ஒரு கலைஞன் அவனிடம் இருக்கும் கலை உபகரணங்களைக் கொண்டு மட்டும் கலைப் படைப்பு உருவாகிவிடுகிறது என்று சொல்லி விட முடியாது. அதன் பின்னாலிருந்தோ இல்லை அதனைத் தாங்கியோ ஒரு சமூக நிகழ்வு, இயக்கம், அசைவு என்ற ஏதோ ஒரு சில செயல்பாடுகளின் தாக்கங்கள், புறக்காரணிகளால் நேரிடையாகவும் எதிர்மறையாகவும் கலைப் படைப்புடன் தொடர்பு கொண்டிருக்கும்.
அதை ரசிப்பவர்கள் அப்படைப்பில் இருக்கும் தடங்கள் வழியே பயணப்பட தெரிந்தால் மட்டுமே ஒரு பெருவெளியின் திட்டிவாசலென அப்படைப்பை உணர வைக்கும். * 1960களில் இந்தியக் கலை வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கண்டது. இந்திய நவீனக் கலையின் தொடக்கம் பிரித்தானிய ஆட்சிகாலத்தின் தொடர்ச்சியாகவே பாவிக்கப்பட்ட சிந்தனைப்பள்ளிகளின் பங்களிப்பு இருந்தது. இந்த விவாதங்கள் எழ ஆரம்பித்த காலத்தில், “Group 1890” என்கிற குழு ஒன்று உருவெடுத்தது. இந்தக் குழுவை 12 படைப்பாளிகள் ஒன்று சேர்ந்து உருவாக்கினர். இந்திய சுதந்திரத்திற்கு பின்பான 1950களில் தீவிரமாக உருவாகி ஓவியப் படைப்புகள் மீதிருந்த ஐரோப்பிய சிந்தனை மற்றும் மாற்றங்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான தீவிர முனைப்போடு ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் கொள்கையென முன்னெடுத்துச் சென்றவற்றில் முக்கியமானதாக ஐரோப்பிய கலை இயக்கங்களின் நீட்சியாக தன் படைப்புகளை முன் வைத்து வந்த அத்தனை பேரின் படைப்புகளும் இந்தக் குழுவால் நிராகரிக்கப்பட்டது (hybrid mannerisms resulting from the imposition of concepts evolved by successive movements in modern European art’ ). மாற்றங்களை தனது படைப்பாக்கத்தின் அனுபவத்தில் இருந்து ஒவ்வொரு படைப்பாளியையும் அனுகுவதற்கு போதித்தது. அதே நேரம் இந்த இயக்கம் எந்தவொரு குறிப்பிட்ட முறைகளையும், பாணிகளையும் தன் குறிக்கோளாக போதிக்கவில்லை.
ஓவியர் J.ஸ்வாமினாதன் அவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட இந்த குழு- ரெட்டப்ப நாயுடு, ஜீ.எம்.ஷேக் உள்ளிட்ட முக்கிய படைப்பாளர்கள் அடங்கிய இந்தக் குழு தன்னைத் தொடர்ந்து தக்க வைக்கத்தவறியது. இக்குழுவின் முதல் கண்காட்சியே இதன் கடைசிக் கண்காட்சியாக இருந்தது. அதற்குப் பின் இக்குழுவைக் காப்பாற்ற முனைந்த அடுத்தடுத்த முயற்சிகள் யாவும் தோற்றுப் போனது. 1967ல் இரண்டாவது கண்காட்சிக்காக நிகழ்ந்த ஒரு சந்திப்பில் இந்தியாவின் முன்னோடி கலை விமர்சகர்களில் ஒருவரான கீதா கபூர் அவர்களும் இருந்தார்.
courtesy : asia-art-archieve / group 1890
க்ரூப்1890 தனது இரண்டாவது கண்காட்சியை நடத்தமுடியாத போனதற்கு கலை குறித்த தர்கங்கள் உண்டாக்கியப் பிளவு என்று புரிந்து கொள்ள முடியும்.
இந்த முடிவிலிருந்து இந்தியச் சமகால கலை இருவேறு முனைகளில் இருந்து செயல்பட ஆரம்பித்தது. ஒரு பக்கம் இதை முன்னெடுத்த ஜே.ஸ்வாமிநாதன் இந்தியாவின் கலாச்சார அடையாளமாக உருவாகும் அரசின் உதவியோடு ஒரு கலை அமைப்பை பெரும் கட்டுமானத்தில் கொண்டு வந்தார். அது 1982ல் மத்தியபிரதேசத்தின் போபாலில் வைத்து திறந்துவைக்கப்பட்ட ‘பாரத் பவன்’. மறுமுனையில் க்ரூப் 1890 படைப்பாளர்களோடு செயல்பட்ட கலைவிமர்சகர் கீதா கபூரின் முயற்சியில் அவரது கணவரும் புகழ்பெற்ற ஓவியர் ஷெர்கிலின் தங்கையின் மைந்தருமான விவான் சுந்தரம், பூபன் காகர், க்ரூப்1890ல் இருந்து பிரிந்து வந்த ஜீ.எம்.ஷேக் ஆகியோருடன் இணைந்து உருவான PLACE FOR PEOPLE (1981) என்கிற குழுவாக நடத்திய கண்காட்சி. இது வெற்றிகரமான முக்கிய நிகழ்வாக இந்திய கலை வரலாற்றில் இடம் பிடிக்கிறது. இந்தக் குழுவானது மொத்தமாக ஆறு ஓவியர்களும் ஒரு கலை விமர்சகரும் அடங்கிய குழு. இந்த அமைப்பை முன்னெடுத்துச் சென்றவர்கள் தான் விவான் சுந்தரம் மற்றும் கீதா கபூர் என்ற தம்பதியினர். இவர்கள் சேர்ந்து ஆற்றிய பங்களிப்பு ஒவ்வொன்றுமே சமகாலத்தின் கலை படைப்புகள் மற்றும் செயல்பாடுகளில் முன்னோடியானவை.
தோல்வி வெற்றிகரமானது
ஒரு வெற்றிகரமான கண்காட்சிக்கு முன் நடந்த ஏற்பாடுகளாக, சமகாலத்தில் கையாளப்படவேண்டிய சமூகக், கலாச்சார, அரசியல் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்த பிரக்ஞை மற்றும் கலைப் படைப்புகள் வழியே அவற்றை அனுகும் யுக்திகள் என்று கலந்தாய்வு செய்ததன் விளைவாகவே வெற்றி கண்டதாக என்று தன் அனுபவங்களிலிருந்து பகிர்ந்தவர் மேற்சொன்ன இரு குழுவிலும் அங்கம் வகித்த G.M. ஷேக்.
PLACE FOR PEOPLE பிரித்தானிய CURATOR மற்றும் விமர்சகரான திமோத்தி ஹைமேனின் வழிகாட்டுதலில், ஏற்கனவே நாட்டின் முக்கிய நவீன படைப்பாளர்களாக இருந்த விவான் சுந்தரம், GM ஷேக், பூபன் காக்கர், சுதிர் பட்டவரதன், நளினி மாலினி ஆகிய அறுவர்களும் உரையாடும் தன்மையுள்ள ( Narrartive ) படைப்புகளை உருவாக்கத் தூண்டியது. இந்த பாணி இன்னும் அகண்ட வெளியில் விவாதிக்கப் பட்டது. அப்படி விவாதிக்கப்பட்டவையே கண்காட்சிகளின் படைப்புகளாகவும், கீதாவின் கட்டுரைகளாகவும் வெளி வந்த்து. கீதா கபூர் இந்தியாவின் முன்னோடி விமர்சகராக வலம் வர இந்த அமைப்புடன் சேர்ந்து உருவாக்கிய கட்டுரைகள் முக்கியமானக் காரணமாக அமைந்தன.
விவான் சுந்தரம் சமகாலத்தின் முக்கியக் கலைஞரான இவர், ஓவியம், சிற்பம், பதிப்போவியம், நிழற்படக்கலை, காணொளி, என்று பல தளங்களில் முன்னோடியாக செயல்பட்டார். சில வருடங்களுக்கு முன்பு GAGA WAKA எனும் கண்காட்சியில் ஆடைகள் வடிவமைப்பை முன்வைத்து ஒரு Cross over exhibitionஆக நாகரிகம் அதன் நடப்பு வழக்கு மற்றும் கலை ஆகியவற்றை இணைக்கும் வாய்ப்புகளை mannequin எனப்படும் மாதிரிகளில் கையண்டார். அரசியலிலும் தனது கருத்துக்களை படைப்புகள் வாயிலாகவும், நேரடியாகவும் செயல்பட்டு சமூகப் பொறுப்புள்ள படைப்பாளியாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கீதாகபூர் இந்தியாவின் மிக முக்கியமான கலை விமர்சகர்களில் ஒருவர், கலை விமர்சனம், கலை வரலாறு, அரங்க நிர்வாகம்(curator) ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறார். தனது கணவருடன் இணைந்து தனியாகவும், குழுவாகவும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் என பல்வேறு கண்காட்சிகள் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். சமகாலத்தின் கலை தத்துவங்கள், கோட்பாடுகளென முப்பது ஆண்டுகளுக்கும் மேலே இவரது செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் பெற்றவையாகக் கருதப்படுகின்றன.
விவான் சுந்தரம் முயற்சித்த ஒவ்வொரு சோதனைகளுமே பெரிய வெற்றிகள் பெற்றன. விவான் சுந்தரத்தின் படைப்புகளை மட்டும் தனியாக ஆராய்வது அல்லது ரசிப்பது என்பதே புதிய பல தளங்களை ஒருவரிடமிருந்தே அறிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். அதுமட்டுமன்று, இவர் கலை குறித்து ஆராய்பவனுக்கும் மிகப் பொருத்தமான தேர்வாக இருப்பார். இவரது தாயின் சகோதரியான புகழ்பெற்ற ஓவியர் அம்ரிதா ஷெர்கில் மேல் கொண்ட ஈர்ப்பில் வெளி வந்த RE-TAKE of AMRITA அவரின் நினைவு போற்றும் தொகுப்புகளில் ஒன்று.
vivan sundaram collections
ஒவ்வொரு முறையும் பரிசோதனைகளோடும், புதிய முயற்சிகளோடும் புதுப்புது வடிவங்களை அனுபவங்களைத் தேடும் சுந்தரம், தனது சித்தியான அம்ரிதாவின் வெவ்வேறு காலங்களில் எடுக்கப்பட்ட நிழற்படங்களைத் தொகுத்திருக்கிறார். இத்தொகுப்பில் உள்ள அநேகப் படங்கள் அம்ரிதாவின் தந்தையான உம்ராவ் சிங் எடுத்தவை. மொத்தமாக வெவ்வேறு காலங்களில் சேமித்த நிழற்படங்களை டிஜிட்டலில் ஒரே காலத்திற்குள் ஒட்டியமைத்த வேலைப்பாடுகள் அவரது பிற படைப்புகளிடமிருந்து அழகியல் பூர்வமாகவும் தன்னுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு தொகுப்பாகவும் அமைந்த இந்த கண்காட்சியைத் தவிர சமூகத்தின் பங்கை தன் கலைபடைப்புகளில் வெளிப்படுத்தாத வேறு எந்த கண்காட்சியும் நடைபெறவில்லை.
போஸ்ட் மார்டம் என்ற கண்காட்சியில் அவரது முயற்சிகள் மனித மாதிரிகளில் உருவாக்கிய சிற்பங்கள், உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் அரங்கேறிய LADY GAGAவின் தாக்கத்தில், நவநாகரிக ஆடை அலங்காரத்தின் தாக்கங்களை முன்வைத்து அவர் உருவாக்கிய GAGA WALK ஆகியனவும் முக்கியமானவைகளாக பேசப்பட்டன.
விவான் சுந்தரத்தினை இந்தியாவின் முதன்மையான மற்றும் தலை சிறந்த INSTALATION ARTIST ஆகக் கருதுவதும் தவிர்க்க முடியாதது. Installation art என்பது ஓவியங்கள், சிற்பங்களைக் காட்டிலும் அதிக அனுபவத்தை நேரடியாக மக்களுக்குத் தருபவை, அரங்குகளில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பல்வேறு நோக்கங்களோடும் உருவாக்கப்படும் பொதுவாக முப்பரிமாணத்தோடும், ஒலி, ஒளி, வாசனை என பல பரிமாணங்களோடும் பார்வையாளனுக்கு அனுபவம் தருவது ஆகும். இதன் காரணமாக ஐரோப்பியத் தாக்கம் மிக்கவர் என்றும் இந்தியக் கலை மரபிற்கு எதிரானவர் என்கிற விமர்சனமும் அவர் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டே வந்திருக்கிறது. அவர் இந்தியத்தன்மை என்கிற மரபை விமர்சன பூர்வமாகவும் அரசியல் பூர்வமாகவும் எதிர்கொண்டார்.
அவரை கலைஞர் என்று அழைத்ததற்கு இணையாக செயற்பாட்டாளர் என்று அழைக்கும் அளவிற்கே சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குறிப்பாக மதரீதியான பிரச்சினைகளில், பாசிச ஒடுக்குமுறைகளை மிகக்காத்திரமாக எதிர்த்தவர். அத்தோடு தன் சகாக்களின் குரல்களையும் பதிவு செய்யத் தூண்டியவர். சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையை,கொடுமைகளை எதிர்த்தவர் தமது படைப்புகளில் வெளிப்படுத்தியவர். 1960களின் பிற்பகுதியில் குஜராத் கலவரங்களைக் கண்டித்த இவர், வளைகுடா போர், பாபர் மஸ்ஜீத் இடிப்பு என சில ஆண்டுகளுக்கு முன் நடந்த குஜராத் மதக் கலவரங்கள் வரை எல்லா அநீதிகளுக்கும் எதிராக அவர் தமது படைப்புகளிலும் வினையாற்றியுள்ளார்.
* எல்லா காலங்களிலும் சுந்தரத்தின் மனைவி கீதா கபூரின் இணையான பங்களிப்பை ஒதுக்கிவிட்டு இவரைப் பற்றி மட்டும் பேசிவிட முடியாது. இந்த தம்பதியரின் வாழ்க்கை மற்றும் அவரது பயணங்கள், படைப்புகளில் வலம் வருவது, இந்திய நவீன ஓவியங்கள் குறித்த ஆய்வுக்கும் பயன்படும். கொள்கைகள், பாணிகள், தொழில்நுட்பங்களினால் மட்டுமே வெற்றி கிட்டுவதில்லை, ஒரு கலைப் படைப்பு வெற்றிகரமாக மக்களிடம் போய்ச்சேர்வதற்கு இத்துறையில் பக்கபலமாய் பல செயல்பாடுகள் இருக்க வேண்டும். அது தான் ஒரு சிறந்த கலைச் சமூகத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்க முடியும். புதிய பரிசோதனைகள், கலை விமர்சனம், கலை வரலாறு, ஊடகம், அரங்கு ஏற்பாடு, கருத்தரங்கம் போன்றவை அவசியம் வேண்டும்.
கீதா கபூர் மற்றும் விவான் சுந்தரம், இவ்விருவரும் அப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தை நிரப்பியவர்கள். இவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வதே கலைத் துறையில் நமக்கு பல கண்ணோட்டங்களை உருவாக்கவும், சில கருத்துகளை, முடிவுகளைத் தகர்த்தெரியவும் உதவும். ஏனெனில் கலை வரலாறு இல்லாத சமூகத்தின் கால்தடங்கள் கண்டிப்பாக அழிக்கப்படும். விடுதலைக்குப் பின்னர் 1980களில் வெவ்வேறு திசைகளில் பயணித்த இந்தியக் கலையின் முற்போக்குத் தடம் விவான் சுந்தரத்தின் மிகப்பெரிய பங்களிப்பில் இருந்தே தொடங்குகிறது.
(2014ல் கணையாழியில் வந்த கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்)
***
ஜீவ கரிகாலன் – ட்ரங்கு பெட்டிக் கதைகள், கண்ணம்மா, ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள் என மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கிறது. கணையாழியில் துணை ஆசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும் சில இதழ்களில், பத்திரிகைகளில் கட்டுரைகள், கதைகள் எழுதுவது என இயங்கி வருகிறார்.மின்னஞ்சல்: kaalidossan@gmail.com
அசலின் மதிப்பு போலிகளின் வரவிற்குப் பின்னால்தான் தெரியும் என்பர். கலை உலகில் பிரசித்தி பெற்ற எந்த படைப்பையும் சந்தையில் உலவும் போலிகளைக் கொண்டு இன்னும் மதிப்பு வாங்கி தக்கதாகக் கருதுவார்கள். ஆனால் ‘போலி’ – சந்தைகளால் உருவாக்கப்படுபவை. சந்தை போலிகளை ‘மாற்று’ என உற்பத்தி செய்து புது பெயரிட்டும் அழைக்கும்.
அப்படி என்றால் ‘மாற்று’ என்பதே போலியானதா?
இல்லை ஒருபோதும் இல்லை
‘மாற்று’ என்பது உண்மையில் மதிப்பீடு தான். சொல்லப்போனால் மாற்று என்பதுதான் பரிணாமம் மாற்று என்பது தான் வளர்ச்சி. மாற்று என்பது மற்றொரு அசலும் கூட. மாற்று என்று சொல்லப்படும் போலிகள்தான் ‘மாற்று’ என்கிற கருத்திற்கு எதிரான ஒற்றைப்படைத் தன்மையான எதிர்ப்பை ஒரு அமைப்பில் வலுப்பெற வைக்கின்றன.
*
எழுத்தாளர் சி.மோகன் தவிர்த்து – இந்திய அளவில் தாக்கம் செலுத்திய ஒரு பெரும் ஆளுமைக்கு சொல்லிக்கொள்ளும்படியான அஞ்சலிக் கட்டுரைகள் என்று கூடவேண்டாம், அவர் மறைவு குறித்த சமூக ஊடகப் பதிவுகளே கூட தமிழில் இல்லை. தமிழ் நிலத்தோடும் தொடர்புடைய விவான் சுந்தரம் எனும் கலை ஆளுமை மேற்குலகின் தாக்கத்தில் வாழ்ந்தவர், இந்தியக் கலை மரபை எதிர்த்தவர், ஒரு பிராமணர் என்பதால் அவரை ஓவியராக ஏற்றுக்கொள்ளாத சிந்தனைக் குழாம் இருக்கத்தான் செய்யும்.
kiran nadar museum collection
மக்களை முன்வைத்து 70களுக்குப் பின்னர் இந்தியா முழுக்க சிறு சிறு குழுக்களாய் பரவி வந்த முற்போக்கு கலை இலக்கிய உலகில். தனது வாழ்நாள் முழுதும் தமது கலை மற்றும் அரசியல் செயல்பாட்டை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தியும், அதை மக்களுக்கானதாகவும் சமரசமற்றும் முன்வைத்த அசலான கலைஞன் விவான் சுந்தரம்.
சமரசமற்ற என்றால் – தன்னை நேருவியனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் விவான் சுந்தரம். ஒரு பக்கம் இந்திராகாந்தி ‘பாரத் பவன்’ போன்ற இந்தியாவின் உலக அளவிலான கலாச்சார மையத்தை தொடங்கும் காலத்திலேயே, அரசின் கொடுங்கோண்மையை (நெருக்கடிகால அரசை) விமர்சித்தவர். அவ்வாறே சீக்கியப் படுகொலைக்கும் மும்பையில் நடந்த இசுலாமியர்கள் மீதான வன்கொடுமைகளுக்கும், பாபர் மசூதி இடிப்பிற்கும், ஈராக் மீது அமெரிக்கா நடத்திய எண்ணெய்க்கான யுத்தம் குறித்தும் என அதிகாரத்திற்கு எதிரான, நசுக்கப்படும் மக்களுக்கான கலையை சர்வதேச படைப்புலகின் காட்சிமொழியில் நிறுவி வந்தவர் சுந்தரம்.
இன்றைக்கு முற்போக்கு என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அநேக படைப்பாளர்களும் எடுக்கின்ற அரசியல் சார்பை தன் வாழ்நாளின் எந்த ஒரு காலத்திலும் எடுத்திராதவர் விவான் சுந்தரம். மேற்குலகின் சிந்தனையால் மட்டுமே இப்படியான அரசியல் சார்பை, தலைவனைத் தொழும் மரபைத் தாண்டி சுயத்தோடும் மக்கள் பக்கமும் நிற்க வைப்பதற்கு விவான் சுந்தரமால் முடிந்திருக்கிறது. அவரது காட்சிமொழியை பல காலங்களில் விமர்சித்தவர்கள், மறைமுகமாகவும் மெல்ல மெல்லவும் அந்த வடிவத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவும் வணிக பலன்களை ஈட்டுபவர்களாகவும் மாறியிருப்பதை கலையுலகில் காண இயலும்.
வழமையாகப் பேசப்படுகின்ற கலை குறித்த அமர்வுகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் சமகாலக் கலை என்பது் நிகழ்காலத்தை மட்டுமே பேசுவதா அல்லாவிடில் தற்காலத்தைப் பொருத்தும் தேவையான ஒன்றின் அவசியத்தைப் பேசுவதா என விவாதித்துக் கொண்டிருக்கையில், விவான் சுந்தரத்தினை அறிதவதன் வாயிலாக அவரது படைப்புகளும் பயணமும் உணர்த்தும் சமகாலக் கலை குறித்த சித்திரமானது இலக்கியத்தின் வாயிலாக இலக்கணத்தைப் புரிந்து கொள்ளும் செவ்வியல் முறைமையாகப் பார்க்கலாம். இவ்விதம்..
விவான் என்பவர்…
விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தைச் சார்ந்த இந்தியாவின் மிக குறிப்பிடத்தக்க முக்கியமான ஓவியர்களில் ஒருவரான அம்ரிதா ஷெர்கில் விவான் சுந்தரத்தின் பெரியம்மா. விவானது தாத்தா உம்ராவ் சிங் ஷெர்கில் தொடக்க காலப் புகைப்படக் கலைஞர். சுந்தரத்தின் மனைவியான கீதா கபூர் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி இந்தியக் கலையின் விமர்சன ஆய்வை முறைமைப்படுத்தி ஒன்றுதிரட்டிய முன்னோடிகளில் ஒருவராகவே அழைக்கப்படும் இவரையும் கணக்கில் கொண்டால் கலைக்குடும்ப வரிசையில் ஐவரும் ஒருவராக அமைகிறார்.
பரோடாவிலும் (G.M.ஷேக் என்றழைக்கப்படும் குலாம் முகம்மது ஷேக்கை இங்குதான் சந்திகிறார்) லண்டனிலும் படித்து வளர்ந்தவர் சுந்தரம். Alain Delon, Nureyev போன்ற ஒரு துள்ளலான இளைஞன் சுந்தரம் என நினைவுகூர்கிறார் ஷேக். பரோடாவிலேயே முதல் வண்டியான Fantabulous–யை சுந்தரம் ஓட்டிச்செல்வதை (1962-ல் வெளியான ராயல் என்ஃபீல்டின் புகழ் பெற்ற மாடல்) பெருமையுடன் விவரிக்கிறார்.
Slade School of Art-ல்(இலண்டன்) இருந்தபோது Ronald Brooks Kitaj-ன் (பிற்காலத்தில் 1984-ல் National Academy of Design-ன் Academician ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்) நட்பைப் பெறுகிறார் சுந்தரம். அவரைத் தனது குரு என ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார்.
அக்காலங்களில் தன்னை இடதுசாரி அமைப்பில் ஈடுபடுத்திக்கொண்டு பாரீஸையும் இலண்டனையும் உலுக்கிய 1968-69 மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறையிலும் இருந்தார். Slade-ல் இருந்தபோது 1960-களில் ஓர் ஆண்டு முழுவதும் நேச நாடுகளாலும் அச்சு நாடுகளாலும் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களையும் இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்ட பிற படங்களையும் பார்த்த சுந்தரம் அதில் திணறிப் போகிறார். ஏனெனில் இந்தியாவில் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவின் ஈடுபாடு பற்றிய பண்பாட்டு நினைவுகள் குறைவாகவே உள்ள அதே வேளையில் ஐரோப்பியர்கள் வெறிகொண்டு அதனுடனேயே வாழ்வதை நன்கு உணர்கிறார். ஸ்லேடில் அவர் பார்த்த பலவற்றை உள்வாங்கிக் கொண்டார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஆஷ்விட்ஸுக்குச் செல்லும்போது, வதை முகாம்களின் விடுதலையைப் பற்றிய ஆலன் ரெஸ்னாய்ஸின் NIGHT AND FOG (1956) ஆவணப்படத்தின் மீள்நினைவுகளைக் காண சுந்தரத்தால் முடிகிறது. அந்தப் படங்களைப் பார்த்ததில் அவருக்கு முழு உலகையும் திறந்து காட்டியது போல் உணர்கிறார். அவர் மீண்டும் ஓவியம் வரைவதற்குத் திரும்பிய போது அவற்றுள் சில திரைத் தாக்கங்களாய் எஞ்சியிருந்தன. அதற்கெல்லாம் மேலாக ஓவியமும் கூட.
சுந்தரத்தின் தொடக்ககாலப் படைப்புகள் மக்கள் கலைவடிவிலும் 1960-களின் பிற்பகுதியில் எதிர்பண்பாட்டு அரசியல் பேசுவதன் தாக்கத்தின் கீழும் உருவாக்கப்பட்டன. எழுபதுகளில் அரூப ஓவியங்களின் ஆதிக்கம் நிறைந்த இந்தியக் கலை ஓவியங்களுக்குள் உருவ ஓவியத்தை கருத்துருவமாகக் கொண்டுவந்த கலைஞர்களின் வரிசையில் அவர் தனித்து வெளிப்பட்டார். 1972-இல் சிலி கவிஞர் பாப்லோ நெருடாவின் மச்சு பிச்சுவின் உயரங்கள் (THE HEIGHTS OF MACCHU PICCHU) (1947) என்ற தொகுப்பின் பெயரில் ஒரு தொடரை உருவாக்கினார்.
இந்தியா திரும்பிய பின் ஓவியங்கள் அதிக பார்வையாளர்களை அடையச் செய்யும் வகையில் 1973-ல் பரோடாவில் ஒரு கிராஃபிக் பட்டறையை நடத்தும் யோசனையை ஆர்வத்துடன் முன்வைத்து பல்வேறு இடங்களில் அக்கண்காட்சியை ஏதோ கட்டளைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தவர் போல சுந்தரம் நிகழ்த்துகிறார்.
1974 காலகட்டத்தில் கலைஞர்கள் தீவுகளைப் போலத் தனித்திருந்தனர். அவர்களை ஒன்று சேர்க்கும் விதமாக ஒரு கூட்டுக் கண்காட்சியை முன்மொழிந்தார். பத்து கலைஞர்கள் ஒன்றுகூடினர். ஒரு சர்வாதிகாரியின் பேயுருவைப் போல இந்திராகாந்தியின் உயர்ந்து நிற்கும் உருவப்படம் ஒன்றைக் காட்சிப்படுத்தினார். அவ்வமையம் பெரும் சலசலப்பை உண்டாக்கியது அது. அதன் பிறகு வந்த நாட்களில்தான் பூபேன் காகர், குலாம் முகமது ஷேக், ஜோகென் சொளத்ரி, சுதிர் பட்வர்தன், நளினி மலானி, கிவ் படேல் அவர்களோடு சுந்தரமும் இணைந்து 1978-ல் “டிரைனாலேவை நிராகரித்த அறுவர்” என்ற ஒரு கண்காட்சியை நடத்தினார். பிறகு Triennale (டெல்லியில் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சமகால கலை-ஓவிய சர்வதேச கண்காட்சி)-விற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டார். லலித் கலா அகாடமிக்கு எதிராக இந்தியக் கலைஞர்கள் சமூகம் கிளர்ந்தெழுந்தபோது அப்போராட்டத்திலும் ஈடுபட்டார்.
பரோடா, டெல்லியில் எண்ணற்ற நாட்கள் ஈடுபட்ட ஆழமான தொடர் உரையாடல்களில் சில சமயம் கலையில் அரசியலின் பங்கு பற்றியும் அரசியல் சார்பற்றிருப்பதும்கூட ஒரு அரசியல் செயல்பாடுதான் என்றும்கூட விவாதித்து கனவு திட்டமென ‘Place for People’ என்ற ஒரு கண்காட்சிக்கான அறிவிப்பை 1979-ல் வெளியிடுகிறார். இந்நாட்களில்தான் கீதா கபூரின் கலை பற்றிய கட்டுரைகள் அதிகமாக எழுதப்பட்டன.
Installation படைப்புகள் உருவாக்கத் தொடங்குவதற்கு முன்பு கூட்டுத் தயாரிப்புகளில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். 1976-ல் இமாச்சலப் பிரதேசத்தில் கசௌலி கலை மையத்தில் (The Kasauli Art Centre) பட்டறைகள் நிறுவ உதவியதைக் குறிப்பிடலாம். இவ்வமைப்பு 1991 வரை இயங்கியது. அடுத்து 1988-ல் JOURNEYS என்றழைக்கப்படும் மென்வண்ணத் (pastel) தொடரை உருவாக்கினார்.
முதலில் LONG NIGHT (1988) என்ற Charcoal ஓவியங்கள் ஆஸ்ட்விச்சின் பெரிய சிதிலமடைந்த பெரிய சிமெண்ட் தூண்களையும் குத்திக்கிழிக்கும் முள்கம்பிகளையும் குறிப்பது. இவரது Installation பணியின் முதல் எடுத்துக்காட்டாக ENGINE OIL என்கின்ற தொடர் (1991) எண்ணெய் வளங்களைக் கட்டுப்படுத்துவதற்காக ஈராக் மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகளின் வளைகுடாப் போரின் வான்வழித் தாக்குதலைக் குறிப்பிட்டுக் காட்டும் மையையும் எஞ்சின் ஆயிலையும் கொண்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பிறகு வண்ணங்களிலும் ஓவியங்களிலுமிருந்தும் சடாரென விடுவித்துக்கொண்டு மரபுத்தொடர்ச்சியை, தனது வரலாற்றை வாழ்விற்கு மிக அணுக்கமான ஆவணங்களைக் கொண்டு உருவாக்கப்பட Installation முறையில் சுந்தரத்தின் தாத்தா உம்ராவ் சிங் ஷெர்-கில்லின் டிஜிட்டலில் மறு உருவாக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களால் மிக முக்கியமானதாக உருமாறினார். தனிப்பட்ட நினைவலைகளை நிகழ்கால, கடந்த காலத்தின் உரையாடல்களாகக் கற்பனை செய்து பார்ப்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கின்ற ஒன்று. அதைச் செயல்படுத்தலில் காட்டியவர் சுந்தரம். ஷெர்-கில் குடும்பக்காப்பக புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்ட கருப்பு மற்றும் வெள்ளை டிஜிட்டல் போட்டோ மாண்டேஜ்களின் வரிசையே Re-take of ‘Amrita’. இது Victoria Memorial, Calcutta-ல் காட்சிப்படுத்தப்பட்டது.
அடுத்தது 1995-ல் நடைபெற்ற The Sher-Gil Archive, Memorial (1993, 2014) பம்பாயில் வகுப்புவாத வன்முறைக்கு ஆளான மக்களுக்காக அவரது கொந்தளிப்பான மனநிலையில் உருவாக்கப்பட்டது.
2011-ல் நடைபெற்ற GAGAWAKA: Making Strange என்ற நிகழ்வில் ஃபேஷன் துறையை எவ்வளவு கிண்டலடிக்க முடியுமோ அவ்வளவு அடித்திருப்பார். அதீத ஆர்வத்துடனான கலையாக்கங்களை உருவாக்கிய சுந்தரத்தின் ஒவ்வொரு படைப்பும் சமகால இந்தியக்கலை அவர்காலத்தில் வெகு புதிதாகவே இருந்ததில் ஆச்சரியமில்லை.
வெளிநாடுகளுக்குப் பயணம் சென்று சுந்தரம் தான் உணர்ந்ததாகக் கருதிப் பேசிய சில விஷயங்களை, சமூகச் செயற்பாட்டாளர்களும் ஆள்பவர்களும் கலைஞர்களும் செவிமெடுக்க வேண்டிய ஒன்றாகப் படுகிறது. பிறநாட்டுக் கலைஞர்களுடான நட்பும் அவர்களது நாடுகளின் அரசியலில் வேரூன்றியிருக்கும் புதுமையான கருத்துக்களும் அவர்களது வெளிப்பாட்டு முறைகளுக்கும் நமது மனம் திறந்திருக்க வேண்டும் என்றும்(குறிப்பாக – இலண்டன், கியூபா) சமகாலத்தின் சிந்தனையானது உலகின் மூலை முடுக்குகளிலிருந்து பெறப்படும் அனைத்திலிருந்தும் உட்கிரகிப்பதே ஒவ்வொரு கலைஞனின் கடமை என்கிறார். முற்போக்கு இயக்கமாகக் கலையுலகத்தை வளர்த்தெடுக்க விரும்பும் இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் விவான் சுந்தரத்தின் வாழ்க்கை ஒரு முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.
