செம்மீன்

சித்ரா சிவன்

சென்னை நுங்கம்பாக்கம். ‘யெல்லோ ட்ரீ’ கலைக்கூடத்தின் குளிரூட்டப்பட்ட நீண்ட வளாகம் அமைதியாக இருந்தது. இளவேனிலின் ஓவியங்கள் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்தன. கேன்வாஸ்கள் முழுக்கத் தென் தமிழகத்தின் காய்ந்த செம்மண் நிலமும், பாழடைந்த சாமிகளின் சிலைகளும், எரியும் சூரியனும் அடர் வண்ணங்களில் தீட்டப்பட்டிருந்தன. அந்த வறட்சிக்கு நடுவே, ஒரே ஒரு ஓவியம் மட்டும் முற்றிலும் மாறுபட்டிருந்தது. அது, ஒரு சிறிய கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் ஒற்றைச் செம்மீன், வறண்ட நிலத்தின் நடுவே வைக்கப்பட்டிருப்பது போன்ற சித்திரம். காற்றில்லாத வெற்று வெளியில் செவுள்களை அசைத்துத் தவிக்கும் ஒரு மீனின் அனாதிரூபம் அது.

அங்குதான் அவள் சக்தியை முதன்முதலில் பார்த்தாள்.

அவன் ஒரு முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க மனிதன். கசங்கிய பருத்திச் சட்டையும், கத்தரித்து விடப்படாத தாடியும், கலைக்கூடத்தின் பளபளப்பிற்குச் சற்றும் பொருந்தாத தோற்றமும் அவனிடம் இருந்தன. அவன் அந்தச் செம்மீன் ஓவியத்தின் முன்னால் அரை மணி நேரத்திற்கும் மேலாக நின்றுகொண்டிருந்தான். பிறகு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தவளிடம் அருகில் வந்தான். ’பஃபட் சொன்ன ‘பழக்கத்தின் தளைகள்’ ஞாபகம் வருது இல்ல…’ என்று மெல்லிய குரலில் கேட்டான். ’ஒரு குறுகிய எல்லைக்குள்ளேயே வாழ்ந்து பழகின உயிர்… வெளியில இருக்கிற பிரம்மாண்டமான உலகத்தைப் பார்த்துப் பயப்பட ஆரம்பிச்சிடும். இந்த மீனைப் போல…’

இருபத்து இரண்டு வயதான இளவேனில், நுண்கலையில் முதுகலை முடித்துவிட்டுத் தன் முதல் தனிநபர் கண்காட்சியை நடத்தியவள். அவளுக்கு அந்தப் பெயர் ஆச்சரியத்தைத் தந்தது. வாரன் பஃபட்-ட சொல்றீங்களா? என்று கேட்டாள். 

’நான் வாசிக்கிறது வழக்கம் தான்… என் பேரு சக்தி… தேனி பக்கம் ஒரு சின்ன கிராமத்துல இருந்து வர்றேன். எங்களுக்கு கொஞம் நஞ்சை நிலம் இருக்கு… ஆனா இப்போ சென்னை ஐடி கம்பெனில வேலை. ஒரு செயற்கையான மீன் தொட்டிக்குள்ள அடைபட்டுக் கிடக்கிற மாதிரிதான் இருக்கு என் வாழ்க்கையும்…’

அன்றிரவு இளவேனிலின் இன்ஸ்டாகிராமில் ஒரு மெசேஜ் வந்தது, ’உங்க ஓவியங்கள்ல மண்ணோட மணம் இருக்கு… ஆனா அது அந்த ஆர்ட் காலரி ஏசி ரூம்ல மூச்சு திணறிக் கிடக்கிற மாதிரி தோணுச்சு… அந்த மீன்… அது தொட்டிக்குள்ள இல்ல, நம்ம எல்லாரோட மனசுக்குள்ளயும் நீந்திட்டு இருக்கு…’

