Home Blog Page 84

4 . நாயகன் என்ற கண்

0

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி – 04

கதை : பாபாகா ; ஓவியம் : கணபதி சுப்ரமணியம்

முன்பொரு காலத்தில் ஒரு மந்திரவாதி எங்கெல்லாம் ஒரு கண் வரைகிறானோ, அங்கெல்லாம் அந்தக் கண் பார்ப்பதை கண்காணிக்கும் சித்தி பெற்றிருந்தான்.

அவன் கண் வரைந்த இடங்கள்

ஒரு எறும்புப் புத்து

ஒரு இளவரசியின் குளியலறை

ஒரு படையின் பாசறை என

ஒரு கஜானாவின் பாதுகாவலனின் கையில் பச்சை குத்திய கண்

ஒரு மிகமர்மமான ஔடதக்குறிப்பின் வலது ஓரத்தில் மிகச்சிறிய கண்

தலைத்துண்டிக்கப்படும் தண்டனை பீடம்

ஒரு கோயில் விக்ரகத்தின் வலது கண்ணை சிற்பியை மயலில் ஆழ்த்தி செதுக்கியிருந்தான்

இன்னும் பல்லாயிரம் கண்கள்

மன்னனின் ஆணையின் படி மந்திரவாதியின் கண்கள் பொசுக்கப்படும் போது

கனல் சிவந்த இரும்புக்கோலை ஏந்தியவனிடம்

“இனி நீ தான் நாயகன்” என்றான்.

*******

கருத்துகளுக்கு :

கதை : பாபாகா – albenizme@gmail.com
ஓவியம் : கணபதி சுப்ரமணியம் – gpathy@yahoo.com

சாவுக்குருவி

1

சிந்துஜன் நமஷி

அதிகாலை இருளும் அதனை மீறும் கீழ் வானின் ஒளிக்கதிர்களுமென்று வானம் கென்வசில் வரையப்பட்ட நீர்வர்ண ஓவியம் போலவிருந்தது. அந்த அடர் நிற வானுக்குளிருந்து தான் தவிட்டு நிறத்தில் ஒரு சாவுக்குருவி பறந்து வந்தது. ரொசய்றோவின் வீட்டை மூன்று முறை சுற்றி வட்டமடித்துக் கத்திவிட்டு மீண்டும் ஒரு திசை  முடிவிலியின் வழியில் பறந்து மாயமாகிப் போனது.

மலைமுகடுகள் மீது பட்டுத் தெறித்த சாவுக்குருவியி்ன் சத்தம் கேட்டு ஐன்னல் கம்பிகளுக்கு இடையே முகத்தை புதைத்துக்கொண்டு சாவுக்குருவி தெரிகிறதா ? என்று வானை அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிடுந்தார் ரொசைறோ. கொம்புகள் மீது மலைப்பாம்பு நகர்வதைப்போல அவரது வலது கைவிரல்களிடையே ஜபமாலை அசைந்துகொண்டிருந்தது.

படித்துக்கொண்டிருந்த விவிலியத்தின் பக்கங்களுக்கு இடையே சிவப்புநிற வெல்வெட் நாடாவை வைத்து மூடி முக்காலி மீது வைத்தார். எழுந்து போய் சுவரைத் துழாவி ஆழியை போட்டதும் மின்குமிழின் மஞ்சள் வெளிச்சம் வெள்ளைக்காரன் காலத்து சுண்ணாம்புச்சுவர் மீது வடியத் தொடங்கியது.

ரயில் வருவதற்காக எக்ஸ் 2 கடவை மூடப்பட்டு அபாய மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. நேரம் என்ன? ஐஞ்சு மணி இருக்குமா? மனதுக்குள் நினைத்துக்கொண்டே கடிகாரத்தைப்பார்த்தார். அது ஐந்து இருபதைக் காட்டிக்கொண்டிருந்தது. ரொசைறோ ஸ்ரேசன் மாஸ்டராக இருந்து ரிட்ரயர்ட் ஆனவர்.  ரயில் என்ஜின் சத்தத்தை வைத்தே அது ஜெர்மன் மேட்டா இல்லை ரஷ்யன் மேட்டா என்று சொல்லி்விடுவார். நேரம்தான் கொஞ்சம் முன்ன பின்ன ஆகி விடும். கேட்டால் இது என்ன ஜப்பானா ? வெள்ளக்காரன் வந்திருக்காட்டி இண்டைக்கு வரைக்கும் இங்க ரயினே வந்திருக்காது என்பார். அவருக்கு இது சொந்த ஊர்கூட கிடையாது. இங்கு அவரும் மனைவி எஸ்தரும் வந்து பல வருடங்களாகிறது.  உறவு என்று யாரும் வந்து போவதில்லை. பிள்ளைகள் கூட இல்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர்.  ஊர் மக்களுக்கும் அவர் மீது பெரிய மரியாதை உண்டு.

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார். கண்களைச்சுருக்கி வானில் சாவுக்குருவி தெரிகின்றதா என்று நோட்டம் விட்டார் ரொசைறோ.

நீண்ட நாட்களாக எண்ணெய் பார்க்காத இரும்புப்படலை “கிரீச்ச்ச்” சத்தத்தோடு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். செல்வா சைக்கிளோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தான் .

“சேர் ! குட் மோனிங் சேர்! என்ன? இண்டைக்கு நேரத்தோட எழும்பிற்றீங்களோ?”

பதில் எதுவும் சொல்லாமல் சிரித்தபடியே நின்று கொண்டிருந்தார் ரொசைறோ .

“போங்க சேர் போய் பாத்திரம் எடுத்திட்டு வாங்க”

” குட் மோனிங் ”                                                                    

“இண்டைக்கு பால் வேண்டாமடா செல்வா “

“வேண்டாமா ? ஏன் சேர்”

“எஸ்தர் செத்துப் போச்சுடா !

” எப்ப சேர் ??? “

” இண்டைக்குத் தான் சாமம் ரெண்டு மணி போல இருக்கும். மனம் கிடந்து அடிச்சிட்டே இருந்துச்சு. எழும்பி போய் எஸ்தர் பக்கத்திலயே இருந்தன். நான் வந்தது தெரிஞ்சு உடனே முழிச்சிட்டா. பத்து நிமிசமா என்னயே பாத்திட்டு இருந்தாடா அப்பிறம் ஒரு கண்ணில மட்டும் கண்ணீர் வந்துச்சு. அத துடச்சி விட்டன். அப்பவே போய்ட்டா.. “

” யாருக்கும் சொல்லலயா இன்னும்? “

” சொல்லி… சொல்லி என்ன ஆகப்போகுது? எல்லாரக்கும் தெரிஞ்சது தானே. அதுபோக எதுக்கு மத்தவங்களுக்கு அந்த சாமத்தில வீண் தொல்ல அதான் விடியட்டம் எண்டு பாத்தட்டு இருந்தன் “

“சரி நீங்க உள்ள போய் இருங்க.. நான் சொல்லி விடுறன் எல்லாருக்கும்”

அவரின் பதிலுக்காக காத்திருக்காமல் குருளைக் கற்கள் கொட்டிக்கிடக்கும் பாதையில் சைக்கிளை  உருட்டிக் கொண்டு அதன் மீது பாய்ந்து ஏறி வேக வேகமாக உழக்கத் தொடங்கினான். அந்த இடத்திலிருந்து கொண்டு  கொண்டை ஊசி வளைவுகளில் செல்வா மறையும் வரைக்கும் அவன் மீது வைத்த கண்ணை அங்கு இங்கு நகர்த்தாமல் அவனையே பார்த்துக்கொண்டு நின்றார் ரொசைறோ.

 வீட்டின் அனைத்து கதவுகளும், ஜன்னல்களும் திறந்துவிடப்பட்டன. சகல வாயில்களாலும் நுழைந்த மலைக்காற்று புதிதாய் நடை பழகிய குழந்தையாய் அந்த வீடு முழுதும் விளையாடித் திரிந்தது.

அந்த வீட்டிலிருந்து முழுவதுமாய் தொடர்பறுத்தது போல கொல்லைப்புறத்தில் வெளிவாசல் கதவோடு இருந்தது ஒரு தனி அறை. ஒரு காலத்தில் ஸ்ரோர் றூமாக பாவிக்கப்பட்ட அந்த அறையில் தான் இத்தனை நாளும் எஸ்தர் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள். கைகளை வைத்துத் தள்ள அந்த சிறகுக்கதவுகள் திறந்து கொண்டன. திறந்த வேகத்தில் ரொசைறோவின் முகத்திலடித்துக் கடந்து போனது சாதாரண மனிதர்களால் சகிக்கவோ சுவாசிக்கவோ முடியாத வாடை.

அன்றுதான் யாராவது முதன்முதலாக அந்த வாடையை நுகர்வார்களேயானால் அந்த இடத்திலேயே வாந்தி எடுத்து விடுவார்கள் பலவீனமானவர்களாயிருந்தால் மயக்கமே வரும் , அப்படியொரு ரத்தக் கவிச்சியும் , சீழும் கலந்த வாடை அது .

அந்த அறையின் எதிர்ப்பக்கச்சுவரோடு போடப்பட்டிருந்த கயிற்றுக்கட்டிலில் ஈரச்சாக்கைப்போல கிடந்தாள் எஸ்தர் . ஜன்னல்களில்லாத அந்த அறையில் கூரையின் இரண்டு ஓடுகளைக் கழற்றி வெளிச்சம் வருவதற்காக அதே இடத்தில் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்தது .சூரிய ஒளி அந்த சதுரவடிவ கண்ணாடியினூடு ஒரு வெளிச்சத்தூண் போல அறைக்கு மத்தியில் இறங்கிக்கொண்டிருந்தது .தோளில் கிடந்த துண்டால் தரையைக் கூட்டிவிட்டு எஸ்தரின் காலடியில் போய் அமர்ந்து கொண்டார் ரொசைறோ .

இந்த நிமிசம் வரைக்கும் பெயரோ , மருந்தோ தெரியாத வியாதி எஸ்தருக்கு வந்தே கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களிருக்கும் . ஆரம்பத்தில் பிளேடால் கிழித்தது போன்ற கீறல்களே உடல் முழுவதும் தோன்றியது. வெறும் இரண்டு வாரங்களுக்குள் அது என்ன, ஏது என்று தெரிந்து கொள்வதற்குள் அந்த கீறல்கள் வெள்ளரிப் பழம் போல வெடித்து அகலமாகவும், ஆழமாகவும் மாறியிருந்தன . சிலது சதை வரை பரவி உலர்ந்து போன செந்நிறரத்தம் பூவின் நிறத்திலிருந்தது.  அத்தனை ஆழமில்லாத வெடிப்புகள் மெல்லிய மஞ்சள் நிறத்திலும் இருந்தன. நீர் போன்ற நிறமற்ற திரவம் கசியத்தொடங்கி பின்னாட்களில் ரத்தமும், ஊனும், சீழும் அந்த வெடிப்புகளிலிருந்து வெளியேறத் தொடங்கியது. அப்போதுதான் எஸ்தரின் உடலிலிருந்து ஒருவிதமான வாடை வெளியேறுவதை அவர்களால் உணர முடிந்தது. அடுத்தடுத்த நாட்களிலேயே யாராலும் அந்த வாடையை சகித்துக்கொள்ள முடியாமல் போனது.

எஸ்தருக்கு வந்திருக்கும் நோய் பற்றியும் அவளது உடலிருந்து வரும் வாடையைப் பற்றியும் வெளியில் ஊர்சனம் அரசல்புரசலாய் கதைப்பவை எல்லாம் தன் காதுபடக் கேட்ட பிறகு அவர் யாரையும் வீட்டிற்குள் அனுமதிப்பதை நிறுத்திக் கொண்டார். நாட்கள் போகப்போக அந்த நோய் எஸ்தரின் முள்ளந்தண்டையும் தாக்கி எழுந்து நடக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டாள்.

அவர் சக்திக்கு மிஞ்சியும் இந்த தேசத்தின் எந்த மூலை முடுக்கிலெல்லாம் எஸ்தரின் நோயிக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்பினாரோ அத்தனை நீள அகலங்களுக்கும் அவளை சுமந்திருக்கிறார் . ஓய்வு பெற்ற பிறகு வங்கியில் இருந்த மொத்த சேமிப்பையும் வெளிநாட்டிலிருந்து வந்த டாக்டர்கள் முதல் பில்லி சூனிய மந்திரவாதிகள் வரைக்கும் கொட்டி, இதற்கும் மேல் எதுவும் ஆகப் போவதில்லை என்பதை உணர்ந்த ஒரு நாளில் இந்த அறை துப்பரவு செய்யப்பட்டு இதே கயிற்றுக் கட்டிலில் கிடத்தப் பட்டவள்தான். இன்று இறந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக  ஊருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

போர்வை தாறுமாறாக கலைந்து, கணுக்காலுக்கு கீழே வெளியில் தெரிந்தது. தன் ஆள்காட்டி விரலால் எஸ்தரின் உள்ளங்காலில் கோடு வரைவதைப்போல தடவிப்பார்த்தார். அது நன்கு முதிர்ந்த மலைவேம்பு மரத்தின் பட்டைகளைப் போலப் பாளம் பாளமாக வெடித்துப் போயிருந்தது. அந்த வெடிப்புகளினுள் ரத்தமும், சீழும் காய்ந்து போயிருந்தது. போர்வையின் ஒரு மூலையைப் பிடித்து சுண்டி இழுத்து அதை பந்து போல சுருட்டி தூர வீசினார் . எஸ்தரின் உடையைக் கிழித்தெடுத்தார். அந்த பழந்துணி அடம்பிடிக்காமல் இலகுவாக சரசர வென்று பிரிந்து வந்தது. எஸ்தரின் நிர்வாணம் நீண்ட நாட்களுக்கு முன்பு இறந்து போன காட்டு விலங்கொன்றின் எச்சத்தப்போல இருந்தது  .

கணுக்கால், தொடை என்று நாள்பட்ட காயங்களிருந்தன . மார்பகங்களுக்கு கீழும்  வயிற்றிலும், கழுத்திலும் பெரிய காயங்கள் இருந்தது. அது தவிர சின்னச் சின்ன வெடிப்புகள் அதிக அளவில் இருந்தது. அவள் இடது கையை பிடித்து உடலை குப்புற திருப்பிப்போட்டார். முதுகு முழுவதுமிருந்த காயங்கள் அவிந்து போயிருந்தன. படுக்கைப் புண்களினுள் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன.

பாத்திரம் முழுதும் தண்ணீர் கொண்டு வந்து அதில் பஞ்சை நனைத்து உடல் முழுவதுமிருந்த காயங்களினுள் அழுத்தித் தேய்த்து சுத்தப்படுத்தினார் . இதற்குப் பிறகு இந்த வாய்ப்பு தனக்கு கிடைக்கப்போவதில்லை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது . ஒரு தேர்ந்த ஓவியன் கண்கள் வரைவதைப்போல அத்தனை நுணுக்கமாய் ஈரப் பஞ்சால் காயங்களை துடைத்தெடுத்தார். தரையில் அவர் காலைச்சுற்றி ரத்தமும், சீழும் ஊறிய பஞ்சுத் துண்டுகள் இறைந்து கிடந்தன. வாசனைப்பவுடரை கைகளிரண்டிலும் கொட்டி அவள் உடல் முழுதும் தடவி விட்டார்.

எஸ்தரின் கூந்தல் காட்டு மரங்களின் கொடி போல முறுக்கி திரண்டுபோய் இருந்தது. முடிந்தவரை சிக்கெடுத்து பின்தலையில் நிற்குமாற் போல் கொண்டை கட்டிவிட்டார். வெள்ளை நிற நீண்ட கவுன் ஒன்றை உடுத்திவிட்டார். கால் கையை நீட்டி கட்டிலில் கிடத்தினார். அங்கிருந்து எழுந்து சில அடி தூரம் போய் எஸ்தரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இத்தனை நாள் தாம்பத்திய வாழ்க்கையின் ஞாபகப் படிமங்கள் கட கடவென்று அவிழ்ந்து கொட்டிக் கொண்டிருந்தது. மெல்ல ஒரு விசும்பல், தொண்டை  உலர்ந்து உதடுகள் துடிதுடித்துக் கொண்டிருந்தது. வேகமாய் ஓடிவந்து எஸ்தரை அள்ளி மார்போடு அணைத்துக் கொண்டார். இரண்டு துளி கண்ணீரோடு அவள் நெற்றியில் முத்தமிட்டார். அவள் காதுகளுக்குள் முணுமுணுத்தார்.

யு ஆர் எ ஜெம் !

யு ஆர் எ ஜெம் !!

இப்போது மீண்டும்  ஒரு முத்தம் முன்பு தந்ததிலும் அழுத்தமாக .

செல்வா சொன்ன சாவுச்செய்தி கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து சேர்ந்திருந்தார்கள். வீட்டு விறாந்தையில் அடுக்கி வைக்கப்பட்ட மலர் வளையங்களுக்கும், இறைந்து கிடந்த பூக்களுக்கும் இடையில் எஸ்தர் பேழையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தாள்

டெட்டாலை வாளி வாளியாகக் கரைத்து எஸ்தரின் அறை முழுதும் ஊற்றி தரை , சுவரை தேய்த்துக் கழுவினான் செல்வா. எஸ்தர் அணிந்திருந்த ஆடையையும், இத்தனை காலமும் கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த போர்வையையும் செத்த பாம்பை தூக்குவது போல நீண்ட தடி ஒன்றில் தூக்கி கொல்லைப்புறத்து வெளி மீது வீசி எறிந்தான். கயிற்றுக் கட்டிலை உடைத்து தீ வைத்தான்.

நண்பர்கள், மிக நெருங்கிய உறவுக்காரர்கள் என்று சொச்ச மனிதர்கள் அந்தச் சிதையை இடுகாடு வரைக்கும் கொண்டு வந்து சேர்த்தார்கள் . பேழை கயிற்றில் குழிக்குள் இறக்கப்பட்டது. குழி மூடப்பட்டு மண்ணை குமித்து அதன் மீது மலர்வளையங்கள் சாற்றி வைக்கப்பட்டன. வானம் இருட்டி தூறல் போடத்தொடங்கியது. யாரோ கொண்டு வந்த மலர்வளையமொன்றில் ஒட்டப்பட்டிருந்த எஸ்தரின் கருப்பு வெள்ளை புகைப்படம் மழைத்துளிகளில் கரைந்து கொண்டிருந்தது .

“சேர்”

“போவமா”

பின்தோளை அழுத்தினான் செல்வா.

“நீ போ நான் கொஞ்ச நேரம் இருந்திட்டு வாறன்”

“சரி! கவனமா வாங்க நான் வீட்டை போய் உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாறன்”

செல்வா போனபிறகு அங்கிருந்த கல் இருக்கைகளில் அமர்ந்து கொண்டார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் கல்லறைகளும், நாவல்நிற பூ பூக்கும் ஜகரந்தா மரங்களும் மட்டுமே இருந்தன. அவற்றின் பூக்கள் கல்லறைகளின் மீது கொட்டிக் கிடந்தன. ஆனால் இங்கு எந்த மரங்களும் தம் உதிர்ந்த பூக்களை நினைத்து கவலை கொள்வதாய் தெரியவில்லை மீண்டும் மீண்டும் பல லட்சக்கணக்கான பூக்களை நாளாந்தம் மலர்வித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஒரு பூவை எடுத்து நுகர்ந்து பார்த்தார். அது இன்னமும் வாசனை பரப்பிக்கொண்டு தான் இருந்தது. மனிதனும் பூவைப்போல தானே. இறந்த பிறகும் அவன் இந்த பிரபஞ்ச வெளிக்குள் தானே தூவப்படுகிறான்.

எந்த வழியால் எஸ்தர் ஊர்வலம் வந்ததோ மீண்டும் அதே வழியால் வீட்டுக்கு நடந்து வந்தார் ரோசைறோ. தங்களுக்கு என்று பிள்ளைகள் கூட இல்லாத முதுமையை இருவருமே பல வருடங்களாக ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். யார் முந்திக்கொள்ளப் போகிறோம்? யார் தனித்துவிடப்பட போகுறோம்? என்ற திரைமறைவு ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் யார் வென்றவர்? தோற்றவர்? இருப்பவரா இல்லை இறந்தவரா? காலத்திடம் கேட்டால் “இருப்பவன் பாவி” என்று சொல்லும். இப்போது நுழையப் போகும் வீடு தொடங்கி தன் கடைசி நாள் வரைக்கும் பீடிக்கப் போகும் வெறுமை தன் பெருங்கரங்களால் அவரை அழுத்திக் கொண்டது.

யாருமில்லாமல், ஒரு அகல்விளக்கு கூட ஏற்றாமல் வீடு “ஓ” வென்று கிடந்தது. விறாந்தை முழுதும் இறைந்து கிடந்த உதிர்ப்பூக்களை தோளில் கிடந்த துண்டால் கூட்டிவிட்டு கை, காலை நீட்டி குப்புறப்படுத்துக் கொண்டார் .மரணம் போன்றவொரு ஆழ்ந்த தூக்கம் இப்போதைக்கு எல்லா வெறுமைகளையும் அடுத்த ஒரு மணி நேரத்துக்காவது தள்ளிவைக்கும் என்று நம்பினார் ரோசைறோ. ஆனால் மனம் உடலின் எதிர்திசையில் நகர்ந்து கொண்டிருந்தது .

மெல்ல மூச்சு திணறியது, யாரோ கழுத்தை இறுக்குவது போலவொரு உணர்வு. பெரும் சத்தத்தோடு இருமினார். நுரையீரல் பூக்களின் வாசத்தை துப்பித்தள்ளியது. அவர் தேவை அவருக்கு மட்டும் புரிந்தது. எழுந்து எஸ்தரின் அறைக்குள் ஓடினார். டெட்டால் வாசம் நாசியை அரித்தது. அதையும் தாண்டி சுவர்களிலும், தரையிலும் அப்பியிருந்த ரத்தமும், சீழும் கலந்த நெடியை முகத்தை அதன்மேல்  தேய்த்து, தேய்த்து உறிஞ்சத் தொடங்கினார். ஆனாலும் அவர் தேவைக்கு அது போதுமானதாய் இல்லை. பைத்தியம் பிடித்தவனைப் போல கொல்லைப் புறத்துக்கு ஓடி வந்தார்.

மாந்திரீகனின் வசியம் போல எங்கோ ஒரு மூலையில் இருந்து அந்த வாடை அவரை ஈர்த்துக் கொண்டிருந்தது. வேலி மீது வீசப்பட்டு கிடந்த எஸ்தரின் போர்வையை கண்டு கொண்டார் . முட்கம்பிகள் கிழிக்காமல் பத்திரமாய் அதை பிரித்தெடுத்து மீண்டும் வீட்டுக்குள் ஓடினார். போர்வையைச் சுருட்டி எடுத்து அதற்குள் முகத்தைப் புதைத்து ஆழஆழமாக மூச்செடுத்து விட்டார். கல்லறைகளின் மீது கிடந்த பூக்கள் உதிர்ந்த பிறகும் வாசம் பரப்புவது போல, எஸ்தரின் எச்சம் போர்வையில் கசிந்து கொண்டிருந்தது. இப்போது கத்தி அழவேண்டும் போல இருந்தது அவருக்கு. வாயும், மனமும் விலாசமாக திறந்து கொள்ள அழுது தீர்த்தார். பெரும் பாரமிறங்கியது போல இருந்தது.

விறாந்தையில் எஸ்தரின் போர்வையை விரித்தார். தன் சட்டை, வேட்டியை களைந்து அவர் நிர்வாணத்தை போர்வை மீது கிடத்தினார்.

சாப்பாடு கொண்டு வந்த செல்வா கதவை தட்டிக்கொண்டு நின்றான். நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அப்போது அந்த இரவே அதிர, அலறியபடி ஒரு சாவுக்குருவி தாழ்வாகப் பறந்து போனது.

***

சிந்துஜன் நமஷி – கொழும்பூவில் வசித்து வரும். கவிதைகள், சிறுகதைகள் எழுதிவருகிறார். அண்மையில் இவரது கவிதைத் தொகுப்பு “போர்கால ராஜாளிகள்” எனும் பெயரில் வெளியானது. தொடர்புக்கு – “sindujannamashy@gmail.com” sindujannamashy@gmail.com

மயிலாப்பூரும் மா. அரங்கநாதனும்…

0

ரவிசுப்பிரமணியன்

கலைஞன்

கோவில்களும் திறக்காமல்
உலகியக்கம் ஸ்தம்பித்து
சப்தமொடுங்கிய
நேரத்தில்
சந்நிதித் தெருவின் வீட்டிலிருந்து
நாதஸ்வரக் கலைஞன்
நாத ஆலாபனையில் உருக்குகிறான்

பச்சைக்கிளிகளும்
புறாக்களும்
ராகவழி திரிந்தலைந்து கோபுரங்களுக்கு
பறக்கின்றன

தீர்த்தக்குளத்தின் சொற்ப நீரில்
மீன்கள் சிலிர்த்து
வான் நோக்கி இதழ் குவிக்கின்றன

கோசாலை பசுக்கள்
மேயாது வெறிக்க
நாக மண்டபத்து உயிரினங்கள்
சுருண்டுகிடக்க
கடவுளும் மெல்ல நடந்து
திட்டி வாசலை
நெருங்கிவிட்டார்

வளி மண்டலத்தையே
சுநாதத்தால் நிரப்பிக்கொண்டிருந்த கலைஞன்
வாசிப்பை நிறுத்தினான்
இலவசத்திற்கான வரிசையில் நிற்க.

***

தேர்ந்த படைப்பாளிகள் தீர்க்க தரிசிகள் என்று நீங்கள் நம்பத்தான் வேண்டும். அதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. உலகம் முழுக்க இப்படி ஒரு உற்பாதம் நடந்துகொண்டிருக்கிறபோது எனக்கு மா. அரங்கநாதனின் “மயிலாப்பூர்” கதை ஞாபகத்துக்கு வந்தது. என்ன ஞானதிருஷ்ட்டி அது என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

1987ல் வெளிவந்த அவரது “வீடு பேறு” தொகுப்பில் உள்ள கதை அது. கிட்டத்தட்ட இன்றைக்கு இயக்கமின்றிக் கிடக்கும் இந்த விஷயங்கள் எல்லாம் அக்கதையில் வருகிறது.

திடீரென்று சென்ற வாரம் என் மனைவி நீங்கள் பிறந்த வருஷத்தின் பெயர் என்னவென்று சொல்லுங்கள் என்றாள். கடலங்குடி ஜோசியர் சொன்ன குறிப்பை அப்பா ஜாதமாக எழுதி வைத்திருந்தார். புலம் பெயர் வாழ்வில் அது எங்கோ தொலைந்து இப்போது இருப்பது தேதி நேரம் வருஷம் சொன்னால் கணிக்கும் கணிப்பொறி ஜாதகம். அதில் தமிழாண்டின் பெயர் இல்லை. தமிழ் வருஷங்கள் அறுபதுதானே பார்த்துவிட்டுச் சொல்வோம் என்று நினைத்தேன். அந்த பெயர்களை பார்த்தால் பிறந்த வருஷம் ஞாபகத்துக்கு வருமென்று அந்த பட்டியலைத் தேடி எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். சோப கிருது என்று தட்டுப்பட்டதும் அவளிடம் சொல்லிவிட்டு பஞ்சாங்கத்தில் அந்த வருஷத்திலிருந்து சும்மா வருஷபலன்களைப் படித்துக்கொண்டிருந்தேன்.

