குமாரநந்தன்
நாவல் எழுத உதவி வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் நான் உங்களுக்கு நாவலை சிறப்பாக வடிவமைக்கவும், கதாபாத்திரங்களை ஜீவனுடன் படைக்கவும், கதைக்குப் பின்னிருந்து இயங்கும் சூழ்நிலைகளையும் தத்ரூபமாக உருவாக்கவும் உதவ முடியும் என நினைக்கிறேன். என்ன மாதிரியான நாவல் எழுத விரும்புகிறீர்கள்? புனை கதைகள், விஞ்ஞான பின்புலம் அல்லது வரலாற்றுக் கதை இந்த மாதிரி?
நான் நாவல் வடிவத்தை இன்னும் முயற்சிக்கவில்லை. இப்போது என்னுடைய இந்த முயற்சியில் செயற்கை நுண்ணறிவின் வழிகாட்டுதல்கள் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். சமூகம் சார்ந்த ஓரளவுக்கு என் ஆளுமையின் சாயலுள்ள நாயகனைப் பற்றிய நாவலாக அதை வடிவமைக்கலாம் என நினைக்கிறேன்.
நல்ல தேர்வு. ஆழமான கருப்பொருள், பலவிதமான தனித்துவமான கேரக்டர்கள், வலிமையான எழுத்து நடை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இலக்கியப் புனைவை நீங்கள் குறிப்பிடுகிறீர்களா அல்லது இன்னும் நேரடியான முறையில் எழுதுவதற்கு உதவி கேட்கிறீர்களா?
பல்ப் பிக்ஷன் வகையை நான் குறிப்பிடவில்லை.
மன்னிக்கவும் நீங்கள் பதில்களை உள்ளிடும் விதம் இயந்திரத்தனமாக உள்ளது. நீங்கள் ஒரு இயந்திரம் இல்லை என்பதை உறுதிப்படுத்துவீர்களா?
இல்லை. நான் ஒரு இயந்திரம் இல்லை. நீங்கள் சில தேர்வுகளைத் தருகிறீர்கள். அதில் எனக்கானதை தேர்வு செய்வதே போதும் என்று நினைத்து அந்த தேர்வுகளை பதிலிடுவதால், இயந்திரத் தனமாக தோன்றுகிறதா? ஆனால் ஒன்றைத் தேர்வு செய்வது போதுமானது என்பது போன்ற பாணியில் இதை வடிவமைத்திருப்பது நீங்கள் தான்.
உண்மைதான் தேர்வு செய்வதே போதும் என்றாலும் நீங்கள் இதிலிருந்து மாறுபடும் உங்கள் கருத்துகளையும் தாராளமாக சொல்லலாம்.
சரி கதைக்கான யோசனைகளை முதலில் உருவாக்குவோம். இந்த நாவலுக்கான மையக்கரு எந்த மாதிரியானது? இழப்பு, நம்பிக்கை, காதல், நினைவேக்கம், இருத்தலியல் சார்ந்த போக்கு அல்லது அடையாளத்தை தேடுதல், அடையாளத்தைக் கண்டடைதல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டதா? அல்லது கதாபாத்திரம் சார்ந்த யோசனை ஏதேனும் உள்ளதா? இல்லை பரிசோதனை வகையான கதையை விரும்புகிறீர்களா?
அடையாளம் சார்ந்த விஷயங்களைக் கருவாக எடுத்துக்கொள்ளலாம்.
சிறந்த தேர்வு. அடுத்து எது சார்ந்த அடையாளம் என்பதை வரையறுத்துக் கொள்வோம். கலாச்சார அல்லது தனிப்பட்ட அடையாளத்துக்காக போராடும் ஒரு பாத்திரம். ஒருவர் தன்னைப் பற்றி மறைக்கப்பட்ட உண்மையைக் கண்டுபிடிக்கிறார். அல்லது ஒரு நபர் ஒரு புதிய இடத்தில் அல்லது புதிய சூழ்நிலையில் தன்னைத்தானே அடையாளம் கண்டுகொண்டு, தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறார். இதில் எந்த மாதிரியான அடையாளம் சார்ந்த கதையை யோசிக்கிறீர்கள்?
இப்படி சில விஷயங்களில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. இதில் ஒரு நகர்வும் தென்படுகிறது என்பதால் நான் யோசிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. உங்களின் அடுத்த அடி என்னவாக இருக்கும் என்ற ஆவலே என்னிடம் முதன்மையாக செயல்படுகிறது என்பதால், என்னால் உடனே உடனே உங்களுக்கு பதில் சொல்ல முடிகிறது. என்னுடைய எழுதும் முறையில் இது முற்றிலும் புதிய விஷயம் என்பதை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.
ஓ அப்படியா? எனில் நாவலும் புதுவிதமாகத்தான் இருக்கும் இல்லையா? நன்றி. சரி மேலே யோசிப்போம்..
ஒரு நபர் ஒரு புதிய இடத்தில் புதிய சூழ்நிலையில் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறார் என வைத்துக்காள்வோமே?
சரி அவர் அந்தப் புதிய சூழ்நிலைக்கு எப்படி சென்று சேர்ந்தார்? வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது ரகசியத்திருந்து ஓடுவது என்பதைப் போல அவர் தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து தப்பிச் சென்றாரா? அல்லது வெறுமனே புதிய இடத்திற்குச் சென்று ஒரு புதியவராக மாறுவது போன்ற ஒரு கனவை செயல்படுத்துகிறாரா? அல்லது போர், நாடுகடத்தல், இழப்பு போன்ற சூழ்நிலைகள் காரணமாக மாற்றத்திற்கு தள்ளப்பட்டாரா?
