Home Blog Page 36

செல்வசங்கரன் கவிதைகள்

0

கால் மீது கால்

ரு துப்பாக்கி வெடிப்பதற்கு முந்தைய நிலையில்
தனது முந்தைய நிலையை இவ்வுலக உயிர்களை வைத்து
சோதித்துக் கொண்டிருந்தது
முந்தைய நிலையை வழியில் தென்பட்ட ஒருவரிடம் நீட்டியதும்
அவர் மிரண்டு ஒதுங்கினார்
உடனே அதை வைத்து எல்லாரையும் மிரட்ட ஆரம்பித்தது
எல்லாரும் ஒளிந்தார்கள் பம்மினார்கள் ஓடினார்கள்
கட்டிலுக்கடியில் மறைந்திருந்தவனை எழுப்பி திடீரென அவனிடம்
வெடிக்கும் நிலையை எள்ளி நகையாடுகிற வேலையைத் துவக்கியது
வெடிக்கும் நிலை முரட்டுத் தடியன்களை பரம ஞானியாக்கும்
ரசம் போன ஒரு கலை
அதுவொரு சைவ பட்சி காலி டப்பா மொண்ணையான கத்தி
அதை வைத்து ஒன்றையும் கழட்ட முடியாது
வேண்டுமென்றால் பக்த கோடிகளுக்கு வேண்டுமளவிற்கு
புளிச்சோறு ஆக்கித் தட்டலாம்
வெடிக்கும் நிலைக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது
ஆவேசத்தில் ரத்தச் சிவப்பாக இருந்தது வெடிக்கும் நிலை
அருகிருந்த ஒருவனின் நெற்றி நடுவே அது துப்பாக்கியை வைக்க
துப்பாக்கி முனையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன்
கால்மீது கால்போட்டு உட்கார்ந்திருந்த முந்தைய நிலை
இதற்குப் பெயர் முந்தைய நிலை என்றது
வெடிக்கும் நிலைக்கு கோபம் மண்டைக்கேறி
மூன்று தோட்டாக்களை ஒன்றன்பின் ஒன்றாக
அவன் நெற்றியில் இறக்கியது
இப்படித்தான் இந்த உலகத்தில் துப்பாக்கிகளுக்கு
பைத்தியம் பிடிக்கிறது
இப்படித்தான் துப்பாக்கி வெடிப்பதற்கு முந்தைய நிலை முன்னால்
இந்த உலகம் மண்டியிட்டுக் கிடக்கிறது


கையோடு வந்த முகம்

முகத்தைக் கழுவும்போது முகம் கையோடு வந்துவிட்டதை
யாரும் நம்பமாட்டேன் என்றார்கள்
எனக்காக எனது முகம் இன்னொருமுறை
கையிலிருந்து முகத்திற்கு போய் திரும்ப கைக்கு வந்து காட்டியது
பாருங்களென கையில் உள்ளதை எடுத்துக் காட்டினாலும்
அது முகமே இல்லையென்றார்கள்
வாங்கிப் பாருங்களென்றாலும் யாரும் கையை நீட்டவில்லை
என் முகத்தை பத்திரமாக உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டேன்
எல்லாரும் விளையாடுவோம் என்றதும் சரியென
எல்லாரும் எல்லாருடைய முகத்தையும் நடுநாயகமாக வைத்து
விளையாட ஆரம்பித்தோம்
முகத்தைப் பார்த்து அணி பிரித்தார்கள்
முகத்தைப் பார்த்து நாற்பத்தைந்து ரன்கள் என்றார்கள்
முகத்தைப் பார்த்து பந்து மட்டை விளிம்பில் பட்டதாக கத்தினார்கள்
முகத்தைப் பார்த்து வெயில் இன்று அதிகமென சடைத்தார்கள்
நாளை விளையாடலாமென எல்லாருடைய முகத்தையும் பார்த்து
எல்லாரும் சொல்லிவிட்டு எல்லாரும் கலைந்து சென்றார்கள்
போகும் அவரவர் முகத்தை அவரவர் பத்திரமாக எடுத்து வீடு சென்றனர்
எல்லாமுமாக இங்கு முகமே உள்ளது
வழியில் என்னுடைய முகம் மாதிரியிருந்த
என்னுடைய கைகளை விரித்து பார்த்துக் கொண்டேன்


அக்குள்ஸ்

கைகளைத் தூக்கச் சொல்லி அக்குள் பளபளப்பில்
தலைமுடியைச் சீவி முகத்தைச் சரி பார்த்தனர்
முகம் சரிவர தெரியவில்லை என்றவர் தலையில் செமத்தியாக
ஒன்று விழுந்தது
அக்குள் மினுமினுப்பையெடுத்து ஒருவர் தன் கூலிங்கிளாஸிற்கு
அதை ஏற்றினார்
அக்குளின் வளைவில் மேலிருந்து கீழே சறுக்கி விளையாடினர்
அக்குளிலேயே முகம் புதைத்துக் கிடந்தவரின் பின்னந்தலையை இழுத்து
எல்லாரும் என்ன செய்கிறோம் நீ என்ன செய்கிறாய் என
ஒருவர் கோபம் கொண்டதில்
அக்குளை நாவால் தேய் தேயென தேய்த்துக் கொண்டிருந்தவரை
பார்த்த பின்னாடி
இரண்டு நல் உள்ளங்களையும் வாழ்க என வாழ்த்தி ஆசி வழங்கினார்
அக்குள் மடிப்பிடையே சிகரெட்டை சொருகிக் காட்டி
சிகரெட்டுகளை வாரி வழங்குகிற வைபோகமும் நடந்தேறியது
அக்குள் பள்ளத்தில் நொங்கு பதநீர் ஊற்றிக் குடித்தனர்
அக்குள் ரோமங்களை வெளியே காட்டாமல் எந்நேரமும்
அந்த இடத்தை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தவர்களை
இப்பொழுது என்ன செய்வதென்றே தெரியவில்லை
தெருவுக்குள் ஒரே அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தனர்
கேட்டால் அக்குள் தினம் என்கின்றனர்


செல்வசங்கரன் – விருதுநகரைச் சேர்ந்த இவர் அறியப்படாத மலர்-NCBH, பறவை பார்த்தல்-மணல் வீடு, கனிவின் சைஸ்(மணல் வீடு),சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி(மணல் வீடு), கண்ணாடி சத்தம்(காலச்சுவடு) என இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ஆதவன் படைப்புகளில் முனைவர் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.
மின்னஞ்சல் – selvasankarand@gmail.com

குரூரத்தின் நிழல்

0

ஸ்ரீராம் கலியப்பெருமாள்

ய்ய்ய்ய்… லெட்சு நில்ரா டே….

எதிர்பார்த்த சாவித்திரி அத்தையின் குரலது. இட்லி கடையில் போட்டது போட்டபடி இருக்க கொண்டையை முடிந்தவாறு செருப்பணியாத காலோடு வேகமாய் வந்த சாவித்திரி அத்தையின் குரலைக் கேட்டதும் வண்டியை நிறுத்தினான் லட்சுமணன். “அத்த ஏறுங்க” என சொன்னான். பெரிதளவு பதற்றமின்றி ‘அன்பரசன்ட்ட போடா‘ எனச் சொன்னாள்.

அன்பரசன் ஆஸ்பத்திரியை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். பட்டுக்கோட்டை சுற்று வட்டார கிராமங்களான கோட்டைகுளம், பாளையம், ஆனைவிழந்தான் குளம், வெட்டிக்காடு, சாந்தாகாடு பகுதிகளில் நிகழும் சண்டை சச்சரவுகளில் காயப்பட்டவர்களை உடனடியாக உள்வாங்கிக்கொள்ளும் ஒரேயொரு ஆஸ்பத்திரி. பழனி மாமாவை அங்குதான் கொண்டு போயிருப்பார்களென சாவித்திரி அத்தை நம்பினாள். லட்சுமணன் வண்டியை வேகப்படுத்தினான்.

செட்டிதெரு வேகத்தடையை தாண்டியதும் “இந்த குச்சிக்காரி பயல்ட்ட சொன்னனே, அவன் கேக்கலயே. என்ன பண்ணி வச்சிருக்காங்களோ” என அத்தை அரற்றத் தொடங்கினாள். அவளுக்குள் எழுந்த குருதியலைச் சித்திரம் லெட்சுமணனின் வண்டியை அங்குமிங்கும் அசைத்தது. அத்தை திடமான நிலைக்கு வர நொடிகள் ஆனது.
பழனி மாமாவுடனான முப்பதாண்டு கால திருமண வாழ்க்கையில் இந்த குளத்துக்கரையில் அத்தை பார்க்காத ரத்தமில்லை. திருமணம் நடந்த ஆறு மாதத்திலேயே சாராய வியாபாரத்தில் ஏற்ப்பட்ட தகராறில் கொழுந்தனாரை பெரியாஸ்பத்திரி பிணக்கொட்டாயில் பார்த்த கோலம் இன்றும் மறவாது. பிணத்தை வீட்டிற்கே கொண்டு வராமல் எரித்து முடித்தனர்.

கொந்தளிப்பான நினைவுகளுக்குள் இருந்த அத்தையை லெட்சுமணன் பேச்சு கொடுத்து திசை திருப்பினான். “இந்த மணி பய இப்டி செய்வான்னு நெனக்கல” என்றான்.

பெரியாஸ்பத்திரி வாசலில் வண்டியை நிறுத்தியதும் அத்தை உள்ளே இறங்கி ஓடினாள். அவளின் கதறல் ஆஸ்பத்திரியில் இருந்த புறாக்களையே எழுந்து பறக்கச் செய்தது. லட்சுமணன் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்றுகொண்டிருந்தான்.

ஆஸ்பத்திரி வாசலில் நின்றுகொண்டிருந்த பழனியின் பங்காளிகள் கோபமுற்று நின்றுகொண்டிருந்தனர். “எப்புட்ற்றா போனாங்கெ அந்த குச்சிக்காரி பயல என்ன பண்றேன்னு பாரு ஆய் அப்பன் ஒரு கண்டரோலி பயலகூட விடக்கூடாது’ என்று தங்களுக்குள் சொல்லிக்கொண்டனர். ஆனால் பதிலுக்கு சம்பவம் செய்யும் தாட்டியக்காரர்களாய் அவர்களில் ஒருவனுமில்லை.

“பட்டுக்கோட்ட ஆளுவலாம் வெட்டி புட்டாங்களாம். காது சல்லட தெரியிற மாதிரி பண்டாங்களாம்” ஆஸ்பத்திரியிலிருந்த மூதாட்டிகள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். லெட்சுமணனுக்கு பயம் தொற்றியது.

01

கொளத்துக்ரையில பக்கத்து அக்கத்து வீட்ல உள்ள எல்லாரையும் அத்த, மாமான்னு தான் கூப்டுவோம். இந்த வழக்கத்திற்கு சாதி வேற்றுமையில்லை. ஊர்ல குடியேற நெனக்கிற ஒருத்தேன் சாதியை விட்டா நல்லது. இல்லன்னா விட்ட மாதிரி காட்டிக்கிறது நல்லது. பாவம் பழனி மாமாவால ரெண்டுல ஒன்னாக்கூட இருக்க முடியல.

தெக்க இருந்து வந்து மூனு தலமொற ஆயுமே, அந்த பெரும அவருக்கு தேவப்பட்ட ஒண்ணாதான் இருந்துச்சு. பட்டுக்கோட்டைய பொறுத்த வரைக்கும் வன்முறைங்கிறது நிலத்தின் உறுதிமொழி. இவன் கையில்தான் சூலம் ஏறும்னு தீர்மானிக்க முடியாது. அன்னக்கி நடந்தது மணி கையில ஏறின சூலத்தால. எங்க மண்ண பொருத்தவரைக்கும் சில எடத்துல பணமாயும் சில எடத்துல ஆயுதமாயும் சூலம் உருவங்கொள்ளும்.

எப்போதும் போல நாடார் கடை வாசல்ல பீடி அடிச்சிட்டு இருந்த மணி சபரிமலைக்கு மால போட்டு இருந்தான். பழனி மாமாவுக்கு மணியைப் பிடிக்காது. “பண்டார பய நம்ம முன்னாடி பீடி குடிக்கிறதான்னு கடுப்பு” அவருக்கு இருந்தது.

முன்னொரு காலத்தில் பழனி மாமா ரவுடியாக இருந்தாராம். சிவகங்கையில யாரையோ கொன்னுட்டு ஜெயிலுக்கு போனதா சொல்வாங்க. ஊருல குடிச்சுப்போட்டு சச்சரவுகளை உருவாக்கிக் கொண்டே இருப்பார். அவரு மயேன் பொன்னாண்டி எங்களுக்கு சிநேகிதென். பிஞ்சிலேந்து எங்ககூட பழுத்தவன். “அப்பன் இப்படி பண்றான் கண்டிச்சுடு மாப்ளன்னு” பசங்க சொல்லியும் கேக்கல.

வண்டிபேட்ட சந்துல வந்து நாடார் கட முக்கத்த தாண்டிய பழனி மாமா வழக்கம் போல போதையிலிருந்தார். பீடி அடிச்சிட்டு இருந்த மணி பழனி மாமாவைப் பார்த்தான். பீடியை அணைச்சு குண்டிக்கு பின்னாடி மறைச்சு வைச்சான். மாமா போனதும் அடிக்கலாமென்று அப்படியே அமர்ந்திருந்தான்.

‘ஏ மணி இங்க வா. அவ்வளோ ஆடம்பரப் புண்ட ஆயி போச்சா’
என்று கன்னத்தில் விழுந்த அறை மணியைக் கோபப்படுத்தியது.

“மாமா நாதான் உங்கள பாத்து பின்னாடி மரச்சன்ன அப்பறம் ஏன் மாமா கை வக்கிறிங்க” என்று குரல் தழுதழுக்கக் கேட்டான். மணி கண்களைக் கசக்கிக்கொண்டு அங்கிருந்து விலகி நடந்தான். மணியை பழனி மாமா அடித்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் திருப்பி அடித்துவிடவேண்டுமென வெறி கொண்டிருந்தோம். மணி தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் நடுவில் நின்றுகொண்டு அழுதான். மணியின் அப்பா அவனை அழைத்துக்கொண்டு நேராக பழனி மாமா இருந்த இடத்திற்குச் சென்றார். நிறை போதையிலிருந்த பழனியைப் பார்த்து மணியின் அப்பா ‘என்னத்துக்குயா என் புள்ளைய கை வச்ச. அவன் பீடி குடிக்கிறான். கஞ்சா குடிக்குறான். அத நாம் பாத்துக்குறேன், உன் சண்டியர் தனத்த என் பிள்ளைட்ட காட்டாத” என்று பயம் மிரட்டச் சொல்லி முடித்தார். மது அருந்தியபடியிருந்த பழனி மாமா மணியின் அப்பாவை கன்னத்தில் அறைந்தார். மணி கண்ணீர் வழியும் கண்களோடு தனது தந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். மழை பொழியத் தொடங்கியது. மண் மணம் எழுந்தது. மணி தனது கண்களை மூடிக்கொண்டு நாசிவரை இழுத்தான். மழை முழுதும் பழனியின் ரத்த வாடை பெருகும் நினைப்பு அவனை கிளர்ந்தெழச் செய்தது.

02

“ஏய் லெட்சு ஒரு நிம்சோம் வாயேன். வந்து வண்டிய எடேன்”. இருவரும் பேசிக்கொண்டே பயணப்பட்டனர். மணி பீடியை அடித்துக்கொண்டே பேச்சினைத் தொடர்ந்தான்.

“மச்சான் அவன அடிச்சுற்றுவோம் டா”

“வேணா மச்சான் அடிச்சுடாத. சும்மா ரெண்டு ஓட்டுடோட்டி விடு. இல்லனா ஒரு வெட்டு வெட்டி விடு” என்றான் லெட்சு.

‘ஏண்டா டே எழவு புண்ட ஒரே திரியா முடிச்சுட்டா போதும். இல்லான்னா தேவ இல்லாம நோண்டிட்டே இருப்பான் டா” என்று பதில் சொன்ன மணிக்கு ஆறுதல் சொல்ல எதுவுமில்லை. நாங்கள் இருவரும் சரத் அண்ணாவின் இடத்திற்கு சென்றோம்.

‘வா லெட்சு.. என்ன ஆளே இந்த பக்கம் காணோம்”

“அப்பாவோட தங்களுக்கு போயிறேன் அதான்”

மணி சரத் அண்ணாவின் கைகளைப் பற்றி “எனக்காக பண்ணி குடுங்க எங்க அப்பன கை வச்சிட்டான் பழனி புண்டா மயேன்”

சரத் எதுவும் பேசமால் இருந்தார். இதைச் செய்யத்தான் வேண்டுமாவென யோசித்தார். ஆனால் மணி கொஞ்சம் சத்தமாக குரல் எழுப்பி சிங்காரண்ணே நீ மட்டும் வா என்றான்.

கோபம் கொண்ட சிங்காரம் “இருடா சுன்னி எல்லாத்தையும் யோசிக்கணும்ல” என்றார். அன்றைக்கு மணியும் தந்தையும் பழனியின் இடத்திலிருந்து வெளியேறிய போது பெய்த மழையின் தொடர்ச்சி பொழியத் தொடங்கியது. மண் மணத்தது. தனது கண்களை மூடிக்கொண்டு நாசிவரை உள்ளிழுத்து உள்ளே பெருகும் காட்சியை நினைத்து மிக ரகசியமாய் சிரித்துக் கொண்டான்.

03

“அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து, காத்து மன்னிக்க வேண்டும். சத்தியமான பொண்ணு பதினெட்டாம் படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் . காசி, இராமேஸ்வரம், பாண்டி, மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் அய்யன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!”

இதை கவனித்த சிங்காரம் கஞ்சாவின் இறுதி இழுவையைச் சுவைத்தபடி “மன்னிப்பு குடுத்தா தாண்டா கடவுளு” என்றார். கல்லுப்பட்டற வழியில பின்னால போய் அடிச்சிரலாம்னு பிளானு. லைன் பாத்து எல்லாரும் ஸ்பாட் அட்டென் பண்டங்கே. சிங்காரன்னே சின்ன கை சாமானோட கிளம்பினாரு. ‘நாடார் கட கிட்ட நிக்கிராப்ள மேப்படியான் கார்த்தி பாத்துட்டானாம். எறங்கி அடிச்சுடாலாம்” என்றார்.

பழனிமாமா சுகமா பீடி குடிச்சிட்டு இருந்தாப்ள.

சரத் அண்ணே சிங்காரண்ணே ரெண்டு பேரும் மாமாவைக் கையோட மடக்கி பிடிக்க மணி ஸ்குவாடோட தோன்றினான். அட்ரா மணின்னு சொல்லி முடிப்பதற்குள் சரத் அண்ணே மாமாவின் காதுமடலைக் கொத்தினார். மணி பழனி மாமாவின் நெஞ்சில் ஏறி மிதித்தான். பழனி மாமா நிலத்தில் குருதியோடு விழுந்தார். அப்பொழுது எதுவும் அறியாத பச்சை பிள்ளை போல நாடார் கடையை தாண்ட முற்பட்டான் லெட்சு.

சிங்காரண்ணனும் சரத்தண்ணனும் வண்டிபேட்டை மறவாடி வழியால் ஓடி மறைந்தனர். சந்தில் இருந்து ஓடி மறைந்தான் மணி. லெட்சு வண்டியில் செல்வதைக் கண்ட சாவித்திரி அத்தை குரல் கொடுத்தாள்.

ஏய் லெட்சு……….

04

ஆஸ்பத்திரிக்கு முன்னால் நின்றுகொண்டு நடந்தவற்றை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் லெட்சு. எல்லாம் முடிந்து போயிருந்தது. மழை மெல்லிய தூறலாய் பெருகத் தொடங்கியிருந்தது. அவன் கண்களை மூடி கொஞ்சநேரம் மூச்சை உள்ளிழுத்தான். மண்ணின் மணம் வந்தது. சாவித்திரி அத்தையின் அழுகுரல் ஓலமாய் எழ மழையின் வீச்சு கூடி நின்றது.

***

ஸ்ரீராம் கலியப்பெருமாள் – பட்டுக்கோட்டையை சொந்த ஊராகக் கொண்ட இவர் தற்போது திரைத்துறையில் உதவி இயக்குனராகப் பணியாற்றுகிறார். மின்னஞ்சல்:realelephant26@gmail.com

ஜில்லா விலாஸம்

2

கார்த்திக் புகழேந்தி

18 ஏப்ரல் 1936

கொல்லம்-செங்கோட்டை வழியாக மதராஸ் ராஜதானிக்குச் செல்லும் புகைரதம் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க திருநெல்வேலி வீரராகவபுரம் தண்டவாளத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. தண்டவாளத்திற்குக் கீழ்ப்புறமுள்ள ரயில்வே ஃபீடர் சாலையில் சாரிசாரியாக வண்டிமாடுகள் பாரச்சுமைகளோடு நகர்ந்து கொண்டிருந்தன. நாடு முழுக்க சுதேசி கோஷம் பரவலாகி, சுப்பிரமணிய சிவமும் சிதம்பரம் பிள்ளையும் கைதாகி, மொத்த ஊரும் அல்லோலப்பட்டபோது இதே சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட உடலின் மிக அருகிலே நின்று கொண்டிருந்தேன்.

அப்போது எனக்கு எட்டு அல்லது பத்து வயது இருக்கும். இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. இந்துக் கல்லூரி மாணவர்கள் திரளாகக் குவிந்து ஹர்தால் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பாளையங்கோட்டை பூனிடிவ் போலீசாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்துக் கல்லூரி முதல்வரையும் பாரி சாராய ஆலையைச் சேர்ந்த அவரது நண்பரையும் பொதுஜனம் மிரளடிக்கச் செய்து ஓட ஓட விரட்டிய காட்சியும், அன்று நடந்த கல்லெறிச் சம்பவமும், கீழரத வீதி முனிசிபல் ஆபீஸ் எரிப்பும், அதன் தொடர்ச்சியாக நடந்த துப்பாக்கிப் பிரயோகமும், அதில் கொல்லப்பட்ட என் வயதொத்த சிறுவன் முகமும் எல்லாமே பக்கம் பக்கமாகப் பேப்பரில் வந்தது.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தான் ஊரே மயான அமைதிக்குத் தள்ளப்பட்டு, பள்ளிக் கல்லூரிகள் திறக்கத் தடை விழுந்து, ‘எங்கேயும் கூட்டம் கூடக்கூடாது. ராத்திரியில் வெளியிலே வரக்கூடாது’ என்று அடக்குமுறை அதிகமானது. திருநெல்வேலி, தச்சநல்லூர் என்று எல்லா இடங்களிலும் ரிஸர்வ் பட்டாளத்தின் கடுங்காவல். அப்போதுதான் சர்ச் மிஷன் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த என்னை, படிப்பு கெட்டுவிடக் கூடாது என்று முதல்தடவையாக நாகர்கோவிலுக்கு இடம் மாறினார் தாத்தா தேசிகர். ஹர்தாலில் ஈடுபட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட அவரது மூத்த மகன்வழி வாரிசின் எதிர்காலம் அப்போது முதல் அவர் தலையிலே விழுந்தது. அதன்பிறகு என்னுடைய படிப்பு, வளர்ப்பு எல்லாமே அவர் தீர்மானம் தான்.

ஏதோ நேற்று நடந்தது போல இருக்கிறது எல்லாமும்.

14 ஏப்ரல் 1936

“பரந்தாமா.. இங்கே இருக்கிறப்போ நீ எப்படின்னு ஊருக்கே தெரியும். அதேபோல போற இடத்திலும் பொழைக்கற இடம்ன்ற நினைப்போட இருக்கணும். சாதாரண உத்தியோகம் இல்ல, சர்க்கார் உத்தியோகம் உனக்கு கிடைச்சிருக்கிறது. முப்பது வருஷமா தாலுகா குமாஸ்தாவா லோல் பட்டதுக்கான பிராயசித்தம் உனக்கு இந்த உத்யோகம். ஜில்லா போர்டு ரெவன்யூ இன்ஸ்பெக்டர்ன்றது லேசுப்பட்ட வேலை இல்லே. மணல்லே எண்ணெய் பிழியும் கொம்பாதி கொம்பனெல்லாம் இந்த இடத்தைப் பிடிக்கத் தேவுடு காத்துட்டுத் திரியுறான்.

கண்ட சச்சரவிலயும் மூக்கை நுழைக்காம, பனிஷ்மெண்ட் வைக்காம, உங்கப்பனாட்டம் இல்லாம இருந்தியானா சர்க்கார் மாறுதோ இல்லையோ, உன் யோகத்துக்கு டெபுடி, ஸப்-கலெக்டர்னு ஆகக்கூடும். புரிஞ்சு நடந்துக்கோ. நீ போகப்போற ஜில்லா ஒன்னும் பாதாள லோகத்திலே இல்லை. திருநெவேலி போய் பொகவண்டி ஏறினா, இப்பல்லாம் மூனு பொழுது தானாம். சுக ஆயுசா, ஒரு இடத்தில இருந்து நல்லபடி உத்தியோகத்தைக் கவனி என்ன” தெப்பக்குளத்தெரு படிக்கட்டு வீட்டுத் திண்ணையின் வாசலில், சாய்வு நாற்காலி போட்டு வசதியாகச் சாய்ந்து கொண்டு, மடியில் வெத்தலைச் சீவல்பெட்டியும், தொடையில் கிருஷ்ண சந்த்ர பட்டாச்சார்யா எழுதின ஏதொவொரு தத்துவப் புத்தகத்தையும் தாழ்த்தி வைத்துக்கொண்டு, தன் நீண்ட வியாக்கியானத்தை நிகழ்த்தி முடித்தார் தாத்தா தேசிகர். அவர் ஆவி மொத்தம் சுருக்கம் கண்ட உடலுக்குள் இறுகிவிட்டது. பேச்சு மட்டுமே கெதி. படித்து முடித்து பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் காமர்ஸ் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவனை எப்படியாவது சர்க்காரில் சேர்த்துவிட வேண்டும் என்று பிடியாக இருந்து நினைத்ததைச் சாதித்து விட்டார்.

அவர் சொன்னது போல செங்கல்பட்டு ஜில்லா ஒன்றும் பாதாள லோகத்தில் இல்லைதான். ஆனால், “வேலை தயார். உடன் புறப்பட்டு வரவும்.” என்ற ஒற்றைவால் தந்தியை மட்டும் கொடுத்து, ஊரோடு உள்ள அத்தனை விவகாரங்களையும் பள்ளிக்கூடத்தோடு உள்ள எல்லா உத்ஸாகங்களையும் நொடிப்பொழுதில் கைவிட்டு, அதேகதியில் வண்டியேற்றியும் விட்டதுதான் தாங்க முடியாமலிருந்தது. தேசிகரை எதிர்க்கும் சொல் என்னிடம் இன்றுவரை உற்பத்தியானதில்லை.

விசாரித்தவரையில் செங்கல்பட்டு ஜில்லாவுக்கான தூரம் முந்நூற்று அறுபது மைல் இருக்குமாம். கொல்லம் வழியாகப் புறப்பட்டு திருநெல்வேலியில் வந்து தாகசாந்தி பண்ணிக் கொள்ளும் புகைரதத்தில் தடையேதும் இல்லை என்றால் அன்றிரவே திருச்சினாப்பள்ளி அடைந்து, மறுநாள் அகால வேளையில் செங்கல்பட்டு ஜில்லாவைச் சேரும் என்பது மட்டும் துல்லியம்.

தாத்தா சொன்ன இன்னொரு விஷயம் முக்கியமானது. கிடைத்திருக்கிற இந்த வேலை ஒன்றும் சாதாரணம் இல்லை. ‘ஜில்லா போர்டு ரிவின்யூ இன்ஸ்பெக்டர்!’ துரைமார் கைகளால் பெரும் பட்டங்களை வாங்கிச் சூட்டிக் கொண்டவர்களின் வாரிசுகளே இதே வேலைக்கு அடிபுடி போட்டுக் கொண்டிக்கிறார்கள். சர்க்கார் விரோதியின் வாரிசு என்று அறியப்பட்டிருக்க வேண்டிய அடைமொழியிலிருந்து தப்புவித்து, தாத்தா தேசிகர் எப்போதோ யாருக்கோ செய்த உபகாரத்தின் பேரில் அடியேன் சிபாரிசு பண்ணப்பட்டிருக்கிறேன்.

அதன்படி, சுக்லபட்சம் சப்தமி திதியன்று காக்கைச் சகுனம் பார்த்து, கிருஷ்ணன் கோவில் முகப்பிலிருந்து பெட்டிப் படுக்கைகளுடன் குதிரை வண்டியில் துவங்கிய புறப்பட்டுப் பிரயாணம் திருநெல்வேலி வந்தடைந்து, புகைரதம் மூலம் மூன்றாம் நாளில் இழைத்துக் களைத்து செங்கல்பட்டு ஜில்லாவில் முகாமாகியிருந்தது.

18 ஏப்ரல் 1936

ஊர் பெரியது தான். ராஜதானிக்குப் பக்கத்திலே வேறு இருக்கிறது. தாலுகாவும் அதுவேதான். பதினைந்து லட்சம் ஜனங்கள் உள்ள ஜில்லாவென்று அரசாங்கக் குறிப்பில் படித்திருக்கிறேன். கூடவே ஊரிலுள்ள பதினாலு சாதியர் பட்டியலும் அவரவர் செய்தொழில்களும் பிற விவகாரங்களும் ரத்தினச் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டிருந்தது. இரண்டு பெரிய குன்றுகளுக்கு நடுவே பள்ளத்தாக்கு போல அகன்று கிடப்பதால் தண்ணீர் தேக்கங்களுக்குக் குறைவில்லை.

ஒருபக்கம் அகன்று செல்லும் கப்பிபோட்ட கூடுசாலை. இன்னொரு பக்கம் இருப்புப்பாதை. நட்டநடுவிலே யோவான் துறவியாரின் தேவாலயம். கிழக்கு மேற்கு எங்கு பார்த்தாலும் பச்சைப் பச்சையென முழுக்க வயல்கள். காந்தியாரின் விடுதலை மார்க்கம் ஒருவழியாக இழுத்தடிக்கும் நேரத்தில், மந்திரி சபைக்குள் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்திய ஜஸ்டிஸ் பார்ட்டி இங்கே மிகப் பிரபல்யம்.

எந்தப் பற்றுக்கேடும் இல்லாமல் ஹோல்டாலைக் கையில் பிடித்துக்கொண்டு புகைரதத்தை விட்டு இறங்கி, புக்கிங் மாஸ்டரின் அறையை நோக்கி நடந்தேன். வந்த விபரம், அடைய வேண்டிய விலாசம், பிரயாண வசதி, உள்ளிட்ட விபரங்களை எல்லாம் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, ரயிலடியை விட்டு வெளியில் வந்தேன்.
பொழுது நன்றாக மசிந்திருந்தது. ரஸ்தாவின் லாந்தர் வெளிச்சத்தில் ரிஸர்வ் தொப்பியுடனும் மேவாய் கட்டையை இழுத்துப் பூட்டிய வார்பெல்டுடனும் சிவப்பு நிற உடையில் இரண்டு வெள்ளைக்காரச் சிப்பாய்கள் விடுவிடுவென மேற்கு நோக்கி நடந்து போவதைப் பார்த்த பிறகு வேறெதுவும் புது உலகத்துக்கு வந்துவிடவில்லை என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. இருவரும் என்னைத் தாண்டிச் சென்ற திசையில் ‘துருப்புகளுக்கு மட்டும்’ என்று எழுதிப்போட்ட கபே ஒன்று எடுத்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ’மாஸ்டர் மாஸ்டர் ஒன் அணா மாஸ்டர்” என்று சட்டையில்லாத சின்னப் பிள்ளைகள் சிலர் அந்த நேரத்திலும் வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார்கள். கபேவுக்கு மேற்புறம் செல்லும் சாலை சிறைக் கொட்டடிக்குச் செல்லும் வழி என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஜங்ஷனுக்கு எதிர்புறமுள்ள வெட்டவெளி மைதானத்தில், தம்பிடி பணத்துக்கு ஒரு குதிரைவண்டி பிடித்தேன். அங்கிருந்து முக்கால் மைல் தள்ளி, தங்குவதற்காக சர்க்கார் சாவடிக்குப் பக்கத்திலே வீடு ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். சிம்னி விளக்குகளின் வெளிச்சம் போதுமானதாய் இருந்தது. பசும் வேப்பமரச் சூழல், பழைய காலத்துச் சாவடி, சுவர்களில் அங்கங்கே காரை உதிர்ந்த தடம், மேற்கூரையில் செல்லரித்துப் போயிருந்த உத்திரக்கட்டைகள் பயமுறுத்தின. ஓடுகளில் மூஞ்சூறு நடமாட்டம் வேறு, வெளிவாசலில் பண்டிகைக் காலங்களில் பளபளவென்று மின்னி, ஊர்வலம் போய்வந்து ஓய்ந்த பிறகு, ஒதுக்குப்புறமாகச் சரிந்து கிடக்கும் சிறியதும் பெரியதுமான கேட்பாரற்ற தெய்வச்சிலைகள் வேறு அச்சத்தைக் கொடுத்தன. எப்படியோ அன்றைய இரவைச் சற்று மன தைரியத்துடன் தான் கடக்க வேண்டியிருந்தது.

19 ஏப்ரல் 1936

பொழுது புலர்கின்ற மாதிரி தெரியவில்லை. எழுந்து குளித்துப் புறப்பட்டு, வாசலுக்கு வந்தேன். நேற்று இரவு என்னை அழைத்து வந்த குதிரை வண்டி அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. ஒருவேளை இரவு இங்கேயே ஓய்வெடுத்துவிட்டாற் போல என்று சமாதானம் செய்து கொண்டேன்.

பொழுது கண்கூசச் செய்யும் நேரத்துக்கு முன்னதாக, கிராம முனிசீப்தான் முதல் ஆளாகத் தேடிவந்து சந்தித்தார். ‘மேற்படி பிரயாணம் எல்லாம் சுகம்தானா? ராவிலே வந்திருக்க வேண்டியவன் கொஞ்சம் வெளியூர் வேலையாகிப் போச்சு” என்று சுவாரசியமாக முகத்தை வைத்துக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்தினார். அவரிடம் வேலை அழைப்பாணைச் சிட்டையைக் கொடுத்தேன். இன்முகத்தோடு பெற்றுக் கொண்டார்.

முத்தையா பிள்ளை நேர்தோற்றத்தில் ஆள் வாளிப்பானவராக இருந்தார். கருத்த கனத்த உடம்பு. தொந்தியை வெளியே தள்ளும் ஒட்டக்கழுத்துச் சட்டை, மடித்த மல்வேட்டி, தோளில் கௌபீனத்தைவிட கொஞ்சம் நீளமான துண்டு. தலையில் மாட்ட வேண்டிய குல்லாவை அக்கத்தில் வைத்துக்கொண்டு துவாரபாலகரைப் போல கையில் தடியில்லாமல் வந்தார்.

”நமக்கும் பூர்வீகம் தெற்கேதான். நாங்குநேரி பக்கம். திருநவேலியிலிருந்து கல்லெடுத்து வீசுற தொலைவு. அங்க முத்தையா பிள்ளை குடும்பம்னே ஊரே சொல்லும். சித்தாந்த சைவம். ஜெமீன் சம்பந்தமா இங்கே பல தலைமுறையா இங்கே இருந்தாச்சு. தம்பி என்ன படிச்சிருக்கே. சைவமா வைணவமா? வேதத்துக்கு மாறினவர் இல்லையே!” நயமாக என்னைக் குறித்த விபரங்களைப் பிடுங்கிக் கொண்டார்.

அவர் கூடவே அழைத்து வந்திருந்த இன்னொரு கருத்த தடியான ஆள் குதிரை வண்டிக்காரனிடம் ஏதோ விவகாரம் பேசிக் கொண்டிருந்தார். முனிசீப் அவரைக் கைகாட்டிக் கிட்டே அழைத்தார்.

“இவன் இங்கே தலையாரி. பேரு முள்ளான். காது கொஞ்சம் மந்தம்; மத்தபடி ஊர்பட்டு எல்லா விபகாரமும் நாநுனி. இங்க உள்ள கிராமணில ஆரம்பிச்சு யார் என்ன வண்ணம்னு ஒன்னு விடாம சொல்லிருவான். சத்திரிய குலம்”

“டே கேட்டியா! தம்பிதான் புதுசா வந்திருக்க ரெவின்யூ இன்ஸ்பெட்டர். மேப்படி விவரங்களைக் கூடமாட இருந்து பாத்துக்க” என்று பரஸ்பரம் பண்ணினார் முனிசீப்.

“அப்புறம் தம்பி எனக்கு மாஜிஸ்த்ரேட்கிட்டே ஒரு சின்ன வேலை இருக்கு. கோட்டைக்குப் போகணும். இங்க என்ன வசதிக் குறைவுன்னாலும் எனக்குத் தனியாச் சொல்லு. எல்லாத்துக்கும் நல்ல வழி பண்ண ஆள் இருக்கு என்ன”

இடியும் மின்னலுமென எனக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சத்தமாயும், தலையாரி முள்ளானுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சைகையிலும் காட்டிவிட்டு, காத்து நின்ற குதிரை வண்டியில் ஏறிப் புறப்பட்டுப் போய்விட்டார் கிராம முன்சீப். முத்திரைச் சீட்டில் இருந்த அவரது பெயரைப் படித்தேன் ’முட்டயாபிளே’ என்று அச்சடித்திருந்தது.
’முனிசீப் உத்தியோகம் ராஜாமார் பதவி போல’ என்று தாத்தா தேசிகர் சொல்லிக் கேட்டதுண்டு. துரைகள் ஆட்சியிலே எதுதான் சாதாரணம். முனிசீப்புக்கு நேரம், காலம் என்று கட்டுப்பாடுகள் கிடையாது. நிலவரி வசூலிப்பது, ஊரில் ஏற்படும் பிறப்பு இறப்பைக் குறித்து வைப்பது, யாராவது தப்புத்தண்டா செய்தால் காவாலிகளைச் சிப்பாய்களிடம் பிடித்துக் கொடுப்பது. தண்டனை விதிப்பது, கிராம நிர்வாகம் என்று அவரது அதிகாரவரம்பு பெரியது. சிறுசிறு குற்ற வழக்குகளுக்கு விசாரித்து தீர்ப்பும் வழங்கும் அதிகாரம் உள்ளவரென்பதால் அவருக்கென வீடு, வாசல், அலுவல் பேதம் கிடையாது.

குறிப்பிட்டுச் சொன்னால் ஜில்லாவின் ரெவின்யூ, லோகல் என்று இரண்டு துறைக்கும் பொதுவான ஜவாப்தாரி முனிசீப்தான்.

தலையாரி முள்ளான் எந்தப் பித்தமும் இல்லாமல் ஒரு பெரிய துணிச்சாக்கு சுற்றிய பெட்டியில் வைத்து எடுத்து வந்திருந்த அடங்கல் பொஸ்தகங்களை, ஆண்டு வரிசை தப்பாமல் பிரித்தெடுத்து, மேஜையில் அடுக்கத் துவங்கினார்.

