Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்சுடரேகிச் சுடர்க!

சுடரேகிச் சுடர்க!

ந. சிவநேசன்

சேலம் வந்து சேர இன்னும் ஒரு மணிநேரம் இருந்தபோது அவன் வழக்கம்போல எதிர்பட்டான். ஒரு வாரத்துக்கு முன்புதான் அறிமுகம். என் இருக்கைக்கு அருகிலிருந்தவர் இறங்கிக் கொண்டதும் அந்த இடத்தில் ஆக்கிரமித்துக் கொண்டவன் சிரித்ததிலிருந்து தொடங்கியது. நன்றாக யோசித்துப் பார்த்தாலும் எது அவனுடனான முதல் உரையாடல் எனப் புலப்படவில்லை. கொஞ்ச நாட்களிலேயே நிறைய பேசிவிட்டதும் அதற்குக் காரணமாக இருக்கலாம். 

இன்று எதிரிருக்கை காலியாக இருந்ததில் அங்கு அமர்ந்து கொண்டு புன்னகைத்தான். அலுவலகம் சென்று வரத் தோதான நேரத்தில் இரயில் அமைந்து கொண்டது பெரிய வரம். இந்த ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அதிகம் போனை சொடுக்கிக் கொண்டே இருக்க முடியாதெனத் தேடினால் பெரிதாக உரையாடாமல் எல்லோருமே மௌனம் பழகியிருந்தார்கள். காரணமின்றிப் பேசிப் புன்னகைத்தது பண்டைய காலம் போல மாறி விட்டிருந்தது. 

நீண்ட நேரமாக வெளியே நகர்ந்து கொண்டிருந்த தென்னந்தோப்புகளைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சட்டெனத் திரும்பி ‘நீங்கள் மரணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டான்.

என்னால் அந்தக் கேள்வியை உடனடியாக எதிர்கொள்ள முடியவில்லை. ஒருவாறாக சிரித்துக் கொண்டே எனக்குத் தெரிந்த தத்துவ வியாக்கியானங்களை அதற்குள்ளாகவே அலசி ‘அது தவிர்க்க முடியாத ஒன்று’ என்றேன். 

‘அதை ஏன் முதலில் தவிர்க்க வேண்டும்? அவ்வளவு கொடியதா என்ன?’ அவன் அடுத்த கேள்வியைக் கேட்டதும் நான் பார்வையைத் தவிர்க்க சன்னலை நோக்கினேன். ரயில் காவிரியின் பாலத்தின்மீது கடந்து கொண்டிருந்தது. நான் சட்டென சன்னலை உதாரணமாக்க நினைத்தேன்.

‘இந்த சன்னலின் கம்பிகளைப் பார்ப்பதும் அதற்கு வெளியே விரிகிற காட்சிகளைப் பார்ப்பதும் நேரத்துக்குத் தகுந்தவாறு மாறுகிற மனதின் விசித்திரங்களில் ஒன்று. மரணம் இந்தச் சன்னலின் கம்பியைப் போல. நாம் ஏன் அதனைத் தாண்டி விரிகிற வாழ்வில் கவனத்தை வைக்கக் கூடாது?’

அவன் எதுவோ சொல்ல வாயெடுத்து அமைதியானான். உண்மையில் அவன் பயணிக்கிற இந்த நாற்பது நிமிடங்கள் தான் அவனுடனான நட்பு எனக்கு. இந்த நாற்பது நிமிடங்கள் அவன் இல்லாதபோதும் சுவாரஸ்யமாகத் தான் நகரும். இருமருங்கிலும் விவசாய நிலங்களின் பசுமையும் நடுநடுவே தென்படும் சிற்றாறுகளும் மாத சம்பளக்காரனின் முதல் தேதியைப் போல இதமளிப்பவை.

தர்க்கரீதியான, எந்நேரமும் எல்லாவற்றையும் சீர்தூக்கிப் பார்த்தே தீரவேண்டுமென வாதம் செய்கிற நண்பர்களை எனக்கு அவ்வளவாக பிடிக்காது. அவர்களது கேள்விகளுக்கு விடைகள் தெரிந்திருப்பினும் கூட நான் பேச்சைத் தொடர்கிற சுவாரஸ்யமற்று எதுவும் விடை கூறாமல் இருந்துவிடுவேன். அவர்கள் அதே கேள்வியை அல்லது அதே கேள்வியை வேறு தொனியில் இரண்டு மூன்று முறைக் கேட்டுவிட்டு பிறகு அடிபட்ட முகத்தோடு சமாதானத்துக்கு வருவார்கள். சமாதானம் என்றால் ஒரு டீ இரண்டு வடை அல்லது ஒரு சிகரெட். சமயங்களில் இரயிலை விட்டு இறங்கியதும் ஸ்டேஷன் வாசலில் அசைவ உணவு. அதையும் தாண்டி இரவு மது அருந்தலாமா எனக் கேட்பவர்களும் ஓரிருவர் இருக்கிறார்கள். 

