Home Blog Page 65

பரு

2

சக.முத்துக்கண்ணன்

ஒன்பதாம் வகுப்புலேயே எங்களுக்கு முகமெல்லாம் பரு போட்டிருந்தது. பத்தாம் வகுப்பு வந்தும் கூட நிறைய பசங்க பச்சமொகம் மாறாமல் வழுவழுப்பாக இருந்தார்கள். ஒருவேளை வளத்தியாருந்தால் வருமா? என்று பார்த்தால் அப்படியுமில்லை. அதிலும் சிலர் மிச்சமிருந்தனர். இந்த பரு மேட்டர் எங்களை ஏதோ அயோக்கியன் போல காட்டி விட்டது. யாரோ ‘அந்த’ மாதிரி செய்யும் பசங்களுக்குத்தான் பரு வருமென கிளப்பி விட்டிருந்தார்கள். பதினோராம் வகுப்பு வந்ததும் பரு வந்தவர்களின் எண்ணிக்கை கூடிவிட்டதால்  ஈசியாக யோக்கியனாகிட்டோம். முகம் நிறைத்த பருக்களோடும் அகமது அழகாகத்தான்  இருந்தான்.

அகமது நல்ல உயரம். செவச்செவன்னு இருப்பான். ‘இந்த அல்லாக் காரெங்கெ மட்டும் எப்றா வெள்ளவெளேர்னு இருக்காய்ங்கெ?’ என மொத்த மதத்துக்கும் வெள்ளைச் சாயம் பூசிவிட்டிருந்தோம். அகமதுக்கு நல்லா நடிக்க வரும்.  எல்லா சார் மாதிரியும் செய்து காட்டுவான். நடை, உடல்மொழி, குரல் என தூள் கிளப்புவான். ஓரளவு படிப்பான். நாங்க ஏ-ஒன் குரூப். எல்லாமே நல்லா படிக்கிற கேஸ்தான்.

பதினோராம் வகுப்பு வந்த புதிதில் பயாலஜி சார் போல நடித்துப் பழகினான். பயாலஜி சார் சின்னதா துண்டு ஒன்னு வச்சிருப்பார். வெள்ளை டர்கி துண்டு. எடுத்து கைல பிடிச்சிருக்கிறதும் உதறி தோள்ல போட்டுகிறதுமாவே இருப்பார். அவரை நினைத்தால், அந்த துண்டுதான் முதல்ல ஞாபகத்துக்கு வரும். துண்டைக் கையாளுவதை, அவரைப் போலவே செய்துகாட்டி எங்களிடம் கைதட்டு வாங்கினான் அகமது. 

காப்பரிச்சையெல்லாம் முடிந்த பிறகு நியூ அட்மிசனாக மெர்லின் வந்து சேர்ந்தாள். கல்வித் துறையில் இப்போதிருக்கிற கெடுபுடி ரூல்ஸ்செல்லாம் அப்போ இல்லை. ஹெச்சமா பாத்துச் சொல்லிட்டா சரித்தான். மறுநாள் ஹெச்சம் வகுப்புக்கு வந்தார். அதட்டலாய் மெர்லினை அறிமுகம் செஞ்சிட்டுப் போனார். பிள்ள சூப்பராருக்கு. பிரச்சன வரும்ன்னு முன் எச்சரிக்கை.

எங்களுக்கு முளைத்த பருக்களை அர்த்தமுள்ளதாக்கினாள் மெர்லின். பூர்வீகம் கேரளா. அப்பாவின் வேலை நிமித்தமாய் கம்பம் வந்திருக்கிறார்கள். வந்த பிறகு பிறந்த கடைக்குட்டியிவள்.

மெர்லின் வருவதற்கு முன், மெர்லின் வருவதற்கு பின் என எங்களது ஹையர் செக்கன்டரி காலகட்டத்தையே ரெண்டாக பிரிக்கலாம். மெ.மு-வில் ஹிஸ்ட்ரி குரூப்பில் இருந்த தனலச்சிமி தான் பள்ளி தேவதை. அடுத்த பத்து இடங்களைப் பிடித்தவள்களைச் சங்கத்தலைவன் லிஸ்ட் போட்டு வைத்திருந்தான். இதெல்லாமே ஆவணமாக எழுதிக் கொள்வதில்லை. புங்க மர நிழலில் கூடி அரட்டையடிக்கையில் ரசிக்கத் தெரிந்த சிலர் சொல்லி வைத்த லிஸ்ட். மெ.பி. காலத்தில் மெர்லின் ஒன்லி தான். அவளை அடித்துக்கொள்ள ஆளில்லை. சொல்லப்போனால் ஆசிரியர்கள் சிலரே அவளை வளைப்பதாக ப்ரவீன் தகவல் சொன்னான்.

மெ.மு-வில் போட்டு வைத்திருந்த தேவதை லிஸ்ட்டெல்லாம் சும்மா. வேறுவழியில்லாமல் போட்டு வைத்தது. பட் மெர்லின்!…  ப்ச்.. அவ்ளோ அழகு. சுருள் சுருளான அவள் கேசத்தில் எப்போதும் ஈரம் படிந்தேயிருந்தது. ஒருநாள் பீட்டி பீரியடு முடிந்து வரும்போது அவள் நெற்றியைப் பார்த்தேன். வேர்வை வழிந்து காதோரமிருக்கும் குறுமயிர்களை நனைத்திருந்தது. புங்க மரத்தை அவள் கடக்கும் போது படிந்திருந்த ஈரத்தின் மீது பட்ட இளங்காற்றில் அவள் சுகப்பட்டதை அகமதிடம் சொன்னேன். அவன் அதையே கவிதையாக பேப்பரில் எழுதி வந்து மறுநாள் சங்கத்தில் காட்டினான். சங்கமென்றால் வேறொன்றுமில்லை. அப்படியான சொற்பிரையோகம் நிஜமாகவே அப்போது இருந்தது. ப்ரவீன் பேச்சை எல்லோரும் மறுக்காமல் கேட்டதால் அவனைச் சுற்றி அப்படி அமைப்பு உருவாகியிருந்தது.  அவன் இப்போது சீட்டுக்கம்பெனி நடத்துகிறான்.

மெ.பி. காலத்தில் பசங்க நன்றாக படிக்க ஆரம்பித்தார்கள். இதை பயாலஜி (சார்) தவறாக புரிந்து கொண்டார். ஏதோ அவர் திறமையால் பசங்க பயாலஜியில் மார்க் வாங்கியதாய்ச் சொல்லிக் கொண்டார். சரி விடு என சங்கத்தில் தீர்மானம் போட்டு லூஸில் விட்டோம்.

அகமது கூடுதலாய் மெனக்கட்டான். வகுப்பறையில் முதல் ஆளாய் எழுந்து நின்று பதில் சொல்ல ஆரம்பித்தான். ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் சிட்டிசன் அஜித் போல பேசிக்காட்டி அசத்தினான். துண்டை எடுப்பது போல் வெறுங்கையில் பாவனை காட்டி ஒரு உதறு உதறி பயாலஜி (சார்) போல நடந்து காட்டினான். மெர்லின் மலர்ந்து சிரித்தாள். அகமது நடிக்கும் போது நான் மெர்லினைத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்றம் ஒரு பூ பூப்பது மாதிரியான அவளது எக்ஸ்பிரசன்களை நான் சொல்லச்சொல்ல  அகமதுக்கு றெக்கை முளைத்துக் கொண்டிருந்தது.

வெள்ளைநிறத் துண்டைச் சட்டென உதறிவிட்டுத் திரும்பிக் கத்தினார். “ரிபோசோம் ஒட்டிருந்தா அது சொரசொரப்பான எண்டோ பிளாஸ்மிக் வலை பின்னல். ரிபோசோம் அங்க இல்லீன்னா வழவழப்பான எண்டோபிளாஸ்மிக் வலைபின்னல். பரு இருந்தா சொரசொரப்பா இருக்கும்ல கன்னம். பரு மாதிரி தான் ரிபோசோம்” என்றார். எங்களுக்குப் புரிந்தது. அவர் விடவில்லை.   மேலும் புரிய வைக்க பரு முகத்துப் பசங்களையும், பொண்ணுங்களையும் எழுப்பினார். சொரசொரப்பான முகம், வழுவழுப்பான முகம் வகுப்பையே ரெண்டாகப் பிரித்தார். அகமதுவும் மெர்லினும் ரிபோசோமால் பிரிந்தார்கள்.

அன்றுதான் பரு முளைத்ததிற்காக அகமது அவ்வளவு சங்கடப்பட்டான். மறுநாள் எல்லா பருவையும் கண்ணாடியில் பார்த்துக் கிள்ளிக் கிள்ளி முகம் பூராம் சிவந்து வந்திருந்தான். இடது கன்னத்திலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டே இருந்தது. பீட்டி சார் பாத்துட்டு திட்டினார். எங்களையும் உக்கார வச்சு கிளாஸ் எடுத்தார். அவனுக்கு மருந்து சொன்னார்.

‘காயம் தான் ஆறும். பரு வரத்தான் செய்யும். குளுச்சியான தண்ணில பொழுதன்னைக்கும் கழுவிக்கிட்டே இரு. முடிஞ்சவரைக்கும் எதையும் போட்டு இழுகாத. அப்டியே விடு. தானா சரியாகிடும்.’

மெர்லின் பரிதாபப்பட்டாளா? தெரியவில்லை. பார்த்து எழுத பிராக்டிக்கல் நோட்டை அகமதுக்கு  கொடுத்தாள். வாழ்வின் பூரணத்துவம் அடைந்த ஞானி மாதிரி  கிடந்தான். நானும் அந்த நோட்டை வாங்கித் திறந்தேன். ஓரளவு நன்றாக வரையப்பட்ட படங்கள். எழுத்தையும் படங்களையும் விட அவள் கேசம்தான் நல்லாருக்கென அவனிடம் சொன்னேன். ஆமான்டா என்றான்.

அடுத்த வகுப்பிலிருந்து பசங்க மெர்லினை சைட் அடிக்க எங்கள் வகுப்புக்கு வந்து போனார்கள். ஒருநாள் லஞ்ச் அவரில் எங்களுக்கும் அந்த பசங்களுக்கும் தகராறு வந்தது. யாரும் வெளியில் சொல்லக் கூடாதென சங்கம் முடிவெடுத்தது. தலைவன் சொன்னா கேக்கணும். அதற்குதான் கூறான ஒருவனைப் போட்டு வைத்திருந்தோம். அவன் எங்களை விட மூன்று வயது மூத்தவன். அப்றம் பருவ விசயத்தில் சந்தேகம்ன்னா சொல்வான். பயாலஜிக்கு சொந்தக்காரன். அவங்கப்பாவும் பயாலஜியும் சேந்து தண்ணியடிப்பார்கள். அதான் அவனப் போட்டது. அவனோடு ஒருமுறை தனியே பேசிக்கொண்டிருந்த போது சொன்னான்.

‘அகமது லவ் பண்ணிக்கிறட்டும், கல்யாணம் நா முடிச்சாலும் முடிச்சிருவேன்’ என்றான்.

‘இப்டி எத்தன பேர்டா?’

அகமதிடம் சொல்லவும் இல்லை. கஷ்டமாக இருந்தது.

லஞ்ச் அவரில் வகுப்பில் மெர்லின் தனியே இருந்தப்போ அகமது நுழைந்திருக்கிறான். மெர்லின் வெட்கப்பட்டுச் சிரித்திருக்கிறாள். பின்பக்கம் இருந்த மறைப்புத்தட்டிக்கு பக்கத்தில் போய் நின்று இங்க வா என்பது போல் சைகை செய்திருக்கிறாள்.  அவ்வளவுதான் சறுக்கி விழுந்து நெஞ்சு படபடக்க எடுத்த ஓட்டம் எங்களை அடைந்ததும் தான் நின்றது. மூச்சிரைக்க உள்ளங்கைகளைக் காட்டினான். வேர்த்த விரல்கள் லேசாக நடுங்கின. வருடம் முடிந்து போகிறவரை ஒரு வார்த்தை கூட அவன் பேசியதாகத் தெரியவில்லை. தனிமையில் அவளைப் பார்த்தாலே வேர்த்துக் கொட்டுவதாகச் சொன்னான். இவனது பாடுகளை, நாங்கள் ஏதோ காதல் வயப்பட்டது போல் உணர்ந்தோம்.

அதுவொரு வெள்ளிக்கிழமை. கெமிஸ்ட்ரி பிராக்டிக்கல் கிளாசில் எனக்கு எதிர்புறமிருந்த இருக்கையில் மெர்லின் உக்கார்ந்திருந்தாள். தலைக்கு ஊத்தி மல்லியப்பூ வைத்து வந்திருந்தாள். நெற்றியில் விழுந்து சில முடிகள் பறந்தன. வழக்கத்தை விட தூக்கலான அழகு. அப்போதுதான் மெர்லினை ரொம்பக் கிட்டத்தில் பார்க்கிறேன். இடது கன்னத்தில் உதட்டுக்கு கொஞ்சம் கிட்டத்தில் சின்னதாய் ஒரு பரு போட்டிருந்தது.

‘ஏய் ஒனக்கும் பரு வந்திருச்சு மே’

‘இல்லப்பா இது பருல்ல வேறெதோ. போயிரும்.’

சொல்லிட்டு மெர்லின் உதட்டைப் பிதுக்கிக் கொண்டதைப் பார்க்க அழகாக இருந்தது. அந்த பருவையே தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். மெர்லினுக்கு வந்த முதல் பருவை அகமதிடம் சொன்னேன்.

நைட் ஸ்டடியில்  உக்கார்ந்து கவிதை எழுதினான். ஜானி மாஸ்டர் கையும் களவுமாக பிடித்து மிரட்டினார். மறுநாள் ஹெச்.செம்மைப் பார்க்க வரவேண்டுமெனச் சொல்லி அனுப்பினார்.

நல்லவேளையாக மறுநாள் அப்படி ஏதும் நடக்கவில்லை.

ஈவினிங் ஸ்டடிக்கு பயந்து கொண்டே வந்தான். மாஸ்டர் வரவில்லை. ராதாக்கா வந்திருந்தது. ஏதும் சொல்லவில்லை. ஸ்டடி முடிந்து போகும்போது  சைக்கிள் ஸ்டாண்டிலிருந்து சைகை காட்டி அழைத்தது. நாங்களும் அவனோடு போனோம். அவனைக் கண்டித்தது. ராதாக்கா கண்டித்தால் எங்களுக்கு வலிக்காது. நல்ல அக்கா.

‘மாஸ்டர் எல்லாத்தையும் சொன்னார். ஏன்டா இப்டி?.. அப்றம் உன் கவிதையெல்லாம் படிச்சுப் பாத்தேன். நல்லாருஞ்ச்சு. யாரவ? மெர்லின். எத்தன பேர் தான்டா அவள வளைப்பீங்க…?’ பாக்குறதோட விட்ரணும். இப்டி சிக்கிக்கிட்டு முழிக்காத. சூதானமாரு. சரியா?’

‘அக்கா… மாஸ்டர்..?’

‘அத நான் பாத்துக்கிறேன்.’

இது போதும் என்றிருந்தது. அக்கா சொன்னா மாஸ்டர் அடங்கிருவார். ரெண்டு பேரையும் வைத்து பள்ளியில் கிசுகிசு இருந்தது.

அகமதுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்த போது நான் ராதாக்காவையே பார்த்துக் கொண்டிருந்தேன். கன்னம் நிறைய பருக்கள். கிட்டத்தில் நின்றிருந்ததால் பான்ஸ் பவ்டர் வாடை தூக்கியது. வரும்போது அகமதிடம் சொன்னேன். என்னைத் திட்டினான். ஒன்பதாப்பில் ராதாக்காவிடம் தான் டியூசன் போயிருந்தோம். குளிச்சிட்டு ஈர ஜட்டில மூஞ்சியத் தொடச்சா பரு வராதுன்னு எங்கிட்ட சொல்லுச்சு. அத இவன்ட்ட சொன்னப்ப சிரிச்சான். இப்ப வைறான். வெண்ண.

ப்ராக்டிக்கல் எக்ஸாம் தொடங்க இருந்தது. மாற்றி மாற்றி  ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தோம். பள்ளிக்கூட வழக்கப்படி கேள்ஸ்ட்ட வாங்கக்கூடாது. அகமது மெர்லினிடம் டைரியைக் கொடுப்பதை முருகன் சார் பாத்திட்டார்.  அவனை வராண்டாவில் வைத்து சாத்து சாத்தென சாத்திட்டார். அப்படியே செய்தியை கூட்டாளி வாத்தியார்களுக்கும் கொண்டு போனார். அவர்கள் கூடி அரட்டையடிக்கும் பீட்டி ரூமில் அகமதை  மதியத்திலிருந்து சாயந்தரம் வரை நிற்க வைத்தார்கள். மெர்லினை ஆபீஸ் வரச்சொல்லி ஒரே கேள்விதான்,

‘டைரி கொடுத்தானா ?’

‘ஆமா சார்.’

‘நீ போ..’

அவ்ளோ தான்

பீட்டி ரூமில் வைத்து அகமது பலரால் தாக்கப்பட்டான். வசைகளால் காயம்பட்டு மறுநாள் அப்பாவோடு வந்து ஹெச்சம் சாரிடம் சம்பிரதாய அடிகளோடு பிராக்டிக்கல் எழுத அனுமதிக்கப்பட்டான். பிசிக்ஸ் பிராக்ட்டிக்கல்  முடிந்து கிரவுண்டில் வைத்து அவன் சட்டையைக் கழற்றிக் காட்டியபோது எனக்கு அழுகையே வந்துவிட்டது. நெடுக்கும் குறுக்குமாய் காயத்தின் தடங்கள். வெள்ளைத் தோலுக்கும் அதுக்கும் நல்லா செவந்து வார் வாராகத் தடித்திருந்தன. ரணத்தால் முதுவே நடுக்கத்திலிருந்தது. அவனும் எல்லாப் பரிச்சையும் எழுதி ஏதோ பாசாகி காலேஜ் போயி இப்ப சென்னையிலொரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறான்.

இந்த சம்மரில் ஊருக்கு வந்திருந்தான். நானும் அவனும் தேட்டருக்கு நடந்து போகும் வழியில் ராதாக்காவைப் பார்த்தோம். வாசப்படியில் உக்கார்ந்திருந்தது. கையழைத்து கூப்பிட்டது.

‘ஏய்  கண்ணா நல்லாருக்கியா?

அகமது நீயெப்டிருக்க?’ 

முகமெல்லாம் சதைபோட்டு அக்கா அழகாய் புசுபுசுவென இருந்தது. அவனும் அப்பாவானதைச் சொல்லிக் கொண்டான். நானும்.

வீட்டுக்குள் அழைத்தது. 

‘படம் போட்ருவாங்கக்கா போணும்’ என்றேன்.

‘ரெண்ரைக்குதான் போடுவாங்க. தேட்டருக்குக் கிட்டத்துலயே இருக்கேன் எனக்குத் தெரியாதா?’

நல்லா பெரிய சைஸ் சோபா. உட்கார்ந்ததும் புசுக்கென உள்ளே போனது. உள்ரூம் வாசலில் நின்று நாங்க வந்திருப்பதைச் சொல்லிக் கொண்டிருந்தது. பேசுவதிலேயே  வீட்டுக்காரர் எனத் தெரிந்தது.

‘நம்ம ஜானி மாஸ்ட்ரா இருக்குமோ..?’ அகமதிடம் மெல்லமாய் கேட்டேன். அவன் மறுத்து தலையாட்டினான். எனக்கெதிர் பக்கம் உக்கார்ந்திருந்ததால் ரூம் உள்ளே தெரியும்படி அவனுக்கு வாட்டமாக இருந்தது. அவர் வருவதைப் பார்த்து லேசா எழுந்து உக்கார்ந்தான். நானும் திரும்பினேன். நிலைப்படியில் குனிந்து ஒசரமான ஒருத்தர் வந்தார். மாநெறம். கண்ணாடியை நெற்றிமேல் ஏற்றி விட்டிருந்தார். லேசான தாடி. முக்கா பேண்ட் போட்டிருந்தார். அவர் ஒசரத்துக்கு அது அசிங்கமாக இருந்தது.

‘வாங்கப்பா..’  தலையாட்டினார். நாங்களும்  கூச்சப்பட்டுக் கொண்டு அசைந்து கொண்டோம். என் கிட்டத்தில் உட்கார்ந்தார். அவர் முகமெல்லாம் பருக்கள் வந்த தடம். கொத்துக் கொத்தாக போட்ருக்கும் போல. சொள்ளை சொள்ளையாக இருந்தது. அக்கா ஜூஸ் போட்டுக் கொடுத்தார். தொடக்கத்திலேயே அவர் ஓவியரெனவும், ஒரு வாரப்பத்திரிக்கையிலிருந்து சர்ச்சையாகி இப்ப வெளியே வந்துவிட்டதாகவும் சொன்னார். அக்கா மெல்ல மெர்லின் மேட்டருக்கு வந்தது. ராதாக்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘அக்கா அது அப்டில்லக்கா’ என நான் குறுக்கிட்டு கதைக்குள் புகுந்தேன். அந்த விசயத்தைச் சொல்லி முடித்ததும். அவருக்கு என்ன தோனியதோ? அக்காவைச் சும்மாருக்கச் சொல்லிட்டு என்னையே தொடரச் சொன்னார். நான் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் என்னையே ஊன்றி கவனித்துக்கொண்டே வந்தார். என் கண்கள் வழியாக பாய்ந்து உள்ளிருப்பதை காணும் பார்வை. அவருக்கு லேசா நீலம் பாரித்த கண்கள்.  இடையிடையே அவரது எக்ஸ்பிரசன் வேறு மாதிரி இருந்தது. உள்ளுக்குள் நகைத்துக்கொண்டே கேட்பதாகவும், ரசிப்பதாகவும் பட்டது. ஒருகட்டத்தில் அந்த ஊடுருவும்  பார்வையைத் தொடர்ந்து பார்க்க முடியாமல் சட்டென நிறுத்தினேன். என் தேக்கத்தை உணர்ந்து  சரி என்பதை போல அவர் நார்மலாகி என்னைத் தொடரத் தூண்டினார்.

இதற்கிடையே அகமது வெக்கப்பட்டுக் கொண்டதாகவும், சில இடங்களில் சங்கடப்பட்டது போல அவன் நெளிந்து கொண்டதாகவும் பிறகு அக்கா சொல்லிச் சிரித்தது.

‘நீ சொல்லச் சொல்ல அகமது மூஞ்சப் பாக்கணுமே!’

சொல்லி முடித்த பிறகும் அந்த ஓவியரின் நீலக்கண்கள் எதையோ கண்டுவிட்ட தொனியில் என்னையே  திரட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தன. அதென்ன இந்தாளுக்கு மட்டும் இப்படி கண்ணு பளீர்ன்னு இருக்கு. யோகா பண்றவங்களுக்கு இப்டி இருக்குமென கேள்விப்பட்டிருக்கிறேன். ‘கொஞ்சம் பொறுங்க’ என உள்ளே போனார். அக்கா கொஞ்சம் காராச்சேவை எடுத்து வந்து தட்டில் வைத்தது. இனியெங்க படத்துக்கு போக நைட் சோ போகலாமென முடிவெடுத்தோம்.

எதையெதையோ தேடி ஒரு பண்டலை எடுத்து வந்தார். ஏ4 சைசில் அவர் வரைந்த ஓவியத்தாள்கள் இருந்தன. அதில் கொஞ்சத்தைப் பிரித்து எடுத்தார். மீதத்தை அக்காவும் நாங்களும் ஒவ்வொன்றாய் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தோம். தத்ரூபமான ஓவியங்கள். பார்த்துவிட்டு ‘பயங்கரம்க்கா’ என்றான் அகமது. வியந்து ரசித்துக் கொண்டிருந்தோம். அவர் தேடியது கிடச்சிட்டது போல. அதைமட்டும்  ஸ்பெஷலாக அக்காவிடம் காட்ட, ‘சூப்ராருக்குங்க’ என்றது.

அகமது வாங்கிப் பத்துட்டு அவனும் சூப்பர் சார் என்றார். அடுத்து என் கைக்கு வந்தது. பார்த்து அதிர்ந்து போனேன். அது மெர்லின். அவரை நிமிர்ந்து பார்த்தேன். லேசாக சிரித்தார். கரெக்ட்டா..? என்பது போல் இருந்தது. நானும் எஸ் சார் என்பது போல தலையாட்டிக் கொண்டேன். அந்த இடத்தில் வாயைத் திறந்து நல்லாருக்கு சார் என சொல்ல வேண்டியிருந்தது. அதற்கு பிறகு அவரை என்னால் பார்க்க முடியவில்லை. பயமாக இருந்தது. அகமதைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். அக்கா போன் நம்பர் வாங்கிக்கொண்டது. வருகிற வழியில் ‘ஏன்டா.. அந்த மேட்டர இன்னுமாடா வச்சு ஓட்டுவீங்க. அதெல்லாம் லவ்வே இல்லடா! அந்த ஏஜ்ல வர்ற ஒரு அபெக்சன்’ தொடர்ந்து ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். எனக்கு அவரது கண்கள் அகலாமல் ஞாபகத்திலேயே இருந்தது.

இரவு பதினோரு மணியிருக்கும் ஸ்டாக் ரூமில் மர பீரோ மேல் அடுக்கி வைத்திருந்த பச்சை அட்டை போட்ட லாங் சைஸ் நோட்டைத் தேடி எடுத்தேன். பக்கம் பக்கமாய் எழுதிவைத்திருந்த கவிதைகளில் அவள் பெயர் வந்த இடமெல்லாம் சரியாக கருப்பு மையில் கிறுக்கி, அழித்திருந்தேன். அழித்தது தெரியாமல் இருக்க பூ மாதிரி வரைந்திருந்தேன். பக்கம் தோறும் கருப்பு பூக்கள்.  எங்காவது அவள் பேரை மறைக்காமல் விட்டிருக்கேனா தேடினேன். ஒரே ஒரு இடத்தில் மட்டும்  விடுபட்டிருந்தது.

மெர்லின்….

அந்த பக்கத்திலிருந்த கவிதைக்கு ‘பரு’ என தலைப்பிட்டிருந்தேன். பழுப்பேறிய அந்த தாளைத் தடவிப்பார்த்தேன். சுகப்படும் சொரசொரப்பு. இடது கன்னத்தில் உதட்டுக்கு கொஞ்சம் கிட்டத்தில் முளைத்த முதல் பரு கண்ணில் வந்து நின்றது. மர பீரோவிலிருந்த ரசமிழந்த கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன்.  புள்ளிப் புள்ளியாக பருக்களின் தடம். மெர்லின் மீது கருப்பு மையில் கிறுக்கி ஒரு பூ வரைந்தேன்.