***
வேதநாயக் – “தேவதா உன் கோப்பை வழிகிறது” கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். யாவரும் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கும் இவர் ஓவியங்கள் மீது மிகவும் ஈடுபாடு கொண்டிருப்பவர். எந்த அரசியல் சார்புமற்ற கலையைப் பேசுவதே தனது நோக்கமாகக் கொண்டிருப்பவர். தற்போது திருவண்ணாமலையில் வசித்து வருகிறார். மின்னஞ்சல்: மின்னஞ்சல்: editorialmagazines@gmail.com
“நாம இதப் பத்தி பேசணும்” – ஒவ்வொரு முறையும் இந்த நான்கு வார்த்தைகள் இட்டுச்செல்லும் திசையில் சிக்கலாக்கப்படப்போகும் ஏதோவொரு புதிருக்கு ஆயத்தமாகவேண்டும். “எப்படி ஒங்களால ரெண்டு பேர கேரி பண்ண முடியுது.. இதுல எதாச்சும் ஒன்னு பொய்யாதான இருக்கமுடியும்..” என்பதிலோ, “இவ்வளோ டிஸர்விங் பர்ஸனா நா.. சீரியஸ்லி எனக்கே தெரியல.. அதுவும் இந்த வாரம்.. எதோ ரொம்ப ஐ ஃபீல் லைக்.. என்ன யாராலயும் இந்த அளவுக்கு லவ் பண்ணமுடியுமாங்குற மாரி.. (சற்று நிறுத்தி..) பட் அவங்ககூட இந்த வாரத்துல ஹாவ் யு பீன் இண்ட்டிமேட்.. ஹோப் யு கெட் இட்.. செக்ஸ் ஐ மீன்..” என்பதிலோ, “லவ் மேரேஜ் பண்ணியும் மென் வுட் சீக் சம்திங் அவுட்சைட் ல்ல.. எனக்கு இந்த மேரேஜ் சிஸ்டம் மேல இருக்க பிலீஃபே போயிடும் போல..” என்பதிலோ ஆண்களின் பொது மனவோட்டத்தைக் குழப்பத்துடன் பார்ப்பாளேயொழிய என்னைக் குறிப்பிட்டு குற்றஞ்சாட்டும் சுவடே இருக்காது.
என்னுடைய இயல்பிற்கு சிறு காயங்கள்கூட உகந்தவையல்ல; அசலைப் பெருக்கியுணர்ந்து வேறெங்கோ கொண்டுபோய் நிறுத்தி எந்தவொரு தருணத்தையும் பாழ்செய்யக்கூடியவன். கூடுமானவரை மிக லேசான மனிதனாக முன்னிறுத்துவதே மென்மையாகக் கோபப்பட வராதவன் என்பதால்தான் – முரண்போக்கு தலையெடுத்துவிட்டால் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு தணியவே முடியாத முசுட்டுகுணம்; காயப்படுத்தியவரை அக்கணத்தில் எழவே முடியாத அளவுக்கு வீழ்த்தவேண்டும். பட்டுக் கருகியிருக்கும் புதர்ச்செடியை தீக்குச்சியால் அவள் நிமிண்டிப்பார்க்கும் ஒவ்வொரு முறையும் இயன்றவரை எச்சிலை விழுங்கிக்கொண்டு, அவளால் தாங்கவே முடியாத தணலை மிகுந்த உளைச்சலுடன் மறைத்து வைக்கவே முயன்றிருக்கிறேன். மீறி வெடித்து சின்னாபின்னமாகும் ஒவ்வொரு தருணத்திலும் வாழ்க்கை இந்த திசையில் ஏன் திரும்பியதென யோசிக்காமலிருந்ததில்லை.
வெளுத்த எண்ணெய் பிசுக்கான சருமத்தையும் செம்பருக்கள் அடர்ந்த ஒடுங்கிய கன்னத்தையும் ஆபரணமற்ற ஒப்பனையையும் இறுக்கி இழுத்துப்போடப்பட்ட குதிரைவாலால் ஏறிய நெற்றியையும் தாண்டி ஈர்க்கப் போதுமான ஏதோவொன்று அந்த முகத்தில் மிச்சமிருந்திருக்கிறது. துறைரீதியில் மட்டுமல்லாது பொது விஷயங்களிலும் கெட்டிக்காரியாகத் தெரிந்ததும் ஒரு காரணம். முகக்கவர்ச்சி குறித்த தற்செருக்கும் நிறையவே உண்டென பேச ஆரம்பித்த நாட்களில் தெரிந்தது. ஆண்களை பலவீனமானவர்களென வரையறுக்கும் எண்ணங்களுக்கு இடமளிக்கக்கூடாதென்ற விழிப்போ என்னவோ.. அவளுடைய சாதாரண உரையாடல்களைக்கூட நீளவிடாமல் வெட்டிக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும், பயிற்சிக்காக வருபவர்களின் தயக்கத்தைக் களைந்து சகஜமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவனென்ற முகவரி கொண்டவன். இப்படி சமநிலை சலனப்படுவதைப் பொறுக்கமாட்டாமல் அவளை ஒரு சராசரி என மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ளவும் அதை அப்படியே நம்பவும் அதிகம் விரும்பினேன். வரையறுத்துச் சொன்னால், பலவீனப்பட்டுவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
“ஸ்டில் என்னால நம்பமுடியாத விஷயம் எதுன்னா.. நீங்க என் பெர்டேக்கு விஷ் பண்ணதுதான்.. நியூ யூனிட்னு யாருக்குமே சொல்லல.. ஈவன் புது சல்வார் கூட இல்ல.. எப்டி தெரிஞ்சுது ஒங்களுக்கு?”, நிறுத்தமாட்டாள். “அண்ட் மோரோவர், நீங்க இதையெல்லாம் மைண்ட் பண்ற பெர்ஸன்னு நெனைச்சதேயில்ல..” இம்மாதிரியான பின்னொட்டுகளில் ‘என்னை’ அடிக்கோடிட்டபடியே இருப்பாள். நெருக்கமான பின்னர் இப்படியான ஏதோவொரு கேள்வியில் மீளும் முந்தைய அலைவு எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அன்றிரவு ஓர் உணவுக்கூடுகை ஏற்பாடாகியிருந்தது – அணியின் இறுக்கம் தளரும் இடங்களில் முக்கியமானது. அணித்தலைவர் அவளுடைய இடது மணிக்கட்டில் பதியப்பட்டிருந்த R என்ற பச்சைக்குத்தலை விசாரித்தார். தன்னுடைய தந்தை பெயரென்று சொன்னவளிடம் அதுவரையிலிருந்த பொலிவு ஒரு மாற்று இருண்டதை நான் குறிப்பிட்டுக் கவனித்தவரை சரி. நிறுத்தாமல், அப்பெயரை அறிய அலுவலக அறையிலிருந்து அவளுடைய விண்ணப்ப படிவத்தை ஏன் தேடியெடுத்தேன் என்பதோ அதில் கண்ணில்பட்ட பிறந்ததினத்தை ஏன் நினைவில் நிறுத்தினேன் என்பதோ பணியிடத்தில் வாழ்த்துச் சொல்லாமல் ஏன் மாலை அலைபேசியில் சொன்னேன் என்பதோ அந்நாளின் புரிதலுக்கு மிக தொலைவிலிருந்தன.
இருபத்திநான்கு வயதிலிருந்தவளுக்கு தன்னைவிட பதினோரு வயது முதிர்ந்தவனிடம் உண்டானது எதிர்பாலினக் கவர்ச்சியென சொல்வதைவிட முட்டாள்தனம் ஏதுமிருக்க முடியாது. வயதுக்கு மீறிய பக்குவம் நிறைந்தவள் என்பதால்தான் என்னோடு அவளுக்கு அலைவரிசை பொருந்திப்போயிருக்க வேண்டும். அரும்புக்காலத்தில் நிகழக்கூடிய பட்டாம்பூச்சித் தருணங்கள்கூட என்னிடமிருந்து சாத்தியப்பட்டிருக்காது. என் இருபதுகளில்கூட அப்பருவத்திற்கான கொண்டாட்டங்களுடன் இருந்தவனில்லை. இவளுக்காகவும் பிரத்யேகப் பிரயத்தனங்கள் எதுவும் செய்யவில்லை; செய்யவரவில்லை என்று சொல்வதே சரி. இரண்டாண்டுகளுக்குப் பிறகும் இந்த உறுத்தல் வெவ்வேறு விஷயங்களில் வெளிப்படும். என்னுடைய இயல்பே அவளுக்குப் போதுமானதாக இருந்தாலும் ‘தனக்காக’ என்ற எளிய எதிர்பார்ப்பு பொய்ப்பதை அவ்வப்போது கொட்டித்தீர்த்துவிடுவாள். “ஒங்களோட ருட்டீன்ல நா அப்படியே வந்து அட்டாச் ஆயிருக்கேன்.. ஜஸ்ட் அவ்ளதான்.. எனக்குன்னு நீங்க எதுமே மாத்திக்கிட்டதில்ல.. நாட் ஈவன் ய பிட்.. எல்லாமே ஒங்க கம்ஃபட்ட பேஸ் பண்ணிதான்..”. வினாடிகளுக்கேனும் சுள்ளென்றிருக்கும்.
ஆனால் எனக்காக தன்னை நிறையவே மாற்றிக்கொண்டிருக்கிறாள் என்றுதான் நம்புகிறேன். முக்கியமாக தன்மதிப்பை விட்டுக்கொடுத்திருக்கிறாள். “அஜய்கூட எனக்கு பிரேக்கப் ஆனதே அவனுக்கு இன்னொரு பொண்ணுமேல இண்ட்ரெஸ்ட் இருந்துச்சுன்னுதான்.. பட் இப்போ.. ரியலி ஐ டோன்னோ வாட் ஐயம் டூயிங்.. ஆல்ரெடி கல்யாணம் ஆன ஒருத்தர்கூட.. ஜீஸஸ்..” ஒவ்வொரு முறையும் வார்த்தைகள் இவ்விடத்தில் தழுதழுக்கும். அமைதியாக இருப்பதைத் தாண்டி, தேற்ற ஏதுமற்று நிற்பேன். முந்தைய உறவின் மிச்சமாக கடுமையான உளச்சிதைவைக் கடந்து வந்திருக்கிறாள். “நவ் ஐ ஃபீல் லைக் ய பிட்ச்..” குரல் முழுமையாக உடைந்துவிடும். ‘சாரி’ எனச் சொல்லவேண்டுமாவென இவ்விடத்தில் நிறைய முறை யோசித்திருக்கிறேன்; நா எழாது. மறுமுனையில் மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்கும், “பட் ஒங்களுக்காக செய்யலாம்.. யு ஆர் ஸ்வீட்..” என்னை சமனப்படுத்துகிறாளா அல்லது தனக்குத்தானே நியாயம் சொல்லிக்கொள்கிறாளா?
ஒன்றரை மாத பயிற்சி முடித்து பெங்களூருக்கு திரும்பிய பிறகு அனுப்பியிருந்த “தேங்க் யு சர்.. வில் மிஸ் த டீம் மச்..” என்ற குறுஞ்செய்தி சம்பிரதாயத்திற்கானதல்ல என்றும் ஏனையருக்கு அப்படியெதுவும் அனுப்பவில்லையென்றும் பின்னொரு நாள் – அவளுக்கும் என் மீது ஈர்ப்பு இருந்ததா என்று கேட்டதற்கு – சொன்னாள்; பதில் இதுதான்; இவ்வளவுதான். ‘ஏன் பிடித்தது’ என மேற்கொண்டு நீட்டிக் கேட்கவே அச்சமாக இருந்தது. தோற்றமாக இருக்க வாய்ப்பில்லை – எனக்கே தெரியும். அவளுக்குப் பிடித்த ஆங்கில வலைதொடர் நாயகனைப் போன்றே அணியின் ரவீந்தர் தெரிவதாக ஓரிரு முறை சொல்லியிருக்கிறாள் – தோற்றத்தில் வீழும் சிறியவளில்லை என காட்டிக்கொள்ளக்கூட சொல்லியிருக்கலாம். சந்திப்பொன்றில் இப்படிச் சொன்னாள், “யு எம்பத்தைஸ் வித் பீப்பிள்.. அதுதான் ஒங்கள ஸ்பெஷல் ஆக்குது..” குறுக்கிட்டு “அதுதான் ஒனக்கு புடிச்சுதா என்கிட்ட?” என்றதற்கு, “சொல்லமாட்டேன்..” – வேறெங்கோ பார்த்துக்கொண்டிருப்பவளின் உதட்டில் முறுவல் இருக்கும்.
இப்படித்தான்.. எதையுமே கேட்டு வாங்கிட முடியாது; சின்ன விஷயத்திலும்கூட. ஒவ்வொரு அழைப்பின் முடிவிலும் ‘லவ் யு’ என்று சொல்லும்போது பதிலுக்கு, “யா.. பை” என்பாள். “நீயும் சொன்னா எதாச்சும் கொறஞ்சு போயிடுமா?” என்றால், “சொல்லிட்டே இருந்தா அதுல ஒன்னுமே இல்லேல்ல..” என நிறுத்துவாள். ஆனால் அதே தருக்கம் பதிலீட்டில் செல்லுபடியாகாது. என்றேனும் நான் அப்படி அழைப்பைத் துண்டித்தால், “இப்ப என்ன ப்ரச்சன ஒங்களுக்கு.. எதுக்கு மொட்டையா கட் பண்றீங்க?” – உடனே மீண்டும் அழைத்து கத்துவாள். “என்ன இப்படி ச்சைல்டிஷா போட்டிக்கு போட்டி பண்றீங்க.. எனக்கு நீங்க அத மாத்த வேணாம்.. ஒருமாரி ஃபிக்ஸ் ஆயிடுச்சு அது.. ப்ளீஸ்..” ஏறிய வேகத்திற்கு சட்டென குரல் பணியும்.
நிஜம் அதுதான். எதையும் நான் திருப்பிச் செய்யும்போது அவளால் தாங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை. “என்ன ட்ரை பண்றீங்க இப்ப?.. என்ன மாரி ஒரு பர்ஸன் ரிலேஷன்ஷிப்க்கெல்லாம் லாயக்கில்லன்னு ப்ரொஜக்ட் பண்ணனுமா?” அவளுடைய புரிதலின் அர்த்தத்தில் விமரிசிக்க ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அற்பங்களைப் பெரிதுப்படுத்தாமலிருக்க மெனக்கெடும் என் எத்தனங்களை உயர்த்திக்காட்டவே விளையாட்டாக முயன்றிருப்பேன். “நத்திங் நியூ.. வீட்லயுமே நா அவ்ட்காஸ்ட் தான்.. யாராலுமே என்ன ட்டாலரேட் பண்ணிக்கமுடியாது..” எனும்போது, ‘இல்லை’யென மறுப்பதற்குள், “பட் ப்ளீஸ்.. யு ஆர் நாட் தெம்.. அப்படிதான் நம்புறேன்.. ப்ளீஸ்..” கெஞ்சலும் ததும்பலுமாக பிரச்சனையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுபோயிருப்பாள். “நா ஸில்லியா நடந்துக்கிட்டாலும் ப்ளீஸ் புட் அப் வித் மீ..” ஏன் இது இந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என யோசிப்பதற்குள், “வித்தவுட் எனி ஷேம் ஐயம் பெக்கிங் யு.. என்கூட இருங்க.. ப்ளீஸ்.. என்ன வெறுத்துடாதீங்க..” என்று முடித்திருப்பாள்.
இத்தனை அப்பட்டமாக சார்பை வெளிப்படுத்துமளவிற்கு பலவீனமாவளும் இல்லை. நெருங்கிய உறவிற்குள்ளும் சார்பற்றிருப்பதை அடிப்படைக் கண்ணியமாக நம்புபவள். கணவனின் பணத்தில் இதே பட்டத்திற்காக படித்துக்கொண்டிருக்கும் சக பெண்ணொருத்தியை வியப்புடனே அவளால் அணுக முடிந்திருக்கிறது. “எப்படி முடியுதுன்னே தெரியல சீரியஸ்லி.. அவரு அவள எவ்வளோ ச்சீப்பா பாப்பாரு.. இப்படி விமன்தான் அவங்க மரியாதைய கெடுத்துக்கிறாங்க..”, அவள் சொல்லுவதைப் புரிந்துகொள்ள சிரமப்பட்டிருக்கிறேன். அவளுடைய பெண்ணியக் கோணங்களை அறிவதில் எனக்கு விருப்பம் இருந்திருக்கிறது. பெண்களின் கற்புக்கட்டுப்பெட்டித்தனங்களுக்கு எதிராக புரட்சிப் பேசும் ஆண்களை “இவனுக காஜி அட்வாண்டேஜுக்காகத்தான் இதெல்லாம் பேசுறானுக..” என்பாள், “கவனிச்சு பாருங்க விமன லிபரேட் பண்ற விஷயமெல்லாம் மென்னுக்குதான் நெறைய சாதகமா இருக்கும்.. ப்ரீ மரைட்டல், ஃப்ரெண்ட்ஸ் வித் பெனிஃபிட்ஸ், பொண்ணுங்க குடிச்சா தப்பான்னு கேக்குறது.. எல்லாமே.. ஈவன் இந்த ட்ரெஸ் விஷயம்கூட.. அவனுக்கு வேணும்.. ஆம்பளயால ஆம்பளயா மட்டுந்தான் யோசிக்கமுடியும்..” கேட்டபடி கூசி நெளிந்துகொண்டிருப்பேன். “நாம எதும் தப்பு பண்றோமா?” என ஒவ்வொரு முறை அவள் தடுமாறும்போதும், இல்லையென தேற்றிய தருணங்கள் மனத்தில் குறுக்கிடும்.
“இந்த ரிலேஷன்ஷிப்புக்கு எந்த ஃபியூச்சருமில்லன்னு ரெண்டு பேருக்கும் தெரியும்.. இத ரொம்ப ஹெவியாக்கிக்க வேணாம்ன்னு நெனைக்கிறேன்.. எண்ட் ஆஃப் த டே ஒங்களுக்கு வீட்ல ஒருத்தவங்க இருக்காங்க.. இது இல்லேன்னாலும் யு ஆர் கண்ட்டெண்டட் தான்ல..” எந்த உணர்ச்சியுமில்லாமல் வெறுமையாக இதை அவளால் சொல்லமுடியும், “பட் என் விஷயத்துல அப்படியில்ல.. எப்போவாச்சும் இதுலேந்து நா வெளிய போனா, என்னால அத தாங்க முடியணும்.. ஐ ஷுட் சர்வைவ் தட்.. ஒங்களுக்கு இது புரியுதா தெரியல..” உடல்ரீதியான உறவாக அது நீளாததற்கு அவளுடைய இந்த மனநிலைதான் காரணமென்று நினைத்ததுண்டு. இருவருக்கும் அதிலிருந்த விருப்பம் அவ்வப்போது எட்டிப்பார்த்திடாமலில்லை. பின்னிரவு பேச்சுகள் அந்த விளிம்பைத் தொட்டுத் திரும்பும். ஒவ்வொரு முறையும் அடுத்தநாள் காலையில் தவறாமல் ‘சாரி’ என்று அனுப்பியிருப்பாள்.
இந்த விஷயத்தில் அவளுடைய அந்தந்த சமயத்து மனப்போக்கை ஒத்திசையும் விதத்தில்தான் நடந்துகொண்டிருக்கிறேன்; ‘ஒங்க லைஃப்ல எதுக்கு நான்? யு ஹாவ் எவ்ரிதிங்..’ பலமுறை இதைக் கேட்டிருக்கிறாள். அது உடற்தேவைக்காக அல்ல என்ற பதில் கொடுக்கக்கூடிய தன்மானம் அவளுக்கு ரொம்பவே அவசியம். அதற்காகவோ என்னவோ, எப்போதுமே நானாக நெருக்கமான உரையாடல்களை முன்னெடுக்க முனைந்ததில்லை. சந்திப்பொன்றில் நிகழ்ந்த முத்தத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல அத்தனை சாத்தியங்களும் இருந்தன; செய்யவில்லை. ‘நாம இதப் பத்தி பேசணும்’ என்பதில் இந்த விஷயம் ஒரு நாள் விவாதிக்கப்பட்டது. “ஒங்களுக்கு எல்லாவாட்டியும் நானே கேக்கணும்ல.. ஏன் என்ன இப்படி ப்ரிமிட்டிவா ஃபீல் பண்ண வைக்கிறீங்க?” என்றாள். “இல்ல.. ஒனக்கு இது ரொம்ப ஊண்டிங்கான விஷயமா இருக்கக்கூடாது.. அதுக்காகத்தான்..” என்றதற்கு, “நீங்க கேட்டு நா வேணாம்ன்னு சொன்னா என்ன இப்ப ஒங்களுக்கு.. எங்கிட்ட ஏன் இவ்வளோ ஈகோ பாக்குறீங்க..” என்றாள். “ஸீ.. ஒனக்காக யோசிச்சுதான்..” என்று என் தூய்மைக்கு சவுக்காரம் போடுவதற்குள், “மைரு.. எனக்கான டெஸிஷன நீங்க எடுக்காதீங்க.. என்னோட பிரச்சனய நா யோசிச்சுக்கிறேன்..” பொரிய ஆரம்பித்துவிட்டாள்.
எப்போதேனும் கசப்பு வலுத்து என்னுடைய மறைகுணம் வெளிப்பட்டு ‘பிரேக்கப் பண்ணிக்கலாம்’ என நிறுத்தும்போது இதே வார்த்தையை சொல்லுவாள். “அந்த டெஸிஷன நாதான் எடுக்கணும்.. யு காண்ட்..”. அதன் அர்த்தம் புரிந்ததில்லை; எனக்கு வேண்டாமென்ற முடிவையெடுக்க இவளென்ன தடை சொல்லுவது என்றிருக்கும். “இந்த செப்பரேஷன் என்ன ஒரு டார்க்னஸ்ல விட்டுடும்.. வெளிய வரவே முடியாது.. அதெல்லாம் யோசிக்கவே மாட்டீங்கள்ல.. என்னோட ஒவ்வொரு மூவ்லயும் கொஞ்சமாச்சும் ஒங்களோட ப்ரெஸன்ஸ் இருக்கு..” – நாடக வார்த்தைகளெனப் புறந்தள்ள முடியாதவை; இன்றைய நிலையிலிருந்து யோசித்தாலும் அத்தனை சத்தியமானவை. அவளுடைய சராசரி இயக்கங்களில் மிகச்சிறிய வடிவிலேனும் நான் இருக்கத்தான் செய்தேன். எத்தனை வெறுப்பிலும் விட்டுவிடமுடியாத நேசம் நிச்சயம் மிச்சமிருக்கவே செய்தது.
அவளுக்குத் தன் அன்றாடத்தின் சின்னச்சின்ன நகர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் அதிக விருப்பமிருந்தது. பொறுத்துக் கவனிக்கும் வழக்கம் அதிகம் இல்லாததாலோ என்னவோ, கேட்கும் எந்தவொரு விஷயத்திற்கும் இடையிடையே அதே விஷயத்தையொட்டிய என் நினைவிலிருந்து கடந்தகாலத்தை முன்வைக்க தவிர்க்கவே முடிந்ததில்லை “நடுநடுவுல எதாச்சும் ஒங்க சைட்லேந்து சொல்லிட்டே இருக்கணும்.. ஆல்வேஸ் டாமினண்ட்..” என்று கேலி செய்வாள். இப்படி சொன்ன அடுத்தநாள் எதுவும் குறுக்கிடாமல் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தால், “மை காட்.. நா சொன்னதுக்காகவா? ஹவ் சில்லி ஆர் யூ..” நிறுத்தவே முடியாமல் கலகலவென சிரிப்பாள். அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சமயங்களில் முதிர்ச்சியற்றவனாகத்தான் நடந்துகொண்டிருக்கிறேன். பதினோரு ஆண்டு இடைவெளிக்கான பக்குவத்தை – தவறுகளையும் குறைகளையும் ஏற்கக்கூடியவன் – எப்போதுமே எதிர்பார்ப்பவளாகத்தான் இருந்திருக்கிறாள். நானோ சமவயதினனாக நடந்துகொள்ளவே முயன்றபடி இருந்திருக்கிறேன். வயது வித்தியாசத்தை அருகச்செய்வது என்னை சற்று இலகுவாக்குமென நம்பியிருக்கிறேன். வயதுப் பேதம்தான் தனக்கு விவரிக்கமுடியாதொரு பாதுகாப்புணர்வு கொடுப்பதாக அவள் சொல்லும்போதெல்லாம் துளியேனும் கலவரப்படாமல் இருந்ததில்லை.
சொல்லப்போனால், தேக்கிவைத்து வெடிப்பதை மட்டும்தான் என்னுடைய ஒரே குறையாக பல முறை சொல்லியிருக்கிறாள். “ஆஸ் ய பெர்ஸன், யு ஹாவ் நோ அதர் ஃப்லாஸ்” இந்த உறவிற்குள் இப்படியொரு வார்த்தையா எனப் பார்ப்பேன். “இந்த ரிலேஷன்ஷிப்ப வெச்சு ஒங்கள தப்பு சரின்னு ஜட்ஜ்மெண்ட்டலா சொல்ல எனக்குமே எந்த தகுதியுமில்ல.. பட் அதுலயுமே, வேற யாருமா இருந்தா எதாவது ஒரு பக்கம் நிச்யமா காம்ப்ரமைஸ் பண்ணிருப்பாங்க.. யு ரெஸ்பெக்ட் யுவர் பீப்பிள்.. அண்ட் யு டேக் பெய்ன் ஃபார் தட்.. நானா இருந்தாகூட இப்படி இருந்திருப்பேனான்னு தெரியாது” என்பாள். தன்னுடைய மனிதர்களை மதிப்பவன் என்ற உயரத்தில் வைக்கப்பட்டிருப்பவனால் அந்த நம்பிக்கைக்கு எதிர்முனையில் நிற்கமுடிவதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடிந்ததில்லை. என்னுடைய கோவம் அத்தனை மோசமான முகத்தை எனக்கு அளித்திருக்கும். “நெஜமாவே நீங்க என்ன லவ் பண்றீங்களா?” என்னால் பதிலே சொல்லமுடியாது. அக்கணத்தில் இல்லையென்று சொல்வதுகூட என் புத்திக்கு சாத்தியம். “இல்ல இப்படியொரு பர்ஸனதான் நா லவ் பண்றனா.. சத்யமா ரொம்ப அசிங்கமா இருக்கு..” உடைவுக்கு நடுவேதான் இந்த வார்த்தைகளைக் கேட்கமுடியும். விளக்குவதாக நினைத்து, “நா ரொம்பவே நார்மலா எல்லா விஷயத்தையும் எடுத்துக்குறேங்கறதுக்காக.. வென் இட் கோஸ் பியாண்ட் ய பாயிண்ட்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, “நோ.. ஹெல் நோ..” அழுகையோடே குரலை உயர்த்துவாள், “நீங்க நார்மலா எடுத்துக்கல.. அடக்கி மனசுல வெச்சுக்குறீங்க.. நார்மலா எடுத்துக்கிட்டா சேத்து வெச்சு கத்தமாட்டீங்க..” இத்தனை அழுகையிலும் எப்படி இந்த அலுப்பூட்டும் தர்க்கத்துடன் பேசமுடிகிறது என்று மேலும் கோவம்தான் வரும். “ஆமா.. சரி அப்டியே இருக்கட்டும்.. அதுக்காக ஒன்ன மாத்திக்கப் போறியா..? இல்லேல்ல..” குத்திக் கிழிக்கவேண்டும் என்ற மூர்க்கம் எங்கிருந்தோ வந்துவிடும்.
“ஒங்களால நா அழும்போதுகூட கத்திட்டே இருக்கமுடியும்ல..” ஓரிரு நாட்கள் கழித்து சாவதானமாக கேட்பாள். பதிவுசெய்து வைத்திருக்கும் அழைப்பை அனுப்பி கேட்கச் சொல்லுவாள். கொதிப்பு அடங்கியிருக்கும்போது ஒருவன் இக்கேள்விக்கு சரணடையத்தான் வேண்டும். “கொஞ்சம் ஷாட் டெம்பர்ட்.. மாத்திக்க முடியல..” மாறவேண்டியது நான்தானென ஒப்புக்கொள்வதில் வெட்கமில்லை. உடனே மறுமுனையில் நிறம் மாறும். “ஷாட் டெம்பர்ட் இல்ல.. இல்-டெம்பர்ட்.. வீட்ல அவங்ககிட்டயும் இப்படிதான் பிஹேவ் பண்ணுவீங்களா?” கூண்டிலேயே நிறுத்திவிடுவாள். ஆமாம் / இல்லை என்ற பதிலே சொல்லமுடியாத இப்படியான அநேக கேள்விகள் உண்டு.
அவளுடைய எண்ணங்களை ஒத்திசைத்துத்தான் நான் பேசவேண்டும் என எப்போதுமே எதிர்பார்த்திருக்கிறாள். பிசிறி விலகும் வெளியிருந்தும் நானும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவே விரும்பியிருக்கிறேன். அதற்கான சிறிய விலையாகவே என் நிறுவைகளைப் பிழையாக்கிக்கொண்டிருக்கிறேன். அவள் சரியென்றும் பிழையென்றும் அளவிடுவனவற்றை ஆமோதிக்க கூச்சமேயில்லாமல் அபத்த விளக்கங்களைத் தயாரிப்பது ஒருவிதத்தில் தன்வதைதான். ஏன் அப்படி செய்தேனென விளக்கமுடியவில்லை. அவளால் விரும்பப்படுவனாக இருப்பது எனக்குப் பிடித்திருந்தது, அவ்வளவுதான்; மனத்தளவில் அது எனை உயர நிறுத்தியது.
பெங்களூரில் ஆய்வுக்காக இணைந்த புதிய அணியைப் பற்றி நிறையவே சொல்லுவாள். அவர்கள் எத்தனை சிறந்தவர்கள் என அவள் சொல்லும்போது ஏற்கனவே பரிச்சயமானவர்களைப் பற்றி பேசுவதைப்போல ஆமாம் ஆமாம் என்பேன். அவர்களின் வார்த்தைகளுக்கு மேன்மையான அர்த்தத்தை தருவித்துச் சொல்லி மேலும் மெருகூட்டுவேன். இவையெல்லாம் ஆரம்பத்தில் எல்லோருடனும் அவளுக்கு இணக்கமான போக்கு இருந்த நேரத்தில் நடந்தவை. பின்னாளில் ஒவ்வொருவராக அவள் பார்வைக்கு வெளுக்க ஆரம்பித்தார்கள். அசூயையின்றி அவர்களைச் சபிக்க ஆரம்பித்தேன்; அவர்களின் சராசரி சுயநலப்போக்குகளைக்கூட பூதாகரப்படுத்தி வன்மையாக நான் விமர்சிப்பது அவளுக்கு ஆறுதலளித்தது.
மட்டுமின்றி, ஆய்வறிக்கை தயார் செய்ய வழிகாட்டியாக முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரை நிர்ணயித்திருந்தார்கள். அறவே பொருந்திப்போகவில்லை. “காலாகாலத்துல கல்யாணத்த பண்ணாம அவளோட டிப்பெல்லாம் வந்து எம்மேல எறக்குறா.. எது கேட்டாலும் வெட்டி வெட்டிதா பதில் சொல்றா..“ நாளுக்கு நாள் இருவருக்குமான இறுக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. “அவளுக்கு எப்டியோ நாவொரு கேரிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு தெரிஞ்சிருக்கு.. அந்த காண்டு தெரியுது நல்லா.. நா ஃபோன் யூஸ் பண்ணாலே எரிச்சலாவுறா..” சின்னச்சின்ன சீண்டல்களுக்கும் இவளிடமிருந்து அளவிற்கதிகமான எதிரீடுகள் முளைத்தன. பாராத அப்பெண்ணிடமிருந்து தினந்தோறும் புதிய குறைகளையும் குற்றங்களையும் நான் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. அடுத்த ஆறு மாதம் எப்படி அப்பெண்ணை சமாளித்து அறிக்கையைச் சமர்ப்பிப்பது என்பதைத் தாண்டி எங்களுக்கு பேச எதுவுமே இல்லை என்றளவில்தான் அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் உறைந்திருந்தன. என்னையொரு ஆய்வு மாணவனுக்கான பதற்றத்திலேயே அந்நாளில் வைத்திருந்தேன்.
எப்போதேனும் கொஞ்சம் விடுபடல் வேண்டி, இதைவிட மோசமான சூழலில் மோசமான மனிதனுக்குக் கீழிருந்துதான் என்னுடைய ஆய்வறிக்கையை நிறைவு செய்தேன் என்று அவளைத் தேற்றுவதற்காக சொல்லப்போனால், “ஐயோ.. ஒங்க பழய கதெயெல்லாம் வேணாம்.. இட் டஸின்ட் ஹெல்ப் மீ..” என கத்துவாள். நான் அணுக விரும்பாத விதத்தில் அவள் அப்பிரச்சனையை அணுகினாலும் அதை மறுக்கவோ எதிர்க்கவோ முடியாமலிருப்பதோடு அல்லாமல், அவளை அத்திசையிலேயே உத்வேகப்படுத்த வேண்டியிருந்தது. “ஒனக்கு எதுதாம்ப்பா ஹெல்ப் பண்ணும்?” என விரக்தியுடன் கேட்டால் தயக்கமேயில்லாமல் “அத நீங்கதான் யோசிக்கணும்” என்பாள். சுர்ரென்றிருக்கும். தாக்குப்பிடிக்க முடியாத எல்லையை கிட்டத்தட்ட கடந்திருந்தேன். மாதக் கணக்கில் ஒரே விஷயத்தில் ஏற்படும் ஒரே மாதிரியான பிரச்சனைக்கு – அதையெல்லாம் முழுமையாகக் கடந்து வந்து வாழ்வின் வேறொரு கட்டத்திலிருக்கும் – என்னிடமிருந்து வெவ்வேறு தீர்வுகளையும் ஆறுதலையும் எப்படி எதிர்பார்க்கிறாளென எரிச்சல் மண்டும். தனிப்பட்ட முறையில் தீவிர உளநெருக்கடி. பணியிடத்திலும் அக்கறைக் கோளாறு. சொன்னதற்கு, ‘கொஞ்சம் எனக்கு இதெல்லாம் செட்டில் ஆகுற வரைக்கும் டூ வீக்ஸ் லீவ் எடுங்க’ என்றாள். இந்த உறவிலிருந்து விலகிக்கொள்ளலாமாவென ஒவ்வொரு சிகரெட்டிலும் யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு வினாடி அழுத்தி யோசித்தாலும் அத்தனையும் பூஜ்ஜியமாக தெரிந்தது.
