Tuesday, June 23, 2026

காதோதிகள்

ம.கண்ணம்மாள்

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக, என்னுள் ஒரு விருப்பமிருந்தது. அது என்ன விருப்பம்? கனவு என்று சொல்லலாமா? ஆமாம். சரி என்ன கனவு? அது மிக எளிமையானது. அரசியலில் நான் உச்சம் தொடவேண்டும். இப்போதும் என்னைச்சுற்றி மிகப்பெரும் கூட்டமுள்ளது. இது போதாது. இன்னும் வேண்டும். அவர்களோடு நான் கீழிறங்கி நடக்க வேண்டும். இசை கேட்க வேண்டும். இசை என்பது வெறும் சந்தோஷமல்ல. போராடுவதற்காகவும் இசையை அடிக்கடி கேட்கலாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் இசைக்கலைஞர்கள் போராட்டக் குணமிக்கவர்கள். எனக்கும் போராட்டக் குணமுண்டு. நானொரு அரசியல் இசைப் போராட்டக் கலைஞன்.

*****

என் வீடு அன்று நிரம்பி வழிந்தது. சோர்வாக நான் ஆகிடக்கூடாது. ஆண்கள், பெண்கள் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்த தாய் மகளிர்கள், சட்டென்று என்னைப் பார்த்து சிரிப்பை உதடுகளுக்குக் கொண்டு வந்த தந்தையன்கள், சிறிதே வெட்கப்பட்டு கண்ணைச் சுருக்கிய முதுமகளிர்கள் …… அப்பப்பா……… ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். ஒவ்வொருவருராக அழைத்துப் பேசினேன். பட்டா பெறுவதிலிருந்து, பிறப்புச்சான்றிதழ், சினிமாவே கதியெனக் கிடக்கும் வளரிளம் பெண்ணுக்கு வேலை தருவது, வங்கிக்கடன் வாங்குவது, இது போல எல்லாமே சொல்லப்பட்டு வந்த போது, லாரி லாரியாகச் செங்கற்களும், ஜல்லிக் கற்களும், சிமெண்ட் மூட்டைகளும் கொட்டி பெருங்கட்டிடமொன்றிற்கு என்னுள் அஸ்திவாரம் தோண்டிய அந்த வற்றல் தொற்றலான ஒரு உருவம் நடு இரவில் புதைந்து போயிருந்த மெத்தையிலிருந்து விழித்தெழச் செய்தது.

“அய்யா சீக்கிரமா அமைச்சர் ஆகிடுங்க”

சில நாட்களில் அஸ்திவாரம் பலரால் தோண்டப்பட்டது.

நானும், அஸ்திவாரமும் சிறிது சிறிதாக உறவாட தொடங்கினோம்.

*****

கூட்டம் அதிகம் கூடும் மாலை வேளை. எப்போதும் போல் என்னைச் சுற்றி பேப்பர்கள், விவாதங்கள் மற்றும் அதற்கான காரியவாதிகள் சூழ்ந்திருந்தார்கள். ஒவ்வொருவராக, நகர்ந்து வர, வற்றல் தொற்றல் உருவம் என் முன் வந்தது. கனவில் கண்ட அதே முகம். நல்ல உயரம். கையைத் தர முனைந்தேன். இரும்புப்பிடியாகப் பிடித்தது. கார்டொன்றை எடுத்து நீட்டியது. “அமைச்சராகக்கடவாய்” என்றிருந்தது. கார்டை சட்டைப்பையில் வைத்துக்கொண்டேன். யாரும் கவனிக்கவில்லை. வேகமாக நடந்து, கடந்து சென்றது. நானும் வெளியில் வந்தேன்.

“டிரைவர், எங்கண விட அண்ணே” என்றார்.

கேள்வியை காதில் ஏற்றாததால், அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.

மெதுவான தொனியில் இசைக்குள் மூழ்கத் தொடங்கினேன்.

*****

மறுநாள் விடியலில் மழை கொட்டத் தொடங்கியது. அந்த அழகான வீட்டில் வளர்ப்புப் பிராணி 

She – ன் சத்தத்தில் கண் விழித்தேன்.

She, அம்மாவைக் கூப்பிடு என்றேன். வெளிர் கத்திரி நிறத்தில் என் மனைவி தெரிந்தாள். பளீரிடும் நிறம். சோர்வில்லாத முகம். அன்றைய நாளுக்கான பணியில் தன்னைப் பொருத்திக் கொண்ட பரபரப்பு.

“கையை என் நெற்றியில் வைத்தாள். காய்ச்சல் இல்லல்ல…”

மிகமிக மெதுவாக நெற்றியில் முத்தமிட்டாள்.

பளாரென உராய்ந்துக் கொண்ட என் உடலை அசட்டைச் செய்து விட்டு, லாவகமாக எழுந்தேன்.

*****

அனாதைக் குழந்தைகளுக்கு எங்கக் கட்டிடத்தில் இடமில்லை சார். ஏற்கனவே இடம் பத்தல. எதாவது ஏற்பாடு பண்ணித் தாங்க சார்… பிச்சைக் காரங்களும் தங்கியிருக்காங்க… உங்களைப் போல பெரிய மனுஷங்க தான் உதவி பண்ணனுமென சொல்லிக் கொண்டே போனவரை, அழுத்தமாகப் பார்த்ததில், பேச்சை நிறுத்தினார்.

ஆமாம்… என்ன சொன்னீங்க… அனாதைக் குழந்தைகள்..

அனாதைன்னு சொல்ல நீங்க யார்?

