Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்வரலாற்று துயரங்களும் தலைமுறை கடந்த அஞரும்

வரலாற்று துயரங்களும் தலைமுறை கடந்த அஞரும்

மா.க.பாரதி

ரலாற்றில் பெரும் அநீதிகள் இழைக்கப்படும்போது – அது காலனியம், போர்கள், ஆக்கிரமிப்புகளாகட்டும், சாதி-மத-இன ஒடுக்குமுறைகளாகட்டும், மனிதர்களால் உருவாக்கப்படும் பஞ்சங்களாகட்டும் – உடனுக்குடனாக பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உடல் ரீதியிலும் மன ரீதியிலும் பல உபாதைகள் ஏற்படுவது பற்றி அறிந்திருப்போம். சமகாலத்திலும் இவை ஓய்ந்தபாடில்லை. பாலஸ்தீனத்தில் அடிக்கடி வானிலிருந்து குண்டு மழை பொழிவதைக் கேட்டுப் பழகியிருக்கும் மக்கள், அங்கிருந்து புலம்பெயர்ந்தாலும் இரவு நேரத்தில் இல்லாத குண்டுச் சத்தம் கேட்டு எழுந்து அலறுவதைப் பதிவு செய்திருக்கின்றனர். ரபீப் ஜியாதாவின் (Rafeef Ziadah) We teach life, sir என்னும் அற்புதமான நிகழ்த்துகலைக் கவிதை, அந்த வலிமிகுந்த நினைவோட்டங்களைப் பதிவு செய்கிறது:

“I wish I could just run barefoot in every refugee camp and hold every child, cover their ears so they wouldn’t have to hear the sound of bombing for the rest of their life the way I do”

மேற்கத்திய தத்துவ மரபில் தெகார்தே இருமைவாதத்தை முன்வைத்தார். உடலையும் மனதையும் இரு துருவங்களாகக் கருதினார். மனம் பருப்பொருளல்லாத ஒன்று; உடல் ஓர் இயந்திரம் என்னும் நோக்கே அதன் சாரம். தத்துவ ரீதியில் இதற்கான எதிர்ப்புகள் பல காலமாக இருந்து வந்தாலும், மரபியல், நரம்பியல் துறைகளில் நடந்துவரும் ஆய்வுகள் இந்தப் பிரிவினையை முழுமுற்றாகத் தகர்க்கின்றன. மனதின் ஆழத்தில் நிகழும் பெருந்துயரமும் அதிர்ச்சியும் மனதுள்ளேயே இருந்துவிடுவதில்லை. உடலின் செல்களுள் வேதியியல் மாற்றங்களை நிகழ்த்துகிறது. மன அழுத்தங்கள் உடலைப் பாதிப்பது பற்றியும், உடல் நோய்கள் மன நிம்மதியைப் பாதிப்பது பற்றியும் மருத்துவ அறிவியல் பேசுகிறது. பெருந்துன்பங்களுக்கு ஆளாவோர்க்குத் தம் உடல்நிலையும் மனநிலையும் மட்டும் பாதிப்பதன்றி, அத்துன்பங்களின் சுவடுகள் அவர்களது அடுத்தடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் வல்லமை கொண்டவை என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் கூறுகின்றன. இக்கட்டுரை மேல்மரபியல் ஆய்வுகளை அறிமுகப்படுத்தும் நோக்கைக் கொண்டுள்ளது. (ஒரு அறிவியல் ஆசிரியரின் இலாவகத்தை இக்கட்டுரை பெற்றிருக்க வாய்ப்பில்லை. காரணம், நான் வரலாற்று ஆய்வாளன்.) இத்தகைய அறிவியல் ஆய்வுகள் வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கும், நம் சமகாலத்தைப் புரிந்து கொள்வதற்கும் ஒரு வழித்தடம் அமைத்துக் கொடுக்கின்றன. ஒரு வகையில் இந்நெடிய வரலாற்றில் நம்மையும் நமது சமூகத்தையும் எப்படி இருத்திப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஒருவிதத் தெளிவை இந்த அறிவியல் ஆய்வுகள் எனக்குக் கொடுத்துள்ளன. மேலும், இத்தகைய ஆய்வுகளைச் சாதிச் சமூகத்தில் முன்வைக்கும்போது அதற்கெனத் தனியே சிந்திக்கும் வேலையையும் சேர்த்தே கொடுக்கிறது. மரபியலை வைத்துக்கொண்டு நம் ஊரில் அந்தக் காலத்தில் பேசிய பேச்சுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எனவே, இக்கட்டுரை அதைப் பற்றியும் இறுதியில் சில வார்த்தைகளைப் பேசுகிறது. 

சமூக ஊடகங்களிலும் திரைப்படங்களிலும் இணையத் தொடர்களிலும் உளவியல் தொடர்பான உரையாடல்கள் பெருகியுள்ளன. நல்ல விஷயம். உளவியல் பிரச்சனைகள் உடல் ரீதியான அசௌகரியங்களையும், சமயத்தில் நோய்களையும் தர வல்லன என்பது ஓரளவு பொது அறிவாகிவிட்டது. மேலும், சில தீவிர உளவியல் நெருக்கடிகள் நம்மை ட்ராமாவுக்குள் (Trauma – அஞர்) தள்ள வல்லவை. அதிர்ச்சியும் வருத்தமும் பதற்றமும் உச்சம் பெறும் நிலையாக ட்ராமாவை வரையறுக்கலாம். நம்மை உளக்குலைவுக்கு உள்ளாக்கும் இத்துன்பங்களின் தடங்கள் நீங்காமல் PTSD (Post-Traumatic Stress Disorder) ஆக வடுவாக மாறுவதும் உண்டு. ஒரு பெருந்துன்பத்துக்குப் பிறகு, அதன் வடு ஆறாமல் நினைவுகளாகவும் (Memories), கனவுகளாகவும் (Dreams and Nightmares), அச்ச உணர்வாகவும் மாறி நமது அன்றாட வாழ்வையே பாதிக்கும் நிலையை PTSD என உளவியல் அறிஞர்கள் வரையறுக்கின்றனர். நிறைய உளவியலாளர்கள் இப்படிப்பட்ட ட்ராமாக்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படும் (Intergenerational trauma) என்று பல காலமாகச் சொல்லி வருகின்றனர். நமக்கு இந்தச் சொல்லாடல்கள் எல்லாம் ஓரளவு பழக்கமானவை தான். எல்லோருடைய வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் நமது பெற்றோரின் ட்ராமா நம்மை பாதித்திருக்கும். பெற்றோர் தமது வாழ்வில் நிகழும் துயரங்களைச் சரியாகக் கையாளாமல் விட்டு, அதைக் குழந்தைகள் மேல் ஒரு வகையில் ஏற்றிவிடுவது உண்டு. பெற்றோருடனே நாம் இருப்பதால் அவர்களது நடத்தை மூலம் நம்மிடம் வந்து சேர்வதுண்டு. குழந்தைகளிடம் இவ்வாறு ஏற்றப்படும் ட்ராமாவை அவர்கள் சரியாகக் கையாளாமல் விட்டால் அது அவர்களது குழந்தைகளுக்கும் கடத்தப்படும் என்பது உளவியலாளர்கள் கருத்து. இதைப் பற்றிப் படிக்கப் படிக்க ஏதோ ஒரு வம்சாவழியினருக்கே விட்ட சாபத்தைப் படிப்பது போலத்தான் உணர்ந்தேன். 

நம்மூர்க் கதைகளில் ஏதோ ஒரு பெண்ணுக்கு ஒரு அநீதி நடந்திருக்கும். அதனால் கோபமுற்ற அப்பெண்ணோ அப்பெண்ணின் பேயோ அந்த அநீதி இழைத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், அவர்களின் பரம்பரைக்கே சாபமிட்டுவிடுவாள். அதனால் அப்பரம்பரையினரே ஏதோ ஒரு வகையில் அந்தப் பாதிப்புகளைத் தாங்கியிருப்பார்கள். அக்கோபத்திலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் அப்பெண்ணைத் தெய்வமாகவோ யட்சியாகவோ வழிபடுவர். பல ஆணவக் கொலை அம்மன்கள் இப்படி வழிபடப்படுபவர்கள்தான். தமிழ்க் கதைகள் மட்டுமன்றி புராண இதிகாசங்களிலும், பேய்க் கதைகளிலும் இந்த trope-ஐ நாம் பார்த்திருப்போம். Intergenerational trauma, Transgenerational trauma போன்ற பதங்களைப் பார்க்கையிலோ அவற்றைப் பற்றிப் படிக்கையிலோ இந்தப் பேய்க்கதையும் அதன் சாபமும்தான் நியாபகத்துக்கு வருகிறது. சமீபத்தில்கூட ஜெயமோகனின் ”ஓநாயின் மூக்கு” என்னும் அட்டகாசமான சிறுகதையும் இப்படிப்பட்ட சாபத்தை மையமிட்டு வந்ததுதான். கதைக்குள்ளேயே அதற்கு ஒரு பகுத்தறிவுவாத விளக்கமும் வைத்திருப்பார். 