ஆளைப் பார்க்கும் பார்வையிலே புதுப்புளியா இல்லை பழகுன புளியா என்று கணித்துவிடுபவர் போலத் தன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் முள்ளான். எனக்கு எந்தச் சிரமமும் தராமல் ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் தெரிந்துகொள்ள வேண்டிய, ஜில்லா போர்டு மற்றும் தாலுகாக்கள் பற்றிய தகுந்த விபரங்கள் பலவும் அவர் அளித்த நோட்டுப் பொஸ்தகத்தில் கச்சிதமாகவும் ரத்னச்சுருக்கோடு குறிப்பெழுதப்பட்டிருந்தன.

ரெவென்யூ கிராமப் பட்டியல், அவைகளில் சுரோத்திரியம் பண்ணும் ஜமீன்களின் பெயர்கள், அவர்தம் ஆண்டுக் குத்தகை, வாரி, வசூல் மற்றும் நிலுவை விபரங்கள், நிதி ஆதாரக் கையேடுகள், ஊரிலுள்ள மிராசுகள், முக்கியப் புள்ளிகளின் பெயர்கள், பதினாறு தர நன்செய் நிலங்கள், புன்செய் நிலத்தீர்வைகள், விவசாய மராமத்து வேலைகளில் நிவர்த்தி செய்யப்படாதவை, கிராமங்களுக்குச் செல்லும் ரஸ்தாக்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள், பாலங்கள் உடைந்து போய் நேர் விஜயம் செய்ய முடியாத ஊர்கள், உப்புக் காய்ச்சும் இடம், சாராயம் வடிக்கும் இடம் தொடங்கி, அவுரிச் சாயம் போடும் பட்டறைகள் வரை நீண்டுகொண்டே போனது ஒரு நோட்டு. முன்பு பணியில் இருந்தவர்கள் விபரம் அவர்களால் செய்து முடிக்கப்படாமல் விடுபட்டுப்போன பணிகள் என ஒரு நாள் முச்சூடும் இந்தத் தாள்களைப் புரட்டுவதில் கழிந்தது.

27 ஏப்ரல் 1936

ஒரு வார காலம் நோட்டுப் புத்தகங்களுக்கு ஊடாகவே கழிந்து கொண்டிருந்தது. அன்றைக்கு விடியற் காலையிலே எழுந்து விட்டேன். இரவில் குளிர் வழக்கம் போல பிரமாதம். தூக்கம் பரவாயில்லைதான். சுத்துவேலைக்காக நியமிக்கப்பட்டிருந்த வேலையாள் பெரிய வெண்கலப் பானையில் வெதுநீர் போட்டு வைத்திருந்தார். குளித்து முடித்து உடை மாற்றியதும், எங்காவது வெளியே சென்று, கொஞ்சம் நேரம் பிந்தி கச்சேரிக்குப் போகலாம் என்று தோன்றியது. மாட்டிவண்டி கிடைத்தும் நடந்து போகவே விரும்பினேன்.

ஊரைச் சுற்றி பயிர்பச்சை விளைச்சல் அமோகம். நஞ்சையும் புஞ்சையும் தோட்டக்கால்களும் ஊரூராக இருந்ததினால் அந்த வட்டையில் குடிபடை கிராமங்களும், கிராம நத்தமும் அதிகம் போல என்று மனம் நோட்டுப் பொஸ்தகத்தில் அறிந்த விபரங்களைக் களவிவகாரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டது. ஜில்லாவில் பஸ் ரூட் உண்டு. தபால் வண்டிகளும் ஓடிக்கொண்டிருந்தன. ஜில்லா போர்டு ஆஸ்பத்திரியும் குஷ்ட ரோக சிகிச்சையும் பிரசித்தம். மேஜர் யூனியன் என்று இரண்டு பெரிய ஹை ஸ்கூல்கள், இது தவிர போலீஸ் ஸ்டேஷன், ஜெயில், சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸ், சினிமா கொட்டகைகள் என ஒரு கஸ்பாவுக்கு என்னென்ன வசதிப்பாடுகள் உண்டுமோ அத்தனையும் செங்கல்பட்டு தாலுகாவுக்குள் ஏற்பட்டிருந்தது.

ஜில்லா சப்-கலெக்டரின் நிலையான இருப்பிடத்தின் அருகில் வந்துசேர்ந்திருந்தேன். யந்திரத் துப்பாக்கி கொண்ட காரும் ஐம்பது கெஜ தூரத்தில் மோட்டார் சைக்கிள்களும் சூழ சப்-கலெக்டர் வாகனம் எப்போது வேண்டுமானாலும் ஊரைச்சுற்றி வளைய வரலாம் என்று மனதுக்குத் தோன்றியது.

மேலிடத்தவர்கள் முகாம் வருகிறபோது அவர்களுக்குச் சலாம் அடிப்பதில் ஆரம்பித்து, சப்ளை கவனிப்பது வரை அனைத்து அசைவுகளும் சித்திரகுப்தனின் கண்கொண்டு குறிப்பு எடுக்கப்படும் என்று தேசிகரின் குரல் இப்போது காதுகளுக்குள் ஒலித்தது. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. லகான் பிடித்த குதிரை சேணம் போல கால்கள் நேராக ரெவின்யூ கச்சேரியை நோக்கித் திரும்பி நடந்தன.

29 மே 1939

என் கெட்ட நேரமோ, நல்ல நேரமோ பணியில் சேர்ந்திருந்த முதலாவது மாதத்தில் முதல்முறையாக ஜில்லா கலெக்டர் என்னுடைய பிர்க்காவிற்கு முகாம் வரப்போவதாக ஓலை அனுப்பியிருந்தார்.

வழக்கமாக ‘தாசில்தார்’ முகாம் வந்தால் அவரது உணவு விஷயங்களில் இருந்து எல்லா காரியங்களும் முனிசீப் கவனித்துக் கொள்வார். டெப்டி கலெக்டர் வருகிறார் என்றால் அவரது படை, பட்டாளத்துக்கான போஜனங்கள் தொடங்கி அத்தனை செலவுகளையும் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தான் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்போது கலெக்டரே வரப்போகிறார் என்றால் இதைவிடப் பெரிய சோதனை எதுவும் இல்லை. ஏதாவது தத்துபித்து ஏற்பட்டாமல் இருக்க வேண்டும்.

நேராக முன்சீப் முத்தையா பிள்ளையை அவரது வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்து என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும், இங்குள்ள நடைமுறைகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். பத்தாதற்கு தேசிகருக்குக் கடுதாசி எழுதிப்போட்டு அவரின் பதிலுக்கும் காத்திருந்தேன்.

‘கலெக்டர்களைக் கூடச் சமாளித்துவிடலாம். அவர்களது பட்லர்கள் பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடியாது’ என்று எப்போதோ அவர் சொன்ன விபரங்கள் மூளைக்குள் ஓடியது.

சப்ளைகளைச் சரியாகக் கவனித்தும், பட்லருக்கான தனிக்கவனிப்பு கொஞ்சம் பிசகினாலும் சமயம் பார்த்து பழிதீர்த்து விடுவான். ஒரு மந்திரவாதியின் சூட்டுக்கோல் போல பட்லர்கள் வரிசையாக அன்றைய நாளின் கனவில் வந்து சென்றார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

எனக்கு இந்த வேலை கிடைப்பதற்கே இதற்கு முன்னாள் பொறுப்பிலிருந்த டெப்டி கலெக்டருடைய பட்லரின் பழிவாங்கும் செயல்தான் காரணம்.

அப்போதிருந்த டெப்டி-கலெக்டர் இதே பிர்காவுக்கு முகாம் வந்தபோது ரெவின்யூ இன்ஸ்பெக்டர் எல்லோருக்கும் சப்ளைகளைச் சரிவரச் செய்துவிட்டு, பட்லரை மறந்துவிட்டார்.

டெப்டி கலெக்டர் முகாம் முடிந்து புறப்படுகிற அன்று காலையில் அவருக்குக் காபி கொடுக்காமல் நின்றிருக்கிறான் பட்லர். ஏன் என்று கேட்டதற்கு, ரிவின்யூ இன்ஸ்பெக்டர் கொண்டுவந்து கொடுத்த பால் செம்பில் இருக்கும்போதே திரிந்துபோய் வந்தது என்று பதில் சொல்லி இருக்கிறான்.

உடனடியாக ஆளனுப்பி, ரெவென்யூ இன்ஸ்பெக்டரை வரச்சொன்னார் டெப்டி கலெக்டர், திரிந்த பால் செம்பை அவன் தலையிலே கவிழ்த்துவிட்டு “வெளியே போ” என்று விரட்டி விட்டார்.

அவனும் கொஞ்சம் மானியாக இருந்ததால் பாலாபிஷேகம் நடத்தப்பட்ட அன்றைக்கே கால் கடுதாசியில் ராஜிநாமா எழுதி தாசில்தாரிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு வண்டியேறி விட்டான். அவன் விட்டுப்போன இடத்துக்குத்தான் நான் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன்.

1 ஜூன் 1939

ஜில்லா கலெக்டர் வந்துசேர்வதாகச் சொல்லியிருந்த மூன்று நாட்களுக்கு முன்பாக அவரது குதிரை வந்து சேர்ந்தது. கூடவே குதிரைக்காரனும்.
இரண்டு நாட்களும் பராமரிப்பில் எந்தக் குறையும் வைக்காமல் குதிரையையும் குதிரைக்காரனையும் சரியாகவே கவனித்துக் கொண்டேன். மூன்றாம் நாளில் சொல்லி வைத்தபடி கலெக்டர் பரிவாரங்களோடு பிர்காவுக்கு வந்து சேர்ந்தார்.

பார்வைக்கு இறுக்கமான மனிதரைப் போலத் தெரியவில்லை. அவர் கவனித்த கோப்புகளை எல்லாம் திறந்துகாட்டி, நேரத்துக்கு பால், முட்டை என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து, நல்ல மரியாதையுடன் நடந்துகொண்டதற்கான பலன் அன்றைக்கு மாலையிலே அவரது முகத்தில் தெரிந்தது. பட்லரும் இசைந்து கொடுத்து நடந்து கொண்டது ஆதூரமாக இருந்தது.

கலெக்டர் வெளியில் எங்காவது ஆய்வுக்குச் செல்வார் என்று எதிர்பார்த்தபோது, இரண்டு நாட்களும் தன் நண்பர்களைச் சந்திக்க இருப்பதால் பிரயாண ஏற்பாடு எதுவும் தேவையில்லை என்று மறுத்துவிட்டார். முகாமின் கடைசி நாளில்தான் அடுத்தபடியாக பூந்தமல்லி செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.

அன்றைக்கு மாலையில் மூன்று நாள் தங்கியிருந்தபோது செய்த செலவுகளுக்காக பில் எழுதிக்கேட்டார். விவரமாக கிராம முன்சீப் மூலம் மொத்த செலவு ஒன்றரை ரூபாய்க்கான பில்லை எழுதிக் கொடுத்தேன். கலெக்டர் முன்னிலையிலே காம்ப் கிளார்க் அந்தப் பணத்தை முனிசீப்பிடம் எடுத்து நீட்டினார்.

என்ன நினைத்தாரோ கொடு பில்லைப் பார்க்கலாம் என்று வாங்கிப் பார்த்த கலெக்டர் அதில் தன்னுடைய குதிரைக்குச் செய்த செலவுகள் எதுவும் இல்லாததைக் குறித்துக் கேட்டார். கொஞ்சம் ஜாக்கிரதையாக, ‘குதிரைக்கு அப்படி ஒன்று பெரிய செலவு ஆகவில்லை’ என்றேன். அவ்வளவுதான் கொந்தளித்து விட்டார் மனுஷன்.

‘அப்படி என்றால் மூன்று நாளாக என் குதிரையைப் பட்டினி போட்டிருக்கிறாயா?’ என்று விடுவிடுவென லாயத்துக்கே சென்றுவிட்டார்.
அங்கு குதிரை அதுபாட்டுக்குப் புல்லையும் கொள்ளையும் தின்று, அதைத் தாடையில் வைத்து ருசித்து அசைபோட்டுக் கொண்டு ஜலீரென நின்றது.
’தொர குதிரையை நல்லா பார்த்துக்கிட்டே தொரை’ என்று குதிரைக்காரனும் தானாய் முன்வந்து சாட்சி சொன்னான். உண்மையிலே அவனையும் சரிவர கவனித்து வைத்திருந்தேன்.

குதிரை வாயில் கானம் பாகாய் வடிவதைப் பார்த்த பிறகுதான் அமைதியானார் கலெக்டர். இருந்தும் ஓங்குதாங்கான குரலில் “குதிரைக்கு என்ன செலவு ஆனதோ அதைச் சரியாக கணக்கில் காட்டி, பணத்தை வாங்கிக்கொள்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார். தலை தப்பித்தது.

‘தம்பி தொரைமார் ஆட்சியில, சர்க்கார் சேவகனா இருந்துட்டு, இதுக்கெல்லாம் அசந்தா எப்புடி’ என்று மெல்ல சிரித்துக்கொண்டே என்னைச் சீண்டினார் முன்சீப்.

7 ஜூலை 1939

தாத்தா தேசிகரிடமிருந்து நான்கு வாரங்களுக்குப் பிறகு நான்கு பக்கத்துக்கு இண்டு இடைவெளி விடாத அளவுக்கு நுணுகி நுணுகி கடிதம் வந்திருந்தது. ரொம்ப அவசரமாக வந்து சேர்ந்துவிட்டது போல.
பதிலுக்கு வேலை ஒன்றும் அவ்வளவு அவதி இல்லை. எல்லாம் நல்லபடி உள்ளது என்று எழுதிப் போட்டேன்.

உள்ளபடியே வேலையின் உறுத்தல்கள் மெல்லப் பழகிவிட்டது. புதிய அரசியல் சட்டம் வந்த பிறகு எல்லோருக்கும் ஆட்சி அதிகாரம் மாறிவிடும் என்ற அசையாத நம்பிக்கை வேறு வந்துவிட்டது. சிலர் ஆமாமென்றார்கள். சிலர் இல்லை இல்லை என்றார்கள். இதை வாய்ப்பாகக் கொண்டவர்கள் சர்க்கார் வரியில் ஆரம்பித்து தீர்வை கட்டுவது வரை அத்தனையிலும் இழுபறி வைக்க ஆரம்பித்தனர்.

மராமத்து இலாகா கேட்பாரற்றுக் கிடந்தது. ஜமீன்களின் உள்ளடி வேலைகளால் ரெவின்யூவுக்கு கீழே வரும் விவசாயம், ஏரி, பாலம், குளம், கால்வாய், உப்பளம், பொதுக் கட்டிடம் மட்டுமல்லாமல், லோக்கல் ரஸ்தா பழுது முதல் அத்தனை வேலைகளும் ரெவின்யூ இலாகாவின் தலையிலே வந்து விழுந்தன.

சர்க்கார் உத்தியோகம் ஒன்றும் மெத்தைப் படுக்கை இல்லை. அது முள் படுக்கை. எது எடுத்தாலும் தாமதம். சிவப்பு நாடா குற்றச்சாட்டுக்கள். அதிகார அழுத்தம். மேலிட பரோபகாரம்.

உத்தியோகத்தில் நல்லபேர் சம்பாதிக்கத் தெரியாவிட்டாலும் கெட்டபேர் அவ்வளவாக இல்லை.

27 டிசம்பர் 1940

முதல்முறை ஊருக்குப் போய் வந்திருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம் பழகியிருந்தது. கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி ஏற்படுத்திய வற்புறுத்தலைத் தள்ளிவிட்டதில் தாத்தா தேசிகருக்குத்தான் என்மேல் கடுங்கோபம்.

இன்னும் ஏதாவது சொன்னால் வேலைக்கு கால்கடுதாசி போட்டுவிடுவேன் என்று பார்வதி அத்தையின் வழியாக அவர் காதுக்குச் சொன்ன பிறகுதான் அவரைச் சமாளிக்க முடிந்தது.

அப்பனைப் போல ஏதாவது லட்சியவெறி வந்து, பார்க்கிற வேலையை எழுதிக் கொடுத்து விடுவானோ என்று அவர் உண்மையாகவே பயந்தார். தத்துவப் புத்தகங்களில் இருந்து இப்போது அவர் அரிஜன் வாசிக்க ஆரம்பித்திருந்தார். அதனாலேயே அவருக்குத் ‘தனிநபர் அறப்போர்’ மீதான பயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் எனக்கு ஒரு சின்ன பழிவாங்கல் திருப்தி மட்டுமே தேவையாயிருந்தது. கிட்டத்தட்ட அது ஒரு மிரட்டல்தான்.

ஊரில் நிறையவே மாற்றங்கள். எல்லா மூலையிலும் அரசியல் பேச்சுகள். சுயநிர்ணய உரிமை ஆதரவாளர் ஒருபக்கமும் மொழிப்போராட்டக்காரர் மறுபக்கமும் நின்று மோதிக்கொள்ள, நிறையபேருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஜஸ்டிஸ் பார்ட்டியினர் முன்னெடுப்பில் மூன்று வருடங்களாக தலைவிரித்து ஆடிய இந்திப் போராட்டம் இப்போதுதான் சற்று ஓய்வுக்கு வரவிருக்கிறது. தில்லி ராஜ்ஜியத்தில் இருந்து கதர் கட்சியார் விலகலை அடுத்து, மாகாணம் புதிய சஞ்சலங்களோடு இருக்கிறது. கிட்டத்தட்ட கவர்னரிடமிருந்து இந்தி ரத்து அறிவிப்பு வந்துவிடலாம் என்றிருக்கிறது நிலைமை. இருந்தாலும் எங்கே அசம்பாவிதம் என்றாலும் கூட்டம் திரட்டினாலும் அது அங்கே சுற்றி இங்கே சுற்றி நம் தலையிலும் ஒரு சிறு கல்லையாவது எறிந்துவிட்டுப் போய்விடும்.

2 ஜனவரி 1940

அன்றைக்கு காலை ரெவின்யூ கச்சேரியின் வாசலில் ஒரு முப்பது பேருக்கு மேல்கொண்ட கூட்டம் கூடி நின்றது.

கச்சேரிக்கு முன் சென்றதும் தான் கவனித்தேன். கூடி நிற்பவர்கள் தலையாரி முள்ளானிடம் அந்நியோன்யமாக நின்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

மாரிக்காலம் வந்துவிட்டதால் ஏதாவது ஏரி உடைப்பு ஏற்பட்டு விட்டதோ, இரண்டுநாள் முன்புதான் ரஸ்தாவில் கடலரிப்பால் பாலம் கால் பெயர்த்துக் கொண்டு நிற்பதாகச் சொன்னார்கள். அதிலே ஏதும் பாதிப்பானவர்களாக இருக்குமோ?

தலையாரியை உள்ளே அழைத்து விவகாரம் கேட்டேன்.

“ஏரிப்பிரச்சனை சார்வாள்” என்றார்.

சரி விபரமான யாராவது ஒருத்தர் ரெண்டு பேரை உள்ளே வரச்சொல்லிட்டு மற்றவர்களைக் கூட்டம் போடாமக் கலைஞ்சு போகச் சொல்லிச் சொன்னேன்.

உள்ளே வந்த அந்த நபருக்கு எப்படியும் வயது நாற்பதுக்குள் இருக்கும். எழுத்து படிப்பு தெரிந்தவராக இருந்தார்.

“என்ன விஷயம்”

“ஐயா ஏரித்தண்ணி பாழாப் போகுதுங்க. கலங்கு ஒடஞ்சு, உள்வாய்க்காரங்க அதப் புதைச்சு விட்டதால இப்ப பள்ளத்துக்கே போயிருச்சிங்க…”

“எந்த ஊருன்னு சொன்னாதானே”

“பொன்விளைந்த களத்தூர் ஏரிங்க. பாலாத்தங்கரையிலருந்து ரண்டு மைல் கெழக்கங்க”

“ஏரி பள்ளமானா என்ன.. இன்னும் தண்ணி கட்டுமே..?”

“அய்யோ, பள்ளமாப் போனது தண்ணி கட்டுற எடம் இல்லைங்க. தண்ணி போற எடம். அதுதான் ரொம்ப பள்ளமாப் போச்சுங்க.”

“சட்டப்படி உங்க ஜெமீன்தான் செய்யணும். அவர் என்ன சொல்றாரு”

“கோடைக்கு முன்னாலே ஜமீந்தார்கிட்டச் சொன்னம்ங்க. சரிபண்ணித் தர்றம்ன்னாருங்க… அப்புறம் வரவேயில்லங்க..”

“யார் உங்க ஜமீனு..”
“அதுவந்து, முத்துரங்கம் முதலியாருங்க. சமஸ்தான காங்கிரஸ்ல இருக்காரில்லீங்களா அவருதான்..”

“ஓ! சரி அவர் வரலன்னா கலெக்டர்கிட்ட மனுப் போடலாமில்ல..”

“அதையும் ஏன் விடுவானேன்னு கலெக்டருக்கும் மனு போட்டோம்ங்க. மனு கேள்விக்கே வரலை.”

“ஏன்?”

”இடையில தாசில்தார்னு ஒருத்தர் இருக்காருங்களே. அவரு ஜெமீனோட தம்பிதானுங்க.”

தாசில்தாருக்கும் ஜமீந்தாருக்கும் ஏதோ ஒட்டுறவு இருக்கும் என்று எப்போதோ புரிந்திருந்தேன். இங்கிருக்கும் சங்கிலித்தொடருக்கு அந்நியமாய் இருப்பவன் நான் மட்டும்தான் என்பதை அவர்கள்தான் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தார்கள்.

“….“

“அவருதான் கணக்கெல்லாம் பாப்பாரு. எங்க மனுவ மட்டும் மடிச்சு மேலிடத்துக்கு அனுப்பிருவாருங்களா?”

“அண்ணன் ஜமீன், தம்பி தாசில்தாரா..?”

“ஆமாங்க…”

“சரி இப்ப ஏரியோட மேனேஜ்மண்ட் யார்கிட்டத்தான் இருக்கு”

“யாராவது எதாவது பண்ணுனாதானங்க அவரா இவரான்னு சொல்லலாம். ஏரிக்கு காவாய் வெட்டி தண்ணி பாய்ச்சித் தரக்கூடியவங்க ஜமீனுதான். வருசக்கணக்கா வெட்டே விழல. பாதை கெட்டுப்போய் பத்து வருசமா வரவுகாலும் கிடையாது.”

“ஊர்க்காரங்களைத் திரட்டி எதாவது முயற்சி எடுத்தீங்களா?..”

“அங்கதாங்க சிக்கலு. எங்களுது ஜமீனுக்குச் சொந்த கிராமம்ங்க. பூராம் பட்டா உண்டு. ஜமீன மீறி, நாங்க காவாய் கட்டி எடுக்கப்போனா பக்கத்தூர் ஆள்ங்க எங்கள மண் அள்ளக் கூடாதுன்னு சண்டைக்கு நிப்பாங்க..”

“அவங்க ஏன் சண்டைக்கு வராங்க..”

“அவங்களது பெரிய கிராமம்ங்க. எங்கள மட்ட மனுசனாப் பாப்பாங்க. கிட்டக்கப் போனா வெட்டுக்குத்துன்னு வந்து நிப்பாங்க. நாம வெள்ளாம பாக்கணும்ங்களா, அருவா கம்பத் தூக்கிட்டு ஓடணும்ங்களா நீங்களே சொல்லுங்க.”

“…..”

“அதுல அவங்களுக்கு நன்ம இல்லாமயில்ல. கல்கட்டாம வுட்டு ஏரிக்குத் தண்ணி வரவு இல்லாம ஆனாதால, அவங்களே உள்ளுக்குள்ள பயிர் வச்சு அக்கிரமம் பண்ணுறாங்க. இப்ப அவங்களே அசல் கிராமமா ஆகிட்டு வராங்க. அவங்க பக்கம் கலங்கலும் கட்டிட்டாங்கனா நாங்க எதுமே செய்ய முடியாது.”

“இவ்வளவு சிக்கலை வச்சுக்கிட்டு எப்படி பயிர் வைக்கிறீங்க..”

“அந்தப் பாடு பெரும்பாடுதாங்க. ஏரிக்கு வழிசெய்யாட்டாலும் தீர்வ கணக்கு, காணிக்கு பதினோரு ரூவான்னு எண்ணி வாங்க தேதியானா குமாஸ்தா டான்னு வீடுதேடி வந்துடுவாருங்க..”

அவர் சொன்னது சுருக்கென்றுதான் தைத்தது. முகத்தைக் கொஞ்சம் விறைப்பாக்கிக் கொண்டேன்.

“சரி மொத்தம் எவ்வளவு வஜா இருக்கும் உங்க பக்கம்..”

“என்ன அவுங்களுக்கு ஒரு ரெண்டாயிரத்திலருந்து மூவாயிரம் வந்துரும்ங்க. நஞ்சையும் புஞ்சையும் இருக்கே. கொறைஞ்சது மூணர ரூவால இருந்து, பத்தே முக்கா ரூவா வரைக்கும் ஏக்கருக்குன்னு ஜமீனுக்கு வசூலாகுரும். அவுங்களுக்கு அயன் கிஸ்தி கம்மிதானுங்களே. என்ன ஒரு ஐநூறு நுவா கட்டுனா பெரிய விசயமுங்க.”

“புஞ்சை தீர்வை எப்புடி?”

“அது மானாவாரியா போடுறது தாங்க. அவுரி உளுந்தஞ்செடி இப்படி என்னமாது… அதுக்கும் ரெண்டு ரூவா தீர்வ. மொதல்ல எங்க ஐயாமார் காலத்தில வாரப் பட்டாவா இருந்துச்சு. இப்ப கொஞ்சங் கொஞ்சமா ரொக்கத் தீர்வைன்னு ஆக்கிட்டாங்க.”

“உங்களோடது மொத்தம் எத்தன கிராமம்?”

“ஒரே கிராம்ம்தாங்க… ஏழைக்குடிங்க, இந்தத் தண்ணி ஒன்னு தான் சாமி.”

நான் தலையாரி முள்ளானை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர் விஷயத்தைப் பிடித்துக் கொண்டவராக, “ஒரே இனத்தானுங்க சார்வாள்..” என்றபடி பறைத்தாளம் அடிப்பதுபோல கைசாடை அசைத்துக் காட்டினார்.
அது அவர்களை நிச்சயம் சங்கடப்படுத்தியிருக்கும்.

ஒருவிதக் குற்றஉணர்வு மேலோங்க அடுத்து அவர்களைச் சிரமமின்றி எதிர்கொள்ள கொஞ்சம் இணக்கம் மிகுந்த தொனியில் கேள்விகளைத் தொடர்ந்தேன்.

“ஒரே கிராமத்தாள்களா நீங்கல்லாம்… சரி உங்களுக்கு ஆளுக்கு எத்தனை ஏக்கர் தேறும்.”

“எனக்கு பத்து ஏக்கர் நஞ்சைங்க. ஏக்கரு தீர்வை நூறு ரூவா கட்டுறேனுங்க. இவரு மூக்காண்டி. மேல்பாட்டக்காரரு ஆறே முக்கா ஏக்கரு வச்சிருக்காரு. மத்தவங்களுக்கு நாலு அஞ்சுன்னு இருக்குதுங்க. தரிசும் கெடக்குதுங்க. அதை விட்டுக் கொடுக்கணும்னும் ரொம்ப அழிச்சாட்டியம் நடக்குமுங்க”

“உங்களுக்கு இந்தத் தீர்வை ஜாஸ்தியாப் படுதுன்னு எப்பவாச்சும் தாவா போட்டீங்களா?”

“அது ஒரு பத்து வருசம் முன்ன வியாஜ்யம் பண்ணமுங்க. ரெண்டு கோர்ட்டிலயும் எங்களுக்குத்தான் சாதகமா வந்துச்சு. மூனாவது கோர்டில அவங்கதான் ஜெயிச்சாங்க.”

“யாரு.. ஜெமீனா?”

“அவர்தானுங்க… அவரு நேரா ஆஜராக மாட்டாருங்க. குமாஸ்தா வந்து கேஸெல்லாம் பாத்துக்குவாருங்க”

“அந்த ஜட்ஜ்மெண்ட் காப்பி இருக்கா உங்கட்ட?”

“அதெல்லாம் பத்து முப்பது வருசத்து முந்தின தீர்மானம்ங்க. எதையும் பத்திரப்படுத்தாம விட்டோம்ங்களே.. காஞ்சாலும் தீஞ்சாலும் நிலத்துக்கு இவ்வளவு தீர்வையானு எங்க பெரியவரு வியாஜ்யம் போட்டதுங்க. துட்டுதான ஜெயிக்குது.”

“அப்படின்னா இப்ப கலங்கு கட்டித் தரணும்னு மட்டும் கேஸ் போட்டா, ஒங்க ஜமீன் தூசு தட்டுற மாதிரி தட்டிட்டுப் போயிருவார் அப்படித்தானே..”

“ஜமீன்கூட கட்ட வேணாம்ங்க, பொறுப்பெடுத்து உங்கள மாதிரி அதிகாரி ஒருத்தர் மனசு வச்சா போதும்ங்க. கிளியானூர் ஏரிப்பாதை குறுக்க பாலம் கட்டித் தந்தீங்களே அதுபோல அதிகாரி எங்களுக்குத் துணை நின்னா போதும்ங்க. எங்களுக்கு வேற கதி இல்ல பாருங்க”

“….”

“சின்ன ஏரிங்க எங்களுது. தாங்கல் மண் போட்டதே இல்ல. மாடு கண்ணு மேய்க்க ஊருள்ள ஒரு புறம்போக்கு கிடையாது. ஏரி உள்வாயானாலும் வெளிவாயானாலும் யார் எந்த எடத்தை மடக்கிப் போட்டாலும் பட்டா வாங்கிட்டுப் போய்ட்றாங்க..”

“என்ன, ஏரிக்குள்ள பட்டா கொடுத்தாங்களா..”

“அது எல்லா கிராமத்லயும் கொடுக்காங்களே.”

“ஒங்க கிராமத்துல உண்டா.. விபரமாச் சொல்லுங்க..”

“அது ஒரு இரனூறு முந்நூறு காணிங்க தேறும்ங்க.. பட்டாவ வச்சுக்கிட்டு ஆள் மாத்தி ஆள் கைமாத்திக்கிட்ட கதைல்லாம் இருக்கு. கதர்கட்சிக்காரங்களே ஏரிக்குள்ள இடம் வாங்கிப் போட்டிருக்காங்களே…”

“ஆமாங்க..?”

“ஆமாங்க, குமாஸ்தாவ வச்சு சொந்தப் பயிர் பண்ணினாருங்க. இப்ப கொஞ்சம் வரிகட்ட மாட்டாம ஏலத்தில வித்துட்டாருங்க.”

“இதெல்லாம் எப்போ நடந்தது?”

“போன வருசம் கூட ஏலம் நடந்துச்சே. ஆனா, வெளியாள் யாரும் வரமாட்டாங்க. அசல் ஊர்க்காரனே கிரையத்துக்குக் கேட்டா வித்துடுவாங்க. இப்படி இருபது காணி ஜமீன் தன்பேர்லயே பதிஞ்சிருக்காரு.”

“உங்க யார் பேர்லயாவது அப்படி வாங்கினது உண்டா?”

“அது பெரிய செலவுங்க. போக்குவரத்து எல்லாம் பாக்கணும். பட்டாவுக்கு செலவழிக்கணும். பாயுற மாட்டைப் பிடிக்கிற கதை. அதைப் புடிச்சுத்தான் கமலை ஓட்டணும்ன்னா மித்த கடனையெல்லாம் அடைக்க இந்த உசுரு போதாது…”

“சரி ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க, எதுக்கு ஏரியை பட்டா போடுறாங்க.”

“அதுங்க.. ஊர ஒட்டித்தான் ரயில்ரோடு போவுது. பின்னாடி காலத்துல அங்க என்னென்ன வரும்னு சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க. அதுக்காக ஒழவு ஓட்டுறவன் பொழப்புல இப்படியாங்க மண்ணள்ளிக் கொட்டுறது”

“சரி நீங்க சொன்ன விபரமெல்லாம் வச்சு நான் மேலே எழுதிப் போடுறேன். மொத்தமா கலங்கல் கட்டுற வேலைக்கு என்ன செலவாகும்னு மட்டும் சொல்லுங்க.”

“அது ஆயிரம் ஆயிரத்தை நூறு ஆகும்ங்க.. எங்க சத்துக்கு நூறு நூத்தம்பதுன்னா பிரிச்சு கொடுக்கலாம்ங்க.”

“சரி உங்க கலங்கு கட்டித்தர வழியை நான் பண்ணுறேன். நீங்க வேற ஒரு உதவி மட்டும் பண்ணனும்..”

“என்ன செய்யணும்னு சொல்லுங்க”

“நான் ஒரு கடுதாசி தர்றேன்.. அதை நான் சொல்லும் முகவரிக்கு உங்க பேரிலே தபால் அனுப்பி விடுங்க”

“அப்படி செஞ்சா கலங்கல் கட்டித் தந்திடுவாங்களா”

15 ஜனவரி 1940

ஒரு நீண்ட கடிதத்தில் ஏரிப் பிரச்சனை குறித்து விலாவரியாக நான் இரண்டு கடிதங்கள் எழுதினேன். ஒன்று மேலிடத்துக்கும் இன்னொன்று கலங்கல் கட்டித்தரக் கேட்டவருக்கும். அதை அவர் பெயரிலேயே குறிப்பிட்ட ‘காஞ்சிபுர’ விலாசத்துக்குத் தபால் அனுப்பச் சொன்னேன்.
நான் எழுதிக் கொடுத்திருந்த அந்த முகவரிக்கு அவர் தபால் அனுப்பினார். அது எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பது குறித்து எல்லாம் நான் எதையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பார்த்தபடி அதே வாரத்திலே ’ஜஸ்டிஸ்’ ஆங்கில ஏட்டில் அந்த விவகாரங்கள் விலாவரியாய் வெளிவந்திருந்தன. ஜமீன் கட்சியினர் தொடங்கி, சர்க்கார் குமாஸ்தாக்கள், கதர்க் கட்சி மிராசுகள் வரைக்கும் ஆடிப்போய் விட்டனர்.

அரசாங்கப் பதிவேடுகளில் மட்டும் இருந்த புள்ளிவிபரங்களும் ஏரிக்குள் இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விதமும், அது யார் யார் பேரில் எந்தெந்த காலகட்டத்தில் பதிவாகி இருக்கிறது என்ற விபரங்களும் எப்படி ஒரு கிராமத்தான் மூலம் பத்திரிகையில் வெளிவந்தது என்று ஆளாளுக்கு தவித்தனர். கூடுதலாக ஜமீன் ஒழிப்பு விவகாரம் பேசுபொருளாகி இருந்த நேரத்தில் இப்படி ஜமீனுக்குப் பாதகமாக திரியைக் கொளுத்தி விட்டது யார் என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குக் கலங்கு கட்டிக் கொடுப்பதுகூட இப்போது பிரச்சனை இல்லை.

27 செப்டம்பர், 1967

கோட்டையில் இருந்து எனக்கு ஓர் கடிதம் வந்திருந்தது.
அப்போது சேலம் மாவட்ட சப்-கலெக்டராகப் பொறுப்புயர்வு பெற்றுப் பணியிலிருந்த நேரம்.

நாடு விடுதலை கண்டு, மாகாணங்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு, சர்க்கார் முறைமைகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன.

முதலமைச்சராக பழைய நீதிக்கட்சிக்காரர், திருவாளர். சி.என்.அண்ணாதுரை பதவியேற்றிருந்தார்.

கடிதம் அவர் பெயரிலே முத்திரையிடப்பட்டிருந்தது. அதுவொரு பிரத்யேக சந்திப்பிற்கான அழைப்பிதழாகவும் இருந்தது.

கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் (28 செப்டம்பர் 1967) நான் அவரை ஓர் அரசு அதிகாரியாகச் சந்திக்கச் சென்றேன். தோளில் பருத்தித்துண்டு, முனைகளில் கட்சிக்கரை. கருப்பு பிரேம் கண்ணாடி, பொடி போட்ட முகத்துடன் சிரித்தபடி வரவேற்றார். ‘பரந்தாமன் சப்-கலெக்டர். சேலம். விசாரிச்சதில் பெரிய விஷயமெல்லாம் பண்ணிய ஆளாமே. எப்படி இருந்தது ரயில் பிரயாணமெல்லாம்?”

ஒரு முதல் அமைச்சருக்கான எந்தக் கர்வமும் இல்லாமல் என் நலம், பிரயாணம், ஜாகை, பணியில் இருந்த ஊர்கள் குறித்தெல்லாம் விசாரித்தார். காங்கிரஸ் சர்க்காரில் கிளியனூர் ஏரியைக் கடக்க பாலம் கட்டும் திட்டம் மூலம் பிள்ளைகள் தண்ணீருக்குள் நடந்து பள்ளிக்கூடம் போகும் நிலைமையை மாற்றியது குறித்தெல்லாம் தெரிந்தறிந்து பாராட்டிப் பேசினார்.

அந்தச் சந்திப்பில் சரியாக 27 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கல்பட்டு ஜில்லா பொன்விளைந்த களத்தூர் ஏரியில் கலங்கு கட்டித்தரும் விவகாரத்திற்காக நான் அவருக்கு மாற்றுப்பெயரில் அனுப்பியிருந்த கடிதமும் தற்போது அதே கிராமத்திற்கு நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தருவதற்காக பதிவேடுகளில் ஏரி விவகாரம் தொட்டு மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட எனது கடிதத்தின் கையெழுத்தையும் அவர் அடையாளம் கண்டுகொண்டு என்னை நேரில் அழைத்துப் பேசியதையும் அறிந்து வெலெவெலத்துப் போனேன்.

“உங்களைப் போன்றவர்கள் எங்களோடு இணைந்து பயணிக்க வேண்டியவர்கள். எப்படி இருந்தாலும் அதிகாரத்தை மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த நினைக்கிறவரை நீங்கள் எங்களோடே எப்போதும் இருப்பீர்கள்” என்றார். அவரது அந்த வாக்கியத்தை என் வாழ்நாளுக்கும் மறக்கவேயில்லை.

***

கார்த்திக் புகழேந்தி

பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “வெஞ்சினம்” வெளியாகியுள்ளது. தொடர்புக்கு -writerpugal@gmail.com

நியமம்

1

ஜா.தீபா

ந்தப் புன்னகையில் இருந்து வாசுகி தன்னை விடுவித்துக் கொண்டாள். பிளாட்ஃபார்ம் நடுவே நின்றுகொண்டு மின்சார ரயில் எழுப்பும் கனத்த ஓசையினூடே மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தாள். இப்போதும் அந்த புன்னகையின் சாரம் அப்படியே இருந்தது.