“இதுல எதுமே இல்ல எனக்கு.. ஏதோ ஒனக்காக மட்டும்தான் இத கேரி பண்ணிட்டிருக்கேன்னு தோனுது..” எப்படி இதைச் சொன்னேனெனத் தெரியவில்லை. அவள் வழக்கத்திற்கு மாறாக மெளனித்திருக்க, நிறுத்தாமல் தொடர்ந்தேன், “சுத்தமா ரெஸிப்ரோக்கேஷனே இல்ல இதுல.. எதோ நா மட்டும் கொடுத்துட்டேயிருக்கமாரி இருக்கு.. இவ்வளோ எஃப்பர்ட்ஸ்லாம் எதுக்குன்னு இருக்கு இப்போ..” அவள் விடும் எந்த வார்த்தையையும் பற்றிக்கொண்டு ஏறி நசுக்க தவித்துக்கொண்டிருந்தேன். மாறாக நிலவிய அமைதியில், இங்குமங்குமாக உள்ளிருப்பவற்றைக் கொட்ட ஆரம்பித்தேன். “நடுவுல ரெண்டு நாள் ரொம்ப தலவலின்னு சொன்னேன்.. லீவ் போட முடியாம அத்தன ஸ்ட்ரெஸ்லயும் வேலைக்கு போயிட்டிருந்தேன்.. அதப் பத்தி அக்கறப்பட்டு விசாரிக்கவேணாம்.. ஒனக்கு அது ஈஸியா வராது (நானே ஏன் இன்னும் அவளுக்காகவும் வாதாடுகிறேன் என உள்ளுக்குள் கொந்தளிப்பாக இருந்தது) அட்லீஸ்ட் அன்னிக்காச்சும் ரெண்டு வார்த்த ஸூதிங்கா.. போன எடுத்தா அதே சேம் தீஸிஸ் தீஸிஸ் தீஸிஸ்.. பொலம்பல்.. அதர் எண்ட பத்தி எதுமே யோசிக்கமுடியாதுல்ல ஒன்னால..” என தொடர்ந்தபோது இடைமறித்து, “ரெஸிப்ரோக்கேஷன்னு என்ன மீன் பண்றீங்க..?” என்று அவள் கேட்டதும் பளாரென அறையவேண்டும் போலிருந்தது. வாய்ப்பை விடக்கூடாதென, “ஐ டோண்ட் ஃபீல் பீயிங் லவ்ட்.. ஒரு எழவும் இல்ல அங்கேந்து..” முடிந்தளவிற்கு கசப்புடன் திடமாகவே சொன்னேன். நெடுநேரம் மறுமுனை நிசப்தித்திருந்தது. வாயைப் பொத்திக்கொண்டு அழுவதின் தேம்பலொலி மட்டும் இடையிடையே கேட்டது. பலவீனப்பட விருப்பமின்றி இணைப்பைத் துண்டித்தேன். துண்டிக்க துண்டிக்க மீண்டும் மீண்டும் அழைத்தபடியிருந்தாள். எடுத்தால் அதே அமைதி.. அதே அழுகை..
‘நாம இத பத்தி பேசணும்’ என ஓரிரு நாளில் வந்து நிற்பாளென நினைத்ததற்கு மாறாக அன்றிரவே சற்றே நீண்ட குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள் – ‘ஒங்க ஒருத்தரால மட்டுந்தான் எப்போமே என்ன வெறுக்கமுடியாதுன்னு நெனச்சிட்டிருந்தேன்.. ஃபைனலி அதுமே பொய்யாயிடுச்சு.. ஒங்கள ப்ளேம் பண்ணல.. எதோ ஓவர்கான்ஃபிடன்ஸ்.. நம்ம ரிலேஷன்ஷிப் அப்டியில்லன்னு நெனச்சேன்.. ரொம்ப டேக்கன் ஃபார் க்ராண்டட் மாதிரி பண்ணிட்டேன்.. உள்ளுக்குள்ள இருக்கறத இன்னொருத்தரால ஃபீலே பண்ணமுடியாத அளவுக்குதான் நா பிஹேவ் பண்றேன்.. நீங்க எனக்கு எவ்வளோ இம்ப்பார்ட்டண்ட்ன்னோ ஹவ் மச் ஐ வேல்யூ யுன்னோ சொல்லிப் புரிய வைக்கிறது அசிங்கம்.. ஒங்கள நா ஃபோர்ஸ் பண்ணல.. ஒங்க நெலமைல நா இருந்தா இவ்ளோல்லாம் பொறுத்துப்போக மாட்டேன்தான்.. வேணாம்ன்னு ஒங்களுக்கு தோனுச்சுன்னா கஷ்டப்பட்டெல்லாம் இதுல இருக்கவேணாம்..’ மூன்று நான்கு முறை வாசித்தேன். வாக்குவாதமாக இருந்தால் ‘இப்போதுமே உனக்கு நான் தேவை என்ற புள்ளியில்தான் நீ இதை யோசிக்கிறாய். எனக்கு நீ தேவையானவளாக இருக்கும்படி உன்னை உயர்த்திக்கொள்ள நீ யோசிக்கவேயில்லை’ என்று பேசலாம். சொல்லவில்லையே தவிர மனதிற்குள் அத்தனை வறட்டுத்தனத்துடன் இருந்தேன். பதிலே அனுப்பாமல் விலகிவிடலாமாவென யோசித்தேன். இன்னொரு செய்தி வந்தது, “ஓகேன்னு சொல்லிடுவீங்களோன்னு பயமா இருக்கு.. ப்ளீஸ் ஃபர்கிவ் மீ.. ப்ளீஸ்.. கொஞ்ச நாள் இதேல்லாம் பொறுத்துக்கோங்க.. எனக்கே தெரியிது நா நார்மலா இல்ல.. ஒருமாதிரி இந்த தீஸிஸ் விஷயத்துல ரொம்ப ப்ரீஆக்குப்பைடா இருக்கேன்.. இத முடிச்சடுறேன்.. அதுக்கப்பறம் நா புதுசா எதும் மாத்திக்கிறேன்னு பொய் சொல்லல.. அட்லீஸ்ட் நீங்க எதிர்பாக்குற அந்த மியூச்சுவாலிட்டி வந்துரும்.. ப்ளீஸ் இருங்க..” கனிந்துவிடவில்லையெனினும் ஈரமேயில்லாதவனாக நடந்துகொள்ளமுடியவில்லை.
சுமூகமான பின்னர் ஒரு நாள், “ஒங்களுக்கு அன்னிக்கு அனுப்புன டெக்ஸ்ட்ட திரும்ப வாசிச்சுப் பாத்தேன்.. ச்சும்மா அந்த நேரத்து எமோஷன்லல்லாம் அனுப்பல அத.. தட் இஸ் சோ ட்ரூ.. ஒன்னுமே பண்ணமுடியாது நீங்க இல்லாம என்னால..” என்றாள். இயல்பு நிலையிலிருக்கும்போது இப்படிச் சொன்னது நிறையவே கனத்தது. “நாளிக்கு இன்னொரு பெர்ஸன் என் லைஃப்ல வந்தா.. எனக்கெல்லாம் அது அமையாது.. பட் வந்தா சொல்றேன்.. அவன ஒங்களோட கம்பேர் பண்ணியே ஒட்ட முடியாம போகப்போது.. ஒங்கள கொஞ்சமா வெறுக்க கத்துக்கனும் இனிமே..” சிரித்தாள். “இல்லேன்னா.. அந்த நாயி அஜயவே கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ரெடியாதான் இருப்பான்.. அப்பப்ப டெக்ஸ்ட் போட்டு ஆழம் பாப்பான் இப்பவும்.. அவன்கூடன்னா ஐ கேன் கண்ட்டினியு திஸ் வித் யூ ஆல்வேஸ்.. எந்த கில்ட்டும் இல்லாம.. சம்ஹவ் நீங்க எப்போமே இருக்கணும் எனக்கு..” ஐந்தாரு வினாடிகள் பிடித்தன எனக்கு. மெல்ல நிதானித்து, “பைத்தியம்” என்றேன்.
மீண்டும் இதையே வேறோரு முறையும் சொல்லியபோது, “நீ ஏன் அப்படி சொல்ற.. என்னோட லைஃப்க்குள்ள வரணும்ன்னு சொல்ல வரல ஒனக்கு?” வயதின் தாழ்வெண்ணத்தில்தான் இதைக் கேட்டிருக்கவேண்டும். “கேட்டா நீங்க ஒத்துக்க மாட்டீங்க.. ஐ நோ யுவர் ப்ரையாரிட்டீஸ்..” நிச்சயம் குற்றமாகச் சொல்லவில்லை. “எனக்கு ஆச இல்லாமல்லாம் இல்ல.. ரொம்ப சாதாரண பொண்ணுதான் நா அந்த விஷயத்துல.. பட் எனக்கு எதையும் டெஸ்ட்ராய் பண்ணவேணாம்..”. என்றாவது ஒரு நாள் விலகிச்செல்லப் போகிறவள் என்ற நினைவுக்கு மாறாக, எப்போதுமே அவள் உடனிருக்கவேண்டுமென எனக்குமே அக்கணத்தில் தோன்றியது.
ஆய்வறிக்கை சமர்ப்பித்து எல்லாம் சாதகமாக, திருவனந்தபுரத்தில் பணி கிடைத்தது. புது இடத்தில் தன்னைப் பொருத்திக்கொள்ளும் அழுத்தத்தை சீக்கிரமே கடந்துவிட்டாள். “திரும்ப பொலம்ப ஆரம்பிக்கப்போறான்னு பயந்துட்டீங்களா? பொலம்பறதுக்கு இங்க எவனாச்சும் மல்லுவ புடிச்சுக்கிறேன்.. பயப்படாதீங்க..” என்றதற்கு, “அதச்செய் மொதல்ல.. சத்யமா இன்னொருவட்டில்லாம் முடியாது..” என்றேன். “ச்ச.. கொஞ்சம்கூட பொஸஸ்ஸிவா பேச மாட்டீங்க.. அப்பாடான்னு சொல்றீங்க..” கோவிப்பதைப் போல சொன்னாள். “நீ என்ன பொலம்பதானப் போற.. அதத்தாண்டி போமாட்ட.. தெரியும் எனக்கு..” என்றேன். “ஓவர் கான்ஃபிடன்ஸ் இதெல்லாம்.. இதுக்குன்னே சீக்கிரம் ஒரு பையன புடிக்கிறேன் இருங்க.. ஒரு தமிழ் பையன் இருக்கான்.. பாத்துட்டே இருங்க”
விளையாட்டாக குறிப்பிட்ட அந்த தமிழ்ப் பையனைப் பற்றித்தான் பின்னாட்களில் அதிகம் பேச ஆரம்பித்தாள். சில நாட்களில் அவனைப் பற்றி பேசுவதை அப்பட்டமாக நிறுத்தினாள் – அதுதான் விநோதமாக இருந்தது. மனத்தொந்தரவில் சிறிய பிசிறுகளும்கூட தனித்துத் தெரிய ஆரம்பித்தன. இயல்பாக இருக்க சிரமப்படுவளாகத் தெரிந்தாள். நிறுத்தி யோசித்தால், விலகிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டதோவெனத் தோன்றியது. தடுமாறுவதைப் பார்க்க பரிதாபமாகக்கூட இருந்தது. “நீ எதாச்சும் என்கிட்ட சொல்லனுமா?” கேட்டுவிட்டேன். “என்ன சொல்லனும்.. ஒன்னு இல்லயே பேபி..” அந்த பேபி ரொம்பவே செயற்கையாகப்பட்டது. சந்தேகப்பட்டு விசாரிக்கும் தோற்றத்தையெடுத்துக்கொள்ள தயாராக இருக்கவில்லை; ஏதோ மழுப்பி பேச்சை முடித்துக்கொண்டேன். அதேநேரம், அன்றாடப் பேச்சை நானாக தொடங்குவதை நிறுத்தவேண்டுமென முடிவு செய்துகொண்டதோடு, நிறைவேற்றவும் செய்தேன். இரு வாரங்களாகியும் அவளுக்கு அது அந்நியமாகப்படவில்லை என்பதே போதிய பதிலைச் சொல்லுவதாகத் தெரிந்தது.
“எக்ஸ்ப்ளைன் பண்ற கஷ்டமெல்லாம் ஒனக்கு வேணாம்.. எனக்கே புரியுது.. ஐ வில் மூவ் ஸ்லோலி.. அண்ட் இதுல ஒன்ன எதுமே ஜட்ஜ் பண்ணமாட்டேன்.. ஃபீல் ஃப்ரீ..” என்று அனுப்பினேன். பின்னிரவு இரண்டரை மணி. குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டாள். ஏதோ தட்டச்சு ஆகி மீண்டும் அழிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தது. சட்டென எதுவுமே பதில் வராமல் ஓய்ந்தும்விட்டது. ‘என்ன?’ என்று நான் அனுப்பிய செய்தி ஒற்றை டிக்குடன் நின்றது. இம்மியும் தூக்கம் வரவில்லை.
“எனக்கே என்ன பத்தி ஒங்க அளவுக்கு தெரியாது.. எப்டியும் நீங்க கேட்ருவீங்கன்னு ஐ வாஸ் ஃபியரிங் த மொமண்ட்.. ஸ்டில்.. நீங்களே கேட்டுட்டா பெட்டர்ன்னுதான் வேண்டிட்டு இருந்தேன்.. பட் சத்யமா நீங்க கேக்குற மாதிரி இல்ல.. ப்ளீஸ் மூவ் பண்றேன்னுல்லாம் எப்பயுமே சொல்லாதீங்க.. கண்டிப்பா இந்த ஃபியூ வீக்ஸ் நா முன்ன மாதிரி ஒங்கக்கிட்ட இல்ல.. பட் இதெல்லாம் புரியாத ஆள் கெடையாது நீங்க.. புது ரிலேஷன்ஷிப்போட யர்லி டேஸ்ல இருக்க ச்சின்ன ஹை தான்.. சீக்கிரமே அதெல்லாம் போயிடும்.. நாம எப்பவும்போலத்தான் இருப்போம்..” மறுநாள் காலை பேசும்போது படபடவென ஆரம்பித்தாள். எங்கோவொரு மூலையில் என் அனுமானத்தை மறுப்பாளென அசட்டுத்தனமாக நம்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும் – ‘நாம் பிரியப்போவதில்லை’ என்ற தேற்றலையுமேகூட தோற்றுப்போன மனநிலையில்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களுக்குள் இருப்பதாகச் சொல்லும் அந்த ‘ச்சின்ன ஹை’ முன்பு எங்களுக்குள் இருந்ததாவென யோசித்தேன். இனி அவர்களோடும் அவனோடும் எங்களையும் என்னையும் ஒப்பிட்டுக்கொண்டே இருக்கப்போகிறேனென நினைத்துக்கொண்டிருக்கும்போதே, “அண்ட் என்னால ஒவ்வொரு மொமண்ட்லயும் அவன ஒங்களோட ரிலேட் பண்ணாம இருக்கமுடியல.. யு ஹாவ் செட் சம் ஸ்டாண்டட்..” அழுகையும் சிரிப்புமாகச் சொன்னாள். “ஹீ இஸ் ய வெரி ஆடினரி கை.. அவனால..” என்று அவள் தொடர நினைத்த இடத்தில் வெட்டினேன். “வேணாம்.. ஃபார் காட் சேக்..” அவள் அமைதியானாள். “மத்தவங்க எல்லார பத்தியும் சொல்ற மாதிரி அந்தப் பையன பத்தியும் என்கிட்ட ஷேர் பண்ணவேணாம்.. நா எதாச்சும் சொன்னா நிச்சயமா அதுல பயஸ் இருக்கும்.. சோ ப்ளீஸ்..” புரிந்துகொண்டாள். “இட் மஸ்ட் பீ ய ஹெல் ஃபார் யூ..” தவிப்பவளை நான்தான் இதற்கும் தேற்றவேண்டும். “பட் ப்ளீஸ் ஸ்டே.. வீ வில் பீ ஓகே சூனர்..” தீர்க்கமாகச் சொன்னாள்.
பின்னாளில் அன்றாடங்களைப் பகிர்வது அவளுக்குச் சுலபமாக இல்லை. முன்புபோல அத்தனையையும் கொட்டமுடியவில்லை. எதை விடுத்துப் பேசுவது என்பதில் வெளிப்படையாகத் தடுமாறினாள். “ஒங்களால எப்படி அது முடிஞ்சுது.. அவங்கள பத்தி எதுமே கொண்டுவரமாட்டீங்க என்கிட்ட.. நானே எதாச்சும் கிளறிதான் ஹர்ட் ஆயிப்பேன் அப்பப்போ.. பட் நீங்களா ஒரு ச்சின்ன இது கூட சொல்லமாட்டீங்க.. ரியலி ஐ யம் ஸ்ட்ரக்லிங் ஆன் தட்..” இதற்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. “மே பீ கொஞ்ச நாள்ல என்னாலயும் இத ஹாண்டில் பண்ண முடியும்ன்னு நெனைக்கிறேன்..” அவளே முடித்துவிட்டாள்.
அவள் நம்பியதற்கு மாறாக நாளுக்கு நாள் தணிக்கைகள் அதிகம் அவசியப்பட்டபடி இருந்ததாலோ என்னவோ.. என்னோடு அவளால் ஐந்து நிமிடங்களுக்குமேல் பேசவே முடியவில்லை. தேய்வை அதன் போக்கிலேயே அனுசரிக்க முயன்றேன். இட்டு நிரப்ப அவளும் முயன்றபடி இருந்தாள். நமக்குள் எதுவும் மாறப்போவதில்லை என அடிக்கடி உறுதி சொன்னாள். அவளுக்கே நினைவூட்டிக்கொள்ளத்தான் அப்படிச் சொல்கிறாளெனப் பட்டது.
எப்போதேனும் பொதுவான விஷயங்களைக் கொண்டு உரையாடலை நீட்டிக்கவும் முடிந்தது. அப்படி நீளும் நாட்களில் எதையோ நிகழ்த்திவிட்ட திருப்தி அவளிடம் தெரிந்தது. ஏன் இத்தனை போராடுகிறாள் என்றிருக்கும். துயர நாட்களில் பயன்படுத்திக்கொண்டு இப்போது விலகிவிட்டாளென நினைத்துவிடுவேனென அஞ்சுகிறாளா? அப்படி நினைத்தாலும்தான் என்ன.. விட்டொழித்துவிட்டு குழப்பமின்றி வாழலாம்தானே.. கொஞ்சம் குற்றவுணர்ச்சியுடன் இருந்தால்தான் என்ன கெட்டுவிடப் போகிறது? இக்கேள்விகளையெல்லாம் கொண்டு அவளை அதிகமாகத்தான் நேசிக்க முடிந்தது.
ஓரிரவு பேச்சு எங்களின் தொடக்கநாட்களை மையமிட்டது. அம்முகம் அப்போது எப்படியிருந்தது என்பதையே நான் மறந்துவிட்டேன். இரண்டு ஆண்டுகளில் எப்படியெப்படியோ மாறிவிட்டாள் – தாடை சற்று அகண்டு.. வேறு மாதிரி. அணியில் எல்லாருமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்பினாள் – முன்பு பார்த்திடாத படம். சிவப்புநிற மேக்ஸியில் அப்புகைப்படத்தில் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதாக நிற்கிறாள். அந்தக் கண்களில் வாஞ்சை தெரிவதைக் குறிப்பிட்டேன். அதற்காகத்தான் இத்தனை நாளும் காட்டியதில்லையெனச் சிரித்தாள். அவளைப் பார்க்கவில்லையேயொழிய அதே பூரிப்புடன்தான் நானும் அப்படத்தில் நிற்கிறேன். அங்கிருந்து எங்கெங்கோ வந்துவிட்டோம் என்றேன். “என்ன உயிரோட புடிச்சு வெச்சிருக்கீங்க..” என்றாள். அவள் அடிக்கடி சொல்லுவதுதான் என்றாலும் ஒவ்வொரு முறையும் பொருட்படுத்திச் சொல்லுவதைப் போலத்தான் இருக்கும். “கிஸ்ஸஸ்” என்று அனுப்பினேன். முறுவலைப் பதிலாக அனுப்பினாள். பேச்சை இன்னும் நெருக்கினேன். இப்போதைய புதிய சூழலில் அவளே ஆரம்பிப்பது சிரமம். நானே தொடர்ந்தேன். மறுத்தாலும் ஒன்றும் கெட்டுவிடப்போவதில்லை என்று நினைப்பதற்குள், “வேணாம்..” என்று அனுப்பியிருந்தாள். தயாராக இருந்தாலுமே உள்ளுக்குள் அடைத்தது. “பரவால்ல..” என தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போதே, “எனக்கு அவன ஏமாத்துற மாதிரி இருக்கு..” என்ற செய்தி வந்தது. மேற்கொண்டு எதுவுமே அவ்விரவு பேசிக்கொள்ளவில்லை.
“ஐ நோ தட் வாஸ் ஹார்ஷ்.. பட் எனக்கு வேற என்ன சொல்றதுன்னு..”என ஆரம்பித்து அவள் அனுப்பியிருந்த நீண்ட செய்தியை வாசிக்காமல் உடனடியாக அழித்தேன். “நீ எதும்மே எக்ஸ்ப்ளைன் பண்ணவேணாம்.. ஒரு மாசத்துக்கு முன்னவே நா விலகிக்கிறேன்னு சொன்னேன்ல.. ஒனக்கு அவன் ஓகேவான்னு அஸஸ் பண்ற டைம் வரைக்கும் இத கண்டினியூ பண்ணனும்ன்னு தோனுச்சா?” அனுப்பிவிட்டு பார்க்கும் அவகாசம்வரை பொறுத்திருந்து நானே அழித்தேன். “ப்ளீஸ்.. என்ன ஆச்சு இப்ப..” மன்றாடும் குரலில் இச்செய்தியை யூகிக்கமுடியவில்லை. அலட்சியக் குரலே பொருந்தியது. “இப்ப பேசும்போதெல்லாம் அவன ச்சீட் பண்ற மாதிரி இல்லயா ஒனக்கு? நா க்ளோஸா வந்தா மட்டும் ஆக்வடா இருக்குன்னா.. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுதா? யு ஜஸ்ட் வாண்ட் மீ பை யுவர் சைட்.. பக்கத்துல இருக்கனும்.. கொட்றதுக்கு ஒரு வெண்ட்.. அவ்வளோதான்.. புரியுதா ரெஸிப்ரகேஷனே இல்லன்னு ஏன் சொன்னேன்னு.. இதுல என்னத்த நா ஃபீல் பண்ணமுடியும்.. மியர் சப்போர்ட்.. இந்த ஏஜ் டிஃபரன்ஸ்ல யு காண்ட் ஃபைண்ட் எனித்திங் பெட்டர் வித் மீ..” பொரிந்து அனுப்பினேன். துண்டிக்க துண்டிக்க விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தாள். “ஒங்கள நா யூஸ் பண்ணிக்கிட்ட பிக்ச்சர மட்டும் எனக்கு கொடுக்காதீங்க ப்ளீஸ்” உடைந்து அழும் குரலை பதிவு செய்து அனுப்பியிருந்தாள். என்னைத் தொடர்புகொள்ள முடியாதபடி அத்தனை வழிகளையும் அடைத்தேன்.
ஏக்கத்தோடு அல்லாமல் வெறுப்புடன் விலகியதாக என்னை நம்பவைப்பதுதான் அதிலிருந்து அதிக காயமின்றி வெளிவர உதவுமென நம்பினேன். அவ்வுறவில் ஒரு முட்டாளாகவே இருந்திருக்கிறேன் என – அவமானமாகவே இருந்தாலும் – மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டேன். என் பணி முன்னேற்றங்களை இத்தனை நாளும் காவு கொடுத்திருப்பதாகவே தோன்றியது. பண முதலீடுகளில் அக்கறையில்லாமல் இருந்திருப்பதாகப்பட்டதும் நிறையவே குறுகினேன். கீர்த்தி கேட்டுக்கொண்டேயிருந்த டிரைவிங்கை சனி ஞாயிறுகளில் சொல்லிக்கொடுத்தேன். பையனை மாலைகளில் ஷட்டில் வகுப்பிற்கு அழைத்துப்போனேன். தன்முன்னேற்ற/மனநெறி நூல்களை வாசிக்கவேண்டுமென ஏனோ தோன்றியது. தவறவிட்ட தருணங்களை நினைத்தால் அதீதச் சோர்வு மண்டியது. நண்பர்களுடன் சரிசெய்ய முடியாத அளவிற்கு மனத்தொலைவு அதிகமாகியிருந்தது. எல்லாவற்றையும் களைத்துப்போட்டுவிட்டு செல்லும் கொடுங்காற்றைப் போல தெரிந்த இரண்டு வருடங்களைப் புழுங்கி நொந்துகொண்டேன். தோற்றுப்போனவனாக என்னை நினைக்கக்கூடாதென அடிக்கடி சொல்லிக்கொள்ள வேண்டியிருந்தது.
நான்கு வாரங்களுக்குள் புதிய வாழ்முறையை வகுத்துக்கொண்டதாக நம்பி முன்நகர ஆரம்பித்தேன். உடனிருப்பவர்கள் என் உற்சாகத்தில் குழம்பினாலும் மனப்பூர்வமாக மகிழ்கிறவர்களாகவே தெரிந்தார்கள். என்னுடன் நேரம் ஒதுக்கிப் பேச அணித்தலைவரும் அதிகம் விரும்பினார். விநோதமாக சிலர் எங்காவது பயணம் போய்வரச் சொல்லி அறிவுறுத்தினார்கள். இவையளித்த உத்வேகத்தின் அளவிற்கே என் பலவீனத்தின் வெளிப்படைத்தன்மையும் சுற்றியிருப்பவர்களின் தாட்சண்யமும் அச்சமளிக்க ஆரம்பித்தன. அத்திசையிலேயே யோசனை நீள, சட்டென எங்கிருந்தோ புதிய இருள் கவிந்ததைப் போலிருந்தது. அன்று மதியம் முழுக்க அறைக்கதவைச் சாத்திக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருந்தேன். கீர்த்தியை அழைத்துப் பேச முயன்று, ஏதோ சமாளித்து வைத்துவிட்டேன். அணித்தலைவரின் அறையில் பார்த்தால், அவர் புறப்பட்டுவிட்டதாகச் சொன்னார்கள். மொட்டைமாடிக்குப் போனவனை காலி கிங்ஸ் பெட்டி பரிகாசம் செய்தது. அந்த மாலையைக் கடந்துவிட்டால் போதுமென்றிருந்தது. அடுத்த நாள் மட்டும் என்ன மாறிவிடப் போகிறது. மீட்சியின் ரேகைகள் மெல்ல அழிய ஆரம்பித்திருப்பது தூலமாகத் தெரிந்தது.
மீண்டும் அறைக்கு வந்ததும் அவசரமாக அலைபேசியிலிருந்து அவளுக்கான தடைகள் அத்தனையையும் களைந்தேன். இனம்புரியாத ஆசுவாசம். அவளை மேலும் வெறுக்க ஏதேனும் கிட்டினால் தேவலாமென்றிருந்தது. முகப்புப் படத்தின் இடம் காலியாக இருந்தது – அவளுமே என் இணைப்பை தடை செய்திருக்கலாம். அழைத்துப் பேசலாமாவென ஒரு கணம் யோசித்தேன். மன்னிப்பேதும் கோராமல் தன் தினசரி அல்லல்களை அவள் சொல்ல ஆரம்பித்தால் விலக்கத்தை என்னால் சுலபப்படுத்த முடியும். நிச்சயம் அப்படி பேசமாட்டாள். அசிரத்தையுடன் யதார்த்தத்தை அவள் முன்வைத்தால் என் மனநிலையை மிக மூர்க்கமாக அது சிதைக்கக்கூடும். வட்டத்திற்குள்ளிருக்கும் சாம்பல்நிற பெண் வடிவத்தைப் பார்த்தபடி நின்றேன். என்னிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கும் முகப்புப் படம் என்னவாக இருக்கமுடியும்? அவனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி எதுவுமா? நெருக்கமாக ஒட்டி நின்று.. கன்னங்களை உரசிக்கொண்டு.. அப்படித்தான் இருக்கமுடியும்.
அலுவலக அறையிலிருக்கும் பெரிய கண்ணாடியில் நரைக்கத் தொடங்கியிருக்கும் கிரிதா மயிரைப் பார்த்தபடி நின்றேன். நிகழ்ந்த அந்த முத்தத்தை அன்று நீட்டியிருக்கவேண்டுமென திடீரென தோன்றியது. ‘பெரிய கண்ணியவான் மயிரு’. டையைத் தளர்த்திக்கொண்டேன். அந்த கடைசிக் குறுஞ்செய்தியை மீண்டும் எடுத்துப் பார்த்தேன் -‘எனக்கு அவன ஏமாத்துற மாதிரி இருக்கு..’ அடிநெஞ்சின் நமைச்சல் தொண்டைவரை ஏறியிறங்கியது. காணாத அந்த தற்படத்தை வண்ணங்களால் விரிவாக்கிக்கொண்டே இருந்தேன். அவர்களுடைய முத்தங்களுக்கு தடையின்றி அடுத்தடுத்த கட்டங்களை எட்டும் உரிமம் உண்டென ஆமோதித்துத் தலையசைத்துக்கொண்டேன். மறுக்க நினைத்தும் மனக்கண்ணில் மின்னலாக அக்காட்சிகள் வெட்டியபடி இருந்தன. பின்கழுத்துப்பட்டையில் வியர்வை இறங்கியது. வஞ்சிக்கப்பட்ட பாத்திரத்தை ஏன் தூக்கி அலைகிறேன் என்ற கேள்வியின் புகைத்திரை மெல்ல விலகுவதைப் போலிருந்தது. பாவனைகளைத் துறந்திருக்கும் புதியதொரு முகம் கண்ணாடியில் தெரிந்தது. ‘ரெஸிப்ரோக்கேஷன்னு என்ன மீன் பண்றீங்க..?’ என்ற அழுகுரல் எங்கிருந்தோ காதுக்குள் ஒலித்தது.
***
மயிலன் ஜி சின்னப்பன் (மயிலன் சின்னப்பன்) (ஜூன் 12, 1986) தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். மருத்துவராகப் பணிபுரிகிறார். தமிழ் வரலாற்றில் இருந்தும் மருத்துவத்துறையில் இருந்தும் உளவியல் கோணத்தில் புதிய கருக்களை எடுத்து சிறுகதைகள் எழுதிவருபவர். இதுவரை வெளிவந்துள்ள படைப்புகள் – நாவல் – பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் – 2019; சிறுகதைத்தொகுதிகள் – நூறு ரூபிள்கள் – 2020, அநாமதேயக் கதைகள் – 2021, சிருங்காரம் – 2022. தொடர்புக்கு : premamayilan@gmail.com
ஜென்ஸ் பீட்டர் ஜேக்கப்ஸன் (7 ஏப்ரல் 1847-30 ஏப்ரல் 1885) டென்மார்க்கில் பிறந்த எழுத்தாளர், அறிவியலாளர். சொற்பமான நாவல்களும், சிறுகதைகளும் கவிதைகளும்தான் படைத்திருக்கிறார் என்றாலும் டேனிஷ் இலக்கியத்தின் உச்ச எழுத்தாளர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இயல்புவாதத்தை டேனிஷ் இலக்கியத்திற்கு அறிமுகப்படுத்தியவர். இரண்டு நாவல்களும், ஏழு சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். இவரின் மரணத்திற்குப் பிறகு கவிதைத் தொகுப்பு வெளியானது. இளம் வயதிலேயே காசநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். தன் விருப்பத்திற்கேற்ப பயணங்களை மேற்கொள்ள முடியாததினாலும் அறிவியல் ஆய்வுகளில் கவனம் செலுத்தமுடியாததினாலும் இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டார். புகழ் பெற்ற ஜெர்மானிய எழுத்தாளரான தாமஸ் மன், தன்னை அதிகம் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவராக ஜேக்கப்ஸனை குறிப்பிடுகிறார்.
