அலைகள் ஆக்ரோஷமாக வந்து மோதியபடியிருந்த கரையில் இரண்டு தென்னைகளுக்கிடையேயான சொற்ப நிழலில் அமர்ந்திருந்தனர். முகவாய்க்கட்டையைக் கால்முட்டிகளில் தாங்கி தொலைவில் கடலில் குளித்துக் கொண்டிருப்பவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். கைகள் கரை மணலை அளைந்து கொண்டிருக்க கடற்காற்றும் அவள் தலைமுடிகளில் சிலவும் தீராதவொரு விளையாட்டில் ஈடுபட்டிருந்தன. மெல்லிய உடல்வாகு, அநாதரவான குழந்தையின் ஏக்கம் பீடித்த முகம், ஆனால் தீர்க்கம் மின்னும் கண்கள். அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். குளிப்பவர்களுக்கு அப்பால் அலைகளற்ற வெளிர்நீல நீர்ப்பரப்பு முடிவற்றுப் பரந்திருந்தது. நீர்வெளியுள் இறங்கியிருந்த தொடுவானமும், அதில் நிழல்போல் ஒட்டியிருந்த மீன்பிடிப் படகுகளும் கடலெனும் சித்திரத்துக்குக் கூடுதல் அர்த்தம் சேர்த்தன.
பலூன்காரர்கள், ஐஸ்கிரீம் விற்பவர்கள், பத்து ரூபாய்க்கு இருபது ரவைகள் வாங்கி விளையாட்டுத் துப்பாக்கியால் பலூன்களைச் சுடுபவர்கள், விரும்பிய இடங்களில் விரும்பிய கோணங்களில் நின்று புகைப்படமெடுப்பவர்கள், சிறு ராட்டினங்களில் சுற்றும் குழந்தைகள் என உற்சாகமாயும் பரபரப்பாயும் ஒரு சுற்றுலாத்தலத்தின் கடற்கரையாக அது இருந்தது. ஒழுங்கான வரிசைகளில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர்களும் நேர்த்திக்கடனாக மொட்டை போட்டுக் கொண்டவர்களின் சந்தனம் தடவிய தலைகளுமே ஒரு புண்ணியத் தலமும் அங்கிருப்பதை உணர்த்தின.
படபடத்த அவள் இமைகளை அவற்றின் வசீகரிக்கும் கருமையைப் பார்த்தான். இன்று என்னவோ அவளைப் புதிதாகப் பார்ப்பது போலிருந்தது. பேயாட்ட அலைவுகள் அடங்கி இப்போதுதான் அவன் மனதின் பெண்டுலம் அமைதியில் லயம் கொள்ள ஆரம்பித்திருந்தது. கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் எழுப்பிய ஆரவாரக் கூச்சல் அவளுக்குள் உற்சாகத்தைத் தூண்டியது. கலக்கம் தெளிந்து கொண்டிருந்த அவனிடம் அவள் கேட்டாள், “கடல்ல குளிக்கலாமா?”
முகத்தைக் கழுவி இப்போதுதான் கொஞ்சம் துயரத்தைப் பூசிக்கொண்டாற் போன்ற தோற்றத்துடன் முதுகலை முதல் வருடத்தில் அவள் சேர்ந்தபோது அவன் இரண்டாவது வருடத்தில் இருந்தான். அந்த முகத்துக்குப் பொருந்தாத வகையில் அவள் கண்களில் மட்டும் எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருந்தது. எதேச்சையாக அவளைக் கடந்துபோன தருணங்களில் ஒரு வெளிச்ச முத்தாக, இருளில் கணப்பொழுது ஒளிர்ந்து பின் விலகிப் போய்விடும் மின்மினியாகத் தோன்றினாள். சிலநேரம், மனதின் ஆழத்தில் ஏராளம் வைத்துக் கொண்டு பகிர யாருக்காகவோ காத்துக்கொண்டிருப்பவளைப் போலிருந்தாள்.
அந்த வருடம் கல்லூரியில் கல்சுரல்ஸ்க்கு அவன் பொறுப்பாக இருந்தான். வருடத்தில் இந்த நாட்களை மாணவர்கள் எல்லோருமே ஆர்வமாய் எதிர்பார்த்தார்கள். கலைநிகழ்ச்சிகள் வழியாக தங்களது பிம்பங்களைக் கட்டமைத்துக்கொள்ள திறமைசாலிகளும் வகுப்புகளின் வறட்சியிலிருந்து தப்பித்து ஆடல் பாடல் நடனம் எனப் பொழுதை சுவாரஸ்யமாய் கழிக்க மற்றவர்களும் வரவேற்றுக் கொண்டாடிய நாட்கள் அவை. ஒருநாள் மாலைப்பொழுது அவனிடம் வந்து அப்போது பிரபலமாக இருந்த ஒரு சினிமாப் பாடலுக்கு தான் நடனமாடப் போவதாகச் சொன்னாள்.
“சரி” என்றுவிட்டு கிளம்பப் போனவளிடம் “நீங்க கிறிஸ்டியனா?” எனக் கேட்டான். அது கிறிஸ்தவப் பெயர்தான் என்பதை அவன் அறியாமலில்லை. ஆனாலும் அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டுமென தோன்றியது. சற்று சங்கோஜத்துடன் “ஆமாம்” என்றபோது அவள் கண்ணிமைகள் நுட்பமாய்ச் செய்த சிறு சீன கைவிசிறிகளைப்போல அவனைப் பார்த்து விரிந்தன.
அந்தப் பார்வை அவனை சலனப்படுத்தியது அவள் விழிகளைப் பார்க்காமலேயே கேட்டான். “சினிமாப் பாட்டு இல்லாம வேற ஏதாவது பாட்டுக்கு ஆடலாமே… பாரதியார் பாட்டு, ஃபோல்க் சாங். ம்… எங்கிட்ட ஒரு கேசட் இருக்கு. திவ்ய பிரபந்தம், சுத்தானந்த பாரதியார்னு நல்ல பாட்டுங்க, டான்ஸுக்கு ஏத்த மாதிரி ட்யூன்ஸ், வித்தியாசமாவும் இருக்கும்…” அவன் தன்னையறியாமல் பேசிக்கொண்டே போனான். அவள் எந்தப் பதிலுமின்றி சங்கோஜமான ஒரு முறுவலுடன் வருகிறேன் எனப் போய்விட்டாள். தன்னைக்குறித்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இப்படி எந்தப் பெண்ணிடமும் அவன் பேசியதில்லை, அவளோடு பேசிக் கொண்டேயிருக்க வேண்டுமென்ற ஆவல் எங்கிருந்து கிளர்ந்து வருகிறது என யோசித்துப் பார்த்தான். காரணங்கள் தெளிவற்று இருந்தன.
ஆனால் கல்சுரல்ஸில் அவள் பெரிய ஆச்சரியத்தைத் தந்தாள். நடுவில் ஒருமுறை இவனிடம் வந்து அவள் கேசட் வாங்கிப் போனதை சீனியரான அவன் பேச்சை மதிப்பதான ஒரு பாவனை என்றுதான் நினைத்திருந்தான். அன்று அவள் சினிமாப் பாட்டுக்கு ஆடவில்லை. கானம் கிருஷ்ணய்யரின் ‘ஜகத் ஜனனி’க்கு அவள் பிடித்த அபிநயங்களும் வெளிப்படுத்திய பாவங்களும் தொழில்முறை நாட்டியக் கலைஞரையும் விஞ்சுவதாக இருந்தன. அந்த மாலைப்பொழுதில் ‘சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி’யாய் எல்லார் மனதிலும் நிறைந்தாள்.
நேரில் பாராட்டிய ஒரு நாளில் “எல்லாம் உங்களால்தான்” என்றாள், “நீங்க அன்னைக்குச் சொன்னது, அந்தக் கேசட் கொடுத்தது… நீங்க அப்படி ஒரு விஷயத்தைச் சொல்லாமப் போயிருந்தா நான் சினிமாப் பாட்டுக்குத்தான் ஆடியிருப்பேன், ஏதாவது குத்தாட்டம் மாதிரி….” அவன் சலனத்தில் ஆழத்தில் கல்லொன்று விழுந்தது. அவளை அவன் காதலிக்கத் தொடங்கியிருந்தான். தீவிரமாய் மனம் அவளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவள் மனதிலும் அவன் மட்டிலான சலனமொன்று தொடங்கியிருப்பதை அறிய அவனுக்கு நீண்டநாட்கள் ஆகவில்லை. அடிக்கடி சந்தித்துப் பேசினார்கள். ஒருநாள் தைரியத்தைத் திரட்டி அவளைக் காதலிப்பதாகச் சொன்னான். பதிலேதும் சொல்லாமல் போனவள் நான்கு நாட்களாக அவனைப் பார்க்கவில்லை. அவன் மனமுடைந்து போனான். ஐந்தாவது நாள் அவளே அவனைத் தேடி வந்தாள். வேகமாக அவன்முன் வந்து நின்றவள் அவனையே உற்றுப் பார்த்தாள். அவள் முகத்தில் என்ன இருக்கிறதென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சட்டென்று அவன் கையைப் பற்றிக் கொண்டவள் “ஐ லவ் யூ டூ” என்றாள். அப்போது அவள் கண்கள் கலங்கின, எப்போதையும்விட மிகு துயரில் அவை கரைவதைப் பார்த்தான்.
நகரத்துப் பூங்காவில் நெடிமிக்க பூக்களை உதிர்த்துக் கொண்டிருந்த காட்டுவாகை மரத்தடியில் அமர்ந்திருந்தபோது தரையோடு படிந்திருந்த அருகம்புற்களை அனிச்சையாகப் பிடுங்கியவளாக “அரவிந்த்…” என்றாள். சற்றுநேரம் அமைதியாய் இருந்தவள் தொண்டையைச் செருமிக்கொண்டு அந்தக் கண்களின் குறுகுறுப்பு மாறாமலே சொன்னாள், “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடிச்சு”. அந்த வார்த்தைகள் அவனுள் இறங்க சில வினாடிகள் பிடித்தன. “விளையாடறியா?” என்றவனிடம் இல்லையென்று அழுத்தமாகத் தலையசைத்தாள். வேர்களை பூமியோடு இறுக்கிக்கொண்ட அருகம்புற்கள் இணுக்குகளாய் அறுபட்டு அவள் கையோடு வந்தன. தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் அவன் மனம் உள்ளுக்குள் நடுங்கியது, கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. பிறகு அந்த நடுக்கம் ஒருவித ஒவ்வாமையாகயும் எரிச்சலாகவும் பதற்றமாகவும் மாறியது. இல்லை சும்மா விளையாடினேன் என்று சொல்வாளென்று காத்திருந்தான். அவளோ நிதானமாக சொல்லத் தொடங்கினாள். இளங்கலை முடித்ததும் வீட்டினர் கட்டாயப்படுத்தி உறவினர் ஒருவருக்குத் திருமணம் செய்து வைத்தது, ஆறு மாதமே நீடித்த அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது பற்றியெல்லாம் மிகச் சுருக்கமாகச் சொன்ளாள். உண்மையிலேயே அவன் குலைந்து போனான். இதெல்லாம் உண்மைதானா எனக் கேட்க நினைத்தான், அவளது பேச்சுப் பொய்யில்லை என்பதற்கு நிரூபணம் தேவையிருக்கவில்லை. அதற்குப் பின் எதுவும் பேசிக் கொள்ளாமலே விடுதிக்குத் திரும்பினர். அப்போதிருந்து அவனுள் ஓயாமல் அலைகள் புரள ஆரம்பித்தன.
இரண்டு மாதங்கள் கடந்தன, இடையில் அவளைப் பார்க்கவோ பேசவோ அவனுக்கு மனமில்லாமல் இருந்தது. எதேச்சையாகக்கூட அவர்களிருவரும் எதிரெதிரே சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் இந்த இரண்டு மாதங்களும் சதா அவளைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தான். ஒரு பெண், ஏற்கனவே மணமானவள், அந்த உறவின் நிமித்தம் ஒரு ஆணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டவள் என்று அறிகையில் மனம் ஏன் இடறுகிறது, அவள் மீதிருந்த ஈர்ப்பும் பிரியமும் இப்போது ஏன் அருவருக்கின்றன எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். ஆனால் பரஸ்பரம் ஒரு ஆணும் பெண்ணும் ஆத்மார்த்தமாக விரும்புவதில் இந்த விஷயங்கள் ஏன் குறுக்கிட வேண்டும், அவற்றை ஏன் அவன் பொருட்படுத்த வேண்டும். சுய தர்க்கம், விவாதம், கோபம், கழிவிரக்கம் என நாட்கள் கடந்தன. மனம் எப்போதும் பதற்றத்திலிருக்க சிந்தனை கனன்றபடியிருந்தது. ஒருநாள் விடியற்காலை தீர்மானத்துடன் எழுந்தான், உடனே ஜான்ஸியைப் பார்க்கவேண்டும். அவள் விடுதியில் இல்லை. உடம்பு சுகமில்லையென்று விடுப்பில் ஊருக்குச் சென்றவள் இன்னும் திரும்பவில்லையென்று சொன்னார்கள். அவன் துணுக்குற்றான். எப்படியோ அவள் வீட்டு முகவரியை வாங்கினான்.
எட்டுமணி நேரம் பயணித்து அவள் ஊரில் இறங்கினான். இணையான இரண்டு இரும்புக் கோடுகள் வெயிலில் மினுமினுத்தபடி தொடுவானம் வரை நீண்டிருந்த ஒரு ரயில்பாதையையொட்டி அமைந்திருந்தது அவள் வீடு. அவனை அவள் இயல்பாக வரவேற்றாள், வீட்டினருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். வேறு ஒரு வேலையாக இந்த வழியாக வர நேர்ந்தபோது சும்மா அவளைப் பார்த்துவிட்டுப் போகலாம் என வந்ததாகச் சொன்னான். உடம்பு பரவாயில்லையா, கல்லூரிக்கு எப்போது வருகிறாய், வருவதாக இருந்தால் நானும் நேரே கல்லூரிக்குத்தான் போகிறேன், என்கூட வரலாமே எனக் கேட்டான். ஒரு நிமிடம் யோசித்தவள், வருகிறேன் என்றுவிட்டு உடன் பயணத்துக்குத் தயார் செய்துகொண்டு கிளம்பினாள். அவள் வீட்டில் அவனை யாரும் விகல்பமாகப் பார்க்கவில்லை.
பேருந்தில் இருவரும் எதுவும் பேசாமலே வந்தார்கள். அவள் விலகியோடும் மரங்களையும், அசைந்து மறையும் வயல்களையும் பார்த்தபடி வந்தாள். இடையில் பேருந்து ஒரு ஊரில் நின்றது. ஏதோ நினைத்தவன் “இங்கே இறங்கிடலாம், வா” என்றபடி அவள் கையைப் பிடித்தபடி இறங்கினான். அது கடலோரம் அமைந்த ஒரு புண்ணியத் தலம். அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தபின் இருவரும் கடற்கரைக்கு வந்தனர்.
தென்னைகளுக்கிடையே கடலைப் பார்த்து அமர்ந்திருந்தபோது அவன் சிரித்தபடி சொன்னான், “கடலோட இந்த ஓய்வின்மை எனக்கு எப்பவுமே பதற்றம் தர்றதா இருக்கு. கடலப் பார்த்தபடி கரையில என்னால அமைதியா உக்கார முடியறதில்லை. என்னோட பதற்றத்த கடலோட இந்த அலையடிக்கிற பதற்றம் அதிகமாக்கிடுது”. இதை அவன் சொல்வது முதல் தடவையில்லை. இதுவரை அவன் சென்றிருந்த எல்லாக் கடற்கரைகளிலும் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமாக உடனிருந்தவர்களிடம் இதைச் சொல்லியிருக்கிறான். பதற்றம் மிக்கவன் என்று அவன் முகத்தை அவன் செயல்களைப் பார்க்கும் யாரும் சொல்ல மாட்டார்கள். பாவனை எனத் தோன்றாத ஒருவித நிதானம் அவன் தோற்றத்திலும், பேச்சிலும் செயல்களிலும் எப்போதுமே இருந்தது. அவனோடு பழகிய இந்த நாட்களில் எதற்காகவும் அவன் பதறி நின்று அவளும் பார்த்ததில்லை.