அடுத்த இரண்டு வாரங்கள், அவர்கள் இருவருக்குமான உலகம் வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்திகளுக்குள் சுருங்கியது. சக்தியின் மெசேஜ்கள் மிகவும் ஆழமானவையாக இருந்தன. அவன் சங்க இலக்கியங்களை மேற்கோள் காட்டினான், நவீனக் கோட்பாடுகளைப் பேசினான், தன் மடிப்பாக்கம் அறையில் வளர்க்கும் மீன் தொட்டியைப் பற்றி விவரித்தான், ‘என்கிட்ட மூணு தங்கமீன்கள் இருக்கு… வெளி உலகத்தோட சத்தமே இல்லாத ஒரு அமைதியான உலகம் அது… ஆனா, அந்தத் தொட்டிக்குள்ள ஒரு தனி ஒழுங்கு இருக்கு. நீங்க தண்ணிய மாத்தும்போது அந்த மீன்கள் உங்க விரல்களை வந்து தொடும் பாருங்க… அது ஒரு அமானுஷ்யமான மௌன உரையாடல்…’ இளவேனில் அவனைக் குறித்து தன் மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கினாள். பெருநகரத்தின் நெரிசலில் சிக்கியிருக்கும் ஒரு மென்மையான தத்துவவாதி, ஒரு தேர்ந்த வாசகன், கண்ணாடித் தொட்டியின் மௌனத்தை ரசிக்கும் சாதுவான மனிதன். 

அவளது தோழி ரம்யா, ’அவன் உன்னைவிட பன்னிரண்டு வயசு மூத்தவன் இளா… கொஞ்சம் பாத்துக்கோ. இந்த சோஷியல் மீடியா ஆளுங்க நிஜத்துல வேற மாதிரி இருப்பாங்க…’ என்று எச்சரித்தபோது, ’வயசுங்கிறது வெறும் நம்பர் ரம்யா… அவரோட சிந்தனை ரொம்ப முதிர்ச்சியானது. ஒரு மீன் தொட்டியோட மௌனத்தைக் கொண்டாடுற ஒருத்தரால யாருக்கும் தீங்கு செய்ய முடியாது…’ என்றாள்.

நெடுநாட்களுக்குப் பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை தியாகராயநகரில் இருக்கும் ஒரு பாரம்பரியமிக்க உணவகத்தில் நேரில் சந்திக்கலாம் என்று சக்தி அழைத்தபோது இளவேனில் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டாள்.

ஆனால், நேரடிச் சந்திப்பு அவளுக்கு ஒரு விசித்திரமான அதிர்ச்சியைத் தந்தது.

உணவகத்தின் நெரிசலில், அவசர அவசரமாக சாப்பாடு பரிமாறப்படும் சத்தத்திற்கு நடுவே, சக்தி மிகவும் சுருங்கிப்போய்க் காணப்பட்டான். மெசேஜ்களில் சரளமாக ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசியவன், நேரில் மிகக் குறைவாகவே பேசினான். அவன் காபி குடித்த விதம், வேலையாளை அலட்சியமாக அதட்டிய விதம் எல்லாமே அவளுக்கு அசௌகரியத்தைத் தந்தது. அவளது ஓவியங்களைப் பற்றி அவன் பேசவே இல்லை. மாறாக, ஆபீஸில் இருக்கும் மேளாலர் தன்னை எப்படி நடத்துகிறார் என்ற புலம்பலே அவனிடம் இருந்தது.

அவள் கற்பனை செய்து வைத்திருந்த ஆழமான தத்துவவாதி அங்கே இல்லை. ஒரு எளிய, சற்றே விரக்தியடைந்த மனிதனே அமர்ந்திருந்தான். ஆயினும், இவ்வளவு நாட்கள் செயலிகளின் செய்திகளில் காட்டிய அந்த மென்மையான மனிதனைத் தேடினாள். அவளது மனம் அவனது தற்போதைய அசட்டுத்தனங்களை நியாயப்படுத்த முயன்றது. ’அவருக்குப் புதிய இடம், அதான் படபடப்பா இருக்காரு. ஒருவேளை அவரோட அந்த அமைதியான மீன் தொட்டிக்கு முன்னாடி உட்கார்ந்தா பழையபடி மாறிடுவாரோ’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“நம்ம எங்கேயாவது தனியாப் போய் பேசலாமா? இங்கே ரொம்ப சத்தமா இருக்கு. எனக்கு இந்த சத்தம் தலைவலியைத் தருது,” என்றான் சக்தி, காபி பில்லைக் கொடுக்கும்போது.

“சரி, வேளச்சேரில இருக்கிற ஒரு அமைதியான காபி ஷாப் போலாமா?” என்றாள் இளவேனில்.

“ஏன் தேவையில்லாம காசு செலவு பண்ணிக்கிட்டு? மடிப்பாக்கத்துல என் ரூம் இருக்கு. அங்கே போகலாம். அமைதியா இருக்கும். நீங்க என் மீன்களையும் பார்க்கலாம்,” என்றான்.

