Monday, May 25, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்சிவபிரசாத் குறுங்கதைகள்

சிவபிரசாத் குறுங்கதைகள்

ரேக்ளா – Race

டே ராஜா!” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன். ரேக்ளா வண்டியை ஓட்டியபடியே கை அசைத்தான் மகேந்திர பூபதி. அதில் அவனோடு ஒருவரும் அமர்ந்திருந்தார். அது அவனின் அப்பாவாக இருக்க வேண்டும். கொதித்து ஆறும் பாலின்மீது படர்ந்து பரவும் பாலாடை போல வெள்ளை நிறத்தில் பளபளக்க அந்த ரேக்ளா மாடு துள்ளிக் குதித்து ஓடியது. அதன் கம்பீரமும் வேகமும் பார்த்த உடனேயே மனதை ஈர்த்தன.

“டே பூபதி! உனக்கு ரேக்ளா வண்டியெல்லாம் ஓட்டத் தெரியுமா?” ஆச்சரியத்துடன் கேட்டபடி, வண்டியோடே நானும் ஓடினேன்.

“ஆமாம்டா ராஜா. நாளைக்கு ஸ்கூலில் பார்ப்போம்,” என்று கர்வமாகக் கத்தியபடி, வெள்ளைக் காளையில் அமர்ந்த இளவரசனைப் போலக் கடந்து போனான்.

மகேந்திர பூபதி என்னோடு ஆறாம் வகுப்பில் ஒன்றாகப் படிக்கிறான். வகுப்பில் அவன் தான் உயரமாகவும், அதற்கேற்றாற்போலப் பருமனாகவும் இருப்பான். அடர்த்தியான சுருள் முடியோடு மாநிறமாக இருப்பான். தினமும் அவன் நெற்றியில் அகன்ற கோடு போலச் சந்தனம், குங்குமம், அதற்கு மேல் மஞ்சள் என வைத்து வருவான். இரண்டு வருடங்களாக ஆறாம் வகுப்பிலேயே தோல்வியுற்றதால், மூன்றாம் வருடமாக எங்களோடு படித்தான். “இனி பள்ளிக்குப் போகமாட்டேன்” என்று அடம்பிடித்தவனை, “இந்த ஒரு வருடம் மட்டும் போ. இந்த வருடமும் தேர்ச்சி பெறவில்லை என்றால் பள்ளிக்கு வர வேண்டாம்” என அவன் அப்பா கட்டாயப்படுத்தியதால் வருகிறான்.

மறுநாள் பள்ளிக்குச் சென்றதும், மகேந்திர பூபதி ரேக்ளா வண்டி ஓட்டி வந்ததை வகுப்பில் இருந்தவர்களிடம் சொன்னேன். எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். யாரோ ஒரு மாணவன் வகுப்பு ஆசிரியர் சுதமதி டீச்சரிடம் சொல்ல, அவர் பூபதியை “ரேக்ளாக்காரன்” என்று கூப்பிட்டார். அவர் சொல்வதைப் பார்த்து வகுப்பே கூப்பிட ஆரம்பித்தது. இதனால் பூபதி கோபப்படுவான் என்று பார்த்தால், ஏதோ மாவீரன் என்ற பட்டம் கிடைத்ததைப் போலப் பெருமைப்பட்டான்.

பெரும்பாலான நாட்களில் காலையில் வந்துவிட்டு, மதியம் ஓடிவிடுவான். “அப்படி எங்கடா போற?” என ஒருமுறை கேட்ட போது, “ரேக்ளா மாட்டுடன் விளையாடப் போகிறேன்” என்பான். அவனின் அப்பா சாமி என்கிற பெருமாள் மதுக்கடை வைத்திருந்தார். அவர்களின் தோட்டத்தில் ரேக்ளா மாடு மேய்ந்துகொண்டு இருக்குமாம். அதைப் பராமரிக்க வேலை ஆள் கூட உண்டாம். என்னையும் மாட்டுடன் விளையாடக் கூப்பிடுவான். எனக்குப் போக ஆசைதான். ஆனால், எங்கள் ஊர் பையன்கள் என் அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள் என்பதால் மறுத்துவிடுவேன்.

