Home Blog Page 69

பாலைவன லாந்தர் கவிதைகள்

4

பாலைவன லாந்தர்

*

கறுத்து தடித்த உதடுகளால்

கறுத்து தடித்த உதடுகளால் வழங்கப்படும் முத்தங்களுக்காக ஏன் இத்தனை பிரயாசைப்படுகிறீர்கள்
கறுத்து தடித்த உதடுகளால் உலகின்  மிகப்பெரிய முத்தங்களை வழங்கிவிட முடியுமா என்ன

கறுத்து தடித்த உதடுகளால் தனது ஏக்கங்களை இலகுவாக விவரித்து விட முடியும் என்று நம்புகிறீர்களா

கறுத்து தடித்த உதடுகளால் போகிக்கும் சமயத்தில் முணுமுணுக்கப்படும் “ம்ம்ம்” என்ற சங்கீத அதிர்வால் அந்த நிலம் தனது பூர்வீகத்தை அடைந்து விடுமென கனா கண்டீர்களா

கறுத்து தடித்த உதடுகளால் அளவிற்கு அதிகமாக அடுக்கப்படும் மாமிசம் தடவிய அரைவேக்காட்டு மைதா ரொட்டிகளை வெண்ணை வழியாமல்  தின்று விட முடியுமா

கறுத்து தடித்த உதடுகளால் பற்களுக்கு நடுவில் நிறுத்தப்பட்ட சிகாரை புகைத்து முடிக்கும் வரை உதடுகளில் இருந்து நழுவிவிடாமல் நெருப்பை உறிஞ்சுவிட இயலுமா

கறுத்து தடித்த உதடுகளால் எதை செய்துவிட முடியுமென பனைக்கீற்று முனை போலுள்ள உதடுகளை ஆணிக்கொண்டை போன்ற ஆயுதத்தால் குத்திக்குத்தி தடிக்க வைக்கின்றனர்

பாழடைந்து வெடிப்புகள் நிரம்பிய சுவற்றில் அறையப்பட்டிருக்கும் பித்தளை ஆணிகளைப் போன்று கறுத்து தடித்த உதடுகளில் மீச்சிறு அணிகலன்களை பொருத்தி இருக்கும் பெண்களை இறுக்கமாக அணைத்து  சொல்ல வேண்டும்

ஆமன்

***

2) இப்போது நடந்து கொண்டிருப்பது எத்தனையாவது யுத்தம்

மதில்களைத் தகர்த்து நுரையீரல்களின் ஓடுகளில்
காத்தாடி விட்டுக்கொண்டிருந்த விரல்களில்
நூலினை சிறிது சிறிதாகச் செலுத்தும் மாலுமி
அன்னார்ந்து மேலெழுந்து கேட்கிறான்
இது எத்தனையாவது யுத்தம்
நத்தைக்கூட்டை விசுக்கென நசுக்கியப் பின்
யாருமற்ற ஆழ்கிணற்றைத் தேடி பதுங்கி
பிசுபிசுக்கும் உணவை விழுங்குவதற்கு
வாய் திறக்கும் வாய்க்குள் நெளியும் புழுக்கள்
கூட்டமாகக் கேட்கின்றன
இது எத்தனையாவது யுத்தம்
இரண்டு பாதங்கள் ஒன்றையொன்று முந்துகின்றன
சமரசம் செய்யும் உடல் சாவகசமாய் அமர்ந்துகொள்ள
மலைகளைத் தகர்த்து ஒரு பாறையைத் தேர்ந்தெடுக்கிறது
மீதமிருக்கும் பாறைகள் இரண்டு பாதங்களுக்கு நடுவே
மரமென வளர்ந்துகொண்டே கேட்கிறது
இது எத்தனையாவது யுத்தம்
பூச்சிக்கொல்லியை நுகர்ந்தவுடன் பிரசவிக்கப்பட்ட
பூச்சிக் குட்டிகளின் இறுதிப்பூச்சி
தனது கண்களை திறக்காமலேயே
பெரிய பூச்சியின் உணர்கொம்பை பிடித்திழுத்து கேட்கிறது
இது எத்தனையாவது யுத்தம்

***

***
3) சிவந்த மண்டைகள்

பிரேதப்பரிசோதனையின் போது
உடைக்கப்படும் மண்டைகளின் சப்தம்
தன்னை இம்சிக்காமல் இருப்பதற்காக
காதுகளில் ஓர் இசையை பொருத்தி கொள்ளுதல்
ஒவ்வொரு மண்டைக்கும் ஏறி இறங்கும்
சப்தத்தின் அளவீடுகள்
அதிலும் சின்னஞ்சிறு மண்டைக்கென
ஒரு ம்யூட்
பழுத்த மண்டைகளுக்கு வேறு ரகம்
மண்டைகளை உடைத்த பின்
மறக்காமல் நிலைக்கண்ணாடியில்
தனது தலையை தடவிப்பார்த்தபின்
அணிந்து கொள்ளும் கண் ஆடி
இரண்டு கண்களும் தோண்டி எடுக்கப்பட்டு
வீசியெறியப்பட்ட மண்டையில்
குளிர் கண்ணாடி அணிவித்து
சுயமி புகைப்படம் எடுப்பதென்பது வியாதி
ஓய்வாக இருக்கும் போது மண்டைகளுக்கு பெயரிடுதல்
அதனோடு உரையாடுதல்
தனக்கு பிடித்த கதைகளை வாசித்து காட்டுதல்
நெளிந்து போன குவளையை நெளிந்த மண்டையில் அடித்து சியர்ஸ் சொல்லுதல்
இறுதியாக நெற்றியில் முத்தமிடுதல்
மற்ற நேரங்களில் மண்டைகள் எனப்படுபவை
முப்பத்தைந்து
நாற்பத்தேழு
எழுபத்தெட்டு

***

பாலைவன லாந்தர் – தற்பொழுது கத்தாரில் வசிக்கிறார். உப்பு வயலெங்கிலும் கல்மீன்கள், லாடம் என்று இரு கவிதைத்தொகுப்புகள் வந்துள்ளன. தொடர்புக்கு – palaivanam999@gmail.com

EIA 2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை வரைவு தமிழில்

4

தமிழ்ச் சமூகத்திற்கு வணக்கம்

கொரோனா ஊரடங்கில் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு நபரும் எதிர்பாராத, சமாளிக்க இயலாத நெருக்கடிகள் சூழந்துகொண்டிருக்கின்ற இந்தப் பேரிடர் சூழலில், இந்திய ஒன்றிய அரசு பல சட்டங்களை அவசரகதியில் நிறைவேற்ற தீவிரமாக முனைப்புக் காட்டிவருகிறது. அதில் அச்சமிக்கச் சட்டமாகப் பல சூழலியல் இயற்கை ஆர்வலர்களும், மாணவர்களும், பொது மக்களும் எதிர்க்கும் திட்டம் – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 (வரைவு). சிலர் தேவையற்ற அச்சமென்கிறார்கள், சிலர் நம்புங்கள் என்கிறார்கள், சிலர் நாங்கள் பலர் சிலரில்லை என்றும் திருத்துகிறார்கள்.

120 கோடிக்கும் மேற்பட்டோர் வாழும் இந்திய ஒன்றியத்தில் மட்டும் 19, 500 மொழிகளும் வட்டார மொழிகளும் இருப்பதாக 2018-இல் வந்த கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையிலுள்ள 22 அலுவல் மொழிகளிலாவது மொழிபெயர்க்காமல் மக்களிடம் கருத்து எப்படி வாங்கிட முடியும் என்கிற ஆதாரக் கேள்விக்கு நீதிமன்றம் வழியாகக் கிடைத்திருக்கும் அவகாசம் மிகச்சிறிய இடைவெளி தான், ஆகஸ்ட் 11!

மக்களால் உருவாகும் அமைப்புதான் அரசு என்கிறது அரசியல் சாசனம். மக்களாகிய நாமே நமக்காக அதைச் செய்வோம் என்கிற உந்துதலில் நண்பர்களின் ஒத்துழைப்போடு இந்த மொழிபெயர்ப்பைத் தொடங்கினோம். மொழிபெய்ர்ப்பு அத்தனை எளிதான பணி அல்ல. அதுவும் இத்தனை குறுகிய இடைவெளியில், அதை விடக் கடினம் இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்படும் துறை சார்ந்த கலைச்சொற்கள். வேதியல், உயிரியல், சூழலியல், இயற்பியல், சட்டம் என எல்லா வகைப் பயிற்சியும் தேவைப்படுகிறது.

முகநூலில் இதற்கான அழைப்பை விடுத்ததும் முன்வந்த நபர்கள் பெரும்பாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட பணியை முடித்து விட்டார்கள். பணியை அரும்பாடுபட்டுச் செய்தவர்கள், பிழை திருத்தி, தரத்தை மேம்படுத்தி, மேலும் கூர்தீட்டி மக்களுக்குச் சமர்ப்பித்தாலும், இதில் நிறையப் பிழைகள் இருக்கலாம், மேலும் திருத்தங்கள் தேவைப்படலாம், மேம்படுத்த வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் குறைந்த அவகாசத்தில் மக்களுக்கு இது கையில் போய்ச் சேர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நாங்கள் வெளியிடுகிறோம். இதை மேம்படுத்த விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு இதன் பிரதியைப் பெற்றுக்கொண்டு மேம்படுத்தலாம். இன்னும் சில நாட்கள்தான் இருக்கிறது. இது மக்களின் மொழிபெயர்ப்பு, பொதுவெளியில் வெளியிடப்பட்ட பதிப்பு, அதனால் முடிந்தவரை அனைவருக்கும் பகிருங்கள். எங்களோடு இணைந்து பணியாற்றியவர்கள் (விவரங்கள் கடைசிப் பக்கத்தில்) அனைவருக்கும் உளமாற நன்றி கூறுகிறோம்.

இது மக்களின் மொழிபெயர்ப்பு, மக்களின் பிரதி. மக்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்..

EIA-2020-draft-tamil-public-translation

இப்படிக்கு

ஒருங்கிணைப்பாளர் குழு

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் ( இறந்த பெண், பார்வை)

0

பார்வை 

1)

வர் புன்னகை முகத்துடன் இருந்தார். நிறைய எடை உள்ளவராக இருந்தார். தொப்பை பெரியதாக இருந்தது. அருகில் ஈர்ப்பான வடிவமும் முகமும் கொண்ட பேரிளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அவருடைய இரண்டாவது மனைவியாக இருக்கக்கூடும். அவர் பட்டிமன்ற பேச்சாளர். கேட்பவர்களுக்கு சிரிப்பு வரும்படி பேசக் கூடியவர். பேரிளம் பெண்தான் அவருடைய உதவியாளராகவும் காரியதரிசியாகவும் இருக்கிறாள் என்பதை அவள் செயல்கள் மூலம் அறிந்தேன். விரைவு ரயிலில் இரண்டு நபர்கள் உட்காரும் வரிசையில் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். நான் மூன்று நபர்கள் உட்காரும் வரிசையில் ஒர இருக்கையில் நடை பாதைக்கு இந்தப் பக்கம் உட்கார்ந்திருந்தேன். மூன்று அடி இடைவெளி எங்கள் இருவருக்கும் இடையே இருந்தது. பேரிளம்பெண் ஒர இருக்கையிலும் பட்டிமன்ற பேச்சாளர் ஜன்னலோரமாகவும் அமர்ந்திருந்தார்கள். நான் அவளை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் என்னைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. நான் இருக்கும் இடத்திலிருந்து அவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. கேட்டரிங்கிலிருந்து முதலில் கேசரி வந்தது. கேசரி வாங்கி இருவரும் சாப்பிட்டார்கள். அவள் அவருக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுத்தாள். துடைப்பதற்கு துண்டை எடுத்துக் கொடுத்தாள். நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணுகிறவர்களிடம் அலைபேசியில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தாள். பட்டிமன்ற பேச்சாளர் புன்னகை மாறாத முகத்துடன் இருந்தார்.

திடீரென்று சற்றுக் கிழவித் தோற்றத்தில் ஒரு பெண் யாரையோ தேடி வந்து கொண்டிருந்தாள். எங்கள் இடத்துக்கு வந்ததும் அந்தப் பேரிளம் பெண்ணை அடிக்க ஆரம்பித்தாள். அவளும் திருப்பி அடித்தாள். பேச்சாளரின் முகம் மாறியது. ஆனாலும் புன்னகை மறைந்திருப்பதாகவே எனக்குத் தோன்றியது. பெண்கள் இருவரும் பேசிக்கொண்டதிலிருந்து வந்த பெண் அவரின் முதல் மனைவி என்பதை அறிந்து கொண்டேன். எங்கள் பெட்டியில் இருந்தவர்கள் எழுந்து நின்று நடப்பதைப் பார்த்தார்கள். நான் இருவரையும் விலக்கி விட்டேன். வந்த பெண்ணிடம் நான் பேசினேன்; ‘இவுங்க மாதிரி உங்களுக்கு செக்ரெட்டரி வேலை பாக்க முடியுமா. உங்களுக்கு வேற குறை இல்லை தானே’. அந்தப் பெண் தலையாட்டினாள். ‘பேசாமப் போங்க’ என்றேன். நான் ஆச்சரியப்படும்படியாக அவள் சென்றுவிட்டாள். பேரிளம்பெண் என்னைப் பார்த்துச் சிரித்தாள். பேச்சாளர் புன்னகை முகத்துடனேயே இருந்தார். அவள் எழுந்து எங்கள் இருக்கைகளுக்கு பின்புறம் இருந்த கதவைத் திறந்து வெளியே சென்றாள். நான் திரும்பிப் பார்த்தேன். அவள் என்னை அழைத்தாள். நான் எழுந்து சென்றேன். ‘உங்களுக்கு அவளைத் தெரியுமா’ என்று கேட்டாள். நான் ‘தெரியாது’ என்றேன். ‘உங்களிடம் மந்திர சக்தி இருக்கு. அதான் நீங்க சொன்ன உடனே அவ போயிட்டா’ என்றாள். அக்கம்பக்கம் பார்த்து அதிர்ஷ்டக்காரனும் அற்பனுமான என்னை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள். கைப்பையைத் திறந்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஐந்தை எடுத்து என் சட்டைப்பையில் திணித்தாள். பிறகு அவள் தன்னுடைய இருக்கைக்குச் சென்றுவிட்டாள். நான் சென்று என்னுடைய இருக்கையில் அமர்ந்துகொண்டேன். பேச்சாளரின் முதல் மனைவி என் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் ஏன் சென்றாள் என்று எனக்குத் தெரியவில்லை. அவள் திரும்பிச் செல்லும் முன் என்னைப் பார்த்த பார்வை என் நினைவில் இருக்கிறது.

***

இறந்த பெண்.

2)

கெட்டவனான நான் ஆதரவற்ற பெண் முதியோர்களுக்காக ஓர் ஆதரவு நிலையம் நடத்துகிறேன். அநாதைப் பெண் குழந்தைகளின் பராமரிப்பிற்காக ஒரு விடுதி நடத்துகிறேன். தூத்துக்குடி துறைமுகத்தில் எங்கள் தொழில் நடக்கிறது. எங்கள் எதிர் கோஷ்டிகளின் தொழில் நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதியில் நடக்கிறது. எங்களின் தலைமை பம்பாயில் இயங்குகிறது. என்னைப் போட்டுத்தள்ள எதிர் கோஷ்டியினர் மும்முரமாக இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. நான் பெண் தெய்வங்களை வணங்குவதாலும் பெண்கள் மீது கருணை கொண்டவனாக இருப்பதாலும் ஒரு பெண்ணை என்முன் நிறுத்திப் பின்னால் இருந்து என்னைச் சுடுவதாக ஏற்பாடு என்று தகவல் கிடைத்தது. ‘முட்டாள்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாமா ஒருவருக்கு கற்பனை செல்லும். நான் என்ன பீஷ்மரா ஆயுதத்தை துறந்து நிற்க. அந்தப் பெண்ணும் சேர்ந்து சாகப்போகிறாள்’ என்று நினைத்துக் கொண்டேன். என் ஆட்களைக் கூப்பிட்டு எனக்கு ஏதாவது நடந்தால் அவர்களை வேரோடு அழித்துவிட வேண்டும் என்று சொன்னேன்.

நான் என் பாதுகாவலர்களுடன் கோயிலிலிருந்து வெளியேறிக் காரை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு கார் வந்து நிற்பதைப் பார்த்தேன். காரிலிருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண் இறங்குவதைப் பார்த்தேன். சற்று நின்றேன். அந்தப் பெண்ணைப் பார்த்துப் பரிதாபப்பட்டேன். ஏற்கனவே நான் ஜிப்பாவிற்குள் இரண்டு கைகளையும் விட்டிருந்தேன். காரிலிருந்து இருவர் இறங்கி அவள் பின்னால் நிற்கப் போவதை அறிந்தேன். இரண்டு கைகளாலும் சுடப்பழகியிருந்த நான் ஜிப்பாவிலிருந்த துப்பாக்கியை எடுத்து இரக்கமில்லாமல் அந்த துர்பாக்யசாலிப் பெண்ணை நோக்கி ஒரு நொடியில் இரண்டு கைகளாலும் சுட்டேன். அவள் கீழே விழுந்தாள். பின்னால் நின்ற இருவரும் காரி ஏறிக் கிளம்பினார்கள். நானும் பாதுகாவலர்களுடன் காரில் ஏறிச் சென்றேன். என் ஆட்களை சரணடையச் சொன்னேன். இப்படி ஒரு விசித்திரமான திட்டத்தை என்னைக் கொல்லத் தீட்டிய நபர் யாரென்று தெரியவில்லை. இந்த சிந்தனையை எதிர் கோஷ்டியினரின் நம்பிக்கைக்கு உரிய மலையாள மாந்திரீகர் சொன்னார் என்பதைப் பின்னால் அறிந்தேன். யார் என்றே தெரியாத அந்தப் பெண் பலியாகிவிட்டாள்.

பம்பாயிலிருந்த எங்கள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராகி விட்டார். என்னை சட்டமன்ற உறுப்பினாராகும்படி எங்கள் தலைவர் கூறினார். தமிழ்நாட்டில் அது சாத்தியமில்லை என்பதால் கவுன்சிலராகி விட்டேன். அந்த மாந்த்ரீகவாதி பெரிய பாபத்தைச் செய்துவிட்டார் என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருக்கிறது.

***

சுரேஷ்குமார இந்திரஜித்

   

அஞ்சலி

1

ஷான்

து அஞ்சலிதான்..

நன்கு அறிமுகமான மனிதர்கள் கூட முற்றிலும் எதிர்பாராத சூழலில் திடீரென்று எதிர்ப்படுகையில் தடுமாறிப் போவோம். திருமாறன் ஒரு வினாடி உறைந்து நின்று விட்டான். கடந்த ஆறு ஆண்டுகளில் அவள் எங்கே இருக்கிறாள் என்ன செய்கிறாளென்று அறிந்து கொள்ள அவனும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அப்படி முயன்ற போதும் அவளுடைய நெருங்கிய நட்புகள் பற்றி எந்தத் தகவலும் இல்லாததாலும் அவள் ஃபேஸ்புக் பக்கத்தில் எந்த விதமான புதிய பதிவுகளும் இல்லாததாலும் பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஒரு முறை அவளுக்கு அழைக்க முயன்றபோது அவளுடைய பழைய எண்ணும் செயல்பாட்டில் இல்லை என்று தெரிய வந்தது.

ஃப்ரீமாண்ட் என்பது கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு இந்தியா. பார்க் பெஞ்சில் சில நொடிகள் கண்ணயர்ந்துவிட்டு திடீரென்று கண்விழித்தால் சற்று சுத்தமான சென்னையிலோ ஹைதராபாத்திலோ இருப்பது போல ஒரு குழப்பம் ஏற்படும். டார்கெட் அங்காடியில் வீட்டுக்குத் தேவையான சில மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு வந்திருந்தான் திருமாறன். வந்த வேலை முடிந்து சக்கரம் வைத்த டிராலியில் பொருட்களைப் போட்டுத் தள்ளிக்கொண்டு வெளியே வந்து காருக்கு அருகே வரும்போதுதான் அவளைப் பார்த்தான். அவள் இவனைப் பார்த்திருக்கவில்லை. தன்னுடைய காருக்கு அருகே டிராலியை நிறுத்தி பொருட்களை எடுத்து காரின் பின்புறம் அடுக்கிக் கொண்டிருந்தாள். இவன் அதிகமான பொருட்கள் வாங்கியிருக்கவில்லை. எனவே விரைவில் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு டிராலியை அதற்குரிய இடத்தில் விட்டு வந்தான். அஞ்சலி நிறைய வாங்கியிருந்தாள். இன்னும் காரில் எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தாள். திருமாறன் அவசரமாக தனது காருக்குள் ஏறி அமர்ந்தான். ஏனோ அவள் பார்வையில் பட்டு விட இவன் விரும்பவில்லை.

அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடியே திருமாறன் கையிலிருந்த ஸ்டார்பக்ஸ் காபியை உறிஞ்சத் தொடங்கினான். கொதித்தது.

அஞ்சலியை அவன் கடைசியாக சந்தித்த சூழல் அப்படி ஒன்றும் மகிழ்ச்சியானதல்ல. சென்னையில் சைதாப்பேட்டை குடும்ப நீதிமன்றத்துக்கு வெளியே அவள் பெற்றோருடன் பார்த்தது. திருமாறனுடனான மூன்று வருட வாழ்க்கை சட்டப்படி முடிவுக்கு வந்த நாள்.. உருக்குலைந்து போயிருந்தாள். வெறித்த பார்வையுடன் தரையில் கிடந்த வேப்பம்பூக்களைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். திருமாறன் அவளை மெல்ல நெருங்கினான். அவள் இவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.

பெரிய கரிய விழிகளில் நீர் ததும்பி நின்றது. எப்போது வேண்டுமானாலும் விழத் தயாராக இருந்தது.

“புரிஞ்சுக்கோ அஞ்சு…” என்றவன் சுதாரித்து “அஞ்சலி” என்று மாற்றிக் கொண்டான். தயாராக இருந்த கண்ணீர் திரண்டு பொட்டுப் பொட்டாக விழுந்தது.

“இதுதான் உனக்கும் நல்லது. எனக்கும் நல்லது. உனக்கு அமெரிக்கன் லைஃப் ஸ்டைல் எல்லாம் ஒத்து வரலை. நீ வளர்ந்த விதம் அப்படி. நானும் பொறுமையாதான் இருந்தேன். உனக்கே தெரியும். விடு.. என்னென்னவோ நடந்து போச்சு.”

அவள் ஏதாவது சொல்லுவாள் என்று எதிர்பார்த்தான் திருமாறன். ஆனால் அவள் எதுவும் பேசவில்லை. சில நொடிகள் கனத்த மவுனத்துக்குப் பின் ஒரு பெருமூச்சை வெளியிட்டான்.

“எனி வே.. இதை மியூச்சுவலா முடிச்சுக்கிட்டதுல எனக்கு சந்தோஷம். நானும் நாலு நாள்ல திரும்பிப் போகணும். வீ கேன் பீ குட் ஃப்ரெண்ட்ஸ்”

ஆன்லைன் மேட்ரிமோனி வழியாக ஜாதகம், ஜாதி, பணம், மதம், நிறம் எல்லாம் பார்த்துதான் அவர்கள் திருமணம் நடந்திருந்தது. அஞ்சலி பி.ஏ ஹிஸ்டரி படித்திருந்தாள். ஓரளவு பாடுவாள். கிராபிக் டிசைன் கற்று வைத்திருந்தாள். பார்த்தவுடன் மனதில் ஒட்டிக் கொள்ளும் முகம். அகண்ட விழிகள், நீண்ட புருவங்கள். இரண்டாவது முறை பார்க்கத் தூண்டும் அழகு.

திருமாறன் அப்போதுதான் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆன்சைட் பணிக்காக சென்றிருந்தான். அமெரிக்க மாப்பிள்ளை என்றதும் மேட்ரிமோனி சந்தையில் மவுசு கூடிவிட்டது. சராசரியான உயரம், மெல்லிய தொப்பை என்று குறை சொல்ல முடியாத தோற்றம். அஞ்சலியின் அழகைப் பார்த்ததும் அவன் மயங்கிவிட்டான். அவன் அக்கா மாலதி அப்போதும் சொன்னாள்.

“வேலைக்கு போற பொண்ணா பாத்துக்கடா… அங்க போயி ரெண்டு பேரும் சம்பாதிச்சாதான் சமாளிக்க முடியும். இந்தியா மாதிரி இல்லை”

“அக்கா.. இங்க வந்து பாரு. வேலைக்கு போயிட்டு இருந்தவங்களே குழந்தைங்களைப் பாத்துக்க வேலையை விட்டுட்டு வீட்டுல உட்கார ஆரம்பிச்சுட்டாங்க. நான் தேவையான அளவுக்கு சம்பாதிக்கிறேன். அவ குடும்பத்துக்கான பொண்ணா இருந்தாப் போதும்.”

“இப்ப இப்படித்தான் சொல்லுவே… ரெண்டு குட்டி போட்டப்புறம் செலவு வரும்போது தெரியும். நீ அவகிட்டே மயங்கிட்டேடா… இனி என்ன சொன்னாலும் உன் காதுல ஏறாது … போ”

ப்ரீ வெட்டிங் ஷூட் என்று அஞ்சலியை அழைத்துக் கொண்டு நண்பர்களுடன் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்தான். பயணத்துக்கு முதல் நாள் இரவு தூக்கமே இல்லை. அஞ்சலியின் பக்கம் அப்படியான தோழிகள் இல்லை. அப்பா அம்மா வந்தால் நன்றாக இருக்காது என்று திருமாறன் சொல்லிவிட்டான். அவளுடைய பள்ளித் தோழி ப்ரேமா உடன் செல்வதாக ஒப்புக் கொண்டாள். அவள் கொஞ்சம் அராத்துப் பேர்வழி.

“எதுக்கும்மா கவலைப்படறீங்க. இவளைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? அன்னை தெரசாவோட நேரடி வாரிசு. நான் போறேன்ல.. பத்திரமா பாத்துக்கறேன்.”

அஞ்சலி சற்று

 கூச்ச சுபாவம் உடையவள் என்று அவனுக்கு அப்போதுதான் தெரிந்தது. அவனுடைய நண்பர்களுடன் யோசித்து யோசித்துப் பேசினாள். ஒதுங்கி ஒதுங்கி நின்றாள்.

“ஜாலியா இரு அஞ்சலி. ஏன் இப்படி பயப்படறே?” பல முறை கேட்ட பிறகு சொன்னாள்.

“எனக்கு இப்படி வந்தெல்லாம் பழக்கம் இல்லை. காலேஜ்ல படிக்கும்போது ஃப்ரெண்ட்ஸ் கூட இப்படி வெளியே போக விட்டதில்லை.”

திருமாறனின் நண்பர்கள் இருவர் வந்திருந்தார்கள். கூத்தும் கும்மாளமுமாக இருந்தார்கள். ரகளையானவர்கள். அவர்கள் போட்டோ ஷூட் என்று அடித்த லூட்டியில் இன்னும் மிரண்டு போனாள். கிறிஸ்தவத் திருமணங்களில் அணியும் வெள்ளை உடை அவளுக்குத் தரப்பட்டது. திருமாறன் கோட் சூட் அணிந்திருந்தான்.

“அய்யோ… இதெல்லாம் போட்டா அம்மாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாங்க”

“என்ன சார்.. மேடம் இதுக்கே இப்படி சொல்றாங்க. நாங்க பிகினி எல்லாம் போட்டு சூட் பண்ணியிருக்கோம்.” நீண்ட தாடி வைத்து புருவத்தில் கோடு போல மழித்து விட்டிருந்த போட்டோகிராபர் சலித்துக் கொண்டான்.

அஞ்சலி ஒத்துக் கொள்ளவே இல்லை. ப்ரேமா அவள் அம்மாவுக்கு போன் போட்டாள்.

“ஏன்டி மானத்த வாங்கறே… அவ்வளவு தூரம் போயிட்டேல்ல. மாப்பிள்ளை என்ன சொன்னாலும் கேளு.”

பட்டுச்சேலையோடு குளிர் கண்ணாடி அணிந்து புல்லட் ஓட்டச்சொல்லி என்னென்னவோ செய்யச் சொன்னார்கள். அஞ்சலிக்கு வியர்த்து விறுவிறுத்தது.

போட்டோகிராபர் திருமாறனை ஓரமாக அழைத்துப் போய் சொன்னான்.

“சார்.. மேடம் ரொம்ப இறுக்கமா இருக்காங்க. சிரிக்கவே மாட்றாங்க.. லைஃப் லாங் இருக்கப் போற விஷயம் இது. நீங்கதான் எடுத்துச் சொல்லணும். இவ்வளவு செலவு பண்ணி வந்திருக்கோம்”

திருமாறன் அஞ்சலியிடம் வந்தான். அவன் குரலில் சற்று கடுமை.

