Home Blog Page 75

ரொபெர்த்தோ பொலான்யோ கவிதைகள்

2

தமிழில் : சரோ லாமா

1]


கழுத்தில் கத்தி வைத்து
அந்த இளைஞன் உறுமுகிறான்
உன்னிடமிருக்கும்
எல்லாவற்றையும் எனக்கு கொடு
எல்லாவற்றையும் எனக்கு கொடு
இல்லையெனில் நான் உன் கழுத்தை அறுத்துவிடுவேன்
என்றபோதும்
அவனது கேசத்தின் வழியே நிலா சுடர்கிறது.

***

2] மரங்கள்

நான் எழுதும்போது
மரங்கள் என்னை அமைதியாக கவனிக்கின்றன
மரத்தின் உச்சி
பறவைகள், எலிகள், பாம்புகள், புழுக்கள் என
பல்லுயிரிகளால் நிறைந்திருக்கிறது
ஆனால் என் மூளையோ பயங்கள்
மற்றும் முறைப்படுத்தப்படாத திட்டங்களால் நிறைந்திருக்கிறது

***

3]


இந்த ஆயிரம் வருடங்களில் எதுவும் மாறிவிடவில்லை
அவையெல்லாமும் இந்த நூற்றாண்டில் எழுதப்பட்டுவிட்டன.
மக்கள் சரியாக எழுதப்படாத வாக்கியங்களை வாசிக்கிறார்கள்
தொலைந்துவிட்ட பெண்ணை தேடுகிறார்கள்.
துண்டாடப்பட்டு அசைவின்மையில் கிடக்கும் குழந்தைகள்
உங்கள் பிரகாசமற்ற பச்சை நிறக் கண்கள் என எதுவும்
ஒரு போதும் உயிர்த்திருக்கப் போவதில்லை
அது ஒரு கிரேக்க துன்பவியல் நாடகத்தைப் போல
இன்னும் சரியாக சொல்லப்போனால்
இதெல்லாமும்
மழைக்கால கடற்கரையைப்போல
இன்னொரு அதிசயமாய்
இன்னொரு உதாசீனமாய்.

***

4]


விதவைகளைப்பற்றி
கைவிடப்பட்டவர்களைப்பற்றி
அநாதரவான முதியவர்களைப்பற்றி
ஊனமுற்றவர்களைப்பற்றி
மனம் பேதலித்தவர்களைப்பற்றி எழுதுங்கள்.
உலகை அசைத்து நகர்த்தும்
மகத்தான போர்கள் மற்றும்
மகத்தான வணிக தந்திரங்களுக்குப் பின்னால்
அவர்கள் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் கடன் வாங்கி
வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு
நமது நகரங்களின்,
நமது விளையாட்டுகளின்,
நமது பாடல்களின் மீது படிந்துவிட்ட
சிவப்புக் கறையை படித்துக்கொண்டு
அவர்கள் இருக்கிறார்கள்.

***

5] இடைவேளை

என்னை நம்புங்கள், நான் அறையின் மையப் பகுதியில் அமர்ந்திருக்கிறேன்
மழைக்காக காத்திருக்கிறேன். நான் தனித்திருக்கிறேன்.
எனது கவிதையை எழுதி முடித்தேனா இல்லையா என்பது பற்றி கவலையில்லை
நான் மழைக்காக காத்திருக்கிறேன்.
காபி அருந்திக்கொண்டு முற்றத்துக்கு வெளியே நீளும் அழகான நிலக்காட்சிகளை
சன்னல் வழியே பார்த்துக்கொண்டிருக்கிறேன்
கொடிக்கயிற்றில் துணிகள் அசையாமல் கிடக்கின்றன
அங்கே காற்றின் இருப்பு துளியும் உணரப்படவில்லை
சற்று தொலைவில்
குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக அமர்ந்து காபி குடித்தவாறு பார்த்துக்கொண்டிருக்கும்
வண்ணத்தொலைக்காட்சியின் சத்தம் சன்னமாக கேட்கிறது.
என்னை நம்புங்கள், மஞ்சள் நிற மேசைகள் மடித்து வைக்கப்பட்டிருக்கின்றன
புறநகருக்கு வெளியே அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிட வேலைகள்
நடந்து கொண்டிருக்கின்றன
கட்டிடத்தின் உச்சியில் பதினாறு வயது சிறுவன்
சிவப்பு செங்கற்களை அடுக்கிவைத்துக் கொண்டே
எந்திரத்தின் அசைவுகளை சிந்தித்துக் கொண்டிருக்கிறான்
அவனுடைய அந்த நேரத்துக்கான மிகப் பரந்த வெறுமையான வானம்
அந்திக் காற்றோடு விளையாடிக் கொண்டிருக்கிறது
அவன் தன் எண்ணங்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறான்
தனது எண்ணங்களோடும் உறைந்த காட்சிப் படிமங்களோடும்
விளையாடிக்கொண்டிருக்கிறான்.
ஒருவித செயலற்ற தன்மை ஊடுருவும் பனியைப்போல
அவனது கண்களில் இருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
என்னை நம்புங்கள், அங்கே அருகாமையில் சூழ இருந்தது அன்பு அல்ல
ஆனால் களவாடப்பட்ட அழகான முடிந்துபோன வைகறை மட்டும்தான்.

***

6]


சில நேரங்களில் நான் கற்பனை செய்திருக்கிறேன்
குறைந்த ஒளியுள்ள அறை ஒன்றை
ஒரு சிறிய அடுப்பு
ஆரஞ்சு பழங்களின் வாசனையோடிருக்கும்
ஒரு சிவப்பு நிற திரைச்சீலை
வசிப்பிட தளத்தின் மேல் ஒரு பெரிய அகலமான மெத்தை
தழும்புகள் நிறைந்த நீண்ட கால்களுடைய ஒரு பெண்
முகம் தாழ்த்திய கண்கள் மூடிய அந்தப் பெண்ணை
முடி அதிகம் வளர்ந்த பையன் ஒருவன் பின்கழுத்தில் முத்தமிடுகிறான்
அவனது விறைப்பான ஆண்மை அவளது பின்புறத்தை தழுவிக்கிடந்தது
மேலும் இருவரும் காமத்தின் விறைப்போடு முயக்கத்தில் கிடக்கிறார்கள்
மிக அருமையான நறுமணம் அவர்களைச் சூழ்ந்திருக்கிறது
அவன் தலையிலும் மூக்கிலும் மலர்கள் அலங்காரம்
காதலர்களின் நிலவில் அவர்கள் ஓர் அற்புதமென
நான் மேலும் சில காட்சிகளை கற்பனை செய்துகொள்கிறேன்.

