புணர்ச்சியை விடவும் அந்தரங்கமானதல்லவா?
இது என்ன தெய்வம்?
அவனுக்கு
மன்னிக்கவும்
அவருக்கு
இதோ
நூறு ஜோடி கைகள்
நூறு ஜோடி கால்கள்
ஆயிரம் ஜோடி கண்கள்
ஆயிரம் ஜோடி காதுகள்
பத்தாயிரம் மூக்குகள்
முளைத்திருக்கின்றன
நம் சின்ன கண்களுக்குள் அடங்காத
பேருருவன்
நம்பவில்லையா நீங்கள்?
கொழுந்தியாளின் மகள்
உட்காரும் சடங்கு விழாவுக்கு
குடும்பத்தோடு
வெளியூர் சென்றிருக்கும்
நம்முடைய கணேசமூர்த்தியின்
(பத்திரமாய் பூட்டப்பட்டிருக்கும்) வீட்டுக்குள்
இந்த நடுநிசியில்
மையிருளில்
தன்னந்தனியாய்
திருடிக் கொண்டிருக்கும்
அவனை
மன்னிக்கவும்
அவரை
ஷ்ஷ்ஷ்…..
மூச்சுவிடும் சத்தம் கூட வராமல்
முழுசாய்
முழுசாய்
ஒரு முறை பாருங்கள்
மெய்யான குடிகாரர்கள், தான் நிற்கும் இடத்தை விட்டு சாகும் வரை ஓரங்குலம் கூட நகர மாட்டார்கள்
அப்பாடி
ஒரு வழியாக
இளம்பச்சை உதடுகள்
முளைத்துவிட்டன
எனக்கு
ஒரு தடையும் இல்லை
இனி நான்
பொழுதெல்லாம்
பொழுதெல்லாம்
அந்த சூர்யனை
உறிஞ்சிக்
குடித்துக் கொண்டே இருப்பேன்
சூர்யனே
முதல் போதை
சூர்யனே
உச்ச போதை
சூர்யனே
கடைசி போதையும் ஆகும்
ஒவ்வொரு கல்பறவைக்கும் ஒவ்வொரு ஆகாய கங்கை
சிறுவர்களால்
அந்தரத்தில்
வீசி எறியப்பட்ட
கணத்திலிருந்து
புத்தம் புது மாயச்சிறகுகள் இரண்டு
முளைத்து
வானில் பறந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு கல்பறவையும்
ஒவ்வொரு உயரத்தில்
ஒர் இமைக்கணம்
அசையாமல் நின்று
ததும்பி
மீளவும்
தரைக்கு திரும்புகிறது
அதென்ன ததும்பும் உயரம்?
முற்றிலும்
தன் சிறகுகள் அசையாத வானத்தில்
ஓர் செம்பருந்து
வெறுமனே நீந்திக் களிக்குமே
அந்த உயரம் தானே
அது?
நேற்றைய ஆடு இன்றைய விருந்து நாளைய மலம், வரிசை சரிதானே? ஓம் ஓம் ஓம்
நூறு வயிறுகளுக்குள்
இறங்கிச் சென்று
ஒய்யாரமாய்
அமர்ந்து கொண்டு
முதல் முறையாக
யோசிக்க தொடங்குகிறது
ஒரு ஆடு
ஒரு வேளை
கடவுள்
நம்மை
பலி ஆடாக
படைத்து விட்டாரா?
சரி, இரு சிறகுகளால் நடக்கத் தொடங்கினால் என்ன ஆகும்?
இடது பாதம்
எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்
காலடிகளை எல்லாம்
அக்கணமே
பழங்கதைகள் ஆக்கியபடி
தன் காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது
வலது பாதம்
போலவே
வலது பாதம்
எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்
காலடிகளை எல்லாம்
அக்கணமே
பழங்கதைகள் ஆக்கியபடி
தன் காலடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறது
இடது பாதம்
இப்படியாகத்தான்
நான்
மூச்சிறைக்க
நடந்து…
நடந்து…
நடந்து…
நடந்து கொண்டிருப்பதை எல்லாம்
வெறும் பழங்கதைகளாய் ஆக்கி கொண்டிருக்கின்றன
இந்த எழவெடுத்த
பாதங்கள்
குட்டியூண்டு அரிசி மணிக்கு ஆயிரம் கால்களோ? ஆயிரம் கண்களோ?