அவள் அவனை நோக்கித் திரும்பினாள், கடற்காற்றுடன் விளையாடிக் கொண்டிருந்த தலைக்கேசத்தை பின்னால் தள்ளியபடி வாஞ்சையுடன் கடலைப் பார்த்தபடியே சொன்னாள், “அரவிந்த், நாம எங்கிருந்தாலும் கடல்சூழத்தான் இருக்கோமில்லையா. ஆழிசூழ் உலகுங்கிறது கருணை பார்த்து கடல் நமக்கு விட்டுத்தந்த துண்டு நிலங்கள்தானே, அது மேலதானே மனுஷ வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. இந்தக் கடல், அலைகள், அதனோட உப்பு எல்லாம் நமக்குள்ளேயும் இருக்கு, பூர்வீகத்துல கடல்லருந்து வந்தவங்கதானே நாமெல்லாம். அப்புறம் இந்த உலகத்தில ஒவ்வொரு மனுஷனும் ஒரு நீர்வெளி. சிலர் கடல், சிலபேர் குட்டை.” அவள் சிரித்தாள்.
அவன் ஆச்சரியப்பட்டான், கடலைப் பற்றி இவ்விதமாக இதுவரை யாரும் அவனிடம் பேசியிருக்கவில்லை. இவளுக்குள் இவ்வளவு ஆழமா? கடலை அவனாலும் நெருங்கி உணர முடியும் போலத் தோன்றியது. அதேநேரம் வாழ்வெனும் சமுத்திரம் பற்றிய அடிப்படைகளும் அவனுக்குத் தெளிவுபட ஆரம்பித்தன. அவனொரு கடலாகவே இருக்க விரும்பினான், அற்ப விஷயங்களைச் சட்டை செய்யாது பிரியத்திலும் காதலிலும் விரியும் ஒரு கடலாக. மெல்ல அவனது கடல் கொந்தளிப்புக் குறைந்து கரைகள் அகல ஆரம்பித்தன.
மெதுவாகப் பதற்றம் தணிந்துகொண்டிருந்த அவனிடம் அவள் கேட்டாள், “கடல்ல குளிக்கலாமா?”
தயங்கி அவன் கரையில் நின்றிருக்க ஓடி அவள் கடலில் இறங்கினாள். பாதம் கூசும்படி கீழே கரைகிற மணலும் எழும்பிவந்து உடலை மோதும் அலைகளின் விளையாட்டுமாய்க் கடலில் குளிப்பது அவளுக்கு ஆனந்தமாயிருந்தது. கைகளைப் பின்னால் கட்டி அண்ணாந்து கண்களை இடுக்கிச் சூரியனைப் பார்த்தபடியிருந்தவனை பெயரைக் கூப்பிட்டு அழைத்தாள். வெளிர்நீலவண்ணச் சுடிதார் நீரில் நனைந்து அடர்வண்ணமாகியிருக்க வெளித்தெரிந்த அவள் அங்கங்களுக்கு பளபளப்பு கூடிவிட்டிருந்தது. தயங்கித் தயங்கி கடலுக்குள் இறங்கினான். அவனுக்கு இதுதான் முதல் கடல் குளியல். கடலின் அலை நுரைக்கும் பதற்றத்துக்குள் அவன் நின்றான். இடுப்புவரை கடல்நீரின் குளிர். அதற்குமேல் உடல் பதறியது. பரீட்சித்துப் பார்க்கும் விதமாய்க் கடலைக் கைகளில் அள்ளினான். விருப்பமின்றியே முங்கினான். பிறகு மெதுவாகக் கடலிடம் தன்னைக் கொடுத்தான். கண்களிலும் நாவிலும் கடலின் உப்பை உணர்ந்தான். கடலுக்குள்ளாக நீந்தினான். அலை பெரிய சவால். அவனையது புரட்டிப்போட்டது. நிலைகுலைந்து வீழ்ந்து தள்ளாட்டமாய் எழுந்தான், மறுபடியும் வீழ்ந்து மறுபடியும் எழுந்தான். கடல் விளையாட்டின் விதிகள் அவனுக்குப் புரிய ஆரம்பித்தன. கடல் தண்ணீர்தான், பரந்த ஆகிருதியாலும் காற்று எழுப்பித் தரும் அலைகளாலும் முரட்டுத்தனம் கூடிவிட்ட தண்ணீர். காலில் எதுவோ தட்டுப்பட்டது. தலைகீழாகி கடலின் தரையைத் தொட்டு அதை எடுத்தான். ஒருபாதி பழுப்பும் வெள்ளையுமாய் வரிகளோடி மறுபாதி சுண்ணாம்பாய் வெளுத்திருந்த சங்கு. மூடினால் உள்ளங்கைக்குள் அடங்கிவிடுமளவுக்கு சிறியதுதான், ஆனால் அழகாயிருந்தது. தண்ணீருக்கு வெளியே வெளிச்சத்தில் மினுமினுத்தது.
சங்கை எடுத்துக்கொண்டு கரைக்கு வந்து அமர்ந்தான். குழந்தை போன்ற குதூகலத்துடன் அவள் குளித்துக் கொண்டிருந்தாள். கைகளிரண்டையும் பக்கவாட்டில் நீர்மட்டத்துக்கு மேலாக நீட்டி ஓசையெழும்ப நீரைத் தட்டிக் கொண்டிருந்தாள், ஒரு நீர்ப்பறவை சிறகடிப்பதுபோல. அவ்வளவு சீக்கிரத்தில் கடல் அவளை விடாது என்று தோன்றியது. இவன் வெளியேறிவிட்டதைப் பார்த்தவள் தண்ணீருக்குள் இருந்தபடியே ஏன் கிளம்பிட்டீங்க என்றாள். கையை உயர்த்தி சங்கைக் காட்டினான். வெளியே வர எத்தனித்தவளிடம் “பொறுமையா குளிச்சுட்டு வா, நான் வெயிட் பண்றேன்” என்றபடி போய் தென்னையடியில் அமர்ந்தான்.
அவள் கரையேறி வந்தபோது அந்த சங்கைக் கொடுத்தான். உற்சாகத்துடன் வாங்கிக் காதில் வைத்து அது ரீங்கரிக்கிறதா எனப் பார்த்தாள். இருவரும் அறைக்கு வந்து பால்கனியில் நின்று கடலைப் பார்த்தனர். மேலிருந்து பார்க்கும் கோணம் கடலுக்கு இன்னும் அழகைத் தந்திருந்தது. இந்தப் பக்கம் பொங்கிக் கொண்டிருக்கும் கடல், அந்தப் பக்கம் அந்திச் சூரியனின் பின்னணியில் தேவாலயத்தின் உச்சி. கன்னித்தன்மை கெடாமல் தான் ஈன்ற குழந்தையை கையிலேந்தி பெண் தெய்வம் பிறைமாடத்தில் சிலையாக நின்றாள். தேவாலய மணி ஒலித்து மக்கள் உள்ளே விரைந்தனர்.
பால்கனி கிராதியில் சாய்ந்திருந்தவளின் தோள்மீது கைவைத்து அணைத்தவன் தன் நாவால் அவள் கன்னங்களை வருடினான். அவள் கன்னங்களிலும், காது மடல்களிலும், உதடுகளிலிலுமிருந்த உப்புச்சுவை அவனுக்குக் கிறக்கம் தந்தது. “யூ ஆர் ஸோ ஸால்ட்டி” என்றபோது அவள் சிரித்தாள். அவளைக் கைகளில் வாரிக்கொண்டு, அவள் நாவைத் தன் நாவால் தொட்டபோது மூளைவரை அதன் குளிர்ச்சியை உணர்ந்தான். உப்புச்சுவையும் குளிர்ச்சியுமாய் அவன் மறுபடி கடலில் மூழ்க ஆரம்பித்தான். பால்கனியிலிருந்து விலகி அறைக்குள் போகையில் “இனிமே கடல் எனக்குப் பதற்றம் தராது” என்றான். அப்போது கைகளில் அவன் கடலை ஏந்தியிருந்தான்.
1980-களின் மத்தியிலும் அதன் இறுதி ஆண்டுகளிலும் இந்திய அளவிலும் உலக அளவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், 90களின் தொடக்கத்தில் நிகழ்ந்த தாராளமயவாதம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஒரு சராசரி இந்தியனின் மனதை தன்னம்பிக்கையுடையதாக, மாற்றத்தை எதிர்கொள்ளத்தக்கதாக மாற்றியுள்ளது. அதற்கு முன்பான சராசரி இந்தியக் குடிமகனது ஒருநாள் வாழ்வென்பது பல்வேறு சிடுக்குகளைக் கொண்டதாகவும், அவநம்பிக்கைகளை உடையதாகவும் இருந்து வந்தது. இம்மனநிலை கலை இலக்கியச் செயல்பாடுகளிலும் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது. உதாரணமாக தமிழில் 1980-ல் எழுதவந்த யூமா வாசுகி, எம்.யுவன், பா.வெங்கடேசன், மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட சில கவிஞர்களின் கவிதைகளைத் தவிர இன்னபிறக் கவிஞர்கள் தங்களின் படைப்புகளைச் சோதனைகளுக்கு ஒப்படைக்கத் தயங்கியும், தன் சமகாலத்தை படிபெடுப்பதில் கவனம் செலுத்தியதையும் அக்காலகட்டத்தில் தீவிரமாக இயங்கிய சில சிறுபத்திரிக்கைகளில் காணலாம். இதற்கு இறுக்கமான படிம அடுக்குகள் மற்றும் எமோஷனல் டைப் கவிதைகள், காதல் கவிதைகள் மிகவும் உதவிகரமாக இருந்தன.
அதே சமயத்தில் தினமணிக் கதிர், இந்தியா டுடே போன்ற வெகுஜன மற்றும் இடைநிலை இதழ்களில் நவீன கவிதைகளுக்கு சில பக்கங்களை ஒதுக்கவும் செய்தனர். இது புதிய வாசகர்கள் நவீனத்தின் பக்கம் திரும்ப வாய்ப்பளித்தது
இதற்குப்பிறகான வருடங்களில் சராசரி தமிழ் குடிமகனது வாழ்விலும், வாசகனது வாழ்விலும் பொருளாதார அளவில் பெரிதான மாற்றங்களேதும் ஏற்படவில்லையெனினும், வழிவழியான அரசியல் மற்றும் பொருளாதாரச் சுரண்டல் முறைகளில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. எனவே உத்தேசமாக மதிப்பிட்டாலும் கூட இக்காலகட்டம் மாற்றத்திற்கானது என்றே கூறமுடியும், ஏறக்குறைய 90களின் தொடக்கம் மற்றும் மத்தியில் எழுதத் தொடங்கிய பல்வேறு கவிஞர்கள் சுயாதீனமாக இல்லாவிட்டாலும் தங்களுக்கு முன்னிருந்த தளைகளில் இருந்து சற்றே விடுபட்டு, உத்வேகமாக இயங்கத் தொடங்கினர். அது கவிதை பரப்பில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. 91ல் பிறந்த துரை தான் பிறந்த தசமத்தில் இயங்கிய நவீனத்துவத்தை செறிவான அளவில் உள்வாங்கியிருக்கிறார் என்பதே இத்தொகுப்பின் மூலம் காணமூடிகிறது. அதுவே அவரது பலமாகவும் தெரிகிறது. இத்தொகுப்பின் முதல் இரண்டு கவிதைகள் இப்படி இருக்கிறது
1. எங்களின் உவர் நிலத்தில் வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள் ஏழடி இருப்பாள் எனக்குத் தெரிய முக்கால் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அலைபாய்கிறாள் காற்று வாங்குகிறாள் நீராடுகிறாள் எப்போதாவது புரண்டு படுப்பாள் அப்போதெல்லாம் கடலும் எதிர்திசைக்கு மாறிக்கொள்ளும்.
2. மொத்தமாக பதுங்கு குழிகளில் வந்து விழுந்தார்கள் ‘அப்பா நாம் ஏன் பாம்பைப்போல படுத்தபடியே நகருகிறோம்’ ‘இறைவன் வானிலிருந்து திராட்சைகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே! அவை புளிக்கும் திராட்சைகள் உனக்குப்பிடிக்காதல்லவா’
இக்கவிதைகளில் இயங்கும் காலமும், நிலமும், வாழ்வும் இரண்டு விதமானது. முதல் கவிதையில் ‘உவர் நிலத்தில் வெட்டுண்ட காய்ந்த மரத்தி’ என்ற நில மூதாதையின் மீதான நம்பிக்கை, வாழ்க்கையையும், அதன் போக்குகளையும் முற்றிலுமாக மாற்றும் என குறியீடாக உணர்த்துகிறது.
அடுத்த கவிதையில் அதே போன்ற நிலத்தில்; ஒரு பதுங்கு குழியில் பதுங்கும் தகப்பனதும் மகளதும் உரையாடல் வாழ்வின் அபத்தத்தைக் கூறி அதிர்ச்சியளிக்கிறது.
ச.துரையின் கவிதைகளின் மொழி ஒருவித சந்தத் தன்மையுடனும், அமைதியும் ஒழுங்கும் கூடியதாகவும் உள்ளது. இத்தகைய மொழியின் மூலம் பெரிய அதிர்ச்சி மதிப்பீடுகளை உருவாக்கி, தம் பிம்பத்தை பிரதானப்படுத்தும் தன்மையான கவிதைகளை நோக்கி நகர வாய்பிருந்தும் துரை அத்தகைய முயற்சிகளில் ஈடுபடாதது ஆறுதலளிக்கிறது. எனவே கவிஞரா கவிதையா என்ற தளத்தில் துரையின் முகம் பின்னின்று கவிதை முன்னெடுக்கிறது. இத்தகையக்கூறுகள் பிற்காலத்தில் அவரை செம்மைபடுத்த உதவிடும்.
‘இரண்டு ஒன்று மூன்றாக நடனமாடுபவர்கள்’ என்ற கவிதையில்; என் காதலனை நீங்கள் சந்திப்பீர்களா? நிச்சம் மகளே,
‘விலாங்கு மீன்கள் வாங்கி வருவேன் உணவில் கலந்தாடலாம்’ என்ற கவிதை வரிகளும், பக்கம் 15-ல் உள்ள ‘நாடியில் இருந்து கீழ்நோக்கி’ என்ற கவிதையின் இரண்டு வேறுவிதமான சொல்லல் கூறுமுறைகளை ‘எனக்கு தலை சுற்றுவது மாதிரி இருக்கிறது வயிறே’ என் ஒற்றை வரியில் மூலம் அக்கவிதையை நேர்கோடாக பிரித்திருப்பார். இது அவரது சமகாலக்கவிஞர்களை நிச்சயம் பொறாமைப்பட வைக்கும்.
மேலோட்டமான பார்வையில் இக்கவிதைகளில் காணக்கிடப்பவை அனைத்தும் உத்தியாகவே தோன்றும் ஆனால் உண்மை அதுவல்ல, அத்தகைய உத்திகள் பெரும்பாலும் வாசகனை மிரட்சிக்குள்ளாகுவதாகவோ, சலிப்படைய வைப்பதாகவோ இருக்கும். ஆனால் இங்கு அவை நவீனத்துவத்தின் பூரணமான கவித்துவ தொனியை எட்டியிருக்கிறது.
கரையில் அமர்ந்திருப்பவன் பேசவேயில்லை அலைகளைப் பார்க்கிறான், அலைகள் குரைக்கின்றன குரைக்கும் அலைகள் எதைத்தான் கேட்கின்றன, அவன் எதையும் பேசவில்லை எழுந்துபோய் தடவிக்கொடுக்கிறான் அவை எக்கி எக்கி இடுப்புக்கு மேல்வரை நக்கிக்கொடுக்கின்றன. என்ற கவிதையை உதாரணமாகக் காண்கிறேன்.
‘என் அன்பின் சிப்பியை யாரும் திறக்க முன்வரவில்லை அவை கடலுக்குக் கீழே ஓடிக்கொண்டிருக்கின்றன ஒட்டமும் நடையுமாக என்ற தேவதச்சன், தேவதேவன் போன்ற மூத்த கவிகளின் வரிகளையும் கூட எனக்கு நினைவிற்கு கொண்டு வந்தது.
தான் வாழும் நிலத்தினை பற்றி புரிதலுடன்,அங்குள்ள மனிதர்கள் மற்றும் பொருட்கள் விலங்கினங்கள், தட்பவெப்பம், உண்ணும் முறை, வணங்கும் தெய்வங்கள், அரசதிகாரம், ஆட்சியாளர்களென இந்நெய்தல் திணைக் கவிதைகளின் முலம் ச.துரை தன் நிலம் தன்மீது சுமத்தும் அத்தனை பாரங்களையும் நுண் சித்தரிப்புகளாக காட்சிப்படுத்தியிருப்பதை பின்வருமாறு பல்வேறான கவிதைகளின் வாயிலாக காணலாம்..