பூபதியின் அப்பா ரேக்ளா பந்தயத்தின்மீது பைத்தியம் கொண்டவர். ஒருமுறை போட்டியின் போது வண்டியிலிருந்து விழுந்து பெரிய காயங்களோடு உயிர் தப்பினாராம். அதிலிருந்து அவர் போட்டியில் கலந்துகொள்வதில்லை. ஆனால், தன் மகன் பூபதியைப் போட்டிக்குத் தயார் செய்து வருகிறார்.

மகேந்திர பூபதி ஒவ்வொரு சனி, ஞாயிறும் காலை பத்து மணிக்கு வண்டியில் எங்கள் வீட்டைக் கடந்துப் போவான். அப்போதெல்லாம் என் பேரைச் சொல்லிக் கத்துவான். நான் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் என்னைப் பார்த்து மிக உற்சாகமாகக் கையசைத்துச் செல்வான். நானும் அவனின் வெள்ளைக் காளையின் வேகத்தை ரசித்தபடியே நின்றிருப்பேன்.

எனக்கு அவன் ரேக்ளா வண்டியில் ஏறி ஊரைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் வகுப்பில் இன்னும் அவனோடு நெருக்கமாகப் பழகினேன். பள்ளியில் அவனோடே சேர்ந்து சுற்றினேன். ஒரு நாள் ரேக்ளா வண்டியில் என்னையும் கூட்டிப் போக வேண்டும் என்ற ஆசையையும் சொன்னேன்.

“சரிடா எங்க அப்பாகிட்டச் சொல்லுறேன்,” என்று சொன்ன பூபதி, அடுத்த நாளிலிருந்து ஏனோ என்னைத் தவிர்க்க ஆரம்பித்தான். சந்தோஷ் என்ற பையனோடு சேர்ந்து சுற்றினான்.

ஒரு நாள் சந்தோஷிடம் பூபதி என்னிடம் பேச மறுக்கும் காரணம் கேட்டேன்.

“கீழ்சாதிப் பசங்களை ரேக்ளா வண்டியில ஏத்தக் கூடாதுன்னு அவன் அப்பா சொல்லிட்டாராம்,” எனச் சொன்னான். ஒரு சிறுவன் சுமக்க வேண்டியிராத வடு ஒன்று என் மனதை அழுத்தியது. எனக்கு ஏமாற்றமாக இருந்தது. நானும் பூபதியோடு பேசுவதை நிறுத்திவிட்டேன்.

அந்த வருடமும் பூபதி ஆறாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், பள்ளியை விட்டு நின்றுவிட்டான். என்னுடைய அப்பாவின் பணிமாறுதல் காரணமாக நானும் சொந்த ஊரை விட்டு வந்து வேறு நகரத்தில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டேன். அவனை இருபது வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் சந்தித்தேன்.

என்னுடைய கிராமத்திற்குப் போகும் கடைசி மினிபஸ்ஸைத் தவறவிட்டதால், ஏதேனும் கார் பேசிப் போகலாம் எனப் பார்த்தபோது, தூரத்தில் ஒரு வெள்ளை நிற அம்பாசிடர் நின்றிருந்தது. நான் அதன் அருகில் சென்று கூப்பிட்ட போது, உள்ளே இருந்து ஒரு பெரிய உருவம், வெள்ளை நிற வேட்டி சட்டையில் இறங்கியது. நெற்றியில் அகன்ற சந்தனக் கோடு, அதில் குங்குமமும் மஞ்சளும் வைக்கப்பட்டிருந்தது.

“நீங்க மகேந்திர பூபதி தானே?” எனக் கேட்டேன்.

“ஆமாம்,” என்று சொன்னவன், என்னை யாரென்று அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் யோசித்தான். என்னைப் பற்றிச் சொன்னதும் ஞாபகம் வந்தவனாகப் பிரியமுடன் கையைப் பிடித்து நலம் விசாரித்தான். நானும் அவன் குடும்பம் குறித்து விசாரித்தேன்.

“எல்லாம் போயி கடைசியில இந்த வண்டி மட்டும்தான் மிஞ்சிச்சு,” என்றான்.

வாடகைக்கு வண்டி வேண்டும் என்றதும் ஆர்வமாக வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான். என்னையும் அமரும்படி சொன்னான். 

