கணேஷ் பாபு
மாடியில் இருந்து கீழே வந்துகொண்டிருந்தபோதே கிருஷ்ணமூர்த்தி மாமாவின் குரல் கேட்டது. ஒருகணம் படிகளில் கால் தடுமாறியது. நிலை மீண்டபின் யோசித்தேன். கீழே செல்லத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. நான் வீட்டில் இருக்கும் தகவல் இந்நேரம் அவருக்குச் சொல்லப்பட்டிருக்கும். சிறிது நேரத்தில் அவரே மாடிக்கு என்னைப் பார்க்க வரக்கூடும். அதற்கு முன் நானே அவரைச் சந்தித்துவிடுவது உரையாடலின் நீளத்தைக் குறைப்பதற்கு உதவக்கூடும். வரவேற்பறை சோபாவில் சாய்ந்தமர்ந்து அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தவர், என்னைப் பார்த்ததும் வழக்கமான அதிகார தோரணையில் பேசத் துவங்கினார்.
“வாடா, காலேஜ் லீவு போல? ஒரு ஃபோன் போட்டிருந்தா நேத்தே வந்திருப்பேன்ல?”. நல்லவேளை என்னுடைய நேற்று இவரிடம் இருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது. நேற்றுக்கு இருந்த அதிர்ஷ்டம், இன்றுக்கு இல்லை. இவரிடம் மாட்டிக்கொண்டது. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று விழித்துக்கொண்டிருந்தபோதே அடுத்த கேள்வியைக் கேட்டார், “அலமாரில எதுக்குடா இத்தனக் கதப் பொஸ்தகங்கள வச்சிருக்கிற? சும்மா எடத்த அடைச்சுக்குட்டு இருக்கே, இதுக்குப் பதிலா பார்க்குறதுக்கு லட்சணமா ஏதாவது ஒரு பொருள வைக்கலாம்ல?”, என்றார்.
“இதெல்லாம் நவீன இலக்கியச் சிறுகதைகள் மாமா. நாவல்களும் இருக்கு” என்றேன்.
“அதெல்லாம் கிடக்கட்டும்டா, இதுனால என்ன லாபம்?”, என்றார்.
அவரிடம் நான் கோபப்படுவதில்லை. அவர் ஒரு பழுத்த லௌகீகவாதி. வெற்றிகரமான வியாபாரி. லௌகீக லாபங்களுக்கப்பால் அவர் எதையும் பொருட்படுத்துவதில்லை. அவருக்குத் தெரிந்த காகிதம் என்பது, ரூபாய் நோட்டுத்தான். புத்தகங்கள் குறித்தும் வாசிப்பு குறித்தும் என்ன சொன்னாலும் அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியாது என்கிறபோது எதற்காக அவருக்கு விளக்கம் கொடுத்து வீணாக நம் சக்தியை விரயமாக்கவேண்டும்? ஆகையால், அவருக்குப் புரியும் வகையில் அவருடைய அலைவரிசையிலேயே பேசி அவரைக் கடந்துசென்றுவிட வேண்டும் என்று நினைத்தேன். நான் சொன்னேன், “மாமா, ஒரு பேச்சுக்கு இந்த அலமாரி முழுக்க புத்தகங்களுக்குப் பதிலாக கட்டுக் கட்டாக பணம் இருக்குன்னு வைச்சுக்குவோம், அப்ப நீங்க என்ன சொல்வீங்க?”
அதைக் கேட்டதும் அவர் விழி விரிந்தது. “அப்படியும் இருக்குமாடா? அவ்வளவு பணம் வச்சிருக்கியா? இருந்தா எனக்கும் கொஞ்சம் கொடுடா” என்றார்.
சரிதான், அவ்வளவுதானா நீங்கள்? என்று நினைத்துக் கொண்டேன். “மாமா, ஒரு பேச்சுக்கு பணம்னு சொன்னேன். உடனே உங்களுக்கு எவ்வளவு சபலம் தட்டிருச்சு பாத்தீங்களா?. ஒருவகையில் நான் சொன்னது உண்மைதான் மாமா. நீங்க இந்த அலமாரில பாக்குற புஸ்தகங்கள் எல்லாமே உங்க கண்ணுக்கு வெறும் தாளாத் தெரியலாம். என் கண்ணுக்கு எல்லாமே பொற்காசுகள் உள்ள புதையலு மாமா, தலைமுறைக்கும் நீடிக்கக்கூடிய செல்வம்” என்றேன்.
இப்போதும் நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை. “சரிதான் போடா, உன் கண்ணுக்கு இதெல்லாம் புதையலாத் தெரியுதுன்னா உன் கண்ணத்தான் செக் பண்ணனும்”, என்றார்.
