Home Blog Page 30

லங்கூர்

0

சுரேஷ் பரதன்

க்ஷ்மி பாய்க்கு படபடப்பாய் வந்தது. தலை சுற்றியது. இருந்தாலும் அவள் இப்போது அவசரமாக அவள் வீட்டுக்குப் போக வேண்டும். பாபுவைப் பார்க்க வேண்டும். அவன் அவர்கள் கையில் மாட்டிக்கொள்ளக்கூடாது. அது மட்டும் முக்கியம். வேறெதுவும் இப்போது அவளது கவனத்திலில்லை. நடையின் வேகத்தைக் கூட்டினாள். சாகேத் மெட்ரோவுக்குப் போகும் அந்த குறுகலான தெருவைக் கடந்தது, வலது புறம் திரும்பினால் அவளது வீடு வந்துவிடும். மிஞ்சிப் போனால் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிட நடை தூரம் தான். ஆனாலும் அவளுக்கு வெகு நேரமாய் நடந்தாலும் வீடு வராததைப் போல, அவள் வீடு அவளை விட்டு தூர தூரமாய் போய்க் கொண்டிருப்பதைப் போல தோன்றியது. அவள் கிட்டத்தட்ட ஓடவே ஆரம்பித்தாள்.

தெருமுனையிலிருந்து பார்க்கும்போது வீட்டுக்கருகினில் சின்னதாய் ஒரு கூட்டம் கூடியிருப்பதைப் போல இருந்தது. அவளது படபடப்பு இன்னும் அதிகமாயிற்று. இந்த முறை இத்தனை பேரா வந்திருக்கிறார்கள் என்ற அச்சமும் அவளை தாக்கியது. என்ன ஆனாலும் சரி.. எத்தனை பேர் வந்தாலும் சரி.. இந்த முறை அவர்களின் பொல்லாப் பேச்சிற்கு தான் இரையாகப் போவதில்லை என்று தீர்மானமாய் முடிவெடுத்துக் கொண்டாள். அவள் தன் வீட்டை நெருங்க நெருங்க அந்தக் கூட்டத்தில் உள்ளவர்கள் யாரும் அவளுடைய மாமனார் வழி உறவுகளோ அல்லது மாமனார் ஊர்க் காரர்களோ இல்லை என்று அறிந்து கொண்டாள். வெளியில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அவள் குடும்பத்திற்கும் எந்த விதமான ஒட்டுமில்லை. உறவுமில்லை. தில்லி நகரத்தில் ஆங்காங்கே நின்று பொழுதைக் கழிக்கும் கூட்டம் இந்த மாதிரி நிறையவே இருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து பயப்பட ஒன்றும் இல்லை.

தன் சுடிதாரின் துப்பட்டாவை தலைக்கு மேல் ஒரு முக்காடைப் போல போட்டு அதனை கொஞ்சம் கீழே இழுத்துத் தன் முகத்தையும் மூடிக் கொண்டு தன் வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்தாள். அங்கே அவளது மாமனார் வீட்டிலிருந்து வந்திருந்தவர்கள் நின்றிருந்தார்கள். மாமனார் சச்தேவ் மஹாஜன் நடுநாயகமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்க, அவருடன் வந்த அவரது சொந்தக்காரர்கள் அவரைச் சுற்றி நிற்க, லக்ஷ்மிபாயின் அப்பா கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தார். லக்ஷ்மிபாய் அந்தக் கூட்டத்தில் தன் நான்கு வயது மகன் பாபுவைத் தான் தேடினாள். அவன் அவள் கண்களுக்குத் தட்டுப்படவேயில்லை. அத்தனை ஆண்களையும் அவர்களின் முதுகுக்குப் பின்புறமாகக் கடந்து தன் வீட்டு வாசலில் முக்காடிட்டு நின்று கொண்டிருந்த அவள் அம்மா கம்லாதேவிக்கு அருகில் அவளுக்கும் முதுகுக்குப் பின்னால் போய் நின்று கொண்டாள். மெல்ல அவள் காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டாள். “மா பாபூ கஹான் ஹ! அவனை இங்கே காணாமே” கம்லாதேவி முன்பக்கம் கூடியிருந்த கூட்டத்தின் மீதிருந்த பார்வையின் திசையை மாற்றாமல் அவன் இன்னும் பால்வாடியிலிருந்து வரவில்லை என்று கிசுகிசுப்பாகவே பதில் சொன்னாள். லக்ஷ்மிபாய்க்கு மெல்ல உயிர் திரும்பி வந்தது. இப்போது அவள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த சச்தேவரின் குரலைக் கேட்கத் தொடங்கினாள்.

“அதுங்க தான் சின்னஞ்சிறுசுக.. எதோ கோபத்துல சண்டை போட்டுக்கிட்டு ஆளுக்கொரு திசையில வந்து இருக்குதுங்க. ஆனா பெரியவங்க நாம் தான புத்தி சொல்லி சேந்து வாழ வைக்கனும். அது நம்ம கடமையில்லையா. அதை விட்டுட்டு அதுக்கு நீங்க இப்படி வீடு எடுத்துக் கொடுத்து தனியாவே வாழ்ந்துக்கோன்னு சொல்லி வச்சுட்டா எப்படி. சின்னப் புள்ளைகளுகக்கு தான் புத்தியில்லைன்னா பெரியவங்களுக்கும் இல்லைங்கிறத எப்படி ஏத்துக்கிறது. இல்லை அவ சம்பாரிச்சுக் கொடுக்குற காசுக்கு ஆசைப்பட்டு இங்கனேயே இருக்கட்டும்ன்னு வைச்சுக்கிட்டீங்களா”

லக்ஷ்மிபாயின் அப்பா எதுவும் பேசாமல் மௌனமாய் தலையைக் குனிந்து நின்று கொண்டிருந்தார்.

“வாய்க்குள்ள அப்படி என்னத்தை வச்சு அடைச்சு வச்சிருக்கீரு. இப்படி ஒன்னுமே பேசாம நின்னா எப்படி. நீரா புத்தி சொல்லி அனுப்பறீரா இல்லை எங்கூட்டு பஹூவை (மருமகளை) நாங்களே கூட்டிட்டு போகட்டுமா.. கட்டுன புருஷன் அங்கன கையில புடிச்சுக்கிட்டு தனியா கஷ்டப்பட்டுட்டு இருக்குறப்ப இந்த ச்சோரி (திருட்டுப் பெண்) இங்கன ஊர் மேய்ஞ்சுட்டு இருக்கிறத எந்த நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஆம்பளை தான் பாத்துக்கிட்டு இருப்பான்”

“யாரு திருடி.. நானா .. என்னத்தைத் திருடினேன்.. யார்கிட்ட திருடினேன்..” லக்ஷ்மிபாய் அவள் அம்மா முதுகுக்குப் பின்னால் இருந்து குரல் எழுப்பினாள்.

“அரே லடுக்கீ… சுப் ரஹோ.. பெரியவங்க பேசிட்டு இருக்கும் போது பொம்பளைப் புள்ளை வாய மூடிகிட்டு இருக்கனும்ன்னு உங்க மாதாஜீ உனக்குச் சொல்லித் தரலையா.. இல்லை நாலு காசு இடுப்பு சுருக்குல முடிஞ்சு வைச்சிருக்கேன்னு வாயத் தொறக்கியா..”

கூட்டத்திலிருந்து யாரோ குரல் கொடுத்தார்கள். அது யார் என லக்ஷ்மிபாய் பார்க்க முற்பட்டாள். சச்தேவருக்கு வால் புடிக்கும் அவர் தெருவைச் சேர்ந்த நடுவயசுக்காரன். லக்ஷ்மிபாய்க்கு சுள்ளென கோபம் வந்தது. இருப்பினும் நிதானமாக பதில் சொன்னாள்.

“அங்கிள் ஜீ… உனக்கு சம்பந்தமில்லாத விசயங்களில் தேவையில்லாமல் தலையிடாதே.. அது உனக்கு நல்லதல்ல போன்ற பல நல்ல விசயங்களை எனக்கு என் சிறுவயதிலேயே என்னோட அம்மா சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அதை ஒருநாளும் மறக்கவே இல்லை. அப்படித்தான் நான் குடும்பம் நடத்தினேன் என்பதை அதோ என் அப்பாஜீ(மாமனார்)யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.”

கூட்டத்தில் இருந்து குரல் கொடுத்தவனின் முகம் சுண்டிப் போயிற்று. அவன் மெதுவாக “சச்தேவ்ஜி.. உங்கள் மருமகளுக்கு வாய்த் துடுக்கு அதிகம் தான். ரகுநாத் எப்படி இவளுடன் குடும்பம் நடத்தினான்.. நீங்கள் ஏன் இவளை மீண்டும் உங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும் என நினைக்கிறீர்களோ தெரியவில்லை. இப்படியே விட்டுவிடுங்கள். குளிர் காலம் வரப் போகிறது.. உடம்பு சூட்டுக்கு ஆளில்லாமல் தனியாய் கிடந்தால் என்றால் புத்தி வந்து தானாய் ரகுநாத்தை தேடி வருவாள்” என்று சொல்லி விஷமமாய் நமுட்டுச் சிரிப்பு சிரித்தான். .

லக்ஷ்மிபாய் இப்போது தான் கோபத்தைக் காட்ட வேண்டியதின் கட்டாயத்தினை உணர்ந்தவளாய்..

“அங்கிள் ஜீ.. எங்கள் குடும்பத்திலோ அல்லது அப்பாஜீ குடும்பத்திலோ பிறந்த பெண்கள் உடம்பு சூட்டுக்கு அலைந்ததே இல்லை. இல்லையா அப்பாஜீ.” என தன் மாமனாரையும் அவன் பேச்சுக்குள் இழுத்துவிட, சச்தேவர் அவனைப் பார்த்து முறைத்தார். அவருக்குக் கூட அவன் அப்படி பேசியது பிடிக்கவில்லையென அவர் பார்வை காட்டியது. அவன் இனிமேல் தான் பேசினால் எடுபடாது என்று நினைத்து அமைதியானான்.

லக்ஷ்மிபாய் மேலும் பேசினாள். ”அப்பாஜீ யார் கூப்பிட்டாலும் நான் மதன்கிரிக்கு (அவள் மாமனார் ஊர்) வருவதாய் இல்லை. இங்கேயேதான் இருக்கப் போகிறேன். எனக்கு பாபுவும் பாபுவுக்கு நானும் போதும்.”

உடனே சச்தேவர்.. “அதெப்படி அப்படியே விட்டுவிட முடியும். நீ வந்து தான் ஆக வேண்டும். என் மகனின் மனைவி. அப்படியெல்லாம் உன் இஷ்டத்துக்கு விட முடியாது.. உடனே மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு புறப்படு. இல்லையென்றால்…”

“என்ன செய்வீர்கள் அப்பா ஜீ.. மதன்கிரி வீட்டில் வைத்து அடித்தீர்களே அதைப் போல இப்போதும் அடிப்பீர்களா.. மாட்டுக் கொட்டகையின் கூரையில் செருகிவைத்திருந்த மூங்கில் பிரம்பை எடுத்து வந்திருக்கிறீர்களா. ”

சச்தேவருக்கு அவமானமாய் போய்விட்டது. “ஏய்…. நான்.. நான்.. அது வந்து.. எப்போது உன்னை அடித்தேன். எல்லாரும் கூடியிருக்கும் பொது இடத்தில் என் மீது பொய்க் குற்றம் சொல்லாதே.. “ என கோவத்தில் கத்தினார்.
”கத்தாதீங்க அப்பாஜீ.. இப்படி கத்துறதால நீங்க அடிச்சது இல்லைன்னு ஆயிடாது. எத்தனை நாள் அடிச்சிருப்பீங்க.. எத்தனை நாள் குளிர்லேயும் வெயில்லேயும் நான் அந்த மாட்டுக் கொட்டகையிலேயே படுத்து கெடந்திருக்கேன். இன்னும் என் உடம்புல, மனசுல பல காயங்களோட வடு இருக்கு.”

“அதெல்லாம் விடு. அங்கன உன்னோட மாமியார் தனியா கெடந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. அவளுக்கு உடம்பு கூட சரியா இல்லை. நீ என்னடான்னா உன்னோட கடமைகளை விட்டுட்டு இங்க வந்து தனியா குடித்தனம் பண்ணிகிட்டு இருக்க..”

“ஏன் அப்பாஜீ.. உங்க இரண்டாவது மருமகள் சாரதாதேவி வீட்டில் இல்லையா. ஓ,, அவ, விகாஸ் தேவர்ஜீ (கொழுந்தன்) கூட தனிக் குடித்தனம் போயிட்டாளா.. தேவர்ஜீக்கு சம்பளம் கூடியிருச்சா..”

எல்லா திசைகளிலும் தான் மடக்கப்படுவதை உணரத் தொடங்கினார் சச்தேவர்.

கூட்டத்தில் இருந்த இன்னொருவர் “ க்யா.. சச்தேவ்ஜீ,, இந்த சோக்ரி (சின்னப் பெண்) பாட்டுக்கு வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கிறாள். நீங்கள் பாட்டுக்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எழுந்து போய் அவள் முடியைப் பிடித்து இழுத்து வாருங்கள். யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்.”

“யாராவது என்னைத் தொட்டீர்கள் என்றால் நான் பொல்லாதவள் ஆகிவிடுவேன். அப்புறம் காஸ் சிலிண்டரைத் திறந்து தீ பொருத்தி கொள்வேன். நீங்கள் அத்தனை பேரும் அப்புறம் திஹாரில் தான் ரொட்டி சாப்பிட வேண்டும். சாக்கிரதை.” லக்ஷ்மிபாய் கோபமாய்க் கத்தினாள்.

சச்தேவரும் கூட வந்திருந்த அத்தனை பேரும் பயந்து ஒடுங்கினார்கள். லக்ஷ்மிபாயின் அப்பா அவளை அப்படியெல்லாம் செய்து விடாதே என்ற மாதிரி பார்த்தார், கம்லா தேவியோ அவள் அவசரப்பட்டு எதுவும் பண்ணிவிடக் கூடாதென லக்ஷ்மிபாயின் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“அம்மா விடம்மா.. இவர்கள் என்னைத் தூண்டிவிடாத வரைக்கும் நானாக என்னை ஒன்றும் செய்து கொள்ள மாட்டேன். அப்பாஜீ,, நான் திரும்பவும் சொல்கிறேன் நான் மதன்கிரிக்கு வரமாட்டேன். நீங்கள் போகலாம்,”

வேறு என்ன சொன்னால் இவள் தன்னோடு வர சம்மதிப்பாள் என யோசனை செய்யத் துவங்கினார் சச்தேவர். தன் பிரம்மாஸ்திவாரத்தை உபயோகிக்க முடிவு செய்தார்.

“நீ வரவில்லை என்றால் நாங்கள் சும்மா இருப்போம் என்று நினைக்காதே. பாபு எங்கள் பேரன். ரகுநாத்தின் பிள்ளை. நாங்கள் அவனை உன்னிடம் விட்டு வைக்க மாட்டோம். இப்போதே தூக்கிக் கொண்டு போவோம். அவனை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய். அவனை கொண்டு வந்து கொடுத்துவிடு. நாங்கள் போகிறோம்”. என்றார்.

“ஒருக்காலமும் அது மட்டும் நடக்காது. என் பிள்ளையை உங்க மகனால ஒழுங்கா வளக்க முடியாது..”

“ஏன் முடியாது.. அவன் தன் பிள்ளையை ராசா மாதிரி வளப்பான்.”.

“எப்படி.. என்னைய அப்பப்ப இங்க என் அப்பா வீடுக்கு போயி காசு வாங்கிட்டு வான்னு அடிச்சு அனுப்பினாப்புல இனி தன் புள்ளையை அடிச்சு அனுப்பி காசு வாங்கிவரச் சொல்லி அந்தக் காசுலயா..”

“ஏ புள்ள.. எம்மகன் கெவர்மெண்டு ஆபீஸில வேலை பாக்கான்.. இண்டியா கேட்டு பக்கம்.. விதேஸ் மந்த்ராலாயவுல .. (வெளியுறவு அமைச்சகம்) தெரியுமா.”.

“தெரியும்.. தெரியும். என்ன வேலைன்னு உங்களுக்குத் தெரியுமா.. ”

“அது வந்து… அது வந்து ..”

“சொல்லுங்க அப்பாஜீ.. என்ன வேலை பாக்கார் உங்க மகன். சொல்லுங்க.. ஏன் பேசாம இருக்கீங்க.. என்னையையும் எங்க அப்பாவையும் ஏமாத்தின மாதிரி இவங்க எல்லாரும் ஏமாற மாட்டங்க இல்லையா. அதனால உங்களால சொல்ல முடியாது. அப்படிப்பட்ட வேலை அது. இல்லையா அப்பா ஜீ.. நான் சொல்லவா..”

“இவரு பையன் சர்க்கார் உத்தியோகத்துல எல்லாம் இல்லை.. ஆனா இண்டியா கேட்டு பக்கம் இருக்குற எல்லா சர்க்கார் பில்டிங்கு ஆபீஸ்லேயும் அவருக்கு வேலை. அதானா அப்பா ஜீ..”

“என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி எங்கப்பா அங்க போயி விசாரிக்க போனப்ப எதோ ஆபீஸ்ல வேலை பாக்குற மாதிரி நடிக்கத் தெரிஞ்ச உங்க பையனுக்கு முத ராத்திரியிலயோ அதுக்கு அப்புறமாவோ எங்கிட்ட நடிக்க தெரியலை. எப்படிக் கத்தினாரு இல்ல.. அடுத்த ரூம்ல இருந்த உங்களுக்கும் கேட்டுத்தானே இருக்கும் அப்பா ஜீ. எப்படி கத்துனாரு.. ஒரு லங்கூர் குரங்கு மாதிரி. நா பயந்தே போயிட்டேன். அவருக்கு புத்தி சரியில்லாம கத்துறாரோன்னு நெனைச்சேன். அப்புறம் தானே தெரிஞ்சுது. அவருக்கு வேலையே அதுதானாம்.”

“இந்தியா கேட்டுக்கிட்ட இருக்குற எல்லா ஆபீஸ்கள்லேயும் குரங்குகளோடத் தொல்லை ரொம்ப அதிகமாம். சுத்தி இருக்குற மரங்கள்ல குடியிருக்கிற குரங்குகள் அப்பப்ப கூட்டம் கூட்டமா எதுனா தெறந்து இருக்குற ரூம்க்குள்ள போயி ஃபைல் பேப்பர் எல்லாம் கிழிச்சு வைச்சிருங்களாம். கண்ட இடத்துல ஒன்னு ரெண்டுல்லாம் போயி அசிங்கமாக்கி வைச்சிடுங்களாம். அதுகளை எல்லாம் எப்படி வெரட்டுறதுன்னே தெரியாம, இவர் பையன மாதிரி அஞ்சாறு பேரை கம்பனி மூலமா வேலைக்கு வைச்சிருக்காங்களாம். இவங்க என்ன பண்ணி அந்தக் குரங்குகளை வெரட்டுறாங்க. சாதாரண குரங்குகளுக்கு லங்கூர் குரங்குன்னா பயம். அதோட ஆக்ரோசம் பாத்து பயம். அதனால இவங்க லங்கூர் மாதிரி கத்திக்கத்தி மத்த சாதரணக் குரங்குகளை வெரட்டுவாங்க. ரகுநாத் அந்த வேலையில ரெம்பக் கெட்டியாம். அவர் கத்துனா அச்சு அசலா ஒரு நிச லங்கூர் கத்துனாப்புலேயே இருக்குமாம். அதனால மத்தவங்க சத்தத்துக்கு பயப்படாத குரங்குகள் கூட ரகுநாத் சத்தத்துக்கு பயந்து ஓடுமாம். குரங்கை கத்தி பயப்பட வைச்ச மாதிரி என்னையையும் கத்தி பயப்பட வைக்க பாத்தாங்க. லக்ஷ்மிபாய் என்ன குரங்கா.. சொல்லுங்க நான் என்ன குரங்கா.. ”

“சரி.. வேலை விசயத்துல தான் பொய் சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பரவாயில்லை. மனுசன் சம்பாதிச்சு குடும்பத்தைப் பாத்துக்குறார்ன்னு தான ஒரு வருஷமா கூடவே இருந்து குடும்பம் நடத்தி ஒரு புள்ளையும் பெத்துக்கிட்டேன். அந்த வேலையையாவது ஒழுங்கா பாத்தாரா உங்க புள்ளை அப்பாஜீ.. சொல்லுங்க, ஒழுங்காப் பாத்தாரா. பாதி நாளு வேலைக்குப் போறதில்லை. கெடைக்குற பாதி நாள் காசையும் குடிச்சே காலியாக்கினாரு. அப்புறம் குடும்பம் நடத்த காசில்லாம போறப்ப எல்லாம் லெக்ஷ்மிபாயை அடிக்க வேண்டியது உதைக்க வேண்டியது. உங்கப்பங்கிட்ட போயி காசு வாங்கிட்டு வான்னு அனுப்ப வேண்டியது. உன் புருஷன் காசு கொடுக்கலை.. அதனால உனக்கும் ரொட்டியில்லைன்னு எத்தனை நாள் என்னய பட்டினி போட்டிருப்பீங்க அப்பாஜீ.. சொல்லுங்க. என்னை விடுங்க அப்பாஜீ.. பாபு உங்க பேரன் தானே.. மகனோட புள்ளைதானே.. அவனுக்காவது ஒழுங்கா என்னை விட்டு பால் கொடுக்க விட்டீங்களா.. இல்லை.. வீட்டுல கட்டின பெயஸ் (எருமை மாடு) பாலையாவது கொடுத்தீங்களா.. பச்சைமண்ணு பசியில கத்தினப்ப எல்லாரும் வேடிக்கை தானே பாத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப பாபுவை மதன்கிரிக்குக் கூட்டிட்டு போய் ராசா மாதிரி பாத்துக்குவோம் சொல்றீங்க. எப்படி அப்பாஜீ.. எப்படி.. ”

சச்தேவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. என்ன சொன்னாலும் தன் பேச்சை லக்ஷ்மிபாய் கேட்கப்போவதில்லை என்று புரிந்து கொண்டார். ஊரிலிருந்து அவர் சேர்த்துக்கொண்டு வந்த கூட்டத்தின் முன்னால் அவருக்கு தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொள்ள முடியாமல் கோபம் வந்தது. கொதிக்கும் கோபத்தில் பேசத் துவங்கினார்.

”ஹரே.. ச்சோக்ரீ.. நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேங்கிறது உனக்கு மறந்து போச்சுன்னு நெனைக்கேன். சச்தேவ் மஹாஜன்.. மதன்கிரியில இப்படி எங்கிட்ட பேசுறதுக்கு உதட்டுக்கு மேலே மீசை வச்ச ஒரு ஆம்பளைக்குக் கூட தைரியம் கெடையாது. ஒரு பொண்ணுக்கு இத்தனை தைரியம் எங்கேருந்து வந்தது. நாலு காசு கையில இருக்குன்னு தெம்புல பேசிறியா.. எப்படி வந்தது அந்தக் காசு.. யார் கூட … ”

”நிறுத்துங்க அப்பாஜீ. இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசுனீங்கன்னா அப்புறம் மரியாதை கெடையாது. படிக்காத பொண்ணுன்னா யார் கூடயாவது படுத்துத்தான் பணம் சம்பாதிக்கனுமா. இப்படி பேச உங்களுக்கு ஷரம் ஆனாச் சாகியே..(வெக்கமா இல்லையா). பத்து வீட்டுல பர்த்தன் (பாத்திரம்) கழுவுறேன். தரை தொடைக்கிறேன். நாலு வீட்டுல ரொட்டி போட்டு, சப்ஜி வைச்சுக் கொடுக்கிறேன். கெடைக்கிற காசை பத்திரமா சேத்து வைக்கிறேன். இப்படித்தான் லக்ஷ்மிபாய் சம்பாதிப்பா. மத்தபடி இல்லை. ஆமா.. வந்ததுலேருந்து பாக்குறேன். காசு வைச்சிருக்க காசு வைச்சிருக்கன்னே பேசுறீங்களே அப்பாஜீ.. அதுனால தான் இப்ப என்னை கூட்டிட்டு போக வந்தீங்களா. சரிதான். இப்பல்ல புரியுது”

சச்தேவர் மஹாஜனுக்கு முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஒன்னும் தெரியாத பெண்ணை நாலு பேர் வைத்து மிரட்டிக் கூட்டிக் கொண்டு போய்விடலாம். அவளிடம் இருக்கும் காசை அடித்துப் பிடித்து பிடுங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து வந்தவரின் மன ஓட்டத்தினை இந்த சின்னப் பெண் எத்தனைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டாள் என்று ஏமாற்றமும் ஆச்சரியமும் தோல்வியும் துவளலுமாக அவரை உணர்ச்சிகள் வாட்டியெடுத்தன. இருந்தாலும் வாய்ப் பேச்சுக்கு மட்டுமாவது ஏதாவது சொல்லவேண்டுமென நினைத்தார்.

”உன் காசு பணமெல்லாம் யாருக்கு வேண்டும். ஒழுங்கு மரியாதையாக என்னோடு புறப்பட்டு வருகிறாயா.. இல்லையேல் நான் ரகுநாத்துக்கு வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவேன். நீ, உன் வாழ்நாளெல்லாம் இப்படி தனியொருத்தியாகவே அல்லாடிக் கொண்டிருக்க வேண்டியது தான். சாக்கிரதை.. ”

”என்ன மிரட்டுகிறீர்களா அப்பாஜீ.. தாராளமாக நீங்கள் அவருக்கு இன்னொரு பெண்ணைக் கல்யாணம் கட்டிக் கொடுங்கள். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் அந்தப் பெண்ணையாவது காசுக்காக அடித்துத் துன்புறுத்தாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நான் தனித்து வாழ்ந்தாலும் தன்மானத்தோடு வாழ்வேன் அப்பாஜீ. ஒரு நாள் நீங்கள் உங்கள் மகனுடன் வாருங்கள். நான் வீட்டு வேலை பார்க்கும் வக்கீலம்மாவிடம் இது குறித்துப் பேசுவோம். பரஸ்பரம் பேசி முடித்து பிரிந்துவிட்டால் ஒருவருக்கும் பிரசச்சினை இல்லை பாருங்கள். இப்போது நீங்கள் போய் வாருங்கள். ”

லக்ஷ்மிபாய் தீர்மானமாகச் சொன்னாள். சச்தேவர் மஹாஜன் தோளில் போட்டிருந்த நீண்ட துண்டை கையில் எடுத்து உதறினார். ”வக்கீலம்மாவெல்லாம் பழக்கமா உனக்கு.” அவர் குரலில் இப்போது சாந்தமும் பயமும் தெரிந்தது.

”உலகம் ரொம்பப் பெரியது அப்பாஜீ. தண்ணீர் தன் மேல் விழும் நிழலைப் பிரதிபலிக்குமே அது போல இந்த உலகம் அப்பாஜீ. நாம் அதன் மேல் எப்படி இருக்கிறோமோ அப்படியே உலகமும் பிரதிபலிக்கும். நல்லவர்களுக்கு இந்த உலகம் எப்பொழுதும் நல்லதாகவே இருக்கும். அது போலத் தான் இவ்வுலக மனிதர்களும் அப்பாஜீ. நம்மைச் சுற்றி நல்லவர்கள் வேண்டுமெனில் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் அப்படி இருக்க முயற்சியாவது செய்ய வேண்டும் அப்பாஜீ. ”

“அப்படியானால், நான் என் மகன் ரகுநாத் யாருமே நல்லவர்கள் இல்லையென குற்றம் சொல்கிறாயா.. ”

”இல்லை அப்பாஜீ.. இல்லை. உங்களுக்கு காசு முக்கியம். காசு கிடைத்துவிட்டால் நீங்கள் நல்லவர். உங்கள் பையனுக்கு குடி போதை முக்கியம். அதை விட்டுவிடார் எனில் அவரும் நல்லவர் தான்.”