நம்மளோட டோட்டல் நெகடிவ்வும் அது தான். அம்மா, அப்பா இல்லாத பிள்ளைங்கன்னு சொல்லலாம். அப்படி சொல்லறதுக்கு என்ன?

இன்னொரு வார்த்தை சொன்னீங்கல்ல… பிச்சைக்காரங்கன்னு..

உங்க வீட்டு சோத்துக்கு வந்து நின்னா பிச்சைக்காரங்க இல்ல சார்.

அப்படி பார்த்தா இங்க எல்லாருமே ஏதோவொரு வகையில பிச்சை எடுக்கிறவங்க தான்… வயித்துப்பசி மட்டும் பிச்சை இல்லை. எல்லாமே பிச்சை தான்..

சாப்பிட இல்லாதவங்க… வழி இல்லாதவங்க… இப்படிச் சொல்லப் பழகிக்குங்க..

கரும்புச்சக்கைப் போல அரை நொடி உணர்ந்தேன். 

சரிங்க… என அவரைப் பார்த்தேன்.

நான் பார்த்துக்கிறேன்… நான் பார்த்துப்பேன்.. வாங்க…

வந்தவரிடமிருந்து பெறப்பட்ட கெட்டியான காகிதக்கோப்பு என் மேஜையின் நடுவில் வந்தது.

இரவு நெருங்கத் தொடங்கிய நேரம். ஆரஞ்ச் வெண்ணிற விளக்குகளுக்கு நடுவில் கார் நிதானப்படுத்திக் கொண்டு நகர்ந்ததில், சாலைகளிலிருந்த மக்களின் மேல் கவனம் திருப்பினேன்.

நொடியில் துளைத்து, துல்லியமாகக் கவனிக்கும் பார்வை என்னுடையது.

ஏன் இவ்வளவு கூட்டம் இன்னைக்கு என்றேன்….

என் வேலையைத் தினமும் நடைமுறைப்படுத்தும் பணியாளன். அண்ணே என்றதில், 

சொல்லு தம்பி என்றேன்…

ரெண்டொரு நாளில் தேர்தல் தேதி சொல்லப்போறாங்க

அண்ணே. அதான் எல்லாக் கடைகளிலும் கூட்டம் தள்ளுது. அப்புறம் பணம் சரளமாக கொண்டுட்டு வரமுடியாதுல்லண்ண..

ஆமாம் என்றதில் என் உடல் முடிகள் நெட்டையாகின.

நான் எதற்குப் பயப்படணும்?

ஏன் பயப்படணும்?

அண்ணே என்ற குரல் கேட்டு, 

மறுபடியும் சொல்லு தம்பி…

நீங்க சீட் கேளுங்கண்ணே…

திரும்பி பின் சீட்டைப் பார்த்து சிரித்தேன்…

பாத்துக்கலாம் தம்பி… பார்த்துக்கிறேன்…

முக்கால் பங்கு பயணம் முடிவுற்ற நிலையில் சன்னமான இசை என்னை மறைத்துக்கொண்டது.

*****

விடியற்காலை 3.24 போல கண் விழித்தேன். சில நாள்கள் அப்படி அதுவாகவே அமைந்துவிடும். ஆனால், எனக்கு எதுவும் சிக்கலில்லை.

பக்கத்திலிருந்த கையை மிகப் பொறுமையாக ஒத்தி வைத்தேன். 24 வருடங்களாகப் பார்க்கும் கை அது. என்னுள் விரிந்துக் கிடக்கும் மற்றொரு உலகை, என் உள்ளேயும் வெளியேயுமான ஆழமான, பள்ளமானக் குழிகளை சீராட்டும் அக்கறைக் கொண்ட கையை கரிசனமாகப் பார்த்தேன்.

இந்த வாழ்க்கையே, தேவைக்காக தான் எனத் தோன்றியது.

புதிதாகக் கட்டப்பட்ட வீடு ஆகையால், பெரிய மாடி, கூடவே நிறைய மலர்த்தொட்டிகள். தரையில் உடலைக் கிடத்தினேன்.

என்னவிதமான சில்லிப்பு… தரை என்னை வியாபித்துக் கொண்டது. புரண்டு, உருண்டு மல்லாக்கப்படுத்ததில், விடியலுக்கான தயார் நிலைத் தென்பட்டது. சிறிதேயான காற்றில் உடல் சொக்கிக்கிடந்தது. இந்த இடம் மிக அனுகூலமான இடம். என் நிறைவுகளை அள்ளித் தந்து, சுய சோதனைக்கு உட்படுத்தும் இடம். கண்ணுக்கு இதமான உவப்பைப் பருகத் தொடங்கினேன். வானில் தெரிந்த சில மேக நகர்வுகள், ஒரு சில விண்மீன்களைக் கூர்மையாகப் பார்க்கத் தொடங்கியதில் என்னை விட்டுச் சென்ற அம்மாவும், அப்பாவும் இருப்பது போல பிரமை. சிறு வயதிலிருந்தே இறப்பென்றால் பயம். அம்மா கையைப் பிடித்து இறுக்கிக்கொள்வேன். பயப்படக்கூடாது தம்பி… அவங்க வானத்துக்குப் போயிட்டாங்க… அவ்வளவு தான்… பின் வந்த நாட்களில் இறப்புப் பற்றி தெளிந்த அறிவுக் கிடைத்தாலும், என்னை நானே புத்தாக்கிக் கொள்ள அடிக்கடி சொல்லும் வார்த்தை, “இறப்பு இனிது”

