Home Blog Page 31

1929

0

பிரமிளா பிரதீபன்

ம் பேரு தாரணி. தாரணி யசோதரன்”

இல்லையில்லை.. இவ்வளவு தெளிவாக ஒரு பைத்தியம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டாது. பின் எப்படித் தொடங்குவதாம். இவர் மிகப் பிரபல்யமான மனோத்துவ ஆலோசனையாளர் என்பதால் ஒரே பார்வையில் கண்டுபிடிப்பாரோ!

“ஒன்னுமே சொல்லாம நிண்டா சரியா இருக்குமா? “இல்லல்ல… எம் பேரு தாரணி. நா அவ்வளவா படிக்காதவ. ஆனா எம்புருசன் நல்லா படிச்சவரு…’ ச்சே புருசன பத்தியெல்லாம் எதுக்கு பேசணும்?”

அடுத்ததாய் தாரணிக்கான அழைப்பு எனும் எச்சரிக்கையுணர்வே அவளுக்குள் வேடிக்கையான எண்ணங்களையெல்லாம் தோற்றுவிக்கத் தொடங்கியிருந்தது. பதட்டத்தை உள்ளங்கைக்குள் பொத்திப் பிடித்தவளாய் அமர்ந்திருந்தாள்.

பேசாமல் எழுந்து ஓடிவிட்டால் என்ன?

நானொரு பைத்தியக்காரியாய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் தானென்றாலும், வெகு சாமர்த்தியமாய் அவற்றை மறைத்துக்கொள்ள விரும்பினேனே தவிர வெளிப்படுத்தவல்ல… ஒரு பைத்தியக்காரியை நிச்சயமாய் எவருமே அனுமதிக்கவோ விரும்பவோ போவதில்லை.

ஓடிவிடலாமா?

நிஜத்தில் பைத்தியக்காரத்தனம் தானா இது? அல்லது அதி புத்திசாலித்தனமா? அறிவற்ற பூஜ்ஜிய மனநிலையா? மதியின் மேம்பட்ட எண்ணச் செறிவா? அதனிலெல்லாம் ஆழமானதா? கற்பனாவாதத்தின் உச்சமா? சாராசரி மனநிலையை மிஞ்சிய ஆன்மீக வெளிப்படுத்தலா?

என்றாலுமே யாருக்குமே தெரியாத பைத்தியமாய் அவ்வப்போது உருமாறும் தேர்ச்சியும் மிக அத்தியாவசிமானது தானோ!

“சந்தியா ஒங்கள பத்தி சொல்லிருக்காங்க டொக்டர்”

எதிர்பாரா விதத்தில் அவளை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தாள். திட்டத்தில் இல்லாத புதிய அறிமுக யுக்தி. இவ்வளவு நேரம் கஷ்டப்பட்டு திட்டமிட்டிருக்க வேண்டாமோ!

“உக்காருங்க…. நீங்க தாரணி தானே!”

மனோத்துவ ஆலோசனையாளர் திரு.கயானுக்கு தன்னைத் தெரிந்திருந்தமை பற்றியும் அவரது சினேகமான சிரிப்பு அறையெங்கிலுமாய் வழிந்தமை பற்றியும் ஆச்சரியமாகவே தோன்றியது.

கூடவே அந்த அறையில் தெரிந்த பளீர் நேர்த்தி சங்கடத்தைத் தருவதாயிருந்தது. அவ்வளவு ஒழுங்கு. ஒருபுறம் நீள்வாக்கு கண்ணாடி யன்னலில் தெரியும் வெளிக்காட்சி. இன்னதென்ற அடையாளமற்று சுவரை நிரப்பிய அம்சமான தைல ஓவியம். அதில் வளைந்தாடும் உருவமாய் பெண்ணொருத்தி தெரிவது போலிருந்தாலும் அதுவொரு பெண்ணல்ல போலவுமாய்.

ஆமாம் நிறங்கள் சிதறி வடியும் உருவற்ற பெருந்தொடர்ச்சி. ஒருவிதமான ஊதா கலந்த இளநீலத்திற்கு என்ன பெயர். அவ்வளவு எடுப்பாய் இருக்கிறதே!

பரவிக் கொண்டிருக்கும் இந்த மெல்லிய வாசனை செயற்கையானதா இல்லை இச்செடிப்பூக்களினதா? செடிக்கருகாமையிலுள்ள மூலைச்சுவரில் சில புத்தகங்களும் சுவர் கண்ணாடியும் இருந்தன. புத்தர் படம் போட்ட கருநீல அட்டையுடைய புத்தகம் மாத்திரம் வெளியே இழுப்பட்டிருந்தது. சற்றே எக்கிப் பார்த்தால் கண்ணாடியில் இடுப்புப் பகுதி தெரிந்தது. இதற்குள் எதற்கொரு கண்ணாடி? அழும் மூஞ்சிகளை பார்த்துச் சிரித்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்களோ! மேசைக்கடியில் ஒரு மஞ்சள் வண்ண உறை கொண்ட லோலிபப் கிடந்தது. சிறுவர்கள் யாரேனும் தவறவிட்டிருக்கக் கூடும். குனிந்து அதனை எடுத்துப் போட்டாலென்ன? அது முறையல்ல. அதற்காக அது அப்படியே கிடக்கட்டும் என விடுவதும் முறையல்லவே!

வைத்தியருக்கும் நோயாளிக்குமான கதிரைகளின் இடைவெளி மிகக் குறைவானதாய் இருந்ததுடன் வழமை போலல்லாது அவை சாய்வு கதிரைகளாவுமிருந்தன. ஆச்சரியந்தான்.. யாரும் சொல்லாமலேயே அவளும் சாய்ந்து ஆசுவாசிக்கும் தோரணையிலேயே அமர்ந்திருந்தாள். இயல்பாகவே ஒரு ஒத்துணர்வு ஏற்பட்டுப் போனதோ!

ஏதும் பேசாமல் நீளும் இந்த இடைவெளி பற்றி இவர் ஏன் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. எனது தற்போதைய தேவையென்பதாய் நினைக்கிறாரோ? இருக்கட்டும்… இருக்கட்டும்.

தாரணி பெருந் தயக்கத்துடனேயே தொடர்ந்தாள்.

‘“சேர்….. எப்பிடி ஆரம்பிக்குறதுன்னே தெரியல… எங்க தொடங்கி எப்பிடி சொல்றதுன்னு ஒன்னுமே புரியல… ஒரே வார;த்தையில சொல்லனுமுணா…”

அவ்வறைக்குள் வேறு யாராவது இருக்கிறார்களாவென மீண்டுமொரு முறை தேடிக்கொண்டே சற்று முன்னால் எக்கி மெதுவாகச் சொன்னாள்,

“எனக்கு பைத்தியமுனு நெனைக்கிறேன்”

கயான் அசாதாரணமான நிதானத்துடன் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“எவ்வளவு காலமா?”

“கொஞ்ச காலமா….. இப்ப கூடிருச்சு”

“பைத்தியம்னு ஏன் முடிவு பண்ணீங்க?”

அவள் மீண்டும் அறையின் திசைகளை கவனித்து யாருமில்லையென உறுதிபடுத்திக்கொண்டே தொடர்ந்தாள்.

“ரொம்ப கோவம் வருது. கைல கெடைக்கிறத தூக்கி அடிக்கிறேன். சத்தம் போட்டு கத்துறேன். எம்புள்ளய அடிச்சு காயப்படுத்திகூட இருக்கேன். புள்ளைய கண்டாலே சமயத்துல தலய பிய்க்கிற கோவம் வர்ற மாதிரி இருக்கு. இந்த பழக்கமெல்லாம் எம்புள்ளய ரொம்ப பாதிக்குதுன்னு நெனைக்குறேன் சேர்”

“பாதிக்குதுன்னு தெரிஞ்சா எதுக்காக செய்யணும்?”

அவள் திடுக்கிட்டு அமைதியாகினாள்.

“சரி….. மகளுக்கு எத்தன வயசு”

“பன்னண்டு முடிஞ்சு பதிமூனு வருது”

“அப்போ கோபப்படுறத நிறுத்த முயற்சி செஞ்சா சரியா போயிடுமில்லயா?”

“இல்ல… அததான எனக்கு கண்டுபிடிச்சுக்க முடியல. மூச்செடுக்கையில அடைக்கிறாப்ல… எங்கயாவது ஓடிரலாம் போல… என்னத்தயெல்லாமே யோசிக்கத் தொடங்கிட்டேன். சரியா தூங்க, சாப்பிட, பேச எதுவுமே முடியுதில்ல… கடைசிலதான் இப்பிடி…. எனக்கு பைத்தியமுனு….”

“இங்க பாருங்க தாரணி. நீங்க ஒரு வேலையில இருக்கிறீங்க. உங்களுக்கு வீட்டையும் வேலையையும் ஒன்னா பாத்துக்கிறது கஷ்டமா இருக்கலாம். அந்த சமயத்துல நீங்க சொல்றது எல்லாமே சாத்தியம்தான். அதுவுமில்லாம அறிவு நிலையிலிருந்து உயர்ந்த மனநிலை கூட ஒருவகையான பைத்தியம்தானே! கொஞ்சம் வித்தியாசமா யோசிக்க தெரிஞ்சவங்க எல்லாம் தங்கள பைத்தியம்னு சொல்லத் தொடங்கிட்டா உலகத்துல பாதிபேர் பைத்தியமாதான் இருக்கணும் இல்லையா?”

தாரணி அர்த்தமற்ற பதட்டத்துடனேயே இருந்தாள். இடைக்கிடையே பேக்கிலிருத்த தண்ணீர் போத்தலை எடுத்துக் குடித்துக்கொண்டாள்.

“உங்க ஹஸ்பண்ட் என்ன பண்றார்? அவரோட ஏதும் பிரச்சனைகள்?”

“ச்சே அவர் என்னயும் ஒரு கொழந்தய போலதான் கவனிச்சுக்குறார். அவரால எதுவுமே இல்ல.”

“அப்ப உங்க கோபம் தொடர்பா எதுவும் அவருக்கு தெரியாதா?”

“அத எப்பிடி சொல்றதுன்னா… எனக்கு எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கணும். தரையில ஒரு முடி விழுந்திருந்தா, தூசி படிஞ்சிருந்தா, வச்சது வச்ச இடத்துல இல்லன்னா… இதெல்லாம் எனக்கு புடிச்சிக்காது. செருப்ப கழட்டி ஒரே வாக்குல நேரா அடுக்கி வைக்காட்டி கூட என்னால ஏத்துக்க முடியல. அவ்வளவுக்கு சரியா இருக்கணுமுன்னு நெனைப்பேன். சோறையும் கறியையும் ரொம்ப பெசைஞ்சு யாரும் சாப்புடறத கூட ஏத்துக்க முடியல. எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கனுணுமுனு தோனும். இப்பிடி யோசிக்கிறதாலதான் வீட்டுக்குள்ள சண்ட கூட வருது. அத்தோட அதையெல்லாம் வேற எப்பிடி சொல்றதுன்னு புரியல்ல. இன்னோங் கூட நெறைய சொல்லிக்கலாம்.”

அவள் தடுமாறினாள். வார்த்தைகள் பதட்டமாக வந்து விழுந்தன. எதைச் சொல்வதென்று தெரியாத தவிப்புடன் பல சம்பவங்களை முன்னும் பின்னுமாக மாற்றி மாற்றிச் சொன்னாள்.

“பொறுமையா சொல்லுங்க… சண்டை எப்பிடி வருது?”

“சொல்லலப் போனா பிரச்சின தொடங்குற எடமே எம் பழக்க வழக்கந்தான். நான் நெனைக்கிற புள்ளையா எம்புள்ள இல்ல. அவ ரொம்ப குழப்படியா இருக்கா. சரியா எல்லாம் செஞ்சிக்குவான்னு எதிர்பார்க்குறேன். அவரும் எனக்காக ரொம்ப சமாளிக்கிறாரு. ஆனா எதுவுமே நெஜமா இல்ல. எனக்காக எல்லாரும் நடிக்கிறாங்க. எங்கிட்ட உண்மையா இல்லன்னு தோனுது. எனக்கு தெரியல… இதெல்லாம் சரியா சொல்றேனான்னு தெரியல”

இல்லாத வியர்வையைத் துடைத்துக்கொள்வதாய் பட்டது. இருந்தாலும் வலது கையால் முகத்தை அழுந்தத் துடைத்தவாறே முடியைப் பின்னால் அமத்தி விட்டாள்.

“மகள் என்ன தப்பு செய்றாள்னு நினைக்கிறீங்க?”

“எத சொல்றது…? இப்டி வச்சிக்குவோம். சில நேரத்துல மரக்கறி சாப்புட மாட்டா. ஊட்டிவிட சொல்லுவா ஊட்றது சரியில்லன்னு சொன்னா கோவப்படுறா. எதிர்த்து பேசுறா. புள்ளைக்கு தேவையானதை தெனமும் பார்த்து பார்த்து செய்றேன். அளந்து அளந்து கொடுக்குறேன். ஆனா பூடு, கிராம்பு இதையெல்லாம் சாப்புட சொன்னாக்கூட புள்ளைக்கு புடிக்குதுல்ல. தெரியாம வீசிப்போட்டதை ரெண்டு முறை கண்டுபிடிச்சிட்டேன்.”

“கண்டுபிடிச்சி…..!”

“பயங்கரமா அடிச்சேன். கள்ளத்தனம் செய்றத என்னால ஒத்துக்க முடியல. ஆனா நான் கோவத்துல அடிக்கல்ல.”

அவள் அனேகமாக வேறெங்கேனும் ஒரு திசையை நோக்கியவாறே பேசிக்கொண்டிருந்தாள். அவரை நேரே பார்த்துப் பேச அமையும் போதெல்லாம் அவசியமேயற்ற தடுமாற்றத்துடன் குனிந்தும் நிமிர்ந்துமாய் பேசினாள்.

இன்னும் ஏதோவெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டார்கள். பின் ஒரு வாரத்திற்கு பிறகு சந்திக்க வேண்டிய தினத்தையும் நேரத்தையும் தீர்மானித்து விடைபெறும் போது அவள் அழுததற்கான அடையாளம் முகத்தில் தேங்கியிருந்தது. அவளும் ஓரடி பின்னால் சரிந்து கண்ணாடியில் தன் பிம்பத்தைத் திரும்பிப் பார்த்தாள்.

*

உடலில் எப்பாகத்தின் கனதி குறைந்ததென்று தெரியவில்லை. தூக்கி வைத்திருந்த பெருங்கல்லொன்றைத் தட்டியடித்து வெடிக்க வைத்தாயிற்று. இனியென்ன? துண்டு துண்டாக பெயர்த்தெடுத்து வீசிவிடுவது தானே! எத்தனையோ திட்டங்கள் குடைந்தபடியே இருந்தன. அதுவாக அதன்படி நடக்கட்டுமென அவற்றை புறந்தள்ளினாள். வாசலில் போடப்பட்டிருந்த மிதித்துணி சுருண்டிருந்தது. காலால் அதனை விரித்து நேர்படுத்தினாள்.

இன்னும் இருபது நிமிடங்களுக்கிடையில் அவன் வந்துவிடக் கூடும். அடுத்தடுத்ததாக ஏகப்பட்ட ஏவல்களை குழந்தையிடத்தே வீசியபடியே வேலைகள் செய்தாள்.

“அப்பா வருவாரு டிவிய நிப்பாட்டு”

“அப்பா வர மொதல்ல குளிச்சிரு”

“அப்பா வரப்போராரு புத்தகத்த எடு”

“தலகாணிய பாரு அப்பா வந்துருவாரு எடுத்து வை”

எல்லாம் சரியாகவிருப்பதை உறுதிபடுத்திக் கொண்டாள். சாப்பாட்டு மேசையில் பொருட்களேதும் இல்லை. தும்புத்தடி நிலத்தில் படாமல் தொங்கியது. யன்னல்கள் சரியாக மூடப்பட்டிருந்தன. தேவையற்ற மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. குசினி குழாயில் தண்ணீர் சொட்டவில்லை. குறிப்பாக மிதித்துணிகள் சுருங்கியிருக்கவில்லை.

குளித்துத் தூய்மையானாள், பிள்ளையையும்.

குடிக்காமலிருந்த சளி மருந்து அப்படியே கிடந்தது. ஆண்டவா! சட்டென எடுத்து மறைத்து வைத்தாள். பிள்ளை படிப்பில் மூழ்கியதாய் பாவனை செய்வது போலிருந்தது. இருக்கட்டும் பிறகு பேசிக்கொள்ளலாம்.