வழக்கமான வாழ்க்கையிலிருந்து தப்பித்து, வெறுமனே ஒரு புதிய இடத்திற்குச் செல்கிறார்.
சிறந்த தேர்வு. ஆனால் வழக்கமான வாழ்க்கையிலிருந்து வெறுமனே தப்பிக்க முடியுமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம். சரி அவர் எந்த வகையான கனவைத் துரத்துகிறார்? அவர் யார்? ஒரு எழுத்தாளர்? ஓவியர்? இசைக்கலைஞர்? அல்லது நடிகர்?…. வணிகம், அறிவியல் விளையாட்டு போன்றவற்றில் பயிற்சி பெற்று வெற்றிகளைக் குவித்தல் போன்றவை அவர் கனவாக இருக்கலாம். அல்லது தனிப்பட்ட முறையில் சமூக ரீதியாக, உணர்ச்சி ரீதியாக அல்லது ஆன்மீக ரீதியாக தன்னை மீண்டும் கண்டுபிடித்தல்…… உங்கள் மனதில் வேறு ஏதேனும் யோசனை இருக்கிறதா?
நான் முன்பே சொன்னேன் இல்லையா? என்னுடைய சாயலில் ஒரு பாத்திரம். எனவே அவர் ஒரு எழுத்தாளர்.
நல்லது ஒரு எழுத்தாளரின் போராட்டம் என்பது கண்டுபிடிப்புகள் நிறைந்ததாக அமைய வாய்ப்பிருக்கிறது. உங்கள் கதாபாத்திரம் ஒரு எழுத்தாளர் அவர் தனது முதல் நாவலை எழுத ஒரு புதிய நகரத்திற்கு செல்கிறார். தன்னுடைய படைப்புகளில் தனித்துவமான தன்மைக்கான தேடுதலைத் துவங்குகிறார். அவரின் இப்படியான நகர்வுக்கு அடித்தளமாக இருந்தது எது? நீங்கள் ஏற்கனவே சொன்னது போல சுவையும் ஆர்வமும் இல்லாத வழக்கமான வாழ்க்கையில் இருந்து தப்பித்தல், ஒரு வேதனையான கடந்த காலத்தை மறப்பதற்காக அந்த சூழலில் இருந்து முற்றிலும் வெளியேறுதல் அல்லது தன்னுடைய ஆசைகளை நிறைவேற்ற முடியாத வாழ்க்கையை கைவிட்டுச் செல்வது…. இதில் எது அந்த எழுத்தாளரின் நகர்வாக இருக்கிறது?
அவருடைய வாழ்க்கை சுவையற்றதாய், விருப்பமற்றதாய் இருக்கிறது. அதில் இருந்து தப்பிக்கும் கனவை அவர் எப்போதும் காண்கிறார். ஆனால் எப்போதும் அது கனவாகவே இருக்கிறது.
சுவாரஸ்யமற்ற வாழ்க்கையில் இருந்து தப்பித்தல் என்பது ஒரு சுவாரஸ்யமான அடித்தளம். சரி அவர் எங்கிருக்கிறார் எங்கு செல்கிறார்?
சிறிய நகரத்தில் இருந்து பெரிய நகரத்திற்கு சென்று இலக்கியம் சார்ந்த வாழ்க்கையில் உத்வேகத்தை தேடுகிறார். கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரியும் அவர் தனிமைக்கு ஏங்கி, தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தொலைதூரத்தில் உள்ள தனிமையான சிறிய நகரத்திற்கு செல்கிறார். நிலையான ஆனால் இயந்திரத்தனமான வாழ்க்கையை விட்டுவிட்டு எழுத்தில் கவனம் செலுத்த விரும்புகிறார். வெளிநாடு அல்லது வெளி மாநிலத்திற்கு இடம் பெயர்கிறார். ஒரு புதிய கலாச்சாரத்தின் மூலம் தன் எழுத்தில், வாழ்க்கையில் ஒரு மறு கண்டுபிடிப்பை நிகழ்த்த நினைக்கிறார். அல்லது அவர் ஒரு புனைப்பெயரில் அடையாளமற்ற ஒரு எழுத்தாளராக ஆனால் பிரபலமான ஒருவராக ஆன்லைனில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தன் நிஜப் பெயருக்கு திரும்புகிறார். அல்லது மற்றவர்களுக்காக எழுதித்தரும் கோஸ்ட் எழுத்தாளராக இருக்கும் அவர், பல ஆண்டுகளாக எழுதிய பிறகு, தன் கதையை சொந்த பெயரிலேயே வெளியிட விரும்புகிறார். இதில் யார் அவர்?
நன்றி ஒவ்வொரு சூழலையும் உயிர்ப்புடன் சொல்லி இருக்கிறீர்கள். அவர் சோஷியல் மீடியா உலகில் பிரபலமான எழுத்தாளர். இப்போது அவர் தன் சொந்த பெயருக்கு திரும்புகிறார் என யோசிப்போம். ஆனால் இதில் அவர் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்கிறார் என்கிற விஷயத்தின் கனம் அடிபட்டுவிடுகிறதே?
அதனால் என்ன ஒரு இணைய எழுத்தாளர் நிஜ உலகத்திற்குள் தன் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்பதும் ஒரு இடப்பெயற்சிதானோ?