***

தமிழாக்கம் : சரோ லாமா

அதீதன் கவிதைகள்

0

தொடரும் உயிரி

எவ்வித கவலைகளுமின்றி
சீழ்கையடித்தபடி
வான்பார்த்து நடந்து செல்பவன்
நிதானித்துத் திரும்பிப் பார்க்கையில்
அவ்வுயிரின் கண்களை
நேருக்குநேர் சந்திக்க நேரிடுகிறது

எப்போதென கணிக்க இயலாத
காலத்திற்கு முன்பிருந்தே
தொடர்ந்து கொண்டிருக்கும் பயணத்தின்
ஏதோவொரு நிறுத்தத்தில்
இறங்க வேண்டியவர்களாயினும்
நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது
அவர்களது வாகனம்

உடலை துளைத்திடும் பார்வையிலிருந்து
தப்பிக்க முயல்பவனை
விடாது துரத்திடும்
அதன் கழுத்தில் மாட்டப்பட்டிருந்த
சங்கிலியின் முனையைப் பிடித்திருக்கும்
விரல்களுக்குச் சொந்தக்காரனின்
முகத்தை
இதற்குமுன் பலமுறை
கண்ணாடிகளில் பார்த்த ஞாபகம்

உடையினை ஒவ்வொன்றாய் களைந்தபடியே
ஓடிக்கொண்டிருப்பவன்
அவிழ்த்தெறிந்த ஆடைகளை தின்றபடியே
மீளமுடியா சாபத்தின் கண்ணியாய்
பின்தொடர்கிறது

இனி வழியேதுமில்லையென
பயத்தின் உச்சத்தில் உடலொடுங்கி
குன்றியவனின் அருகில் வந்து
இடம்மாற்றிய
சங்கிலியை பற்றியவனை
விழிகளால் வெறித்து பார்க்குமதன்
இதழில் தெரிந்த ஏளன சிரிப்பின்
அர்த்தம் புரிந்திட
திறந்துகொள்கிறது பாதை

***

விளையாட்டு மைதானம்

நெடிதுயர்ந்த
இம்மதிலுக்கு பின்னே இருக்கிறது
ஒரு விளையாட்டு மைதானம்
தினமும் வருபவர்களின்
கூச்சல்களும் இரைச்சல்களும்
செவிகளில் விழும்போதெல்லாம்
பரபரக்கும் மனதை கட்டுப்படுத்தி
கவனம் சிதறாமல் உறங்க முயல்கையில்
கனவுக்குள் மெல்லக் கேட்கிறது
இதுவரை அறியப்படாத விளையாட்டின்
விதிமுறைகள்
உதைபடும் பந்தாகவோ
அடித்திடும் மட்டையாகவோ
இடையிலிருக்கும் வலையாகவோ
எதுவொன்றாகவும் இல்லாமல்
மைதானத்து நிலமாக இருக்க விரும்பும்
விநோத ஆசையோடு
நிதமும் தருணத்தை எதிர்பார்த்து
காத்திருப்பவர்களுக்கு ஆறுதலென
காற்றில் மிதந்து வரும் தூசினை
சேகரித்து வைத்திருக்கும் கொள்கலன்
நிரம்பி வழிகையில்
தூரத்தில் ஒலித்த மணியோசையால்
சிந்தை மீண்டு தலைதிருப்பிட
எங்கிருந்தோ வந்து விழும்
பந்தொன்றில் வரையப்பட்டிருக்கும்
சிரிக்கும் முகத்தை பிரதியெடுத்து
பத்திரப்படுத்தி வைத்திருக்கும்
மதிலுக்கு முன்னிருப்பவர்களால்
ஒருபோதும் போகமுடியாத மைதானத்தில்
தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கின்றன
எண்ணற்ற விளையாட்டுகள்..

***

கூட்டாளிகள்

நிகழ்ந்து கொண்டிருக்கும்
யாவற்றையும் பார்த்தவாறே
அமைதியாய் இருக்கும்
அச்சிலையை போலவே எதுவும் பேசாமல்
ஒரு ஓரமாய் உட்கார்ந்திருப்பவனை
யாரும் கவனித்ததாய் தெரியவில்லை
அனைத்தையும் படம் பிடிக்கும்
தேர்ந்த புகைப்படக் கலைஞனை போல
தலையை உயர்த்தி
கண்களை மூடிமூடித் திறக்க
சேகரமாகின்றன புகைப்படங்கள்
குவியத்தொடங்கிய புதியனவற்றுக்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
பழையவைகளைக் கண்டுபிடிக்கும்
ஒருபோதும் அலுத்திடாத விளையாட்டில்
ஈடுபட்டிருப்பவனை அழைத்து
தன்னையும் சேர்த்துக்கொள்ளச் சொல்லி
இறைஞ்சும் குரல்
அவனுக்கு மட்டுமே கேட்டிட
மெல்ல அத்திசை நோக்கி
திரும்பிப் பார்த்து சிரித்தவனுக்கு பதிலாய்
ஒற்றைக்கண் சிமிட்டி நகைக்கிறது சிலை.

***

அதீதன்

ஜீவன் பென்னி கவிதைகள்

0

1)

விடியல்

சிறிய ஒளிகளை பரப்பும் இந்த தூண்கள்
மிகப்பெரியவை
காண்டா விளக்குகள் அணையும் வரை
பகல் காத்திருக்கிறது
நெருப்பு கண்டுபிக்கப்பட்ட
இரவிற்குப் பிறகு
உலகம் காத்திருப்பதற்குப்
பழகிக்கொண்டது.
இவ்வுலகின் தாமதமான பகல்
பல நுட்பமான சந்தர்ப்பங்களுக்கு
மிக அருகில்
நம்மைக் கொண்டு வந்து
சேர்த்திருக்கிறது
இறுக்கமற்ற ஒலியின் லயத்துடன்

*

2)

அனாதையென்றொரு சொல்

எப்போதும் தன்னாடைகளை கிழித்துக்கொண்டிருக்கும்
அவளுக்கு
பெயரொன்றுமிருக்கிறது
சிறிய மொழியொன்றும்
பேய் சிரிப்பும் அழுகையொன்றும்
ஞாபகங்களின் அழுக்குகள்
படிந்திருக்கும் நகங்களை
நாளெல்லாம் கடித்துத் துப்பிக்கொண்டிருக்கும்
அவளுக்கு
இவ்வளவுக்கருகிலிருந்தும் போதுமானதாகயில்லை
இந்த அன்புகள்

*

3)

மீதமிருப்பவை

இவ்வினாவை
ஒரு மெல்லிய கனத்திலிருந்து தான்
உருவாக்கி வைத்திருந்தேன்
மிக இரகசியமாக.
எல்லா விடைகளும் கிடைக்கப்பெற்ற
வாழ்விற்குப் பிறகும்
அந்த வினா
என்
கைகளுக்குள் ளிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக என் கைகள்
துண்டான பிறகும்
மீதியில் அதன் வாசனை
வலியுடன் ஒட்டிக்கொண்டிருந்தது
மீதமிருந்து எது உன்னைத் துன்புறுத்துகிறதோ
அதுவே அசலான வாழ்வு

*

4)

பாதை

பிறகு ஒருபொழுதில்
நீ சாலையினோரத்தில் பூச்செடிகளை
விற்றுக்கொண்டிருந்தாய்
எப்போதோ தவறவிட்ட
ஒரு துண்டு ஒளிரும் வானம்
கொஞ்சம் கொஞ்சமாக
கிடைத்துக்கொண்டிருக்கிற துனக்கு
உன் பாதைகளை உன்னிடம் எது சேர்க்கிறதோ
அதுவே அன்பினாற்றல்

*

5)

கொள்ளை நோய்

கடைசியில் மீந்துவிட்ட வெள்ளைத்துணிகளில்
இன்னும்
சில குழந்தைகளைச் சுற்றலாம்
பிறகு அதன் வலிகளை
தீர்க்கமாகப் புதைத்து
அடையாளத்திற்கென சிறிய செடிகளை
நடலாம்
கைவிடப்பட்ட உயிர்களுக்கென நம்மிடமிருக்கும்
சொற்கள்
அழுகைகளாகிவிட்டன
பிரார்த்தனைகளின் கடைசி சொல்லில்
நாம் வெறுங்கையுடன்
நின்றுகொண்டிருந்த அன்றிரவு
எப்போதும் போலல்லாமல் மிகத்தனிமையாகப்
பிரகாசிக்கின்றன
சில நட்சத்திரங்கள்.