அவன் உள்நுழையும் போது சிரிப்பால் வரவேற்றாள். பிள்ளை நிமிர்ந்து ஒருதடவை சிரித்துப் பின் குனிந்தது.

“படிக்கிறியா நடிக்கிறியா? மொதல்ல ஒழுங்கா உக்காரணும் அப்பத்தான் படிப்பு மண்டைக்கு ஏறும். உக்காந்து படிக்கிற லெச்சணத்த பாரு…. இதெல்லாம் ஒங்க கண்ணுக்கு தெரியவே தெரியாதா?” தாரணியையும் திட்டியபடி பிள்ளையின் தலையில் பலமாக ரெண்டு போட்டான்.

அவர்கள் ஒரு ஒழுங்கு முறையில் இயங்கினார்கள்… சிரித்தார்கள்… சாப்பாட்டு மேசையை சாப்பிடவும் சோபாவை டிவி பார்க்கவும் பயன்படுத்தினார்கள். ஓய்வெடுக்கவும் சரியான அளவில் நேரமொதுக்கிக் கொண்டார்கள்.

சமையலறை யன்னலில் அரிசி பருக்கைத் தேடும் குருவியொன்று இரவு நேரத்திலும் வந்து கண்ணாடியை கொத்திப் பார்த்துக்கொண்டிருந்தது. எழுந்து போய் ஒருபிடி அரிசியை விசிறத் தோன்றினாலும் அக்குருவி ஏமாறப் போகிறதா அல்லது அங்கு கிடைக்கும் ஏதேனும் ஒன்றைக் கொத்தி திருப்தியுறுகிறதாவென காண ஆவல் கொண்டவளாய் பேசாதிருந்தாள்.
குருவியின் அசைவு இருளுக்குள் பெரிதாகி தெரிந்தது. தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க பயமாகவும் அருவருப்பாகவும் கூட இருந்தது. விரட்டி விடுதலுக்கும் மனம் ஒப்பவில்லை. அப்படியே அசையாதிருந்தாள்.

இரவு நேரத்தில் ஏன் குருவி வருகிறதென்று அவன் சந்தேகத்துடன் அவளைக் கேட்டான். எந்நேரமும் அரிசி வீசப்படுவதால்தான் அது வரப் பழகியிருக்க வேண்டுமெனும் புதுக் காரணத்தைக் கண்டுபிடித்தான். அதையே திரும்பத் திரும்பச் சொன்னான். இடையில் அரிசி இன்னுமே மிஞ்சியிருக்கிறதாவென யன்னலைத் திறந்து தேடினான். ஒரு பருக்கை கூட கிடைக்காத ஏமாற்றத்தை குருவியின் மீதாக்கித் திட்டினான். வேகமாக அது அரிசி பருக்கைகளை விழுங்குவதை தான் அவதானித்ததாக இரண்டொரு முறை கூறிக்கொண்டான்.

பழங்கள் சாப்பிடப்படாமல் அப்படியே இருப்பதாகக் கூறி பேச்சை வேறு திசைக்கு மாற்றி திட்டத் தொடங்கினான்.

சமயம் பார்த்து தாரணி ஆரம்பித்தாள்.

“நம்ம எல்லாருமே ஏதோ வகையில உளநலம் பாதிக்கப்பட்டுதான் இருக்றோமாம். இது பெருசா வெளியில தெரிஞ்சிக்காட்டியும் மத்தவங்களுக்கு அது பிரச்சனையா ஆகாட்டி வெளிய தெரிஞ்சிக்க வாய்ப்பே இல்லன்னு சொல்றாங்க. அப்பிடி மத்தவங்களுக்கு பிரச்சன தருவதாயிருந்தா ஒடனே மருந்து எடுக்கணுமாம். டொக்டர பாக்கணுமான்னு சொல்றாங்க”

“யாரு சொல்றாங்க?”

“ஒரு புத்தகத்துல படிச்சேன்.”

“இத புத்தகத்துல வேற படிக்கணுமா? நாந்தா சொன்னேனே ஒனக்கு நெறய பிரச்சின இருக்குனு”

“ம்ம்… பிரச்சனதானே! இதுக்கு OCD இல்லன்னா OCPD -ன்னு பேராம். இது வாறதுக்கான காரணம் சரியா இதுதான்னு இல்லையாம். ஆனா ஏராளமானவங்களுக்கு இருக்குமாம். ரொம்ப சுத்தமா இருக்கணுமுன்னு நெனக்கிறது… வச்சது வச்ச மாதிரியே இருக்கணும்… அப்பறம் எல்லாமே ஒரே ஒழுங்குல நடக்கும்னும் நமக்கு புடிச்ச மாதிரியே மாத்தணும்னு யோசிக்கிறது. இன்னோ நெறய்ய..”

அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவள் தொடர்ந்தும் சொல்லத் தொடங்கியிருந்தாள்.

“வெளிய தெரியாட்டியும் இதெல்லாம் மத்தவங்களுக்கு தொல்லையான விசயந்தா பாருங்க. ரொம்ப நேரமா கை கழுவுறது… அளவுக்கு அதிகமா குளிக்கிறது… எல்லாரும் நமக்கு தகுந்தாப்பல மாறணும்னு நெனச்சிக்கிறது இப்படியெல்லாம் கூட அதுக்குள்ள அடங்குது பாருங்க”

“அப்படியெல்லாம் பாத்தா வாழ முடியுமா சொல்லு?”

“அதென்னமோ வாஸ்த்தவந்தா. ஆனா நமக்கும் அதெல்லாமே இருக்குதுன்னு நெனச்சா கொஞ்சம் பயமா இருக்கு.”

“நமக்குன்னு ஏன் என்னய சேத்துக்கற? எனக்குன்னு ஒன்னய வேண்ணா சொல்லிக்க”

அவன் எரிச்சலடைந்தவனாய் காட்டிக்கொண்டான். அவனுக்கு இவ்வுரையாடலில் நாட்டமில்லையென்பதை வேறுவகையில் வெளிப்படுத்தினான். கொட்டாவி விட்டான். உடல் நெளித்தான். கைத்தொலைபேசியை நோண்டி ஏதோ வீடியோ பார்க்கத் தொடங்கியிருந்தான்.

தாரணி வைத்தியர் பேசியவற்றை மீட்டிக்கொண்டே படுக்கையில் சாய்ந்தாள்.
‘OCD-ல பாதிக்கப்பட்டவங்க அர்த்தமேயில்லாத முட்டாள்தனமான ஏதாவது செஞ்சிட்டே இருப்பாங்க. அதனால நடக்கவிருக்குற கெட்டதுகளை கட்டுப்படுத்திட்டதா இல்லன்னா அவங்க இருக்குற இடத்த அவங்க பாதுகாக்குறதாவும் நினச்சிப்பாங்க. சொல்லப்போனா அப்பிடி நினைக்கையிலதான் அவங்களால பதட்டமில்லாம இருக்க முடியும். இதெல்லாம் விட்டுர நினச்சாலே பெரிய பீதியில் பதறி ஓய்வா சந்தோசமா இருக்கவே முடியாம தவிப்பாங்க”

இன்னும் எவ்வளவோ சொன்னாரே.. உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமுமாம். பிள்ளை என்னத்த செஞ்சிச்சின்னு அத போட்டு தண்டிக்கணும்?

பிள்ளையிடத்தே போய் படுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. திட்டுவானே. ஒரு வயசுக்குப் பின் தனியா விடுறது ரொம்ப கட்டாயமாம். இடைக்கிடை போய் தொந்தரவு செய்யவும் கூடாதாம். அவங்க ஆரோக்கியத்துக்கு நல்லதில்லையாம்.

பலமாக தலையில் அடித்தானே. வலித்திருக்குமோ! பிள்ளை எதுவுமே சொல்லிக்கொள்ளவில்லையே?

இறக்கி வைத்ததாய் எண்ணிக்கொண்ட பாரம் மிகப்பலமாக நெஞ்சை அழுத்தியது. சாய்ந்துகொள்ள முடியாமல்… கைகால்களை அசைக்கக்கூடத் தோன்றாமல் படுத்திருந்த பக்கவாட்டு கன்னத்தில் இருதுளி கண்ணீர்த் திவலைகள் உருண்டு அதே இடத்தில் படிந்து தேங்கின. அத்திவலைகளின் அடர்த்தி அனாயாசமானதாகப்பட்டது. அதனைத் துடைத்தெறியும் முயற்சியைக்கூட வெறுத்தவளாய் அப்படியே கிடந்தாள். வைத்தியரின் அறைக்குள் தென்பட்ட புத்தரின் உருவம் கொண்ட அட்டைப்படம் மனதிற்குள் நிழலாடியது. சம்பந்தமேயில்லாமல் அந்த லோலிபப்பை அவர் எடுத்து என்ன செய்திருப்பார் என்று யோசித்தாள். விரக்தியான சிரிப்பொன்றை இருளுக்குள் வாயசைத்து வெளிப்படுத்தினாள். தனது முயற்சி ஸ்திரமற்று துவண்டு சரிவதாய் தெரிந்தது. மூச்சு முட்ட போர்வையைப் போர்த்தி அடர் இருளுக்குத் தாவினாள்.

*

அனுமானம் பொய்த்திருக்கவில்லை. ஏதோவொரு இடத்தில் இடறியது. சந்தேகத்தை உறுதிபடுத்த சந்தியாவுடனும் பேச வேண்டி நேர்ந்தது.

நிச்சயமாக தாரணிக்கு ஒரே ஒரு மகன்தான். மகளென தன் பிள்ளையை மாற்றிச் சொல்லியிருக்கிறாள். அல்லது தடுமாற்றத்தில்…. இல்லை தடுமாற்றத்தால் தொடர்ச்சியாகவே மகனை மகளாக்குதலுக்கான அவசியமென்ன? அதையும் விட சந்தேகத்திற்கான ஏராளமான இடங்களை அவள் மிச்சப்படுத்தியுமிருந்தாள்.
OCPD-யின் அறிகுறிகள் அவளிடத்தேயும் இல்லாமலில்லை. ஆனால் அனேகமாகப் பொய்களையே அவள் சொல்ல விழைவதாக இருந்தது. சொல்லப் போனால் ஆரம்பத்தை விட நாளாக நாளாகத்தான் அவளில் பதட்டமும் பயமும் அதிகரித்திருந்தது.

கயான் மேலதிகமாக சில மாத்திரைகளைப் பரிந்துரைத்தான். மாத்திரைகளைவிட தொடர்ச்சியான சந்திப்பே அதற்கான தகுந்த நிவாரணியென அடிக்கடி வலியுறுத்தும் போது அவளது தடுமாற்றத்தை அவதானித்தான். மூச்சுபயிற்சிகளையும் உடற்தளர்ச்சிக்கான பயிற்சிகளையும் மாற்றி யோசிக்கும் திறன்களையும் மெல்ல மெல்ல உணர்த்தி அவளைத் தெளிவாக்க முயற்சித்தான்.

அவர்களது சந்திப்பு இறுதிக்கட்டங்களை அடைந்துகொண்டிருந்தன. அவள் எல்லாவற்றையும் தொடர்பேயில்லாமல் சந்தேகம் கேட்டாள். மாத்திரைகள் பலனற்று போக வாய்ப்புள்ளதா? மாத்திரைகளை தண்ணீரில் அல்லது தேநீரில் கரைத்து குடிப்பதால் அதன் பலன் குறையுமா? சந்திப்புக்கு வராமல் மாத்திரை மட்டும் குடித்தால் சரியாகாதா? இன்னும் பலவற்றையிட்டும் குறைப்பட்டாள். தன்னிடத்தே ஒரு மாற்றமும் இல்லையென்பதாய் அழுது தன் பிள்ளையின் எதிர்காலம் பற்றியெல்லாம் பேசத் தொடங்கியிருந்தாள்.

“இப்பவெல்லாம் மர்மமா என்னென்னமோ நடக்கத் தொடங்கிருக்கு… நான் சொன்ன விசயத்த யாராவது கண்டுக்கலன்னா பயங்கரமா கோவிச்சிக்கிறேன். அடுத்த கட்டமா நான் எச்சரிச்ச விசயத்த நானே நடத்தி மத்தவங்கள திட்டித் தீர்த்துக்குவேன். எப்பிடியாவது நான் சொன்னது சரின்னு நிரூபிக்க என்னவெல்லாமோ பண்றேன். அப்பிடின்னா… ஒங்களுக்கு இது புரியல்லயோ தெரியல்ல… நடந்த ஒரு விசயத்த சொன்னா ஒங்களுக்கு வௌங்கிரும் சேர்.”

மிகவும் பதறிப் போனவளாய் பேசிக்கொண்டிருந்தாள். கைகளை அசைத்து அசைத்து நிலை தடுமாறியவளாய், குரலில் சிறுநடுக்கம் தொற்றியிருந்தது.

“இப்ப பாருங்க… தண்ணி க்ளாச மேசையில வைக்க வேணான்னா, யாருமே கேட்ட பாடா இல்ல… அப்பறம் யாருக்கும் தெரியாம நானே அத கீழ தள்ளிவிட்டுட்டு சத்தம் போட்டு கத்துவேன். கடைசில எல்லா குத்தமும் என் பொண்ணு செஞ்சதாதான் மாறியிருக்கும். நான் செய்யலம்மான்னு அவ எவ்வளவு சொன்னாலும் புள்ளவுட்டு பேச்சு எடுபடாம போகும். அப்பறம் கோவம் தெறிக்க கண்ட எடத்துல அடிச்சு புள்ளய காயப்படுத்துவேன். அத்தோட போச்சின்னு கோவம் தீந்தாலும் பரவால்லயே! கத்தி வீட்டயே ரெண்டாக்கி போட்ருவேன். இப்பிடியெல்லாம் எதுக்கு நடக்குதுன்னு ஒன்னுமே புரிய மாட்டிங்குதே…!”

அவள் வெடித்தழுதாள். இயலாமையின் அந்தரத்தில் எங்கேனும் ஒரு பிடிமானம் கிடைக்காதாவெனும் இறுதித்துளி நம்பிக்கையில் அமர்ந்திருந்தாள்.

எல்லாமே எதிர்பார்த்ததுதான். நிலமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் என்ன? தாரணி சொன்ன அத்தனை பொய்களிலும் ஒரே ஒரு பொய்யைத்தானும்தான் கண்டுக்கொண்டதாய் கயான் கடைசிவரை காட்டிக்கொள்ளவில்லை.

எனினும் ஒரு தடவை கேட்டுப்பார்த்திருக்கிறான்.

“உங்க குடும்பத்தை நான் சந்திக்கணும். கூட்டி வர முடியுமா?”

உயிரற்ற வெற்றுச் சிரிப்பொன்றை உதிர்த்தவாறே சரியென்றாளே தவிர செய்யவில்லை. செய்வாளென்ற எதிர்பார்ப்பும் அவனுக்கு இருக்கவில்லை.

ஒன்றிற்குமே பிடிபடாத சில அவஸ்தைகள் வெளிப்படும்போது… வேறு வழியே இல்லை எனும் சூழ்நிலை உருவாகும் போது… இச்சம்பவங்களை ஆய்ந்தறிந்த ஒரு நபராக…. வேறென்ன செய்துவிட முடியும்?

வழமையாகச் செய்வதுதான்.

கயான் 1929 இலக்கத்தை அமத்தி பேசத் தொடங்கியிருந்தான்.

***
*1929 – இலங்கைச் சிறுவர் பாதுகாப்பு உடனடித் தொடர்பிலக்கம்

பிரமிளா பிரதீபன் – இலங்கையில் உள்ள வத்தளையைச் சேர்ந்தவர். தற்பொழுது ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது விரும்பித் தொலையுமொரு காடு யாவரும் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது மின்னஞ்சல்: pramilaselvaraja@gmail.com

ட்ராமா குயின்

1

ரம்யா

முதன்முறையாக அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பு பேருந்து ஏறி அமர்ந்த கணம் தோன்றியது. அவளின் தாட்டீகமான விரிந்த மார்பையும், கட்டுமஸ்தான தேகத்தையும் கணீரென்ற குரலையும் மேடையையே ஆக்கிரமித்து நடிக்கும் அவளின் ஆளுமையையும் அவளின் நாடகத்தை நேரில் கண்டவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.விளம்பரப்படங்களில், செய்தித்தாள்களில் அவளைப் பார்த்திருக்கிறேன். அழகி, வடிவானவள் என என்வரையில் சொல்லிவிட முடியாது. அவளுடைய அழகெல்லாம் அவளின் ஆணவத்திலிருந்து வருவது என்று மட்டும் சத்தியமாகச் சொல்ல முடியும். குழைந்து உருகும் பெண்கள் எத்தனை அழகானாலும் ஆண்களுக்கு துச்சம்தான். பாலாமணிக்கு உடல் மேலான போதம் இருப்பதாக எந்த புகைப்படத்திலும் நான் கண்டதில்லை. அப்படியொரு கர்வமாக நின்றிருப்பாள். விரிந்த மார்பு கொண்ட அத்தனை பெண்களிலும் தெரியும் இயல்பான நிமிர்விற்குமேல் அவள் தன் கலையையும் செல்வத்தையும் சேர்த்துக் கூட்டிய ஆணவம் ஒன்றைக் கை கொண்டிருந்தாள் என்றே எப்போதும் நினைப்பேன். அதுதரும் சீண்டலே என்னை அவளிடமிருந்து விலக்கி வைத்திருந்தது.