சாபத்தையும் ட்ராமாவையும் இணைப்பதற்குக் காரணமுண்டு. மனிதர்கள் பரிணாம வளர்ச்சியினால் பெற்ற ஒரு பெரும் சொத்து pattern recognition. கற்காலத்தில் ஒரு புதர் அசைந்தால் அதை சிங்கம், புலி, பாம்பு என்று கருதி அங்கிருந்து ஓட்டம் பிடிப்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அங்கு இம்மிருகங்கள் எதுவும் இல்லையென்றாலும் அதைப் பார்த்து ஓடுவதால் தான் அப்படிப்பட்டோரின் சந்ததியினர் பிழைத்திருக்கின்றனர். அப்படி பயப்படுபவர்கள் தாம் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்வார்கள். சமயத்தில் அங்கு எதுவும் இல்லை என்று நினைத்து ஆயாசமாக அமர்ந்திருக்கும்போது மெய்யாலுமே சிங்கம், புலி, பாம்பு வந்து பாயுமல்லவா? அப்படி ஆயாசமாய் இருப்போர் அடுத்த தலைமுறையைக் காண இயலாது. எனவே, பரிணாம வளர்ச்சியின் இயற்கைத் தேர்வு விதிகளின் அடிப்படையில் நாம் எல்லோரும் pattern recognition செய்து தப்பிப் பிழைத்தோரின் சந்ததியினரே. அந்த உணர்வே நம்மை இல்லாத இடங்களிலும் ஒரு pattern-ஐக் காண வலியுறுத்துகிறது. பரம்பரைச் சாபத்துக்கும் intergenerational trauma-வுக்கும் நாம் முடிச்சுப் போடுவது இந்த pattern recognition-ஆல்தான். ஒரு சாபம் இருப்பதாலேயே அதை நினைத்து மனம் வெதும்பி அச்சாபத்தை நாமே நிறைவேற்றி விடுவதும் உண்டு (Manifesting a curse). சில கிரேக்கக் கதைகளில் அசரீரி வாக்கைப் (prophesies) பொய்ப்பிக்க எடுக்கும் நடவடிக்கைகளே அந்த வாக்கை மெய்ப்பிக்கும் வண்ணம் போய் முடியும். பல தலைமுறைகளாக நம்மை வாட்டும் வாதைகளை விளக்க முற்படும் மனிதர்கள், அவற்றை சாபமாகவோ அசரீரி வாக்காகவோ புரிந்து கொள்வர். விளக்க இயலாத நிகழ்வுகளை ஏதோ ஒரு வழியில் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அதை விளங்கிக் கொள்ளவும் கையாளவும் இயலும். 

உளவியல் ஆய்வுகள், அதிலும் குறிப்பாக பெருந்துயரங்களைக் கண்டோரையும் அவர்களது குழந்தைகளையும் ஆய்வு செய்யும் உளவியல் வல்லுனர்கள், இதை intergenerational trauma என்று வகைப்படுத்தினர். அத்துயரங்களையே சந்திக்காத அடுத்தடுத்த தலைமுறையினரும் இந்த PTSD-யை அனுபவிப்பதைப் பார்த்த அறிஞர்கள் அதை transgenerational trauma என்று அழைத்தனர். இந்த ட்ராமா எப்படி தலைமுறை தாண்டிக் கடத்தப்படுகிறது என்ற கேள்வியை யூத இன அழித்தொழிப்பிலிருந்து (Holocaust) தப்பிப் பிழைத்த யூதர்களையும் அவர்களது பிள்ளைகளையும் ஆய்வு செய்தோர் முதன்முதலில் ஆய்ந்தனர். பின்னர் வியட்நாமில் பணிபுரிந்த அமெரிக்க இராணுவத்தினர் வீடு திரும்பியதும் அவர்கள் சந்தித்த உளப் பிரச்சனைகளை ஆய்வு செய்தோர் PTSD பற்றிய புரிதல்களை நமக்கு அளித்தனர். அந்தத் துன்பங்களை நேரில் சந்திக்காத அடுத்த தலைமுறையினர் எவ்வாறு அதனால் எழும் மனச் சிதைவுக்கு ஆளாகின்றனர் என்பதை விளக்க முற்பட்ட உளவியல் வல்லுநர்கள், அத்துன்பத்துக்கு ஆளான பெற்றோரின் நடத்தைகளால் (behaviour) உந்தப்பெற்றே பிள்ளைகள் அவ்விளைவுகளைக் காண்கின்றனர் என முடிவுரைத்தனர். ஏற்கனவே சொன்னதுபோல், அத்துன்பங்களால் மன அழுத்தத்துக்கும் ட்ராமாவுக்கும் ஆளான பெற்றோர், குழந்தைகளிடம் கடுமையாகவும் கண்டிப்புடனும் அதீத பாதுகாப்புணர்வுடனும் நடந்துகொள்வார்கள். அவர்களை அறியாமலேயே உலகம் மீதான பயத்தையும் பதற்றத்தையும் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவர். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் வெகுகாலமாய் இவ்வளர்ப்பு தந்த ட்ராமாவால் மன நோய்களுக்கு ஆளாகித் தவிப்பர். பின்னர் அது அடுத்த தலைமுறையினரையும் அவ்வாறே பாதிக்கும். மீள இயலாத சுழற்சியாக இத்துன்பங்களும் ட்ராமாக்களும் தொடர்ந்துகொண்டே இருக்கும். அத்தொடர்ப் பின்னலில் யாரேனும் ஒருவர் இதைக் கண்டுகொண்டு உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அப்பிரச்சனையின் மூலத்தை அறிந்து கையாண்டு கட்டுப்படுத்துவர். அதன் மூலம் அதற்கடுத்த தலைமுறையினர் அத்துன்பங்களிலிருந்து விடுபடலாம். இவ்வாறு பெற்றோரின் நடத்தைகளால் (behavourial transmission) குழந்தைகள் தாங்கள் சந்திக்காத துயரங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றனர் என்றே உளவியல் ஆய்வுகள் நம்பி வந்தன. இது உண்மைதான். ஆனால், கடந்த முப்பது வருடங்களில் வளர்ச்சி பெற்ற மேல்மரபியல் துறை (Epigenetics), வெறும் நடத்தைகள் மட்டுமல்லாமல் உயிரியல் ரீதியாக பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு ட்ராமா கடத்தப்படுகின்றன என்று ஒரு குண்டைப் போட்டது. 

ஓரளவு நமக்குத் தெரிந்த விஷயத்திலிருந்தே தொடங்குவோம். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோருக்கு ஓரளவு அறிமுகமான ஒன்றையே எடுத்துக்காட்டாகப் பார்ப்போம். கடந்த சில நூற்றாண்டுகளாகப் பெரும் பஞ்சங்களைச் சந்தித்த பகுதி நம்முடையது. 18, 19-ம் நூற்றாண்டுகளில் இந்தியா சந்தித்த பஞ்சங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. சென்ற நூற்றாண்டில் கூட, சுதந்திரத்துக்கு கொஞ்சம் முன்பாக 1943-ம் வருடம் வங்காளப் பகுதியில் ஏற்பட்ட பஞ்சத்தில் கிட்டத்தட்ட 30 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர். நமது சென்னை மாகாணத்தில் 1876-78 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட தாது வருடப் பஞ்சத்தில் 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கின்றனர் என்று வரலாற்றறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். நான்கிலொரு பங்கு மக்கள் இப்பஞ்சங்களால் மாய்ந்தனர். ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மிச்சமுள்ள பல இலட்சம் மக்கள் பாதிக்கபட்டிருக்கின்றனர். காலனியத்துக்கு முன்பும் மழை பொய்த்துப் பஞ்சங்கள் வந்திருக்கின்றன. எனினும் அவை யாவும் இவ்வளவு பரந்துபட்ட பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. காரணம் ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சார்ந்த மக்களை அவை பாதிக்கும். அதில் பலர் இறந்தும் போவார்கள். அப்பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வேறு பகுதிகளுக்குச் செல்வார்கள். பஞ்சம் பிழைத்தல் என்னும் சொல் தமிழில் பெரும் புழக்கத்தில் இருந்து வருகிறது. இன்றும் விளையாட்டாகவேனும், தமது ஊர்களை விட்டு சென்னை தில்லி போன்ற பெருநகரங்களுக்கு வருவோர் “பஞ்சம் பிழைக்க வெளியூர் வந்திருக்கோம்” என்று சொல்வதுண்டு. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கணக்கிலடங்காதவை. ஆனால், அன்றைய அரசுகளும் வணிகர்களும் ஊர்த்தலைவர்களும் நிலச்சுவான்தார்களும் செல்வந்தர்களும் வெவ்வேறு வகைகளில் பஞ்சங்களை அணுகியிருந்துள்ளனர். 