கோவில்களுக்குப் போவேன் வணங்குவேன். ஆனால் பெரும் தெய்வ நம்பிக்கை இல்லை. நடக்கும் நடப்பையெல்லாம் பார்த்து பகடியாக “எல்லாம் அவன் கையில் இருக்கிறது.

நம் கையில் என்னாடா தம்பி இருக்கிறது” என்று கவிஞன் இசைக்குக் கட்செவி அஞ்சலில்எழுதியிருந்தேன். அவன் அடுத்த நிமிஷம் “சானிடைசஸ்ர்கள்ண்ணா” – என்று பதில் அனுப்பியிருந்தான். அப்படிக் கடவுள்கள் மேல் மட்டுமல்ல இந்தச் சாமியார்கள், ஜோசியர்கள், குறி சொல்பவர்கள், ஏடு படிப்பவர்கள், மந்திரவாதிகள், மதவாதிகள் இவர்கள் யார் மீதும் எனக்கு எந்தக் காலத்திலும் நம்பிக்கை இருந்ததில்லை. அதை இந்தக் காலம் மேலும் ஊர்ஜிதம் செய்கிறது. ஆனாலும் இந்தப் பிரகிருதிகள் என்னதான் சொல்கின்றன என்று வேடிக்கைக்காகப் படித்துப் பார்ப்பேன். அந்த வகையில் இந்த சார்வரி வருஷத்தின் பலன் சொன்ன பஞ்சாங்கப் பாடலைப் படித்ததும் விக்கித்துப் போனேன். கவிஞர். இடைக்காடரின் அந்த வெண்பா இது.

“சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் – மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றி சாவார் இயம்பு”.

முன்னவர் சிறுகதை எழுத்தாளர். பின்னவர் கவிஞர். முன்னவர் எண்பதுகளில் அப்படி ஒரு கதையைச் சொன்னார் என்றால் பின்னவர் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இந்தக் கவிதையை எழுதியிருக்கிறார். கழிசடைகள் வாக்கை நம்பாமலிருக்கலாம். கலைஞனின் வாக்கை நம்பாமல் இருக்க முடியுமா. ஆனால் அத்தகைய கலைஞனுக்குக் கிடைக்கும் மதிப்பு இங்கு எத்தகையது என்று வெதும்பும் சூழலில் இரண்டு சம்பவங்கள் ஆறுதலாக இருந்தன.

நம் எல்லோரைப் போலவும் வீட்டுக்குள் அடைபட்டு பொருள்கள் கிடைக்காது அவதிப்பட்ட பொன்னீலனுக்கு அரசு அதிகாரிகள் வீடு தேடி பொருள்களைக் கொண்டுபோய் சேர்த்தது. சோ. தருமன் பல் வலியால் அவதிப்பட்டு வெளியே சென்ற போது போலீஸ்காரர்கள் அவரை மறித்து கெடுபிடி செய்து பின் அவர் எழுத்தாளர் என்று தெரிந்ததும் (அவர் என்ன ரைட்டர் என்று கீழ் மட்ட ஆட்கள் புரிந்துகொண்டது வேறு விஷயமாக இருந்தாலும்) அவரை மரியாதையாக நடத்தியது ஆறுதலான விஷயங்கள்.

நம் அரும் பெரும்மொழியின் சாதனைகளைப் பல துறைகளிலான அதன் பங்களிப்பை அதன் தாதுக்களின் மேன்மையை உலகின் முன் வைத்து நிறுவி அதை உயர்த்தாமல், மொழியை வெற்று கோஷங்களாக்கி அரசியல் செய்து கொழுத்தும் விற்றும் பிழைத்து வருபவர்கள் மத்தியில் உண்மையிலேயே கலைக்கும் இலக்கியத்துக்குமாய் வாழ்பவர்களுக்காக சமூகமோ அரசோ ஒரே ஒரு அரிசி மிட்டாயைக் கொடுத்தால் சந்தோஷப்படுகிறது மனசு.

இருக்கட்டும்.

மா. அரங்கநாதன் கதைக்கு வருவோம். திடீரென்று ஒரு நாள் ஊரே காணாமல் போய்விடுகிறது அந்தக் கதையில். ஊர் என்றால் ஊரில் இருக்கும் ஜூவராசிகள். பூங்காக்கள் சாலைகள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கார்கள் ரிக்‌ஷாக்கள் எல்லாம் தூசு படலமாய் அசைவற்று நிற்கின்றன. புழுதிபடிந்த கேட்பாரற்ற கட்டிடங்கள். மனிதர்களே இல்லா கோவில்கள் குளங்கள். அந்தக் கலியுகத்திலும் கரப்பான் பூச்சிகள் மட்டும் நிறைய வாழ்கின்றன. எதோ ஒன்று நடந்து இயக்கமற்ற இடத்தில் முத்துக்கருப்பனுடனும் அவனுடன் உரையாடும் காயத்திரி வழியாகவும் சில சித்தரிப்புகள் விவரணகள் வழியாகவும் கதை நகர்கிறது. கதை நடக்கும் மாசமும் இதே சித்திரை மாசம்.

அந்த இயக்கமற்ற காலத்திலும் மனம் நிம்மதியாய் இருக்க தேவாரத்தைப் பற்றிப் பேசுகிறான் முத்துக்கருப்பன். கடைசியில் அந்த ஊர்மட்டும் அனாந்திரமாக இருக்க முத்துக் கருப்பனும் காயத்ரியும் வெவ்வேறு திசைகளில் பூச்சிகள் போல சென்று மறைகின்றனர் என்று கதை முடிகிறது.

இழான் பவில் சார்த்ர, சைமன் டி பாவெர் மற்றும் (அபத்தவாதி) ஆல்பெர்ட் காம்யூ, ஃபியோடோர் தஸ்தயேவ்ஸ்கி, பிரான்ஸ் காஃப்கா போன்றோரின் இருத்தலியல் எழுத்துக்களை அறிந்தவர்கள் ஓரளவு இதைச் சட்டென புரிந்துகொண்டுவிட முடியும்.

இந்தக் கதையும் அது தரும் குறியீடுகளும் அதன் உப பிரதிகள் தரும் செய்திகளும் இந்த வைரஸ் தாண்டவ காலத்திற்குப் பொருத்திப்பார்க்க இடமளித்து காலத்தைத் தாண்டி அர்த்த பரிமாண விஸ்தீரணம் கொள்கிறது.

மா. அரங்கநாதனை ஜார்ஜ் லூயி போர்ஹோவுக்கு இணையானவர் என்று சொன்ன க. நா.சுவால் ஞானரதத்தில் வெளியிடப்பட்ட கதை இது. திறமையுள்ள படிப்பாளியான ஒரு எழுத்தாள நண்பர் அப்போது அந்தக் கதை புரியவில்லை என்று க. நா.சுவிடம் கேட்டதற்கு இன்னும் ஒரு முறை படியுங்களேன் என்று அவர் சொன்னதாக 16. 2. 88 இல் பாரிமுனை ஒய் எம் சி ஏ அரங்கில் அவரே பேசிய ஒரு ஒலிப்பதிவு சொல்கிறது.

எந்த ஆர்பாட்டமும் சிஷ்யகோடிகளுமில்லாமல் நம் பண்பாட்டு கலாச்சார தளங்களின் கூறுகளை, ஆன்மீக மரபின் தீற்றல்களை, தமிழின் தொன்ம அடியாழ வேர்களின் மகத்துவத்தைத் தன் படைப்புகள் வழி எழுதிக்காட்டிய கலைஞன் மா. அரங்கநாதன்.

அறிவுத்தளத்தில் அவை இயங்கினாலும் சாதாரண ஒரு வாசகனும் அதில் அவனுக்கான ஒரு இழையைப் பிடித்து மேலேக முடியும். தன் வாசகனுக்குத் தோற்றம் காட்டியும் காட்டாமலும் தோற்றங்களுக்குப் பின் உள்ள உண்மையின் வழி அவனை சஹிர்தயனாக்கி மேலேற்றவே அவர் விரும்பினார்.

காலதேச வர்த்தமானங்களைக் கடந்து மொழிக்கும் சிந்தனை தளத்தில் கொடுத்து வாங்கவும் கலைஞன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை அவனது வீர்யமான படைப்புகள் இன்றும் சொல்லிக்கொண்டேயிருக்கின்றன.

தன் நேரடி அனுபவத்திலிருந்து மட்டுமல்ல அமானுஷ்ய கற்பனைகளிலிருந்தும் கலைஞர்கள் எழுதுவார்கள் அப்போதைக்கு அது மாயத்தோற்றம் காட்டினாலும் காலம் தன் கோலத்தின் மூலம் அதற்கு அர்த்தத்தை ஏற்றிவிடும் போல.

***

ஆசிரியர் குறிப்பு : –

கவிஞர், எழுத்தாளர், ஆவணப்படஇயக்குனர், இசைக்கலைஞர் என பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புக்கு : +91 994 004 555 7
ravisubramaniyan@gmail.com

விக்கி பீடியா லிங்க் :
Ravisubramaniyan
https://ta.wikipedia.org/s/436u

தொலைந்த பாடல்

3

ஹேமி கிருஷ்

பொங்கித் தளும்பிய சபர்மதி ஆற்றின் கரையை அதன் போக்கில் விடாமல், போடப்பட்ட 3 அடி தடுப்பில் கைகளை தாங்கியபடி ஆற்றினைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மங்கை .ஆறு வானத்தின் நிறத்தை வாங்கிக் கொண்டு மினுமினுத்தது. செந்தீயின் நிறம்…..

” தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா” மனம் தனிச்சையாக நினைத்தது..
பாரதியாரை நினைத்ததும், அப்பா ஞாபகத்தில் வந்து போனார். கிருஷ்ணாவும் வந்து போனான்… மங்கை நெற்றிப் பொட்டில் கை வைத்துத் தேய்த்தாள். வேண்டாம்.. மறந்தாயிற்று. இனி என்ன?

அவன் படிக்கட்டுகளிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்ததை மங்கை பார்த்தாள். வந்துவிட்டானா? இவன் யார்? ஏன் நம் இடத்திலேயே வந்து நிற்கிறான்?
ஒரு வாரமாக கவனித்தப் பிறகுதான் இவன் தினமும் வந்து நிற்கிறான் என்றே உறைத்தது. .. அலுவலக அல்லது பக்கத்து வீட்டு மனிதர்களைப் போல, இவனை இங்கே பார்ப்பது அவளுக்கு வினோதமாகவும் ஒவ்வாமையாகவும் இருந்தது.
நவ்ரங்கபுராவில் அவளது வீடு. அலுவலகம் பால்டியில் இருக்கிறது. தினமும் மாலை வீடு திரும்பும் முன், லால் தார்வாஜாவில் இறங்கி, ரிவர்ஃப்ரண்டிற்கு வந்து இப்படி இளைப்பாறிக் கொள்வாள்.

இருள் கவிழத் தொடங்கும் போது, தூரத்தில் வெளிச்சப் பொட்டுகளாய் கட்டிடங்களாய் தெரியும் போது, ஆற்றில் மின் விளக்குகளின் பல நிறங்கள் குழைந்து, மிதக்கத் தொடங்கும் போது, அங்கிருந்து கிளம்புவாள். மனம் லேசாகியிருக்கும்.

வழக்கம் போல் வீட்டிற்குள் நுழைந்ததும் வெறுமையும் புகுந்தது. அவளது அறையில் அம்மா இருந்த இடம் வெற்றிடமாக இருந்தது. இளமைக் காலத்தில் இடுப்பொடிய வேலை செய்து கடும் எலும்பு தேய்மானத்தில் அவதிப்பட்டு, மங்கைப் பற்றி கவலையிலேயே இறப்பும் அவள் அம்மாவை அழைத்துக் கொண்டது.
மாளவிகாவும், ரோகிணியும் சமையலறையில் ஏதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் மங்கையின் சித்தப்பாவின் மகள்கள். வீட்டில் இருக்கும் மூன்று அறைகளில் ஒரு அறை மங்கை குடும்பத்திற்கும், மற்றோர் அறை சித்தப்பா குடும்பத்திற்கும், மூன்றாவது அறை அவளது அத்தை, மாமாவிற்குமாக பிரிக்கப்பட்டு, நடுவில் இருக்கும் முற்றம் கூடிய வராண்டா எல்லாரும் கூடுமிடமாக இருந்தது. இப்போது அவளது அறையில் அவளுக்கு துணையாக மாளவிகாவும் ரோகிணியும் படுத்துக் கொள்கிறார்கள்.

நல்ல வசதியாக வாழ்ந்த குடும்பம். எதிர்பாரா பெரிய கடன் சுமையால் எல்லாவற்றையும் விற்று நொடிந்து போனார்கள். பிறகு நிலைமையை சமாளித்து கொஞ்சம கொஞ்சமாக மீண்டு ஒரு சுமாரான நிலைக்கு வந்தார்கள்.
அகமதாபாத்தில் நவ்ரங்க புராவில் நவீன கட்டிடங்களுக்கு மத்தியில் தேமே என்றிருக்கும், பழைய தமிழ்நாட்டு பாணியில் கட்டப்பட்ட வீட்டில் வாழும் தமிழ்பேசும் கூட்டுக் குடும்பம் இது வீட்டின் பெரியவர்கள் இயலாமையில் ஒடுங்கி விட்டார்கள். இவர்கள் மூவரும் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.
மங்கை ஓடிப் போய் மாளவிகாவை கட்டிப் பிடித்து விட்டு, ரோகிணியை அழைத்துக் கொண்டு முற்றத்தில் போய் அமர்ந்து கொண்டாள். மூவருக்குமாக காபி போட்டு மாளவிகா, மங்கைக்கு ஒரு முத்தம் கொடுத்து, காபியும் கொடுத்து அவளருகில் அமர்ந்து கொண்டாள். மூவரும் வீட்டு வேலைகளை பேசிக் கொண்டே பகிர்ந்து செய்வார்கள். சமையல் வேலையை மட்டும் பெரியவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எல்லாரும் சாப்பிட்டு தூங்கச் சென்றபின், இவர்கள் மூவரும், முற்றத்தில் இருளின் தழுவலிலும், நிலவின் வெளிச்சத்திலும், படுத்துக் கொண்டே அன்றைய பொழுதைப் பற்றி பேசிக் கொள்வார்கள். ரோகிணிக்கும், மங்கைக்கும் இரவு தூங்குவதற்கு முன் காபி குடிக்கும் பழக்கம் இருக்கிறது… பாடல்களை கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். அதுவும், மங்கைக்கு பாரதியின் பாடல்கள்.

” தீர்த்தக் கரையினிலே, தெற்கு மூலையில்”… என கேட்டப்படி அவளது அப்பாவின் நினைவை தவிழ விடுவாள். பாரதியாரின் பாடல்கள் என்றால் அவளது அப்பா வாசனுக்கு மிகப் ப்ரியம். பாரதி பாடல்களை இப்போதும் கேட்டால், அப்பா வாரியணைப்பது போல் ஒரு பிரம்மை வந்துவிடும். மங்கையின் ஆறேழு வயதில் அவளுடைய பிஞ்சு கைகளை அவருடைய நெஞ்சில் பற்றிக் கொண்டு, பெரிய கண்கள் முழிக்க வெற்றிலையை குதப்பியபடி, ” பாயுமொளி நீயெனக்கு” எனப் பாட ஆரம்பிப்பார். மிக சாதுவான சிரித்த முகமாக இருக்கும் அவர் பாரதி பாடல்களை மட்டும் கர்வம் மிளிர, கண்கள் பொங்க பாடுவார்.

மாலையில் வீட்டுக்கு வருகையில் பாடம் படிக்கும் மங்கையைப் பார்த்து “சின்னஞ்சிறு கிளியே. கண்ணம்மா. செல்வ களஞ்சியமே” எனப் பாடிக் கொண்டே உள்ளே நுழைவார். அடுப்படியில் புதைந்த பெண்களை உச்சி முகர்ந்து தைரியமூட்டிய பாரதியை, வாசன் சிலாகித்து சொல்லிச் சொல்லி, மங்கைக்கு முண்டாசுக் கவிஞன் மீது காதல் உண்டானது.. அவளுக்கு பாரதியையும் அப்பாவையும் வேறாக பிரித்துப் பார்க்கத் தோன்றியதில்லை.

மங்கையின் அப்பாவிற்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அவர் பாடிய பாரதி பாடல்களும், கடவுள் பற்றிய அபிப்ராயமும் மங்கையின் ஒவ்வொரு அணுக்களிலும் புக ஆரம்பித்தது . ” நாளை போற இடத்துல நாள் கிழமைக்கு பூஜை புனஸ்காரம் செய்யலைனா உனக்குதான் பாதகம்” என அம்மா அழுவாள். மங்கையை மாற்ற அவள் அம்மா என்னவோ சாகசம் செய்தும் தோற்றுப் போனாள்.

சகலமும் அவளுக்கு அப்பாதான். சிறு காயம் பட்டால் கூட அப்பாவின் பரிவிற்காக அவரை கண்கள் தேட ஆரம்பித்து விடும். மாதவிடாய் காலத்தை ஒவ்வொரு மாதமும், மாடியில் போடப்பட்டிருக்கும் கூரை அறையில்தான் கழிக்க வேண்டும் என வீட்டினர் தீர்மானமாய் பிடிவாதமாய் சொன்ன போது, இவரும் மாடியறையில் இவளுடன் துணைக்கு வந்து படுத்துக் கொள்வார். தீட்டு பெண்ணை தொடக் கூடாது என்றபோதும், காதில் வாங்காமல் அவளை அரவணைத்தார். அவளுடைய எல்லா முடிவுகளுக்கும் துணை நின்றவர். கல்லூரியில் விருப்பமான படிப்பை படிக்க அவர் வீட்டுச் சுமைகளுடன் கடன் வாங்கிப் படிக்க வைத்தார்.வாழ்வதன் சாட்சியாக சுழன்று கொண்டிருந்த அந்த உயிர்க்கடிகாரம் ஒரு நாள் நின்று போனது. ஓரிரவில் வாசன் நாற்காலியில் அமர்ந்தவர் அமர்ந்தபடியே போய்ச் சேர்ந்தார். அப்பா இல்லாத உலகம் வேறுமாதிரியாக இருந்தது. இருப்பினும் அவள் அப்பா எப்போதும் அவள் கை பிடித்து சென்றதில்லை, முன் நடக்க வைத்து பின் வந்தவர். எந்த சூழ்நிலையையும் அடுத்தவர் துணையில்லாமல் தனியாக எதிர்க்கொள்ளப் பழக வேண்டுமென அவர் எடுத்த பாடம்தான் அவளுடன் துணைக்கு நின்றது நிரந்தரமாக..அந்த தனிமை அவளுக்கு பிடித்திருந்தது கிருஷ்ணா வரும் வரை,
“என்ன யோசனை… வா போய் தூங்கலாம்” என சொல்லி,மாளவிகா, மங்கையின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

சில நாட்களுக்கு பிறகு ஆற்றருகே தினசரி பார்க்கும் அவனை வங்கியில் நேருக்கு நேராக பார்த்த போது இருவருமே தர்மசங்கடமாக உணர்ந்தார்கள். அதன் பின் மானெக் சௌக், மார்க்கெட் என அடிக்கடி தென்படும் போதெல்லாம் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஆற்றங்கரையில் தெரிந்தவனை வேறென்ன செய்வது தவிர்ப்பது தவிர.

அன்றைக்கு ஓர் விடுமுறை நாளில் ரோகிணி வீட்டிற்கு மூச்சு வாங்க ஓடி வந்தாள்.

“மங்கை.. சீக்கிரம் கிளம்பி வா” என்று பதறியபடி அவளை இழுத்தாள்.

“என்னாச்சு?”
“நீ வா சொல்றேன்” என்றபடி அவளை இழுத்துக் கொண்டு வெளியேறும் போது ..
“இதுக போக்கு சரியில்ல,. எங்கேடி போறீங்க? என அவர்களது அத்தை திட்டியதை காதில் போட்டுக் கொள்ளாமல் ஸ்கூட்டியை ரோகிணி ஓட்ட, பின்னமர்ந்தாள் மங்கை. அங்கிருந்து போடாக் தேவிற்கு சென்று கொண்டிருந்தார்கள்…

” எங்கடி போறோம் ? “

ஃபோட்டோ எக்ஸிபிஷனுக்கு” காற்றில் வார்த்தைகள் சிதறியபடி அவளை அடைந்தது.

“அங்க ஏன் இவ்ளோ அவசரமா?” மங்கைக்கு பதட்டம் தொற்றியது. போடாக் தேவிலிருந்த ஒரு பழமையான கட்டிடத்திற்குள் கூட்டிச் சென்றாள். அங்கே புகைப்பட கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. ரோகிணி நேராக அவளை கூட்டிச் சென்று ஒரு புகைப்படத்தின் முன் நிற்க வைத்தாள். மங்கை பிரம்மை பிடித்தது போல் நின்று விட்டாள்.

மங்கையின் புகைப்படம். அதில் கண்கள் கண்ணீரினால் பூத்து கன்னத்தில் வழிந்திருந்தது. நேர்கோடாய் வழிந்த கண்ணீர், தெரு விளக்கில் மின்னியது. மை பூசிய கண்களில் சிவந்த நரம்புகள் வலைப் போல் தெரிந்தன, . காதில் பச்சை சிவப்பு கல் வைத்த ஜிமிக்கி ஜொலித்தது. இளஞ்சிவப்பு நிலா , வண்ணக் கலவையான சபர்மதி ஆறு, விளக்கொளியில் மங்கையின் முகம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து எடுக்கப்பட்ட புகைப்படம். மங்கைக்கு உண்டான உணர்வு அவளுக்கே விளங்க வில்லை. சில நொடிகள் அதையே உற்றுப் பார்த்தவள் பதட்டத்தை காண்பிக்காமலிருக்க ரோகிணியை இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.இருவரும் வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது.

” பாத்தியா? யார் எடுத்திருப்பா?” கேட்டாள் ரோகிணி.

” தெரியலைடி..” என மங்கை யோசித்தாள். அந்த நாள் நினைவிருக்கிறது. கிருஷ்ணாவின் திருமணம் அன்று… கல்யாணத்திற்கு செல்லாமல் இங்கு வந்தாள். நமக்கே தெரியாமல் அத்தனை நிதானமாக யார் எடுத்திருப்பார்கள். யோசிக்க யோசிக்க மூளையில் பொறி தட்டியது.

“அவனா? அவன் எடுத்திருப்பானோ?”வாய்விட்டு கேட்டாள்.
” எவன்” ரோகிணி திருப்பி கேட்டாள்.
” ரிவர்ஃப்ர்ன்ட்ல தினமும் ஒருத்தனை பாக்கிறேன். நான் வர்ற அதே நேரத்துக்கு வர்றான்.. ஆனா கையில கேமரா இல்லையே” குழம்பினாள்.

“இப்போ அங்க இருந்தானா அவன் நீ பாத்தியா?அங்கேயே விசாரிச்சிருக்கலாம்னு சொன்னேன்..நீ அவசரப்பட்டு இழுத்துட்டு வந்துட்ட.. “
” இல்லடி . சரியா கவனிக்கலை.” வந்ததும் மாளவிகாவிடம் பற்ற வைத்தாள்…
“மாலு.. நம்ம மங்கையை பாக்க தினமும் ஒருத்தன் ரிவர் ஃப்ரன்டுக்கு வரானாம் தெரியுமா? இதையே இன்னைக்குதான் சொல்றா. கல்லூளி மங்கை ” என்றபடி முழு விபரத்தையும் சொன்னாள்.

” ஏய் லூஸு சும்மா இரு.அவன் என்னைலாம் பாக்கல. நானே குழப்பத்துல இருக்கேன்” என சோபாவில் அமர்ந்தபடி குழப்பமாகவும் பதட்டமாகவும் யோசித்தாள்.

அவள் அத்தை வந்தாள், ” வீட்ல சொல்லிட்டு போற பழக்கமெல்லாம் வச்சுக்காதீங்க? உங்க அப்பங்காரன் வரட்டும் வச்சுக்கிறேன். அதென்ன மட்டு மரியாதை இல்லாத குணங்கள்” என திட்டியபடி துணிகளை முற்றத்தில் இருந்த கம்பியில் உலர்த்தினாள் இவர்கள் மூவரும் கண்டுகொண்ட சுவடே இல்லை. தங்கள் பேச்சை ரகசியமாக தொடர்ந்தார்கள்.

“அவன் எப்படி இருப்பான் சொல்லு” இருவரும் நச்சரித்தனர்.
” ஏய் போங்கடி”
“இல்லடி.எங்கயாவது பார்த்தா சொல்லலாம்ல…சொல்லு” என்றார்கள்.
” நல்லா உயரமா இருந்தான்., சுருள் முடி, மாநிறத்துக்கும் கம்மியான நிறம்… மீசை வச்சிருந்தான். தமிழ் பையன் மாதிரிதான் தெரிஞ்சான்..”
” ஸ்மார்ட்டா இருந்தானா?” என மாளவிகா கண்ணடித்து கேட்டாள்.

மங்கை முறைத்தாள் “அப்படித்தான் வச்சுக்கேயேன்.. அவன்தான் எடுத்தானானு தெரியாது. ஆனா அவன் பார்வை சந்தேகமா இருக்கு.பாக்கலாம்”என்றாள்.
மறு நாள் மாலை பதட்டத்துடன் சபர்மதி ஆற்றங்கரைக்கு வந்தாள். முன் பின் தெரியாத ஒருவனிடம் பேசுவது எரிச்சலான விஷயமாக தோன்றியது மங்கைக்கு.
அன்று அவன் அவளுக்கு முன்னதாகவே வந்திருந்தான். அவன் யாரையோ எதிர்ப்பார்ப்பது போல் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான். மங்கையை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அவனருகில் சென்று மெதுவாக கூப்பிட்டாள், அவன் பதட்டமாகவே பார்த்தான்
“நீங்கதான் என்னை ஃபோட்டோ எடுத்தீங்களா? ” என குஜராத்தியில் கேட்டாள்.
“எனக்கு புரியலை. நான் தமிழ் நாடு”ஆங்கிலத்தில் சொன்னான்.

“ஓ. தமிழா நீங்க?.. நீங்கதான் என்னை ஃபோட்டோ எடுத்தீங்களா?”

“ஆமாங்க.. அது வந்து நானே உங்ககிட்ட சொல்லணும்னுதான் தினமும் வர்றேன்.. ஆனா “ என இழுத்தான்.

” கொஞ்சமாவது அறிவு இருக்கா? என்னோட அனுமதி இல்லாம நீங்க எப்படி என்னை எடுக்கலாம்? அதும் கண்காட்சில வைக்க எவ்ளோ தைரியம். எங்க வீட்ல பார்த்தா அவ்ளோதான் “ என திட்ட ஆரம்பித்தாள்.

” மன்னிச்சுக்கோங்க… அன்னைக்கு உங்களை எடுக்கணும்னு நோக்கத்துல நான் இல்லை. .. ஊரை சுத்திப் பாத்துட்டு இருந்தேன். அன்னைக்கு உங்க வாடிய முகத்தை பார்த்ததும் எதையும் யோசிக்காம எடுத்துட்டேன் மன்னிச்சுக்கோங்க!” கெஞ்சினான்.