”அப்படியானால் அவன் குடிப்பதை விட்டுவிட்டால் நீ அவனோடு குடித்தனம் நடத்துவாயா. ”

”ஏன் முடியாது அப்பாஜீ. அவரை குடிப்பதை நிறுத்தச் சொல்லுங்கள். நிறுத்திவிட்டால் அவர் ஒழுங்காக வேலைக்குப் போவார். ”

”அப்படியானால் நான் சொல்கிறேன் பேட்டா(மகளே). நீ இப்போது என்னுடன் வரலாம் இல்லையா. ”

”இல்லை அப்பாஜீ. இப்போதும் என்னால் அங்கே வரமுடியாது. இங்கே எனக்கு ஓரளவு வருமானம் வருகிறது. அவரும் இங்கிருந்து வேலைக்குப் போகச் சொல்லுங்கள். இருவரின் வருமானத்தையும் சேர்த்து பாபுவுக்கு நல்ல படிப்பைத் தரலாம். இங்கே வீட்டுக்கு வெளியே தெருவில் சாயங்காலத்திலிருந்து ராத்திரி வரை மார்கெட் நடக்கும் அப்பாஜீ. அந்த மார்க்கெட்டின் வியாபாரி சங்கத்தில் ஒரு அங்கிள் ஜீயை எனக்குத் தெரியும். அவர் சங்கத்தில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொல்லியிருக்கிறார். சங்கத்துக்கு பத்தாயிரம் ரூபாய் கட்டினால் நானும் மெம்பராகிவிடுவேன். அன்றன்றைய காய்கறி பாவ் (விலை) எல்லாருக்கும் போனில் அனுப்பிவிடுவார்கள். காலையில் வீட்டு வேலைக்கு போய்விட்டு வந்து சாயங்காலத்தில் வியாபாரமும் பார்த்து சம்பாதிக்கலாம். உங்களுக்கும் மாதாமாதம் பணம் அனுப்பலாம். என்ன சொல்கிறீர்கள் அப்பாஜீ.. ”

லக்ஷ்மிபாய் பேச்சை நிறுத்தினாள். சச்தேவர் தன் தோள் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். அங்கே இருந்த எல்லாரும் மௌனமாக இருந்தார்கள். சச்தேவருடன் வந்தவர்களில் அவர் வயதுடைய ஒருவர் மெதுவாகப் பேசத் துவங்கினார்.

”மஹாஜன்ஜி.. லடுக்கிக்கீ திமாக் தேஜ் ஹ.. ஆவோ. ஹம் சல்தே ஹே.!(இந்த பெண் புத்திசாலி. வாருங்கள் நாம் போகலாம்.) அவள் சொல்வதுதான் சரி. நியாயமும் கூட. ” என்று சொல்லிவிட்டு லக்ஷ்மிபாயின் வீட்டை விட்டு தெருவுக்கு போனார். மொத்த கூட்டமும் அவர் பின்னே சென்றது. சச்தேவ் மஹாஜனும் தான்.

***
சுரேஷ் பரதன் – சொந்த ஊர் நெல்லை. பணி நிமித்தம் வசிப்பது டில்லியில். இவரது படைப்புகளாக முதல் சிறுகதைத் தொகுப்பு “சந்நதம்” மற்றும் இரண்டாவது கவிதைத் தொகுப்பு “ஈரூசற்தாண்டவம்” ஆகியன வெளிவந்துள்ளன.

துணை

1

பரிவை சே.குமார்

முன்னெல்லாம் அடிக்கடி வீட்டுப் பக்கம் வரும் செண்பகம் இப்ப அதிகமா வர்றதில்லை. மூச்சுக்கு முன்னூறு தரம் அக்கா… அக்கான்னு வருவா. கொஞ்ச நாளா பாத்த பேசுறதோட நிறுத்திக்கிறா. இன்னக்கி அவகிட்ட ஏண்டி இங்கிட்டு வர மாட்டேங்கிறேன்னு கேக்கணும்’ என்று நினைத்தபடி மாட்டெருவையை சுமந்து வயலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் பர்வதம்.

‘மழக் காலங்கிறதால பசும்புல்லத் தின்னுட்டு மாடு பூராம் கழிய ஆரம்பிச்சிருச்சு. கசாலயெல்லாம் தொறுத்தொறுன்னு கிடக்கு பாக்கச் சகிக்கல. மாடுக மேலெல்லாம் எருவும் மூத்தரமுமா கலரே மாறிப்போயி கெடக்குக. இந்த சரவணப்பயல மாட்டக் குளிப்பாட்டுடான்னா அசய மாட்டேங்கிறான். நாமதான் குளிப்பாட்டணும் போல. என்ன அந்த சனியங்கள இழுத்துக் கொண்டு போய் சேக்கிறதுதான் கஷ்டம். ஒண்ணு காட்டுக்கு இழுத்தா ஒண்ணு மேட்டுக்கு இழுக்கும். இன்னும் சொல்லப் போனா பில்லப்பசுவ தண்ணிக்குள்ள இறக்க போராடணும். தனி மூக்கனயில போட்டு தரத்தரன்னு இழுத்துக்கிட்டுப் போனாலும் தண்ணிக்கிட்ட போனோடனே தேருக்குக் கட்ட போட்டமாரி நின்னுக்கும். இல்லன்னா நம்மள இழுத்துப் போட்டுட்டு மாக்காலி எடுத்து ஒரே ஓட்டம்… அப்புறம் அந்தக் கயிர பீ பிருக்கெல்லாம் இழுத்துக்கிட்டு திரிஞ்சிட்டு சாந்தரம்தான் வரும். கயரத் தொடவே அருவெறுப்பா வரும்.’

‘அவரு இருந்தா செவ்வா வெள்ளி அவனயும் கூட்டிக்கிட்டு மாடுகளக் குளிப்பாட்டி பொட்டு வச்சு கொண்டாந்து கட்டிட்டு வேலக்கிப் போவாரு. போன வாரம் முதலாளிகூட நாமக்கல் போனவரு நாளக்கித்தான் வாராரு. இன்னக்கி எருக் கொட்டிட்டு வந்தோடன இந்தக் காளய கூட்டிக்கிட்டு போயி கழுவியாந்திரணும். மத்தியானத்துக்கு கீரத்தண்டு கிடக்கு அதோட கருவாட்டப் போட்டு வச்சமின்ன நாக்குக்கு ருசியா சாப்பிடலாம். நாச்சியக்கா மோரு ஊத்தப் போகயில வெங்காயம் தக்காளி வாங்காரச் சொல்லணும் ரெண்டோ மூனோதான் கிடக்குது.’

எதேதோ யோசனைகள் எழுந்த வண்ணம் இருக்க வரப்பில் போய்க்கொண்டிருந்தவளின் எதிரில் எருக்கொட்டிவிட்டு வெறுங்கூடையுடன் செண்பகம் வந்து கொண்டிருந்தாள்.

“என்னக்கா யோசன பலமாயிருக்கு எந்தக் கோட்டயப் பிடிக்க இம்புட்டு யோசன அதுவும் எருக்கூடயோட…” கேட்டுவிட்டுச் சிரித்தாள்.

“ஆமா… கோட்டயப் பிடிச்சி எந்தாலியப்போட்டு அறுத்தேனுல்ல… அது ஒண்ணுதான் எனக்கு இப்பக் கொறச்ச… மாட்டக் குளிப்பாட்டணுமின்னு நெனச்சிக்கிட்டு வந்தேன்.”

“அதான் சரவணன் இருக்கானுல்ல… அவனக் குளிப்பாட்ட சொல்ல வேண்டியதுதானே…”

“அது இருந்த எடத்த விட்டு எந்திரிச்சா என்னத்துக்கு ஆகுறது… சரி நில்லு மேட்டுச் செய்யில கொட்டிட்டு வந்துடுறேன்” என்றபடி நகர்ந்தாள்.

எருவக் கொட்டிட்டு ‘சை கழுஞ்சு வைக்கிதுக மேலெல்லாம் வழிஞ்சு சேல எல்லாம் போச்சு’ என்றபடி வந்தாள்.

“அப்புறம் மாடு சந்தனமாக்கும் போட்டு வக்கிம்”

“உனக்கு கிசும்பு அதிகம்டி… ஒரு வெசயத்த உங்கிட்ட கேக்கணுமின்னே நினச்சேன்டி… இப்பக்கூட அத நெனச்சிக்கிட்டுத்தான் வந்தேன். ஆமா நீ ஏன் இப்பல்லாம் எங்க வீட்டுப் பக்கம் அதிகமா வாறதில்ல என்னடியாச்சு உனக்கு..?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லேக்கா… வேல நெறயாயிருக்கு… அதான்”

“பொய் சொல்லாதடி… அப்படி என்னடி வேலயிருக்கு… ”

“அது…”

“என்னத்தயோ எங்கிட்ட மறக்கிறேன்னு தோணுது… எங்கூட்டுக்கு போவப்படாதுன்னு உங்காத்தா சொன்னுச்சா…”

“ஐய்யோ… அம்மா அதெல்லாம் சொல்லாது. அதுவே உங்கூட்டுப் பக்கம் வராம இருக்கவும் நோண்டி நோண்டிக் கேட்டுக்கிட்டு இருக்கு… அதுகிட்ட ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன்.” சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“ஏதோ சொல்லி சமாளிச்சிட்டேன்னா… என்ன பிரச்சன உனக்கு…”

“ஒண்ணுமில்லேக்கா… வேலயிருந்துச்சு அதான்…”

“மறுபடியும் மறக்கிறேடி… எங்கிட்டசொல்லலாமின்னா சொல்லு… இல்லேன்னா பரவாயில்ல விடு”

“அப்பறம் வீட்டுக்கு வாரேங்க்க… இப்ப அம்மா பால் ஊத்தப் போயிருக்கு, தங்கச்சியும் தம்பியும் பரிச்சக்கிப் படிக்கிறாங்க… அப்பா வேலக்கிப் போறதுக்குள்ள அவருக்குச் சாப்பாடு செய்யணும்க்கா.. சரிக்கா நா அப்பறம் வாரேங்க்க” எனச் சொல்லிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் ஓடிவிட்டாள்.

‘ம்ம்… என்னத்தயோ மறக்கிறா… என்னான்னுதான் தெரியல… சரி அப்புறம் வரட்டும் என்ன ஏதுன்னு சொல்லாமயா போயிருவா’ என்று நினைத்தபடி சென்றவள் எதிரே நாச்சியக்கா வர, ‘அக்கா வெங்காயம் தக்காளி வாங்கிக்கிட்டு வா… வந்து காசு வாங்கிக்க’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு போனாள்.

வாசலில் கிட்டிக்கம்பு செதுக்கிக் கொண்டிருந்த சரவணனை பாத்தவளுக்கு கோபம் தலைக்கேறியது. “தம்பிக்கி காலயில இது ரொம்ப முக்கியம்… இதுதான் உங்களுக்குச் சோறு போடப்போகுது… தூக்கிப் போட்டுட்டு எந்திரிக்கிறியா இல்ல எருக்கூடய தலயில போடவா..?” குங்குமகாளியாய் மாறிக் கத்தினாள்.

“போம்மா… கிட்டி வெளடா செதுக்கி மட்டும் வச்சிட்டு வாரேன்” முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு சொன்னான்.

“சீக்கிரம் வந்து தொல…. மாடுகளப் பாக்கச் சகிக்கல… அதுகளக் குளிப்பாட்டிட்டு நீ என்ன வேணாலும் வெளயாடு… எங்கிட்டு வேணுமின்னாலும் போய்த் தொல”

“மாடு குளியாட்டவா சித்தப்பா வந்தோடனோ அதுகிட்ட சொல்லலாமுல்ல… நா வரல போ” சொல்லிக்கிட்டே அவள் எட்டிக்கிட்டு அடிக்க முடியாதபடி தள்ளிப் போனான்.

“அவுக கலக்கிட்டரு உத்தியோகம் பாக்கிறாக காலயில போனா ராத்திரிக்குத்தான் வாராக. அப்புடி என்னதான் வேலயோ தெரியல. நீங்க கிட்டி வெளாடப் போங்க… எனக்குத்தானே எல்லாம் வந்து கிடக்கு. இன்னக்கி ஒரு பயலுக்கு சோறுயில்ல… பட்டினி கெடங்க அப்பவாச்சும் வீட்டு வேல பாக்கணுங்கிட புத்தி வருதான்னு பாப்போம்’ அவள் இன்னும் கோபத்துடன் பேசவும் “கம்மாயில சொறியிருக்கு… மேலெல்லாம் அரிக்கும்மா…” மெல்ல இறங்கி வந்தான் சரவணன்.

“அப்ப பைப்புல தண்ணி அடிச்சுக் கொடு… நா மாட்டக் கழுவுறேன்”

“தண்ணி அடிக்கிறதுக்கு கம்மாக்கே போகலாம்.”

“சரி அப்ப கம்மாய்க்கே போவோம் வா…”

அடுக்கடுக்கான வேலைகளில் மூழ்கியதால் நேரம் போனதே தெரியவில்லை. கீரத்தண்டையும் கருவாட்டையும் போட்டு கொழம்பை கூட்டிவிட அந்த ஏரியாவே மணத்தது. அவளது மாமியாவுக்கு அந்த வாசம் வயித்துப்பசியை கிள்ளி நாக்கில் எச்சில் ஊற வைத்தது.

“என்னத்தா… கீரத்தண்டும் கருவாடுமா வக்கிறே.” என்றவாறு நாக்கைச் சப்புக்கொட்டியபடி உள்ளே வந்தாள்.

“ஆமா அயித்த… வேற காயி ஒண்ணுமில்ல… வெங்காயந்தக்காளி மட்டும் நாச்சியக்காவ வாங்கிட்டு வரச்சொன்னேன். அவுக இருந்தா மார்க்கெட்டுல வாங்காந்து தருவாக. நாளைக்கி கிடக்க தட்டப்பயரப் போட்டு வச்சமின்னா நாளானக்கி சந்தயில காயிக வாங்கிக்கலாம்…”

“ம்… இந்த சரவணன் எங்கிட்டுப் போயித் தொலஞ்சான்..? லீவுன்னா வீடு தங்காது… போடுற வெயிலெல்லாம் அது தலயிலதான் விழுகணுமின்னு திரியும். அது வந்துச்சுன்னா ராமசாமியண்ண தோட்டத்துல போயி கத்திரிக்கா புடுங்கிக்கிட்டு வரச்சொல்லு… அங்க வதி அழியுது அத்தாச்சி வந்து புடுங்கிக்க்ச் சொல்லுன்னு அண்ணபொண்டி சொன்னுச்சு. நாம அங்க போறமாரியா பாதயிருக்கு… கல்லும் முள்ளுமாவுல்ல கிடக்கு. இவன விட்டா சைக்கிள்ல ஒரு நிமிசத்துல பொயிட்டு வந்திருவான்.”

“ஆமா… அது எந்தப் பொட்டல்ல கிட்டி வெளாடுதோ… லீவ் விட்டாத்தான் வீடு தங்குறதில்லயில்ல தெருத்தானே பொறக்கும். நாளக்கி நாம்போயி புடுங்கிக்கிட்டு வாறேன்”

“சரி… ராமசாமி அண்ண இந்தப்பக்கமாப் போகயில பாத்துச் சொன்னா அதுவே புடுங்கியாந்து கொடுத்துரும்…” என்றபடி பக்கத்து வீட்டுப்பக்கம் ஊர்க்கதை பேச போய்விட்டாள். இனித் திரும்பி வர ரெண்டு மணியோ, மூணு மணியோ ஆகலாம்.

அரிச்ச தலையைச் சொறிஞ்சிக்கிட்டே ‘பேனு கெடக்கு போல… இந்தப் புடுங்கு புடுங்குது… யாரயாச்சும் பாக்க்ச் சொல்லலாமுன்னா ஒருத்தி கூட இங்கிட்டு வரமாட்டேங்கிறாளுக. நாமளே உருவிப்பாப்போம்’ என முணுமுணுத்துக் கொண்டே ஈருவலிய எடுத்துக்கிட்டு திண்ணையில வந்து உட்கார்ந்தவள் செண்பகம் வருவதைப் பாத்ததும் ‘இவகிட்ட தலயக் சத்த தலயக் கொடுத்தாப் போதும் உருவி எடுத்திருவா… பேன் பாக்குறதுல கில்லாடியில்ல இவ’ என நினைத்துக் கொண்டாள்.

“என்னக்கா வேலயெல்லாம் முடிஞ்சிருச்சா..?”
“இப்பதான்டி முடிச்சேன். சத்தவடம் எந்தலயக் கொஞ்சம் பாரேன்… ஒரே அரிப்பா இருக்கு… நாத்துனா மக அர்ச்சனாப்புள்ள வந்திருந்தால்ல… அயித்த அயித்தன்னு தலயோட தலவச்சிப் படுத்துக் கெடந்தா… அவகிட்டயிருந்து இறங்கிருச்சு போல… புடுங்கி எடுக்குது… எங்க நின்னாலும் தலயச் சொறிஞ்சிக்கிட்டு நிக்கிறது வெக்கமாயிருக்குடி”

“சரி இந்தப்பக்கமாத் திரும்பி உக்காரு… வெளிச்சம் தெரியல. எங்க அத்தய காணோம்..?”

“அவங்க இந்த நேரமெல்லாம் வீட்டுல இருக்கதில்ல… பக்கத்து வீடுகளுக்கு கத பேசப் போயிருவாக…”

“அப்புறம் அவங்களுக்கும் பொழுது போகணுமில்ல…”

“ஆமா அவ அங்க போனா இவ இங்க போனான்னு உருப்புடாத பேச்சுத்தான் பேசப்போறாக… மொத்தத்துல ஊர்ப்பொரணி அம்புட்டுத்தான்”

செண்பகம் சிரித்தபடி அவள் தலையில் பேன் பார்க்க ஆரம்பித்தாள்.

பர்வதம் நினைவு வந்தவளாய், “சரி நீ ஏன் இங்கிட்டு வரலங்கிறதுக்கு காரணத்த சொல்லு” என்றாள்.

“அதான் வந்துட்டேன்ல…”

“பேச்ச மாத்தாதடி… எனக்குத் தல வெடிச்சிடும் போல… ஒரு நாள்ல பாதி நேரத்த இங்கிட்டே போக்குறவ திடீர்ன்னு வரலயின்னா… நா எதுவும் திட்டிட்டேனான்னு என்ன நானே கேட்டுக் கொடஞ்சிக்கிட்டுக் கிடக்கேன்”

“அய்யே அதெல்லாம் ஒண்ணுமில்ல… இப்பச் சொல்லாம விடமாட்டே நீ… அப்படித்தானே… சரி முருக மாமா உள்ளயா..?”

“அவன எதுக்கு இப்பக் கேக்குறே..?”

“இல்ல வீட்டுக்குள்ள வேற் யாரும் இருந்தா சொல்ல வேண்டாமேன்னுதான்…” இழுத்தாள்.

“அவனில்ல… கலக்டெரு காலயிலயே வெளிய பொயிட்டாக… சரவணப்பய எங்க வீடு தங்குறான்…. இங்க நீயும் நானும் மட்டுந்தான்… அப்புடி என்னடி ரகசியம் சொல்லப்போறே… சொல்லு கேக்குறேன்”
“பேன் இல்லக்கா ஈறு நெறயயிருக்கு… ஈருவலியால உருவுறேன்… என்னத்தக்காச் சொல்ல… ஒண்ணுமில்லேக்கா… மனசுதான் சரியில்ல…”

பர்வதம் ஒண்ணும் பேசாமல் அவளைப் பார்த்தாள்.

“உங்களுக்கெல்லாம் தெரியாதுக்கா… நா முருக மாமா மேல உசுரயே வச்சிருந்தேன். ஆனா மாமா…”

இப்பத்தான் அவளுக்கு புரிந்தது. அவளது பெரும்பாலான நேரம் இங்கே கழிந்தாலும் அதில் முருகனுடன் அவள் அடிக்கும் லூட்டிதான் அதிகமிருக்கும். அவனை ஏதாவது சொல்லி வம்பிழுத்துக் கொண்டே இருப்பாள். சின்ன வயதில் இருந்து ஒண்ணா வளர்ந்த பிள்ளைங்க… கேலி முறை வேறு என்பதால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

“அவனுமா…?”

“இல்லக்கா… நா மட்டும் சின்ன வயசுலயிருந்தே மாமா மேல ஆசய வளத்துக்கிட்டேன்… பொட்டச்சிதானே” கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“அவங்கிட்ட சொன்னியாடி…”

‘ப்ச்…ப்ச்’ என உதடு சுளித்தவள் “இல்லக்கா… படிப்பு முடிஞ்சதும் சொல்லலாமுன்னு இருந்தேன். ஆனா அதுக்குள்ள…”

“அதுக்குள்ள..?”

“அன்னக்கி உனக்கிட்ட மாமா என்ன சொன்னுச்சு… ஞாபகத்துல இருக்கா… யோசிக்கா…”

“என்ன சொன்னான்…?” எனக் கொஞ்ச நேரம் யோசித்தவளுக்கு அதற்கான விடை கிடைத்தது. கூடப் படிச்ச புள்ள கூடப் பழகுறதாவும் அவளையே கட்டிக்கப் போறேன்னும் முருகன் சொன்னது அவள் ஞாபகத்தில் ஆடியது.

“என்ன சொன்னாங்கன்னு இப்ப ஞாபகம் வந்திருச்சா..?” சுரத்தில்லாமல் கேட்டாள்.

“ம்…”

“நானும் அதக் கேட்டேங்க்கா.. அதுக்கப்புறம் மாமாவ பாக்க எனக்கு மனசுமில்ல தயிரியமும் இல்ல… அதான் இங்கிட்டு வரல… வர நெனக்கல” கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

“அடி கிறுக்கி இதுக்காகவா வராம இருந்தே… அவந்தான் சொல்லியிருக்கான்… இது கிராமமுடி… இங்க சாதி, சனமுன்னு எல்லாமிருக்கு. அவனோட நோக்கத்துக்கெலாம் எதுவும் நடக்காதுடி. இங்க யாரும் அதுக்கு ஒத்துக்கமாட்டோம். எல்லாரும் எதுத்தா மனசு மாறாமய போயிருவான். அப்படியே அவளத்தான் கட்டுவேன்னு கட்டினா உனக்கு அவனவிட நல்ல மாப்ள கெடக்காமயா போயிடுவான். போட கழுதன்னு சொல்லிட்டு வர்றவனுக்கு கழுத்த நீட்டிட்டு வாழ வேண்டியதுதானே….”

“கெடப்பாங்க்… கெடய்ப்பான்… முருக மாமாமாரி ஒருத்தங் கெடப்பானா..?” வார்த்தைகள் தவிப்பாய் வந்து விழுந்தது.

அதற்கு பர்வதத்தால் பதில் சொல்ல முடியலை.

“என்னால போன போகட்டுமின்னு விட்டுட்டுப் போக முடியலக்கா… மாமாவப் பாக்காமயிருக்க நெனச்சாலும் முடியலக்கா. ரோட்ல அது வர்றப்ப அதோட வண்டிச் சத்தம் கேட்டு என்னயறியாம எட்டிப் பாக்கச் சொல்லுதுக்கா… கேணச்சிறுக்கி மனசுக்குள்ள ரொம்பவே மாமாவச் சொமந்துட்டேன்” அழுதவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

“சரி விடு… மாமாகிட்டயும் அயித்தக்கிட்டயும் பேசி உன்னய அவனுக்கு நா உன்னயக் கட்டி வக்கிறேன்… நம்மள மீறியாப் போகப் போறான்.”

“வேண்டாங்க்கா… கட்டாயப்படுத்தி வாழ்க்கயில சேந்தா ரெண்டு பேருக்குமே சந்தோசம் போயிடுமுக்கா. மாமாவோட சந்தோசத்தயும் பறிச்சிட்டு, அவர விரும்புன பொண்ணோட சந்தோசத்தயும் பறிச்சிட்டு நா மட்டும் எப்படிக்கா நல்லாயிருக்க முடியும்… நல்லா வாழ முடியும் சொல்லு. நா மட்டும்தானே விரும்புனேன்… மாமா இல்லயில்ல. ரெண்டு மனசைக் கொன்ன பாவத்தை சுமக்காம ஒத்த மனசு செத்தா பரவாயில்லக்கா. நம்மூருக்கு வர்ற பாதயில சுமதாங்கி ஒண்ணுயிருக்குல்ல… இன்னக்கி அது ஒரு காட்சிப் பொருளாட்டம் நிக்கலாம். பலருக்கு எதுக்கு ரெண்டு கல்ல ஊனி, அதுமேல ஒரு கல்லப் போட்டு வச்சிருக்காங்கன்னு தோணலாம். அதயெதுக்கு அந்தக் காலத்துல எல்லா ரோட்டுலயும் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒருக்கா வச்சிருக்காங்கன்னு இன்னக்கி யாரும் யோசிக்கிறதில்ல… அத ரோட்டுல நிக்கிற ஏதோ ஒரு கல்லுன்னு கடந்து போயிடுறோம். பல இடங்கள்ல அதை உடச்சிப் போட்டிருக்காங்க… சில இடங்கள்ல அந்தமாரிக் கல்லு வீட்டு வாசப்படிக்கு ஆகும்ன்னு தூக்கிட்டுப் போயிட்டாங்கதானே. ஆனா அது அந்தக்காலத்துல பல பேரோட சுமய சலிப்பிலாமச் சுமந்திருக்கும்ல்லக்கா. .தூரத்துலயிருந்து சுமயோட வர்றவங்க, ஆளுத் தொணயில்லாம தூக்கி வர்ற சுமய இறக்கி வச்சிட்டு கழுத்த நீவி, கால உதறி, தல வேதனயப் போக்கித் தங்களக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்க பயன்பட்டிருக்குல்ல… அதோட வேலயே அதுமேல வக்கிற சுமயயெல்லாம் சுமக்குறது மட்டுந்தானேக்கா… அதுல சந்தோசமான சும… துக்கமான சுமன்னு எல்லாமே கலந்துதான இருந்திருக்கும் இல்லயாக்கா. எனக்கென்னக்கா நா ஒரேயொரு சுமயத்தானே சுமக்கப்போறே… ஆமாக்கா முருக மாமா நெனப்பச் சுமந்துக்கிட்டு கிடக்கிறதும் ஒரு சுமதான்னாலும் அது சுகமான சுமதானேக்கா. அந்த சுகத்த நா இப்பவும் எப்பவும் அனுபவிக்கணும்ன்னு நெனக்கிறேங்க… அது மட்டும் எனக்குப் போதும். மாமா விரும்புன பொண்ணயே கட்டிக்கட்டும். அவரு விருப்பப்படி கட்டி வச்சிருங்கக்கா… யாரும் எதுக்காதீங்க… அவரு வாழ்க்கய வாழட்டும்… அது போதுமெனக்கு. இதப்பத்தி தயவுசெய்து வீட்டுல யார்கிட்ட பேசாதக்கா… நா கெளம்புறேங்க்கா” என்றபடி கண்ணீரை துடித்துக் கொண்டு எழுந்த செண்பகம், தன் பின்பக்கத்துத் தூசியைத் தட்டிவிட்டபடி அங்கிருந்து நகர,

சுமையை மட்டும் தூக்கிக் கொண்டு அவனைத் தட்டிவிட்டுப் போவதாக பர்வதத்துக்குத் தோன்ற,

கண்களில் நீர்க்கோர்க்க அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

***

பரிவை சே.குமார் – தற்பொழுது பணி நிமித்தம் அபுதாபியில் வசிக்கிறார். இவரது சிறுகதைத் தொகுப்பு எதிர்சேவை வெளியாகியது. இரண்டாவது தொகுப்பை வம்சி பதிப்பகம் வெளியிட்டது. இவரது சிறுகதை ஒன்று யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய க.நா.சு சிறுகதைப் போட்டியில் பரிசு வென்றது. தொகுப்பின் பெயர் “கொரோனா காலம்”. இவரது படைப்புகளை வாங்க இங்கே சொடுக்கவும்

ரேவா கவிதைகள்

0

1.

