Wednesday, June 24, 2026

தூஸ்ரா

பாலு

தொடக்க ஆட்டக்காரனாகக் களமிறங்கி பளபளப்பான புதுப் பந்தை அடித்து வெளுத்து சிதைக்க வேண்டும் என்பதே கோபாலுக்குப் பெரும் கனவாய் இருந்தது. ஆரம்ப ஆட்டத்தின் அறைகூவலைச் சந்திக்கவே அவன் விரும்பினான். இன்ஸ்விங்கையும் ஔட்ஸ்விங்கையும் கவனித்து அதற்குத் தகுந்தாற்போல் விளையாடுவதையே அவன் மனமும் உடலும் விரும்பியது. பயிற்சியாளரோ அவனை நெருக்கடியைத் தாங்கும் டெத் பேட்டராக உருவாக்க எண்ணினார். அவனின் அதிரடி ஆட்டத்துக்கு இறுதி ஓவர்களே தோதாக இருக்குமென்பதால், “நீ அன்-ஆர்த்தடக்ஸான ப்ளேயரு கோபால். பந்து கொஞ்சம் அடி வாங்கிச்சுன்னா டெத்ல நீதான்டா…” எனச் சக வீரர்களுமே ஊக்குவித்தனர். 

“நூறு பந்து போட்டா அதுல முப்பதையாவது சிக்ஸர் அடிச்சிருக்கணும். ஸ்விங்கு மயிறு மட்டையெல்லாம் எதுக்கு ஒனக்கு?” எனப் பயிற்சியாளர் கடுமையாகத் திட்டுவார் இவனை.

“அப்போ டெத்ல ரிவர்ஸ் ஸ்விங்கானா என்ன செய்ய, கோச்?” என முகம் சுளித்து முறுக்கிக்கொண்டு நிற்பான். அவர் சினமடைந்து பந்தை மட்டையை நோக்கி வீசியடிப்பார்.

“நெனவிருக்குல்ல? நாளைக்கு சேஷாத்ரி சாரை பார்க்கப் போறோம். கஷ்டப்பட்டு உனக்கு அங்கே சிபாரிசு வாங்கிருக்கேன். நீப்பாட்டுக்கு அவர்கிட்ட போய் இப்படியெல்லாம் பேசிட்டுக் கெடக்காதே” 

சேஷாத்ரி எம்சிசி வீரர்களின் ஞானப்பிதா. விளையாட்டுத்துறை மருத்துவரும்கூட. இழையோடத் தொடங்கிய நரையிலும் மைதானத்தில் அவர் கால்படாத நாளில்லை. சுழற்பந்து வீச்சாளருக்கு விளையாட வயதேது? நாற்பத்தைந்தை நெருங்கும் அவர், “என் வலதுகை விரல்களுக்கு வயசாகுற வரை விளையாடிட்டே இருப்பேன்” என்பார் இளம் வீரர்களிடம். தமிழ்நாடு ரஞ்சி அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என ஒரே சமயத்தில் இரு பெரும் பொறுப்புகளைத் தூக்கிச் சுமப்பதில் எந்த பாரமுமில்லை அவருக்கு.

செழித்து வளர்ந்த ஃபினிஷ்ஷிங் வீரனாய் மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்புக்குள் நுழைந்தான் கோபால். பயிற்சியாளர் அவனை சேஷாத்ரியிடம் அறிமுகப்படுத்தி ஒப்படைத்தார். கோபாலகிருஷ்ணன் சுவாமிநாதன் (22), அன்-ஆர்த்தடக்ஸ் இடதுகை அதிரடி பேட்டர். டாக்டர் சேஷாத்ரி பலநாட்களாய் இப்படியொரு வீரனைத் தேடிக்கொண்டிருந்தார். சம்பிரதாய அறிமுகங்கள் முடிந்ததும் கோபாலைத் தனியே அழைத்து வந்த பயிற்சியாளர் அவனிடம் சொன்னார்:

“பலருக்கு இங்கே நுழையுறது கனவு. சௌத் ஸோன் துலீப் ட்ராஃபில உன் ஆட்டத்தை சேஷாத்ரி சார் பார்த்துட்டு உன்னை மாதிரி ஒரு ப்ளேயர் வேணும்னு அவராவே கேட்டார். நம்மவருன்னு நீ சேஷாத்ரி சாரை ஈஸியாவும் எடுத்துக்க முடியாது. அவருக்கு கிரிக்கெட்தான் மூச்சு. மத்த கருமத்தைப் பத்தி அவருக்குக் கவல மயிறே இல்ல. இனி நீ அவர் பொறுப்பு. அப்டே புடிச்சு ரஞ்சி அது இதுன்னு ஆடி மேல வந்துக்கோ. ஏதோ என்னால முடிஞ்ச தூரத்துக்கு உன்னைக் கூட்டிட்டு வந்துட்டேன்” எனத் தீவிரமான பார்வையுடன் மெல்லிய குரலில் சொன்னார். 

மெட்ராஸ் க்ளப் வீரர்களுடன் பழகுவதில் கோபாலுக்குத் தாழ்வுணர்ச்சி இருந்தது. அவர்களின் ஆர்தடாக்ஸ் ஷாட்டுக்கு முன் தன்னைக் காட்டானாய் உணர்ந்தான். பயிற்சியில் அணியோடு ஐக்கியமாகாமல் தனித்து விடப்பட்ட ஆட்டைப் போல் சுற்றித் திரிந்தவனை கவனித்தார் சேஷாத்ரி.

“என்ன பிரச்சினை?”

“கவர் ட்ரைவ் ஆடுனா எட்ஜ் ஆகுது” 

“நியூ பால் ஆடுனதே இல்லையா?”

“அன்-ஆர்த்தடக்ஸ் ஹிட்டர்னு முத்திரை குத்திட்டாங்க. எனக்கு டெஸ்ட் ஆடணும். நான் நம்பர் சிக்ஸே இறங்கினாலும் எண்பது ஓவர் முடிஞ்சு நியூ பால் வந்தா அதை எதிர்கொண்டுதானே ஆகணும். என் கேமை மாத்தணும் சார்” எனப் பணிவுடன் சொன்னான் கோபால்.

