Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்சசி இனியன் கவிதைகள்

சசி இனியன் கவிதைகள்


சசி இனியன்

கசப்பு

புணர்ச்சிக்குப் பின்
​அவள் உடல் நடுங்கியது,
மிகச் சிறிய உடல்.
உள்ளிருப்பது எல்லாம்
அசூயை
​காமத்தின் உடலியக்கம்,
காமத்தின் உன்மத்தம்,
பிசுபிசுப்பு.
​காதல்—
மரணம் வரை நீளும் கசப்பு.
​சுடுகாட்டில்
சதைத்துண்டம் இல்லை;
ஆனாலும்
சாம்பலை
குத்திக் குத்திக் கிளறுகிறீர்கள்.
​அங்கே எலும்பும்கூட
இல்லை.
​எங்கும் நிறைந்திருக்கும்
கசப்பு,
கசப்பு,
என்று என்னென்னவோ
பிதற்றினாள்.

​பின்பு நிதானித்து,
“காலமில்லா
மனித வாழ்வின்
நுகரவே முடியாத கசப்பை
என்ன செய்வது?”
என்று யாரிடமோ கேட்டாள்.
​பதிலுக்கு ஒரு குரல்:
“அது மானுடத்தின்
மிக நீண்டகால கசப்பு பெண்ணே!
​இனிப்பைப் போலவே
ருசிமிக்க கசப்பு,
அதை மென்று விழுங்க வேண்டும்.”
​”அதற்குப் பழகும் வரை?”
​”ஒன்பதிலிருந்து
பூஜ்யம்
வரை எண்ணிக் கழிக்கலாம்;
முடிந்தால்
எண்ணமற்று
இருக்க முயற்சிக்கலாம்.”

*

சுடர்

​கோபுரத்தின் மீது
​முச்சுடர் விளக்கு ஒளிர்கிறது;
அதை எத்தனை நேரம் பார்த்திருப்பேன்
எனத் தெரியாது.

​தீ
கைபிடித்து அழைத்தது;
சுடரின்
ஒளியில்
கரைந்து எரிகிறேன்.

​அது
உருகி அலறலாய் மாறுகிறது.
பின்பு பரிவின் குரல்,
தனக்குத்தானே ஆறுதல்
சொல்லிக்கொள்கிறது.

​நான்
மீண்டும் எரிகிறேன்.

​நான்
சுடரைத்தானே
பார்க்க வந்தேன்!

*

நவீன ஓவியன்.
பழகத் தொடங்கிய
ஓவியனின்
கித்தானில்—

​சிறிய வீடு,
அதற்கொரு சன்னல்,
மரம்,
சில பறவைகள்,
ஆண் பெண் முயக்கம்,
நாய்க்குட்டி,
நட்சத்திரம்,
சூரியன்.

​அதன் நிறங்களில்
எழுந்து வந்தது
புதியதொரு ஆன்மா.

​பின்பு
அது
படைத்தது,
இன்னொரு
பிரபஞ்ச மனம்,
பிரபஞ்ச இயக்கம்!

*

​கடவுள் அல்லாத ஒன்று.
ஒரு உலோகம்
அதிர்வது போல
என்
மனம் அதிர்கிறது.
​யாரோ அதை அதிர்வுறச்
செய்கிறார்கள்.
சில போது நானே
அப்படி ஆகிக்கொள்கிறேன்.
​சில சமயம்
மிக மெல்லிய அதிர்வு;
அது உயிரின் அதிர்வாகவும்கூட இருக்கலாம்.
அது என்னை நடுக்கமுறச் செய்கிறது.
​ஆனால்,
இவற்றையெல்லாம்
நான் உற்று கவனிக்கிறேன்.
​உள்ளிருந்து அதிர்வது போல
ஒளிர்கிறது
தூய ஆன்மா.
​ஆனால்,
அது கடவுள் அல்ல.

*

வேடதாரி
சொர்க்கம்,
சுகம்,
வெகுமதி
எல்லாமும் கிடைக்குமென்ற
எந்த உத்தரவாதமும்
வாக்குறுதியும்
கடவுளிடமிருந்து
அளிக்கப்படவில்லை.
​ஆனாலும்,
​கறுப்புப் பிசுக்கு ஏறிய
சிலையின்
முன் கண்ணீர் வடியக்
கை கூப்பி நிற்பவளை
என்ன சொல்லித் தேற்றுவது?
​உயிர் வாழ்ந்திருப்பதால்
உண்டாகும் துன்பத்திற்கு
நம்பிக்கை அளிப்பது போலவும்,
நம்பிக்கை அல்லாதது போலவும்
இருவேறு பாவனைகள்
கடவுளுக்கு எதற்கு?
​கடவுள்
ஒரு கபட வேடதாரி
என்று சொன்னால்,
கோபம் வருகிறது அவளுக்கு.
​பின்பு
அவளே
அவளைத் தேற்றி,
அழுத கண்ணைத் துடைத்துக்கொண்டு,
கறுப்புச் சிலையின்
முன்
தெத்துப்பல் தெரியச் சிரிக்கிறாள்.
​இப்பொழுது கறுப்பினூடே
மினுங்கும் மெல்லிய கோடு
பளிச்சென்று தெரிகிறது.

***

சசி இனியன் – இயற்பெயர் இரா.சசிகலாதேவி. சிதம்பரத்தை சேர்ந்தவர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வுகூட நுட்புனர் ஆக பணி புரிகிறார். தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறார். நீலி வனம் அவருடைய கவிதைத் தொகுப்பு. மின்னஞ்சல்: sasiiniyan1978@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here