Home Blog Page 70

பெயராய்ப் பின்தொடர்தல்

4

பெருந்தேவி

“எப்போதோ நடந்ததைப் போலிருக்கிறது” என்றாள் சுகந்தா. ஒரு பெரிய கதையைச் சொல்லப் போகிறாள் என்று புரிந்தது. இளமாலையின் பொன்வெயில் வெளியே சொரிந்திருந்தது. மேசையை அடுத்திருந்த பெரிய கண்ணாடி வழியாகப் பார்க்க, சருகுக் குவியல்களிலிருந்து நிமிர்ந்து நின்றது நாகலிங்க மரம். சுகந்தா பள்ளியில் என்னுடன் படித்தவள். இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு ஃபேஸ்புக் வழியாகக் கண்டுபிடித்துக்கொண்டோம். நட்பைப் புதுப்பித்தோம். பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள பல கதைகள் இருந்தன. தென்சென்னைப் பகுதியில் சில மரங்களுக்கும் தொட்டிச் செடிகளுக்கும் நடுவே அழகான சிமிழ் போலத் துலங்கியிருந்த சிறிய காபி டே கஃபேயில் வாரம் ஒரு முறை சந்திக்கத் தொடங்கியிருந்தோம்.

அன்று சந்தித்தபோது எங்களுக்கு காபுசினோ ஆர்டர் செய்தோம். அதன் பின் சுகந்தா தன் பயண அனுபவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டாள். புனைவை விட விசித்திரமான ஒன்று. பத்தாண்டுகளுக்கு முன்பு, அவள் அமெரிக்காவில் முனைவர் பட்டத்துக்கான படிப்பை முடிக்கும்போது, கேப் டவுனில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பண்பாட்டு மானுடவியல் துறையில் பேராசிரியர் வேலைக்கான நேர்காணலுக்குச் சென்றிருக்கிறாள். பல்கலைக்கழகம் போல் இயங்கக்கூடிய பெரிய கல்லூரி அது. தென் ஆப்பிரிக்கா அவளுக்குப் பரிச்சயமில்லாத நாடு என்பதால் விமான நிலையத்திலிருந்து அவளை அழைத்துச் செல்ல, அந்தக் கல்லூரியிலிருந்து பேராசியர் ஜான் லிவிங்ஸ்டன் என்பவர் வந்திருக்கிறார். “லிவிங்ஸ்டன் ஒரு வினோதமான ஆசாமி, மத்தியக் கிழக்கின் பண்பாட்டை ஆய்வு செய்பவர் அவர்” என்று கேப் டவுன் யாத்திரையை விவரிக்கத் தொடங்கினாள் சுகந்தா.

“வெள்ளைக்காரர் நல்ல பருமன். வழுக்கைத் தலை. சிறிய சிவப்புப் புள்ளிகள் அங்கங்கே தெளித்த முகம். குடமிளகாய் மூக்கு. கோட் சூட்டோடு விமான நிலையத்துக்கு வந்திருந்தவர் எனக்கு முகமன் கூறி வரவேற்றார். நான் தங்கவேண்டிய ஓட்டலில் என்னைக் கொண்டுபோய் விடுவதற்கு முன் ‘மன்னித்துக் கொள்ளுங்கள், நாம் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு முதலில் சென்றுவிட்டு ஓட்டலுக்குப் போவோம்’ என்றார்.

கேப் டவுன் மையப்பகுதியில் அமைந்திருந்த பெரிய சூப்பர் மார்க்கெட் அது. ‘நீங்களும் உள்ளே வாங்களேன்,’ என்றதால் கூடச் சென்றேன். ஒரு டஜன் tampon பாக்கெட்களை அவர் வாங்கினார். பில் கவுண்டரில் கார்டைக் கொடுத்துவிட்டு என்னிடம் ‘என் மகளுக்காக’ என்று தெரிவித்தார். எனக்கு அவசியமில்லாத தகவல் அது. வெளியே வந்து காரில் ஏறினோம். கிளம்பும்போது அவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏனோ ஸ்பீக்கரில் போட்டார்: ‘டார்லிங், நான் கேட்டதை வாங்கிவிட்டாயா?,’ ‘டார்லிங், அந்தப் பெண் வந்து இறங்கிவிட்டாளா?,’ ‘டார்லிங், அவளோடு சாப்பிடப் போகிறாயா?,’ ’டார்லிங், அவள் பார்க்க எப்படி இருக்கிறாள்?,’ ‘டார்லிங், என்னால் தனியாக இருக்க முடியாது, சீக்கிரம் வந்துவிடு.’ இப்படி இன்னும் இருபத்தைந்து டார்லிங்குகள். பேசி முடித்தவுடன், ‘என் மகள், அவளுக்குப் பதினைந்து வயது’ என்று சாவகாசமாகக் காரைக் கிளப்பினார். எதற்கு என்னைப் பற்றி அந்தப் பெண் விசாரித்தாள் என்று புரியவில்லை. அதிகாரம் செறிந்த குரல் அந்தப் பெண்ணுக்கு. ஆங்கிலத்தில் அவள் ‘she’ என்ற போதெல்லாம் ‘அவள்’ என்றே எனக்குத் தொனித்தது. பதினைந்து வயதுப் பெண்ணின் குரலாக அது இல்லை. அவரை அவள் ஆட்டுவிக்கக் கூடியவள் என்று எனக்குத் தோன்றியது.

கேப் டவுனில் நான் தங்கியிருந்த நாட்களில், ஓட்டலிலிருந்து கல்லூரிக்கும் கல்லூரியிலிருந்து ஓட்டலுக்கும் லிவிங்ஸ்டன்தான் என்னை அழைத்துச் சென்றார். தவிர, என்னை இரவு உணவுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பும் அவருக்குத் தரப்பட்டிருந்தது. அவருடன் நான் சென்றபோதெல்லாம் அவருக்கும் அவர் மகளுக்குமான சம்பாஷணைகளைக் கேட்க வேண்டியிருந்தது. எல்லா அழைப்புகளையும் அவர் ஸ்பீக்கரில்தான் போட்டுப் பேசினார். குறைந்தது ஆயிரம் டார்லிங்குகளையாவது நான் கேட்டிருப்பேன்.

இரண்டாவது நாள் அவரோடு இரவு உணவுக்குச் சென்றபோது தன் மகளைப் பற்றிய சில தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவருடைய வளர்ப்பு மகள் அவள் என்று தெரிவித்தார். அவளுக்குப் பதினாறு மொழிகள் நன்றாக எழுதப் படிக்கத் தெரியும், அனாயாசமாக ஏழெட்டு வாத்தியங்களை அவளால் வாசிக்க முடியும் என்று குரலில் பெருமை பொங்கச் சொன்னார். ‘வாசித்தல் என்றால் சும்மா வீட்டினர் மட்டும் கேட்கும் வகையில் அல்ல. அவளால் எந்தத் தயாரிப்புமில்லாமல் பெரிய இசைக் கச்சேரிகளை நிகழ்த்திவிட முடியும். விளையாட்டுகளில் அவள் திறமைசாலி. ஓட்டப் பந்தயங்களில் எப்போதும் முதலிடத்தில் வருபவள். சதுரங்கத்தில் அவளை யாரும் ஜெயிக்க முடியாது. ஒரு முறை அவளுடைய IQவை ஒரு பிரபலப் பல்கலைக் கழகத்திலிருந்து சோதித்துப் பார்த்தார்கள். அவளைச் சோதித்த கணினியே உடைந்து ரிப்பேர் ஆகிவிட்டது,’ என்றபோது அவர் விழிகள் பளபளத்தன. ‘உங்களிடம் சொல்வதற்கென்ன, அவள் இந்த உலகத்தவளா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. கணிதத்தில் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கே அவளால் கற்றுத்தர முடியும். இரண்டு வருடங்களுக்கு முன்பு செமஸ்டர் முடியும் சமயத்தில் எதிர்பாராதவிதமாக ஒரு கணிதப் பேராசிரியருக்கு சில வாரங்கள் வகுப்பு எடுக்க முடியாமல் போனது. அவர் என் நெருங்கிய நண்பர். என் மகளை அழைத்து பாடங்களை நடத்தி முடிக்க வைத்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது அவளுக்கு பதின்மூன்று வயதுதான். ஆனால் ஒன்று, இந்த ஏற்பாடெல்லாம் எங்கள் கல்லூரிக்குத் தெரியாது’ என்று கூறினார்.

நீயே சொல், இதெல்லாம் நடக்கக் கூடியதா என்ன. அதுவும் ஒரு பெரிய கல்லூரியில். ஒருவேளை லிவிங்ஸ்டன் கிறுக்காக இருக்க வேண்டும். அல்லது மனப் பிரமையில் மூழ்குபவராக இருக்க வேண்டும். தவிர, இவர் ஏன் தன் மகளைப் பற்றி என்னிடம் விடாமல் பேசிக்கொண்டிருக்கிறார் என்று எனக்கு எரிச்சலாக இருந்தது. சாப்பிட்டுக் கிளம்பிய சமயத்தில், ‘நீங்கள் என் மகளை அவசியம் சந்திக்க வேண்டும். என்னிடம் வந்துசேரும் முன் காப்பகத்தில் நிறைய சிரமப்பட்டிருக்கிறாள். உங்களை மாதிரிதான் இருப்பாள் அவளும். அவளது கைவிரல்கள் உங்களுடையதைப் போல்தான் மெலிந்திருக்கும். உங்களைப் பார்த்தால் அவள் விடவே மாட்டாள்’ என்று ஒரு சிற்றுரையை நிகழ்த்தினார். என் விரல்கள் பற்றிய அவர் குறிப்பு எனக்குச் சற்று உறுத்தலாக இருந்தது.

எனக்கு நினைவிருக்கிறது, அவர் பேசி முடித்தவுடன் அலைபேசி அழைப்பு வந்தது. ‘டார்லிங், டின்னர் முடிந்துவிட்டதா?’ அவர் மகளேதான். அழைப்பில் ‘டார்லிங், மறக்காமல் அவளை நம் வீட்டுக்குக் கூப்பிடு’ என்று கேட்டாள் அவள். உடனே அவரும் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்தார். நான் முதலில் நாசுக்காக மறுத்தேன். ஆனால் அவர் விடவில்லை. ‘அவளுக்காகவாவது வாருங்கள்’ என்று மன்றாடத் தொடங்கினார். சாக்குப்போக்கு சொல்லி நான் தப்பிப்பதற்குள் பெரும்பாடாகிவிட்டது. அன்று நான் கொஞ்சம் பயந்துபோனேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

உனக்குத் தெரியும், பேராசிரியர் வேலைக்கான நேர்காணல் என்பது ஓரிரு அமர்வுகளில் முடிந்துவிடாது. கல்லூரித் தலைவர், மாணவர்கள், துறைப் பேராசிரியர்களுடன் சந்திப்புகள், பெரிய அரங்கத்தில் ஒரு மணி நேர ஆய்வுரை, மாதிரி வகுப்பு என்று நேர்காணல் பல கட்டங்களில் நடக்கும். என்னைச் சக்கையாகப் பிழிந்தார்கள். நானோ என் திறமையைவிட என் பலவீனத்தைத் தொடர்ந்து நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தேன். மனம் அலைக் கழிந்திருந்தது. டார்லிங்குகள் வேறு என் மனதில் ஒலித்துக் கொண்டிருந்தன. சம்பந்தமில்லாத ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை அது. ஆனால் என் செயல்திறனில் அது பெரிய குறுக்கீடாக இருந்தது. தவிர, வெவ்வேறு நேர்காணல் சந்திப்புகளின்போது லிவிங்ஸ்டனும் கூடவே இருந்தார். நேர்காணல் கமிட்டியின் தலைவரும் துறைத் தலைவரும் அவர்தான். கவனம் சிதறாமல் ஒரு நிமிடம் எனக்கு அமையவில்லை.

லிவிங்ஸ்டன் என்ற நபர் இருந்திராவிட்டாலும் அந்த நேர்காணலைச் சரியாகச் செய்திருப்பேனா என்றால் அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால் ஒன்று, அந்தத் துறைப் பேராசிரியர்கள் என்னிடம் கேட்டதெல்லாம் மூன்றாம் தர, நாலாந்தரக் கேள்விகள். எல்லாமே லிவிங்ஸ்டன் தொடக்கி வைத்துக் கேட்ட கேள்விகளுக்கு ஒத்தூதும் வகையிலான பொருளற்ற துணைக் கேள்விகள். சோர்வுற வைக்கக்கூடிய, புதிய பார்வைகளுக்கு எந்த இடமுமில்லாத, அதனாலேயே என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டாமென்று அவர்கள் முடிவு செய்துகொள்ளும் வகையில் அமைந்தவை. உருப்படியில்லாதவை.

கேப் டவுனிலிருந்து நான் கிளம்புவதற்கு முன்தினம், மாலையில் என்னை ஓட்டலுக்குத் திருப்பிக் கொண்டுவிடும் வழியில், எதிர்பாராத விதமாக லிவிங்ஸ்டன் என்னிடம் ‘நாம் டேபிள் மௌண்டனைப் பார்த்துவிட்டுப் போகலாமே’ என்றார். சட்டென்று என்ன சொல்லி மறுப்பது என்று தெரியவில்லை. அவரோ என் பதிலை எதிர்பார்க்காமல் மேற்கொண்டு காரைச் செலுத்தினார். டேபிள் மௌண்டன் கிட்டத்தட்ட தட்டையான மேற்பரப்பும் செங்குத்தான பாறைகளும் மலையேறிகளுக்கான பரிச்சயமான, ரகசியமான காட்டுப் பாதைகளும் அமையப்பெற்ற இயற்கைச் சிற்பம். அடிவாரத்திலிருந்து சற்று மேலேறி ஓரிடத்தில் கார் நின்றது. சரியாக அப்போது அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஸ்பீக்கரைப் போட்டவுடன், ‘இங்கே இறங்கிப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்று நழுவினேன். சில அடிகள் நடந்தபின் பூமரங்களோடான ஒரு பாதை தெரிந்தது. அதன் வழியே ஐந்து நிமிடம் நடந்திருப்பேன். ஒரு பாறை உச்சிக்கு வந்திருந்தேன்.

அங்கிருந்து பார்த்தால் கீழே இறங்கிய சரிவில் அடர்த்தி குறைந்தது போல் தெரிந்த காட்டுப் பகுதி, கொஞ்ச தூரத்திலேயே நகரத்தின் ஒரு பகுதி கண்சிமிட்டிச் சிரித்தது. நகரத்தின் அழைக்கும் வசீகரத்தோடும் காட்டின் ஏமாற்றக்கூடிய அமைதியோடும் மயக்கிய நிலக் காட்சி. என்னை மறந்து லயித்தபோது என் முதுகில் ஏதோ உணர்ந்து திரும்பினேன். சில அடிகள் தள்ளி லிவிங்ஸ்டன் நின்றுகொண்டிருந்தார். ஒரு நொடியில் அவர் நான் நின்ற இடத்தை அடைந்துவிட்டிருக்க முடியும். சட்டென்று அங்கிருந்து நகர்ந்து திரும்பி வேகமாக நடந்தேன். காருக்கு வந்தோம். அன்று என்னைத் தங்கியிருந்த இடத்தில் இறக்கிவிடும்போது, ‘நாம் எப்போதுமே தொடர்பிலிருப்போம், இந்த நேர்காணல் நீங்கள் எங்கள் ஊருக்கு வர ஒரு சாக்கு. என் மகளை நீங்கள் பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு ஒரே வருத்தம்,’ என்றபடி என் கையைப் பலமாகக் குலுக்கினார். நான் எதற்காக அவரோடு தொடர்பிலிருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் முகத்தைச் சுளித்துக்கொண்டேன். அதுவும் அவர் மகள், அவளைப் பற்றி அவர் குறிப்பிட்டபோது ‘டார்லிங்’ என்ற குரலைச் செவியுற்றது போன்ற உணர்வு. ஒவ்வாமையைத் தந்தது அது.

ஊருக்குத் திரும்பி வந்தபின் கேப் டவுனில் நடந்ததைப் பற்றிப் பல நாட்கள் யோசித்துக் கொண்டிருந்தேன். லிவிங்ஸ்டன் என்னிடம் நடந்துகொண்ட விதம் விடை தெரியாத புதிராக என் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. கேப் டவுனிலிருந்து திரும்பி வந்தபின் என் காதலனிடம் அதைப் பற்றிக் கூறினேன். அவன் வழக்கம்போல அசுவாரசியத்தோடு கேட்டான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ‘அதற்கெதற்கு அந்த ஆள் ஒரு டஜன் tampon பாக்கெட்கள் வாங்கினார்?’ என்றான். அதற்காகவே ஒரு சண்டை எங்களுக்குள் நடந்தது. சில வாரங்கள் பேசாமலிருந்தோம்.

என்னுடைய ஒரு பேராசிரியர் ’லிவிங்ஸ்டனின் நடவடிக்கையைக் குறித்து நீ அந்த கல்வி நிறுவனத்துக்குப் புகாரளிக்க வேண்டும், நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம் இப்படி நடப்பதெல்லாம் அத்துமீறல்’ என்று ஆத்திரப்பட்டார். நானும் அதைப் பற்றி ஒரு நாள் யோசித்துப்பார்த்தேன். ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் புகார் கொடுக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். இன்னொரு பேராசிரியரோ ’அவள் விளையாட்டாகக்கூட டார்லிங் என்று கூப்பிட்டிருக்கலாம். ஒவ்வொரு கலாச்சாரச் சூழலிலும் குடும்பச் சூழலிலும் மகள் தந்தையை அழைக்கும் விதம் மாறுபடலாம் தானே’ என்று வேறொரு கோணத்தைத் தந்தார். என் பக்கத்து வீட்டுக்காரி — அவள் ஒரு பிரெஞ்சுப் பெண் — அவளிடமும் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். முதலில் அவள் ‘ஒழுக்கரீதியாகவெல்லாம் இதை நாம் பார்க்க வேண்டாம்’ என்று அறிவுறுத்தினாள். ஆனால் கொஞ்ச நேரம் கழித்து ‘யோசித்துப் பார்த்தால் பத்து நிமிட அழைப்பில் முப்பது டார்லிங்குகள் அதிகப்படியாகத்தான் தெரிகிறது’ என்று பின்வாங்கினாள்.

சில நெருங்கிய இந்திய நண்பர்களுக்கும் என் நேர்காணல் பற்றித் தெரிவித்தேன். ஒரு சிநேகிதன் ’எனக்கென்னவோ வேறொருவருக்கு வேலை தருவதற்காக, உன்னைப் பயமுறுத்த அந்த வெள்ளைக்காரப் பேராசிரியரும் அவருக்குத் தெரிந்த ஒரு பெண்ணும் சேர்ந்து நாடகம் போட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது,’ என்று அனுதாபம் தெரிவித்தான். ஒரு பத்திரிகையாளன் அவன். ‘ஆமாம், என்ன இருந்தாலும் நாம் இந்தியர்கள், வெள்ளைக்கார மனோபாவமே வேறு மாதிரி,’ என்று அதை ஆமோதித்தேன். அதுவும் தென்னாப்பிரிக்க வெள்ளைக்காரர்கள், அவர்களது மூதாதையர்கள் நமது காந்தியையே பொது இடங்களில் என்ன பாடுபடுத்தினார்கள்!

கேப் டவுனில் நடந்ததைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ‘வன்முறை என்பது மனிதன் தன்னை மீளுருவாக்கம் செய்துகொள்வதே’ என்று ஃப்ரான்ஸ் ஃபனான் எழுதியிருப்பது கண் முன்னால் நிற்கும். காந்திக்கு நடந்ததும் கறுப்பர்கள் காலங்காலமாக சந்தித்ததும் நான் எதிர்கொண்டதும், எல்லாம் ஒன்றா என்ன? ஆனால் ஃபனான் ஸ்தூலமான வன்முறையை மட்டும் வன்முறை என்று கருதியவர் அல்ல. ஆகவே, எதுவும் புரிபடாமல் கேப் டவுனில் என் நேர்காணல் பாதிக்கப்பட்டு, அதனால் ஒரு வகையில் என் எதிர்காலம் சீர்குலைந்ததை வன்முறை என்று நான் எண்ணிக்கொள்வதை அவர் ஆட்சேபிக்கப் போவதில்லை. அந்த வேலை ஒரு வெள்ளைக்காரருக்குத்தான் கிடைத்திருக்கும் என்று நினைத்து சோர்ந்துபோனேன். உனக்கே தெரியும், இன்று வரையிலும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை.

காலப்போக்கில் கேப் டவுன் பற்றிய நினைவும் தேய்ந்து போனது. கேப் டவுன் அனுபவத்தைப் புரிந்துகொள்ள, அதன் மீது பாய்ச்ச உதவியாக வெளியிலிருந்து வெளிச்சம் எதுவும் எனக்குக் கிட்டவில்லை என்பதுதான் உண்மை. அந்த வேலை உண்மையில் யாருக்குக் கிடைத்ததென்று தெரியவில்லை. எனக்கு அதைப் பற்றித் தெரிந்துகொள்ள பெரிதாக ஆர்வமும் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு, மானுடவியல் துறைகள் குறித்த ஒரு சுற்றாய்வுக்கு, நான் பணியாற்றிய நிறுவனம் சார்ந்த ஆலோசகராக இருந்தேன். இணையத்தில் அதைச் சார்ந்து தேடிக் கொண்டிருந்தபோது, எதேச்சையாகக் கேப் டவுன் கல்லூரியின் இணையதளம் என் கண்ணில் பட்டது. .

எதற்கும் பார்க்கலாமென்று என்னை நேர்காணல் செய்த துறையின் பேராசிரியர்கள் பெயர்ப்பட்டியலில் கண்ணை ஓட்டிப் பார்த்தேன். என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்ற ஜான் லிவிங்ஸ்டன் என்ற பெயர் அதில் இல்லை. ஆனால், பேராசிரியர் கென்னத் ஜே. லிவிங்ஸ்டன் என்ற ஒரு பெயர் தரப்பட்டிருந்தது. உடனே ஆர்வம் தாங்காமல், வேகமாக அவர் ப்ரொஃபைலைச் சொடக்கி, அவருடைய துறை சார்ந்த இணைய பக்கத்துக்குச் சென்றேன். கென்னத் ஜே. லிவிங்ஸ்டனின் புகைப்படம் அதில் பகிரப்பட்டிருந்தது. ஆனால் அவர் இளையவர். நான் பார்த்தவரில்லை.”

சுகந்தா இதையெல்லாம் விவரித்தபோது, டேபிள் மவுண்டனில் லிவிங்ஸ்டனின் காரிலிருந்து அவள் இறங்கிய கட்டத்தில் எங்களுக்கு காபுசினோ வந்துவிட்டிருந்தது. நான் அதைக் குடித்து முடித்திருந்தேன். அவள் கதையைக் கூறி முடித்தபின் மெதுவாக, “உன் பத்திரிகையாள நண்பன் சொன்னதுதான் சரி என்று படுகிறது. அந்த ஆள் தெரிந்த யாருக்கோ அந்த வேலையை வாங்கித்தரத் திட்டமிட்டிருப்பார். இப்போது அந்தக் கல்லூரியில் வேலை செய்யும் இளம் பேராசிரியர் அவர் மகனாகக் கூட இருக்கலாம். உன் திறமை தெரிந்து, உன் கவனத்தைச் சிதறடித்து, போட்டியிலிருந்து உன்னை அப்புறப்படுத்த ஒரு மகளை ஜோடித்து இத்தனை நாடகம்” என்றேன்.

“இருக்கலாம். ஆனால் யாருக்குத் தெரியும்? லிவிங்ஸ்டன் என்ற பெயர் அத்தனை அபூர்வமானதில்லை. அது சம்பந்தமில்லாத வேறொருவராக இருக்கலாம். மேலும் எதற்காக இப்படிச் சுற்றி வளைத்து ஒரு குழப்ப நாடகம்? தவிர, என்னை எதற்கு அவர் வீட்டுக்குக் கூப்பிடவேண்டும்? ஒருவேளை நிஜமாகவே அந்தப் பெண் அவர் மகள்தான் என்றால்?”

“ஆனால் அந்த டார்லிங் விஷயம்? தவிர அவள் ஒரு சிறுமி…”

சற்று நேரம் பேசாமல் மௌனமாக இருந்தோம். பிறகு, சூழ்நிலையை மாற்ற நினைத்து “ப்ரவுனி ஆர்டர் செய்யலாமா?” என்றேன். அவள் தலையாட்டினாள். ஒரு பணியாளரை அழைத்து ஆர்டர் செய்தேன். சில நிமிடங்களிலேயே ப்ரவுனிகளோடு அவர் வந்தார். தட்டுகளை மேசையில் வைத்துவிட்டு, காப்பிக் கோப்பைகளை எடுக்க அவர் முனைந்தபோது, அவர் கை தவறி கோப்பையிலிருந்த காப்பி அவள் உடையில் சிந்தியது. கொட்டியது என்பதுதான் சரி. ஏனெனில் அவள் காப்பியைக் கால்வாசி கூட குடித்திருக்கவில்லை.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த கஃபே மேனேஜர் ஓடி வந்தார். “சாரி மேடம்” என்று மன்னிப்பு கேட்டுவிட்டு டிஷ்யு பேப்பர்களைக் கொண்டுவந்து தந்தார். நாங்கள் ப்ரவுனியைத் தின்று முடிக்கையில் அவர் ஒரு சிறிய காகித அட்டைப்பெட்டியை கொண்டுவந்து அவளிடம் தந்தார். “எங்கள் சேவையில் நேர்ந்த குறைபாட்டுக்காக மன்னிப்பும் ஒரு சிறிய பரிசும்” என்றார். “ஒரு பேஸ்ட்ரி இருக்கிறது, அவ்வளவுதான்” என்றார் சிரித்தபடி. “கோகோ ஃபேண்டஸி பேஸ்ட்ரி ஒரு துண்டு.” சுகந்தா, “நன்றி, எனக்கு மிகவும் பிடித்த பேஸ்ட்ரி” என்றாள் வியப்போடு. ”எனக்குத் தெரியும்,” என்று புன்னகைத்தபடி நட்போடு கூறினார் அவர்.

ஒரு சிறிய சாதாரணத் தவறை இப்படி மெனக்கிட்டு சரி செய்கிறார்களே என்று எனக்குக் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. சென்னையில் ரெஸ்டரண்ட்கள், கஃபேக்களில் இதையெல்லாம் பார்ப்பது அபூர்வம். அவரிடம் நன்றி தெரிவித்தேன். “பேஸ்ட்ரிஸை நீங்கள் வீட்டிலிருந்துகூட ஆர்டர் செய்யலாம். இங்கே பக்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்றால் எங்கள் கிளையை நேரடியாகவே கூப்பிடலாம்” என்று சொல்லியபடி தன் கார்டைக் கொடுத்தார். “தொலைபேசியில் அழைக்கும்போது தவறாமல் என் பெயர் சொல்லிக் கேளுங்கள். நானே நேரில் வந்து தருகிறேன். என் பெயர் லிவிங்ஸ்டன், டேவிட் லிவிங்ஸ்டன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கள் மேசையிலிருந்து தட்டுகளை எடுக்கப் பணியாளரை அழைத்தவர், “உங்களைப் போலவே என் மகளுக்கும் கோகோ ஃபேண்டஸி என்றால் உயிர்” என்றார் சுகந்தாவைப் பார்த்தபடி. அவள் சட்டென மேசை மீது வைத்திருந்த தன் கைகளை எடுத்துக் கீழே வைத்துக்கொண்டாள்.

***

பெருந்தேவி

சிலை

0

சுஷில் குமார்

                                                    

ஒரு சனிக்கிழமை மாலை, மாஹோ கடற்கரையில் நடந்துகொண்டிருந்தபோது  மாதவன்குட்டி எனைத்தேடி வந்தான். நிறைய குடித்திருந்தான்.

“வாடே, அம்மாட்ட பேசுனியா மக்கா?” என்று கேட்டேன்.

தொங்கிய தலையை நிமிர்த்தி, “ஆமா மக்ளே, அம்ம கம்பெனிக்கி போயிருக்காளாம் மக்கா.. இன்னும் அவளுக்க கூடப்பின்னல் நிக்க மாட்டுக்கு. நா எப்ப அவள உக்கார வெச்சிப் பாக்கப் போறேன் மக்கா? எளையவள கெட்டிக் குடுக்கணும்லா? அம்மக்கி அத நெனச்சி ஒரே சங்கடம்.. இப்பிடி இருந்தா எவன் மக்கா வருவான்?” என்று சொல்லி மீண்டும் முகத்தைத் தொங்கப் போட்டான் மாதவன்குட்டி.

“அதெல்லாம் தானா அமையும் மக்கா. நீ நெலச்சிட்டேலா டே.. பின்ன என்ன? பாப்பம் விடு..” என்றேன்.

“நீ இல்லன்னா நா தொலஞ்சேன் மக்கா.. சும்மாச் சொல்லல்ல கேட்டியா? நானே ஒரு கோம்பப்பய..எனக்கு சின்ட் மார்ட்டின்லயே பெரிய ரிசார்ட்ல மேனேஜர் வேல.. யாரு செய்வா மக்கா?”

“அடங்குல..ஒனக்கு ஓவராய்ட்டு பாத்துக்க.. வா போயி எதாம் சாப்பிடுவம்.. சரக்கு கொடலுக்குள்ள போனா ஒனக்குச் சும்மாக் கெடக்காது என்ன?”

கடற்கரைச் சாலையின் பிரபல விடுதியில் கடலைப் பார்த்தவாறு இருந்த மேசையில் உட்கார்ந்து சாப்பிட்டோம். சுற்றிலும் மகாகனி மரங்களின் அடர்ந்த இருளும் இனிய தென்றலும். மாதவன்குட்டி பேச வந்த விசயத்தைப் பற்றி இன்னும் பேச ஆரம்பித்திருக்கவில்லை.

“செரி, என்ன டே மேட்டரு? பேசணும்னு சொன்னேல்லா?” என்று கேட்டேன்.

“கெவின்.. ஒரு வாரமா லோலாவக் காணல…நீ சொன்னமாதியே ஆய்ட்டு.. எனக்கு மட்டும் ஏன் இப்டி நடக்கு மக்கா?”

*****

மாதவன்குட்டி சின்ட் மார்ட்டின் தீவிற்கு வந்து மூன்று வருடங்கள் இருக்கும். பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பார்த்த மாதிரி வந்த புதிதில் திறந்த சிலிக்கான் மார்புகளையும், உடல்முழுக்க பச்சை குத்திய ஆண்களையும், கிழவர்களுடன் கைகோர்த்துத் திரியும் கட்டிளங்குமரிகளையும் பார்த்து மலைத்தான். பல ஆண்டுப் பழைய ஒயின் பாட்டில்களைக் கையில் குடுத்தபோது ஒரே மூச்சில் அவற்றை பாட்டம் சிப் அடித்தான்.

அவனுடைய இருண்ட முகத்தில் கொஞ்சம் ஒளிவரத் துவங்கியபோது ஒருநாள், எனது பல்பொருள் அங்காடியில் வைத்து தற்செயலாக லோலாவை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அன்று மாலையே, “கெவின், மாப்ள.. அவளப் பாக்கணும் மக்கா” என்றான்.

“லே ராஸ்கல்.. பாக்கணுமா? இல்ல?..”

“இல்ல மக்கா.. என்னா அழகுல அவா, பாத்த ஒடனே ஒரு மாதிரி ஆய்ட்டு கேட்டியா? அவ என்ன வேல பாக்கா?” என்று வாயைப் பிளந்து கேட்டான்.

“சொன்ன பொறவு பேக் அடிக்க மாட்டேன்னா சொல்லுகேன்..”

“சேச்செ.. சொல்லு மக்ளே.. எனக்கெல்லாம் லைஃப்ல இப்டி நடக்கத நம்பவே முடில.. அவ மூஞ்சியப் பாக்க முடில மக்கா? ஒரு மாதிரி நடுங்கிட்டு..”

“ஆமா டே, ஆமா.. ஏஞ் சொல்லமாட்ட? பெரிய மேனஜர்லா? இப்ப பொண்ணு கேக்கத்தானச் செய்யும்.. நாளக்கி ‘நீ யாருப்போ’ன்னு கேப்ப, என்ன?”

“என்ன மக்கா இப்பிடிச் சொல்லிட்ட?.. கன்னியாரிக் கடலோட போயிருக்க வேண்டியது.. இன்னா, இங்க வந்து ஃபாரின் ஒயின் குடிச்சிட்டுத் திரியேன்…எனக்கு வந்த பவுசப் பாரு..” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“இவனுக்க அநியாயத்துல.. தீய வைக்க.. லேய், ஒனட்ட ஒரு பேச்சுக்கு ஒண்ணுஞ் சொல்ல முடியல்லய டே.. ஒடனே சோகப்பாட்டு பாட ஆரம்பிச்சிருக!”

அவன் அமைதியாக இருந்தான்.

“செரி டே, சமானப்படு.. சொல்லுகேன்.. லோலா எனக்க ஃபிரண்டு தான்..ஸ்பெயின்காரியாக்கும்.. நம்ம வோர்ஹவுஸ் இருக்குல்லா, சிம்ஸன்பேய்ல.. அங்கதா வேல..” என்று சொல்லி அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன்.

ஏதோ புரியாதவனாக முழித்து, “என்ன மக்கா சொல்லுக? வோர்ஹவுஸ்ல இவளுக்கு என்னடே வேல?” என்று கேட்டான்.

“ஆங்…அங்க வரவனுகளுக்கு செரச்சி விடுவா.. கேக்காம்பாரு மண்டையன்..”

“சொல்லுடே, தெரியாமத்தான கேக்கேன்.. நீ பலதும் பாத்தவன்…ஹிஹி…”

“மயிரு.. லேய் நீ செரியான ஆளு கேட்டியா? அவளப் பாத்த ஒடனே இவருக்கு லவ்வு வந்துட்டாம்.. இந்த ஊர்ல உள்ள எல்லாவனுக்கும் அவ லவ்வர்தான்.. அம்பது டாலர்தான் பாத்துக்க.. என்ன செய்யலாம் சொல்லு மக்கா? தூக்கிருவமா?”

மாதவன்குட்டியிடம் ஒரு அணக்கம் இல்லை.

*****

மற்றொரு நாள் நானும் என் மனைவி டெனிஸும் ஒரு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது மாதவன்குட்டி லோலாவுடன் உள்ளே நுழைந்தான். எங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவன் வேறு வழியின்றி அவளை அழைத்துக்கொண்டு எங்கள் மேசையின் அருகே வந்து நின்றான்.