பகலாகி மிதக்கும் கானல்

முற்றுபெற்றுவிட்ட ஓர் உரையாடல் கரைக்கு
வந்து சேர்ந்திருக்கிறது
என் கடல்

மோதி மோதி
திமிறும் மனம்
அனலாக்கும் அவ்வெப்பத்தை
அறிந்து வைத்தே கிளிஞ்சல் பொறுக்குகிறது
கானல்

கரை தட்ட
எப்படியும் வந்து சேரும் ஒரு படகில்
பிடித்துவைப்பேன்
விளங்கா அவ்வொற்றைப் பகலை

2.
வளரும் திரை

பிடித்தங்கள் தான் முதல் பிரதானம் என்றாய்

மேம்போக்காய்
ஒரு திரைச்சீலை அசைவை
ஆளுக்கான வரவென அறிந்துவைத்திருந்த
நிழல்
கனல் கொண்டு அளக்கும் அச்சிறு தவறால்
இனி
மீள
மீள மிதக்கிறது

திரை நழுவும் பருவம்
கண்டதைக் கடலாக்கி

3.
நிழல் தேடும் முனை

சலிப்புகள் மித மிஞ்சிக் கிடக்கிறது
காரணங்களோடு
அதில்
சலித்தெடுத்த ஒரு பொய்க்கான
ஆம்- ஐ
நான் ஏன் பிச்சையிட வேண்டும்

வாய்ப்புகள் பிரதானமெனில்
தந்த சொல்
நின்ற கோலம்
எடுத்தாண்ட உரிமை
இதை எந்த கழுவில் ஏற்ற?..
இல்லை எந்த சில்லறைக்கு செல்லுபடியாக்க?

சொல்
சொல் என துடிப்பேற்கிறது
மறந்த நொடியின் ஏமாற்றம்

எதை விட
எதை எடுக்க
அணுக்கம் தேவையென
நிழலுக்கு தகிக்கிறது என் குடை உச்சி

வந்து விழும் மழைத்துளி
போதுமாய் இல்லை

ஒரு சில்லிடல் சிக்கிக்கிடக்கும்
மனதிற்குள் முடிச்சிட்டுக் கிடக்கிறது
பழைய நிழல்
பழகிய சலிப்போடு

4.
இருள் நிரப்பும் கணம்

தீரா வட்டங்கள் தீர்ந்தழிக்கும்
வாழ்வில்
வசதிப்பட வந்து நிற்கிறது
வியாக்கியானங்களின் வருகை

நுழையத் தெரிவது
தெரிந்ததை நுழைக்க
அறிந்தது
அதுவரைக்குமென்ற அந்தகாரத்தை இழக்கிறது

ஓர் உணர்தல் உருவாக்கும்
வடிவத்திற்கு மொழிகள் இல்லை
அது
அழிய அழிய
பிறப்பிக்கும் எத்தனையோ நானில்
எந்த நான்
என் சமன் அற்ற நானோ
அந்த நானை பரிசளிக்கும் சூழலுக்குள்
இழுத்து வரத் தெரிந்த
என் பிரியக் காற்றே

மோதிச் சிதற
சிதறிப் பெருக
பெருகி குவிய
குவிந்து பின் ஓர் உயிர்க் கொள்ள
இப்பாத்திரம் சுமக்கும் பழிக்கு
நீ
நான் அறிந்துவிட்ட பிச்சை

சத்தம் சில்லறைகள்
மௌனம் செல்லுபடிகள்
எண்ண எண்ண
எதிலும் புள்ளி

இணைக்க
இணைக்க வடிவம் கொள்கிறது
பாத்திரம்

ரேவா, மதுரையைச் சேர்ந்த இவர் வசிப்பது சென்னையில். இவரது படைப்புகளைப் பெற இங்கே சொடுக்கவும்..

கோடி அணுக்கள் விவரிக்கும் ஏகாந்தப் பெருவெளி – வேல்கண்ணனின் ‘லிங்க விரல்’ கவிதை நூல் குறித்த பார்வை

0

முகில் நிலா தமிழ்

குழந்தையை, குழந்தையாகி அணுகுவதைப் போலவே கவிதையை, கவிதையாகி அணுகினாலன்றி அதனுள் வெகுதூரம் பயணிக்க முடியாது

கவிஞன் தான் பயணிக்கும் வெளியை தன் எழுத்துக்களால் விவரிக்கும் போது அது அவனின் தனிப்பட்ட அனுபவமாகிறது, கவிதைகளை வாசிக்கும் போது, அந்தக் கவிதைக்குள் வாசகன் தன்னை உணரமுடிந்தால், அந்தக் கவிதை பொதுவாகிவிடுகிறது…

ஆக இந்த நூலில் பொதுவாக உணரக் கூடிய கவிதைகள் அதிகம் இடம்பெற்று இருக்கிறது.. இந்த நூல் வாசிப்பனுபவம் எனக்கு சற்று கடினமாகத்தான் இருந்தது, அதிகம் குறியீடுகளும், படிமங்களும் நிறைந்த கவிதை தொகுப்பு இது என்பதும், என் வாசிப்பனுபவம் என்பது மிக எளிய சொற்களைக் கொண்ட கவிதைகளை உள்வாங்கும் அளவே இருக்கிறது என்பதுவுமே காரணி…

இந்த நூலின் கவிதைகளை புரிந்துகொள்ள சொற்களில் எந்த சிக்கலும் எனக்கில்லை என்றபோதும் அதன் பொருளை உள்வாங்க சிக்கல் இருந்தது என்பதை வாசகர்களிடமும், நூலாசிரியர் கவிஞர் வேல்கண்ணன் அவர்களிடமும் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை..

இவர் கவிதைகளுக்கு கடும் விமர்சனம் செய்ய காத்திருக்கும் எல்லோருக்கும் அவர் பதில் சொல்லும் விதமாக இரண்டாவது கவிதையில்

“//முழுமையற்ற
நெளிந்த சொற்களுக்குள் மெனெக்கெட்டு
எப்படியோ மீனை பிடித்துவிட்டேன்.
செதில் நீக்கம் செய்துகொண்டிருக்கையில்
பூண்டு மஞ்சள் கல் உப்பை தயார் நிலையில் வைத்து இருக்கிறீர்கள்.
மீனை ஆய்ந்து கொண்டிருக்கும் போதே குழம்பை கொதிக்க வைக்கிறீர்கள்
தூய்மையான துண்டாடிய மீன்களை உங்களிடம் தருகிறேன்.
“தலைப்பிரட்டையை வைத்து என்ன செய்வது, மீன் எங்கே?”
இரக்கமில்லாத உங்களின் கேள்விக்கு
எங்கிருந்து கொண்டுவருவது கவிதையை”//
என்கிறார்…

இதை வாசித்த உடனே எனக்குள்ளிருந்த விமர்சக பார்வையை தூக்கிவீசிவிட்டு, கவிதைக்குள் முடிந்தவரை எந்த திட்டமிடலும் இன்றி பயணிக்க வேண்டுமென தோன்றியது..

கவிதைக்குள் இருக்கும் கருவை மட்டும் உள்வாங்கிவிட வேண்டும் என்ற ஆவலை உள்ளடக்கி வாசிக்க தொடங்கினேன்.
///” இரவை நிரப்புதல் என்பது
கொஞ்சம் கொஞ்சமாய்
நானே என்னைத் தின்னுதல்” /// என்கிறார்.

அந்த இரவை நிரப்ப இசை, மது, புணர்ச்சி, நண்பர்கள் கூடுகை, நிலா பார்த்தல் , கவிதை, நட்சத்திரம், நோயின் தீவிரம், இப்படி இன்னும் இன்னும் பலவற்றை செய்தும் அவருக்குள் இருக்கும் இராட்சத பறவையின் ஒரு இறகாக மட்டுமே இரவு இருப்பதாகவும் இன்னொரு இறகு இரவில்லாத மற்றவையாக இருப்பதாகவும் அதன்பின் தன்னைத் தானே தின்று இரவை நிரப்புவதாகவும் சொல்கிறார்…

உண்மையில் இரவென்பது அத்தனை கடினமில்லை பலருக்கும், வெகு சிலருக்கே இரவைக் கடக்க வெகு சிரமப்பட வேண்டி இருக்கிறது… என் பார்வையில் இந்தக் கவிதை அவர் கடந்த அந்த இரவுக்கு முன்பே தொடங்கி விடுகிறது… கடந்த சம்பவங்களை ஜீரணிக்க வழியற்று, தன்னால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்ட பல நாட்களின் இரவுகள் எனக்குள்ளும் அந்த வலியை தந்திருந்ததை இந்தக் கவிதை மீட்டுத் தந்தது..

“///மங்கிய விளக்கொளி.
அறையெங்கும்
காலியான மதுப் புட்டிகள்
தாள் குவியல்கள்
சிகரெட் பஞ்சுகள்
ரெனால்ட் நீலத்து வரிகளுடன் பழைய கேசட்டுகள்.
பிசுக்கு நிரம்பிய சுவர்
அழுகிய வீச்சமும்
கருந்திட்டும் அப்பிக் கிடக்கும் தரை
எத்தப்பட்டு சுருண்டு ஓய்ந்த பாய்
கருங்கல் தலையணை

வெளியேறுவதற்கான
காரணங்கள் பலவிருந்தும்
ஒன்றில் நிற்கிற சகலமும்
ஒருக்களித்த கதவுக்கு அப்பால்
ஆர்ப்பரிக்கும்
கடலோசை”//
இந்தக் கவிதை தந்த தாக்கம் வேறானவை. இந்த உலகை, இந்த வாழ்வை வெறுக்க ஆயிரம் சமூககாரணிகள் நம் முன் உண்டு, ஆயினும் வாழ்வதற்குப் பிடிப்பாய் எதோ ஒன்றைப் பற்றிக் கொள்கிறோம் என்று தோன்ற வைத்த கவிதை இது ..

“வளர்ந்த
நந்தவனம்
தாங்கொணாப் புழுக்கம்
கிரகித்துக் கொள்கிறது
அத்துவானக் கானல் செடி”/// இந்தக் கவிதை ஒரு இடத்தில் அல்லது ஒரு உறவுக்குள் இருப்பதன் மூலம் அனுபவிக்கும் சுகங்களையும் அதன் பொருட்டு சகித்துக் கொள்ளும் பல துன்பங்களையும் ஒரே புள்ளியில் நோக்குவது போலவே எனக்குப் பட்டது..

“///என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக் கடித்தது
உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது
வேட்டை நாய்களை ஏவினேன்
பசித்த புலியின் கூண்டு திறந்துவிடுகிறாய்
ஆற்றின் வழித்தடத்தில்
நாம் அமைத்த வீட்டினை நோக்கி
ஒற்றை யானை வந்துக்கொண்டிருக்கிறது.//”

இது அரசியல் கவிதை என எனக்கு வாசிக்கும் போது பட்டது… இந்தக் கவிதைக்குப் பின்பான அரசியலும் சமகாலத்தியது என்பதுதான் எனக்குப் புரிந்த குறியீடு… நாம் செலுத்திய ஒரு வாக்கு, நமக்கே எப்படியெல்லாம் தொல்லைகளாக மாறி இன்று ஒற்றை ஆட்சி, ஒற்றை மொழி, ஒற்றை தேசம் என்ற கட்டமைப்புக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது என கவிஞர் சொல்வதாக எனக்குப் பட்டது..

“///பல்லாயிரம் உயிர்களை
வாரிச்சுருட்டியதைச் சொல்லிச் சொல்லி
கழுத்தறுக்க வேண்டும்.
கடலின் கழுத்துயெது?

லட்சக்கணக்கான உயிர்களைச் சுழற்றியெறிந்ததைக் காண்பித்து
மாறுகால் மாறுகை வாங்க வேண்டும்
காற்றின் கை கால்யெது?

பெருகியோடும் குருதி வெள்ளத்தின் வீச்சம்
நுகரவைத்து
சங்கு அறுக்க வேண்டும்
நதியின் முகமெது?
எண்ணிக்கையற்ற உயிர்களை
புதைத்துக் கொண்டது குறித்தக் கேள்வியுடன்
தலைக்கொய்ய வேண்டும்
நிலத்தின் தலையெது?
மிதக்கும் முழுநிலவு
அலையாடும் கப்பல்
கடல் பார்ப்பது எவ்வளவு ஆனந்தம் நண்ப”//

இந்தக் கவிதை வாசிப்பனுபவம் இன்னும் சற்று அகலமானது, இயற்கை நிகழ்த்தும் பேரழிவுகளுக்கு யாரை நிந்திக்க முடியும் என்று மேலோட்டமாக அவர் சொல்வதாகப் பட்டாலும், எனக்குள் இந்தக் கவிதை என்னை நானே ஆய்வுக்குட்படுத்தும் கவிதையாகத்தான் பட்டது…
மிகச் சரியான ஒன்று உலகில் உண்டா? மிகச் சரியான மனிதன் என யாரும் உண்டா? தினசரி நாம் நிகழ்த்தும் பேரழிவு என்று எத்தனையோ இருக்கிறதுதானே, இயற்கை மீதும் சக மனிதர்கள் மீதும் அறிந்தும் அறியாமலும் பல அத்துமீறல்களை செய்துவிடுகிறோம் அல்லவா? அத்தனைக்கும் பொறுப்பாய் யாரைச் சொல்வது, நம்மை நாமே தலையைக் கொய்து கொள்ள முடியுமா?! என எத்தனையோ கேள்விகளை இந்தக் கவிதை எனக்குள் ஏற்படுத்தியது…

அழிவும் சரி ஆக்கமும் சரி நம்பிக்கை உடையவனுக்கு கடவுளின் கையிலும், நம்பிக்கையற்றவனுக்கு அறிவியலின் கையிலும் இருப்பதாகவே உணரச் சொல்லியும் ஒரு குரல் இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்குள் ஒலித்தது…
“///கவிதையில் ஒரு மரம் வரைகிறேன்
கவிதையில் ஒரு தோப்பு வரைகிறேன்
கவிதையில் கானகம் வரைகிறேன்

முதல் வரி எழுதுவதற்கு முன்பிருந்த பறவை
திரும்பி வந்தபாடில்லை.”///

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இதுவென சொல்வேன்…

கவிதை எழுதுவதற்கும், கவிதை செய்வதற்குமான வேறுபாட்டை விளக்கும் கவிதை இது என்று தோன்றியது… இன்னும் ஒரு வடிவத்திலும் இக்கவிதை எனக்குள் புகுந்தது… (சமூக அமைப்புகளில் குடும்பம் என்ற ஒன்று எப்படி கட்டமைக்கப்படுகிறது என்பதை சொல்வது போன்றும் தோன்றியது… அன்பின் பால் நிகழ்த்தப்பட வேண்டிய யாவற்றையும் ஒரு கட்டமைப்புக்குள் கட்டிவைத்து அதன்பின் அல்லது அதன் பொருட்டு அன்பு கொள் எனப் பணிக்கும் முட்டாள்தனத்தை சொல்வதாகவும் பட்டது)

“//மிக நீண்ட தூரம்
விருப்பக்குறியும் நிலைத்தகவலும்
இருத்தலை தெரிவிக்கும்
காலமிது
இறப்பில் தொடங்கி
இறப்பில் முடியும்
இந்நாட்களை கடப்பதற்கு
கள்ளச்சாவி ஏதேனும் உண்டோ?
எங்கெனவும் இருக்கும் காற்று
நிரப்ப முடியாத பிடிமூச்சு
எண்சாண் உடம்புக்கு நுரையீரலே பிரதானம்
காற்றின் உருவம் என்னுயிர்
இவ்வுலகின் மிக நீண்ட தூரம்
மூக்கிலிருந்து நெஞ்சாங்குழி வரை”///

இந்த தொகுப்பு சமகாலத்தின் நகல் என்பதற்கு இது போன்ற கொரானா காலக் கவிதைகள் சிலவும் இடம்பெற்றிருக்கிறது… மிக மிக கடக்க முடியாத தூரமாய் மூக்கிலிருந்து நெஞ்சாங்குழி வரை சுட்டியது மிகச் சிறப்பு… மிகப் பொருத்தமும் கூட.

“///கனவில் வந்த சிவன்
கனவில் வந்த சிவன்
தேடிக் கண்டறியா நகரத்துள் அழைத்துச் சென்றான்
காடுடைய சுடலை சாம்பல் பூசி வீதியில்
அங்கம் உருண்டான்
வீணை மீட்டி
ஒரு தெரு
உடுக்கை ஓங்கி ஒலிக்க
புறத்தே
ஆனந்த தாண்டவமிட்டான்
பம்பை முழங்க
ஒரு தெரு
பறையடித்து
ஒரு தெரு
நிலமதிர கொடுகொட்டி ஆடலுடன்
ஒரு தெரு
சேகண்டியுடன் சங்கொலித்து
சலனமற்று நடந்தான்
இசைக்கும் ஓசை பலப்பல
தெருவின் இசை பலப்பல
நடை தளர்ந்த பொழுதில் தேடிக் கண்டுகொண்டேன்
தெருவின் தேர்வே இசை
இசையின் தேர்வே சிவன்
கனவின் தேர்வு நான்.//”

இந்தக் கவிதை சமூகத்தின் வேறுபாட்டை, மனிதர்களுக்கு தக்க, வீதிகளுக்கு தக்க, ஊர்களுக்கு தக்க என தன்னை மாற்றிக்கொண்ட சமய நம்பிக்கையையும் அதன் பால் ஏற்படுத்தப்பட்ட பிளவுகளையும் சுட்டுவதாக எனக்குப் பட்டது…

இப்படி இந்த நூல் வாசிப்பனுபவம் முழுவதும் எனக்கு என்ற சொல் மேலோங்கி நிற்க ஒரே காரணம், இது என் வரையில் உள்வாங்கப்பட்ட வாசிப்பு அனுபவமேயன்றி இந்த நூலின் விமர்சனமோ அல்லது கவிதைகளின் கரு இதுதான் என்றோ என்னால் உறுதியாக சொல்ல முடியாது என்பதுதான்..

உங்களின் வாசிப்பில் இந்தத் தொகுப்பு முழுமைக்குமான கவிதைகள் வேறு வேறு இடங்களை நிகழ்வுகளை மனதின் பதிவுகளை உணரச் செய்யலாம்…

எழுதிய கவிஞரே கூட இந்தக் கவிதை இதை மட்டும் தான் பேசுகிறது என்று சொல்லிவிட முடியாத அளவு படிமங்களும், குறியீடுகளும் நிறைந்த தொகுப்பு இது…

இதை என் வாசிப்பனுபவம் என்றே எழுதிய கவிஞரும், வாசிக்கும் நீங்களும் எடுத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடும்… இந்த தொகுப்பை வாங்கி வாசித்து அதற்கான சிறந்த விமர்சனங்களை முன்வைப்பீர்கள் என்ற நம்பிக்கையோடும் என் வாசிப்பு அனுபவத்தை நிறைவு செய்கிறேன்…

***
முகில் நிலா தமிழ் – இவர் கோவையில் வசித்து வருகிறார். கவிதைகள் மற்றும் கவிதை குறித்த கட்டுரைகளை அவ்வப்போது எழுதி வருகிறார்.

திரை

2

இதயா ஏசுராஜ்

1

யற்காட்டிலிருந்து அவசர அவசரமாகத் திரும்பியவன், விஜயாவைப் புடவை மாற்றிக்கொண்டு உடனே புறப்படுமாறுச் சொன்னதும், சினிமாவுக்குதான் என்று தெரிந்து விட்டது. எந்த தியேட்டரில் அவனது வீரத்தலைவரின் எந்த படம் போட்டிருக்கிறார்களோ தெரியவில்லை. அதான் காலையிலிருந்துத் தலைகீழாக ஆடிக்கொண்டிருந்தானா என நினைத்தாள்.

கல்யாணமான இந்த மூன்று மாதத்தில் பத்துக்கும் மேற்பட்ட வீரத்தலைவரின் படங்களை அவனுடன் பார்த்திருந்தாள். ஒவ்வொரு முறையும் அவஸ்தையோடு நெளிந்து இருக்கையில் உட்கார பிடிக்காமல் சிறுநீர் வருகிறது என அடிக்கடி எழுந்துச் சென்று விடுவாள். எந்த காட்சியையும் தவற விடக்கூடாது என்பதில் அதிக கவனத்துடன் இருப்பவன் தலையை மட்டும் அசைத்து அனுமதித்தவாறு இருப்பான்.

தான் உயிருக்கும் மேலாக மதிக்கும் வீரத்தலைவரின் திரைப்படத்தை, வாழ்நாளில் எப்பொழுதும் பார்க்கப் போவதில்லை என்று அவள் அவளைப் போலவே முதல் திலகத்தின் ரசிகையான இன்னொரு தோழியிடம் செய்து கொடுத்திருந்த சத்தியத்தை தர்மசங்கடத்துடன் மீறிக்கொண்டிருக்கிறாள் என்னும் உண்மையை நீலமேகம் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. அவள் முதல் திலகத்தின் தீவிர ரசிகையாக இருப்பாள் என்று அவன் கற்பனைச் செய்தும் பார்த்ததில்லை என்பதால் இப்பேரிடியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் கலக்கமுற்றான். கல்யாணத்துக்கு முன்பு இதைப் பற்றி எப்படி யோசிக்காமல் போனோம் என்று வருந்தினான். தான் நினைத்த மாதிரி படித்த பெண்ணாகவும், செக்கச் செவேலென்று அழகுடனும் இருந்ததால் அவளைப் பார்த்தவுடன் சம்மதம் சொல்லி விட்டான். ஆனால் இப்படி கொள்கை ரீதியாக எதிரி முகாமைச் சேர்ந்தவளாக இருப்பாள் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்த்திடவில்லை. இதை தற்செயலாகவே அவன் கண்டுபிடித்தான்.

ஒரு நாள் அவள் ஏரிக்கு குளிக்கச் சென்றிருக்கும் போது பீரோவுக்குள் எதையோ தேடிக்கொண்டிருந்தவன், அவளது திருமணப் பட்டுப் புடவையின் உள்ளே எதுவோ துருத்திக் கொண்டிருப்பது போல் கண்ணில் படவே அதை வெளியில் எடுத்தான். இரண்டு குயர் அளவுக்கு மிக பெரிதான நோட்டு புத்தகம் அது. அதன் முதல் பக்கத்தில் சொப்பன மாளிகை திரைப்படத்தில் முதல் திலகம் ஸ்டைலாக சிகரெட் பிடித்து கொண்டிருக்கும் அழகிய வண்ணப்படம் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழே ‘என் இதய தெய்வதுக்கு காணிக்கை’ என்று எழுதப்பட்டு அவளுடைய பெயரும் இருந்தது. அதிர்ந்து போனவனாகப் பக்கங்களை புரட்டினான். ஜெயசக்தி முதற்கொண்டு தற்போது வெளியான செல்லப்பா வரையிலானத் திரைப்படங்களின் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணத்திலான காட்சி படங்கள் ஒட்டப்பட்டு சின்னச் சின்ன கவிதைகளில் முதல் திலகத்தின் புகழுரைகள் எழுதப்பட்டிருந்தன. ஸ்தம்பித்துப் போனவன், கடுங்கோபத்துடன் அந்நோட்டை கையில் எடுத்துக் கொண்டு கொல்லைப் பக்கம் சென்று சுடுநீர் போடுவதற்காக இருந்த அடுப்பில் போட்டுவிட்டு அருகிலிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை உள்ளே கவிழ்த்து தீக்குச்சியைக் கொளுத்தி போட்டான். நெருப்பில் நோட்டிலிருந்த படங்களெல்லாம் திகுதிகுவெனப் பற்றி எரித்தன. அப்பொழுதான் அவன் மனம் மெல்ல மெல்ல ஆசுவாசம் அடைந்தது.

ஏரியில் இருந்து திரும்பியவள், உள்ளறைக்குச் சென்று துணிமாற்றிக் கொண்டு ஈர ஆடைகளை காயப்போடுவதற்காக கொல்லைப் பக்கம் சென்றாள். வேலியின் ஓரமாக பூவரசம் மரத்துக்கும் புங்கை மரத்துக்குமாகக் கட்டப்பட்டிருந்த நீண்ட நைலான் கயிற்றில் ஒவ்வொரு ஆடையாகப் போட்டுக் கொண்டிருந்தவள் தொடர்ந்து காகிதங்கள் கருகும் வாடையைப் பெரிதாக எடுத்து கொள்ளாமல் எல்லா துணிகளையும் காயப் போட்டுவிட்டு கைகளை புடவைத் தலைப்பில் துடைத்தபடியே பின்வாசல் வழியாக வீட்டினுள் நுழையச் செய்கையில் அவளது கால்களில் அது தட்டுப்பட்டது. எரிந்தும் பாதி எரியாததுமான இணைந்த நான்கைந்து காகிதங்களின் சுருள். பதற்றத்துடன் குனிந்து எடுத்தாள். எப்பொழுதோ வந்தாள் திரைப்படத்தில் கம்பிகளுக்குப் பின்னால் இருந்து கைகளை மட்டும் வெளியே நீட்டும் நாயகனின் தோற்றம். அவன் முகத்தை காணவே இல்லை. எதிரே பெட்டியுடன் நாயகியின் உருவம். பார்த்தவுடன் அது தன்னுடையதுதான் என்று தெரிய ஓடிசென்று அணைந்து போயிருந்த அடுப்பை பார்த்தாள். உள்ளே கத்தைக் கத்தையாக கருகியத் தாள்கள். வெளியேயும் அவை இரைந்து இங்குமங்குமாக காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்தன.

தன் உயிர் முடிச்சைப் பற்றி யாரோ பலமாக இழுத்தது போல வலியில் துடித்து போனாள். அவளுக்கு நினைவுத் தெரிந்த நாளாக சேகரித்து வைத்திருந்த படங்கள் அவை. தனிதனியாக இருந்தால் தொலைந்துப் போய்விடும் என்று நோட்டில் ஒட்டி தொகுப்பாக ஆக்கியிருந்தாள். தன்னை விட்டு எப்பொழுதும் பிரியாமல் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தது இப்படி முற்றிலுமாக அழிந்து போயிருப்பதைக் காணும்போது மரணமே சம்பவித்ததாக உணர்ந்து பெரும் அழுகையோடு தரையில் உட்கார்ந்து விட்டாள்.

ஏதோ வேலையாக வெளியே வந்த அவளுடைய மாமியார் இவள் அழுவதைப் பார்த்ததும் துணுக்குற்றவளாக அருகே வந்து “என்னடி ஆச்சு” எனக்கேட்டாள். வாய் பேச முடியாமல் கைகளில் அள்ளி வைத்திருக்கும் காகிதங்களையும் அடுப்பையும் சுட்டிக்காட்டி யாரென்று சைகையால் வினவினாள். இதற்கு அந்தம்மாவால் பதிலேதும் சொல்லத் தெரியவில்லை.

பாத்திரங்களை அள்ளிப்போட்டு கழுவுவதற்காகப் புழக்கடையில் உட்கார்ந்திருந்த வேலைக்காரி சரோஜாவுக்கு இவள் அழுவதற்கான காரணம் புரிந்தது. ஆனாலும் நிலைமையின் தீவிரம் உணர்ந்திட முடியாது குழப்பத்துடன் இவளிடம் வந்து, “சின்னையாதான் ஏதோவொரு நோட்டு புத்தகத்தை எடுத்து வந்து அடுப்பில் போட்டு எரித்தார்” என்றாள்.

திக்கென்று ஆனது இவளுக்கு. தன் தலைவன் மீது அவன் எந்தளவுக்கு பைத்தியமாக இருக்கிறானோ அந்தளவுக்கு அவனது எதிராளி மீதும் அதிக குரோதம் கொண்டவனாக இருக்கிறான் என்பது அவளுக்கு தெரியும். அவளிடமே அவளது முதல் திலகத்தைப் பற்றி பலநேரம் கேவலமாகவும் ஆபாசமாகவும் நையாண்டிச் செய்திருக்கிறான்.

அப்பொழுதெல்லாம் ரத்தம் கொதிக்கும். நரம்புகள் முறுக்கேறும். நறநறவென்று பற்களைக் கடித்தப்படி தன் கோபத்தை சிரமத்துடன் விழுங்கியிருக்கிறாள்.

அவனுக்குத் தெரியக்கூடாது என்று நினைத்திருந்தது இப்பொழுது தெரிந்துவிட்டது. இதனால் ஒரு பூகம்பம் வெடிக்கும் என்று நன்குணர்ந்தாள். அதே நேரம், அவனுக்கு அவனுடைய தலைவன் பெரிது என்றால், எனக்கு என்னுடைய திலகம் பெரிது. என்னுடைய இத்தனை வருட உழைப்பை நிமிடத்தில் சிதைத்துவிட்ட அவனை எப்படி எதிர்கொள்வது என ஆத்திரத்துடன் யோசித்தாள்.