***

ஜீவன் பென்னி

மீரா மீனாட்சி கவிதைகள்

0

***

ஜீன்ஸ் பாக்கட்டில் மிஞ்சிய நட்சத்திரங்கள்.

“அவள்
ஒவ்வொரு விண்மீனையும்
பிற விண்ணுடலையும்
இடம்பெயர்த்து வடிவமைக்கிறாள்
அதன் புத்தம்புது அழகை
உள்ளார்ந்து இரசிக்கிறாள்
மிச்சமாயின இரண்டு நட்சத்திரங்கள்
எங்கும் பொருந்தவில்லை.
ஜீன்ஸ் பாக்கட்டில் கவனத்துடன்
பத்திரப்படுத்துகிறாள்

பலகோணங்களில் நின்றும்
ஒரு கண்ணடைத்துக் கூர்ந்து நோக்கியும்
துல்லியமான மனகணக்குகளிலும்
சீராகாமல் புதிரானது
அவற்றின் இடமெங்குதான் மறைந்தன !!!

கோலம் பழகியவளிடம்
கோடுகளும் அதன் வளைவுகளும்
இலக்கணமாக நிகழ்ந்தன

மருதாணிச் சிகப்பில்
ரேகை மங்கிய உள்ளங்கையில்
இடம்தொலைத்து நடுங்கும்
இரண்டு விண்மீன்கள்
வெறித்துப் பார்க்கின்றன”

அவள் ஜீன்ஸை அவிழ்க்கிறாள்

***

மீரா மீனாட்சி

சோழன் வாலறிவன் கவிதைகள்

3

01}

அறிவு
நம்மை நன்மை தீமையென
தராசில் வைக்கிறது

ஞானம்
நம் சகலத்தையும்
ஒழுங்கு படுத்துகிறது

யாருடைய அறிவு
யாருடைய தராசு
யாருடைய ஞானம்
யாருக்கு நன்மை
யாருக்கு தீமை
யாருக்கான ஒழுங்கு

எல்லா காலமும்
பொருள் குறித்தே
எல்லா பாயிரமும்
காசானவனின் மசுரு குறித்தே

02}
கூறு போடும் டாலர்

ஒவ்வொரு நானும்
புனித மாஸ்க்கை
புரட்சி மாஸ்க்கை
மாட்டிக் கொண்டு
எத்தனை எத்தனை ஒத்திகை பார்த்தும்
திரைக்கதைப்படி மேடையில் அத்தனையும் சொதப்பல்

என் நானை நீங்கள்
நடிகரென்று சொன்னாலும்
உண்மையில் அதுக்கு
நடிக்க சுத்தமாக வராது
சுட்டுப் போட்டாலும்
சாம்பலிலும்
அடிமையின் துரோகத்தின் சந்தர்ப்ப வாதத்தின்
மரபணு நெடி அடவுகள் போடும்

அதே புன்னகை
அதே வேம்பூ
அதே காதல்
அதே காமம்
அதே தாழ்வின் அகங்காரம்
ஆலகாலத்தின் அடவுகள்

பன்றியான
என் நானை
அதன் சகதியில்
அதன் களிதீரத் தீர
வாழ்வளித்தே வைத்திருக்கிறேன்

சந்தையில் கூறுவைக்க
தயார் நிலையில் இருக்கும்
அரசின் கூர் ஈட்டியை எப்போதும்
அன்போடு வரவேற்று காத்திருக்கிறேன்

களிதீரத் தீர
என்னையும் நன்றாக உண்டு
நீங்கள் மாஸ்க்குகளோடவே காத்திருங்கள்
புலி மான் கோமாதா எருமை பன்றி
பாம்பு பூனை எலி மண்புழு எல்லாமே
சந்தையின் டாலர் கண்களுக்கு
ஒரு கூறு தான் ஒரே ஒரு கூறு மட்டுமே தான்

03}

டாலர் அறிக்கை

அத்தனைக்கும் ஆசைப்படு
அத்தனைக்கும் இடங்கொடு
அத்தனைக்கும் கண்ணீர் விடு
அத்தனைக்கும் ரத்தம் சிந்து

நீ உழைத்த உழைப்பு
உன் வாய்க்கரிசிக்கும் தேறாது
மரணமே பூரண விடுதலை
சாவு அழைக்கும் போதே செத்துப் போ

04}

கலைக்கும் நமக்கும் இடையே
மூன்று பாதைகள்

நம்மை உணரவைப்பது.

நம்மை மறக்கடிப்பது.

மறந்து கொண்டிருக்கும் போதும்,
உணர்ந்து கொண்டிருக்கும் போதும்
கட்டியக்காரனாக தண்ணீர் தெளிப்பது.

அன்றாடத்தின் அவஸ்தையில் நின்று
கலையில் அவஸ்தையின் நுண்மை படித்து
எதிர்த்துச் சாவது அல்லது சுயம் செத்துப் பிழைப்பது.

அவன் உணர வைக்கிறான்
இவன் மறக்கடிக்கிறான்
நீ கட்டியக்காரன்
எதிர்ப்பவன் காலத்தின் கர்ப்பத்தில்
நான் சுயம் செத்த சந்தர்ப்பத்தின் ஊளை.

என் எல்லா சொற்களும்
அதிகாரத்தின் அறம் எரித்துக் குவித்த
பிணங்களின் சாம்பல் கங்குகள்.

***

சோழன் வாலறிவன்

கவிதை – பத்ம பாரதி

0

சொல்

தாயக்கட்டைகளைச் சுழற்றிவீசுவதுபோல்
சொற்களை வீசியெறிகிறாள் சிறுமி
ஒவ்வொரு சொல்லையும் தொற்றியெடுத்து 
தன்சேலைக்குள் பொதிந்தவற்றுடன் ருசிபார்த்து
அதிர்ஷ்டம் கொண்டுவரும் 
தாயத்திற்காகக் காத்திருக்கும் அம்மாவின்முன்
தன் கனவில் புகுந்த பேய்ச்சொல்லை
ஒரு சித்திரத்தின் நளினத்துடன் 
வீசுகிற சிறுமி‌‌ அவள் முக வெளிறலில் 
கலைந்து திகைக்கிறாள்
மனதைத் தைத்து ரணமாக்கும் சொற்கள் 
காதுகளில் மொய்க்கும் 
சுவர்க்கோழியின் ரீங்காரமாகின்றன
காலம் பொதித்த அர்த்தச் சுமையில்
கழன்று விழுகிற சிறுமியின் சிறகுகள்
உயிர்பயத்தில் விடுவித்துக்கொண்ட 
பல்லியின் வாலாகத் துடிக்கின்றன.