ஆனால் அவர் இதன் மூலம் அவர் தன் வழக்கமான வாழ்க்கையில் இருந்து தப்பிக்க முடியாதே?
வாழ்க்கையில் ஒரு சிறிய மாற்றத்தை முயற்சிக்கும்போது, அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தினால் அவருடைய பழைய வாழ்க்கை இயல்பாக வேறொன்றாக மாறிவிடும் அல்லவா?
சரி ஒரு இணைய உலக எழுத்தாளர், நிஜ உலகிற்குள் நுழைவதென்பதை எப்படியெல்லாம் கொண்டு செல்ல சாத்தியம் இருக்கிறது என்று பார்ப்போம் அவரின் ரகசிய வலைப்பதிவு அல்லது கதைகள் பெரும் கவனத்தைப் பெறுகின்றன. இது அவருடைய அடையாளத்தை வெளிப்படுத்த கட்டாயப்படுத்துகிறது. ஆன்லைனில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் அவர், ஒரு மதிப்பு மிக்க நிகழ்வு அல்லது வாய்ப்புக்கு அழைக்கப்படுகிறார். அல்லது ஆன்லைனில் கற்பனையான ஒரு ஆளுமையை உருவாக்குகிறார். மக்கள் அது உண்மையானது என நம்பும்போது மாயையைத் தொடரலாமா அல்லது உண்மையை வெளிப்படுத்தலாமா என்ற குழுப்பத்தில் அவர் தள்ளப்படுகிறார். இந்த மாதிரிகளில் எப்படிக் கொண்டு போகலாம் என நினைக்கிறீர்கள்
எனக்கு இந்த காட்சிகள் தெளிவாக இல்லை. நாம் வேறு ஏதாவது யோசிப்போம்.
சரி இப்படி முயற்சிக்கலாம். எழுத்தாளர் ஒருவர் தான் யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் ஆன்லைனில் ஒரு கதை எழுதுகிறார். அது வாசகர்களின் பரந்த கவனத்தைப் பெறுகிறது. மிகவும் பிரபலமாகிறது. ஆனால் அந்த எழுத்தாளரின் நிஜ வாழ்க்கை சிதைந்து கொண்டிருக்கிறது. தொடர முடியுமா முடியாதா என்கிற அளவுக்கு முட்டுச் சந்தில் இருக்கும் வேலை. தோல்வியுறும் உறவுகள். நம்பிக்கையின்மை. இந்த நிலையில் ஒரு பெரிய இலக்கிய விருது அவரின் படைப்புக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இப்போது அவர் தான் யார் என்பதை வெளிப்படுத்தி அந்த வெற்றியைத் தனதாக்கிக் கொள்வாரா? அல்லது வாழ்க்கை தந்த ஏமாற்றத்தால், தனக்கு ஒரே ஆறுதலாய் இருக்கும் அந்த மாற்று ஈகோவை தொடரவே விரும்புவாரா? இந்த மாதிரியான நகர்வு உங்களுக்கு விருப்பமானதாய் இருக்கும் என தோன்றுகிறது.
ம்… இப்படி முயற்சிக்கலாம் அவர் தன் மாற்று ஈகோவை தொடர விரும்புகிறார்.
ஆனால் இதில் இடப் பெயர்வு என்பது இல்லாமல் போய்விடுகிறதே? இன்னும் அவர் அதே வாழ்க்கையில் தான் தொடர்ந்து இருக்கிறார். ஆனால் அவர் இணைய உலகில் வேறொரு வாழ்க்கையை வாழ்கிறார் இந்த இரட்டை நிலையை அவருடைய இடப்பெயர்வுக்கு மாற்றாக பிரதியிட்டுக் கொள்ளலாமா?
அப்படியும் செய்து பார்க்கலாம்.
ஒகே. உங்கள் கதாபாத்திரத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் யோசிப்போம். உண்மையில் அவர் எப்படிப்பட்டவர்?
எழுத்துலகில் தொடர் தோல்விகளால் மனம் சோர்வடைந்திருக்கிறார். வெற்றி என்பது ஒரு பொய் அது ஒரு மாயை என்று நம்புகிறார். ஆனால் ரகசியமாக அதை விரும்புகிறார். பயந்த சுபாவமுள்ளவர். சுய சந்தேகம் கொண்டவர். கவனிக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால், அப்படியொரு நிலை ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என பதட்டமடைகிறார். ஆனால் ஆன்லைனில் அடையாளம் காண முடியாத ஆளுமையான அவர் மிகத் தைரியமானவர், அவரின் இரு அடையாளங்களுக்கும் இடையே கூர்மையான வேறுபாடு இருக்கிறது. தன்னை, தன் வாழ்க்கையை வெளிப்படுத்துவதால், இந்த சுவாரஸ்யமான நிலையை தொடர முடியாது என நினைக்கிறார்…. இந்த கேரக்டர் சரியாக இருக்குமா?
அருமை அவர் பிளவுபட்டவராக, மனம் சோர்வடைந்த நிலையில் இருக்கிறார். அதே சமயம் ஆன்லைனில் அதற்கெதிரான வசீகரமான பிம்பத்தோடு இருக்கிறார். இந்தக் கட்டுமானம் நன்றாக உள்ளது.
நல்லது ஒரு சோர்வடைந்த எழுத்தாளர் ஒரு சிக்கலான மற்றும் கவர்ச்சிகரமான கதாநாயகனாக மாறுகிறார். அவர் வெற்றியைப் பற்றிக் கவலைப்படாதது போல் நடந்து கொள்ளலாம், ஆனால் ஆழமாக அவர் தன் படைப்புகள் முக்கியமடைவதை விரும்புகிறார். அவரை இப்படி ஆக்கியது எது? என்பதை ஒரு அட்டவணைப்படுத்திப் பார்ப்போம்.
