Tuesday, May 26, 2026

ராசாத்தி

ராஜேஷ் வைரபாண்டியன்

ராசாத்திக்கு அந்த விடியல் சாவு செய்தி வந்த வீட்டின் முதல் காலை போல இருந்தது. சூரியன் கிழக்கில் தென்பட ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அவள் மனசுக்குள் இன்னும் இரவின் குளிர் படர்ந்திருந்தது. கிழக்கே வானம் செம்மஞ்சளாக விரிந்தது. தினமும் அழகாகத் தோன்றும் அந்த நிறம் இன்று அழகாக இல்லை. இன்று அவள் ஊரை விட்டுப் போகிறாள். 

வீட்டின் முன் அவள் வரைந்த கோலத்தில் காகங்களும் சிட்டுக்குருவிகளூம் நடந்து திரிந்து கோலத்தை அழித்திருந்தன. அந்தக் காலடி அவள் வாழ்க்கையை யாரோ மெதுவாக அழித்துப் போகிற மாதிரி இருந்தது. சமையலறையில் அம்மா பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்தாள். “இன்னும் நேரமிருக்கே ராசு ” என்றாள் அம்மா. சில “இன்னும்” கள் நம் ஆறுதலுக்காக சொல்லப்படுவதில்லை. அவை நம்மை நின்ற இடத்திலிருந்து தள்ளி விழ வைக்கத் தான் சொல்லப்படுகின்றனவோ எனத் தோன்றியது.

ராசாத்தி கிணற்றடிக்கு வந்தாள். கடைசி முறையாக தண்ணீரை இறைக்க. வாளி மேலே வந்தவுடன் அதில் தெரிந்த முகம் தண்ணீருக்குள் கரைய முயற்சி செய்தது. இந்த கிணறு தான் அவளுக்கு அம்மா. இந்த தண்ணீரில தான் அவளது முதல் அழுகை, முதல் வெட்கம், முதல் ஆசை, முதல் பயம் எல்லாமே கரைந்திருந்தது. கிணற்றுக்குள் எட்டிப்பார்த்தாள். கிணறும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. ‘என்னை மறந்துருவியா?’ என்றாள். கிணறு மெளனித்திருந்தது. 

புளியமரத்தடிக்கு வந்து நின்றாள். இலைகள் காற்றில் நடுங்கின. அந்த நடுக்கம் இறந்தவளின் வளையல் சத்தம் போல கேட்டது. “நீ போகாதே” என மரம் சொல்வது போலிருந்தது. இந்த மரம் அவள் திருமணத்தைப் பார்த்திருக்கிறது. அவள் கண்ணீரும் அதற்கு தெரியும். அவள் மௌனமும் புரியும். மனிதர்களுக்கு நினைவுகள் கனமாக இருக்கும். மரங்களுக்கு நினைவுகள் வேர் மாதிரி பூமியெங்கும் பரவி இருக்கும். எவ்வளவு இழுத்தாலும் வெளிய வராது.

அம்மா காபி கொண்டு வந்தாள். காபி சூடாக இருந்தது. ஆனால் அவளுக்கு அது பிரிவின் சுவையை நினைவூட்டியது. “நல்லா இருக்கணும்ப்பு” என்றாள் அம்மா. அந்த வார்த்தைகள் ஆசீர்வாதம் போலில்லை. “நீ போக வேண்டிய அளவுக்கு நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா?” என அம்மாவின் கண்கள் கேட்டது. ராசாத்தி பதில் சொல்லவில்லை. சில கேள்விகளுக்கு பதில் இல்லை. அவை கேள்வியாக எப்போதும் இருப்பதே நல்லது.

அவள் வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தாள். கதவு, திண்ணை, சுவர் அனைத்துமே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தன. அந்த பார்வை மண்ணில் புதைக்கப்படும் முன் இறந்த உடம்பை பார்க்கும் கண்களை ஒத்து இருந்தது. இன்று அவள் போகவில்லை. இன்றிலிருந்து அவள் மெதுவாக மறையப் போகிறாள்.

சூரியன் உச்சிக்கு வந்தபோது, ராசாத்திக்கு நேரம் அவளைத் தவிர்த்து ஓடியது போலிருந்தது. காலையிலிருந்து உடம்பு எங்கும் நகரவில்லை. ஆனால் மனம் மட்டும் எங்கோ தொலைந்திருந்தது. இரண்டு தெரு தள்ளியிருக்கும் அம்மன் கோவிலுக்கு போனாள். கோயில் மணி ஒலித்தது. விளக்கு ஏற்றினாள். தீபம் நடுங்கியது. அந்த நடுக்கம் அவள் ஏற்றுக்கொண்ட வாழ்க்கையைப் பிரதிபலித்தது. அம்மனைப் பார்த்து எதுவும் கேட்கவில்லை. கேட்டால் அவள் தருவாள். அவள் தருவது திரும்பவும் வாங்கிக்கொள்கிற மாதிரி தான் இருக்கும். அவளுக்கு வேண்டியது ஒன்றே ஒன்றுதான் வேறு எதுவும் வேண்டாம். இந்த ஊரைவிட்டு மட்டும் என்னை அனுப்பிவிடாதே அம்மா என்றாள். அம்மன் பதிலேதும் சொல்லவில்லை.