*

அரை டாக்டர்

​ஞாயிற்றுக்கிழமைக் காலை பதினோரு மணிக்கு பள்ளிக்கூட வராண்டாவில் சீட்டாட்டம் துவங்கியிருந்தது. ஜோயல் தாத்தாவோடு மோகன், தினகரன், சுபாஷ், கெளரிசங்கர் எல்லோரும் ரம்மி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

​“டே புல்லட்டு, தீப்பெட்டி இருக்கா?” என்று கேட்டபடி சுதாகர் வந்தான். சுபாஷை யாராவது ‘புல்லட்டு’ என்று பட்டப்பெயரில் கூப்பிட்டால் கோபம் வந்து கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்துவிடுவான். இன்று கொஞ்சம் நல்ல மனநிலையில் இருந்ததால், “இல்லடா நண்பா,” என்றான்.

​“யோவ் ஜோயலு, உன்கிட்ட இருக்கா?” என்று தாத்தாவிடம் கேட்டான்.

​“டே, அவரு நம்மகூட சீட்டாட வந்துட்டா, பேரச் சொல்லிக் கூப்பிடுவியா? கொஞ்சம் வயசுக்கு மரியாதை கொடுடா,” என்றான் கெளரி சங்கர்.

​“பாரு தீனா, நம்ம சயின்டிஸ்ட்டு கருத்துச் சொல்ல ஆரம்பிச்சுட்டான்,” என்று கேலி செய்தான்.

​கெளரி சங்கர் மீண்டும் ஏதோ சொல்ல ஆரம்பிக்கும்போது, “சரி விடுங்கப்பா. அவன் சொன்னா சொல்லிட்டுப் போறான். இதுக்காக சண்டை போட்டுக்காதீங்க,” என்று ஜோயல் தாத்தா சமாதானப்படுத்தி, சுதாகருக்குத் தீப்பெட்டியைக் கொடுத்தார்.

​மோகனுக்குப் பக்கத்தில் அமர்ந்தவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த ‘வில்ஸ்’ சிகரெட்டை எடுத்தான். அதை ஸ்டைலாகப் பற்ற வைத்து, ஆழமாக இழுத்து புகையைச் சீட்டாடிக் கொண்டிருப்பவர்கள் பக்கமாய் விட்டான். “டே தொழுக்கா, புகையை அந்தப் பக்கம் போய் விடுடா,” மோகன் சற்றே எரிச்சலோடு சொன்னான். மீண்டும் இழுத்து வேண்டுமென்றே கூட்டத்தின் பக்கமாய் புகையை விட்டபடி, “இது அரசாங்க சொத்து. எங்கே வேணாலும் சிகரெட் பிடிப்பேன். உனக்குப் பிடிக்கலையா? நீ போய் அந்தப் பக்கம் விளையாடுடா,” என்றான்.

​சுதாகர், சீரகாப்பாடி விநாயகா மருத்துவக் கல்லூரியில் ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டெண்டாக வேலைக்குச் சேர்ந்து இன்னும் மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால் திமிராகப் பார்ப்பது, தெனாவெட்டாகப் பேசுவது என்று சுதாகர் ஆளே மாறியிருந்தான்.

​தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப் பண்ணிக்கொண்டிருக்கிறானோ? என்று நினைத்த தினகரன், “நண்பா, நீயும் விளையாட வாடா,” என்று கூப்பிட்டான். “இந்த பத்து ரூபா, இருபது ரூபா பெட்டுக்கெல்லாம் யாரு தினா விளையாடுவா? அம்பது நூறுன்னு பெட் வச்சா விளையாடலாம்,” என்றான்.

​“நீ என்னப்பா பெரிய கை. வேலைக்குப் போற. நாங்க படிச்சுக்கிட்டுதானே இருக்கோம். எங்களால் இதுதானே முடியுது?” என்று தினகரன், சுதாகரை வேண்டுமென்றே உயர்த்திப் பேசினான். சுதாகர் பக்கத்திலிருந்த தூண் மீது சாய்ந்துகொண்டு பெருமையாகச் சிரித்தான்.

​“ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டெண்ட் என்ன வேலை செய்யணும் நண்பா?” சுபாஷ் தன் பங்கிற்கு சுதாகரின் வாயைக் கிளறினான்.

​“அதுவா புல்லட்டு, ஆபரேஷன் நடக்குதுன்னா அறுக்கறதுக்கு, திரும்ப தைக்கறதுக்குத் தேவையான கருவிகள் ஊசி, மருத்துன்னு எல்லாத்தையும் நாங்கதான் ரெடி பண்ணி வைப்போம்” என்று ஆர்வமாகச் சொன்னான் சுதாகர்.