ஒரு விசேஷ நாளில் சுற்றமும் நட்பும் சூழ, மத்தியில் அந்த இளைஞன் இராமநாதன் இந்தப் புன்னகையைத் தந்திருக்க வேண்டும். அந்தப் புகைப்படத்தில் இருந்தே தனியாக அவனைக் கழற்றி சுவர்களில் ஒட்ட வைத்திருக்கின்றனர். அவனது முகத்தை அந்தப் புன்னகையைக் கொண்டே நினைவில் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் அது தனக்கு உதவியாக இருக்க முடியாது என்பதையும் தெரிந்து கொண்டாள்.
தேடப்படுபவர்களாக தன்னை மாற்றிக் கொள்கிறவர்கள் முதலில் செய்வது புன்னகையைத் தொலைப்பதுதானே என வாசுகி நினைத்துக் கொண்டாள். இராமநாதனின் முகம் ஒருவித அப்பாவித்தனத்தைக் கொண்டிருந்தது. வேறு ஒரு அடையாளமும் கூட வேண்டி இருந்ததால் அவள் இராமநாதனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“விடைத்த மூக்கு” என்பதில் கவனம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். தனக்கு எளிதில் அறிய முடிந்த ஒருவரின் மூக்கோடு அதனைப் பொருத்திக்கொள்ள முடிந்தது அவளால். சுவரொட்டியில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை அலைபேசியில் பதிவு செய்தாள். மின்சார ரயில் வந்து நின்றது. ஏறியதும் உட்கார ஜன்னலோர இருக்கைக் கிடைத்தது. அலைபேசியை கவனிக்க விரும்பிய ஒரு பயணியை அலட்சியம் செய்து பதிவுசெய்து வைத்திருந்த எண்ணை அழைத்தாள்.
அழைப்பு உடனடியாக ஏற்கப்பட்டது. “சென்னையிலேருந்து பேசறேன். என் பேர் வாசுகி. ரயில்வே ஸ்டேஷன்ல காணவில்லை நோட்டிஸ் பார்த்தேன்.

“இராமநாதனைப் பத்தி எதுவும் தகவல் கிடைச்சுதா?”

“நீங்க?” சிறு சொல்லுக்கும் அதிக மூச்சு வாங்கும் அறுபது வயதான பெண்ணின் குரல் அது.

“நான் வாசுகி. இராமநாதன் கிடைச்சிட்டாரா? எனக்கு அவரப்பத்தி எதுவும் தெரியாது. ஆனா ஏதாவது உதவி செய்யணும்னு விருப்பப்படறேன்.”

சிறு கேவல் எழுந்தது.

“நேத்து தான் இராமநாதனை அடக்கம் பண்ணோம்”

“ஓ! அது இராமநாதன் தானா?”

“என்னது?”

“நீங்க அடக்கம் பண்ணினது இராமநாதனைத் தானே? நல்லாத் தெரியுமா?”

எதிர்முனை திகைத்து அமைதியானது. வேறு யாரோ ஃபோனை வாங்கியிருந்தார்கள்.

“யாருங்க வேணும்?”

“சார்… இராமநாதன் காணவில்லை போஸ்டர் பார்த்தேன்…”

அலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

வாசுகி அலைபேசியில் இராமநாதன் என்று பதித்திருந்ததை அதன் தொடர்பு எண்ணோடு சேர்த்து அழித்தாள். அலைபேசியை தன் பைக்குள் வைத்துக் கொண்டாள். கூடையில் இருக்கும் பாட்டிலில் இருந்து எஞ்சியத் தண்ணீரைக் குடித்தாள். பல்லாவரம் தொடங்கி கடந்துபோகும் ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் இராமநாதன் புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கொண்டே வந்தான்.

வாசுகி எக்மோர் ரயில் நிலையத்தில் இறங்கினாள். அங்கிருந்து அலுவலகம் செல்ல பதினைந்தே நிமிடங்கள் தான். இன்னமும் நேரம் இருந்தது. எல்லா நாட்களிலும் அவளுக்கு இந்த நேரங்கள் வாய்க்கின்றன. இந்தப் பொழுதுகளுக்காகவே தான் ஒவ்வொரு தினத்தையும் அவள் கழிக்கிறாள். அவளது வேலை ஒரு வழக்கறிஞரின் அலுவலகத்தில். அவர்கள் தரும் தாள்களில் இருந்து எழுத்துகளைத் தட்டச்சு செய்து உரிய நேரத்தில் தரவேண்டும். கவனம் கூடுகிற வேலை பிசகக் கூடாது. இயந்திரத்தனமாக செய்யக்கூடிய வேலையும் தான்.

வாசுகி தனது கைப்பையினைத் திறந்தாள். ஜிப் கிழிந்துபோய் நாட்களாகியிருந்தன. சில காகிதங்களும் கொஞ்சம் சில்லறைகளையும் தவிர வேறொன்றுமில்லாத அந்தப் பைக்கு அவள் ஊக்குப்பின் தைத்து மூடியிருந்தாள். அதன் உள்ளேயிருந்து ஒரு சிறிய குறிப்பு நோட்டினை எடுத்து வைத்துக் கொண்டாள்.

அதில் “எக்மோர் ஸ்டேஷன்” என அவள் எழுதியிருந்த இடத்தில் “நூர் ஆபுதின்” என்ற பெயர் அழகாக எழுதப்பட்டிருந்தது. அவளுடைய கையெழுத்தின் நிதான வடிவம் அது. அதன் கீழ் வரிசையாக சில பெயர்கள், எண்களுமாக முத்துக்கோர்த்தது போல கிடந்தன. அவளுடைய விரல்களின் கோணல்களுக்கு மாறாக உருட்டிச் செதுக்கப்பட்ட எழுத்துக்கள்.

குழாயிலிருந்து தண்ணீரை தேவைக்குப் பிடித்துக் கொண்டாள். பிறகு நாளிதழ்கள், புத்தகங்கள் விற்கும் கடையின் முன்பாக போய் நின்றாள். சிறிய கூட்டம். அந்தக் கடை முன்பாக முழங்கால் படிய தரையில் அமர்ந்தாள். அவளுடைய செயலினால் அங்கு நின்றிருந்த ஓரிரண்டு வாடிக்கையாளர்கள் சற்றுப்பதறி விலகினார்கள். ஒருவர் அவள் செயலை அசிரத்தையாக கவனித்தார். அவள் தொங்கவிடப்பட்டிருந்த நாளிதழ்களின் போஸ்டர்களை விலக்கினாள். பின்புறத்தில் கடைச்சுவரின் அடியில் “நூர் ஆபுதின்” என்ற பெயரைத் தாங்கியிருந்த சுவரொட்டி மீது வெளிச்சம் பட்டது.

எழுபது வயதினைக் கொண்டிருந்த நூர் ஆபுதின் கூட்டத்தில் விலக்கப்பட்ட ஒரு குழந்தையின் பார்வையைக் கொண்டிருந்தார். அவரது கண்களைப் பார்த்தாள். அவை பல்லாங்குழிக்குள் கிடந்தன. மூக்கு வளைந்திருக்கிறது என்பதை மனக்குறிப்பில் வைத்துக் கொண்டாள். முன்பற்கள் எடுப்பானவை. முன்தினம் பார்த்தபோது கூட குறிப்பில் வைத்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. முடி கொட்டிப்போய் விட்டது. வைத்திருந்த காலத்தில் கோரைப்புல்லின் தூக்கல் கொண்டவையாக இருந்திருக்கலாம். உற்றுப் பார்த்தாள். நடுநெற்றியில் வெட்டு இருப்பது இப்போது தான் தேசலாய்த் தெரிகிறது.

வாசுகி கண்களை மூடிக்கொண்டாள். நூர் ஆபுதினை நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவானவை ஒவ்வொன்றாக நம்பிக்கைக்குள் வந்தன. கடைக்காரர் நின்று கொண்டிருந்தவருக்கு அவசியமானதைக் கொடுத்துவிட்டு குதித்து வெளிவந்தார்.

“என்னம்மா வேணும்? தெரிஞ்சவரா?” என்று கேட்டார்.

“இல்லை” என்பதை மட்டும் தலையாட்டிவிட்டு வாசுகி அங்கிருந்து நகர்ந்தாள். கடைக்காரர் ஒருமுறை குனிந்து நூர் ஆபுதினை பார்த்துவிட்டுப் போனார். காணாமல் போனவர்களின் முகங்கள் வாசுகிக்குப் பாடமாகியிருந்தன.

வாசுகி எக்மோர்ஸ்டேஷனின் மற்ற நடைமேடைகளுக்குச் சென்றாள். கூட்ட நெரிசல் குறைவாக இருக்கிற நேரம். ஒவ்வொரு முகமாக கவனத்துடன் பார்த்துக்கொண்டே நடந்தாள். தவிப்பும், கலக்கமும், அச்சமும், எதிர்பார்ப்பும், பூரிப்புமாக பலமாதிரி கடக்கும் முகங்கள் அவை. இதுபோன்ற நேரங்களில் வாசுகி மனிதர்களுக்கு சற்றுத்தள்ளி அமர்ந்து கொள்வாள். தன்னுடைய பார்வையை மட்டும் அகலாமல் வைத்திருப்பாள்.
இப்போதெல்லாம் “இவர்கள் காணாமல் போனவர்கள்தானா?” என்பதை நிமிடங்களிலேயேக் கூட தனது அனுபவத்தால் வாசகியால் கண்டு கொள்ள இயலுகிறது. சென்னையில் இப்படியாக இந்நான்கு வருடங்களில் எட்டு பேரை அவள் குடும்பத்துடன் அனுப்பியிருக்கிறாள்.

இப்படிதான் நரிக்குறவர் சமூகம் சார்ந்த நான்கு வயது சிறுமியை மீட்டுத் தந்ததில் அவளுடைய பெயர் ஒரு வார இதழில் வந்திருந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து ரயிலில் தனியே சென்னை வந்து சேர்ந்திருந்த அந்த சிறுமி வெகுநேரமாக அழுதபடி நின்றிருந்தாள். வீடில்லாத குழந்தை நினைத்த இடத்தில் அழ முடியும் என்று எல்லோரும் நினைத்திருக்கக் கூடும். வாசுகி அப்படி நினைக்கவில்லை. யாரும் பொருட்படுத்தாத அந்த நரிக்குறவச் சிறுமியின் அழுகை அவளை அன்று நகரவிடாது செய்தது.

பயணப் பெட்டிகளோடும், அவசரத்தோடும் மக்கள் அவரவர் பயணத்திற்குள் ஆழ்ந்திருந்தார்கள். பெற்றோர் யாரும் இல்லாத இடத்தில் ஒரு குழந்தை வீறிட்டு அழுவது கவனம் ஈர்க்க அல்ல, தன் கையறு நிலையின் உச்சத்தை வெளிப்படுத்த என்பதை வாசுகி யோசிக்காமலேயே புரிந்து கொண்டாள்.

தன்னிடமிருந்த பைசாவில் ஒரு ஆரஞ்சு மிட்டாயும், பட்டர் பன்னும் வாங்கிக் கொடுத்தாள். அது தனக்கு பிச்சை எதுவும் வேண்டாம் என்பது போல நின்றது. “எனக்குப் பசிக்குது” என்று பட்டர் பன்னை பிய்த்து ஒரு கடி கடித்தாள். சிறுமி அவள் அருகில் வந்தது. மீதமிருந்த பட்டர் பன்னையும் கூடவே தண்ணீரையும் குடித்த பிறகு சிறுமி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

விவரம் சேகரித்து சிறுமியை அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனாள். சிறுமி சொன்ன விவரத்தின்படி பெற்றோரிடம் ஒப்படைத்தாள். அவர்கள் பலவாறு நன்றி சொன்னார்கள். முந்தைய தினம் மாலையில் இருந்தே சிறுமியைத் தேடுவதாகவும், அவர்கள் கொடுத்த புகாரைக் காவல் நிலையம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் சொன்னார்கள்.

இன்றைய தினம் எந்த முகமும் காணாமல் போன முகமாக இல்லை. அவள் தன் அலுவலகம் நோக்கி நடந்தாள். நடக்கையில் சரஸ்வதி அம்மாளின் மகள் என்று பதிவு செய்யப்பட்டிருந்த எண்ணிற்கு ஃபோன் செய்தாள். இவளுடைய போனை எடுத்ததும் சரஸ்வதி அம்மாளின் மகள் “இப்பக் கூட அவரும் நானும் ஸ்டேஷனுக்கு போயிட்டுத்தான் வர்றோம்.” என்றாள். எந்த உபகார வார்தைகளுமற்ற உரையாடலாக இரண்டு மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்தத் தேடல்.

“உங்கம்மா சாயல்ல யாரப் பார்த்தாலும் பக்கத்துல போய்ப் பாத்துட்டு தான் வர்றேன்… இன்னிக்குப் பாத்த ஒருத்தங்களுக்கு கூட உங்க அம்மா சாயல் கொஞ்சம் ஒத்துப் போச்சுது… ஆனா அவங்க இல்லை. உங்க அம்மாவுக்கு நல்ல மேட்டு நெத்தி இல்ல?” என்றதும் சரஸ்வதியின் மகள் விசும்பினாள். வாசுகி ஃபோனை அணைத்தாள்.

சாலையின் ஓரமாக வந்து பைக்குள் இருந்த காகிதக்கட்டில் சரஸ்வதி அம்மாளின் நோட்டிசைத் தேடி எடுத்தாள். மேட்டு நெற்றியும் கூர் மூக்கும் கொண்ட சரஸ்வதி அம்மாளை அவள் அந்தக்கால நடிகை ராஜகாந்தத்தின் சாயலோடு நினைவில் இருத்தியிருந்தாள்.

வாசுகிக்குக்குக் கூட நடிகை சினேகாவின் சாயல் இருப்பதாய் எப்போதும் சொல்வான் சிவகுரு. வாசுகி அதை நம்பியதில்லை. “வாசுக்கா நீ சிரிக்கும்போது பாரேன்… இப்படித்தான் இருக்கே…!” என்பான். கடைக்குப் போய்விட்டு வரும் வழியில் “ஆனந்தம்” பட போஸ்டரில் சிநேகா அவளைப் போல் சிரித்துக் கொண்டிருந்தார். “போடா அவங்க சிரிப்பு எவ்வளவு அழகு?”

“ஆமாக்கா.. நீயும்.!”

வாசுகி சிவகுருவின் கைகளைத் தன்னோடு இணைத்தபடி கடைத்தெருவில் நடப்பாள். சிவகுருவுக்கு கூச்சமாக இருக்கும். அவன் லேசாக விலகுவான். சிவகுரு சென்னைக்குப் படிக்கப் போகிறான் என்பதில் வாசுகிக்கு மிகுந்த பெருமை. சிவகுருவைவைப் பற்றி நினைக்கையில் எப்போதும் போல அம்மாவையும் நினைத்துக் கொண்டாள். வீட்டில் இருப்பாள் அவளுடைய அம்மா.

வாசுகியின் தொலைபேசி அழைத்தது. காசிநாதன் என்கிற எண்ணின் அழைப்பு அது. காசிநாதன் காணாமல் போய் பதினைந்து தினங்களே ஆகியிருந்தன. காசிநாதன் நாற்பது வயது உள்ளவர். கடன் தொல்லை காரணமாக காணாமல் போய்விட்டதாக நாளிதழ்களில் தெரிந்து கொண்டாள். கடனை எப்படியாவது அடைத்து விடலாம் என்றும் திரும்பி வந்து விடும்படியும் காசிநாதனின் மனைவியும் மகள்களும் நாளிதழ் விளம்பரங்களில் இறைஞ்சியிருந்தனர். வாசுகி அவர்களைத் தொலைபேசியில் அழைத்தபோது காசிநாதனின் மகள் சரியாகப் பேசவில்லை. கடன் கொடுத்த எவரோ பேசுகிறார்கள் என்றே நினைத்தாள்.

வாசுகி தன்னைப் பற்றி பலவாறாகச் சொல்ல வேண்டியிருந்தது. “அப்பாவோட சொந்த ஊரு எது?” என்று கேட்டாள். மதுரை பக்கம் ஒரு கிராமம் என்றும் அவர் அங்கெல்லாம் போக மாட்டார் என்றும் காசிநாதனின் மகள் உறுதியாக சொன்னாள். மதுரை போகும் ரயில்களில் எதற்கும் தேடிப் பார்க்கிறேன் என்று வாசுகி வாக்குறுதி தந்தாள். அந்த மகள் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. சொன்னபடியே தினமும் ஒருமுறை மதுரை வழியே போகும் ரயில்களைச் சுற்றி வரவும் செய்தாள்.
காசிநாதனுக்கு ஒல்லியான தேகம். கொஞ்சம் அகன்ற விழிகள். எதைக் கண்டாலும் அச்சம் கொள்ளும் பாவனையை கொண்ட கண்கள்.

புகைப்படத்தின் இந்த அடையாளம் போதும் என்றே காசிநாதனை வாசுகி தேடத்துவங்கினாள். இப்படியான அம்சங்களோடு தான் பல முகங்கள் அமைந்திருக்கின்றன என்பதை வாசுகி தன் தேடலின்போது கண்டிருந்தாள். காசிநாதன் என்கிற எண்ணிலிருந்து தான் இந்த தொலைபேசி அழைப்பு.

“அக்கா… நான் மஞ்சு பேசறேன்.. அப்பா வீட்டுக்கு வந்துட்டாருக்கா…”

“அப்படியா! ரொம்ப சந்தோசம்… நல்லாருக்காரா?”

“ஆமாக்கா… சரியா சாப்பிடாம… பாவம்கா அவரு” என்று அழுதாள்.

“உங்க அப்பாவை நல்லாப் பாத்துக்கம்மா.. அவரைத் திட்ட வேண்டாம்னு அம்மாக்கிட்ட சொல்லு”

“சரிக்கா… தினமும் நீங்க ஃபோன் பேசுனது பெரிய விசயம்கா… சென்னையில தான இருக்கீங்க… வீட்டுக்கு வாங்க ஒருநாள்”

“ஆகட்டும்மா… வச்சிடறேன்… அப்பா பக்கத்துலேயே கொஞ்சம் இருங்க” என்றவள் காசிநாதன் காணாமல் போன விளம்பர நாளிதழை எடுத்து கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டாள். காசிநாதன் பெயரில் பதிவு செய்திருந்த அலைபேசி எண்ணையும் அழித்தாள்.

இப்படி ஒருநாள் சிவகுருவும் வீடுவந்து சேருவான் என்று தான் அவளும் அம்மாவும் காத்திருக்கின்றனர். சென்னைக்கு அவனை பஸ் ஏற்றிவிட்ட நாளில் வாசுகிக்கு தம்பி இல்லாத வீட்டுக்குள் நுழையப் பிடிக்கவில்லை. வாசலிலேயே அமர்ந்திருந்தாள். வாசுகியின் அம்மாவும், அப்பாவும் கூட அவளருகில் அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. சிவகுருவும் அவர்களும் ஒன்றாக தருணங்களைத் தங்களுக்குள் தனித்தனியாக எண்ணிக் கொண்டிருந்தனர்.

வாசுகியின் அம்மா அவன் பிறந்தபோது தன்னருகில் கிடத்தப்பட்டிருந்த நொடிகளில் இருந்து நினைவை மீட்டுக்கொண்டிருந்தாள். அதன்பிறகு மீண்டும் அவனை அவர்கள் பார்க்கவேயில்லை.

சிவகுருவினை கல்லூரியில் சேர்த்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. சிவகுருவுக்கு சிறிய விபத்து என்றும் உடனே வரும்படியும் தகவல் சொன்னது. வாசுகியின் அப்பா கல்லூரியை அடைந்தபோது அவரைத் தகுந்த பாதுகாப்போடு அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்து சென்ற வேகத்திலும், நிலவிய பேரமைதியிலும் அப்போதே அவர் தன்னை இழக்கத் தொடங்கியிருந்தார். கல்லூரி நிர்வாகம் வெகுநேரம் எடுத்துக் கொள்ளவில்லை. நேரடியாக விஷயத்துக்கு வந்தனர். சிவகுரு உயிரோடு இல்லை என்று அவனுடைய அப்பாவுக்கு உணர்த்தப்பட்டது. கல்லூரிக்குப் பின்னால் இருந்த குளத்தில் சிதைந்து கிடந்த அவனது உடல் நான்கு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டதை சொன்னார்கள். அவன் அணிந்திருந்ததாய் சொல்லி நைந்த சட்டை ஒன்றை தந்தார்கள். அது அவனுடையதுதானா என்று போலிஸ் ஒருமுறை அப்பாவிடம் கேட்டுக் கொண்டது. “கல்லூரிக்கு செல்கிறான் என்றதும், எங்கள் ஊர் லயா கார்மெண்டில் எடுத்த சட்டை இது. நானும் அவனுமாகத் தான் போய் வாங்கினோம். அவனுக்கு இந்த நிறம் எடுப்பாக இருக்கும் என்று நினைத்து தான் வாங்கினேன்” என்றார் வாசுகியின் அப்பா.

போலிஸ் அது சிவகுருவின் சட்டை என்று மட்டும் குறித்துக் கொண்டது. நான்கு நாட்களாக ஏன் தங்களுக்கு தகவல் சொல்லவில்லை? ஏன் முகம் சிதைந்திருக்கிறது? இதை எப்படி தற்கொலை என்று சொல்லமுடியும் என்று வாசுகியின் அப்பாவின் தலைக்குள் ஏராளமான கேள்விகள் ஓடின. எவருக்கும் பதில் சொல்லும் திறனும் மனதும் இல்லை. தற்கொலை என்றே வழக்கினை முடித்தார்கள். ஊருக்கு எடுத்துச்செல்ல கல்லூரியும், காவல்துறையும் ஒரேடியாக ஒரே குரலில் மறுத்தது. ஒற்றை ஆளாய் வாசுகியின் அப்பா பரிதவித்துக் கிடந்தார். வாசுகியின் அம்மாவும், வாசுகியும் அழைக்கப்படாமலேயே அவசரக்கோலத்தில் தன்னிடம் தரப்பட்ட பொட்டலத்தை எரியூட்டினார்.

வெற்று மனதோடும் பதில்கள் அற்றுப்போயும் ஊர் திரும்பினார். உறவினர்களும், நண்பர்களும் கேள்விகளை மட்டுமே கேட்டபடி இருந்தனர். “அவனே போயிட்டான்” என்பதே அவரின் நினைவாக இருந்தது. வாசுகியினாலும் அவளுடைய அம்மாவினாலும் அவரின் மௌனத்தைக் களைய முடியவில்லை. சிவகுரு மறைந்த பதிமூன்றாவது நாள் அவன் அம்மாவின் கனவில் வந்தான். “நான் இருக்கேன்மா இங்கன தான் இருக்கேன்” என்றான். வாசுகியின் அம்மா அந்த நடுஇரவில் ஆவேசம் கொண்டு எழுந்தாள். சிவகுருவின் புகைப்படத்துக்கு போடப்பட்டிருந்த மாலையைக் கழற்றி வீசினாள். “அவன் இருக்கான்… உயிரோட தான் இருக்கான். என்னைத் தேடி வருவான்” என்றாள். திரும்பத் திரும்ப அதையே சொன்னாள். எவருடைய சமாதானமும் சந்தேகமும் அதன் பிறகு அவளிடத்தில் பேச்சற்றுப் போனது.

சிவகுருவின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு காலங்குளம் ஜோதிடரிடம் சென்றபோது கூட சிவகுரு “எப்ப வருவான்?” என்கிற கேள்வியைத்தான் வாசுகியின் அம்மாவால் கேட்க முடிந்தது. அவர் பல கணக்குகளைச் சொன்னார். பிறகு அவன் ஆன்மா இன்னும் அழியவில்லை. ‘அவன் வருவான்’ என்றார். தலை நிமிர்த்தி திரும்ப வீடு வந்தாள் அம்மா. அவளுடன் போயிருந்த வாசுகியும் நம்பிக்கையைப் பற்றிக்கொண்டாள்.

வாசுகியின் அப்பாவை இந்த நம்பிக்கைக் குத்தியபடி இருந்தது. மூவரும் அவரவருக்கான வாழ்க்கையில் கிடந்தார்கள். வாசுகி அடிக்கடி சென்னை வந்து போலீசில் சிவகுருவைக் காணவில்லை என்று புகார் கொடுத்தபடி இருந்தாள். போலிஸ் மூடப்பட்ட வழக்கு என்றது. அதில் முனையளவு முனைப்பையும் காட்ட மறுத்தது.

இதற்காகவே சென்னைக்கு அம்மாவையும் அப்பாவையும் அழைத்து வந்தாள் வாசுகி. சொந்த ஊரில் தெருவில் இருந்த அத்தனை பேரிடமும் இவர்களது சென்னை முகவரி இருந்தது. சிவகுரு வந்தால் தகவல் கொடுக்க வேண்டும் என வாசுகியின் அம்மா ஒவ்வொரு வீடாகப் போய் சொல்லிவிட்டு வந்தாள்.

வாசுகி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தாள். தட்டச்சு செய்ய வேண்டிய காகிதங்கள் எதுவும் இன்னும் வந்து சேரவில்லை. அங்கே கிடந்த அன்றைய தினச்செய்தித்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டாள்.

எப்போதும் போல அவளுடைய குறிப்பு நோட்டினையும் பக்கத்தில் வைத்துக் கொண்டாள். அன்றைய தினம் காணாமல் போனவர்கள் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை. இப்போதெல்லாம் இதுபோன்ற செய்திகள் அதிகம் வருவதில்லை. வாட்ஸ்ஆப் வசதியைக் கொண்டிராத அலைபேசி என்பதால் வாசுகி இது போன்றவற்றை செய்தித்தாள்களிலேயே கண்டு கொண்டிருக்கிறாள். செய்தித்தாளை மூடப்போகும் ஒரு கணத்தில் தான் பார்த்தாள். காலங்குளம் ஜோதிடர் முந்தைய நாள் இரவு இறந்திருந்தார்.

அவர் மகன்களும், மகள்களும் அதற்காக கண்ணீர் அஞ்சலியை புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தனர். “உங்க பையன் திரும்பி வரலேனா… என்னை வந்து என்னனு கேளுங்க?” என்றிருந்தார் அவர். போய்சேர்ந்து விட்டார். வாசுகி அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தாள். அம்மாவிடம் காலங்குளம் ஜோதிடர் குறித்து சொல்ல வேண்டாம் என்று தீர்மானம் கொண்டாள்.

மாதாந்திர பேருந்து பாஸ் பையில் இருக்கிறதா என்று ஒருமுறை சோதனை செய்து கொண்டாள். தண்ணீர் பாட்டிலை மீண்டும் நிரப்பினாள். மதியானம் வருவதாக அலுவலகத்தில் சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
நூர் ஆபுதினைத் தேடி எந்தெந்த தர்காக்களுக்கும் மசூதிகளுக்கும் செல்லலாம் என்ற யோசனையுடன் போய்க்கொண்டே இருந்தாள்.

***

ஜா.தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. திரைத்துறை சார்ந்த நூல்களும் ஐந்திற்கும் மேற்பட்ட தலைப்பில் வெளிவந்துள்ளன. இவரது மின்னஞ்சல் முகவரி– deepaj82@gmail.com

ஊர் எனும் வாக்கியம்

0

ஜீவ கரிகாலன்

தமிழில் beating around the bush என்பதற்கான அர்த்தம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்று வைத்துக்கொள்ளலாம். இது ஒரு ’விமர்சனம்’ என்றார் என் நண்பர். எனக்கோ இது ஒரு வடிவமாகத் தோன்றியது. சமீபத்திய பயணம் ஒன்று கிளர்த்திய நல்ல மனநிலையை, மேற்சொன்ன இந்த புரிதலுக்கு இரையாக்கிட எனக்கு ஒரு கட்டுரைத் தேவைப்பட்டது :

‘ஒரு பயணம் என்னவெல்லாம் செய்துவிடும்?’ என்கிற வாக்கியம் வேண்டுமானால் தேய்வழக்காய் இருக்கலாமே தவிர ஒரு பயணம் அப்படியானது இல்லை. ஏதோ கணத்தில் முடிவாகின்ற பயணம் உற்சாகம் தருவது மட்டுமல்ல, அது மிகச்சரியானவர்களோடு பயணிக்கையில் சிலவற்றைக் கீறிவிடும் அல்லது விதைத்து விடும். எனக்கு இது ஒரு கீறல் தான். தீபாவுக்கும் கார்த்திக்கிற்கும் விதையிட்டு முளையிட்டு பயிராகப் போவது நிச்சயம், அறுவடையில் பதிப்பாளனுக்கு பங்கிருப்பதால் அதுவே மகிழ்ச்சி தான்.

அரங்கு கிடைத்தாலும் மிகச்சுமாரான விற்பனையே என்ற போதிலும் நெல்லை புத்தகக்காட்சிக்கு பயணிக்க காரணமிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னர் தேடிச்சென்ற செம்புப்பட்டயத்தின் ஆர்வத்தால் விளைந்த பந்தம் அது. யாருமே தெரியாத ஊரை ancestral origin என்று சொல்வதால் என்ன பயன்? பலரைத் தெரிந்திருந்தாலும் அண்மையில் நான் வளர்ந்த கரூரில் இறங்கிய போதும் இப்படித்தான் தோன்றியது.

இவ்வகையான கட்டுரைகளை முன்புபோல் நிதானமாகவே எழுத முடியவில்லை, ஒருபுறம் வரலாற்றை அறிவியல்பூர்வமாக காபந்து செய்வதாக நினைத்துக் கொள்பவர்கள், மற்றொருபுறம் கலாச்சாரம் என்ற பெயரில் மறைமுகமாக இருந்தவர்கள் மதத்தை காபந்து பண்ணுவதாக தம்மையும் பிறரையும் ஏமாற்றுபவர்கள். இவர்கள் எந்த ஒரு சாரரையும் வம்பிக்கிழுக்காமல் உறுதியற்ற தன்மையுடைய வாக்கியங்களை முலாம் பூசுவது போல் பூச வேண்டும். கூடுதலாக அறச்சீற்றம், சில எழுத்தாளர்களின் தனித்தமிழ் மிரட்டல்கள் வேறு..

இரண்டு நெல்லைக்காரர்கள் மத்தியிலே, இரண்டு நாரோயில்காரர்கள் மத்தியிலே, மதுரைக்காரர்கள் மத்தியிலே.. இதுகூட பரவாயில்லை எந்த ஊராக இருந்தாலும் அது டெல்டா தானே என்று சொல்லும், கீழை மேலை தஞ்சை மாவட்டத்துக்காரர்கள் பாசம் என்பது என்னவென உறுதியாய் தெரிந்துகொள்ளவே முடியாது.

அப்படியானால் ஊர் என்பது என்ன?


இந்தக் கேள்விக்கு விடை தெரிய பல ஆயிரம் மைல் பயணங்களும் போர்களை முன்வைத்தோ, வணிகங்களை முன்வைத்தோ எழுதப்பட்ட வரலாறுகள் உலகம் முழுக்கப் பரவியிருக்கின்றன. இதில் ஊர் என்பது என்ன? ஒரு சிறு பயணத்தில் கிடைத்த சிறு வெளிச்சம் தான் இக்கட்டுரை. இங்கே வெளிச்சமென்பது ‘கேள்விகள்’ தோன்றுமிடம் தான், வெளிச்சத்தின் எல்லை தான் ‘பதில்’.

முன்கதை:

நெல்லை மாவட்டத்தின் பிரதான விளையாட்டுத் திடல் அது. கேலரியில் அமர்ந்தபடி பொதுவான விஷயங்கள் பேச ஆரம்பித்த கணத்தில் சட்டென பேச்சுவாக்கில் திட்டமிட்டோம். எழுத்தாளர் ஜா.தீபா கொற்கை போய் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். கார்த்திக் ஆதிச்சநல்லூர் போக வேண்டும் என்று விரும்பினார், எனக்கோ மணப்பாடு சர்ச் மீது மையல் இருந்தது. எல்லாமே ஒரே பயணத்தில் போய்வரும் சாத்தியம் இருப்பதை உணர்ந்ததும் அடுத்து அந்த நாளை பயணத்திற்காக எனத் திட்டமிட்டோம்.

*

மு.காமராசு அவர்களின் அனுசரணையோடு காலை உணவு காத்திருக்கிறது என்று முதலில் திட்டமிட்டதால், ரொம்ப நேரம் இங்கே இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்தே நம்பி இறங்கினேன். வந்தது வழிபட அல்ல, ரசிக்க என்பதால் பசி தடுமாறி ரதியின் காலடியில் விழுந்துவிட்டது. ராஜ கோபுரம், மண்டபத்து சிற்பங்கள். குறிப்பாக சிற்பத்தில் இருக்கும் மன்னர்களின் முகவெட்டு, இதே தன்மையில் உள்ள நெல்லையப்பர், ராமேஸ்வரம், தென்காசி கோயில் சிற்பங்கள் ஆகியன. இது ஒரே ஆட்சியில் நிறுவப்பட்டது எனும் தடயங்களைக் கொண்டிருந்தாலும் (போதாக் குறைக்கு நவாப் ஆட்சியின் கோயில் இடிப்பு சமபவங்கள் நடைபெற்றதாக முழுமை இல்லாத செய்திகளை உள்ளடக்கிய கோயில் இது) இவ்வகையான கோயில்கள் 16-ஆம் நூற்றாண்டு கோயில் என்று மட்டும் சொல்லிவிட முடியாது என்கிற எண்ணம் மேலோங்கியது.

கோயிலின் உட்பிரகாரம் என்பது முதல் phase, வெளிப்பிரகாரம் என்பது மூன்றாவது phase, ராஜ கோபுரம் என்பது ஓரளவுக்கு கடைசி அல்லது அதற்கு முந்தைய phase, வெளிப்பிரகாரத்தில் மற்ற தெய்வங்களுக்கான சன்னதிகளை அவ்வப்போது அமைத்துக் கொள்ளலாம். இன்றைக்கு புறம்போக்கு இடத்தில் ஒரு விநாயகர் கோயிலைக்கட்டிவிட்டு முருகன், ஐயப்பன், மாரியாத்தாள் என்று backward integrate செய்யும் உள்ளூர் கவுன்சிலர் அ தர்மகார்த்தாக்களுக்கு ஒரு மரபுத் தொடர்ச்சி இருப்பது இப்படித்தான். அப்படிப் பார்த்தால் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டிலிருந்தே இந்த கோயில் இருந்திருக்கக் கூடும். அதற்கான காரணத்தை தேடித்தான் எங்களது எஞ்சியிருந்த பயணம்.

சிற்பங்களின் காலத்தை நாம் அறிவதால் அல்லது சிற்பம் உருவாக்கப்பட்ட பின்னணியை அறிவதால் அல்லது படிமவியல் கூறுகளைக் கண்டுகொள்வதால் மட்டும் சிற்பத்தை ரசிக்க முடிவதில்லை. சிற்பம் ஒரு கதை கூற வேண்டும் – அந்தக் கதையால் மட்டும்தான் பார்ப்பவருக்கு ஒரு பிணைப்பு ஏற்படுகிறது. ஆரியநாத முதலியாரோ, விசுவநாத நாயக்கரோ நாயக்கர்களை தமிழகத்தில் வேரூன்ற வைக்க அவர்களோடு கலை மரபில் பிணைவது முக்கியம் என்று பெரியதொரு தொலைநோக்குப் பார்வை ஒன்றை வைத்திருக்கலாம், அதுவே இதுபோன்ற பல கோயில்களின் புனரமைப்பிற்கு காரணமாக அமைந்திருக்கலாம்.

கோயிலின் சிறப்பாக ரதி-மன்மதன் சிற்பங்களைச் சொன்னாலும், வெளிப்பிரகாரத்தில் இருக்கின்ற தன் மகனை மீட்கும் அரசனின் சிற்பமும் சொல்லிய & சொல்லாத கதைகள் தான் இக்கோயிலின் சிறப்பம்சமாக நான் பார்த்தேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வோடு அங்கிலிருந்து கிளம்பலானோம். வற்றாநதியின் வலப்புறத்திலேயே தொடர்ந்தது எங்கள் பயணம்.

கிருஷ்ணாபுரத்தை வைத்து அதே கேள்வியைக் கேட்டேன் – ஊர் என்பது என்ன?

நாயக்கரைப் பொறுத்தவரை ஊர் என்பது தன் பிரதாபத்தை தாங்கி நிற்கப்போகும் நிலம்., அதுவே கோயிலைச் சுற்றி அமர்த்தப்பட்ட 108 அந்தணர்களுக்கு (கல்வெட்டுச் செய்தியின் படி) வேறு ஒன்று. கோயிலை பரமாரிப்பதற்காக தானமளிக்கப்பட்ட நிலத்தில் வசிப்பவர்களுக்கு அது வேறு ஒன்று.

*

திச்ச நல்லூர் குறித்து ஒரு தொடரையே எழுத்தாளர் கார்த்திக் எழுத ஆரம்பித்துவிட்டார். விரைவில் அங்கே ஒரு கள அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க இருப்பதாக அறிந்தபோது கார்த்திக் அதற்குள் ஒரு முக்கியமான நூலைக் கொண்டு வந்துவிடுவார் என நம்புகிறேன். ஆதிச்சநல்லூர் என்றதும் முதுமக்கள் தாழி என்பதால் அது ஒரு சுடுகாடு மட்டுமே என்கிற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் இருந்ததுண்டு. பொருநை நதி நாகரிகம் குறித்து தமிழக அரசு கொண்டுள்ள ஈடுபாடு அந்த எண்ணத்தை மாற்றும்.

மு.காமராசு அவர்களின் தொடர்பில் இருந்த அதிகாரி ஒருவர் எங்களை ஆய்வு நடக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார். அவரது அனுபவத்தில் ஆதிச்சநல்லூர் ஆய்வு குறித்த அவரது கருத்துகள் சிலவற்றைக் கேட்டறிந்தோம். 110 கிமீட்டருக்கும் மேற்பட்ட இடம் ஆய்வுக்காக நூறாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாங்கள் நின்ற இடம் ஒரு சிறு குன்றின் முகட்டைப் போன்றது. பலகாலத்திற்கு முன் அது ஒரு சிறு மலை முகடாகவும் இருந்திருக்கலாம்.

இது வெறும் இடுகாடு மட்டுமல்ல, மக்கள் வாழ்ந்த ஒரு முழுமையான நாகரிகம் என்று அங்கே கிடைத்த பொருட்களைப் பட்டியலிட்டு சொன்னார் அந்த தொல்லியல் அறிஞர். ஈமச் சடங்குகள் நீர்நிலைக்கு அருகில் இருக்க வேண்டுமென்பதால் அவ்விடத்தில் தாழிகள் அதிகம் கிடைக்கின்றன என்றும் சொன்னார்.

கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பின் (பெருமூச்சு விடாமல் படிக்கமுடியவில்லை எனில் அது ரேடியோ கார்பன் டேட்டிங் எனக்கொள்ளலாம்)படி இங்கு கிடைத்த சில பொருட்களின் காலம் கி.மு 9-7-ஆம் நூற்றாண்டு என்று சொல்கிறார்கள். ஆனால் அங்கே கிடைத்திருக்கும் எலும்புக்கூடுகள் கி.மு 18-ஆம் நூற்றாண்டு வரை (3800 ஆண்டுகள்) பழையது என்கிறார்கள். மேற்சொன்ன இந்த கால வித்தியாசத்தை எடுத்துக்காட்டும் மண் நிற அடுக்குகளை அந்த அறிஞர் விளக்கினார்.