அப்பாவை எனக்கு மிகவும் பிடிக்கும் ஆண் பிள்ளைக்கு அம்மா மேல தான ஒட்டுதல் இருக்கும்னு சொல்லும் போது, அப்பாவின் மீதும், என சொல்வதைக் கேட்டு, வீட்டில் கீறிச், கிச்கிச், ஆ… ஹா ஹா என பல சிரிப்புகள் எழும். ஏன் இவர்கள் இப்படி சிரிக்கிறார்களென யோசித்ததில்லை. அப்பாவை நினைக்கும்போதெல்லாம். எந்தக் கரடுமுரடான ஒலியும் எனக்குக் கேட்கவில்லை. மாறாக, மெல்லிய சாக்ஸபோன். அதிகம் பேசமாட்டார் பேசினால், பேச்சில் அலசல் தெரியும். பெரும்பாலான நேரங்களில் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கிறேன். அந்த அனுசரணையான உடம்பும், பூசினாற் போன்ற பளபளக்கும் கன்னங்கள், அடர்நிறச் சட்டைகள் இயற்கையாக அமைந்த செழிப்பான கேசம் என்னை உற்றுப்பார்க்க வைத்திருக்கிறது.

“வயிறு நிறைய புள்ளைக்கு சோறு போடு” இது என்னைப் பல நாள் சிரமப்படுத்தியிருக்கிறது. வயிறு பெரிசா இருக்கான்னு தொட்டு தொட்டுப் பார்த்து சாப்பிட சொன்ன அப்பாவை யாருக்குத் தான் பிடிக்காது? 

பின்னொரு நாளில் அறியாத பருவத்தில், பசி என்னை வழிமறித்து அபகரித்துக் கொண்டது.

உப்பிக்கிடந்த வயிறு, ஒட்டிப் போய் வற்றியது. 

நானும், அம்மாவும் ஒரு மதிய வேளையில், வயிறு நிறைய சோற்றினை அள்ளித் தின்றுக் கொண்டிருந்தபோது, சுவாதீனமாக உள்ளே நுழைந்தவர்கள், அப்பாவின் உடலைக் கிடத்தினார்கள். எங்களின் அனுமதியின்றி இறப்பு உள்நுழைந்தது.

அலுவலகத்தில் பணம் கையாடல் எனும் பெருங்குற்றச்சாட்டு, சக ஊழியர்களின் அவஸ்தைகள், கை கட்டி நின்று தன்னை நிரூபிக்கத் தவறிய நிமிடங்கள், இறப்பினைத் தானாக அழைத்து வந்துவிட்டது.

அப்பா, நல்லவர் என்பதை விட, பிறரின் பொருளுக்கு ஆசைப்படாதவரென தெருவே கத்தியதில், பீறிட்ட அழுகையினை அப்பாவுக்குத் தாலாட்டு ஆக்கினேன். 

அன்றிலிருந்து, இறப்பு என்றால் பயம். அப்பா, வானத்தில் தெரியுறார் பார்…. என வருத்தமும் வேதனையும் சேர அம்மா சொல்வதில் எவ்வளவு துயர்…

பின்னாளில் எனக்கு நேரிட்ட அனுபவங்களில் வருத்தமும், வேதனையும் எப்படியிருக்குமென்பதனை, ஒட்டிய வயிறில் கை வைத்து அழுத்திக் கொண்ட போது தெரிந்துக் கொண்டேன்.

ஆனாலும், “இறப்பு இனிது” என்றே சொல்வேன்.

*****

என்னைக் கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளுங்கள். இறப்புக்கதை நிறைய என்னிடமிருக்கிறது. ஆனால், சொல்ல நேரம் இது அல்ல. மெலிதாகச் சிரித்து, குறைந்த வெளிச்சத்தில் துழாவத்தொடங்கியதில், சொந்த உபயோகத்திற்கான என் அறை அழைத்தது. மிக அழகான அறை அது. முழுவதும், மீதியுமாகச் செதுக்கும் சிற்பக்கூடம் அது. மூளையைக் கொஞ்சம் வேலையும் வாங்கும். வாழ்க்கைக்கான நுகர்பொருள் கலாச்சார மனப்பான்மைக் கொண்ட தேடலுக்கான விசாலத்தில் மறுபடியும் மல்லாக்கக் கிடந்தேன்.

கண் விழித்த போது, கடுமையாக உழைக்கத் தயாரானேன். உச்சக்கட்டமாக உழைப்புத் தெரிந்தது. வேறெதுவும் என்னை அமுக்கவில்லை. எந்த அந்நிய வாடையும் என் மீதில்லை.

அந்தரங்கத்தை விட்டு வெளியே வந்த போது, சென்னை செல்ல ஆயத்தமானேன்.

நினைவுகளைத் தள்ளிவிட்டு, காரில் உதிரி, உதிரியாக இசைத்த இசையில் என் மனம் ஒருங்கே அமைதியானது.

*****

சென்னை போன்ற வெளியூர்கள் செல்வதெல்லாம் மிக இரகசியமாக வைத்துக்கொள்வேன். அரசியலில் எனக்கு எதிரிகள் அதிகம். ஆனால், நான் மிக இயல்பாக வாழ்கிறேன். தலைமைக்குப் பயந்து, கட்சியின் மூத்தவர்களை மதித்து நடப்பவன். ஆனால், மிகக் குறைந்த நாட்களுக்குள் பல பொறுப்புகள் தானாகவே வர எதிரிகள் வந்தடைந்தார்கள். அதை என் மனம் ஏற்க மறுத்தது. மனதினடியில் மூச்சுத் திணற வைத்தது. தினந்தோறும் சொல்லிக் கொள்ளும் இரு தூண்டுக் காரணிகளை வாய் முணுமுணுத்தது.

1. எல்லோருக்கும் நல்லவனாக வாழமுடியாது.