​“ஆபரேஷன் பண்றப்போ எத்தனை பேர் இருப்பீங்க நண்பா?” தினகரன் கேட்டான்.

​”மயக்க மருந்து கொடுக்கிற டாக்டரு, ஆபரேஷன் பண்ற டாக்டரு, சீனியர் சிஸ்டரு, ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டெண்ட்டுன்னு அஞ்சாறு பேருக்கு மேல இருப்போம் நண்பா.”

​“நீ எட்டாவது வரைக்கும் தான படிச்சிருக்க. எப்படி நண்பா சமாளிக்கிற?” என்று சுபாஷ் கேட்டதும், சுதாகர் சிகரெட்டை கடைசி முறை இழுத்து புகையை விட்டபடி, “அதெல்லாம் பார்த்துக்கிட்டேயிருந்து கத்துக்கிட்டா வந்திடும் புல்லட்டு,” சற்றே பெருமை பொங்கச் சொன்னான்.

​“அப்ப அஞ்சு வருஷம் எம்.பி.பி.எஸ். படிச்சு, ஒரு வருஷம் ஹவுஸ் சர்ஜன் முடிச்சு, திரும்ப எம்.எஸ். ரெண்டு வருஷம் படிச்சு, இரண்டு மூணு வருஷம் பிராக்டீஸ் பண்ணி வரதெல்லாம் வேஸ்டா நண்பா?” சுபாஷ் மனதுக்குள் சிரித்தபடியே கேட்டான்.

​“அவுங்க ஆபரேஷன் கத்துக்க பத்து வருஷம் கூட எடுத்துக்கலாம். ஆனா நானெல்லாம் இந்த மூணு மாசத்துக்குள்ளேயே நிறைய தெரிஞ்சுகிட்டேன் புல்லட்டு. ‘அரை டாக்டர்’ ஆயிட்டேன்னா பார்த்துக்கோ,” என்று பெருமை பொங்க சுதாகர் சொன்னான்.

​“என்னது, ‘அரை மெண்டல்’ ஆயிட்டியா?” கெளரி சங்கர் சிரித்தான்.

​உடனே சுபாஷ் தலையைக் கோணித்துக்கொண்டு நாக்கை வெளியே துருத்தி ஒரு நிமிடம் செத்துப்போனவன்போல செய்கை காட்டி, “இல்லப்பா, ‘அரை டாக்டர்’ ஆயிட்டானாம்.” அவன் செய்கையைப் பார்த்து எல்லோருக்குமே சிரிப்பு வந்துவிட்டது. வராண்டாவே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

​சுதாகர் மட்டும் சிரிக்கவில்லை. சிகரெட் துண்டைக் கீழே போட்டு மிதித்தவன், அவர்கள் ஒவ்வொருவரையும் ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தான். அவன் குரல் சட்டென்று தணிந்து ஒரு குரூரமான அழுத்தத்தோடு வெளிப்பட்டது.

​“ஆமாண்டா… நான் ‘அரை டாக்டர்’ தான். ஆனா ஆபரேஷன் தியேட்டர்ல நான் என்ன பண்றோம்னு தெரியுமா? பிணத்தோட மண்டையை உடைச்சு மூளையை வெளிய எடுப்பேன். உடலை அறுத்துக் குடலை உருவிப் போடுவேன். ரத்த வாடைக்கு நடுவுல இதையெல்லாம் பண்றப்போ நீங்க இப்பச் சிரிக்கிற மாதிரியே நானும் சிரிப்பேன்,” என்று ஆவேசமாகச் சொன்னான்.

​சிரிப்பொலி சட்டென்று அடங்கியது. கையில் சீட்டுகளுடன் நண்பர்கள் ஒருவித நடுக்கத்தோடு சுதாகரைப் பார்க்க, அவன் விறுவிறுவென வராண்டாவை விட்டு இறங்கி நடந்தான். அந்தப் பள்ளிக்கூட வராண்டா ஒரு மயான அமைதியில் உறைந்தது.

