Tuesday, May 26, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்கோபால் ஹொன்னால்கெரே கவிதைகள்

கோபால் ஹொன்னால்கெரே கவிதைகள்

தமிழில்: கார்த்திகைப் பாண்டியன்

ஏதோவொரு மனப்பீடிப்பு

ஒரு சிட்ரஸ் மலரின்
பாகங்களைக் கூறுபோட்டு
அதை நான் விளக்கும்போது
நன்கு பழுத்த அத்திப்பழத்தைப் போல
அவள் நாணுகிறாள்.
நான் அவளைத் திருமணம் செய்து கொள்ளவில்லை
ஆனாலும் அவள் மகளை
என் மகள் என்றே அழைக்கிறேன்.
ஒருமுறை கல்லிவரின் பயணங்கள் கதையை
சின்னப்பெண்ணுக்கு நான் சொன்னபோது
அவள் என்னிடம் இறுதியில் கேட்டாள்
“அப்பா, ஒருவேளை லில்லிபுட் இளவரசி
கல்லிவரோடு காதலில் விழுந்தால்
எவ்வாறு அவர்கள் திருமணம் புரிவார்கள்?”

கழுதைகள்

அனேகமாக இதுவொரு தொன்மக்கதை
எனக்கு அவரின் பெயர் நினைவில்லை
ஒரு திபெத்தியக் கவிஞர்
பொறுமையாக அமர்ந்து எழுதினார்
கவிதைகள் கவிதைகள் கவிதைகள்
அவருடைய வாழ்க்கை முழுவதும்
பிறகு
அவருக்கு எண்பத்தொன்பது வயதாகி
கண்ணாடி போன்ற வழுக்கைத்தலையோடு
மரணத்தை அண்மிக்கும் பொழுதில்
மூன்று கழுதைப்பொதி அளவில்
கவிதைகள் அவரிடமிருந்தன
பிரார்த்தனை சக்கரங்களைச் சுழற்றும்
ஒரு மடாலயத்திற்கு
அவற்றைத் தர அவர் விரும்பினார்
வாடகைக்கு எடுக்கப்பட்ட மூன்று கழுதைகளின் மீது
கவிதைகளை ஏற்றிக்கொண்டு
வாழ்க்கையைப் பற்றி யோசித்தவாறே
நடக்கத் தொடங்கினார்
உயிரை உறையவைக்கும் குளிர்காலம்
முதியவருக்கு உடல் நடுங்கத் தொடங்கியது
அவரால் நடக்க முடியவில்லை
ஒரு கழுதைப்பொதி அளவு கவிதைகளை எரித்து
தீயை மூட்டி
அதனருகே அமர்ந்து குளிர்காய்ந்தார்
மீண்டும் பயணத்தைத் தொடங்கும்வேளையில்
அவருக்குள் ஒரு சிந்தனை தோன்றியது
கழுதைகளைப் பார்த்தபோது
கழுதைகளைப் பற்றி அவரெழுதிய ஒரு கவிதை
அவருக்கு நினைவு வந்தது
குளிரில் கழுதைகளும் நடுங்கிக் கொண்டிருந்தன
மீண்டும் அவர் தீமூட்டினார்
மீதமிருந்த இரண்டு கழுதைப்பொதி அளவு
கவிதைகளைக் கொண்டு
இப்போது நெருப்பைச் சுற்றி
மூன்று கழுதைகளையும் நிறுத்திவைத்தார்
விமர்சகர்கள் சொல்கிறார்கள்
அவரது மறைவுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட
கவிதைகளில் இருந்து
நெருப்பில் கருகாத ஒற்றை வரி போதும்
அவருடைய ஒட்டுமொத்த ஞானத்தையும்
பறைசாற்ற
உங்களுடைய கழுதையைத்
தேடிக் கண்டுபிடித்து
உங்களுடைய பயணத்தைத் தொடருங்கள்

