Home Blog Page 68

சுற்றுச்சூழல் மதிப்பீட்டுத் தாக்கம் என்ன சொல்கிறது?

1

– ஜா. தீபா

டந்த நான்கு மாதங்களாக இந்தியா பொது முடக்கத்துக்குள் உள்ளது. பொதுமுடக்கம் தொடங்கிய முதல் இரண்டு மாதங்களில் அரசாங்கம் கொரோனாவை விரட்டுவதற்குப் பல உபாயங்களைக் கையாண்டது. விளக்கு ஏற்றுவது, கைதட்டுவது, செல்போன் ஒளியை கொரானா வைரஸுக்குக் காட்டுவது என்பதும் இவற்றில் அடங்கும். அடுத்த இரண்டு மாதங்களில் கொரோனாவில் இருந்து மக்கள் வெளிவருவதற்குப் பொருளாதார ரீதியிலான திட்டங்களை வகுப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் ‘ஆத்மநிர்பர் பாரத்’ என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். அன்றைய தினம் கூகிளில் மற்ற இந்திய மொழிகளால் தேடப்பட்ட வார்த்தையாக ‘ஆத்மநிர்பர்’ இருந்தது. அதாவது ‘தற்சார்பு இந்தியா’ என்பது அதன் அர்த்தம்.

‘தற்சார்பு பாரதம்’ என்பது இந்தியா தனக்கான பொருளாதார தேவையைத் தானே பூர்த்தி செய்து கொள்வது என்கிற அர்த்தத்தில் மோடி அவர்களால் சொல்லப்பட்டது. இந்த உரைக்குப் பின் நாட்டில் நடைபெறுகிற ஒவ்வொன்றுமே கவனத்தில் கொள்ள வேண்டியவை. அதில் முக்கியமான ஒன்றாக EIA 2020 வரைவினைப் பார்க்க வேண்டியிருக்கிறது. Environmental Impact Assessment என்பது இதன் விரிவாக்கம்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு என்கிற இந்த வரைவினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பார்ப்பதற்கு முன்பு சமீப கால உதாரணச் சம்பவம் ஒன்றினை பார்க்க வேண்டியிருக்கிறது.

தற்சார்பு பொருளாதாரக் கொள்கையின் ஒரு அம்சமாக நிலக்கரி சுரங்கங்கள் தனியார் வசம் ஏலம் விடப்படும் என்றது அரசு. உடனே அதனை செயல்படுத்தத் தொடங்கியது. சத்திஸ்கர் மாநிலத்தில் சூரஜ்பூர் மாவட்டத்தில் ஹஸ்டியோ அராந்த் என்கிற காட்டுப்பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை அரசு கடந்த ஜூன் 18 அன்று தனியாருக்கு ஏலம் விட்டுள்ளது. ‘ஆத்ம நிர்பர்’ திட்டத்தின் ஒரு பகுதி இது என்றிருக்கிறார் பிரதமர் மோடி.

இந்த அடர்ந்த காட்டுபகுதியைச் சுற்றிலுமுள்ள ஒன்பது கிராமங்களும் தற்போது இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒன்பது கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களும் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். ‘ஆத்ம நிர்பர்’ எனும் பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் காடுகளால் ஏற்கனவே தற்சார்பு பொருளாதாரத்தை நம்பியுள்ள இந்தக் கிராமத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்றிருக்கின்றனர் அவர்கள். இதோடு அந்தக் கிராமத்தினர் தங்களுடைய கடிதத்தில் இப்படி குறிப்பிட்டுள்ளார்கள், “ஏற்கனவே இங்குள்ள சமூகத்தினர் கோவிட் 19 தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இப்போது வாழ்க்கையின் நிச்சயமின்மையையும், இடப்பெயர்வினையும் சந்திப்பது துரதிருஷ்டவசமானது” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும் அரசாங்கம் தங்களது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இந்த நிலக்கரி சுரங்க ஒப்பந்தங்கள் அரசினால் அதானி நிறுவனத்துக்கு தரப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் நாம் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பிட்டு வரைவினைப்  பார்க்க வேண்டியிருக்கிறது.

Environmental impact assessment எனப்படுகிற சுற்றுச்சூழல் மதிப்பீடு மறு வரைவு செய்யப்பட்டுள்ளது. EIA என்பது நீர்நிலைகள், காடுகள் போன்ற பகுதிகளில் உருவாகிற திட்டங்கள், தொழிற்சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் குழுவினைக் கொண்டது. இந்த வரைவில் சொல்லப்பட்ட விதிமுறைகளைக் கொண்டே தொழிற்சாலைகள், அணுமின் நிலையங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றிற்கு அனுமதி தரப்படுகிறது.

இந்த வரைவு வெளிவந்ததுமே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், சூழலியல் நிபுணர்கள் என அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்கள் முன்வைக்கும் ஒரு வலிமையான கருத்தானது நம்மை எச்சரிக்கை செய்கிறது. “இந்த வரைவு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கா அழிப்பதற்கா?” என்கிற கேள்வியில் இருந்து தொடங்குகிறது அவர்களது எச்சரிக்கை.

இந்த வரைவில் உள்ள அம்சங்கள் நம்மை அச்சத்திற்குள்ளாக்குவதே இதற்கு காரணம். மிகுந்த கவனத்தில் எடுத்துக் சொல்லப்பட வேண்டியவையாக சிலவற்றைக் குறித்து தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்லி வருகின்றனர்.

உள்நாட்டு நீர்வழிப்பாதைகளில் மேற்கொள்ளப்படுகிற மாற்றங்களுக்கு சுற்றுச்சூழல் இயக்ககத்தின் அனுமதி தேவையில்லை என்கிறது புதிய வரைவு. 25 முதல் 100 கிலோமீட்டர் தூரத்துக்குள் நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதலுக்கு முன் அனுமதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையை விரிவாக்க வேண்டும் என்று அரசு நினைத்தால் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. இதற்கு சேலம் எட்டு வழி சாலைத் திட்டம் உதாரணம். இப்படியிருக்க, நூறு கிலோமீட்டர் வரை நெடுஞ்சாலையை அகலப்படுத்த சுற்றுச்சூழல் இயக்ககத்தின் முன்-அனுமதி தேவையில்லை என்பது நாம் எதிர்பாராத விளைவுளை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பிட்ட பகுதியில் காட்டுப்பகுதி குறுக்கிட்டால் அந்தக் காட்டினை அழித்து சாலையை உருவாக்குவதற்கும் அனுமதி கிடைத்திருக்கிறது என்பது கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது.

அதே போல் கட்டடமோ, ஒரு தொழிற்சாலையோ விதிமீறல்களோடு கட்டப்பட்டு வந்தால் கூட திட்டம் முடிந்த பிறகு திட்டத்துக்கு பிந்தைய ஒப்புதலைப் (Post Facto) பெறலாம் என்கிறது புதிய சட்ட விரைவு. இது சட்டத்துக்கு முரணானது என்று ஏப்ரல் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த போதும் இந்த அம்சம் வரைவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. திட்டத்தில் விதிமீறல் இருக்கும்பட்சத்தில் அரசாங்க பிரதிநிதிகளோ, திட்டத்தை முன்மொழிபவரோ மட்டுமே புகாரளிக்க இயலும். மக்களுக்கு புகாரளிக்கும் உரிமை இல்லை என்கிறது புதிய வரைவு. நம்முடைய பகுதியில் தொடங்கப்படும் புதிய தொழிற்சாலையினால் நமது நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படுமெனில் அதனை பொதுமக்களில் ஒருவராக நாம் புகாரளிப்பதற்கு இந்த புதிய வரைவு தடுக்கிறது.

இந்தியாவின் நிர்வாக அமைப்பில் எப்போதும் சில குறைபாடுகள் இருந்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்கு ஒரு உதாரணம் விசாகப்பட்டணத்தில் கடந்த மே மாதம் ஏற்பட்ட தொழிற்சாலை வாயு கசிவு. வாயு கசிவினால் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார்கள் மக்கள். இந்த வாயு கசிவுக்கு காரணமான எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலை எந்த முன் அனுமதியும் பெறாமல் இருபது வருடங்களாக இயங்கி வந்திருக்கிறது. இதை அந்த நிறுவனமே ஒப்புக் கொண்டுள்ளது. மக்கள் அதிகமாக வசிக்கும் அந்தப் பகுதியில் இது போன்ற ஆபத்தினை விளைவிக்கும் நிறுவனங்களுக்கு எப்படி அனுமதி தர முடிந்தது என்ற கேள்விக்கு நாம் விடை தேடுகிற சமயத்தில் தான் சட்டத்துக்கு புறம்பான நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரைவு கொண்டு வரப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட ‘சில திட்டங்கள்’ குறித்து பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படாது என்றும் தெரிவிக்கிறது புதிய வரைவு.

இந்த வரைவினை சட்டமாக்குவதற்கு முன்பு மக்களின் ஆலோசனைக்காக வரைவினை வெளியிடவேண்டும் என்கிறது விதிமுறை. அதனால் இந்த புதிய வரைவினை வெளியிட்டு மக்கள் தங்கள் கருத்தினைப் பதிவு செய்வதற்கு ஜூன் மாதம் 10ம் தேதி வரை மத்திய அரசு கால அவகாசம் தந்திருந்தது. இந்த நோய்த்தொற்று காலத்தில் இந்த கால அவகாசம் மிகக் குறைவானது என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டதால் ஆகஸ்ட் 10வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதுவே குறைவான அவகாசம் தான் என்றிருக்கும்போது சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கால அவகாசத்தை ஜூன் 20ம் தேதிக்கு குறைத்திருந்தார். கால அவகாசத்தை நீட்டிக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மக்கள் தங்களது ஆலோசனைகளைத் தெரிவிக்க ஆகஸ்ட் 11 வரை கால அவகாசத்தை நீட்டித்து உத்தரவு வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கோவிட் 19 தாக்கத்திலும், பாதிப்பிலும் உள்ள இந்த சமயத்தில் புதிய வரைவினை சட்டமாக்குவதற்கு அரசு காட்டும் அவசரத்தன்மை எச்சரிக்கை உணர்வை அதிகப்படுத்துகிறது. இந்தியா போன்று வெவ்வேறு பின்னணிகள், மொழிகள் கொண்ட நாட்டில் இது போன்ற வரைவுகளை மக்கள் பார்வைக்கு கொண்டு வருகையில் மக்களின் கருத்துகளைப் பதிவு செய்ய போதிய கால அவகாசம் தேவைப்படும். சுரங்கப்பணிகள தொடங்குவதாக இருந்தாலும் , அணுமின் நிலையங்கள், துறைமுகங்கள் போன்றவை நிறுவப்பட்டாலும் அதன் பாதிப்பு நேரடியாக பழங்குடியினரையும், மீனவர்களையுமே தாக்கும். அதனால் சுற்றுச்சூழல் தொடர்பான எந்த வரைவும், சட்டமும் விளிம்பு நிலை மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்வது மிக அவசியம்.

அதனால்  அவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் பிராந்திய மொழிகளில் வரைவினை அரசு வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வரைவினை வெளியிட்டிருக்கிறது சுற்றுச்சூழல் அமைச்சகம். டெல்லி உயர்நீதிமன்றம் பிராந்திய மொழிகளில் வரைவினை மொழிபெயர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டபிறகே மொழிபெயர்ப்பு பணிகள் தொடங்கியுள்ளன. வரைவு மொழிபெயர்ப்பக்கப்பட்டு மக்கள் ஒவ்வொருவரையும் குறிப்பாக பழங்குடியினர், மீனவர்கள், மலைவாழ் மக்களை எல்லாம் சென்று அடைந்து அவர்கள் அதனைப் புரிந்து கொண்டு கருத்தினையும், எதிர்ப்பையும் பதிவு செய்வதற்கான அவகாசம் தரப்படவில்லை என்பது மற்றுமொரு ஆபத்து. வரைவினை வெளியிடும்போதே பிராந்திய மொழியில் வெளியிட்டிருக்க வேண்டுமென்பது அடிப்படையான ஒரு செயல், அதனை இந்த அரசு செய்யத் தவறியிருக்கிறது. மக்களை புறந்தள்ளிவிட்டு கொண்டுவரப்படுகிற திட்டமோ என்கிற சந்தேகத்தை ஆரம்ப நிலையிலேயே இது ஏற்படுத்திவிட்டது.

இதற்கு முந்தைய வரைவின் (E I A 1996)படி, 20,000 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டடங்கள் கட்டும்போது மாவட்ட நிலை மதிப்பீட்டு நிபுணர் குழு திறனாய்ந்து கட்டடத்துக்கான அனுமதி தரும். புதிய வரைவின்படி 1,50,000 சதுர அடி வரைக்குமான கட்டடத்துக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை. அதாவது இது ஒரு விமான நிலையம் அமைப்பதன் சதுர அடி அளவு. ஒரு கட்டடம் கட்டுகையில் சுற்றுசுழல் மாசுபாடு அடையும். இதனைக் கட்டுப்படுத்தவே கட்டடம் கட்டுவதில் கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டது. 1,50,000 சதுர அடி வரை கட்டடம் கட்டலாம் என்பது சூழலுக்கு எத்தகைய ஆபத்தினை விளைவிக்கும் என்பதை புரிந்து கொண்டால் புதிய வரைவு சூழலுக்கு எந்தளவுக்கு பாதகமானது என்பதை உணர முடியும். சென்னை மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் கட்டடங்கள் அதிகம் கட்டப்படுவதால் சூழலுக்கு ஏற்படும் அபாயங்கள் அதிகம்.

தன்னிறைவு பொருளாதாரம், வர்த்தகத்தை எளிமையாக்குதல் என்கிற பெயரில் வெளிக்கொண்டு வரப்பட்ட இந்த புதிய வரைவில் உள்ள ஒரு முரணை எடுத்துகட்டாகச் சொல்லலாம்.

புதிய நிதி ஆயோக் அறிக்கையில் நிலக்கரியில் முதலீடு செய்வதென்பது அத்தனை இலாபகரமானது அல்ல என்கிறது. ஏனெனில் நிலக்கரி தொழிற்சாலைகளை நிர்வகிப்பதும், நிலக்கரியை இறக்குமதி செய்வதும் அதிக செலவினை எடுத்துக் கொள்வது. அதே நேரம் சூரிய சக்தி  திட்டங்கள் சிக்கனமானதாக உள்ளது, அப்படியிருக்க நாம் சூரிய சக்தித் திட்டத்தையே முன்வைத்திருக்க வேண்டும் என்கின்றனர் சூழலியல் நிபுணர்கள்.  ஏனெனில் அதற்கான தட்ப வெப்பமும், வசதியும் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஆனால் அரசு நிலக்கரி வளத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.

இந்தியாவின் மத்திய காட்டுப்பகுதி நிலக்கரி சுரங்கத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகள் தொடங்கிவிட்டன. இங்கு உற்பத்தியாகும் நிலக்கரியை பல பாகங்களுக்கும் எடுத்துச் செல்ல சாலைகள், ரயில்வே தண்டவாளங்கள் போடப்படும். அதற்காக மட்டுமே மத்திய அரசு 50,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இதற்காக காடுகள் அழிக்கப்பட வேண்டியிருக்கும், மக்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். சமகாலத்தில் இந்தியாவில் காடுகள் அழிக்கப்படுவது என்பது இதற்கு முன்பு நிகழ்ந்ததைவிட அதிகமோ என்கிற சந்தேகத்தை சில நிகழ்வுகள் சொல்கின்றன.

இரண்டு சம்பவங்களைச் சுருக்கமாக சொல்ல வேண்டும். மத்தியபிரதேசத்தின் உமர்வாடா கிராமம், மகாராஷ்ட்ராவின் பிஜாபூர் கிராமம், உத்தரகாண்டின் உத்தம் சிங் நகர் மாவட்டம், சட்டிஸ்கரின் மகாசமுந்த் மாவட்டம், ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டம் இங்கெல்லாம் அரசு தனியாருக்காக காடுகளைக் கையகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து இந்த இடங்களில் வாழும் பழங்குடியினர் ஒடுக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். இயற்கை சமநிலை குலைகிறது. ஒரு உதாரணம் கடந்த டிசம்பரில் ஒரிசாவில் சம்பல்பூர் மலைகிராமத்தில் இலட்சக்கணக்கான மரங்கள் திடிரென்று வெட்டி வீழ்த்தப்பட்டன. இந்தக் காட்டினை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். சித்ராங்கதா சௌத்ரி என்கிற பத்திரிக்கையாளர் இதனை வெளிக் கொண்டு வந்த பின்னரே சுற்றுசூழல் ஆர்வலர்களின் அழுத்தத்தால் தற்காலிகமாகக் காட்டினை அழிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த காட்டுப்பகுதி நெய்வேலி நிலக்கரி குழுமத்தினரால் அதானிக்கு ஒப்பந்தமாகத் தரப்பட்டிருந்ததே காட்டின் அழிப்புக்கு காரணம்.

இரண்டாவது உதாரணம் ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் 1890களில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்து நிலஉரிமைக்காக விவசாயிகளை ஓரணியில் இணைத்தவர் பிர்சா முண்டா. இன்றும் அவர் ஜார்கண்ட் மக்களின் ‘பகவான்’, மாபெரும் தலைவராக நினைக்கப்படுகிறார்.

25வது வயதில் பிர்சா முண்டா சிறையில் இறந்தபிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் சோட்டாநாக்பூர் குத்தகை சட்டத்தினைக் (1908) கொண்டு வந்தது. அதன்படி ஜார்கண்ட் பழங்குடியினரின் நிலங்களை விவசாயம் மற்றும் அரசு சேவைக் நிறுவனக் கட்டடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிறது சட்டம். அதோடு நில குத்தகை உரிமையை ஒரே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பழங்குடியினைரிடம் மட்டுமே தர இயலும் என்பதும் சட்டத்தின் அம்சம்.

ஆனால் பாஜக அரசு இதில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. அதன்படி நிலம் கேள்விக்கு உட்படுத்தாமல் எவர் வசம் வேண்டுமானாலும் தரப்படலாம் என்பதான திருத்தமாக இருந்தது. கிராம சபையின் அனுமதி பெறப்படாமல் நிலங்களை தாரை வார்க்கும் வேலையிலும் அரசு ஈடுபட்டது. இதனை எதிர்த்து பழங்குடியினர் இலட்சக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக கிராமத் தலைவர்கள் உட்பட 10000க்கும் அதிகமானவர் பேரில் தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

இப்படியான சந்தேகங்களையும், தீர்க்கப்பட வேண்டிய அம்சங்களையும், மறைமுகத்தன்மையும் கொண்டதாக புதிய வரைவு உள்ளதாலேயே அனைத்துத் தரப்பினரும் எதிர்த்து வருகிறார்கள். நாட்டின் வளர்ச்சி என்கிற ஒற்றை வார்த்தையில் அத்தனையையும் கடந்து செல்ல நினைக்கிறது அரசு. தற்சார்பு பொருளாதாரம் என்பதை வெறும் கவர்ச்சியான வாக்கியமாக மாற்றிவிட்டு அதன் போர்வையில் எந்தத் திட்டத்தையும் கொண்டு வந்துவிடுகிற வித்தையினை அரசு செய்யத் தொடங்கிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்படுகிறது.

நீர், நிலம் காற்று இவை மக்களுக்கானது, வருங்கால சந்திதியினருக்கானது.  வெறும் அரசியல் பாண்டங்கள் இல்லை இவை. சில நிறுவனங்களுக்கு மட்டுமே வளர்ச்சி ஏற்படுத்தித் தருவதல்ல தற்சார்பு பொருளாதாரம் என்பது. கண்ணுக்கெட்டாத தொலைவில் வாழுகின்ற ஒவ்வொரு மக்களும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வாழ்வாதாரத்தினை ஏற்படுத்திக் கொடுப்பது. அது இந்த புதிய வரைவு ஏற்படுத்தித் தருமா என்பது சந்தேகமே. அரசு இந்த புதிய வரைவினை செயல்படுத்த உறுதி கொண்டுள்ளது.

பொதுமக்களான நமக்கிருக்கும் ஒரே கேடயம் நமது கருத்தினை பதிவு செய்வது மட்டுமே. ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் நமது கருத்தினையும், எதிரிப்பினையும் மின்னஞ்சல்கள் மூலமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்ப வேண்டியது மட்டுமே ஒரே வழி.

இது நமது குரலாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. நமது வருங்கால சந்ததிகள் நம்மை நம்பச்செய்யும் கடைசி யுக்தியும் இது தான்.

  • ஜா.தீபா

சங்கர்

0

ஸ்ரீரஞ்சனி

 “ங்கர், நீங்க தனியத்தானே இருக்கிறீங்க, உங்களோடை ஒருத்தரும் இல்லைத்தானே?”

 “ஓம், நான் தனியத்தான் இருக்கிறன்”

 “என்ரை பெயர் ஜோசேப். நான் ஒரு லோயர், சட்ட உதவி நிலையத்திலிருந்து கதைக்கிறன். குடிச்சிட்டு வாகனம் ஓடினதெண்டும் மனைவியைத் தாக்கினதெண்டும் உங்களிலை குற்றம்சாட்டப்பட்டிருக்கு …”

“குடிச்சதெண்டு என்னைப் பொலிஸ் பிடிக்கேல்லை, அப்பிடி நான் குடிக்கவுமில்லை”

“சரி, நானும் யூனிவேசிற்றிலை இருக்கேக்கே குடிச்சிட்டு வாகனமோட்டியிருக்கிறன்தான். அது பிரச்சினையில்லை. ஆனா, பிழையை ஒத்துக் கொள்ளவேணும்… சரி, அதைப் பத்திப் பிறகு உங்கடை லோயரோடை கதையுங்கோ. இப்ப உங்கடை உரிமையள் என்னெண்டு சொல்லத்தான் நான் கோல் பண்ணினான்.”

“ஓ, ஓகே”

“பொலிஸ் உங்களிட்டை என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாதேங்கோ, நீங்க சொல்றதை உங்களுக்கெதிராக அவை கோட்டிலை பாவிக்கேலும். அவை என்னத்தைக் கேட்டாலும், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கோ, சரியோ!”

 “ஓ, ஓகே”

 “ஆனா அவை ஏதாவது செய்யச் சொல்லி உங்களைக் கேட்டால் நீங்க செய்யோணும். அதுக்கு மறுப்புச்சொல்லேலாது. உதாரணத்துக்கு உங்கடை ரத்தத்திலை இருக்கிற அற்கோலின்ரை அளவைப் பாக்கிறதுக்கா ஊதச்சொல்லி அவை உங்களைக் கேட்கக்கூடும்.” 

“ஓகே”

 “நாளைக்குக் காலமை உங்களை அவை கோட்டுக்குக் கொண்டுபோவினம். ஆராவது உங்களைப் பிணையிலை எடுக்கோணும். பிணையிலை போறதுக்கு உதவி செய்யிறதுக்கு என்னைப் போல லோயர்மார் அங்கை இருப்பினம். சரியோ? வேறை என்ன? என்னட்டைக் கேட்கிறதுக்கு உங்களுக்கு வேறை ஏதேனும் கேள்வியிருக்கோ?”

“இல்லை, நன்றி”

“ஓகே”

போனை வைத்தவனிடமிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. வேண்டாவெறுப்பாகப்போய் மூடியிருந்த அந்த அறைக்கதவைத் தட்டினான். அறைக்கு வெளியில் காவலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரின் மூக்குக்கண்ணாடிக்குக் கீழால் அவனைப் பார்த்தார். அவனை அவர் இளக்காரமாகப் பார்ப்பது போல அவனுக்கிருந்தது. அவன் தலையைத் தாழ்த்திக்கொண்டான். 

அவனிருந்த அறைக்குள் மீளவும் அவனைக் கொண்டுபோய்விட்ட அவர் கதவைப் பூட்டிக்கொண்டார். வெற்றுத்தீவொன்றில் தனித்துவிடப்பட்டிருப்பதுபோல அவனுக்கு மிகுந்த பதற்றமாகவிருந்தது. தலையிடித்தது. நாள் முழுவதும் எப்படி அங்கே கழியப்போகிறதென்ற எரிச்சல் எதையாவது அறையவேண்டும்போல ஆத்திரத்தைக் கொடுத்தது. 

மீண்டுமொரு முறை அவனுக்குள் எரிமலை ஒன்று வெடித்தது.   

“சனியன் நிம்மதியாய் திண்டு குடிச்சுக்கொண்டு என்ரை வீட்டிலை சொகுசா இருக்கும், நான் இங்கைகிடந்து அவதிப்படவேண்டிக்கிடக்கு. அந்த நாயின்ரை சகவாசமே இனி வேண்டாம்.” வெறுப்புடன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். 

முதல்நாள் இரவு நிகழ்ந்தவை திரும்பத்திரும்ப அவனை அலைக்கழித்தன. 

 “கனடா டேய்க்கு வீட்டிலை பாபர்கீயூ செய்யிறம், மனிசையையும் கூட்டிக்கொண்டு வாவன்,” குரலில் மிகுந்த உற்சாகத்துடன் மகேஸ் சொன்னான். 

“அண்டைக்குதான் மனுசியின்ரை பேர்த்தேயடா, அவள் என்ன பிளான் போட்டிருகிறாளோ தெரியாது.”

 “கனடாவின்ரையோடை அவவின்ரையையும் சேத்துக்கொண்டாடினால் போச்சுது. பிறகு வீட்டை போய் உங்கடை கொண்டாட்டங்களைச் செய்யலாம்தானே!” தோளில் தட்டிக் கண்ணடித்தான் மகேஸ்.

***

பன்னிரண்டு மணி தாண்டிய அந்த நடுச்சாமத்தில் பார்ட்டி சூடேறிக் கொண்டிருந்தது.  

“வாழ்வே மாயம்,” விமல் பாடத்தொடங்க ஆண்களும் பெண்களுமா தனித்தனிய இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அந்த இடத்தில் திரண்டனர். றிங்ஸ் உடன் உவப்பாச் சாப்பிடுவதற்காக மகேசின் மனைவி மேலும் தின்பண்டங்களைக் கொண்டுவந்து மேசையில் வைத்தா. 

வீட்டுக்குப் போவம் என சர்மிளா அவனை ஆக்கினைப்படுத்த ஆரம்பித்தாள். அந்த முஸ்பாத்தியை விட்டிட்டுப்போக அவனுக்கு மனசு வரவில்லை. அவள் அவனிடம் அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்த மகேசின் மனைவி,  “உங்களோடை தனியக் கொண்டாட வேணுமெண்டு அவ விரும்புறா, கூட்டிக்கொண்டு போங்கோவன்” என வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு சிரித்தா. 

அவனுக்கு வெட்கமும் எரிச்சலும் அவமானமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டன. சரி வெளிக்கிடு என அவளுக்குச் சொன்னவனை சந்திரன் வந்து கட்டியணைத்து, மச்சான் என்ஜோய் என்றான். மற்றவர்கள் அனைவரும் ஹப்பி பேர்த்டே சர்மி, என ஒரே நேரத்தில் ஆரவாரமாக திரும்பவும் வாழ்த்தினர்.

“நீங்க நிறையக் குடிச்சிருக்கிறியள், நான் உங்களோடை வரமாட்டன், ஊபரைக் கூப்பிடுங்கோ, அல்லது நான் பஸ்சிலை போறன்” வெளியில் வந்ததும் அவள் அவனிடம் அடம்பிடித்தாள்.

 “சாமத்திலை ஊபரிலை போறன் எண்டு நிக்கிறாய், உனக்கென்ன பைத்தியமே?”

“உங்களோடை வாறதுதான் ஆபத்து, நான் வரமாட்டன்”

“எனக்கென்ரை அளவு தெரியும். நான் அப்பிடி ஒண்டும் தலைகீழா நிக்கேல்லை. நாடகம் போடாமல் பேசாமல் ஏறு இப்ப!”

அப்போதும் மரக்கட்டைபோல அவள் அசையாமல் நின்றதில் அவனுக்கு ஆத்திரம் வந்தது. 

தலைமயிரைப் பிடித்திழுத்து, காருக்குள் தள்ளினான். வீட்டுக்குப் போகும்வரைக்கும் அவன் எதுவும் பேசவில்லை. அவள் அழுதுகொண்டிருந்தாள்.  

காரைவிட்டிறங்கி நேரடியாகப் படுக்கையறைக்குப் போனவன் உடையை மாற்றிக்கொண்டு வாஸ்ரூமுக்குப் போகவென வெளியில் வந்தபோது, லிவ்விங் ரூமிலிருந்து அவள் கதைப்பது அவனுக்குக் கேட்டது.  