*

கைப்பேசி

​ராஜாவிற்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் தன்னுடைய கைப்பேசியில் பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்தது. பார்த்துவிட்டுப் போகலாம் என அடக்கிக் கொண்டான். கைப்பேசியில் ‘லோ பேட்டரி’ எச்சரிக்கையும் வந்தது. ஆனாலும் கண்டுகொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தான். படத்தின் கடைசி கணத்தில் கைப்பேசி அணைந்து போனது. மிகுந்த எரிச்சலோடு கைப்பேசியைக் கீழே வைத்தவன், டார்ச் லைட்டைத் தேடினான். கிடைக்கவில்லை. பொறுமை இழந்தவனாய், தொலைக்காட்சி வைக்கப்பட்டிருக்கும் மர மேசையில் இருந்த எல்லாப் பொருட்களையும் கலைத்துப் போட்டு ஆராய்ந்தான். ஆனால், டார்ச் லைட் மட்டும் கிடைக்கவேயில்லை.

​கட்டிலில் படுத்துத் தன்னுடைய காதலியிடம் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த வாசுவிடம் கேட்டான். “நான் பார்க்கல ராஜா. ஒருவேள செந்தில் எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம்,” என்றான். செந்தில் இவர்களின் அறை நண்பன். இரவு உணவு வாங்கப் போயிருந்தான். இவர்கள் தங்கியிருப்பது மலை அடிவாரம். மூன்று பேரும் வெவ்வேறு மலை கிராமங்களில் ஆசிரியராகப் பணி புரிகிறார்கள். யாருக்கும் சமைக்கத் தெரியாது. இங்கு இருந்த ஒரு சின்ன உணவகத்தில் சாப்பிட்டு வந்தார்கள். அதன் உரிமையாளர், இரவு நேரத்தில் மட்டும் போதுமான வருமானமில்லை எனk கடை போடுவதை நிறுத்திவிட்டார். எனவே, ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிறிய நகரத்தில் இருந்த உணவகத்தில் உணவு ஆர்டர் செய்திருந்தார்கள்.

​இரவு எட்டு மணிக்கு வரும் தனியார் பேருந்தில் உணவுப் பொதியைக் கொடுத்து அனுப்புவார்கள். பேருந்து வரும் நேரத்திற்குப் போய் வாங்கி வர வேண்டும். இந்த வேலையை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எனத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள். இன்று செந்தில் வாங்க வேண்டிய நாள் என்பதால் சென்றிருந்தான்.

​ராஜாவிற்குச் சிறுநீர் முட்டிக் கொண்டு இருந்தது. எரிச்சலோடு பாயில் கிடந்த தலையணையை உதைத்தான். வேறு வழியில்லாததால், இருளிலேயே தைரியமாகப் போய்விடுவோமா என யோசித்தான். அப்போது தொலைக்காட்சிக்குப் பக்கத்தில் செந்திலின் கைப்பேசி சார்ஜில் போடப்பட்டிருப்பது கண்ணில் பட்டது. அதன் பாஸ்வேர்டு தெரியவில்லை என்றாலும், அவசரத்திற்கு எடுத்து டார்ச் லைட்டைப் போட்டுக் கழிப்பறையை நோக்கி ஓடினான்.

​அவர்கள் தங்கி இருந்த அறைக்கும் வெளியே கொஞ்ச தூரமாய்க் கழிப்பறை இருந்தது. மேற்கூரை இல்லாத கழிப்பறை. அதில் மின்விளக்கு வசதியும் இல்லை. கழிப்பறையின் பின்புறம் செடிகொடிகள் வளர்ந்து பெரிய புதர் காடாய்க் கிடந்தது. இரண்டு மூன்று முறை அதிலிருந்து பாம்பு வந்ததால், இரவில் போகும்போது டார்ச் லைட்டோடுதான் சென்றார்கள். வீட்டின் உரிமையாளரிடம் மின்விளக்குப் போடச் சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லை.

​ராஜா சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த போது, வலது காலின் பக்கத்தில் ஏதோ ஊர்வதைப் போல உணர்ந்தான். கைப்பேசியின் வெளிச்சத்தில் பார்த்தான். தேள் ஒன்று கால்களுக்கு இடையே இருந்தது. திடீர் வெளிச்சத்தின் காரணமாகத் தன் கொடுக்குகளைத் தூக்கியபடி ராஜாவின் கால் பக்கம் வந்தது. பதட்டத்தோடு வேகமாய் பின்னால் நகர்ந்தான். அங்கிருந்த இரும்பு வாளியில் இடித்துக் கீழே விழப் போனான். ஆனால், அதிர்ஷ்டவசமாக அருகிலிருந்த சிமெண்ட் தொட்டியின் சுவரைப் பிடித்துக் கொண்டான். இந்தப் போராட்டத்தில் அவனிடமிருந்த கைப்பேசி, மீன் நழுவி விழுவதைப் போலத் தொட்டிக்குள் விழுந்தது.