நெய்தல் ஆட்டிறைச்சி – உண்ணும் உணவு முறை நெய்தல் நாய்கள் – விலங்கு நல்ல பாடு வராதென்று இயல்பான தமிழில் பேசினார் – நிலம் சார்ந்த மொழி. ‘எப்படி இந்த ஆட்டைப் பிடித்தீர்கள்’ ‘வலைவீசித்தான்’- வாழ்வியல் முறை
சார்லஸ் உயிர்தெழுந்த இந்த ஆறுமணி நேரத்தில் நான்கு வாலை மீன்களை பிடித்திருக்கிறார். இருபத்தியொரு முறை கர்த்தரை கடலில் வீசியிருக்கிறார் – வணங்கும் தெய்வங்கள் என அழகியல் தன்மையோடும், வாசிக்கவும் அதிலிலிருந்து புதியதானவொன்றைப் பெற முடியுமாறும் இருப்பது வசகனுக்கு நல்ல அனுபவப்பங்கீடாகவும், புதிய திறப்புகளுக்கான வாயிலாகவும் இருக்கும்.
’விடிவெள்ளிகளில் கடல்மீதுவிழும் வானை என்ன செய்யப் போகிறாய்? தூண்டில் போடுவேன் பெருத்த நிலச்சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு போவேன் வாங்குவோர்க்கு நிலாவை இனாமாகக் கொடுப்பேன் ஈன்ற தொகையில் முப்பொழுதும் மூன்று பக்கங்களென அசைவாடி புணர்ந்து திளைப்பேன் பின்பொருநாள் இறப்பேன் சவுக்கைக் காட்டின் வயிறு மாதிரியான திடலின்மேல் வியாபித்த வானம் பார்த்தபடியே.
இக்குரல் எனக்கு இவரின் பல முன்னோடிக் கவிஞர்களை நினைவுபடுத்துகிறது. அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ஷங்கர்ராமசுப்ரமணியன், இசை போன்ற கவிஞர்களிடமிருந்து பகடி, நுண் அரசியல், நில விவரணைகள் போன்றவற்றுடன் ஒத்துள்ளார். ஆனால் இவர்கள் அனைவருமே தங்களைக் குறிப்பிட்ட திணை எல்லைக்குள் சுருக்கிக் கொண்டவர்களில்லை. ச.துரையிடம் இது பாதகமான அம்சமாக இல்லையென்றாலும் சற்று விலகி கவனிக்க வேண்டும் மேலும் திருகல் மொழித் தன்மையில்லாத, இக்கவிதைகள் அவரை மிக்சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும். நெய்தலை தன் பண்பாட்டு வெளியாகக்(Cultural Space) கருதி அதனூடான வாழ்வுமுறைகளை பதிவு செய்திருப்பதில் ச.துரை வெற்றி பெற்றிருக்கிறார் என்பதே என் அனுமானம்.
இவரது பெரும்பாலானக் கவிதைகளில் காலமும் வெளியும் (Time And Space) காணப்படுவதும், நிலமும் பொழுதும், வாழ்வியல் முறைகளும், தன்னிலை மற்றும் புறச்சூழல்களென அனைத்தும் உத்தேசமாக கலந்திருக்கிறது. இதன் மூலம் கோட்பாடு மற்றும் சித்தாந்த அமைப்புகளை நோக்கிச் செல்ல வாய்ப்பிருந்தும் அதனை எதேச்சையாக தவிர்த்திருக்கிறார் என எண்ணுகிறேன். இதனால் துரை தனித்துத் தென்படவும் செய்கிறார்.
“தவளையொன்று இருளுக்குள் பாய்ந்தது இருளுக்குள் நுழையக் கதவுகளே இல்லை என்றார்கள் உண்மைதான் வெளிச்சத்திலிருந்து இருளுக்குள் நுழையக் கதவுகளேயில்லை ஆனால் இருளுக்குள்ளிருந்து இன்னொரு இருளுக்குள் நுழைவதற்கு நிறைய தடுப்பகள் இருக்கிறது” என்ற இருப்பு குறித்தான விசாரணைகளும் அங்காங்கே தென்படுகிறது. டைலர் வில்பர்ட், இவானோவிச்சின் மீன் தொட்டி, ஹென்றி அதிகாலையிலேயே தனது பியானோவை வாசிக்கத் தொடங்கிவிட்டார், ஆதியிலும் செம்மறிகள் இருந்தன, வெள்ளரிப்பிஞ்சுகளைப் பயிரிடும் ஒருத்தி இறந்து போனாள்.
ஒரு ஆப்பிளின் டைரியிலிருந்து போன்ற கவிதைகள் தனித்து உள்ளது. தற்போது எழுதிக் கொண்டிருக்கும் வி.என்.சூர்யா, பெரு.விஷ்ணுகுமார், ச.துரை, ராம்சந்தோஷ், கனிமொழி.ஜி, ஸ்டாலின் சரவணன், அதீதன் சுரேன் போன்ற சில குரல்கள் தனித்து அடையாளமாவது தெரிகிறது. இத்தொகுப்பின் மூலம் துரையும் தனக்கான பதிவை தமிழ் கவிதை பரப்பில் தக்கவைத்துள்ளார்.
”கூடாரமொன்றினுள் அடுக்கிய டம்ளர் கோபுரத்தின் மீது பந்து எறியப்படுகிறது டம்ளர்கள் சரிகின்றன துளிமோதி நினைவுகள் உதிருமே அதுபோல பெரிய எலும்புத்துண்டை கவ்விய டாபர்மேனைப் போல துள்ளுகிறான் எல்லோரும் கைதட்டுகிறார்கள் கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும் பழையபடி டம்ளர்களை சோர்வோடு அடுக்கிற கிழவனே! நீதான் நீயேதான் பழஞ்சேர்த்தி ஞாபக அழுத்தி நினைவடர்த்தி மீள்மனதி”.
நல்ல கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. தன் புத்தாக்கமான இந்த கவிதைகளுக்காக ச.துரை தாராளமாக மகிழ்ச்சியடைலாம்.
***
–கண்டராதித்தன்
மத்தி சால்ட் பதிப்பகம், சென்னை
(சேலம், ’சொற்கள் ’அமைப்பின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை / 23.03.2019)
இன்றிரவு தொலை மெய்நிகர் உரையாடலுக்கு வருவதாக சொல்லியிருக்கிறான் மிச். அவனுக்காக வீட்டில் ஒரு புராதன மியூசியத்தைக் கொண்டுவர வேண்டும் என நினைத்தவனாய் உலகின் மியூசியங்களுக்குள் சென்று பார்வையிட ஆரம்பித்தான் மயங்.
வெளியே ஏதோ சத்தம் கேட்டது. கதவைத் திறந்து கொண்டு போய் பார்க்கலாமா என யோசித்தான். சட்டென அப்படி யோசித்துவிட்ட தன்னுடைய மடத்தனத்தை நினைத்து வியந்து போனான். அவன் பிறந்ததில் இருந்து இதுவரை இந்த வீட்டின் கதவு திறக்கப்படவே இல்லை. கதவு என்பது வீட்டின் ஒரு சம்பிரதாயம் தான். அப்படி இருக்கும்போது இப்போது அவனுக்கு எப்படி கதவைத் திறந்துகொண்டு போகும் யோசனை வந்தது என வியப்பாய் இருந்தது. இன்று தனக்கு என்னவோ ஆகிவிட்டது என நினைத்துக் கொண்டான்.
வெளியில் போக யாருக்குமே அனுமதி இல்லை. இங்கே அனுமதி என்பது விஷயம் அல்ல. வெளியே போனால் அவன் இந்த உலகத்தில் இருந்து துடைத்து எறியப்பட்டுவிடுவான். தன்னுடைய அசிரத்தையை நினைத்து வருந்தியவனாக கேமரா பதிவுகளை இயக்கிப் பார்த்தான். வாசலை ஒட்டியிருந்த காட்டின் ஊடாக புலி ஒன்று நிதானமாக நடந்து சென்று கொண்டிருந்தது. ஓ இந்தப் புலிகளின் தொல்லை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று நினைத்தவனாய் அலுவலக வேலையை தொடர ஆரம்பித்தான்.
அவன் மனைவி, மகன், அம்மா எல்லோரும் அந்த வீட்டில் தான் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் தங்களை ஹைட் செய்து கொண்டிருப்பதால் வீட்டில் யாருமே இல்லாததைப் போல வெறுமையான அமைதி நிலவியது. இதே வீட்டில் ஷமின் தன்னுடைய இசைக்கருவியில் விண்ணதிர இசை முழக்கிக் கொண்டிருப்பான் என்பதை நினைக்கும்போது மயங்குக்கு சிரிப்பாய் வந்தது. தன் யூகம் சரிதானா என்பதைப் பார்த்துக் கொள்ள ஷமினின் ஹைடை நீக்கினான். விநாடி நேரத்திற்குள் வீடே இடிந்து விழுவதைப் போன்ற ஆரவாரமான இசை அறையை நிறைத்தது. ஷமின் தன் அறையில் நடன அசைவுகளில் மெய் மறந்திருந்தான். மயங் மீண்டும் அவனை ஹைட் செய்தான். நல்லவேளை ஏடாகூடமாய் எதுவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் திறக்க முடியாத அளவுக்கு லாக் செய்து கொண்டிருப்பான் ஷமின். இந்தக் காலத்துப் பிள்ளைகள் ஏன்தான் இப்படி இருக்கிறார்களோ? என நினைத்துக் கொண்டவனாய் வேலையை தொடர்ந்தான்.
இரவு சொன்னபடியே மிச் உரையாடலுக்கு வந்து காத்திருந்தான். மயங் வீட்டை மறைத்திருந்த பாஸ்வேர்டை அவனுக்கு திறந்துவிட்டான்.
மிச் வீட்டுக்குள் தோன்றினான். பிரான்சின் புராதன மியூசியத்தின் உள் அரங்கைப் போல மாற்றியிருந்த அந்த அறையைப் பார்த்து அவன் புன்னகை மேலும் விரிந்தது.
“ஆமாம் ” என்றபடி அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினான்.
மயங் ” உன் கை ஏன் இவ்வளவு சூடா இருக்கு. “
“தெரியல அப்புறமா செக் பண்ணிக்கறேன்.”
” மயங்.. நான் என் வீட்லதான் இருக்கேன். ஆனா உன் வீட்லயும் இருக்கேன். உன்னைத் தொடுறேன். அப்போ நான் எங்க இருக்கேன் சொல்லு பார்ப்போம். “
” சாமி வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா உன் தத்துவ விசாரத்த ” என குறும்பாய் சலித்துக் கொண்டவனாய் நீ ஏதாவது சாப்பிடுகிறாயா? என்றான்.
” இங்க இத்தாலியின் புராதன உணவான பீட்சாவை சாப்பிடறதுதான் சரியானதா இருக்கும் நான் எனக்கு இப்ப அதைத்தான் ஆடர் பண்ணப்போறேன். “
” அப்போ நானும் சீனாவின் புராதன பண்டமான செஸ்வான் நூடுல்சை ஆடர் பண்ணிக்கிறேன் ” என்று சிரித்துக் கொண்டே சீனாவின் பிரசித்தி பெற்ற உணவகத்தில் ஆர்டர் செய்து விட்டு மெஷினை தயார் செய்து வைத்தான் மயங்.
வேலை, உடல் நலம், சமீபத்தில் பார்த்த விஷயங்கள் என பேசிக்கொண்டிருந்த மிச் திடீரென ஒரு படத்தைக் காட்டி இது என்னவாயிருக்கும் சொல்லு பார்க்கலாம் என்றான். அவன் சிரிப்பில் அத்தனை குறும்பு. மயங்கிற்கு சத்தியமாய் அது என்னவென்றே தெரியவில்லை. ஏதோ வினோதமான வடிவத்தில் அந்த இயந்திரம் இருந்தது. “என்ன இது ஏதாவது அயல்கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரமா?” மிச் வெடித்துச் சிரித்தான்.
” இது அயல் கிரக இயந்திரம் இல்லை. நம்ம பூமியை சேர்ந்த இயந்திரம்தான் “
” ஆமாம் இதையும் பார் ” என இன்னும் விநோதமான சிரிப்பூட்டக் கூடிய அதே போன்ற பல படங்களைக் காட்டினான் மிச்.
அந்த வடிவங்களைப் பார்க்க என்னவென்றே தெரியவில்லை மயங்குக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.
” நம்ம பூர்வகுடிகள் விசித்திரமானவர்கள் அவர்கள் இதையெல்லாம் பயன்படுத்தி என்னதான் செய்திருப்பார்கள் ” என ஆச்சரியத்தை அடக்க முடியாமல் கேட்டான்.
” நண்பா இவை கார், பஸ், லாரி, வேன், ஆட்டோ பிளைட் எனப்படும் வாகனங்கள் “
” வாகனங்களா அப்படியென்றால்? “
” இதன் மூலம் மக்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சென்றார்கள். “
” வாட் ” மயங் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்தான். அவன் உடல் நடுங்கியது மக்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு சென்றார்களா? என்ன ஒரு பயங்கர காலம் நினைக்கவே கொடூரமாய் இருக்கிறது. பாவம் மக்கள் அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா?.
” ஆமாம் நீ இதையெல்லாம் எப்படி தெரிந்து கொண்டாய்? நீ சொல்வது உண்மைதானா அல்லது நீயே எதையாவது இட்டுகட்டி தயாரித்துக் கொண்டு வந்து கதை விடுகிறாயா? ” என அவனை சந்தேகமாகப் பார்த்தான் மயங்.
மிச் இதை எதிர்பார்க்கவில்லை. ” நண்பா என்ன திடீர்னு இப்படி சொல்லிட்ட. உனக்குத்தான் தெரியுமே நான் ஒரு பழங்கால ஆராய்ச்சியாளன். பலப்பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பதிவுகளை நோண்டிக் கொண்டிருக்கும் போது திடீரென இந்த விஷயம் தட்டுப்பட்டது. “
” உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா? இந்த வாகனங்கள் எல்லாம் போக வர உலகம் முழுவதும் பல கோடி மைல்களுக்கு சாலைகள் போட்டிருக்கிறார்கள் நம் மூதாதையர்கள். பயப்படாத இதெல்லாம் பல நூறு வருஷங்களுக்கு முன்னாடி. “
சுற்றும் தலையை பிடித்துக் கொண்டான் மயங். ” சாலைகள் என்றால் எப்படி இருக்கும்? அதற்கும் இந்த வாகனங்களுக்கும் என்ன சம்பந்தம்? ” என்றான்.
மிச் சிரித்துக் கொண்டே ஒரு வீடியோவை இயக்கினான். அதில் சாலைகள் அதில் விரையும் வாகனங்கள் மற்றும் அதில் அமர்ந்திருக்கும் மக்கள் என ஒரு புராதன காலத்தின் காட்சிகள் அந்த அறையில் நிறைய ஆரம்பித்தன.
பல டன் எடையுள்ள அந்த இயந்திரங்கள் கர்ணகொடூரமாய் சப்தம் எழுப்பியபடி அதி வேகமாய் நகர்வதைக் கண்டு மயங் அலறினான்.
” நண்பனே தயவு செய்து அதை நிறுத்திவிடு. என்னவொரு காட்டுமிராண்டித்தனமான காலம். மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா? “
” ஆமாம் நண்பனே. இதோ என்னுடைய பீட்சா வந்துவிட்டது. உன்னுடைய ஆர்டர் வந்துவிட்டதா பார் ” என்றான். மிஷினில் நூடுல்ஸ் வந்து கொண்டிருந்தது.
மயங்கிற்கு இன்னும் குழப்பம் விலகவில்லை. மனிதர்கள் எதற்காகத்தான் அப்படி வாகனங்களில் வெளியே போனார்கள் என்றான் பரிதாபமாய்.
” தெரியவில்லை நண்பா இனிமேல்தான் அதை ஆராய்ச்சி செய்ய வேண்டும். ஒருவேளை அவர்கள் வேலை இடங்களுக்கு, கேளிக்கைகளுக்கு, உணவகங்களுக்குப் போயிருக்கலாம். “
“அப்போது உலகத்தில் இந்த அளவுக்கு வைரஸ்களின் ஆதிக்கம் இருந்திருக்காது என்று நினைக்கிறேன் ” என்றான் மிச். அவன் பீட்சாவை சாப்பிட ஆரம்பித்திருந்தான்.