சங்க காலம் என்று ஒரு தொல்லியல் அறிஞர் பேசுவது ஒரு ஸ்லாம் புக் காதல் கவிதைக்கு நிகரானது

கார்த்திக்கும் தீபாவும் நிறைய கேள்விகள் அந்த அதிகாரியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கே வேலை செய்த மக்களோடு உரையாட விரும்பினேன்.

“இங்க ஏதாவது கெடச்சதுன்னா உங்களுக்கு என்ன தோனும்”

“காசு கொடுக்கறவங்க சந்தோசப்படுவாங்கன்னு தோனும்”

“என்னங்க.. இங்க பொதஞ்சு கெடக்கறவங்க உங்க முன்னோர்கள்னு நெனப்பிங்களா”

“அது என்ன எனக்கு மட்டும் முன்னோர்கள், எல்லோருக்கும் முன்னோர்கள் தான.. இதுல எங்க சாதி வந்தது?” – ஒரு மானுடவியல் கேள்விக்கு, ஒரு சமூக நீதி பதில் நேரடியானது இல்லையென்றாலும் அதில் துளியும் பாசாங்கு இல்லை, மாறாக 100% உணர்வுப்பூர்வமானது, நியாயமானது.

பெரியவருக்கு இருந்த சமூகநீதிப் பதட்டம் அவருக்கானது மட்டுமல்ல உள்ளே வேலை செய்யும் அதிகாரிகளுக்கும் இருக்கும்..

“இங்க ஏதாவது கெடச்சதுன்னா உங்களுக்கு என்ன தோனும்” இதே கேள்வியை அந்த அதிகாரிக்கு கேட்டபோது நேரடியான பதிலேதும் வரவில்லை. அதை மேலும் மேலும் ஆய்வுக்குட்படுத்துவோம் என்கிற ரீதியிலான பதில்தான் வந்தது. கிடைத்த ஆதாரங்களை வரலாற்றுகாலக் கணக்கில், அறிவியல் பூர்வ ஆய்வுக்கூட பரிசோதனைகளில் மானுடவியல் கோட்பாடுகளின் படி, மொழியியல் தகவல்களின்படி என ஆய்வு செய்தால் நம் நிலத்தில் கூடுதலாகவும் ஒன்று துணை (அல்லது இடராக)வந்து நிற்கும் , அது சங்க இலக்கியம். ஆய்வுகள் இவை எல்லாவற்றையும் தாண்டி வந்து நின்றாலும் அது மத்திய, மாநில அரசுகளின், உள்ளூர் அரசியலின், மத நம்பிக்கைகளின் எந்த ஒரு அடுக்கையும் அசைக்கக்கூடிய அல்லது அசைக்கக்கூடாத ஒன்றாக அது வெளிவர வேண்டிய ஏதோ ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிர்பந்தங்கள் இருக்கும் என்று தோன்றியது.

எல்லாவற்றையும் தாண்டி ஆதிச்சநல்லூர் என்பது ஆய்வு செய்பவர்களுக்கு அது எவ்விதம் உணர்வு தரும், அதை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு அந்த ஊர் என்பது என்ன?

*

அடுத்ததாக,

கொற்கை செல்லும் வழியில் ஆழ்வார் திருநகரியில் சிறு நிறுத்தம். தூரத்து உறவினர் ஒருவர் வீட்டிலிருக்கும் விக்கிரகம் பற்றியும், ஜா.தீபாவின் நினைவில் இருந்த தாமிரபரணி ஆற்று படித்துறை பற்றியும் அங்கிருக்கும் காபி கடை பற்றியும் பேசிக்கொண்டு வந்த எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காபி கடையும் திறக்கப்படவேயில்லை. படித்துறையும் சாக்கடையாலும் சிறுநீர் வீச்சத்தாலும் மகத்தான மனித இனத்தின் பிரதிநிதித்துவம் என்னவென புரியவைத்தது. விழுந்தடித்து ஓடினோம். படித்துறையுள்ள 90% ஊர்களும் இன்று இப்படித்தான் இருக்கின்றன 10% ஆய்வை இன்னும் செய்யாத ஒரு பயணி சொல்லிப்போனார், செல்போன் வந்தபிறகு பாத்ரூமில் தான் குளிப்பதை விரும்புகிறார்கள் என்பது அவர் வாதம்.


புகழ்பெற்ற டி.வி.எஸ் நிறுவனம் பராமரிக்கும் நவதிருப்பதித் தலங்கள் இருக்கின்ற ஊரில் போதிய ஒதுங்கிடங்கள் இல்லை அல்லது போதிய விழிப்புணர்வு இல்லை. இனி ஆழ்வார் திருநகரி என்றதும் படித்துறையின் இந்த வாடைதான் ஞாபகத்தில் வருமோ என்றபடி அவ்வூர் விட்டு நகர்ந்தோம். பெரியாழ்வார் எங்களை மன்னிக்கட்டும்.


கொற்கை தமிழகத்தின் பழைய துறைமுகம். இன்றைய கடற்பரப்பிலிருந்து(புன்னைக்காயல்) சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி இருக்கின்றது. அதுவும் மிகச்சிறிய கிராமம் தான். பெரிய அளவில் அரசு மேற்கொண்ட ஆய்வுகள் நிறைவடையாமலேயே முடிந்துவிட்டது. அண்மையில் நடந்த ஆய்வுகளுக்குக் கூட எந்த எச்சமும் இல்லை. இன்று அங்கே பயணிப்பவர்களுக்கு சங்க இலக்கியத் தகவல்கள் மட்டுமே கொற்கையோடு நம்மைப் பிணைக்க இருக்கும் ஒரே சக்தி. கார்த்திக் சில சங்க இலக்கிய மேற்கோள்களைச் சொல்ல, ஜா.தீபா தன் புனைவுக்கான நிலத்தைக் காணும் பாவனையோடு உற்சாகமாக இருந்தார் (அது ஒரு மகப்பேறு மருத்துவமனையின் ஸ்கேனிங் சென்டர் போல் இருந்தது).

ஊருக்குள் நுழைந்ததும் தீபாவும் கார்த்திக்கும் நூலகத்திற்குள் நுழைந்து கொற்கை பற்றிய நூல்கள் என்னவெல்லாம் இருக்கின்றன, கொற்கை பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் என்று நூலகரிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். நானோ அங்கே எந்த பதிப்பகத்தின் நூல்களெல்லாம் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். நூலக வருகைப் பதிவேட்டையும் பார்த்தேன்..

“ஆட்கள் வாசிக்க வராங்க போல இருக்கே”

“எல்லாம் போட்டித்தேர்வுகள் புத்தகங்கள் தான்.. வேறெதுவும் தொடுறதேயில்லை..”


சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒரு கிராமத்து நூலகம் கூட அதன் மாண்பைப் போற்றும் வகையில் அல்லது பிற வரலாற்று நூல்களையாவது பிரதானப்படுத்தி வைத்திருக்கலாம். கொல்கத்தாவிலிருந்து பணம் வருது.. அதனால் உங்க முப்பாட்டன் சொத்தா என்று நூலக ஆணை பெறுவோர்கள் கேட்கும்போது, கொற்கையில் தோண்டினாலும் நியாயம் கேட்க ஆட்கள் கிடைக்கப்போவது இல்லை.

கொற்கையின் நினைவாக இருக்கும் ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த வன்னிமரத்தை வணங்கிவிட்டு, கொற்கை மக்கள் வழிபடும் அந்த நடுகல்லிற்கு என்ன கதையிருக்கும் என்று கேட்டுக்கொண்டோம். அகழ்வுகள் நடந்தபோது ஆதிச்சநல்லூரில் கிடைத்தது போலவே முதுமக்கள் தாழி, மற்பாண்டங்கள். அதிலும் முக்கியமாக கிமு 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் பிராமி (அ தமிழி) எழுத்துகள் பொதிந்த மற்பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன, எழுத்துகள் குறித்து சரியான ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்றாலும். அறிஞர்கள் வாசித்ததாக அறியப்பட்ட சொல் “ஆதன்” இது முழுமையாகக் கிடைக்காத சொல். இதை வைத்துக்கொண்டே பல கதைகள் உருவாக்கப்பட்டன. சமணம், திருமால் வழிபாடு, கண்ணகி வழிபாடு என்று மூன்று தடயங்கள் எஞ்சியிருக்கின்றன.

கடந்த ஆண்டு கூட கொற்கையில் அகழ்வாய்வு நடைபெற்று முக்கியமான சேகரங்கள் பெறப்பட்டன. கொற்கை துறைமுகம் என்பது நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு குளமே. கொற்கை குளம் ஒரு மின்பிடித் துறைமுகம் போன்ற தோற்றத்தை தந்தாலும் அது கடல் இருந்த பகுதி என்பது ஆச்சரியமே. அந்த வெண்மணலில் நிறையவே சிப்பிகள் தென்படுகின்றன, பத்தடி தோண்டினாலே சங்குகளும் கிடைக்கின்றன என்று சொல்கிறார்கள். கொற்கை குளத்தின் முகப்பில் இருக்கும் வெற்றிவேல் அம்மன் “கண்ணகி” என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கண்ணகி கொற்கை வழியாகத் தான் ஈழத்திற்கு சென்றிருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டோம். “மிளிர்கல்” குறித்தும் நினைவு கூர்ந்தோம். தீபா ஒரு காலப்பயணத்திற்கு தயாரானதாக உற்சாகமடைந்தார். அங்கிருந்து திருச்செந்தூர் நோக்கி கிளம்பினோம்.


கொற்கை, தமிழகத்திற்கு அதன் பழம்பெருமைக்கு பெரிதும் உதவுகின்ற, நடுவண் அரசுக்கு அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லாத, உள்ளூர்க்காரர்களுக்கு அதனால் எதுவுமே உதவாத மேலும் ஒரு ஊர். இதனால் பலனடைந்த ஒரேயொரு உள்ளூர்க்காரர் ஜோ.டி.குருஸிற்கு மட்டும் – என்று இந்த கொற்கை நாவலும் கூட இடம்பெறாத அந்த நூலகத்தை நினைத்துச் சொல்லலாம்.


திருச்செந்தூர் போவதற்குள்ளே எங்கள் மூவரின் எண்ண அலைகள் ஒரே அலைவரிசையில் இருந்தன, அரசியல், இலக்கியம், சினிமா, வரலாறு, ஏன் குடும்ப வாழ்க்கை என்று பேசினால் கூட ஒரேவிதமான எண்ணவோட்டம் மையமாக இருந்ததை கவனிக்க முடிந்தது. அதிலிருந்து ஒருவேளை என்னைத் தனித்துப் பிரித்தது பசி மட்டுமே.. திருச்செந்தூரில் முருகனா? அல்லது மணி அய்யர் ஓட்டலா? எது சிறந்தது என்று யோசித்துக் கொண்டேன்.

கோயிலுக்குச் செல்வதாகத் திட்டமிட்டாலும் வள்ளிக்குகை வாசலிலேயே போகக்கூடாது என்று முடிவு செய்துவிட்டேன். கோயிலின் நிறுவனமயம் ஏனோ என்னைத் தடுத்தது எனலாம். தீபா மட்டும் உள்ளே செல்ல, நானும் கார்த்திக்கும் கடலை, மாங்காய், சுண்டல், பைனாப்பிள் என மேய்ந்து கொண்டிருந்தோம். தமிழ் ஆன்மீக மரபில் “அய்யா வழி” குறித்து படைப்புகள் வரவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கிருக்கிறது. மனதில் நாராயண குரு வந்து போனார்.

அய்யா வழி கோயிலைப் பார்க்கையில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி. கடலில் சில கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பாலம் சென்று கொண்டிருந்தது. ஊடகத்தோடும், சமூக விஷயங்களைப் பேசும் மனிதர்களோடும் தொடர்பு கொண்டிருந்த எங்கள் மூவருக்கும் அது என்னவெனத் தெரியவில்லை. திடீரென முளைத்திருக்கும் பாலம் என்ன, நிறைய கப்பல்கள் அந்த பாலத்தை ஒட்டி நிறுத்தப்பட்டிருப்பது எதற்கு என்று கேள்விகள் எழுந்தன. கூடங்குளம், ஸ்டெர்லைட், குளச்சல், கடலூர் என தமிழகக் கடற்கரையோரம் இருக்கும் பிரச்சினைகளில் புதிதாக ஒன்று உருவாகியிருக்கிறதே என்கிற எண்ணம். மணப்பாடு போகும் வழியில் பார்க்கலாம் என்றாலும் அதுவரை பொறுமை இல்லை. மேப் வழியாக அது சரியாக எந்த ஊர் என்று தேடினோம், கல்லாமொழி எனும் ஊர் என்று அறிந்து கொண்டோம்.

சுமார் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு நிலத்திலிருந்து கடலுக்குள் செல்லும் அந்த நிலக்கரி இறங்குதளம் கடலில் கப்பலிலிருந்தபடியே உடன்குடியில் கட்டப்படும் அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரியைக் கொண்டுசெல்லும் கன்வேயர் பெல்ட் கொண்டது என்று சொல்கிறார்கள். 2009-லிருந்தே இந்த திட்டத்திற்கு எதிராகப் போராடி வருகிறார்கள் மீனவர்கள். இந்தச் செய்தி எங்களுக்கு முற்றிலும் பெரிது. எட்டு கி.மீ கடலுக்கு உள்ளே செல்லும் இறங்கு தளம் இருப்பதால் மண் அரிப்பு, மீன் பிடிப்பதில் உள்ள சிரமம் என பல சிக்கல்களை முன்வைக்கின்றனர் அப்பகுதி மீனவர்களின் போராட்ட அமைப்புகள். இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத செய்திச் சேனல்களும் உண்டு. சூழலியல் ஆர்வலர்களும் உண்டு.


எல்லோருக்குமே ஒரு ட்ரெண்டிங் தேவைப்படுகிறது. திறந்து போட்டிருக்கும் சாக்கடைக் குழியிலோ, ஆழ்துளைக் கிணற்றிலோ சில உயிர்களை பலி கொடுக்காத வரை நாம் அவற்றை பேசுபொருளாக்குவதில்லையே.. அதைப்போல தான் இதுவும். மணப்பாடு குன்றில் இருந்து அந்த நிலக்கரி இறங்குதளத்தைப் பார்த்தவுடன் ஸ்டெர்லைட் மூடப்பட்டதும் வெற்றி கிடைத்தது போன்ற பாவனையில் நிறுத்தப்பட்ட என் வேலை ஒன்றை மீண்டும் தொடங்கும் புள்ளி ஒன்றையும் நினைக்க வைத்தது.

ஆம்.. நாங்கள் மணப்பாடும் வந்துவிட்டோம். மணப்பாடு என்றாலே ‘இயற்கை’ படம் அந்த தேவாலயத்தை ஒரு கதாப்பாத்திரமாக மாற்றியிருந்தது தான் நினைவுக்கு வரும். அது ஒரு சிறிய ரோமாபுரி என்று சொல்வார்கள். உள்ளே போகும்வரை மனதில் ஒலித்த அந்தப் படத்தின் இசையை விட, அந்த தேவாலயம் அமைந்திருக்கும் குன்றிலிருந்து புலனாகும் 360 டிகிரி காட்சி மற்ற புலன்களை ஸ்தம்பிக்க வைத்தது. இந்தியாவின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்று என்று சொல்லுமளவுக்கு பயணிக்கவில்லை என்ற போதும் ஓரளவுக்கு நிழற்படங்களின் வாயிலாகப் பார்த்த அனுபவத்தில் அல்லது தமிழகத்தின் அழகிய கடற்கரைகளில் ஒன்று எனும் தகுதி பெற்றவனாக இவ்வாக்கியத்தை மாற்றிவிடுகிறேன்.


தேவாலயத்தினுள்ளே மூவரும் சென்று அமர்ந்து கொண்டோம், எங்களைத் தவிர நான்கைந்து பேர் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தார்கள். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்த நகருக்கு வந்த ஃப்ரான்சிஸ் சேவியர் நிர்மாணித்த தேவாலயம் இது. பிரம்மாண்டமான ஆலயத்திற்குள் வேற்று மதத்தினராய் பல ஆண்டுகளுக்குப் பின்னர் நுழைவது, புதிய கூடு ஒன்றில் புறா நுழைவதாய் இருந்தது.

தூத்துக்குடியிலேயே கல்லூரி வாழ்க்கை இருந்திருந்தால் இந்தக் கோயிலில் ஒரு காதலின் அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும் என்று மனம் குமுறியது.

சில நூறாண்டுகள் கடந்த போர்த்துகீசிய கட்டுமானம் ஒன்றில் கவிழ்ந்திருக்கும் நிசப்தம் நினைவுகளைத் தூண்டி டி.டியில் பார்த்த “கருணாமூர்த்தி”யின் ஏதோ ஒரு வலியை, ஏசுபிரானின் உருவமாகவே தந்தது. சிறிய கோட்டிற்கு அருகில் பெரிய கோடு போடுவதைப் போலே, துன்பமே வாழ்க்கையாய் கொண்டவர்களை ஆற்றுப்படுத்துவதற்காய் தனது வலியை, பாரத்தைச் சுமந்து காட்டும் ரத்தமும் சதையுமான மனிதர் ஒருவர் வாழ்ந்துவிட்டுப் போய் இருக்கிறார்.

“ஏசு என்றால் என்ன”

“மானுடத்தின் உச்சம்”

அவர்மேல் விசுவாசமெல்லாம் மத நிறுவனத்தின் ஜோடனைகள் தான்.

“கிருத்துவம் என்பது இயேசுவாகுதலை லட்சியமாகப் பார்க்கிறது” வேத ஆகமங்கள் அதை போதிக்கிறதோ இல்லையோ அப்படியான பல கிருத்துவர்களை நான் பார்த்திருக்கிறேன். ரோஸ்லின் அக்கா, ஜான்ஸி மேடம், மரியதாஸ் எனும் கிருத்தவர்களின் வாசம், பெயர் மறந்துபோன ஆல்பன்ஸ் சர்ச்சின் வாசம், அந்த சர்ச்சின் வழியே என் சொந்த ஊரான நாகலாபுரத்து – பள்ளிவாசல்பட்டி வாசம் வந்தது.

ஊர்பெயர் நாகலாபுரம். வீடிருக்கும் பகுதி பள்ளி வாசல்பட்டி நினைவிலோ அந்த ஊர் முழுதும் CSI தேவாலயத்தின் வாசமாகப் படிந்திருக்கிறது.

நேரம் ஆனதால் கடற்கரையில் இறங்காமல், அங்கிருந்தே நெல்லை நோக்கித் திரும்பலானோம். மற்ற புலன்கள் வேலை செய்ய ஆரம்பித்தன, காதில் ஒலித்த வித்யாசாகர் இசை – எனக்கு ஜிக்கியின் குரலாக மாறும் அதே நொடி, தனக்கும் ஜிக்கியின் குரல் கேட்கிறது என்றார் தீபா. இருவரும் சொன்ன உடனேயே மொபைலில் இருந்து காரின் ஸ்பீக்கருக்கு இணைப்பைத் தந்து ஜிக்கியின் பாடலை ஓடவிட்டார். அந்த கணத்திலும் மதம் மாறவிடாமல் பசி எங்களைத் தடுத்தது.

நெல்லையை நோக்கி வேகமாகச் சென்று கொண்டிருந்தோம். வெறும் ஹல்வாவைத் தவிர வேறு எதனையும் சுமந்துகொண்டு நெல்லையை விட்டுப் போக முடியாது இல்லையா என்று கேட்டேன்.

மீண்டும் ஆழ்வார் திருநகரி இறங்கி, அந்த புகழ்பெற்ற காபி கடையில் இறங்கி சூடான வடை, காபி என வேட்டையாடிவிட்டுக் கிளம்பினோம். உபரியாக அங்கே இறக்கிவைக்கப்பட்ட சமோசா எல்லாவற்றையும் விட மிகச் சுவையானதாக இருக்க, எல்லோருமே வாங்கிக் கொண்டோம். இனிமேல் எனக்கு ‘ஆழ்வார் திருநகரி’ எனும் ஊர் அந்த சமோசாவை மட்டும் தான் நினைவெனக் கொண்டிருக்கும்.

இன்னும் வேறெதாவது சாப்பிட வேண்டியிருக்கா என்று தேடினோம். கடைசிவரை நாங்கள் தேடிய பால்பன் கிடைக்கவில்லை. இப்போது பால்பன் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது இருக்கன்குடி செல்லும் வழியில் உள்ள புதூர்..

குடும்பத்தோடு கோயில் திருவிழாவிற்கு வந்துவிட்டு ஊர் திரும்புகையில், ஒரு சாதாரண கடையில் இறங்கி பால்பன் சாப்பிட எத்தனிக்கையில், “பால்பன் ஃப்ரெஷ் தானா.. வயித்துக்கு ஒன்னும் ஆவாதே? ஏன்னா நைட்டு ட்ரைன்ல போறோம்” என்று கேட்டுக்கொண்டிருந்த என் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவருக்கு,

“பால்பன் சாப்பிட்டால் எந்த சாதிக்கலவரமும் நின்றுவிடும்” என்று வேடிக்கையாகச் சொன்ன உள்ளூர்க்காரரின் குரல் என்னால் மறக்க இயலாது. “புதூர்” என்றால் எனக்கு பால்பன்னும் அங்கே நடக்கின்ற சாதிப்பிரச்சனைகளும் தான் நினைவுக்கு வரும். அதற்கு பின்னர் கரிசலில் பொன்னீலன் எழுத்தில் பூதலாபுரம் கலவரம் பற்றி தெரிந்துகொண்டேன்.

“அப்போ ஊர் என்று என்னதான் சொல்ல வருகிறாய்”
ஏற்கனவே பலரும் சொன்னது தான்,
ஊர் என்பது ஒரு கதையைத் தாங்கி நிற்கும் நிலம்.


ஜீவ கரிகாலன் – kaalidossan@gmail.com

அடியேந்திரம்

0

சுஷில் குமார்

பாலும் தேனும் தயிரும் இளநீரும் விட்டு அபிஷேகம் செய்துமுடித்த போது அப்பாவின் எலும்புச்சில்லுகள் கடல் சிப்பித் துண்டுகளைப் போல பளிச்சென்று தோன்றின. முந்தைய பகலில் கதற ஆரம்பித்த அண்ணன் இன்னும் முடித்த பாடில்லை. நான் ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாமல் இருந்ததைப் பார்த்து பலரும் பலவும் நினைத்திருக்கக் கூடும். ஒன்றும் செய்வதற்கில்லை.

வாழையிலையின் மீதாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த எலும்புச் சில்லுகளின் மீது ஒரு பாக்கெட் திருநீற்றைத் தூவி அதன் மேலாக சந்தனத்தைக் குழப்பி வைத்து குங்குமப்பொட்டு வைத்த போது அப்பா தெய்வமாகிறார் என்று எனக்கு நானே சொல்லியபடி கையெடுத்து மார்பில் வைத்துக் கொண்டேன்.

சடங்குகளைச் செய்துகொண்டிருந்த பெரியவரின் செல்போன் மிகச் சத்தமாக அலறியது. ‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து…’

அந்த நொடி சட்டென மேல்கரை மாமாவின் குரல் என் காதுகளுக்குள் ஒலித்தது. அந்த கணீர்க்குரலின் ஞாபகம் பல வருடங்களுக்குப் பிறகு சட்டென அப்போது தோன்றியதை உணர்ந்த கணத்தில் கண்கலங்கியதோ என்னவோ, மனது படபடத்தது. இதே பாடலை மாமா பாட அப்பா கண்கலங்க கேட்டுக் கொண்டிருப்பார். அப்பாவும் அவரும் எப்படித்தான் அவ்வளவு நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களோ என எப்போதும் ஆச்சரியப்படுவேன். பேசுவதை விடுவோம், மாமா பாடிக்கொண்டேயிருப்பார், அப்பா கண்களை மூடி தலையசைத்துக் கேட்டுக்கொண்டேயிருப்பார். முச்சந்திக் கடையிலானாலும் இரயில் தண்டவாளக் கரையோர நடையானாலும் குளத்தங்கரை படித்துறையானாலும் அப்பாவுக்கும் மாமாவுக்கும் இடையில் எவரையும் பொருட்படுத்தாத ஓர் உரையாடலோ சங்கீதக் கச்சேரியோ இருந்து கொண்டேயிருக்கும்.

“ரெட்டப் புள்ளயோ மாதில்லா சுத்துகானுவோ. அப்படி என்னத்த தான் பேசுவானுவளோ!” என்று மேல்கரை வீட்டுப் பாட்டியும் என் பாட்டியும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என் கையைப் பிடித்து மஞ்சளரிசியில் முதலெழுத்தை எழுதியவர் மேல்கரை மாமா தான். அது மட்டுமில்லாமல் எனக்கான பல விசயங்களில் முதலாக வந்து நின்றவர் மாமா தான். அம்மா எப்போதுமே அப்பாவிற்குக் காப்பி கொண்டுவரும் போது தட்டில் இன்னொரு காப்பியும் இருக்கும். மாமாவை உட்கார வைத்து அவரது குடும்பப் பாடுகளைக் கேட்காமல் அனுப்பவே மாட்டாள் அம்மா. என்ன முக்கியமான விசயமானாலும், “அண்ணா கிட்டயும் ஒரு வார்த்த கேட்டுட்டு செய்ங்கோப்பா,” என்பாள் அம்மா. அம்மாவிற்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை. மாமாவின் உருவில் தன் இல்லாத அண்ணனுக்கான ஏக்கத்தை நிறைவு செய்து கொண்டாள் அம்மா.

சடங்கு செய்துகொண்டிருந்த பெரியவரின் சத்தம்.

“தம்பி, அண்ணங் கூட சேந்து தொட்டுக் கும்பிட்டுட்டு போணியத் தூக்கிக் குடுப்போ. ரெண்டு வேரும் போயி வடக்கப் பாத்து நின்னு தலைக்கு மேலாட்டு பின்னாடி போட்டுட்டு முங்கிட்டு வாங்கோ. திரும்பிப் பாக்காம வரணும், என்னடே!”

அண்ணன் சொன்னபடியே செய்து முங்கிக் கொண்டிருந்தான். என்னையும் பார்த்து தலையசைத்தான். மேல்கரை மாமா பழையாற்றில் என்னைக் கைகளில் தாங்கி நீச்சலடிக்கச் சொல்லித் தந்தது ஞாபகம் வந்தது. அப்பாவின் சாம்பலோடு முங்கியபோது மேல்கரை மாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு உட்சென்றேன்.
“நேரமாச்சில்லா மக்ளே, செனம் முங்கிட்டுப் போ. அம்மயப் போயி பாரு. என்ன நெலமைல கெடக்காளோ!” என்று அழைத்தார் மேல்கரை மாமா. சட்டென மேலெழுந்து போணியையும் சிவப்புத் துணியையும் எடுத்தபடி மேலேறினேன்.

“போன் பண்ணி வீட்டு நடைக்கு வரலாமான்னு கேளுங்கோ.”

“அதெல்லாம் செரியா இருக்கும். பொறப்படு மக்ளே.”
….

வீட்டு வாசலில் சென்று நின்றபோது அழுது கருத்து ஓய்ந்த முகத்துடன் கால்கழுவி விட்டாள் என் மனைவி. மைனி அண்ணனுக்குக் கழுவிவிட, அவன் மீண்டும் கதறியபடி அவள் மீது சாய்ந்தான். அவனைத் தாங்கிக்கொண்டே மைனியும் அழுதபடி உள்ளே சென்றாள். அம்மாவின் சத்தமில்லை. அவள் சத்தமில்லாத வீடு தேரிக்காட்டின் மூர்க்கமான மௌனத்துடன் இருந்தது.

அந்த அறையினுள் நிறைந்திருந்த மாமாவின் சிரிப்புச் சத்தம். மேல்கரை மாமா அந்த முதல் அறையைத் தாண்டி வந்ததே இல்லையோ? ஏன்? அவரது வீட்டிற்குள் மட்டும் எல்லோரையும் தூக்கிக்கொண்டு போய் விடுவாரே!

“மேக்கர மாமாவாக்கும் ஒங்கப்பாக்கு தாலியெடுத்துக் குடுத்தது. மனுசன் சரியான தொட நடுங்கில்லா? கெட்டு மக்களே, வரத பாப்போம்ன்னு கத்துனா மேக்கர மாமா. பயந்து போயாக்கும் இந்தாளு கெட்டுனது,” என்று சொல்லிச் சிரிப்பாள் அம்மா. திருமணம் முடிந்த சில வருடங்களுக்கு அப்பாவிற்கு சரியான வேலை வராமல் அலைந்து திரிந்திருக்கிறார். அப்போது பெரும்பாலும் மேல்கரை மாமாவின் வீடு தான் எங்கள் பசியை அடக்கியது.

அப்பாவைக் கிடத்தியிருந்த அதே இடத்தில் மயங்கிக் கிடந்தாள் அம்மா.

“அம்ம எதும் குடிச்சாளா?”

“எந்திக்கவே மாட்டுக்காங்கோ. எந்திச்சா ஒரே கத்தக்கம். தொண்டத்தண்ணியும் வத்தியாச்சி. ஒன்னும் எறங்காட்டா என்னத்துக்கு ஆகும்? நீங்க கூப்ட்டுப் பாருங்கோ.”

“எம்மா, எம்மா, எந்திச்சி கொஞ்சம் தண்ணியக் குடி.”

அம்மாவிடம் எந்த அனக்கமும் இல்லை.

மெல்ல அவளருகே உட்கார்ந்தேன். கைகள் சில்லிட்டிருந்தன. நான் தொட்டதும் மெல்ல வெட்டி இழுத்துக் கொண்டாள்.

“எம்மா, இங்கப் பாரு. பிள்ளக்கில்லாம் சோறு குடுக்காண்டாமா? எல்லாம் பசில கெடக்கு. நீ எந்தி மொதல்ல.”

நெற்றிச் சுருக்கம் விரிந்து மெல்லத் திறந்த கண்களில் இருந்த அறியாமையும் வெறுமையும் என்னை விரட்டுவதைப் போலிருந்தது.
“மக்ளே…” அதன் மேல் அவள் சொல்லிய எதுவும் கேட்கவில்லை.
அம்மாவை மெல்லத் தூக்கி என்னோடு சேர்த்துக் கொண்டு சிறிது சிறிதாகத் தண்ணீர் கொடுத்தேன். சில மடக்குகள் உள்ளே சென்றதும், அம்மா ஓவெனக் கதறியபடி, “மக்ளே. மேக்கர மாமாவ இப்பிடி மறந்துட்டோமே மக்ளே. எங்கண்ணே, மேக்கர அண்ணே, எங்கையால எத்தனக் காப்பி குடிச்சண்ணே. ஒங்கூட்டுக்காரன் போய்ட்டான், பாக்க வரல்லியா? நா ஒனட்ட எப்பிடிச் சொல்லுவேன்? மக்ளே, ஒங்கப்பா… அந்தா பாரு, வாசல்லயே நிக்கா மக்ளே. மேக்கரையான்ட்ட யாமுட்டி சொல்லலன்னு கேக்காளே. நா எங்கன்னு போயித் தேடுவேன். மக்ளே, மாமாட்ட சொல்லு மக்ளே. நீ போயி மாமாவக் கூட்டிட்டு வா. அப்பாக்க நெஞ்சு அப்பத்தான் நெறையும் மக்ளே. அந்தா பாரு, சிரிச்சிட்டே நிக்கா பாரு.” என்றவள் மீண்டும் மயங்கிச் சரிந்தாள்.

அப்பாவும் மேல்கரை மாமாவும் நீண்ட காலம் ஒன்றாகவே பணிபுரிந்தவர்கள். அதிகம் படித்தவர் என்பதால் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார் மாமா. தனது நிறுவனத்து பெரியவர்களிடம் பேசி அப்பாவிற்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார் மாமா. அப்பா மில் இயந்திரங்களுடன் மொத்த வாழ்க்கையையும் ஓட்டினார். மாமா தனக்குக் கிடைத்த பல சிறந்த வேலைகளுக்குச் செல்லாமல் அப்பாவுடனே இருந்து விட்டதாக அப்பா சொல்வார். இத்தனைக்கும் மேல்கரை மாமாவிற்கு வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஊர்ப்பண்ணையார் வம்சம். யானைகட்டிப் போரடித்த பெருமை கொண்ட குடும்பம். பல தங்கைகள், தம்பிகள், எல்லோரும் வேறு வேறு இடங்களில் வசதியாக இருந்தார்கள். மாமா மட்டும் பூர்வீக வீட்டோடு ஒன்றிவிட்டார். கடைசியாக மேல்கரை வீட்டிற்குச் சென்று மாமாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பச்சென்ற அப்பாவைப் பார்க்காமல் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்திருக்கிறார் மாமா. அப்பா அன்று கிளம்பியிருக்காவிட்டால் இந்த வாழ்க்கையே இல்லாமல் தான் ஆகியிருக்கும். இல்லை, வேறேதோ விதமாக இருந்திருக்கலாம், நன்றாகவோ மோசமாகவோ!
..

சட்டென கண் விழித்த அம்மா, “மக்ளே, மேக்கர மாமா எப்பிடி இருக்கான்னு கேளு மக்ளே, எனக்கு படபடன்னு வருகு பாத்துக்கோ. கெட்ட சொப்பனம். மக்ளே, யார்ட்டயாம் கேளு, எங்க இருக்கான்னு கேட்டுப்பாரு. அவ்வோ தெரிஞ்சா ஓடி வந்துருவா மக்ளே. அவ்வோளுக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லு மக்ளே. நீ கேளு மொதல்ல. அம்மக்கி நெஞ்சு வலிக்கி, மேக்கர, மேக்கரைக்கி வேணும்னா போயிப் பாரு மக்ளே. யாரையாம் அனுப்பு. கேட்டுப் பாரு, போ, போ..” என்றாள்.

முகநூலைத் திறந்து ஒரு பதிவிட்டேன்.

“அப்பா தெய்வமாகிவிட்டார். அப்பாவின் பால்யகால சினேகிதர் ஒருவரைத் தேடிச்சென்று சேதி சொல்ல வேண்டும். சேரன்மாதேவி அருகே உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளவும். நன்றி.”

பதிவிட்ட அடுத்த இரண்டு நிமிடங்களில் நாகர்கோவிலில் இருந்து அழைத்தார் ஸ்ரீநிவாசன்.

“கேள்விப்பட்டேன் டா. நீ சரியான பொறவு போன் பண்ணலாம்னு பாத்தேன். அம்மா ஓகே வா? அண்ணன் எப்பிடி இருக்கான்?”

விசயத்தைச் சொன்னதும், “அதுக்கென்ன மக்ளே, இந்தா இப்போ வண்டிய எடுத்தா ஒரு மணிக்கூர்ல சேரன்மாதேவி. ஆளத் தூக்கிருவோம். ஊரு எங்கன்னு சொன்ன? மேக்கரயா? ஓ மேல்கரை யா? கேட்ட மாதிதான் இருக்கு. போயிப் பாப்போம். ஆமா, என்னன்னு சொல்லதுக்கு?” என்றார் ஸ்ரீநிவாசன்.

“அப்பா பத்தி தகவல் சொல்லணும். ஆனா, மொதல்ல மேக்கர மாமா எப்பிடி இருக்கார்னு பாக்கணும். அவர கண்டுபிடிச்சிட்டு நீங்க எனக்குக் கூப்டுங்க. பாருங்க, நீங்க இருக்கதயே மறந்துட்டேன்.”

“அதுசரி. நீ எங்கடே நம்மளல்லாம் ஞாபகம் வைக்கப் போற? பாரு ஒங்கப்பாவ, எத்தன வருசமா கூடவே இருந்திருக்காரு அந்த மாமா கூட!”

ஸ்ரீநிவாசனும் அவரது மனைவி சுதாவும் அவசரமாகக் காரை எடுத்துக் கொண்டு சேரன்மாதேவிக்குச் சென்றார்கள். மேல்கரையை அவ்வளவு எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர் முகப்பில் இருந்த கோவில் பலகையைப் பார்த்து தற்செயலாக நிறுத்தினார் ஸ்ரீநிவாசன்.
“ஏம்ப்பா, என்ன தகவல் சொல்ல வந்திருக்கோம், இப்ப தான் கோவிலுக்குப் போற நேரமா? செனம் யார்ட்டயாம் கேளுங்கோ, இன்னும் ஊரயே கண்டுபிடிக்க முடியல. இதுல அந்த மேக்கர மாமாவ எங்கன்னு போயி தேட?”

“மொதல்ல கோவில் போர்டப் பாரு. இந்த ஊராத்தான் இருக்கும். இரி, கேக்றேன்.”

சற்று நேரத்தில் கார் ஊரின் மையத்திலிருந்த மேக்கரையான் பழைய கோவில் தெருவிற்குள் சென்றது.

“ஆச்சரியம் தான்டி. ஒரு ஊரையே மறந்துட்டு எப்பிடி இருக்க முடியுதோ? எத்தன வருசமிருக்கும்? அவனுக்கே ஞாபகமில்லையாம். பத்தோ பதினொன்னோ படிச்சேன்னு சொன்னான். ஆனா, ஒரு ஒட்டுறவு கூடவா இருக்காது?”

“ஊரென்ன ஊரு? நாம மட்டும் சொயம்பா என்ன? இத்தோட பத்து ஊராச்சு. இந்தா நாரோயில் வந்து அஞ்சு வருஷம் ஆயாச்சு. நமக்கு மட்டும் சொந்த ஊருன்னு ஏதும் இருக்கா என்ன? இதுல, வி.ஆர்.எஸ் குடுக்கறப்ப கண்டிஷன் வேற, ஒரு ஊர்லயும் நெலைக்கக் கூடாதுன்னு. இனி அடுத்த ஊர் பாக்க வேண்டியதான?”

“எட்டி, நம்ம கத வேற, நமக்கு இதுக்குன்னு ஒரு பேஷன் இருக்கு, வசதியும் இருக்கு, அதான் ஊரூரா சுத்துகோம்.”

“அதுசரி, ஒங்க ஃபிரண்டோட அப்பாக்கு என்ன நெலமையோ என்னவோ! ஊர விட்டு ஒட்டு மொத்தமா காலி பண்ணிட்டுப் போறதுன்னா சும்மாவா என்ன? சரி..சரி, மொதல்ல அந்த மாமா, ம்ம்‌ம்… பேரென்ன? அவரு பேரே மேக்கர மாமா தானா? எப்பிடி இருப்பாருன்னு கேட்டீங்களா? அதெல்லாம் கோட்டைய விட்டுருப்பீங்க.”