எழுந்து ஆவேசமாக நடந்தாள். அவ்வீட்டின் அகன்ற மிக பெரிய வெளிவாசல் திண்ணையின் ஒரு பகுதியில் நீலமேகம் குத்துகாலிட்டு அமர்ந்து தன்னருகே குவிந்திருந்த வைகோல் கட்டுகளிலிருந்து கையளவாக அள்ளி அள்ளி லாவகமாகத் தொடுத்து கொண்டிருக்க, அவனுக்கெதிரில் பண்ணைக்காரன் சாமூண்டி கையில் கோல் கொண்டு பிரியாக முறுக்கிக்கொண்டிருந்தான்.

கோபாவேசமாக வந்து நிற்கும் அவளைப் பார்த்தும் பார்க்காததுப் போல செய்யும் வேலையில் தீவிரமாக இருக்கிறவன் மாதிரிக் காட்டிக்கொண்டிருக்க, “என்ன காரியம் செய்திருக்கீங்க, நீங்க” உஷ்ணக்குரலில் அவள் கத்தினாள். அலட்சியமாகத் தலை நிமிர்ந்து என்ன என்கிறது போல் அவளைப் பார்த்தான்.

“இப்படி செய்ய உங்களுக்கு எப்படி மனசு வந்திச்சு” சொல்லும் போதே அவள் உடைந்து விட்டாள். “மனுஷனுக்கு ரசன இருக்க வேண்டியதுதான். ஆனா அது வெறியா மாறிடக் கூடாது”

“நீ பண்ணுனது மட்டும் ஒழுங்கா? முத்தம் கித்தமுன்னு கவித எழுதியிருக்க. குடும்ப பொண்ணுங்க செய்ற காரியமா இது”
அவள் வாயடைத்துப் போனாள். “அவரு நட்சத்திரம். அத ரசிக்கிறது தப்பா”
“நட்சத்திரமா இருந்தாலும் அந்தாளு ஒரு ஆம்பளதானே”
அவனது வக்ரமானப் பேச்சு அதிர வைத்தது.

இதற்கு சூடாக ஏதேனும் பதிலடி கொடுக்க வேணும் என நினைத்தாள். “ஒங்காளு பேத்தி வயசுள்ளப் பொண்ணுங்களக் கட்டிப்பிடிச்சு நடிக்கிறாரே அதவிட அசிங்கத்தையா நா பண்ணிட்டேன்” இதைக் கேட்டதும் அவன் முகம் சிவந்தது. உடல் பதற சுற்றும் முற்றும் பார்த்தான். சாமுண்டி ஆவென்று வாய் பிளந்தபடி இவர்களைப் பார்த்து கொண்டிருந்தான். எதிர்த்த வீட்டு செங்கமலமும், கதிர்வேலுவும் வாசலில் நின்று இங்கே கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெருவில் போவோர் வருவோரில் சிலரும் வேடிக்கைப் பார்க்க அவனுக்கு அவமானமாக இருந்தது. தரதரவென்று அவள் கையைப் பிடித்து உள்ளறைக்கு இழுத்து போனான். அவனது மனகொதிப்பு அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. மேலும் சீண்ட நினைத்தாள்.

“உம்தலைவரு ஏதோவொரு இந்திப் படத்தப் பாத்திட்டு அம்மாதிரி தலப்பா, தார்பாய்ச்சி வேட்டி, கையில கம்புமா வராரே, பாக்க வேடிக்கயா இல்ல, குடுகுடுப்புக் காரன் போல” அவள் சத்தமாக சிரித்தாள்.

அவன் மேலும் கோபமானான்.

“உங்க நடிகருக்கு டான்ஸ் சுட்டுப்போட்டாலும் வராது. ஸ்லோமிஸன் மாதிரி காலத் தூக்கித் தூக்கி நடந்து வரதுக்கு பேரு டான்ஸா”

“இதோ பாருங்க.அவருக்கு டான்ஸ் வராதுன்னு மட்டும் சொல்லாதிங்க. அருள் விளையாடல் படத்தில ருத்ரதாண்டவம் ஆடியிருப்பாரே. அது ஒன்னுப் போதுமே. அதுமாதிரி ஒங்க மனுஷனால ஆட முடியுமா”

“கடலுடன் நதியும் சேர்ந்து…” பாட்ட நீ பார்த்ததில்லையடி. என்ன டான்ஸ். தலைவர் பின்னி எடுத்திருப்பாரு”

“ஆமா, டான்ஸ் ஆடி நாட்டியப்பேரொளியையேத் தோக்கடிச்ச ஆளில்லையா அவரு. பாவம் அந்தம்மா ரொம்ப நொந்துப் போயிருப்பாங்க”

“அடியே, ஒங்காளு பாடலும் நடனமும் படத்தில ஆடின டான்ஸ நான் பாக்கலைன்னு நினச்சியா. அதுக்கு பேரு பரதநாட்டியமா. ஜனங்களெல்லாம் கொல்லுன்னு சிரிச்சுட்டாங்க”

“அந்த டான்ஸோட மகிமையப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். டான்ஸ் ஆடி முடிச்சதும் உடம்பு முழுசும் அதிர அதிர அப்படியே நிப்பாரு. அப்ப அவரோட பாதங்கள் ரெண்டும் தரையில இருக்குதா இல்ல அந்தரத்தில தத்தளிக்குதான்னு பிரமிப்பு உண்டாகும். இதே மாதிரியான அற்புதத்த தன்னோட வயசான காலத்துல இப்ப கூட என் ஆசை ராணியே படத்தில பண்ணியிருப்பாரு”

“ஓவர் ஆக்டிங் தாங்க முடியலேன்னு அவரோட ரசிகர்களே எரிச்சலடையுறது தெரியுமா உனக்கு”

“அவரு நாடகத்துறையிலே இருந்து வந்ததாலே கடைசி ஆடியன்ஸுக்கும் தன்னோட நடிப்புத் தெரியிற மாதிரி செய்கிறாரு. இது மிகை நடிப்பில்ல,யதார்த்தம்”

“அரசியலில் உங்க ஆளோட ஜம்பம் பலிக்கல பாத்தியா. இந்த அவமானம் தேவையா. அதுக்கெல்லாம் முகராசி வேணும்”

“எங்க திலகம் கடைசிவரைக்கும் நடிக்கணும்தான் பிரியப்பட்டாரு. அவருக்கு பதவி மேலே ஆசையிருந்திருந்தா, பெரும்தலைவர் மரணத்துக்கு பிறகு தான் உச்சத்திலே இருந்தபோதே அந்த வாய்ப்ப பயன் படுத்திருப்பாரு”

“எங்க மகராசன் கொடுக்க கொடுக்கச் சிவந்த கரங்களுக்குச் சொந்தகாரர். ஆனா உங்க திலகம் எச்சிக் கையாலக்கூட காக்கா ஓடாதவரு”
“நிறுத்துங்க. எல்லா அறிஞ்சது மாதிரி பேசாதீங்க. வெளியேத் தெரியாம அவரு செஞ்ச தர்மங்களுக்குக் கணக்கே இல்ல. பாரதிதாசன் அவரோட கொடைத் தன்மையப் பத்தி பாட்டே எழுதியிருக்காரு. முடிஞ்சா படிச்சு பாருங்க. அதுபோகட்டும். துயரங்கிறது ஒரு கலை. சோகமான காட்சியில எங்க திலகம் அழுகையக்கூட ரசிச்ச பரவசப்பட வைப்பாரு. ஆனா ஒங்க தலைவர அழச்சொன்னா மூஞ்சிய மூடிக்கிறாரு”

“இதோ பாரு. சனங்கள அழவைக்கிறதா முக்கியம். அவனவன் குடும்ப கவலைய மறக்க சினிமாவுக்கு வராங்க. அங்க அழுவாச்சி தேவையா. எங்தலைவரோட பாட்டும், கத்தி வீச்சும் போதுமே. மனசெல்லாம் குளிர்ந்து போகும்”

வெறுப்பும், கசப்புணர்ச்சியுமாகத் தெறித்து விழுந்த சொற்கள் அவ்வறையை நிரப்பி மூச்சுமுட்ட வைத்தன. நீண்ட தர்க்கங்கள் விவாதங்கள் முடிவற்று நிண்டு கொண்டிருக்க அவனது அப்பாவும் அம்மாவும் அறைக்குள் வந்தார்கள். என்னச் சொல்லி அவர்களது சண்டையை நிறுத்துவது என்று தெரியாமல் தந்தை தடுமாறிக் கொண்டிருக்க, “அடியே பேச்ச நிறுத்துடீ” என சத்தமிட்டு அவன் தாயார் அவர்களைக் கலைத்தார்.

“பொம்பள புள்ளயா நீ. அவனுக்குச் சமமா வாயாடிகிட்டு இருக்கியே. யம்மாடி… இப்படியொரு ராங்குக்காரிய ஏன்வயசுக்குப் பாத்ததே இல்லை” முகத்தை அஷ்டகோணலாக்கி அங்கலாயித்தாள்.

தாய் தன் பக்கம் இருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனது வீராப்பு மேலும் அதிகரித்தது.

மாமியாரின் குணம் அறிந்ததே. பாசமாக இருப்பது போல மற்றவர்களின் முன்னே நடந்து கொள்வாள். ஆனால் தனிமையில் இருக்கும் போது அவளுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷ ஊசிகளாகவே இறங்கும். அவளைப் பொருட்படுத்தாமல் புறக்கணிக்கும் வழிகளை இவள் கண்டறிந்து வைத்திருந்தாள். இருந்தபோதிலும் இதுதான் சமயமென்று தன் மகனோடுச் சேர்ந்து கொண்டு தன்னை மட்டம் தட்டித் தூற்றும் பேச்சைப் பொறுக்க முடியவில்லை.

“ஓ.. அம்மாவும் புள்ளையும் ஒன்னாச் சேர்ந்தாச்சா. இனிமே எனக்கு எங்கே ஞாயம் கிடைக்கப் போவுது” சத்தமாக முணுமுணுத்தாள்.
“என்னடி, நியாயம் அநியாயமூன்னு கதவிடுற. நீ ஒழுங்கமா நடந்துகிட்டா நாங்க ஏன் குற சொல்றோம்”

“அப்படி ஒழுக்கம் கெட்டு என்ன பண்ணிட்டேன்”

“அதான் பாத்தேனே. ஆல்பம் பூராவும் அன்பு முத்தம் ஆசை முத்தமுன்னு உருகி உருகி எழுதியிருந்தியே. ச்சீ… வெட்கம் கெட்டவளே”

“டேய், இந்த சிறுக்கியப் பத்தி சாதாரணமா நெனச்சிடாதே. நீ இல்லாத நேரத்திலே ரூமு கதவச் சாத்திகிட்டு டேப்ரிகார்டல பாட்டப் போட்டுகிட்டு அதோட சேர்ந்துப் பாடுறதும், கை காலத் தூக்கித் தூக்கி ஆடுறதுமா என்னவெல்லாம் பண்ணுவா தெரியுமா. சொல்லவே நா கூசுது”
மாமியாக்காரி இப்படி சொன்னதும் விதிர்விதித்துப் போனாள். தனது அந்தரங்கம் இவ்வாறு பகிரங்கமாக வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதால் மிதமிஞ்சிய சினமுண்டானது.

“பாத்திங்களா உங்க அம்மா வேலய. ரூமுக்குள்ளே திருட்டுத் தனமா எட்டிப் பாத்திருக்காங்க. இத மட்டும்தா பார்த்தாங்களா இல்ல வேற எதஎதப் பார்த்தாங்களோ”

கசப்போடு அவள் சொல்ல, அவன் ரௌத்திரமானான்.

“ஏண்டி எங்க அம்மாவப் பத்தியே அசிங்கமா பேசுறியா”

அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து வேகமாக தள்ளிவிட, மேஜையின் விளிம்பில் தலைமோதி ஆ….வென்ற அலறலுடன் அவள் கீழே சாய்ந்தாள். ரத்தம் பெருக்கெடுத்து மூர்ச்சையாகிப் போனாள்.

2

நான்கு நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு அவள் அன்றுதான் தன் தாய் வீட்டுக்கு வந்திருந்தாள். தலையில் தையல்கள் போடப்பட்டிருந்தன. ரத்தம் நிறைய சேதாரமானதால் அவளது அண்ணனும் அவனுடைய நண்பர்கள் இரண்டு பேரும் ரத்தம் கொடுத்திருந்தார்கள். மிகவும் பலகீனமாக இருந்தாள். உடம்பு மட்டுமல்ல மனமும் சோர்ந்து போயிருந்தது.

மருத்துவ மனையில் இருந்தபோதும், இப்பொழுது வீடு திரும்பியிருக்கும் நிலையிலும் அவளுடைய புகுந்த வீட்டு ஜனங்கள் ஒருவரும் வந்து பார்க்கவே இல்லை. “என்ன திமிர் அவர்களுக்கு, கேட்க ஆளில்லை என்று நினைத்தார்களா, அவர்களை என்ன செய்கிறேன் பார்” என்று அண்ணன் குதித்து கொண்டிருந்தான். அப்பாதான் அவனைச் சமாதானப்படுத்தி வைத்திருந்தார்.

அவளுடைய மாமனார் நல்லவர்தான். ஆனாலும் பொண்டாட்டியின் வார்த்தைக்கு அடங்கி இருப்பவர். இவள் அடிபட்டு விழுந்தபோது அவர்தான் ஆம்லன்ஸுக்கு தகவல் கொடுத்து அனுப்பி வைத்தார். மருத்துவமனைக்கு வந்து அவளைப் பார்க்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம். மனைவி, மகனுக்கு பயந்து பேசாமலிருந்திருக்கக்கூடும்.

விஜயாவின் அப்பா முதல் திலகத்தின் தீவிர ரசிகர். ஏன் பக்தர் என்றே சொல்லலாம். திலகத்தின் தலைமையில், அவர் தாலி எடுத்து கொடுக்க, ஒரு திரைப்படத்தின் படபிடிப்பின் இடையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் அக்கல்யாணம் நடந்தது. இவளுக்கும் இவளுடைய அண்ணனுக்கும் பெயர் சூட்டியதும் முதல் திலகம்தான். இவளுடைய தந்தைக்கு ரசனையைக் கடந்து வேறொருத் திறமையும் இருந்தது. முதல் திலகத்தின் குரலையும், உடல் மொழியையும் தத்ரூபமாகப் பிரதியெடுப்பதில் வல்லவராக இருந்தார். சாப்பாட்டு ராமன் படத்தில் இடம்பெறும், “தேவகி, மலையுச்சியில ஒரு மலரைப் பார்த்தேன்” அப்படியிங்கிற வசனத்தை அவர் பேசும் போது கேட்பவர் கிரங்கிப் போவார்கள். “கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான், அவள் ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், லதா..என் காதல் தேவதை காலமெல்லாம் களித்திருக்க நான் கட்டிய வசந்த மண்டபத்தைப் பார்” இப்படியாக அவர் பேசும் வசனங்களுக்கு அரங்கம் கைதட்டி ஆர்பாட்டம் செய்யும். நூற்றுக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். தூர்தர்ஷனிலும் பங்கு பெற்றிருக்கிறார்.

ஒரு நடிகரை தன் வாழ்வின் பக்கங்களோடு இணைத்து கொண்டு ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதனுடன் தொடர்புடைய திரைப்படக் காட்சிகளை நினைவு கூர்ந்து இவ்வாறாகவே தொடர்ந்து பயணிக்கும் பக்குவப்பட்ட மனநிலையை அவள் தந்தைப் பெற்றிருந்தார். அவர் கனவுகளின் மிச்சமாகவும், அவரின் தொடர்ச்சியாகவும் அவளும் அவள் அண்ணனும் இருந்தனர்.

பள்ளிப் படிப்பை முடித்ததும் மேற்கொண்டு கல்லூரிக்குச் செல்லாமல் கிடைத்த நல்லதொரு வேலையை இறுகப்பற்றிக் கொண்டு குடும்ப பாரத்தைச் சுமக்க தந்தையோடு தோள் கொடுக்கத் துவங்கி விட்டான் அவளுடைய அண்ணன். தமிழில் வெளிவரும் அனைத்து சினிமா பத்திரிக்கைகளையும் வாங்கி வாசிப்பதில் அவன் ஆர்வம் கொண்டிருந்தான். அதிலும் குறிப்பாக முதல் திலகத்தின் தீவிர ரசிகராக இருந்த சின்ன அருணாசலம் நடத்திய ‘முதல் திலகம் ரசிகன்’ என்ற பத்திரிக்கையென்றால் அவனுக்கு உயிர். மாதந்தோறும் வந்து கொண்டிருந்த அவ்விதழில் முதல் திலகத்தின் புகைப்படங்கள், திரைப்படக் காட்சிகள், அவரது நேர்காணல்கள், அவரைப்பற்றிய மற்றவர்களின் அபிப்ராயங்கள், என ஏராளமான தகவல்கள் அடங்கியிருக்கும். பல முறை வாசித்து அவன் பாதுகாக்கும் பொக்கிஷம் அவைகள்.

அவள் இப்படியானப் பத்திரிக்கைகளின் வாயிலாகவே தன் ஒப்பற்ற ஆல்பத்தைத் தயார் செய்திருந்தாள். இதற்காக ஒரு புத்தகத்தின் இரண்டு மூன்று பிரதிகள் வாங்குவதுமுண்டு. மேலும் ஜோன் என்கிற சிநேகிதியும் அவளுக்கு இவ்விசயத்தில் பெரிதும் உதவியிருக்கிறாள். அவளுடைய மாமா பழையப் புத்தகக்கடை வைத்திருந்தார். அவரிடம் சொல்லி வைத்திருந்து இவளுக்குத் தேவையான புத்தகங்களைப் பெற்று கொடுத்திருக்கிறாள்.

ஆல்பத்துக்காக கிழித்தவைப் போக நிறைய புத்தகங்கள் இப்பொழுதும் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது அவளுக்கு பெரும் நிம்மதியை அளித்தது.

கஸ்தூரி என்ற அவளின் இன்னொரு தோழியும் மிக முக்கியமானவள். அவள் இவளைப் போலவே முதல் திலகத்தின் பரம ரசிகை. அவளும்,இவளும் முதல் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை ஒன்றாகவே படித்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்களது ஊரைச் சுற்றிலும் அக்கம் பக்கத்து கிராமங்களில் நான்கு தியேட்டர்கள் இருந்தன. இவர்கள் பெண்கள் என்பதால் தனித்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும், இரண்டு குடும்பத்தினரும் இணைந்து சினிமாவுக்குச் சென்றுவரும் வழக்கமிருந்தது. ஒரு குடும்பம் தனியேச் செல்லும் போது அதில் இன்னொருத்தி இணைந்து கொள்ள தடையேதுமில்லை. இப்படி சாதகமானச் சூழ்நிலை உண்டென்றாலும் பள்ளியைக் கட்டடித்துவிட்டு படம் பார்க்க செல்வது அவர்கள் இருவருக்கும் சுவாரசியமான அனுபவமாகும். யாருடைய தலையிடும் இல்லாமல் சுதந்திரமாக சினிமாவைக் கண்டு களிக்கும் அப்பொழுதுகள் மித மிஞ்சிய சந்தோஷத்தையளித்தன. என்ன… ஊர்க்காரர்கள் எவரேனும் பார்த்து விடுவார்களோ என்ற அச்சமட்டும் நெஞ்சை விட்டு அகலாதிருக்கும். பனிரெண்டாம் வகுப்பை முடிந்ததும் அவ்விருவருக்குமான அத்தகைய வாய்ப்பு கிடைக்காமல் போனதில் பெரும் வருத்தமுண்டு. அதன் பிறகான இந்த நான்கு வருடங்களில் அவர்கள் நிறைய முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் முதல் திலகத்தின் மீது கொண்ட அதீத விருப்பத்தினால், அவருக்குப் போட்டியாளரான வீரத்தலைவரின் திரைப்படத்தை தங்கள் வாழ்நாளில் எத்தகையச் சூழ்நிலையின் போதும் பார்க்கவேக் கூடாது என்று ஒருவருக்கொருவர் சத்தியம் செய்து கொண்டார்கள்.

3

கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்தின் மீது லேசான மழைதூறல் விழுவது போல, விஜயா தரையில் விழுந்து நெற்றியில் குருதி வழிய அலறுகிற காட்சி அவனது மணக்கண்ணில் அடிக்கடித் தோன்றி நெஞ்சில் பொங்கி தழும்பும் சீற்றத்தை ஒரளவேனும் தணிக்கப் பார்த்தது. அகம்பாவம் பிடித்தவள், சொல்பேச்சு கேளாதவள், பிடிவாதக்காரி… ஒழிந்து தொலையட்டும் என்று மனதில் சலனம் உண்டாகும் போதெல்லாம் வாய்விட்டு சத்தமாகச் சொல்லிக்கொண்டான். அவனது துவேசத்தை இன்னும் ஊதிப் பெரிது படுத்தும் விதமாக அவன் தாய் விஜயா பற்றி சாடும் வசைச் சொற்கள் அனுதினமும் அவ்வீட்டில் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அச்சொற்கள் அவனுக்குள் ஊடுருவி மெல்ல தலைதூக்கும் குற்றவுணர்ச்சியையும் கீழ்சாய்த்து விட்டு உன் செயலில் யாதொரு தவறும் இல்லை என்று பிரகடனப்படுத்த முயற்சித்தன. ஆனாலும் ஒரு நாளின் ஏதாவது ஒரு கணத்தில் தாளமுடியாத வெறுமையை அவன் உணந்தான்.

சிறிதும் எதிர்பார்த்திடாத அச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னதான தன் இல்லற வாழ்வின் பொழுதுகளை நினைவிலிருந்து முற்றிலுமாக அழித்துவிட தீர்மானித்திருந்தான். அது அவ்வளவு எளிதல்ல என்று உணர்ந்ததும் பேரச்சம் உண்டானது. கவலை தோய்ந்த முகத்தோடு பலகீனமடைந்தவனாக தனது அன்றாடச் செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போனான். எங்கும் செல்லாமல் பிரக்ஞையற்று அறைக்குள் முடங்கிக் கிடக்கும் அவனது இப்போக்கு அவன் தாய்க்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருபோதும் இவ்வாறு நடந்து கொள்ளாதவனின் இப்போதைய நிலைக்கான காரணம் மனைவியின் பிரிவே என்று அவளுக்குத் தெளிவாகவே தெரிந்தது. இதுவே அவள் கோபத்தை பன்மடங்காக்கியது. நீலமேகத்தின் அறை கதவைச் சத்தமாக திறந்து உள்ளே போனாள்.

“ஏண்டா நேத்து வந்தவளுக்காக இப்படி உருகிக்கிடக்கிறது பைத்தியகாரத்தனமா ஒனக்கு தோணலையா”
ஆத்திரத்தோடு நிற்பவளை அவன் நிதானமாக ஏறிட்டான். கருணையற்ற அவள் முகத்தை மேலும் காணச்சகியாதவனாகத் தலைகவிழ்ந்தான்.
அவள் அவனருகே அமர்ந்து அவன் தலைகேசத்தை கோதிவிட்டவாறு சொன்னாள்.

“ராசா மனச அலையவிடாதே. இவ போனா போறா. ஒலகத்திலே வேற பொண்ணே இல்லையா என்ன. நா ஒனக்கு செவப்பா தக்காளிப் பளமாட்டம் ஒரு பொண்ணப் பாத்து கெட்டி வைக்கிறேன்” அவள் அப்படி சொன்னதும் சடாரென எழுந்து நின்றான்.

“பேசாம இருக்க மாட்டியா நீ, ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து அடிச்சு அனுப்பியாச்சு, இப்ப இன்னொருத்தியைத் தேடுறியா… ச்சீ எந்திரிச்சு வெளியே போ”

கொந்தளிப்போடு வந்து விழுந்த வார்த்தைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் எழுந்து அவனை முறைத்தவாறு வெளியேறினாள்.

அக்கா, தங்கை என அவன் பெண்களோடு பிறந்தவன் தான். பெண்கள் இருக்கும் வீட்டில் மென்மையும், கனிவும் நிறைந்திருக்கும் (அவன் அம்மா இதற்கு விதிவிலக்கு). சகோதரிகள் இருவரும் அம்மாவைப் போல் அல்லாமல் அப்பாவைக் கொண்டிருந்ததால் அவன் மீது பிரியமாகவே இருந்தார்கள். அவர்களின் திருமணத்திற்குப் பிறகான வெற்றிடத்தைத் தன்னுடைய சிறந்த நடத்தையால் விஜயா நிரப்பியிருந்தாள் என்பதில் இம்மியளவும் சந்தேகத்துக்கு இடமில்லை. மல்லிகைப் பூவின் மணமும், கண்ணாடி வளையல்களின் உரசலோசையும், கால் கொலுசின் ரீங்காரமுமாக நாள் முழுவதும் அவளது நடமாட்டம் அவ்வீட்டை ஆக்கிரமித்திருந்தது. “சரிங்க அத்தை… சரிங்க அத்தை” என்ற சொற்களை மீறி அவளுடைய பேச்சொலியை அவன் கேட்டதே இல்லை. இரவின் தனிமையில் கூட அவள் அதிகம் பேசியதில்லை. அவளுடைய செயல் எதுவும் இதுவரை அவனை சங்கடப்படுத்தியதற்கான சான்றுமில்லை.

அவளின் அணுக்கமான பணிவிடைகளால் அவன் தன்னை சுகவாசியாக உணர்ந்திருந்தான். காலையில் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வீட்டை விட்டு வயற்காட்டுக்கு புறப்படுகையில் புத்துணர்ச்சி பெற்றவனாகவே இருப்பான். எத்தகைய கடுமையானச் சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிக்கும் ஆற்றல் தனக்கு ஏற்பட்டு இருப்பதாக நம்பினான். இப்படியாக அவள் வரவுக்குப் பிறகு தன் வாழ்க்கை ஒளி மிகுந்ததாக ஆகியிருக்கிறது என்று மகிழ்ந்திருக்கும் நிலையில் திடுமென நிகழ்ந்துவிட்ட அந்த துர்சம்பவத்தை அவனால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. அவள் தன்னையோ தன் செயலையோ குறைகூறி இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் தன் உயிரே அவரென்று எண்ணியிருக்கும் வீரத்தலைவரைப் பற்றி எவ்வளவு கேவலமாக பேசி விட்டாள். இப்படி நடந்து கொள்ள இதுவரை யாரும் துணிந்ததே இல்லை. கசப்பை விழுங்க முடியாமல் பதற்றம் அதிகரித்தது.

அவன் ஆறாம் வகுப்பு படிக்கையில் அவர்கள் வீட்டுக்கு வந்திருந்த மாமா முறையுடைய தூரத்து சொந்தக்காரர் ஒருவர் அவனை அவ்வூரிலுள்ள டூரிங் தியேட்டருக்கு அழைத்து சென்றார். விக்ரமாதித்த மகாராஜா என்ற வீரத்தலைவரின் படமது. அப்படம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மெய் மறக்க வைத்தது. பலவித மாறுவேடங்களில் வந்து சாகசங்கள் செய்வதும், மின்னலென வாளைச் சுழற்றி சண்டைப் போடுவதும், கதாநாயகியுடன் காதல் புரிவதும் அவனை வெகுவாக கவர்ந்தன. அன்றிலிருந்து வீரத்தலைவரை அவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. பிறகு, அவருடைய திரைப்படம் வருகிறபோது தன்னை அழைத்துப் போகுமாறு அவன் தன் வீட்டாரை நச்சரிக்க ஆரம்பித்தான். சில நேரங்களில் அழைத்துப் போனார்கள். அதைவிட, சின்னப் பயலுக்குச் சினிமா என்ன வேண்டிக்கிடக்கு என்று கண்டிப்புடன் கூட்டிப்போகாத நாட்களே அதிகம். இதற்காக வருத்தமுற்ற அவன், தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கான உபாயத்தை வெகு விரைவிலே கண்டறிந்து கொண்டான்.