எனக்கு அப்போதெல்லாம் நீ இப்போது தான் என் வழிக்கு வந்திருக்கிறாய் எனப் பெருமையாக இருக்கும். எத்தனை பெரிய சிந்தனையையும் முடக்கித் தேவைகளுக்காக அடகு வைக்கும் அவர்களது தடுமாறுகிற இந்தநிலை தான் சுயம் என்பதாகத் தோன்றும். அப்படியானவர்களின் வரிசையில் தான் இவனையும் சேர்க்க நினைத்திருந்தேன். இவன் நாமக்கலில் ஏறி சேலத்தில் என்னுடன் இறங்குவான். பெரிய சிநேகமெல்லாம் ஆரம்பத்தில் இல்லை. ஒவ்வொரு முறையும் அவனே வலிய வந்து பேச்சைத் தொடங்குவான். 

முதன்முதலில் ‘இந்த ரயில் தேவையிலிருந்து புறப்பட்டு எல்லோரது வாசல் வரை செல்கிறது இல்லையா சார்?’ என்றபோது நான் கொஞ்சம் யோசித்தேன். 

‘ஆமா. எல்லாமே அவசரக் கோலம் தான். ஓடிக்கிட்டே இருக்கோம். ஆனா வாசல் மட்டுமில்லையே? அதைத் தாண்டி பிள்ளைகளின் வாழ்வு, எதிர்காலம் குறித்த பயம் எல்லாம் இருக்கிறதே’ என்றேன்.

அதற்கு அவன் எதுவும் பேசவில்லை. எதுவும் பேசாதது பதிலில்லை என்பதால் அல்ல.‌ அது எனது அறியாமையை தெளிய வைக்க முயற்சிக்காத ஒரு அலட்சியம் என்பது போல அவன் பார்வை இருந்தது. 

‘உன்னைப் பொருத்தவரை அதிக வலியைத் தருவது மரணமா அல்லது தொலைந்துப் போதலா?’

அடுத்த நாளிலிருந்து அவன் சட்டென ஒருமைக்குத் தாவியது எனக்குள் சிறு அதிர்ச்சியை உண்டுபண்ணியது. இருந்தாலும் அக்கேள்வியின் தாக்கத்தில் அந்தத் தொனி குறித்து அவ்வளவாக கவலை கொள்ளவில்லை. 

‘தொலைந்து போதல் என்கிற ஒன்று அறியாமல் நடந்தால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குடும்பம் குட்டி என்றிருப்பதை விடுத்து, அதாவது குடும்பம் என்ற அமைப்பை ஏற்றுக்கொண்டு அதிலிருக்கிற லாபத்தை மட்டும் அனுபவித்துவிட்டு, நாளடைவில் சலிப்பேறியதாகச் சொல்லி பரதேசி என்கிற போர்வையில் வேண்டுமென்றே காணாமல் போகிறவர்கள் கடைந்தெடுத்த அயோக்கியர்கள்’ 

என்னிடமிருந்து இப்படியொரு காட்டமான பதிலை எதிர்பார்த்திருக்க மாட்டான் என்கிற எண்ணத்தோடு அவனை உற்று கவனித்தேன். ஆனால் பெரிதாக முகத்தில் எந்த மாறுதலும் இல்லாதது ஆச்சரியத்தைத் தந்தது. 

‘ஒரு கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாகத்தான் வெளியேறியாக வேண்டுமென ஏதேனும் நியதியிருக்கிறதா? அதற்கு கூட்டுப்புழுவாக இருக்கையிலேயே வெளியேறி விடுகின்றத் தேவை இருக்கிறதென்றால் வெளியேறி விட வேண்டியதுதானே? அவ்வுயிருக்கென சுய பச்சாதாபங்கள் ஏதும் இருக்கவே கூடாதா? தியாகம் என்று சொன்னாலும் மனதுக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டிருக்கும் வரை அது நிச்சயம் ஏதோவொரு வகையில் யோக்கியதன்மையை பாதிக்கிறது இல்லையா?’

மிக நிதானமான அக்கேள்வி கொஞ்சம் யோசிக்கச் செய்தது. ஆனால் சிகாமணி எதிரில் நின்றிருந்த நபர்களுக்கு நடுவே தலையை நீட்டியதும் அந்த நிதானத்தை சலனம் அசைத்தது. இப்போது என்ன பதில் சொல்லப் போகிறாய் என கூட்டத்தின் நடுவே அவர் நின்று சிரித்தது ஆத்திரத்தை உண்டு பண்ணியது. உடனே சூடு வைத்தாக வேண்டிய அவசரம் வந்து தொற்றிக் கொண்டது.