மயங் வெளியில் செல்வதைப் பற்றி நினைத்துப் பார்த்தான். கதவைத் திறந்தாலே முடிவற்று விரிந்திருக்கும் காடு. அதில் சில நூறு அடிகள் சென்றதும் வைரஸ்கள் உடலைப் பற்றிக் கொள்ளும். உடல் செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பிக்கும். நினைக்கும் போதே உடல் நடுங்கியது.
இப்போது எங்கேயாவது போக வேண்டும் என்றால் ஒரு சுவிட்சைத் தட்டிவிட்டு படுத்துக் கொண்டால் போதும் உடல் செல் இணைப்புகள் பிரிக்கப்பட்டு நோட்ஸ்படி எங்கே போக வேண்டுமோ அங்கே அனுப்பப்பட்டு மீண்டும் அங்கே உருவாக்கப்பட்டுவிடும். ஆனால் அது உடல் ரீதியான இணைவுக்கு மட்டும் தான். வேறு எதற்கும் யாரும் எங்கேயும் போகத் தேவை இல்லை
உடல் செல்களை சிதைக்கும் வைரஸ்களை உருவாக்கும் வேலையை தீயவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள். இன்று காற்றில் நிறைந்திருப்பது அந்த வைரஸ்கள் தான். அரசாங்கமும் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டது. ஒரு வைரஸை அழித்தால் இன்னொரு வைரஸ் அதை அழித்தால் இன்னொன்று இப்படியேதான் போய்க் கொண்டிருக்கிறது.
ஒருவேளை மனிதன் இப்படி வைரஸ்களை உருவாக்கி காற்றை நச்சாக்காத சமயத்தில் மனிதர்கள் வெளியே சென்று நடமாடியிருக்கக் கூடும். அவர்களிடம் இப்போது இருப்பது போல எல்லாவற்றையும் தன்னிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் கருவிகள் இருந்திருக்காது.
” ஹலோ மயங்.. என்ன யோசனையில மூழ்கிட்ட. எதையும் நம்ப முடியல இல்ல. இதுக்கே இப்படி ஆயிட்ட அந்தக் காலத்தில சினிமான்னு ஒண்ணு இருந்தது அதைப் பத்தி சொன்னா நீ இன்னும் குழம்பிப் போயிடுவ ” என சிரித்தான் மித்.
மயங் அவனை அச்சத்துடன் பார்த்தான். இன்னும் இவன் என்னென்ன பூதத்தை கிளப்பிவிடப் போகிறான். பதிவு செய்யப்பட்ட காட்சிகள் திரையில் ஓடும். அதுக்குப் பேர்தான் சினிமா. பதிவு செய்யப்பட்ட காட்சிகள் ஏன் திரையில் ஓட வேண்டும் எப்படி யோசித்துப் பார்த்தும் மயங்கால் அதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
மிச் அவனுடைய யோசனையைப் பார்த்து அடக்க முடியாமல் சிரித்தான். அவனை இன்னும் பீதியூட்டிப் பார்க்க நினைத்தவனாய், ” மயங் இதுக்கே நீ இப்படி யோசிச்சா எப்படி இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்ப நாம பேசிகிட்டிருக்கோமே தமிழ் இதுக்கு வரி வடிவம் இருக்கு அதை நாம எழுத்தா எழுத முடியும் தெரியுமா? “ எழுத்து வரி வடிவம்.. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
” மிச் நீ பெரிய ஆராய்ச்சியாளன் தான் ஒத்துக்கறேன். இப்படி புரியாத பழைய விஷயங்களைப் பேசி என்னைக் கொல்லாத. இந்த மியூசியம் பேக்ரவுண்ட் இருக்கற வரைக்கும் நீ இப்படித்தான் பேசிக்கிட்டிருப்ப. இப்ப பிரபலமா இருக்கிற செயற்கை உலகம் கான்செப்ட்டுக்கு இந்த பேக்ரவுண்ட்டை மாத்திக்கறேன் ஒரு நிமிஷம் இரு ” என சொல்லிக் கொண்டே கம்ப்யூட்டர் பட்டன்களைத் தட்ட ஆரம்பித்தான் மயங்.
மிச் அவனைப் பரிதாபமாகப் பார்த்தான். மயங்க்கின் கோட் நேர்த்தியாக இருந்தது. இதை அவனே டிசைன் செய்தானா இல்லை அவன் மகன் ஷமின் செய்தானா என கேட்க நினைத்தான். இந்த உடைகள் எல்லாம் உண்மையில்லை. மயங் உண்மையில் இப்போது நிர்வாணமாய் தான் இருப்பான். அவனுக்கு இன்னொரு விஷயம் நினைவுக்கு வந்தது. இன்று ஐந்து நிமிடத்தில் கம்ப்யூட்டரில் டிசைன் செய்து நாம் அணிந்திருப்பதாய் காட்டப்படும் இந்த உடைகள் எல்லாம் பழங்காலத்தில் மாதக்கணக்கான கடும் உழைப்பில் உண்மையிலேயே தயாரிக்கப்பட்டன என இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என மிச் யோசித்துக் கொண்டிருந்தான்.
நீர்ச்சிரங்கு பூச்சியூரும் நள்ளிராக் கனாவில் நிலத்தினில் பெரும் பெயல் நிரம்ப, நீலப்பெருநீர் நல்லோள் முலையிடை அலையெனப் புகும். அவள் நீளக்கூந்தல் ஆம்பல் மலரில் நனைந்து முயங்க கூதிர் மருண்டு துஞ்சல் துறந்து வீசும். காமம் படர்த்தும் அன்னள் நறுமணம் போன வேனில் நாளில் எனதின்னுயிரில் குருதிப் பூவென மலர்ந்ததை உன்னிடம் சொன்னதாய் ஞாபகம். இந்த குருட்டுக் கூதிருக்கு அதைச் சொல் நண்ப! நான் துயிலெழவேண்டும்.
***
கூற்று – 02
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்தில் எவ்வம் சூழ்ந்த நகரத்தின் வீடொன்றில் அழுங்கல் தோன்றி அழுதாள் ஓர் இல்லாள். “கொள்ளைநோயே! வளிநீங்கி போவென்று பாடுமோர் பாணன் முழு ஊரடங்கால் தெருவுக்கு இறங்கவில்லை. நகரின் அமைதியில் பயங்கரம் அரும்பி ஞமலிகள் குரைத்தன இராப்பகல், பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்தில் மலர்கள் உதிர்கின்றன. வளர்பிறை அம்புலியோ வானில் தேய்கின்றது வீட்டின் கதவை இறுகச்சாத்தி இருமினாள் இல்லாள். எங்கோ உயிரின் மூச்சுத்திணறல் எழுந்து முடிகிறது. அம்புலன்ஸ் வண்டியின் ஒலி யாமத்தை மிரட்டுகிறது. பாணா! முகக்கவசத்தோடு உன் குடிலில் இருந்து ஒரு பாடல் பாடேன், நெஞ்சம் பதைக்கிறது.
***
கூற்று – 03
கைவிடப்பட்ட பதுங்குகுழிக்குள் கைவிடப்பட்ட சிறார் பிணங்கள் அவர்கள் மேல் போர்த்தியிருந்த கூறைச்சீலையில் எஞ்சிய தாயின் முலைப்பால்
எஞ்சிய தாய் எங்கே போனாள் ? உயிர் தப்பும் தவிப்பில் இன்னோர் பதுங்குகுழியைத் தேடி.
இறுதிவரை எஞ்சினாளா ? எஞ்சி நிற்கும் யுத்தத்தை போலவே பிய்த்தெறிய முலைகளற்ற ஒரு கண்ணகியாய் நந்திக்கடலில் பிணமாய் எஞ்சினாள்.
தாய்மாரின் பிணத்தை போர்த்துவதற்கு எஞ்சிய பிள்ளைகளிடம் துணிகளில்லை. நிலமெங்கும் கவிழ்ந்தது நிர்வாணம்.
‘மனிதன் நெருப்பைக் கண்டு பயந்தான். பின்னர், அதனை வழிபடத் துவங்கினான்’ என்றே நம்முடைய வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் நமக்கு நெருப்பின் கதையை அறிமுகம் செய்து வைக்கின்றன. உளவியலாளர் சிக்மன் பிராய்ட் “மனிதர்களது அச்ச உணர்வும் குற்ற உணர்வுமே முதன்முதலில் வழிபாடுகளைத் தோற்றுவித்தன’ என்று குறிப்பிடுகின்றார். ‘தமிழறிவியலில் ஐம்பூதங்களில் ஒன்றெனக் கருதப்பெறும் நெருப்பு, அச்சத்தின் காரணமாகவே ஓர் வழிபாட்டுப் பொருளாக மாறியதா? அது சரி என்றால் மனிதகுலம் நெருப்பின் ஆற்றலை உணரும் முன்னே அவர்களுக்கு அச்ச உணர்வு பழக்கப்பட்டிருந்ததா? எனில், நெருப்பிற்கு முன்பாக மனிதன் எதைக் கண்டெல்லாம் பயம் கொண்டிருந்தான்? அவற்றை எவ்வாறு எதிர்கொண்டான். அவற்றின் மீதும் தனது வழிபடுதன்மையை ஏற்றியிருக்கிறானா? முதலில், நெருப்பிற்கும்- அச்சத்திற்கும் -மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்புகள் என்னென்ன?
மனிதகுலத்தின் எல்லா சமூக அமைப்புகளிலும், சில நம்பிக்கைகள் பிறப்பு முதல் இறப்புவரை அவர்களிடையே வேரூன்றியிருக்கின்றன. அவற்றில் நீண்டநெடிய முக்கியத்துவமும் பெற்றவை என்று கணக்கெடுத்தால் பேய், பிசாசு குறித்த நம்பிக்கைகள் என்றென்றைக்குமாக தங்களிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.
இன்றைக்கும் ஆவி, பேய், பிசாசு, பூதங்கள் ஆகியவைகளிடமிருந்து தங்களையும், தங்கள் சந்ததிகளையும் காத்துக் கொள்வதற்காக பல்வேறுவிதமான சடங்கு மரபுகளைத் தொடர்ந்து கடைபிடித்துவரும் தொல்குடிச் சமூகங்களை உலகின் எல்லா மூலை முடுக்கிலும் அடையாளம் காண முடியும். இது வெறும் பேச்சுக் கணக்குகள் அல்ல. உலகளவில் 90 நாடுகளில் வாழும் 37 கோடி பழங்குடி மக்களைக்கொண்டு கண்டறியப்பட்ட முடிவு.
ஐயாயிரம் விதமான பண்பாட்டுக் கூறுகளையும், ஏழாயிரத்திற்குச் சற்று குறைவான மொழிகளைப் பாவிக்கிறவர்களாக அறியப்படும் அவர்கள், வெவ்வேறு நிலப் பரப்பினுள் அருகி வாழும் சூழலினால். தங்களிடையே நேரடியான கலாச்சாரத் தொடர்புகளோ மொழி, அறிமுகங்களோ ‘பெரும்பான்மையான நேரங்களில்’ ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளைப் பெறவில்லை. ஆனபோதும், அவர்களிடம் காணப்பட்ட முக்கியமான பொதுப்பண்பாக, பேய், பிசாசு, ஆவிகள் மீது அச்சமும், அவற்றின் இருப்பின்மீது தீவிர நம்பிக்கை கொண்டிருப்பதும், அவற்றைச் சாந்தப்படுத்தும் சடங்குகளில் பிரத்யேகமாக நெருப்பு வழிபாட்டினை (சில சமயங்களில் சூடிடுதல்) முதன்மையாகக் கொண்டிருந்தனர்.
விழித்திருக்கும் இரவுகள்
மனிதன் நெருப்பைக் கண்டுபிடிக்கவில்லை என்பது அறிவியல் நிஜம். நெருப்பின் ஆற்றலை எதேச்சையாகக் கவனித்த மனித முன்னோடிகள் (Homo-genus) அதனைப் புரிந்து கொள்வதின் மூலம், அதனைக் கட்டுப்படுத்தவும், பயன்படுத்தவும், தேவையின்போது மீளுருவாக்கம் செய்துகொள்ளவும் வேண்டிய வழிமுறைகளையே ஏறத்தாழ மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்திருந்தனர். இப்படி கற்பனை செய்துகொள்ளலாம். ஹோமோ-ஜெனஸ் குழு ஒன்று பற்றியெரியும் நெருப்பு குறித்தான தங்களது புதிய புரிதலைத் தங்கள் கூட்டத்தினரிடையே உடலசைவுகளின் மூலம் மிகத் தீவிரமாக விவரித்துக் கொண்டிருந்தது. அவர்களுடைய அந்த ‘அசையுரையாடல்!’ அடுத்த ஒரு இலட்சம் ஆண்டுகளில் மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது எனும் உண்மை குறித்த எந்த யூகமும் அப்போது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
அதுவரை, உதயகால வெளிச்ச நேரங்களில் வேட்டையாடி, பொழுது வீழ்ந்ததும் மரங்களிலும் குகைகளிலும் பாறை வெடிப்புகளுக்கு இடையேயும் கூட்டமாக/ தனித்து ஒடுங்கி, உயிர் பிழைத்திருந்த மனித முன்னோடிகளின் நீண்டகால ‘ரிதம்’ நெருப்பைக் கையாளத் துவங்கிய நாளில் முதன்முதலாகத் தடம்புரளத் துவங்கியது. தங்களது எல்லா வழக்கமான நடைமுறைகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டு, புதிய விதிமுறைகளில் பொருந்திக்கொள்ளவும், புதிய சூழலியல் அசைவுகளை எதிர்கொள்ளவும் அவர்கள் முன்வரத் தொடங்கினார்கள். (அதேநேரம், மனித இனத்தின் அனைத்து முன்னோடிக் குழுக்களும் இவ்வாறாக நெருப்பின் அறிமுகம் ஒரே காலத்தில் ஏற்பட்டிருக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.)
நெருப்பின் ஆற்றலைப் பயன்படுத்தத் தெரிந்த ’சந்ததிகள்’ படிப்படியாக உணவுச் சங்கிலியின் மேல்மட்டத்தை நோக்கி வேகமாக முன்னேறத் துவங்கினார்கள். அதுவரையிலும் பனிப்பாலைகளில் வசித்த சில குழுவினருக்கு மட்டுமே இயற்கைவழி வாய்ப்பாக, பதப்படுத்தப்பட்ட இரையும் உணவும் கிடைத்துக் கொண்டிருந்த சூழலில், நெருப்பின் மூலமாகச் சமைத்து உருவாக்கப்பட்ட உணவு, வேட்டை நிகழாக் காலங்களிலும் உயிர்ப் பிழைத்திருக்கச் செய்யும் அரும்வாய்ப்பை அக்குழுவினர்களுக்கு வழங்கியது.
புதிய நிலத்தில்..
முதன்முதலில் நெருப்பு கூட்டிச் சமைத்த இறைச்சி, கிழங்குகள் அல்லது மெல்லுடலி ஆகிய வேகவைக்கப்பட்ட இரை மனித முன்னோடிகளது தாடையிலும் செரிமான உறுப்புகளிலும் மாற்றங்களை பின்வந்த நாட்களில் ஏற்படுத்தின. அவர்களின் குடல் திசுக்களின் நீளம் அபரிமிதமாகக் குறைந்தது. உணவு உண்ண எடுத்துக் கொள்ளும் நேரமும், செரிமான நேரமும், உடலியக்க ஆற்றலும் மிச்சமானது. நெருப்பினால் பதப்படுத்தப்பட்ட உணவு அவர்களது பசித்தலையும் காலத்தைச் சுருக்கி, உணவுத் தேடலின் நீண்ட அலைச்சலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தது. எஞ்சியிருந்த நேரங்களில் அவர்கள் கலை முதலான காரியங்களில் ஈடுபடத் துவங்கினர்.
வேட்டை ஆயுதங்களை நவீனமாக்குதல், பாறைக் கீறல்கள், கரிச்சித்திர ஓவியங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்கள். ஓசைகளைக் கவனித்துப் பிரித்தறியும் திறனும், சிந்தனைகளின் துவக்கப் புள்ளியும் அவர்களது குழுவினரிடையே பெரும் மாற்றங்களை உண்டாக்கினது. மிக முக்கியமாகக் காப்பு நடவடிக்கைகளினால் உயிர்ப் பிழைத்திருத்தல் சதவிகிதம் மிகக்குறைந்த அளவில் அதிகரிக்கத் துவங்கியிருந்தது. இச்சந்ததிப் பெருக்கம் உணவுத்தேவையையும், இடப் பற்றாக்குறைகளைச் சீராக்கும் நடவடிக்கைகளை அவசியமாக்கின. முன் பின் அறிமுகம் இல்லாத நிலங்களுக்குள் மனித முன்னோடிகளைவிட சற்று வித்தியாசமான உடலமைப்பு கொண்டிருந்த அந்தப் புதிய குழுவினர் இடம்பெயரத் தொடங்கினர்.