“குடிச்சுச்போட்டுக் கார் ஓடவேண்டாமெண்டு சொன்னதுக்கு தலைமயிரை பிடித்…”

பேர்த்டே என்பதால் ஊரிலிருந்து அவளின் தாய் அவளைக் கூப்பிட்டிருக்கிறா என்பது ஒரு கணத்துக்குள் அவனுக்கு புரிந்தது. வேகமாகக் கீழே போனவன் போனவேகத்தில் போனைத் துண்டித்தான். ஏதோ சொல்வதற்காக வாயெடுத்தவளின் கன்னத்தைப் பொத்தியடித்தான். 

“உனக்கென்னடி விசரே? அங்கையிருக்கிறவைக்கு தேவையில்லாக் கதை சொல்றாய், உனக்காண்டி அவங்கள் பார்ட்டி வைச்சாங்கள், அதை அரைநடுவிலை விட்டிட்டு இங்கை வாறன். நாய், நாய் … நாயைக் கொண்டுவந்து நடு வீட்டுக்கை வைச்சது என்ரை பிழை… திரும்பக் கோல் பண்ணடி … லைன் கட் ஆயிற்று எண்டு சொல்லு…”

 “மாமி, அப்பிடி ஒண்டும் நான் பெரிசாய்க் குடிக்கேல்லை. சும்மா ஆட்களோடை சேந்து கொஞ்சம் எடுத்தனான். இவ என்னடா எண்டா அதைப் பெரிசாப் படம் காட்டுறா. இந்த நேரத்திலை தனிய ஊபரிலை வரப்போறனெண்டு நிண்டா. கொஞ்சம் புத்தி சொல்லுங்கோ …” சொன்னவன் அவளிடம் போனைக் கொடுத்தான்.

அவள் ஏதும் கதைக்கவில்லை. வெறுமன அழுதாள். அவளின் உதடும் ஒரு பக்கக் கன்னமும் வீங்கியிருந்தன.

அவன் மேலே போய் படுத்துக்கொண்டான். அவள் கீழேயே இருந்தாள்.

வீடு ஒரே நிசப்தமாக இருந்தது. 

***

கதவு தட்டும் சத்தம் அவனை நித்திரையிலிருந்து எழுப்பியது. அவனுக்கு மிகவும் அசதியாக இருந்தது. சத்தி வருவது போல ஓங்காளித்தது. வயிற்றைப் பிரட்டியது. யாரடா விடாமல் தட்டுறது, எரிச்சலுடன் எழும்பிப்போய்க் கதவைத் திறந்தான்.  அங்கே ஓர் ஆணும் ஒரு பெண்ணுமா பொலிஸ் நின்றது. 

அவன் காலடி நிலம் அதிர்ந்தது.

இரவுபகலா ஓடித்திரிந்து இரண்டு வேலைசெய்து, வசதியான வீட்டில் அவளை வாழவைத்ததுக்கு, அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்ததுக்கு அவனுக்குக் கிடைத்த பரிசு இதுதானென அவனின் மனம் அவமானத்திலும், ஆத்திரத்திலும் வெந்தது.

***

அடுத்த நாள் பிணையில் அவனை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த அவனின் அக்காவின் கணவர் சுரேசைப் பார்த்ததும் அவனுக்கு உடுப்பு உரிந்து விழுந்ததுபோல மிகவும் வெட்கமாக இருந்தது. 

அக்கா மீனாவின் குத்தரிசிச் சோறும், ஆட்டிறைச்சிக் கறியும், நன்கு கடைந்த முளைக்கீரைக் கறியும் அவனைப் பார்த்து முழித்தன. 

“யோசிக்கிறதை விட்டிட்டுச் சாப்பிடு தம்பி, நேற்று முழுக்கப் பட்டினி கிடந்திருப்பாய்!”

அவளின்உபசாரம் அவனைக் கரைத்தது. அவனின் முதுகை மீனா ஆதரவாக வருடிக்கொடுத்தாள்.  

 “என்ன பொம்பிளையடா அவள்? கட்டின புருஷனை ஜெயிலுக்கு அனுப்புறவள், ஒரு தமிழ் லோயரோடை இவர் எல்லாம் கதைச்சிருக்கிறார் …” அவளது குரல் இடறியது.

“கனடாவுக்கு வாறதுக்காண்டிக் கட்டுறது, பிறகு ஏதாவது ஒண்டைக் காட்டிப் பிரிஞ்சால் தங்கடை எண்ணத்துக்கு ஆட்டம் போடலாமெண்டுதான் இவளவை இப்பிடி ஆடுறாளவை. என்னோடை வேலைசெய்யிற ஒரு ஆளின்ரை பெண்சாதிக்கு இன்னொருத்தனோடை தொடர்பிருந்ததாம். இப்ப புருஷனை மாட்டிப்போட்டு அவள் அவனோடை போட்டாள்”

“இவைகளின்ரை இந்தக் கூத்துகளாலைதானே சில ஆம்பிளையள் விசர்பிடிச்சலைஞ்சு கொலைசெய்யிறளவுக்குக்கூட மாறினம்.” மீனா அலுத்துக்கொண்டாள். 

 “அங்கிள் நீங்க இனி எங்களோடைதான் இருக்கப்போறியளாம் எண்டு அம்மா சொன்னா. அன்ரிக்கு என்ன வருத்தம்?”

அவனின் மடியில் ஏறியமர்ந்த மீனாவின் மகளுக்கு என்ன சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை. 

***

அந்தத் தமிழ் லோயர் தர்மாவின் அலுவலகத்தில் பலர் காவல் இருந்தார்கள். ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு அவர் அவனைக் கூப்பிட்டார். புத்தகங்களும் பைல்களுமா அந்த அறை நிறைந்திருந்தது. ஹலோ சொன்ன அந்த மெல்லிய, உயரமான, வயதுபோன லோயரின் கண்களில் அவனுக்குக் கருணை தெரிந்தது. அவர் சொல்வதற்கு முன்பே அவருக்கு முன் இருந்த கதிரையில் அவன் அமர்ந்துகொண்டான். 

 “எப்பிடியிருக்கிறியள்?”

“என்னத்தைச் சொல்றது?”

”ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ. ஒரு பிரச்சினையுமில்லை. உங்களை ஒருத்தரும் ரெஸ்ற் பண்ணிப்பாக்கேல்லை. அதாலை குடிச்சுப்போட்டுக் கார் ஓடினது எண்டதை அவை நிரூபிக்கேலாது… இப்பிடியான குடும்ப வன்முறை வழக்குகளிலை முதல்தரம் குற்றம்சாட்டப்படுறவைக்கு மன்னிப்பிருக்கு. அடி தடி இல்லாமல் பிரச்சினைகளை எப்பிடிக் கையாளுறது எண்டு சொல்லித்தாற வகுப்புகளுக்கு போகச் சொல்லி ஜட்ஸ் சொன்னவர்தானே, அதுக்குப் பதியுங்கோ…” 

 “இதாலை என்ரை வேலையிடத்திலை ஏதேனும் பிரச்சினை வருமோ?”

“இல்லை, இல்லை. அது அவைக்குத் தெரியத்தேவையில்லை. நீங்க வழமைமாரி வேலைக்குப் போங்கோ, ஆனா பிணை நிபந்தனைகளின்படி நடக்கிறது முக்கியம். எந்தவிதத்திலும் உங்கடை மனிசியை நீங்க தொடர்புகொள்ள முயற்சிக்கக்கூடாது. ஆருக்கூடாகவும் ஏதாவது செய்திகூட அனுப்பேலாது. அவ போற இடங்களிலிருந்தும் 500 மீற்றர் விலகியிருக்கோணும். எங்காவது தற்செயலாகக் கண்டிட்டாலும் விலகிப்போயிடோணும். எதையாவது மீறினியள் எண்டால் உங்களைத் திரும்பவும் பொலிஸ் கைதுசெய்யலாம்… பிறகு நீங்க தன்னைச் சந்திக்கலாம் அல்லது வீட்டை வரலாமெண்டு அவ எழுத்திலை சொன்னா மட்டும்தான் உங்கட வீட்டுக்கு நீங்க திரும்பிப்போகலாம். அப்பிடித் தாற ஒப்புதலைக்கூட எந்த நேரத்திலும் வாபஸ் பண்ணுற உரிமை …”  

“அவ சொல்லி நான் என்ரை வீட்டை போகோணும்! ம், நல்ல கதைதான்!. முதல் வேலையா அவளை டிவோஸ் பண்ணோனும், அவளோடை மனிசன் வாழேலுமே.”

 “பொம்பிளையளுக்கு இந்த நாடு குடுக்கிற இடம்தான்.. அதாலை வாற திமிர்தான். என்ன செய்யிறது? டிவோஸ் எடுக்கோணும் எண்டால் எடுக்கலாம், ஆனா அது வேறை கதை. அதுக்கு நீங்க அதற்கான வக்கீலைச் சந்திக்கோணும். இப்ப முதலிலை இந்த வழக்கை முடிக்கப்பாப்பம்.”

***

அந்த வகுப்பு நடக்கும் இடத்தின் வாகனத்தரிப்பிடத்தில் காரை நிறுத்திப்போட்டு, கீழே இறங்கியபோது அந்தக் குளிருக்குள்ளும் அவனுக்கு வியர்த்தது. கால் இடறியது. வானம் ஒரே கருமையாக இருந்தது. அவனுக்குள் இருந்த இயலாமை அவனின் நடையில் தெரிந்தது.  

‘இந்தச் சனியனைப் போய் கலியாணம்கட்டிக் கூட்டிக்கொண்டுவந்தனே. பெரிய கண்ணை உருட்டி உருட்டிப் பாத்த பார்வையிலை விழுந்த என்னைச் செருப்பாலை அடிக்கோணும்! வெள்ளைத் தோல் எண்டு சீதனத்தையும் குறைச்சு வாங்கி, காசைச் செலவழிச்சு இங்கை கூப்பிட்டு விட்டால் … நாய் ஆட்டம் போடுறாள். இனியென்ன, என்னை ஏமாத்தி கனடாவுக்கு வந்திட்டாளே …. நாய்!’ அவனின் மனம் குமுறியது. 

சுனாமி ஒன்று பெருக்கெடுத்துப் பாய்ந்து அவன் நெஞ்சை அமுக்கியது.

அந்தச் செங்கல் கட்டிடத்துக்கு முன்னால் பல்வேறு வயதுகளில் இருந்த பல இன ஆண்கள் கூடியிருந்தனர். தமிழர் மாதிரித் தெரிந்த ஒரு முதியவருக்குப் பக்கத்தில் போய் அவன் நின்று கொண்டான்.  சரியாக ஆறு மணிக்குக் கதவு திறந்தது. அவரவர் வருமானத்துக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட கட்டணத்தை வரிசையில் நின்று எல்லோரும் கட்டினர். தன் பங்குக்கான பணத்தை அவன் எடுத்தபோது, மணித்தியாலத்துக்கு பதினாலு டொலர் தாறன்தானே என்ற தோறனையில் முதுகு முறிய வேலைவாங்கும் முதலாளி நினைவுக்கு வர அவனுக்கு மனம் கசந்தது. 

என்ன பிரச்சினைக்காக அந்த வகுப்புக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள், அதைப் பற்றி என்ன உணர்கிறார்களென ஒவ்வொருவராகக் கூறும்படி அந்த வகுப்பை ஒருங்கிணைக்கும் ஜோன்  கேட்டார். தாடியைத் தடவியபடி அவர் சிரிக்கும்போது அவரின் முகத்தின் குறுக்கே விரியும் ஒளிர்வுமிக்க அந்த வெள்ளைப் பற்கள் அவனைக் கொஞ்சம் இலேசாக்கியது. 

 “சாப்பாடு சரியில்லையெண்டு கோவத்திலை அடிச்சுப்போட்டன், அது பிழையெண்டு இப்ப விளங்குது. பிள்ளையளை விட்டிட்டு இருக்கிறது சரியான கஷ்டமாயிருக்கு. எப்ப திரும்ப வீட்டுக்குப் போவன் எண்டிருக்குது.” என்றார் ஒரு நடுத்தர வயது மனிதர்.   

 “சமரிலை ஒவ்வொரு சனியும் சொக்கர் விளையாடுறனான். அண்டைக்கு மனிசி போகவிடாம குறுக்கே நிண்டுகொண்டு சரியான அரியண்டம் தந்தா. கடைக்குப் போகோணுமெண்டு அடம்பிடிச்சா. அவவைத் தள்ளிப்போட்டு நான் சொக்கருக்குப் போட்டன், அங்கை வந்து பொலிஸ் பிடிச்சிட்டுது. என்ரை மகன் நான் இல்லாமல் படுக்கமாட்டான் … அதை நினைக்கேக்கேதான் கவலையாயிருக்கு,” அந்த இளைஞன் அழுதுவிடுவான் போலிருந்தது.  

“முப்பது வருஷத் தாம்பத்தியம். ஒரு நாளும் பெரிசா பிரச்சினைப்பட்டதில்லை…  மகன் ஒரு சொல்லும் கேட்கிறதில்லை. அவனிலை இருந்த கோவத்தை அண்டைக்கு மனிசியிலை காட்டிப்போட்டன். சும்மா தள்ளினதுதான். அதுக்கு அவன் பொலிசைக் கூப்பிட்டிட்டான்,” இது அந்த முதியவர். 

“அண்டைக்குப் பார்ட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகேக்கை காருக்குள்ளை ஏறமாட்டன் எண்டு சாமமெண்டும் பாக்காம மனிசி கத்திக்கொண்டு நிண்டா. அதாலை ஏறச்சொல்லி நான் காருக்கை தள்ள வேண்டியிருந்துது.  அவவின்ரை நன்மைக்காண்டித்தான் நான் அப்பிடிச் செய்தனான். அதிலை எந்தப் பிழையுமிருக்கிறதா எனக்குத் தெரியேல்லை …, ம்ம் வரவேணுமெண்டதுக்காண்டித்தான் இங்கை வந்திருக்கிறன்” என்றான் சங்கர். 

ஒவ்வொருவராக சொல்லும்போது அவர்கள் செய்த விடயம் சரியா, வேறென்ன வழியில் அதைத் தீர்த்திருக்கலாமென ஜோன் கேட்டபோது எல்லோரும் ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். ஆனால் அவன் மட்டும் அதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை என்றான். 

“சரி, 12 வாரத்துக்கு நாங்கள் சந்திக்கப்போறம். பல விடயங்களைக் கற்கப்போறம். முடிவில நீங்க என்ன சொல்றியளெனப் பாப்பம். எல்லாரும் கலந்துரையாடல்களில பங்குபற்றோணும், வீட்டுப்பாடம் செய்யோணும். உங்கடை செயற்பாடுகளைப் பத்தி உங்கடை கோட் தவணைக்கு முதல் உங்கடை நன்னடத்தை அதிகாரிக்கு நான் அறிவிக்கோணும், மற்றது வரவு மிகவும் முக்கியம். …” எனச் சொன்ன ஜோன் வேறும் சில விதிமுறைகளையும் கிரமங்களையும் விளங்கப்படுத்தினார். 

வகுப்பு முடிந்துபோகும்போது, “நீங்க இப்பிடிக் கதைக்கக்கூடாது. சும்மாதன்னும் ஓம் செய்தது பிழைதான், இனிச் செய்யமாட்டன் எண்டு சொல்லாட்டி உங்கடை பெயரைப் பதிவுகளிலை இருந்து எடுக்கமாட்டாங்கள்,” சங்கரின் காதுக்குள் குசுகுசுத்தான் அவனுக்குப் பக்கத்திலிருந்த ஜஸ்ரின். 

***

உடல்ரீதியாகத் துன்புறுத்துவது மட்டும்தான் துன்புறுத்தல் அல்ல என துன்புறுத்தல்களின் வேறுபட்ட வகைகளை ஜோன் பட்டியலிட்டார். சொற்களாலும் செயல்களாலும் ஒருவரை உணர்ச்சிரீதியாகத் துன்புறுத்துவது குறித்தவருக்கு மிகப் பெரிய வேதனையாக இருக்கும் என்பதை விளக்கும் வீடியோவை அனைவரும் பார்த்தனர். ஒருவருடைய கோபத்துக்குக் இன்னொருவர் காரணமாக இருக்கமுடியாது, அவரவர் செயலுக்கு அவரவரே காரணம் என்பதை விளங்கப்படுத்தும் ஒரு உளவியலாளரின் பேச்சை எல்லோரும் கேட்டனர். மற்றவரின் கருத்துக்களைச் செவிமடுக்காமல், தனது செய்கைகளை மட்டும் நியாயப்படுத்தி நடப்பது குறித்தவரின் சுயமதிப்பைப் பாதிக்கலாம் என்பதைப் பற்றியும் அது அவர் மனவுளைச்சலுக்கு உள்ளாவதற்குக் காரணமாகலாம் என்பதைப் பற்றியும் அங்கிருந்தவர்கள் கலந்துரையாடினார்கள். அச்சுறுத்தல்களுக்குள் வாழ்பவர்களின் உணர்வுகளும், வேதனைகளும் எப்படியிருக்கும் என்பதை சில உதாரணங்களுக்கூடாக உணரவைக்கும் கேள்வி பதில் அமர்வில் அவனும் பங்கெடுத்தான். ஆண்களும் சமூகமயப்படுத்தலும் என்ற ரெட் ரோக்கை அனைவரும் செவிமடுத்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான சமூக எதிர்பார்ப்புகள் எங்கனம் அவர்களையும் அறியாமல் அவர்களை வரையறுக்கிறது என்பதை அவர்களின் வாழ்க்கை உதாரணங்களுடாகப் பகிர்ந்துகொண்டனர். அவற்றிலிருந்து வெளிவர வேண்டிய அவசியத்தை ஒத்துக்கொண்டனர். 

பன்னிரண்டாவது வார முடிவில் ஒவ்வொருவரிடமும் எதைக் கற்றீர்கள், எப்படி வித்தியாசமாகச் செயல்படுவீர்கள் என ஜோன் கேட்டபோது, அங்கு கற்றவற்றைப் பாடசாலையில் கற்பித்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும் என ஒரு இளைஞன் கவலைப்பட்டான். 

ஆணுக்கும் பெண்ணுக்குமான வரையறைகளையும், கடமைகளையும் சுமத்தி சமூகமும் கலாசாரமும் எவ்வளவு அநியாயம் செய்கிறது என இன்னொருவர் குமுறினார். 

 “அவளின் கரிசனையையும் பயத்தையும் மதித்து ஊபரிலேயே ரண்டு பேரும் அண்டைக்குப் போயிருக்கலாம்… தாய்க்கு அவள் சொன்னவை பற்றின என்ரை உணர்ச்சிகளை நான் தன்மையா அவளுக்கு விளங்கப்படுத்தியிருக்கலாம்…” 

என்ற அவன், அவனுடைய கோபத்துக்கு அவள்தான் காரணமென அவளை வைத பொழுதுகள் அவனைக் கூச வைப்பதாகவும், அவனின் செயல்கள் அவனுக்குக் குற்றவுணர்வைத் தோற்றுவிப்பதாகவும் மேலும் கூறினான். அத்துடன் அவளுக்கு அவன் நல்ல கணவனாக இருக்கவில்லை, இனியும் அவளுடன் சேர்ந்து நன்றாக வாழ முடியுமாவெனத் தெரியவில்லை என்றான்.

அனைவரும் சங்கர் சொன்னதை அமைதியாகக் கேட்டனர். ஆமோதிப்பைத் தலையசைப்பினால் சிலர் வெளிப்படுத்தினர். வகுப்பு முடிவில் நடந்த சம்பவம் தொடர்பாக அவரவர் துணைவர்களுக்கு கடிதம் எழுதும்படி அனைவரிடமும் கேட்கப்பட்டது.

அன்புள்ள சர்மி, 

அடிச்சும், கெட்ட வார்த்தைகளாலை பேசியும் நான் உன்னைத் துன்புறுத்தியிருக்கிறன். என்னைக் கோவப்படுத்திறாய் எண்டு உன்னைக் குற்றம்சாட்டியிருக்கிறன். என்ரை நடவடிக்கைகளாலை நீ எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பாய் எண்டதை இப்ப என்னாலை கற்பனைசெய்து பாக்கமுடியுது. 

இனிமேல் இயன்றவரைக்கும் வித்தியாசமாய் நடக்க நான் முயற்சிப்பன். என்ரை செயல்களை, எண்ணங்களை எப்படிக் கையாளலாமெண்டு இந்த வகுப்பிலை சொல்லித்தந்திருக்கினம். உனக்கு நல்லதொரு கணவனாக நான் நடக்காததுக்காக என்னை மன்னிச்சிடு. 

அன்புடன்

சங்கர்

எழுதியதை ஜோனிடம் அவன் சமர்ப்பித்தான். ஆசுவாசமா மூச்சுவிட்டான். பாரம் இறங்கிய  மகிழ்ச்சியுடன் வகுப்பை விட்டு நீங்கினான். 

 “ஜோன் சொன்னமாரியே நீங்க மாறியிட்டியள், நீங்க கதைச்சவிதம் நல்லாயிருந்துது. இனிமே நாங்க இங்கை திரும்பிவரக்கூடாது. குட் லக்”

ஜஸ்ரின் அவனின் கையைக் குலுக்கினான். கொடுப்புக்கால் சிரித்தபடி சங்கர் அங்கிருந்து விலகினான்.

ஸ்ரீரஞ்சனி

நல்லதோர் வீணை

0

சுஷில் குமார்

ந்தக் கொண்டை ஊசி வளைவுகள் முதல் முறையாக எனக்கு தலைசுற்றலைக் கொடுத்தன. ஒவ்வொரு முறை இந்தக் கிளைக்கு வரும்போதும் அளவற்ற உற்சாகமும் மகிழ்ச்சியும் என்னில் இருக்கும். அதற்குப் பிரதானமான காரணம் திருநாவுக்கரசன். அந்த மலைப்பிரதேசக் கிளையின் தமிழ் ஆசிரியர். என்னைப் பொருத்தவரை நான் செய்திருக்கும் பணியில் என்னை நீடித்திருக்கச் செய்யும் ஓர் உந்துசக்தி. இவனைப் போல நான் ஏன் இருக்க முடியவில்லை என பலமுறை என்னை யோசிக்க வைத்த கவி, கலைஞன், ஞானி அவன். இந்தப் பயணம் அப்படியே நீண்டுகொண்டே செல்லாதா? அவனுடனான இந்தச் சந்திப்பை எப்படியாவது நான் தவிர்த்துவிட முடியாதா? எனத் தோன்றிக் கொண்டேயிருந்தது.

திருநாவுக்கரசன் இப்படிச் செய்திருப்பான் என்பதை என்னால் நம்ப முடியவேயில்லை. ஆனால், எதுவும் உறுதியாகத் தெரியும் முன் நான் ஏன் அவன் இப்படிச் செய்திருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்? நாங்கள் பேசிய விசயங்களும் சேர்ந்து செய்த காரியங்களும் எவ்வளவு உன்னதமானவை! சாப்பாட்டிற்குக் கூட வழியற்ற இந்த ஏழைக் குழந்தைகளுக்கு உலகத்தரத்திலான அறிவுப்பரப்பை எற்படுத்திக் கொடுத்ததில் சொல்லப்போனால் என்னை விட அவனுக்குத்தான் பங்கு அதிகம்.

ஆனால், இப்படியொரு புகார் அவன்மீது வந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவேயில்லை. ஒருவேளை அவன் இதைச் செய்திருந்தால் நான் அவனை என்ன செய்யப்போகிறேன்? இருக்காது, அவன் இதைச் செய்திருக்க மாட்டான்.

      நான் கூட கல்விப்பணியை ஓர் நல்ல வருமானம் வரக்கூடிய ஒரு வேலையாகத்தான் செய்கிறேன். ஆனால், திருநாவுக்கரசனுக்கு இது ஒரு வெறி, உயிர், கடவுள், எல்லாம். சென்ற மாதம் அழைத்திருந்தபோது கூட தனது மாணவர்களில் இருபது பேர் அத்தனை திருக்குறள்களையும் மனப்பாடம் செய்துவிட்டதாகக் கூறினான். எந்தக் குறளின் பொருள் கேட்டாலும் உதாரணத்தோடு விளக்கிவிடுவார்களாம். கிராமப்புற, பழங்குடி மாணவர்கள் இவ்வளவு கூர்மையாக இருக்க முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.

பள்ளி இருக்கும் கிராமத்தை நெருங்கிவிட்டேன். வழக்கமாக நிறுத்தி தேநீர் அருந்தும் கடைக்காரர் என்னைப் பார்த்ததும் கை காட்ட, ஓட்டுனரிடம் வண்டியை நிறுத்துமாறு சொன்னேன். எனக்கும் அந்த இடைவெளி தேவையாக இருந்தது. திருநாவுக்கரசனிடம் என்ன பேசப்போகிறேன்? அவனது முகத்தை எப்படிச் சந்திக்கப் போகிறேன்? அவன் மேல் வந்திருக்கிற குற்றச்சாட்டைப் பற்றி அவனிடம் சொல்லிவிட்டார்களோ இல்லையோ? அவனுக்குத் தெரிந்திருந்தால் அவன் உடனடியாக என்னை அழைத்துத் தன் தரப்பைச் சொல்லியிருப்பானே? ஒருவேளை தவறு செய்ததால்தான் என்னை அவன் அழைக்கவில்லையோ?

“வாங்க சார்..ரொம்ப நாளாக் காணோம்…டபிள் ஸ்ட்ராங் தான?” என்று சிரித்தார் தேநீர்க் கடைக்காரர்.

“ஆமா தலைவரே, மத்த ஊருக்கெல்லாம் ஒரு ரவுண்டு போய்ட்டு வரேன்..நீங்க எப்பிடியிருக்கீங்க?”

“நமக்கென்ன சார்? குளிரு இருக்க வரைக்கும் கட நல்லா ஓடும்..சம்மர் வந்தா அப்டியே லெமன் சோடா போட்ரலாம்னு பாக்றேன் சார்…”

“அதும் நல்ல யோசனதான்…ஆமா, நம்மாளு வந்தாரா இந்தப் பக்கம்?”

“யாரு சார்? நம்ம தமிழ் வாத்தியா? அவர கொஞ்ச நாளாக் காணுமே? நாகூட நேத்து யோசிச்சேன், மனுசன் சொந்த ஊருக்குப் போயிருப்பாரோன்னு..”

இதே தேநீர்க்கடையின் முன்னால்தான் திருநாவுக்கரசனை முதல்முறை சந்தித்தேன். வழக்கம்போல தேநீர் அருந்த வண்டியை ஒதுக்கியபோது குறுக்காக வந்து விழுந்தான் திருநாவுக்கரசன். பதறி இறங்கிப் பார்த்தேன். நல்ல வேளையாக பெரிய அளவில் காயமேதுமில்லை. கீழே விழுந்ததில் அவனது மூக்குக்கண்ணாடி உடைந்துவிட்டது. கையில் இலேசான சிராய்ப்பு. அவனைத் தூக்கிவிட்டு சட்டையிலிருந்த மண்ணைத் தட்டியபோதுதான் அவனை சரியாகக் கவனித்தேன். அவனது உடல் முழுதுமே தீப்புண் தழும்பைப் போன்ற வெள்ளைத்தோல். தலைமுடி அமெரிக்கக்காரர்களைப் போன்ற நிறத்தில் இருந்தது. முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள்.

எழுந்து நின்றவன் ஒரு கண்ணைச் சுருக்கி மறு கண்ணால் என்னைக் கூர்ந்து பார்த்தான்.

“மன்னித்துக்கொள்ளுங்கள் ஐயா. நான்தான் தவறாக வந்து விழுந்துவிட்டேன். தங்களது வாகனம் வந்ததைக் கவனிக்கவில்லை.” என்று சொல்லி என் கையைப் பிடித்து அழுத்தினான்.

ஒருநொடி என்னையறியாமலேயே அருவருத்து கையை வெடுக்கென உதறிவிட்டேன். இதை உணர்ந்தவனாக, “இது ஒரு தோல் வியாதிதான் ஐயா. ஏதோ சத்துக்குறைபாட்டினால் வருகிற நோயென்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். என்ன, மருந்துதான் கிடையாது…தொற்று நோயென்று பயந்து விட்டீர்களோ?” என்றான்.

“சாரி சார்… சாரி…” என்று சொல்லி மீண்டும் அவனது கையைப் பற்றிக்கொண்டேன். “வேற அடி ஒண்ணும் படலல்ல சார்?”

“இல்லையில்லை…ஒன்றும் பிரச்சினையில்லை. எனது மூக்குக் கண்ணாடியை கொஞ்சம் எடுத்துத் தர முடியுமா?”