1882ல் வெளிவந்த ‘பெர்காமோவில் கொள்ளை நோய்’ என்ற சிறுகதையின் மீது அதன் எதிர்மறைத்தன்மைக்காகவும் இறைநம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. தீவிர நாத்திகரான ஜேக்கப்பஸன், சொந்த நாட்டிலும் வெளிநாட்டிலிருந்தும் எழுந்த கண்டனக் குரல்களை மென்மையாகவே அணுகினார். பெரும் துன்பத்திற்கும் அவதிகளுக்கும் உள்ளாகும் மனிதர்கள், வாய்ப்பு கிடைத்தாலும் தன்னைக் கட்டுப்படுத்தும் தளைகளிலிருந்து விடுவித்துக்கொள்ளத் தயங்குவது ஏன் என்ற விசாரணையை இச்சிறுகதையில் எழுப்புகிறார். நோய்களையும் மரணங்களையும் எந்த விண்ணுலகமும் தடுக்காது என்பதை உணரும்போது எழும் கொந்தளிப்பு இக்கதையில் மிக இருண்மையாகக் கையாளப்பட்டிருக்கிறது. மனிதனை ஒரு பாவப்பிறவியாக கருதுவதற்கு எதிராகப் பல கேள்விகளை இச்சிறுகதை எழுப்புகிறது.
மனிதனின் பாவங்கள்தான் கொள்ளை நோய்க்கான காரணமா? இப்பாவங்களை இனி ஏற்றுக்கொள்ள ஒருவரும் இல்லையா? இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான தூதர் தன் கடமையை நிறைவேற்றாமல் திடீரென மறைந்துவிட்டால் அது கடவுளை நேரடியாக அணுகுவதற்கான வாய்ப்பென்றா அல்லது மீண்டும் அத்தூதரை உருவாக்க வேண்டும் என்ற தவிப்பா, எது எளிய மானுடனின் உணர்வாக இருக்க வேண்டும்?
பெர்காமோவில் கொள்ளை நோய்
பழைய பெர்காமோ நகரம் ஒரு தாழ்வான மலையின் உச்சியில் மதிற்சுவர்களும் வாயிற்கதவுகளும் சூழ வேலியிடப்பட்டு அமைந்திருந்தது. புதிய பெர்காமோ நகரம் அதே மலையடிவாரத்தில் நாற்புறமும் சுழன்றடிக்கும் காற்றுக்குத் தன்னை வெளிக்காட்டியபடி இருந்தது.
ஒரு நாள் புதிய நகரத்தில் கொள்ளை நோய் தோன்றி அச்சந்தரும் வேகத்தில் பரவத் தொடங்கியது; பேரெண்ணிக்கையில் மக்கள் மாண்டனர், பலர் சமவெளிகளைக் கடந்து உலகின் நான்முனைகளுக்கும் தப்பித்தோடினர். பழைய பெர்காமோ நகரின் குடிமக்கள் காற்று வெளியைச் சுத்தம் செய்யும் நோக்கில் கைவிடப்பட்ட இந்நகரின் மீது தீ மூட்டினர். ஆனால் அதனால் நன்மையென ஏதும் விளையவில்லை. மலை மீதிருந்த நகரத்திலும் மக்களின் மரணங்கள் தொடங்கியது; முதல் நாளில் ஒருவர், பின்னர் ஐந்து, அதன் பின்னர் இருபது… கொள்ளை நோய் அதன் உச்சத்தைத் தொட்டதும் மேலும்மேலுமென மரிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது.
புதிய நகரத்தில் வாழ்ந்த மக்கள் தப்பிப் பறந்தோடியதைப் போல இவர்களால் வெளியேற இயலவில்லை.
அதையும் முயன்ற சிலர் இருந்தனர், ஆனால் அவர்கள் வேட்டையாடப்பட்ட ஒரு விலங்கின் எஞ்சிய முடமான வாழ்வினை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்; கழிவுக் குழிகளிலும் ஓடைகளிலும், வேலிகளின் அடியிலும், பச்சை வயல் வெளிகளிலும் பதுங்கி வாழவேண்டியிருந்தது. குறு நிலக்கிழார்களின் வீடுகளுக்குள் கொள்ளை நோயினை முதலில் பரப்பியவர்கள் தப்பியோடி வந்தவர்கள்தான் என்பதால், காணும் அந்நியர்கள் அனைவரின் மீதும் கற்கள் எறியப்பட்டன. நிலங்களின் மீது கால் வைத்திராதபடி அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள். அல்லது சற்றும் இரக்கமும் கருணையுமின்றி ஒரு பித்தேறிய நாயைப் போல அடித்து வீழ்த்தப்பட்டார்கள். அது நியாயமான தற்காப்பு செயல்தான் என்றும் இரக்கமற்றவர்கள் நம்பினார்கள்.
பழைய பெர்காமோ நகரத்து மக்கள் எங்கும் வெளியேறிட முடியாமல் இருக்கும் இடத்திலேயே தங்கிட நேர்ந்தது. நாளுக்கு நாள் நோயின் தீவிரமும் கூடி வளர்ந்தது; இக்கொடூரமான நோய் வேகமாகப் பற்றிப் பரவும் தன்மையுடையதாகவும் பெரு வேட்கை கொண்டதாகவும் மாறியது. பேரச்சம் தன்னிலை மறக்கும் பித்தாக வளர்ந்தது. ஒழுக்கம் நல்வாழ்வு என்பவற்றையெல்லாம் பூமி வாய் பிளந்து முழுங்கிவிட்டதைப் போல மனித இயல்பின் ஆகப் பெரும் கேடுகள் அவற்றுக்குப் பதிலாக மேலெழத் தொடங்கின.
கொள்ளை நோய் முதன்முதலில் தோன்றிப் பரவத் தொடங்கிய நாட்களில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் இணக்கத்துடனும் அதை எதிர்த்துப் போராடினர். சடலங்கள் குறித்த நேரத்தில் முறைப்படி அடக்கம் செய்யப்படுவதை உறுதிசெய்தனர். ஒவ்வொரு நாளும் நகரச் சதுக்கங்களில் பெருந்தீயெழுப்பி தெருக்களினூடாக நற்புகை வழிந்தோடச் செய்தனர். ஜூனிபர் தழைகளும் புளிங்காடி நீரும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இவையனைத்திற்கும் மேலாக மக்கள் பெருங்கூட்டமாகவும் தனித்தும் அதிகாலையிலும் பின்னிரவிலும் தேவாலயத்தை நாடிச்சென்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தங்கள் பிரார்த்தனைகளுடன் இறைவனின் முன்னால் வந்து நின்றனர். ஒவ்வொரு நாளும் கதிரவன் மலைகளின் பின்னால் மறையும்போது தேவாலயத்தின் அத்தனை மணிகளும் சொர்க்கத்தை நோக்கி அலையாடும் தன் நூற்றுக்கணக்கான குரல்வளைகளிலிருந்து ஓலமிட்டு அழைப்பொலிகளை எழுப்பின. நோன்புகள் ஒருங்கமைக்கப்பட்டன, அன்றாடம் புனித திருச்சின்னங்கள் ஆல்டரின் மீது எழுந்தருளின.
இறுதியாக ஒரு நாள் இதற்குமேல் செய்வதற்கு வேறொன்றுமில்லை என்றானபோது, நகர் மண்டபத்தின் மாடங்களில் ஏறி, ஊதுகுழலிலும் இசைக்கொம்புகளாலும் பெருஞ்சப்தத்தினை எழுப்பி, கன்னி மாதாவோ, நடுவர் நீதிமானோ அல்லது நகரத் தலைவரோ இப்போதே இங்கு தங்களைக் காக்க உடனே இங்கு வரவேண்டும் என்று கட்டளை இயற்றினர்.
ஆனால் இவையெதுவுமேகூட உதவவில்லை; உதவக்கூடிய ஒன்றென அங்கு எதுவுமேயில்லை.
மக்கள் இதை உணர்ந்தபோது, விண்ணுலகம் தங்களைக் காக்காது, காக்கவும் இயலாது என்ற நம்பிக்கை வலுப்பெற்றபோது, வெற்றுக் கைகளை மடிமீது வெறுமையில் விரித்துப் போட்டு, ‘இனி வருவது வரட்டும்” என்றும் கூறத்தொடங்கினர். இல்லையில்லை… உண்மையில், ஒரு இரகசிய வஞ்சகமான நோயெனப் பதுங்கியிருந்த ‘பாவம்’ தற்போது வெளிப்படையாகவே கொடூரமான சீற்றங்கொண்ட கொள்ளை நோயாக மாறிவிட்டதைப் போலத் தோன்றியது. இது உடல் நோயோடு கை கோர்த்துக்கொண்டது. ஒன்று உடலை அழிக்க முயன்றுகொண்டிருந்தபோது மற்றொன்று ஆன்மாவைத் தேடி வேட்டையாடி அழித்துக்கொண்டிருந்தது. அவ்வளவு நம்புதற்கரியது அவற்றின் செயல்கள், அவ்வளவு பெரியது அவை உண்டாக்கிய பேரழிவுகள்! பெருந்தீனிக்காரர்களின் புலம்பல்களோடும் குடிகாரர்களின் அலறலோடும் தெய்வ நிந்தனையும் இறை வெறுப்பும் காற்றில் நிறைந்தது. பகலிலேயே நடந்தேறிய மட்டற்ற ஒழுக்கக்கேடுகளை விட பெரியதாக எதையும் தறிகெட்ட இரவுகள் ஒளித்துவிடவில்லை. “நாளையே மரிக்கப்போகிறவர்கள் நாம், இன்றே உண்டு தீர்ப்போம்!” – ஏதோ இவ்வரிகளை அவர்கள் சந்தத்திற்கேற்ப இயற்றி பல்கருவிகள் கொண்டு முடிவிலாத ஒரு இசையரங்கில் தொடர்ந்து இசைத்ததைப் போலிருந்தது. ஆம், அத்தனை பாவச்செயல்களும் அரங்கேறின. அதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒன்றென ஏதுமிருந்தால், அவை அங்கே புனைந்துருவாக்கப்பட்டது. ஏனென்றால், அவர்கள் தங்கள் துர்மார்க்கத்தை பின்பற்றுவதற்கு ஏதுவான அத்தனை வழிகளையும் கைக்கொண்டனர். விண்ணுலகம் உறுதியளிக்காத பாதுகாப்பை அவர்கள் தீய சக்திகளின் பேராற்றலினால் பெற்றுவிடலாம் என்று நம்பியதால் இயற்கைக்கு மிக முரணான தீயொழுக்கங்கள் அவர்களிடையே செழித்தோங்கின. மேலும், பில்லி சூனியம், மாயமந்திர வித்தைகள், பேயோட்டுதல் போன்ற தீச்செயல்களைக்கூட அவர்கள் நன்கு கைவரப்பெற்றனர்.
அடுத்தவர்க்கு இரங்குதல், உதவிகள் பரிமாறுதல் என்பதெல்லாம் அவர்களின் மனங்களிலிருந்து முற்றாக மறைந்துவிட்டிருந்தது; ஒவ்வொருவரும் தம்மைப் பற்றிய எண்ணங்களை மட்டுமே கொண்டிருந்தனர். நோயில் விழுந்தவன் பொது எதிரியாகக் கருதப்பட்டான். யாராவது கொள்ளை நோயின் முதல் தாக்குதலான முதற் காய்ச்சலால் சோர்வுற்று துர்பாக்கியமாக தெருவில் விழ நேர்ந்தால் அவனுக்கென ஒரு கதவும் அங்கே திறக்கவில்லை. ஆனால், அவன் மீது கற்களை வீசியும், ஈட்டியால் குத்தியும், ஆரோக்கியமானவர்களின் பாதையிலிருந்து வலிந்து வெளியேறும்படி நிர்பந்திக்கப்பட்டான்.
நாளுக்கு நாள் கொள்ளை நோயின் தீவிரம் அதிகரித்தது, நகரத்தின் மீது கோடை வெயில் அழல் வீசியது. ஒரு துளி மழையும் பொழியவில்லை, மெல்லிய இளங்காற்றுகூட சுழன்றசையவில்லை. வீடுகளில் அழுகிக் கிடக்கும் சடலங்களிலிருந்தும், பூமியில் பாதி புதைக்கப்பட்டிருந்த பிணங்களிலிருந்தும் உண்டாகிய மூச்சடைக்கும் துர்நாற்றம் தெருக்களில் அசைவற்று தேங்கி நிற்கும் காற்றுடன் கலந்து வீசியது. கருங்காகங்களை அது பெருங்கூட்டமாக ஈர்த்ததில், கூரைகளும் சுவர்களும் கருமையைப் போர்த்திக்கொண்டன. வெகுதூரத்திலிருந்து வந்திருந்த விசித்திரமான, அருவருப்பான பெரிய பெரிய பறவைகள் அழுகிய உடல்களைக் கொத்தும் ஆர்வமுடைய அலகுகளுடனும், வாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் கூரிய நகங்களுடனும் நகரைச் சுற்றியிருக்கும் சுவர்களைச் சூழ்ந்து அமர்ந்திருந்தன; அவை பேராசை மிகுந்த உளைவற்ற கண்களால் நோக்கியபடி காத்திருந்தன. இந்த துர்பாக்கியம் பீடித்த நகரம் சவக்குழியாக மாறுவதற்குக் காத்திருப்பதைப் போல.
கொள்ளை நோய் பரவத் தொடங்கி பதினோரு வாரங்கள் ஆகியிருந்தபோது, சமவெளியிலிருந்து புது நகரத்துத் தெருக்களினுள் புகை பூசிய கற்சுவர்களுக்கும் மரவீடுகளின் கருஞ்சாம்பல் குவியல்களுக்கும் இடையே காற்றைப் போல மக்கள் ஊர்வலம் ஒன்று புகுவதைக் காவல் கோபுரத்தின் மீதிருந்த காவல்காரனும், உயரமான இடங்களில் நின்று கொண்டிருந்த மற்றவர்களும் கண்டனர். பேரெண்ணிக்கையில் மக்கள் திரள்! ஆண்களும் பெண்களும் வயதானவர்களும் இளைஞர்களுமென குறைந்தது அறுநூறு அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள். பெரிய கறுப்புச் சிலுவைகளை அவர்கள் சுமந்து வந்தனர். அவர்களின் தலைக்கு மேல் நெருப்பைப் போல தீ சிவப்பில் பரந்த பதாகைகள் மிதந்துகொண்டிருந்தன. அவர்கள் பாடல்களைப் பாடியபடி முன்னோக்கி நகர்ந்து வந்தனர். மனக்கசப்பின் வெந்துயரளிக்கும் சுரங்கள் சலனமற்ற வெப்பக்காற்றில் மேலெழுந்தன.
பழுப்பு, சாம்பல் மற்றும் கறுப்பு நிறங்களில் இருந்தன அவர்களின் ஆடைகள், ஆனால் அவர்களனைவரும் சிவப்பு நிற சின்னமொன்றை மார்பில் அணிந்திருந்தனர். அவர்கள் நெருங்கி வருகையில்தான் அது சிலுவை என்று தெளிவானது. அவர்கள் அருகில் வருவதற்கே வெகு நேரமானது. பழைய நகரத்திற்கு இட்டுச் செல்லும், சுவர்களால் சூழப்பட்ட செங்குத்தான சாலையில் அழுந்த நடைபோட்டு மேலேறி வந்தனர். அது வெள்ளை முகங்களின் மொய்திரள்; அவர்கள் தங்கள் கைகளில் சாட்டையை ஏந்தியிருந்தனர். அவர்களின் சிவப்பு பதாகைகளில் தீ மழை காட்சியாக இருந்தது. கறுப்புச் சிலுவைகள் கூட்டத்தில் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தன.
அடர்த்தியான அத்திரளிலிருந்து வியர்வையின், சாம்பலின், சாலைத் தூசியின், பழைய தூபத்தின் நாற்றமெழுந்தது.
அவர்கள் பாடுவதை நிறுத்திவிட்டனர், பேசுவதைக் கூட. மந்தையின் வெற்றுக் காலடிச் சப்தங்களைப் போன்ற மிதியொலிகளைத் தவிர வேறொன்றும் கேட்கவில்லை.
முகங்களுக்குப் பின் முகங்களாகக் கோபுர வாயிலின் இருளுக்குள் அமிழ்ந்து மறுபக்கத்தில் வெளிச்சத்தில், கலங்கிய சோர்வுற்ற உணர்வுகளுடனும் பாதி மூடிய இமைகளுடனும் வெளிப்பட்டன.
பின்னர் பாடுவது மீண்டும் தொடங்கியது; மன்னிப்பு கோரும் ஒரு இரங்கற் பாடல்; தங்கள் கைகளிலிருந்த சாட்டைகளை மேலும் உறுதியாக இறுகப் பற்றிக்கொண்டு போர் கூவலுக்கு நடை போடுவதைப் போல வீறுகொண்டு நடந்தனர்.
கடும் பஞ்சத்தில் வீழ்ந்த நகரத்திலிருந்து வந்தவர்கள் போல அவர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் கன்னங்கள் உள்ளொடுங்கி இருந்தன, எலும்புகள் துருத்தி வெளியே நின்றன. இரத்தம் இலாது உலர்ந்த உதடுகளும், கண்களுக்குக் கீழே கருவளையங்களும் கொண்டிருந்தனர்.
பெர்காமோ நகரத்து மக்கள் ஒன்று திரண்டு அவர்களை மலைப்புடன் வேடிக்கை பார்த்தனர் – சற்று அச்சத்துடனும். மது உச்சத்தில் சிவந்த முகங்கள் இவ்வெளிறிய வெள்ளைப் புதுமுகங்களை நேரில் எதிர்கொண்டு நின்றன; தீயெரியும் கண்களுக்கு எதிரில் மட்டுமீறிய குடியில் தொய்வடைந்திருந்த மந்தப் பார்வைகள் தாழ்ந்து போயின. இவ்வளவு காலம் தெய்வ நிந்தனை செய்தவர்கள் இக்கூட்டத்தின் பாடல்களுக்கு முன்னால் வாய் பிளந்து நின்றனர்.
அவர்கள் வைத்திருந்த சாட்டையின் மீது குருதி படிந்திருந்தது.
இந்த அந்நியக் கூட்டத்தினரைக் கண்டதும் விசித்திரமான மனக்குலைவிற்கு ஆளானார்கள் மக்கள்.
ஆனால் இவ்வுணர்வுகளை உதிர்த்து தெளிவடைய அவர்களுக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. சற்று நேரத்திலேயே சிலுவையைத் தாங்கிய கும்பலில் ஒருவன் ப்ரெஸியாவைச் சேர்ந்த காலணிகள் செப்பனிடும் அரைப் பைத்தியக்காரன் என்பதைச் சிலர் கண்டுகொண்டனர். உடனடியாக அவன் சார்ந்த மொத்தக் கும்பலுமே மக்களின் பார்வையில் கேலிக்குரியவர்களானார்கள். ஆனாலும், அங்கே புதியதாக ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அன்றாடத்திலிருந்து ஒரு கவனச் சிதறல்; கரடி வித்தைக்காரனையோ ஒரு கூத்தாடியையோ பின்தொடர்வது போல கதீட்ரலை நோக்கி அணிவகுத்துச் சென்ற அந்நியர்களை மக்களும் பின்தொடர்ந்தனர்.
ஓவியம்: சீராளன் ஜெயந்தன்
ஆனால் தங்களை உந்தி முன்னேறிச் செல்கையில் அவர்கள் சற்று மனக்கசப்புற்றனர்; இந்த அந்நியர்களின் உணர்வுக் கொப்பளிப்புடன் ஒப்பிடுகையில் தங்களின் இறை வெளிப்பாடு மிகத் தட்டையானது என்று உணர்ந்தனர். அந்நியர்களான இந்த செருப்பு தைப்பவர்களும், தையல்காரர்களும் தங்களை மதமாற்றவும், தங்களுக்காகப் பிரார்த்திக்கவும், தாங்கள் கேட்க விரும்பாத வார்த்தைகளைச் சொல்லவும்தான் இங்கு வந்திருக்கிறார்கள் என்பதை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். மெலிந்த, தலை நரைத்த இரண்டு தத்துவவாதிகள் இறைக்கு எதிரான நிலையை விவரித்து ஒரு முறைமையை பெர்காமோவில் ஏற்கனவே உருவாக்கியிருந்தனர். அவர்கள் குடிபோதை கும்பலைத் தூண்டிவிட்டனர், இதயங்களினுள் உறைந்திருக்கும் தீமையைக் கிளர்ந்தெழச்செய்தனர். இதனால் தேவாலயத்தை நெருங்கும் ஒவ்வொரு காலடிக்கும் கூட்டத்தின் கொந்தளிப்பு அச்சுறுத்துவதாக மாறியது, கோபத்தில் கதறல்கள் காட்டுத்தனமாக எழுந்தன. அந்நியர்களின் மீது இவர்கள் வன்முறையைப் பிரயோகிக்க அதிக நேரம் பிடித்திருக்காது. தேவாலய நுழைவாயிலுக்கு இன்னும் நூறு அடிகளே இருந்தபோது, மதுவிடுதிகளின் கதவுகள் திறந்துகொண்டன. அதற்குள்ளிருந்து மதுவெறியர்கள் தட்டுத்தடுமாறி ஒருவர்மீது ஒருவர் விழுந்தடித்து ஒடி வந்தனர். ஊர்வலத்தை தாங்களே தலைமை தாங்குவதைப் போல முன்னால் ஓடிச் சென்று ஓங்காரக்குரல் எடுத்து கோஷமிட்டனர் – ஒருவனைத் தவிர. அவன் தேவாலயத்தின் புற்கள் மண்டிய கற் படிகளில் தலைகீழாக கைகளால் நடை போட்டு ஏறிச்சென்றான். இது அங்கே சிரிப்பலைகளை ஏற்படுத்தியதால் எந்த வன்முறைச் சம்பவமும் நிகழாமல் திருக்கோயிலுள்ளே அந்நியர்கள் நுழைந்தனர்.
மீண்டும் இங்கே வருவது, பிரம்மாண்டமான இக்குளிர்ந்த வெளிக்குள் பிரவேசிப்பது, விசித்திரமாகத் தோன்றியது பெர்காமோ மக்களுக்கு. மெழுகுவர்த்திகளிலிருந்து உருகிய பழைய சொட்டுக்களின் மூக்கைத் துளைக்கும் வாசம் நிறைந்த இச்சூழலில் – அவர்களின் பாதங்களுக்கு நன்கு பரிச்சயமான கற்தரையின் முழுதும் தேய்ந்து போன வடிவங்களும் தடிமனாகச் செதுக்கப்பட்ட எழுத்துகளும் அவர்களின் எண்ணங்களைப் பலமுறை சோர்வடையச் செய்திருக்கின்றன. அவர்களின் பார்வைகள் பாதி ஆர்வத்துடனும் மீதி விருப்பமின்றியும் பெட்டகங்களின் அடியில் படர்ந்திருந்த மங்கலான வெளிச்சத்தின் மீது விழுந்தன. பன்மடிப்புகளாய் ஒளிரும் தங்கத் தூசியிலும் புகை மூட்ட வண்ணங்களிலும் நழுவிச் சென்றன. ஆல்டரின் விசித்திரமான நிழல்களில் தங்களையே தொலைத்தனர். அவர்களின் இதயங்களிலிருந்து என்றென்றும் அடக்கவியலாத ஏக்கங்கள் கிளர்ந்தெழுந்தன.
இதற்கிடையில் மதுவிடுதியிலிருந்து வந்தவர்கள் உயரிய பலிபீடத்தில் நின்றபடி இழிவான செயல்களைச் செய்தவண்ணம் இருந்தனர். ஒரு கசாப்பு கடைக்காரன், உருவம் பெருத்த இளையவன், தனது வெள்ளை பனிக்கவச உடையை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டான். அது குருமார்களின் வெண்ணிற அங்கியைப் போல அவன் முதுகில் தொங்கியது. அருவருப்பும் தெய்வப்பழியும் நிரம்பிய, வெறித்தனமும் ஆபாசமுமான வார்த்தைகளால் ஜெபக் கூட்டத்தை நிகழ்த்தினான். சற்றே வயதான பருத்த தொப்பையுடன் இருந்த ஒருவன், அவன் உடல் எடையையும் மீறி சுறுசுறுப்புடனும் விரைந்தும் செயல்பட்டான். தோலுரித்த பூசணிக்காய் போல முகமுடைய அவன்தான் வழிபாட்டுச் சொற்களுக்குக் கேலியான மறுமொழி சொல்லிக்கொண்டிருந்தான். வழிபாட்டுக்கு மண்டியிடுவதைப் போல அவன் முழந்தாளிட்டு பலிபீடத்திற்கு முதுகைக் காட்டி கோமாளியைப் போல மணியடித்தான், தூபக்கலத்தை சக்கரம் போலச் சுண்டிவிட்டான். மற்ற குடிகாரர்கள் உரக்கச் சிரித்தபடி குடிபோதையில் விக்கலெடுத்து நன்றாக நீட்டி படிக்கட்டுகளில் படுத்து கிடந்தார்கள்.
அந்நியர்களைப் பார்த்து முழு தேவாலயமும் கேலி செய்து சிரித்தது. பழைய பெர்காமோவின் மக்களாகிய தாங்கள் கடவுளைப் பற்றி எத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறோம் என்று தங்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து பார்த்து அறிந்துகொள்ளும்படி கூவல் விடுத்தனர். அவர்கள் கடவுளை அவமதிக்க வேண்டும் என்பதற்காக ஆவேசமாக களிக்கூச்சலிடவில்லை. மாறாக, தங்களின் ஒவ்வொரு தெய்வ நிந்தனையும் இந்த அந்நியப் புனிதர்களின் மனங்களில் கூர்மையாகக் குத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால் அவர்களோ தேவாலயத்தின் மையத்தில் வந்து நின்று வேதனையில் முணுமுணுத்தனர். அவர்களின் இதயங்கள் வெறுப்பினாலும் பழி வேகத்தினாலும் கொதித்தன. அவர்கள் தங்கள் கைகளையும் கண்களையும் கடவுளை நோக்கி உயர்த்தி அவருடைய இல்லத்திலேயே அவரை நோக்கிச் செய்யப்படும் கேலிக்கூத்துகளுக்கு எதிராகக் கடவுளின் பழி இவர்கள் மீது விழ வேண்டுமென வேண்டினார்கள். இவர்கள் அத்தனை பேரையும் அழித்துவிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள், ஆனால் முதலில் கடவுள் தன்னுடைய வல்லமையைக் காட்ட வேண்டும் என்று வேண்டினார்கள். இறைவனை நோக்கி எழும் இந்த கொடூரக் கூச்சல்களையும், அவநம்பிக்கைகளையும், போலியான உதடுகளிலிருந்து பிற்பாடு வெளிப்படக் காத்திருக்கும் வேதனைக் குரல்கள் அனைத்தையும் மொத்தமாகக் கடவுள் வெல்வாரென்றால் அவர் காலடியிலேயே நொறுங்கி மடிவதற்கும் தயாராகவே இருந்தார்கள் அந்நியர்கள்.
பின்பு மன்னிப்பு கோரும் இரங்கற்பாடலை பாடத் தொடங்கினார்கள். அதன் ஒவ்வொரு இசைக் குறிப்பும் சோதோமை மூழ்கடித்த தீ மழை வேண்டியும் எதிரிகள் வீட்டின் தூண்களை உருக்குலைக்கும்போது சாம்சனை ஆட்கொண்ட வலிமையையும் வேண்டுவதாக ஒலித்தது. அவர்கள் இசையாலும் சொற்களாலும் பிரார்த்தனை செய்தார்கள்; தங்கள் தோள்களிலிருந்த ஆடைகளை விடுத்து கசைகளால் ஜெபித்தார்கள். அவர்கள் வரிசை வரிசையாக மண்டியிட்டார்கள், இடுப்பு வரை துணிகளைக் களைந்து கூர்மையான முனைகளைக் கொண்ட, இழை இழையாகப் பின்னப்பட்ட கயிற்றை தங்கள் முதுகின் மீது சுழற்றினார்கள். வெறித்தனமாகவும் தன்னிலை மறந்தும் சீறும் சாட்டையிலிருந்து இரத்தத் துளிகள் இடுப்பில் வழிந்து உடம்பில் ஒட்டுமளவிற்குச் சாட்டையால் தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டார்கள். ஒவ்வொரு அடியும் கடவுளுக்கான படையல். இன்னும் வேறு வேறு வழிகளில் அவர்கள் இப்படியே தொடர்ந்து அடித்துக்கொள்வார்கள் என்றால் இறைவனின் கண் முன்னாலேயே குருதி தோய்ந்த சதைத் துண்டுகளாக அவர்கள் உடைந்துவிடுவார்கள். இறைவனின் கட்டளைகளை எதிர்த்து பாவம் செய்த இவ்வுடல் தண்டிக்கப்பட வேண்டும், சித்திரவதை செய்யப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும். இவ்வுடல் எவ்வளவு வெறுக்கத்தக்கது என்பதை இறைவன் பார்க்க வேண்டும். இறைவனை மகிழ்விப்பதற்காக அவர்கள் எப்படி நாயைப் போல ஆனார்கள் என்பதை அவர் காண வேண்டும். அவரின் ஆற்றலின் முன்னால் அவர்கள் நாயை விடவும் கீழானவர்கள், அவர் பாதத்தின் அடியில் உழலும் தூசியை உண்ணும் பூச்சிகள்! அவர்களின் கைகள் வலுவிழந்து போகும்வரை, சதைப் பிடிப்புகளால் சுருண்டு வீழும்வரை அடி மேல் அடி விழுந்தபடி இருந்தது. பித்தேறிய கண்களுடன், வாயில் நுரை பொங்க, சதையை விட்டு இரத்தம் சொட்டு சொட்டாக வெளியேற அவர்கள் ஒவ்வொருவராய் வரிசையில் சரிந்தனர்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திடீரென தங்கள் இதயம் அதிர்வதை உணர்ந்தனர், கன்னங்களில் வெப்பம் மேலேறுவதையும் மூச்சு விடக் கடினம் கூடுவதையும் கவனித்தனர். உச்சந்தலையின் அடியில் குளிர்ச்சியான ஏதோவொன்று வளர்வதைப் போலத் தோன்றியது, அவர்களின் முழங்கால்கள் வலுவிழந்தன. அது அவர்களையும் ஆட்கொண்டுவிட்டது; அவர்கள் மூளையில் இருந்த பைத்தியக்காரத்தனத்தின் ஒரு சிறு புள்ளி இந்தக் கொந்தளிப்பை புரிந்துகொண்டது.
மிகக் கடுமையானதும், பெரும் சக்தி கொண்ட ஒரு தெய்வத்தின் அடிமைகளாக தங்களை உணர, அக்கடவுளின் முன்னால் தாழப் பணிய, அவருடன் ஒன்றெனக் கலக்க, மென்மையான பக்தியில் அல்லாமல் – மெளனமான ஜெபத்தின் செயலற்ற தன்மையின் ஊடாக அல்லாமல் – பித்துப்பிடித்ததைப் போல, அவமானத்தின் விளைவான வெறித்தனத்தாலும், இரத்தத்தாலும், கதறலினாலும், ஈரம் பளபளக்கும் சாட்டையின் அடியில் விழுந்து இறையுடன் கலப்பதை மக்களால் இப்போது புரிந்துகொள்ள முடிந்தது. அந்த கசாப்பு கடைக்காரன் கூட அமைதியாகிவிட்டான். பல்லில்லாத தத்துவவாதிகள் தங்கள் நரைத்த தலையை அலையும் கண்களுக்கு முன்னால் தாழ்த்திக்கொண்டார்கள்.
தேவாலயம் இப்போது முற்றிலும் அமைதியாகிவிட்டது; அலையைப் போன்ற ஒரு அசைவு மட்டுமே கூட்டத்தினிடையே வீசிச் சென்றது.
அப்போது அந்நியக் கூட்டத்திலிருந்து ஒரு இளம் துறவி எழுந்து பேசினார். அவர் புத்தம்புதிதாக நெய்யப்பட்ட நாரிழைத்துண்டைப் போல வெளிர் நிறத்தில் இருந்தார். நிலக்கரியைப் போல அவரது கருமையான கண்கள் ஒளிர்ந்தன, அவரது வாயைச் சுற்றி தடிமனான முகக் கோடுகள் ஒரு மனித முகத்தின் மடிப்புகளைப் போல அல்லாமல் கத்தியால் மரத்தில் செதுக்கப்பட்டவை போல இருந்தன.
அவர் தனது மெலிந்த நடுங்கும் கரங்களை வானை நோக்கிப் பிரார்த்திப்பதற்காக உயர்த்தினார், அவரது அங்கியின் மேற்கைகள் சுருண்டு கீழிறங்கியது.
பின்னர் அவர் பேசினார்.
நரகத்தைப் பற்றிப் பேசினார், சொர்க்கம் எல்லையற்றது என்பதனால் நரகமும் எல்லையற்றதுதான் என்றார். தனிமையான இவ்வுலகத்தின் குற்றவாளிகள் ஒவ்வொருவரும் சகித்துக்கொள்ள வேண்டிய வேதனைகளைப் பற்றியும் அழுகுரல்களால் அதை நிறைப்பதைப் பற்றியும் உரைத்தார். கந்தகக் கடல்களும், தேள்கள் நிறைந்த நிலப்பரப்புகளும், மேலாடையைப் போல ஒரு மனிதனைப் பற்றிச் சூழ்ந்துகொள்ளும் தீப்பிழம்புகளும், காயத்தைக் குத்தி ஊடுருவும் ஈட்டியைப் போல உடலைத் துளைக்கும் கடுமையான மௌன தீக்கதிர்களும் அங்கே உள்ளன.
