Home Blog Page 96

சசிகலா பாபு கவிதைகள்

0

Displaying IMG_20130824_121558.jpg

நீலத்திமிங்கலமாய் மாறி
கடலளக்க விரும்பிய
ஒருத்தியை அறிவேன்
அவள் பேச்சில்
உப்பும் மீனும் கலந்த
மென் வாசமிருக்கும்
அவளைப் பறத்தலுக்காய்
பணித்திருந்தபோதும்
நீந்தவே பிரியப்பட்டாள்
ஈரச்சிறகுகளுடன்
நெடுந்தூரம் செல்வதையும்
எப்படியோ சாத்தியமாக்கினாள்
கடல் கடல் கடல்
என முனகியவள்
சுவாசங்களிலும்
குமிழிகள் சிதறியபடி இருந்தன
விழிகளுக்கு இமை பாரமென்றாள்
செதில்கள் அரிப்பதாயும் சொல்லியிருந்தாள்
எனக்குத் தெரிந்ததெல்லாம்
அவளின் பலவண்ணச் சிறகுகள்
மட்டுமே
முழு பவுர்ணமி நாளொன்றில்
கடற்கரையில் அவளைக்
கண்டெடுத்தபோதும்
நீலச் சேலை அணிந்திருந்தாள்
அன்று கடல் நீலமாயிருக்கவில்லை
பெரிய அலையொன்று புரட்டியதும்
அவள் உடலெங்கும்
மெல்லியதாய் முளைத்திருந்த
செவுள்களைக் கண்டேன்
உதிர்ந்துகிடந்த இறகுகளை
பொறுக்கிக் கொள்ள
கடல் மெல்ல
மேலேறி
வந்து கொண்டிருந்தது
அவளை நோக்கி

**************************

நீரைக்கிழித்துப் பயணிக்கும்
ஒற்றைப் படகில்
புதுமஞ்சள் தாலியுடன்
இருந்தவளிடம்
அருவிக்கரைச் சுழல்களில்
சிக்கி உயிரழந்தோரின்
கதைகள் சொல்லி
முத்தாய்ப்பாய்
உச்சியில் உள்ளங்கைப் பதித்து
ஆசீர்வதித்த
சாராய நெடியுடனான
அந்த பாணதீர்த்தப்
படகோட்டிப் பெரியவரையும்
வயிற்றில் கருவின்
இருப்பறியாது
ஓடித் திரிகையில்
பாதம் குத்தி உட்புகுந்த
ஏற்காடு மலை முள்ளும்
மற்றோர் முறை
காணவேனும்
நீண்ட பயணமொன்று
மிக அவசரமாய்
தேவைப்படும் பொழுதுகளிலும்
பயண சுவாரசியமாய்
கண்டடைந்து விடுகிறேன்
வனம் துறந்து
வான் கடக்கும்
அந்தச் சிறிய
நீலப் பறவையை

**************************

கோப்பைவிளிம்புகளில்
வழிகிறது கருணை
தீநா தீண்டத் தீண்ட
நவத்துவாரங்களிலும்
முளைக்கின்றன்
மேலும் நாக்குகள்
சிவப்பேறிய விழிகளில்
மட்டும் ஒளிரும் நா
இறுதித் துளி பருக
உடன் ஒரு தேவன் தேவை
இதழோரம் பிசுபிசுப்பதை
அவனிதழ் ஒற்றி எடுப்பதையே
ஆகமங்கள்
அனுமதிப்பதாய்
அவனே சொல்லியிருந்தான்
மிகு அயர்வுடன்
அவன் விலகியதும்
எஞ்சிய காலத்தில்
புதிதாய் கிளைத்தெழுகிறது
மற்றுமொரு பால் பல்
கோப்பை உடைந்து
நிலமெங்கும்
உதிர வீச்சம் பரவுங்காலை
வாயிலில் காலடியோசை
அதோ
மற்றோர் தேவன்
காத்திருப்பு
வழியும் விளிம்புகளுடன்

**************************

குறு அரம் கொண்டு
கிழித்தவள் அப்போதே
சென்று விட்டாள்
சரேலென நஞ்சுக்கொடிபற்றி
இழுத்ததும் வேலை
முடிந்திருந்தது அவளுக்கு
மிக லேசாய்
தலை திருப்பிப்
பார்த்தபோது
குழந்தை மேஜைமேல்
புரண்டு விழுந்திடுமோவென
அஞ்சியவளைப் பார்த்து
சன்னமாய் புன்னகைத்தத் தாதி
துளி நீர் பருகத் தந்து
எவருக்கோ காத்திருந்தாள்
நுழைந்தவன்
ஒரு கணம் திகைத்தான்
இயந்திரமாய் செயல்பட்டான்
கோல்களில் உயர்த்திக் கட்டிய
கால்கள்
என்ன மாதிரியான சலனம்
உண்டாக்கியிருக்கும்
மிக இளம் வயதினன்
துரித கதியாய் தையலிட்டவனுக்கு
இது எத்தனையாவது காட்சி
கசடுகள் நீங்க
அடிவயிற்றில் அழுத்தியவேளை
பீறிட்ட வலியால் தன்னிச்சையாய்
அவன் சட்டைநுனி பற்றிய
விரல்கள்
என்னவெல்லாம் சொல்லியிருக்கும்
ஒற்றைப் புன்னகையுடன்
சென்றவன் மட்டுமே
அறிந்திருந்தான்
பெண் என்பவள்
பெண் மட்டுமே அல்ல

**************************

வேர்களைச் சுமந்து
அலைவதென்பது
பாரமாய் இருந்ததேயில்லை

நான் கொட்டும் மலர்கள்
வேர்களின் வாசத்திற்காகவே
நான் உதிர்க்கும் இலைகள்
வேர்களின் நீட்சிக்காகவே
நான் பொழியும் மழை
வேர்களின் வேர்களுக்காகவே

காலத்தைச் செரித்து
காற்றை உமிழும் என்னை
பச்சையமாய்
நிலைக்க வைக்க என்
வேர்களோடே பயணிக்கிறேன்

எதனுள்ளோ தன்னை
மறைத்திருக்கும் வேர்களை
வெளியின் வெளியெங்கும்
பரவ விடுகிறேன்

பெயர்தல் என்பதும்
மற்றுமொரு சடங்காகும்
நிச்சலனப் பொழுதினிலே
என் வேர்கள்
எனக்குள் கிளைபரப்பி
எங்கும் மலர்ந்திருக்கும்!

சசிகலா பாபு

கடுக்ராண்டி மொவன்

0

கதை : ரமேஷ் ரக்சன் – 5

ஓவியம் : ஞானப்பிரகாசம் ஸ்தபதி

“அங்க பாத்தியா மாக்கான் மொவன.  வேலியோரமா சுத்திட்டு கெடப்பான்… வயக்காட்ல நிக்கான் பாரு”

“ஏய் கடுக்ராண்டி மொவன ஓணான் புடிக்க போலயா…வயலுக்குள்ள கெடக்க?”

“ஆமாணே…”

“வெளாடிட்டு திரிஞ்சப்பய அப்பன் போனதும் வயலுக்குள்ள எறங்கிட்டான்…. பொழச்சிகிட்டா சரி தான்”

“ஆத்தாக்காரியும் அவ்ளோ கூறா இருந்தமாரி தெர்லயே”

“யயே! அவ ஒரு வெள்ளந்திமட்டப்பா”

“அதும் சரி தான்”

நஞ்சை நடவேண்டும் என்பதற்காக வரப்பு வெட்டிக் கொண்டிருந்தவன், வரப்பையும் தாண்டி  ‘நங்’கென பெருவிரலைப் பெயர்த்து வைத்திருந்தான் சுடலை. சைக்கிள் க்ரீச் சத்தத்தையும் தாண்டி மேக்காற்றில் அவர்களின் சொல் காது கடந்து கிழக்கே சென்றது.

காலில் வடிந்து கொண்டிருந்த இரத்தத்தை, வரப்பினோரம் காய்ந்து கிடக்கும் தொளி்யை அள்ளி அப்பி இரத்தத்தை நிறுத்திப் பார்த்தான் நிற்கவில்லை.

கொஞ்சம் பிந்தைய நடவு தான்:

வயக்காடு என்றாலே இடுப்பிலொரு துண்டோடு அப்பாவைக் காணும் சுடலைக்கு, இன்று – அதே டவல் கொடியில் கிடப்பது சொற்களுக்குள் அடக்கிவிடும் துயரமாய் இல்லை. எச்சில் தொட்டு வைத்து விடும் அந்த விரல்களும் இல்லை. இரு தென்னை மரத்திற்கிடையே காற்றாடும் அந்த டவலின் ஒரு பகுதியை கிழித்து கட்டிவிட்டு வரப்பினோரம் அமர்ந்திருந்தான்.