***

பத்ம பாரதி

சஹானா கவிதைகள்

0

1)

ஊர் ஒரு எல்லையோடு
முடிவடையவில்லை
எல்லைக்கு பின்னும்
தொடர்கிறது அதே ஊர்
மொட்டை மாடியில் நின்று
பார்க்கிறேன்

நீண்டு சென்று கொண்டே
இருக்கிறது
மேற்குத் தொடர்ச்சி மலை
மலை தான் இந்த ஊரின்
எல்லை எனினும்
மலைக்கு அந்த புறமும்
விரிந்து செல்லும் வேறொரு ஊர்
அங்கும் இங்கு போலவே
பாயக்கூடும் அருவி
பாயக்கூடும் என்ன பாயும் அருவி

குரங்குகள் கும்மாளமிடும்
மரங்கள் மக்கள் கடைகள் வீதிகள் வீடுகள் தொழில்கள்
பாகுபாடின்றி
பெய்யும் மழை

வானக் கூரை ஒன்றேதான்
கால நிலையும் வேறில்லை
குளங்களும் ஆறுகளும் சாலைகளும்
குறிஞ்சி முல்லைக்கு பின்பான
மருத நில பரப்பும் வேறுபட்டிருக்காது
காற்றின் பசுமையும் மாறாது

ஊரில் எல்லாம் இருக்கிறது
ஊர் பெயரில் என்ன இருக்கிறது

***

2)

தண்ணீரில் முகம் பதித்து
வையகம் எங்கும் ஒளி வீசி
குளிர் இரவில் போர்வையாகி
இந்த பூமியில் இல்லாமலே
உலகில் வாழும் நிலவே
உனக்கு எத்தனை வயது

***

3)

ஏ பழுதடைந்த கடிகாரமே
பழுதான நேரத்தை
ஏன் சொல்லிக்கொண்டே இருக்கிறாய்
போரடிக்காதா

***

சஹானா

கவிதை – விபீஷணன்

0

முதலைகளிடம் ஒப்பந்தம்

எனது முதுகெலும்பிலிருந்து
இதயத் துண்டுகளை
எடுத்தார்கள்
வஞ்சகப் படிமர்கள் குத்தியதில்
சிதறியவை என்றேன்

எதிர்பார்ப்புகளால் உடைந்திருந்த
மூக்கெலும்பு சிலுவையின் வடிவம்
பெற்றிருந்தது

குயிலின் கூட்டை மனமென
வைத்திருக்கிறேன்
அதில் குரலிழந்த
குயில்கள் சப்தமிட்டபடி..

அரையணா உயிரை
கடன் வாங்குபவர்கள்
வட்டியும் கேட்பதுண்டு

வயிற்றுக்குள் நுழைந்து
சோறு திருடுபவர்களை
செரிக்கத் தெரியவில்லை

இப்பொழுது கூட
எனக்கு சிலை வைக்கவேண்டும்
என்று உடலை கழற்றுகிறார்கள்

சும்மா பார்த்துக் கொண்டிருக்கின்றேன்

***

விபீஷணன்.

அலசல்

0

சைலபதி

ண்பா, நான் சொல்வதை நீ நம்பவில்லை என்பது உன் சிரிப்பில் தெரிகிறது. எப்படிக் காதல் உணர்வை அடைந்தவர்கள் தவிர வேறு யாராலும் விவரிக்க முடியாதோ அதேபோல பயத்தையும் மரணத்தையும் அடைந்தவர்கள் அதை மற்றவர்களுக்கு விளக்கவே முடியாது. நான் இன்னும் மரணமடையவில்லை என்பது மட்டும்தான் எனக்கு ஆறுதல். மற்றபடி அந்தக் கணம், அப்போது எனக்குள் எழுந்த நடுக்கம் இன்னும் போகவேயில்லை. வீட்டின் ஓரத்தில் பழைய மரச்சாமான்கள் போட்டிருக்கும் அறையில் சுதந்திரமாய்ச் சுற்றித் திரியும் எலியைப் போல அது இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

இரவு அப்போது மணி ஒன்றிருக்கும். லேசாக இருமல் ஆரம்பித்தது. தொண்டையை செருமிக் கொண்டு அப்படியே படுக்க முயன்றேன். ஆனால் அது பயனளிக்கவில்லை. சில நிமிடங்களில் இருமல் அதிகமானது. நேற்றிலிருந்து உள்ளூர ஒரு ஜுரம் இருந்தது. கூடவே தலைவலி வேறு. நான் பொருட்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. திமிர், நமக்கெல்லாம் கொரோனா வராது என்னும் திமிர்.

எழுந்துபோய் வாஷ்பேசினில் இருமித்துப்ப முயன்றேன். எச்சில் கூட வரவில்லை. வெறும் வறட்டு இருமல். மீண்டும் படுக்கைக்கு வந்தும் அவஸ்தை குறையவே இல்லை.

நண்பா, ஒன்று சொல்லவா… என் மனைவி, என் இரு பிள்ளைகள், கூடத்தில் படுத்திருக்கும் அம்மா என்று அனைவருக்கும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது இரவில் சின்ன சத்தம் கேட்டால் கூட விழித்துக் கொள்வது. ஆனால், எனது காட்டு இருமலுக்கு அவர்களிடம் சிறு புரளல் கூட இல்லை. என்ன ஆனது இவர்களுக்கு…

நான் சின்னவனாக இருக்கும்போது தாத்தாவுக்கு ரொம்ப முடியவில்லை. பாட்டி பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டாள். தாத்தாவுக்கு லேசாக இழுத்தாலும் விசுக்கென்று எழுந்து அமர்ந்து நெஞ்சை நீவிவிடுவாள். ஒருநாள் பாட்டி அசந்து தூங்கிவிட்டாள். தாத்தா அன்று போய்ச்சேர்ந்தார். பாட்டி அழும்போது, “கண்ணுக்குள்ள வச்சிப் பாத்துக்கிட்டனே, என்னை அசத்திப்போட்டுக் கொண்டு போய்ட்டானே” என்று அழுதாள். அதை நான் மனதில் குறித்துக்கொண்டு பின்னாளில் பாட்டியிடம் கேட்டேன்.

“எம தருமரு வந்தாருன்னா, சாவுறவங்க கண்ணுக்குத் தெரியும். ஆனா அவங்களால வாய் திறந்து சொல்ல முடியாது. கூட இருக்கிறவங்க கண்ணைக் கட்டி அவங்களை மயங்கடிச்சிட்டுத்தான் உசிரைக் கொண்டு போவான்” என்றாள்.