2. நல்லவன்னு சொல்றதுக்காக, நீங்கள் சொல்வதையெல்லாம் என்னால செய்ய முடியாது.

என்னப்பா… நல்லாருக்கியா? என்ற ஒரிரு வார்த்தைகளுக்குள் மிக மிக எதேச்சையாக விஷயம் சென்னையில் சொல்லப்பட்டது. MLA சீட் கிடைப்பது அவ்வளவு எளிதும் அல்ல. ரொம்ப மெனக்கெடணும். 

பார்க்கலாம்.. பார்த்துப்பேன்… 

காதிலொலித்த இசைத்தளத்தில் மெல்ல மூழ்கினேன்.

*****

முன்பை விட வேகமாக பணியில் இயங்கினேன். ஓர் ஓரமாக மனதில் துளிர்விட்ட ஆசை, நிலம் பார்க்கும் செடியாக, வெளிவரத் தொடங்கியது. எந்த கிரீடமும் எனக்குளில்லை. ஆனாலும், நிறைய போராட்டங்கள். வெட்கமும், ஆணவமுமில்லாத ஒரு மனநிலையில் உழைப்புப் புரட்டிப்போட்டது. அம்மாதிரியான நேரத்தில் லேசான துன்புறுத்தல்களை என் உடல் தாங்கிக் கொண்டது.

*****

நான் மிக சாதாரணமானவன். இந்த வெளியுலகத்தின் மேல் மிகுந்த பற்றுடையவன். ஒரு போதும் அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள விரும்பியதில்லை. என்னுள் நல்லது × கெட்டது என எதுவும் இல்லை. எப்போதுமே எனக்கு, ஒரு கேள்வி எழும். என் நலம் விரும்புபவர்கள் கேட்கக் கூடியக் கேள்வி அது,

“நீ ஒரு அரசியல்வாதி தான். ஆனால், அரசியல் செய்யத் தெரியாதவன்”.

இதை கேட்டு கேட்டு பெரும் மனவுளைச்சலில் தவித்த நாள்களுண்டு. தீர்வாக, உளவியல் நிபுணரையும் சந்தித்தேன். முடிவாக, நானறிந்தது.

“விளையாட்டு மட்டும் இருந்தால் போதாது. விளையாட மிக பொருத்தமான அழகான மைதானம் வேண்டும்” அவ்வளவுதான்.

அனைவரையும் அன்பாக பார்க்குமெனக்கு நான் சார்ஜ் ஏற்றப் பயன்படும் ஒரு கருவியென பயன்படுத்தப்படுவதாக விமர்சனம் வருவதை பொறுத்துக்கொண்டேன்.

காரணம் ஸிம்பிள். 

என் இளவயது சூழலும், பசியில் துவண்ட போது அடைக்கலம் தந்த சில நல்ல மனித உடல்களும் மட்டுமே. பதவியைத் தாண்டி, அப்பதவியை ஆக்கப்பூர்வமாகக் கொண்டு எளியோருக்கு உதவ நினைத்ததுதான். திரும்பவும் சொல்கிறேன். சிறு வயதில், பசியின் பொருட்டு இறப்பினைப் பயத்தோடு அணுகியிருக்கிறேன். கிடைத்ததென்னவோ தோல்வி. என்னளவில் திரும்ப திரும்ப சொல்லிக் கொள்வது “இறப்பு இனிது”. 

காரினுள் நுணுக்கமாக ஒலிக்கப்பட்ட இசைக்குறிப்பினுள் துவளத் துவள மிதந்தேன்.

*****

நள்ளிரவைக் கடந்த பொழுதில் நன்கு அடைக்கப்பட்ட பிரமாண்ட செங்கல், சிமெண்ட் கலவைக்கு முன்னால் அவர்கள் தோரணையாக அமர்ந்திருந்தார்கள்.

அந்த ஊரின் பெரும் பதவிக்காரர் மற்றும் மூத்தக் கட்சிக்காரர்கள், அவர்களின் காதோதிகள் குழுமியிருந்தனர்.

அவர்கள் முன்னால் சாத்தியங்கள் சந்தேகமாகி விரிவாகிப் பரந்து ஆக்கிரமித்துக் கிடந்தது.

மண்மேட்டில் தெரிந்த இருட்டு ஆபத்தாகப்பட்டது.

பெரும்பாலும் இந்த உலகின் ஆபத்தானவைகளை இருட்டில் தான் மனித உடல்கள் நடைமுறைப்படுத்துகின்றன.

என்னாய்யா… என்னா நிலவரம்… 

காதோதி -1 வாய்திறந்தார்

நமக்குக் கிடைக்கிறது கஷ்டம்ன்னு பேசிக்கிறாங்கய்யா.

இருக்கட்டும்ய்யா.. தமிழ்நாடு முழுக்க அதே நிலமதான். பள்ளம் யாருக்கு யார் தோண்டுறதுண்டு இருக்குல்ல.

மறுபடியும்,

காதோதிகள் – 2,3,4 வாய் திறந்தனர். 

அண்ணே… பள்ளமானாலும் குழி நாம தான் தோண்டனும். மாவட்டம்ல என்ன நடக்குது.. தெரியல.. ஊர் பூரா பேசிக்கிறாங்க..

அடப்போய்யா… பினாத்தாதே… கற்பனை பண்ணாதே…

தலைமை யாரை நிக்க வச்சாலும் ஜெயிக்க வைக்கணும். தலைமைக்கு யார் பதில் சொல்றது?

காதோதிகள் வாய் மூடியது.

மண்மேட்டில் தெரிந்த இருள் சிரித்தது. யார் கண்ணுக்கும் தெரியவில்லை.