‘கூட்டுப்புழு எக்கேடோ கெட்டுப் போகட்டும் சார். அது எங்கே போனால் நமக்கென்ன கவலை? இனப்பெருக்கம் செய்கிற நோக்கத்தில் வதவதவென முட்டைகளைப் பெருக்கத் தெரிந்துவிட்டு அம்போவென காணாமல் போவதையா இயற்கை கற்றுத் தந்திருக்கிறது? ஆத்திரத்தைக் கிளப்பாதீர்கள் சார்’ 

 சிகாமணி இப்போது வாயை மூடிக்கொண்டு வெறிச்சென நிற்பதைப் பார்க்க சற்று ஆறுதலாக இருந்தது. 

‘நீங்களெல்லாம் மேலை நாட்டினரைப் பார்த்து இன்னும் நிறைய கற்க வேண்டும்’ என்றபடி அவன் தன் கழுத்துப்பட்டையைச் சரி செய்தான். 

இந்தமுறையும் நீங்கள் என்பது ஒருமை தான் என்பது புரியாமலில்லை. அவன் என்னைப் போன்ற கருத்தொருமித்தவர்களைச் சேர்த்து நீங்கள் என்கிறான். 

அலுவலகம் சென்றபிறகு இது குறித்து சகப் பணியாளன் நளனிடம் சொன்னேன். 

‘இப்படியாபட்ட பைத்தியங்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே போய் நீ வேறு ஸ்டேஷனில் இறங்கப் போகிறாய். அது மட்டும் நன்றாகப் புரிகிறது’ எனச் சிரித்தான். 

‘இது மாதிரியான சித்தாந்தங்களை கேட்கவெல்லாம் உனக்கு நேரமிருக்கிறதா? எனக்கு சீட்டுப் பணம் கட்டுவது குறித்தும், அடுத்த மாதம் இடம் வாங்கி வீடு கட்டுவது குறித்தும் யோசிக்கவே நேரம் போதவில்லை’ என்றான். 

அவன் சொன்னதும் தான் உரைத்தது. ரயிலில் பயணிக்கிற யாவரும் அவனை ஒரு பொருட்டாக மதித்ததாகவே தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவனது இருப்பு குறித்தும் ஒருவரும் அலட்டிக் கொள்ளவில்லை. இப்படியான நபர்களிடம் பேசுவதற்கான தொடர்பை நான் எப்படி எப்போது ஏற்படுத்திக் கொண்டேன்? 

சொல்லப்போனால் விதி, ஜாதகம் குறித்து கூட பெரிதான ஈர்ப்பில்லை. இறை நம்பிக்கை பற்றியும் வனிதாவிடம் தர்க்கம் செய்வேன். குறிப்பாக குழந்தை மரணங்களை முன்வைத்து அவளது வாதத்தை முடித்து வைப்பதில் அப்படியொரு நிம்மதி. ஆயினும் ஒரு கஷ்டம் என வரும்போது மீண்டும் ஓடி வந்து பாதங்களில் சரணடைந்து மன்னிக்கக் கோருகிற சராசரியான ஆத்திகனிடம் எதற்கு வாழ்வு குறித்த தர்க்கப்பாடுகள் வெளிப்படுகின்றன. அதிலும் இதற்கு முந்தைய நாட்களில் உறங்கிக் கொண்டே செல்கிற நேரத்தை இவனுக்காக செலவிடுகிறேன். 

ஆச்சரியமாக அவனது பெயரைப் பற்றி பலமுறைக் கேட்டபோதும் அவன் அதனைச் சொல்லாமல் மழுப்பிக் கொண்டே இருக்கிறான். ஓரிரு முறை கேட்டபிறகு வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லையெனில் அசௌகரியமாக உணர்கிறவர்களைப் போல நான் அதன்பிறகு கேட்பதை விட்டுவிட்டேன்.

‘பெயரில் என்ன இருக்கிறது? நீங்கள் சொல்வது போல் நம் குடும்பத்துக்கு நாம் யார் என்கிற அடையாளத்தில் தானே எல்லாம் இருக்கிறது?’ 

சீண்டுகிறான். சிகாமணி மீண்டும் எதிர் திசையில் ஆயில் அழுக்கோடு நின்றவாறு தன்னை காட்டிக் கொண்டார். 