இன்னமும் தேவாலயத்தில் அமைதி நிலவியது; மூச்சற்று அவருடைய சொற்களைக் கேட்டார்கள். அவர் ஏதோ தன் கண்களாலேயே நரகத்தைக் கண்டவர் போலப் பேசினார். அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டார்கள்: அவர் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரா அல்லது நரகக் குழிகளிலிருந்து சாட்சி சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் ஒருவரா?
பின்னர் நீண்ட நேரம் நீதியைப் பற்றியும் நீதியின் வலிமையைப் பற்றியும் பிரச்சாரம் செய்தார். நீதியமைப்பின் ஒவ்வொரு அங்கமும் முழுமையாகச் செயல்படவேண்டும் என்றும் ஒவ்வொரு மீறலும் குற்றமென்றாகி அவர்களுக்கு எதிராக ஒவ்வொரு பருக்கையும் கணக்கிடப்படும் என்றார். “ஆனால் கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காகத்தானே மரித்தார்? ஆம் என்றால் நாம் இனி சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்லர். ஆனால் நான் உங்களிடம் உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன், உங்களில் ஒருவராலும் நரகத்தை ஏமாற்றிவிடமுடியாது. சித்திரவதை பல்சக்கரத்தின் ஒரேயொரு பல் கூட உங்களின் சதையைக் கிழிக்காமல் கடந்துவிடாது. நீங்கள் கோல்கோத்தா சிலுவைக் கதையை அடிப்படையாகக் கொண்டு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டீர்கள், அல்லவா?. வாருங்கள், வாருங்கள். வந்து பாருங்கள்! நான் அதன் அடிவாரத்திற்கே உங்களை அழைத்துச் செல்கிறேன். உங்களுக்குத் தெரியுமல்லவா, வெள்ளிக்கிழமை ஒன்றில்தான் கதவுகளைத் திறந்து ‘அவரை’ வெளியே தள்ளி மிகக் கனமான சிலுவையை அவர் தோள்களின் மீது வைத்தார்கள். அதைச் சுமந்து குடியிருப்புகள் அற்ற, வறண்ட ஒரு பாழ் குன்றின் மீது ‘அவரை’ ஏற வைத்தார்கள். கூட்டம் அவரைப் பின்தொடர்ந்து சென்றது, அவர்களின் பாதங்கள் மிதித்து சுழன்றெழுந்த தூசிப் படலம் அவ்விடத்தை நிறைக்கும் செம்மேகங்கள் போலக் காட்சியளித்தன. ஒரு குற்றவாளியை முற்றிலுமாக அம்பலப்படுத்த வேண்டும் என்பதனால், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் தசைகளை அத்தனை கண்களும் காண வேண்டும் என்பதனால், நீதியின் அதிபதிகள் ‘அவரின்’ ஆடையைக் கிழித்தெறிந்தார்கள். சிலுவையின் மீது அவரைக் கிடத்தி, அவரது கை கால்களை நீட்டி, கைகள் ஒவ்வொன்றிலும் ஒரு இரும்பு ஆணியையும், குறுக்கு பாதங்களின் மீது ஒரு ஆணியையும் அடித்தனர். முழுவதுமாக உள்ளிறங்கும் வரை ஆணியின் தலைகளில் ஓங்கி அடித்தார்கள். தரையில் ஒரு குழியிட்டு சிலுவையை அதில் இருத்தி நிமிர்த்து உயர்த்தினார்கள், ஆனால் அது நேராக உறுதியாக நிற்கவில்லை. ஆகவே அசைத்து நகர்த்தி பக்கவாட்டில் தூண்களையும் ஆப்புகளையும் முட்டுக் கொடுத்து அதைத் தாங்குமாறு செய்தனர். இதைச் செய்யும்போது, ‘அவரின்’ இரத்தத் துளிகள் கண்களின் உள்ளே விழுந்துவிடாமல் தடுப்பதற்குத் தொப்பிகளைச் சற்று கீழிறக்கி மறைத்துக்கொண்டார்கள். ‘அவர்’ சிலுவையில் இருந்தபடி தன்னுடைய கிழிந்த ஆடைகளை வீசியெறிந்து கொண்டிருந்த வீரர்களைப் பார்த்தார், கொந்தளிப்பான மக்கள் கூட்டத்தைப் பார்த்தார். யாரைக் காக்கும்பொருட்டு அத்தனை துன்பங்களையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாரோ அவர்கள் ஒருவரின் கண்களிலும் இரக்கம் தென்படவில்லை.
கீழே இருந்தவர்கள், பலவீனமாகியும் துடிதுடித்துக்கொண்டும் இருந்த ‘அவரை’ மேல் நோக்கிப் பார்த்தார்கள். தலைக்கு மேலே ‘யூதர்களின் ராஜா’ என்று எழுதியிருந்த பலகையைப் பார்த்தார்கள். ‘அவரை’ நிந்தித்து குரலை எழுப்பினார்கள்: “ஆலயத்தை இடித்து மூன்றே நாட்களில் அதைத் திரும்பக் கட்டுகிறவரே, உன்னை நீயே காப்பாற்றிக்கொள். நீ தேவனுடைய குமாரனாயிருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா.” அதன் பின்னர், தேவனின் ஒரே குமாரனாகிய ‘அவரை’ கோபம் ஆட்கொண்டது. பூமியை நிறைக்கும் இந்த வெற்றுக் கும்பல் இரட்சிப்புக்குத் தகுதியற்றவர்கள் என்பதை உணர்ந்தார். ஆணித் தலையினூடாக தனது கால்களைக் கிழித்து விடுவித்தார். தனது கைகளை இறுக மூடி ஆணியோடு பிய்த்து வெளியே எடுத்தார், சிலுவையின் கரங்கள் வில் போல வளைந்தன. தரையில் குதித்து தன்னுடைய ஆடைகளைப் பிடுங்கிக்கொண்டார். அதை ஒரு அரசனைப் போலத் தன்னைச் சுற்றி போர்த்திக்கொண்டு பரலோகத்திற்கு உயரப் பறந்து சென்றார். சிலுவை காலியாக நின்றது, மீட்பு எனும் மகத்தான பணி நிறைவேறவேயில்லை. நமக்கும் இறைவனுக்கும் இடையில் இடையீட்டாளரென ஒருவரும் இல்லை; சிலுவையில் நமக்காக மரித்த ஏசு இல்லை; சிலுவையில் நமக்காக மரித்த ஏசு இல்லை; சிலுவையில் நமக்காக மரித்த ஏசு இல்லை!”
அவர் அமைதியானார்.
அவர் தனது கடைசி வார்த்தைகளை உச்சரித்தபோது, கூட்டத்தை நோக்கி முன்னோக்கிச் சாய்ந்து தனது கைகளாலும் உதடுகளாலும் அச்சொற்களைக் கூட்டத்தின் தலைகளை நோக்கிப் பரப்பினார். வேதனையின் முனகல் சப்தம் தேவாலயத்தினுள் ஊர்ந்து பரந்தது, ஆங்காங்கே மூலையில் அழத் தொடங்கினர்.
உடனே கசாப்பு கடைக்காரன் பிணத்தைப் போல வெளிறியிருந்த கைகளை அச்சுறுத்தும் வகையில் மேலே உயர்த்தி உரக்கக் கத்தினான்: “துறவியே, துறவியே… நீங்கள் ‘அவரை’ மீண்டும் சிலுவையில் அறைய வேண்டும். கட்டாயம் செய்ய வேண்டும்.” அவனுக்குப் பின்னால் சீற்றத்துடன் கரகரப்பான குரல்கள் எழுந்தன: “ஆமாம், ஆமாம், சிலுவையில் அறையுங்கள்! சிலுவையில் அறையுங்கள்!”
தெளிவாகவும் தீர்க்கமாகவும் நடுங்கும் ஒற்றைக் குரல் எழுந்தது: “ஆம், சிலுவையில் அறைய வேண்டும்.”
ஆனால் அத்துறவி, உயர நீட்டியிருக்கும் கைகளின் அலைகளைப் பார்த்தார், கத்தும் உதடுகளின் இடையே விரிந்த இருளையும், வேட்டை விலங்கைப் போல வெண்மையாக ஒளிரும் பற்களையும் கண்டு ஆனந்த பரவசத்தில் பரலோகத்தை நோக்கி கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டமாகச் சிரித்தார். பின்னர் அவர் கீழிறங்கினார். அவருடைய கூட்டத்தினர் தீ மழை தாங்கிய பதாகைகளையும் வெற்று கருப்புச் சிலுவைகளையும் உயரப் பிடித்தபடி தேவாலயத்தை விட்டு வெளியேறினர். பாடல்களைப் பாடிக்கொண்டு மீண்டும் சதுக்கத்தைக் கடந்து கோபுர வாயிலின் திறப்பு வழியே வெளியே சென்றனர்.
மலையிலிருந்து கீழிறங்கிச் சென்ற இக்கூட்டத்தினரைப் பழைய பெர்காமோவினர் வெறித்து நோக்கினர். நீண்ட சுவர்களால் ஆன செங்குத்தான சாலை, சமவெளிக்கு அப்பால் மறையும் சூரியனின் ஒளியினால் மங்கலாகத் தெரிந்தது. ஆனால் நகரத்தை வட்டமிட்டுச் சூழ்ந்திருக்கும் சிவந்த சுவரின் மீது கூட்டத்தில் அங்குமிங்கும் அசையும் சிலுவைகள் நிழலுருக்களாகத் தெளிவாகப் பதிந்தன.
***
நரேன் – ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். சமீபத்தில் கவனம் பெற்ற இவரது மொழிபெயர்ப்பில் வெளியான சமகால புலம்பெயர் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு “இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்” மின்னஞ்சல்: Narendiran.m@gmail.com
“ஏன்டா, சாப்பாடு ருசியா இல்லன்னா டா ஊர விட்டு ஓடி வந்த?” முதலாளி கேட்டபோது சட்டெனப் பொங்கி வந்த கோவத்தை மறைத்தபடி நின்றான் நாராயணன். சுற்றி நின்ற மற்ற வேலையாட்கள் கை கொட்டிச் சிரித்ததைப் பொருட்படுத்தாமல் பாத்திரம் கழுவ தண்ணீர் குழாயைத் திறந்து விட்டான். அதன் இரைச்சல் சத்தத்தினூடே காதுகளை இறுக்க பொத்திக்கொண்டதைப் போல பாவனை செய்தான். “அட, என்னாக் கோவம் வருகு மயித்தானுக்கு! சோத்துக்கு வழி இல்லன்னாலும் சூடும் சொரணையும் ஒருவாடு உண்டும், என்னடே?” நெருங்கி வந்த முதலாளியை மீண்டும் அவமதிக்க மனம் கொள்ளாமல் எழுந்து நின்றான் நாராயணன்.
“மரியாத மயிரெல்லாம் ஒன்னும் வேண்டாம் கேட்டியா? அவவன் குனிஞ்சு குனிஞ்சே கொதவளையக் கடிக்க நிக்கானுவோ. நீ கொள்ளாம் டே. செரி, சொல்லு, கேப்பம். சாப்பாட்டுல ருசி இல்லன்னுலா ஓடி வந்தியான், உள்ளது தானா புள்ளோ?” என்னதான் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்கள் பெருகி வந்தாலும், வாழ்க்கை கொடுத்த மனிதன் முன் திமிறி நிற்க முடியாமல் மெல்லத் தலையாட்டினான் நாராயணன். கண்கள் நீர் நிறைந்து நின்றன.
சரியெனத் தலையாட்டியவன் தேங்காய் சவுரியுடன் புளியும் உப்பும் சேர்த்து கரி பிடித்த போணிகளை அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தான்.
“பெரிய மவராசன் வீட்டுப் பிள்ளல்லா இவரு. ஊத்ததக் குடிச்சிட்டுப் போனும் பாத்துக்கோ. குண்டிக்குத் துணி இல்ல, வாய்க்கு மட்டும் வக்கணையா கேக்குது, என்ன? பிச்சக்காரப் பயல. ஒங்கப்பன் ஊருக்கு ஒழச்சிட்டே இருப்பான். நா பெத்துப் போட்ட எல்லாத்துக்கும் பீத்துணி கழுவிட்டே கெடக்கேன். இதுல வக்கண மயிரு, வக்கண, ராஸ்கல். சத்தங்காட்டாம தின்னுட்டுக் கெடக்கணும். மீச மொளச்சி ரெண்டு நாள் சம்பாதிச்சிட்டா பெரிய ஆம்பளைன்னு நெனப்போ? ஒட்ட நறுக்கிருவேன்.. அவனுக்க மொறப்பும் மயிரும்..” அம்மா கத்திக் கொண்டிருந்தபோது உப்போ புளிப்போ அற்ற சோற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நாராயணன். ஒருநாளும் உப்பு, புளிப்பு எதுவும் இருந்ததில்லை தான். ஏனென்று எவ்வளவு யோசித்தாலும் பதிலில்லை. அம்மாவும் அதைத்தான் சாப்பிடுகிறாள். ஒரு நாள் கூட அவள் பசித்தோ ஆர்வத்தோடோ சாப்பிட்டுப் பார்த்ததில்லையே!
அப்பாவுடன் கல்யாண வீடுகளுக்குச் செல்வதற்காக ஏங்கிக் காத்திருப்பான் நாராயணன். ஏழு கறியா? ஒன்பது கறியா? பருப்புப் பாயாசமா, அடைப் பிரதமனா? என்று பலத்த யோசனையாக இருக்கும். நேந்திரம்பழ பாயாசம் வைக்கும் வசதியான திருமணங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். காலி ஃப்ளவரையோ அல்லது சேனைக் கிழங்கையோ சிக்கன் பொரிப்பு மாதிரியே எப்படித்தான் செய்கிறார்களோ என்று வியந்து சாப்பிடுவான். அப்பாவும் கல்யாணப் பந்தியில் அவன் செய்வதையெல்லாம் ரசித்துப் பார்த்திருப்பார். தலை வாழை இலையாகக் கேட்பான். சிறு கைக் குழிவில் நீரேந்தித் தெளித்து இடம் வலம், வலம் இடமாகத் தேய்த்துக் குளிப்பாட்டுவான். “மாப்ளேய், சோப்பு வேணுமா?” என்று கண்ணடித்துக் கேட்பார் மணி மாமா. அவரது கைப்பக்குவம் தான் நாஞ்சில் முழுதும். ‘மணி மாமா மாதிரி மாஸ்டர் ஆகணும்’ என்று லட்சியம் வேறு.
“பொட்டப்புள்ள மாதில்லா அடுக்களய சுத்திச் சுத்தி வாரான். மூக்க வெட்டித் தூரப் போட்டா செரி ஆயிரும். வாசம் புடிச்சிட்டு சுத்துது சவம்,” என்று விரட்டுவாள் அம்மா. “மாஸ்டர் ஆவனுமாம் மாஸ்டர். அப்பன் கிழிச்ச கிழி போறாதுன்னு நல்ல மவன் வந்து சேந்துருக்கான். அந்த மணிய பாத்துட்டும். பயலுக்க கூட என்ன சேர்க்கன்னு கேக்கேன்.”
வாழையிலையின் நிறம் பார்த்துக் கூட சில சமயம் முகம் சிறுத்து விடுவான் நாராயணன். அப்பாவை நோண்ட, “எப்போ, பயலுக்க எலய ஒன்னு மாத்திக் குடுப்போ,” என்று சமாதானப்படுத்துவார் அப்பா.
இலையின் இடது ஓரத்தில் சிறு பொட்டென பொடி உப்பு, அதன் அருகே வாழைக்காய் துவட்டல், நேந்திரம் பழ வத்தல் இருந்தால் இவை இரண்டிற்கும் இடையே இரண்டோ மூன்றோ, சில பந்திகளில் நேந்திரம்பழ உப்பேரியும் உண்டு, பின் இடமிருந்து வலமாக தயிர்ப் பச்சடி, இஞ்சிப் பச்சடி, நார்த்தங்காய்ப் பச்சடி, மாங்காக்கோசு என்று சென்று இலையின் வலது பகுதியில் சிறு குன்றென அவியல். ஏற்கெனவே வைக்கப்பட்ட ஒவ்வொன்றையும் விரல் தொட்டு நக்கிப் பார்த்து அப்பாவைப் பார்த்துத் தலையாட்டுவான்.
“சாப்புடு மக்ளே, நல்லா சாப்புடு..” என்று சிரிப்பார் அப்பா.
அவியல் வைத்ததும் அடுத்து வருவது என்னவென ஆர்வமாய்ப் பார்ப்பான். சேனைக் கிழங்கு எரிசேரி பக்கத்துப் பந்தியில் வந்தாலே தெரிந்து விடும். நாராயணன் முகமும் அப்படி சொலிக்க ஆரம்பிக்கும். இல்லை, உருளைக் கிழங்கு மசாலா என்றால் ஒரு பெருமூச்சு விட்டு, ‘சரி, என்ன செய்ய’ என்பதைப் போல பார்ப்பான். அதுவும் சுடு சோறு இலையில் கொட்டப்படும் வரையில்தான். இரண்டு பங்குகளாகப் பிரித்து, ஓரம் கரிந்த அல்லது சரியாகப் பொரியாத பப்படம் வந்துவிடக் கூடாதே என வேண்டியிருப்பான். பப்படத்தைப் பொடிக்கும் ஓசையில் அவனையறியாமல் சிலிர்த்துக்கொள்வான். பருப்பு விட்டு அதன் நடுவே குழிவில் வாழையிலைத் தண்டிலிருந்து வடியும் நெய்யோடு சேர்த்துப் பிசைந்து ஒரு உருண்டையாக உருட்டி வாய்க்குள் திணித்ததும் கண்களில் நீர் நிரம்பி விடும்.
“கண்ணு வைக்காதீரும் ஓய்! மருமவன அப்பிடியாக்கும் வளக்கேன்.” ஒரு நாள் விளம்பத் தெரியாத யாரோ மாற்றி மாற்றி விளம்பிவிட, சாப்பிட்ட திருப்தி இல்லாமல் தலைவலியே பிடித்துக் கொண்டதாய் அவன் சொன்னதைக் கேட்டு வீடே சிரித்தது. அம்மா மட்டும் ஏனோ சிரிப்பதேயில்லை.
கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் அவனைச் சாக்காக வைத்து அப்பாவைத் திட்டுவாள் அம்மா. அவளது அழகும், மகிழ்ச்சியும் இங்கு வந்த பிறகு இல்லாமல் ஆகிவிட்டதென திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பாள். அடுக்களைக்குள் அவள் இருக்கும்போதெல்லாம் ஒரே எரிச்சல்தான். தனக்குத்தானே ஏதாவது பேசிக்கொண்டேதான் சமைப்பாள். பாத்திரங்கள் உருளும். கரிந்த வாடை வரும். கடுகிற்குப் பதிலாக வெந்தயத்தைப் போட்டு தாளிப்பாள். உருளைக் கிழங்கைத் தோலோடு அப்படியே பெரிய பெரிய துண்டுகளாகப் போடுவாள். சேனை என்றால் தொண்டையைப் பிடித்துக்கொண்டு ஓடுவான் நாராயணன். முட்டைப் பொரியலில் எப்போதும் முட்டை ஓடு கண்டுபிடித்துப் பொறுக்கி வைத்து விளையாடுவான். அவியல் என்றால் நறுக், நறுக், பொரியல் என்றாலே தீய்ந்து போனது என்றுதான் அக்குடும்பத்து சிறுசுகளுக்குப் பழக்கம்.
“என்ன மாப்ள, இந்தா தேய் தேய்க்க? பாத்து டே, பக்கத்துக் கடைக்கு ஓட்ட போட்டுட்டுப் போய்ராத,” என்று நாராயணனின் தோளில் தட்டிச் சிரித்தான் குட்டிமணி.
“அது, சும்மா எதுக்கோ உம் பேச்சு வந்தா, அப்போ மொதலாளி தான் உன்னப் பத்தி பெருமையாப் பேசுனாரு. கெட்டிக்காரனாம். சொன்ன வேலையும், சொல்லாத வேலையும் சேத்துப் போட்டு செய்வியாம். நம்ம பயலுவளுக்கு ஒருத்தனப் பத்தி நல்லதா ஏதும் சொன்னா பொறுக்காதுல்லா! அதான் போட்டுக் குடுத்துட்டானுவோ, அதுக்கென்னா இப்போ, மொதலாளி மொதல்ல சிரிச்சாரு. பொறவு ஆள் அமைதியா நின்னு தலையாட்டிட்டே ஏதோ யோசிச்சாரு. அவரு பாக்காததா என்ன? இன்னிக்கி நீ மாட்டிக்கிட்டயா, மனசுல வைக்காம கேட்டுட்டாரு மக்ளே. நீ ஒன்னும் நெனைக்காத என்ன?”
குட்டிமணி சொல்லச் சொல்ல கழுவிய ஒவ்வொரு பாத்திரமாகப் பளபளத்து வந்தது. அடுப்பங்கரையில் ஊதுபத்தி மணம். மாஸ்டர் வந்திருக்க வேண்டும்.. சட்டென எழுந்தவன் குட்டிமணியைப் பார்த்து சைகை காட்டிவிட்டு அடுப்பங்கரைக்குள் ஓடினான்.
“வாடே, வா. என்ன, செரியான தீவனமோ? கொடவண்டி முன்னாடி சாடிச் சரிஞ்சிரும் போலயே?” மாஸ்டரைப் பார்த்ததும் எல்லாம் மறந்து சிரித்தபடி, “ஒரே எண்ணெத் தீவனம்லா மாஸ்டர். பின்ன, உளுந்தவடையக் கண்டா கை நிக்க மாட்டுக்கு, இந்த வயித்தெரிச்சல் வேற கொடஞ்சிட்டே வருகு. ஒரு மாதி நெஞ்சுல தீய வச்ச மாதி. என்னவாருக்கும் மாஸ்டர்?” என்று கேட்டபடி பனியனில் ஈரக் கைகளைத் துடைத்தான். “ஆமா, இப்போ வந்து கேளு. வாயி தான் கேடு. பெருஞ்சீரகத்த கொஞ்சம் கொதிக்க வச்சிக் குடி. செரி ஆவும். என்னத்த தின்னாலும் செரிக்க வயசுதான் மக்ளே. ஆனாலும் கொஞ்சம் வயிறு சொல்லதையும் கேக்கணும் பாத்துக்க. ஊருக்கே ஆக்கிப் போட்டாலும் நம்ம வயிறு அரப் பக்கா தான கொள்ளும். ஆனா, நீ அப்பிடி அள்ளி முழுங்க ஆளும் கெடயாதே! எண்ணப் பலகாரத்த கொஞ்ச நாளைக்கி கொறச்சிப் பாரு மக்ளே.”
மாஸ்டருக்கு நாராயணன் இருந்தால் பாதி வேலை முடிந்த மாதிரிதான். எல்லா கறிகளையும் கூட்டுகளையும் ஆரம்பிப்பது அவர் என்றால் முடிப்பது அவனாக இருப்பான். சுவையில் பாதிப்பங்கு அவனுக்கு. பல நேரங்களில் மொத்தத்தையும் அவன் கையில் விட்டுவிட்டு சுகமாகக் கால் நீட்டி உட்கார்ந்து பீடி இழுத்துக் கொண்டிருப்பார். அவனும் ஆசான் முன்னால் தன் கைப்பக்குவத்தைக் காட்டுவதில் மும்முரமாக இருப்பான்.
“அது சும்மா ஒன்னும் இல்ல. ருசி அறிஞ்ச நாக்கு உள்ளவனுக்குதான் ருசி அறிஞ்ச கை அமையும். அதுலயும் அவன் பசிச்சிக் கெடந்தவனாக்கும். சும்மா சாதாரண பசியில்ல கேட்டேளா, அது ஒரு மாதி வக்கணையான பசியாக்கும். நளன் மாதின்னு சொல்லலாமா இருக்கும். அவனுக்க கையில ருசின்னா இவனுக்கு மொத்தமும் ருசிதான். பெருசா என்ன தின்னுரப் போறான், ரெண்டாளு திங்கதத் திம்பானா இருக்கும். ஆனா, அதில்ல விசயம். அந்தக் கை தொட்டாலே எதுல என்னத்தக் கொறன்னு சொல்லிரும். தொடணும்னு கூட இல்ல, வாசம் புடிச்சாலே சொல்லிருவான். அதாக்கும் உள்ளது. அன்னிக்கி, நா வெச்ச சக்கப்பழப் பாயாசத்தயே சரியில்லன்னு சொல்லிட்டாம்லா! எனக்குக் கோவந்தான். ஆனா, ஒருத்தன் நமக்கும் மேல ஏறி வாராம்னு வைங்கோ, ஒரு அளவுக்கு மேல நம்ம ஒன்னுமே இல்லன்னு ஆயிரும் பாத்துக்கோங்கோ. நாராயணன் ருசிக்கப் பொறந்தவன். அவன் பட்ட கஷ்டமெல்லாம் இதுக்குதானோன்னு நெனப்பேன்.”
அடுப்பங்கரையில் மட்டுமல்ல. விளம்பும் நேரத்திலும் மங்கலமாகக் கிளம்பி வந்து நிற்பான் நாராயணன். நெற்றிப் பட்டையும் பளிச்சென்ற சிரிப்பும். வரும் வாடிக்கையாளரின் முகமறிந்து அங்குமிங்கும் ஓடி பணியாளர்களிடம் ஏதேனும் சொல்லிக்கொண்டேயிருப்பான்.
“உப்புமால அடில புடிச்சதச் சொரண்டிப் போட்டு கொஞ்சம் மொளவாடில தேங்காயெண்ண விட்டுக் கொழச்சு ஒரு உருண்ட உருட்டி வச்சிப் பாருங்கோ. நம்ம ஹோட்டல் தான் நம்பர் ஒன்! தெரியுமா?”
“இவன் என்னத்த டே ஒளருகான்? கரிஞ்சிப் போனா ஏன் கரிஞ்சின்னு சண்டைக்கு வாரான். இப்போ அடில புடிச்சத சொரண்டித் திங்கச் சொல்லுகான். வட்டுப்பய..”
“அட, எது கரிஞ்சா நல்லது, எது கரியக்கூடாதுன்னு இருக்குல்லாண்ணே. சாளக் கருவாட்ட கரிச்சி சுட்டுக் கஞ்சி குடிச்சிருக்கேளா? அது ஒரு இதாக்கும்.”
முதல் வாடிக்கையாளர் வரும் முன் அடுப்பங்கரையில் சம்மணம் போட்டமர்ந்து ஒவ்வொரு கறியையும் கூட்டையும் தானே விளம்பி ஒரு தட்டம் சோற்றோடு ருசித்து எழுவான் நாராயணன். அவன் முகத்து திருப்தியைப் பார்த்தாலே அன்றைய வியாபாரம் தெரிந்து விடும் என்பார் மாஸ்டர்.
“சரி மக்கா, ஓடி வந்துட்ட செரி, திரும்பப் போற யோசன இருக்கா இல்லையா? யார்ட்டயும் போன்லயும் பேச மாட்டுக்க, ஊருக்கும் போன மாதி தெரியல்ல. மாசாமாசம் யாருக்கோ பணம் மட்டும் போட்டு விடுக, என்னவாக்கும் எண்ணம்?”
சட்டென முகம் இருண்டு விட, “அண்ணே, இந்த அட்வைஸ் மயிரெல்லாம் வேண்டாம்ணே. ஒனக்கு எல்லாம் கேக்க உரிம உண்டும். ஆனா, இத விடு. அது செரி வராது..”
“அப்பிடி என்னடே பிரச்சன?”
அப்பாவின் முடிவு அன்று அப்படி வருமென்று நாராயணன் நினைத்தும் பார்க்கவில்லை. கொத்த வேலையிலிருந்து அழுது தெவங்கி வந்து நின்றவன் காதில் விழுந்த முதல் குரல், “தவிச்ச வாய்க்கு தண்ணி கூட குடுக்க மாட்டால்லா. இந்த மனுசனுக்கு என்னத்தக் குடுத்தாளோ? சாப்புடும்போது பொதப்பேறில்லா சரிஞ்சி விழுந்தாராம்.” என்றது. அம்மா மயங்கிக் கிடந்தாள். அவளை உலுக்கி எழுப்பிக் கேட்க வேண்டும். அப்பாவின் ‘விடு மக்கா’ என்ற குரல் கேட்க பரிதவித்து நின்றான்.
அடுத்த நாள் காடாற்று முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவன் புடக்களையில் பேசிக்கொண்டிருந்த அம்மாவைக் கவனித்தான்.
“இந்தப் பிள்ளேளுக்கு சோறு போடுவாளோ என்னமோ! எல்லாம் ஒட்டடக் குச்சி மாதில்லா இருக்கு. அவளும் வக்காடு மாதி தான் இருக்கா? என்னமோ, செய்வின எதாம் இருக்குமோ?” என்றது மற்றொரு குரல். “ஆமாக்கா, நான் கேட்டது அப்பிடியாக்கும். இவளுக்க அடுப்பச் சுத்தி யாரோ செய்வின வச்சிட்டாளாம். அடுப்பங்கரைல ஒன்னுமே வெளங்காதாம். பாதி சண்ட அதுக்கு தானாம்.” “அதுக்கென்ன, எங்க வீட்டுலயும் அப்பிடித்தான். ஒரு வருசத்துக்கு கறி எடுத்தா கல்லு மாதில்லா கெடந்து. எவ்ளோ வேக வச்சாலும் வாய்ல வைக்க முடியாம. பொறவு, ஒரு பூசாரி சொல்லித்தான் அடுப்பச் சுத்திப் போட்டு எரிச்சேன். பின்ன, எவளுக்க கண்ணோ என்னவோ?”
அம்மாவிற்கு செய்வினை வைக்க யாரால்தான் முடியும்? அது மட்டுமா பிரச்சினை? அப்பாவைக் கண்டாலே அவளுக்கு ஆகாதே? பாசம் இருந்தால் ருசி தானாக வரப் போகிறது.
அடியந்திரம் அன்று. மூன்று தலைவாலை இலைகள் நெடுவாக்கில் போட்டு, ஐயர் சொல்லச்சொல்ல, ஒவ்வொரு காய்கறியாய் அவர் சொன்ன இடங்களில் அடுக்கினான். எலுமிச்சை, முருங்கை, கத்தரி, வெண்டை, கிழங்குகள், மஞ்சள், என்று அத்தனையும் ஒவ்வொரு நினைவாய் கொண்டுவர கண்ணீர் விட்டுத் தேம்பி அடுக்கினான்.
அப்பாவின் படத்தின் முன் நின்று கண் மூடி வணங்கிய போது அவனுக்கு அவரோடு சேர்ந்து சாப்பிட்ட பந்திகள் நினைவு.
மாவும் எள்ளும் சேர்த்துப் பிசைந்து பிடி உருண்டை உருட்டி அவன் கையில் கொடுத்து, “அப்பாவுக்கு வையிப்போ” என்று ஐயர் சொன்னபோது, “அப்பா, அப்பா” வெனக் கதறி விட்டான்.
பூசை முடிந்து படையலின் முதல் இலை முன் அமர்ந்தபோது ஒரு சொட்டு வாசம் கூட இல்லை. நிறமற்ற கறிகள். ருசியற்ற உணவு. உயிரற்ற வெறும் குவியல். ஒரு உருண்டை உருட்டி எடுத்து வாயில் வைத்த கணம், அடுக்களையில் இருந்து அம்மா யாரிடமோ கேட்டாள், “என்னத்த டே கறி வச்சிருக்கான் கறி மயிரு. அடியந்திரத்துக்கு எரிசேரி வைக்காண்டாமா? எவனாக்கும் மாஸ்டரு? நா என்னான்னு கேக்கேன்..”
சட்டென எழுந்து அம்மாவின் முன் சென்று, “நீயெல்லாம் ஒரு பொம்பளையா? அப்பா செத்ததுக்கு ஒரு சொட்டு கண்ணீர் விட்டியாட்டி நீ? எரிசேரி மயிரு கேக்கா ஒனக்கு? ஊருல எல்லாவனும் சொல்லது சும்மா ஒன்னும் இல்ல, அவருக்கு என்னவாம் குடுத்துக் கொன்னாலும் கொன்னுருப்ப நீ. இப்ப எரிசேரி மயிரு! ஒங் கையால ஒரு சொட்டு கஞ்சி குடிச்சாக்கூட வெளாங்காது. அப்பிடியே எனக்கும் ஒரு காடாத்து நடத்திரு…” என்று கத்திவிட்டு வெளியேறியவன் தான்.