இளவேனில் ஒரு கணம் தயங்கினாள். ஒரு ஆணின் அறைக்குத் தனியாகச் செல்வதில் இருக்கும் ஆபத்துகளைப் பற்றிச் சமூகம் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தது. ஆனால், அவனது மெசேஜ்களின் ஆழமும், அந்தத் தொட்டி மீன்களின் மௌனமும் அவளது எச்சரிக்கை உணர்வை மழுங்கடித்தன. “சரி, உங்க மீன் தொட்டியைப் பார்த்த மாதிரி இருக்கும்,” என்று சிரித்தாள்.

மடிப்பாக்கத்தின் குறுகலான சந்து ஒன்றில் இருந்த அந்த ஒற்றை அறை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவர்கள் வந்தபோது இரவு எட்டு மணி ஆகியிருந்தது. அறைக்குள் நுழைந்ததும் இளவேனில் சுற்றிலும் பார்த்தாள்.

அறை முழுக்க ஒட்டடைகளும், காய்ந்த துணிகளும், பிளாஸ்டிக் பாட்டில்களும் சிதறிக்கிடந்தன. புத்தகங்கள் எதுவும் கண்ணில் படவில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமாக, அங்கே எந்த மீன் தொட்டியும் இல்லை. ஒரு மூலையில், தூசி படிந்த ஒரு வெற்றுப் பிளாஸ்டிக் வாளி மட்டுமே கிடந்தது. அதில் காய்ந்த பாசி படிந்திருந்தது.

“உங்க மீன் தொட்டி எங்கே?” என்று கேட்டாள் இளவேனில். அவளது குரலில் ஏமாற்றமும் லேசான பயமும் கலந்திருந்தது.

சக்தி தன் சட்டையைக் கழற்றி ஒரு நாற்காலியில் போட்டுக்கொண்டே, “ஓ… அதுவா? அது ஆபீஸ்ல இருக்குன்னு சொன்னேனே… ஞாபகம் இல்லையா?” என்றான். அவன் குரலில் இருந்த மென்மை மறைந்து, ஒருவித அதிகாரத் தோரணை வந்திருந்தது.

“இல்லை, நீங்க உங்க ரூம்லதான்…” என்று தொடங்கினாள் இளவேனில். அவளுக்குள் ஒரு பயம் மெல்லத் தலைதூக்கியது. அவன் தன் அறையில்தான் மீன் தொட்டி இருப்பதாகச் சித்தரித்திருந்தான் என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. அந்த வெற்று வாளி, அவனது பொய்களின் குறியீடாக அவளுக்குத் தோன்றியது.

“சரி, அதை விடு. தண்ணி வேணுமா?” என்று கேட்டுவிட்டு அவன் அவளருகே வந்து சோபாவில் அமர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்கள் இளவேனிலுக்கு ஒரு நரகமாக மாறியது. சக்தி அவளைப் பாராட்டத் தொடங்கினான், ஆனால் அது அவளது கலையைப் பற்றியது அல்ல; அவளது உடலைப் பற்றியது. அவளது கைகளைப் பற்றினான். அவளது விரல்கள் நடுங்குவதை அவன் கவனிக்கவில்லை, அல்லது கவனிக்க விரும்பவில்லை.

அவளுக்கு அந்த இடம், அந்த மனிதன், அவனது வேர்வை மணம் என எதுவுமே பிடிக்கவில்லை. அவளது மனம் அலறியது: ‘இங்கிருந்து ஓடிவிடு. இவன் நீ நினைத்த மனிதன் அல்ல. இவன் உன்னை ஒரு சிறிய தொட்டிக்குள் அடைக்கப் பார்க்கிறான்.’

ஆனால் அவளால் எழ முடியவில்லை.

அவள் வளர்ந்த விதம், பெண்களுக்குக் கற்பிக்கப்படும் “நாகரிகம்”, ஒருவரை அவரது முகத்திற்கு நேரே அசிங்கப்படுத்தக் கூடாது என்ற சமூகப் பயிற்சி அவளை இருக்கையோடு சேர்த்துக் கட்டியிருந்தது. ‘இப்போது திடீரென எழுந்து போனால், அவன் தன்னை எப்படி நினைப்பான்? இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவமதிப்பது போல் இருக்குமோ? அவன் கோபப்பட்டு கத்தினால் என்ன செய்வது?’ என்ற பயம் அவளைப் பக்கவாதமுற்றவள் போல் மாற்றியது. ஒரு பெண்ணின் “வேண்டாம்” என்ற வார்த்தையை விட, ஒரு ஆணின் ஈகோ காயப்பட்டுவிடக் கூடாது என்பதில் இந்தச் சமூகம் அவளை எவ்வளவு கவனமாக வளர்த்திருக்கிறது என்பதை அவள் அந்த நொடியில் உணர்ந்தாள்.