நான் லோலாவைப் பார்த்து லேசாகச் சிரித்து, “ஹேய்..ஆர் யு ஆல் ரைட்?” என்று கேட்டேன். அவனைக் கண்டுகொள்ளாத மாதிரி இருந்தேன்.

“மாப்ள, லேய்…சும்மா வழில பாத்தம் மக்கா…சாப்டுட்டுப் போலாம்னு கூட்டிட்டு வந்தேன்..” என்று நெளிந்தான். அவன் பேசுவது புரியாமல் லோலா அதே புன்னகையோடு நின்றாள். என் மனைவி அவர்களை எங்களோடு உட்கார்ந்து சாப்பிடச் சொல்லி என்னை இடித்தாள். நான் மாதவன்குட்டியை உற்றுப் பார்க்க, அவன் லோலாவுடன் என் எதிரே அமர்ந்தான்.

“செரிடே.. மன்னிச்சிரு.. ஒன்ட்ட சொல்லாம ஒரு நாள் அவளப் போயி பாத்தேன் பாத்துக்க..” என்று வழக்கம்போல தலையைத் தொங்கப் போட்டான்.

அவன் சொல்வதுபோல அது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயம் இல்லை. வோர்ஹவுஸ் என்றழைக்கப்படும் பாலியல் தொழில் இல்லங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் மிகவும் வறுமையான குடும்பங்களில் இருந்து வருபவர்கள். எனக்குத் தெரிந்தே அங்கிருக்கும் பலர் திருமணம் ஆனவர்கள், அவர்களது கணவர்களுக்குத் தெரிந்தே அந்தத் தொழிலில் இருப்பவர்கள். இன்னும் பலர் பிழைக்க வேறு வழியேயில்லாமல் அந்தத் தொழிலுக்கு வந்தவர்கள். இன்னொரு முக்கியக் காரணம் மற்றெந்தத் தொழிலை விடவும் இதில் பல மடங்கு சம்பாதிக்க முடியும். எனது ஒரு மாத சம்பளத்தை ஒரு சில இரவுகளிலேயே சம்பாதிக்கும் பல தோழிகள் இருக்கிறார்கள்.

ஒரு சில விசயங்களில் அவர்கள் மிகவும் கறாராக இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் தங்களைப் புகைப்படம் எடுக்க அவர்கள் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. வோர்ஹவுஸ் தாண்டி வேறெங்கும் யாருடனும் அவர்கள் அவ்வளவு எளிதாகப் போவதில்லை. அப்படி ஒரு பெண் இன்னொருவனுடன் வெளியே வருகிறாள் என்றால், அவர்களுக்குள் மிக ஆழமான ஒரு நட்போ அல்லது காதலோதான் இருக்கும். அப்படிச் சிலர் திருமணம் செய்துகொண்டு மாறிச் செல்வதையும் பார்த்திருக்கிறேன்.

*****

நானும் மாதவன்குட்டியும் மழலையர் வகுப்பிலிருந்தே சேர்ந்து படித்தோம். அவனுக்கு அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள் என மகிழ்ச்சியான குடும்பம். பள்ளி முடிந்து தினமும் அவன் வீட்டிற்குச் சென்று தங்கச்சிகளுடன் சேர்ந்து விளையாடுவோம். அம்மா பஜ்ஜி, வடை, சுண்டல் என ஏதாவது செய்து தருவார்.

மாதவன்குட்டியின் அப்பா ஒரு சிற்பக் கலைஞர். கன்னியாகுமரியின் பல கோவில்களின் கோபுரச் சிற்பங்கள் அவரது கைவண்ணத்தில் உருவானவை. வீட்டில் இருக்கும்போதும் எப்போதும் வரைந்துகொண்டோ களிமண்ணில் ஏதாவது செய்துகொண்டோதான் இருப்பார்.

ஒருநாள் இரண்டு மகள்களையும் உட்கார வைத்து அவர்களைப் போலவே ஒரு களிமண் சிலை செய்துகொண்டிருந்தார் அப்பா. நானும் மாதவன்குட்டியும் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் எங்கள் கண் முன் இரு கடவுள் சிலைகள் உயிரோடு இருந்தன.  பிரதிஷ்டை செய்யப்பட்ட மாதிரி. அந்த இடம் வேறொரு விதமாக மாறிப்போனது.

மாதவன்குட்டி படிப்பில் மிக மோசம். வகுப்பில் மூக்கை நோண்டிக்கொண்டோ, சன்னல் வழி வெளியே பார்த்துக்கொண்டோ, இல்லை, கால்சட்டைப் பையிலிருந்து நொறுக்குத் தீனியை எடுத்துக் கொறித்துக்கொண்டோ இருப்பான். விளையாடக் கூப்பிட்டாலும் வராமல் ஒதுங்கி நிற்பான். தினமும் மாலை எனது நோட்டுப் புத்தகங்களைப் பார்த்து மூத்தவள்தான் அவனுக்கு எழுதிக் கொடுப்பாள். பள்ளியில் பல மாணவர்கள் வேண்டுமென்றே அவனைச் சீண்டுவதும், அடிப்பதுமாக இருந்தனர். அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் அவர்களிடமே போய் நிற்பான்.

எனக்கு மீசை அரும்பி வாலிப வயதுக் குறும்புகள் ஆரம்பித்தபோதும் மாதவன்குட்டி மற்றவர்களைச் சார்ந்து, அவர்கள் செய்வதை வாய்பார்த்து, உலகம் அறியாதவனாக அல்லது அறிந்துகொள்ள விரும்பாதவனாகவே இருந்தான்.

தினமும் என் வீட்டிற்கு வந்து இரவு வரை என்னோடு இருந்து படிப்பான். என் அம்மாவும் அவனிடம் மிகப் பாசமாக இருந்தார். “பாவம் மக்ளே, அப்பாவிப் பய கேட்டியா? பத்தாங்கிளாஸ் தேறிட்டான்னா பரவால்ல!” என்பார் அம்மா.

தேர்வுக்கு ஒரு மாதம் முன் ஒரு நாள் மாலை, நானும் அவனும் எங்கள் வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது அவனது தங்கை படபடத்து ஓடி வந்தாள். அழுதுகொண்டே, “அண்ணே, வீட்டுக்கு வாண்ணே…அப்பா கீழ விழுந்துட்டாளாம்.. ஆஸ்பத்திரில சேத்துருக்காம்..”

மாதவன்குட்டி கலக்கமடைந்தவனாக வீட்டிற்கு ஓடினான். நானும் பின்னாலேயே ஓடினேன். வீட்டிலிருந்து அம்மாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். கோவில் கோபுரத்தின் மீது நின்று வேலை செய்தவர் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறார். தலையில் பலத்த அடி. சிக்கலான அறுவை சிகிச்சை செய்து நீண்ட ஓய்வில் இருக்க வேண்டிய நிலைமை. ஆஸ்பத்திரிக்கும் பரிட்சைக்கும் இடையில் ஓடி ஓடி மிகவும் நொடிந்து போனான் மாதவன்குட்டி.

அப்பா ஓய்வில் படுத்ததும் அம்மா கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒரு கம்பெனிக்காக ஒயர்க் கூடை, சங்கில் செய்யப்படும் அலங்காரப் பொருட்கள், சணல் பொம்மைகள் என செய்துகொடுத்து சம்பாதிக்க ஆரம்பித்தாள். அப்பா மூன்று மாதங்களில் எழுந்து நடமாடத் தொடங்கினாலும் முன்பைப் போல அவரால் வேலை செய்ய முடியவில்லை. அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார். காரணமே இல்லாமல் வீட்டில் உள்ள பொருட்களைப் போட்டு உடைத்தார். சில சமயங்களில் தங்கைகளை மாடலாக வைத்து செய்த சிலையைக் கட்டிப்பிடித்து சிலையோடு சிலையாக உட்கார்ந்திருப்பார். திடீரென்று வெறும் வேட்டியுடன் வெளியே சென்று விடுவார். எங்கு தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாது. இரவில் அவராகவே வந்து எதுவும் பேசாமல் படுத்து உறங்குவார். மொத்தக் குடும்பமும் வறுமையின் பிடிக்குள் மெல்ல நழுவிச்சென்றது.

ஒரு நாள் மாதவன் குட்டி, “கெவின், ஒங்க மாமாட்டச் சொல்லி தந்திப் பேப்பர் போட வேல வாங்கித் தா மக்கா.. அம்ம ரொம்பக் கஷ்டப்படுகால்லா, நா காலைல பேப்பர் போட்டா கொஞ்சம் பைசா பாக்கலாம்லா மக்கா?” என்று கேட்டான்.

எங்கள் வீட்டுக்கு அதிகாலையில் வந்து என் நண்பன் பேப்பர் போட்டுச் செல்வதைப் பார்க்க எனக்கு மிகுந்த கஷ்டமாக இருந்தது. ஒருவழியாக பத்தாம் வகுப்பில் தேறிவிட்டான். நான் கணிதப் பிரிவு எடுத்தேன், அவனை கணக்குப் பதிவியல் பிரிவில் சேரச் சொன்னேன்.

போகப்போக அவனது அப்பா வீட்டிற்கு வராமல் கடற்கரையிலோ, கோவில் மண்டபங்களிலோ படுத்துக் கிடக்க ஆரம்பித்தார். சாப்பிடக்கூட வீட்டிற்கு வருவதில்லை. அம்மாவும் தங்கைகளும் அவர் பின்னாலேயே போய் இழுத்துக் கொண்டு வந்தாலும் சிறிதுநேரத்தில் கிளம்பி விடுவார். ஒருநாள், அம்மாவும் தங்கைகளும் பகவதி அம்மன் கோவிலுக்குக் காலை நிர்மால்ய தரிசனம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். அப்பா கோவில் வாசல் அருகே பிச்சைக் காரர்களுடன் உட்கார்ந்திருந்தாராம். கிழிந்த அழுக்கடைந்த வேட்டியுடன் உடல் முழுதும் சேறு.

அம்மா சென்று கையைப் பிடித்துத் தூக்கியபோது, “யாரு..யாரு.. போ.. போ.. பைசா.. பைசா தா.. பைசா தா..” என்றாராம்.

“மாப்ள, எப்பிடி இருந்த மனுசன்டா? எத்தன தெய்வத்தப் படச்சக் கையி அது? இப்ப சாக்கடைல அளஞ்சிட்டுக் கெடக்கு.. அப்பா தெருல கெடந்து சாவதப் பாக்க முடில மாப்ள.. எனக்கு அவர மாதி தெறம இருந்தாக்கூட கொஞ்சம் பைசா பாத்துரலாம் மக்கா..”

“என்ன செய்ய மக்கா? நீ கவலப்படாத டே..கொஞ்சம் நல்லாப் படி.. பி.காம். முடிச்சா எதாம் வேலைல ஏறிரலாம்.. வெளிநாட்டுக்கு எதாம் போயிரலாம்னு எங்க மாமா சொன்னாரு கேட்டியா.”

பேப்பர் போடுவதுடன் மாலை நேரத்தில் பரோட்டாக் கடை ஒன்றில் வேலைக்கு நின்றான் மாதவன்குட்டி. காலை நான்கு மணி முதல் இரவு பன்னெண்டு மணி வரை உழைப்பு, பள்ளிக்கூடம், மீண்டும் உழைப்பு. வெகுளியான அவனது முகத்தில் குடிகொண்ட ஒரு தீவிரம் அவனிடமிருந்த குழந்தைத்தன்மையைப் பறித்துக்கொண்டது. யாரிடமும் நின்று பேசக்கூட நேரமில்லாதவனாக, பேச விரும்பாதவனாக பறந்துகொண்டே இருந்தான் மாதவன்குட்டி.

கல்லூரிக் காலம்..

வசதியான வீட்டு விடலைப் பையனுக்கு உரித்தான ஆடம்பரம், குடி, ஊர்சுற்று, காதல் சேட்டைகள் என்று எல்லாம் எனக்கு அமைய, மாதவன்குட்டி ஒருநாளில் நான்கு வேலைகள் செய்து குடும்பத்தைப் பார்த்துக்கொண்டான். காலையில் பேப்பர் போட்டுவிட்டு, எங்கள் கல்லூரிக்குப் பக்கத்தில் இருந்த ஜெராக்ஸ் கடையில் எடுபிடி வேலைகள் செய்து கொடுத்தான், வகுப்புகளுக்கும் தவறாமல் சென்றான், மாலையில் ஒரு சில வீடுகளுக்குப் பால் பாக்கெட் போட்டான், பின் இரவில் பரோட்டாக் கடை. உடல் எவ்வளவுதான் ஒத்துழைக்கும்? தூக்கமின்மை, சரியாக உணவு உட்கொள்ளாமை, அப்பா குறித்த கவலை எல்லாம் சேர்ந்து அவனை அல்சரில் கொண்டு விட்டது.

“மாப்ள.. போதும் மக்கா.. ரொம்ப ஓடுற பாத்துக்க.. ஒடம்பப் பாக்காம இப்டி ஒடுனேன்னா பொறவு ஒனக்கு ஒண்ணுன்னா யாரு பாப்பா? கொஞ்ச நாளக்கி ஒழுங்கா சாப்ட்டு ரெஸ்ட் எடு மக்கா? நா கொஞ்சம் பைசா தாரேன்.. கொஞ்ச நாள் அப்டியே போட்டும்.. எனக்கு தேவப்பட்டா பொறவு கேக்கேன்.. என்ன?”

“எப்பிடி மக்கா ரெஸ்ட் எடுக்க முடியும்? ரெண்டு தங்கச்சிமாரயும் கர சேக்கணும்லா மக்கா? அவ்வோ போய்ட்டா நானும் அம்மாவுந்தான, சமாளிச்சிரலாம்.. மூத்தவளுக்கு அம்மா கம்பெனில நிக்க ஒரு பையன கெட்டி வைக்கலாம்னு பாக்கோம்..”

அதுவரை சேர்த்துவைத்த பணத்தில் பெரியவள் திருமணம் முடிந்தது. இரண்டாவது தங்கை அப்போதுதான் பூப்பெய்திருந்தாள்.

எனக்கு அரியர்கள் கூடிக்கொண்டே போக, அவன் எல்லா தேர்வுகளிலும் சுமாராக மதிப்பெண் எடுத்துத் தேறினான். அப்பா எங்கே போனார் என்று யாருக்கும் தெரியாமல் போக, மாதவன் குட்டியும் அப்படி ஒருத்தர் இருந்ததையே மறந்தது போல இருந்தான்.

ஒருநாள், கன்னியாகுமரி கடற்கரையில் உட்கார்ந்து ஒரு பியர் பாட்டிலை எடுத்து என் முன் வைத்தேன். மாதவன் குட்டி ஏதும் பேசாமல் உம்மென்று இருந்தான்.

“என்ன டே? என்னன்னு சொல்லு, மூஞ்சி ஏன் இப்டி இருக்கு?”

அவன் ஒன்றும் பேசவில்லை.

“அப்பா எதும் வந்தாரா மக்கா?”

“அவரு இனி வந்தா என்ன? வராட்டா என்ன மக்கா? எங்கம்மயப் பாத்து அவருக்கு அடயாளமே தெரில.. அவரு அவருக்க ஒலகத்தோடயே இருக்கட்டும் மக்கா.. விடு..” என்று சொன்னவன் சட்டென பியர் பாட்டிலை எடுத்து வேகவேகமாகக் குடிக்க ஆரம்பித்தான்.

சட்டென அந்த பாட்டிலைத் தட்டிவிட்டு அவனை அறைந்துவிட்டேன்.

“என்னல? பெரிய மயிராயிட்டியோ? பீருல்லா குடிக்கான் செறுக்கிவுள்ள..எந்தி ல மொதல்ல ராஸ்கல், ஓடிரு.. இந்த தெசப்பக்கம் வந்துறாத..” என்று கத்தினேன்.

சற்று நேரம் அமைதியாக நின்றவன், “இல்ல மக்கா.. என்னால முடில பாத்துக்க.. தங்கச்சி..” என்று சொல்லி ஓவென அழ ஆரம்பித்தான்.

“லேய்.. லேய்.. மக்ளே.. என்னல ஆச்சி? அழாத மக்கா? என்னல? சொல்லுல..”

“மக்கா.. தங்கச்சிக்கி மண்டக்கி வழியில்ல மக்கா.. எங்கப்பா மாதியே பொலம்புகா மக்கா..”

“என்னல சொல்லுக.. நல்லாத்தான இருந்தா மக்கா? என்ன டே ஆச்சி?”

“தெரில மக்கா.. கொஞ்ச நாளாட்டு தனியா பெறைல ஒக்காந்து ஒரே பொலம்பக்கம்.. நம்ம கூப்புட்டா பதிலே வராது.. அப்பா செஞ்சால்லா ஒரு செல, தங்கச்சிய மாதி, அதக் கெட்டிப்புடிச்சிட்டு இருக்கா.. இன்னிக்கி தாவணிய கடிச்சிக் கிழிச்சி ஒரே ஊள.. என்னால பாக்கக் கழியல்ல மக்கா.. எனக்கு போதமில்லாம விழுந்து கெடக்கணும் மக்ளே.. ப்ளீஸ் ல.. எனக்கு சரக்கடிக்கணும் மக்ளே..” என்று அழுதான்.

அவனை அப்படியே அழைத்துக்கொண்டு ஸ்பார்ஸா ரிசார்ட்டுக்குச் சென்றேன். அவனது முதல் குடி மறக்க முடியாததாக இருக்கட்டும். ஒரு இம்போர்ட்டட் பியரை வாங்கி, “குடி மக்கா.. நா இருக்கம்ல ஒங்கூட.. எல்லாஞ் செரி ஆவும் மக்கா.. நீ குடி..” என்றேன்.

*****

சின்ட் மார்ட்டினில் மற்றொரு நாள். நானும் டெனிஸும் கற்சிலுவைக் கோவிலுக்குச் சென்று மஞ்சள் மலர்களை வைத்து ஜெபம் செய்துவிட்டு அங்கிருந்த புல்வெளியில் உட்கார்ந்திருந்தோம். பல நாடுகளைச் சார்ந்த பல தம்பதிகள் அச்சிலுவையின் முன் நின்று வேண்டிக்கொண்டிருந்தனர். உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் கூடத் தெரியாத இந்தத் தீவில் இந்தச் சிலுவையின் முன் இவர்கள் எதைத் தேடி நிற்கிறார்கள்?

டெனிஸ் என் கையக் கிள்ளி தூரத்தில் சுட்டிக் காட்டினாள். லோலாவும் மாதவன்குட்டியும் கைகோர்த்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரு நொடி லோலாவுடனான எனது நாட்கள் ஞாபகம் வந்தது. டெனிஸை அருகில் இழுத்து, “மாதவன்குட்டி ஜோடிப் பொருத்தம் சூப்பர், இல்லையா டார்லிங்?” என்றேன்.

“ஆமாம் கெவின், ஆனால், அவர்கள் இருவரும் எப்படி நெருக்கமானார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவேயில்லை. உங்கள் நண்பருக்கு ஸ்பானிஷ் கூட தெரியாது இல்லையா?” என்று சிரித்தாள்.  

“வா, அவர்களிடமே கேட்கலாம்.” என்றவாறு மறைந்து சென்று மாதவன்குட்டியின் தோளில் தட்டி, “என்ன தம்பி? சும்மா சாப்ட வந்தியோ?” என்றேன்.

மாதவன்குட்டி நெளிந்துகொண்டே, “மக்ளே.. அது.. ஃப்ரீயா இருந்தா வான்னு கூப்ட்டா.. சும்மா கம்பெனிக்கி வந்தேன் மக்கா..” என்றான். லோலா வழக்கமான புன்னகையுடன் கைகுலுக்கினாள்.

“அடி ராஸ்கல்.. நீ எப்பிடி வந்தேன்னு பாத்தம்ல.. சர்ச்சுக்கு வர்ற மூஞ்சியப் பாரு..”

டெனிஸ் நாசூக்காக லோலாவை அழைத்துக்கொண்டு செல்ல, மாதவன் குட்டி படபடத்தவனாக நின்றான். அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டே, “மக்ளே, டெனிஸ் வர்ற முன்னாடி நா யார்கூட சுத்துனேன் தெரியுமா?” என்றேன்.

மாதவன்குட்டி ஏதும் பேசாமல் நின்றான்.

“லோலா கூடத்தான் மக்கா.. நீ என்ன நெனச்சி அவ கூடப் பழகுறன்னு எனக்குப் புரியல பாத்துக்க..”

“கெவின், ஒன்னப்பத்தி அவ ஏற்கெனவே சொல்லிட்டா.. அது எனக்கு ஒண்ணும் பெருசாத் தோணல்ல மக்கா..”

“அதில்ல மக்கா.. வோர் ஹவுஸ் பொண்ணுங்கள பத்தி ஒனக்கு இன்னும் செரியா புரியல்ல பாத்துக்கோ.. நாஞ் சொல்லுகம்லா டே.. சந்தோசமா இரி.. போ, வா.. ஆனா, வேறேதும் பெருசா யோசிக்காத பாத்துக்கோ..”

“என்ன மக்கா நீயே இப்பிடிப் பேசுக? என்னயெல்லாம் ஒரு ஆளுன்னு நம்மூர்ல எவளாவது பாத்திருப்பாளா? லோலா என்ன ஒரு ஹீரோவா பாக்கா மக்கா.. ஒருவேள அவ கூட இருக்கப்போ எனக்குதா அப்பிடித் தோணுகோ என்னமோ.. அவ என்ன ஒண்ணும் கஸ்டமராப் பாக்கல மக்கா..”

“ஆமாமா.. இப்ப சொகமாத்தா இருக்கும் டே.. அவ ஸ்பானிஷ்காரி வேற.. இங்க ஸ்பானிஷ் பொண்ணுங்கள என்ன சொல்லுவாங்க தெரியுமா?”

மாதவன்குட்டி தலையாட்டினான்.

“ஸ்பானிஷ் பொண்ணுங்க பெரிய தலைவலின்னு.. எல்லாத்தயும் உறிஞ்சிட்டு விட்ருவாளுக மக்கா.. நீ எத்தன டாலர அள்ளிப் போட்ட?”

“மாப்ள.. அவ என்ட்ட இதுவர அஞ்சி பைசா வாங்குனதில்ல பாத்துக்க..”

“ஓஹோ…கத அப்பிடிப் போகுதா?.. நீ வெர்ஜின் தானல?.. அதாக்கும் மேட்டரு.. இன்னொன்னும் சொல்லுகேங் கேளு.. வோர் ஹவுஸ் பொண்ணுங்க எங்க எப்ப காணாமப் போறாங்கன்னு தெரியாது மக்கா.. அவங்க வாழ்க்க அப்பிடி..”

சிறிது நேரம் அமைதியாக தூரத்தில் சென்ற லோலாவைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“செரி விடு.. நடக்க மாதி நடக்கட்டும்.. ஆனா, நீ எப்பிடி மக்கா அவட்ட பேசிப் பழகுன? ஒனக்கு ஸ்பானிஷ் வராது, அவளுக்கு இங்கிலீஷ் சுத்தம்..” என்று கேட்டேன்.

“ஒலகம் பூரா கஷ்டப்படுறவங்க பாஷ ஒண்ணுதான மக்கா..” என்று சொல்லி என் முகத்தைப் பார்த்தான் மாதவன்குட்டி.. என் முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது மூக்கொழுக அடிவாங்கிய அதே மாதவன்குட்டிதானா?

“ம்ம்ம்.. என்னத்த சொல்ல மக்கா? ஆனா, வோர்ஹவுஸ்ல ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு கத இருக்கும்.. நீ என்ன தியாகியா? வாழ்க்க குடுக்கதுக்கு..”

“கெவின்.. ஒனக்கு அவளப் பத்தி என்ன தெரியும்? ஒனக்கு அவ ஒடம்பத் தெரியும்.. வேறென்னத் தெரியும் சொல்லு?”

என்னிடம் பதில் இல்லை. அதன் பிறகு மாதவன்குட்டி பேசிய விசயங்கள் வாழ்க்கை குறித்த எனது பார்வையை உலுக்கிப் பார்த்தன.

லோலாவிற்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவளது ஒவ்வொரு வேளை உணவிற்கும் உத்திரவாதம் இன்றிதான் வளர்ந்திருக்கிறாள். அவளது அம்மா என்ன வேலை செய்தாள் என்பது அவளுக்குப் புரிய நீண்ட காலம் பிடித்தது. அவளது அப்பா ஒரு சிற்பி. நிர்வாணச் சிலைகளைச் செய்து பிளாட்பாரங்களில் வைத்து விற்பதுதான் தொழில். ஒரு சிலை செய்ய சில நாட்கள் வரை கூட ஆகும். ஒரு சிலை விற்றால் ஒரு சில நாட்களுக்குப் பசியின்றி உறங்கலாம்.

அப்பா சிலை செய்யும் அறைக்குள் யாரையும் விடுவதில்லை. அம்மா மட்டும் அவ்வப்போது போவாள். நீண்ட நேரம் கழித்துதான் வெளியே வருவாள்.

லோலா பதின் வயதடைந்த காலம். ஒருநாள், ஆர்வமிகுதியால் கதவிடுக்கின் வழியாக உற்றுப் பார்த்தாள். அம்மா நிர்வாணமாக சிலை போல் நிற்க, அப்பா அவளைக் கற்சிற்பமாகச் செதுக்கிக்கொண்டிருந்தார். அம்மாவின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்க அப்பா அவளைக் கெட்ட வார்த்தைகளில் திட்டினார். அம்மாவின் தொங்கிய மார்பகங்களை தூக்கி மேலாக நிறுத்திப் பார்த்தார். அவை நெகிழ்ந்து கீழே போக அவளை மீண்டும் திட்டிக்கொண்டே சென்று ஒரு கயிற்றை எடுத்து வந்தார். லோலாவின் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. கயிற்றால் அம்மாவின் மார்பின் கீழே இறுக்கமாகச் சுற்றினார் அப்பா. பலமுறை சுற்றிய அழுத்தத்தில் அம்மாவின் மார்பகங்கள் மேலேறி வந்தன.

அம்மா பல நாட்கள் கண்ணாடி முன் நிர்வாணமாக நின்று தனது உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பதை போர்வைக்குள் இருந்து பார்த்தாள் லோலா. யாருமில்லாத போது அவளும் கண்ணாடி முன் அப்படி நின்று தன்னுடலைப் பார்க்க ஆரம்பித்தாள். அந்தச் சிலைகளுக்கும் இந்தத் தசையுடலுக்கும் என்ன தொடர்பு?

அப்பாவின் சிலைகள் முன்பு போல நன்றாக வரவில்லை. விற்பனையும் இல்லை. அம்மாவின் முகத்திலிருந்து சிரிப்பு முழுதாகக் காணாமல் போனது. அவளும் தொழிலுக்குப் போக முடியாமல் வீட்டில் இருந்தாள். அப்பா அவ்வப்போது பதற்றமாக வீட்டுக்குள் ஓடி வருவார். கையில் சில ரொட்டிப் பாக்கெட்டுகளும் பழங்களும் இருக்கும். பல நாட்கள் எதுவும் இல்லாமல் போக மீண்டும் பசி வந்து குடிகொண்டது.

ஒருநாள் லோலா வீட்டில் நுழைந்தபோது அப்பா அம்மாவைப் பலமாக அடித்துக் கொண்டிருந்தார். அவள் அலறிக் கொண்டு இடையே சென்று விழ அப்பா ஏதும் பேசாமல் அவரது சிற்பக் கூடத்திற்குள் சென்றுவிட்டார். அம்மா அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

“என்னம்மா? அப்பா எதற்காக உங்களை அடித்தார்?”

அம்மா தேம்பிதேம்பிச் சொன்னாள், “நீ எங்காவது போய்விடு லோலா.. உன் அப்பாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது.. நீ போய்விடு..” என்றார்.

“எதற்காக அம்மா? என்னிடம் சொல்லுங்கள் அம்மா..”

“அப்பாவிற்குச் சிலை செய்ய இப்போதெல்லாம் நான் தேவையில்லாமல் ஆகிவிட்டேன்.. என்னால் அவருடைய கலை அழிந்துபோய் விட்டதாம்.. அவருக்கு முன்னால் நிற்கும் மாடல் இளமையாக இருக்க வேண்டும்.. உன்னை மாதிரி இளம் பெண்கள்தான் இப்போதெல்லாம் மாடலிங் செய்கிறார்களாம்.. வெளியிலிருந்து மாடல்களை அழைத்து வர நிறைய செலவாகுமாம்.. அவர் உன்னை..” என்று சொல்லி அம்மா லோலாவை இறுக்கிக் கட்டிக்கொண்டு அழுதார்.

அடுத்தநாள் அதிகாலை தூங்கும் அம்மாவையும் அப்பாவையும் முத்தமிட்டு அங்கிருந்து கிளம்பி திருட்டுப் படகில் வேறொரு தீவிற்குச் சென்றாள் லோலா. பின், பல தீவுகள், பல அலைக்கழிப்புகள்.. இறுதியாக எல்லோருக்கும் சொர்க்கமான சின்ட் மார்ட்டின்.. வோர்ஹவுஸ்..

மாதவன்குட்டி லோலாவின் கதையைச் சொல்லி முடித்து அமைதியாக இருந்தான். நீண்ட மௌனம்.

“மக்கா? எங்கப்பா எதுக்கு வீட்ட விட்டு வெளியப் போனாரு மக்கா? எந் தங்கச்சிங்க செலயக் கட்டிப் புடிச்சிட்டுக் கெடந்தார்லா, எதுக்கு? எங்கம்மய எப்பிடி அவருக்கு அடையாளங் கூடத் தெரியாமப் போச்சி?”

மாதவன்குட்டியின் முகம் அவ்வளவு தீர்க்கமாகத் தெரிந்தது. எதையோ கண்டறிந்துவிட்ட ஒரு பிரகாசம்.

“செரி, அதெல்லாம் விடு மக்கா.. அவரு படச்ச சாமிச் செலயெல்லாம் அவருட்ட வேறென்ன கேட்ருக்கும்? அவரு நிச்சயமா கோபுரத்துலருந்து வழுக்கி விழுந்துருக்க மாட்டாரு மக்கா.. வேணுன்னே விழுந்துருப்பாரு.. எனக்கு நல்லாத் தெரியும்.. பொறவு ஒரு நாள் அந்தக் கோபுரத்தப் போயிப் பாத்தேங் கேட்டியா.. அவரு செஞ்ச ஒரு செலயிலயும் உயிர் இல்ல.. எல்லாம் மழுங்கிப் போய் இருந்து.. அந்த ஒரு லெச்சணம் வரல்ல மக்கா.. எனக்கு அப்ப எந் தங்கச்சி ஞாபகந்தான் வந்து.. அவ பாக்கதுக்கு பகவதி அம்மன் மாதில்லா இருப்பா மக்கா.. ட்ரெஸ்ஸ கிழிச்சிட்டு அவ எதுக்கு கத்துனா? எங்கப்பாக்க மனசுக்குள்ள என்ன இருந்துருக்கும்? அப்ப, லோலாக்க அப்பாக்க எண்ணம் செரிதானா மக்கா? யாரு மக்கா பரிசுத்தமான ஆளு? நீயா? நானா? லோலாவா?”

மாதவன்குட்டியின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. அப்படியே அவன் தோளில் கையைப் போட்டு கழுத்தை நெருக்கி இழுத்து அணைத்து கட்டிக்கொண்டேன். தூரத்தில் கற்சிலுவையின் முன் மஞ்சள் மலர்களை வைத்து மண்டியிட்டு நின்றாள் லோலா.

*****

மற்ற வோர்ஹவுஸ் பெண்களை மாதிரித்தான் லோலாவும் காணாமல் போய்விட்டாளா?

இரவுணவை முடித்து கடற்கரைச் சாலையில் திரும்பி நடந்துகொண்டிருந்தோம். மாதவன்குட்டி சொன்னான், “கெவின், எனக்கு உள்மனசுல அவ திரும்பி வந்துருவான்னு தோணுகு பாத்துக்க..”

நான் கற்சிலுவையை மனதில் நினைத்து லோலா திரும்பி வரவேண்டும் என வேண்டிக்கொண்டேன்.

***

– சுஷில் குமார்

பனைமரம்

11

பரிவை சே குமார்

“சாமியய்யாவோட பனமரத்த வெட்ட ஆளு வந்திருக்கு… ஒன்னோட பன ஒண்ணு கோணத்தல வரப்புல இடி வுழுந்து கொண்டக்கட்டு கருகி நிக்குதுல்ல அதயும் வெட்டச் சொல்லலாமுல்ல…” பல் குச்சியோடு கொல்லக்காட்டுப் பக்கம் போய்விட்டு வந்த செதம்பரம் எச்சியத் துப்பியபடி என்னிடம் கேட்டான்.

“இல்ல மச்சான்… அத பெரிய மச்சினன் வந்து வெட்டிக்கிட்டுப் போறேன்னு சொல்லியிருக்காரு…”

“ஓ… அப்பச் சரி… இல்ல ஆளு வந்திருக்கு… அப்பறமாத் தேடிப் போயி ஆளுப் புடிக்கிறதுக்கு வந்தவங்கள வெட்டச் சொல்லலாமேன்னு பாத்தேன்…” வேப்பங்குச்சி பல்லில் விளையாடியது.

“இவங்கக்கிட்ட சொன்னாலும் இன்னக்கி வெட்டமாட்டாக மச்சான்… நாளக்கி வாறோமுன்னு சொல்லுவாக… வெலயும் அடிச்சிக் கேப்பாக… அதான் மச்சினன் வேணுமின்னுட்டாரு… அவருக்கிட்ட தரமாட்டேன்னு சொல்ல முடியுமா என்ன… மாட்டுக் கசாலக்கி ஓடு போடும் போது அவருதானே கைமரமெல்லாம் கொடுத்து விட்டாரு… பனய வித்து எம்புட்டு லாபம் பாக்கப் போறோம்… அதான் வந்து வெட்டிக்குங்கன்னு சொல்லிட்டேன்…”

“ம்… ஆமாமா… வெலக்கிக் கொடுத்தா எம்புட்டுக்கு கொடுக்கப் போறோம்… அவரு எடுத்துக்கிட்டா நாளப்பின்னா எதுவும் வேணுமின்னா கொடுத்து உதவுவாருல்ல…” என்றபடி எச்சியைத் ‘புளிச்’செனத் துப்பிவிட்டு நகர்ந்தான் செதம்பரம்.