அவனது வீட்டு வளாகத்துக்குள்ளேயே அவன் தாத்தாவின் வசிப்பிடம் இருந்தது. தோட்டத்தின் ஒரு பகுதியில் காணப்பட்ட அந்த இல்லத்துக்கு அவன் அதிகம் சென்றதில்லை. பாசத்தோடு அவர் அவனை நெருங்கும் போதெல்லாம் அவன் பயத்துடன் விலகிச் செல்பவனாகவே இருந்தான். தாத்தா என்றாலே அச்சமூட்டும் அவரது தோற்றம் அவனை கதிகலங்க வைக்கும். இடதுபுறத்தில் நீளமானத் தழும்புடன் கூடிய அகோரமான அவர் முகத்தைக் கண்டு நிறைய முறை அவன் அலறித் துடித்திருக்கிறான்.

தாத்தா அவரது சிறுவயதில் யாருக்கும் அடங்காதச் சண்டியராக இருந்திருக்கிறார். ஊரே அவரைக் கண்டு அஞ்சி நடுங்குமாம். ஒருமுறை சந்தையில் நடந்த தகராறில் எதிராளி அவரது முகத்தில் கத்தியை வைத்து விட்டான். கோபத்தில் இவர் அவனது ஒரு கையை எடுத்து விட்டார். இதனால் சில ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட தாத்தா பின்னாளில் மனம் திருந்தி ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டு எளிய வசதியோடு இந்த சிறிய இல்லத்தில் வசித்து வருகிறார்.

“தாத்தாவிடம் கொடுத்து வா” என்று அவனது அம்மா ஏதாவது பலகாரங்களைத் தந்துவிடும் போது அவன் பயந்தவாறே அவருடைய இருப்பிடத்துக்குச் செல்வான். அவன் போகும் பெரும்பான்மையான வேளைகளில் அவர் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு தலைதூக்கி விட்டத்தையோ, சுவரில் மாட்டியிருக்கும் தினசரி காலண்டரையோ, மேஜை மின்விசிறியையோ வெறித்து பார்த்தவாறு கையில் வைத்திருக்கும் கண்ணாடிக் குப்பியிலுள்ள சாராயத்தை தேநீர் அருந்தும் நிதானத்தோடு மிடறு மிடறாகக் குடித்து கொண்டிருப்பார். அச்சாராய வாடை அவனுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதனால் அவன் மேலும் அச்சம் கொண்டு வாசல் படியைக் கடந்து உள்ளே நுழையாமல் அங்கேயே நின்ற வண்ணம் தாத்தா என கம்மியக் குரலில் விளிப்பான். தலை நிமிர்ந்து பார்ப்பவர் கைநீட்டி அவனை உள்ளே வருமாறு அழைப்பார். அவன் தயங்கி தயங்கி செல்லும்போது பலகாரத்தட்டை வாங்கி வைத்துக் கொண்டு அவனை அனுப்பிவிடாமல் இழுத்து தன்னருகே உட்கார வைத்துக் கொள்வார். அங்கிருந்து உடனே வெளியேறி வந்து விட வேண்டும் என்றே அவன் துடியாய் துடிப்பான். அவனது அவஸ்தையை உணர்ந்து கொள்ளாமல் இப்ப என்ன படிக்கிறாய் என்று ஒவ்வொரு முறையும் அவன் அங்கு செல்லும்போது தவறாமல் கேட்கும் அதே கேள்வியை அப்பொழுதுதான் முதல் முதலாக கேட்பதுப் போலவே வினவுவார். அவன் தான் படிக்கும் வகுப்பைச் சொல்வான். அதன் பிறகு ஆலோசனைச் சொல்லும் விதமாய், “எதற்கும் பயப்படக்கூடாது. தாத்தாவைப் போல எப்பொழுதும் தைரியமாக இருக்கணும்” என்பார். போதை ஏற ஏற அவருடைய சொற்கள் தொடர்பின்றித் துண்டு துண்டாகவும், உளறலாகவும் வந்து விழும். நிதானம் இழந்து அவர் படுக்கையில் விழும் தருணத்துக்காகவே காத்திருப்பவன் அவ்வாறு நிகழ்ந்ததும் அவரிடமிருந்து தன் கையை உதறிக் கொண்டு எழுந்தோடி வந்து விடுவான். பீதியும் அருவருப்புமாக தாத்தாவை உணர்ந்திருந்தவன் ஒரு கட்டத்தில் அவரை அடிக்கடிச் சென்று சந்திக்கிறவனாகவும், அவருடன் நீண்ட நேரம் உரையாடுகிறவனாகவும் ஆகி இருந்தான். இந்த மாற்றம் விட்டாருக்கு வியப்பைத் தந்தது. “தாத்தா அப்படி என்னடா சொக்குப்பொடி போட்டார்” என்றாள் அம்மா. “நிறைய கதைகள் சொல்கிறார். கேட்டுக் கொண்டே இருக்க ஆசையாய் இருக்கிறது” என்று துணிந்து பொய்யுரைத்தான்.

பகலிலே மட்டும் சென்று கொண்டிருந்தவன் இரவிலும் அவரைக் காணச் சென்றதோடு தாத்தாவுடன் படுத்துக் கொள்கிறேன் என அடிக்கடி அங்கு தங்கவும் செய்தான். மது அருந்தியதன் காரணமாக தாத்தா இரவில் சீக்கிரமாகவே உறங்கி விடுகிறவராக இருந்தார். அவர் கட்டிலிலும் அவன் தரையிலுமாக படுத்துக் கொள்வார்கள். தாத்தா தூங்கியதும் ஒன்பதரை மணிக்குப் பிறகு, ஒரு ஆள் படுத்திருப்பதைப் போல் பாயில் தலையணைகளை வைத்து மேலே போர்வையைப் போர்த்திவிட்டு எச்சரிக்கையுடன் அவன் பின் வாசல் வழியாக வெளியேறி விடுவான். இருளான அரவமற்ற அத்தெருவைக் கடந்து போவதற்கு அச்சமாக இருந்தாலும் சினிமாவின் மோகம் அவனை தைரியமூட்டி வழி நடத்தியது. உள்ளூர் டென்ட் கொட்டகையில் இரண்டாம் ஆட்டம் பார்ப்பது அவனுக்கு திகிலான அனுபவமாக இருந்தது.

திரைப்படத்துக்கானக் காசை அவன் தாத்தாவின் சேமிப்பிலிருந்தே கைப்பற்றிக் கொண்டான். பெஞ்சுக்கும் தரை டிக்கட்டுக்கும் இடையேயானக் கட்டைச் சுவருக்கு கீழே மறைவாக உட்கார்ந்து கொள்வது அவனுக்கு பாதுகாப்பையளித்தது. வீரத்தலைவரின் அதிகத் திரைப்படங்களைக் காண வேண்டும் என்பதால் அருகாமையிலுள்ள பல ஊர்களுக்கும் அவன் சென்று வந்தான். இதற்காக சில நண்பர்களையும் தன்னோடுச் சேர்த்து கொண்டான். என்ன.. அவர்களுக்கான டிக்கெட் செலவையும் இவனை ஏற்க வேண்டியிருந்தது. அதைப் பற்றி அவன் கவலை கொள்ளவுமில்லை. நண்பர்களின் சைக்கிளில் தொற்றிக்கொண்டு வீரத் தலைவரின் திரைப்படம் எங்கெல்லாம் ஓடுகிறதோ அங்கெல்லாம் பயணித்து வந்தான். பார்த்த படங்களையே மீண்டும் மீண்டும் பார்க்கவும் செய்தான்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் மீசை முளைத்து வாலிபனாகி விட்டதால் அவனைக் கண்டிப்பதை விட்டார்கள் நிறுத்தி கொண்டார்கள். இது பெரும் மகிழ்ச்சியையும் விடுதலையுணர்வையும் கொடுத்தது.
அவன் ஊரில் பத்தாவது வரையிலுமே இருந்ததால் மேலே படிக்க ஏழு மைல் கடந்து பூவாளூருக்கு செல்ல வேண்டியிருந்தது. சினிமாவுக்காக ஊர் ஊராக சுற்றியவனுக்கு பதினோராவது வகுப்பு படிப்பதில் சிறிதும் நாட்டமில்லை. வேலைக்குப் போக வேண்டிய அவசியமின்றி ஏராளமான நிலமும், ஐஸ்வரியமும் நிறைந்திருந்ததால் அவன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமூச்சாக விவசாயத்தில் இறங்கிவிட்டான். சின்ன வயதில் இருந்து வயல்காடுகளுக்கு சென்று கொண்டிருந்ததால் அவ்வேலைகள் எளிதாக இருந்ததோடு மனதுக்கும் நிறைவளித்தன.

அவன் தன்னைப் போன்ற வீரத்தலைவரின் தீவிர ரசிகர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டான். அவர்களுடன் கலந்துரையாடி அவ்வூரில் வீரத்தலைவரின் ரசிகர் மன்றம் ஒன்றை நிறுவினான். சூடோடு சூடாக அவரது உரிமைக்குயில் திரைப்படத்தை அவ்வூரின் ஸ்ரீஅம்பாள் தியேட்டருக்கு கொண்டு வரச் செய்தான். அந்நாள் மிக பொன்னானது. வீரத்தலைவரின் 40 அடி உயர கட்டவுட் வைக்கப்பட்டு அதற்கு பிரம்மாண்டமான மாலை அணிவிக்கப்பட்டது. தியேட்டரைச் சுற்றிலும் வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டப்பட்டன. சினிமா பார்க்க வரும் அனைவருக்கும் லட்டு கொடுக்கப்பட்டது. படத்தில் தலைவர் தோன்றியதும் சூடம் ஏற்றி வணங்கினார்கள். திரையைச் சுற்றிலும் சீரியல் லைட் போடப்பட்டு ஜெகஜோதியாக ஜொலித்தது. தங்கள் வாழ்நாளில் இப்படியொரு கொண்டாட்டத்தைக் கண்டதில்லை என்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்றுவரையிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒருமுறை பிரச்சாரத்துக்காக வீரத்தலைவர் அவ்வூரின் வழியே சென்றபோது அங்கு சிறிது நேரம் இருந்து உரையாற்றினார். அப்பொழுது அவர் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் அவருக்கு இவனை அறிமுகப்படுத்தி இவனது தீவிர நடவடிக்கையை எடுத்துரைத்தார். தலைவர் உள்ளம் மகிழ்ந்து இவன் தோள் மீது கைபோட்டு இயல்பாக உரையாட அத்தருணம் புகைப்படமாக எடுக்கப்பட்டது. அந்த அரிய அற்புத நிழல்படம் பெரிது படுத்தப்பட்டு இவனது வீட்டின் வரவேற்பறையில் இன்றளவும் காட்சியளிக்கிறது.

4

மதியம் வீட்டுக்குச் சாப்பிட வருகிறபோதுதான் லால்குடி பூங்காவனம் திரையரங்கில் கூண்டு புறா திரைப்படம் போட்டிருக்கும் போஸ்டரைப் பார்த்தான். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுவெளியீடாக இப்படம் வருகிறது. பெரும்பாலும் வீரத்தலைவரின் அனைத்துப் படங்களையும் கண்டிருந்த அவன் இப்படத்தை மட்டும் இதுவரை பார்த்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு உரக்கம்பனி விஷயமாக தஞ்சாவூர் சென்றிருந்த வேளையில் கமலா தியேட்டரில் இப்படம் போடப்பட்டிருந்ததைப் பார்த்தான். போன காரியம் சீக்கிரமாக முடிந்து விட்டபோதிலும் படம் பார்ப்பதற்கான அவகாசம் தாராளமாக இருந்த நிலையில் தியேட்டருக்கு வெளியே நெடும் பொழுது அமைதியாக நின்றிருந்தான். ஜனங்கள் வரத்துவங்கியிருந்தார்கள். டிக்கெட் கொடுக்கப்பட்டது. ஆட்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்று டிக்கட் கவுண்டர் மூடும் வரையிலும் அவன் அங்கேயே நின்றிருந்தான். மனதுக்குள் போகலாமா வேண்டாமா என்ற சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. முதல் திலகத்தின் படத்தைப் பார்க்கவே கூடாது என்ற வைராக்கியத்தில் இருந்தவனுக்கு இது சோதனையான கட்டம் தான். உடன் அவனுடைய தலைவரும் நடித்திருந்தாலும் இப்படத்தைப் பற்றி வெளியில் கேள்விப்பட்டது நினைவுக்கு வந்தது. ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் வருகிற வீரத்தலைவர் பின் சிறைக்குச் சென்று விடுவாராம். படத்தின் இறுதியில்தான் மறுபடியும் தோன்றுவாராம். இடையில் முதல் திலகத்தின் ஆளுமையே படம் முழுவதும் என்பதால் எதற்காக இந்த விஷப்பரிட்சை என்று அவன் அன்றைக்கு அப்படத்தை பார்க்காமலே திரும்பி விட்டான். மறுபடியும் இப்பொழுதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அன்றைக்கு இருந்ததைவிட இன்று மனதளவில் ஏற்பட்டிருந்த மாற்றம் அவனை படம் காண தியேட்டருக்கு உந்தி தள்ளியது.

அந்திமப் பொழுது. தனது டிவிஎஸ் 50 ஐ பாஸ் வைத்துவிட்டு திரையரங்க முகப்பிலிருந்தப் போஸ்டர்களைக் கவனிக்கலானான். வீரத்தலைவரும் முதல் திலகமும் தோளில் கைப்போட்டபடி சிரித்தவாறிருந்தார்கள். அந்தப் பதாகைக்கு தியேட்டர் சார்பாக சிறிய மாலையேப் போடப்பட்டிருந்தது. ஆனால் தியேட்டரின் வலது பக்கமுள்ள வீரத்தலைவரின் போஸ்டருக்கும் இடது பக்கமுள்ள முதல் திலகத்தின் போஸ்டருக்கும் உயரமும் அடர்த்தியுமான பெரிய பெரிய மலர் மாலைகள் அவரவர் ரசிகர்களின் மூலமாகப் போடப்பட்டிருந்தன. இரண்டின் முன்பாகவும் அந்தந்த ரசிகர்கள் ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் குழுமியிருந்தார்கள். போட்டியின் காரணமாக சண்டைகள் மூளும் என்ற நினைப்போடு சில போலீஸ்காரர்களும் வரவழைக்கப் பட்டிருந்தார்கள். மேலும் எப்பொழுதும் இல்லாத வகையில் தியேட்டர் ஊழியர்கள் பலரும் கூட்டத்தோடு கலந்து எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக எல்லோரையும் பார்வையாலே மேய்ந்து கொண்டிருந்தார்கள்.

வீரத்தலைவரின் ரசிகர் கூட்டத்தில் சுற்று வட்டாரத்திலிருக்கிற நிறைய பேர் இருந்தார்கள். அவர்களில் பலரை இவனுக்கு முன்பே நன்கு தெரியும். இம்மாதிரியானச் சூழ்நிலையில் அவ்வகையானோரிடம் சென்று களிப்புடன் உரையாடுவது அவனுக்கு விருப்பமானதாகும். ஆனால் இப்பொழுதோ கேளிக்கைக்கும், ஆர்ப்பாட்டத்துக்கும் நெஞ்சில் இடமேதும் இல்லாதச் சூழலில் வெறுமனே அவர்களை வேடிக்கைப் பார்த்தாவாறிருந்தான். நாழியாகிவிட்டது, டிக்கெட் எடுத்து உள்ளே போகலாம் என அவன் அங்கிருந்து நகர முற்படுகையில் அவன் பெயரைச் சொல்லி அழைத்தவாறே சீனிவாசன் வந்தான். அவன் முன்னால் நண்பனும் இந்நாள் எதிரியுமாவான். அருகில் வந்து இவனது கைகளை வாஞ்சையுடன் பற்றிக் கொண்டான். “உன்னோட பேசி நீண்ட நாளாச்சு நண்பா” என்றான். இவன் வறட்சியான புன்னகையோடு பதிலளித்தான். “நாட்களல்ல மூன்று வருடங்களாகிறது” அவன் கலக்கமடைந்து விட்டான் என்பதை சட்டென்று சோகத்தால் சூழப்பட்ட அவன் முகம் வெளிகாட்டியது. “உண்மைதான் நண்பா. சின்ன வயசிலிருந்து இணைப்பிரியாம வாழ்ந்திட்டு ஒரு அற்ப விஷயத்துக்காக மல்லுக்கட்டினத நினைச்சா அபத்தமா இருக்கு. நா அன்னைக்கு அப்படி பேசியிருக்கக்கூடாது. உன் கோபத்தைத் தூண்டி மூர்க்கமா நடந்துகிட்டது பைத்தியகாரத்தனம். என்னைய மன்னிச்சிடுடா. பழசயெல்லாம் மறந்திடுவோம். இப்ப விரிவா பேச நேரமில்ல. கூட்டாளிக காத்திருக்காங்க. நான் நாளைக்கு வந்து உன்னைப் பார்க்கிறேன்” அவன் அவசரமாகச் சொல்லிவிட்டு முதல் திலகத்தின் ரசிகர்கள் திரண்டிருக்கும் இடம் நோக்கி போய்விட்டான்.

இவன் டிக்கெட் எடுத்து உள்ளே சென்று சோபா வரிசையில் உட்கார்ந்தான். படம் இன்னும் துவங்கி இருக்க வில்லை. சினிவாசன் மறுபடியும் மறுபடியும் மனசுக்குள் வந்தான். மற்ற கூட்டாளிகள் போலல்ல அவன். தனக்கு நினைவுத் தெரிந்த நாளிலிருந்து அவனோடு பழக்கம். அப்படிப்பட்ட ஆழமான நட்பில் பிளவுண்ட நாளினை எளிதில் மறந்துவிட முடியுமா என்ன. ஐந்து வருடங்களுக்கு முன்பான அன்றைய நாளுக்கு மனம் விரைந்து சென்றது. முதல் திலகத்தின் எங்கிருந்தோ வருகிறாள் திரைப்படத்தை அவன் பார்த்திடச் சென்றிருந்தான் என்பதை அறிந்ததும் இவன் கடும் கோபம் கொண்டான். கூடவே இருந்து கொண்டு இப்படி குள்ளநரித்தனம் பண்ணுகிறானே என்று ஆவேசம் உண்டானது. வேறு வழியில்லாமல் தந்தையும் தாயுடனும் செல்ல வேண்டியதாயிற்று என்று அவன் எவ்வளவோ எடுத்துரைத்தும் இவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. வசை சொற்களால் மனதை புண்ணாக்கும் வகையில் ஆக்ரோஷமாகக் கத்தித் தீர்த்தான். ஒரு நிலையில் இதனை மேலும் பொறுத்துகொள்ள மாட்டாமல் சீனி கொதிப்படைந்தான்.

“எனக்கு வீரத்தலைவரும் வேண்டாம். அவரோட படங்களும் வேண்டாம். அவரின் அடிமைகளோட இனியும் நட்பும் வேண்டாம். முதல் திலகத்தின் படம் எவ்வளவு உற்சாகத்தைக் கொடுக்கிறது தெரியுமா. இப்படியான மகிழ்ச்சியை உன்னோட தலைவரின் படம் ஒரு நாளும் தரவே முடியாது. அவர கட்டிக்கிட்டு நீயே அழு”

“என்னடா சொல்றே. அந்த மனுசன பூஜிக்கவே ஆரம்பிச்சிட்டியா. இதுதானா உன்னோட மனவுறுதி”

“நீ எது வேணா சொல்லிக்க. இனிமே திலகத்த ஆராதிக்கிறது மட்டுமல்லாம ஊருக்கே இதைச் சொல்லி எனக்கான கூட்டத்தை அதிகரிக்க போறேன். இது மட்டும் இல்லாம உம் தலைவர அசிங்கப்படுத்தி உங்கள தலைக்குனிய வைக்கப் போறேன்”

அவனது பேச்சு வெறியேற்றியது. ஆத்திரத்தோடு அவனை ஓங்கியடித்தான். இவன் அடிப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காததால் அவன் நிலைகுலைந்து போனான். மறுகணம் கண்கள் சிவப்பேற அவன் இவனை அடித்தான். எல்லோரும் வந்து போகிற அங்காடித் தெருவில் இருவரும் கட்டிப்பிடித்து உருண்டபடி சண்டை போட்டார்கள்.

வேடிக்கைப் பார்ப்பவர்கள் பார்த்துக்கொண்டிருக்க சிலர் ஓடிவந்து அவர்களைப் பிரித்து விட்டார்கள். அவனைக் கொன்று விட வேண்டும் என்று இவனுக்கு கடும்கோபம் உண்டானது. இதற்காக மடத்தனமாக சில திட்டங்களையும் இவன் நினைத்திருந்தான். மறைத்து வைத்திருக்கும் கத்தியோடுத் திரிந்தான். எதிர்எதிரே சந்தித்தபோது கடைசி நொடியில் மனம் பின்வாங்கியது. அது கோழைத்தனமல்ல வேறு ஏதோவொன்று என்றளவில் உணரமுடிந்தது. பிறகு பார்க்கும் வேளைகளில் இருவரும் முகம் திருப்பிச் செல்வதே வழக்கமானது.

அவன் இப்பொழுது வந்து பேசியதும் தான் ஏன் கோபப்படவில்லை என்று அதிசயித்தான். அத்தோடு இயல்பாக பேசவும் தன்னால் எப்படி முடிந்தது என்று நினைத்தான்.

நெஞ்சுக்குள் குறுகுறுவென்று ஏதோ வருடுவது போல் உணர்ச்சியலை எழும்ப உடன் அமர்ந்திருப்பவர்களின் பக்கம் பார்வையை நகர்த்தினான்.
அவனது இருக்கைக்கு ஏழெட்டு இருக்கைகள் கடந்து விஜயா இருப்பதை பார்த்தான். அருகில் அவள் அண்ணன் தெரிந்தான். இவன் நன்கு சாய்ந்தமர்ந்து தன்னை மறைத்து கொள்ள எத்தனித்தான். ஆனாலும் அவள் தன்னைக் கண்டுகொண்டாள் என அறியமுடிந்தது. விளக்கு அணைந்து இருள் பரவியதும் புரொஜெக்டர் ரூமிலிருந்து ஒளிபாய்ந்து வெண்திரையில் விழ படம் துவங்கியது. திரைக்காட்சியில் மனம் லயிக்கவில்லை. நெஞ்சம் தடதடத்துக் கொண்டிருக்க அமைதி இழந்தவனாக எழுந்து வெளியே வந்து தேநீர் அருந்தினான். சிறுநீர் கழித்து விட்டு எந்தவித அவசரமுமின்றி நடந்து சென்று இருக்கையில் உட்கார்ந்தான். இடைவெளிக்காக மனம் ஏங்கிக் கொண்டிருந்தது. இடைவேளை விட்டபோது அண்ணனும் தங்கையுமாக எழுந்து போனார்கள். சிறிது நேரத்தில் அவள் வந்து உட்கார்ந்துவிட அவளது அண்ணன் தின்பண்டங்கள் வாங்கி வந்தான். சாதாரணமாகத் திரும்புவது போல் திரும்பி அவள் தன்னைப் பார்க்கிற மாதிரி தெரிந்தது. ஆனாலும் அது உறுதிதானா என்ற சந்தேகமும் உண்டானது. அவளுக்கும் தனக்குமான இந்த இடைவெளி எப்பொழுதும் நிரந்தரமாகி விடுமோ என அச்சமுற்றான்.

படம் முடிந்து வெளியே வருகையில் சற்றுத் தொலைவில் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். இடையில் நடந்து கொண்டிருந்த இரண்டு மனிதர்கள் சத்தமாக படத்தை விமர்சனம் செய்தவாறு சென்றது தெளிவாக காதில் விழுந்தது.

“படத்தோட இயக்குனருக்கு அறிவே இல்லப்பா. ரெண்டு பேருக்கும் இது ஆரம்பகால படமா இருந்தாலும் மக்கள் மத்தியில் அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துச்சு. அத மனசில வச்சுக்கிட்டு ஒரு நல்ல கதையா தேடியிருக்க வேணாமா. கதையிலும் திரைக்கதையிலும் அக்கற எடுத்துகிட்டுப் பண்ணியிருந்தா இந்த படம் சரித்திரத்தில மிக முக்கியமான படமா அமைஞ்சிருக்கும். மனுஷன் கோட்டை விட்டுட்டான்” உரையாடியப்படியே அவர்கள் சென்று மறைந்து போனார்கள். அவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்படுகையில் கவனித்தான். முன்னே விரையும் அவளது அண்ணன் வாகனத்தில் இருந்த அவள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் திரும்பி இவனைப் பார்த்தாள். மெல்லியச் சிரிப்பொன்றை உதிர்ப்பதுப் போலவும் தெரிந்தது. ஜிவ்வென்று இதயத்தில் உற்சாகம் பீறிட்டது.

5

தொலைக்காட்சியில் சனிக்கிழமை திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. வஹிதா ரஹ்மான் ஆடுகளைஓட்டியபடி பாடிக்கொண்டிருந்தார். அந்நேரம் கதவு தட்டப்பட விஜயாவின் அப்பா எழுந்து சென்று திறந்தார். வெளியே இவன் நின்றிருப்பதைக் கண்டதும் ஒரு கணம் தாமதித்து பின் முகமலர்ச்சியோடு “வாங்க மாப்பிள்ளை” என்றார். விஜயா நிமிர்ந்து பார்த்தாள். இவன் நிச்சயம் வருவான் என்று அவளுக்கு நன்கு தெரிந்திருந்த போதிலும் பரபரப்பு காட்டாமலும் அதேநேரம் வரவேற்கும் சம்பிரதாய முறையில் எதுவும் கூறாமலும் வெறுமனே எழுந்து நின்று பார்த்தாள். யார் வந்திருக்கிறார்கள் என்ற நினைப்போடு தன்னறையில் இருந்து வெளியே வந்த அவளுடைய அண்ணன் இவனைக் கண்டதும் முகம் இறுகி கடுகடுப்பானான். கையை நீட்டி கோபமாக எதையோச் சொல்ல முற்பட அவனப்பா கண்களாலையே அமைதியாக இரு என்று சமிக்ஞைக் காட்ட வெறுப்புற்றவனாக விருட்டென்று அறைக்குள் புகுந்து கொண்டான்.

இவன் கையில் வைத்திருந்த அட்டைப்பெட்டியை டீப்பாயின் மீது வைத்து விட்டு அமர்ந்தான். தொலைக்காட்சியின் சத்தத்தை முற்றிலுமாக குறைத்து விட்டு நாற்காலியில் சௌகரியமாகச் சாய்ந்துகொண்டாள் விஜயா.

இவன் அட்டைப்பெட்டியைப் பிரித்து அதனுள்ளிருந்து விலையுயர்ந்த வெளிநாட்டு டேப் ரெக்கார்டரை எடுத்து வெளியே வைத்தான். மேலும் பெட்டியின் உள்ளிருந்து கை நிறைய கேசட்டுகளை அள்ளியெடுத்து வைத்தான்.

சிவந்த பூமி, வைர சுரங்கம், அன்னை வீடு, இவனே மனிதன், கடவுள் மகன், ஒன்பது ராத்திரி, தவப்புத்திரன் என்று நிறைய படங்களின் பாடல்களும் வசனங்களும் அடங்கிய தொகுப்புகளாக அவைகள் இருந்தன. தன் கண்களால் நம்ப முடியாத விநோதம் அங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதை அவள் ஆச்சரியத்துடன் கவனித்தாள். அந்தக் கேசட்டுகளை அவள் பார்க்க வேண்டும் என்பதற்காக அதன் முகப்புத் தெரிகிறது மாதிரி அவன் எடுத்து வைக்கிறபோது அதில் அசூயை இல்லாதிருப்பதைக் கவனித்தாள்.

“நண்பனொருத்தன் வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்தான். உனக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டு வந்தேன்” என்று அவள் கேட்காமலே தான் எதற்காக வந்தேனென்று அவன் சொல்லி முடித்தான்.

அறைக்குள் இருந்தாலும் கூடத்தில் என்ன நடக்கிறது என்பதைக் காதுகொடுத்து கேட்டுக்கொண்டிருந்த அவளண்ணன் இனியும் பொறுக்க முடியாது என்பதுபோல் சினத்துடன் வெளியே வந்தான்.