***

சக.முத்துக்கண்ணன், தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர்.தற்போது அரியலூரில் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். சிலேட்டுக்குச்சி எனும் ஆசிரிய அனுபவ நூல் ஒன்று வெளியாகியுள்ளது. தொடர்புக்கு – kannatnsf@gmail.com

தயாஜி குறுங்கதைகள்

0

நீதி

    நிச்சயம் இந்த மரணத்திற்கு நீதி வேண்டும். வாசகங்கள் பொருந்திய பதாகைகள். கூச்சல். குறைந்தது இருபது பேராவது இருக்கும். சாலையை மறைத்திருந்தார்கள். மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பாலனுக்கு நியாயம் வேண்டும்.

                      அதனை மறைக்க சிலர் போலி நாடகம் போடுகிறார்கள் எனவும் ஆளுக்கு ஆள் முகநூலில் முழங்கிக் கொண்டிருந்தார்கள்.  ஒரு பக்கம் பத்திரிகைகள் இறந்தவர் தொடர்பான செய்திகளை சேகரிக்கிறார்கள். “என்னதான் பொறுக்கியா இருந்தாலும் தண்டனை கொடு , சாவடிக்க நீ யாரு..?” என எங்கோ மூலையில் யாரோ யாரிடமோ ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

சூழல் பரபரப்பானது, நேரம் ஆக ஆக கூட்டம் குறைந்தும் கூடியும் விளையாட்டு காட்டியது.

   பாக்கியத்திற்கு வெளிவர முடியவில்லை. மனமில்லை. படுத்தவாறே அழுதுக்கொண்டு கடவுளின் நீதிக்கு நன்றி செலுத்திக் கொண்டிருந்தாள்.

                அவள் கையில் , மனிதர்களால் நீதி கிடைக்காத தன் ஒரே மகளின் புகைப்படமும் அருகில் அவளது உதிரம் பட்ட பாவாடையும் இருக்கிறது.

***

சட்டம் தன் கடமையை செய்யும்

     அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது. ஒருமாதமாய் போடப்பட்ட திட்டம். அலாரம் அடிக்கும் நேரத்திற்கும் காவல் துறையினர் வருவதற்குமான நிமிடங்கள் வரை மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருந்தது.  அதற்கு, இன்னும் ஐந்து நிமிடம் முப்பத்தாறு வினாடிகள் ஆகும்.

    ஆளுக்கு ஆள், கட்டியிருக்கும் கைகடிகாரத்தில் ஒரு கண் வைத்துக் கொண்டே துப்பாக்கியில் வாடிக்கையாளர்களை குறிப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒருமாத கால கண்காணிப்பில், வங்கி கொள்ளை பற்றிய தமிழ் ஆங்கில மற்ற மொழி தெரியாத குறும்படங்கள் முதல் பெரும்படங்கள் வரை பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.

    இன்னும் சரியாக ஒரு நிமிடம் இருக்கிறது. வினாடி முள் முப்பதைக் காட்டியவுடன் வெளியேறிட வேண்டும். எவ்வளவு கிடைக்கிறதோ அவ்வளவு போதும். முக்கியம் மாட்டிக் கொள்ளக் கூடாது.
காவல் அதிகாரிகளைக் குழப்புவதற்கு இன்னொரு திட்டமும் போட்டிருந்தார்கள். முதல் நாள் இரவே வண்டியை வங்கிக்கு எதிரில் நிறுத்திவிட வேண்டும். காலையில் ஆளுக்கு ஒரு வழியில் வங்கியிருக்கும் வட்டார கடைகளில் வந்துவிட வேண்டும். எல்லா தகவல்களும் புலனத்தில் நொடிக்கு நொடி பகிரப்பட்டுக் கொண்டே இருந்தன.

    உணவு நேரம் முடிந்ததும் வங்கிக்குள் நுழைய வேண்டும். அதுவும் ஒருவர் பின் ஒருவராக உள்ளே சென்று ஆளுக்கு ஒரு பக்கம் அமர வேண்டும்.

    உண்ட களைப்பில் சிலருக்கு மண்டை ஓடியிருக்கும்.  ஆக அவர்கள் நிலைமையை புரிந்துக்கொள்வதற்கு முன்னமாக தப்பிக்கலாம்.

    நால்வரும் திட்டமிட்டபடி ஒவ்வொன்றாக நகர்த்திக் கொண்டிருந்தார்கள். காரில் பதற்றத்துடன் யாரும் உட்கார விரும்பவில்லை. துளியும் சந்தேகம் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்னமே; கார் தகுந்த முறையில் பரிசோதனை செய்யப்பட்டுவிட்டது. ஓடி வந்த வேகத்தில் காரில் ஏற வேண்டும், சாவியைத் சொருக வேண்டும், கார் காற்றாக பறக்க வேண்டும்.

    என்ன ஒரு அறிவுப்பூர்வமான யோசனை. தமிழ்ப்படங்களில் கூட இப்படியான அறிவாளி திருடன்கள் இருக்கவில்லை.

    முப்பதாவது வினாடியை காட்டியது கைகடிகாரம். பணத்துடன் ஓடினார்கள். வாசலை தாண்டினார்கள்.

அதிர்ச்சி.

நின்றார்கள்.

    நேற்றே நிறுத்தி வைத்த வாகனத்தில் பார்க்கிங் டிக்கட் இல்லாததால் சக்கரத்தை ஒருவர் பூட்டி முடித்து எழுந்துக்கொண்டிருந்தார்.

***

– தயாஜி, மலேசியாவில் வசிக்கிறார். தொடர்ந்து கதைகள், நூல் விமர்சனம் என இயங்கி வருகிறார். இவரது வலைப்பூ – https://tayagvellairoja.blogspot.com , இவரது மின்னஞ்சல் – tayag17@gmail.com

நினைவோ ஒரு பறவை – 01

1

பி.ஆர். பந்துலு

ஜா.தீபா

ஒரு திரைப்படம் எதனால் வணீகரீதியான வெற்றி பெறுகிறது என்கிற துல்லியமான கணிப்பு ஒருவரிடத்திலும் இருப்பதில்லை. ஆனால் சில இயக்குநர்கள் தங்களது படைப்பாற்றலின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மக்களின் ரசனையை கணித்து வைத்திருப்பார்கள். எந்த மாதிரியான வகையினைச் சேர்ந்த படங்கள் என்றாலும் அதில் வெற்றி பெற்று விட முடியுமென்று தீர்மானமாய் அவர்களால் நம்ப முடியும். எடுத்துக் கொண்ட களம் எதுவாகினும் திரைக்கதையிலும், படத்தை உருவாக்கும் முறையிலும்  சுவாரசியத்தை எப்படி கூட்ட வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கும் இயக்குநர்களே காலத்துக்கும் அழியாத  படங்களைத் தந்திருக்கின்றனர். அப்படியான ஒருவராக இயக்குநர் பி.ஆர் பந்துலுவைச் சொல்ல முடியும்.

இயக்குநர் பி.ஆர் பந்துலு இந்திய சினிமாவின் மரியாதைக்குரிய படைப்பாளர். தமிழ்த் திரைப்படங்களில் அருமையான சாதனைகள் செய்தவர்.

பந்துலுவின் படங்களைப் பார்க்குந்தோறும் அவர் மேல் மதிப்பு கூடிக்கொண்டே தான் போகிறது. காரணம் தனது படங்களின் மூலம் இவர் சொல்ல விழைந்தவை தான். இவரது படங்கள் சமூகம் குறித்தே பேசின.

தமிழகத்தைப் போலவே தெலுங்கு பட உலகிலும், கன்னடத்திலும் பந்துலுவின் பெயர் நிலைபெற்றிருக்கிறது.  இவரது இயக்கத்தில் வெளிவந்த பட வரிசையைப் பார்க்கையில் வெவ்வேறு களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது புரியும். அதோடு அனைத்தையும் வெற்றி பெறவும் செய்திருக்கிறார்.

யதார்த்தமான கதை சொல்லல் பாணி தான் பந்துலுவினுடையது. ஆனால் அதில் நாம் எதிர்பாராத ஒரு கற்பனைத்தன்மை கலந்திருக்கும். தங்கமலை ரகசியம், ஆயிரத்தில் ஒருவன் படங்கள் காமிக்ஸ் கதையின் அம்சங்கள் நிறைந்தவை. காட்டில் மிருகங்களுக்கு இடையில் வளரும் ஒரு குழந்தை அங்கேயே வளர்ந்து தான் மனிதன் என்பதையே மறந்து போகிறான். இது தங்கமலை ரகசியம் கதை. ஆயிரத்தில் ஒருவன் படம் அதன் காட்சி பிரம்மாண்டத்துக்காக எப்போதும் பேசப்படும்.  தீவு நாடுகள், அங்கு ஒரு அழகான இளவரசி, வீரமான அடிமைக்கும் இளவரசிக்குமான காதல், கடற் கொள்ளைக்காரர்கள், கப்பலில் நடக்கும் சண்டைகள் எனத் திரையில் ஒரு சாகசக் கதையைக் காட்டியதில் முழு வெற்றி பெற்ற இயக்குநர் பந்துலு.

இதற்கு காரணம் நாடக உலகில் பந்துலு நாடக உலகில் கொண்டிருந்த மிகுந்த அனுபவமே. கர்நாடகாவில் குப்பி வீரண்ணா போன்ற நாடக ஆளுமையிடம் பணி செய்தவர். மகாபாரத போரை மேடையில் நிகழ்த்த வேண்டுமெனில் குதிரைகளையும், யானைகளையும் மேடைக்கே அழைத்து வந்தவராம் குப்பி வீரண்ணா.

அந்த பிரம்மாண்டத்தினை நாம் பந்துலுவின் சரித்திர காலப் படங்களில் பார்க்க முடியும். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக கடலும், கப்பலுமாக நம் முன் காட்டியது பெரும் சாதனை. கர்ணன் படத்தின் போர்க்காட்சிகளும், அரண்மனை காட்சிகளையும் சொல்லலாம்.

கதைக்குத் தருகிற முக்கியத்துவத்தை விட சொல்ல வந்த கருத்துக்கு காட்சிகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து இயங்கியிருக்கிறார். இதனை ‘சபாஷ் மீனா’, ‘பலே பாண்டியா’, ‘நாடோடி’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கர்ணன்’ படங்களில் பார்க்க இயலும். அதனால் ஒரு கோர்வையான கதை சொல்லல் முறையில் இவரது படங்கள் அமையாமல் சுவாரஸ்யமான காட்சிகளின் அடுக்குகளாக அமைந்திருக்கும்.  இந்த பாணியினை அவர் தொய்வில்லாமல் செய்து வந்தார். அதனால் தான் இப்போதும் இவரது படங்கள் ரசிக்கப்படுகின்றன.

சிவாஜியும், எம்ஜிஆரும் இவரது படங்களில் ஒன்றைத் தான் வலியுறுத்துவார்கள். அவை அடிமைத்தனத்துக்கு எதிரான குரல்கள். ‘தங்கமலை ரகசியம்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கர்ணன்’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். 

இவரது படங்களுக்கு பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் கதைகள் யாவுமே உரிமைகளுக்கான குரல்களாகவே இருந்திருக்கின்றன. ஒரு இயக்குநர் தொடர்ந்து இப்படியான குரல்கள் ஒலிக்கும் திரைப்படங்களை வெற்றிகரமாக மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார் என்றால் பி.ஆர் பந்துலுவையே முக்கியமாகச் சொல்ல முடியும்.

இந்திய சுதந்திரம் அடைந்த காலகட்டத்துக்கு முன்பாக வெளிவந்த அநேக படங்கள் அடிமைத்தனத்துக்கும் சாதிய அடக்குமுறைக்கு எதிராகவும் வலுவாக குரல் கொடுத்திருக்கின்றன. அதற்காகவே தடை செய்யப்பட்ட படங்களும் அதனால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களும் இருந்திருக்கின்றனர். அதனால் திரையில் சமூக சீர்திருத்த கருத்துகளை சொல்வதென்பது புதிதல்ல. ஆனால் பி.ஆர் பந்துலு மற்றவர்களைக் காட்டிலும் வித்தியாசப்படுகிறார். சாதி அடக்குமுறையினை எதிர்ப்பது என்பது சுதந்திரத்துக்குப் பிறகான காலகட்டத்தில் குறிப்பிடத்தகுந்த சமூக சீர்திருத்தமாக இருந்தது. இது போன்ற கருத்துகளை படங்களில் சொல்லும்போது அதனை சரியான கலவையில் சொல்லியாக வேண்டும். ஏனெனில் அப்போதைய சமூகம் பல முனைகளால இறுக்கப்பட்டிருந்தது. ஐம்பதுகள் தொடங்கி எழுபது வரையிலும் உள்ள தலைமுறையினர் பல்வேறு கொள்கைகளை பின்பற்றுபவர்களாக, பழமைவாதத்தினையும் கைவிட முடியாதவர்களாக இருந்தனர். அவர்களுக்கு ஒன்றைக் கொண்டு சேர்ப்பது என்பது கவனமாகக் கையாளப்பட வேண்டியதாய் இருந்தது.

அதனால் தான் சொல்ல வந்த கருத்தை வலியுறுத்த வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களை வடிவமைத்தார் பந்துலு. புத்திசாலி ஒருவன் சமூகத்தின் அவலங்களை கேள்வி கேட்பதென்பது ‘ஹீரோயிசம்’ ஆகிறது. இதை அவர் அப்படியே எம்ஜிஆருக்கு பொருத்தினார். அடிமைப் பெண் படத்திலும்,நாடோடியிலும் எம்ஜிஆர் எதையும் கேள்வி கேட்கும் துணிவு கொண்டிருப்பார். அதே சமயம் அப்பாவியான ஒரு கதாபாத்திரம் சமூகத்தை நோக்கி வெள்ளந்தியாக கேள்வி கேட்பது என்பது எப்போதுமே சரியான யுத்தியாக இருந்திருக்கிறது. பலே பாண்டியா, சபாஷ் மீனா படங்களின் சிவாஜிக்கள் அந்த வகையைச் சேர்ந்தவர்கள்.

கர்ணன் படத்தினைப் பற்றி மட்டுமே பக்கம் பக்கமாய் எழுத இயலும். மகாபாரதம் என்கிற மாபெரும் இதிகாசத்தில் கர்ணனைத் தனியாகத் தேர்ந்தெடுத்து அவனுடைய கதையை சொல்ல வேண்டிய அவசியத்தை படத்தைப் பார்க்கையில் தெரிந்து கொள்ள இயலும். கர்ணன் என்பவன் துரியோதனின் கூடாரத்தில் இருந்ததால் நாம் அவனை வில்லனாக சித்தரித்து வைத்திருப்போம். தமிழ் மக்களிடம் கர்ணனுக்கு நற்பெயர் வந்ததற்கு கர்ணன் படம் மிகப்பெரிய காரணம். கர்ணன் தாழ்த்தப்பட்டவர்களின் அடையாளமாக மாறியிருக்கிறான். அவன் கொண்ட வலியை எந்த மேடு பள்ளமும் இல்லாமல் நம்மிடம் காட்டியதில் பந்துலு பெரும் சாதனை செய்திருக்கிறார். பஞ்ச பாண்டவர்கள் என்பவர்கள் கடவுளுக்கு இணையாக வழிபடப்படுபவர்கள். அவர்களை விமர்சிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். இன்றைய காலகட்டத்தின் அரசியலில் பஞ்ச பாண்டவர்களையோ, கிருஷ்ணனையோ விமர்சித்து ஒரு படம் தகராறுகள் ஏற்படுத்தாமல் வரும் என்பதை யோசிக்க இயலுமா?

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ‘கர்ணன்’ அர்ஜுனனுக்கு எதிரான கர்ணன் என்பவன் நியாயவானாக இருந்தான் என்பதை  வலியுறுத்தியது. எல்லா வாய்ப்புகளும் கொண்ட அர்ஜுனன் ஜெயித்தது முக்கியமல்ல, எல்லாவற்றையும் இழந்த , வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கர்ணனை வலுவுள்ளவர்கள் முன்னேற விடாமல் செய்திருக்கிறார்கள் என்பது தானே கர்ணன் படம் சொல்லும் செய்தி.

இதைச் சொல்லும் தைரியம் பந்துலுவுக்கு இருந்திருக்கிறது. எதை எப்படி சொல்ல வேண்டும் என்று பந்துலு தெரிந்து வைத்திருப்பதாலேயே முன்னோடி இயக்குனராக இருக்கிறார். நாம் அதன் பிரமாண்டத்துக்காகவும், சிவாஜி அவர்களின் நடிப்புக்கும், படத்தில் சொல்லப்பட்ட துரியோதனன், கர்ணன் நட்புக்காகவும், கர்ணனின் கொடை வள்ளல் தன்மைக்காகவும்  கொண்டாடியிருக்கிறோம். இந்தப் படம் இவற்றை மிஞ்சி நிற்கும் செய்தியை வலியுறுத்துகிறது. கர்ணன் என்கிற கதாபாத்திரத்தின் மீது தமிழ் மக்களுக்கு பெருமதிப்பும், வாஞ்சையும் வரச் செய்தது திட்டமிட்டது உருவாக்கியதாகவே தோன்றுகிறது. ‘கர்ணன்’ படத்தினை ஆதரவற்றவர்களாக கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவனை புறந்தள்ளுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே பந்துலு நமக்குச் சொல்ல நினைத்தது. ‘கர்ணன்’ படத்தின் மையமுமே அது தான். படத்தின் முக்கிய காட்சி என்று எதையும் எடுத்துக் கொள்ளுங்கள் அதன் பின்னணி இதுவாகத் தான் இருக்கும்.

வில்வித்தை பயிற்சியை மக்களின் முன்பாக சபையில் அர்ச்சுனன் செய்து காட்டுகிறபோது கர்ணன் தானும் பங்கு கொள்ள விருப்பம் தெரிவிப்பான். கர்ணனின் அந்தஸ்தை முன்நிறுத்தி அதற்கு அனுமதி மறுப்பார்கள் ஆச்சாரியர்கள்.

“நாங்கள் ஆச்சாரியர்கள். நாங்கள் வகுத்ததே தர்மம்” என்பார்  துரோணர்

“ஆச்சாரியரான நீங்கள் ஆயுதம் பயின்றது தவறு” என்ற குற்றச்சாட்டுக்கு துரோணாச்சாரியார் இப்படி சமாளிப்பார்,

“நாங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள்”.

ஒரு சூடான வாக்குவாதம் மட்டுமல்ல இது. இன்றைய காலகட்டத்தின் பேசுபொருட்களும் கூட.

படத்தில் மேகநாதன் என்ற சிறுவன் கர்ணனிடத்தில் பேசும் காட்சி மற்றொரு சாட்சி. தான் பள்ளிக்குப் போகமுடியாததைப் பற்றி மேகநாதன்,

“படிக்கும் வயதல்லவா எனக்கு. அறிவுப்பசி எடுத்து பல பாடசாலைகளைத் தேடிப்போனேன். எங்கும் எனக்கு இடமில்லை. பிறப்பறியாதவன், அநாதை, தாழ்ந்தவன், உயர் இனத்தவருடன் படிப்பது தவறு. பாவம். போ” என கழுத்தைப் பிடித்து தள்ளி விட்டார்கள்”

“மகனே, அரசுக்கே புத்தி சொல்லும் அறிவடா உனக்கு. உன் போன்ற குழந்தைகளுக்காக ஒரு அரசன் நாட்டிலே செய்ய வேண்டிய பலவற்றை உன் அறிவின் மூலமாக புரிந்து கொண்டேன். அனைத்தையும் குறைவின்றி செய்து விடுகிறேன்” என்பார் கர்ணன். தாழ்த்தபப்ட்ட ஒருவர் அதிகார மையத்துக்கு செல்கிறபோது தான் தன்னை ஒத்தவர்களின் வலியை புரிந்து கொள்ள முடியும் என்பதான காட்சி இது. துரோணர்களும், கிருபாச்சாரியர்களும் உயர் குலத்தவரான பஞ்சபாண்டவர்களுக்கு மட்டுமே ஆதரவாக நிற்கும்போது மேகநாதன் போன்ற அடித்தள மக்களின் அதிகார பிரதிநிதியாக கர்ணன் இருந்தான் என்பது கவனிக்கப்பட வேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில் மகாபாரத்ததில் இப்படியான காட்சி இல்லை. இதை படத்துக்காக சேர்த்தது நுணுக்கமான, திட்டமிட்ட அசகாய புத்திசாலித்தனம்.

இதனை இவர் ஒரு படத்தில் மட்டும் சொல்லவில்லை. ‘நாடோடி’ படமே சாதி அடக்குமுறைக்கு எதிரான படம் தான். அதைச் சொன்ன விதத்தில் ஒரு இயக்குநருக்கு இருந்த துணிவு தான் பேசப்பட வேண்டியது. சாதி ஒழிப்பைக் குறித்து மேடையில் பேசும் பேச்சாளர் ஒருவரின் மகள் தாழ்ந்த ஜாதியினர் ஒருவரைக் காதலிக்கிறாள் என்றதும் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார். அவள் தற்கொலை செய்து கொள்வாள். மகளின் மரணம் அவரை பாதிக்காத அளவுக்கு ஜாதி வெறி அவருக்குள் இருக்கும். அதன் பின் நடக்கும் கதை தமிழ் தமிழ் சினிமாவில் பல கதைகளுக்குத் தாக்கம் ஏற்படுத்தியது.

ஒரு ஆண் அப்பாவித்தனமான கண் பார்வையற்ற ஒரு பெண்ணோடு பயணம் செய்கையில் என்னென்ன இடர்ப்பாடுகள் மற்றவர்களால் ஏற்படுகிறது என்பது தான் ‘நாடோடி’ கதையின் போக்கு. எம்ஜிஆரின் மற்றப் படங்களில் இருந்து நாடோடி படம் முற்றிலும் வித்தியாசமான ஆளுமையைத் தந்திருக்கும் என்பதை இப்போது படம் பார்க்கையில் புரிந்து கொள்ள முடிகிறது. படம் முழுக்கவுமே ஒரு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு.  

பலே பாண்டியா, சபாஷ் மீனா படங்கள் ஆள் மாறாட்டக் கதைகள் இந்திய சினிமாவில் சக்கை போடு போடும் என்பதை உறுதி செய்தன. நகைச்சுவை வரிசைப் படங்களில் இவை இரண்டும் வைக்கப்பட்டாலும் இந்த இரண்டு படங்களும் அரசியல் பேசின.

Balepandiyan

‘இவ்வளவு பெரிய பங்களா உங்க ஒருத்தருக்கா சார்” என்று சிவாஜி அப்பாவியாகக் கேட்கும்போது, “ஷ்..பங்களாக்குள்ள பாலிடிக்ஸ் பேசாத…கேர்ஃபுல்” என்று கடந்து செல்வார் எம். ஆர் ராதா.

‘ஆயிரத்தில் ஒருவன்’ கதையே கூட அடிமைத்தனத்துக்கும் அதிகார மையத்துக்கும் நடக்கிற யுத்தம் தான். எம்ஜிஆர் போன்ற திரையிலும், அரசியலிலும் ஆளுமைமிக்க ஒருவரை வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் எடுப்பதென்பது ஒரு துணிவே, ஏனெனில் எம்ஜிஆர் இந்தப் படத்தில் ஒரு அடிமை. ஒவ்வொரு முறையும் கையாலாகாத தனத்துடன் தோற்றுக் கொண்டே இருக்கும் ஒரு அடிமை கதாபாத்திரம் எம்ஜிஆருக்கு.. ஆனால் இதை நம் புத்திக்கு எட்டவிடாமல் செய்திருக்கும் யுத்தி தான் கவனிக்கப்பட வேண்டியது. எம்ஜிஆரின் குரல் அந்தப் படத்தில் அடிமைகளின் குரலாய் ஒலித்தது என்றாலும், சுதந்திரம் பெற வேண்டுமெனில் வீரம் மட்டுமே போதாது, விவேகமும் வேண்டும் என்று வலியுறுத்தும் கதாபாத்திரமும் கூட. திரைக்கதையில் இதனை சரியாய்க் கொண்டு வந்ததாலேயே படம் இன்றளவும் பேசப்படுகிறது.

அடிமை எனும்போது அவர் கைதிகளையும் உள்வாங்கியிருக்கிறார். அதனால் தான் அவரது எல்லாப் படங்களிலும் சிறைச்சாலை காட்சிகள் தவறாமல் இடம்பெற்றிருக்கும்.

கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் படங்களை பந்துலு இயக்குவதற்கும் படம் சொல்லிய செய்தி தான் காரணமாக அமைந்திருக்க வேண்டும். தமிழகத்தில் பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் இருந்திருக்கின்றனர். அவர்களில் நேரடியாக அதிகாரத்தை நோக்கி கேள்வியை முன்வைத்தவர்கள், போராடியவர்கள் என நாம் கொண்டாடுபவர்கள் கட்டபொம்மனும், வஉசியும். இவர்களைக் குறித்த படங்களை தயாரித்து இயக்கியது பந்துலுவின் ஆழமான உந்துதல் என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.

நறுக்கென்று முகத்துக்கு நேராக சீறுபவர்களாக வீரபாண்டிய கட்டபொம்மனும், கப்பலோட்டிய தமிழனும், ஆயிரத்தில் ஒருவனுமாக இருக்கிறார்கள். இருவருமே ஆங்கிலேயர்களை எதிர்த்து தங்கள் உடமைகளையும், உயிரையும் இழந்தவர்கள். அந்த இழப்புக்குப் பின்புலமான அவர்களது சுயமரியாதையைப் படம் எடுத்துக் காட்டியது.  கட்டபொம்மன் குறித்த வெவ்வேறு விதமான ஆய்வுகள் தமிழில் உள்ளன. கட்டபொம்மனைக் குறித்து கூடுதலாகவே ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ சொல்லிவிட்டது என்றும் ஆதாரங்களோடு முன்வைக்கிறார்கள். ஆனால் பந்துலு இந்தப் படத்தை இயக்கிய விதமென்பது ‘நம்மிடத்திலும் எதற்கும் அஞ்சாத வீரன் இருந்திருக்கிறான்; என்று சொல்வதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு தான் தமிழகத்தில் இன்றளவும் இந்த இருவரும் விடுதலை வீரர்களாக நிலைபெற்றிருக்கிறார்கள் என்பது மிகையில்லாத கருத்து.. சினிமாவின் மாபெரும் தாக்கம் இது.

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தைத் தவிர வசூலில் அனைத்துப் படங்களுமே வெற்றி. சேர்த்து வைத்து கப்பலோட்டிய தமிழன் ஒரு காவியமாக நமக்கு இன்று மாறியிருக்கிறது.