“அதெல்லாம் தேவையில்லாதது. நீ ஒரு லெஃப்ட் ஹேண்ட் சீக்கா. அன்-ஆர்த்தடக்ஸா ஆடுறது ஒன்னும் கொலைக்குத்தமில்ல” எனச் சொல்லிப் புதுப்பந்தை எதிர்கொள்ளும் முறையை கோபாலுக்குக் கற்பித்தார். ஆரம்பத்தில் நிறையவே எட்ஜ் வாங்கினாலும் போகப் போக நடு மட்டையில் ஆடப் பழகினான். ஔட்ஸ்விங் ஆகும்பட்சத்தில் எம்மாதிரியான பந்துகளை விட வேண்டுமெனக் கற்பித்தார் சேஷாத்ரி. ஏற்பதைவிட விட்டொழிவதிலிருக்கிறது விளையாட்டின் ஆன்மா.

நேர்த்தியான மட்டையாளர்களைக் கொண்ட அணியை உருவாக்கி வைத்திருந்தாலும் கோபாலின் கரடுமுரடான ஆட்டமுறை சேஷாத்ரியை வெகுவாகவே கவர்ந்தது. வைதீகர்கள் கைவிடும்போது வேட்டையர்களே காப்பான்கள். இத்தனை ஆண்டு கிரிக்கெட் அனுபவத்தில் சேஷாத்ரி அதை நன்கறிந்திருந்தார். ஆகவே அவனை ஐந்தாம் எண் வீரனாய் ரஞ்சியில் களமிறக்கத் துணிந்தார். புதுவை, விதர்பா, ரயில்வே அணிகளுக்கு எதிராக முப்பது ரன்களை சராசரியாக வைத்திருந்தான் கோபால். தமிழ்நாடு அணியின் எல்லா வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டதால் ஒவ்வொருவரின் சிறு பங்களிப்பும் வெற்றிக்கு உதவியது. முன்கூட்டியே அரையிறுதியை எட்டிவிட்டதால் தயக்கத்தை உடைத்து சேஷாத்ரியிடம் போய் நின்றான் கோபால்.

“என்னை ஓப்பனிங் இறக்கிவிடுங்க சார்” 

“ஏன்? நீ ஔட்டானதும் டீமே கொலாப்ஸ் ஆகுறதுக்கா? அதெல்லாம் வேண்டாம். பின்னாடி ஆட ஆள் வேணும்”

“அதான் செமிக்கு போயிட்டோமே. இனி நடக்குற லீக் மேட்சுக்கு மட்டும் ஓபனிங் ஆடுறேன் சார். செமில நீங்க சொன்ன மாதிரியே பின்னாடி ஆடிக்கிறேன்” 

குழப்பத்தால் பீடிக்கப்பட்டவராய் முடிவெடுக்க இயலாமல் அங்குமிங்கும் நடந்தார் சேஷாத்ரி. கோபாலின் விடாப்பிடியான ஆர்வத்தால் அரை மனதோடு ஒப்புக்கொள்ளவும் செய்தார். விளையாட்டுக்குத் திறமையானவர்களைப் போலவே பிடிவாதக்காரர்களும் இன்றியமையாதவர்கள். 

“போர்க்களத்துல செத்தாலும் பரவாயில்லை. ஆனா ஜெயிச்சுட்டு செத்துடணும்னு அடம்பிடிப்பான் ஆஸ்திரேலியக்காரன். அதனாலத்தான் அவன் உலகத்துலயே நம்பர் 1 டீமா இருக்கான். இந்தியன்ஸுக்கு அந்த மைண்ட்செட் ஒத்துவராது. நம்மளுக்கு ரிசல்ட்டைவிட ப்ராக்ரஸ்தான் முக்கியம். ஆனா இங்கே டீமுக்கு ஒருத்தன் ஆஸ்திரேலியக்காரனா இருந்தாகணும். நம்ம டீம்ல கோபால் அந்த ரோலை எடுத்துப்பான்னு நம்புறேன்” என அணிச் சந்திப்பின்போது எல்லோர் முன்னிலையிலும் சேஷாத்ரி கூறினார்.

அவருக்கிருந்த சந்தேக உணர்வுகளைச் சிதறடிக்கும் வண்ணம் கோபால் பந்துகளைக் காற்றில் பறக்கவிட்டான். ஊசலாடும் பந்துகளை விட்டு, எளியவற்றை யூகித்து விளாசினான். களத்தில் அவன் ஓட்டமும் மெச்சும்படியாக இருந்தது. இரண்டை மூன்றாக்கும் ஆரோக்கிய உடற்கட்டு அவனுக்கு. அதைவிடச் சுழற்பந்து வீச்சாளர்களைச் சுக்குநூறாக்கும் வல்லமை படைத்திருந்தான். அப்போட்டியில் சதமடித்துவிட்டதால் சேஷாத்ரிக்கு முடிவெடுக்கும் நெருக்கடி உண்டாகிவிட்டது. ரஞ்சி அரையிறுதிச் சுற்றிலும் கோபாலைத் தொடக்க ஆட்டக்காரனாய் களமிறக்கிவிட நேர்ந்தது.

வெற்றிகரமான தொடக்க இணையை நாக்-ஔட் போட்டியில் பிரிப்பது சாமர்த்தியமான முடிவுதானா சேஷாத்ரி? தமிழ்நாடு இன்னும் எத்தனை ஆண்டுகள் இரண்டாவது ரஞ்சி கோப்பைக்காகக் காத்திருப்பது? தேர்வாளர்களின் காட்டமான கேள்விகளுக்கு இரட்டை சதத்தால் பதிலளித்தான் கோபால். நம்பிக்கையைக் காப்பாற்றிய நெகிழ்ச்சியோடு தன் வளர்ப்பு சோடைப்போகாது என்கிற கர்வத்தால் பூரித்து அதே விவேகத்தில் இறுதிச்சுற்றுக்குத் தயாரானார் சேஷாத்ரி.