*
புது ஹோட்டல் திறப்பு விழாவன்று நாராயணனுக்கு அப்படி நடந்தது எல்லோருக்கும் சங்கடம் தான். அடுப்பங்கரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கதறி அழுது விழுந்திருக்கிறான். முதலாளியே வந்து தன் காரில் தூக்கிக்கொண்டு போய் ஊரின் பெரிய மருத்துவமனையில் சேர்த்தார். வயிறு முழுதும் புண்ணாக்கி வைத்திருக்கிறான். எண்ணெயும் காரமும் வக்கணையும் சேர்ந்து செய்த காரியம். குடலின் சில பகுதிகளை நீக்கித் தைத்து ஓய்வில் கிடத்தினார்கள். குட்டி மணியும் மாஸ்டரும் வேலை நேரம் போக சென்று பார்த்து வந்தாலும் கூடவே இருக்க யாருமில்லாமல் தனித்துக் கிடந்தான். நினைவு வந்ததும் பசி, பசி. சாப்பிட்டுப் பல நாட்கள் ஆயிருக்கும். நரம்பு வழி உள்ளேறும் திரவங்களின் ருசி அறியத் தெரிந்தாலும் தெரிந்திருக்கும் அவனுக்கு. விழித்தவன் குட்டி மணியையும், மாஸ்டரையும் தேடினான்.
“என்ன தம்பி, எப்பிடி இருக்கு இப்போ? டாக்டர் நீ முழிச்சதும் சொல்லச் சொன்னாரு.. இன்னா வாரேன்.. எதாம் குடிக்கியா?”
தலை தானாக ஆடியது. அப்பாவின் வயிற்றில் பார்த்த அதே நெடிய தழும்பு. பம்பாயில் அலைந்த காலத்தில் வயிற்றுப் பிரச்சனையில் தான் அப்படி ஆனது என்று சொல்லியிருக்கிறார். தன் வயிற்றுப் பஞ்சில் கைவைத்து கண் மூடிக் கிடந்தான். அந்த வலியின் ஊடாக பல குரல்கள், பல முகங்கள், மலர்ந்து ருசித்துச் சாப்பிடும் முகங்கள், இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்கும் கண்கள், விரல் நக்கிச் சாப்பிடும் குழந்தைகள், ருசியின் உச்சத்தில் உள்ளிருந்து தெறித்து விழும் புன்னகைகள்…
கண்களை அறை முழுதும் ஓட விட்டான். வெறும் வெள்ளை. ஒற்றை நிறம் கூட இல்லா வெள்ளை. ஏதும் வாசம் வருகிறதா என முகர்ந்து பார்த்தான். மருத்துவமனை மருந்து வாடைகள் மட்டுமே வர குமட்டிக் கொண்டு வந்தது. பார்க்க யாரும் வந்திருந்தால் ஏதும் வாங்கி வந்திருப்பார்களே என கட்டிலின் அருகே கிடந்த சிறு மேசையை நோக்கித் தலையைத் திருப்பினான். வெறும் குளுக்கோஸ் பாட்டில்கள். ஒரு பிரெட் பாக்கெட் கூடவா வாங்கி வந்திருக்க மாட்டார்கள்? இதோ இப்போது சென்ற நர்ஸ் திரும்பி வந்தால் கேட்டுப் பார்க்கலாம். ஏதும் குடிக்க வேண்டுமா என்று கேட்டாளே! நல்ல ஒரு டிக்காசன் காப்பி கேட்டுப் பார்ப்போம். கூட ஒரு உளுந்த வடை! ம்ம்…
அந்த அறையின் மேல் சுவரிலிருந்து ஒரு சத்தம் வந்தது. கூர்ந்து பார்த்தபோது மெல்லிய ஒரு விரிசல் விழுந்தது. அதன் தூசி அவன் மீது விழ கைகளை ஆட்டி விலக்கினான். மெல்ல விரிந்த விரிசலிலிருந்து மென்கைகள் இரண்டு நீண்டு வந்தன. கைகளில் ஒரு தங்கத் தட்டு. என்ன அதன் மீது? அட, மொறுமொறு உளுந்த வடையும் தேங்காய்த் துவையலும்! அடுத்து வந்தது மல்லிகைப்பூ இட்லியும் சாம்பாரும், கூட ஒரு கிண்ணத்தில் ரச வடையும்! அற்புதம், அற்புதம். என்ன ருசி! ஒன்றைச் சாப்பிட்டு முடிக்க இன்னொன்று, பிறகு இன்னொன்று என வந்து கொண்டேயிருந்தது. நின்றபாடில்லை. அறை முழுதும் தங்கத் தட்டுகள்! தின்று முடித்த எச்சில்கள்!
தட்டுகளும் மிச்சங்களும் சேர்ந்து மலை போலக் குவிய அதன் மேல் படுத்திருந்தான் நாராயணன். நறுமணங்கள் மெல்ல மெல்ல நாற்றமாக மாறின. மூச்சுத் திணறி, “போதும், போதும்” என்று அரற்றினான். மேலும் மேலுமென உணவுகள் குவிய நறுமணங்களும் வாடைகளும் நிறைய, அவற்றுள் மெல்ல மெல்ல மூழ்கத் தொடங்கினான். மணி மாஸ்டரின் குரல், “நாராயணா, நாராயணா, எப்பிடி இருக்க மக்ளே?”
மருத்துவர் வந்து பார்த்து விட்டு, “ரெண்டு மூணு நாள்ல வீட்டுக்கு போலாம் தம்பி. கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட்டு தான் கேட்டியா? ஆமா, கூட யாரு இருப்பாங்க? வேளைக்கு சாப்பிடணும். நேரத்துக்கு சாப்பிடாம இருக்கக் கூடாது. பின்ன, காரம், எண்ணப் பலகாரம் கொஞ்ச காலத்துக்கு அவுட். என்ன? புரிஞ்சுதா?” என்றார்,
“சார், கூட யாரும் இல்லன்னு நெனைக்கேன். அந்த ஹோட்டல்காரரு கூட்டிட்டு வந்த பேசண்ட் சார்.”
“ஓ, ஆமா, சரி சரி.. யாரும் கூட இருந்து பாத்துக்க முடியுமான்னு பாருங்க. கொஞ்சம் குடல் ஆறிடுச்சுன்னா பரவால்ல..”
வீட்டிற்கு வந்தவனுக்கு வேளாவேளைக்கு ஹோட்டலிலிருந்து சாப்பாடு வந்தது. ஆனால், சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. மூச்சு மூட்டியது. கஷ்டப்பட்டு சாப்பிட்ட போது நாவில் எதுவும் ஏறவில்லை. ரப்பர் துண்டுகளைக் கடித்து விழுங்குவதைப் போலிருந்தது. நோயின் தாக்கம் என இருந்தவனுக்கு அடுத்தடுத்த வேளைகளிலும் அதே சப்பென்ற சாப்பாட்டைக் கண்டு மனம் நடுங்கியது. சாப்பாட்டுத் தட்டின் அருகே கிடந்து கனவுக்குள் மூழ்கினான். கனவில் வரும் வாசமும் ருசியும் ஆறுதலாக இருந்தது. பசி கூடிக் கூடி அவனை மெல்ல அரிக்க ஆரம்பித்தது. வலிந்து ஒவ்வொன்றாய் எடுத்து வெறி கொண்டதைப் போல தின்றான். ஒரு சொட்டு ருசி கூட இல்லை.
வாழ்வின் ருசி எல்லாமும் வடிந்து போய்விட்டதா, இனி அப்பாவுடன் சாப்பிட்ட கல்யாணச் சாப்பாடு கிடைக்கவே கிடைக்காதா? என் நரம்புகளிலெல்லாம் பாவம் குடியேறி விட்டதா? அம்மாவைப் பழித்த பாவமா? அவள் மட்டும் என்ன யோக்கியமா? எரிசேரி, அவியலெல்லாம் எங்கே? மாம்பழப் புளிசேரி, நார்த்தங்காய்ப் பச்சடி, போளி, பால் பாயாசம் எல்லாம் எங்கே?
படுத்தால் தூக்கம் இல்லை. தூங்கினாலும் எழுந்துகொள்ளப் பிடிக்கவில்லை. அறைக்குள்ளேயே அந்த முடை நாற்றத்திற்குப் பழகி படுக்கையிலேயே கிடந்தான். மெலிந்தான். கண்களைச் சுற்றி கருமை. இதென்ன இளநரையும் வந்துவிட்டதா? ஒருவேளை இதெல்லாமே கனவுதானோ? எப்படி இந்தக் கனவிலிருந்து வெளிவருவது? மாஸ்டர் வந்து பார்த்தாரா? குட்டி மணி? முதலாளி?
உத்தரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட இரண்டு வேட்டிகளின் முடிவில் ஒரு தலை கொள்ளுமளவு சுருக்கு கிடந்தது. நிதானமாக எழுந்து நின்றவன் அருகே குவிந்து கிடந்த தங்கத் தட்டுகளின் மீது ஏறி நின்றான். இன்னும் சிறிது எம்பினால் சுருக்கில் மாட்ட சரியாக இருக்கும். இன்னும் சில தட்டுகள்! தொங்கும்போது கால்கள் கிடந்து அடிக்குமா? நாக்கை கடித்துத் துண்டாக்கி விடுவேனா? இரத்தம் தெறிக்குமே? இரத்தத்தின் ருசி எப்படி இருக்கும்? அப்பா பொதப்பிலேறி தான் செத்துப் போனாரா? அப்போது என்ன ருசி தெரிந்திருக்கும்? இன்னும் சில தட்டுகள்! இதோ, இப்போது ஏறி விடுவேன். இதென்ன, இந்தச் சுருக்கு எட்டாமலேயே இருக்கிறது? கடைசியாக ஒருமுறை கூட ருசியாகச் சாப்பிட முடியாதா?
ஒவ்வொரு நாடியிலும் இதயத் துடிப்பு தடித்துக் கேட்ட, ஒவ்வொரு மூச்சும் நீண்டு விழுந்த அந்த கணத்தில் அவன் படுக்கையருகே வந்து நின்றது ஒரு உருவம். இருக்காது, இருக்கவே இருக்காது? அம்மாவா? சீ, சீ! ஒரு கணம் பல்லைக் கடித்தவன் அடுத்த நொடி ஓவெனக் கதறி அழ ஆரம்பித்தான். உடன் அந்த உருவமும் அழ ஆரம்பித்தது. அம்மா வந்திருப்பது நிஜம் தானா? எப்படி வந்தாள்? அவள் வீம்பை விடுத்து வந்திருக்க வாய்ப்பேயில்லையே? அவள் என்ன வீம்பு காட்டுவது, நானல்லவா காட்ட வேண்டும்? அவள் முகத்திலேயே முழிக்கக்கூடாது என்றிருந்தேனே! இப்போது எதற்கு வந்திருக்கிறாள்? ஒரு வேளை குட்டி மணி சொல்லியிருப்பானோ? மாஸ்டரே நேரில் போய் கூட்டி வந்திருப்பாரோ? என் தலையில் கைவைத்திருக்கிறாளே, இதெல்லாம் சாத்தியமேயில்லையே? அப்பாவின் சாவு, அடியந்திரம். எரிசேரி….
பசிக்கிறதே! பசி, வெறி கொண்ட பசி.. செத்துப் போன நாக்கு. கை கால்கள் தூக்கித் தூக்கி படுக்கையில் அடித்தன. வெறியில் கூச்சலிட்டான். அலறினான். ஓங்கி அழுதான். அப்போது, அருகேயிருந்த உருவத்தின் அந்த நடுங்கிய மென் கைகள் அவனை நோக்கி நீண்டன. கழுத்தோடு அவனைத் தாங்கி, எழுந்து உட்காரச் செய்தன. அருகேயிருந்த கிண்ணத்தை எடுத்து அவன் வாயருகே கொண்டு சென்றன. தாவிச் சென்று அந்தக் கிண்ணத்தில் வாய் வைத்து உறிஞ்சினான். உயிர், உயிர், உடலின் மொத்த நோயையும் தீர்க்கும் உயிர்.. ஒரே உறிஞ்சலில் மொத்தக் கிண்ணத்தையும் முடித்து எழுந்து கண் திறந்தவன் உதட்டோரம் இருந்த ஒற்றைப் பருக்கையை நாவால் உள்ளிழுத்த போது துள்ளி எழுந்தான்.
“ஆஹா, என்ன ருசி. அற்புதம்.. அற்புதம்…” என்று கத்திக் கொண்டே ஆட ஆரம்பித்தான்.
***
சுஷில் குமார் – 35-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ள நிலையில், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வெளி வந்திருக்கிறது. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்”… மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com
அந்த ஆளுயர செம்பருத்திச் செடியில் எத்தனையோ முறை நான் பூப்பறித்திருக்கிறேன் அதிலெதுவும் இப்போது என்னிடம் இல்லை மரம்தான் வைத்திருக்கிறது இன்னும் அந்தப் பூவை ஒவ்வொரு நாளும் அதை மலர்த்திக் காட்டி என்னை அழைக்கும் ஒவ்வொரு முறையும் நான் பறித்துவிட்டதாய் நினைக்கையில் நீர்ப்பறவை போல மூழ்கி மறுநாள் மற்றொரிடத்தில் பூக்கும் இன்னும் நான் பறித்திடாத பூ
***
ருசி
ஒளி நிழல் ஒளி நிழல் தன்னைப் பிரட்டி தன்னைப் பிரட்டி வரு கிறது
ஒரு இலை நிதானமாக
பசித்திருக்கிறது நிலம்
***
எனது வேலை
எனது வேலைக்கு நீளமான உறுதியான கைகள் எட்டுப் பக்கமும் கால்கள் வேட்டை விலங்கின் கண்கள் இரையின் காதுகள் ஆனாலும் சின்னப் பிரிவுக்கும் வாடும் வீட்டுச்செடியின் வாசனை அதற்கு. ஒருநாள் அதன் உடலிற்கு பொருந்தாத இரண்டு குட்டிச்சிறகுகள் அதன்மீது முளைத்திருப்பதைக் கண்டேன் அதனிடம் சொன்னதும் கிக்கிரி பிக்கிரியென சிரிப்பு ஒரே துள்ளாட்டம்; பறந்து பறந்து பார்த்தது ஒரு கோழியைப் போல பொத்திப்பொத்தி நான்தான் அதை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது
வெகுநெடுநாட்கள் கழித்து வேலைக்குள் மூழ்கியிருந்த ஒரு மழைநாளில் சட்டென தோகை விரித்து ஆடத்தொடங்கியது.
***
ஆனந்த் குமார் தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர். இவரது முதல் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ பரவலான கவனத்தைப் பெற்றது. 2022க்கான குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். குழந்தைகள் புகைப்படக் கலைஞரான இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். மின்னஞ்சல்: ananskumar@gmail.com
முற்றத்தில் நிற்கும் இரட்டைப்பிலாவில் ஒன்று கூழன் ஒன்று செங்கவருக்கை. அப்பா எங்கிருந்தோ வாங்கி வந்து கொளக்கட்டி பரத்தி கீழே ஓடையிலிருந்து தண்ணீர் கோரி ஊற்றி வளத்தெடுத்த விதைகள். நன்கு விளைந்த கூழன் சக்கை ஒன்று ஆளுயரம் இருக்கும். சுளை ஒவ்வொன்றும் வளர்ந்த ஆளின் கையளவு இருக்கும். செம்பருத்தி வருக்கை சிவப்பாய் தேன் சுவையில் தித்திக்கும். கூழன் சக்கையில் கூழனாயிருந்தாலும் பெரியளவு நார் இருக்காது. பூஞ்சியும் அவ்வளவாக இருக்காது. குடும்பமே சுற்றி உட்கார்ந்து தின்னும். ஆளுக்கொரு பெரிய துண்டு. சின்னவனுக்கு மட்டும் சுளைகளைப் பிய்த்து கொடுப்பார்கள். எங்கள் ஊரில் இந்த இரட்டைப் பலா சற்றே பிரசித்தம்.
கல்லூரி முதல் வருடம் ஒரு மூன்று மாதம் இருக்கும். கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து இரவு தூங்கப்போகும்போது இடது கண்ணோரம் ஒரு மின்னல். அன்று தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததும் வலது கண்ணோரம் ஒரு மின்னல். அன்று மாலை வீட்டுக்கு வந்ததும் அறைக்குள் சென்றுவிட்டேன். அறை என்றால் பெண்மக்கள் எங்கள் நால்வருக்கான அரங்கு. அரங்கின் மூலையில் விளக்கைப் போடாமல் அசைவின்றி அமர்ந்திருந்தேன். நடுவில் உள்ளவன் இடையில் வந்து பார்த்தான். சற்றைக்கெல்லாம் யாரையோ அழைத்து வரும் சத்தம் கேட்டது. எனக்கு நேர் இளைய தங்கை. அம்மா இன்னும் வரவில்லை. இருவரும் ஏதோ கேட்டார்கள் நான் பதில் சொல்லவில்லை. மூணாவது தம்பியும் ஐந்தாவது தங்கையும் இன்னும் பள்ளியிலிருந்து வரவில்லை. சின்னவனும் கடைசித் தங்கையும் விளையாடி முடித்து வந்துவிட்டார்கள். யாரும் என் அறைப் பக்கம் வரவில்லை. கூடிக்கூடிப் பேசிக்கொண்டார்கள். ஐந்து வருடத்துக்கு முன் அப்பா சண்டை போட்டுப் போனவர் தனியே இருபது மைல் தள்ளி வீடெடுத்து வசிக்கிறார். பிள்ளைகளிடம் விரோதம் ஏதுமில்லை. நாங்கள் விருப்பப்பட்டால் அங்கு போய் வருவோம். குழந்தைகள் நாங்கள் ஏழு பேர் . மூன்று ஆண் நான்கு பெண். நான்தான் மூத்தவள். அப்பா ஆசையாய் வைத்த பெயர் ஸ்டாரி.
*
உடலெங்கும் ஒரு எரிச்சல். உறுத்தல். உடைகள் என் உடலை எரிக்கத் தொடங்கின. நான் அவற்றை அவிழ்த்து தூரமாய் எறிந்தேன். தண்ணீர் தண்ணீர். உடல் எரிந்தது. பின்புற கிணற்றடிக்கு ஓடினேன். உடலின் ஜ்வாலைகள் கண்ணுக்குள் எதிரொளித்தன. தண்ணீர் தண்ணீர். வாளி நிரம்பி காலியானது. இப்போது தாகம். தண்ணீர் தண்ணீர். மீண்டும் வாளி நிரம்பி காலியானது. கிணத்தடியில் அப்படியே உட்கார்ந்தேன். நடு உச்சை. அக்கம்பக்கத்து வீடுகளில் யாரும் இல்லை. என் காதில் அந்த குரல் கேட்டுக் கொண்டேயிருந்தது.
‘’சூடு வேவுதே எரியுவே பொள்ளுதே அய்யோ அம்மோவ். ‘’
*
மீண்டும் தண்ணீர் தண்ணீர். என்னைச் சுற்றி எல்லாம் புகை போலத் தெரிந்தது. நான் வீட்டுக்குள் ஓடினேன். தங்கைகள் சேலையை எடுத்துக் கொண்டு பதறிப்போய் ஓடி வந்தார்கள். தம்பிகள் தூரமாய் நின்றார்கள். எனக்கு எல்லாம் மங்கலாய்த் தெரிய ஆரம்பித்தது. திடீரென அழுதேன். எதையோ நினைத்து சிரித்தேன். என்ன செய்தும் தூக்கம் மட்டும் வரவில்லை. எல்லாம் மங்கலாய். புகை… கண்ணைச் சுற்றியும் என்னைச் சுற்றியும் புகை.
*
நான் நிர்வாணமாய் ஓடத்தொடங்கிய காலங்களில் அந்த இரட்டைப்பலா மரத்தடியில்தான் சங்கிலியில் பிணைத்திருந்தார்கள். அந்த சங்கிலி ஐந்து வருட நீளமாயிருந்ததை நான் கண்ணிமைக்குள் அறிந்தேன்.
அதன்பிறகு நடந்த சம்பவங்கள் எல்லாம் வேறொரு தளத்தில் வேறொரு உலகத்தில் நடந்தவை. மங்கலானவை. வேறொருவர் அறியாதவை. நானே எனக்கு சாட்சியாய் நின்றவை.
*
“கட்டமண்ணாப் போவும்”
கூன் விழுந்த கிழவி ஒருத்தி சாபமிட்டுக் கொண்டிருந்தாள். நான் ஒரு மைதானத்தில் தனியே நின்றிருந்தேன். என்னைச் சுற்றிலும் தவளைகள் தாவிக் கொண்டிருந்தன. ஒன்றல்ல ஒரு நூறு இருக்கும். கிழவி தவளைகளை வாரி வாரித் தின்றாள்.
“மாக்கான் நல்ல ருசிட்டி தின்னுதியா?’’
நான் தலையசைத்து மறுக்க யத்தனித்தேன் இயலவில்லை.
“இஞ்ச பாருட்டி கொடலு இஞ்ச பாருட்டி ஈரலு நல்ல ருசி தின்னுதியா?’
இப்போது அவள் கைகளில் வேறு எதோ மிருகத்தின் மாமிசம். நான் மீண்டும் தலையசைத்தேன். அந்த இடத்திலிருந்து பறந்து போக முயன்றேன். கால்கள் சற்று உயர எழும்பின. நான் பறந்தேன். கொஞ்ச உயரம். பறக்க முடியவில்லை. கைகளை வேக வேகமாக அடித்துக் கொண்டேன். அவ்வளவுதான். கிழவி சிரிக்கும் சத்தம் கேட்டது.
“பாட்டியே சிரிச்சாதிங்க”
நான் கெஞ்சிக்கொண்டேயிருந்தேன். கிழவி வசைகளை ஆரம்பித்தாள். நான் மௌனமானேன்.
என்னைச்சுற்றி கயிறுகள் நடனமாடத் தொடங்கின. பல நிறக் கயிறுகள். ஒவ்வொரு கயிறும் என் முகத்தருகே வந்து யாசிப்பது போல் ஒரு நொடி நின்று நின்று நடனமாடின. திடீரென அந்த கயிறுகளுக்கு முகம் முளைத்தது. கூர்ந்து பார்த்தேன் அது என் முகம். எல்லாக் கயிறும் நானே.
கிழவியைக் காணவில்லை.
நூறு அறைகள் கொண்ட பழைய வீடு. நான் ஒவ்வொரு அறையாய் ஓடுகிறேன். என்னைச் சுற்றிலும் கூந்தல்கள் பறந்துகொண்டிருந்தன. கயிறுகள் போலவே பல வண்ணங்களில் பல வடிவங்களில். என் நிர்வாணத்தை கூந்தல்களைக் கொண்டு மறைக்க முனைந்தபோதெல்லாம் ஓர் அசரீரி தடுத்தது.
திரவமும் இல்லாத திடப்பொருளும் இல்லாத நீர்ம வடிவில் அந்த சூடடிக்கும் களத்தில் நான் ஒரு உருண்டையாகக் கிடந்தேன். வெயில் கொதித்துக் கொண்டிருந்தது. நான் நல்ல வெள்ளி நிறத்தில் மினுங்கிக்கொண்டிருந்தேன். சற்றைக்கெல்லாம் எங்கிருந்தோ வந்த ஒரு சிறுமி என்னை உருட்டி விளையாடினாள். களத்தின் நடுவே வந்ததும் நான் திடீரென இரண்டாகப் பிளந்தேன். அவள் விடவில்லை இப்போது அவளுக்கு விளையாட இரண்டு பந்துகள். மறுபடியும் உருட்டினாள். நான் நான்காகப் பிளந்தேன். அந்தி சாயும் நேரத்தில் களம் முழுதும் நான் ஆயிரம் உருண்டைகளாக சிதறிக் கிடந்தேன். சிறுமி என்னைக் கைவிட்டு தூரமாய் நகர்ந்தாள்.
“பிள்ளா என்னப் பிடிச்சி உருட்டி வச்சிட்டு போ”
நான் கத்திக்கொண்டேயிருந்தேன்.
வெள்ளை நிறக் கட்டடம் பிணமும் நிணமும் கலந்தொரு நாற்றம். மோட்டுவளையைப் பார்த்தபடி என்னைக் கிடத்தியிருந்தார்கள். நான் அங்கிருந்த நாட்களிலெல்லாம் கூரையைப் பார்த்தபடியே நாட்கள் கழிந்தன. முதலில் மஞ்சள் நிறத்தில் ஒரு பொத்தானைக் கொடுத்தார்கள். கூட அருந்த கொஞ்சம் நீரும். பொத்தான் வயிற்றுக்குள் போனதும் என் கண்கள் மூடிக்கொண்டன.
கன்னத்தை தட்டி ரத்தக்கறை நிறத்திலொரு பொத்தானைக் கொடுத்தார்கள் அது வயிற்றுக்குள் போவதை கண்ணாடிபோல் என்னால் காண முடிந்தது. பொத்தான் வயிற்றுக்குள் போனதும் பேசத் தொடங்கியது. ஆச்சரியமாக அதன் குரல் என் அப்பாவின் குரலை ஒத்திருந்தது.
“குட்டே மக்கா நல்லா ஒறங்கு”
நான் என்னை அறியாமல் தூங்கிப் போனேன்.
வெள்ளைக் கட்டடம் எனக்கென ஓர் அறையை ஒதுக்கியிருந்தது, நான்கு பக்கமும் வளைவான அறை. நான் ஒரு வட்டத்துக்குள் இருந்தேன். எனக்கான படுக்கையில் ஆணிகளைப் பரத்தி இருந்தார்கள். அதன் மேல் சில நேரம் தீக்கங்குகளைத் தூவிச் செல்வார்கள் சிப்பந்திகள். ஒரு மாதம் சென்றிருக்கும் என் பின்புறம் ஒரு குழி தோன்றியிருந்தது. படுக்கைப் புண் என்றார்கள். என் ஒருபக்க எடை குறைந்திருந்தது. நான் நடக்கையில் ஒரு பக்கமாய்ச் சாய்ந்து நடந்தேன்.
“நோவுதுடியே அம்மோவ்”
நான் தீனமாய் அழுதேன். நோய்மையின் மஞ்சள் நிற நாய் ஒன்று என் மேல் மூத்திரம் பெய்துவிட்டுப் போனது.
தேவதைகள் உலகில் அடுத்த மாதம் கழிந்தது. என் கையின் மறுபக்கம் ஒரு திரவ போத்தல் சொருகப்பட்டிருந்தது. புகைமண்டலம். தேவலோகம். பெண் தெய்வங்கள். நீலம் தோய்ந்த வெள்ளை தொங்கு சீலைகள். யாரேனும் அந்த தேவலோகத்தில் நடமாடிக்கொண்டேயிருந்தார்கள். போத்தலில் பல வண்ணத்தில் திரவங்கள் மாறிக்கொண்டேயிருந்தன. நான் மிதந்து மிதந்து அமிழ்ந்துகொண்டேயிருந்தேன். ஒருநாள் என்னைச் சுற்றி என் உடன்பிறப்புகள் அமர்ந்து பாடிக்கொண்டிருந்தார்கள். சின்னவன் குரல் உயர்த்திப் பாடினான்.
“தேவனே நான் உமதண்டையில் இன்னும் நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்”.
எல்லோரும் உடன் பாடினர். நெடு நாட்களுக்குப் பிறகு நான் மலர்ச்சியாய்த் தூங்கினேன்.
ஒரு இருட்டுத்திரி எரிந்துகொண்டிருந்த விளக்கைக் கண்டேன். இருள் சுடர். அதை நான் எங்கோ பார்த்திருக்கிறேன். கருத்த சுடரின் ஓரங்களில் மினுமினுப்பு. கருத்த வெளிச்சம் அந்த இடத்தை நிரப்பியிருந்தது. ஓடுதளம் ஒன்று அந்த வெளிச்சத்தில் இருந்தது. நான் அதில் ஏறி நின்றேன். ஒரு கீச்சொலி கேட்டது. என் கால்கள் ஓடத்தொடங்கின. பிறகு தொடர்ந்து கீச்சொலிகள். அந்த ஓடுதளம் நின்ற இடத்தில நின்றது போலிருந்தது. ஆனால் சுற்றியிருந்த காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. எல்லாம் தலைகீழாக.
மரங்களின் வேர்கள் மேல்நோக்கி நின்றன. பறவைகள் மல்லாக்கப் பறந்தன. விலங்குகள் முதுகுகொண்டு நடந்தன. அந்த காட்சிகளில் மானுடப் படைப்புகள் எதுவும் இல்லை. கீச்சொலி நின்றது. காட்சிகள் மறைந்தன. நான் மெல்லிய குரலில் முனங்கினேன்.
“சர்த்தல் வார மாரி இருக்குவு. இத்துபோல வெள்ளம் கிட்டுமா?” நூற்றுக்கணக்கான ஊசிகளும் பல நிறத்து நூல்களும் வெள்ளை திரைச்சீலை ஒன்றின் மீது தன்னிச்சையாக தைத்துக்கொண்டிருந்தன. யாரோ அவற்றிற்கு கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். பெரும் முரசொலி கேட்க ஆரம்பித்தது. ஊசிகள் நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தைக்கத் தொடங்கின. இப்போது முரசின் அடிக்கு ஏற்ற தாளத்தில். சற்று நேரத்தில் எண்ணிக்கையிலடங்கா பேரிகைகள் முழங்கி பெரும் ஓசை எழலாயிற்று. ஊசிகளின் வேகம் அதிகரித்தது. திரைச்சீலையில் சிலந்திக் கூடொன்றின் வண்ண நூல் உருவம் தோன்றியது.
நான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என் வாய் மெல்ல முணுமுணுத்தது. “வவுறு பவிச்சுவு கொஞ்சோல சக்க தருவியளா?” அந்த குறுமணல் பரப்பில் ஓடிக்கொண்டிருக்கையில் கால்கள் அனிச்சையாய் நின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூட்டுகள் சிதறி மணற்பரப்பெங்கும் வாய்பிளந்து கிடந்தன. அதன் சாவிகள் எங்கெங்கோ கலைந்து கிடந்தன. நான் ஒரு பூட்டைக் கையில் எடுத்தேன். அது திறந்து இருந்தது. அதன் சாவி பறந்து என் கையில் குதித்தது. நான் அதைப் பூட்டினேன். மற்றொரு பூட்டை எடுத்தேன் அது பூட்டியிருந்தது. அதன் சாவி பறந்து வந்தது. அதைத் திறந்தேன். இப்படியாக நூற்றியெட்டு பூட்டுகள், திறந்து பூட்டி மணற்பரப்பைக் கடந்தேன். ஒரு வாசனை மூக்கைத் துளைத்தது.
“எங்கயோ சக்க மணம் வருதே எம்மோவ்”
சோவென ஒரு சத்தம். வயலின் தந்தி ஒன்று இழுபட்டதைப் போல் மற்றொரு சத்தம். மழை. வண்ண மழை. மழையின் வாசனை நாசியை நிரப்பியது. நான் மழையில் இறங்கினேன். ஒரு துளி என் உடலில் பட்டது. எரிந்தது. அமிலம். அமில மழை. உடல் பொத்தலாகாமல் தடுத்தபடி குடைகள் ஆடி மிதந்து வந்தன. நான் குடைக்குள் மறைந்துகொண்டேன். அப்போதுதான் மழைத்துளிகளைப் பார்த்தேன். அவை ரத்த நிறத்தில் தரையில் ஒழுகி ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டேன். வானத்தின் கடவுள்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் சாத்தான் காதருகில் சொல்லிப் போனான்.
“சக்க மரத்துக்கு என்னாச்சு?”
காதருகில் ஒரு பிரார்த்தனைக் குரல். ஆலய மணியோசை. அந்த பிரார்த்தனை ஓசைகள் பெருகின. மொத்த உலகமும் பிரார்த்தித்துக்கொண்டிருந்தது. கூடவே சலங்கையொலி போல சிறு மணியோசை. ஒரு குதிரை வண்டி வந்து நின்றது. சிவப்பு உடை உடுத்த வயோதிகர் பின்பக்க பாரங்களை இறக்கினார். பரிசுப் பொட்டலங்கள். பல வண்ணங்களில் பல வடிவங்களில் பல அளவுகளில். எங்கும் பனிக்குளுமை நான் போர்வைக்குள் என்னைப் பொதிந்துகொண்டேன். குறுக்கும் நெடுக்குமாக ரிப்பன்கள் கட்டப்பட்ட பொட்டலங்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன.
வயோதிகர் சிநேகமாய்ச் சிரித்தார். உனக்குப் பிடித்ததை எடுத்துக்கொள். பனி மான்கள் ஆதரவாய் சொல்லின. என் உடல் சிலிர்த்தது. ஜிங்கில் பெல்ஸ் பாடல் ஒலித்தது.
நான் உறக்கத்தில் சிரித்துக் கொண்டேயிருந்தேன்.
இரவு இடக்கண்ணில் ஒரு மின்னல்.
“ஒரு சக்கச் சொள தருவியளா?’’
இரட்டைப் பலா நின்றிருந்த இடம் மொட்டையாக இருந்தது. அதிகாலையில் மீண்டும் இடது கண்ணில் ஒரு மின்னல் வெட்டு அந்தியில் வலது கண்ணில் ஒரு மின்னல். அனிச்சையாய் நான் தலையைத் தடவினேன். பிறகு உரத்துக் கத்தினேன்.
“ம்மோ இஞ்ச வா! எனக்க முடிய எங்கட்டி? எதுக்குட்டி எனக்கு மொட்டை அடிச்சிய? எடியே எம்மோ இஞ்ச இருந்த எரட்டப்பிலாவுவள எங்கட்டி? எதுக்குட்டி முறிச்சிய?’’