“டேய் ஒனக்கு மானம் ரோஷமெல்லாம் கிடையாதா. அவள அடிச்சு விரட்டிட்டு இப்ப பள்ளக்காட்டிட்டு வந்து நிக்கிறியே. உன்னுடைய நாடகத்தை நம்ப நாங்க யாரும் தயாரா இல்லை. உம் மூஞ்சியப் பார்க்கவே வெறுப்பா இருக்கு. நீயெல்லாம் ஒரு மனுஷனா. வெளியே போடா”

அப்பா தடுத்தும் கேளாமல் இவன் சட்டைக் காலரைப் பற்றி வெளியேத் தள்ள முயன்றான். விஜயா இடையில் புகுந்து அண்ணனிடமிருந்தை அவனை விலக்கி விட்டாள். பின் தீர்க்கமாக இவனிடம் சொன்னாள்.
“நீங்க கொண்டு வந்ததையெல்லாம் எடுத்துக்கிட்டு உடனே புறப்படுங்க” இதைக்கேட்டு இவன் தளர்ந்து போனான். கண்ணீர் முட்டியது. பரிதாபத்தோடு அவளை ஏறிட்டுப் பார்த்தான். அவள் தன் பேச்சின் தொடர்ச்சியாக “நானும் புடவை மாத்திட்டு வரேன்” என்றாள்.
அவள் என்ன சொல்கிறாள் என்று முதலில் விளங்காமல் பின் புரிந்து கொண்டதும் சந்தோசத்தில் முகம் பிரகாசமடைந்தது.

அவனது வண்டியின் பின்புறம் ஏறிக்கொள்ளும் நேரத்தில் ரகசிய தொனியில் கேட்டாள். “மாரிஸ் தியேட்டர்ல உலகம் சுற்றும் நாயகன் போட்டிருக்காங்கலாமே நாளைக்கு மேட்னி போகலாமா”

***

இதயா ஏசுராஜ் – திருச்சியில் வசித்து வருகிறார். “வருகைக்கான ஆயத்தங்கள்”, “இருளின் நிழல்”, “பயணிகள் உலவும் காகிதக் காடு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். மேலும் இவர் ‘இல்லம் சொர்க்கமாக’, ‘மனிதனின் தேடலும், மகத்தான வெற்றியும்’, ‘உலக மாமேதை அண்ணல் அம்பேத்கர்’, ‘மேஜிக் செய்வது எப்படி?’, ‘நிகரில்லா தலைவன் சே குவேரா’, ‘சர்வாதிகாரி ஹிட்லர்’, ‘அறிஞர் அண்ணா, கடையேழு வள்ளல்கள்’, ‘தமிழ் சினிமாவின் வரலாறு’என 12 நூல்கள் எழுதியுள்ளார்

ஊறும் மிளகாய்

0

க.வசந்த்பிரபு

ப்போதும் இப்படி நேரத்திற்கு ஆபிஸ் வரவேண்டிய வேலை இல்லை தான் என்றாலும், எப்போதாவது இப்படி காலை சாப்பாட்டுக்கு முன்பு வரவேண்டியிருக்கும். இன்றும் அப்பிடித்தான். என் சீனியர் ஸ்டாப் ஆபிஸ் வேலையாக சென்னை செல்கிறார். அவருக்கு தேவையான பைல் ஒன்று என்னிடம் இருந்ததால் இன்று நேரத்திற்கு ஆபிஸ் வரவேண்டியதாகிவிட்டது. இனி வீட்டிற்கு போய்விட்டு மாலை வந்தால் போதும் என்ற எண்ணத்தினோடே பார்க்கிங்-கில் இருந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். வழியில் சிகரெட் பாக்கெட் வாங்கிக் கொண்டு, ஒரு சிகரெட்டை தனியாக வாங்கி, பற்ற வைத்து இழுத்த போது, பசிப்பதை போன்ற ஒரு உணர்வைத் தந்தது. அடுத்தடுத்த இழுவைகளில் புரிந்துவிட்டது. பக்கத்திலிருந்த சிறிய ஓட்டல் ஒன்றிலிருந்து வந்த மணமும், மணி 10 ஆகியிருந்ததும் கூட பசியை எனக்கு உணர்த்தியிருக்கலாம். உடனே வீட்டிற்கு அழைத்து வெளியிலேயே சாப்பிட்டு விட்டு வருவதாக சொல்லிவிட்டு அந்த ஓட்டலுக்குள் நுழைந்தேன்.

ஒரு உணவுப்பொருள் தரக்கட்டுப்பாடு அதிகாரி போல, ஓட்டலைப் பார்த்துக் கொண்டே நுழைந்தேன். பக்கவாட்டுக் கூரைகளில் எண்ணெய்ப் பிசுக்குகளும், புகைக் கருப்பும் சேர்ந்து ஏறியிருந்தது. கை கழுவுகிற பேசின் மட்டும் வெண்மையை வைத்திருந்தது. கைகழுவ ஏசியன் பெயிண்ட் டப்பாவில் நீரும், அதனுள் ஒரு பிளாஸ்டிக் கிளாசும் இருந்தது. தண்ணீரை கலக்காமல் நீரை மொண்டு கையைக் கழுவி விட்டு திரும்பினால், 12 பேர் மட்டுமே அமரும்படியான அந்த ஓட்டலில் 13 பேர் அமர்ந்தும் 2 பேர் நின்று கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அமர்ந்து சாப்பிட்ட 13 பேரில் ஒருவன் என் ஆபிசின் ஏதோவொரு செக்ஷனில் தான் இருக்கிறான். நான் சட்டென வெளியேறி நின்றேன்.

இதற்குமுன் இப்படி ஒருமுறை காத்திருந்து சாப்பிட்டு இருக்கிறோம். நானும் முரளியும் அப்போது ஒரே அறையில் தங்கியிருந்தோம். இல்லையில்லை அவனது அறையில் தங்கியிருந்தேன். அவன் தான் எனக்குமுன் காஞ்சிபுரம் போய் அந்த அறையை பிடித்து வைத்திருந்தான். அவன் அங்கு ஏதோ ஒரு கொரியன் கம்பெனியில் வேலையில் சேர்ந்த இரண்டாவது மாதத்தில் நான் அந்த அறையில் போய் சேர்ந்தேன். அங்கிருந்த போட்டித் தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டரில் சேர்ந்திருந்தேன். காஞ்சிபுரம் தான் கோச்சிங் சென்டர்களுக்கு பேமஸ் அப்போது. இப்போது யாராவது என் ஆபிசில் புதிதாக ஜாய்ன் செய்கிற போது, நான் அவர்களிடம் கேட்பது எங்க படிச்சிங்க என்று தான். என்னைக் கடந்து சென்று வலதுபுறம் வளைந்த டிவிஎஸ் 50 யின் கண்ணாடியில் பட்ட சூரிய ஒளியின் பிம்பம் எனக்கு வலமிருந்து இடமாக சட்டென ஒரு பறவை போல கடந்தது.

ஓட்டலின் உள்ளிருந்து வெளியே சென்ற நான்கு பேருக்கு பின்னால் வந்த ஒருவன், என்னை இடமிருப்பதாகச் சொல்லி உள்ளே அழைத்தான். அமர்ந்ததும் குடிக்க வைத்திருந்த கிளாசையும், தண்ணீர் இருந்த ஜக்கையும் எட்டிப்பார்த்தேன். சுத்தமாகத்தான் இருந்தது. அதற்குள் இலை வந்துவிட்டது. கூடவே உள்ளே வரும் போதே சொன்ன ஆனியன் தோசையும் வந்திருந்தது. வாழை இலையில் வைத்த தோசையின் சூடு இலையின் மணத்தை பரப்பியது. தேங்காய் சட்னியும், இன்னொரு சட்னியும், ஊற்றிவிட்டு, சாம்பாரை தனிக்கப்பில் வைத்துவிட்டு, வேறேதும் சொல்லவா என்றபோது, நான் மற்றவர்களின் இலைகளைப் பார்த்தேன். பலரும் பூரி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உடனே பூரி சொல்லிவிட்டு, அந்த இன்னொரு சட்டினியை காலி செய்துவிட்டு அது என்ன சட்டினியாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அதற்குள் பூரி இல்லாமலே அருகில் வந்த அவன், “சார் பூரிக்கு கிழங்கு இல்ல, வடகறியும் காலி, சாம்பார், சட்னி தான் ஓகே..வா ” என்றான்.

நான் அதைப்பற்றிய கவலையேதுமின்றி..

“பரவால்ல பூரி போட சொல்லு.. இந்த சட்னி மட்டும் கொஞ்சம் வை” என்றேன்.

வைத்து விட்டு அவன் பூரி எடுத்துவர போய்விட்டான். இது என்ன சட்னி என்று எப்படி அவனிடம் கேட்பது, அருகில் ஆட்கள் அமர்ந்து இருக்கிறார்கள், எனக்கும், அந்த அறைக்கும் இடது மூலையில் என் ஆபிஸ்காரன் வேறு இருக்கிறான். என்ன நினைப்பான்.
இதே போல, என்னோடு கோச்சிங் சென்டரில் படித்த மகேந்திரன் வீட்டில் ஒருமுறை ஒரு சட்னி சாப்பிட்டேன். அது பீர்க்கங்காய் தோலை மட்டும் சீவி, பொன்னிறமாக வதக்கி, மிளகாய், புளி, இஞ்சி வைத்து அரைத்திருந்ததாக சொன்னார் மகேந்திரனின் அப்பா. அவர்தான் அவங்க வீட்டில் சமையல். அவனது அம்மா சென்னையில் வேலை செய்தார்கள். அரசு வேலைதான், தினமும் ரயிலில் போய் திரும்புவார்கள். அப்போதெல்லாம் பல நாட்களில் அவன் வீட்டுச் சாப்பாட்டு ருசியோடே மதிய வகுப்புகளை கடந்திருக்கிறேன். காலையில் மகேந்திரனின் அம்மா போகும் 7.18 ரயில், கேன்சல் ஆகி வேறு நேரத்திற்கு மாறிய போது, அவனது அம்மா அங்கேயே தங்கிக் கொள்வதாய் முடிவாகி, அவனும் அவனது அப்பாவும் இங்கு தங்கி இருந்தார்கள். அவன் கோச்சிங் சென்டரிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டான். பிறகு மகேந்திரனும், அவன் அப்பாவும் சேர்ந்து தள்ளுவண்டியில் ஒரு ஓட்டலை வைத்துவிட்டார்கள். நானும் முரளியும் அந்த ஓட்டலில் பலநாட்கள் காத்திருந்து சாப்பிட்டு இருக்கிறோம். அவன் படிப்பதை நிறுத்தியிருந்ததைப் போலவே, அவனது அம்மாவும் இவர்களிருவரை தவிர்த்து வேறொருவரோடு வாழ்ந்தது பின்தான் தெரிந்தது.

சட்னி காலியாகி இருந்தது. கையில் ஒரு துண்டு தோசை தான் இருந்தது. அதை சாம்பார் தொட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, பூரி வந்துவிட்டது.

அவன் பூரியை வைத்து விட்டு சூடு பொறுக்காமல் கையை காற்றிலாட்டியபடி, சட்னியா.. சாம்பாரா என்றான்.

நான் சட்னி என்று சொன்னவுடன், அவன் தேங்காய் சட்னி கரண்டியில் கை வைத்தவுடன், நான் சட்டென, இதுவேணாம், அந்த சட்னி வை என்றபோது, அவன், கத்திரிக்கா சட்னியா.. என்றபடி வைத்துவிட்டு போய் விட்டான். எதிரிலிருந்தவன் ஆப்பாயிலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். பக்கத்திலிருந்தவன் பூரிக்கு காத்திருந்தான். நான் சாப்பிட்டு முடித்துவிட்டு கையை கழுவிவிட்டு திரும்பியபோது, என்னை கடந்த பெண்ணின் முகத்தை பார்க்க தூண்டியது, நான் உண்டுமுடித்த அத்தனை உணவின் வாசமும் கலந்து வந்த அவளின் வியர்வை வாசம். அதற்குள் அவள் உள்ளே போய்விட்டிருந்தாள். எப்படியும் அவளுக்கு 30 வயதிருக்கலாம். பணம் கொடுப்பதற்காக நின்றிருந்தேன். அவள் தான் வந்தாள். 35 வயதுக்கு மேலிருக்கும். கத்திரிக்கா சட்னி வைத்தவன் எனக்கான தொகையை சொன்னான். நான் பணத்தை எடுத்து அவளிடம் நீட்டினேன். அவள் பணத்தை வாங்கியபடி அவனிடம், ஆப்பாயில், ஆம்லேட் எதுவும் இல்லையா என்றாள்.

நான், சிரித்தபடி இல்லை என்றேன். அவள் மீண்டும் அவனிடம், எனக்கான மீதித்தொகையை எண்ணியபடியே, உள்ள போய் கொழம்புல இருந்து மீனெல்லாம் எடுத்துட்டு கொழம்ப மட்டும் அடுப்புல ஏத்து, சுட்டதும், அடுப்ப நிறுத்திட்டு மீன அதுல போட்டுடு.. என்றாள். நான் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போகாமல் ஆபிஸ் வந்துவிட்டேன். மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.

முரளி வீட்டில் எப்போதும் மீன் கொழம்பை முதல் நாளே வைத்துவிட்டு, மறுநாள் தான் சாப்பிடுவார்கள். அது நாலைந்து வேளைகள் உணவோடு இருக்கும். சோறோடு, இட்லியோடு, சப்பாத்தியோடு, பூரியோடு என… முரளியின் அம்மா சுவையாகவும், புதிதாகவும் சமைக்கக் கூடியவர். ஊருக்கு வந்து திரும்பினால், நிச்சயம் புளிக்காய்ச்சல் சாறு, ஊறுகாய், சப்பாத்தி மாவு, எல்லாம் கொடுத்து அனுப்புவார்கள். சாதம் மட்டும் வடித்தால் போதும், தயிர் பாக்கெட் வாங்கிக்கொள்வோம், புளிசாதம், தயிர்சாதம், ஊறுகாய் என ஓட்டுவோம். எப்போதாவது மகேந்திரன் ஓட்டலில் கிரேவியோ, இல்லை அவன் வீட்டிலிருந்து கொழம்போ வாங்கிக்கொள்வோம். பதினான்கு முறை தேர்வெழுதி, பதினைந்தாவது முறை தான் செலக்ஷன் லிஸ்டில் வந்தேன். முரளிக்கு வீட்டில் பெண் பார்க்க தொடங்கியிருந்தார்கள். நெருங்கிய உறவுக்கார பெண்ணை பார்த்து முடிப்பதாக தான் திட்டம். இருந்தாலும் வெளியில் கொஞ்சம் பார்த்து விட்டு பார்க்கலாம் என முடிவெடுத்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். இறுதியில் உறவுக்காரப் பெண்ணையே திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு வேலை செங்கல்பட்டில் கிடைத்தது. இன்னும் ஒரு 5 மார்க் எடுத்திருந்தால் எப்போதோ சொந்த ஊருக்கு வந்திருப்பேன். முரளியின் திருமணத்திற்கு கூட காலையில் தான் வந்தேன். முரளி திருமணத்தில் இரவு உணவு மெனு என்ன தெரியுமா?? கொத்து பரோட்டா, மினி இட்லி வித் சாம்பார், ரவா தோசை, பூசணி அல்வா, கிச்சடி னு கலக்கலா இருந்ததாம். நான் தான் லீவு போடனுமேனு வரல. காலையிலயும் அட்டனன்ஸ் போட்டுவிட்டு ஓடி விட்டேன். ரொம்பநாள் கோவமாகவே இருந்தான். பிறகு செங்கல்பட்டிற்கு ஜோடியாக இருவரையும் வரவழைத்து மதிய சாப்பாட்டை வேதாசலம் நகர், ரங்கா ரெசிடன்சியிலும், இரவு சாப்பாட்டை அண்ணாநகர், வள்ளி பாரடைசிலும் என விருந்து வைத்து பஸ் ஏற்றிவிட்டேன்.

வீட்டிலிருந்து போன் வந்தது, உணவுக்கான அழைப்பென்று எடுத்தபோது, மனைவியின் தங்கை மகள் வயதுக்கு வந்திருப்பதாகவும், பள்ளியில் இருந்து தகவல் வந்ததையும், மனைவியும், மச்சினியும் ஸ்கூலுக்கு போய் கொண்டிருப்பதாகவும், வெளியிலேயே சாப்பிட்டு விட்டு மாலை, மச்சினி வீட்டுக்கு வந்துவிடும் படியும் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள். நான் எழுந்து ஆபிசின் வெளியே வந்து, டீ கடையில் நின்று, பாக்கெட்டை பிரித்து சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே, ஒரு டீ என்றேன். மதிய உணவு நேரமென்பதால் கடையில் கூட்டமில்லை. சிகரெட்டை இழுத்தபடியே மாஸ்டர் டீ போடுவதை பார்த்துகொண்டிருந்தேன். பால் குண்டானில், பால் பாதிக்கும் கீழிருந்ததால், கையை ஊதியபடி பாலை எடுத்தார், வெகுநேரம் காய்கிற பாலில் டீ சாப்பிடுவது தனிசுகம். கடைசி பப் இழுப்பதற்குள் டீ கைக்கு வந்துவிட்டது. டீ நல்லசுவை. பாலின் அடர்த்தியைக் கூட்ட ஒரு வெள்ளை காட்டன் துணியில் கொஞ்சம் ஜவ்வரிசையை கட்டி, பால் குண்டானில் போட்டு டீ சுவையை கூட்டுவார்கள். அந்தச் சுவை இல்லை இது. இந்த ஜவ்வரிசி விஷயமெல்லாம் கூட முரளி சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

டீ கடையிலிருந்து ஆபிசின் உள்ளே வருவதற்குள் புதிய நம்பரிலிருந்து ஒரு போன் வந்தது. எடுத்து பேசிக் கொண்டே வந்தேன். மகேந்திரனின் அம்மா தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு. அவருடைய ஆபிசில் ஏதோ சிக்கல், சிக்கல் யாரோடென்றால், செங்கல்பட்டில் என்னோடு பணிபுரிந்து புரோமஷனில் சென்னை சென்றவனோடு. எனவே என்னை பிடித்து சரிசெய்கிற முயற்சிக்காகவே என்னை அழைத்திருந்தார்கள். நான் முழுவிவரத்தையும் கேட்டுவிட்டு சரி பாத்துக்கலாம் அம்மா. ஒன்னும் பிரச்சனை வராது. நான் சொல்றன், என போனை கட் செய்து விட்டு, ஆபிசின் உள்ளே போகாமல் பார்க்கிங்கிற்கு வந்துவிட்டேன். எத்தனை வருடங்கள் கழித்து என்னை பிடித்து பேசுகிறார்கள், அவர்களுக்கு தேவையெனும் போது எப்படி, யாரை வைத்து பேசித் தீர்கலாம் என யோசிக்கிற அவரைக்குறித்து யோசித்துக் கொண்டே, அவனுக்கு போன் செய்தேன். அவனிடம் விவரத்தை கூறினேன். அவன் மகேந்திரனின் அம்மா மீதான குற்றங்களை அடுக்கி தள்ளினான். இந்தமுறை மட்டும் எனக்காக விட்டுவிடுவதாகவும், இனி சரியாக இருக்கச் சொல்லியும், சொல்லச் சொன்னான். கூடவே அவர் வாங்கும் லஞ்சத்தில் தனக்கான பங்கை சரிவர தராமல் போவதில் தான் பிரச்சனை எழுகிறது. அதைச் சரி செய்துகொள்ளச் சொல் என்றான். பிறகு கொஞ்சநேரம் நாங்கள் பழைய கதைகள் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குள் இரண்டுமுறை அழைத்துவிட்டார் மகேந்திரன் அம்மா. பிறகு அவரை அழைத்து அவன் சொன்னதையெல்லாம் சொன்னேன். அவரும் நன்றி சொல்லிவிட்டு இனி பிரச்சனை வராம பாத்துக்கறன் என்று சொல்லி தொடர்பை துண்டித்துக் கொண்டார். மகேந்திரனைப் பற்றி ஒன்றுமே கேட்கவில்லை. நானும் கூட கேட்கவில்லை. மகேந்திரனிடம் பேசியே 10 மாதங்களுக்கு மேலாகியிருக்கும்.

காலையில் ஓட்டலில் முரளி வீட்டு ஸ்டைலில் செய்த மீன் குழம்பு ஞாபகத்தில் வந்து நீந்திக்கொண்டிருந்தது. நான் வண்டியை எடுத்துக்கொண்டு ஓட்டலுக்கு போனேன். வண்டியை நிறுத்திவிட்டு ஒரு சிகரெட்டை இழுத்து முடித்துவிட்டு உள்ளே போகும் போதே, கல்லாவிலிருந்த அந்த பெண்ணிடம், இடம் இருக்கா என்றபடியே அவளைப் பார்த்தேன். அவள், “இடம்லாம் இருக்கு, சாம்பார், கொழம்பு, கூட்டு, பொரியல்லாம் கிடையாது. ரசம், மோர், அப்பளம், ஆம்லேட் தான் இருக்கு ” என்று முடித்த போது நான் டேபிளில் அமர்ந்திருந்தேன். அந்த அளவுக்கு பசியிலிருந்தேன்.

காலையில் கத்திரிக்காய் சட்னி வைத்த அதே ஆள் தான், இப்போதும் இலை வைத்தான். இலையை கழுவி விட்டு நிமிர்ந்த போது ஆவி பறக்க சுடு சோறோடு நின்றிருந்தான். வைத்துவிட்டு, “மீன் கொழம்பு ஊத்தவா” என்றான். நான் பக்கெட்டை எட்டிப்பார்த்தேன், குழம்பு அடியில் இருந்தது, போடு என தலையை அசைத்ததும், கொழம்பை ஊத்திக் கொண்டே, பீஸ் எதுவும் இருக்காது. வெறும் கொழம்பு தான் என்றான். நான் சொல்லாமலே எனக்கு ஆம்லேட் வந்திருந்தது. அப்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டு அடுத்து வாங்கிய சோறுக்கும் மீன் கொழம்பே வாங்கிக் கொண்டேன். பாத்திரத்தை சுரண்டி ஊத்தியதால், இந்த முறை மீனின் கண்ணும், உடைந்த மண்டையின் சிறிய பீஸ் ஒன்றும் கிடைத்தது. இலையிலிருந்த ஆம்லேட் தீர்ந்திருந்தது. இப்போது நான் ஆம்லேட் சொல்லிவிட்டு, அடுத்த சோறு வாங்கிக் கொண்டு ரசம் ஊத்தச் சொன்னேன். ரசம் ஊத்திவிட்டு ஊறுகாய் வேண்டுமா? என ஊறுகாய் பாட்டிலோடு நின்றிருந்தான். நான் பாட்டிலின் ஸ்டிக்கரையும், பாட்டிலில் இருந்த ஸ்பூனையும் பார்த்துவிட்டு வைக்கச் சென்னேன். ஏனென்றால் சில ஓட்டல்களில் மாதக்கணக்கில் கூட ஊறுகாய் தீராமலிருக்கும் படியிலான சுவையிலிருக்கும், அந்த பாட்டில்கள் அழுக்கேறி இருக்கும், ஸ்பூன் சில்வர் கலரிலிருந்து ஊறுகாய் கலருக்கு மாறியிருக்கும். அவன் வைத்துவிட்டு ஆம்லேட்டும் எடுத்துவந்து வைத்துவிட்டு போய்விட்டான். ரசம் சோறை சாப்பிட்டு விட்டு அவனை அழைத்து கொஞ்சமாய் சோறு வைக்க சொல்லி மோர் போட்டுக்கொண்டேன். மீண்டும் ஊறுகாய் பாட்டிலோடு நிற்கிறான். இந்தமுறை அவன் ஊறுகாய் எடுப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிளறிக் கொண்டிருந்தவனிடம், என்ன என்றேன். இல்ல சார் பச்சமிளகா இருக்கு. அதான், தள்ளிட்டு எடுக்கறன் என்ற போது, நான் பச்சமிளகாயை எடுத்து இலையில் வைக்கச் சொல்லி, ஊறுகாயில் ஊறிய பச்சை மிளகாயை தொட்டுக் கொண்டு பல வருடங்களுக்குப் பிறகு, சாப்பிட்டேன்.

கை கழுவிவிட்டு பணம் கொடுக்க வந்து நின்ற போது, அந்தப் பெண், ”கொழம்புல மீன அள்ளிப் போட்டதுக்கு அப்பறம் தீய கொறச்சு வைடா ” என நாளைக்கான வேலைகளை கவனித்தபடியே என் பக்கம் திரும்பி பணம் வாங்கிக் கொண்டார். ஒரு ஆம்லேட்டுக்கு மட்டுமே பணம் எடுத்துக் கொண்டார். கூட்டு, பொரியலுக்குப் பதில் அந்த ஆம்லேட் போல. சோறு போடுவதில் அவர்களுக்கென அறத்தை வைத்திருந்தது எனக்கு பிடித்திருந்தது.

சிகரெட்டை பற்ற வைத்தபடியே, ஆபிசின் எதிர்திசையில் நடந்து போனேன். முரளியோடு அறையிலிருந்த போது, முரளி வீட்டிலிருந்து வரும் ஊறுகாயில் ஊறி இருக்கும் பச்சைமிளகாயை பாதி பாதி எடுத்துக் கொள்வோம். அது காரமும், புளிப்புமாய் மாறி மாறி நாக்கில் நீர் இறைத்து விளையாடும். மனம் எதை எதையோ நினைவூட்டியது. மகேந்திரனுக்கு போன் பண்ணி பேச வேண்டும் போல இருந்தது. நான்கைந்து முறை அழைத்தும், எடுக்கவில்லை. இன்னும் கோவத்தில் தான் இருக்கிறான் போல.

பத்து மாதங்களுக்கு முன், இரவு எட்டு மணியிருக்கும், போனில் அழைத்து முரளி விபத்தில் இறந்துவிட்டான் என்பதையும், தெரிந்தவர்களை வைத்து பார்மாலிட்டிகளை வேகமாய் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், பாடியோடு ஊருக்கு வந்துவிடுகிறேன் என சொன்ன போது, நான் வீட்டிலிருந்தேன், நேராக மாடிக்குப் போய் நான்கைந்து சிகரெட்டை தொடர்ந்து பிடித்துவிட்டு இறங்கி வந்தபோது, பெரிய ஒர்க் ஒன்றை கான்ராக்ட் எடுத்திருந்த கான்ட்ராக்ட்காரர் நாளை ஆபிசில் இல்லாமல் வெளியே பார்க்கலாம். சில விஷயங்கள் பேச வேண்டுமென மெசேஜ் அனுப்பியிருந்தார். இரண்டு மிஸ்டு காலும் இருந்தது. நானே அவரை அழைத்துப் பேசினேன். அவர் அமைச்சரை பார்க்க வந்திருப்பதாகவும், நாளை காலை ஏழு மணி வாக்கில் அழைப்பதாகவும் சொல்லிவிட்டு வைத்துவிட்டார். அதற்குள் மகேந்திரன் ஒருமுறை அழைத்திருந்தான்.

என் ஆபிஸ் சீனியர் ஸ்டாப்புக்கு போன் செய்து நாளை லீவு வேண்டும் என சொல்லிவிட்டு, கடைக்கு வந்து சிகரெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு மாடிக்கு போய்விட்டேன். பின் கீழிறங்கி வந்து மகேந்திரனுக்கு அழைத்த போது, அவனுடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. முரளியின் போனுக்கு அழைத்த போது யாரும் எடுக்கவில்லை. மனைவி சப்பாத்தியும், பருப்பு சாம்பாரும் எடுத்து வந்து வைத்தாள். நான் சாப்பிட்டு விட்டு முரளி வீட்டுப்பக்கம் போனேன். முரளியின் அப்பா, அம்மா, அக்கா, இன்னும் சிலரும் அழுது கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்ததும் இன்னும் அழுகையை கூட்டினார்கள். அக்கா வீட்டுக்காரிடம், முரளியோட தம்பி சென்னையிலிருந்து கிளம்பிட்டானா என்றேன். அவர் தலை அசைத்தபடி கண்களை மூடிக்கொண்டு, உதடுகளை உள்ளிழுத்து அழுகையை அடக்கினார். அடுத்த கேள்வியை நான் தவிர்த்தேன்.