“நெருப்பு உருவாக்கும் கழிகள்/ கற்களுடன், ஊசிகள், நார்கள், மரத்துண்டுகள், அவர்கள் உருவாக்கின கலைப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்களுடன்‘’ கூட்டமாக நிகழ்ந்தது இந்த இடப்பெயர்வு. அவ்வாறு தாங்கள் கண்டடைந்த புதிய நிலத்தின் உணவு மண்டலத்தைப் போரிட்டும், அரிதான சமயங்களில் மிக எளிமையாகவும் கைப்பற்றினார்கள். அப்புதிய சூழலில் அவர்கள் எதிர்கொண்ட பெரிய உடல் கொண்ட பாலூட்டிகள் முதல் சின்னப் பூச்சிகள், மெல்லுடலிகள், மரங்கள், தாவரங்கள், மண், மலை, காடுகள், வெள்ளம், கடல், காலம், வானிலை ஆகிய அனைத்தையும் குறித்த புதிய கற்பிதங்களைத் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டார்கள். அவற்றுள் எவை தங்களுக்கு உதவும் எவை தங்களைக் கொல்லும் எனும் சாதக பாதக அம்சங்களைப் பகுத்துணரும் அவசியமும் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
இந்தப் பகுத்துணர்வுத் தன்மை அலைகுடி-நிலைகுடி என இருவகை வாழ்க்கை முறைகளைக் கொண்ட குழுவினரிடையே வேறுவேறு தாக்கங்களை உருவாக்கியது. நிலைகுடிகள் ஆபத்தானவற்றைக் கூட்டுசேர்ந்து எதிர்த்து அழித்து, அதே இடங்களில் குழுவாகத் தாங்கள் வாழத் தலைப்பட்டார்கள். அலைகுடிகள் பலசமயம் அவற்றிடமிருந்து விலகித் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே பெருமளவு முயன்றார்கள்.
இருளைக் கேட்ட காதுகள்
தாங்கள் ஏற்கனவே அறிந்திருந்த தகவமைப்பு விதிகளுக்கு அப்பாற்பட்டு, இருளின் எந்தவோர் சின்ன அசைவையும் அச்சத்துடனே எதிர்கொண்டு வந்த மனித முன்னோடிகளுக்கும், நெருப்பு பயன்பாட்டின் மூலம் புதிய பகுத்துணர் திறனை வளர்த்துக் கொண்ட முதல்நிலை மனிதப் பிரிவினருக்கும் வெளிப்படையான வேறுபாடுகள் தெரியத் துவங்கின. நெருப்பின் ஆகிருதி எப்போதும் தங்களைக் காக்கும் என ஒரு சாரரும், எதிரிகள் கையிலுள்ள, ஒளிரும் ஓர் வினோத ஆயுதம் தங்களை எந்நேரமும் கொல்லக் கூடும் என மறுசாரரும் நம்பத் தலைபட்டனர்.
மனிதர்கள் தங்கள் பண்டைய வாழ்நாளில் பெரும்பாலான நேரம் பசி-பிழைத்திருத்தல், இடப்பெயர்வு-கண்டடைதல், அச்சம்-தற்காத்தல் அல்லது எதிர்கொள்ளல் ஆகிய இருமைகள் குறித்தே அதிகம் சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. இயற்கைச் சூழலும் இருள்-வெளிச்சம் ஆகிய இரு முக்கிய பிரபஞ்ச விளைவுகளும் தினம் தினம் அவர்களோடு கண்ணாமூச்சி விளையாடியது. இருளின் புலப்படாத தன்மையும் ஆபத்துணர்வும் அவர்களுடைய பயச் சிந்தனையைத் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தன.
அச்சமயங்களில் நெருப்பின் ஆற்றலால் கிடைக்கும் வெளிச்சமும் பயனும் அவர்களுக்கு அச்சமறுக்கும் ஆயுதம் ஒன்றைக் கைக்கொண்டிருக்கும் கிளர்ச்சியைத் தந்தது. இதனால் குளிர், மழை, வெள்ளம், இடி, மின்னல், விலங்குகள், தாவரங்கள் எனத் தங்களைச் சூழ்ந்துள்ள மற்ற எவற்றைவிடவும், அவர்களது பண்டைய விலங்கு மனத்திற்குள் புதைந்துக் கிடந்த அச்ச உணர்வில் இருந்து விடுதலை அளித்த பேரொளியான நெருப்பின் மீதான தொடர்ச்சியான கற்பனைகள் மனித மனங்களுக்குள் கிளர்ந்துக் கொண்டே இருந்தன. அக்கற்பனைகளை அவர்கள் வெளிப்படுத்தத் துவங்கியபோதே அவர்களது கதைசொல்லிப் பண்பாடும் உருவெடுக்கத் துவங்கியது.
அக்கதைகளின் வழியாகக் கண்ணுக்குப் புலப்படாமல் தம்மைக் கட்டுப்படுத்தும் ஆற்றல்களும், தங்கள் சுற்றுப்புறத்தில் ஏற்பட்ட மாயாவாத நிகழ்வுகளும், (நீர்- நெருப்பு- இடி-மின்னல்-பொருள்கள்-விலங்குகள்) தவிர்த்து வேறு பல ஆற்றல்களும் உண்டு எனவும், அவை தங்களைக் காக்கவும் அழிக்கவும் கூடும் என்றும் அவற்றை வழிபடுவதன் மூலம் உயிர்ப் பிழைக்கலாம் என்றும் நம்பகங்கள் உண்டாகின. இதுவே, பின்னாளில் ஆவி வழிபாடு எனும் Animism தோன்றக் காரணமாக அமைந்தது. மேலும், இறப்பிற்குப் பின்பான கற்பனைகளிலிருந்து ஆவி வழிபாட்டின் மற்றொரு வகையான Spiritism-மும் தோன்றியது.
மாய சக்திகளாலும், இயற்கையைக் கடந்த ஆவிகளாலும் மனித இனம் காக்கப்படுகிறது என்ற எண்ணங்கள் வலுவுற உயிர்- இறப்பு- ஆவி- ஆன்மா- பேய்கள் ஆகியவை குறித்த அச்சமும் – நம்பிக்கையும் பொதுவான அம்சங்களாக இருந்தன. எனவே எவ்விதத் தடைகளுமின்றி பேய்-தெய்வம் ஆகிய இருநிலைகளின் இருப்பு காலத்துக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாகிப் பெருகி வளர்ந்தது.
அச்சம் தீர்த்த தாய்
உலக நாட்டார் கதைகள் பலவும் ’நெருப்பை’ உண்டாக்கும் ஆற்றல் பெண்களிடமே இருந்தது என்கின்றன. அவர்களுக்கே முதன்முதலில் சூழலைக் கட்டுப்படுத்தும் மந்திர சக்திகளும் அளிக்கப்பட்டிருந்தன. மங்கோலியப் புராணங்களில் பெண்கள் நோய் தீர்க்கும் மருத்துவர்களாக வருகிறார்கள். அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தோனேஷியா, சைபீரியா மற்றும் இந்தியப் பழங்குடிக் கதைகளில் பெண்கள் மந்திரவாதிகளாகத் தோன்றுகிறார்கள். அவர்களே சூனியக்காரர்களாகவும் அறியப்பட்டிருந்தார்கள். செயற்கையாக நெருப்பை உண்டாக்கும் வல்லமையை அவர்கள் தங்கள் உடலுக்குள் மறைத்து வைத்திருப்பதாக நம்பப்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் தலைமைத்துவம் கொண்டவராகவும், சமூகத்தின் ஆற்றல் வாய்ந்த இயற்கைக் கூறுகளுக்கும், செழிப்புக்கும், ஒரே சமயத்தில் தாயாகவும், நிலைமாறாக் கன்னியாகவும், அச்சத்தை விளைவிக்கும் காண்பதற்கரிய ஆற்றல்களுக்கும், கற்பனைகளுக்கும் பெண் தன்மையே அடையாளமாகக் கொள்ளப்பட்டது. உலகை உருவாக்கிய மூலப் பெண் தெய்வங்களாகக் கருதப்படும் மெசபடோமிய தியாமட் (Tiamat) எனும் ஐந்துதலை பெண் டிராகனும், சுமேரியர்களின் யூரினோம் (Eurynome) தேவதையும், தமிழர்களின் பூதேவியும் (Bhudevi) இவ்வாறு உருவானவர்களே.
இன்னொரு பக்கம், தமிழ்ச் சங்க இலக்கியங்களில் வரும் பேய்மகளிர், அராபிய வினோத பூதங்கள் (Genies) ஸ்காண்டி நேவிய குறும்பூதங்கள் (Trolls) இந்திய தேவதைகள் (Sprits) வட ஜெர்மானிய சிறுதேவதைகள் (Elves) தென்மேற்கு இங்கிலாந்தின் குறுந்தேவதைகள் (Pixies) ஐரிஷ் நாட்டு பூதங்கள் (Lepreshanuns) கிரேக்கத் தேவதைகள் (Angels) உலகத் தேவதைகள் (Fairies) பூதங்கள் (Demons) கொடும்பேய்கள் (Devils) எனத் தீநிலைக் குறியீடுகளாகவும் பெண்தன்மை உருவகப்படுத்தப்பட்டிருந்தது.
சங்க இலக்கியங்களில் காணப்படும் சூலி, சூர்மகள், வரையறை மகளிர், கடல்கெழு செல்வி, கானமர் செல்வி, பாவை, அணங்கு போன்ற பேய்த் தெய்வங்களை இந்த இருநிலைகளின் கலவைகளாகக் கொள்ளலாம். அதேசமயம், புத்த ஜாதகக் கதைகள், “பேய்களுக்கு நிழல் கிடையாது; நிழலற்றிருப்பது கடவுள் பண்பு” எனவே பேய்கள் மனித இனத்திற்கே சம்பந்தமற்ற ஒன்று என வலியுறுத்தின. இவ்வாறாக இந்திய நிலம் முழுக்க பேய்கள்-கடவுளர்-மானுடம் ஆகிய முப்பரிமாணம் குறித்துப் பல்வேறு விதமான நம்பிக்கைகளும், கதைகளும் எழுந்திருந்தன.
நல்லை அல்லை
தெய்வம் மற்றும் பேய்களில் பெண் தன்மையை முன்னிலைப்படுத்தியது போல ஆண்மையச் சிந்தனைகளும் பின்னாளில் உருவாகத் துவங்கின. இந்தியப் புராணங்களின்படி, பேய்கள் கடவுள்களுக்கு மூத்த சகோதரர்கள். பெரும் செல்வத்திற்காக இருசாரரும் போரிட்டபோது, பேய்களை வென்று கடவுளர் சொர்க்கம் சென்றுவிட்டனர். அங்கிருந்து அவர்கள் தங்களை நன்மைக்கும் பேய்களைத் தீமைக்கும் அதிபதிகளாக அறிவித்துக்கொண்டார்கள். “மக்களுந் தேவரும் பிரமரு நரகரும்; தொக்க விலங்கும் பேயு மென்றே; நல்வினை தீவினை யென்றிரு வகையாற்’ எனத் தீவினையாளர்களே பேய்களாகப் பிறக்கிறார்கள் என்கிறது பௌத்த காப்பியமான மணிமேகலை.
நம் கண்களால் பார்க்க முடியாத, அபார பலம் படைத்த கெட்ட தூதர்களே பேய்கள் என்றும், அவர்கள் கடவுளின் மகன்கள் என்றும் (ஆதியாகமம் 6:2), தேவதூதர்கள் (யூதா: 6) என்றும் விவிலியம் குறிப்பிடுகிறது. நோவா காலத்தில், பேய்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் எதிரிகளாகி, யெகோவாவுக்கு விரோதமாக நடந்த சாத்தானின் கலகங்களில் கூட்டுச் சேர்ந்துகொண்டன என்றும் மேலும் சில பேய்க் குறிப்புகள் விவிலியத்தில் உண்டு. (லூக்கா 8:30; அப்போஸ்தலர் 16:16; யாக்கோபு 2:19)
இவற்றின்படி பெண்-ஆண் எனும் பால் பேதம் கடந்து நன்மை-தீமை எனும் இருமையே பேய்கள் விஷயத்தில் முக்கியத்துவம் பெற்றது. சங்க இலக்கியங்களில் காணப்படும் சூலி, சூர்மகள், வரையறை மகளிர், கடல்கெழு செல்வி, கானமர் செல்வி, பாவை, அணங்கு போன்ற பேய்த் தெய்வங்களை இந்த இருநிலைகளின் கலவைகளாகக் கொள்ளலாம். அதேசமயம், புத்த ஜாதகக் கதைகள், “பேய்களுக்கு நிழல் கிடையாது; நிழலற்றிருப்பது கடவுள் பண்பு” எனவே பேய்கள் மனித இனத்திற்கே சம்பந்தமற்ற ஒன்று என வலியுறுத்தின.
இவ்வாறாக இந்திய நிலம் முழுக்க பேய்கள்-கடவுளர்-மனிதர்கள் ஆகிய முப்பரிமாணம் குறித்துப் பல்வேறு விதமான நம்பிக்கைகளும், கதைகளும், வழிபாடுகளும், சடங்குகளும் அவற்றினை அடிவாரமாகக் கொண்டு மதங்களும் தோன்றியிருந்தன.
மரணத்தின் கால்கள்
மனிதர்களில் தன் வாழ்நாள் முற்றுப்பெறும் முன்னே மரணத்தைத் தழுவியவர்கள் மீதமுள்ள காலம் வரைக்கும் பேயாகத் திரிவார்கள் என்றும், அச்சமயங்களில் பிறருக்குத் தீமையும், நன்மையும் செய்வார்கள் என்ற நம்பிக்கை வலுப்பட்டிருந்தது. சமண மகாவீரரும், பௌத்த கௌதமரும், வைணவ ஆண்டாளும், கிறிஸ்தவ இயேசுவும், இஸ்லாமிய நபியும், சீக்கிய குருநானக்கும், அய்யாவழி வைகுண்டரும், கேரள நாராயணகுருவும் தங்கள் உலக வாழ்க்கை பூர்த்தியடைந்து தெய்வ நிலையை எய்தியவர்களாகக் கருதப்படுகிறவர்கள்.
அவர்கள் போலவே சங்க இலக்கியங்களில் வரும், அணங்கு, சூரரமகளிர், இயக்கர், இயக்கிகள், அழன், அலகை, அள்ளை, இருள், கடி, கழுது, கருப்பு, காற்று, காற்றேரி, தூர்த்தேறி, குணங்கு, கணம், குணபம், கூளி, குறளி, சவம், சாவு, சாரதம், சாதகம், சோவு, பசாசு, பிசாசு, பாசம், பாரிடம், மருள், மண்ணை, மயல், முனி, பூதன், கிருத்திமம், மகோதரம், வெறி, வியந்தரம், நீலி ஆகியோருக்கும் வேறுபல பின்கதைச் சுருக்கங்கள் உண்டு.
சமணத் தத்துவ காவியமான நீலகேசியில் வரும் நீலி என்ற பெண் பேய், காரைக்கால் அம்மையார் சிவனோடு இணைத்துப் பாடும் கூளிக் கணங்கள் எனும் ஆண்பேய்கள், சிலம்பு தேவராட்டியான முதுவாய்ச் சாலினி, மாலிருஞ்சோலை மலையில் வசிக்கும் வனசாரினி, இடாகினி எனப் பால்பேதமின்றி தென்னிலத்து இலக்கியங்களிலும் தத்துவங்களிலும் பண்பாட்டிலும் சடங்குகளிலும் இடம்பெறும் துர்தேவதைகளும், பேய்களும், அவர்களில் நன்மை செய்யும் பேய்நிலைத் தெய்வங்களும் வேறுபல பின்புலங்களைக் கொண்டிருந்தார்கள்.
