Saturday, May 2, 2026
Homeஇதழ்கள்2023 இதழ்கள்கோடி அணுக்கள் விவரிக்கும் ஏகாந்தப் பெருவெளி - வேல்கண்ணனின் ‘லிங்க விரல்’ கவிதை நூல் குறித்த...

கோடி அணுக்கள் விவரிக்கும் ஏகாந்தப் பெருவெளி – வேல்கண்ணனின் ‘லிங்க விரல்’ கவிதை நூல் குறித்த பார்வை

முகில் நிலா தமிழ்

குழந்தையை, குழந்தையாகி அணுகுவதைப் போலவே கவிதையை, கவிதையாகி அணுகினாலன்றி அதனுள் வெகுதூரம் பயணிக்க முடியாது

கவிஞன் தான் பயணிக்கும் வெளியை தன் எழுத்துக்களால் விவரிக்கும் போது அது அவனின் தனிப்பட்ட அனுபவமாகிறது, கவிதைகளை வாசிக்கும் போது, அந்தக் கவிதைக்குள் வாசகன் தன்னை உணரமுடிந்தால், அந்தக் கவிதை பொதுவாகிவிடுகிறது…

ஆக இந்த நூலில் பொதுவாக உணரக் கூடிய கவிதைகள் அதிகம் இடம்பெற்று இருக்கிறது.. இந்த நூல் வாசிப்பனுபவம் எனக்கு சற்று கடினமாகத்தான் இருந்தது, அதிகம் குறியீடுகளும், படிமங்களும் நிறைந்த கவிதை தொகுப்பு இது என்பதும், என் வாசிப்பனுபவம் என்பது மிக எளிய சொற்களைக் கொண்ட கவிதைகளை உள்வாங்கும் அளவே இருக்கிறது என்பதுவுமே காரணி…

இந்த நூலின் கவிதைகளை புரிந்துகொள்ள சொற்களில் எந்த சிக்கலும் எனக்கில்லை என்றபோதும் அதன் பொருளை உள்வாங்க சிக்கல் இருந்தது என்பதை வாசகர்களிடமும், நூலாசிரியர் கவிஞர் வேல்கண்ணன் அவர்களிடமும் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை..

இவர் கவிதைகளுக்கு கடும் விமர்சனம் செய்ய காத்திருக்கும் எல்லோருக்கும் அவர் பதில் சொல்லும் விதமாக இரண்டாவது கவிதையில்

“//முழுமையற்ற
நெளிந்த சொற்களுக்குள் மெனெக்கெட்டு
எப்படியோ மீனை பிடித்துவிட்டேன்.
செதில் நீக்கம் செய்துகொண்டிருக்கையில்
பூண்டு மஞ்சள் கல் உப்பை தயார் நிலையில் வைத்து இருக்கிறீர்கள்.
மீனை ஆய்ந்து கொண்டிருக்கும் போதே குழம்பை கொதிக்க வைக்கிறீர்கள்
தூய்மையான துண்டாடிய மீன்களை உங்களிடம் தருகிறேன்.
“தலைப்பிரட்டையை வைத்து என்ன செய்வது, மீன் எங்கே?”
இரக்கமில்லாத உங்களின் கேள்விக்கு
எங்கிருந்து கொண்டுவருவது கவிதையை”//
என்கிறார்…

இதை வாசித்த உடனே எனக்குள்ளிருந்த விமர்சக பார்வையை தூக்கிவீசிவிட்டு, கவிதைக்குள் முடிந்தவரை எந்த திட்டமிடலும் இன்றி பயணிக்க வேண்டுமென தோன்றியது..

கவிதைக்குள் இருக்கும் கருவை மட்டும் உள்வாங்கிவிட வேண்டும் என்ற ஆவலை உள்ளடக்கி வாசிக்க தொடங்கினேன்.
///” இரவை நிரப்புதல் என்பது
கொஞ்சம் கொஞ்சமாய்
நானே என்னைத் தின்னுதல்” /// என்கிறார்.