அவன் அவளை நெருங்கி முத்தமிட முயன்றபோது, அவள் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவளது உடல் விறைத்துப் போனது. அது மறுப்பின் வெளிப்படையான அறிகுறி. ஆனால் சக்தி அதை, பெண்களுக்கே உரிய “நாணம்” என்று தனக்குள் மொழிபெயர்த்துக் கொண்டான்.

அவள் அந்தச் சோபாவில் கிடக்கையில், தன் நிலை அந்த ஓவியத்து மீனைப் போலவே இருப்பதை உணர்ந்தாள். கண்ணாடித்தொட்டிக்குள் இருக்கும் மீனுக்குத் தண்ணீர் இருக்கும், ஆனால் சுதந்திரம் இருக்காது. அதன் உலகம் வெளியில் இருப்பவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. இப்போது அவளது உடலும், அவளது மௌனமும் அவளது கட்டுப்பாட்டில் இல்லை. அந்த உறவில் அவளுக்கு எள்ளளவும் விருப்பமில்லை, ஆனால் அவன் அதை முடிக்கும் வரை அவளது உடல் ஒரு உயிரற்ற மரக்கட்டையைப் போலக் கிடந்தது. அவளது மௌனம் அவனால் சம்மதமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இரவு பத்து மணிக்கு அவள் தன் விடுதிக்குத் திரும்பும் ஆட்டோவில் அமர்ந்திருந்தபோது, அவளது கண்கள் கலங்கவில்லை. மாறாக, அவளுக்குள் ஒரு வெற்றுத் தனிமை படர்ந்திருந்தது. தன் உடலை விட, தன் மனதின் உள்ளுணர்வை தானே கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது. ஆட்டோவின் ஜன்னல் வழியே தெரிந்த சென்னையின் விளக்குகள், தண்ணீருக்குள் தெரியும் மங்கலான பிம்பங்களைப் போல அவளுக்குத் தோன்றின.

அடுத்த இரண்டு நாட்களுக்குச் சக்தியிடமிருந்து தொடர்ச்சியாக மெசேஜ்கள் வந்தன. ‘ஞாயிற்றுக்கிழமை இரவு மறக்க முடியாதது’, ‘நீ என் தொட்டியின் அழகான மீன்’. இளவேனில் எதற்கும் பதிலளிக்கவில்லை. மொபைல் திரையில் அவனது பெயர் தோன்றும் போதெல்லாம் அவளுக்கு மூச்சுத் திணறுவது போலிருந்தது. தண்ணீரே இல்லாத வெற்றுத் தரையில் தூக்கிப் போடப்பட்ட மீனைப் போல அவள் தவித்தாள்.

மூன்றாம் நாள், அவளது நிலையைப் பார்த்த ரம்யா அவளது மொபைலைப் பறித்தாள்.

“இளா, என்னடி இது? பிடிக்கலனா பிளாக் பண்ண வேண்டியதுதானே? ஏன் இப்படிப் பயந்து சாகுற? அவன் என்ன பெரிய இவனா?” என்று கேட்டுவிட்டு, அவளது வாட்ஸ்அப் கணக்கிலிருந்து, ‘சக்தி, எனக்கு உங்களை முகத்திற்கு நேரே பிடிக்கவில்லை என்று சொல்லத் தெரியவில்லை. அன்றிரவு நடந்தது என் விருப்பப்படி நடக்கவில்லை. இனி எனக்கு மெசேஜ் செய்ய வேண்டாம்’ என்று டைப் செய்து அனுப்பிவிட்டு, அவனைத் தட்டாமல் பிளாக் (Block) செய்தாள். அனைத்து சமூக ஊடகங்களிலும் அவனது கணக்குகள் முடக்கப்பட்டன.