அப்போதுதான் கவனித்தேன். அவனுக்கு இடது கண் இல்லை. வெறும் இமைகளால் மூடிய வெற்றுக்குழிதான் இருந்தது. மூக்குக் கண்ணாடியை எடுத்துக் கொடுத்தவாறு, “சார்…ஒங்க கண்ணு?” என்றேன்.

“அது பிறவியிலேயே இப்படித்தான் ஐயா. வலது கண்ணால் பார்க்க முடியும். ஆனால், பகல் வேளைகளில் கொஞ்சம் கூசுவதால் கண்ணை இடுக்கிக்கொண்டு பார்ப்பேன். அவ்வளவுதான். வேறொன்றும் பெரிய பிரச்சினையில்லை. என்ன, வாரம் ஒருமுறை இப்படி விழுந்து சாலைகளில் அங்கப்பிரதட்சிணம் செய்கிறேன்..ஹாஹஹா..”

அவனுக்கும் தேநீர் வாங்கிக்கொடுத்து, “தப்பா நெனைக்காதீங்க, அதென்ன, நீங்க செந்தமிழ்ல பேசுறீங்க?” என்று கேட்டேன்.

“சிலராவது பேசித்தானே ஆக வேண்டும் ஐயா. நமது மொழி அல்லவா? அது மட்டுமில்லாமல் நான் தமிழ் பயின்றவன். கேட்பதற்கும் இனிமையாகத்தானே இருக்கிறது?”

“கண்டிப்பா…ஆமா, என்ன வேல செய்றீங்க?”

“இப்போதைக்கு வேலை தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். சில பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், என் தோற்றம் குறித்த புகார்களாலோ, அல்லது எனது பார்வைக் குறைபாட்டைக் காரணம் காட்டியோ என்னை வெளியே அனுப்பிவிடுகிறார்கள். வேறு எங்கு வேலை தேடிச் சென்றாலும் பத்து, இருபது ரூபாய் நோட்டுகளைக் காட்டி திருப்பி அனுப்புகிறார்கள். என் கவிதைப் புத்தகங்களை விற்றா நான் பிழைக்க முடியும்? தமிழ் நாட்டில் ஓர் கவிஞன் புத்தகம் விற்றுப் பிழைத்துவிட முடியுமா என்ன?”

“நீங்க கவிஞரா சார்? நா பெருசா புக்ஸ்லாம் படிக்கிறதில்ல….நான்ஃபிக்சன் கொஞ்சம் வாசிப்பேன்..”

“மகிழ்ச்சி…சரிங்க ஐயா..மிக்க நன்றி..” என்று சொல்லியவாறு எழுந்தான்.

“சார்..ஒரு நிமிசம்…நீங்க ஏன் எங்க ஸ்கூல்ல ஒரு இண்டர்வியூக்கு வரக்கூடாது?” என்று கேட்டேன்.

மகிழ்ச்சியாகத் தலையை ஆட்டினான் திருநாவுக்கரசன்.

தேநீர் அருந்திவிட்டு கடைக்காரரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். திருநாவுக்கரசன் தினசரி வரும் கடை அல்லவா? ஏன் ஒரு வாரமாக வராமல் இருக்கிறான்? விசயம் வெளியே யாருக்கும் தெரியாது என்றுதானே தலைமை ஆசிரியரும் சொன்னார்.

பள்ளி நிர்வாகிகளும் தலைமை ஆசிரியரும் முதலில் எனது யோசனையை ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோதும் திருநாவுக்கரசனுக்காக ஒரு நேர்முகத் தேர்வை நடத்த ஒப்புக்கொண்டனர். அந்த மனிதன் எங்களை ஆச்சரியப் படுத்தி விட்டான்.

ஆழ நெடுந்திரை ஆறு கடந்திவர் போவாரோ…” என்று அவன் ஆரம்பித்த நொடியே எனக்குப் புல்லரித்து விட்டது. அப்படி ஒரு கம்பீரம், உச்சரிப்பு, உடல் மொழி..கம்பனே எங்கள் முன் வந்து நின்று பாடியது போல உறைந்திருந்து கேட்டோம்.

வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ?” என்றவாறு அறையின் அங்குமிங்கும் நடந்துகொண்டே வேழமாகித் தமிழ் உரைத்தான்.

தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ?” என்றவன் சொல்லித் திரும்பியபோது அவன் கண்ணில் நீர் நிறைந்து விட்டது.

ஏழைமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ?” என்று சொல்லி மண்டியிட்டு குகனாகவே மாறி நின்றான். அடுத்த சில நிமிடங்கள் அவன் அச்செய்யுளை விளக்கிய விதம் கண்டு மலைத்துப் போய்விட்டோம். எனது அனுபவத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் நாங்கள் எழுந்து நின்று கை தட்டியது அன்று மட்டுமே. என்ன ஒரு ஆசிரியன் அவன்!

ஐந்து வருடத்தில் எத்தனை சாதனைகள்! எத்தனை புதுமைகள்! ஒரு தமிழ் ஆசிரியனுக்கு இதெல்லாம் சாத்தியமா என்று திரும்பிப் பார்க்க வைத்துவிட்டானே!

பள்ளி அன்று விடுமுறை. வெறிச்சோடிக் கிடந்த மைதானத்தையும் புல்வெளியையும் தாண்டித் தலைமை ஆசிரியர் அறைக்கு நடந்தேன். அறை வாசலிலேயே நின்றிருந்த அவர் நேராக என்னை அடுத்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார். தூரத்தில் சந்திப்புகளுக்கான அறையின் வெளியே திருநாவுக்கரசன் தனியாக உட்கார்ந்திருந்தான். நாங்கள் நெருங்கிச் செல்ல, எங்கள் காலடிச் சத்தம் கேட்டு மெதுவாக எழுந்து நின்றான். இதே அறையில்தான் தனது தமிழ்ப்புலமையால் எங்களை வீழ்த்தினான்.

எனது குரல் கேட்டு ஒரு நொடி அவன் நடுங்கியதாக எனக்குத் தோன்றியது. அவனருகில் சென்றதும், “ஐயா..நீங்கள் தான் வந்திருக்கிறீர்களா? எவ்வளவு நாட்களாயிற்று பார்த்து? நலம்தானே ஐயா?” என்று கேட்டான்.

“நல்லாருக்கேன் திரு…” என்று சொல்லி அவன் தோளில் தட்டிவிட்டு உள்ளே சென்றேன்.

மனிதவள நிர்வாகி, தலைமை ஆசிரியர் ஆகியோருடன் கலந்தாலோசித்து என்ன செய்யலாம் என ஒரு முடிவுக்கு வந்திருந்தோம். திருநாவுக்கரசனுடனான விசாரணையில் நானும் மனிதவள நிர்வாகியும் இருப்பதாக முடிவு. தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசனை உள்ளே அனுப்பிவிட்டுச் சென்றார்.

“வா திரு. ஒக்காரு…”

எங்கள் மேசையின் முன் இரண்டடி தூரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தான். அவனது முகத்தில் நான் எதிர்பார்த்த மாதிரி எந்தவித பதற்றமும் இல்லை. மிக இயல்பாக ஒரு புன்னகையுடன் எங்களைப் பார்த்தான்.

இந்த மாதிரி விசாரணைகளில் கடைபிடிக்க வேண்டிய படிநிலைகள் இருக்கின்றன. மனிதவள நிர்வாகி அதன்படியே அவனிடம் அவனது பணி சார்ந்த பொதுவான கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவனும் மிகச் சாதாரணமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு எவ்வளவு சீக்கிரம் இதை முடித்து விட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை முடித்து விட வேண்டும் என உள்ளுக்குள் படபடப்பு. அவனில் ஏதேனும் ஒரு சிறு சலனம் தெரிகிறதாவென நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு சிறு சலனம் தெரிந்திருந்தால் கூட அடுத்த நொடி அவனது சட்டையைப் பிடித்து உண்மையை வெளிக்கொண்டுவந்து விடுவேன்.

மனிதவள நிர்வாகி ஓர் இடைவெளி விட்டு என் முகத்தைப் பார்த்தார். நான் தலையாட்ட, திருநாவுக்கரசனை நோக்கி, “திருநாவுக்கரசன், இன்னிக்கி உங்கள வரச் சொன்னது எதுக்குன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“இல்லை ஐயா..” என்று என்னையும் நிர்வாகியையும் பார்த்தான் திருநாவுக்கரசன்.

“உங்க மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் வந்திருக்கு திருநாவுக்கரசன்..என்னன்னு தெரியுமா?”

“என் மேல் புகாரா? என்ன புகார் ஐயா?” இப்போதும் அவனது முகத்தில் ஒரு சிறு பதற்றம் கூட இல்லை.

“பசங்க கூட நீங்க பொதுவா ரொம்ப நெருங்கிப் பழகுவீங்களோ?”

“ஆமாம் ஐயா…எனக்கு மாணவர்கள் என்றால் உயிர்..என்னைப் பார்த்ததுமே ஓடி வந்து என் தோளில் துள்ளி ஏறிவிடுவார்களே! ஐயாவுக்கு நன்றாகத் தெரியுமே! ” இதைச் சொல்லும்போது அவன் என் கண்களைத் தவிர்த்தான்.

எனக்குள் ஒருவித பயம் சட்டெனத் தோன்றியது. அவனது இரண்டு தங்கைகள், தம்பி மற்றும் அம்மாவின் முகம் என் மனதில் வந்து சென்றது. அந்தக் குடும்பத்தின் அச்சாணியே இவன்தான். அதை ஒடித்துவிட்டால் என்ன செய்து பிழைப்பார்கள்? அம்மா வேறு உடல்நலமில்லாதவர். தங்கைகள் தேயிலைத் தோட்டத்திற்குச் செல்கிறார்கள். அங்கு என்ன பெரிதாகக் கிடைத்து விட முடியும்? அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து அவர்கள் குழந்தைகளை மடியில் போட்டுக் கொஞ்ச வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பானே?

ஒருநாள், “என்ன திரு, ஒனக்கொரு பொண்ணு பாக்கலாமா?” என்று கேட்டேன்.

“அடச் சும்மாயிருங்கள் ஐயா..இந்த ஜென்மத்தைப் பார்த்துக்கொள்ள இன்னொரு உயிரை வேறு துன்பப்படுத்த வேண்டுமா? எனக்கு என் மாணவர்கள் இருக்கிறார்கள், தமிழ் இருக்கிறது, போதாதா என்ன?” என்று சொல்லிச் சிரித்தான்.

அவன் சொன்ன வார்த்தைகளே இப்போது என்னைச் சுற்றியோடிக் குழப்பின. ‘எனக்கு என் மாணவர்கள் இருக்கிறார்கள்!’.

நிர்வாகி தொடர்ந்தார், “திருநாவுக்கரசன், சுத்தி வளச்சிப் பேச வேண்டாம்…சிக்ஸ்த் ஸ்டேண்டர்ட் பாய்ஸ நீங்க மாலஸ்ட் பண்ணதா கம்ப்ளெய்ண்ட் வந்திருக்கு…”

“என்ன? என்ன ஐயா சொன்னீர்கள்? மாலஸ்ட்டா? அப்படியென்றால்?” என்று அவரது முகத்தைப் பார்த்தான். அவன் நடிப்பது எனக்கு உறுதியாகிவிட்டது.

“அவங்கள தனியா அழச்சிட்டுப் போயி தகாத இடங்கள்ல தொட்டதாக சொல்லிருக்காங்க…என்ன சொல்றீங்க?”

“ஐயா…என்னைப் பார்த்தா அப்படிச் சொல்கிறீர்கள்? யார் சொன்னது? என் முன் அவர்களைக் கொண்டுவந்து நிறுத்துங்கள்..என் முன்னால் வந்து அவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம்…வேடிக்கை மனிதரைப் போல வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று தினசரி உரக்கச் சொல்லி வாழ்பவன் நான்..இந்தப் பணி என் உயிர் போன்றது தெரியுமா உங்களுக்கு? யார் சொன்னது, வரச் சொல்லுங்கள், நான் கேட்கிறேன்…”

“மிஸ்டர் திருநாவுக்கரசன், எவிடென்ஸ் இல்லாம நாங்க உங்கள விசாரிக்கக் கூப்பிடல…அதுவுமில்லாம கார்ப்பெண்ட்ரிக்கு யூஸ் பண்ற பசைய போதைப்பொருளா நீங்க யூஸ் பண்ட்றதாகவும் பசங்கள அதயே செய்ய வச்சி நீங்க மாலஸ்ட் பண்ணதாகவும் தெளிவான எவிடென்ஸ் எங்க கிட்ட இருக்கு…என்ன நடந்துச்சின்னு நீங்களே சொல்லிட்டீங்கன்னா நல்லாருக்கும்…இல்லன்னா, நாங்க லீகலா போக வேண்டியிருக்கும்…”

சற்று நேரம் அமைதியாக இருந்த திருநாவுக்கரசன், “ஐயா…இல்லவே இல்லை. இதெல்லாம் யாரோ செய்கிற சதி…என் தமிழ் மேல் ஆணையாக நான் அப்படிச் செய்யவில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும், தேவையும் எனக்கில்லை..” என்று உறுதியாகக் கூறினான்.

“தேவையில்லன்னா என்ன மயிருக்கு பசங்கள சயின்ஸ் லேபுக்கு கூட்டிட்டுப் போனீங்க? தமிழ் வாத்தியாருக்கு அங்க என்ன வேலன்னு கேக்றேன்? அதுவும் லஞ்ச் ப்ரேக்ல…நானும் பொறுமையா கேட்டுட்ருக்கேன், ரொம்ப ஓவரா டயலாக் அடிக்கிறீங்க..” என்று கத்திய நிர்வாகி என்னைப் பார்த்து, “சார், இதெல்லாம் சரி ஆகாது, இவன மாதிரி ஆளுங்கள எல்லாம் போக்ஸோல உள்ள போட்டு லாடம் கட்டுனாத்தான் சரி ஆகும்…சிம்பதி க்ரியேட் பண்ணி வெளையாடுறான் சார் இந்தாளு..நல்லா ஏழு வருசம் ஜெயில்ல கெடந்து சாகட்டும்..” என்றார்.

திருநாவுக்கரசன் எழுந்து, “ஐயா, நீங்கள் மரியாதைக் குறைவாகப் பேசுகிறீர்கள்..என் தரப்பை நான் கூறிவிட்டேன்..இதுவரை நான் செய்த  ஆசிரியப்பணியையும் மீறி என் மீதான உங்கள் நம்பிக்கை இவ்வளவுதான் என்றால், உங்களிடம் சாட்சியங்கள் உள்ளதென்றால், என்னை இங்கிருந்து அனுப்பி விடுங்கள்…இதற்குமேல் இங்கே வேலை செய்வது எனக்குச் சரியாகப் படவில்லை..நானே எனது பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிடுகிறேன்..என் வாழ்க்கையை நீங்கள் முடித்துவைத்ததாக இருக்கட்டும்..” என்று சொல்லி விட்டு மிக இயல்பாக நின்றான்.

நிர்வாகி எரிச்சலோடு என்னைப் பார்க்க, அவரைக் கொஞ்சம் வெளியே இருக்குமாறு நான் சைகை செய்தேன்.

திருநாவுக்கரசன் இப்போது இலேசாக உணர்ச்சிவசப்பட்டு, “என்ன ஐயா இது? என்னைப் போய் இப்படிச் சொல்கிறார்களே? உங்களுக்குத் தெரியாதா ஐயா என்னைப்பற்றி? இந்த மாணவர்களுக்காக நான் எவ்வளவு சிரமப்படுகிறேன், இரவு பகலாக உழைக்கிறேன், இவர்களில் நிறைய பேரை தினசரி வகுப்பிற்கு அழைத்து வருவதே எனக்குப் பெரிய வேலை ஐயா..என் சொந்தக் குழந்தைகள் மாதிரி அல்லவா இவர்கள்..என்னைப் போய் இப்படிச் சொல்கிறார்களே!”

நான் எதுவும் பேசாமல் அவன் பேசுவதையெல்லாம் பேசட்டும் என்று இருந்தேன்.

“ஐயா, இத்தனை வருடச் சேமிப்பில் இப்போதுதான் முதல் தங்கைக்குத் திருமணம் கூடி வருகிறது. இன்னும் எவ்வளவு சுமைகள் இருக்கின்றன எனக்கு, நான் எப்படி ஐயா இப்படி ஒரு காரியத்தைச் செய்வேன்? என்ன ஐயா, நீங்கள் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள்? நீங்களும் என்னைச் சந்தேகப் படுகிறீர்களா? இதற்குமேல் நான் இருந்து பயனில்லை..எங்காவது விழுந்து செத்துப்போகிறேன்..” என்று எழுந்தான்.

“திரு, கார்பெண்ட்ரிக்கு என்ன கம் யூஸ் பண்ணுவாங்க தெரியுமா?” என்று அவனது கையைப் பிடித்து இழுத்தேன்.

“என்ன, என்ன? என்ன கேட்டீர்கள்?” என்று திணறினான் திருநாவுக்கரசன். அடுத்த சில கேள்விகளில் எனக்கு உண்மை தெரிந்து விடும். அவனது கம்பராமாயணமும் கவிதைகளும் எல்லாம் இதற்குத்தானா?

“திரு, நா கேட்டது ஒனக்கு நல்லாவே கேட்டுச்சு..என்ட்ட நீ நடிச்சிர முடியும்னு நெனைக்கிறியா?”

திருநாவுக்கரசன் ஒன்றும் பேசவில்லை.

“ஏண்டா, இந்தப் பசங்களுக்கு நம்மள விட்டா யாருடா இருக்காங்க? எத்தன நாளக்கி டா இவங்க இப்படித் தேயிலத் தோட்டத்தில கெடந்து சாவணும்? ஆனா, ஆவன்னா தெரியாத ஒவ்வொருத்தனயும் திருக்குறள், கம்பராமாயணம் சொல்ல வச்சவன்டா நீ..அவங்க அப்பா அம்மால்லாம் ஒன்னச் சாமி மாதிரிதானடா பாக்குறாங்க? நீ எனக்கே ஒரு இன்ஸ்பிரேஷன் டா திரு…என்னவா இருந்தாலும் என்ட்ட சொல்லு டா…இந்த நாளக் கடந்து போயிரணும்னு நா எவ்ளோ துடிச்சிட்டே வந்தேன் தெரியுமா ஒனக்கு? இப்பக்கூட ஒம்மேலத் தப்பில்லன்னு ஆயிடாதான்னு இருக்கு டா..”

திருநாவுக்கரசன் இன்னும் சிலையாகத்தான் நின்று கொண்டிருந்தான்.

“டேய் திரு…யோசிக்காம என்னன்னு சொல்லுடா. இது எதுவுமே நடக்கலன்னு சொன்னாலும் கேட்டுட்டுப் போறக் கூட்டந்தான்டா இந்த மக்கள்லாம்…அவங்களுக்காக பேச வேண்டியது நாம தான டா? தப்பே செஞ்சிருந்தாலும் பரவால்ல, என்ட்ட சொல்லு நீ, எம் மொகத்தப் பாத்துச் சொல்லு நீ…நாம வேற எங்கயாம் எதாவது வேல பாத்துக்கலாம் டா..நா இருக்கண்டா ஒங்கூட..சொல்லுடா…”

திருநாவுக்கரசன் என் முகத்தைப் பார்த்தான். என் கண்களை வெறித்துப் பார்த்தான். தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தான்.

“டேய் திரு..நம்ம தங்கச்சிங்க வாழ்க்கையப் பாக்க வேண்டாமா டா? விசயம் வெளிய தெரிஞ்சி மீடியாக்குப் போனா என்ன ஆகும்னு யோசிச்சிப் பாரு..நீ என்ட்ட சொல்லு..இங்கயே முடிச்சுக்குவோம்…மேனேஜ்மென்ட்ல நா பேசுறேன்….கேஸ் ஏதும் போடாம நா பாத்துக்குறேன்..எல்லாத்தயும் மறந்துட்டுப் புதுசாத் தொடங்கலாம் டா…”

இன்னும் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன டா நீ, நா இவ்ளோ சொல்றேன், பதில் பேச மாட்டேங்கிற? எல்லாத்தயும் விடுடா…ஒன்ட்ட நா சொன்னதேயில்ல, இப்பச் சொல்றேன்…எம் பொண்ணக் கூட ஒன்ட்ட விட்டுத்தான் தமிழ் படிக்கச் சொல்லணும்னு நெனச்சிருக்கேன்….” என்று நான் சொல்லியதும் சட்டென நெடுஞ்சாண்கிடையாக என் காலில் விழுந்தான்.

“ஐயா..ஐயா…ஐயா..ஐயா…” என்று கதறிக் கொண்டே கிடந்தான்.

சத்தம் கேட்டு உள்ளே வந்த மனிதவள நிர்வாகி, “நா தான் சொன்னேன்ல சார்…இவந்தான் பண்ணிருப்பான்னு…இப்ப அழுது நடிக்கிறான் பாருங்க…இவன நீங்க இன்டர்வியூக்கு கூட்டிட்டு வந்தப்பவே நான் சொன்னேன்ல சார்…இது சரிப்பட்டு வராதுன்னு…சரி, தெறமை இருக்குன்னு வாய்ப்பு குடுத்தா இப்ப நம்ம மடிலயே கைய வச்சிருக்கான் பாருங்க சார்…கொஞ்ச நாள் விட்டிருந்தா போதைல இந்தப் பசங்கல்லாம் பைத்தியமாயிருப்பாங்க சார்…இந்த நாய்க்கு வேணும்னா எங்கயாம் போயிருக்கலாம்ல சார்? கை, கால அடிச்சி ஒடச்சிரலாம்னு வருது சார்….நா ஸ்டேஷனுக்கு கால் பண்ட்றேன் சார்…ராஸ்கல், இவனல்லாம் சொசைட்டில நடமாட விடக் கூடாது…” என்று கத்தினார்.

“சார்…கொஞ்சம் இருங்க…” என்று அவரை அமைதிப்படுத்தி திருநாவுக்கரசனைத் தூக்கிவிட்டேன்.

“இங்கப் பாரு திரு…எனக்கு நீ பதில் சொல்லியாகணும்…நீ ஏன் அப்படிப் பண்ண?”

சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“சொல்லு…எனக்குத் தெரிஞ்சாகணும்…”

திருநாவுக்கரசன் பேச ஆரம்பித்தான். “என்னத்தச் சொல்ல? எல்லாம் நாந்தா பண்ணேன்…நல்லாத் தெரிஞ்சிதான் பண்ணேன்…ஆனா, ஏன் பண்ணேன்னு எனக்கேத் தெரில…அதான் நெஜம்…நா செத்துருக்கணும்…செத்துருவேன்…என்னால இருக்க முடில…செத்துருவேன்..ஒங்களுக்கு துரோகம் பண்ணிட்டேன்..என்னோட தமிழுக்கு துரோகம் பண்ணிட்டேன்…எங் கம்பனுக்கு துரோகம் பண்ணிட்டேன்…எம் பாரதிய மறந்துட்டேன்…என்ட்ட இருந்த எல்லாத் திருக்குறளும் போயிடுச்சி…இப்ப நா வெறும் பொணம்…நா செத்துருவேன்…செத்துருவேன்…எல்லாமே வேஷம்ல? நா பேசுன தமிழும் பொய்யா? என்னப் பாத்தா எனக்கே அருவருப்பா இருக்கு…என்ன நல்ல அடிச்சிடுங்க..அடிச்சிக் கொல்லுங்க…இங்கயே இது முடியட்டும்…என்னால வெளிய தலகாட்ட முடியாது…நா செத்துப் போயிரணும்…”

நிர்வாகி கோவத்தில் அவனைச் சட்டையோடு சேர்த்துப் பிடித்துச் சுவற்றில் நெரித்து, “ராஸ்கல்…எம் முன்னாடியே எப்படில்லாம் நடிச்ச நீ? நீ சாகல்லாம் மாட்ட…இன்னும் அனுபவிப்ப பாரு…ஆனா, ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ..வேற எந்த வேலைக்கி வேண்ணாப் போ..இல்லாட்டி கோயில் கோயிலாப் போயி பிச்சையெடு…மவன, இனிமேல் டீச்சர் வேலைக்கின்னு ஏதாவது ஸ்கூல் வாசல மிதிச்சன்னு வையி, ராஸ்கல் ஒன்னத் தேடி வந்து கொல்லுவேன்…மனசில வச்சுக்கோ…” என்று கத்திவிட்டு வெளியேறினார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு…

காரிலிருந்து நான் இறங்குவதைப் பார்த்த அம்மா என்னருகே வந்து, “வாங்கய்யா..வாங்க…” என்று என் கைகளைப் பிடித்துக்கொண்டார்.

“எப்டி இருக்கீங்கம்மா? திரு இல்லையா?”

“அத ஏன்யா கேக்றீங்க? எம்புள்ளக்கி என்னமோ ஆயிடுச்சிய்யா…வேல போனதுலேந்து வீட்டுக்குள்ளயே மொடங்கிக் கெடக்கான்ய்யா…யார்ட்டயும் ஒரு வார்த்த பேச மாட்டேங்கிறான்…வேற வேலைக்கும் போறதில்ல…நீங்க ஒரு வார்த்த சொல்லுங்கய்யா…”

அம்மா தண்ணீர் எடுத்துவர தாகம் தீரக் குடித்துவிட்டு வீட்டிற்குள் சென்றேன். 

திருநாவுக்கரசன் ஒரு கயிற்றுக் கட்டிலில் கம்பளிக்குள் புதைந்து கிடந்தான். அவனது வீடு முழுவதும் இருள் நிறைந்து நின்றது. சட்டரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவரின் பெற்றோரையும் சமாளித்து ஒருவழியாக வேலை நீக்கத்தோடு முடித்து வைத்திருந்தேன்.

கட்டிலின் அருகே சென்று, “டேய் திரு? ஒன்ட்ட பேசணும்..” என்றேன்.

ஒருதரம் என் முகத்தைப் பார்த்துவிட்டுத் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

நான் எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தபடியே நின்றேன். அந்த அறையின் உஷ்ணம் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது.

“திரு…மொதல்ல எந்திரி நீ….”

கட்டிலிலிருந்து தன்னைப் பிய்த்துக்கொள்வது போல எழுந்து நின்றவன் என் கையைப் பிடித்துத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்தான். பலநாள் பட்டினி கிடந்தவன் போல வாடிப்போய், முகம் கருத்து நடுங்கி நின்றான். அவனது கண்கள் எதிர்ச்சுவற்றில் நிலைகுத்தியிருந்தன. அந்தச் சுவற்றில் அவன் கடந்த ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது வாங்கிய புகைப்படம் தொங்கிக்கொண்டிருந்தது.

அவனது கட்டிலைச் சுற்றிலும் ஏராளமான காகிதங்களும் புத்தகங்களும் சிதறிக் கிடந்தன. தச்சுவேலைக்கான பசை உறைகள் கிழிந்து கிடந்தன. எனக்கு அவனைப் பார்த்து அருவருப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. ஏதும் சொல்லாமல் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். பள்ளியிலிருந்து நான் கொண்டுவந்திருந்த அவனது நல்லாசிரியர் விருதை என் பையிலிருந்து எடுத்து அவனது கால்மாட்டில் வைத்துவிட்டு வெளியேறினேன்.

திண்ணையில் அழுதுகொண்டிருந்த அம்மாவின் கையில் கொஞ்சம் பணத்தைத் திணித்துவிட்டு விறுவிறுவென்று நடந்தேன்.

“அண்ணே, டீ குடிச்சிட்டுப் போங்கண்ணே…” என்றவாறு எதிரே வந்தாள் சிறிய தங்கை.