அடுத்த ஊர் எதுவென்று அவனுக்கே தெரியாது
அவனொரு
இலக்கில்லா நெடுந்தூர பயணி
அவன் பயணித்துக் கொண்டே இருக்கும்
அத்தனை ஊர்களுக்கும்
அவனுக்கும் முன்னே
மிகச் சரியாக பயணித்து முடித்து
கொதி உலை வெந்து
பதமாகி காத்திருக்கின்றன
அவன் பெயர்
எழுதப்பட்டிருக்கும்
அரிசி மணிகள்
ஒரு வேளை, ஆகாயத்திலும் இல்லாமல் இருப்பவனோ?
எப்படியும் பிடித்து விட முடியும்
என்று
மெய்யாகவே நம்பி
நகரத் தொடங்கிவிட்ட
பேருந்தை நோக்கி
சிட்டாய் பறந்து
ஓடி வந்து கொண்டிருக்கும் ஒருவன்
அந்த சில கணங்களுக்கு
பேருந்துக்கு
உள்ளே இருப்பவர்களில்
ஒருவன் அல்லன்
பேருந்துக்கு
வெளியே இருப்பவர்களில்
ஒருவனும் அல்லன்
உண்மையில்
இந்த பூமியிலேயே
இருப்பவன்
அல்லன்
அலைகளுக்கு அடியில் இருக்கின்றன உங்கள் முகங்கள்
வாயாடி தண்ணீரே
ஓயாத உன் பேச்சை
கொஞ்சம் நிறுத்தேன்
ஒரே ஒரு நிமிடமாவது
நிறுத்து
அமைதியாய் இரு
ஏனா?
இப்போது
ஒரு முறை
என் முகத்தை
பார்த்துக் கொள்ள வேண்டும் போல
இருக்கிறது
எனக்கு
அதனால்
திகம்பர கதவுகள்
ஒருவர் பின் ஒருவராக
மூச்சிறைக்க ஓடி வருகிறார்கள்
நான்கு சீடர்களும்
அப்படியும்
இரு வினாடிகள்
தாமதமாகிவிட்டிருந்தது
இன்னும்
சூர்யன் முளைக்காத வெட்டவெளி
பசுங்கிளைகள் பரப்பி நிற்கும்
ஆலமரத்தடியில்
வகுப்பினை தொடங்கிவிட்டிருந்தார்
குருதேவர்
கிளைகளில்
ஓசை எழாது அமர்ந்திருக்கும் குருவிகள்
மலை உச்சி செம்பாறைகள்
இன்னும் அணையாது எரிந்து கொண்டிருக்கும்
சில நட்சத்ரங்கள்
புலரி வானம்
உடன்
மற்ற சீடர்கள்
எல்லோரும்
மிகச் சரியான நேரத்தில் வந்து
வகுப்புக்கு உள்ளே
அமர்ந்திருக்கிறார்கள்
நால்வரும்
தலைகுனிந்தபடி
வகுப்புக்கு
வெளியே
நின்று கொண்டிருக்கிறார்கள்
ஒரு முகமும்
தெரியவில்லை
ஒரு குரலும்
கேட்கவில்லை
இல்லாத பெருங்கதவுகள்
அறைந்து மூடப்பட்டுவிட்டன
அவர்களுக்கு
அத்தனை அம்மணங்களும் உங்கள் சின்ன கண்களுக்கு வெளியே தான் மதர்த்திருக்கின்றன
கடவுளே
என் பாதங்களுக்கு
கீழே
மட்டும் அல்ல
என் தலைக்கு
மேலேயும்
கோடான கோடி
வேர்களை
பரப்பி வைத்திருக்கும்
இந்த பூமியின் மீது தான்
இத்தனை காலமாய்
நான்
நடந்து கொண்டிருக்கிறேனா?
கழுத்து வலிக்க
அண்ணாந்து
பார்த்துக் கொண்டிருப்பவனின்
பால்முகம் கண்டு
மெல்ல சிரித்துக் கொள்கின்றன
உச்சி மலைக் காடுகள்
***
வ. அதியமான் – திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வசித்து வருகிறார். குடைக்காவல் எனும் முதல் கவிதை தொகுப்பு சால்ட் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: vaadhiyamanrasan@gmail.com