*****

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் தடதடக்கும் தாக்குதல்களை பிரச்சாரமாகக் கொண்டது. நான்கு முனைப்போட்டிகளாக உருமாறியது. இலக்கை நோக்கியப் பயணத்தில் களத்தில் வெற்றி நூலைப் பிடிக்க, சிக்குகளைக் களையத்தொடங்கினர்.

*****

இந்நிலையில் நான் சார்ந்திருந்த கட்சியின் வேட்பாளராக பெரும் போட்டிக்கு இடையில் அறிவிக்கப்பட்டேன். என் ஊரில் பெரும்பான்மையாக நான் மையப்படுத்தப்பட்டு, எதிர்கட்சிப் பிரச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி பேசப்படும் முதல்நிலைக் கட்சி வேட்பாளனாகக் களத்தில் நின்றேன். கட்சியைத் திட்டியதோடு, தனிமனித தாக்குதலும் தொடர்ந்த போதும், தைரியமாகச் சுற்றி சுழன்றேன். தினந்தோறும் மக்களைச் சந்தித்தல், வார்டு வார்டாக பிரச்சாரம் என ஓய்வில்லாமல் பறந்ததில், என் முன்னால் தேர்தலில் வெற்றி ஒன்றே பெரிதாக தெரிந்தது. மற்றக் கட்சியினர் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் என்னைத் தரம் தாழ்த்திய போதும், நான் மறுப்பு அறிக்கை விடவில்லை. விளக்கம் கொடுக்க வேண்டி தேவை எனக்கு இல்லை எனக் கருதினேன்.

*****

என்னைச் சுற்றியிருக்கும் புதிர்களை நானே அவிழ்த்தலென்பது என்னால் முடியாதது. நான் என்பது நானே தான். நானொரு வித்யாசமானவன். சொல்லப்போனால், நான் நிற்கும் இடத்தில் நானே பிரதானமாக தெரிவேன். வெகு மக்கட்திரள் என்னை உற்றுநோக்கும். வழிநெடுகிலும் தோள் தாங்கிய மாலைகள், போர்த்தப்பட்ட சால்வைகள், மலர்த்தூவல்கள் என் ஊரில் இதுபோல முன்பும், இப்போதும், வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. இனியும் அதுபோல கிடைப்பது சற்றே கடினம் என உணர்ந்திருக்கிறேன்.

இங்குள்ள கைக்கூலிகள், எதன் பொருட்டும் வசை பாடித்தீர்க்கும் மனித உடல்களின் மனஅடியோட்டம் என்பதை நானறியாமலில்லை. இருப்பினும், அமைதி காத்தேன்.

மனித வாழ்வு, இப்பெரும் உலகம், உயிர்களின் வலி அதன் உள்ளீடாகவுள்ள வன்முறை, அழிவு இதெல்லாம் மனதிலோடியது.

இவற்றை, அடையாளம் காண வேண்டியாவது சிறிது அரசியல் தெரிய வேண்டும்.

இசை ஒரு ஒழுங்குடன் ஒலிக்கத் தொடங்கியது. கண் மூடி சிறையுண்டுக் கிடந்தேன்

*****

நாள்தோறும் என் கட்சிக்கான பணி, டிரெய்லராக என்னுள் ஓடியது. திசை திருப்பும் திகில் கூட்டமாக எதிர் சவுடால்கள் ஊரையே துவம்சம் செய்ததைக் கண்டு அயரவில்லை. அவ்வளவு குழப்பங்கள், நெருக்கடிகள் தொடர்ந்தன. ஊழல்… ஊழல்… என்ற கூக்குரல் ஓலத்தில், எந்தப் பின்வாங்கலும் என்னிடமில்லை. எந்தக் கொள்ளையும் நான் அடிக்கவில்லை…

என் சொத்துகள் குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும். வருமானத்திற்கு உட்பட்ட சொத்துகள் பற்றிய முழுவிவரம் மற்றும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதில் சொத்துகள் பற்றிய போதுமான உண்மைகள் இல்லையெனவும், மக்களுக்கு இது பற்றிய முழுமைகள் தெரிவிக்க வேண்டுமெனவும், எதிர்கட்சியினர் தொடர்ந்து பிரச்சாரத்தில் படபடத்தனர்.

இதெல்லாம் சொல்லிக்கொண்டு, ஆதாரம் காண்பித்து, மறு அறிக்கை விட்டு, என்னை நல்லவனாக்க நான் முயலவில்லை.

அரசியலில் தவறுகள் அதிகம். ஊழல்கள் உண்டு. இவ்விரண்டையும் எந்த அரசியல்வாதி, தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் எவ்வளவு செய்கிறார்களென்பதே விஷயம். அரசியலின் இரு கண்கள் தவறும் ஊழலும். இந்த இரு கண்களையும் விரல் விட்டு நோண்டிக் கண்ணையே பிய்த்து எடுக்கும் மனித உடல்கள் இங்கிருக்கின்றன. அவர்களுக்குத் துணை போகும் ஆண், பெண் மனித உடல்கள், காலத்திற்கேற்ப வாழ்ந்துக் கொண்டுதானுள்ளார்கள். ஆனாலும், இவற்றையெல்லாந் தாண்டி அடிப்படையான அறம் என்பது ஒவ்வொருவரிடமும் வேண்டும்.

பத்து மணிக்குள்ளான பிரச்சாரம் முடித்து, கண்ணை மூடிய போது மேலுள்ள விஷயங்கள் மனதில் தோன்ற, வெப்பத்தில் நனைந்தேன்.