‘நான் முன்பு சொன்னதையே தான் இப்போதும் சொல்கிறேன். பிரம்மச்சாரிகளின் தொலைதல் குறித்து எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை. குடும்பமென்று அமைந்தபிறகு அதனைக் காப்பதை விட வேறென்ன அடையாளம் மனிதனுக்கு வேண்டியிருக்கிறது? இன்னும் சில வெட்கம் கெட்டவர்கள் இருக்கிறார்கள். மனைவி பிறகு பிள்ளைகளின் உழைப்பாலேயே சோறு தின்று உயிர் வளர்த்து பிறகொருநாள் போய் சேர்கிறவர்கள்’ நானும் சீண்டும் நோக்கத்துடன் பேசினேன். பிறகு இவ்வளவு வசையான சொற்கள் ஏன் என்னிடமிருந்து வெளிப்படுகின்றன? இவனாகவே பிடுங்குகிறானோ என்ற ஐயம் பலமுறை எழுந்ததைப் போல இப்போதும் தோன்றியது.

அவன் பெயரைத் தவிர மீதி விஷயங்களை என்னால் வாங்க முடிந்தது. 

நாமக்கலில் உள்ள நூற்பாலை ஒன்றில் தலைமை மெக்கானிக்காக பணிபுரிவதாகச் சொன்னான். ஆயில் கசிகிற, அழுக்கடைந்த உடைகளைக் கவனமாக வேறொரு பையில் தினமும் எடுத்துவந்துப் போகிற வழக்கம் கொண்டவன். எப்போதாவது தலைக்கு சாயம் இடுவானாயிருக்கும். கருமயிர் கொத்துக்கால்களில் வெண்மை முளைத்திருந்தது. நான்காம் வகுப்பு பயில்கிற ஒரே ஒரு மகன் இருக்கிறானாம். மனைவி வீட்டை நிர்வகிப்பவள்.

‘உங்களுக்கு ஊதியம் எவ்வளவு தருகிறார்கள்?’ 

‘மீண்டும் தவறான சொற்பிரயோகம். அவர்கள் என்னத் தருவது? ஒரு நாளைக்கு அருநூறு ரூபாயை நான் ஊதியமாகப் பெறுகிறேன்’ 

நான் சிரித்துக் கொண்டேன். அதை அவனும் உணர்ந்தது போல கூர்ந்து பார்த்தான்.

நான் இந்த ஒரு வார காலத்து நிகழ்வையும் அம்மாவிடம் சொன்னேன். அவளுக்கும் சிகாமணி தந்தையாயிருந்து சிகாமணி ஆன விஷயம் பிடிக்காது‌. ஆனபோதும் இப்போதெல்லாம் அவள் அதைப் பெரிதாக நினைப்பதில்லை. அவரை யாரிடமும் விட்டுக் கொடுக்காத மனப்பான்மை உடையவள். அவர் எங்கே போனார் என்கிற விவரம் ஒரு செல்லரித்த நூலாய் பரணின் மீது கிடந்தது. ஆனால் அவள் விசேஷ நாட்களில் பூ வைத்துக் கொள்வதன் மூலம் அவர் உயிரோடிருக்கிறார் என்பதை எல்லோரிடமும் உணர்த்துகிறாள்.

அந்த நேரத்தில் விவரம் தெரியாதவர்கள் திரும்ப வந்துட்டாரா எனக் கேட்டிருக்கிறார்கள். 

‘ம்.. பெங்களூருல நண்பர் வீட்டுல தங்கி வேலை பாத்துட்டு இருக்காரே. பணம்லாம் அனுப்புவார்’ என்பாள் பாவனை மாறாமல். 

விதவைப் பெண்களை வைத்து அம்மை நோய் வந்தக் குழந்தைகளுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றும் வழக்கம் எங்கள் பக்கம் இன்னமும் உண்டு. ஏழு அல்லது ஒன்பது நாட்களில் அதைச் செய்வார்கள். ஒருமுறை உறவுக்காரப் பெண் தன் குழந்தைக்கு தண்ணீர் ஊற்ற அம்மாவை ஜாடையாக அழைத்தபோது செல்ல மறுத்துவிட்டாள்.

அப்பெண் நகர்ந்தப்பிறகும் நீண்ட நேரம் அமைதி. ‘அவர் செத்துட்டாருனே எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்களா?’ என எங்கள் முகங்களைப் பார்த்துக் கேட்கையில் நாங்கள் தலை குனிந்து கொண்டோம். அவ்வப்போது நடக்கிற சின்னச் சின்ன விபத்துகள், பணப் பிரச்சினைகள் குறித்து நளனிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருந்தேன். 

‘உங்க அப்பா வீட்டை விட்டுப் போய் எத்தனை வருஷம் ஆகுது?’