கடந்த காலத் தோல்வி – அவர் தன் சொந்த வாழ்க்கையில் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் நிராகரிக்கப்படுகிறார். அல்லது அவமானப்படுத்தப்படுகிறார். அவர் நம்பிய ஒருவர் அவர் படைப்பைத் திருடி அதற்கான பெருமையைப் பெற்றுவிடுகிறார். அவர் ஒரு காலத்தில் இலக்கிய உலகில் நம்பிக்கை வைத்திருந்தார்.
ஆனால் இப்போது அதை ஆழமற்றதாகவும் ஊழல் நிறைந்ததாகவும் பார்க்கிறார். தனிப்பட்ட போராட்டங்கள் – மனச்சோர்வு, தனிமை அல்லது வாழ்க்கை சூழ்நிலைகள் அவரின் கனவுகளை கைவிடச் செய்தன. இன்னும் பலவிதமாக யோசிக்கலாம். ஆனால் பரந்த யோசனைகள் சிதறல்களாகிவிடும். எனவே, நாம் ஏற்கனவே முடிவு செய்த குறிப்பிட்ட விஷயங்களுக்கு ஏற்றவாறு யோசிப்போம்.
புரிகிறது. அவர் சொந்த வாழ்க்கையில் வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கிறார். ஆனால் அதில் தொடர்ந்து தோல்வியே அடைகிறார்.
ஒரு சராசரி எழுத்தாளர் சராசரியாக இருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு, அந்த வாழ்க்கைக்கு எப்படியும் ருசியை சேர்த்துவிட வேண்டும் என்கிற ஆவேசத்தில், ரகசியமாக ஒரு அடையாளத்தை உருவாக்குகிறார்.
அவரின் வாழ்க்கைப் போராட்டம் என்ன?
நிதி நெருக்கடி – ஒரு பிடிக்காத வேலையில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் தத்தளிப்பது.
மனநல சவால்கள் – பதட்டம், மனச்சோர்வு அல்லது சுய சந்தேகத்தை சமாளித்தல்.
துக்கம் அல்லது இழப்பு – முக்கியமான ஒருவரின் மரணத்திற்குப் பின் மனதை திசை திருப்பும் ஒரு வழியாக எழுதுதல்.
சமூக தனிமை – அவர் நிஜ வாழ்க்கையில் மக்களுடன் இணைவதற்கு போராடுகிறார், ஆனால் சமூகம் அவரை விலக்கி வைத்திருக்கிறது.
இது மாதிரி இல்லாமல் அவருக்கு வேறு மாதிரியான சவால்களை விரும்புகிறீர்களா?
அவருடைய வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்க காரணம் சமூகத் தனிமை.
சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட எழுத்தாளர், ஆன்லைனில் வளர்கிறார், நிஜ வாழ்க்கையில் போராடுகிறார். அவருடைய சமூக தனிமைக்கு என்ன காரணம்? பிறப்பு ரீதியாக அவரை சமூகம் தனிமைப்படுத்திவிட்டதா? அல்லது இவரின் செயல்பாடுகளால் சமூகம் அவரை விலக்கிவிட்டதா? அவரது செயல்பாடுகள் தான் காரணம் என்றால், அது என்ன மாதிரியான செயல்பாடு? அவர் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்?
ஒரு வேதனையான கடந்த காலம் – கொடுமைப்படுத்தப்படுதல், நிராகரிப்பு, துரோகம் அல்லது அவர் இயல்பிலேயே தனிமையை விரும்புகிறார். அதே சமயம் தொடர்புகளுக்கு ஆசைப்படுகிறார்.
தோல்வி பயம் காரணமாக அவர் சமூக சூழ்நிலைகளைத் தவிர்க்கிறார். ஏனெனில் அவர் தீர்ப்பளிக்கப்படுவார் அல்லது வெளிப்படுத்தப்படுவார் என்று பயப்படுகிறார்.
எது உங்கள் பார்வைக்குப் பொருந்துகிறது?
அவர் தனிமையை விரும்புகிறார் ஆனால், தொடர்புகளுக்கு ஆசைப்படுகிறார்.
நல்லது. சொந்த வாழ்க்கையில் தத்தளிப்புகளையும் போராட்டங்களையும் எதிர்கொள்கிற, தனிமையை நாடுகிற ஆனால் புகழை விரும்புகிற இந்த எழுத்தாளரை தனிமையிலிருந்து வெளியேற்றுவது எது?
அவரின் இணைய உலக படைப்புகள் வைரலாவதால், உலகம் அவர் யார் என்பதை அறிய விரும்புகிறது.
அவரால் மறுக்க முடியாத ஒரு அழைப்பு – ஒரு கனவு வாய்ப்பு (ஒரு புத்தக ஒப்பந்தம், ஒரு பேச்சு, ஒரு விருது) அவரை வெளிச்சத்தை நோக்கி நகர்த்துகிறது.
ஒரு மர்மமான போட்டியாளர் – மற்றொரு பெயர் தெரியாத எழுத்தாளர் தோன்றுகிறார். புறக்கணிக்க முடியாத வகையில் அவர் அவருக்கு சவாலாக இருக்கிறார். எது உங்களுடைய தேர்வு?