“என்ன அஞ்சலி… நம்ம வேதா இந்த ஷூட்க்காக புல்லட்லயே திருச்சில இருந்து வந்திருக்கான். நீ குறைஞ்ச பட்சம் கொஞ்சம் சிரிச்ச மாதிரி மூஞ்சிய வெச்சுக்க முடியாதா?”

“நினைச்ச மாதிரி மூஞ்சியை வெச்சுக்க நான் என்ன நடிகையா? எனக்கு வரலை. என்னை விட்டுடுங்க” என்று மனதுக்குள் கதறினாள். வெளியே சொல்லவில்லை. தலை அசைத்து வைத்தாள். அதற்குப் பிறகுதான் ஆட்டமே தொடங்கியது.

“மேடம்.. அப்படியே லிப்புக்குப் பக்கத்துல போங்க. கிஸ் பண்ண வேண்டாம். ஆனா பண்ணுனா எப்படி ஒரு எக்ஸ்பிரஷன் இருக்குமோ அது வேணும்”

“சார்… நீங்க சட்டையக் கழட்டிட்டு இந்த வாட்டர்ல நில்லுங்க. அவங்களை அப்படியே தூக்க முடியுமா?”

அஞ்சலிக்கு எப்படியோ ப்ரேமா அந்த இரண்டு நாட்களை நன்றாக அனுபவித்தாள். இவர்களுக்கு செய்து காட்டுகிறேன் பேர்வழி என்று வேதாவுடன் சேர்ந்து தனியாக ஒரு போட்டோ ஷூட் நடத்திக் கொண்டிருந்தாள்.

“என்ன மேடம் நீங்க… ப்ரேமா மேடத்தைப் பாருங்க… அந்த ஃபீலிங்தான்.. அது அப்படியே உங்க முகத்துல வரணும்…”

அவளுக்கு அழுகைதான் வந்தது.

எப்படியோ அழுகையை அடக்கிக் கொண்டு ஒப்பேற்றி போட்டோ ஷூட்டை முடித்து சென்னை வருவதற்குள் அவளுக்கு உயிர் போய்விட்டது. காரில் திரும்பும்போது திருமாறன் இறுக்கமாக அமர்ந்திருந்தான். அவன் ஏதேதோ எதிர்பார்த்திருந்தான்.

வீடு வந்து சேர்ந்தபோது அஞ்சலிக்குத்தான் திட்டு விழுந்தது.

“அவங்க அமெரிக்காவுல இருக்கறவங்க. கொஞ்சம் ஃப்ரீயா இருக்கணும்னு நினைப்பாங்க. மாப்பிள்ளையோட அக்கா கூப்பிட்டிருந்தாங்க. ஷூட் முடிஞ்சு வந்ததுல இருந்து மாப்பிள்ளைக்கு மூஞ்சியே இல்லையாம். சாப்பிடாம போய் படுத்துட்டாராம். நீ கூப்பிட்டுப் பேசு மொதல்ல, தலைகீழா தண்ணி குடிச்சாலும் இப்படி ஒரு வரன் அமையாது. அத நீயே கெடுத்துடாதே..”

அஞ்சலிக்கு ஆத்திரம் வந்தது. பள்ளியில் படிக்கும்போது ஒரு முறை நாடகத்தில் நடிக்கப் பெயர் கொடுத்துவிட்டு வந்ததற்காக அவள் அப்பா ஓங்கி அறைந்து விட்டார். அதன் பிறகு அந்த ஆசையையே விட்டுவிட்டாள். புதிதாக யாரிடமும் ஒட்டிக் கொண்டு பேசுவது அவள் சுபாவத்திலேயே இல்லை. நீண்ட நாட்கள் பழகினால்தான் பேசவே தொடங்குவாள். இதெல்லாம் அவள் அம்மாவுக்கே தெரியும். திடீரென்று அமெரிக்க மாப்பிள்ளைக்கான அஞ்சலி எங்கிருந்து குதிப்பாள்?

அறையைப் பூட்டிக்கொண்டு சற்று நேரம் அழுதுவிட்டு அவளுடைய மொபைலை எடுத்தாள். திருமாறனை அழைத்தாள்.

“ஹலோ” தளர்வாக வந்தது அவன் குரல்.

“என் மேல கோவமா?”

“ப்ச்.. இல்லை”

“இல்லை.. தெரியும். உங்களுக்குக் கோபம்தான்… ஐ ஆம் சாரி… நான் உங்களை ரொம்ப அப்செட் பண்ணிட்டேன். எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. இனிமே பழகிக்கறேன். கொஞ்சம் டைம் கொடுங்க”

சொல்லும்போதே படபடத்து அவளுக்கு அழுகை வந்தது. விசும்பி அழத் தொடங்கினாள்.

“ஏய்.. அஞ்சு.. பைத்தியம்.. இப்ப எதுக்கு அழறே? உன்னோட நல்லதுக்குத்தானே சொல்றேன்… நாளைக்கு நீ அமெரிக்காவுல வந்து இருக்கப் போறவ… அங்கே எல்லாம் ஓவரா அலட்டுவாங்க. ஸ்டைலா இருப்பாங்க.. நீ இதெல்லாம் பழகிக்கணும். இல்லாட்டி அங்க வந்து ரொம்ப கஷ்டப்படுவே…”

“புரியுது.. நான் மாத்திக்கறேன்…” சொற்கள் வந்தாலும் ஒரு வித அச்சம் அவளுக்குள் பரவியது. அவன் தன்னை வெறுத்து விடுவானோ? அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய அவள் தயாராக இருந்தாள். ப்ரேமாதான் மீண்டும் உதவிக்கு வந்தாள்.

“இதுக்கு போயாடி அழுதுட்டு இருக்கே?”

அவளுக்கு எப்படி டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்புவது என்று தொடங்கி சரியான லிப் ஸ்டிக் போடுவது வரை சொல்லிக் கொடுத்தாள். புக் மை ஷோவில் டிக்கெட் போட்டுக் கொடுத்தாள். டிக்கெட்டை அனுப்பியபோது திருமாறன் அசந்து போனான். இந்த மாற்றம் திருமாறனுக்குப் பிடித்திருந்தது. அவள் அணிந்திருந்த புதிய சென்ட் அவனைக் கிறங்கடித்தது. அவளுடைய புதிய ஆடைகள் அவள் அழகைப் பல மடங்கு உயர்த்திக் காட்டின.

“அஞ்சு… அள்ளுறியே”

அஞ்சலி வெட்கமாக சிரித்தாள்.  

திருமணம் இனிதாக நடந்தேறியது. டெக்ஸாஸ் மாகாணத்தில் ஆஸ்டின் நகரில் அவள் வாழ்க்கை தொடங்கியது. விமானத்தில் சென்று இறங்கியபோதே தொண்டைக்குள் உருளத் தொடங்கிய ஒரு பயப்பந்து மூச்சை அடைத்துக் கொண்டு அகல மறுத்தது. பெரிய பெரிய சாலைகள், வால் பிடித்தது போல் பறக்கும் பறக்கும் கார்கள் என்று நேரில் பார்க்கும்போது மிரட்டலாக இருந்தது. அக்கம் பக்கத்திலிருந்து சில தமிழகப் பெண்கள் வந்து பார்த்துப் போனார்கள். டப்பர்வேரில் ஏதாவது சமைத்து எடுத்து வந்தார்கள். பிந்து சென்னையைச் சேர்ந்தவள். மலையாளி. இங்கே இரண்டு ஆண்டுகளாக இருக்கிறாளாம். அவளாகவே வீட்டுக்கு வந்து அறிமுகம் செய்து கொண்டாள். சிரித்த முகம். உதவி செய்யும் குணம். அஞ்சலி அவளோடு உடனே ஒட்டிக் கொண்டாள்.

“ஆரம்பத்துல இப்படித்தான் எனக்கும் இருந்துது.. உனக்கு எல்லாம் நான் காமிச்சுக் கொடுக்கறேன். நாம சேர்ந்து ஷாப்பிங் போலாம்”

அவர்கள் வந்து சேர்ந்த இரண்டாவது வார இறுதியில் உள்ளூர் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி ஏற்பாடானது. விருந்தாளிகள் பட்டியலைப் பார்த்ததும் உள்ளே இருந்த பயப்பந்து இன்னும் பெரிதாகிப் போனது. அஞ்சலி பிந்துவையும் வரச்சொல்லி அழைத்தாள்.

“பயமா இருக்கு”

“நான் பாத்துக்கறேன்”

வீட்டின் புல்தரையில் பார்பேக்யு விருந்து. மாலை நான்கு மணி முதலே ஆஸ்டின் வாசிகள் வந்து கொண்டிருந்தார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் கூட்டம் அது.

அஞ்சலி ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் கையை அன்றுதான் முதன் முதலாகப் பிடித்துக் குலுக்கினாள். பஞ்சு போல இருந்த கைகளில் அசாத்திய வலிமை. அவளை விட இரண்டடியாவது உயரம் அதிகமாக இருந்தாள். இன்னொரு கையில் ஒயின் பாட்டிலுடன் நின்றாள். சத்தமாகப் பேசி அதை விட சத்தமாக சிரித்தாள். ஜென்னி என்று தன்னுடைய பெயர் சொன்னாள். அவளுடைய பாய் ஃப்ரண்ட் ரோட்ரிக் கழுத்தில் பாம்பு போன்ற டாட்டூ அணிந்திருந்தான். கையில் கிட்டார் வைத்திருந்தான். பச்சை நிறக் கண்கள். ஏற்கனவே அறிமுகமான பெண்களை மெல்ல அணைத்து அணைத்து வரவேற்றான்.

அவன் தன்னை நெருங்குவதை அஞ்சலி அச்சத்தோடு கவனித்தாள். தானும் அணைக்க வேண்டுமோ என்ற சந்தேகம் எழுந்தது. சந்தேகம் கேட்க பிந்து வேறு அருகில் இல்லை. இவளிடம் வந்ததும்  “நமஸ்தே” என்று கை கூப்பினான் ரோட்ரிக். போன உயிர் திரும்பியது.

பார்பேக்யு என்ற பெயரில் கறி மதியத்திலிருந்து மெல்ல வெந்து கொண்டிருந்தது. அங்கே இருக்கும் பார்பேக்யு உணவகங்களில் ஆர்டர் சொல்லிவிட்டால் தார் வண்டியைப் போன்ற ஒரு வண்டியை டிரக்குகளில் கட்டி ஓட்டி வந்து விடுவார்கள். வீட்டுக்கு அருகிலேயே நிறுத்தி மரக்கட்டைகளைப் போட்டு பல்வேறு மாமிசங்களைச் சுட்டுப் பரிமாறுவார்கள். எந்த மரத்தின் கட்டைகள் எப்படி ருசிக்கும் என்பது வரை ஒரு கணக்கு இருந்தது.

ரோட்ரிக் கிட்டாரில் இசைத்து சிறிது நேரம் பாடினான். அவனுக்கு அழகான குரல். அனைவரும் கைதட்டி ரசித்தார்கள். ஒயினும் பீரும் ஆறாக ஓடியது.

பிந்து மட்டும் அன்று இருந்திராவிட்டால் அஞ்சலி பாடு திண்டாட்டமாகியிருக்கும். ஏனென்றால் முதல் கோப்பைக்காக டோஸ்ட் செய்து அவளை அனைவருக்கும் அறிமுகம் செய்த பிறகு திருமாறன் அஞ்சலியை மறந்துவிட்டிருந்தான். அவனுக்கென்று ஆண்களும் பெண்களுமாக ஒரு நண்பர் கூட்டம் இருந்தது. ஊற்றி ஊற்றிக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் அவ்வளவு குடிப்பான் என்று அவளுக்குத் தெரியாது.

அவளுக்குப் பசித்தது. எதை எடுத்துச் சாப்பிடுவது என்றே தெரியவில்லை.

“உனக்கு என்ன வேணும்?”

“ப்ச்.. ஏதோ ஒண்ணு”

பிந்து எழுந்து சென்று தட்டில் போட்டு எடுத்து வந்து தந்தாள். நெருப்பில் சுட்ட மாமிச வாசனை அவளுக்குப் புதிது. சிரமப்பட்டு சாப்பிட்டாள். தயிர் சாதம் இருந்தால் போதுமென்று தோன்றியது. திடீரென்று ஏனோ அம்மாவுடன் பேசவேண்டும் போலிருந்தது. கறி சரியாக வெந்திருக்கவில்லை. கடிக்க சற்றுக் கடுமையாக இருந்தது. ஆனால் அதே கறியை சிலாகித்துக் கொண்டிருந்தாள் பிந்து.

“சூப்பரா குக் ஆகியிருக்கு…  இவ்வளவு சாப்ட்டா டெக்ஸாஸ்ல தவிர உலகத்துல எங்கேயும் பீஃப் கிடைக்காது…”

அஞ்சலி எழுந்த வேகத்தில் அவள் மடியிலிருந்த தட்டு எகிறி விழுந்தது. கார்ப்பெட் முழுக்க பார்பெக்யூ சாஸ் சிதறியது. வேகமாக குளியலறை நோக்கி ஓடுவதற்குள் குமட்டிக் கொண்டு வந்தது. குளியலறை வாசலிலேயே வாந்தி எடுத்தாள். பிந்து ஓடிவந்து தாங்கிப் பிடித்தாள்.

அதன் பிறகு பார்ட்டி வேகமாக முடிவுக்கு வந்தது.

“இட்ஸ் ஓகே திரு… இன்னொரு நாள் கொண்டாடுவோம். ஜஸ்ட் டேக் கேர் ஆஃப் அஞ்சலி” என்றபடி அவளைக் கவலையோடு பார்த்துக் கலைந்து போனார்கள். திருமாறன் அரை மனதாக அனைவரையும் வழியனுப்பிவிட்டு வந்தான்.

அஞ்சலி மூன்றாவது முறையாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். திருமாறன் தலையைப் பிடித்துக்கொண்டு பார்த்தான்.

“என்ன சார்.. எல்லா ஜோலியும் பண்ணிட்டு இப்போ தெரியாத மாதிரி பாக்கறது?”

பிந்து பாத்ரூம் தரையை சுத்தம் செய்தபடியே கேட்டாள். அவனுக்கு இன்னும் புரியவில்லை.

“புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி முழிங்க… எனக்கு லேட் ஆச்சு… அஞ்சலி.. நான் நாளைக்கு வரேன். கன்ஃபர்ம் பண்ணிக்கலாம்.” கண்ணடித்துவிட்டுப் போனாள் பிந்து.

இப்போதுதான் திருமாறனுக்கு உறைத்தது. பிந்துவை வெளியே அனுப்பி கதவைச் சாத்திவிட்டு மேலே போனான். அஞ்சலி சுருண்டு படுத்திருந்தாள். கோபமாக வார்ட்ரோபை எட்டி உதைத்தான். கண்கள் சிவந்திருந்தன.

“ஆர் யூ ப்ரெக்னண்ட்?”

அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். எதுவும் சொல்ல முடியவில்லை. அறை கிறுகிறுவென சுற்றியது.

“ஷிட்” தலையைக் கையில் பிடித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

“நான்தான் ஒரு வருஷம் வேணாம்னு சொன்னேன்ல… இடியட்.. இடியட்… காண்டம் இல்லாத நேரமா வந்து கட்டிப் பிடிக்க வேண்டியது. டேட்ஸ் பாத்துட்டேன்னு இளிக்க வேண்டியது. மேட்டர்னு வந்துட்டா ஒண்ணும் கொறச்சல் இல்லை. வேற ஏதாவது பண்ண சொன்னா நான் ரொம்ப ஷை டைப்… ”

போதையிலும் கோபத்திலும் வார்த்தைகள் கட்டுப்பாடிழந்து கொட்டிக் கொண்டிருந்தன. அஞ்சலி அழத் தொடங்கியிருந்தாள்.

“அழு அழு.. இது ஒண்ணுதான் தெரியும். வேற ஒரு மண்ணும் தெரியாது. வந்ததுல இருந்து இதான செஞ்சுட்டு இருக்கே? ஏதோ உன்னைக் கொலை பண்ண இந்தியாவுல இருந்து கூட்டிட்டு வந்த மாதிரியே ஒரு மூஞ்சி… எல்லாம் என் தல விதி.. ” மீண்டும் ஒரு முறை வார்ட்ரோபை உதைத்தான். பெட்ரூமைத் திறந்து கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியேறினான். அஞ்சலியிடமிருந்து ஒரு கேவல் வெளியானது. ‘அம்மா….’ என்று உதடுகள் உச்சரித்தன. ஆனால் சத்தம் வரவில்லை. சத்தமே இல்லாமல் அழுதாள். திருமாறன் அப்படியெல்லாம் பேசியது அதுதான் முதல் முறை. ஆனால் அது ஒரு அணை உடைந்த தருணம். அதன் பிறகு வெள்ளம் நிற்கவே இல்லை.  

மறுநாள் உடல் அயர்ச்சியையும் பொருட்படுத்தாமல் எழுந்து சமைத்தாள். திருமாறன் சாப்பிடாமலேயே வேலைக்குப் போனான். பதினோரு மணிக்கு மேல் பிந்து ஒரு அட்டைப் பெட்டியுடன் வந்தாள். பிரக்னன்சி டெஸ்ட் கிட். அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று சொல்லியபோது அஞ்சலிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“அய்யடா.. பேபிக்கு வெக்கத்தைப் பாரு.. போ போயி நான் சொன்ன மாதிரி டெஸ்ட் எடு… ஞாபகம் வெச்சுக்கோ.. எய்ம் முக்கியம். நீயே பண்ணுவியா இல்ல நான் கூட வரணுமா?”

“வேண்டாம்.. வேண்டாம்” என்றாள் அஞ்சலி முகம் சிவந்து. முழு ஐந்து நிமிடங்களுக்குப் பின் தயக்கமாக வந்து நுனி விரல்களால் பிடித்த ஸ்டிரிப்பைக் காட்டினாள்.

முகம் மாறினாள் பிந்து. “எந்தா இது. நெகடிவ்னு வருது”

“நீங்கதான் ரொம்ப அவசரப்பட்டுட்டீங்க”

பத்து நிமிடங்களுக்குப் பின் அவளுக்கு காபிக் கோப்பையை நீட்டியவாறே தயக்கமாகச் சொன்னாள் அஞ்சலி.

“எனக்கு பீஃப் எல்லாம் சாப்பிட்டுப் பழக்கமே இல்லை. நேத்து நீங்க பீஃப்னு சொன்னதும் குமட்டிட்டு வந்துடுச்சு.”

“அட ஆண்டவா.. இதை அப்பவே சொல்றதுக்கு என்ன?”

அஞ்சலி அமைதியாக காபியை ஒரு மிடறு குடித்தாள். பிறகு சொன்னாள்.  

“இல்ல.. நீங்க ஏதோ தெரியாம குடுத்துட்டீங்க… சொன்னா நீங்க ஃபீல் பண்ணுவீங்கன்னுதான். எனக்கு இருக்கற ஒரே ஃப்ரெண்ட் நீங்கதான்.” கண்கள் கலங்கிவிட்டன.

“அஞ்சலி அஞ்சலி… லிசன்.. அந்த ஜென்னி வந்தாளே.. அவ ஒரு வீகன்.. முட்டை பால் கூட கிடையாது. அவளுக்கு சாப்பிட எதுவும் இல்லைன்னு சாலட் எடுத்து வெச்சு சாப்பிட்டுட்டு இருந்தா… அவ பாய் ஃப்ரண்ட் ரோட்ரிக் செத்தது எது கெடைச்சாலும் சாப்பிடுவான். இந்த நாட்டுல எத்தனை பைத்தியக்காரத்தனம் இருந்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் உயிரே போனாலும் விட்டுத் தர மாட்டாங்க. அது தனி மனிதனோட சுதந்திரம். அதனால எல்லோரும் திரும்பத் திரும்ப தங்களுக்குப் பிடிச்சதையும் பிடிக்காததையும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. கொஞ்சம் அளவுக்கு அதிகமாவே… கடைல போயி ஒரு காபி வாங்கும்போது கூட நூறு கண்டிஷன் போட்டு வாங்குவாங்க. ஒவ்வொருத்தன் குடிக்கற காபியும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கும். இங்கே நீ எதைக் கத்துக்கறியோ இல்லையோ.. அதைக் கத்துக்கணும்”

“தேங்க்ஸ் அக்கா…” என்ற அஞ்சலியை இழுத்து அணைத்து கொண்டாள் பிந்து.

“பாத்தியா…இதுக்குதான் நான் யாருக்கும் அட்வைஸ் பண்றதில்லை. உடனே வயசைக் கூட்டறியே… பிந்துன்னு கூப்பிடு. சரி நீ ரெடியா இரு. மத்தியானம் ஷாப்பிங் போவோம். அதுதான் இங்கே லேடீஸ் டைம்.”

திருமாறன் மாலையில் வந்தான். மெல்ல விஷயத்தைச் சொன்னதும் அவன் முகத்தில் நிம்மதி தெரிந்தது. முந்தைய நாள் சற்று அதிகமாகப் பேசிவிட்டோமென்று அவனுக்கும் புரிந்தது. இரவு அவனே வலிய வந்து அணைத்தான். அஞ்சலி ரகசியமாக கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

நடந்ததைச் சொன்ன போது “உன் அப்பா கூடவே காலம் தள்ளலையா நான்” என்று அலுத்துக் கொண்டாள் அவள் அம்மா.

அதன் பிறகு எப்போது குடித்துவிட்டு வந்தாலும் அஞ்சலியின் குறைகளைப் பாடுவது அவனுக்கு வழக்கமாகிப் போனது. இப்படியே ஒரு ஆண்டு கழிந்தது. இப்போது அதே பிரச்னை வேறு வடிவம் எடுத்தது.

“பைத்தியமாடா நீ.. ஏற்கனவே இங்கே நம்மாளுங்க ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாங்கடா. சித்ராவோட மாமா பொண்ணு வீட்டுல இப்படி வேணாம் வேணாம்னு தள்ளிப் போட்டு அப்புறம் ஒரு குழந்தை பொறக்கறதுக்கு லட்ச லட்சமா செலவு பண்ணிட்டு இருந்தாங்க. இதெல்லாம் உன்னோட ஐடியாவா இல்ல அவ ஐடியாவா? என்ன ஹீரோயின் அழகு குறையாம பாத்துக்கறாளா?”

ஒவ்வொரு முறை ஸ்கைப்பில் அழைக்கும்போதும் திருமாறனின் அக்கா மாலதி ஆரம்பித்து விடுவாள். குழந்தையே வேண்டாமென்று இருந்தவன் ஒரு கட்டத்தில் அமேசான் ப்ரைம் டெலிவரி போல உடனடியாகக் குழந்தை வேண்டுமென்று ஆரம்பித்துவிட்டான். இங்கே அஞ்சலியின் விருப்பமென்று எதுவுமே இல்லை. அவன் படுத்திய பாட்டில் எப்படியாவது ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டால் போதுமென்று இருந்தது அவளுக்கு. ஒவ்வொரு மாதமும் அவள் மாதவிடாயை அடைந்தபோது வெறுப்படைந்தான். அந்த நாட்களில் லேப்டாப்பைப் பார்த்தபடி உர்ரென்று இருப்பான். நெட்ஃபிளிக்ஸில் தொடர்ந்து ஏதாவது பார்த்துக் கொண்டே இருப்பான். சாப்பாட்டைக் கொண்டு சென்று வைத்தால் எதுவும் பேசாமல் முறைத்தபடி சாப்பிடுவான். ஏதாவது போன் வந்தால் உடனே சிரித்துப் பேசுவான்.  

இப்போதெல்லாம் அஞ்சலி பிந்துவிடம் வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்து விட்டாள். அவளும் இவளுக்கு ஆறுதலாக இருந்தாள்.

“ச்சில் யா.. இவனுங்களுக்கு பொம்பளைங்க பிரச்னை எப்பவும் புரியாது. ஒண்ணு புரிஞ்ச மாதிரி நடிப்பானுங்க… இல்லாட்டி புரியாத மாதிரி நடிப்பானுங்க”

இரண்டு ஆண்டுகள் கடந்தபோது திருமாறன் சுத்தமாகப் பொறுமையிழந்திருந்தான். தொட்டாலே வெடிக்கும் டைனமைட் போல உலா வந்தான்.

அமெரிக்காவில் இதற்கான சிகிச்சைகள் செய்து கட்டுப்படியாகாது. எனவே இரண்டு மாதங்கள் நீண்ட விடுப்பில் இந்தியா திரும்பினார்கள். குழந்தையின்மை தொடர்பான எல்லா சோதனைகளும் செய்து தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு திரும்புவதென்று முடிவானது.

ரிப்போர்ட்டுகளை வாங்க அஞ்சலியை மட்டுமே செல்லும்படி சொன்னான் திருமாறன். அஞ்சலி இந்தத் தருணத்தில் அவன் உடன் வரவேண்டுமென்று எதிர்பார்த்தாள்.

“ப்ளீஸ்.. நீங்களும் வந்தாதான் சரியா இருக்கும். எனக்கு பயமா இருக்கு.”

“நான்தான் சொல்றேன்ல.. ஒரு முக்கியமான டெலிவரி இருக்கு. ட்வெண்டி ஃபோர் அவர்ஸ் போன் கால்லயே இருக்கணும். உனக்கு இதெல்லாம் புரியாது.”

உண்மையில் திருமாறனுக்கு ஒரு அச்சம் இருந்தது. தன் பக்கம் குறை இருந்துவிட்டால்? அவனுக்கு அந்த உண்மையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லை.

போன அஞ்சலி நீண்ட நேரம் வரவே இல்லை. பொறுமையிழந்து அவள் எண்ணுக்கு அழைத்தான். அவள் போன் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஐம்பது தவறிய அழைப்புகளுக்குப் பிறகு மூன்று மணி நேரம் கழித்து அவளிடமிருந்து போன் வந்தது.

“எங்கடி போய்த் தொலைஞ்சே?” திருமாறன் சீறினான்.

“லேப்ல ரொம்ப லேட் பண்ணிட்டாங்க. ஆட்டோல வந்துட்டு இருக்கேன்”

“ஏன் போனை எடுக்கலை?”

“வந்து சொல்றேன்”

அவள் குரலில் அதுவரை இல்லாத ஒரு இறுக்கம். அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒரு வழியாக அஞ்சலி ஆட்டோவில்  வந்து இறங்கினாள். அவள் முகம் இருண்டு போயிருந்தது.

“வாட் த ஹெல் ஈஸ் ராங் வித் யூ? எங்கடி போயிருந்தே?” இரைந்தான். அவன் அக்கா மாலதி எதுவும் நடக்காதது போல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

“பேசித் தொலை”

எதுவும் பேசாமல் அவனிடம் ரிப்போர்ட்டுகளைக் கொடுத்துவிட்டு அறையில் சென்று படுத்துவிட்டாள் அஞ்சலி. திருமாறனுக்கு எதுவும் புரியவில்லை. காகிதங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான். நீண்ட யோசனைக்குப் பின் அவற்றைப் படம் எடுத்து ஒரு டாக்டர் நண்பனுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பினான். அவன் பார்த்துவிட்டு அழைத்தான்.

“சாரிடா.. கொஞ்சம் சிக்கலான பிரச்னைதான். பயலாஜிகலா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தை பெத்துக்கறது முடியாத காரியம்”

“எனக்கு என்னன்னு வந்திருக்கு?”

“உன்னோட ரிப்போர்ட்ல ஸ்பெர்ம் கவுண்ட், ஷேப், எல்லாமே பக்காவா இருக்கு”

“நல்லா பாத்தியா?”

“நீயே படிக்கலாமே.. நார்மலா என்ன ரேஞ்ச்ல இருக்கணும் இப்போ என்ன இருக்குன்னு எல்லாமே இருக்கு பாரு”

திருமாறனுக்குள் ஒரு நிம்மதி மெல்லப் பரவியது.

“அப்புறம் என்ன பிரச்னை?”

“உன்னோட ஒய்ப் பக்கம்தான்.. அது என்னன்னா..”

“க்யூர் பண்ண முடியாதா?” திருமாறன் சட்டென்று இடை மறித்தான்.

“எது?”

“அஞ்சலியோட ப்ராப்ளம்”

“சாரிடா.. எனக்குத் தெரிஞ்சு பாசிபிள் இல்லை. பெட்டர் யூ கோ ஃபார் அடாப்ஷன் டா.. தத்தெடுத்துக்கோ.. நானே ரெஃபர் பண்றேன்”

“தேங்க்ஸ்டா… ”

போனை வைத்துவிட்டு மீண்டும் ஒரு முறை ரிப்போர்ட்டை எடுத்துப் பார்த்தான். நிம்மதிப் பெருமூச்சு விட்டான். டிவி பார்த்துக் கொண்டிருந்த அக்காவிடம் வந்தான்.

“அக்கா.. உங்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்றான்.