‘வர்ற மார்ச் வந்தா முழுசா இருபது வருஷம் முடியுது. அப்போ எனக்கு பதினேழு வயசு’ 

‘நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. பவானி, கொடுமுடி பக்கம் ஒருநாள் வீடு வாசல்லாம் கழுவிட்டு போய்ட்டு வா. அம்மாவ சும்மா கோயிலுக்குப் போகலாம்னு அழைச்சிட்டுப் போ. ஆத்தங்கரைல வச்சி அவருக்கு ஒரு காரியம் பண்ணி திதி கொடுத்துடு. அதான் குடும்பத்துக்கு நல்லது’ 

அவன் சொன்னது சரியாகப்பட்டபோதும் அவருக்காக நான் போய் காரியம் செய்வதை வெறுத்தேன். ஆனால் இதுகுறித்த எனது வெறுப்பும் அம்மாவுடைய வெறுப்பும் வேறுவேறாக இருந்தது. அம்மா அவர் இறந்துவிட்டதை மறுப்பதில் உறுதியாக இருந்ததால் கோயிலுக்கு வர மறுத்தாள். ஆனால் நான் அப்படியில்லை. அவர் குறித்த எதுவுமே ஒரு மறைக்கவியலா எரிச்சலை உண்டு பண்ணியது. கோயிலுக்குச் சென்றபோதும் அரைகுறை மனதோடு சடங்குகளைச் செய்ய மறுத்து நான் விலகி நின்றதை வனிதா புரிந்து கொண்டாள். எனக்கு பதிலாக அமர்ந்த என் மகனோடு அக்காவின் குடும்பமும் பங்கெடுத்தது. அம்மா கோயிலுக்கு வரவும் மறுத்து வீட்டிலிருந்தாள். நாங்கள் வீடு திரும்பி மூன்று நாட்கள் வரை அவள் எங்களிடம் பேசவில்லை. 

‘அம்மாவ விடுங்க. உங்க அப்பா இத்தனை வருஷம் வரைக்கும் உயிரோட இருப்பார்னு எப்படி நம்புறது? நாம காரியம் பண்ணது நல்லது தான்’ என வனிதா சமாதானம் செய்தாள்.

‘அப்படியே உயிரோட இருந்துருந்தா உங்க மேலலாம் கொஞ்சம் கூட பாசம் இல்லாமலா போயிருக்கும்? இத்தனை வருஷத்துல திரும்பி வந்துருப்பார்ல’ 

என்று அவள் தொடர்ந்து சொன்னபோது தான் அவர் மீது இன்னும் ஆத்திரம் உண்டானது. சிந்தனையில் உயிரோடிருக்கும் போதெல்லாம் அவர் வெறும் சிகாமணியாகவும், இறந்துவிட்டதாகத் நினைக்கும் போது அப்பாவாகவும் தோன்றத் தொடங்கியது அன்றிலிருந்து தான். 

அம்மா அவர் பற்றிய எந்த ஏக்கங்களையும் வெளிக்காட்டாமல் இருப்பதில் கவனமாக இருந்தாள். அவருக்கு சிறுவயதிலிருந்தே சாதுக்களுடன் நிறைய நட்புண்டு. காசி, கேதார்நாத் என திருநீறு கமழ சுற்றி வருவார். நான் சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே இல்லற சுகத்திலிருந்து விடுபடுவது குறித்து அவ்வப்போது பேச்சினூடாக தொட்டுச் செல்வார்.

‘இந்த வாழ்க்கை எதுக்கானதுனு நினைக்கிற? மத்தவங்களுக்கு உதவுறதா? கல்யாணம் பண்ணிட்டு குழந்தைங்க பெத்துக்கறதா? பொழுது இறங்குனதும் எங்க இருந்தாலும் குடுகுடுனு ஓடிவந்து வீட்டுக்குள்ள புகுந்துக்குறதா? எல்லாருக்கும் எல்லாமும் செஞ்சிட்டு எல்லாருக்காகவும் என்னை தியாகம் பண்ணிட்டனேனு புலம்பிக்கிட்டே கண்ண மூடுறதா? இதெல்லாம் வாழ்க்கை இல்ல’

நான் வேறு எது என்பது போல நிமிர்ந்து பார்த்தேன். 

‘இந்த நிலம் தான் வாழ்க்கை. இந்த மக்கள கூர்ந்து கவனிக்கிறது தான் வாழ்க்கை. ஒரே ஒரு தடவ பொறக்குறோம்.. மத்த உசுருங்கள விட தெளிவான சிந்தனையோட பொறக்குறோம். அந்த சிந்தனைய வச்சி பொறந்த இடத்தை இரசிக்கணும். மனுசங்க, அவங்க உணவு, அவங்க பழக்க வழக்கம் எல்லாத்தையும் நேரடியா போய் பாத்துட்டு வரணும். உலகம் முழுக்க சுத்த ஆயுசு போதாது. முடிஞ்ச வரைக்கும் உள்நாட்டுலயாவது பயணம் போகணும். ஒரு இடத்துல பொறந்து அதே இடத்துல கண்ண மூடுறதுல எனக்கு விருப்பமே இல்ல’ 

நான் எதிர்கேள்வி கேட்க பயந்து அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால் அக்கா அப்படியில்லை. 