மீண்டும் போனை எடுத்து மகேந்திரனை அழைத்தேன். சுவிட்ச் ஆஃப் லேயே இருந்தது. முரளி போனும் எடுக்கவில்லை. நான் வீட்டிற்கு வந்து காலை 3.30 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு படுத்துவிட்டேன். ஆனால் காலை ஆறு மணிக்கு எழுந்தபோது, முரளி நம்பரிலிருந்தும், மகேந்திரன் நம்பரிலிருந்தும் மிஸ்டு கால்கள் இருந்தன. நான் கிளம்பி முரளி வீட்டிற்குப் போன போது, முரளியின் கம்பெனியில் இருந்து யூனியன் ஆட்களெல்லாம் பஸ் வைத்து வந்திருந்தார்கள். கம்பெனி முதலாளி கூட வந்திருந்தார். முரளியின் உடல் அவன் வீட்டு வராண்டாவில் இருந்தது. நான் சென்றவுடன் முரளியின் அக்கா என் கையை பிடித்துக்கொண்டு விடாமல் அழ ஆரம்பித்தாள். இத்தனை மணிக்கு வந்திருக்கும் எனக்கு யார் முகத்தையும் பார்க்க தைரியமில்லை, முரளியின் முகத்தை பார்த்து அழுதபடி நின்றிருந்தேன். என் போன் அடிக்க ஆரம்பித்த போது, முரளியின் அக்கா என் கையை விட்டு விட்டார். நானும் வெளியே வந்து, ஒரு 8 நிமிடங்கள் அமர்ந்திருந்தேன்.

அதற்குள் மறுபடியும் கான்ட்ராக்ட்காரர் அழைத்து, 7.30 மணிக்கெல்லாம் தயாரா இருங்கள் என்றும், அமைச்சரும் நம்மோடு வருகிறார் என்றும், காரை வீட்டுக்கு அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு வைத்துவிட்டார். என்னால் மறுக்கமுடியவில்லை. அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். 7.40 கெல்லாம் முரளியின் தெருவைக் கடந்து காரில் போய்க்கொண்டிருந்தேன். அங்கிருந்து பாண்டிச்சேரி போய் விட்டோம். இரவாகி விட்டது திரும்பிவர. அதற்குள் மகேந்திரன் பலமுறை அழைத்திருந்தான். அக்கா வீட்டுக்காரரும் சிலமுறை அழைத்திருந்தார்.

அதற்குப்பின் இப்போது தான் மகேந்திரனை அழைக்கிறேன். இப்பொழுது இமைகளை ஒரு முறை நான் மூடினால் கலங்கிய கண்களில் இருந்து நீர் இறங்கும். அதை தவிர்த்து நான், கர்சீப்பை எடுத்து கண்களை துடைத்துக் கொண்டேன். நான் வெகுதூரம் நடந்து வந்து விட்டேன். இப்போது திரும்பி நடந்தேன். ஓட்டலுக்கு அருகிலேயே விட்டு விட்டு வந்த வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது, எதிரில் வந்த ஓட்டல்கடை பையனை அழைத்து அந்த ஊறுகாய் எங்கு கிடைக்குமென கேட்க, அலுவலகத்திற்கு பக்கத்திலிருந்த சந்தில் போய், மூன்றாவது லெப்ட்டில் முதல் வீடு என்றான். ஆபிசில் போய் தலையை காட்டிவிட்டு, மூன்றாவது லெப்டில் முதல் வீட்டில் நிறுத்தினேன். வெளியில் நின்றிருந்த முரளியின் அம்மா வேகமாய் வந்து என் கையைப்பிடித்து உள்ளே அழைத்துப்போய் அமர வைத்துவிட்டு, வீட்டின் பின்னால் இருந்த முரளியின் அப்பாவை அழைத்தார். ஒருபக்கம் சில பெண்கள் அமர்ந்து பாட்டிலில் ஊறுகாய் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சிறிய பாக்கெட் பேக்கிங்கும் நடந்து கொண்டிருந்தது. சமயலறையில் இருந்து பால்குக்கர் சத்தமிட்டது.

சுவரில் முரளியின் படம் மாட்டி இருந்தது. அதற்கு கீழே அவனது யூனியன் கொடி இருந்தது. அதை பார்த்துக் கொண்டிருக்கும் போதே, முரளியின் அப்பா சிகப்பு கொடியைக் காட்டி, அவன் யூனியன்காரங்க இதபோத்தி தான் தூக்கிட்டு போனும்னு கேட்டாங்க. அதுதான் நாங்க செய்யற பெரிய மரியாதை னும் சொன்னாங்க. அப்புறம் சுடுகாட்டுல இருந்து திரும்பும் போது கொடிய எடுத்துட்டு வந்து வீட்டுல கொடுத்துட்டு போயிட்டாங்க என்றார். இருவரும் என்னைப் பற்றியும், குடும்பத்தைப் பற்றியும், வேலையைப் பற்றியும் விசாரித்து பேசிக்கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்த முரளியின் தம்பி, அருகில் வந்து நெருங்கி அமர்ந்து கொண்டான். அரைமணி நேரத்திற்கும் மேல் அங்கிருந்தேன். நான் அவர்களிடம் எதுவுமே கேட்கவில்லை, அவர்கள் கேட்டதற்கு மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அதற்குள் மனைவியிடமிருந்து போன் வந்தது. நான் இன்னொரு நாள் வருவதாகச் சொல்லி விட்டு வெளியே வந்து போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

பின்னாலேயே வந்த முரளியின் தம்பி இரண்டு பாட்டில் ஊறுகாயை கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்தான். பேசி முடித்து போனை வைத்தேன், முரளியின் அப்பா வேறு இரு பாட்டிலோடு வந்து என் வண்டியில் வைத்துவிட்டு, தம்பியின் கைகளில் இருந்த பாட்டிலை காட்டி அது கடைக்கு போட்டது. ஒரு பாட்டிலுக்கு 2 மிளகாய் தான் இருக்கும். இதுல ஆறேழு மிளகாய்க்கு மேல இருக்கும் என என் பெயரைச் சேர்த்துச் சொன்னார்.

மனைவியை அழைத்து வர மச்சினியின் வீட்டுக்கு போகும் வழியிலிருந்த பங்க் கடையில் ஒரு சிகரெட் வாங்கிப் பற்ற வைத்தேன். சனிக்கிழமை கிளம்பி காஞ்சிபுரம் போய், மகேந்திரனை நேரில் பார்த்து பேசவேண்டும் எனத் தோன்றியது.

***
க.வசந்த்பிரபு – இவர் திருவண்ணாமலையில் வசிக்கிறார். தொழில்முறை வடிவமைப்பாளராகவும், நிழற்படக் கலைஞராகவும் இருக்கிறார். மின்னஞ்சல்: vasanthprabu20@gmail.com

தொகென் சென்ஜி கவிதைகள்

0

தமிழில் – செள.வீரலெக்ஷ்மி

தோகென் சென்சி (Dogen zenji) 19 சனவரி 1200 முதல் 22 செப்டம்பர் 1253 வரை வாழ்ந்தவர். ஜப்பானின் உயரிய குடும்பத்தில் பிறந்த தோகென்னின் வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருந்தது. ஏனெனில் அவர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டார்.பெற்றோரின் இழப்பு வாழ்வின் நிலையாமையைப் பற்றிய தேடலை தோகென்னுக்குள் ஏற்படுத்தியது. தோகென்னின் பதின்மூன்றாவது வயதில், அவர் புத்த சமயத் துறவியானார். 24 வயதில் தோகென் சீனா சென்று, புத்த சமயத்தைப் பயின்று, அதை ஜப்பானுக்குக் கொண்டு வந்தவர். தோகென் சீனாவிற்குச் சென்று புத்த சமயத் தத்துவத்தை பயில்முறையைக் கற்று, ஜப்பானில் சோட்டோ சென் என்ற புத்த சமயப்பிரிவைத் தொடங்கினார்.  தோகென் , சீனாவின்  புத்த கோட்பாட்டைப் பின்பற்றாது இந்தியாவிலிருந்து சீனா வழியாக வந்த  சாக்கியமுனியின் வழிமுறையைப் பின்பற்றினார். வாழ்வியலில் மட்டுமல்லாது எழுத்தின் வழியே சென் தத்துவத்தை விளக்கியவர்.  தோகென் பன்முக ஆளுமைகளை கொண்ட கவிஞர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், புத்த சமயத் தத்துவக் கருத்துக்களை ஜப்பானிய மொழிக்குக் கொண்டு வந்தவர். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோகென்னின் கவிதைகள் சீன, ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1.
புலம்பெயரும் பறவை
எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை
அதற்கு ஒரு வழிகாட்டியும் தேவையில்லை.

2.
நீர்ப்பறவைகள்
வருகின்றன போகின்றன
அவற்றின் தடங்கள் மறைந்துவிட்டன
ஆனால் எப்போதுமே
அவை பாதையை மறப்பதில்லை

3.
இரவின் இதயத்தில்,
நிலவொளி சூழ்ந்திருக்க,
ஒரு சிறு படகு மிதக்கிறது,
அலைகளால் ஆடவுமில்லை
தென்றலால் அசையவுமில்லை.

4.
நம் வாழ்நாளில் தவறும் சரியும் நன்மையும் தீமையும்
குழம்பியுள்ளன.
நிலவுடன் விளையாடி, காற்றை மறுதலித்து, பறவைகள் ஒலியை
கேட்கும்பொழுது,
பல்லாண்டுகளாக நான் மலையில் பனியிருப்பதை வெறுமனே பார்த்தேன்.
இந்த குளிர்காலத்தில் சடுதியில் உணர்கிறேன் பனிகள் மலைகளை
உருவாக்குகின்றன.

5.
வசந்த காலக் காற்றால்
என் சொற்கள் சிதறிப்பறக்கின்றன
மக்கள் அவற்றைப் பார்க்கலாம்
பூக்களின் பாடலாய்.

6.
நீண்ட காலம் பற்றின்றி இவ்வுலகில் வாழ்கிறேன்,
தாளையும் எழுதுகோலையும் விடத் தொடங்கியதிலிருந்து
அதீத உணர்வுகளின்றி மலர்களைப் பார்க்கிறேன் , பறவைகள் ஒலியைக் கேட்கிறேன்,
மலைகளில் வசிக்கிறேன், இலகுவான இம்முயற்சிகளை நினைந்து வெட்கமடைகிறேன்.


சௌ.வீரலெக்ஷ்மி, இவர் மதுரையைச் சேர்ந்தவர். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஜென் மற்றும் கீழைத்திய மரபுக் கவிதைகள் மீது பெரும் ஈர்ப்பு கொண்டவர். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.

வேதநாயக் கவிதைகள்

0

(1)

அடிப்பீடத்தின் மேற்கோடு
இலேசாக விரிசலுற்று கசிவதை
கைக்குட்டையாலோ
நீள்மேலணித் துணியின்
முனையாலோ ஒற்றியெடுத்தலை
நாசூக்காய் செய்வித்தல் குறித்து:

கறையாகுதலைப் பற்றி
மகா ப்ரக்ஞையுடன்
மிடறு, மிடறாய் தொண்டைச் சதை உருண்டை
மெதுவாய் அசைவதைக் கூர்ந்து
மெலிதாய் முத்தமிட அவா உந்துகிறது

வலக்கையின் சுண்டு விரலில்
நீளமாய் வளர்த்து வைத்திருக்கும்
நகத்தின் மேலாய்
யாரும் பயன்படுத்தா பச்சை வண்ணம் எதன் குறியீடு?
கோப்பையைச் சுரண்டிச் சுட்டுவதால்
என்னிலிருந்து எதை அடைய இயலும்?

உடைந்த கோப்பையின் மீதான
கசிந்தொழுகலாய் கசிந்தழுதலாய் உன்மீதாய்
நான்தான் என்பதை உணர்..

பரிசாரகனுக்கு தெரியாமல்
அதுவாகவே உடைந்திருக்கக் கூடும்
ஊதிக் களைத்துப் போகாதே
அளாவளாவ நானிருக்கையில்
தானே ஆறட்டும், தணி…

ஏதோ ஓர் உந்துதலில் பூமியின் ஓரடி மேல் அவளுடன் தேநீர் அருந்துதல் குறித்ததாய்:

தெ.சு.கவுதமன் கவிதைகள்

0

எவரையும்
கிட்ட நெருங்கவிடாமல்
தன் கதகதப்புக்குள்
அலகால் நகர்த்திநகர்த்தி
முட்டைகளை அடைகாத்த
எத்தனையோ
குஞ்சித்தாய்க்கோழிகளின்
வாழ்ந்த அடையாளம்
தாங்கியிருக்கிறது…
முட்டைகள்
ஒவ்வொன்றாய் கூடுடைக்க
விடுதலையாகி வெளிவந்த
குஞ்சுகளின் இறக்கைகள்
வலுப்படும் காலம்வரை
அடைக்கலம் தந்த கோட்டையிது…
அப்பிய செல்கள்
வேறெங்கும் பரவிடாதபடி
எருக்கிலைகளை ஒடித்துவந்து
கூடை சுற்றிலும் பரப்பிவிடும்
அம்மாவையும்
நினைவுபடுத்த மறக்கவில்லை
பஞ்சாரக்கூடை…

– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, ஊடகத்துறையில் பணியாற்றுகிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஐந்திற்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. தொடர்புக்கு – gauthamands@gmail.com

பிரயாணம்

0

வைரவன் லெ.ரா

1

ஸ்தரு.. முன்னாடி நல்ல வெளஞ்ச மாங்கா கெடக்கே, எடுத்து உள்ள வைக்கேன். சிலிவி மீனு கொண்டு வருவா. வெரலு நீளத்துக்கு சாள வாங்கி கொழம்பு வை. கெழங்கு கெடக்கான்னு அடுக்காளைல பாரு.’ தாமஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே, கதவைத் தட்டும் ஓசை கேட்டது. அவர் எழுந்து கதவைத் திறக்கவும், மேரி உள்ளே வந்தாள், அவள் கையில் கடுங்காப்பி இருந்தது. “எஸ்தருக்கு பொறவு நீ போடுக காப்பிதான் மோளே எனக்கிஷ்டம். நாராஜனும், தாணுவும் வாறேன்னி சொன்னானுவ. வந்தா உள்ள கூட்டிட்டு வா சரியா”, மேரி அறையின் வலது பக்கம் பார்த்தாள். ஏற்கனவே இரண்டு நாற்காலிகள் கிடந்தன. அறையின் ஒருபக்கம் கண்ணாடி அலமாரியில் பழைய கருப்பு பிரேம்கள், லென்ஸ் டப்பாக்கள் சீராக அடுக்கப்பட்டிருந்தன. “அப்பா, அவங்க உள்ளதான் இருக்காங்க. நீங்க பாக்கலையோ”, நாற்காலிகளை நோக்கித் தலையைத் திருப்பினாள். “கண்ணாடி கட ஒடமஸக்காரனுக்கே கண்ணு அவிஞ்சு போய் கெடக்கு. மோளே அந்த மேசைல இருக்க கண்ணாடியக் கொண்டா.” மேரி கண்ணாடியை எடுத்துக் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள். ‘நாரோயில்ல மழக் கொஞ்சம் கூடித்தான் போவுது. வெளிய வேலையா எறங்கினா மழ அடிக்கும். வீட்டுக்குள்ள இருந்தா மழ வெறிச்சிரும். கடைல வியாவாரம் எப்படி போகுதுல தாணு. ஆளு பெருத்துட்டியே. சுகரு கூடிப் போச்சுன்னு நெனைக்கேன். நாராஜனா பாத்தியா. ஒடுசிலியா இருக்கப்போய் ஒரு சோக்கேடும் வரல.’ தாமஸ் சொல்லிவிட்டு தன் வயிற்றைத் தடவிக்கொடுத்தார். ‘எஸ்தரு எனக்க டூல் பாக்ஸ எங்க. இந்த கண்ணாடி பிரேம்மு கொஞ்சம் ஆடுகு. குட்டி ஸ்குருவ கொஞ்சம் திருக்கி விடணும்.’

‘அப்பா. வெளிய நிக்க மாங்காமரத்த வெட்டணும்’ சாலமன் அரை டிரௌசரில், சட்டை அணியாமல் தாமஸ் முன் வந்துநின்றான்.

‘வெட்டுனா, நெழலு இருக்காது மக்ளே’

‘இல்ல வெட்டணும். எனக்கு வீட்டுல இருந்து பாத்தா வானமே தெரிய மாட்டுக்கு’ அழ ஆரம்பித்தான்.

‘மரத்துக்கிடையோடி பாரு, வானம் அழவோலத் தெரியே’ தாமஸ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, எஸ்தர் ஜெபிப்பது காதில் விழுந்தது.

‘பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.’

தாமஸ் மெதுவாக எழுந்து, நின்றவிடத்தில் இருந்தே முட்டிப்போட்டு, எஸ்தரோடுச் சேர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார்.

‘அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டு வருவார்.’

இருண்ட அறையின் உத்திரத்தில் கண்கூசும் வெண்மை நிறத்தில் வானம் உண்டாக, அங்கே வண்ண நட்சத்திரங்கள் மின்னின. வானில் இருந்து மெல்லிய கோடாய் வெளிச்சம் வெட்ட தேவதைகள் அன்னம் போல பறந்து வந்தார்கள். தாமஸ் எஸ்தரின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டார்.

2

“ஹலோ விவேக். சாலமன் பேசுறேன்டா”, விவேக்கிற்கு சாலமனின் குரல் வழக்கமான உற்சாகத் தொனியில் இல்லாதது போலத் தோன்றியது.

“சொல்லுடா.. யு.எஸ்ல இருந்து வந்திருக்கேன்னு கேள்விப்பட்டேன். இப்போவாச்சும் ஞாபகம் வந்துச்சே”

“அம்மா எறந்துட்டாங்கடா” சாலமனின் குரல் தாழ்ந்தது.

“என்னடா ஆச்சு” விவேக் பதற ஆரம்பித்தான்.

“அம்மாக்கு சடன்னா அட்டாக்ன்னு சிஸ்டர் கால் பண்ணினா. உடனே கிளம்பி வந்துட்டேன். ஆல்ரெடி ஓபன் ஹார்ட் சர்ஜரி வேற பண்ணிருந்தாங்க. எல்லாம் ரெண்டு நாளுல முடிஞ்சிடுச்சு. உனக்கு தெரிஞ்சு வேளச்சேரி இல்ல பள்ளிக்கரணை பக்கம் எலெக்ட்ரிக் சுடுகாடு இருக்கா?”

“சரி, மொத நா வீட்டுக்கு வரேன்.”

விவேக், சாலமன் வீட்டிற்கு அவனின் அப்பாவையும் அழைத்து வந்தான். அது ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பு. சாலமனின் தங்கை சென்னையிலும், அவன் அமெரிக்காவிலும் வசிக்க பூர்வீக வீட்டை விற்றுவிட்டு, இங்கே அம்மாவும் அப்பாவும் குடியேறிவிட்டதாக சாலமன் சொல்லிய ஞாபகம். காலை ஒன்பது மணி, ஆதலால் குடியிருப்பின் எல்லா வீட்டிலும் ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. சாலமன் வீடு தரைத்தளம், எதிரே இருந்த வீட்டின் கதவு இன்னும் திறக்கப்படாமல் பால் பாக்கெட் வெளியே கிடந்தது. சாவு வீட்டிற்குரிய எந்த அறிகுறியும் இல்லை. வெளியே இரண்டு பேர் நின்றுகொண்டிருந்து, எதையோ சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். விவேக்கும் அவனின் அப்பாவும் கதவு திறந்து கிடக்க வீட்டிற்குள் நுழைந்தார்கள். முன்னறையில் ஃபிரிசெர் பெட்டியில் சிறுபிள்ளை உறங்குவதைப் போல எஸ்தர் கிடந்தாள். மேலே பெயருக்கு கூட ஒரு மாலையில்லை. தான் கொண்டு வந்திருந்த மாலையை ஃபிரிசெர் பெட்டியின் மேலே போட்டு எஸ்தரை வணங்கவும், சாலமன் படுக்கையறையில் இருந்து வெளியே வந்தான். மொத்தமாக அங்கே ஐந்து பேருக்கு மேல் இல்லை.

“வாடா” சாலமன் விவேக்கை மெதுவாக அழைத்தான்.

“ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க பாவம். நிம்மதியா போகட்டும். மேரி அக்கா இவங்களுக்கு காபி கொடுங்க” சாலமன் அழைக்கவும், வீங்கிய கண்களோடு மத்திய வயதுப் பெண்ணோருத்தி அடுக்களைக்குள் நுழைந்தாள்.

“இவங்க” விவேக் கேட்கவும்,

“மெய்ட். இவங்கதான் பாத்துக்கிட்டாங்க”

“சரி, உன்னோட வொயிப் குழந்தைங்கலாம். சிஸ்டர் எங்க”

“யு.எஸ்ல இருந்து டக்குன்னு கிளம்பி வந்தேன். அதுக்கே ஒரு லட்சம் பக்கம் ஆயிடுச்சு. அவங்கள வர வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். ஜெனி இவளோ நேரம் இங்கதான் இருந்தா. வீட்டுக்குப் போய் ரிஃபரெஷ் ஆயிட்டு வரேன்னு போய் இருக்கா. பக்கத்து அபார்ட்மெண்ட் தான். வாக்கபிள் டிஸ்டர்ன்ஸ். அவதான் பாவம் ராத்திரி உறங்கவேயில்ல, அழுதுட்டே இருந்தா. நான்தான் அனுப்பி வச்சேன். அவளோட ஹஸ்பண்ட் வெளியே நின்னாரே. நீ பாக்கலயா. அவளோட டாட்டருக்கு நெக்ரோஃபோபியா, அவங்க மாமியார் வீட்டுல விட்டுட்டு தான் வந்தா. அவசரத்துல வந்துட்டேன். எல்லாம் முடிச்சிட்டு மூனு நாள்ல கெளம்பணும்”

“உங்க அப்பா எங்க”

“நேத்து நைட் ரூமுல போய் பூட்டிகிட்டவருதான். உள்ளேயே இருக்காரு. அப்பப்போ வெளிய வந்து பாக்குராரு. ரொம்ப டிஸ்டர்ப் ஆயிட்டாரு. அம்னீஷியா வேற. அம்மா இறந்ததயே மறந்துட்டாருன்னு நெனைக்கிறேன். எலெக்ட்ரிக் சுடுகாடு கொஞ்சம் விசாரிச்சு சொல்லு. சாயந்திரம் டைம் கேட்டுக்கலாம்”

விவேக் சரி என்பது போல தலையசைத்தான். அருகிலே அவனுடைய அப்பாவும் சாலமனையே வெறித்துக்கொண்டு நின்றார். அவர் மெதுவாக விவேக்கை கண்ணைக் காட்டி வெளியே அழைத்தார்.

“அவங்க சொந்த ஊருக்கு கொண்டு போகலையா? புள்ளங்க நல்லா சம்பாதிக்க வெளிநாடோ, வெளியூரோ போறாங்க எல்லாம் சரிதான். பொறவு எல்லாமுமே அவங்க முடிவுதான் இல்லையா, இருந்தாலும் அவங்க அப்பாக்கிட்ட ஒரு வார்த்த கேக்க சொல்லுடா. இவங்களுக்கு சொந்தகிந்தம் யாரும் இல்லையா. நம்மள சேத்தே ஆறு பேருக்கு மேல இல்ல.” அவரின் குரல் தழுதழுத்தது.

“அப்பா. உங்களுக்கு பிரஷர் இருக்கு. நான் அவன்கிட்ட பேசுறேன். நீங்க இருக்கீங்களா? இல்ல கிளம்புறீங்களா?”

“போப்பா.. மனசே கனத்துடுச்சு. நா இருக்கேன். எல்லாம் முடியட்டும். பாவம் ஆளும் பேரும் இல்லாம இருக்காங்க”

“சரிப்பா. வெளிய சேர் போடுறேன். உக்காந்துக்கோங்க”

விவேக் வீட்டினுள் நுழையும் போது, சாலமன் அவனின் அப்பாவை கைத்தாங்கலாக அழைத்து முன்னறைக்கு கூட்டி வந்தான். வந்தவர் ஒரு நிமிடம் எஸ்தரின் முன்னே நின்றார். அவரின் கண்கள் சிவந்து இருந்தன, மாறாக ஒருதுளி கண்ணீர் சிந்தவில்லை. உள்ளே அவர் தங்கியிருந்த அறையில் இருந்து, இரண்டடி மரக்குருசு ஒன்றையெடுத்து வந்தவர், அதனை ஃபிரிசெர் பெட்டியின் மேலே வைத்தார். சாலமனை அழைத்து ஃபிரிசெர் பெட்டியின் அருகிலேயே ஒரு நாற்காலியைப் போடச்சொல்லி அமைதியாக உட்கார்ந்துகொண்டார். அவரின் பார்வை எஸ்தரை விட்டு விலகவில்லை. எஸ்தரின் தலை மெதுவாகத் தாமஸை நோக்கித் திரும்புவது தெரிந்ததும், அவரின் உதடுகள் விரிந்தன.

3

“தாமஸ், கண்ணாடி ரெடி ஆயிட்டுங்களா? இன்னைக்கி தாரேன்னு சொன்னீங்களே”, வெள்ளை வேஷ்டியும் ஜிப்பாவுமாக நெடுநெடுவென வளர்ந்த ஒல்லியான மனிதர் உள்ளே வர, தாமஸ் வந்தவரை வரவேற்று நாற்காலியில் அமரவைத்தான்.

“ஸ்தோத்திரம் சார், ஒரு நிமிஷம்.” புன்னகையோடு சொல்லிவிட்டு, மர டிராயரில் இருந்த கருப்பு நிற டப்பாவைத் திறந்து, புதிய கண் கண்ணாடியை சுவரில் மாட்டியிருந்த இயேசு படத்தின் முன்னே வைத்து சிலவினாடிகள் வேண்டிக்கொண்டு அவரிடம் நீட்டினான்.

“உமக்க தெய்வ நம்பிக்கையே பாதி கண்ணத் தொறந்து, ஆண்டவருக்க ஒளிய காட்டிடும்வே. நாரோயில் ஜில்லால இப்போ உனக்கா கொடி தானடே பறக்கு. ஆனா கைச்சுத்தமும் ராசியும் விடாம பிடிச்சிக்கணும். எவ்ளோ பைசா ஆச்சுடே.” தாமஸ் கேட்ட ரூபாய்க்கு மறுகேள்வி இல்லாமல் ஜோபியில் இருந்த நோட்டுகளை நீட்டி கண்ணாடியை மாட்டிக்கொண்டு ஜம்மென்று வெளியே சென்றார்.

அவர் வெளியே சென்றதும், அருகில் மளிகைக்கடை வைத்திருக்கும் தாணுலிங்கம் உள்ளே வந்தான். “அண்ணாச்சி, வந்தவரு வன்கைன்னு நினைக்கேன். பிளசறு காருல வந்துட்டு போறாரு.”

“ஆமா. நம்ம குலசேகரத்துல இருந்து பேச்சிப்பாற போற வழி நெடுக ரப்பர் எஸ்டேட் இருக்குல்ல. அதுல பாதி இவாளுக்க சொத்து தான்.”

“இந்த கண்ணுல மாட்டுற கண்ணாடிக்கு அவளோ மவுசு பாத்தீளா”

“பொறவு. சிலருக்கு பொடி எழுத்து தெரியாது, சிலருக்கு தூரத்துல இருக்கது தெரியாது. வயசானா வெள்ள எழுத்து தெரியாது. டாக்டர்ட்ட போய் கண்ண செக் பண்ணி, சரியான லென்ஸ் மாட்டுனக் கண்ணாடிய போட்டோமின்னு வை. எல்லாம் சரி ஆய்டும். ஐட்டம் செஞ்சு வாங்க திருநவேலிக்கும், திருவந்திரத்துக்கும் அலைஞ்சுட்டு இருந்த ஆளுகளுக்கு நம்ம நாரோயில்லயே இப்ப கட வந்தாச்சுல்லையா. அலைய செலவு மிச்சம் தானல. இப்போ இங்கேயே ஊருப்பட்ட கண்ணு ஆசுவத்திரி வந்தாச்சு. டாக்டர் சொல்ல அளவுக்கு நம்ம லென்ச பொருத்தி பிரேம் மாட்டணும். பிரேமுக்கு கொஞ்சம் மாடல் வச்சுருக்கோம். இதுக்காண்டி மட்டும் மாசம் ரெண்டு வாட்டியாச்சும் திருநவேலி போய்ட்டு வரணும்”

“அது சரிண்ணே. இப்போ சினிமால கண்ணாடி போடுகான்லா இந்த கமலஹாசன், ரஜினி, சரத்பாபுலாம். அவாளுக்கும் அப்போ கண்ணுல சோக்கேடோ?”