பந்துலுவின் படங்களுக்கு தாதாமிராசி கதை எழுதியுள்ளார். பலே பாண்டியா, சபாஷ் மீனா இரண்டுக்கும் கதை தாதா மிராசி. மிக முக்கியமாய் பந்துலு அவர்களின் படங்களில் வியப்பை ஏற்படுத்துவது படத்தின் வசனங்கள். ஆர். சண்முகம், மா.ரா என எழுத்தாளர்கள் எழுதியிருந்தாலும் வசனங்களின் தன்மை ஒன்று போலவே இருப்பதைப் பார்க்க இயலும். மிக யதார்த்தமான நவீனத்துவம் கொண்ட வசனங்கள்.

அரண்மனையிலே வளர்ந்த சித்தார்த்தன் வெளியுலகத்தைத் தரிசிக்கும்போது ‘இத்தனை துயரங்கள் நிறைந்ததா மனித வாழ்க்கை’ என்று உணர்த்து கொண்டு பிறகு புத்தனாகிறான். ‘சபாஷ் மீனா’ படத்தன் மையமும் இதுவே தான். செல்ல மகனாக வளரும் சிவாஜி வாழ்க்கையின் போக்கில் வறுமையை உணருகிறபோது தன்னைச் சுற்றிய உலகத்தின் ஏற்றத் தாழ்வுகளை புரிந்து கொள்கிறான். இதில் இந்தக் கதாபாத்திரத்துக்கு கிடைக்கு போதிமரம் அவனுடைய காதலி.

இவரது படங்களில் வருகிற பெண் கதாபாத்திரங்கள் வலு கொண்டவர்கள். எதையும் கேள்வி கேட்பவர்கள். முக்கியமாய் கதாநாயகனை வழி நடத்துபவர்கள்.  பலே பாண்டியா படத்தில் தற்கொலை செய்து கொள்ள நினைக்கும் ஒருவனுக்கு நம்பிக்கையைத் தரும் கதாபாத்திரம் தேவிகாவுக்கு.

பந்துலு குறித்து ஓரிடத்தில் எழுதுவதை நிறுத்த வேண்டுமெனில் ஒற்றை வாக்கியத்தில் முடிக்கலாம் – அவர் சமூகத்தின் பொக்கிஷம்.

***

ஜா தீபா – எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், ஆவணப்பட இயக்குனர் என தொடர்ந்து எழுதி வரும் இவர் நெல்லையை சேர்ந்தவர். அயல் சினிமா இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். “நீலம் பூக்கும் திருமடம்” எனும் இவரது சிறுகதைத் தொகுப்பு பரவலான கவனத்தைப் பெற்றது. இவரது மின்னஞ்சல் – deepaj82@gmail.com

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – பகுதி 4

1

உருவக அரங்கம் – ‘Image Theatre’ – பல தளங்களில் கையாளக்கூடிய வடிவம்!

-ரூபன் சிவராஜா

செவிமடுப்பதோடு மட்டுமல்லாமல், பார்க்கும் திறனையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.. உலகப்பார்வையைப் பிரதிபலிக்கும் உருவங்களை நாம் உருவகப்படுத்துவது எதிர்காலத்தை ஊடுருவுவதற்கான சிறந்த வழியாகும்’Augusto Boal

இதற்கு முந்தைய / பிற பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

Augusto Boal உருவாக்கி வளர்த்தெடுத்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின்’ மற்றொரு வடிவக்கூறு ‘உருவக அரங்கு – Image Theater’.

பரந்த வெளிப்பாட்டு வெளி

உருவக அரங்கு ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் முதன்மை வடிவக்கூறுகளில் ஒன்று. ஒரு பேசுபொருளுக்குரிய சொற்கள் தீர்ந்துபோகும்போது அல்லது புதிய சிந்தனைக்கான சொற்கள் அகப்படாமல் பழக்கப்பட்ட சடங்குபூர்வமான வட்டத்திற்குள் நின்று சிந்திக்கின்ற நிலையை மாற்றுவதற்கு உருவக அரங்கினை Boal உகந்த வழியாகக் கருதினார். அந்த உத்தி புதிய வெளிப்பாட்டு வடிவங்களைத் திறக்கக்கூடியது. உருவக அரங்கின் வெளிப்பாட்டு வெளியும், வாய்ப்பும் பரந்துபட்டது. எழுத்தறிவற்ற ஒருவருக்கும், மொழியியல் அறிஞர் ஒருவருக்கும் சம அளவு வெளிப்பாட்டு வாய்ப்பு இந்த அரங்கச் செயற்பாட்டு வடிவத்திற்குள் உள்ளது.

அரங்க வெளிப்பாடுகளில் அசைவுகள் மட்டுமல்ல, உறைநிலை என்பதுகூட வீரியமாக வெளிப்படக் கூடியது. ஒத்திசைவான ஒளி மற்றும் இசையின் துணையுடன் உறைநிலைக் காட்சிகளை அழகாகவும் அர்த்தபூர்வமாகவும் உருவகிக்க முடியும். உடல்மொழி, முகபாவனை, ஒருமித்த திசை நோக்கிய பார்வை இதற்கு முக்கியமானவை. குறியீடுகளைக் கொண்ட உறைநிலை மற்றும் அசையும் உருவகங்கள் மூலம் நிகழ்த்தப்படும் இவ்வரங்கில் ஆற்றுகையாளர்களின் உடல்மொழியும் உடல்கள் மூலம் உருவகப்படுத்தப்படும் காட்சிபூர்வ வடிவங்களும் முதன்மையானவை.

வாய்மொழி உரையாடலுக்கு மாற்றான அரங்கு

குறித்த ஒரு சிக்கல், பிரச்சனை, முரண்பாடு சவால் சார்ந்து நிலவும் சூழலையும், அதற்கான தீர்வு நோக்கி உரையாடவும், சிந்திக்கவும் உகந்த அரங்கியல் வெளிபாட்டு உத்திகளை அது கொண்டுள்ளது. வாய்மொழி உரையாடலுடனான அரங்க வெளிப்பாட்டிற்கு மாற்றான ஒரு உத்தியும் வடிவமுமாகும்.

இந்த அரங்கு வெளிப்பாட்டு வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் துல்லியத்தன்மையைக் கோருகின்றது. கவர்ச்சிகரமான, கோசத்தனமான அல்லது மழுப்பல்தனமான சொற்களுக்குள் பார்வையாளர்கள் உணர்வு மயக்கத்திற்கு உள்ளாகுவதற்கு உருவக அரங்கில் வாய்ப்பில்லை. அது நேரடியானதும், துல்லியமானதுமான அர்த்த வெளிப்பாட்டினை நிர்ப்பந்திக்கும் வடிவம். உதாரணமாக விடுதலை, ஜனநாயகம், நீதி, சுதந்திரம், இனவாதம் போன்ற சமூக அரசியல் சார்ந்த சொற்களின் அர்த்தத்தை சொற்களால் வலியுறுத்துவதற்கும், உருவக அரங்கிற்கூடாக வெளிப்படுத்துவதற்கும் துல்லியமான வேறுபாடுகள் உள்ளன. சொல்லின், கருப்பொருளின், கருத்தியலின் சாரத்தை நுணுகியறிதல், சொற்களின் மெய்யான அர்த்தங்களைப் பகுத்தறிதலுக்கும் அவை சார்ந்த மாற்றங்கள் பற்றிய உரையாடலுக்கும் உருவக அரங்கு உகந்த வாய்ப்பினையும் வெளியினையும் கொண்டுள்ளது.

உடல்களால் உருவகப்படுத்தல்

உடல்களால் உருவகங்களைக் காட்சிப்படுத்துதல் இதன் அடிப்படை உத்தி. அந்தக் காட்சிப்படுத்தலில் ஒடுக்குமுறை சார்ந்த பேசுபொருள் பிரதிபலிப்பதாக அமையும். நடிகர்களின் குழுநிலைப் பங்கேற்பு மூலம் உறைநிலை உருவம் (Freeze Images) அல்லது சிலைகள் (Statues) காட்சிப்படுத்தலுக்கு உட்படும். குறிப்பிட்ட ஒரு பேசுபொருள், ஒரு முரண்பாட்டு அல்லது அநீதிச் சூழல், அல்லது ஒரு நிலைமை உருவகப்படுத்தப்படும்.

ஆற்றுகையாளர்கள் அல்லது பங்குபெறுவோர் தமதும் மற்றவர்களினதும் உடலை/உடல்களைக கொண்டு உருவகத்தை/உருவகங்களை அமைப்பர். அரங்கின் நெறியாளர் (Joker) உருவகங்கள் எந்தக்கட்டத்தில் உறைநிலையிலும், எந்தக்கட்டத்தில் அசைநிலையிலும் இருக்கவேண்டுமென்பதை உறுதிசெய்வார்.

இதில் முக்கிய அம்சம் ஆற்றுகையாளர்கள் வாய்மொழி உரையாடல்களைத் தவிர்ப்பதாகும். ஆரம்பநிலையில் செயற்கைத்தனமாகத் தோன்றினாலும் போகப்போக உருவக அரங்கம் வாய்மொழி உரையாடலிலிருந்து விடுவிக்கப்பட்ட தொடர்பாடல் கலை வடிவம் என்பதைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்வர். ஏனைய அரங்குகளுக்கு விதிவிலக்காக ஜோக்கர் உருவக அரங்கின் ஒவ்வொரு படிநிலைகளையும் அறிமுகம் செய்தல் நிகழும். எடுத்துக்காட்டாக ஜோக்கர் ஒரு பேசுபொருளைப் பரிந்துரைக்கலாம். ஆற்றுகையாளர்கள் முன்மொழியப்பட்ட அப்பேசுபொருள் குறித்த தமது புரிதலை தமது உடல் /உடல்கள் மூலம் உருவகித்து நிகழ்த்திக் காட்டுவர்.

ஆரம்பநிலையில் உருவகங்கள் ஒடுக்குமுறையின் சமகால நிலையைப் பிரதிபலிப்பதாக அமைக்கப்பட்டு படிப்படியாக மாற்றமடைந்து விரும்புகின்ற மாற்றத்தின் இறுதிநிலை/இலக்கு நிலை உருவகம், அதாவது (Ideal image) நிகழ்த்திக்காட்டப்படும்.

வாய்மொழிச் சொற்களினூடாக ஒரு முரண்பாட்டுச் சூழலை வெளிப்படுத்துதென்பது சமயங்களில் சம்மந்தப்பட்டவர்களைச் சீண்டி ஆத்திரமூட்டக் கூடும். எனவே முரண்பாட்டுச் சூழல் பற்றிய சுமூகமான உரையாடலை ஏற்படுத்துவதற்கு இவ்வகை உருவக அரங்க முயற்சிகள் பயனுள்ளவையாகக் கருதப்படுகிறது.

பல்தளங்களில் கையாளக்கூடிய கலை வடிவம்!

ஒடுக்குமுறைக்கெதிரான அரங்கப் பேசுபொருளுக்கு வெளியிலும் இதனைப் பயன்படுத்த முடியும். கலை, இலக்கிய, சமூக ஊடக மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும்  பயன்படுத்தக்கூடியது. அதன் பயன்பாடுகள் கலை வெளிப்பாட்டினூடான சமூக மாற்றம் என்பதற்கு அப்பாலும் பல்வேறு சமூக ஆய்வுகள், கல்வியியல் ஆய்வுகள், மானிடவியல், நிறுவன மேம்பாடுகள் சார்ந்த ஆய்வுகளுக்கான துணைக்கருவியாகவும் கையாளத்தக்கவை. கற்பித்தல் சார்ந்த இடங்களில் தெளிவூட்டலுக்குரிய, விவாதங்களுக்கு வழிகோலும் கருவியாக இதன் பயன்பாடு பெருவாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

உதாரணத்திற்கு பாடசாலை மாணவர்கள் ஒரு நாவலையோ, சிறுகதையையோ வாசித்த பின்னர், அதன் மூலப்பாத்திரத்தைச் சித்தரிப்பதற்குக்கூட இந்த உருவக அரங்க முறைமையினைக் கைக்கொள்ள முடியும். மனித உறவுகளுக்கிடையிலான, குடும்ப, சமூக சூழ்நிலைகளின் பேசுபொருள் உருவக அரங்கிற்குக் கூடுதல் பொருத்தமுடையது.

***

தொடரும்..
ரூபன் சிவராஜா..

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் – நூல் விமர்சனம்

0

சு.கஜமுகன்

ண்டன்காரர் என்னும் குறுநாவலிற்கு பிறகு சேனன் எழுதி இருக்கும் இரண்டாவது நாவலே சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள் ஆகும். இதுவும் ஒரு வகையான யுத்த நாவல்தான் என்றபோதும் யுத்தத்தையும் அதன் துயரத்தையும் மட்டும் பேசாமல் அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியை நிகழ்கால சம்பவங்களுடன் சேர்த்துப் பேசுகின்றது. இக்கதையில் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின் வீரதீர செயல்களோ அல்லது தனிநபர் சாகாசங்களோ பேசப்படவில்லை மாறாக யுத்தம் நிகழ்ந்த இந்த வரலாற்றுத் தருணத்தில் வாழ்ந்த எளிய மக்களின் அன்றாட வாழ்வு, யுத்தத்தில் எதிரொலித்த அவர்களின் அவலக்குரல் மற்றும் யுத்தத்தின் பின்னர் நிர்கதியாக்கப்பட்ட அவர்களின் வாழ்வு குறித்தே வரலாற்றுப் புனைவுடன் பேசுகின்றது இந்நாவல்.    

பல நிகழ்வுகளை ஒரே தரத்தில் அல்லது ஒரே நேரத்தில் பேசுவதால் முதல் வாசிப்பில் இதனை புரிந்து கொள்வது மிகக் கடினம். ஏனெனில் ஒரே தரத்தில் வரலாறு ஒரு புறமாகவும், புனைவு ஒரு புறமாகவும், கதை அல்லது சம்பவங்கள் இன்னொரு புறமாகவும் செல்வதோடு மட்டுமல்லாமல் கதையின் போக்கில் இறந்தகாலம் நிகழ்காலம், எதிர்காலம் என்பன மாறி மாறி வருவதனால் கதையின் போக்கை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் எழக்கூடும். கதையின் சில இடங்களில் சமகால நிகழ்வும், இறந்தகால வரலாறும்  ஒரேயடியாகச் செல்லப்படுவதனால், இறந்தகால வரலாறு தெரியாதோர் நிகழ்கால சம்பவங்களுடன் அதனைப் பொருத்திப் பார்ப்பது கடினமான ஒன்றாகவே இருக்கும். படைப்பாளியுடனான உரையாடல் மற்றும் வாசகர்களின் விமர்சனம் மூலமமே இந்நாவலின் முழுப்பரிமாணத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளமுடியும். இதனை தனியே நாவலாகவும் அதே வேளை சிறு கதைகளின் தொகுப்பாகவும் பார்க்கமுடியும்.

யுத்தம் என்பது பல பரிமாணங்களின் தொகுப்பாகும். யுத்தத்தை பேசும் இந்நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் யுத்தத்தின் பல பரிமாணங்களைப் ஒரேயடியாகப் பேசுவதால் புரிந்து கொள்வது சற்றுக் கடினமாக இருக்கலாம். மாறாக ஒவ்வொரு பரிமாணத்தையும் தனித்தனி அத்தியாயமாக எழுதி இருந்தால் இக்கதை வாசகர்களுக்கு புரிந்து கொள்ள இலகுவாக இருந்திருக்கும். ஆனால் யுத்தம் நிகழும்பொழுது தனித்தனி பரிமாணமாக நிகழ்வதில்லை, மாறாக  அனைத்துப் பரிமாணங்களின் தொகுப்பாகவே யுத்தம் நிகழும் என்பதனால் தனது கதை சொல்லும் முறையிலும் கதையின் அனைத்துப் பரிமாணங்களையும் ஒரேயடியாக நிகழ்த்துகிறார் ஆசிரியர். அந்த வகையில் இது ஒரு புது வகையான எழுத்து முயற்சி கூட  என்று சொல்லலாம். பழைய பாணியில் அல்லது வெறும் நேர்கோட்டுப் பாணியில் கதையை சொல்லாமல் ஒரு புது வகையான பாணியில் கதையை சொல்ல முயற்சித்துள்ளார்.

ஸ்பானிய போரின் கொடூரத்தைப் பேசுகின்ற பிக்காசோவின் குவார்ணிக்க ஓவியத்தில் எவ்வாறு சிறகு ஒடிக்கப்பட்ட பறவை, குரல் வலை நசுக்கப்பட்டு கதறும் குதிரை, இறந்த குழந்தையை பதறும் கைகளில் ஏந்தி வானத்தை நோக்கி கதறும் தாய், தீப்பற்றி எரியும் வீட்டில் சிக்கிகொண்டு காப்பாற்ற கதறும் பெண், வெட்டுப்பட்டு வீழ்ந்து கிடக்கும் சிப்பாய், காலில் நசுக்கப்படும் தலை கவசம், திறந்த கதவின் வழியே பறந்து வரும் பெண் எனப் பல விடயங்கள் ஒரே ஓவியத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளாதோ, அதே போல் இந்நாவலிலும் ஒரே தரத்தில் அல்லது ஒரே நேரத்தில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிக்காசோ ஒவ்வொரு படங்களையும் தனித்தனியாக வரைந்திருக்காலம் ஆனால் யுத்தத்தின் அவலத்தைப் ஆழமாகவும் அழுத்தமாகவும் பிரதிபலிக்கவே ஒரே படத்தில் அனைத்தையும் கொண்டு வந்தார். அதே போல்தான் இந் நாவலிலும் பல வரலாற்று நிகழ்வுகள், புனைவுகள், புராணக் கதைகள், நிஜக் கதைகள், அரசியல் காய் நகர்த்தல்கள், யுத்தத்தின் பின்னால் அரசின் பங்கு, யுத்தத்தில் அகப்பட்ட எளிய மக்களின் தப்பித்தல் வாழ்வு என அனைத்தும் தனித்தனியாக பேசாமல் ஒரேயடியாக ஒரே தரத்தில் ஒரே தளத்தில் பல கதைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அல்லியின் கதையில் தொடங்கி, அல்லி ராணியின் வரலாற்றுக் கதை, இந்தியன் ஆமி பிரச்சனை, பங்கர் வாழ்வு, பங்கரில் முளைக்கும் காதல் கதை, குண்டுகளிலிருந்து தப்பி ஓடும் அகதி வாழ்வு, வெளிநாடு செல்வதற்கான ஏஜென்சி வாழ்க்கை, புலம் பெயர் வாழ்வின் சிக்கல்கள், புலம் பெயர் அரசியல் அமைப்பின் தில்லு முல்லுக்கள் என யுத்தத்தைக் கடந்து வந்த ஈழத்தமிழர்கள் சந்தித்த, கேள்விப்பட்ட முக்கியமான அனைத்துப் பிரச்சனைகளையும் கதைக் களமாக்கி உள்ளார் ஆசிரியர். இவற்றின் ஊடாக பயணிக்கும் சித்தார்த்தன், அல்லி மற்றும் சாதனாவின் போராட்ட வாழ்க்கையே இந் நாவலின் கருவாகும்.

இயக்கப் போராளியாக போராடும் அல்லி, அவள் சந்திக்கும் யுத்தக் களம் சார்ந்த சிக்கல்கள், யுத்தத்தில் அகப்பட்டு பின்னர் அதிலிருந்து தப்பி ஓடி புலம்பெயர் தேசத்திற்கு சென்று அங்கும் குடும்ப வன்முறையில் சிக்கி மீண்டெழும் சாதனா போன்ற பிரதான கதாபாத்திரத்திரங்களின் ஊடாக உயிர் வாழுதல் என்பதே தப்பி ஓடுதல்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

இவர்களை வழிப்படுத்தும் அல்லது குழப்பத்திற்கு உள்ளாக்கும் சித்தார்த்தன், அடிக்கடி தோன்றி மறையும் ஒரு கதாபாத்திரமாக, அடி மனத்துக் குழப்பத்தின் மாயத் தோற்றமாக கதையின் போக்கில் முன்னும் பின்னும் நகரும் ஒரு கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதால் அது வாசகர்களுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தலாம். கதையின் போக்கில் அடிக்கடி தோன்றி மறைவதால் அதன் தொடர்ச்சியினைப் புரிந்து கொள்வது சற்று சிக்கலான விடயமாகும்.

சில இடங்களின் படைப்பாளி பேசும் தத்துவார்த்த வசனங்களானது ஜென் மனநிலை வாய்க்கப்பட்ட ஒருவர் அதி உச்ச நிலைக்கு சென்று ஆடும் ருத்ர தாண்டவத்தின் போது வெளிவரும் புரட்சி மிகு வார்த்தைகளாகவே காணப்படுகின்றது. “இறப்பின் நிச்சயம் இறப்பின் வேதனையை மறைத்துவிடுகிறது, மதிப்புறச் சாதல் செய்தால் மட்டும் கோழி சட்டிக்குள் போவதில் இருந்து தப்பி விட முடியுமா?”, “நிசத்தை அரூபமாக்கிய நிழல் பல தளங்களில் உயிர்புடையதாய் இருக்கின்றது”,” போதியின் நிழல்தானே அம்மரத்தின் புனிதத்தை நிறுவிற்று”. “இருப்பது இருந்தபடி இருத்தலின் தொடர்ச்சியாகத்தான் இந்த அமைதி நியாயங்கள் தென்டப்படுகின்றன போன்றன அவற்றுள் சிலவாகும். மேலும் சித்தார்த்தன் மற்றும் சீடன் மகிந்தவின் கதை, அல்லி மற்றும் அர்ஜுனனின் கதை போன்றவற்றின் மூலம் நேரடியாக ஒரு கதையும், மறைமுகமாக இன்னொரு கதையும் செல்வது ஆசிரியரின் எழுத்தாளுமையின் உச்சத்தைக் காட்டுகின்றது.

அர்ஜுனன் பெண்களை மணந்து அதன் மூலம் நிலங்களையும் சொத்துகளையும் தனதாக்கி கொள்கின்றான் என்பதன் ஊடாக பண்டைய நிலவுடைமைச் சமுதாயத்தின் ஆதிக்கக் கூறையும், “தெற்கில் யு.என்.பி யின்ற மடிக்குள்ள படுத்துப் போட்டு இங்க வந்து சிங்களவனின்ட தோலை உரிச்சுக் கொண்டு வருவம் என உசுப்பேத்தியதுதான் மிச்சம்” என்பதின் ஊடாக தமது அரசியல் சுயலாபத்திற்காக நாடகமாடிய தமிழ் தலைமைகளின் இரட்டைப் போக்கையும், “போராடச் சக்தி அற்றவர்கள் மட்டும்தான் பொய்க்கதைகள் கட்டுவார்” என்ற வரிகளின் ஊடாக பொய் புரட்டு மூலம் மக்களை ஏமாற்றும் வலதுசாரிய அரசியலின் சூட்சுமத்தையும் பதிவு செய்கிறார். 

அதிகார வெறியின் கோரத்தாண்டவத்தினால் “மனிதம் குறுகி மிருகமாக மருவியது. நாலு கால்களில் நகர்ந்தனர் அனைவரும்” என்ற வரிகளின் ஊடாக ஒட்டு மொத்த அவலத்தையும் ஒரே வரியில் பதிவு செய்கிறார். ஒரு சிப்பாய் தன் வாழ்நாள் முழுவதும் போராடினாலும் வழங்க முடியாத பணத்தையும், வசதியையும் அவர் குடும்பங்களுக்கு வழங்கல், இறுதி வரை நிறுத்தாத நிரந்தர அடி, இராணுவச் சுற்றிவளைப்பு, போன்ற இறுதி யுத்தத்தை வெல்வதற்கான கோத்தபாயவின் ஐந்து கருதுகோள்கள் மூலம் இந்த யுத்தம் எவ்வாறு தோற்கடிக்கப்பட்டது என்பதனையும், அதன் பின்னணியிலுள்ள அதிகாரத்தின் சூழ்ச்சியையும் பதிவு செய்யத் தவறவில்லை ஆசிரியர்.

கோத்தபாய, மகிந்தா, நாராயணசாமி மற்றும் ஐ.நா அதிகாரி பிரவுண் போன்ற கதாபத்திரங்களின் உரையாடல்கள் இறுதி யுத்தத்தின் பின்னால் இந்திய, அமெரிக்க, ஐ.நா வின் பங்களிப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. அதிலும் குறிப்பாக “தவறுகள் நடக்காத யுத்தம் என்று ஒன்றில்லை” என்ற நாராயணசுவாமியின் கூற்றானது மக்களைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, எந்தவிதமான போர்குற்றம் மற்றும் மனித உரிமைகளை மீறல்களில் நீங்கள் ஈடுபடலாம், அவர்களிற்குப் பின்னால் இந்தியா நிற்கும் என்ற தைரியத்தை அவர்களுக்குக் கொடுத்தது.

இலங்கை, இந்திய அமெரிக்க அதிகாரத்தின் இரத்த விடாயால் உருவான யுத்தம் இது என்பதை “யார் யாரோவினது இரத்த விடாயால் உங்கள் மண்டைகள் சிதறிக் கொண்டிருக்கின்றன” என்ற சித்தார்த்தனின் வரிகளின் ஊடாக நம்மால் உணர முடிகிறது. அதிலும் குறிப்பாக “இராணுவத்தினர் மட்டும் கீதா கிருஷ்ணனின் யுத்த வேட்கையுடன் பலனை நோக்கா பணி செய்து கிடந்தனர்” என யுத்தம் செய் எனத் தூண்டும் பகவத் கீதையினையும் போகிற போக்கில் எள்ளி நகையாடுகிறார். அத்துடன் அவர்கள் எடுக்கும் வெற்றிச் சின்ன புகைப்படங்களும், ஒளிப் பதிவுகளும் அவர்கள் வாழ்நாள் முடியும் வரை துரத்தும் என கலும் மாக்கிரேவைப் பற்றிய பதிவும் காணப்படுகின்றது.