“ அங்க வச்ச போட்டோவை நீங்க எடுத்துடுங்க. இன்னைக்கே ” என சொன்னாள். அவன் மறுப்பு தெரிவிக்காமல் எடுத்து விடுவதாகக் கூறினான்.

மறு நாள் அவன் புகைப்படத்தை எடுத்துவிட்டானா என மூவரும் மீண்டும் அந்த கண்காட்சி இடத்திற்கு சென்றார்கள். சொன்னபடியே அவளுடைய புகைப்படத்தை எடுத்திருந்தான். அவளுக்கு தன்னுடைய அந்த புகைப்படத்தை மீண்டும் பார்க்க வேண்டுமென தோன்றியது.

மறு நாள் அவனை மீண்டும் ஆற்றங்கரையில் சந்தித்தாள்… அவனாகவே வந்து பேசினான்…” ஃபோ ட்டோவை எடுத்துட்டேங்க….”

” பார்த்தேன், நன்றி… அந்த ஃபோட்டோ நிஜமாவே அழகா இருந்துச்சு, இதுவரை அப்படி என்னை நானே பார்த்ததில்லை.. “

” நீங்க இன்னைக்கும் திட்டுவீங்கன்னு எதிர்ப்பார்த்தேன்”

” இல்ல..அந்த போட்டோவை பாத்தப்போ எனக்கு உண்டான உணர்வும், .பின்ணணில இசைச்சிட்டு இருந்த… எல் வால்ஸ் இசையும் என்னை என்னமோ பண்ணிடுச்சு. அப்படியே உறைஞ்சு நின்னுட்டேன். .”

“அப்றம் ஏன் அதை எடுக்க சொன்னீங்க.. ஃபோட்டோவையே அழிக்க சொன்னீங்க?”

” ஆமா… என் அனுமதி இல்லாமல் எடுக்கிறது தப்புதான் ”

” தெளிவா இருங்க மேடம். எல்லாரையும் குழப்பாதீங்க” சொன்னான் சிரித்துக் கொண்டே.

வீட்டில் இரவில் வழக்கத்துக்கு மாறாக எல் வால்ஸ் மற்றும் டிமிட்ரியின் வால்ட்ஸ் 2 இசையையும் அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தாள். ரோகிணி மாளவிகாவின் காதில் ஏதோ சொல்லி, இருவரும் நமட்டு சிரிப்பு சிரித்தார்கள்.

” ஏய் என்ன சிரிக்கிறீங்க?”
” அதுல்ல.. இந்த ம்யூஸிக்தான் அந்த கண்காட்சில போட்டாங்களாமே..” என சிரித்தபடி மாளவிகா கேட்டாள்.
இவள் எழுந்து இருவரையும் மாற்றி மாற்றி தலையணையில் அடித்தாள்.
” போடி… பாட்டு கேக்கற மூடையே கெடுத்திட்டீங்க” என்றபடி அலைபேசியை அணைத்தாள்.

மறு நாளும் ரிவர்ஃப்ரன்டில் அவனைப் பார்த்தாள். அவனாக பேசுவான் என நினைத்து அவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். நதிக்கரையில் இருக்கும் கான்க்ரீட் இருக்கைகள் எல்லாம் மனிதர்களால் நிரம்பிருந்தன; பலூன், துப்பாக்கிகளை விற்பவர், ஒவ்வொரு இருக்கையாய் சென்று குழந்தைகளிடம் ஆசை காட்டிக் கொண்டிருந்தார்.

நடைபாதை ஓரத்தில் பானி பூரி விற்பவரிடமும், மசாலா சாட் விற்பவரிடமும் கூட்டம் மொய்த்துக் கிடந்தது. ஆரஞ்சு மஞ்சள் நிற சாயமூட்டி தரும் ஐஸ் கோலாவை வாங்க சில குழந்தைகள் அடம் பிடித்துக் கொண்டிருந்தன. சில குழந்தைகள் அந்த ஐஸ் நிறத்தை மூக்கிலும், தாடையிலும் அப்பிக் கொண்டு சில்லிடும் உணர்வை சிலிர்ப்புடன் சுவைத்துக் கொண்டிருந்தன. இன்னும் சிலர் வெறுமனே நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவனும் அவளை போலவே அவளை பார்த்த மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. அப்படியே நடைபாதையில் நடந்துவிட்டு படியேறி மேலே சென்று விட்டான்.
மங்கைக்கு ஏமாற்றமாக இருந்தது… ” சரி. அவன் யார்…அவன் எதுக்கு நமக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.. வழிப்போக்கன் தானே…” என சமாதனம் செய்தாலும், அவளை எடுத்த புகைப்படமும், அவன் முகமும் அவளுக்குள் பரிதவிப்பை உண்டாக்கியது

அந்த வாரம் முழுவதும் ஆற்றங்கரைக்கு செல்லவில்லை. அவன் தன்னை கண்டுகொள்ளாமல் போனதுதான் உண்மையான காரணமாக இருந்தாலும், நான் ஒன்றும் உன்னை எதிர்ப்பார்க்கவில்லை என்று அவனுக்கு மறைமுகமாக சொல்லிட, அங்கு போகாமல் தவிர்த்தாள்.

சில நாட்களில் சபர்மதி ஆசிரமத்தின் அருகே மிக அருகில் மீண்டும் அவனைப் பார்த்தாள்.

“எப்படி அடிக்கடி உங்களை பாக்கிறேன்” என அவளாகவே கேட்டாள்.

“ஒரே ஏரியால இருக்கிறோம் போல. ? வாங்க. அந்த படிக்கட்டுல உட்காந்து பேசலாம்” எனக்கேட்டான். மங்கை தயங்கினாள்.
“வேலையா இருந்தா, பரவாயில்லை. இன்னொரு நாள் பேசலாம்”
“ஆமா. கொஞ்சம் லீ லேண்டுக்கு போறேன்”
“அதெங்க இருக்கு?”
“அதோ நடக்கிற தூரம்தான்”
“சரி.. உங்க கூட நடந்துட்டே வரட்டுமா நீங்க தப்பா நினைக்கலைன்னா”
“ஓ சரி” என்றபடி நடக்க தொடங்கினாள்.
“என் மேல கோபமா இருக்கீங்க போலிருக்கு?” என்று கேட்டான்.
” இல்ல. கோபம் வர்ற அளவுக்கு நீங்க எனக்கு பழக்கமில்லையே?”
” அது வும் சரிதான்… ரிவர் ஃப்ரண்ட்ல இப்போ பாக்கறதில்லையே”
“அதுவா.. கொஞ்சம் பிஸி” என தலையை ஆட்டியபடி சொன்னாள்.
” ஓ!. உங்களுக்கு எப்படி தமிழ் தெரியும்? உங்க சொந்த ஊர் எது?”
“தாய்மொழி தமிழ்தான்…பலதலைமுறையா இங்கதான் இருக்கோம். தமிழ்நாட்டுல திருச்சி பக்கம்னு சொல்வாங்க. நான் இங்க ஒரு ப்ரைவேட் கன்சர்ன்ல வேலை பண்றேன்”
“உங்க பேர் தெரிஞ்சுக்கலாமா? விருப்பமில்லைனா வேண்டாம்”
“மங்கை…”
” வாவ். நல்ல தமிழ் பேர் “
” எங்கப்பாக்கு தமிழ்ல ஈடுபாடு அதிகம், தமிழ்ல எழுதப்படிக்க சொல்லித் தந்தார். புத்தகங்கள், பாரதிப் பாட்டுன்னு அறிமுகம் செஞ்சார்… தினமும் தூங்கறதுக்கு முன்னாடி பாரதி பாட்டை கேட்டுதான் தூங்குவேன், ஏனோ எங்கப்பா என்கூட இருக்கிற போலவே இருக்கும்”
“ரொம்ப நல்ல விஷயங்க…என் பேர்லாம் கேக்க மாட்டீங்களா”?
” மன்னிக்கணும்.. உங்க பேர் என்ன? என்ன பண்றீங்க?”
” என் பேர் அகிலன்.. நான் போட்டோகிராபர். . ஊர் திண்டுக்கல். நிறைய இடங்களுக்கு பயணம் செஞ்சு போட்டோ எடுப்பேன். உணர்வுகளை பிரதிபலிக்கிற எளிமையான முகங்கள்தான் எனக்கு மூலதனம். அந்த மாதிரியான முகங்களைத் தேடி நாடு முழுக்க பயணப்பட்டுட்டே இருக்கேன்..”
“ஓ! நீங்க ஊருக்கு போயிருப்பீங்கன்னு நினைச்சேன்”
” இல்ல துர்கா பூஜைக்கு, இங்க நல்லா இருக்கும்னு சொன்னாங்க. இந்த கலாச்சார அழகை கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துட்டு போலாம்னு இருக்கேன் “
” ஓ..சரி..இங்கதான் நான் போகணும். இன்னொரு நாள் பாக்கலாம்” என்றாள்.
” நாளைக்கு பாக்கலாமா ரிவர்ஃப்ரன்ட்ல?.. நான் வெட்டியாதான் இருக்கேன். எனக்கு இங்க தமிழ் பேச கிடைக்க ஒரே ஆள் நீங்கதான் ” .
“சரி “என்றாள்.
” உங்ககிட்ட புது ஆளுங்கற உணர்வே வரலை. பழகினவங்ககிட்ட பேசற மாதிரிதான் இருக்கு” .
அவள் முறைத்தபடியே உள்ளே சென்றாள்.

அதன் பின் அவனுடனான உரையாடல்கள் சபர்மதி நதிக்கரையில் தினமும் தொடர்ந்தது. இருவரும் பெரிதாக எதிர்ப்பார்ப்பில்லாமல் பேசத் தொடங்கினார்கள்.
பிடித்த வேலை,பயணம் செய்வது, கிடைக்குமிடத்தில் உண்பது, தூங்குவது, புதிய முகங்களை புகைப்படம் எடுப்பது, கண்காட்சி வைப்பது என அவன் சொன்ன வாழ்க்கை முறையை ரசித்தாள்.

மொழி தெரியாத புது ஊர் என்பதால் கடைவீதிக்கு மங்கை உதவியுடன் அவன் சென்றான்.. இங்கேயே பிறந்து,வளர்ந்த மங்கைக்கும் இவனிடம் பேச விருப்பப்பட்டதற்கு காரணம் உண்டு. வீட்டு ஆட்களை தவிர வேறொருவரிடமும் இதுவரை தமிழில் கதையளந்ததில்லை. இது அவளுக்கு புதிதாகவும், அவளுடைய வெறுமையான மனதிற்கு விடுதலை தந்தது போலவும் இருந்தது.
ஒரு நாள் அவன் அலைபேசியில் “பாயுமொளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு! தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு! ” என அழைப்பு வந்தது. அவன் முழு வரிகளையும் ஒலிக்க விட்டு பின் எடுத்து பேசினான்.
அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து..

” இது எப்ப இருந்து? என குறும்புடன் கேட்டாள”
” எது?”
“பாரதியார் பாட்டை ரிங் டோனா வச்சது”
” உங்களுக்கு பாரதியார் பாட்டு ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சதும் ” என சொல்லிச் சிரித்தான். பின் மீண்டும் அந்த பாடலை அலைபேசியில் ஒலிக்க வைத்தான்.

வயலின் இசையில் பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒலித்த அந்த பாடலை, தகதகவென மிதந்த ,செக்கச் சிவப்பு சபர்மதி ஆற்றின் மேலெழும்பிய சிறு அலைகளை பார்த்தவாறு அமைதியாக கேட்டனர். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அமைதியான அந்த நேரத்தை கலைத்துவிட்டு, அவள் அவனிடம் சொல்லாமல் வீட்டிற்கு கிளம்பினாள். அவனும் ஏனென்று கேட்கவில்லை.
அந்த பாடலைக் கேட்டதும், அவளுக்கு அப்பா ஞாபகம் வந்தது. சுய பச்சாதாபம் வாழ்வில் என்றும் உனக்கு தோன்றிடக் கூடாது என அவர் அவளுக்கு உபதேசித்தது நினைவுக்கு வந்தது. அதையும் மீறி அழுகை வந்தது. பெருமூச்சு ஒன்றை விட்டு இறுக்கத்தை தளர்த்திக் கொண்டாள்.

இருவருமே அலைபேசி எண்களை பரிமாறியதில்லை. காரணம் வீட்டிற்கு வந்த பின்னும் இரவு வரை அலைபேசியில் தொடரும் பழக்கம் வேண்டாம் என மங்கை சொல்லியிருந்ததால் அவனும் அவள் எண்ணைப் பெற முயற்சிக்க வில்லை.
ஒருமுறை அவனை வீட்டிற்கு அழைத்து வந்து அலுவலக நண்பன் என அறிமுகம் செய்த போது, சித்தியும், அத்தை, மாமாவும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்கள்.

மங்கைக்கு தர்மசங்கடமானாலும், அகிலன் அதனை பெரிதாக நினைக்கவில்லை மாறாக அவளை சமாதானப்படுத்தினான். அவள் தங்கைகள், அவனைப் பிடித்திருப்பதாகச் சொன்னார்கள். வீட்டில் சரியாக பேச முடியாததால், ஒரு விடுமுறை நாளில் அவள், அவளது தங்கைகளுடன் சேர்ந்து அவனை சந்தித்தாள். அவர்கள் மூவரும், அவனுடன் அகமதாபாத்தின் பழமையான இடங்களுக்கு சென்றார்கள்.

படிக்கிணற்றில் அவள் தங்கைகள், தங்களை புகைப்படம் எடுக்கச் சொல்லி அகிலனின் புகைப்படக் கருவியில் எடுத்துக் கொண்டனர். அன்று முழுவதும் அவள் சிரித்தபடியே இருந்தாள். அவனும் கூட.

“பெண்கள் எல்லோரும் தேவதைதானே?” ஒருநாள் சபர்மதி நதிக்கரையில் அவர்களின் வழக்கமான இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தபோது, எடுத்ததும் இப்படிச் சொன்னான் அகிலன்…

“இல்லை.இப்படி சொல்லிச் சொல்லி, பெண்களை பயன்படுத்திக்குது இந்த ஆண் சமூகம்” ஆட்சேபித்தாள்.

“உங்க அனுபவம் அப்படி இருக்கலாம். ஆனா… நான் பார்த்த பெண்கள் நிஜமாவே தேவதைகள்தான்.. என் அம்மா, என் அக்கா, என் பெண் தோழிகள்” சில நொடிகள் விட்டு, “நீங்களும்தான்!..நான் அவர்களுக்கு எதுவுமே செஞ்சதில்லை. நான் அவ்ளோ நல்லவன்லாம் இல்லைதான். இருந்தாலும் பிரதிபலன் இல்லாம அன்பை மட்டுமே எனக்கு தந்திருக்காங்க. இதோ முன் பின் தெரியாம இங்க வந்து பழகின நீங்க கூட அப்படித்தான் எனக்காக மெனக்கெடறீங்க..”

“நான் செய்யறதும் கொஞ்சம் சுயநலமாத்தான் அகிலன்… ஒரே மாதிரியான மனுஷங்களை பார்த்து சலிக்கிறப்போ, புதுசா ஒருத்தரை பார்த்தா பழகிப் பாக்கலாம்னு தோணும்ல,அப்படித்தான்.”
” புகழை விரும்பாம உண்மை சொல்றீங்க. அப்போ நீங்க தேவதைதானே”
” நான் தேவதையா இருக்க விரும்பலை.” என்றாள்.
” விரும்பினாலுமே எல்லோராலும் தேவதையாக முடியாது. எனக்கு வர்ற உணர்வை நீங்க உணரணும்னு அவசியம் இல்லை.” வெடுக்கென சொன்னான்.
” நான் கிளம்பறேன் கொஞ்சம் வேலை இருக்கு” என்றபடி சட்டென எழுந்தாள்.
“கோபமா? உங்களை காயப்படுத்திட்டேனா ?” அவன் கேட்டான்.
“இல்ல..நிஜமாவே எனக்கு வேற வேலை இருக்கு. உஸ்மான் புரா வரைக்கும் போகணும்.அப்றம் பாக்கலாம்” என்றபடி கிளம்பினாள். மங்கை, லால் தார்வாஜாவில் ஆட்டோ ஒன்றைப் பிடித்து நேராக வீட்டிற்குப் போனாள்.

” இவனுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? தமிழ் நாட்டின் ஏதோ ஒரு திக்கிலிருந்து வந்தவன், எந்த புள்ளியில் நம் வாழ்வில் இணைந்தான்? எதற்காக இவனிடம் தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன்? என்ன அர்த்தம் வந்துவிட்டது இந்த உறவில்? ஒரு துக்கத்திலிருந்து விலக இன்னொரு துக்கத்தில் போய் மாட்டிக் கொள்ளும் மனம் ஒரு பிசாசு”என பரிதவித்தாள்.

வீட்டிற்கு சென்று மாளவிகாவின் மடியில் தலைவலிக்கிறதென படுத்துக் கொண்டாள்.முன்னெப்போதோ படிந்திருந்த நிராகரிப்பின் வலி, புதியவனின் அருகாமை எல்லாம் மனதை இம்சை செய்தது. மறுநாள் நல்ல மழை ! மாலையில் மங்கையின் அலுவலக வாசல் முன் அவன் குடையில் காத்துக் கொண்டிருந்தான். அலுவலகம் விட்டு வெளியே வந்த மங்கைக்கு அவனைப் பார்த்ததும் ஆச்சரியம்! பிசாசு மனம் அவனைப் பார்த்ததும் சிரித்தது.

“என்ன இங்க?” ஆச்சரியமாய் கேட்டாள்.

” இல்ல நேத்து நீங்க வேற கோவிச்சுகிட்டீங்களா? மனசே சரி இல்லை. உங்ககிட்ட உரிமை எடுத்துகிட்டேனோனு தோணுச்சு. அதான் இங்கேயே வந்து மன்னிப்பு கேக்கலாம்னு வந்தேன்” என்றான். குடையில் விழுந்த மழைத் துளிகள் தடதடவென அவன் பேச்சுக்கு தாளமிட்டது.

அவள் சிரித்தாள்..” பரவாயில்ல, கொஞ்சம் மூட் அப்செட் ஆயிடுச்சு. அப்புறம் மறந்துட்டேன்.. நாளைக்கு மீட் பண்ணலாம்” என சொன்னதும் அவன் சரி என விடைபெற்றுக் கொண்டான்.மறு நாள் அவர்களின் வழக்கமான சபர்மதி நதிக்கரையிலிருந்த மர இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். இருக்கை குளிர்ந்திருந்தது. முந்தைய நாளின் மிச்சமிருந்த மழை மதியம் வரை பெய்து ஓய்ந்திருந்தது.. புற்களின் பச்சைவாசம் ஈரக் காற்றில் மிகுந்திருந்தது. சிறகுகளை படபடவென சிலிர்த்தபடி பறவைகள் நதியின் மேல் அமர்வதும் பறப்பதுமாக இருந்தன.

” உங்க கிட்ட ஒன்னு கேக்கறேன் தப்பா நினைக்க வேண்டாம்” எனக் கேட்டான்
” பரவாயில்லை சொல்லுங்க”
“அன்னைக்கு ஏன் அழுதீங்க…. விருப்பமில்லைனா சொல்ல வேண்டாம்”
என்னைக்கு?
” நான் ஃபோட்டோ எடுத்தேனே அன்னைக்கு” என்றான்.
சிரித்தாள்…” அன்னைக்கு கிருஷ்ணா வோட கல்யாணம்… கிருஷ்ணா யார் தெரியுமா? என்னோட கணவன்”
அகிலன் நம்ப முடியாமல் அதிர்ச்சியாய் பார்த்தான்.

“ஒரு விசேஷத்துலதான் அவனை பார்த்தேன். அவனாதான் வந்து வந்து பேசினான். அப்பா இறந்த சமயம், அப்போ வந்த உறவு அவன்.. எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பிட்டே இருப்பான். அப்புறம் மெல்ல பேச ஆரம்பிச்சு, ரெண்டு பேருக்கும் பரஸ்பரம் பிடிச்சு போச்சு. தினமும் காலேஜுக்கு போறப்போ, வர்றப்போ, ஜாமல்பூர் பஸ் ஸ்டாப்ல வந்து நிப்பான். நமக்காக ஒருத்தர் எப்பவும் இருக்காங்கன்ற எண்ணமே எனக்கு அவ்ளோ சந்தோஷத்தை தந்துச்சு. ரெண்டு பேரும் காதலிச்சோம்… தினமும் மணிக்கணக்காய் விடிய விடிய சளைக்காமல் பேசியிருக்கிறோம். ரொம்ப அழகா காதல் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. கல்யாணமும் பெரியவங்க ஆசிர்வாதத்தோட நடந்துச்சு..அவங்க வீட்ல கால் வைச்ச உடனேயே கிருஷ்ணாவோட அம்மா என் கடவுள் மீதான அபிப்ராயத்தை சுரண்டுனாங்க… என் அம்மா வீட்ல கூட திட்டிட்டே சகிச்சுகிட்டாங்க. ஆனா இது புகுந்த இடம் இல்லையா? நான் மாறனும்னு உறுதியா இருந்தாங்க. என்னால மாற முடியலை. எப்படி நான் வேற யாரோவா மாற முடியும்? கிருஷ்ணா நான் ஈகோவில் திமிரில் இப்படி செய்யறதா சொல்வான். என்னை பற்றி நல்லா தெரிஞ்சும் அவன் அப்படி சொன்னது எனக்கு அத்தனை வலியா இருந்துச்சு. கேட்டா, எப்படியும் என்னை மாத்திடலாம்னு நினைச்சானாம்” வலியுடன் புன்னகைத்தாள். பின் அவளே தொடர்ந்தாள்.

“திடீர்னு ஏக கட்டளைகள் , கட்டுப்பாடு உங்க முன்னாடி முளைச்சு கண்ணை மறைச்சா எப்படி இருக்கும்? அப்படி இருந்துச்சு எனக்கு. தினமும் பிரச்சனை, சண்டை. நான் ஒருத்திதான் அவங்களுக்கு அந்நியமா தெரிஞ்சேன். அப்புறம் அவனாதான் எங்கிட்ட விவாகரத்து கேட்டான்.

சும்மா இருந்த என் மனசை கலைச்சு என்னை கல்யாணமும் செஞ்சு அப்புறம் என்னை வேணாம்னு போயிட்டான். விவாகரத்தும் வாங்கியாச்சு. அந்த கவலையிலேயே அம்மாவும் என்னை விட்டு போயிட்டாங்க. மனசால ரொம்ப பாதிச்சிட்டேன். திடீரென சூனியமான உணர்வு.

எப்படியும் திரும்ப வருவான் என நினைச்சப்போ ஒரு நாள் அவனுக்கு ரெண்டாவது கல்யாணம்னு கேள்விப்பட்டேன். உடைஞ்சு போனேன். இருந்தாலும் அவன் கல்யாணத்துக்கு நானும் பெரிய மனசு பண்ணி கிளம்பினேன். ஆனா போக முடியாம இங்க வந்து அழுதேன்.. பைத்தியம் பிடித்தது போல் இரவு முழுக்க அழுதேன். போதும் இனி ஒருபோதும் அவனுக்காக அழக் கூடாது . அவன் இழப்பு அப்படியொன்னும் எனக்கு வலிக்கலைங்கறதை அவனுக்கு உணர்த்தனும்னு நினைச்சேன். இதோ இப்போ வரைக்கும் அப்படித்தான் தைரியமா இருக்கேன் ” என்றாள்.
சில நொடி அமைதிக்குப் பின்..

“ஐ லவ் யூ”

” என்ன?” .

” நாம் ஓடிப் போலாமா? என சிரித்தபடி கேட்டான்.
“ப்ளடி நான் என் கவலையை சொல்லிட்டு இருக்கேன்.. நீ என்ன லூஸு மாதிரி பேசற?”

“ ஏய்.. நான் உண்மையாதான் சொல்றேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். முதல் நாள் வலி தெரியற இந்த கண்களை பாக்கிறப்பவே ரொம்ப பிடிச்சு போச்சு. உங்க முகத்துல எப்பவும் ஒரு அமைதி இருக்கு தெரியுமா? அதுதான் போட்டோ எடுக்க தோணுச்சு. எந்த நிபந்தனையும் இல்லாம உங்களை என்னால நேசிக்க முடியும். நீங்க காதலிச்ச கிருஷ்ணா மாதிரி இல்ல நான்”

“இதெல்லாம் காதலிக்கற வரைக்கும் தான்…போதும்”

“இப்படித்தான் ! தவறானதை நம்பி மோசம் போறதும், சரியானதை சந்தேகப்படறதும் தான் இந்த உலகம். என்னோட தோற்றம், என்னோடவேலை, இப்படி நாடோடி மாதிரி இருக்கிறதால என்னை நம்பத் தோணலைல்ல?”

” அப்படி இல்ல.. கல்யாணம்னு வர்றப்போதான் எல்லாருடைய முகத்திரை கிழியுது..”

“ இவ்ளோ நாள் எல்லாம் எங்கேயும் நான் தங்கினதில்லை. யார்கூடவும் ஒட்டினதுமில்ல. மனம் போன போக்குல வாழ்ந்த நான் உங்களுக்காத்தான் தங்கினேன். ”

” இப்போதைக்கு எதுவும் வேண்டாம் !”

“உங்களுக்கு என்னை பிடிக்கலைனா, இனி எப்பவும் தொந்தரவு செய்ய மாட்டேன்.”

அவள் எதும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள். அவள் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தான் தினமும் அவன் மங்கையின் வருகைக்காக சபர்மதி நதிக்கரையில் காத்துக்கொண்டிருந்தான். தெரிந்தும் மங்கை அங்கு செல்வதை தவிர்த்தாள். செல்லவேண்டுமென பிசாசு மனம் ஊஞ்சலாடிக் கொண்டேயிருந்த போது பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டாள். 10 நாட்கள் மேலாகியிருக்கும்.மனது கேட்காமல் அவனை சந்திக்க ரிவர்ஃப்ரெண்டிற்கு சென்றாள். அவன் அங்கு இல்லை. அதன் பின் வந்த நாட்களிலும் அவன் வந்திருக்கவில்லை.

ஒரு நாள் இரவு அவளுடைய சித்தப்பா, அவளருகில் அமர்ந்து பேசினார். தூரத்து உறவினர் பையன். அவனுக்கும் இது இரண்டாவது திருமணம். சென்னையில் வேலை பார்ப்பதாகவும், அவனுடைய ஜாதகம் பொருத்தமாக இருப்பதால், பேசி முடிக்கலாமா என அவளை கேட்டார்.

மங்கை எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்ததைப் பார்த்து தனது அறைக்கு சென்றுவிட்டார். அன்றிரவு தூங்கும்போது அருகில் படுத்திருந்த ரோகிணி மெதுவாக மங்கையை கூப்பிட்டாள் “அக்கா!”

மங்கை கண் திறந்து அவளைப் பார்த்தாள்….” அகிலன் நம்பர் வச்சிருக்கியா? என மெதுவாக கேட்டாள். மங்கைக்கு கண்ணீர் குபுக்கென எட்டிப் பார்த்தது. ரோகிணியும், மாளவிகாவும் அவளை கட்டிப்பிடித்து ஆறுதல் படுத்தினார்கள்.மறுநாள் அவளுடைய சித்தப்பா மீண்டும் கல்யாணம் பற்றி பேசினார். அருகில் அத்தையும் இருந்தார்.