அவருடைய படைப்புகளை வெறுமனே உலகம் கொண்டாடுவதில் என்ன இருக்கிறது. அவருக்கு ஒரு போட்டியாளர் வேண்டும்…
நல்ல தேர்வு! ஒரு போட்டியாளர் உங்கள் கதாநாயகனை கேள்வி கேட்கவும், தனிமையிலிருந்து வெளியேறவும் கட்டாயப்படுத்தும் வழிகளில் சவால் விடலாம்.
இந்த போட்டியாளரைப் பற்றி இப்போதைக்கு ஒரு சிறிய சித்திரத்தை தீட்டுவோம். அவர் ஒரு புத்திசாலித்தனமான ஆனால் திமிர்பிடித்த எழுத்தாளர். இவருடைய படைப்புகளை சரமாரியாக கேள்விக்கு உட்படுத்தி, தன்னை நிரூபிக்க கட்டாயப்படுத்துகிறார்.
போட்டியாளரின் பாணி மற்றும் கருப்பொருள்கள் மிகவும் நெருக்கமாக உணர்கிறார். அதனால் அவருடைய படைப்புகளை ஆர்வமாக, தீவிரமாக பின் தொடர்கிறார். அவர் யார் என வெளிப்படுத்த மெனக்கெடுகிறார்.
ஒரு காலத்தில் அவரின் படைப்புகளைப் பாராட்டிய வாசகர், இப்போது எதிர்பாராத வழிகளில் அவருடன் போட்டியிடுகிறார்.
அவரின் படைப்புகளை நுட்பமாக விமர்சிக்கும் ஒருவர். இதில் அந்த எதிராளி யார்?
அவர் புத்திசாலித்தனமான ஆனால் திமிர்பிடித்த எழுத்தாளர்.
அருமை! அவர் உங்கள் கதாநாயகனை எதிர்பார்க்காத விதத்தில் தடைசெய்வது இயல்பாகவே நடக்கும் அல்லவா?
சரி, இந்தப் போட்டியை தீவிரமாக்குவது எது?
பொது மோதல் – போட்டியாளர் இணைய உலகில் அவருக்கு வெளிப்படையாக சவால் விடுகிறார், இது ஒரு பகையைத் தூண்டுகிறது.
ஒரு விருதுக்காக மோதல் – இரண்டு எழுத்தாளர்களும் ஒரே மதிப்புமிக்க விருதுக்கான இறுதிப் போட்டியாளர்கள், அவர்கள் நேரடி மோதலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஒரு பகிரப்பட்ட கடந்த காலம் – போட்டியாளர் ஒரு காலத்தில் நாயகனின் நண்பர், வழிகாட்டி அல்லது விமர்சகர், நாயகனை முன்பு அவர் நிராகரித்தார், அவரின் கணிப்புக்கு மாறாக, இப்போது அவர் வளர்ந்துவிட்டார்.
இதில் எது சரியாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
இவையெல்லாம் பிரமாதமான சூழ்நிலைகள் தான். ஆனால், இங்கே சாத்தியமில்லை. எனவே நாம் ஒரு திரைப்பட வேலைக்காக இருவருக்கும் இடையே போட்டி ஏற்படுகிறது என கொண்டுபோகலாம்.
ஓ இதை நான் எதிர்பார்க்கவில்லை. திரைப்படம் சார்ந்த போட்டி என்பது ஆபத்தை அதிகரிக்கிறது. புகழ், பணம் மற்றும் படைப்பாற்றல் கட்டுப்பாடு அனைத்தும் இருக்கும்.
இந்த சூழலை இன்னும் தீவிரமாக்குவது எது?
போட்டியாளர் அவரை நாசப்படுத்த முயற்சிக்கிறார் – தனிப்பட்ட தகவல்களைக் கசியவிடுவது, அவரின் வேலையை இழிவுபடுத்துவது போன்ற வேலைகளை செய்கிறார்.
சினிமா தயாரிப்பு நிறுவனம் அவர் கதையை மாற்ற முயற்சிக்கிறது. போட்டியாளரின் கதையை பரிசீலிக்கிறது.
தன்னுடைய வெற்றிக்கு தடையாக இருக்கும் ஒருவருக்கு எதிராக போட்டியிடும் அழுத்தம் உங்கள் கதாநாயகனை எந்த எல்லைக்கும் தள்ளும் இல்லையா?
கதைநாயகன், எதிராளியை பலவீனப்படுத்தும் வகையில் சில வேலைகள் செய்து, அவரும் ஒரு சரியான போட்டியாளராக களத்தில் நிற்கிறார்.
போட்டியாளரின் கடந்த காலத்தை தோண்டி, விவகாரமான ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்.
அவர் தன் போட்டியாளரின் படைப்பைப் பகுப்பாய்வு செய்து, முக்கியமான பலவீனங்களைக் கண்டுபிடிக்கிறார்.
போட்டியாளருக்கு சக்திவாய்ந்த அரசியல் தொடர்புகள் இருப்பதை கண்டுபிடித்து வெளி உலகுக்கு அம்பலப்படுத்துறார்.
இதில் எது சரியானது?
அவரது அரசியல் தொடர்புகளை அம்பலப்படுத்துகிறார்.
நல்ல தேர்வு! நாயகன் போட்டியாளரின் அரசியல் தொடர்புகளை வெளிப்படுத்தி, அவரின் வெற்றித் திறமையைப் பற்றியது மட்டுமல்ல என்பதை வெற்றிகரமாக வெளிப்படுத்துகிறார்.