அந்த இரவை நிரப்ப இசை, மது, புணர்ச்சி, நண்பர்கள் கூடுகை, நிலா பார்த்தல் , கவிதை, நட்சத்திரம், நோயின் தீவிரம், இப்படி இன்னும் இன்னும் பலவற்றை செய்தும் அவருக்குள் இருக்கும் இராட்சத பறவையின் ஒரு இறகாக மட்டுமே இரவு இருப்பதாகவும் இன்னொரு இறகு இரவில்லாத மற்றவையாக இருப்பதாகவும் அதன்பின் தன்னைத் தானே தின்று இரவை நிரப்புவதாகவும் சொல்கிறார்…

உண்மையில் இரவென்பது அத்தனை கடினமில்லை பலருக்கும், வெகு சிலருக்கே இரவைக் கடக்க வெகு சிரமப்பட வேண்டி இருக்கிறது… என் பார்வையில் இந்தக் கவிதை அவர் கடந்த அந்த இரவுக்கு முன்பே தொடங்கி விடுகிறது… கடந்த சம்பவங்களை ஜீரணிக்க வழியற்று, தன்னால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்ட பல நாட்களின் இரவுகள் எனக்குள்ளும் அந்த வலியை தந்திருந்ததை இந்தக் கவிதை மீட்டுத் தந்தது..

“///மங்கிய விளக்கொளி.
அறையெங்கும்
காலியான மதுப் புட்டிகள்
தாள் குவியல்கள்
சிகரெட் பஞ்சுகள்
ரெனால்ட் நீலத்து வரிகளுடன் பழைய கேசட்டுகள்.
பிசுக்கு நிரம்பிய சுவர்
அழுகிய வீச்சமும்
கருந்திட்டும் அப்பிக் கிடக்கும் தரை
எத்தப்பட்டு சுருண்டு ஓய்ந்த பாய்
கருங்கல் தலையணை

வெளியேறுவதற்கான
காரணங்கள் பலவிருந்தும்
ஒன்றில் நிற்கிற சகலமும்
ஒருக்களித்த கதவுக்கு அப்பால்
ஆர்ப்பரிக்கும்
கடலோசை”//
இந்தக் கவிதை தந்த தாக்கம் வேறானவை. இந்த உலகை, இந்த வாழ்வை வெறுக்க ஆயிரம் சமூககாரணிகள் நம் முன் உண்டு, ஆயினும் வாழ்வதற்குப் பிடிப்பாய் எதோ ஒன்றைப் பற்றிக் கொள்கிறோம் என்று தோன்ற வைத்த கவிதை இது ..

“வளர்ந்த
நந்தவனம்
தாங்கொணாப் புழுக்கம்
கிரகித்துக் கொள்கிறது
அத்துவானக் கானல் செடி”/// இந்தக் கவிதை ஒரு இடத்தில் அல்லது ஒரு உறவுக்குள் இருப்பதன் மூலம் அனுபவிக்கும் சுகங்களையும் அதன் பொருட்டு சகித்துக் கொள்ளும் பல துன்பங்களையும் ஒரே புள்ளியில் நோக்குவது போலவே எனக்குப் பட்டது..

“///என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக் கடித்தது
உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது
வேட்டை நாய்களை ஏவினேன்
பசித்த புலியின் கூண்டு திறந்துவிடுகிறாய்
ஆற்றின் வழித்தடத்தில்
நாம் அமைத்த வீட்டினை நோக்கி
ஒற்றை யானை வந்துக்கொண்டிருக்கிறது.//”

இது அரசியல் கவிதை என எனக்கு வாசிக்கும் போது பட்டது… இந்தக் கவிதைக்குப் பின்பான அரசியலும் சமகாலத்தியது என்பதுதான் எனக்குப் புரிந்த குறியீடு… நாம் செலுத்திய ஒரு வாக்கு, நமக்கே எப்படியெல்லாம் தொல்லைகளாக மாறி இன்று ஒற்றை ஆட்சி, ஒற்றை மொழி, ஒற்றை தேசம் என்ற கட்டமைப்புக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது என கவிஞர் சொல்வதாக எனக்குப் பட்டது..