நடுத்தரமாக சத்தமிட்ட இசையில், சிறிது சிறிதாக குளிரத் தொடங்கினேன்.

*****

அவர்கள் தெளிவாகப் பின்னிரவில் கூடியிருந்தார்கள். கட்டட வேலை நடந்துக்கொண்டுள்ள இடம் அது. மணல் நிரப்பல் பட்டும், படாமலும் உதிர்ந்துக்கிடந்தது. குழிகளில் நீர் நிரம்பியிருந்ததில் தெரிந்த நிறத்திற்கு வண்ணம் சொல்ல முடியாது. அந்த இருட்டு மண்மேடு பின்னொரு நாளில் ஒரு வெளிச்சமுள்ள அறையாக மாறக்கூடும். எங்கு பார்த்தாலும் சிமெண்ட், கற்கள், சலிக்கப்பட்ட மணல் துகள்கள், கம்பிகள் எனக் கலவையாகயிருந்ததைத் தாண்டி, சமதளமான மனையொன்று இருந்தது. சுற்றிலும் நல்ல விலையுயர்ந்த நாற்காலிகள். இந்த நாற்காலிக்குத்தான், மனித உடல்களின் இவ்வளவு ஆட்டமும். யார் அமர்வது என்ற கேள்வியில் நாற்காலிகளின் தரம் ஆட ஆரம்பிக்கின்றது. காட்சிகள், அதற்கான படப்பிடிப்புகள், ஒப்பனைகள், பேச்சுகள் என அனைத்தையும் கொக்கிப்போட்டு இழுத்து, குழியில் தள்ளும் மலைப்பாதை வளைவுகள் இங்கு பேரதிகம். எல்லா வளைவுகளையும் உதறித்தள்ளும் ஒரு மனித உடல் தான் அரசியலுக்கு அவசியமாகின்றது.

இப்போது,

நாயகமாக நடுவிலிருந்தவர், என்னாய்யா…. என்னா சந்தேகம் உனக்கு? என்றார்.

காதோதி -1 இல்லைங்க அய்யா… நமக்கு சீட் தரல…

காதோதி – 2 நாம ஏமாந்துட்டோம்ய்யா…

அது அப்படியல்லய்யா… உங்களுக்குப் புரியாது. நான் இல்லன்னா என்ன? கட்சி நம்மோடது. யார் நின்னாலும் ஜெயிக்கணும். தலைமை தான் நமக்கு முதல்ல. நம்ம ஜாதிக்காரன் இல்லன்னா என்ன? அதெல்லாம் பார்க்ககூடாது. ஓட்டு பிரியக்கூடாது. போய் வேலையைப் பாருங்க. எனக்கு ஜெயிக்கணும். அவ்வளவு தான்…

அய்யா…

சொல்லுப்பா…

“என்ன… இப்படி சொல்லி அனுப்பிட்டீங்க…”

ஆமாய்ய… அப்பதானே அது பரவும்… நான் கோவமாருக்கேன்னு வெளியில சொல்ல முடியுமா? தமிழ்நாடு முழுக்க ஜாதிக்காரன் தான் சீட்கேக்கிறான். எனக்கு சீட் இல்ல. விரோதம் மாறாது.” 

“சற்று தூரத்தில் உயரத் தெரிந்த கான்கிரீட் கம்பிகளை எக்கிப் பார்த்துக்கொண்டே,” பேச்சை நிறுத்தி யோசித்து,

உனக்குத் தெரியாதுய்யா…

வலிக்குது… உள்ளாற பிசைஞ்சு பிசைஞ்சு வலிக்குது…

இருளின் மரங்களின் நிழலில் ஏதோ அசைவது போல் தெரிந்தன.

மனுஷங்க இல்லாத இடத்துக்குப் போக தோணுது….

வெளில தலைக்காட்டமுடியல. கேட்டா இதெல்லாம் கட்சியில சாதாரணம்ங்கறானுங்க… எது சாதாரணம்? என் ஜாதிக்காரனுக்கு என்ன பதில் சொல்றது?

இப்போது மரங்களின் நிழலில் அசைவில்லை. 

இப்போ நான் தனியாள் ய்யா… எவனும் கூட இல்ல…

பத்து பேர் கூட இருந்து பழகிட்டா, அது இருவது பேரா இருந்தா தான் அன்னைய நாள் நல்லாருக்கும். அது ஒரு மனுஷபோதை. சுத்திலும் கூட்டத்தோட பொழுதக் கழிக்கிறது. மனுஷங்க இருந்தா சோறு, தண்ணி வேணாம். பெரும் ராஜபோகமான சுகம் அது. அனுபவிச்சா மட்டுமே புரியும்.

இப்போ, சல்லித்தனமா ஒரு மனுஷபயல் கூட கிட்டக்க இல்ல.

டென்ஷன் ஆகாதீங்க அய்யா…

இப்போது எதிரே தெரிந்த இருளில் எச்சலனமுமில்லை. 

சரியான நேரத்துல என் குறுக்கால வந்துட்டான். எனக்கு சமாதானமாகல. எப்படி நான் அரசியல்ல இனி வேலை பார்க்குறது?

“இதெல்லாம் சகஜமா எடுத்துகலாம்ய்யா.. கோவப்படாதீங்க. உடம்புக்கு ஆகாது. விடுங்கய்யா..”

“மனசு ஆறல எனக்கு… எழுந்து நின்று எரியும் விளக்கை உற்றுப் பார்த்தவாறு, “ம்.. ஹீ.. ம்..” என்றார்.”