தோட்டத்தின் வரப்பில் புல் மேயவிட்டிருந்த கிழவி, “அங்கன வரப்பு வெட்டிட்டு இருந்தவன காணுமே” என்று சுற்று முற்றும் பார்க்க மோட்டார் அறையின் அருகில் இருந்திருந்தான் சுடலை. காலைப் பிடித்துக் கொண்டிருந்த பாட்டிக்கு பனைமூட்டு நிழலில் இருப்பு கொள்ளவில்லை. எருக்க மூட்டில் மாட்டின் கயிற்றினை கட்டிவிட்டு அவனை நோக்கி பதறியபடி வந்தாள்.

“என்னாச்சியா? கால்ல வெட்டிட்டேன்”

ஒன் ஆத்தாகாரி தேறிட்டாளா? அப்டியே தான் கெடக்காளா?

“நேத்து ராத்திரி சோறு பொங்குச்சி… நாத்து வளருதுனு அம்ம தான் கஞ்சி ஊத்தி குடுத்துவுட்டுச்சி…”

பாட்டி கேட்பதெல்லாம் சுடலையின் அப்பா பார்த்து வந்த வேலை, அவனின் அம்மாவுக்கும் தெரியும் என்பதால் தான். மாடு இழுத்துக் கொண்டு ஓடும் பொழுதெல்லாம் கயிறு பிடித்துக் கொடுக்கும் சுடலையாகவும், வேலியோரத்தில் கண்ணி கட்டி ஓணான் தலைக்கு காத்திருக்கும் சுடலையாகவும், ஓடையில் நீந்திக்கிடக்கும் சுடலையாகவும், கள்ளிப் பழம் திண்ணும் சுடலையாகவும், தெரிந்தும் பார்த்தும் வந்த பாட்டிக்கு மனது கொள்ளவில்லை.

மூச்சு பிடிக்க வரப்பு வெட்டுவது, உரமிடுவது, காவல் கிடப்பது, மடை மாற்றுவது என சகலமும் அப்பா கூட இருக்கும்போதே பார்த்தும் என்றாவது ஒருநாள் மண்வெட்டி பிடித்து வேலை செய்வதையும் பார்த்திருந்த பாட்டிக்கு,

“பள்ளேடம் உட்டதும் மேக்கமாக்கதான வாரானுவ”

இந்த சொல்லில் இனி சுடலை இருக்கப்போவதில்லை என்று தெரியும். “இந்த வயசுல இப்டி வரப்பு வெட்டிட்டு கெடக்கானே” இந்த முணுமுணுப்போடு தான் மாட்டை எருக்கலையில் கட்டிவிட்டு வந்தாள்.

சுடலையின் அப்பா போலவே சுடலையும், நஞ்சை நடும் காலங்களில் எலிக்கு கிட்டி வைக்கும் வேலை செய்தால் பணமும் நிறைய சம்பாதிக்கலாம், இந்த வயசுக்கேற்றார் போல ஊர் சுற்றவும் செய்யலாம். அப்பா இறந்த கவலையை மறப்பதற்கு அது ஒருபாலமாக இருக்குமென்பது பாட்டியின் எண்ணம்.

“கைய பாரு பொத்து கெடக்கு… உங்க அப்பன மாரி எலி புடிச்சா நல்ல வருமானம் தான?”

கிட்டதிட்ட ஒருமாதமாகியும் வீட்டைவிட்டு வெளியேறாமல், களையெடுக்கும் வேலைக்கு செல்லாமல் கிடக்கும் அம்மா. உலை கொதிக்க வைக்க பணமில்லாத நிலையில், துக்கம் விசாரிக்க வருபவர்கள் கொடுத்துப் போகும் அந்தப் பணத்தில் எத்தனை நாள் தான் சமாளிப்பது? ஊர்க்காரர்கள் பலரும் நஞ்சை நட்டு முதல் உரமும் இட்டிருந்தார்கள். பாட்டி சொல்வதும் நியாயமாகப் பட்டது.

“ஆனா எனக்கு தான் தெரியாதே ஒரு எலிக்கு எவ்ளோ வாங்கனும்னு?”

“அது ஒன்னும் மலைய சாய்க்ற வேல இல்ல”… 50ருவா வரைக்கும் வாங்குதானுவ, ஏக்கருக்கு 20காணும் வச்சாலும் போதும் நல்ல லாவம்லா..”

“அந்திக்கு வீட்டுக்கு வந்து ஒம்மட்ட சொல்றேன் சொல்லித்தருவா.” மீண்டும் மாடு இருக்குமிடம் நோக்கி நடக்கத் துவங்கியிருந்தாள் பாட்டி. அவனுக்கும் அது பிடித்திருந்தது. வயலை யாருக்காவது “அடச்சி” கொடுத்துவிட்டு இந்த வேலையில் பணம் சம்பாதித்து கடனையாவது அடைக்கலாமென்று சுடலைக்கு எண்ணம்.

பாட்டி சுண்ணாம்பு வைத்து கட்டிவிட்ட காலோடு மீண்டும் வயலில் இறங்கி வலியோடு வரப்பு வெடடிக் கொண்டிருந்தான் சுடலை. . பதினோறு மணிவரை நின்றால் போதும் வரப்புவெட்டு முடிந்துவிடும். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

கொண்டு வந்த பழைய சாதத்தையும், பூவரசன் இலையில்வைத்து கொடுத்து அனுப்பிய ஊறுகாயும் விரித்து, இரண்டு கால்களையும் விரித்து வரப்பிலிருந்தபடி தென்னைக்கு நீர் போகும் பாதையில் அமர்ந்து பசியமர்ந்தான். மோட்டார் ரூமை அடைத்துவிட்டுச் செல்லலாமென மணி பார்க்கையில் மணி ஒன்பதரை ஆகியிருந்தது.

யோசனையின் பின் யோசனை. கால்வலியையும் பொருட்படுத்தாது சைக்கிளை உருட்டிக்கொண்டு வீட்டைப்பார்த்து நடக்கலானான் சுடலை. மழை நின்றதற்கான அறிகுறியாக ஈசல்களும் தட்டான்களும் முன்னும் பின்னுமாய் பறந்து கொண்டிருந்தது.

“ச்சொடல வரான்… சொடல வரான்”

சிலாகித்தும் சிரித்தும் வந்த சுடலையின் நண்பர்கள் சடசடவென அடித்து ஓய்ந்த மழை போல அமைதியாகினர். கொஞ்சமாய் முடி முளைத்த அந்த மொட்டைத் தலையுடன் சுடலை அவர்களைப் பார்த்தான். அவர்களோ சிரிப்பதற்கே சிரமப்பட்டனர். வேகமாய் வீடு வந்து சேர்ந்தவன் திண்ணையினோரம் இருக்கும் தூணில் சைக்கிளை சாய்த்து போட்டு விட்டு திண்ணையிலேயே தூங்கினான்.

சைக்கிள் சத்தம், திண்ணையில் ஆள் நடமாடும் சத்தம் எதையும் உணரமுடியாதவளாய் சுடலையின் அம்மா வீட்டிற்குள் படுத்திருந்தாள்.

“ஏய் பொன்னம்மா…ஏளா?”

“ஒம்மொவன் வந்து திண்ணையில தூங்குதான் அதகூட பாக்காமால இருப்ப…”

“இந்த சேலகாரபய ஓயாம ருவாய்க்கு வாரான் அவன்னு நெனச்சேன்… இவுக இருக்கும்போது தொடோடியா ( தொடர்ச்சி) 3 சீலை எடுத்தேன். அந்த ருவா அப்டியே கெடக்கு”.

மகனுக்கு இந்த சங்கடமெல்லாம் தெரியக்கூடாதென தெளிவாய் இருந்தாள் சுடலையின் அம்மா. பாட்டியிடம் சொல்லும் போதும் காதும் காதுமாய் சொல்லி முடித்துவிட்டு திண்ணையில் வந்தமர்ந்தாள்.

வயலில் வைத்து சொன்னதையெல்லாம் மீண்டும் பாட்டி சொன்னதும், சுடலை போலவே அவனின் அம்மாவுக்கும் சரியான யோசனையாய் தெரிந்தது. அதற்குள் சுடலையும் முழித்திருந்ததால் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தான். எலி பிடிப்பதற்கான கிட்டியை எல்லாம் வரிசையாய் எடுத்து அடுக்கினான்.