அடுத்த நாளில் இருந்து அஞ்சலியிடம் அவன் நடந்துகொள்ளும் முறை முற்றிலுமாக மாறிவிட்டது. இது நடந்து ஒரு வாரத்தில் அஞ்சலியை அவள் அம்மா வீட்டில் கொண்டு சென்று விட்டான்.

“அவ அங்கே ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கா அத்தை. கொஞ்ச நாள் இங்க உங்க கூட இருக்கட்டும்.”

இரண்டாம் மாத இறுதியில் அஞ்சலியை இந்தியாவிலேயே விட்டுவிட்டு விமானம் ஏறினான்.

“ஒரு ரெண்டு மாசம் கழிச்சு டிக்கெட் போடறேன். வரட்டும்.”

அஞ்சலியின் அம்மாவுக்கு ஏதோ சரியாகப்படவில்லை. ஆனால் அஞ்சலி எதுவும் பேசவில்லை. அமைதியாகத் தலை குனிந்து அமர்ந்திருந்தாள். அவன் போன் செய்வது கூட படிப்படியாக நின்று போனது. பிந்துதான் அஞ்சலியை அழைத்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பாள்.

இரண்டு மாதங்கள் கழித்து டிக்கெட் வரவில்லை. விவாகரத்து நோட்டீஸ் வந்தது. அஞ்சலியின் வீட்டார் இடிந்து போனார்கள். திருமாறன் வீட்டில் கைவிரித்து விடார்கள். அவள் அப்பா நேரடியாக அவனுடன் பேசிப் பார்த்தார்.

“இல்ல மாமா.. அவளுக்கு என் கூட இங்கே ஒத்து வரலை. எப்ப பாரு ஒரே அழுகை. எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கா. அது தவிர அவளால ஒரு குழந்தைக்கு அம்மா ஆக முடியாதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு. இது அவளுக்கே தெரியும். சட்டப்படி எனக்கு விவாகரத்து கேக்க உரிமை இருக்கு.”

அஞ்சலியின் வீட்டிலும் அவளைத்தான் குற்றம் சொன்னார்கள்.

“அழகு போல மாப்பிள்ளை. அனுசரிச்சுப் பொழைக்கத் தெரியலை. எல்லாம் தலை விதி” அவள் அப்பா தலையிலடித்துக் கொண்டார்.

சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே தீர்ப்பின் பிரதியைத் தந்துவிட்டு வரும்போது அவளைப் பார்த்ததுதான் கடைசி. அதன் பிறகு திருமாறன் தன்னுடைய அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த நேத்ரா ஷர்மாவைத் திருமணம் செய்துகொண்டான். ஃபெவிகால் நிறத்தில் பதுமை போலிருந்தாள். நேத்ரா திருமாறனை விட நான்கு மடங்கு சம்பாதித்தாள். அந்த நிறுவனத்தில் அதிவேகமாக உயர்ந்தாள். திருமாறனின் குடும்பத்தாருக்கு ஜாதி மறந்து போனது. திடீர் சீர்திருத்தவாதிகளாக மாறிவிட்டனர்.

திருமணம் முடிந்த நான்காவது மாதம் அவள் கர்ப்பமானாள். திருமாறன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். அடுத்த ஆண்டு ஒரு அழகிய ஆண் பிள்ளை. வாட்ஸாப், பேஸ்புக் என்று அந்தப் படத்தைப் பகிர்ந்தான் திருமாறன். முக்கியமாக அஞ்சலி அதைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினான். அடுத்தது ஒரு பெண் குழந்தை. அதையும் உடனே பகிர்ந்து அஞ்சலியின் ப்ளூ டிக் வருகிறதா என்று காத்துக் கொண்டிருந்தான். அப்போதுதான் வேறு புதிய எண்ணிலிருந்து அதற்கு அழைத்துப் பார்த்தான். எண் உபயோகத்தில் இல்லை.

நேத்ரா அடுத்தடுத்து உயர்ந்து வேறு ஒரு பெரிய நிறுவனத்தில் சிடிஓ நிலைக்கு வந்துவிட்டாள். ஆனால் அதற்காக அவர்கள் டெக்சாசிலிருந்து கலிபோர்னியா செல்ல வேண்டியிருந்தது. அவன் சம்பளம் நேத்ராவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சிறிதாகிப் போனதால் திருமாறன் வேலையை விடவேண்டியிருந்தது. உண்மையில் அவன் கற்று வைத்திருந்த டெக்னாலஜிக்கு அதன் பிறகு வேலை கிடைக்கவில்லை. ஒர்க் ஃப்ரம் ஹோம் கன்சல்டன்ட் என்று மாறினான். அதன் பிறகு வீட்டிலிருந்து பொறுப்பாக குழந்தைகளைப் பார்த்துக் கொண்டான்.

நேத்ரா ஒரு அலுவல் வேலையாக ஹவாய் போயிருந்தாள். போர்டு மீட்டிங் வருவதால் அதற்கான திட்டமிடல் அங்கே நடந்தது. எப்படியும் ஆண்டின் பாதி நாட்கள் அவள் வீட்டில் இருக்க மாட்டாள். உலகத்தின் ஏதாவது  நகரத்தின் நட்சத்திர ஓட்டலில் இருந்து அவர்களோடு பேசுவாள்.

குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டுத்தான் டார்கெட் அங்காடிக்கு வந்திருந்தான் திருமாறன். அது அவனுடைய அன்றாட வாடிக்கை. அப்போதுதான் அஞ்சலி அவன் கண்ணில் பட்டாள்.

அவளை அமெரிக்காவில் அதுவும் ஃப்ரீமாண்ட்டில் அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. பள்ளி முடிய அவனுக்கு இன்னும் நேரமிருந்தது. அவளை நோட்டமிட்டான்.  

அஞ்சலி முற்றிலும் மாறியிருந்தாள். கூந்தலை காற்றுக்கு அலைய விட்டிருந்தாள். இடைவிடாது முகத்தில் வந்து வீழும் கேசக் கற்றைகளை சரி செய்வதில் ஒரு நளினம் இருந்தது. மூக்கு குத்தியிருந்தாள். உடற்பயிற்சி செய்வாள் போலிருந்தது. அணிந்திருந்த ஆடைக்குள் சிக்கென்று இருந்தாள். திருமாறன் சீட் பெல்ட்டுக்கு வெளியே பிதுங்கிக் கொண்டிருந்த தனது வயிறைப் பார்த்தான். ஸ்லீவ்லெஸ் உடை ஒன்றை அணிந்திருந்தாள். புஜத்தில் ஒரு மலரும் பட்டாம்பூச்சியும் பச்சை குத்திக் கொண்டிருந்தாள். அவளால் இவ்வளவு கவர்ச்சியாகத் தோன்ற முடியும் என்று திருமாறன் கனவிலும் நினைத்ததில்லை. டெஸ்லா கார் ஒன்றை அவளே ஓட்டிக் கொண்டு வந்திருந்தாள். இதையெல்லாம் தாண்டி அவளிடம் ஒரு துள்ளலும் மகிழ்ச்சியும் இருந்தது. அவனுக்கு இப்போது பழைய சாத்தான் மண்டைக்குள் குடையத் தொடங்கியது.  

அவள் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியதும் சில நொடிகள் யோசித்தான். பிறகு காரைக் கிளப்பி அவளைப் பின் தொடர்ந்தான். பதினைந்து நிமிடங்களில் அவள் வீடு வந்தது. அந்தப் பகுதி நன்கு வசதியாக வாழ்பவர்களின் பகுதி. இங்கே ஒரு வீடு வாங்க வேண்டுமென்பது நேத்ராவின் நெடுநாள் கனவு. அந்த வீடு இருந்த சாலையில் இரண்டு முறை கடந்தான். பள்ளி விடும் நேரமாகிவிட்டது. திடீரென்று நினைவு வந்தவனாக காரைத் திருப்பிக் கொண்டு கிளம்பினான்.

அவனுக்கு அன்று இரவு இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த நாள் காலையிலேயே அங்கே வந்துவிட்டான். அந்த வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் காரை நிறுத்திவிட்டுக் காத்திருந்தான். ஃபகத் பாசில் போன்ற தோற்றத்துடன் ஒருவன் வெளியே வந்தான். ஒரு சிறிய பெண் குழந்தையை நடத்திக் கூட்டிப் போனான். அதுதான் அவள் கணவனாக இருக்க வேண்டும். ஒருவேளை இது இரண்டாவது திருமணமாக இருக்கும். அவனுக்கு ஏற்கனவே இந்தக் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவன் எப்போதும் வீட்டில்தான் இருந்தான். அஞ்சலிதான் வெளியே சென்று வந்தாள்.

அடுத்த நாளும் திருமாறன் அங்கே போனான். காபி குடித்தபடி வேடிக்கை பார்த்தான். அவன் கால்கள் தந்தியடித்துக் கொண்டிருந்தன. அஞ்சலி வெளியே கிளம்பினாள். ஃபகத் பாசிலுக்கு தெருவில் வைத்து முத்தமிட்டாள். பிறகு காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பிப் போனாள்.

அவள் போன பத்து நிமிடத்தில் ஃபகத் பாசில் மட்டும் கதவைத் திறந்து வெளியே வந்தான். நேராக அவன் காரை நோக்கி வந்தான். திருமாறன் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. செய்வதறியாமல் திகைத்து அமர்ந்திருந்தான். அருகே வந்த அவன் காரின் கண்ணாடியைத் தட்டி இறக்கும்படி சொன்னான்.

“நீங்க மிஸ்டர் திருமாறன்தானே?”

திருமாறன் தடுமாறினான்.

“அஞ்சலிதான் நேத்து உங்களை இங்கே பாத்துட்டு சொன்னா. ஐ ஆம் சஞ்சய். அஞ்சலியோட ஹஸ்பண்ட்”

கையை திறந்திருந்த கார் கண்ணாடி வழியாக நீட்டினான். திருமாறன் தயக்கமாக அவன் கையைப் பற்றிக் குலுக்கினான்.

“உள்ளே வாங்களேன். ஒரு பீர் சாப்பிட்டுட்டே பேசுவோம். வீ ஆர் கைண்ட் ஆஃப் பேமிலி.. இல்லையா?”

திருமாறன் தயங்கினான்.

“ப்ளீஸ்”

இறங்கி காரைப் பூட்டிவிட்டு அவனைத் தொடர்ந்தான்.

“மூணாவது நாளா வரீங்க இல்லையா?” என்றான் சஞ்சய் நடக்கும்போது.

“சாரி… இன்டர்பியர் பண்ணனும்னு இல்லை. அஞ்சலி எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கத்தான்… ”

“உங்க அக்கறை புரியுது”

கதவைத் திறந்து உள்ளே வந்தார்கள்.

“அங்கிளுக்கு ஹாய் சொல்லு சித்தாரா” என்றான். சித்தாரா ஒரு கேன்வாசில் வண்ணங்களால் கோடிழுத்துக் கொண்டிருந்தாள். “ஹாய் அங்கிள்” என்று இவனைப் பார்த்து மலர்ந்து சிரித்தாள்.

இவனை அமரச் சொல்லிவிட்டு ஃப்ரிட்ஜைத் திறந்து இரண்டு பீர் கேன்களை எடுத்தான்.

சோபாவில் அமர்ந்தபடியே வீட்டின் விஸ்தாரத்தை அளந்தான் திருமாறன். அவன் வீட்டை விட மூன்று மடங்கு பெரியது.

“நைஸ் ஹவுஸ்… வாட் ஆர் யு டூயிங்?”

“நத்திங்”

“புரியலை”

“நான் ஒரு சைன்டிஸ்ட். என் பேர்ல ஒரு பத்து பேடண்ட் இருக்கு. அதுல வர பணமே எங்களால செலவு செய்ய முடியலை. அதனால ரெண்டு வருஷமா ஒண்ணும் செய்யாம இருக்கேன். நான், அஞ்சலி, சித்தாரா இதுதான் இப்போதைக்கு உலகம். தேவைக்கு மீறி பணம் இருக்கறதால நிறைய பிலந்த்ராபி பண்றேன். கொடுத்து வாழ்வோமே… இந்தியப் பெண்களுக்கு ஒரு சின்ன என்ஜிஓ நடத்தறோம். அஞ்சலிதான் அதை மேனேஜ் பண்றா. அவளுக்கு வீட்டில் இருக்கப் பிடிக்கலை”

“நீங்க எப்படி அஞ்சலியை மீட் பண்ணினீங்க? அவ கொஞ்சம் ரிசர்வ்டு டைப் ஆச்சே?”

“ஓ.. உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனா என்னோட அக்காவைத் தெரிஞ்சிருக்கும்”

“யாரு?”

“பிந்துன்னு.. ஆஸ்டின்ல உங்க பக்கத்து ப்ளாக்ல”

“ஓ.. ஆமா.. அவங்க அஞ்சலிக்குக் கூட க்ளோஸ்”

“கல்யாணம் வேண்டாம்னு இருந்த என்னை அரிச்சு எடுத்துட்டா… சரி பேசிப் பாக்கறேன்னு சொன்னேன். நானும் அஞ்சலியும் ஒரு வருசம் ஸ்கைப்லயே பேசிக்கிட்டோம். அஞ்சலி எல்லாத்தையும் என்கிட்டே சொன்னதுக்கு அப்புறம்தான் சேர்ந்து வாழணும்னு முடிவெடுத்தோம்”

சில நிமிடங்கள் அமைதியில் கழிந்தன.

“நாங்க ஏன் டைவர்ஸ் பண்ணினோம்னு சொன்னாளா?”

“ம்ம்.. அதையும் சொன்னா…  என்னிக்காவது நீங்க இப்படி வருவீங்கன்னும் சொன்னா”

சஞ்சய் புன்னகைத்தான். அதில் சற்று விஷமம் இருந்தது போல் பட்டது திருமாறனுக்கு.

“இந்த பேபி…” என்று இழுத்தான் திருமாறன்.

“எங்க குழந்தைதான்… ”

திருமாறன் அவசரமாக ஏதோ சொல்லப் போக கை உயர்த்தி அவனை நிறுத்தினான்.

“உங்க குழப்பம் எனக்குப் புரியுது. அதை கிளியர் பண்ணத்தான் உங்களை உள்ளே கூப்பிட்டேன். அஞ்சலி பெரிய தப்பு பண்ணிட்டா. அதை சரி செய்யணும்னு எனக்குத் தோணுச்சு“

“அஞ்சலியா?”

“ஆமாம். அவ ஒரு கிராபிக் டிசைனர்னு உங்களுக்குத் தெரியுமா?”

திருமாறன் விழித்தான்.

“அவளைப் பத்தி கடைசி வரைக்கும் எதையுமே நீங்க தெரிஞ்சுக்க முயற்சி பண்ணலை. அதுதான் பிரச்னை”

“புரியலை”

அவனிடம் ஒரு பென் டிரைவைக் கொடுத்தான்.

“நேத்தே உங்ககிட்டே பேசியிருப்பேன். ஆனா இதைத் தேடி எடுக்க வேண்டியிருந்தது”

“என்ன இது?”

“உங்க ரெண்டு பேரோட ஃபெர்டிலிடிட்டி டெஸ்ட் ரிப்போர்ட். ஞாபகம் இருக்கா”

தலையசைத்தான்.

“அது போட்டோஷாப் பண்ணது. அஞ்சலி ஒரு டாக்டர் ஃப்ரண்ட் ஹெல்ப்போட அதை மாத்தியிருக்கா. உண்மையில் அவகிட்டே எந்த ப்ராப்ளமும் இல்லை”

திருமாறன் பியர் பாட்டிலை அவசரமாக வைத்தான்.

“நோ.. நான் நம்பமாட்டேன். அவ எதுக்கு தன் மேல இப்படி ஒரு பழியைப் போட்டுக்கணும்?”

சஞ்சய் புன்னகைத்தபடியே ஒரு மடக்கு பியரைக் குடித்தான்.

“நல்லா யோசிச்சுப் பாருங்க. உங்க பக்கம் குறைன்னு தெரிஞ்சிருந்தா அவளுக்கு இந்த விடுதலை உங்ககிட்டே இருந்து கிடைச்சிருக்குமா?”

திருமாறனுக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. பியர் காரணமல்ல. பென் டிரைவை திருமாறன் கையில் வைத்து அழுத்தினான் சஞ்சய்.

“இந்த பென் டிரைவ்ல ஒரிஜினல் ரிப்போர்ட்.. போட்டோஷாப் ஃபைல்… அவ மாத்துன ரிப்போர்ட்.. எல்லாமே இருக்கு. அவளுக்கு இதை சொல்றதுல இஷ்டம் இல்லை. ஆனா இப்போ எல்லாமே முடிஞ்சப்புறமாவது இதை நீங்க கட்டாயம் தெரிஞ்சுக்கணும்னு எனக்குத் தோணுச்சு.”

திருமாறன் அவசரமாக எழுந்து கொண்டான். கால்கள் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தன. சஞ்சய் வாசல் வரை வந்தான். அவன் தோளில் ஆதரவாகத் தட்டினான்.  போன் அடித்துக் கொண்டே இருந்தது. திருமாறன் அதைத் தொட்டு  அடக்கினான்.

“கவலைப்படாதீங்க. இப்ப டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறியிருக்கு. நீங்க தத்து கூட எடுத்துக்கலாம். அப்புறம் மிஸ்டர் திருமாறன்…”

நடக்கத் தொடங்கிய திருமாறன் திரும்பினான்.

“இனிமே இந்த மாதிரி வந்து நிக்காதீங்க… ” இதை சொல்லும்போது சஞ்சய் முகத்தில் புன்னகை இல்லை.

கையில் பென் டிரைவ் கனத்தது. திருமாறன் காரை நோக்கி நடந்தான். மொபைல் போன் மறுபடி அடித்தது. நேத்ரா அழைத்திருந்தாள். ஹவாயில் பிகினி உடையில் அவள் ப்ரொபைல் படம் சிரித்தது.

“டார்லிங்.. வேர் ஆர் யூ ரோமிங்? பிக் அப் டைம் ஆயிடுச்சு… நேத்து மாதிரி அவங்களை வெயிட் பண்ண வெக்காதீங்க ப்ளீஸ்… ” அவள் குரலில் கண்டிப்பு.

“ஆன் மை வே ஹனி… ஐ ஆம் ஆன் மை வே” என்றான் திருமாறன் பணிவாக.

***

கானல்

0

நாகராஜன் இறந்துவிட்டார்.

காலையில் விஜயகுமாரின் உறக்கத்தை கலைத்தது அலைபேசியின் ஒலி. வந்திருந்த குறுந்தகவலை வாசித்தார். நிகழ விரும்பாத அல்லது நிகழும் என நினைத்திராத ஒன்றை கண்ணுற்றதைப் போன்ற முகபாவனை. பல் துலக்கிவிட்டு எப்போதும்போல் இளங்காலை வெயில் பாவும் மொட்டை மாடிக்குச் சென்றார். நான்கு மாடி அடுக்ககம் அது. விஜயகுமாரின் வீடு மூன்றாவது தளம். படியேறும் தருணத்திலும் குறுந்தகவலில் இருந்த இரண்டு சொற்களை வாசித்துக்கொண்டே ஏறினார். மொட்டை மாடியில் உள்ளுறைந்திருக்கும் மென்சோகத்தைப் பிரதிபலிக்கும் மங்கலான சூரியன். சுவரில் சாய்ந்து நின்றுகொண்டார். வீட்டின் எதிர்ப்புறம், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து தென்படும் மலையைப் பார்த்தார். எப்போதும் பார்ப்பதை விட மிகப்பிரம்மாண்டமாய் காட்சியளித்தது.

முகத்தில் சோகம் தன்னை விஸ்தரித்துக்கொள்ளத் துவங்கியது. தனக்கு குறுந்தகவல் அனுப்பிய நபரை அழைத்தார்.

“என் பேரு விஜயகுமார். நாகராஜனுக்கு..”

“கேள்விப்பட்டேன்”

“எப்படி? என்ன ஆச்சு ?”

“அட்ரெஸ்?”

மலையின் பின்புறத்திலிருந்து சூரியன் மேலேறியது. உஷ்ணம் அதிகரிக்க அறைக்கு கீழிறங்கினார். நுழைந்தவுடன் எதிர்ப்பட்ட புகைப்படமும் அதில் மனைவியின் சிரிப்பும் ஆசுவாசப்படுத்தியது. மாசேறிக்கிடந்த அறையை கவனித்தார். ஒருவார காலம் பயன்படுத்திய துணிகள் துவைப்பதற்காக அறையின் மூலையில் குவிந்து கிடந்தன. அதை இடறிய வண்ணம் படுக்கையறைக்குள் நுழைந்தார். சுத்தமாக விரிக்கப்பட்டிருந்த மெத்தையுடன் கூடிய கட்டிலைப் பார்த்தார். ஆற்றாமையுடனான பார்வை அது. கீழே முந்தைய இரவு படுத்துறங்கிய பாயைச்சுருட்டி அறைக்கதவின் பின்புறம் சாய்த்தார்.

குறுந்தகவலில் வந்திருந்த நாகராஜன் எனும் பெயரிடப்பட்ட முகவரி விஜயகுமாருக்கு பல நினைவுகளைக் கிளறியது. ஹரிகாந்த் சேட்டிடம் வேலைக்குச் சேர்ந்த தினங்கள் ஞாபகத்தில் எழுந்தன. பெரியப்பா சுந்தரேசன் ஈரோட்டில் மயில்கண்டு வேட்டிக்கான வணிகத்தில் இருப்பவர். அவர் சிபாரிசில் வேலையற்று இருந்த விஜயகுமாருக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டையில் ஜமக்காள வியாபாரத்தில் செழித்த லாபம் கண்டிருந்த ஹரிகாந்த்திடம் கணக்கர் வேலை கிடைத்தது. படித்த பி.காமிற்கு வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவிலான வேலைதான் என விஜயகுமாரும் சேர்ந்து கொண்டார்.

ஹரிகாந்த் வாளிப்பான மனிதர். முந்திரியின் நிறம். பரம்பரை பரம்பரையாக துணி சம்மந்தமான வணிகத்தில் இருப்பவர். தலைமுறையின் ஏதோ ஒரு கிளையில் சேலத்தில் கால் பதித்திருக்கின்றனர். பின் ராஜஸ்தானத்திலிருந்து தருவிக்கப்படும் ஜமக்காளங்களை சேலத்து துணிக்கடைகளில் மொத்தமாக வியாபாரம் செய்வது தொடங்கிற்று. ஹரிகாந்த் இன்னுமொரு படி மேலேறி சேலத்தில் நெய்யப்படும் சுடிதாருக்கான துணிகளை வடக்கிற்கு ஏற்றுமதி செய்தார். அதற்கான தொடக்கத்தில் பணிக்கு ஆட்கள் கூடுதலாகத் தேவைப்பட்டனர். அப்போதே விஜயகுமாருக்கு ஹரிகாந்த்துடன் அறிமுகம் ஏற்பட்டது.

ஹரிகாந்த் கஞ்சர். ஊதிய உயர்வு எனும் சொல்லிற்கே இடமில்லை. ஆனால் அங்கு பணி செய்த ஐந்து ஆண்டுகளிலும் விழாக்காலங்களில் துணி, இனிப்பு, பலகாரங்கள், பின் ஆண்டிற்கு ஒருமுறை என்று எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட ஒரே போனஸ் பட்டுவாடா. ஆனால் ஒவ்வொரு ஆளுக்கும் ஐந்தாளுக்கு நிகரான கடுமையான பணி.

நிறைய இடங்களுக்கு ஏற்றுமதியும் பல்வேறு முறைகளில் இறக்குமதியும் நிலவியதால் கணக்கு வழக்கு பார்ப்பதில் விஜயகுமாருக்கு எப்போதும் தாமதம். பணி கிடைத்த ஓராண்டில் திருமணம் நிகழ்ந்தது. நான்கு நாட்கள் விடுப்பு. பணி திரும்பும்போது ஒவ்வொரு நாளும் நான்கு நாட்களுக்கான பணிச்சுமை இருந்தது. வீடு திரும்ப ஏற்படும் தாமதம் கூடியது. விஜயகுமாரின் தாமதத்தை மனைவியும் பழகிக்கொண்டார். அதனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளை  நினைவிலிருந்து கடந்து சென்றார்.

நினைவின் ஓட்டத்தை இடைவெட்டியது குறுந்தகவலின் ஒலி. நாகராஜனின் இறுதிச்சடங்கிற்கான தகவல் வந்திருந்தது. பலருக்கு அனுப்பும்போது தனக்கும் அனுப்பியிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டார்.

மனைவியின் புடைவைகளுக்கு அடியிலிருந்து தபால் கவர் ஒன்றை எடுத்தார். உள்ளே செல்லுபடியாகும் நூற்றி நாற்பத்தி ஐந்து நூறு ரூபாய் தாள்கள். மேலுறையின் மீது நாகராஜனுக்கு எனும் நினைவூட்டல். அதை மீண்டும் மனைவியின் புகைப்பட்டத்திற்கு அடியில் சமர்ப்பணத்தைப் போன்று வைத்தார். அந்த செயல் அவரை குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணங்களற்று செய்ய விரும்பும் செயல்.

முழுதும் அழுக்கு நீங்காத துவைத்த ஆடை ஒன்றை அணிந்து கொண்டார். கண்ணாடியில் பிரதிபலித்த முகம் வயதை கூட்டிக்காட்டியது. முகத்தில் சின்னச்சின்ன சுருக்கங்கள் தோன்றியிருந்தன. பாதி தலைமயிர் நரையேறியிருந்தது. கண்கள் எப்போதும்போல் சிவந்திருந்தன. பணியின் களைப்பில் கண்கள் சிவந்திருக்கும்போது சொல்லப்படும் மனைவியின் சொற்களை நினைவுபடுத்திக் கொண்டார்.

“உங்க கண்ணு எப்பவுமே செவந்து இருக்கு. வயசாளிமாரி. எதையோ செய்ய தவறிட்ட பயம் எப்பவும் கண்ணுல தெரியுது. ஆனா அழகா இருக்கு”

நிலைக்கண்ணாடியிடம் சின்னதாக புன்முறுவலிட்டார். பதிநான்காயிரத்து ஐநூறு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டார். நினைவின் அடையாளமாய் நாகராஜன் எனப் பெயரிடப்பட்ட மேலுறையை சட்டைப்பையில் மடித்து வைத்தார். மனைவின் புகைப்படத்திடம் விடைபெற்றார். குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கன் தெரு நோக்கி புறப்பட்டார்.

நினைவின் சுழலில் ஷேர் ஆட்டோ ஊர்வது போலிருந்தது. நாகராஜன் ஹரிகாந்த்திடம் ஜமக்காள வணிக காலத்திலிருந்தே பணிபுரிபவன். எப்போதும் புன்சிரிப்பு படர்ந்த முகம். லாரிகளில் ஏற்றப்படும் சரக்குகளையும் குடோன்களில் இறக்கி வைக்கப்படும் சரக்குகளையும் மேற்பார்வையிடும் பணி. சரக்குகளின் கணக்கு சரிபார்க்க செல்லும் நேரங்களில் நாகராஜனுக்கும் விஜயகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாகராஜன் ஆறு வயதிலிருந்தே உழைப்பவன். பவானிக்கு அருகில் சொந்த ஊர். நாகராஜனுக்கே துல்லியமாக நினைவிலில்லை. அப்பா குடிகாரர். எப்படியோ பிழைத்துக் கொள்ளட்டும் என கைவிடப்பட்ட வாழ்க்கை வாய்க்கப்பட்டவன். செவ்வாய்பேட்டை, லீ பஜார், பூ மார்க்கெட், அக்ரஹாரம் என கூலிவேலை பார்க்காத இடங்களே இல்லை. கூலிவேலையில் கிடைத்ததைவிட இருமடங்கு ஊதியத்துடன் ஹரிகாந்த் பணியில் சேர்த்துக்கொண்டார். காலப்போக்கில் தீவிர விசுவாசி. தொழிலில் நேர்மை. அதேநேரம் ஹரிகாந்திடம் நிரந்தர இடம்.

நாகராஜனுக்கு நினைவுகூறும் திறன் அதிகம். ஒருநாள் முழுக்க வந்துபோகும் சரக்குகளின் தகவலை துல்லியமாக ஒப்பிப்பான். விஜயகுமார் ஒவ்வொரு முறையும் பாராட்டுவார். ஒருமுறை காரணத்தையும் கேட்டார்.

“சொமதான் சார் என் ஒலகம். அதுல கணக்கு மட்டுந்தான் வச்சுக்க முடியும். பட்டுவாடா செய்ய முடியாதே!”