​கழிப்பறை முழுக்க இருள் சூழ்ந்த நிலையில், தொட்டித் தண்ணீரில் அவன் வலது கையை விட்டுத் தேடினான். அடி ஆழத்தில் கிடந்தது. பாசிகள் ஒட்டியிருந்த கைப்பேசியை எடுத்து, அவன் லுங்கியில் துடைத்தான். அதன் பொத்தானை வேகமாக அழுத்தி அணைத்தான்.

​எதிர்பாராமல் நடந்த தவறை நினைத்து மனம் படபடத்தது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. செந்தில் இந்தக் கைப்பேசியை வாங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. நாற்பதாயிரம் மதிப்புள்ள கைப்பேசியை எட்டு மாதத் தவணையில் வாங்கி இருந்தான். தண்ணீரில் விழுந்த விஷயத்தைச் சொன்னால் என்ன நடக்கும் என்று நினைக்கவே பயமாக இருந்தது.

​ராஜா பணிக்குச் சேர்ந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. வாசுவின் நண்பன் என்பதால் அவனுடைய பரிந்துரையின் பேரில் இங்கே தங்கி இருந்தான். ஆனாலும், செந்தில் இவன் அறையில் தங்கி இருப்பதை முழு மனதாக ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜாவின் பள்ளித் தலைமையாசிரியருக்கும் செந்திலுக்கும் ஏதோ ஒரு பிரச்சினையில் மனவருத்தம். அக்கோவத்தைத் தேவையில்லாமல் ராஜாவிடம் காட்டிக் கொண்டிருந்தான்.

​ராஜா தன்னுடைய இஷ்ட தெய்வங்களை எல்லாம் வணங்கியபடி வாசுவிடம் ஓடினான். இவன் ஓடி வந்த வேகத்தையும், கலவரமான முகத்தையும் பார்த்து வாசு படுக்கையை விட்டு எழுந்தான். “ராஜா என்ன ஆச்சு? ஏதாச்சும் பாம்பைப் பார்த்துப் பயந்திட்டயா?” என்றான். ராஜா அவனிடம் விஷயத்தைச் சொல்லித் தன்னிடமிருந்த கைப்பேசியைக் காட்டினான். வாசு அதை வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தான். கைப்பேசியின் கவரெல்லாம் நனைந்து போயிருந்தது. அதைக் கழற்றிக் கைப்பேசியை ஆராய்ந்தான். தண்ணீர் உள்ளே போயிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகத் தோன்றியது.

​”ராஜா, இப்போ ஆன் பண்ணினா போன் முழுசா கெட்டுப் போயிடும். இதைக் கடையில கொடுத்துதான் சரி பண்ணணும்னு நினைக்கிறேன்.” செந்திலிடம் இதை எப்படிச் சொல்லிச் சமாளிப்பது என்று இருவருமே கவலை கொண்டார்கள்.

​”செந்தில் போன் வாங்கி ஒரு மாதம் கூட ஆகலதானே. அப்போ வாரண்டி ஒரு ஆறு மாதத்திற்காவது இருக்காதா?” என்றான் ராஜா.

“இருக்கும். ஆனா, போன் தண்ணியில விழுந்தாலோ, டிஸ்பிளே போனாலோ வாரண்டி கிடையாதுன்னு நினைக்கிறேன்.”

“அப்போ, போனை இன்சூரன்ஸ் பண்ணி இருந்தா சரி பண்ணித் தருவாங்கதானே?”

“அட, நீ வேற. இன்சூரன்ஸ் மட்டும் பண்ணி இருந்தா புது போனே கூட வாங்கிக்கலாம். ஆனாலும், செந்தில் வச்சிருந்த புகைப்படங்கள், வீடியோ, முக்கியமான கோப்புகள் எல்லாம் இனி போயிடும். அதுதான் கொஞ்சம் கஷ்டம்.”