“காலைல ஓடைல போட்டு ஒருக்கா கழுவி எடுத்துட்டு வா… ஒன் அப்பன் வேலையை செய்ய நீ இருக்கனு அப்ப தான் நாலு பேரு தேடி வருவான் நாலு பேருட்ட சொல்லுவான்”

அப்படிச்சொன்னதும் சுடலைக்கு கொஞ்சம் பெருமையாய் இருந்தது…

வயல் வேலையை பார்த்தபடி தெரிந்தோரிடமும் கேட்போரிடமும் சொல்லி வைத்திருந்தான் சுடலை. முன்னமே தன் வயலுக்கு எத்தனை எலி கிட்டியென்று ஒவ்வொருவராய் முன் பணமும் கொடுத்த வண்ணம் இருந்தனர். நாட்கள் மிக வேகமாய் நகரத்துவங்கியது.

சரியான நேரத்தில் நடவு தொடங்கியவர்களுக்கு பால் வெடிக்கத் துவங்கியிருந்தது. சுடலையை தேடத் துவங்கினர். பணம் கைகளில் புழங்கத் துவங்கியது. பணத்தின் வரவு இருந்தும் தினசரி சீட்டுக்காரர்களும், காரியத்திற்கு கடன் கொடுத்தவர்களும் வீடு தேடி வரத்துவங்கினர்.

சிநேகிதமாய் சுடலையின் அப்பாவிடம் பழகிய பக்கத்து ஊர்க்காரர்களில் சிலர், இங்கு நடப்பதைக் கேள்விப்பட்டு, போன முறை நடவுக்கென்று வாங்கிச் சென்ற எலி கிட்டியை திரும்பக் கொடுத்து அதற்கான பணத்தையும் கொடுத்தனர். அதோடு அவர்கள் ஊரிலும் எலி கிட்டி போடச் சொல்லி கேட்டுக் கொண்டனர். சுடலை பம்பரமாய் சுழலத் துவங்கினான்.

“கடுக்ராண்டி மொவன் அப்பன மிஞ்சிடுவான் போல. சிட்டா பறாக்கான…”

காதுபடவே புகழ்ந்தனர்

வீட்டுக்கு பணம் கேட்டு வர வேண்டாமென்று தெருவிலேயே மறைத்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிழமை இவ்வளவு பணம் தருவதெனவும் சீக்கிரமே கடனை அடைப்பதாகவும், சொல்லியனுப்பினான் சுடலை. வடக்கு நோக்கியிருக்கும் அம்மன் கோவில் மதிலையொட்டி ஒரு வேப்பமரமிருக்கும் அதனருகே பணத்தோடு அமர்ந்திருப்பான். சொன்னவர்களெல்லாம் பணம் பெற்றுச்சென்றார்கள்.

கருவாடு சுட்டு, பருப்புக் குழம்பு வைத்திருந்தாள் பொன்னம்மாள். சுடலை சாப்பிட்டுவிட்டு வயலுக்கு செல்லலாமென வீட்டிற்கு வந்தான். அருகிலிருக்கும் தூணில் அமர்ந்து, சம்மணமிட்டு இருப்பதுபோல ஒருகாலை மடக்கி ஒருகாலை முட்டுகொடுத்து தலையில் வைத்திருந்தாள்

“எம்மோ”

“இந்த சேலக்காரணுக்கு எவ்ளோ குடுக்கனும்? நான் வரதுக்குள்ள இருட்டிட்டுனு ஊருக்கு போய்ட்டானாம்? இங்க வந்தானா?”

“எம்மொவன்ட்ட பேசிகிடுங்கனு சொல்லிவுட்டேன்…”

“மொத்தமா எவ்ளோனு சொல்லு நாளைக்கு வந்தாம்னா அவன கணக்கு முடிச்சி அனுப்பு…”

“எதுக்கு மக்கா?”

“ஊரு கல்லுல ஒருமாதிரி பேசுதானுவ அதான்.”

எந்த சொல் ஊர் வாயிலிருந்து விழக்கூடாது என்று பொன்னம்மாள் நினைத்தாலோ அந்த சொல் விழுந்தது. அதும் தன் மகனிடமிருந்தே விழுந்தது.

சாப்பிட்ட தட்டில் கையைக் கழுவியவன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் சாக்குகளின் மேல் கிடந்த டவலில் கையைத் துடைத்துவிட்டு வெளியேறினான் சுடலை.

“கதவ சாத்திக்கமோ… நான் வெள்ளனெ வாரேன்”

“எவஞ்சொன்னது” என கேட்டு கோபப்படவோ, சண்டையிடவோ வாய்ப்பில்லாமலிருந்தது பொன்னம்மாளுக்கு.

சொன்னது மகன்!

யோசித்தாள்..

நாளையே ஊரில் யாராவது பையனிடம் பேசிவிட்டால்! கைகலப்பு வரலாம். ஏன் கொலைகூட நிகழலாம். மீண்டும் யோசித்தாள்.

“அப்பனுக்குன்னு மொட்ட போட்ட தலைல முடி கூட மொளைக்கல. இந்தப்பயல பத்தி கொஞ்சங் கூட யோசிக்காம, ரோஷக்காரி புருஷன் பின்னாடியே போய்ட்டாளப்பா”

அதே ஊர்கல்லில் இருப்பவர்கள் பேசத்துவங்கினர் மறுநாள் …

 

 

1

       – ரமேஷ் ரக்சன்

rameshrackson@yahoo.com

ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்

1

காகிதத்திலிருந்து  துள்ளிக்குதிக்கும் எறும்பு

காலத்தின் துளைகளில்
ஒப்படைக்கும்
நீர்ப்பரப்பு மீன்களென
சொற்களின் வயிற்றிலிருந்து குஞ்சு போட்டுக்கொண்டிருக்கிறது
நொதித்துப் புரளும்
தீராப் பிரியம்
அல்லது
சாத்துயர்

***

துரிதம்

கழுத்தறுக்கப் புறப்படும் முன்
வாசலுக்கு வெளியே அழைப்புமணி இருக்கும்
அழுத்தினால்
அது பூனையின் குரலிலோ குருவியின் குரலிலோ
சப்தம் எழுப்பும்
என்பதை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

***

சாம்பல் சூடு

வழிவிடும்படியானதொரு கட்டளையில்
சிவந்து இறங்கிக்கொண்டிருக்கிறது
அந்தி விண்

கவனியாது அல்லது எதிர்த்ததுபோல்
நின்று சீண்டிப்பார்க்கும்
ஆளுயரச்சுவரில்
நினைவள்ளிப் பருகித்துடிக்கிறது

மனுஷபூதம் பிறகு அதிர்வின் பாதம்

***

–ஆறுமுகம் முருகேசன்

ஒரு மழையிரவில் . . .

1

4533312812_71cd29f313

                     ரமேஷ் ரக்சன் கதைகள் – 04

“மழை பெஞ்சாலும் அண்ணனும் தம்பியும் குல்பி விக்கிறத விட மாட்டிங்களாடா?”

“இல்ல சார் எப்பவும் வாங்குறவங்க வாங்குவாங்க. அவுங்க தான் தெனமும் கொண்டுவர சொல்லிருக்காங்க…”

“சார் பசங்கள பாத்திங்களா!? ரெகுலர் கஸ்டமர் எல்லாம் வச்சிருக்கானுங்க”

“அப்டிலாம் இல்ல சார் எங்கிட்ட நல்லா இருக்கும்னு வாங்குறாங்க…”

“அவரு கேக்காம எதும் சொல்லாதடா கேள்வியா கேப்பாரு” என்று அண்ணன் தம்பியின் காதில் முணுமுணுக்க அமைதியானான்.

“இங்க ரெண்டு குல்பி குடு!..”

“10ரூபா, 20ரூபா எது சார் வேணும்?..” தம்பிக்காரன் விலை சொல்லி முடிக்க, அண்ணங்காரன் வெண்ணிலாவும் சாக்லேட்டும் இருக்கு சார் எது வேணும் என்றான்.

“எங்கள பாத்தா பயமா இல்லயா?”

“இந்த மாதிரி எல்லாம் சின்ன பசங்க விக்க கூடாது தெரியுமா?”

“படிக்ற வயசுல படிக்காம குல்பி விக்றாங்கனு ஜெயில்ல போடலாம் தெரியுமா?”

“ஹிந்திகார படிக்கிற பசங்க எல்லாம் பாணிபூரி விக்றாங்க சார்…”

வலது கைக்கு லாவகமாய் நின்ற தம்பிக்காரன் பொடனியில் அடித்தபடி இரண்டு போலிஸ்காரர்களும் அவர்களை கடக்க ஆரம்பித்தனர்.