தெய்வம்-பேய் இருவருமே வீரநிலை வழிபாட்டுடன் அதிகம் தொடர்பு கொண்டிருப்பர்கள் என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது. பண்டைத் தமிழினப் போர்த் தெய்வமான கொற்றவையை நேரடியாக வழிபடுவதற்கும், அதே போர்களில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக நடப்படும் ‘நடுகல்’ வழிபாட்டுக்கும் அடிப்படையாகவே இருந்த வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளும்போது, தெய்வம்-மனிதன்-தெய்வநிலை; மனிதன்-பேய்-பேய்நிலைத் தெய்வம் என்ற இருவிதமான சங்கிலிப் பிணைப்பையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
பேய்த்தனம்
மனித மனம் காலகாலமாக மரணத்திற்குப் பிறகான ‘நிகழ்வைக்’ குறித்த அச்சத்தால் உள்ளூர உறைந்திருக்கிறது. இறந்த பிறகு அடையும் உயர்நிலை குறித்த தீவிரமான வேட்கையுடன் மனித மனம் நீண்ட நெடுங்காலமாக பெரும் உரையாடலை மேற்கொண்டு வருகிறது. வரலாறு நெடுகிலும் மதங்களும், பிற சித்தாந்தங்களும் மனித வாழ்க்கையைப் புனிதமாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தாலும், உயிர் துறந்த பிறகு அடையும் அமைதி அல்லது உயர்பதவி ஆகியவையே புனிதத் தன்மையோடு கூடிய அதியுன்னதக் கற்பனைகளாக அறிவிக்கப்படுகின்றன.
பண்டைய தமிழர்களின் நடுகற்கள், மட்தாழிகள், மெசபடோமியரின் சிக்குரத்துகள், எகிப்தியரின் பிரமீடுகள், அமீரகரின் உம் அல்நார் கிணறுகள், சீனர்களின் சுடுமண் வீரர்கள் குழி, சோழர் பள்ளிப்படைகள், மாவீரர் துயில் இல்லங்கள் எனக் கிறிஸ்தவர்களின் கல்லறையிலிருந்து தலைவர்களின் சமாதிகள் வரைக்கும் இந்த உண்மையைதான் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
இறப்புச் சடங்குகளை மேற்கொள்ளும் வெட்டியானுக்கும், கிறிஸ்தவ பாதிரியாருக்கும், யூத குருவுக்கும், ஷாமன்களுக்கும், பிக்குகளுக்கும் ஜெப மந்திரங்கள் வேன்டுமானால் வேறுவேறாக இருக்கலாம். அவர்களது இலக்கு ஒரே திசையிலே மனித மனத்தைக் கட்டுவிக்கிறது. அது இறந்தோரை தெய்வ நிலைக்குச் சாந்திப்படுத்துவது அல்லது பேய்த் தன்மையைக் கட்டுப்படுத்துவது.
தமிழில் பேய் என்கிற சொல் அஞ்சுதல், அச்சுறுத்துதல் என்ற பொருள் கொண்டே உருவானது. “பேஎம் நாம் உரும் என வரூஉங் கிளவி; ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்கிறது தொல்காப்பியம். அச்சமூட்டும் இறந்த மனிதர்களின் ஆன்மா பல திக்குகளிலும் அலைந்து மக்களுக்குச் சொல்ல முடியாத தீமைகளைச் செய்வதாகக் கருதியதால் அவற்றிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும், தாம் இறந்த பிறகு பேய் நிலை அன்றி தெய்வ நிலை அடையவும் விரும்பிய போது, நன்மை தீமை இருமைகள் ஒழிந்து மேல்நிலை-கீழ்நிலைத் தெய்வங்கள் அளவின்றி பெருகியது.
பரிணாம அச்சு
மனித இனம் நாகரிகம் கொண்ட உழுகுடிச் சமூகமாக உருவாகத் துவங்கி ஏறத்தாழ 12ஆயிரம் ஆண்டுகளையும், கடவுள் மற்றும் மதக் கோட்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு 5 ஆயிரம் ஆண்டுகளையும், அவற்றை மறுதலிக்கும் அல்லது பயன்படுத்திக் கொள்ளும் அறிவியல் தொழில்நுட்பங்கள் உருவாகத் துவங்கி ஏறத்தாழ 500 ஆண்டுகளையும் கடந்துவிட்டோம். இக்காலக்கோட்டுச் சித்திரத்துக்குள் மனிதகுலம் பயணித்து வந்துள்ள தொலைவு வியப்பளிக்கக் கூடியது. இந்த நெடும்பயணத்தில் தனது பண்டைய ஞாபகங்களின் எச்சங்களை எப்போதும் தன் தலைக்குமேல் சுமந்துகொண்டே அலைகிறது. நவீனங்களோடு வாழும் இன்றைய காலகட்டத்திலும் இந்ஞாபகங்கள் கதைகளின் வழியாகவும், வாய்மொழியினாலும், எழுத்திலக்கியங்கள், பக்தி, சினிமா, அரசியல், உளவியல், மதங்கள் என யாவற்றிலும் பரவிக் கிடக்கின்றன.
ஆதியில் மனிதன் மேற்கொண்டிருந்த வினைகளில் பலவும், அவனது பழைய ஞாபகங்களாக, மரபின் தொடர்ச்சியாக, நினைவின் மிச்சங்களாக அவனால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவனது தொன்மையான பழக்கங்களின் மீதே இன்றைய அவனது ‘நவீன மனம்’ கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தினம் தினம் அவன் எதிர்கொள்ளும்/ செயல்படுத்தும் பல்வேறு அன்றாடங்கள் வரலாற்றின் நெடிய சங்கிலியைத் தன் கையில் விடாமல் பற்றியிருப்பதற்கான குறியீடு. எத்தனையோ அழித்தொழிப்புகள், அதிகார மாற்றங்கள், இடப்பெயர்வுகள், போர்கள், சாவுகள், அடிமைத்தனம், மதத் தலையீடு யாவற்றையும் கடந்த ஓர் பொதுப்பண்பினை இம்மனித இனம் தன்னுள்ளே எப்போதும் கொண்டுள்ளதை நாம் மறுக்கவியலாது. சமநிலையற்ற இவ்வுலகில் இன்றும், ஓர் தாயோ தகப்பனோ தன் பிள்ளைகளைக் கண்டிப்பதற்காக, தன்னையும் அறியாமல் ஏதோ ஒரு அச்சமூட்டும் கதைகளையோ வினைகளையோ மேற்கொள்வதும், தனிமையில் மனிதமனம் இருட்டு குறித்த கற்பனைகளைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்வதும், ‘கேண்டில் லைட்’ விருந்துகளில் கூடிக் களிப்பதன் மீதான விருப்பங்களும், சேட்டைகள் செய்தால் சூடு வைப்பதும், சண்டையின் போது கற்களைத் தேடுவதும், உயரமான இடங்களில் இருந்து எச்சில் துப்புவதும், பேயோட்டும் சடங்குகளில் நெருப்பைப் பயன்படுத்துவதும், இறந்தவர்களை நெருப்பில் எரியூட்டுவதும், விளக்கெரிக்கும் வழிபாடும் உலகளாவிய ஆதி மனம் நெருப்பின் மூலம் ஏற்படுத்திக்கொண்ட அச்சம்-நம்பிக்கை-விடுதலை ஆகிய பண்டைய ஒருங்கிணைப்பின் ஞாபகக் கொடையே.
அதேசமயம் இன்னொரு தரப்பில், இன வரலாற்றை அழிக்க நூலகங்களை எரிப்பதும், கூலி உயர்வு கேட்டவர்களைக் குடிசையோடு கொளுத்துவதும், பெண்ணைச் சதியிலிடுவதும், தியாகங்களை நிகழ்த்த தன்னைத் தீக்கிரை ஆக்கிக் கொள்வதும் நெருப்பு வரலாற்றின் முந்தைய பிந்தைய பக்கங்களில் தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டே வருகின்ற பெருங்கதையே..
கை ரிக்ஷாக்காரர்கள் கனவான்களை அமர வைத்து சாலையில் இழுத்துக் கொண்டு ஒருகாலத்தில் ஓடினார்கள் பின்னர் வானுயர் சிலைகள் மந்திர்கள் மசூதிகள் கனரக லாரிகள் இனிப்பு வாலாக்கள் அன்றும் இன்றும்தலைநகரின் வணிகத்தெருக்களில் மூத்திரம்பெய்பவர்கள் எண்ணிக்கை பல லட்சம் தெருவிற்கு நாலு வந்தேறி வணிகச் சண்டியர்கள் சத்திரங்கள் ஊரைச்சுற்றி தூதரகங்கள் கல்லறைகள் இரண்டு ரொட்டிச் சால்னா பாவ் பாஜி உள்ளங்கையில் புகையிலை வைத்துக் கசக்கிகடைவாயில் அதக்கும் தம்பக் நகரம் அங்கே தெரு முழுக்க எச்சில் மெல்லிய பருத்தியில் வடிவமைத்த குர்தாக்கள் ஜெய் காளி சூலங்கள் ராணா பிராதாப் சிங்கோ சுல்தான்களோ இரஜ புத்திரர்களோ தலைநகரின் திசை வடக்கு மூன்று பானிபட் யுத்தங்கள் எழுநூறு ஆண்டுகளாய் அது ஒரு புற நகரம் மேலும் எல்லோரும் இறந்து போனவர்கள் அல்லது இன்னும் கொல்லப்பட வேண்டியவர்கள் அவர்கள் பழங்கதைகளைப் இறந்தவர்கள் மொழியில் இன்னும் சொல்வார்கள் கொலைநகரம் தில்லி இஸுலாமியர்களை இசுலாமியர்களே போரில் வென்றார்கள் இந்துக்கள் இந்துக்களையே வென்றார்கள் கிறித்துவர்கள்டச்சுக்காரர்களை பிரஞ்சுக்காரர்களை கடவுள்கள் கடவுள்களையே கொன்றார்கள் ஒரு பவுண்ட் பாண் மற்றும் கலால்வரிகள் ஆக்ட்ராய் எனும் வணிக நுழைவுவரி என மாட்சிமைதாங்கிய ஜார்ஜ் எல்லா நாணயங்களையும் செல்லாதாதாக்கினான் தில்லியை இங்கிலாந்தின் காலனியாக்கிய ரிப்பன் பிரபு எங்கள் அப்பன் தீபகற்பத்தின் தென் பகுதியில் தில்லிக்கப்பாலும் மக்கள் இருக்கிறார்கள் என்பதைக் கண்ட வைஸ்சிராய்கள் சில மண்கோட்டைகளை தகர்த்தார்கள் வெப்ப மண்டல அம்மை கண்டு குளிர்பிரதேசங்களில் குடி யிருந்து கொண்டார்கள் தில்லியில்வைத்துதான் திரும்பியது தன்னாட்சி ஒருவன் மகாபாரதத்தைமறுபடியும்எழுதுகிறான் சிலர்இராமாயணத்தை உபதேசிக்கிறார்கள் பாவப்பட்ட இந்தியா காசியில் ஓய்வெடுக்கிறது அங்கே நிகழும் கூட்டு மரணம் பிறகு கொஞ்சம் தலை மழிக்கப்பட்டபெண்களின் காதல் கதைகள் சாம்பல் தடவியசடைமுடி நிர்வாணிகளில் நர மாமிசினிகள் மேலும் புண்ணியவான்கள் ருல்போ இத்தாலியை இறந்தவர்களின் நகரம் என்றான் இறந்தவர்களின் வன்மத்துடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகம் மக்கள் தில்லியில் ஜார்ஜ் அதை புதுதில்லியாக்கினான் அவன் இந்தியாவை இந்துக்களை முசல் மான்களை சீக்கியர்களை இறுதியாக ஜந்தர் மந்திரில் வைத்து ஒடுக்கி ப்போனான் பல்லாயிரம் காலம்தொடரும் பழைய கொலைமுறை யூனியன் காலனிக் கலவரங்கள் தெற்கிலிருந்து பலகாதம் கொண்ட தொழுவம் இருக்குமிடம் ஆம் அது ஒரு பெட்ரோபரோமா
நினைவில் உள்ள குழந்தையின் புகைப்படத்தை கைது செய்தல்
யாருக்காவது பற்களின் மீது கட்டி இருந்தால் சொல்லுங்கள் அதற்கான மருத்துவம் எனக்கு தெரியும் அது மட்டுமல்ல ஓசைகளில் கூட சுவையறிவேன் எலுமிச்சம்பழம் தரையில் நசுங்கும் ஓசை புளிப்பு சுவை என் எடை நிறைய பிங்க் நிறம்~வெள்ளை நிறம்~ கொஞ்சம் கருப்பு நிறம் இவ்வளவுதான்.
என் அம்மா என்னை இளமையாக பெற்றெடுத்தாள் குழந்தையான என்னிடம் ஒட்டகத்தின் திமில் போல முகத்தை சுருக்கிக் காட்ட சொன்னார்கள் யோசனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லாதவர்கள்.
நான் வளர வளர செம்மறி ஆட்டின் கண்ணீரின் நிறம் போல என் பெயர் மாறிவிட்டது யாராவது அழைத்தால் பெயரின் இரண்டாவது எழுத்தை மட்டுமே கூப்பிடுவதாகத் தோன்றுவது பிரம்மை இல்லை.
உயரமான விலங்கின் எலும்புகளால் செய்யப்பட்ட நாற்காலியில் விரும்பி அமரும் நான் எல்லோரையும் நம்பிவிடுவேன் எறும்புகளை நம்பி கூட பொறுப்புகளை ஒப்படைப்பேன் சிதறிய சர்க்கரையை அப்புறப்படுத்த சொன்னாலும் என் ரகசிய அறையில் நுழையக்கூடாது என்று சில நாளில் தண்ணீரில் வேலியை அமைப்பதும் உண்டு
தூங்குவதற்குப் படுக்கை எதுவும் தேவையில்லை முகத்தை / தலையைக் கொஞ்சம் சாய்த்தாலே தூங்கிவிடுவேன் நெடுநேரமாய் என்னைக் காத்திருக்க வைத்தவர் பழிவாங்குவதாய் நினைத்திருக்கலாம் என் தலை / முகம் சற்று சாய்ந்து இருப்பது பற்றி தெரியாமல்.
“அடுக்கப்பட்ட புத்தங்கள் எரியும்போது கவிதைப்புத்தகம் நன்றாக எரியும்” என்று கனவில் வந்த புத்தகத்தில் படித்தேன் காயங்களில் இருந்து ஒளிரத்தொடங்கும் பெண் என்னையே வேகவைத்து எடுத்து வரச்சொன்னாள் பற்களின் மூலம் நடந்து சென்று அவள் முன் நின்றேன் அப்புத்தகம் அவள் கையில் இருந்தது அதில் இரத்தம் தோய்ந்த குறுவாள் Book Marker ஆக இருந்தது.
2
வயிற்றுக்கு நேராக இரண்டாக வெட்டப்பட்ட மனிதனை இரண்டு சவப்பெட்டிகளில் புதைக்க வேண்டும் அதற்கு முன்பாக , வாழும் போதே அவன் அடைந்த சிறிய மரணங்களுக்கு உரிய நீர் சடங்குகளையும் செய்ய வேண்டும். வாரம் முழுவதும் இறந்தவர்களுக்காக ஞாயிற்று கிழமைகளில் அழுவது என் வழக்கம் அப்போது பார்ப்பேன் உதிர்காலத்தை துளிர்காலத்தில் மறந்திடும் சில மரங்களின் பழுத்த இலைகளில் வாசனை உட்பட பழங்களின் சாயல் இருக்கிறது என்று.
