Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்புகைப்பட சாட்சியம்

புகைப்பட சாட்சியம்

“ரகு ராய் அவர்களின் நினைவில்”

-கு. ஜெயபிரகாஷ்

“The camera is an extension of your soul.”

கு ராய் (Raghu Rai) மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்ட அடுத்த கனம் அவர் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் கண்முன் தோன்றி மனதை பிசைந்தது. அவரின் மூன்றாம் கண்ணாக அவரின் கேமரா இருந்தது. இந்த கேமரா ஒரு கருவியல்ல; அது ஒரு தியானம். ஒரு புகைப்படக் கலைஞர் பார்ப்பதற்கும் மேலாக உணர வேண்டும் என்பதை நிரூபிக்கும் பணி அவருடையது. 

ரகு ராய் இருந்த காலத்தில் உலகம் சற்றே வேறுபட்டதாக இருந்தது. ஏனெனில் அவர் அதை பார்த்த விதம் வேறுபட்டது. ஒளி, நிழல், மனித முகம், மௌனம் ஆகியவை அனைத்தையும் அவர் ஒரு கலைஞனாக மட்டும் அணுகவில்லை; ஒரு சாட்சியாக, ஒரு கேள்வியாக, சில நேரங்களில் ஒரு காயமாக அணுகினார். அவர் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும், “இது நடந்தது” என்று சொல்லவில்லை; “இதை நீ உணர்ந்தாயா?” என்று கேட்டது போல இருக்கும்.

தெருக்களில் நடக்கும் சாதாரண மனிதர்களின் நடைகளில் அவர் ஒரு வரலாற்றைக் கண்டார். கூட்ட நெரிசலில் ஒரு தனிமையைப் பிடித்தார். குழந்தையின் சிரிப்பில் ஒரு நிலையற்ற மகிழ்ச்சியை, முதியவரின் கண்களில் ஒரு காலத்தின் சுமையைப் பதிவு செய்தார். அவர் படங்களில் மனிதர்கள் இருந்தார்கள்; ஆனால் அவற்றை நிரப்பியது மனிதர்களின் உள்ளார்ந்த அமைதி, பயம், நம்பிக்கை, உடைந்த கனவுகள். அந்த படங்களைப் பார்க்கும்போது, நாம் அவற்றை உணருவோம். (“Don’t shoot what it looks like. Shoot what it feels like.”)

 இருளின் மறுகரையில் ஒளி பெற்ற உண்மை “Bhopal Gas Tragedy” என்ற இருண்ட இரவில், உலகம் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு கலைஞனின் கண்கள் விழித்திருந்தன. அந்த விபத்தை அவர் பதிவு செய்த விதம், செய்தி மதிப்பைத் தாண்டி, மனித நெஞ்சின் தாங்க முடியாத கனத்தை உலகிற்கு உணர்த்தியது. ஒரு குழந்தையின் உறைந்த உடல், அதைத் தாங்கிய மனிதனின் கைகள். அந்த ஒரு தருணம், காலத்தின் மீது ஒரு குற்றச்சாட்டு போல் நின்றது.

“அந்த புகைப்படம் ஒரு படம் அல்ல; அது மனித அலட்சியத்தின் சாட்சியம். அந்த சாட்சியம் இன்னும் நம்மை அமைதியாக விசாரிக்கிறது: ‘நாம் உணர்ந்தோமா? அல்லது பார்த்துவிட்டு மறந்தோமா?’” இந்த ஒரு புகைப்படம் இந்தியாவை மட்டுமல்ல உலகமே துக்கத்துடன் திரும்பிப் பார்த்தது.

“Magnum Photos” போன்ற உலகத் தர மேடைகள் அவரை கலைஞனாக ஏற்றுக்கொண்டபோதிலும், அவர் எந்த மேடையையும் தன் கலைக்கு எல்லையாக நினைக்கவில்லை. அவரது frame-கள் சீரான அமைப்பைத் தேடவில்லை; அவை உண்மையைத் தேடின. குழப்பத்திலும் அவர் ஒரு இசையைப் பார்த்தார்; அந்த இசை சில நேரங்களில் வலியால் நிரம்பியதாக இருந்தாலும், அது உண்மையானது.