“செக் பண்ண வேண்டியது என் கண்ணையல்ல. உங்க மனசத்தான்” என்று சொல்ல நினைத்தேன். மரியாதை கருதி சொல்லவில்லை. உடனே, அவர் என்னைப் பேச்சில் வென்று விட்டதான பாவனையில், புன்னகையுடன் சோபாவில் சாய்ந்து அமர்ந்தார். “பாட புஸ்தகத்தப் படிக்காம, இதெல்லாம் என்ன நேர விரயம்? இதப் படிக்கிற நேரத்துல போட்டித் தேர்வுகளுக்கான புஸ்தகங்களப் படிச்சா வாழ்க்கைல முன்னேறலாம்ல” என்றார். என் அப்பா அவருக்கு ஏற்ற பதிலைச் சொன்னார், “இங்க உக்காந்து இட்லியும் வடகறியும் திங்கற நேரத்துல உன் கடையில உக்காந்து வியாபாரம் பாத்தா, கூட நாலு காசு பாக்கலாம்ல மூர்த்தி” என்றார். வழுக்கி விழுகாததான பாவனையில் மாமா சொன்னார், “உண்மதான் மாமா, ஆனா, விடிஞ்சதிலிருந்து இருட்டற வரைக்கும் கல்லாவுலயே உக்காந்திருக்கேன். வருஷக்கணக்கா இப்படியே இருந்தா ஒரு மிஷின் மாதிரி ஆயிருவேன். அதனால்தான், ஒரு ஆசுவாசத்துக்கு இப்படி அக்கா வீட்டுக்கு வந்துர்றது” என்றார்.
அப்பா சொன்னார், “அவனுக்கும் அப்படித்தாண்டா. பாடத்தையே படிச்சுட்டு இருந்தா அவனுக்கும் தான் ஒரு மிஷின் மாதிரி ஆயிடறதா நினைக்கிறான். அதனால இப்படிப்பட்ட புஸ்தகங்களப் படிச்சுட்டு ஆசுவாசம் தேடிக்கிறான். உனக்கு என் வீடு எப்படியோ அப்படித்தான் இவனுக்கு இந்த அலமாரியில இருக்குற புஸ்தகங்கள்”.
“மனுசன எந்திரமாகிறதுல இருந்து காப்பாத்தக்கூடிய எந்த விஷயமும் நல்ல விஷயம்தான மாமா”, என்றேன்.
“என்னமோ சொல்றீங்க” என்றவாறு இது சம்பந்தமான பேச்சை நீடிக்க விரும்பாமல், வியாபார விஷயங்களை அப்பாவிடம் பேச ஆரம்பித்தார் மாமா. அந்தச் சிறிய இடைவெளியில் அவரிடம் இருந்து தப்பித்து வெளியே வந்தேன்.
ஆனால், மீண்டும் அன்றைய மாலையே அவரிடம் மாட்டிக்கொள்ள நேர்ந்தது. ஊரின் முக்கியமானதும் அழகியதுமானதொரு சிவன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். மாலை வேளையில் வானிலிருந்து பொன்மயமான சூரியப் பிரபைகள் கோயில் கோபுரத்தின்மீது பொழிந்து கொண்டிருந்தன. சிற்பங்கள் யாவும் பொன்னொளியில் குளித்துக் கொண்டிருந்தன. சிற்பங்களையெல்லாம் ஒவ்வொன்றாக விழிவிரித்துப் பார்த்துக் கொண்டிருக்கையில், என் முதுகில் பலமாக ஒரு அடி விழுந்தது. திரும்பிப் பார்த்தால், கிருஷ்ணமூர்த்தி மாமா சிரித்துக்கொண்டிருந்தார். “ரொம்ப நேரமா, உன்னப் பார்த்துட்டிருக்கேன். கோயிலுக்கு வந்தமா, நேரா கருவறைக்குப் போய் சாமியப் பாத்தமா, வந்தமான்னு இல்லாம, இது என்னடா, கோபுரத்த இத்தன நேரம் பாத்துட்டுருக்க” என்றார்.
“நீங்க என்ன மாமா, திடீர்னு கோயில் பக்கம் தலையக் காட்றீங்க” என்றேன்.
“ஜோசியக்காரன் சொல்லிருக்காண்டா, ஒன்பது வாரம் இந்தக் கோயிலுக்கு வந்து விளக்குப் போட்டா வியாபாரம் விருத்தியாகுமாம்ல, அதனாலத்தான் வந்தேன்”, என்றார்
“ஒரு விஷயத்துல இறங்கினா அதுல கண்கூடா ஒரு லாபம் இருந்தாத்தான் இறங்குவீங்க, இல்ல மாமா?” என்றேன்
“ஆமாண்டா, இல்லாட்டி, இந்தக் கோயிலுப் பக்கம் வர்றதுக்கு எனக்கென்ன ஒன்ன மாதிரி கிறுக்கா பிடிச்சுருக்கு?”, என்றார்.
நான் ஒன்றும் சொல்லாமல் சிற்பங்களைப் பார்த்தபடி இருந்தேன். மீண்டும் துவங்கினார், “நான் கேட்டதுக்கு பதிலச் சொல்றா, கோயிலுக்கு வந்தவன் சாமியக் கும்பிடாம, இங்க என்ன சிற்பத்தப் பாத்துட்டிருக்க? என்றார்.