நாடகக்காரர்கள் அனைவரும் இப்படி புகழையும் பணத்தையும் அடைந்துவிடுவதில்லை. என்னைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்தானே என்ற பொறுமல் எப்போதும் என்னிடமுண்டு. வேலை நிமித்தமாக எத்தனை முறை பாலாமணி சூப்பர் எக்ஸ்பிரஸில் கும்பகோணம் போயிருந்தாலும் அவளின் நாடகத்தைக் காணத் தோன்றியதேயில்லை. நிர்வாணமாக ஒரு காட்சியில் தோன்றுவதாக விளம்பரம் செய்யப்பட்ட அவளின் நாடகத்தை நான் பார்க்கச் செல்கிறேன் என வெளியில் சொல்லிக்கொள்வதை கெளரவக் குறைச்சலாகக் கருதியவனாக இருக்கலாம். ஆனால் என்னைப் போலவே அப்படி வெளிக்காட்டிக் கொண்ட பலரும் திருட்டுத்தனமாகப் பார்த்துவிட்டார்கள் என்ற விஷயமும் தெரிந்துதான் இருந்தது.

தாராஷஷாங்கம் நாடகத்தில் பாலாமணி நிர்வாணமாக நடித்தபின் அனைவரும் பேசும் பொருளாக மாறிப்போனாள். அதன்பின் ஆவளின் வளர்ச்சி அசுர வேகமாக இருந்தது.“பெண்களே ஆண் வேடம் போடுகிறார்களே அதைப் பார்க்க!, பெட்ரோமாக்ஸ் லைட்டுன்னு புதுசா அறிமுகப்படுத்தியிருக்கா அதைப் பார்க்க! மனைவிக்கு பாலாமணி சாந்து வாங்க” என எத்தனையோ காரணங்களைச் சொல்லி அவளைப் பார்க்க வைக்கத்தான் அவளும் தினுசு தினுசாக நாடகங்களைப் போட்டுக்கொண்டிருந்தாள். என்னுடன் இருக்கும் நண்பர்கள் அவளின் நாடகத்திற்கு மெனக்கெட்டு ரயிலேறிச் சென்று பார்த்தார்கள். ஆனால் எந்த நாடகக்காரனுக்கும் அல்லது அறிவாளி என காட்டிக் கொள்பவனுக்கும் அவளை, அவள் நாடகத்தை வெளியில் புகழ்வதில் சிக்கல் இருந்தது.

எனக்குக்கூட ஏன் இந்த வீம்பு என அண்ணாச்சி சொன்ன போதுதான் புரிந்தது. அண்ணாச்சி கொடுத்த கடுதாசி இருக்கிறதா என சட்டைப் பாக்கெட்டை சரிபார்த்துக் கொண்டேன். சுவாமிகளின் மரணத்திற்குப் பின் நொடிந்துபோன நாடகக் கம்பெனியை மீட்க அண்ணாச்சி மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது நாடகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் பாலாமணியை நாடகம் போட அழைக்கலாம் என்ற யோசனையை அண்ணாச்சி எடுத்ததற்குப் பின்னால் என்ன காரணம் என என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லா முடிவுகளிலும் அவர் காட்டும் தீர்க்கம் போலவே இதிலும் தீர்க்கமாக நின்றிருந்தார்.

“அவள கூப்பிடத்தான் வேணுமா? அவ பொம்பள ஒரு மாதிரி. ஏற்கனவே அவள பத்தி இருக்கற சேதியெல்லாம் உங்களுக்கு தெரியாம இல்ல. இப்ப நீங்க நாடகம் போட கூப்பிட்டீங்கன்னா கத கட்டீருவானுக” என முகத்தை சலிப்பாக வைத்துக் கொண்டு சொன்னபோதும் அவர் சலனமடையவில்லை.

“எந்த நாடகம் நடிக்கற பொம்பளய பத்தி தான் நம்ம ஆளுங்க நல்லா பேசிருக்காங்க. நாம கூப்பிடணுமா வேணாமான்னு இல்ல இங்க கேள்வி. அவ ஒத்துக்கிடுவாளா இல்லயான்னு தான் கேள்வி” என்றார் சுருக்கமாக.

அண்ணாச்சி அவளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு பிடிக்கவில்லை. ஒத்துக்கொள்ளும் அளவு என்ன பெரிய இவளா என மனதில் தோன்றியது.“ஆனா…” என நான் இழுத்துக் கொண்டிருந்தபோது இடையில் புகுந்து, “என்ன ஆனா… கம்பெனி நட்டத்துல போய்கிட்டு இருக்கு. சினிமா பக்கம் போய்ட்டு இருக்கற மக்கள நாடகத்துல இன்னும் கட்டிப்போடற வித்தய அவட்ட மட்டும் தான் தெய்வம் விட்டு வச்சிருக்கு. அவ மனசு வச்சா தான் இந்த கம்பெனி பொழைக்கும். நமக்கு தேவைப்படற அளவுக்கான பணத்த அவ நாடகம் போட்டாத்தான் இப்ப நெலமைக்கு வசூல் பண்ண முடியும்” என்றார்.

“அண்ணாச்சி… சுவாமிகள் கிட்ட நீங்க நாடகம் போட ஆரம்பிச்சதிலிருந்து உங்கள பாக்கறவன்ற மொறைல சொல்றேன். பொண்ணு வேஷத்தையும் ஆம்பளைங்கள போட வச்சு பய பக்தியா நாடகம் போட்டுட்டு வந்தவரு அவரு. தீட்டு பட்டுடக் கூடாதுன்னா சொல்றேன்” என தலையைக் கீழே போட்டுக்கொண்டே வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னேன்.

“பிள்ளே… பொண்ணு வந்தாலே தீட்டுன்னா கதைல ஏன் ஆம்பளைகள மட்டும் வச்சு எழுதவேண்டியது தானே. எல்லாத்துக்கும் நமக்கு பொம்பள வேண்டியிருக்கு. வெளில காட்டிக்கணும்னா தீட்டு. அப்படித்தானே.” என்றார். அதிர்ச்சியடைந்தவனாக நின்றுகொண்டிருந்தேன்.

“நெலம ரொம்ப மோசமா போயாச்சு பிள்ளே. மொதல்ல இங்கயிருந்து கிளம்பணும். திருப்பாதிரிபுலியூருக்கு ட்ரூப்ப அழச்சிட்டு போகலாம்னு இருக்கேன். என் நடிப்பு மேல நம்பிக்க இருக்கு. ஒரு நாடகத்த நடத்துற செலவுக்கான பணம் கிடச்சிடுச்சுன்னா போதும். மீண்டுடலாம். இன்னும் கடன் வாங்கி குவிச்சு செய்யற அளவு மனத்தைரியம் எனக்கில்ல. இந்த நாடகத்தால வாழ்ந்தவன விட கெட்டவன் தான் அதிகம். எனக்கு வாழணும்னு இல்ல. இந்த கலைய கடைசி வரைக்கும் செய்யணும். அவ்ளோதான். இதைத்தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கைகளைப் பிடித்துக்கொண்டார். கொஞ்சம் உணர்ச்சிவயமாகிவிட்டார் என்று புரிந்தது. மென்மையான இளம் கைகளே அந்த பதட்டத்தைக் கடத்தியிருந்தது. இத்தனை இளையவரை நான் அண்ணாச்சி என்பது எப்போதும் துருத்தித் தெரிந்ததில்லை. நடிப்பாலும் குணத்தாலும் எல்லோருக்கும் அவர் அண்ணாச்சி மட்டுமே. அவர் கைகளை இறுகப்பற்றி, “புரியுது அண்ணாச்சி” என்றேன்.

“நீயே நேர்ல போய் நம்ம கம்பெனி நெலமையையும், நாடகக்காரங்க நெலமையையும் எடுத்துச் சொல்லி அவகிட்ட நேரடியா சம்மதம் வாங்கிட்டு வரணும் பிள்ளே. இந்தக் கடுதாசிய நீதான் அவ கைல கொண்டு சேக்கணும்” என்று சொல்லி என் கைகளில் அந்த கடுதாசியைத் திணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். சிறிது தூரம் முற்றத்தை நோக்கிச் சென்றவர் திரும்பாமலேயே, “அங்க ஷாமண்ணா இருக்கார். அவர் பாத்துப்பார். இல்லைனாலும் அவ பெரிய மனச நம்பித்தான் உன்ன அனுப்பறேன் பிள்ளே. ஒனக்கு அவமானம் ஏதும் நடக்காது” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார். அந்த ஒரு காரணத்துக்காகவே நான் என்னை சமாதானம் செய்துகொண்டு அவளைப் பார்க்க இப்போது பஸ் ஏறியிருக்கிறேன்.

நாடகத்துறையில் பெண்கள் நுழைந்ததிலிருந்தே எல்லாம் கெட்டுவிட்டதாக நினைப்பவன் நான். இன்றும் கூட அந்த நினைப்பு மாறவில்லை.“தேவடியாள்கள் போடும் கூத்து” என நானே கிண்டல் செய்திருக்கிறேனே. அவளுடைய சாதியைக் குத்திக் காண்பிக்கும் பொருட்டு நண்பர்கள் சபையில் அவ்வாறு சொல்லி ஆற்றாமையை போக்கிக்கொள்வதுண்டு. எல்லாம் இந்த சபலபுத்தி கொண்ட ஆண்களை மூலதனமாக வைத்துப் போடப்படும் ஆட்டம் என்ற எண்ணம்தான் எனக்கு. தாங்கள் சந்தையாகிறோம் என்ற சிரத்தையே இல்லாமல் அவளை நோக்கி பெரும் படையுடன் இந்த வெட்கங்கெட்ட ஆண்கள் கூட்டம் மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்று எப்போதும் என் கையறு நிலையைச் சொல்வது போல கூத்துப்பட்டறையில் சொல்லிக்கொள்வேன்.

பேருந்தின் எதிர்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருந்தது.“கையில் கால் துட்டு கூட இல்லை. பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய சிந்தனையில்லாத நிலையை அடைய வேண்டும். இத்தனைக்கும் மத்தியில் நாடகம், கலை, மண்ணாங்கட்டி வேறு.” என எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது. கலைந்து கலைந்து முகத்தில் அறைவது போல நான் நடித்த பல நாடகங்களின் காட்சித்துணுக்குகள் மின்னி மின்னி மறைந்துகொண்டிருந்தன.

“யோவ் நானும் பாக்கறேன் டிக்கட் கேப்பிருன்னு. ஒம்பாட்டுக்கு சொகுசா ஒக்காத்துக்கிருக்கயே” என்று கண்டக்டர் கேட்டபோது எங்கிருந்தோ விழித்துக்கொண்டது போல எல்லா எண்ணங்களையும் உதிர்த்து பரபரப்பானேன்.

“மன்னிச்சிடுங்கண்ணே. பாலாமணி ஸ்டாப்புக்கு ஒரு டிக்கட்” என்று சொல்லி அவசர அவசரமாக சட்டைப் பையிலிருந்த அரையணாவை எடுத்துக் கொடுத்தேன். சொன்னதும் ஒரு நிமிடம் பார்வையை நிறுத்தி “அங்க எங்க” என கனிவாகக் கேட்டான்.

“பாலாமணிய பாக்க” என்ற அலட்சியத் தோரணையில் சொன்னேன். அவனுக்கு நான் அவள் பெயரைச் சொன்னது அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். எல்லோரும் மதிக்கும் ஒருவளை அலட்சியப்படுத்தும் போது கிடைக்கும் கிளுகிளுப்புக்கு நிகர் இந்த உலகில் ஏது. அதுவும் எல்லோரும் அழகி என்றும் ட்ராமா குயின் என்று புகழும் ஒருவளை. பிற ஆண்கள் மதிக்கும் ஒருத்தியை தனக்கு நெருக்கம் என்று காண்பித்துக் கொள்வதில் வரும் ஒருவகை விவஸ்தை கெட்ட மகிழ்ச்சி உள்ளூரப் பொங்கி வழிந்துகொண்டிருந்தது எனக்கு. அதற்குப்பின் டிக்கெட் கொடுக்கும்போது ஒரு பவ்யமான தோரணை அவனிடம் வந்துசேர்ந்திருந்தது.

பாலாமணியைத் தெரியாதவர் கும்பகோணத்தில் இருக்க முடியாதுதான். ஆனாலும் இத்தனை மரியாதையாக நடந்து கொள்ளுமளவு என்ன செய்திருப்பாள் என்றே தோன்றியது. அவளின் வள்ளல் குணத்தைப் பற்றி பிறர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நடிகர்கள் புகழின் உச்சத்தில் இருக்கும்போது கட்டப்படும் கதைகளை நான் பெரும்பாலும் உண்மை என்று நம்பியதில்லை. எல்லாம் புகழுக்காக போடப்படும் வெளிவேஷம் என்றே எப்போதும் நினைப்பேன். எத்தனை பேரை அப்படிப் பார்த்திருக்கிறேன். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பாலாமணி வீட்டுக்கு வழி கேட்க நினைத்தபோது “பாலாமணி வீட்டுக்குச் செல்லும் வழி” என எழுதியிருந்தது. வழிநெடுக மக்கள் நின்றிருந்தனர்.

“தம்பி ஏன் இங்க நிக்கறீங்க” என்று மாட்டுவண்டியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளைஞனிடம் கேட்டேன்.

“இந்நேரத்துக்கு பாலாமணி தலை காயவைக்க மாடிக்கு வருவா. அவள பாக்க தான்” என்றான். அங்கிருந்த அனைவரும் கூட அதைப் பார்க்கத்தான் வண்டி கட்டிக்கொண்டு வந்திருப்பது புரிந்தது. ஒருவகையான அருவருப்பு உடலில் பரவியது. கேள்விப்பட்ட கதைகள் யாவும் உண்மை என்று தெரிய வரும்போது அடையும் ஒருவகை திகைப்பு கலந்த வியப்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தேன். அந்த வீட்டின் காம்பவுண்ட் கேட்டு வரை கூடியிருந்த மக்களின் வழித்தடத்தைக் கொண்டே ஒருவழியாக வந்து சேர்ந்தேன். நான் கட்டியிருந்த மங்கலான பட்டு வேட்டி சட்டை, சந்தனப்பொட்டு, கையில் வைத்திருந்த செல்லப்பெட்டியைக் கண்டு காவலாளி ஓரளவு ஊகித்திருக்க வாய்ப்புண்டு. அவன் என்னைக் கண்டதும் சுற்றி நின்று உள்ளே அனுமதிக்க வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தபடியே ஓடிவந்து, “அம்மா இன்னும் ரெண்டு மாசத்துக்கு டிராமா எதுவும் ஒத்துக்கறதில்லன்னு சொல்லிருக்காங்க” என என்னையும் துரத்திவிடும் பாவனையில் கை காட்டினான். சற்றே அவமானகமாக இருந்தது.