‘அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? எங்களைலாம் பெத்துக்கிட்டீங்க.. இதெல்லாம் பண்ணாம எங்க வேணாலும் சுத்த வேண்டியது தானே?’ 

சிகாமணி அதற்குக் கோபப்படவில்லை. ரொம்பவும் நிதானமாகப் பேசினார். அம்மா அன்று இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அரிசி களைந்து கொண்டிருந்தாள். அன்றாடம் அவள் படுக்கையறையில் இவற்றைக் கேட்டதால் வந்த சலிப்பாகக் கூட இருக்கக்கூடும். ஆனால் முழுதாக விட்டுவிட்டுப் போவார் என்றெல்லாம் அவள் அப்போது நம்பியிருக்கவில்லை. 

‘அதுதான் நான் பண்ண பெரிய தப்பு. கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது. உங்களையும் பெத்துருக்கக் கூடாது. இப்பதானே அறிவு வருது?’ 

எங்கள் முகம் வாடக்கூடாதென சில சொற்களை அவர் சேர்த்துக் கொண்டார்.

‘ஒண்ணும் பிரச்சினையில்ல. கருமத்தாம்பட்டியில பூர்வீக நிலம் கேஸுல இருக்கு. அது சாதகம் ஆனதும் உங்க எல்லாரையும் சேர்த்தே பயணத்துக்கு கூட்டிட்டுப் போறேன். அப்படிலாம் யாரையும் அம்போனு விடமாட்டேன்’ எனச் சிரித்தது எங்களைக் கொஞ்சம் சமாதானமடையச் செய்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவர் பரதேசம் செல்கிற முனைப்பிலிருப்பதற்கான அறிகுறிகளை நாங்கள் உணர்ந்தோம். ஆயினும் எங்கே அசட்டையாக விட்டோமென இப்போது யோசித்தால் தெரியவில்லை. சட்டென ஒரு ஐப்பசி மாத பௌர்ணமி இரவில் காணாமல் போயிருந்தார். காணாமல் போயிருந்தார் என்பதைத் தவிர வேறெதுவும் சொல்ல முடியாதபடி நீண்டிருந்த அதன் பிறகான நாட்கள் அம்மா மீது சுமையாக அழுந்தியதில் அவள் முதலில் கவலையுற்றுப் புலம்பியபடியே இருந்தபோதும் வருமானம் வரத் தோதான சிறுதொழில்களில் இறங்கியபிறகு பெரும்பதட்டத்திலிருந்து முதலில் வெளியே வந்து எங்களையும் கை கொடுத்துத் தூக்கிவிட்டாள். 

ஏதேனுமொரு விசேஷ நாளில் திரும்பிவருவாரென்ற எங்கள் நம்பிக்கைகள் அதன்பிறகு காணாமல் போயின. எதேச்சையாக கோயில்களுக்குச் செல்கிறபோதும் பரதேசிகளின் பக்கம் அனிச்சையாக பார்வை திரும்பியது. நெருங்கிய வட்டாரங்கள் தங்கள் உறவுகளிடம் எங்களை அறிமுகப்படுத்தும்போது சிகாமணிக்கு நாங்கள் இன்னாரென குறிப்புணர்த்திய வாயோடு பின்னொட்டாக உணர்த்தவிருக்கிற சொற்கள் முதுகுக்குப் பின்னாலிருந்து எங்களை ஜாடையாக அழைக்கத் தொடங்கின. அப்போதிருந்து சிகாமணி அப்பா என்கிற நிலையிலிருந்து நழுவி வெறும் சிகாமணியாக எனக்குத் தோன்றத் தொடங்கினார். 

வனிதாவிடம் சிகாமணி இரயிலில் தோன்றியது குறித்துச் சொன்னேன். ஏதேனும் பிரமையாயிருக்கும் என்றாள். அது வெறும் பிரமையென்று எனக்கும் தெரியும். இப்போதெதற்கு காரணமின்றி அப்பிரமை என்னைச் சூழ வேண்டுமென்பதே என் கேள்வியாக இருந்தது. 

அவன் வழக்கத்துக்கு மாறாக இன்று இரயிலில் எனக்கு முன்பாக ஏறிக் காத்திருந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவனைப் பார்த்துப் புன்னகைத்தபடி அருகில் நெருங்கியதும் அக்கேள்வியைக் கேட்பானென எதிர்பார்க்கவில்லை. 

‘அப்புறம் சிகாமணி விஷயத்தில் என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?’ 