தார்மீகமாக எளிய மக்களுக்குச் செய்ய வேண்டியனவற்றை அவர்கள் கொஞ்சமேனும் செய்திருக்கிறார்கள். பஞ்சங்கள் இயற்கையாக வருவதுமுண்டு. மழை பொய்த்தால் வருபவை அவை. செயற்கைப் பஞ்சங்கள்தான் இன்று உலகில் நாம் அதிகம் காண்பவை. பண்டைக் காலத்திலும் போர்களாலும், சரிவர ஆட்சி நடத்தாததாலும் பஞ்சங்கள் தோன்றியுள்ளன. பழங்காலத்தை பொற்காலமாக நான் கட்டமைக்க முயலவில்லை. எனினும் அந்த தார்மீக உணர்வைப் பற்றிப் பேசியாக வேண்டும். அப்படிப்பட்ட தார்மீக உணர்வால் உந்தப்பெற்ற பலரும் எளிய மக்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்துள்ளனர். மக்களைக் கொடூரமாகச் சுரண்டிப் பிழைத்த நிலச்சுவான்தார்களும்கூட பஞ்ச காலத்தில் மக்களுக்கு நெல் மூட்டைகளை அவிழ்த்துத் தந்திருக்கிறார்கள். இதனால் ஓரளவேனும் சாவுகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. இந்த தார்மீக உணர்வு புரவலர் மனநிலையிலிருந்து வருவது. மக்களைப் பாதுகாக்கும் பங்கை செல்வந்தர்கள் தமதாக எடுத்துக்கொண்டு, அதன் மூலம் தமது அதிகாரத்தை இருத்தி வைத்துள்ளனர். நிச்சயம் பிரச்சனைக்குரியதுதான். எனினும் இந்த தார்மீக உணர்வுதான் பலரையும் வரலாற்றில் காப்பாற்றியுள்ளது. இந்த தார்மீக உணர்வை அறக்கணக்கு (Moral Economy) என்று ஏழை மக்கள் புரிந்து வைத்திருந்தனர் என்று ஈ.பி. தாம்சன் கூறுகிறார். 

எனினும் நவீன காலனிய ஆட்சி, சுரண்டலையே மையமாகக் கொண்டிருந்ததாலும், இங்கிலாந்து நாட்டின் செல்வாக்கை மேம்படுத்துவதற்காகவே ஆட்சி நடத்தப்பட்டதாலும், பஞ்சத்தைப் பற்றியும் மக்களைப் பற்றியும் பெரிதாகக் கவலைப்படாமல் ஆட்சி நடத்தியுள்ளனர். வட்டார அளவில் பல காலனி அதிகாரிகள் இதைப் பற்றி முறையிட்டாலும், மேலிடத்தில் பெரிய அளவு தாக்கத்தை இவை ஏற்படுத்தவில்லை. நவீன முதலாளியமும் இலாப வேட்கையும் இந்த தார்மீக உணர்வை அழித்தொழித்தது. மேலும், மையப்படுத்தப்பட்ட அரசு முடிவுகளால் ஒரு பெரும்பகுதி முழுவதுமே பஞ்சத்தில் வீழ்ந்த வரலாறும் உண்டு. எனவே காலனியம் வேர்கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க பல்வேறு பஞ்சங்களை நாம் சந்தித்துள்ளோம். தொன்றுதொட்டு வந்த அறப் பொருளியலின் வீழ்ச்சியை எளியோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் உலகம் முழுக்கவே முதலாளித்துவ ஆட்சிக்கும் காலனியாதிக்க ஆட்சிக்கும் எதிராகப் பல்வேறு கலகங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சென்னை மாகாணத்திலும் அரிசிக் கலகங்கள் நிகழ்ந்துள்ளதாக டேவிட் அர்னால்ட் குறிப்பிடுகிறார். இது நிற்க. இப்பஞ்சங்களால் உடலும் உள்ளமும் மானமும் குறுகி நின்றமை குறித்தே வள்ளலார் வருந்துகிறார். சத்திய தருமச் சாலை நிறுவி வந்தோர்க்கெல்லாம் உணவிட்டுக் காப்பாற்றியுள்ளார். பசி எவ்வளவு தூரம் உடலையும் மனதையும் உருக்குலைக்கிறது என்பது பற்றித் தமது ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலில் உருகி உருகி விவரித்துள்ளார் வள்ளலார். இப்பசியும் பஞ்சமும் நம் மனதிலும் உடலிலும் ஆழமான பல தடங்களை விட்டுச் சென்றுள்ளன. 

இன்றும் இந்தியர்கள் மட்டுமன்றி தெற்காசிய மக்கள் பலரும் Thin Fat Phenotype என்றொரு விநோதமான உடற்கூறு உள்ளதென்று ஆய்வாளர்கள் பலர் சொல்கின்றனர். சர்க்கரை நோய், அதீத கொழுப்பு, கல்லீரல் கொழுப்பு போன்ற நோய்களை நாம் அதிக உடல் எடைகொண்டோருடன் தொடர்புபடுத்துவது வழக்கம். ஆனால் பார்ப்பதற்கு ஒல்லியாக இருக்கும் பல இந்தியர்களுக்கும் இந்நோய்கள் வருவதை இன்று நாம் காண்கிறோம். அதற்குக் காரணமாக இதுகாறும் நாம் சொல்லி வந்த காரணங்கள் – நவீன வேலைகள் தரும் மன அழுத்தம், சரியான உடற்பயிற்சி இல்லாமை, நல்ல உணவுப் பழக்கம் இல்லாமை – அதனோடு அதீத துரித உணவுகளை உட்கொள்வது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணாமை, நேரம் தவறித் தூங்குவது, நவீன உலகத்தின் நுகர்வுப் பண்பாட்டுக்கு அடிமையாதல் போன்றவையே. இவை எல்லாவற்றிலும் உண்மை இருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடான இங்கிலாந்தில் இருக்கும் ஒருவருக்கும் இந்தியாவில் அதே அளவு உடல் எடையும் BMI-யும் உள்ள ஒருவருக்கும் உடல்ரீதியில் பல வேறுபாடுகள் உள்ளதை சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஒரே BMI இருந்தாலும், தெற்காசியாவைச் சார்ந்தவருக்கு அதிகக் கொழுப்பு இருக்கிறது. இதற்குக் காரணம் மேற்சொன்னவை மட்டுமல்ல. மிக அடிப்படையான காரணமுள்ளது. மேல்மரபியல் – Epigenetics. 

உயிரியலுக்கு அடிப்படையானது மரபணு – DNA. இந்த மரபணு தான் குரோமோசோம்களாக அடுக்கப்பட்டிருக்கும். தாயிடமிருந்து 50 சதவிகிதமும் தந்தையிடமிருந்து 50 சதவிகிதமும் குழந்தைக்குக் கடத்தப்படுகிறது. இந்த மரபணு தான் பல தகவல்களை உள்ளடக்கி அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது. மரபணுக் குறியீட்டு வரிசை (Genetic Code Sequence) மூலமே தலைமுறை கடந்து பல உயிரியல் பண்புகள் கடத்தப்படுகின்றன. கண்களின் நிறம், உடல் தோற்றம், மயிர் நிறம், உயரம், பருமன் முதல் தூக்கத்தில் வரும் குறட்டை வரை இந்த மரபணுக் குறியீடுகள் மூலமாகவே பெற்றோரிலிருந்து குழந்தைகளுக்குக் கடத்தப்படுகின்றன. இப்படிப்பட்ட மரபணுக் குறியீடுகள் எளிதில் மாற்றமடையாது. ஆனால், சில உட்காரணிகளாலும் புறக்காரணிகளாலும் இவை மாற்றமடையவும் சிதிலமடையவும் வாய்ப்புள்ளது. மரபணுக்கள் தம்மைத் தாமே பிரதி செய்துகொள்ளும் இயல்புடையது. அவ்வாறு பிரதி செய்யும்போது ஏற்படும் சில குளறுபடிகளால் மரபணு மாற்றம் பெறும். சூரியனில் இருக்கும் யூ.வி. கதிர்கள் (Ultraviolet Rays) முதற்கொண்டு பல்வேறு கதிர்வீச்சுகள் (Radiation), புகைப்பிடித்தல், அதீத மாசுபாடு, சில இரசாயனங்கள் போன்றவற்றால் மரபணுக் குறியீடு மாற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவை யாவும் மரபணுவை, அதாவது DNA-வின் Genetic Code-ஐயே மாற்றும் வல்லமை பெற்றது. இதுவன்றி மேல்மரபணு என்று இன்னொரு சமாச்சாரம் உள்ளது. 