அப்படித்தான் என்னைச் சுற்றியிருக்கிறவர்களை எமன் மயங்கடித்து விட்டான் என்று தோன்றியது. நெஞ்சை அடைப்பது போலத் தோன்றியது. உடலின் சக்தியைத் திரட்டி சமையலறை சென்று வெந்நீர் வைத்துக் குடித்தேன், இதமாக இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் இருமல் குறைந்தது. அப்படியே வந்து படுக்கையில் படுத்தேன்.

உறங்கக் கண்ணை மூடினால், நான் மரணித்துக் கிடப்பதுபோலக் காட்சி தோன்றியது. பக்கத்தில் திலகாவும் பிள்ளைகளும் அழுது கொண்டிருக்கிறார்கள். அம்மா வாசலில் யாரையோ கட்டிக் கொண்டு அழுகிறாள். அப்போது ஒருவன் டை கட்டிக்கொண்டு உள்ளே வருகிறான். ‘யார் திலகா’ என்று விசாரிக்கிறான்… பின்பு திலகாவிடம் வந்து, “உங்க வீட்டுக்காரர் எங்க பேங்க்ல 5 லட்சம் பர்சனல் லோன் வாங்கியிருந்தார். அதில் இன்னும் 4 லட்சம் அடைக்கப்படவில்லை. நீங்கள்தான் சட்டப்படி அவரின் வாரிசு என்பதால் கடனை உங்கள் பெயருக்கு மாற்றிவிட்டோம்’ என்று சொல்லி கொஞ்சம் கத்தைப் பேப்பரை அவளிடம் தந்துவிட்டு நகர்ந்தான்.

திலகாவுக்கு அழுகை நின்றுவிட்டது. என் உடலையே உற்றுப் பார்த்தாள். என் நண்பன் என்பதால் உன்னை நோக்கி, “அண்ணா 5 லட்சம் வாங்கி இந்த மனுஷன் என்னண்ணா செய்தார்?” என்றாள்.

நீ மிகவும் நல்லவனாயிற்றே.. “தெரியலைம்மா.. ஒருவேளை மார்க்கெட்டில் இன்வெஸ்ட் பண்ணியிருக்கலாம்” என்கிறாய்.

“ ஐயோ எதுவுமே சொல்லாம இப்படி என் தலைல கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போய்ட்டாரே.. நான் என்ன செய்வேன், கடனைக் கட்டுவனா, இல்லை பிள்ளைகளை வளர்ப்பேனா.. ” என்று சத்தம் போட்டபடி என் நெஞ்சில் ஓங்கி ஓர் அடி அடித்து அழுதாள். உண்மையாக நெஞ்சில் அடித்தது போல் வலிக்கவே தூக்கம் கலைந்து விட்டது. அதன்பின் இந்த நிமிடம்வரை உறங்கவேயில்லை.

நண்பா, எனக்கு கொரோனா இருக்குமோ என்கிற சந்தேகம் இப்போது வலுவாகி விட்டது. அதற்கு முன்பு நான் என்ன செய்வது… ஒருவேளை பரிசோதனையில் உறுதியாகி விட்டால் தனிமைப்படுத்தி விடுவார்கள். இப்பொழுதெல்லாம் அனுமதித்த ஒருமணி நேரத்தில் இறந்து விடுகிறார்களாம். அதனால் உறுதியான பின்பு இவற்றை எல்லாம் ஆசுவாசமாகப் பேச முடியாது. நான் உன்னிடம் என் கணக்கு வழக்குகளைச் சொல்கிறேன். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் நீ அதை அவளிடம் பக்குவமாகச் சொல்லிவிடு. கொஞ்சம் அதிர்ச்சி அடைவாள். நானே சொல்லலாம். ஆனால் அடுத்த கணத்திலிருந்து அவள் இரக்கமற்றவளாக மாறிவிடக் கூடும். அதற்காக யாருக்குமே தெரியாமல் மறைத்து வைத்து இந்த கொரோனா போலக் கடைசி நொடியில் பிரச்னைகள் அதிகமாகிக் கழுத்தைப் பிடிக்கக் கூடாது. அதனால்தான் உன்னிடம் சொல்கிறேன். என்ன சொல்கிறாய்… ஏதாவது சொல் நண்பா.”

*

“நண்பா, உன்னை நான் என்னவோ நினைத்தேன். ஆனால் நீ, உண்மையை சந்திக்க தைரியமில்லாதவனாக இருக்கிறாய். வாழ்க்கையை உறவுகளை நீ எவ்வளவு கீழ்த்தரமாக நினைக்கிறாய் நண்பா… உனக்காக உன்னுடன் வாழ்ந்து உனக்கான வாரிசுகளைப் பெற்றவள் அவள்… அவளிடம் உண்மையை மறைக்க வேண்டும் என்கிற உன் எண்ணமே எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

உண்மையில் எனக்கும் இதேபோன்று சில பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் அதை நான் உன்னிடமோ இல்லை வேறு யாரிடமோ சொல்லப் போவதில்லை. காரணம் அவ்வாறு சொன்னால் நான் என் மனைவியை என் தோழியை எனக்காக வாழ்பவளை அவமதித்ததாக ஆகிவிடும். இதைச் சொல்கிற போது இன்னொன்றையும் சொல்ல வேண்டும். உண்மையில் இவற்றையெல்லாம் நான் இதற்கு முன்பு சிந்திக்கவேயில்லை. நீ பேசுகிறபோதுதான் இந்த ஞானோதயமும் தோன்றியது. மனைவியானவளிடம் தைரியமாகத் தன் வரவு செலவுகளை ஒப்புவிப்பவன் யார்?

இது ஒரு வேத வசனம் போல எனக்குள் கேட்கிறது. நாம் ஏன் அதைச் செய்யவில்லை. இதுதான் நாம் நம் உறவுகளுக்குத் தரும் மரியாதையா… உன் அந்தரங்கங்களை அவள் அறியாமல் அவற்றை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொண்டாய் என்று அறிந்தாலே நாளை அவள் உன் படத்தைத் தூக்கிப் போட்டு மிதிக்கமாட்டாள் என்பது என்ன நிச்சயம்… ஒருவேளை திலகா நல்லவளாய் இருக்கலாம், ஆனால் என் மனைவி அப்படியில்லை. உயிரோடு இருந்தால் என்னையோ இல்லையென்றால் என் படத்தையோ துவம்சம் செய்துவிடுவாள்.

அதனால் நான் இப்போதே முடிவு செய்துவிட்டேன். இன்றே அவளுடன் என் வரவு செலவுகளைச் சொல்லப் போகிறேன். அவள் அடித்தாலும் சரி வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் தீர்மானம். நீ முதலில் டெஸ்டுக்குக் கொடுத்துவிட்டு வா. அதன்பின் திலகாவை அமரவைத்துப் பேசு. அவள் புரிந்து கொள்வாள். நீ ஒன்றும் ஊதாரியில்லை. அவ்வப்போது குடிப்பாய் என்பதைத் தவிரக் குடிகாரனும் இல்லை. பங்குச்சந்தையில் நீ செய்த முதலீடுகள் பாதாளத்துக்குப் போனதனால் முட்டாள் என்று சொல்லிவிட முடியுமா… எல்லாம் விதி.

