ஒரு மழை இரவு

மழைக்குருவி

ழை வரும் போலிருந்தது. இரவு மணி பன்னிரெண்டைத் தாண்டியிருந்தது. ரத்தினத்துக்கு இன்றைக்கும் தூக்கம் வரவில்லை. அந்தக் கால டேப் ரெக்கார்டர் ஒன்று அவள் அருகிலேயே இருந்து பாடிக் கொண்டிருந்தது. ரேடியோ மோடில் வைக்கலாம். வைத்தால் இரவெல்லாம் எதையாவது பாடிக் கொண்டிருக்கும். ஆனால் ரத்தினத்துக்கு கேசட்டில் கேட்டால்தான் பிடிக்கும். கேட்டால் இப்படி சொல்லுவாள், “மழைக்காகவும் மின்னலுக்காகவும் என்னால் காத்திருக்க முடியாது. தோன்றும் போது இதயத்தினுள் மழை பெய்ய வேண்டும். கண் சிமிட்டும் போது மூளைக்குள் மின்னல் தெறிக்க வேண்டும்.”

அவளது அப்பாவும் சித்தியும் ஒரு கல்யாணத்திற்காக கொடைக்கானல் வரை போயிருக்கிறார்கள். வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும். போகும் போதே அவளது சித்தி எச்சரித்துவிட்டுதான் போயிருந்தாள்.

“பாட்ட பாட்ட கேட்டுகிட்டு வீட்ட கண்டமேனிக்கு போட்டுருந்த.. கூய்மோள.. ஒன்னய உதுத்து உப்புமா கிண்டிருவன் ..”

சித்தி சொன்னது நினைவில் வந்ததும் ரத்தினத்திற்கு ஒரு நொடி கை கால்களெல்லாம் நடுங்கின. ரத்தினத்தையும் அழைத்துச் செல்லலாம் என்று அவளது அப்பா சொன்னபோது சுடுகாட்டுப் பேய் போல தங்குதங்கு என்று குதித்தாள் சித்திக்காரி. 

“இந்த நொண்டி நாய வச்சிக்கிட்டு தேர் இழுக்க சொல்தீயளா என்னிய..”

அப்பா சித்திக்காரியிடம் கெஞ்சலாகச் சொன்னார்.

“பிள்ளய நொண்டினு சொல்லாத அனிச்சோம்….”

“பிள்ள்..ளெ.. வயசு முப்பத்தி ரெண்டாச்சி.. இன்னோரு ஒரு நொண்டிப் பயலப் பாத்து இவள தள்ளி உடுததுக்கு துப்பு இல்ல.. வாய் மயிறு.. “

ரத்தினம் எப்போதும் ஒன்றை நினைத்து நொந்து கொள்வாள். சித்திக்கு எப்படித்தான் அனிச்சம் என்று பெயர் வைத்தார்களோ.. உண்மையில் ரத்தினத்தின் அம்மாதான் அனிச்ச மலர். அத்தனை மென்மையானவள். கோபத்தில் ஒரு சொல் சொன்னாலும் முகம் வாடிவிடும். மோப்பக் குழையும் அனிச்சம். இன்னொருத்தியின் வீட்டிற்கு தன் கணவர் போய் வருகிறார் என்பது தெரிய வந்த நாளில் அல்லிகுளத்தில் இன்னொரு அல்லியாய் மிதந்து கிடந்தாள். துக்கம் நடந்து மூன்று மாதத்திற்குள்ளாகவே ரத்தினத்தின் வீட்டில் கோரைப்பற்கள் முளைத்த இந்த அனிச்சம் பூ பூத்தது. 

வள்ளுவன் சொன்ன அனிச்ச மலருக்கு நேர் எதிரானவர் ரத்தினத்தின் அப்பா. அவள் சித்தி அனிச்சம் ஆயிரம் திட்டு திட்டினாலும் T.A.மதுரத்திடம் திட்டு வாங்கியும் சிரித்து கொண்டே இருக்கும் N.S.கிருஷ்ணன் போல, “என்ன அனிச்சோம்.. நீ இப்பலாம் பழைய மாரி திட்டமாட்டங்கியே.. யாம்..” என்று சொல்லி சிரிப்பார். இந்தக் கண்றாவிகளை காணச் சகியாமல் எங்காவது ஓடிவிட வேண்டும் போலிருக்கும் அவளுக்கு. தன்னால் எப்படி ஓட முடியும் என்பது நினைவுக்கு வந்ததும் அசட்டுச் சிரிப்பொன்றை மனதிற்குள் உதிர்த்தபடியே ரேடியோ முள்ளைத் திருக ஆரம்பிப்பாள். 

மாடியில் இன்னொரு டேப் ரெக்கார்டர் உண்டு. நேஷனல் பேனசோனிக். அது சித்தி அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்தது. அதியற்புதமாக பாடும். கீழே ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்திவிட்டு அதே கேசட்டை எடுத்துக் கொண்டு போய் நேஷனல் பேனசோனிக்கில் ஒலிக்கவிட்டால் அனுபவிக்கத் தகுந்த ஒரு துல்லியம் தெரியும். ஆனால் அந்த இசைத் துல்லியத்தை அனுபவிக்க ரத்தினத்துக்கு மட்டுமே தெரியும். எதற்காகவாவது சித்தியை தாஜா செய்ய வேண்டும் என்றால் அவளது அப்பா மாடியில் இருக்கும் டேப் ரெக்கார்டரில் இந்த பாட்டைத்தான் போட்டுவிட்டு ஸ்ரீநிவாஸோடு சேர்ந்து சித்திக்காரியை நோக்கிப் பாடுவார்.

அனிச்ச மலரழகே.. அச்சு அச்சு வெல்லப் பேச்சழகே..

இவளா அனிச்சமலர்.. இவள் பேச்சா அச்சு வெல்லத்தின் மதுரத்தை ஒத்தது.. அச்சுவெல்லத்தை வாயில் போட்டுக் கொண்டே கெட்ட வார்த்தை பேசுபவள்.

ரத்தினத்திற்கு அடிவயிற்றில் இருந்து பற்றிக் கொண்டு வரும். எப்பேர்பட்ட பாட்டு.. எத்தனை உயிர்ப்புள்ள வரிகள். எப்போதும் கனைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கழுதையை நோக்கி அந்த வரிகளைப் பாடுவதா. ச்சீ.. என்றிருக்கும் அவளுக்கு.

சித்திக்காக ஒரு கேவலமான பாடல் உலகத்தில் இதுவரை பிறக்காமலா போயிருக்கும் என்று ரத்தினம் எண்ணிப் பார்ப்பாள். ச்சே.. என்ன சிந்தனை இது. உலகில் இதுவரை பிறந்த எல்லா பாடல்களும் உன்மத்தமானவை. அச்சு வெல்லத்தின் மதுரம் நிறைந்தவை. 

ஒரு நாள் ராத்திரி கனவில் ரத்தினம் சாட்டையை சுழற்றி சுழற்றி சித்திக்காரியை வெளுத்தபடியே பாடினாள்.

“சண்டி ராணியே.. எனக்கு கப்பம் கட்டு நீ.. ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டுப்பட்டு நீ.. “

இந்த நட்ட நடு ராத்திரியில் மிக மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும் டேப் ரெக்கார்டரில் அவள் எதிர்பார்த்த வரி இதோ வரப்போகிறது. ரத்தினம் தன் எல்போ கிரட்ச்சை அவசரமாக தன் இடது கைகளில் மாட்டிக் கொண்டு தத்தி தத்தி நடந்து போய் தன் வலது காதையும் கன்னத்தையும் டேப் ரெக்கார்டருக்கு அருகே வைத்தாள். இளையராஜா காதலாகி கசிந்துருகினார்.