“ரஜினின்னா மூனு முடிச்சு படத்துல கமலஹாசன தண்ணில முக்கி கொள்ளுவான்லா அந்தப் பயதானே”

“அண்ணாச்சிக்கு இந்த கண்ணாடி, கட, வீடு, சர்ச் தவிர ஒன்னும் தெரியாது” சொல்லிவிட்டு தாணுலிங்கம் நமட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“தெரிஞ்சு என்ன எழவுக்குல. நம்ம பொண்டாட்டி பிள்ளைகள பாத்தா போதாதா? அதுக்கு வரும்படி கொடுக்க தொழிலும் தெரியும். கூட வம்பளக்க நீயும் நாகராஜனும் போதும்லா. ரெண்டு பேரு வாயி நீளத்துக்கும் சிலோன்னுக்கே போயிரலாம்”

“இப்படியே பேசிட்டு கெடையும்”

“யாமுல. மூப்பாச்சுன்னா எம்பிள்ள எங்கள ராசா கணக்கா பாத்துகிடுவான். வேறு என்ன செய்யன்ணும்ங்க”

“சரி கொதிக்காதையும்”

சொல்லிவைத்தாற் போல நாகராஜன் பதினொரு மணி பதிவு டீயைக் கொண்டு வந்தான்.

“எப்போ தாணுலிங்கத்துக்க தொண்ட நாலு ரதவீதிலயும் கேக்காம்ல. தொண்டைக்குழிய பாத்தியாண்ணே பழையாரு ஆழத்துக்கு. கொறச்சுப் பேசு. பொறவு உனக்க கடைல கொண்டக்கடலைலயும், பொறிக்கடலைலயும் பொடி ஜல்லிய போட்டு எடைய கூட்டது ஊருக்கே தெரிஞ்சு போவும்” நாகராஜன் சொல்லவும்,

“ஒனக்கு தெரியாத நாராஜா. அரிசில மண்ணு. எண்ணெய்ல குருடாயிலு. என்னென்ன உண்டோ எல்லாத்தயும் சேத்துப்புடுவான். வியாபாரக் காந்தம்லா தாணுலிங்கம்”

“மெதுவா பேசுங்க அண்ணாச்சி. அப்புறம் எவனுக்க காதுலயாச்சும் உழுந்துன்னா உண்மன்னு நெனச்சுக்குவான். ஏற்கனவே என் சொக்காரனுக்குலாம் கடைல நாலு ஆளு நின்னுன்னா கும்பி எரியும். இதுல இதையும் சேத்து நம்மள நடுத்தெருக்கு கொண்டு வந்துருவானுவ”

“அப்புறம் நாங்க என்ன பொய்யா புழுகுகோம். என்ன சொல்லுக நாராஜா”

தாணுலிங்கத்திற்கு இதை நிறுத்த வழி தெரியும். சட்டென்று “அண்ணாச்சி கண்ணாடில சந்தேகம் கேட்டேனே அதச் சொல்லுங்க மொத” இந்தக் கேள்வி வரவும் மீண்டும் பழைய தாமஸ் ஆனான்.

“அது கலர் கண்ணாடிலால. ஸ்டைலுக்குன்னு நெனைக்கேன். இப்போ மண்டகனத்துக்கும் கண்ணாடி போட்டா சரி ஆய்டும்ன்னு வெள்ளக்காரன் சொல்லுகானுக. கொஞ்ச வேலை இருக்கு, இன்னும் ரெண்டு ஆர்டருக்கு பிரேம் போட்டு வைக்கணும். ராத்திரி பேசுவோம்ல”

“சரிண்ணே நானும் வாரேன். கடைல கொஞ்சம் ஆளு நிக்கி.” தாணுலிங்கமும் நாகராஜனும் அவரவர் கடைகளுக்குத் திரும்பினர்.

தாமஸ் கடைப் பக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கும் தாணுலிங்கத்திடனும் டீக்கடை வைத்திருக்கும் நாகராஜனிடம் மட்டுமே பேசுவான். வேறு யாரிடமும் பெரிதாகப் பேசுவதில்லை, பழக்கமுமில்லை. நாகராஜா கோயிலில் இருந்து தபால் நிலையம் செல்லும் சாலையில் ஆசாரிமார் தெரு ஆரம்பிக்கும் முனையில் இருந்தது பிரைட் ஆப்டிகல்ஸ். காலை ஒன்பது மணிக்கே கடையைத் திறந்துவிடுவான். மதியம் இரண்டிலிருந்து நான்கு மணி வரை உணவு இடைவேளை. அதன்பின் திறக்கப்படும் கடை இரவு ஒன்பது மணிக்குத்தான் சாத்தப்படும். கடைக்கு வந்துபோக சைக்கிள் ஒன்றுண்டு. வீட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் செட்டாக் ஞாயிறு தேவாலயம் செல்லவும், பொண்டாட்டி பிள்ளைகளை அன்றைக்கு வெளியே அழைத்துச் செல்லவும் உபயோகப்படும், மற்ற நேரம் அமுக்கமாய் வீட்டின் வாசலில் படர்ந்து வளர்ந்திருக்கும் மாமர நிழலில் ஓய்வெடுக்கும்.

எஸ்தர் கொல்லாங்கோட்டுக்காரி, ஞாயிறு தவிர்த்து மீன் இல்லையேல் தொண்டையில் சோறு இறங்காது. கூட அவித்த மரச்சீனிக்கிழங்கோ, பீன்ஸ் துவரமோ, நெத்திலி அவியலோ தொடுகறிக்கு உண்டு. ஞாயிறுக்கு எனத் தனியே டபிள்யூ.சி.சி சந்திப்பிலிருந்து வெட்டூர்மணிமடம் செல்லும் சாலையோரம் விற்கப்படும் வெள்ளைப்பன்றி இறைச்சியோ அல்லது சேவியர் மாட்டிறைச்சி கடையில் இருந்து கறியோ உண்டு. இதனாலே மத்தியானம் உண்டு உறங்கியவன் கடையைத் திறக்க சிலநாட்கள் ஐந்து மணி ஆகலாம். ஆட்கள் அவன் கடை திறக்கும் வரையிலும் காத்திருக்கும். காத்திருந்த கோபம் உள்ளுக்குள் இருந்தாலும் தாமஸைக் கண்டால் யாரும் சுடுசொல் சொல்வதில்லை. அப்படி ஒரு முகம் அவனுக்கு. பிள்ளைகளில் மூத்தவன் சாலமன் இப்போது ஸ்காட் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பும், இளையவள் ஜெனிபர் டதி பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பும் முறையே படிக்கிறார்கள். தாமஸுக்கு கர்த்தரும் அத்தனை சுகந்தமான வாழ்வைத்தான் அளித்திருந்தார். இதனாலே கேரளாவிற்கோ, வேளாங்கண்ணிக்கோ வருடா வருடம் கண்டிப்பாய் ஒரு ஆன்மிக யாத்திரையுண்டு. அந்நேரம் கடையின் வெளியே வெள்ளை போர்டில் கடை அடைக்கப்பட்ட விவரம் தொங்கவிடப்பட்டிருக்கும். தாமஸ் என்னதான் வேலை இருந்தாலும் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்குவதில் குறையொன்றும் வைப்பதில்லை.

“எட்டி எஸ்தரு.. கொமருப் பிள்ளையே புறப்பட்டு வந்தாச்சு. நீ என்ன மினிக்கிட்டுக் கெடக்கா” முன்னறையில் இருந்து கத்தினான்.

“அவ ஒரு சுடிதார எடுத்துண்டு மாட்டிட்டு வந்திருவா. யனக்கு சாரி கட்டாண்டமா. யனக்கும் சுடிதார் எடுத்து கொடும்ன்னு சொன்னா கேக்கீறா? எல்லாருக்கும் டீ போட்டு, பாத்திரத்தக் கழுவி. கூட ஒமக்கு ஒம்ம சட்டையும் பேண்டும் எங்க கெடக்கும்ன்னு தெரியாது. அதயும் நான்தான் எடுத்துக் கொடுக்கணும். இப்போதான் நானே மேலு கழுவி உள்ள சாரி கட்ட வந்தேன்” படுக்கையறையில் இருந்து குரல் கொடுத்தாள்.

“உனக்கு முப்பத்தஞ்சு வயசு ஆச்சிடி. உனக்காண்டி தான் படத்துக்கே வாரேன் கேட்டியா. பொறவு டிக்கெட் கெடைக்காது. பிள்ளைகளே ரெடி ஆயி நிக்கி. சாலமா அப்பாக்க வண்டிய உருட்டி வெளிய நிப்பாட்டு மக்ளே.” சாலமன் வெளியே செல்லவும், கூடவே ஜெனிபரும் சென்றாள்.

“ராத்திரிக்கு பரோட்டாயும் பீப்பும் வெளிய சாப்பிட்டுட்டு வரணும். நா ஒன்னியும் சமைக்கல்ல”

“பேசிட்டே இருந்தா. சாரி எப்புடி கட்டுவா. பேசாம கட்டிட்டு வாடி. பிள்ளைகளு வெளிய போய்ட்டு. நா வேணும்னா உள்ள வரவா எஸ்தரு”

“பாதி கெழவன் ஆயாச்சு. ஆசையப் பாத்தீரா யேசப்பா”

“நடிக்காத எஸ்தரு.. நைட் மோளதுக்கே பயந்துட்டு சின்ன புள்ள போல என்ன எழுப்புவ. தனியா இருக்க பயப்படுவேன்னு உள்ள வாரேன்”

“உள்ள வராதயும்.. ஜெம்பர் போடல”

“அப்போ இன்னா வாரேன்”

4

“சாலமா ஒரு நிமிஷம் இங்க வா” விவேக் அழைக்கவும் வெளியே வந்தான்.

“ஆதம்பாக்கத்துல எலெக்ட்ரிக் சுடுகாடு இருக்கு. அப்பாட்ட ஒரு வார்த்த கேளு. ஒங்கள விட பெரிய எழப்பு அவருக்குத்தான்”

“அவரு அம்மா இறந்ததையே சாயந்திரம் மறந்துடுவாரு. அவர்ட்ட என்னப் பேச?” சாலமன் சொல்லிமுடிக்கவும், விவேக்கின் அப்பாவினுடைய குரல் காட்டமாகக் கேட்டது.

“உனக்கு அம்மாதான் எறந்துருக்காங்க. அவருக்கு கூட இத்தன வருஷம் இருந்த துணையாக்கும் எறந்திருக்காங்க. வெளிநாடு போய்ட்டு, நாலு ஊரப் பாத்துட்டா அறிவு கூடித்தாண்டா போகுது”, விவேக்கிற்கு அப்பா சொல்லியது உண்மையில் கொஞ்சம் ஆசுவாசம்தான், எப்படியும் அவன் பேசினால் சாலமன் கேட்கப் போவதில்லை.

“இல்ல அங்கிள். அப்பாக்கு ஞாபக மறதி, அப்பப்போ ஒரு மாரி..” நீட்டி முழக்கிய சாலமனின் குரல் இறங்கியது.

“அதுக்குன்னு.. சரி நீ பேசாண்டாம், நா பேசுறேன்” விவேக்கின் அப்பா சட்டென்று எழுந்து தாமஸின் அருகே சென்றார்.

“சார்..” சொல்லிவிட்டு தாமஸின் முதுகை மெல்ல தட்டிக் கொடுத்தார். தாமஸ் வந்தவரை நிமிர்ந்து பார்க்கவும் ஏனோ அவரின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. தாமஸ் எழுந்து அவரை இறுக அணைத்துக்கொண்டார். “ஆசுவத்திரி போகணும்னா சின்னப் பிள்ள போல அழுவா. பயப்படுவா. இனி எதுக்கு ஆசுவத்திரி மருந்து மாத்திரைலாம்”, குழந்தையின் அழுகையைப் போலத் தேம்பித்தேம்பி அழுதார்.

அவர்கள் இருவரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரின் கைகளும் ஒன்றுக்கொன்றுக்குள் பிணைந்து தனியே கதைகள் பேசின. சாலமன் விவேக்கின் அருகில் அமர்ந்தபடி கொதித்துக்கொண்டிருந்தான்.

“என்னடா அங்கிள் இவளோ கோபப்படுறாரு.”

“நானா இருந்தா, இருக்க கோபத்துல ரெண்டு அடி முதுகுல விழுந்துருக்கும்” விவேக் சொல்லிவிட்டு, உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான்.

5

“அப்பா.. நானும் தங்கச்சியும் பேசித்தான் முடிவு பண்ணிருக்கோம். அம்மாக்கும் சம்மதம் தான். நீங்கதான் இழுக்குரீங்க”

தாமஸ் எஸ்தரைப் பார்த்தார். அவளின் கைகள் வியர்த்துக் கொட்டியது, சேலையால் அதைத் துடைத்துக்கொண்டிருந்தபடியே, கண்ணசைவிலே இதில் தனக்கும் விருப்பமில்லை எனக் காட்டினாள்.

“இல்ல மக்ளே, நீ சொல்லது தெற்றுன்னு சொல்லல. ஆனா வீட்ட விக்க சொல்லுக. சென்னைல தாமசம் பண்லாம்னு சொல்லுக. பொறவு எங்களுக்குன்னி இருக்கது இந்த வீடும், கடயும், வெளிய நிக்க மாங்காமரமும், பழய செட்டாக்கும் தான. கூட பெரிய பழக்கம்லா அப்பாக்கு கெடயாது. இதில மெட்ராஸ் வந்தா. இருக்க ஒக்குமான்னு யோசிக்கேன்” தாமஸ் கனிந்த குரலில் சொல்லிவிட்டு சாலமனின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தார்.

வீட்டின் உள்ளறையில் அவரவர் துணைகளும் குழந்தைகளும் இருக்க, அங்கேயிருந்து பிள்ளைகளின் கீச்சிடல் கேட்டபடியிருந்தது. எஸ்தருக்கு பிள்ளைகள் ஆசையோடு வந்த காரணம் அப்போதுதான் விளங்கிற்று.

“அப்பா.. நானும் தான் யு.எஸ் போகப் பயந்தேன். ஒலகம் ரொம்ப பெருசுப்பா. எதுக்கு இந்த சின்ன வட்டத்துலயே இருக்கீங்க. வந்து பாருங்க. ஒங்களுக்கும் வயசு அறுவது தாண்டியாச்சு. தங்கச்சி சென்னைல தான இருக்கா. ஒத்தாசிக்கு கூடமாட வரமுடியும். தனியா இங்க இருக்கதுனால ஒரு யூஸும் இல்ல. ஆறு சென்ட்டுக்கு மேல இடம் கெடக்கு. வித்தா கெடைக்க ரூவாயுல நல்ல அபார்ட்மெண்ட்ல வீடு வாங்கலாம். என்னோட பிரண்ட்ஸ்ட்ட பேசிட்டேன். நீங்க சரின்னு சொல்லுங்க” சாலமன் பேசிக்கொண்டிருந்த போது தாமஸ் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு விட்டத்தையே வெறித்தார்.

“அண்ணா.. அப்பாக்கு சம்மதம் இல்லைனா ஃபோர்ஸ் பண்ணாண்டாம். அவங்க இருக்க இடத்துல இருக்கட்டுமே. அவங்க இங்க இருந்தாதான் நானும் அம்மைக்க வீடுன்னு ஊருக்கு வரமுடியும்” ஜெனிபர் சொல்லவும், அறையில் இருந்து, அவளுடைய கணவனின் குரல் கேட்டது. “ஜெனி, பாப்பா அழுகாப் பாரு. உள்ள வா”, அங்கே எந்தக் குழந்தையின் அழுகுரலும் கேட்கவில்லை.

“மக்ளே, சென்னைல இந்த மாரி ஒரு ஓட்டு வீடு வாங்க முடியுமான்னு பாரு. முன்ன நல்ல பெரிய மாங்காமரம். சாயங்காலம் வெளிய ஒரு சேர் போட்டு நிழலுல உக்காந்துப்பேன். நாராஜன் கட மாரி ஒரு டீக்கட. சாயந்திரம் நடக்க ஒரு ஸ்டேடியம். இறச்சி வாங்க சேவியர் கட மாரி ஒன்னு. நானும் எஸ்தரும் போக சர்ச். நம்ம சப மாறி மரமும் செடியும் இருக்கணும். ஒங்க அம்மைக்கு பொறத்தால கருவேப்பிலயும், கொய்யாக்க மரமும் வேணும்.” தாமஸ் பேசிமுடிக்கும் போது எஸ்தரின் கண்கள் நிறைந்துவிட்டன.

“அப்படியே நாராஜா மாமாவையும், தாணுலிங்க மாமவையும் கூட்டிட்டு போகணும்னு சொல்லுங்க. நீங்க கேக்க மாறி வேணும்னா. இங்க இருந்து எல்லாத்தையும் பிச்சி கொண்டுபோய் அங்க நட்டுவைக்கணும்” சாலமன் பற்களைக் கடித்துக்கொண்டே சொன்னான்.

அதன்பிறகு அவர்கள் யாரும் பேசிக்கொள்ளவில்லை. பிள்ளைகள் இருவரும் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்கள். மற்றவர்கள் அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். சாலமனும், ஜெனிபர் கணவனும் எதுவும் சொல்லிக்கொள்ளாமல் அவர்களை வேகமாகக் கடந்து போனார்கள்.

வீட்டை விற்க சாலமனே எல்லா ஏற்பாடும் செய்தான். அவர்கள் பத்திரப் பதிவை மாற்றிக் கொடுத்த அன்றே கடையை அங்கே வேலை பார்க்கும் ஜானிடமே ஒப்படைத்து வாடகையை தன் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம் செலுத்துமாறு சாலமன் கேட்டுக்கொண்டான். அன்றைக்கு தாமஸும் தாணுலிங்கத்தையும் நாகராஜனையும் பார்க்கக் கடைக்குச் சென்றார். மளிகைக் கடையை தாணுலிங்கத்தின் மருமகனும் டீக்கடையை கொஞ்சம் பெரிதாக காபி ஷாப்பாக விரிவாக்கி நாகராஜனின் மகனும் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

“அண்ணாச்சி பிள்ளைகளு கூப்பிடுதுன்னா போய்தானே ஆக முடியும். என்ன கொஞ்ச நாளைக்கு ஒங்கள தேடுவோம். அப்புறம் பழகிடும் பாத்தீங்களா.” தாணுலிங்கம் சொல்ல,

“நொட்டுவான். சாயந்திரம் இனி ஸ்டேடியத்துக்கு நடக்க போகாண்டாம்ன்னு சந்தோஷம் இப்போவே மொகத்துல தெரியே” நாகராஜன் பதிலுக்குச் சொன்னார்.

“பிபி சுகர் இருக்கதுனால நடக்க வரல அப்படித்தானே. எனக்காண்டி தான் தாணு வாரான்”

“ஐயோ அண்ணாச்சி, அவன் ஒரு ஆளுன்னு சொல்றத கேக்கீங்களே”

தாமஸ் வெகுநேரம் அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார். உண்மையில் அவர்கள் விடைப்பெற்றுக் கொள்ளும்போது மூன்று பேரின் கண்களும் நீரில் தளும்பின.

6

தாமஸ் அலைபேசியை எடுத்து யார் யாரிடமோ மெதுவாகப் பேசினார். பின்னர் நாற்காலியிலே அமர்ந்துகொண்டார். விவேக்கின் அப்பா வெளியே வரவும் சாலமனும் விவேக்கும் என்ன சொல்ல வருகிறார் என்பது போல பவ்யமாக எழுந்து நின்றார்கள்.

“சாலமன், அப்பாகிட்ட பேசினேன். அவருக்கு இங்க அம்மாவ எரிக்கிறதுல இஷ்டம் இல்ல. இன்னொன்னு உங்க மதத்துல எரிக்கிற வழக்கமும் கெடையாது. என்னதான் மெட்ராஸ்ல இருந்தாலும், அவங்க சொந்த ஊர் சபையிலே பொதைக்கிறத தான் அவரும் விரும்புராரு. அதுதான் நியாயமும்.”

“இல்ல அங்கிள். எப்படி அங்க கொண்டு போறது. எதுவும் பிளான் பண்ணல. பொறவு அங்க யாரையும் எனக்கு அவ்வளவா தெரியாது.”

“தாமஸ், நாகர்கோயில்ல யாரோ நாகராஜன், தாணுலிங்கத்துட்ட பேசிருக்காரு. ஒங்களோட சபை பாதர்ட்டயும் பேசியாச்சாம். பிரச்சனை ஒன்னும் இல்ல. விவேக், ஆம்புலன்ஸ் ஃபிரிசெரோடு கொண்டு போற மாரி வேணும். உன்னோட பிரென்ட்ஸ்ட்ட உடனே விசாரிச்சிட்டு சொல்லு, நேரம் அதிகம் இல்லப்பா”

சாலமனுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் முகம் அவன் ஆத்திரப்படுவதை வெளிக்காட்டியது. வேகமாக தாமஸ் அருகில் சென்றான்.

“அப்பா.. என்ன நெனச்சுட்டு இதுலாம் செய்றீங்க”. தாமஸ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு தான முடிவு பண்ணிருக்கணும்”

“எஸ்தரு ரொம்ப நாளா ஊருக்கு போகணும்ன்னி கேட்டுட்டே இருந்தா. நாங்களும் ஒனக்க கிட்ட கேட்டுப் பாத்தோம். மெட்ராஸ் வந்ததுக்கு பொறவு, நாங்க நீ சொல்றத மட்டும் தான கேட்டோம். ஊருக்கு போகாண்டாம்ன்னு சொன்ன, சரின்னு கேட்டுக்கிட்டோம். மொத்தமே நாலு வாட்டி எறப்புக்கும் விஷேச வீட்டுக்குமா நீயே கூட்டிட்டு போய்ட்டு வந்துருவ. மீதி நேரம் இந்த நாலு சொவருதான எல்லாமுமே. இப்போ அவதான் ஊருக்கு போயே ஆகணும்ங்கா. அப்பாட்ட எதுக்கு மக்ளே வெப்ராளப்படுக..” தாமஸின் வார்த்தைகள் அதன் பிறகு சொற்களால் நிரம்பாமல் கண்ணீரால் நிரம்ப, சட்டென்று புன்னகைக்க ஆரம்பித்தார். “பாரு, எஸ்தரு உன்ன தான் பாக்கா. அவ சொன்னது காதுல விழுகா சாலமா. ஊருக்கு ஒரு வாட்டி போய்ட்டு வந்திருகேன் மக்ளேன்னு கேக்கா. காதுல விழுந்துச்சா. எட்டி ஒனக்க மொவன் பக்கத்துல தான இருக்கான். அவன்கிட்ட பேசு.”, சாலமன் அப்பாவையும் அம்மாவையும் மாறிமாறிப் பார்த்தான். “எல்லாத்தையும் நானே சொல்லணும். பிள்ளைட்ட பேச எதுக்கு கெடந்து முழிக்காளோ. மக்ளே இந்தவாட்டி அவளுட்ட சொல்லிட்டேன். சாலமன் என்னதான் இருந்தாலும் நம்ம பிள்ளைலா? சொன்னா கேப்பான். நம்ம மொவன அப்படியா வளத்தோம். இன்னொன்னு ஜெனிபரும் பாவம், அவளையும் கூட்டிட்டுப் போவோம். அதுவும் அம்மைக்க வீட்டப் பாக்கணும்ன்னு அப்பப்போ சொல்லும், அது ஓடிஆடி திரிஞ்ச வீடுலா. அத வித்துட்டோம்லா மக்ளே. வெளிய இருந்து பாத்தா ஒன்னும் சொல்லமாட்டாங்க. நானும் எஸ்தருட்ட இப்போ சொல்லிட்டு இருந்தேன். கடையப் போய் பாக்கணும், பத்து வருஷம் ஆச்சு. ஒருவாட்டிப் போய் பாத்துட்டு வந்துருவோம். அப்பா தொந்தரவு பண்ணுகேன்னு நெனைக்காத மக்ளே. உங்க அம்மையும் வீட்ட ஒருவாட்டிப் போய் பாத்துட்டு வந்திருலாம்ன்னி சொல்லுகா. எப்போவும் இப்படித்தான் அவளுக்கு என்ன வேணும்னாலும் நேரா கேக்க மாட்டா. எனக்க பொறத்தால நின்னுட்டு.” மென்மையான குரலில் சொன்னார்.

இதைக் கேட்டதும் சாலமன் ஓரமாகப் போய் அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கலங்க ஆரம்பித்தன. வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தான். விவேக் வீட்டிற்குள் வருவதும், அவனுடைய அப்பா தாமஸுடன் பேசுவதுமாகக் காட்சிகள் வேகமாக நகர்ந்தன. ஜெனிபர் வீட்டிற்கு வந்ததும் விவேக்கிடம் பேசினாள். கண்கள் கலங்கியிருந்தாலும் முகம் மலர்ந்தது. சாலமன் எதையுமே உள்வாங்கிக் கொள்ளாமல் அப்பாவையும் அம்மாவையும் வெறித்துக்கொண்டிருந்தான்.

வீட்டின் வாசலில் ஆம்புலன்ஸ் வந்ததும் இரண்டு ஆஜானுபாகுவான ஆட்கள், தாமஸிடம் பேசிவிட்டு ஃபிரிசெரைத் தூக்கிச் சென்றனர். ஜெனிபர் கையில் இரண்டு பேக்கோடு அவர்கள் பின்னால் சென்றாள். சாலமன் எதையோ உணர்ந்தவன் போல ஓடிச்சென்று, தாமஸைத் தாங்கிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கவும், தாமஸ் அவனிடம் கேட்டார், “மக்ளே நீயும் ஊருக்கு வாறியா? எஸ்தர் சந்தோசப்படுவா”,

“வாரேன்பா, வாரேன்” அவரைக் கட்டியணைத்து அழுதான்.

“எங்க தங்கமொவன்லா.. அழாத மக்ளே” தாமஸ் அவன் தலையை வருடிவிட்டார்.

விவேக்கும் அவன் அப்பாவும் முறையே சாலமனையும் தாமஸையும் அழைத்துச் சென்றார்கள். ஆம்புலன்ஸில் ஏற்கனவே எஸ்தர் ஏற்றப்பட்டிருந்தாள். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

“அப்பா. நீங்க காருல வாங்க. நா ஆம்புலன்ஸ்ல முன்னாடி உக்காந்து வாரேன்” சாலமன் அழுத முகத்தோடுச் சொன்னான்.

“இல்ல மக்ளே. ஒனக்கு அறியாததா. எஸ்தருக்கு ஒத்தைல இருக்க பயமுண்டு. பதிமூனு மணி நேரம் ஆகும்லா ஊருக்கு போக. நானும் அவளுட்ட பேசிட்டே வந்தேன்ன்னா எனக்கும் நேரம் போய்டும். நா பின்னாடி எஸ்தர் கூட ஒக்காந்துக்கேன். மொவன் முன்னாடி ஒக்காந்துக்கோ. அப்புறம்..” ஒரு நிமிடம் எதையோ யோசித்தவர், “மேரி இங்க வா மோளே”

அவர்களை கவனித்துக்கொண்ட பணிப்பெண்ணை அருகில் அழைத்தார். அவள் அருகே வரவும், “எஸ்தரு ஒங்கிட்ட சொல்லிட்டே இருப்பால்லா வீட்டுக்கு போகணும்ன்னு.. பாத்தியா நாங்க பிரயாணம் போறோம்” அவரின் முகம் புன்னகையில் நிரம்பியது.

***
வைரவன் – சொந்த ஊர் ஒழுகினசேரி, நாகர்கோயில். பணி நிமித்தமாய் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது முதல் நூல் “பட்டர் பீ & பிற கதைகள்” அண்மையில் வெளியானது. மின்னஞ்சல்: vairavanlr@gmail.com