நாங்க சின்னப்புள்ளயா இருக்கயில வூருக்குள்ள ரெண்டு எடத்துல பனமரங்க கூட்டமா நிக்கிம்… வயக்காட்டுக்கு நடுவ வரப்புகள்ல கிட்டத்தட்ட எரநூறு மரங்களுக்கு மேல நிக்கிம்… அதுக்குப் பேரே பெரிய பனங்காடுதான்.. அப்புறம் கொல்லக்காட்டுப் பக்கம் ஒரே எடத்துல அறுவது மரங்களுக்கு மேல நிக்கும்… அது சின்னப் பனங்காடு… இது போக கம்மாக்கரயில ரெண்டு… அங்கங்கே வய வரப்புல ஒண்ணு ரெண்டுமான்னு நெறயப் பனைங்க நின்னுச்சு… அதெல்லாம் காலப்போக்குல சன்னஞ்சன்னமாக் கொறஞ்சிருச்சு…  நெட்டப் பன…. குட்டப்பன… கோணப்பன… சதக்காச்சி… கொட்டக்காச்சி… குப்பக்கரப்பன… மடக்கரப்பனயின்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு பேர் இருக்கும்…  ஒரு சில பனைக்கி அது யாருக்குச் சொந்தமோ அவங்க வீட்டுப் பேரும் வழக்குல இருக்கும்.

அப்புடித்தான் வேப்பஞ்செய்யில நின்ன ஒத்தப்பனைக்கி சாமியய்யாவுட்டுப் பனயின்னு பேரு… இப்ப உள்ளதுக சொல்றது செல்லப்பனோட பன… ஆமா நாங்க சின்ன வயசுல சாமியய்யா வீட்டு வய வரப்புல நின்னதால சாமியய்யாவுட்டுப் பனன்னு சொன்னோம்… இப்ப இருக்க எளசுகளுக்கு அது செல்லப்பனோட வயலாயிப் போச்சு… அதனால பனக்கிப் பேரும் செல்லப்பனோவோட பனயின்னு ஆயிப்போச்சு… ஒறவு மொறக்கி ஏத்தமாரி மாமா, சித்தப்பா, அண்ணங்கிறது செல்லப்பனுக்கும் பனைக்கிம் எடயில வந்து நின்னுக்கும்…

வூருக்குள்ள சாதி சனத்துல சேரமா ஒரு பய எப்பவுமே தனியாவே திரிவான்… அப்படித்தான் சில பனயிங்க பனங்காட்ட விட்டு வயலோட வரப்புல தனிச்சி நிக்கிம்… அப்படிப் பனங் கூட்டத்துல சேராம  தனியா நின்ன பனதான் இந்தப் பன… நல்ல உயரமா… அடி பெருத்துப் போயி… கருகருன்னு நிக்கிம்… தனிச்சி நிக்கிறதால அதுக்கு பேரே ஒத்தப்பனதான்… ஒரு சில வூருக்குப் போகும்போது பாத தெரியாம வழி கேட்டா, அந்தா தெரியுதுல்ல ஒத்தப்பன… அதத்தாண்டுன்னா வூரு வந்துரும்ன்னு சொல்றத நாங்கேட்டிருக்கேன்.

சின்ன வயசுல ரொம்ப அதிகம் உயரமில்லாமத்தான் இருந்துச்சு… இப்ப நல்ல உயரம்… கண்டேவி கோவிலு கோபுரத்த விட உயரமா இருக்கும்… ஆடிக்காத்துல அது ஆடுறதப் பாத்தாலே ஒடிஞ்சி விழுந்துருமோன்னு பயமாயிருக்கும்… அப்புடித்தான் மனசுக்குள்ள தோணும்…. ஆனா அதுக்கு ஒண்ணும் ஆவாது… எனக்குத் தெரிஞ்சதுல இருந்து பட்டுப் போற வரக்கிம் அப்புடியேதான் நின்னுச்சு… என்ன இப்பக் காப்புக் கம்மி… முன்னால சாக்குச் சாக்கா பணம்பழம் புடுங்குவாங்க… சமீபத்துலதான் நச்சத்திரம் ஒண்ணு எரிஞ்சி விழுந்து கொண்டக்கட்டு கருகிப் போயிருச்சு… இப்ப கருகுன கொண்டக்கட்டும் கீழ விழுந்துருச்சு… மொட்ட மரமாத்தான் நின்னுச்சு…

சின்ன வயசுல வீட்டுக்கு வெளிய படுத்துக்கிட்டு நச்சத்திரத்த எண்ணிக்கிட்டு ஆத்தா கத சொல்லக் கேட்டுக்கிட்டு படுத்துக் கெடப்போம்… அப்ப மானத்துல நச்சத்திரம்  நகந்து போறத எண்ணிக்கிட்டு இருப்போம்… செல நேரத்துல நச்சத்திரம் எரிஞ்சி விழுகுறதப் பாத்தா ஆத்தா ஒடனே எதாச்சும் பூவ நெனச்சிக்கங்கன்னு சொல்லும்… அப்பல்லாம் மனசுல்ல படக்குன்னு வாரது மல்லியப்பூத்தான். நச்சத்திரம் விழுகுறதப் பாக்கயில பூவ நெனக்காட்டி மறதி வருமாம்… என்ன மறதி வந்துருக்கு இது வரக்கிம்… இந்தா பழசெல்லாம் அப்புடியேதானே நெனவுல இருக்கு…

பன மரத்துல இடியோ, நச்சத்திரமோ விழுந்துட்டா அதோட கொண்டக்கட்டு காத்துல விழுறதுக்கு முன்னால வித்துறணும்… அப்பத்தான் கொஞ்சமாச்சும் வெல போகும்ன்னு அப்பா சொல்லக் கேட்டிருக்கேன்… கொண்டக்கட்டு விழுந்துட்டா அம்புட்டுத்தான்… உச்சியில பொந்தாயிப் போயிரும்… அதுவும் மழக் காலமாயிருந்தா அந்தப் பொந்துல தண்ணி நின்னு பன ஒண்ணுக்கும் ஒதவாமப் போயிரும்ன்னு சொல்வார்… அப்ப வாங்குறவுக சொல்ற வெலக்கித்தான் கொடுத்தாகனும்… எங்க மரத்துல இடி விழுந்து ஒரு வாரந்தான் ஆவுது… ஓலை கருகித்தான் நிக்கிது… இன்னும் கொண்டக்கட்டு விழுகல… இப்பக் கொடுத்தா சொன்ன வெலக்கி அஞ்சு பத்து கொறச்சித்தான் போகும்… அடிமாட்டு வெலக்கி கேக்க மாட்டாங்க… சாமியய்யாவோட பனய அடிமாட்டு வெலக்கித்தான் வாங்கியிருப்பானுக… யாரு வாங்கியிருக்கப் போறா, வாழ்ற மாணிக்கத்துல செங்கக் காலவா போடுற மாரிமுத்துதான் வாங்கியிருப்பான்.

சாமியய்யாவோட மரத்துப் பனங்காயி வெல்லம் போட்டாப்புல அப்புடி இனிக்கும்… அது சரியான சதக்காச்சி… ஒத்தக்காச்சி… ரெட்டக்காச்சின்னு இல்லாம எல்லாமே மூணு கொட்ட வச்சி பெரிய காயாத்தான் இருக்கும்… பனம்பழ சீசன்ல காலயில எந்திரிச்சி பனம்பழம் பொறக்கப் போறவங்களோட மொதக்குறி அந்தப் பனயாத்தான் இருக்கும்… அப்புறந்தான் பனங்காட்டுப் பக்கம் போவோம்… சாமியய்யா எப்பவும் பழம் பழுத்து விழ ஆரம்பிச்சதுந்தான் ஆளு விட்டு வெட்டுவாரு… அதுக்குள்ள நாம ஒரு பழமாச்சும் எடுத்தாந்து சுட்டுத் தின்னுறலாம்.

மரத்துல இருந்து விழுற பனம்பழத்த நெருப்புல போட்டு சுட்டுப்புட்டுத் தின்னா ஆகா…. அம்புட்டு சொவயாயிருக்கும்… அதுவும் மொத்தமா வெட்டிக் கொண்டாந்து சதய மட்டும் அறுத்தெடுத்து அவிச்சிக் கொடுப்பாங்க… அது அதவிடச் சொவயாயிருக்கும்… அதுவும் எங்காத்தா ரெண்டு கருப்பட்டிய வேற அவிக்கும் போது தட்டிப் போட்டு, ஏலக்காய நசுக்கிப் போட்டு விடும்… அந்தச் சொவ எல்லாம் இப்ப எங்கயிருக்கு… சதக்காச்சி கூட சின்னச் சின்னதாத்தான் காய்க்குது இப்போ… அதுவும் காய் அதிகமிருக்கதில்ல…

ஒரு தடவ பால்பாண்டிப் பய மொங்கு வெட்டுறேன்னு அந்தப் பனயில ஏறிட்டான்… வயிராத்தா… அதான் சாமியய்யாவோட பொண்டாட்டி தயிர் வூத்திட்டு ரோட்டுல வரும்போதே பனமரத்தப் பாத்துச்சு… நாங்க ஓடி ஒளிஞ்சாலும் அதோட பார்வயிலயிருந்து தப்ப முடியுமா என்ன… ஒரே கத்து… என்னடா பண்ணுறிய பனயிலன்னு கத்திக்கிட்டு வயல்ல எறங்கிருச்சு… நாங்க எல்லாரும் ஓடி ஒளிய, பனந்தூருல நின்னுக்கிட்டு நெத்தில கய்ய வச்சி சூரியன மறச்சிக்கிட்டு மேல பாக்குது… கொண்டக்கட்டுல கொரங்கு மாரிக்கித் தொங்கிக்கிட்டு நிக்கிறான் பால்பாண்டி… அட எடுபட்ட பயலன்னு ஆரம்பிச்சி… அப்பனாத்தாவ எல்லாம் இழுத்துத் திட்டி கீழ இறங்குறியா இல்ல நா மேல வரவாடான்னு கத்த, ஆத்தாடி இந்தப் பொம்பள ஏறுனாலும் ஏறிருவானு பயந்துக்கிட்டு மெல்ல எறங்கி பாதியிலயிருந்து ஒரே குதியாக் குதிச்சி எறங்கி ஓடியாந்து முள்ளக் குத்திக்கிட்டு அந்த முள்ளு கொடுத்த வேசாடு தாங்காம வய்யாபுரிக்கிட்ட முள்ளெடுத்து மந்திரிச்சதெல்லாம் தனிக்கத… இப்ப பால்பாண்டிய பொதச்ச எடத்துல புல்லு மொளச்சிப் போச்சு… ம்… அம்புட்டுத்தான் வாழ்க்க…

அப்ப கசால கட்டுறதுக்கு பனவோலதான்… எங்கப்பாரு எங்க பனயள்ள வெட்டுற ஓல பத்தாதுன்னு மத்தவங்க மரத்துலயும் வெட்டிக்கிறேன்னு கேப்பாரு… இப்பல்லாம் கொடுக்க யோசிப்பாங்க… அப்ப அப்படியில்ல… நல்லா வெட்டிக்கப்பா அப்படின்னு சொல்லுவாங்க… அவங்க வீட்டுக் கசால கட்ட எங்க மரத்துல வெட்டிப்பாங்க… அப்பல்லாம் சாமியய்யா மரத்துலயும் வெட்டுவோம்… ஒவ்வொரு ஓலயும் நல்ல அகலமாப் பெரிசா இருக்கும்… ஒரு மரத்து ஓல நெறயா இருக்கது அந்த மரத்துலதான்.

கசால கட்டுறதே பெரிய வேலதான்… ஓல வெட்டி… அத ஒண்ணுக்குள்ள ஒண்ணாக் கோர்த்து வரிசை அடுக்கி வச்சி கருக்கோட இருக்க மட்டய வெட்டு எடுத்து, மட்டயோட ரெண்டு பக்கமும் இருக்க கருக்கவெட்டி எடுத்துட்டு அத உறிச்சி நாறெடுத்து வச்சிப்பாங்க… ஓல கொஞ்சம் காஞ்சதும் கசால கட்டுறதுக்கு மொதநாளு வட்டமா அடுக்கி, பள்ளயம் போடுறதுன்னு சொல்லுவாக…  சாமி கும்பிடும் போது சாமிக்கு முன்னால வாழ இலயில பொங்கலோ சுண்டலோ படக்கிறதுக்கும் பள்ளயம்ன்னுதான் சொல்வாங்க… ஓலயில கொடங்கொடுமா தண்ணி ஊத்தணும்… நா அக்கா தம்பின்னு தண்ணி கொண்டாந்து ஊத்த, ஐயா, அப்பா, சித்தப்பாக்கன்னு எல்லாரும் தண்ணியில வூறுன பன்நாற ஓலயில கோத்துக் கொடுப்பாங்க… தங்கச்சியும் சின்னத் தம்பியும் ஒலயக் கொண்டு போயிக் கொடுக்க,  மொதனாலு வந்து கை மரத்தயெல்லாம் கைபாத்து கம்பெல்லாம் சரி பண்ணிக் கட்டி வச்சிருப்பாக, அது மேல ஓலய வாங்கி நெருக்கம் நெருக்கமாக் கட்ட ஆரம்பிப்பாங்க… அங்காளி, பங்காளி கூட உதவிக்கி வந்து நிப்பாக.

சுத்துக்கட்டு வேல சுளூவா முடிஞ்சிரும்… ஆனா பன ஓலய வச்சி மோடு கட்டுறதுதான் பெரிய வேல… அது நல்லாத் தெரிஞ்ச ஆளுதான் ஒழுகாமக் கட்ட முடியும்… மழ காலத்துல மோடு ஒழுதா மாடுக படுக்க முடியாம… கசாலயில மூத்தரம், சாணியோட மழத்தண்ணியும் சேர தொழி அடிச்சி வச்சிருங்க… அதுல படுத்து மேலெல்லாம் நாறடிச்சிக்கிட்டு நிக்கிங்க… அப்ப அதுக பக்கத்துல போனா வாலால அந்தத் தண்ணிய நம்ம மேல அடிக்கும் பாருங்க… அத அனுபவிச்சிருந்தாத்தான்… அந்த நாத்தமும் சாணியும் கொடுக்கிற கடுப்புத் தெரிஞ்சிருக்கும்… அதுனால மோடு கட்டுறதுதான் இருக்கதுலயே சள்ள சுடிச்ச வேல… நறுக்குன்னு கட்டி… ரெண்டு பக்கமும் கூராச் செதுக்குன கம்பச் சொருகி கம்பி சுத்தி கட்டி, அதுமேல நாறயும் சுத்தி கட்டி முடிச்சிட்டுக் கீழ எறங்குவாங்க.

கட்டி முடிச்ச கசாலக்குள்ள போயி நின்னா புது ஓல வாசம் சும்மா கும்முன்னு இருக்கும்… ஆள அப்புடியே சுண்டியிழுக்கும்… கொஞ்ச நாளக்கி கசாலக்குள்ள அடிக்கடி போச் சொல்லும்… ஒரு மழ பேஞ்சி மோடு ஒழுதா… என்ன கட்டுனானுங்க… மோடு தொர்ருன்னு ஒழுவுதுன்னு ஆத்தா கத்த, அப்பா போயி நாகப்பனயோ பூமியயோ இழுத்தாருவாரு. வந்து கம்பிய அவுத்து ஓலயலச் சரிபண்ணி, வக்கல அதுமேல மெத்தமாரி விரிச்சி மறுபடியும் கம்பியை நறுக்குன்னு சுத்தி விடுவாக… அப்புறம் அது ஒழுகாது. பண ஓலயவிட தென்னங்கிடுகு பரவாயில்லன்னு கசாலயத் தென்னங்கிடுகு வாங்கி கட்ட ஆரம்பிச்சோடனே பன ஓலக்கி வேல இல்லாமப் போச்சு… உழப்புன்னு பாத்தா தென்னய விட பனதான் கூட… இப்ப தென்னங் கீத்துல கட்டுறதும் போயி எல்லாரு வூட்டுலயும் ஓட்டுக் கசாலயாயிருச்சு… அந்தக் கசாலக்கி மாடுகளத்தான் காணோம். இப்ப விழுற காவோலய அடுப்பெரிக்கவும் பெரிய கார்த்தியக்கி சுழுந்து கட்டவுந்தான் வச்சிக்கிட்டோம். பயக அந்த ஒல மட்டய வண்டியாச் செஞ்சி இழுத்துக்கிட்டுத் திரிவானுக…  

கம்மா மூலயில ஒரு குட்டிப் பன இருந்துச்சி… அதுலதான் வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இருக்காருன்னு கும்பிடுவாக… அந்தப்பன பட்டுப் போயி, கொஞ்சங் கொஞ்சமா நொறுக்கி விழுந்து மண்ணோட மண்ணா மக்கிப்போச்சு… வில்லுக்கம்பு வெள்ளச்சாமி இப்ப எங்க இருக்காருன்னே தெரியல… அவரு மட்டுமில்ல… அங்கங்கே மரங்கள்ல வச்சிக் கும்பிட்டா சாமிக எல்லாம் காணாமப் போச்சு… நாங்க அந்தப் பக்கம் போகயில கையெடுத்துக் கும்பிட்டுப் போவோம்… எளவரசுகளுக்கு அதெல்லாம் தெரியாது… வூருக்குள்ள இன்னன்ன சாமி இருந்துச்சுன்னு இப்ப யாருஞ் சொல்லிக் கொடுக்குறதும் இல்ல… நாகரு, பாம்பரம்மா, கொன்னயூரா அப்படின்னு வச்சிக் கும்பிட்ட சாமியெல்லாம் இப்ப இருந்த எடந்தெரியாமப் போச்சு.

சாமின்னதுந்தான் பழனிக்குப் போனது ஞாபகத்துல வருது… அப்பல்லாம் இங்கயிருந்து எம்புட்டுப் பேரு பழனிக்கி நடப்பாக தெரியுமா… அது ஒரு திருவிழா மாரிக்கி இருக்கும்… ஒரு மாசத்துக்கு பஜன… மலக்கிக் கெளம்புறதுக்கு மொத நாளு வடிச்சிப் போடுறதுன்னு கள கட்டும்… ஒரு வருசம் பழனிக்குப் போனதுல நானு, ராஜகோபாலு, செதம்பரம்,  பால்பாண்டி, தொரராசுன்னு எல்லாமும் எளவரசுக… ஒரே ஆட்டம் பாட்டந்தான்…

சிங்கப்புணரி தாண்டி வயக்காட்டு வழியில நடந்து போறோம்… கூந்தப்பன ரெண்டு நிக்கி… பூப்பூத்து அவ்வளவு அழகா… இதென்னடா புதுசாயிருக்கு… பன மாரியிருக்கு… பூத்திருக்குன்னு சொன்னப்ப… சாமியய்யாதான் இது கூந்தப்பனடான்னு சொன்னாரு… அதப்பத்திப் பேசிக்கிட்டுப் போறோம்… முன்னால ஒரு கூட்டம் அரோகரா போட்டுப் போவுது… அதுல நாலு தாவணிக… அதுக எங்களப் பாக்க… நாங்க அதுகளப் பாக்க… அப்புறம் கூந்தப்பன… கூந்தப்பனன்னு பின்னாலயே வெரட்டிப் போக, அடேய் மலக்கிப் போறோமுடா… வள்ளி தேவானய அங்க போயி பாத்துக்கலாமுடான்னு வெள்ளச்சாமி மாமா சிரிக்காமச் சொன்னாரு… ஆனாலும் விடாம கொட்டாம்பட்டியல அதுக தங்குன எடத்துலயே நாங்களும் தங்குனோம்… அப்பப்ப சின்னச் சின்னதா பேச்சு வார்த்த நடந்துச்சு… மறுநாக் காலயில அவங்க எந்திரிக்கிறதுக்கு முன்னாடி எங்களக் கெளப்பிக் கொண்டு போயிட்டாரு சாமியய்யா… அப்புறம் அதுகள சம்முவ நதிக்கிட்ட பாத்தோம்… சிரிச்சிச்சிக…. பேரு கூட செவாமி, சவுந்தரம்ன்னு சொன்ன ஞாபகம்.

ரெண்டு மூணு கொண்டக்கட்டு உள்ள பனமரம் பக்கத்து வூருல நின்னுச்சு… அத  சாமின்னு சொல்லிக் கும்பிடுவாக… அதோட அடியில மஞ்சளக் கொட்டி வச்சிருப்பாக… ஒரு ஆணி அடிச்சி வெள்ளி செவ்வா பூப்போடுவாக… அது இருந்த எடத்துல இப்ப ஒரு வூடு வந்துருச்சு… அதுலயிருந்த சாமி இப்ப அங்கயில்ல…  அவரு ஆடு மேக்கப் போகும் போது ஒரு வூருல இருவத்தோரு கொண்டக்கட்டோட ஒரு மரமிருந்துச்சுன்னு அப்பா சொல்லியிருக்காரு… இருவத்தோரு கொண்டக்கட்டான்னு ரொம்பப் பெரமிப்பா இருக்கும். கலியாணம் முடிஞ்சி மாமனாரு வீட்டுக்குப் போனப்போ ஊருக்குப் பக்கத்துல இருக்க ஐயனாரு கோவிலுக்குக் கூட்டிப் போனாங்க… அங்க குதிரச் செல பெரிசா நின்னுச்சு… அதுக்குப் பக்கத்துல ஒரு பன நாலு கொண்டக் கட்டோட நின்னுச்சு… ஒரு பேய் மழயில குதிரயோட அதுவும் வுழுந்து நொறுங்கிப் போச்சு… குதிர புதுசா செஞ்சிட்டாக… பன நின்ன எடத்துல இப்ப வேம்பு நிக்கிது.

கொல்லக்காட்டுல நின்ன பனயெல்லாம் இருந்த எடந் தெரியாமப் போச்சு… இப்ப வேலிக்கருவதான் மண்டிக் கெடக்கு… அதேமாரி பெரிய பனங்காட்டுல இப்ப இருவது மரம் நிக்கிறதே பெரிசு… இப்ப யாரும் மொங்கு வெட்டுறதுமில்ல பனம்பழம் பொறக்கப் போறதுமில்ல… வெட்டுறதுமில்ல… அதுவாக் காச்சி சும்மாதான் கொட்டிக் கெடக்கு… இப்ப இருக்க மரங்க அதிகமாக் காக்கிறதுமில்ல… காக்கிற மரமெல்லாம் எப்பவோ காலாவதி ஆகிப்போச்சு.

‘ம்… சாமியய்யாவோட மரத்த வெட்டுறாகன்னு செதம்பரம் சொன்னதும் என்னென்னமோ நெனப்பு வந்திருச்சு… போ… பொழப்புத் தழப்பப் பாக்காம வெட்டியா ஒக்காந்திருந்தாத்தான் வாழும்..’ என்றபடி முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தேன்.

“எங்குட்டுப் போறிய… ஒருதா சாப்புட்டுப் போங்க…” வீட்டுக்குள் இருந்து மருமகளின் குரல் கேட்டது.

“இந்தா வாரேந்தா… பால் மாடு மெலெலாம் சாணி அப்பிக்கிட்டு நிக்கிது… ரெண்டு வாளித்தண்ணி எறச்சி ஊத்தி கழுவிட்டு, அப்புடியே குளிச்சிட்டு வாரேந்தா…”

“ம்… செரி மாமா… அப்புடியே கன்னுக்குட்டியவும் கழுவியாந்துருங்க… இந்த சோலப்பய எங்கிட்டுப் போனான்… அது இருந்தா ஒங்களுக்கு ஒதவியாயிருக்குமுல்ல்…”

“நா பாத்துக்கிறேந்த்தா… அவன எதுக்குத் தேடுற…” என்றபடி மாட்டயும் கன்னயும் அவுத்துக்கிட்டு, ஒரு வாலியவும் மோந்து ஊத்திக் கழுவ ஒரு சிலுவருச் சட்டியவும் எடுத்துக்கிட்டு, கெடந்த வக்கல்ல கொஞ்சத் எடுத்துக்கிட்டு  அடிபயிப்ப நோக்கிப் போனேன்…

எதுத்தாப்புல செல்லப்ப மவன் சுந்தரம் வந்தான்.

“என்னப்பா… ஒத்தப்பனய வித்துட்டியாளாக்கும்…?”

“ஆமா சித்தப்பா… அதான் நச்சத்திரம் எரிஞ்சி விழுந்து பட்டுப்போச்சுல்ல…”

“ம்… பாத்தேன்… வெல போயிருக்காதே…”

“அப்பாதான் கொடுத்தாக… மரக்கட மாரிமுத்து மாமாதான் வாங்கியிருக்காக… எம்புட்டுன்னு தெரியல… பனங்காட்டுல மேலச்செய்யி வரப்புல நிக்கிற ரெண்டயும் சேத்துக் கொடுத்துட்டாக…”

“அட அதயுமா… அது நல்லாத்தானே நின்னுச்சு… அத எதுக்குக் கொடுத்தான்…”

“இருந்து என்னத்துக்கு ஆவுது… நல்லாயிருக்கும் போதே கொடுத்தா வெல கொஞ்சம் கூடப்போகுமுல்ல அதான்… ஆமா உங்க மரங்கூட இடி விழுந்து பட்டுபோயி நிக்கிதே… கொண்டக்கட்டு விழுகுறதுக்குள்ள கொடுத்துடலாமுல்ல…” என்றான்.

“கொடுக்கணும்… உங்க பெரிய மாமா கேட்டிருக்காரு… அதான் விக்கல….”

“செரி சித்தப்பா… வரவா…” என்றவன் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் நகர்ந்தான்.

‘பனயிருந்து என்னத்துக்கு ஆவுதுன்னு சொல்ற நெலமயாயிப் போச்சு… ம்… என்ன சொல்ல’ன்னு நெனச்சப்போ எனக்குப் பெருமூச்சுத்தான் மிச்சமானது.

“என்னய்யா செல்லப்பய்யாவோட மரத்த வெட்டுறாகளாக்கும்…” கேட்டபடி எதிரே இருந்த தட்டில் இட்லியை வைத்துச் சாம்பாரை ஊற்றினாள் பேத்தி சுகப்பிரியா.

“ம்… பட்ட மரத்தக் கொடுத்தாலும் பரவால்ல… நல்லா நிக்கிர மரத்தயும் சேத்துல்ல கொடுத்திருக்கான்…” ஆதங்கத்தச் சொன்னேன்.

“ஆமா… பனமரம் நின்னு என்னத்துக்கு ஆவுது…”

“உனக்கென்ன தெரியும்… பனயப் பத்தி… பனம்பழம் சுட்டுத் திங்கத் தெரியுமா… மொங்கு வெட்டி அப்புடியே உறிஞ்சிக் குடிக்கத் தெரியுமா… கிழங்குப் பண்ண போடத் தெரியுமா… கெழங்கு அவிக்கத் தெரியுமா… இல்ல சுட்டுத்தான் திங்கத் தெரியுமா… இன்னக்கி மொங்கு நாப்பது ரூவாக்கி அஞ்சுன்னு எண்ணிக்கயில வாங்கித் திங்கிறிய… பொங்கலுக்கு இருவது ரூவாக்கி அஞ்சின்னு கெழங்கு வாங்கி சாமி கும்பிட்டு அதத் திங்காம காயப் போட்டு தூக்கி வீசுறிய… பன மண்ணரிப்பத் தடுக்கும்… அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப் போவுது… டிவியக் கட்டி அழத்தான தெரியுது… “

இதுக்கு மேல் நின்னா பேசியே கொன்னுருவாருன்னு அவ சத்தமில்லாமப் பொயிட்டா.

மாட்டக் கொல்லக்காட்டுல கொண்டேயி விட்டுட்டு வரலாம்ன்னு போகும் போது ஒத்தப்பன வெட்டுறதப் பாத்தேன்…. பாதிப்பனயில கயிறு போட்டு ரெண்டு பேரு இழுத்துப் பிடிச்சிருந்தாக ஒராளு தூருல கோடாரியால வெட்டிக்கிட்டு இருந்தான்… சுத்தி வெட்டியிருக்க, மரம் ஆட்டம் கொடுத்துக்கிட்டு இருந்துச்சு…

‘ம்… ஒத்தப்பன இருந்த எடத்த இனி மறந்துருவோம்… ம்… மரமட்டுமில்ல மனுசனும் செத்துட்டா யாரு நெனக்கப் போறா… நானே செத்தாலும் எம்புட்டு நாளக்கி நெனக்கப் போறாக… எம்புட்டு மரம்… எத்தன பன… எல்லாம் போன எடந் தெரியல… யாரு ஞாபகத்துல வச்சிருக்கா… எனக்கே சிலது ஞாபகமில்ல…’ மனசுக்குள் பேசியபடி நடக்க ஆரம்பித்தேன்.

மாட்ட அவுத்து விடும்போது ‘சடச்சட’ன்னு சத்தமும் அதத் தொடந்து ‘தொப்’புன்னு ஒரு சத்தமும் கேட்டுச்சு.  ஒத்தப்பன செத்துருச்சுடான்னு சத்தமாச் சொல்லிக்கிட்டேன்.

திரும்பி வரும் போது ஒத்தப்பன நின்ன இடம் வெறுமையாய்…

வேப்பஞ் செய்யிக்குள்ள ஒத்தப்பனயோட தலப்பக்கம் சிதறிப் போயிக் கிடந்தது வேப்பமரத்து உச்சியிலயிருந்து தவறி விழுந்து செத்துப்போன சாமியய்யாவோட தல போல….

பாக்கச் சகிக்காம முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

***

பரிவை சே குமார், தற்பொழுது அபுதாபியில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு எதிர்சேவை அண்மையில் வெளியாகி உள்ளது

சலனம்

3

நாச்சியாள் சுகந்தி

சந்தியா  சாவு வீட்டிலிருந்து திரும்பி வருபவளைப் போல அயர்ச்சியுடனும் துக்கத்துடனும் அந்த சாலையில் நடந்து கொண்டிருந்தாள். அந்த சாலை அவளுக்கு மிகப் பழக்கமான சாலைதான்.  ஆனால் அந்த சாலையில் ஒருபோதும் நடந்தவளில்லை. பி.எம்.டபிள்யூ காரில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு, ‘ஒரு அமைச்சரே என் காலடியில் தான் இருக்கிறான்’ என்கிற மமதையில்தான் சில மணி நேரத்துக்கு முன்பு கூட  இருந்தாள். காலம் யார் மமதையில் மண்ணள்ளிப் போடாமல் விட்டது.

சந்தியாவுக்கு தான் எந்த சாலையின் வழியே நடக்கிறோம், எங்கே செல்கிறோம் என்கிற நினைவு முற்றிலும் இல்லாமல்  கால்  போகும் பாதையில் போனாள். எத்தனை தூரம் நடந்திருக்கிறோம் என்பது தெரியாமலேயே நடந்தாள். நடந்து நடந்து நா வறண்டபோது சுயநினைவுக்கு வந்தாள். வளசரவாக்கத்திலிருந்து கே.கே நகர் வரை நடந்து வந்திருக்கிறாள். அதுவும் உச்சி வெயில் மண்டையை மட்டுமில்லாது மொத்த உடம்பையும் வியர்க்க வைத்து உடலில் இருந்த அத்துனை நீரையும் மிடறுமிடறாக குடித்துத் தொலைத்திருந்தது. நா வறட்சியும் மனக்குழப்பமும் சேர்ந்து மயக்கம் வருவது போல கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது சந்தியாவுக்கு.   

கண்ணை முழித்து பார்த்தபோது வடபழனி சூர்யா ஆஸ்பத்திரியில் இருந்தாள். சந்தியா பிரபல தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர்.  சினிமா நடிகைக்கு இருப்பது போல் சந்தியாவுக்கும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் பல நாடுகளில் ஒரு பெரிய ரசிகர் வட்டமே இருந்தது. முகநூலிலும் டிவிட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் பல லட்சம் பேர் சந்தியாவை பின்தொடர்ந்தார்கள்.  சந்தியா முகநூலில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றி ஒரு நிமிடம் முடிவதற்குள் ஐநூறு  லைக்குகள் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். அதுவும் இப்போதெல்லாம் செக்கச் செவேலென ஹார்ட்டின்கள் குவியும். அதுவும் பேஸ்புக் ஸ்டோரியில் ரத்தத்தால் அபிஷேகம் செய்வது போல ஹர்ட்டின்கள் மழையாக  பெய்யும்.

சந்தியாவுக்கு இந்த புகழையெல்லாம் விட,  தமிழ்நாட்டின் மிக இளம்வயது அமைச்சர் என ஊடகங்களும் பத்திரிகைகளும் பாராட்டிய அமைச்சரின் காதலி என்கிற பெருமை  எல்லா செயல்களிலும் இடங்களிலும் அவளை அறியாமலேயே வெளிப்பட்டுக்கொண்டு இருக்கும். அந்த சந்தியாதான் இப்போது உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் படுத்துக்கிடந்தாள்.  கே.கே நகர் பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்தவளை அவளின் ரசிகர் ஒருவர்  தன் காரில் ஏற்றி வந்து மருத்துவம்னையில் சேர்த்து   இருந்தார். அவர் சந்தியா வேலை பார்க்கும் செய்தி தொலைக்காட்சிக்கு தகவல் சொல்ல, அங்கிருந்து சந்தியாவின் தோழிகள் இருவர் வந்திருந்தனர். அதில் ஒருத்திக்கு மட்டுமே சந்தியாவின் நிகழ்காலம், நிழல்காலம் எல்லாமும் உள்ளது உள்ளபடியே தெரியும்.

அவளிடம் தான்  டாக்டர், சந்சந்தியாவுக்கு பிளட் பிரஸர் அதிகம் இருப்பதாகவும் ஊசி போட்டுள்ளதால் அவர் தூங்குகிறார் என்றும் தூங்கி எழுந்தால் பிரஸர் குறைந்துவிடும் என்று கூறியிருந்தார். அவள், ‘சந்தியா முழித்துவிடுவாள்’ என்ற நம்பிக்கையில் அவளது அருகிலேயே உட்கார்ந்து சொட்டு சொட்டாக விழும் டிரிப்ஸை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். காலம் தண்ணீர் போன்றது. காட்சிகளாக உறைந்து விடுகிறது; வார்த்தைகளாக ‘சொட் சொட்’ என விழுகிறது. சில சமயம் ஆறுபோல ஓடிவிடுகிறது. காலம்தான் ஞானம்; காலம்தான் கடவுள்.

கண் மூடிக்கிடந்த சந்தியாவுக்கு பாலாஜி பேசியது மீண்டும் மீண்டும் தலையின் நான்கு சுவர்களிலும் பட்டு எதிரொலிப்பது போல இருந்தது.