எப்போதும் போல எல்லோரும் போல மணியடிக்காமல், ஒரு சத்தமாகவோ தாளமாகவோ மணியடித்தால் தினமும் இரவு குல்பி வாங்கும் நபர்கள் இறங்கி வந்து வாங்கிச்செல்வார்கள். ஏனெனில் அண்ணன் தம்பி இருவர் விற்கும் குல்பி, கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது காரணமாக இருப்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. அதுமட்டுமில்லாது, அதிக பேச்சுலர்கள் வாழும் தெரு அது.
தினசரி வாங்கும் நபர்கள் மணியடிப்பது யாரென தெரியாமல், கீழ் இறங்க வேண்டாம் என்பதும் இவர்களை அடையாளம் காண்பதற்கு, ஒருத்தனுக்கான அலாரமாக இருந்த அந்த அண்ணன் தம்பிகளின் அழைப்பு, நாளடைவில் சுவையால் அந்த தெருவிலிருக்கும் எல்லா மேன்சனுக்கும் பழக்கப்பட்ட ஒன்றாகிப்போனது.

“மெதுவா சொல்லலாம்ல? அடிச்சிட்டு போறான் பாரு தேவடியாமொவன்;”

“துட்டும் தரமாட்டான்… ஓசில குடுக்க சொல்றியா?”

“ஒரு அடிதான!.. 40ரூவா மிச்சம்!..”.

சின்ன மேஜை. சுற்றும் போது எத்தனை ரெக்கைகள் இருக்குமென எண்ணிவிடும் அளவிற்கு மெதுவாய் ஓடும் ஒரு மின்விசிறி. அழுக்குத்துணிகளை தொங்கவிட இரண்டு சுவற்றை இணைத்து ஒரு கயிறு. துணிகளை துவைத்துக்கொள்ள சின்னதாய், நான்கு விரல் உயரம் அளவிற்கு சதுரமாய் கட்டப்பட்ட மற்றுமொருமூலை அதனையொட்டி ஒரு சன்னல் அதில் இரண்டு சோப்பு.

அவர்கள் பாஷையில் சொல்வதானால் உப்பு சோப்பு, மேலுக்கு போட்டு குளிக்கிற சோப்பு
அருகருகே படுத்திருந்தாலும் விடியலில் என்னவோ இருவருமே சிலுவை போலவே படுத்திருப்பார்கள்.

பக்கத்திலேயே பழக்கம் பிடித்து வைத்திருந்த தாத்தாவோடு ஒட்டிக்கொண்டவன் சின்னவன். பகலில் பழச்சாறு கடைகளுக்கு அவர் ஐஸ் கட்டிகளை கடைகடையாக போடப்போகும் போது ஒத்தாசையாக கூடச்செல்வான்.

பாலமோ மேட்டுப்பகுதி வரும் போது பின்னிருந்து தள்ளுவது. அப்படி இல்லாத சமையங்களில் ஐஸ் கட்டிகளோடு ஒருவனாய் அமர்ந்து கொள்வது.ப்ரிட்ஜ், வாசிங்மெசின் என லோடு வந்துவிட்டால், அந்த முதியவரும் சம்மந்தப்பட்டவர்களின் வீட்டில் லோடு இறக்கி வைத்துவிட்டு வாய்ப்பு கிடைத்தால் அந்த தெர்மாகோல் ஷீட்டுக்கு தலையை சொரிந்தபடி நிற்பார், சிலமுறை வாங்கியும் கொடுத்திருக்கிறார்.

உதிர்த்து விளையாட தெர்மாகோல்

ரிக்ஷா சைக்கிள் ஓட்டக்கொடுப்பது

ஒரு எப் எம் ரேடியோ

சின்னவனுக்கு விருப்பமெல்லாம், எப்போதோ ஒருமுறை உடைந்த நிலையில் கிடைத்த தெர்மாகோல் பாக்ஸ் மீண்டும் கிடைத்து விடாதா என்பது தான் அது.சொரசொரப்பான கல் ஒன்றை எடுத்து தெர்மாகோலை உராய்ந்து உராய்ந்து சின்ன சின்ன முட்டைகளாய் அரை முழுவதும் நிரப்பி விளையாடியது மீண்டும் ஒருமுறை நிகழ்ந்து விடாதா என்பது தான்.

என்னதான் அண்ணனும் தம்பியுமாய் குல்பி விற்று வந்தாலும் எப் எம் வாங்குவதற்கென அண்ணனிடம் காசு கேட்டதுமில்லை. அடம் பிடித்ததுமில்லை. அந்த முதியவருடன் செல்கையில் கிடைக்கும் 5ரூபாய் பத்து ரூபாய் என தனியாய் சேமித்து வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில், அண்ணனிடம் கூட பணம் சேர்ப்பதை சொல்லவில்லை.

“டேய் பொடியா” என்றழைத்த சற்று நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தவனை, “என்னாடா அண்ணன புடிச்சிட்டு போயிட்டாங்கனு சோகமா இருக்கியா? நாளைக்கு காலைல விட்ருவாங்களாம் எல்லாம் பேசியாச்சி. அந்த ஆளு அப்டி சொன்னானு கவலப்படாத” என்று மெதுவாய் தேற்ற முயன்றார் பெரியவர் சிறுவனை.
சின்னவன் அழத்துவங்கியபடியே எத்தனையோ இரவுகள் கேட்டும் சொல்லாத தான் பிளைக்க வந்த கதையை சொல்ல ஆரம்பித்தான்.

“எங்க ஊர்ல நாங்க ஓடு லோடு ஏத்தி விடுற வேலைக்கு, லீவு நாள்ல எங்க அண்ணன் கூட நானும் சும்மா போவேன். நாங்க மதியம் சாப்டு மரத்து மூட்ல இருக்கும்போது எங்க ஓனர் ஒரு புது கார்ல வந்தாரா…

நல்லா இருக்குனு நான் போயி பாத்ததும், எங்க அண்ணனும் பின்னாடியே வந்தான். நான் கண்ணாடிய தொட்டுபாத்ததுக்கே அந்த ஆளு என்ன கொட்டிட்டான். சும்மா தான் பாத்தோம்னு சொன்னதுக்கு எல்லாம் தள்ளி நின்னு தான் பாக்கனும் தொட்டுஎல்லாம் பாக்கக்கூடாதுனு சொல்லிட்டான் அதான் இங்க வந்தோம்..”

“இங்கையும் அந்த அப்பார்ட்மெண்ட் ஆளும் அதையே சொன்னாரா அதான் எங்கண்ணன் கார் கண்ணாடிய ஒடச்சி மாட்டிக்கிட்டான்!..”

“என்னமோ இவனுவ மட்டும் தான் கார் வாங்குறவன் மாதிரி!?.. நீங்க ரிக்ஷா ஓட்ட சொல்லி தரியளா? நானும் அப்டியே கார் ஓட்டிப்படிச்சி அப்றம் கார் வாங்குவேன்” என்றவனை இன்னும் சற்று அருகில் அமர்த்தி புது எம் எம் ரேடியோவை கையில் கொடுத்தார்.

“நீ சேத்து வச்சிருக்கல்லா அந்த ரூவாய எல்லாம் எடுத்துட்டு வா” என்று அனுப்பியதும், சேர்த்து வைத்திருந்த சில்லரையை எடுத்துக்கொடுக்க அதில் 135/- இருந்தது.

“என்னடே நேத்து ராத்திரி தான 185/- ருவா இருக்குனு சொன்ன அதுக்குள்ள 50 ருவா எங்க?” என்று கேட்க,

“நான் சரியா எண்ணாம சொல்லிட்டேன்..” -என்று சமாளித்தான்.

“இது 300 ரூவா;”, “நீ இந்த 135 ரூவாய குடுத்துரு மீதிகாசு தர வேணாம் ராத்திரி பாட்ட கேட்டுட்டே தூங்கு காலைல அண்ணன் கூட்டிட்டு வந்துரலாம்” என்று அவனை அறைக்கு அனுப்பி வைத்திருந்தார் அந்தப் பெரியவர்.

அறையில் துணிக்கயிறு மின்விசிறியில் முடிச்சிட போராடித் தோற்றிருந்தது.
ஐஸ்கட்டி அறை முழுவதும் நீராகப் பரவியிருந்தது. ஐஸ் பெட்டியைச் சுமந்து வந்த தெர்மாகோல் சின்ன சின்ன பந்துகளாய் உதிர்ந்து கிடந்தன.