***

சுஷில் குமார் நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். கிராமப்புற மாணவர்களின் மாற்றுக் கல்வி சார்ந்த ஆசிரியப் பயிற்சி மற்றும் பள்ளிகள் மேலாண்மைப் பணிகளை கோவையில் இருந்து செய்து வருகிறார். தொடர்புக்கு -sushilkumarbharathi2020@gmail.com

கார்த்திக் திலகன் கவிதைகள்

0

1) நடுங்கும் மனதுடன்


அற்ப மலையே
பூமியின் மீது ஒட்டியிருக்கும்
அட்டை பூச்சியே
உன்னைப் பிடிக்கும் பெரிய விரல் மட்டும்
எனக்கிருந்தால்
உன்னை பிய்த்து கடலில் வீசுவேன்
என்று கர்ஜித்தான் அவன்
மலையோ கண்களை இறுக மூடிக்கொண்டு
நடுங்கும் மனதுடன் மௌனமாய்
படுத்துக்கிடந்தது
போய்யா அவனை அந்தப்பக்கம் அழைத்துக்கொண்டு அதியா
மலை பயப்படுகிறதில்லையா
என்றாள் அவ்வழியே வந்த ஔவைப் பாட்டி

2) தொடுதலின் மொழி


தொடுதல் என்பதொரு உரையாடல்
தொடுகையில் தொடுபவை தொட்டவை இரண்டும் பேசிக்கொள்ளும்
பார்வையால் தொடுவது மனதால் தொடுவது என்பதும் புழக்கத்தில் இருந்தாலும்
விரல்களைப் போல தொடுதலின் மொழியை சரளமாக பேசக்கூடிய பிறிதொன்றில்லை
ஆனால் என் விரல்களோ மொழியறியாதவை என்பதை
நாம் முதன் முதலில்
கைகோர்த்துக் கொண்டபோதே
நீ அறிந்திருப்பாய்
நாளடைவில் தொடுதலின் மொழியை இலக்கணப் பிழையின்றி உன் விரல்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தன
தொடுதலின் மொழியிலேயே உன் உடல்மீது கவிதை எழுதுமளவுக்கு இப்போது
என் முரட்டு விரல்கள் தேறிவிட்டன என்று நீயே சொல்கிறாய்
எனக்கு மகிழ்ச்சி தாளவில்லை

3) நெஞ்சப்பறவை


அவன் நெஞ்சு உடையும் சத்தம்
உனக்கு பிடித்திருக்கிறது
எதைச் சொன்னால் அவன் நெஞ்சு உடையும்
என்று உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது
உடைந்த நெஞ்சின் கீரல்களில் வலிகள் வழிந்தோடி அபிஷேகச் சிலைபோல அவனிதயம் தோன்றுமொரு காட்சி உன் கண்களை நிறைக்கிறது
அவன் நெஞ்சு உடையும் போது சிலீரென
உன் முகத்தில் தெறிக்கும் அன்பின் குருதி
கெட்டித்து உன் முகம் அழகாகிறது
உடைந்த சில்லுகள் சிவந்த இறகுகளாகி
உன் நினைவின் மீது தத்தித் தத்தி நடந்து போகும் அவன் நெஞ்சப்பறவையை
நீ ரசிப்பது போல் யாராலும் ரசிக்க முடியாது

4) கோவம்


நான் சொன்னது தவறுதான்
ஆனால் நீ
கோவித்துக் கொள்ளவில்லை
நீ கோவித்துக் கொண்டிருந்தால் நான் சமாதானமாகி இருப்பேன்
என் மீதே எனக்கு கோவம் வந்து
அதை தணிக்க முடியாமல் இப்போது
தவித்துக் கொண்டிருக்கிறேன்
என் மேல் எதற்காகவும் நீ கோவப்படாததை நினைத்து உன் மேல் எனக்கு கோவம் கோவமாக வருகிறது
என் மேல் கோவப்படக்கூட ஆளில்லாத அனாதை நான்
நீயும் என்மேல் கோவப்படாவிட்டால் நான் எங்கு போவேன்

5) நகைச்சுவை


வயதுவந்தோருக்கான
நகைச்சுவை சொல்வதில்
நீ வல்லவன்தான்
அதற்காக இப்படியா
என் மௌனத்திற்கு புரையேறி
அதன் ஒளியுடல் குலுங்கக் குலுங்க
வெகு நேரம் இருமிக் கொண்டிருக்கிறது
என் மௌனம் கண்கலங்கி
இப்படிச் சிரிப்பதைப் பார்த்து
எத்தனை நாளாகிறது

***

கார்த்திக் திலகன் – “அந்த வட்டத்தை யாராவது சமாதானப்படுத்துங்கள்” தொகுப்பின் ஆசிரியர்.

கூத்தன்

0

செந்தில்குமார் நடராஜன்

கரின் உடலைக் கிழித்து ஓடும் ஓர் ஆற்றங்கரையில், கிடாவை விழுங்கிய மலைப்பாம்பின் வயிறு போல புடைத்துக்கொண்டு கிடந்தது அந்த டார்மெட்ரி. அங்கே தங்க வைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு சிறிய கிராமத்தையே அந்த டார்மெட்ரி விழுங்கியிருந்தது. வண்ணமயமான இரும்புப் பாளங்கள் மீது அடுக்கப்பட்டிருக்கும் பெட்டிகள் போன்ற அறைகள், வெளிச்சம்படும் அல்லது கைகளுக்கு எட்டும்  இடங்களில் எல்லாம் தொங்கும் உடலற்ற நீண்ட சேஃப்டி உடைகள், கைப்பிடிகளில் கைகளை ஊன்றியபடி நிற்கும் மனிதர்கள் எனச்சில பிரத்யேக அடையாளங்களால் டார்மெட்ரிகளைக் கண்டுபிடித்து விடலாம்.

டார்மெட்ரி பார்க்கிங்கில் லோரியை நிறுத்தியிருந்த சேகர் அண்ணன், தன் டிரைவிங் சீட்டில் பக்கவாட்டில் ஒருகாலை வெளியே நீட்டி உட்கார்ந்தபடிக்  காத்திருந்தார். ஒருபக்கக் காதில் நீலநிறப் புள்ளியாக ப்ளுடூத் ஹெட்செட் மின்னிக்கொண்டு இருந்தது. லேசாக திறந்து கிடக்கும் கதவின் வழியாக ஏசி காற்று உறுமிக்கொண்டு இருந்தது.  ஒலி எஃப்எம்மில் விமலா, ‘வணக்கம் சிங்கை’ அங்கத்தைத் தொடங்கியிருந்தார். அவசர அவசரமாக ஓடிவரும் கூத்தனைப் பார்த்ததும் சேகர் அண்ணனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மூர்த்தி “தோடா… கூத்தன் ஐயா வந்துட்டாக. இனிமே ஒரே கூத்தாத்தான் இருக்கும்”, என்று சத்தமாக அவனுக்கு கேட்கும்படிச் சொல்லிவிட்டு அவனைப் பார்க்காதது போல லோரியின் கதவில் தாளம்போடத் துவங்கினான். “சேகர் அண்ணே… இந்த மூர்த்திய பாருங்கண்ணே. எப்பப் பாத்தாலும் என்னய நக்கலடிச்சிக்கிட்டே இருக்கு”, கூத்தனின் குரலில் இருந்த வெகுளித்தனம் அவன் வளர்ந்த உருவத்திற்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் இருந்தது.  மூர்த்தி கூத்தனைச் சீண்டுவதும், கூத்தன் சேகர் அண்ணனிடம் முறையிடுவதும் வழக்கமான ஒன்றுதான். மனதை இலகுவாக்கும் கிண்டலையும், கேலியையும், சமாதானங்களையும் விட வேறெப்படி ஒருநாளை இனிதாகத் தொடங்கிவிட முடியும்? என்பதைப் போல சேகர் அண்ணன் அங்கு நடக்கும் நாடகத்தைக் கண்டுகொள்ளாமல் ஒரு சின்ன புன்னகையோடு ஒருகையை ஸ்டியரிங்கிலும் ஒருகையைக் கன்னத்திலும் வைத்த மாதிரி வேறெங்கோ பார்த்தபடி இருந்தார்.

அந்த டார்மெட்ரியில் இருந்த எல்லோருக்கும் அவர் ‘சேகர் அண்ணன்’ என்றாலும் கிட்டத்தட்ட ஐம்பது வயதை நெருங்கியவர், மன்னார்குடிக்காரர்.  புலம்பெயர்ந்து வந்து மூன்றில் ஒருபங்கு ஆயுளை இங்கேயே கழித்து விட்டார். இப்போதெல்லாம் ஊருக்கு போகும்போது யாராவது அவரை “சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கார்”, என்று அறிமுகப்படுத்தினால்  மெலிதாகச் சிரித்துக் கொள்வார்.  ஊரில் கொத்தனாராக வேலை பார்த்தபோது டைல்ஸ் ஒட்டக் கற்றுக்கொண்ட அனுபவம்தான் தொடக்கம். ஏஜண்டுக்கு லட்சக்கணக்கில் பணம் கட்டி  லோக்கல் ட்ராவல்ஸ் உதவியுடன் டெஸ்ட் அடித்துவிட்டு வொர்க் பர்மிட்டில் வந்தவர். இங்கு வந்து டைல்ஸ் கட்டிங் அலைன்மன்ட் என்று எதுவும் புரியாமல் சீனன் சொல்லும் வேலையெல்லாம் செய்து பழகிக்கொண்டார். கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கான்க்ரீட் கலவை மாதிரி காலம் உருட்டிப் புரட்டிக்கொண்டே இருந்தது. ‘யீ கோங் கன்ஸ்ட்ரஷன்’ கம்பெனியில் சைட் சுப்ரவைசராகி, சொல்லிக் கொள்ளும்படியான பொறுப்புகளில் இருந்துவிட்டு பிறகு, தனியாக லோரி வாங்கி தொழில் தொடங்கி விட்டார். அப்போதெல்லாம் குடியுரிமை கிடைப்பது அவ்வளவு சிரமம் இல்லாது இருந்தது. இங்கேயே வீட்டுவேலைக்கு வந்திருந்த ஒரு பெண்ணுடன் திருமணம். குழந்தைகள் இல்லை.

நாள் முழுவதும் கன்ஸ்ட்ரஷன் கம்பெனிக்கும், காஸ் சிலிண்டர் கம்பெனிக்கும் லோரி ஓட்டுவார். இரவு எட்டு மணிக்கு ஊர்க்கார கூட்டாளிகளுடன் தெண்டாயுதபாணி ஸ்டோர் வாசலில் கூடிவிடுவார். ஒரு மனுசன் யாரிடமும் அதிகம் பேசாமல் இப்படி எப்படி இருக்கமுடியும் என்று நினைப்பவர்களுக்கு முற்றிலும் எதிரான  ஓர் அவதாரத்தை தெண்டாயுதபாணி ஸ்டோர் வாசலில்தான் எடுப்பார். கடை வாசலில் பூக்கடையில் இருக்கும் பெரிய பிளாஸ்டிக் ஐஸ்பெட்டிகளை இழுத்துப்போட்டு அதைச் சுற்றிலும் போடப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் சேர்கள் சகிதம் கச்சேரி தொடங்கிவிடும். கண்டெய்னர் மீது அடுக்கப்படும் பரோன்ஸ் எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் பியர்கள், வயோதிகம் விழுங்கிய காலத்தை அரட்டையாக வெளியே தள்ளும்.  மறுபடியும், அடுத்த நாள் காலை இவர் லோரி ஓட்டுவதற்காகவே விடிவது போல விடிந்துவிடும். சேகர் அண்ணன் தான் லோரியில் அழைத்துப் போகும் எல்லாருடைய வீட்டுச்சூழலையும் ஓரளவு தெரிந்து வைத்திருப்பார். திடீரென ஒருநாள் கோழி பிரியாணி, தண்ணி எனப் பெரிய பையுடன் சாப்பாட்டு நேரத்தில் ஏதாவது ஒரு சைட்டில் வந்து நிற்பார். பூக்கடையோடு மூன்றுக்கு இரண்டு அடியில் ஒட்டிக்கொண்டு நிற்கும் மொபைல் கடைக்கு போன் செய்து ஒவ்வொரு முறையும் வேறு வேறு எண்களுக்கு டாப்அப் செய்யச் சொல்வார். சேகர் அண்ணன் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் தலையைச் சுற்றி சின்ன கொசுக்களைப் போல எண்கள் சுழன்று கொண்டே இருக்கும். ஒரு போன் நம்பரில் முதல் நான்கு எண்ணைச் சொல்லும்போதே சற்று நிறுத்தி “இது அந்த சுப்ரவைசர் சுரேஷ் பய லோரில்ல”, என்பார். சுரேஷ் லோரி நம்பர் 4D-க்கு மாறும். மறுநாள் மாறிப்போகும் ஓர் எண்ணால் “தேவடியாப்பய..”, என்று சுரேஷ் அம்மாவை ஒரு எத்தும், 4D-க்காரனை ஒரு எத்தும் எத்துவார். அடுத்து வேறு எண்ணுக்கு மாறுவார். அவர் உண்டியல் நடத்துவதாகவும், அவரிடம் நிறைய பேர் குருவிகளாக இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் புதிது புதிதாகக் கேர்ள் பிரெண்ட்ஸ்களுடன் ஜோகூரில் சுத்துவதாகவும் கூட வதந்திகள் உண்டு.

கூத்தன் உட்பட அந்த டார்மெட்ரியில் இருக்கும் சிலரும் சேகர் அண்ணன் உதவியுடன் சிங்கப்பூர் வந்தவர்கள்தான். உள்ளூர் ஏஜண்டுகள், கன்ஸ்ட்ரஷன் சப்கான்கள் என நிறைய பழக்கவழக்கம் இருப்பதால் இதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் இதுவரை யாரிடமும் நேரடியாகக் காசு வாங்கியதில்லை. சேகர் அண்ணனுக்கு ஏஜெண்டுகள் தனியாக கமிசன் கொடுத்துவிடுவார்கள் என்றுகூடப் பேச்சுக்கள் உண்டு. “அண்ணன் சொல்ற மாதிரி கேளுடா. எங்க டெஸ்ட் அடிக்கணும், இங்க வந்ததுக்கு அப்புறம் என்ன கோர்ஸ் படிக்கணும், டிரைவிங் லைசன்ஸ் எப்படி எடுக்கணும்னு எல்லாத்தையும்  அண்ணனே சொல்லுவாரு”, என்பதாகக் கடல் கடக்கும் ஏதாவது ஓர் உரையாடலில் சேகர் அண்ணன் இருப்பார். இப்படியான ஓர் உரையாடலுக்குப் பிறகுதான் கூத்தன் ஒருநாள் காலரில் மஞ்சள் வைத்திருந்த ஒரு பச்சை நிறப் புதுச்சட்டையைக் கறுப்பு நிறப் பேண்டில் இன் பண்ணி போட்டுக்கொண்டு, காலில் பளபளப்பான தோல் செருப்பும், நெற்றியில் கரைந்து வழியும் குங்குமம் சகிதமுமாக ஏர்போர்டில் வந்து இறங்கியிருந்தான். கறுப்பான ஒல்லியான உருவம். திருத்தமில்லாத அரும்பு மீசை. ஒட்டிய கன்னங்கள். ‘கூத்தன் பழனிச்சாமி மன்னார்குடி டூ சிங்கப்பூர்’, என்று சிவப்பு நிற மார்க்கரால் எழுதப்பட்டு நைலான் கயிறு சுற்றப்பட்ட அட்டைப்பெட்டி. ஒரு கைப்பையில் முடிந்தவரை  திணித்து வைக்கப்பட்ட துணிமணிகள் என வந்து நின்றவனை மூர்த்திதான் ஏர்போர்ட்டிலிருந்து அழைத்து வந்திருந்தான்.

கூத்தனைப் பற்றிச் சேகர் அண்ணனிடம் முதலில் சொன்னதும் மூர்த்திதான். “நம்ம பூந்தாலங்குடி கிராமம்தான்ணே. அப்பா கண்ணு தெரியாதவரு. ஊனமுற்றவங்க நடத்துற ஒரு ஆர்க்கஸ்டிராவுல இருக்காரு.  மூனு மாசத்துக்கு முன்னால அவனோட அம்மா ஒரு ஆக்சிடென்டுல செத்துப்போச்சி.  பய பெருசா ஏதும் படிக்கலைண்ணே. அந்த ஏரியா அப்துல் கலாம் ஐயா மன்றத்துப் பசங்கதான், இவனுக்கு ஏதாச்சும் செஞ்சு அங்க இழுத்துவுடுறான்னு கேட்டுக்கிட்டே இருக்கானுங்க. ஏதாவது பாத்து செய்ங்கண்ணே”. இந்த மாதிரியான கோரிக்கைகள் வருவது அவருக்குப் பழகிப்போன ஒன்று என்பதாலோ என்னவோ சேகர் அண்ணன் எதுவும் கண்டுகொள்ளாதது போல இருந்து விட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் அவராகவே மூர்த்திக்கு ஃபோன் அடித்து “டேய் மூர்த்தி! அந்தப் பூந்தாலங்குடி பயல மன்னார்குடி பஸ்டாண்டுல இருக்க நம்ம மாதா டிராவல்ஸ் போயி டெஸ்ட் அடிக்க ஏற்பாடு பண்ணச் சொல்லு. நான் கம்பெனி கிட்டயும்,   டிராவல்ஸ்லேயும் ஏற்கனவே பேசிட்டேன்”, என்றார்.

அடுத்த சில மாதங்களில் கூத்தன் சிங்கப்பூர் வந்து சேர்ந்து விட்டான். ஆரம்ப நாட்களில் நகரின் வனப்பும், தூய்மையும் அவனை ஏகமாகப் பயமுறுத்தியிருந்தது. சுத்தமான எதையும் தயங்கித் தயங்கியே தொட்டான். பயன்படுத்தினான். யாரையும் தொடாமல் தள்ளியே நின்றான். ஏதேனும் மூடிய அறைகளுக்குள் நுழையும்போது வீசும் நறுமணம் கூட அவனைப் பயமுறுத்தியது. வேலை செய்யும் சைட், லோரி, டார்மெட்ரியைத் தவிர வேறெங்கும் போவதைத் தவிர்த்தே வந்தான். மெடிக்கல் டெஸ்ட் எடுக்கப் போகும்போதுகூட கோழிக்குஞ்சு மாதிரி சேகர் அண்ணன் பின்னாலேயே சென்றான். வெள்ளைத்தோல் நர்ஸ் தொட்டது பல நாட்களாக மனதுக்குள் குறுகுறுத்துக் கொண்டே இருந்தது.

“ஏன்ணே! ஒன்னுக்குப் போற எடத்துலல்லாம் குளுகுளுன்னு இருக்கே. கரண்டு பில்லு எவ்ளோ ஆவும்?, “ஒரு வெள்ளி அம்பது காசுன்னா நம்மூர்க்கு 75 ரூவாயாண்ணே?”, எனக் கொஞ்சம் கொஞ்சமாக காதால் கேட்டுக்கேட்டு நகரத்துடன் பழகத் தொடங்கினான். பெரும்பாலான நேரங்களில் மூர்த்திதான் அவன் கூடவே இருந்தான். தினமும் டார்மெட்டரிக்கும், சைட்டுக்கும் இடையே லோரியில் போகும்போதும் வரும்போதும் சேகர் அண்ணனும் கூத்தனைக் கவனிக்கத் தொடங்கியிருந்தார். வந்த புதிதில் சேகர் அண்ணனைப் பார்த்தால் கூத்தனுக்குச் சட்டென்று பதற்றம் தொற்றிக் கொள்ளும். அவரிடம் இருந்து ஃபோன் வந்தால்கூட எங்கிருந்தாலும் உட்கார்ந்திருக்கும் இடத்திலிருந்து சட்டென்று எழுந்து நின்றுவிடுவான். மூர்த்தியும் அவனைச் சீண்டுவதற்காகவே அடிக்கடி பதற்றமான குரலில், “டேய் கூத்தா சேகரண்ணே வர்றாருடா”, என்று வம்புக்கு இழுப்பான். கூத்தனும் போட்டதைப் போட்டபடி பதற்றப்படுவதைப் பார்த்துச் சுற்றி இருப்பவர்கள் சிரிப்பார்கள்.

ஆரம்பத்தில் பயந்து பயந்து சுற்றிக்கொண்டிருந்த கூத்தன் இப்போது அப்படியில்லை. வளவளவென பேசத்தொடங்கி விட்டான். யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தால் பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. நாலு பேர் சேர்ந்து நின்றால் அவர்களோடு போய் சேர்ந்து கொள்வான். சுற்றி இருப்பவர்களிடம் நிறைய தொடர்பற்ற கேள்விகள் கேட்பான். ஆனால் யாரிடமும் பதிலெல்லாம் எதிர்பார்க்க மாட்டான். முக்கியமாக அவன் பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது காதில் இயர்ஃபோன் மாட்டினால் அவனுக்கு அவ்வளவு கோபம் வரும். கூட்டத்தோடு கூட்டமாக இருப்பதும், பேசுவதும், சிரிப்பதுமே அவனுக்குத் தேவையாய் இருந்தது. அவன் சட்டென்று நெருங்காதது சேகர் அண்ணனிடம் மட்டும்தான். முதலில் லோரியில் ஏறும்போது தயங்கித் தயங்கி “சேகர் அண்ணே! லோரியில முன்னாடி சீட்டுல  உட்கார்ந்துக்கவா?”, என்று பரிதாமாகக் கேட்டபோது சேகர் அண்ணனுக்கு எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. இப்போது அந்த இடம் அவனுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடம். தினமும் லோரியில் ஏறி உட்கார்ந்ததும் எஃப்.எம் ரேடியோவைச் சத்தமாக வைத்துக் கொள்வான். விமலாவும், ரஃபியும் ரேடியோவில் நிகழ்ச்சியில் கேட்கும் கேள்விகளுக்குத் தப்புத்தப்பாக லோரியில் இருப்பவர்களிடம் பதில் சொல்லுவான். லோரியில் உட்கார்ந்திருக்கும் எல்லோருக்கும் கேட்கும்படி சினிமா பாடல்களைக் கூடவே பாடுவான். தேவையில்லாமல் சிரிப்பான். அவனைக் கிண்டலும், கேலியும் செய்பவர்களை அவன் பொருட்படுத்தியதே இல்லை. கூத்தனின் இயல்பு நிலை என்பது மற்றவர்களுக்கு இயல்பாக இல்லை. பெரும்பாலான நேரங்களில் எரிச்சலாகவே இருந்தது.

அன்றும் வழக்கம்போல கூத்தனுக்கு இடம் கொடுக்காமல் மூர்த்தி சேகர் அண்ணனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவனைச் சீண்டிக் கொண்டிருந்தான். டிரைவர் சீட்டுக்குப் பக்கத்துச்சீட்டு என்பது சாதாரணமாக ஒருவர் உட்காரும் சின்ன இருக்கை மட்டுமன்று. அது டிரைவருடனான நெருக்கத்தின் அடையாளம். பல நேரங்களில் உட்காருபவரின் சீனியாரிட்டிதான் அதைத் தீர்மானிக்கும். சேகர் அண்ணனுக்கு மூர்த்தி அங்கே உட்காருவதில்தான் வசதி. இருந்தாலும் இப்போதெல்லாம் அது மாறிவிட்டது. எவ்வளவோ கெஞ்சியும் மூர்த்தி இடம் கொடுக்காதது கூத்தனுக்குக் கடும் கோபத்தைத் தந்தது. தொண்டை அடைத்துக்கொண்டு வார்த்தைகள் வெளியே வராமல் விம்மத் தொடங்கினான். “மூர்த்தி அண்ணே… நீ என்ன பெரிய ஆளா? நான் ஒருநாள் லோரி வாங்குவேன். அப்ப நீ இந்த சீட்டுல உட்கார முடியாம சூத்துல கட்டி வந்து கெடப்ப பாரு…” நிஜமாகவே அவன் விம்மி விம்மிப் பேசுவதைப் பார்த்ததும் மூர்த்திக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கூத்தன் சேகர் அண்ணனைப் பார்த்துக்கொண்டே லோரியில் ஏறாமல் நின்று கொண்டிருந்தான். “டேய் மூர்த்தி! நீதான் பின்னாடி போய்த்தொலையேன்டா. அவனோட ஏண்டா மல்லுக்கட்டுற”, என்று சேகர் அண்ணன் திட்டிய பிறகே மூர்த்தி சிரிப்பை அடக்கியபடி இறங்கி அவனுக்கு இடம் கொடுத்தான். கண்களைச் சின்னப்பையன் மாதிரி துடைத்துக்கொண்டு வந்து உட்காரும் கூத்தனைப் பார்த்ததும் சேகர் அண்ணனுக்கு என்னவோ போல இருந்தது. கீழே குனிந்தபடி வந்தவன் சிறிது நேரத்திற்கெல்லாம் எதுவுமே நடக்காதது போல எஃப்.எம்மில் ஐக்கியமாகி விட்டான். மூர்த்தியும் கேலியும் கிண்டலுமாகப் பின்னால் சிரித்துக்கொண்டு அரட்டைக்குத் தாவியிருந்தான். சேகர் அண்ணன் மட்டும் அடிக்கடி கூத்தனைப் பார்த்தபடி லோரியை ஓட்டிக்கொண்டிருந்தார்.

வழியில் வழக்கமாகக் கோப்பி குடிக்க நிறுத்தும் ஃபுட்கோர்ட் வந்ததும் பார்க்கிங்கில் திருப்பி லோரியை நிறுத்தினார். எல்லோரும் இறங்கியதும் நிதானமாகக் கீழே இறங்கி ஒரு சிகரெட்டோடு ஸ்மோக்கிங் கார்னருக்கு ஒதுங்கினார். கூத்தன் மற்றவர்களோடு சிரித்துப் பேசியபடி கோப்பிக்கடைக்குச் சென்றான். மூர்த்தி அவன் முதுகில் தட்டிவிட்டுத் தோளோடு அவனைக் கட்டிக்கொண்டு நடந்தான். வழக்கமாக மற்றவர்கள் எல்லோரும் கோப்பி குடித்துக்கொண்டு இருக்கும்போது கூத்தன்தான் பிளாஸ்டிக் பையில் ஸ்ட்ராவோடு சேகர் அண்ணனுக்கு வாங்கிக்கொண்டு வருவான். சேகர் அண்ணன் ஒரு கையில் சிகரெட்டும் ஒரு கையில் கோப்பி பையுடன் நிற்கும்போது கூத்தன் வழக்கம்போல் அவரிடம் ஏதாவது பேசத் தொடங்கிவிடுவான். அன்றும் ஒரு கையில் கோப்பியைத் தொங்கவிட்டபடி தன்னை நோக்கி வந்தவனிடம் “டேய் கூத்தா. உன்கிட்ட யாரோ ஃபோன்ல பேசணும்ன்னு சொல்றாங்கடா”, என்றபடி தன் செல்ஃபோனை நீட்டினார். “என்கிட்டயா?” என்றபடி குழப்பத்தோடு ஃபோனை வாங்கியவன், தயக்கத்துடன் “அலோ… யார் பேசுறீங்க…” என்றான். மறுமுனையில், “இது வணக்கம் சிங்கை. நான் உங்க விமலா. சொல்லுங்க எப்படி இருக்கீங்க?” என்றதும் அவன் கையிலிருந்த கோப்பி நழுவித் தளும்பத் தொடங்கியது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் கண்களில் சற்று அதிர்ச்சியோடு அப்படியே நின்றுகொண்டு இருந்தான். சேகர் அண்ணன் அதை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே உதட்டோரத்தில் வந்த சிரிப்பை அடக்கியபடி சிகரெட்டை ஊதிக்கொண்டு இருந்தார். “ஹலோ.. நான் பேசுறது கேட்குதா?”, என்று விமலா மறுபடியும் கேட்டதும் கூத்தன் தடுமாறியபடி, “அக்கா. இல்லக்கா. அண்ணன் திடீர்னு போன குடுத்துச்சு. அதான் கோப்பி கொட்டிடுச்சு. அதான்… நீ சாப்பிட்டியாக்கா?” என்றான். விமலா சிரித்துக்கொண்டே “நல்லா சாப்பிட்டேங்க. நீங்க பசியாறிட்டீங்களா? சொல்லுங்க என்ன பாட்டு வேணும்” என்றார். “பாட்டாக்கா… அது… ம்ம் சாப்பிட்டேன். நீங்க நல்லா பேசுறீங்கக்கா. பாட்டு… ம்ம்…” என்று சில வினாடிகள் யோசித்தவன், “அக்கா… நான் கடவுள் படத்துல வர்ற அம்மா உம் பிள்ளை பாட்டுப் போடுக்கா”, என்றான். விமலா மறுபடியும் சிரித்துக்கொண்டே “நீங்க கேட்ட பாட்டு வந்துகிட்டே இருக்கு. தொடர்ந்து நிகழ்ச்சியில் இணைந்திருங்க” என்றதும் இணைப்புத் துண்டிக்கப்பட்டுப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

கூத்தனுக்குச் சிரிப்பும் அழுகையும் சேர்ந்தே வந்தது. சேகர் அண்ணனிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. பாட்டைக் கேட்டுக்கொண்டு அப்படியே பார்க்கிங் ஓரத்தில் இருந்த சிமெண்ட் கட்டையில் உட்கார்ந்து விட்டான். கண்களைத் திறந்து எதிரே எதையோ உற்றுப் பார்ப்பது போல இருந்தான். ஆனால் அவன் எதையும் கவனிக்கவில்லை. சேகர் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். கூத்தனுக்கு எதைப்பற்றியும் பிரக்ஞையே இல்லை. ஊர் மரத்தடியில் இருக்கும் அய்யனார் சிலைபோல அப்படியே அசையாமல் இருந்தான். கூத்தனைச் சேகர் அண்ணன் இதுவரை அப்படிப் பார்த்ததே இல்லை. அவன் முகத்தில் படரும் உணர்வுகளை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கோப்பி குடித்து முடித்து திரும்ப வந்த மூர்த்தி, கூத்தன் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் அவனை வித்தியாசமாக பார்த்தபடி நெருங்கினான். சேகர் அண்ணன் ஏதோ நினைத்தவராய் கைகளால் சைகை செய்து மூர்த்தியை நிறுத்தினார். பாட்டு முடிந்தும்கூட கூத்தன் அசைவதாய்த் தெரியவில்லை. சேகர் அண்ணன்தான் “கூத்தா.. கூத்தா டேய்…”, என்று மெதுவாகத் தோளைத்தொட்டு அவனை உலுக்கினார். நெடுந்தொலைவிலிருந்து ஓடிவந்த நாயைப்போல மூச்சு மட்டும் வேகவேகமாக அவனிடமிருந்து வந்து கொண்டிருந்தது. பிரம்மை பிடித்தவன் போல அப்படியே உட்கார்ந்திருந்தான். பயந்துபோன சேகர் அண்ணன் லோரியில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து அவன் முகத்தில் ஒரு கை தண்ணீரை ஓங்கி அடித்தார். தடுமாறியபடி தலையை நிமிர்த்தி சேகர் அண்ணனைப் மலங்க மலங்கப் பார்த்தவன் திடீரென்று அவர் கால்களை வளைத்துப் பிடித்துக்கொண்டு அதில் முகத்தைச் சாய்த்தபடி “அண்ணே… அம்மா சாவுற அன்னிக்கு ராத்திரி இந்த பாட்டுதாண்ணே பாடுச்சு. சாப்பிட்டுகிட்டு இருந்த அப்பாவுக்கு திடீர்னு ஏதோ வலிப்பு மாதிரி வந்துச்சு. அம்மா பதறிப்போயி ஆளுங்கள கூட்டியாற ரோட்டு பக்கம் ஓடுனப்பா லாரி அடிச்சி….”, என்று கதறி அழத் தொடங்கினான்.