மரபுவழி (heriditary) கடத்தப்படும் மாற்றங்கள் எல்லாம் மரபணு மாற்றம் மூலமோ மரபணுக் குறியீட்டு மாற்றம் மூலமோ மட்டுமே நிகழ்வனவல்ல. அதைச் சுற்றி இயங்கும் பிற சாதனங்களால் மாற்றம் நிகழ்வதைப் படிக்கும் துறை மேல்மரபியல் ஆகும். Epi என்ற பதத்தின் பொருள் “அதன் மேல்,” “அதற்கு மேல்,” “அதனோடு இணைந்த” என்பதாகும். Epicentre என்பது மையத்துக்குச் சற்று மேல் என்பதாகும். மரபணுவில் உள்ள கார்பன் கலவைகள் மாற்றமடைவது மூலம், ஒவ்வொரு மரபணுவும் எவ்வெவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் என்பது மாற்றமடையும். இதை Gene Expression என்பார்கள். மரபணு மாறாமல் இந்த மேல்மரபணு மாற்றம் பெறுவது ஒரு சில விளைவுகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும். கடந்த முப்பது வருடங்களில் பல்வேறு ஆய்வுகள் மூலம் பல்வேறு பாலூட்டிகளின் உடலில் எவ்வாறு மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது பற்றிய சீரிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

இந்த மேல்மரபணுச் செயல்பாட்டால்தான் இந்தியர்களுக்கும் பிற தெற்காசியர்களுக்கும் பல உடல் நோய்கள் வந்தவண்ணமுள்ளன என்று ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே சொன்னதுபோல் காலனியத்தின் தாக்கத்தால் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகள் பல பஞ்சங்களையும் அதன் விளைவாக ஊட்டச்சத்துக் குறைபாடுகளையும் சந்தித்து வந்துள்ளோம். நம் மூதாதையர்கள் குழந்தைகளாக இருந்தபோது அவர்களது உடல் மிகக் குறைந்த ஊட்டச்சத்தை எவ்வாறு எல்லாப் பகுதிகளுக்கும் பிரித்துக் கொடுப்பது என்ற பிரச்சனையைச் சந்தித்தது. மூளை வளர்ச்சிக்கு மிக அதிக அளவிலான சக்தி தேவைப்படுகிறது. அவ்வாறு மூளைக்குச் செல்லும் சக்தி அதிகரித்தால் உடலில் பிற பகுதிகளுக்கு அதிகம் சக்தி செல்லாது. அன்றைய தாது வருடப் பெரும்பஞ்சத்தின்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களில் உடல் சூம்பிப் போன நிலையில் உள்ள குழந்தைகளையும் பெரியவர்களையும் காண இயலும். மூளைக்குச் செல்லாமல் பிற பகுதிகளுக்கு அச்சக்தியைச் செலவிட்டால், மூளை வளர்ச்சி குன்றியோராக அக்குழந்தைகள் வளரும். இவ்வாறு பல விதங்களில் ஊட்டச்சத்தை ஒவ்வொரு சூழலுக்கு ஏற்பவும் அவர்களது உடல்கள் ஒதுக்கீடு செய்து வந்தன. நிலவும் சூழலுக்கு ஏற்ப மரபணு வெளிப்பாடுகள் மாற்றம் பெறுகின்றன. உடலில் குளுக்கோஸ் அளவைச் சேமித்து வைத்து, முக்கியத் தேவைகளுக்கு மட்டுமே கொடுக்கும் வண்ணம் அம்மேல்மரபணுச் செயல்பாடுகள் அமைந்தன. அடுத்த சந்ததியினர் உருவாவதற்கு பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டு அடிப்படையில் ஏற்பட்ட அனுகூலங்கள் இவை – Evolutionary advantages. அம்மேல் மரபணுக்கள் அவ்வாறு செய்யவில்லையெனில், அடுத்த தலைமுறை என்ற ஒன்றை நம் முன்னோர்கள் கனவுகண்டிருக்கக் கூட இயலாது. மூளை வளர்ச்சியை ஓரளவு பிரதானப்படுத்தியதால், அப்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டோருக்குப் வேறு பல பக்க விளைவுகள் உண்டாயின. பல உறுப்புகள் செயலிழந்தன; உடல் தசைகள் சரிவர வளர்ச்சி பெறவில்லை; உடலின் செல்களால் இன்சுலின்களைச் சரிவரக் கையாள இயலவில்லை (Insulin resistance – இன்சுலின் எதிர்ப்பு). பிற உடல் பாகங்களுக்கு இன்சுலின் சரியாகச் செல்லாததால்தான், மூளைக்கு குளுக்கோஸ் சென்று பிற உடல் உறுப்புகள் ஏதாவது ஒருவகையில் செயல்பட வாய்ப்புகள் அமைந்தன. மேலும், உடலுக்குக் கொழுப்புச் சத்து அவசியமாகையால், அவை அடிவயிற்றுப் பகுதியில் அதிகமாகச் சேமிக்கத் தொடங்கின (Visceral Fat deposition in abdomen). பரிணாம வளர்ச்சி விதிப்படி, கொடூரப் பஞ்ச காலங்களில் உயிர் பிழைப்பதற்கு இப்படிப்பட்ட செயல்பாடுகள் தேவைப்பட்டன. 

பஞ்ச காலம் முடிந்து உபரிகளின் காலம் உடனடியாக வந்துவிடவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகும் வறுமையின் பிடியில் தான் பெரும்பான்மை மக்கள் இருந்து வந்துள்ளனர். இன்றும் கூட ஏழ்மையிலும் வறுமையிலும் உழலும் மக்கள் அதிகம் உள்ள நாடாகத்தான் இந்தியா உள்ளது. அரசுத் திட்டங்களாலும் நவீன வாய்ப்புகளாலும் கொஞ்சம் கொஞ்சமாக நடுத்தர வர்க்கம் பெருகத் தொடங்கியது. கடந்த முப்பது ஆண்டுகளில்தான் இன்று நாம் காணும் பெருவளர்ச்சி சாத்தியமானது. என்னுடைய பாட்டி நீர் எடுப்பதற்காக நெடுந்தூரம் கடந்து ஒரு நிலவுடைமையாளர் வீட்டில் வரிசையில் நின்றதை இன்றும் கூறுவார். ஒரு நாளைக்கு ஒரு வேளை இரு வேளை என்று மட்டுமே உணவுண்டு வந்தவர்கள் நமக்கு முந்தைய தலைமுறையிலும் கூட மிக அதிகம். மூன்று வேளை உணவு என்பது மிகப் பெரும்பான்மையோருக்கு இந்தத் தலைமுறையில் தான் சாத்தியமாகியுள்ளது. அதிலும் கடந்த முப்பது வருடங்களில் பெருகிய உணவுக் கலாச்சாரம் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. புதிது புதிதான வாய்ப்புகள், அதன் மூலம் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள், அது கொணரும் புதிய நோய்கள் என்று இவை பற்றிய உரையாடல்களை நாம் நிறையக் கேட்டாயிற்று. எனினும், கடந்த சில வருடங்களில்தான் இந்த நெடிய வரலாற்றின் உடலியல் தாக்கங்கள் ஆய்வு செய்யப்பட்டுப் பொதுவெளியில் உரையாடப்படுகிறது. 

அடுத்த தலைமுறையை உறுதிசெய்யும் இந்த பரிணாம வளர்ச்சி அனுகூலங்களே இப்போது நமக்குத் தொந்தரவாக மாறி வருகின்றன. கொஞ்சம் கொழுப்புச் சத்து சேர்ந்தாலும் நமது அடிவயிற்றில் சேமித்து வைப்பதற்கு நமது மேல்மரபணு பயிற்சி பெற்றிருக்கிறது. பஞ்ச காலம் முடிந்து மூன்று வேளையும் கார்போஹைட்ரைடு நிறைந்த அரிசிச் சோறு சாப்பிடும் நிலைக்கு வந்தாயிற்று. மேலும் துரித உணவுகளும் சிற்றுண்டியும் தின்பண்டங்களும் அதிகம் உண்கிறோம். திடீரென்று அதிகரித்த உணவு நுகர்வுக்கு ஏற்றாற்போல் நமது உடலுழைப்பு அதிகரிக்கவில்லை. உடலுழைப்புக்கு மாற்றாக உடற்பயிற்சிகள் இருந்து வந்தாலும் அதுவும் திடீரென்று அதிகரித்த உணவு விகிதத்துக்கு ஏற்றாற்போல் வளர்ச்சிபெறவில்லை. ஏற்கனவே சொன்னதுபோல் மேலும் பல வாழ்க்கை முறை மாற்றங்களும் இவற்றோடு இணைந்துகொண்டன. பஞ்சங்களுக்குப் பழக்கப்பட்ட இந்திய உடல் உபரியால் தவிக்கின்றன. பொருள் – சர்க்கரை நோய், கல்லீரல் பிரச்சனை போன்ற பலவும் இந்த உபரியால் மட்டும் நிகழ்ந்தவையல்ல. பஞ்சத்திலிருந்து உபரிக்கு திடீரென மாற்றம் பெற்றதால் நிகழ்ந்த ஒன்று. இவை இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான வளர்ச்சியன்று. காலனியத்தால் சுரண்டப்பெற்று விடுதலை பெற்ற பின் ஓரளவு பொருளாதார வளர்ச்சி பெற்ற பின்காலனிய நாடுகள் பலவற்றில் வாழும் மக்களுக்கும் இத்தகைய உடல் சார்ந்த பிரச்சனைகள் வந்தவண்ணமுள்ளன. 