“ மங்கை உனக்கு இந்த வருஷம்தான் குருபலன், அப்றம் 5 வருஷம் கழிச்சுதான் வருது. உனக்கப்புறம் மத்த ரெண்டு பேரும் இருக்காங்க ஞாபகம் வச்சுக்கோ” என அத்தை சொன்னாள்.

“எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம். 5 வருஷம் ஆனாலும் பரவாயில்லை. என்னை கட்டாயப்படுத்த வேணாம். நல்ல வரன் வந்துச்சுன்னா மாளவிகாவுக்கு முடிச்சிடுங்க எனக்கு சந்தோஷம்தான்” என சொன்னாள்.

அத்தை ஏதோ சொல்ல ஆரம்பித்ததும், அவள் சித்தப்பா “. உன்னுடைய விருப்பம் எப்பவோ சொல்லு. அப்போ பாக்கலாம் . அண்ணா இருந்திருந்தா இதைத்தான் செய்திருப்பார் “என தலை வருடி சொல்லிவிட்டுப் போனார். அத்தை புலம்பியபடியே இருந்தாள். மங்கை எங்கோ தொலைத்தாளோ அங்கேயே அகிலனை தினமும் தேடிக் கொண்டிருந்தாள். அவன் அருகாமை அப்பாவை நினைவு படுத்தியதாக அவளுக்கு தோன்றியது.

அன்றொரு மாலை அந்த சபர்மதி ஆற்றங்கரையில் மங்கையுடன் ரோகிணியும் துணைக்கு வந்திருந்தாள் வழக்கமாக அவனும் அவளும் அமர்ந்து பேசுமிடம் வெற்றிடமாக இருந்தது.. அவன் வருகை நின்று போயிருந்தது.

“தூய சுடர் வான் ஒலியே ! சூரையமுதே கண்ணம்மா..” என பாரதியின் வரிகள் சபர்மதி நதியின் அலையோடு அலையாக மெல்ல தவழ்ந்து போய்க் கொண்டிருப்பதாக தோன்றியது.

“ கவலைப்படாத மங்கை. அகிலன் திரும்ப வருவார் பாரேன். அவர் ஒன்னும் கிருஷ்ணா மாதிரி இல்லை “ என ரோகிணி சொன்னாள்.
“ எப்படி சொல்ற?”

“ ஒரு தடவை நாம எல்லாரும் அவரை மீட் பண்ணினோம்ல. அப்போ உனக்கு தெரியாம உன்னோட நம்பரை அவர் வாங்கிகிட்டார். நீ திட்டுவேனுதான் உங்கிட்ட நான் சொல்லலை” என அவள் சொன்னாள்.

மங்கைக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. சிறு நம்பிக்கை துளிர்த்தது. இருவரும் குறும்பாக ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் வேளையில் மங்கையின் அலைபேசிக்கு ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது…

  • ஹேமி கிருஷ் – பெங்களூரில் வசிக்கும் இவருக்கு, மழை நண்பன் என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகியிருக்கிறது.. தொடர்புக்கு -hemikrish@gmail.com

சென்னை தங்கசாலையில் இருந்து தங்க நாற்கர சாலை வரை….

0

-யவனிகா ஸ்ரீராம்

    சென்னை சென்ட்ரல் நிலையமருகில் இருக்கும் வால்டாக்ஸ் சாலையில், மேலே தங்கும் விடுதியுடன் கூடிய உடுப்பி விலாஸ் உணவகங்களில் நான் ஒரு காலத்தில் வியாபார நிமித்தம் சென்று தங்க வேண்டியிருந்தது. யானைக்கவுரி தாண்டி வலதுபுறம் கொத்தவால் சாவடியில், எனக்கு வணிகம். மின்ட் ரோடு எனும் தங்க சாலையில் ஏராளமான வடநாட்டவரின் மொத்த வியாபர கடைகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் வந்திறங்கும் காய்கனி, கருவாடு, கொட்டைப்பாக்கு முதல், மிட்டாய்கள், பான் வெற்றிலைகள், பீடாச் சரக்குகள், உலர் பழங்கள், மூலிகைச் சாமான்கள், பழைய பேப்பர்கள் என நாலாவிதச் சாமான்கள் நாள் முழுக்க விற்றுத் தீரும். மாலையில் நான் வசூலுக்காக குடவுனில் உட்கார்ந்திருப்பேன். காலருகே எலிகள் வந்து விளையாடிவிட்டு, பெரும் கிடங்கு பொந்துகளில் மறைந்து போய்விடும். மறுநாள் காலை சாவடி முழுக்க மெத்தை போல நிரம்பிக் கிடக்கும் காய்களின் கூளங்களையும், கழிவுகளையும், அள்ளிப் போக வரும் கார்ப்பரேஷன் லாரி மனிதர்கள் தெருக்களைச் சுத்தமாக்கிவிட்டுப் போய்விடுவார்கள்.

    மூத்திர வாசனையும், பழைய மஞ்சள் கட்டிடங்களும், உப்புக் கிட்டங்கிகளும், கிளாஸ்காரர்களின் கை வண்டிகளும், காட்டு யானைகள் போல உறுமும் ‘பார்கோ’ லாரிகளும் சாவடியின் முடக்குகளில் திரும்ப முடியாமல் நிற்க, பாதசாரிகள் தவிர யாரும் கடந்து போய் விட முடியாதபடி நெரிசல் போக, மழைநாளில் சொல்ல வேண்டியதே இல்லை. சகதி மயம், நாற்றம் வினோதமாயிருக்கும். பலகோடி ரூபாய்கள் செலாவணியாகும் தென்னகத்தின் மிகப் பெரிய சந்தையாய் அது இருந்தது.

download

    இடையில் எங்காவது ஒரு சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் குத்துக்காலிட்டு அமர்ந்து பீடியை வாயில் வைத்துக் கொண்டு, தூ…..வெனக் காறி உமிழ்ந்தபடி ‘தே….பசங்க….எங்கிருந்தோ வந்து இங்க புழைக்கிறானுவ….’ என்றபடி கைலியை நிர்வாணம் தெரிய அவிழ்த்துக் கட்டுவார். புரோக்கர்கள், கமிஷன் மாப்புகள், தங்க நகைக்கடைகள், லேவாதேவிக்கடைகள், சாயப்பொருட்கள் என பலதும் விற்கும் குறுக்கு நெடுக்குமான சந்துகளின் கிழே கடைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, அவற்றின் மேல் மாடிக் காரை வீடுகளில் மார்வாடிப் பெண்கள் துணிகளைக் காயப் போட்டுக் கொண்டும், சப்ஜிகளை தயார் செய்து கொண்டும் இருப்பார்கள் வலதுபக்கம் மாராப்பு சேலை அணிந்து, உதடுகளில் லிப்ஸ்டிக் மினுங்க கை நிறைய வளையல்களுடன், கால்களில் மெகந்தி பூசி அவர்கள் பிளாஸ்டிக் வாளிகளில் கோதுமை அளக்கப்போகும் அழகே தனி.

   சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போக சேலம் பகுதியில் இருந்து அதிகம் பிழைப்பிற்காக வந்தவர்கள் பிளாட்பாரங்களில் வசிப்பது போக, சிலர் வட்டிக்கு வாங்கிய குறைந்த கொள்முதலில் காய்கறிக் கடைகளை தெருவிலேயே பரத்தி சில நூறு ரூபாய் லாபம் பார்த்து வாழ்க்கையை ஓட்டுவார்கள். பூக்கடை போலிஸ் ஸ்டேசனில் மாமூல்கட்டுவது அவர்களது வழக்கம்.

    நடுத்தரக் குடும்பத்தார்கள், அலுவலகவாசிகள் இத்தகைய மார்க்கெட்டிற்குள் புகுந்து மலிவாகப் பேரம் பேசி மொத்தமாக பை நிறைய வாங்கிக் கொண்டு பாரிஸில் டவுன் பஸ் பிடித்துப் போய்க்கொண்டிருப்பார்கள். கார் கம்பெனிகளும், மோட்டார் சைக்கிள் விற்பனையகங்களும், சீட்டுக் கம்பெனிகளும், துறைமுக ஏற்றுமதி இறக்குமதி அலுவலகங்களும் பெருகி, சென்னை பெருந்தொழில்களுக்கு மாறிக்கொண்டிருந்த நேரம்.

    வேஷ்டிகள் குறைந்து, பேண்ட் டீசர்ட் என மார்டன் ஆண்கள் பலவிதமான கேச அலங்காரங்களுடன் வீதி கடப்பார்கள். சட்டையணியாத உழைப்பாளிகளையும் பார்க்க முடியும். முதியவர்கள் கை இல்லாத கதர் பனியன் அணிந்து நெற்றியில் திருநீறுடன் கடைகளில் கல்லாவில் இருப்பார்கள். எங்கிருந்தாவது நெற்றியில் நாமம் போட்டவர்கள் வந்த படியே இருப்பதைப் பார்க்கலாம். குடும்பத் தெருக்கள் குறைந்து நிறுவன நகரமாக சென்னை 80களில் அகலச்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

    டம்பப்பைகளுடன் நவநாகரீக நார்மணிகள் (ஆனந்த விகடன் உபயம்) கவுன், மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுகள் அணிந்து, லோஹிப்புடன் நடைபாதைகளில் செல்லும் சென்னை நகரம் அந்நாளில் இரவு நடன விடுதிகளையும், குதிரைப்பந்தயங்களையும் கொண்டிருந்தது. கபாலி, ரங்கன், முனியம்மா என்று பெயர் இருந்தால் அவர்கள் பூர்வீக சென்னைவாசிகள்.

   அந்நாளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களின் உடையலங்காரம் தன்னிச்சையாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். பலவிதமான கொண்டைகள், காது வளையங்கள் என மவுண்ட் ரோடும் மெரினா பீச்சும் இரசனைமிக்கதாக இருந்தது. ரஷ்ய, ஜெர்மனி, பிரஞ்ச் பண்பாட்டு மையங்கள், தூதரகங்கள் என ஒருவிதக் கலாச்சாரப் பரிவர்த்தனைகள், மேல்தட்டு, மத்திய தரம் வரை பெண்களின் தோற்றங்களில் பல்வேறு ஈடுபாடுகளைக் காட்டின. இசை, ஓவியம் என ஒரு புறமும், சினிமா ஒரு புறமும் சென்னையைத் தலைநகரமாக நிற்பதற்க்கு ஏதுவாய் இருந்ததையும் நினைவு கூர்கிறேன். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற கிளாசிக் இன்றும் பாடலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய சென்னைப் பெண்கள் அனைவரும் வடக்கத்திய சுடிதாரில் நுழைந்துவிட்டார்கள். வடநாட்டு முகலாய உடையான அது முழு உடலையும் மறைக்கக் கூடியதாக, கூட்டத்தில் கலந்து போகும் ஒரேபடித்தான, தனித்தன்மைகள் ஏதுமற்று நிறைந்து விட்டதையும் யோசிக்க வேண்டியதிருக்கிறது. எல்லா வர்க்கப்பிரிவுகளிலும் சுடிதார் அத்தியாவசியமானதாகிவிட்டது. கல்லூரி, பள்ளி ’யுனிபார்ம்’-லும் அது முழு அடையாளத்தையும், வணிக அடையாளத்தையும் பெற்றுவிட்டது. அதையடுத்து ஜீன்ஸ் பேண்டும், ஆண்களின் சட்டை போன்ற முக்கால் கை மெல்லிய பருத்தி ஆடைகளையும் அணிந்து கூந்தலை இரப்பர் பேண்டு போட்டு பெண்கள் எளிமையாக காது வளையங்களோடு தோற்றமளிக்கிறார்கள்.  உலகம் முழுக்க அமெரிக்க மயம் ஆக்கிரமித்து விட்டது என்பதற்கு இன்றைய சென்னையும் சாட்சி. இப்பெண்களை வீட்டில் போய்ப் பார்த்தால் பனியன் துணியிலான லெக்கின்ஸும் காலர் வைத்த சட்டைகளுமாய், அல்லது பிரில் பாவடைகளில் இருப்பதைக் பார்க்க முடிகிறது. எல்லாம் நண்பர்களின் தங்கைகள் தான் என்கிறான் மணி !

     எனக்கு ஒருகாலத்தில் இருந்த வளமையான திரேகத்துடன் வாலிபமான அழகுடன், சருமங்கள் இயற்கையாய் மின்னிய ஐந்தரை அடிக்கும் குறையாத பெண்களின் உலகம் எங்கேயென கேட்கத் தோன்றுகிறது.

     மிகவும் ஒல்லியாக அல்லது அதிகம் பருத்த ஆண் X பெண் உடல்களின் சமச்சீரின்மை குறித்தும் இவர்களின் ஆரோக்கியம் குறித்தும் வீட்டு நலன்கருதி வெளியே விடுதிக் கலாச்சாரங்களில் ஏற்படும் உடலியல், மற்றும் விருப்ப வேட்கைகள் எவ்வாறு நோய்த் தன்மை அடைகிறது என்பது குறித்தும், பல்வேறு கைவினை  மற்றும் நெசவு, ஆபரணங்கள் செய்து பிழைத்த பல்வேறு தொழிலாளர்களின் நிலைகுறித்தும், மறைந்து விட்ட பல உற்பத்திகள் குறித்தும் இந்த ஒற்றைமயமான கலாச்சாரத்தின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு போன்றவை கேள்விகளாக எஞ்சுவதைத்தான் குறிப்பிட வேண்டியதிருக்கிறது.

    ஆக பெண்களுக்கான ஆடை மற்றும் முகப்பூச்சுக் கிரீம்கள், சோப்புகள் என காஸ்மெட்டிக்ஸ்-ல் வருடம் 23 ஆயிரம் கோடிகளைச் சுருட்டுகிறது அமெரிக்க பண்பாட்டு நிறுவனங்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

    சௌகரியமான உடை, தேவைக்கேற்ற அலங்காரங்கள், நறுமண திரவியங்கள் அதற்கான விளம்பரங்கள் ஓருபுறமிருக்க, தூசு, மாசு தவிர்ப்பதற்காக முகமூடி போட்டுக் கொண்டு ஸ்கூட்டிகளில் பறக்கும் ஆவியுலகப் பெண்களைக் கண்டால்தான் பதற்றமாக இருக்கிறது.

    மற்றபடி இந்தக் கட்டுரை ஒரு பிரதேச மக்களின் வாழ்வின் பண்பாட்டு ஞாபகங்களை (சாதிமதம் தவிர்த்து) வேளாண், வணிக விழுமியங்களை, தன் தனித்த கலைப்பண்புகளை எப்படி தன் உணர்வில் ஒரு வரலாற்று நடத்தையாகக் தக்க வைத்திருக்கிறது என்பதையே அதன் ’கிளாசிக்கல்’ மேலும் “நியொ கிளாசிக்கல்” வழியே பார்க்க முயல்கிறது.

      தமிழ் நிலம் என்பது சங்க இலக்கியம் தொட்டு திருக்குறள் வழியாக தொல்காப்பியனின் விரிந்த சொல்லாடலிலும், முற்கால, பிற்கால, சேர,  சோழ, பாண்டியர்களோடும், அவர்கள் தழுவிய சமயங்களோடும், சிலப்பதிகாரம், ஔவை, கபிலர், பரணர் வழி பக்தி இலக்கியங்களையும் கொண்டு ராமாயண, மகாபாரத நிகழ்வுகளையும் சுமந்து, கூத்து, தொன்மம், நாட்டார் கலைகள் எனவும் உட்சென்று சுதந்திர கீதங்கள், வள்ளலார் பாரதி, பாரதிதாசன் எனவும் பற்றுக் கொண்டு பெரியார், அண்ணா போக கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், சோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயாணன் எனவும் நவீவினமடைந்து இடையே பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஜல்லிகட்டு, சிலம்பாட்டம், அம்மன் கொடைகள், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதசான்,   டி.எம்.சௌந்தரராஜன், கலைஞர், ஜெயலலிதா எனவும், மேற்கத்திய வரவான இந்தியாவில் 1939-ல் ஆரம்பித்த சினிமாத் தியேட்டர்கள் வழியேயும் சில பாவனைகளோடு காங்கிரஸ், திராவிட, பார்ப்பன இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனவும் மக்கள் கிளாசிசத்தை வகுத்துக் கொண்டிருப்பதாய் நினைவு கூர்ந்தால் 1990-களுக்கு பிறகு உலகமயமாதலின் விளைவுகளில் உண்டான நியோ கிளாசிசம் எவற்றைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது எனவும் பார்க்க வேண்டியதிருக்கிறது.

  மேற்சொன்னவை சம்பந்தப்பட்ட நூல்கள், ஆவணங்கள் இன்று எத்தனை பேர் வீட்டில் எடுத்துப்பார்த்துக் கொள்ளும்படியாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறேன். வீட்டுப்பத்திரமும், பிள்ளைகளின் புத்தகங்களும் போக வீடு முழுக்க சாமான்களும், பண்டங்களும், வங்கி மற்றும் ATM கார்டுகள், வாகனங்கள், செல்பேசிகள், யுனிபார்ம்கள், போக மக்கள் அனைவரும் எதோ ஓரு யூக பேர முயற்சிகளில் ஒருவரையொருவர் ஏமாற்றவும் முயல்கிறார்கள். தமிழ் நாட்டில் இன்றும் சினிமா, பிம்ப, ஊடக அழகியல் முயற்சிகளே பாலியலாக அரசியலைத் தீர்மானிக்கிறது.

    மேற்சொன்னவை வழியே மட்டும் தமிழ் மன அமைப்பு உருவாகி இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. அவை முற்றிலும் வேறு மாதிரியாகவும் இருக்கலாம். பல்வேறு கட்சி அரசியல்வாதிகள், சிறுபான்மை மதத்தவர், சிறுபான்மை மொழியினர், தலித்துக்கள், பெண்கள், சாதியத் தலைமைகள், தமிழ் தேசியவாதிகள், நவின தொழிற் நுட்ப வல்லுனர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என இன்றளவில் தமிழ் நிலம் என்பது எத்தனை வரைபடங்களில் இருக்கும் என்பதை யார் ஊகிக்க முடியும். பி.ஜே.பி க்கும் தமிழ்நாட்டு அக்கறை இருக்கிறது !

    மீண்டும் சென்னைக்குத் திரும்பினால் இன்றைய சென்னை படைப்பாக்கமற்ற உளவியலற்ற யந்திர நகரமாக, புறநகர் எங்கும் தொழிற்சாலைகள் நிரம்பி, வேகமெடுத்து பான் கார்டு அடையாளமாய், எண்களாய் உறைந்து விட்டிருப்பதைக் காண்கிறோம். பன்னாட்டு நிறுவன அலுவலகங்களும், மாநில நிர்வாகக் கட்டிடங்களும், நீதி மன்றங்களும், துறைமுகங்களும், பெரும் உணவு விடுதிகளும், வானுயர்ந்த கட்டிடங்களுமாய் பெருகி பாதுகாக்கப்பட்ட பகுதிகளும், குடியிருப்புகளும், வந்துவிட்டன. IT எனும் ஒரு பொருளியல் பெல்ட் சென்னை நகரை வளைத்துக்கொண்டு விட்டது. கேளிக்கை நிலையங்களில் மூலதன உயர்வை கரைத்து குடித்து கிராமங்களைச் சுரண்டும் டெர்மினேட் நகரம் தான் சென்னை.

   சென்ட்ரல் ரயில் நிலையம், வண்டலுர் விலங்குப்பண்ணை, வடபழனி முருகன் கோவில், கன்னிமரா நூலகம், மெரினா பீச், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கோடம்பாக்கம் AVM, அம்பட்டன் வாராவதி, ரத்னா மெஸ், ராயர் கிளப் ஒற்றைவாடைத் தியேட்டர், ராஜகுமாரி திரையரங்கு, இராயப்பேட்டை மேன்ஷன், மௌண்ட் ரோடு மசூதி, காவேரிப்பட்டினம், சாந்தோம் கிறித்துவ ஆலயங்கள், அடையாறு ஆலமரம், எல்லாம் போக வருகிறவர்களுக்கும், வந்து போகிறவர்களுக்கும் உதவிய ரிக்‌ஷா தொழிலாளிகள், கண் மை பூசிய பழைய பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், குப்பங்கள், கஞ்சா வியாபாரிகள் என யாவும் கிளாசிக்குகளாக இருந்து வந்த நிலையில், இன்றைய சென்னை அதிக மேம்பாலங்களைக் கொண்டும், பன்னாட்டு விமான நிலையங்களோடு உலகின் மிகப்பெரிய நகரங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ரூ.17000-த்திற்கு சென்னப்பன்  என்பவரிடம் பிரிட்டிஷ்காரன் வாங்கிய கடலோர சென்னையின் இன்றைய மதிப்பை யாராலும் கணித்து விட முடியுமா?. பிறகு நான் அந்த குடவுனில் இருந்து ஊர் வந்துவிட்டேன்.

    புதிய நவதாராளவாத மைய அரசுகள் வலுவடைந்து வரும் வேளையில் மக்களின் மனமாற்றமும், தகவலமைப்பும், புதிய போட்டிகளில் நுழையும் தொழில்  நூட்ப அரசும் ஒரு ஆற்றலாக மாறி மூலதனத்தை நோக்கிப் பாயும் போது யூக பேர வணிகங்களின் குற்ற நிலமாக தமிழ் நிலம் நவீனமடைந்திருப்பதை என்ன சொல்ல..?. தர்மமிகு சென்னை மிரட்டல்களையும், பங்கு வர்த்தகத்தையும் ஒருங்கே பெற்று NGO நகரமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களும், இப்படி மாறுவதிலும், பிளவுமனம் கொள்வதிலும் நில அடிப்படையில், சாதீய அடிப்படையில், சலனம் கொள்வதையும் கவனிக்க வேண்டும். எங்கும் அமெரிக்கமயம் துவக்கமாகி விட்டபின் சென்னையை வைத்து, ஒரு நாவலை நியோ கிளாசிசமாக எழுத முடியுமா? கோணங்கி, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா தொடர்ந்து பலரும் நியோ கிளாஸிஸம் வகையில் எடுத்து வரும்போது பேரளவும் வாசகர்களை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நவீன இலக்கிய வளர்ச்சியாக எடுத்துக் கொள்வதில் ஒரு உண்மை இருக்கிறது என்றாலும் மார்க்குவஸ், குந்தர் கிராஸ் என பலரும் தங்கள் தேசத்தின் மைய நகரங்களை வைத்து எழுதிய நாவல்கள், உலகளவில் போற்றப்படுவதை இங்கு ஞாபகமூட்டலாம். உலகின் மிகச் சிறந்த செவ்வியல் மொழி ஒன்றைக் கையில் வைத்திருக்கும் தமிழன், கப்பலோட்டிய தமிழன், கடல் கடந்த தமிழன், கிரேக்கம், ரோம், என வணிகம் கண்ட தமிழன், உண்பது நாழி உடுப்பது இரண்டே என்ற தமிழன், சாதிகடக்க முடியா தமிழன் இன்றைய உலகமய சூழலில் எந்த மன அமைப்பில் இருக்கிறான் ?.

– யவனிகா ஸ்ரீராம்

1

தமிழ் நவீனக் கவிதையில் ஞானக்கூத்தன் ஒரு திருப்புமுனை

0

      -யவனிகா ஸ்ரீராம்

கவிஞர் ஞானக்கூத்தன்

நாளடைவில் ‘அன்று வேறு கிழமை’யையும், ‘நடுநிசி நாய்களையும்’ நூலகத்தில் எடுத்து வாசித்த போது அக்கவிதைகள் என்னோடு தனிமையில் உறவாடியது போலத் தோன்றியது. மிகப்பெரும் நெருக்கடியோ கொந்தளிப்பான சூழல்களோ அல்லாமல், கெடுபிடியான மிசாக் காலங்களும், ‘ஸ்கைலாப்’ எனும் செயற்கை விண் கோள் ஒன்று பழுதாகி பூமி மேல் விழப்போவதாகவும் வந்த அச்சுறுத்தல்களும் இறுதியில் அது கடலில் விழுந்து விட்டதாகக் கூறிய காலங்களும் கடந்து போயிருந்தன.

ஆங்காங்கே கழகப்பிரச்சாரங்களும், கம்யுனிஸ்ட் ஊர்வலங்களும், கோவில் விழாக்களும், நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்களுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் தவனைகளில் பெருகியிருந்தன.  திருச்சி, சென்னை, கோவை, திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு காபிக்கொட்டை வியாபரத்திற்காகப் போகும் வேலை எனக்கு!. பெரிய கடைவீதிகளிலும், ஆலய சன்னதித் தெருக்களிலும் காபித்தூள் வறுவல் மணக்கும் கடைகள் தான் எனக்கு வாடிக்கையாளர்கள். அப்படியான சமயத்தில் ஸ்ரீரங்கம் சன்னதித் தெரு பெட்டிக்கடையொன்றில் அம்மாதக் கணையாழி இதழ் 10 ரூபா மதிப்பு ஒன்றையும், பழைய கிரவுன் சைஸ் 5 ரூபா பதிப்புகள் நான்கைந்தையும் வாங்கிக் கொண்டு ஊர் திரும்புவேன்.

காப்பி மூட்டைகளை சுமப்பது, வெகு தூரம் பயணிப்பது, மேற்கு மற்றும் கிழக்கு மலைப் பிராந்தியத்தில் காபி கொள்முதலுக்கென அலைவது என கடுமையான உழைப்பில் இருந்த நேரம், நவீன இலக்கியப் படைப்புகளை கோணிச் சாக்கிகளிலும், கைப்பையிலும் வைத்துக் கொண்டு வாசித்து வருகையில், அதிகம் மேலோட்டமான உணர்வுகள் குறைந்து புறச்சூழல்கள், காட்சிகள் அனைத்தும் வித்தியாசமாக, புதிர் நிறைந்த மனித் முகங்களாக, என் அணுகும் முறையும் கூட மாறியிருக்க எல்லாமே இலக்கிய நடத்தைகளாக இருப்பதை அனுமானிக்கும்போது என் யதார்த்தம் குலைந்து போனது.

ஒரு இளம் பருவத்தை அதிகம் பாலியல் சம்பந்தப்பட்ட கனவுகளும் வேட்கைகளும், (ஆணாய் இருக்கும்பட்சத்தில் பெண்களை வேட்டையாடுதல்) வெட்கமற்ற செயல்களுக்கு தள்ளி விடுகிறது. ஆணாய் இருப்பதன் அனைத்து சலுகைகளும், தமிழ்ச் சமுகத்தில் பெண்கள் குறித்த நல்ல மன உயரங்களை உருவாக்கவில்லை. வக்கிரங்களை மட்டும் வளர்த்த சாதியப் பின்புலங்கள் மேசமானவை, சிகரெட் புகைப்பது, நீர்நிலைக்குப் போவது , கொஞ்சமாக மது அருந்துவது, கவிதை எழுதுவது எனப் பெரும்பாலும் வீட்டிற்கு வெளியே திரிந்த போது எனது முதல் கவிதை 1992 என நினைவு, ‘’’கணையாழி’யில் வெளியானது. கவிதைகளை ஞானக்கூத்தன் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் தாமதமாகத்தான் தெரிந்து கொண்டேன், தொடர்ந்து எட்டுக்கவிதைகள் இடையே இரண்டு சிறுகதைகள் என பிரசுரமானதில் ஞானக்கூத்தனின் தேர்வில் அங்கீகரிக்கப்பட்ட கவிஞனாகி விட்டேன் என்பது தெரிந்தது. ‘கணையாழிக் கவிஞர்’ என்று விக்கிரமாதித்தியன் கூட குறிப்பிட்டார்.