ஒரு கோட்பாட்டை விட கருதுகோளில் இருக்கும் சுதந்திரம் அழகானது என்றதும் எனக்கு கால் சுளுக்கியது நீங்களும் இதுபோல ஏதாவது முயன்று பாருங்கள். ஒரு காலில் இருந்து இன்னொரு காலுக்கு வலியை மாற்றுவதற்கு கால் தரையில் படாமல் ஒரு புளியங்கொட்டை மீது நின்றேன் அதற்குள்ளாக உலகம் தன் ஒரு சுற்றை முடித்தது நான் வயதில் தொங்க வேண்டியதாயிற்று
எறும்புகளை 11 – 1 நேர்ப்புள்ளியாக நிறுத்தி கோலம் போட்டு சுவரில் கிறுக்கிய கோட்டை கயிறாக இழுத்து துணி காயப்போடும் அவளைப் பற்றிய கேள்விகள் உட்பட பழைய கேள்விகள் ஏதேனும் இருந்தால் தாகமாக இருக்கும் போது கேளுங்கள் நீங்கள் போகும் வழியில் தண்ணீர் பதிலளிக்கும்
கடைசியாக என்னை நேசிக்கும் பெண்களின் பட்டியலைத் தருகிறேன் வெள்ளைத்தாளைப் பார்த்துக் கோபப்படக்கூடாது சரி சரி உங்கள் அவசரம் புரிகிறது “எல்லா பெண்களும்” என்பதற்கு பட்டியல் தேவையா ? நான் 3101982 பூக்களுள்ள சிறு மரம் இலையால் நிழல் தரவேண்டிய அவசியமில்லை பூக்களின் நறுமணத்திற்கும் நிழலுண்டு
விழிப்புடனிருக்கும் ஒரு துப்பாக்கியோ அல்லது ஒரு மழைத்துளியோ அழகே ஒளிர்கிறது மஞ்சள் முகத்தில் சூரியன் வீடு திரும்பினாலும் கம்பளம் விரிக்கும் இரவில் நிலவை உலவ அனுமதித்தாலும் பொய்கையின் முகத்தில் தாமரை மலர்ந்தேயிருக்கிறது விளிம்பில் நிற்கிறது ஒவ்வொரு இதழின் துடிப்பும் மீதி முத்தங்களை ஒளித்து வைத்திருக்கும் உதடுகளின் இடைவெளியில் உயிர் தத்தளிக்கிறது பிரிவின் நொடிகள் உலர்ந்த சருகுகளாக காற்றில் அலைகின்றன காற்று சருகுகளை முகர்கிறது வெய்யில் சுரக்கும் நிலத்தின் இருண்ட ரேகைகளைக் கடக்கிறது அழகோ அசைவின்றி பாறையாக நிற்கிறது இடைவெளியில் தொலைவில் கால நகர்வில் மெளனத்தின் அலையடிப்பில் பிணைத்துக் கொள்ள முடியாத விரல்கள் காதலை நெய்கின்றன வெம்மையடைந்த இரவின் அணுக்களில் அழகோ மின்மினி அகல் அதன் ஒளியில் இரவின் மலர்களில் வெளிச்சத்தின் வண்ணம் படிகிறது ஒரு பாடல் முடிவை எட்டியதும் மறுபாடல் அனுமதி கேட்கிறது பரிதவிப்போ இழப்பின் துயரமோ பாடலில் சொற்களாகவும் இசை ஒலிகளில் நினைவாகவும் ஒலிக்கிறது விலகியிருத்தலின் புனலைக் கடக்கவொரு படகும் நம்பிக்கையின் மரத்தாலான துடுப்பும் கரையில் கிடக்கின்றன கண்ணீர் வடிக்கும் சொற்கள் நிரம்பிய கவிதை படகில் அமர்கிறது விலங்குகள் வனத்தில் இலைகள் அற்ற மரங்கள் காலத்தின் ரேகைகளாக கிளைகளைக் கோர்த்திருக்கின்றன சோர்வடைந்த தாவர உண்ணிகள் இலைகளின் நினைப்பில் கிறங்குகின்றன சலிமும் காண வராத மஜ்னு வெளிறிய விரல்களால் அவற்றைத் தடவுகிறான் அவனேதான் முடிவுறாக் காலங்களுக்கும் பிரிவின் ஓவியம் மஞ்சள் நிற மகரந்தங்கள் நீலத்தில் அலைகின்றன அழகின் கண்களாக காற்றின் மீது நடனமாடுகின்றன இரவில் விளக்கேற்றும் ஒவ்வொரு பளிங்குத் துளியிலும் ஒரே முகம் இளவேனிலின் பசிய மஞ்சள் தளிர்களில் புத்துயிர்ப்பின் நம்பிக்கை அரச இலைகள் காற்றில் சிலிர்க்கும் போதோ கடைசி பழுப்பு இலைகளை வேம்பு நீங்கி விட முயலும் போதோ மழைத்துளிகள் நனைத்த பாதையில் கோடையின் பொன் சிலை பல்லக்கில் ஊர்வலம் வருகிறது அருகிப் போன சந்திப்பின் பழைய காலங்கள் சோர்வூட்டுகின்றன உடைந்த கப்பலின் இரும்பு நங்கூரம் கடலில் மூழ்குகிறது நினைவைத் தோண்டியெடுத்த ஒரு நிமிடமோ ஒரு மணிநேரமோ அல்லது ஒரு நாளோ அழகின் ஒளியை நாணிலேற்றி விண்ணில் எய்கிறது ஒளிக்கோடு கிழிக்கும் வெளியில் பறவைகள் சிதறுகின்றன சலனம் அடங்கவே ஒரு நூற்றாண்டாகிறது ஜன்னல் சுவற்றில் இளைப்பாறும் சாம்பல்நிறப் புறாக்கள் மிதக்கும் நுண் தானியங்களைக் கொத்துகின்றன அழகின் முகமோ புறாக்களின் குரலால் பூரிக்கிறது நிலவின் தடம் மறைந்த நேற்றின் இரவு அதிகாலையில் ஹார்ன் ஒலிக்கும் பேருந்தின் கலைந்திராத துயில் மின்விசிறிக் காற்றில் அசையும் திரைகள் நீள்-விரல்கள் திசைகாட்டிகள் கடற்பயணங்கள் துயர முகங்கள் விதானமில்லாக் கூடாரத்தில் கூடுகின்றன பார்க்க முடியாதவொரு முகம் அழகைத் திரையிட்டுக் கொள்ள அனுமதிக்கிறது காவியப் பத்திகள் நிறைந்த கடிதமோ காதலின் இசைக்குறிப்புகள் நிறைந்த ஆர்க்கெஸ்ட்ராவோ உதடுகளின் அச்சுப் பதிந்த வாழ்த்து அட்டைகளோ வெப்ப இயங்கியலின் இரண்டாவது விதியோடு உலகைக் கோர்க்கின்றன மெளனத்தின் விதைகளைத் தூவும் மஞ்சள் முகம் ஒரு வனத்தின் வேர்களில் அமிலமூற்றுகிறது காதலோ ஓர் இறகொடிந்த விமானம் பிரிவின் அதரங்களில் காலத்தின் முலைகள் பாலூட்டுகின்றன ஒவ்வொரு நாளும் இறுதி நாளின் ஆடைகளை அணிகிறது அரைக் கூண்டுகள் சுழலும் இராட்சத சக்கரத்தின் மேல் முனையில் பறப்பதற்கோ தடைகளற்ற பாதைகள் திறந்திருக்கின்றன ஒரு முத்தத்தால் இறகு முளைப்பதும் புறக்கணிப்பால் முதுகெலும்பு முறிவதும் கூர்நகத்தை விரலில் பூட்டிய இடைவெளி அழகிற்கும் பறத்தலுக்கும் இடையே கோடு கிழிக்கிறது எவ்வோசை பறவைகளை இரவில் எழுப்பியதோ அதன் தொடர்பில் அநித்தியம் ஒட்டி உறங்குகிறது காலத்தின் மூன்று அறைகளிலும் ஒளிர்கிறது மஞ்சள் முகம் உலகின் முதல் ஒலிகள் ஒலித்த நாட்களிலிருந்தே உடைந்த இசைக்கருவிகள் காதலின் சங்கீதத்தை இசைக்க முயல்கின்றன மின்கிதாரின் பிளிறல் பழைய டிராகன்களின் இறகசைப்பை ஒத்திருக்கிறது நாம் பிரிந்தோமா! இறங்கி வருவதற்கு முன்பாக தேவதைகளுக்கோ இறக்கைகள் இருந்தன பிறகோ உடன் நடக்கும் கால்கள் மட்டுமே பள்ளத்தாக்கை நிரப்பி விசும்பு வரை உயர்கிறது வெண் பனி அதன் உடலில் ரேகை விடும் இலையுதிர்த்த மரமோ இரவிலெல்லாம் கனவில் தலைசுற்றி ஆடுகிறது முடிவுறாக் காலங்களுக்கு உதிரும் இலைகளோ பறத்தலின் களிப்பில் சேர்ந்திசைக்கின்றன காதலின் பாடலில் தற்கொலையின் வசீகரம் சொற்களாகிறது இந்நோய் அறிந்தவன் மஜ்னு மட்டுமே ஆயினும் அவன் வைத்தியனல்லன் காதலின் இரண்டு ரோகிகள் எதிரெதிரே மெளனத்தை விற்கின்றனர் அநித்திய மலரின் மாறா ஒளியில் முகங்களைக் காண்கின்றனர் ரோகம் பன்மடங்கு உயர்கிறது ரப்பர்-பொம்மைகள் சுவடுகள் சிப்பிகள் நீருற்று, குரல் ஒலிக்காத பாலை உன்மத்தமேறிய வெய்யில் இடைவெளியற்ற மலர்மாலை அழகின் பல்லுருவங்களிலும் ஒரே மஞ்சள் முகம் ஆழத்தின் குரலோ தவளைகளின் வரவேற்பிசையோ பின்னரவில் புல்-மேயும் மட்டக் குதிரைகளின் அநாதை நிலைமையோ நீள் விரல்களால் தீண்டப்படாத அகப் பாதைகளைத் திறக்கும் உடலின் கருவிகளோ துர்மரணமடைந்த நதியாக காதலின் வெம்மையை கானலாக அசைக்கின்றன எலும்புக்-கூடுகள் நீரற்று மடியும் நன்னீர் மீன்கள் குழந்தைகள் விளையாடும் சர்ப்பங்களின் தோல் புகைபோக்கியின் இருட்டு முகம் நீர் திரளும் பிரிவின் கண்களில் இருள் சூழ்கிறது நாம் பிரிந்தோமா! மஞ்சள் முகத்தில் ஓர் உறைந்த முறுவல் கையசைத்து விடைகொடுக்கிறது நூறு நூறு விமானங்கள் பறப்பதற்காக ஓடுதளத்தில் நகர்கின்றன இடைவெளியில் அழகைப் புதைத்தவர்களான நாமோ முதுகில் படரும் நிலவின் ஒளியில் திசைகளாகப் பிரிகிறோம்
டம்ப்ள்ர் இணையதளத்தில் கதைக்கான துவக்க வரி ஒன்றைக் கொடுத்து அதை வைத்து ஒரு முழுக்கதை எழுதும் சவால் ஒன்று நிகழ்த்தியிருக்கிறார்கள். கொடுக்கப்பட்ட துவக்க வரி இதுதான்.
கோயில்கள் கடவுள்களுக்காக கட்டப்படுபவை. இது தெரிந்த ஒரு விவசாயி சிறிய கோயில் ஒன்றைக் கட்டி எந்த மாதிரியான கடவுள் குடிவருவார் என்று பார்க்கிறார்.
Sadoeuphemist என்னும் நபர் எழுதிய கதையைத்தான் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஆனால் மனதுக்கு மிக நெருக்கமான கதையாக இருந்தது
அரேப்போ தன்னுடைய வயலில் ஒரு கோயில் கட்டினான். கோயில் என்றால் கட்டிடம் எல்லாம் இல்லை. வெறும் நான்கு கற்களை அடுக்கி வைத்ததுதான் கோயில். இரு நாட்களுக்குப் பின்னர் அதில் ஒரு கடவுள் குடியேறியது. “நீங்க அறுவடையின் கடவுளாக இருக்கவேண்டும்” என்றபடி அரேப்போ ஒரு சிறிய பலிபீடம் செய்து அதில் இரண்டு கோதுமைக் கதிர்களை எரித்தார். “அப்படி இருந்தால் நன்றாக இருக்கும்” என்று பலிபீடத்தில் எரிந்த கோதுமைக் கதிர்களின் சாம்பலையும், அடுக்கி வைத்த கற்களின் கோணல்மானலான வடிவத்தையும் பார்த்தார். “இது பெரிய கோயிலெல்லாம் இல்லைதான். ஆனால் நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன். என்னை கவனித்துக்கொள்ள ஒரு கடவுள் இருக்கிறார் என்று நினைப்பது சுகமாகத்தானே இருக்கிறது” எனத் தன் வைக்கோல் தட்டைகளால் ஆன தொப்பியைக் கையில் எடுத்துக்கொண்டு அரேப்போ கிளம்பினார்.
அடுத்தநாள், பலிபீடத்தில் ஒரு ஜோடி அத்திப்பழங்கள் வைத்தார். அதற்கு அடுத்த நாள் கோயிலுக்கு அருகே ஒரு பத்து நிமிடம் தியானத்தில் அம்ர்ந்திருந்தார். மூன்றாவது நாள் குடியேறிய தெய்வம் பேசியது.
“நீ நகரத்தில் இருக்கும் கோயிலுக்குப் போக வேண்டும்.”
அதன் குரல் கோதுமைக் கதிர்கள் உரசுவதைப் போன்று, புற்களினூடே ஓடும் வயல் எலிகளின் கீச்சுகளைப் போலவும் இருந்தது
“ஒரு உண்மையான கோயில். ஒரு நல்ல கோயில். அங்கு போய் அசலான சில கடவுள்களின் அருளைப் பெற்றுக்கொள். நான் துடியான கடவுள் எல்லாம் கிடையாது. ஆனால் என்னால் சிபாரிசு செய்ய முடியும்.” பக்கத்தில் இருந்த ஒரு மரத்தில் இலையைப் பறித்து பெருமூச்சு விட்டபடி அது தொடர்ந்தது. “ நான் உன்னைக் குறைத்து மதிப்பிடவில்லை. இந்தக் கோயில் எனக்குப் பிடித்திருக்கிறது. எனக்கான வழிபாடுகளும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் இதனாலெல்லாம் உனக்கு ஏதேனும் நன்மை நிகழும் என்று நினைத்துக்கொள்ளாதே”
“நான் கட்டும்போது எதிர்பார்த்ததை விட எனக்கு நிறையவே நிகழ்ந்திருக்கிறது” என்றார் அரேப்போ. தன் கதிர் அரிவாளை கீழே போட்டு தானும் அமர்ந்தபடி கேட்டார். “ சொல்லுங்கள் நீங்கள் எதற்கான கடவுள்?”
“நான் உதிர்ந்த இலைகளின் கடவுள். நிலத்தடியில் நெளியும் புழுக்களின் கடவுள். காட்டுக்கும் வயலுக்குமான வரம்பின் கடவுள். பனிப்பொழிவுக்கு முன்பான முதல் உறைதலின் கடவுள். உங்கள் பற்களுக்கிடையே கடிபடும் ஆப்பிள் தோலின் கடவுள். நான் பல சிறிய விஷயங்களின் கடவுள். அழுகிப்போகும் துணுக்குகள் போன்ற, கணநேரத்தில் மறையும் காட்சிகள் போல. காற்றில் ஏற்பட்டு மறையும் ஒரு மாற்றத்தைப் போன்ற பொருட்களின் கடவுள்.”
பெருமூச்செறிந்தபடி அந்தக் கடவுள் தொடர்ந்தது, “இதையெல்லாம் வழிபட்டுப் பயனில்லை, போர், அறுவடை அல்லது புயல் போன்று அல்ல இவையெல்லாம். உன் பிரார்த்தனைகளை உன் கட்டுப்பாடுகள் அல்லாத விஷயங்களுக்காக சேமித்து வை. நீ மிகவும் சிறியவன். என்னைவிட ஆற்றல் வாய்ந்த எதையேனும் வழிபடு. போ.”
அரேப்போ இன்னொரு கோதுமைக் கதிரைப் பிடுங்கி, தன் பற்களிடையே வைத்து தட்டையாக்கினார். “எனக்கு இம்மாதிரி வழிபாடு செய்வதே போதும். அதனால் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையெனில் நான் இப்படியே தொடர்கிறேன்.”
“சரி உன் வசதிப்படி செய். ஆனால் முன்னமே உன்னை எச்சரிக்கவில்லை என்று சொல்லாதே” என்றபடி அடுக்கிவைக்கப்பட்ட கற்களுக்குள் பதுங்கிக் கொண்டது.
அரேப்போ தினமும் காலையில் வயல் வேலைக்கு முன்னர் ஒரு பிரார்த்தனையைச் சொல்வார் பின்னர் அவரும் அந்தக் கடவுளும் அமைதியாக மரங்களைப் பற்றிச் சிந்திப்பார்கள். நாட்கள், வாரங்கள் இப்படியே ஓடின. பின்னர் கரிய பெரிய ஒரு பெரும் புயல் வந்தது. அரேப்போவின் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கின. அவர் வீட்டு ஓடுகள் காற்றில் விசிறப்பட்டன, அவருடைய ஆலிவ் மரத்தில் இடி விழுந்து எரிந்து போனது. அடுத்தநாள், அரேப்போவும் அவருடைய மகன்களும் என்னென்ன மிச்சம் கிடக்கிறது என்று தேடிக்கொண்டிருந்தனர். அந்தச் சிறிய கோயில் வயல்முழுக்க இறைக்கப்பட்டிருந்தது. அந்த நாளின் வேலை முடிந்தவுடன், அரேப்போ சிதறிக்கிடந்த கோயில் கற்களை சேகரித்து திரும்ப அடுக்கினார்.
“தேவையில்லாத வேலை” என்று முணுமுணுத்தபடியே மீண்டும் அந்த கோயிலுக்குள் அந்தக் கடவுள் நுழைந்தது. “ஆனால் என்னால் உனக்கு ஆகக்கூடியது ஒன்று இல்லை”.