“ரத்தினமே முத்தம் வைக்கவா.. அதுக்காக பட்டணம் போய் வக்கீல் வைக்கவா..”

அந்த வரிகளைக் கேட்டதும் அவள் கன்னங்கள் செந்தூரமென சிவந்து போயின., அந்தப் பாட்டில் வரும் நாயகியின் முக பாவனைகளோடு, கண்களை வலம் இடமென உருட்டி உருட்டி, இதழ்களை சுழித்து சுழித்து அடுத்த வரிகளை அவளே எஸ்.ஜானகியோடு சேர்ந்து பாடினாள்.

“வெட்கத்தயும் ஒத்தி வைக்கவா.. அதுக்காக மந்தையில பந்தி வைக்கவா..”

அவள் கண்களில் காதலின் மின்னொளி.

“ஓடி வா ஓடைப் பக்கம்.. ஒதுங்கலாம் மெதுவாக.. ” என்ற போது டேப் ரெக்கார்டரை செல்லமாக ஒரு இடி இடித்தாள். அது டேப் ரெக்கார்டரையா அல்லது இளையராஜாவையா அல்லது அந்த நாயகனையா என்பது தெரியவில்லை. 

இப்போது இளையராஜாவின் இளைய குரல் காதலையும் காமத்தையும் குழைத்து குழைத்து அவளின் தனிமையின் மீது ஏறி இறங்கி நர்த்தனம் ஆடியது. 

“காத்தடிச்சாஆஆ.. தாங்காதடிஈஈ… மல்லியப்பூஊஊ.. மாராப்பூ..”

படக்கென்று டேப் ரெக்கார்டரை நிறுத்தினாள். இளையராஜா ஏன் இப்படி பாடுகிறார். முதிர்கன்னிகள் முற்றாக இளையராஜாவை நிராகரிக்கத்தான் வேண்டுமா.. அடச்சே.. என்ன கேனத்தனமான சிந்தனை இது.. பெய்கின்ற மழைக்கு கானகம் தெரியுமா பாலை தெரியுமா.. அப்படித்தான்.. இளையராஜா ஒரு இசை மழை.. 

டேப் ரெக்கார்டரை ரேடியோ மோடுக்கு மாற்றினாள். அங்கே ஜேசுதாஸ் குழைந்து கொண்டிருந்தார்.

“காம லீலா வினோதம்.. காதல் கவிதாவிலாசம்.. படித்துப் படித்து எடுக்க எடுக்க..  ஓஹோ ஹோ..”

அடக்கடவுளே என்றெண்ணியபடியே ரேடியோவை ஆஃப் செய்தாள். இதே பாடல்களை பகல் வேளையில் ரத்தினம் கேட்டிருந்தால் இது போன்ற அகச்சிக்கல்கள் அவளுக்கு வராது. அவளுடைய இரவுகள் விநோதமானவை. இரவுகள் அவளுக்கு விசித்திரமானவை. 

நகர்ந்து போய் ஜன்னலைத் திறந்தாள். சில்லென்ற காற்று உள் நுழைந்தது. கூடவே மண்வாசனையும். ஏற்கனவே கொஞ்சம் மழை பெய்திருக்கும் போல. ஜன்னலின் கம்பிகளை பிடித்து ஒற்றைக்கால் கொண்டு எக்கித் தெருவில் மழை பெய்த அடையாளம் ஏதும் இருக்கிறதா என்று பார்த்தாள். நீர்க்குட்டைகள் எதுவும் தென்படவில்லை. ஆனால் தெரு மண் முழுதும் நனைந்திருந்தது. மெதுவாக பாடினாள்.

“மழை வருது மழை வருது குடை கொண்டு வா.. கண்ணா உன் பேரன்பிலே ஹோய்”

ச்சே.. என்ன வாழ்விது. கற்பனைகளால் நிறைந்த வாழ்வு. உலகில் எத்தனை கோடி ஆண்மகன்கள் இருக்கிறார்கள். எனக்கென்று ஒருவன் மட்டும் ஏன் இன்னுமில்லை. இத்தனை வயதுக்குப் பிறகும் ஏன் ஒரு ஆண் தன் வாழ்வில் வந்து சேரவில்லை. ஒருவேளை தன் வாழ்வில் ஆண் என்பதே கிடையாதா. காதலையும் காமத்தையும் பிசைந்து ஒரு வாய் ஊட்டி விட ஒருவன் வரமாட்டானா என்று அவள் எண்ணிய போது மாடியில் மெலிதாக பாட்டுச் சத்தம் கேட்டது.

“இரவா பகலா குளிரா வெயிலா என்னை ஒன்றும் செய்யாதடி..”

ரத்தினத்துக்கு பக்கென்று இருந்தது. மாடியில் எப்படி பாட்டு கேட்கிறது. அப்பாவும் சித்தியும் மாடியில் வசிக்கிறவர்கள்தாம். ஆனால் அவர்கள்தான் ஊருக்குப் போயிருக்கிறார்களே. மேலும் இந்த நள்ளிரவில் அப்பாவும் சித்தியும் வர வாய்ப்பே இல்லை. பூனை அல்லது எலியாக இருக்குமென சந்தேகப்பட்டாலும் அவைகள் எப்படி டேப் ரெக்கார்டரில் போய் சரியாக ப்ளே பொத்தானை அழுத்தியிருக்க முடியும். மேலேயிருக்கும் நேஷனல் பேனசோனிக்கில் ரேடியோ மோட் பட்டன் வேலை செய்யவில்லை என்று சித்தி புலம்புவதை பலமுறை கேட்டிருக்கிறாள். ஆக ஒலிக்கும் அந்த பாட்டு ரேடியோவில் இருந்து வர வாய்ப்பேயில்லை.

பாட்டு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. ரத்தினத்துக்கு வியர்க்க ஆரம்பித்தது. தன் வாழ்வில் முதன்முறையாக ஒரு பாடலை ரசிக்க முடியாமல் இருந்தது அவளுக்கு புதிதாய் இருந்தது. 

“நிலவின் முதுகும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம்தானா..” 

ஹரிஹரனின் குரல். நல்ல பாட்டு. ஆனால் இப்போது மிகவும் திகிலாக இருக்கிறது. பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் அவளின் காதுகளினுள் புகாமல் அவளின் தலையைச் சுற்றிச் சுற்றி குருவிகள் போல் வட்டமடித்தன. அவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. ஒருவேளை பேயாக இருக்குமா.. ச்சே.. பேய்தான் கொடைக்கானல் போயிருக்கிறதே.. யாராக இருக்கும்.. என்னவாக இருக்கும்..

ஒருவேளை திருடனாக இருக்குமா. கூச்சல் போடலாமா. போட்டு என்ன ஆகப்போகிறது. மனைவி மக்களில்லாத பக்கத்து வீட்டு பஞ்சாட்சரம் மாமா ஆறு மணிக்கே அரை போதையில் இருப்பார். இடப்பக்க வீட்டு இசக்கியா பிள்ளை எலி அடிக்கவே எட்டு பேரைக் கூப்பிடுவார். எதிர் வீட்டில் முப்பது வருடங்களாக தனியாக இருக்கும் சச்சு பாட்டிக்கு கடந்த பத்து வருடங்களாக மனக்குழப்பம் வேறு. இந்த ஊரில் கடைசியாக ஒரு திருடன் வந்து போனதும் சச்சு பாட்டி வீட்டுக்குதான். கிழவியை மிரட்டுவதற்காக அடுப்பங்கரையிலிருந்த அரிவாள்மனையைத் தூக்கி வந்து காண்பித்த திருடனைப் பார்த்த கிழவி, அரிவாள்மனையை படக்கென்று அவனிடமிருந்து பிடுங்கி, “இதத்தான் காலைலருந்து காய் வெட்ட தேடிட்டு இருக்கேன்.. ச்செத்த மூதி.. இத எடுத்து என்னல பண்ணிட்டுருக்க..” என்ற போது திருடனே கொஞ்சம் பதறித்தான் போனான். 