கோயில் திண்ணையில் உட்கார்ந்தாள். அருகில் ஒரு மூதாட்டி பிச்சிப்பூ கட்டிக்கொண்டிருந்தாள். பூவின் வாசனை இறந்த உடம்பின் மேல் வைக்கப்படும் பூவின் வாசனையை ஒத்திருந்தது. மூதாட்டி அவளைப் பார்த்து சிரித்தாள். “எங்கம்மா போற?” என்றாள். “நகரம்” என பதிலிட்டாள் ராசாத்தி. அந்த வார்த்தை வாயிலிருந்து வெளியே வந்ததும், அது அவளுக்குள் ஏதோவொன்று மெளனமாய் உடைந்து சரிவது போலிருந்தது.

வீட்டுக்குத் திரும்பினாள். சுவரைத் தடவினாள். இந்த சுவரில் தான் அவள் உயரம் குறிக்கப்பட்டது. இந்த சுவரில் தான் அவள் முதல் கோபம் கிறுக்கல் சித்திரமாய் பதிந்திருந்தது. இந்த சுவரில் தான் அவள் கணவனின் நிழல் கடைசியாக விழுந்தது. நகரத்திலும் சுவர் இருக்கும். ஆனால் அதில் நானிருக்க மாட்டேன். அங்கே என் நிழல் மட்டும் தான் இருக்கும். கையில் ஒட்டியிருந்த சுவரின் சுண்ணாம்புப் பூச்சை பார்த்துக்கொண்டே தனக்குள் பேசிக்கொண்டிருந்தாள். சற்று நேரம் கழித்து பைகளைக் கட்டத் துவங்கினாள். இரண்டு பைகள். அவளுடைய முழு வாழ்க்கை அவற்றுக்குள் அடங்விடும். 

அம்மா சாப்பாடு வைத்தாள். அவள் சாப்பிடவில்லை. தொண்டையில் இறங்கவில்லை. “அங்க போனதும் நல்லா சாப்பிடு ராசு” கண்களில் வழிந்த நீரைத் துடைத்தபடியே அம்மா சொன்னாள்.

உறவினர்கள் யாரும் வரவில்லை. எல்லாருக்கும் அவரவர் உலகம். அவரவர் வாழ்க்கை. பிரிகின்ற அன்று ஒருநாள் மட்டும்தான் அதுவொரு பெரிய விஷயமாகத் தோன்றும். பிறகு அது பழைய செய்தி போல ஆகிடும். ராசாத்தி மட்டும் அந்த வீட்டில் நிற்கும் கடைசி மனுஷி போல இருந்தாள். வீடு அவளை பார்த்துக்கொண்டிருந்தது. “நீ இல்லாமல் நான் எதுக்கு?” எனக் கேட்டது வீடு.

இரவு இறங்கியபோது, ராசாத்திக்கு அந்த இருட்டு, மண்ணில் மெதுவாக இறங்கும் சவப்பெட்டி போல இருந்தது. வெளியில் விளக்குகள் எரிந்தாலும், அவளுக்குள் ஒரு விளக்கு கூட எரியவில்லை. பகல் முழுக்க இருந்த சத்தங்கள் எல்லாம் மங்கிப் போனது. இப்போது அவளுடைய மூச்சு மட்டுமே அவளுக்கு கேட்டது. 

அப்போது பக்கத்து வீட்டு லட்சுமி வந்தாள். கையில் வெற்றிலைப் பாக்கு. முகத்தில் அந்த ஊருக்கே உரிய சிரிப்பு, கேள்வி கேட்க வரும்போது மட்டும் வரும் சிரிப்பு.

“என்ன ராசாத்தி… உண்மையிலேயே போறியாக்கும்?”, என்றாள்.

“ஆமா லட்சுமிக்கா”, என்றாள். முதல் முறை அவள் வாயிலிருந்து அது உறுதியாக வெளியே வந்தது.

“அவந்தான் திரும்ப வரலல்லா… பொறவு எதுக்குளா நீயும் ஊரவிட்டு போறங்குத…கஷ்டமாயில்லையா?”

லட்சுமியின் குரலில் கருணை இல்லை. அது ஊரில் சுற்றும் பழைய கேள்வியின் எதிரொலிதான்.

ராசாத்தி முதன்முறையாக நேராக அவளைப் பார்த்தாள். 