1

 

       – ரமேஷ் ரக்சன்

rameshrackson@yahoo.com

அகரமுதல்வன் கவிதைகள் 2

0

மவுனித்த சொற்களிலிருந்து பேசத் தொடங்குகிறது காதல்
நீர்மை ததும்பும் ஜீவநதிக்குள் விழிகள் கிளை பரப்ப
அந்தர மிதப்பில் சிறகுகளற்று பறக்க முயலுமென்
சிந்தையில் ஊறிய உன் நிழல்
என்னையே பின் தொடரும்
சூன்ய பிராந்தியத்தின் தொடக்க கோட்டில்
உயிர் நுனி சிலிர்த்து பூக்க
பிரபஞ்சம் தாண்டிய பிரபஞ்சமொன்றின்
வேலிகளில் கொடிவிடுகிறது முத்தப்பிரமாணங்கள்
உன்னிலேயே பயணித்து
உன்னிலேயே சஞ்சரிக்கும்
மென்மையான பகலொன்றில்
காதலின் குளிர்மை செதுக்கப்பட்டிருந்தது
துயரத்தின் சூட்சுமங்கள் அறிந்திராத
குழந்தையின் அழுகையாய்
மென்மையான சுடரொழுகும் குப்பி விளக்கொன்றின்
வெளிச்சத்தில் கவிதைகள்
இருள்மை கொண்டாடும் நெடிய நாட்களால்
நீயில்லாத நிகழ்காலத்தின்
படிமங்களிலும் உவமைகளிலும்
வனங்களில் மூண்டெழும் நெருப்பின் முகம்.

*—————————————————-*

ஒரு புள்ளியிலிருந்து
என்னை வரையத் தொடங்கும் தூரிகைகள்
துயர ரேகைகளில் மிரண்டு நசுங்குகிறது
புருவ விழிப்புக்களையும்
பெரு நிலக் களம் நடந்த கால்களையும்
துப்பாக்கியின் “டிகர்”படிந்த விரல்களின்
ஜீவ ரசத்தையும்
வர்ணங்கள் விழுங்கி மறைத்துக் கொண்டன
துயரக் கயிறுகளால் சுற்றப்பட்டு
மானுடம் வறண்ட வெளியில்
முகம் உதிர
ஆற்று நீரைத் தேடிச் செல்லும்
என்னுடல் துவாரங்களில் குரூரம் கொப்பளிக்கிறது
பல்வேறு கோணங்களிலெல்லாம்
நானென எனக்கு காட்சிப்படுத்தப்படும்
சுயமற்ற ஓர் உருவம்
வலியமுக்கி மாய்கிறது
துன்பச் சிலுவையோடு அசைவுறும்
காத்திருப்பு வாழ்வில்
மிலேச்சத்தனத்தின் நிழல்கள் படிய
சிறகுகள் தேடிச் செல்கிறது
மவுனித்த எனது சுயங்கள்.

– அகரமுதல்வன்

மழையாதல்

1

எல்லார்க்கும்
எல்லாமும்
சிற்றஞ்சிறுபரல்
உதிர்க்கும்
செவ்வி
எல்லாவிடத்தும்
ஓர் மெல்லினம்
யாருக்கேனும் வாய்த்ததுண்டா
முத்தாகும் சித்தி
தைரியமாய் உகுக்கலாம்
கண்ணீரை
துடைக்க உண்டு
நீர்க்கைகள்
இரைச்சல் சங்கீதம்
மழை உணர்த்தும்
தாய்மடிச்சூடு
என்பிலதனை வெயில்போலக் காயுமே
மழையில்லா மனம்
நின் குழல் பெய்த மழை
துளிர்த்திடச் செய்யும்
நீயெனும் பூவை
யாரும் ஆகலாம்
மழை கண்டு ஆடும் மயில்

– மணிவண்ணன் வெங்கடசுப்பு

யாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் – நடைபயிற்சி 1

2
Fruit Seller - Oil on Canvas - 1963

வலிமையான புனைவினை ஏந்திக் கொண்டும், வளமையான கற்பனைகளின் மரபினைச் சுமந்து கொண்டும் பல நூற்றாண்டுகள் இருந்துவந்த ஒரு இனம், இன்று மின்காற்றாடி, ஒலிப்பெருக்கி, விளக்குகளைச் சுமந்தபடி இருக்கின்றது:-

யாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் -03
பணிக்கரின் ஓவியங்களில் அதிகம் உரையாடல் செய்யும் பாணி இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அவரது landscape மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களைக் காட்டிலும், வண்ணங்களோடு சேர்ந்து எழுத்துகளும், குறியீடுகளும் சேர்ந்த படைப்புகள் மிக முக்கியமானவை.

இந்த பாணி மீது பணிக்கர் கொண்டிருந்த நம்பிக்கை பற்றி நாமும் தெரிந்து கொண்டால் தான் அவரின் ஓவியங்களுக்கருகில் நாம் அமர்வதற்கு உதவியாக இருக்கும். மேலைநாட்டு பாணிகளில் ஏற்பட்டு வந்த தொடர்ச்சியான பரிட்சார்த்த முறைகள் புதுப்புது இசங்களை(Ism)உருவாக்கிக் கொண்டிருந்தன, அந்த காலகட்டத்தில் இந்தியச் சூழலிலும் குறிப்பிடத் தகுந்த அளவு ஓவியங்கள் அப்படியே மேலைநாட்டு பாணிகளை கடைபிடித்தே வந்தன.

பணிக்கரும் மேலைநாட்டு பாணிகளில் பரிச்சயம் கொண்டவர் தான், ஆனால் அவர் தென்னிந்தியாவுக்கென ஒரு இயக்கத்தை உருவாக்கும் உந்துலில் இருந்திருக்கிறார் என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததே. ஆக நீர்வண்ணங்களைக் கொண்டும், கோடுகள் மூலமாகவும் அவர் சில சம்பிரதாயங்களை உடைத்து விட முயற்சித்தார். உடைப்பது என்றால் தகர்த்தெரிந்து விட்டு வேறு எங்கோ ஒரு பண்டோரா கிரகத்துக்கு செல்வது போலன்று, அதை வேறு வழியில் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது ஆகும்.அவர் வண்ணங்களையும் கோடுகளையும் சிக்கனமாக பயன்படுத்த ஆரம்பித்தார், ஆனால் இந்த மினிமலிசம், அவர் உபயோகித்த குறியீடுகள் மற்றும் அடையாளங்களிலிருந்து நிறைய உரையாடல்களை, பார்ப்பவர்களிடம் நிகழ்த்தியிருக்க வேண்டும். இந்தியாவின் மிகத் தொன்மையான தாந்த்ரீகத்தில் இருந்தும், உபநிஷதத்திலிருந்தும் அவருக்கு நிறைய குறியீடுகள் கிடைத்தன.

கீழ்க்கண்ட அவ்வோவியம் (Ancestral Assertion – Oil on Canvas – 1963)வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்து, சமகாலத்துக்கு பயணிக்கும் ஒரு கடத்தி ஆனால் அவ்வளவு எளிதாக நாம் இந்த ஓவியத்தை அணுக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. தொன்மையான குகை ஓவியத்தின் சாயலில் காளை, சூரியன், சந்திரன், மீன், துலாம், பானைகளைச் சுமக்கும் ஆண் மற்றும் பெண், சில விநோதமான குறியீடுகள் (ஸ்வஸ்திக் போன்ற), ஆதி மக்களின் கடவுள் அல்லது மதகுருவைப் போன்ற முகம் ஒன்றும், சக்கரத்தை போன்ற ஒரு அச்சில் சுழலும் வண்ணம் இருக்கும் கோலம், இதை பாறை ஓவியங்களைப் போலவே செம்மண் வண்ண பிண்ணனியில் வரைந்திருப்பார், அதைப் போலவே இன்னும் சில குறியீடுகள் இருளில் இருப்பதைப் போல கருமையான வண்ணத்தின் பிண்ணனியிலே ஓவியத்தின் மேற்பகுதியில் இருக்கும். இந்த ஓவியத்தின் அழகுணர்வைத் தூண்டும் சிறப்பம்சமாகத் தெரிவது ஐந்து தலை நாகத்தின் கோடுகளே!! ஆனால் ஓலைச்சுவடிகளில் இருக்கும் பழமையான மலையாள எழுத்துருக்கள் இதில் இருந்தாலும். உங்களால் நமது முன்னோர்களின் வாழ்வினை உணர்ந்து கொள்வதற்கான வெளிகள் இந்த ஓவியத்தில் மொழி தெரியாதவனுக்கும் சேர்த்து தான் இருக்கின்றன.