“வந்தது வந்துட்ட.. போயிராத.. இருந்து ஒரு வா சாப்ட்டு போ..” என்ற கிழவியைப் பார்த்து ஸ்தம்பித்த திருடன் சில நொடிகளிலேயே ஓவென்று கதறி அழ ஆரம்பித்து விட்டானாம். கிழவி சமைக்கும் வரை காத்திருந்து சாப்பிட்டுவிட்டு கிழவியின் கைச்செலவுக்கும் இருநூறு ரூபாய் கொடுத்து விட்டு நேராக காவல் நிலையம் சென்று சரணடைந்த கதை ஊர் முழுவதும் பிரபலம். 

அன்பு இப்படிதான். செத்த மூதி. திடீரென்று மாயாஜாலம் செய்துவிடும்.

யாரைக் கூப்பிட்டும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று முடிவுக்கு வந்த ரத்தினம் கதவைத் திறந்து மாடிக்குப் போய் பார்ப்பதா என்று யோசித்தாள். பார்த்தாலும் தன்னால் என்ன செய்ய முடியும். திருடன் ஒரு அடி அடித்தால் மூர்ச்சையாகி விடக்கூடிய உடம்பு அவளுக்கு. திருடனின் அடி சித்தியின் அடியை விட வலிமையாக இருக்குமா என்று யோசித்தாள். ஒருவேளை கத்தி வைத்திருந்து குத்திவிட்டால்.. இருக்கிற ஒரே ஒரு உயிரும் போச்சு. ஆனால்…

ஆனால் சித்தியிடமிருந்து விடுதலை. அதை நினைக்கும் போது அவளுக்கு பெரும் ஆசுவாசமாக இருந்தது. பெருமூச்சு விட்டாள். இரவுகள்தோறும் புரட்டியெடுக்கும் அகச்சிக்கல்களிடமிருந்து அக்கணமே விடுதலை. நான்கு சுவர்களெனும் சிறையில் இருந்து மாபெரும் விடுதலை. வாழ்வின் அத்தனை ரணங்களிலிருந்தும் ஒரு நொடியில் விடுதலை. இந்த வாழ்வின் அனைத்துத் துன்பங்களிலிருந்தும் யாராலும் தரமுடியாக விடுதலையை கேவலம் ஒரு திருடனால் தர இயலும் எனும் போது அவள் நினைத்துப் பார்த்தாள், ‘தனதிந்த வாழ்வென்பது எத்தனை பெரிய அபத்தம்..’ 

ஆனாலும் திருடன்தான் வந்திருப்பான் என்பதற்கு ஒரு நிச்சயமுமில்லை. வேறு ஏதேனும் ஒன்றாகக் கூட இருக்கலாம். நாம் தேவையில்லாமல் பயப்படுகிறோமோ என்று நினைத்து மெதுவாகக் கீழ் வீட்டுக் கதவைத் திறந்தாள். தெருவில் அவள் வீட்டருகேயிருந்த சோடியம் விளக்கை பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருந்தன. சோடியம் விளக்கின் மஞ்சள் ஒளியும் தெருவில் ஒரு மழை போல் பெய்து கொண்டிருந்தது.தெருவும் அவளைப் போலவே அனாதரவாய் கிடந்தது. 

தத்தி தத்தி நடந்து வந்து மேலிருக்கும் ஜன்னலைப் பார்த்தாள். ஜன்னலுக்குள் மெல்லிய மஞ்சள் நிற மின்சார விளக்கு எரிந்து கொண்டிருப்பது தெரிந்தது. சித்தி விடிவிளக்கை போட்டுவிட்டே போய்விட்டாளா அல்லது மறந்திருப்பாளா அல்லது இப்போது யாரேனும் போட்டிருப்பார்களா.. ஆனால் உள்ளே யாரும் இருப்பது போல் தெரியவில்லை. 

பாட்டு இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவேளை உண்மையிலேயே மாடியில் திருடன் இருந்துவிட்டால் மாடிக்குச் செல்வது என்பது சாவை நேரே வரவழைப்பதற்கு சமம். சாவு என்ற சொல் நினைவுக்கு வரும்போதெல்லாம் சித்தியும் நினைவுக்கு வந்துவிடுவது இப்போது அவளுக்கு ஒரு குதர்க்கமான மனநிலையும் குருட்டு தைரியத்தையும் உண்டு பண்ணியது.

மாடிப்படிகளில் உட்கார்ந்து உட்கார்ந்து மெதுவாக மேலே சென்றாள். மேலே ஏறும் பொழுதே இதயம் அவளுக்கு வேகமாக துடிக்க ஆரம்பித்தது டம் டம் என்றொலிக்கும் அவளது இதயத்தின் ஓசை உள்ளிருக்கும் மேலே மட்டும் ஒரு திருடன் இருந்தால் அவனுக்கே கேட்டுவிடும் போல. அப்படி அதிர்ந்தது. வியர்த்து வியர்த்து உடுத்தியிருக்கும் சேலையைத் தவிர உள்ளிருக்கும் ரவிக்கையும் பாவாடையும் சன்னமாய் நனைந்திருந்தது. 

தடுமாறி மெதுவாக எழுந்து நின்றவள் இடது கையால் மெதுவாக கதவைத் தள்ளிப் பார்த்தாள். கதவு திறக்கவில்லை. கதவிலிருக்கும் பூட்டு துவாரத்தின் வழியாக ஒற்றைக் கண் கொண்டு பார்த்தாள். விடிவிளக்கின் மெல்லிய மஞ்சள் வெளிச்சத்தில் வீட்டின் உட்புறம் ஒரு அசையாத ஓவியம் போல தெரிந்தது. சுண்டுவிரலில் சிறிய வளையத்தோடு சொருகியிருக்கும் ஒற்றைச்சாவியை வலது கை விரல்களால் எடுக்கும் போது விரல்கள் அவளுக்கு அப்படி நடுங்கின. சாவியை கதவு துவாரத்தில் நுழைக்க முயன்று முயன்று தோற்றுப் போனாள். அவசரத்தில் அண்டாவில் கை போகாது என்றால் இவளுக்கு ஆகாயத்திலேயே கை போகாது. 

இன்னும் படபடப்பு அதிகமாக அதிகமாக இந்த படபடப்பினாலேயே அவளுக்கு செத்துவிடுவோம் என்று தோன்றியது. திடுக்கென்று சாவி, கதவு துவாரத்தில் மாட்டிக் கொண்டதும் அணிச்சையாக கை திருகி கதவு மடாரென்று திறக்க, பிடிமானம் இல்லாமல் அறையினுள் தடுமாறி பொத்தென்று விழுந்தாள். கீழே விழுந்ததும் அவளுக்கு பெரிய அதிர்ச்சி உண்டானது. இதயம் சரவெடியாய் அதிர்ந்தது. அவள் தலையினுள் பயம் தீப்பிடித்து எரிந்தது. தலை வெட்டுப்படப் போகும் ஆட்டுக்குட்டியைப் போல தலையை அங்குமிங்கும் சிலுப்பி சிலுப்பி திருப்பித் திருப்பி வேக வேகமாகப் பார்த்தாள். 