பல சிறுபத்திரிக்கைக் கவிஞர்களையும், தி.ஜா குறுநாவல் வரிசைகளிலும், சுஜாதாவின் கடைசிப்பக்கங்களில் மனம் கொடுத்து கணையாழியின் வழியேதான் பலரின் புத்தகங்களை அடையாளம் கண்டு சேகரிப்பதும் எனக்குள் தொடர்ந்தது. ஞானக்கூத்தனின் “அம்மாவின் பொய்கள், மேசை நடராஜர், பாடைக்குள் ஒளிந்து போகும் நாய், ஆத்மாநாமுடன் வாக்கிங் போகையில் அணுகுண்டு வெடிப்பது, செங்கமலம் சைக்கிள் ஓட்டியது, நாகரிகம் பொசுங்கிய கீழ்வெண்மணி கவிதை, வழுவமைதி, தனிச்செங்கல் சரிவது, ஆள் மறையும் கொல்லை” என பல கவிதைகள் என மனதிற்குள் சலனம் கொண்டிருந்தன.

‘த்வனி, இறைச்சி; என வடமொழி சமஸ்கிருத அணுகுமுறையும் தெரிந்த அவர் தமிழின் தொல்காப்பிய ஒப்புமைகளோடு, திணைகளையும் வைத்து எழுதிய பல கட்டுரைகளைப் படித்தும் இருக்கிறேன். அவற்றுள் அவருக்கு ஒரு உலாகளாவிய ஞானம் இருந்த்து. வரலாற்று விவாதத்திற்கு பதிலாக, கலை உவக்கும் மாற்றங்களே அவருக்குப் பிரதானமாக இருந்தது. அந்தவகையில் உரையாடலையும், பன்முகத் தன்மைகளையும் நவீனக் கவிதையில் வைப்பதற்கும், கூறும்முறையில், எளிமையாக உணர்த்துவதில் அல்லது வேறு வேறு தன்னிலைகளோடு சகவாசம் கொள்ளுவதாய் இருந்ததை ஞாபகம் கொள்கிறேன். பக்தி இலக்கியத்தின் மொழி வளத்தை அதன் ‘போற்றி’ எனும் ஆன்மீகச் சாயலற்று தமிழ் நவீன கவிதைக்கு ஒரு இந்திய முகம் கொடுக்கும் விதமாகி உருவி எடுத்து அதிலிருந்து தனக்கான உலகதாயப் பார்வையை முன்வைத்தார் என்றே கூறலாம்.

2

80,90களில் அதிகம் தாக்கப்பட்டவரும், இயக்கங்கள் சார்பாக வாங்கிக் கட்டிக் கொண்டவரும், தனது கவிதைகளிலேயே அவற்றுக்கு பதில் அளித்தவரும் அவர்தான். “அதிகார மையத்திற்கு தப்பி கவிதை பிழைத்துக் கிடக்கும்” என்றும் , “கலை சுதந்திரமானது” என்றும் எளிமையாகச் சொல்லிவருபவர் தான் அவர்.

நான் அவரின் மாணாக்கன் என்பதில் உடன்படுவேன். திணைகளைக் கலைத்துப்போட்டு எழுதும் எனது கவிதைகளில் அதிகம் இடம் பெற்று விடும் HYPER REALITY தன்மைகள் குறித்த விமர்சனங்கள் வந்த போது “சொற்கள் உறங்கும் நூலகம்” வாசித்துவிட்டு, அதை ஒரு நல்ல தொகுப்பு என்றும் , அதில் புதிய படிமங்கள் ஆச்சரியமூட்டுகின்றன” என்றும் திருவல்லிக்கேணி சந்துகளினுள் ஒன்றில் அவர் நாடகப்பயிற்சி செய்யும் போது கைகளைப் பிடித்துச் சொல்லிவிட்டுப் போனார். யாரிடமும் பெரிதாக உறவு கொண்டு விடுகிற நபர் அவர் இல்லையெனினும் கவிதைகள் என வரும் போது சமகாலக் கவிதைகளின் செல்வழி குறித்தும் சிந்திப்பதில் புத்தார்வம் மிக்கவராகவும், பகிர்ந்து கொள்பவராகவும் இருப்பது எந்த் அதிகாரமுமற்ற, கவி வாழ்வின் பொறுப்பேற்கும் தனிமைதான் என்றே உணர்கிறேன். மற்றபடி பார்ப்பன & திராவிட முரண்பாடுகள் அக்காலத்தில் நெருக்கடிகளாகவே நின்று விடுகின்றன அல்லது அதன் தேவைகள் வர்க்க நலங்களாகிவிட்டதையும் பார்க்கிறோம். ஆக ஒருவித மேற்கத்திய அனுபூதிச் சாயல்களையும், தமிழின் செவ்வியலையும் இணைத்து முதன்முதலாக புதைய நவீன கவிதைகளை அவர் உருவாக்கினார் அதிலும் தமிழ் அடையாளாம் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொண்டாலும் ‘நியோ கிளாசிசம்’ எனும் நவீன உள்ளுரையாற்றல் ஞானக்கூத்தனிடம் அதிகம். ஓசைநயம் மற்றும் செய்யுள் வடிவ நாடகப்பாங்கு, நளினம், அபிநயங்கள் கூடிய அவரின் சொல்லாட்டம் நடனத்தைப் போன்றதும் கலையமைதி கூடியதும் ஆகும். குறுங்காவிய மரபுகளின் தொடர்ச்சி எனவும் கூறலாம். புன்முறுவலை வரவழைக்கும் அவரது பகடி – பெரும் உரைநடை வீச்சுகளில், மேடைகளின், கோசங்களின் போலித்தனத்திற்கு அப்பால் அயர்ச்சியிலும், சலிப்பிலும் குறுகத்தரித்தவை. சுயத் தணிக்கையில் மிகச் சிறந்த ஆற்றல் பெற்றவர் அவர். உறவுகளின் அப்பாலைத் தனிமக்கு இறைத்த மற்றவை அவரது கவிதைகள். பூர்ணத்திற்கும், இருப்பிற்கும் அதிகம் கடன் படாதவை எனினும் அதற்குள்ளேயே படைப்போய்வைக் கொண்டவை. சற்றே கம்பீரம் தொனிக்கும் அவரது வித்யா கர்வமே மொழியை வைத்து அரசியல் நடத்தும் பலருக்கும் எரிச்சலை ஊட்டியிருக்கலாம். பல்கலைக்கழக்ப் பேராசிரியர்கள், பண்டிதர்கள், புலவர்கள் பற்றிய அவரது விமர்சனம் நேர்மையானது. எல்லாவற்றுக்கும் பிறகு இன்றைய நிலையில் அவரது மௌனம் எந்தச் சிக்கலுமில்லாத அவரது திருப்தியின் தேர்வாக இருப்பதையும் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

1

இன்றளவில் நிறுவனங்களின் நியதிகளையும், மாற்றம் பெறாத இயக்கங்களின் ‘மடம்’தனமான வரம்புகளையும் மீறிச் செல்லும் கலைப்பண்பே தனிமனிதனின் இருத்தல் மீதான குறைந்தபட்ச அக்கறையாக நீடிக்கிறது. ஞானக்கூத்தனின் ஆள்மனம் உயிர்க் குறும்புகளின் வழியே இயற்கையின் சலனங்களை ஜென் நிலையில் அனுமானிப்பவை. தவளைகளை “ஜீவியக் காய்கள்” என்பவர் அசேதனங்களை உயிர்ப்பொருளாகவும் (மேசை நடராஜர்) மனிதத் தன்மையின் பாசிச, நார்சிச இயலாமைகளை கேலி செய்தலும், கவிதையின் மையங்களைக் கழற்றி விடுவதில் ஆழுணர்வு கொண்டவராகவும் இருக்கிறார். குறியீடுகளையும், அகநிலை வெண்பா முறைகளையும் பயன்படுத்தி தமிழ் வாழ்வைச் சொல்வதில் தொடங்கி ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பதில் பெரிதும் மனப்பிடிப்பு உள்ளவராகவும் இருக்கிறார். அந்தவகையில் அவரது எல்லாக் கவிதைகளும் வாசிப்பில் அலுக்காதவையும், சுவாரசியம் கூடியவையும் தான்.

ஆத்மாநாம், ஞானக்கூத்தன், சி.மணி, பிரம்மராஜன் என பாரதி, கா.நா.சு வழியில் நவீனக் கவிதைக்கு ஒரு மரபு இருப்பதை வலியுறுத்தும் பா.வெங்கடேசன், ஆனந், ஷா அதி, தேவதச்சன், சுகுமாரன், மோகனரங்கன் என தொடர்ச்சியாக இன்றைய இளம்படைப்பாளிகள் வரை அம்மரபு குறித்து விளக்கமாக எழுத வேண்டும் என்று விரும்புகிறேன்.

அமைப்பியல், பின்னமைப்பியல் மற்றும் மொழி சார்ந்த பல்வேறு தொன்ம கலாச்சாரக் குழுமங்களின் படைப்புகளுக்கு முரணாக தலித்தியம், பெண்ணியம், பின் மார்க்சியம், சூழலியம் போன்றவற்றின் தலையெடுப்பு, ஆக இரண்டின் தொடர்பாகவும் இணைய முடியாமல் ஒரு இருபத்தி ஐந்து ஆண்டுகால விமர்சன மௌனம் முடங்கியிருக்கிறது. இந்நிலையில் தமிழ் ஈழக் கவிதைகள், புலம்பெயர் வாழ்வுகள், அமெரிக்க இந்திய மனம், விளிம்பு நிலை, உடல் எனப்பலவும் இம்மௌனத்தை மேலும் வலுவாக்கி வரும் வேளையில், பொருளியல் தளத்திலும், பண்பாட்டுத் தளத்திலும் விஞ்ஞான சரக்கு சந்தை ஏக போகத்திலும் தனி மனிதன் என்பவனின் கவிதையும், விடுதலையும் உலகம், நாடு, நகரம், கிராமம் என்ற இடம் காலத்தில் அல்லது குறுகிய அதிகார வரம்பின் எல்லைக்குள் என்னவிதமான மாய்மை(fantasy) கொள்கிறது எனப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஞானக்கூத்தனின் அறம் சார்ந்த அரசியல் பகடியிலிருந்து, நவீனக் கவிதை குற்றத்தின் ஆன்மீக அறத்திற்கு மடைமாற்றம் ஆகியிருக்கிறது, இப்போது அதிகாரத்திற்கு இறைமை தேவையில்லை, குற்றத்திற்குத்தான் துணையாக ஆன்மீகம் தேவைப்படுகிறது. என்னளவில் ஒரு தத்துவார்த்த மௌனம் ஞானக்கூத்தன் என்கிற லோகதாயவாதியின் இருப்பில் உரைந்து இருக்கலாம் என்பது அவரது ஆளுமையை என்னளவில் “ஒரு பண்பு குறித்த நிலைப்பாடாய்” புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கிறது.

-யவனிகா ஸ்ரீராம்

1

பின் குறிப்பு :

2005களில் நானும், கவிஞர் சங்கர் ராம சுப்பிரமணியனும் ராமச்சந்திரா மேன்சனில், திசை குழம்பித் திரிந்த நேரம் ஞானக்கூத்தன் அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்தித்தோம். பரவலான நம்பிக்கைகளுடன், நவீன கவிதையில் செவ்வியல் பற்றிப் பேசினார். காபி அருந்திவிட்டு திரும்பினோம். பிறகு பலமுறை கூட்டங்களில் சந்தித்து இருந்தாலும், திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் அவருக்கு “விளக்கு விருது” பெற்றதற்கான, பாராட்டுக் கூட்டம் நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசினேன். ஏற்புறையில், மிக நெகிழ்ச்சியாக தான் கடந்து வந்த பாதையை விரிவாகவும் அதே சமயம் எளிமை குன்றாத மனதுடன் விவரித்தது பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அவர் தமிழின் முக்கியமான கவிஞரும் திருப்புமுனையை உண்டாக்கியவரும் தான்.இன்றைய இளைஞர்கள் பலரின் கவிதைகளிலும் அவரது தர்கமும், பகடியும் தொடர்வதே அதற்கு சாட்சி.

(***)

(நன்றி : தி இந்து தமிழ்திசை

ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய் மற்றும் சில கதைகள்

2

பெருந்தேவி

1. பாலின பேதம் பார்க்காத சலூன்

எல்லா நாற்காலிகளிலும் ஆட்கள் சலூனில் நிரம்பியிருந்தார்கள். ரிசப்ஷனுக்கு  அருகே எப்போதும் எனக்கு முடிவெட்டுகிற எலிஸபெத் கத்திரியும் கையுமாக மும்முரமாக இருந்தாள். எனக்கோ வெளியூருக்குக் கிளம்பும் அவசரம், சலூனுக்கு முன்பதிவு செய்யாமல் செல்லவேண்டியிருந்தது. நுழைவிடத்தில் வாக்-இன் பகுதியில் ஒரு முதியவரும் ஒரு பெண்மணியும் நின்றுகொண்டிருந்தார்கள்.

“உடனடியாக உன்னைக் கவனிக்கமுடியாது” என வருந்திய எலிஸபெத் “ஏற்கெனவே முதியவர் காத்துக்கொண்டிருக்கிறார், பார். நாளைக்கு அவர் மனைவியின் சவ அடக்கம் வேறு,” எனச் சொன்னாள்.

”சரி, முதியவருக்குப் பிறகு என்னைக் கவனி, ஆனால் அந்தப் பெண்ணுக்கு முன்னால் செய்யவேண்டும். ஏற்கெனவே நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியதாகச் சொல்லிவிடு” என்று கிசுகிசுத்தேன்.

“எந்தப் பெண் காத்திருக்கிறாள்?” என்று அந்தப் பக்கம் பார்த்தாள், “யாருமில்லையே?” “வழக்கம் போல எனக்கு ஷார்ட் க்ரூ கட்டே செய்துவிடுங்கள். அதுதான் செய்துகொள்ள வேண்டும் என்கிறாள் அவள்” என்று கூறியபடி எங்களை  நோக்கி வந்தார் முதியவர்.

***

2. ஒரு ஷூவின் கதை


இந்த நகரத்தில் ஒவ்வொரு குளிர்காலத்திலும் பனியில் சறுக்கி விழுதல் என் வாடிக்கை. இங்கே மாணவியாக இருந்த ஆறு வருடமும் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கவேண்டியிருந்தது. இதில் பனித்தரையில் வழுக்காதிருக்க முட்கள் பதிக்கப்பட்ட ஷூ வாங்கவேண்டுமென்கிற ஆசை கனவாகவே இருந்தது. ஆனால் சென்ற மாதம்  வேலை கிடைத்து  இம்மாதம் முதல் சம்பளம் கிடைத்தபின் அது நிறைவேறியது. எல்.எல். பீன் இணையதளம் ஷூக்களுக்குச் சிறப்பு வாய்ந்தது. அதில்தான் ”டோஸ்டி ஷூ” என்று விளம்பரம் செய்திருந்தார்கள். சுளையாக நூற்றுப்பத்து டாலர். இன்று காலை அதை அணிந்த ஒரு மணி நேரத்தில் என் பாதம் சுடச்சுட வெங்காய பஜ்ஜியானது. அலுவலகத்துக்குச் சென்றவுடன் முதல் வேலையாக ஷூவைக் கழட்டிப் பிய்த்துத் தின்றேன்.

***

3. மலைப்பாம்பு

தினத்தந்தியில் அந்த மலைப்பாம்பையும் ஒரு பெண்ணையும் பற்றிப் போட்டிருந்தது. பத்தடி நீளம், முக்காலடி தாட்டி. கரும்பச்சை மஞ்சள் வளையங்களோடு தோல் அலங்காரம் கொண்ட பாம்பு அது. சாதுப்பிராணியென்று அந்தப் பெண் வளர்த்து வந்திருக்கிறாள். சில நாட்களாகச்  சோர்ந்திருந்த பாம்பு இரவில் மெதுவாக ஊர்ந்து அந்தப் பெண்ணருகே அவள் படுக்கையில் நெருங்கிப் படுத்துக்கொண்டதாம். அந்தப் பெண் மன ஆதுரத்தோடு அதை அழைத்துக்கொண்டு (எடுத்துக்கொண்டு)  அதற்கான மருத்துவரிடம் சென்று காட்டியிருக்கிறாள். சோர்வெல்லாம் ஒன்றுமில்லை, உங்களை அளவெடுத்துக்கொண்டிருக்கிறது எப்போது திங்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறது என்றாராம் மருத்துவர். செய்தியைப் படித்த அன்று, இரவில் படுக்கையில் படுத்தபடி பக்கத்தில் ஒருமுறை பார்த்தாள். தன்னை அளவெடுத்தால் ஒரு போடு போடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தபின் அவளுக்கு நிம்மதியான உறக்கம் வந்தது.

***

4. மேடைகள்

இருபது வருடங்களுக்கு முன்னால் கடலூரில் நாங்கள் வசித்த ஓட்டு வீடு வினோதமானது. இருக்கும் அறைகளிலேயே மிகப் பெரிய, முற்றம் இருந்த சமையலறையில் இருபது மேடைகள் இருந்தன. பால், தயிர் வைக்கத் தலா ஒன்று, வெந்நீர் அடுப்புக்கு, தவலைக்குத் தலா ஒன்று, விளாவத் தண்ணீருக்கு ஒன்று, விறகுக்கு ஒன்று, காப்பிப் பொடிக்கு ஒன்று, பெரிய, சிறிய பாத்திரங்கள், கரண்டிகளுக்குத் தலா ஒவ்வொன்று, வால் பாத்திரங்களுக்கு ஒரு மேடை, மாவடு ஜாடி, மாகாளி ஜாடி, கல் உப்பு கச்சட்டிக்குத் தலா ஒன்று, கடையிலிருந்து வாங்கிவந்திருக்கும் காய்கறி பழங்களோடு அப்பா உட்கார ஒன்று, வாங்க வேண்டிய மளிகை சாமான்கள் பட்டியலுக்கு ஒன்று, வழக்கம்போல அடுப்புக்கு, சமைத்ததை வைக்க இரண்டு, சாமி படங்களுக்கு ஒன்று.  ஸ்பூன்கள் வைக்க மேடையில்லை என்று அம்மாவுக்கு ஒரே மனக்குறை. விறகு மேடையில் ஒரு நாள் விறகோடு விறகாகச்  சாரைப் பாம்பு படுத்திருந்தது. மாகாளி ஜாடியை ஒரு நாள் குட்டி மரநாய் ஒன்று நக்கிக்கொண்டிருந்தது. அப்பா அமர்ந்திருந்த மேடையில் ஒரு நாள் பூசணிக்காயை மடியில் வைத்துக்கொண்டு கடவுள் அமர்ந்திருந்தார்.

***

5.ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்


எங்கள் கல்லூரி ஹைன்ஸ் ஹாலில் பேய் நடமாட்டமிருக்கிறதென கல்லூரி முழுதும் பரவலான பேச்சு. ஒரு சிங்கிள் பாதிரியார் ஆவி என்று ஒரு மாணவி பதற்றத்தோடு சொன்னபோது எல்லா பாதிரியாரும் சிங்கிள்தான் என்று ஒரு மாணவன் பல்பு கொடுத்ததைக் கேட்டேன். ஒவ்வொரு செமஸ்டரும் பின்மாலை வகுப்புகள் நடக்கும் இடத்தைக் கல்லூரி தீர்மானிக்கும்போது என் வகுப்புக்கு ஹைன்ஸ் ஹால் வரக்கூடாதென்று நான் வேண்டாத தெய்வமில்லை. இந்த முறை தெய்வம் சதிசெய்துவிட்டது. முதல் நாள் இரவு பத்து மணிக்கு வகுப்பு முடிகிறது. வெளியே வருகிறேன். ஜிலோவென்றிருக்கிறது. இருபுறமும் காலி வகுப்பறைகள். நடுவே பாதையில் நடக்க நடக்கக் கதவு இன்னும் இன்னும் தூரமாகப் பாதை செல்கிறது. அப்போது கதவில் சாய்ந்தபடி ஓர் உருவம். பாதிரியாரின் நீல அங்கி. மங்கலாகப் புகைமுகம். அது என்னைக் கேள்வி கேட்டதோ? இந்த செமஸ்டரில் இங்கேதான் வகுப்பு என்றேன்.  பயப்படுபவர்கள் வழக்கமாகக் கத்துவதைப் போல அதே ”ஆ” என்ற சத்தம். கதவைத் திறந்து வெளியே ஓரே ஓட்டம். நான் அடிக்கக்கூட இல்லையே, பின் ஏன் இப்படி?

***

6. இப்படித்தான் சமயத்தில்

அவள் வீட்டுக்கு வந்த அவன் உரிமையாகச் சமையலறைக்கு வந்தான். டீ போட்டுக்கொண்டிருந்த அவளைக் கட்டியணைத்தபடி பேசிக்கொண்டிருந்தவன் இந்தப் புடவையில் உன் பின்புறத்தைப் பார்த்தால் அச்சு அசல் அந்த நடிகையேதான் என்றான். அந்த நடிகையின் பின்புறங்கள் அத்தனை சிறப்பில்லை. அந்த நடிகைக்குப் பதிலாக எடுப்பான பின்புறங்கள் இருக்கும் வேறொரு நடிகையின் பெயரை அவன் சொல்லியிருந்திருக்கலாமே என்று அவளுக்குத் தோன்றியது. அந்த வேறொரு நடிகையின் பெயர் அவள் வாய்வரை வந்துவிட்டது. ஆனால் உடனே நாக்கைக் கடித்துக் கொண்டாள். அந்த வேறொரு நடிகை ஹார்ட் போர்ன் படங்களில் நடிப்பவள். வார்த்தையை விட்டிருந்தால் அவள் ஹார்ட் போர்ன் பார்ப்பது அவனுக்குத் தெரிந்து விட்டிருக்கும். இந்தக் கதையில்கூட அந்த நடிகை, வேறொரு நடிகை என்று எழுத வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் தமிழ் வாசகர் மனதில் பெண் எழுத்தாளரின் மதிப்பு என்னாவது?

***

7. அந்தக் கிரகத்தில்

எத்தனை எத்தனை விண்வெளிக் கலன்கள் அவர்களை அங்கே அழைத்து வந்தன என இன்னும் யாருக்கும் கணக்கு சரியாகத் தெரியவில்லை. பூமியிலிருந்து தொற்று நோயாளர்களை அப்புறப்படுத்தும் ’Project Healthy Planet’ உலகளாவிய திட்டமாக இருந்தது. புதிய கிரகத்தின் சாம்பல் நிறத்திலான பாறை போன்ற தோற்றமளித்த தரைமீது பல நாட்டவர்களும் தனித்தனிக் கூட்டமாக அமர்ந்திருந்தார்கள். இந்தியாவின் கலன்களில் வந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவர்களருகே அங்கிருந்து வந்த கடைசிக் கலன் இறங்கியது. சிலர் இறங்கினார்கள். நூற்றுக் கணக்கான வெள்ளை, கறுப்பு நிறப் பெட்டிகளை இறக்கினார்கள். ஒருவர் உரக்க அறிவித்தார்: “வெள்ளை நிறப் பெட்டிகளில் கத்திகள் இருக்கின்றன, கூர்மையானவை. கறுப்பு நிறப் பெட்டிகளில் கரம் மசாலா, மிளகாய்ப்பொடி பாக்கட்கள் இருக்கின்றன. தரமும் மணமும் கூடியவை. நீங்கள் உங்களுக்குள் சமமாகப் பிரித்துக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.” பல அரசாங்கங்களும் இப்படி பெட்டிகளை அவர்கள் நாட்டவர்கள் மத்தியில் விட்டுச் செல்கின்றன. அந்தக் கிரகத்தில் தாவரமில்லை, விலங்குகள் இல்லை. அங்கே விடப்பட்டவர்களுக்கான உணவு குறித்து அரசாங்கங்களுக்கு அக்கறை இல்லாமல் இல்லை.

***

8.என்ன குழந்தையோ!

அவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் அந்தச் சின்னக் குழந்தையிடம் முதலில் இதைத்தான் கேட்கிறார்கள்: “உனக்கு அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா?” சின்னக் குழந்தைக்கு “சாக்லேட்தான் பிடிக்கும்” என்று பதில் சொல்லத் தெரியாது. ஆனால் இந்தக் கேள்வி கேட்கப்படும்போது அதன் குட்டிக் கை நீட்டப்படும் சாக்லேட்டுக்கு கிட்டக்கிட்ட போகிறது. அந்த வீட்டுக்கு வரும் சாமர்த்தியசாலிகளோ சாக்லேட்டைத் தந்துவிடாமல் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். அப்போது குழந்தை வாயில் ம வந்தால் ம்மா என்கிறது. ப வந்தால் ப்பா என்கிறது. அதன் பின் தரப்படுகிற சாக்லேட்டை பெருந்தன்மையாக வாங்கிக்கொண்டு பொக்கைவாயாய்ச் சிரிக்கிறது. குழந்தை அம்மாவைச் சொல்லும்போது அப்பாவுக்கு, அப்பாவைச் சொல்லும்போது அம்மாவுக்கு முகம் தொங்கிப்போகிறது. ’நேற்று பிறந்ததாகவே இருக்கட்டுமே, இரண்டு பேருக்கும் சமமாகப் பொன்னாடை போர்த்தாவிட்டால் என்ன குழந்தை அது?’

***

பெருந்தேவி – இதுவரை இவருக்கு எட்டு கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. அமெரிக்காவில் உள்ள சியனா கல்லூரியில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நுண் கதைகள் வழி உரைநடை புனைவு இலக்கியங்களிலும் தடம்பதித்துவருகிறார். தொடர்புக்கு -sperundevi@gmail.com

யாரோ தொலைத்த இசைத்தட்டு

2

தமயந்தி

மார்கெட்டுல ஷெட்லாம் படபடனு பாதிக்கு மூடினாங்க. வெளிய எடுத்து வச்சிருந்த ஆட்டுத்தலைய சண்முகம் அண்ணாச்சி கையில எடுத்துக்கிட்டு அப்பாவப் பார்த்து “வேணுமா சார்”னு கேட்டார். அப்பாக்கு எதும் புரியாம “ஆமா ..ரெண்டு கிலோனு சொன்னார்.

சண்முகம் அண்ணாச்சி அவசரமாக “ சீக்கிரம் வாங்க”னார். எப்பவுமே அப்பாக்கு கிறிஸ்துமசுக்கு முந்தின நாளே கறி வாங்கி வைக்கிற பழக்கம் இருந்துச்சு. அத மஞ்சள்,உப்பு போட்டு வேக வைத்து அம்மா ஆற வைப்பாள். ஒருபக்கம் கேக்குக்காக மைதா மாவை முட்டையோடு சீனிலாம் போட்டு கலக்கும் வேலை எனக்கு. பாதி மாவு என் வாய்க்குள் தான் போகும். வீடு முழுக்க எல்லாம் கலந்த ஒரு வாசனை ஒரு மயிலிறகு பறக்கிற மாதிரி பறந்து போகும்.