சேகர் அண்ணன் ஒன்றும் சொல்லாமல் நின்று கொண்டே இருந்தார். ஊரில் வயலுக்கு வச்சிருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டுச் செத்துப்போன தன் தம்பி அவருக்கு நியாபகத்துக்கு வந்தான். வேலை செய்யும் இடத்தில் கூட வேலை செய்யும் பெண்ணிடம் காதலைச் சொல்லி அது நிறைவேறாமல் போகவும் அவசரப்பட்டு விட்டான்.  உடம்பெல்லாம் பட்டை பட்டையாகத் தோல் உரிந்து வயக்காட்டில் கிடந்தான். கூடப்படித்த நண்பர்கள் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் போட்டார்கள். காசு சேர்த்து மாலை வாங்கிப்போட்டுச் சுடுகாடு வரைக்கும் சுமந்து போனதும் அவர்கள்தான். சேகர் அண்ணன் ஊருக்கு வருவதற்குள் பிணத்தை நீண்ட நேரம் தாங்காது என்பதால் தகனம் செய்து விட்டார்கள். மிஞ்சியிருந்த சாம்பலைப் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்ப விருப்பம் இல்லாமல் தம்பி கிடந்த வயக்காட்டிலேயே உட்கார்ந்திருந்தார். பித்துப் பிடிச்சவனாட்டம் அசையாம உட்கார்ந்திருக்கான்னு ஊர் பேசியது. எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்து இருந்தார் என்று தெரியவில்லை. வானம் விடியும்போதே வீட்டுக்குத் திரும்பினார். லேசாக தூறல் போட்டுக்கொண்டு இருந்தது. மனம் முழுவதும் வெறுமை சூழ்ந்திருந்தது. வீட்டிற்குத் திருப்பினால் அங்கிருப்பவர்களுடன் சேர்ந்து அழநேரிடும் என்பதை நினைத்தால் வெறுப்பாக இருந்தது. வழியில் புளியமரத்தடி ஸ்டாப்பில் உள்ள டீக்கடையில் கொஞ்ச நேரம் ஒதுங்கி நின்றுகொண்டு இருந்தார். வாசலில் கிடந்த பெஞ்சிற்குப் பக்கத்தில் அழுக்குச் சட்டையுடன் உட்கார்ந்திருந்தவன் திடீரென்று கண்களை மூடிக்கொண்டு பாடத் தொடங்கினான். அந்தப் பெஞ்சில் உட்கார்ந்து சப்தமில்லாமல் அழுததும் நியாபகம் வந்தது. அந்தப் பாட்டைப் பாடியவனின் முகம் எப்படி இருந்தது என்ற யோசனை சேகர் அண்ணாவை அலைக்கழித்தது. திடீரென்று மனதில் நுழையும் ஒரு பாட்டுக்கு நேர்த்தியோ அலங்காரமோ தேவையில்லை. அதில் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்னவென்று தனக்குத்தான் புரியவில்லை என்று தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டார். கொஞ்ச நேரம் கூத்தனையே பார்த்தபடி நின்றுகொண்டு இருந்தார்.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு கூத்தனுடன் இருப்பதைச் சேகர் அண்ணனால் தவிர்க்க முடிவதில்லை. அவன் விரும்பியபடி கூட்டமாக ஆட்கள் இருக்கும் இடங்களுக்கு அவனை அழைத்துப்போகத் தொடங்கினார். அப்படி அவனுடன் அடிக்கடி வரும் இடங்களில் தேக்காவும் ஒன்று. அன்று தைப்பூசத் திருவிழாவால் சிராங்கூன் வீதி கூடுதல் உற்சாகத்தோடு இருந்தது. ரேஸ் கோர்ஸ் ரோடு பக்கம் லோரியை நிறுத்திவிட்டு தெண்டாயுதபாணி ஸ்டோர் வாசலில் சேகர் அண்ணன் கையில் ஒரு பரோனஸ் பியரோடு உட்கார்ந்து விட்டார். பக்கத்தில் இன்னொரு பியர் திறக்கப்படாமல் இருந்தது. கடைக்குப் பக்கத்தில் காவடிச்சிந்து பாட அனுமதிக்கப்பட்டிருந்தது. பெருமாள் கோவிலிருந்து காவடி எடுப்பவர்களுடன் கூட்டம் கூட்டமாக வருபவர்களைப் பார்த்ததும் கூத்தனால் ஓர் இடத்தில் சும்மா நிற்க முடியவில்லை. பஜனை, ஜால்ரா, கஞ்சிரா என விதவிதமாக இசைக்கருவிகளுடன் காவடியும், பால்குடமும் சுமந்து ஆடியபடி வரும் ஒவ்வொரு குழுவோடும் கொஞ்சதூரம் போய் ஆடிவிட்டு வந்தான். பக்கத்தில் தண்ணீர் போத்தல்கள் வழங்கிக் கொண்டிருந்தவர்களுடன் சிறிதுநேரம் நின்று கொண்டு, “அண்ணே நான் எடுத்து குடுக்குறேன்ணே”, என்று சொல்லிவிட்டு தண்ணீர்ப் போத்தல்களை எடுத்துக் கொடுக்கத் தொடங்கினான். இடையிடையே, கடையில் இருப்பவர்களைப் பொருட்படுத்தாமல், “அரோகரா! அரோகரா!” என்று கத்தினான். திடீர் திடீரென ஈரத்தோடு வரும் யார் யாருடைய கால்களை எல்லாமோ தொட்டுக் கும்பிட்டான். ஒரு குழந்தையுடன் வந்து கொண்டிருந்த பெரியவரிடம் சென்று “ஐயா நான் பாப்பாவைத் தூக்கிட்டு வர்றேன்”, என்று அவர் பின்னாலேயே ஓடினான்.  கொஞ்சம் நேரம் அப்படியே ரோட்டுக்குப் பக்கத்தில் இருந்த நடைமேடையில் வருபவர்கள் போகிறவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றான். பின்னர் “இந்தா வர்றேன்ணே”, என்று சொல்லிவிட்டுப் போனவன்  உறுமி மேளம் வாசிக்கும் இடம்வரை போய்விட்டு மூச்சு இரைக்க  இரைக்க  ஓடிவந்து, “அண்ணே. நான் சாமிண்ணே. நான் கூத்தண்ணே. அரோகரா! அரோகரா!”, என்றபடி நடராஜர் மாதிரி அந்தக் கடை வாசலிலேயே ஒரு காலைத் தூக்கி நின்றுகொண்டு சப்தம் போட்டுச் சிரித்தான். சேகர் அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்தபடி பியரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்குப் பிறகு அவர் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன் அவருடைய பாக்கேட்டிலிருந்து ஃபோனை எடுத்து எஃப்.எம்மைச் சத்தமாக வைத்துக்கொண்டு பாட்டுக் கேட்கத் தொடங்கினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்தவர் எதிரிலிருந்த மசூதியைக் காட்டி, “கூத்தா.. அங்க போயிருக்கியா?”, என்றார். அவ்வளவுதான் அவரிடம் பதில் கூட சொல்லாமல் எழுந்து மசூதியை நோக்கி ஓடத் தொடங்கினான்.

கூத்தனைப் புரிந்துகொள்வது சேகர் அண்ணனுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. ஆனால் அவன் இருப்பு அவருக்கு ஏதோ ஓர் ஆறுதலைக் கொடுத்தது. சில நேரங்களில் ஏன் இந்த கிறுக்குப்பயலோட சுத்துறோமோ என்று யோசிப்பார். அப்புறம் நாமதான் எப்ப எங்கன்னு நாகரீகம் பார்த்துச் சிரிப்பு அழுகையெல்லாம் கூட அடக்கி வைக்கிறோம். ஆனா கூத்தன் அப்படி இல்லையே? காவடியைச் சுமந்துகிட்டு வர்ற இந்தப் பையன், தன்னோட பேத்தியைச் சுமந்துகிட்டு வர்ற பெரியவர், தக்காளி பெட்டிய கடைக்குள்ள சுமந்துகிட்டு போறவன் இப்படி எல்லாரும் வழியில்லாமலோ அல்லது விருப்பப்பட்டோ மனசுக்குள்ளயும் எதையாவது சுமக்கிறோம்.  கூத்தன் எதையும் சுமக்கிறதா நினைக்கிறது இல்ல. அவ்வளவுதானே? அவன்கூட ஏன் சுத்தக்கூடாது என்று அவரே சமாதானம் ஆகிவிடுவார். இப்போதெல்லாம் சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் கூத்தனோடு தேக்காவுக்குப் போய்விடுவது வழக்கமாகிவிட்டது. ரேஸ் கோர்ஸ் ரோட்டில் லோரியை நிறுத்திவிட்டு தேக்காவில் கூட்டமாக இருக்கும் இடங்களில் அவனோடு சுற்றுவார். சகுந்தலாவில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ரெக்ஸில் படம் பார்ப்பதும் கூத்தனுக்காக மட்டும்தான். அன்றும் அப்படித்தான் கூத்தனோடு மாரியம்மன் கோவிலிக்குச் சென்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது  அவர் காதுக்குப் பக்கத்தில் வந்து சத்தமாக, “அண்ணே பிரியாணி வாங்கித்தாண்ணே”, என்றான். எல்லோரும் அவனையே திரும்பிப் பார்த்தார்கள். சேகர் அண்ணன் அவனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சகுந்தலாவிற்கு அழைத்துப்போய் கோழி பிரியாணி வாங்கித் தந்தார்.

சாப்பிட்டுவிட்டு கடையிலிருந்து வெளியேறும்போதுதான் அந்த இடத்தில் எப்போதும் இல்லாத பரப்பரப்பு இருந்ததை சேகர் அண்ணன் கவனித்தார். என்னவென்று புரியாமல் கூத்தனை அழைத்துக்கொண்டு கூட்டத்தைப் பார்த்தபடியே பஃப்பல்லோ ரோடு பக்கம் நடக்கத் துவங்கினார். ரோட்டோரத்தில் காய்கறி வாங்க நிற்கும் கூட்டம் நெருக்கித் தள்ளிக்கொண்டு தேக்கா பஸ்டாப்பை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சேகர் அண்ணன் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தவராய் எதிரில் வந்த ஒருவரிடம் “ஏங்க என்னாச்சு. ஏன் ஒரே பதட்டமா இருக்கு?”, என்றார். “ஊர் ஆள் ஒருத்தன் மேல வண்டி ஏத்திட்டாங்களாம். ஆள் காலி. ரேஸ் கோர்ஸ் ரோடு பக்கம் ஒரே கலவரமா இருக்கு. போலீஸ் வண்டியல்லாம் கொளுத்திட்டாங்களாம்”, என்று பதில் சொல்லியபடி அவர் வேகவேகமாக நடக்கத் தொடங்கினார். சேகர் அண்ணாவுக்குச் சட்டென்று எதுவும் புரியவில்லை. கலவரமா? இங்கேயா? வண்டிய கொளுத்திட்டாங்களா? எதுவுமே பிடிபடவில்லை. பக்கத்தில் இருந்த கூத்தன்தான் முதலில் எதையோ யோசித்தவனாக “அண்ணே லோரிண்ணே”, என்று கத்திவிட்டுக் கூட்டம் வந்துகொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் ஆட்களை விலக்கிக்கொண்டு ஓடத்தொடங்கினான். சட்டென்று நிலைமை புரியத்தொடங்க “கூத்தா நில்லுடா. நான் போறேன்” என்று கத்தினார். அதற்குள் கூத்தன் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தான்.

சேகர் அண்ணன் இப்படி ஒரு காட்சியை அவர் அனுபவத்தில் தேக்காவில் பார்த்ததில்லை. ஆங்காங்கே பொருட்கள் சிதறிக்கிடந்தன. அவசர அவசரமாகச் சிலர் கடைகளை அடைத்துக் கொண்டிருந்தனர். லிட்டில் இண்டியா எம்ஆர்டிக்குப் பக்கத்தில் நிறைய பாட்டில்கள் உடைந்து கிடந்தன. நடைபாதையில் இருந்த கற்கள் பெயர்த்து எடுத்து வீசப்பட்டிருந்தன. ஒரு போலீஸ் வாகனம் எரிந்து கொண்டு இருந்தது. கண்ணாடிகள் உடைந்து சிதறியிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கூத்தனைக் காணவில்லை. நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. “கூத்தா… கூத்தா…”, என்று கத்தியவாறு லோரி நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி ஓடத் தொடங்கினார். ரேஸ் கோர்ஸ் ரோட்டை அடைந்தவுடன் சாலையோர பார்க்கிங்கில் விழுந்து கிடந்த மோட்டார் சைக்கிள்களுக்கு அந்தப்பக்கம் லோரி கண்ணுக்குத் தெரிந்தது. இரண்டு பேர் லோரியை பிடித்து குலுக்கிக்கொண்டு இருந்தனர். கூத்தன் அவர்களின் இருவரின் சட்டைகளையும் பிடித்து முதுகிற்குப் பின்னால் தொங்கியபடி ஆவேசமாக “அண்ணே லோரிய விடுண்ணே. லோரிய விடுண்ணே”, என்று கத்திக் கொண்டிருந்தான். சேகர் அண்ணன் கால்கள் நடுங்கத் தொடங்கின. “டேய்… டேய்… விடுங்கடா…”, என்றபடி லோரியை நெருங்கவும், எங்கிருந்தோ வந்த காலி பீர் போத்தல் ஒன்று சரியாகக் கூத்தனின் தலையில் மோதி உடைந்து சிதறவும் சரியாக இருந்தது. “அம்மா…”, என்று கத்தியபடி அவர்களின் சட்டைகளிலிருந்து பிடி நழுவிக் கூத்தன் தரையில் சரிந்தான். பளிச்சென்று முகமெங்கும் பரவிய இரத்தத்தைப் பார்த்ததும் லோரியை குலுக்கிக் கொண்டிருந்த இருவரும் அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்கினர். சேகர் அண்ணனுக்குச் சட்டென்று அந்த இடம் மயானம் ஆனது போல இருந்தது. தரையில் குனிந்து கூத்தனைத் தூக்கியவர் கைகளில் இளஞ்சூடாக ரத்தம் பரவியதும், சட்டென பதறிப்போய் அவனைத் தரையில் படுக்க வைத்துவிட்டு எழுந்துவிட்டார்.  லோரிக்குப் பக்கத்தில் இங்கேயும் அங்கேயுமாய் என்ன செய்வதென்று புரியாமல் அலைந்தவருக்கு உடலெங்கும் நடுக்கம் பரவியிருந்தது. முட்டிக்கொண்டு வந்த அழுகையை வாயைப் பொத்தி அடக்க முயன்றார். எதையும் யோசிக்க முடியவில்லை. கூத்தனிடமிருந்து “அண்ணே..அண்ணே..”, என்று முனகல் கேட்டுக்கொண்டே இருந்தது. சட்டென்று ஏதோ நினைத்தவராய்த் தன் சட்டையைக் கழட்டிக் கூத்தன் தலையில் கட்டினார். அவனை அப்படியே தூக்கி லோரியில் போட்டுக்கொண்டு அந்த இடத்திலிருந்து லோரியைத் திருப்பினார். கொஞ்சம் தூரம் நகர்ந்ததும் அவர் கால்கள் முன்னைவிட அதிகமாக நடுங்கத் தொடங்கின. ஸ்டியரிங்கிலிருந்து பிடி நழுவியது. சேகர் அண்ணன் அவ்வளவு பலவீனமானவர் இல்லை. எத்தனையோ பேரைத் தனியாக எதிர்த்து நிற்கும் பலம் உள்ளவர்தான். ஆனாலும் அவர் பக்கத்தில் கிடந்த கூத்தன் அவருக்குள் இருந்த எல்லாவற்றையும் கலைத்துப் போட்டிருந்தான். இதற்கு மேல் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்ற நிலையில் லோரியை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். மூர்த்திக்கு ஃபோன் போட்டவர், “டேய் மூர்த்தி…” எனத் தொடங்கி உடைந்து குழந்தை போல அழத் தொடங்கினார்.

ஒரு மாதத்தில் எல்லாம் மாறியிருந்தது. தலையில் பலமாக அடிபட்டதில் கூத்தன் மயக்கநிலைக்குப் போனவன் 10 நாட்கள் கழித்துத்தான் நினைவு திரும்பினான். காதுக்குப் பின்னால் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் காது கேட்கும் திறனை இழந்திருந்தான். சேகர் அண்ணனும், மூர்த்தியும்தான் மாறி மாறி அவனைப் பார்த்துக் கொண்டார்கள். கலவரத்தில் அடிபட்டிருந்ததால் போலீஸ் விசாரணையும் நடந்திருந்தது. ஹாஸ்பிடலுக்கு இரண்டு முறை வந்த கம்பெனி முதலாளி செலவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார். சேகர் அண்ணாவுடன் பேசியவர் தொடந்து சிகிச்சைகளைச் செய்ய உதவுவதாகவும் இப்போதைக்கு அவன் உடல் தேறியதும் அவனை இந்தியாவுக்கு அனுப்பிவிடலாம் என்றும் சொல்லியிருந்தார். சேகர் அண்ணாவுக்குச் சூழல் புரிந்தது. அவரே கூத்தன் ஊருக்குப் போவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார். முஸ்தபாவில் பெரிய ஸ்பீக்கருடன் ஒரு மியூசிக் சிஸ்டமும், இன்னும் கொஞ்சம் பொருட்களும் வாங்கியிருந்தார். கம்பெனியிடம் பேசிவிட்டுக் கடைசி சில நாட்கள் அவர் கூத்தனைத் தன் வீட்டில்தான் தங்க வைத்திருந்தார். கூத்தன் காதுகளைச் சுற்றி பெரிய கட்டுப் போட்டிருந்தான். சேகர் அண்ணன் காது கேட்காமல் கூத்தன் நொடித்துப் போய்விடுவான் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல கூத்தன் தனக்குக் காது கேட்காமல் போனது பற்றி எந்தக் கவலையும்  கொள்ளவில்லை. அவர் வாங்கி வந்திருந்த மியூசிக் சிஸ்டம் இருந்த பெட்டியை அடிக்கடி தடவிப் பார்த்துக்கொண்டான். பேச முடிந்தாலும் காது கேட்காத குறை என்பது கூத்தனைக் கொஞ்சம் சைகை மொழிக்குப் பழக்கியிருந்தது. அவன் சைகையால் பேசுவதை ரசிக்கும் மனநிலைக்குச் சேகர் அண்ணாவும் வந்திருந்தார். கூத்தனை அவர் லோரியில்தான் ஏர்ப்போட்டுக்கு அழைத்துப் போனார். மூர்த்தியும் கூட வந்திருந்தான். வீட்டிலிருந்து கிளம்பும்போதே அவசர அவசரமாக ஓடிவந்து தன் வழக்கமான இடத்தில் உட்கார்ந்து கொண்டான்.  எஃப்.எம் ரேடியோவைச் சத்தமாக வைத்துவிட்டு பின்னால் இருக்கும் மூர்த்தியைப் பார்த்துச் சிரித்தான். சேகர் அண்ணனும் வழக்கம் போல அதைக் கவனிக்காது  லோரியை ஓட்டிக்கொண்டிருந்தார்.

கூத்தன் செக்கிங் முடித்துப் போகும்வரை சிரித்தபடியே இருந்தான். அவன் நமக்காக நடிக்கிறானோ என்று கூட சேகர் அண்ணனுக்குச் சந்தேகம் வந்தது. அவர் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. மூர்த்தி மட்டுமே அவன் போகும்போது இமிகிரேஷனக்கு அந்தப்பக்கம் போய் குதித்துக் குதித்து கையை ஆட்டியபோது கண்கலங்கினான். கூத்தனை அனுப்பிவிட்டு திரும்பும் வழியில் சேகர் அண்ணன் எதுவும் பேசவே இல்லை. மூர்த்திக்குதான் அவருடைய அமைதி என்னவோ செய்தது. தானாக மெதுவாகச் சேகர் அண்ணனின் தோளைத்தொட்டு, “சேகர் அண்ணே! கூத்தன் குணமாகி வருவான்னே”, என்றான். சேகர் அண்ணன் கண்களில் லேசாகக் கண்ணீர் திரண்டது. வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதே அவர் மொபைல் அதிரத்தொடங்கியது. ஹெட் செட்டை காதில் மாட்டிக்கொண்டவர் “சொல்லும்மா..”, என்று தொடங்கி சன்னமான குரலில் “ஆமாம்..” போடத்துவங்கினார். “சரிம்மா… சரிம்மா… அதெல்லாம் ஒன்னும் இல்ல. உன் மடியில தங்காதது அந்த முருகன் புண்ணியத்துல யார் வயித்துலயாவது போயி தங்கும்மா…”, என்று சொல்லிவிட்டுத் துண்டித்தவர் மீண்டும் மௌனமானார்.

லோரி வழவழப்பான சாலையில் காற்றில் மிதப்பதுபோல சென்று கொண்டிருந்தது. லோரி உள்ளே எதுவுமே நிகழாமல் சூன்யமாக இருப்பது போல இருந்தது. மூர்த்தி லேசாகக் கண்ணாடியை இறக்கினான். சட்டென்று காற்று ஆவேசமாய் உள்ளே நுழைந்தது. மூர்த்தியை கவனிக்காதது போல லோரியை ஓட்டிக்கொண்டிருந்த சேகர் அண்ணன் சிறிதுநேரம் கழித்து தானாகவே பேசத் தொடங்கினார். “அதில்லடா மூர்த்தி. தம்பி செத்துப்போயி வருஷங்கள் ஓடிடிச்சு. அவனுக்கு அப்புறம் எனக்கு இருந்த ஒரே பிடிப்பு ரேயாதான். எனக்கும் அவளுக்கும் பதினஞ்சு வயசு வித்தியாசம். அவ வேலை செஞ்ச வீட்டுலேர்ந்து அவளை மீட்டுத்தான் கல்யாணம் பண்ணேன். அப்பவே உடம்பெல்லாம் செதஞ்சுதான்டா வந்தா. அடிக்கடில்லாம் அவளோட ஒன்னால்லாம் இருக்கமுடியாது. அவளுக்கு உடம்புல இருக்கிற பிரச்சனைக்கு இனி புள்ளையெல்லாம் பொறக்காதுன்னு சொல்லிட்டாங்க. எங்களுக்குள்ள இருக்க வாழ்க்கை போதும்னு இருந்துட்டோம். கூத்தன் வீட்டுல இருந்த கொஞ்ச நாளா நான் வீட்டுல அளவுக்கு அதிகமா குடிச்சிகிட்டு இருந்தேன். நேத்துக்கூட ராத்திரி நான் ரேயாவோட சேர்ந்து நிறைய குடிச்சிட்டேன் போல. எவ்ளோ குடிச்சேன்னு தெரியல. ராத்திரியெல்லாம் நான் போதையில கூத்தனைப் பத்தி அவகிட்ட பொலம்பியிருப்பேன் போல. பத்துமலை போகணும்னு சொன்னேனாம்.”

இதெல்லாம் ஏன் சேகர் அண்ணன் தன்னிடம் சொல்கிறார் என்று மூர்த்திக்கு ஓரளவுக்கே புரிந்தது. இருந்தாலும் கரிசனத்தோடு கேட்பவன் போல கேட்டுக்கொண்டே வந்தான்.

அவனை ஒரு வினாடி பார்த்துவிட்டு திரும்பியவர், “இன்னும் வேணும்னா கண்ணாடியா இறக்கி விட்டுக்கோடா. சில நேரம் நாம லோரிய ஓட்டுறோமா? இல்ல அதுவா நம்மள இழுத்துட்டுப் போவுதான்னு தெரியல”, என்று சொல்லிவிட்டு முனகுவது போலச் சிரித்தார். அப்போது அவர் முகத்தில் அவருடைய மொத்த வாழ்க்கையையும் வழித்து வீசுவது போல ஒரு வறட்டுப் புன்னகை தோன்றி மறைந்தது.

மீண்டும் மூர்த்தியை பார்த்தவர் “ஏன்டா உனக்கும் கூத்தன் வயசு இருக்கும்”, என்றார்.

லோரி சாலையில் நழுவிக்கொண்டிருந்தது. ஒலி எஃப்எம்மில் விமலா ‘வணக்கம் சிங்கை’, நிகழ்ச்சியைப் படைத்துக் கொண்டிருந்தார். யாரோ ஒருவர் ஊரில் இருக்கும் தன் உறவினரின் குழந்தைகள் பெயர்களை வரிசையாகச் சொல்லித் தனக்கு விருப்பமான பாடல் ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தார்.

***

செந்தில்குமார் நடராஜன் – சிங்கப்பூரில் வசிக்கும் இவர். தற்பொழுது சிறுகதைகள் எழுதி வருகிறார். கடந்த ஆண்டு சிங்கப்பூர் இலக்கியத் திருவிழாவில் இவர் எழுதிய கதை முதல் பரிசு வென்றது.

முதலாவது சார்பு நீதிமன்றத்தில் சோழன் பூர்வ பட்டயம்

0

இரா.முருகவேள்

          “ என்கிற ஊரில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோவில் செங்குந்த முதலியார்களுக்குச் சொந்தமானது சார். அதாவது எங்க மூதாதையர்.” என்றார் பேராசிரியர்.

    அவர் முதலியாராக இருக்கலாம் என்ற சந்தேகம் முன்பே இருந்தது. அவரது வாட்டசாட்டமான அத்லெட் தோற்றம் எனக்கு பேராசிரியர் சத்தியமூர்த்தியை நினைவுபடுத்தியது. அவரும் இவரைப் போலவே மாநிறமாக உயரமாக தொந்தியே இல்லாமலிருப்பார்.  ஜூரிஸ்புரூடன்ஸ் சொல்லிக் கொடுத்து சித்தரவதை செய்வார். போர்டில் எழுதி எழுதி தள்ளுவார். அப்போது அவரது கரத்தில் இருக்கும் தசைகள் கோடுகோடாக அசைவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். “இந்த ஆள் இன்ஸ்பெக்டர் மாதிரி ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் அட்டகாசமா இருந்திருக்கும். வக்கீலாகி, அந்த யுனிபார்மும் போடாம வாத்தியாராகி நம்ம உயிரை எடுக்கறான்” என்பார்கள் நண்பர்கள்.

   சத்தியமூர்த்தி பற்றிய உரையாடலை அப்புறம் பார்ப்போம். இப்போது அங்காள பரமேஸ்வரிக்குத் திரும்புவோம்.

    “சோழன் பூர்வ பட்டயத்துல இருளன் பதிவனத்தை வெட்டி, கோட்டையும் பேட்டையும் கட்டி, அங்காளபரமேஸ்வரிக்கு கோவில் கட்டி பலி கொடுத்து  நிர்வாகத்துக்குக் கட்டி முதலியையும், பூசைக்கு பண்டாரத்தையும் வைத்து நிகுதி செய்து வெற்றிலை பாக்கு வைத்துக் கொடுத்ததா இருக்கு”

   பேராசிரியர் தோள்பையில் நீந்தி ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தார். அதில் மேற்கண்டவாறு எழுதியிருந்தது.