“தெரியாமல் செய்த தப்புதானே. எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்க மாட்டானா? சரி பண்ணுவதற்கான தொகை எவ்வளவு ஆனாலும் கொடுத்துடலாம்”

“புரிஞ்சுப்பானு தான் நினைக்கிறேன். ஆனாலும், உனக்கும் அவனுக்கும் இன்னும் சரியா ஒத்துப் போகல. உன்னால தான் இது ஆச்சுன்னு தெரிஞ்சா ஒருவேளை ரொம்ப பிரச்சினை பண்ணினாலும் பண்ணுவான். வேணுனா, நான் பண்ணினதா சொல்லிருட்டா?” என்றான் வாசு.

“இல்ல வாசு. நீ எதுக்கு ரிஸ்கு எடுக்குற? எது நடந்தாலும் அத நானே பாத்துக்கிறேன்,” என்றான் ராஜா.

​அப்போது செந்தில் ஒரு கையில் உணவுப் பொதியும், மறுகையில் டார்ச் லைட்டும் பிடித்தபடி அறைக்குள் நுழைந்தான். 

இட்லி

“இட்லீ…!”

என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாகக் கத்தினேன்.

என் சத்தம் கேட்டு இயற்பியல் ஆய்வகத்தின் ஜன்னல் வழியாகக் கலைவாணி டீச்சர் கோபமாகப் பார்த்தார். அவரைக் கண்டதும் என்னோடு நின்றிருந்த ஆதியும் கோவிந்தும் வேகமாக ஓட ஆரம்பித்தனர். நான் ஒன்றும் புரியாமல் பள்ளியின் மைதானத்திலேயே நின்றிருந்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து, பதினொன்றாம் வகுப்பு அண்ணன் வந்து, “ஏன்டா, டீச்சரையே பட்டப் பேர் சொல்லிக் கூப்பிடுறியா? உனக்கு எவ்வளவு தைரியம்?” என்று என் கைகளைப் பிடித்து இழுத்தான். வசமாக மாட்டிக் கொண்டதால் பிடிவாதம் செய்யாமல் அமைதியாகச் சென்றேன்.

சத்தமாகக் கத்துவதில் பந்தயம் வைத்திருந்தோம். என்ன சொல்லி கத்துவது என்று யோசித்த போது, ‘இட்லி’ என்று கத்த வேண்டும் என ஆதிதான் சொன்னான். உடனே கோவிந்தனும் ஏதோ புரிந்துகொண்டவன் மாதிரி தலையை ஆட்டினான். “முதலில் நீ கத்து,” என்றான் ஆதி. நானும் கத்தினேன். ஆனால், டீச்சரின் பட்டப் பெயரைச் சொல்ல வைத்து என்னை மாட்டிவிடுவார்கள் என்று நினைக்கவில்லை.

நான் இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை. அவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு படித்தார்கள். நாங்கள் அனைவரும் ஒரே ஊர்க்காரர்கள். நான் அவர்களோடு ஒட்டிக்கொண்டு திரிந்தேன்.

“வாடா, நீதான் கத்தினவனா? எந்த கிளாஸ்?” கலைவாணி டீச்சர் கோபமாகக் கேட்டார்.

“ஆறாம் வகுப்புங்க டீச்சர்,” பயத்தோடே சொன்னேன்.

“புதுசா சேர்ந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகலை. அதுக்குள்ளே சேட்டையா?” என்று சொல்லியபடி என் சூத்தாம்பட்டையில் இரண்டு அடி வைத்தார். நான் வலி தாங்க முடியாமல் பின்புறத்தைத் தேய்த்தபடியே கத்தினேன். என் அலறலைக் கேட்டு வகுப்பில் அமர்ந்திருந்த அண்ணன்கள் எல்லாம் சிரித்தார்கள். அது எனக்கு அவமானமாக இருந்தது.

“நடந்தது என்னவென்று கேட்காமல் இப்படி அடிக்கிறீயே! நீ எல்லாம் ஒரு டீச்சரா?” என்று அழுது கொண்டே சொன்னேன்.

என்னுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டு ஏனோ டீச்சருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. தன் கையில் வைத்திருந்த மூங்கில் பிரம்பைத் தன் மேசை மீது வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தவர், “சொல்லுங்க சார். என்ன நடந்தது?” என்று கேலியாய்க் கேட்டார்.