“ஆமாம் சந்தியா, உன்ன லவ் பண்ணினதுக்கு அப்புறம்தான் வெறும் நகர செயலாளரா இருந்த நான் எம்.எல்.ஏ ஆனேன். அதே வருஷத்துல அமைச்சர் ஆனேன். அதெல்லாம் ஒத்துக்குறேன். இல்லேனு சொல்லவே இல்லை. ஆனா ரெண்டு கொழந்தைகளுக்கு அம்மாவான உன்ன நான் எப்படி ஊர் அறிய கல்யாணம் பண்ணிக்க முடியும் சொல்லு…? இத வச்சே பத்திரிகையில அதையும் இதையும் எழுதி நாறடிப்பானுங்க. அதனால கட்சிக்கு பேர் கெடுதுன்னு என்னை அமைச்சர் பதவியில இருந்து தூக்குனாலும் தூக்குவாங்க. ஒனக்காக நான் பதவிய இழக்கணுமா சொல்லு. கல்யாணம் பண்ணினாலும் உன்ன எப்பவும் போல பாத்துக்குவேன். அது சத்தியம்’’

“அப்ப ஒனக்கு வப்பாட்டியா இருக்க சொல்றியா’’

“ரெண்டு புள்ள பெத்தவள பொண்டாட்டி ஆக்கிக்க முடியுமா”’

“என் கூட சுத்தும்போதும், படுக்கும் போதும் நான் ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மான்னு தெரியாதா”

“சந்தியா, நெலம கைமீறி போயிடுச்சு… கல்யாணம் நடந்துதான் தீரும். என்ன அரசியலுக்கு கொண்டு வந்த என் மாமனுக்காக நான் இந்த கல்யாணத்த செஞ்சுதான் ஆகணும். அப்பத்தான் நான் உயிரோடயே இருக்க முடியும்…புரிஞ்சுக்கோ…’’

“நீ என்கூட சுத்துனது, போனது வந்தது எல்லாம் உன் கட்சி தலைவர்கிட்ட சொன்னா அப்பவும் உன் பதவி போகும் தான’’

“என்ன பயமுறுத்துறியா… இதுக்கெல்லாம் கட்சிய விட்டு தூக்கணும்னா கட்சிக்கு அதுமட்டும் தான் வேலையா இருக்கும். உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிக்கோ…போ… இனிமே உங்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசிய மயிரு எனக்கில்ல…போ, உன்னால முடிஞ்சத செய்”

இந்த வார்த்தைகள் சந்தியாவை உயிரோடு அறுக்கும் கத்தியாக இருந்தன. அந்த வார்த்தைகளை விடவும் அவனது முகபாவனைகள் அத்துனை கொடூரமாக இருந்தது. அதுதான் சந்தியாவை மிகவும் துன்புறுத்தியது.  வார்த்தைகளை விட மனிதர்களின் முகபாவனைகள் காலத்துக்கும் மறக்க முடியாததாக இருக்கும். எல்லா நேரத்திலும் ஆன்மாவை சிதைத்துக் கொண்டே இருக்கும். நிம்மதியாக தூங்க விடாது.

மனிதர்கள் கசப்பேறிய சொற்களைப் பேசும்போது அவர்களது முகபாவனைகளில் ‘சாத்தான்த்னம்’ சட்டென குடியேறிவிடுகிறது. வெறுப்பான சொற்களை பேசும்போது ரத்தம் குடிக்கும் காட்டேரியை நேரில் பார்ப்பது போன்றே சிலரின் முகங்கள் இருக்கும். பாலாஜியின்  முகமும்  அப்படித்தான் இருந்தது. அதுவும், ‘நீ ரெண்டு புள்ளைக்கு அம்மாதான’ எனக் கேட்டபோது இருந்த முகபாவம் சாத்தானும் காட்டேரியும் கலந்த முகபாவம். அந்த முகபாவம்தான் சந்தியாவை என்னென்னவோ செய்தது. ‘செத்துவிடலாமா’ என்கிற எண்ணத்தைக் கொடுத்தது. இரண்டு பெண் குழந்தைகளை நினைத்தபோது அந்த எண்ணம்  உள்ளங்கையில் இருந்த ஐஸ் கட்டி  போல் கரைந்தது.

பாலாஜி நடுநிசியில் இரண்டாம் முறையாக கூடல் முடிந்த பொழுதொன்றில், “நீ என் அதிர்ஷ்ட தேவதை.   நீ என்கூட இருக்குற வரைக்கும் அதிர்ஷ்டம்  என்கூட  ஃபிரண்ட்ஷிப்பா இருக்கும்’’ என்று சொல்லியபோது இருந்த முகத்தை நினைத்துப் பார்த்தாள். அந்த முகம்தான் இப்போது சாத்தானாகவும், காட்டேரியாகவும் மாறியிருந்தது என்கிற உண்மையை சந்தியாவால் ஜீரணிக்க முடியவில்லை.

‘ஆண்கள் சுயநலத்துக்காக தேவதூதர்களாகவும் மாறுவார்கள். சாத்தான்களாகவும் மாறுவார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தேவதூதர்களும் இல்லை; சாத்தான்களும் இல்லை. சுயநலப்பிசாசுகள். அதுவும் பணம், பதவி, வெற்றி என அலையும் மகா சுயநலப் பிசாசுகள்’ என அவளது மனம்  கூட சேர்ந்து பலவற்றை சொல்லி சொல்லி துக்கத்தை அதிகப்படுத்தியது. மனம் ஓடும் ஓட்டத்துக்கு எதிர்திசையில் ஓடும் மனத்திண்மை வாய்ந்தவர் உலகத்தில் யார் இருக்கிறார்?

பாலாஜி கல்யாண மேடையில் அமர்ந்திருந்தாலும் அவன் மனம் முழுக்க தேனடையில் அப்பிக்கிடக்கும் தேனீக்கள் போல பயம் அப்பிக்கிடந்தது.  புது மாப்பிள்ளைக்கு உரிய எந்த குதூகலமும் அவன் முகத்தில் இல்லை. ‘இந்த கல்யாணம் எப்படியாவது நடந்தால் போதும்’ என்கிற படபடப்பு வியர்வையாக வழிந்துகொண்டே இருந்தது. அவனால் துடைத்துத் துடைத்து மாளவில்லை. பயம் வயிற்றுக்கு இறங்க இரண்டுமுறை கழிவறைக்கு செல்ல வேண்டியதானது. பயம், பயத்தினால் கொடூர பசி,  அந்த பசியினால் வியர்வை என, ‘இந்த கல்யாணமே வேண்டாம் என தூக்கிப்போட்டு விட்டு ஓடிவிடலாமா’ என்றுகூட அவனுக்குத் தோன்றியது. கட்சித்தலைமை வந்துகொண்டிருக்கிறார் என அரைமணி நேரமாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் வந்தபாட்டைக் காணவில்லை. மண்டபத்தில் கூட்டமோ மாநாட்டுக்கு வந்த கூட்டத்தைப் போல் இருந்தது.

கட்சி தலைமை வருவது தாமதம் ஆக ஆக பாலாஜிக்கு பயம் நெஞ்சை அடைப்பது போல் இருந்தது. ‘ஒருவேள சந்தியா தலைவர மீட் பண்ணி எல்லாத்தையும் சொல்லியிருப்பாளோ…  இங்க வந்து எல்லோருக்கும் முன்னாடி கலாட்டா பண்ணுவாளோ’ என தான் பார்த்த சினிமாக்களை எல்லாம் நினைத்துப் பார்த்து பயந்தான்.

பயம் துரத்தும் மிருகம். அந்த மிருகத்துக்கு அஞ்சிவிட்டோம் என தெரிந்தால் போதும்…அவ்வளவுதான், துரத்திக்கொண்டே இருக்கும். இளைப்பாறுவதற்கு நேரம் கொடுக்கவே கொடுக்காது. துரத்தும். யூகிக்க முடியாத வேகத்தில் துரத்திக் கொண்டே இருக்கும். பாலாஜியையும் அந்த மிருகம் துரத்த ஆரம்பித்துவிட்டது. அரைமணி நேரத்தில் வருவார் என்ற தலைவர் முக்கால் மணிநேரமான பின்பும் வந்து சேரவில்லை. ‘இப்போதுதான் வீட்டை விட்டு கிளம்பியிருக்கிறார்’ என இரண்டாம் கட்ட தலைவர்கள் பாலாஜியிடம் சொன்னார்கள்.

‘தலைவர் வீட்டை விட்டு இப்பத்தான்  கிளம்பியிருக்கிறார் என்றால்.. ஏன், என்ன ஆகியிருக்கும்? சொன்ன நேரத்துக்கு வந்துவிடுகிறவர் இன்னமும் வரவில்லை என்றால்…? ஒருவேள சந்தியா விஷயம் எப்படியோ தெரிந்திருக்குமோ? தெரிந்திருந்தால் நிலைமை என்ன ஆகும்? மீடியா நம்மை நாறடித்து விடுவார்களே… மணல் அள்ளுவதை தடுத்த தாசிதாரைக் கொன்றபோது கூட இப்படி பயந்தது இல்லையே. கட்சித் தலைமை உத்தரவையும் மீறி தடை விதிக்கப்பட்டிருந்த போதை பொருளை தமிழ்நாடு முழுவதும் விநியோகித்த போது கூட கட்சித் தலைமைக்காக பயப்படவில்லையே. குவாரி கான்ட்ராக்டில்  பிரச்சனை செய்த சொந்தக் கட்சிக்காரனைக்  கொன்று அதை விபத்து என நாடகமாக்கியபோது கூட இப்படி பயந்து செத்தது இல்லியே. இந்த அல்ப விஷயத்துக்கு ஏன் இப்படி பயப்படுகிறோம்’ என்று யோசித்துக் கொண்டே இருந்தவனுக்கு பயத்தின் வியர்வையில் பட்டு சட்டை முழுவதுமாக நனைந்து விட்டிருந்தது. முகத்தைத் துடைக்கும் போதுதான் பார்த்தான், தன் அருகில் மணப்பெண் நிற்பதை. அவளது முகத்திலும் உற்சாகமோ, சந்தோஷமோ எதுவும் இல்லை. ஒரு இயந்திரத்தை நிற்க வைத்தால் நிற்பது போல நின்று கொண்டிருந்தாள்.

பாலாஜியை விட ஒன்பது வயது சிறியவள்.   பாலாஜியின் துறை சார்ந்த காண்ட்ராக்ட்  எல்லாம் இவளின் அப்பாதான் கடந்த மூன்று  வருடங்களாக செய்து வருகிறார். பாலாஜிக்கு எல்லாவற்றிலும் முப்பது சதவீதம் கமிஷன் தந்துவிட வேண்டும். முப்பது பர்சண்ட் பாலாஜி என்பதுதான் இப்போதைய பட்டப்பெயர். அது கட்சித் தலைமைக்கும் தெரியும். அடுத்து வரவுள்ள மூன்று தொகுதிக்கான இடைதேர்தல் மொத்த செலவும் பாலாஜி தலையில்தான் எழுதப்பட்டுள்ளது.

நின்று நின்று சலித்துப் போனவள் அலங்கார நாற்காலியில் அமர்ந்தும் விட்டாள். அவளது தோரணை இவனுக்கு பயத்தை இன்னும் அதிகமாக்கியது. ‘ஒருவேளை சந்தியா இவளது நம்பரை எப்படியாவது வாங்கி இவளிடம் எல்லாமும் சொல்லியிருப்பாளா? ஏன் இப்படி ரோபோ போல் நிற்கிறாள்’ என சிந்தித்தவனுக்கு எல்லாமும் சிலந்திவலை பின்னிக்கொண்டே போவது போல இருந்தது.

‘இப்போது தெரியாவிட்டாலும் கல்யாணத்துக்கு பிறகு தெரிந்தால்….? இவள் குடும்பம் கொலைக்கும் பழிக்கும் அஞ்சாத குடும்பம். இவள் கண்ணை கசக்கிக்கொண்டு போய் நின்றால் யோசிக்காமல் நம்மை ஈவு இரக்கமில்லாமல், ஒரு அமைச்சர் என்றும் பார்க்காமல் கொலை செய்துவிடுவது உறுதி’ என நினைக்கும்போதே அவனுக்கு  தலை சுற்றுவது போல இருந்தது.

தலைவர் இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவார் என்று உறுதியாகச் சொன்னார்கள். மளமளவென வேலைகள் நடந்தன. மணப்பெண் அப்போதும் எழுந்து நிற்க விரும்பாமல் உட்கார்ந்தே இருந்தார். முதன்முறையாக அவளிடம் பேசினான் பாலாஜி. ‘தலைவர் வரப் போறாரு.. எழுந்து நில்லு’ என காதருகே போய் சொன்னான்.

அவள் யோசிக்காமல் , ‘இவ்வளவு நேரம் நின்னுட்டுத்தான் இருந்தேன். அப்ப உங்க கண்ணுக்கு தெரியவே இல்லியா… ஒரு மணிநேரமா ஆடாம அசையா நான் நிக்குறேன். அதுவும் உங்களையே பார்த்துகிட்டு நிக்குறேன். நான் நிக்குறதே உங்களுக்கு தெரியல. என்ன கருமமோ, உங்களுக்கு வேர்த்து வேர்த்து வழியுது… எதுவும் வியாதி இருக்கா…   நாசமாப் போன மடையன் எங்கப்பா.  விசாரிக்காம கட்டிக்கொடுக்குறாரு…உங்கள பார்த்தாலே பயமா இருக்கு. ஏசி ரூம்லயும் இப்படி வேர்க்குதுன்னா, என்ன வியாதியோ. இதுல சும்மா சும்மா பாத்ரூமுக்கு போயிட்டு வர்றீங்க. சுகர் இருக்கா, இல்ல வேற எதுவும் வியாதி இருக்கா? 36 வயசாகியும் இதுனாலதான் கல்யணம் பண்ணிக்கலையா. எவனும் பொண்ணு கொடுக்காம இப்ப நான் வந்து மட்டிக்கிட்டேனா’ என அவள் மணமேடை என்றும் பாராமல் கடுகடுவென வார்த்தைகளை தீக்கங்கென வீசினாள்.

அந்த வார்த்தைகள் அவன் மீது பட்டு பட்டு கொப்புளமாக்குவது போல் இருந்தன. வார்த்தைகளை அவள் தூக்கியெறியும் வேகத்தில் வெளிப்பட்ட முகபாவம் த்ரில்லர் சினிமாக்களில் காட்டுவது போல, சாத்தான் நேரடியாக தொண்டையைக் கவ்வுவது போலவே அவனுக்குத் தோன்றியது.  ஏற்கனவே துரத்திக்கொண்டிருக்கும் பயமும் இவளது இந்த சாத்தான் – தொண்டை முகபாவமும் சேர்ந்து மொத்தமாக நெஞ்சை அடைத்த உணர்வைக் கொடுத்தது. உலகமே சட்டென இருட்டாவது போல  தோன்றியது. உட்கார நினைத்தவன் அப்படியே  புயலில் சாயும் மரமென சரிந்து விழுந்தான். அவன் விழ விழ பயம் அவன் மீதேறி மிக உக்கிரமாக உட்கார்ந்து கொண்டது.  

கூட்டத்தில் இருந்த மருத்துவர் ஒருவர் ஓடி வந்தார். கையைப் பிடித்து பல்ஸ் பார்த்தார். இரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருப்பதால் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பதற்றமாகச் சொன்னார்.

மொத்த மண்டபமும்  உறைந்து போயிருந்தது. பயம் அங்கு எஜமானனாகி அதி திமிருடன் நின்றது.

***

நாச்சியாள் சுகந்தி – இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளன. அரசியல், சினிமா, இதழியல் என இவர் பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறார்

நூற்றைம்பது கோட்டைகள்

2

சித்துராஜ்பொன்ராஜ்

யாவரும் ஊரடங்கு கதைகள் வரிசையில் இன்று எனது ‘நூற்றைம்பது கோட்டைகள்’ என்ற கதை வெளிவந்திருக்கிறது.

14ம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் மன்னனாக இருந்த நான்காவது ஹென்றியை ஷேக்ஸ்பியரின் நாடகத்தின் வழியாகவேனும் பல நண்பர்கள் அறிந்திருப்பார்கள்.

இந்த இங்கிலாந்தின் ஹென்றிக்கு சரியாக ஒரு நூற்றாண்டுக்குக் பிறகு பிரான்சு நாட்டை ஆண்ட நான்காவது ஹென்றி முன்னவனைப் போலவே சுவாரசியமானவன்.

தனக்கு முன்னாலிருந்த கத்தோலிக்க மன்னன் வாரிசில்லாமல் செத்துவிட உறவுமுறையின் வழியாக அரசுரிமை பிராடஸ்டண்டு மதத்தவனான இவனுக்கு வந்து சேர்கிறது.

மதச்சண்டைகள் முற்றிப்போய் மனிதர்கள் ஒருவரை ஒருவர் பாரீஸ் நகரத்துத் தெருக்களில் வெட்டிக்கொண்டு செத்த நேரத்தில் ஹென்றி, நாட்டின் பாதுகாப்புக்காக பிராடஸ்டண்டு மதத்திலிருந்து கத்தோலிக்க மதத்துக்கு மாறுகிறான். மாறிய பின்னால் ஐரோப்பியாவிலேயே முதன்முறையாகப் பிராடஸ்டண்டுகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் Edict of Nantes என்ற அரசாணையை அறிவிக்கிறான்.

இதனாலேயே இரு சாரராலும் சந்தர்ப்பவாதி என்று பிரான்சின் நான்காவது ஹென்றி முத்திரை குத்தப்படுகிறான்.

ஹென்றிக்குச் சல்லி என்ற சிறுவயதுத் தோழன் இருந்தான். ஹென்றிக்கு அமைச்சனாகவும் சேவகனாகவும் இருந்த சல்லி கடைசிவரை தனது பிராடஸ்டண்டு மதத்தைவிட்டு மாறவில்லை.

பிரான்சின் மிக இக்கட்டான சூழ்நிலையில் ஹென்றி, சல்லி என்ற இருவரின் உறவும் எப்படி இருந்திருக்கும் என்று எழுத நினைத்தேன்.

‘நூற்றைம்பது கோட்டைகள்’ இவர்கள் இருவரின் கதை.

– சித்துராஜ் பொன்ராஜ்

நூற்றைம்பது கோட்டைகள்

“அவர்களை நாளை காலை வரச் சொல்லி விடலாமா?” அறையின் நடுப்பகுதியில் கொழுத்த மீன்களாய் நீந்திக் கொண்டிருந்த இருட்டுக்குள் வெள்ளை வெளேரென்ற தனது முகத்தை நீட்டியபடி மாக்ஸிமில்லியன் கேட்டார்.

பம்பரத்தின் வடிவத்தில் கபாலம் பெருத்தும் தாடை சிறுத்தும் போயிருந்த உணர்ச்சிகளற்ற முகம். முனையில் சதுர வடிவமாகத் திருத்தப்பட்டிருந்த தாடி. முப்பத்து எட்டு வயதிலேயே தோன்ற ஆரம்பித்திருந்த முன்வழுக்கைக்கு அடியில் ஆழமான சிந்தனைகளின் அடையாளமாக அமைந்திருந்த விசாலமான நெற்றி. எந்நேரமும் தன்னையும் தன்னைச் சார்ந்து இருப்பவர்களையும் மிகுந்த உக்கிரத்துடன் தாக்கிச் சின்னாபின்னமாக்கக் கூடிய வன்முறையை எதிர்பார்த்து சுற்றும் முற்றும் பார்த்தபடியே இருக்கும் சிறிய கூர்மையான மஞ்சள் நிறக் கண்கள். இப்போது அந்தக் கண்கள் அறையின் நடுவே போடப்பட்டிருந்த சிறிய கறுப்பு நிற மேசையின் மீது அமர்ந்து அரசாங்க முத்திரை குத்திய தாள்களை வாசித்துக் கொண்டிருந்த மனிதரின் முகத்தின்மேல் அசையாமல் நிலைகுத்தி இருந்தன.

மேசைமீது எரிந்து கொண்டிருந்த கனமான மெழுகுவர்த்திகளின் தீபமிருக்கும் திசையில் தாள்களைக் காட்டிக் கொண்டு தாழ்வான நாற்காலியில் மன்னர் நான்காம் ஹென்றி அமர்ந்திருந்தார். வாசித்துக் கொண்டிருந்த தாளை நகர்த்தி அதற்கடியிலிருந்த தாளில் உள்ள வரிகளை மிகவும் கவனத்துடன் வாசிப்பவரைப் போல் சில நிமிடங்கள் பாவனை செய்தார். சீற்றமுள்ள ஆண் சிங்கத்தின் கம்பீரமான நெற்றியைப் போன்று கொடுமையும் அகலமும் நிறைந்திருந்த ஹென்றியின் நெற்றிப்பரப்பில் மூன்று வரிகளாய் சுருக்கங்கள் தோன்றி மறைந்தன. பின்பு தனது ஆவலைக் கட்டுப்படுத்த முடியாதவராக தன் கையிலிருந்த தாள்களை மேசைமீது விசிறி எறிந்துவிட்டு மெல்லிய பெருமூச்சோடு முன்னால் நின்றிருந்த தனது அமைச்சரிடம் தனது கவனத்தை ஹென்றி திருப்பினார்.

அப்படி அவர் திரும்பியபோது அறைக்குள் கூடியிருந்த இருட்டின் நடுவே ஹென்றியின் அகன்ற வெள்ளை வெளேரென்ற நெற்றியும் நீள்வட்ட முகமும் சிவப்பேறி மேடேறியிருந்த கன்னங்களும் பெரிய கருநீல நிறக் கண்களும் மெழுகுவர்த்தியின் பொன்னிறமான வெளிச்சத்தில் ஜொலித்துக் கிடந்தன.

மார்ச்சு மாதம் இருபத்திரண்டாம் தேதி பாரீஸின் நோத்ரு தாம் தேவாலயத்தில் ஈஸ்டர் ஆராதனைகள் கொண்டாடப்பட்டு கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் முடிந்து ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது வாரம் தொடங்கவிருந்த போதும்கூட மாலை ஐந்து ஐந்தரை மணிக்கே இருள் கவிய ஆரம்பித்துவிடுகிறது. மேற்குத்திசையில் முதலாம் ஜேம்ஸ் மன்னன் ஆட்சி செய்யும் இங்கிலாந்திற்கும் பிரெஞ்சு தேசத்திற்கும் இடையில் கொந்தளித்துக் கிடக்கும் சாம்பல் நிறக் கடலிலிருந்து எழும் காற்றும் சிறுமழையும் கோதுமையும் பார்லியும் விளையும் மேற்கு பிரான்சின் பிரித்தானியப் பிரதேசத்தின் பெருவெளிகளைக் கடந்து இந்த நாந்த்ஸ் நகருக்குள் புகும்போது கம்பளி ஆடைக்குள்ளும் குளிர் பின்னி எடுக்கிறது. ஏப்ரல் மாதம் பன்னிரண்டாம் தேதியாகியும்கூட இன்னமும் கடும்பனிக் காலம் மறைந்து வசந்தகாலம் வரவில்லை.

 ‘வசந்தகாலம் வரத்தானே வேண்டும்’ என்று வாய்க்குள் அடைபட்டிருந்த சூடான காற்றை உதடு குவித்து மெல்ல வெளியே ஊதியபடியே வெல்வெட்டுக் கையுறைகளை அணிந்திருந்த கைகளை சத்தமெழாமல் தட்டிக் கொண்டிருந்த மாக்ஸிமில்லியன் யோசித்தார். கொஞ்சம் முன்பின் ஆனாலும் வசந்தகாலம் வந்தே தீரும். அதுதான் இதுவரைக்கும் நடந்திருக்கிறது. இந்த ஆயிரத்து ஐநூற்று தொண்ணூற்று எட்டாம் வருடம் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஹென்றி அமர்ந்திருந்த மேசை மீதிருந்த மெழுகுவர்த்திகள் பலவிதமான வேலைப்பாடுகள் அமைந்த பித்தளைத் தண்டுகளுக்குள் செருகப்பட்டிருந்தன. கரைந்து குள்ளமாகிப் போயிருந்த மெழுகுவர்த்திகளின் ஓரங்களில் மெழுகு வெளிப்புறமாய் ஒழுகி உறைந்து அவற்றுக்கு இதழ்விரிந்திருக்கும் வெள்ளைநிற குண்டுப்பூக்களின் தோற்றத்தைத் தந்து கொண்டிருந்தது.

“மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் மன்னரின் கணங்கள் மேலும் சிவப்பேறி அவருடைய உதடுகள் குளிரில் துடித்துக் கொண்டிருப்பதை கவனித்த மாக்ஸிமில்லியனுக்குக் கவலை ஏற்பட்டது.”

மாக்ஸிமில்லியனைவிட மன்னர், வயதில் ஏழு வருடங்கள்தான் பெரியவர் என்ற போதிலும் அவர் பிரான்சின் உஷ்ணமான தெற்கு எல்லைப்புறத்தை ஆண்டுவந்த நவாரா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். நாட்டின் வடக்குப் பகுதியில் பிறந்த தன்னைப்போல் அவரால் இந்த கடுங்குளிரைத் தாங்க முடியுமா என்று மாக்ஸிமில்லியனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. சாத்திய கதவுகளுக்கு வெளியே காவலுக்கு நின்றிருக்கும் பியர்-லூயியை அழைத்து மன்னருக்கு இன்னும் கனமான போர்வைகளை எடுத்துவரச் சொல்லலாமா என்று மாக்ஸிமில்லியன் யோசித்தார். ஆனால் கரிய நிற மேசைமீது ஹென்றி ஊன்றி வைத்திருந்த வலது கை விரல்களின் நீளமும் திடமும் அவற்றின் நகங்களிலிருந்து சிதறிய முத்துப்போன்ற வெளிச்சமும் மேசைமீது ஊன்றியிருந்த வலது கை மணிக்கட்டின் பருமனும் அவரை எதுவும் பேசவிடாமல் செய்தன.

ஹென்றி தனது இடது கையை இடுப்பில் வைத்தபடியே நாற்காலியில் ஒரு பக்கமாக சாய்ந்தபடி அமர்ந்து மாக்ஸிமில்லியனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தப் பார்வையில் நவாரா பிரதேசத்தின் பிரெனி மலைப்பாறைகளின் கடுமையும் உஷ்ணமும் அப்பாறைகளினூடே ஓடும் வெளிச்சம் மிகுந்த சிற்றருவிகளின் மிக லேசாய் சப்திக்கும் சிரிப்பொலியும் நிறைந்திருந்தது. அத்தகைய கடுமையையும் மற்றவர்களுக்கு எளிதில் கேட்காத இடையறாத சிரிப்பொலியையும் ஒரே நேரத்தில் தனக்குள் அடக்கி வைத்திருக்கும் மனிதனை யாரும் வெல்வது கடினம் என்று மாக்ஸிமில்லியனுக்குத் தெரிந்தது.

அதிலும் பத்தொன்பது வயதிலேயே நோத்ரு தாம் தேவாலயத்தின் வளாகத்தில் நடந்தேறிய மார்க்கரெட் டி மெடிசியுடனான தனது திருமணத்தைக் காண வந்த பிராடஸ்டண்டு ஹூயூக்நோட் திருச்சபையைச் சேர்ந்த தனது உறவினர்களும் நண்பர்களும் பிரான்சின் மிகப் பிரசித்தமான பிராடஸ்டண்டு பிரபுக்களும் மார்க்கரெட்டின் அக்காளான ராணி கேத்தரீனால் தூண்டிவிடப்பட்ட கத்தோலிக்கர்களின் கும்பலால் பாரீஸ் வீதிகளில் நாய்களைப் போல் துரத்தப்பட்டு நின்ற இடத்திலேயே வெட்டிச் சாய்க்கப்பட்டதைக் கண்டவன் அப்படித்தான் காலம் முழுவதும் பசித்த ஓநாயாய், முகத்தில் கடுமையுடனும் அடக்கமான சிரிப்புடன் அலைந்து திரிவான்.

அன்று மட்டும் பாரீஸில் மூவாயிரம் பிராடஸ்டண்டுகள் தெருவில் சாகடிக்கப்பட்டு செத்துப் போனார்கள். புனித பார்த்தோலமியூ நாளுக்கு முந்திய தினத்தில் அந்த வன்முறை கட்டவிழ்க்கப்பட்டதால் அந்த சம்பவம் அந்த நாளின் பேராலேயே அழைக்கப்பட்டது. அரசாங்கத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட வன்முறை என்பதால் காவலர்களும் படைவீரர்களும் தெருவோரமாய் நின்றபடி பிராடஸ்டண்டுகள் தெருக்களில் வெட்டிச் சாய்க்கப்படுவதைக் கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். பலர் கும்பலோடு கும்பலாகப் பல பிராடஸ்டண்டுகளைக் கொன்று குவித்தார்கள். பிராடஸ்டண்டுகள் சுதாரித்துக் கொண்டு திருப்பித் தாக்கியதில் வன்முறையில் கலந்து கொள்ளாத பல நூறு அப்பாவி கத்தோலிக்கர்களும் பரிதாபமாகச் செத்துப் போனார்கள்.

அவருக்கு முன்னிருந்த மன்னர் கடைசியில் காலமான பிறகு கடந்த பத்தாண்டுகளாக பிரான்சு தேசத்தைச் சூழ்ந்திருக்கும் மாபெரும் கத்தோலிக்க ஹாப்ஸ்பர்க் பேரரசோடு இடையறாது போர் நடத்தி – வென்று, தோற்று, வென்று – ஹென்றி சர்வ ராஜ அலங்காரங்கள் சார்த்தியிருந்தாலும் தன் உயிருக்குப் பயந்த வெறும் நாடோடியாகத்தான் வாழ்ந்திருக்கிறார். ஆறு வருடங்களுக்கு முன்னால் தனது மூப்பர்கள், உறவினர்கள், சகாக்கள் அனைவரையும் இரக்கமே இன்றி தெருநாய்களைப்போல் சாகடித்தவர்களின் மதமான கத்தோலிக்க மதத்துக்கு மாறினால்தான் பாரீஸ் நகரம் தனக்கு வசமாகும் என்று அறிந்தபோது ‘பாரீஸ் நகரத்துக்காக சந்தேகமே இல்லாமல் ஒரு கத்தோலிக்கத் திருப்பலி ஆராதனையைக் கொடுக்கலாம்’ என்று சொல்லி மாபெரும் பாரீஸ் நகரத்தை உள்ளங்கை அளவே உள்ள கோதுமைப் பணியாரம்போல் லபக்கென்று விழுங்கிய நான்காவது ஹென்றிக்கு இந்தக் குளிரெல்லாம் ஒரு பொருட்டாகாது என்று மாக்ஸி மில்லியனுக்குத் தோன்றியது.

“என்ன சல்லிப் பெருமகனாரே, சிந்தனை பலமாகத்தான் இருக்கிறது போல?”

ஹென்றியின் குரலோசை அறையில் கூடியிருக்கும் இருளில் தெற்குப் பிரஞ்சுப் பிரதேசங்களில் வளரும் அடர்த்தி மிக்க மால்பெக் திராட்சைகளினால் உருவாகிய மதுவைப்போல் மிகுந்த நிதானத்துடனும் கனத்துடனும் பரவி ஆரோகணித்தது.

எஜமானன் தனது அதிகாரப்பூர்வமான பட்டப்பெயரால் தன்னை அழைப்பதைக் கேட்டு மாக்ஸிமில்லியன் வெட்கப்பட்டார். தன் வெட்கத்தை மறைப்பதற்காக உதடுகளை விரித்துப் பற்கள் தெரிய மன்னரைப் பார்த்துச் சிரித்தார். மாக்ஸிமில்லியனின் பற்கள் ஏதோ இரவு பெருச்சாளியின் பற்களைப்போன்று சிறியவையாகவும் நெருக்கமானவையாகவும் மெழுகுவர்த்திகளின் மங்கிய வெளிச்சத்தில் முத்துக்களின் நிறத்தில் சுடர்விடுபவையாகவும் இருந்தன.

“இல்லை மன்னர் பெருமானே. நமது பழைய காலங்களைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்,” என்று சொன்னார் மாக்ஸிமில்லியன் என்ற இயற்பெயருடைய சல்லிப் பெருமகனார்.

“அதைப்பற்றி யோசித்து என்ன லாபம்? நமது இறந்த காலமும் எதிர்காலமும்தான் நம் வாசலுக்கு வெளியே ஒன்றை ஒன்று முறைத்துப் பார்த்தபடி நான் சாவேனா நீ சாவாயா என்று மல்லுகட்டிக் கொண்டு நிற்கின்றனவே.”

நான்காவது ஹென்றி இருட்டில் கரைந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியைப் போல் தன்னைச் சுற்றி நீந்திக் கொண்டிருந்த நிழல்களுக்குள் அமிழ்ந்து போயிருந்தார். பிரான்சின் வட பகுதியினரோடு ஒப்பிட பிரஞ்சு தகப்பனுக்கும் நாவாராவின் ராணிக்கும் பிறந்த நான்காவது ஹென்றி உருவத்தில் குள்ளமானவராய் இருந்தார். மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் அறையின் சுவர்களின்மீது வீசிக் கொண்டிருந்த பெரிய நிழல்களின் மத்தியில் ஹென்றியின் உருவம் மேலும் சிறுத்துப்போய் அவர் எப்போதும் அணியும் கறுப்பு ஆடைகளிலிருந்து அறையின் ஜன்னலை நோக்கி நீட்டப்பட்டிருந்த அவருடைய விரலும் கையும் ஜன்னலைப் பார்த்துத் திரும்பியிருந்த முகமும் தீப்பற்றியதுபோல் பிரம்மாண்டமாக ஜொலித்தன.

“கத்தோலிக்கப் பிரபுக்கள் எல்லோரும் பிராடஸ்டண்டுகளோடு நான் செய்து கொள்ளப் போகும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வார்களா?”

“பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. பிரெஞ்சு ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஆண்வழி வாரிசு நீங்கள்தானே. ஆண்வழி வாரிசு மட்டும்தானே பிரஞ்சு அரியணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பல காலத்திற்கு முன்பிருந்த நடப்பில் உள்ள சாலிக் சட்டம் எல்லோருக்கும் நினைவிலிருக்கிறது. இந்தச் சட்டத்தை மாற்றி மதத்தின் பெயரால் கத்தோலிக்கர்கள் என்பதாலேயே பெண்வழி வாரிசுகளையோ வேற்று நாட்டவர்களையோ அரியணையில் ஏற்றினால் இங்கிலாந்து பிரெஞ்சு அரியணைக்குத் தனக்குள்ள பாத்தியதையைத் தூக்கிக் கொண்டு வந்துவிடும் என்று பாரீஸ் பாராளுமன்றம் எட்டு வருடங்களுக்கு முன்னால் எச்சரித்தது எல்லோருக்கும் நன்றாகவே நினைவிலிருக்கிறது.”