அங்கே யாருமே இல்லை. சரியாக அந்நேரத்தில் பாட்டும் நின்றது. எங்கிருந்தோ கறிக்குழம்பு மணம் ஜம்மென்று தூக்கியது.

நேஷனல் பேனஸோனிக்கில் இருந்து ஒரு வயதான பெண்மணியின் குரல் ஒலித்தது.

“பழனிபாரதியின் வரிகளில் ஒலித்த குரல்கள் சுஜாதா மற்றும் ஹரிஹரன். பாடலுக்கு இசை யுவன்ஷங்கர்ராஜா. படம் பூவெல்லாம் கேட்டுப்பார். நேரம் நள்ளிரவு மணி ஒன்று. நேயர்கள் கேட்டுக் கொண்டிருப்பது பண்பலை சில்வர். அடுத்த ஒலிபரப்பு அதிகாலை மூன்று மணிக்கு சுக ராகத்தில் தொடங்கும். வணக்கம். “

நிசப்தம். எங்கும் நிசப்தம். நிசப்தமும் அவளது காதில் கேட்பது போன்ற உணர்வு தொனித்தது. ஐந்தாறு நிமிடங்கள் அப்படியே கிடந்தாள். வியர்ப்பது நின்றது. கொஞ்சம் கொஞ்சமாக பயம் குறைந்தது. தவழ்ந்து தவழ்ந்து போய் சிறிய மர ஸ்டூலின் மேலிருந்த மண்பானையில் கடைசியில் கொஞ்சமேயிருந்த ஒரு குவளை குளிர்ந்த நீரை எடுத்து பருகினாள். நீர் தொண்டைக்குழியில் இறங்கும் மொடக் மொடக் என்ற சத்தம் கேட்டு அவளே அங்குமிங்கும் திரும்பிப் பார்த்தாள். இன்னொரு குவளை நீர் பருகினால் தேவலாம் போலிருந்தது. ஆனால் மண்பானையில் நீர் இல்லை. நேஷனல் பேனசோனிக் வானொலியின் அருகே ஒரு பிளாஸ்டிக் நாற்காலி இருந்தது. சித்தி எப்போதும் அதில் அமர்ந்துதான் வானொலியில் பாட்டு கேட்பாள். அதில் உட்கார்ந்து பார்க்கலாமா என்று நினைத்தாள். வேண்டாம்.. அதில் உட்கார்ந்தால் சித்தியின் குணாம்சங்கள் நமக்கும் ஒட்டிவிடும் என்றும் நினைத்தாள். 

குவ்வோ குவ்வோ என்று இரண்டு முறை மயில் அகவும் சத்தம் வெளியே கேட்டது. இந்த நேரத்தில் மயிலா என்று நினைத்தபடியே எழுந்து தத்தி தத்தி நடந்து வந்து கதவைப் பிடித்து நின்றபடி வெளியே பார்த்தாள். சச்சு பாட்டியின் வீட்டிற்கு பின்புறம் இருந்த மிகப் பரந்த நிலப்பரப்பு முழுதும் ஒரே இருட்டாகத் தெரிந்தது. மயிலும் தெரியவில்லை குயிலும் தெரியவில்லை. வானம் தன் தொண்டையைச் செருமுவது போல லேசான இடிச் சத்தங்கள் கேட்டன. மீண்டும் மழை வரும் போலிருந்தது. பெருமூச்செறிந்தாள். நுரையீரல் முழுவதும் மண்வாசனை பரவியது. மண்வாசனை மணக்க மணக்க அவளுக்கு மண்ணை அள்ளித் திங்க வேண்டும் போலிருந்தது. இடையிடையே கறிக்குழம்பு வாசனையும் வந்தது. எதிர்வீட்டில் இருக்கும் சச்சு பாட்டி கண்ட நேரத்தில் சமையல் செய்யக் கூடியவள். ஒரு நாள் சச்சு பாட்டி, அதிகாலை மூன்று மணிக்கு கீழ்வீட்டுக் கதவைத் தட்டி, “ரத்துனா.. இந்த டீய கொஞ்சம் சூடு பண்ணிக் குடேன்..” என்று கேட்டாள். ரத்தினம் அந்த பாத்திரத்தைத் திறந்து பார்த்தபோது அதில் இருந்தது ரசம். இப்போது கறிக்குழம்பு வாசனையும் மண்வாசனையும் மாறி மாறி மூக்கினுள் நுழைவது ஒரு விநோதக் கலவையாக இருந்தது.

ரத்தினம் வாசல் நிலையில் தலை சாய்த்தபடி அந்த இருட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இருட்டும் தன் வாழ்வும் வெவ்வேறல்ல என்பது போல அவளுக்குத் தோன்றியது.

அவளின் பின்புறமிருந்து மெதுவாக வந்த ஒரு கை அவளது மூக்கையும் வாயையும் இறுகப் பொத்தியது. இன்னொரு கை அவளது வயிற்றுப் பகுதியை இறுக்கப் பிடித்து அவளை அலேக்காக அப்படியே தூக்கியபடியே, ஒரு காலால் திறந்திருந்த கதவை மடார் என்று உதைக்க, கதவு ‘டம்’ என்ற சத்தத்துடன் மூடிக் கொண்டது. அவளை அப்படியே தூக்கிய அந்தத் திருடன், ரத்தினத்தோடு படபடவென்று பின் சென்று நேஷனல் பேனசோனிக்கின் அருகிலிருந்த நாற்காலியில் தொம்மென்று அமர்ந்தான்.. 

ரத்தினம் தன் தலையில் இடி விழுந்ததைப் போல உடம்பை பேயாய் உலுக்கினாள். ஆனால் அவனது பிடி இரும்புப் பிடியாயிருந்தது. அவளது மூச்சுக்காற்று போகும் அளவிற்கு மட்டும் இடைவெளி விட்டு வாயை இறுகப் பொத்தியிருந்தான். நாற்காலியில் அந்தத் திருடன் அமர்ந்திருக்க அவன் மேல் ரத்தினம் அமர்ந்து கிடந்தபடியே உம் உம் என்று அனத்திக் கொண்டேயிருந்தாள். அந்தத் திருடனோ சர்வ அமைதியாயிருந்தான். 

எது நடக்கக்கூடாதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அது என்னவாக இருக்கும் என்று நினைக்கும் போது ரத்தினத்துக்குள் பயத்தின் அமிலங்கள் நீரூற்றென சுரந்து கொண்டிருந்தன. மூன்று நான்கு நிமிடங்களுக்கு திருடன் மயான அமைதியுடன் அவளுடன் அப்படியே இருந்தான். ‘ம்..ம்..’மென அனத்துவதையும் உடலை உலுக்குவதையும் கொஞ்சம் கொஞ்சமாக அவள் நிறுத்தினாள். அவள் கண்களில் இருந்து நீர் மட்டும் தாரை தாரையாய் வழிந்து அவனின் கைகளை நனைத்தபடியே இருந்தது. அவன் அவள் காதில் மெதுவாகக் கேட்டான்.

“என்ன பவுடர்ட்டீ போடுத..? இந்தா மண மணக்கு..!”