அடுத்த இரண்டு வாரங்கள் அமைதியாக நகர்ந்தன. இளவேனில் மெல்லத் தன் ஓவியங்களுக்குள் திரும்ப முயன்றாள். ஆனால், அவளது தூரிகை இப்போது அடர் வண்ணங்களைத் தொட மறுத்தது. அவள் வரையும் கோடுகள் யாவும் ஏதோ ஒரு கூண்டின் கம்பிகளாகவோ அல்லது தொட்டியின் விளிம்புகளாகவோ மாறின.

ஒரு சனிக்கிழமை மாலை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அதே கலைக்கூடத்திற்கு வெளியே தோழியுடன் இளவேனில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது சாலையின் எதிரே சக்தி நிற்பதை அவள் கண்டாள். அவன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது முகம் விகாரமாக மாறியிருந்தது. அவனது அந்த ‘பண்பட்ட வாசகன்’ பிம்பம் முற்றிலும் உதிர்ந்துபோயிருந்தது. தனக்குத் மறுப்பு தெரிவிக்கப்பட்டதை, ஒரு சிறு பெண் தன்னை நிராகரித்ததை அவனது ஆண் ஈகோவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவன் அவளைப் பார்த்த பார்வை, ஒரு தூண்டில் காரன் இரையைக் கூர்ந்து நோக்குவதைப் போல இருந்தது.

அவள் பயத்துடன் ரம்யாவின் கைகளைப் பற்றிக்கொண்டு வேகமாகத் தன் ஸ்கூட்டரை நோக்கி நடந்தாள்.

அவள் வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பிய அந்த விநாடியில், அவளது மொபைல் அதிர்ந்தது. புதிய ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. வண்டியை ஓட்டிக்கொண்டே ரம்யாவிடம் மொபைலைக் கொடுத்தாள்.

“யார்ன்னு பாரு ரம்யா,” என்றாள் இளவேனில், அவளது குரல் நடுக்கத்தை மறைக்க முயன்று.

ரம்யா மொபைலைத் திறந்து பார்த்துவிட்டு ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள். பின்னர் மெதுவாக வாசித்தாள்.

அதில் எந்தத் தத்துவமும் இல்லை, சங்க இலக்கியமும் இல்லை, மீன் தொட்டிகளின் மௌனமும் இல்லை. ஒரே ஒரு வார்த்தை மட்டும் தூய தமிழில் எழுதப்பட்டிருந்தது:

“தேவடியா.”

இளவேனில் வண்டியின் வேகத்தை அதிகரித்தாள். நுங்கம்பாக்கத்தின் போக்குவரத்து நெரிசலுக்குள் அவளது ஸ்கூட்டர் மறைந்தது. அவளது மனதில், தான் வரைந்த அந்தச் செம்மீனின் ஓவியம் முற்றிலும் சிதைந்துபோயிருந்தது. கண்ணாடித்தொட்டிகள் உடைந்து போகும்போது, மீன்கள் சுதந்திரம் அடைவதில்லை; அவை தரையில் விழுந்து மூச்சுத் திணறி இறக்கின்றன என்பதை அவள் உணர்ந்தாள். ஆனால், அந்தத் திணறலிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கரைசேர வேண்டும் என்ற ஒற்றை வெறியோடு அவள் வண்டியை இருளுக்குள் செலுத்தினாள்.

***

சித்ரா சிவன் – கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிற்றுளி கலை இலக்கிய இதழின் உதவி ஆசிரியர், தமுஎகச-வின் பெண்கள் கிளை செயலாளர். அம்முராகவ் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆதிலா, ஒளவையின் கள் குடுவை, பொய்களுக்குத்தான் முழக்கங்கள் தேவை, உண்மை முனங்கினாலே போதும், அத்தினி என நான்கு நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது. ஸீரோ டிகிரி இலக்கிய விருது, ஜெயந்தன் நினைவு விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது, செளமா இலக்கிய விருது போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். மின்னஞ்சல் : chitrasivan786@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. சிறப்பான கதை.
    கதையை வாசிக்கும் நம்மையும் அதனுடன் பயணிக்க வைத்த எழுத்து.
    முடிவில் அவன் அனுப்பும் வாட்சப் செய்தி வலியைக் கொடுத்தது என்றாலும் அவனுடன் அறைக்குச் செல்லும் பெண், இன்னும் கட்டுப்பெட்டித்தனமாக அவனுக்கு வளைந்து கொடுத்ததைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
    நல்ல கதை, எழுத்தாளர் சித்ரா சிவனுக்கு வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here