திருமணமாகி விஜயகுமாருக்கு இரண்டாண்டுகள் ஆகியிருந்தன. மனைவி கருவுற்றிருந்தார். அந்த சமயத்தில் பணிக்கு காலையில் சீக்கிரம் வந்து மாலையில் விரைவாக வீடு திரும்ப அனுமதி கேட்டிருந்தார். பிரசவிக்கும் நேரம் வந்தது. கர்ப்ப காலத்தில் மனைவின் உடல் நிறைய உபாதைகளுக்கு உள்ளானது. சரியான ஊட்டச்சத்து இன்றி சூம்பிய உடல். கர்ப்பகால சர்க்கரையும் சேர்ந்து கொண்டது. பிரசவிக்கும் நேரம் நெருங்குகையில் சுகப்பிரசவம் வாய்ப்பில்லை என மருத்துவர்கள் அறிவித்தனர். முன்பணம் கட்டக்கூட விஜயகுமாரிடம் சத்து இல்லை. ஹரிகாந்த்தும் ராஜஸ்தான் சென்றிருந்த நேரம். ஹரிகாந்த்தின் மேலாளரைத் தேடி குடோனிற்கு சென்றார். அப்போது எதிர்ப்பட்ட நாகராஜன் மகிழ்வான முகத்துடன் ஆணா பெண்ணா என விசாரித்தான். சுருங்கிய முகத்துடன் முழு விஷயத்தையும் பகிரர்ந்தார். சற்றும் யோசிக்காமல் அரிசிப்பாளையத்தில் இருந்த தன் வீட்டிற்கு அழைத்து சென்று தேவை என்று சொல்லிய பதிநான்காயிரத்து ஐநூறு ரூபாயையும் கையளித்தான்.

“எனக்கு புள்ள குட்டி இல்ல சார். இப்போதைக்கு பிரயோஜனம் இல்லாத பணம். நீங்க பயன்படுத்துங்க. பாத்துக்கலாம்.”

மருத்துவமனை திரும்பிய உடனேயே அப்பணம் பயனற்றது என்பதை அறிந்து கொண்டார். இரண்டு வாரங்கள் பணிக்கு திரும்பவில்லை. பணி திரும்பியவுடன் நாகராஜன் சரக்கு சம்மந்தமாக ராஜஸ்தான் சென்றிருப்பதை அறிந்தார். ஊர் திரும்பியவுடன் பணத்தை திருப்பி அளித்துவிடலாம் என நம்பிக்கை கொண்டார். யதார்த்தத்தில் அதற்கு பிறகு நாகராஜனை அவர் சந்திக்கவேயில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மல்லூருக்கு அருகில் சிறுதொழில் நிறுவனமொன்றின் காசாளராக பணிமாற்றம் செய்துகொண்டு விஜயகுமார் சென்றுவிட்டார். அதற்கு பின்பும் தன் பழைய நிறுவனத்தில் தெரிந்தவர்கள் வழியே நாகராஜனைப் பற்றி பலமுறை விசாரித்திருக்கிறார். ராஜஸ்தான் சென்ற நாகராஜன் திரும்பவில்லை எனும் தகவல் சிலமுறையும், பணியை விட்டே நீங்கிவிட்டான் எனும் தகவல் சிலமுறையும் கிடைத்தது. தனக்கு பணம் கையளித்த வீட்டிற்கும் சென்று அக்கம்பக்கத்தில் விசாரித்திருக்கிறார். ராஜஸ்தான் சென்றிருந்த தகவலை அவர்களில் சிலர் அறிந்திருந்தனர். மேலும் இடையில் ஒரே ஒருமுறை வந்து வீட்டை காலிசெய்து சென்றுவிட்டான் எனும் தகவலே மிஞ்சியது

ஷேர் ஆட்டோ ஸ்ரீரங்கன் தெருமுனையில் நின்றது. நிறைய பேர் அத்தெருவை நிறைத்து நடந்து சென்று கொண்டிருந்தனர். மரணத்தை அறிவிக்கும் பறையோசை தெருவை நிறைத்தது. ஆங்காங்கே மக்கள் கூடிக்கூடி பேசிக்கொண்டிருந்தனர்.

தெருமுனையிலிருந்து ஏழாவது வீடு. சிறிய இல்லம். வாசலில் நிறைய சைக்கிள்கள். நாகராஜனின் உடல் நடுவீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்ததை விட உடல் பூசியிருந்தது. நாகராஜனின் தலைமாட்டில் முக்காடிட்டு வடஇந்தியப் பெண்ணொருத்தி தலையில் கைவைத்த வண்ணம் அமர்ந்திருந்தாள். மடியில் நான்கு வயதையொத்த சிறுவன். யாரிடம் சென்று தன்னை அறிமுகம் செய்துகொள்வது என்று தெரியாமல் விஜயகுமார் முழித்தார். குறுந்தகவல் அனுப்பிய நபரை மீண்டும் அழைத்தார். வாசலில் வந்து இருவரும் சந்தித்துக் கொண்டனர்.

“எனக்கு உங்கள யாருன்னு தெரிலங்க. நான் நாகராஜானுக்கு நாலு வருஷமா பிரண்டு. உங்கள பத்தி எதுவும் சொன்னதா நியாவகம் இல்ல”

பின் தனக்கு தகவல் அனுப்பியதன் பின்னணியை சந்தேகித்தார். முன் நின்று கொண்டிருந்தவரே பேச்சைத் தொடர்ந்தார்.

“அவர் போன்ல இருக்குற எல்லா நம்பருக்கும் தகவல் அனுப்புனேன்.”

தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். தனக்கும் நாகராஜனுக்கும் இடையில் இருந்த தொடர்பை விளக்கினார். பதினான்காயிரத்து ஐநூறு ரூபாய் குறித்த தகவலை பகிரலாமா எனும் எண்ணம் கிளம்பும் தருணங்களில் திக்கினார். பேச்சை இடைவெட்டிக்கொண்டு வீட்டிற்குள் சென்றார். சுவரில் சாய்ந்த வண்ணம் நாகராஜனைப் பார்த்தவாறு மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவரவர்களுக்கு தெரிந்த நாகராஜனின் வாழக்கையை புதிய முகவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தனர். சிலவற்றை ஒட்டுக்கேட்டார். மனம் லயிக்கவில்லை. வீட்டைச்சுற்றி கவனித்தார். மனைவியுடன் ராஜஸ்தானில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தை கவனித்தார். நாகராஜனின் சிரித்த முகம் பாக்கெட்டில் இருந்த பதினான்காயிரத்து ஐநூறு ரூபாயை நினைவூட்டியது.

பதினான்காயிரத்து ஐநூறு ரூபாய் பெரிய தொகை இல்லையா? நாகராஜனுக்கு அந்த தொகை தேவைப்படவேயில்லையா? ராஜஸ்தானிலிருந்து திரும்பவில்லை எனும் தகவலுடன் என் தேடலை நிறுத்திக்கொண்டது எவ்வளவு பெரிய தவறு! என் சோம்பேறித்தனம்தான் இத்தனை அருகாமையில் இருக்கும் நாகராஜனை அடையாளம் காணவியலாமல் தடுத்ததா? சோம்பேறித்தனமா அல்லது மனைவியின் நினைவை தக்கவைத்துக்கொள்ள நான் கைக்கொண்ட கைப்பாவைதான் இந்தத் தொகையா? இத்தனை நாட்களைக் கடத்திவிட்டு இப்போது அடைக்க விரும்பும் பணம் குற்றவுணர்ச்சியிலிருந்து விடுதலை அடையவா அல்லது நியாயவானாக நிரூபித்துக் கொள்ளவா? ஆனால் யாரிடமிருந்து விடுதலை அல்லது யாருக்கு என் நிரூபணம்?  அங்கு நின்று கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அர்த்தமற்ற கேள்விகளுடன் பாக்கெட்டில் கனம் கூடியதாய் உணர்ந்தார். யாரேனும் இறந்த குடும்பத்திற்காக பணம் கொடுக்கிறார்களா என நோட்டம்விட்டார். அதற்கான சாயல் வீட்டினுள் எங்கும் எதிர்ப்படவில்லை.

கைவசம் இருக்கும் பணத்தை வீட்டிற்குள் எங்கேனும் பதுக்கி வைத்துவிடலாமா என்றும் சிந்தித்தார். மறுகணமே யாரேனும் எடுத்துவிடுவார்களோ என்று ஐயப்பட்டார். குழந்தைக்கு உண்டியல் சேமிக்கும் பழக்கம் இருந்திருந்தால் அதில் யாருமறியாமல் போட்டுவிடலாம் என்று கற்பனை செய்தார். நாகராஜனை கிடத்தியிருந்த அறையில் அதற்கொப்ப பொருள் எதையும் இனங்காண முடியவில்லை. மரண வீட்டில் ஏதேனும் செலவினங்கள் தெரிந்தால் அதனை அளித்து தன் கனத்தை குறைக்கலாம் எனத்தேடினார். நிகழும் செலவினங்களை அறிய முடியாதவண்ணம் யாரோ ஒருவர் அதை சரிக்கட்டிக் கொண்டிருந்தனர். விசாரிக்க வந்த துக்கத்தை மறந்து கடனடைக்கும் வழிமுறைகளை தேடினார். பைத்தியம் பிடித்தாற்போன்று கண்கள் வீட்டைச்சுற்றி உலாவின. நாகராஜனை வைத்திருக்கும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துவிடலாமா எனும் எண்ணத்தை சுயவெறுப்புடன் கைவிட்டார். கைவசம் இருக்கும் பணத்தாள்களை விட்டெறிந்துவிட்டு யார் கைக்கும் அகப்படாமல் ஓட விரும்பும் மனம். தன்னைக் கடனாளி ஆக்கிவிட்டு அதை யாரிடமும் சொல்லாமல் பிரிந்ததை எண்ணி நாகராஜனின் மீதான கோபம். இதனை திருப்பி அடைக்காவிட்டால் யாருக்கு நஷ்டம் எனும் புதிர் நிரம்பிய கேள்வி. அனைத்தும் சிந்தனைக்குள் குடைந்தன. லாப நஷ்டங்களுக்கு அப்பால் கனம் நிரம்பிய தொகை அது. பெரும் குழப்பத்திற்குள் ஆழ்ந்து கையறுநிலையில்  நாகராஜனைப் பார்த்தார். ஏக்கம் நிரம்பிய கண்கள் கசிந்தன.

நாகராஜனின் பிணத்தை இடுகாட்டிற்கு ஏற்றிச்செல்லும் வரையில் அவ்வீட்டில் இருந்தார். கடனடைப்பதற்கான சாத்தியங்களைத் தேடும் முயற்சியில் அடுக்கடுக்கான தோல்விகள். இடையிடையே தன் செயல்களுக்கான அர்த்தம் தேடும் மனதை சபித்தார். எதற்குதான் அர்த்தம் இருக்கிறது எனும் சிந்தனை இடைவெட்டியது. அர்த்தம் எனும் சொல்லின் சிந்தனை அந்த நொடி வரையிலான வாழ்க்கையை அர்த்தமிழக்கச் செய்தது. தோல்வியின் சாயலைச் சுமந்தவராய் வீடு திரும்பினார்.

இரவு கவியத் தொடங்கியிருந்தது. நகரம் வெளிச்சத்தால் தன்னை நிரப்பிக்கொண்டது. வீட்டின் அருகாமையில் இருக்கும் மலை எப்போதையும் விட பேருருவம்  அடைந்ததாய் உணர்ந்தார். ஷேர் ஆட்டோவில் இருந்து இறங்கிய உடன் மலையைப் பார்த்தவண்ணம் சிலைபோல நின்றார். நாகராஜனின் நினைவு மலைக்கு இணையாக மனதில் குவிந்தது. அழுகை அடக்கவியலாத விதத்தில் வெளியேறியது. வேகமாக நடந்து வீட்டிற்குள் தன்னை அடைத்துக் கொண்டார். தேம்பித்தேம்பி அழுதார்.

பத்து மணிவாக்கில் குளித்து புத்துணர்ச்சியடைந்தார். எதையோ நினைவு கொண்டவராய் மொட்டை மாடிக்கு சென்றார். இருளின் வழியே மலையைப் பார்க்க முயன்றார். இடைவெட்டாய் மனைவியின் நினைவு. அன்று காலை மனைவியின் புகைப்படத்திற்கு வைக்க மறந்த ரோஜாவின் நினைவும் உடன் எழுந்தது. பிரீட்ஜில் இருந்த கடைசி ரோஜாவை புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும் ஆணியில் வைத்தார். உடுத்தியிருந்த அனைத்து உடைகளையும் களைந்தார். அனுதினமும் சுத்தப்படுத்தி மட்டுமே வைக்கும் மெத்தையின் மையத்தில் படுத்தார். தலைமாட்டில் நாகராஜனுக்கு கொடுக்க வேண்டிய பதினான்காயிரத்து ஐநூறு ரூபாயை வைத்தார். மார்பின் மீது கைகளை கோர்த்துக்கொண்டு விஜயகுமார் கண்ணயர்ந்தார்.

கிருஷ்ணமூர்த்தி
krishik10@gmail.com

தரிசனம்

0

செந்தில்குமார் நடராஜன்

தே வானம்தான். இப்போது அடர்ந்த நீலநிறப் பின்னணியில் ஆரஞ்சுத் தீற்றல்களுடன் விடியத் தொடங்கியிருந்தது. இந்தக் குளிர் மனதுக்கு இதமாக இருந்தது. சிறிது நேரம் இமைகளை மூடியபடி புல்வெளியில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தேன். புல்லில் படர்ந்திருந்த ஈரம் மெதுவாக ஊடுருவி புட்டத்திலும், தொடைகளிலும் பரவியது. புற்களுக்கான பிரத்தியேக மணம் பனியில் கலந்து வீசிக்கொண்டிருந்தது. எனக்கு அஸ்தமனங்களை விட விடியல்களே மனதிற்கும் உடலிற்கும் நெருக்கமானவை. தலையை மேலே உயர்த்தி இரண்டு கரங்களாலும் முகத்தில் படிந்திருந்த மெல்லிய சோர்வின் படலத்தை வழித்தெடுத்தேன். நிலத்திலிருந்து கிளம்பும் பச்சை நிற  பனிமூட்டமாகி, பின்னர் நிறமிழந்து வானத்து நீலத்தில் கரைந்து கொண்டிருந்தது. என் மூச்சின் நீளம் அதிகரித்திருந்தது. உடல் ஓர் அப்பழுக்கற்ற கண்ணாடிக் குடுவைபோல் இருந்தது. அதன் புலன்களின் வழியே ஆரஞ்சு நிறக் குளிர் வேர்விட்டு, கிளைத்து உடலெங்கும் இறங்குவதை உணர முடிந்தது. மனதைக் கவிழ்த்துக் கொட்டிவிட்டு, பின்னர் அதில் வெறுமையை நிரப்பிச் செல்லும் இரவு நேரத்திற்குப் பிறகு என் உடல் நிச்சயம் எடையினை இழக்கிறது. அது பொருண்மை சார்ந்தது இல்லை. ஆனால் என்னால் அதை  உணர முடிகிறது.

என்னைப் போன்ற ஒரு தோல் வியாதிக்காரனுக்கு இந்த விடியல் தரும் ஆறுதல் தவிர்க்க இயலாதது. என் சட்டையை கழற்றிவிட்டு, புற்களில் முதுகினை சாய்த்துப் படுத்துக்கொண்டேன். இரண்டு கைகளையும் நீட்டி இந்த விடியலை ஒரு போர்வை போல இழுத்துப் போர்த்தியபடி கண்களை மீண்டும் மூடிக்கொண்டேன். சட்டென்று தூரம் சுருங்கிவிட்டது. என் முகத்திற்கு அருகில் ஆரஞ்சும் நீலமும் கலந்த மேகங்கள் நதியைப் போல தவழ்ந்தன. கறுத்துக் கிளைத்திருந்த மரங்கள் ஈரம் சொட்டச்சொட்ட அந்த மேகங்களின் மீது மிதந்து சென்றன. நெற்றிப் பரப்பில் நாரைக் கூட்டம் ஒன்று பறந்து சென்றது. அதன் அடிவயிற்றில் படர்ந்திருக்கும் மென்மையான மயிர்கள் காற்றில் அலைவது என் முகத்தில் ஒருவிதமான குறுகுறுப்பைத் தந்தது. என் சொரசொரப்பான தோலுக்கு ஒரு மிருதுத்தன்மை கூடியிருந்தது. உள்ளங்கை முழுவதும் இருந்த செதில் செதிலான வெடிப்புகள் மயிலிறகுகள் போல் நெகிழ்ந்து இருந்தன. முகத்தில் தொடங்கி என் கைகளுக்கு எட்டும் இடங்கள் வரை உடலெங்கும் அந்தக் குறுகுறுப்பை ஊர்ந்திடச் செய்தேன். இந்த நேரத்தில் மட்டும்தான் புற்களில் ஏறி விளையாடும் பனியில் நனைந்த எறும்புகள் என் உடலின் மீது எந்த வன்முறைகளையும் ஏவுவதில்லை. அப்படியே உடலை அசைக்காமல் ஒரு மாடுபோல வெகுநேரம் அந்தப் புல்தரையில் கிடந்தேன். என் மூடிய இமைகளுக்குள் பெயர் தெரியாத வண்ணங்கள் அலைந்து கொண்டிருந்தன. ஆரஞ்சு வெளிர் நீலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஒளியேறியபடி இருந்தது. அந்த வெம்மை தோள்களின் வெடிப்புகளில் இதமாக நுழைந்து பின்னர் உறைந்திருக்கும் இரத்தத் திட்டுக்களைப் பிளந்து உள்ளே இறங்கி நரம்புகளை உசுப்பத் தொடங்கியது. நீண்ட ஊசிகளின் மெல்லிய கூர்கள் மெதுவாக வலியை பெயர்த்து மூளைக்கு அனுப்பத் தொடங்கின. இமைகளுக்குள் மேகங்கள் உடைந்து நீர் திரண்டது. அவ்வளவுதான். என் இன்றைய நாளின் இதமான இறுதி நிமிடங்களுக்குள் நுழைந்து கொண்டிருந்தேன்.

இந்தச் சின்ன விடுதலை என்பது எனக்கு விடியலில் மட்டுமே தான் சாத்தியம். ஒருநாளில் விடியலுக்குப்பின் இத்தகைய விடுதலை என்பது இதே ஆரஞ்சுத் தீற்றல்களோடு அஸ்தமிக்கும் மாலை நேரத்தில்கூட சாத்தியமில்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில் உடலின் சொரசொரப்பும் மனதின் எடையும் கூடத் தொடங்கிவிடும். உடலுக்கு உள்ளேயும் வெளியிலும் புழுக்கள் நெளிவது போன்ற ஓர் அவஸ்த்தை சூழ்ந்துகொள்ளும். வெளிச்சம் என் தோலில் படுவதிலிருந்து ஒளிந்துகொள்ள இங்கும் அங்கும் ஓடவேண்டும். கிடைக்கும் அன்பை மறுத்து அழவேண்டும். நான் எந்நேரமும் கவனிக்கப்படுவேன். சாப்பிடுவது தொடங்கி மலம் கழிப்பது வரை கண்காணிக்கப்படுவேன். நான் ஏதும் செய்துகொள்வேனோ என்ற பயத்தால் என் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்படும். என்னைத் தவிர எல்லோருக்கும் நான் முக்கியம். என்னை யாரும் பார்ப்பதை நான் விரும்புவதில்லை. நான்கூட என்னைப் பார்க்க விரும்புவதில்லை. நான் பார்க்க விரும்புவது இந்த விடியலை மட்டும்தான். விடியும் விடியாத இன்றைய அதிகாலை நேரத்தில் நான் என் உடலை இந்த இயற்கைக்கு ரகசியமாக கடைசியாக ஒருமுறை காட்சிப்படுத்த விரும்புகிறேன். ஆமாம். கடைசியாகத்தான். அதன் பிறகு சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும். இயன்றவரை மைதிலியோடும், மியாவுடனும் மீதமிருக்கும் இன்றைய நேரத்தைக் கழிக்க வேண்டும். இமைகளைத் திறந்தேன். நிதானமாக பாக்கெட்டிலிருந்து குப்பை போல கசங்கியிருந்த அந்தக் கவரை எடுத்தேன். சிறிய வெளிர் நீலநிறக் கண்ணாடிக் குப்பியின் உள்ளே என் நிரந்தர விடுதலை அடர் திரவமாக சின்னக் கடலைப் போல தளும்பிக் கொண்டிருந்தது. இன்னும் சில மணிநேரங்கள்தான். வானம் அப்பட்டமான நீலத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தது. சட்டென்று குப்பியைத் திறந்து வாயில் கவிழ்த்தேன். இன்னொரு பிறப்பிருந்தால் விடியல் நேரடியாக இரவில் முடியும் ஒரு பிரதேசத்தில் பிறக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். என்னுடைய வானத்திற்கு கடைசியாக ஒருமுறை என் நன்றியை தெரிவித்தேன். ஓங்கி அழவேண்டும் போல இருந்தது. வைராக்கியமாக கட்டுப்படுத்திக்கொண்டேன். இந்த நிமிடத்தை இப்போதே மறக்க வேண்டும்.

அவசர அவசரமாகச் சட்டையை அணிந்து கொண்டேன். அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த மியாவின் சங்கிலியை அவிழ்த்துக் கைகளில் சுற்றிக்கொண்டேன். பூங்காவிற்குள் ஆட்கள் வரத்தொடங்கினர். பூங்கா வாசலில் பொக்கே கடை வைத்திருப்பவன் ஒரு பெரிய மலர்களின் பொதியுடன் வழக்கமான வேகத்தில் என்னைக் கடந்து சென்றான். ஓர் இடத்திலிருக்கும் மென்மையை இன்னொரு இடத்திற்கு பிடுங்கி எடுத்துச் செல்வது எவ்வளவு பெரிய வன்முறை? இப்போது எனக்கு எதையும் பார்க்கப் பிடிக்கவில்லை. விடுவிடுவென நடக்கத் தொடங்கினேன்.

மியா தன் வாலை ஆட்டியபடி என் கால்களை உரசியபடி என்னோடு நடக்கத் தொடங்கினாள். அவளுக்குத் தெரியும். நான் அதிகாலை வேளையில் அவளை உதைத்துத் தள்ளுவதில்லை. மியா ஷோலோ ப்ரீட் மயிரிலி நாய். இவளை நான் தேர்வு செய்யவில்லை. அவளாகவேதான் என்னைத் தேர்வு செய்தாள். என்னிடம் உதைபடும் நேரங்களில் மட்டும்தான் மைதிலியிடம் ஓடுவாள். அதுவும் ஓரிரு நிமிடங்கள்தான். மற்ற நேரங்களில் என்னுடன்தான் இருப்பாள். மியாவின் முகத்தைப் பார்த்ததும் வயிற்றுக்குள் ஏதோ உருளத்தொடங்கியது. புல்தரையில் ஒரு முழங்காலில் மண்டியிட்டு கைகளை நீட்டினேன். ஆவேசமாக என்னை நோக்கித் தாவியவள் தன் உடலை வளைத்து வளைத்து என் கைகளை உரசியபடி இடதும் வலதுமாய் அலைந்தாள். விரல்களை ஆவேசமாக நக்கினாள். சற்று கூடுதலாக வெடித்திருந்த செதில்கள் பிளந்து எரிச்சலைத் தந்தன. அவளைப் பக்கத்தில் இழுத்து வழவழப்பான அவள் உடலைத் தடவினேன். அவளுக்குத் தேன் வழியும் டார்க் சாலேட் நிற உடல். நக்குவதை நிறுத்திவிட்டு தன் உடலை வளைத்து என் கால்களை இன்னும் அழுத்தமாக உரசினாள். அப்புறம் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதுபோல என்னிடமிருந்து மீண்டும் மீண்டும் விலகி ஓடிவிட்டுத் திரும்பினாள். சங்கிலியின் பரவும் அழுத்தம் என்னை வீட்டுக்குப் போகலாம் வா என்று அழைப்பதைப் போல் இருந்தது. ஒருவேளை அவள் நாம் சீக்கிரம் இந்த இடத்தைவிட்டு போய்விட வேண்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். எழுந்து புல்வெளியை ஒட்டியிருந்த சிமெண்ட் பாதையில் நடக்கத்தொடங்கினேன். தூரத்தில் விக்ரம் தன் வழக்கமான மரபெஞ்சில் உட்கார்ந்து இருந்தான்.

விக்ரமுக்கு  இருபத்தைந்து வயது இருக்கலாம். கண்ணில் அணிந்திருக்கும் கருப்புக் கண்ணாடியையும், பக்கத்தில் மடித்து வைத்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கையும் கவனிக்காதவர்கள் அவன் பார்வை இல்லாதவன் என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லை. பார்வையற்றவர்கள் பற்றி நம் மனதில் விரியும் எந்தவிதமான பிம்பங்களுக்கும் சற்றும் பொருந்தாத நேர்த்தியான தோற்றம் விக்ரமுக்கு உண்டு. தன் இயற்கையான உடலமைப்புக்கு அப்பாற்பட்டு புறத்தோற்றம் பற்றிய பிரக்ஞை உள்ள ரசனைக்காரர்களுக்கே உரித்தான நேர்த்தி அது. ஒருவேளை இவனை கவனித்துக் கொள்வதற்கு என்றே வீட்டில் வேலை ஆட்கள் இருக்க வேண்டும். மிகவும் திருத்தமான ஷேவ் செய்யப்பட்ட முகம் தொடங்கி, கத்தரிக்கப்பட்ட நகங்கள், எப்போதும் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கும் சிகை அலங்காரம் வரை அவ்வளவு துல்லியமான திருத்தத்துடன் இருப்பது அவ்வளவு எளிதில் சாத்தியப்படாதது. அவன் அணிந்துவரும் டார்க் நிற ஜீன்ஸ்களும், அதற்கு ஏற்றாற்போல் அணிந்துவரும் வெளிர்நிற ஷர்ட்களும் மட்டுமல்லாமல், அதற்குப் பொருத்தமாக அவன் அணிந்து வரும் சாக்ஸ் வரை எதிலுமே ஆடம்பரம் இல்லை. ஆனால் மிகத்துல்லியமான ரசனை உணர்வு உண்டு. அவனைக் கடந்து செல்லும் சில வினாடிகள் வீசும் அந்த நறுமணம் பற்றி எனக்கு எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. இதையெல்லாம் விட அவன் முகத்தில் எப்போதும் ஒட்டியிருக்கும் அந்தப் புன்னகை, அவனைக் கடந்து செல்லும் எவருடைய முகத்திலும் நொடிநேர பரவசத்தைத் தந்துவிடும். அங்கு உட்கார்ந்திருக்கும்போது இந்தப் பூங்காவும், மரபெஞ்சும் அவனுக்காகவே படைக்கப்பட்டது போன்ற உடல்மொழியுடன் இருப்பான். முதலில் அது கொஞ்சம் எரிச்சலாக இருந்தாலும், பின்னர் எல்லோரையும் வசீகரித்துவிட்டது. அவனைப் பொறுத்தவரை வசீகரம் என்பது எப்படியானது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஓர் ஆண் இன்னொரு ஆணை இவ்வளவு தூரம் கவனிக்க வைக்க முடியுமா என்று யோசிக்கும் அளவு அவனை கவனித்திருக்கிறேன். எனக்குள் சின்னதாக அவன் தோற்றம் பற்றிய ஒரு பொறாமையும் உண்டு.

ஆரம்ப நாட்களில் அவனருகில் வந்ததும் அனிச்சையாக என்னையே ஒரு முறை பார்த்துக் கொள்வேன். என் கசங்கிய சட்டையும், பொருத்தமில்லாத பேண்ட்டும், அழுக்கேறி ஒழுங்கற்று வளர்த்திருக்கும் நகங்களும், ஷேவ் செய்யபடாத முகமும் ஒருவித அசூயையைத் தந்தன. உடலில் ஏதோ கெட்டவாடை வீசுவதுபோல இருக்கும். குளிக்கும்போதும், உடைகளை அணிந்து கொள்ளும்போதும் ஏற்படும் வலியைவிட என் தோற்றத்தினால் வரும் அசூயை அவ்வளவு வலி மிகுந்தது இல்லை. இவனுக்கென்ன, பார்வையைத் தவிர இவனுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. தினமும் காலையிலேயே இங்கு வந்து உட்கார்ந்து பாடத்தொடங்கி விடுகிறான். அதற்கப்புறம் எங்கே போவானோ? ஆனால் என்னால் ஒரு மணிநேரம் இல்லை, ஒரு நிமிடம்கூட வேதனையின்றி பகலை நகர்த்த முடியாது. என் நிலை குறித்து கொஞ்சம் கூடுதலாய் நான் வெளிப்படுத்தும் சுயகழிவிரக்கம் தரும் சின்ன ஆறுதலுக்குப் பழகியிருந்தேன். இந்த வேதனையெல்லாம் அவனுக்கு இருக்கப்போவதில்லை.

“சார்! சுந்தர் சார். வாங்க சார். என்ன சார் இன்னைக்கு லேட்டா?”