நீண்ட வரிசையான வாகனங்களின் காத்திருப்பில், உள்ளே உட்கார்ந்திருக்கும் ஒரு மனித உடலின் தள்ளாமை “ம்..ஹீ..ம்” வில் தெரிந்தது.

இருள் இன்னமும் அவர்களைப் பார்த்தபடி அமைதி காத்தது.

*****

தேர்தல் தேதி நெருங்கியது. நாடே திருவிழாவைக் கொண்டாட பரபரத்தது.

வாழ்ந்து, கெட்ட, வாழப்போகும் மனித உடல்கள் சிந்திப்பதை ஒத்திப்போட்டன.

எங்குப் பார்த்தாலும் தேர்தல் வாக்குறுதிகள், செயல்படுத்தப்படவிருக்கும் நலத்திட்டங்கள், தொழில் வாய்ப்புகள், தடையற்ற நீர்வசதி போன்ற பற்பல வண்ணம் கொட்டிய கலவைச் சாந்தாய் தொடர்ந்த பிரச்சாரத்தில் நாடே சாயம் பூசிக் கிடந்தது.

நிற்க கூட நொடியின்றி காற்று போல புகுந்து புகுந்து மக்களைச் சந்தித்தேன். தேர்தல் விதிமுறைகளை மிகவும் கவனத்தில் கொண்டிருந்தேன். செல்லுமிடமெல்லாம் எனக்குச் சாதகமாகயிருந்தது. துளிகூட வெற்றியைப் பற்றி கவலைப்படாமலிருக்க என்னோடிருந்தவர்கள் கூறியதை உள்வாங்கி, கணிசமாக வந்திடுமா? என்றேன்.

அதிருப்தி வேண்டாம்ன்ணே…. என்றார்கள். நாங்கள் சாட்சி… கையும் களவுமா வெற்றி உறுதி என கை உயர்த்தியதில், முகம் பீதி களைந்தது.

*****

கோடிகளைத் தன்னுள் சுமக்கப்போகும் அந்தப் பெருங்கட்டடத்தில் மணல் கொட்டிக் கிடந்த மௌனமான ஒரு முன்னிரவுப்பொழுது, பரந்துபட்ட இடம் ஆட்கள் தென்படவில்லை. சரிந்துக்கிடந்த மணல் குவியலில், ஈரமிருந்தது. வரிசையாக இரு பக்கமும் நிறைய செடிகளை வைத்திருந்தார்கள். செடியின் பச்சையும், பூவின் மொட்டும் அழகழகான நிறத்தில் தலையசைத்ததில், சிறு குழந்தையின் நளினம் தெரிந்தது. இன்னும் சில வருடங்களில் வளர்ந்த மரமும், மலருமான அவ்விடத்தின் ரம்மியத்தில் மனித உடல்கள் தம்மை ஆசுவாசப்படுத்தும் ஒரு பேரிடமாக அது மாற வாய்ப்புண்டு. அந்த நீண்ட வழித்தடத்தின், உட்புறத்தின் பெரிய கனமான இரும்புக் கதவை உள் தள்ளி அவர்கள் நின்றும், அமர்ந்தும் பேசிக் கொண்டே கொட்டாவி விட்டுமாக அராஜக பண்ணையார்த்தனத்தில் காட்சித் தந்தார்கள்.

காதோதிகள் வழக்கம் போல் அன்றன்றைய செய்திகளை ஒப்புவித்தது, நட்ஸ் கலந்த ஐஸ்கிரீமை குடுவையில் வழங்கியது போலிருந்தது.

ஆனாலும், அது சுவைக்கவில்லை.

காதோதிகள் – 1 

அய்யா… என்னா பேசமாட்டேங்கறீங்க.. அடக்காதீங்க அய்யா.. கொட்டித் தீர்த்துடுங்க…

காதோதிகள் – 2, 3

அய்யா.. ஒன்னும் நடக்கல.. இன்னும் கவலப்படாதீங்க சீட் தரல அவ்வளவு தான… தமிழ்நாட்டுல நாங்க யாருன்னு காட்டுறோம்.. நம்ம ஜாதியைப் பத்தி அப்ப தெரிஞ்சுப்பானுங்க..

யாருட்ட கெத்து காட்டுறது…

இங்கிருக்கும் மனித உடல்களுக்குள் இருக்கும் எண்ணக் கழிவுகளை எந்த அறிவியல் யுகத்திலும், எவ்வளவு சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் வந்தாலும் நீக்க முடியாது.

“எண்ணக்கழிவுகள் +ஊறிப்போன அங்கலாய்ப்புகள் = மனித உடல்கள்”

இது தான் கடைசிவரை என உறுதியிடலாம்.

ஒவ்வொரு மனித உடலும், அடுத்த மனித உடலை எப்படிச் சாய்க்கலாம், புகழினைத் தடுக்கலாம், வளரவிடக் கூடாது, நம்மைத்தாண்டி போய்விடக் கூடாது, கூடவே இருந்துக் கொண்டே பாதாளத்தில் தள்ளுவது போன்ற சல்லிசான வேலைகளில் தம்மைச் செப்பனிட்டுக் கொள்கிறார்கள்.

திடீரென, ஒரு காதோதி கத்தியது. பெரும் குரலில்.

உங்கள தான்யா நாற்காலில உட்கார வப்போம். எவன் ஜெயிக்கிறான்னு கணக்கெடுத்தா என்ன? எந்த டீம் வேலைப் பார்த்து சொன்னா என்ன?

நாங்க என்ன பராக்கு பார்க்க இருக்கோமா? கட்சிக்கு வேலை பார்ப்போம். ஆனா, என்னா வேலைன்னு வெளில தெரியாது…

நாங்க இருக்கோம்.. தைரியமா இருங்க… காதோதிகளின் ஏகோபித்த சவலையொலியில் அந்த இடம் உறங்க முடியாமல் முழித்தது.