“அண்ணாச்சி குடுத்துவிட்டதா இந்த கடுதாசிய குடுங்க” எனப் பதட்டத்தை வெளியில் காண்பிக்காமல் நீட்டினேன். அவன் வாங்கிப் பார்த்துவிட்டு உணர்ந்துகொண்டவன் போல ஓடிப்போய் அந்த கேட்டைத் திறந்தான். மிக உயரமான அந்த கேட்டைத் திறந்தபோது யானையை மிக அருகில் கண்டது போன்ற பிரம்மாண்டத்தை அந்த மாளிகை அளித்தது. நான் கற்பனையில் கட்டிக்கொண்டதை விட பிரம்மாண்டமான மாளிகை இது. வாயை மட்டும்தான் பிளக்கவில்லை, ஆனால் அந்த உணர்வோடுதான் நடந்தேன். பின்புறம் சலசலப்புகளும் கூச்சல்களும் கேட்டது. யாரும் செல்ல முடியாத இடத்திற்குள் நுழையும் பெருமித உணர்வோடு அனைவரும் பார்க்கும்படி உள்நுழைந்தேன். கேட்டை பூட்டிவிட்டு மாளிகையை பிரமித்தவாறு பார்த்துக்கொண்டிருந்த என்னை மீண்டும் அழைத்த காவலாளி, “இங்க ஓரமா நில்லும். உள்ள போய் அம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்து கூப்ட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான்.

உள்ளே திருவிழா போல ஆட்களின் நடமாட்டம் இருந்தது. மாளிகைக்கு முன் மார்பிளால் அலங்கரிக்கப்பட்ட வட்ட வடிவமான நீரூற்றும் அதைச் சுற்றிலும் நன்கு கத்தரிக்கப்பட்ட செடிகளும் அந்த மாளிகைக்கு பிரம்மாண்டத்தைக் கூட்டியது. காம்பவுண்டிலிருந்து மாளிகையைச் சுற்றி மிக அடர்த்தியான மரங்களும், அதன் நிழலில் வண்ண வண்ணப் பூச்செடிகளுமென பச்சை சூழ்ந்திருந்தது. குருவிகள், மயில்கள், மான்கள், மனிதர்கள் என உயிர்ப்பான இடமாக சூழல் இருந்தது. தோட்டத்தைப் பார்ப்பதற்கு மட்டுமே பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டதை விடவும் அதிக நபர்கள் அங்கு வெட்டுவதும், சரிசெய்வதுமாக பல வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இடது மூலையின் ஓரத்தில் நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட வெள்ளிச் சாரட்டு வண்டி குதிரைகளின் சிறு அசைவுகளுக்கு ஏற்ப சற்றே அசைந்துகொண்டிருந்தது. வண்டிக்காரன் அடுத்தவேளை பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் ஆயாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒட்டுமொத்த கும்பகோணத்தில் பாலாமணியின் அரண்மனை மட்டும் வேறோர் காலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்தது போல துண்டாக இருந்தது. மகாராணி ஒருத்தி கும்பகோணத்தை மட்டுமல்ல, நாடக உலகையே ஆள்பவள் போல மையமாக அரண்மனை இருந்தது.

சுடுசாதத்தின் ஒருவகை இனிமையான மணமும், பருப்பு வெந்து சாம்பாராக மாறும் அந்த தருணத்தின் மணமும் எங்கோ வலது மூலையின் ஓரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. வயிறு உடனடியாக பசிக்க ஆரம்பித்தது. என் வறண்ட நாவை எச்சிலைக் கொண்டு ஈரப்படுத்திக்கொண்டேன். தூரத்திலிருந்து யாரோ முக மலர்ச்சியோடு ஓடி வந்துகொண்டிருந்தார். கட்டாயமாக என்னை நோக்கியதாக இருக்காது என்ற நம்பிக்கையில் பின்னால் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் யாருமில்லை.

“செல்வண்ணே உங்களத்தான்.” என்றார் சத்தமாக. எனக்கு அடையாளம் தெரியவில்லை. நான் பொதுவாகச் சிரித்து வைத்தேன்.

“சுவாமிகள் ட்ரூப்பு தானே நீங்க. பாத்திருக்கேன். உள்ள வாங்க. அம்மா உங்கள கூட்டியாரச் சொன்னாங்க” என்றான். நான் தலையை ஆட்டிக்கொண்டே அவனுடன் நடந்தேன். வரும்வழியில் பார்ப்பவர்களிடமெல்லாம், “யாரு தெரியும்ல. சுவாமிகள் ட்ரூப்பு” என்று பெருமிதமாகச் சொல்லிக்கொண்டே வந்தான். அதே பெருமிதத்தோடு நானும் சற்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன். எங்கும் வேலையாட்களா, நாடகக்காரர்களா என தெரியாதவண்ணம் பேச்சுகளும் சிரிப்புகளும், அதனூடாக ஏதேதோ வேலைகளும் நடந்துகொண்டே இருந்தன. அதிகமான பெண்கள் இருக்கும்போது அடையும் ஒருவித பயமும் பதட்டமும் உடன் தொற்றிக்கொண்டது. அனைத்து கண்களும் என்னையே பார்ப்பது போன்ற பிரமையில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தேன். வராண்டாவில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல ஒரு கூட்டம் மாளிகையின் வாயிற்கதவையே பார்த்துக்கொண்டிருந்தது.

வாயில் கதவை அடைந்த போதுதான் மெல்ல மாளிகையின் உட்புறம் தெரிய ஆரம்பித்தது. ஏதோ மூச்சடைப்பது போல இருந்தது எனக்கு. மிக உயரமான உத்தரம் கொண்ட முகப்பு. அடிபருத்த தேக்குத்தூண்கள் நிறைந்த விசாலமான வரவேற்பறை. சிவப்பும் பொன்னிற வண்ணமும் அதிகம் தென்படும் தன்மை அரண்மனையின் சாயலையே கொடுத்தது. சாயல் என்ன! அரண்மனைதான். மோகனா பாப்பாவிற்கு ஒரு வாரம் இரவில் கதை சொல்லி தூங்கவைப்பதற்கு இவை போதுமே என்று நினைத்துக்கொண்டேன். உள்ளிருந்த சாடிகள் தோறும் மலர்ந்த மஞ்சள் நிறப்பூக்களும் சாம்பிராணி இலைகளும் விளக்கமுடியாத ரம்மியமான வாசனையும் கமழ்ந்துகொண்டிருந்தது. இனி எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளப் போகும் வாசனை என்று முதற்கணம் தோன்றியது.

“இங்க ஒக்காருங்க. அம்மாகிட்ட தாக்கல் சொல்லிட்டு ஓடியாந்திடறேன்” என துண்டை கையில் இடுக்கிக்கொண்டே ஓடினான். மாடிப்படியின் அருகில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவன் தகவல் சொல்லிக்கொண்டிருந்தான். நான் உட்கார்ந்திருந்த சிவப்புநிற வெல்வட் சோஃபா என்னை மடியில் குழந்தை போல புதைத்துக்கொண்டிருந்த உணர்வை அளித்தது. எனக்கு நேர் எதிரான சுவரில் பல படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் பாலாமணி விருது வாங்கிய புகைப்படங்கள்தான் அதிகமிருந்தன. அதற்கு கீழேயே கண்ணாடிப்பேழையில் விருதுகளும் கேடயங்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. என்னுடைய மெடல்களும் விருதுகளும் பரணில் எந்தத் தகரப்பெட்டியில் உறங்கிக்கொண்டிருக்கிறதோ என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஒரு நாடகக் கலைஞனுக்கு விருது தரும் மோகம் என்ன என்பதை நன்கு அறிந்தவன் நான்.

அந்தப் புகைப்படங்களில் நீளவாக்கில் ‘பாலாமணி மலபார் உடையில்’ என்று எழுதப்பட்ட படம் இருந்தது. வெண்பட்டில் வலது புறம் மிக அகலமான வெள்ளிச்சரிகை மலையாளிகள் கட்டுவது போல மார்பைச் சுற்றி முண்டு கட்டியிருந்தாள். ப்ளவுஸ் அணியாத பாலாமணியின் அந்த போஸ் எந்த ஆணையும் சீண்டுவது. அந்த புகைப்படத்திற்காக அவளைத் திட்டிய பலரும் மறைமுகமாக டவுனுக்குச் சென்று செய்தித்தாளை வாங்கிவந்து ரசித்த புகைப்படமது. செய்தித்தாளில் நான் பார்த்ததை விட துல்லியமாக கலரில் மாட்டப்பட்ட இந்த புகைப்படத்தில் அழகாக இருந்தாள். பாலாமணியின் தாட்டிகமான மார்பில் அவள் கழுத்தை ஒட்டி அணிந்திருந்த நெக்லஸும், மார்புக்கு முன்பே நின்றுவிடும் உயரமும் கொண்ட தடிமனான மாங்காய் ஆரமும், கையை இறுக்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய தங்க வளையல்களும், நடுவிரல், கட்டை விரல் தவிற பிற விரல்களில் அவள் அணிந்திருந்த பெரிய வேலைப்பாடுள்ள மோதிரங்களும், காதில் கிளிஞ்சல் போல ஒட்டிக்கொண்டிருந்த தங்கக் கம்மலும், மூக்கில் அணிந்திருந்த புல்லாக்கும் பெண்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த வணிகச் சந்தையையே கவர்ந்திருந்தன.

பாலாமணி கம்மல், பாலாமணி வளையல் என கூவிக்கூவி விற்பதை நானே கேட்டிருக்கிறேன். அவள் ஒரு நாடகத்தில் கட்டும் புடவை பாலாமணி புடவை என்று சொல்லி தடபுடலாக விற்றுத் தீர்ந்தது. என் மனைவியே கூட கும்பகோணத்திற்குச் செல்கிறேன் என்று சொன்னபோது பாலாமணி புடவை ஒன்று வாங்கிவரச் சொல்லியிருந்தாள்.அவள் குதூகலம் காட்டியபோது அதை சட்டை செய்யாதவன் போல் இருந்தேன். அதில் வெளிப்படும் ஆண்மையின் பொருட்டும், எப்பேற்பட்ட அழகியென்றாலும் விழுபவனல்ல என என் மனைவியிடம் பறைசாற்றிக் கொள்வதற்கும் நடித்த நடிப்பு அது.

பாலாமணி திருமணம் செய்துகொள்ளவில்லை. பொதுவாகவே நாடகக்காரர்களுக்கு அந்தக் குடுப்பினை சரியாக அமைவதில்லை. அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.“திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை” என்ற பேட்டியை என் கூட்டு நண்பர்கள் எத்தனை ஆபாசமாக விவாதித்தோமென்று நினைவிருக்கிறது. ஒரு பெண் திருமணமாகிவிட்டால் ஒரு பார்வை, குழந்தை பிறந்துவிட்டால் ஒரு பார்வை என ஆண்களின் உள்ளம் செல்லும் போக்கை அறிந்தவன் நான். திருமணம் செய்யாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாது கட்டுக்குலையாத பெண்ணின் மேல் கிழவியாவது வரை இருக்கும் ஒருவகை ஆபாசப் பேச்சுக்களை இங்கே தவிர்க்க இயலாது. வீட்டினுள் ஒடுங்கிக் கிடக்கும் பெண்களுக்கே இந்த நிலமை என்றால் நாடகக்கார பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.

எனக்கும் ஒழுக்கம் சார்ந்து யார்மேலும் எந்த மதிப்பும் இல்லை. எல்லோர் மேலும் எப்போதும் ஒரு சந்தேகக்கண் இருக்கும். தொடர்ந்து இது போன்ற செய்திகளைப் பேசிக்கொண்டிருக்கும் கும்பல்களை அருகில் வைத்திருப்பதால் ஆழப்பதிந்து விட்ட உணர்வு இது. மாற்றுவது சிரமம்.

எனக்குப் பின்புறம் சலசலப்புகள் அதிகம் ஆனதும் திரும்பிப் பார்த்தேன். பாலாமணி வருவதை அறிவிக்கும் குரல்கள் என்று புரிந்தது. மனம் அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பை அடைந்தது. ஆறு பெண்கள் சுற்றிலும் ஏதேதோ சலசலக்க மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தாள். மணிகள் குலுங்கும் ஒலி கேட்டது. அவள் காலில் அணிந்திருந்த தண்டையினுள் இருந்த பரல்களின் ஒலியாக இருக்கலாம். மிகத்தடிமனான அதைக் கொடுத்தால் கூட கம்பெனியை மீட்டுவிடலாம் என விவஸ்தை கெட்ட மனம் சொன்னது. கழுத்தை ஒட்டிய நெக்லசும், அதற்குக் கீழே பச்சைக்கல் மாங்காய் ஆரமும், நீண்ட காசுமாலைச் சங்கிலியும், தட்டையான கனமான வளையலும் அணிந்திருந்தாள். மூக்கின் நுனியைக் கூர்மையாக்கிக் காட்டும் புல்லாக்கும், மூக்கின் ஒருபுறம் சிவப்புக்கல் மூக்குத்தியும் மறுபுறம் மூக்கில் வெண்கல் மூக்குத்தியும் அணிந்திருந்தாள். காதுகளை ஒட்டியவாறு வைரத்தோடு அணிந்திருந்தாள்.

எல்லா அணிகலன்களையும் தெய்வத்தன்மையாக்கும் சிவப்புப் பட்டுச்சேலையை கொசுவம் வைத்துக் கட்டியிருந்தாள். விரைவும் கம்பீரமுமாக படியில் இறங்கி வந்துகொண்டிருந்தாள். எங்கிருக்கிறோம், ஏன் வந்தோம் என ஒரு கணம் மறந்து மீண்டு வந்தேன். புகழையும் செல்வத்தையும் தாண்டிய ஐஸ்வரியமான முகமலர்ச்சியுடன் என் கண்களைச் சந்தித்தாள். எனக்கு கால்கள் சற்றே நடுங்க ஆரம்பித்தது. என்னை நோக்கி கையெடுத்து கும்பிட்டு.“வாங்கண்ணே” என்றாள். அந்தச் சொல்லில் என் மனக்கசடுகள் கண நேரம் அமிழ்ந்தது போல இருந்தது.

“வணக்கம்மா” என்றேன். கையை ஏற்கனவே கும்பிடும் பாவனையில் வைத்திருந்தேன். அநேகமாக அவள் மாடிப்படியில் இறங்கி வரும்போதே கைகளைக் கூப்பியிருப்பேன். அதற்குள் வெளியிலிருந்த கூட்டம் ஒன்று எனக்கு முன்னே சென்று அவளைச் சுற்றி வளைத்துவிட்டது. எல்லாம் புலம்பல்களும் யாசகங்களுமான சத்தங்களாக இருந்தன. கழுத்திலிருப்பதையும், கையிலிருப்பதையும், அருகில் தாம்பூலத்தில் வைத்திருந்த பணமும் என வாரிவாரிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். நேரமாகிக்கொண்டே இருந்தது.

அவள் திடீரென உணர்ந்தவளாக அருகிலிருந்த பணியாள் பெண்ணின் காதில் ஏதோ சொல்ல அவள் என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னை நோக்கி வந்தாள். என்னிடம் ஒரு கடுதாசியைக் கையில் கொடுத்து அதை அண்ணாச்சியிடம் பாலாமணி கொடுக்கச் சொன்னதாகச் சொன்னாள். கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னபோது தலையாட்டிக்கொண்டே வெளியில் வந்தேன். பசி முற்றிலும் இல்லாமலிருந்தது. கைகளும் கால்களும் குளிர்ந்திருந்தது. வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. கடுதாசியைப் பிரிக்கவும் மனமில்லை. அதைப் பையில் வைத்துக்கொண்டேன். அண்ணாச்சி மேல் ஆத்திரம் வந்தது.

*

“பிள்ளே, ஒருமுறை நாடக அரங்க சரிபாத்துட்டு வந்திடு. என்னென்ன பாக்கணும்னு யாரவிடவும் உனக்குத்தான் தெரியும்” எனப் பரபரப்பாகச் சொல்லிவிட்டு என்னைவிட்டு நகர்ந்தார் அண்ணாச்சி. என்னிடம் சொல்லிவிட்டால் அவர் அதன்பின் அந்த வேலையைச் சரிபார்த்துவிட்டேனா என்ற கவலை கூட இல்லாமல் இருப்பார். நான் எழுந்து குமரனைக் கூட்டிக்கொண்டு நாடகமேடை போடப்பட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் பாலாமணி ஸ்பெஷல் நாடகம், ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற விளம்பரப் பலகைகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் இந்த நாடகத்தில் பாலாமணி நடிப்பாளா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது அண்ணாச்சியைத் தவிர. ஒன்றும் தீர்க்கமாகச் சொல்லப்படாத அந்தக் கடுதாசி வந்ததிலிருந்தே அண்ணாச்சி நம்பிக்கையாகவும் பரபரப்பாகவும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். எனக்கு ஏதோ உள்ளூர உறுத்தலாக இருந்தது.

