கா.சிவா
வரமும் சாபமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்தான். மனிதர்களுக்கு கிடைக்கும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு என்பது ஒரு வகையில் வரம்தான். அதே சமயம் சாபமும்கூடத்தான். இரு வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தபின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப இயலாதென்பது இதிலுள்ள பொறி. தேர்ந்த பாதை சரியானதாக அமையாதபோது தேர்வு செய்த தன்மீதே கோபம் கொள்வதும் தவறவிட்ட பாதையின் மீது பெரும்பிரேமையும் தீராத ஏக்கமும் தோன்றுவதுதான் சாபம்.
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணின் மனையறம் நாவலில் மஞ்சள் குங்குமம், AVE MARIA, திருவஞ்சி, LUZ எனும் நான்கு தலைப்புகளிலான வெவ்வேறு மனிதர்களின் கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையிலும் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தருணம் வருகிறது. எடுத்த முடிவால் அவர்கள் வாழ்க்கை வரமென ஆகியதா அல்லது சாபமானதா என்பதை விவரிக்கிறது நாவல்.
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் எழுதி சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த மனைமாட்சி நாவலின் தொடர்ச்சி என மனையறம் நாவலைக் கூறலாம். காரணம் இருநாவல்களின் வடிவம். ஆனால், வடிவம் மட்டும்தான் ஒரேமாதிரியே தவிர கதைகளின் களங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் அமைந்துள்ளன.
எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணனின் சிறப்பு என்பது கதையை மிக நிதானமாக எந்தக் குழப்பமும் இல்லாமல் துல்லியமாகக் காட்டுவது. கலைத்துப் போடும் வடிவத்தாலும் திருகல் மொழியாலும் வாசகனைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல், தெளிவாக படைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் யதார்த்தமான சிக்கல்களைக் கண்டு வாசகன் திகைப்படையுமாறு செய்கிறார்.
மனையறம் நூலில் இடம் பெற்றுள்ள நான்கு கதைகளுமே ஒவ்வொரு விதத்தில் சிறப்பானதாக உள்ளன. அவற்றுள் என்னை மிகவும் கவர்ந்த LUZ கதையைப் பற்றி பகிர்ந்து கொள்கிறேன்.
LUZ கதையின் களம் பெரும்பாலும் மலையும் மலை சார்ந்த இடங்களாக உள்ளது. இது சங்ககாலக் கவிதைகளில் குறிப்பிடப்படும் குறிஞ்சித் திணையின் நிலமாக உள்ளது. அதேபோல், அத்திணையின் உரிப்பொருளான புணர்தலும் புணர்தல் நிமித்தமும் இந்நாவல் முழுக்க விரவிப் பொருத்தமாக அமைந்துள்ளது.
விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ள விவேக் மற்றும் அம்மு இருவரும் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலுள்ள அருவிகளில் குளித்தும் இயற்கையை ரசித்தும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். இதை வாசிக்கும்போது சங்கக்கவிதைகளை உரைநடையில் வாசிப்பதுபோலவே உள்ளது. மொழியும், காட்சிகளின் வர்ணனைகளும் காட்டுக்குள் நின்று சாரல் திவலையை உணரும்படி செய்கின்றன.
ஊர் முழுக்க சொந்தக்காரர்கள் சூழ அமைந்துள்ளது விவேக்கின் வாழ்க்கை. நேரெதிராக நான்குபேர் மட்டும் கொண்ட சிறு குடும்பமே அம்முவிற்கு. இரு குடும்பங்களைப் பற்றி சிறு உரையாடல்கள் மூலம் விவரிக்கிறார் ஆசிரியர். அந்த சிறு உரையாடல்களே வாசகனுக்கு அவர்களின் வாழ்க்கையின் முழுச்சித்திரத்தையும் அளித்துவிடுகிறது. எம் கோபாலகிருஷ்ணனின் நுட்பமான எழுத்திற்கு சான்றாக இதைக் கூறலாம்.