ஸ்ரீநிவாசன் காரிலிருந்து இறங்கிச் சென்று ஒரு சில கடைகளிலும் வீடுகளிலும் விசாரித்தார். யாருக்கும் மாமாவைப் பற்றித் தெரிந்த மாதிரியில்லை. ஒரு ஊரின் கதை பேசும் மரங்களும் வீடுகளும் மண்ணும் ஒரு மனிதனின் அத்தனை நீண்ட வாழ்வை அவ்வளவு எளிதாக மறந்து விடுமோ? ஒருவனது கைதொட்டுப் பேசிப் பழகியவர்களும் அவனால் வாழ்ந்தவர்களும், ஏன், அவனைப் பார்க்கக் கூட சகிக்க முடியாமல் திருப்பிக்கொண்டு போனவர்களும் கூட அவனது பெயரையோ முகத்தையோ நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் நிற்பதும் மிக இயல்பான விசயமாகி விடுகிறதோ? ஆனால், ஒருவன் வாழ்ந்த வீடு அவனது சுவாசம் நிறைந்த வீடு அவன் மிச்சம் வைத்த கொஞ்சம் காற்றைத் தாங்கி வைத்திருக்கும் தான், இல்லையா? மேல்கரை மாமாவின் வீட்டுத் திண்ணையை எப்படி மறந்து விட முடியும்? அவரது ஊஞ்சலின் க்ரீச் சத்தத்தை ஒரு நொடி நினைத்துக் கொண்டால் மேக்கரைப் பாட்டியின் தாளிசம் வாசம் மூக்கின் முன் வந்து விடுமே! நானே கிளம்பிச் சென்றிருக்க வேண்டும் என தோன்றிக் கொண்டேயிருந்தது.

அந்தத் தெரு மிக நீண்ட மிக அகலமான தெரு. கோவிலின் முன் இடப்புறம் இரண்டாம் வீட்டில் நாங்கள் இருந்தோம். வலப்புறம் மூன்றாம் வீட்டில்தான் மேல்கரை மாமா இருந்தார். ஸ்ரீநிவாசனிடம் சொல்லியபோது பல வீடுகள் இடிக்கப்பட்டு நவீன பாணியில் கட்டப்பட்டிருந்ததாகச் சொன்னார். சட்டென ஏதோ யோசனை வந்தவனாக, “ஸ்ரீனி, நீங்க நேரா கோவில் வாசல்ல போயி கேளுங்க. பாட்டு பாடுவாருல்லா, அந்த மாமான்னு சொல்லிப் பாருங்க. பண்ணையாரு குடும்பம்னு சொன்னா தெரிஞ்சிருக்கணுமே!” என்றேன்.

காலம் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு விடுவது, சில சமயங்களில் நிலையாக, சில சமயங்களில் தற்காலிகமாக. எல்லாம் ஒரு விதியோ இல்லை அதிருஷ்டமோ என்று சொல்லியபடிக் கடந்து சென்றிருக்க முடியும். எது எங்களை விடாமல் விரட்டியது? எது மேல்கரை மாமாவை அப்படியே வைத்துக் கொண்டது? சரி, பிறகேன் இந்தவொரு விளையாட்டு?

காருக்குத் திரும்பிய ஸ்ரீநிவாசன் கோவிலை நோக்கிச் சென்றார். சுதா ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தாள். ஸ்ரீநிவாசன் பதிலேதும் பேசாமல் வண்டியை நிறுத்தினார். இடப்புற வீட்டின் இருண்ட திண்ணையில் யாரோ உட்கார்ந்திருந்ததைப் போலிருந்தது. இறங்கி திண்ணையின் அருகே சென்ற ஸ்ரீநிவாசன் ஒரு நொடி யோசித்தபடி சுதாவைப் பார்த்து வருமாறு கண்ணசைத்தார்.

திண்ணையில் பாதியும் வீட்டு வாசல் நடையில் பாதியுமாக இருந்த என் அம்மா வயதையொத்த ஒரு பெண்மணி வளைந்து குனிந்து உட்கார்ந்து ஏதோ செய்துகொண்டிருந்தாள்.

“அம்மா, அம்மா..”

அந்த அம்மாவிற்குக் காது கேட்கவில்லை. சுதா மெல்ல அவளருகே சென்று நின்றாள். அதையும் அந்த அம்மா கவனிக்கவில்லை. அம்மாவின் முன்புறமாகக் குனிந்து சுதா வணங்கியபோது காணாத எதையோ கண்டுவிட்டதைப் போல சட்டென முகத்தில் ஒரு புன்னகையுடன் திரும்பினாள் அவள். ஒரு நொடியில் சுதாவையும் ஸ்ரீநிவாசனையும் மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு நீண்ட ஒரு பெருமூச்சு விட்டாள். அவள் என்னென்னவோ யோசித்துக் கொண்டிருக்கக் கூடும். ஸ்ரீநிவாசனும் சுதாவும் அப்படியே நிற்க, அவர்களைப் பார்த்து உட்காருமாறு கையசைத்தாள்.

“தண்ணி கொண்டாரவா மக்களு, வெயில்ல வந்துருக்கியள..”

அக்குரலைக் கேட்டு, அவள் அந்த வயதிற்குள் ஒளிந்திருக்கும் ஒரு இளம்பெண்ணோ என்று யோசித்தபடி ஸ்ரீநிவாசன் நிற்க, சுதா அந்த அம்மாவின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினாள்.

“நல்லாயிரி மக்களு. அம்மக்கிக் கைல ஒன்னும் இல்லய தரதுக்கு. இந்தா இந்த வெத்தலய வச்சிக்கோ. போடுவேன்னா போடு. இல்லன்னாலும் ஒன்னுல்ல.”

ஸ்ரீநிவாசனும் கால் தொட்டு எழ, அம்மா அவர் தலையில் கைவைத்து ஏதோ முனகினாள்.

“அம்ம தனியாத்தான் இருக்கேன் மக்களு. பின்ன, தனின்னும் சொல்லாண்டாம் தான்.” சொல்லியபடி நிமிர்ந்து இருவரையும் மீண்டும் கூர்ந்து நோக்கினாள். சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அம்மா, இங்க நாராயண மூர்த்தின்னு.. பாட்டு பாடுவாராம். ரொம்ப வருசம் இங்கதான் இருந்தாராம்,” என்றாள் சுதா. கேட்ட அந்த நொடியில் அம்மாவின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகளைப் பார்த்து கண் கலங்கியே விட்டார் ஸ்ரீநிவாசன். மிக நிதானமாக மெல்லிய புன்னகையுடன் சுதாவைப் பார்த்து தலையாட்டினார் அம்மா.

“உங்களுக்குத் தெரிஞ்சவராம்மா? இப்ப எங்க இருக்காருன்னு தெரியணும்.”

அம்மா தனக்கேயான நினைவுகளுக்குள் ஆழ்ந்து சென்று கொண்டிருந்தது தெரிந்தது. ஸ்ரீநிவாசன் சுதாவைப் பார்த்து கண் காட்ட இருவரும் அமைதியாகக் காத்திருந்தனர்.

அம்மாவின் கைவிரல்கள் மெல்லத் தாளம் போட ஆரம்பித்தன. கண்களில் ஏதோ ஒரு ராகம் அதன் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவளது புன்னகை மட்டும் மாறவேயில்லை. அந்தச் சுருக்கங்களைத் தாண்டி அது நிரம்பி வழிந்தபடியிருந்தது.

சற்று நேரத்தில் விரல்கள் நின்றன. அம்மா நிலைப் படியில் கையூன்றி மெல்ல எழுந்து உள்ளே சென்றாள்.

“இன்னா வாரேன் மக்களு.”

“ஏம்ப்பா, பெரிய கதையே கெடைக்கும் போலயே! ஒருமாதிரி சங்கடமா ஆய்ட்டு எனக்கு,” என்றாள் சுதா.

“நான் நெனைக்கறது சரியா இருக்கணும்,” என்று சொல்லிவிட்டு திண்ணையில் சாய்ந்துகொண்டார் ஸ்ரீநிவாசன்.

“அவ காதுக்குள்ள என்ன பாட்டு கேட்டிருப்பா சொல்லுங்க பாப்போம்?”

“அவ என்ன கேட்டாளோ என்னமோ! அவ மொகத்தப் பாத்தப்போ எனக்கு பாரதியோட கண்ணம்மா பாட்டு ஒன்னொன்னா வந்துட்டே இருந்து. அமேசிங். அவ ஒன்னும் தனியா இல்ல பாத்துக்கோ.”

“ஆமாப்பா, எனக்கும் அப்பிடித்தான் தோனிச்சு. இப்பிடியே திரும்பிப் போய்ட்டாலும் ஒன்னுல்ல. ஒங்க ஃபிரண்ட் கிட்ட தகவல் சொல்லியாச்சுன்னு சொல்லிரலாம்.”

ஸ்ரீநிவாசன் சுதாவைப் பார்த்து முறைக்க அவள் புன்னகைத்தாள். அம்மா வரும் சத்தம் கேட்டது.

கையில் எதையோ மிகக் கவனமாகத் தாங்கி வந்தாள். “மக்களு இங்க வா, அம்மயப் புடி.”

சுதா எழுந்து அம்மாவைத் தாங்கி படியில் இறங்க வைத்தாள்.

கைகளில் பழைய கருப்பு வெள்ளை புகைப்படச் சட்டங்கள்.

ஒவ்வொன்றாக திண்ணையில் பரப்பி வைத்தாள்.

“அம்மா, இது?”

“நீங்க கேட்டேளே. இதோ, எல்லாம் அவ்வோ போட்டோ தான். இது திருக்குறுங்குடி கோயில்ல பாடுனது. இது இங்க மேக்கரையான் கோவில்ல. இது கூட்டுக்காரன் கூட,” என்றபடி ஒவ்வொரு புகைப்படத்தையும் சுட்டிக் காட்டினாள்.

அந்தக் கூட்டுக்காரன் அப்படியே என்னைப் போலிருந்ததாகச் சொன்னார் ஸ்ரீநிவாசன்.. அவருக்கு அப்படியொரு சந்தோசம்.
அம்மா நிமிர்ந்து பார்த்து, “ரெண்டு வேரும் பண்ணாத்த அழிச்சாட்டியம் இல்லன்னு சொல்லுவா ஊர்ல. சரி, எதுக்காக தேடி வந்திருக்கியோ?” என்றாள்.

என்ன சொல்வதென சுதாவும் ஸ்ரீநிவாசனும் பேச்சற்று நின்றார்கள். அம்மா மீண்டும் தன் நினைவுகளுக்குள் செல்லத் துவங்கினாள்.

“ஏம்ப்பா, எப்பிடிச் சொல்ல? அவரு எங்க இருக்காருன்னு கேளுங்க மொதல்ல,” என்று ஸ்ரீநிவாசனின் காதுகளுக்குள் சொன்னாள் சுதா.

“அம்மா, அவரு இப்போ எங்க இருக்காருன்னு….”

“காப்பி வாங்கிட்டு வரவா, இருங்கோ, பக்கத்துல யாரும் இருக்காளான்னு பாக்கேன்,” என்றபடி எழ முயற்சித்தாள் அம்மா.

“அம்மா, பரவால்ல, வர வழியில சாப்டுட்டு தான் வந்தோம். பெரியவரு எங்கன்னு…”

சற்று நேரம் அசைவின்றி பதிலேதும் சொல்லாமல் இருந்தாள் அம்மா. பின், மெல்ல சுதாவை நோக்கிக் கை நீட்டினாள். சுதா ஸ்ரீநிவாசனின் முகத்தைக் குழப்பத்துடன் பார்க்க அவர் சற்று பதறியபடி தலையசைத்தார்.

சுதாவின் கைகளைப் பிடித்துக் கொண்ட அம்மா எதுவும் பேசாமல் மெல்ல அதை வருடிக்கொடுக்க ஆரம்பித்தார். மெல்ல தனக்குள்ளேயே பேசுவதைப் போல முனகினார். இருவரும் அவருடன் ஒன்றி நிற்க, சில நிமிடங்களில் சுதாவின் மார்பில் சாய்ந்துகொண்டு ஓவெனக் கதறினார். எத்தனை வருட மிச்சமோ!

பக்கத்து வீட்டு மாமி ஒருவர் வந்து எட்டிப் பார்த்துவிட்டு அப்படியே திரும்பிச் சென்றார். எதிர்த்த வீட்டிலிருந்து ஒரு முதியவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது அப்போது தான் தெரிந்தது.

சற்று நேரத்தில் அம்மா அமைதியடைந்து, “அவ்வோ போயி பத்து வருசத்துக்கும் மேலயே இருக்கும்…” என்றார்.

சுதா படபடத்து, “அம்மா, புரியல, என்ன சொன்னீங்க?” என்றாள்.

“அது…. அவ்வோள ஒன்னும் கொற சொல்லதுக்கில்ல, போயிதான் ஆகணும்னு வந்தா யாரு என்ன செய்ய முடியும். போய்ட்டா..”

ஸ்ரீநிவாசன் பொறுமையாக இருக்கும்படி கண்ணசைத்தார்.

“இந்தத் திண்ணையே தான் கதின்னு கொஞ்ச காலம் இருந்தா. பாட்டும் கலாட்டாவும்னு, ஒரே பெகளமா இருக்கும். எல்லாம் ஒரே மாதிரி நீடிக்காதுல்லா, கடவுளுக்கே பொறுக்கல. வீடும் ஊரும் எல்லாம் சுத்தமா சத்தமே இல்லாம ஆயிட்டு..”

“அம்மா, என்ன ஆச்சு? எப்பிடி?”

“எங்கயோ தூத்துக்குடி பக்கத்துல இருக்கதாட்டு தகவல் உண்டும். நா ஒன்னும் அங்க போயெல்லாம் நிக்க மாட்டேன். அது பின்ன, அப்பிடியே இருக்கட்டும். நமக்கு இந்தத் திண்ண தான்னு எழுதிருக்குப் போல!”

ஸ்ரீநிவாசன் ஆர்வமாக, “அம்மா, அவரு யாரு கூட இருக்காரு, நாங்க எங்க போயி பாக்கறது? அட்ரெஸ் எதுவும் இருக்குமா?” என்று கேட்டார்.

அம்மா சற்று நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது உள்ளேயிருந்து கடிகாரம் அடிக்கும் சத்தம் வந்தது.

“இரி மக்ளே..” என்றபடி எழுந்து உள்ளே சென்றார் அம்மா.

ஒவ்வொரு தூணாகப் பிடித்து உள்ளே சென்றவர் ஏதோ முனகியபடி அங்குமிங்கும் அலைந்ததைப் போலிருந்தது. பாடிக் கொண்டிருந்ததைப் போலவுமிருந்தது. எதிர்பக்கச் சுவற்றின் அருகே போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியின் அருகே சென்று நின்றார். ஒரு துணியை எடுத்து அதன் சட்டங்களைத் துடைத்தார். பின், திரும்பிச் சென்று ஒரு வெள்ளைத் துண்டுடன் வந்தார். அதை நீள்வாக்கில் மடித்து அந்த சாய்வு நாற்காலியின் வலப்புறக் கையில் வைத்தார். பக்கத்தில் இருந்த ஒரு சிறிய எழுத்து மேசையின் மீதிருந்த வெண்கலச் சொம்பை எடுத்துச் சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்தவர் அந்தச் சொம்பை அந்த மேசையின் மீது வைத்தார். அதிலிருந்து தளும்பிய நீர் கீழே சிந்தியது. சற்று நேரம் அப்படியே நின்றார். பிறகு மெல்லத் திரும்பி இடப்பக்க அறைக்குள் சென்றார். மீண்டும் பாடுவதோ முனகுவதோ கேட்டது.

“ஏம்ப்பா, என்ன பண்ணுகா? பாக்கதுக்கும் சங்கடமா இருக்கு. ஒன்னும் புரிய மாட்டுக்கு.”

“இரி, வருவாங்க பாரு.”

அம்மா வரும் அனக்கம் கேட்டது.

கையில் எதையோ கவனமாகப் பிடித்தபடி வந்து உட்கார்ந்தார்.

“அது… எங்கயோ வச்சிருந்தேன். மறந்துட்டேன். நா யாருக்கு போன்லாம் போடப் போறேன்? அதான்…” என்றபடித் தன் கையிலிருந்த ஒரு சிறிய டைரியைத் திறந்து கண்களைச் சுருக்கியபடி ஒவ்வொரு பக்கமாகப் பார்த்தார்.

“ரகுன்னு.. அவ்வோ தூரத்துச் சொந்தம் ஒருத்தரு உண்டும். அண்ணன் மொற. அவர்தான் கூட இருக்கணும். அவர் போன் நம்பர எங்கயோ எழுதி வச்சேன்.”

சுதா கண்கள் விரிய ஸ்ரீநிவாசனைப் பார்த்தபடி பெருமூச்சு விட்டாள்.

“இதோ இருக்கே! இந்தாங்கோ, குறிச்சிக்குங்கோ,” என்றபடி அந்த டைரியை நீட்டினாள் அம்மா.

கிட்டத்தட்ட இரண்டு துண்டுகளாகப் பிரிந்து போய்விடவிருந்த அந்தக் காகிதத்தில் இப்படி எழுதப் பட்டிருந்தது.

‘ரகுவரன் – தூத்துக்குடி அண்ணன் – 9894690082’

அந்த எண்ணை ஸ்ரீநிவாசன் குறித்துக் கொண்டார்.

“என்ன விசயம்னு சொல்லவேல்ல மக்களு,” என்று சுதாவின் முகத்தைப் பார்த்தார் அம்மா.

சுதா ஸ்ரீநிவாசனைப் பார்த்துத் தயங்க அவர் விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார்.

அம்மாவிடம் எந்தவொரு சலனமும் அசைவும் இல்லை. குத்திட்ட கண்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார். கைவிரல்கள் சற்று படபடத்தன. ஸ்ரீநிவாசன் சொல்லி முடித்து அமைதியாக நின்றார். அம்மா ஆழ்ந்த யோசனைக்குள் இருந்தாள்.

நீண்ட ஒரு பெருமூச்சுடன், “எல்லாத்தயும் பாக்கணும்னு எனக்கு எழுதியிருக்கு. காளிக் குட்டன் தான் ஒங்கள அனுப்பிருக்கான், என்ன? ம்ம்.. ஏம் மடிலயே கெடத்தித் தூங்க வச்சிருவேன் காளிக்குட்டன. இப்ப என்ன வயசிருக்கும் அவனுக்கு? கோழிமுட்டக் கண்ணும் பிள்ளயார்த் தொப்பையுமா, கல்யாணம்லாம் கழிஞ்சிருக்கும் என்ன? எத்தன பிள்ளையளோ?” என்றார் அம்மா.

“அம்மா, அவனும் நானும் ரொம்ப நெருக்கம். இப்போ சென்னைல இருக்கான். ரெண்டு பொண்ணுங்க. அவன் தான் காலைல…. அவங்க அம்மா ரொம்ப பதறிப் போய் ஆளனுப்பிப் பாக்கணும்னு….”

“தெரியும், அவ தான் சொல்லிருப்பா. அவளுக்கு ஒடம்பொறப்பு மாதில்லா அவ்வோ. கூட்டுக் காரன விட்டுக் குடுத்தாலும் தங்கச்சிக் காரிய விட்டுக் குடுக்க மாட்டா..ம்‌ம்‌ம்‌ம்‌ம்..”

“அம்மா, நீங்க…” என்று குறுக்கிட்டாள் சுதா.

“செரி மக்களு. பொறப்படுங்கோ. வழி பாத்துப் போணும், என்னா? அம்ம இங்கயேதான் இருப்பேன். மேக்கரக்கி வந்தா வரணும். கூட்டுக்காரன் இல்லன்னு அவ்வோளுக்கு தெரிஞ்சா தாங்கவே மாட்டா. அதான் கெதம், கெதம்னு கெடந்து அடிக்கி.”

சுதாவும் ஸ்ரீநிவாசனும் அவர் கால்தொட்டு வணங்கி விட்டு திண்ணையை விட்டு வெளியே வந்தார்கள்.

“ஒன்னு நில்லு மக்களு,” என்றபடி அவர்களை நோக்கி வந்தாள் அம்மா.

வீட்டு முற்றத்தில் வந்து நின்று சுதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

“அது, ஒன்னுல்ல, இன்னிக்கி மாசக் கடைசில்லா? இன்னிக்கிச் சொல்லாண்டாம் மக்களு. ஒரு நாளு பொறுத்து நாளக்கிச் சொல்லுங்கோ. இங்க நாங்கெடந்து பரிதவிச்சிட்டுக் கெடக்கணும்..என்ன மக்களு?”

சுதாவின் கண்கள் கலங்க ஸ்ரீநிவாசன், “அம்மா சொல்லது மாதியே செய்வோம். சரிம்மா….” என்றார்.

மேல்கரை மாமாவின் குரலைக் கேட்ட நொடியில் அதுவரை தேக்கி வைத்த மொத்த அழுகையும் பீறிட்டுக் கொண்டு வந்தது. என் மனைவியும் அம்மாவும் பதறியபடி என்னருகே வந்து நின்று என்னைப் பிடித்துக்கொள்ள, மாமாவிடம் செய்தியைச் சொன்னேன். ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார் மாமா.

சில கணங்களுக்குப் பிறகு, “மக்களு, அம்ம சும்மாயிருக்காளா?” என்று கேட்டார். அவரை அம்மாவிடம் பேசச் சொன்னபோது வேண்டவே வேண்டாமென மறுத்து விட்டார். பிறகொரு நாளில் ஸ்ரீநிவாசனை நேரில் அனுப்பி எவ்வளவு அழைத்தும் சென்னைக்கு வந்து அம்மாவைப் பார்ப்பதற்கு ஒப்புக் கொள்ளவேயில்லை மேல்கரை மாமா. அப்பாவிற்கு அடியேந்திரம் நடத்திய நாளில் அவர் அனுப்பிய கோடித் துணிகள் வந்து சேர்ந்தன.

***

சுஷில் குமார் சொந்த ஊர் கன்னியாகுமரி. தற்போது கோவையில் வசிக்கிறார். கிராமப்புற மாணவர்களின் கல்விப்பணியில் இருக்கிறார். மூங்கில், சப்தாவர்ணம் என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இதுதவிர அவ்வப்போது மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகிறார். தன்னறம் வழியாக இவரது மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் நூல் “தெருக்களே பள்ளிக்கூடம்” க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி-2020 -ல் இவருடைய சிறுகதையும் பரிசு பெற்றுள்ளது. மின்னஞ்சல்: sushilkumarbharathi2020@gmail.com

வாக்குச்சாவடியில் நிற்பவன்

0

சரவணன் சுப்பிரமணி

ள்ளிக்குள் நுழையும்போது மழை விட்டிருந்தது. குளிர் அடித்தது. பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் வசனங்கள் தெளிவாக கேட்டது விதுரனுக்கு. ஆனாலும் வரும் வழியில் பார்த்த காட்சி விதுரனின் மண்டையைத் திருகிக்கொண்டே இருந்தது.

ஒரு கையை நீட்டியபடி மற்றொரு கையில் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி இருந்த அம்பேத்கர் சிலையின் வலது கை உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது. கையின் ஒரு பகுதி சிலையின் காலடியில் கிடந்தது. அந்த சிலையை முழுவதும் சுற்றி இருந்த வெள்ளைத்துணி மழையில் நனைந்து இருந்ததால் சிலையோடு ஒட்டியிருந்தது. சிலையின் நீலநிறம் தெரிந்தது. சிலையை சுற்றிலும் செருப்பும் செங்கலும் கிடந்தன. அந்த இடம் சண்டை நடந்ததற்கான சாட்சியமாக இருந்தது.

தேர்தல் நேரங்களில் தலைவர்களின் சிலைகள் துணிகொண்டு மறைக்கப்படுவது வழக்கம். மறைத்தாலும் உள்ளே இருப்பது யார் என்று அனைவருக்கும் தெரியும். குளவி கொட்டிய இடம் போல அந்த காட்சி மனதுக்குள் இருந்தது. வண்டியைப் பள்ளியின் காரிடாரில் ஏற்றி நிறுத்தினார். செய்திகளில் பார்த்திருக்கிறார். நேரில் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே திறந்திருந்த வகுப்பறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். வந்த களைப்பு. சோர்வு. படுத்தால் தேவலாம் போல இருந்தது. போர்த்திப் படுத்தார். மலை உச்சியில் இருந்து உருட்டி விட்ட கல் போல அந்தக் காட்சி மனதுக்குள் உருண்டு கொண்டே இருந்தது. எப்போது தூங்கினார் என்று தெரியவில்லை.

சாயங்காலம். பள்ளியின் வடக்கு புறம் இருந்த பெரிய வேப்ப மரத்தடியில் விதுரன் கைகளை வீசி நடந்து கொண்டிருந்தார். பள்ளியை ஒட்டி இருந்த வீட்டுத் தொலைக்காட்சியில் இருந்து இளையராஜா பாடல்கள் கேட்டது. அதனால் புது இடத்தில் நடப்பது சலிப்பை ஏற்படுத்தவில்லை. சர்க்கரை வந்ததிலிருந்து காலையும் மாலையும் தவறாமல் ஒருமணி நேரம் நடந்து விடுவார். காலையில் சாப்பிடுவதற்கு முன்பு மெட்பார்மின் ஹைட்ரோகுளோரைடு ஒரு மாத்திரை போட்டுக் கொள்வார். உணவுக் கட்டுப்பாட்டில் யாரும் அவரை அசைத்துவிட முடியாது. திருக்கோவிலூர் பக்கத்தில் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். சொந்த ஊர் சேலம் பக்கம். பிரஸிடிங் ஆபீஸராக முதல் தேர்தல். அதனால் கவனமாக இருந்தார். போக்கஸ் லைட் கட்டியதில் பள்ளி வெளிச்சமாக இருந்தது.

கட்சிக்காரர்கள் வர தொடங்கியிருந்தனர். வகுப்பறை கொஞ்சம், கொஞ்சமாக வாக்குச்சாவடியாக மாறிக்கொண்டிருந்தது. கட்சிக்காரர்கள் மாறிமாறி வருவதும் விதுரன் உட்பட வந்திருந்தவர்கள் அனைவருக்கும் வணக்கம் வைப்பதும் “உங்கள மாதிரி யார் வந்தாலும் எங்க வீட்ல தான் சாப்பாடு, இங்க உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது” என்று சொல்வதும் போவதுமாக இருந்தனர்.

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பில் பள்ளியினுள் லாரி வந்தது. வாக்குப்பதிவு இயந்திரம், கலர் கலராக நிறையக் கவர்கள், போஸ்டர், கட்சி சின்னங்கள், அரக்கு, மெழுகுவர்த்தி, குண்டூசி என தேர்தல் நடத்துவதற்கு தேவையான பொருட்கள் கொண்ட பெரிய கோணி சாக்கை ஒப்படைத்துவிட்டு அனைத்தும் சரியாக ஒப்படைக்கப்பட்டது என்பதற்கு சாட்சியாக கையெழுத்து பெற்றுக்கொண்டார் சோனல் ஆபீசர்.

“நீங்கதானே பிரஸிடிங் ஆபீசர்? எல்லாரும் வந்துட்டாங்களா?” சோனல் ஆபீசர் விதுரனை பார்த்து கேட்டார்.

“ம்” தலையாட்டினார். பி-1, பி-2, பி-3 என அனைவரும் உடனிருந்தனர்.

“சென்சிட்டிவ் பூத்து சார். கேமரா வைக்கிறதுக்கு ஆளுங்க வருவாங்க. ப்ராப்ளம் வராது. இருந்தாலும் நீங்க கவனமா இருங்க. பூத்தில எது நடந்தாலும் நாம தான் பதில் சொல்லணும்” அவரது முகத்தை இறுக்கமாக வைத்திருந்தார்.

“ம்.”

“நைட் மிஷின நல்லா செக் பண்ணிக்குங்க சார். ஏதாவது பிராப்ளம்னா எனக்கு போன் பண்ணுங்க. ரீப்ளேஸ் கூட பண்ணிக்கலாம். மாக் போல் முடிச்சதும் மிஷின கிளியர் பண்ணிடுங்க. சில இடத்துல கிளியர் பண்ணாமலே எலக்சன ஸ்டார்ட் பண்ணி அதனால நிறைய பிரச்சன. மார்னிங் டைமுக்கு ஸ்டார்ட் பண்ணிடுங்க. ஒன் அவருக்கு ஒன்ஸ் ரிப்போர்ட் கொடுத்துருங்க.”

“ம்.”

“பை த வே உங்க நேம் சார்?”

“விதுரன்.” பேரைக் கேட்டதும் சோனல் ஆபீஸர் முகத்தில் சிரிப்பு தென்பட்டது. பூத்துக்கு வந்ததிலிருந்து முதன்முறையாக அப்போதுதான் சிரித்தார்.

“ஐ அம் நந்தன். நம்பர சேவ் பண்ணிக்குங்க” என்று தன்னுடைய செல்போன் நம்பரை கொடுத்தார்.

“நம்ப ரெண்டு பேரும் சொந்தக்காரங்க”

“எப்படி” ஆச்சரியத்தின் குறி விதுரன் முகத்தில் தென்பட்டது.

“தூரத்து சொந்தம்தான்.புராண காலத்து தூரம்”

“புருவத்தை சுருக்கி நந்தனை பார்த்தார்.”

“நீங்க எனக்கு சித்தப்பா முற”

“அப்படியா!”

“கௌரவர்கள் தொண்ணூத்தி ஒன்பது பேர்ல நானும் ஒருத்தன். அப்ப நீங்க எனக்கு சித்தப்பா முற தான?”

“ஆமாம்” என்று தலையாட்டி விதுரன் சிரித்தார்.

“நீங்க யாருடைய அவதாரம் தெரியுமா?”

“…………”
“எமதர்மன்” என்று சொன்னவர் கிளம்பிப் போனார்.

*

காலை 7.30 மணிக்கு 11 வாக்குகள் பதிவாகி இருந்தது. அந்த வருடம் EVM மிஷினை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருந்தது. தான் விரும்பும் நபருக்கு தன்னுடைய ஓட் போகிறது என்பதை வாக்காளர்களுக்கு உறுதிப்படுத்தவும் ஓட்டிங் மிஷின் மீது மக்களுக்கு குறைந்து கொண்டே வந்த நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் செய்திருந்த ஏற்பாடு அது. ஓட்டு போட்ட பிறகு தான் சார்ந்த கட்சிக்கு தான் தன்னுடைய ஓட்டு போனது என்பதை அறிந்துகொள்வதற்கு ஒவ்வொருவருக்கும் கூடுதலாக நேரம் பிடித்தது. அதனால் வாக்காளர்கள் கூடுதல் நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. ஜன்னல் வழியாகப் வெளியில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று பார்த்தார். பெரும்பாலும் கட்சிக்காரர்களே நின்றிருந்தனர். வாசலில் துணிப்பந்தல் போடப்பட்டிருந்தது. வேப்ப மரத்தடியில் இலவம் பஞ்சு போல ஈசல் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. ஈசல் கூட்டத்தைச் சாப்பிட பறவைகளும் இருந்தது. வெளியில் காவலுக்கு இருந்த போலீஸ் ஒவ்வொருவராக உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்.

“தமிழ்நாட்டில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது” என்று செய்தி செயலியின் நோட்டிபிகேஷன் காட்டியது. 8:00 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை பதிவுசெய்தார் விதுரன். காலை ஆறு மணியிலிருந்து இப்பொழுதுதான் அக்கடா என்று உட்காருவதற்கு நேரம் கிடைத்தது. அப்பொழுதுதான் எழுதத் தொடங்கினார்.

“பக்கத்தில இருந்த நாலு பூத்லீயும் பாத்துட்டேன். நீங்கதான் ஐடி கார்டு கேக்குறீங்க”? பூத் ஸ்லிப் மட்டும் வைத்திருந்த ஒருவர் பி-1 ஆபீஸரிடம் கோபமாக பேசிக்கொண்டிருப்பதை விதுரன் பார்த்தார்.

“நான் ஏன் கேட்க போறேன்? எலக்சன் கமிஷன் சொல்றதை நான் செய்யறேன் “. பி-1 பதில் சொன்னார்.

“பூத் ஸ்லிப் எலக்சன் கமிஷன் தானே கொடுத்துச்சு. நா வீட்டிலிருந்து எடுத்துக்கிட்டு வரனா?.”

“அதே எலக்சன் கமிஷன் ஐடி கார்டையும் பாருன்னு சொல்லுது.”

“அப்ப, இது ஆதாரம் இல்லையா?” வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள், ஏஜெண்டுகள் என்று அனைவரும் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். வெளியிலிருந்து ஒருவர் ச்ச் கொட்டுவது தெளிவாகக் கேட்டது.

சார்.. ப்ளீஸ்.. விதுரன் குறுக்கிட்டார். “நீங்க இந்த பக்கம் வாங்க. உங்களால எல்லாரும் நிக்கிறாங்க”. அவர் விதுரன் பக்கமாக வந்ததும் கையில் மருதாணி வைத்திருந்த பெண் தன்னுடைய ஐடி கார்டையும் பூத் ஸ்லிப்பையும் பி-1 னிடம் காண்பித்தார். அவர் பெயரையும் அவரது தந்தை பெயரையும் சத்தமாக வாசித்தார். அவர்தான் என்பதற்கு ஆதாரமாக ஏஜெண்ட் ஒருவர் தலையை ஆட்டினார். “அவர்தான்” என்று ஒருவர் சொன்னார். ஏஜெண்ட்கள் வைத்திருந்த ஓட்டர்ஸ் லிஸ்டில் குறித்துக் கொண்டனர். பூத் ஸ்லீப்பை விதுரன் படித்துக் கொண்டிருக்கும்போது, “அவருதான் சார். அவர விடுங்க.” ஏஜெண்ட் ஒருவர் எழுந்து சொன்னார்.

“இவர ஐடி கார்டு இல்லாம ஓட்டுப்போட விட்டா பின்னாடி வரவங்க யாரும் எந்த ஐடியும் எடுத்துக்கிட்டு வரமாட்டாங்க. அந்த கட்சிக்காரருக்கு மட்டும் விட்டீங்க? எங்க கட்சிக்காரருக்கு விடுங்கன்னு, நீங்க கேப்பீங்க. நாங்க என்ன ஐடி கார்டு எடுத்துட்டு வந்தாங்கன்னு ரெக்கார்ட் பண்ணனும்”. “சார், தயவு செய்து கோவிச்சுக்காம வீட்டுக்கு போய் ஐடி கார்டு எடுத்துட்டு வாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “விடுங்க சார் போட்டுட்டு போகட்டும்” என்று ஏஜெண்ட் ஒருவர் சொல்லி முடிப்பதற்குள்,

“இப்பவே இவ்வளவு நேரம் ஆயிடுச்சு. இன்னும் நான் வீட்டுக்கு போயி, ஐடி கார்டு எடுத்துட்டு வந்து, இந்த லைன்ல நின்னு, ஓட்டு போறதுக்குள்ள, பொழுதே போயிடும்” கோபமாகச் சலித்துக் கொண்டார்.

“அதெல்லாம் போகாது. நான் பாத்துக்குறேன். நீங்க ஐடி கார்டு எடுத்துட்டு வாங்க. லைன்ல நிக்க வேணாம். நேர உள்ள வாங்க, போடலாம்”. சமாதானம் ஆனது மாதிரி தெரியவில்லை. வாய்க்குள் முனகிக்கொண்டே விர்ரென்று போனார்.

“ஐடி கார்ட் இல்லாமல் யாரையும் உள்ளே விடாதீங்க” போலீஸ்காரரிடம் சொல்லிவிட்டு தன்னுடைய இடத்தில் வந்தமர்ந்தார் விதுரன். ஜன்னல் வழியாக முகவர்களின் ஒருவர் கைசாடை காட்ட, கட்சிக்காரர் ஒருவர் போனவர் பின்னால் ஓடினார். வேப்பமரத்தடியில் நின்று இருந்தவரை மோட்டார் சைக்கிளில் கூட்டிப்போவதை விதுரன் பார்த்தார். வேப்ப மரத்தடியில் ஈசல் கூட்டம் பறந்து கொண்டிருந்தது.

“ஓட்டு போட வர்றவங்கள தவிர மீதி எல்லாரும் 100 மீட்டர் தாண்டி போங்க” என்று காவலர்கள் மைக்கில் சொல்லிக் கொண்டிருப்பது விதுரனுக்குக் கேட்டது.கேட்டைத் தாண்டி கூட்டம் நின்றது. 10:00 நிலவரத்தை பதிவு செய்தார். வாக்குப்பதிவு நிறுத்தம் என்று செய்தி செயலியில் நோட்டிபிகேஷன் காட்டியது. உள்ளே திறந்து படித்தார். மாதிரி வாக்கெடுப்பை அளிக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியதால் இரண்டு இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தம். மக்கள் சாலை மறியல். இயந்திரக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு இரண்டு இடங்களில் தாமதம் என்று செய்தி காட்டியது. நிமிர்ந்து பார்த்தார்.

மூத்திரப்பையுடன் வீல்சேரில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரை அவரது மனைவி பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு வந்தார். எந்த உணர்ச்சிக்கான குறிப்பும் அந்தப் பெண்ணின் முகத்தில் தென்படவில்லை. கண்கள் வறண்டு இருந்தது. “ஆக்சிடென்ட் சார். தண்டுவடத்தில அடிபட்டுருச்சி. நிக்க முடியாது. எல்லாம் கிடதான்” இரண்டு நிமிடம் கொடுத்தால் அடிபட்டது முதல் இங்கு வந்தது வரையான கதையைச் சொல்லி முடித்து விடுபவள் போல் சொல்லிக் கொண்டிருந்தாள். இருவர் விரல்களிலும் விதுரன் மை வைத்தார் இருவருக்கும் ஓட்டுப்போட. அவரது மனைவி நகர்ந்ததும், “போன எலக்சன்ல நான்தான் பூத் ஏஜெண்ட். எங்க கட்சிக்கு எல்லா வேலையும் நான் தான் பார்த்தேன். ஆனா இப்ப எந்திரிக்க கூட முடியல.” என்று வீல்சேரில் அமர்ந்து இருந்தவர் விதுரனைப் பார்த்துச் சொன்னார். தலையாட்டினார் விதுரன். பேசிக்கொண்டே இருக்க வேண்டும். நடப்பதையெல்லாம் அந்த அறையின் ஏதாவது மூலையில் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஏக்கம் அவரிடம் தெரிந்தது.

பெரியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரது ஐடி கார்டையும் பூத் ஸ்லிப் ஐயும் எடுத்துக்கொண்டு கட்சிக்காரர்கள் வரத்தொடங்கியிருந்தனர். அதனால் அனைவரும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒடிசலாக இருந்த இளைஞர் தான் ஓட்டு போடுவதை செல்பி எடுக்க வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன் ஆள்காட்டி விரலை முன்னால் நீட்டியபடி நின்று கொண்டிருப்பதை விதுரன் பார்த்தார்.

“செல்பி எடுக்க கூடாது தம்பி. போன் உள்ள அலோட் கிடையாது” விதுரன் கோபமாகச் சொன்னவர் அவன் பக்கத்தில் வந்தார்.

“ஓட்டு போடறத போட்டோ எடுக்க கூடாதா?”

“எடுக்க கூடாது. தேவனா வெளியில போய் எடுத்துக்கோ”

“காலையிலிருந்து டிவி பாத்துட்டு இருக்கேன். அரசியல்வாதிங்க, விஜய், ரஜினி ஓட்டு போடறத போட்டோ எடுக்குறாங்க. அவங்க யாருக்கு ஓட்டு போடுறாங்கன்னு வீடியோ எடுக்குறாங்க. நான் போட்டோ எடுக்க கூடாதா?” சத்தம் கேட்டு போலீஸ்காரர் உள்ளே வந்தார்.