   “சரிங்க”

   “இப்ப கோவில் ஒரு பண்டாரத்து கைல இருக்கு. அதை மீட்கணும். கோவில் எங்களோடதுங்கறதுக்கு பட்டய ஆதாரம் இருக்கு. பட்டயத்துல பூசை செய்யத்தான் பண்டாரத்தை நியமிச்சிருக்கு. இந்தப் பட்டயத்துல எல்லாம் பழக்கம் இருக்கற வக்கீலைத் தேடினப்போ உங்க பேரைச் சொன்னாங்க”

   எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் சோழன் பூர்வ பட்டயத்தில் எல்லா ஊர்களோடும் இந்தக் கட்டியப்ப முதலி பெயர் இணைந்து வரும். இதை வைத்துக் கொண்டு . . . அதுவும் அந்த முதலியும் இந்த முதலியும் இந்தப் பண்டாரமும் அந்தப் பண்டாரமும் ஒன்றுதானா? சோழன் பூர்வ பட்டயத்தை வைத்துக் கொண்டு சிவில் கேஸ் எப்படி . . .

      “கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்க. கோவிலுக்கு டிரஸ்டி, விழாக்குழு எல்லாம் இல்லையா? கோவில் நிலம், பட்டா, அறநிலையத் துறை ரெகார்ட்ஸ் . . . . இன்னும் கொஞ்சம் டீடெல்ஸ் கொடுங்க புரபஸர்”

     “அதாவது 1964லில் பண்டாரம் தாம்தான் டிரஸ்டி என்று பதிவு செஞ்சுட்டார். கோவில் நிலங்களையும் தன் பெயரில் பட்டா பண்ணிட்டார்”

   “மைகாட். 1964. அப்ப நீங்க என்ன பண்ணிட்டிருந்தீங்க. அதாவது உங்க மூதாதையர்”

    ‘ஊர்ல முதலியார்களெல்லாம் திமுக சார். அதனால் இந்தக் கோவில் குளத்திலெல்லாம் அக்கறை காட்டல. எல்லோரும் படிச்சும், பிஸினெஸ் பாக்கவும் சிட்டிக்கு வந்துட்டாங்க. கோவில் பாழடைஞ்சு போயிடுச்சு. அந்த நேரத்துல பண்டாரம் தன்னை டிரஸ்டியாப் போட்டுட்டார்.”

    “மத்த டிரஸ்டிங்க?”

    “அந்தக் காலத்துல கோவிலுக்கு ஒரு டிரஸ்டி போதும்.”

    “ஊர்ல உங்காளுக ஒரு ஆளும்கூட இல்லையா?’

    “பெரிசுக இருந்தது. மணீயம், கர்ணம் எல்லாம் நம்மாளுகதான். அவங்க கண்டுக்காம விட்டுட்டாங்களோ அல்லது இவனே இருக்கட்டும்னு முன் மொழிஞ்சாங்களோ தெரியல.”

    “அதுக்கப்புறம் இன்னி வரைக்கும் எதுவும் செய்யலையா?”

    “இல்லை சார். நிறைய கேஸெல்லாம் நடந்தது. 1977ல் எங்க தாத்தா ஒரு கேஸ் போட்டார். அதில் சூப்பரா ஒரு டாக்குமெண்ட் வெச்சிருந்தார். டிரஸ்டியா இருந்த பண்டாரம் பூசை செய்ய சம்பளம் வாங்கிட்டிருக்கறதுக்கு ரசீது இருந்தது. டிரஸ்டி எப்படி சம்பளம் வாங்க முடியும்? டிரஸ்டி கோவில் நிலங்களைத் தன்னோட பெயரில் பட்டா வங்கினது சரியான்னு வாதாடினோம். ஜெயிச்சுருச்சு”

    “அருமையான விஷ்யம். அப்புறமென்ன?”

    “என்ன ஆச்சுன்னா கோவில் நிலங்களை மீட்டுட்டோம். ஆனால் இந்தாள் டிரஸ்டி என்பது தப்புன்னு டிக்ளேர் பண்ணனும்னு உத்தரவு வாங்காம விட்டுட்டோம்.”

    “மைகாட்.  ஏன் அப்படிப் பண்ணுனீங்க?”

   “அதான் சார். திமுக. கோவில் நிலமே நம்ம கிட்ட வந்த பின்னாடி கோவில் எவன் கைல இருந்தா என்னங்கற தெனாவட்டுதான். தெய்வ பக்தி வேணும் இல்லையா சார்”

    “ஆமாங்க புரபஸர். கட்டாயம் வேண்டும்”. என்றேன் நான்.

    ”கம்யூனிஸ்டுகாரங்க நீங்க ஒத்துக்கறீங்க. திக திமுக காரங்க ஒத்துக்க மாட்டேங்கறாங்களே”

    எனக்குக் கருக்கென்றது. தொழிலையும் கொள்கையையும் நான் குழப்பிக் கொள்வதில்லை. இருந்த போதிலும் இது எனக்குப் பிடிக்கவில்லை.

    “கடவுளை நம்பாத கம்யூனிஸ்டுகளும் இருக்காங்க புரபஸார்”

    “அப்படீங்களா? டூ பேட்”

    இதென்னெ ஏடாகூடம் . . .  கொள்கையின் மீதான செண்டிமெண்ட்டுக்கு இது இடம் அல்ல. பேச்சை திரும்பவும் வழக்கை நோக்கித் திருப்ப முடிவு செய்தேன்.

   “ஓக்கே புரபஸர். பண்டாரம்தான் டிரஸ்டி என்பதை ரத்து செய்யாம விட்டுட்டீங்க. இப்ப என்ன பிரச்சினை?”

   “இப்ப நாங்க எல்லாம் பெரிய பெரிய பதவில இருக்கோம். எல்லோருக்கும் இப்ப சாதி மேலையும், சமுதாய பழக்க வழக்கங்கள் மேலயும் ஆர்வம் வந்திருக்கு இல்லையா? எல்லாரும் வேர்களுக்குத் திரு(ம்)பறாங்க. சொந்த ஊருக்கு வர்றது, சமுதாயக் கூட்டம் நடத்தறதுன்னு எல்லாரும் திரும்பவும் ஒன்னாயிட்டிருக்கோம். ஆனால் எங்க கோவில் பாழடைஞ்சு செடி மொளச்சு கிடக்கு. அதனால எல்லாரும் சேர்ந்து . . .”

   “சேர்ந்து?”\

   “ரெண்டு கோடி ரூபா வசூல் செஞ்சு . . ..”

   “ரெண்டு கோடி!!!!”

   “அதுக்கு மேல முடியல சார்.”

   “!!!!!!!!!!!!!!”

   “ரெண்டு கோடி ரூபாய் வசூல் செஞ்சு ஒரு பெரிய ஸ்தபதியைக் கூட்டிட்டு வந்து கோவிலை பழமை மாறாம புதுப்பிச்சு, பிரம்மாண்டமான கல் மண்டபம் கட்டினோம். இப்ப பாக்க அவ்வளவு அழகா இருக்கு சார்”

   “சரிங்க . . .”

  “கும்பாபிஷேகம் நடத்தறப்ப பண்டாரம் வந்து டிரஸ்டி நான் இருக்கும் போது நீங்க எப்படி நடத்தலாம்னு கேக்கறார்”

  “ஓ … இப்ப அதான் பிரச்சினை”

   “யெஸ் சார். கரெக்டா புடிச்சுட்டீங்க”

   ‘நீங்க இவ்வளவு பேர் இருகீங்க. ஒரு பண்டாரத்தை வெளியேத்த முடியலையா?”

  ‘இப்ப பண்டாரம் பிள்ளைல சேர்ந்துட்டாங்க சார். பண்டாரம், துளுவ வேளாளர் எல்லாம் பிள்ளைன்னு சொல்லிக்கறாங்க. நாகர்கோவில் பிள்ளைமார் தொடர்பால பிஜெபி சப்போர்ட் அவங்களுக்கு இருக்கும்”

     ‘நீங்க?”

   “நாங்க எப்பவும் திமுக தான். ஆனால் இந்தக் காலத்துல பரம்பரைப் பெருமையை நிலைநாட்டணும் இல்லையா சார். பாரம்பரியத்தை மறந்துடக் கூடாது இல்லையா? நம்ம முன்னோர்கள் சோழனோட காண்டாக்ட் வெச்சு பட்டயம் வாங்கியிருக்கோம். விட்டுட முடியுமா? ஆண்ட பரம்பரை இல்லையா? பக்தி வேற கொள்கை வேற”

                  ————————————————————————

        இந்த சப்-ஜட்ஜ் வழக்கமாகச் சிரிப்பதில்லை. அதிகம் பேசுவதுமில்லை. வாய்தா கேட்டால் ரொம்ப சிக்கல் செய்யாமல் கொடுத்து விடும் டைப் என்று ஜூனியர்கள் பேசிக்கொள்வார்கள். சிவில் வழக்குகளில் அதிக ஆர்வம் கொண்டவர். உயர் நீதிமன்ற உச்ச நீதிமன்ற வழக்குகளை மேற்கோள் காட்டி பேசக் கூடியவர். ஆனால் கிரிமினல் வழக்குகளை விசாரிக்க அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அந்த நேரங்களில் சிடுசிடுவென்றிருப்பார். லா நோவிங் ஜட்ஜ்தான். பேசலாம் என்றார் ஒரு சீனியர்.

    அன்று மேகமூட்டமாக இருந்ததால் நீதிமன்றம் இருளோடியிருந்தது. இந்த சூழல் எனக்குப் பிடிக்கும். நீதிமன்றத்தில் கரண்ட் கட்டாலோ, மழையாலோ இருள் சூழ்ந்திருந்தால் அதன் அன்னியத்தன்மையும், நாடகத்தன்மையும் குறைவாக இருப்பது போல எனக்குத் தோன்றும். நீதிமன்றத்தின் உயர்ந்த கூரைகளுக்கும், கருமையேறிய ஈட்டி, தேக்குமரச் சட்டங்களுக்கும், மேசை, நாற்காலிகளுக்கும், நீண்ட வராண்டாக்களுக்கு அரையிருளே பொருத்தமானதாகத் தோன்றும்.

    “இப்ப என்ன எழுதிட்டிருக்கீங்க” என்று கேட்டார் எதிர்த்தரப்பு வழக்குரைஞர் முத்தமிழ் ராசு. முக்கியமான இந்து முன்னணி வழக்குரைஞர். நாங்கள் எதிர்பார்த்தபடியே சுந்தர பண்டாரத்துக்காக வாதாட இவர் வந்திருந்தார். அந்த மதிய நேரத்திலும் பளிச்சென்று குங்குமம் வைத்து பக்திமயமாக இருந்தார். இந்து அமைப்பினர் அணியும் காவி நிறத்திலான பட்டை கங்கணத்தை அணிந்திருந்தார்.

     “சோழன் பூர்வ பட்டயத்தைப் பத்தி ஒரு கதை எழுதிட்டிருக்கேன்”

    முத்தமிழ் கடுப்பானார். “பிரதர், பட்டயத்தை எல்லாம் கொண்டுட்டு வந்து பொஸஸன், டிகளரஷன் கேக்கறது கொஞ்சம் கூட சரியில்ல.”  

  வழக்கு அழைக்கப்பட்டதும் முத்தமிழ் எழுந்தார். “யுவர் ஆனர், பட்டயம் ஆயிரம் வருஷங்களுக்கு முந்தையது. இந்த கால இடைவெளியில் என்னென்னமோ நடந்து விட்டது. தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவில் இதே போலத்தான். ராஜராஜன் கட்டியது. ஆனால் மராத்திக்காரர்கள் எல்லாம் டிரஸ்டியாக இருக்கிறார்கள். எனவே காலமாற்றத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பட்டயத்தை மட்டும் வைத்துக்கொண்டு எதையும் தீர்மானிக்க முடியாது. 1964 ரெவின்யூ ரெகார்ட்ஸ் எங்கள் கட்சிக்காரரின் முன்னோர் தான் டிரஸ்டி என்கிறது.  எனது கட்சிக்காரர் கோவிலில் பண்டாரமாக இருக்கிறார். எனவே கோவிலுக்குத் தொடர்பு இல்லாதவர் இல்லை. இப்போது சொந்தம் கொண்டாடும் இந்த நபர்கள் ஒரு பழைய பட்டயத்தைத் தவிர எந்த ஆவணத்தையும் கோர்ட் முன்னால் கொண்டு வரவில்லை. முதலியார் என்றால் எனக்குத் தெரிந்தே மூன்று பிரிவு முதலியார்கள் உண்டு. செங்குந்த முதலியார், சென்னிமலை முதலியார் . . .  பட்டயத்தில் உள்ள கட்டியப்ப முதலி என்பது யாரைக் குறிக்கிறது . . . .? இந்த முதலிதான் அந்த முதலி என்பதற்கு என்ன ஆதாரம்? எனது கற்றறிந்த எதிர்த்தரப்பு வழக்குரைஞரான நண்பர் இலக்கியத்தையும் சட்டத்தையும் மிக்ஸ் செய்கிறார். ஆனால் மிக்ஸிங் சரியில்லை” கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது. ஜட்ஜ் கூட சிரித்தது போலத்தான் தெரிந்தது. நல்ல விஷயம்தான். இறுக்கம் தளர்வது பேச ஏதுவாக இருக்கும்.

     நண்பரின் வாதம் சரியாக இருந்தது. அவர்  வலிமையான இடத்திலிருக்கிறார்.

ஓக்கே. கோர்ட்டைப் பார்த்தும், எதிர் வழக்குரைஞரைப் பார்த்தும் பயப்படும் வயதை நான் தாண்டி விட்டேன். சட்டம் எதிரிக்குச் சாதகமாக இருந்தால், அதோடு முட்டி மோதாமல் லாஜிக் பேசி வேறு பக்கம் இழுத்துப் போக வேண்டும் என்பது வழக்குரைஞர் தொழிலின் எழுதப்படாத விதி.

     “லா ஈஸ் நத்திங் பட் காமன்சென்ஸ் இன் ஏன் அன்காமன் லாங்குவேஜ்” என்று தொடங்கினேன். இது கார்ல் மார்க்ஸ் சொன்னது. ஆனால் அந்தப் பெயரை இங்கே பயன்படுத்த முடியாது. நானே சொன்னது போல்தான் இருக்கட்டுமே.

    “பட்டயம் இருக்கிறது. பட்டயத்தில் முதலி நிர்வாகம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது. இப்போதும் அந்த ஊரில் எமது கட்சிக்காரர்களான முதலியார்கள் இருக்கிறார்கள். பட்டயம் பண்டாரம் பூசை செய்ய வேண்டும் என்கிறது. நண்பரின் கட்சிக்காரரான சுந்தர பண்டாரம் அங்கே பூசை செய்து கொண்டு இருக்கிறார். எனவே ஆயிரம் ஆண்டுகளில் ஊரில் எதுவும் மாறவில்லை. பட்டயம் நடைமுறையில் இருக்கிறது. செயல்படுகிறது. கற்றறிந்த நண்பர் பட்டயத்தை மறுத்தாலும் அதை அடிப்படையாக வைத்தே பேசுகிறார். இல்லையென்றால் சுந்தர பண்டாரம் எப்படி இந்தக் கோவிலுக்கு பூசை செய்ய முடியும்? சென்னிமலை முதலியாருக்கோ, விருதாச்சலம் ரெட்டியாருக்கோ, சிவகங்கை மறவருக்கோ, கீழக்கரை பாய்க்கோ, நாகர்கோவில் நாடாருக்கோ இங்கே இடமில்லை. இந்த ஊரைச் சேர்ந்த இருவருக்கு இடையிலான உரிமைப் பிரச்சினை இது. பட்டையத்தின் உதவி கொண்டே தீர்க்கப்பட வேண்டும். இது கோவில் நியதிகளும், நியமங்களும் தொடர்புடையது. அதை மாற்ற யாருக்கும் உரிமை கிடையாது. பண்டாரம் பூசை செய்து சம்பளம் வாங்கியிருக்கிறார். ரசீது இருக்கிறது. எனவே கோவில் பூசாரிக்குக் சம்பளம் கொடுப்பவர்கள் யாராக இருக்க முடியும்? கோவில் நிலங்கள் எமது கட்சிக்காரர்களின் அனுபோகத்தில் இருக்கின்றன. பண்டாரத்தின் வேலை கோவிலுக்குப் பூசை செய்வது, அதைச் செய்ய நாங்கள் தடை சொல்லவில்லை. கோவில் நிர்வாகத்தை சோழன் எங்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். அதை விட்டுத்தர முடியாது. இது பாரம்பரியம். முன்னோரின் விருப்பம். அவர்கள் செய்து வைத்த நியதி. மாற்ற முடியாதது. மாற்றலாம் என்றால் எப்போது யார் மாற்றலாம் அதற்கு என்ன நியதி என்பதை நிரூபிக்க வேண்டியது கற்றறிந்த வழக்குரைஞரின்  கடமை”

   ஜட்ஜ் ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டிருந்தார். முத்தமிழிடம் மேலும் ஆவணங்கள் கேட்டு அடுத்த வாரம் வழக்கைத் தள்ளிப் போட்டார்.

    நாங்கள் கிளம்பும் நேரம் ஜட்ஜ் இருவரையும் அழைத்தார். சற்றே யோசனையுடன் பூர்வ பட்டயத்தைப் பார்த்தவர் என்னிடம் கேட்டார்,

“எல்லாம் சரி. இந்த ஆவணத்தில் இந்த ஊரை யாரோ இருளருக்குக் தானமாகக் கொடுத்ததாக இருக்கிறதே?  ஊரின் பெயரே இருளன் பதிவனம் என்று குறிப்பிடப்படுகிறதே? அப்படி ஒரு ஆதிவாசிகள் ஆனைக்கட்டி பக்கத்துல இருக்காங்க இல்ல?, அவர்களுக்கு இந்த வழக்கில் ஆர்வம் இல்லையா?  அந்தக் காலத்துல ஊரே அவங்களுக்குச் சொந்தம்ங்கற போது  கோவிலும், நிர்வாகமும் அவங்களுக்குத்தானே போகும்?”

     நாங்கள் இரண்டு வக்கீல்களும் சிரித்தோம். “இந்த ஊரில் மட்டுமல்ல. இங்கிருந்து நூறு கிலோமீட்டர் சுற்றளவுக்கு எங்கேயுமே இருளர் கிடையாது. எனவே அவர்களைப் பொறுத்தவரை பட்டயம் செல்லாது. தவிர மேற்குத் தொடர்சி மலைகளில் நூற்றுக்கணக்கான இருளர் கிராமங்கள் உள்ளன. யாருக்கு என்னவென்று சம்மன் அனுப்புவது?” என்றேன் நான்.

    ஜட்ஜ் முத்தமிழைப் பார்த்தார்.

    “சமவெளிகளில் இந்த மாதிரி ஒரு பட்டிக்காட்டில் ஒரு கோவிலை வைத்துக் கொண்டு இருளர்கள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு இது என்னவென்றே தெரியாது. அவர்கள் பண்பாடு வேறு, வழிபாட்டு முறைகள் வேறு. இந்தக் கோவிலின் ஆகம விதிகள் வேறு. இது மிகப்பெரிய வில்லங்கங்களைக் கொண்டுவந்து விடும்.”

     ஜட்ஜ் பயந்து போனது தெரிந்தது. இதைச் சொல்ல முத்தமிழுக்கு எல்லாத் தகுதியும் உண்டு. முத்தமிழ் மேலும் தொடர்ந்தார், “இருளரே ஊரில் இல்லாதபோது இருளருக்குத் தானம் கொடுத்தது எப்படி செல்லும்? ஒன்று முதலியார் அல்லது பண்டாரம். இந்த இருவருக்கு இடையேதான் வழக்குத் தீர்க்கப்பட வேண்டும். இருளருக்கு இங்கே இடமே இல்லை. அவர்கள் எங்கோ மலைமேல் இருக்கிறார்கள்.”

   ஜட்ஜ் தலையசைத்துக் கொண்டார். பின்பு என்னைப் பார்த்தார்.

    “யெஸ் யுவர் ஆனர். ஒன்று முதலியார் அல்லது பண்டாரம். இருளருக்கு இங்கே இடமே இல்லை” என்றேன்.

    “இல்லவே இல்லை. இருளரைப் பொறுத்தவரை பட்டயம் செல்லாது” என்றார் முத்தமிழ்.

    நானும் முத்தமிழும் வெளியே வந்து சிகரெட் பற்ற வைத்தோம். முத்தமிழ் கடகடவென்று சிரித்தார். “இதென்ன இந்த ஜட்ஜ் ஐயா புது பிரச்சினையைக் கிளப்பறார். வேடிக்கையா இருக்கு”

   நானும் புகையை இழுத்து விட்டுவிட்டு சிரித்தேன். நமது கட்சிக்காரரின் நலனுக்கு விரோதமானவற்றைப் பற்றிச் சிந்திப்பது புரொபஷனல் எதிக்ஸுக்கு எதிரானது.

   “ஜட்ஜ் இருளரைப் பத்தி இன்னொருதடவை பேசினால் கேஸை நமக்குள்ள செட்டில் பண்ணிக்கலாம்” என்றார் முத்தமிழ்.

    “கண்டிப்பா” என்று ஆமோதித்தேன் நான்.

                    ***

இரா.முருகவேள் – திருப்பூரில் வசித்து வரும் இவர். மொழிபெயர்ப்பு (ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும் பனிக்காடு, கட்டுரைகள் – இன்பமயமான தமிழக வரலாறு, கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும், நாவல் – மிளிர்கல், முகிலினி, செம்புலம்)

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (சு. தா. ம. 2020)

0

பாரதிராஜா

அதென்ன சு.தா. ம. 2020 (EIA 2020)? அது பற்றியே எல்லாரும் பேசுகிறார்கள்?

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 (Environmental Impact Assessment 2020) என்பதன் சுருக்கமே சு.தா.ம.2020 அதாகப்பட்டது, புதிதாக ஏதேனும் திட்டம் தொடங்கும் போது, அந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு நிகழப்போகும் கொடுமைகளைப் பற்றிய ஆய்வுதான் சு.தா.ம மிகக் கொடுமையான பாதிப்புகள் இருக்குமானால், வரப்போகும் திட்டத்தையே வரவிடாமல் செய்யும் வல்லமை கொண்டது அந்த ஆய்வறிக்கை. இதற்காக ஏற்கனவே இருந்த பல வழிகாட்டல்களைத் திருத்தி எழுதிப் புதிய வரைவு ஒன்றை நடுவண் அரசு வெளியிட்டிருக்கிறது.

ஆகா, நல்ல விஷயந்தானே! நம் அரசு மக்களுக்கான அரசு, அதனால் எப்போதும் இது போன்ற நல்ல விஷயங்களையே நமக்காகச் செய்யும். அப்புறம் ஏன் அதுபற்றி இவ்வளவு பேர் இவ்வளவு பேசுகிறார்கள்? இதுதான் பலருக்கும் இருக்கும் கேள்வி.

“இவர்கள் எப்போதும் இப்படித்தான். என்ன செய்தாலும் நொன்னை சொல்லிக் கொண்டிருப்பார்கள்” என்று கடந்து செல்வோரும் நம்மில் இருக்கிறோம். இதில் நல்ல செய்தி என்னவென்றால், இது எது பற்றியுமே எந்தக் கவலையும் இல்லாத, கவலை கொள்ளவே தெரியாத, அது தன் வேலையே இல்லை என்று கருதுகிற மக்களே நிறைந்திருக்கிற இந்த வல்லரசு தேசத்தில் ஓரிரு மாநிலங்கள் மட்டும் சிறிது கூடுதலாகக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றன, அதில் நம் தமிழகமும் ஒன்று. குறிப்பாக இளைஞர்கள் பரவலாக இதுபற்றி உரையாடுகிறார்கள். சமூக ஊடகங்களில் கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள். கேள்வி கேட்பவர்களும் எதிர்ப்பவர்களும் அதிகம் இருப்பதாலேயே அதற்குப் பதிலளிப்பவர்களும் ஆதரித்துப் பேசுபவர்களும் இங்குதான் அதிகம் இருக்கிறார்கள்.

“வரைவில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாதவர்கள்தான் அதை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஒரு சாராருக்குப் பெரும் வருத்தம். அவர்கள் சொல்வதை, “வரைவைப் படித்துப் புரிந்து தேர்ந்தவர்கள்தான் அதுபற்றி வாயை மூடிக்கொண்டு இருப்பவர்களும், அதை ஆதரித்துப் பேசுபவர்களும்” என்று புரிந்து கொள்ளலாமா?

“இந்த அரசு என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் கூட்டம் ஒன்று இருக்கிறது” என்று சொல்லும் கூட்டம் எவ்வளவு யோக்கியமான கூட்டம் என்பதும் நமக்குத் தெரியும். இந்த அரசு என்ன செய்தாலும் அதைத் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும், முட்டுக்கொடுக்கும், அதுபற்றி அரசு சார்ந்த கூலிப்படையே பரப்பிவிடும் பொய்ப் பரப்புரைகளைப் பரப்பத் துணை நிற்கும் கூட்டத்தில் அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை அறியாதவர்கள் அல்ல நாம். அதனால் எந்த முன்முடிவும் இன்றியே கூட நாம் இதுபற்றி அறிய முயலலாம்.

ஆதரவு-எதிர்ப்பு என்பதற்கு முன்பு, இது பற்றிய உரையாடலே தேவையா இல்லையா என்கிற பிரச்சனை பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த உரையாடலே தேவையில்லாதது என்று சொல்பவர்களின் நியாயந்தான் என்ன என்று புரிந்துகொள்ள முயன்றுதான் பார்ப்போமே!

  1. “தம் பிள்ளைகளுக்கு எது சரி-தவறு என்பது பெற்றோர்களுக்குத் தெரிந்ததை விடவா பிள்ளைகளுக்குத் தெரிந்துவிடப் போகிறது? அதுபோல, தம் மக்களுக்கு எது நல்லது அல்லது கெட்டது என்பது அவர்களின் அரசுக்குத் தெரியும். ஆகவே, அவரவர் வேலையை அவரவர் பார்த்தாலே போதும். மக்கள் அவர்களின் வேலையை மட்டும் பார்த்தால் போதும். அரசு அதன் கடமையைப் பார்த்துக்கொள்ளும். தனக்கான பணியை யார் செய்வது என்பதை முடிவு செய்துவிட்ட பின்பு அதை அவர்களிடம் முழுமையாக விட்டுவிட வேண்டும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலையையும் நோண்டிக்கொண்டு இருந்தால் அது தான் தேர்ந்தெடுத்ததைத் தானே கேள்வி கேட்டுக்கொண்டு செய்யும் நேர விரயம்.”

இதையெல்லாம் கேட்கும்போது, இவர்கள் மக்களாட்சியிலும் மக்களின் தேர்விலும் இவ்வளவு நம்பிக்கை கொண்டவர்களா என்று புல்லரிக்கும். இதே வாதத்தை எல்லாக் கட்சியின் ஆட்சிக்கும் வைப்பார்களா என்று சோதித்துப் பார்த்தால் எல்லாம் அம்பலப்பட்டுப் போகும். ‘நல்ல’ சர்வாதிகாரி வேண்டும் என்பதில் தொடங்கி, இந்த மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையே தாம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணுவது வரை இவர்களின் நியாய உணர்வு நம்மைக் கிறங்கடிக்க வைக்கும். இவர்கள் வேறொரு காரணத்துக்காகச் சாமியாடிக் கொண்டிருப்பவர்கள். அவர்களை விட்டுவிடுவோம். எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் இப்படித்தான் பேசுவார்கள் என்று நம்பத்தக்க ஒரு நேர்மையான கூட்டமும் (அந்தளவுக்கு யோக்கியர்கள் இந்தப் பக்கம் மிகவும் குறைவு) இருக்கிறது. அவர்களை வைத்துப் பேசினால் கூட, இந்த வாதத்தில் இருக்கும் பெரும் பிரச்சனை, இது மக்களை முழு முட்டாள்களாகப் பார்க்கிறது. அரசைத் தேர்ந்தெடுக்கும் வேலை மட்டுமே மக்களுடையது, அதன் பின்னர் அரசு செய்யும் வேலைகளைக் கண்காணிக்க வேண்டிய கடமை மக்களுக்கில்லை என்று மட்டும் சொல்லவில்லை; அதற்கான உரிமையோ அறிவோ கூட மக்களுக்கு இல்லை என்கிறது.