“அவளது வாழ்க்கை பங்கரும் வீடுமாகக் கழிந்தது”, “வைத்தியசாலை இரத்தக் காடாக் கிடந்தது”, “உயிர்கள் இலக்கங்களாகச் சுருக்கப்பட்டுக் கணக்குக் காட்டப்படும்”, “தோட்டாவால் எல்லோரும் சாவதில்லை, அரைவாசிப்பேர்குருதி இழந்து குற்றுயிராய்க் கிடந்துதான் சாகின்றனர்” போன்ற சொல்லாடல்கள், மற்றும் “இங்கிருந்தால் என்ர குஞ்சுகளை குண்டுக்கு குடுக்க வேண்டியதுதான் இருட்டு” என்ற சாதானாவின் தாயாரின் வரிகளின் ஊடாக மனிதர்களின் அவலங்களும் “வழியெங்கும் மிருகங்கள் கருகிக்கிடந்தன”, “செல்லடி பட்டுத் தண்ணிக்குள் விழுந்து ஊதிப் பெருத்துக் கிடந்தது மாடு” என்பதன் ஊடாக விலங்குகளின் அழிவுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

“இஞ்ச நடமாடுற ஆக்கள் எல்லாம் செத்த பேய்கள்”, “சனமெல்லாம் எப்பவோ செத்துப் போச்சு” எனப் பேசும், யுத்தத்தின் விளைவால் பைத்தியமாக்கப்பட்டு, நட்டு கழண்டுவிட்டது என்று ஒதுக்கப்பட்ட விமலாவின் கதாபாத்திரத்தின் மூலம் வாழ்வின் தரிசனத்தின் உச்சியை சித்தரிக்கப்பட்டுள்ளது, எனினும் விமாலாவின் ஒற்றைப் பார்வை சமூகத்தால் ஒதுக்கப்பட்டே விட்டது. அதே போல்தான் கிளியக்கா என்னும் கதாபாத்திரமும். “அந்த இடத்தில் ஒரு கிளி இருந்தது என்ற எந்த அடையாளங்களும் இன்று இல்லை. யாரும் அந்த கிளி பற்றிப் பேசுவதும் இல்லை” எனப் பதிவு செய்கிறார். இவ்வாறு பல கிளிக்களும், விமலாக்களும், குமுதாக்களும் மட்டுமன்றி கோழி உரிக்கும் இரத்தினசபாபதி, இந்திய இராணுவத்திடம் பிடிபட்ட குகன், மகனை இழந்த கிளாக்கர் சுந்தரம், சாகப் போக முதல் வீட்டுக்கு வந்த பாலா எனப் பலர் வரலாற்றின் மங்கலான பக்கங்களில் மறைக்கப்பட்டுவிட்டனர்.  

“சொத்துக்களின் மதிப்பும் செத்து போய் விட்டிருந்தது சாமான்களுக்கும் பெறுமதி இருக்கவில்லை உணவுப் பொருட்கள் மட்டும் உயர்வாக இருந்தது”. என்ற வார்த்தைகளின் ஊடாக சமகாலத்தில் கொரோனா வைரசினால் உலகில் ஏற்பட்ட உணவுத் தட்டுப் பாடினையும், உணவுக்கான தேவை மட்டுமே முன்னிலை வகித்து நின்றதையும் நினைவுபடுத்துகிறது. மேலும் தனது மகனை ஒருக்காக் கண்டாப் போதும் எனத் தவிக்கும் சதானாவின் தாயின் கதாபாத்திரமானது இன்றும் காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி அலையும் வடக்கு கிழக்கு தாய்மார்களையும் 23௦ மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மீன் தொட்டியானது, மக்களுக்கு பயன்படாத பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மாத்தளை விமான நிலையத்தையுமே நினைவுபடுத்துகின்றது.      

புலம்பெயர்நாடுகளில் நிகழும் குடும்ப வன்முறை, தொழிலாளிகளை ஒடுக்கும் தமிழ்க் கடைக்கார முதலாளிகளின் அட்டூழியங்கள், ராஜதந்திரம், யதார்த்தவாதம் என்ற பெயரில் தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தாமல் தமது சுய லாபங்களை முன்னிலைப்படுத்தும் தமிழ் அமைப்புகளின் அரசியல் வங்கிறோத்துக்கள், இடதுசாரிய அரசியலின் முக்கியத்துவம் என பல விடயங்களை தொட்டுச்செல்கின்றது நாவல். அதிலும் குறிப்பாக “யுத்தம் முடிந்து பத்து வருடங்களாகி விட்டது, இன்று வரைக்கும் ஏதோ விசாரணை செய்வோம் என பேய்க் காட்டிக் கொண்டு திரிகிறது ஐ .நா. அதற்குப் பின்னால் இழுபட்டுத் திரிகிறார்கள் உங்கள் தலைவர்களிற் சிலர்” என்னும் ரோகினியின் ஆவேசத்தின் மூலம் அமைப்புகளின் அரசியல் தெளிவின்மை படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. 

யுத்தம் எந்த தீர்வுகளையும் வழங்கிய வரலாறு இல்லை, எல்லா யுத்தங்களும் ஆரம்பிக்கும் முதலே தோல்வியைத் தழுவி விடுகின்றன. அவ்வாறு தோல்வியைத் தழுவிய இறுதி யுத்தத்தை அதன் வரலாற்றுத் தொடக்கத்தில் இருந்து அறிந்து கொள்ள அனைவரும் வாசிக்க வேண்டிய நூல் இதுவாகும்.

சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்
நாவல்
தமிழ் ஸ்டூடியோ
₹250
நூலினை ஆன்லைனில் பெற

***

  • சு.கஜமுகன்

மனதுள் படரும் மரணம்

0

க.வசந்த் பிரபு

பரிக்கு மார்ச் மாத இறுதிவரை எந்த பிரச்சனையும் இல்லைதான். அதற்குப்பிறகு தான் முன்புபோல ஆஸ்பத்திரியின் உள்ளே எளிதாய்ப் போய்வர முடியவில்லை. இவனைப் போலவே துணி வியாபாரம் செய்கிற எல்லோரும் துணி மூட்டையை தூக்கிக்கொண்டு அதிகாலையிலேயே ஒவ்வொரு ஊர்ப் பக்கம் போகும் போது இவன் மட்டும் லேட்டாகவே கிளம்புவான். குழந்தைகளுக்கான ஆடைகளோடு, பெண்களுக்கான உள்பாவாடைகள், துண்டு, டீ-சர்ட் மாதிரியான சரக்குகள் மட்டும் போட்டுக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்துவிடுவான். ஒரு நாளைக்கு குறைந்தது 10 குழந்தைகளாவது பிறந்துவிடும், எப்படியும் ஒரு 25 செட் துணியாவது வித்துவிடுவான். ஆணோ, பெண்ணோ எல்லாருக்கும் ஏறக்குறைய ஒரே மாதிரியான துணிதான். துண்டு, பாவாடை என மதியத்திற்குள் மகிழ்ச்சியாகிற அளவிற்கு வியாபாரத்தை முடித்துவிடுவான். உள்ளே இருக்கும் சோர்ஸ்களின் உதவியோடு மதியத்திற்கு மேல் பிறப்புவிகிதம் எப்படி இருக்கும் என்பதை பார்த்துக்கொண்டு அதற்கேற்றார் போல வீட்டுக்கு வந்து போவதோ, இல்லை ஆஸ்பத்திரிக்கு எதிரில் எப்போதும் சுடுதண்ணியும், காலையில் இட்லி, கல் தோசை, பொங்கல், சாம்பார், விற்கும் சுடுதண்ணி கவிதா அக்கா கடையில் முட்டையோடு, இரண்டு பொரியல் சாப்பாடு 30 ரூபாய்க்கு ரொம்ப பேமஸ். அங்கேயோ முடித்துக் கொள்வான். சபரி, கடைக்கு மதியம் சாப்பிட வந்துபோனாலே, கவிதா அக்கா சாயந்திரம் எக்ஸ்ட்ரா சுடுதண்ணி போட்டு வச்சிக்கும். சில சமயம் பால்கூட வாங்கிவச்சுக்கும். அன்னைக்கு மறுநாள் காலையில கடையில இருந்து மூணாவதா இருக்கற டீக்கடை ஓனர் நிச்சயம் வந்து சண்டை போட்டுதான் போவான். அதபத்திலாம் கவலயே படாது கவிதா அக்கா.

சபரி வியாபாரத்திற்குப் போய் 20 நாட்களுக்கு மேலாகிறது. கொரானா தொற்று ஆரம்பமானது முதல், வெளியூரோ, இல்லை மக்கள் வந்து போகிற பஜார் பகுதிகளிலோ, இல்லை பெரிய கோவிலை ஒட்டி  இருக்கிற கட்டண கழிப்பிடத்திற்கு வருகிற வெளியூர் பக்தர்களிடமோ என வியாபாரம் பார்த்தவர்களாலேயே வியாபாரத்திற்குப் போகமுடியவில்லை. வீட்டில் ரேசன் அரிசி சோறுதான் என்றாலும் வீட்டில் இருப்பது கடினமான ஒன்றாய் இருந்தது. இரவு திண்ணையின் முனையில் டேபிள்பேனை வைத்துக்கொண்டு அதற்கு கொஞ்சம் தள்ளிப் படுத்திருந்தவனை ஃபேனில் பட்டு இறந்து போன வண்டின் நாற்றம் அவனை எழுப்பி உட்கார வைத்திருந்தது. கீழே சாய்ந்து கிடந்த பாட்டிலை எடுத்துத் தண்ணீரைக் குடித்துவிட்டு உட்கார்ந்திருந்தவனைப் பார்த்தபடியே வந்த உதயன், அவனுக்கிருக்கும் இரண்டுநாள் ஜூரத்தைப் பற்றியும், லேசான சளி பற்றியும் சொல்லி, ஆஸ்பத்திரிக்கு அழைத்தான். முதலில் மாஸ்க்கையும், பிறகு சட்டையையும் மாட்டிக் கொண்டு ஃபேனை எடுத்து உள்ளே வைத்துவிட்டு, வண்டியை வெளியே தள்ளிக்கொண்டு வந்தான்.

போகிற வழியில் கோயிலுக்கு அருகில் வண்டியை நிறுத்தச் சொன்ன உதயன் மூடியிருக்கும் கோயிலைப் பார்த்து கும்பிட்டுவிட்டு வந்து வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டி ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது நான்கு மணியாகி இருந்தது. உள்ளே ஓ.பி.  சீட்டு போடும் இடத்தில் சபரிக்குத் தெரிந்தவன் தான் இருந்தான். பார்த்துவிட்டு ஜுரத்துக்கான மாத்திரையைத் தந்து அனுப்பினான். வெளியில் வந்த போது கவிதா அக்கா கடையில் சுடுதண்ணீரோடு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. ஓரிருவர் கடையிலும் இருந்தனர். வண்டியை அங்கே நிறுத்திவிட்டு, உதயனையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு மூணாவது கடையில் போய் டீ வாங்கி வந்தான். பேப்பர் கப்பில் டீ குடித்துக் கொண்டிருந்த சபரியைப் பார்த்து ’கண்ணாடி கிளாஸ்லயே கொஞ்சம்தான் தருவானுங்க, பேப்பர் கப்புல தரச்சொன்னதுல இருந்து ஒரே கும்மாளம்தான் அவனுங்களுக்கு’ என கிண்டல் செய்தபடியே, பக்கத்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பருப்பை எட்டிப்பார்த்தாள். இன்னும் இரு சிறு அடுப்புகளை கருங்கல்லை வைத்து தற்காலிகமாக அமைத்திருந்தாள். ஒன்றில் கபசுரக்குடிநீரும், இன்னொன்றில் பொங்கலுக்கான அரிசியுமாக இருந்தது. இங்கு முன்பைவிட ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு அதிகத் தேவை இருப்பதாகவும், அதைச் செய்வதற்கான ஆட்கள் குறைவாக இருப்பதாகவும் புலம்பிக் கொண்டிருந்தாள்.

உதயன் மாத்திரை போட்டுவிட்டுப் படுத்து ஒருமணி நேரமிருக்கும், அவனை எழுப்ப தொட்டபோது ஜூரம் அப்படியே இருந்தது. கொரோனாவாக இருக்குமோ என்ற பயம் வந்துவிட்டது. கவிதா அக்கா ஒரு டம்ளரில் பெரிய பிளாஸ்கில் இருந்து ஊற்றிய சுக்குக்காபியைக் கொடுத்துவிட்டு, ’காலைல 9 மணிக்கெல்லாம் டெஸ்ட் எடுக்க வந்துருவாங்க கொடுத்துட்டு போயிடுங்க, பயப்படற மாதிரிலாம் ஒன்னும் இல்ல’, என்றபடியே பொங்கலை இறக்கிவிட்டு இட்லி குண்டானை அடுப்பில் ஏற்றித் தண்ணீர் ஊற்றினாள். இருவரும் கடையின் பின்புறம் அமர்ந்து பொறுக்கி ஒதுக்க முடியாதபடி மிளகை இடித்துப் போட்டிருந்த பொங்கலை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் ஆஸ்பத்திரிக்குள் வந்தனர், ஓ.பி சீட்டு போட்டுக்கொண்டு உதயனை டெஸ்டுக்கு வரிசையில் விட்டுவிட்டு, ஆஸ்பத்திரியை ஒரு சுற்று சுற்றிவரப் போனான். பிரசவ வார்டின் அருகில் வந்த போது, நிறைய குழந்தைகளின் அப்பாக்களும், தாத்தாக்களும் வெளியே மாஸ்க்கை மாட்டிக் கொண்டு நின்றிருந்தார்கள். எந்நேரமும் ஏதோவொரு ஏவல் உள்ளிருந்து இவர்களுக்கு வரக்கூடும். அது துணிக்காகவோ, சுடுநீருக்காகவோ, இல்லை பணத்திற்காகவோ இருக்கலாம். அங்கிருந்து திரும்பி கொரானா வார்டு பக்கம் வந்தபோது மாடியின் ஜன்னல்களில் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஏதோ ஒன்றுக்காக காத்திருப்பவர்களைப் போலவே அவனுக்கு தெரிந்தார்கள். அதற்குள் சத்தமிட்டபடியே உள்ளேவந்த ஆம்புலன்சிலிருந்து நேற்றைய டெஸ்டில் தொற்று உறுதியாகி இருந்த இருவரை இறக்கி உள்ளே அழைத்துப்போனார்கள். அதைப் பார்த்துக்கொண்டிருந்த போதே, உதயன் டெஸ்டை முடித்துக் கொண்டு போனில் அழைத்தான். அவனை அழைத்துக் கொண்டு கவிதா அக்கா கடைக்கு வந்தபோது, அங்கு சுடுதண்ணி வாங்க வந்த இருவரை, அங்கிருந்த கபசுர குடிநீரை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியபடியே, யாருக்கோ இட்லி கட்டிக்கொண்டிருந்தாள். ஆஸ்பத்திரியின் உள்ளே வேலை செய்பவர்களைப் போல, மாஸ்க், கிளவுஸ் எல்லாம் போட்டிருந்தாள். அவளிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

உதயனை வீட்டில் விட்டுவிட்டு வந்து படுத்துவிட்டான் சபரி. மதியம் எழுந்து, ரசஞ்சோறையும், உப்புக்கண்டத்தையும் சாப்பிட்டுவிட்டு, உதயனைப் போய் பார்த்தபோது, ஜூரம் குறைந்திருப்பதாகச் சொன்னதும், கொஞ்சம் நிம்மதி ஆகி வீட்டிற்கு வந்தான். ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்குத் தேவை நிறைய இருப்பதாகவும் ஆனால், ஆள் இல்லை என்றும் கவிதா அக்கா சொன்னது. இவனை உறுத்திக் கொண்டிருந்தது. உள்ளே போய் துணிமூட்டையைப் பிரித்து சரக்குகளை மீண்டும் அடுக்கிக் கட்டி வைத்தான். வெகு நாட்களாக விற்காத சில பனியன் துணிகளை, தெரிந்த டைலர் ஒருவரிடம் தந்து கொஞ்சம் மாஸ்க்குகளை தைத்து வாங்கிக்கொண்டு வந்தான். சோறு எடுத்து வைத்துவிட்டு அவனுடைய அம்மா தூங்கிவிட்டிருந்தாள். சாப்பிட்டுவிட்டு ஃபேனை எடுத்துக்கொண்டு திண்ணையில் வந்து படுத்தவன் தூக்கமில்லாமல் வெகுநேரம் புரண்டுவிட்டு, பின் தூங்கியிருந்தான்.

காலையில் தூங்கிக்கொண்டிருந்தவனை எழுந்து உள்ளே போய் படுக்கச் சொன்ன இருவர், புளு கலர் உடையும், பெரிய மாஸ்க்கும் அணிந்தபடி, ஒருவர் தன் முதுகில் மருந்து அடிக்கும் மிஷினையும், இன்னொருவர், பாதியளவுக்கு பிளிச்சிங் பவுடர் நிரம்பிய கூடையையும் வைத்திருந்ததைப் பார்த்தபோது, கலைந்திருந்த அரைத்தூக்கம், போலீசின் வாக்கி-டாக்கி சத்தம் கேட்டு முழுவதும் கலைந்திருந்தது. சபரி உள்ளே போய் படுக்கையை வைத்துவிட்டு, சட்டையை மாட்டிக்கொண்டு வருவதற்குள், ரோடு முழுக்க வெள்ளை அடித்து முடித்திருந்தனர். ஆம்புலன்ஸ் ஒன்று வந்து சபரியைக் கடந்து மெல்ல நகர்ந்து உதயன் வீட்டு வாசலில் நின்றபோது, ஏறக்குறைய தெருவிலிருந்த பாதிப்பேர் அவரவர் வீட்டுவாசலில் இருந்தனர். உதயனை ஏற்றிக்கொண்டு வண்டி புறப்பட்டபோது சட்டென சாலையெங்கும் தூவப்பட்ட பிளிச்சிங் பவுடரைப் போலவே உதயனின் முகத்தில் பயம் பரவியிருந்தது. உதயனின் வீடு முழுக்க மருந்து அடிக்கப்பட்டு, வீட்டிற்குள் யாரும் போகாதபடிக்கு தடுப்பு அமைக்கத்  தகரம் இறங்கிக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் பெரிய கோயிலைக் கடந்தபோது, உதயனுக்கு கும்பிடக்கூட தோன்றவில்லை.

அடுத்த முக்கால்மணி நேரத்தில், அப்பகுதியின் ஆரம்ப சுகாதார ஊழியரும், இன்னும் சிலருமாக வந்து, தெருமுழுக்க யாருக்காவது ஜூரமோ,சளியோ இருக்கிறதா என்பதை விசாரித்துக் கொண்டு, உதயனின் வீட்டுக்கருகில் யாருக்கோ காத்திருப்பதைப் போல இருந்தனர். அவர்களின் முகத்திலும் பயம் இருந்தது. ஜீப் ஒன்றில் வந்த அதிகாரி, அவர்களை யாருக்கும் கேட்காதபடிக்கு திட்டிக் கொண்டிருந்தான். அதற்குள் அவரோடு வந்திருந்த பயங்கர உடைகள் அணிந்திருந்த இருவர், உதயனின் அப்பா, அம்மா, தம்பியையும் வண்டியில் ஏற்றியிருந்தனர். அவர்கள் அந்த அதிகாரியிடம் ஏதோ பேப்பரைக் காட்டி கேட்டபோது, அவன் அதை அவர்களிடம் காட்டச்சொன்னான். வாங்கிப் பார்த்த ஆரம்ப சுகாதார ஊழியர், நிமிர்ந்து சபரியின் வீட்டைக் காட்டினார். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த சபரியை வரச்சொல்லி கையை காட்டினர். நேற்று உதயனை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போய் வந்ததால், சபரிக்கும் டெஸ்ட் எடுக்கவேண்டுமென சொல்லி அவனையும் ஏற்றிக் கொண்டு வண்டி கிளம்பியது. இவர்கள் லைனில் நின்று டெஸ்டை முடித்துக் கொண்டு வெளியே வந்த போது, ஏற்றிக் கொண்டுவந்த வண்டி இல்லை. அங்கிருந்து வீட்டிற்கு வர ஆட்டோவோ, பஸ்ஸோ கிடையாது. கொஞ்ச நேரத்திற்குப் பின் கவிதா அக்காவின் வண்டியில் மூவராகப் போய், ஒருவரை விட்டுவிட்டுத் திரும்பி வரும் போது ஆளுக்கொரு வண்டியில் வந்து, கவிதா அக்கா வண்டியைத் தந்துவிட்டு, மற்ற மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். பயம் மெல்ல மெல்லத் தொற்ற ஆரம்பித்தது. இதற்கிடையில் உதயனும் ஓயாமல் சபரியிடம் போனில் பேசிக்கொண்டே இருந்தான். தூக்கத்தில் கேட்கிற ஃபேன் சத்தம் கூட ஆம்புலன்ஸ் சத்தம் போலவே இருந்தது. ஆனால் காலையில் சத்தமே இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்து நின்றிருந்தது. உதயனின் தம்பிக்கும், அப்பாவுக்கும் மட்டும் நோய்த் தொற்றை உறுதிசெய்து அழைத்துப்போன போது, உதயனின் அம்மாவின் முகம் பெரும் பதட்டத்திலிருந்தது. உதயன் சபரியை அழைத்து விவரம் கேட்டுக்கொண்டான்.

உதயனோடு, ஒரு நாளெல்லாம் இருந்தும், அவன் தம்பி,அப்பாவோடு இருந்தும் கூட சபரிக்கு நோய் தொற்றவில்லை என்பது அவனுக்கு தைரியத்தை தந்திருந்தது. அதற்குள் உதயன் சபரியை அழைத்து வீட்டிலிருந்து கொஞ்சம் துணி, குளிக்க பக்கெட், பிளாஸ்டிக் மஃகு எல்லாம் வாங்கி வந்து தரச் சொன்னான். அவன் வாங்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்து வார்டுக்கு வெளியே நின்ற போது ஒருவன் மாடியிலிருந்து, உதயனிடம் பக்கெட் எவ்ளோ சார், என்றதைக் கவனிக்காதவன் போல, உள்ளே போன வார்டு பாய் ஒருவரிடம் இதையெல்லாம் கொடுத்து யாரிடம் தரவேண்டும் எனச் சொல்லி அனுப்பினான். வண்டியை எடுத்துக்கொண்டு வந்து கவிதா அக்கா கடையில் நிறுத்திவிட்டு உட்கார்ந்த சபரியிடம் ஒரு டம்ளரில் கபசுரக்குடிநீரை கொடுத்துவிட்டு, சுடுதண்ணி அடுப்பின் கட்டையை உள்ளே தள்ளிவிட்டு உட்கார்ந்தாள் கவிதா அக்கா.

சபரியின் வாய்க்கசப்பு அடங்கும்முன் உதயனிடமிருந்து போன் வந்தது. அவன் பொருட்களை வாங்கிக் கொண்டதாகவும், ஒரு தைலம் பாட்டில் வேண்டுமென்றும், இங்க ஒரு அண்ணனுக்கு லுங்கி ஒன்னும், ஹெட் போன் ஒன்னும் கேக்கறாரு, வாங்கிட்டு வந்து தந்தா, எக்ஸ்ட்ரா நூறு ரூபா தரன்னும் சொல்றாரு என்றான். சபரி, அவனிடம் சரியென சொல்லிவிட்டு, கவிதா அக்காவிடம் விவரத்தை சொல்லிய போது, அவள் சிரித்தபடியே, அதான் அன்னைக்கே சொன்னனே என்றாள். அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாத்தையும் வாங்கிகொண்டு வந்தவன் அதைக் கொடுத்து அனுப்பிவிட்டு, காசுக்காக காத்திருந்தான். புது நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, எடுத்துப் பேசியபோது, மேல பாருங்க மேல என்ற குரல் கேட்டு மேலே பார்த்தான். அவன் நன்றி சொல்லிவிட்டு, தரவேண்டிய பணத்தோடு நூறு ரூபாயையும் சேர்த்து பேப்பரில் மடித்துக் கீழே போட்டான். எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு, போனையும் பாக்கெட்டில் வைத்தபோது, வேறு ஒரு எண்ணில் இருந்து போன் வந்தது. அழைத்தவருக்கு, தனது வீட்டிலிருந்து பிளாஸ்க், பெட்ஷீட் இரண்டும் எடுத்து வரவேண்டிய தேவை இருந்தது. இவன் சரி என்றதும், அவர் தன் மகனின் போன் நம்பரை அனுப்பி வைத்தார். அந்த நம்பருக்குப் பேசி எங்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

இவன் அந்த வீட்டிற்குப் போகும் முன்னரே, ஒரு பை தயாராக வீட்டு வாசலில் மாட்டி வைத்திருந்தார்கள், இவன் அதை எடுத்துக்கொண்டு வந்து, ஆஸ்பத்திரிக்கு வந்த போது, மேலிருந்து அழைத்த பை-காரர், பையில் 150 ரூபாய் பணமிருப்பதாகவும், அதை எடுத்துக் கொண்டு பையை கொடுத்தனுப்பும் படியும் சொன்னார். அவனும் எடுத்துக் கொண்டு, பையைக் கொடுத்து அனுப்பினான். கவிதா அக்கா கடைக்குத் திரும்பி தட்டை எடுத்து சோறு போட்டுக் கொண்டு சாம்பார் ஊற்றிக் கொள்ளப் போனவனை தடுத்த கவிதா அக்கா, டிபன் பாக்ஸ் ஒன்றிலிருந்த பிரண்டை குழம்பை ஊற்றிவிட்டு, இரண்டு முட்டை வைத்தாள். கடையின் பின்புறம் போய் அமர்ந்து சாப்பிடும் போதே இரண்டு புது நம்பர்களில் இருந்து அழைப்பு வந்தது. ஒருவருக்கு வைப்ஸ், முந்திரி, திராட்சை, பாதாமும், வேண்டுமென்று சொல்லியிருந்தார். இன்னொருவர், நம்பர் சேவ் பண்ணும்போது தெரியாம போன் வந்துருச்சு சாரி, எனக்கு எதுனா வேனும்னா சொல்றன். என்றும் சொல்லியிருந்தார். இப்படியே பத்துநாட்களுக்கு மேல், கொஞ்சம் பேருக்கு மட்டுமே செய்து கொண்டிருந்த வேலை, இப்போது சாதாரணமாக இருபது பேர் வரை தினமும் பேச ஆரம்பித்தார்கள். அதற்குள் உதயனும், அவனுடைய அப்பாவும், தம்பியும் கூட டெஸ்ட் நெகட்டிவ் ஆகி வீட்டிற்கு திரும்பியிருந்தனர். சபரிக்கு தூங்கும் போது கூட யாராவது மேலிருந்து அழைத்து ஏதாவது வாங்கிவரச் சொல்லி பணம் போடுவதுபோல இருந்தது.