“ஆனாலும் எதிர்ப்பு வரும்.”

“வரும்,” என்றார் மாக்ஸிமில்லியன்.

ஹென்றி நாற்காலியிலிருந்து எழுந்து நின்றார். அவருடைய நீளமான கைவிரல்கள் அவர் கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த ரிப்பனில் தொங்கிக் கொண்டிருந்த மூன்று இஞ்சுக்கள் அகலமுள்ள நூரம்பர்க் கடிகாரத்தின் தங்க மூடியை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

“யாரிடமிருந்து?”

“கீஸ் பிரபுக்களுக்களிடமிருந்தும் அவர்களை ஆதரிப்பவர்களிடமிருந்தும்.”

“என் மூதாதை பன்னிரண்டாம் லூயி மன்னரின் இளைய மகளிடமிருந்து இத்தாலிய தந்தையின் வழியாகத் தோன்றியவர்கள்தானே, நான் பிராடஸ்டண்டு மதத்தவனாக வளர்ந்தது இப்போது அவர்களுக்கு நல்ல சாக்காகக் கிடைத்தது. எனக்குத் தெரிந்தவரை கத்தோலிக்க தேவாலயத்தின் போதனைகளோ, பிராடஸ்டண்டு தேவாலயத்தின் கோட்பாடுகளோ மதத்தின் பேரால் யாரையும் கொன்று போடு என்று சொன்னதே இல்லை. அரசியலுக்காக இவர்கள் மதத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.”

காறி உமிழ்வதுபோல் வார்த்தைகளைத் துப்பிவிட்டு நான்காவது ஹென்றி மாக்ஸிமில்லியனை வெறுப்பு கலந்த பார்வையோடு உற்றுப் பார்த்தார். சல்லிப் பெருமகன் அருகிலிருந்த நாற்காலியின் வெல்வெட்டு பதித்த பின்புறத்தை கைகளால் இறுகப் பற்றிக்கொண்டு தன் முகத்தை வெடுக்கென மன்னரிடமிருந்து திருப்பிக் கொண்டார். அவருக்கு ஏற்பட்டிருந்த உணர்ச்சி வேகத்தில் நாற்காலியை மிகப் பலமாகப் பற்றியதில் அவர் முஷ்டிகள் மேலும் வெளிறிப் போனது மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிந்தது.

“அது சரி. கீஸ் பிரபுக்களுக்கு உதவி செய்ய மதத்தின் பேரால் ஆஸ்திரியப் பேரரசும், ஸ்பானிய மன்னன் பிலிப்பும், ஏன் ரோம் நகரமும்கூட கச்சை கட்டிக் கொண்டு நிற்கும். அவர்களைப் பொறுத்தவரை நான் பதவிக்காக மதத்தையே விட்டுக் கொடுக்கக்கூடிய ஒரு பச்சைத் துரோகி. என்னை நம்புவதைவிட கைகளில் சுற்றியிருக்கும் விஷப்பாம்பை நம்பலாம். உங்கள் எண்ணமும் அதுதானே சல்லிப் பெருமகனாரே?”

நான்காவது ஹென்றியின் குரல் பிரெனி மலைத்தொடர்களில் தாவித் தாவி மேலேறிச் செல்லும் நீண்ட ரோமமுடைய ஆடுகளின் கால்கள் இடற சரசரவென்று மலையிலிருந்து உருண்டு வரும் உஷ்ணமான கூழாங்கற்கள்

ஒன்றுமீது ஒன்று அடுக்கி வைத்ததுபோல் நீலநிற வானத்தை நோக்கி எழும்பியபடி கிடக்கும் பழுப்பு நிற நவாரா தேசத்துப் பாறைகளுக்கிடையே அனைத்தையும் இரக்கமின்றி வறள வைக்கும் உக்கிரத்துடன் மெல்ல முனகி அலையும் காற்று.

மாக்ஸிமில்லியன் நாற்காலியின் பின்புறத்தை இறுகப் பிடித்திருந்த கைகளை விடுவித்து தனது மன்னரின் முகத்தை உற்றுப் பார்த்தார்.

“அப்போது பிரான்சைக் கூறுபோட ஆஸ்திரியா, ஸ்பெயின் என்று பல நாடுகள் ஆர்வத்தோடு காத்திருந்தன. அரசியல் ஆதாயத்துக்காகத் தம்மைத் தாமே கத்தோலிக்க கூட்டணி நாடுகள் என்று அறிவித்துக் கொண்டன. ஸ்பெயின் மன்னன் ஃபிலிப் தான் அதிகம் துள்ளினான். பிரான்சைத் தனது அகண்ட ராஜ்ஜியத்துக்குள் சேர்த்துக் கொள்ள அவனுக்குத் தீராத ஆசை. அவர்களின் பிடியிலிருந்து பிரான்சின் சுதந்திரத்தைத் தற்காத்துக் கொள்ள ஒற்றை ஆளாய்ப் படைத்திரட்டி அதில் சேர வருபவர் கத்தோலிக்கரா அல்லது பிராடஸ்டண்ட் ஹ்யூக்நோட்டா என்று பார்க்காமல் ஒரு காலத்தில் சளைக்காமல் போரிட்டீர்கள். அந்த நேரத்தில் பிரான்சு தேசத்து நகரங்களின் பிரதான சதுக்கங்களிலும், சந்தைகளிலும் மதுபான விடுதிகளிலும் உங்களைப் பல தலைகளையுடைய விஷநாகத்தின் பிடியிலிருந்து பிரான்சைக் காப்பாற்றப் போகும் ஹெர்குலீஸாகச் சித்தரித்துப் பொதுமக்கள் புகழ்ந்து பேசியது உங்கள் நினைவில் இருக்கும்.”

ஹென்றியின் பெரிய கருநீலக் கண்கள் தமக்குள் கவிழ்ந்து எல்லையில்லா ஆழங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவை போல் கருஞ்சாம்பல் நிறமாக மாறியிருந்தன. மாக்ஸிமில்லியனின் முகத்தில் முழுவதுமாகப் பதித்திருந்த கண்களை சிறிதும் அகற்றாமல் நான்காவது ஹென்றி சின்னச் சீறலுடன் அவரைப் பார்த்துப் பேசினார்.

“எனது பழைய மதமான பிராடஸ்டண்டு மதத்தை எப்போது மிகப் பகிரங்கமாக நிராகரித்துவிட்டுப் பிரான்சின் மன்னனாக முடிசூடிக் கொள்ளும் ஆசையில் போர்ஜஸ் நகரத்துப் பேராயரின் முன்னால் கத்தோலிக்க மதத்தை ஏற்றேனோ அப்போதே நானும் பல தலைகளையுடைய விஷப்பாம்பு ஆகிவிட்டேன் அல்லவா?”

மாக்ஸிமில்லியன் பதில் பேசாது நின்றிருந்தார்.

நான்காவது ஹென்றி மீண்டும் நாற்காலியில் ஒரு சிறிய பெருமூச்சோடு அமர்ந்தார்.

“நாளை பிரான்சில் வாழும் பிராடஸ்டண்டுகளுடன் கையெழுத்தாகப் போகும் ஒப்பந்தத்தின் ஷரத்துகளை வாசியுங்கள் அமைச்சரே.”

மாக்ஸிமில்லியன் தனது கையில் சுருட்டி வைத்திருந்த தாளை விரித்து மங்கிவரும் மெழுகுவர்த்திகளின் வெளிச்சத்தின் பக்கமாய் அதைச் சாய்த்தபடி நடுங்கும் குரலில் வாசிக்க ஆரம்பித்தார்.

“நமது ரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையின் வருடம் ஆயிரத்து ஐநூற்றி தொண்ணூற்று எட்டு, ஏப்ரல் பதின்மூன்றாம் நாள். நமது ராஜ்ஜியத்தில் வாழும் அனைத்துப் பிராடஸ்டண்டு பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் – எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் தங்கள் மதச் சட்டங்களின்படியும் கோட்பாடுகளின்படியும் இறைவனை வணங்கும் உரிமை வழங்கப்படுகிறது. 1597க்கு முன்னால் பிராடஸ்டண்டு தேவாலயங்களாக இருந்த இடங்கள் எந்தவிதமான இடையூறும் இன்றி தொடர்ந்து அப்படியே இயங்கவும், ஒவ்வொரு கிராமத்திலும், புறநகர்ப் பகுதியிலும் பிராடஸ்டண்டு தேவாலயம் இல்லாத பட்சத்தில் ஒரு தேவாலயம் கட்டிக் கொள்ளவும் அனுமதி தரப்படுகிறது. சட்டத்தின் முன்னால் கத்தோலிக்கர்களுக்கு உள்ள அத்தனை உரிமைகளும் பிராடஸ்டண்டு வகுப்பினருக்கும் வழங்கப்படுகிறது. வெளியூருக்குப் போகும் பிரெஞ்சுப் பிராடஸ்டண்டுகளுக்கு மதம் தொடர்பான எல்லாவிதமான வழக்குகளிலிருந்தும் பாதுகாப்பு தரப்படும். இந்த ராஜ்ஜியத்திலுள்ள எந்த பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட கத்தோலிக்கர்களுக்கு என்னென்ன உரிமை உண்டோ அதே உரிமை பிராடஸ்டண்டுகளுக்கும் வழங்கப்படும். நீதிமன்றங்களின் கத்தோலிக்க நீதிபதிகளின் எண்ணிக்கைக்குச் சம எண்ணிக்கையில் பிராடஸ்டண்டு நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள்…”

மாக்ஸிமில்லியன் வாசிப்பதை நிறுத்தி மன்னரைப் பார்த்தபடி நின்றார்.

“சாலிக் சட்டத்தின்படி எனக்கு முன்னால் மன்னனாக இருந்த என் ஒன்றுவிட்ட சகோதரன் மூன்றாவது ஹென்றி காலமானபோது நான்தான் இந்த நாட்டின் மன்னனாவதற்கு எல்லா உரிமைகளையும் உடையவனாக இருந்தேன். மூன்றாவது ஹென்றியின் காப்படியன் கிளை வாரிசில்லாமல் இருந்ததால் எங்கள் பர்பன் கிளைக்கு அரசுரிமை வருவதுதான் சட்டப்படி சரியானதாக இருந்திருக்கும். ஆனால் பத்து வருடங்களுக்கு முன்னால் ஹென்றி ஒரு கிறிஸ்துவ துறவியால் கொலை செய்யப்பட்டபோது எனக்கு எதிராக இருந்தவர்கள் என்ன வாதத்தை முன் வைத்தார்கள் என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா மாக்ஸிமில்லியன்?”

மாக்ஸிமில்லியன் தனது கண்களை மூடிக் கொண்டார். அவர் குரல் நினைவுகளின் சுமையினால் கனிந்து ஒலித்தது.

“கத்தோலிக்கன் அல்லாத மன்னனைக் கொலை செய்வது சட்டப்படி குற்றமல்ல என்றார்கள்.”

காட்டில் காலடிகளை எடுத்து வைக்க நொறுங்கும் காய்ந்த இலைகளைப்போல் திக்கித் திணறிச் சுடர்விடும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்து சுவர்களில் ஏறி வழியும் நிழல்களாக அறை முழுவதும் பெருத்த மௌனம் கனமாய் அமர்ந்து கொண்டது.

“என் மீது வெளிநாட்டுக்காரர்கள் மட்டுமில்லாமல் இதே நாட்டில் வாழ்பவர்களும் நடத்தியிருக்கும் பல கொலை முயற்சிகளை வெகு எளிதில் மறந்துவிட்டீர்கள் அமைச்சர் பெருமகனாரே. பிராடஸ்டண்டுகளைப் பொறுத்தவரை நான் மதத்துரோகி. கத்தோலிக்கர்களைப் பொறுத்தவரையில் நான் நம்பக்கூடாத விஷப்பாம்பு. சுருக்கமாகச் சொல்லப் போனால் எல்லோராலும் எந்தவித மனச்சங்கடமும் இல்லாமல் கொலைசெய்யப்படக் கூடிய தகுதியுடையவன். நான் பிராடஸ்டண்டாக வளர்க்கப்பட்டாலும் நான் கைக்குழந்தையாக இருந்த போது நவாராவில் எனக்குக் கத்தோலிக்க முறையில்தான் ஞானஸ்நானம் தரப்பட்டது. அதைக்கூட இவர்கள் திரித்து எனக்குப் புனித நீரால் இல்லாமல் ஜூரான்சோன் மதுவினாலும் நசுக்கிய பூண்டினாலும் ஞானஸ்நானம் தரப்பட்டதாகத் திரித்துச் சொல்கிறார்கள். அது தெரியுமல்லவா உங்களுக்கு?”

மாக்ஸிமில்லியன் தலையை லேசாக கீழ்நோக்கிச் சாய்த்துக் கொண்டார். நான்காவது ஹென்றி தனக்குள் பேசுவதைப்போல் பேசிக் கொண்டு போனார்.

“ஞானஸ்நானத்தால் கத்தோலிக்கன். வளர்ப்பால் பிராடஸ்டண்டு. பின்பு பகிரங்கமான சடங்கினால் மீண்டும் கத்தோலிக்கன். இப்போது நான் கத்தோலிக்கனா? அல்லது பிராடஸ்டண்டா? எனக்கே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் எனக்குத் தெரிகிறது. வெளியிலிருந்து நம்மைத் தின்னக் காத்திருக்கும் பலதரப்பட்ட எதிரிகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால் கத்தோலிக்கர்களும் பிராடஸ்டண்டுகளும் ஒன்றாக வேண்டும் சல்லிப் பெருமகனாரே. அப்படி அவர்கள் ஒன்றாக வேண்டுமென்றால் சொற்பொழிவுகளோ உபந்நியாசங்களோ போதாது அமைச்சரே. சட்டத்தின் முன் எல்லோருக்கும் சம உரிமை தரப்பட வேண்டும். சட்டம் தரக்கூடிய மிகப் பெரிய உரிமை எது தெரியுமா? நீதி. உயிருக்கு அச்சப்படத் தேவையில்லாத நிலை.”

நான்காவது ஹென்றி நாற்காலியிலிருந்து எழுந்து தனது அமைச்சருக்கு வெகு அருகில் வந்து நின்று கொண்டார். அமைச்சரைவிட அரசர் சற்று உயரம் குறைவானவராக இருந்தார். அவருடைய கனமான உஷ்ண மூச்சு மாக்ஸிமில்லியனின் முகத்தில் மோதிப் பரவியது.

“இதுவரை பிராடஸ்டண்டு விசுவாசத்தில் அசராத விசுவாசத்தோடு இருக்கும் நீங்கள் மட்டுமல்ல, நானும் புனித பார்த்தோலமியூ நாள் படுகொலைகளை மறக்கவில்லை நண்பரே.”

மாக்ஸிமில்லியன் தனது முகத்திற்கு முன்னால் நிழல்களில் மூழ்கிக் கிடந்த மன்னரின் முகத்தையும் அதன் நடுவிலிருந்த எடுப்பான நீள நாசியையும் பார்த்தார்.  அந்த மூக்கினால்தான் புனித பார்த்தோலமியூ கொலைகளிலிருந்து ஹென்றி தப்பிப் பிழைத்தார் என்று மாக்ஸிமில்லியனின் தந்தை அடிக்கடிச் சொல்வார். பிரெஞ்சு அரச குடும்பத்தவர்களுக்கே பிரத்யேகமாக இருந்த நீளமான நாசி. தனது திருமணம் முடிந்த உடனேயே பாரீஸ் தெருக்களில் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டபோது தனது மனைவி கத்தோலிக்க மதத்தவளாக மட்டுமில்லாமல் அரசியின் தங்கையாக இருந்த காரணத்தாலும் கத்தோலிக்க மதத்திற்கு மாறிவிடுவதாக ஹென்றி செய்து தந்த சத்தியத்தாலும் மட்டுமே அவர் மயிரிழையில் தப்பிப் பிழைத்தார்.

பாரீஸில் இருந்த கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்த மாக்ஸிமில்லியன் கையில் கத்தோலிக்கப் பிரார்த்தனைப் புத்தகம் ஒன்றை எடுத்து வைத்துக் கொண்டதால் கல்லூரியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

“ஆனாலும் உங்கள் கள்ளக் காதலியின் பேச்சைக் கேட்டுத்தான் பதவிக்காக நீங்கள் கத்தோலிக்கராக மாறியதாகப் பேச்சுள்ளது,” என்று தாழ்ந்த குரலில் சொன்னார் மாக்ஸிமில்லியன்.

அவர் பார்வையில் இப்போது மிகப் பெரிய கனிவு நிறைந்திருந்தது. தனது பதினொன்றாவது வயதில் அவருடைய தந்தை முதன்முறையாக நவாரா அரசவைக்குக் கூட்டிச் சென்று ஹென்றியிடம் அறிமுகப்படுத்திய நாளிலிருந்து மாக்ஸிமில்லியன் ஹென்றியுடனேயே சேவகனாக, தூதுவனாக, நண்பனாக, ஆலோசகனாக இருக்கிறார். இருவரும் ஒன்றாகவே புனித பார்த்தோலமியூ நாள் கொலைகளிலிருந்து பாரீஸைவிட்டுத் தப்பி வந்தார்கள்.

அதன்பிறகு நவாராவின் தெள்ளத் தெளிந்த நீல வானத்தின் கீழ் வண்ணமயமான ஆடைகளை அணிந்து கலகலவென்று சிரித்த இளவரசன் எப்படியெல்லாமோ மாறிவிட்டார். அவருடன் சேர்ந்து பாரீஸ் படுகொலைகளிலிருந்து தப்பித்த மாக்ஸிமில்லியன் மட்டும் தான் ஏற்றுக்  கொண்ட கொள்கையில் எந்தவிதமான மாற்றத்திற்கும் இடம் கொடுக்காமல் திடமாக இருக்கிறார்.

தன் நண்பனின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு ஹென்றி மிகப் பெரிதாகச் சிரித்தார்.

“காப்பிர்யேல்லைச் சொல்கிறாயா? உனக்கு ஒன்று சொல்லட்டுமா? நீ சொல்வது சரிதான். காமவயப்பட்டுத்தான் நான் கத்தோலிக்கனானேன்.  ஆனால் நீ நினைப்பதுபோல் பெண்ணின் மீதோ பதவியின் மீதோ மோகம் கொண்டு நான் மதம் மாறவில்லை. என்னை வேறொரு பெரும் காமம் சிறுவயதிலிருந்தே ஆட்டிப் படைத்து வந்திருக்கிறது. அது, இந்தப் பிரான்சு தேசத்தின் மண் மீது நான் கொண்டிருக்கும் காமம். இந்த தேசம் பகைவர்களின் கைகளுக்குப் போய் சிதறி சின்னாபின்னமாகிவிடக் கூடாதே என்ற பெரும் மோகம். இந்த மண்ணின் மீதும் அதன் மக்களின் மீதும் நான் வைத்த பேராசை. உன்னைப் போன்றவர்கள் பதவிமீதும், பெண்கள் மீதும், மத நம்பிக்கைகளின் மீதும், வைத்திருந்த பாசத்தை நான் இந்த மண்ணின்மீது வைத்தேன். அதற்காக என் நற்பெயரையும் நிம்மதியையும் ஏன் என் கடவுளையுமேகூட இழக்கத் துணிந்தேன். வரைமுறை இல்லாத பெருங்காமம் இப்படித்தான் ஒருவனுடைய கண்ணை மறைக்கும். அந்த வகையில் நான் காமுகன், மிகப் பெரிய காமுகன்.”

வெளியே இரவு கவியத் தொடங்கியிருந்தது. மாக்ஸிமில்லியனின் எதிரே இருந்த சுவரில் நான்காவது ஹென்றியின் நிழலுருவம் பெரும் பேயாய், பூதமாய், பெருங்காமத்தால் ஓங்கி வளர்ந்த ராட்சசமாய்த் தெரிந்தது.

மாக்ஸிமில்லியனின் கையும் உடலும் நடுங்க ஆரம்பித்திருந்தன. தனது கையிலிருந்த ஒப்பந்தத் தாளை மீண்டும் சுருட்டி அவர் அந்தப் பயங்கரமான அறையிலிருந்து கிளம்பத் தயாரானார்.

“நில்லுங்கள், அமைச்சரே. ஒப்பந்தத்தின் வேறொரு முக்கியமான ஷரத்தை வாசிக்காமல் போகிறீர்களே”

மாக்ஸிமில்லியன் மீண்டும் தாளை விரித்தார்.

“பிராடஸ்டண்டுகள் தங்கள் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் எட்டு ஆண்டுகளுக்குத் தங்களுக்குச் சொந்தமான நூற்றைம்பது கோட்டைகளைக் கட்டிக் கொள்ளலாம்.  அவற்றில் தேவையான ஆயுதங்களையும் போர் வீரர்களையும் அவர்கள் சொந்த செலவில் வைத்துக் கொள்ளலாம். இக்கோட்டைகள் அரசின் அதிகாரத்துக்கு உட்படத் தேவையில்லை.”

நான்காவாது ஹென்றி மீண்டும் கலகலவென்று சிரித்தார்.

“நாட்டை ஒன்றாக்கத் துடிப்பவன் அதைப் பிளவுபடுத்துவதுபோல் குடிமக்களில் ஒரு பிரிவினர் மட்டும் கோட்டைகளைச் சுயாதீனமாகக் கட்டிக்கொள்ள அனுமதிப்பது உங்களுக்கு விநோதமாகத் தோன்றவில்லையா நண்பரே?”

“தோன்றியது. ஆனால் பிராடஸ்டண்டுகளிடையே தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு உண்டு என்ற நம்பிக்கை வரும் வரைக்கும் தேவைதான் என்று நான் கருதினேன்.”

நான்காவது ஹென்றி தனது அமைச்சரான மாக்ஸிமில்லியன் டி பெத்தூன் சல்லியை உற்றுப் பார்த்தார்.

“இத்தனை பேசுகிறீர்கள். என்னுடன் நெடுங்காலமாகக் கூடவே இருக்கிறீர்கள், நீங்களும் ஒரு கோட்டையைக் கட்டி வைத்திருக்கிறீர்கள். ஏன், உங்களுக்குக்கூட என்மீதும் இந்த நாட்டின்மீதும் நம்பிக்கை பிறக்கவில்லையா நண்பரே?”

’’நானா? கோட்டை கட்டினேனா? எப்போது?” என்று திகைப்புடன் கேட்டார் மாக்ஸிமில்லன்.

’நீங்கள் கட்டியதுதான். புனித பார்த்தோலமியூ இரவில் நீங்கள் உங்களுக்கென்றே கட்டி வைத்திருக்கும் கோட்டை.”

நான்காவது ஹென்றி இரண்டு விரல்களால் தனது பழைய நண்பனின் மார்பை ஓரிரண்டு முறைகள் தட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினார். அவர் சிரிப்பு மட்டும் அறைக்குள் நெடுநேரமாய்க் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் மாக்ஸிமில்லியனுக்குத் தோன்றியது.

நான்காவது ஹென்றி இளைஞர் அல்ல. மத்திய வயதுக்காரர். நாற்பத்தாறே வயதானவர். அவர் போவதை முப்பத்தெட்டு வயதான மாக்ஸிமில்லன் டி பெத்தூன் சல்லி மிகுந்த வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அறையின் ஜன்னலுக்கு வெளியே நாந்த்ஸ் நகரம். அதன்மீது கனமாய் அமர்ந்திருக்கும் கும்மிருட்டு. அதையும் தாண்டி மேற்கில் வெகு தூரத்தில் கடல். அது எல்லையில்லாதது. அந்தக் கடலிலிருந்து திடீரென்று எழுந்த குளிர்ந்த காற்று மாக்ஸிமில்லனைச் சூழ்ந்து கொண்டது.

அந்தக் காற்றின் தீண்டலினால் தான் முழுவதும் சுத்தமாவதைப்போல் மாக்ஸி மில்லியனுக்குத் தோன்றியது.

***

சித்துராஜ் பொன்ராஜ் – இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன.

கொடுத்திராத முத்தம்

14

சேகர் சக்திவேல்

மூத்த இரண்டு பேருக்கும் கடைசி கட்சிகாரனுக்கும் பதினைந்து வருடங்கள் வித்தியாசம் இருக்கும். வள்ளிக்கு பெண்பிள்ளை என்றால் அதிக பிடித்தம். செக்காரக்குடியும் அதைச் சுற்றிய எட்டு கிராமங்களும் உள்ள அந்த கரிசல் பூமியின் மரபுப்படி பெண்பிள்ளைதான் இறுதிக்காலத்தில் பெற்றவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். வள்ளியும் வீட்டுக்கு ஒருத்தியாய் ராணி போல குடிசை வீட்டில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு தோழியாய், எல்லாவற்றையும் சரிநிகராய்ப் பகிர தன்பால் ஒரு பெண்பிள்ளை வேண்டுமென நினைத்தாள். இதையெல்லாம் அப்படியே திருச்செந்தூர் முருகப்பெருமானிடம் வேண்டி கண் திறக்கும்போது பதினைத்து வருடத்திற்கு பிறகு வடக்கே பார்த்து நிற்கும் அம்மன் உனக்கு வயிற்றில் வாய்க்கப்போகிறாள் என்றப்படி நகர்ந்துவிட்டாள் குறத்தி ஒருத்தி. பெரியளவில் திடமாயிருந்து பதினைந்து வருடத்திற்கு பிறகு நம்பிக்கையின் எதிர்பார்ப்பில் வள்ளி நின்றபோது ஆண் பிள்ளை வந்து இருவரையும் ஏமாற்றியிருக்கிறது. அவனுக்கு செழியன் என்றும் பெயர் வைத்தார்கள்.

***

“செழியன், அவன் அம்மா வள்ளி மாதிரி நல்ல வளத்தியா வந்து நிப்பான்” என்று ஊரில் சொல்லாத ஆள் இல்லை. வள்ளிக்கு அடையாளமே தன் வளர்த்திதான். மெலிந்த உடம்பே அதிகமாய் காட்டிடும் வளர்த்தி, இரண்டுபக்க கல் மூக்குத்தி, பாத்திரம் விளக்கும்போதே அதிகமாய் நெளிந்து போகக்கூடிய வளைவு டிசைன் தங்க வளையல். ஆங்காங்கே தட்டுப்படும் காதோர வெள்ளை மசுருக்கள் அதுவும் செவ்வாய், வெள்ளி மஞ்சள் பூசி வண்ணம் மாறியிருக்கும்.

ஆம்பளப்பிள்ளை நிறைந்த வீடென்பதால் காலையில் நான்கு மணிக்கு வள்ளி எந்திரிச்சாள் என்றால் இரவு பத்து பதினொன்னு வரைக்கும் கால் ஒரு இடத்தில் நிற்காது. மூன்று பிள்ளைகளும் அந்த கால்களை அப்போது கவனித்தது இல்லை.

செழியனின் மழலைப்பருவம் முழுவதும் அவன் அம்மைக்கு பெண் பிள்ளையாகத் தான் பாவிக்கப்பட்டான். செழியனின் முகப்பாவனை மாறும்வரை அவனுக்கு தென்னமரக் கொண்டை, கடுக்கான் தோடு, பட்டு பாவாடைச் சட்டை என்று அலங்கரித்து ஆர்பரித்துக் கொள்வாள் வள்ளி. செழியனுக்கும் தன் அம்மாவின் மீது அன்பையும் தாண்டிய காதலொன்றை ஒளித்து வைத்திருந்தான். மாலைப் பொழுதில் வள்ளியும், தன் தோழிகளும் வீட்டுவாசலில் அமர்ந்து கதை பேசுவார்கள். செழியனுக்கு தன் அம்மாவின் மடியில் அமர்ந்து கதைகளை கேட்டுக்கொண்டே இருப்பதில் அதிக பிடித்தம் இருக்கும். சில நேரத்தில் மடியில் அமர்ந்து ஆடிக்கொண்டு இருக்கும் போது பாவாடை கிழிந்துபோகும்.

“ஓமடியான் என்னா வரத்து வாரான்ப் பாரேன்” என்று தலையில் அடித்துக் கொள்வாள்.  பக்கத்து வீட்டு அக்காக்களுக்கு செழியனென்றால் அதிகமான பாசம் வைப்பார்கள். தாயத்து, பல்லாங்குழி, துண்டு சீட்டில் போலீஸ் திருடன் எழுதி விளையாடுவது என வீட்டுக்குள் விளையாடும் விளையாட்டுக்கே செழியன் பழக்கப்பட்டிருந்தான்.

பிழைப்புக்கு நகரத்திற்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகிப்போனாலும் வள்ளிக்கு கூச்சம் மட்டும் விட்டுப்போனதாயில்லை. தன் வீட்டு ஆண்கள் இல்லாத எந்த இடத்திற்கு வள்ளி போகமாட்டாள். எத்தனையோ முறை செழியன் இதுபற்றி பேசினாலும் காதில் வாங்கிக்கொள்ள மாட்டாள் வள்ளி. வறுமை வீட்டின் நடுவே கிடந்தாலும், வள்ளியின் பாசம் அதையெல்லாம் வெளியே தள்ளிவிடும். ரேஷன் அரிசிக்கும், கத்தரிக்காய் புளிக் குழம்புக்கும் அப்படி என்னதான் அந்த வீட்டில் பிடிக்குமென்று தெரியாது, தினமும் அவர்கள் வீட்டு அடுப்பறையில் இருந்து கொள்ளும். மதியமே இரவுக்கும் சேர்த்து பொங்கி வைத்துவிடுவாள். தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பாரும் மதுரை மீனாட்சி அப்பளமும் மதியச்சோறாய் இருக்கும். விரத நாள் என்பதால் ஒரு வேளை மட்டும் சோறு. மீதமுள்ள இரண்டு வேளைகளும் கோதுமை தோசையும் தக்காளி சட்னியும் அடுப்பறையில் இருக்கும்.

தக்காளியின் விலையை பொறுத்து உள்ளியின் அளவு மாறுபடும். நூறு கிராம் நெய்யை சரியாய் ஒரு வருடத்திற்கு இழுத்து கொண்டுப் போவதில் வள்ளியின் சிக்கனத்தை தெரிந்துக்கொள்ளலாம். வருடத்திற்கு ஒருமுறை வடகமும், கூழ்வத்தலும் வீட்டில் தயாரிக்கப்படும். அதுக்கும் குடும்பத்தின் எல்லா கைகளும் வந்திருக்க வேண்டும். சோற்று கூழ் வத்தலை ரேசன் கடை வேட்டியில் விடியபொழுதில் ஊற்றத் தொடங்குவார்கள். வீட்டின் கடைக்குட்டி என்பதற்காக செழியனுக்கு ஐஸ் ஃபேக்டரியில் கலர்பொடி வாங்கி கூழில் கலந்து ஊற்றுவாள் அவன் அம்மை. சாயங்காலம் வீட்டின் திண்ணையில் எல்லோரும் அமர்ந்தபடி பேசிக்கொண்டே வேட்டியில் தண்ணியை தெளித்து உறித்து எடுப்பார்கள். வெளிப்புறம் காய்ந்தும் உட்புறம் வழுக்கும் உணர்ச்சியை தரும் மாவு போலான வத்தல் சுவையாய் இருக்கும். “வெறும் வத்தல திங்காத.. வவுறு வலிக்கும்ல” என்று மண்டையில் அடித்தப்படி இரண்டெடுத்து அவள் உதட்டுக்குள் வள்ளி வைத்துக் கொள்வாள். அவளைச் சொல்லி குத்தமில்லை. அவளின் கஞ்சாமிட்டிதனம்தான் இன்று இந்தளவு கொண்டு வந்திருக்கிறது.

சரியாய் சொல்லப்போனால் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். முந்தைய மூன்று நாளின் ஏதோ ஒரு கிறுக்கு வேலையைச் செய்து வீட்டின் வெளியே இருக்கும் பூசனமரத்து கம்பைக்கொண்டு செழியனை விளாசிவிட்டாள் வள்ளி. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அது அப்போது அவனுக்கு வலிக்கவே இல்லை. ஆனாலும் தன் கோபத்தை சாப்பாட்டு மீதும், எப்படியெல்லாம் தனிமைப்படுத்தி கொள்ள முடியுமோ அப்படியெல்லாம் தன்னைத்தானே வைத்துக்கொள்ள நினைத்தான் செழியன். சோற்று விஷயத்தில் அம்மா எந்த அக்கறையும் அவன் மேல் மட்டுமில்லை யார் மீதும் வீட்டில் வைக்கமாட்டாள். செழியனின் அப்பாவுக்கும் இது பொருந்தும். இப்படியான சேட்டைக்கு பின் வாங்கிய பரிசினால் சாப்பிடாமல் கோபத்தோடு போய் படுத்துக் கொண்டான்.

ஒரே ஒரு அறை மட்டுமே இருக்கும் போலீஸ் லைனில்  தின்பது, விளக்கு ஏற்றுவது இறுக்கமாகப் படுத்துக்கொள்வது என அடக்கிக் கொண்டார்கள். இரவு அம்மா சாப்பிடும்போது அவனின் தொடை வரை கால்சட்டையை ஏற்றிவிட்டாள். வாழைத்தண்டு வண்ணத்தில் இருக்கும் தன் தொடையில் ஆட்காட்டிவிரல் நீளத்திற்கு தண்டவாளம் போன்ற இரத்தம் கட்டியிருந்தது. தேங்காய் எண்ணெயை அதன்மேல் பரப்பி தடவி அழுதாள். அவளின் கண்ணீர் துளி தன் தொடை மீது விழுந்த நொடி தன்னையும் மீறி அவன் உடல் சிலிர்த்து போனது. அவள் இறங்கி வந்துட்டாள் என்பதையறிந்த பின்பும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தன் அதிகமான வீம்பையும், மூன்று வேளையும் உண்ணாமலும் தன் வெறுப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் செழியன். நல்லவேளை, நம்பி என்றொரு நண்பன் அவனுக்கு கூடயிருந்தான்.

வள்ளி சைவமாக இருந்ததால் கிறிஸ்துவர்களென்றால் கடலும், மீன் நினைவும் வந்துவிடும். செழியன் அம்மையும் அப்பனும் திருவாசகம் ஓதி வழிபட்டாலும், மூத்த அண்ணனின் வேலைக்காக பனிமய மாதாவையும் நம்பினாள்.  அம்மாவும் செழியனும் தேவாலயத்தின் வாசலில் நிற்கிறார்கள். கூட்டம் எக்கச்சக்கமாய் நிற்கிறது.

“சஷ்டி, விசாகத்த விடவும் கூட்டம் கம்மித்தான்” என்று வள்ளி முடிக்கும் முன்னரே, “அப்போ ஒங்க மூத்தப்புள்ளைக்காக அங்கையே போயீ நிக்கவேண்டிதான?”என்று செழியன் கேலி செய்தான்.