அரசின் ஒவ்வொரு முடிவெடுப்பிலும் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமகளுக்கும் நேரடிப்பங்கு இருக்க வேண்டும் என்பதோ அவர்கள் ஒவ்வொருவரும் அரசை விடவும் அரசு கையைக் காட்டும் வல்லுநர்களை விடவும் அறிவாளிகள் என்பதோ அல்ல நம் வாதம். அரசுக்கு வெளியிலும் அறிஞர்கள் இருக்கிறார்கள், புரிபடாத மக்களுக்கும் அவர்களின் மொழியில் புரியவைக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது, இப்படி ஒரு பெரும் நோய்ப்பரவல் காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளை விட்டுவிட்டு அவசர அவசரமாக உரையாடலே இல்லாமல் இப்படியான பெரிய மாற்றங்களைப் புகுத்துவது பெரிய அயோக்கியத்தனம் போலப்படுகிறதே என்பதுதான் நாம் சொல்வது. வாய்திறந்து பேசும் கொஞ்சநஞ்சப் பேரின் குரல்களையும் நெரிக்க முயல்வதில் இருக்கும் பதட்டம்தான் நமக்குப் பெரும் அச்சத்தைக் கொடுக்கிறது.

உரையாடலே தேவையில்லை எனும் இந்தக் கூட்டந்தான் இந்த வரைவு தம் தாய்மொழி உட்படப் பல மக்களின் மொழிகளில் மொழிபெயர்க்கப்படாததை வரவேற்கும் கூட்டமாக இருக்கிறது. “மக்கள் கருத்துக் கேட்புக்குத் தக்க நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறதே!” என்று வாதாடிவிட்டு, “இதுகளுக்கெல்லாம் என்ன புரிஞ்சிடுச்சுன்னு கருத்துச் சொல்லணும்னு துடிக்குதுக!” என்று புலம்புபவர்களாக இருக்கிறார்கள். இதற்கும் ஏதோவொரு வகையில் மதச்சாயம் பூசி அல்லது அந்நியக் கைக்கூலிகள் என்று பூச்சாண்டி காட்டி உரையாடலைத் திசைதிருப்ப முடியுமா என்று திட்டம் தீட்டும் பேர்வழிகளாக இருக்கிறார்கள்.

  • “இதை எதிர்ப்பவர்கள் எல்லோருமே வளர்ச்சிக்கு எதிரானவர்கள். ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் பொருளியல் வளர்ச்சி என்பது மிகவும் அடிப்படையானது. அதன் அருமை தெரியாதவர்களே சுற்றுச்சூழல் போன்ற பொருளற்ற விஷயங்கள் மீது கவலைப்படுபவர்களாக இருக்கிறார்கள்.”

நல்ல குற்றச்சாட்டுதான். இதை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் போலத்தான் தெரிகிறது. குறிப்பாகப் பொருளியல் வளர்ச்சியை எதிர்ப்பவர்கள் போலத்தான் தெரிகிறது. ஆனால் யாருடைய வளர்ச்சியை? யாருடைய பொருளியல் வளர்ச்சியை? இது ஒரு பெரும் முதலாளித்துவ மோசடியின் பரப்புரை. அதற்கு வீழ்ந்து கிடப்பது யார் என்று பார்த்தால் அவர்களிடம் ஊதியம் பெற்று சென்ற தலைமுறையை விட ஓரளவு வசதிகளோடு வாழ்க்கையை அமைத்துக்கொண்டு விட்டதில் பெரும் பெருமிதமும் நிறைவும் அடைந்துவிட்ட நடுத்தர வர்க்கம். இந்த எதிர்ப்பாளர்கள் முதலாளிகளின் வளர்ச்சி – அதுவும் பொருளியல் வளர்ச்சியைக் கண்டு சகிக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த முதலாளிகளின் மீது இவர்களுக்கு என்னதான் கோபம்? இது ஒரு வெறும் வறியவனின் – வக்கற்றவனின் பொறாமையா? தனக்குக் கிடைக்காதது யாருக்கோ கிடைக்கிறதே என்ற பொறாமை மட்டுந்தானா?

அல்லது, அதற்கும் மேலே, இன்னும் அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கப் பெறாமல் சீரழிந்து கிடக்கும் ஒரு பெருங்கூட்டத்துக்கு நடுவில் மனச்சாட்சியே இல்லாமல் சொகுசு வாழ்க்கை வாழும் ஒரு சிறுகூட்டம், தன் வருமானத்தில் ஒரு சிறுபங்கை மட்டும் சமூகத்தின் ஒரு பகுதியினரோடு பகிர்ந்துகொள்வதன் மூலம், அதையே ஒரு நாட்டின் – சமூகத்தின் வளர்ச்சி என்று நம்ப வைத்து, அதன் மூலம் பயனடைவோரை எல்லாம் வாயடைத்து வைப்பது மட்டுமில்லாமல், அவர்களைத் தமக்காக வாதாடவும் வைக்க முடிகிற கொடுமையைப் பார்த்து வரும் கோபமா?

அதற்கும் மேலே, தம் நல்வாழ்வுக்காக எந்த மனச்சாட்சியும் இல்லாமல் வாயற்ற – குரலற்ற கோடானுகோடி மனிதர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வளர்ச்சி நாயகர்களின் கொடுமையைக் கண்டு கொதிக்காத – உணரக்கூட முடியாத பெரும்பான்மை மக்களின் மனச்சாட்சியாக இருக்கத் துடிக்கும் கோபமா?

  • “மனிதன் வாழத்தானே பூமி! இவர்கள் ஏன் இப்படி மனிதனை விடப் பூமியைப் பற்றி இவ்வளவு கவலைப்படுகிறார்கள்? இந்தச் சிந்தனையே மேற்கத்தியச் சிந்தனை போல் இருக்கிறது. இதில் ஏதோ சதி இருக்க வேண்டும்!”

மனிதன் வாழத்தான் பூமி. ஐயமேயில்லை. ஆனால் மனிதன் அழிப்பதற்கு அல்ல. இப்படியே அழித்துக்கொண்டே போனால் அது திரும்பி மனிதர்களையே அழித்துப் போட்டுவிடும். இந்தத் தொடர்பு, வளர்ச்சி வியாபாரிகளுக்கும் அவர்களிடம் கூலி வாங்கிக்கொண்டு மாரடிக்கும் நம் பிரச்சார பீரங்கிகளுக்கும் புரிந்து தொலைவதில்லை. அல்லது, அதைப் புரிந்துகொள்ள விரும்பவில்லை.

பூமி மனிதனுடையதுதான். ஆனால் மனிதனுடையது மட்டுமல்ல. மற்ற உயிர்களுக்குமானது. அதைக்கூட விடுங்கள். பூமி நமக்கு மட்டுமானதில்லை. நம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்குமானது. அதைப் பற்றியாவது கவலைப்பட வேண்டாமா? “நாமா அழியப் போகிறோம்! நம் சந்ததிகள்தானே அழியப் போகிறார்கள்! அதற்காக நாம் ஏன் இப்போதே கவலைப்பட்டுச் சாக வேண்டும்!” என்பவர்கள் இவர்கள். சரிதான். இது தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படும் கூட்டம் போலத் தெரியவில்லை. தற்போதைப் பற்றி மட்டுமே கவலைப்படும் கூட்டம் போலவும் தெரிகிறது.

சுற்றுச்சூழலைப் பற்றிக் கவலைப்படுவதே மேற்கத்தியச் சிந்தனை என்னும் இவர்கள்தான் புழுப்பூச்சிகளுக்குக் கூடத் துன்பம் நேர்வதைத் தாங்க முடியாமல் பூமி பூஜை போட்டு வீடுகட்டும் மரபைப் பற்றிப் புளகாங்கிதம் அடைபவர்கள். புழுப்பூச்சிகளுக்குத் துன்பம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க முடியாதுதான். குறைந்தபட்சம் அதற்காக வருந்தவாவது செய்வோமே, வருந்திக்கொண்டே நமக்கு வேண்டியதைச் செய்து கொள்வோமே என்கிற தத்துவத்தைப் போலத்தானே இதுவும்! இதற்கு மட்டும் ஏன் மேற்கத்தியச் சாயம் பூச வேண்டும்! இயற்கையையும் நதிகளையும் வணங்கும் நமக்குத் தொழில் வளர்ச்சியை முன்னிறுத்தும் வாதம்தானே மேற்கத்திய வாதம் போலப் பட வேண்டும்!

“நல்ல சாலைகள் வேண்டும், பாலங்கள் வேண்டும், இருப்புப்பாதை வசதிகள் வேண்டும்; ஆனால் அவை அனைத்தும் மரங்களை வெட்டாமலே, இயற்கையின் மீது விரல்படாமலே செய்ய வேண்டுமா? இதென்ன பினாத்தல்? அதெப்படி முடியும்?”

வசதிகள் வேண்டும் என்றாலே இயற்கையைச் சீரழித்துத்தான் அவற்றைக் கொடுக்க முடியும் என்பதே பைத்தியக்காரத்தனமான பேச்சு. சோம்பேறித்தனமானதும் கூட. நல்ல உடை போட வேண்டும், நகை போட வேண்டும் என்றால், அதற்குக் கையை வெட்ட வேண்டும் – கழுத்தை வெட்ட வேண்டும் என்பது போல் இருக்கிறது இந்த வாதம். வேறு வழியே இல்லை என்றால், தக்க ஆய்வுக்குப் பின் – ஒப்புதலுக்குப் பின் வெட்டிக்கொள் என்பதற்கும், தொடங்கும் எல்லாத் திட்டங்களுக்குமே எதை வேண்டுமானாலும் கேள்வியில்லாமல் வெட்டிக்கொள்ளும் உரிமையைக் கொடுப்பதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. “இது வேண்டுமென்றால் அது கிடைக்காது, அது வேண்டுமென்றால் இது கிடைக்காது” என்கிற இருமைய வாதத்துக்கு வெளியே வந்து, “இதுவும் முக்கியம், அதுவும் முக்கியம்” என்று ஏற்றுக்கொண்டு விடை தேடினால் நன்றாக இருக்கும். இந்த அரசு அதற்கு நேரமில்லாத அரசாக இருக்கிறது.

நிறுவனங்கள் இயல்பிலேயே லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்படுபவை. அவர்களிடமிருந்து மக்களையும் மண்ணையும் காக்கத்தான் அரசு. அந்த உரிமையை நிறுவனங்களிடம் விட்டுக்கொடுக்கும் அரசு, மக்களுக்கும் மண்ணுக்கும் அவ்வளவு நல்லதில்லை. இதுதான் அச்சமாக இருக்கிறது.

சரி, இதைப் பற்றிய உரையாடல் வேண்டும் என்று கூச்சல் போடுபவர்கள் யார்?

இவர்களில் கண்மூடித்தனமாக அரசை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். வேறொரு கட்சியின் ஆட்சியில் இவ்வளவு பேசியிருக்க மாட்டார்கள். இவ்வரசின் மற்ற கொடுமைகளால் பாதிக்கப்பட்டு எப்படியேனும் இவர்களின் கொடுமைகளுக்கு முடிவு வந்துவிடாதா என்ற நம்பிக்கையில் எல்லா எதிர்ப்புகளிலும் கலந்து கொள்கிறவர்கள் இருக்கிறார்கள். அரசியல் சார்பு காரணமாகவே நாலுவரியில் எதையேனும் பேசப்பழகிக் கொண்டு வந்து எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அது மிகச்சிறுபான்மையான ஒரு கூட்டம். மிச்சமிருக்கும் பெருங்கூட்டம் யார் என்று பார்த்தால், அவர்கள் எல்லாக் கட்சியின் ஆட்சியிலும் இதே வேலையைச் செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். எல்லாக் காலத்திலும் ஆட்சிகளுக்கும் ‘வளர்ச்சிக்கும்’ எதிரானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நியாயந்தான் என்ன என்று பார்ப்போமே!

  1. “மக்களாட்சி என்பது மக்களின் ஆட்சி. மக்களுக்கு ஊழியம் செய்வதற்காக அவர்களின் வாக்கைப் பெற்று மேலே செல்பவர்கள், அதன் பின் தம்மை மேலானவர்களாகவும், தம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியவர்களைக் கீழானவர்களாகவும், மக்குப் பிண்டங்களாகவும் (தம்மைத் தேர்ந்தெடுத்ததாலேயே அப்படி இருக்க வேண்டும் என்று கட்டாயமா என்ன!) கருதும் போக்கு மக்களாட்சியின் அடிப்படைப் பண்புகளுக்கே எதிரானது. உண்மையில், பல்வேறு காரணங்களுக்காக, தேர்ந்தெடுத்து அனுப்பும் மக்களின் சராசரி அறிவை விடக் குறைவான அறிவும் கல்வியும் கொண்ட பல தலைவர்களை இந்த நாடு பார்த்திருக்கிறது. அரசுகளும் அவர்களின் வல்லுனர்களும் அறிவாளிகளாக இருந்தாலுமே கூட, அவர்கள் மோசம் போவதற்கு வாய்ப்பு நிறைய இருப்பவர்கள். எனவே கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களைக் கண்காணிக்கும் ஆற்றலும் அறிவும் படைத்த வல்லுநர்கள் மக்களுக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறார்கள். தம்மைப் போலவே பெரும்பான்மை மக்களையும் அறிவாளிகளாகவும் விழிப்புணர்வுடையவர்களாகவும் ஆக்க வேண்டும் என்று உழைக்கிற வல்லுநர்கள், ஊழலில் திளைத்தே பழகிவிட்ட அரசுகளை விடவும் அரசு வல்லுநர்களை விடவும் சந்தேகத்துக்கு உரியவர்கள் இல்லை.”

இதுவும் மக்களாட்சியின் மீது கேள்விகளை எழுப்பும் கூட்டமாகவே இருக்கிறது. ஆனால் அதற்கு விடையாக, ஒரு தனி மனிதனைக் கடவுளாக்கி ‘நல்ல’ சர்வாதிகாரி வேண்டும் என்று சொல்லி அத்தனை அதிகாரத்தையும் ஒரே மனிதனிடம் குவிக்க வேண்டும் என்கிற அறிவுகெட்ட கூட்டமாக இல்லாமல், மக்களை மேலும் அதிகாரம் படைத்தவர்களாவும் உரிமையுடையவர்களாகவும் விழிப்புணர்வு உடையவர்களாகவும் மாற்றிக் கண்காணிப்பைக் கூட்ட வேண்டும் என்கிற கூட்டமாக இருக்கிறது. எனவே இயல்பாகவே நமக்கு இவர்கள் பேசுவதுதான் ஈர்க்கிறது.

  • “பொருளியல் வளர்ச்சி அல்லது தொழில் வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி ஆகிவிடாது. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்று இன்னும் பல்வேறு கூறுகள் இருக்கின்றன. அது மட்டுமில்லை. வளர்ச்சி என்பது எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும். உலக மக்களில் 95% பேர் 5% வளங்களைப் பகிர்ந்து கொள்பவர்களாகவும் மீதமிருக்கும் 5% பேர் 95% உடைமைகளையும், வளங்களையும் கட்டுப்படுத்துவதாகவும் மாறுவது மனிதகுலத்தின் வளர்ச்சியல்ல, வீழ்ச்சி.”

“பொருள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை, அது இருந்தால் மற்ற எல்லாமே எளிதில் கிடைக்கும்” என்பது உண்மைதான். ஆனால் அது ஓரளவுதான் உண்மை. அதற்கு ஆதாரமாக எத்தனையோ நாடுகளும் இந்தியாவுக்குள்ளேயே பல மாநிலங்களும் இருக்கின்றன. சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஸ்காண்டினேவிய நாடுகள்தான் உலகப்பெரும் பணக்கார அமெரிக்காவை விடவும் வாழச் சிறந்த நாடுகளாகப் போற்றப்படுபவை. தொழில் வளர்ச்சியில் முன்னேறியதாகச் சொல்லப்படும் மராட்டியத்தையும் குஜராத்தையும் விடவும் கேரளம்தான் முன்னேறிய மாநிலம். இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் சமநிலையான பாதைதான் தமிழகம் செல்ல விரும்பும் பாதை. இந்தியா செல்ல விரும்ப வேண்டிய பாதை.

அடுத்து, வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்வதிலும் எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கி நகர்வதிலும் இந்தியாவுக்குக் கேரளமும் தமிழகமுமே முன்னோடிகள். நாமும் அதிகாரக் குவிப்புக்கும் பொருட் குவிப்புக்கும் வேகமாக இரையாகிக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதற்குக் கொஞ்சநஞ்ச எதிர்ப்பாவது வருகிறது என்றால் அது இங்கிருந்துதான் வருகிறது. இதை நாம் விடாமல் தொடர வேண்டும். அதைத்தான் இந்தப் பக்கம் இருப்பவர்களும் பேசுகிறார்கள். எனவே அவர்களோடு அணி சேராவிட்டாலும் கூட அவர்களோடு உரையாட வேண்டியது நமக்கு முக்கியம். அதற்கு அவர்களின் குரல்வளை நெறிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

  • “மனித வாழ்க்கை என்பது இயற்கை சார்ந்தது. இயற்கையின் ஒவ்வோர் அங்கமும் மனிதன் உயிர் வாழ்வதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிப்பவை. வியாபாரிகள் இதைப்பற்றிக் கவலைப்படாதவர்கள். ஆட்சியாளர்கள் இந்த வியாபாரிகளுக்காக உழைப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே நாம்தான் மக்களுக்காக உழைப்பவர்களாகவும் போராடுபவர்களாகவும் இருக்க வேண்டும்.”

காற்றுக்கும் நீருக்கும் உணவுக்கும் எரிபொருளுக்கும் மருந்துகளுக்கும் பொருளியல் வளர்ச்சிக்குமே கூட இயற்கையைத்தான் நாம் நம்பியிருக்கிறோம். இயற்கையிடம் இருக்கும் வளங்கள் அளவற்றவை அல்ல. அவற்றுக்கென்று ஓர் அளவு இருக்கிறது. அவற்றை முழுதும் முடித்துவிட்டால் அதன் பின்பு மனிதகுலத்தின் இருப்பே சாத்தியமில்லாமல் போய்விடும். இந்தக் கிரகம் மனிதர்கள் வாழத் தகுதியாகிவிட்டால் அதன் பின்பு என்னென்ன வைத்திருந்தாலும் என்ன பயன்?

இந்த வரைவு இந்த மண்ணை வாழத் தகுதியற்றதாக்கும் வேலையை வேகப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் இவர்கள். அப்படியெல்லாம் ஆகாதென்றோ அதுபற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றோ எண்ணுகிறது எதிரில் இருக்கும் கூட்டம். “உனக்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை” என்றும் ஆணவத்தோடு முறைக்கிறது.

இந்த இடத்தில் நமக்குக் குழப்பம் வருகிறது. எனவே இங்கோர் உரையாடல் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழலைக் காக்க உரையாட வேண்டியது முக்கியம் என்பதோடு சேர்த்து நம் மண்ணையும் மக்களையும் வரப்போகிற எல்லாவற்றிலுமிருந்து காக்க உரையாடும் மரபையும் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

ஆக, உரையாடல் தேவையில்லை என்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். தேவை என்பவர்கள், கீழே உள்ள கேள்விகளுக்கான விடையைத் தேடுங்கள்:

  1. பெரும்பாலான திட்டங்களை பி2 பிரிவில் தள்ளி மக்களின் பார்வைக்கு வெளியே எடுத்துச் செல்வதன் நோக்கம் என்ன? மக்கள் கருத்துக் கேட்புக்கான அவகாசங்களைக் குறைப்பதன் பின் உள்ள தேவை என்ன? வளர்ச்சியை வேகப்படுத்தி ஏற்கனவே வல்லரசாகிவிட்ட நாட்டை இன்னும் பெரிய வல்லரசாக்குவது மட்டுந்தானா?
  2. இந்த வரைவு நிறைய ஒளிப்பு வேலைகளுக்குத் துணை போகிற வகையில் உள்ளது என்கிறார்களே, அது உண்மையா? அப்படியானால், உலகம் முழுக்கவுமே வெளிப்படைத்தன்மையோடு குடிமக்களுடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பெரிதும் பேசப்பட்டும் அதன் மூலம் தகவல் பகிர்வை ஊக்குவிக்கும் சட்டங்கள் இயற்றப்பட்டும் வருகிறது. இப்படியான சூழ்நிலையில் அதற்கு நேர் எதிர்த் திசையில் ஒரு வல்லரசு நாடு பயணப்படுவது அந்த நாட்டுக்கும் அதன் ஆதிக்கத்தின் கீழ் வரப்போகும் உலகத்துக்கும் நல்லதுதானா? அதனால் யாருக்கு நல்லது? உலகத் தலைமை ஏற்றிருக்கும் நம்மிடமிருந்து இந்த உலகம் கற்றுக்கொள்ள ஏதேனும் இருக்கிறதா?
  3. தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு விலக்கு சரி (அதுவே சரியில்லை. ஏனென்றால் அதைச் சாக்காகக் கொண்டு ஒளிந்து கொள்கிற கதைகளையும் நிறையவே பார்த்து விட்டோம், எ.கா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி கேட்கும் எல்லாப் பெரிய கேள்விகளுக்குமே இதுதான் இப்போது ஒரே பதில்!). அதென்ன நடுவண் அரசு உத்திநோக்கோடு (strategic considerations) அறிவிக்கும் திட்டங்கள்? தேசியப் பாதுகாப்பு தொடர்புடையதல்லாத – ஆனால் உத்தி முக்கியத்துவம் உடைய திட்டங்கள் என்றால், அதில் தேர்தல் உத்திநோக்கோடு செய்யும் வேலைகளும் அடங்குமா? அதற்குள் வேறெதுவும் அடகு வைக்கும் வேலைகள் செய்ய வாய்ப்பிருக்கிறதா?
  4. இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது யார்? அவர்களின் உயிரோ, உடைமையோ உங்களுடையவற்றைப் போலவே மதிப்பு மிக்கவைதானா?  உங்களைக் கூட விடுங்கள். மும்பையிலோ சென்னையிலோ ஒரு வசதியான பகுதியில் வாழும் மக்களை விடப் பெயர் தெரியாத ஏதோவொரு காட்டுக்குள் வாழும் மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையில் முக்கியத்துவம் குறைந்தது? அவர்கள் நாம் சொல்லிக்கொண்டிருக்கும் வளர்ச்சியைக் கேட்டார்களா? அல்லது, அவர்களுக்கு வளர்ச்சி வேண்டாம் என்றாலும் நமக்கு வளர்ச்சி வேண்டும் என்பதால் அவர்கள் நமக்காக விட்டுக்கொடுத்துத்தான் ஆக வேண்டுமா? அப்படி அவர்கள் நமக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டே போவதற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?
  5. அனுமதி இல்லாமல் தொடங்கிய திட்டத்துக்குக் கூட பின்னர் அனுமதி வாங்கிக் கொள்ளலாமாமே? அதாவது, எந்தத் திட்டமும் அனுமதி வாங்காமல் தொடங்கிக் கொள்ளலாம், பின்னர் அனுமதி வாங்கிக் கொள்ளலாமாமே? உண்மையா? இப்படிச் சொல்வதற்குப் பதில், “மதிப்பீடும் தேவையில்லை, ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை, போப்பா அந்தப் பக்கம்!” என்று சொல்லியிருக்கலாமே! அப்படி ஏன் செய்யவில்லை? அடுத்து அதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோமா?
  6. கண்காணிப்புத் தேவைகள் முன்பு இருந்ததை விடக் கூடியிருக்கின்றனவா அல்லது இப்போது குறைந்திருக்கின்றனவா? ஒருவேளை, ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் குறைத்திருப்பதை விட, நமக்கு ‘வேண்டிய’ நிறுவனங்களுக்கு மட்டும் குறைத்தோ, விலக்களித்தோ ஏதேனும் மாற்றங்கள் செய்ய முடியுமா? அதுதானே வளர்ச்சிப்பாதையில் நடைபோடும் நமக்கு உதவும் முதலாளிகளுக்கு நாம் செய்யும் தக்க கைம்மாறாக இருக்க முடியும்!
  7. அனுமதியின் செல்லுபடிக் காலம் கூடியிருக்கிறதா அல்லது குறைந்திருக்கிறதா? ‘காலாவதியாகாத செல்லுபடி’ என்று ஏதேனும் இருக்கிறதா? அடுத்த திருத்தத்தில் அப்படியும் ஒன்றைத்தான் சேர்த்துக் கொள்வோமே! குறைந்தபட்சம், நமக்கு ‘வேண்டிய’ நிறுவனங்களுக்காவது இதைச்செய்ய முடிய வேண்டும். அதுதானே தேச நலனுக்கு நல்லது!
  8. சுற்றுச்சூழல் அமைச்சகம் என்று ஒன்றை வைத்துக் கொண்டிருப்பதே ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு எதிரானது என்கிறார்களே! அதை ஏன் மூடிப் போட்டுவிடக் கூடாது? குறைந்தபட்சம், வணிக அமைச்சகத்தையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும் ஒரே அமைச்சரின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் வளர்ச்சிக்கு இன்னும் வசதியாக இருக்கும் என்கிறார்களே! அதுபற்றி இந்த வரைவில் குறிப்பிடப்பட்டிருக்கிறதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தேட விரும்பும் ஒருவர், ஆங்கிலமோ இந்தியோ தெரிந்தவராக இருந்தால் மட்டுமே அவருக்கு அதற்கான தகுதி இருப்பதாகக் கருதிய அரசு, வேறு எந்த முக்கிய மொழியிலும் மொழிபெயர்ப்பு வெளியிடாமல் விட்டது தற்செயலானது இல்லை. ஆறில் ஒரு பங்கு மனிதகுலத்தை ஒற்றை மொழியின் கீழ் கொண்டு வந்துவிடக் கூடிய அதிகாரம் தன்னிடம் இருக்கிறது என்று நம்பிக்கொண்டிருக்கும் கோமாளிகள் சிலரின் தப்புக் கணக்கு இது. அவர்கள் கெட்ட நேரம், அதில் தமிழ்நாடும் இருக்கிறது. “இன்று இரவு உன் வீட்டில் தீ வைக்கப் போகிறோம். அதை உனக்குப் புரிகிற மொழியில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்கிற ஆணவம் யாரை எரிக்கிறது என்று பார்க்கத்தானே போகிறோம்!

இத்தனையையும் மீறி, தான் படித்துப் புரிந்து கொண்டால் மட்டும் போதாது. தன் மக்கள் எல்லோரும் இதைப் படித்துப் புரிந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று எண்ணி ஓர் இளைஞர் கூட்டம் அதை இரவு-பகலாக விழித்து வேலை செய்து தன் தாய்மொழியில் வெளியிட்டிருக்கிறது (இவ்வரும் பணியைச் செய்து முடித்திருக்கும் யாவரும் குழுவைப் பாராட்டச் சொற்களில்லை நம்மிடம்). இந்தியாவில் அப்படியான ஒரு வேலையைச் செய்யும் பிள்ளைகளைப் பெற்றெடுத்திருக்கும் ஒரே தாய் தமிழ்த்தாய்தான். எத்தனையோ விஷயங்களில் நாம் இந்த நாட்டுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறோம். இதிலும் இருந்துவிட்டுப் போவோம். தமிழ் வரைவைப் படித்துச் செரித்து, செரிக்க முடியாதவற்றைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்து, கேள்வி கேட்டு, நம் மக்களாட்சிக் கடமையை ஆற்றுவோம். எவ்வளவோ பொய்யும், புரட்டும் பகிரப்படும் சமூக ஊடகங்களில் இவ்வரைவையும், அது பற்றிய நேர்மையான உரையாடல்களையும் பகிர்வோம். பிறருக்காகவும் சேர்த்தே இம்மண்ணைக் காக்கும் கடமை தமிழர்களுக்கு இருக்கிறது. இன்றல்ல, நாளையல்ல, பல தலைமுறைகளுக்குப் பின் இதற்காகப் பல நாடுகள் நமக்கு நன்றி சொல்லும்.