“விவாதம் பண்ணாதீங்க. எங்களுக்கு எலக்ஷன் கமிஷன் என்ன சொல்லுதோ அதான் செய்கிறோம். பூத்துள்ள போட்டோ எடுக்கக்கூடாது.”

“அவங்களுக்கு ஒரு நியாயம். எங்களுக்கு ஒரு நியாயமா?”

“தம்பி மிஷின விட்டு தள்ளி நில்லுபா” போலீஸ் சொன்னார். கோபத்தில் மிசினை உடைத்து விடுவானோ? என்ற பயம் விதுரனை தொற்றிக் கொண்டது.

“அவன முதலில் வெளியே அனுப்புங்க” ஏஜெண்ட் ஒருவர் சொன்னார்.

“போன உள்ள வெச்சுட்டு ஓட்ட போட்டுட்டு வாடா” – அவனுக்கு தெரிந்தவர் போல் இருந்த ஏஜெண்ட் ஒருவர் அதட்டலாகச் சொன்னார்.

“இவனையெல்லாம் ஓட்டு போடவே விடக்கூடாது. தூக்கி உள்ள வைங்க சார்” என்று போலீசை பார்த்து ஏஜெண்ட் ஒருவர் சொன்னார்.

“உங்க கட்சி ஆளுங்கள விடலாமா.? நீங்க என்ன பண்ணீங்க. எவ்வளவு பணம் கொடுத்தீங்க, சொல்லட்டுமா? நீங்க போட்ட ஆட்டத்தனால வேலூர்ல எலக்சன நிப்பாட்டி வச்சிருக்காங்க. உங்களையெல்லாம் தூக்கி உள்ள வைக்கலாமா?” இப்பொழுது ஏஜெண்டுகள் சண்டை மூண்டது. கட்சி சண்டையாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர்.

ஓட்டுக்கு கொடுத்த பணம் பொருட்களை எல்லாம் பட்டியலிட்டனர். சத்தம் அதிகமானது. அனைவரையும் சமாதனம் செய்ய முயன்று கொண்டிருந்தார் விதுரன். போலீஸ்காரர் அந்தப் பையன் உட்பட பூத் ஏஜெண்டுகள் இருவரை வெளியே அழைத்து போனார். விடுங்க சார் இனிமே நான் எதுவுமே பேச மாட்டேன் என்று சொன்னவர் உள்ளே வந்து அமர்ந்தார்.

“நான் இன்னும் ஓட்டு போடவே இல்ல. நீங்க என் உரிமையை தடுக்கிறீர்கள்.” அந்தப் பையன் வேகமாக பேசினான். உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை உன் பாட்டுக்கு போயி ஓட்டு போட்டு வர தெரியாது என்று வரிசையில் நின்று கொண்டிருந்த பெண்கள் திட்டினர்.

“உரிமையை கேட்க தெரியுது இல்ல. படிச்சிருக்க. எலக்சன் கமிஷன் சொன்னது உனக்கு புரியல. பூத்ல கலவரம் பண்ணேன்னு தூக்கி உள்ள வச்சுருவேன். அமைதியா போட்டுட்டு வெளியில் வந்துடணும்.” போலீஸ் கடுமையாகச் சொன்னார். சரி என்பது போல் தலையாட்டி உள்ளே சென்று ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தான். நன்றாக ஓடிக்கொண்டிருந்த வண்டி திடீரென்று நின்று மீண்டும் ஸ்டார்ட் ஆனது மாதிரி இருந்தது வாக்குச்சாவடி.

12 மணி நிலவரத்தை பதிவு செய்து மீதமிருந்த எழுத்து வேலைகளில் மும்முரமாக இருந்தார் விதுரன். நீண்ட நேரமாக யாரும் ஓட்டு போடவில்லை என்பதை உணர்ந்தார். ஓட்டுப்பதிவு ஆனதற்கு அடையாளமாக வரும் கி…..கி என்ற சத்தம் வரவே இல்லை. நிமிர்ந்து பார்த்தார். பி-1 ஒரு வாக்காளரின் பெயரை ஓட்டர்ஸ் லிஸ்டிலும் தேடிக் கொண்டிருந்தார்.

“சீக்கிரம் அனுப்புங்க. வயசானவங்க வெளியில நிக்கிறாங்க.” என்று சொல்லிக் கொண்டே வந்தவர் அந்தப் பையனின் பூத் சிலிப் வாங்கிக்கொண்டு அந்தப் பையனுக்கு பின்னால் இருந்த பெண்ணை “நீங்க போங்க” என்று சொல்லி நகர்ந்து நின்றார். பூத் ஸ்லீப்பை படித்தார்.

“இது, இந்த பூத் ஸ்லீப் இல்ல. பக்கத்து பூத். அங்க போயி ஓட்டு போடுங்க” என்று சொன்னவர் பூத் ஸ்லிப்பை வந்தவரின் கையில் கொடுத்து நகர்ந்தார்.

“சார் தம்பி நம்ம ஊரு தான்” ஏஜெண்ட் எழுந்து சொன்னார். அப்பொழுதுதான் விதுரன் வந்தவரை முழுமையாகப் பார்த்தார். இருபத்தி ஆறு வயது இருக்கும். மாநிறம். நல்ல உயரம். நேர்த்தியாகச் தலைசீவி இருந்தான்.

“உங்க ஊரு தான். இவர் ஓட்டு இந்த பூத்ல இல்ல” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் போலீஸ் ஒருவர் உள்ளே வந்தார். கூடவே ஒரு பெண்ணும். விதுரன் பக்கமாக வந்தவர் பக்கத்தில் நின்றிருந்த பெண்ணைக் காட்டி “இவங்கள ஓட்டு போட வச்சு அனுப்புங்க. அர்ஜெண்ட். நான் கூட்டிட்டு போகணும்” என்று சொன்னார். எல்லோரது கண்களும் அந்தப் பெண்ணை நோக்கியே இருந்தது. விதுரன் “சரி” என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினர். பக்கத்திலிருந்த இளைஞன் அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த பெண் தன்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்தார். 620. தீபா. அப்பா பெயர் ராஜி என்று பி-1 சத்தமாக வாசித்தார். பார்ப்பதற்கு நல்ல உயரமாக இருந்தாள். சுடிதார் அணிந்திருந்தாள். இடது கன்னத்தில் தழும்பு இருந்தது. ஒரு கையில் வாட்ச், மற்றொரு கையில் தங்க வளையலும், மணிபர்சும் இருந்தது. ஏஜெண்டுகள் பக்கமிருந்து சரிதான் என்பதற்கு அடையாளமாய் எந்தவித சமிக்ஞையும் வரவில்லை. “சரியா” என்று பி-1 மீண்டும் ஒருமுறை கேட்டார். ஏஜெண்ட் ஒருவர் “ஆமாம்” என்பதற்கு அடையாளமாக கை சாடை செய்தார். அது “அவள இங்கிருந்து அனுப்பு” என்பது போல இருந்தது. அந்தப் பெண் தன்னுடைய வாக்கை பதிவு செய்து பெண் போலீஸ் முன்னால் போக, அந்தப் பெண் பின்னால் கிளம்பி போனதும், ஓட்டிங் மெஷினில் பதிவான வாக்குகள். 17C-ல் பதிவான வாக்காளர்களின் எண்ணிக்கை சரியாக உள்ளது என்பதை உறுதி செய்து, 1 மணி நிலவரத்தை பதிவு செய்து கொண்டிருந்தார்.

அப்போது தான் நினைவுக்கு வந்தது காலையிலிருந்து சர்க்கரை மாத்திரை சாப்பிடாதது. மாத்திரை எடுக்க பையினுள் கைவிடும் போது,
“நீங்க நினைச்சா ஓட்டுப்போட விடலாம்” ஏஜண்ட் அருகில் வந்து கேட்டார். அந்தப் பையனும் உடன் இருந்தான். விதுரன் திரும்பி அந்தப் பையனைப் பார்த்தார். என் ஓட்டை இந்த பூத்தில் போடாமல் விட மாட்டேன் என்ற பாணியில் நின்று கொண்டிருந்தான்.

“புரியாம பேசாதீங்க. அவரோட ஓட் இங்க இல்ல”

“தெரியும் சார்”

“எங்க இருக்கோ அங்க போய் போட சொல்லுங்க”

“இந்த தம்பிக்கு அங்க போய் போட விருப்பம் இல்ல சார்”

“ஏன்?”

“அந்த பூத் காலனியில இருக்கு.”ஷாக் அடித்தது போலிருந்தது. சமாளித்துக்கொண்டு, “எங்க இருந்தா என்ன? போய் போட சொல்லுங்க”

“…………………”

வெளியே போலீசிடம் ஒருவர் சத்தமாக கத்திக் கொண்டிருப்பது கேட்டது. வந்தவர் பூத்துக்குள் சென்றுவிடாமல் இருக்க கதவருகில் கையை மறித்து நின்று கொண்டிருந்தார் போலீஸ். விதுரன் வெளியே சென்று பார்த்தார். “நான் பெங்களூரில இருந்து ஓட்டு போறதுக்கு வந்திருக்கேன். என் ஓட்ட யாராவது போட்டாங்கன்னு தெரிஞ்சுச்சு.. இங்க இருக்கிறவங்க எல்லாரும் அவ்வளவுதான்” என்று செல்போனை எடுத்து வீடியோ பிடிப்பது போல் காண்பித்தார். “சார் உங்க ஓட்டு யாரும் போடல.. அமைதியா இருங்க” என்று விதுரன் சொல்லி முடிப்பதற்குள் “உன் ஓட்ட யாரும் போடல. உன் பேர்ல ஊருக்குள்ள 3 பேர் இருக்காங்க. அவங்க பேர படிச்சத உங்கிட்ட மாத்தி சொல்லி இருப்பாங்க. நான் இருக்கிறபப்படி விடுவனா?” ஏஜெண்ட் எப்படியாவது இந்த ஒரு ஓட்டை தன்னுடைய கட்சிக்கு வாங்கிவிட வேண்டும் என்ற முடிவோடு பேசினார்.

“இந்த ஒரு ஓட்டு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க” சொந்த ஊரில், சொந்த ஊரின் பள்ளிக்கூடத்தில் யாரோ ஒருவரின் முன்னால் கெஞ்சுவது அசிங்கமாக இருந்தது அவருக்கு. அந்த இளைஞன் மற்ற பூத் ஏஜெண்டுகளிடம் கைகளை நீட்டி கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.
“இல்லாத ஓட் எப்படி போட வைக்கிறது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பையன் வந்தான். அவன் பூத் ஸ்லிப்ல அவன் போட்டோக்கு பதிலா வேற ஒரு பொண்ணோட போட்டோ இருந்துச்சு. ஐ டி செக் பண்ணிட்டு ஓட் போட விட்டேன். இது முடியாது. தப்பு” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஓட்டுப் போடுவதற்கு வைத்த மையை ஒருவர் தலைமுடியில் தேய்த்து அழிப்பதைப் பார்த்தார். “எதுக்கு இப்ப மைய அழிசிங்க”? அவரிடம் எந்த பதிலும் இல்லை. “மேடம் இன்னொரு முற மை வைங்க. அழிக்கக்கூடாது.போய் ஓட் போடுங்க” என்று கோபமாகச் சொன்னார். உண்மையில் அந்தப் பையன் மேல் இருந்த கோபத்தை, வந்தவர் மீது காட்டினார். ஏஜெண்டும் சப்போர்ட் செய்யும் நோக்கில் வந்தவரைத் திட்டினார். அந்த இளைஞர் வெளியில் சென்று சத்தமாக யாருடனோ போனில் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. ஏஜெண்ட் நகர்வதாக இல்லை. விடாப்பிடியாக “உங்கள்ட்ட சொல்றதுக்கு என்ன? பார்த்தா நம்ப ஆ…..” அவர் சொல்லி முடிப்பதற்குள் சோனல் ஆபீசர் உள்ளே வந்தார். 2 மணி நிலவரம், ஆண், பெண் ஓட்டுப் போட்டவர்கள் எண்ணிக்கை அனைத்தையும் குறித்துக்கொண்டு, “எப்படி போகுது விதுரன்?” என்று கேட்டார். “ம்.. நல்லா போகுது சார்”. “ம், பார்த்துக்கோங்க” என்று சொன்னவர் கிளம்பிப் போனார். அந்த நொடிக்காகக் காத்திருந்தது போல இருந்த ஏஜெண்ட்,

“பார்த்தா நம்ம ஆளுங்க மாதிரி இருக்கீங்க “பெருமை பொங்கச் சொன்னார்.

“………….”

“நாலு நாளைக்கு முன்னாடி பெரிய சண்டை ஆயிடுச்சு. ரெண்டு நாளு விழுப்புரம் போலீஸ் ஸ்டேஷன்ல, இனிமே இந்த பிரச்சனை வராதுனு எழுதி கொடுத்துட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இளைஞர் வந்து சேர்ந்து கொண்டார்.

“………..”

“எவ்வளவு தைரியம் இருந்தா பானைய தூக்கிகிட்ட, கொடிய புடிச்சிகிட்டு, ஊருக்குள்ள ஓட்டு கேட்டு வருவானுங்க? அவனுங்கள சொல்லி தப்பில்லை, கட்சி சொன்னுச்சி, மயிரு சொன்னுச்சின்னு சாதி மாறி அவங்க கூட சுத்திக்கிட்டு இருக்கிற தலமாட்டுகொல்லி ஊரில இருக்கத்தான் செய்யுது.”

“………….” எப்படி இவர்களைத் தவிர்ப்பது என்று தெரியாமல் மனதுக்குள்ளே நெளிந்து கொண்டிருந்தார். இவரும் விடுவதாக இல்லை.

“உள்ள வராதீங்கன்னு சொன்னோம். சின்ன பசங்க கல்லெடுத்து சிலைய அடிக்க, பிரச்சன பெருசாயிடுச்சு. இரண்டு பக்கமும் மண்ட ஒடஞ்சி, இப்ப கேஸ் இருக்கு. அத கட்சி பாத்துக்கும்.” என்று சொன்னதும் அந்த இளைஞனின் முகத்தில் தோன்றி மறைந்த சிரிப்பை விதுரன் கவனித்தார்.

“…………”

“இந்த ஒரு ஓட்டு மட்டும் போட வைங்க” என்று அந்தப் பையனைப் பார்த்துக் கொண்டே கேட்டார்.

“எப்படி போட வைக்கிறது? நீங்களே சொல்லுங்க.. பெரிய ரோதனையா இருக்கு” என்று நெற்றியைத் தடவிக் கொண்டார்.

ஊருக்குள்ள மொத்தம் 1269 ஓட். 970 போலிங் ஆனாலே பெரிய விஷயம். மீதிப்பேர் கேரளா பெங்களூர்ன்னு வெளியில இருக்காங்க. கண்டிப்பா வரமாட்டாங்க. அதுல ஏதாவது ஒன்ன போட விடுங்க.

“இது ரொம்ப பெரிய தப்பு. இப்பதான ஒருத்தர் வந்து கத்திட்டு போனாரு. நீங்களும் பாத்துட்டு தானே இருந்தீங்க. இதனால இங்க வேலை செய்ற எல்லாருக்கும் பெரிய பிரச்சனை ஆயிடும்”.

“எதுவும் ஆகாது சார். நாங்க பார்த்துக்கிறோம்.”

“நல்லா பாப்பிங்கலே, காலைல உங்க முன்னாடி தான போஸ்டர்ல கட்சி சின்னம் ஒட்டாம எதுக்கு இருக்கீங்கன்னு சண்டைக்கு வந்தாங்க. ஸ்டிக்கர் கொடுக்கல, சொல்லியிருக்கு எடுத்துட்டு வருவாங்கன்னு சொன்னோம். எலக்சன் ஸ்டார்ட் ஆக போகுது எப்ப எடுத்துட்டு வருவாங்கன்னு கேட்டாங்க?. சரின்னு கையால வரஞ்சா இது எங்க சின்னம் மாதிரியே இல்லன்னு சண்டைக்கு வந்தாங்க. எல்லாரும் செல்போனை தான் சார் தூக்குறாங்க. நீங்க சொல்ற மாதிரி பண்ணா பெரிய பிரச்சனை ஆயிடும். தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் கள்ள ஓட்டுன்னு பிரேக்கிங் நியூஸ் போடுவாங்க. தயவு செய்து வேலையை செய்ய விடுங்க. அந்தப் பையன ஓட் இருக்கிற பூத்ல போய் போட சொல்லுங்க” சொன்னவர் நகரத் தொடங்கியதும்,

“எல்லார்கிட்டயும் பேசி நா ஒத்துக்க வைக்கிறேன்” என்று சொன்னவர் ஏஜெண்ட் அமர்ந்திருக்கும் இடத்திற்குச் சென்று தன்னுடைய இடத்தில் அமர்ந்து, மற்றவருடன் பேச ஆரம்பித்தார். அவர் பக்கத்திலேயே நில்லு என்று அந்த இளைஞனைப் பார்த்து சைகை செய்தார். எழுந்து வந்தவர்,
“எல்லாரும் ஒத்துக்கிட்டாங்க சார். எந்த கட்சிக்கு வேணாலும் போடட்டும் நாங்க எதும் சொல்ல மாட்டேன்னு சொல்றாங்க.”

“எல்லாரும் ஒத்துகிறதனாலேயே தப்பு சரி ஆயிடுமா?”

“……….”

“ஒரு ஓட்டு தான 200 பேருக்கு மேல வரலன்னு சொல்றீங்க. அதுல ஒன்னா இதுவும் இருந்துட்டு போகட்டும். விடுங்க சார்”.

கோபமாகப் புறப்பட்டான் அந்த இளைஞன். ஏஜெண்ட் அவனை நிறுத்தினார்.

“அது எப்படி சார் விடுறது? நேர்ல இருக்கான்ல. ஒரு ஓட்டு கூட கலையாம வாங்கித் தரதா வாக்குக் கொடுத்திருக்கோம் கட்சிக்கு.”

“இந்த மாவட்டத்தில எங்க ஓட் போட்டாலும் உங்க கட்சிக்குத்தான் போகும். அங்க போய் போட சொல்லுங்க. உங்க கட்சிக்கு ஒரு ஓட் அதிகமா கிடைக்கும்.” தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற தொனியில் சொன்னார்.

“………….” இருவரும் எதுவும் பேசவில்லை. ஏஜெண்ட் மீண்டும் ஆரம்பித்தார்.
“போலீஸ் கூட ஒருத்தி வந்து ஓட்டு போட்டு போனாளே. அவளோட அப்பா, அம்மா ஓட்டு இங்கதான் இருக்கு. அவங்க வரமாட்டாங்க. இவ பண்ண காரியத்துக்கு எப்படி எல்லா மூஞ்சியையும் பாப்பாங்க. அவளோட அப்பா ஓட்ட போட விடுங்க” என்று கேட்டவர், “வேலைக்கு வெளியூருக்கு அனுப்புனா பையன புடிச்சிட்டு வருதுங்க. சொந்த சாதியில இல்லாதது. வெளியில என்ன இருக்குன்னு தெரியல? வெட்டி வீசாம விட்டதுதான் தப்பு” என்று பேசிக்கொண்டிருந்தார்.

மதியத்தில் இருந்து இந்த ஒரு ஓட்டு பெரிய தலைவலியாக இருப்பதாக விதுரன் மனசுக்குள் மருவிக்கொண்டார். வேக்காலமாக இருந்தது. திருப்ம்பி அந்தப் பையனைப் பார்த்தார். ஏஜெண்ட் ஒருவர் அந்தப் பையனிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். இவர்களுடன் பேசி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்தார். விதுரன் அந்தப் பையனை வரும்படி சைகை செய்தார்.

“படிக்கிறீங்களா?”

“வேலைக்கு போறேன்” என்று அசட்டையாக பதில் சொல்லும்போது ஏஜெண்ட் இருவர் அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்தனர்.

“என்ன படிச்சு இருக்கீங்க?”

“பி. ஈ”

“தம்பி உங்களுக்கு இந்த பூத்ல ஓட் இல்ல. அவங்களுக்கு சொன்னா புரிய மாட்டேங்குது. ஏதேதோ பேசிட்டு இருக்காங்க. நீ படிச்சவன் புரிஞ்சிப்பேன்னு நினைக்கிறேன்.”

“………….”

“முன்னாடி நடந்த சண்டையினால அங்க போக பயமா இருக்கா?”

“இல்ல”

“அப்படி இருந்தா சொல்லுங்க. வெளியில போலீஸ் இருக்காங்க. பூத் வரைக்கும் கூட வருவாங்க” என்று சொல்லி முடிப்பதற்குள், “நான் எதுக்கு காலனில போய் ஓட்டு போடணும்? என் ஊர்ல தான் போடுவேன்”

“இங்கதான் உனக்கு ஓட்டு இல்லையே”?

“ஓட்டு போடுறதுக்காக அவனுங்க இடத்துல போய் நிக்கணும்னு அவசியமில்ல”

“நல்லா படிச்சு இருக்கீங்க. வேலையில இருக்கீங்க. நீங்க இப்படி பேசலாமா? நீங்கதான் தம்பி இதெல்லாம் மாத்தணும்.” கோபம்தான் ஆனாலும் அமைதியாகச் சொன்னார்.

ஏஜெண்ட்கள் அவனுக்காகப் பேசியது, நீண்ட நேரமாக நின்றது, கெஞ்சியது எல்லாம் சேர்த்து பொறுமை இழந்தவனாக, “அங்க போயிதான் ஓட் போடணுமா” என்று கேட்டான்.

“ம்”

“எனக்கு ஓட்டே வேணாம்” என்று சொன்னவன் கோபமாக கிளம்பிப் போனான். என் ஓட்ட எப்படி போடறதுன்னு எனக்கு தெரியும் என்று கதவருகில் நின்று சொன்னான். செல்போனில் யாருடனோ சத்தமாகப் பேசிக்கொண்டே நடந்தான். போனவன் பின்னால் இரண்டு பேர் ஓடிக் கொண்டிருந்தனர். வெளியே போனவன் வேப்ப மரத்தடியில் பூத் ஸ்லீப்பை கிழித்து வீசிவிட்டு கேட்டை நோக்கி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, “எதுக்கு சார் வம்பு. ஒரு ஓட்டு தானே போட்டுவிட்டு போகட்டும் விடுங்க. இதனால என்ன பெருசா மாறப்போகுது?” பி-1 விதுரன் அருகில் வந்து சொன்னார்.

“ஓட்டு போட கூட காலனி பக்கம் போக மாட்டேன்னு நிக்கிறான். எப்படி சார் விடுறது?”

“புரட்சி எல்லாம் இங்க பண்ண முடியாது.”

“ம்.”

“நேரம் ஆக ஆக ரண்டு ஆளா வந்து நிப்பாங்க. உளுந்தூர்பேட்ட பக்கத்துல இதே பிரச்சனைதான் பயங்கர சண்டை ஆயிடுச்சாமமாம். பூத்த உள்ள பூட்டிக்கிட்டு உட்கார்ந்து இருக்கலாம். பிரண்ட் போன் பண்ணாரு. நம்ப வந்தமாதிரி வீட்டுக்கு போகணும் சார்.” உள்ளபடியே இந்த பயம் விதுரனுக்கும் இருந்தது. பி-1 தொடர்ந்து பேசினார்.

“எக்கேடும் கெட்டுப் போகட்டும் விடுங்க சார். அந்தப் பையன் சொல்றதுல பெருசா தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல. இங்க பிரச்சனை வந்தா மீண்டும் எலெக்ஷன் அணௌன்ஸ் பண்ணிட்டு போயிட்டே இருப்பாங்க. நமக்கு ஒன்னுன்னா கண்டுக்கவே மாட்டானுக. இவ்வளவு நியாயமா எலக்சன் நடத்திக் கொடுத்த மட்டும் நமக்கு தூக்கி கொடுப்பாங்கன்னு நினைக்கிறீர்களா? எலக்சன் முடிஞ்சதுக்கு அப்புறம் பொட்டி எடுத்துட்டா நம்மள கண்டு கூட ஆள் இருக்காது. ஆனா நாம்ப இந்த ஊரை தாண்டிதான் போகணும்.”

“ம்”

“நான் முன்னாடியே சொன்னேன் இதெல்லாம் நடக்காது. இவன் வயசுல இருக்கிற ஒரு பையனோட பூத் ஸ்லீப்பும் ஐடி கார்டையும் கொடுத்து பேசாம ஓட்டு போட வைக்கலாம்னு. நீதான் எதிர் கட்சிக்காரன், அது இதுன்னு சொன்ன. இப்ப பாரு அவன் ஊருக்குள்ள போய் என்ன சொல்ல போறான்னு தெரியல? ஒரு ஓட்டு கூட வாங்கிக் கொடுக்க முடியல. நீ எல்லாம் நம்ப சாதிக்கு என்னடா செய்யப் போறேன்னு யாராவது கேட்டா என்ன பதில் சொல்றது?” என்று அவனுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்த இரண்டு ஏஜெண்ட்கள் பேசிக்கொள்வது விதுரன் காதில் விழுந்தது. அப்போது அந்த இளைஞனின் பின்னால் ஓடிய இருவரும் அவனை சமாதானப்படுத்தி, ஓட்டுப் போட்டுவிட்டு வெளியே போகும் வாசல் வழியாக அவனை அழைத்து வந்தனர். ஏஜெண்டுகள் இருவரும் பி-1யிடம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த இளைஞன் விதுரனைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.

“அவரு ஓகே சொன்னா எனக்கு ஓகே” என்று பி-1 சொன்னது விதுரன் காதில் விழுந்தது. கடைசியாக ஒரு முற முயற்சித்து பார்க்கலாம் என்ற நோக்கில் அந்த இளைஞன், ஏஜெண்டுகள் அனைவரும் விதுரனை நெருங்கி வந்தனர். அந்த இளைஞன் விதுரனைப் பார்க்கவே இல்லை. பார்ப்பதைத் தவிர்த்தான்.

“சார்” என்று ஏஜெண்ட் ஒருவர் ஆரம்பித்ததும், அந்த இளைஞன் முந்திக்கொண்டு,

“என்வீட்டு வாசல்ல கைகட்டி வேலை கொடுன்னு லைனில் நின்னான்னுங்க, அவங்க கூட போய் என்ன நிக்க சொல்றீங்க. இதுக்கு நீ ஓட்டு போடாமலே இருந்திருக்கலாம் அப்படின்னு நாலு பேரு பேச மாட்டாங்க? சலுகைல படிச்சி, சலுகையில வேலைக்கு போறானுங்க. எங்க பொண்ணுங்களையும் கூட்டிட்டு போறானுங்க. அவனுங்க கூட போய் மச்சான் முறை கொண்டாடி லைன்ல நின்னு ஓட்டுப்போட சொல்றீங்களா?”

இருமல் வந்தது. செருமிக் கொண்டான்.

“நான் எதுக்கு போலீஸ் பாதுகாப்புல போய் ஓட்டு போடணும்? என் கழனி சைஸ் தான் அவனுங்க ஊரு. பிரஸ் புடிச்சு ஊருக்குள்ள வந்து சின்னம் வரையற அளவுக்கு தைரியம். சிலை கைய ஒடச்ச அன்னைக்கே நாலு பேர் கையும் ஒட்டச்சி இருக்கணும். அப்ப எங்க பொண்ணுங்கள பார்க்க தைரியம் வருமா?” கண்கள் தடுமாற ஆரம்பித்தது. ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு போனான். சாராய வீச்சம் அடித்தது. சத்தம் கேட்டு போலீஸ் உள்ளே வந்தார். “வெளில போ” என்பது போல் சைகை காட்டினார். ஏஜெண்ட்கள் அவனருகில் இருந்தவர்களும் அவனை “அமைதியா இருடா” என்று சொன்னார்கள். அவனது கையைப் பிடித்தார்கள். அவர்களது கைகளை உதறிவிட்டு பேசத் தொடங்கினான். இருமல் வந்தது. மீண்டும் செருமிக் கொண்டான்.

ஆசிரியராக முழுவதும் நொறுங்கிப் போய்விட்டார் விதுரன். ஒட்டுமொத்த படிப்பே கேள்விக்குறியாக அவர்முன் நின்றது.

“கடைசியா கேட்கிறேன். நான் இங்க ஓட்டுப் போடலாமா, கூடாதா”? மிரட்டும் தொனியில் கேட்டான்.

“உங்களுக்கு எங்க ஓட்டு இருக்கோ. அங்க போய் போடுங்க” என்று சொன்னவர் கோபமாக நகர்ந்து போனார்.

“அங்கதான் போகணுமா?” சத்தமாகக் கேட்டான்.

“ம்.”

“………””………”.”……..” திட்டிக்கொண்டே வெளியே போனான்.

நிறைவு: தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்தது முடிந்தது என்று செய்தி செயலி காட்டியது. வேப்ப மரத்தடியில் காலையில் பார்த்த ஈசல்களின் இறக்கை காற்றிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. கூடவே பூத் ஸ்லீப்பும். வேப்ப மரம் மட்டும் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.

***

சரவணன் சுப்பிரமணி – amudhini2017@gmail.com

ராஜ்யோத்சவா

6

தருணாதித்தன்

ன்றரை ஆகும்” என்றான் ரகு ராவ்.

“லட்சமா?” என்றேன் நம்ப முடியாமல். நாங்கள் ஆனந்துடைய சைக்கிளைப் பார்த்து வியந்து கொண்டிருந்தோம். “ஓரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்கி விடலாம் போல இருக்கிறதே “

சைக்கிள் பளபளப்பாகக் கூட இல்லை. உடனே எனக்கு அதைத் தொட்டுப் பார்க்கவேண்டும் போல தோன்றியது. அதை சைக்கிள் என்று சொல்வது தவறு. பைக் என்றுதான் சொல்ல வேண்டுமாம்.

“கார்பன் ஃபைபர் ஃப்ரேம்” என்று தட்டிக் காண்பித்தான் ரகு ராவ்.

“இது அமெரிக்காவிலிருந்து இம்போர்ட் செய்த மாடல், ஆறு மாதம் காத்திருந்து வாங்கியது” என்றான்.

“சுந்தர் புது எம் டி பி வாங்கி இருக்கிறான்” என்று காட்டினான். அங்கே மோட்டார் பைக் போல தடிமனான டயருடன் ஒரு சைக்கிள் இருந்தது. அது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இல்லை. உருவ அமைதி இல்லாமல் வளர்ந்த சில மனிதர்கள் போல இருந்தது.

“இப்போது நாம் ஹைவேயில்தானே போகிறோம்? மலை ஏறப் போவதில்லையே? மவுன்டன் பைக் எதற்கு?”

“சார், இதெல்லாம் ஓட்டும் அனுபவத்திற்காக. ஓட்டினால் மனம் பூமியிலிருந்து விடுதலை அடைந்து மேலே மிதக்கும், ஒரு புதிய அடையாளம் கிடைக்கும்”

அப்படித்தான் பேச்சு சென்ற மாதம் ஆரம்பித்தது. நான் அலுவலகத்தில் வேலைப் பளுவில் சிக்கி தாங்க முடியாத மன உளைச்சலில் இருந்தபோது ரகுதான் சொன்னான்.

“சார், நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துக்கணும். வீட்டுல பொழுது போக என்ன செய்வீங்க?”

“அடப்போப்பா, ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகவே ராத்ரி ஆயுடுது, பிறகு ஏது நேரம்?”

புதிய பாஸ் வந்ததிலிருந்து தினமும் இரவு வெகுநேரம் ஆகி விடுகிறது. அவர் வந்த முதல் நாளே எனக்கு நேரம் சரி இல்லை. மதிய உணவுக்குப் பிறகு சற்று சோம்பேறித்தனமாக எதையோ படித்துக் கொண்டிருந்த போது, “என்ன ரிபோர்ட் இது? இது நீங்கதான் எழுதினீங்களா?” எனது மேசைக்கு அருகில் நின்றுகொண்டு, முகத்துக்கு எதிரே ரிபோர்டை காண்பித்து, குரலை உயர்த்திக் கேட்டார்.

நான் உட்கார்ந்திருந்த பெரிய அறையில் கூடவே இருந்த பதினேழு பேரும் வேலையை நிறுத்திவிட்டு என்னைப் பார்ப்பதாக நினைத்துக் கொண்டேன்.

பழைய பாஸ் இருக்கும்போது ரிபோர்ட் எல்லாம் ஒப்புக்குத்தான். எல்லாமே பேசி விளக்கினால் போதும்.

“ஓரு நாலு பக்கம் கோர்வையாக எழுதக்கூட தெரியாதா உங்களுக்கு?” என்னை யாரும் இதுவரை இப்படிக் கேட்டதிலை.

“சாரி சார், நாளைக்கு வேற ரிபோர்ட் எழுதித் தருகிறேன்”

“என்ன ஒரு மோசமான வேலை! இப்போதே உட்கார்ந்து எழுதுவது நல்லது”

அவர் போனதும் ஒரு பாட்டில் தண்ணீரைக் குடித்தேன்.

ரகுதான் வந்து “சார், உங்களை மட்டும் அவர் தனியாகத் திட்டவில்லை, எல்லோருக்கும் இதேதான் நிலைமை” என்றான் சிரித்துக் கொண்டே.

எனக்கு ஜனவரியில் ப்ரமோஷன் வரவேண்டும். நாள் முழுவதும் அதே கவலையாக இருந்தது. இரவுத் தூக்கமும் சரியாக இல்லை.

“சார், கவலப்படாதீங்க, மனசு ரிலாக்ஸ் ஆனா, நீங்க செய்யற வேலையும் தானாக எளிதாக இருக்கும்”

“ஆமாம், நான் கூட ஒரு காலத்தில் ஆசிரமத்துக்கு சென்று கொண்டிருந்தேன். சுவாமிஜியின் உரைகள் ஆசுவாசமாக இருந்தன”

“யாரு? போன வருஷம் பெண்கள் விவகாரத்துல மாட்டிக்கிட்டாரே அவரா?”

“ஆமாம், அதற்குப் பிறகு போவதில்லை, இப்ப எல்லாம் அப்பப்ப சீரியல், படம் பார்க்கிறதோட சரி”

“சார், அதெல்லாம் போதாது. ஏதாவது ஓடி ஆடி விளையாடினால் நல்லது”

“நான் முன்னலாம் தினமும் ஷட்டில் விளையாடுவேன், கொரோனா ஆரம்பிசுது, இப்ப எல்லாம் போச்சு”

“சார், எப்ப எல்லோரும் சைகிள் ஓட்டறாங்க, நானும் ஆறு மாசமாய்த்தான் ஓட்டறேன். ஓட்ட ஆரம்பிச்சா, மனசு மிதக்க ஆரம்பிக்கும். அதுவே ஒரு யோகா மாதிரி அனுபவம். நிறுத்தவே மனசு வராது, நாள் முழுவதும் புத்துணர்ச்சியா இருக்கும். இப்ப நாங்க வார இறுதி நாட்களில் நீண்ட தூரம் ஓட்ட ஆரம்பித்து விட்டோம். ஒரு தடவை எங்களோட வாங்க” என்றான்.

இப்படியாக நான் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருந்தேன். பெங்களூரில் திடீரென்று எல்லோரும் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்திருந்தார்கள் என்று தெரியவந்தது. காலை வேளைகளில் நிறைய பேர் சைக்கிளில் சுற்றுவதை அப்போதுதான் கவனித்தேன். சைக்கிளில் செல்வது ஏழை எளிய மக்களுக்கு என்பது போய், பளபளப்பான டீ-ஷர்ட்களில் நிறைய பேர் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். லாக் டவுன் முடிந்த பிறகு அலுவலகத்துக்குக் கூட நிறைய பேர் சைகிளில் செல்ல ஆரம்பித்திருந்தார்கள். சாலைகள் பெரும்பாலும் காலியாக இருந்ததும் வசதியாக இருந்தது. நானும் என்னுடைய மகன் உபயோகித்த பழைய சைக்கிளைத் துடைத்து எண்ணெய் போட்டு வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒட்ட ஆரம்பித்தேன்.

இந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி திங்கள் கிழமை. வழக்கமாக இப்படி மூன்று நாள் விடுமுறை வந்தால், வெளி ஊருக்குச் சுற்றுலா கிளம்பி விடுவோம். கொரோனாவுக்குப் பிறகு வெளியூர்ப் பயணம் எல்லாம் நின்றுபோய் விட்டது. திடீரென்று ரகுராவ்தான் என்னை நீண்ட தூர ரைடுக்கு இழுத்தான்.

“சார், நாங்கள் எல்லோரும் ராஜ்யோத்சவாவுக்கு நந்தி மலைக்குப் போகிறோம், நீங்களும் வாருங்கள்”

“இல்ல ரகு, வீட்டில பாத்ரூம் ரிப்பேர் செய்ய வேண்டும், ஆள் வரச்சொல்லி இருக்கிறேன்”

“சார், அதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், நீங்க வாங்க சொல்றேன்”

“இல்ல ரகு, வேலை இருக்குது, மாதாந்திர ரிபோர்ட் எழுதி முடிக்கணும், இன்னும் பாதி கூட ஆகவில்லை. நாளைக்கு காலை தயாராக இல்லை என்றால், என் ப்ரமோஷன் போச்சு”

“சார், அதெல்லம் சாயங்காலம் வந்து எழுதுங்க, ஒரு தடவை வந்தால் பிறகு விடவே மாட்டீங்க “

“ரகு, அவ்வளவு தூரம் எல்லாம் எனக்கு ஒட்டிப் பழக்கம் இல்லை, முடியாது” என்றேன்.

“சார், நீங்க வீட்டுக்குப் பக்கத்துல சின்ன சின்ன ரோடுல போனால், அது ஓட்டறதே இல்லை, ஒரு தடவை எங்க கூட வாங்க அப்பதான் பைக் ரைடு என்றால் என்ன என்று தெரியும். அது ஒரு சுதந்திர அனுபவம், வானத்தில் பறப்பது போல இருக்கும்” என்றான். அரைகுறையாக சரி என்பது போல சொன்னேன்.

பத்து கிலோமீட்டர்தான் என்னுடைய அதிக பட்ச சாதனை, ரகு ராவிடம் எவ்வளவு கிலோமீட்டர் என்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டேன்.

“சார், குழுவாகச் சென்றால் தூரம் ஒரு கணக்கே இல்லை. இரண்டு பாட்டில் தண்ணீர், கொஞ்சம் க்ளூக்கோஸ், வாழைப்பழம், கடலை மிட்டாய் என்று களைப்புக்கு உடனடி சக்தி அளிக்கும் உணவு அவ்வளவுதான்” என்றான்.

“திரும்பி வர எவ்வளவு நேரம் ஆகும்? நான் ரிப்போர்ட் எழுதி முடிக்க வேண்டும், இல்லா விட்டால் காலையில் பாஸிடம் திட்டுதான்”

“ஸார், நீங்கள் மாலை நான்கு மணிக்குள் வீட்டுக்கு வந்து விடலாம். வந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டால். பிறகு எந்த வேலையும் மனம் ஒன்றி செய்ய முடியும்”

“என்னவோ ரகு, நீ இவ்வளவு வற்புறுத்தறதுனால வரேன், வந்து வேலையை முடிக்கணும்”

காலை ஐந்து மணிக்கு ரகு மற்றும் நண்பர்களுமாக அவனுடைய காருடன் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டான். காரில் பின்பக்கத்தில் சைக்கிள்களை ஆடாமல் கட்டிவைத்துக் கொண்டு கிளம்பினோம்.