அம்முவும் விவேக்கும் அருவிகளில் நீராடியும், காட்டிற்குள் நடந்தும், சில்லென்ற காற்றை உணர்ந்தபடி வண்டியில் பிரயாணித்தும், ஒருவரையொருவர் சீண்டி கொஞ்சி விளையாடியும் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். தொடர்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும்போதே மனித மனம் வேறொன்றை எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது. மகிழ்ச்சியை முழுதாக அனுபவிக்கும் இயல்பு மனிதனுக்கு இல்லை. அனுபவிக்கும்போதே சந்தேகம் ஊறத் தொடங்கிவிடுகிறது. இது எவ்வளவு நேரம் நீடிக்கும், அதன் பிறகு என்ன மாதிரியான துயரம் காத்திருக்கிறதோ முதலிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கிறது. ஏனென்றால் அவன் வாழ்வில் தொடர்ந்து இன்பத்தை அனுபவித்திருக்கமாட்டான். சற்றைக்கெல்லாம் அனுபவித்த இன்பத்திற்கு ஈடானதாகவோ அல்லது அதைவிட அதிகமாகவோ துன்பம் வந்துவிடும். இதில் விசித்திரம் ஒன்றுண்டு, துன்பத்தில் இருக்கும்போது அடுத்து இன்பம் வரவிருக்கிறது என்ற எண்ணம் எழுவதில்லை. உலகில் அனைவரும் மகிழ்ந்திருக்க தனக்கு மட்டுமே இப்படி துன்பம் வாய்த்திருக்கிறது என இன்னும் அதற்குள் ஆழ்கிறான்.
LUZ கதையில் தொடர்ந்துகொண்டிருக்கும் இன்பத்தைக் கண்டு அம்மு அப்படித்தான் பயப்படுகிறாள். எம்மாதிரியான துன்பம் நேரவிருக்கிறதோ என. ஆனாலும் அடுத்தடுத்து இனிய பொழுதுகள் தொடர்கின்றன. இப்போது, ஆசிரியர் எந்த மாதிரியான துயரத்தை இவர்களுக்கு அருளவுள்ளாரோ என்ற பதைப்பு வாசிப்பவர் மனதில் உருவாகிறது. கடைசியில் அந்த விபத்து ஏற்படுகிறது. அம்மு மீண்டு வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாக உள்ள நிலையில் விவேக் எடுக்கும் முடிவு அவனுக்கு வரமாகிறதா சாபமாகிறதா என்பது கதையின் முடிவாகவும் நாவலின் முடிவாகவும் அமைந்துள்ளது.
இக்கதையில் என்னை மிகவும் கவர்ந்தது எம். கோபாலகிருஷ்ணனின் மொழி. தெள்ளிய நீரோட்டம்போல எந்த மயக்கமும் அளிக்காமல் வாசகனைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறார். காட்டின் மரங்களையும் அதன் குளுமையும் இருளுமான சூழலையும் அருவிகளின் நீர் தெறிப்பையும் காட்டிச் செல்கிறார். ரத்தம் உறிஞ்சும் அட்டைகள், குரங்கைப் புசித்து அதன் மண்டையோடுகளை ஒரேயிடத்தில் போடும் புலி, அவ்வப்போது வந்து வீட்டு வேலியை அசைத்துப் பார்க்கும் யானை போன்றவற்றை நேரில் காண்பதுபோலவே உணர வைக்கிறார். இப்படி இயற்கையுடன் இன்பத்தை துய்க்கச் செய்ததன் மூலமே அடுத்து வரும் அந்தத் துயரை தாங்க முடிகிறது.
விவேக் எடுக்கும் முடிவும் அதனை மாற்ற அவன் குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளும் யதார்த்தமாக உள்ளன. காதல் வேண்டும் வேண்டுமென ஏங்கும் மனதுதான், சில நேரங்களில் அபரிதமான அன்பைத் தாளமுடியாமல் தவிக்கிறது. அம்மு, விவேக் தன்மீது செலுத்தும் அன்பின் மிகுதியாலேயே அவன் மீது கோபம் கொள்வதும் அவனின் மாற்ற முடியாத உறுதியைக் கண்டு நெக்குருகுவதும் அழகு. காதலின் உன்னதம் என்பது காதலை விட்டுக் கொடுப்பதும் விலகாதிருப்பதும் எனத் தோன்றுகிறது. இரண்டும் எதிரெதிரானவை என்று தோற்றம் கொண்டிருந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என்பது மனதில் காதலை உணர்ந்தவர்களுக்குப் புரியும்.