தீவிரப் பயிற்சிக்கு இடைப்பட்ட சின்னஞ்சிறு இளைப்பாறலில் அவருக்கும் கோபாலுக்கும் அணுக்கம் அதிகரித்தது. வலைப்பயிற்சியில் அவரின் சுழற்பந்துகளை வலை கிழியுமளவு ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான். சுழற்பந்து வீச்சாளனின் உளவியல் முறையை அவனிடம் ஆத்மார்த்தமாக உரையாடினார் சேஷாத்ரி. ஃபீல்டிங் பயிற்சியின்போது நீல வானில் மேகங்களைத் தொட முயன்று தோற்றுக் கீழிறங்கி வந்த சிகப்பு பந்து அவன் கைகளில் வசப்படாமல் தொட்டியிலிருந்து துடித்தெழுந்து விழும் மீனைப் போல் நழுவியது. என்றுமில்லாமல் அதிகப்படியான பந்துகளை அணைக்க இயலாமல் தவித்து மைதானத்துக்கு நேர்ந்துவிட்டான். 

“என்னாச்சு?” என சேஷாத்ரி தூரத்திலிருந்து கூச்சலிட்டார்.

“சாரி சார்” 

“மைண்ட்ல என்னவோ ஓடிட்டு இருக்கு. அதான் இவ்ளோ கேட்ச் விட்ற. என்ன ஓடுது?” என்று அவனைத் தனியாக அழைத்து விசாரித்தார்.

“வீட்ல சண்டை சார். இந்தியா ஆட முடியலைன்னா ஏதாவது வேலைக்கு போ இல்ல பிசினஸ் ஆரம்பின்னு ரொம்ப நாளா டார்ச்சர். சாரி சார், ஃபைனல்ஸை வெச்சுக்கிட்டு இதெல்லாம் யோசிக்கக்கூடாதுதான். கொஞ்ச நேரம் ப்ரேக் எடுத்து வந்துக்கிறேன் சார். சரி ஆகிடுவேன்” எனப் புலம்பித் தீர்த்தான்.

“நான் ஏன் உன்னை ஓபனிங் ஆட வைக்க யோசிச்சேன் தெரியுமா? இந்தியால ஃபினிஷ்ஷர் ரோலுக்கு ஆளில்ல. நீதான் ஓபனிங் ஆட அடம்பிடிக்கிறே”

“நீங்க கேட்கிற ஃபினிஷ்ஷர் இந்தியாவுக்கு என்னைக்காவது ஒருநாள் கிடைப்பான் சார். டீம்ல இடம் கிடைக்கணும்ங்கிறதுக்காக நான் அல்லாத ஒருத்தனா ஆக முடியாதுல்ல”

“ஓபனிங்-க்கு ஏகப்பட்ட காம்ப்பட்டீஷன். இருக்கிற லெஜெண்ட்ஸை மீறி கால்தடம் பதிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? ரஞ்சில பார்த்தேல்ல? எத்தனை யங் ஓப்பனர்ஸ் சென்ச்சுரீஸா விளாசுனாங்கன்னு…”

“மத்தவங்களை விடுங்க சார். நான் என்ன பண்ணா எனக்கு சான்ஸ் கிடைக்கும்?”

“இதே ஃபார்ம்ல ஃபைனல்ஸ் ஆடு. டீம் ஜெயிக்கணும். மத்ததெல்லாம் கடவுளுக்குத்தான் வெளிச்சம். கடவுளுக்கே கிரிக்கெட் டீம்ல சான்ஸ் இருக்கான்னு தெரியல.”

“டீம் ஜெயிக்கிறது உங்க பொறுப்பு. நம்ம பௌலர்ஸ் ஒத்துழைக்கணும். ஆனா என் ஃபார்ம் எங்கேயும் போயிடாது. இதே வேகத்தை ஃபைனல்ஸ்லயும் பார்ப்பீங்க. உங்ககிட்ட இன்னொன்னு சொல்றேன். கடவுளுக்கு இந்த பாக்கியம் கிடைக்குமான்னு தெரியல. ஆனா நான் கண்டிப்பா ஒருநாள் இன்டர்நேஷனல் ஆடுவேன்” எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டு ஃபீல்டிங் பயிற்சிக்கு விரைந்தான். இம்முறை பந்துகள் கைவசப்பட்டன.

சத்தியத்துக்கு இணங்க கர்நாடகாவுக்கு எதிரான இறுதிச்சுற்றில் கோபால் இரண்டு இன்னிங்ஸிலும் அரை சதமடித்திருந்தாலும் தமிழ்நாடு அணியால் கோப்பையைக் கைப்பற்ற முடியவில்லை. ட்ரெஸ்ஸிங் அறையில் மொத்த அணியும் சோகத்தில் மூழ்கியிருக்க, கோபால் மட்டும் ஆசுவாசமாக தன் ஆட்டத்தின் காணொளியைப் பார்த்துக்கொண்டிருந்தான். வீரர்கள் வருத்தத்தில் விம்மியது கோப்பை நழுவியதற்காக மட்டுமல்ல; சேஷாத்ரி முதல் தர கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதற்காகவும்தான் என்பதை அறிந்ததும் கோபால் தன் ஆசுவாசத்தை எண்ணி வெட்கினான். பிற இளம் வீரர்கள் சேஷாத்ரியின் பாதங்களைத் தொட்டு வணங்கும் கடைசி வாய்ப்பாக அக்கணத்தை எண்ணிக்கொண்டபோது கோபால் மட்டும் அவரை ஆரத்தழுவித் தேம்பினான்.

“கமான் பாய்ஸ், எதுக்கு எல்லாரும் இவ்ளோ ஜலம் ஊத்துறீங்க? ஃபர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டை அஃபீஷியலா ஆட முடியாது. அவ்ளோதானே? மத்தபடி வீக்கெண்ட் ஆனா க்ரௌண்டுக்கு வரத்தான் போறேன்” என வீரர்களை உற்சாகப்படுத்தினார் சேஷாத்ரி.