அவள் அதிர்ச்சியானாள். ஏதோ பிசகு உண்டாகப் போகிறது. மீண்டும் உடம்பை உலுக்க ஆரம்பித்தாள். அவன் மீண்டும் அவள் காதில் கிசுகிசுத்தான்.

“யாத்தா.. கன்னம் பஞ்சு பஞ்சால்லருக்கு.. நொடிக்கு நூறு பாட்டுல்லா மண்டைல ஓடுது.. இப்ப தோணுதத பாடுதன்.. ஒடம்பாட்டாம கேளு.. ன்ன..” என்றபடியே தொண்டையைச் செருமிக் கொண்டு மெதுவாகப் பாட ஆரம்பித்தான். T.M.Sன் பாதி குரல் ஒலித்தது.

“தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்.. நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்.. எங்கே நானென்று தேடட்டும் என்னை.. சிந்தாத முத்தங்கள் சிந்த.. எங்கே.. நானென்று தேடட்டும் என்னை.. சிந்தாத முத்தங்கள் சிந்த..”

அயோக்கியப் பயல்.. எத்தனை திமிர் இருந்தால் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் ஒருவன் இப்படிப் பாட முடியும். எல்லாம் திமிர்தான்.. வேறென்ன.. ஆண் என்கிற திமிர். அதுவும் திருடன் என்கிற திமிர். அதிலும் இந்த அர்த்த ராத்திரியில் நீ ஒரு பெண். அதிலும் ஒரு கால் விளங்காதவள். உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என்கிற திமிர். திரும்பி அவன் முகத்தில் காறி உமிழ வேண்டும் போல் இருந்தது அவளுக்கு. 

இறந்து போன தன் தாயையும், தனியே விட்டுப் போன தன் தந்தையும் நினைத்துக் பொங்கிப் பொங்கி அழுதாள். திடீரென்று அவளுக்குத் தோன்றியது. ஒருவேளை சித்தி இங்கிருந்தால் என்னாகியிருக்கும். ரத்தினம் கீழே இருந்திருப்பாள். சம்பவம் சித்திக்கு நடந்திருக்கும். திருடனின் மடியில் சித்தி உட்கார்த்திருப்பதையும், சிந்தாத முத்தங்கள் சிந்த என்று திருடன் பாடுவதையும் நினைத்துப் பார்த்தாள். மனதிற்குள் சிரிப்பு வெடிக்க, குபீரென்று வெடித்துச் சிரித்தாள். இப்போதும் அவள் உடம்பு அழுவது போலவே குலுங்கியது. இப்போது திருடன் கொஞ்சம் பாவமாக பேசினான். 

“ஒடம்ப ஒடம்ப ஆட்டாதட்டீ.. நீ பயத்துல ஒடம்ப ஆட்டுத.. ஆனா ஒம் பெடக்ஸும் என் தொடையும் எங்க லவ் பண்ணீருமோன்னு எனக்கு பயமாயிருக்கு..” என்றான். ரத்தினத்தின் நீலக் கண்கள் பெரிதாக விரிந்து இதயம் ஹெவி பேஸில் டம் டம்மென அலர ஆரம்பித்தது.

அடப்பாவி.. இதற்காகத்தான் இத்தனை நிமிடங்கள் அவ்வளவு அமைதியாக அப்படியே இருந்தானா என்று நினைத்து மனதிற்குள் மீண்டும் கலவரமானாள்.

“இங்காருட்டீ.. களவாங்கது மட்டுந்தான் ஏந்தொழிலு. வேற எதுவும் கெடயாது.. பாவமாருக்கனுட்டு ஒன்னய உடுதன்.. கத்தி கலவரம் பண்ணீராத.. ன்னா..” என்றபடியே அவளைத் திடுமென்று விடுவித்தான். பயத்தினால் சட்டென்று எழுந்தவள் தாங்கிப் பிடிக்க எதுவும் இல்லாமல் இடதுபுறம் குப்புற விழுந்து வேக வேகமாக தவழ்ந்து போய் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். தலையை நிமிர்த்தி அவனை பார்ப்பதற்கே அவளுக்கு பயமாய் இருந்தது. தான் பயப்படுவது அவனுக்கு அனுகூலமாகும் என்பதால் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளுடைய நீலக் கண்களைக் கண்டவன் முகமலர்ந்து சிரித்துப் பாடினான்.

“நீலம் கொண்ட கண்ணும்.. நேசம் கொண்ட நெஞ்சும்.. காலந்தோறும் என்னைச் சேரும் கண்மணி.. “

அவன் பாடியது கேட்டு தலை தாழ்த்திக் கொள்ளத்தான் அவள் முயன்றாள். ஆனால் முடியவில்லை.

மெல்லிய மஞ்சள் நிற விளக்கொளியில் அவன் முகம் இரவில் மலர்ந்த இளஞ்சிவப்பு காக்டஸ் மலர் போல விரிந்திருந்தது. மிலிட்டரிக்காரன் போல முடி வெட்டி இருந்தான். தீர்க்கமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள். அது திருடனின் கண்களே இல்லை. முன்பின் தெரியாத ஒரு பெண்ணின் கண்களைப் பார்த்து இவன் சுட்டு விரல் நீட்டினால் விரல் பிடித்து அவன் வீட்டிற்குச் சென்றிடுவாள். அப்படியொரு கண்கள் அவனுக்கு. சுத்தமாக சவரம் செய்த தாடை. துளி தொப்பையும் அவனுக்கில்லை. ஏதோ பெண் பார்க்க வந்தவன் போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இதழ்களால் சொற்களைச் சொல்லாமல் கண்களால் சொற்களைச் சொல்லும் மாந்திரீகப் பார்வை அது. யாரோ ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரனின் முகம் அவள் நினைவில் மின்னி மறைந்தது.

சில விநாடிகள் அமைதிக்குப் பிறகு அவன் சாதாரணமாகக் கேட்டான்.

“சோறும் கறிக்குழம்பும் செஞ்சிருக்கேன்.. சாப்புடுதியா..” 

அவள் திடுக்கென்று அதிர்ந்தாள். 

“களவாங்குத வீட்ல ஏதாது சமச்சி சாப்டுதது இப்ப ட்ரெண்டு..” என்றான்.

சாப்பிட்டுவிட்டு போ என்று சச்சு பாட்டி சொன்னதும் கதறி அழுத திருடன் இப்போது அவளுக்கு நினைவுக்கு வந்தான். ஆனால் என்னமோ அவளுக்கும் இப்போது கதறி அழ வேண்டும் போல இருந்தது. பதின்மூன்று வயதில் அவள் பூப்படைந்திருந்த போது சேத்தூரிலிருந்து வந்திருந்த அன்னம்மா சித்திதான் இந்த வார்த்தையைக் கடைசியாக அவளிடம் கேட்டாள்.

“ஏப்பிள்ள.. சாப்டியா நீ..”

இப்போது ஒரு திருடன் கேட்டிருக்கிறான். அடுப்பங்கரைக்குச் சென்று ஒரு தட்டில் கறிச்சோறு போட்டு வந்து அவள் முன்னே வைத்துவிட்டுச் சொன்னான்.

“வயித்த அமுக்கி புடிச்சுருந்தப்போ ஒம் பசி எங்கையவே தின்றுருக்கும். பட்டினி கெடக்கியோ இல்லாட்டி வெரதமோ.. ?” என்றான்.

கண்களில் நீர் தழும்ப அவள் அமைதியாய் அமர்ந்திருந்தாள். 

“எங்க தாத்தாவோட தாத்தாவோட தாத்தா சொல்லிருக்காருவோ.. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்னு.”