“வாய் வடக்க வரைக்கும் நீளுது, கிழிச்சுருவேன்” வள்ளி.

பனிமயமாதாவையே நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் திடீரென சுற்றியிருப்பவரைப் பார்த்துவிட்டு அவர்கள் வணங்குவது போலவே மண்டியிட்டு கண்ணீர் சிந்திவிட்டாள். விவரமில்லாத வயதிலும் செழியனுக்கு  ஏதோ ஒரு பெரிய பாரமாய் மனதில் ஏறியது. அவனுக்கு வள்ளியை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்பது போல இருந்தது. அப்படியான சமூகம் அப்போது கிடையாது. அம்மையாகட்டும் கூடப் பிறந்தவளாகட்டும் நெருக்கம் என்பது எப்போதும் இருக்காது. பொத்தி வைக்கப்பட்ட அன்பு எல்லா பொழுதுகளிலும் வீட்டுப் பெண்களிடம் பொக்கிஷமாகவே தென்பட்டிருக்கிறது. மாதாவுக்கு உப்பையும், மிளகையும் எறியும் போதே தன் வீம்பையும் சேர்த்து எறிந்து விட்டான். ஆலயத்தைவிட்டு வெளியே வரும்போது அம்மையின் இடக்கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவளுக்கு அவன் தெம்பை பரிமாறினான் என தனக்குத்தானே நம்பிக்கொண்டான்.

அன்றிரவு தூக்கம் ஓரு பெரிய அமைதியை கொடுக்கப்போகிறது என்பதை தெளிவாய் தெரிந்து கொண்டு படுக்கைக்கு சென்றான் செழியன். ஆனால் தன் அம்மையின் மண்டியிட்டு சிந்திய கண்ணீர் துளிகள் அவன் கண்ணுக்குள் நின்று கொண்டே இருந்தது. விரிப்பில் இருந்து எழுந்து பொறவாசலில் போய் உட்கார்ந்தான். அம்மை பாத்திரம் விளக்கிவிட்டாள் என்பதை தரையைக் கழுவி விடுவதில் தெரிந்து கொண்டான். வழக்கமாக செய்யும் அதே வேலையைதான் செய்து கொண்டிருக்கிறாள். ஆனால் முதன்முறையாக தன் அம்மையின் மீது இரக்கமோ இல்லை பாவமோ உள்மனதில் கிடந்து உணர்த்துவதாய் உணர்ந்தான்.

“யம்மா, நா கழுவிவிடட்டா”

“ஏம்ல., தூங்காம முழிச்சிட்டு இருக்க, நேரம் தவறுதுலா..”

”இல்லம்மா, நீங்களும் வாங்களேன், ஒன்னா

படுப்போம்”

“செத்தப் பொறு, வாரேன்”

அம்மையின் மீது கால்போட்டு படுத்துத் தூங்கும் பழக்கம் வைத்திருந்தான் செழியன். அம்மையும் மகனின் தலையை கோரிவிட்டாள்.

விடியற்காலை நான்கு மணி இருந்திருக்கும். செழியனுக்கு மூத்திரம் முட்டி நின்று கொண்டிருந்தது. தூக்கத்தில் எழுந்து மூத்திரம் பேய பொறவாசலுக்கு சென்றான். அம்மை தெரு குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து கொண்டிருந்தாள். ஐந்து நிமிடம் கடந்திருக்கும், படுக்கையில் கிடந்த வள்ளி கையில் செய்கை காட்டினாள். அப்பாவை அழைத்து வருவதற்குள் வாயில் நுரை தள்ளியிருக்கிறது. விடியகாலையில் தண்ணீருக்கு போனவளை முனி பாய்ந்திருக்குமென்று கை நிறைய திருநீறை அள்ளி அம்மையின் நெற்றியில் பூசிவிடுகிறார் அப்பா. மொத்தமுமாக குழம்பி நிற்கிறான் செழியன். அடுத்தடுத்த நொடிகள் வாழ்வில் வந்திருக்க கூடாத நிமிடங்களாய் அமைந்து அம்மையை ஹைக்ரவுண்டு ஆஸ்பத்திரி வரை இழுத்துக் கொண்டு போய்விட்டது.

ஆரஞ்சு ஃப்ளேவர் ஹால்ஸ் மிட்டாய் சந்தைக்கு வந்த நேரமது. மூத்தவன் செழியனுக்கு இரண்டு வாங்கி கொடுத்திருந்தார். திடீரென தாய்மாமன் அத்தையொருத்தி செழியனை இறுக்கக்கட்டிப் பிடித்து அழுகிறாள். எதுவும் புரியாத மனநிலைமையில் நின்று கொண்டிருக்கிறான். வீட்டை ஒதுங்க வைக்கும் பொறுப்பை சித்தி எடுத்துக் கொண்டாள். சாவு வீட்டை தயார் செய்வதிலும் சிக்கல்கள் நிரம்பிக் கிடக்கின்றன. தொலைபேசி வசதியில்லாத காலத்தில் வெளியூர்காரர்களுக்கு சேதியை பரப்புவதில்  தந்தை போராடிக் கொண்டிருந்தார். ஓய்வுபெற்று குடிபெயர்ந்து வந்திருந்த தந்தி ஆபிஸ் தாத்தாவின் வீட்டில் மட்டுமே ஃபோன் உண்டு. செழியனின் அப்பா எவரிடத்திலும் எளிதல் பழகக்கூடிய முதன்மை தலைமை காவலர். இருக்கும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் ஃபோனில் அழைத்து தன் மனைவி தவறியதை அந்தந்த வட்டத்துகுட்பட்ட தன் சொந்தங்களிடம் சொல்லச்சொல்லி உதவி கேட்டார். அவர்களும் நடுயிரவில் சைக்கிள் அழுத்தி ஒவ்வொரு வீட்டில் சொன்னார்கள்.

ரொம்ப ஆசையாய் வாங்கி வைத்த ஆரஞ்சு ஹால்ஸ் தன் சட்டைப்பையில் கிடப்பதை செழியன் உணர்ந்திருக்கிறான். செழியனுக்கு நாவுக்கு அடியிலிருந்து எச்சில் சுரக்கிறது. சுற்றியிருக்கும் ஒப்பாரி சத்தத்தில் வாயில் போடுவது சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் அது அவன் நாவை உறுத்திக்கொண்டே இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் ஆரென்ஞ் ஹால்ஸை வாயில் போட்டுக்கொண்டான்.

நடுராத்திரியில் ஒருமுறை அம்மையை பார்ப்பதற்கு வீட்டுக்குள் பெண்கள் எல்லோரும் அழைக்கிறார்கள். முக்காலியில் அமர்த்தி மூலையில் உட்கார வைக்கப்பட்டிருந்தவள் தன் அம்மையே இல்லை என்பதாகவே நினைத்திருந்தான். எல்லா நேரங்களிலும்  பாலீஸ்டர் சேலையில் பார்த்தவளை, பச்சை பட்டுப் புடவையில் பார்ப்பது அவனுக்கு அவன் அம்மாவென்று எவ்வித உணர்ச்சியையும் தரவில்லை. பாலீஸ்டர் உருகி உடம்பில் ஒட்டிவிடும் என்று நினைத்திருந்தார்களாம். பெருமையாய் போய் சேர்வதற்காக அக்காள் ஒருத்தியின் நெக்லசை அம்மாவுக்கு அணிந்திருக்கிறார்கள். தோல் சுருங்கிய கழுத்தில் அது எப்படி பொருந்தும். தாய்மாமன் அழுது முட்டுகிறான். செழியனுக்கு அழுகை என்பது வரவில்லை. வெளியே வந்து கரிசல் மண்ணின் சின்னச்சின்ன உருண்டையை உள்ளங்கையில் மேலும்கீழும் ஆட்டிக் கொண்டிருக்கிறான். அந்த இரவு முழுக்கவும் ஒரு பொட்டு தூக்கமில்லாமல் உட்கார்ந்திருக்கிறான். கால்மீது கால்போட்டு தூங்க அவன் அம்மா இப்போது இல்லை. இப்போதுதான் இல்லாமல் இருக்கும் பட்டியல் அவன் வாழ்வில் தொடக்கம் பெறுகிறது.

தேரை விடியத்தொடங்கியது, வெளியூர் தலைகள் அதிகம் நிரம்புகிறது. அதன்படி ஒப்பாரி சத்தமும் கூடுகிறது. காலையில் ஒருபொழுது அம்மையை பார்த்து அழுதிட அழைத்துச்செல்கிறாள் அப்பனின் தங்கை. நாடி கட்டப்பட்டுவிட்டது. இரு கண்களும் சந்தன வில்லையால் அப்பப்பட்டிருக்கிறது. அதுவும் சின்ன சின்ன விரிசல்விட்டிருக்கிறது. பயம் நிறைந்தவனை சித்தி இடுப்போடு அணைத்துக் கொண்டாள். சாமான்கள் அதிகம் நிறைந்த வீடு அம்மாவை வைப்பதற்காகவே வெறிச்சோடி மாற்றப்பட்டிருக்கிறதா இல்லை அவள் இல்லாததால் வெறிச்சோடிப் போக ஆரம்பித்துவிட்டதா என்பது தெரியாமல் முழிக்கிறான். நெஞ்சி முட்டி நிற்கிறான்.  ஆனால் அவனைப் பொருத்தவரையில் அம்மையைக் காணவில்லை. அவ்வளவுதான்.

இறுதிப் பொழுதுக்கும் முந்திய நேரத்தில் சட்டையை கழற்றியப்படி வீட்டுக்குள் வர அழைத்தனர். இப்போது ஒப்பாரியின் சத்தம் காதைக்கிழிக்கிறது. இழுவை அதிகமாக எழும்புகிறது. வார்த்தைகள் புரியவில்லை. இரும்புக்கட்டிலில் கிடத்தப்பட்ட அம்மையின் உதட்டில் வெற்றிலை இடித்து வைக்கப்படிருக்கிறது. விரத சோற்றுக்கு பின் உதட்டில் பரிமாற்றிய வெத்தலையின் ருசி அழுகையை வரவைத்துவிட்டது. கத்திய கத்துக்கு வீட்டுக்குள் கூடியிருந்த ஊர் அமைதியாகிவிட்டது. அப்போதும் அவன் அம்மா எழும்பவில்லை. ஆனாலும் அவன் கால்கள் நகர மறுக்கிறது. பயம் நிரம்பிக் கிடந்தது. மூத்தவர்கள் இரண்டுபேரும் ஆளுக்கொரு பக்கமாய் கட்டிலில் உட்கார்ந்து அம்மையிடம் கதை சொல்லி அழுது கொண்டிருக்கிறார்கள். செழியனுக்கு இப்போதைக்கு இந்த இடத்தைவிட்டு நகரவேண்டும். அண்ணன்கள் இருவரும் அம்மையின் கையைப்பிடித்து முத்தத்தைக் கொடுக்கிறார்கள்.

“பாவிமனுஷி, ஒருத்தன் கல்யாணத்தையாது பாத்துட்டு போயிருக்கலாம்ல”,

“எலும்பும் தோலுமா நிக்கரவனுக்காவது அந்த ஆண்டவன் பாவம் எடுத்துருக்கலாமே”

“அம்மா இனி வரம்மாட்டா, கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுல” ஆச்சி முன்னுக்கு தள்ளுகிறாள். தனக்கு அம்மை இத்தனை தூரம் பயம்காட்டுவாள் என்பது தெரியாமல் போனான் செழியன். அம்மையின் உயிர் போய்விட்டது, உடலும் போகப்போகிறது. இதையெல்லாம் நின்று யோசிக்கக்கூடிய வயதும் அதுவல்ல. சுற்றி பூமாலை கட்டப்பட்ட தேரில் அம்மையை ஏற்றிவிட்டார்கள். தேருக்கு வெளியே ஒரு அடிக்கு நெளிந்த மெட்டியோடு கால்கள் கிடக்கின்றன. வேம்பு சாற்றை ஒவ்வொரு மகனின் உதட்டில் ஏதோ ஒரு விரல் தடவிவிட்டு போகிறது. சுட்டெரிச்சு, காடத்தி சோற்றை தண்ணீர் தெளித்து தின்னு இலையையும் பின்னாலிருந்து திருப்பி போட்டாச்சு.

நாட்கள் நகர்ந்து ஓட அம்மையின் நினைப்பு செழியனுக்குள் தனிமையோடு வளர்ந்து நின்றது. ஆச்சி சொல்லியும் கொடுக்காமல் போன அந்த இறுதி முத்தத்தை நினைத்தே செழியனின் வாழ்வு கலங்கியது. எப்போதும் அடைக்க முடியாத  அன்பின் பெருங்கடனாய், அவனைத் துயர்படுத்தும் ஒரு சொல்லாய்  அம்மைக்கு கொடுத்திராத முத்தம் தொடர்ந்து வந்தது.

***

சேகர் சக்திவேல் -சேகர் சக்திவேல் தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியைச் சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தொடர்புக்கு :sekarsakthivelblog@gmail.com

ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கு! தோற்றமும் வடிவமும் வளர்ச்சியும்

0

ரூபன் சிவராஜா

இதற்கு முந்தைய / பிற பதிவுகளை வாசிக்க இங்கே அழுத்தவும்

மக்கள் அரங்கு –  Forum Theatre

பிரேசில் நாட்டு அரங்கியல் அறிஞர் Augusto Boalஇன் சிந்தனையில் தோன்றி வளர்ந்த ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கியல் – Theatre of the oppressed’ வடிவமானது பல்பரிமாணக் கூறுகளைக் கொண்டுள்ளது. மக்கள் அரங்கு (‘Forum theatre), கட்புலனாகா அரங்கு(Invisible theatre), உருவக அரங்கு/படிம அரங்கு(Image Theatre), வானவில் அரங்கு (Rainbow of Desire), சட்டவாக்க அரங்கம் (Legislative theatre) ஆகிய அரங்கியல் வடிவக் கூறுகளையும் கொண்டுள்ளது. Augusto Boalஇன் சிந்தனை, ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்க வடிவங்களின் தோற்றம், பின்னணி, வளர்ச்சி, அரங்க வடிவங்கள், அவற்றின் உட்கூறுகள், நிகழ்த்துகை-ஆற்றுகை முறைமைகள், பேசுபெருள் பற்றிய கட்டுரைத்தொடராக இது அமைகின்றது.

அகஸ்டோ போல்ன் – oppressed theatre

Forum Theatre எனும் மூலவடிவம் பற்றியும், அதன் தோற்றம், அதனைத் தோற்றுவித்து வளர்த்தெடுத்த் அரங்கவியலாளர் Augusto Boal  இன் சிந்தனை குறித்தும் பதிவு செய்ய முனைகிறது தொடரின் முதற்கட்டுரை. ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கின் மற்றைய வடிவக்கூறுகளைத் தனித்தனியாக இனிவரும் கட்டுரைகள் பேசவுள்ளன.

01 . மக்கள் அரங்கு –  Forum Theatre

Forum Theatre – இதற்கான சிந்தனையும் செயல்வடிவமும் Augusto Boal அவர்களிடமிருந்து உருவான ஒரு அரங்கியல் வடிவம். ‘ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம்’ என்ற ஒரு இயக்கமாக 1970-களில் இந்த அரங்கியல் வடிவம் தோன்றியது. Forum என்ற லத்தீன் மூலச்சொல்லின் பொருள் ‘மக்கள் கூடும் இடம்’. நவீன சொல்லாடல் அர்த்தத்தில் ஒரு பிரச்சினையை முன்வைத்து, விவாதித்து ஆராயும் இடத்தைக் குறிக்கின்றது. இத்தகையை அர்த்தத்திலேயே Forum theathre-ன் பயன்பாட்டினை நோக்க முடியும்.

அடிப்படையில் Forum theathre-இன் மூலவடிவம் முற்கூட்டியே திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டு நிகழ்த்தப்படுவதில்லை. அது பார்வையாளர்களின் பங்கேற்புடன் அரங்கத்தில் உருவாக்கப்படுவது. அதனுடைய மைய அம்சம் ஒரு பிரச்சினையைப் பல்வேறு கோணங்களில் ஆராய்வது. தீர்வுகளைப் பரீட்சித்துப் பார்ப்பது. முயற்சித்துப் பார்ப்பது. விவாதங்களும், பரீட்சித்துப் பார்த்தல் செயற்பாடுகளும் நாடக மொழி, நாடகப் படைப்பாக்க அழகியல் உத்திகளுடனான காட்சிப்படுத்தல் ஊடாக நிகழ்த்தப்படும்.

மக்கள் சமூகம் தமது உலகத்தை நேர்மறையான மாற்றத்திற்கு உட்படுத்துவதற்குரிய தீர்வைக் கண்டடையும் முயற்சிக்கு இந்த வடிவம் பொருத்தமானதாக நோக்கப்படுகின்றது. நுணுக்கமான கூறுகளைக் கொண்டதொரு வடிவம். நாடகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட கதைக்களம் ஒடுக்குமுறை சார்ந்த பேசுபொருளைக் கொண்டிருக்கும். சமூக வாழ்வியல், சமகால அரசியலின் பிரதிபலிப்பாக இருக்கும். கதை நகர்வு ஒரு முரண்பாட்டின் உச்சத்திற்கு, சர்ச்சைக்குரிய இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு நிறுத்தப்படும். அதிலிருந்து பார்வையாளர்களின் பங்குபற்றலுடன் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்பட்டு வளர்த்தெடுக்கப்படும். பல்வேறு சாத்தியமான தீர்வுகள் நிகழ்த்திப் பார்க்கப்படும்.

**

பிரேசில் நாட்டின் ரியோ நகரத்தின் Arena Theatre இல் அரங்கியல்துறை இயக்குனராக கடமையாற்றிய Boal 1950களிலும் 1960களிலும் Arena Theatreஇற்குரிய பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டார். அரங்குகளைத் தாண்டி, தெருக்களில் நாடகங்களை நடாத்தினார். அவர் பிரேசில் தொழிற்கட்சி செயற்பாட்டாளராகவும் இருந்திருக்கின்றார். தொழிற்சாலைகள், தொழிற்சங்கங்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களிலும், வறிய மக்கள் கூடும் இடங்களிலும் திறந்தவெளி அரங்கங்களை முன்னெடுத்தார் என அறியக் கிடைக்கின்றது. உழைக்கும் மக்கள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் பொருட்டே அவர் அரங்கவியல் கலையைக் கையாண்டார்.

அவரின் அரங்கம் பற்றிய பார்வை ஒடுக்கப்பட்டோருக்கான அரங்கமென்ற இயக்கமாகத் தோன்றி வளர்ந்தமைக்கு வலுவான அரசியல் காரணிகள் உள்ளன. 1964 முதல் 1985 வரை இராணுவ ஆட்சியின் கீழ் பிரேசில் இருந்தது. 1960களில் பிரேசிலிலும் ஏனைய தென் அமெரிக்க நாடுகளிலும்; மோசமான அடக்குமுறை மற்றும் சர்வாதிகார ஆட்சி நிலவியது. இராணுவ ஆட்சியில் பிரேசில் மோசமானதொரு சமூக அரசியல் சூழலுக்குள் இருந்ததால்,  ஒடுக்குமுறைகளும், கருத்துச்சுதந்திர மறுப்பும், கடும் கண்காணிப்புகளும் நிலவியது. எனவே இந்த அரசியல் சமூகப் புறநிலைகளே Forum Theatre தோற்றுவிக்கப்பட்டமைக்கான அடித்தளம்.

Augusto Boal இன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கம், இராணுவ ஆட்சி பீடத்தின் கண்களை உறுத்தியதொன்றும் ஆச்சரியமானதல்ல. 1971இல் அவர் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார். நான்குமாத சிறைக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தொடர்ந்து ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ நேர்ந்தது. அர்ஜென்டீனா, போர்த்துக்கல், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் புலப்பெயர்வு வாழ்க்கைக்குப் பின்னர் மீண்டும் தனது தாயகம் திரும்பினார். இவ்வாறாக 15 ஆண்டுகள் உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்த அவர் அங்கிருந்த காலப்பகுதிகளிலும் Forum Theatre-ஐ வளர்த்தெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். அர்ஜென்டீனாவில் வசித்த காலத்தில் தென் அமெரிக்க நாடுகளான பெரூ, எக்குவாடோர் ஆகிய நாடுகளுக்கப் பயணமாகி வறிய சிறுசிறு சமூகங்களை நோக்கிய அரங்கச் செயற்பாடுகளை முன்னெடுத்தார். உள்நாட்டுப் போர், அரசாங்கங்களின் அக்கறையின்மை, குறைபாடுகள், சமூக வாழ்வியல் பிரச்சினைகளை அரங்க நிகழ்வுகள் ஊடாகக் கையாண்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்ட முனைந்தார். ஒடுக்கப்பட்டவர்களாலேயே ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய முடியுமென்ற (Only the oppressed are able to free the oppressed) கருத்தினை அவர் வலுவாகக் கொண்டிருந்தார்.

இராணுவ ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர் 1986-லேயே மீண்டும் சொந்த நாடு திரும்பினார். நாடு திரும்பியதை அடுத்த ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கத்திற்குரிய மையத்தினை (Center for the Theatre of the Oppressed ) நிறுவினார். அதனூடாகக் குடியுரிமை, சமூக கலாச்சார மற்றும் வேறுவகை ஒடுக்குமுறைகள் சார்ந்த பிரச்சினைகளை அரங்க மொழி மூலம் அணுகினார். 1970களில் பிரேசிலிலும் தொடர்ந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் அது பரவியது. நாடக அரங்கினை சமூக அரசியல் மாற்றத்திற்குத் தூண்டும் ஒரு உத்தியாக கையாள Boal நினைத்தார். அவருடைய இந்த அரஙகச் செயற்பாடுகளின் விளைவாகக் குற்ற நடவடிக்கைகளால் பாதிககப்பட்டவர்கள் மற்றும் சாட்சியம் வழங்குவோருக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சட்டம் பிரேசிலில் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

எல்லோரும் நாடகத்தில் நடிக்கலாம்  – நடிகர்களாலும் நடிக்க முடியும்’

நாடகத்தை எல்லா இடத்திலும் நடத்தலாம் – நாடக அரங்கத்திலும் அதனை நடத்தலாம் ’

என்ற அவருடைய கூற்று நாடக அரங்கத்திற்குரிய சட்டகங்களையும் கட்டுகளையும் அவிழ்த்து எவ்வாறு அதனை வெவ்வேறு பரிமாணத்தில் நிகழ்த்தலாம் என்பதையும், பார்வையாளர்கள் நாடக அரங்கின் அங்கமாக மாறுவதன் சாத்தியப்பாடுகளையும் வலியுறுத்துகின்றது.

**

நோர்வே தமிழர்கள் மத்தியில் அண்மைக் காலமாக Forum Theatreஐ முன்னெடுக்கும் செயற்பாட்டில் கலாநிதி சர்வேந்திரா அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில வருடங்களாக Forum Theatre அரங்கங்களை, அதன் மூல வடிவத்திலிருந்து சற்று மாற்றத்திற்கு உட்படுத்தி அவர் நெறிப்படுத்தி வருகின்றார். அவர் நாடக அரங்கியல் துறைகளில் நீண்டகால செயற்பாட்டு மற்றும் படைப்பாக அனுபவத்தினைக் கொண்டிருப்பவர். 80-களின் நடுப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக கலாச்சாரக்குழுவின் கலை முயற்சிகளிலும், பின்னர் புலம்பெயர் சூழலிலும் பல்வேறு நாடகங்களையும் அரங்க நிகழ்வுகளையும் நெறிப்படுத்திய அனுபவம் அவருக்குண்டு.

Boal அறிமுகப்படுத்திய Forum Theatre-னை மாற்றங்களுக்கு உட்படுத்தி பின்பற்றுபவர்கள் (பல்வேறு நாடுகளில்) நாடகத்தின் சில பகுதிகளை முன்கூட்டியே எழுத்துருவாக்கி, ஒத்திகை பார்த்து ஆற்றுகை செய்கின்ற நடைமுறையும் உள்ளது. சர்வேந்திரா நெறிப்படுத்துகின்ற அரங்குகளும் அப்படியான ஒரு மாற்றங்களுக்குட்பட்ட வடிவமாகவே மேடையேற்றப்பட்டு வருகின்றன. வடிவம் சார்ந்தும் எடுத்துக்கொண்ட கதைக்களம் சார்ந்தும் பலரினது கவனத்தை அந்த அரங்குகள் பெற்றிருந்தன. நாடகத்திற்குரிய காட்சிப்பூர்வ அழகியலையும், Forum Theatre-ற்குரிய தன்மைகளையும் அவற்றில் காண முடிகின்றது. நாடகம் ஒரு சர்ச்சைக்குரிய இடத்தில் நிறுத்தப்பட்டு பார்வையாளர்களின் பங்கேற்புடன் கருத்தியல் உரையாடலாகத் தொடர்வதென்பது சர்வேந்திரா நெறிப்படுத்தும் மக்கள் அரங்கின் உத்தியாகும்.

**

சோக்கிரட்டீஸ் கையாண்ட விவாதங்களுக்கூடான கற்பித்தல் முறைமையினை அரங்கவியல் அணுகுமுறையாக Boal பின்பற்றினார் என்று கூறப்படுகின்றது. கேள்விகளை எழுப்புவதன் மூலம் சிந்தனையைத் தூண்டி மெய்யியல் சார்ந்த கருத்தியல் விவாதங்களை முன்னெடுத்தார். அதனையொத்த வகையில், பார்வையாளர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பி, அவர்களின் வாழ்பனுவங்களை நாடக அரங்க மொழியில் வெளிப்படுத்துகின்ற முறைமையை அறிமுகப்படுத்தினார். அதாவது முதலில் கேள்விகளை, பிரச்சினைகளின் மூலத்தை பார்வையாளர்கள் மத்தியில் முன்வைப்பதன் மூலமும், பின்னர் நாடக அரங்கியல் மொழியை அவர்களிடம் கையளிப்பதன் மூலமும் அரங்கு நிகழ்த்தப்படுகிறது.

இந்த வடிவம் ஒரு முழுமையான நாடகத்தைப் பார்க்கும் அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு வழங்காது. காட்சி நகர்வில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, பார்வையாளர்களின் பங்கேற்பினைக் கோரிநிற்கும். சமூகத்தில் எரியும் பிரச்சினையொன்றை இது கையிலெடுத்து, அரங்காற்றுகையாளர்களுடன் (நடிகர்கள்) பார்வையாளர்களை இணைத்து நிகழ்த்தப்படும். அதாவது பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்குமிடையிலான இடைவெளிகள் கணிசமாகக் குறைக்கப்படும். இருதரப்பும் இணைந்து (interact) செயற்படும் களமாக அரங்கு மாற்றப்படும். இங்கு மேடை மட்டும் ஆற்றுகைக்குரிய மையமாக இருக்காது. பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் பகுதிகளும் ஆற்றுகைக்குரிய அரங்கமாக இருக்கும். சமூகத்திலும் வாழ்க்கையிலும் நேர்மறையான மாற்றத்தை நோக்காகக்கொண்டு, அந்த மாற்றம் கோரிநிற்கின்ற சாத்தியமான தீர்வுக்குரிய கருத்தியல் விவாதங்களை அரங்காற்றுகை மூலம் கண்டடைவது Forum Theatre -ன் முதன்மை இலக்கு.

ஒருவழித் தொடர்பாடலாக இல்லாமல் இருவழி உரையாடற்சிந்தனையின் வெளிப்பாடாகவும் இதனைக் கொள்ளமுடியும். இதில் அதிகாரம் முழுவதும் பார்வையாளர்களிடம் கையளிக்கப்படுகின்றது. பார்வையாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்கள். நாளாந்த வாழ்வில் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு வாழ்வியல் சார்ந்து பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கான அரங்கமென்பதால் இது ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கமாக வடிவம் பெற்றது.

வழமையான நாடக அரங்க வடிவங்கள் ஏலவே திட்டமிட்ட எழுத்துருவுடன் காட்சிகள் நெறிப்படுத்தப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு அரங்கேற்றப்படும். இந்த தீர்மானிக்கப்பட்ட சட்டகங்களைக் கொண்ட அரங்க வெளிப்பாட்டு வடிவமும் அணுகுமுறையும் அதிகாரத்திற்குச் சேவை செய்கின்றது என்ற கருத்தினை Boal கொண்டிருந்தார்.  அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் அதனை மேலும் இறுக்கமாகப் பேணுவதற்கும், அதிகாரத்தைக் கையிலெடுக்க விரும்புபவர்கள் அதனை நோக்கிய தமது நலன்களுக்கான கருவியாக-பிரச்சார ஊடகமாக இதனைப் பயன்படுத்தும் சூழல் நிலவுகின்றதென்பது அவரது நிலைப்பாடு. அந்தச் சூழலை உடைத்து அதற்கு மாற்றாக ஒடுக்கப்பட்டவர்களின் கைகளில் அரங்க மொழியினையும் களத்தினையும் கையளிக்கும் ஒரு வடிவமாக இதனை வடிவமைத்து வளர்த்தெடுத்தார்.

**

யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் அரங்க செயற்பாட்டில் நிபுணத்துவ ஆளுமையும் செயற்பாட்டு நீட்சியும் கொண்டவர் கலாநிதி சிதம்பரநாதன். அவரது நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் பண்பாட்டு மலர்ச்சிக்கூடத்தின் செயற்பாடுகளையும் இதனைத்தழுவிய அல்லது இதன் தன்மைகள் சிலவற்றை உள்ளடக்கிய வடிவமாக வகைப்படுத்த முடியும் கடந்த ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தொடர்ச்சியான பல அரங்கச் செயற்பாடுகள், அமர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

சமூகத்தின் இளைய தலைமுறையின், மாணவர்கள், பெண்கள், போரின் பாதிப்புகளுக்குள்ளான மக்களை மையப்படுத்தி பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் செயற்படுகின்றது. அவர்களின் ஆளுமைத்திறன் ஆற்றல்களை வெளிக்கொணருவது, படைப்பாற்றலுக்குரிய உந்துதலை வழங்குவது, சிந்திக்கத் தூண்டுவது, கலைகளின் ஊடாக தன்னாற்றல் மேம்பாட்டுக்குரியதும், சமூக மாற்றத்திற்குமுரிய விளைவுகளைத் தேடுவது என்ற அளவில் இதன் இயங்குதேவை அமைகின்றது. சமூக மாற்றத்திற்கான அரங்கப்பணி என்றே பண்பாட்டு மலர்ச்சிக்கூடத்தினை உருவாக்கிச் செயற்படுபவர்களும் கூறுகின்றனர். எனவே அளவுகோல்களிலும் உட்கூறுகளிலும் வேறுபட்டாலும் Boal-ன் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரங்கிற்கும் பண்பாட்டு மலர்ச்சிக்கூட அரங்கப்பணிகளுக்கும் அடிப்படை நோக்கத்திலும் வடிவத்திலும் ஒத்த தன்மைகள் உள்ளன.

போருக்குப் பின்னரான சூழலில் தமிழ்ச் சமூகத்தின் சமூக, பண்பாட்டு வாழ்வியல், அரசியல் மீட்டுருவாக்கத்திற்கான செயற்பாடுகள் இத்தகைய மையங்களுக்கூடாகப் பிரக்ஞைபூர்வமாக முன்னெடுக்கப்படுவது ஆரோக்கியமானதாகும். தாயகப்பகுதிகளில் சமூக பண்பாட்டுச் சிதைவுகள் அதிகம் இடம்பெற்றுவருகின்ற புறநிலையில் இவ்வாறான செயற்பாடுகளும் அவற்றுக்கான பலமானதும் சுதந்திரமான பண்பாட்டு அமைப்புகள் அவசியப்படுகின்றன. பண்பாட்டுத்தளத்தில் ஒரு மக்கள் இயக்கமாகச் செயற்படவும் ஆரோக்கியமான விழுமியங்களுடனான ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கவும் இவ்வகை அமைப்புகள் உகந்தவை. மக்களின் பிரச்சினைகளை மக்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து, கலைகளின் ஊடாக வெளிப்படுத்தும் விதத்திலான செயற்பாடுகளை பண்பாட்டு மலர்ச்சிக்கூடம் முன்னெடுக்கின்றது. அதன் வகிபாகம் கலைகளின் ஊடான மானிட சமூக மேம்பாடு என்பதற்கு அப்பால் எமக்கான சமூக நிறுவனங்களை வளர்த்தெடுப்பதென்ற அடிப்படையிலும் அதன் வகிபாகம் முக்கியத்துவம் பெறுகிறது.

**

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட –  கட்டமைக்கப்பட்ட நாடக அரங்க வெளிப்பாட்டு வடிவம் அதன் பேசுபொருளைப் பொருத்தமான தீர்வினை நோக்கி வளர்த்தெடுப்பதற்குத் தடையாக இருக்கும் என்பது Boal-ன் கருத்து. பார்வையாளர்களான சாதாரண மக்களின் வாழ்வனுபவங்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளையும் உள்ளார்ந்து அணுகுவதற்கு Forum Theatre  வழிவகுக்கின்றது. வேறு பரிமாணத்தில் அரங்க வெளிப்பாட்டினை முன்னெடுப்பதற்கும், புதிய மாற்றம் நோக்கிய அணுகுமுறைகளைக் கண்டடைவதற்கும் இது வழிகோலக்கூடியது. இந்த வடிவத்தில் படைப்பாக்கத்திற்குரிய கற்பனைகளுடன், கலைத்துவ நுணுக்கங்களுடன், நாடகத்திற்குரிய காட்சியின்பத்தைக் கொடுக்கும் அதேவேளை சமூக வாழ்வியல் பிரதிபலிப்பு காத்திரமானதாக அதில் இருக்கும். எனவே தேடலும் சமூகப் பார்வையும் பிரக்ஞைபூர்வமான ஈடுபாடும், கலைத்துவ ஆளுமையும், நடிப்பாற்றலும் செயல்முனைப்பும் இதில் ஈடுபடும் நடிகர்களுக்கு அவசியமாகின்றது.

மக்கள் சமூகம் கூட்டாக இணைந்து செயற்படுதல், ஜனநாயகத் தன்மையுடன் சமூக மாற்றத்திற்கான கலையை முன்னெடுத்தல் என்ற இரண்டு பரிமாணங்கள் இந்த வடிவத்திற்குள் உள்ளடங்கியுள்ளன. பிரச்சனையின் மூலத்தை ஆராய்தல், அதனை நாடக அரங்கமாக முன்வைத்தல், விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகுதல், வெவ்வேறு தீர்வுகளைப் பரீட்சித்துப் பார்த்தல், சாத்தியமான தீர்வினைக் கூட்டாகக் கண்டடைதல் என்பதாக அதன் உட்கூறுகளை வகுக்கலாம்.