”செல்வண்ணே.. பாலாமணி என்ன வேஷம் கட்டுறா. தாசி வேஷம் தானே. அப்டி சொல்லித்தான் பத்து பேர கூட்டியாந்திருக்கேன். ஏமாத்திப் போட்றாதீங்கண்ணே” என இடதுபக்க மூலையில் கும்பலோடு நின்றிருந்த மணி உச்ச குரலில் கத்தியவாறு கேட்க, அருகிலுள்ளவர்கள் சிரித்தனர்.

“தாராஷஷாங்கம் நாடகம் இல்லையேன்னு காஞ்சு போயிருக்கவனுகள சந்தோஷப்படுத்தணும்ல. தாசி வேஷம் தான்.” என்றேன் நக்கலாக. எனக்கு ஏனோ அவள் வரமாட்டாள் என தீர்க்கமாகத் தோன்றியது. வந்தாலும் கூட அவள் நடிக்க மாட்டாள் என்றே நம்பினேன். தர்மத்துக்கு நடிப்பதற்கெல்லாம் மெனக்கெடமாட்டாள் என்று நினைத்தேன்.

“ஆனா ஒன்னு செல்வண்ணே.. எந்த வேஷத்தக் கட்டினாலும் கூட்டத்த கட்டி ஈர்த்திடுவா. இப்ப அவ அதிரடியா கூட்டத்த ஈர்க்கறது, பரபரப்பா பேச வைக்கறதத் தாண்டி வேற எங்கயோ போய்ட்டா. இன்னைக்கு இங்க பொம்பளைங்க தைரியமா நடிக்க வராங்கன்னா அவ ட்ரூப்பு இருக்க நம்பிக்கைல தான்” என உடன் வந்துகொண்டிருந்த குமரன் சொன்னான்.

“அதுக்குன்னு நிர்வாணமா நடிச்சு தான் இதெல்லாம் செய்யணுமா குமரா…” என்றேன் எரிச்சலாக.

“அந்த நாடகத்த நான் நேர்ல பாத்திருக்கேன் செல்வண்ணே… அது ஒரு உத்தி தான். தூரத்திலயிருந்து பாக்குறனுக்கு அந்த ஒரு நொடி நிர்வாணமா தெரியும். முனிவரோட தவம் கலைஞ்சதோ இல்லயோ ஒட்டுமொத்த நாடக ஒலகத்தையே கலக்கிட்டா. இனி காலகாலத்துக்கும் தாராஷஷாங்கம்னு சொன்னா பாலாமணி தான் ஞாபகம் வருவா. நல்ல விளம்பர உத்தி” என்றான்.

“ம்…” என பேச்சை முடித்துக் கொள்ளும் பாவனையில் சொன்னேன்.

யாரெல்லாம் ’பாலாமணி சிறப்பு நாடகம் போட்டுத்தான் இந்த நாடகக் குழுவ மீட்கணுமா’ என்று கேள்வி கேட்டார்களோ அவர்கள் அனைவரும் உற்சாகமாக நாடக மேடையைச் சுற்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். இதற்கு முன் இத்தனை நடிகைகளையும் ஒரே இடத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அத்தனை பேரையும் ஒரே இடத்தில் சேர்க்க பாலாமணி போன்ற ஒருத்திதான் இங்கு வரவேண்டியிருக்கிறது. ”ம்… பெரிய இவ” என மனதில் சொல்லிக்கொண்டேன்.

அன்று மாலை கோலாகலமாக டம்பாச்சாரி விலாசம் சிறப்பு நாடகம் அரங்கேறியது. அதில் பாலாமணியே டம்பாச்சாரியாக கதை நெடுக நடித்திருந்தாள். வேசி மதனசுந்தரியாக வருவாள் என எதிர்பார்த்த ஏமாற்றம் சற்று அலையலையாக எழுந்து அவளின் நடிப்பில் அது அமிழ்ந்து போனது. அவளின் கணீரான குரலும், துறுதுறுப்பான நடிப்பும் அரங்கு முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டது. அவள் கையில் வைத்திருந்த டமாரச் சத்தத்தை விட “அதாகப்பட்டது என்னன்னா…” என்ற அவளின் குரலுக்குப் பின் கூட்டம் ”ட்ராமா குயின்! ட்ராமா குயின்!” என கூச்சலிடுவதை நிறுத்தியது. ஒட்டுமொத்த காலத்தையே ஸ்தம்பிக்க வைத்தது போல இருந்தது அவளின் குரலும் பாட்டும்.

டம்பாச்சாரி விலாசம் எத்தனை மேடைகளில் நடிக்கப்பட்டிருக்கிறது. நானும் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் பாலாமணி போல அரங்காற்றுகை செய்வதில் யாரும் தேர்ந்தவர்கள் அல்ல என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்தான். சில நாடகங்கள் அப்படி தங்களை சில கலைஞர்களிடம் ஒப்புக் கொடுத்துவிடுகின்றன. அவள் முன்னர் அரங்கேற்றிய அத்தனை டம்பாச்சாரி விலாசத்தை விடவும் இதுதான் சிறந்தது என பேசிக்கொண்டார்கள். எத்தனை முறை சுவாமிகளின் ஒரே நாடகம் பலமுறை அரங்காற்றுகையாவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நடிகர்களாலோ, சூழலாலோ அல்லது விளக்கமுடியாத ஒன்றாலோ அது வேறொன்றாக ஆகிறது.

டம்பாச்சாரி விலாசத்தின் கதாநாயகி மதனசுந்தரியாக வடிவாம்பாள் நடித்திருந்தாள். பெயருக்கேற்றாற் போல வடிவானவள். அழகி. முத்தாய்ப்பாக சாமண்ணா ஐயர் பதினாறு வேடங்களில் தோன்றினார். சட்டிப் பரதேசியாக, கோமுட்டி செட்டியாராக, டாபர் மாமாவாக அவர் வந்த இடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஆர்ப்பரித்து சிரித்துக்கொண்டிருந்தனர். சாமண்ணா கவர்னர் வெல்லிங்டன் பிரபுவிடமிருந்து சார்லி சாப்ளின் பட்டம் பெற்றவர். எங்கள் நாடகக் குழுவிலிருந்த பலரும் அவரை ஒரே சமயம் பெருமிதமாகவும் பொறாமையாகவும் பார்த்துக் கொண்டிருந்தோம். நாடகம் முடிந்தபோது அண்ணாச்சி கலங்கியபடி விரைவாக எழுந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரவு முழுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதும், விருப்பமானவர்களும், பெரிய ஆட்களும் பாலாமணி நாடகக் குழுவினருக்கு பரிசுகள் வழங்குவதும் என அந்த இடமே கோலாகலமாக இருந்தது. மிகப்பெரிய வரலாற்று நிகழ்வொன்றைப் பார்த்துக்கொண்டிருப்பவன் போல அந்தச் சலசலப்புகளை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் சம்பிரதாயமாக மொத்த நாடகக்குழுவும் எடுக்கும் புகைப்படம் முடிந்தவுடன் மெல்ல அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். பாலாமணியும் சாமண்ணாவும் நாடக மேடையைவிட்டு கிளம்பியவுடனேயே கூட்டம் வேகமாகக் கலைய ஆரம்பித்தது.

எல்லோரும் கலைந்து சென்ற பின் இருக்கும் ஒரு கலைந்த கலையற்ற தன்மை என்னை வெறுமையில் ஆழ்த்தியது. மேடைக்கு நேரெதிராக தூரத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அழுகையாய் வந்தது. ஏன் அழுகிறேன் என்று சொல்லத் தெரியவில்லை. மேடை ஒழிந்தபின் எல்லாமும் பொருளற்றுப் போகிறது. நடிகர்களும் பார்வையாளர்களுமே இந்த மேடைக்கும் இடத்திற்கும் உயிரூட்டுகிறார்கள். காலமும் இடமும் பொருள் கொள்வது இவர்களால்தான்.

எல்லோரும் ஒருநாள் இந்த நாடக மேடையை விட்டுக் கிளம்பவேண்டியதுதான். ஒருவகையில் நல்ல கலைஞர்கள் அனைவரும் இதை அறிந்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். பாலாமணி பணத்தை வாரிவாரி தானம் செய்வதும், யாரையும் சட்டை செய்யாமல் வாழ்வதும் கூட இதை உணர்ந்ததனால் இருக்கலாம். அண்ணாச்சிக்கு பாலாமணி கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கையும் கூட இதனால் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. மிகச்சரியாக எதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எண்ணங்கள் கலைந்து முட்டினாலும், அவ ட்ராமா குயின்தான்,நடிகை… நடிகை.. என மனசு அடித்துக்கொண்டிருந்தது.

“எடீ… பாலாமணி… நீ ஒரு ட்ராமா குயின் தான் டீ…” என்று உலறலான நாக்கை சுழற்றிக்கொண்டே சாராய பாட்டிலை கீழே வைத்தேன். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. என்னை யாரும் நினைவு வைத்திருக்கப் போவதில்லை. ஆழத்தில் பாலாமணியையும் கூடத்தான் என்று தோன்றியது. ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். வலிந்து சங்கரதாஸ் சுவாமிகளை நினைத்துக்கொண்டேன். கண்களை மூடி, ஒருக்களித்து கைகளை தொடையிடுக்கில் வைத்து உடலைக் குறுக்கி பெஞ்சில் படுத்துக்கொண்டேன். இந்த நாடக மேடையும் கூட கண்களை மூடியவுடன் காணாமல் ஆனது. எங்கோ இருளான வானத்தில் வேகமாக நட்சத்திரங்களினூடாக பறந்துகொண்டிருந்தேன். என் உளறல்கள் அங்கே சிதறிக்கொண்டிருந்தன.

*

நாடகம் முடிந்த அடுத்த நாள் காலை அண்ணாச்சியைக் காண பாலாமணி சாமண்ணாவுடன் வந்திருந்தாள். நாங்கள் அனைவரும் பேச்சுச் சத்தங்களை நிறுத்திக்கொண்டு சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு ஓரமாக நின்றிருந்தோம். மஞ்சளும், குங்குமமும், மல்லிகையும் கலந்த வாசனையும், பெண்களின் சேலைக்கே உரிய ஒருவித மணமும் கூடத்தை நிறைத்தது. வந்து நின்றதும் ஒட்டுமொத்த கூடத்தையும் நிமிர்ந்த கண்களால் துழாவி என்னைக் கண்டுகொண்டதைக் காட்டும் பொருட்டு தலையை ஆட்டியவாறு திவ்யமாகப் புன்னகைத்தாள்.

எனக்கு பயல்கள் மத்தியில் அது பெருமிதத்தைத் தந்தது. சாமண்ணா வேகமாக வந்து அண்ணாச்சியின் கைகளை பிடித்துக்கொண்டார். அவர் அண்ணாச்சியின் தலையை, கன்னங்களை, தடவி தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டார். “பொடியனா இருக்கும் போது மொத மொறையா பவுடர் போட்டு விட்ட கன்னம். ஞாபகம் இருக்கா?” என்று அண்ணாச்சியிடம் கேட்டார்.

“ஞாபகம் இருக்கு சாமண்ணா” என்றார் அண்ணாச்சி கலங்கியபடி.

“இவன் பெரிய நடிகனா வருவான்” என பாலாமணியைத் திரும்பிப் பார்த்து சாமண்ணா சொன்னார். அவள் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டே மெலிதாகப் புன்னகைத்தாள். அழகி என்று நினைத்துக்கொண்டேன். அருகில் வந்து கைகளில் வைத்திருந்த தாம்பூலத்தட்டை அண்ணாச்சியிடம் கொடுத்துவிட்டு கைகளைக்கூப்பி வணங்கினாள்.

”வசூலான முழுப்பணமும் இதுல இருக்கு” என்று சொல்லிவிட்டு மங்களமாகச் சிரித்தாள்.

***

ரம்யா – விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். எழுத்தாளர். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர். மின்னஞ்சல்: ramya20080625@gmail.com

என் படைப்பில் என் நிலம்…

0

லட்சுமிஹர்

தையும் அதன் இயல்போடு பயணிக்க விட்டுவிட வேண்டும் என்கிற நோக்கம் என்னுள் எப்போதும் இருந்திருக்கிறது. அதனால் என்னவோ எந்த நிலமும் எனக்கு அந்நியமாகவோ, சொந்தமாகவோ தெரிந்ததில்லை.

அதன் வெளிப்பாட்டை எனது படைப்புகளில் வாசகர்களால் உணர முடியும். ஒரு இடைவெளியை அவர்களுடன் நான் ஏற்படுத்திக்கொண்டே செல்கிறேன், அது வாக்கியத்தின் கட்டமைப்பிலோ , கதை நகர்தலிலோ அல்லது ஒரு சொல்லிலோ கூட இருக்கலாம்.

உதாரணத்திற்கு ‘வெற்றோசை’ எனும் சிறுகதையில் ‘அவள் மேகத்தை நோக்கி நீந்திக் கொண்டிருக்கிறாள்’ என்கிற வரியைச் சொல்லலாம். இது நான் எடுத்துக்கொண்ட அல்லது கைவிடப்பட்ட நிலத்திலிருந்து எழும் மனப்போக்கை உடையதாகவே இருக்கிறது. இதை நான் ஏற்படுத்தும் இடைவெளியிலிருந்து வாசகர்கள் தங்களை கதையிலிருந்து துண்டித்து சுயத்தை அடைய வேண்டும் என்கிற அடிப்படை தான்.

இப்படி எனது படைப்புகளில் யதார்த்தத்தை தாண்டிய கதை முறைகளில் எனது நிலமாக இருப்பவைகளை இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம். ஒன்று அனுபவங்கள் ஏற்படுத்திய மனப்பிறழ்வு, மற்றொன்று தத்துவ விசாரிப்புகள். இவைகளை கதை என்னும் நிலப்பரப்பில் சிதறடித்தளையே விரும்புகிறேன்.

1. ‘மன்யாவின் உடல்கள்’ என்னும் கதையில் கதையின் கடைசி வரி ‘அடிவயிற்றை தடவிப் பார்த்துக் கொண்டாள் அதற்கு கீழ் ஒன்றும் இல்லை’ இப்படியாக முடிகிறது.

2. ‘வெற்றோசை’ கதையில் “தொடக்கமும் முடிவும் ஒரே முடிச்சில் இருந்தே பிரிக்கப்பட்டதாகிவிட்டதா என்கிற தேடல் அவனும்! அவளும்! அதுவாகி! போன வெற்றோசை ”.

இப்படிப்பட்ட கதைகளை எழுதும் பொழுது மொழித்திருகல்களோடு மட்டும் நின்றுவிடாமல் அவைகள் நம் நிலத்திற்கான கூறுகளுக்குள்ளும் இயங்குவதை உன்னிப்பாகக் கையாளுகிறேன். அதற்கு ‘சதுக்கப் பூதம்’ என்னும் மாய எதார்த்தக் கதை வாதத்தில் நம் இலக்கிய, பண்பாட்டுத் தொன்மங்களுடன் ஒன்றாவதை கவனிக்க முடியும். அந்தக் கதையில் கரிசல் நிலத்தை ஒரு சிறுவன் பூதம் என்று நினைத்துக்கொள்கிறான். இப்படியாக அந்த மாய யதார்த்தம் அவர்கள் வழிபடும் குலதெய்வ வழிபாட்டில் பிணைக்கப்படும் பொழுது நமக்கான கூறுகளை அது கண்டடைகிறது.

பெரும்பாலும் எனக்கான கதைகளை கதாப்பாத்திரங்கள்தான் கொண்டு வந்திருக்கின்றன. அவைகளின் பார்வையிலேயே அவர்கள் வாழ்ந்த நிலத்தை பதிவு செய்வதால் அந்நிலம் ஒவ்வொரு முறையும் வெவ்வேறாகவே தன்னை அர்த்தப்படுத்திக் கொள்கின்றன.

போட்டோ சார்’ மற்றும் ‘தொடர்பவைகளின் கூற்று’ ஆகிய இரண்டு கதைகளும் கொடைக்கானல் மலையில் நடப்பவையாகத் தெரிந்தாலும், தன்னை இழத்தலில் யாசிர் பாயும், தன்னை அறிதலில் தொடர்பவைகளின் கூற்றின் மையக் கதாப்பாத்திரமும் வித்தியாசப்படுகின்றன. அவர்களின் நிலமும் அங்கு மாறுபடுகின்றன. அந்நிலத்தின் தொன்மத்தையும் சமகால சமூகவியல் மாற்றங்களில் அவர்கள் உழலும் பொழுது இருவேறு நிலமாக மாறுகின்றன.