ஹனுமான்ஜி

வாயுதேவனுக்கும்
அஞ்சனைக்கும்
மகனாகப் பிறந்தவர்
அவருடைய குழந்தைப்பருவத்தில்
ஒருமுறை உதிக்கும் சூரியனை
பென்னம்பெரிய பழுத்த ஆப்பிள்
எனத் தவறாக எண்ணிக்கொண்டு
அதைப் பிடிப்பதற்காக
வானில் தாவிப் பறந்தார்
கடவுள்களைக் காட்டிலும்
அவருக்கு பலம் அதிகம்
தனது ஒட்டுமொத்த விருப்பங்களையும்
ஸ்ரீராமனுக்கு ஒப்புக்கொடுத்ததன் வழியாக
அந்த பலம் அவருக்கு வந்தது
மிகவும் சக்திவாய்ந்த
ஓர் உறுதியான பிரம்மச்சாரி
ஒருமுறை அவர் கடலை கடக்கும்போது
கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த
ஒரு தேவதை கர்ப்பம் தரித்தாள்
அவருடைய உதவியின்றி
ஸ்ரீராமனால் ஒருபோதும்
போரை வென்றிருக்க முடியாது
சிரஞ்சீவியாக அவர் வாழ்கிறார்
இரு புராணங்களிலும் தோன்றுகிறார்
இராமாயணத்தையும் மகாபாரதத்தையும்
இணைக்கும் ஒரு சங்கிலியாக
பாகவதர் சொன்னார்:
“எப்போதெல்லாம்
பகவான் ஸ்ரீராமனின் புகழைச் சொல்லும் பாடல்களை
பக்தர்கள் பாடுகிறார்களோ
கண்களில் கண்ணீரோடும்
கைகளை கட்டிக்கொண்டும்
யாருக்கும் தெரியாமல்
ஏதோவொரு மூலையில்
ஹனுமான்ஜி நின்றிருப்பார்.”

அவருடைய வாலால் எத்தனை நீளமாகவும் வளரமுடியும்
அதேபோலத்தான் அவருடைய ஆற்றலும் பக்தியும் பற்றிய கதைகளும்

மற்றொரு நாள்
ஹரிகதை சொல்லும் பாகவதரைச் சந்திக்க
நான் சென்றிருந்தபோது
ஒரு நாட்காட்டியைப் பார்த்தேன்
அதில் ஹனுமான்ஜி
சஞ்சீவினி மலையைத் தூக்கிச் செல்கிறார்
மலையின் உச்சியில்
ஒரு போத்தலின் படம்

மருத்துவர் பாபுராவ் படேலின்
சிவ சக்தி
கடவுள் அருளிய ஊட்டச்சத்து மருந்து
உற்சாகமும் ஆற்றலும் வீரியமும் தரவல்லது

500 மில்லி 1000 மில்லி
ஐந்து ரூபாய் உங்கள் மொத்தக் குடும்பத்துக்குக்கும்
ஏழு ரூபாய் ஐம்பது பைசா

உம்முடைய சித்தம் நிறைவேறுக

மழை பொழிந்தே தீரும்
மழை பொழிந்தே தீரும்
புலிகள், மயில்கள், யானைகள்,
மற்றும் சிங்கங்களின் வடிவங்களில்
பூங்காவில் உள்ள
வெட்டி சீர்செய்யப்பட்ட புதர்களின் மீது.

மழை பொழிந்தே தீரும்
மழை பொழிந்தே தீரும்
பிறகு அந்தப் புதர்கள் யாவும்
புதர்களாய் மாறும்.

நம்பிக்கை குறித்த ஒரு நம்பமுடியாத கதை

இந்தியாவைச் சேர்ந்த ஒரு முதியவர் நம்பினார்:
தனது இரவுணவுக்கான மேலாடையை அணியும்போது
தன்னுடைய பசியை அதிகரிக்க அது உதவும் என்பதை.
அவருடைய பசியை அது அதிகரித்தது.

அமைதியின் பச்சையம்
(தாமஸ் மெர்டனுக்கு)

தோட்டத்தில் போதிமரம் இயற்கையாக வளர்கிறது
அதன் சில கிளைகள் நீளமாகவுள்ளன
அதன் சில கிளைகள் குறுகியதாக உள்ளன
அதன் அமைதியின் பச்சையம் என்பதுதான்
புத்தரின் ஞானம்

மரம் பிராணவாயுவை வெளியிடுகிறது

ஓர் உற்சாகமான காலைநடையை
ஒவ்வொரு மனிதனும் பழகிக்கொள்ளவேண்டும்
அவனுடைய இலட்சிய உருவத்தை நோக்கி அல்ல
ஆனால் தனக்குள்ளாகவே மிகவும் ஆழமாக
ஓர் உற்சாகமான நடை
உதிரத்தில் உள்ள பிராணவாயுவை அதிகரிக்கும்
அவனுடைய மனம் மிகுந்த அமைதியில் ஆழ்ந்திடும்
பிறகு ஒட்டுமொத்த நாளும்
தனது சலசலக்கும் மனதை
அவன் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்
மேலும் அவன் பார்க்கலாம்
சொற்கள் என்பவை
வெளிப்படுத்துவதற்காக அல்ல
மாறாக ஒரு முதன்மையான அமைதியை
மீட்டெடுக்கும் போராட்டம் மட்டுமே.