ஆசிரியர் எம். கோபாலகிருஷ்ணின் மொழிக்கு உதாரணமாக இந்தப் பத்தி:
//கீழ்வானில் வெட்டியடித்தது மின்னல். ஒருகணம் எங்கும் வெளிச்சம் பூத்து மறைந்தது. திடுதிடுவென தொலைவில் ஒலித்து மெல்லத் தேய்ந்து மறைந்தது இடியோசை. இருட்டும் வரைக்குமான அன்றைய நாளின் அலுப்பையும் வெம்மையையும் தணிவித்திருந்தது மழை. வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தில் மழை இப்போது வலுத்திருப்பதைக் காணமுடிந்தது. ஒவ்வொரு துளியையும் ஏந்திக்கொள்கிறபோது பூமி சிலிர்க்கிறது போலும். நிலம் சிலிர்க்கையில் தாவரங்கள் அசைகின்றன. இலைகளும் பூக்களும் அசையும்போது காற்று குளிர்கிறது. காற்றின் குளிர் மனிதர்களை அணைக்கிறது. மனிதர்கள் நனைகிறார்கள். ஒதுங்குகிறார்கள். கதவடைத்துக் கதகதப்பேற்றுகிறார்கள். யாவர்க்கும் யாவைக்குமாய் பெய்கிறது மழை//
இந்தப் பத்திக்குப் பிறகு தொடரும் விவேக் மற்றும் அம்முவிற்கு இடையேயான உரையாடல் மிகச் சிறப்பான உச்சமாக அமைந்துள்ளது.
புனைவுகளை வாசிக்கும்போது அவ்வப்போது கண்கள் கசிவதுண்டு. ஆனால் மனம் இனிய பரவசத்தில் பொங்கி கண்ணீர் வழிந்தது இந்த நூலை வாசித்தபோதுதான். இந்நூலின் இறுதியில் LUZ கதையையும் திருவஞ்சி கதையையும் ஆசிரியர் இணைத்துள்ளார். அது எவ்வித செயற்கையான பிரயத்தனமுமின்றி அத்தனை பாந்தமாய் இயைந்துள்ளது. இரண்டு கதைகளும் அழகான முத்துச்சரம்போல இணைந்து எந்தப் பிசிறுமில்லாத முழுமையை அடைந்துள்ளன. அரவிந்தன் மற்றும் விவேக் கதா பாத்திரங்களின் ஒட்டுமொத்த ஆகிருதியைக் காட்டும் அந்தக் கணம் மனதில் பெரும் பரவசமெழுந்தது. கண்ணிலிருந்து வழிந்த நீர் நெஞ்சில் சொட்டியது. LUZ எனும் போர்த்துகீசிய சொல்லுக்கு ஒளி என்று பொருள் கூறுகிறது கூகுள். போர்த்துகீசிய வம்சாவளியைச் சேர்ந்த அம்மு என அழைக்கப்படும் பெலிக்ஸ் -க்கு ஒளியானவன் விவேக் என்று தலைப்பு உணர்த்துவதாகக் கொள்கிறேன்.
வாசிக்கும் அனுபவத்தை இனிமையானதாகவும் முடித்தபோது பரவசத்தையும் அளித்த எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றியும் பிரியமும். அவர் தொடர்ந்து எழுதவேண்டும் என வாழ்த்துகிறேன்.
***
கா. சிவா: சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிவலாங்குடியில் பிறந்தவர். தற்போது சென்னையருகே உள்ள ஆவடியில் வசிக்கிறார். விரிசல், மீச்சிறுதுளி, கரவுப்பழி, ஆழ்தலும் மிதத்தலும் ஆகிய நான்கு சிறுகதை தொகுப்புகளும் “கலைடாஸ்கோப்பினுள் ஓர் எறும்பு” எனும் கவிதைத் தொகுப்பும் “தண்தழல்” எனும் நாவலும் எழுதி வெளியிட்டுள்ளார். சரஸ்துதி எனும் நூல் தற்போது வெளிவந்துள்ளது. மின்னஞ்சல்: sivaangammal1983@gmail.com