பல மேற்கத்திய நாடுகளிலும் ஏழ்மையும் ஊட்டச்சத்துக் குறைபாடும் வரலாறுதோறும் இருந்து வந்தாலும், காலனியாதிக்க நாடுகளின் ஏழ்மையும் காலனியாதிக்கத்துக்குட்பட்ட நாடுகளின் ஏழ்மையும் வித்தியாசமானவை. ஒப்பீட்டளவின் தீவிரத்தன்மை கொண்டனவாய் மூன்றாம் உலக நாடுகளின் ஏழ்மை உள்ளது. புதிய செய்தியல்ல. மேற்சொன்ன எடுத்துக்காட்டை இந்தப் பின்னணியில் விளங்கிக் கொள்ள வேண்டும். அதை யுட்கின்-யஜ்னிக் முரண்பாடு (Yudgin-Yajnik Paradox) என்பர். யஜ்னிக் என்னும் இந்திய அறிவியல் அறிஞர் தமது நண்பரான யுட்கின் என்னும் இங்கிலந்து அறிஞருடன் எடுத்துக்கொண்ட உடற்கூறு ஆய்வின் முடிவுப்படி, இருவருக்கும் ஒரே அளவு BMI இருந்தாலும், இந்தியரது உடலில் ஒப்பீட்டளவில் அதிகக் கொழுப்புள்ளது தெரியவந்துள்ளது. உபரிக் கொழுப்புக்கு உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவை முக்கியக் காரணங்களாக இருப்பினும் வரலாற்று ரீதியில் அவரது இந்திய மூதாதையர்கள் சந்தித்து வந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை முக்கியக் காரணமாக முன்வைக்கிறார். யஜ்னிக் பிறந்தபோது அவர் குறைந்த எடையுடைவராக இருந்தது இதற்கொரு சான்றாகும். உடல் எவ்வாறு பஞ்சத்தை எதிர்கொள்ளத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறதோ, அதேபோல மனமும் வன்முறையை எதிர்கொள்ளத் தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. உடல் சேமிக்கும் கொழுப்பு (Visceral Fat), மனதின் அதீத விழிப்புணர்வுக்கு (Hyper-vigilance) இணையானது.

காலனியம் கொடுக்கும் ட்ராமா எத்தகையது? நிச்சயமாக காலனியம் உடல் சார்ந்து மட்டுமல்லாமல் உளவியல் சார்ந்தும் பல நெருக்கடிகளையும் தடங்களையும் தழும்புகளையும் விட்டுச் சென்றேயுள்ளது. அதுவும் நேரடியாக அதன் வன்முறைக்கு ஆளானவர்களும் அவற்றைக் கண்ணுற்றவர்களும் பல்வேறு உடல்-மன உபாதைகளுக்கு (Psycho-somatic illness) ஆளாவதைப் பற்றி உளவியலாளரும் அரசியல் அறிஞருமான ஃப்ரான்ஸ் ஃபனோன் குறிப்பிடுகிறார். அச்சூழலுக்கு உட்பட்டோரை தம்மைத் தாமே மனித நீக்கம் செய்யும் நிலைக்குக் காலனியம் தள்ளுகிறது. அல்ஜீரிய இளைஞர்கள் பலருக்கு வயிற்றுப் புண் (Stomach ulcers) உண்டாயின; பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சனைகள் உருவாயின; விசாரணைக் கூடங்களில் (Interrogation centres) சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோருக்கு இளமையிலேயே முடி நரைத்துப் பல நரம்பியல் பிரச்சனைகள் உண்டாயின; அகதிகள் முகாமில் தங்கும் குழந்தைகள் பலருக்கும் அதீத இரைச்சல்களால் பயம் வந்தது (Noise phobia); அது மட்டுமல்லாமல், இந்த வன்முறைகளை நிகழ்த்துவோருக்கும் பல உளவியல் பிரச்சனைகள் வருவது பற்றியும் ஃபனோன் குறிப்பிடுகிறார். அதனால் தான் காலனிய நீக்கம், வன்முறைக்கு உட்பட்டோரை மட்டுமல்லாமல் வன்முறையாளரையும் விடுவிக்கும் என்று அவர் முன்மொழிந்துள்ளார். 

போர் வன்முறைகளும் பஞ்சங்களும் ஒரு தலைமுறையை மட்டுமல்லாது அடுத்தடுத்த தலைமுறையையும் பாதித்து வருகின்றன. இது தொடர்பான முன்னோடி ஆய்வு டச்சுப் பஞ்சக் குளிர்காலத்தின் போது நிகழ்ந்தது (Dutch Famine Winter). இரண்டாம் உலகப்போரின் இறுதியில் (1944-45) ஜெர்மனி நெதர்லாந்துப் பகுதியை ஆக்கிரமித்தது. போரின் கொடூரத்தோடு கடும் பனிக்காலமும் இணைந்ததால் இரண்டு வருடங்களுக்கு இந்தப் பஞ்சம் நீடித்தது. ஐரோப்பாவில் மிகச் சமீபத்தில் நிகழ்ந்த பஞ்சமாகையால், அதன் விளைவுகளைப் பற்றி அதிக அளவிலான ஆய்வுகள் எளிதாக நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 30,000 பேர் இந்தப் பஞ்சத்தால் மரணமடைந்தனர். 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டனர். அப்போது கர்ப்பிணிப் பெண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அடுத்த ஐம்பது ஆண்டுகள் – அவர்களது முதல் தலைமுறையையும் இரண்டாம் தலைமுறையையும் தொடர்ந்து ஆய்வுக்குட்படுத்தியதால் பல முக்கிய விஷயங்கள் நமக்குத் தெரிய வந்துள்ளன. பஞ்சத்தின்போது கர்ப்பிணிகளாக இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், உடல் பருமன், இருதய நோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற பல உடல் உபாதைகள் இருந்தன என்று கண்டுபிடிக்கப்பட்டன. அது மட்டுமன்றி புறச்சூழல்களுக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக்கொண்ட மேல்மரபணுக்களின் செயல்பாட்டால், அப்பஞ்சத்தில் பாதிக்கப்பட்டோரின் பேரப்பிள்ளைகளுக்கும் உடல் உபாதைகள் கடத்தப்பட்டன. குறிப்பாக அளவுக்கதிகமான கொழுப்பு உடலில் சேர்ந்துள்ளதைச் (Adiposity) சமீபத்திய ஆய்வுகள் நமக்கு வெளிக்காட்டுகின்றன. 

அதேபோல யூத இன அழித்தொழிப்பிலிருந்து தப்பித்தவர்களை ஆய்வு செய்த போது அவர்கள் PTSD-யால் பாதிக்கப்பட்டுது தெரியவந்தது. உடலில் பலவித ஹார்மோன்கள் இருப்பது நமக்குத் தெரியும். அதில் கார்டிசாலும் (Cortisol) அட்ரினலைனும் (Adrenaline) மன அழுத்ததிற்கான ஹார்மோன்கள். ஆபத்துகளைச் சந்திக்கையில் இவ்விரு ஹார்மோன்களும் அதிகமாகச் சுரக்கும். அட்ரினலைன் சுரக்கும்போது இருதயம் வேகமாகத் துடித்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உடனடியாக fight or flight response-ஐ இயக்கும் ஹார்மோன் அதுதான். கார்டிசால் அளவு நெடுநாளைய மன அழுத்தத்தையும் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும் ஹார்மோன். அது அதிகரித்தால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து மன அழுத்தத்தம் அதிகரிக்கும். இவ்விரு ஹார்மோன்களும் ஆபத்துக்காலங்களில் நம்மை எச்சரிக்கையுணர்வுடன் வைத்திருக்கின்றன. இன அழித்தொழிப்பு, போர் வன்முறைகள் போன்றவை மிகக் கொடூரமான ட்ராமாவைத் தரும் வல்லமை படைத்தவை. இதனால் மனிதர்கள் பாதிக்கப்படும்போது, கார்டிசால் அளவும் அட்ரினலைன் அளவும் எப்போதும்போல் அதிகரிக்கும். ஆனால் நெடுங்காலம் இவை தொடரும் பட்சத்தில் கார்டிசால் நம்மைப் பாதுகாக்க வேண்டி, தாம் சுரப்பதைக் குறைத்துக் கொள்ளும். அதீத அளவு இந்த ஹார்மோன்கள் சுரக்குமானால், சமாளிக்க இயலாத அளவு உடல் உபாதைகள் பெருகுமாதலால், உடல் தம்மைத் தாமே தகவமைத்துக்கொள்ள இந்த ஹார்மோனைப் பயன்படுகிறது. மன அழுத்தம் இருப்போருக்கு வழக்கமாக அட்ரினலைன் அளவும் கார்டிசால் அளவும் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், ட்ராமா முடிந்து PTSD-யால் பாதிக்கப்பட்டோருக்குக் கார்டிசால் அளவு குறைந்து காணப்படும். மேற்பார்வையில் முரண்போலத் தெரியும் இந்த அளவுக் குறைபாட்டுக்கு இதுதான் காரணம். 