எல்லா காரியங்களையும் பண்டிகைக்கு முந்தின நாளே முடிச்சா தான் அம்மாக்கு நிம்மதியா இருக்கும். அதுக்காகவே அப்பா முதல் நாளே போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்திச்டுவார். அப்பாக்கு பண்டிகைக்கு பிரியாணியோட சாப்ஸ் இருக்கணும். சண்முகம் அண்ணாச்சி சாப்ஸுக்கு பக்கவாட்டா கத்திய சரிச்சு தட்டிக்கிட்டே “ அங்கல்லாம் ஒண்ணும் பிரச்னை இல்லயேனார் அப்பாட்ட.

“இல்லயே…ஏன்?”

“என்ன சார் இப்டி கேக்கீக… எம்ஜிஆர் செத்துப் போயிட்டார்.”

“எப்ப?”

“அடப் போங்க சார்.. தெரியாதா? அதான பாத்தேன் வழக்கம் போல கறி வாங்க வந்திருக்காரனு”

அப்பா கொஞ்சம் பதட்டமா சுத்தி முத்தி பார்த்தார். நான் அவரோட கால்களுக்கு நடுல ஒட்டி நின்னுக்கிட்டேன்

“நல்லா தான இருந்தாரு”

ஆமா சார்… உங்க வீட்டுல டிவி இருக்கா

ஆஹ்.. இருக்கே…ஆனா பாக்கல..

அதான் சார் உங்களுக்குத் தெரில..

ஆனா வர்ற வழில பெரிய அளவுல எந்த விதமான அதிர்வும் இல்லை.அப்பா என்னை இறுக்க பற்றிக் கொண்டார். அவருக்கு எம்ஜிஆர்னா ரொம்பப் பிடிக்கும். வாத்யார்னு தான் எம்ஜிஆரை சொல்லுவார். எம்ஜிஆர் படங்கள ரொம்ப ரசிச்சி பாப்பார். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தப் பிறகு அப்பா கட்சில சேர்ந்துக்கிட்டார். அப்பப்ப கட்சிக் கூட்டம்லாம் போயிட்டு வர்றதுண்டு.

அப்பா அதுக்கு அப்புறமா சண்முகம் அண்ணண்ட்ட ஏதும் பேசல..அண்ணன் தான் கிளம்புறப்ப “பாத்துண்ணே…இவன வேற கூட்டிட்டு வந்திருக்கீங்க”னு சொன்னார். அப்பா வெறும்  உம் மட்டும் கொட்டி விட்டு அவசரமா மார்கெட் வாசலுக்கு வந்தார். மார்கெட் வாசல்ல எந்த கடையும் திறக்கல. நேத்து ராத்திரி கொட்டிருந்த குப்பைல தக்காளி வாடை அடிச்சிது. எதிர்பக்கமா ஆறுமுக நாடார் கடைக்கு முன்னால சைக்கிள அப்பா நிறுத்திருந்தார்.

அப்பாஎன்னைக் கேரியர்ல ஏத்திக்கிட்டு பெடல் பண்ண ஆரம்பிச்சார். அவர் மவுனத்துலயே நிறைய பேசின மாதிரி இருந்துச்சு.

“எம்ஜிஆர் அமெரிக்காலயா செத்துப் போயிட்டாருப்பா?”னு கேட்டேன் நான். அவர் “தெரிலயேப்பா”னு சொல்லிட்டு ”சித்தப்பா ஏதும் சொன்னானால”னார். சித்தப்பா அறைக் கதவு திறக்காமலே இருக்குறத வர்றப்ப பாத்துட்டுத் தான் வந்தேன் .இல்லை என்பது போல தலையாட்டி விட்டு அது எப்படி முன்னால சைக்கிள் ஓட்டுற அப்பாவுக்குத் தெரியும்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பின்ன “இல்லப்பா”னேன்.

அப்பா அவ்ளோ வேகமா சைக்கிள் ஓட்டுறதா எனக்கு ஞாபகமில்ல. அவ்ளோ வேகமா ஓட்டுனார்.வீட்டுக்குள்ள போய் டிவிய போட்டா தூர்தர்ஷன்ல செய்தி சொல்லிட்டு இருந்தாங்க. அம்மா கேக் செய்றதெல்லாம் விட்டுட்டு கைய துடைச்சிட்டு ஓடி வந்தா.

அப்பா எதுவுமே பேசல. கறி பை சைக்கிளோட பிடில தான் தொங்கிட்டு இருந்துச்சு. சித்தப்பா அப்பாவப் பாத்து

“என்னண்ணே இது “னார்.

அப்பா ரொம்ப தளர்ந்து போய் உட்கார சித்தப்பா

“கலைஞருக்கு தெரியுமோ என்னமோ”னார்

“ஆமா ஆமாசென்னைக்குப் போயி சொல்ல வேண்டியது தானனு அம்மா கிண்டலா சொன்னா. சித்தப்பாவோட முகத்துல பளீர்னு கோபம் வந்துச்சு.

“அவர் தான் முதல்ல வருவார் பாருங்க…டேய் பாரதி…நீ சொல்லு”னு சித்தப்பா என்னையும் இழுத்தார்.

அப்பா கழுத்தை மட்டும் திருப்பி –”ஆளு செத்துக்கிடக்கு… யார் முதல்ல வருவானா கணக்கு ?னு சொன்னார். அன்னைக்கு அப்புறமா டிவி அணைக்கப்படலை. அடுத்த நாள் பண்டிகைக்கு ஏதும் செய்யவுமில்லை. சித்தப்பா மட்டும் கலைஞர் வந்தப்ப அம்மாவப் பாத்து

“சொன்னேம்ல அண்ணி.. அவர் தான் முதல்ல வருவார்னு…என்னனாலும் ப்ரெண்டுலா “

“ஆமா ஆமா.. அதான் கணக்குக் கொடுக்கல..” அப்பா ஏதோ ஒரு வேகத்துல பேச சித்தி கழனித் தண்ணி ஊத்தப் போனவ “த்தோ பெரியவரே…எதுக்கு இத்ன ஆவேசம்? நம்ம வீட்ல தான் ஏதோ பிரச்னைனு நெனைப்பாங்க”

“நெனைப்பாங்க கஸ்தூரி… நெனைப்பாங்கனார் அப்பா. அம்மாக்கு சித்தி அபப்டி அப்பாட்ட பேசுறது பிடிக்கல. கீழ்கண்ணால அவர முறைச்சிட்டே”வாய வச்சிட்டு உங்களுக்கு சும்மா இருக்க முடியாதானு சொன்னா.

சித்தப்பா திடீர்னு எந்திரிச்சு” ஜெயலலிதா வந்தாச்சுனார்..அப்பா ஒரு நிமிஷம் திரும்பிப் பார்த்து “நிசமாவா”னு சொல்ல சித்தி கழனித் தண்னியைக் கொட்ட போயிட்டா. அம்மா அப்பாவப் பாத்து கிசுகிசுப்பா- ஷ்..சும்மாத்தான் இருக்க முடியாதா உங்களாலனு சொன்னா. அது சித்தப்பாக்கு கேட்ட மாதிரி தான் இருந்துச்சு. ஆனா சித்தப்பா குளிக்கப் போற மாதிரி கிளம்பி “என்னமோ மனசு சொல்லுதுண்ணே..பிரச்னை ஆகுமோ னுட்டு போயிட்டார்.

அப்பா ஏதும் பதில் சொல்லல. ஆனா கண்ண டிவிலருந்து எடுக்கல. அம்மா உள்ளருந்து வந்து இப்ப அப்பா பக்கம் உட்கார்ந்து ”எதுக்கு தேவையில்லாம அவ கிட்ட பேசுறீங்க?னு கேட்டா. அப்பா சலிப்போட”ம்ம் …உனக்கு எந்த நேரத்துல என்ன எழவ பாக்கணும்னு தெரில…னார்

“ஆமா ஆமா… இப்ப பாருங்க வாங்கின கறிலாம் தூரத் தான் போடணும்..

”வேணாம்..பேச்ச விடு..சண்டை வந்திடும்

அப்பாக்கும் அம்மாக்கும் நடுல எப்பவுமே சண்டை பெரிசா வந்ததே இல்ல. அப்பா அம்மாவோட ஒரு சத்தத்துலேயே அமைதியா ஆயிடுவார். அப்பல்லாம் அவர் வீட்டுல சாப்பிடவே மாட்டார். அம்மா நெடும் இடும்பா இருப்பா. எப்படி ரெண்டு பேரும் பேசிப்பாங்கனு தெரில.அது சாதாரணமா நடந்திடக் கூடியதா இருந்ததும் இல்ல. மறுபடி ரெண்டு பேரும் சண்டைப் போட்டுப்பாங்களோனு இருந்துச்சு எனக்கு.

சித்தி வேற திரும்பப்போறப்ப –மனவினைகள் யாருடனோ மாயவனின் …விதிவகைகள்னு ரஜினி மூணு முடிச்சுல பாடுற மாதிரி பாடிட்டு போனா. அம்மா சட்டென எழுந்து எங்க ரூமுக்குப் போயிட்டா.

அப்பா அன்னிக்கு பூராவும் குளிக்கக் கூட இல்ல. அன்னிக்கு ராத்திரி பூராவும் அப்பா  சரியா தூங்கவே இல்ல. காலைல எந்திரிச்சப்ப டிவி பாத்துட்டே தான் இருந்தார். அம்மா வடைக்கு ஊறப் போட்டு ஆட்ட ஆரம்பிச்சோன்ன அப்பாக்கு எரிச்சல் வந்து என்னைக் கூப்பிட்டு “உங்கம்மைக்கு அறிவே இல்லியா? கோண்டு போய் ஓடைல கொட்ட சொல்லு வடைய..னு சொன்னார். என்னமோ கட்டுண்ட மாதிரி அம்மா க்ரைண்டரை ஆஃப் செஞ்சிட்டு சித்திகு குரல் கொடுத்தா. அந்த நேரந்தான் டிவில ஜெயலலிதாவை ஒரு ஆள் சடலம் ஏற்றின வேனிலிருந்து தள்ளி விட்டார். அப்பா சடாரென எந்திரிச்சு நின்னே விட்டார்.

“என்னலே நட்க்குது. தலீவரு கடைசி ஊர்வலத்துல இதென்ன நாடகம்?

சித்தப்பா துண்டு கட்டினபடி ஹாலுக்குள்ள ஓடி வந்தார். டிவில ரொம்ப ரகளையா இருந்துச்சு. ரெண்டு பேரும் ரொம்ப பதட்டமா பார்த்தாங்க.சித்தப்பா அப்பாவத் திரும்பிப் பாத்துட்டு

“யாரு திமுக காரங்களா”

“இல்ல இல்ல… சின்னப் பையன் தான்..யாருனு தெரில. அந்தம்மாவ கீழ இறக்கிட்டான் “

அச்சச்சோனு சித்தி ஏகத்துக்கு பெருமூச்சு விட்டாள். இப்ப அவங்க நாலு பேருமே டிவி கிட்டயே போயிருந்தாங்க.

”எவ்ளோ கூட்டம்”னாங்க சித்தி மறுபடியும். சித்தப்பா அவளிடம் பேசாம இருனு சைகை காட்டினார். சித்தி அதை கவனிக்கவே இல்லை. அவளோட பார்வை ஒரு வண்ணத்துப்பூச்சி மாதிரி அந்த டிவி பொட்டியோட நாலாமூலைலயும் பறந்துக்கிட்டே இருந்துச்சு. அப்பா சட்டுனு வெளியே போய் முற்றத்துல உட்கார்ந்தார். அவர் மேலெல்லாம் வேர்வையா இருந்துச்சு. அவரோட சோர்வு ரொம்ப அசாத்தியமானதா இருந்துச்சு. எனக்கு பதைபதைப்பாகி அம்மாட்ட சொல்ல ஓடினேன். அம்மா பின் மடைக்குப் பக்கமா மண்ணெண்னெய் அடுப்பை வச்சி வடைய சுட எண்ணை சட்டிய ஏத்த தீக்குச்சிய உரசிட்டு இருந்தா. என்னைப் பாத்ததும் “உஷ்னு சொன்னா.

நான் அவ கழுத்தக் கட்டிக்கிட்டு காதோரமா: ம்மா..அப்பா ஒரு மாரி இருக்காரும்மா..னேன்

ஒரு மாரினா?”

வாயேன்ம்மா

அம்மா தீக்குச்சிய மடைல தூக்கிப் போட்டுட்டு என் கூட வந்தா. முன்னால உக்காந்திருக்கிர அப்பா பக்கத்துல உகாந்து “இப்ப என்ன ஆயிப் போச்சு. வாங்க…எந்திரிங்க…?”

“இல்லம்மா.. நீ போ. நான் வர்றேன்”

அம்மா கொஞ்ச நேரம் உத்துப் பாத்துட்டு “ இந்த அரசியல்லாம் நமக்கு வேணாம்ங்க. உங்களுக்கு வேணவே வேணாம்…உங்களுக்குப் பொய் சொல்ல வராது. பின்ன எப்படிங்க?”

“த்தூரப் போ”

“அட..ச்சும்மா தூரப் போ. அங்கிட்டுப் போனுக்கிட்டு… உங்களுக்கு அவரு தலீவர். சரி. இந்தப் புள்ளைக்கு என்ன ? பண்டிகைக்கு துணி போடாம கறி தின்னாம..”

அப்பா என்னக் கிட்ட கூப்பிட்டு “அப்படியால”னார். நான் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். ஆமானு சொன்னா அப்பாவுக்கு இன்னும் கஷ்டமாருக்கும்னு தோணுச்சு

“நாளைக்கு சாப்பிடலாம்ப்பானேன்

அப்பா லேசாக சிரித்தார், அது அந்த நேரத்துக்கு இதமா கூட இருந்துச்சு. குற்றாலம் போய் நடுராத்திரி குளிச்சிட்டு செங்கோட்டை பார்டர் கடைல போய் நடுங்கிட்டே இலைல விழுற பரோட்டாலயும் கோழிக்குழம்புலயும் கை வைக்கிறப்ப லேசா உசிர் வெடவெடக்கும்,. அத மாதிரி.

சித்தப்பாவும் அப்பாவும் அன்னிக்கு ராத்திரி பூரா வெளிய தான் உக்காந்து பேசிட்டே இருந்தாங்க. ரவுண்டானா வெளிச்சத்துல முன்பக்க வேப்ப மரம் அசைஞ்சிட்டே இருந்தது, வெளிச்சத்தை அசைச்ச மாதிரி இருந்துச்சு.

”அந்தப் பையன் பேரு என்னல”னார் அப்பா

“அதாம்ணே.. முத மரியாதைல நடிச்சிருக்குமே…திலீபன்னு நெனைக்கேன்”

“அதாராம்ல

“சொந்தக்காரங்கனாங்க. நானும் எங்க ஆளுங்க தான்னு நெனைச்சேன்

“அட..என்னலே நீ…அதெப்படி ஆகும்

அப்பா உள்ளே எழுந்து போய் ரெண்டு க்லாஸ் எடுத்துட்டு வந்தார். குறைப்பை உணர்ந்து சித்தப்பா உள்ள போய் ஒரு ரம் பாட்டிலை எடுத்து வர சித்திக்கு முகம் மாறுச்சு

“பண்டிக வேணாம். இது மட்டும் வேணுமாக்கும்”

அப்பா நிமிராமலே தண்ணீர் சேர்ந்த்து ஊத்திட்டு என்னைக் கூப்பிட்டு” அம்மாட்ட கண்ணாடி முட்டை போட சொல்லு தங்கம்னார்

அம்மாகிட்ட சொன்னதும் அவ லேசா சிரிச்சிக்கிட்டே இரும்புக் கல்ல அடுப்புல வச்சி எண்ணைய விட்டுட்டு என்னய முட்டையை உடைக்க சொன்னா. நான் நங்குனு மேடைல முட்டைய உடைச்சிப் போட்டோன்ன அம்மா சிரிச்சிக்கிட்டே பக்கதுல ஒரு பாத்திரத்துலருந்து வடையை எடுத்துக் கொடுத்தா,.

”இதெப்பம்மா சுட்டே?”

அம்மா தோளைக் குலுக்கிக்கிட்டு சிரிச்சது ரொம்ப சந்தோஷமாருந்துச்சு. காத்துல மரத்துலருந்து விழுந்த இலை மேலெழும்பி திரும்ப கீழ விழுற அழகு மாதிரியே இருந்துச்சு.

அப்பாட்ட கண்ணாடி முட்டைய நீட்டினப்ப அவர் அந்த வெள்ளைப் பகுதிய முதல் விள்ளலா எடுத்து வாய்லப் போட்டு ஸ்ஸ்னார். அப்புறமாட்டு “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்னு பாட்டினார். விக்கல் எடுத்தது. அப்பா தண்ணீர் குடிப்பார்னு நெனைச்சேன். ஆனா அவர் “தலீவர் நெனைக்காரு”னு சொல்லிட்டு அழுதார்.

(தொடரும்)

தொடரின் இணைப்பிற்கு இங்கே சொடுக்கவும்

பிரதிகளின் பன்முகக் கலாச்சாரமும் இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின் எல்லைகளும்

0

எஸ்.சண்முகம்

தேசியத்தை சாதாரணமாக முறைமைப்படுத்தாத பிரதிகளை இலக்கிய விமர்சனம் புனிதத் தொகுப்பாக்குகிறது என நான் வாதாட விரும்புகிறேன்.

-சைமன் டூரிங்

(லிட்ரேச்சர் நேஷனலிசம்ஸ் அதர் தி கேஸ் பார் ரிவிஷன்)

இலக்கியம் என்ற சொல்லை குறிப்பீடு செய்யும் இரு வேறு பண்புச் சொற்களானக் கவிதை, உரைநடை ஆகியவற்றைப் பகுத்துப் புரிந்து கொள்ளவே பெரும்பாலும் இலக்கிய விமர்சனம் என்ற எழுத்துச் செயல் ஒரு கால கட்டம் வரையில் வரையறை செய்து வந்தது. குறிப்பாக மொழியியல் ரீதியாக இலக்கியத்தை காண விழைந்த கோட்பாடுகளில் அமைப்பியல் வாதம் தொடங்கி பின்-அமைப்பியல் வாதம் அமைவுற்று அதன்பிறகு பின்-நவீனத்துவம் என்ற நிலை வரை வளர்ந்துள்ளது. இதில் பின்-அமைப்பியல் வாதத்தை

1.அர்த்தம் குறித்த தத்துவமாகவும்

2.அர்த்தம் குறித்த அரசியலாகவும் கூறுகின்றனர். இலக்கியம் என்பதிலுள்ள ‘நான்’ என்ற இறையாண்மையை அகற்றிவிட்டு எல்லா வடிவங்களையும் ஒன்றோடொன்று இயைபுடையதாகக் குறிக்கிறது.

‘தத்துவம்’ என்பதை மொழிகடந்த அரூபப் பொருளாகக் கருதியதின் விளைவே ‘கவிதையையும், ‘உரைநடையையும்’ முழுமுதற் வடிவங்களாக மாற்றியது. இதன் எல்லைகளைத் தகர்த்த ழாக் தெரிதா என்ற பின்-அமைப்பியல் சிந்தனையாளர் தத்துவம், கவிதை ஆகியவை எல்லாமே ஒருவகையான மொழிதான் என்று கூறுகிறார். இதன் அடிப்படையில் அர்த்தம் என்பதை வாசித்தல் மூலம் தள்ளிப்போட்டுக்கொண்டே போகலாம் என்றும் கூறுகிறார்.

ஒரு மொழியாலானப் பிரதிக்கு ஒரு நிலையான அர்த்தம் என்பது இருக்க சாத்தியமில்லை என்பதைத் தனது கட்டவிழ்த்தல் மற்றும் difference என்ற மொழிக்கோட்பாடாகச் செயல்படுத்திக் காண்பிக்கிறார். மொழியால் கட்டமைக்கப்பட்ட

அகம் இலக்கியம்
அல்லது
அகவயம்-தத்துவம்

(selforsubject) என்பதை மொழியாலேயே கட்டவிழ்க்க முடியும் என்கிறார். அதேபோல ‘தத்துவம்’ சார்ந்த பெருங் கதையாடலையும் மொழிக்குறிகளின் தொகுப்பாகக் காணும்போது அந்த மொழிக்குறியின் உதவியின்றி ‘தத்துவம்’ என்ற குறிப்பீட்டை சாத்தியப்படுத்த இயலாது. இதனைக் கட்டவிழப்பு செய்யும் பட்சத்தில் தத்துவம் தனது மொழி கடந்த செயல்பாடு என்பதிலிருந்து கழன்று வெறும் மொழிக்குறிகளாகவே இருப்பதைக் காண முடியும்.

இத்தகைய சிந்தனையின் மற்றொரு சாத்தியமாக மிஷேல் பூகோவும் ஒருமையுடைய சில கருத்துகளைக் கொண்டிருந்தார். அவரும் ஒருவனின் அகத்தைச் சிதறடிக்கச் செய்யும் செயலாக முறையீட்டை தனது டெக்னாலஜி ஆப் செல்ப் (தன் என்பதின் தொழில் நுட்பம்) என்ற நூலில் எழுதுகிறார். ஒருவன் இன்னொருவனிடம் பாவமன்னிப்பு கேட்பதில் ஈடுபடும் போது மொழிரீதியாகத் தனது அகத்தை அழித்துக்கொள்கிறான் என்கிறார். இதற்கு ஆதாரமாக புனித் அகஸ்டின் பாவ மன்னிப்பை முன்வைக்கிறார். ஒரு சீமாட்டி தனது அகத்தினுள் அமுக்கப்பட்ட பாலியல் குறித்த நடப்புகளை வெளிக்கொணர இயலாத காலக்கட்டத்தில் அந்தப் பாலியல் அடக்குமுறையைக் கீழறுப்பு செய்யும் முகமாக அன்று நிலவிய ஒரு நாடோடிக் கதையை இதற்கு எதிரானப் பிரதியியல் செயலாக வாசிக்கிறார்.”ஒரு மாய மோதிரம் அது எந்த இடத்தில் வைக்கப்படுகிறதோ அந்த ஸ்தானத்தின் கதையை அது சொல்லிவிடும். மொழியற்றுக் கிடக்கும் ஒடுக்கப்பட்டப் ‘பெண்ணின் பாலியல் அகத்தை’ கதையாடலாய் மொழிகிறது. கதைசொல்லும் மோதிரத்தை அந்தப் பெண் தனது யோனியில் வைக்க அம்மோதிரம் அவ்வுடலிய ஸ்தானத்தின் அடக்குமுறையை உள் வயப்படுத்தப்பட்ட அகத்தை மொழியால் கதையாக்கிச் சொல்லி விடுவிக்கின்றது. இந்த வினோதமான நாடோடிக் கதையை பூக்கோ அகவயப்படுத்தலுக்கான மொழிரீதியான கீழறுப்பாகக் காண்கிறார். அதேபோல Cervantesன் Don Quixote-ஐப் பற்றிக் கூறும்போது

எழுதப்பட்ட வார்த்தை மற்றும் பொருள் இனி எப்போதும் ஒன்றையொன்று மற்றும் அவற்றுக்கிடையேயும் பிரதிபலிக்காது. Don Quixote தன்னிச்சையாகவே திரிகிறான்.

செர்வாண்டஸின் கதைமொழிக்கும் அதுகுறிக்கும் பொருளுக்கும் எந்த வகையானக் குறிப்பிட்ட ஒப்புமை இல்லாத ஒரு மொழிவெளியில் அந்த மொழிப்புனைவான Don Quixote சஞ்சரிக்கிறது என்கிறார்.

சிந்தனைத் துறையில் அறிதல் முறையிலும் அறிவுத் தொகுப்பிலும் அடக்குமுறையை உள் வயப்படுத்தப்பட்ட அகத்தை மொழியால் கதையாக்கிச் சொல்லி விடுவிக்கின்றது. இந்த வினோதமான நாடோடிக் கதையை பூக்கோ அகவயப்படுத்தலுக்கான மொழிர்தியான கீழறுப்பாகக் காண்கிறார். அதேபோல Cervantes Don Quixote-ஐப் பற்றிக் கூறும்போது

எழுதப்பட்ட வார்த்தை மற்றும் பொருள் இனி எப்போதும் ஒன்றையொன்று மற்றும் அவற்றுக்கிடையேயும் பிரதிபலிக்காது. Don Quixote தன்னிச்சையாகவே திரிகிறான்.

செர்வாண்டஸின் கதைமொழிக்கும் அதுகுறிக்கும் பொருளுக்கும் எந்த வகையானக் குறிப்பிட்ட ஒப்புமை இல்லாத ஒரு மொழி வெளியில் அந்த மொழிப்புனைவான Don Quixote சஞ்சரிக்கிறது என்கிறார்.

சிந்தனைத் துறையில் அறிதல் முறையிலும் அறிவுத் தொகுப்பிலும் பன்முகப் போக்குகளை உண்டாக்கியதில் நீட்ஷேயின் பங்கை முக்கியமாக இங்கே குறிப்பிட வேண்டும். அவரும் ஒரு மொழிநூல் அறிஞராக இருந்தவர். தத்துவத்தின் கற்பனா சக்தியை ஒற்றைக் குறிப்பீடானக் ‘கடவுளை’ வைத்துக் குறைப்பதை எதிர்க்கும் முகமாக ‘கடவுள் இறந்து விட்டார்’ என அறிவித்தார். இதை அவரது முக்கியமான சிந்தனைகளுள் ஒன்றாகக் கொள்ளலாம். இதன் அடிப்படைத் தத்துவத்தின் அர்த்தச்சுழிப்பைக் கட்டுப்படுத்தும் இறையாண்மையைத் தகர்க்கவே அவ்வாறு எழுதினார். இதைப்போலவே ரோலன் பார்த் என்ற இலக்கிய விமர்சகரும் ‘ஆசிரியன் இறந்து விட்டான்’ என்பதை விமர்சனத்தில் முன்மொழிந்தார். ஏனெனில் இலக்கியப் பிரதியின் வாசித்தலுக்கான பன்முனை சாத்தியத்திற்கு ஆசிரியனின் தொன்ம மதிப்பீடு தடையாக இருக்கிறது. அது பன்முக வாசிப்பிலிருந்து வாசகனை வெளியே தள்ளி விடுகிறது. ஆகவே “ஆசிரியன் எனும் குறிப்பற்ற மொழிப்பிரதியானது” அர்த்தத்தை ஒருமுகப்படுத்தாமல் எண்ணற்ற வாசக சாத்தியப்பாட்டைத் தழைக்கச் செய்கின்றது. ஆகவே பல்வேறு கலாச்சார முனைகளை ஒரே பிரதியில் வாசித்துப் பெருக்கும் வாய்ப்பை அது உண்டாக்க விழைகிறது.