ஹெப்பாள் ஃளை ஓவர் அருகே ஏர்போர்ட் ரோடு ஆரம்பிக்கும் இடத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பைக்குடன் வந்திருந்தார்கள். எல்லோரும் சைக்கிள் ஓட்டுவதற்கான உடை. உடலுடன் ஒட்டிய பளபளப்பான அரைக்கால் பேன்ட், மேல் சட்டை, கண்ணாடி, தலைக் கவசம், கைகளில் உறைகள் என்று சினிமாப் பாடல் காட்சிக்குழு மாதிரி இருந்தது. அவ்வளவு இறுக்கமாக உடை இருக்க வேண்டுமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் தொள தொளப்பான ட்ராக் பேண்டும் டீ ஷர்ட்டுமாக நான் மட்டும்தான் இருந்தேன். அது பெங்குவின் கூட்டத்துக்கு நடுவே ஒரு மனிதன் போல இருந்தது. வண்ணப் பெங்குவின்கள்.

காலை ஆறு மணிக்கு ஹெப்பாளிலிருந்து கிளம்பினோம். அங்கங்கே ராஜ்யோத்சவத்துக்குகாக புதிதாகக் கொடி மரம் நடப்பட்டிருந்தது. மஞ்சளும் சிவப்புமான கர்னாடகத்தின் கொடி கயிறுகளில் குறுக்கும் நெடுக்குமாக கட்டிப் பறந்து கொண்டிருந்தது. ஆட்டோ ட்ரைவர்கள் காலையிலேலே குளித்து, சீருட அணிந்து விழாக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்கள். ராஜ்யோத்சவா என்பது பழைய மைசூர், மதராஸ் ப்ரெசிடென்சி மாகாணங்களிலிருந்து 1956-ல் கர்னாடகா என்ற பெயருடன் தனி மாநிலம் ஆன நாளைக் கொண்டாடும் விழா இது. பெங்களுருக்கு வந்த புதிதில் இது விசித்திரமாக இருந்தது. நாடு விடுதலை தினம் கொண்டாடுவதைப் பார்த்திருக்கிறோம்.

ரகுராவிடம்தான் கேட்டேன்.

“நாட்டுக்கு சுதந்திர தினம் கொண்டாடுவோம், இதென்ன மாநிலத்துக்கு சுதந்திர தினமா?”

“சார், எங்களுக்கு ஒரு அடையாளம் கிடைத்த நாள், கொண்டாட வேண்டியது அல்லவா?”

இந்த ராஜ்யோத்சவா விழாவுக்கு சில எழுதப்படாத விதிமுறைகள் உண்டு. முதலில் கொடி. மஞ்சளும் சிவப்புமான கொடி. அது கம்பத்தின் மேல் மட்டும் இல்லை, தெருவுக்குக் குறுக்கே கயிறு கட்டி தொங்கும். ஸ்கூட்டர், ஆட்டோ, கார், பஸ் என்று எல்லா வாகனக்களிலும் இருக்கும். அரசாங்க வாகனம் மட்டும் இல்லை, நிறைய பொது மக்களும் கொடி கட்டிக்கொண்டு திரிவார்கள். தெரு முனைகளில் கொடிக்கம்பத்துக்குக் கீழே புவனேசுவரியின் படம் இருக்கும். பாரத ஜனனிய தனுஜாதே, கர்னாடக மாதே, கன்னட நுடி என்று பாடல்கள் அலறும். அப்படிப்பட்ட ராஜ்யோத்சவா நாளில் நாங்கள் கிளம்பி இருந்தோம்.

பைக்கில் எறும்போதுதான் ரகு என்னிடம் கேட்டான்.

“கொடி எங்கே? கொண்டு வரவில்லையா?”

“என்ன கொடி, நீ சொல்லவில்லையே.”

“ராஜ்யோத்சவா ரைடுக்கு கொடி அவசியம் வேண்டும்”

நான் பையைக் காண்பித்து “இதோ பார்.. நீ சொன்னபடி தண்ணீர், வாழைப்பழம், க்ளூக்கோஸ் எல்லாம் கொண்டு வந்திருக்கிறேன், கூடவே கீழே விழுந்து சிராய்த்தால் இருக்கட்டும் என்று களிம்பு கூட கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன்.

“ஸாரி, நான் சொல்ல மறந்து விட்டேன். பரவாயில்லை, போகும் வழியில் எங்காவது வாங்கிக் கொள்ளலாம்”

அப்போதுதான் நான் கவனித்தேன், எல்லா பைக்களிலும் சிறிய கொடி வைத்துக் கட்டி இருந்தார்கள். என்னைத் தவிர.

எங்கள் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த நாகணா என்று அழைக்கப்படும் நாகேஷ்ராவ் அருகில் வந்தான்.

“லோ நன் மகனே (அடேய் என் மகனே), உனக்கு கன்னடமும் பேச வராது, கொடியும் இல்லை, போகும் வழியில் எவனாவது நிறுத்திக் கேட்டால் என்ன சொல்லுவாய்?” என்று நாடகத்தனமாக கைகளை ஆட்டிக் கேட்டான்.

“கொத்தில்லா” என்றேன் அலட்சியமாக.
“நாகணா.. மகனே, நீ உயிருடன் திரும்பிப் போக வேண்டுமானால் மரியாதையாக முதலில் ஒரு கொடியை வாங்கி பைக்கில் கட்டு, இல்லாவிட்டால் உன் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு இல்லை” என்றான்.
நாகணா ஒன்றும் இல்லாததைப் பெரிதுபடுத்துவான், நான் அவன் சொன்னதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

ரகு “அதெல்லாம் போகிற வழியில் பார்த்துக் கொள்ளலாம்” என்றான்.

நாகணா மறுபடியும் “உங்களுக்கு நல்லதனமாகச் சொன்னால் புரியாது, வழியில் சமரஹள்ளி இருக்கிறது. கெம்பே கௌடா பெங்களூர் உருவாக்கியபோது, நகரக் காவலுக்கு இங்கிருந்துதான் வீரர்கள் சென்றார்களாம். இப்போதும் இங்கே கன்னட வீரப்படை என்று ஒரு குழு இருக்கிறது. மிக விமர்சையாக, நூறு அடி கொடிக்கம்பம் நட்டு விழாக் கொண்டாடுவார்கள். சற்று வலதுசாரிக் குழு” என்றான்.

எனக்கு கவலை பற்றிக் கொண்டது.

“இங்கே மாலில் கொடி கிடைக்குமா?” என்று எதிர்ப்பக்கம் பார்த்தேன். அங்கே இருபத்து நான்கு மணியும் திறந்திருக்கும் மெக் டொனால்ட்சைத் தவிர வேறு எந்தக் கடையும் திறந்த மாதிரி இல்லை.

ரகுராவ் “ஏலஹங்காவில் கிடைக்கும்” என்றான்.

நாகணா “ஹைவேயில் எந்தக் கடையும் இல்லை, நாம் உள்ளே போகப்போவது இல்லை, உனக்காக வழி மாற்ற முடியாது என்றான்.

“சார், நீங்கள் நடுவில் வாருங்கள். பார்த்துக் கொள்ளலாம்” என்றான் ரகுராவ்.

நான் பைக்கில் ஏறி அமரும்போதே கைகள் நடுங்கின. வீரப்படை பற்றி அடிக்கடி செய்திகள் வரும். வடக்கே மஹாராஷ்டிரத்துடன் எல்லைத் தகராறு, தமிழ்நாட்டுடன் காவிரி நீர் தகராறு என்று எல்லாப் போராட்டங்களும் வன்முறையாக நடத்துபவர்கள்.

கிளம்பும்போது மறுபடியும் நாகணா என்னை எச்சரித்தான். சொல்லுவதைப் பார்த்தால், என்னைக் கொடிக்கம்பத்தில் கட்டிவைத்து அடிப்பார்கள் போல இருந்தது. போகும் வழி எல்லாம் நான் எங்கே கொடிக்கம்பம் தெரிகிறது, எங்கே கூட்டமாக இருக்கிறார்கள் என்று கவனமாக இருந்தேன்.

திடீரென்று எல்லோரும் வேகத்தைக் குறைத்தார்கள். ரகுராவ் “காலை உணவு நேரம். இங்கே தோசை அருமையாக இருக்கும் என்றான்”

நான் அப்போதுதான் நாங்கள் ஒன்றரை மணிநேரமாக ஓட்டி வந்திருக்கிறோம் என்று உணர்ந்தேன். ஏதோ ஒரு சாகர் என்று ஒரு சிறிய உடுப்பி ஹோட்டல். வட கிழக்கு மாநிலத்தான் ஒருவன் பெரிய கல் முழுக்க வரிசையாக தோசைக்கு நெய் தெளித்துக் கொண்டிருந்தான். கையேந்தி பவன் வகைதான். நிறைய சைக்கிள்கள், கார்கள் எல்லாம் நின்றிருந்தன. எல்லா வண்டிகளிலும் கொடி. நான் சுற்றிலும் எவனாவது தீவிர கட்சிக்காரன் மாதிரி தெரிகிறானா என்று கவனமாகப் பார்த்தேன்.

“என்ன தோசை எப்படி? இந்த மாதிரி ருசி, மணம் நகரத்துக்குள் கிடைக்கது” என்றான் ரகு.

“அப்படியா? சமரஹள்ளி எவ்வளவு தூரம்?” என்றேன்.

“சார், இந்த நாகணா இப்படித்தான் எதையாவது கிளப்பி விடுவான், நீங்க நடுவில வாங்க” என்றான் ரகு. இருந்தாலும் எனக்கு பயமாக இருந்தது.

சாலை ஒரு பெரிய வளைவாக சென்றது – திரும்பிய பிறகுதான் கொடிக்கம்பத்தையும் கூட்டத்தையும் பார்த்தேன். நடுவில் இருந்த நான் மட்டும் பைக்கை நிறுத்த முடியவில்லை, ஒரு நிமிடத்தில் நாங்கள் அந்தக் கூட்டத்துக்கு அருகே இருந்தோம். அவர்கள் கை காட்டி எங்களை நிறுத்தச் சொன்னார்கள்.

ரகு அருகே வந்து, “ஒன்றும் இல்லை, ஏதாவது டொனேஷன் கேட்பார்கள், நீங்கள் நடுவிலேயே இருங்கள்” என்றான். அப்படித்தான் ஆரம்பித்தது. சிலர் கையில் ரசீது புத்தகத்தை எடுத்து பணம் கேட்டார்கள்.

“ஒரு நூறு ரூபாய் கொடுத்து விடுங்கள், வாங்கிக் கொண்டுபோய் விடுவார்கள்” என்றான் ரகு.

“நூறு என்ன இரு நூறே கொடுக்கிறேன், கொடி இல்லை என்று தகராறு செய்யாமல் விட்டால் சரி” என்றேன்.

நெற்றியில் பெரிய குங்குமமும் தொங்கு மீசையுமாக ஒருவன் வந்து என்னிடம் ரசீது புத்தகத்தை நீட்டினான். இருநூறு ரூபாயை நன்றியுடன் வாங்கிக் கொண்டு அடுத்து யாரிடமாவது போயிருக்க வேண்டும். அதுதான் இல்லை.

என்னுடைய பைக்கைப் பார்த்து “கொடி எங்கே?” என்றான். அதற்குள் ரகு என் உதவிக்கு வந்தான். என்னைப் பேசாதே என்று சைகை செய்தான்.

“அதான் நாங்க எல்லோரும் கொடி வெச்சிருக்கிறோமே”

“அதெல்லாம் சரி, இவரிடம் மட்டும் ஏன் இல்லை? அவரையே பேசச்சொல்”
நான் அவசரமாக “எனக்குத் தெரியாது, இல்லா விட்டால் எடுத்து வந்திருப்பேன்” என்று சொன்னேன். ஆங்கிலத்தில்.

“பெங்களூர் வந்து எவ்வளவு வருடம் ஆகிறது, இன்னும் கன்னடா பேச வராதா?”

ரகு ராவ் உதவிக்கு வந்தான் “அப்படி இல்லை, வரும்போது எல்லா இடத்திலும் தேடினோம், எங்கேயும் கொடி கிடைக்கவில்லை”

அதற்குள் அடுத்து ஒரு மோட்டார் பைக் குழு வருவது தெரிந்தது. தொங்கு மீசைக்காரன் அவர்களிடம் வசூலிக்கக் கிளம்பினான்

“மரியாதையாக கொடி வாங்கி சைக்கிளில் கட்டுங்கள், இல்லா விட்டால் இந்தச் சாலையில் திரும்பிப் போகவிட மாட்டோம்” என்று என்னை முறைத்து விட்டு நகர்ந்தான்.

நாகணா அருகில் வந்து “நான் கிளம்பும்போதே சொன்னேனா, இப்போது அனுபவி” என்றான்.

அடுத்த கிராமத்தில் இருந்த கடைகளில் விசாரித்தோம். கிடைக்கவில்லை. ஹைவேயிலிருந்து உள்ளே சென்றால், தொட்டபள்ளாபூரில் கிடைக்கும் என்றார்கள். நாங்கள் போக வேண்டிய வழி வேறு.

ரகுராவ் “ஸார், பார்த்துக் கொள்ளலாம், நாம திரும்பி வரும்போது இவங்க எல்லாம் லஞ்ச் சாப்பிட போய் விடுவார்கள்” என்றான்.

நாகணா “அப்படி எல்லாம் நினைத்து மகிழ வேண்டாம், இப்படித்தான் போன வருஷம் மைசூர் ரோடில மண்ட்யா பக்கத்துல ஒரு கார்” என்று ஆரம்பிக்க, ரகு ராவ் அவனை நிறுத்தினான்.

“மண்ட்யா பக்கத்துல என்ன ஆச்சு?” என்ற என்னுடைய கேள்விக்கு ரகுராவ் நாகணாவை முறைத்தான்.

நான் போகும் வழி முழுவதும் ஏதாவது கடை தெரிகிறதா, கொடி இருக்கிறதா என்று பார்த்தேன். நாங்கள் நந்தி மலை அடிவாரத்துக்கு வந்திருந்தோம். மேலே செல்வதற்கு அனுமதி இல்லையாம், போலீஸ் பாதுகாப்பு போட்டிருந்தார்கள், வழி அடைத்திருந்தது. மலையைச் சுற்றி வரலாம், எல்லாம் சேர்ந்து நூறு கிலோமீட்டர் ஆகும் என்றார்கள்.
நான் போலீஸ்காரரிடம் பக்கத்தில் எங்காவது கொடி கிடைக்குமா என்று ரகுவை விசாரிக்கச் சொன்னேன். அவர்களுக்கும் தெரியவில்லை.

ரகுராவ் “இது மிக அருமையான வழி, இயற்கை அழகு ரசிக்க வேண்டும், நிதானமாகத்தான் போவோம், வாருங்கள்” என்றான். நான் ஏதாவது கிராமம் உண்டா, கடை இருக்குமா என்று கூகிள் மாப்பில் தேடினேன். நடுவில் ஒரு இடத்தில் சாலை மிக ஏற்றமாக இருந்தது. இறங்கித் தள்ள வேண்டியதாயிற்று.

ரகுராவ் “சார், நானும் முதல் முறை வந்தபோது, இப்படித்தான் தள்ளினேன், இன்னும் இரண்டு தடவை வந்தால் நீங்களும் ஓட்டுவீர்கள்” என்றான்.

“நீ எப்போதாவது கொடி இல்லாவிட்டால் திரும்பிப் போக விடாத முரடர் கூட்டத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாயா?” என்று குரலை உயர்த்தினேன்.

ஒருவழியாக மலையைச் சுற்றி வந்து விட்டோம்.

ரகுராவ் “சார் பாதி தூரம் ஆகி விட்டது, இன்னிக்கு நீங்க சென்சுரி ரைடுதான் அதைக் கொண்டாடலாம்” என்றான்.

ரகு “அந்த தொங்கு மீசை ஆளிடமிருந்து மட்டும் என்னைக் காப்பாற்றி விடு, உனக்கு கோடி புண்ணியம்” என்றேன்.

நாகணா நடுவில் வந்து வேறு வழியாகத் திரும்பலாமா என்று கேட்டான். என்னைத் தவிர வேறு யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. கிளம்பினோம். எனக்கு சற்று கை கால்கள் நடுக்கமாக இருந்தது. ரகு ராவ் என்னை நடுவில் வரச் சொன்னான். சமரஹள்ளி திருப்பத்துக்கு அருகில் வரும்போதே எனக்கு உதறல்.

சாலை அருகே கூட்டம்.

“நாம் வேகமாக அந்தப் பக்கம் போய் விடலாமா?”

“முடியாது சார், வாங்க பார்க்கலாம்”

கூட்டமாக அவர்கள் வந்தார்கள். தொங்கு மீசை என்னைப் பார்த்து விட்டான், என்னுடைய பைக்கில் இப்போதும் கொடி இல்லை. கையைக் காட்டி மறித்து, நேராக என்னிடம் வந்தான்.

ரகு ராவ் “நாங்க வழியில் எல்லா ஊரிலயும் நிறுத்தி கொடி கிடைக்குமான்னு பார்த்தோம், எங்கயுமே கிடைக்கல”

நான் என்னைக் கட்டிப்போட ஏதாவது கயிறு வைத்திருக்கிறானா என்று பார்த்தேன்.

“உங்களுக்கும் கிடைக்கவில்லையா? வரவங்களுக்குக் கொடி கொடுக்கலாம்னுட்டு நானும் தேடி அலஞ்சேன், எங்கயும் கிடைக்கல, சரி போங்க, அடுத்த முறை கொடி இல்லாமல் வராதீங்க, ஜெய் கர்னாடகா!” என்றான்.

நானும் குரலை உயர்த்தி “ஜெய் கர்னாடகா” என்றேன் முகத்தைத் துடைத்துக் கொண்டு, தண்ணீர் குடித்து, பெருமூச்சு விட்டேன்.
திரும்பும் வழி மிக அழகாக இருந்தது. ரகுவிடம் நிறுத்தி தோசை சாப்பிடலாமா என்றேன். சாப்பிட்டோம். வெந்தய மணத்துடன் அருமையான தோசை. ரகுராவ் சொன்னபடி வீட்டுக்கு நான்கு மணிக்கு வந்து சேர்த்து விட்டான்.

நான் தான் மாலையில் அலுவலக வேலையைச் செய்யவில்லை.

***

தருணாதித்தன் – tharunadithan@yahoo.com

கைமாறு

0

கா. சிவா

மூடியிருந்த ஜன்னல்களின் சிறிய இடைவெளிகளில் பனிக்காற்று பீறிட்டு உள்நுழைந்தது. தட் தட் எனக்கேட்கும் ஒலி எத்தனை விரைவாகக் கேட்கிறது என்பதை வைத்து ரயிலின் வேகத்தை உணர முடிந்தது. மெல்லிய பனி பலநூறு நுண்முட்களால் சந்துருவின் மேனியை துளைத்து உள்நுழைந்தன. கடும் வெயிலின் தகிப்பு சந்துருக்கு பொருட்டாகத் தெரிந்ததில்லை. ஆனால் பனியின் மென்தைப்பை அவனால் தாங்க முடியவில்லை. கைகளை கட்டிக்கொண்டு உடலை ஒடுக்கியபடி கழிவறையை ஒட்டிய பாதையில் அமர்ந்திருந்தான்.

அவனைப் போலவே இன்னும் பலரும் அமர்ந்திருந்தார்கள். ஓரமாக இவர்களின் பைகள் குவியலாக கிடந்தது. சந்துரு மற்றவர்களைப் பார்த்தான். பெரிதாக வருந்தாமல் துண்டையோ லுங்கியையோ போர்த்திக் கொண்டு சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். இருவர் கால்களை நீட்டியபடியும் மற்றவர்கள் இவனைப் போல கால்களை கையால் கட்டியபடியும் இருந்தார்கள். சந்துருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையினால் முன்பதிவில்லாத இந்தப் பெட்டியில் இப்படி அமர வேண்டியதாகி விட்டது. இங்கே அமர்ந்து இப்படிக் குறுக வேண்டியதாகி விட்டதே என்ற எண்ணம் எழுந்ததுமே அப்பாவின் மேல் வெறுப்பு எப்போதும் இருப்பதைவிட பன்மடங்கு கூடியது. சில நேரங்களில் இவன் யோசித்திருக்கிறான், ஏன் இத்தனை வெறுப்பு தந்தைமேல் தோன்றுகிறதென. தான் சிறுவயதிலேயே செய்ததை கூறிக்கூறி இவனை குத்திக் காட்டுவதுடன் தன்னால் செய்ய முடியாமல் போனதையும் “என்னால் தான் முடியவில்லை. நீயாவது செய்யேன்” என நல்வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக எண்ணிக் கொண்டு இவனை தன்னிரக்கத்தில் தள்ளிக்கொண்டே இருப்பதுதான் காரணம் எனத் தோன்றியது. அவர் செய்ததையும் செய்யத் தவறியதையும் நான் செய்தால்… நான் செய்ய வேண்டியதை யார் செய்வது. என் பிள்ளையா… இல்லையில்லை ஒருபோதும் என் பிள்ளைக்கு இப்படியொரு நெருக்கடியைக் கொடுக்க மாட்டேன் என்று எண்ணிக் கொண்டபோதே தற்போது இதற்கு எந்த அவசியமும் இல்லை, முதலில் வேலை வேண்டும், பிறகுதானே திருமணம் பிள்ளையெல்லாம் என்று தன்னையே கடிந்து கொண்டபோது திலகாவின் நீள்வட்ட ஏறு நெற்றி முகமும் சற்று மேடிட்ட இதழ்களும் நினைவுக்கு வந்து மறைந்தது.

ஜன்னலுக்கு வெளியே தெரிந்த இருளின் கரிய போர்வை கிழிந்தது போல அவ்வப்போது தூரத்து வெளிச்சம் தெரிந்து மறைந்தது. மாட்டேன் மாட்டேன் என எத்தனை தடவை கூறினான். அப்பா அவரின் முடிவில் தகர்க்க முடியாத உறுதியுடன் இருந்தார். ஒவ்வொரு முறை சந்துரு முடியாதெனக் கூறியபோதும் அந்த உறுதி வலுப்பெற்றது. எப்போதும்போல கடைசியாக “அவர் பிடிவாதம்தான் தெரியுமே. போய் பாத்துட்டு வாடா” என அம்மா கூறி சந்துருவை நகர்த்தினாள். இருவருக்கும் இடையில் நசுங்கி கண்ணீரைப் பொழியும் அம்மாவை காணச் சகியாமல்தான் இந்தமுறையும் ஒப்புக் கொண்டான்.

டிப்ளமோ படித்த அப்பா அவர் படிக்க எண்ணிய பொறியியலை சந்துருவைப் படிக்க வைத்தார். இவனுக்கு என்ன பிடிக்கிறது எனக் கேட்கவேயில்லை. தன்னைக் கேட்டிருந்தால் என்ன சொல்லியிருப்பான் என சிலமுறை தன்னையே கேட்டுக் கொண்டபோது இவனால் அதைக் கணிக்க முடியவில்லை. ஆனாலும் வேலை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் “நீங்கதானே எஞ்சினியரிங்ல புடிச்சு தள்ளுனீங்க. நெறவேறாத ஒங்க ஆசைக்காக இப்ப நான் பாடுபடறேன்” என்று அவர் முகத்தைப் பார்க்காமல் கத்துவான். பிறகு அம்மா சொல்வார் “அவர் கம்பீரம் மெதுவாக தளர்ந்து, வருந்துவதாக”. அப்போதும் “தப்பு செஞ்சிட்டு வருத்தப்பட்டா சரியாயிடுமா” என மனதிற்குள் கறுவிக் கொள்வான்.

அப்பாவின் நண்பர் கோதண்டத்தைப் பார்ப்பதற்காக காலையில்தான் திருப்பூருக்கு வந்தான். ஐந்து வருடங்களுக்கு முன் மிகவும் நலிந்த நிலையில் இவரிடம் உதவி கேட்டுவந்த கோதண்டத்திற்கு வேலை கிடைக்க உதவி செய்தாராம். அவர் இரண்டு வருடங்களில் தன் சொந்த ஊருக்கு அருகில் இருப்பதால் திருப்பூருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு சென்று விட்டார். அவரைப் பார்த்து தன் பேரைக் கூறினால் உடனே வேலைக்கு வழி செய்வார் எனக் கூறித்தான், விருப்பமில்லா சந்துருவை அனுப்பினார். சென்னையில் என்ன செய்வது என்று புரியாமல் தவித்தபோதும் முரண்டு பிடித்தபடியே கிளம்பினான்.

கோதண்டத்திடம் பேசிவிட்டுச் செல்லலாம் என இவன் முயன்றபோது அப்பாவிடம் இருந்த அவரின் எண் தொடர்பு கொள்ளமுடியாத நிலைக்குச் சென்றிருந்தது. செய்த உதவிக்கு பதில் உபகாரம் கேட்பதுபோல் இருக்குமென்றே அப்பா இத்தனை நாள் தயங்கியிருக்கிறார். வேறுவழி இல்லாமல்தான் இவனை அனுப்புவதாக அம்மா கூறினார். அதனால்தான் அப்பா நேரில் வராமல் அவர் முகவரியைக் கூறி அனுப்பினார்.

ஆங்கங்கே கேட்டு வீட்டை அடைவதற்குள் மதியம் ஆகிவிட்டது. அவர் மாலைதான் வருவார் என்று வாசலில் நின்ற இராணுவத்தில் ஓய்வு பெற்றவர் சொன்னார். கம்பெனியின் முகவரியைக் கேட்டான். அதன் தொலைவு அதிகமாக இருந்ததால் அங்கேயே காத்திருக்க முடிவுசெய்து அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்தின் அருகே கிடந்த திண்டின்மேல் அமர்ந்திருந்தான். தேடிக் கண்டுபிடித்தபோது வீட்டைச் சரியாகக் கவனிக்கவில்லை. இப்போது சற்றுத் தள்ளி நின்று பார்த்தபோது ஏதோவென்று சரியாக இல்லாததுபோலத் தோன்றியது. சுற்றியிருந்த கட்டடிடங்களெல்லாம் புதுவடிவத்துடன் பொலிவாக இருக்க இவர் வீடு பழைய காலத்து வீடுபோல தோற்றம் கொண்டிருந்தது. வண்ணமடித்து பல ஆண்டுகள் ஆகியிருக்கும். வெண்மையைப் போல மாறியிருந்த வண்ணம், அடித்தபோது நீலமாக இருந்திருக்க வேண்டும் என்பதை சிறிய மடிப்புகளின் வெயில்படாத இடங்களில் தொக்கி நின்ற வண்ணத்தைக் கொண்டு அறிய முடிந்தது. இதைப் பார்த்தவுடன் சந்துருவுக்கு தங்கள் கிராமத்து அரியநாயகி அம்மன் கோவில் நினைவு எழுந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றபோது கோவிலுக்கு அழைத்து சென்றார்கள். தூரத்தில் இருந்து பார்க்கும்போது அதன் நேர்த்தியும், வடிவ ஒழுங்கும், பழமையும் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. ஆவலுடன் கோயிலின் உள்ளே சென்றான். சிலைகளுக்கும் சுவருக்கும் இடையே விரிசல்விட்டிருக்க, சிலை விழுந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. பூச்சுகள் உதிர்ந்து இரண்டு மூன்று அடுக்கு வண்ணங்கள் வெளிறித் தெரிந்தன. அரசமரம் ஒன்று தன் வேரைப் பரப்பி சுவர்களை கவ்விக்கொண்டு வானத்தை எட்டித்தொட முயன்றது. ஏன் இப்படி கைவிட்டுள்ளார்கள் எனக் கேட்டபோது, அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. அரசுதான் மராமத்து செய்ய வேண்டும், ஆய்வு செய்ய வரவேண்டுமென பல வருடங்களாக மனு கொடுத்து வருகிறார்கள். ஆய்வு செய்து, அறிக்கை தயாரித்து, மதிப்பீடு செய்து, பணம் ஒதுக்கி அரசு பீடம் வருவதற்குள் என்னவாகுமோ. ஊர்க்காரர்கள் கை வைத்தல் பெருங்குற்றமாகும் எனக் கூறினார்கள். கோவில் மெதுமெதுவாக அது தோன்றிய பழங்காலத்திற்குள் நுழைந்து மறைந்துவிடும் என அப்போது தோன்றியது. இப்போது அது தன் இலக்கை அடைந்திருக்கக் கூடும் என்று எண்ணியபோது ரயிலின் கதவு உக்கிரமாகத் தட்டப்பட்டது.

ரெயில் ஏதோவொரு நிலையத்தில் நின்றிருந்தது. இதில் ஏறுவதற்காக வெளியில் நின்று கதவை தட்டி “தொறங்கய்யா, கதவத் தொறங்கையா” என்று சற்று வயதானவரின் குரல் ஒலித்தது. “ரயில் கதவை, லீவரை கீழே அழுத்தி திறக்க வேண்டியதுதானே. எதற்காக தட்டிக் கொண்டிருக்கிறார்” என்று சினம் தோன்ற அலுப்புடன் எழுந்தான். உறங்கிக் கொண்டிருந்த இருவரை தாண்டிக்கொண்டு கதவருகில் சென்றான். அவர் தட்டிக்கொண்டே இருந்தார். “ஏன் கத்துறீங்க கொஞ்சம் நில்லுங்க” எரிச்சலுடன் லீவரை இழுத்தபோதும் கதவைத் திறக்க முடியவில்லை. கதவுக்கு அருகில் இருந்தவர் “தம்பி மேலே பாருங்க. அந்தக் கொண்டிய எடுங்க அப்பதான் தொறக்க முடியும்” என்றார்.

ரயிலில் ஏறியவர் கையில் இரண்டு பெரிய மூட்டைகளை வைத்திருந்தார். அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரின் நிலையும் சற்று குலைந்தது. இவர் தன் மூட்டையை ஏற்கனவே கிடந்த பைகளுக்கருகில் நிற்கவைத்தார். கால்களை நீட்டி அமர்ந்திருந்தவர்கள், மடக்கி அமர வேண்டியதானது. கல்பட்டு கலைந்த குளம் சிறிது நேரத்தில் தன் பழைய நிலைக்குத் திரும்புவதென அனைவரும் ஒருங்கியமர்ந்து துயிலுக்குள் செல்ல முயன்றனர். இப்போது ஏறியவர் நன்றி தொனிக்கும் முகத்துடன் “ரெண்டு நிமிசந்தான் நிக்கும். ஏற்கனவே ரெண்டு வண்டில தொறக்கல. அதாலதான்” என்றபடி இவனைப் பார்த்து கூறிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காமல் கதவின்மேல் சாய்ந்து அமர்ந்து கொண்டார். பாதி நரைத்த தலையில் துண்டை உருமா கட்டியிருந்தார். சுத்தமாக நரைத்திருந்த மீசையுடனும் சில நாட்கள் வளர்ந்த ரோமங்களுடனும் இருந்த முகத்தில் கவலை மையெனப் படிந்திருந்தது. இவர் முகம் எவரையோ நினைவுபடுத்தியது. யாரையென்று சட்டென நினைவுக்கு வராததால் சலிப்புடன் சாய்ந்தமர்ந்து தனக்குள் ஆழ்ந்தான்.

அப்பா எப்பவுமே இவனிடம் அதிகமாக பணம் புழங்காதவாறு பார்த்துக் கொள்வதில் கவனமாக இருந்தார். “பணம் என்பது கூரான ஆயுதம் போல. அதை பயன்படுத்த தெரியாதவன் தன்னை காயப்படுத்திக் கொள்வதோடு பிறரையும் துன்பப்படுத்துவான்” என்று தத்துவம் போல சொல்வார். அதன் அர்த்தம் இதுவரை இவனுக்குப் புரிந்ததில்லை. பணம் கையில் இன்னும் கிடைக்கவில்லையே. திருப்பூருக்கு வர ரெயில் பயணச்சீட்டுடன் நூறு ரூபாய் மட்டுமே கொடுத்தார். வேலைக்கு சேர்ந்தால் கம்பெனியிலேயே முன்தொகை தருவார்கள். தங்க வசதியும் உணவும் கிடைக்கும் எனக்கூறினார். அவருக்குத் தெரியாமல் தான் தருவதாக அம்மா நூறு ரூபாய் கொடுத்தார். ரெயில் நிலையத்திலிருந்து கோதண்டம் வீட்டுக்குச் செல்வதற்கும் மூன்று வேளை சாலையோரம் இருந்த கடையில் உண்டதற்கும் போக இருபது ரூபாய்தான் பையில் இருக்கிறது. டிக்கெட் பரிசோதகர் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்ற அச்சம் வேறு ஒரு குமிழியாக உள்ளே உருண்டு கொண்டிருந்தது.

கோதண்டம் முகம் நினைவுக்கு வந்தது. சூரியன் மறைந்து மங்கலாக முகம் தெரியுமாறு வெளிச்சம் இருந்தபோது பழைய வடிவக் காரொன்றில் வந்தார். தொலைவில் அதன் சத்தத்தை கேட்டவுனேயே காவலாளியின் உடல்மொழி மாறுவது தெரிந்தது. அப்போதே சந்துரு உணர்ந்து கொண்டான். கார் உள்ளே சென்ற பிறகு வாயிலின் அருகே சென்றான். காவலாளி இவனைப் பற்றிக் கூறியவுடன் இவனைப் பார்த்தார். தயங்கியபடியே நடந்து அவரருகே சென்றான். மிகுந்த களைப்புடன் இருந்த முகத்தில் முறுவலைக் காட்ட முயன்றார். அது பொருந்தாமல் செயற்கையாக மெல்லிய அசூசையை சந்துரு மனதில் உண்டாக்கினாலும் இவனும் புன்னகைக்க முயன்றான். இது அவர் பார்வைக்கு எப்படித் தெரியும் என்று எழுந்த எண்ணத்தை அடக்கியபடி.

சந்துரு அவன் அப்பாவின் பெயரைச் சொன்னவுடன் கோதண்டம் முகத்தில் ஒளி கூடியதாகத் தோன்றியது. இப்போது அவரின் புன்னகை விரும்பத்தக்கதாக மாறியிருந்தது. “நீங்க சாயங்காலம்தான் வருவீங்கன்னு இவர் சொன்னாரு. கம்பெனிக்கு வரலாம்னு அட்ரஸ் கேட்டேன்…” என்று சந்துரு கூறத் தொடங்கிய போதே, “கம்பெனிக்கு வந்தாயா…” என்று அவரின் குரலில் வெளிப்பட்ட அதிர்ச்சி முகம் வெளிப்படுத்தியதில் கால்வாசிதான் இருக்கும். இந்த தளர்ந்த முகத்தில் இத்தனை உணர்வு மாற்றங்களை குறுகிய நேரத்திலேயே பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தாலும் அதை ரசிக்க நேரமில்லை. “இல்ல சார். தூரமா இருக்கேன்னு இந்த பஸ் ஸ்டாப்லயே ஒக்காந்திருந்தேன்” ஊதிய பலூனுலிருந்து காற்று இறங்குவது போல அந்த அதிர்ச்சி அவர் முகத்திலிருந்து வெளியேறி ஆசுவாசமடைந்தார்.

“சொல்லுப்பா… அப்பா நல்லாருக்காரா. என்ன விசயமா வந்திருக்கீங்க”
வந்த நோக்கத்தைக் கூறியவுடன் அவர் முகம் எப்படி மாறப்போகிறது என்பதைக் காணும் ஆவல் மனதில் எழுந்தது. “நான் என்ஜினியரிங் முடிச்சிருக்கேன். சென்னையில சரியான வேலை அமையல. அதான் ஒங்க கம்பெனியில ஒங்க மூலமா கிடைக்கும்னு அப்பா அனுப்பினார்”
சட்டென முகத்தைத் திருப்பி வெளியே பார்த்தார். அவரின் முகத்தை இவன் கூர்ந்து நோக்குவதை உணர்ந்து முக உணர்ச்சிகளைக் காட்டிவிடக் கூடாதென திரும்பியிருப்பார் என தோன்றியபோது சற்று ஏமாற்றமாக இருந்தது. இவன் அவரின் தளரந்திருக்கும் சற்று பூசினாற்போன்றிருந்த உருவத்தை நோக்கினான். ஏனோ பெரியநாயகி கோவில் சட்டென நினைவுக்கு வந்தது.

இவன் பொறுமை கரையத் தொடங்கியபோது திரும்பினார். மிகவும் தீர்மானமாக கூறும் தொனியில், “தம்பி, இப்ப நெலம சரியாயில்ல. நான் வேற ஏதாவது எடத்துல விசாரிச்சுட்டு அப்பாக்கிட்ட சொல்றேன்னு சொல்லுங்க” என்று கை கூப்பினார்.

இவன் திகைத்தபடி நிற்பதைப் பார்த்தவர் “தம்பி செலவுக்கு பணம் இருக்கா. எதுவும் தேவையா..”

“இல்ல சார் அப்பா கொடுத்திருக்கார்… வர்றேன் சார்” அப்பாமேல் எத்தனை வெறுப்பிருந்தாலும் அந்த நேரத்தில் வேறொருவருக்கு முன் அப்பாவை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை.

“தம்பி பணம் இருக்கான்னு நான் கேட்டேன்னு அப்பாக்கிட்ட சொல்லாதீங்க. அவரப்பத்தி குறைவா நெனச்சிட்டேன்னு நெனச்சு வருத்தப்படுவாரு” என்றவரிடம் பதிலேதும் சொல்லாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு வெளியே வந்தான்.

ரெயிலின் ஹார்ன் ஒலி கூர்மையாக செவிக்குள் நுழைந்தது. ஏதோ ஸ்டேசனுக்குள் நுழைவதை உணரமுடிந்தது. நிர்கதியாய் நின்றவருக்கு, வேலை வாங்கிக் கொடுத்தவருக்கு எப்படியொரு நன்றிக்கடனை செலுத்திவிட்டார் இந்த கோதண்டம். வீட்டினுள்ளே அழைக்கவில்லை. அமரச் சொல்லவில்லை. குடிக்கவோ உண்ணவோ எதுவும் கொடுக்கவில்லை. இவரைப்போய் நம்பி அனுப்பினாரே, அப்பாவைச் சொல்ல வேண்டும். இந்த அவமானம் அவருக்கு வேண்டும் தான். ஆனால் இதுமாதிரி ஏதேனும் நேரக்கூடும் என்பதை எண்ணியே அவர் யாரிடமும் உதவி கேட்காமல் தன் மரியாதையை காத்துக் கொண்டிருக்கிறார் போல. ஆனால் அதை மொத்தமாக சரித்து அழித்துவிட்ட கோதண்டம் மேல் தோன்றிய கோபத்தில் கையை தொடையின் மேல் ஓங்கித் தட்டினான். சத்தம் பெரிதாகக் கேட்டது. திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். கதவை யாரோ தட்டினார்கள். வண்டி நிற்பதை உணர்ந்தான். கதவருகே அமர்ந்திருப்பவர் எழுந்து திறந்துவிடுவார் என்ற எண்ணத்துடன் கண்களை மூடிக்கொண்டான். ஆனால் தட்டல் சத்தம் நிற்கவேயில்லை.