நண்பர்களிடம் வாங்கியிருக்கும் கடன்கள், வங்கிக் கடன், நெருப்பு என்றால் சுடாது. ஒருவேளை உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் கிடைக்கும் தொகை, இன்சூரன்ஸ் ஆகியவற்றை அவளுக்கு விவரி. அவள் கோபப்படலாம், அழலாம், ஆர்ப்பாட்டம் செய்யலாம். ஆனால் எல்லாவற்றையும்விட நாம் கண் மூடும்போது, பாரமில்லாமல்… என்ன அப்படிப் பார்க்கிறாய்… கண்மூட என்றால் கண்மூடிவிடவா போகிறோம். ஒரு பேச்சுக்கு… அப்படிப் பார்க்காதே, நான் எனக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்.

போ, டெஸ்ட் எடு… மனைவியிடம் பேசு. நானும் பேசுகிறேன்.”

*

தைரியமானவர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் எவ்வளவு கோழையாய் இருக்கிறோம். மனதுக்குள் மகேஷ் பேசியதே ஓடிக்கொண்டிருந்தது.

இந்நேரம் மகேஷ் பரிசோதனை செய்திருக்கலாம். வீட்டுக்கு வந்து மனைவியிடம் பேச ஆரம்பித்திருப்பான். திலகா எப்படி எதிர்வினையாற்றுகிறாளோ…

மகேஷ் சொல்லியிருப்பான். அப்போது நான்… அவனுக்கு அறிவுரை சொல்லிவிட்டு நாம் அதைப் பின்பற்றாமல் இருந்தால் எப்படி…

மனைவி இருக்கும் அறைக்குப் போனேன். அறையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தார்.

“எல்லாம் ஹாலுக்குப் போங்க… டிவில தர்பார் போடுறான்” என்றதும் அவர்கள் சிட்டாய்ப் பறந்தார்கள். நான் அறையின் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டேன்.

”ஏங்க, என்ன இது, பட்டப்பகல்ல… பசங்க வீட்டுல இருக்கு… சொன்னாக் கேளுங்க…”

மறுப்பவளைப் போன்ற சொற்களோடும் நெகிழும் பாவனைகளோடும் பேசிய மனைவியைப் பார்த்ததும், ஒரு கணம் மனம் சபலம் அடைந்தது. சொல்ல வந்ததை விட்டுவிட்டுப் பேசாமல்…

சே, என்ன நினைப்பு… மகேஷ் மனதில் தோன்றி ‘அடேய்… என்னை மாட்டி விட்டுட்டு நீ மட்டும்…’ என்று மிரட்டுவதுபோல் தோன்றியது.

“ஐயோ அப்படியில்லப்பா… நான் உன்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும், நான் சொல்லப் போறதக் கேட்டு நீ என்னைத் தப்பா நெனச்சாலும் பரவாயில்லை. நான் பேசியாகணும்…”

அடுத்த அரைமணி நேரம் மின்விசிறி சுழன்றதா என்று தெரியவில்லை. உடல் நன்கு வியர்த்துக் கொட்டியது. ஆனாலும் எல்லாவற்றையும் சொல்லி முடித்த ஆசுவாசம் மனதில் இருந்தது. அடிகூட விழ வாய்ப்பிருக்கிறது. எதற்கும் தயாராக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தேன். அமைதியில் கண்ணீர் பெருக்கெடுத்தது. மனம் லேசானது. அந்த கணம் இனி எல்லாவற்றையும் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற நம்பிக்கையும் தோன்றியது. அது என் மேல் உள்ள நம்பிக்கையில் இல்லை. என் எதிரே உட்கார்ந்திருப்பவள் மேல் உள்ள நம்பிக்கை.

அவள் ஆதரவாகக் கட்டிக்கொண்டாள். கண்களைத் துடைத்தாள். பின்பு ‘எல்லாம் பார்த்துக்கலாம், கவலைப்படாதீங்க’ என்றாள். அடுத்து

“உங்க ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டுகளைக் கொடுங்க…”

தந்தேன்.

அதை அவள் புடவைகளுக்கு நடுவே திணித்தாள். எந்தப் புடவைக்கு நடுவில் என்று கவனிக்கும் முன்பு பீரோவை மூடினாள். கணினியில் அமர்ந்து “உங்க நெட் பேங்கிங் பாஸ்வேர்டு சொல்லுங்க”

சொன்னேன்.

உள் நுழைந்து வேறு பாஸ்வேர்டு மாற்றினாள். நான் நல்லவனாக அதைப் பார்க்காமல் திரும்பிக் கொண்டேன். மொபைலில் இருந்த வேலட்டுகளின் பின் எண்களை மாற்றினாள். பின்பு,

“இதோ பாருங்க, இதெல்லாம் எனக்காக இல்லை, நம்ம குடும்பத்துக்காக… ஒரு இரண்டு வருஷம் சிக்கனமா இருந்தா உங்க பிரச்னை எல்லாம் முடிஞ்சிடும். சோ கொஞ்சம் கோவாப்ரேட் பண்ணுங்க” என்று சொல்லி மீண்டும் அணைத்தாள்.

அடிவிழாமல் போனது மகிழ்ச்சிதான் என்றாலும் இனி எல்லாவற்றுக்கும் கை ஏந்த வேண்டும் என்றபோது தான் மீண்டும் கண்கள் வியர்த்தன.

சரி எப்படியோ நல்லது நடந்தால் சரி. இந்நேரம் மகேஷும் டெஸ்ட்க்கு கொடுத்து விட்டு வந்து திலகாவிடம் பேசியிருப்பான். திலகா என்ன சொன்னாளோ…

ஆர்வத்தில் மகேஷுக்கு போன் அடித்தேன். கட் செய்தான். மீண்டும் அழைத்தேன் கட் செய்தான். சரி டென்ஷனாக இருக்கலாம் என்று விட்டுவிட்டேன்.

மறுநாள் அவனே போன் செய்தான். “மச்சான் கொரோனா ரிசல்ட் வந்துருச்சுடா, நெகட்டிவ்” என்றான் புன்னகையோடு.

“அது சரிடா, திலகா கிட்ட பேசுனியா…”

“மச்சான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே, இருமல் வந்தப்போ வந்த பயத்தவிட திலகாகிட்ட சொல்லணும்னு நினைக்கிறப்போ வர்ற பயம் அதிகமாயிருக்குடா. அதுதான் நெகெட்டிவ் வந்திருச்சில்ல. பார்த்துக்கலாம். நீயும் ஏதும் உளறி வைக்காத” என்று சொல்லி போனைக் கட் செய்தான்.

“அடேய் கொரோனா, அநாவசியமாக என் வாழ்வோடு விளையாடி விட்டாயே…”.