வாட்சை பார்த்தேன். ஆமாம். இன்று வழக்கமான வீடு திரும்பும் நேரத்தை விட கொஞ்சம் தாமதமாகவே திரும்புகிறேன். அவன் தோராயமாகவோ அல்லது பேச்சு வாக்கிலேயோ தான் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். முதலில் என் பெயர் சுந்தர் இல்லை. அதிலொன்றும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அவன் பேசுவது என்னிடம்தான். இன்னொன்று, அவன் பெயரும் விக்ரம் இல்லை. என் நாய்க்குட்டி பெயரும் மியா இல்லை. அவன் தான் எனக்கும் மியாவிற்கும் பெயர் வைத்தது. அதே போலத்தான் நானும் அவனுக்கு விக்ரம் என்று பெயர் சூட்டியிருந்தேன். ஒரு சாயலில் பார்ப்பதற்கு அந்தக் கால கமல் மாதிரிதான் இருப்பான். ஆனால் அவன் எப்படி எனக்கு ஆணின் பெயரையும், என் நாய்க்குட்டிக்கு பெண்ணின் பெயரையும் வைத்தான் என்றுத் தெரியாது. ஒருவேளை எங்கள் இருவரின் தோற்றம் பற்றி இந்தப் பூங்காவில் இருக்கும் வேறுயாராவது அவனுக்குச் சொல்லியிருக்கலாம். இதுவும் என் யூகம்தான்.  ஏனென்றால் நான் இதுவரை அவனிடம் பேசியது கூட கிடையாது.

இந்தப் பூங்காவிற்கு விக்ரம் இரண்டு மாதங்களாகத்தான் வரத் தொடங்கியிருக்கிறான். அதற்கு முன் அவனை இந்தச் சுற்றுவட்டாரத்தில் நான் பார்த்ததில்லை. தினமும் நான் பூங்காவிலிருந்து வெளியேறும் நேரத்தில் இதே மரபெஞ்சில் உட்கார்ந்திருப்பான். யாருக்காக வருகிறான், யாருக்காகக் காத்திருக்கிறான் என்றெல்லாம் தெரியாது. நான் அவனை எப்போது கவனிக்கத் தொடங்கினேன் என்றெல்லாம் கூட சரியாக நினைவில் இல்லை. நான் அவனைக் கவனிக்கத் தொடங்கிய நாட்களில், அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தை நெருங்கும்போது என் திசையைப் பார்த்து சினேகத்தோடு திரும்புவான். என் காலடி ஓசையையோ அல்லது மியாவின் சப்தத்தையோ வைத்துத்தான் எங்கள் வருகையை அவன் கண்டுபிடித்திருக்க வேண்டும். சில நாட்களில் எங்களையும் அறியாமல் என் முகமும் அவன் முகமும் ஒரே நேர்கோட்டில் இருப்பது போல சந்தித்துக் கொள்வோம். ஒருநாள் அவன் உட்கார்ந்திருக்கும் இடத்தைக் கடக்கும்போது திடீரென்று “சார்! வாங்க சார்”, என்றான். பின்னர் மியாவின் திசையில் தோராயமாக தன் ஒரு கையை நீட்டி விரல் நுனிகளை குவித்து ஒன்றோடு ஒன்று உரசி, “ஹலோ பப்பி. மியா பப்பி…”, என்று கொஞ்சத் தொடங்கினான். முதலில் நான் அவனைக் கவனிக்காதது போலத்தான் கடந்து சென்றேன். ஆனால் மியா அவனை நெருங்கத் தொடங்கினாள். மியாவுக்கு அவன் சூட்டிய அந்தப் பெயர் பிடித்துவிட்டது. பின்னர் தினமும் மியாவுடன் அவன் விளையாடுவதை எப்படியாவது உறுதிசெய்து கொண்டான். ஒருநாள் மியாவுடன் விளையாடிக் கொண்டே “சார்! மியா எவ்ளோ நல்ல பேர்ல”, என்றவன், “உங்க பேர் கூட நல்ல அழகான பெயர்தான் இருக்கணும் சார். இந்த பிரபு, சுந்தர் இப்படிங்கிற மாதிரி.” மியாவின் கழுத்தை அணைத்தபடி நிமிர்ந்தவன் திடீரென்று, “சார்! உங்களுக்கு சுந்தர்ங்கிற பேரே இருக்கட்டும் சார்.” என்றபடிச் சத்தமாகச் சிரித்தான். இப்படித்தான் எனக்கு பெயர் வைக்கும் வைபோகம் மியாவின் முன்னிலையில் மிக எளிமையாக நடந்து முடிந்தது. எனக்குச் சூட்டப்பட்ட பெயர் பொருத்தமாக இல்லாவிட்டாலும் பிடித்திருந்தது. தவிர, அதை மறுப்பதற்காகக் கூட அவனிடம் பேச விரும்பவில்லை.

ஆனால் அந்த நாளுக்குப் பிறகு, நான் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் என் நடையின் வேகத்தைக் கொஞ்சம் அவனுக்காகக் குறைத்துக் கொண்டேன். மியாவுக்கு விக்ரமோடு விளையாட அதிக நேரம் கொடுக்கத் தொடங்கினேன். உடல் எரிச்சலைப் பொறுத்துக் கொண்டேன்.

எனக்கு அவனை அவமானப்படுத்தும் எண்ணமெல்லாம் இல்லை. இருந்தாலும் ஏனோ அவனிடம் பேசத் தோன்றவில்லை. ஒரு சபிக்கப்பட்டவன் இன்னொரு சபிக்கப்பட்டவனிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது? அவன் பார்வையற்றவன் என்ற இரக்கம் இருந்ததாலோ என்னவோ என்னையும் அறியாமல் என் முகத்தில் பரவும் ஒரு புன்னகையோடு கடந்துவிடுவேன். என்மீது எறியப்படும் இரக்கத்தை கொஞ்சம் அவன் மீதும் எறிவேன். இருந்தாலும், நாளடைவில் எந்த விதத்திலும் அவனைப் போய்ச் சேராத புன்னகை என்னை என்னவோ செய்யத் தொடங்கியது. அப்படி அவனைப் பார்த்துப் புன்னகைப்பதும் சீக்கிரமே நின்றுவிட்டது. அவனுக்கும் மியாவுக்கும்தான் தொடர்பு என்பதுபோல நடந்துகொள்ளத் தொடங்கினேன்.  அவனுக்கு மியாவை தொடுவதில் அவ்வளவு பரவசம். விக்ரம் தன் முகத்திற்கு நேராக மியாவின் முகத்தை இழுத்து விளையாடும்போதும், அவள் முதுகெங்கும் சற்று அழுத்தமாய் வருடி விடும்போதும் அவள் அவனோடு அன்யோன்யமாய் குழைந்தபடி நிற்பாள். தன் பங்கிற்குத் தானும் முகத்தால் எக்கி எக்கி அவனோடு ஏதேதோ பேசுவாள். ஒருவேளை, அவன் சிரிப்பும், தொடுதலும், அவன் கைகளின் வழியே தரும் அழுத்தங்களும் அவளுக்குப் புரிந்திருக்கலாம். அல்லது மியா அவள் மீது நான் செலுத்தும் வன்முறைகளைப் பற்றி விக்ரமிடம் முறையிட்டிருக்கலாம். அவர்கள் உரையாடலில் நான் நுழைந்ததில்லை. மற்றபடி நான் அவனை விலகி நிற்பதும், அவனோடு பேசாமல் இருப்பதும் தொடர்ந்தபடியே இருந்தது.

“சார்! சுந்தர் சார். என்ன சார்… மியா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கா, ஏதும் விசேஷமா சார்?”
இன்றும் அப்படித்தான். அவன் கேள்விக்கு வழக்கம் போல் மௌனமாய் இருந்தேன். அவனும் தினமும் என்னை அவனோடு பேசவைக்க முயன்றுகொண்டே இருக்கிறான். நான் அவனிடம் பேசத்தொடங்கினால் ஒளிந்து வாழ விரும்பும் என் துயரைச் சொல்ல வேண்டியது வரும். ஒருவேளை அவன் துயரங்களை கேட்கவேண்டிய நிலையும் வரலாம். அதிகாலையில் மட்டும் வெளியுலகை பார்க்க விரும்பும் என் துயரைவிட, ஒரு காலத்திலும் வெளியுலகை பார்க்கவியலாத ஓர் அதிதுயரத்தை நான் கேட்க விரும்பவில்லை.

“சார்! நேத்து ஒரு கனவு கண்டேன் சார். என்னன்னு கேளுங்களேன்?”

விக்ரம் சுவாரசியத்தை வளர்க்க விரும்புகிறான். இருளைப் பற்றிய அவனுடைய கற்பனையானதொரு சித்திரத்தில் என்ன சுவாரசியம் இருந்துவிடப்போகிறது? இருந்தாலும் அவன் என்னவெல்லாம் தன் கனவில் பார்த்திருப்பான் என்ற ஒரு குறுகுறுப்பு சட்டென்று வந்து போனது. ஆனால் அவனிடம் இதைச் சாக்காக வைத்து அவனோடு பேச்சைத் தொடங்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. நான் இன்று சீக்கிரம் வீட்டுக்குப் போகவேண்டும். என் நேரம் குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் அதற்குமுன் அவன் கனவுக்குள் நுழைந்து பார்க்கும் ஆசை கொஞ்சம் எட்டிப் பார்த்தது. அவனிடம் கேட்பதற்கு தயக்கமாக இருந்தது. நாமே நினைத்துப் பார்க்கலாமே என்று என் கண்களைக் கொஞ்சநேரம் மூடிகொண்டேன். எதை என் கனவில் தவிர்க்க நினைத்தேனோ அதுவே காட்சிகளாக விரிந்தன. புழுக்கமான சிறிய அறை. எப்போதும் வெளிச்சத்தை அள்ளி வீசிக் கொண்டிருக்கும் ஜன்னல். கட்டில் வரை வந்துவிட்டு பின் வாசலுக்கு போய் யாரையோ பார்த்துக் குரைக்கும் மியா, தண்ணீர் நிரம்பிய பாத்திரத்துடன் தோளில் வெள்ளை நிறத் துண்டை போட்டபடி அறைக்குள் நடந்துவரும் மைதிலி என மாறி மாறி காட்சிகளாக வந்தன. தலையைச் சிலிர்த்துக்கொண்டு கண்களைத் திறந்தேன். என்னால் நான் விரும்பும் ஒரு கனவைக்கூட காணமுடியவில்லை. என்னை ஆசுவாசப்படுத்தும் இந்த அதிகாலையின் காட்சிகூட என் கனவில் வராததை நினைத்து வெட்கமாக இருந்தது. என் மனம் என்னைத் தொல்லைபடுத்தும் காட்சிகளால் நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. விக்ரமைப் பார்த்தேன். அவன் இமைகளின் படபடப்பில் பரவசம் தளும்பியது. நான் அவனைப் பார்த்தபடி காத்திருந்தேன். அவன் எனக்காகக் காத்திருக்கவில்லை.

“சுந்தர் சார்! கேளுங்க. என் கனவுல நீங்கதான் வந்தீங்க. பளபளன்னு இருந்த மியாவை சங்கிலியால் பிடித்துக்கொண்டு அரண்மனையிலிருந்து நகர்வலம் வரும் வரும் ராஜா போல இருந்தீங்க”
சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தேன். இந்த முறை எதிர்பாராத தாக்குதலை என் மீது நிகழ்த்திவிட்டான். என்னை ஒரேயடியாய் தூக்கி விசிறியடித்து வீழ்த்தும் ஆயுதம். அவன் கனவில் நான் வந்ததாகச் சொல்வது கூட ஆச்சர்யமில்லை. “அரண்மனையிலிருந்து நகர்வலம் வரும் ராஜா போல இருந்தீங்க”, என்பதுதான் என்னை நிலைகுலைத்துச் சாய்த்துவிட்டது. என் மனதிற்குள் நிறைந்து கிடக்கும் எந்தவிதமான பிம்பங்களிலும் தென்படாத ஒரு காட்சி. உடையையே விரும்பாத ஒரு ராஜா இருக்கிறாரா? நான் வெளிச்சத்தைக் கண்டு ஓடி ஒளியும் ராஜாவை பார்த்ததே இல்லை. இவன் வெளிச்சத்தையே பார்த்ததில்லை. நினைத்துப் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும், எது இந்த கனவை அவனுக்குச் சாத்தியப்படுத்தியிருக்கும் என்பதை யோசித்தால் கிளர்ச்சியாக இருந்தது. இவன் என் நேரத்தைத் தின்கிறான். நான் மைதிலியைப் பார்க்கவேண்டும். இருந்தாலும் மனம் நகர மறுத்தது.

இருந்தும், அவனிடம் பேசும் தயக்கம் உடைபடுவதை ஏதோவொன்று தடுக்க எனக்குள் முயன்று கொண்டிருந்தது. எனக்கு இப்போதே மைதிலியை பார்க்க வேண்டும். அவள் மடியில் படுத்து அழவேண்டும். அவளிடம் என் மன்னிப்பைக் கேட்கவேண்டும். இவன் வேறு ஏதேதோ பேசி என்னை இங்கேயே நிறுத்துகிறான். மீண்டும் கண்களை மூடினேன். இவன் சொல்லும் ராஜாவாக என்னை வலிந்து நினைத்துப் பார்த்தேன். மங்கலான வெளிச்சத்தில் கம்பீரமாக ஒரு பெரும் மக்கள் கூட்டதிற்கு மத்தியில் நடந்து வருகிறேன். சில நொடிகள்தான். அந்தக் காட்சி தந்த பரவசம் என்னை ஏதோ செய்தது. அழவேண்டும் போல் இருந்தது. நேரம் சுருங்கிக்கொண்டே இருந்தது. இப்போதே யாரிடமாவது சொல்லவேண்டும் போல இருந்தது. மியாவுக்கு நான் சொல்வது புரியலாம். மைதிலியிடம் சொல்ல வீடு வரை போகவேண்டும். விக்ரமின் முகத்தைப் பார்த்தேன். அப்பழுக்கற்ற முகம். அவன் இமைகள் துடித்துக்கொண்டே இருந்தன. எவ்வளவு அழகாக இருக்கிறான். முகம் தெரியாத மனிதர்களிடம் அன்பைப் பகிர்ந்துகொள்ள எவ்வளவு அழகான ஒரு மனநிலை வேண்டும். நான் ஏன் இவனை நிராகரிக்கிறேன். இன்று இந்தப் பூங்காவிலிருந்து வெளியேறும்போது எதை எடுத்துக்கொண்டு செல்லப் போகிறேன்? எதை இங்கே விட்டுவிட்டுப் போகப்போகிறேன்? எனக்கு ஏனோ இப்போது அவன் கைகளை முத்தமிடவேண்டும் போல இருந்தது. நான் பேசித்தான் ஆகவேண்டும். அவன் தெரிந்தே தான் என் பலவீனத்தை தொட்டுவிட்டான். இவனை நெருங்கியிருக்கக் கூடாது. இந்த நாளைவிட்டால் இனி இவனுடன் பேச வாய்ப்பிலாமல் போகலாம்.
“ஏழு வருடங்களாக மைதிலியும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.”

பேசியே விட்டேன். மியா என்னை ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு அவளுக்குச் சம்மந்தம் இல்லாதது போல தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். நான் அவனை பார்த்துக்கொண்டே இருந்தேன். இதுவரை நான் அவனைப் பார்ப்பதாலும் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அவனும் என்னைப் பார்ப்பது போல இருந்தது.

“சுந்தர் சார்!”, விக்ரமின் குரலில் பரவசமும் பற்றிக்கொண்டது. பேசியது என் குரல்தான் என்பதில் அவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவன் குரலில் இருந்த ஏதோ ஒரு மாற்றம் அதை நான் பரிபூரணமாக நம்பும்படிச் செய்தது. அவன் என்னை அடையாளம் கண்டுவிட்டான். இப்போதில்லை. எப்போதோ அடையாளம் கண்டுபிடித்துவிட்டான். அவனுக்கே தெரிந்திராத எனக்காகத்தான் இந்தனை மாதங்களாக அவன் இங்கே வருகிறானோ என்னவோ?

என் கால்கள் தடுமாறுவது போல இருந்தன. நான் இப்போது உட்கார வேண்டும். அவனை விக்ரம் என்று பெயர் சொல்லி அழைக்கத் தயக்கமாய் இருந்தது. அது சுந்தர் அவனுக்குச் சூட்டிய பெயர். கையில் வைத்திருந்த தண்ணீரை அவசர அவசரமாகக் குடித்தேன். நான் முதன்முறையாகத் அவனிடம் தோற்கிறேன் என்ற எண்ணம் வந்தது. உண்மையில் அப்படி இல்லைதான். ஆனாலும் அப்படி நினைத்துக் கொண்டேன். அதுவும் மனதுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. மெதுவாகத் தயங்கியபடி நடந்து அவனை முன்னேறினேன். அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். அந்தப் பூங்காவில் இருந்த எல்லோரும் என்னையே பார்ப்பது போலவும், நான் பேசப்போவதை கேட்கக் காத்திருப்பது போலவும் இருந்தது. அநேகமாக தலையைக் குனிந்தபடி அவனருகில் உட்கார்ந்திருக்கும் என்னைத்தான் அவன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நிமிர்ந்து பார்க்காமல் மெதுவாக அவன் கையைத் தொட்டேன்.

“உண்மைதான் விக்ரம். ஏழு வருடங்களாக மைதிலியும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.”
விக்ரமின் விரல்கள் பனியில் நனைந்த புற்களைப் போல அவ்வளவு மிருதுவாக இருந்தன. மெதுவாக நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தேன். அவன் மூடிய இமைகள் துடிப்பதிலிருந்து என்னால் எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. அதற்கெல்லாம் அவசியமோ நேரமோ இல்லை. அவன் தன் மற்றொரு கையால் அவனைப் பற்றியிருந்த என் விரல்களைத் பற்றிக்கொண்டான். இதுதான். இந்தத் தருணத்தைத்தான் நான் ஆயுள் முழுவதும் தவிர்க்க விரும்புகிறேன். நல்லவேளையாக விக்ரமால் இந்தச் சொரசொரப்பைப் பார்க்க இயலாது. குறைந்தபட்சம் இவனது இரக்கம் என்னைத் தொட்டதற்குப் பிறகே தொடங்கப் போகிறது.
*
காற்றில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. அதற்குப்பின் உடலை மென்மையாகத் தழுவும் இதமான வெயில் தொடங்கிவிடும். இங்கிருந்து கிட்டத்தட்ட ஐம்பது அடிகள் நடந்தால் பூங்காவின் வாசலை அடைந்துவிடலாம். அங்கிருந்து வலதுபக்கச் சாலையில் திரும்பி ஓர் இருபத்தைந்து அடிகள் எடுத்துவைத்தால் பொக்கே கடை. கால்களில் சில்லென்று படரும் ஈரத்தையும், முறிக்கப்பட்ட கிளைகளின் பச்சையத்தையும் பல்வேறு மலர்களின் வாசனையையும் பெருமூச்சாய் இழுத்து மனதில் தேக்கிவைத்துக் கொள்ளலாம். எனக்குப் பார்வை இல்லை என்பதாலோ என்னவோ என் பேரை கொஞ்சம் சத்தமாகத்தான் அந்தக் கடைக்காரர் அழைப்பார். என்னால் நன்றாகக் கேட்க முடியும். பார்வை உள்ளவர்களை விடவும் துல்லியமாக ஒலியின் வேறுபாடுகளை என்னால் உணரமுடியும். ஆனால், கடைக்காரர் என் மீது கொஞ்சம் கூடுதலான அக்கறையைத்தான் இப்படி கொஞ்சம் சத்தமாகக் காட்டுகிறார். என்னிடம் தினமும் பூங்கொத்தைத் தரும்போது ஒரு குழந்தையை கொடுப்பது போல அதை ஒரு காகிதத்தில் சுற்றி, என் ஒரு கையில் சாய்த்து, என்னுடைய இன்னொரு கையால் அந்தப் பூங்கொத்தை அணைத்துக்கொள்ளச் செய்வார். ஒவ்வொரு நாளையும் இனிமையாக்க இதுபோன்ற பரிவையும், என் மேல் செலுத்தப்படும் அன்பையும்விட வேறென்ன ஒன்று தேவையாய் இருந்துவிடப்போகிறது. இப்போது அந்தப் பூங்கொத்தின் காகிதம் சுற்றப்பட்ட அடிப்பாகம் மாதிரிதான் என்னைப் பற்றிக்கொண்ட சுந்தர் சாரின் கை இருந்தது.

சுந்தர் சார் கூப்பிடும் “விக்ரம்” நானாகத்தான் இருக்க வேண்டும். இன்னொரு அழகான பெயர். நாட்களைக் கிழித்து வீசுவதைப் போல பெயர்களைக் கிழித்து வீசினாலும் நன்றாகத்தானே இருக்கும். ஒவ்வொரு நாளும் புதிய புதிய பெயர்கள். நான் தொடுவதன் வழியே புரிந்துகொள்ளும் உருவங்களும், கேட்கும் குரல்களும், சுவைகளும் அதிக வித்தியாசங்களைத் தர இயலாமல் ஒரு கட்டத்தில் சலித்துவிடுகின்றன. புதிது புதிதான அடையாளங்களின் வழியாக அவை தன் பரவசத்தை நீட்டித்துக் கொள்வது எனக்கு எவ்வளவு இதமானதாக இருக்கிறது.

“சுந்தர் சார்! உங்கள் கையைப் பிடித்திருப்பது பொக்கேயை பிடித்திருப்பதைப் போல இருக்கு. மைதிலி மேடம் இதையும் சொல்லியிருக்காங்களா?”

சுந்தர் சாரிடம் இருந்து பதில் வரவில்லை. மியா கொஞ்சம் தள்ளி விளையாடிக் கொண்டு இருக்கவேண்டும். தேவையான அளவு நிசப்தம் சூழ்ந்திருந்தது. ஓர் அசைவு புலப்படவேண்டும் அல்லது அவர் குரலாவது கேட்கவேண்டும். என்னால் அடுத்த கேள்விக்குப் போக முடியவில்லை. இப்போது நிச்சயம் சுந்தர் சார் பேசுவார் என்று தோன்றியதால் காத்திருந்தேன்.

சற்று நேரத்திற்குப் பிறகு ஒரு மெலிதான விசும்பல் மட்டும் கேட்கத் தொடங்கியது. மியா சங்கிலியை தரையில் இழுத்தபடி வருவதும் போவதுமாக இருந்தாள். சுந்தர் சார் தான் பிடித்திருந்த என் கையை இறுக்கினாரா அல்லது தளர்த்தினாரா என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் அந்தத் தொடுதலில் ஒருவிதமான ஏக்கத்தின் சாயல் இருந்தது.

“விக்ரம், உண்மையாவே நான் உன் கனவில் வந்தேனா? அதுவும் நகர்வலம் வரும் ராஜாவைப் போல? மியாவுடனா?”

அவர் குரல் கொஞ்சம் குழைவது போல் இருந்தது. காலையில் வாங்கும் மலர்களில் மதியம் தென்படும் ஒரு குழைவைப் போல் அந்தக் குரல் இருந்தது. மனிதனின் குரலில் எவ்வளவு நுட்பங்கள் ஒளிந்திருக்கின்றன? இந்தக் குழைவால் சோகம், நெகிழ்ச்சி, நன்றி, ஏக்கம் என எவ்வளவு உணர்வுகளை கடத்திவிட முடிகிறது. என்னால் சுலபமாக அவர் உணர்வைக் கேட்க முடிகிறது. நான் இப்போது சொல்லவேண்டும். என் கனவை சுந்தர் சாரின் மொழியில் சொல்லவேண்டும். அவர் என்னிடம் கேட்பது நான் பார்த்ததை இல்லை. அவர் பார்க்க விரும்புவதை. நான் ஒரு சித்திரத்தை என் பேச்சின் வழியாக அவருக்கு வரையவேண்டும். அந்தச் சித்திரம் நான் தொட்டு உணர்ந்த முப்பரிமாணங்களை, எனக்கு அறிமுகம் இல்லாத இருபரிமாணக் காட்சிகளில் வரைவது போல இருக்கவேண்டும்.

“ஆமாம் சார். இந்த பூங்காவைப் போன்ற பெரிய அரண்மனை அது. அங்கு நான் நடக்கும் நடைபாதையெங்கும் சீராகச் சமன் செய்யப்பட்டு இருந்தது. எனக்கு எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று நீங்கள் சொல்லியிருந்தீங்களாம். எனக்குத் தெரியும் சார். நான் உங்களைப் பார்ப்பதற்காக விடியலுக்கு முன்பே வந்துவிட்டேன். குளிர் அதிகமாக இருந்தது. என்னைப் போலவே உங்களைப் பார்க்கவென்று நிறைய பேர் வந்திருந்தார்கள். அந்த இடமே ஒரே ஆரவாரமாக இருந்தது.”
“மைதிலி வந்திருந்தாளா? கையில் தண்ணீர்ப் பாத்திரம் ஏதும் வைத்திருந்தாளா?” சுந்தர் சார் குரலில் அவசரம் இருந்தது. மைதிலி ஏன் தண்ணீர்ப்பாத்திரம் வைத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சுந்தர் சாரின் குரல் தேவாலாயத்தில் பாவமன்னிப்புக் கேட்கும் ஒருவனின் குரல் போல இருந்தது.

“தெரியல சார். தூரத்தில் இருந்தாங்க சார். தேவதை மாதிரி…”

“தேவதைகள் தூரத்தில்தான் இருப்பாங்களா, விக்ரம்?”

“தூரம்னா ரொம்ப இல்ல சார். ஒரு ஐம்பது அடி எடுத்துவைக்கும் தூரம்தான் சார். நம்மைப் கவனித்துக்கொள்பவர்கள் ஏதாவது ஒரு சின்ன சப்தம் கேட்டால்கூட நமக்கு ஏதோ ஆபத்துன்னு பதறி ஓடி வந்துவிடும் தூரம்தான். நாம தடுமாறி விழப்போனா சட்டுன்னு ஓடிவந்து வந்து நம் கையை பிடிச்சுத் தூக்குற தூரம்தான். அது நீங்க நினைப்பது போன்று அவ்வளவு தூரம் இல்லை”

உளறுகிறேன்.

ஒழுங்கற்றும், முழுமையற்றும் அலையும் நினைவுகளை திரட்டித்தான் அந்தச் சித்திரத்தை அவருக்கு நான் வரைய வேண்டும். நான் சொல்வதும் அவர் கேட்பதும் வேறு மாதிரியான சித்திரங்களாகக்கூட இருக்கலாம். ஆனால் இருவருமே பார்க்க விரும்புவது ஒரே தரிசனத்தைத்தான். அவருக்கு வேறு எதைப்பற்றியும் சந்திக்கும் சந்தர்ப்பத்தை நான் தர விரும்பவில்லை. எப்படியாவது இந்த உரையாடலைத் தொடரவேண்டும்.
“சார், மியா இன்னும் உயரமா இருந்தா தெரியுமா? அவள் உடலிலிருந்து ஏதோ புதிய வாசனை ஒன்று வந்தது.” பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன். சுந்தர் சார் நான் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இருக்க வேண்டும். எனக்கும் அவரோடு பேசவேண்டும்.

“அவள் வயிற்றில் ஏதாவது காயங்கள் இருந்ததா விக்ரம்?. சின்னதா பிறை மாதிரி…”

“நிச்சயம் இல்லை சார். அவள் தோலில் மிருது கூடியிருந்தது. என்னைப் பார்த்ததும் ஓடிவந்து என் மார்பில் ஏறினாள். என் மீது அவள் உடலைச் சரித்து, தன்னுடைய உடலை அசைத்து அசைத்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். என் முகத்தை நக்கினாள். ரொம்ப திடமாக இருந்தா சார்.”  சுந்தர் சார் இதைத்தான் எதிர்பார்க்கிறாரா என்ற சந்தேகம் வந்தது. அவர் அசைவுகளோ சப்தங்களோ இல்லாமல் இருந்தார்.