*****

தேர்தல் நாளன்று விடியும் முன்னே கண் விழித்தேன். மாடிக்குச் செல்ல வேண்டுமென தோன்றியதை எந்தக் குறுக்கு விசாரணைக்கும் இடம் தராமல் செய்தேன். குலதெய்வக் கோயில் வழிபாடு முடித்து, வெளியே வரும் போது, மனது மிகவும் விரும்பும் நறுமணம். கமழ்ந்து கிளர்த்தியது. எல்லாவிதமான தடைகளைக் களையும் என்னைக் கைத்தூக்கக் கூடியதொரு பற்றினை உணர்ந்தேன். என் மனத்தின் உள்வரை சென்று என்னையே மறந்தாற் போல, சுகந்தமான நல்ல மனநிலையைத் தந்தது ஏகாந்தமடையச் செய்யும் மதர்த்தலான வெறியில், நல்ல நேரத்தில் என் வாக்கினைப் பதிவு செய்து, அப்போதே வெற்றியானது போல பெரும் மகிழ்ச்சி, நடையில் பக்குவம். பேச்சில் கனிவு. செயலில் அனைவரையும் அரவணைத்துக் கொள்ளல் என முழுவதுமாக உருமாறி முதிர்ச்சி பெற்று நின்றேன். எல்லாரிடமும் பொதுப்படையாக பேசினேன். எந்த மறைவுமில்லை.

அண்ணே… நிறைய பத்திரிக்கைகள், மீடியாக்களில் நம்ம ஊர் வெற்றின்னு வந்திருக்கு… அண்ணே.. MLA ஆகிட்டா வேலை ஒன்னு வாங்கித்தாங்க..

உதவியாளனை அன்பாகத் தட்டிக்கொடுத்தேன். 

பார்த்துக்கலாம்.. பார்த்துப்பேன்… 

காரின் மிதமான நகர்வில், கோர்க்கப்பட்ட இசைக்கோவை அதிர்வில் கண்கள் அழுந்த உறங்கினேன்.

*****

அன்று தேர்தல் முடிவு அறிவிக்கும் நாள். என்னிடம் எப்பதற்றமுமில்லை. சஞ்சலமுமில்லை. சுமார் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பக்கட்ட முடிவு தெரியக்கூடும். விளையாட்டாக, ஒரு ஆபத்துடன் விளையாடிவிட்டேன். ஆனால், அது பிடித்திருந்தது. அது கனவும் கூட. தலையில் கனம் ஏற்றிக் கொள்ளாத கனவு. சிரித்துக்கொண்டேன்.

*****

தொடர்ந்து எனக்கான எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. புரியவில்லை. உயரமான மலையுச்சியில் பிடித்தமன்றி நிற்பது போல உணர்ந்தேன். எதிர்கட்சியின் வெற்றிக் குரலில் என்னுள்ளே ஏதோ பிறாண்டியது. கொட்டும் குருதியோடு அவ்விடத்தைவிட்டு அகன்றேன்.

மிக மிக மிகத் துல்லியமாக, சரியாக போட்டுக்கொடுத்த வரைபடக் கணக்கின்படி என் வெற்றி காவுக்கொடுக்கப்பட்டது.

******

தன்னிச்சையாக காருக்குள் உட்கார்ந்தேன். என் அருகில் ஒரு மனித உடலும் இல்லை. என்னைப் பார்த்து ஒதுங்கிக் கொண்டனர். பார்வையைத் தவிர்த்தனர். உதவியாளன் கூட அருகில் வரவில்லை. மிகச் சரியாக பெரும் கடப்பாறையால் என் முதுகைப் பிளந்திருந்தார்கள்.

*****

எப்பொழுதும் போல காலை விடிந்தது. யாரோ பார்க்க வந்திருப்பதன் அறிகுறியாக, she விடாமல் உணர்த்திய சத்தம் கேட்டு வெளியில் வந்தேன். அதே வற்றல் தொற்றலான உருவம் நின்றிருந்தது. அதன் கண்களில் எனக்குக் கொட்டியதைப் போலவே குருதிக் கொட்டியது. என் கைகளில் குருதி நனைத்த ஒரு கார்டொன்றை மறுபடியும் தந்துவிட்டு நகர்ந்து நடந்து மறைந்தது.

கார்டில் “அனைத்தையும் மற” இப்படிக்கு அஸ்திவாரம் என எழுதப்பட்டிருந்தது.

***

ம.கண்ணம்மாள் – மருதநிலம் தஞ்சையைச் சொந்தமாகக் கொண்டவர். 25 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியராக பணி மேற்கொண்டு வருகின்றார். அதோடு, பொதுவெளியில் கவிதை, கட்டுரை, சிறுகதை என இயங்குதலோடு, சீர் வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருக்குறள் அக மெய்ப்பாடுகள், இலக்கண உரைகளில் சமுதாயம், முப்பெரும் கவிஞர் பாக்களில் மெய்ப்பாடுகள், பாவலரேறு ச.பாலசுந்தரம் போன்ற நூல்களையும், ‘தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் திருக்குறள் விளக்கம்’ என்ற நூலையும் பதிப்பித்துள்ளார். சீர் கலை இலக்கிய காலாண்டிதழின் ஆசிரியர் குழுவிலும் பங்குக் கொண்டுள்ளார். சன்னத்தூறல், அதகளத்தி, உடல்கள் – கால்கள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மின்னஞ்சல் முகவரி : kannamano07@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here