இன்னொரு வகையில் சொல்வதானால் மக்கள் தமது நாளாந்த வாழ்வில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை சார்ந்த நிலைமைகளை எதிர்த்து வெளிவருவது தொடர்பானது. இதில் Actors,  Spect-Actors, Audience என  Forum Theatreஇன் பங்காளர்கள் வகைப்படுகின்றனர். Spect – Actors எனப்படுவோர் பார்வையாளர்கலிருந்து நாடக அரங்கினை அவதானிப்பவர்களாக அல்லது பாத்திரமாக மாறி நாடக அரங்கில் செயற்படுபவராகவும் இருக்க முடியும். அவர்கள் சுயமான கருத்துகள், அனுபவங்களை நடிப்பு வழியாக வெளிப்படுத்துவதன் மூலம் ஒரு விமர்சனக் கண்ணோட்டத்துடனான சிந்தனைக்கு (Critical thinking) வழிகோருபவர்களாகவும் இருப்பர். நாடக அரங்கத்தை நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து மேற்கொண்டு நகர்த்துவதற்கான காட்சிகளை பார்வையாளர்கள் தமது கருத்தாக முன்வைக்க முடியும். அவர்கள் முன்வைக்கும் காட்சிகளை நடிகர்கள் உள்வாங்கி காட்சியை விரித்துச் செல்வர். அல்லது பார்வையாளர்களே பாத்திரமாக மாறி காட்சிக்குரிய நடிப்பினை-நிகழ்த்திக் காட்டலை முன்னெடுப்பர்.

புலம்பெயர் சூழலில் எமது சமூகத்தில் நிலவுகின்ற அக முரண்பாடுகள் பலவும் பேசாப்பொருளாகப் ‘பேணப்படுகின்றன’. வழமையான கலைகளினூடாக அவற்றைப் பேசுதல் சுலபமல்ல. பிரச்சாரமென்ற நிலைக்குச் சென்றுவிடக்கூடும். எனவே Forum Theatre எனும் இந்த வடிவம் இவ்வாறான அகமுரண்பாடுகளையும், சென்சிற்றீவாக(Sensitive) அணுகவேண்டிய சமூகப் பிரச்சினைகளையும் பொதுத்தளத்தில் விவாதப்பொருள் ஆக்குவதற்கும், சமூகமாக இணைந்து சிந்திப்பதற்கும் செயற்படுவதற்கும் உகந்ததாக அமையும்.

இதன் மூலம் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று சமூகப்பிரச்சினைகள் குறித்த விவாதங்களை ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்தல் மூலம் மாற்றங்களுக்கு வழிகோலுதல். மற்றையது அருகிவரும் அரங்கியல் கலையை புதியதொரு பரிமாணத்தில் உயிர்ப்போடு வைத்துப்பேணுதல், வளர்த்தெடுத்தல் என்பதாகும்.

(தொடரும்)

உசாத்துணை நூல்:

 The Theatre of the Oppressed – Boal’s methods and practice> Arne Engelstad 

கர்ச்சல்

0

கார்த்திகேயன் புகழேந்தி

ஊரடங்கின்பொழுது சென்னையை வந்தடைந்த பெயர் தெரியாப் பறவைகளையும் விதவிதமான பூச்சிகளையும் இன்ஸ்டாவில் படம்பிடித்துப் போட ஆரம்பித்தார் பிரபல பல் மருத்துவர்.  சிட்டியின் பரபரப்பான இடத்தில் சொந்தமாக ஒரு கிளினிக். தரைத்தளத்தை பேக்கரி வைத்திருந்த ஒரு மலையாளியிடம் வாடகைக்கு விட்டிருந்தார். எப்போதும் முதல் மாடி பால்கனியில் கடை வாசலுக்கு நிகராகக் கூட்டம் மொய்க்கும். அவ்வளவு கைப்பக்குவம்  இருந்தாலும் பணம், பதவி எல்லாம் மரத்துப்போயிருந்தது அவருக்கு. அதற்குக் காரணம் எவ்வளவு நுணுக்கமான அறுவைச்சிகிச்சை எல்லாம் செய்தாலும்  சொந்தபந்தங்களிடையே பல்லு புடுங்குற வேலைதானேன்னு ஒரு எளக்காரம். விசிட்டிங்க் புரஃபஸராப் போன காலேஜ்லையும் சமயத்துல டிபார்ட்மெண்ட் கணக்கு வழக்கெல்லாம் பார்க்க சொல்லிடுவாங்க. ’கோட்டா மட்டும் இல்லன்னா கம்பவுண்டராக்கூட ஆகியிருக்க மாட்டான்’ என்று டாக்டர் தொழில் என்னவோ தங்கள் பரம்பரை சொத்து என்பதுபோல் அவர் காதுபடவே கலாய்ப்பார்கள்.

இந்தக் கொரோனா காலத்துல சாதாரண சளி, இருமல்னாலே கார்ப்பரேஷன் புடிச்சிட்டு போய்டுவானோங்கற பயத்தினாலயோ என்னவோ எவனும் பல்லு வலிக்கிதுன்னு வரவே இல்லை. பேக்கரியின் கூட்டம் கூடியதுகூட ஒரு காரணமாக இருக்கலாம். காலேஜும் மூடியாச்சு. அதனால் க்ளினிக்கிற்கு விடுப்பு விட்டுவிட்டார். அப்போதுதான் தன் கல்லூரி காலத்தில் மூட்டை கட்டி வைத்து விட்டிருந்த வைல்ட் லைஃப் ஃபோட்டோ கிராஃபி கனவு மெல்லத் துளிர்விட ஆரம்பித்தது.  தன்னைவிட மகன் பறவைகளப் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் காட்டவே அரசு ஊழியரா இருந்து ஓய்வுபெற்ற அவரோட அப்பா மண்டைக்குள் அடிச்ச அதே மணி அவர் மண்டைக்குள்ளும் அடிக்க ஆரம்பித்தது. ’இவனுக்கு ஜூவாலஜி வரும்போல. எப்படியாச்சும் என் மகனை டாக்டராக்கிடணும்.’

ஊரடங்கு தளர்ந்ததும் ஒப்பந்தப்படி அருங்காட்சியகத்திற்கு கூட்டிக்கொண்டு போனார். முதலில் அவர் சொல்லும் இடம், பிறகு அவன் சொல்லும் இடம். இதுதான் அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தம். உள்ளே நுழைந்ததும் அந்த பிரம்மாண்டமான எலும்புக்கூட்டை பார்த்த மகன் மிரட்சியில் அன்னாந்து பார்த்தான். மெல்ல அதைத் தொட்டுப் பார்த்துவிட்டு அவரிடம் கேட்டான், “அப்பா! டைனோசர் கறி ருசி எப்படி இருக்கும்? அதோட ஒரு முட்டைய ஆம்லெட் போட்டாலே  நாம ஃபேமிலியோட சாப்பிடலாம்ல?”

மகனுடைய அறிவுப்பசிக்கு தீனிபோட நினைத்து அவனை அங்கு அழைத்து வந்த அப்பாவுக்கு அவன் இப்படியொரு கேள்வியை முதலில் கேட்டதை நினைத்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை.

“லெக் பீஸ் கொஞ்சம் பெருசா இருக்கும். மத்தபடி டேஸ்டெல்லாம் அதுவும் கோழிக்கறி மாதிரிதாண்டா இருக்கும். டிராகன் சிக்கன் எல்லாம் சாப்பிட்டு இருக்கல்ல. அந்த பேர் எப்படி வந்துச்சு?” என்று அவர் சொல்லி சமாளித்து விட்டார். 1800களின் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகுதான் டயனோசர்கள் என்ற தனி இனமே பெயரிடப்பட்டது. அதுவரை எல்லாமே டிராகன்கள்தான். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து வந்த பறவைகளில் நெருப்புக்கோழிகள் தான் இன்னும் உயிருடன் இருக்கின்றன. அவற்றின் முட்டைகள் தான் இப்போது இருப்பதிலேயே பெரிது. ஆனால் டயனோசர் காலத்தில் பறக்க முடிந்த அவற்றால் இப்போது உடல் எடை காரணமாக வேகமாக ஓடத்தான் முடியுமே தவிர பறக்க முடியாது. அப்படியொரு விசித்திரமான தலைகீழ் பரிணாமம் நெருப்புக்கோழிகளுடையது. அதனால் அவற்றை ரேட்டைட்ஸ் என்றும் சொல்வார்கள். இப்படியாகச் சென்று கொண்டிருந்த தந்தையின் என்ன ஓட்டத்தை சடாரென குறுக்கிட்டு மகன் கேள்வி கேட்டான்.

“ஏன்பா? டயனோசர்தான் செத்துப்போச்சு. இந்த bird, எல்லாம் இன்னும் zooல இருக்கே. அப்புறம் ஏன் Museumல வச்சிருக்காங்க? இவ்ளோ birds இருந்தும் ஏன் national bird peacock இந்த Museumல இல்ல. அப்ப இங்க இருக்கறதெல்லாம் anti national birdடா?”

அப்பாவிற்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. இவன் இந்தக் கேள்விகளையெல்லாம் புரிந்துதான் கேட்கிறானா? அல்லது எதேச்சையாகக் கேட்கிறானா? இவனை வெச்சிக்கிட்டு இனி நியூஸ் சேனல் பார்க்கக்கூடாது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு மகனுக்கு விளக்க ஆரம்பித்தார்.

”அப்படி இல்லைடா! ஆஸ்ட்ரிச்ல இருந்து குருவி வரைக்கும் இறகிருக்கும் எல்லா உயிரினமும் பறவைகள்தான். அதை அதுங்க பறக்கப் பயன்படுத்துதுங்களா? நீந்தப் பயன்படுத்துதுங்களா? இல்ல தன் இணையைக் கவர பயன்படுத்துதுங்களா? அடைகாக்க மட்டும் பண்படுத்துதுங்களா? இல்ல எதுவுமே வேணான்னு ஒரு இறகைப் பிச்சு தன் காதையே கொடைஞ்சுக்க பயன்படுத்துதுங்களான்னு பார்த்தோம்னா அது அந்தந்த தட்பவெப்பம், உடல்வாகு, சுற்றுச்சூழல் பொருத்து அதுங்க எடுக்க வேண்டிய முடிவு.  அதுல தேசியப் பறவை ஸ்பெஷல். ஏன்னா அதுக்கு நிறைய ரூல்ஸ் இருக்கு. இதோ படிச்சுக் காட்றேன் பாரு”

தொடர்ந்து ஆண்ட்ராய்டைத் துழாவி வாசித்துக் காட்டினார்.

’ஒரு தேசியப்பறவை நாடு முழுவதும் காணப்பட வேண்டும், தனித்தன்மை மிக்கதாக இருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நாட்டின் பாரம்பரியத்துடன் அதிக தொடர்புடையதாக இருக்க வேண்டும். மன்னராட்சி முடிந்து அரசாங்கங்கள் உலகெங்கும் நிலைப் பெற்றபோது சின்னச் சின்ன இனக் குழுக்களெல்லாம் சேர்ந்து ஒரே தேசிய அடையாளத்தைத் தழுவின. அந்த வரையறையில் தேசிய கீதம், தேசியக் கொடி என்று ஆரம்பித்து தேசிய விலங்கு, தேசியப் பறவைகளும் அடக்கம். கடும் போட்டிக்குப் பிறகு கர்ச்சல் பறவையைக் காட்டிலும் மயிலுக்கே இந்தியாவின் தேசியப் பறவையாகும் அந்தஸ்து அளிக்கப்பட்டது.’

கர்ச்சல் பறவையா? அது எப்படிப்பா இருக்கும்? மயிலைவிட அழகா இருக்குமா?

“அழகு ஒரு அளவுகோள் இல்ல. மயிலுக்கும் இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாற்றுக்கும், பாரம்பரியத்துக்கும் உள்ள தொடர்புதான் காரணம். முகலாயர்களின் மயில்வண்ண அரியணைக்கு முன்னால் கண்ணனின் கிரீடத்தை அலங்கரித்த ஒற்றை இறகிற்கு முன்னால் முருகன் சூரபத்மனை வதம் செய்து அது மயிலாகவும், சேவற் கொடியாகவும் மாறிய கதைய அன்னிக்கு பாட்டி சொன்னாங்கல்ல?”

“ஆமா”

“அப்படிதான் பீக்காக் நேஷனல் பேர்ட் ஆச்சு. அதை யாராச்சும் கொண்ணா அவங்கள ஜெயில்ல போட்டுடுவாங்க. அதனாலதான் அது இங்க இல்ல. புரிஞ்சுதா?”

மீதமுள்ள பதப்படுத்தப்பட்ட அரிய வகை விலங்குகளை, பறவைகளை ஒவ்வொன்றாகக் கடந்து செல்லும்பொழுது அவருக்கு மொகலாய மன்னர் பாபரின் டைரிக்குறிப்பு ஒன்று நினைவுக்கு வந்தது. பறக்கும் தன்மையும் கொண்டு அதிக சதைப்பிடிப்புடைய ‘The Great Indian Bustard’ என்று அழைக்கப்படும் இந்திய கர்ச்சல் பறவைகளைத் தான் பாபர் போன்ற மன்னர்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள். றெக்கையும், தொடையுமாக எதைக் கண்டாலும் வகைதொகை பாராமல் வேட்டையாடி, சமைத்து ருசி பார்த்த அவர் தன் சந்ததிக்கு உதவுமே என்ற நல்ல எண்ணத்தில் எந்தெந்த பறவையின் எந்தெந்த பாகம் அதிக சதைப் பிடிப்பாகவும், ருசியாக இருக்கும் என்று குறிப்பெடுத்து வைத்திருந்தார். கர்ச்சல் வகையறா பறவைகளின் கறி மட்டும் கால் பகுதியானாலும் சரி, மார்புப் பகுதியானாலும் சரி ருசியில் பேதமில்லை என்றது அந்தக் குறிப்பு.

இன்று இந்தியாவில் 500 மயில்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில்தான் கர்ச்சல் பறவைகள் இருக்கின்றன. அவற்றின் இயற்கையான இருப்பிடங்களான புல்தரைகளும், குறுங்காடுகளும் வடமாநிலங்களிலேயே அதிகம் உள்ளன. ஆகவே அவற்றின் இயற்கை இருப்பிடங்களுக்கான புனரமைப்புப் பணிகள் ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன (NEET மையங்களைப் போல). நாளை குஜராத், கர்னாடகமும், மஹாராஷ்ட்ராவிலும் இது விரிவாக்கப்படலாம். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறன் குறைவாகவே கர்ச்சில்களுக்கு உள்ளது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் முட்டையிடும்.  அதனால் இன்னும் 5 வருடங்களில் தன் மகன் வளர்ந்து NEET எழுதும் காலத்தில்கூட மயில்களுக்கும், கர்ச்சில்களுக்குமான விகிதம் 1:1 என்று மாறுவது சாத்தியமில்லை.  ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படித்து அரசு ஆஸ்பத்ரிகளில் வேலை செய்யும் மருத்துவர்களைப்போல மயில்கள் வயல்வெளிகளில் மனிதர்களோடு மனிதர்களாக எல்லா மாநிலங்களிலும் உலாவுகின்றன. அதனால் தான் இன்று இந்தியாவிலேயே நீட் தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட ராஜஸ்தானை விட இரண்டு மடங்கு மருத்துவர்கள் தமிழகத்தில் இருக்கின்றனர்.

“அப்பா இங்க பாருங்க. டைகர் மட்டும் இருக்கு. அதுவும் நேஷனல் அனிமல்தானே?”

மகன் தன்னை மடக்க நினைப்பதை ரசித்தார்.

”முடிஞ்ச அளவுக்கு எல்லாவிதமான ஜீவராசிகளின் இயற்கையான வாழ்விடங்களை புனரமைத்துக்கொடுக்க வேண்டிய தார்மீகக்கடமை நமக்கு இருக்கு. ஏன்னா அதோட எடத்ததான் நாம ஆக்ரமிச்சிருக்கோம். சில மிருகம் காட்டைவிட்டு வந்து நம்மோட வாழப்பழகிடுச்சு. நாம கொரோனாவோட வாழப் பழகின மாதிரி. ஆனா எல்லா விலங்கும், பறவையும் இதச் செய்ய முடியாது. அதனால சிங்கம் காட்டுக்கே ராஜான்னாலும், விலாசம் மாறி அது நாட்டுக்குள்ள வந்தா மனுஷந்தான் அதோட ராஜா. ஜீவகாருண்யத்தோட, தற்காப்புதான் முதல்ல. அதுனால அடிச்சிட்டு அத அருங்காட்சியகத்து அனுப்பிடுவான். அப்படிதான் இந்த புலி இங்க வந்திருக்கும்.”

“அப்ப வைல்ட் அனிமல்ஸோட டொமெஸ்டிக் அனிமல்ஸ்தான் நல்லது. இல்லப்பா?”

”எல்லாத்தையும் நமக்கு சாதகமா இருக்கான்னே பார்க்குறது தப்பு.  இப்போ நீ டிஸ்கவரி சேனல் எல்லாம் பார்த்தா புலி மானை வேட்டையாடுறது, பறவை பூச்சிகளை திண்றது மாதிரியான காட்சியத்தான் காட்டுவாங்க. அது இயற்கையா உருவான உணவுச்சங்கிலி. ஆனா எப்படி பூச்சிங்க மலர்களின் மகரந்தச் சேர்க்கைக்கு வழி செய்யும், பறவைகள் பழங்களையுண்டு அதன் மிச்சமான விதைகளை தன் எச்சத்தின் மூலம் பரப்பி காடுகள் உண்டாக்கும்னு எல்லாம் அவங்களால காட்ட முடியாது. காட்டு விலங்குங்கதான் வரப்போகும் தொற்றுகளையும், பேரிடர்களையும் முன்கூட்டியே தெரியப்படுத்தும் வகை உயிர் நீக்கும் அல்லது இடம் பெயரும்.  நாம வாழ பறவைங்க எவ்வளோ முக்கியம்னு எந்திரன் படத்துல பார்த்தல்ல?”

“ஆமாப்பா. அதுலேர்ந்துதான் நான் செல்ஃபோன்ல ஆங்ரி பேர்ட் விளையாடுறதயே கொறச்சுட்டேன். பேர்ட்ஸ் இருந்தா வெட்டுக்கிளி வந்து வயல சாப்டிருக்காதுல்ல. பேட்ட சைனால சமைக்காம சாப்டதுனாலதானே கொரோனா வந்துச்சு?”

”கரெக்ட். மனிஷனுக்கு இரையாவதைத் தவிர்த்து அதுங்களுக்குன்னு தனித்தனி பொறுப்புகளும் இயற்கையிலேயே இருக்கு. மத்தபடி சாப்பிடணும்னா அதுக்கு ஆடு, கோழி மாதிரி பிராய்லர்தான். புரிஞ்சுதா?”

கோழிகளும், காகங்களும் இன்று உலகெங்கிலும் ஒரேமாதிரி காணப்பட்டாலும் மரபு சார்ந்து சில நாடுகளின் தேசியப்பறவை அந்தஸ்தையும் பெற்றிருக்கின்றன. மனிதனை அண்டி வாழ்வதைத் தவிர்க்க காகங்கள் போகும் இடத்தில் எல்லாம் கிடைத்ததை உண்டு, இருக்கும் இடத்தில் வாழும் தன்மையை உருவாக்கிக் கொண்டன. கூலித் தொழிலாளிகளைப் போல. ஆனால் கோழிகள் தாமாக இடம் பெயரவில்லை. பொறியியல் படித்தவர்களைப்போல் அவை இந்திய துணை கண்டத்திலிருந்து மற்ற நாடுகளுக்கு அரசுகளால் எடுத்துச்சென்று இனப்பெருக்கம் செய்யப்பட்டவை. சூரியனின் உறவாய் விடியலை அறிவிக்கும் கடவுளின் தூதுவனாய்ப் பல நாடுகளில் சேவலை வழிபடுகிறார்கள். ஜல்லிக்கட்டைப் போலவே சேவற் சண்டைகளுக்கும்  நம் வாழ்வியலுக்கும் தொடர்பு இருக்கிறது. பெயர்ந்த இடத்திலெல்லாம் தன் போர் குணத்திற்காக பெயர் போன சேவல்கள் தைரியத்தின் அடையாளங்களாக, தங்கள் தேசிய இனத்தின் வீரியத்தின் குறியீடாகக் கருதப்பட்டன.

கோழிகளின் அண்டி வாழும் தன்மையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்த மனிதன் கற்றுக்கொண்டான். மரபணுக்களை மாற்றுவதன் மூலம் உட்கார்ந்த இடத்திலிருந்தே தேடி வரும் தீவனத்தைத் தின்று கொழுக்கும் விதமும், ஒரு நாளின் இரவு பகல் நீலத்தைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் வருடம் முழுவதும் முட்டையிடும் விதமும் கோழைகளாக அவற்றை வடிவமைத்தான். நாட்டுக் கோழிகளின், சேவல்களின் தனித்தன்மையை மெல்ல மெல்ல மழுங்கடித்துத்தான் பிராய்லரை உலகமயமாக்கலின் சின்னமாக மனிதன் மாற்றினான். நாமக்கல், ராசிபுரம் எல்லாம் இனி பிராயிலர்களுக்குத் தான். தமிழகத்திற்குப் போட்டியாக வங்காளத்தில், கல்யாணியில் மிகப்பெரிய பண்ணை தயாராகி வருகிறது. உலகமயமாக்கலின் சின்னமான சேவற் கொடியில் பட்டொளி வீசும் சாவைகள் பயந்த சுபாவம் கொண்டவை, காயடிக்கப்பட்டவை, அடிமை வாழ்க்கையின் மொத்த உருவம்.

“அப்பா! ரொம்ப  நாள் ஆச்சு! போகும்போது நம்ம கடைக்குப் போய்ட்டு போவமா?”

ஆமாம் இல்லை என்றெல்லாம் சொல்லாமல் அப்பா மையமாகத் தலையை ஆட்டினார். மகனிடம் விளக்க முடியாத அரசியல் விவரணைகளை அமைதியாக அசைபோட ஆரம்பித்தார். இன்றைய ஆட்சியாளர்கள் முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை எள்ளல் செய்கின்றனர். மயிலுக்கு போர்த்திய பேகனைப் பகடி செய்கின்றனர். ஒரு புறாவிற்கு இந்த அக்கப்போரா என்று சிபி சக்கரவர்தியை பார்த்துச் சிரிக்கின்றனர். ஆனால் வேட்டைப் பிரியரான பாபரைக் காட்டுமிராண்டியாக சித்தரிக்கும் மானுடப் பதர்கள் மனுநீதி சோழனை மட்டும் சிறந்த பக்தனாக ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்?

தேசிய சின்னங்கள் எல்லாவற்றின் தகுதியும் மாற்றியமைக்கப்படும் காலம் வெகுதூரம் இல்லை என்பது அவர் கணிப்பு. இந்தியாவின் பாரம்பரியத்திற்கும் மயில்களின் தமிழ் தொன்மங்களுக்கும் இருக்கும் தொடர்பை மறக்கடித்துவிடலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். இனமான சேவல்களைவிட உலகத்தரமான பிராயிலர்களின் சந்தையாக தமிழகத்தையும், வங்காளத்தையும் ஆக்க நினைக்கிறார்கள். அதிக சதைப்பிடிப்புடன் கூடிய பறக்கும் திறனுக்கு அதிக மதிப்பெண் கொடுத்து ஒருநாள் கர்ச்சல் பறவை போட்டியின்றி தேசியப் பறவையாக அறிவிக்கப்படலாம். தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழகத்தில் இன்று கர்ச்சல் பறவைகள் இல்லவே இல்லை என்பது கூடுதல் தகுதியாகக் கருதப்படலாம்.

கட்டிட வாசலில் காரை நிறுத்தியதும் கதவைத் திறந்துகொண்டு நேராக பேக்கரியின் பின்பக்க சூளையை நோக்கி ஓடினான். முன்பக்கம் கடை மூடியிருந்தாலும் முதல் ஈடின் வாசனை வாவா என்றது. “ஏட்டா! ரெண்டு சிக்கன் க்ராய்ஸாண்ட்” என்றான் பரவசமாக.

வெள்ளை ஏப்ரனுடன்  பிரசவ வார்டிலிருந்து குழந்தையைத் தூக்கி வருவதுபோல் ஒரு பொட்டலத்தை ஏந்தி வெளியே வந்த ஆண்டனி ஏட்டன் அவன் கண்களுக்கு தேவதையாகத் தெரிந்தார்.

தான் அணியப்போகும் வெள்ளை அங்கி கோட்டா? ஏப்ரனா? என்பதை அவன் தீர்மானிக்கட்டும். அதற்கான சூழலை ஏற்படுத்தித் தர்றதுதான் என் கடமை. நல்லாப் படிச்சு மெரிட்ல வந்தான்னா முதல் மாடி, இல்லைன்னா இருக்கவே இருக்கு தரைத்தளம். நான் ஆசைப்பட்டதயும் செய்யாம எங்க அப்பா ஆசப்பட்டதயும் செய்யாம இப்படி கிணறக்காத்த பூதம் மாதிரி வாழ்றதெல்லாம் ஒரு வாழ்க்கையா என்றிருந்த அவருக்கு நல்லவேளையாக இந்திய பல் மருத்துவ சபைக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்திற்கும் இடையே ஒரு முடிவு எட்டப்பட்டிருந்தது பெரிய ஆறுதல். அதன்படி பல் மருத்துவர்கள் நேரடி சிகிச்சை அல்லாத வேலைகளைக் கொரோனா வார்டுகளில் செய்யலாம். இது சுய பச்சாதாபத்திற்கான நேரமல்ல. ஆத்ம திருப்திக்காகவாது நம்மாலான வேலைகளைச் செய்ய வேண்டும். அதுவரை க்ளினிக் பூட்டியபடியே இருக்கட்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தார். அதுதான் கிடைத்த வாய்ப்பிற்கு தான் செலுத்தும் நன்றிக்கடன் என்பது அவருக்குத் தெரியும். மருத்துவம் என்பது போட்ட முதலீட்டைத் திரும்பி சம்பாதிக்கும் தொழில் அல்ல. பண்ணையாரைப் போல், தர்மகத்தாவைப் போல் அது ஒரு பதவியும் அல்ல. அது ஒரு மனநிலை. அதுதான் தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பவர்களுக்குச் சொல்லித் தரப்படும் முதல் பாடம். தமிழ்நாட்டில் தான் சேவை செய்வேன் என்ற பிரமாணம் எடுத்துக் கொள்பவர்களுக்கு தான் மேற்படிப்பிற்கே பரிந்துரை கிடைக்கும். 

தேசியப் பறவையாக கர்ச்சல் பறவை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற தகவலை அரசுப் பதிவேட்டிலிருந்து அப்பா சொன்னது ஒரு கணம் நினைவுக்கு வந்தது. மயிலா? கர்ச்சலா?ன்னு வாக்குவாதம் முடிவுக்கு வரவே இல்லை. கடைசியா ஒருத்தர் எழுந்து “எல்லாம் சரிதான். ஒன்னு ஒசத்தி, இன்னொன்னு மட்டம்னு சொல்லல. ஆனா உலக அரகில் ‘The Great Indian Bustard’ –  உச்சரிப்பிலோ, எழுத்திலோ கொஞ்சம் பிசகினாலும் அது எவ்வளவு சங்கடம்னு யோசிக்க வேண்டியதா இருக்கு”ன்னு கொளுத்திப் போட்டுட்டு உட்கார்ந்துவிட்டார். பாடப் புத்தகங்களை மாற்றி எழுதுகையில் அதை மட்டும் அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு முடிவெடுப்பது நல்லது என்று தோன்றவே சிரித்துக் கொண்டார்.

***

கார்த்திகேயன் புகழேந்தி – வானவில் புத்தகாலயம் பதிப்பகத்தின் நிறுவனர். ஆசிரியர் தொடர்புக்கு -writerpk86@gmail.com

பபூன்

0

சிவகுமார் முத்தய்யா

விடிந்தும் விடியாத காலைப் பொழுதிலேயே துயில் கலைந்து  பபூன் நாகராசன் பரபரப்பாகிவிட்டார். தனது கூரைவேய்ந்த வீட்டின் மோட்டுவளையில் சில நாட்களாக கருமை நிறத்தில் தொங்கியும் படர்ந்தும் கிடக்கும் அத்தனை ஒட்டடைகளையும் தட்டி சரி செய்துவிட்டார். அக்கம் பக்கத்தில் உள்ள  கூத்துக்கார கோஷ்டிகளிடம் நேற்றே தன்னை நேர்காணல் செய்ய ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் இருந்து நிருபர், மற்றும் கேமராமேன் வருவதைப் பற்றிச் சொல்லி பெருமிதம் கொண்டார். அவர் சொல்லிய தோரணையை வைத்து சிலர் வியப்பாகவும், பலர் அவர் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்று என்பது போலவும் பார்த்து விட்டு  நமுட்டு சிரிப்பு சிரித்தனர்.  ஒரு சிலர் இவர் காதுபடவே நக்கலும் நையாண்டியும் பண்ணினர்.

“இந்த ஊர்க்காரப் பயல்களே இப்படித்தான்… என்று உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.” என்று முகத்தில் அணிந்திருக்கும் முகக் கவசத்தைப் போட்டுக் கொண்டபடியே முணுமுணுத்துக் கொண்டே அவர்களை விட்டு விலகினார்.

நேர்காணல் செய்ய வருகின்றவர்களுக்கு நம்மால் முடிந்த ஏதோ ஒன்றை தந்து உபசரிக்க வேண்டும். காலை நேரத்தில் மலையாளத்து சேட்டன் டீக்கடையில் சூடான வெங்காய பஜ்ஜியும், வயநாடு தேயிலை தேநீரும் கிடைக்கும். அதனை வாங்கிக் கொடுக்கலாம் ஆனால் ஊரடங்கு காரணமாக கடையில்லை. என்ன செய்வது என்று யோசித்தார். இவர் பொதுவாக  டீக்கடைக்கு காலைப் பொழுதில் செல்லும்  பழக்கமில்லாதவர். சமீப காலங்களில் அடிக்கடி ஏற்படும் வயிற்றுக் கோளாறு காரணமாக டீ குடிப்பதில்லை. ஆனால் இதைவிடவும் மோசமான  குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. என்றைக்கு “பபூன்” வேடமேற்று  காலில் சலங்கையைக் கட்டினாரோ… அன்று ’கள்’ குடியாக தொடங்கியது இன்று டாஸ்மாக்கில் வந்து நிற்கிறது. அரிதாக எப்போதாவது டீக்கடையில் இவரைப்  பார்க்கும் ஊர்க்காரர்கள், “கூத்து இல்லைய்யா,, பபூன்” என்று கேட்பார்கள். இல்லையென்று கையைக் காட்டிச் சொல்வார்.அநேகமாக செய்தித்தாள் வாசிக்கவும், ஊர் நிலவரத்தை அறியவும் தான்  செல்வார். அரிதாக எப்போதாவது டிபன் சாப்பிடுவார். கூத்தில் அதகளம் காட்டும் இவர் இயல்பில் அதிகம் பேசமாட்டார்.

பிறகு குளித்துக் கொள்வோம் என்று முதலில் ஒட்டடை அடித்ததில் அப்பியிருந்த அழுக்கை கழுவிச் சுத்தம் செய்தார். ஆட்கள் நடமாட்டம் அதிகம் இன்றி காணப்படும் கடைத்தெருவைக் காணும் ஆவலில் கிளம்பினார். பால் வாங்கிக்  கொண்டு வந்து வீட்டிலேயே டீ போட்டுவிடலாம்  என்று தோன்றியது. மளிகைக் கடை மட்டும் திறந்து இருப்பதாகச்  சொன்னார்கள். ராவுத்தர் கடையில் பால், டீத்தூள், வெல்லம் வாங்கிக் கொள்ளலாம். பேட்டி எடுக்க வருகின்றவர்கள் வரும் வரை ‘’ சூடு குறையாமல் இருக்க ஒர் பிளாஸ்க் வேண்டும், கொஞ்ச தூரம் நடந்து மேளக்காரத் தெருவுக்கு வந்தார். கையில் போட்டிருந்த கடிகாரத்தில் நேரத்தைப்  பார்த்தார் இப்பவே எட்டாகியிருந்து. வைகாசி மாதம் என்பதால் வெயில் வெப்பம் குறைந்த கடைசி வாரம்.தெருவெங்கும் நிற்கும் மரங்கள் பசுமை கொண்டிருந்தன. கடந்த சில நாட்களில் பறவைகளின் அதிகமான வருகையைக் காண முடிந்தது. அதன் துள்ளல் நிரம்பிய பாடல்களைக்  கேட்க முடிந்தது.

ஆனி தொடங்க  இன்னும்  சில நாட்கள் இருப்பதால் வானில் ஒளி குறைந்த சூரியன். சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையின் ஈரத்தில், தெருவோர வேலியில் நின்ற மரங்களில் பசுமை அடர்ந்திருந்தது. கிளைகளில் படர்ந்து கிடந்த தூதுவளைக் கொடிகளில் பூத்திருந்த நீல நிறப் பூக்களில் மகரந்தங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தன. கொடியில் சின்னஞ்சிறிய சிவப்பு நிறப் பழங்கள் பழுத்து என்னை சாப்பிட வாருங்கள் என்று அழைப்பது போலிருந்தது. தெரு முனையில் முதல் வீடாக இருந்த டக்ளஸ் வீட்டு தென்னைக் கூரையில் படர்ந்து ஓடியிருந்த பரங்கிக்கொடி காய்ந்து அதன் கொடிகள் படர்ந்து நெளிந்து வளைந்து இருப்பதை பார்த்ததும் இவருக்கு அது பூத்துக் காய்த்த அந்த பருவக்காலம் நினைவுக்கு வந்தது. இப்படித்தான் மனித வாழ்வும். பரங்கிப்பூக்கள்.. அதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருக்கும். மார்கழி மாதத்தில் காலைப் பொழுதுகளில் இந்தப் பூவையும் கக்கரத்தான் ஊதா நிறப் பூக்களையும் பறித்து வந்து பெண்கள் வாசலில் கோலமிட்டு அதன் மையத்தில்  வைப்பார்கள். குட்டிமேரி அப்படித்தான் வைப்பாள். திடீரென்று குட்டிமேரி சலங்கை கட்டிய கால்களுடன் நினைவில் நடக்கத் தொடங்கினாள். தன்னைக் கட்டுப்படுத்தி அவளைத் தடுத்து நிறுத்தி விட்டு, ஒரு வித லயிப்பில் நடக்கத் தொடங்கினார்.