தாயக்கட்டை, செஸ்போர்டு, சீட்டுக்கட்டு, புக்கு, பவர் பேங்க், நெட் மோடம் னு விதவிதமா பொருட்கள உள்ள அனுப்பியிருந்தான் சபரி. ஆட்களுக்கு ஏற்ப பணம் வாங்கிக்கொண்டான். வட்டச்செயலாளர் ஒருவர் அட்மிட் ஆனபோது, மெட்ராஸ் பக்கமெல்லாம் சிக்கன் போடுறாங்க, இங்க என்ன முட்ட மட்டும் போடுறீங்க, அது சரி இல்ல, இது சரி இல்ல என்ற நாளிலிருந்து, கெடுபிடி இன்னும் அதிகமாகி வார்டு பாய்கள் எதையும் வாங்கிக் கொண்டு போகவும் பயந்தார்கள். மறுநாளே துணி காயவைக்கும் கயிறு வாங்கி மேலே ஒருத்தரைக் கூப்பிட்டு அவரிடம் கயிறைக் கொடுத்து வெளிப்பக்க ஜன்னலில் கட்டிவிடச் சொல்லி அதுவழியாக அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான் சபரி. மறுநாள் இரண்டாவது மாடிக்கு தரச்சொல்லி ஒரு தூக்குவந்தது. அதுதான் வட்டசெயலாளர் இருக்கும் மாடி. அனேகமாக அவருக்காகக் கூட இருக்கலாம். அவர் கேட்டிருந்த கேள்விகளால், அந்த மாடியை ரொம்ப கெடுபிடியாகவே வைத்திருந்தனர். நூறு ரூபாய் வாங்கிக்கொண்டு தூக்கோடு கொண்டி ஒன்றை மாட்டி அனுப்பிவிட்டான். வட்டச்செயலாளர் தான் கயிறை இழுத்தார். தூக்கை உள்ளே எடுக்க முடியாது என்பதால் தான் கொண்டி ஏற்பாடு செய்திருந்தான் சபரி. வட்டச்செயலாளர், கூட ஒருவனை வைத்துக்கொண்டு வார்டு முழுவதும் தூக்கிலிருந்த சிக்கனை வினியோகித்து முடித்துவிட்டு, சபரியைப் பார்த்து சிரித்தார். அன்று மாலை மூன்றாவது மாடியில், இரண்டு நாட்களுக்கு முன் செஸ் போர்டு வாங்கிய ஒருவர் இறந்துவிட்டதாகத் தகவல் வந்தபோது, போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான்.

மறுநாள் வட்டச்செயலாளரின் ஏற்பாட்டில் பெரிய பாத்திரத்தில் சிக்கன் வந்திருந்தது. மேலிடத்தில் பேசி, நேராகவே உள்ளே எடுத்துச் சென்றார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்களே அதை வழங்கவும் ஏற்பாடாகி இருந்தது. ஒவ்வொரு நாளும் உள்ளே வருவோரின் எண்ணிக்கை கூடிய போது, பதினைந்து நாள் உள்ளே என்பதும் கூட எட்டு நாளாகவோ, ஒன்பது நாளாகவோ குறைந்திருந்தது. அன்று மதியமும் 30 வயதுக்காரர் ஒருவர் மூச்சுத் திணறலால் இறந்து போயிருந்தார். முன்பும் கூட இங்கேயே 15 க்கும் மேல் மரணத்தை பார்த்திருந்தாலும் கூட அடுத்தடுத்த நாட்களில் மரணத்தைப் பார்த்தபோது சபரிக்கு ஏதோ செய்தது. ஏனோ கவிதா அக்கா கடையும் இரண்டு நாளாக இல்லை போனும் ஆஃப் ஆகியிருந்தது. தொண்டை கரகரப்போடு வீட்டிற்கு வந்து படுத்தவனுக்கு இரவுக்குமேல் ஜூரம் ஆரம்பமானது. காலையில் இன்னும் அதிகமான போது, ஆஸ்பத்திரிக்கு டெஸ்ட் கொடுக்க வந்துவிட்டான். டெஸ்ட் கொடுத்துவிட்டு கவிதா அக்கா கடைக்கு வந்தான். இன்றும் கடை இல்லை. வட்டச்செயலாளர் ஆட்கள் நிறையபேர் ஆஸ்பத்திரிக்குள் போய்கொண்டிருந்தார்கள். ஒருவேளை நெகட்டிவ் ஆகி திரும்பக்கூடும் பார்த்துவிட்டுப்போகலாம் என சபரியும் உள்ளே போனான். வட்டச்செயலாளருக்கு மூச்சுத்திணறலாகி ஆக்சிஜன் வார்டுக்குப் போயிருக்கிறார் என்றும், எம்எல்ஏ கலெக்டரிடம் பேசி, உள்ளூர் விஐபிகள், ஆஸ்பிட்டலுக்குள் இருப்பவர்களோடு பேசித் தொடர்ந்து அவருக்கு ஆக்சிஜனும், தொடர் கண்காணிப்பும் ஏற்பாடாகி இருப்பதாகவும் பேசிக்கொண்டவர்களைக் கடந்து வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து விட்டான்.

மறுநாள் காலை வீட்டிற்கு வந்த ஆம்புலன்ஸில், தேவையான பொருட்களோடு முன்னமே தயாராகி இருந்ததால் சட்டென ஏறிக் கிளம்பிவிட்டான். ஆஸ்பத்திரி உள்ளே போகும்போது கவிதா அக்கா கடையைப் பார்த்தான். இன்றும் மூடிதான் இருந்தது. இரண்டாவது மாடியில் படுக்கை ஒதுக்கியிருந்தார்கள். ஒரு சிலருக்கு மட்டுமே இவனைத் தெரிந்திருந்தது. இரண்டு நாட்களும் ரத்தம் டெஸ்ட்டும், ஈசிஜியும் எடுத்தார்கள். சுண்டல், கபசுரக்குடிநீர், முட்டை, மாத்திரைகள், என நகர்ந்தது. அடிக்கடி அறையை துடைத்துக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் துடைக்கையில் எழும் மணம் ஏதோ ஒரு ஆறுதலை அந்த அறையெங்கும் பரப்பியது. வீட்டில் அம்மாவுக்கு நெகட்டிவ் வந்ததும் பயம் கொஞ்சம் தெளிந்து அன்று இரவுதான் உறங்கினான். மறுநாள் மாலை சபரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது எழுந்துவந்து ஜன்னல் பக்கமாக நின்றுகொண்டு வாயையும் திறந்து கொண்டு மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தான். ஒரு அரைமணி நேரத்திற்கு பின் தேவலாம் என்றபோது வந்து படுத்துக்கொண்டான். டாக்டரிடம் மூச்சு திணறல் பற்றிச் சொன்னபோது, ஆக்சிஜன் கொடுக்க சொல்வதாக அவனிடம் சொன்னார். இரவு தூங்கவே அவனுக்கு பயமாய் இருந்தது. திணறல் ஏதும் இல்லை என்றாலும் மூச்சை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டான். காலையில் எழுந்த போது, எதிர்வரிசையில் இருந்த ஒருவர் நெஞ்சுவலியில் இறந்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். பத்தரை மணிக்கு மேல்தான் பெட்டிலிருந்து அவரை அப்புறப்படுத்தினார்கள். அதன்பிறகு அறைமுழுவதையும் துடைத்துவிட்டுப்போன பிறகு தான் ஒருசிலர் சாப்பிட்டார்கள். மதியம் சபரிக்கு மூச்சுதிணறுவதைப்போல இருந்ததும் எழுந்து ஜன்னல் பக்கம் நின்றுகொண்டான். ஆனால் திணறல் அதிகமான போது, வார்டுபாயும், நர்ஸ் ஒருவரும் அவனை அவசர அவசரமாக ஆக்சிஜன் கொடுக்க அழைத்துப் போனார்கள். வேறொருவரிடமிருந்து ஆக்சிஜனை மாற்றி கொடுப்பதற்குள் சபரி திணறல் அதிகமாகி இறந்துவிட்டான். வட்டச் செயலாளர் திரும்பிப் படுத்துக்கொண்டார்.    

***

ஆசிரியரி தொடர்புக்கு –  vasanthprabu20@gmail.com

திருவண்ணாமலையில் வசிக்கிறார். தொழில்முறை வடிவமைப்பாளராகவும், நிழற்படக் கலைஞராகவும் இருக்கிறார்.

பூ மணக்கும் துயரம்

1

அய்யப்பன் மகாராஜன்

முன்பே குறித்து வைத்திருந்த இரவுக்கு இருவரும் சரியாக வந்து சேர்ந்தது முருகேசனுக்கு வசதியாக இருந்தது. அவர்களைக் கண்ட பரபரப்பில் தனது பாலியஸ்டர் இரட்டை வேட்டியினை இழுத்து புட்டம் தெரிய தூக்கிக் கட்டிக் கொண்டான். ஒருவனின் கக்கத்தில் சுருட்டப்பட்ட சாக்குப்பை இருந்தது.

முருகேசன் அவர்களுக்குக் காட்டிய இடம் முக்கிய சாலையிலிருந்து பிரிந்த ஒரு தெருவின் இடையில் திரும்பும் ஒரு மடக்கு சந்தாக இருந்தது. நேராகப் போய் ஒரு வளைவுப் போட்டுத் திரும்ப வேண்டும். தெரியாதவர்கள் மீண்டும் வந்த வழிக்கே வந்து குழம்புவார்கள்.

அவதானித்துப் பார்த்தால் ஒரு இடுக்குத் தெரியும். அதில் நுழைந்தால் கிடைக்கும் பள்ளத்தில் இறங்கினால் ஓடித் தப்பித்து விடலாம்.

“வார நேரமாச்சி. நா எதுத்தாக்குல இருக்க பலசரக்குக் கட வாசல்ல நிப்பேன். நீ சொவத்துக்குப் பொறத்தாக்குல சாஞ்சி நின்னுக்கோ… அவன் மறுகரையில ஒளிஞ்சி நின்னுக்கிடட்டும். அந்தாளு ரோட்டுலேருந்து தெருவுக்குள்ளத் திரும்பும்போது எப்பயும் ஒரு சீரேட்டுப் பத்த வப்பான்…

படிக்கன் ஆளு அவந்தாமுன்னா நா கடைக்குப் பக்கத்துல இருக்க முடுக்குக்குள்ள போயிருவேன். நீங்க சோலிய முடிச்சிருங்கோ… ”

“ஒருவ்வேள ஆளு ஏதாவது சுதாரிச்சிட்டாம்னா தப்பிக்கதுக்கு உள்ளதான் ஓடணும். அந்தாக்குல, நீ மறுகரையிலேருந்து வந்து நேரயே வச்சுச் சவுட்டு. அவங்கிட்ட பெலம் கெடையாது. சாஞ்சிருவான். என்னா?”

“செரிண்ணே ஒஞ்சொல்லுபடியே முடிச்சீருதோம்..”

சொன்னது போலவே முருகேசன் எதிர்க்கடை உப்பு மூட்டையுடன் சேர்ந்து கொண்டான். பரபரப்பைக் கூட்டிக் கொள்ள பின்புற தொடைகளை இரண்டு கைகளாலும் தட்டிக் கொண்டான் ஒரு ஊச்சாளியைப் போல.

விழித்த வாக்கில் இருளினுள்ளே நகர்ந்து கொண்டிருந்தது நேரம். இந்த சமயத்தில் ஒரு வண்டிச் சத்தம் நேரே சாலையிலிருந்து திரும்பி அவர்களை நோக்கி வந்தது. முருகேசன் எட்டிப் பார்த்தான். வருவது தெரியாமல் இருக்க கைவண்டி வேகத்தில் ஒரு போலீஸ் ஜீப் அவனுக்கு எதிராக வந்தது. வேறு வழியில்லாமல் முருகேசன் முடுக்கினுள் பதுங்கினான்.

அதேசமயம் தெருவினுள் நின்றவன் போலீசைக் கண்டதும் அவர்கள் முன்னால் சிக்கலாகாதிருக்க ஓடாது நடக்க முற்பட்டான்.

ஆனால் முருகேசன் முடுக்கிலிருந்து வெளிப்பட்டபோது கண்ட கட்சி முற்றிலும் எதிர்பாராதது. இரண்டு போலீஸ்காரர்கள் முதல் ஆளை பிடிக்குள் வைத்திருந்தார்கள்.

“இந்த ராத்திரியில இங்க என்னலே செய்யிதே?”

“வேல முடிஞ்சுப் போயிட்டிருக்கேன் சார்.”

“என்ன வேல?”

“பழக்கட வேல சார்”

“ராத்திரில தான் பழம் விப்பியோ?”

“கட முடிஞ்சி படம் பாக்கப் போயிட்டு வாரன் சார்..”

“எந்தத் தேட்டரு?”

“பயோனியர்”

“டிக்கட்டக் காட்டு”

“டிக்கட்டு ஃப்ரண்டுக் கிட்ட மாட்டிருக்கு சார்”

“அவன எங்கே?”

“அவன் அந்த வழியா வீட்டுக்குப் போயிட்டான்”

வாகனத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அதிகாரி சொன்னார்.

“போதும். அவன வண்டியில ஏத்தும்”.

அவனை அடித்து வண்டியில் ஏற்றினார்கள். ஒரு காவலர் சந்தேகத்தில் தெருவினுள் சென்று வழி கெட்டுத் திரும்ப வந்தார். அதே சமயம் இரண்டாவது ஆள் பல முடுக்குகளுக்குத் தப்பி பஸ் ஸ்டாண்டினுள் நுழைந்து பூக்காரர்கள் அடுக்கிப் போட்டிருக்கும் பூக்கூடைகளோடும் பூத்தட்டுகளோடும்  சேர்ந்து கொண்டான்.

தாக்கப் போட்டத் திட்டம் நொறுங்கிவிட்ட கவலை முருகேசனின் தலைக்குள் அரித்தது. மாட்டிக் கொண்டிருக்கிற ஒருவன் பத்திரக் கள்ளன். அவனுடைய வாயிலிருந்து விளங்கும்படியான எதையும் தோண்டி எடுத்துவிட முடியாதுதான். எனினும் காலம் ஒரு அல்பையாக அமைந்து விட்டால் என்ன செய்வது? தன்போக்கில் செல்லும் எதனையும் அது அனுமதிக்க விரும்பாது  என்று யோசித்தான்.

அதவா அவன் எதையாவது கக்க நேர்ந்துவிட்டால் தன் சோலி இதோடு முடிந்து விடும். நகரம் முழுக்க கொடிக்கட்டி பறத்தி விடுவார்கள். கெடுபெயர்ச் சுமையால் தலையெடுத்து நடக்க முடியாது. சாவாது செத்தது போலாகி விடும்.

சிதம்பரம் சரியான நேரத்திற்குள் வராததே இத்தனை வேதனைக்கும் காரணம். அவரை நினைக்கையில் நெஞ்சுக் கூட்டில் தெவக்கம் முட்டியது.

தன் சீவிதத்திற்கான பங்கத்தினை சிதம்பரம் தானே வலிய உருவாக்கிக் கொண்டதாகவே முருகேசன் கருதிக் கொண்டான்.

ஒரு இரவில் பட்டறையை மூடும் சமயத்தில் சாவிக்காக சிதம்பரம் கையை நீட்டினார். அது பதிவு இல்லையென்பதால் முருகேசன் சஞ்சலம் கொண்டான்.

“அந்த மேலராமன்புதூரு பார்ட்டி நாலு மாச சீட்டுப் பணத்த தரவேயில்லையேடே…”

“ஆமண்ணாச்சீ”

“பாரு, நேத்தக்கி நா அந்தப் பக்கமா போனேன் பாத்துக்கோ… பைசாவ எங்கேனுக் கேட்டா… அதான் துணியெடுக்க வந்தப்போ பயலப் பாத்து மொத்தப் பணத்தையையும் தந்துட்டனேங்கான்…”

ஒரு அடிக்கல் உருவிப் போவதை சமாளிக்கத் தொட்டு முருகேசன் தன் சிரிப்பினூடே சொன்னான்,

“நம்பாதியோ அண்ணாச்சி. ஒங்களக் கண்டதும் சமாளிக்கப் பாத்திருக்கான். நாம்போறேன். அப்பத்தான் சரியாவும்”. முருகேசன் தன் வேட்டி மடியினை இறுக்கிக் கட்டி விட்டு விரலால் நெக்கிப் பார்த்துக் கொண்டான்.

“ஒரு காரியம் செய்யலாமா? கடைய மூடிருவோமா?”

தன் கனவுகளிலிருந்து வழுக்கியடித்த இந்தத் தருணத்தை நேர்கொள்ள இயலாது அவரைப் பார்த்தான்.

“என்ன அண்ணாச்சி இப்படி சொல்லிட்டியோ?”

“ஆமடே!. சீட்டு நடத்துனவன் ஏமாத்திட்டுப் போயிட்டான்னு பேரும் நாணமும் கெட்டு வாழதுக்கு, ஒரேயடியா இருக்க நகையள குடுத்துக் கணக்கத் தீத்துரலாமுன்னு இருக்கேன்…”

கடையை அவரேப் பூட்ட, அதன் பொருள் தந்திபோல் விளங்கியது.

“ஒங்கய்யா இருக்காருல்லா, அவரு நம்மக் கடையில சோலிப் பாத்தவரு தெரியுமில்லா? எங்கடை சொர்ணமும் அவரும் ஒண்ணு. ஒரே தரம். அவரு அலைஞ்சிப் புடிச்சுக் குடுத்த ஆர்டருகளும் ஆளுங்களும் தான் எங்கடைய நிமிர வச்சது.

திடும்னு மனுஷன் மண்டையப் போட்டது, நானே செத்தது மாதிரி ஆச்சு. அவருக்குச் செய்ய வேண்டிய நிவர்த்திக்காவத்தான் ஒன்னையச் சேத்துக்கிட்டு வேலையும் படிச்சுக் குடுத்தேன். ஆனா…”

அவர் ஸ்டாண்டைத் தள்ளினார்.

“நாளைக்குக் கணக்கெடுத்துப் பாக்கணும். என்ன ஆனாலும் செரி, ஆர்டருக் குடுத்த பார்ட்டிக் காரங்களுக்கு நகைய துல்லியமாக் குடுக்க ஏற்பாடு செய்யணும்.”

சைக்கிளோடு கிளம்பும் போது சொன்னார். “நா ஒரு பாவப்பட்ட ஆசாரிடே..”.

அதேசமயம் முருகேசனுக்கு சைக்கிளை எளிதாக மிதிக்க வரவில்லை. கால்கள் பின்னோக்கி இடற, பெடல் எதிர்வாக்கில் சுழன்றது. கணக்குப் பார்த்தால் கதி கெட்டு விடும். செத்த மனிதர்களே தத்தமது அழிந்த பெயர்களால் இன்றும் உலவுவது அவன் கண்டதுதான்.

மடியைத் தடவிப் பார்த்தான். மிஞ்சியது இதுதான். ஒரு உறுத்தலில் ஆள் அரவமற்ற இடத்தில் சைக்கிளை நிறுத்தினான். சுவரின் எச்சரிக்கையைப் புறக்கணித்து ஒதுங்கி விட்டு மடியைத் திறந்து பொதியை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். சந்தேகத்தின் பலனாக பொதி வெறுமே தெரிந்தது. சிதம்பரம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு தான் ஒளித்து வைத்திருந்த நகையையும் எடுத்துக் கொண்டு விட்டார். சிறுகச்சிறுக சேர்த்த பலமாத வைப்பு இனி அவனுக்கு இல்லை. சகவாசிகளோடு இந்தத் தருணத்தில்தான் அவன் காரியத்தில் இறங்கத் துணிந்தான்.

முருகேசனின் முயற்சியால் முதல் ஆள் விடுபட்டு வந்தான். இடவாடு சறுக்கிய ஆத்திரம் மூவரையும் தீ மூட்டியிருந்தது. வெள்ளிக்கிழமை கடையடைப்பு நாள். இனி சிதம்பரம் வசூலுக்குத் தனியாகப் போய் வருவார். அன்று மட்டும் அவருக்கு சிறிது “வெள்ளமடி” இருக்கும். தற்போது இந்த தேதிக்கு நேரம் குறித்தார்கள்.

நினைத்தது சரியாக நடந்தேறியது. சிதம்பரம் தெருவிற்குள் இறங்கியதுமே முதாலமவன் பதுங்கி அவரைப் போக விட்டான். பிறகு பின்புறத்திலிருந்து நெருங்கி உப்புச்சாக்கினால் அவரது தலையை மூடி இறுக்கினான். எதிர்ப்புறம் முளைத்த இரண்டாமவன் எகிறி மடியில் மிதித்தான். பலாமரம் போல நிற்பு கொண்ட மனிதர் பலாக்காயாக சுருங்கினார். தன் பருவ எட்டலை அதன் மதர்ப்பை உணர இயலாத ஒரு மனநோயாளியின் குமைச்சலைப் போல இரவு தன் சீவிதத்தை முடித்துக் கொண்டது அன்று.

இரண்டு கால்களுக்கும் இடையில் தலையை சொருகிக் கொண்டவராக பலத்த முறிவுகளுடன் கிடைத்தார் சிதம்பரம். சாவின் வாசலிலிருந்து ஊசலாக உயிருடன் தப்பியது அதிசயமாகப் பேசப்பட்டது. அவரும் கடையுமாகக் கிடப்பில் வீழ்ந்த போது உயிர் பிழைத்தற்காக வீட்டார் தெய்வத்தைத் தொழ, அதே காரணத்திற்காக தெய்வத்தை நொந்தார் சிதம்பரம். அவரது வாக்கு போலவே கடை மூடப்பட்டது. எனினும் வாடிக்கையாளர்களுக்கு உண்டானதை செய்து கொடுத்தார்.

முருகேசன் எதிர்ப்புறத்திலேயே ஒரு கடையைப் பிடித்தான். இறை நம்பிக்கையும் கூடியது. தனது செலவில் சபரிமலைக்கு நண்பர்களை அழைத்துச் சென்றான். காணமல் போனவர்களுக்கான அறிவிக்குமிடம் சென்று “தன்னுடன் வந்த இன்னார் இன்னார் சாமிகள், நம்பியார் சுவாமி கட்டிடத்தின் முன் வந்து சேர்ந்து கொள்ளவும். இப்படிக்கு “தேவி ஜூவல்லர்ஸ்” என்று தனது தாயார் பெயர் சொல்லும் “கடைப்பெயரை” சன்னதியில் அறிவித்து மகிழ்ந்தான்.

கடை மினுக்கத்துடன் கூடிய ஒரு விழைவான வாழ்க்கையை அவனுக்குப் பெற்றுத் தந்தது. ஒரு நேரம் பார்த்து அவன் அம்மா கேட்டாள்.

“வீட்டுல ஒரு கொமர வச்சிருக்கோம். அவள ஒரு எடம் பாத்துத் தள்ளிவிட வேண்டாமாலே? . தரம் வருது. என்ன செய்வியோன்னு கேக்காவோ. நா இன்னும் மூச்சு குடுக்கல.”

“அதுக்கு நா என் செய்யணும்?”

“ஆளு யாருன்னு கேளேன்?”

“என்னச் செலவாவும்? அதச் சொல்லு மொதல்ல”

“அத நாம பேசிக்கிடலாம். நீ மொதல்ல ஆளு யாருன்னு தெரிஞ்சிக்கிடாண்டாமா?”

“சும்மக் கெட்டுவானா?”

“அதெப்படி?. வெறுங்கையோட எவன் கெட்டுவான்?”

“முடியாதுல்லா?. எவனோ ஒருத்தன் எங்கேயிருந்தோ வருவான். நாமக் கஷ்டப்பட்டு உண்டாக்கி அவன்கிட்டத் தூக்கிக் குடுக்கணும்!. அப்படித்தானே? ஒங்கிட்ட இருக்கதப் போட்டு அனுப்பு”

“யெங்கிட்ட யாதுலே? இருந்ததெல்லாத்தையும் வாங்கித் தானே நீ கடையப் போட்டே?”

அவன் சீறிக் கொண்டு வந்தான்.

“நீ தந்தது எந்த மூலைக்கி?. அந்த நச்சாபிச்சாக் காச வச்சி டெக்கரேசன் கூட செய்யப் பத்தல. லச்சக் கணக்குல கடத்த வாங்கியாக்கும் மொதலுப் போட்டிருக்கேன். அதக்குடுத்தேன் இதக்குடுத்தேன்னு என்கிட்டே வந்திராதீங்கோ.”

முத்து உள்ளறையில் வெளிறி நின்றாள். அவள் தனது நெஞ்சில் கைவைக்க தேவிக்கு வலித்தது.

“நீ இது என்னத்தல பேசுதே? ஒரு அண்ணன்காரன் பேசுத பேச்சா?”

“என்னக் கொண்டு ஆகாது. என்னவாம் செய்யுங்கோ”.

அவளது எண்ணங்கள் உயிரை இழந்தன. அதன் பிறகு வீட்டுச் செலவிற்குக் கூட அவனிடம் நிற்பதற்கு அவளுக்கு மானக் கேடாக இருந்தது. ஊரில் பார்ப்பவர்கள் “ஒனக்கு என்னக்கா? ஒம்பேருல கடை வச்சப் பொறவு ஒனக்குத் தெளிச்சம் தான்” என்றார்கள். அவள் யாரிடமும் மூச்சு விடக் கூட பயந்தாள்.

வீட்டுவேலைப் பத்தாமல் சமரின் போது ஆளெடுத்த சமயம் துப்புரவு பணியாளராக வேலைக்குச் சேர்ந்தாள். சித்திரவிளையைச் சேர்ந்த ராஜி அவளுக்கு இந்த உபகாரத்தினை செய்தாள். ஒரு நட்பின் அடுக்கத்தில் நிகழும் கொட்டுதல் போல இருவரது குடும்பச் சங்கதிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 

மாரி பேருந்து நிலையத்தின் மேற்புற படிக்கட்டுகளின் அருகே பூ விற்றுக் கொண்டிருந்தான். ஒருசமயம் படிக்கட்டின் வழியாக இறங்கிப் போன முத்தைக் கண்டதும்  அருகில் இருந்தவனிடம் பூக்கூடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு படிக்கட்டுகளைத் தாவிப் போனான்.

“ஒங்கூட கொஞ்சம் வரட்டா?”

“எதுக்கு?”

“பேசதுக்குத் தான்”

“என்னத்தப் பேசணும்?”

முத்து நின்று அவனை நேருக்குநேராகப் பார்த்தாள். அவன் புன்னைகைத்தான்.

“என்னையப் புடிச்சிருக்குன்னு சொன்னியாமே! ஆமாவாமா?”

“யார் சொன்னது?” அவள் அதிர்ந்து போய் கேட்டாள்.

“உங்கம்மாதான்”

“அப்படிலாம் எதுவும் இல்ல. எனக்கு எந்த எழவும் இஷ்டவும் இல்ல. ஓடிப் போயிரு”

பந்தியில் விலக்கப்பட்ட நபரைப் போல அவன் தளர்ந்து போய் நின்று கொண்டான். அவள் பேருந்தில் உட்கார்ந்த போதும் போக மனமில்லாமல் நின்றான்.