“///பல்லாயிரம் உயிர்களை
வாரிச்சுருட்டியதைச் சொல்லிச் சொல்லி
கழுத்தறுக்க வேண்டும்.
கடலின் கழுத்துயெது?

லட்சக்கணக்கான உயிர்களைச் சுழற்றியெறிந்ததைக் காண்பித்து
மாறுகால் மாறுகை வாங்க வேண்டும்
காற்றின் கை கால்யெது?

பெருகியோடும் குருதி வெள்ளத்தின் வீச்சம்
நுகரவைத்து
சங்கு அறுக்க வேண்டும்
நதியின் முகமெது?
எண்ணிக்கையற்ற உயிர்களை
புதைத்துக் கொண்டது குறித்தக் கேள்வியுடன்
தலைக்கொய்ய வேண்டும்
நிலத்தின் தலையெது?
மிதக்கும் முழுநிலவு
அலையாடும் கப்பல்
கடல் பார்ப்பது எவ்வளவு ஆனந்தம் நண்ப”//

இந்தக் கவிதை வாசிப்பனுபவம் இன்னும் சற்று அகலமானது, இயற்கை நிகழ்த்தும் பேரழிவுகளுக்கு யாரை நிந்திக்க முடியும் என்று மேலோட்டமாக அவர் சொல்வதாகப் பட்டாலும், எனக்குள் இந்தக் கவிதை என்னை நானே ஆய்வுக்குட்படுத்தும் கவிதையாகத்தான் பட்டது…
மிகச் சரியான ஒன்று உலகில் உண்டா? மிகச் சரியான மனிதன் என யாரும் உண்டா? தினசரி நாம் நிகழ்த்தும் பேரழிவு என்று எத்தனையோ இருக்கிறதுதானே, இயற்கை மீதும் சக மனிதர்கள் மீதும் அறிந்தும் அறியாமலும் பல அத்துமீறல்களை செய்துவிடுகிறோம் அல்லவா? அத்தனைக்கும் பொறுப்பாய் யாரைச் சொல்வது, நம்மை நாமே தலையைக் கொய்து கொள்ள முடியுமா?! என எத்தனையோ கேள்விகளை இந்தக் கவிதை எனக்குள் ஏற்படுத்தியது…

அழிவும் சரி ஆக்கமும் சரி நம்பிக்கை உடையவனுக்கு கடவுளின் கையிலும், நம்பிக்கையற்றவனுக்கு அறிவியலின் கையிலும் இருப்பதாகவே உணரச் சொல்லியும் ஒரு குரல் இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்குள் ஒலித்தது…
“///கவிதையில் ஒரு மரம் வரைகிறேன்
கவிதையில் ஒரு தோப்பு வரைகிறேன்
கவிதையில் கானகம் வரைகிறேன்

முதல் வரி எழுதுவதற்கு முன்பிருந்த பறவை
திரும்பி வந்தபாடில்லை.”///

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இதுவென சொல்வேன்…

கவிதை எழுதுவதற்கும், கவிதை செய்வதற்குமான வேறுபாட்டை விளக்கும் கவிதை இது என்று தோன்றியது… இன்னும் ஒரு வடிவத்திலும் இக்கவிதை எனக்குள் புகுந்தது… (சமூக அமைப்புகளில் குடும்பம் என்ற ஒன்று எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை சொல்வது போன்றும் தோன்றியது… அன்பின் பால் நிகழ்த்தப்பட வேண்டிய யாவற்றையும் ஒரு கட்டமைப்புக்குள் கட்டிவைத்து அதன்பின் அல்லது அதன் பொருட்டு அன்பு கொள் எனப் பணிக்கும் முட்டாள்தனத்தை சொல்வதாகவும் பட்டது)