போன முறை தை பொங்கலுக்கு ஊருக்குச் சென்றபொழுது நடந்த நிகழ்வை ஒட்டிய கதையே ‘ம்மே’. கோடங்கி மறைவுக்கு பிறகு அவரின் மகனுக்கு சாமி இறங்காமல் மந்தையில் நிகழ்ந்தவைகள் பற்றிய கதை. இதன் உள்ளடக்கத்திலும் ஆசிரியர் தலையீடு சிறிதும் இருக்காது. மதுரையின் வட்டார வழக்குடன் எழுதிப் பார்த்த கதை. என்னதான் நான் என் ஊரிலிருந்து தள்ளியே வாழ்ந்திருந்தாலும் இக்கதையை எழுதும் போது அங்கு நான் கேட்ட மனிதர்களின் குரல்களை என்னால் ஒவ்வொரு வார்த்தையிலும் உணர முடிந்தது, அப்போதுதான் நானே அறியாமல் என்னுள் அந்நிலம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அறிந்தேன். அக்கதையில் வரும் ‘கூட்டுக் கருப்பட்டி’ மாற்றுதல் போன்றவைகள் என் நிலத்திற்கே உண்டான சிறப்பு. இதே நடையில் எழுதப்பட்ட ‘போஸ்டர்’ சிறுகதையும் இதே நிலத்து மனிதர்களைப் பேசுபவைகள்தான். எதனளவு கொண்டாடுகிறோமோ அதனளவு விமர்சனமும் எனக்கு இருக்கிறது. மதுரை என்றாலே கோபம் , வீரம், பாசம் என்று மாற்றி மாற்றி கேட்டுக்கேட்டு எனக்கும் சலிப்புதான் வருகிறது. யதார்த்த மனிதர்களை உள்ளடக்கிய நகரம் என்றுதான் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். அப்படியான எதார்த்த மனநிலையினுடைய அமுதனை உங்களால் அக்கதையில் பார்க்க முடியும், இப்படியாக முன்சொன்ன வீராப்புகளில் ‘புழுத்து செத்த’ அவனது அப்பா மணிமுத்தையும் பார்க்க முடியும். அக்கதை அந்நிலத்தின் இந்த வெட்டி வீராப்புக்கும் எதார்த்தத்துக்கும் இடையே சொல்லப்பட்ட கதை.

சில சமயங்களில் நான் எடுத்துக்கொண்ட கதைகளுக்கு தனி நிலத்தையும் உருவாக்கி இருக்கிறேன். போனமுறை தஞ்சாவூர் சென்றிருந்த போதே ‘காடு இறங்குதல்’ பற்றி கேள்விப்பட்டேன். அவர்களின் வழிபாட்டு முறைகள், காளை வளர்ப்பு என்று தெரிந்து கொண்டாலும், அவைகள் இப்போது இருக்கும் நிலத்திற்கு அந்நியப்பட்டவைகளாகவே இருந்தன. ஆனால் அவர்கள் எனக்கு கொடுத்த தவசியையும், வனத்தையும், காசிவளவரையும், மணியப்பனையும் என்னால் விட்டுவிட முடியவில்லை. அதனால் எனக்கான ஒரு கற்பனை நிலமான பாப்பநாடு, கொண்டக்குடிகல், வேதன்யம் காட்டை என்னால் உருவாக்க முடிந்தது. இப்படியாக எழுதியதும் ஒருவிதச் சுதந்திரம்தான். அதற்குள் ஒன்றுபட்ட இரண்டு மூன்று பண்பாட்டுக் கூறுகளையும் காணமுடியும்.

நாம் அறியாத புது நிலத்தில் நம் பயணங்களின் போது உள்ளிழுக்கப்பட்டு தொலைவது இயல்புதான். அப்படித்தான் சத்திஸ்கர் காட்டினுள் சுற்றி அலைந்து கொண்டிருந்தபோது திடீரென என்றைக்கோ வாசித்த செல்மாவினுடைய தேவமலர் காட்டினுள் புகுந்தது போன்ற உணர்வு. அங்கே தோன்றியதுதான் ‘செல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள்’ எனும் சிறுகதைக்கான கரு. அந்தக் காட்டினுள் செல்மா அலைந்து திரிந்து வாசகராகிய நமக்கு எடுத்து வந்த கதையைப் பேசும் சிறுகதை. நிலமென்ற மாயம் செல்மாவினுடைய மனம்தான். அதற்காக செல்மா பற்றி நிறைய படிக்க நேர்ந்த அனுபவங்களும் என்று என்னால் நிறைவாக எழுத முடிந்தது. செல்மாவை அவரின் படைப்புகள் வழியும், தனிப்பட்ட வாழ்வின் மீறல்களையும் பேசும் சிறுகதை. ‘டார்லிங் எனப் பெயர் சூட்டப்பட்ட சித்தாந்தம்’ இப்படிப்பட்ட கதை கருதான். ஆனால் இதில் வரும் மானசி எதிலும் தன்னை இணைத்துக்கொள்ள விரும்பாதவள். நிலத்திலிருந்து விடுபட நினைக்கும் அப்பாவி.

அதற்கடுத்து நான் இயங்கும் சினிமா சார்ந்த கதை களங்கள்தான். சினிமா தெருக்களில் உங்களால் நடக்க முடிந்தால் ‘ஆப்பிள் பாக்ஸ்’ கதையில் வரும் ராமகிருஷ்ணன் போன்று எண்ணற்ற திறமை வாய்ந்த அசிஸ்டண்ட் டைரக்டர்களை உங்களால் பார்க்க முடியும். எவ்வளவோ இடர்களுக்கு மத்தியிலும் எந்த விதத்திலும் தங்கள் கனவுகளை விட்டுவிடாது சுற்றும் உள்ளங்கள். ‘வெளில புடுச்ச வேலைய செய்யாம எத்தனையோ பேரு செத்துட்டு இருக்கான், நான் புடுச்ச வேலைய செஞ்சு வாழ்ந்துட்டு இருக்கேன் விடுடா, சீக்கிரம் படம் பண்ணுவோம்’ என்று ராமகிருஷ்ணன் அண்ணன் நம்பிக்கையாகச் சொன்னது இன்றைக்கும் நினைவுக்கு வருகிறது. ‘ஸ்டார்’ திரைப்படங்களில் பணியாற்றும் ஸ்டண்ட் மாஸ்டரைப் பற்றிய கதை, ‘போகஸ்’ ஜூனியர் ஆர்டிஸ்ட் பற்றியது. சினிமா சார்ந்த நிலத்தை உள்ளிருந்து பதிவு செய்வது ஒருவித மனக்கசப்பால் வருவதுதான் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். கூடுதல் தகவலாக ஒரு உதவி இயக்குனருக்கு ஒருநாள் பேட்டா ஐம்பது ரூபாய் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. இருக்கட்டும். வாழ்க!

எப்படியோ இதெல்லாம் கதைகளாக நடந்தேறியது என்பதுதான் மகிழ்ச்சி. சில நேரங்களில் நேர்த்தியாகவும் சில நேரங்களில் உளறல்களாகவும். இன்னும் நிறைய எழுத வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. நடக்குமானால் மகிழ்ச்சி. அது உங்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.

***
லட்சுமிஹர் – மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்தவர் தற்போது திண்டுக்கல்லில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணி புரிந்து வருகிறார். ஸெல்மா சாண்டாவின் அலமாரிப் பூச்சிகள் என்னும் முதல் சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகம் வாயிலாக வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: lakshmihar.malai@gmail.com

கட்டம்

0

சரவணன் சந்திரன்

ந்த பொம்பளையால சீப்படணும்னு உங்க ஜாதகக் கட்டத்தில தெளிவா இருக்குது. பேசாம இப்பயே முடுக்கி விட்டிருங்க. இல்லாட்டி பின்னாடி கெடந்து உருளுவீங்க. ஆழமா படிச்சவங்க விஷயத்தில வயசு ஒன்னும் கணக்கு இல்லை. கணிக்கிற விஷயத்தில நாங்க ரெண்டு பேரும் லேசுப்பட்டவங்க கிடையாது. இதுவரைக்கும் தப்புனதில்லை. கட்டத்துக்குள்ள நின்னு யாரோடவும் போட்டி போடுவோம்” என்று தனபாண்டியின் குரல் வரவே விழித்துப் பார்த்தேன். கிரிதரன் ஒத்திசைவாகத் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தான். கேட்டவுடனேயே கண்ணைத் திறந்து இவர்களைப் பார்ப்பதற்கு முன்பே எனக்குத் திக்கென இருந்தது. அடுத்த கணம் அவன்கள் என் தனிவாழ்வினுள் நுழைகிறார்கள் என்பதால் எரிச்சலாகவும் வந்தது.

நிதமும் இரவு என்னைப் படுக்க வைத்துக் கைகால்களை அழுத்திவிட்டுக் கொண்டிருப்பார்கள். “இந்தப் பக்கம் நீ அமுக்கு” என யாராவது ஒருத்தர் சொல்கிற சத்தம் மட்டுமே கேட்கும். அன்றைக்கும் அப்படிச் செய்துகொண்டிருந்த போதுதான் அமைதியைக் கிழித்துக்கொண்டு அதைச் சொன்னான். “மூடிக்கிட்டுப் போங்கடா அந்த பக்கம். ஒரு மரியாதை வேணாம். கூடப் படுக்கைக்குப் பக்கத்தில உங்காந்திட்டா பொண்டாட்டி ஆயிடுவீங்களா” என இருவரையும் துரத்தி விட்டேன். அதற்கப்புறம் அதிகாரத் தோரணையை அவர்கள் இருவரிடமும் கொஞ்சம் அதிகமாகவே காண்பித்தேன். பிறகு அதுகுறித்து மூச்சே விடவில்லை என்னிடம். மேலும் மேலும் பவ்யமாகத்தான் அலைந்தார்கள்.

கிரிதரனும் தனபாண்டியும் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவருக்குமே இருபத்து சொச்சம் வயதிருக்கலாம். முதலில் என்னுடைய பட்டறையில் கிரிதரன்தான் வேலைக்குச் சேர்ந்தான். கொஞ்சநாள் கழித்து அவன் தனபாண்டியை அழைத்து வந்தான். இருவரும் காளைகளைப் போல ஜோடி போட்டுக்கொண்டு அலைவார்கள். மற்றவர்களிடம் இருந்து தனித்து இருவரும் ஓர் ஓவியம் போல் புடைத்துக்கொண்டு தெரிவதைப் போல எனக்குத் தோன்றி இருக்கிறது. சிக்கல் இல்லாதவர்கள் என்பதால் இருவரையும் எனக்கு எடுத்திருந்த வீட்டிலேயே தங்க வைத்திருந்தேன். எப்போதாவது குடிக்கும்போது தனபாண்டிக்கும் கொஞ்சம் ஊற்றிக் கொடுப்பேன். ஆனால் கிரிதரன் முடியாது என மறுத்துவிடுவான்.

கிரிதரன் கஞ்சா அடிப்பதாக பட்டறையில் மற்ற பையன்கள் பேசிக்கொள்வார்கள். எனக்கு அதைக் கண்டுபிடிக்கத் தெரியாது என்றாலும், அழுத்தி விடுகிற சமயங்களில், மாடு வயிற்றை நிலத்தில் பதித்து அமர்ந்து ரசனையாய்த் தலையை ஆட்டிக் கொண்டிருப்பதைப் போல கிரிதரன் தலையை மட்டும் ஆட்டுவான் ஒரு தினுசாய். அதனாலேயே அவன் கஞ்சா அடிப்பான் எனத்தான் நானும் நம்பினேன். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், தனபாண்டி சொல்வதற்கு மட்டும் தலையாட்டியபடி அமர்ந்திருப்பான்.

வேலையில் எந்தச் சுணக்கமும் காட்ட மாட்டார்கள். இருவரும் அமைதியாய் யாரிடமும் பேசாமல் கம்பியை எடுத்து நெருப்பில் சொருகிக் கொண்டிருப்பார்கள். கடமுடாவென எந்தக் கம்பிச் சத்தமும் இருக்காது. இருவர் செய்யும் வேலையிலும் ஒரு நுணுக்கத்தைப் பார்த்து இருக்கிறேன். அவர்கள் இருவரையும் தொந்தரவு செய்யாமல் விட்டு விட வேண்டும். தங்களுக்குள் எதையாவது குனிந்து மெதுவாகப் பேசிக்கொள்ளும் போது பெரும்பாலும் கிரிதரன் தலையை மட்டும் ஆட்டுவான். பையன்கள் அதைச் சுட்டிக்காட்டி, “கட்டுன பொண்டாட்டி மாதிரி ஆட்டுறான் பாரு” எனக் கிண்டலடிப்பார்கள். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் தனபாண்டி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடுகிற ஆளாக இருந்தான் கிரிதரன்.

ஓர் இரவில் குடித்துக்கொண்டிருக்கும் போது, “உங் கதையைச் சொல்லுலே” எனத் தனபாண்டியைப் பார்த்துச் சொன்னேன். கிரிதரனிடம் கேட்டிருந்தால் தலையை மட்டும்தான் ஆட்டுவான். “பெறந்ததில என்ன இருக்கு அன்ணாச்சி? புழுவப் போலத்தான் பெறப்பு. சதுரகிரி மலை தெரியும்ல. அங்க ஒரு குரு இருந்தாரு. இங்க இருக்கப் பிடிக்காம சின்ன வயசிலயே அங்க ஓடிப் போயிட்டேன். அங்க நல்ல சாப்பாடு, தங்கல். ஒழுங்கா குருவுக்கு பணிவிடை செஞ்சேன். எங் குருட்ட இருந்து ஜாதகம் பார்க்கக் கத்துக்கிட்டேன். எங்குருநாதர் காசுக்கு ஜோசியம் பார்க்க மாட்டாரு. அந்த ஜாதகத்தை அவருக்குத் தொடத் தோணனும். அவரை மாதிர் இருக்க ஆசை. அவர் செத்தபிறகு எங்க போறதுன்னு தெரியாம ஊருக்குப் போனப்பதான் இவன் இங்க கூப்டு வந்தான்” என்றான்.

“அவங்கதை என்னலே” என்றேன்,

“ரெண்டு பேரும் சின்ன வயசில இருந்தே ஒண்ணா இருக்கோம். வீட்ட தண்ணி தொளிச்சு அவனே முழுகிட்டான். ஏதோ அரைக்கிலோ சீனி அதிகமா வாங்கறதுக்காக ரேஷன் கார்ட்ல அவன் பேரை இன்னமும் வச்சிருக்காங்க. அவங்கப்பா ஆடு மேய்க்கிறாரு. அம்மா ரெம்ப நாளைக்கு முன்னயே செத்திருச்சு. இருந்த கொஞ்ச நிலத்தை கவர்மெண்ட் எடுத்துட்டாங்க. அதில கொஞ்சம் காசு வரும்ணு காத்துக்கிட்டு இருக்காங்க. ஓர் அண்ணனும் தம்பியும். அண்ணன் காட்டு வேலைக்குப் போறான். தம்பி எட்டு படிக்கிறான். எது மேலயுமே ஆர்வம் இல்லாம இருந்தான். நாந்தான் கட்டம் கணிக்கக் கத்துக் குடுத்தேன். இப்ப குட்டி பதினாறு அடி பாயுது” என்றான்.

இருவரையும் அதற்குப் பின் கொஞ்சம் கூர்மையாகக் கவனிக்க ஆரம்பித்தேன். வீட்டினுள் சத்தம் வராமல் நுழைந்த போது, மஞ்சள் குண்டு பல்ப் வெளிச்சத்தில், சுவரோரம் ஒட்டி அமர்ந்து, மடியில் வைத்துப் புத்தகம் ஒன்றை விரித்துப் படித்துக்கொண்டிருந்தனர். எட்டாம் வகுப்புப் பையன்களைப் போலத் தோளோடு தோள் நெருக்கி அமர்ந்திருந்தனர் அப்போது. என்னைப் பார்த்ததும் அவசர அவசரமாக அதை ஒளித்து வைத்தனர். அவர்கள் போனபிறகு அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்த போது, ஜோதிடப் புத்தகம் என்று தெரிந்தது.