இதில் மக்களின் பேராசைக்கும் பெரிய பங்கிருக்கிறது. இயல்பிலேயே சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் அளவுக்கு நம் வளங்களைக் காப்பதில் நமக்கு அக்கறை இல்லாமல் இருக்கிறது. மக்களே அக்கறையோடு இருக்கும் நாடாக இருந்தால் கூட அதை மக்களிடம் விட்டுவிடலாம்.  மக்களும் அக்கறையற்றவர்களாக இருக்கும் போது அரசுதான் மக்களின் சார்பாகக் கவலைப்பட வேண்டும். மக்களைப் போலவே அரசும் கவலையற்று அல்லது விழிப்புணர்வற்று இருக்கும் போது இரு சாராரையுமே விழிப்புணர்வுடையவர்களாக மாற்றும் பொறுப்பு அந்நாட்டு வல்லுநர்களுக்கும் படித்தவர்களுக்கும் இருக்கிறது. அதைத்தான் தமிழகத்தில் ஓர் இளைஞர் கூட்டம் செய்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு நம் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கைலாய மலைக்கும் அபாயம், பழனி மலைக்கும் அபாயம் என்கிறார்கள். தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

***

பாரதிராஜா

பலஸ்தீனம்: இஸ்ரேலின் நிலப்பறிப்பும் அமெரிக்கத் தீர்வுத் திட்டமும்

ரூபன் சிவராஜா

கொரோனா நெருக்கடி முழு உலகையும் தலைகீழாய்ப் புரட்டிப் போட்டிருக்கின்ற நிலையிலும் ஆக்கிரமிப்பு சக்திகள் நெகிழ்வுப் போக்கிற்குரிய அணுகுமுறை மாற்றங்களுக்குத் தயாரில்லை. பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை (West Bank) நிலங்களைப் பலவந்தமாக தனதாக்கிக் கொள்ளும் இஸ்ரேலின் சமகால முனைப்பு அதனையே வெளிப்படுத்துகின்றது. ஐ.ந-வும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்கா தவிர்த்த உலக நாடுகள் பலவும் இஸ்ரேலின் இந்த முனைப்பினைச் சட்ட விரோதமெனக் கண்டிக்கின்றன. இருப்பினும் இஸ்ரேலின் கடும்போக்கிற்கு அமெரிக்கா வழமை போல முண்டுகொடுக்கின்றது. வழமை போல என்பதற்கு மேலாக டிரம்ப் நிர்வாகம் பிரத்யேகமாக இஸ்ரேலின் நிலப்பறிப்பு அரசியலுக்கு துணை நிற்கின்றது எனலாம். இந்த ஆண்டின் (2020) ஆரம்பத்தில் இஸ்ரேலின் பங்களிப்புடன் அமெரிக்க ஜனாதிபதி, டிரம்ப் வெளியிட்ட இஸ்ரேல்-பலஸ்தீன சமாதானத் தீர்வுத்திட்ட முன்மொழிவில் இதற்கான பரிந்துரை இடம்பெற்றுள்ளது. பலஸ்தீனத் தரப்பின் பங்கேற்பு முற்றிலும் இல்லாமல் உருவாக்கப்பட்ட சமாதான வரைபு அதுவாகும். அதாவது இன முரண்பாட்டில் தொடர்புப்பட்ட இரு தரப்பில், ஒரு தரப்பு முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு தீர்வுத்திட்டம் வரையப்பட்டுள்ளது.

மேற்குக்கரையில் யூதக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ள பிரதேசங்களை இஸ்ரேலுடன் இணைக்கும் திட்டம் ஆங்கிலத்தில் ‘Annexation’ எனச் சுட்டப்படுகின்றது. அரசியல் அர்த்தத்திலும் நடைமுறையிலும் இதன் பொருள் தனது இறைமைக்கு அப்பாற்பட்ட இன்னொரு தேசத்தின் ஆட்புலத்தை (Territory) பலவந்தமாக இணைப்பதைக் குறிக்கின்றது. அடிப்படையில் இதுவொரு அப்பட்டமான இறைமை மீறல். சர்வதேச சட்ட மீறலுமாகும். உக்ரைனில் இருந்து கிறேமியா குடாவினை (Crimean Peninsula) 2014-ல் இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் ரஸ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதை மேற்குக்கரை தொடர்பான இஸ்ரேலின் இன்றைய முனைப்புடன் ஒப்பிடமுடியும்.

இந்த வலுக்கட்டாய இணைப்பினைத் தடுக்கும் நோக்கில் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்குத் தயாரென பலஸ்தீனத் தன்னாட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. 2014-க்கு பின்னர் இரு தரப்பிற்குமிடையிலான நேரடிப் பேச்சுவார்த்தைகள் நின்று போயிருந்தன.

“பலஸ்தீனிய பிரதேசத்தின் எந்தவொரு பகுதியையும் இணைப்பதாக இஸ்ரேல் பிரகடனப்படுத்துமானால், இஸ்ரேலுடன் இதுவரை கையெழுத்திடப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளிலிருந்தும் விலகுவதாக அர்த்தப்படும்;” என பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகம் ஐ.நா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.  ‘பலஸ்தீனர்களைக் காட்டிலும் வேறெந்தத் தரப்பிற்கும் சமாதானத் தீர்வினை எட்டுவதில் அதிக அக்கறை இருக்க முடியாது. அதேபோல் சமாதானம் எட்டப்படாத நிலையில் பலஸ்தீனியர்களைப் போல் இழப்பு வேறெவருக்கும் இருக்கப் போவதில்லை’ என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல் தெரிவித்திருந்தது.

பலஸ்தீனர்களின் செய்வதறியாத விரக்தி நிலை, அரேபிய எதிர்ப்பு, சர்வதேசக் கண்டனங்களைப் புறந்தள்ளி இணைப்பு விடயத்தில் இஸ்ரேல் கடும்போக்குக் காட்டுகின்றது. அதேவேளை இஸ்ரேலின் பாதுகாப்புத் துறையின் முக்கிய மூன்று முந்நாள் உறுப்பினர்கள் மேற்குக்கரை இணைப்பு ஆபத்தான முடிவென எச்சரித்துள்ளனர். எகிப்த், ஜோர்டான் நாடுகளுடனான இஸ்ரேலின் சமாதான ஒப்பந்தங்களை இந்த இணைப்புப் பாதிக்கும் என்பது அவர்களுடைய வாதம். அத்தோடு வளைகுடாவின் இஸ்ரேல் நட்பு சக்திகளைக் கோபமூட்டுவதோடு பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தினைக் குறைமதிப்புச் செய்வதோடு, இஸ்ரேலின் ஜனநாயகத்தின் மீது கேள்வியெழுப்பும் நடவடிக்கை எனவும் அவர்கள் எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாற்று நீட்சியில் நடந்தேறிய நிகழ்வுகள் பலஸ்தீனர்களுக்கு எதிராக இருந்து வந்திருக்கின்றன. 70 ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறைக்கெதிரான போராட்டம், 30 ஆண்டுகளுக்கு மேலான இறுதித் தரிப்பிடம் சேராத சமாதான முயற்சிகள், நிலப்பறிப்பு, ஒடுக்குமுறை, படுகொலைகள் எனப் பாரிய அவலங்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்ற மக்களாக அவர்கள் உள்ளனர். பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகம் அதிகாரமற்ற கட்டமைப்பாக இருக்கின்றது. இஸ்ரேல் வரலாற்று ரீதியாக பலமான அதிகார மையமாக இருந்து வந்திருக்கின்றது. யூத தேசியவாதம் கூர்மை மிக்கதாகவும் பிராந்தியத்தில் பலம் பொருந்தியதாகவும் உலக வல்லரசான அமெரிக்காவின் ஆதரவுப் பின்புலத்தினைத் தக்க வைத்ததாகவும் இருந்து வருகின்றது. பலஸ்தீனர்கள் மீதான உலக ஆதரவு என்பது தார்மீக அடிப்படையிலானதும், செயல் அழுத்தங்களுக்கு வழிகோலாத அனுதாப அலைகளுமாகவே நீண்ட காலமாக இருந்து வந்துள்ளன.

நடைமுறை அர்த்தத்தில் இந்த இணைப்புத் திட்டம் ஜோர்டன் பள்ளத்தாக்கு (Jordan valley) உட்பட்ட மூன்றில் ஒருபகுதி மேற்குக்கரைப் பிரதேசங்களைப் பற்றியது. ‘யூத நிலத்தின் மீது யூத இறைமையை நிலைநாட்டுதல்’ என்ற கோஷத்துடன் இஸ்ரேல் களமிறங்குகிறது. யூத தேசம் (Nation) பிறந்து வளர்ந்த நிலப்பகுதிகள் அவை என்பது அவர்களின் வாதம்.

இந்த வாதத்திற்கும் கோஷத்திற்குமான அடிப்படை என்பது, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட யூதர்களின் கோட்பாடு சார்ந்தது. நிலத்தை அடிப்படையாகக் கொண்ட கோட்பாட்டின் பிறப்பிடம் அவர்களது மதம். தமக்காக இறைவனால் “வாக்களிக்கப்பட்ட பூமி”  (தேர்ந்தெடுக்கப்பட்ட பூமி) என்பதே அவர்களின் அந்தக் கோட்பாட்டு வியாக்கியானம். சிங்களவர்கள் மத்தியிலும் இதையொத்த கோட்பாட்டு வியாக்கியானம் உள்ளது.

பௌத்தத்தைப் காப்பதற்காக புத்தரால் தேர்ந்தெடுக்கப்பட்டதே இலங்கைத்தீவு என்ற மஹாவம்ச நம்பிக்கை பெரும்பான்மை சிங்களவர் மனங்களில் ஆழமாய் வேரூன்ற வைக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாடு நீண்ட வரலாற்றுப் பின்னணியையும் அரசியல் நிகழ்வுகளையும், ஆக்கிரமிப்புப் போர்களையும், சமாதான முன்னெடுப்புகளையும் கொண்டது. இவை பற்றி முன்னர் பல கட்டுரைகளில் விரிவாக எழுதியுள்ளேன். இருப்பினும் தற்போது பேசுபொருளாகி இருக்கும் மேற்குக்கரை ஆக்கிரமிக்கப்பட்ட பின்னணி, திட்டமிட்ட யூதக் குடியேற்றங்கள் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுவது அவசியம். சமகாலத்தைப் புரிந்து கொள்ள உதவும். 1967இல் (05.06.1967 – 10.06.1967) சிரியா, ஜோர்டான், எகிப்த் ஆகிய அரபு நாடுகள் மீது இஸ்ரேல் நடாத்திய போர் ஆறு நாள் போர் என அழைக்கப்படுகின்றது. இந்தப் போரில் எகிப்த், ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளிடமிருந்து பிரதேசங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. சினாய் குடா மற்றும் காசா ஆகியன எகிப்திடமிருந்தும், கிழக்கு ஜெருசலோம் மற்றும் மேற்குக்கரை ஜோர்டானிடமிருந்தும், கோலான் குன்றுகளை (Golan Heights) சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் கைப்பற்றியது.

1979-ல் இஸ்ரேல் – எகிப்த் இடையிலான சமாதான ஒப்பந்தத்திற்கு அமைய சினாய் குடாவிலிருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறியது. 1993-ன் ஒஸ்லோ உடன்படிக்கையின் விளைவாக மேற்குக் கரையின் 18 வீதமான நிலப்பரப்பின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாட்டு உரிமையைப் பலஸ்தீனத் தரப்பு மீளப்பெற்றது. இருந்தபோதும்  இப்பிரதேசங்களில் இஸ்ரேல் படைகளின் பிரசன்னம் தொடர்ந்து இருந்து வருகிறது. மட்டுமல்லாது பிரதேசத்திற்கான உள்நுழைவு, வெளிச்செல்லல் சார்ந்த அனுமதிகளையும் இஸ்ரேல் படையினரே தீர்மானிக்கின்றனர். மேற்குக்கரையின் பெரும்பகுதி நீர்வள மற்றும் உட்கட்டுமான முகாமைத்துவம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்து  வருகின்றன. 2005 வாக்கில் காசாவிலிருந்து யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டன. ஆயினும் காசா மீது பல தடவைகள் இராணுவ ஆக்கிரமிப்பினை இஸ்ரேல் மேற்கொண்டிருந்தது. காசாவிலிருந்து யூதக் குடியேற்றங்கள் அகற்றப்பட்டதை அடுத்து 2007-ல் ஹமாஸ் அமைப்பு காசாவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2006, 2008-2009, 2012, 2014 எனப் பல தடவைகள் காசா மீது இஸ்ரேல் படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. ஹமாஸ் அமைப்பிற்கு எதிரான போர் என்ற பிரகடனத்துடன் இஸ்ரேல் படையெடுப்புகளைச் செய்தது.

மேற்குக்கரை மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, குடியேற்றங்கள் சட்ட விரோதமானது என ஐ.நா பல தீர்மானங்கள் மூலம் வலியுறுத்தி வந்ததோடு முழு அளவிலான வெளியேற்றத்தையும் கோரி வந்துள்ளது. ஆயினும் ஐ.நாவின் உந்தத் தீர்மானங்களுக்கும் இஸ்ரேல் மதிப்புக் கொடுக்கவில்லை. ஐ.நா பாதுகாப்புச் சபையில் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலைக் காப்பாற்றி வந்திருக்கிறது அமெரிக்கா.

240 வரையான குடியேற்றத் திட்டங்களில், எட்டு லட்சம் வரையிலான யூதர்கள் கிழக்கு ஜெருசலோம் உட்பட மேற்குக்கரையில் வசித்து வருகின்றனர்.

பலஸ்தீனப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட யூதக் குடியேற்றங்கள், ஜெனீவா உடன்படிக்கைகளுக்கு (Geneva Conventions) முரணானவை. இதற்கு ஆதாரம் ஜெனிவா உடன்படிக்கையின் ‘49 ஆவது அலகு’: ‘ஒரு ஆக்கிரமிப்பு சக்தி, தான் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்திய இன்னொரு ஆட்புலத்திற்கு, தனது சொந்த மக்களின் ஒரு பகுதியை நாடு கடத்தவோ அல்லது இடம்பெயர வைக்கவோ முடியாது’. அத்தோடு ‘பாதுகாப்பு அவசியப்படுகின்ற தனிநபர் அல்லது மக்கள் திரள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதையும் நாடு கடத்தப்படுவதையும் இந்தத் தீர்மானம் தடை செய்கிறது.’

குடியேற்றங்களும் புறக்காவல் நிலையங்களும் சட்ட விரோதமானவை என்றும் அத்தகைய பிரதேசங்களில் அனைத்துவகைக் கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட வேண்டுமென்றும் இறுதியாக டிசம்பர் 2016 ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.  2017-ல் இஸ்ரேல் நாடாளுமன்றம், சட்டத்திற்குப் புறம்பாக அமைக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்களைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்ததனிகர் Michelle Bachelet ஜூன் இறுதியில் வெளியிட்டிருந்த அறிக்கையில், இணைப்பு சட்ட விரோதமானது என்றும், இஸ்ரேலின் முந்நாள் மூத்த அதிகாரிகளின் கருத்தினையும் உலககெங்கும் எழுகின்ற எதிர்ப்பினையும் செவிமடுத்து, இந்த ஆபத்தான பாதையைக் கைவிடுமாறு இஸ்ரேலை மேலும் கோரியிருந்தார்.

பலஸ்தீனத் தரப்பும் ஒரு சமாதான திட்ட முன்மொழிவை வைத்துள்ளது. படை நீக்கம் செய்யப்பட்ட காசா, மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேமைத் பலஸ்தீனத் தாயகமாக அங்கீகரிக்கப்பட்ட தீர்வு பற்றி அதில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. முழுமையான விபரம் அறியப்படாத போதும், சர்வதேச சட்ட வரையறைகளுக்கும் ஐ.நா தீர்மானங்களுக்கும் அமைவான தீர்வுத் திட்டத்தினை பலஸ்தீனத் தரப்பு முன்வைத்துள்ளதாக அறிய முடிகிறது. புலஸ்தீனர்களின் தாயகக் கோட்பாட்டினை மறுதலிக்கும் இஸ்ரேலின் பலவந்த இணைப்பு மற்றும் அமெரிக்க தீர்வுத் திட்டத்திற்கான பதிலாக பலஸ்தீனத் தரப்பின் தீர்வுக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

டிரம்ப் நிர்வாகத்தின் தீர்வுத்திட்ட முன்மொழிவின்படி, குடியேற்றத் திட்டங்களை அப்படியே பேணுவதும், ஜோர்டான் பள்ளத்தாக்கினை இஸ்ரேல் நிரந்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்குமான பரிந்துரை இடம்பெற்றுள்ளது. ஜோர்டான் பள்ளத்தாக்குப் பிரதேசங்கள் பலஸ்தீனியர்களின் முக்கிய விவசாயப் நிலங்களைக் கொண்டுள்ளது.  இதற்கு இழப்பீடாக பலஸ்தீனர்களுக்கு நேகேவ் பாலைவனங்களில் குறிப்பிட்ட சில நிலத்துண்டுகளை வழங்குவது தொடர்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசம் எகிப்த் எல்லையை அமைவிடமாகக் கொண்ட காசாவோடு இணைந்த பகுதியாகும். சமாதானத் தீர்வுத் திட்டத்தினை பலஸ்தீனத் தரப்பு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் 30 பில்லியன் டொலர் நிதி எதிர்கால முதலீடுகள், அபிவிருத்திகளுக்காக பலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஜெருசலேம் இஸ்ரேலின் விட்டுக்கொடுப்புக்கு இடமற்ற தலைநகரம் என்பதற்கு அமெரிக்கத் தீர்வு முன்மொழிவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் போன்ற சிறந்த நண்பனை வெள்ளை மாளிகையில் இதுவரை இஸ்ரேல் கொண்டிருக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு புகழாரம் சூடியுள்ளார்.  இஸ்ரேலிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினை டெல் அவீவிலிருந்து ஜெருசலோமிற்கு மாற்றியது அமெரிக்கா. மட்டுமல்லாமல் கோலான் மலைகளை இணைப்பதற்குரிய ஒப்புதலையும் வழங்கியது. டிரம்பின் சமாதானத் திட்ட வரைபு என்பது இஸ்ரேல்-பலஸ்தீனத் தரப்பில் பலமான தரப்பாக இருக்கக்கூடிய இஸ்ரேலுக்கு ஒரு அன்பளிப்புப் பொதியாகவும் அமைந்துள்ளது.

நவம்பர் அமெரிக்கத் தேர்தல். தேர்தலில் டிரம்ப் தோற்று வேறொருவர் தெரிவு செய்யப்படும் போது இஸ்ரேலின் திட்டத்திற்குரிய ஆதரவு இல்லாமற் போக வாய்ப்புண்டு. எனவே டிரம்ப் பதவியில் இருக்கும் சில மாதங்களுக்குள் திட்டத்தை நிறைவேற்றும் முனைப்பு நேதன்யாகுவிற்கு இருக்கக்கூடும்.

பலவந்த இணைப்பு (Annexation), சட்டவிரோதம் (Illegal), இராணுவ ஆக்கிரமிப்பு (Military Occupation) ஆகிய சொற்பிரயோகங்களுக்கிடையிலான வேறுபாட்டினை அவற்றின் சரியான சூழமைவுகளில் விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. 1967-ல் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்ட யூதக் குடியேற்றங்கள் அனைத்தும் சட்ட விரோதமானவை என்று சர்வதேச சட்டங்களும் ஐ.நா மற்றும் ஹாக் தீர்மானங்களும் வரையறை செய்கின்றன

இராணுவ ஆக்கிரமிப்பிற்கும் பலவந்த இணைப்பிற்குமிடையில் வேறுபாடுகள் உள்ளன. இராணுவ ரீதியில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கைகள் ஆக்கிரமிப்பிற்கு உள்ளான மக்களிடமிருந்தும், சர்வதேச மட்டத்திலிருந்தும் எழுந்தபடி இருக்கும். அந்த வகையில் இராணுவ ஆக்கிரமிப்பு பெரும்பாலும் தற்காலிகமானது. ஒரு கட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீதான தமது பிடியை ஆக்கிரமிப்பு சக்திகள் விலக்கிக்கொள்ள நேரிடுகிறது. பலஸ்தீன நிலங்களை விடுவித்தல் தொடர்பான கோரிக்கைகள், அழுத்தங்கள் சர்வதேச ரீதியில் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. 2005-ல் காசாலவிலிருந்து யூதக் குடியேற்றங்களை அகற்றியது மட்டுமே அழுத்தங்களுக்கு இஸ்ரேல் செவிசாய்த்த ஒரேயொரு சந்தர்ப்பம்.

இராணுவ ஆக்கிரமிப்பு மூலம் நிலங்களை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் அரசுகளின் உத்திபூர்வப் பொறிமுறைகளில் முக்கியமானது திட்டமிட்ட குடியேற்றம். அடுத்தபடியாக சொந்த மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான பல்வேறு உடனடி மற்றும் படிப்படியான நடவடிக்கைகள். சொந்த நிலத்திலிருந்து மக்களை அச்சுறுத்தி வெளியேற்றுதல், வதிவிட உரிமையை மறுத்தல் உட்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள். இவற்றின் நோக்கம் மக்கட்தொகை சமநிலையைத் (Demographic balance) தமக்குச் சாதகமாக மாற்றுதல். அதாவது குறிப்பிட்ட நிலத்தின் பூர்வீக மக்களின் இயல்பான பரம்பலைக் குழப்புதல், அவர்களைச் சிறுபான்மையினராக்குதல். இது கொலனித்துவ அணுகுமுறை (Colonial approach) எனப்படும். கிழக்கு ஜெருசலேம், மேற்குக்கரை பிரதேசங்களில் இஸ்ரேல் இந்த அணுகுமுறையினைக் கைக்கொண்டு வந்துள்ளது. பெரும்பான்மையாக இருந்த பலஸ்தீன மக்கள் இப்பிரதேசங்களில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.

நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், பூர்வீக மக்களைச் சிறுபான்மையினராக்குதல் போன்ற உத்திபூர்வ நடிவடிக்கைகளுக்கு இஸ்ரேலும், சிறிலங்கா அரசும் இதற்கான சமகால உதாரணங்கள். இஸ்ரேலின் பலஸ்தீன நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் யுதக்குடியேற்றங்களும், தமிழீழத்தின் கிழக்கு மற்றும் மணலாறு உட்பட்ட பிரதேசங்களின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் அந்த வகையைச் சேர்ந்தவை. 2009-க்குப் பின்னரான சூழலில் தமிழர் தாயகத்தின் வடக்கும் கிழக்கும் முற்றுமுழுதான இராணுவ மயப்பட்டுள்ளன. தமிழர்களின் நிலவுரிமையின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குரியதாகியுள்ளது. வன்னியின் கேப்பாபுலவு உட்பட்ட சில பகுதிகளில் மக்களின் வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறக் கோரும் போராட்டங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

மேற்குக்கரை மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு என்பது, அதன் காலநீட்சி அடிப்படையில் ஒருவகையான நிழல் இணைப்பினை (de facto annexation) ஏலவே கொண்டிருக்கிறது என்ற கருத்தும் நிலவுகின்றது. தற்போது இஸ்ரேல் அறிவித்துள்ள இணைப்பிற்கு சர்வதேச மட்டத்திலான எதிர்ப்பு என்பது இணைப்பினைக் கைவிடவேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தி இருக்கின்றது. அதன் நடைமுறை அர்த்தம் ஏற்கனவே உள்ள ‘நிழல் இணைப்பினைத்’ தொடர்வததென்பதாகும். ஏற்கனவே உள்ள நிழல் இணைப்பு சட்ட விரோதமானது. அதனையும் நீக்குவதற்குரிய அழுத்தத்தினையும் ஒருங்கே பிரயோகிப்பதே மேற்குக்கரை தொடர்பான பிரச்சினைக்குரிய இறுதித்தீர்வுக்கு வழிகோலும். பலவந்த இணைப்பு என்பது ஜெனீவா மற்றும் ஹாக் உடன்படிக்கைகளை மீறும் செயல். மறுபுறத்தில் அவை போர்க்குற்றத்திற்கு ஒப்பானவை. ஏனெனில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மீது ஒருதலைப்பட்சமாக இறைமையை நிறுவுதற்குரிய உரிமை ஆக்கிரமிப்பாளர்களுக்கு இல்லை.

இன்று பேசுபொருளாகியிருக்கும் இணைப்பு என்பது மேற்குக்கரை, கிழக்கு ஜெருசலேம், ஜோர்டான் பள்ளத்தாக்கு உள்ளடங்கிய 30 வீதமான பலஸ்தீன பிரதேசங்கள் சார்ந்ததாகப் பிரஸ்தாபிக்கப்படுகிறது. ஆயினும் 1967-ல் ஆக்கிரமிக்கப்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை படிப்படியாகத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் 30 வீதத்திற்கும் மேலான பலஸ்தீன நிலங்கள் விழுங்கப்பட்டு விட்டன. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக பலஸ்தீனத்தின் மீது திணிக்க முற்படும் தீர்வுவென்பது நிலங்களை விழுங்கிய தீர்வு. பலஸ்தீனத் தரப்பின் கூற்றுப்படி வரலாற்று ரீதியான பலஸ்தீனத் தாயக நிலப்பரப்பின் 15 வீதமான பிரதேசங்களை உள்ளடக்கியதே அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத்தீர்வு. மட்டுமல்ல சர்வதேச சட்டங்களை மீறிய, ஐ.நா தீர்மான அடிப்படைகளுக்கு முரணானவை என்பதோடு, சமாதானத் தீர்வுக்கு அடிப்படையாக ஒஸ்லோ உடன்படிக்கையில் இணக்கம் காணப்பட்ட, மற்றும் ஐ.நா தீர்மானங்களுக்கும் முரணானவை.

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் தவிர கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

ரேவா கவிதைகள்

2

1) காத்திருப்பின் கடவுச்சொல்

சிறகுகளுக்கான சிந்தனை மனம்
தாழப் பறக்கும் போது
அடைபடுகிற இடத்தின் வசதிக்குள்
வனைந்துகொள்ள முடிகிற உயரமாய் இருக்கிறது
தொடங்குதல்

தொட்டுப்பார்த்து
தொடர்ந்து சேர்த்த குறிப்புகள்
முற்றுப்பெறா பக்கமாகிப் புரட்டுகிறது
இருப்பின் காற்றை
கையடக்கமான வெளிச்ச விளிம்பிற்குள்
நிழல் கொண்டு புதைந்திருக்கிற
காரணம்
போதுமாய் இருக்கிறது
கூடுதலாக்கிப் பிரகாசிக்க காத்திருக்கும்
ஒரு சொல்லுக்கு

***

2) மனம் பகிரா வெளியின் பசியளவு

இருப்பதை இருப்பதாய்
நம்பவைக்கும் கணத்தைத் தொட்டு
நடித்துக்கொண்டிருக்கிற
பாத்திரத்தை
எடுத்துக்கொண்ட கொள்ளளவாகி
நிறை என்கிறது
மெளனம்

நின்று பேசும் வசதிக்குள்
வாத்சல்யங்களை அளவிடும்
உன் ஒப்பீடு
ஓர் ஒப்பந்தமுனை

இடவசதி
இதுகாறும் அனுமதித்த
உள்வளைவில் உண்டுபார்த்த அப்பம்
என் கைப்பண்டம்

பசி
அர்த்தங்களின் கைமாற
மாறும் ருசிக்குள்
கிளை மீறிப் பறக்கிற அதிர்விற்கு
மணமுண்டு
உண்டு பார்த்த யோசனைகளோடு

விளைவைத்தான் பயிர் செய்கிறது
நிலம்
நீரோடு வருவதில் உருண்டோடுகிற
நயம்
நீர்ச்சுழி மீறிச் சேர்த்த
நிதானம்

நிறைத்துக்
கட
என்பதில் நிறைகிறது
பங்கீட்டின் அகவெளிப் பாத்திரம்

***

ரேவா, மதுரையில் வசித்து வரும் இவருக்கு “கவனிக்க மறந்த சொல்” எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

nelmalar25@gmail.com

சுவடுகளை அழிக்கும் பயணம்

0

வாகீசன்

நொறுங்கிய
கண்ணாடித் துகளின்
பொடிகளை
உந்தித் தள்ளுகின்றது
மோகபேரன்பின் பெருந்திணை கண்ணீர்

பெஞ்சமின் பட்டனின் பயணச்சீட்டு
அண்டார்டிகாவில்
எதிரொளிக்கும் துகளிடையே
இருத்தி திருப்புகின்றது
நேரத்தில் பின்னோக்கி

அண்டத்துள் அண்டத்தை தேடி
மெக்காண்ட்லஸ்ஸின் அடியொற்றிய பயணத்தில்
ஆசிகளும் சாபங்களும்
நீர்த்து நிறமற்று மறைகின்றன

மறந்த
மறுத்த
வெறுத்த
துரத்திய
வஞ்சித்த
உயிர்களின் மீதான
கடைசி சிலிர்ப்பின்
நிழல் மிஞ்சியிருக்கின்றது
எஞ்சியிருக்கும் பயணத்தில்
அழிந்தபடி

***

வாகீசன், திரைத்துறையில் பணியாற்றும் இவர். இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். கவிதைகள் எழுதிவருகிறார்.