இத்தகைய சூழலில் சிக்கிய யூதர்களையும், அமெரிக்க இராணுவத்தினரையும், 9/11 தாக்குதலில் சிக்குண்டு தப்பித்தவர்களையும் ஆய்வு செய்ததில் அவர்களுக்கு PTSD இருப்பதையும், கார்டிசால் அளவு குறைந்ததையும் பதிவு செய்துள்ளனர். இவர்களது அடுத்த தலைமுறையினரில் பலருக்கும் கார்டிசால் அளவு குறைந்திருப்பதும் தொடர் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதன் பொருள் அவர்கள் எல்லோரும் PTSD-யால் பாதிக்கப்படுவார்கள் என்பதல்ல. ஒருவேளை அவர்கள் தங்கள் வாழ்வில் துன்ப துயரங்களைச் சந்திக்கையில், குறைவாக உள்ள கார்டிசால் அளவால் அவர்களது மன அழுத்தங்களைக் கையாள இயலாது. அதனால் அட்ரினலைன் அளவு அதீதமாக அதிகரிக்கும். எனவே, குறைந்த கார்டிசால் அளவு உள்ளவர்கள் PTSD பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதே இந்த ஆய்வுகள் சொல்லும் முடிவு. முப்பது வருடங்களாகத் தான் இந்த ஆய்வுகள் சீரிய முறையில் நடந்து வருகின்றன. இன்னும் பல ஆய்வுகள் நடத்தப்பட்டால் இதன் தீவிரத்தன்மை இன்னும் தெளிவாகத் தெரியவரும்.

மனிதர்கள் மேல் இது பற்றித் தொடர் ஆய்வுகள் நடத்த இயலாத காரணத்தால் (!), ஆய்வகங்களில் விலங்குகள் மீது வழக்கம்போல் பரிசோதனை முயற்சிகள் செய்யப்பட்டன. அதில் குறிப்பிட்ட ஒரு ஆய்வு அடுத்தடுத்த தலைமுறைக்கு ட்ராமா கடத்தப்படும் பாங்கினை விளக்கத் தலைப்பட்டது. ஒரு எலியை எடுத்துக்கொண்டனர். செர்ரிப் பூவின் வாசத்தை நுகர வைத்து அதன் காலில் மின்சாரம் பாய்ச்சினர். சில நாட்கள் தொடர்ந்து அவ்வாறு நுகர வைத்து மின்சாரம் பாய்ச்சியவுடன், அந்த வாசத்தை நுகர்ந்த அடுத்த நொடியே அதன் உடல் நடுக்கம் பெறுவதைக் கவனித்தனர். இப்படியே சில நாட்கள் அதன் கால்களில் மின்சாரம் பாய்ச்சி அதைப் பெண் எலியுடன் புணரவிட்டனர். அதன் அடுத்த தலைமுறை எலி அந்த சுகந்தத்தை நுகர்ந்த உடனேயே நடுங்கத் தொடங்கி விட்டது. அதற்கடுத்த தலைமுறை எலியும் இவ்வாறு நடுக்கம் பெற்றதையும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், மேல்மரபணு மூலம் கடத்தப்படும் உணர்வுகளையும் ட்ராமாவையும் பற்றிய முடிவுகளை அவர்கள் வெளியிட்டு விவாதித்து வருகின்றனர். இவை யாவும் முடிந்த முடிபுகள் அல்ல என்பதை அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டாம் மூன்றாம் தலைமுறை எலிகளுக்கு அந்த சுகந்தத்தின் மீதிருந்த பயத்தைப் போக்குவதன் மூலம் இந்த தொடர்பு வலை அறுபடுவதையும் பதிவு செய்துள்ளனர். 

முதல் தலைமுறையினருக்கு ஏற்படும் தீவிர மன அழுத்தம் அடுத்தடுத்த தலைமுறையினரையும் பாதிக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கின்றன. அதற்கு தம்மைத் தாமே தகவமைத்து அடுத்த தலைமுறையின் இருப்பை உறுதி செய்யும் பரிணாம வளர்ச்சிச் செயல்பாடு அடிப்படைக் காரணமாக உள்ளது. முதல் தலைமுறையின் சூழலால் உந்தப்பெற்ற மேல்மரபணுக்கள் அடுத்த தலைமுறைக்கும் இவ்வாறு நிகழும் என்ற எச்சரிக்கையுணர்வால், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்திக் கடத்துகிறது. எனினும், சூழல் மாற்றம் பெற்ற போதும், மேல் மரபணுச் செய்லபாடுகள் உடனடியாக மாற்ற பெற இயலாமையால் பல நேரங்களில் அவை உடல் உபாதைகளாக மாற்றம் பெறுகின்றன. சமூகப் பொருளாதார சூழ்நிலைகள் உயிரியலோடு எந்த அளவு உரையாடுகிறது என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. 

இதைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கையிலும் நண்பர்களோடு உரையாடியபோதும் மிக முக்கியமான கேள்வியொன்று எழுந்தபடியே இருந்தது. குறிப்பாக இந்தியாவில் நாம் உள்ளபோது இப்படிப்பட்ட முடிவுகள் சாதிகளைப் பற்றியும் ஒரு சாதிக்குள் திருமணம் நடப்பது பற்றியும் அது எவ்வாறு அவ்வச் சாதிகளின் செயல்பாடுகளையும் துன்ப துயரங்களையும் வடிவமைக்கிறது என்பது அந்த கேள்வி.

இது பற்றி ஒரு சில விஷயங்களை மட்டும் சொல்லிக் கட்டுரையை முடிக்கிறேன். சில முக்கியமான திறமைகள் மரபியல் ரீதியாகக் கடத்தப்படுவது உண்மையே. சிலருக்கு ஓசை மிகத் துல்லியமாகக் கேட்கும். சிலருக்கு இயல்பிலேயே நினைவுத் திறனிருக்கும். சிலரது உடல் தடகளத்துக்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இவற்றை மரபியல் அனுகூலம் (Genetic Advantages) என்று அறிவியல் அறிஞர்கள் வரையறுப்பர். ஆனால் இத்தகைய இயற்கைத் திறமைகள் எந்தவொரு சமூகத்தவரோ சாதியினரோ இனத்தவரோ முழுமையாக உரிமை கொண்டாட இயலாது. எல்லா நாடுகளைச் சார்ந்தவர்களிடமும் இனங்களைச் சார்ந்தவர்களிடமும் இத்தகைய இயற்கைத் திறன்கள் உள்ளன. காலனிய ஆதிக்கவாதிகளும் சாதியவாதிகளும் இத்தகு திறன்கள் ஒரு சில சமூகத்தவரிடம் மட்டுமேயுள்ளன என்று அறிவியலுக்குப் புறம்பான முறையில் 19-ம் நூற்றாண்டிலும் 20-ம் நூற்றாண்டிலும் பேசி வந்தனர். ஆனால், தற்போதைய பல ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால் மனிதர்கள் அனைவரின் மரபணுவும் 99 சதவிகிதத்துக்கு மேல் ஒத்த தன்மையுடையது என்பதாகும். அந்த ஒரு சதவிகித வேறுபாடும் கூட இனத்துக்கு இனமோ சாதிக்குச் சாதியோ அதீத அளவு மாறுபடாது. சாதியோ இனமோ, ஒரு சமூகத்துக்குள்ளேயே இருக்கும் மரபியல் வேறுபாடு, ஒரு சமூகத்தவருக்கும் வேறொரு சமூகத்தவருக்கும் உள்ள வேறுபாட்டை விட அதிகம் என்றே ஆய்வுகள் நமக்குச் சுட்டிக் காண்பிக்கின்றன. எனவேதான் இனங்களும் சாதிகளும் உயிரியல் யதார்த்தமில்லை; சமூக யதார்த்தம் என்ற வாதங்கள் வலுப்பெற்று வருகின்றன. சமூகப் பொருளியல் ரீதியில் மனிதர்களுக்குள் வேறுபாடுகள் நிலைநிறுவப்படுவதே உண்மை. இனம் பற்றிய உரையாடல் நடைபெறும்போது வெளித்தோற்றத்தில் தெரியும் உடலின் நிறம் முக்கியப் பங்கு வகிப்பது உண்மையே. அது மரபியல் ரீதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. அதற்கு பல நூறு தலைமுறைகள் வாழ்ந்து வந்த புவியியல் அமைப்பு, சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள மெலனின் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகள் போன்ற பல சமூக-உயிரியல் செயல்பாடுகள் காரணமாகின்றன. வெறும் மரபியல் செயல்பாடுகள் மட்டுமே வேறுபாடுகளை உற்பத்தி செய்யக் காரணமாக இருப்பதில்லை. 