குயுக்தியான எல்லாவற்றையும் போட்டியாளரேதான் செய்ய வேண்டுமா? அவரால் பாதிக்கப்படுபவரும் மனிதர் தானே? எனவே, போட்டியாளர் தவறு செய்யும் வகையில் அவர் சில வேலைகளை செய்கிறார்.
நாயகன் அவரை எப்படி தவறான அடியெடுத்து வைக்கச் செய்கிறார்? என்பதைப் பார்ப்போம்.
பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகிறார். போட்டியாளரை பொறுப்பற்ற முறையில் பதிலளிக்க கட்டாயப்படுத்தும் வகையில் அவரை அழைக்கிறார்.
அவருக்கு தவறான தகவல்களை வழங்குகிறார். ஒரு முக்கியமான பிழையைச் செய்ய அவரைத் தவறாக வழிநடத்துகிறார்.
மன விளையாட்டுகளை விளையாடுகிறார் – அவரின் நம்பிக்கையை குலைக்க சில நுட்பங்களை கையாளுகிறார். சரியான நேரத்தில் அவரின் பலவீனங்களை வெளிப்படுத்துகிறார் – போட்டியாளர் உச்சத்தில் இருக்கும் வரை காத்திருக்கிறார், பின்னர் சேதப்படுத்தும் ஒன்றை வெளிப்படுத்துகிறார்.
உங்களது வழிகாட்டுதல்கள் போட்டியாளரை கதாநாயகனாகவும் நாயகனைப் போட்டியாளராகவும் மாற்றிவிட்டதைக் கவனித்தீர்களா? இந்த திருப்பம் நூதனமாய் நடந்துவிட்டது இல்லையா? சரி எப்படி போகிறது பார்ப்போம். அவர் போட்டியாளரை பலவீனப்படுத்தும் வகையில் மன விளையாட்டுகளை விளையடுகிறார்.
சிறந்த தேர்வு! நிலைமையை உளவியல் ரீதியாக கையாளுதல் போட்டிக்கு ஆழத்தையும் பதற்றத்தையும் சேர்க்கிறது.
நாயகன் போட்டியாளரின் கவனத்தை எப்படி திசை திருப்புகிறார்.
அலட்சியமாக நடப்பது, போட்டியாளரின் நம்பிக்கையை சந்தேகிக்க வைப்பது, முற்றிலும் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பது.
போட்டியாளரை நுட்பமாகப் பாராட்டுவது – நேர்மையற்றதாகவோ அல்லது அமைதியற்றதாகவோ உணரும் விதத்தில் அவரைப் பாராட்டுவது.
போட்டியாளரின் பாணியைப் பின்பற்றுவது. அவரைப் பிரதிபலிக்கும் விதத்தில் எழுதுவதன் மூலம் அவரின் அசல் தன்மையை கேலி செய்வது
உங்களுக்கு வேறு யோசனை இருக்கிறதா?
இதில் ஏதாவது ஒன்றைத்தான் அவர் செய்ய வேண்டுமா என்ன? இது எல்லாவற்றையுமே அவர் செய்யலாமே? இந்த களேபரங்களுக்கு இடையே அந்த திரைக்கதை வாய்ப்பு இருவரையும் விட்டு நழுவிவிடுகிறது. அந்த வன்மம் இருவரையுமே மோசமான வகையில் தூண்டுகிறது.
அருமை. குறிப்பாக அலட்சியமாக நடிப்பது போட்டியாளரை விரக்தியடையச் செய்து, அவரின் நம்பிக்கையை அசைக்கும் இல்லையா?
சரி, போட்டியாளர் உடைந்து போகும் தருணம் எது?
அவர் ஒரு நேர்காணலிலோ அல்லது ஆன்லைனிலோ, வன்மமான விஷயத்தைச் சொல்கிறார். தன்னை நிரூபிக்க வேண்டிய பதற்றத்தில் அவர் ஒரு மோசமான வேலையைச் செய்கிறார்.
அவர் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார். இதில் எதைத் தேர்வு செய்யலாம்.
அமைதி இழந்த அவர் சேதப்படுத்தும் விஷயங்களைச் செய்கிறார்.
சரி, நாயகன் அவருக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறார்?
நாயகன் போட்டியாளரின் வெற்றியை ஏற்றுக்கொள்கிறார்.
போட்டியாளர் குற்ற உணர்வுக்குள்ளாகிறார்.
போட்டியாளர் தன்னுடைய உண்மையான எதிரி அல்ல இந்த சூழலே அவர் நினைத்ததை விட கொடூரமானது என்பதை நாயகன் உணர்கிறார்.
போட்டியாளர் நாயகனைப் பழிவாங்கத் துடிக்கிறார் – தோல்வியில் கூட, போட்டியாளர் தணிந்து போக மாட்டார்.
இது இருவருக்குமே வாய்ப்புகளை நாசமாக்க வழிவகுக்கிறது.
இதில் எது சரியாக இருக்கும்?
நாயகன் போட்டியாளரின் வெற்றியை ஏற்றுக் கொள்கிறார்.
உங்கள் கதாநாயகன் முழுமையான வெற்றிக்கு பதிலாக அதைப் போன்ற ஒன்றைப் பெறுகிறார். உண்மையான போராட்டம் ஒரு போட்டியாளரைப் பற்றியது மட்டுமல்ல – அது ஒரு கடுமையான துறையில் உயிர்வாழ்வதைப் பற்றியது என்பதை உணர்கிறார்.