“நா கேட்டேன்னு எதையும் மனசில வச்சிக்கிடாத. வீட்டுல பேசுனத என்னமோன்னு நினச்சி அவசரப்பட்டு பேசிட்டேன். நா பேசுனது தப்புதான். போட்டும் மக்கா….”

வண்டியெடுக்க இருந்த அவகாசத்தில் அவன் தாழ்ந்த குரலில் அவளிடம் சொல்லிவிட்டு அகன்றான்.

நேர்ச்சை தவறிய நிலை போல தவித்தாள் தேவி.

“நா ஒத்துக்கிடவா? எங்கண்ணன் கைவிட்டுட்டான். எங்கம்மைக்கு எப்படியாவது என்னைக் கட்டிக் குடுத்துரனும்… இல்லேனா என்னையே நெனச்சு ஏக்கத்துல நோயாளியா மண்டையப் போட்டுருவா… அதனால போக்கத்த என்னை எப்படியாவது கட்டிக்கோ. போயி நிக்கட்டா அவன் கிட்ட…?” தேவியின் சமாதானம் சண்டையில் முடிந்தது.

ஆனால் அன்று ஏனோ அறையிலிருந்து பூவாசனையாகக் கிளர்ந்தது. அம்மா ஊதுவத்திக் கொளுத்தி வைத்திருக்கிறாளா? என்று பார்த்தாள். எதுவும் இல்லை. செடியோடு பூத்த மணம். தூக்கத்தின் இடையில் விழிப்பு வந்த போதெல்லாம் வாசனை இருந்தது. அல்லது வாசனையால் தூக்கம் இடறுகிறதா தெரியவில்லை. அதிகாலையில் எழுந்தபோது தன்னையே கூட வாசனையாக உணர்ந்தாள். பூக்களை நினைக்கையில் எதிர்பாராது தோன்றிய மாரியின் முகமும் தொடர்ச்சியாக நினைவில் வந்தது. கோணல் சிரிப்பு. இதை எப்போது கவனித்தோம் என்ற குழம்பமும் வந்தது.

சித்திரவிளைக்குப் போனவள் அவன் வீட்டைக் கடக்கும் போது எட்டிப் பார்த்தாள். மாரி பைகளாக செவந்திப் பூக்களை அசைத்துக் கொட்டிக் கொண்டிருந்தான். வாடாமல்லி மூலையில் ஒருங்கிக் கிடந்தது. கூடை கூடையாய் மல்லியும் பிச்சியும் மிதக்க, ரோஜா வாசலில் வரவேற்றது. ஒடுக்கத்து வெள்ளியில் அதிகமாக விற்பனையாகும் போலும் என நினைத்துக் கொண்டாள். அவன் பூக்களைக் கிளறி விட்ட போது கலவையாய் நெருங்கிய வாசனை அவளது மனக்கூறினை நெகிழ்வித்து துயரத்தினை அடக்கம் செய்வதை உணர்ந்து அதிசயித்தாள்.

மாலையில் திரும்பி வரும்போது வேண்டுமென்றே பேருந்து நிலைய படிக்கட்டுப் பக்கமாக வந்தாள். கூட்டத்தினிடையே பூ விற்பனைக் காரர்களில் மாரியைத் தேடினாள். அவன் நின்ற இடத்தில் வேறு ஒருவன் பூச்சரத்தினை விற்றுக் கொண்டிருந்தான். சுற்றிலும் தேடியும் வேறு ஆட்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.

“அக்கா….பூக்கா….பிச்சிவெள்ள…  மல்லியப்பூ…செவந்தி…ரோ….ஸ்!”

“மாரி இல்லையா?”

அவன் திடுக்கிட்டு கூடையைத் தூக்கிக் கொண்டான். சுற்றும் முற்றும் பதட்டத்துடன் பார்த்தான்.

“மாரி எங்கே?”

“போலீஸ் புடிச்சிட்டுப் போயிருச்சுக்கா…”. அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.

“எதுக்கு?”

“இங்க யாவாரம் பண்ணக் கூடாதுல்லா… வழக்கமா போலீஸ் வெரட்டும். விட்ரும். இப்பப் புதுசா ஒரு எஸ்ஸை வந்திருக்காரு. வந்ததும் மொதோ வேலையா பூக்கக்காரப் பயலுவள அடிச்சி இழுத்துட்டுப் போயிட்டார்… இங்க மாரிதானே மெயின் ஆளு… அங்கப் பாருங்க…”

அவள் பார்த்த இடத்தில் மாரியின் பூத்தட்டுகளும் கூடைகளும் கிடக்க அவற்றிற்கு சாத்தப்பட்டது போல பூப்பந்துகள் அறுந்துக் கிடந்தன.

அதன்பிறகு அவள் எங்கு சென்ற போதிலும் முடிந்த வரையில் பேருந்து நிலைய படிக்கட்டுகளின் வழியில் செல்ல முயன்றாள்.

மாரி விடுபட்ட செய்தியினை அம்மாவை வைத்து அறிந்த பிறகு ஒருநாள் படிக்கட்டு அருகில் வந்த போது பரபரவென சத்தத்துடன் பூ விற்றுக் கொண்டிருந்த அவனது கோணல் சிரிப்பினைக் கண்டாள்.

“ரெண்டு மொழம்”

அவன் அவளை அதிசயித்துப் பார்த்தான். மல்லியாக சுற்றப்பட்ட பூப்பந்தினை உயரேத் தூக்கிப் போட்டான். ஒரு கையில் பூச்சரத்தின் நுனி இருந்தது. பந்து திரும்பி வருவதற்குள் கையால் ஒருமுழம் பிடித்து அதை வைத்து இரண்டாக்கிக் கொண்டு பந்தினைப் பிடித்துக் கீழே வைத்தான். சிறிய வாழை இலைத் துண்டில் வைத்து மடித்துக் கொடுக்க, பூ அவளது கைக்கு வந்தது. அவள் காசினைக் கொடுத்தாள்.

“பைசா வேண்டாம்”

“பைசாவுக்குன்னா பூ தா…”.

அவன் வாங்கிக் கொண்டான்.

“போலீசுப் புடிச்சிட்டுப் போச்சாமே…?”

அவன் முகம் சற்று வாடியது. அதில் துயரின் வலி இருந்தது.

“எப்படித் திரும்பவும் பூ விக்கே?”

“பொழப்புக்கு?. ஒரு கடை இருக்கா நமக்கு? அதெல்லாம் பாக்க முடியாது?. என்னா… ஒரு ரெண்டு நாளைக்கு தரையில இருக்க முடியாது.”

“ஏன்?”

“எஸ்ஸை குண்டித் தோல உரிச்சிட்டான்”

அவள் நெற்றியில் கைவைத்தாள். அதற்குள் மூன்று பேருக்கு பூ அளந்து கொடுத்தான்.

“திரும்பவும் வர மாட்டாங்களா?”

“வருவான்… தா அங்கப் பாரு…” அவள் பார்த்த திசையில் ஒரு சிறுவன் சாலையில் நின்று கொண்டிருந்தான்.

“வந்தா பூவே….ன்னு கத்திக் கிட்டே ஓடுவான். ஒடனே நாங்களும் கெடச்சதத் தூக்கிக்கிட்டு பிச்சிப் பறந்திருவோம்”

“இதுலாம் சரியாவாதா?”

“ஒரு கடை பிடிக்கது வர…”

அவள் ஒரு நீண்ட மூச்சிலிருந்து மீண்டாள்.

“”நா ஒரு விசயம் சொல்லட்டா?”

“நல்ல விசயமானா சொல்லு”

“அன்னைக்கி நீ என்னக் கேட்டே?”

“அத விடு… எனக்குக் கிறுக்கு…”

“நீ கேட்டது உள்ளது தான்!”

அவளது மலரும் முகத்தை அவன் காணும் போதில் அவனது விரியும் அகத்தை அவள் கண்டு கொண்டிருந்தாள்.

‘ஆனா ஒரு விஷயம்… எங்கக் கையில ஒத்த நயா பைசாக் கூட கெடையாது. இருக்கத வச்சி ஒப்பேத்தனும்… நாளை இதவச்சி எந்த சங்கடமும் வரப்பிடாது. சரின்னா பாக்கலாம்”.

அருகில் நின்றவனிடம் பூக்கூடையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு, அவன் சட்டென அவள் கைப்பிடித்து படிக்கட்டுகளில் இறங்க வைத்தான். அவள் இறங்கிக் கீழே வருவதற்குள் ஓடிப் போனவன் திரும்ப வந்து ஒரு சிறிய ஓலைப் பெட்டியினை அவளுக்குக் கொடுத்தான்.

“என்னது?”

அவன் எதுவும் சொல்லாததால் அவள் பிரித்துப் பார்த்தாள். பெட்டி முழுவதும் இனிப்பசேவும், ஜிலேபியுமாக வெள்ளை நிறத்தில் நிறைந்து இருந்தது. தன் மகிழ்வினை தடுத்துக் கொள்ள அவளுக்கு பெரும்பாடாக இருந்தது. பூக்களின் வாசம்  வருவதாக நினைத்து வரும் வழியெல்லாம் பெட்டியினை அவள் முகர்ந்து கொண்டே வந்தாள்.

மாலை வடிய இருந்த நேரம். தேவி தன் மகனின் கடைக்கு வந்தாள். முருகேசன் பார்ட்டிகளுடன் இருந்ததால் கவனிக்கவில்லை. கடைக்காரப் பையன்தான் கண்டு சொன்னான். தேவிக்கு கால் கடுத்தது. உட்கார்ந்தால் பரவாயில்லை என்று தோன்ற கடைத் திண்ணையில் உட்கார்ந்தாள்.

“இங்க எதுக்கு வந்தே?”

வரும்போதே சீறிக் கொண்டு வந்தான்.

“கோவப்படாதே… ஒங்கிட்டப் பேசவே நேரம் கெடைக்கல. தங்கச்சிக்கு ஒரு நல்ல எடம் வந்திருக்கு… நீ மனசு வச்சா நடத்தி வச்சிரலாம்…”

“நீ எப்படி இங்க வரலாம்?. நா என்ன செத்தாப் போயிட்டேன்?. நாலு பேரு யாவாரம் பேசக் கூடிய எடம். இங்க வந்து கொல்லைக்குப் போற மாதிரி குத்த வச்சிக்கிட்டு இருக்கே….? யாராவது கேட்டா என்னன்னு சொல்லுவேன்? ஒம்மூஞ்சியக் காட்டி இதுதான் எங்கம்மான்னு சொன்னா எனக்குக் கொறச்சலா இருக்காதா? என்னை மதிச்சு எவனாவது கடைக்கு வருவானா? போத் தூற”.

அவள் சேலைத் தலைப்பால் வாய்க்கு அடை கொடுத்துக் கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்து பின்புறம் குளிக்கப் போனவள் வராமல் போக, முத்துத் தேடிக் கொண்டு போனாள். அழுகையைத் துடைத்துக் கொண்டிருந்த அவளை சரி செய்ய முயன்று முத்து தோற்றாள்.

“அவன் சொல்லிட்டானாம்… இவ அழுதாளாம்… போம்மா… என் வாழ்க்கைய நா பாத்துக்கிடுதேன்.. இந்தப் பிச்சைக் கேக்கத மொதல்ல நீ நிறுத்து. இந்த ஊருல ஒரு பூக்கட போடதுக்கு எனக்கு ஒரு எடம் கெடச்சா… அது போதும் எனக்கு.”

சிதம்பரத்தின் வீட்டிற்கு முத்துவை அழைத்துக் கொண்டு தேவி போனபோது குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“மவளுக்குக் கல்யாணம் வச்சிருக்கேன்… ஒரு வார்த்தை கூப்புடலாமுன்னு வந்தேன்…”

சிதம்பரத்தின் மனைவி அவர்களை அவரிடம் அழைத்துக் கொண்டுப் போனாள். எழுந்திருக்க மிகச் சிரமமாக இருப்பது கண்டு தேவிக்கு வேதனையாக இருந்தது. சிதம்பரம் பத்திரிகையை வாங்கித் தொட்டுப் பார்த்து விட்டு  தலையை ஆட்டினார்.

திருமணத்தன்று முருகேசன் தான் எல்லா இடங்களிலும் முளைத்துக் கொண்டிருந்தான். வேலைகளை இழுத்துப் போட்டு செய்தான். சிறிய மண்டபத்தினுள் பலவிதமான பூக்களைக் கொண்டு நிறைத்திருந்தார்கள் பூக்கார பையன்கள். வாசனை கதம்பமாக நிறைந்து நின்றது.

சிதம்பரம் கைத்தாங்கலாக முகூர்த்த நேரத்திற்கு சரியாக வந்தார். முருகேசன் சிரித்தபடி அவரை வரவேற்றான். மணமக்கள் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள். நடுங்கும் தனது கைகளால் மடியினை அவிழ்த்து ஒரு பொதியினை எடுத்து முத்து வசம் கொடுத்தார். அவள் ஒரு நீண்ட தங்க மாலையை பொதியிலிருந்து எடுத்து அணிந்து கொண்டாள். அவர் கண்ணோரம் பூ பூத்தது. மாரியின் கண்கள் கலங்கின. தாலிக்கட்டு முடிந்ததும் அவரது மனைவி பதனமாக அவரை அழைத்துப் போனாள்.

“எனக்கு ஒரு சந்தேகம்”

காரில் ஏறப்போன சமயம் சிதம்பரத்தின் மனைவி கேட்டாள்.

“அந்த முருகேசன் பயதான் ஒங்கள உப்புச்சாக்க மூடி அடிச்சானோ?”

“நீ பாத்தியா?”

“நா பாக்கல… கேக்கேன்”

“எத்தர தடவ தான் கேப்பே?”

முருகேசன் வழியனுப்ப வரவில்லை. சமையல் புரையில் குமைந்து கொண்டிருந்தான். கற்கள் ஒளிரும் நீள மாலை அவனை வலிக்கச் செய்தது. அதைப் பார்க்க விருப்பமில்லாது முடங்கி இருந்தான். மட்டுமல்லாது பூக்களின் வாசனையை அவன் பிரியப்படுவதேயில்லை. பூக்கள், ஊதுபத்திகள் இத்யாதிகளின் வாசனைகளை விட்டு அவன் எப்போதும் விலகியே இருப்பான். அப்பாவின் மரணம் தொட்டு அவை அவனை சாவு நினைவுகளுக்கே அழைத்து செல்கின்றன. அந்த மண்டைக் கனம் வருவது ஏனென்று அவனுக்குத் தெரியவில்லை.  

“அந்த மனுசனப் பாத்தியா… அவர உப்புச்சாக்குப் போட்டு அடிச்சவன் வீட்டுக் கல்யாணத்துக்கே வந்து செயினையும் போட்டுட்டுப் போறாரு…”

யாரோ சொன்னது போல் இருக்க, அவன் திடுக்கிட்டு வெளியே வந்தான். அங்கு யாரும் இல்லை.

மறுநாள் கடையைத் திறந்த போது கவனித்தான். எதிரில் சிதம்பரத்தின் கடையில் “தேவி பூக்கடை” என்ற பெயர்ப்பலகை புதிதாக கண்ணில் பட்டது. பூக்கள் வந்து இறங்க, காற்று வாசனையைக் கொண்டு வந்து சேர்த்தது.

மனம் வலுவில் இல்லாத நேரம். தொலைபேசி அடித்தது.

“ஹலோ”

“லைட்டு வேலைக்கு ஆளக் கூப்பிட்டிருந்தேளோ?”
“ஆமா…”

“வழி எங்கே?”

“சந்திரா ப்ரஸ் ரோடு தெரியுமில்லா?”

“ஆமா”

“அதுக்குள்ள வந்தா புதுசா தேவி ஜூவல்லர்ஸ்னு ஒரு கடை வரும்…”

“ஓ! அந்த உப்புச்சாக்குக் கடை! அங்க வந்துட்டு…?”

அவன் தொலைபேசியை வைத்தான். 

 ***

அய்யப்பன் மகாராஜன்

நானும் ராஜா தான்

2

மு. வெங்கடேஷ்

“ஓ.. ரியலி? கங்கிராட்ஸ் மேன்”.

நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன் என்பதற்காக இப்படி வியந்து பாராட்டுகிறான் இந்த விம். அத்தோடு விட்டானா என்ன? அந்தப் பெரிய அறையில் கணிப்பொறித் திரைகளுக்குள் புதைந்து கிடக்கும் எங்கள் அணியினர் அனைவரையும் அழைத்து, என்னுடைய பதிலை டச்சு மொழியில் அவர்களிடம் மொழிபெயர்த்துச் சொன்னான். நிச்சயம் அவன் என்னைக் கிண்டல் செய்கிறான் என்று எனக்குத் தோன்றியது. அவர்களின் முகங்களும் அதை உறுதி செய்வதாக இருந்தது.

இந்தக் கேள்வி இந்தியாவிலும் இதுவரை பலமுறை பலரால் 

என்னிடம் கேட்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் எல்லா  தடவையும் பொய்யான பதிலையே தந்திருக்கிறேன். இந்த விஷயத்தில் உண்மையைச் சொல்வதற்கு எனக்கு எப்போதுமே கொஞ்சம் கூச்சமாக இருக்கும். இந்த முறையும் அதையே செய்திருக்க வேண்டும். பெல்ஜியர்கள் பெரும்பாலும் உடன் பணிபுரிபவர்களின் சொந்த வாழ்க்கைக்குள் மூக்கை நுழைப்பதில்லை என்கிற நம்பிக்கையில் உண்மையைச் சொல்லிவிட்டேன்.

விம் கொஞ்சம் மாறுபட்டவன். பெல்ஜியனாக இருந்தாலும் பழகுவதில் இந்தியர்களையே மிஞ்சிவிடுவான். இந்தியர்கள் யாருடனும் எளிதில் பழகக்கூடியவர்கள் என்ற பொதுவான கருத்து உண்டு. வசீகரமானவன். யாருடனும் உடனே பழகிவிடுவான். நான் இங்கு வந்து ஆறு மாத காலமாகிறது. அவன் மட்டும் இல்லையென்றால் என் கதி அதோகதி தான்.  பல சொந்த விசயங்களை அவனுடன் பகிர்ந்து கொள்ளுமளவுக்குப் பழக்கம். எதையும் எதிர்பார்க்காமல் பழகுபவன். சாப்பாட்டு ராமன். சாப்பாடு என்றால் போதும் உலகையே மறந்துவிடுவான். ஒருவகையில் அவன் அப்படி இருப்பதில் எனக்கு சந்தோசம் தான். மாதம் குறைந்தபட்சம் இரண்டு முறையேனும் ஓசி சாப்பாடு கிடைத்து விடுகிறது. பெரும்பாலும் டச்சுப் பார்ட்டிகளை மட்டுமே விரும்பும் பெல்ஜியர்கள் மத்தியில் அடுத்தவர்களுக்கு வாங்கிக் கொடுக்கவும் அவர்களிடமிருந்து வாங்கிச் சாப்பிடுவதிலும் கில்லாடி. அவனுடைய வெகுநாள் ஆசை “லுவானியம்” சென்று சாப்பிடுவது மட்டும் இன்றுவரை நிறைவேறாமல் இருந்து வந்தது.

இந்த ஒற்றைப் பதிலுக்காக அவன் எல்லோர் முன்பும் என்னை இப்படி அவமானப்படுத்தி இருக்கத் தேவை இல்லை தான். இருந்தாலும் அவன் சொன்னதைக் கேட்டவுடன், அலுவலக நண்பர்கள் அனைவரும் கண்களை அகல விரித்தபடி வாய் பிளந்து  “ஆஹா  ஓஹோ” என்று ஆரவாரம் செய்வதைப் பார்த்தால் இதில் வேறு ஏதோ மர்மம் இருப்பதாகத் தோன்றியது. அதில் சிலர் என்னிடம் கை கொடுத்து வாழ்த்துச் சொல்லவும் தவறவில்லை. இன்னும் சிலர் தங்களுக்குள் ஏதோ பேசிச்சிரித்துக் கொண்டிருந்தார்கள். சில  உண்மைகள் ஏற்படுத்தும் சங்கடங்களுக்கு பொய்யே தேவலை என்று தோன்றியது. இனிமேல் யார் கேட்டாலும் உண்மையைச் சொல்லப் போவதில்லை என்று மனதுக்குள் தீர்மானம் செய்து கொண்டேன்.  

சந்திப்பு ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த எங்களுடைய அணித்தலைவி சார்லட் லாப்டாப்பைத் தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். அந்த மரத்தளத்தில் அவளுடைய ஹீல்ஸ் சத்தம் டக் டக் என்று கேட்க, அங்கு நின்று கொண்டிருந்தவர்களைப் பார்க்கையில் அவளுடைய வருகைக்காகவே காத்திருந்தது போல் இருந்தது. நான் நினைத்தது போலவே அவளிடமும் செய்தி தெரிவிக்கப்பட, அவள் கண்களிலும் அதே வியப்பு. பொதுவாக எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் பேசுபவள் சார்லட். அது அவளுடைய குணமா இல்லை அணித்தலைவியாக  இருப்பதால் அவ்வாறு நடந்து கொள்கிறாளா என்று இன்றளவும் எனக்குத் தெரியாத ஒன்றாக இருந்து வருகிறது. அவள் ஆச்சரியப்பட்டு இதுவரை நான் பார்த்ததில்லை.

எதையோ டச்சு மொழியில் சொல்லியபடி என்னருகே வந்து வாழ்த்து தெரிவித்த சார்லட், சற்றுமுன் விம் கேட்ட அதே கேள்வியை மீண்டும் என்னிடம் கேட்டாள்.

“உண்மையாவே நீ ஏழாவதா?”

பெரும் தயக்கத்துடன், வேறு வழியில்லாமல் “ஆமாம், மொத்தம் ஏழு பேர் நான்தான் கடைசி” என்றேன்.

“ஆல் பாய்ஸ்?”.

“எஸ்”.

“தென் யு ஹவ் டு ரியலி ட்ரீட் அஸ் மேன்” என்று கூறியபடியே கூட்டத்தை விலக்கிக் கொண்டு அருகில் வந்த விம் “இன்று மதியம் நாம் அனைவரும் லுவானியம் செல்கிறோம். அது இவனுடைய விருந்தாக இருக்கப்போகிறது” என்று என் கையைப் பிடித்து, உயர்த்திச் சொன்னான். அவன் என் பதிலுக்காகக் காத்திருந்தவனாகத் தெரியவில்லை எனக்கு. இதைக்கேட்டு அங்கிருந்தவர்களின் முகத்தில் மேலும் சந்தோசம். பின் அனைவரும் அவரவர் இடத்திற்குச் சென்று தங்கள் வேலைகளைத் தொடர, வெகுநாள் கனவு நிறைவேறப் போவதை எண்ணி உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தான் விம். எதுவும் புரியாதவனாய் நான் மட்டும் தலையைச் சொறிந்தவாறு நின்று கொண்டிருந்தேன். 

விருந்து கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லைதான். ஆனால் எதற்காகக் கொடுக்கிறோம் என்பது தெரியாமலிருப்பது தான் பிரச்சனை. எப்படியும் விம் இதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை. என் மூலம் இன்று லுவானியம் சென்றுவிடலாம் என்று அவன் முடிவுசெய்து விட்டான்.  இதே பதிலை இந்தியாவிலிருந்த போது பலமுறை பலரிடம் கூறியிருக்கிறேன்.  “உண்மையாவா?”, “இந்த காலத்துல ஏழா?”, “உங்க அம்மா பாவம்”, “உங்க அப்பாவுக்கு வேற வேலையே இருந்ததில்லையா?”  இப்படிப் பலமாதிரி கேலி செய்திருக்கிறார்களே தவிர யாரும் விருந்து கேட்டதாக நினைவில்லை. கல்லூரியில் படிக்கும்போது உடன் படித்த சத்யராஜுடன் பிறந்தவர்கள் பதிமூன்று பேர் என்பதால் அவன் பெயரைச் சொல்லித் தப்பித்திருக்கிறேன். அடுத்து வரப்போகும் கேள்விகளைத் தவிர்ப்பதற்காக சிலநேரங்களில் நானே கூட இரண்டு அண்ணன்கள் என்று சொல்லியும் இருக்கிறேன். இப்போதும் அதுபோலவே சொல்லி இருக்கலாமோ என்று யோசிக்கவும் தவறவில்லை.

ஒருமுறை பள்ளியில் உடன் படித்தவர்கள் இதைச்சொல்லிக் கேலி செய்ய, கோபத்துடன் அம்மாவிடம் இதுபற்றிக் கேட்டிருக்கிறேன், “நானும் வேண்டாம்னு சொல்லித்தான் கலைக்கப் போனேன், இந்த கம்பத்துக்காரி சும்மா கெடந்தாளா என்ன? பாதவத்தி கடவுளா குடுத்தத ஏன் மைனி வேண்டாம்னு சொல்றீங்க என்று சொல்லித் தடுத்து விட்டாள்” என்றாள். நான் கோபப்படுகின்ற நேரங்களிலெல்லாம் அப்பா சொல்வது இதுவாகத்தான் இருக்கும் “பெரிய தவம் இருந்து பெத்தவரு இவரு, சும்மா கெடடி, வயிறு காஞ்சா தானா வரும் மூதி”. கம்பத்திலிருக்கும் அத்தையை எனக்கு எப்போதும் பிடித்ததில்லை.

இதெல்லாம் ஒருபுறம் மனதில் ஓடிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருந்த விம்மைப் பார்த்தேன். அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த எந்த வேலையையும் செய்யாமல், ஆன்லைனில் லுவானியத்தின் மெனு-கார்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். “லுவானியம்” இதுவரை அலுவலக ஒன்று கூடுதலுக்கோ, அணியின் ஒன்று கூடுதலுக்கோ செல்லும் இடமாகவே இருந்திருக்கிறது. ஆனால் இன்று காரணமே தெரியாமல் நான் கொடுக்கப்போகும் விருந்துக்குச் செல்லும் இடமாக மாறியிருக்கிறது. விருந்து ஓகே தான். ஆனால் லுவானியம் தான் சற்று இடிக்கிறது. விம்மிடம் கேட்டும் பார்த்துவிட்டேன் “நாம வேணா பிசேரியா போகலாமா” என்று. வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டான். அவன் செய்த ஒரே நல்ல காரியம் வெள்ளிக்கிழமை இதைச் செய்தது. வெள்ளிக்கிழமை பொதுவாகத் தொலைவில் உள்ளவர்கள் வீட்டிலேயே இருந்து வேலை செய்வது வழக்கம்.