டக்ளஸ் வீடு உள்ளிட்ட நாலைந்து வீடுகளில் கேட்டுவிட்டார். உள்ளே வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த பெண்கள் இல்லை என்று மட்டும் சொன்னார்கள். இவர் அணிந்திருந்த நீல நிற முகக்கவசத்தைப் பார்த்து சிலர் சிரித்தனர். எப்படியும் பத்து மணிக்குள் வந்துவிடுவார்கள். நிருபர் மற்றும், கேமராமேன் உள்ளிட்ட சிலர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.   பிளாஸ்க் வேண்டாம் என்று திரும்பி நடக்கத் தொடங்கிய போது எதிர்ப்பட்ட பெண்கள், சிறுவர்களிடம்  விஷயத்தைச் சொல்லியபடியே வேகமாக நடந்து  வீட்டிற்கு  வந்து சைக்கிளை எடுத்து அதில் ஏறினார். அப்போது கனகம் எதிரே வந்தாள்.

கூத்துக்காரர்கள் குடியிருக்க, ஒடம்போக்கியாற்றின் எதிர்ப்புறம் மேற்கும் கிழக்குமாக திடல் போலத் திட்டுத்திட்டாய் நீண்டு கிடக்கும் ஆற்றோரப் படுகையை ஒட்டித்தான் கிராமத்தினர் இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த புறம்போக்கு இடத்தில் இவர்கள் தங்கியிருந்தபோதும் சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் 1994ம் ஆண்டில் இவர்களை இந்த இடத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். அப்போது உள்ளூரைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் முனியாண்டி வந்து அதிகாரிகளிடம் பேசி இவர்கள் அங்கே குடியிருக்கக் கட்சி மேலிடத்தில் சொல்லி அதிகாரிகளைப் பணிய வைத்தார். அதன் பிறகு கூத்துக்கார பதினைந்து குடும்பங்களுக்கும் அவர் நிரந்தர தலைவராகிப் போனார்.அதன் பிறகு அடிக்கடி வந்து கூட்டங்களுக்கு இவர்களை ஆட அழைத்துச் செல்வார்.அது பபூன் நாகராசனுக்கு இந்த டெல்டா மாவட்டங்களைத் தாண்டியும் மற்ற இடங்களிலும்  செல்வாக்கு அதிகமாக  இருந்த காலக்கட்டம்.

ஒரு சித்திரை மாத மழை நாளில்   அதிராம்பட்டினம்  அய்யனார் கோவில் திருவிழாவின் ஆட்டத்துக்கு சென்று திரும்பியபோது, நல்ல மதிய நேரம் கோடை மழைக்குப் பிறகான நல்ல வெயில். கூத்துக்காரத் தெருவே அசமடங்கியிருந்தது. ஆட்டத்தில் குறவன் வேடமேற்று ஆடும் சக ஆட்டக்காரன் செல்வத்தின் வீட்டுக்காரி கனகம் வீட்டில் இருந்து முனியாண்டி வெளியே வருவதைப் பார்த்தார். அடச்சீ.. என்று கருவிக்கொண்டார். இது பற்றி ஊரில் சிலர் அரசல்புரசலாக பேசிக் கொண்டார்கள். கனகத்தைப் பார்த்ததும் இந்த நினைப்பு இப்போது எழுந்தது. கனகத்தை முறைக்கு  அக்கா என்றே அழைப்பார். சில நேரங்களில் அவளை கண்டிக்க வேண்டும் என்று தோன்றியபோது அவள் ஒரு மாதிரியானவள் என்று தெருக்காரப் பெண்கள் சொல்லக் கேட்ட பயத்தால் தவிர்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல இந்த விஷயத்தில் நாம் மட்டும் என்ன யோக்கியமா?” என்று இது போன்ற சமாச்சாரங்களில் தலையிடுவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டு விட்டார்.  இந்த விவகாரம் ஒரு நாள் தெரிந்து போக இரண்டு பெண் குழந்தைகளையும் தவிக்க விட்டு, செல்வம் அரளிக்காய் அரைத்து உண்டு இறந்து போனதும், கனகம் பெயர் பெத்த ஆட்டக்காரி ஆகிப்போனதும் வேறு கதை.

சைக்கிளில் ஏறினார். பெடல் சத்ததுடன் சீராக ஒடியது.செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு கிளம்பிவிட்டோமே என யோசித்தார். இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கடைத்தெரு இருந்தது. அப்போது ரெயில்வே தடம் தனிமையில் உறைந்து போயிருந்தது. வெட்டாற்றில் இருந்து எண்கன் வழியாகப் பிரிந்து வரும் ஒட்டக்குடியான் வாய்க்காலில் ரெயில்வே கேட், அருகே, குளிக்கரை குச்சான் உடும்பு வேட்டைக்கு ”கண்ணி” வைத்துக்கொண்டிருந்தான். வாய்க்காலில் இருந்தபடி, சைக்கிளில் வரும் இவரைக் கண்டதும் ”மச்சான்” என்று ஓங்கிய குரலில் குச்சான்  கத்தினான்.

சைக்கிளை விட்டு இறங்கி திரும்பிப் பார்த்தார், “கண்ணி”யை அங்கே போட்டுவிட்டு ஒடிவந்தான் குச்சான். “என்னுமோ டிவியில இருந்து பேட்டி எடுக்க வர்ங்கன்னு கேள்விப்பட்டேன்” என்றான் முகத்தில் மகிழ்ச்சி பொங்க.

“ஆமாய்ய இன்னக்கித்தான் வர்றாங்க.. ஆமா ஒனக்கு எப்படித் தெரியுங்குறேன்.” என்றார். “மச்சான் நேத்தி கடைத்தெருவுல பேசிக்கிட்டாங்க” என்றான்.

“அவுங்களுக்குத் தான்… டீ போட சாமன் வாங்க போறேன்… சரி இஞ்ச என்னாய்யா பண்ற” என்றார்.

“வீட்டுல சும்மா இருந்தா உன் தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை வந்து வாய் நாறிப்போகும். அதான் கிளம்பி வந்துட்டேன். எதாவது கிடைச்சாலும் மதியம் கொழம்புக்கு ஆகுமில்ல. ஒனக்க இல்லாம சோறு இறங்க மட்டுது” என்றான் வாய்க்காலில் மண்டியிருந்த நாணல் காட்டைப்  பார்த்தபடி.

சைக்கிளில் ஏறினார். அளவுக்கு அதிகமாகக் கூட்டம் நிரம்பி வழியும் டீக்கடை பூட்டிக்கிடந்தது. கடைத்தெருவில் இலந்தைப் பழத்தை உருட்டிவிட்டது போல ஆட்கள் இறைந்து நின்று பேசிக் கொண்டிருந்தனர். ராவுத்தர் மளிகைக் கடை வாசலில் நின்று தவில் வித்வான் ஆவுடையப்பன் போனில் யாருடனோ பேசிக் கொண்டு நின்றார்.  அப்போது கடைவீதியில் இருந்து காளி வேஷம் போட்டு ஆடும் ஆறுமுகம் கடைக்குள் புகுந்தான். பபூன் நாகராசனைக் கண்டதும் வணக்கம் வைத்துவிட்டு, நலம் விசாரித்தான்.’ டிவியில இருந்து இன்னக்கி நம்மள பேட்டி எடுக்க வர்றாங்க” என்று அவர் அவனிடம் சொன்னார்..

“அப்படிய்ய சந்தோஷம்” என்று அவன் சொல்லிக்கொண்டே “இரண்டு கிலோ எள்ளுப்புண்ணாக்கு  போடுங்க” என்றான்.. இதனைக் கூர்ந்து கேட்ட ஆவுடையப்பன் கடைக்குள் வந்து என்ன விஷயம் என்று ஆறுமுகத்தைப் பார்த்து கேட்டார்.. “இவரைப்  பேட்டி எடுக்க வர்றாங்க” என்றான். இதனை கேட்ட ஆவுடையப்பன், ஒரு மாதிரியாகச் சிரித்துவிட்டு, “பபூன் அப்படி என்ன சாதிச்சி கிழிச்சுப்புட்டாரு…புடலங்க…போங்கட… யார்க்கிட்டே ரீல் விடுர்றீங்க” என்று சொல்லிவிட்டு ஹ…ஹ…வென சிரித்தார். அப்போது கடையில் இருந்த சிலரும் சிரித்தனர்.

நாகராசன், கடைக்கார பாயைப் பார்த்து சாமான்களை சொன்னார். அப்போது அவரது  குரலில்  கரகரப்பு கூடியிருந்தது. எல்லோர் மத்தியிலேயும் தவுல்காரன் இப்படிப் பேசிப்புட்டானே” என்று முணுமுணுத்தார். ஆவுடையப்பனுக்கும் இவருக்கும் பேச்சுவார்த்தை முறிந்து போய் வெகுநாளாகிவிட்டது.

பொருட்களை  துணிப்பையில் வைத்து சைக்கிள் ஆன்பரில் மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

இந்த தொற்று நோயால் ஒரு கூத்துக் கலைஞன்  எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை உலகுக்குச் சொல்ல  பேட்டி எடுக்க வருகிறார்களே என்ற சிறு மகிழ்ச்சியில் ஆவுடையப்பனின் வார்த்தைகள் குலைவை ஏற்படுத்தின. சட்டென்று மனம் விக்கித்தது. இத்தனைக் காலங்கள் செழுமையான ஆட்டத்தையும், பகடியான நடிப்பையும் கட்டிக் கொண்டு அழுததற்கு கிடைக்கும் சிறிய அங்கீகாரத்தைக்கூட தனது சக கூத்துக் கலையைச் சேர்ந்த அங்கத்தினன் ஏற்றுக் கொள்ளவில்லையே ஏன்? மனம் வெதும்பினார்.

“ஆவுடையப்பன் சிறந்த தவில் வித்துவான் எனப் பேர் பெற்றவர். கோவிலுக்குள் சென்று வாசிப்பவர், அது தான் காரணமா? உள்ளுக்குள் உறைந்திருக்கும் பழைய வன்மா? அல்லது கர்வமா? நான் வெறும் சிரிப்பு நடிகன் ஆமாம். நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சியின் பபூன். வேறு அடையாளம் எனக்கு ஏது. இவர்கள் பார்வைக்கு நான் ஒரு கோமாளி. அவ்வளவுதான்…”  மனம்  விரக்தியில் புழுங்கத் தொடங்கியது.

ஏன் தன் மீது இன்னும் ஆவுடையப்பனுக்கு.. இத்தனை கோபம். மனதில் உறைந்து கிடந்த அது மேலெழும்பியது… கும்பகோணம் பட்டீஸ்வரம் கோவில் திருவிழாவில் நடந்த கூத்தில், ஆவுடையப்பன் கோஷ்டியில் நாகராசன் ஆட்டத்துக்கு போயிருந்தார். ஆவுடையப்பன் வாசித்த நையாண்டி வாசிப்பையெல்லாம், கேலிக்கூத்தாக்கியது நாகராசன் ஆட்டம். அவர் அடித்த அடியெல்லாம், பபூன் தனது குரலில் வாசித்து, அவர் வாசிப்பை தனது உடல் மொழியால் வெளிகாட்டி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். அதனையும் தாண்டி அவர் வசமிருந்த ஆட்டக்காரி மல்லிகாவை அன்று காலை அழைத்துக்கொண்டு வந்து இரண்டு நாட்கள் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் தங்கவைத்து அனுப்பி வைத்தார். இது எல்லாமே ஆவுடையப்பனுக்கு தெரிந்துபோனது. இதையறிந்த ஆவுடையப்பன்  இதே கடைத்தெருவில் வைத்து தான் அன்று தகாத வார்த்தையில் திட்டினார், அன்றைய பொழுது  அதிக போதையில் இருந்த நாகராசன் பதிலுக்கு எகிற இருவருக்கும் வார்த்தை முற்றியது. கைகலப்பு வராமல் இருவரையும் சமாதானம் செய்து கடைவீதியில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ஆவுடையப்பன் கோஷ்டியில் இருந்து நிரந்தரமாக விலகிப்போனார் நாகராசன்.

இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை மனதில் வைத்துக் கொண்டு தான் ஆவுடையப்பன் இப்படி நடந்து கொண்டார் என்று நினைத்தபோது அவர் மீது வெறுப்பு படர்ந்தது.

“அப்போதிலிருந்து இந்த ஆள்  இப்படித்தான் என்று தெரியும். இத்தனை வயதாகியும் அவர் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறார்.” சைக்கிளை சற்று வேகத்தில் ஓட்டினார்.

மணி ஒன்பதுக்கு மேலாகியிருந்தது. வீட்டுக்கு வந்து சாமன்களை வைத்து விட்டு ஓடம்போக்கி ஆற்றுக்கு வந்தார். மடுவில் தேங்கி நின்ற நீரில் மழை நீரும் தேங்கி குளம் போல் காட்சியளித்தது நீர்ப்பரப்பு. படித்துறையில் அப்போது இரண்டு பெண்கள் குளித்துவிட்டு கிளம்பினார்கள். வேகமாக இறங்கி குளித்தார். ஆவுடையப்பன் பேசியது தொண்டைக்குள் சிக்கிக் கொண்ட மீன் முள்ளாய் இம்சித்தது. மிலிட்டரி சின்னையன் ஞாபகம் வந்தது. மாதம் ஒரு தடவை அவர் கோட்டாவில் கிடைக்கும் ரம் பாட்டில் ஒன்றை இவருக்குத் தருவது வழக்கம். குளித்துவிட்டு மீண்டும் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்தார். விஷயத்தைச் சொல்லிவிட்டு பாட்டிலை வாங்கிக்கொண்டு திரும்பினார். வந்த வேகத்தில் பாட்டிலைத் திறந்து தம்ளரில் ஊற்றி  கடுங்கோடைக் காலத்தில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் ஆடு  தீராத தாகத்துடன் பருகுவதைப் போல அவசரத்துடன் பருகினார். இது இப்போது தேவை என்று அவருக்கு தோன்றியது. கருமை நிறம் கொண்ட திரவம் மிகுந்த மன எழுச்சியை உருவாக்கியது.

மீண்டும் ஊற்றிக் குடித்தார். மனதில் வலிமையும் தெம்பும் ஏற்பட்டது போல உணர்ந்தார். “பிறக்கும்போதும் அழுகின்றான்.. இறக்கும் போதும் அழுகின்றான்” பாடலை சந்திரபாபுவின் குரலில் பாடினார். ஏதோ ஒன்று தொண்டையை அடைத்தது.

இப்போது வயது அறுபதைத் தாண்டிவிட்டது என்றாலும் உடற்கட்டு இன்னும் தொப்பை விழாது பார்த்து கொண்டார். சராசரியான உயரம். தலையை கச்சிதமாக வெட்டி சாயம் ஏற்றியிருந்தார். லேசாக கன்னத்தில் மட்டும்  குழி விழுந்துவிட்டது. மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் குறையில்லை. குரல் கரகரப்பு இல்லாத நையாண்டி பேச ஏற்றது. கூத்தில் இவர் ஆட்டக்காரிகளிடம் பேசும் பாணியே புதுவிதமானது… சிரிக்காத உம்மணாம் மூஞ்சிகளையும் சிரிக்க வைத்து விடுவார். ஆபாசம் என்பது எப்போதாவது இருக்கும். பாட்டுப் பாடுவதிலும் கில்லாடி. சந்திரபாபு, சி.எஸ். ஜெயராமன் பாடல்களை அவர்கள் குரலிலேயே பாடி கைதட்டல்களையும் அன்பளிப்புகளையும் அள்ளி விடுவார். ஒரு பபுனுக்குரிய உடல்மொழி வாய்த்திருந்தது.

திரவம் இறங்கிய சில நிமிடங்களில் உற்சாகத்தில் சத்தமாக சில பாடல்களை பாடினார். காவியமா? இல்லை ஒவியமா? பாடலைப் பாடியபோது மனதில் நெருடல்.இந்தப் பாடல் குட்டிமேரிக்கு ரொம்பப் பிடிக்கும். ஆட்ட நிகழ்ச்சிகளை விட இருவரும் தனித்திருக்கும் பொழுதுகளில் அவள் பாடச்சொல்லி அதிகம் கேட்பாள். மிகச் சிறந்த ஆட்டக்காரி. பார்வையாளர்களின் ரசனையை தனது இடுப்பு வளைவுகளின் வழியே பூர்த்தி செய்துவிடுவாள். அவள் ஆடுவதை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுவிட்டதை அறிந்த கூத்துக்கார கோஷ்டிகள் முகம் சுளித்தனர். எண்கண் முருகன் கோயில் வைத்து குட்டிமேரியை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் சேர்ந்தே நிகழ்ச்சிகளுக்கு ஆடப்போனார்கள். ஆனால் கோஷ்டி ஆட்கள் இவரைப் பற்றி குட்டிமேரியிடம் பொய்யான செய்திகளை சொன்னார்கள். அதனை நம்பிய குட்டிமேரி, இவரிடம் அது பற்றிய  விளக்கம் கேட்கத் தொடங்கினாள். இது தொடர் கதையாகியது. ஆட்டமில்லாத நாட்களில் இவர்கள் வாக்குவாதம் முற்றியது. இவர்களின் குடும்ப வாழ்க்கையை நிம்மதியாக செல்ல விடவில்லை அவர்கள். இவர் வீட்டில் இல்லாத பொழுதுகளில் சில ஆட்கள் குட்டிமேரியிடம் வலிய வந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் நோக்கமெல்லாம் வேறு மாதிரியாக இருந்தது. ஒன்றரை வருடங்கள் மல்லுக்கட்டி ஒட்டினார். ஒரு நாள் இவருக்குத்  தெரியாமல் கிளம்பிப் போய்விட்டிருந்தாள் குட்டிமேரி. கலங்கிப் போனார். எங்கே போனாள் என்று தெரியவில்லை. சில வருடங்கள் கழித்து, மதுரையில் நாதஸ்வரம் வாசிக்கும் பெரோஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு குட்டிமேரி இருப்பதாகவும் ஆடப் போவதில்லை என்றும், திருச்சி காட்டூரில் ஆட்டத்துக்குப்  போனபோது கருமாரி கோஷ்டியை சேர்ந்த காத்து சொன்னான். இதனைக்  கேள்விப்பட்டதில் இருந்து தான் அதிகக் குடி அவரை ஆட்கொண்டது.

 இது நடந்து முப்பது வருடங்கள் ஒடிவிட்டன. ஆனால் குடித்தால் இது தான் இவருக்கு முதலில் நினைவு எழும். இல்லையென்றால் எதையும் நினைக்காமல் அமைதியாக இருந்து விடுவார்.

இப்போது விசிலில் ஒரு பாட்டைப் பாடினார். கண்ணாடியை எடுத்து தனது முகத்தைப் பார்த்தார்.  சூட்கேசைத் திறந்து பபூன் ஆடைகளை எடுத்தார். சலங்கையை எடுத்து ஆட்டிப்பார்த்தார். அவை சலசலத்தன, ஆட்டத்துக்குப் போய் சில மாதங்கள் ஆகிவிட்டன. குறைவான சேமிப்பை வைத்துப் பார்த்து பார்த்து செலவு செய்து நாட்கள் நகர்ந்து கொண்டிக்கின்றன. வருடத்தின் மொத்த வருமானமும் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் நடக்கும் கூத்துகளில் சம்பாதிப்பது வழக்கம். அதனை வைத்துத் தான் மற்ற மாதங்கள் நகரும். ஆனால் அது நடக்கவில்லை. தொற்றுநோயால் திருவிழாவுக்கு தடை. எப்படி வாழ்வது என்று தெரியவில்லை. தனி ஒருவனுக்கே இந்த நிலை என்றால் குடும்பத்துடன் வாழ்பவர்களின் நிலை? இதனை நினைத்தபோது என்னமோ போலிருந்தது அவருக்கு. கண்களில் பிசுபிசுப்பு. பிழைப்புக்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும். நோயால் சாவதை விடப் பசியால் செத்துவிடுவோமா?

புலியூரில் சிறு வயதில் அப்பா, அம்மாவை  இழந்து பத்து வயது சிறுவனாக நின்றபோது  சின்னக்கண்ணு மாமா தான்  அடைக்கலம் அளித்தார். அவர் வீட்டில் பிள்ளைகுட்டிகள் அதிகம் இருந்தும் அரவணைத்துக் கொண்டார். இவரும் சேர்ந்து கொண்டதால் சுமை அதிகரிக்கும் என்று மாமாவின் மனைவி வேம்பு அத்தை அஞ்சினாள். அப்போது மாமா இவரை மூன்றாவது தெருவில் இருந்த பூவாண்டி மேளக்கார கோஷ்டியில் எடுபுடி வேலைகளுக்கு அனுப்பி வைத்தார். கச்சேரி காலங்களில் கிடைத்த சொற்ப பணத்தை அப்படியே கொண்டு வந்து அத்தையிடம் கொடுத்துக் கொண்டிருந்தார் நாகராசன். மேளக்கார கோஷ்டியில் இருந்தாலும் அவருக்கு தவில் வாசிப்பதிலும், நாதஸ்வரத்திலும் ஈடுபாடு இல்லாது போயிற்று. ஆடுவதிலும் பாடுவதிலும் ஆர்வம் கொண்டு திரிந்தார். கூத்தில் குறவன் வேடமேற்று ஆடிப் புகழ் பெற்றிருந்த சீனிக்குட்டி பபுனிடம் சிஷ்யனாக சேர்ந்து நாட்டுப்புற கலையைக் கற்றுக்கொண்டார்.

பெட்டியில் இருந்து எடுத்து பபூன் ஆட்ட ஆடையை அணிந்து கொண்டார். சந்திரபாபு பாணியிலான மீசையை வரைந்து கொண்டார். பெட்டியில் மறைந்து கிடந்த லிப்ஸ்டிக்கை தேடினார். அப்போது மற்றொரு பெட்டியில் இருந்த தமது இளம்வயது புகைப்படங்களின் ஞாபகம் வந்தது அதனை பேட்டி எடுக்க வருபவர்கள் வேண்டும் என்று கேட்டிருந்தார்கள். அவசர அவசரமாக உதட்டில் சாயத்தை தடவிக் கொண்டே வேறு ஒரு சூட்கேஸ் பெட்டியை திறந்தார். பிரேம் செய்து வரிசையாக சிலவற்றை அதில் அடுக்கியிருந்தார்.  முதன் முறையாக வேடமேற்று ஆடி பதினைந்து வயதில் எடுத்தது தொடங்கி நாற்பது வயது வரை பல கால கட்டங்களில் பத்துக்கும் குறையாதவற்றை எடுத்து பத்திரப்படுத்தியிருந்தார் அதில் புகழ்பெற்ற ஆட்டகாரி தஞ்சை லெட்சுமியும் இவரும் ஜோடியாக எடுத்தது வரை இருந்தது.

லெட்சுமி போட்டோவிலும் நல்ல வாட்டம் சாட்டமாக தெரிந்தாள். இயல்பிலும் அப்படிதான் என்றாலும் இந்தக் கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் அப்படியொரு வசீகரம். அவள் ஆட்டத்தின்போது கெட்ட வார்த்தையில் ஏக வசனம் பேசி கலகலப்பு ஏற்படுத்துவது அத்தனை பிரசித்தம் அது மட்டுமல்ல. இரட்டை அர்த்தம் தொனிக்க பேசுவதில் பெரும் பண்டிதனும் தோற்கும் அளவுக்கு ருசிகரம் மிக்கவள். குலுக்கல் ஆட்டம் போட்டு முரட்டு வாலிபர்களை வசப்படுத்திய  இவள் போட்டோவில் வெட்கப்பட்டிருந்தாள். இது லெட்சுமியின் அரிதான அழகு என்று தோன்றியது.

 முதன் முதலாக லெட்சுமியை வேதாரண்யம் பக்கத்தில் ஒரு கிராமத்தில் ஆடப்போனபோது தான் சந்தித்தார். அதன் பிறகு தொடர்ந்து கோடைக்கால திருவிழாக்களில் சந்திக்க நேர்ந்தபோது நெருக்கம் கூடியது. லெட்சுமி தான் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். எனக்கு எவருமில்லை. வயதான அம்மா மட்டும் தான் என்றாள். சில வார யோசிப்புக்கு பிறகு, அவள் வார்த்தையை நம்பிதான் லெட்சுமியையும் அவளது தாயாரையும் அழைத்துக் கொண்டு வந்தார். சில மாதங்களிலேயே லெட்சுமியின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் உள்ளூர் முனியாண்டி தொடங்கி யார் யாரோ வந்து போய்க்கொண்டிருப்பதாக சொன்னார்கள். இவர் நினைத்தது போல் லெட்சுமி இல்லை என்பதை அறிந்ததும் அவர்களை வெளியேற்றினார். இரண்டாவதும் சரியாக அமையவில்லை என்றபோது விரக்தியில் உறைந்து போனார். ஆனால் அவருக்கு உள்ளுக்குள் ஒரு ஆசை இருந்தது நடவுப்பாட்டு பாடும் ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அது மாமாவுக்கு பிறகு சாத்தியமற்றுப் போனது.

வேடத்துடன் வெளியே வந்தார். நேரத்தைப் பார்த்தார். பத்து மணிக்கு மேலாகியிருந்தது. பசிப்பது போலிருந்தது. வாசலில் நின்று ஊரின் முகப்பில் இருந்து இருசக்கர வாகனங்கள் எதுவும் வருகிறதா என்று பார்த்தார். பபூன் வேடமேற்று வாசலில் நிற்பதைப் பார்த்த இரண்டு சிறுவர்கள் ஆர்வத்துடன் இவர் அருகே ஒடிவந்து ஏதோ சொல்லி சிரித்தார்கள். அவர்களை ”போங்கடா” என்று விரட்டினார்.

போதை இறங்கியது போலிருந்தது. பாட்டிலைத் திறந்து திரவத்தை ஊற்றினார். ஆவுடையப்பன் பேசியது நினைவுக்கு வந்தது. சமீபகாலமாக தெருவில் உள்ள கோஷ்டிக்கார ஆட்கள் கூட இவரிடம்  சரிவரப் பேசாமல் இருக்கிறார்கள். வயதாகிவிட்டது. ”கிழவனால் இனி ஒன்றும் ஆகாது என்று நினைக்கிறார்களா? நான் ஆடாத ஆட்டமா? பாடாத பாட்டா? என் எசப்பாட்டுக்கு எதிரே நிற்பார்களா இவர்கள்”

அவர்களை நினைத்தபோது சிரிப்பாக வந்தது. செல்போனை எடுத்துப் பார்த்தார். பேட்டியெடுக்க அவர்கள் வருவதாகச் சொன்ன நேரம் கடந்து பதினோரு மணிக்கு மேல் ஆகியிருந்தது. செல்போனை எடுத்து அவர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சித்தார் முடியவில்லை. திண்ணையோரத்தில் அமர்ந்து பாட்டிலைத் திறந்து, சரக்கை ஊற்றினார். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தான் தனிமையாகி விட்டதாக உணரத் தொடங்கினார். “நான் கோமாளியல்ல ஏமாளி” என்று சொல்லிக்கொண்டார்.  மாமா சிவக்கண்ணு தலைமூச்சாக அடித்துக்கொண்டார், “நமக்கு ஏத்த மாரி நடவு நடுற பொண்ணு பாக்குறேன் கட்டிக்கடா” என்று இவர் செவி சாய்க்கவில்லை. “அவர் சொன்னதைக் கேட்டு இருக்கலாம்” என்று நினைத்தபோது கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர். வாய்விட்டு அழவேண்டும் போலிருந்தது.

ஒரு லிட்டர் ரம் பாட்டிலையும் காலி செய்திருந்தார். செல்போனை எடுத்து பேட்டியெடுக்க வருபவர்களுக்கு போன் செய்தார். நீண்ட ரிங் போய் கட் ஆகியது. நாலைந்து தடவை முயற்சித்துப் பார்த்தார். எந்த பதிலும் இல்லை. அவர்கள் வந்தால் பார்த்துக் கொள்வோம் என்று சொல்லியபடி உச்சகட்ட  போதையில் தலைகவிழ்ந்து கிடந்தார். அவரது குறட்டை சீழ்க்கையொலி எழுப்பியது. வீட்டுக்கு எதிரே இருந்த தூங்குமூஞ்சி மரத்தில் அமர்ந்து கருங்குயில் ஒன்று அவரது குறட்டைக்கு எதிர்ப்பாட்டு பாடியது.

சிவகுமார் முத்தய்யா – ஆசிரியர் தொடர்புக்கு – sivakumarsivatamil@gmail.com

சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 02

3

1) அழுகின்ற பெண்கள்.

நான் பஸ்சிற்காக நின்று கொண்டிருந்தேன். சாலையில் ஒரு பெண் அழுதுக் கொண்டே சென்றாள். பஸ்ஸிற்காக  நிறைய ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். சாலையில் நடந்து செல்கிறவர்களும் வாகனங்களில் செல்பவர்களும் அவளைப்  பார்த்துக் கொண்டே சென்றார்கள். அவள் எதற்காக அழுதுக் கொண்டே செல்கிறாள். யாரும் இறந்துவிட்டார்களா. இறந்தால்தான் அழ வேண்டும் என்று இல்லை. பல காரணங்கள் உண்டு. கணவனிடம் அடி  வாங்கி அழுதுக் கொண்டே செல்லலாம். மனிதர்கள்  மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களைக் காட்டிலும் துயரமாக  இருக்கும் நேரங்கள்தானே அதிகம். நான் பக்கத்தில் உள்ள கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி வைத்துக் கொண்டேன்.  பஸ் வந்தது. பஸ்ஸில் ஏறினேன். பஸ்ஸில் அவள் உட்கார்ந்திருந்தாள். அழுதுக் கொண்டிருந்தாள். பஸ்ஸில் கண்டக்டர் டிக்கெட்  கொடுத்துக் கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்தவர்கள் அனைவரும் அவரவர் எண்ணங்களுடன் உட்கார்ந்திருந்தார்கள். ஆட்கள் பஸ்ஸில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள். கடைசி நிறுத்தம் வந்தது. 

அவள் அழுதுகொண்டே இறங்கினாள். நானும் இறங்கினேன். எதிரே இருந்த சர்ச்சினுள் நுழைந்தாள். நானும் நுழைந்தேன். அவள் மண்டியிட்டு கண் மூடி அழுது கொண்டிருந்தாள். நான் வேறொரு பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தேன். எனக்குப் பழக்கம் இல்லாததால் மண்டியிடுவது சிரமமாக இருந்தது. அவளுக்கு என்ன துயரம் இருக்கக்கூடும். என்ன நிவாரணம் கேட்டுப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டிருக்கிறாள் என்பது அவளைத் தவிர யாருக்கும் தெரியாது. என்னுடைய கற்பனையில் வாழ்க்கையில் அவள் ஆதரவற்ற நிலையில் இருக்கிறாள் அல்லது ஒருவருடைய உடல் நலப்   பிரச்சினை காரணமாக இருக்கும் என்று தோன்றியது. அவள் திடீரென்று   கதறிக்  கதறி  அழுதாள். அழுகை நின்றது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். சர்ச்சை விட்டு வெளியேறும்போது மீண்டும் அழுதாள். அழுதுகொண்டே அந்தப் பக்கம் வந்த பஸ்சை நிறுத்தி ஏறினாள்.அவரவர்க்கு அவரவர் வேலை. நான் என் வேலையைப் பார்க்கக் கிளம்பினேன்.

*

2) மச்சம்

அவனுடைய மனைவி உதட்டிற்குக் கீழே ஒரு மச்சம் வைத்துக்கொள்வாள். ‘எதற்காக’ என்று அவன் கேட்கும் போது ‘அழகுக்காக’ என்பாள். அவனுக்கு எரிச்சலாக இருக்கும். திருமணமான ஒரு மாத காலத்திலேயே அவர்களுக்குள் இது தொடர்பாக சண்டை வந்துவிட்டது. ஆனால் அவள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. விவாகரத்து செய்து கொள்வோம் என்று கூடப் பேசிப் பார்த்துவிட்டான். ‘நான் எதற்காக ஒப்புக் கொள்ள வேண்டும்’ என்று சண்டைக்கு வருவாள். ஆனால் மச்சம் வைப்பதை நிறுத்தமாட்டாள். தன்னுடைய பிரச்சினையை  வெளியே சொல்வதற்கு அவனுக்கு சங்கோஜமாக இருக்கிறது. ஆனாலும் ஒரு நண்பனிடம் சொன்னான். மச்சம் அழகாகத்தான் இருக்கிறது என்று அவன் சொல்லி விட்டான்.  மனநல மருத்துவரிடம் அவளைக் கூட்டிச் செல்லலாம் என்று கூட அவனுக்குத் தோன்றியது. அவளிடம் இதைச் சொன்னாலே பெரும் சண்டை வந்துவிடும். 

பிறகு அவனே மன நல மருத்துவரிடம் சென்றான். ‘ஏன் மச்சம் இருந்தால் என்ன.  மச்சம் நன்றாகத்தானே இருக்கும்’ என்றார்  அந்த மருத்துவர். ‘அவள் மச்சம் வைத்துக்  கொள்வதை விட மாட்டேன் என்கிறாள். ஆனால் என் மனதுக்கு அது  பிரச்சினையாக இருக்கிறது. என் மனதில் ஏதோ  கோளாறு இருக்கிறது. என்ன  என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள்தான் என் மனக்கோளாறை  சரி செய்ய வேண்டும்’ என்று மருத்துவரிடம் கூறினான். அவனை அவர் விநோதமாகப் பார்த்தார். பிறகு ‘முகத்தில் மச்சம் உள்ள யாராவது உங்களை பாதித்து இருக்கிறார்களா’ என்று கேட்டார். யோசித்துப் பார்த்துவிட்டு ‘அப்படி யாரும் இல்லை டாக்டர்’ என்றான்.

‘உங்கள் மனக்குழப்பத்திற்கு மாத்திரை தருகிறேன். அடுத்த வாரம் வாங்க’ என்றார். வீட்டிற்கு வந்துவிட்டான்.

இரண்டு நாட்கள் கழித்து அவள் மச்சம் வைத்துக் கொள்ளாமலிருந்ததை பார்த்தான்.  அவன் அது பற்றிக் கேட்டபோது ‘மச்சத்திற்க்காக நாம் ஏன் சண்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. விட்டுவிட்டேன்’ என்றாள்.  இப்போது அவனுக்கு, அவள் மச்சத்தோடு இருக்கும்போதுதான் அழகாக இருந்ததாகத் தோன்றியது.

***