வாசிப்பை அடிப்படையாகக் கொண்ட மொழி ரீதியான விமர்சனம் வளர்ந்தபோது பின்-அமைப்பியலின் தொடர்ச்சியாக இன்று பேசப்படும் பின்-நவீனத்துவம் என்ற கலாச்சார விமர்சனம் ஒரு புதிய விசையோடு இயங்கத் தொடங்கி உள்ளது. இலக்கியப் பிரதி என்பதை விரிவுபடுத்தும் இந்தப் பின்நவீனத்துவத்தை “கலாச்சாரங்கள் பற்றிய கலாச்சாரம்” என வால்டர் ட்ருயட் ஆண்டர்சனால் குறிக்கப்படுகிறது. அதைப்போலவே பின்-நவீனத்துவ சிந்தனையாளர்களுள் மிக முக்கியமானவரான ழாக் பிரான்சுவா லயோடார்ட் எல்லா வகையானப் பிரதிகளையும் (இலக்கியம், ஓவியம், கட்டிடக்கலை…) ஒரு வகையான மையமற்ற மொழி விளையாட்டு எனச் சொல்கிறார். மேலும் சொல்லாடல்களின் தகர்வை நுண்ணிய சொல்லுதல் கொண்டே நிகழ்த்துகிறார். கதை சொல்லுதலே எல்லாப் பிரதிகளின் உட்கிளையெனவும் கூறுகிறார். மேலும் அவர் ‘கனவு’ என்பதை நூதனமாக எழுதப்பட்ட ஒரு காகிதத்தைக் கசக்கிப் போட்டுவிட்டு அதை மறுபடியும் விரித்து வாசிக்கும் போது நமக்குத் தெரியக்கூடிய கலைந்த நிலை ஓர் இடைவெளிகள் அடங்கிய மொழிக்குறிகளைப் போன்றதுதான் கனவு என்று புதிய பின் நவீனத்துவ வாசிப்பை பிராய்டின் கனவு பற்றிய கருதுகோள் மீது முன்வைக்கிறார். இதைப்போலவே பிரடெரிக் ஜேம்ஸனும் வெபர்-ன் சமூக ஆய்வுகள் மற்றும் பிராடஸ்டன்ட் அறவியல் குறித்த பிரதியைப் பின்-நவீனத்துவம் வழியாக வாசித்து அவரை ஒரு கதைசொல்லியாகக் குறிப்பிடுகிறார். அதேபோல் மானுடவியல் அமைப்பியல்வாதியான கிளாட் லெவிஸ்டராஸ் பிரேசிலின் பழங்குடியினரைப் பற்றிய தனது நூலான டிஸ்ட்ரஸ் ட்ராபிக்ஸில்

“இத்தகைய கதையாடல்களை புக் ஆப் பேண்டகுரலின் நான்காவது புத்தகத்திலிருந்துதான் ரபலா எழுதியிருக்கக்கூடும். துவக்க கால கேலிச்சித்திரங்களை நமக்களிக்கும் போது அதனை இப்போது மானுடவியலாளர்கள் கருமித்தனமிக்க மூலப்பிரதியின் மீது தைக்கப்பட்ட உறவுகளின் முறைமை என அழைக்கின்றனர்; இந்த முறைமையை நாம் கருக்கொண்டு அறிவது அரிதாயினும், அதில் ஒரு வயோதிகன் இளம்பெண்ணை ‘தந்தையே’ என அழைப்பான்.”

டோல் டிரம்ஸ்
– கிளாட் லெவிஸ்ட்ராஸ் –
டிரஸ்டஸ் டிராபிக்ஸ் என்று கூறுகிறார்.

பிரான்சுவா ரபலாவின் நாவலின் ஒரு பகுதியை லெவிஸ்ட் ராஸ் தனது Tristes Tropiques என்ற நூலில் பிரேசிலியப் பழங்குடியினரைப் பற்றிய ஆய்வில் பயன்படுத்துவதில் இலக்கியம் X மானுடவியல் என்ற நேரெதிர் வகைமைகளைத் தகர்த்து ஒருவித பின்-நவீனத்துவம் குறிக்கும் ஒரு கதை சொல்லல் உருவாவதும் வகைமைகளுக்கு இடையிலான இடைவெளி மறைந்து ஒன்றுக்குள் ஒன்று மங்கலாக ஆவதையும் காணலாம். இதில் முக்கியமாக ஒரு வயோதிகன் ஓர் இளம்பெண்ணை ‘தந்தையே’ என்று அழைக்கிறார். இது ஒருவகைப் புராணிக நையாண்டித்தனம் தொனிப்பதாக ‘அப்பா’ என்ற மொழிக்குறிப்பை வைத்துத் தனது மானுடவியல் குறித்த கண்டுபிடிப்பைச் சொல்லிச் செல்கிறார்.

2.

இன்று பல்வேறு திசைகளில் வளர்ந்துள்ள இலக்கிய விமர்சனம் என்ற வகையானது பின் காலனிய நாடுகளில் அமைப்பியல் வாதம், பின்- அமைப்பியல் வாதம், பின்-நவீனத்துவம் ஆகியவை அறிமுகமாவதற்கு முன்னர் ஆங்கிலம் வழியாக எழுதப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் ஆங்கிலோ சாக்சன் விமர்சனம் என்ற அடைமொழியோடு விளக்கியதில் நமக்கு மிகவும் அறிமுகமானவர் டி.எஸ்.எலியட். இவரது கவிதைகள் மீது நிகழ்ந்த அதீத வாசிப்பால் இவரின் விமர்சன எழுத்துகள் அதிக கவனத்தைப் பெற இயலாமல் போயின.

இவரது வழியில் வந்த ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் மற்றும் எப்.ஆர். லிவிஸ் போன்றோரின் விமர்சன முறைமை அதிகம் அறியப்படுகிறது. இவ்விருவரையும் நவீன விமர்சனத்தின் முன்னோடிகளாகக் கொள்ளலாம்.

இதற்கு முன்னர் டிரைடன் என்பவர்தான் ‘விமர்சனம்’ என்ற வார்த்தையை முதலில் அச்சு வடிவில் பயன்படுத்தியவர் என்பார்கள். இவர் விமர்சனம் என்பதை எந்தவித இலக்கிய வடிவத்திற்கான உரையாடல் என்ற பிரயோகத்தில் பயன்படுத்தினார். இவரிடமிருந்து வளர்ந்த ஆங்கில விமர்சன போக்கில் டி.எஸ்.எலியட்டின் விமர்சனக் கட்டுரைகள் ஆங்கில, ஐரோப்பிய கண்டங்களின் கவிதைகளைக் குறித்து ஆராய முற்பட்டது. அதில் இந்தியாவைப் பற்றியும் போகிற போக்கில் பேசுகிறார். அன்றைய காலக்கட்டத்தில் மிகவும் முனைப்பாக இருந்த

1. கட்டற்ற புனைவியல் தன்மை
2. ஆசிரியனின் சரிதம் சார்ந்த இலக்கிய விமர்சனம்
3. ஆசிரியர் வழியாக இலக்கியப் பிரதியை வாசித்தல்
4. இலக்கியப் பிரதியின் வழியாக ஆசிரியனை அறிதல்

என்பவைகளுக்கு மாற்றாக

1.வரலாற்றுப் பிரக்ஞை
2.கவிஞன் தன் அகத்தை அழித்தல்
3.மரபுடன் கவிஞனுக்குள்ள தொடர்பு
4.கவிதைக்கும் தேசியத்திற்கும் பிராந்தியத்திற்கும் உள்ள உறவுநிலை
5.உரைநடைத் தவிர்த்த கவிதையின் முதன்மைப் போக்கு
6.பருண்மை ஒப்புமை
ஆகியன எலியட்டினுடைய விமர்சனத்தின் முக்கிய அம்சங்களாகும்.

“பல்வேறு விதமான பதிவேடுகள் அல்லது விவரப்பட்டியல்கள் அளிக்கக்கூடிய இலகுவான சூழலமைவுகளினூடாக கவிதைகள் இடையீடற்ற வாதத்தில் நுழைகிறது. இதிலிருந்து விமர்சகன் இரவல் பெறலாம்.”

-போஸ்ட் ஸ்டக்சுரல் ரீடிங் ஆப் இங்கிலீஷ் பொயட்ரி-

தொகுப்பு: ரிச்சர்ட் மச்சின் மற்றும் கிறிஸ்டோபர் நாரிஸ்.

எலியட் மேலே குறிப்பிடும் ‘நிலையற்ற பொருத்தம்’ என்பதன் மூலம் ஓரளவு கவிதைக்கு ஒரு நிர்ப்பந்தமான சூழலமைவு இருக்கத் தேவையில்லை என்கிறார். தேசம், மொழி, கவிஞன் ஆகியவை குறித்துத் தனது விமர்சனக் கட்டுரைகளில் விரிவாக விவாதித்துள்ளார். இவை இன்றைய பின்-காலனிய சூழலில் மிகுந்த விமர்சனத்துக்கு உட்படக்கூடியவை. இதற்கு எத்வர்ட் செய்த், பார்பரா ஹார்லே, ஹோமி கே.பாபா , டிமோத்தி பிரனன் போன்ற பின்-காலனிய அழகியல் சிந்தனையாளர்களின் பங்களிப்புகள் முக்கியமானவையாகும்.

எலியட்டிற்கு அடுத்தபடியாக வந்த ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் அவரது விமர்சன மரபை மேலும் வளர்த்தெடுத்தார். எலியட்டின் fluid context’ என்பதிலிருந்து ஜார்ஜ் வாட்ஸன் கூறுவதை இங்குக் காண்பது பொருத்தமானதாகும்.

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ், சொல்லை அடிப்படையாக வைத்துச் செய்யப்பட்ட சொல் ஆய்வு முறையாகவே விமர்சனத்தை வளர்த்தார். அதோடன்றி கவிதை வாசித்தலில் ஒரு புதிய முறையையும் உருவாக்கினார். நிகழ்காலச் கலாச்சாரம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார்.

சொல்லாய்வு முறையை மென்மேலும் நெறிபடுத்தியவர் எப்.ஆர்.லிவிஸ்

இவரை செய்முறை திறனாய்வாளர் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு கவிதையையும் சொல்வாரியாகப் பிரித்து பொருள் குறித்த விமர்சனத்தை ஒருவகையான விஞ்ஞான அழுத்தம் தரும் முகாமாக செய்முறை விமர்சனத்தை மேற்கொள்ள முற்பட்டார். இவரது விமர்சனப்போக்கின் முக்கியக் கூறுகள் :

1.பருப்பொருண்மை
2.குறிப்பீட்டுத் தன்மை
3.மெய்யாக உணர்தல்

ஆகியவை ஆகும். ஒரு கவிதையை இம்மூன்று கூறுகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்து அந்தக் கவிதையின் திரண்ட கருத்திற்கு வாசகனை இவரது விமர்சனம் இட்டுச்செல்லும் தன்மை உடையதாக விளங்கியது.

இதை அவர் ஓர் ஆய்வு முறைமையாகக் கையாண்டார்.

பிரெஞ்சு புதிய விமர்சனப் பாங்கை ஆங்கில விமர்சகர்கள் எதிர்கொண்ட போதிலும் சசூரின் (Saussure) Langue, Parole என்ற இரு பாகுபாடுகளும் அன்றைய மொழியியல் சூழலில் புதிய தாக்கங்களை உருவாக்கியது.

அதைப்போல குறி, குறிப்பான், குறிப்பீடு பற்றிய அவரது சிந்தனையையும் மொழிக்குறியை, ஒரு குறிப்பீடற்றக் குறியாகக் கண்டதையும் விமர்சனத் துறையில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. இதைப்போல அமெரிக்கா மொழியியலாளரான சார்லஸ் சாண்டாஸ் பியர்ஸ் முன்வைத்த குறி,

உரையாளன் மற்றும் பொருள் என்ற மொழியியல் கருத்தும் இணைந்து குறியியல் என்ற புதிய ஒரு புதிய குறியியல் சிந்தனை, இலக்கிய விமர்சனப் போக்கை மாற்றக் காரணமாக இருந்தது. 1924இல் இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள மறுத்த ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் 1934-ல் ஏற்றுக் கொண்டனர்.

ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் இப்போக்கை நிராகரித்தார். குறியானது எவற்றிற்கெல்லாம் குறிப்பிடும்படியாக நின்றதோ அதனை அர்த்தத்தின் அர்த்தமானது கவனியாது நிற்க (ப.8) சுசூரை புரிந்து கொள்ளும் விதமாக கிடைக்கக்கூடிய குறிப்புகள். அது எளிய கவனிப்பின்மையை குறிப்பிட்டுக் கூறவில்லை. ஒரு பத்தாண்டு காலத்திற்கு பின் ரிச்சர்ட்ஸ் இதையே புகழ்ந்தார்.

ஆங்கில இலக்கிய விமர்சகரான ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் தனது பாரம்பரிய முன்னோடிகளில் ஒருவரான கவிஞர் கோலரிட்ஜின் பற்றிய Imagination for Coleridge’ என்ற தன் நூலில் ‘Semiology என்பதை குறியியல் குறித்த ஒரு கோட்பாடெனக் கூறுகிறார்.

டிரைடன் தொடங்கி கோலரிட்ஜ் வழியாக எலியட் ஒரு மையப்புள்ளியாக இரு வேறு காலக்கட்டத்திற்கு இடையே தனது விமர்சனத்தை இயக்கியுள்ளார்.

தமிழிலக்கிய விமர்சன சூழலில் இத்தகைய போக்குகள் கல்வித்துறை சார்ந்தவர்களாலும்/கல்வித்துறை சாராத சிறு பத்திரிகையாளர்களால் அதிகரிக்கவும் முன்னெடுக்கப்பட்டன.

3.

எப்.ஆர்.லீவிஸின் செயல்முறை ஆய்வை சி.சு.செல்லப்பா தனது இலக்கிய விமர்சனக் கட்டுரைகளுள் ஒரு முறைமையாக முன்வைத்தார். இது க.நா.சுப்ரமணியம் முன்வைத்த ரசனையை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய அபிப்பிராய கோட்பாட்டுக்கு எதிராக, ஓரளவு சரியான முன்மாதிரியை வைத்தது. இதன் பிறகு இலக்கியத்தில் அகம் என்பதைக் குறித்த கருத்துக்களில் மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றவர்கள் பொருளாதாரம் என்ற கீழ்க்கட்டுமானம்/மேல்க்கட்டுமானம் கலாச்சாரத்தை நிர்ணயிக்கிறது என்று எழுதினர். இதிலிருந்து விடுபட்டக் குரலாய் கோவை ஞானி பொருளாதாரக் காரணிகளுடன் ‘ஆன்மிகம்’ என்ற கலாச்சாரக் காரணியும் அகத்தைக் கட்டமைக்க முற்படுகிறது என்று கூறி மார்க்சிய இறுக்கத்தைத் தளர்த்தினார். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக தமிழவன்  ‘ஸ்டரக்சுரலிசம்’ என்ற நூல் அகம் என்பதை ஒரு மொழிக் கட்டமைப்பாகக் காண விழைந்தது. சொல்லாடல் ஆய்வு முறை, கட்டவிழ்த்தல் ஆகிய இவை இரண்டும் விமர்சனத்தை பருண்மைப் பகுப்பாய்வு ஆக மாற்றியுள்ளது. இதன் பிறகு பின்-அமைப்பியல் வாதம், பின்-நவீனத்துவம் ஆகியவை இன்று தமிழிலக்கியத்தில் அகம் என்பதைக் குறிப்பீடு செய்ய பல்வேறு வகையான மொழிசார்ந்த கோட்பாடுகளை முன்வைத்து வளர்ந்துள்ள நிலையில் சிறுபத்திரிகை மரபில் வந்துள்ள முரளி அரூபன் தமிழாக்கம் செய்துள்ள டி.எஸ்.எலியட்டின் கட்டுரைகளை வாசிப்பது நமக்கான விமர்சன முன்மாதிரிகளை அமைத்துக்கொள்ள பெரிதும் உதவும்.

4.

உதவிய நூல்கள்

1.Post Structuralist Readings of English Poetry.
-Edited by Richard Machin and Christopher Norris.

2. Poetry As Discourse
-Anthony Easthope

3.The Literary Critics
-George Watson

4. Technologies of the Self
-A Seminar with Michel Foucault

5. Nation and Narration
-EditedbyHomi. K.Bhabha

6.The Order Of Things
An Archaeology of the Human Sciences.
-Michael Foucault

7. The Ideologies of Theory Essays
1971-1986) Volume-2, Syntax Of History
-Fredric Jameson

8.Sacred Wood
-T.S.Eliot

9.On Poetry and Poets
-T.S.Eliot

10. The Varieties of Metaphysical Poetry
-T.S.Eliot
Edited and Introduced by Ronald Schuchard

11. The Fontana Post-Modernism Reader
Epilogue:
The End and Beginning of Enlightenment
-Edited by Walter Truett Anderson

12. Tristes Tropiques
-Claud Levi-Strauss
Translated from the French by John Russell

13. The Lyotard Reader
The Dream-work does not Think.
-Edited by Andrew Benjamin.

14. ஸ்டக்சுரலிசம்
–தமிழவன்

எஸ்.சண்முக – கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர். சமீபத்தில் இவரது கவிதைத்தொகுப்பு “முன் மாதிரிக் கயல்” வெளியானது. இக்கட்டுரையானது டிசம்பர் 2008ல் வெளியான கதைமொழி நூலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆசிரியர் தொடர்புக்கு : – s.shanmugam65@gmail.com

சயந்தன் – நேர்காணல்

2

நேர்கண்டவர் : அகர முதல்வன்

மகால ஈழ எழுத்தாளர்களுள் சயந்தன் குறிப்பிடத்தகுந்தவர்.”ஆறாவடு” நாவலின் மூலம் வெகுவாக அறியப்பட்ட இவரின் இரண்டாவது நாவலான “ஆதிரை“(தமிழினி பதிப்பகம்)  ஈழப்படைப்புக்களில் முக்கியமான வருகை. நாவல்களை மட்டுமல்லாது சிறுகதைகளையும் எழுதும் சயந்தனின் மிக அண்மைய சிறுகதையான “பூரணம்” விவாதத்திற்கு உள்ளானது. ஆதிரை என்கிற பெயரில் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்போது தன்னுடைய மூன்றாவது நாவல் எழுதும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.

புலம்பெயர் தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது

நாம் மீண்டும் மீண்டும் தமிழ் (தமிழக) அறிவுலகச் சூழலை மட்டுமே சுழன்று வருவதாக எனக்குத் தோன்றுகிறது. புலம்பெயர்ந்து நீங்கள் வசித்துவரும் நாட்டின் அறிவார்ந்த தரப்பினரோடு உங்களுக்கு கலைவழித் தொடர்புகள் ஏதேனும் உண்டா? உங்களுடைய ‘ஆதிரை’ நாவலை அந்த நாட்டு மொழியில் மொழிபெயர்க்கலாம் அல்லவா?

மொழி ஒரு முதல் சிக்கல். ஆங்கிலப் பரிச்சயம் இருந்தது. ஆனால் ஜெர்மன், பிரெஞ்சு மொழிகள் அவ்வாறல்ல. அவற்றைக் காதால்கூட முன்னர் கேட்டதில்லை. அதனாலேயே அவற்றில் நுழைய நிறையச் சிரமம் இருந்தது. அதிலும் புலம்பெயர்ந்தவுடனேயே எதிர்கொள்கின்ற தஞ்சக் கோரிக்கை இழுபறிகள், வேலைப்பளு, அசட்டை போன்றவற்றாலும் மொழியில் ஆழமாகக் காலூன்ற முடியவில்லை. அன்றாடச் சீவியத்திற்குப் போதுமான அளவிலேயே ஜெர்மன் மொழியை அறிந்து வைத்திருக்கிறேன். அதிலும் வாசிப்பென்பது இலவசப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளைப் படிப்பதோடு முடிந்து விடுகிறது. ஜெர்மனிய இலக்கியம், ஜெர்மனிய எழுத்தாளர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. இந்தத் ‘தெரியாமை’ தனியே இலக்கியத்திற்கு மட்டுமென்றில்லை. புலம்பெயர்ந்த நாட்டின் சமூக, அரசியல் விவகாரங்களில்கூட எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இங்கே நடைபெறுகிற ஒரு கூட்டாட்சி அரச தேர்தலை விடவும் இலங்கையிலும், இந்தியாவிலும் நடைபெறுகிற உள்ளூராட்சித் தேர்தலில் ஆர்வமாயிருக்கிறேன். இலங்கையாவது நான் பிறந்து வளர்ந்த நாடு. இந்தியத் தேர்தலை எதற்காகக் கவனிக்கிறேன் என்பது இன்னமும் புரியவில்லை. இவ்வாறாகத்தான் புலம்பெயர்ந்த முதல் தலைமுறையில் பெரும்பாலானவர்கள் வாழ்கிறார்கள்.

இலக்கியத்தில் நாங்கள் தமிழகச் சூழலைச் சுற்றி வருகிறோம் என்கிறீர்கள். ஒரு கவனிப்பு உள்ளதென்பது உண்மைதான். அது எழுத்திற்கா அல்லது ‘ஈழத்தமிழருக்கா’ என்பதை உரையாடிக் கண்டடைய வேண்டியிருக்கிறது. 2009இற்குப் பிறகு ‘இரக்கத்துக்கு உரியவர்கள்’ என்ற பரிவின் கீழ் ஈழ எழுத்துக்கள் தமிழகத்தில் கவனிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இலக்கியத்திற்கு கறாரான மதிப்பீடுகள் அவசியம் என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு நாம் வியக்கின்ற இலக்கியங்களை அவ்வாறான மதிப்பீடுகளின் வழியேதான் கண்டடைந்தோம். மதிப்பீடுகளின் கடுமையை ‘பாவப்பட்ட சனங்கள்’ என்று கருதித் தணிக்க வேண்டியதில்லை. பாவப்பட்ட சனமாயிருப்பதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. இதேவேளை தமிழகத்திற்குள் நுழைந்துதான் பின்னர் அதற்கு வெளியே போகவேண்டிய ‘கள நிலவரத்தை’யும் பதிவு செய்கிறேன். ஷோபா சக்தியை எனக்கு சாரு நிவேதாதான் கோணல் பக்கங்களில் அறிமுகம் செய்தார். தமிழ்நதியை பிரபஞ்சன் அடையாளம் காட்டினார். தமிழகம் வியந்த பிறகே ஈழம் தன்னுடைய பிள்ளைகளைக் கவனிக்கிறது என்பது என்னுடைய ‘மனப்பிராந்தியாக’ இருந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே. 

ஆதிரை மொழிபெயர்ப்பு பற்றிக் கேட்டிருந்தீர்கள். அது ஆறாவடுவுக்கு நிகழ்ந்திருக்கிறது. ஒரு தற்செயல் நிகழ்வாக. எவெலின் மாசிலாமணி என்பவர் தமிழிலிருந்து ஜெர்மனுக்கு மொழியாக்கம் செய்பவர். சுவிற்செர்லாந்தைச் சேர்ந்தவர். காத்தவராயன் கூத்திலிருந்து ஜெயமோகன் வரை மொழியாக்கம் செய்துள்ளார். அவர் ஆறாவடுவை மொழிபெயர்க்க முன்வந்தார். இரண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்தன. ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்தித்தேன். கீழைத்தேய பகைப்புலத்தை மேற்கிற்குத் தருவதில் எழுகிற சிக்கல்களையெல்லாம் அனுபவித்தேன். இறுதியில் என்னால் வாசித்துப் புரிந்துகொள்ள முடியாத ஆனால் என்னுடைய பிரதியை கைகளில் வைத்துப் பார்க்கின்ற அனுபவம் அலாதியாகத்தான் இருந்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாக வேண்டியது. கோவிட் 19 சற்றுத் தள்ளிவைக்கக் கூடும். ஆறாவடு ஜெர்மனில் வெளியான பிறகு ஆதிரையை மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும் என்பது என்னுடைய நம்பிக்கை.

ஈழப் படைப்பாளிகளின் சமகால இலக்கியத்தில் ‘ஆதிரை’ நாவலும் மிக முக்கியமானது. அந்த நாவலை எழுதிய காலங்களில் நினைவுகளின் வழியாக தாயகத்திற்கு மீளத்திரும்பும் வாதையை கண்டிப்பாக அனுபவித்து இருப்பீர்கள். ஒரு புலம்பெயர் படைப்பாளியாக அந்த வாதை இரத்தத்தை காயப்பண்ணும் அளவிற்கு கொடூரமானது. எப்படியான உணர்வுகளும் கொந்தளிப்புகளும் உள வீழ்ச்சிகளும் அந்த நாட்களில் இருந்தன?

ஈழப்போரில் என்னுடைய குற்ற உணர்ச்சியே ஆதிரை நாவல். கடைசி நாட்களில் ‘கைவிடப்பட்ட சனங்கள் யார்’ என்ற கேள்வி என்னில் குமுறியபடியே இருந்தது. அதுவோர் எரிமலைக் கொதிநிலை. எல்லோருக்குமான விடுதலைப்போரின் இறுதிமுடிவில் அதன் வெம்மையை, கருகிய எரிவை, இரத்த வெடுக்கை ‘ஏழைகளும் நலிந்தோரும்’ மட்டுமே அனுபவிக்க நேர்ந்ததை ஒரு தற்செயல் நிகழ்வென்று சமாதானமாக இயலவில்லை. சமூக, பொருளாதார படிநிலைகள் ‘போருக்குள் விளையாடிய’ உண்மை அறைந்து கொண்டேயிருந்தது. குரூரமாகப் பல் இளித்தது. இறுதி யுத்தத்தில் அகப்பட்டவர்களில் இந்திய வம்சாவழியினரான மலையக மக்கள் நாற்பது வீதத்தினர் என்று புள்ளிவிபரம் சொல்கிறது. அட்டை உறிஞ்சிய பிறகு மீந்த இரத்தத்தை தமிழீழ விடுதலைக்காக எங்களுடைய நிலங்களில் அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பாய்ச்சியதை அரசியலிலும், இலக்கியத்திலும் யாரும் கவனப்படுத்தவில்லை என்பதை ‘தவறுதலாக நிகழ்ந்துவிட்டது’ என்றா கூறமுடியும். இல்லை. விடுதலையின் முழுமையான ‘கிரெடிட்’ஐ தன்னுடையது என்று சொல்ல ஆசைப்பட்ட ஒரு சமூக மனநிலையே இதற்குக் காரணம். இது குற்றம் சுமத்தப்பட வேண்டிய மனநிலை. இது கேலி செய்யப்பட வேண்டிய மனநிலை. தாழாக் குற்ற உணர்வும், ஆயிரம் கேள்விகளும், சுய கேலியுமே ஆதிரை ஆனது. ஆதிரையை ஒரு புலம்பெயர்ந்த மனோநிலையோடு நான் எழுதவில்லை. அது எழுதப்படுகின்ற போதே மூன்று தடவைகள் அந்த நிலங்களுக்குச் சென்றிருந்தேன். கதை மாந்தரோடு பேசியிருக்கிறேன். அவ்வாறு ‘விடுப்புக்’ கேட்பதுவே குற்ற உணர்வு மிகுந்த அனுபவம்.

ஆதிரையை நிறைவு செய்யும்போது என்னைப் பீடித்திருந்த குற்ற உணர்ச்சியிலிருந்து வெளியேறுவேன் என்று நினைத்திருந்த போதும், ‘குருதிச்சேறில் நனைந்திருந்த கழுத்திலிருந்து ஆதிரை சயனைட் குப்பியை இழுத்தாள்’ என்ற இறுதி வரியை எழுதி முடித்தபோது முப்பது ஆண்டுகளாக என்னோடிருந்த சனங்களை மறுபடியும் கைவிட்டு வந்த உணர்வே என்னை ஆட்கொண்டது.   