மதியம் ஒரு மணி. நான், விம், லிண்டா, லூக் இடத்திலிருக்க, வழக்கம் போல் சார்லட் மட்டும் ஏதோ ஒரு சந்திப்புக்குச் சென்றிருந்தாள். அவள் வருகைக்காகக் நாங்கள் காத்திருந்தோம். விம்மால் இருக்க முடியவில்லை. சார்லட்டைத் திட்டத் தொடங்கி இருந்தான். அரை மணிநேரமாகியும் சார்லட் வராததால் கோபத்தில் ஒரு சிகரெட்டையும் அடிக்கச் சென்றுவிட்டான். இன்னொரு நாள் செல்லலாம் என்று சார்லட் சொல்லி விடுவாளோ என்று விம் பதட்டப்படுவதை என்னால் உணர முடிந்திருந்தது. சிறிது நேரத்தில் அவன் வரவும், சார்லட் வரவும் சரியாக இருந்தது. விம்முக்கு உயிர் திரும்பியிருந்தது. அலுவலகத்திலிருந்து வெளியேறிய நாங்கள் லுவானியம் நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம். கோடை என்பதால் வெயில் இதமாக இருந்தது. அனைவரும் கருப்புக்கண்ணாடி அணிந்திருப்பதைக் கண்ட நான், என்னுடைய கண்ணாடியை எடுத்து, துடைத்து பின் அணிந்து கொண்டேன்.

“லுவானியம்” லூவன் நகரிலிருந்து ப்ரசல்ஸ் செல்லும் வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் உணவு விடுதி. அகழி போல் அமைந்த ஓடையின் நடுவே சிறுகுன்றின் மேல் ஒய்யாரமாக அமைத்திருக்கும் ஒரு கண்ணாடி மாளிகை. இன்றைக்கும் பலர் அதை ஒரு மாளிகை என்றே எண்ணிக் கொண்டிருந்தனர். எங்கள் அலுவலகத்தினர் மட்டுமே வந்து செல்வதற்காகக் கட்டப்பட்ட உணவு விடுதியோ என்று எண்ணத் தோன்றுமளவுக்கு வேறு யாரும் வந்து செல்லாத இடமாக இருந்து வந்தது. ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கமும், டென்னிஸ் விளையாட்டு அரங்கமும் உள்ளேயே அமைத்திருக்கும். சில நேரங்களில் எங்கள் அலுவலகத்தினர் வந்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். குளிர்காலமென்றால் கண்ணாடிகள் அனைத்தும் மூடப்பட்டு, ஹீட்டருடன் கதகதப்பாக உள்ளேயே அமர்ந்து, வெளியில் கொட்டும் பனியை ரசித்தவாறே சாப்பிடும் அம்சம் கொண்டதாக இருக்கும். அதுவே கோடைக்காலமென்றால் கண்ணாடிகள் அனைத்தும் திறக்கப்பட்டு, காற்றோட்டமாக உள்ளேயோ அல்லது வெளியேயோ நம் விருப்பம்போல் அமர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளதாக அமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் அனைவரும் வெளியில் இருக்கும் மேசையில் அமர்ந்து சாப்பிடுவதையே விரும்புவார்கள். அங்கு செய்யப்படும் லசான்யா மற்றும் ஆம்லெட் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இருந்தது. இத்தனை அம்சங்களையும் கொண்ட இடத்தில் விலையைக் குறைவாக எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை தான்.

எல்லாம் சரிதான். என்னை எதற்கு விருந்து கொடுக்கச் சொல்லி அழைத்துச் செல்கிறார்கள். லுவானியம் செல்வதென்றால் ஒருவித சந்தோசம் தானாக மனதில் வந்திருக்கும். ஆனால் இன்று அது இல்லை. லுவானியத்தின் பில்லை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. சாப்பாட்டிற்கான பில்லைக் கேட்டால் மொத்த ஓட்டலை விலைபேசி முடித்ததற்கான பில்லைக் கொடுப்பார்கள். இந்த மாதம் கட்ட வேண்டிய லோனுக்கான தவணை மிஞ்சினாலே பெரிதுதான். அண்ணன் வேறு நேற்றே மெசேஜ் அனுப்பியிருந்தான். “அக்கவுண்ட்ல பணம் இருக்குல்ல? படிக்க வாங்குன லோனுக்கு இந்த மாசம் EMI பிடிப்பான். போன மாசம் மாதிரி மறந்துராத”. என்று. அதற்கு மேலும் பொறுமை இல்லாமல் காரணம் தெரிந்து கொள்ளும் பொருட்டு ஒருவழியாக விம்மிடம் கேட்டுவிட்டேன்.  “ஏழாவது பையன் என்றால் என்ன சிறப்பு?”.

“ஓ உனக்குத் தெரியாதா? சாரி டியூட். பெல்ஜியத்தில் ஏழாவது குழந்தை என்றால் தனிச்சிறப்பு உண்டு. அதற்கு ராஜ மரியாதை தான். ஏழாவதாகப் பிறக்கும் ஆண் குழந்தைக்கு நாட்டின் ராஜா ஞானத்தந்தையாகவும், பெண் குழந்தைக்கு ராணி ஞானத்தாயாகவும் இருப்பார்கள். அப்படி அமைவது ரொம்ப அபூர்வம் என்பார்கள். சாப்பிடும்போது இதுபற்றி இன்னும் விளக்கமாகப் பேசலாம்” என்றான். அவன் கூறியது எனக்குப் புரிந்தும் புரியாமலும் இருந்தது. அவன் பசியில் இருக்கிறான் என்பதை மட்டும் என்னால் உணர முடிந்தது. வெயில் தெரியாமல் காற்று சிலுசிலுவென்று வீசிக் கொண்டிருக்க, ஏற்கனவே விம் தொலைப்பேசி மூலம் அழைத்துச் சொல்லியதால் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மேசையில் சென்று அமர்ந்த பிறகு ஆர்வத்தோடு இருந்த நான் விம்மிடம் “அப்ரோம்” என்றேன்.

இந்தப் பழக்கம் எப்போதிருந்து நடைமுறையில் இருக்கிறதென்பது தெரியவில்லை, ஆனால் ஆறேழு தலைமுறைகளாக இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த நாட்டில் ஏழாவது குழந்தையாகப் பிறப்பது அத்தனை சிறப்பு. இதைக் கேட்டுக்கொண்டிருந்த சார்லட் இடைமறித்து “ஏழாவது குழந்தையாக இருந்தால் மட்டும் போதாது, பெண் குழந்தைகளே இல்லாமல் தொடர்ச்சியாக ஏழு ஆண் குழந்தைகள் அல்லது ஆண் குழந்தைகளே இல்லாமல் தொடர்ச்சியாக ஏழு பெண் குழந்தைகள் இருக்க வேண்டும். இடையில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ பிறந்திருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது” என்றாள்.  “ஓ அப்படியா இது எனக்குத் தெரியாதே” என்று கேட்டுக் கொண்டான். இது எதையுமே தெரிந்திராத லூக் அதை ஒப்புக் கொள்வதுபோல் நெற்றியைச் சுருக்கி, உதட்டைக் கீழ்நோக்கி வைத்து, பின் தலையை இடது வலமாக அசைத்தான்.

நான் இங்கு வந்தது முதல் தண்ணீரே இல்லாமல் கிடந்த ஓடை இன்று வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதிலிருந்து எழும்பிய குளிர்ந்த ஆவி என்மேல் பட, அது அந்த வெயிலின் சூட்டைத் தணிப்பதுபோல் இருந்தது. வெகுநேரம் காத்திருந்த எங்களுக்கு முதலில் சூப் பரிமாறப்பட்டது. அது சூடாகவும் இருந்தது.

சார்லெட் தொடர்ந்தாள் “அவ்வாறு பிறக்கும் குழந்தையை அரச பரம்பரையின் ஞானக்குழந்தை என்பார்கள். அப்படிப் பிறப்பதே ஒரு தனிச்சிறப்பு தான். அவ்வாறு பிறக்கும் குழந்தையை ராஜாவோ அல்லது ராணியோ சிலநேரங்களில் நேரில் வந்து வாழ்த்துவதும் உண்டு. பிறந்தது முதல் இறக்கும் வரை அவர்களுக்கென தனிச்சலுகைகள் பல உண்டு. உதாரணத்திற்கு அரண்மனையைப் பார்வையிடுதல், இலவசக்கல்வி பெறுதல், ராஜா ராணியிடமிருந்து கிடைக்கும் பரிசுப் பொருட்கள் என இன்னும் பல இருக்கின்றன. ஆனால் இப்போதெல்லாம் அதுபோன்ற ஞானக்குழந்தையைக் காண்பதென்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. தற்போதைய ராஜா ஃபிலிப்புக்கே ஒரே ஒரு ஞானக்குழந்தை தான். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி ப்ரசல்ஸ் நகரின் மௌண்டாய் தம்பதியருக்குப் பிறந்த இரட்டையர்களில் மூத்தவன் ஹாரூன் மட்டுமே ராஜாவின் ஞானக்குழந்தை. எட்டாவதாகப் பிறந்த இரட்டையர்களின் இரண்டாமவனுக்கு அந்தச் சலுகை கிடையாது.  

பேச்சின் சுவாரஸ்யத்தில் ஆர்டர் என்று கேட்டு வந்தவனைக் கூட மறந்திருந்தோம். பின் சுதாரித்துக்கொண்டு வந்தவனிடம் அவரவருக்குத் தேவையான உணவைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். காலையில் அலுவலகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் போன் செய்த அம்மா “ஏல இன்னைக்கு அமாவாசை கண்ட கழுதையும் தின்றதா” என்று சொல்லியது நினைவில் வர, எனக்கு ஒரு வெஜிடேரியன் லசான்யா என்று சொல்லி முடித்துக் கொண்டேன். குடித்த சூப் வெஜிடேரியன் என்பதையும் அவனிடம் கேட்டு உறுதி செய்து கொண்டேன். அருகிலிருந்த விம், நாம் இருவரும் இன்று பீர் அருந்தலாம் என்று சொல்லி இரண்டு “லா சோயூஃப்” என்றான். மறுக்காமல் நானும் மேலும் கீழுமாகத் தலையசைத்துக் கொண்டேன்.

லிண்டா தொடர்ந்தாள் “பவுடோயின் 1951-ஆம் ஆண்டு தனது தந்தைக்குப் பிறகு மன்னரானார். 1993-ல் மறைந்தார். அவருக்குக் குழந்தை ஏதும் இல்லை. அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர் ஆல்பர்ட் மன்னராகப் பதினொரு ஆண்டுகள் இருந்தார். பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரிலிருந்து ஒருவர் மறைந்த மன்னர் பவுடோயின் மற்றும் அவரது மனைவி ராணி ஃபேபியோலா ஆகியோரின் ஞானக் குழந்தைகளை ஒன்றிணைக்கும் “ட்ரிப் டு தி எஃப்தலிங்“ என்கிற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ஏழாம் எண்ணைக் கருத்தில் கொண்டு அக்கூட்டம் ஏழாம் மாதத்தின் ஏழாம் நாளில் நடந்ததாம். அதில் நூறு பேர் கலந்து கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு வந்தவர்கள் அதற்கு முன்பு ராஜாவின் மறைவின் போது சந்தித்துக் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். ஃபேபியோலா ராணி பல விசித்திரக் கதைகளை எழுதியிருந்தார். அவற்றில் ஒன்று ‘இந்தியன் வாட்டர் லில்லிஸ்’. அதனைப் பெருமைப்படுத்தும் விதமாகப் புகழ்பெற்ற டச்சு வடிவமைப்பாளர் அன்டன் பிக் அவர்களால் வடிவமைக்கப்பட்ட  “எஃப்தலிங்” என்ற பொழுதுபோக்கு பூங்காவில் ஒரு பூங்காவிற்கு “இந்தியன் வாட்டர் லில்லிஸ்” என்று பெயரிடப்பட்டு அது 1966-ல் திறக்கப்பட்டதாம்.  

நாங்கள் ஆர்டர் செய்திருந்த உணவை எடுத்து வந்திருந்தார்கள். எனக்கான லசான்யாவும், லா சோயூஃபும் எனக்கெதிரே வைக்கப்பட்டன. விம் கூடுதலாக ஒரு ஆம்லெட் சொல்லியிருந்தான். லசான்யாவை சுவைத்தவாறே அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். மனதில் ஒருவித பெருமித உணர்வு தோன்றுவதை என்னால் மறுக்க முடியவில்லை.

மீண்டும் விம் தொடர்ந்தான் “இந்தப் பாரம்பரியம் எப்போது தொடங்கப்பட்டது அல்லது ஏன் முதலில் ஒரு பாரம்பரியமாக மாறியது என்பது கூட இங்கு யாருக்கும் தெரியாது. எல்லோரும் இந்தப் பாரம்பரியத்தைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள் என்பதே என் கணிப்பு. அதுபோக அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் ராஜாவின் பெயரையோ ராணியின் பெயரையோ சூடிக்கொள்ளலாம். அதுவே இங்கு பலருக்கும் தெரியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. காலம் செல்லச்செல்ல ஞானக்குழந்தைகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது. இனிவரும் காலங்களில் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதை என்னால் அடித்துக் கூற முடியும். தப்பித்தவறி ஏதேனும் அதிசயம் நடந்தால்தான் உண்டு. சார்லட்டுக்கு வேண்டுமானால் அந்த எண்ணம் இருக்கலாம்” என்று சொல்லிப் போகிற போக்கில் அவளையும் கிண்டல் செய்துவிட்டுச் சிரித்தான். அனைவரும் அவனைப் பின்தொடர்ந்தனர். நானும் சேர்ந்து கொண்டேன்.

வழக்கத்தைவிட வெயில் சற்று அதிகமாக இருந்த போதிலும், அதன் வெப்பம் தெரியாமல் குளிர்ந்த காற்று அதனை ஈடு செய்து கொண்டிருந்தது. “இந்த வெயிலுக்காக எத்தனை நாட்கள் காத்திருந்தோம்” என்று லிண்டா சொல்ல அதனை ஆமோதிப்பது போல் அனைவரும் தலை அசைத்துக் கொண்டனர். விம்மின் மூளை மட்டும் வேறுவிதமாக யோசித்தது. “வரவரக் குளிர் காலம் கம்மியாவது கூட அதிக பிள்ளைகள் பெற்றுக் கொள்வதற்குத் தடையாக இருக்கும் போல. வீட்ல ஒரே புழுக்கம்” என்று சொல்லிச் சிரித்துக்கொண்டான். லசான்யாவின் சூடும், பீரின் குளிர்ச்சியும் நாவில் ஒருவித புதிய சுவையை உணரச் செய்து கொண்டிருந்தது.   

சார்லர்ட் தொடர்ந்தாள் “என்னுடைய கணவரின் தாத்தா கூட ஒரு ஞானக்குழந்தை என்று அவர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அவர் எங்கு பிறந்தார், எங்கு வாழ்ந்தார், ரோமன் கத்தோலிக்கரா, எந்த தேவாலயத்தில் பெயர் சூட்டிக்கொண்டார், எங்கு திருமணம் செய்து கொண்டார் என்ற எந்த சாட்சியங்களும் எங்களிடம் இப்போது இல்லை. சிலவருடங்களுக்கு முன்பு நாங்கள் அதுபற்றி அரசாங்க ஏட்டில் எங்கேனும் பதிவாகி இருக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். ஒன்றும் கிடைக்கவில்லை. எங்களுக்கு சந்தேகமே, அவர் தன்னை ஒரு ஞானக்குழந்தை என்று பதிவு செய்து கொண்டாரா என்பது தான். அதற்கான விடை கணவரின் குடும்பத்தில் கூட யாருக்கும் தெரிந்திருக்கவில்லை” என்றாள்.

அனைவரும் சாப்பிட்டு முடித்து பில்லுக்காகக் காத்திருந்தோம். விம் மட்டும் இன்னொரு பீர் என்று சொல்ல, சார்லட் “நாம இன்னும் வேலை செய்யணும்” என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினாள். பீர் கான்சல் செய்யப்பட்டது. வேலை நாட்களில் இரண்டு லெஹர் பீர் அல்லது ஒரு ஸ்ட்ராங் பீர் மட்டும் குடித்துக்கொள்ள அனுமதி இருந்தது. நாங்கள் ஏற்கனவே குடித்திருந்த “லா சோயூஃப்” ஸ்ட்ராங் பீர் வகையைச் சேர்ந்தது. எனக்கு ஒரு பீரே போதுமானதாக இருக்க, அது ஏற்படுத்திய போதை தலைக்கு ஏறி இருந்தது. ப்ரசல்ஸ் வீதியில் ராஜா உடை அணிந்திருந்த நான் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வர, சுற்றி துப்பாக்கி ஏந்திய வீரர்களும், டிரம்ஸ் வாசிப்பவர்களும் கூடியிருந்த மக்கள் மலர் தூவி என்னை வரவேற்றுக் கொண்டிருந்தனர். விம்மும் சார்லட்டும் எனக்கு வணக்கம் வைத்துக் கொண்டிருந்தார்கள். அதை நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டிருந்தேன்.

ஓரிரு நிமிடங்களில் சாப்பாட்டிற்கான பில் வந்தது. நினைத்தது போலவே மிக அதிகம்தான். ஆனால் ஒரே ஆறுதல் கட்டியது போக அக்கவுண்டில் உள்ள பணம் இந்த மாதத் தவணைக்குப் போதுமானதாக இருந்தது. அந்த வகையில் ராஜாவுக்கு சந்தோசம் தான்.

***

மு வெங்கடேஷ் – அண்மையில் இவர் எழுதிய கொரங்கி எனும் சிறுகதைத் தொகுப்பு வெளி வந்தது. தொடர்புக்கு -venkat.kjv@gmail.com

செல்லா பாலம்

3

தென்றல் சிவக்குமார்

ஜெமினி பாலத்தின் மீது ஆட்டோ ஊர்ந்து கொண்டிருந்தபோது வழக்கம்போல இடப்புறம் தெரிந்த, பாதியில் நிற்கும் பாழடைந்த ஒரு பிரம்மாண்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் சுபா. அதன் முன்னிருக்கும் வெற்றிடத்தில் எப்போதும் போல ஐந்தாறு சினிமா யூனிட் வண்டிகள் நின்றிருந்தன. “ஒரு நிமிஷம் லெஃப்ட் ஓரமா நிறுத்த முடியுமா?” ஆட்டோ நகரும் நிதானத்தைச் சலித்து அதே பிரம்மாண்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வினோத் “நிக்கலாம் மேடம், இப்போதைக்கு க்ளியர் ஆறாப்ல தெரில” என்றபடி ஒடித்து நிறுத்தினான்.

மூச்சடைத்தாற்போல சட்டென்று வெளிக்காற்றுக்குள் குதித்து இறங்கியவள், வினோத் கவனிப்பதற்குள்ளாக, கைப்பையிலிருந்த ரூபாய் நோட்டுகளைப் பாலச்சுவர் விளிம்பிலிருந்து எக்கி விசிறினாள். அடுத்த உந்துதலாக, கீழே விழும் தாள்களைப் பார்க்க முடிகிறதாவெனப் பார்க்கக் குனிந்தபோதுதான் வினோத் கவனம் இவள் பக்கம் திரும்ப, அருகில் ஓடிவந்தான். பார்க்க முடியவில்லையோ விருப்பமில்லையோ, இவன் ஓடி வருவதையும் உணர்ந்ததாலோ, திரும்பியவள், நேராக ஆட்டோவில் சென்று அமர்ந்து “போலாங்க” என்றாள். இவன் முழிப்பதைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து “வேற பணம் இருக்கு, போலாம்”

இதற்குள் வாகனங்கள் மெல்ல நகரத் தொடங்க, வினோத் ஓடிவந்து ஆட்டோவைக் கிளப்பினான். பாலத்துக்கடியில் வளைந்து திரும்பிய கார் வைப்பரில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டு சிக்கியிருந்தாற்போலத் தோன்றியது நிஜம்தானா என்று யோசிக்காமலிருக்கத் தலையை உலுக்கிக் கொண்டான். “என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவை போல்” என்று பாட்டு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பாட்டை நிறுத்தவேண்டுமா, அதையும் எப்படிக் கேட்பது என்று குழப்பம் எழுந்தது. துணிந்து பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்தபோது, சுபா சத்தமில்லாமல் பாட்டை ரேடியோவுக்கு இணையாக முணுமுணுப்பது தென்பட்டது. நிம்மதியாக மூச்சுவிட்டான்.

ஆனந்த் தியேட்டர் அருகில் இறங்கிக் கொண்டவள், அலைபேசி செயலி பயணக்கட்டணத்தை அறிவிக்கக் காத்திருந்த இடைவெளியில், “மேடம் ஆஃபீஸ் இங்கதானா?” அரைக் குரல்தான் வெளிவந்தது. ஒரு முறை இருமிக் கொண்டான். தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். “ஆமாங்க வினோத், அதானே உங்க பேரு, அதான் ஆப்ல வந்துச்சு”. இவ்வளவு நேரத்தில் வினோத் முதல் முறையாகப் புன்னகைத்தான் “ஆமாங்க மேடம், க்ரவுண்ட் ஃப்ளோரா மேடம்” என்பதை முடிப்பதற்குள்ளாக சரியாக சில்லறை சுத்தமாக அவனுக்குப் பணம் கொடுத்துவிட்டு, “லிஃப்ட் வந்துருச்சு” என்று லிஃப்டை நோக்கி ஓடினாள்.

அடுத்த சவாரி அங்கிருந்து சேப்பாக்கத்துக்கு, பின் அங்கிருந்து திருவல்லிக்கேணி தபால் நிலையம்.  தேனீரா, பழச்சாறா என்று யோசித்து, தனியாகத் தேனீர் அருந்தும் அபிப்ராயம் இல்லாததால் பழச்சாறு வாங்கி அருந்திக்கொண்டிருந்தபோது அலைபேசி ஒலிக்கவும் லேசாக அதிரத்தொடங்கிய மனம், அழைப்பது பத்மாதான் என்பதைப் பார்த்ததும் அமைதியானது. “என்னம்மா?” என்றதும், “வண்டி ஓட்டிட்டிருக்கியா மாமா? இவதான் என்னவோ உங்கிட்ட பேசணுமாம்” என்று மகள் தீபிகாவிடம் கொடுத்தாள். அவளுக்கு ஐந்து நாட்கள் இருந்த காய்ச்சல் அன்றுதான் தணிந்திருந்தது. “அப்பா.. ப்பா.. ஃபைனல் எக்ஸாம் வருதுப்பா.. ஸ்கூலுக்குதான் போய் அஞ்சு நாளாச்சு.. இன்னிக்கு சரியாயிருச்சுல்ல.. ட்யூஷன் போறேன்பா.. ப்ளீஸ்ப்பா” என்றது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிள்ளை. “ஏண்டா, இன்னிக்கு விட்டுட்டா இதோட திங்கக்கெழம போய்க்கலாம்ல” என்றால் சிணுங்கியது. “சரி, சரி.. நானே வந்து கூட்டிட்டுப் போறேன். அதுவரை ஒழுங்கா சாப்ட்டு தூங்கணும், சரியா” என்று வைத்தபோதுதான் லேசாக சிரிப்பே வந்தது.

பணத்தைப் பார்த்தாலே பாலத்தின் மேலிருந்து பறந்த பணத்தாட்களின் ஞாபகம் வந்தது. அமைதியாக இருக்கவே முடியவில்லை. அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வருவது கோபமா, பரிதாபமா, பயமா, எல்லாம் சேர்ந்த உணர்வா என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாப்பிடப் பிடிக்கவில்லை. மூன்று மணி வாக்கில் பெயர் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தபோது நல்ல உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்துகொண்டான். எடுத்துப் பேசி “பெர்சனல் லோன்லாம் வேண்டாங்க” என்று சொல்லுவதற்குள் இன்னும் வியர்த்துவிட்டது. விர்ரென்று கடந்த ஒரு பைக் சக்கரத்திலிருந்து பசுஞ்சாணம் இரண்டு தடங்களாகச் சாலையில் பதிந்திருந்தது. பின்னால் மெதுவாக மாட்டுவண்டி வந்துகொண்டிருந்தது. தனக்கு முன் பதிந்துவிட்ட தன் சாணத்தின் மீதே மாடு நடந்து சென்றது. வண்டி முழுக்க தொட்டிச் செடிகள்.

நல்ல வெயிலிலும், அவ்வளவு வியர்த்தபோதும், சூடாகத் தேனீர் அருந்தலாம் போலிருந்தது. வெங்கட்டை அழைத்தான். ஐந்தே நிமிடத்தில் லான்ஸி கஃபேவுக்கு வந்த வெங்கட் “ஏண்டா டீ குடிக்கவா இப்டி ஃபோன் பண்ணிக் கூப்புடுவ?” என்றுதான் ஆரம்பித்தான். குழம்பிய கண்களை ஒரு நொடியில் கண்டுகொண்டான். “என்னாச்சுடா? பாப்பா எப்பிட்றா இருக்கா?” “பாப்பா நல்லாருக்காடா, இன்னிக்கு ட்யூஷன் போறேன்னு ஒரே அடம், சரியாயிருச்சுல்ல அதான். ஆனா இது வேற சிக்கல்டா” என்றான்.

அலைபேசியை அவ்வப்போது பார்த்தபடி, காலை சவாரியைப் பற்றிச் சொல்லி முடித்து “பாலத்துலேருந்து குனிஞ்சு பாத்துட்டிருந்தாங்கடா. வெலவெலத்துப் போச்சு எனக்கு. எதாவது செஞ்சுகிட்டிருந்தா? எத்தனாவது மாடியில வேலையோ தெரியல? குதிச்சிட்டிருந்தா?” என்பதற்குள் வெங்கட் “ஏண்டா தேவல்லாம இவ்ளோ யோசிக்கறே?” கோபமாகவே கேட்டான்.

“என் பேர சொல்லி வினோத்னு சொல்லிச்சுடா அந்தம்மா. அவங்க கடசியா எனக்குத்தான ஃபோன் பண்ணாங்க? அதான் எதாவதுன்னா என் நம்பருக்கு ஃபோன் வருமோன்னு பயமா இருக்குடா. ஒண்ணும் சாப்டல. இந்த வெயில்ல தூங்கியிருக்கேன் பாரு. சரியான தலவலி” “தேவல்லாத” என்று எதோ சொல்லத் தொடங்கிய வெங்கட், “சரி டீயக் குடி, தலவலி சரியாப் போகும்” என்று மட்டும் சொன்னான்.