இளம் வீரர்களின் ஜெர்சியில் கையெழுத்திட்டதும் ட்ரெஸ்ஸிங் அறையிலிருந்து வெளியேறித் தனி ஆளாய் மைதானத்துக்குள் நுழைந்தார். ஆட்ட நாளுக்கு உண்டான உத்வேகத்தில் கை கால்களைத் தளர்த்தி மிதமான ஓட்டத்தில் பிட்ச்சை சென்றடைந்தார். புல்வெளியில் பறந்து விரிந்தோடிய கால்கள் பிட்ச்சுக்கு அருகே வருகையில் மெல்ல வேகமிழந்தது. பிட்ச் நடுவில் ஏற்பட்டிருந்த நரம்பைப் போலான விரிசலைத் தொட்டு வணங்கி பிரியாவிடை அளித்துப் புறப்பட்டுச் சென்றதை கோபால் தூரத்திலிருந்து பார்த்தான். தடுக்கி விழுந்தால் கடற்கரை இருப்பினும் சேஷாத்ரி ஒருநாளும் அங்கு சென்றதில்லை. ஆனால் ஓய்வு பெற்ற நாளில் நிசப்தமாய்க் கடலின் ஓசையைக் கூர்ந்து கேட்டார். மைதானத்தில் கிடைக்காத ஏதோவொன்றைக் கடலிடம் தேடினார். முடிவிலா நீண்ட வானையே அவரால் கண்டுகொள்ள முடிந்தது. 

சில தினங்களுக்குப் பின் முழுநேரமாக மருத்துவத் துறைக்கே திரும்பிவிட்டார். தசைப்பிடிப்போ, உள்காயங்களோ அல்லது உடலளவிலான அசௌகரியமோ ஏற்பட்டால் தமிழ்நாடு வீரர்கள் முதலில் சந்திப்பது சேஷாத்ரியைத்தான். ஒருமுறை இவரைக் காண மருத்துவமனை வரை தேடி வந்தான் கோபால்.

“அசரூதீன் பாய் கால் பண்ணாரு. அடுத்த மாசம் நடக்குற பாகிஸ்தான் டூர்ல நான் இருக்கேனாம்” 

மகிழ்ச்சி பொங்க அவன் நெஞ்சைத் தட்டிக்கொடுத்த சேஷாத்ரி, “ஃபர்ஸ்ட் மேட்ச் எங்கே?” எனக் கேட்டார்.

“சேப்பாக்லதான்”

“சொந்த மண்லயே டெபூ ஆகுற வாய்ப்பு எல்லாருக்கும் அமைஞ்சுடாது” 

“எனக்கு நீங்க ஒரு ஹெல்ப் பண்ணணும்.”

“சொல்லு”

“சேப்பாக் பிட்ச்ல ஸ்பின் எப்படித் திரும்பும்னு உங்களுக்கே தெரியும். சக்லைன் முஷ்டாக் இங்கே வரான். எனக்கு அவனை அடிக்கணும். நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார்”

சக்லைன் முஷ்டாக் அண்மையில் பந்துவீசிய காணொலி ஆவணங்களை பார்த்தார் சேஷாத்ரி. அவனுடைய கைவிரல்களைத் திரும்பத் திரும்பப் பார்த்து ஒன்றைக் கண்டடைந்தார். பந்தை ஆட்காட்டி விரலுக்கும் நடு விரலுக்குமிடையில் பிடித்துப் போட்டால் ஆஃப் ப்ரேக்; கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்குமிடையில் பிடித்துப் போட்டால் தூஸ்ரா.

“இனி தினமும் உனக்கு நெட்ஸ்ல போடுறேன். நீ முதல்ல பார்க்க வேண்டியது பந்தை இல்ல. என் கை விரலை. நான் எந்த விரலால பந்தை ரிலீஸ் பண்ணுறேன்னு பாரு. அதுக்கு அப்புறம் கவனத்தைப் பந்து மேல திருப்பி விளையாடு” என்றார் சேஷாத்ரி. 

அந்தி சாய்ந்ததும் அவனுக்கு நிறுத்தாமல் தூஸ்ரா, ஆஃப் ப்ரேக் என மாற்றி மாற்றி வீசுவார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனப் பண்டிகை பாராமல் பயிற்சி தொடர்ந்தது. அவனிடத்தில் சேஷாத்ரிக்குப் பிடித்ததே கற்றலின் சுயநலம்தான். கடைசி நாளின் பயிற்சி முடிந்ததும் பூரித்த கண்களுடன் தேகம் ததும்ப அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினான். 

“இந்தியா பாகிஸ்தான் மேட்ச்சுங்கிறது யுத்தம். ஜெயிச்சுட்டு வா” 

ஆட்ட நாளில் கோபாலைப் பதற்றமடையாமல் பார்த்துக்கொண்டார் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அன்ஷுமன் கெயிக்வாட். சர்வதேச டெஸ்ட் போட்டியை ஆடும் பதற்றத்தைவிட மூத்த வீரர்களுடன் விளையாடும் பயமே மேலோங்கியிருந்தது. ஆனால் அந்த மனநிலை ஆட்டமுறையை சிதைக்குமென கேப்டன் அசாருதீன் அறிவுறுத்தியதால் கவனத்தைப் பந்தின்மீது மட்டுமே வைத்தான்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் முதலில் பேடிங்கை தேர்வு செய்தார். 238 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஓரளவு சுமாரான தொடக்கத்தைத் தந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் கோபாலும் VVS லக்ஷ்மணும் களமிறங்கினர். களத்தை நோக்கி வரும்போது லக்ஷ்மண் அவனிடம், ‘முதல் ஓவரை வாசிம் அக்ரம் வீசுவான். நீ எதிர்கொள்கிறாயா? நான் எதிர்கொள்ளட்டுமா?’ என இந்தியில் கேட்டார். பின்வாங்கினால் தன்னைத் தன்னம்பிக்கை குறைவானவனாய் எண்ணிவிடுவாரோ என நினைத்துத் தானே தொடங்குவதாகச் சொன்னான்.