அன்றைய காலனியாதிக்கக் காலகட்டத்தில் இந்திய இராணுவத்தில் யார்யாரெல்லாம் சேரத் தகுதியானவர்கள் என்ற பேச்சு எழுந்தபோது, மராத்தியர்களும், ராஜபுத்திரர்களும், பஞ்சாபிகளும் இயல்பிலேயே வலுமிக்கோராகவும் ஆண்மைகொண்டோராகவும் கருதப்பட்டதால் அவர்களை இயல்பிலேயே போர்த்திறன் கொண்ட இனங்கள் (Martial Races) என்று வரையறுத்தனர். மாறாக வங்காளிகளும் தென்னிந்திய பிராமணர்களும் பெண்மைத்தன்மை பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு இராணுவங்களில் பெரிதாக இடம்தரவில்லை. ஒருவர் வளரும் சூழ்நிலையில் அவர்கள் பயிற்றுவிக்கப்படும் திறன்கள் பல இயல்பிலேயே வருவனவல்ல. காலனியாதிக்க காலத்தில் போர்களில் ஈடுபட்டு வந்த பல இனங்களை இவ்வாறு வகைப்படுத்துவது ஆங்கிலேயர்களுக்கு எளிதானதாக இருந்து வந்தது. மேலும், அன்றைக்கு அரசுப் பதவிகளில் அதிகம் இருந்து வந்த பிராமணர்கள் தம்மையும் தம் சாதியையும் இயல்பிலேயே அறிவுத் திறம் கொண்டவர்களாகச் சித்தரித்துக் கொண்டனர். அக்காலத்தில் இன அடிப்படையிலான போலி அறிவியல் கோரல்கள் (Pseudo-scientific claims based on race) இருந்துவந்ததால், அத்தகைய பார்வையை இந்திய சாதி-மதங்களின்மேல் வெள்ளை ஆதிக்கவாதிகள் செலுத்தியதில் வியப்பில்லை. கறுப்பினத்தவர் இயல்பிலேயே மூளை வளர்ச்சி அதிகம் இல்லாதவர்கள்; அடிமை எண்ணம் கொண்டவர்கள். வெள்ளை இனத்தவர் பிறரை ஆளும் திறன்களை இயல்பிலேயே கொண்டவர்கள்; அறிவில் உச்சம் பெற்றவர்கள் போன்ற அறிவியலுக்குப் புறம்பான பல பார்வைகளை அவர்கள் கொண்டிருந்தனர். இத்தகைய இனவாதப் பார்வையே பிற்காலத்தில் ஒவ்வொரு சாதியாரிடமும் ஒவ்வொரு இயற்கைத் திறன் உள்ளது என்கிற மேலாதிக்கக் கோட்பாடு வளர்வதற்குக் காரணமாக இருந்தது. 

வறுமை நிலையில் சரியான ஊட்டச்சத்து இல்லாமல் பல தலைமுறைகளை வைத்திருக்கும்போது அது மரபணு வெளிப்பாட்டை எப்படி பாதிக்கும் என்பதை மேல்மரபியல் ஆய்வுகள் நமக்குச் சுட்டிக்காண்பிக்கின்றன. மேலும், மரபணு வெளிப்பாடும் முடிந்த முடிபாக அல்லாமல் சூழலுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ளும் வல்லமை பெற்றதால், நல்ல சூழல் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து சரியான ஊட்டச்சத்தையும் திறன்கள் வெளிப்படுத்துவதற்கான வெளியையும் உருவாக்கிக் கொடுத்தால், அந்த மரபணு வெளிப்பாடு மாற்றம் பெறும் என்பதுமே அறிவியல் கூறுகிறது. இளையராஜாவுக்கு ஓசையைப் பிரித்தறியும் திறன் சராசரி மனிதர்களை விட அதிகமாக உள்ளது. அதை Perfect Pitch என்பார்கள். ஆனால் அவருக்குச் சிறுவயதில் ஊட்டச்சத்து சரியான அளவுக்குச் செல்லவில்லையெனில், அவரது மரபணு வெளிப்பாட்டை மேல்மரபணுக்கள் நிறுத்தி வைத்து அவர் உயிர்பிழைப்பதற்கான வழிமுறைகளை மேற்கொண்டிருக்கும். மேலும் இத்தகு திறனை வெளிப்படுத்த வெளிகள் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் அவர் இசைமேதையாக உலவியும் இருக்க இயலாது. அதனால்தான் குழந்தை வளர்ப்புப் பற்றிப் பேசும்போது எல்லா விதமான துறைகளையும் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைப்பதன் முக்கியத்துவத்தை இன்று பேசி வருகிறோம். 

சமூகநீதி வட்டாரங்களில் நாம் கேள்விப்படாதது ஒன்றுமல்ல. காலம் காலமாக கல்வியறிவு பெற்ற சமூகம் கல்வியில் முன்னணியில் புதிதாய் ஏழ்மையிலிருந்து எழும் சமூகம் கல்வியில் ஓரளவு பின்தங்கி இருப்பதும் சூழலைப் பிரதானப்படுத்தியதே என்பது இன்றைக்குப் பொது அறிவாகிவிட்டது. அதிலும் கல்வி கற்பதற்கான சரியான சூழலை வீட்டில் அமைக்கவில்லையெனில் அது முன்னேற்றத்தை எவ்வாறு தடுக்கும் என்பதும் நமக்குத் தெரியும். சூழல் சரியாக அமையும்பொழுது இயல்பிலேயெ உருவாகும் ஒரு சில திறமைகள் வெளிச்சம் பெறும். சாதியவாதிகளுடன் போராடி வருவதால் சமூகநீதி வட்டாரங்களில் இருக்கும் நாம் ”இயல்பிலேயே” என்ற பதத்தை என்றும் சந்தேகத்துடனேயே பார்த்து வருகிறோம். Nurture vs. Nature என்னும் பழங்காலச் சண்டையில் என்றும் Nurture பக்கமே நாம் நின்றுவருகிறோம். Nature என்று சொன்னால் அதைச் சாதியவாதிகள் தங்களுக்கான வாதமாக மாற்றிவிடுவார்கள் என்ற அச்சம் எழுவது இயல்பே. எனினும், Nurture vs Nature என்ற உரையாடல் பெரும்பாலும் காலாவதியாகி Nature through Nurture என்னும் இடத்துக்கு இன்று வந்தடைந்திருக்கிறோம். இயல்பிலேயே மரபணுக்கள் சில திறன்கள் வளர்வதற்கான வாய்ப்புகள் வழங்கினாலும், சரியான சூழல் இல்லையெனில் மரபணு வெளிப்பாடு அடங்கிவிடும். இது Nature பக்கம் நிற்பது கிடையாது. இயற்கையும் சூழலும் என்றென்றும் முடியா உரையாடலில் இயங்கி வருகிறது. இத்தகு திறன்கள் எந்தவொரு சமூகத்தவரின் தனிச்சொத்தல்ல. அந்த ஒரு சதவிகித வேறுபாடுகள் தான் மானுட குலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரிச் செயல்பாடுகளில் இயங்க முதன்மைக் காரணமாக இருக்கிறது. அந்த வேறுபாடுகள் இல்லையெனில் உலகம் சுவாரஸ்யமற்றுப் போய்விடும். 