அவள் மெதுவாக தலையைத் திருப்பி சோற்றுத் தட்டைப் பார்த்தாள். பொதிகை மலையின் நீரூன்றிய தாமிரபரணி இப்போது அவள் வாயில் சுரந்து கொண்டிருந்தாள்.

“நாட்டுக்கோழி கறிட்டீ.. ப்ரெஷ் கறி.. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலதான் கொன்னு உறிச்சது..”

அந்தத் தட்டை வேகமாக இழுத்து சோற்றை அள்ளி அள்ளி உண்ண ஆரம்பித்தாள். . 

“யாத்தாடி.. செத்து கித்துப் போயிராதட்டீ.. மெதுவா தின்னு..” என்றவனை அவள் கண்டு கொள்ளவே இல்லை. இன்னும் வேகமாக அள்ளி அள்ளித் தின்றபடியே வாயிலிருந்து தெறிக்கும் சோற்றுடனே தலை தூக்காமல் கண்களை லேசாய் வலப்புறம் சாய்த்து கேட்கக்கூடாத கேள்வி ஒன்றை அவள் கேட்டாள்.

“தொட்டுக்க ஒன்னும் செய்யலியா..?”

“கோபி மஞ்சூரியன் வேணா செய்யவா..!” என்று அவன் கேட்டதற்கு “ம்..” என்று தலையசைத்தாள். 

“அடங்கொம்மாள..” என்றவாறே வலது கையை ஆவேசமாய் தூக்கி ஓங்கி அறைய வந்தவனைப் பார்த்து வெளிறிப் போய் மிரண்டாள். ஆனால் அவன் அறையவில்லை. தன் இடது கையால் அவள் வலது காதை பிடித்துத் திருகி முன்னும் பின்னும் இழுத்தபடியே சொன்னான். 

“வீட்ல குண்டுமணி தங்கங் கூட இல்ல.. பீரோவ தெறந்தா கரப்பாம்பூச்சியா ஓடுது.. தூக்குவாளி சம்பட சட்டிலேருந்து ஜாமென்ட்ரி பாக்ஸ் வரைக்கும் தெறந்து பாத்துட்டேன்.. பத்து பைசா கூட இல்ல.. சரி கடுகு சீரகம் டப்பாலயாவது எதாச்சும் இருக்கும்னு அதுல கடுகு சீரகமே இல்ல.. ஏட்டீ.. இது வீடா.. இல்ல வீடு மாதிரியா..?”

அவளுக்கு சிரிப்பும் கண்ணீரும் காது மடலில் வலியும் ஒரு சேர வந்தது. கனத்த எரிச்சலோடு அவள் காது மடலில் இருந்து படக்கென்று தன் கையை எடுத்தான். அப்போது அவள் காதிலிருந்து ஜிமிக்கி கழன்று கீழே விழுந்தது. அவன் அதை டக்கென்று எடுத்து அந்த மெல்லிய மஞ்சள் விளக்கொளியில் பார்த்துக் கேட்டான்.

“இதாச்சும் தங்கமா..?”.

அவள் பதிலேதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள். 

“வெசம் வாங்க துட்டுல்லாம உசுரோடயிருக்கீய போல..நாசமத்து பேதீலதாம்ட்டீ போப்போது ஒங்குடும்போம்..” – அவன் சபித்தான்.

பின்னர் யோசித்தவளாய் அவள் அப்பா அவரது சிறுவயதில் இருந்து ஒரு உண்டியல் சேர்த்து வருவதாகவும் அது பரண் மேல் இருப்பதாகவும் சொன்னாள். அவன் பரண் மேல் ஏறி அந்தப் பெரிய மண் உண்டியலை தரையில் போட்டு உடைத்தான். உள்ளிருந்தவை அனைத்தும் பழைய ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசாக்கள்.

“அடத் தரித்திரச் சண்டாளமே..” என நொந்து போனான். 

அதில் வித்தியாசமான சில பைசாக்கள் இருந்தன. அதில் ஒன்றை எடுத்துப் பார்த்தான். ஒரு அணா என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதைத் திருப்பிப் பார்த்தான். ஈஸ்ட் இண்டியா கம்பெனி – 1818 என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அவன் கண்கள் அகல விரிந்து சிவந்தன.

“ஏ.. செறுக்கியுள்ளயலா.. இந்த உண்டியல எரநூறு வருசமா சேக்கிய போல.. தரித்திரத்துல குசேலர் குடும்பத்தையே மிஞ்சீட்டியளே.. நல்லவேள இத ஒடச்சேன்.. இதல்லாம் நெரம்பதுக்கு இன்னும் முந்நூறு வர்சமாது ஆவும்..”

அவள் சோகமாக முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டாள்.

அவன் சோர்வாக எழுந்து அடுப்பங்கரைக்குச் சென்று குழம்புச் சட்டியைத் தூக்கி வந்து இன்னும் கொஞ்சம் குழம்பையும் ரெண்டு துண்டு கறியையும் அவள் தட்டில் இட்டவனை விநோதமாகப் பார்த்தாள். 

அவனிடம் அவளுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்றுத் தோன்றுகிறது. ஆனால் அது என்னது என்று அவளுக்குப் புரியவில்லை. அவன் அவளருகே வந்து குத்த வைத்து அமர்ந்தபடியே அவள் வலது காதை உற்றுப் பார்த்தான். அவளுக்கு காது மடல் கூசியது. அவன் தன் இடது கை விரல்களால் அவள் காது மடலின் ஓரத்தை மெதுவாகத் தடவிப் பார்த்தான். இப்போது அவளுக்கு உடலில் தலையில் இருந்து கால் வரை வலது புறம் மட்டும் சிலிர்த்து மயிர்க்கூச்செறிந்தது. தலையை நெளித்து அசைந்தபடியே யோசித்தாள். தன் காதை முரட்டுத்தனமாக திருகிய அதே கையா இது. கோழி இறகினால் காதை குடைந்தாற் போல் அல்லவா இருக்கிறது. அவள் அப்படி நெளிந்தாள்.

“திருகாணி காதுலதான் இருக்கானு பாத்தம்ட்டீ..” என்றான். 

வார்த்தைக்கு வார்த்தை ஏட்டீ ஏட்டீ என்றவன் சொல்லும்போது தனக்கு ஏன் கோபமே வரமாட்டேன் என்கிறது என்பது அவளுக்குப் புதிராக இருந்தது. மேலும் ஏட்டீ ஏட்டீ என்றவன் சொல்லும் போது உடம்பில் புதிய சுகம் பிறக்கிறது. 

திடீரென்று வானமே வெடித்துச் சிதறியது போல பெரும் இடியோசையொன்று வானில் முழங்கியது. இடிச் சத்தம் கேட்டு பதறிய ரத்தினம் சோற்றுக்கையுடனே படக்கென்று அவன் கையைப் பிடித்து அடுத்த நொடியே சுதாரித்து கையை எடுத்து, “ஸாரி..” என்றாள். சடசடவென மழை பெய்யும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. திறந்திருந்த ஜன்னலின் வழியே பார்த்தான். வெளியே மழை பொழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவன் எழுந்து ஒரு பாடலின் வரிகளை தற்கணத்திற்கு ஏற்றபடி மாற்றிப் பாடியபடியே ஜன்னலை நோக்கி சென்றான். 

“(அவள்)தொட்டாள் நான் மலர்ந்தேன்.. தொடாமல் நீ மலர்ந்தாய் ..”