சலிப்புடன் நிமிர்ந்து பார்த்தான். அங்கே அமர்ந்திருந்தவர் ஜன்னல் கண்ணாடியை மூடிக்கொண்டிருந்தார். இவன் முகத்தைப் பார்க்காதது போல பார்வையை தாழ்த்திக் கொண்டு கீழேயே அமர்ந்து கொண்டார். இவன் நினைத்தாலும் அவரை இந்தப் பக்கம் இழுக்காமல் கதவைத் திறக்க முடியாது. வெளியில் இருந்து குரல் மன்றாடியது. திறங்கப்பா… என்று ஆரம்பித்த அந்தக் குரல் திறங்கடா… என்று ஒரு வசைச் சொல்லுடன் முடிந்தது. அதைக் கேட்காதது போலவே கதவருகில் இருந்தவர் அமர்ந்திருந்தார். அருகில் அமர்ந்திருந்தவர்கள் கண்விழித்து நோக்கியபின் எதுவுமே கூறாமல் கண்களை மூடிக்கொண்டார்கள். ரயில் நகர ஆரம்பித்தது. கூடவே நடந்தபடி தட்டிய கையை எடுத்துக்கொண்டு திட்டியவை எதிர்காற்றில் சிறிதளவே செவியை எட்டியது.

சந்துரு வெறுப்பும் சினமும் பொங்க கதவையொட்டி இருந்தவரை நோக்கினான். குனிந்து அமர்ந்திருந்தவர் இவனின் நோக்கின் கூரிய தீண்டலால் நிமிர்ந்தார். ஒருகணம் கோதண்டத்தைப் போலவே தோன்றினார். இவன் சினத்தின் உச்சிக்கு சென்றான். அவர்மேல் இருந்த கோபமும் வெறுப்பும் உள்ளத்தை உலுப்ப “ஏங்க, நீங்க அங்க குளிருல நின்ன மாதிரிதானே இவரும் நிக்கிறாரு. ஒங்களுக்கு அவரோட கஷ்டம் தெரியலையா. ஒங்களுக்கு நான் கதவத் தொறக்கலையினா இப்படி இங்க கதவ மூடிக்கிட்டு திறக்கமுடியாம ஒக்காந்திருக்க மாட்டீங்க…” அவர் இவன் முகத்தை கோபமோ குற்றவுணர்ச்சியோ இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அது சந்துருவின் சினத்தை மேலும் தூண்டியது.

“ஒங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே கெடயாதா. ஒதவி தேவைப்பட்டப்ப நமக்கு ஒருத்தன் ஒதவுனானே. அதே மாதிரி ஒதவி கேக்குற ஒருத்தனுக்கு ஒதவணுமேன்னு தோணலையா. ஒருத்தன் கதறும்போது, ஒதவுற இடத்துல இருக்கிற ஒங்களால எப்படி அவன கைவிட முடியுது. மத்தவங்க பரவாயில்ல. ஆனா அவர் நிக்கிற எடத்துல இருந்து மேல வந்த ஒங்களுக்கு அவர் கஷ்டம் தெரியுமில்ல… தெரிஞ்சே இப்படி மரக்கட்ட மாதிரி ஒக்காந்திருக்கிறது மனுசத்தனந்தானா…” கோபத்தில் வார்த்தைகள் தடுமாற வேகமாக மூச்சிளைக்க அவரையே நோக்கினான்.

“தம்பி கொஞ்சம் அமைதியா இருங்க. ஏன் இத்தன ஆவேசப்படறீங்க. என்னமாரி தான் அவரும் நிக்கிறாரு. அவரோட கஷ்டம் என்னன்னு எனக்கு தெரிஞ்சதாலதான் தொறக்கல” அவர் பதில் சொல்ல ஆரம்பித்ததே இவன் கோபத்தை பாதி குறைத்துவிட்டது. அவர் கூறவருவதை கவனித்தான். எப்படி தன் மனச்சாட்சியிடம் தனக்கு நியாயம் கற்பித்துக் கொள்கிறார் என்பதைப் பார்க்கும் ஆர்வம் சந்துருவுக்குள் எழுந்தது.

“ஜன்னலத் தொறந்து பார்த்தேன் ரெண்டு பேரு நிக்கிறாங்க. மூனு மூட்டைய வச்சிட்டுருக்காங்க. அவங்களுக்காக பாத்து தொறந்திருந்தா இங்க இருக்குற யாரும் தூங்க முடியாது. எல்லோரும் இடிச்சுக்கிட்டு நின்னுக்கிட்டுதான் போவணும்” என்று அவர் கூறியபோது சுற்றிலும் பார்த்தான். ஒருவரையொருவர் நெருங்கியமர்ந்துதான் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

“இன்னும் ரெண்டு வண்டி அடுத்து இருக்குது. அதுல ஒன்னுல அவங்களால ஏறிட முடியும். ஒங்கள மாதிரி யாராச்சும் தொறக்க இருப்பாங்க. அந்த மூட்டைகளோட, இதுல ஏறவிட்டுருந்தா உள்ள இருக்கிறவங்க எல்லாரும் நசுங்கிக்கிட்டுதான் போவணும். அதுதான் ஒதவியா…” என்று கூறியபின் கதவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டார். அப்போது அவரது உதட்டில் மெல்லிய ஏளனச் சிரிப்புடன் சிறு நிறைவும் இருந்ததை சந்துரு கண்டான்.

சந்துருவிற்கு ஏனென்றியாமல் மெல்லிய புன்னகை தோன்றியது. நாளை திலகா சொன்ன மாதிரி அவள் அப்பாவைச் சந்திக்க வேண்டும் என எண்ணியபடி கண்களை மூடி தூக்கத்தை வரவழைக்க முயன்றான்.

***

கா. சிவா – தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதி வரும் இவரது “விரிசல்” எனும் சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல்: sivaangammal1983@gmail.com


கா. சிவா
sivaangammal1983@gmail.com

ராஜமுனி

4

ரம்யா

 

1

எழ வேண்டுமென்ற உந்துதல் உள்ளத்தின் எங்கோ ஓர் ஆழத்தில் அவனுக்கு ஒலித்தது. கண்களைச் சுருக்கி விழித்தபோது கண்ட இருளைக் கண்டு முதலில் திகைத்தான். பயத்தினால் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு தன்னை திரட்டிக்கொள்ள முற்பட்டான். முதலில் எங்கிருக்கிறோம் என்பது மண்டையை எட்டியபோது மனம் அவனுக்கு கனமாகியது. சூடான கண்ணீர் கண்களின் பக்கவாட்டில் வழிந்தது. காதுக்குள் அது நுழைந்துவிடும் அசெளகரியத்தைத் தடுக்க எண்ணி ஒருக்களித்துப் படுத்தான். எங்கிருந்தோ ஒருதுளி குளிர் திரவம் அவன் சென்னியில் தெறித்துச் சிதறியது. மிரண்டு பதறி முழு உடலையும் உந்தி எழுந்து கொண்டான். பசி மயக்கத்தில் எத்தனை நாள் படுத்திருந்தோம் என்பதறியாதவனாய் இருளை வெறித்திருந்தான். தன் காலருகில் ஈரப்பதத்தை உணர்ந்தபோது நாய்போல் அதன்மேல் குப்புற விழுந்து நாவால் நக்கி அதைக் குடித்தான். எழ முடிந்த அளவு ஆற்றல் கொண்டதை உணர்ந்தவனாய் மெதுவாக எழுந்து உடலை உந்தித் தள்ளினான். தான் என்ற உணர்வும் உடலும் வேறு என்ற எண்ணத்திலேயே அந்தக் குகை இருளில் நடந்தான். குகை முனையின் வெளிச்சத்தை விரைந்து சென்று தழுவி உடலை உற்று நோக்கினான். அது தன்னுடன்தான் இருக்கிறது என்பது கண்டு ஒருவாறாக மன நிம்மதி வந்து சேர்ந்தது அவனுக்கு.

குகையின் விளிம்பை அடைந்து கீழ்நோக்கிப் பார்த்தபோது பத்தடி ஆழத்தில் குளம் போன்ற அமைப்பு இருந்தது. அந்தப் பாறையிலிருந்து கசிந்த நீரை கச்சிதமாக சேர்த்து வைத்திருந்த குளமது. அதில் தன் உருவத்தை பசும்நீலத்தில் அவன் பார்த்தான். எலும்பும் தோலுமாக நீண்ட தாடியும் முடியுமாக தன்னைப் பார்க்கும் போது அது தானல்ல என்று அவனுக்குத் தோன்றியது.

குதித்தால் குளத்தில் விழுந்து உடலையும் வயிறையும் குளிர்விக்கலாம் தான். ஆனால் அங்கே கால்களை மடித்து, நீருக்குள் மல்லாந்துப் படுத்து கண்களை மூடி தக்கையைப்போல மிதந்து கொண்டிருந்த ஆசாமியைக் கண்டு பின்வாங்கினான். அவர் தன்னைப் போலவே மெலிந்தும் நீண்ட தாடியும் சிகையும் வைத்திருந்ததைப் பார்த்தான். எலும்புக்கூடுகள் ஒரே மாதிரி இருப்பது போல மிக மெலிந்த மனிதர்கள் ஒரே தோற்றத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டான். அவர் விழிக்கும் வரை காத்திருக்கலாம் என்றெண்ணினான். 

திடீரென மழை பெய்தது. அவன் இருந்த இடத்தில் அவனுக்காக மட்டுமே பெய்தது போல அது கொட்டியது.  வாயைத் திறந்து நாக்கை வெளித்தள்ளிக் கொண்டு மழையை வாங்கிக் கொண்டிருந்தான். ஏனென்று தெரியாத ஏக்கம் அவனை முட்ட அந்த மழையின் சத்தத்தின் ஒத்திசைவோடு கதறி அழுதான். அழுது அழுது அது பொருளற்றதாகத் தோன்றவே மீண்டும் குன்றிலிருந்து எட்டி அந்த மனிதனைப் பார்த்தான். எந்த மாற்றமும் தென்படவில்லை. அவன் முகம் கனவினுள்ளிருந்து புன்னகைப்பதைப் போல இருந்தது. காலம் மெதுவாக ஓடிக்கொண்டிருப்பதாகப் பட்டது. தாணிப்பாறையிலிருந்து கால்போன போக்கில் அழுதுகொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் நடந்து வந்தது நினைவிற்கு வந்தது.

சிறிது நேரத்திற்கெல்லாம் இருள் கவ்வி வானத்தின் முழுமதியனால் காடு ஒளி கொள்வது போல இருந்தது. காலம் நொடி நொடியாகக் கடப்பதாக அவனை அழுத்தி வந்தது. நான்கு திசைகளுக்கும் நான்கு மலைகள் வீதம் நிறைத்திருந்த சதிரகிரி மலையின் மடிக்குள் சிறு மகவாக ஒடுங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது அவனுக்கு. தன் அம்மாவின் ஒடுங்கிய முகமும் அதில் அவனுக்காக எப்போதும் மிச்சமிருக்கும் புன்னகையும் அப்போது ஏனோ அவனுக்கு நினைவுக்கு வந்தது.

“அம்மா….ங் ங் ங் ங்…ம் ம்ம்…” என்று முனகிக்கொண்டே அழ ஆரம்பித்தான்.

“ஒன்ன எப்டியாச்சும் அந்த பாழாப்போன எடத்துல இருந்து மீட்டுடலாம்னு நினச்சேனேம் மா… எனக்கு படிப்ப விட்டா வேற எதுவும் தெரியாதே… இப்டி உன்ன விட்டுட்டு வந்துட்டேனேம்மா… ஒனக்கு வேற யாராச்சும் நல்ல பிள்ள பெறந்திருக்கலாம்மா… சூடு சொரண இல்லாத பிள்ளயோ… பொழக்கத் தெரிஞ்ச பிள்ளையோ பொறந்திருக்கலாம்மா… இல்ல இல்ல… நாம வேற சாதில பொறந்திருக்கலாம்மா… இல்ல.. இந்த ஒலகம் வேற மாதிரி இருந்திருக்கலாம்மா… அம்மா… என்ன நீ வெறுத்துடாத… அம்மா ம்…. அம்மா ம்ம்ம்…” என்று முனகிக்கொண்டே உடலைக் குறுக்கிக்கொண்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

சலனமற்ற குளத்தில் யாரோ கல்லை எடுத்து அடித்தது போல அவன் உடல் அதிர்வு கொண்டது. யாரோ தன்னை பிருஷ்டத்தில் ஓங்கி மிதித்தது போலிருந்தது. எழுந்து, அமர்ந்து திகைத்து முடிக்கும் முன் அவர் ஓங்கி இவனை அறைந்தார்.  கைகளைக் கொண்டு கன்னத்தைப் பொத்தி வைத்தவாறு ஏன் என்ற கேள்வியுடன் வெறித்து அவரைப் பார்த்தான். 

“எதுக்குடா நாயே இப்டி அழற?” என்று கேட்டார்.

“நான் ஆய்வு.. தாவரம்…” உலறினான்.

“உச்” என்றார்.

“எனக்கு பி.எச்.டி பட்டம் குடுக்கமாட்டேனுட்டாங்க”

”ஏன்”

“….சாதி” என்று இழுத்து சொல்லி முடித்தபோதே அந்த வார்த்தைக்கும் அந்த இடத்திற்கும், அந்த ஆளுக்கும் அது பொருளற்றதெனத் தோன்றியது. ஒரு பொண்ணு என்னை காதலிக்கறதா சொல்லி… என் பிரஃபசர் கூட அந்தப் பொண்ணு…” திரண்டு வராத வார்த்தைகளை முனகியும் முக்கியும் என மென்று முழுங்கிக் கொண்டிருந்தான். மீண்டும் முனகியவாறு “எனக்கு இதத்தவர வேற ஒன்னுந் தெரியாது..” என்று சொல்லி ஏக்கத்தோடு அவரின் கண்களைப் பார்த்தான்.

“ம்.. சரி என்னத்துக்கு இது..”

“என்னத்துக்குன்னா… இதான் என் கெரியர்..” கெரியர் என்ற வார்த்தை அந்த ஆசாமிக்கு புரிய வாய்ப்பில்லை என்று அவனே முடிவு செய்துகொண்டு “என் வாழ்க்கைல முக்கியமான விஷயம் இதான்..” என்றான்.

“டேய் உன் மண்டையப் பொளந்துடறேன்டா இன்னைக்கு. எதுக்குடான்னு கேட்டா..”

“எதுக்குனு கேட்டா.. தாவரத்த ஆராய்ச்சி பண்றது எனக்கு பிடிக்கும். நிறைய கண்டுபிடிப்புகள ஒலகத்துக்கு குடுக்கலாம். என் வேல வருமானத்த வச்சி என் குடும்பத்த கொஞ்சம் நல்ல நெலமைக்கு கொண்டு வந்திருப்பேன்.” குரல் தழுதழுத்து மீண்டும் கம்மிய குரலில் அழுதான்.

செருமி காறித் துப்பிக்கொண்டே “யாரும் யாரையும் இங்க நல்ல நிலமைக்கு கொண்டு வந்திட முடியாதுடா பைத்தியக்கார நாயே! மொதல்ல இப்ப அவங்க நல்லா இல்லன்னு யாரு சொன்னது. ஒனக்கு என்ன இதுல கெடக்குது அதச் சொல்லு”

திகைத்தவனாய் “ம்… எனக்கு.. எனக்கு.. தாவரத்த ஆராயரதுல தான்.. ஒரு இது…. ஒரு சந்தோஷங் கெடக்குது” என்றான்.

”ம்.. இப்ப நீ ஒக்காந்திருக்க மலை பேரு என்ன தெரியுமா”

“தெரில”

“சஞ்சீவி மல”

“ம்…”

”என்னடா ’ம்…’ சுன்னி நாயே.. இதோட இன்னொரு பேரு மருந்து மல. இங்க பண்ணாத ஆராய்ச்சி புண்டையவா அங்க நாலு செவத்துக்குள்ள பண்ணப் போற. நியாயமா இங்க வந்ததுக்காக நீ சந்தோசமா தான இருக்கணும்..” என்று கூறியவாறு தன் முகத்தைக் கோணலாக்கி மீண்டும் காறி உமிழ்ந்தார்.

அவன் ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தான். அவன் தலைமுடியை தன் இடக்கையால் பற்றி முகத்தைப் பார்த்து தன் இடுப்பு முடியில் வைத்திருந்த இலைகளை எடுத்து அவனிடம் நீட்டி “இது என்னான்னு தெரியுமாடா..”

“ம்ஹூம்.. இல்ல.. தெர்ல”

”இத சாப்பிடு”

எந்த மறுப்பும் உடலிலோ மனதிலோ சிறிதளவும் எழாதவன் போல அந்தக் பச்சைக் கொழுந்து இலைகளை வாங்கி மென்றான். வயிற்றின் தீ அடங்குவதாக எண்ணம் எழுந்தது அவனுக்கு. இனிமையான எண்ணங்கள் அவனுள் நிறைய ஆரம்பிப்பதை உணர்ந்தான்.

”இது பசிய அடக்கறது. பசிக்கு உணவாகறது. ஒன் மொகரக் கட்டையப் பாத்தா நாலு நாள் சாப்புடாதவன் மாதிரி இருக்கே” என்று சொல்லிக்கொண்டே அவன் அருகில் வலது கையை தலையில் ஊன்றி ஒருக்களித்துப் படுத்தார்.

அவன் வாயைப் பிளந்தவாறு “இந்த சிறு புல்லா… ஆனா இப்படி ஒன்னு இருக்கத நான் கேள்விபட்ருக்கேன்.” என்றவாறு சிறு மெளனத்திற்குப் பிறகு

”நீங்க சொல்றதுல்லாம் நியாயந்தான்.  ஆனா நான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தது நெல் பயிரப் பத்தி. அத காட்டுல எப்படி பண்றது?” என்று சமாதனம் செய்யும் பாவனையில் கேட்டான்.

“ஏன்?”

அதை எதிர்பாராதவன் போல “அதுதானே மக்களுக்கு அதிகமாகப் பயன்படற தாவரம்.. அதான்” என்றான்.

“எவ்ளோ நாளா”

”நாளா… ஏழு வருசமா”

“ஒரே தாவரத்தையா?

“ஆமா? அதோட மரபணுவ படிக்கறது. அதுல மாற்றத்த கொண்டு வாரது… இப்படி நெறய…”

“இங்க இந்தக் காட்டுல கோடி தாவரம் மொளைச்சிக் கிடக்கு. மனுஷங்களுக்கு இது எதுவுமே வேண்டாம்னு நினைக்கிதியோ?”

அவன் ஏதும் பேசவில்லை.

“அது சரி. எல்லாத்துக்கும் எல்லாத்தையும் குடுக்குத அளவு இயற்கை கனிஞ்சும் இல்ல. சில காடுங்க மூடித்தேன் கெடக்கும். தனக்கானவங்கள தேர்ந்தெடுத்து எப்பவாது மடில கெடத்திக்கும்” என்று சொல்லிவிட்டு அவனைப் உற்றுப் பார்த்தார்.

“ஒங்களுக்கு என்னய சொல்லி புரிய வைக்க முடில. நீங்க இங்க இருக்க எண்ணிக்கைய பத்தி பேசிக்கிட்டு இருக்கீக. நான் ஒரு தாவரத்துக்குள்ள போய் அணுவணுவா தெரிஞ்சிக்கறத பத்தி பேசிக்கிட்டு இருக்கேன். ஒரு தாவரத்தோட அத்தனை இயல்புகளையும் தெரிஞ்சு நமக்குத் தேவையான இயல்ப அதிகப்படுத்திக்கறத பத்தி…”

“இயல்ப ஏன் மாத்தணும். அந்த இயல்பு அதிகமா இருக்க இன்னொரு தாவரத்த கண்டறிய சோம்பல்பட்டு..” என்று அலுத்துக் கொண்டார்.

“இல்ல.. வந்து…”

“அத விடு.. இனி இங்கையும் ஆராச்சி பண்ண முடியாது உன்னால” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தார்.

நிமிர்ந்து ஏதும் புரியாதவனாய் “ஏன்” என்றான்

“ஏன்னா… நீ தான் நேத்தே செத்துட்டியே”

அவன் திடுக்கிட்டு “இல்ல இல்ல… நான் நான்.. உயிரோட..”

‘ஆமா.. நேத்து அந்த குகைல செத்து கிடந்த..” என்றார்

“இல்ல.. நம்பமாட்டேன்.”

அந்த மனிதர் எக்காளமிட்டுச் சிரித்தார். 

“நான் இப்ப இங்க இருக்கேனே..”

”உன்னோட ஒரு நிகழ்த்தகவு தான் இங்க இருக்கு”

குழம்பிப்போய் “புரியல” என்றான்.

”இப்ப நிகழ்ந்துகிட்டிருக்க பிரபஞ்சத்துல நீ இருக்க. வேறொரு பிரபஞ்சத்துல அந்த குகைல நீ செத்துக் கிடந்த.  இன்னொரு பிரபஞ்சத்துல நீ நினைக்கிற தாவரவியல் ஆய்வாளனா வெற்றிகரமா இருந்திட்டிருக்கலாம்.” 

“இன்னொரு பிரபஞ்சமா.?”

இணைப் பிரபஞ்சங்கள் கேள்விப்பட்டதில்லையா நீ…

”கேள்விப்பட்டிருக்கேன். ஆனா அதெல்லாம் ஒரு தியரி தான்.. நிரூபிக்கப்படல”

“அப்படிப் பாத்தா இந்த பிரபஞ்சமே ஒரு தியரி தானே”

அவர் பேசுவதை ஆர்வமாக கேட்பவனாய் “ஆங்… இல்ல.. இருக்கலாம்” என்று தீவிரமாக யோசிக்கும் பாவனையில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“எல்லாமே இங்க இருக்கலாம் தான்”

“உண்மையாவே இந்த இணைப் பிரபஞ்சங்கள் இருக்கா?” என்று பதட்டமாகக் கேட்டான்.

”ஆமா. என் வரைல இருக்கு. இது என் தியரி” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தார்.

”கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க”

”இந்த வாழ்க்கைல முக்கியமானதும் முக்கியமில்லாததுமான பல முடிவுகள எடுக்கச் சொல்லி இந்தப் பிரபஞ்சம் அப்பப்ப வந்து நம்ம முன்ன நிக்குது. நீ கவனிச்சிருக்கியா? ஒரு முக்கியமான முடிவ எடுத்துட்டதால நம்ம வாழ்க்கையோட போக்கே மாறிப்போயிருக்கும்”

“ஆமா.. ஆமா” என்றான் பலமாக.

“அந்த முடிவ நீ எடுத்துட்டதால அதுக்கு மாத்தா இருக்க இன்னொரு முடிவு அழிஞ்சு போகாது. அது நீ தேர்ந்தெடுத்த முடிவுக்கு இணையாவே இன்னொரு பிரபஞ்சத்த உருவாக்கி வளந்துட்டு இருக்கும். நீ தேர்ந்தெடுத்து வாழற இந்தப் பிரபஞ்சம் மட்டுமில்ல நீ வாழ ஆசப்படற பிரபஞ்சத்திலயும் நீ தான் இருப்ப. அத நீ உணரல. உணர முடியாது. ஆனா என்னால உணர வைக்க முடியும்” என்றார்.

”ஆமா… நீங்க யாரு…”

”நான்…. இடக்காடார் சித்தனா இருந்தேன். பின்ன போகர என் சித்தி வழியா உணர்ந்து அவரோட இருந்தேன். ஒரு கட்டத்துல அவரும் நான் தான்னு தோனுச்சு. நான் அவராவும் கொஞ்ச நாள் இருந்தேன். இப்ப நீ என்ன போகன்னே கூப்பிடலாம். அந்தப் பேரு எனக்கு ரொம்ப பிடிக்கும்.”

 ”உங்களுக்கு சாவு இல்லயா?” 

”சாவு வரும்போது தெறக்கற இரண்டு முடிவுல சாவின்மைய தேர்ந்தெடுத்து அந்த பிரபஞ்சத்துல நுழைஞ்சிடுவேன். இப்ப இங்க இருக்கேன். அப்படி நுழையற மிகச் சிலரயும் நுழையற கணத்துல பாத்திருக்கேன். உன்னையும் அங்கதான் பாத்தேன். என்னைக்காவது சாவணும்னு தோனுச்சுனா சாவேன்” என்றார்.

அவன் தன்னையோ தன்னைச் சுற்றி நிகழ்வதையோ நம்ப முடியாதவனாய் தலையின் பாரத்தை இரு கைகளாலும் தாங்குபவன் போல உட்கார்ந்திருந்தான்.

“என்கூட வா..” என்று அவன் கைகளைப் பற்றி அந்த முழு நிலவின் ஒளியில் இழுத்துச் சென்றார். அவனுக்கு ஒரே சமயம் மிதப்பது போலவும் விரைந்து ஓடுவது போலவும் இருந்தது. அதன்பின் அவன் ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டே இருந்தான். மலையிலிருக்கும் அத்தனை தாவரங்களையும் கற்றான். பசி வராமலிருக்க, பசித்தீயை அணைக்க, உடல் உறுதியடைய, இளமையாகவே இருக்க, காமத்தைக் கடக்க, இனிய கனவுகள் வர, மகிழ்ந்து களிக்க, கரைந்து அழ என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செடியென போகரின் வழி கண்டடைந்தான். மேலும் மேலும் அவர் சொல்லாதவற்றையும் கூட கண்டுகொண்டு, கண்டுகொண்டு வியந்தான். தாதும், பூவும், இலையும், காயும், கனியும், செடியும், மரமும் வேரும் என தாவித்தாவி அதன் இயல்புகளை அறியுந்தோறும் எழுச்சியடைந்தான். காடு திறந்து கொடுக்கும் தொலைவுக்குச் சென்று அதன் ஆழத்தைக் கண்டடைந்து திழைத்தான். பிறிதொரு நாள் காலையில் அவன் எழுந்தபோது போகர் அங்கு இல்லை என்பதை உணர்ந்தான். அவர் இதுவரை அங்கிருக்கவில்லை என்பது போல அதன்பின் சஞ்சீவி மலையில் திகழ ஆரம்பித்தான்.

2

எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது போன்ற மயக்கைத் தரும் தன் பொக்கை வாயை மிகவும் கடினப்பட்டு அசைத்து “ஏத்தா யாரு புள்ள நீயி” என்று முகமெல்லாம் குறுமடிப்புகள் விழுந்த கிழவி துள்ளிக் கொண்டிருந்த மைனாவை முக்கிக்கொண்டே தன் பக்கமாக இழுத்தாள். உச்சமாக இழுபட்ட உண்டிவில்லைப் போன்ற அவளின் காதுகளில் குலுங்கிய தண்டட்டியை இழுத்துக் கொண்டே…

“நானு… நானு… மீனாட்சி பேத்தியா” என்றாள் மைனா.

“சரித்தேன். நல்லா வாயாடியா இருக்கியே…”

“வாயிருந்தாத்தேன் பொழைக்க முடியும்னு எங்க பாட்டி சொல்லிருக்காளே” என்று கறாரான மழலைக் குரலில் மைனா கூறினாள். 

கிழவி அவளின் கன்னத்தை பிடித்து அள்ளி முத்தமிட்டு, “என் மவராசி. நீ பேசுத்தா…” என்று கொஞ்சினாள். அங்கு வந்த மோகனைப் பார்த்ததும் கண்சிமிட்டி தலையை ஆட்டி அழைத்தவாறே கிழவி “ஏலே மோகா என்னடா எப்பவும் இல்லாம இவ்ளோ தொலவெட்டு நேர்ச்சலாம்..” என்று கேட்டாள். 

“வெள்ளாம சரியில்ல ஆத்தா. வீட்ல் ஒன்னுலாட்டி ஒன்னு நடந்துக்கிட்டே கெடக்கு. அதேன்” என்று சொல்லிக் கொண்டே மைனாவை தூக்கிக் கொண்டான்.

“வீட்ட விட்டு ஓடிப்போன மூத்தவன் என்ன ஆனாம்னே தெரியலய்யேய்யா..” என்று சொல்லிக் கொண்டே முந்தானையை கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

”இங்க இந்த சனங்க மத்தில கெடந்து சீரழிய்ததுக்கு அவன் எங்கயாச்சும் நல்லாத்தேன் இருப்பான் ஆத்தா” என்று மோகனும் கலங்கினான்.

“படிப்ப முடிச்சிடுவேன்னு வந்து கருப்பட்டி முட்டாயி கொணந்து குடுத்துட்டு போனவன் அடுத்த மாசம் வந்தப்ப மூதேவி ஏறில்ல வந்து நின்னான். கண்ணுக்குள்ளயே நிக்கான் மோகா..” என்று கிழவி ஏங்கியவாறு கூறினாள்.

“என்ன செய்யச் சொல்லுதீய ஆத்தா. அவன் படிச்ச படிப்பென்னனு கேட்டாக்கூட இங்க உள்ள சனங்களுக்கு சொல்லத் தெரியாது. இவன் பிரச்சனையா புரியப் போவுது”

“நம்மலால ஒன்னுமே பண்ண முடியாம போயிடுச்சேடா மோகா. நம்ம புள்ளைக படிக்கலைனாலும் உசிரு பொழச்சி கண்ணுக்கு முன்னாடி கெடந்தா போதும்னு தோணுது. இந்த எழவெடுத்த படிப்பு படிக்காம இருந்திருந்தா அவன் இங்கின நம்ம கூட கெடந்திருப்பான்ல”

“அப்டி சொல்லாத ஆத்தா. நம்ம புள்ளைகளும் நம்மள மாதியே இன்னும் காட்டுலையும் மேட்டுலையும் கஸ்டப்படனுமாக்கும். படிக்கட்டும். நாலு துட்டு சம்பாரிக்கட்டும். அவன் கெரகம்.. என்னத்த சொல்ல உசிரு பொழச்சு அவன் எங்கின இருந்தாலும் நல்லாத்தேன் இருப்பான்த்தா அவன் மனசுக்கு.”

”காட்டுலையும் மேட்டுலையும் நாம எவன்கிட்டயும் கைகட்டியாடா மோகா சம்பாரிக்குதோம். இங்கினயே ராசா மாறி வாழலாம்ல” என்றாள் கிழவி தெம்பாக.

“ஒலகம் எங்கினயோ போய்க்கிட்டு கெடக்கு ஆத்தா. காட்டுலயும் மேட்டுலயும் ராசா மாதிரி நிக்கலாந்தேன். துட்டு வருமா? துட்டு” என்று கொஞ்சம் ஆவேசமாகக் கேட்டுப்பின் கையறு நிலையென உணர்ந்து அமைதியானான்.

இரு கைகளையும் கண்களை அழுத்தித் துடைத்தவாறு, அப்படியே பேச்சை மாற்ற விரும்பியவளாய் “பாப்பா நல்லா கெட்டிக்காரியா இருக்காளே. என்ன பேரு” என்று மலர்வாகக் கேட்டாள். 

“ரமா…. ஆனா மைனானுதேன் கூப்புடறது” என்று சொல்லிக் கொண்டே மைனாவின் கன்னத்தில் முத்தமிட்டான். ”செரி ஆத்தா, வேல கெடக்கு.. ஆடு வெட்டுத நேரமாச்சு. நீ அங்க சாப்புட வந்திடு என்ன.” என்றான்.

“சரிலே நீ போ. ஆத்தா வாரேன்..” என்று கைகளை காண்பித்தவாறு அமைதியானாள்.

மோகனின் தோளில் உட்கார்ந்திருந்த மைனா அவன் இரு காதுகளையும் பிடித்து இழுத்தவாறு “ஏப்பாய் நம்ம ஆடு எங்க” என்று கேட்டாள்.

“சங்கிலி தாத்தா வச்சிருக்காருய்யா”

“அவரே வச்சிக்குவாராப்பா”

“ஆமா. சாமிக்கு குடுக்கணும்ல ஆத்தா… அத தாத்தாதேன் குடுத்துட்டு வருவாரு” என்று சொல்லிக் கொண்டே தன் குடும்பமும் சுற்றமும் குழுமியிருந்த மாமரத்தை அடைந்தான். தாணிப்பாறையிலுள்ள ஒவ்வொரு மாமரத்தின் அடியிலும் குடும்பம் குடும்பமாக மக்கள் குழுமியிருந்தனர். ஆடி அமாவாசையான முந்தைய நாள் இரவில் சதுரகிரியின் மலைப்பகுதியிலிருக்கும் மகாலிங்கம் கோவிலுக்குச் சென்று வழிபட்ட கையோடு நேர்த்திக்கடனைச் செலுத்திக் கொண்டிருந்தனர்.

கொட்டுச் சத்தம் ஒலிக்க முதுகுடும்பன் சங்கிலி பதறாமல் ஆட்டோடு மோகனின் மாமரத்தில் வந்து நின்றார். ஆடு சலனமற்று இருந்தது. தண்ணீரை அதன்மீது தெளித்த போது ஆடு கழுத்தைக் குனிந்து நீட்டியது. அதைக் கண்ட கிழவிகள் கண்கலங்கி ஓங்கிய குலவைகள் இட்டனர். அது மனிதர்கள் கடவுளுடன் உரையாடும் ஒலியா, விலங்குகளுடன் உரையாடும் ஒலியா, காட்டின் ஒலியே தானா என்று பிரித்தறியவியலாத வண்ணம் குலவைச் சத்தம் காட்டைப் பிளந்துகொண்டு ஒலித்துச் சிதறியது. குலவைச் சத்தமே அப்பாலிருந்த கடவுளை அழைத்து வந்தது போல முதுகுடும்பன் அருள் வந்து ஆடினார். ஓங்கி ஒரே வீச்சில் ஆட்டை வெட்ட அதன் தலை கீழே விழுந்தது. ஆட்டின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்து தரையை ரத்தத்தால் நிறைத்தது. தனக்கு சேர வேண்டியதைத்தானே கொடுக்கிறார்கள் என்பது போல காடு அதை அசிரத்தையாக வாங்கிக் கொண்டிருந்தது. 

ஒவ்வொரு மாமரத்தையும் ஒவ்வொரு குடும்பமாக இருபது குடும்பங்கள் ஆக்கிரமித்திருந்தனர். நேர்த்திக்கடனுக்கு வேண்டிக்கொண்ட இந்த இருபது குடும்பங்களைத் தவிர புதூர் கிராமத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் அங்கிருந்த ஒவ்வொரு குடும்பத்துடனும் இணைந்திருந்தனர். ஒவ்வொரு மாமரத்தின் அடியிலும் நேர்ந்துவிட்ட ஆட்டின் ரத்தம் காய்ந்து கிடந்தது. கறிக்குழம்பும் சோறும் ஒவ்வொரு மாமரத்தின் கீழும் தயாராகிக் கொண்டிருந்தது. எங்கெல்லாம் கறியும் சோறும் தயாரானதோ அங்கெல்லாம் குலவைச் சத்தத்தின் ஒலியும் படையலின் மணமும் எழுந்தது. ஒவ்வொரு குடும்பமும் முதல் படையலை மலையிலிருந்து இறங்கி வரும் சித்தர்கள் சாப்பிடுவதற்காக வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாட்களில் மட்டுமே இந்தச் சித்தர்கள் மலைகளிலிருந்து கீழே இறங்கிவந்து சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும்தான் பந்தி ஆரம்பமாகும். அந்தந்த குடும்பத்தினர் தனக்கு வரப்போகும் சித்தர்களுக்காக காத்துக் கிடந்தனர். 

சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி வருவதைப் பார்ப்பது மலைப்பானது. திடீரென எங்கிருந்து வருகிறார்கள் என்று புரியாமல் இருப்பதனாலோ என்னவோ மக்கள் அந்தச் செயலில் தெய்வீகத்தன்மை இருப்பதாய் நம்பினர். ஒவ்வொரு சித்தரும் சாப்பிட்டு முடித்தபின் உரியவருக்கு ஆசி வழங்குவார்கள். அதன் பின் குலவைச் சத்தம். சலசலப்புகள். அவர்களின் எச்சில் இலையில் நேர்ச்சை செய்து கொண்டவர்கள் சாப்பிட்டபின் இறுதியாக மற்றவர்கள் பந்தியில் சாப்பிடுவார்கள்.  ஒவ்வொரு மாமரமாக குலவைச் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது.

“பாட்டி காலு ரொம்ப வலிக்கிது பாட்டி” என்றாள் மைனா.

“சும்மா கெடத்தா…” என்று மீனாட்சி அதட்டினாள். 

நேரம் சென்றுகொண்டே இருந்தது. மற்ற மரத்தினர் பந்தி முடிந்து பெரும்பாலும் மோகனின் மரத்தைச் சுற்றி சித்தரின் வருகைக்காகக் காத்து நிற்க ஆரம்பித்தனர்.  எதிர்பாராத விதமாக ஒரு சித்தர் மலையிலிருந்து இறங்கி வந்தார். வந்தவர் யாரையும் பார்க்காமல் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். மீனாட்சி கூப்பிய கைகளோடு குலவையிட ஆரம்பித்தாள். அவள் குலவையிட பிற கிழவிகளும் இணைந்து கொண்டனர். சலசலப்புடன் பந்தி ஆரம்பித்தது.

மோகன் படபடப்போடு சித்தரின் பின்னே ஓடிப்போய் தயங்கித் தயங்கி “எய்யா ராசமுனி…” என்றார். அவன் திரும்பி புன்னகைத்தான். அவன் கையில் பிடித்திருந்த ரமாவை நோக்கி “படிக்கணும்…” என்று சொல்லி தலையைத் தடவினான்.  பயமும் வெட்கமும் கலந்து ரமா மோகன் பின்னே ஒளிந்து கொண்டாள்.

“படிக்கவையி… இந்த ஒலகத்துக்கு அதான்” என்று மோகனைப் பார்த்துக் கூறினான். தன் இடுப்பிலிருந்து விதைகள் நிறைந்த சுருக்குப் பையை மோகனிடம் நீட்டி “இது காடு கனிஞ்சு நிலத்துக்கு குடுத்தது. இனி இதையும்…” என்று சொல்லி முடிக்கும் முன்னரே, மோகன் கைகூப்பியபடி அதை வாங்கிக் கொண்டு “சரிய்யா.. சரிய்யா..” என்று அழுது கொண்டிருந்தான்.

செங்குத்தான சதுரகிரி மலைக்கு ஏறும் அந்தப் பாதையின் முனையில் இருந்த சிறு பாறையில் சங்கிலிக் குடும்பன் அமர்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடக்கும் போது ஒரு நொடி ராசமுனி நின்றான். அவரைப் பார்த்துச் சிரித்தான். அவரும் சிரித்தார்.

***

-இரம்யா

***

ரம்யா – விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். இலக்கிய வாசகர். இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தொடர்புக்கு ramya20080625@gmail.com