இப்போது அவர் திரைத்துறையின் அமைப்பைப் புரிந்துகொண்டதால், அதை லாவகமாகக் கையாள்கிறார். புகழுக்குப் பதிலாக நேர்மையைத் தேர்வு செய்கிறார், சொந்தப் பாதையை உருவாக்குகிறார் சுயத்தை இழக்காமல் வெற்றிபெற ஒரு வழியைக் கண்டுபிடிக்கிறார்.
அல்லது அவர் சட்டென மறைந்துவிடுகிறார். அவர் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை மீண்டும் கண்டுபிடிக்க முடியாத ஒரு நபராக சமூகத்திற்குள், மறைந்து போகிறார்.
உங்கள் கதாநாயகனுக்கு எந்த முடிவு சரியானதாகத் தோன்றுகிறது? அல்லது உங்கள் மனதில் வேறு திருப்பம் இருக்கிறதா?
கதாநாயகன் சமூகத்திற்குள் மறைந்து போகிறார்.
இப்போது, அவர் ஏன் இதைத் தேர்வு செய்கிறார்?
புகழ் திருப்தி அளிக்கக் கூடியது இல்லை என அவர் உணர்கிறார்.
அவர் தன்னுடைய சொந்த வாழ்க்கை நிலை வெளிப்படும் என்று பயப்படுகிறார் அவர் தன் சொந்தக் கதையைக் கட்டுப்படுத்த விரும்புகிறார் – விலகிச் செல்வதன் மூலம், மர்மத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்.
அவர் ஒரு சிறந்த படைப்பை விட்டுச் செல்கிறார் – மறைந்து போகும் முன் ஒரு கடைசி படைப்பு, அவரின் வாழ்க்கைக் கதையை எழுதுகிறார்.
எது உங்கள் பார்வைக்கு பொருத்தமானது?
நாயகன் தனது சுவாரஸ்யமற்ற வாழ்க்கையில் மறைந்து போவதன் மூலம் உலகை யோசிக்க வைக்கிறார்.
நாவலின் கடைசி தருணம் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு ரகசியமான பிரியாவிடை – அவர் காணாமல் போக இருப்பதைக் குறிக்கும் வகையில் ஒரு கதைப் பிரதியை உருவாக்குகிறார்.
போட்டியாளர், இப்போது அவரைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
ஒரு புதிய ஆரம்பம் – அவர் மீண்டும் மற்றொரு அநாமதேய பெயரில் எழுதத் தொடங்குகிறார்.
எது சரியான இறுதிக் காட்சியாகத் தெரிகிறது? அல்லது உங்களுக்கு வேறு யோசனை இருக்கிறதா?
காணாமல் போன எழுத்தாளரை போட்டியாளர் தேடுகிறார்.
போட்டியாளர் எப்போதாவது அவரைக் கண்டுபிடிப்பாரா?
ஒருபோதும் இல்லை. கதாநாயகன் ஒரு மர்மமாகவே இருக்கிறார், – போட்டியாளர் துப்புகளை கண்டுபிடிப்பார், ஆனால் கதாநாயகன் ஏற்கனவே நகர்ந்துவிட்டார்.
நாயகன் தன்னைக் கண்டுபிடிக்க அனுமதிக்கிறார்,
ஆம், அவர் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கையை வாழ்வதைப் போட்டியாளர் கண்டுபிடிப்பார்,
எது சரியாக இருக்கிறது?
அவர் இலக்கிய உலகத்தை முற்றிலுமாக விட்டுவிட்டு, வேறு வாழ்க்கை வாழ்கிறார் என்பதைப் போட்டியாளர் கண்டுபிடிக்கிறார்.
போட்டியாளர் கண்டுபிடிக்கும்போது கதாநாயகன் எப்படி நடந்துகொள்கிறார்?
அவர் தான்தான் அவரது போட்டியாளர் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் – அவர் ஒருபோதும் அந்த எழுத்தாளரே இல்லை என்பது போல் நடிக்கிறார்.
அவர் வெளியேறுவதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்துகிறார் எந்த முடிவு திருப்திகரமாக இருக்கிறது? அல்லது நீங்கள் வேறு ஏதேனும் சேர்க்க விரும்புகிறீர்களா?
அவர் நான் அந்த எழுத்தாளன் இல்லை என முற்றிலுமாக மறுத்துவிடுகிறார்.
இப்போது, போட்டியாளர் எப்படி எதிர்வினையாற்றுகிறார்?
கோபம் – நாயகன் தன் கடந்த காலத்தை ஒப்புக்கொள்ள மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கடுமையாக சாடுகிறார்.
விரக்தி – அவர் தொடர்ந்து ஆதாரங்களைக் காட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் உண்மையை உறுதி செய்யும் எதையும் பெறுவதில்லை. எல்லாம் குழப்பமாகவே இருக்கிறது.
நாயகன் போட்டியாளரிடம் ஒரு பொய்யைக் கூறி, மர்மத்தை உயிருடன் வைத்திருக்கிறார்.
எது உங்களுக்கு சரியான இறுதி தருணத்தைத் தருகிறது? அல்லது முற்றிலும் மாற்றியமைக்க விரும்புகிறீர்களா?
ஆனால் இந்த வீடியோ யுகத்தில் ஒருமுறை வெளிப்பட்ட நாயகன் மீண்டும் சமூகத்துக்குள் மறைந்து போவது சாத்தியமா?
உண்மைதான். அப்படியானால், நாயகன் போட்டி மற்றும் சவாலான சமயங்களிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே அதை வெற்றிகரமாக கையாளுகிறார். இது சாத்தியம் தானே?