தேவையற்ற பயம் என்று எதுவுமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. தேவையற்ற பயம்தான் என்று நம்பவும் எதுவோ ஒன்று தேவைப்படுகிறது. தலைவலியை ஒரு காப்பியோ, டீயோ, மாத்திரையோ அப்போதைக்கு அடக்கிவைப்பதைப் போல எதையாவது செய்து இவன் சங்கடத்தை அமுக்கிவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஐந்து நிமிடம் மட்டுமே பார்த்துக்கொண்டாலும் கலகலவென்று இருக்க வேண்டாமா? புதுசு புதுசாக எங்கிருந்துதான் இந்த சங்கடங்களெல்லாம் கிளம்புகிறதோ?

“எதனா சாப்பிட்றியா?” என்று கேட்டுப் பார்த்தான் “ம்ஹூம், அஞ்சு மணிக்கு ட்யூஷன், இப்ப கெளம்புனாத்தான் சரியா இருக்கும், இன்னிக்கு சைக்கிள்ல போகவேணாம்னு பாப்பாட்ட சொல்லிருக்கேன், கொஞ்சம் லேட்டானாலும் மூஞ்சிய தூக்கிட்டு சைக்கிள்ல கெளம்பிரும்” “சரி கெளம்பு. நானும் கூட வரேன். பாப்பாவ ட்ராப் பண்ணிட்டு அந்தம்மாவுக்கே ஃபோன் பண்ணிப் பாத்துடலாம். எப்டியும் கால் லிஸ்ட்ல உன் நம்பர் இருக்குதுதான? இன்னொரு வாட்டியும் பண்ணிப் பாத்துடுவோம்”

********************

அலுவலகத்துக்காக ஒலியமர்த்தி வைத்திருந்த அலைபேசி மெல்ல அதிர்ந்தது. வீட்டுக்கு வந்ததும் ஒலிகூட்ட மறந்துவிட்டது வியப்பாக இல்லை. எங்கேயோ பார்த்த எண், யாரென்று தெரியவில்லை. எடுத்ததும், “மேடம் நான் காலைல ட்ராப் பண்ணனே ஆட்டோல, வினோத் பேசறேன் மேடம்”

ஒரு நொடி மௌனம். “மேடம் நல்லாருக்கிங்களா மேடம்?”

“நல்லாருக்கேன் விவேக்”

“வினோத் மேடம்”

“ஆ ஆமா வினோத். நல்லாருக்கேன், வீட்லதான் இருக்கேன்”

“மேடம் ரொம்ப பயந்துட்டேன். இப்பயும் ரெண்டு வாட்டி ஃபோன் எடுக்கலையே, எதும் ப்ரச்சனையா? கேக்கலாமான்னும் தெரியல. ஆனா கேக்காம இருக்க முடியல”

அனிச்சையாக அலைபேசித் திரையைத் தள்ளி இரண்டு தவறவிட்ட அழைப்புகளக் கவனித்து, நாக்கைக் கடித்துக் கொண்டு, தன்னை மீறிப் புன்னகைத்தபடி சொன்னாள்,

“அது செல்லாத பணம் வினோத். அடகு வச்சு ஜ்வல் லோன் வாங்கலாம்னு ஒரு செட் வளையலை ஜ்வல் பாக்ஸ்லேருந்து எடுத்தப்ப, அதுக்குக் கீழ ஒரு பர்ஸ்லருந்து கெடச்சுது. பழைய ஐந்நூறு ரூபாய் நோட்டு, பன்னண்டு இருந்துச்சு வினோத். ஜ்வல் லோனுக்காக பர்மிஷன் கேட்டிருந்தேன். ஆனா பேங்க் மூடியிருந்துச்சு. செகண்ட் சேட்டர்டே. அதெல்லாம் நமக்கு எங்க ஞாபகம் இருக்கு? அலுப்பாயிடுச்சு. அதனாலதான் ஆட்டோ புக் பண்ணேன்”

“ஸாரி மேடம், தேவல்லாம கேட்டு…”

“இல்ல வினோத். பர்ஸ் கனமா இருக்காப்ல தோணுச்சு. கனம்னா கல்லு மாதிரி கனம்”

“புரியுது மேடம்”

“அதான் அங்கேருந்து விசிறிட்டேன். பதறிப்போய்ப் பாத்த எல்லாரையும் யாரோவா நெனச்சு பழிவாங்கிட்ட திருப்தி. ஆனா நல்லாருக்கிங்களான்னு கேட்டுட்டு நல்ல பதிலுக்குக் காத்திருந்த உங்ககிட்ட உண்மையத்தான் சொல்ல முடியும் இல்லியா?”

“ஸாரிங்க மேடம்”

“பரவால்லங்க. இப்ப சொன்னது இன்னொரு கல்ல விசிறிட்டாப்ல நிம்மதியாத்தான் இருக்கு”

மௌனம்.

மௌனம்.

மேஜை மேல் சிந்தியிருந்த தண்ணீரில் கிறுக்கிக் கொண்டிருந்த வினோத்தின் வலது கரத்தை இழுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் வெங்கட்.

“மேடம்”

“சொல்லுங்க வினோத்”

“ஆட்டோ வேணும்னா எப்பன்னாலும் கால் பண்ணுங்க மேடம்”

***

சென்னையில் வசிப்பவர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர். அண்மையில் “எனில்” எனும் கவிதைத் தொகுப்பு வெளியானது. ஆசிரியர் தொடர்புக்கு – thendralsivakumar@hotmail.com

திலுகோத்தி சாலுமா

0

மணி எம்.கே மணி

லுபாத்தி பாலுமா, திலுகோத்தி சாலுமா என்று இசையமைப்பாளர் ரமணி சார் பாடிக் காட்டியதும் முதலில் அட, அட, அட, அட என்றவர் தெய்வா சார் தான். அவர் குரல் தனியாகக் கேட்கும். எல்லோரையும் பார்த்தார். அனைவருமே அந்த மெட்டை சம்மதிக்கிற மனநிலையில் தான் இருந்தார்கள். இது ஒன்றும் அதிசயமில்லை, ரமணி சாருக்கு உடனடியாக தனது டியூனை ஏற்க வைக்கிற அபார உத்தியிருந்தது. படம் பண்ணுகிறவர்கள் யாராக இருந்தாலும் உதாரணத்துக்கு அவர்கள் கொண்டு வருகிற எந்த மெட்டானாலும் அதைப் போலவே போட்டுக் கொடுத்து அசத்தி விடுவார். ஒருவேளை, அதையே கூட போட்டுக் கொடுத்து விடுவதுண்டு. சிருஷ்டி என்கிற பெயரில் அவர் அலட்டிக் கொள்வதில்லை. ஒரு கேச்சிங் வேண்டும், அவ்வளவு தான். அவர் பாடிக் காட்டாத பலுபாத்தி பாலுமா கிடையாது, திலுகோத்தி சாலுமா கிடையாது. மகி வெளியே வந்தான். அணைத்து வைத்த சிகரெட்டில் ஒரு துண்டு இருந்தது. பற்ற வைக்கும்போது உஷாராக மூக்கின் மீது பட்டு விடாமல் நேக்காக கொளுத்துவது இப்ப எல்லாம் அனாயாசமாக கைவசமாகிறது. எப்போ டிபன் தருவான்கள்?

வெங்காய போண்டா. அதே ஜிலேபி. ஒரு சக்கரைக் காப்பி. வயிறு தணிய இதெல்லாம் போதாதா? காலையில் இருந்து அவன் பாஸ்கர் கூட தான் இருக்கிறான். மதியம் அசைவ சாப்பாடு, பிரம்மாதம்.  வர சொல்லியிருந்தார். நடக்கிற படத்தின் புரொடியுசருக்கு தோஸ்த்து போட்டுக்கொண்டு தெய்வா சார் என்கிற நண்பர் தினமும் வருவதாகவும், தான் அறிமுகம் செய்யும்போது நீ ஒரு வணக்கம் வைத்து விடு என்றும் அவனிடம் சொல்லியிருந்தார். அறிமுகம் எல்லாம் காலை டீ டைமிலேயே முடிந்து விட்டது. பாசு சொன்னாம்பா உன்னப்பத்தி ! இரு போலாம் என்று காலையில் இருந்து உட்கார வைத்ததற்கு காரணம் புரிந்தது. டிபன் பிளேட்டுடன் தொப்பை முன்னே வர ஆனை நடை நடந்து இவர்கள் பக்கத்தில் வந்த தெய்வா சார் பாஸ்கரிடம் வாங்கிட்டியா என்று கேட்டார். பாஸ்கர் அவரிடம் தலையசைத்து விட்டு மகியின் தோளை அணைத்துக் கொண்டார். “ இன்னைக்கு பார், கீர் கிடையாது. உன் ரூமுக்குப் போவோமா? “

தெய்வாவின் காரை நிறுத்த ரொம்ப நேரம் அலைந்து திரிய வேண்டியிருந்தது.

உடல்நலமோ, மனநலமோ சமநிலையில் இல்லாமல் இருந்த தம்பியின் வாழ்வின் ஒரே நோக்கம் தொலைக்காட்சி பார்ப்பதுதான். மகியே அவனை நெருங்குவது கிடையாது. சுதந்திரப் புறா ! அவன் இருக்கிற அறையை வெளியே மூடிவிட்டு ஹாலில் வசதிகள் செய்து கொடுத்தார்கள்.  மரியாதை நிமித்தம் அவர் மட்டுமே தனியாகக் குடிப்பதை சகிக்க ஆகாமல் ஒரு சாக்கு கிடைத்ததும் சிக்கன் வாங்க மகியே படியிறங்கிச் சென்றான்,  துர்கா அக்கா பிசியாக இருந்தார்கள். அவனை அவர்களால் ஒரு கடைக்கண் பார்வை பார்க்க முடிந்ததும் ஒரு சிக்கன் என்று சொல்லி விட்டு ஒதுங்கிக் கொண்டான். ஒன்றிரண்டு பெண்கள் பிளாட்பாமில் வீடு போல வசதியாக உட்கார்ந்து கொண்டிருந்து சாப்பிட்டார்கள். மகியைப் பார்த்து ஒரு சொட்டு புன்னகை காட்டின அமுலு கையில் ஒரு தட்டை வைத்துக் கொண்டு பிச்சைக்காரி போல அக்கா அக்கா என்று சொல்லிக் கொண்டிருந்தாள். “ இருடி, தரேன் ! எனக்கு என்ன பத்து கையா இருக்கு? “ ஆனால் அவள் வேலை செய்வதை கவனித்தால் தெரியும், பத்து கைகள் தான் இயங்குகின்றன. அவளது கணவர் இலையை எடுத்துப் போட்டு பிளேட் கழுவி, காசை வாங்கிப் போடுகிறார் தான். போதாது. இந்த ராணி தெருவில் இந்தப் பிள்ளைகள் மற்றுமுள்ள குடும்பங்கள் அனைத்துமே காலையிலும் இரவிலும் பசியாற்றிக் கொள்ளுவது இங்கே என்றாகி விட்டது. ஒரு வியாபாரம் நடக்கிற கடை போல இல்லை என்பதை சற்று நேரத்தில் கண்டுபிடிக்க முடியும். ஒவ்வொருவரும் தனது அதிகாரம் செல்லுபடியாகிற குடும்பமாக வந்து கலைந்து போவார்கள்.

இதற்கு முன்பிருந்த வீட்டில் வாடகை தொல்லை வந்து அதை காலி செய்து இங்கே வந்து பாத்திரங்களை இறக்கி முடித்த உடனேயே மகியும் ராஜாவும் தங்களிடம் இருந்த கடைசிப் பைசாவில் டிபன் வாங்கினார்கள். வேறென்ன? இட்லி தான் கட்டுப்படியாகும். கடை மூடப் போகிற நேரம். இவர்கள் சாப்பிட்டு கை கழுவும்போது பார்சல் பொதியைக் கொடுத்த அக்கா மகியைப் பார்த்து ஒன்று சொன்னதும் அவன் திடுக்கிட்டான்.

“ பணம் இல்லன்னா கூட பரவால்ல. என்ன வேணுமோ வாங்கிக்கோங்க. பணம் கெடைக்கறப்ப குடுத்துக்கலாம் ! “

மறுநாள் காலையிலேயே நான்கு பேருக்கும் கடனாகக் கிடைத்த பூரி, வடகறி அவ்வளவு அமிர்தமாக இருந்தது. இந்த மாதிரி ருசியில் டிபனெல்லாம் கடைசியில் எப்போது சாப்பிட்டோம் என்று பேசிக் கொண்டார்கள். அது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நடுவில் கல்லூரி படிக்கிற சுதாகருக்கு அவன் வீட்டில் கொடுக்கிற பணம் வந்த போது கொஞ்சம் கொடுத்ததுடன் சரி. அவர்கள் கேட்பதில்லை. அவர்களின் கணவர் வந்து தலை சொறிந்தபடி ஏதாவது சொல்ல வந்தாலும் அவர்கள் அவரைக் கண்டித்து விடுவார்கள். மகி மற்றும் நண்பர்கள் என்றில்லை, இவர்களைப் போல எவ்வளவு பேரோ? இந்த நடனப் பெண்களுக்குமே கூட காசு வருவது எப்போதெல்லாமோ தான். மேற்படி தொழில் செய்யப் போகிற பெண்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டாம், அவர்களின் குழந்தைகள் தட்டு தூக்கிக் கொண்டு நேராக இங்கே வந்துவிடும்.

சிக்கன் ரெடி.

மகி சொல்ல மறந்து போயிருந்தாலும், பெப்பர் போட்டே செய்திருந்தார்கள்.

தெய்வா பல ஆங்கிளிலும் பல்டி போட்டுக் கொண்டு குடித்தார். புர்று புர்று என்று சிகரெட்டில் புகை விட்டார்.  தயிர் சோறு தின்பது போல அவர் சிக்கனைத் தின்றது விசித்திரமாக இருந்தது. இவற்றுக்கெல்லாம் நடுவில் சினிமாவைத் தாண்டி ஒரு விஷயத்தைப் பற்றிக் கூட அவர்கள் பேசவே இல்லை. சளைக்காமல் பாஸ்கர் ஈடு கொடுத்துக் கொண்டிருந்தார். மகியிடம் கூட அவர்கள் பல சந்தேகங்களைக் கேட்டுத் தீர்த்துக் கொண்டார்கள். உதாரணமாக சூளைக் கறுப்பன் எந்த சினிமா நடிகையின் ஒரு பக்க முலையை அறுத்துக் கொண்டு போனான், சிலோன் லைலா என்பது யார் போன்ற விஷயங்களில் மிகுந்த அபிப்ராய பேதங்கள் எழுந்தன. அக்காள் தங்கையை ஒரே நேரத்தில் வரவழைத்து அவர்களை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தாமல் சாட்டையால் மட்டுமே அடித்து திருப்பி அனுப்பின ஒரு தலைவரின் கதையைச் சொல்லும்போது அதிகமாக உணர்ச்சிவசப்பட்டுவிட்ட தெய்வாவிற்கு தொடர்ந்து பிடிக்க சிகரெட்டுகள் இல்லை. கீழே சென்று வாங்கி, ஒரு வீட்டின் காலி மதில் சுவர் அருகே நின்று பற்றவைத்து அந்த தலைவர் அருளிய நெக்லஸ்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தவர், துர்காவைப் பார்த்து விட்டார். அந்த நகையை எப்படி மாந்தரீகம் செய்து கொடுத்து அவள்களை அவர் கோடீஸ்வரர்களாக்கினார் என்கிற கதையை முழுமை செய்து முடிக்காமல் இடது பக்கக் கரத்தை சுவரின் மீது வைத்துக் கொண்டு வலது பக்கக் காலை ஆட்டத் துவங்கி ஒரே திசையை நோக்கி சிகரெட்டின் புகையை நெஞ்சு வரை இழுத்து, புர்ரென்று புகையை ஊதியது படு பயங்கரமாக இருந்தது. ஒரு அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்து கொண்டு இதற்கெல்லாம் வெட்கப்பட்டுக் கொண்டு நழுவிச் செல்ல முடியுமா? என்றாலும் துர்கா அக்கா அவர்களை நோக்கி ஒரு துளி இடைவெளி விடாமல் துளைத்தவாறே இருந்த அந்தக் கொடூரமான மந்தகாசப் புன்னகை, அதை மன்னிக்கவே முடியாது.

கடை பூட்டுகிற நேரம். எல்லோரும் நச்சரிக்கிறார்கள். வேலை கிடந்து ஆட்டி வைத்ததில் புடவை கிடப்பதெல்லாம் ஒரு மாதிரி தான். வயிற்றையும் இடுப்பையுமா கவனிக்க முடியும். பக்கத்திலேயே எரிகிற மஞ்சள் பல்பின் வெளிச்சம் அவர்களுடைய கண்களில் உதடுகளில் மின்னியது. தெய்வ சிகாமணி இப்போது அவர்களை அப்படியே புரட்டிப் போட்டு அல்லது நிற்க வைத்து செய்வதைப் போலவே இருக்கிற முக பாவத்துக்குப் போயிருந்தார். குடிக்காமல் நிற்கிற யாரும் இதைக் கண்டுபிடித்து விட முடியும் என்பதை அவர் அறியவில்லை. கொஞ்சம் விட்டால் இடுப்பைப் போட்டு ஆட்டி விடுவார் என்று கற்பனை செய்து விட்ட மகி கத்தியே விட்டான்.

“ போலாமா? “

அவர் எதில் ஒன்றிலிருந்தோ தாவி, மண்ணுக்கு வந்து விழுந்து சுதாரித்து என்னவோ சொல்ல முயலுகையில் மகி முறுகினான். அங்கிருக்கிற சில பையன்கள் காரின் மொத்த டயர்களையும் அறுத்துப் போட்டு விடுவார்கள் என்பதாகச் சொன்னான்.

அவருடைய கண் அவனை வெறித்தது.

முழுவதுமாகத் திரண்ட அந்தப் பகையை தீர்க்கமாக ஏறிட்டு நின்றான் மகி.

இருவரும் தங்களுடைய பார்வைகளை திரும்ப எடுத்துக் கொள்ளவில்லை.

மகியை ஒருமுறை பார்த்துக் கொண்ட பாஸ்கர் தெய்வாவை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு போனார்.

அதற்குப் பின்னர் அந்த வீட்டுக்கும் பல மாதங்களாக வாடகை கொடுக்கப்படவில்லை. அட்வான்ஸ் பணம் தீருகிற அன்று வீட்டுக்காரருடன் கூட ஒரு ஐந்து பேர் படியேறினார்கள். மொத்த பொருட்களையும் எடுத்து வெளியே வைத்துவிட்டு, கதவைப் பூட்டிக் கொண்டு போனார்கள். பொருட்களை பக்கத்து வீட்டின் அருகே இருந்த காலி இடத்தில் வைத்து விட்டு தம்பியை வேறு ஒரு தம்பி வீட்டுக்கு விட்டுவிட்டு வந்தார்கள். இரவு மாடியில்  படுத்தார்கள். மகி லண்டனில் இருக்கிற ஒரு நண்பனிடம் பணம் கேட்டிருந்தான். அது வந்து கொண்டிருக்கிறது. பேர் சொல்லித் தேடி வருவார்கள். கோட் வார்த்தை சொல்ல வேண்டும். பணம் கிடைத்து விடும். துர்கா அக்காவிற்கு பணத்தைக் கொடுத்து விட்டுக் கிளம்பி விடலாம். மேலே நடந்ததை எதுவும் சொல்லாமல் அன்று கூட இட்லி வாங்கி சாப்பிட்டார்கள்.

மாடியில் நல்ல காற்று.

மனமும் உடலும் சோர்வு.

நல்ல உறக்கம்.

தட்டி எழுப்பி இதென்ன சத்திரமா என்று கேட்டு ஒரு கூட்டம் அவர்களைக் கீழே இறக்கியது. நள்ளிரவு. கடைகள் எல்லாம் சாத்தியிருந்தன. துர்கா அக்காவின் வீட்டில் ஒரு சிறிய விளக்கின் ஒளி தெரிவது போல, தெரிந்தது போல தோன்றியதும் விரைவாக நடந்தார்கள். கொடுக்க வேண்டிய தொகை, நான்கு பேர் டிபன் சாப்பிட்டது என்று சொன்னால் நம்ப முடியாதது. அவர்கள் ஏதாவது ஒரு பெரிய விஷயத்துக்கு இந்தப் பணத்தை நம்பிக் கொண்டிருக்கக் கூடும். என்ன நினைப்பார்கள் என்பதை மகியால் கற்பனை செய்ய முடியவில்லை.

மறுநாள் லண்டன் நண்பனை போனில் பிடிக்க முடியவில்லை.

மகியும் ராஜாவும் ரோட்டில் சுற்றி பார்க்குகளில் படுத்து ஒவ்வொரு நாளும் தேர்வு செய்த பல இடங்களிலும் இரவு தங்கி அவமானத்தில் உழன்ற கதையை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். யார் யாரோ தங்களால் முடிந்த அளவில் சோறு போட்டு உயிரைக் காப்பாற்றினார்கள். மகி தனக்கு சினிமா தெரியாது என்று நினைத்துக் கொண்டான். தனக்கு அதெல்லாம் வராது என்று நினைத்துக் கொண்டான். தொடர்கள் எழுதப் போனதும் காசு கிடைத்தது. மகி நினைத்திருந்தால் அந்தக் கடனை கொஞ்சம் கொஞ்சமாகக் கூட அடைத்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. ஒருவிதமான தயக்கம் அதில் நுழைந்தவாறு இருந்து, நாட்களை தள்ளிப் போட்டான். அந்தக் கதை எப்போதேனும் நினைவில் வரும்போது ஒரு நிமிட மௌனம் வரும். அதைத் தாண்டிச்  செல்லுவது தவிர வேறு வழி? ஆனால் ஒருநாள் ஒரு தேநீர் கடையில் யாரோ ஒருவர் தோளின் மீது கரத்தைப் போட, திரும்பிப் பார்த்தவன் திடுக்கிட்டான்.

பயத்தில் மூத்திரமே முட்டிவிட்டது.

அசோக் அவனது பெயர். சந்தேகமென்ன? துர்கா அக்காவின் மகன். அப்போது ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தவன் இல்லை இப்போது. கல்லூரி முடித்து விட்டிருக்கலாம். கல்யாணம் கூடத்தான். திகுதிகுவென்று இளமை முறுக்குடன் பளிச்சென்று இருந்தான். தோளின் மீது போட்ட கரத்தை எடுக்கவில்லை. அது வலுவாக இருந்தது. அவனது கண்களைப் பார்த்துக் கொண்டு மகி என்னென்னவோ சொல்ல முயன்றான்.

அவன் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை.

“நல்லா இருக்கீங்களா சொல்லுங்க? “ என்றான்.

“ ம்”

“அவ்ளோ தான். அது போதும். அம்மா கேட்டா சந்தோஷப்படுவாங்க.“ என்றான்.

மகி மீண்டும் பல விஷயங்களை சொல்லிப் போகும் போது அதை நிறுத்தி குழல் பணத்துடன் வந்தவர்கள் உங்களைத் தேடினார்கள் என்றான். நீங்கள் பார்க்கிலும் பீச்சிலும் படுத்துக் கிடப்பதாக பலரும் சொன்னார்கள் என்றான். நீங்கள் யாருமே ஏமாற்றுகிற பிள்ளைகள் இல்லையென்று அம்மா சொல்லுவார்கள் என்றான். அவங்க நல்லா இருந்தா போதும், நம்ம காசெல்லாம் வேணா என்று தனது அம்மா சொன்னதை அவன் சொன்னபோது மகி தனது கண்ணீரை மறைக்க அப்படிப் போராட வேண்டியிருந்தது.

அப்பா திடீர் என்று ஒருநாள் இறந்து விட்டார், அம்மாவிற்கு மிகவும் வயதாகி விட்டது. கடை இன்னும் நடக்கிறது என்றான். தங்கையும், தங்கை புருஷனும் அதில் தான் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது அப்படித்தானே? இப்பவும் சினிமா இருக்கிறது. சோத்துக்கு சூத்து காயும் சினிமா மக்கள் இருந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் குடல் வெறிக்கு எதையாவது எடுத்துப் போட ஆட்கள் வேண்டாமா?

ராணி தெருவிற்கு இதற்காகவே தஞ்சம் அடைகிற தரித்திரவாசிகள் இருக்கக்கூடும்.

கனி இந்தக் கதையை என்னிடம் சொல்லி முடித்த போது இருவரும் கொஞ்சம் மௌனமாகவே இருந்தோம்.

“ சரி, விடு ! “ என்று முடிக்கவே முயன்றேன்.

“ துர்கா அக்காவை மனசால பலவந்தம் செஞ்ச ஒரு பணக்கார தடியனை எல்லாம் உனக்கு ஆதாயம் இருந்தும் நீ விரோதம் பண்ணிக்கலையா? உன்னால் முடிஞ்சதெல்லாம் நீ பண்ணியிருக்க “ என்றேன்.

அவன் இல்லையென்று தலையசைத்தான்.

“ தெய்வ சிகாமணி வந்துட்டுப் போன மறுநாள் நான் அவங்க கிட்ட பார்சல் வாங்கி திரும்பறப்ப, அவங்க இதுவரை நான் பாத்திருக்காத சிரிப்போட அந்த குண்டன் யாருன்னு கேட்டாங்க. சொன்னனே, மிஷின் மாதிரி இல்லன்னா தெய்வம் மாதிரி எல்லாருக்கும் பசி தீக்கற அன்ன பூரணி அப்ப அவங்க மொகத்தில இல்ல. அப்படியே தன் அழகைப் பூரா தன்னோட மொகத்துக்கு கொண்டு வந்துட்ட ஒரு சாதாரணப் பொம்பிள ! “

நான் அவனை ஏறிட்டேன்.

“ என்னால அது முடியாமப் போனா கூட, எதுக்காக நான் அவங்கள வெறிக்காம இருந்தேன், எதுக்காக அவங்கள ரசிக்காம இருந்தேன், எதுக்காக உங்களைப் பாக்கறப்போ எனக்கு மோகம் வளந்துகிட்டே இருக்குன்னு என் பார்வையால சொல்லாம இருந்தேன்னு நெனைக்கறப்ப தான் எனக்கு கஷ்டம் ஜாஸ்தியா இருக்கு ! நான் சொல்றத உன்னால புரிஞ்சுக்க முடியுதா? “

“ டிரை பண்றேன் ! “

“ ரொம்ப பண்ணிக்க வேணா. முடியலன்னா விட்ரு. இந்த மாதிரி ஏதாவது புரியாமப் போவும்போது நான் ஒரு பாட்டு பாடிக்கறது வழக்கம் “

இருவரும் சேர்ந்து பலுப்பாத்தி பாலுமா, திலுகோத்தி சாலுமா பாடினோம்.