குடும்ப விஷயங்களைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் பேசுவது பற்றிய அசூயை சட்டென என்னைச் சூழ்ந்தாலும் எனது பாரம்பரியம் குறித்தத் தகவல்கள் அவனுக்குத் தெரிந்தது மேலும் அவன் மீதான இரகசியத்தன்மையை அதிகரிக்கச் செய்தது. இருப்பினும் எங்கேயாவது அவர் உயிரோடிருப்பதற்கான சாத்தியங்களை அவனது கேள்வி மீண்டும் உயிர்ப்பித்ததில் ஆர்வமடைந்தேன். 

‘உங்களுக்கு எப்படி அவரைத் தெரியும்?’ எனக் கேட்டதற்கு அவன் பதில் சொல்லவில்லை. 

‘நான் ஏற்கனவே கேட்டது தான். உன்னைப் பொருத்தவரை அதிக வலியைத் தரக்கூடியது மரணமா அல்லது தொலைந்து போதலா?’ 

இந்தமுறை அக்கேள்வியில் நான் தடுமாறினேன். சிகாமணி எங்கேயாவது வாழ்வது தெரிந்தால் இழுத்து வந்து நிறுத்தி நான்கு கேள்விகள் சூடாகக் கேட்டுவிட்டு கைபிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விடவேண்டும்.

தொலைந்து விடுபவர்களைப் பற்றி மீண்டும் வசை பாடினால் அவர் இருக்கிற இடத்தைச் சொல்லாமல் மறைத்து விடுவானென்கிற அபத்தமான அச்சம் உள்ளுக்குள் எழுந்ததை நினைத்துச் சிரித்துக் கொண்டேன். வாய் தன்னிச்சையாக மரணம் தான் என முனகியது. 

‘நல்லது’ என்றான். பிறகு நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. 

அலுவலகத்தில் இது குறித்து நளனிடம் கூறினேன். ‘இதெல்லாம் அவ்வளவு பெரிய ஆச்சரியமில்லை. நீ ஏற்கனவே உன் தந்தை காணாமல் போனது குறித்து அலுவலகத்தில் எக்கச்சக்கமாகப் புலம்பியிருக்கிறாய். தேநீர் கடைக்காரன் வரை உன் வரலாறு தெரியும். அவனுக்குத் தெரிந்ததில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?’ 

‘அப்படிப் பார்த்தாலுமே பொருத்தம் இல்லையே.. அவன் அறிமுகமாகி ஒரு வாரம் பத்து நாட்கள் தான் இருக்கும். பார்க்க நம்மைப் போலிருந்தாலும் பேச்செல்லாம் சித்தன் போலிருப்பதால் தான் அவனது சொற்கள் குறித்து யோசனையாக இருக்கிறது?’

‘உனது முகநூலில் அல்லது வலைதளத்தில் கூட நீ எழுதிய சுயபுராணத்தை அவன் படித்திருக்கலாம். இந்த காலத்தில் சர்வ சாதாரணமாக நான்கையும் ஏழையும் முடிச்சிட்டு பதினொன்று எனச் சொல்லிவிட முடியாதா?’

சித்தன் முகநூலெல்லாம் பயன்படுத்துவானா என்கிற எண்ணத்துக்கு நான் தாவியிருந்தேன்.

‘சிந்தையுடைத் திறப்பின் மந்தகதி அகல.. 

இத்திருமேனி தணல் சூழ நொந்தழியுமேகில் 

அந்தமொடுச் சுடரேகி.. 

எண்ணமெலாம் பற்றேவல் விதியேறி.. 

குற்றமகலக் குற்றமகல வருமுந்தன் நிழலொத்தே இப்பிறப்பு..’ 

சந்தேகமில்லை. சித்தன்தான். இன்னும் என்னென்னவோ பாடினான். நான் முடிக்கட்டுமென அமைதியாயிருந்தேன்.

‘மனித மனம் போல கெட்டழிகிற ஒன்று வேறெதுவுமில்லை. கெட்டழிந்த பின்பு அதை சரி செய்ய வேண்டி பரதேசம் செல்கிறவர்களை திட்டி என்ன ஆகப்போகிறது. அப்படியே கெட்டழிகிற மனதோடு அவர்களை குடும்பத்துக்குள் விட்டு வைத்தாலும் அது நலமென்றுக் கருதுகிறாயா? சுயநலமாகவே இருப்பினும் அதைத் திறந்து உடைத்து விலகிக் கொள்வது தானே நல்லது? கூடவே இருந்து மனம் ஒரு பக்கமும் உடல் ஒருபக்கமும் இழுக்க வாழ்ந்தழிவது நல்ல வாழ்வுக்கு உகந்ததா? 