“நான் கஷ்டப்படல. காத்திருந்தேன்”

லட்சுமி சிரித்தாள். “அதுதானே கஷ்டம்.”

அந்த சிரிப்பு ராசாத்தியின் மனதை அறுத்தது. அவள் எழுந்து நின்றாள். உடம்பு நடுங்கவில்லை. குரல் மட்டும் கொஞ்சம் தாழ்ந்தது.

“இந்த ஊர்ல நான் காத்திருந்தவளா மட்டும் தான் இருக்கணுமா?
நான் வேற எதுவும் இல்லையா?”

லட்சுமி பதில் சொல்லவில்லை. அந்தக் கேள்வியின் ஆழம் லட்சுமிக்கு புரியவுமில்லை. அங்கே மௌனம் மண்ணில் விழுந்த மழைத்துளிபோல மெதுவாக பரவியது.

“நான் போறேன். அவனைத் தேடி இல்ல. என்னைத் தேடி.”

அது முதல் முறையாக ராசாத்தி தன்னைப் பற்றி உரக்க சொன்ன வாக்கியம். 

லட்சிமி கிளம்பியதும் வீட்டுக்குள் வந்து பைகளை அடுக்கியபோது, ஒரு பழைய புகைப்படம் கீழே விழுந்தது. தரையில் விழுந்த அந்த புகைப்படம் ஒரு இறந்த பறவை போல புரண்டு கிடந்தது. அவள் அதை எடுக்கவில்லை. பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தப் படத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் ஒரு ஆண். அவன் முகம் இப்போது அவளுக்கு சரியாக நினைவில்லை. ஆனாலும் அந்த சிரிப்பு மட்டும் ஞாபகம் இருந்தது. 

அவன் ஊரிலிருந்தபோது எல்லாம் இப்படித் தான். சிரிப்பு, கனவு, நகரம். “நாம வேற எங்கயாவது போலாம் ராசாத்தி” என அடிக்கடி சொல்வான். அந்த “வேற எங்கயாவது” தான் இப்போது ராசாத்திக்கு பயமாக இருந்தது. அவன் முதலில் தனியாகப் போனான். அவள் மட்டும் இங்கே இருந்தாள். காத்திருந்தாள். அந்தக் காத்திருப்பு யாருமற்ற ரயில் நிலையத்தில் தனித்து நிற்கும் வலியை அவளுக்கு கொடுத்திருந்தது.

முதல் வருடம் அவன் கடிதம் எழுதினான். இரண்டாம் வருடம் கடிதங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. மூன்றாம் வருடம் மெளனம். எதுவும் தெரியவில்லை. ஊரிலிருந்து யாரோ சொன்னார்கள் அவனுக்கு அங்க வேற வாழ்க்கை இருக்காம். ராசாத்தி எதுவும் கேட்கவில்லை. கேட்காத கேள்விகள் தான் சில நேரம் நம்மை உயிரோட உலவச் செய்கிறது.

அம்மா மட்டும் எல்லாம் தெரிந்தவள் ஆனாள். “அவன் வரமாட்டான்” என்றாள் ஒருநாள். அந்த வார்த்தை அவள் உயிரின் வேரில் விழுந்த அமிலச்சொட்டாக இருந்தது. அவள் பதில் சொல்லவில்லை. சில உண்மைகள் எதிர்த்தால் உடையும். ஏற்றுக்கொண்டால் மெதுவாக மரிக்கும். ராசாத்தி மெதுவாக மரித்துப்போக முடிவு செய்தாள்.

அதன் பிறகு ஊரில் எல்லாம் மாற ஆரம்பித்தது. அவள் “அவனுக்காக காத்திருந்தவள்” ஆனாள். பெண்களின் பார்வை, ஆண்களின் கள்ளப்பார்வை. எல்லாமே அவளைச் சுற்றி ஒரு தெரியாத வட்டம் போட்டது. அந்த வட்டம் ஒரு கண்ணுக்குத் தெரியாத சிறை. அவள் அதன் வெளியே இருந்தாலும் உள்ளே இருப்பது போலானது வாழ்வு.

அந்தப் புகைப்படத்தை மீண்டும் பார்த்தாள். அவன் முகம் இப்போதும் அவளுக்கு சரியாக நினைவில்லை. ஆனாலும் அவன் இல்லாத வாழ்க்கை மட்டும் தெளிவாக இருந்தது. அவன் போனது நகரத்துக்கு. அவள் இப்போது போவதும் அதே நகரத்துக்கு. ஆனால் அவனைத் தேடி அல்ல. அவனிடமிருந்து தப்பிக்க. அந்தக் காத்திருந்தவள் எனும் சொல்லிலிருந்து விடுபட. 