“நாம் சமாளிக்கலாம். புயல் தாண்டிவிட்டது. திரும்பக் கட்டுவோம். ஆனால் இன்று படையலுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நாளை இதற்கான அஸ்திவாரத்தை சரி செய்யலாம். சரியா?”
அந்தக் கடவுள் கற்களை ஒருமுறை அசைத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டது.
ஒரு வருடம் ஆனது. அந்தக் கோயிலுக்கு கற்சுவரும், கோதுமைத் தட்டைகளால் ஆன கூரையும் வந்தது. அரேப்போவின் நண்பர்கள் அதைப் பார்த்து மெலிதாய்ச் சிரித்தார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் சில நேரம் பழங்களையும் பூக்களையும் வைத்துப்போனார்கள்.
பிறகொருமுறை வெள்ளாமை பொய்த்தது. கடவுள்கள் தங்கள் கருணையை நிறுத்திவிட்டார்கள். அரேப்போவின் வயலில் கோதுமை மெலிதாய் உடைந்து விழக்கூடியதாய் வளர்ந்தது. மக்கள் கதறியபடி தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வெறித்த கண்களோடு வயல்களைப் பார்த்தார்கள். செம்மறி ஆடுகளைப் பறிகொடுத்து அதன் இரத்தத்தை நிலத்தில் தெளித்து பசியோடே உறங்கப் போனார்கள். அரேப்போ கோயிலுக்கு வந்து கோயிலுக்கு அருகில் அமர்ந்து கொண்டார். அவருடைய விலா எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. அவர் கைகள் நடுங்கியபடி ஒரு பிரார்த்தனையைச் சொன்னார்.
“உனக்கு இங்கு எதுவும் கிடைக்காது” என்றபடி அந்தக் கடவுள் இருளில் முனகியது. “நான் செய்யக்கூடியது எதுவுமில்லை. சொல்லப்போனால் செய்யக் கூடியதே எதுவுமில்லை” நடுங்கியபடி அது “இந்தக் கோயில் உனக்கு இன்னொரு சுமையா?” என்றது.
“நாங்கள்” என்று தொடங்கி அரேப்போ வாக்கியத்தை விழுங்கினார். “ இந்த வருடம் சரியில்லை. நாங்கள் இதனைச் சந்தித்திருக்கிறோம். இப்போதும் சந்திப்போம். என்ன பசியுடன் இருக்கிறோம். அவ்வளவுதான்” என்றார்.
“நாம் ஒருவருக்கொருவர் இருக்கிறோம் தானே? இன்னும் பலர் வேறு கடவுள்களை எல்லாம் வேண்டினார்கள். ஆனால் அவர்கள்கூட காப்பாற்றவில்லையே” என்றபடி பலிபீடத்தில் சில கோதுமைக் கதிர்களை வைத்தார். “நம் ஒப்பந்தம் எனக்குப் போதும் என்றார்”
“இன்னும் மோசமானவை வரும்” என்றபடி அந்தக் கடவுள் கற்களுக்குள் இருந்து உரைத்தது. அவற்றில் இருந்தெல்லாம் நான் உன்னைக் காக்க முடியாது.”
வருடங்கள் உருண்டோடின. அரேப்போ சுருக்கம் விழுந்த தன் கைகளை கோயில் கற்கள் மீது வைப்பார். சில நாட்கள் அங்கு அமர்ந்தபடி கடவுளைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பார்.
ஒரு சபிக்கப்பட்ட நாளில் செந்நிறத்தில் மிளிரும் கடலைத்தாண்டி போர் வந்தது.
அரேப்போ தள்ளாடியபடி கோயிலுக்குள் வந்தார். அவருடைய கை அவருடைய வயிற்றை மூடியபடி இருந்தது. அந்தப் புனித இடமெங்கும் அவருடைய இரத்தம் சிந்தியது. அவருக்குப் பின்னால் அவருடைய கோதுமை வயல்கள் எரிந்தன. அதில் எலும்புகள் கருகின. தள்ளாடியபடி மண்டியிட்டார். அப்போது அந்தக் கடவுள் அவரைக் காண வெளியே வந்தது.
“என்னால் இவற்றைக் காப்பாற்ற முடியவில்லை” என்று மிக வருத்தத்துடன் சொன்னது. “என்னை மன்னித்துவிடு! என்னை மன்னித்துவிடு! என்னை மன்னித்துவிடு!” என்று இறைஞ்சியது. மரங்களின் இலைகள் எரிந்து சாம்பல் மழையைப் பொழிந்து கொண்டிருந்தன. “இத்தனை வருடங்கள் நான் உனக்கு எதையுமே செய்ததில்லை” என்று அரற்றியது.
“ஷ்” என்றபடி அரேப்போ தன் வாயை விரலால் மூடிக்காட்டினார். அவர் இதழ்கள் இரத்த வாடையை அறிந்தன. அவர் பார்வை மங்கியது. தன் நெற்றியை கருவறைக் கற்களின் மீது வைத்தபடி அரேப்போ முனகினார். “சொல்லுங்கள். நீங்கள் எவற்றின் தெய்வம்?”
“நான்…” என்று இழுத்தபடி தெய்வம் அரேப்போவின் தலையைத் தடவிக்கொடுத்து தன் கண்ணை மூடிப் பேசியது.
”நான் உதிர்ந்த இலைகளின் கடவுள். நிலத்தடியில் நெளியும் புழுக்களின் கடவுள். காட்டுக்கும் வயலுக்குமான வரம்பின் கடவுள். பனிப்பொழிவுக்கு முன்பான முதல் உறைதலின் கடவுள். உங்கள் பற்களுக்கிடையே கடிபடும் ஆப்பிள் தோலின் கடவுள்.”
அரேப்போவின் இதழ்கள் புன்னகைத்தன.
“நான் பொருளற்ற, பல சிறிய விஷயங்களின் கடவுள். அழுகிப்போகும் துணுக்குகள் போன்ற, கணநேரத்தில் மறையும் காட்சிகள் போல. காற்றில் ஏற்பட்டு மறையும் ஒரு மாற்றத்தைப் போன்ற பொருட்களின் கடவுள்” என்று முடிக்கையில் அந்தக் கடவுள் விசும்பியது.
“அழகு” தன் இரத்தம் கற்கள் வழியே தரைவரைக்கும் ஒழுக அரேப்போ சொன்னார் ”எல்லாமே! அவை எல்லாமே அழகு”
வயல்கள் எரிந்து அந்தப் புகை சூரியனை மறைக்க, இரத்தப்பசி எடுத்த அந்தப் போர் நடந்தது. வானுலகம் தன் கோரமுகத்தை கட்டவிழ்த்து விட்டது. அரேப்போ என்னும் விவசாயி அந்தக் கோயிலின் கருவறைக் கற்களில் தலை சாய்த்தபடியே தன் கடவுளிடம் போயிருந்தான்.
***
இதன்பின்னர் ciiriianan என்னும் நபர் எழுதியது.
சோரா அந்தக் கோயிலை கூரைகள் உட்பக்கம் விழுந்த நிலையில் எலும்புகளுடன் கண்டடைந்தாள்.
“பாவம்! ஏழ்மையான கடவுள்” கடைசிப் பூசாரியைப் புதைக்கக்கூட யாருமில்லை” என்றாள். பின்னர் வெளியூர்க்காரியான அவளுக்கு “இல்லை இப்படித்தான் இறந்தவர்களுக்கு இங்கு மரியாதை செய்வார்களோ” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
அந்தக் கடவுள் ஆழ்ந்த யோசனையில் இருந்து விழித்தது.
“அவன் பெயர் அரேப்போ. அவன் ஒரு விவசாயி” என்றது.
சோரா திடுக்கிட்டாள். அவள் அதற்குமுன் ஒரு தெய்வத்தின் குரலைக் கேட்டதில்லை. “நான் அவருக்கு எப்படி மரியாதை செய்வது?” எண்றாள்.
“என் பலிபீடத்துக்குக் கீழே அவனைப் புதை” என்றது கடவுள்.
“சரி” என்றபடி சோரா மண்வெட்டியை எடுக்கச் சென்றாள்.
அவள் திரும்ப வந்து, மரக்குச்சிகள் மற்றும் உதிர்ந்த இலைகளுக்கு இடையே இருந்து எலும்புகளைச் சேகரிக்கும்போது, அந்தக் கடவுள் அவளிடம் “இரு” என்றது”. அவள் அந்த எலும்புகளை சாயமேற்றாத கம்பளித்துணி ஒன்றில் வைத்திருந்தாள். “இரு” என்று மீண்டும் கூறிவிட்டு “என்னால் உனக்கு எதுவும் செய்ய முடியாது. நான் உபயோகமான எவற்றின் கடவுளும் இல்லை” என்றது.
சோரா பலிபீடத்தைப் பார்த்தவாறு தரையில் அமர்ந்து அந்தக் கடவுள் சொன்னதைக் கேட்கத் துவங்கினாள்.
“புயல் அவன் விளைச்சலைச் சூறையாடிய போது, நான் எதுவும் செய்யவில்லை. வெள்ளாமை பொய்த்து அவன் பசியுடன் இருந்தபோது, என்னால் அவனுக்கு உணவளிக்க முடியவில்லை. போர் வந்தபோது” அதன் குரல் நடுங்கியது.
“போர் வந்தபோது என்னால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை. போரிலிருந்து இரத்தம் வழிய என் கைகளில் மரணிப்பதற்காக அவன் என்னிடத்தில் வந்தான்”
சோரா மீண்டும் அந்த எலும்புக் குவியலைப் பார்த்தாள்.
”எனக்கு என்னவோ நீங்கள் மிக உபயோகமான ஒன்றின் கடவுளாக இருந்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது”
“என்ன!” என்று அந்த தெய்வம் கேட்டது.
சோரா, அந்த மண்டை ஓட்டை பத்திரமாக அந்தக் கம்பளித் துணியில் எடுத்து வைத்துவிட்டுச் சொன்னாள். “நீங்கள் அரேப்போவின் கடவுளாக இருந்திருக்கிறீர்கள்.”
***
இதன்பின்னர் Stu-pot என்பவர் தொடர்ந்து எழுதியது.
தலைமுறைகள் உருண்டோடின. அந்தக் கிராமம் மீண்டு வந்தது. வீடுகள் மீண்டும் கட்டப்பட்டன, தோட்டங்கள் மீண்டும் பயிரிடப்பட்டன, காயங்கள் ஆறின. மலையில் வசித்த, கற்களோடு பேசிய அந்தக் கிழவனை எல்லோடும் மறந்துவிட்டார்கள் ஆனால் கோயிலுக்கு அவன் பெயர் நிலைத்துவிட்டது.
அந்தக் கோயிலின் கடவுள் பல நாட்களுக்கு முன்னமே அமைதி ஆகிவிட்டதால், பலபேர் அது வெற்றிடம் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தப் பாழடைந்த கோயிலைக் கடக்கும்போதெல்லாம், ஒரு இறந்த நண்பனுக்கான இரங்கல்போல நெஞ்சுக்குள் வலித்தது. அந்தக் கோயிலில் இருந்து வீசும் வெறுமையான குளிர்காற்று, போய்ப்பார்க்கலாம் என்று நினைத்தவர்களையும் விலக்கியது. அந்தக் கோயிலுக்கு அரிதாக வருபவர்கள் விவரமறியாத குழந்தைகள் மட்டுமே. அவர்கள் சுற்றியிருக்கும் பூச்செடியில் இருந்து வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு மலர்களை பலிபீடத்தில் வைத்துவிட்டுப் போவார்கள்.
அந்தக் கடவுள் அமைதியான அதன் கோயிலுக்குள் அமர்ந்து தூரத்துச் சாலையையும் அதில் பயணப்படும் மக்கள், வண்டிகள், குதிரைகள், மரத்தில் இருந்து விழுந்து காலைச்சுற்றும் இலைகள் ஆகியவற்றைப் பார்த்தபடி இருந்தது. எவ்வளவு நாளாயிற்று? இந்த உலகம் அது இல்லாமல் நகர்ந்திருக்கிறது. அதனால் ஆகக்கூடிய உதவி எதுவுமில்லை என்று அதற்குத் தெரியும். நிலங்கள் வெள்ளத்தில் முழுகவும், வெள்ளாமை பொய்க்கவும், வீடுகள் எரிக்கப்படவும், உபயோகமுள்ள கடவுள்களே கைவிட்டார்கள் எனில் இந்த உலகம் மிகவும் மோசமான இடமாக இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டது,
மனிதர்கள் அறிவிலிகள் என்று அதற்குப் புரிந்தது. வரம் தராத, அதிர்ஷ்டம் அருளாத கடவுளிடம் யாரேனும் பிரார்த்தனை செய்வார்களா? எதையுமே எதிர்பார்க்காமல் ஒரு கோயிலைப் பராமரித்து யாரேனும் படையலிடுவார்களா? ஒரு உப்புப் பெறாத கடவுளிடம் அமர்ந்து யாரேனும் தியானம் செய்வார்களா? எதையும் எதிர்பார்க்காமல் யாரென்றே தெரியாத ஒருவரைப் புதைத்துவிட்டுப் போவார்களா? பயனற்ற, வித்தியாசமான அன்பை என்னிடம் கொட்டிப்போயிருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதமான, முட்டாள்தனமான, நன்றியுள்ள, அதே நேரம் பிழைக்கத்தெரியாத பிறவிகள் இந்த மனிதர்கள்.
அதனால் அது மாலை மங்கும் மஞ்சளை மரத்தில் இருந்து விழும் இலைகளில் தீட்டியது. புழுக்களை மண்ணில் நடனமாடச் செய்தது. காட்டுக்கும் வயலுக்குமான வரம்பை பூச்செடிகளும் சிறிய பெர்ரிப் பழச் செடிகளும் வளரச் செய்தது. பனி பொழியும் குளிர் வருமுன்னே காற்றில் குளிரை ஏற்றி எச்சரித்தது. ஆப்பிள்கள் மொறுமொறுப்பான, கடித்தால் பற்களில் சிக்காத தோலுடன் பழுக்கச் செய்தது. இதனுடன் அதன் கட்டுப்பாட்டில் இருந்த அர்த்தமற்ற அனைத்தையும், தன் இறுதி மூச்சில் தன்னைப் புகழ்ந்த ஒருவனுக்காக அழகாக்கியது.
“வணக்கம்! எளிய அழகான பொருட்களின் கடவுளே” என்று ஒரு பரிச்சயமான குரல் வந்தது.
கண்கள் சுருக்கி உதடுகள் குவித்து அந்தக் கடவுள் “அரேப்போ” என்று முணுமுணுத்தது. நூறாண்டுகள் பேசாததால் அதன் குரல் முரடு தட்டியிருந்தது.
“நான் அர்ப்பணிப்பின், சிறிய அன்புகாட்டும் செய்கைகளின், முறிக்கமுடியாத பிணைப்புகளின் கடவுள்” என்று அந்தக் கடவுளை அமைதிப்படுத்தியது அரேப்போ.
“மிக அருமை அரேப்போ” என்று அந்தக் கடவுள் தன் கண்ணீரினூடே சொன்னது. “எனக்கு உன்னை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது – இவ்வளவு முக்கியமான கடவுளுக்கு நிச்சயம் பெரிய கோயிலொன்று தேவைப்படும். நீ நகரத்துக்குப் போகலாமே. அங்கு பலபேர் உன்னைக் கொண்டாடுவார்கள்”
“இல்லை! நான் அங்கும் போகப்போவதில்லை” என்று அரேப்போ தலையாட்டி மெல்லச் சிரித்தது.
“இன்னும் தொலைவா? உனக்கு ஆசைகள் அதிகம். ஆனால் நீ நிச்சயம் விரும்பப்படுவாய் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என்று அந்த மூத்த கடவுள் சொல்லிக் கொண்டிருக்கையில் அரேப்போ இடைமறித்தது.
“நீ அனுமதித்தால் நான் உன்னுடனே இருக்க விரும்புகிறேன்” என்றது அரேப்போ.
மூத்த கடவுளுக்குப் பேச்சில்லை, “நீ ஏன் இங்கிருக்க விரும்புகிறாய்?” என்றது.
ஏனெனில் “ நான் முறிக்கமுடியாத பந்தங்கள், பிரியாத நட்புகளின் கடவுள். மற்றும் நீ அரேப்போவின் கடவுள்” என்றது அரேப்போ.
****
ஹாலாஸ்யன் – ஆசிரியர் தொடர்புக்கு -yes.eye.we.yea@gmail.com