 

2013-11-08_075503
Ancestral Assertion : Oil on Canvas: 1963

இதே வருடத்தில் வரையப்பட்ட மற்றொரு ஓவியமான பழ வியாபாரி(Fruit Seller – Oil on canvas) தான் எனக்கு பணிக்கருக்கு மிக அருகில் செல்ல அனுமதித்த ஓவியம். இணையத்தில் சென்று நீங்கள் பழ வியாபாரி என்று தேடினால் உங்களுக்கு நிறைய ஓவியங்கள் கிடைக்கக் கூடும். எனக்கும் கிடைத்தன – அத்தனை ஓவியங்களிலிருந்தும் இவ்வோவியம் எத்தனை தூரம்(அல்லது நமக்கு மிக அருகில் இருக்கிறது) என்று நீங்களும் தேடிப் பாருங்கள்.

 Fruit Seller - Oil on Canvas - 1963
Fruit Seller – Oil on Canvas – 1963

சிறுவர்களின் attempt போலே தோன்றும் கோடுகள் யாவும் சிறுவர்களாக இல்லாதவர்களால் வரைய இயலுமா?? உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் வரைந்திருக்கும் வீடு,மரம்,மீன்,படகு,மனிதன், மலைப் பிரதேசம், வானம் போன்றவற்றை நம்மால் இந்த வயதில் வரைந்து விட முடியுமா?? அது அவ்வளவு எளிதானதா?? இல்லை ஏனென்றால் இவை மனம் சம்பந்தப்பட்டவை. குழந்தைகள் கொட்டும் வண்ணங்களின் பிரதியை நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியாது.

முதலில் ஏன் அப்படி வரைய வேண்டும்??.
தெருவில் வந்து விற்பனை செய்யும் எந்த வியாபாரியும் நிகர எடைக்கு பில்லிங் போட்டு, லிப்ஸ்டிக் நன்றி சொல்லப் பழகியவன் இல்லை. அவன் உரையாடுவான், பேரம் பேசுவான், குடும்ப நலம் விசாரிப்பான், குதர்கம் பேசுவான், ஒரு சொம்பு தண்ணீர் கேட்பான், குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு பழம் கொசுறு தருவான். அவனது விற்பனைக் கணக்குகளில் இத்தனை விசயங்களும் அடக்க விலைக்குள் ஒளிந்து இருக்கும், அதை எப்படி உங்களால விளக்க முடியும்? ”. “சரி அடுத்த வாரம் வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லும் கணக்கின் குறியீடு என்ன?
“MENTAL PROCESS OF PICTURE MAKING” என்று பணிக்கர் சொல்லிக் கொடுத்திருக்கும் மிக முக்கியமான பாடம் இது, ஒரு கலைப் படைப்பு மன அளவில் உருவாகிவிடுகிறது அதன் Medium தான் வெவ்வேறு கலை வடிவங்களில் தென்படுகிறது. அதே சமயம் இந்த உள்பயணத்தில் (Inward Journey), ஒரு மீடியம் தீர்மானிக்கப்பட்டவுடன் அந்தக் கலை வடிவம் உருப்பெறும் முறைகள் என்னென்ன? அதற்குத் தேவையானவை யாவை?

இவ்வோவியத்தில் பழ வியாபாரி கைகளில் இருக்கும் பழத்திற்கான விலையை 56+bcqθ² என்று நிர்ணயிக்கிறான்!! அது பற்றிய தீர்மானங்கள் உங்களிடமே விட்டுவிடலாம். நான் அந்த பழச்சுமையை சுமந்து வந்த வற்றிய வயிறுடைய காளைக்கு வாங்க வேண்டிய வைக்கோலுக்கும் சேர்த்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தை அந்தக் கணக்குகளில் பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் சுவர் ஓவியங்களின் தாக்கம், பின்னர் மேலை நாட்டு பாணியில் சில லேண்ட்ஸ்கேப் , மரணம்(Death & Dog ), அமானுஷ்யம் (ghost) போன்ற படைப்புகள் மட்டுமல்லாது சமகால மனிதர்களின் பதிவையும் உருவாக்கினார் அவற்றில் பழ வியாபாரி, மீன் விற்பனை செய்பவன், புரளி பேசும் பெண்கள் போன்றன முக்கியமானவை.

எல்லாவற்றிட்கும் மேலே,  இந்தியாவின் முக்கியமான ஒரு இயக்கங்களில் ஒன்றாக Madras School of Artsஐக் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவரும், முதன்மையானவரும் KCS பணிக்கர் தான். இன்று அவரது கனவு கிராமமான சோழமண்டலத்தில் உள்ள அவரது அசல் ஓவியங்களில் அவரது கனவுகளையும், கலையமசத்தினையும் உணர்வதற்கு இடம் கிடைத்ததே, இந்த புகையால் சூழந்த நகரவாசிக்கு கிடைக்கும் புத்துணர்வுக்கான வாய்ப்பு.

அடுத்த பகுதியில் வேறு ஒரு படைப்பாளியோடு சந்திப்போம்

உங்கள் கருத்துகள் மட்டுமே, என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்

-ஜீவ.கரிகாலன்

திருக்குமரன் கவிதைகள்

0

இன்றும் கூட இப்படியாய்..

தொடுவானத் தொலைவெனினும்
தொட்டிடலாம் என்றெண்ணி
காத்திருந்தும் இன்றுவரை
கையெட்டாக் கலக்கத்தில்
கடலில் மூழ்குகின்ற
கடைசிக் கணச் சூரியனாய்
கண்கள்

விடைபெறுமந்தக் கண
வேளையிலும் எற்றியெற்றி
அடிக்கின்ற அலைகளாய்
அவள் நினைவு, மூச்சடைத்து

வெடித்த நெஞ்சிருந்து
விசிறுண்ட குருதியின்
படிவாய் ஆங்காங்கே
பரவி முகிற் தசைகள்
வாழ்ந்திருந்த காதலின்
வழித் தடமாயும் தான்,
நேத்திரத்துள் நிழலாய்
நினைவினுரு கரைகையிலே
போர்த்துறங்கிப் போயிற்று அந்தி
சோர்த்த படி
வெறித்த என் மனம் போல்
வீழ்கிறது இன்றிரவு..

எதுவுமற்ற காலை..

எதற்கும் வணங்காத காலமொன்று
எமக்கும் இருந்தது

கடல் நோக்கிப் பறந்து செல்லும்
வெள்ளைப் பறவையொன்று
கலங்கி மறைவதைப் போல
மூன்று தசாப்தத்தின் கனவு
ஒருநாள் காலையில் பார்த்த போது
கந்தகப்புகையைக் காவிக்கொண்டு
முகிலாகிக் கலைந்து போனது

உடைந்தழுத படி
ஒருக்களித்துப் படுத்துவிட்டு
மூக்கை உறிஞ்சிக்கொண்டு
மறுபக்கம் திரும்பிய போது
ஆண்டுகள் ஓடிப்போயிருந்தன

கொடுத்து வைத்தவர்கள்
அமரர்,மாவீரரென ஆக
ஊழ்வினை முடியாதோர்
உழல உயிர்  பிழைத்தது
அப்போது தான் தெரியவந்தது

குண்டுகளை வானமன்று
குடையாகப் பிடித்திருந்தும்
தன்மான வாழ்வின்
தன்னிறைவில் இருந்ததனை
எப்படித்தான் நாம் மறந்து போனோம்?

இப்போதில்
கழுத்தை நெரித்த கவட்டுக்குள்
கன்னம் தேய்த்தல் தான்
இராஜதந்திரமெனும்
பொரிமாவை மெச்சும்
பொக்கை வாய்ச்சியின் காலம்
பாத்தீனியமாய் எம்முன்னே
படர்கிறது

மறதியும் காலமும்
மனுச வழிக்காவி தான்
அதற்காக
அறணையாய் எப்படி ஆனோம் நாம்?

வீங்கிச் சிவந்த கண்ணும்
வீறிட்டழுத வாயும்
ஏங்கிய மனமுமாய் நாளை
எழுந்து நாம் பார்க்கும் போது
தேங்கியிருக்குமோ எம்
தீராத கனவு கொஞ்சம்?, இல்லை
ஓங்கி அரசதையும் மேவி
உயர வளர்ந்திருக்கு மோடா?