வாசிம் அக்ரம் வீசிய முதல் பந்தே நெஞ்சு வரையிலான பௌன்சர். பந்து மட்டையில் பட்டிருந்தால் அறிமுகப் போட்டியிலேயே தங்க முட்டையுடன் சென்றிருப்பான். வீசப்பட்ட வலையில் சிக்காததை எண்ணி ஏமாற்றமடைந்த வாசிம் அக்ரம், அவனை முறைத்தார். அப்போது ராகுல் டிராவிட் சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது.

‘களத்திலிருக்கும் வரை எதிராளியின் கண்களை எதிர்கொள்ளாதே. பந்தை நன்றாக எதிர்கொண்டுவிட்டு கண்களின் வலையில் வீழ்ந்த எத்தனையோ பேட்டர்களை பார்த்திருக்கிறேன். அவனைப் பழிவாங்க நினைத்தால் பந்தை விட்டு விளையாடு; அல்லது நடு பேட்டில் தொட்டு விளையாடு’

கடைசிப் பந்தில் சரியாக யூகித்த கோபால், லெக் சைடில் தட்டிவிட்டு மூன்று ரன்கள் ஓடினான். அந்த முன் மாலையில் ஒட்டுமொத்த சேப்பாக்கமும் தன் வீட்டுப் பிள்ளையின் முதல் சர்வதேச ரன்னுக்கு எழுந்து நின்று ஆரவாரம் செய்தது. அடுத்த ஓவரில் வக்கார் யூனிஸ் பந்தில் முதல் பௌண்டரியை அடித்தான். பிறகு வாசிம் அக்ரம் பந்துகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டான். இதனால் அவர், புதிய திட்டத்துக்குத் தள்ளப்பட்டு அவனுக்கு மட்டும் அரௌண்டில் இருந்து வீசினார். எனினும், அவன் மட்டை பௌண்டரியை நோக்கியே பந்துகளை விரட்டின. வெக்கையில் வழியும் வியர்வையைத் துடைத்தபடி குழம்பிப் போய் நின்றார் வாசிம். முதல் நாள் முடிவில் எட்டு ஓவர்களுக்கு இந்தியா 48 ரன்களுடன் அதிரடி தொடக்கத்தைத் தந்திருந்தது. அன்றிரவு கோபால் ஓட்டலில் ஓய்வெடுத்திருக்கும் சமயத்தில் சேஷாத்ரி அலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

“செம ஸ்டார்ட் கொடுத்திருக்கடா. டிவில பார்த்தேன். வாசிம் அக்ரமுக்கு மூஞ்சே இல்ல. பசங்கலாம் என்ன பேசிக்கிறாங்க தெரியுமா? பார்த்தீங்களா சார், கோபால் போனதுமே இந்தியா ஆறு ரன்ரேட்ல ஸ்டார்ட் கொடுக்குது. இதுக்கு முன்னாடி இப்படியெல்லாம் நடந்திருக்கான்னு கேக்குறாங்க. ஆனா உனக்கு இன்னும்கூட ஃபூட் மூவ்மன்ட் நல்லா வரணும். உனக்கு கால் ஆணி அடிச்ச மாதிரி ஒரே எடத்துல நிக்குது. மத்தபடி ரொம்ப நல்லா ஆடுற. நாளைக்கும் இதே வேகத்துல ஆடாதே. கொஞ்சம் விட்டு ஆடு. லக்ஷ்மண் கிட்ட கத்துக்கோ. வாசிம் அக்ரம் இன்னைக்கு சொதப்பியிருக்கலாம். நாளைக்கும் அப்படியே போடுவான்னு உத்தரவாதமில்ல” 

அவர் சொல்லுக்கேற்ப அடுத்த நாள் வாசிக் அக்ரம் அசுர ஆற்றலுடன் பந்துவீசினார். முதல் சில ஓவர்களில் லக்ஷ்மண் விக்கெட்டை எடுத்தார். அதற்கடுத்த ஓவரை வீச வந்தான் சக்லைன் முஷ்டாக். முதல் பந்தே வழக்கத்தைவிட பௌன்ஸ் ஆகி கீப்பரின் தோள்பட்டையில் அடித்துக் காயமேற்படுத்தியது. கூடுதல் பௌன்ஸால் அந்த ஓவரைத் தப்பித்தால் போதும் என்றிருந்தான் கோபால்.

அடுத்த ஸ்பெல்லில் கோபாலுக்கு வாசிம் அக்ரம் பந்துவீசக் காத்திருந்தபோது மொத்த சென்னை ரசிகர்களுமே கோஷமெழுப்பி ஊக்குவித்தனர். ஆனால் ரசிகர்களின் ஆரவாரத்தை அமைதியாக்கும் பொருட்டு வாசிம் வீசிய இன்ஸ்விங்கில் அரை சதமடிக்காமல் ஆட்டமிழந்தான். அவனுடைய நம்பிக்கையூட்டும் அறிமுகம் சென்னை ரசிகர்களுக்குத் திருப்தி அளித்ததால் கைதட்டலின் ஒலி கடல் வரை எட்டியது. 

அந்த இன்னிங்ஸ் முழுவதும் அவன் சக்லைன் முஷ்டாக்கின் ஆட்டத்தையே தீவிரமாக கவனித்தான். சச்சின், டிராவிட், அசாருதீன் ஆகிய முக்கிய புள்ளிகளை வீழ்த்தி ஃபைஃபர் எடுத்திருந்தான் சக்லைன். இந்தியா 254 ரன்களுக்கு ஆட்டமிழந்து 16 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததை எண்ணி ரசிகர்கள் ஆறுதலடைந்தனர். ஆனால் அடுத்த இன்னிங்ஸில் அஃப்ரிடிஹ்யின் அதிரடிக்கு அரங்கமே அமைதியானது. பாகிஸ்தான் 286 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்தியாவுக்கு 271 இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கோபால் களமிறங்கியதுமே பௌண்டரி அடித்து புத்துணர்ச்சியூட்டும் தொடக்கத்தைத் தந்தான். அவன் தயாராய் இருந்ததெல்லாம் வாசிம் அக்ரமுக்காக. வக்கார் யூனிஸை குறைத்து மதிப்பிட்டிருந்ததே அவன் செய்த பிழை. அவருடைய ஔட்ஸ்விங்கை சரியாக எதிர்கொள்ளாமல் இரண்டாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தான். ஐந்து ரன்களில் அவன் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்த விக்கெட்டுகளை அணி இழக்கத் தொடங்கியது. 