நான் நடந்த எல்லாவற்றையும் சொன்னேன். ஆதி, கோவிந்தன் இருவரையும் பிடித்து வர ஆள் அனுப்பியவர், நான் இன்னும் தேம்பிக் கொண்டே இருப்பதைப் பார்த்து, மேசை மீது இருந்த இரண்டு சாக்லெட்டைக் கொடுத்துச் சமாதானம் செய்யப் பார்த்தார். நான் அதை வாங்க மறுத்து, தேம்பியபடியே நின்றேன். அந்தச் சாக்லெட் என் அவமானத்துக்கு விலையாகாது என என் மனம் அடம் பிடித்தது.

ஆதியையும் கோவிந்தனையும் இரண்டு அண்ணன்கள் கூட்டிக்கொண்டு வந்தார்கள். இருவரும் தலை குனிந்தபடியே கலைவாணி டீச்சர் முன்பு நின்றார்கள். அவர்களின் சூத்தாம்பட்டை டீச்சரின் பிரம்பால் பழுக்கப் போவதையும், இருவரும் அழுகப் போவதையும் எண்ணிச் சந்தோஷமாக இருந்தாலும், நண்பர்களை மாட்டிவிட்டது கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

ஆனால், டீச்சர் ஏனோ அவர்களை அடிக்கவில்லை. ஐம்பது தோப்புக்கரணம் போடச் சொன்னார். ஆதியைக் கூப்பிட்டு ஏதோ கேட்டார். அவன் சொன்னதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்தார். அவர்கள் இருவரையும் அனுப்பிவிட்டு, என்னை மட்டும் இருக்கச் சொன்னார். அவர்கள் போனதும்,

“டே தொப்புளான், இங்க வாடா,” என்றார்.

என் பட்டப் பெயரைச் சொல்லி டீச்சர் கூப்பிட்டதும், வகுப்பில் இருந்த அண்ணன்கள் எல்லாம் சிரித்தார்கள். எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆனாலும் அமைதியாக நின்றிருந்தேன்.

“தொப்புளான்!”

“டே தொப்புளான், கிட்ட வாடா,” கலைவாணி டீச்சர் இன்னும் கிண்டலாகக் கூப்பிட்டார்.

வகுப்பு முழுக்கச் சிரிப்பலை. நான் ஆத்திரம் தாங்காமல் “போடி இட்லி!” என்று கத்தியபடி, என் உயிர் பிடுங்கப்படுவது போல ஒரே ஓட்டமாக மைதானத்திற்கு ஓடினேன். நீண்ட தூரம் போய் யாராவது துரத்தி வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் வரவில்லை.

அடுத்த ஒரு வாரம் கலைவாணி டீச்சர் கண்களுக்குப் படாமல் மறைந்து திரிந்தேன். ஒரு நாள் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு லஞ்ச் பாக்ஸைக் கழுவிக்கொண்டிருந்தேன். அப்போது, “டே தொப்புளான்,” என்றக் குரல் கேட்டுத் திரும்பினேன். கலைவாணி டீச்சர் சிரித்துக்கொண்டே நின்றிருந்தார். அவரின் புன்னகை நிரம்பிய முகம் நம்பிக்கை தரவே, “குட் ஆப்டர்நூன் டீச்சர்,” என்று சொல்லியபடியே அருகில் சென்றேன்.

“என்னடா தொப்புளான், ஒரு வாரமா ஆள் கண்ணுலேயே படலை. ஸ்கூல் வரத்தானே செய்ற?” என்றார்.

நான் ஒன்றும் சொல்லாமல் சிரித்தபடியே நின்றேன். என் கையிலிருந்த லஞ்ச் பாக்ஸைப் பார்த்தவர்,

“மதியம் என்ன சாப்பிட்டே?” என்று கேட்டார்.

“இட்லிங்க டீச்சர்,” என்றேன்.

என் வலது கன்னத்தை மெல்லமாகக் கிள்ளி, “வெரி நாட்டி பாய்!” என்று இடது கன்னத்தில் செல்லமாக அடித்துச் சென்றார். 

***

சிவபிரசாத் – சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கியச் சிறுபத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ மற்றும் மொழிபெயர்ப்புத் தொகுப்பான “பால்மீசை” ஆகிய புத்தகங்களின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். மின்னஞ்சல்: Sivaprasath29@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here