“சார். அவளால் ஒரு நிமிடம்கூட என்னிடம் இருக்க முடியவில்லை. நாம் பேசுவதை உங்களிடமிருந்து எனக்கும், என்னிடம் இருந்து உங்களுக்கும் அவள்தான் ஓடி ஓடிச் சொல்லிக்கொண்டு இருந்தாள். ஆரம்பத்தில் நீங்கள் பேசவே இல்லை. உங்கள் குரல் கேட்கவே இல்லை. ஆனால், மியா நம் இருவருக்கும் இடையே அப்போதும் பேசிக்கொண்டேதான் இருந்தாள். அவளுக்கு உங்கள் மேல்தான் பாசம் அதிகம், சார். உங்களிடம் இருந்த அதே கம்பீரத்தை அவளும் தன் நடையில் இருப்பதாகக் காட்டிக்கொண்டாள். தரையில் புரளும் அதன் சங்கிலி உங்கள் கைகளில் சுற்றப்பட்டு இருக்கிறதா என்று அடிக்கடி நின்று கவனித்துக் கொண்டாள்.” எனக்கே கொஞ்சம் அதீதமாக இருந்தது. இருந்தாலும் மனம் அதீதத்தை மறைமுகமாக விரும்பியபடியே இருக்கிறதே! மியாவிடமிருந்து எந்தச் சத்தமும் வரவில்லை. ஒருவேளை அவள் புற்களில் படுத்துக்கொண்டு எங்கள் இருவர் முகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

“நான் என்ன மாதிரியான உடை அணிந்திருந்தேன் விக்ரம். உடலெல்லாம் மறையும்படியா? வெளிச்சம் என் மீது படும்படியா? என்ன நிறத்தில்?” அவர் உடலும் குரலும் தளர்ந்தது போல் இருந்தது. என்னிடம் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட உடைகளைப் பற்றிய நினைவு வந்தது. அலமாரியிலிருந்து எடுக்கும்போதும் அதை அணிந்து கொள்ளும் போதும் அந்த உடைகளின் இருப்பை உணர்ந்திருக்கிறேன். உடலை அதிகம் உறுத்தாத உடைகள். மற்றதெல்லாம் பிறர் சொல்வதுதான்.

எனக்கு கனவிலும் நிஜத்திலும் தெரியும் உருவங்களுக்கோ, உடைகளுக்கோ பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஒருவேளை சுந்தர் சாரின் கனவுகளில் அப்படி ஏதும் வித்தியாசங்கள் இருக்குமா என்று தெரியவில்லை. என்னிடம் சிலர் அவர்கள் தங்களுடைய கனவுகளில் தண்ணீரின் மீது நடந்ததாகவும், வான்வெளியில் மிதந்தாகவும் சொல்லியிருக்கின்றனர். தங்கள் பரவசத்தை படமாக வரைந்து காட்டியிருக்கின்றனர். சிறிய பறவையின் மிருதுவான இறகினையும், கண்ணாடித் தொட்டியில் அலைந்துகொண்டிருக்கும் மீனின் அழகிய துடுப்புகளையும் என்னைப் போன்ற ஒரு மனித உடலுக்குப் பொருத்தி என்னால் கற்பனை செய்ய முடியவில்லை. மேலும் நான் உணர்ந்த தனித்தனியான இந்த முப்பரிணாம உருவங்களை வரைபடமாக என்னால் உணர முடிந்ததில்லை. இருந்தாலும் நான் சுந்தர் சாருக்கு அந்தக் காட்சியை சொல்லியே ஆகவேண்டும். உடையை மட்டும் என்னால் சொல்ல இயலாது என்றுத் தோன்றியது.

“சார், முதலில் பளிங்குத் தரையில் சங்கிலிகள் உரசும் சப்தம் கேட்டது. உங்கள் பெயரைச் சொல்லி எல்லோரும் எழுப்பிய ஆராவாரம் காதைப் பிளந்தது. அந்த இடத்தை புதுவிதமான பசுமையின் நறுமணம் நிறைந்திருந்தது. அவ்வளவு இரைச்சல்களுக்கு மத்தியிலும் உங்கள் காலடி ஓசை எனக்குத் தெளிவாகக் கேட்டது. வழுவழுப்பான ரோஜா மலரின் இதழைப் போன்றதொரு மென்மையான அங்கியை அணிந்திருந்தீங்க சுந்தர் சார். அதற்கு மேல் முன்பக்கம் திறந்திருக்கும் ஆளுயர மேலங்கியை அணிந்திருந்தீங்க. ஒரு மதிய நேர வெப்பத்தைப் போன்றதொரு சிவப்புநிறம் சார். சார், மியாவின் தோலைப் போல இந்த உடை மினுமினுப்பாக இருந்தது. தலையில் சின்னதாய் மலர்கள் வேயப்பட்ட ஒரு கிரீடம். கடலின் நீல நிறத்திலான ஒரு கல் பதிக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட தேவதைகள் வைத்திருப்பதைப் போன்ற ஒரு வெண்ணிற கோலை கையில் வைத்திருந்தீர்கள். அதன் முனையில் பறவையின் மெல்லிய இறகுகள் பொருத்தப்பட்டிருந்தன. முனைகள் கூராக இல்லாமல் பஞ்சினால் சுற்றப்பட்ட காலணிகளை அணிந்திருந்தீங்க. ஒரு ராஜாவை இவ்வளவு கருணை பொருந்திய கம்பீரத்துடன் பார்க்கவே முடியாது சுந்தர் சார்.”

நான் கேட்ட ராஜாக்களையும், துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் அந்தக் கனவில் கிடந்த சத்தங்களையும், அரூபங்களையும் சுந்தர் சாரின் எதிர்பார்ப்புகளையும் சேர்த்து சேர்த்து என் கனவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உயிரூட்டிக்கொண்டு இருந்தேன்.

“கூட்டத்திலிருந்த நான் என் கைகளை உயர்த்தி சத்தமாக உங்களிடம் ‘என்னைத் தெரிகிறதா?’ என்று கேட்டேன். நீங்கள் பதில் சொல்லவேயில்லை சார். ஆனால் நீங்கள் என்னைப் பார்த்து நிச்சயம் புன்னகைத்திருக்க வேண்டும். அப்போது என் உதடுகளில் லேசான துடிப்பு இருந்தது. நானும் அப்போது புன்னகைத்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைக் கடந்து செல்லும்போது மட்டும் மெதுவாக நடந்தீங்க. நானும் மியாவும் உற்சாகமாய் இருந்தோம். அவள் தோளில் மேலும் மிருது கூடியிருந்தது. சிறிது நேரம் நின்று மியா என் முகத்தை ஆவேசமாக நக்கினாள். நான் மீண்டும் ஆவேசமாக உங்களைப் பார்த்து , “சார் ராஜா மாதிரி இருக்கீங்க”, என்று கத்தினேன்.”

என்னால் என்னை நிறுத்த முடியவில்லை. சுந்தர் சாருக்கு நான் மறுபடியும் மறுபடியும் தொடர்பற்ற காட்சிகளை சொல்லத் தொடங்கினேன். எனக்கு நூறு அடிகளுக்கு அப்பால் இருந்து சங்கிலி தரையில் உரச வழவழப்பான தோலுடன் ஓடிவரும் மியாவை, “தொலை தூரத்திலிருந்து அசைந்து வரும் ஒளிபொருந்திய வெண்பஞ்சுப் பொதியைப் போன்ற என் நாய்க்குட்டி” என்றேன். இரண்டும் ஒன்றுதானே? மியா என் முகத்தை நக்கும்போது பரவும் நீர்மையை, வெம்மையும் குளிருமாய் தோலை உறுத்தாமல் வருடும் அதிகாலை நேரத்தை, மதிய நேர சிவப்பை, திடீரென்று மியா வயிற்றில் புரளும் என் கைகளில் இடறும் பிறை வடிவத் தழும்பை, நான் பாடும் பாடலில் வரும் ஓர் இசைக்குறிப்பின் கம்பீரத்தை எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அரவமற்ற தெருவில் ஒலிக்கும் சிறு ஓசைக்கும், காதுகளை விடைத்தவாறு தலையை உயர்த்திப் பார்க்கும் என் அதீத உணர்வுகளையும், கண்களை மூடியபடி படுத்திருக்கும் இரவின் முகத்தையும், அந்த இரவின் முகத்தைத் தன் ஈரமான நாவினால் நக்கிக் கொடுக்கும் அவர் அன்பையும் சொன்னேன். ஒரு நாய்க்குட்டியாகவும், என் இரவின் ஆன்மாவாகவும் புரண்டுகொண்டிருக்கும் ஒரு கனவைச் சொன்னேன். ஒரு பார்வையற்றவனின் கனவின் உன்னதங்களைச் சொன்னேன். காட்சிகளுக்குப் புலப்படாத என் வாழ்வின் மேன்மைகளைச் சொன்னேன். எனக்குப் பித்துப் பிடித்தது போல் இருந்தது.

சுந்தர் சார் என் தோளில் சரிந்து தன் முகத்தைப் புதைத்துக் கொண்டார். அப்போதுதான் என் கனவிலிருந்து எனக்கு விழிப்பு வந்தது போல இருந்தது. நிச்சயம் விழிப்பும் கனவும் வெவ்வேறாக இருந்தன. சுந்தர் சாரிடமிருந்து வரும் வார்த்தைகள் மேலும் மேலும் குழையத் தொடங்கின. மீண்டும் அவர் விசும்பல் அதிகமானது. நான் அவரை ஆதரவாக இழுத்து என் மார்பில் தாங்கிக் கொண்டேன்.

பின்னர் அவர் காதில் மெதுவாக “சார். ஒரு பொக்கே சரிந்து என் மேல் விழுந்து கிடப்பதைப் போல்”, என்றேன்.

திடீரென்று தன் பலத்தையெல்லாம் திரட்டி ஒரு புயல் காற்றின் வேகத்தோடு என்னை இறுக்கிக் கொண்டு ஓவென அழத் தொடங்கினார். மியா வேகவேகமாகக் குரைத்தபடி சங்கிலியை இங்கும் அங்கும் இழுத்தாள். சட சடவென சுற்றிலும் இருந்த மரங்கள் கிளைகள் முறிந்து விழுவது போல இருந்தது. நின்ற இடத்திலேயே புதைக்கும் மூர்க்கத்துடன் ஒரு மௌனம் எங்களை அழுத்தியது. இருவருமாக ஒரு பரவசத்தின் உச்சத்தில் திளைத்திருந்தோம். நான் பேசுவதை முழுமையாக நிறுத்தினேன். என்னால் இந்தக் கனத்தைத் தாங்க இயலவில்லை. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. சுந்தர் சார் துவண்டுபோய் என் மீது சரிந்தார். தேவைக்கு அதிகமான நிசப்தத்தில் அவர் விசும்பல் மட்டும் ஊடுருவிக்கொண்டு இருந்தது. சுற்றிலும் காலடிச் சத்தங்கள் குறைந்தது யாராவது நின்று வேடிக்கைப் பார்க்கிறார்களா என்ற சந்தேகத்தை எனக்குத் தந்தது. சுந்தர் சார் உடலும் குரலும் ஆசுவாசம் அடையும் வரை அவரை அணைத்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் என் முதுகில் ஈரமாக கரையத் தொடங்கினார். மறுபடியும் நிசப்தம் திரும்பும் வரை காத்திருந்தேன். மியா இப்போது கொஞ்சம் அமைதி அடைந்திருக்க வேண்டும். கால்களுக்கு நடுவில் குழைந்தபடி என்னை நக்கத் தொடங்கினாள். முகத்தில் ஏறிக்கொண்டிருந்த வெப்பம், வானம் நீல நிறத்தை அடைந்திருப்பதை உணர்த்தியது.

என்னால் சுந்தர் சாரை இப்போது முழுமையாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

“மைதிலி மேடம் இப்படித்தான் சொன்னாங்களா சார்? நாளைக்கு அவங்களை அழைச்சிட்டு வாங்க”, என்றேன்.

“விக்ரம், நாளைக்கு நான் வருவேனான்னு தெரியாது. அவங்க மியாவோடு வரலாம்.” சுந்தர் சாரின் பிடி நழுவியது போல இருந்தது. லேசான பதட்டம் என்னைத் தொற்றிக்கொண்டது. சுந்தர் சார் தடுமாறியபடி எழுந்தார்.

“சார், நான் வேணும்னா உங்களோட வரவா சார்”, என்றேன்.

“நீ தேவதைகளை பார்த்ததுண்டா? அவர்களுக்காக கனவு கண்டதுண்டா விக்ரம்?” சுந்தர் சாரின் குரல் ஒரு குழந்தையின் குரலைப் போல் இருந்தது. கையில் தண்ணீர்ப்பாத்திரத்துடன் நடந்துவரும் மைதிலியின் குரலைக் கேட்கவேண்டும் போல் இருந்தது. முதன்முறையாக என்னிடம் பதில் இல்லாமல் தவித்தேன்.  சுந்தர் சார் மீண்டும் என்னை நெருங்கி வந்தார். என் தலையில் தன் கையை வைத்துக் கோதினார். பின்னர் அவர் விரல்கள் என் நெற்றியில் அலைந்து இமைகளில் இறங்கின.

“கனவு காண்பதை மட்டும் நிறுத்திடாதே விக்ரம்”, என்றார்.

இன்னும் அடர்வான ஓர் உலகம் எனக்குள் திறந்துகொண்டது. எனக்குப் பிடித்த அந்த உலகில் பார்வை குறித்தான எந்தத் தேவையும் எனக்கு இருந்ததில்லை. பார்வை என்பது எனக்குப் புறஉலகின் ஒரு பண்பு மட்டுமே. என் அக உலகில் எது ஒளி எது இருள் என்ற கேள்விகள் இல்லை. என்னால் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்ள முடிந்ததே எனக்குப் போதுமானதாக இருந்தது. என் உலகில் புற உலக பேதங்களுக்கு இடம் இருந்தே இல்லை.

சுந்தர் சார் தன்னை என்னிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றார். மியாவின் சங்கிலியை அவர் கைகளில் இருந்து கழற்றி என் கைகளில் சுற்றினார். என்னிடமிருந்து சில அடிகள் விலகினார். பின்னர் என்னை நோக்கித் திரும்பியிருக்கக் கூடும். நான் அவர் முகத்திற்கு நேர்க்கோட்டில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது மியா என் மடியில் கிடந்தாள். சுந்தர் சார் என் நெற்றியை தடவியது போல இருந்தது. நான் மியாவின் நெற்றியில் என் விரல்களால் அலைந்து கொண்டிருந்தேன். சுந்தர் சார் மீண்டும் தன் கட்டுப்பாட்டை இழப்பது போல இருந்தது. என் மீது மலரின் பொதி ஒன்று விழுந்து அழுத்துவது போல் இருந்தது.

“விக்ரம், எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக இருட்டுவது போல் இருக்கிறது.” சுந்தர் சாரின் குரல் தெளிவில்லாமல் கேட்டது.

ஓர் இருள் இன்னொரு இருளின் மீது கவிழ்ந்தது. அது பேரொளியாய் தன்னுள் அனைத்தையும் வாரிச் சுருட்டிக்கொண்டது..


ஒரு இரவின் மினிமலிச விளைவு…!

0

ஐசக் பேசில் எமரால்ட்

னிதன் உருவாக்கிய போதைகளில் எளிமையானது சாராயம். அப்படித்தான் அன்றைக்கு உணர்ந்தேன். காரணம் உறக்கத்தில் தென்பட்ட அவளின் முகம். இரு சுற்றுக்கள் முடிந்து, மடிக்கணினியின் முன் முடிக்கப்படாத கவிதை ஒன்றிற்காக அமர்ந்தேன். வெள்ளைத்திரையை வெகுநேரமாய் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜன்னலுக்கு அப்பால் வெட்டிக்கொண்ட மின்னல் போல் தோன்றிய மறைந்த நினைவினால் தான் சாராயம் குறித்த மதிப்பீடு. மலைக்காட்டில் பெருமழைக்குப்பின் நனைந்திருந்த கற்றாழை போல் முதுகில் வியர்வை படர்ந்திருந்தது. காரணம் குப்புறப்படுத்திருந்தாள். ஆசிட் ரிஃப்ளக்ஸினால் உணவுக்குழாய் வீக்கமடைந்து, அதனால் அருகாமையில் இருந்த மூச்சுக் குழாயில் திணறல் ஏற்பட்டது போல் வயதாகி சுற்றிக்கொண்டிருந்தது. அவசர நேரத்திற்கு உதவலாம் என வாங்கிய மேஜை விசிறியை அவளின் முதுகிற்கு நேராக திருப்பினேன்.  

அதிக பட்சம் மூன்று பேர், அதற்கு மேல் தங்கினால் உடற்சூட்டினால் அறையெங்கும் அனல் காற்று வீசும். ரெசிடென்சியல் இடம் என்பதால் வாடகை அதிகம். சாதாரணமாகவே தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பதில் எங்களுக்குள் கடும் போட்டி இருந்தது. அதிலும் அவளே என்றும் முந்தி செல்லும் வீராங்கனை. காரணம் பெரும்பான்மை நேரங்களில் அது குறித்த உள்ளுணர்வை இழந்திருந்தேன். ஊரடங்கு என்று அறிவித்தாயிற்று, சொல்லவா வேண்டும்! அறை முழுவதும் கசகசவென இருந்தது. கண்ணாடி டம்ளரில் தரை தட்டியிருந்த மது என்னைப்  பார்த்துக் கொண்டிருந்தபோது, கவிதையும் உயிர்த்தெழுந்து விடும் எனத்  தோன்றியது. மேலே மூச்சுக்குழாய் சுருங்கிக் கொண்டிருந்தது. மிச்சம் இருந்ததைக் குடித்துவிட்டு படுத்துவிட்டேன்.  சிறிது நேரத்தில் கண்ணை மூடி நினைவிழப்பதும், மீள்வதுமாக இருந்தேன். அப்போது சாவதற்கு முந்தைய நொடிகளில் இழுப்பது போன்று மூச்சின் வேகம் குறைந்து கேட்டது. கண் விழித்தேன். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்து. அறை முழுவதும் கும்மிருட்டு. எங்கும் கருப்பு. நான் எதையும் பற்ற வைக்கவில்லை. எனக்குத் தோன்றவில்லை.

இருட்டின் நீளம் அதிகமாக, இருட்டிற்குள்ளே வெளிச்சம் மெதுவாக வந்திறங்குவதை உணர்ந்தேன். ஜன்னலில் வெளியே வானத்தின் வெளிச்சம் நன்றாக தென்பட்டது. இதற்குமுன் கடற்கரையில் வீசிய சுழற்காற்றில் சுருண்டு விழுந்த மணல் சப்தத்தை போல் பிரமாண்டமான சத்தம் கேட்டது. ஜன்னலைத் திறந்தேன். மரங்கள் பிசாசாட்டும் ஆடிக்கொண்டிருந்தது. ஆளைக் கீழே தள்ளிவிடும் அளவிற்கான சூறைக்காற்று. மிதமான சாரல் மழை. சிறிது நேரத்தில் நினைவுகள் கொண்டு உள்ளத்தை ரணமாக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதை நுண்ணுணர்ந்து சாத்திக்கொண்டு படுத்துவிட்டேன்.

இருப்பு கொள்ளவில்லை. கண்ணாடித்தொட்டியில் வண்ணமீன்கள் நீரின் மேற்பரப்பில் வந்து வேகமாக திரும்புகையில் குமிழ் எழும் ஒலி ரம்மியமாக இருந்தது. வானத்தின் ஒளியில் பொன்னிற மீன்களைப் பார்த்தேன். அது ஓவியமாக வரையப்பட வேண்டிய ஒன்று. சிறிய வீட்டிற்குள் நிறைய பொருட்கள் என்பது அந்த மீன் தொட்டிக்கும் பொருந்தும். ஒன்றையொன்று மோதிக்கொள்ள அத்தனை வாய்ப்பிருந்தும் லாவகமாக நீந்தும் திறன் ஏற்பட்டிருந்தது. மொத்தம் இருபத்தியெட்டு மீன்கள். ஒவ்வொரு மீன்களும் மேலெழும்பி கீழே செல்வதால் தொடர்ச்சியாக நீரின் சலம்பல் கேட்டுக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் ஒலி நின்று போயிருந்தது. அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிகழ்ந்த உடனே நான் அதை உணரவில்லை. அனிச்சையாக உணர்ந்த ஒரு சத்தத்தை இழந்தபோது அறை முழுவதும் நிசப்தம். மீண்டும் கருமுறுவென அப்பளம் நொறுங்கி உடைவது போன்ற சத்தம்.  சூறைக்காற்று அடிக்கும்போது தூறல்கள் ஜன்னலைத் தட்டிச்  செல்லும். மீன்தொட்டியில் நீண்ட இடைவெளி விட்டு ஒரே ஒரு குமிழ் சப்தம். என் கண்களின் உள்ளிருந்து ஒளியொன்று வேகமாக ஆழத்திற்கு வளைந்து சென்று கொண்டிருந்தது. அது கடைசியாக தேங்காய் நாரில் ஊர்ந்து கொண்டிருக்கும் அட்டைப் பூச்சியில் முடிந்தது. நினைவை முற்றிலும் இழந்தேன். கண்களை திறக்கவே முடியவில்லை. உயிரை விட்டுவிடக்கூடாது எனப் போராடி கண்களை திறந்தேன், கடுகளவு வெளிச்சமும் இல்லை. கடுகே ஒரு சிறு இருட்டு தானல்லவா..!

டார்ச் விளக்கின் வெளிச்சத்தை மீன்தொட்டியில் பாய்ச்சினேன். ஒரேயொரு மீன் மட்டும் மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது. அதிர்ந்தே போனேன். நீரின் பிற இடங்களில் சுற்றி வெளிச்சத்தைப் பாய்ச்சினாலும் தென்பட்டது ஒரு மீன் தான். வாசல் திறப்பானில் வெளிச்சம். பூட்டினது பூட்டியபடியே காணப்பட்டது. ஒரே குழப்பமாக இருந்தது. திருடன் யாரேனும் வீட்டில் பதுங்கி இருக்கிறானா? முகப்பிற்கு சென்றேன். முகப்பு அறை துடைத்து வைத்தது போன்று காணப்பட்டது. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு கண்ணாடி, அதனருகில் ஒரு சீப்பு உட்பட அனைத்துமே ஒவ்வொன்று. குளியலறைக்குச் சென்றேன். அங்கே எந்த மாற்றமும் இல்லை. சமையலறையிலும் பெரிய மாற்றம். அரிசி டப்பாவைத் திறந்து பார்த்தேன். விடிந்தால் பொங்கும் அளவிற்கு மட்டுமே இருந்தது. என்ன நடக்கிறது? நன்றாக முகத்தை, கண்களைக் கழுவிக்கொண்டு டார்ச் வெளிச்சத்தை அறையெங்கும் பாய்ச்சினேன். நான் கண்டது அனைத்தும் நிஜம். நாங்கள் வாங்கிக் குவித்த பொருட்கள் எதுவும் இல்லை. எனது பெட்டியை திறந்து பார்த்தேன். அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு.

அவளை எழுப்ப வேண்டாம். பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. அவளிடம் சொல்ல வேண்டாம் என்று எண்ணிக்கொண்டேன். சங்கடப்பட்டுப் போவாள். அல்லது எனக்கு பைத்தியம் பிடித்துள்ளது என உதாசீனம் செய்வாள். போலீசில் புகார் செய்யலாம் என்று மேஜையில் வைத்த செல்போனை தேடினேன். காணவில்லை. அவள் செல்போன்..? அதுவும் இல்லை. தலையணைக்கு அடியில் வைத்திருப்பாள். அங்குமில்லை.

தொலைபேசி மட்டுமே இருந்தது. அதை இந்த சமூகமே உதவாக்கரையாக உணர்ந்ததால் இணைப்பைத் துண்டித்துப் பல வருடங்கள் ஆயிற்று. பார்வைக்கு ஒரு பொம்மையாக தொல்பொருளாக வைத்திருந்தோம். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. மது பாட்டில்கள் வைத்திருந்த அலமாரியைத் திறந்தபோது கடைசியாக மிச்சம் வைத்திருந்த சிறிதளவு மதுவைத் தவிர, திறக்கப்படாத முழு பாட்டில் இல்லை. என் பின்னந்தலை முடியைச் சுற்றி வியர்வை படர ஆரம்பித்தது. சூறைக்காற்று நின்றபின் பேய்மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தபோதே போர்வையை மூடிப் படுத்துக்கொண்டேன்.  

வாங்கிய பொருட்கள் காணாமல் போனால்கூட, சிறிய வயதிலிருந்து சேமித்த எனது அன்பிற்குரிய உயிரற்ற பொருட்கள் தொலைந்து போகாமல் பெட்டியில் இருந்ததை ஆசுவாசமாக உணர்ந்தேன். சட்டையில் இருந்து கழன்ற பொத்தான்களில் இருந்து நடத்துனர் கிழித்து தந்த பயணசீட்டு வரை என்னால் காதலிக்கப்படும் ஒன்றாக இருந்துள்ளது. நான் உயிரற்றவைகளையே அதிகமாக நேசித்து, புணர்ந்து ஆர்கசம் அடைந்து வளர்ந்தவன்.

முகத்தை மூடிப் படுத்திருந்தபோது மீண்டும் மேலே கேட்கும் மூச்சிழுப்பு சத்தம். ஆனால் இந்த முறை மேலிருந்து அல்ல, கீழிருந்து. அனிச்சை என்பதால் காதுக்கு மட்டும் எதிரொலிக்கிறதா..? இடப்பக்கம் சரிந்து படுத்தேன். ஆசிட் ரிஃப்ளக்ஸ் இருந்தால் மருத்துவர்கள் சொல்வது தானே! இடது காதில் ஒலி நன்றாக விழுந்தது. ஆனால் கீழே வெகு தொலைவில் கேட்பது போன்ற உணர்வு. தரையில் காது வைத்தபோது கொஞ்சம் அருகில் இருந்து கேட்பது போன்ற உணர்வு. இடையிடையே பெண்குரலில் கூப்பாடு. “காப்பாற்றுங்க… யாராவது இருக்கீங்களா…?”  மழை இரைச்சலிலும் ஒற்றைக்கல் வேகமாக அறையின் மூலையில் விழுந்த சத்தம் கேட்டது. அதில் ஏற்கனவே தொல்பொருள் ஆகிவிட்ட எங்களுடன் இருக்கும் நாழி ஒன்றை மூலையில் குப்புற போட்டிருந்தோம். அதில் இருந்து தான் கல்லெறி சத்தம் கேட்டது. தூசிகள் படிந்திருந்த நாழியை மெதுவாக நகர்த்திவிட்டு அந்த இடத்தில் டார்ச் அடித்தேன். கண் இமைக்கும் நொடியில் ஒளி விழுந்த இடத்தின் நடுவில் பிளந்து கொண்டு சிறு கல் ஒன்று ராட்சஸ வேகத்தில் வந்தது. சரியான நேரத்தில் சற்று அகன்றதால் முகம் தப்பித்தது. கல் விழுந்த இடத்தில் மட்டும் சிறு துவாரம். மூலையில் கிரிக்கெட் ஆடிய, பேட், ஸ்டம்புகள், ஹெல்மெட் ஒதுங்கிக் கிடந்தது. ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு அந்தத் துவாரம் வழியாகப் பார்த்தேன். உள்ளே பொன்னிற வெளிச்சம். தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அலறல் சத்தம். ஸ்டம்பினால் அந்த இடத்தை உடைத்து டார்ச் அடித்துப் பார்த்தேன். ஆழம் இருபது அடி. அதற்கு மேலேயே இருக்கலாம்.

வலுவான கயிறு ஏதேனும் இருக்கிறதா என வீடு முழுவதும் தேடினேன். எந்த கயிறும் கண்ணில் தென்படவில்லை. இருந்தாலும் இக்கட்டான நேரங்களில் தென்பட வாய்ப்பு குறைவு. சட்டென்று ஒரு யோசனை. அவளின் துணி அலமாரியைத் திறந்தேன். உள்ளே எங்கள் திருமணத்திற்கு அவள் அணிந்த சேலையைத் தவிர வேறெந்த துணியும் இல்லை. சட்டென்று நினைவுக்கு வந்தது சற்றுமுன் கலவிக்காக அவள் களைந்த சேலை. நல்லவேளையாக அது அவிழ்த்தெறிந்த இடத்தில் அப்படியே கிடந்தது.

சேலையை அறைக்குள் இருந்த கம்பியில் இறுக்கமாக கட்டிக்கொண்டு துவாரத்திற்குள் விட்டேன்.  டார்ச்சை வாயில் வைத்துக்கொண்டு சேலையை மெல்லப் பிடித்து நிதானமாக ஒவ்வொரு அடியாக உள்ளே இறங்கத்  தொடங்கினேன். “அப்படித்தான், வாங்க, வாங்க…!” சேலையின் விளிம்பிற்கு வந்துவிட்டேன். இன்னும் சரியாக 5 அடி தான் இருக்கும். டார்ச் அடித்துப் பார்த்தபோது நான் இறங்கும் இடத்தில் சரியாக சிமெண்டினால் செய்யப்பட்ட நீர்த்தொட்டி காணப்பட்டது. நீருக்குள் நான் கண்ட காட்சியைப் போல் ஒரு காட்சியை வாழ்நாளில் காணவே கூடாது என்று விரும்புகிறேன். எங்கள் வீட்டில் இருந்த 29 மீன்களும் அந்த நீர்தொட்டியில் இருந்தது. நான் கீழே இறங்குவதற்குள் வேகவேகமாக, தொட்டியில் இருந்த பெரிய மீன் ஒன்று ஒவ்வொரு மீனாக விழுங்கிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு மீனையும் விழுங்க விழுங்க அதன் நீளம் முன்பைவிட இரு மடங்காகும். இருபத்தியெட்டு மீன்களையும் விழுங்கி முடித்தபோது, பொன் நிறத்தாலான விலாங்கு மீன் போன்று வளைந்து வளைந்து ஓடியது. “தொபக்” நீரில் குதித்தேன். இப்போது அந்த மீனை காண நீரை துளாவினேன். எங்குமில்லை. சற்று முன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு என் கண்களால் கண்ட மீன் எங்கே போனது…? தொட்டியிலிருந்து வெளியேறிவிட்டு பார்த்தபோது அதே மீனின் நீரில் மினுங்கும் இரு கண்கள்.