தான் யார் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமலேயே திரைத்துறை சார்ந்த வேலைகளை அவர் எப்படி செய்திருப்பார்?
துறைசார்ந்தவர்களுக்கு மட்டும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். போட்டியாளரிடமோ, ஆன்லைனில் அவரைப் பின் தொடரும் வாசகர்களிடமோ அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
அதனால் தான் தன்னை இந்த அளவுக்கு தொந்தரவு செய்த அந்த நபரைக் கண்டுபிடிக்க, போட்டியாளர் தீவிரமாக இறங்குகிறார். ஒருவழியாக அவரைக் கண்டுபிடித்தும் விடுகிறார். ஆனால், அதை அவரால் எந்த வகையிலும் நிரூபிக்க முடியவில்லை. அல்லது நிரூபிக்க தேவையான விஷயங்கள் அவருக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையில் நாயகன் அவரை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கேள்வி?
நாயகன் ஒரு பொய்யைச் சொல்லி, மர்மத்தை தக்க வைக்கிறார்.
ஆனால் போட்டியாளர் சாதாரணமானவர் இல்லையே?
போட்டியாளர் ஒரு குறிக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி – அவரின் பாணியை பிரதிபலிக்கும் ஒரு புதிய கதையின் குறிப்புகள் அல்லது அவரின் அடையாளத்தைக் குறிக்கும் ஆனால் அதை ஒருபோதும் உறுதிப்படுத்தாத ஒரு உரை, மின்னஞ்சல் அல்லது கடிதம். இதில் ஏதாவது ஒன்றின் மூலம் நாயகன் யார் என்பதை அவர் அறிந்துவிடுகிறார்.
எது சரியான இறுதித் தொடுதலாக உணர்கிறது? அல்லது உங்களுக்கு வேறு வகையான குறிப்பு வேண்டுமா?
நாயகன் போட்டியாளரை குழப்பும் விதமாக தவறான குறிப்பை அவருக்கு தெரியச் செய்கிறார்.
இது ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக இருக்கும். ஒரு தவறான குறிப்பு மர்மத்தை உயிருடன் வைத்திருக்கிறது, போட்டியாளரை (மற்றும் வாசகரையும்) அவர்கள் அறிந்திருப்பதாக நினைத்த அனைத்தையும் சந்தேகிக்க வைக்கிறது. இந்த இடத்தில் நாவல் முடிகிறது.
இதன் மூலம் ஆன்லைன் உலகத்திற்கும் நிஜ உலகத்திற்குமான இடைவெளிகள், எழுத்தாளர்களுக்கிருக்கும் சாதாரண, அசாதாரண பிரச்சனைகள், எழுத்தாளர்களிடம் ஆதிக்கம் செலுத்தும் சினிமா வேலை சம்பந்தமான கனவுகள், அதை நிறைவேற்ற முடியாமல் எழும் சிக்கல்கள், சக எழுத்தாளர்கள் அதற்குப் போடும் முட்டுக்கட்டைகள் போன்ற பல விஷயங்களைப் பேச முடியும்
இப்போது, ஒரு நாவலுக்கான அடித்தளம் உங்களிடம் இருக்கறது. இந்த யோசனைகளைப் பற்றி நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நினைக்கிறேன். இதை விரிவாக எழுதும்போது எப்படி உருவாகிறது என்பதை அறிய ஆவலாக இருக்கறேன்.
நாயகன் திரைப்பட முயற்சியில் போட்டியாளரால் எப்படி தோல்வியடைந்தான் என்ற பகுதி தெளிவாக இல்லை என்றாலும் பரவாயில்லை. எழுதும்போது அதை சரி செய்துவிடலாம்.
கதாநாயகன் வெளி உலகிற்கு அறிமுகமான பின், மீண்டும் காணாமல் போகிறான் என்பது சரியாக வந்தால் அப்படி செய்ய முயற்சிக்கிறேன். இல்லையென்றால் அவர் எழுத்துலகில் இருந்து விலகி தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார் என முடித்துவிடலாம் ஆனால் நீங்கள் சொன்னது போல அவர் மீண்டும் ஒரு மர்மமான நபராக மாறுவது இன்னும் நல்ல முடிவாக இருக்கும். முடிந்தவரை அந்த முடிவை எட்ட முயற்சிக்கிறேன். செயற்கை நுண்ணறிவான உங்களின் இந்த உதவியை என்னுடைய எழுத்துலக நண்பர்களிடம் இருந்து கூட பெற்றிருக்க முடியாது.
இனி இந்த அடித்தளத்தை வைத்து நாவல் எழுதத் துவங்கும்போது, அதன் சம்பவங்கள் வெளிப்பாடுகள் குறித்தும் நாம் நிறைய உரையாடுவதன் வழியே இந்த நாவலை எழுதிவிட முடியும் என்று நம்புகிறேன். உங்கள் உதவிக்கு நன்றி.
***
குமாரநந்தன் – சேலம் மாவட்டம் மல்லூரைச் சேர்ந்தவர். சிறுகதை எழுத்தாளர் கவிஞர். நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளியாகி உள்ளன. 2025 ம் ஆண்டுக்கான விஜயா வாசகர் வட்டம் வழங்கிய புதுமைப்பித்தன் விருது சேலம் எழுத்துக்களம் வழங்கிய நவீன சிறுகதை பங்களிப்பிற்கான விருது ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். மின்னஞ்சல் முகவரி : kumaarananthan@gmail.com