“கோயில் சாமி கும்பிடுறதுக்கு மட்டுமில்ல மாமா. இது ஒரு கலைக்கூடம். நம்ம மரபோட மிகச்சிறந்த கலைச் செல்வங்கள் எல்லாம் கோயில்லதான் இருக்கு. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. மூலவர் மட்டும் ஒரு கோயிலுக்குப் போதும்னா, கர்ப்பக் கிரகம் மட்டும் போதுமே. எதுக்காக வேலை மெனக்கிட்டு கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும், இத்தன ஆயிரம் சிற்பங்கள செதுக்கி வச்சுருக்காங்க? கோயில், பக்திக்கானது மட்டுமில்ல, கலை ரசனைய வளர்க்கக் கூடிய பயிற்சி மையமும் கூட. பக்தனா மட்டும் இருக்காத, கலை ரசிகனாவும் இருன்னு ஒவ்வொரு கோயிலும் நம்மகிட்ட சொல்லிகிட்டே இருக்கு. நம்ம முன்னோர்கள் பெரும் கலை ரசிகர்களாத்தான் இருந்திருங்காங்க. இந்த வெற்று வாழ்க்கைய நகர்த்துறதுக்கு கலை உதவி செய்யும். கலை எந்தத் துயரத்துல இருந்தும் நம்மளக் காப்பாத்தும்னு இந்தச் சிற்பங்கள் மூலமா நமக்கு நம்ம மூதாதைகள் சொல்லிட்டே இருக்கிறாங்க மாமா, நாமதான் செவிட்டுப் பிண்டங்களாப் போயிட்டோம் “,என்றேன்.
“நீ சொல்ற மாதிரியே இருக்கட்டும்டா. இந்தச் சிற்பங்களையெல்லாம் ஒவ்வொன்ணாப் பார்த்து முடிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகுமேடா”, என்றார்.
“ஆகட்டும் மாமா, ஒரு முழு நாள் கூட போதாதுதான். அதனால என்ன. சினிமாவுக்கும் சீரியல் பாக்குறத்துக்கும் ஒரு நாள்ல பல மணி நேரம் செலவிடுறோம்ல, ஒரு கோயில பாக்குறதுக்கு ஏன் சில மணி நேரத்தையாவது செலவழிக்கக் கூடாது”, என்று கேட்டேன்.
தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவர், “நீ விடிய விடிய இந்தக் கோயிலப் பாத்துட்டே இரு ராஜா, எனக்கு வேலை இருக்கு”, என்று கிளம்பினார்.
“தயவுசெய்து சீக்கிரம் கிளம்புங்க”, என்று நானும் மனதிற்குள்ளாகவே சொல்லிக் கொண்டேன். அவரிடம் இருந்து என்னைக் காப்பாற்றியதற்காக, கோயில் கோபுரத்தை நோக்கி ஒரு கும்பிடு போட்டேன்.
இளங்கோ கிருஷ்ணனின் இந்தக் கவிதை தான் நினைவுக்கு வந்தது.
இந்த மதியத்தின் மேல்
ஒரு நூலாம்படை போல்
படர்ந்திருக்கிறது அன்றாடத்தின் புராதனத் துரு
பல்லூழி காலமாய்
அமர்ந்திருப்பதைப் போன்ற பாவனையில்
ஒரே திக்கை வெறிக்கிறது நாய் ஒன்று
பழைய பொருட்களை வாங்குபவன்
சைக்கிளில் என் வீதிக்கு வர
நான் இந்தப் பூமியைத் தூக்கித் தருகிறேன்
பட்டாணி கூட பெறாது இந்த மசுரு
எனக் கையில் திணித்துவிட்டு நகர்கிறான்
கிரீச் கிரீச் என வண்டி சப்தமிட
- இளங்கோ கிருஷ்ணன்
கிருஷ்ணமூர்த்தி மாமாவும் இந்தப் கவிதையில் வரும் பழையப் பொருள் வாங்குபவனும் ஒன்றுதான். இப்படிப்பட்ட மனிதர்களைப் பெருவாரியாகக் கொண்டதுதான் இந்த உலகம். பூமி உருண்டையையே கையில் கொடுத்தாலும் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள். இவர்களுக்கெல்லாம் அன்றாடத்தைக் கடந்த, லௌகீக லாப நட்டங்களைக் கடந்ததொரு உலகம் உள்ளது என்று காண்பிப்பதற்காகத்தான் கோயிலைக் கட்டியவர்கள் சிற்பங்களை கோபுரங்களில் வடித்திருக்கிறார்கள். இவர்கள் அதை ஒருபோதும் பார்க்காமல் போனாலும்கூட இவர்களது தலைக்கு மேல் வானுயரத்தில் அவை என்றென்றும் இருந்து கொண்டுதான் இருக்கும்.
***
கணேஷ்பாபு – தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர். தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசிக்கிறார். இவரது முதல் நூலாக “வெயிலின் கூட்டாளிகள்” எனும் சிறுகதைத் தொகுதி யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்துள்ளது.மின்னஞ்சல்: ganeshmodec@gmail.com