காலத் தூரிகை

ஊர் நினைவில் மிதப்பதற்கு
உயிர் விரும்பிக் கேட்கிறது
யார் முகங்கள், எவர் நினைவு
எழுந்து வரும்!, என அறிய
ஆசை தான் எனக்கும்,
ஆனாலும் உடனடியாய்
யோசித்த மாத்திரத்தில்
யுகத்தை முன் கொணர்தலெலாம்
வாய்ப்பில்லை, எனினுமுயிர்
வாய்விட்டுக் கேட்ட பின்னால்
ஏய்த்து, இழுத்தடித்தல்
எனக்கியலாதெனச் சொல்ல

உதட்டைக் கடித்து
ஓரமாய் விழி உருட்டி
பதட்டமின்றி மனத்தாள்
பாதையொன்றை வரைந்தாள்
ஆளற்று நீண்டு செலும்
அப்பாதை முடிவினிலே
நீலக் கடல் அகன்று
நிலம் தொட்டுப் புரள்கிறது
வானிலிருந்தெடுத்துத் தான்
வண்ணத்தைச் சேர்த்திருப்பாள்

எழுந்துவரும் என்னுடைய
ஏக்கப் பெருமூச்சை
இழுத்தெறிந்தாள் கடல் மேலே!
ஏதோ சில வெண்கோடாய்
இதன் படிமம், அப்போதே
ஆவியாய் கடல் கொஞ்சம்
அசைந்தெழுந்து வான் முட்ட
காவியத்தின் அதியுச்சக்
கட்டம் போல் விழியிருந்து
அஞ்சனத்தை எடுத்து
அப்பி விட்டாள் முகில்மேலே
பஞ்சு வண்ண முகில்
பாரமாகிக் கருக்கட்டி
பன்னீர்க் குடமுடைந்து
பளபளக்கும் துளிகளெந்தன்
கண்ணீரோடு சேர்ந்தென்
கன்னத்தில் உருளுகையில்

ஒவ்வொரு துளிகளிலும்
ஊரும், உறவுகளும்
எவ்வளவு இயல்பாக
என் முன்னே!, உயிரென்னை
கட்டி அணைத்துக்
கை இறுகப் பற்றியது
விட்டுன்னைச் செல்லேனென
விம்மியது, பூவுலகின்
காலக் கரைப்பானிந்தக்
களிமழைதான் காணென்று
கண்ணைத் துடைத்தென்னைக்
கட்டியது, காதோரம்

மழையன் பாடல்கள்
மண்ணீர மணத்தோடு
அளைந்தென்னைச் செல்கிறது
அள்ளி..

அனுக்கிரகம்..

அப்படி எதைத்தான் நீ
அகல இமை விரித்து
இப்படி உன்னிப்பாய்
எதையோ முன் தேடுவதாய்
கண்கரையில் ஈரம்
கசிந்தபடி காணுகின்றாய்?

வெண்பறவை அழகாய்
விரித்தடிக்கும் சிறகுகளில்
கண் தொற்றிக்கொண்டு
கடக்கிறதோ கடல்களினை!

வீணையை வானம்பாடி
மீட்டினால் எழுந்துவரும்
கானந்தான் ஏதுமுந்தன்
காதுகளிற் கேட்கிறதோ!

இதழாற் காதுமடல்
இழுத்துக் கடித்தபடி
பிடரிக்குள் விரலூரும்
பெருஞ்சுகத்தின் கிறுக்கத்தில்
கண்ணிருட்டிப் போவது போல்
காய்கின்ற அந்தியிலே
ஊறுகின்ற நினைவுகள் தான்
உனைக்கரைத்து விட்டதுவா!

கடற்தொடுப்பின் கரையிலுள்ள
கற்தூணில் மெல்லமெல்ல
உடற்பாரம் முதுகினிலே
ஊன்றி, தேய்த்தபடி
குந்திவிட்டாய் வினாக்குறியாய்
கூனி, கொதித்தெரியும்
எந்த வலியெனினும்
இடியாமல் அதன் சுவையை
அனுபவித்துச் சுகிக்கின்ற
அனுக்கிரகம் உனக்குளது
தனித்துப் போனாயெனும்
தடுமாற்றம் ஏதுமில்லை

யாருமற்ற கடற்கரையும்
அரையிருளும்,குளிர்காற்றும்
தூரத்தில் எங்கிருந்தோ
துமிக்கின்ற ஓரிசையும்
தாழ்ந்துயர்ந்து மிதந்து செலும்
தனித்தனிப் பறவைகளும்
வாழ்வுக்குப் போதாதா
வழி நெடுக, கை நிறைய
கட்டியணை முழங்காலை
கண் கலங்கும், பிறகென்ன
அழகான தனிமையடா
அப்படியே செத்து விடு..

புதுத்துணி

1

புதுத்துணி

                                       -ரமேஷ் ரக்சன்

heavy-anklet

“நீ என்ன மாறி சின்ன புள்ளயா இருக்கும்போது, உங்க அம்மா இப்டிலாம் வாங்கி குடுத்த்தாங்களா?… நீ எப்போ இருந்தும்மா சேல கட்டுற?!.. நான் எப்போம்மா கட்டணும்?..”

அவளுக்கு ஏதெனும் தேவை வந்துவிட்டால் உடனே அம்மாவின் பால்ய வாழ்க்கை பற்றி கேட்கத் துவங்கிவிடுவாள். அம்மாவுக்கு இது நன்றாக தெரிந்திருந்தும், எப்போதும்போல கதை சொல்லி தூங்க வைத்து விடலாமென்றெண்ணி இம்முறையும் தோற்றுப் போனாள்.

“சொல்லும்மா…?”

“இந்தமாரி நீயும் சின்னபுள்ளயா இருக்கச்ச, என் துணிய வச்சிருக்கிற மாதிரி, உனக்கும் எதும் பெட்டி வச்சிருந்தியா..?”

எப்படியும் மகள் தூங்க அனுமதிக்கமாட்டாளென நன்றாகவே தெரியும். அந்த நேரத்தில் வாய்க்கு வந்த பொய்களையும், தற்சமயத்திற்கு கோர்வையாய் வந்தவைகளையும் விறுவிறுப்பாய் ஒரு கதை வடிவில் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா. கதை கேட்க கேட்க கண் விழுந்ததே அன்றி மூடியபாடில்லை மகளுக்கு.

“அவ்ளோ தாம்மா அப்பறம் நான் பெரிய மனுஷியாகி வளந்துட்டேன்” என, அம்மா கதையை முடிக்கவும் மகள் பேசத் துவங்கினாள்.

“அப்படின்னா நான் ஒண்ணு கேக்கட்டா?..”

“ம்…”

மகள் கேட்கும் மின்னல் வேகக் கேள்வியை விட, நுணுக்கமாய் அம்மா யோசிக்கத் துவங்கியிருந்தாள், தான் சொல்லி முடித்திருந்த கதையை. அதற்குள் கேள்வியை கேட்டுவிட்டாள் மகள்.

“நம்ம நேத்து சாய்ங்காலம் ஒரு தெரு வழியா வந்தம்ல?… ”

“ம்..”

“அந்த ஸ்கூல்ல இருந்து வந்த பொண்ணுங்கல்லாம் போட்டுட்டு வந்த துணி நல்லா இருந்ததும்மா… எனக்கும் அத மாதிரி வாங்கி தர்றியா?..”

“போனவருசம் வாங்கி தந்தத விட இது நல்லாருக்கும்மா… அடுத்த வருஷமும் இதயே வச்சிக்றேன்… நெஜமா வேற கேக்க மாட்டேன்… வாங்கி தாம்மா?!” – இறைஞ்சினாள்.

யூனிஃபார்ம் வாங்கிக்கொடு என கேட்பது மூன்றாவது வருடம். எப்போதும் இல்லாமல் முதன்முறையாக எதிர்த்தும் பேசிவிட்டாள். எதிர்த்து பேசிவிட்டாள் என்பதைவிட, வாங்கி கொடுக்க முடியவில்லையே என்கிற இயலாமை மேலோங்கியிருந்தது அம்மாவுக்கு.

மகளின் கேள்விகள் எதையும் காதில் வாங்காதவளாய் யோசிக்கத் துவங்கியிருந்தாள். மேலும், அவளின் பால்ய வாழ்வும் அவளுக்கு எட்டின அறிவும் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டேயிருந்தது. அதிலொன்று-

துணிக்கடைக்குள் எப்படி செல்வது என்பது தான் அது!

எப்போதுமே மகள் கேட்காமலே, தோது வரும் போதெல்லாம் மகளுக்கென துணியோ மற்றதோ, அப்போதைக்கு கையில் புழங்கும் காசுக்குத் தக்கவாறு மகளுக்கு செய்துவிடுவது அவளின் வழக்கம்.

புது ஊர். நிறைய மக்கள் புழங்குமிடம். நவநாகரீக ஆடைகள், நிறம் வேறுபட்ட மனிதர்கள், மற்றும் புரியாத மொழிகள் எல்லாம் சேர்ந்து அவளை இப்படி யோசிக்க வைத்துக் கொண்டிருந்தது.