புலம்பெயர்ந்து வாழும் சனங்களிடையே கடுமையான சாதிய மனோபாவங்கள் தலையெடுப்பதாக அறிய முடிகிறது. தாயகத்திலும் தான். மேற்கத்திய கலாச்சாரச் சூழலோடு தம்மை இணைத்துக் கொண்டாலும் இவ்வாறான சாதியை மனநோயை விட்டு ஏன் விலக மறுக்கிறார்கள்? உங்களுடைய அனுபவத்தில் இதனை எவ்வாறு எண்ணுகிறீர்கள்?

நிலத்தை மாற்றிக் கொள்வதால் தமிழ்ச்சமூக மனதில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்படுமென எதிர்பார்ப்பது வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்பதைப் போன்றது. இரண்டாயிரம் வருடங்களாக நிலங்களையும், மதங்களையும், பண்பாட்டு மாற்றங்களையும் சந்தித்து வந்தபோதும் ஒரு சின்னக் கீறு தன்னும் படாமல் காவி வந்த சாதிய மனோபாவத்தை ஒரு புலம்பெயர்வு அழித்து விடாது. தாய் நிலத்தில் சாதி என்ன நிலவரத்தில் உள்ளதோ அதேதான் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உண்டு. அதை சாதி மேற்கத்திய வெர்சன் 2.0 என்று பெயரிடலாம். சக மனிதர்களிடம் ஒரு சமூக அதிகாரப் படிநிலையை அனிச்சையாக உணரும் சாதிய மனோநிலையோடு இங்கு நிறைய மனிதர்கள் உலாவுகிறார்கள். இதற்காக வெட்கித்து, குற்ற உணர்வு கொண்டு இதிலிருந்து வெளியேற சமூக அறிவை வளர்த்துக் கொள்ளும் கூர்மையையும் அவர்களிடம் நான் காணவில்லை. பெரியாரை உள்ளே அனுமதிக்காதே.. அம்பேத்கரை வெளியே அனுப்பு. தலித்தியத்தை எதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கூச்சல்கள்தான் அதிகமாயிருக்கின்றன. ஒரு தர்க்கத்திற்காக தேசியம் என்ற எண்ணக்கருவை மேற்கில் இருந்துதான் பெற்றோம் என்று வாதாடினால்… வாதாடி என்ன ஆகப்போகிறது.. அடுத்த கேள்வியைக் கேளுங்கள்.. 

தமிழ் தேசியம் தொடர்பான உங்களுடைய நிலைப்பாடு என்ன? அதனை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

ஓர் அடையாள அரசியலாகவே தமிழ் தேசியத்தை உள்வாங்கினேன். எந்த அடையாளத்தின் பொருட்டு தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் ஒடுக்கு முறைக்கு உள்ளானார்களோ அதே அடையாளத்தை ஒரு கூட்டுச்சக்தியாக, கூட்டு எதிர்ப்பாக முன்வைக்க வேண்டியிருந்தது. இன்றைக்கும் அதைச் சார்ந்தே நிற்கின்றேன். அதற்குள் நின்றே பின்வருவனவற்றைப் பேசுகின்றேன். இங்கே தமிழ் தேசியத்தையும் பழைய ஆண்ட பரம்பரைக் கனவுகளையும் ‘ஒண்டடி மண்டடியாகக்’ குழப்பிக்கொள்வோரே அநேகம். அடக்குமுறைக்கு எதிராக ஆதிக்க உணர்வால் போராட முடியாது. நான் ஒடுக்குமுறைக்கு எதிரான திரள் வடிவம் என்ற வகையிலேதான் தலித்தியம், பெண்ணியம் போன்ற அரசியல் சிந்தனைகளையும் புரிந்து கொள்கிறேன். அவற்றைக் ‘கருவியாகப்’ பயன்படுத்துகிற தரப்புக்களில் கேள்விகள் உண்டு. உதாரணமாக 2010இல் ஈழ வடபுலத்தில் தலித்தியச் சிந்தனைகளுக்கூடாக மக்களைத் திரட்டி மகிந்த ராஜபக்சவுக்கு ஓட்டுச் சேர்க்க முயற்சித்தார்கள். அவர்களுக்கு புலி வெறுப்பின் உச்சத்தில் அதற்கொரு வடிகாலாக மகிந்த ஆதரவு இருந்ததேயன்றி வேறு காரணங்கள் இருக்கவில்லை. இப்படியானவர்களில் சந்தேகங்கள் உண்டே தவிர தலித்தியச் சிந்தனைகளில் ஒரு சிறு சந்தேகமும் இல்லை. இவை தமிழ் தேசியத்தின் சமாந்தரமான பயணிகள். ஒன்றுக்கொன்று நட்பு முரணோடு இயங்க வேண்டியவை. ஆனால் தமிழ் தேசிய இனத்திற்குள் நடக்கின்ற சமூக, பால், வர்க்க அசமத்துவங்களில் தமிழ் தேசியம் கள்ள மௌனம் சாதிக்கின்றது. மௌனத்தினால், உள்ளிருக்கும் ஒடுக்குமுறையாளர்களின் பக்கத்தில் நிற்கிறது. அது ஒடுக்கப்பட்டவர்களுடைய அருகில் ஓர்மத்தோடு குரல் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசையை தேசியத்தைக் குலைக்க நினைக்கும் சதி என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஒரு பொது எதிரிக்கு முன்னால் இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்கிறார்கள்..

தமிழ் தேசியமும் தலித்தியமும் சமாந்தரமான பயணிகள் என்றேன். அவற்றை எதிர் எதிர் துருவங்களுக்குத் தள்ளிவிடும் சக்திகளில் அவதானத்தோடு இருக்க வேண்டும். ‘ஈழத்தின்’ தமிழ் தேசியப் பயணத்தில் எல்லோருடைய வியர்வையும் உண்டு. எல்லோருடைய இரத்தமும் உண்டு. ஒருநாளைக்கு தமிழ் தேசியப் பலம் ‘தீர்வை’ கண்டடைகிற போது அது எல்லோருக்கும் உரியது.. இந்நிலையில் முன்னரே ‘தரப்புகளை’ வெளியேற்றுவது தமிழ் தேசியத்தின் ‘உள்ளிருக்கும் மேலாதிக்க மனநிலைக்கே’ சார்பாகி விடும். கவனம் தேவை.  

தமிழ்தேசியம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு துணையாக நிற்கவில்லை என நீங்கள் கூறுகிறீர்கள். அப்படி பொத்தாம் பொதுவாக வரையறை செய்யமுடியாதென கருதுகிறேன். தேசியம் என்பதே முழு ஜனநாயகமும்,சமத்துவமும் கொண்டதுதான். ஈழத்தில் இருக்கும் தமிழ் தேசியமானது ஆக்கிரமிப்பிற்கு எதிரானது. நீங்கள் இப்போதிருக்கும் (புலிகளுக்கு பின்னரான காலம்)  தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய அமைப்பாக கருதி இந்த முடிவுக்கு வந்திருக்கிறீர்களா?

தேசிய எண்ணக்கரு ஜனநாயகத்தை உள்ளடக்கியது. அதனால்தான் தமிழ்ச் சூழலில் அநேகம் பேருக்கு தேசியம் புரிவதேயில்லை என்கிறேன். நம்மில் பலர் தமிழ் தேசியம் என்பதை சிங்கள ஆமியைச் சுடுவது என்றே புரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நான் சொல்வதுண்டு. ஈழத்தில் தமிழ் தேசியம் ஆக்கிரமிப்பிற்கு எதிரானது என்கிறீர்கள். ஆம். அது சிங்கள பேரினவாதச் சிந்தனைக்கு எதிராக தூலமான முறையில் போராடியிருக்கிறது. எதிர்த்து நின்றிருக்கிறது. நன்று. ஆனால் தனக்குள் நிகழும், சமூக, பால், வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியிருக்கிறதா.. குரல் உயர்த்தியிருக்கிறதா.. மகளிர் தின நிகழ்வுகளையும் மே தின நிகழ்வுகளையும் சான்றாகச் சொல்லாதீர்கள்.. அவை வெறும் சடங்குகளாகி நாளாகிவிட்டன. சென்ற வருடம் வடபுலத்தில் வரணியில் ஒரு கோவிலில் வெளிப்படையாக சாதி அடிப்படையில் ஒரு பிரச்சனை வெடித்தது. தாழ்த்தப்பட்டோர் தேர் இழுக்கக்கூடாதென்று இயந்திரத்தை வைத்து இழுத்தார்கள். இது செய்தியாகிய போது தமிழ் தேசியக் குரல்கள் ஓர் அலையாக நியாயம் பேசவில்லை. அப்போது தமிழ் தேசியம் யாருடைய குரல் என்று சந்தேகம் எழுமல்லவா… அல்லது யாருக்கோ அச்சப்படுகிற குரல் என்று தோன்றுமல்லவா.. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மட்டும் முன்வைத்து இதைப் பேசவில்லை, மொத்த சமூக வெளியையும் அவதானிக்கிறேன். புலிகளுக்குப் பிறகான பத்தாண்டுகளில் தமிழ்த்தேசியம் தன்னை முற்போக்காக வெளிப்படுத்தவேயில்லை. அவ்வாறானால் புலிகளுடைய காலம் எப்படியிருந்ததென்று ஒரு கேள்வி உருவாகும். சாதிக்கெதிரான ஒரு கருத்தியல் அறிவூட்டலை புலிகள் முன்னெடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதில் அவர்கள் வேண்டுமென்றே தங்களுடைய அதிகாரத்தை மட்டுப்படுத்திக் கொண்டார்கள் என்று புலப்படுகிறது. ஆயினும் சாதிய வன்முறைகளை, சாதிய ஒடுக்குமுறைகளை அவர்கள் கடும் குற்றங்களாக சட்டத்தில் பிரகடனப்படுத்தியிருந்தார்கள். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அவை முன்னரே குற்றச்செயல்கள் என்றாலும்கூட புலிகள் அதை மிகத்தீவிரமாக அணுகினார்கள். மேற்சொன்னதைப் போன்ற தேர் இழுப்பதில் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை புலிகளுடைய காலத்தில் வேறு மாதிரியே தீர்ந்திருக்கும். அது ஒடுக்கப்பட்டவர்களுடைய தரப்பில் பெறுமதியானது. இந்த ‘பெறுமதி’ என்ற வார்த்தையைக் குறித்துக் கொள்ளுங்கள். இன்னொன்று புலிகளுடைய காலத்தில் தலித்திய அரசியலுக்கு எதிரான ‘கேலிக் குரல்கள்’ தமிழ் தேசியப் பரப்பிலிருந்து வெளிப்பட வாய்ப்பே இல்லை. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு முற்போக்குத் தமிழ்  தேசியம் பற்றிய சிந்தனைகள் எனக்கு இருந்தன. உள்ளிருக்கும் அசமத்துவங்களுக்கு எதிரான போக்குடைய ஒரு தமிழ் தேசியக் கனவு அது. இருக்கின்ற தமிழ் தேசியத்திலிருந்து இன, பால், சமூக, வர்க்க ஒடுக்குமுறைக் கருத்துக்களை வெளியேற்றுகிற வேலைத் திட்டங்களை யோசித்திருக்கிறேன். எதுவானாலும் இறுதியில் அயர்ச்சியே எஞ்சுகிறது. 

ஈழப்போராட்டம் இன்றைக்கு சந்தித்திருக்கும் ஜனநாயக வழியிலான அணுகுமுறைகளும் தேக்கம் அடைந்து இருக்கின்றன. குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் சடங்கியல் ரீதியாகவும், உணர்வெழுச்சி புகை மூட்டத்திற்குள்ளும் நீதிக்கான அறிவார்ந்த அரசியல் போராட்டத்தின் கொதிநிலை இன்று  தணிந்து போய்விட்டது போல தோன்றுகிறதே?

ஈழப்போரில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதி காலம் தொட்டே கொடையாளர் பாத்திரம்தான் உண்டு. இதை என்னுடைய பதிநான்கு வருட புலம்பெயர் வாழ்வின் அனுபவத்தில் சொல்கிறேன். ஒரு காலத்தில் புலம்பெயர் நாடுகளில் தமிழர்களுடைய கூட்டுச் சிந்தனையை ஓர் அரசியல் திரளான சக்தியாக்கி சர்வதேச அரசியலில் செல்வாக்குச் செலுத்தமுடியுமென்று நம்பியிருந்தேன். அது நான் புலம்பெயர்ந்திருந்த ஆரம்பக் காலங்கள். அதனால் ‘உருளுதாம்… புரளுதாம்..’ போன்ற நம்பிக்கைகள் எனக்கிருந்தன. நாடு கடந்த அரசு பற்றிய எண்ணக்கருவை வியந்திருக்கிறேன். அது செயல் வடிவம் பெற்ற சில ஆண்டுகளிலேயே ‘சிரிப்புக் கம்பனி’ ஆகிவிட்டது. என்னுடைய ஒரு நண்பர் அண்மையில் கீழ்வருமாறு சொன்னார். ‘புலம்பெயர்ந்த சனங்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளோடு உறவுகளை ஏற்படுத்தி அங்கிருக்கின்ற அரசியல்வாதிகளோடு ‘லொபி’ வேலைத்திட்டங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் இலங்கையில் இருக்கின்ற சுமந்திரனோடும், கஜேந்திரகுமாரோடும் ‘லொபி’ செய்து கொண்டிருக்கிறார்கள்’ உண்மைதான். புலம் பெயர்ந்த தமிழர்கள் ஓர் அரசியல் சக்தியே கிடையாது. கேள்வியில் குறிப்பிட்டதைப்போல நினைவுச் சடங்குகளையே அவர்களால் செய்ய இயலும். இதை ஒரு குற்றச்சாட்டாக நான் கூறவில்லை.

உங்களுடைய மூன்றாவது நாவலை எழுதி வருகிறீர்கள். புலம்பெயர்ந்து வாழும் நிலத்தின் கதையை எழுதுவதாக நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். மிக முக்கியமான நகர்வாக நான் இதனைக் கருதுகிறேன். ஒரு படைப்பாளி அவனுடைய ‘அலைந்துழல்’ ஜீவிதத்தில் ‘அகதி’  நிலையில் இருந்து எழுதும் புனைவாக அதனை நான் எதிர்பார்க்கிறேன். வெளிவரவிருக்கும் நாவல் குறித்து  பகிர்ந்து கொள்ளுங்களேன்?

வாழும் நிலத்தின் கதையென்று சொல்ல மாட்டேன். ஆனால் கதை வாழும் நிலத்தில் நிகழ்கிறது. தொடக்கத்தில் குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுக்களும் கேட்காத ஒரு நாவல் என்று தீர்மானித்திருந்தபோதும் முடிவில் அது நிராசையாகத்தான் முடிந்தது. முதலாவது நாவலான ஆறாவடு, செய்திகளின் தொகுப்பு என்றொரு விமர்சனம் இருந்தது. அது பகுதியளவிற்கு உண்மையானது. வரலாற்றுச் செய்திகளே அதில் பெருமளவுக்குக் கதையாகவும் நிகழ்ந்தது. ஆதிரையில் வரலாறு மேடையின் பின்திரைச் சேலை போல் இருந்தது. புதிய நாவலில் வரலாற்றைச் சொல்லும் இலக்கிய நாட்டத்திலிருந்து விலகியிருக்கிறேன். மிகுதியை நாவல் வெளியானதும் நீங்களே சொல்லுங்கள்.   

ஈழத்தின் இலக்கிய விமர்சனத்துறையானது, க.சிவத்தம்பி, க.கைலாசபதி போன்றவர்களுக்கு பின்னால் நிகழ மறுத்துவிட்டதன் காரணமாக எதனைக் கருதுகிறீர்கள்? இப்போது வெளிவரும் பெயரளவிலான விமர்சனங்கள் கடுந்தனிமனித வெறுப்புகளை மட்டுமே கொண்டிருப்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

விமர்சனத்துறை என்றில்லை, புதிய கோட்பாட்டுச் சிந்தனைகள், புதிய மொழிபெயர்ப்புக்கள் எதுவுமே ஈழத்தில் இப்போது நிகழ்வதில்லை. தமிழகம் இது விடயத்தில் ஆச்சரியப்பட வைக்கின்றது. எம்மிடம் அப்படியொரு பாரம்பரியம் இல்லை. இன்றைக்கும் ஆறுமுகநாவலரைக் கேள்விக்கு உட்படுத்தினால் சைவமும் தமிழும் என்ற லேபிளுக்குக் கீழ் அவரை ஒளித்துவைக்கிற கல்விதான் நமக்குப் புகட்டப்பட்டிருக்கிறது. க.சிவத்தம்பி, க.கைலாசபதி காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கும் சமூகத்திற்குமான ‘போக்குவரவு’ சிறப்பாயிருந்தது. இலக்கிய சமூக அரசியல் விவகாரங்களில் அது சமூகத்தில் செல்வாக்குச் செலுத்தியது. உரையாடல்களை சமூகத்தில் நிகழ்த்தியது. இன்றைக்கு பல்கலைக்கழகம் அதிலிருந்து வெளியேறி விட்டது. சமூகத்திற்கும் அதற்கும் இப்போது கிலோ மீற்றர் கணக்கில் இடைவெளி உண்டு. ஆக, இவற்றையெல்லாம் வெளியிலிருந்துதான் மறுபடியும் முதலேயிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஈழச்சூழலில் தற்காலத்தில் அனோஜன் பாலகிருஷ்ணன், தர்மு பிரசாத் போன்றவர்கள் இலக்கிய மதிப்பீட்டாளர்களாக நம்பிக்கை அளிக்கிறார்கள். மற்றபடி தனி மனித வெறுப்பினால், விருப்பினால் வந்து கொண்டிருக்கும் ‘நறுக்குகள்’ வேறு திணைக்களத்தைச் சேர்ந்தவை. அவை நிலைத்தகவல் வகையானவை. எப்போதாவது இன்றைய நாளின் ஞாபகத்தில் வரக்கூடியவை. பின்னர் அமிழ்ந்து விடுபவை.     

பொதுவாக ஈழத்தமிழர் மீதான பரிவினால் மட்டுமே சில ஈழப்பிரதிகளுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பு இருப்பதாக சில பிரதிவாதங்கள் உண்டு. அப்படியான பிரதிகளுக்கு ‘கழிவிரக்க பிரதி’யென சிலர் பெயர் சூட்டியும் இருக்கிறார்கள். என்னளவில் இது கண்மூடித்தனமான வாதம். உங்களுடைய ஆதிரை நாவலுக்கு தமிழகத்தின் இந்துத்தமிழ் பத்திரிக்கை வழங்கிய விருதையும் இவ்வாறு கருதமுடியுமா? இப்படியான வாதங்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?

முதலாவது கேள்வியில் இலக்கிய மதிப்பீட்டில் கறார் தன்மை அவசியமென்று சொன்னேன். எல்லா எழுத்துக்களுக்கும் கடுமையான முதலாவது மதிப்பீட்டாளர் எழுதியவரே என்பது என்னுடைய நம்பிக்கை. நான் எழுதிய எல்லா எழுத்துக்களையும் நீங்கள் படிக்கவில்லை என்பதற்கான காரணம் ஒரு மதிப்பீட்டாளராக அவற்றை நான் வெட்டி வீசி எறிந்திருக்கிறேன் என்பதுவே. ஆகவே வெளியிலிருந்து வருகிற மதிப்பீடுகளின் ‘உண்மையான இடத்தை’ எழுதுபவரால் உள்ளுணர முடியும். அதனாலேயே சில ஈழப்பிரதிகள் ‘பாவம் பார்க்கப்பட்ட’ எழுத்துக்களாக அணுகப்படுகின்றனவோ என்ற சம்சயம் எனக்கு உண்டு. 2009இற்கு முன்னர் இப்படி நடக்கவில்லை என்பதை ஆதாரமாக வைத்தே இதைப் பேசுகிறேன். இதைப்பற்றி தமிழகத்தின் விமர்சகர்கள், மதிப்பீட்டாளர்கள் எல்லோருடனும் திறந்த உரையாடல் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இந்துவுடைய விருது குறித்துக் கேட்டீர்கள். வெளியிலிருந்து வருகின்ற மதிப்பீடுகளின் உண்மைத்தன்மையை எழுதியவரே முதலில் அறிவார் என்று முதலில் சொல்லியிருக்கிறேன். இதைக் கேளுங்கள். சில வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த கலகம் அமைப்பினர் என்னுடைய ‘பெயரற்றது’ கதைத்தொகுப்பிற்கு ‘சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான’ விருதுச் செய்தியை அனுப்பியிருந்தார்கள். அதைப் பணிவன்புடன் மறுத்திருக்கிறேன். ஆதிரைக்கும் பெயரற்றதுக்குமான என்னுடைய சொந்த மதிப்பீடுகளே ஒன்றைப் பெறவும் இன்னொன்றை மறுக்கவும் செய்தன.

செவ்வியல் தன்மை வாய்ந்த படைப்புக்களை எழுதவல்ல இடத்திற்கு ஈழத்தமிழ் இலக்கியம் இன்றைக்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று கருதுகிறேன்.இனிவரும் பத்து ஆண்டுகளுக்குள் அது நிகழுமென நம்பிக்கை இருக்கிறது. உங்களுடைய அனுமானம் என்னவாக இருக்கிறது?

எழுத்து ஒரு தவம் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனால் அது நிறைய உழைப்பைக் கோருகிறது. உலகம் வேகமாகி விட்டது. அந்த வேகம் எல்லாவற்றிலும் பாதிப்பைச் செலுத்துகிறது. பத்து வரியில் ஒரு நிலைத்தகவலை எழுதி அடுத்த அரை மணிநேரத்தில் ஐம்பது விருப்புக்குறிகளைப் பெறுவதற்கு மனித மனம் விரும்புகிறது. எழுத்தை முன் வைப்பதற்குப் பதிலாக பெயரை அடையாளமாக்குவதும், பெயருக்கு விசிறிகளைப் பெறுவதும் ஒரு நுட்பமாக மேற்கொள்ளப்படுகிறது. பிறகு எதை எழுதினாலும் உள்வாங்கப்படுமென்று நம்பப்படுகிறது. இவ்வாறான குறுக்குப் பாதைகளுக்கூடாக செவ்வியல் இலக்கியங்களை யோசித்துப் பார்க்கவே எனக்குக் கண் வேர்க்கிறது. இருப்பினும் இந்தக் கேள்வியை  நேர்மறையாக நிறைவு செய்வதற்காக செவ்வியல் படைப்புகள் வராது என்று சொல்லவில்லை. வந்தால் நன்றாயிருக்குமென்று கூறுகிறேன்.

‘கண் வேர்க்கிறது’ என்கிற உங்கள் பதிலில் இருக்கும் அங்கதத் தொனியை நான் விளங்கிக்கொள்கிறேன். செவ்வியல் இலக்கியங்கள் பற்றிய உங்களுடைய கருதுகோள் என்ன?

அது காலத்தினில் நிற்க வேண்டும்.!

தொடக்கத்தில் சிறுகதையாளராக இருந்து நாவல்களுக்குள் வந்தவர் நீங்கள், இப்போது மீண்டும் சிறுகதை எழுதுகிறீர்கள். சிறுகதை, நாவலென இவ்விரு  கலைகளுக்கும் அதனுடைய வடிவ உள்ளீடுகள் சார்ந்தும்  அமைப்புகள் சார்ந்துமே நிறைய வேறுபாடுகள் உண்டு. எதனை நீங்கள் உங்களுடைய நெருக்கமான கலையாக கருதுகிறீர்கள்?

என்னுடைய வருகை நாவல் ஊடாகவே நிகழ்ந்தது. அதற்கு முன்னர் எழுதியவற்றை எழுதப் பழகிய கதைகள் எனலாம். நாவல்தான் எனக்கு வசப்பட்ட கலை. அதில்தான் நிதானத்தையும் சுதந்திரத்தையும் உணர்கிறேன். சிறுகதை கைக்குள் திமிறுகிற ஓர் உயிரியைப்போல இருக்கிறது. நான் எழுதியவற்றில் ஒரு நான்கை நல்ல சிறுகதைகளென்று சொல்லலாம். ஒரு முறை நண்பர் சசீவன், கையில் ஒரு குறுங்கத்தியோடு அலையும் மனோநிலையில் ஒரு சிறுகதையை எழுதிவிடலாம் என்று குறிப்பிட்டார். அதனாலேயோ என்னவோ அந்த வடிவம் கை வருவதே இல்லை. ஒரு கத்தியை எனக்கு ஒழுங்காகப் பிடிக்கக்கூடத் தெரியாது.  

மழுப்பல்கள் வேண்டாம் சயந்தன். கண்ணை மூடிக்கொண்டு சொல்லுங்கள். இன்றைய இளம் எழுத்தாளர்களில் உங்களுக்கு நம்பிக்கைத் தரக்கூடியவர்களாக யார் யாரை அடையாளப்படுத்த விரும்புகிறீர்கள் ?

கண்ணைத் திறந்துகொண்டே சொல்கிறேன். யதார்த்தன், சுசித்திரா, கார்த்திக் பாலசுப்ரமணியன், சுரேஷ் பிரதீப், அனோஜன் என்று தொடரலாம். இவர்களுடைய ஒரு கதையாவது ‘அட இதை நான் எழுதியிருக்கலாமே’ என்று தோன்ற வைத்துள்ளது. 

நீங்கள் படைப்பூக்க மனநிலையில் இருந்தே புனைவை எழுதத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன். உங்களுடைய படைப்பு மனவெழுச்சியை நீங்கள் எவ்வாறு கண்டடைகிறீர்கள்? அப்படியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்?

இந்தக் கேள்விக்கு ஆழ்மனத்தின் வாசலைத் தட்டும் அனுபவம், அக மன இயக்கம், அறிந்தும் அறியாததுமான பொருண்மைத் திறன்கள் என்ற வார்த்தைகளைக் கொண்டு ஒரு மனவெழுச்சி தரக்கூடிய பதிலை எழுதலாம் என்றால், ஓர் கவிதையில் கவிஞர் இசை குறிப்பிட்டதைப்போல ‘எனக்கு ஒன்றுமே புரிவதில்லை தம்பி’ என்றுதான் தோன்றுகிறது. எழுத வேண்டுமென்ற வேட்கை நீண்ட கால இடைவெளிகளில்தான் உருவாகிறது. ஆதிரை வெளியாகி ஐந்து ஆண்டுகளாகின்றன. இடையில் மூன்று கதைகள் எழுதியிருக்கிறேன். புதிய நாவலைத் தற்போது எழுத வேண்டுமென்று தோன்றியதற்குரிய படைப்பூக்கக் காரணியை எனக்குத் தெரியாது. தொடர்ச்சியாகப் புனைவுகளும், வரலாறுகளும், சமூக அரசியலையும்  வாசித்துக் கொண்டிருப்பதால் இலக்கியம் பற்றிய என்னுடைய சிந்தனைகள் காலத்திற்குக் காலம் மாற்றமடைகின்றன. ஒருவேளை ஊற்றில் நீரைப்போல புதிய இலக்கியப் புரிதல்கள் எனக்குள் ஊறி ஊறி ஒரு முழு அனுபவமாகின்ற போது அதை ஒரு இலக்கிய வடிவமாக முன் வைக்கின்ற தாகம் ஏற்படுகின்றது எனலாம். நான் பெறுவதற்கு ஒன்றுமில்லையெனில் நான் தருவதற்கும் ஒன்றும் இல்லை.

***