சுவர் முழுவதும் காய்ந்த தேங்காய் நாரினால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன் நடுவே அட்டைப்புழுக்கள் ஆங்கங்கே மின்னிக் கொண்டிருந்தன. தரையில் ரத்தத்தினால் பதிந்த காலடி தடங்கள் மேற்கிலிருந்து கிழக்கு வாசல் வழியாக வெளியேறியிருந்தது.

அந்தப் பெண் என்னை சீக்கிரம் வந்து காப்பாற்றுமாறு அழைத்துக்கொண்டே இருந்தாள். என்னை முழுவதுமாக சூழ்ந்து விட்டது, தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இதயம் வெடித்து இறக்க நேரிடலாம் என கதறிக் கொண்டிருந்தாள். அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்தபோது பிரம்மாண்டமான அறையின் நடுவே நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி நூற்றுக்கணக்கான கோழிகள் மிக நெருக்கமாக நின்று கொண்டிருந்தன. சில கோழிகள் அவள் காலை கொத்தின. பயத்தினால் உதறினாள். பல சுற்றுக்கள் தொலைவில் இருந்த கோழிகளும் அவளை நோக்கி சீறிப் பாய்ந்தன. அலறி துடித்துக்கொண்டபோது தான் மேலே பார்த்தேன். எங்கள் வீட்டு மின்விசிறி அதே மூச்சிரைப்புடன் சுற்றிக்கொண்டிருந்தது. அதன் மூலமாக அந்நிய வீட்டில் சாமத்தில் நுழைந்த குற்ற உணர்வைக் களைந்தேன். அவள் பாதங்களின் அருகில் கொக்கரித்தும், சீறிக் கொண்டிருந்த கோழிகளை ஒவ்வொன்றாய் தூக்கி சுமந்து வெளியேற்றினேன்.

“உங்களுக்கு கோழின்னா அவ்வளவு பயமா…?” என்று அவளிடம் கேட்டுவிட வேண்டும் என்று நினைத்தேன். அவளும் நடுச்சாமத்தில் கோழி பிடிக்க வந்தவன் என்பதை உணர்ந்ததை கண்களினால் வெளிப்படுத்தினாள். அவளிடமிருந்து நான் வலுக்கட்டாயமாக அகற்றிய கோழிகள் அனைத்தும் கோவத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்தது. திடீரென்று மௌனம். வெளியே வந்து பார்த்தபோது ஒரேயொரு கோழி மட்டும் காணப்பட்டது. அது அவளைப் பார்க்காமல் பூழலை காட்டிக் கொண்டிருந்தது. கோழிகளை மறையச் செய்துவிட்டேன் என்று ஆசுவாசப்பட்ட அந்த நொடியே என்மீது காதல் கொண்டாள். எனக்குப் பசிப்பதை உணர்ந்து, சமைத்துத் தருகிறேன் கோழியைக் கொன்று கொடுங்கள் என்றாள். உடனே கோழியை தூக்கிக்கொண்டு நீர்த்தொட்டியில் தலையை அமுக்கிக், கழுத்தைத்  திருகிக் கொன்று, பீட்டையைப் பிய்த்துப் போட்டேன். என் கைகளில் இருந்த ரத்தத்தை நாவால் வருடி சுவைத்தபோது வெறியாகியது.

அவளிடம் “உன் கணவன் எங்கே.?” உற்சாகமான குரலில் உடனே பதில் வந்தது, “நீங்கள் வருவதற்கு கொஞ்சம் முன்புதான் தற்கொலை செய்து கொண்டார். உடல்  சமையலறையில் உள்ள பனை உத்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. சாவதற்கு முன்பு எனக்கு அளித்த சாபங்களின் விளைவால் இத்தனை கோழிகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டது. நல்லவேளையாக நீங்கள் வந்தீர்கள். சிறுத்தை என்றால் கூட நிதானம் இழப்பதில்லை. இந்தக் கோழிகளை கண்டாலே அடிவயிறு முட்டி  விடும். ஆனால் நீங்கள் வந்ததற்கு பின், என் கணவனின் உடல் காணாமல் போய்விட்டது” என்றாள்.

எனது கைகளில் இருந்த கோழியின் ரத்தம் முழுவதும் அவளின் உடல்களில் கோடுகளாகிப் போனது. அதை ஒரு ஓவியமாக மாற்றியிருக்க வேண்டும். அதற்கு காரணம் நான் ஒரு நல்ல கலைஞன் இல்லை என்பதாகவே இருக்கும். இம்மாதிரி நேரங்களில் கவித்துவம் என்னைவிட்டு அகன்று விடுகிறது. சபலம் முடிந்தபிறகு சமையலறையில் இருந்து எரிந்த பிணத்தின் வாடையுடன் கலந்து, கோழிக் குழம்பின் மணம் சுண்டி இழுத்தது. எரிந்து போன சதைப்பிண்டங்களின் நுண்துகள்கள், துணிகள் சிதறிக் கிடந்தது. மேலாடையின்றி கொதிக்கும் குழம்பை கரண்டியால் கோதியபடி புன்னகைத்தாள். தள்ளி நின்று கரண்டியை கிளறவில்லை என்றால் முலையில் தடயம் உருவாக வாய்ப்பு உருவாகலாம் இல்லையா என்றேன். உயிருடன் சீறிக் கொண்டிருந்த கோழிகளைக் கண்டு நடுங்கியவள், வெட்டுண்டு கொதிப்பதைக் கரண்டியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். உண்ட மயக்கம் இந்த நாளின்  முற்பாதியை பேசத் தொடங்கினாள் .

“அதிகாலையில் பனிப்போராக தொடங்கி போர்க்களமானதுக்கு காரணம் பானிப்பூரி. அவரது கடைக்குத் தான் நகரத்தில் மவுசு. காரணம் அனைவரும் ஒரு துளையிட்டு ரசம் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்த நேரம், பானிப்பூரியை உடைத்து ‘ஒடச்ச’ பூரியாக மாற்றினார். ஒரு உடைத்தல் மூலமாக ஏக வரவேற்பு. ரசம் உள்ளிட்ட இதர பொருட்களை ஒன்றாகக் கலந்து கொடுத்ததில் புதிய சுவை கிடைத்தது. பிறர் இந்த கருதுகோளை கையாளாமல் போக, நிறைவின்மையாகவோ, பயிற்சியாகவோ இருந்து போகட்டும். ஒடச்சதன் மூலம் வரும் புதிய வாடிக்கையாளர்களை நிராகரிக்கும் மனநிலை எங்கிருந்து உருவாகிறது?

நாளாக கடையில் கூட்டம் அள்ளியது. ஆறு மணிக்கெல்லாம் கடைக்கு வந்து ஏமாந்து செல்பவர் அதிகம் ஆயினர். ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட் பானிப்பூரி கொண்டு செல்வது வழக்கம். ஆறு மணிக்கு மேல் வருபவர்களுக்காக 2 பாக்கெட் அதிகமாக எடுத்துச் செல்ல சொல்லி விட்டேன். கொள்கை, மண்ணாங்கட்டி, அதிகமாக ஆசைப்படக் கூடாது என வழக்கொழிந்த வசனங்கள். அதென்ன உடலுழைப்பை உறிஞ்சும் விதமாக பல கிலோ எடையாலானதா என்ன? இல்லையே. காற்றை விட அதிகம். தேவை அதிகம் ஆகிறபோது கொடுப்பதில் என்ன பிரச்சனை..? உற்பத்திக்கான உழைப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றாலும் விடுவதில்லை. நானும் பொறுத்துப் பார்த்துவிட்டேன். இனிமேல் நம்பிக்கை இல்லை. அதனால் தான் அவரது ஆண்மையை அவமதித்தேன். ஒரு பவுன் நகையை எனக்குக் கனவாகவே வைத்த இந்த ஆளை தற்கொலை செய்ய வைக்க வேண்டும் என்பது தற்காலிகமாக நடந்தது இல்லை. ரொம்ப நாள் திட்டமிட்டு செய்தேன். வார்த்தைகளினால் புண்படுத்தினேன். அவரது ஆண்குறியில் எச்சிலைக் காரி உமிழ்ந்தேன். என்னைப் பார்த்தார். கோவமும், ஆற்றாமையும் கொள்கையுடன் கலந்து வேகமாக அடுப்பங்கரையில் சென்று மண்ணெணையை எடுத்துத்  தலையில் ஊற்றினார். தீப்பெட்டியை வாயில் கவ்விக்கொண்டு, கயிற்றைப் பனை உத்தரத்தில் போட்டு என் கண்ணெதிரே, தீக்குச்சியைப் பற்ற வைத்து, எரியும் உடலுடன் தூக்கில் தொங்கினார்.  புகை வெளியேறிக் கொண்டிருந்த புகையோட்டின் வழியாகவே கோழிகள் உள்ளே நுழைந்தது. இந்த சாபத்திலிருந்து விடுபடவே முடியாது என்றிருந்தேன். நல்ல வேளையாக வந்தீர்கள். உங்களினால் நான் பாவத்தில் இருந்து முழுமையாக வெளியேறி பரிசுத்தம் ஆனவளாக உணர்கிறேன். ஆனால் நீங்கள் எனக்காக ஒன்று மட்டும் செய்ய வேண்டும். ஒரு பவுன் நகை மட்டும் வாங்கித் தரவேண்டும். நீங்கள் என்னுடையவராகிப்  போவீர்கள். ஆனால் ஒருமுறை மட்டுமே. ஒவ்வொரு முறைக்கும் ஒரு பவுன் என்றால் உங்களிடம் என்னை முழுவதுமாக ஒப்புக் கொடுக்கிறேன்.” என்றாள்.

நானும் அனைத்திற்கும் இசைந்து தலையசைத்தேன். அதற்குமுன் முக்கியமான அந்த முடிவை எடுக்க விழைந்தேன். ஆம், பசிகளுக்குமுன் தேவை முக்கியமாகப்பட்டது. அடைந்த பிறகு லட்சியமும், சமூகம் எனக்கு அளித்திருக்கும் இடமும், அதனால் செய்ய வேண்டிய காரியங்களும். அதிலிருந்து எனக்குள் கிடைக்கப்பெறும் அகங்காரங்களும் எனக்கு முக்கியம். அதனால் தாமதிக்காமல் அவளைக் கொலை செய்ய வேண்டும். அங்கிருந்த நீர்தொட்டியின் அருகில் அழைத்துச் சென்று கோழியைக் கொன்றதைப் போலவே அவளையும் கொல்ல வேண்டும். இப்பொழுது அவளின் கணவனாக மாற வேண்டியது, நான் வாழ்வதற்காக இந்த சமூகம் அளித்த கொடை. ஒரு கணவன் தற்கொலை செய்திருக்கிறான் என்றால் கண்டிப்பாக அவள் செய்த துரோகத்தின் பொருட்டே நடந்திருக்கும் என்று உறுதியாய் நம்பினேன். அவள் கணவனுக்கு செய்த துரோகத்திற்காக நான் செய்ய வேண்டிய கடமை என்று சட்டென்று கையை நீர்தொட்டிக்குள் விட்டு விலாங்காக மாறியிருந்த எனது மீனைக்கொண்டு கழுத்தை நெருக்கினேன். உயிருடன் இருந்த மீனும், அவளும் துடிதுடித்துக் கொண்டிருந்தனர்.

பிடி இறுகுகையில் அவள் மறைந்து போனாள். சுற்றிமுற்றிப் பார்த்தேன். அவள் இல்லை. மிக அனிச்சையாகி இருந்த வாசம் காற்றில் வீசியது. ஆம், என் மனைவி நான் வந்த வழி சேலையில் தொங்கிக்கொண்டு நின்றாள். என்னைப் பார்த்து நம் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுங்கள், நான் மேலே அடுக்குகிறேன் என்றாள். மூச்சிரைக்கும் விசிறியைத் தவிர அனைத்தையும் எடுத்துக் கொடுத்தேன். அப்போது தொட்டியில் இருந்த மீன், விழுங்கிய ஒவ்வொரு மீன்களையும் வெளியே கக்கிக் கொண்டிருந்தது. அதில் எந்த மீனிற்கும் உயிரில்லை. நீரில் மிதந்து கொண்டிருந்தது.

ஐசக் பேசில் எமரால்ட் – நாகர்கோயிலைச் சேர்ந்த இவர். தற்போது திரைப்படத் துறையில் பணிபுரிகிறார். இவரது நாவல் அண்மையில் வெளியானது

ஐயா

4

தமிழ் சுப்பிரமணி

‘வாடா வந்து பால் ஊத்து, ஒடியா……’

தயங்கித் தயங்கி வீட்டினுள் நுழைந்து கடைசி அறைக்குச் சென்றான் மணிராசு. பெரியப்பாவின் உயிர் வயித்துக்கும் தொண்டைக்கும் இழுப்பாடாய் இருந்தது. அம்மா பால் டம்பளரைக் கொடுத்தாள்.  அதை வாங்கிக்கொண்டு பெரியப்பாவின் வாயருகே சென்றான்.  அந்தக் காவாசி உசிருக்கு முகத்தில் தெளிச்சி தட்டியது.  உறுமல் அதிகமானது.  பயப்படாத ஊத்து என சுற்றி நின்ற குரல்கள் சொல்ல பாலை வாய்க்குள் ஊற்றினான்.

‘உம் பேரச்சொல்லி இன்னாருதேனு ஞாபகப்படுத்து ’ என்று அம்மா சொன்னாள்.  

‘ஐயா..ஐயா..நாந்தேன் மணிராசுயா..ஐயா..ஐயா..என்ன தெரிதா…’

இவன் கேட்கக் கேட்க மூச்சுத் திணறல் அதிகரித்து ஒரு கட்டத்தில் அடங்கியது. ஊரும் சொந்தமும் கூடியது.  தறி ஓட்ட சம்சு விடப்பட்டது.

‘யோவ் எரிக்கலாமா பொதைக்கலாமா.’

‘ஏ..யெப்பா என்ன பேசிட்ருக்க, கண்ணாளமாகாத ஆளுயா புதைக்கிறதாஞ் சரி.’  

‘சும்மா நசநசனு பேசாம முருகன்ட்டயே கேளுங்கப்பா.’  

ஊர் பெரிய தலைகளின் கழுத்து முருகனை நோக்கித் திரும்பியது.  

‘என்னப்பா உங்க அண்ணன எரிப்போமா பொதப்போமா.’

‘சுப்பு மாமா சொன்னபடிக்கே கல்யாணமாகத ஆளு அதனால பொதச்சிரலாமுங்க.  அப்புறங்க கொட்டுகிட்டலாம் அமத்த வேணாங்க.’

‘சரிப்பா முருகா.’

சங்கு ஊத பாடை வண்டி தயாரானது.  பெரியப்பாவைத் தூக்கி பாடையில் வைத்தனர்.  ஒவ்வொருமுறை சங்கு சத்தம் கேட்க கேட்க மணிராசின் அக்கா செல்வி அழுதுகொண்டே இருந்தாள்.  பயந்து போயிருந்ததால் அம்மா அக்காளைத் தேற்றினாள்.  பாடை கிளம்ப ஊர் ஆம்பளைகள் பின்னாடியே சென்றனர். மணிராசு கருப்பு மச்சானுடன் டிவிஎஸ்50ல் முன்னக்கூடிய சுடுகாட்டிற்கு போய்விட்டான். சுடுகாட்டை அப்போதுதான் முதல் தடவை பார்க்கிறான்.  உடனே வலது கையை சட்டைக்குள் விட்டு வயிற்றுத் தொப்புளுடன் வைத்துக்கொண்டான்.  

‘டேய் பதினெஞ்சு வயசாச்சு ஏண்டா இன்னும் சின்ன நொண்ணியாட்டம் பன்ட்டிருக்க, கைய வெள்ளெல்ரா தாயிலி.’

மச்சான் சொன்ன பிறகு கையை எப்போதும் போல் வைத்துக் கொண்டான்.  ’அந்தா கூடாரம் மாரி இருக்கே அங்கதான் பொனத்த எரிப்பாங்களா.’

‘ஆமாடா நாளைக்கு நீ செத்தாலுஞ் சேரி நாஞ் செத்தாலும் சேரி இங்கனதான்.  நம்ம சாலியப்பெய மக்கா எல்லாரும் இங்கெனதேங்.  அங்குட்டு இன்னொரு சுடுகாடு இருக்கே.  ஒரு சுடுகாடு இல்ல சாதிவாரியா பல கிடக்கு.’

‘என்னய்யா, பொணம் எப்ப வரும்’ வெட்டியானின் குரல் கேட்க சங்கு சத்தமும் சேர்ந்து கேட்டது.  ’இந்தா சங்கு சத்தம் கேட்குதுல பக்கத்துல வந்திருச்சு’ மச்சான் சொன்னான்.

‘ஏ முருகா தறியவிட்டு எந்திரிடா. செத்த முண்டயாட்டம் ஓட்டிட்டு கெடக்க. கையவும் காலவும் பாரு வேத்து ஊத்துது.  இப்புடி இருந்தா எப்புர்ரா மிதிப்பலகா கால்ல நிக்கும். இழுவக்கயிறு கைல பிடிபடும். உரப்பான வேல பாத்துத் தொலடா. தள்ளு தள்ளு இடத்த காலி பண்ணு.’

‘இல்லணே நானே ஓட்டிருவேன்.’

‘மொச புடிக்கிறத எங்களுக்குத் தெரியாதாக்கும்.  செத்த நேரத்துல உங் கூட்டாளி வந்துருவானுங்க. ஓட்ன பாதிச் சீலையோட வெளில கெளம்பிருவ.  பூராம் உருப்புடாத கேசு.  கேட்டா கட்சி கொள்கனு பேச வேண்டிது.  நயாப் பைசா புரையோஜனம் இருக்கா அந்த கட்சினால. கேட்டா மொழிய வளக்குறதே நாங்கதானு சொல்றது.’

‘அண்ணே உனக்கு அம்புட்டுதா மரியாத.  கட்சிய பத்தி தப்பா பேசாத’.  

‘ஏண்டா எடுவட்ட முண்ட கட்சியா சோறு போடுது. உந்தாட்டியத்தெல்லாம் இங்க காட்டக்கூடாது.’

‘அண்ணே நீ ரெம்ப மணியம் பன்ற. உஞ் சோலி மயிரப் பாரு. எனன்கெல்லாந் தெரியும்.’

கோபத்தைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிப் போனான் முருகன்.  

‘ஏம்பா நடராசா தம்பிட்ட பாத்து பேச வேணாமாயா’

அடுப்படியிலிருந்து மரகதம் சொல்ல ’சும்மாக் கெட கெழவி உனக்கு ஒன்னுந் தெரியாது. இவன அந்த கட்சில இருந்து அடிச்சு வெரட்டுறானுங்களானு பாரு.’

அன்று பொதுக்கூட்டம் காந்தி மைதானத்தில் நடந்தது. முருகன் மைக்கைப் பிடித்து ஒரு வெளு வெளுத்துவிட்டான்.  கூட்டத்திற்கு தலைமை தாங்கிய விருதை சம்பந்தம் பேசும்போது “தம்பி முருகன் சொன்னது போல” என்று முருகனின் பெயரை அடிக்கடி ஒப்பித்தார். ஒருவாரம் கழித்து கட்சியின் செய்தித்தாளில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பட்டியலில் முருகனின் பெயர் இருந்தது. கூடவே அவனது கூட்டாளிகளின் பெயரும். முருகனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  நடராசனுக்கு ஒரே சந்தோசம். இனிமேலாவது வேலை வெட்டினு இருப்பான் கட்சினு திரிய மாட்டான் என மனதில் நினைத்துக் கொண்டார். அந்த சந்தோசத்தை வெளிக் காட்டாமல் ‘இப்பயாது பொழப்பப் பாருடா, தட்சிணாமூர்த்திய எம்புட்டு கும்புட்டாலும் கடைசில கொலதெய்வந்தேன் சோறு போடும்டா’ என்று சொன்னார்.  எதிர்வீட்டு செல்வராசு ‘அந்த கட்சில இருக்குறதுக்கு பேசாம எங்க கட்சில வந்து சேரு முருகா’ என்றான்.  இல்லயா… எனக்கு மேக்கப் போடுறவங்க பின்னாடி போறது பிடிக்காதென ஒரே வார்த்தையால் முகத்தில் அறைந்தான் முருகன்.

‘யெம்மோ நீ எந்திரி நாந் தார் சுத்துறேன்.’  புள்ளைக்கு பொறுப்பு வந்ததை எண்ணி மனங் குளிர்ந்தாள் மரகதம்.  ஊடநூலை சக்கரத்தில் மாட்டி குழலை சுத்துக் கம்பியில் செருகினான். சங்கரலிங்கம் விழுந்தடித்து ஓடி வந்து ’முருகா… உங்கண்ணே கால வெட்டிட்டானுங்கடா… பாப்பணைக்க போன இடத்துல இப்புடி ஆய்ருச்சுடா’ என்று கத்தினான்.  ராட்டை விலக்கிவிட்டு அவனுடன் முத்துச்சாமி வீட்டை நோக்கி ஓடினான் முருகன்.  வீட்டு முற்றத்தில் இரத்தம் ஒழுக நடராசன் கிடந்தார்.  முத்துச்சாமி கொல்லப்புறம் வழியே கம்மாய் தாண்டி ஓடிவிட்டான். முத்துச்சாமியின் பெஞ்சாதி கேவியபடி தரையில் குத்தவைத்து இருந்தாள். பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் அண்ணனை தோள்மீது தூக்கிப் போட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினான். ‘தம்பி போலீஸ் கேசு ஏதும் குடுக்காதடா’ என்ற குரல் முருகனின் முதுகுப் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்தது.

நடராசனுக்கு நெசவு தவிர ஆசாரி வேலையும் அத்துப்படி. வேலாயுதபுரம் ஆறுமுக ஆசாரியிடம் இரண்டு வருடம் வேலை செய்திருந்த அனுபவம் இருந்தது.  இடது கால் இல்லாததால் தனக்காக ஒரு கட்டைக் காலை செய்து கொண்டார்.  இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு, அப்படியே கட்டையை ஊனி ஊனி நடப்பார். மணிராசு நடக்கப் பழகியதே நடராசனிடம் தான். அப்போது நடவண்டி வைத்துத்தான் நடக்கப் பழக்குவார்கள். நடராசன் தன் துண்டை வைத்து மணிராசை நடக்க பழக்கினார்.  துண்டை மணிராசின் மார்பில் கட்டி கம்புக்கூடு வழியே துண்டின் முனைகளை வலது கையில் பிடித்து ஒவ்வொரு எட்டாய் நடக்க வைத்தார். ராத்திரி தூங்கப் போகையில் மணிராசின் காலை அமுக்கிவிட்டு கதை சொல்லி தூங்க வைப்பார்.  கட்டையில் பிளசர், களிமண்ணில் குதிரை எல்லாம் செய்து விளையாடக் கொடுப்பார்.

‘ஐயா’ என்று அழுதபடிக்கே மணியரசு வந்தான்.  

‘என்னடா மவனே என்ன ஆச்சு.’  

‘அந்த வேலு மாமா பெய என்ன ஆட்டைக்கு சேத்திகிட்ட மாட்டுறான்.’

‘ஏன் சேத்துக்க மாட்டுறான்.’

‘பம்பரஞ் சுத்தும்போது கையெல்லாம் வேத்து ஈரமாயிருதுயா. அதனால பம்பரஞ் சரியாவே சுத்த முடியல. பம்பரங் கூட சுத்தத் தெரில உப்புக்கு சப்பாணினு சொல்றாங்கயா.’

’ஏன்டா சீவனத்த வாங்குற.  உங்கொப்பங் கையும் இப்படிதாங்.  சின்ன பெயதான நீ..போவப் போவ சரியா போய்ரும். நா அந்த சில்லுண்டி பெயலுகள்ட்ட உன்ன சேத்திக்க சொல்றேன்.’

மணிராசு அழுகையை நிப்பாட்டி ஓட ஆரம்பித்தான்.

முருகனுக்கு தறி ஓட்ற வேலை இருப்பதாலேயே மணிராசை கவனிக்க முடியாது. வரவு செலவு கணக்கு பாக்க போகனும், ஊட நூலு வாங்க போகனும் ஆயிரத்தெட்டு சோலி இருந்துச்சு. அதனாலேயே நடராசனிடமே மணிராசு அதிகம் வளர்ந்தான். நடராசனுக்கு சோசியம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுதி.  செல்விக்கும், மணிராசுக்கும் சோசியம் பாத்ததே இவர்தான்.  செல்விக்கு செவ்வா தோசம் அத சரியாக்கனும். அதுக்கு இந்த மந்திரத்த தெனமும் ஒருக்க சொல்லனும்னு சொன்னார்.

ஞானானந்தமயம் தேவம் நிர்மல 
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ
முபாஸ்மஹே”

இந்த மந்திரத்தை செல்வியைவிட மணிராசுதான் நன்றாக மனப்பாடம் செய்திருந்தான். பெரும்பாலும் நடராசனின் சோசியம் பலித்துவிடும். இதை எப்படி கற்றார் என்று கேட்டால் சொல்லமாட்டார்.  

‘ஏய்..ஏய் குத்துனா கும்பம்.’

‘அதெல்லாம் முடியாது.’

‘டேய் ஆக்கர் வைடா அவஞ் செத்தக்கட்டைக்கு.’

குத்துன குத்தில் மணிராசின் பம்பரம் பிளந்து வாய்க்காலில் ஒரு பாதி வேப்பமரத்துக்கடியில் ஒரு பாதி சிதறி ஓடியது. ’கோஸ்’ என்ற கோரஸ் குரல்கள். ‘டேய் கணபதி ஏண்டா யெம் பம்பத்த உடச்ச.’

‘ஆட்டைனா உடயத்தாஞ் செய்யும் போவியா.’

கணபதியை அடிக்க ஓடி வந்த மணிராசு தரை மண் தேய சறுக்கி விழுந்தான். கூட்டாளிகளெல்லாம் சிரிக்க இருங்கடா எங்க அய்யாவ கூட்டி வாரேன் என்று கிளம்பினான்.

‘ஐயா பள்ளியூடத்திலயுஞ் சரி தெருவுலயுஞ்சரி என்ன அந்த கணபதி ஒரண்ட இழுத்துட்டே இருக்கான்யா என்னனு வந்து கேளு.’  

‘கணபதி யார்ர அவென் புதுக் கூட்டாளியா.’

‘கூட்டாளிலாம் இல்ல நம்ம தெருவுக்கு ஒருமாசம் மின்னுக்க புதுசா குடி வந்துருக்காங்க. எங்கூடதா படிக்குறாங்.’

‘அவங்கப்பேன் யாரு.’

‘அதெல்லாம் தெரியாது. ஆனா அவன மத்த பசங்க ஓடிப்போன முத்துச்சாமி பையனு சொல்லி கேலிப் பண்ணுவாய்ங்க.’  

நடராசனின் முகம் சட்டென இறுக்கமானது.

‘என்னயா எதுமே சொல்ல மாட்ற.’  

‘விடுடா பாத்துக்கலாம்’.

‘அவன என்னனு கேக்க போறியா இல்லையா.’

‘விடுன்றேன்ல…’

அடுத்தநாள் நடராசன் ஊடநூலை பசைப்பிரிக்க தரையில் அடித்துக் கொண்டிருந்தார்.  ’நேத்து நாங் கூப்ட்டு வரலல’ சொத்தென்று முதுகில் குத்தி ஓடிய மணிராசின் கால்கள் நூலில் பின்னிக் கொண்டன.  குப்புறடிக்க விழுந்தான்.  வலது நெத்தி தெறித்து ரத்தம் கொட்டியது.  வள்ளிமயில் பதறிக்கொண்டு டீத்தூளை மணிராசின் நெற்றியில் தேய்த்துவிட்டாள்.  

‘ஏண்ணே இப்படி பன்ற அங்குட்டு போயி நூல அடிச்சாதா என்னவாம்.’  

‘அது இல்லப்பா முருகா’

‘விடுணே கட்டுப்போட போயிருக்குறவ வந்து என்ன பாடுபடுத்தப் போறாளோ.’ கூனிக்குறுகிப் போனார் நடராசன்.  