ஆஹா.. ஏற்ற இறக்கத்தோடு என்ன அழகாக பாடுகிறான் என்று ரசித்தாலும் ரத்தினம் கொஞ்சம் முகஞ்சுழித்தபடியே, “அய்ய.. அப்பிடில்லாம் ஒண்ணுல்ல..” என்றாள். தட்டில் இன்னும் பாதிச்சோறு மிச்சமிருந்தது.

ஜன்னலின் வழியே பெய்யும் மழையைப் பார்த்தான். தெரு விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் கோடுகளாக கொட்டும் மழைத்துளிகள் தங்கம் போல் மின்னிக் கொண்டிருந்தன. எதிர்வீட்டு மாடியின் ஜன்னல் கண்ணாடிகளில் நீர்முத்துக்கள் கோலமிட்டு மெதுவாக கீழே வழிந்தோடிக் கொண்டிருந்தன. பகலாக மட்டும் இருந்திருந்தால் மரங்கள் நனைந்து அதன் இலைகள் இன்னும் அடர்பச்சையாக பளபளப்பாகத் தெரிந்திருக்கும் என்று நினைத்தபடியே அவன் மீண்டும் பாடினான். அது அத்தனை அற்புதமாக இருந்தது. 

“சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ.. சிலை வண்ணம் அங்கே.. கலை உள்ளம் இங்கே.. நிலை தன்னைச் சொல்ல தூதுவன் எங்கே .. பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடிவா..!” என்று மழையை நோக்கி இரு கைகளை நீட்டினான்.

ரத்தினத்திற்கு கண்களில் நீர் கோர்த்துவிட்டது. மழையை காதலி போல் நினைத்து அழைத்துப் பாடுகிறானே.. அவன் பாடும்போது ஆண் மயில் தோகை விரித்தாடுவது போல் அல்லவா இருக்கிறது. தன்னை அறியாமல் அவள் இதழ்கள் முணுமுணுத்தன.

“யாரோ இவன்.. யாரோ இவன்.. என் பூக்களின் தேனோ இவன்..”

 அவளின் முணுமுணுப்புச் சத்தம் கேட்டு அவன் திரும்பிய போது, திடுக்கிட்டு தலை குனிந்து மீண்டும் சோற்றை வேகவேகமாக அள்ளித் தின்ன ஆரம்பித்தாள்.

“விக்கி கிக்கி தொலைஞ்சிராதட்டீ.. ஒரு சொட்டுத் தண்ணியில்ல ஒன் வீட்ல..” என்று அவன் சொல்லி முடிக்கும் போது அவளுக்கு விக்கல் வர ஆரம்பித்தது. 

“நாசமா போச்சு..” என்றபடியே ஒரு சொம்பை எடுத்துக் கொண்டு மழைநீர் பிடிப்பதற்காக கதவைத் திறக்கப் போனான். வேகமாக அவனை நோக்கி வேண்டாம் வேண்டாம் என்று கையசைத்தாள். விக்கல் ஒவ்வொன்றும் பெரும் விக்கலாக இருந்தது. மழைத் தண்ணீர் குடித்தால் காய்ச்சல் வரும் என்று சைகைகளால் செய்து காண்பித்தாள். அவள் அருகில் வந்து அமர்ந்து, “மூச்ச நல்லா இழுத்து உடுட்டீ..” என்றான். அவள் மூச்சை பெரிது பெரிதாக இழுத்து விட, அவளின் மார்பகங்கள் விம்மிப் புடைத்து உள்வாங்கி விம்மிப் புடைத்து உள்வாங்க, அதைப் பார்த்தபடியே அவன் வாய்விட்டுப் பாடினான்.

“கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ..?” 

வரிகளின் அர்த்தம் புரியாமல் விக்கிக் கொண்டிந்தவளை திட்டிச் சொன்னான்.

“அடுத்த வரி நீதாம்ட்டீ பாடனும்.. ‘நானே தரும் காலம் வரும்.. ஏனிந்த அவசரமோ..”

சடக்கென்று அவள் புரிந்தவளாய் அவனை அறைவதற்காக வேகமாக சுழற்றிய அவளின் இடது கையை தன் இடது கையால் படக்கென்று பிடித்தான். அவளது இடது கை விரல்களை பார்த்தவன் ஆச்சரியமாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“எல்லா வெரல்லயும் நகம் பெருசு பெருசாருக்கு.. ஆனா யாம்ட்டீ நடு வெரல்ல மட்டும் நகத்தெ சுத்தமா வெட்டி வெச்சிருக்க..?”

ஏற்கனவே பெரிதாக விக்கிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது அது முரட்டு விக்கலாக மாறியது. உடம்பு அதிர அதிர விக்கினாள். அவளின் விக்கல் ஒலிகள் சரியான தாள சுருதியில் இயங்கும் ஒரு ரிதம் போல அவனுக்கு ஒலித்தன. தலையை அசைத்துக் கொண்டேயிருந்தவன் திடீரென்று பாட ஆரம்பித்தான்.

“கொக்கு சைவ கொக்கு.. ஒரு கெண்ட மீனக் கண்டு..”

அவள் எரிச்சலாகி அவன் தொடையில் எந்த உரிமையுடனோ ஓங்கி ஓங்கி அடித்து, எப்படியாவது இந்த விக்கலை நிறுத்துய்யா என்று சைகையினால் கெஞ்சினாள்.

அவன் மிகச் சாதாரணமாகக் கேட்டான்.

“மேட்டர் செய்வமா..? 

ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்துக்கு தூக்கி வீசப்பட்டவள் போல ரத்தினம் திடுக்கிட்டு அதிர்ந்து உறைந்தாள்.

“விக்கல் நின்றுச்சி..” என்றவன் எழுந்து போய் மீண்டும் மழை பார்க்க ஆரம்பித்தான். பனிமலையில் இருந்து பாலைவனத்துக்குள் விழுந்து மீண்டும் பாலைவனத்தில் இருந்து பனிமலைக்குத் திரும்பும் சாகசங்கள் எல்லாம் ஒரு நொடியில் நிகழ்கின்றனவே. இதற்கு பெயர் என்ன..? 

ஜன்னலில் இருந்து பார்வை விலக்காமல் அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.

“வந்ததுக்கு ஒரு பிரயோசனமுமில்ல.. செரி.. நா கெளம்பட்டா..”

அவள் பரிதாபகரமானதொரு அதிர்ச்சிக்குள்ளாகி, “அதுக்குள்ளயா..?” என்றாள். அவன் ஜன்னலில் இருந்து மெதுவாக தலை திருப்பி ஏதோ புரிந்தவனாய் அவளைப் பார்த்துக்கேட்டான்.

“ஏ..கிறுக்கு.. நா திருடன்ட்டீ..” 

அவள் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். ஏதோதோ சொல்ல வந்து ஒன்றும் சொல்ல முடியாமல் திக்கித் திணறித் தவித்தாள். அவள் இதழ்களின் விளிம்பில் ஆயிரமாயிரம் சொற்கள் இருந்தன. ஆனால் அவை ஒவ்வொன்றும், ‘நான் முதல்ல போகமாட்டேன்ப்பா .. நீ போ.. ‘ என்று பயந்தன. எதிர்வீட்டுத் திருடனிடம் சச்சுப் பாட்டி சொன்னதையே இந்தத் திருடனிடம் இவள் சொன்னாள்.

“ஒரு வாய் சாப்டுட்டு போங்களேன்..” 

அவளின் அருகே வந்தமர்ந்து அவள் கீழ் உதட்டை லேசாக சுண்டிவிட்டுக் கேட்டான்.

“ஒரு வாய்னா இந்த வாயா..!!”