விழுந்த மறுகணம் எழுந்தோடும் குதிரை என்பதை அந்த இன்னிங்ஸில் மீண்டும் நிரூபித்தார் சச்சின் டெண்டுல்கர். பாகிஸ்தானில் அஃப்ரிடி செய்ததை இந்தியாவுக்காக செய்து தந்தார் சச்சின். ஆனால் சக்லைன் முஷ்டாக் செய்த மாயாஜாலத்தால் இந்திய அணி விக்கெட்டுகளைத் தந்து தோல்வியைத் தழுவியது. இந்திய மண்ணில் அதுவரை நிகழ்ந்திடாத வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணமொன்று அரங்கேறியது. ஒட்டுமொத்த ரசிகர்களும் பாகிஸ்தானின் ஆட்டத்துக்கு எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினர். அவர்களின் பேரன்புக்குக் கைமாறு அளிக்கத் தெரியாமல் திணறிய பாகிஸ்தான் வீரர்கள், தொப்பிகளைக் கையிலேந்தி மைதானத்தைச் சுற்றி ஓடி வந்து ரசிகர்களுக்கு நன்றி பாராட்டினர்.

பாகிஸ்தானிடம் வீழ்ந்ததை எண்ணித் துயருற இந்திய அணிக்கு அவகாசமில்லை. மூன்றே நாட்களில் டில்லியில் இரண்டாவது (கடைசி) போட்டி ஆரம்பமானது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் டாஸ் போடுவதற்கு முன் ஆடுகளத்தைப் பரிசோதித்த ரவி சாஸ்திரி, கங்குலியை அழைத்து, ‘டாஸ் வென்றால் அசாருதீனை பேட்டிங் தேர்வு செய்யச் சொல்’ என அறிவுறுத்தினார். 

சென்னையிலிருந்த பௌன்ஸுக்கு பாதிகூட டெல்லியில் இல்லாததை உணர்ந்த கோபாலும் லக்ஷ்மணும் நிறைய ஷாட்ஸ் ஆடினார்கள். இதுவும் சுழற்பந்துக்குத் தோதான் ஆடுகளம். சக்லைன் முஷ்டாக்கின் முதல் ஆஃப் ப்ரேக் பந்தில் கோபால் ஏறத்தாழ ஆட்டமிழந்திருப்பான். அதிர்ஷ்டவசமாக ஃபீல்டர் கேட்ச்சை விட்டதால் களத்தில் தொடர்ந்து நிற்பதற்கான வாய்ப்பு நீடித்தது. சக்லைன் வீசிய தூஸ்ராவை சேஷாத்ரி கற்பித்த முறையில் நகர்ந்து ஆஃப் திசையில் பௌண்டரிக்குத் தள்ளினான். அடுத்த ஸ்பெல்லில் எதிர்கொண்ட தூஸ்ராவையும் எல்லைக்கோட்டுக்கு அனுப்பி முதல் சர்வதேச அரை சதத்தை நிறைவு செய்தான். 

‘இந்த இடதுகை பேட்டருக்கு தூஸ்ரா வேண்டாம்’ எனப் பாகிஸ்தான் கேப்டன் வாசிக் அக்ரம், சக்லைனுக்கு அறிவுறுத்தியதை கோபாலால் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. அதைத் தொடர்ந்து அவன் எதிர்கொண்ட எல்லாப் பந்துகளும் ஆஃப்-ப்ரேக்-ஆகவே வந்தன. அடுத்தடுத்த இரு பௌண்டரிகள் அடித்ததால் திட்டத்தை மாற்றிய சக்லைன், தூஸ்ரா வீசி ஸ்டம்புகளை பறக்கவிட்டான். கை விரல்களைக் காணாமல் கண்ணசந்த நேரத்தில் எல்லாம் நிகழ்ந்துவிட்டதாய் ஏமாற்றத்துடன் உணர்ந்த கோபால் அறுபது ரன்களுடன் மைதானத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் நடைப்பிணமாய் பெவிலியனுக்கு திரும்பினான்.

இந்திய அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் வெறும் 175 ரன்களுக்கு சுருண்டது. முதலில் செய்த தவறை கோபால் இரண்டாவது இன்னிங்ஸில் செய்யாமல் சக்லைன் முஷ்டாக்கின் விரல்களைப் பார்த்து ஆடினான். கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கு இடையிலிருந்து சுழன்று வந்த தூஸ்ரா பந்துகள் அனைத்தும் எவராலும் தடுக்க இயலாமல் மைதானத்தைவிட்டு வெளியே போயின. ஆனால் 96 ரன்களில் முஷ்டாக் அகமது பந்தை ஓங்கி அடிக்கப் போய் ஆட்டமிழந்தான். நடந்தது புரியாமல் திணறிப் போய் நின்ற அவன் அங்கிருந்து செல்லாமல் அந்தப் பந்தை வேறு எப்படி எதிர்கொண்டிருக்கலாமெனச் சிந்தித்தான். டெல்லி ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டியதுமே அவன் தான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்து வெளியேறினான். 

‘நல்ல இன்னிங்ஸ்! வெற்றியை உறுதி செய்திருக்கிறாய்’ எனப் பயிற்சியாளர் பாராட்டினாலும் தான் சதமடித்து வெல்லாததை எண்ணி மனம் நொந்தான். இந்தியா 212 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாய் வென்றது. 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலை அடைந்த நிலையில், நான்கு இன்னிங்ஸிலும் ஃபைஃபர் எடுத்த சக்லைன் முஷ்டாக் தொடர் நாயகன் விருது பெற்றார். 

தொடர் முடிந்ததும் கர்வத்துடன் சேஷாத்ரியின் வீட்டிற்குச் சென்றான். தன் ஆட்டத்தைப் புகழ்பாடித் தள்ளுவாரென எதிர்பார்த்து வந்தவனுக்கு அவரின் இறுகிய முகமே பதிலாய் கிடைத்தது. 