எப்படி இந்தத்துணியை வாங்கலாம் என்றிருந்தவள், எப்படி வாங்க வேண்டுமென ஒரு முடிவுக்கு வந்தவளாய், சரி வாங்கித்தரேன் என்று பதிலளித்தவளுக்கு, புதிதாய் ஒரு குழப்பம் மூலையிலிருந்து எழும்பி மடியிலமர்ந்து கொண்டது. யூனிஃபார்ம் ரெடிமேடாகவே கடையில் கிடைக்கும் என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது.

அதற்கொரு டெய்லர் பார்க்க வேண்டும், மகளை அளவெடுக்க வேண்டும் அதற்கெனவும் பணம் வேண்டும். இப்படியாக கேள்விகள் பிய்த்தெடுக்க, எதையோ புரிந்து கொண்டவளாய் மகள் பேசத் துவங்கினாள்.

“நீ இன்னைக்கு கயித்துமேல தட்டுவச்சி, அதுல கால்மடக்கி நடக்குறது எப்டின்னு சொல்லித் தாம்மா… நீ சொல்ற மாதிரியே செய்றேன்… அதுல எப்படியும் நெறய்ய துட்டு போடுவாங்கள்ல?.. அதுக்கு அப்பறமா துணி வாங்கிக்கலாம்..” என்று அம்மாவின் சோகம் பரவிய முகத்தினை தேற்றத் துவங்கினாள் மகள்.

தொழிலுக்கு தாயும் மகளுமாய் கிளம்பிவிட,  துணிக்கடைகளில் விதவிதமான பள்ளிச்சீருடைகள், ஹார்ன் சத்தங்களென கடந்து கொண்டிருந்தனர்.

முதற்கட்டமாய் ஒரு துணிக்கடையின் வாசலின் நிற்கும் காவலாளியைப்பார்த்து புன்னகைக்க முயன்று தோற்றாள். மீண்டும் அடுத்த கடை அடுத்ததடுத்த கடையென எல்லா கடையின் முன் நிற்கும் காவலாளியிடமும் தோற்றாள். சிரிப்பது இத்தனை கடினமாய் இருக்குமென அவள் எதிர் பார்க்கவேயில்லை;

ரோட்டோரமாய் மெஷின் போட்டு தைக்கும் டெய்லர்கள் எல்லாம் கிழிந்த ஆடைகளை தைப்பதை மட்டுமே பார்த்தவள் என்பதால் அவர்களுக்கு புதுத் துணியெல்லாம் தைக்கத் தெரியுமா என்பதில் அவளுக்கு பெரிய சந்தேகம்.  அங்கேயும் புன்னகைக்க முடியாமல் தோற்றாள்.

முந்தைய இரவின் தீர்மானம் எல்லாம் உடைவது போலிருக்க, முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தது. “தண்ணி குடுங்க” என கேட்பது போல கேட்டு விடலாம் என்ற மனநிலையை எட்டுவதற்குள்ளாகவே விடியலை நெருங்கியிருந்தது. தன்னுடைய இயலாமையில், பகல் அவளுக்கு இருட்டிக் கொண்டு வந்தது.

எத்தனை நேரம் தான் மகளும் அம்மாவின் முகத்தைப்பார்த்தபடியே நடப்பாள்…

“ஏம்மா பேசமாட்டேங்குற?..”

“எல்லா எடமும் கூட்டமா இருக்குல்ல!… இன்னைக்கு கம்பு எங்க கட்டுறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்.. இன்னைக்கு எப்டியும் கொஞ்சம் ரூவாய சேத்துறலாம் என்ன?..” என்று மகளை தேற்ற நினைத்தவளாய் நடக்கத்துவங்கினாள்.

தினந்தோறும் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறாள். வருடா வருடம் சீருடை கேட்கும் போதெல்லாம் மாறும் அம்மாவின் முக பாவனைக்கும், இன்றைக்கு அம்மாவின் முக பாவனைக்கும், ஏதோ வித்தியாசம் இருப்பவளாய் உணர்ந்தாள். யோசிக்கத் துவங்கியவள் மறுபடியும் பேசத் துவங்கினாள்.

“அந்த புள்ளைங்க இந்த காலுல மாட்டியிருக்றது… அப்பறம் இந்த முட்டி வரைக்கும் துணி மாதிரி இழுத்து விட்டுறுக்காங்கள்ல, அதெல்லாம் எனக்கு வேணாம்மா. நீ மேல போட்டுக்க பாவாடையும், சட்டையும் மட்டும் வாங்கித்தா. அந்த இடுப்புல இருக்கறது கூட வேணம்மா… ”

“நமக்கு தான் அதெல்லாம் தேவைப்படாதுல்ல..” என்றதும்,

பெரு விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் மட்டும் தான் பிடி இருக்கணும்…மற்ற நான்கு விரல்களிலும், கயிற்றின் தொடர்பு இருக்கக் கூடாதென முதன் முதலாய் சூடு வாங்கியதிலிருந்து…

ரோட்டோரம் மகளை பிரசவிக்கவிருக்கும் தருவாயில், இடுப்பு வரை ஆடை உயர்ந்திருந்தை வேடிக்கை பார்த்தவன் வரை கண்முன் நிழலாட உடைந்து அழத்துவங்கியிருந்தாள் அம்மா

 

– ரமேஷ் ரக்‌சன்

rack

ப.தியாகு – கவிதைகள்

0

ப.தியாகு – கவிதைகள்

awww !1) கடல் நாணச் செய்துவிடல்

உடைமரங்கள் சேகரித்து
கட்டுமரம் செய்துகொண்ட
சமயோசிதத்தின் முன்
நீண்ட தொலைவு காட்டி
அச்சுறுத்தும் கடலின்
பிரயத்தனம் பலித்துவிடவில்லை

அதன்பின்
வசதியாய்
நழுவிக்கொள்ள விட்டுவிட்டேன்
என் கால்களுக்குக்கீழ்
கடலை..

 

 

2)
தயக்கத்தை
முடிவுக்குக் கொண்டு வருவதென
திறந்து வழிவிடுகிறதிந்த
மின் தூக்கியின் கதவு
கிடைத்த தனிமையில்
தந்து பெறத் தவித்து
நாம் கைவிட்ட முத்தம்
இப்போது
தரைத்தளத்துக்கும்
ஐந்தாம் தளத்துக்குமாய்
அலைந்தபடியிருப்பதன்
துயரத்தை சொல்வதெனில்
அதுவொரு உபகவிதை.

 

 

3) சமாதானத்தின் மடி
catharine la rose

சதா இரையும்
உன் பேத்தல்கள் அனைத்தும்
அடக்கிக்கொண்டுவிட்டன
சிறு முனகலில்

வேட்கையோடு நீ
சரித்துக்கொள்ளும் ‘வோத்கா’
உள்ளத்து ரணங்களின்
சீழோடு வினையாற்றி
இமைப்பீலிகள் நனையப்பொங்கும் கண்ணீராகும்
வேதி விளைவுகளுக்கு
அவசியங்கள் இல்லை இனி

தங்க முட்டைகளென்று பொய்யுரைத்து
வாழ்க்கை உனக்குக் கையளித்த
வெறும் கூழாங்கற்களை
ஒற்றைத் தேகமாக்கி விட்டெறிந்து
பின் எங்குறைவாய் உயிரால்,

ஏமாற்றங்களும் வாதைகளும்
வந்து தீண்டா
மரணத்தின் மடியிலன்றி.

– (நண்பன் ராம்நாத்-ன் நினைவுக்கு)

 

 

4) வல்ல சாத்தான்

சொப்பனத்தில்
அவனுக்கு அவனின்
பத்தினியாயும்
அப்பொழுதின் நிதர்சனத்தில்
அவளுக்கு அவளின்
புருஷனாயுமிருந்து
கூடல் நிகழ்த்துகிறான்
பிசகவே பிசகாத
வியூகங்கள் அமைக்கவல்ல
சாத்தான்

வழக்கம் போலவே
சுவடுகளெதுவும் தென்படாததினிமித்தம்
சந்தேகங்களுக்கு வாய்க்கப்போவதில்லை
சந்தர்ப்பம்
அடுத்து வருவதான விடியலிலும்

கடவுச்சொல்லொன்று
கசிந்துவிட்டிருப்பது
தெரிந்திருக்கவில்லை போலும்
முட்டாள் கடவுளுக்கு.

iyy

 – ப.தியாகு
மின்னஞ்சல்: pa.thiyagu@yahoo.in