இன்னும் சற்றைக்கெல்லாம் கிளம்பப் போகிறவன் ஏன் இப்படி ததும்ப ததும்ப காதல் பேசுகிறான். விவசாயம் செய்யப் போவதில்லை என்றால் ஏன் நிலத்தை இவ்வளவு ஆழ உழ வேண்டும். அவளுக்கு அவனுடனே போக வேண்டும் போல இருந்தது.

“சோறு எனக்கு மட்டுந்தான்ட்டீ வடிச்சேன். பாவம்.. ஒனக்கு நல்ல பசி.. எனக்கு ஆயிரம் வீடு இருக்கு.. ஒனக்கு இது மட்டுந்தான வீடு.. நீ சாப்ட்டா என்ன நா சாப்ட்டா என்ன..”

நீர் தழும்பும் தன் நீலக் கண்களோடு அவன் கண்களை தீர்க்கமாகப் பார்த்தாள்.

“அப்பிடில்லா பாக்காதட்டீ.. ” என்றவன் தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். பெருமூச்சு விட்டபடி எழுந்தான். தன் இடது கையை அவளை நோக்கி நீட்டி, “எந்தி..” என்றான். அவள் அவனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு டாட்டா காட்ட மாட்டியா..?” என்றான். அவள் கண்களிலிருந்து நீர் பொங்கி வழிந்தன.

சோற்றுப் பருக்கைகள் ஒட்டியிருக்கும் தன் வலது கையை பார்த்தாள். அவன் அவளது பின்னே சென்று ஒரு குழந்தையை தூக்குவது போல அவளைத் தூக்கி நிறுத்தினான். அவள் அவனது தோள்பட்டைகளை உரிமையாகப் பிடித்தபடியே தத்தி தத்தி நடந்து வந்தாள். வாசல் கதவைத் திறந்தான். மழை நின்றிருந்தது. சாரல் இன்னும் விடவில்லை. 

“கொஞ்சங்கூட தண்ணியில்லயே எப்படி கை கழுவுவ..?” என்றான். ஒரு குழந்தையைப் போல முகத்தை சுழித்துக் கொண்டு அவள் சொன்னாள்.

“எங்கூட்ல தண்ணீருக்குதான் பஞ்சம்.. கண்ணீருக்கு பஞ்சமில்ல.. கண்ணீராலேயே கழுவிக்குவேன்..”

 “லூசாட்டீ நீ..”

“திரும்ப வருவியளா..?” என்றாள்.

“ஒரு களவாணிப்பயட்ட கேக்குத கேள்வியா இது..?”

எதையுமே களவாடாமல் எதையோ களவாடியது போல ஒரு உணர்வு அவனுக்குள். மாடியில் இருந்து ஐந்தாறு படிகள் இறங்கியவன் திரும்பி அவளைப் பார்த்தான். சோடியம் விளக்கொளியில் அசையாமல் ஒரு மஞ்சள் ஓவியம் போல் நின்று கொண்டிருந்தாள்..மேலேறி வந்தவன், தனது வலது உள்ளங்கையை திறந்து காண்பித்தான். அந்த ஜிமிக்கி இன்னமும் அவன் கையில்தான் இருந்தது. அவளின் இடது காது மடலைத் தடவிப் பார்த்தான். அந்த ஜிமிக்கியை அவள் காதைப் பிடித்து திருகாணியில் பொருத்திக் கொண்டே அவளின் நீலக் கண்களைப் பார்த்து சொன்னான்.

“இந்த ரெண்டு கண்ணையும் அப்பிடியே அவிச்சு தின்றவா..!!”

அவள் தன் நீலக் கண்களால் அவனைப் பார்க்க பார்க்க அவனுடம்பில் நீலம் பரவிக் கொண்டிருந்தது.

“அப்பிடி பாக்காதட்டீ..” என்றான்.

“அப்பிடிதான் பாப்பென்..” என்றவளைப் பார்த்து அவன் பாடினான்.

“அப்படி பாக்கறதுன்னா வேணாம்.. கண்ணால தாக்குறது வேணாம்..!”

குபீரென்று சிரித்தாள். 

“என் வாழ்க்கைல இவ்ளோ அழகான ஒரு ஒரு மணி நேரத்த நா பாத்ததே இல்ல.. நா ரொம்ப பயந்த ஒரு மணி நேரமும் இதான்.. ரொம்ப சந்தோசமாருந்த ஒரு மணி நேரமும் இதான்..” என்றவளை அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

“எம் பேரு என்னன்னு கேகக்கவேயில்லியே..” என்றான்.

அவள் மெதுவாக அழகாகப் பாடினாள்.

“உன் பேரே தெரியாது.. உனைக் கூப்பிட முடியாது.. நான் உனக்கோர் பேர் வைத்தேன்.. அது உனக்கே தெரியாது..”

அவன் ஒரு படி மேலேறி அவளைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்டான்.

“ஏட்டீ.. கள்ளச்சி.. நீ இம்புட்டு நல்லா பாடுவியா..!!”

“இன்னொரு நாள் வாங்க..” என்றாள். 

“களவாங்கதுக்கு என்னருக்கு ஒன் வீட்ல..?” என்றதும் அவள் நீலக் கண்களிவிருந்து அவன் கண்களுக்கு மின்னலை பாய்ச்சியபடியே சொன்னாள்.

“ஏன்.. நா இல்ல..” 

“இப்பிடில்லா பேசாதட்டீ.. ” 

என்றவன் விறுவிறுவென படிகளில் கீழிறங்கினான். அவளைத் திரும்பிப் பார் திரும்பிப் பாரென்று அவன் மனம் சொன்னாலும் பார்க்காமல் தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினான். தெருவிளக்குகள் அணைந்து எரிந்து அணைந்து எரிந்து ஒருவனை வெளிச்சத்திலும் இருட்டிலும் மாறி மாறி காட்டிக் கொண்டிருந்தன. அவன் நடந்து போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள். சோற்றுப் பருக்கைகள் ஒட்டியிருக்கும் வலது கையை நுகர்ந்து பார்த்தாள். இனி அவள் நுகரும் எல்லா கறிசோற்றின் வாசனைகளும் அவன் நிறைந்திருப்பான்.

அவன் நிச்சயம் திரும்ப வருவான் என்று அவள் நம்பினாள். இதுவரையிலும் வாழ்வில் தான் உணர்ந்திராத ஒரு அமைதி உள்ளத்தில் படருவதை உணர்ந்தாள். படிகளில் கீழிறங்கிப் பார்த்தாள். அவன் இன்னும் தெருமுனையைக் கடக்கவில்லை.

தெருமுனைக்கு சென்று நின்ற அவன் திரும்பி அந்த மாடி வீட்டைப் பார்த்தான். இன்னமும் அவள் அங்கேயே நின்று கொண்டிருப்பதும் இவனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. அவளுக்குக் கேட்காது என்றாலும் அவன் வாய்விட்டுச் சொன்னான்.

“அப்பிடி பாக்காதட்டீ..”

***

மழைக்குருவி – இயற்பெயர் அருண்குமார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் மூலமாக எழுத்தின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு மழைக்குருவி என்கிற புனைப்பெயரில் கவிதைகள் சிறுகதைகள் எழுதி வருகிறார். அச்சு இதழ்களிலும் மின்னிதழ்களிலும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார். மின்னஞ்சல்: mazhaikkuruvi@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. அட்டகாசம், ரசித்து வாசிக்க வைத்தது.
    அதுவும் முடிவு அத்தனை அற்புதம்.
    வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here