“நான் ஏதாவது தப்பா ஆடியிருந்தா சொல்லிடுங்க” 

“உன் கேம்ல எந்தக் குறையுமில்ல. ஆனா ஏன் நீ மட்டும் அடிச்சிருக்கே?” 

“நான் மட்டும் அடிச்சேனா? என்ன டாக் நீங்க? சச்சின், டிராவிட், கங்குலி, அசாருதீன்னு எல்லாரும்தானே அடிச்சிருக்கோம். மொத்த சீரிஸ்ல அவங்களையெல்லாம்விட நான் அதிகம் அடிச்சிருக்கேன். அப்படியே நான் மட்டும் அடிச்சிருந்தாலும் அதுல என்ன தப்பு?”

“நான் கேட்க வந்தது சக்லைன் முஷ்டாக்கை ஏன் நீ மட்டும் அடிச்சிருக்கே?”

“Because I got you, doc. அவனை அடிச்ச ரெண்டே கொம்பனுங்க நானும் சச்சினும்தான். சச்சின் பாய்கூட கொஞ்சம் தடுமாறினார்”

“சச்சின் ஒரு கடவுள். அவரை விட்டுடு. மத்தவங்க ஏன் அடிக்கல?”

“என்னைக் கேட்டா? நீங்க இந்தியாவுக்கு கோச் ஆகிடுங்க. சக்லைன் முஷ்டாக்னு ஒருத்தன் ஆள் அட்ரஸ்ஸே இல்லாம போயிடப்போறான்” எனச் சொல்லி சிரித்தான் கோபால்.

அதில் சிரிக்க ஒன்றுமில்லை எனும் விதமாய், “நீ ஏன் சொல்லிக்கொடுக்கல?” என வினவினார். 

“என்ன?”

“நான் உனக்குச் சொல்லிக்கொடுத்தேன்ல. நீ ஏன் மத்தவங்களுக்குச் சொல்லித் தரல?”

“நான் எப்படி டாக் சொல்லிக் கொடுக்கிறது? சுத்தி எல்லாரும் சீனியர்ஸ். நான் போய் முந்திரிக்கொட்ட மாதிரி சக்லைன் முஷ்டாக்கை எப்படி அடிக்கணும்னு பாடம் எடுத்துட்டு இருந்தேன்னா டெல்லிக்கு என்னைக் கூட்டிட்டுக்கூட போயிருக்க மாட்டாங்க.”

“டிரெஸ்ஸிங் ரூமை விடு. உன்னோட non striker-க்காவது சொல்லிக் கொடுத்திருக்கலாமே”

சொல்வதறியாமல் மௌனமாய் இருந்தான். பதிலை எதிர்நோக்கிப் புருவத்தை உயர்த்தினார் சேஷாத்ரி.

”நான் ஏன் டாக் சொல்லித் தரணும். நான் சொல்லிக் கொடுப்பேன், இவனுங்க சக்லைனை அடிப்பானுங்க. அப்புறம் நாளைக்கு என் பொசிஷனை அவனுங்க எடுத்துப்பானுங்க. நான் பென்ச்ல உக்காந்துட்டு தண்ணி தூக்கிட்டுப் போகணுமா?”

“நம்ம ஊர்ல பாகிஸ்தான்கிட்ட தோத்திருக்கோமே! எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா நமக்கு இது? ஒவ்வொரு தடவையும் பாகிஸ்தான் டூர் போகும்போதெல்லாம் கண்டிப்பா ஒத வாங்கிட்டு வந்துட்றோம். சரி அவனுங்களை இங்கே வர வைச்சு ஒதைக்கலாம்னு பார்த்தா இந்த தடவை அதுகூட முடியலையே. சீரிஸ் டிராதானே ஆகியிருக்கு. நீ ஏதோ ஜெயிச்சுட்ட மாதிரி குதிச்சுட்டே வர? அடுத்த ஒரு வாரத்துக்குத் தூக்கமே வரக்கூடாதுடா உனக்கு” 

“எனக்கு டீம் பத்தியெல்லாம் கவலை இல்ல. நான் ஜெயிக்கணும். அடுத்த பத்து வருஷத்துக்கு நான் இன்டர்நேஷனல் விளையாடணும்” 

“டீம் ஜெயிக்க வேணாம், தான் ஜெயிச்சா போதும்னு நினைக்கிற ஒருத்தவனுக்கு டீம்ல வேணா இடம் இருக்கலாம். என் வீட்ல இல்ல. நீ கிளம்பலாம்” எனத் தீவிரமாகச் சொல்லி எழுந்தார் சேஷாத்ரி. 

அப்படியொரு தாக்குதலை எதிர்பார்த்திடாதவனாய் அதிர்ச்சியுடன் எழுந்தான் கோபால். பார்வையால் அவரிடத்தில் மன்றாடினாலும் அவரின் பிடிவாத குணத்தை நன்கறிவான். அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான முக்கோண டெஸ்ட் தொடர் இருந்ததால் சக்லைன் முஷ்டாக்கை போலவே முத்தையா முரளிதரனை அடிக்கவும் சேஷாத்ரியிடம் தயாராக விழைந்திருந்தவனுக்கு தண்டனையாக அமைந்தது அவரின் கதவடைப்பு. கற்றலின் சுயநலத்தால் அவனிடத்தில் வசீகரிக்கப்பட்ட அவர், அவனுடைய வெற்றியின் சுயநலத்தை அருவருத்தார்.

குருவைப் பிரிவதும் அவரை மிஞ்சிச் செல்வதும் சீடனுக்கு இன்றியமையாததென அறிந்த கோபால், அடுத்த முக்கோணத் தொடருக்காகத் தீவிரமாய் பயிற்சி செய்தான். பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் அபாரமாய் விளையாடி ஃபார்மை விடாமல் பார்த்துக்கொண்டான். ஆனால் அணி மீண்டுமொருமுறை எதிராளியிடம் சொந்த மண்ணில் வீழ்ந்தது. இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியில் அதிர்ஷ்டவசமாக முரளிதரன் இல்லாததால் முதல் சர்வதேச சதத்தை எட்டினான். என்ன பயன்? போட்டி சமநிலையில் முடிந்ததால் இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது. இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் வென்றபோதும்கூட தொடர் நாயகன் விருது தனக்குக் கிடைக்குமா என ஏக்கத்துடன் காத்திருந்தான். 