இந்தியாவின் மனித அதிர்வுகளை அவர் தனது கேமரா வழி வெளியே கொண்டு வந்தார். இந்திரா காந்தியின் உருவம் முதல், சுதந்திரத்தின் உணர்ச்சி பிம்பமாக அவர் எடுத்த படங்கள் ஒரு தேசம் தனது ஆத்மாவைக் கண்டுகொள்ளும் கண்ணாடியாக இருந்தன.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலும் மௌனமாகவே இருந்தது. ஆனால் அந்த மௌனம் வெறுமை அல்ல; அது அவரது கலைக்கு இடமளித்த அமைதி. புகழ் அவரைத் தேடியது; ஆனால் அவர் புகழைத் தேடவில்லை. அவர் தேடியது ஒரு உண்மையான தருணம். புனையப்படாத, அப்படியே இருக்கும் வாழ்க்கை. மனிதர்களின் அருகில் சென்று, அவர்களின் கண்களில் தங்கி இருக்கும் கதைகளை அவர் கேட்டு, அவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார். அந்த அணுகுமுறை அவரை ஒரு புகைப்படக் கலைஞனாக மட்டுமல்ல, ஒரு மனிதநேயத்தின் குரலாக மாற்றியது.

அவரது படங்கள் ஒரு சமூக ஆவணம் மட்டுமல்ல; அவை ஒரு தத்துவம். மனித வாழ்க்கை எவ்வளவு அழகானதோ, அதே அளவு உடைந்ததுமாக இருக்கிறது என்பதைச் சொல்லும் ஒரு அமைதியான சிந்தனை. அந்த சிந்தனை இன்றும் நம்மை இழுத்துக்கொண்டு செல்லுகிறது.

இன்று அவர் இல்லை என்று நாம் சொல்லும்போது, ஒரு கேள்வி நம்முள் எழுகிறது: “அவரைப் போன்ற பார்வை மீண்டும் பிறக்குமா?” அவர் எடுத்த ஒளி இன்னும் உலகின் பல மூலைகளில் பரவிக்கிடக்கிறது. அந்த ஒளி மங்கவில்லை; அது இன்னும் நம்மைத் தொட்டுக்கொண்டே இருக்கிறது.

அவரது படங்கள் அருங்காட்சியகங்களில் மட்டுமல்ல; அவை மனித நினைவுகளில் பதிந்திருக்கின்றன. அவை நம்மை அமைதியாகச் சிந்திக்க வைக்கின்றன, சில நேரங்களில் நம்மை சற்று வலியடையச் செய்கின்றன, ஆனால் அவை எப்போதும் நம்மை உண்மைக்கு அருகில் கொண்டு செல்கின்றன.

ரகு ராய் மறைவது ஒரு முடிவு அல்ல; அது ஒரு நீண்ட ஒளியின் பிரதிபலிப்பு. அவர் எடுத்த ஒவ்வொரு புகைப்படமும், “வாழ்க்கை இங்கே இருந்தது” என்று சொல்லும் ஒரு சாட்சியாக உள்ளது. அவர் இல்லாவிட்டாலும், அவர் பார்த்த உலகம் இன்னும் நம்மை நோக்கி இருக்கிறது. நாமோ அதை உணரத் தயாராக இருக்கிறோமா என்று அமைதியாகக் கேட்கிறது.

காலம் கடந்தும் அவரின் புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக நினைவில் இருக்கும். அந்த கருப்பும் வெள்ளையும் உணர்வுகளின் வர்ணங்களாக இன்னும் தொடர்கின்றன. இப்போது ரகு ராய் இல்லை; ஆனால் அவர் குறிப்பிட்ட உலகம் இன்னும் இருக்கிறது. 

***

கு.ஜெயப்பிரகாஷ் – திருவண்ணாமலை மாவட்டம். “முனைவர்” “சா” என இரண்டு  குறுநாவலும் “ஹீராபோரா” என்ற சிறுகதைத் தொகுப்பும் “மரமும் மண்ணுத்தாத்தா” என்ற குழந்தைகளுக்கான அறிவியல் கதைகளும் வெளிவந்திருக்கிறது. உயிரித்தொழில்நுட்பவியல் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். கல்விப்புலத்தில பல சர்வதேச அளவில் பல ஆய்வுக் கட்டுரைகளும் புத்தகங்களும் வெளிவந்துள்ளது. புழுதி என்ற இணைய இதழை நடத்திவருகிறார். மின்னஞ்சல்: phycojai@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here