“கட்டம் அறிந்து காப்பாற்றிக்கொள்” என்று கொட்டை எழுத்தில் அட்டையில் ஓர் எந்திரம் வரையப்பட்டதன் கீழ் போட்டிருந்தார்கள். சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். ராசிகள், லக்கினங்கள், கணங்கள் என எல்லாவற்றையும் பற்றியும் தனித்தனியாக எழுதி இருந்தனர். என் மகள் ராசிக்குப் படித்துப் பார்த்தேன். எதையும் போட்டு உடைப்பர் இந்த ராசியினர் என மிகச்சரியாகப் போட்டிருந்தது. அவர்கள் ஒளித்து வைத்த இடத்திலேயே மறுபடியும் வைத்து விட்டேன்.

நான் எடுத்துப் பார்த்த விஷயம் அவன்களுக்குத் தெரியும் போல? அதற்கப்புறம் துணிந்து எடுத்துப் படித்துக்கொண்டிருந்தனர். குடிக்கிறவர்களுக்கு மத்தியில் படிக்கத்தானே செய்கிறார்கள் என்பதால் நானும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் கிரிதரன் மட்டும் அந்தப் புத்தகத்தை வெறிகொண்டு படிப்பதைப் பார்த்தேன். அந்தப் புத்தகத்தை அவன் பைபிளை ஏந்துவதைப் போல அணைத்து எடுத்துச் சென்றான்.

சிலநாட்கள் இடைவெளியில் அந்தப் புத்தகத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு நடந்து போவதைப் பார்த்தேன். கிரிதரனின் கண்களில் குழி விழுந்திருந்தது. ஆனால் தனபாண்டியைப் பொறுத்தவரை சோறுக்குத்தான் முதல் இடம் எப்போதும் கொடுப்பான். “அண்ணாச்சி. பசியில அந்த மலைக்குப்போய் உக்கார்ந்த உடனேயே சுடுசோறு போட்டாங்க. அதுக்கு விட்டது வேறு எதுவும் இல்லை” என்பான்.

மதியத்தில் வேலை இல்லாமல் அமர்ந்திருந்த போது ஒருநாள் இருவரும் இணைந்து ஒரு சிறுபெண்ணை அழைத்துக்கொண்டு வந்து நின்றனர். நெஞ்சே இல்லாமல் சாயம் போன சுடிதாரில் நின்றாள். வத்தலக்குண்டுவிற்குப் பக்கத்தில் உள்ள மலைக் கிராமத்தில் இருக்கிறது வீடு. அவளுக்கு ஓர் அக்காவும் உண்டு. குடும்பமே தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கிறது. இவள் எப்படியோ பன்னிரெண்டு முடித்து விட்டாள். இனி அவளைப் படிக்க வைக்க வாய்ப்பில்லை எனச் சொல்லி விட்டார்கள் வீட்டில். ஊரில் இருக்கும் போதே கிரிதனுக்கும் அவளுக்கும் காதலாம். அவளை நர்ஸ் ஆக்கிவிட்டுத்தான் திருமணம் முடிப்பேன் எனக் கிரிதரன் எல்லோரிடமும் சவால்விட்டு அழைத்து வந்துவிட்டானாம். என்னது சவால் விட்டானா? தலையை ஆட்டினானா?

அவளுக்குப் பட்டறைக்குப் பக்கத்திலேயே நானும் போய் ஒரு தங்குமிடத்தை ஏற்பாடு செய்தோம். அதுவும் நல்ல ஒழுக்கமான பிள்ளைதான். கிரிதரனிடம் இருந்து தள்ளியே நடந்தாள். ஏற்கனவே தெரிந்தவர்கள் என்பதால் தனபாண்டியை “சொல்லுங்கண்ணே” என்பாள். என்னை நாளடைவில் அவளாகவே அப்பா என அழைக்கத் துவங்கினாள். கிரிதரன் எங்கெங்கோ போய் யார் யாரையோ பிடித்து, அவளுக்கு நர்சிங் படிப்பிற்குக் கோவையில் இடம்பிடித்துக் கொண்டுவந்தான். அவன் இப்படியெல்லாம் பேசுவான் என்பதே எனக்கு வியப்பாக இருந்தது. அப்படியெனில் என்னிடம் பேசாமல் இருந்ததற்குக் காரணம் மரியாதை என எடுத்துக்கொண்டேன்.

அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கொண்டு போய் நர்சிங் கல்லூரியில் சேர்த்துவிட்டு, அடுத்த பேருந்தைப் பிடித்துப் பட்டறைக்கு வந்து சேர்ந்துவிட்டான். “எங்க தங்குணீங்கல” என்றேன். “ரூம் போடலை அண்ணாச்சி. அவங்களை காலேஜூக்குள்ள விட்டுட்டு நான் பஸ் ஏறிட்டேன்” என்றான் தலையைக் குனிந்தபடி. கவனித்துப் பார்த்தபோது இருவரும் திடீரெனத் தனித்தனியாகச் சாப்பிடப் போவது தெரிந்தது.

இன்னொரு பையனை அழைத்து விஷயத்தைக் கேட்டேன். அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் காசை மிச்சம் பிடிக்கிறானாம் கிரிதரன். எனக்கென்ன தலையெழுத்தா எனத் தனபாண்டி எப்போதும்போலப் போகிறானாம். “உனக்கு கிறுக்குப் பிடிச்சிருச்சா. எதாவது யார்ட்டயாவது பணம் கட்டச்சொல்லிச் சிபாரிசுக்குப் போகலாம்” என்றேன் அழைத்து. “இல்லைங்க அண்ணாச்சி நாந்தான் தரையில உருண்டு புரண்டு இதைப் பண்ணனும். யார் தலையிலயும் சுமையை ஏத்தக்கூடாது. இந்த சோத்தையும் திங்கற ஜனங்க இருக்கத்தானே செய்றாங்க” என்றான் கிரிதரன்.

அவனை நினைக்கையில் எனக்குப் பெருமையாக இருந்தது. அந்தப் பெண்ணிற்கு உடையும் செருப்பும் வாங்கக் கொஞ்சம் பணம் கொடுத்தேன். அவன் கேட்கிற சமயங்களில் முன்பணமாகத் தொகையும் கொடுத்தேன். நாள்பட கிரிதரன் சரியான உணவில்லாமல் சோர்வாகத் தட்டுப்படத் துவங்கினான். சில நேரங்களில் எனக்கு வாங்குகிற சாப்பாட்டில் குழம்பு, பொரியலைக் கொஞ்சம் மிச்சம் வைத்து, வெறும் சோறு மட்டும் ஒரு தட்டுக்கடையில் வாங்கிவரச் சொல்லி அவனைச் சாப்பிட வைப்பேன். என்னால் முடிந்தது அதுதான்.

நண்பர்களோடு வெளியில் போய்விட்டு இரவு வீடு திரும்பியபோது, உள்ளே பலத்த சத்தம் கேட்டது. தனபாண்டி, “லூஸூக்கூதி.. சொல்லிக்கிட்டே இருக்கேன்” என கிரிதரனை அடிக்கிற சத்தமும் கேட்டது. உள்ளே நுழைந்தபோது தனபாண்டி கையில் பயணப்பையோடு நின்றான். என்னுடைய சமாதானங்களைப் பொருட்படுத்தாமல், “எதைக் கண்டானோ அதுல? அந்த வாடை ஞாபகம் வந்திருச்சுன்னா மத்ததை மறந்திடறான். இவன் தெரிஞ்சே சீப்பட நினைக்கிறான். அதை என் கண்கொண்டு பார்க்க முடியாது அண்ணாச்சி. மன்னிச்சிருங்க” எனச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வேலையிலிருந்து போனான். நடுவீட்டில் செல்வ லட்சுமி என்கிற பெயர் கொண்ட ஜாதக நோட்டு ஒன்று கிழிந்து கிடந்தது. அதைக் கையில் எடுத்தபோது கிரிதரன் வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு அவனது படுக்கைக்கு விரைந்தான்.

தனபாண்டியின் பிரிவிற்குப் பின் கிரிதரன் மேலும் முடங்கிப்போனான். கொஞ்சம் வேகம் குறைந்த இயந்திரம் போல பட்டறைக்குள், அதேசமயம் பழைய நுணுக்கத்துடன் நடை போட்டான். இரண்டொரு தடவைக் கவனித்துப் பார்த்தேன், கம்பிகள் உரசுகிற சத்தம் கேட்கவில்லை. அந்தப் பெண்ணின் கல்லூரிக் கட்டணத்திற்காகப் பக்கத்தில் அவன் ஒரு பெரிய தொகையை வட்டிக்கு வாங்கியதாகவும் எனக்குத் துப்பு கிடைத்தது. “இங்க ஆட்கள் வருவாங்க. போவாங்க. எனக்கும் பணத்துக்கும் சம்பந்தம் இல்லை” என்று கொடுத்தவரிடம் போய்ச் சொல்லிவிட்டும் வந்தேன். சோதித்துப் பார்த்ததில் முறையாய் வட்டி கொடுப்பதும் தெரியவந்தது.

ஊரில் நிலத்திற்கான பணம் வந்துவிட்டதாக வந்து நின்றான். அந்த முறைதான் அதிக நாட்கள் அவன் விடுமுறை எடுத்தது. நான்கு நாள் கழித்துக் கிளம்பி வந்த அவன் என் கையில், வங்கி மாதிரி நினைத்து, ஒன்றரை இலட்சம் ரூபாயை ஒரு பைசா வட்டிக்கு கொடுத்து வைத்தான். அதற்கப்புறம் அவன் ஊருக்குப் போவதையே நிறுத்திவிட்டான். “எனக்குன்னு இனிமே இதை விட்டா வேற ஒன்னுமே இல்லை அண்ணாச்சி. கொஞ்ச நாள் பிடிமானம்” என்றான் என்னிடம்.

அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி அந்தப் பிள்ளைக்கு கல்விக் கட்டணம் மற்றும் உணவுக் கட்டணத்தைக் கட்டினான். இடையில் ஒருநாள் வந்த அந்தப் பிள்ளை எங்களது பக்கத்து வீட்டில் குளித்துவிட்டு, பட்டறைக்குக் கிளம்பி வந்தாள் கையில் ஒரு பழைய, நூல் பிரிந்த ரெக்ஸின் பையோடு. ”படிச்சு முடிச்சா அவங்க வச்சிருக்க ஆஸ்பத்திரிலேயே வேலைக்கு எடுத்துக்குவாங்களாம்ப்பா” என்றாள். எனக்குப் பார்க்கச் சங்கடமாக இருந்ததால், கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து, “போயி முதல்ல தோள்ள போடற மாதிரி நல்ல ஒரு பையா வாங்கிக்குடு. சினிமாவுக்கு கூப்டுட்டு போ. கற்பெல்லாம் போயிராது உனக்கு” எனச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

மாலையில் அவளைப் பேருந்தில் அனுப்பிவிட்டுத் திரும்பி கிரிதரன் உற்சாகமாக நடந்துவந்த காட்சியைத் தூரத்தில் இருந்து பார்த்தேன். அப்படியொரு துள்ளல் இருந்தது அவனது நடையில். அப்போதும் தலையை தன்னியல்பாய் ஆட்டிக்கொண்டிருந்தான் அவன். வந்துநின்ற அவனிடம், “கேட்டதெல்லாம் வாங்கிக் குடுத்து அனுப்புனியால” என்றேன். “அதுக்குத்தான எல்லாமே அன்ணாச்சி. சின்ன வயசில இருந்து ஆதரவா இருந்துச்சு. அன்னைக்கு நிலைமைக்கு அந்த ஆதரவு இல்லைன்னா செத்துப்போய் இருந்திருப்பேன். அந்தப் புள்ளையை எனக்கு ரெம்ப பிடிக்கும் அண்ணாச்சி” என்றான் ஆழமான யோசனையோடு. தனபாண்டியைக் குறித்து ஒருநாள் அவனிடம் விசாரித்தபோது, “அவனை இனிமே நான் பார்க்கிற அம்சம் இல்லை அண்ணாச்சி” என்று சொல்லிவிட்டு விரைவாக அவ்விடத்தில் இருந்து அகன்றான்.

அவளது மூன்றாம் வருடப் படிப்பிற்கு முன்னமே என்னிடம் கொடுத்து வைத்திருந்த பணம் முழுமையாகக் கரைந்துவிட்டது. மற்ற பையன்களிடமுமே அவன் கடனாகப் பணம் பெற்றிருந்தான். சிறிய அளவிலான தொகைகள் என்பதால் தலையைக் கொடுத்தாவது தந்துவிடுவான் என அவன்மீது எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது. ஆட்டைத் தூக்கிக் குட்டியில் போட்டுக் குட்டியைத் தூக்கி இன்னொன்றில் போட்டு அவளைப் படிக்க வைத்தான். அவள் முடிப்பதற்குள் இவன் தன்னைச் சுற்றிக் கடனைச் சுவராய் எழுப்பிக்கொண்டான்.

அவள் சொன்ன மாதிரியே படித்து முடித்ததுமே வேலைக்கு எடுத்துக்கொண்டார்கள். வேலைக்குப் போவதற்கு முன்பு வந்து பார்த்தாள். இருவரும் ஒரே மாதிரியான நிறத்தில் செல்போனை கையில் வைத்திருந்தார்கள். வேலைக்கு இடையே ஓடிப் பதுங்கி அவன் பேசுவதைப் பார்த்து இருக்கிறேன். கொஞ்ச நாள் செல்போனுக்கு வேலை இல்லாமல் இருந்தது. சோர்ந்துபோய் அமர்ந்திருந்த அவன் கோவைக்குப் போய்விட்டு வர அனுமதி கேட்டான். இருளடைந்தது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு திரும்பி வந்தான்.

“அவங்களா பார்க்குற வரை நாம போயி பார்க்க முடியாதாம்” என்றான் என்னிடம். கிரிதரனின் எந்தத் தொலைபேசி அழைப்புகளையும் அப்புறம் அந்தப்பெண் எடுக்கவே இல்லை.

சிலநாட்கள் கழித்து என்னுடையதிலிருந்து அழைத்துப் பார்த்தேன். “அலோ யார் பேசறது? நான் அவங்க அக்கா பேசறேன். நீங்கதான் ஓனரா? அந்தப்பையன் எந்நேரமும் படுக்கறதை பத்திதான் பேசறானாம். வெளிப்படையா சொல்ல முடியாதளவுக்கு பயங்கர டார்ச்சருங்கறா. ஒரு பொண்ணப் பெத்தவரு. உங்களுக்குத் தெரியாதா? எங்க வீட்டுக்காரருக்கு தெரிஞ்சா கொன்னே போடுவாரு. நான் வச்சிடறேன். நீங்க கொஞ்சம் கண்டிஷன் பண்ணி வைங்க” என்றது குரல்.

அந்தரத்தில் விட்டு ஓடிப்போகிற அளவிற்கு துரோகம் செய்யக் கூடியவளாக அவள் நிச்சயம் இருக்க மாட்டாள் என நம்பினேன். அவள் மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு எப்படித் தெரியும்? பொதுவாகவே இந்தப் பிள்ளைகள் எல்லாம் ரகசியமாகவே இருக்கிறார்கள். அந்தப் பிள்ளை கிளம்பிவந்து என்ன ரகசியம் சொல்லப் போகிறாளோ?

அவனை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. நெஞ்சில் சங்கடம் அடைக்க, எனக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கோர்த்து “நமக்குன்னு இருக்கறது கண்டிப்பா வந்துரும். நல்ல நேரம் வந்தா அது நடந்திடும்” என்றெல்லாம், என்னவோ சொல்லிப் பார்த்தேன். அவன் குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. அந்தப் புத்தகத்தை நெஞ்சோடு அணைத்தபடி அவன் தூங்கிக்கொண்டிருப்பதை வீட்டினுள் நுழையும்போது ஒருதடவை பார்த்தேன். வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு கிளம்பி எங்கேயோ போய்விட்டு வருவான். அவனது சட்டையைத் துழாவியபோது, கோவைக்குப் போகிற பயணச்சீட்டு இருந்தது.

முறை வைத்து வாரம் தவறாமல் இப்படிப் போய்விட்டு வந்தான். அந்த முறை அவன் கிளம்பிப் போனபோது, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து என்னை அழைத்தார்கள். “பொண்ணுங்க வேலை செய்ற எடத்தில எக்குத்தப்பா நடந்துருக்கான். அந்தப் பொண்ணை எல்லார் முன்னாடியும் தகாத மாதிரி அசிங்கப்படுத்திருக்கான். அவங்க வேலைக்காரங்க போட்டு அடிச்சு இங்க தூக்கிட்டு வந்திருக்காங்க. ஓனரு ரெம்ப பெரிய மனுஷன். கேஸ் போட்டு ரிமாண்ட் பண்ணித்தான் ஆகணும்” என்றார்.