இடம்பெயர்வு என்பது ஊரிலிருந்து நகரத்துக்கு போவது அல்ல. ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவுக்கு தப்பிக்க முயல்வது. ஆனால் எந்த நினைவிலிருந்தும் தப்பிக்க முடியாது. நினைவுகள் நம்முடன் எப்போதும் பயணம் செய்யும்.

ராசாத்தி புகைப்படத்தை எடுத்து பைக்குள் வைத்தாள். அவள் அவனை மறக்கவில்லை. அவள் அவனை மன்னிக்கவும் இல்லை. அவளால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக்கொண்டது.

அந்த தருணத்தில் தான் அவளுக்கு புரிந்தது. இவள் ஊரை விட்டு போகிறாள் என்று எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவள் ஒரு வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்குள் தப்பிச் செல்கிறாள்.

அம்மா அவளுடைய பைகளை வாசலுக்கு கொண்டு வந்தாள். இருவரும் பேசவில்லை. பேசினால் குரல் உடைந்து போகும். மௌனம் தான் சில நேரம் பெரிய தைரியம். அம்மாவின் கண்கள் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்த பார்வை எதுவுமே செய்ய முடியாத பார்வை.

ராசாத்தி திண்ணையில் உட்கார்ந்து கடைசியாக வீட்டை பார்த்தாள். சுவர், கதவு, மாடம், பின்வாசல் எல்லாமே அவளை அடையாளம் காண்பது போல தோன்றியது. இந்த வீட்டில் அவள் சிரிப்பு இன்னும் சுவருக்குள் மறைந்து இருக்கும். அவள் அழுகை இன்னும் காற்றில் மிதந்து இருக்கும். அவள் மட்டும் இங்கிருந்து நீங்கிச் செல்கிறாள்.

அம்மா அவளுடைய நெற்றியில் குங்குமம் வைத்தாள். “ நல்லா இரு ராசு” என்றாள். ராசாத்தி அம்மாவின் கையைப் பிடித்தாள். அந்த வயது முதிர்ந்த கை மழையில் நனைந்த மண் போல மென்மையாகவும் கனமாகவும் இருந்தது. 

வீடு நீங்கினாள்.

பேருந்து நிறுத்தம் வந்தாள். பேருந்து வருவதற்காக நின்றிருந்த மற்றவர்கள் யாரும் அவளைப் பார்க்கவில்லை. அவள் அவர்களைப் பார்க்கவில்லை. எல்லாரும் தத்தம் வாழ்க்கைக்குள் மூழ்கி இருந்தார்கள். 

பேருந்து வந்தது. அது பெரிய விலங்கு போல வாய்திறந்து நின்றது. அதன் உளளே வெளிச்சம் இருந்தது. அந்த வெளிச்சம் அவளுக்கு அறுவை சிகிச்சை அறையின் ஒளி போல தெரிந்தது, உள்ளே போனால் வலி இருக்கும், வெளியே நின்றால் மரணம் இருக்கும். ராசாத்தி ஒரு நொடி தயங்கினாள்.

திரும்பிப் பார்த்தாள். ஊர் அங்கேயே இருந்தது. அசையவில்லை. அழவில்லை. விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. நாய்கள் படுத்திருந்தன. மரங்கள் காற்றில் ஆடின. எல்லாமே இயல்பாக இருந்தது. அவள் மட்டும் இயல்பாக இல்லை. அந்த தருணத்தில் தான் உணர்ந்தாள். ஊர் அவளை விட்டுப் போகவில்லை. அவள் தான் ஊரை விட்டுப் போகிறாள். ஆனால் ஊர் அவளுக்குள் இருந்து போகவில்லை.

பேருந்தின் படிக்கட்டில் காலடி வைத்தாள். உள்ளே ஏறினாள். பேருந்தின் கதவு மூடியது. பேருந்து நகரத் தொடங்கியது. சன்னல் வழியாக வெளியே பார்த்தாள். ஊர் மெதுவாக பின்னால் நகர்ந்தது. உண்மையில் நகர்ந்தது ஊர் இல்லை. பேருந்தின் சன்னலை வேகமாக மூடிவிட்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள் ராசாத்தி.

***

ராஜேஷ் வைரபாண்டியன் – தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார். அனைத்து வகைமைகளிலும் சேர்த்து பதினோரு நூல்கள் வெளியாகியிருக்கின்றன. ‘உதிரிகள்’ எனும் சிற்றிதழை நடத்தி வருகிறார். 2018 வரை ‘நிலாரசிகன்’ என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை எழுதினார். புன்னகை இலக்கிய விருது, உயிர்மை சுஜாதா சிற்றிதழ் விருது, உயிர்மை சுஜாதா கவிதை விருது, பிரமிள் கவிதை விருது, ஸீரோ டிகிரி இலக்கிய விருது ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார். மின்னஞ்சல்: svprajesh@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here