***

சைலபதி – இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதழாளர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்க அரசு இருது, சுஜாதா விருது உள்ளிட்ட பல விருதுகள் இவர் படைப்புகளுக்கு கிடைத்துள்ளன. தொடர்புக்கு – shylapthy@gmail.com

யாரோ தொலைத்த இசைத்தட்டு – 04

0

சித்தி ரெண்டு மாசத்துக்குப் பிறகா வந்தப்ப ரொம்ப சாதாரணமா ஏதோ ரெண்டு மூணு நாள் வெளியூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கு. அன்னிக்கு தான் இடைக்கால முதலமைச்சரா நெடுஞ்செழியன தேர்ந்தெடுத்தாங்க. சித்தப்பா ஒண்ணுமே பேசல.. ஆனா நக்கலா அப்பாவ பாத்தாரு. அப்பாவும் கோவமா ஒண்ணுஞ் சொல்லல. ஆனா  துண்டை சேர் நுனில தட்டி எந்திரிச்சு போனார்.

கொஞ்ச நேரத்துல மாயண்டி மாமா வந்திருந்தார். மாமாவுக்கு பெரிய மீசை உண்டு. பாக்க சிகப்பா தக்காளிப் பழம் மாதிரி இருப்பார். ஒரு வாட்டி மீசைய எடுத்தா எம்ஜிஆர் மாதிரி இருப்பார்னு சொல்லி சொல்லியே மீசய எடுத்தார். அவர் வீட்டு அத்த “ பாக்க சகிக்கலனு சொன்னானு அப்பா சொன்னார். அம்மா நக்கலா அப்பாவ பாத்து”அப்படி ஏதும் நீங்க செஞ்சிப்படாதிக்கன்னு சொன்னா.

இப்ப மாமாக்கு மறுபடி மழைல முளைச்ச மூணாம் நாள் புல் மாதிரி மீசை வளர்ந்திருச்சு. மாமா இப்ப இந்திப்பட ஹீரோ மாதிரி இருந்தார்.

தலீவர் பிரபாகரன் அறிக்க வுட்டத பாத்தீகளா?னு அப்பாட்ட கேட்டார்.

“ஆமா ஆமா. இயக்கத்து மேல தலீவரு கொண்டிருக்கிற ஈடுபாடு பத்திலாம் பேசிருந்தாரு..ஏல…அம்மைய காப்பி கொண்டு வர சொல்லு…”

அம்மா உள்ள முனங்கினாள். நான் சைக்கிள் வண்டி ஓட்டின மாரி ஓடி உள்ள போனப்ப உங்கப்பாக்கு நான் என்ன காப்பி மெஷினானு கேட்டா… நான் சர்ருனு பிரேக் போட்டு போன ஸ்பீடுலயே வந்துட்டேன்.. ஆனா அஞ்சே நிமிஷத்துல காப்பி தம்ளர் மாயாண்டி மாமா கைல இருந்துச்சு.

அப்பா சித்தப்பா நக்கலா பாத்த்த சின்னக் குரல்ல மாயாண்டி மாமாட்ட சொன்னது எனக்குக் காதுல கேட்டுச்சு. மாயாண்டி மாமாக்கு முகம் சுண்டிப் போச்சு

“ம்ம்ம்…புரிது…அன்னிக்கு ஜெயல்லிதா வண்டில ஏறுனப்பவே காதர் கிண்டல் பண்ணான். உங்க தலீவருக்கு மட்டும் ஒரு பொண்டாட்டியானு கேட்டேன்.. இப்ப ஜானகியம்மா தாம்வே வரணும்..”

“தலமைக் கழகத்துக்கு லெட்டர் போடலாமானு இன்னிக்கு நம்ம வட்ட செயலாளர்ட்ட கேட்டுறலாம் …கழகத்துக்கு நாம தொண்டனா இந்த நேரம் இத செய்யணும்…”

“ஆமால..இல்லனா உந்தம்பிலாம் கிண்டல் பண்றாப்ல ஆயிடும்..”

“என்னப் பார்வைல பாத்தான்… ஏதோ நெடுஞ்செழியன நாம தான் ஆக்குணோம்னு… ஆனா தலீவரோட வொய்ஃப் தாம்வே வரணும்”

“ம்ம்..அப்படி தான திமுகல பாப்பாங்க… தலீவரு இல்லாத கட்சி எப்படி தாக்குப் பிடிக்கும்னே பயமாருக்கு”

“காங்கிரஸ் ஆதரவு இருக்குவே.. ராஜீவ் காந்தி உருகித்தேன் அறிக்கை வுட்டிருக்காரு..அதுனால தப்பிச்சிரும்….”

“அட்த்தூ… காங்கிரசால நம்ம கட்சி வருதா.. போவே…நல்லா புத்தி பேதலிச்சிட்டு தான் போவுது..”

“அப்படி சொல்லல…இனிம தேர்தல்னு வந்தா காஙிரஸ் சப்போர்ட் இருந்தா நல்லது தான…நம்ம கட்சில தலீவரு மாரி யாரு இருக்கா?”

மாயாண்டி மாமா தலையை சிலுப்பிக் கொண்டார்….ரொம்ப நேரம் சும்மாருந்து விட்டு “எனக்கு என்னமோ ஒண்ணு தோணுது…சொன்னா திட்டப்படாது…”

“சொல்லும்வே…நமக்குள்ள என்ன?”

“அந்த ஜெயலலிதா கட்சில பெரிய ஆளா ஆயிரும்னு நெனைக்கேம்வே”

அப்பா கோபமா பாத்து “என்னவே பேசுறீரு? நியாயமா பேசும்..”

“அட… சொன்னேம்லா கோவப்படக்கூடாதுனு.. எனக்கென்னமோ அதான் தோணுது…”

“அப்ப கலீஞ்சருக்கு அப்பால ஸ்டாலினா…அன்பழகனா?”

“ஏம் கிண்டல் பண்ணுதீரு..கனிமொழி கூட வரலாம்வே”

“நல்லா தான் ஜோசியம் சொல்லுதீரும்வே.. எனக்கு பிபி ஏறுது. நாஞ்சொல்லுதேன் பாரும்வே…ஜானகியம்மா வரணும்.. ஜெயல்லிதாம்மாவும் கூட கூட இருக்கட்டும்…தலீவரு கூட அத்தனி படம் நடிச்சிருக்காக… அப்பால கட்சி மாநாட்டுல கோல்லாம் கூட கொடுத்திருக்காக… ஆனா பாத்தா தலீவரு தான் இவுகன்னு நம்புற ஒரு ஆளா வேணும்… அது ஜானகியம்மாவாத் தேன் இருக்கும்.”