“//மிக நீண்ட தூரம்
விருப்பக்குறியும் நிலைத்தகவலும்
இருத்தலை தெரிவிக்கும்
காலமிது
இறப்பில் தொடங்கி
இறப்பில் முடியும்
இந்நாட்களை கடப்பதற்கு
கள்ளச்சாவி ஏதேனும் உண்டோ?
எங்கெனவும் இருக்கும் காற்று
நிரப்ப முடியாத பிடிமூச்சு
எண்சாண் உடம்புக்கு நுரையீரலே பிரதானம்
காற்றின் உருவம் என்னுயிர்
இவ்வுலகின் மிக நீண்ட தூரம்
மூக்கிலிருந்து நெஞ்சாங்குழி வரை”///

இந்த தொகுப்பு சமகாலத்தின் நகல் என்பதற்கு இது போன்ற கொரானா காலக் கவிதைகள் சிலவும் இடம்பெற்றிருக்கிறது… மிக மிக கடக்க முடியாத தூரமாய் மூக்கிலிருந்து நெஞ்சாங்குழி வரை சுட்டியது மிகச் சிறப்பு… மிகப் பொருத்தமும் கூட.

“///கனவில் வந்த சிவன்
கனவில் வந்த சிவன்
தேடிக் கண்டறியா நகரத்துள் அழைத்துச் சென்றான்
காடுடைய சுடலை சாம்பல் பூசி வீதியில்
அங்கம் உருண்டான்
வீணை மீட்டி
ஒரு தெரு
உடுக்கை ஓங்கி ஒலிக்க
புறத்தே
ஆனந்த தாண்டவமிட்டான்
பம்பை முழங்க
ஒரு தெரு
பறையடித்து
ஒரு தெரு
நிலமதிர கொடுகொட்டி ஆடலுடன்
ஒரு தெரு
சேகண்டியுடன் சங்கொலித்து
சலனமற்று நடந்தான்
இசைக்கும் ஓசை பலப்பல
தெருவின் இசை பலப்பல
நடை தளர்ந்த பொழுதில் தேடிக் கண்டுகொண்டேன்
தெருவின் தேர்வே இசை
இசையின் தேர்வே சிவன்
கனவின் தேர்வு நான்.//”

இந்தக் கவிதை சமூகத்தின் வேறுபாட்டை, மனிதர்களுக்கு தக்க, வீதிகளுக்கு தக்க, ஊர்களுக்கு தக்க என தன்னை மாற்றிக்கொண்ட சமய நம்பிக்கையையும் அதன் பால் ஏற்படுத்தப்பட்ட பிளவுகளையும் சுட்டுவதாக எனக்குப் பட்டது…

இப்படி இந்த நூல் வாசிப்பனுபவம் முழுவதும் எனக்கு என்ற சொல் மேலோங்கி நிற்க ஒரே காரணம், இது என் வரையில் உள்வாங்கப்பட்ட வாசிப்பு அனுபவமேயன்றி இந்த நூலின் விமர்சனமோ அல்லது கவிதைகளின் கரு இதுதான் என்றோ என்னால் உறுதியாக சொல்ல முடியாது என்பதுதான்..

உங்களின் வாசிப்பில் இந்தத் தொகுப்பு முழுமைக்குமான கவிதைகள் வேறு வேறு இடங்களை நிகழ்வுகளை மனதின் பதிவுகளை உணரச் செய்யலாம்…

எழுதிய கவிஞரே கூட இந்தக் கவிதை இதை மட்டும் தான் பேசுகிறது என்று சொல்லிவிட முடியாத அளவு படிமங்களும், குறியீடுகளும் நிறைந்த தொகுப்பு இது…

இதை என் வாசிப்பனுபவம் என்றே எழுதிய கவிஞரும், வாசிக்கும் நீங்களும் எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடும்… இந்த தொகுப்பை வாங்கி வாசித்து அதற்கான சிறந்த விமர்சனங்களை முன்வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் என் வாசிப்பு அனுபவத்தை நிறைவு செய்கிறேன்…

***
முகில் நிலா தமிழ் – இவர் கோவையில் வசித்து வருகிறார். கவிதைகள் மற்றும் கவிதை குறித்த கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here