சிறப்பாய் விளையாடியுமே அடுத்த மாதம் நடந்த மற்றொரு முக்கோண டெஸ்ட் தொடரில் அவன் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் ஒருநாள் முக்கோண தொடருக்காக சார்ஜா சென்று பாகிஸ்தானை அதிரடியாக எதிர்கொண்டு முதல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றான். ஆனால் இறுதிச்சுற்றில் தங்க முட்டையைப் பெற்றுவிட்டதால் இந்தியா மற்றுமொரு முக்கோண தொடரில் தோல்வியடைந்தது. 

1999 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே, கென்யா, இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக நன்றாக விளையாடினான். ஆனால் அவன் தந்திரங்கள் இம்முறை பாகிஸ்தானிடத்தில் சோபிக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதியிலேயே அவனுடைய பெயர் இந்திய அணியிலிருந்து காணாமல் போனது.

அதே வருடத்தில் கோபாலின் அன்-ஆர்த்தடக்ஸான ஆட்டத்தை ஒத்து விளையாடக்கூடிய ஒரு பேட்டர் இந்திய அணியில் அறிமுகமானான். அவன் பெயர் வீரேந்தர் சேவாக். முதல் ஓவரில் (முடிந்தமட்டில் முதல் பந்தில்) பௌண்டரி விளாசிவிடக்கூடியவன் என்கிற நற்பெயரை பெற்றான். நாளடைவில் சச்சினுக்குப் பிடித்தமான சக வீரனாய் மாறியதால் மும்பை லாபி கோபாலகிருஷ்ணன் சுவாமிநாதனைவிட வீரேந்தர் சேவாக்கையே தேர்வு செய்ய ஆரம்பித்தது.

கிரிக்கெட் மெல்ல மெல்ல தன்னிடமிருந்து விலகுவதை உணர்ந்த கோபால், ஒரு கிரிக்கெட் அகாடமியை தொடங்கி சிறார்களுக்கான பயிற்சியாளர்களை நியமித்துத் தொழில் தொடங்கினான். அணியின் நலனை எண்ணிக் கவலைகொள்ளாதவர்களை எண்ணி அணி கவலைகொள்வதில்லை. தேர்வாளர் குழுவில் ‘கோபாலகிருஷ்ணன்’ என்கிற பெயர் அதன்பிறகு ஒலிக்கவே இல்லை. அறிவிக்காமல் நேரும் ஓய்வு ஒரு வீரனுக்கான இழுக்கு. 

ஓரிரவு சேஷாத்ரி அவன் கனவில் தோன்றி, “நாலு பேருக்கு சொல்லிக் கொடுக்கணும் கோபால். சொல்லிக் கொடுக்கிறது மூலமா என்னவாகும் தெரியுமா? உன் மைண்ட் க்ளியர் ஆகும். நானெல்லாம் ஒரு விஷயத்தைக் கத்துக்கொடுத்துட்டா நிம்மதியா உணர்வேன். மைண்ட் எம்ப்ட்டியானாதான் புது விஷயங்களைக் கத்துக்க மூளை ஒத்துழைக்கும். நானறிஞ்சது எனக்கு மட்டுமே உரியதுன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டா மூளை அழுகிப்போயிடும். உனக்கு கிரிக்கெட் அப்படித்தான் அழுகிப்போச்சு. நீ இன்டர்நேஷனல் விளையாடின ப்ளேயர். ஆனா இப்போ நீ யாருமே இல்ல. நான் ஒரு இன்டர்நேஷனல் மேட்ச்கூட விளையாடினதில்ல. ஆனா என்னால பல கிரிக்கெட்டர்ஸ் உருவாகியிருக்காங்க. இன்னைக்கும் பசங்களுக்கு நெட்ஸ்ல போவ்ல் பண்ணிட்டுத்தான் இருக்கேன். அந்த நிறைவு இருக்கே…! உனக்கு அப்படி ஏதாவது நிறைவு இருக்கா கோபால்?” எனக் கேட்டபோது அதிர்ந்தெழுந்தான்.

இத்தனை ஆண்டுகளாய் ஏன் அவரிடம் மனமிறங்கிப் பேசவே இல்லை? எது தடுத்தது? சர்வதேச வீரன் எனும் அகங்காரமா? அதற்கான தண்டனையை விதியே வழங்கிவிட்டதே! இன்னும் எது தன்னைத் தடுக்கிறதெனக் குழம்பியவன் உடனடியாக அவர் வீட்டுக்குச் சென்றான். 

கொடும்பனி பொழியும் அதிகாலையில் அவர் வீட்டின் கதவு பாதி திறந்திருந்தது. பயிற்சி உடையிலிருந்த சேஷாத்ரி காலணிகளையும் கழட்டாமல் சோஃபாவில் படுத்துறங்கிக்கொண்டிருந்தார். செல்லப்பிராணி நிலை தடுமாறி சோஃபாவை சுற்றிச் சுற்றி வந்தது. கோபால் அவரை எழுப்ப முயன்றான். சேஷாத்ரி தன் உறைந்த வலது கையில் கிரிக்கெட் பந்தை இறுகப்பற்றியபடி நித்தியமான துயிலில் ஆழ்ந்திருந்தார். பளபளப்பு ஓய்ந்த சொறசொறப்பான சிகப்புப் பந்து அவரின் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் இருந்தது.

***

பாலு – இயற்பெயர் பாலகிருஷ்ணன் கருணாநிதி. சென்னையைச் சேர்ந்தவர். ஊடகவியலாளராக பணிபுரிகிறார். இதுவரை ‘சொனாட்டா’ (2024), ‘ஸ்டேல்மேட்’ (2026) ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: krshbala99@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here