பூமியின் மீது நிறைய நதிகள் ஓடுவதற்காக கடவுளுக்கு நன்றி

எல்லா நீரும்
மழைநீரே
மேலும் நீர் என்பது
ஒரு வரம்
இந்த ஆண்டை
நன்முறையில் கடப்பதற்காக
கடவுள் இந்திரனால் அனுப்பப்பட்டது.

    காதல் என்பது
        கவிதையைப் போல
            இந்தப் பிரபஞ்சத்தின்
        நீர்

கவிதை என்பது ஏற்கனவே
ஓர் உறக்கமின்மையால் பாதிக்கப்பட்டவனின்
கைகளில் சிக்கி
சாகுமட்டும்
நசுக்கப்பட்ட
ஒரு மூட்டைப்பூச்சி
(மற்ற மூட்டைப்பூச்சிகள்
யாவும் பிரார்த்திக்கின்றன
’ஓ கடவுளே, அவனுக்கு
காதலைக் கொடு
அவன் ஒரு பெண்ணை
காதலிக்கட்டும்
அவளை இந்தப் படுக்கைக்கு
அழைத்து வந்து
அவளோடு சேர்ந்து
நன்றாக உறங்கட்டும்.’)

உறக்கமின்றி பாதிக்கப்பட்டவன்
ஓரிரவில் திடீரென்று
யோசிக்கக்கூடும்
தன்னுடைய அறிவுத்திறனால்
காதலை இன்னும்
முக்கியமான சங்கதியாக மாற்றலாமென
ஆகவே
சூனியக்காரியின் மந்திர இரசாயனத்தில் இருந்து
ஒரு துளியை அவன்
நீருக்குள் வீசுகிறான் அது
அனைத்து ஆண்களையும் பெண்களையும்
சாத்தானைப்போல
மிகுந்த வளமானவர்களாக மாற்றுகிறது
அவர்களின் குழந்தைகள் என்பவை
வெறும் பாலியல் எண்ணங்களாக
அல்லது எந்த வாரிசுமில்லாத
கிறிஸ்துவைப் போல
பாழானவையாக இருக்கின்றன.
பூமியின் மீது நிறைய நதிகள் ஓடுவதற்காக
கடவுளுக்கு நன்றி.
அனைத்து ஆண்களும் ஒரே ஆதாரத்திலிருந்து
நீரருந்த வேண்டியதில்லை என்பதற்காகவும்
கடவுளுக்கு நன்றி.

***

கோபால் ஹொன்னால்கெரே (1942-2003) – கர்நாடகத்தைச் சேர்ந்த கவிஞர். நேரடியாக ஆங்கிலத்தில் எழுதியவர். மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதனில் நுண்கலைகள் பயின்றிருக்கிறார். இலக்கியத்தை உண்மையாக நம்பும் எல்லாக் கலைஞர்களையும் போலவே யதார்த்த வாழ்வின் சுழல்களில் சிக்கிச் சீரழிந்தவர். மொத்தம் ஆறு தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் அவருடைய வாழ்நாளில் அவை பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஹொன்னால்கெரே இறந்தபிறகு அவருடைய மொத்தக் கவிதைகளையும் அவரின் நண்பர் ஜெயசீலன் தொகுத்து பொயட்ரிவாலா மூலம் ஒரே புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். சிறுபிள்ளை விளையாட்டு என்று கருதப்பட்ட முதல் தொகுப்பு மட்டும் முழுக்கவே இந்தத் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. ஹொன்னால்கெரே பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால் – அற்புதம்.


கார்த்திகைப் பாண்டியன் – 1981 ஆம் வருடம் மதுரையில் பிறந்த கார்த்திகைப் பாண்டியன் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தனியார் பொறியியல் கல்லூரியொன்றில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். எஸ்.ராமகிருஷ்ணனை தனது ஆதர்சமாகக் கொண்டவர். 2011 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். அத்துடன் மொழிபெயர்ப்பிலும் தீவிர ஆர்வம் செலுத்தி வருகிறார். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், பத்து மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. – மின்னஞ்சல்: karthickpandian@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here