அதனால் தான் சிகாமணி உங்களை விட்டுப் போய்விட்டார். இப்போதும் அவர் மீது கோபமாகத் தான் இருக்கிறாயா?’ 

என்னால் அக்கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் என் காதில் அவன் பாடிய குற்றமகல என்ற சொல் மட்டும் விடாப்பிடியாக ஒலித்துக் கொண்டே இருந்தது. 

‘மரணத்தருவாயில் அவர் நிச்சயம் உங்களை நினைத்துக் கலங்கியிருப்பார். ஒரேயொரு மன்னிப்புக்காக அவர் ஆன்மா ஏங்கியிருக்கலாம் என்பது குறித்து ஏதாவது யோசனை இருக்கிறதா?’ 

இதற்குமேலும் அவர் மரணித்துவிட்டார் என உனக்கெப்படித் தெரியும் எனக் கேட்பது அபத்தமாகத் தோன்றியது. மேலும் அவன் சொல்வதை மட்டுமே கேட்கப் பணிக்கப்பட்டிருக்கும் சீடனாக நான் அங்கு அமர்ந்திருந்தேன். அவன் பேசிக்கொண்டே போனது எதுவும் காதில் விழவில்லை. நிமிர்ந்து கூட்டத்தில் தென்பட்ட முகங்களைத் தேடினேன். அப்பா எங்கேயும் தென்படவேயில்லை என்பது மனதை அழுத்தியது. ரயில் அடுத்த ஸ்டேஷனைத் தொட்டிருந்தது. அதற்கு முன்பாகவே அவன் பேச்சை நிறுத்தியிருந்தான். என்னை யோசிக்க விடவேண்டுமென்பதற்காகவே அமைதியாக இருந்தது போலிருந்தது. 

நான் வீட்டுக்கு வந்தும் யாரிடமும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கை கால் முகம் அலம்பி உடை மாற்றி அம்மாவின் அறைக்குச் சென்றேன். அவள் தொலைக்காட்சியில் ஒலிக்கிற ஏதோவொரு பாடலைக் கேட்டபடியே கீரை பறித்துக் கொண்டிருந்தாள். நான் வந்து நிற்பதைப் பார்த்து ஆச்சரியமாக ஏனென்பது போல முகம் காட்டினாள். மீண்டும் ‘என்னடா ஆச்சு?’ என்றபோது நான் எதுவும் பேசாமல் சுவரில் மாட்டப்பட்டிருந்த அப்பாவின் படத்தைப் பார்த்தேன். அந்தப் படம் பூக்கள், விளக்கின்றி இருந்தது. 

அப்பா பற்றிய எனது வசைகள் அவளுக்கு நினைவில் வந்திருக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தைக் கூட பலமுறை நான் அங்கிருந்து அகற்றி பரணில் போட்டிருக்கிறேன். ஆனால் இரண்டொரு நாட்கள் கழித்து அம்மா மீண்டும் அதையெடுத்து பழையபடி மாட்டிக் கொள்வாள். அப்பாவின் வாழ்வு குறித்து அவளும் நிறைய யோசித்து சலிப்பேறிப் போய் இனி யோசிப்பதில்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கக் கூடும் எனத் தோன்றியது. காத்திருத்தலின் சலிப்பு. என்னைப் போலவே அவளும் அப்படத்தைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் வேலையைத் தொடர்ந்தாள்.

‘நான் அப்பாவின் படத்துக்கு விளக்கேற்றலாம் என நினைக்கிறேன்’

நான் சொன்னதற்கு அவள் எந்தச் சலனத்தையும் காட்டவில்லை. நான் சற்றுக் காத்திருந்துவிட்டுத் திரும்பி நடந்தபோது ‘கடையில திரியும், பசு நெய்யும் வாங்கிட்டு வா’ என்றாள். 

***

 ந.சிவநேசன் – சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் ஆரியபாளையம் சிற்றூர். பள்ளி ஆசிரியர். விவசாயத்திலும், எழுத்துத் துறையிலும் ஆர்வம். கவிதைகள் காலச்சுவடு, அகழ், நீலம், புரவி, வாசகசாலை, ஆனந்தவிகடன், குமுதம் தீராநதி, கணையாழி,  கல்வெட்டு, தகவு, நுட்பம், கீற்று, சொல்வனம்  போன்ற பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும் பல்வேறு இணைய, இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். தெற்கு ஜன்னல் சிறுகதை தொகுப்பு நூல். கானங்களின் மென்சிறை, ஃ வரைகிறது தேனீ, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சர்க்கரை, மீன்காட்டி விரல், ஞௌ போல வாழ்பவர்கள் ஆகியவை கவிதை நூல்கள். மின்னஞ்சல் : nsivanesan1988@gmail.com

Previous article
Next article
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here