சித்தி கடந்து போனவ “சொன்னா தப்பா எடுத்துக்க்க் கூடாது பெரியவரே… உங்க அம்மாக்குக் கூட இம்ப்புட்டு வருத்தப்படுவீகளானு தெரில…”

அம்மாக்கு உள்ளிருந்து கேட்டிருக்கும் போல.. “ஒன் வாய் தான் எனக்கு எமன்னு மூஞ்ச சுழிச்சிட்டு சொன்னா…”

“எங்க பாத்தாலும் பொம்பளங்க அட்டூழியம் தான்…”

சித்திக்கு கோபம் வந்து மூக்கு புடைச்சிட்டு போச்சு. கோபமா உள்ளப் போய் அம்மாட்ட, பொம்பளங்க சேர்ந்து இல்லன்னா இந்தப் பிரச்னை தான்… ம்ம்ம்.. நான் என்ன தப்பா சொன்னேன் சொல்லுங்கோனு கேட்டது எனக்கு ரொம்ப்ப் பிடிச்சிருந்துச்சு..

அம்மா பாத்திரத்தை நங்குண்ணு வச்சா. பதில் ஒண்ணும் சொல்லாம “சனியன் புடிச்ச பூனை எல்லா எச்சியயும் தட்டிட்டுப் போவுது…சனியன்ன்னா”

அப்பாவை மாயாண்டி மாமா தர்மசங்கடமா பார்த்தாரு.. சித்தி கண்ணெல்லாம் கலங்கி மாயாண்டி மாமா பக்கம் திரும்பி “போறுமான்னா

“மூணு மாசம்மா அம்மா வூட்டுல புகையே இல்ல..கண்ணும் கலங்கல்ல…”

அப்பா சரி வுடு வுடுன்னார்.

“எப்படி பேசுதாக பாத்திகல்லா..நான் அரசியல்லாம் பேசப்படாதா?”

“சாரிவேன்னு” மாயாண்டி மாமா சொன்னாரு. அவரோட பார்வை எப்படா இந்த வீட்டுலருந்து எப்ப போலாம் மாரி இருந்துச்சு. அதே மாதிரி நான் கெளம்புறேன்னார்.. அப்பாவோட முகம் இறுகலா இருந்துச்சு. சின்ன சண்டைக்கே வீடு இறுகுதே.. அரசியல் கட்சி மாதிரி பெரிய இடத்துல்லாம் எவ்ளோ சண்டை, இறுக்கம்லாம் இருக்கும்னு தோணுச்சு. எல்லாருமே பாவம்னு தோணுச்சு.

அம்மா ரொம்ப உர்னே இருந்தா. என்னை மடில மடில வச்சிக்கிட்டா. அப்பாக்கு சாப்பாடு வைக்கிறப்ப அம்மா எதுவும் பேசல.. அப்பாக்கும் கஷ்டமா இருந்திருக்கும் போல..

“சிரியேன்னார் அப்பா. அம்மா தலையை நிமிரவே இல்ல.. நானும் அம்மாவையே பாத்துட்டு இருந்தேன். அம்மா முதுகு மட்டும் ஏறி இறங்குச்சு”

“என்ன தான குறை சொல்லுவீக?”

“ஐய்ய…வூட்ல இப்ப இது ஒரு பிரச்னையா என்ன?”

“ஆமா சானகி வரணும் ஜெயல்லிதா வரணும்னு சொல்லுதீக…ஆனா சும்மா வாய் விட்ட ஒருத்திக்கு கொழுப்பு அடங்கணுய்ம்னா …பின்ன என்ன? ?”

“போதும்ப்பா…”

சித்தி கதவோரமா நிழலா தெரிஞ்சா. “நாங்க வேணா தனியா போயிடுறோம் பெரியவரேன்னா”

அப்ப தான் சித்தப்பா உள்ள வந்து பைய சுவர்ல தொங்கப் போட்டார். போன வாரம் பாத்தப் படத்துல ஸ்ரீரிப்ரியாக்கு ஆபத்துனோன ரஜினி வந்த மாரி சித்தப்பா வந்தார்.

என்ன? எங்க போறன்னு சித்திட்ட கேட்டார்.

சித்தி அவசரமா நகர அவர் உள்ளே வந்து, என்ன மைனினு கேட்டார். அம்மா அமைதியா இருக்க அப்பா எரிச்சலோட “ வீட்டுல என்ன எழவு நடக்குனு தெரில.. நாம ஒண்ணு பேசினா இவள்க ரெண்டு பேரும் கெடந்து முட்டிக்கிறாள்க”

அப்பா ரொம்ப மனசு உடைஞ்சிப் போய் சொன்னார். அவ வந்தோன்ன வீட்டுல பிரச்னை பாரேன்னு, சித்தப்பா கோவத்துல அறைக்குள்ள போனார். சித்திய அவர் அடிக்கிறார்னு தோணுச்சு. அம்மா பின்னாலயே நாம் விரசா போய் எட்டிப் பாத்தா சித்தி தரைல சாமி மாரி உக்காந்திருக்க அவர் அவள அப்படி அடிக்காரு.

ஆனா அவ அசையல.. ஒரு நிமிஷம் தடுக்கல.

என்னலெ இது..வுடுனு அப்பா சொன்னோன்ன, சித்தி – ஊருக்கு இளச்சவ பிள்ளையார் கோவில் ஆண்டினு சொன்னா ..

சித்தப்பா மறுபடி பாய ஆரம்பிக்க அப்பா தடுத்தார். எனக்கு பயமா இருந்துச்சு. இப்படிலாம் அடி விழுந்தா என்னல்லாம் தாங்கியே இருக்க முடியாது. இப்பவும் சித்தி சாமி மாதிரி தான் இருக்கா. கண்ணுல ஒரு சொட்டு அழுகை கூட இல்லை.

“நான் இப்ப என்ன செய்யணும்னு சித்தப்பாவப் பார்த்து கேட்டா…” போய் சாவுன்னார் சித்தப்பா.

அம்மா குத்தவுணர்ச்சியே இல்லாம நின்னதப் பாக்குறப்ப எனக்கு எரிச்சலா இருந்துச்சு. அம்மாட்ட பின்னால போய் “பாவம்ம்மா சித்தி”னேன். எம்பொறமண்டைலயே ஒரு போடு போட்டா.

“பெரிய மனுஷன் மாரில்ல பேசுறன்னா”

பாவம்மானேன்..

அம்மா அப்படியே கல்லு மாரி நின்னா. சித்தி சாமி மாரி நின்னதுக்கும் அம்மா கல்லு மாரி நிக்கதுக்கும் பெரிய வித்தியாசம்  இருக்குனு தோணுச்சு. எனக்கு தூக்கம் வரவே இல்ல.. தூங்குலனு அப்பா சொல்லிட்டே இருந்தார். அம்மா என் தலையக் கோதி விட்டப்பா நான் தலைய உலுக்கிட்டேன். எனக்கு கண்ணு முன்னால இருந்த இருட்டுல தான் சித்தி இருந்தா. அவளக் கட்டிப்[ பிடிச்சிக்கணும்னு தோணுச்சுது.

அண்ணேனு பதட்டத்தோட கதவ தட்டினார் சித்தப்பா. நான் அம்மாவ இறுகப் பிடிச்சிக்கிட்டேன். கதவ அப்பா தான் திறந்தாரு.

அவ தூக்கு மாட்டிக்கிட்டாண்ணேன்னு சித்தப்பா அழுதார்….

தொடரும்…

முந்தைய பகுதிகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்

.