Sunday, May 3, 2026
Homeஇதழ்கள்2020 இதழ்கள்தாமரைபாரதி கவிதைகள்

தாமரைபாரதி கவிதைகள்


கருஞ்சேற்று யானையின் தும்மல்

1.
பெயர் தெரியா மலை மரத்தில்
பெயர் தெரியாப் பூ மலர்தல்போல
பெயர் தெரியா அவனைக் கடந்து போகிறேன்.

2.
அடர் பனி வைகறை
இன்னும் உறக்கம்
நீளத்தான் வேண்டும்
கனவிலாவது நீளும்
அவனது சந்திப்பிற்காய்

3.
யாம்,
சந்திப்பின்
பிரக்ஞையிலூறிய
தகிப்பில் திளைக்க
திளைப்பில் தகிக்க
அவனோ
கருஞ்சேற்று
யானைக் கன்றாக
களிப்புறுகிறான்

4.
இவ்வளவு சீக்கிரமாகப்
பற்றிக்கொண்டானே
என்பதுதான்
அச்சுறுத்துகிறது
இவ்வளவு சீக்கிரமாகவே
பற்றுதலைக்
கைவிட்டுவிடுவானோயென்று

5.
கொஞ்ச நாள்கள் தொடர்பற்றிருப்பின்
எனக்கென்னவாயிற்றோ
என்றெல்லாம் விசனப்பட்டுக்கிடக்காதே
நானப்படியா விசனப்பட்டுக் கிடக்கிறேன் என்கிறான்
யாருக்கென்னவானால் எனக்கென்ன
என்றெல்லாம் நான் வாழவில்லையா
என்பவனைப் போட்டு மிதித்தாலென்ன?

6.
சனியன் பிடிச்ச
ஆன்லைன்
ஒரே ஒரு நாள் மட்டும்
உலகமெங்கும்
காலாவதியாகிடக்கூடாதா
என்றெண்ணுபவனை
இவ்வுலகு மன்னிக்குமா என்ன?

7.
போதுமிந்த அவஸ்தை
ஒரு தும்மலின் வேகத்தில்
சென்று விட வேண்டும்
அவனது நினைவுச்
சுவடேயற்ற
பிராந்தியத்துக்கு.


ஞாயிறின் பொலிவு
தைத்திங்கள்
பனிமுழு நிலவில்
மழை நனைத்த
வாழை இலையில்
வழிந்தோடும் திவலையென
பசுமையாய் நினைவினூடே
வந்து போகிறான்.
நாணல் தலைசாய்த்து
ஓடிய சிறுவாய்க்கால் கரையில்
அந்நிலவு சாட்சியாகப்
பிரியமாட்டேன்
என்றானே
இப்போதெங்கு போனான்?
தூரங்களே இல்லாத
ரம்மியமான இக்கனவு வழியே
காதகன் அவனைத்
தரிசித்துக் கிடப்பினும்
தற்கணத்தில் அருகினிலவன்
நனவென வரின்
இந்த ஞாயிற்றுக்கிழமையின்
பொலிவு மேலும் கூடுமே.


ஆட்டம்
வந்ததற்கும் போவதற்கும்
வழி அறிந்த நாம்தான்
இரண்டுக்கும் இடையில்
என்ன செய்வதென்று
அறியாமலே ஆடிக்கொண்டேயிருக்கிறோம்


வீடு பேறு
எல்லாவற்றையும் விட்டுச்
செல்வதற்காகத்தான்
எல்லாவற்றையும்
சேகரித்துக்கொண்டிருக்கிறோம்


மேகம்
தேவையற்றது
மனதில் நிரம்புகையில்
தேவையானது
மனதிலிருந்து நீங்குகிறது
மேகம் நீங்கிய மலையாக


சூர்ய விழி
மலையின் பின்னால் நீ
மறைவதாகப்
போக்குக் காட்டினாலும்
உனது குணப்பிரகாசம்
எமது விழிகளை
நோக்கித்தான்.

***

தாமரைபாரதி – மின்னஞ்சல்: thamaraibharadhi@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here