இது நிற்க. மிக முக்கியமான இன்னொரு கேள்வியொன்றும் உள்ளது. எனில் ஒரே சாதிக்குள் திருமணம் செய்யும் வழக்கம் நமக்குச் செய்வதுதான் என்ன? சாதி மேலாதிக்கக் கருத்தியலுக்கு முற்றிலும் மாற்றான ஒன்றே இங்கு நடந்து வருகிறது. ஒரே சாதிக்குள்ளும் வட்டத்துள்ளும் தொடர்ந்து திருமணம் செய்து இனப்பெருக்கம் செய்வது பலவித மரபணுக் கோளாறுகளையே வெளிப்படுத்துகின்றன. மரபணு வேறுபாடுகள் அதிகம் இல்லாத ஒரே சாதிக்குள் இனப்பெருக்கம் நிகழும்போது இருவருக்கும் பொதுவாக உள்ள மூதாதையர்களின் மரபணுக் கோளாறுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது இலகுவாக மாறுகிறது. ஆந்திராவில் உள்ள ஒரு வைசியச் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட மரபணுக் கோளாறு உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஒரு ட்ராமா அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதுபோல் குணங்களும் குணநலன்களும் கடத்தப்படுவது இல்லை. ஆரோக்கியமான மரபுவழிக் கடத்தல் என்று சொல்லப்படுவது பாதிப்புகளின்றி நடுநிலையான மரபுவழிப் பரிமாற்றமேயாகும். Healthy transmission of genes implies neutral inheritance rather than the transmission of advantages or disadvantages. 

சாதி-மத ரீதியில் ஒடுக்கப்பட்டு வரும் மக்கள் என்றும் விழிப்புநிலையிலேயே இருந்துவர வேண்டியுள்ளதால் அவர்களது உடலிலும் உள்ளத்திலும் எத்தகைய நோய்கள் குடிகொண்டிருக்கின்றன என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் அந்த அச்சம் கடத்தப்பட்டுக்கொண்டே வரவேண்டிய சூழல் வேறு. பொதுவான கதையாடல் கூறுவதுபோல, தலித்துகள் எல்லாக் காலங்களிலும் எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்டோராய் இருந்ததில்லை. எவ்வாறு வளமும் பஞ்சமும் இடத்துக்கு இடமும் காலத்துக்குக் காலமும் மாற்றம் பெற்று வந்திருக்கிறதோ அதே போல சமூகச் சூழ்நிலைகளும் மாற்றம் பெற்று வந்திருக்கின்றன. இத்தகைய ஒடுக்குமுறைகள் வரலாற்றுக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஏதோ ஒரு புள்ளியில் இத்தகு வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் தொடங்கியிருக்கின்றன. எனில், சமூக அரசியல் ரீதியில் இத்தகைய ஒடுக்குமுறைகளை நிச்சயம் ஒழித்துக்கட்ட இயலும். அதே போலத்தான் – இச்சூழல்களால் உண்டான மன அழுத்தங்களும் ட்ராமாவும் ஒரு கட்டத்தில் முடிவுக்குக் கொண்டுவர இயலும். அதற்கு மனநலத்தைப் பேணுவது மட்டும் தீர்வு கிடையாது. சமூகப் பொருளியல் விடுதலையுடன் சேர்ந்த மனநல விடுதலைதான் முழுத் தீர்வாக இருக்க இயலும். 

ட்ராமாக்கள் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவது என்றைக்கும் முடிந்த முடிபாக இருக்கவேண்டியதில்லை. நம் வாழ்காலத்திலேயே ஒவ்வொருவரது ட்ராமாவும் ஓரளவேனும் சீர்செய்ய இயலும். அதற்குத் தகுந்தாற்போல சிகிச்சை எடுத்துக்கொள்வதும் மருந்துகள் உட்கொள்வதும் ஓரளவேனும் நம்மைச் சீர்செய்ய உதவும். மேலும், மேல்மரபியல் சூழலுக்கு ஏற்பச் செயல்படும் தன்மையுடையதால், சூழலை மேம்படுத்துவதன் வழியாகவும் சரியான சிகிச்சை வழியாகவும் மாற்றம் பெறும் என்று அறிஞர்கள் உரைக்கின்றனர். நம் மேல் விழும் வடுக்கள் மாற்ற முடியாதவை அல்ல. இதை Epigenetic Reversibility என்கிறோம்.

மேற்சொன்ன சமூகப் பொருளியல் காரணங்களால் ஏற்படும் ட்ராமாக்களை வெறும் மருந்து மாத்திரைகளாலும் தனிநபர் சிகிச்சைகளாலும் மட்டுமே மாற்ற இயலாது. காசாவில் ஆக்கிரமிப்பு நடந்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வெறும் மருந்து மாத்திரைகள் கொடுத்துச் சரிசெய்துவிட முடியாது. அதனால் தான் உளவியல் நலன் என்பது ஆழமான சமூக அரசியல் பிரச்சனையாக இன்று கருதப்படுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ நற்சூழல் அமைத்துக் கொடுப்பது சமூகப் பொருளியல் விடுதலை மட்டுமல்ல; அது அவர்களது அடுத்த தலைமுறையின் உயிரியல் விடுதலையுமாகும். நற்சூழ்நிலை, சத்தான உணவு, வன்முறையற்ற வாழ்வு ஆகியவை அந்த மேல்மரபணு சுவிட்சுகளை (Switches) மீண்டும் இயல்பு நிலைக்குத் திருப்ப வல்லவை. 

References

  • Arnold, David. “Famine in Peasant Consciousness & Peasant Action: Madras 1876-78.” In Subaltern Studies: Writings on South Asian History and Society, edited by Ranajit Guha. 3. Oxford University Press, 1994.
  • González-Rodríguez, Patricia, Jens Füllgrabe, and Bertrand Joseph. “The Hunger Strikes Back: An Epigenetic Memory for Autophagy.” Cell Death & Differentiation 30, no. 6 (2023): 1404–15.
  • Jawaid, Ali, Martin Roszkowski, and Isabelle M. Mansuy. “Transgenerational Epigenetics of Traumatic Stress.” In Progress in Molecular Biology and Translational Science. Elsevier, 2018.
  • Kaur, Harjyot, and Pooja Jaggi. “Intergenerational Trauma in the Context of the 1947 India–Pakistan Partition.” Psychological Studies 68, no. 3 (2023): 374–87.
  • Kwon, Diana. “Borderline Personality Disorder May Be Rooted in Trauma.” Scientific American, January 1, 2022. https://www.scientificamerican.com/article/borderline-personality-disorder-may-be-rooted-in-trauma/.
  • Li, Yanping, Yuna He, Lu Qi, et al. “Exposure to the Chinese Famine in Early Life and the Risk of Hyperglycemia and Type 2 Diabetes in Adulthood.” Diabetes 59, no. 10 (2010): 2400–2406.
  • Mandal, Shreya. “Reading the Silence of the Bengali Diaspora: Bibliotherapy and the Inheritance of the 1943 Bengal Famine.” Psychology Today, June 8, 2025. https://www.psychologytoday.com/us/blog/bipoc-mental-health/202505/reading-the-silence-of-the-bengali-diaspora.
  • Sharma, Dinesh C. “Genetic Isolation in Casteist India Could Render Some People More Vulnerable to Disease.” The Wire: Science, July 19, 2017. https://science.thewire.in/science/caste-founder-events-endogamy-recessive/.
  • Thompson, E. P. “The Moral Economy of the English Crowd in the Eighteenth Century.” Past & Present, no. 50 (1971): 76–136.
  • Wells, Jonathan C. K., Emma Pomeroy, Subhash R. Walimbe, Barry M. Popkin, and Chittaranjan S. Yajnik. “The Elevated Susceptibility to Diabetes in India: An Evolutionary Perspective.” Frontiers in Public Health 4 (July 2016).
  • Yajnik, Chittaranjan S., and John S. Yudkin. “The Y-Y Paradox.” The Lancet 363, no. 9403 (2004): 163.
  • Yehuda, Rachel. “How Parents’ Trauma Leaves Biological Traces in Children.” Scientific American, July 1, 2022. https://www.scientificamerican.com/article/how-parents-rsquo-trauma-leaves-biological-traces-in-children/.
  • Yehuda, Rachel, Nikolaos P. Daskalakis, Amy Lehrner, et al. “Influences of Maternal and Paternal PTSD on Epigenetic Regulation of the Glucocorticoid Receptor Gene in Holocaust Survivor Offspring.” American Journal of Psychiatry 171, no. 8 (2014): 872–80.
  • Yehuda, Rachel, and Amy Lehrner. “Intergenerational Transmission of Trauma Effects: Putative Role of Epigenetic Mechanisms.” World Psychiatry 17, no. 3 (2018): 243–57.
  • Ziadah, Rafeef, dir. We Teach Life, Sir. n.d. Accessed May 20, 2026. https://www.youtube.com/watch?v=aKucPh9xHtM.

***

மா.க. பாரதி –  கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பணி நிமித்தமாக டில்லியில் வசித்து வருகிறார். அசோகா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை ஆய்வு மாணவராகப் பணிபுரிந்து வருகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக-சமய வரலாற்றை ஆய்வு செய்கிறார். மின்னஞ்சல் : barathyganesan96@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here