***
சிவசங்கர் எஸ்.ஜே – புனைவெழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியச் செயல்பாட்டாளர். இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். அம்பேத்கர் கடிதங்கள் போன்ற மொழியாக்கங்களைச் செய்தவர். குமரிமாவட்ட பண்பாட்டாய்விலும் ஈடுபட்டு வருகிறார். யாவரும் பதிப்பகம் வாயிலாக யா-ஓ மறைக்கப்பட்ட மார்க்கம் 1&2 வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: prismshiva@gmail.com
காயத்ரியின் வற்புறுத்தலுக்காக வேண்டா வெறுப்பாகத்தான் வந்திருந்தேன். இப்போதெல்லாம் வேலை முடிந்து வந்ததும் சிறு குளியல், நரசுஸ் பொடி மணக்கும் காபியுடன் கொறிக்க மிக்சர் அல்லது கடலை, அதன்பின் போனில் முகநூல், வாட்ஸப், ரீல்ஸ் எனப் பொழுதைக் கழிக்கவே மனம் விரும்புகிறது என்பதால் அலுவலகத்திலிருந்து கூடடைந்த பின் வெளியில் எங்கும் செல்வதில்லை. போன் என்னைக் கெடுத்துவிட்டது என நீங்கள் நினைக்கலாம் இன்னைக்கு உலகத்துல இருக்க அம்புட்டுப் பேரையும் இந்தப் போன்தான் கெடுத்து வைத்திருக்கிறது என்பதே உண்மை, ஏன் உங்களைக் கூட அது தன் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக்கும் என்பதில் எனக்குத் துளியேனும் சந்தேகமில்லை.
சின்ன வயதில் முத்தாளம்மன் கோவில் திருவிழா என்றால் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். செண்பகம் என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னதும் இந்த திருவிழாவில்தான், என்னோட மாமா மகனுக்கே கட்டி வச்சிட்டாங்க நான் என்ன செய்யட்டும் என சிறிதாய் கண்ணீர் சிந்திச் சென்றவள் இதுதான் என்னோட அத்தான் மலரவன் என அவளின் காக்கைக் கலர் கணவனை அறிமுகப்படுத்தியதும் இதே கோவில் திருவிழாவில்தான். அதன்பின் முத்தாளம்மன் மீது எனக்குத் தனிப்பட்ட விதத்தில் ஏற்பட்ட கோபத்தால் கோவிலுக்குச் செல்ல விரும்புவதில்லை. எப்பவும் ஏதாவதொரு காரணம் சொல்லித் தப்பி வந்தவன் இந்தமுறை வயித்துப் பிள்ளைக்காரி கூப்பிடுறா போயிட்டு வந்தாத்தான் என்ன எப்பப் பாரு இந்த போனை நோண்டிக்கிட்டு இருந்தா சீக்குத்தான் வரும் என அம்மா கத்தியதால் கிளம்பி வந்தேன்.
முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு இப்போது அருகில் தரிசாய் கிடந்த வயல்களில் கார், வண்டிகளை நிறுத்த சுத்தம் செய்து டியூப்லைட் கட்டி வைத்திருந்தார்கள். அங்கு காரை நிறுத்திவிட்டு இறங்கினோம். ஓரளவுக்குக் கூட்டம் இருந்தது.. மக்கள் நடமாட்டத்தின் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூசியாக இருந்தது. காயத்ரியின் வயிற்றில் யாரும் இடித்து விடாத வண்ணம் அவளைப் பாதுகாப்பாய் கூட்டிக் கொண்டு போனவன், ‘பாரு ஒரே தூசியா இருக்கு… நாளக்கி வந்திருக்கலாம் கொஞ்சம் கூட்டமில்லாமல் இருக்கும். இன்னைக்கு திருவிளக்குப் பூஜைங்கிறதால கூட்டம் அதிகமாத்தான் இருக்கும், இதுல வந்து உடம்புக்கு ஒத்துக்காமப் போச்சுன்னா என்ன பண்றது’ எனச் சத்தமாகச் சொன்னபோது ‘அதெல்லாம் ஒண்ணும் ஆகாது… நீங்க வாங்க’ என்றபடி நடந்தாள்.
‘செல்லாத்தா செல்ல மாரியாத்தா’ என எல்.ஆர்.ஈஸ்வரி ஒலிபெருக்கியில் அதிக சப்தமில்லாமல் பாடிக் கொண்டிருக்க, கோவில் வாசலை அடைந்தபோது கூட்டத்தில் சிலர் செல்லாத்தாவாக மாறி ஆடிக் கொண்டிருந்தார்கள்.
“நீ மெல்லப் போய் சாமியைக் கும்பிட்டு வா… நா இந்தா அந்தப் பக்கம் நிக்கிறேன். வெளிய வந்ததும் எனக்கு மிஸ்டு கால் கொடுத்துட்டு இங்கயே நில்லு நான் வந்து கூட்டிக்கிறேன்” என என் விரதத்துக்கு, கோபத்துக்கு பாதிப்பு வராமல் முத்தாளம்மன் முகத்தைப் பார்க்காமால் ஓரமாய் ஒதுங்கி நிற்க நினைத்துச் சொன்னேன்.
“சாமி கும்பிட வரலையா..? கூட்டமில்லாத இடத்துல எல்லாம் பாதுகாப்பா வந்தீங்க… இங்க விட்டுட்டுப் போறீங்க…” என நக்கலாய் அவள் கேட்க, “நீ போனா அங்க நிக்கிற போலீஸ்கார அம்மாவே உன்னைப் பாதுகாப்பா உள்ள அனுப்பிரும்… போ என்னையக் கம்பல் பண்ணாதே” என்றபோது என் மனசுக்குள் செண்பகம் முத்தாளம்மனாகத் தெரிந்து சிரித்தாள்.
என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்ததே பெருசு. இனியும் வற்புறுத்த வேண்டாம், அப்படி வற்புறுத்தினால் வீணான வாக்குவாதம்தான் வரும் என நினைத்தவள் போனை மட்டும் எடுத்துக் கொண்டு ஹேண்ட் பேக்கை என் கையில் கொடுத்துவிட்டுப் போனாள்.
அப்படியே மெல்ல நடந்து கூட்டமாக இருந்த இடத்துக்குப் போனேன். அங்கே ஒரு குதிரையை ஆட வைத்துக் கொண்டிருந்தார் அந்த நரை விழுந்த மனிதர். அவருக்கு அருகில் ஒரு சிறுவன் மேளம் ஒன்றை அடித்துக் கொண்டிருக்க, இன்னொருவர் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருந்தார். அந்த இசைக்குத் தகுந்தவாறு அந்தக் குதிரை ஆடிக் கொண்டிருந்தது. முதியவரின் உடம்பு எலும்பாகத் தெரிந்தாலும் குதிரை நல்ல சதைப்பிடிப்புடன்தான் இருந்தது. அவரின் முகத்தைப் பார்த்தபோது எங்கயோ பார்த்த ஞாபகம் வர, நெற்றில் தடவி யோசித்தேன்.
சின்ன வயதில் பக்கத்து ஊர் பெரியநாயகி அம்மன் கோவில் குதிரையெடுப்புக்கு இதேபோல் குதிரை கொண்டு வருவதுடன், பொய்க்கால் குதிரை ஆட்டமும் வருடாவருடம் இவர்தான் ஆட்டுவிப்பார், ஆடுவார். எங்கள் பகுதியில் பங்குனியில் ஆரம்பிக்கும் அம்மன் கோவில்களின் திருவிழா ஆடி மாதம் வரை இருக்கும். அதுவரை அவர் சந்தைக்கு அருகில் குடிசை போட்டுத் தங்கியிருப்பார். பெரும்பாலும் எல்லாத் திருவிழாவிலும், செட்டிய வீட்டுத் திருமணங்களிலும் இவர் குதிரையை ஆட்டுவிப்பார். குதிரையெடுப்புக்கு வரும்போது அவர் பக்கத்திலேயே நிற்பதுண்டு, குதிரையைப் பார்க்க என்றாலும் கூட அவருடன் சிநேகமான ஒரு சிரிப்பு இருக்கும்.
அப்போது அவருக்கு வயது நாற்பதுக்குள்தான் இருக்கும், தலை நிறைய முடி வைத்திருப்பார். இப்போது முன் வழுக்கையும் தாடி நிறைந்த முகமுமாய் காலம் அவரை மாற்றியிருந்தது. அவருடன் ஒரு சிறுவன் இருப்பான். அந்தச் சிறுவன்தான் இப்போது நாதஸ்வரம் வாசிப்பவராக இருக்கக் கூடும். ஏறத்தாழ அவரை அன்று பார்த்தது போன்ற உருவம்.
சுற்றிலும் கூட்டம் நிற்க, குதிரையை ஆட விட்டுக் கொண்டிருந்தார். மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடல் முடிந்து, கூடமேல கூடை வச்சு பாட்டுக்கு குதிரை ஆடி சற்று ஓய்வுக்காக அவர் முகம் பார்த்தபோது வாசித்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கையை உயர்த்தினார். வாசிப்பு நிற்கவும் குதிரை ஆட்டத்தை நிறுத்த ,சிறுவன் மேளத்தை வைத்து விட்டு அதன் கயிற்றை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு போய் ஒரு வாளியில் இருந்த தண்ணீருக்கு அருகில் விட்டான். அது குடிப்பமா வேண்டாமா என்பதாய் வாய் வைத்து, பின் எடுத்துப் பெரும் மூச்சொன்றை விட்டு, பல்லைக் காட்டி, சிறிதாய் சப்தம் எழுப்பி மீண்டும் குடித்தது.
ஒலிபெருக்கியின் சப்தம் சுத்தமாகக் குறைக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற இருப்பதாக அவ்வப்போது அறிவிப்பு மட்டும் வந்து கொண்டிருந்தது.
விரித்திருந்த துண்டில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் காசு போட்டு விட்டு நகர, நானும் பத்து ரூபாய் தாளை அதில் போட்டுவிட்டு சற்றே ஒதுங்கிப் போய் அமர்ந்தவரின் அருகில் போய் ‘ஐயா நல்லாயிருக்கீங்களா…?’ என்றேன்.
என்னை ஏறிட்டுப் பார்த்தவர், விளக்கொளியில் சரியாகத் தெரியவில்லை என்பதாலா அல்லது வயதானவர்களுக்கே உரித்தான பார்வையாலா தெரியவில்லை , கையை கண்களுக்கு மேல் இருத்தி, ஒளி மறைத்துப் பார்த்து ‘தம்பி யாரு… தெரியலையே…’ என்றார்.
“ஐயா நான் உங்கள சின்ன வயசுல பாத்திருக்கேன்… நம்ம பெரியநாயகி அம்மன் கோவில் குதிரையெடுப்புக்கு வந்து பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடுவீங்க, குதிரை எடுத்து வரும்போது உங்க குதிரையை முன்னால ஆடவிட்டுக்கிட்டு வருவீங்க. அப்ப உங்க மகனும் இன்னொருத்தரும் வாசிப்பாங்க. இங்க இப்ப நாதஸ்வரம் வாசிச்சவருதானே உங்க மகன்”
“ஆமய்யா… பெரியநாயகி வர தேவதையில்லய்யா… அவளக் கும்பிட்டுப் போனா ஆடி மாசத்து வரைக்கும் அமோகமான சம்பாத்தியம். சாதிச் சண்டை, நீ பெரியவனா நா பெரியவனாங்கிற பணச் சண்டையில குதிரையெடுப்பை நிப்பாட்டிட்டாங்க, அதுக்கு அப்புறம் எங்க பாடும் பெரும்பாடாத்தான் போச்சு. ம்ம்…. என்னத்தைச் சொல்ல… வாழ்க்கை கஷ்ட ஜீவனமாய்த்தான் ஓடுது தம்பி. அன்னைக்குப் பாத்தவங்க இப்ப ஞாபகம் வச்சி எங்கிட்ட வந்து பேசுறீங்க பாருங்க காசு பணத்தைவிட இதைத்தான் ஊருஊராச் சம்பாரிச்சி வச்சிருக்கோம் தம்பி”
“அப்ப நீங்க வச்சிருந்தது வெள்ளைக் குதிரை… நல்ல உயரமா இருக்கும் இல்லையா…”
“ஆமா தம்பி… அது நல்ல உசரம், அரபிக்குதிரையோட வாரிசு… வயசானப்பவும் கொடுக்க மனசில்லாம வச்சிருந்தேன். ஒரு மழை நாள்ல செத்துப் போச்சு தம்பி. இது என்னய மாதிரி குதிரையை ஆட்டுவிக்கிறவருக்கிட்ட வாங்குனதுதான்… ஆனா அம்புட்டு உசரமில்லைன்னாலும் நல்ல அறிவு… சொல்றத அப்புடியே கேட்டுக்கும்… இந்தப் பாட்டுக்கு இதுதான் தாளகதின்னு ஒரு தடவை கயிற்றைச் சுண்டிக் காமிச்சிட்டாப் போதும் அடுத்த முறை கயிறை நாம சுண்ட வேண்டியதில்லை அவுகளே அழகா ஆடிருவாங்க… புத்திசாலி” பெருமையாச் சொன்னார்.
“அன்னைக்கு இதுல கிடைச்ச வருமானம் உங்க குடும்பத்துக்குப் போதுமானதா இருந்திருக்கும்… ஆனா இப்பக் கிடைக்கிறா சொற்பக் காசுல அப்படி இருக்காதுல்லய்யா”
“எங்க தம்பி… இப்ப இதுல அவ்வளவு ஒண்ணும் சம்பாத்தியமில்ல தம்பி. நம்ம பக்கந்தான் கூப்பிடுறாங்க. அதுவும் இப்ப மண்டபங்கள்ல கல்யாணத்தை வச்சி பாட்டுக் கச்சேரி வைச்சிடுறாங்க. மாப்பிள்ளை அழைப்புக்கெல்லாம் ஆடும் குதிரை யாரும் கேக்குறதில்லை. சினிமாவுல ஆடுற மாதிரி ரோட்டுலயும் ஆளுகள ஆட விட்டுக் கூட்டியாராங்க” விரக்தியாய்ச் சொன்னார்.
“ம்…”
“இப்போதைக்கு எங்க பொழப்பு கஷ்ட ஜீவனம்தான் தம்பி. அன்னக்கி வந்தோம் நாங்க ஆடுனோம் குதிரையை ஆட விட்டோம் சொன்ன பணத்தை வாங்குனோம் போனோம்ன்னு இருந்தோம். இப்ப அதிகமா பணமெல்லாம் கிடைக்காது. அதுபோக பெரும்பாலும் கூப்பிட மாட்டாங்க. கூட்டம் கூடுற திருவிழாக்கள்ல நாங்களே குதிரையை ஆட விட்டு, துண்டை விரிச்சி காசு வாங்குறோம். இது கூட கௌரவமான பிச்சைதான் தம்பி” குரல் கம்மச் சொன்னார்.
“இந்த வருமானம் உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கும் அதோட குதிரைக்கும் போதுமானதா இருக்காதே”
“இதுல எப்புடி தம்பி இன்னைக்கு வெலவாசிக்கு கட்டுபடியாகும். அன்னக்கி கஷ்டப்பட்டாலும் பெரியவன ஒரு பத்தாப்பு வரைக்கும் படிக்க வச்சேன். அவனுக்கும் எந்த தெய்வத்தோட புண்ணியமோ பேங்குல பியூன் வேலை கிடைச்சிச்சு. அவனோட சம்பாத்தியத்துலதான் நாங்க ஆறு பேரு வயித்தைக் கழுவிக்கிட்டோம். இந்தா இங்க நாதஸ்வரம் வாசிக்கிறானே இவன் ரெண்டாவது ஆளு. சின்ன வயசுல எங்கூட அதைத் தூக்குனவன் படிக்கலை… கொத்தனார் வேலைக்குப் போவான். கரெண்ட் வேலை பார்ப்பான். ஆசாரி வேலையும் அத்துபடி. வீட்டுல சும்மாவே இருக்கமாட்டான். ஏதாவதொரு வேலைக்குப் போவான். ராத்திரியல்ல இந்த மாதிரி வரும்போது அவனும் வருவான். அவனுக்கு இது தொழில் இல்லை. மனசுக்கு சந்தோசத்தைக் கொடுக்கிற ஒரு வஸ்து. அது இவனோட மகன்… படிக்கிறான்… என்ன படிக்கப்போறேன்னா கலெக்டருன்னு சொல்வான். அதுதான் விதியின்னா மாறவா போகுது. படிப்புல படு கெட்டி, மேளம் வாசிக்கிறதுலயும் கில்லாடி. இப்பல்லாம் எங்க ஊரு பிச்சை கோவில்களுக்கு வாசிக்கப் போகும்போது இவனையும் கூட்டிப் போறான். போன வாரம் திருப்பத்தூர்ல புத்தகக் கண்காட்சியில வாசிச்சி முதல்வர்கிட்ட பாராட்டு வாங்கிட்டு வந்தான்… மேளத்துல இப்ப வர்ற பாட்டுக்கெல்லாம் அழகாத் தாளம் போடுவான்” பெருமையாச் சொன்னார்.
“ஆஹா… திறமை இருந்தா பிழைச்சிக்கலாம்ய்யா… ஆமா உங்க மூத்த மகன் இப்ப உங்க குடும்பத்துக்கு…” மெல்ல இழுத்தேன்.
“ஏந்தம்பி அப்படிக் கேக்குறீங்க… கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்த புள்ளையில்லயா அவன்… இன்னமும் எல்லாரும் கூட்டுக் குடித்தனம்தான். பர்மா காலனி கடைசியில ஒரு இடத்தை வாங்கி, லோனைப் போட்டு வீட்டைக் கட்டிப்புட்டான். அங்கதான் எல்லாரும் இருக்கோம். மருமகப்புள்ள எங்கக்கா மக, இவனுக்கு எம்மச்சினன் மக. அதுனால சண்டை சச்சரவுக்கு வழியில்ல. என்னயத்தான் குதிரையை விக்கச் சொல்லி நின்னான், நிக்கிறான். பதினஞ்சி வயசுல இதோட கயிறைப் பிடிச்சது, அதெப்படி இதை விட்டுட்டு வீட்டுக்குள்ள உக்காந்து காலத்தை ஓட்டுறது, நடைபொடையா இருக்கும் வரைக்கும் இதுதான் நமக்குன்னு விக்கல்லாம் முடியாது, வேணுமின்னா இப்பவே இன்னொரு குதிரை ஒண்ண வாங்கிக் கொடு பழக்கப்படுத்தி வச்சிக்கலாம் இதுக்கும் வலது கால்ல ஏதோ அடிபட்டிருக்கும் போல ஆடும்போதே காலத் தூக்கிருது. நம்ம பொழப்புக்கு வாயில்லா ஜீவன் அதுகளப் போட்டுப் பாடாப்படுத்துறோம் இல்லையா… சர்க்கஸ்ல யானையை சேர்ல உக்கார வைக்கிற மாதிரி, நாயை சைக்கிள் ஓட்ட வைக்கிற மாதிரித்தானே இதுவும். இப்படி ஆடணும்ன்னு அது தலையெழுத்து… இல்லையா..”
“நீங்க சொல்றது சரிதாய்யா… இப்பல்லாம் இதெல்லாம் குறைஞ்சிக்கிட்டுத்தானே வருது… அப்புறம் எதுக்கு இன்னொரு குதிரை உங்க மகன் சொன்னது மாதிரி இதெல்லாம் வித்துட்டு வீட்டுல ஓய்வெடுக்கலாமுல்ல”
“ஆடுன உடம்பு எப்புடி தம்பி ஓய்வெடுக்கும். இப்ப எல்லா ஆட்டத்துக்குமே மவுசு போச்சு தம்பி. கரகாட்டம், நாடகமே அரிதாகிப் போன காலத்துல பொய்க்கால் குதிரை ஆட்டமெல்லாம் போன இடம் தெரியல. எங்களுக்கு கூட ஒருசில ஊர்கள்லதான் இன்னமும் வாய்ப்பு கிடைக்குது புதுசா எதுவும் கிடைக்கிறதில்லை. முன்ன மாதிரி மக்கள் ராவெல்லாம் முழிச்சி எதையும் பாக்க விரும்புறதில்லை. எல்லாத்தையும் கையில வச்சிருக்க போனுக்குள்ள கொண்டு வந்துட்டாங்க. அதுல நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு. எல்லாத்தையும் பாக்க முடியுதுல்ல. கரகாட்டத்தையெல்லாம் ஆளுகளைப் பாக்க வக்கிறேன்னு வக்கிரமா மாத்தி மொத்தமா எடுத்து வச்சி மூடிட்டாங்கள்ல. பல ஊர்கள்ல கரகாட்டத்துக்கு போலீஸ் அனுமதியே இல்லைன்னு சொல்லிட்டாங்க. சமீபத்துல எங்கயும் கரகாட்டம் வைக்கக் கூடாதுன்னு அரசாங்கமே சொல்லியிருக்குன்னு பேச்சு வந்துச்சு… பாவப்பட்ட சனங்க… அதுக வாழ்க்கை அதுலதானே… இப்ப என்னவோ அனுமதி வாங்கி, இத்தன மணிக்குள்ள முடிச்சிக்கணும்ன்னு சொல்லியிருக்காங்களாம்… பொழச்சிப் போகட்டும். கரகாட்டத்துக்கு இம்புட்டுக் கட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன… கொச்சையாப் பேசுறது மட்டுமில்ல தம்பி, நாலு சுவத்துக்குள்ள நடக்குறதை தெருவுல நடத்திக் காட்ட ஆரம்பிச்சதுதானே. அதுல படிக்கிற சின்னப் பயலுகள ஆபாசமா ஆடவிட்டு, அவனுக எட்டிக்கிட்டு எங்க எங்கயோ புடிக்கிறானுக… அன்னக்கி ஒரு நாடகத்துல சின்னப் பயல பபூனுக்குப் பழக்குறானுங்களாம்… அவங்க அம்மா வயசுல்ல டான்ஸ்காரிக்கிட்ட அவ்வளவு ஆபாசமாப் பேசுறான். நம்ம சனங்க கைதட்டுதுக… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, எந்திரிச்சி வந்துட்டேன். காலம் கெட்டுப் போச்சு தம்பி. அன்னக்கி நாடகம் நடத்த செலவான தொகையை இன்னைக்கு ராஜ நடிகருக்கு கொடுக்கணும். அதிகமாச் செலவு பண்ணி கூட்டமே இல்லைன்னு பாதி ராத்திரியில நிப்பாட்டுறதுக்கு எதுக்கு அதை வைக்கணுமின்னு முடிவு பண்ணிடுறாங்க.”
அவர் சொல்வது சரியெனத் தெரிய தலையை ஆட்டினேன்.
அம்மனுக்கு அபிஷேகம் ஆவதை மணியோசை சொன்னது.
“எல்லாக் கலையையும் அழிச்சிட்டோம் தம்பி, உங்களுக்குத் தெரியுமான்னு தெரியலை முன்னெல்லாம் நம்ம பக்கம் ஒயிலாட்டம்ன்னு ஒண்ணு வைப்பாங்க. ராமாயணக் கதையைச் சொல்லி கையில கர்ச்சீப் மாதிரி ஒரு வெள்ளைத் துணியை வச்சிக்கிட்டு ஆடுவாக. பாக்க நல்லாயிருக்கும். அதெல்லாம் இப்போ எங்கே…? அந்தக் கலைஞர்கள் என்ன ஆனாங்க..? அந்தக் கலையையே தொலச்சிட்டோமுல்ல. அதே மாதிரித்தான் கரகாட்டம்… மெல்ல மெல்ல அழிஞ்சிக்கிட்டு வருது. இனி எங்கயும் வைக்கக் கூடாதுன்னு சொன்னதை மாத்திக்க மாட்டேன்னு அரசு சொல்லியிருந்தா அந்தக் கலைஞர்களோட வாழ்க்கை என்னாகும்..? அதை யாரும் யோசிக்கமாட்டோம். அவங்களை மறந்திருவோம். நீங்க யோசிச்சிப் பாருங்க… நீங்க சின்ன வயசா இருக்கும் போது ஊரு ஊருக்கு ரிக்கார்ட் டான்ஸ்ன்னு வந்து பாட்டுப் போட்டு ஆடி, அரிசி, புளி, பருப்பு, பழைய துணிகன்னு கொடுக்கிறதை வாங்கிட்டுப் போவாங்க. அவங்கள்லாம் இப்ப வர்றதேயில்லை இல்லையா. அது மாதிரித்தான் மண்டமணிக்காரங்க, பனையரம்மா, குடுகுடுப்பைக்காரங்க, அழகர் மாட்டுக்காரங்க, ஏலத்துல துணி விக்கிறவங்க இப்ப நிறைய காணாமலே போயிட்டாங்களா இல்லையா… அப்படித்தான் எல்லாமே… கொஞ்ச நாள் பேசுவோம்… அப்புறம் மறந்துருவோம்.”
புரிந்ததாய் தலையாட்டினேன்.
“இந்தா இங்க நாளைக்கு அம்மன் பவனிக்குத்தான் எங்களை வரச்சொன்னாங்க… வேற வேலையில்லை, சரி மொதநாளே போனா அங்குன ஏதாச்சும் சம்பாதிக்கலாமேன்னு வந்தோம். அஞ்சு பாட்டுக்கு ஒரு தடவை குதிரைக்கும் எங்களுக்கும் ஓய்வு விட்டுப்போம். எழு மணிக்கு ஆரம்பிச்சோம் மூணு ரவுண்டு முடிச்சிருக்கோம்… ஒரு மூன்னூறு ரூபாயாச்சும் கிடைச்சிருக்கும். குதிரைக்கு தேவையானதெல்லாம் கொண்டு வந்திருக்கோம். எங்களுக்கு எப்படியும் சாப்பாடு கிடைச்சிரும் அப்ப இது லாபந்தானே. நாளைக்கு பேசுன தொகையைக் கொடுப்பாங்க. அப்ப இங்க வந்ததுக்கு எங்களுக்கு ஒரளவு நல்ல வருமானம் கிடைக்குமுல்ல”
“ம்.. இருந்தாலும் வீடு, வேலை, படிப்புன்னு வாழ்க்கை மாற்றத்தை நோக்கிப் போனதுக்கு அப்பறம் எதுக்கு இப்படி..?”
“அதான் சொன்னேனா… இதுதான் எங்களுக்கு சோறு போட்டுச்சு, இதுதான் எங்கள வாழ வச்சிச்சு, இதுதான் என் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்துச்சு, என்னோட வாரிசுகளை படிக்க வச்சிச்சி… அப்புறம் இதை எப்படி தம்பி விடமுடியும்… இந்தா இங்க வந்தோம், நாலு தெரிஞ்ச சனங்களைப் பார்த்தோம்… உங்களமாதிரி ஆளுகளோட பேசுனோம். இது கூட ஒரு சந்தோசம்தானே… இல்லையா..?”
“ம்”
“இன்னொன்னு தம்பி… அன்னைக்குத் திருவிழாக்கள் எல்லாம் எல்லாரும் கூடி மகிழக் கொண்டாடினாங்க… அதுல அந்நியோன்யம் இருந்துச்சு, ஆனந்தம் இருந்துச்சு, குறிப்பா வருசம் பூராம் உழைச்ச களைப்பு நீங்கி உடம்புக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்துச்சு. தங்களுக்கு பாதுகாப்பா, வாழ்வுக்கு வளமளிக்கிற தெய்வத்துக்கு அவங்க சிறப்பு செஞ்சாங்க, அந்தத் தெய்வங்கள் எல்லாம் குளிர்ந்து அடுத்த வருசம் இன்னும் நல்ல மழை பெய்ய வச்சி விவசாயத்தை பெருக்குச்சுக… இன்னக்கி திருவிழாக்கள் எல்லாம் கடமைக்காய் மாறிப்போச்சு. பல கிராமங்கள்ல வீடுக மட்டும் பூட்டிக் கிடக்கலை கோயில்களும்தான். அன்னைக்கு செவ்வாய் வெள்ளி சாம்பிராணி போட்டுக் கும்பிட்ட மாதிரி இன்னக்கி எங்கயும் இல்லை. திருவிழாவுக்கு வர்றாங்க கொண்டாடுறாங்க பூட்டிப் போட்டுட்டுப் போயிடுறாங்க… மனுசங்களே குடியிருக்காத ஊருகளுக்குள்ள தெய்வம் மட்டும் எப்படி இருக்கும்…? கல்லுதான் இருக்கும் அதான் இன்னக்கி மனுசங்க மனசு கல்லாகிப்போச்சு. எவனாச்சும் ஒருத்தன் அடிபட்டுக் கிடந்தா என்னாச்சோ ஏதாச்சோன்னு பதறித் தூக்கிட்டு ஓடுன காலமெல்லாம் மலையேறிப் போச்சு தம்பி. இப்பல்லாம் அதைப் போட்டோ புடிச்சி, போனுல போடுற காலமாகிப்போச்சு… இன்னக்கி இருக்க மனுசங்க உணர்வுகள் செத்துப் போனவங்களா மாறிப் போயிட்டாங்க தம்பி. வீட்டுல ஆளாளுக்கு தனித்தனி உலகம்… சிரிப்பு… யாரும் யாரோடவும் பேசுறதில்லை… எங்கயும் ஒண்ணாக் கிளம்பிப் போறதில்லை… எப்பவும் போனு… பெரியவங்ககிட்ட ஆறுதல் வார்த்தையெல்லாம் பேசுன காலம் இப்ப இல்லை. ஒரே வீட்டுக்குள்ள அப்பனும் மகனும் பேசி வருசமாயிப் போச்சுன்னு சொல்றதெல்லாம் கேக்கவே ரொம்ப வருத்தமாயிருக்கு தம்பி”
எனக்கு சுருக்கென்றது. என் உலகம் போனுக்குள் சுருங்கி விட்டதையும் வீட்டில் யாருடனும் சிரித்துப் பேசியதில்லை என்பதையும் அப்போது உணர்ந்தேன்.
“தம்பி… இனி வரும் காலத்துல திருவிழாக்கள் எதுவும் இருக்காது. கிராமங்களோட பெருமையே சிறு தெய்வங்கள்தான்… பேச்சி, முத்தாளம்மன், நாகர், கருப்பர், முனியய்யா, ஒண்டி வீரன், காளி, மாரி, பாம்பரம்மா, பரமேஸ்வரி, உளிவீரன், அய்யனாருன்னு எம்புட்டுச் சாமிய ஊரு ஊருக்கு இருக்கும் தெரியுமா…? மரத்தைக் கும்பிடுவான்… கல்லைக் கும்பிடுவான். இப்ப அதெல்லாம் எங்க போச்சு தம்பி. எத்தனை சிறு தெய்வத்தை தொலைச்சிட்டோம் தெரியுமா..? மாரியும் காளியும் கருப்பனுந்தான் இன்னக்கி ஊருகள்ல இருக்காங்க, மத்ததெல்லாம்..? மரத்துலயும் கல்லுலயும் இருந்ததெல்லாம் இடம் தெரியாமப் போயிருச்சா இல்லயா… அப்படித்தான் தம்பி வரும் காலத்துல எல்லாத்தையும் இழந்துருவோம். சிறு தெய்வங்கள், புடைப்புத் தெய்வங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா காணாமப் போயிரும் தம்பி. வருமானம் வர்ற கோவில்கள்ல காசு கொடுத்துப் பாக்குற தெய்வங்கள் மட்டுந்தான் இருக்கும். நேருக்கு நேரா நின்னு நாம பேசுன, சண்டை போட்ட, கட்டிப் புடிச்சிக் கொஞ்சுன சிறு தெய்வங்கள் எல்லாம் காணாமலே போயிரும். எல்லாத்தையும் இழந்த மாதிரி அதுகளையும் நாம இழந்திருவோம் தம்பி” என்றபடி வெற்றிலையுடன் புகையிலையை வைத்துச் சுருட்டி வாயில் அதக்கிக் கொண்டார்.
“உண்மைதான் ஐயா… நீங்க சொன்னதெல்லாம் இப்ப அப்படித்தான் இருக்கு… எங்க ஊர்லயே நிறைய சிறு தெய்வங்கள் போன இடம் தெரியல. இப்ப இருக்க தலைமுறை ஊருக்கே வர்றதில்லை. அவங்களுக்கு நாகரைத் தெரியுமா..? வில்லுக்கம்பு வெள்ளச்சாமியைத் தெரியுமா..? இல்லை பனங்காட்டுக் கருப்பனைத்தான் தெரியுமா..? வரமளிக்கும் வனப்பேச்சியைத் தெரியுமா..? எல்லாமே போச்சுங்க”
“திருவிழாக்கள், கலைநிகழ்ச்சிகள், சிறு தெய்வங்கள்ன்னு எல்லாத்தையும் இழந்த நாம இப்ப உறவுகளையும் உரிமைகளையும் இழக்க ஆரம்பிச்சிருக்கோம் தம்பி. வாழ்க்கை ஒரு தரம்தான் அதுல எத்தனை சண்டைகள், சச்சரவுகள்… பேச்சுவார்த்தை அத்துப் போய்… உறவு முறைகள் தெரியாம அடுத்த தலைமுறையை நாம போனுக்குள்ளயும் டிவிக்குள்ளயும் வளக்குறோம். வெளியில ஓடி ஆடுன காலமெல்லாம் இப்ப இல்லை… போனுலதான் விளையாட்டு. எல்லாரையும் சோம்பேறி ஆக்கிட்டோம்… வீட்டுக்குள்ள் சண்டைக்காரங்க மாதிரி வாழுறோம்… எழுத்தைக் குறைச்சோம், இப்போ பேச்சையும் குறைச்சிட்டோம்… எல்லாத்தையும் நாசமாக்கிட்டு நாம நல்லாயிருக்கோம்ன்னு நினைச்சிக்கிறோம். காரும், வீடும், பணமும் இருந்தா அது நல்ல வாழ்க்கையா தம்பி. இல்ல தம்பி இல்லவே இல்லை… உறவுகள் வேணும், அடுத்தவனுக்கு ஒரு துன்பமுன்னா ஆதங்கப்படுற உணர்ச்சி வேணும்… இதெல்லாம் இல்லாம வாழ்ந்து என்ன புண்ணியம் தம்பி” வெற்றிலை எச்சிலைத் துப்பினார்.
