கற்களோடானது இவ் வாழ்வு
வேர்பிடித்து நிற்கும்
அம்மாவுக்கு
பாரம் கூடிய கிளை நான்
பெருங்காற்றுக்கு
கெடு சூழலுக்கு
காத்துக்கொண்டு நின்றாள்
எத்தனைமுறை
என் துண்டிப்பை நான்
விரும்பினேன்
வேரை விட்டு
கிளையை விட்டு
வெளியில் பறந்துருளும்
இலைகளாக
மாறிக்கொள்ள எண்ணினேன்
ஒரு
ஒரு
முறையும் வலி தான்
ஒவ்வொரு முறையும்
எல்லாமும் தாங்கினாள்
நிலம் பிடித்து
நீரிருப்பான வேர்களோடு
கிளைகளில் பூ மலர்வதும்
நானானேன்.
இந்த ஊருக்கு
பழுத்த உண்மைகளைக்
கற்றுக் கொடுத்தது யார்?
வளைவுகளில்
இடித்துக் கொண்டு
பாதைகளில் வழுக்கிவிழுந்து
நிஜத்தின் மீது
ஊர்ந்து கொண்டிருக்கும்
புழுவாகச் செல்ல
ஆரம்பித்து விட்டேன்.
என்னுடைய கிண்ணத்திற்கு
தினசரி அரிசி
உறுதி செய்யப்பட்டிருக்கிறது
அடுப்பில் ஏற்றினால்
பொலபொலவென
வெந்து விடுகிறது
கை கால்களை நீட்டி
மடக்கி
தோணுகிறதை யெல்லாம்
பேச முடிந்து
இவ் வாழ்வுதான்
எத்தனை
எளிமையாக
வந்து சேர்ந்திருக்கிறது
அம்மா
அரிசியில் கிடக்கும்
கற்களாகினாள்
ஊர்ந்து நெளியும்
வண்டாக அதில்
அப்பா மாறிப்போனார்
உண்ணும்போது
புரையேறினால்
ஞாபகமாய்
தலையில் தட்டிக் கொள்கிறேன்.
சிக்கிமுக்கிக் கற்களைக்
கைகளில்
ஏந்தியிருக்கிறேன்
மிகப் பழைய வாழ்வின்
திரண்ட வடிவம் இது
மிருதுவான குளிர்ச்சிக்கும்
உள்ளுறைந்த சூட்டிற்குமாக
யுகயுகமான சத்தம் கேட்கிறது
கற்கள் மண்டிய பாதையில்
நடக்கிறேன்
கற்களுரசி வரும் நீரைப்
பருகுகிறேன்
விளையாட்டின் போது
தலை மயிர்களுக்குள்
கல் நெருஞ்சிகள்
பூத்துக் கொள்வதை
அம்மா
ஒவ்வொரு நாளும்
வாரி யெடுத்துவிடுகிறாள்
கல்லுக்கும்
மண்ணுக்குமாக வளர்கிறேன்
கற்கள் கூடிக் கிடக்கும்
தானியங்கள்
இருப்பிருக்கிறது
யாரும் குறிப்பு சொல்லாமல்
கைகள் குவித்து
நடுகற்களை வணங்குகிறேன்
நாம் சந்திக்கும்போது
எனக்கொரு
கல் கொடுங்கள்.
***
நந்தன் கனகராஜ் – சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம். தனியார் நூற்பாலைகளில் பணி செய்து,தற்போது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் ஆலோசகர். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள்,கட்டுரைகள் எழுதி வருகிறார். அகாலத்தில் கரையும் காக்கை (2020), மேழி நகரும் தடம்(2022), மலைச்சி (2024) ஆகிய கவிதை நூல்கள் வெளியாகி உள்ளன. புதுக்கோட்டை மாவட்ட புத்தகத் திருவிழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருது, சென்னை படைப்பு குழும கவிதை நூல் விருது, தமுஎகச அமைப்பின் மாநில இலக்கிய விருது ஆகியன பெற்றுள்ளார். செம்மலர் மாத இதழின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டு வருகிறார். இவரது கவிதைகள் மலையாளம்,ஆங்கிலம்,வங்காள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.மின்னஞ்சல்: skrnandhan@gmail.com