முருகனிடம் நடராசனைக் காய்ச்சி எடுத்தாள் வள்ளி. கேட்டுக்கொண்டே இருந்த நடராசன் கட்டைக் காலை ஊனி வந்து ‘ஒரு நிமிசம்மா’, மணிராசின் கட்டுப்போட்ட தலையில் கை வச்சு ‘இவன் நல்லா வருவான்.  இவன் கைலதான் எனக்கு சாவு. இது நிச்சயம்’, சொல்லிவிட்டு நகர்ந்தார்.  வீடு அமைதியானது.  கிட்டத்தட்ட மயான அமைதி.  

‘ஏற வுடு ஏற வுடு….’ மணிராசு கபாடி என்று கத்திக்கொண்டே யாரைத் தொடலாம் என்ற யோசனையில் இருந்தான். ‘ஏற வுடுங்கடா அவன’ கணபதி கத்த மணிராசின் கண்கள் கணபதியை பார்த்தவாறு இருந்தது. ‘டேய் இவன டேசடிச்சு அனுப்புங்கடா.’ வெடுக்குனு மணிராசின் வலதுகாலை ஒருவன் பிடித்திழுத்தான். மணிராசிற்கு ஈட்டி போட்டு லாபியை தாண்டி வெளியே எறிந்தான் கணபதி. கடுப்பேறிப்போன மணிராசு ‘போட ஓடிப்போன முத்துச்சாமி மவனே’ என்று கத்திவிட்டான். சுத்தியிருந்த அத்தனை பேரும் சிரிக்க ஆரம்பித்தனர்.  கபடியின் அடுத்த ஆட்டம் வந்தது.  கணபதி பாடிய படி ஏறுகோட்டருகில் வர கணுக்காலை மணிராசு பிடித்திழுத்தான். படக்கென்று காலை உதறி விடுவிக்க மணிராசு கணபதியின் கையை பிடிக்க வழுக்கிக் கொண்டு போனது. மீதமிருந்தவர்கள் கணபதியின் மேல் பாய முற்பட்டனர். சுதாரித்த கணபதி சொத்தென மணிராசின் நெஞ்சில் ஐந்து விரல்களையும் பதித்து ஒரு புள்ளியோடு வெளியேறினான்.  

மணிராசிற்கு அந்த அடி ஐயாவின் அடியை நியாபகப்படுத்தியது. சின்னப் பையனாக இருக்கையில் முதுகில் அவர் திட்டென கொடுத்தபோது உரைத்த அதே உணர்வு. ‘என்னடா பொம்பள பிள்ளையாட்டம் கைய வச்சிருந்தா எப்படிடா காலு அம்புடும். நல்லா உரப்பான வேல செய்டா’ சக கூட்டாளிகள் சொல்ல காதில் வாங்காதவனாக கணபதி அடித்த அடியை மனதில் ஓட விட்டுருந்தான். இந்த சம்பவத்திற்கு பிறகு கணபதியிடம் பார்த்தே பழகினான்.

முத்துச்சாமி நடராசனின் காலை வெட்டின அடுத்தநாள் வேறு ஏரியாவுக்கு சென்றவள்தான் அவன் பொஞ்சாதி. ஒரு மாசம் முன்னம் தான் பழைய வீட்டிற்கே வந்தாள். தெருக்காரர்களோடு பழகினாலும் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தாள். முக்கியமாக நடராசனின் கண்களில் பட்டுவிடக் கூடாது என்பதில் மட்டும் கவனமாக இருந்தாள். வெளியே செல்ல வேண்டுமென்றாலும் கூட கொல்லைப்புறம் வழியேதான் செல்வாள். ஒரு அவசர வேலையாக தெரு வழியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட மணிராசின் வீட்டைக் கடக்கும்போது முக்காடு போட்டுக் கொண்டாள். கட்டைக்கால் சுவரில் சாய்ந்திருந்தது.  நடராசன் வீட்டுத் திருணையில் உட்கார்ந்திருந்தார்.  முத்துச்சாமியின் பொஞ்சாதியை அடையாளம் கண்டுவிட்டார். அவளும் இவரைப் பார்த்துவிட்டாள்.  அவளுக்கு மனசு கெடந்து துடித்தது. விருட்டென்று நகர்ந்துவிட்டாள்.  நடராசனுக்கு மூச்சு வாங்கியது. அவரால் சாதாரணமாக இருக்க முடியவில்லை.  மயங்கி விழுந்தார். ‘ப்ச்..கொஞ்சநாள்தா தாங்குவாப்ல. எதுக்கும் எல்லாத்துக்கும் தயாரா இருங்கம்’ எல்லா டாக்டரும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.

‘தாய் வயித்துக்காரக மண்ணள்ளி போடுங்கயா.’ முதலில் முருகன் மண்ணள்ளிப் போட்டார்.  அன்னைக்கி கெழவி சாகும்போது ‘உங்கண்ணனுக்கு யாரும் இல்லடா நீதாங் பாத்துகிடனும்’னு சொன்னது கண் முன் வந்து நின்றது.  அடுத்து மணிராசு மண்ணள்ளினான்.  கை நடுங்க ஆரம்பித்தது.  கண்கள் லேசாக கலங்கியது.  ‘தம்பி வெரசா போடுயா மண்ண.’ நடராசனின் கட்டைக்காலும் அவருடன் சேர்த்துப் புதைக்கப்பட்டது.

மூன்று நாள் காரியம் முடிந்தது.  முத்துச்சாமியின் வீட்டைத் தாண்டி மணிராசு போகையில் வாசப்படியில் அவனின் பெஞ்சாதி உட்கார்ந்திருந்தாள்.  எதையோ பறிகொடுத்தவள் போல இருந்தாள்.  ஒருவேளை முத்துச்சாமி இறந்திருப்பார் போல என எண்ணிக்கொண்டான். கணபதி வேற மூன்றுநாள் கண்ணில் தட்டுப்படவில்லை என்பதாலும் அவளின் பக்கத்து வீட்டுக்காரர்களும் இதையேதான் நினைத்துக்கொண்டனர்.  

‘வள்ளிமயிலே மணிராசோட கை மசுர செரச்சுவிடு. பெரியப்பனுக்குதாங் புள்ளையில்ல மணிராசு அவர சுத்தி சுத்தி வந்தாங். பன்னி விடுத்தா’ கலுசு தாத்தா சொல்ல மணிராசின் கை மயிர் மழிக்கப்பட்டது.

‘எம்மா மூனு நாளு லீவு போட்டேன் இன்னைக்காவது ஸ்கூலுக்கு வேமா போனும். சாப்பாட டிபன் பாக்ஸ்ல டக்குனு வைங்க.’  

‘ஏ ரெடி டா.’  

அரக்கப்பறக்க பள்ளிக்கூடம் வந்து வகுப்பறையில் உட்கார்ந்தான்.  பள்ளிக்கூடம் தொடங்கியது.  ’மே ஐ கமின் டீச்சர்.’  

‘ஏண்டா லேட்டு, மூனு நாளு ஆளவேக் காணும்.’

‘அப்பா தவறிட்டாரு டீச்சர். சரிப்பா உள்ள வா.’

முத்துச்சாமி மகன் கணபதி மொட்டைத் தலையுடன் உள்ளே நுழைந்தான். எல்லாரும் பாவ முகத்துடன் அவனைப் பார்த்தனர்.  மணிராசிற்கு முகத்தில் ஒரு அதிர்ச்சி.  கணபதியின் கண்களை உற்றுப்பார்த்தான். அந்தக் கண்கள் ஐயாவின் கண்களாய் தெரிந்தது. அவன் காதுகள் ஐயாவின் காதுகளாக மாறியிருந்தது. அவனின் கைகள் ஐயா உடையதேதான். இவன் கணபதி அல்ல ஐயாவே தான்.  மணிராசைப் பார்த்து ஒரு சிரிப்புடன் கணபதி முன் பெஞ்சில் அமர்ந்தான்.  மணிராசால் அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அன்று மதியம் வெக்கையை அடக்க பேய் மழை பெய்தது.

***

–  தமிழ்மணி, அருப்புக்கோட்டை

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு – 2

0

இதற்கு முந்தைய / பிற பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

கட்புலனாகா அரங்கு (Invisible Theatre) – சமூக மாற்றத்திற்கான கருவி!

யதார்த்தத்திற்கும் நாடகத்திற்கும் இடைப்பட்ட புள்ளி

டுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் இன்னொரு வடிவமான, கட்புலனாகா ஆற்றுகை வடிவத்தினை, நாடகம் என்று வரையறுப்பதா, யதார்த்தமென்று வரையறுப்பதா என்பது கடினமான கேள்வி. இது யதார்த்தத்திற்கும் நாடகத்திற்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் சேர்க்கக்கூடிய ஒரு கலைவடிவம். இது மேடையில் நிகழ்த்தப்படுவதற்கு பதிலாக, மக்கள் கூடுகின்ற, நடமாடுகின்ற பொதுத்தளங்களில் நிகழ்த்தப்படுவதாகும். ஏதேனுமொரு ஒடுக்குமுறை மீது கேள்வியெழுப்பும் வகையிலும் நிகழ்த்தப்பட வேண்டும். ஒடுக்குமுறைக்குரிய தீர்வினை நோக்கிய உரையாடலை, விவாதத்தை, சிந்தனையை நோக்கி நகர்த்துவதாகவும் அமையும்.

இங்கு பார்வையாளர்கள் என்ற நேரடி வரையறை பொருந்தாது. நாடகம் நிகழ்த்தப்படும் இடத்தில், அந்த நேரத்தில் இயல்பாகவும், தத்தமது அலுவல்கள் நிமித்தமும் கூடியிருக்கின்ற¸ நடமாட்டத்திலிருக்கின்ற மக்கள்தான் இதன் பார்வையாளர்கள். நாடகம் என அங்குள்ளவர்கள் அறியாதபடி இது நிகழ்த்தப்படும். அந்தச் சூழலில் இயல்பாக நிகழும் ஒரு சம்பவம் போல மக்கள் இதனைக் காண்பார்கள்.

ஒடுக்குறைக்கெதிரான பேசுபொருள்

யதார்த்த சூழலில் நிகழக்கூடிய, எதிர்கொள்ளக்கூடிய, சமூகத்தில் நிலவக்கூடிய ஒரு ஒடுக்குமுறையைப் பேசுபொருளாகக் கையாள்கின்றது. அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார, இன, பால், நிற, குடும்பம் என ஒட்டுமொத்தாக மானிட சமுதாயம் எதிர்கொள்ளக்கூடிய ஒடுக்குமுறைகள், பாரபட்சங்களை இதன் பேசுபொருளாகத் தெரிவு செய்ய முடியும்.

ஒரு தனிநபர் இன்னொரு தனிநபரை நோக்கி, குழுவொன்று தனிநபர் மீது, அதிகாரம் மிக்க தனிநபர் குழு ஒன்றின் மீது என ஒடுக்குமுறை எந்த வகையினதாகவும், வடிவத்திலும் இருக்கலாம். என்ன நடைபெறுகின்றது என்பதைத் பார்வையாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் நாடகத்தின் சித்தரிப்பும் காட்சிகளும் கட்டமைக்கப்படுதல் வேண்டும்.

நிகழ்த்தப்படும் இடம் ஒரு சந்தையாக, வணிக வளாகமாக, உணவகமாக, நேநீர் சாலையாக, பாடசாலைக் கன்ரீனாக, வேலைத்தளமாக, பொதுச்சேவையிடமாக, போக்குவரத்து நிலையமாக என மக்கள் கூடுகின்ற இன்னபிற இடங்களாகத் தெரிவு செய்யப்படும்.

இதனை நம்மில் பலர்  தெரு நாடகம் என நினைக்கக்கூடும். தெரு நாடகம் வேறு. இந்தக் கட்புலனாகா அரங்கம் வேறு. இதனை நாடகமென இதன் பிரதியை ஆக்கியவரும் நெறியாளரும் நடிகர்களும் இதன் உருவாக்கக் குழுவினரும் மட்டுமே அறிந்திருப்பர். துல்லியமாகத் திட்டமிடப்பட்ட நாடகமொன்றைத் தாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை அங்கிருப்பவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். நிகழ்த்தப்படும் இடத்தில் நிகழும் ஒரு சம்பவமாகவோ, முரண்பாடாகவோ, ஒடுக்குமுறையாகவோ தான் கூடியிருக்கும் மக்களுக்கு (பார்வையாளர்கட்கு) தோன்றும். அந்த அடிப்படையிலிருந்து தான் மக்களின் தலையீடும் பங்கேற்பும் எதிர்வினையும் அமையும்.

நுணுக்கமான முன்தயாரிப்பு – எழுத்துரு – ஒத்திகை

ஆயினும் எந்தவொரு வழமையான நாடகவடிவங்களை உருவாக்குவதற்குரியது போன்ற திட்டமிடலும், முன்தயாரிப்பும் இந்த வடிவத்திற்கும் அவசியம். நாடகம் நிகழும் போது அங்குள்ள மக்களை அதற்குள் உள்ளிளுத்து பங்கேற்கச் செய்தல் – நிகழ்ந்து முடிந்த பின்னர் நாடகம் கையிலெடுத்திருந்த பேசுபொருள் பற்றி மக்களைத் தமக்குள் உரையாடச் செய்தல் –  விவாதிக்கச் செய்தல் என்பன இதன் முக்கிய நோக்கம். அதனூடாக மக்களின் மனநிலை, கருத்து நிலையில் ஒடுக்குமுறை அநீதிகளுக்கு எதிரான மாற்றங்களைத் தூண்டுவதாகும்.

இதன் பிரதி (Script work) காட்சி விபரிப்புகளோடு இயல்புத்தன்மையைப் (Realism) பிரதிபலிக்கும் வகையில் ஆக்கப்பட வேண்டும். பாத்திரங்கள் உருவகப்படுத்தப்பட்டு, அதற்குப் பொருத்தமான நடிகர்கள் தெரிவு, போதிய ஒத்திகைகளினூடாக நெறிப்படுத்தப்படும். வழமையான ஒரு நாடகமோ, அரங்க ஆற்றுகையோ எப்படி எழுதப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு நெறிப்படுத்தப்படுகின்றதோ, அதேபோன்ற முன்தயாரிப்பு இதற்கும் அவசியம். இன்னும் சொல்லப்போனால் அவற்றில் நுணுக்கமும், திட்டமிடலும், போதிய நேரமும் இதற்கு மேலதிகமாக அவசியப்படுகின்றது.

சமூக மாற்றம்

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கின் இலக்கு மாற்றம் என்பதாகும். முற்போக்கான சமூக மாற்றத்தைக் கோருவதுதான் இந்தக்கலையின் முக்கிய நோக்கம். ஒடுக்குமுறைக்கெதிரான சிந்தனை, செயற்பாடு என்பதாக மாற்றமென்பது இங்கு அர்த்தப்படுகின்றது. பிரக்ஞையற்ற பார்வையாளர்களை பிரக்ஞை பூர்வமானவர்களாக்குதல். செயற்துணிவும் செயலூக்கமும் உள்ள மனிதர்களாக மாற்றுவதற்குரிய கருவியாக இந்த வடிவம் Boal-இனால் வளர்த்தெடுக்கப்பட்டது.

இதனை நிகழ்த்துவதற்கு பிரத்யேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபம் தேவையில்லை. பார்வையாளர்களுக்கு அழைப்பு விடுத்து நாடகம் பார்க்க அழைக்க வேண்டியதில்லை. மக்களை நாடி நாடகத்தைக் கொண்டு செல்வதோடு, நாடகம் என்று மக்கள் அறியதபடி மக்கள் மத்தியில் அதனை நிகழ்த்துவதாகும். அந்த வகையில் நாடகம் தொடர்பான ஈடுபாடு அற்ற, அது தொடர்பான கருத்துமந்தம் கொண்டவர்களின் கவனத்தினையும் இந்த வடிவத்தின் மூலம் ஈர்க்க முடியும்.

மரபார்ந்த நாடகமும் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கமும்

மரபார்ந்த நாடகத்திற்கு ஒரு மேடை இருக்கும். ஆங்கு நிகழ்வது நாடகம் என்ற முன்னறிவிப்பிற்கு அமைய அதற்கான பார்வையாளர்கள் இருப்பார்கள். இங்கு வித்தியாசம் என்னவெனில், மண்டப மேடையில் நடாத்தப்படுவதற்கு மாறாக நடைமுறையில் அத்தகைய நிகழ்வு ஒன்று சம்பவிக்கக்கூடிய பொது இடங்களில் நிகழ்த்தப்படுகிறது.

பொதுவாகவே மரபார்ந்த நாடகத்திற்கும், ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கத்தின் அனைத்து வடிவங்களுக்குமான முக்கிய வேறுபாடு தொடர்பாடல் வெளியும் பங்கேற்பு வெளியும் சார்ந்தது. மரபார்ந்த நாடகம் என்பது பார்வையாளர்களை நோக்கிய ஒரு வழித்தொடர்பாடலைக் கொண்டது. ஆற்றுகையாளர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும் பார்வையாளர்கள் வெறுமனே நாடகத்தின் கருத்தினையும் கலைத்தன்மையையும் நுகர்பவர்களாக மட்டும் உள்ளனர். நாடகத்தின் கட்டமைப்பிற்கும் நிகழ்வடிவத்திற்கும் கட்டுப்பட்டவர்களாக பார்வையாளர்கள் உள்ளனர். Boal-ன் கூற்றுப்படி, நாடகத்தின் சடங்குகளால் அவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

மரபார்ந்த நாடகத்தில் பார்வையாளர்கள் தமது விருப்பப்படி சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்தவோ அன்றி நாடகத்தின் அங்கமாகப் பங்கேற்கவோ முடியாது. பார்வையாளர்கள் தம்மை வெளிப்படுத்தும் அதிகாரமற்றவர்களாக, ஒடுக்கப்படும் தரப்பினராக வைத்திருக்கப்படுகின்றனர் என்பது Boal-ன் பார்வை.

பார்வையாளர்களுக்கு அதிகாரம் சமூக மாற்றத்திற்கான கருவி

ஒட்டுமொத்தமாக ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கம் என்பது பார்வையாளர்களை நேரடியாகப் பங்கேற்க வைப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரத்தினை வழங்குதல், அந்தப் பார்வையிலிருந்து தான் ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கக்கூறுகளை Boal தோற்றுவித்தார். மேடைக்கும் மண்டபத்திற்கும் இடையிலான இடைவெளியைத் தகர்ப்பது, நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவது என்பது அவருடைய இலக்கு. சமூக மாற்றத்திற்கான கருவியாக அரங்கியலைக் கைக்கொள்ளும் சிந்தனையில் பரந்துபட்ட மக்களின் நேரடிப் பங்கேற்பினைக் கோருகின்ற நிலையிலிருந்தே Boalன் இந்த அணுகுமுறையை விளங்கமுடியும்

அனைவருமாக இணைந்து சிந்தித்தல், செயற்படுதல், பிரச்சினைகளுக்கான தீர்வினைக் கண்டடைதல் என்பது இந்த அரங்கச் செயற்பாட்டின் இலக்கு.

முழு உலகமும் ஒரு நாடக மேடை’

‘முழு உலகமும் ஒரு நாடக மேடை’ என்றார் சேக்ஸ்பியர். கட்புலனாகா அரங்கம் பற்றிய சிந்தனை அப்பொழுது அவரிடம் இருந்திருக்கா விட்டாலும், அந்தக்கூற்று முற்றுமுழுதாக கட்புலனாகா அரங்கத்திற்கும் பொருந்துகிறது. ‘Theater can be done everywhere. Even in a theater – நாடகத்தினை எங்கு வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். சில சந்தர்ப்பங்களில் மேடையிலும் அதனை நிகழ்த்தலாம்’ என்பது Boal-ன் பிரசித்திபெற்ற கூற்று.

ஒத்திகை பார்க்கப்பட்ட ஒரு அரங்கப்பிரதி அமைய மேடையில்லாத ஒரு இடத்தில் நிகழ்த்தப்படுவதாயினும், நிகழ்த்தப்படும்போது, கட்புலனாக நாடகம் மரபார்ந்த நாடகத்திலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றது.

கட்புலனாகா நாடகத்தின் ஏதோவொரு கட்டத்தில், அல்லது முடிவில் மக்களின் பங்கேற்பு நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது. நிகழ்த்தப்படும் சம்பவத்தில் முரண்பாடு கூர்மையடையும் போது மக்களின் ஊடாட்டம் (interaction) நிகழும். நாடகம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, பார்வையாளர்களாகிய மக்கள் எந்தக்கட்டத்தில் வேண்டுமானாலும் குறுக்கிடலாம். அல்லது தலையிடாமல் சம்பவத்தை முழுமையாகப் பார்த்துவிட்டுக் கலைந்து செல்லலாம். அல்லது சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அந்த இடத்தில் நிற்காமல் விலகியும் செல்லலாம். எனவே பார்வையாளராகிய மக்களுக்கு எல்லாவிதமான தெரிவுச்சுதந்திரமும் இதில் உள்ளது.

கட்புலனாக நாடகத்தில் கவனிக்க வேண்டியவை

கட்புலனாக நாடகத்தை வெற்றிகரமாக நிகழ்த்துவதென்பது மக்களை அதில் தலையிடச் செய்வது, கருத்துகூற வைப்பது, தீர்வு பற்றிச் சிந்திக்க வைப்பதில் தங்கியுள்ளது.

அதனை உறுதிப்படுத்துவதற்கு நாடகத்தில்:

  • கூர்மையானதொரு ஒடுக்குமுறை, முரண்பாட்டினைக் கொண்ட சம்பவம் பேசுபொருளாக்கப்படுதல் வேண்டும்.
  • பதற்ற சூழல் தோற்றுவிக்கப்படவேண்டும்.
  • மக்களை ஈடுபட வைப்பதற்குரிய வகையில் அந்தப் பதற்றம் படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும்
  • நிகழ்த்தப்படும் இடம் கணிசமான மக்கள் கூடுகின்ற இடமாகத் தெரிவுசெய்ய வேண்டும். அந்த இடத்திற்குப் பொருத்தமான பேசுபொருள் அமைதல் வேண்டும்
  • நாடகத்தின் கட்டமைப்பு வடிவம், வளர்த்தெடுக்கப்படும் முறையிலும் கவனம் கொள்ள வேண்டும். நாடகத்திற்குரிய தன்மைகள், தரம், களம் சார்ந்த நாடகத்தின் நீளம் துல்லியமாகத் திட்டமிடப்படுதல் முக்கியமானது.

(தொடரும்)

***

ரூபன் சிவராஜா

தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வரும் இவர் கட்டுரைகள் போக கவிதை, பாடல்களும் எழுதி வருகிறார். வசிப்பது நார்வேயில். இவரது முதல் நூல் – அதிகார நலனும் அரசியல் நகர்வும் அண்மையில் வெளியானது.

மொடாக்குடியன் (குறுங்கதைகள்)

0

சுரேஷ்குமார இந்திரஜித்

1 ) அது அப்படித்தான்

சரவணனும் அவன் மனைவியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். இன்று வேறுபக்கம். வழக்கமாகச் செல்லும் வழியை மாற்றுவோம் என்று மனைவி சொல்லியிருந்தாள். போகும் வழியில் பல வருடங்களுக்கு முன் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவமனையைக் கடந்தார்கள். இந்த மருத்துவமனை டாக்டரிடம்தான் முதலில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

பிறகு பக்கத்திலேயே ஓரு டாக்டர் வந்துவிட்டதால் அவரிடம் காண்பிக்கலானார்கள். பழைய டாக்டரைப் பார்த்து பல காலமாகிவிட்டது. அவரைத் திரும்பி வரும்போது பார்க்கலாம் ‘ என்றான் சரவணன். மனைவியும் ‘ சரி’ என்றாள். மேலும் ‘புதியதாக நாம் காட்டும் டாக்டர் இவரைவிடக் கெட்டிக்காரர்’ என்றாள். அதை அவனும் உணர்ந்திருந்தான். ‘இந்த டாக்டர் வயதானவர். புது டாக்டர் வயது குறைந்தவர். அதனால் புது மாத்திரைகளைக் கொடுக்கிறார்.’ என்றான். மனைவி ஓர் துணிப்பையை மடித்துக் கையில் வைத்திருந்தாள். பழக்கடை அருகே வந்ததும் பழங்கள் வாங்கினாள். விலை பேசும்போது பழக்காரியுடன் அவளுக்குச் சிறு சச்சரவு ஏற்பட்டது. விலை பேசும்போது மட்டும் எப்படியோ அவளுக்கு ஒர் அதிகாரம் வந்துவிடுகிறது.

திரும்பும்போது பழைய டாக்டரின் மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள் டாக்டரின் அறைக்குள் நோயாளி இருப்பதாக செவிலி கூறினாள். காத்திருந்தார்கள். இந்த டாக்டர் இப்படித்தான் நோயாளியிடம் கதை பேசிக்கொண்டிருப்பார். ஒருவழியாக நோயாளி வெளியே வந்தார். சரவணனும் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள். டாக்டர் ஒருகணம் திகைத்தார். பின்னர் ‘வாங்க வாங்க’ என்று உற்சாகமாக வரவேற்றார். நலம் விசாரிப்பு முடிந்தது. அவனின் மனைவியைப் பார்த்து ‘வயசாயிடுச்சே’ என்றார். இருவரும் வெளியே வந்தார்கள். அவனது மனைவி யோசித்துக்கொண்டே வந்தாள் ‘ உங்களைக் கேட்கவில்லை. என்னை மட்டும் கவனித்துவிட்டு வயசாயிடுச்சு என்கிறார் டாக்டர்’ என்றாள் அதற்கு சரவணன் ‘அது அப்படித்தான்’ என்றான்.

2 ) மொடாக்குடியன்

மொடாக்குடியன் மகேந்திரனும் நானும் மேனகாவும் பீர் குடித்துக் கொண்டிருந்தோம். மகேந்திரன் பத்து பாட்டில் பீர் குடிப்பான். சிகரெட் பத்து பாக்கெட் வரை புகைப்பான். ஆள் கல் மாதிரி இருப்பான். எனக்குதான் ஏதாவது நோவு வந்து கொண்டேயிருக்கும் அவனுடைய அப்பா வசதியானவர். செல்வந்தர் குடும்பம். பல தொழில்கள் அவர்களுக்கு இருந்தன. பணத்திற்குப் பிரச்சினை இல்லை. மேனகா பீர் மட்டும்தான் குடிப்பாள். கூறுவதையே திரும்பக்கூறும் அந்த மொடாக்குடியன் கூறினான் ‘நான் சிறுவனாக இருந்தபோது கோவில் அருகே நடந்து வந்துகொண்டிருந்தேன் ஒரு குதிரை வண்டிக்காரர் வண்டியில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டார். நான் சென்றேன். அவர் என்னிடம் காசு கொடுத்து பீடி வாங்கி வரச்சொன்னார். நான் கடைக்குச் சென்று பீடி வாங்கினேன். பீடியை அப்போதுதான் கையால் தொட்டேன். பயந்துகொண்டே சென்று வாங்கிய பீடியை அந்தக் குதிரை வண்டிக்காரரிடம் கொடுத்தேன். வீட்டிற்கு பதற்றத்துடன் சென்று அம்மாவிடம் சொன்னேன். அம்மா அப்போது சமைத்துக் கொண்டிருந்தார். நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பிறகு அந்தச் சின்ன வயதில் யாருக்கும் தெரியாமல் சிகரெட் வாங்கிப் புகைத்தேன். அதன் பிறகு பிளஸ் ஒன் படிக்கும்போதே மது குடிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது எனக்குப் பெயர் மொடாக்குடியன் மகேந்திரன்’

இதைப் புதிதாகக் கேட்கும் மேனகா ‘அன்று நீங்கள் சொன்னதைப் அம்மா பெரிதாக எடுத்துக் கொண்டிருந்தால் சிகரெட் குடிக்காமலும் மதுக் குடிக்காமலும் இருந்திருப்பீர்களா’ என்றாள். ‘அப்படி உறுதி சொல்ல முடியாது. ஆனால் என் அம்மா நான் கூறியதைக்கேட்டு என் பதற்றத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்’ என்றான். ‘இப்போது உங்கள் அம்மா எங்கிருக்கிறார்கள்’ என்று மேனகா கேட்டாள். ‘நான் பிளஸ் டூ படிக்கும்போதே அவர் இறந்துவிட்டார்’ என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம் சென்றான். ‘இவர்கள் கெட்டுப் போவதற்கு ஏதாவது அல்பக்காரணம் தேடிக்கொள்வார்கள்’ என்று என்னிடம் மேனகா கூறினாள். மகேந்திரன் பாத்ரூமிலிருந்து அழுதுகொண்டே வெளியே வந்தான். ‘என் அம்மா நினைவு வந்துவிட்டது’ என்று கூறிக்கொண்டே கதறி அழுதான். மேனகா என்னைப் பார்த்தாள். நான் மகேந்திரனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ‘மனம் என்பதே சிக்கல்தான்’ என்றாள் மேனகா.

– சுரேஷ்குமார இந்திரஜித்