மிகப்பெரிய விசயத்தை சாதாரணமாய் அவர் பேசியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவர் எனக்கு ஊர் காக்கும் அய்யனாராகத் தெரிந்தார். கையெடுத்துக் கும்பிட்டேன்.
அவரின் பேரன் “அய்யோவ் வா… இன்னம் ஒரு தடவை” எனக் கூப்பிட எழுந்து வேஷ்டியை அவிழ்த்துக் கட்டிவிட்டு, வெற்றிலையைத் துப்பி, வாயைக் கொப்பளித்துத் தண்ணீர் குடித்தவர் என்னிடம் “கடைசியா ஒண்ணு சொல்றேன் தம்பி… நாம வாழப் பிறந்த இந்த வாழ்க்கை ஒரு தரம்தான் என்பதை உணர்ந்து எதிரெதிரா நிக்கிற சொந்தத்தை எல்லாம் இனிமேலா பிறக்கப்போறோம் எனக் கட்டி அணைச்சி வாழக் கத்துக்கிட்டா இந்த வாழ்க்கை இன்னும் சிறப்பாகும் தம்பி. இந்த குதிரை ஆட்டமெல்லாம் என்னோட ஆட்டத்தோட போயிரும் தம்பி… இதுக்கெல்லாம் இனி மவுசு இருக்காது தம்பி. எல்லாம் மாறிடும். என்னைய அடையாளம் தெரிஞ்சி பேச வந்தீங்க ரொம்ப நேரமா என்னென்னமோ பேசிட்டேன். யார்க்கிட்டயாச்சும் கொட்டணும்ன்னு தோணுறப்போ நமக்கு நெருக்கமான ஒருத்தர் வந்தா கொட்டிருவேன் தம்பி. இதே மாதிரி பல ஊர்ல கொட்டியிருக்கேன்… விதைச்சதெல்லாம் எங்கயாச்சும் ஒரு இடத்துல முளைவிட்டாக்கூட போதும் தம்பி… சரி இன்னொரு ஆட்டம் போட்டுட்டு வர்றோம். நாளக்கி இங்கதான் இருப்போம், வந்தா ரெண்டு வார்த்தை பேசிட்டுப் போங்க”
“சரிங்கய்யா… கண்டிப்பா நாளைக்கு வர்றேன். இந்தாங்க இதை குதிரைக்கு கொள்ளு வாங்க வச்சிக்கங்க” என்றபடி பணத்தை நீட்ட, “அதெல்லாம் இருக்கு தம்பி. இம்புட்டு நேரம் பேசுனதுக்கா” எனச் சிரித்தவரிடம் “அதெல்லாம் இல்லைங்கய்யா… இருக்கட்டும்” என அவரின் கையில் வைத்துத் திணித்துவிட்டு நகர, காயத்ரி மிஸ்டு கால் கொடுத்தாள்.
இனி வீட்டில் போனுக்கு ஒதுக்கும் நேரத்தையெல்லாம் எல்லாருடனும் பேசுவதற்கு ஒதுக்க வேண்டும் என மனசுக்குள் நினைத்தபடி கோவில் வாசலை நோக்கி நடந்தேன்.
‘கூப்பிட்டா ஓடி வருவாளா’ என ஒலிபெருக்கி பாட ஆரம்பித்தபோது ஏனோ பல வருடங்களாக பேசாத தங்கை செல்லநந்தினி ஞாபகத்தில் வந்தாள்.
***
பரிவை சே.குமார் – தற்பொழுது பணி நிமித்தம் அபுதாபியில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு எதிர்சேவை வெளியாகியது. இரண்டாவது தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டது. இவரது சிறுகதை ஒன்று யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய க.நா.சு சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது. தொகுப்பின் பெயர் “கொரோனா காலம்”.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி ஈரானில் நடைபெறும் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் அங்கு நடைபெறும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான முன்னறிவிப்பு என்கிறார்.
மூலம்: ஓர்லி நோய் | அக்டோபர் 6, 2022 -இந்த கட்டுரை லோக்கல் கால் (Local Call) இதழுடன் இணைந்து வெளியிடப்பட்டது.
செப்டம்பர் 29, 2022 அன்று, மெல்போர்னில், ஈரானியப் போராட்டங்களுக்குத் துணை நிற்கும் வகையில் ஒரே வாரத்தில் இரண்டாவதாக இன்னொரு பேரணிக்காக மக்கள் ஒன்று கூடினார்கள். (Matt Hrkac/CC BY 2.0)
சமீப வாரங்களில் ஈரானில் பொங்கி எழுந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து வெள்ளம் போல் வெளிவரும் புகைப்படங்கள், காணொளிகளோடு சேர்ந்து எண்ணற்ற கொத்துக்குறிகளும் (hashtags) வந்துள்ளன. அவற்றுள் முதன்மையானது, #மஹ்சா_அமினி — 22 வயதான குர்தியப் பெண்ணின் பாரசீகப் பெயர் (அவரது உண்மையான குர்தியப் பெயர் ஜினா/ஜினா அமினி), அவர் செப்டம்பர் 14 அன்று “முறையற்ற வகையில் ஹிஜாப்” அணிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் ஈரான் அரசின் “அடக்கமிகு காவல்துறையால்” கொடூரமாகக் கொல்லப்பட்டார், அதுதான் தற்போதைய போராட்ட அலையைத் தூண்டியது.
மற்ற கொத்துக்குறிகளில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தது, “பெண், வாழ்க்கை, சுதந்திரம்” (“زن, زندگی, آزادی”), குர்தியப் பெண்ணிய இயக்கங்களால் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட இந்த முழக்கம், பின்னர் ஈரான் முழுவதும் போராட்டங்களின் பிரபல மந்திரமாக மாறியுள்ளது.
பெண்களின் உரிமைகளுக்கும் விடுதலைக்கான மக்கள் போராட்டத்திற்கும் இடையே உள்ள நேரடித் தொடர்பு ஈரானில் நடைபெறும் பொது உரையாடலில் புதிதல்ல. பல வழிகளில், பெண்களின் உரிமைகள் – மற்றும் அவற்றின் மீறல் மீதான அணுகுமுறை, பெரும்பாலும் – 1979-இல் அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இஸ்லாமியக் குடியரசுக்குப் பெரும் லிட்மஸ் சோதனையாகவே மாறியுள்ளது. அதே காரணத்திற்காகவே, இஸ்லாமியப் புரட்சிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே அந்நாட்டில் எழுந்த பெண்கள் இயக்கங்களின் வரலாற்று வேர்களிலிருந்து ஊக்கம் பெற்று நடைபெறும் ஈரானியப் பெண்களின் இப்போராட்டம், இந்த அரசின் கீழ் இது வரை நிகழ்ந்த மக்கள் போராட்டங்களிலேயே மிக உறுதியானதும் தைரியமானதுமாக இருக்கிறது, .
பெண்களின் இப்போராட்டம், அச்சமின்மைக்கும் எதிர்ப்புணர்வுக்கும் அடையாளங்களாக விளங்கும் முன்மாதிரியான ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. நீண்ட காலச் சிறைவாசம் அனுபவித்த (இன்றும் சிறையில்தான் இருக்கிறார்), சிறையில் இருந்த ஒரு காலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட, மனித உரிமை வழக்கறிஞரும், ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் கருத்துச் சுதந்திரத்துக்கான சகரவ் பரிசை வென்றவருமான நஸ்ரின் சொட்டூடே; 2009-ஆம் ஆண்டு “பசுமை அலை” போராட்டத்தின் போது கொல்லப்பட்ட இளம் பெண் நேதா ஆகா-சொல்டான், இவரின் சாவின் புகைப்படங்கள்தாம் இப்போதைய போராட்டங்களின் அடையாளமாக மாறியிருக்கின்றன; சிறையில் கணிசமான காலத்தைச் செலவிட்டு, பெண் அரசியல் கைதிகளைச் சிறைகளில் தனிமைப்படுத்தும் ஈரான் அரசின் கொள்கையை “வெள்ளைச் சித்திரவதை” என்ற புத்தகத்தில் எடுத்துரைத்த, பத்திரிகையாளரும் மனித உரிமை ஆர்வலருமான நர்கஸ் முகமதி ஆகியோர் இவர்களில் அடக்கம்.
இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்ட பிறகு ஈரானில் நடைபெற்ற பெண்ணியப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவருக்கு இந்தப் பெண்களும் இன்னும் பலரும் பெரும் கடன் பட்டிருக்கிறார்கள்: 2003 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடிதான் அவர்.
1979 புரட்சி வரை, அந்நாட்டில் நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதிகளில் ஒருவரான எபாடி, தெஹ்ரான் மாவட்ட நீதிமன்றத்தின் தலைவராகப் பணியாற்றினார். புரட்சிக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சி பெண்கள் நீதிபதிகளாக இருக்கும் தகுநிலையை நீக்கியது. அதிலிருந்து எபாடி ஈரானில் மனித உரிமைகள் பற்றிய புத்தகங்களை எழுதுவதிலும், ஆட்சியின் பல முக்கிய எதிர்ப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞராகப் பணியாற்றுவதிலும் கவனத்தைத் திருப்பினார். நஸ்ரின் சொட்டூடே, எழுத்தாளர் அப்பாஸ் மரூஃபி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளுக்காகத் தீவிரமாகச் செயல்பட்ட அவரின் மனைவியோடு சேர்த்து ஈரான் அரசின் உளவாளிகளால் கொல்லப்பட்ட தேசக் கட்சித் தலைவர் தரியுஷ் ஃபொரௌஹர் போன்ற அரசால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் ஆகியோர் அவரின் நுகர்வர்களாக இருந்தனர்.
ஈரானிய மனித உரிமை வழக்கறிஞரும் ஆர்வலருமான, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி. (உபயம்)
2003-ஆம் ஆண்டில், எபாடி அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஈரானியரும் முதல் முஸ்லீம் பெண்மணியும் ஆனார். இந்த விருது பின்னர் ஈரானிய அரசால் பறிமுதல் செய்யப்பட்டது, 2009-இல் எபாடி ஈரானை விட்டு வெளியேறி லண்டன் சென்றார், அங்கிருந்துதான் இன்றுவரை ஈரானின் மக்களாட்சிமயமாக்கலுக்காகப் பணியாற்றி வருகிறார்.
பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் எபாடிக்கு என் நேர்காணல் விண்ணப்பத்தை அனுப்பினேன்; இஸ்ரேலிய ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் என்பது ஈரானைவிட்டு வெளியேறியவர்களுக்கும் கூடச் சிறிய ஒன்றில்லை. வியப்பூட்டும் விதத்தில், 24 மணி நேரத்திற்குள்ளேயே அவரிடமிருந்து உடன்பாடு தெரிவித்து விடை வந்தது.
கரகரப்பான தொண்டையுடன் செப். 30 அன்று உரையாடலுக்கு வந்தார் – “இருமிக்கொண்டே பேசுவதற்கு மன்னியுங்கள்,” என்று தொடங்கியவர், “இது இன்று எனக்கு இடைவிடாத நான்காவது நேர்காணல்” என்றார். 75 வயதில், எபாடி ஈரானின் திருப்பங்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார், நாடுகடந்து வாழும் நிலையிலும் தன்னால் முடிந்தவரை மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளிக்க உழைக்கிறார். உறுதியாகவும் இருக்கிறார்: இதுதான் இந்த ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம்.
இப்போது ஈரானில் இருந்து வெளிவரும் புகைப்படங்களையும் காணொளிகளையும் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
எம் தாயகத்தின் இளைஞர்களும் இளைஞிகளும் மிகவும் துணிச்சலாக, அச்சமின்றிச் சமரில் நிற்பது எனக்குப் பெருமிதத்தைத் தருகிறது, ஆனால் ஒரு வேதனையுணர்வையும் அளிக்கிறது. ஏற்கனவே 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுதான் [செப். 30], கிழக்கு மாகாணமான சிஸ்தன் மற்றும் பலுசெஸ்தானின் சஹீதான் நகரில், மக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அங்கிருந்து வரும் காணொளிகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.
சமீப ஆண்டுகளில், தொழிலாளர் உரிமைகள் முதல் விலைவாசி வரை பல்வேறு பிரச்சனைகளுக்காக ஈரானில் நடைபெறும் பல போராட்ட அலைகளை நாம் கண்டுவிட்டோம். தற்போதைய போராட்டங்கள் முன்பு நடந்தவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்டவை என்று நினைக்கிறீர்களா?
நிச்சயமாக, பல வழிகளில். முதலாவதாக, இப்போதைய போராட்டம் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சமூகத்தின் அனைத்து அடுக்குகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இரண்டாவதாக, மிகவும் குறிப்பிட்ட விதத்தில் நடந்த முந்தைய போராட்டங்களைப் போலல்லாமல் – அதாவது, அவர்களுக்குக் கிடைக்காத குறிப்பிட்ட ஏதோவொன்றைப் பற்றி முழக்கம் எழுப்புவதற்காக அனைவரும் தெருக்களில் இறங்கினர் – இந்தப் போராட்டமோ அரசியல் ரீதியானது, பொது மக்கள் ஒற்றைக் கோரிக்கையின் பின்னால் ஒன்றுபட்டுள்ளனர்: இந்த ஆட்சியை அகற்றி, மதச்சார்பற்ற மக்களாட்சியை நிறுவல் என்பதே அது.
ஜூன் 15, 2009 அன்று ஈரானின் தெஹ்ரானில் உள்ள ஆசாதி மற்றும் எங்கெலாப் சதுக்கத்தில் நடைபெற்ற ஈரானிய அதிபர் தேர்தல் பேரணி. (Arash Ashoorinia/CC BY-NC 2.0)
மூன்றாவதாக, முந்தைய அலைகளில், மக்கள் ஓரிடத்தில் கூடுவார்கள், காவல்துறை எளிதாகச் சுற்றி வளைத்து, போராட்டத்தை அடங்கிவிடும். இன்று, மக்கள் தெளிவாகிவிட்டார்கள், ஒவ்வொரு நகரத்திலும், பல சிதறிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இது அடக்குமுறைச் சக்திகளை நீர்த்துப்போகச் செய்வதில் வெற்றி கண்டுவிட்டது.
அரசாங்கத்திடம் போதுமான படைகள் இல்லை, எனவே பாசிஜ் [இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படைக்குக் கீழ்ப்பட்ட ஒரு தன்னார்வப் போராளிக் குழு] படைகளின் ஆதரவைப் பெறுகிறது, அவர்களில் பலர் 18 வயதுக்குட்பட்டவர்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை அடிக்கச் சம்பளம் கொடுத்து அழைத்துவரப்பட்டிருக்கும் குழந்தைகள் கையில் தடிகளுடன் திரிவதைப் புகைப்படங்களிலும் காணொளிகளிலும் நீங்கள் பார்க்கலாம். இது ஒரு சிறுவர் சுரண்டல், நான் இது பற்றி ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்குப் (UNICEF) புகார் அளித்திருக்கிறேன். ஈரான்-ஈராக் போரின் போது (1980-88), ஈரானிய அரசாங்கம் போர்-வன்முறைச் சூழ்நிலைகளில் குழந்தைகளைப் பயன்படுத்தியது போன்றதுதான் இதுவும்.
மற்றொரு தனித்துவமான கூறு என்னவென்றால், போராட்டக்காரர்கள் தைரியத்தோடு தங்களைத் தற்காத்துக் கொள்கிறார்கள். கடந்த காலங்களில், தாக்கப்பட்டாலும் கைது செய்யப்பட்டாலும் வெறுமனே நிற்பார்கள், அதே நேரத்தில் காவல்துறையினரே சாளரங்களை உடைத்து அல்லது சில இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்துவிட்டுப் பழியைப் போராட்டக்காரர்கள் மீது போடுவார்கள். ஆனால் இம்முறை, மக்கள் போராடுவது தங்கள் உரிமை என்று உணர்ந்து போராடுகிறார்கள். இந்த உரிமை சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள், ஈரானியச் சட்டங்கள் ஆகிய இரண்டிலுமே உள்ளது. இது அடக்குமுறைச் சக்திகளை ஒன்றுக்கு இரண்டு முறை சிந்திக்க வைக்கிறது. சில இடங்களில், பொதுமக்கள் காட்டிய வலிமை, படைகளை ஓடச் செய்யும் அளவிற்கு இருந்ததைக் கண்டோம். அவர்கள் மக்களை எதிர்கொள்ளப் பயப்படுகிறார்கள்.
இவை அனைத்தும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கம் இது என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
வேறு சொற்களில் கூறுவதானால், இவை ஆட்சியைச் சீர்திருத்துவதற்கான அழைப்புகள் அல்ல, அதை அகற்றுவதற்கான அழைப்புகள், அப்படித்தானே?
அதேதான். ஏனென்றால் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பை வைத்துக்கொண்டு, ஈரானில் எந்தச் சீர்திருத்தமும் உண்மையான இயலுமை இல்லை. ஈரானிய மக்களுக்கு இது நன்றாகத் தெரியும், பல ஆண்டுகளாக அதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த போராட்ட அலையின் போது [இது டிசம்பர் 2017-இல் கொரசான் மாவட்டத்தில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, அப்போதைய அதிபர் ரூஹானியின் உள் அரசியலுக்கு எதிராகத் தொடங்கியது], மக்கள், “சீர்திருத்தவாதிகளே, பழமைவாதிகளே – கதை முடிந்துவிட்டது” என்று முழக்கம் எழுப்பினர். அந்த நிமிடம் முதல் அந்த முழக்கம் மக்களின் குரலில் நிரந்தரமானது. “சீர்திருத்தவாதிகள்” என்று கொடுக்கப்படும் விளக்கத்துக்கு மக்கள் ஏமாற மாட்டார்கள், ஆட்சியைக் கவிழ்ப்பதற்குக் குறைவான எதற்கும் நிறைவடைய மாட்டோம்.
செப்டம்பர் 29, 2022 அன்று, மெல்போர்னில், ஈரானியப் போராட்டங்களுக்குத் துணை நிற்கும் வகையில் ஒரே வாரத்தில் இரண்டாவதாக இன்னொரு பேரணிக்காக மக்கள் ஒன்று கூடினார்கள். (Matt Hrkac/CC BY 2.0)
‘இந்த ஆட்சி ஹிஜாபைத் தனது கொடியாகப் பார்க்கிறது’ ஈரானில் அடக்குமுறைச் சாம்பலுக்குக் கீழே தொடர்ந்து எரியும் எதிர்ப்பின் கரிகள் இருந்துகொண்டே இருக்கின்றன என்ற உணர்வு உள்ளது, இது அவ்வப்போது மேற்பரப்புக்கு மேலே வெடிக்கிறது. அந்த நிலையான, துணிச்சலான எதிர்ப்புப் போராட்டம் பெண்களால் வழிநடத்தப்படுகிறது. இன்று நாம் காணும் புகைப்படங்களில், பெண்கள் புகைப்படக்கருவிகளுக்கு முன்னால் தங்கள் ஹிஜாபைக் கழற்றி, முகத்தைக் காட்டி, ஆட்சியை எதிர்த்துப் போராடுகிறார்கள். இது அவர்கள் பயத்தை வென்றுவிட்டார்கள் என்ற எண்ணத்தையே தருகிறது.
அதுவேதான். ஈரானியப் பெண்கள் புரட்சிக்குப் பிறகு முதல் நாளிலிருந்தே இஸ்லாமியக் குடியரசை எதிர்த்தனர், ஏனெனில் அவர்கள் முன்பு அடைந்திருந்த அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டனர். இம்முறை அவர்கள் அச்சத்தை முற்றிலுமாகக் கைவிட்டு, ஒடுக்குமுறை சக்திகளின் வன்முறைக்கு எதிராகத் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.
பெண்ணிய எதிர்ப்போடு சேர்ந்து, இஸ்லாமிய ஆட்சியின் முதல் நாளிலிருந்தே ஈரானிய மக்களின் மேசையில் கட்டாய ஹிஜாப் பிரச்சினையும் உள்ளது. 2000-களின் முற்பகுதியில் “கட்டாய ஹிஜாபிற்கு எதிராக ஒரு மில்லியன் கையெழுத்து” என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தின் முதல் ஆதரவாளர்களில் நீங்களும் ஒருவர். தற்போது, சவூதி அரேபியாவிலும் இந்தச் சட்டம் திரும்பப் பெறப்பட்டு விட்டதன் பின்பு, ஈரானில் மட்டுமே இது போன்ற சட்டம் இன்னும் உள்ளது. ஹிஜாப் இஸ்லாமியக் குடியரசின் இப்படியோர் அடிப்படைப் பிரச்சினையாக மாறுவதை நீங்கள் எவ்வாறு விளக்குகிறீர்கள்?
இந்த ஆட்சி ஹிஜாபைத் தனது கொடியாகப் பார்க்கிறது, ஹிஜாப் பிரச்சனையில் ஏதாவது விட்டுக்கொடுத்து விட்டால், மக்களுக்கு மற்ற உரிமைகளையும் வழங்க வேண்டியது வரும் என்று பலமுறை கூறியுள்ளனர். பொதுமக்கள் அதை நன்கு புரிந்து கொண்டுள்ளனர், அதனால்தான் இன்று பெண்களும் ஆண்களும் கட்டாய ஹிஜாபை நீக்க வேண்டும் என்கிறார்கள். பெண்கள் வெற்றி பெற்றால், அது ஈரானின் மக்களாட்சிமயமாக்கலுக்கான முதல் படியாக இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஈரானில் மக்களாட்சி பெண்கள் மூலம் வரும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை, அதனால்தான் இந்த போராட்டத்தில் திரளான பங்கேற்பைப் பார்க்கிறோம்.
நீங்கள் குறிப்பிட்டது போல் இன்று வரை இந்தப் போராட்டம் 70-க்கும் மேற்பட்டவர்களின் உயிரைப் பறித்திருக்கிறது. உங்கள் கருத்துப்படி, இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எந்தளவுக்கு இந்த ஆட்சி தனது வன்முறையில் ஈடுபடத் தயாராக உள்ளது?
கெடுபேறாக, இந்த ஆட்சி எவ்வளவு வன்முறையானது என்பதை ஏற்கனவே ஒன்றுக்கு மேற்பட்ட முறை நிரூபித்துள்ளது. எப்போதும் சிறைவாசம், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றின் மூலமே பொதுமக்களுக்குப் பதிலளித்தது. ஆனால், இம்முறை போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களால் அனைவரையும் சிறையில் அடைக்க முடியாது. எங்கோ ஓரிடத்தில் நின்றுதானே ஆகும். அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி, பல ஒடுக்குமுறைப் படைகள் வெவ்வேறு சாக்குகளைப் பயன்படுத்திக் கிளர்ச்சி செய்தன அல்லது வேலை செய்ய மறுத்துவிட்டனவாம். அவர்களில் பலர் பொதுமக்களுடன் மோத விரும்ப மாட்டார்கள், ஏனென்றால் பொதுமக்கள் வெற்றி பெற்றால், தனிப்பட்ட முறையில் இவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த ஆட்சி நல்ல நிலையில் இல்லை.
செப்டம்பர் 20, 2022 அன்று கெஷவர்ஸ் பெருஞ்சாலையில் ஈரானியப் போராட்டக்காரர்கள். (Darafsh/CC BY-SA 4.0)
இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சிக்கு அடுத்த நாளைப் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறேன். ஈரானிய நண்பர்களுடனான உரையாடல்களில், பல்லாண்டு அடக்குமுறை, உட்போராட்டங்களுக்குப் பிந்தைய ஈரானிய சமூகத்தின் சிதைவின் விலையைப் பற்றி அவர்கள் அதிகம் பேசுகிறார்கள். மறுபுறம், தெருக்களில் பெண்களுடன் ஆண்கள் போராட்டம் நடத்துவதையும், பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் பெண்களுக்கு ஆதரவாக வேலைநிறுத்தம் செய்வதையும் பார்க்கிறோம். ஈரானிய சமூகம் ஒரு புதிய எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளும் பொருட்டு உள் ஒற்றுமையைப் பற்றிக் கொண்டுள்ளதா?
நாம் பேசும் இவ்வேளையில், ஈரானிய மக்கள் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற ஒற்றை விருப்பத்தின் பொருட்டு ஒன்றுபட்டுள்ளனர். ஆட்சி கவிழ்ந்த பிறகு என்ன நடக்கும்? அது பல காரணிகளைப் பொறுத்ததாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கு முன்னால் அது எடுக்கும் விலை என்னவாக இருக்கும், எத்தனை பேரைக் கொல்லும்? ஈரானின் பொருளாதார நிலை எப்படி இருக்கும்? இது அனைத்தும் உள்நாட்டு, பன்னாட்டு சூழ்நிலையுடன் தொடர்புடையது.
ஈரானியப் பெண்களுக்கு ஆதரவாக உலகெங்கிலும் போராட்ட அலைகளைக் காண்கிறோம். பன்னாட்டுச் சமூகத்தின் பங்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இதில் இந்த உலகமே ஈடுபட வேண்டுமா? ஆம் எனில், எப்படி?
மேற்கு நாடுகள் ஈரானிய மக்களுக்கு ஆதரவை அறிவித்தன, ஆனால் எங்களுக்குச் சொற்கள் தேவையில்லை – எங்களுக்குச் செயல்களே வேண்டும். இந்த ஆட்சியின் வன்முறை அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானியத் தூதர்களை வெளியேற்றுவது அல்லது அரசதந்திர உறவுகளைத் தூதரகங்களில் (embassy) இருந்து துணைத் தூதரகங்களுக்குத் (consulate) தரமிறக்குவது அல்லது ஈரானில் இருந்து அவர்களின் தூதர்களைத் திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகள்.
வெளிநாட்டில் வாழும் ஈரானியர்கள் எப்படி? அவர்களுக்கும் இந்த மக்கள் போராட்டத்தில் பங்கு இருக்கிறதா?
நிச்சயமாக! ஆயிரமிருந்தாலும், நாங்கள் ஈரானியர்கள் – வெவ்வேறு காரணங்களுக்காக ஈரானை விட்டு வெளியேறினோம், ஆனால் நாங்கள் அனைவரும் ஈரானியத் தாயகத்தின் மகன்கள், மகள்கள். நற்பேறாக, வெளிநாட்டில் உள்ள ஈரானியர்கள் மிகச் சிறப்பாகவும் திறமையாகவும் பணியாற்றினார்கள். ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கொரியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில், உலகெங்கிலும் நடைபெறும் போராட்டங்களில் அவர்களைப் பார்க்கிறோம். அந்தப் போராட்டங்களின் பலன் பல்வேறு நாடுகளின் குடிமக்களின் கவனத்தை ஈர்த்திருப்பது – அதாவது, ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதைப் பற்றிப் படிக்கச் செல்கிறார்கள். உள்ளூர் ஊடகங்களும் போராட்டங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன, இது செய்திகளை ஈரானில் இருந்து உலகிற்குப் பரப்ப உதவுகிறது.
வெளிநாட்டில் வாழும் ஈரானியர்கள் செய்யக்கூடிய இன்னொன்றும் இருக்கிறது: ஈரானில் இருந்து வெளிவரும் அறிக்கைகள், காணொளிகளை உங்கள் உள்ளூர் மொழியில் மொழிபெயர்த்து, அவற்றை ஊடகங்களுக்கும் தொலைக்காட்சி நிலையங்களுக்கும் அனுப்பிவையுங்கள். அவற்றை உங்கள் பணியிடத்தில், நண்பர்களிடம், அண்டை வீட்டாரிடம் பரப்புங்கள் – இதன் மூலம் ஈரானிய மக்களுக்கு எதிரான அட்டூழியங்களை உலகிற்குத் தெரியப்படுத்துவீர்கள்.
செப்டம்பர் 25, 2022 அன்று கனடாவின் ஒட்டாவாவில் ஈரான் போராட்டக்காரர்களுடன் ஆதரவு ஆர்ப்பாட்டம். (Taymaz Valley/CC BY 2.0)
உங்கள் பல்லாண்டுப் போராட்டத்திற்கு என்ன விலை கொடுக்கிறீர்கள்? உங்கள் உயிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை அச்சுறுத்தல்கள் வந்துள்ளன, உங்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக உங்கள் சகோதரி ஈரானில் பிடித்து வைக்கப்பட்டார். நீங்கள் இன்னும் அச்சுறுத்தலில் இருக்கிறீர்களா?
ஆம், அச்சுறுத்தல்கள் ஒருபோதும் நிற்பதில்லை. என் வாழ்க்கையைப் பற்றிய ஓர் ஆவணப்படம், “நாங்கள் விடுதலை பெறும் வரை” என்ற பெயரில், இந்த ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தைத் திரையிடக் கூடாது என்று எச்சரித்து இயக்குனருக்கும், விழாவுக்கும், எனக்கும் மிரட்டல்கள் வந்தன. சொல்லவே வேண்டியதில்லை, அதற்கு நாங்கள் இணங்கவில்லை. அந்தத் திரைப்படம் ஆட்சி அதிகாரிகளை வெறி பிடிக்க வைத்தது என்ற போதும், நாங்கள் அவர்களுக்கு அஞ்சவில்லை.
எனது கடைசிக் கேள்வி, ஈரானுடன் தொடர்புடையதல்ல, ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் நிலவரத்துடன் தொடர்புடையது. பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து அவர்களின் முதலீடுகளைத் திரும்பப் பெறுமாறு கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் கேட்டுக்கொண்ட போது அதை நீங்கள் ஆதரித்தீர்கள். பாலஸ்தீனியர்களின் மீதான அடக்குமுறையைப் பற்றி ஈரானிய மனித உரிமை ஆர்வலர்களும் இந்த ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் செய்யும் பொதுவான தவிர்ப்புகளுக்கு இடையே, இது ஒரு முன் நிகழ்ந்திரா நடவடிக்கை. அதை விளக்க முடியுமா?
உண்மை என்னவெனில், ஈரானில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்துகொண்டே இருக்கிறது, ஆனால் கவலைக்கிடமாக நாட்டிற்குள் நல்ல தகவல் ஓட்டம் இல்லை. ஈரானியர்களாகிய நாங்கள் உலகில் என்ன நடக்கிறது என்பதை மறந்துவிடக்கூடிய அளவுக்கு எங்கள் சொந்தப் பிரச்சனைகளில் மூழ்கிவிட்டோம். ஆனால் நான் ஒரு மனித உரிமை ஆர்வலர், உலகில் எங்கும் மனித உரிமைகள் மீறப்படுவதை நான் எதிர்க்கிறேன். யூதப் பேரழிப்புக்கும் அடையாளத்தைக் காரணமாக வைத்துப் பல மனிதர்கள் மீது நிகழ்த்தப்படும் குற்றங்களுக்கும் அஞ்சி நடுங்குவது போலவே, பாதிக்கப்பட்டிருப்பது போலவே, அதே காரணங்களுக்காக அப்பாவி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக மாறுவதைப் பற்றியும் நான் அஞ்சி நடுங்கவும் வருந்தவும் செய்கிறேன். இது மத அடையாளம் அல்லது தேசியத்துடன் தொடர்புடையதல்ல, ஏனென்றால் மனித உரிமைகள் ஒரு பன்னாட்டுப் பிரச்சனை, உலகின் ஒவ்வொரு மூலையிலும் அவற்றை நாம் மதிக்க வேண்டும்.
***
*இந்தக் கட்டுரை முதலில் ஹீப்ரு மொழியில் லோக்கல் கால் (Local Call) இதழில் வெளிவந்தது.
***
ஓர்லி நோய், லோக்கல் கால் (Local Call) இதழில் ஆசிரியர், அரசியல் ஆர்வலர், பாரசீகக் கவிதைகளையும் உரைநடைகளையும் மொழிபெயர்ப்பவர். அவர் பிட்சேலம் (B’Tselem) மனித உரிமை ஆர்வலர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும், பலாட் அரசியல் கட்சியின் செயல்பாட்டாளராகவும் உள்ளார். கீழையர் (மிஸ்ரஹி), பெண் இடதுசாரி, பெண், நிரந்தரக் குடியேறிக்குள் வாழும் தற்காலிகப் புலம்பெயரி, அவ்விருவருக்குமிடையேயான நிலையான உரையாடல் என்று அவரது அடையாளத்தை வரையறுக்கும், அவை ஒன்றோடொன்று வெட்டிச்செல்லும் கோடுகளை அவரது எழுத்து கையாள்கிறது.
***
பாரதிராஜா – தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். மின்னஞ்சல்: bharathee@gmail.com