சிலநாட்கள் கழித்து அதிகாலை நேரத்தில் துவண்டு நடந்து வந்தான் கிரிதரன். மேலுக்குச் சுகமில்லாதவர்களிடம் இருக்கும் சோர்வு அவனது கண்களில் தெரிந்தது. ஒடிசலாய்க் குச்சியொன்று காற்றில் ஆடிவருவதைப் போல இருந்தது அவனுடைய நடை. ஜெயில் சோறு ரௌடியைத்தானே உருக்கி எடுக்கும்? இவனுக்கு ஏன் இதெல்லாம் நடக்கிறது என நினைத்துக்கொண்டேன். வந்த அவனை யாருமே தொந்தரவு செய்யவில்லை.

அவன் பிறகொருநாள் தனியாகப் பேசத்துவங்கினான் என்று என்னிடம் வந்து சொன்னார்கள். நான் பார்க்கும்போதே கையைத் திடீரெனக் காற்றில் ஆட்டி முணுமுணுத்தான். வீட்டில் அவனோடு தனியாக இருக்க எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவ்வப்போது நோட்டம் விடுகையில், அந்தப் புத்தகத்தைக் குனிந்து அமர்ந்து படிக்கிற காட்சி தெரியும். “போதும் போய்த் தூங்கு” என்பேன். விளைக்கை அணைக்கிற சத்தம் கேட்கும் எனக்கு.

ஒருநாள் மதியம் போல வெளியில் போய்விட்டுத் திரும்பியபோது, கடை வாசலில் கூட்டமாக இருந்தது. பைகளைத் தூக்கிக்கொண்டு கிரிதரன் எல்லோரது பிடியையும் விலக்கிவிட்டு, ஓட முயற்சித்துக்கொண்டிருந்தான். அருகில் போய் பார்த்தபோது, நெற்றியை நிறைத்து விபூதிப் பட்டை இட்டிருந்தான். வழக்கமாக அவ்வாறு அவன் பூசுவதில்லை. அவன் முகத்தில் அச்சம் நட்டுக்கொண்டு தெரிந்தது.

என்னுடைய கையையும் உதறிவிட்டு நடுச்சாலையில் பைகளைத் தோளில் போட்டுக்கொண்டு திருடனைப் போல ஓடினான் கிரிதரன். கொஞ்ச தூரம் பின்னாலேயே விரட்டிப்போய்ப் பார்த்துவிட்டு மூச்சிரைக்கத் திரும்பி வந்தேன். அவன் போனதிலிருந்து எனக்கு நிலைகொள்ளவில்லை. எங்கே போயிருப்பான்? பையன்களை விட்டுப் பேருந்து நிலையத்தில் தேடச்சொன்னேன். அவனது வீட்டிற்கு அழைத்துப் பார்த்தேன். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அவன் இல்லாத வீட்டினுள் தனியாக நுழைந்தபோது மனம் கனத்தது. கொஞ்சம் அதிகமாகவே அன்றைக்குக் குடித்தேன்.

சிலநாட்கள் கழித்து மீண்டும் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு. “முழுக்க லூஸாயிட்டான் போல. உங்க நம்பரை மட்டும்தான் மனப்பாடமா சொல்றான். கேஸெல்லாம் வேணாம்னு சும்மா அடிச்சுத் தொரத்துரோம். அந்த பொண்ணு வேலை பார்க்கிற எடத்தில போயி அவளுக்கு முன்னாடி வேட்டியை அவுத்து காட்டிருக்கான்” என்றார் அங்கிருந்து பேசியவர். தொலைபேசியை அவனிடம் கொடுக்கச் சொன்னபோது, வாங்க மறுத்துவிட்டானாம். “ஆள் எப்படி இருக்கான்” என்றேன். “உடம்புல உசுரத் தவிர ஒன்னும் இல்லை. கண்ண சிமிட்டறத வச்சுத்தான் பாடில உசுரு இருக்கறதே தெரியுது. ஆனா நெத்தியை நிறைச்சு விபூதிப் பட்டை” என்றார் அவர் பதிலுக்கு.

பிறகு ஒரு வாரம் கழித்து அவனது வீட்டிற்குத் தொலைபேசி செய்தபோது அங்கே அவன் போன விவரம் தெரியவந்தது. “இங்கதான் அமைதியா இருக்கான். திடீர்னு வெளமெடுத்து கிளம்பி போயிர்றான். ஒவ்வொரு தடவையும் ரத்தம் பட்ட சட்டையை வேஸ்ட்டா கீழ போட்டு எரிக்க வேண்டியிருக்கு. மனசே ஆறலை. ரத்தத்தை விடுங்க. நாம காடுகரையில சிந்தாத ரத்தமா? ஊரெல்லாம் அசிங்கப்பட்டிருப்பானே? இங்கயும் வந்து அதைக்காட்டி எங்களையும் ஊரெல்லாம் அசிங்கப்படுத்துறானே” என்றார் அவனுடைய அப்பா.

அதற்கடுத்து அவன் குறித்து நானாகப்போய் எதையும் விசாரிக்கவே இல்லை. என் சொந்த வாழ்விலும் சில இடர்கள் இருந்ததால் அதைப் பற்றிய யோசனைகளும் குறைந்திருந்தன. ஆனால் அவனைப் பற்றி நினைக்கையில் துயரம் கூடும். அந்தப் பெண் அப்பா என அழைத்ததில் கொஞ்சம் அசைந்துதான் போயிருந்தேன். அன்றைக்கு ஒருநாள் ஆறஅமர அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த போது, கடைசியாய் தனபாண்டி சொன்னது திடீரென நினைவிற்கு வந்தது. “இவன் தெரிஞ்சே சீப்பட நினைக்கிறான்”. எதற்காகச் சொன்னான் இதை?

பட்டறையில் பெரிய வேலை ஒன்று வந்திருந்ததால், கொஞ்சம் பொருட்கள் வாங்கத் தற்செயலாகக் கோவைக்குப் போக வேண்டியிருந்தது. கிளம்பும் போதே கிரிதரன் அங்கே இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் உணர்ந்தேன். ஏதோ யோசனையோடு அவனது வீட்டிற்கு அழைத்துப் பார்த்தபோது, நான் உணர்ந்தது சரியெனப் பதில் வந்தது. என் வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, அந்தப் பிள்ளை அன்றொரு நாள் சொன்ன அடையாளங்களை வைத்து அந்த மருத்துவமனைக்குப் போனேன்.

தூரத்தில் அந்த மருத்துவமனை வாசலில் கிரிதரன் குத்த வைத்து அமர்ந்திருந்த காட்சி தெரிந்தது. இருப்பதிலேயே கேடான நிலையில் அங்கே கிடந்தான். முகமெல்லாம் மண் அப்பி இருந்தது. சற்றுமுன் யாரிடமோ அடிவாங்கி இருப்பான் போல. அருகில் போய் அவனது தோள்களைக் குலுக்கி எழுப்ப முயற்சித்தேன். என் கைகளை உதறிவிட்டு, வாயிலின் அந்தப் பக்கம் போய் அமர்ந்து குறுகுறுவென்று என்னையே பார்த்தான். இனி இது பட்டறைக்கு ஏற்ற கம்பி அல்ல என்பதை உணர்ந்து திரும்பும் முன்னர் அவனிடம் ஏதோ ஒரு நம்பிக்கை ஒன்று உந்தித் தள்ள அந்தக் கேள்வியைக் கேட்டேன். வெறும் காற்றில்கூட அந்தக் கேள்வி மிதந்து கொள்ளட்டும்.

“நீ தெரிஞ்சேதான் சீப்படற. மனசறிஞ்சு எதுக்கு அந்தப் பிள்ளையை சீப்பட வைக்குற” என்றேன்.

பதிலேதும் சொல்லாமல் என்னையே எரிப்பதைப் போலப் பார்த்துக்கொண்டே இருந்தான். சற்றுப் பொறுத்த பின்னர், திரும்பி என் வழியில் நடந்தபோது என் முதுகிற்குப் பின்னால் இருந்து அவனது குரல் கேட்டது.

“கட்டம் அதைத்தான் சொல்லுது. கட்டம் என்னைக்கும் தோக்கக் கூடாது”.

முதுகிற்குப் பின்னாலிருந்து விசையொன்று இழுத்தது. நெஞ்சில் ரோமக்கால்கள் நட்டுக்கொண்டு நின்ற நிலையில், திரும்பிப் பார்க்கவே விரும்பவில்லை நான்.

***
சரவணன் சந்திரன் – மதுரையில் பிறந்த இவர் ‘ஐந்து முதலைகளின் கதை’ நாவலுக்கு 2016-ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருது பெற்றவர். இதுவரை எட்டு நாவல்களும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளும் இரண்டு கதைத் தொகுதிகளும் ஒரு மொழிபெயர்ப்பும் வெளிவந்திருக்கிறது.

என் படைப்பில் என் நிலம்

1

பிரமிளா பிரதீபன்

ன் நிலம் பற்றிய நினைவுகளுக்குள் செல்வதில் அனேகமாக நான் விருப்பமுள்ளவளாகவே இருக்கிறேன். எப்போது சென்றாலும் என்னை அரவணைக்கும் உணர்வை மொத்தமாய்ச் சிந்திடும் என் நிலத்தின் மீதான பிடிப்பும் ஈர்ப்பும் எத்தனை வருடப் பிரிவிற்கு பிறகும் குறையவேயில்லை.

என் ஆழ்மனதின் எல்லா நினைவுகளும் என் நிலத்தின் சம்பவங்களுக்கூடானதாகவே பெரும்பாலும் இருந்திருக்கின்றன. ஊரிலிருந்து வெளியேறி எங்கெல்லாமோ திரிந்துக் களைத்து எப்போதேனும் ஒரு நொடி ஆசுவாசிக்கையில் மறைந்திருந்த என் நிலத்தின் வாசனை ஏதோ ஒருவகையில் என்னைத் தொந்தரவு செய்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

அப்போது 2002-ம் வருடம். உயர்தரக் கல்வியை நிறைவுசெய்து எனது மேற்படிப்பிற்காகத் தலைநகரத்திற்குப் பிரவேசித்த ஆரம்பம். அந்நாட்களின் குறுகியகால மண்ணின் பிரிவும், அச்சொற்ப காலத் தொலைதூர ஏக்கமும் என்னை எப்படியெல்லாமோ வருத்தியதை உணர்ந்து அதிசயித்தேன். கிட்டத்தட்ட பித்தேறி நடமாடும் கிறுக்கியாய், ஊர் எல்லையைப் புதிதாய் மிதிப்பது போல் மண்ணைக் கட்டிக்கொண்டு மிதந்தேன். நடந்த பாதைகளில் விழுந்து மணிக்கணக்கில் கிடந்திருந்தேன். மண்ணை அள்ளிச் சுவைக்க முனைந்ததாய்க் கூட ஞாபகம். ஒரு ஆதிமனிதனின் அளவற்ற ஆரவாரத்தையொத்து எனக்கே புரியா மொழிகொண்டு மலைகள் மீதேறி கத்தித் தீர்த்தேன்.

அத்தனைத் தாகமும் சிலிர்ப்பும் எங்கிருந்து தோன்றியதென்றோ… சிறு பிரிவு நிரப்பிய வேதனையை எழுத்தின்வழி தணிக்க முயன்றதையோ நான் திட்டமிட்டுச் செய்ததாக நினைக்க முடியவில்லை. என்னைப் பிடித்தழுத்திய புதிய சூழலும் பொருந்திப்போகா நாட்களின் நகர்வும் சொந்த மண் மீதான மையலை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். எனக்கே தெரியாமல் வாய்க்கும் போதிலெல்லாம் எடையிழந்து பறக்கும் பஞ்சென்றாகி நினைவின் வழியில் என் மண்ணைத் தரிசிக்கத் தொடங்கியிருந்தேன். அம்மண்ணின் மீது நடந்தேறிய அத்தனை சந்தோச நிகழ்வுகளையும் இடையறாது அசை போடவும் ஆரம்பித்திருந்தேன்.

இது மிக முக்கியமான தருணம். இரு நூற்றாண்டுக் காலங்களாக நிலத்தின் உரிமைக்காகப் போராடி முடிவேயற்று தள்ளாடும் மலையகப் பின்புலத்தைச் சேர்ந்த ஒருத்தி எங்ஙனம் மண் மீதான மகிழ்வான தருணங்களை அசை போட முடியும்?

சாத்தியந்தானா?

பிரிவின் வலி தோற்றுவித்த அதிசயமென இதனைக் கொள்ளலாமா? இல்லையெனில் வாழுமிடத்தின் நிறைவுணர்வு கடத்தியப் பரவசமெனலாமா?

சொல்லத் தெரியவில்லை. என் நினைவுகளை எழுத்தில் பதித்து திருப்தியடைதலை ஏன் தொடங்கினேனென்றோ அல்லது தொடர்ந்தேனென்றோ காரணங்களை சேர்த்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் எனது முதலாவது படைப்பான ‘பீலிக்கரை’ எனும் சிறுகதை துல்லியமான ஞாபகத்தின் பதிவெனவும் அது மலையகத்தின் முக்கியமான குறியீட்டுச் சொல்லெனவும் பின்நாளில் பேசப்பட்டது.

இப்படி ஆரம்பித்த எனது படைப்புலகம் நிலத்தின் சாரத்தை உறிஞ்சிக்கொண்டபடியே நீளத்தொடங்கியது. குறிப்பாக எனது ஆரம்பகால எழுத்துக்களில் என் மண்ணின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் வேகம் என்னிடம் அதிகமாகியிருந்ததை நினைவுப்படுத்தல் இங்கே பொருத்தமாயிருக்கக் கூடும்.

ஒவ்வொரு கோடிப்பக்கங்களதும் ஏதோ ஒரு திசையிலிருக்கும் பலா மரங்களும், வெள்ளை மண் சந்தியும், ஸ்டோர் லயங்களும், செண்டாக்கட்டி மலைகளும், நெத்திகாண்களும், தேயிலைப் பொட்டல்களும் தூரத்தே தெரிந்து மின்னும் ஊமையாறுமென என் மண்ணின் அடையாளச் சொற்களே எனது பிரதான கதைக்களங்களாக மாறியிருந்தன. நான் சேர்த்துக்கொண்டு விளையாடிய சின்னவா, கட்டையா, உக்குலி, பெரியப்பொண்னு, கினிகினி, சூரி, அம்மாளு போன்றோர் சுற்றிச்சுற்றி கதாபாத்திரங்களாகிப் போயிருந்தனர். தேயிலை நுனிக்குருத்தின் விசிலொலியும், பாக்குபட்டை சவாரியும், கள் தரும் மயக்க போதையும், கசிப்பு காய்ச்சும் பெரிய பானைகளும், அவ்வப்போதான பழமொழிகளும், சில கெட்ட வார்த்தைகளும் கதைகளுக்குள் இழையோடிய என் கொண்டாட்டங்களும் வலிகளும் மலையக மண்வாசனையைச் சிதறாமல் தருவதாகக்கூட சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நான் எப்போதெல்லாம் பயப்படுகிறேனோ… அல்லது கொண்டாடிக் களிக்கிறேனோ எப்போதெல்லாம் துக்கமும் நிர்க்கதியும் அடைகிறேனோ அப்போதெல்லாம் ஏதோ ஒன்றை எழுதத் துணிகிறேன். அனுபவத்தைவிடச் சிறந்த வழிகாட்டி வேறெதுவாக இருக்க முடியும்? நானும் எங்கெல்லாமோ பயணப்படுகிறேன். ஒரு கட்டத்தில் மலையகம் தானென்றாலும் தன்னை வெளிக்காட்டாமல் சிங்கள மக்களுக்கு மத்தியில் தம்மை ஒளித்து வாழும் ஒரு சூழலுக்குள் (காலி மாத்தறை) என்னைத் தந்து அவர்களையும் அந்த மண்ணின் மொழிக்கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டவளாய் ‘கட்டுபொல்’ எனும் நாவலை எழுதுகிறேன். ஏதோ ஒருவகையில் அம்மண்ணின் ஈரப்பதத்தையும் ஒளிந்து நெளிந்தாடும் வெயில் கோலங்களையும் என் எழுத்துக்குள் சேர்த்துக் கொண்டதாகவே நம்பிக் கொண்டிருக்கிறேன்.

இவர்களின் சிங்களம் கலந்த பேச்சு மொழியையும் கலப்புக் கலாசாரங்களையும் ஓரளவிற்கேனும் பதிவு செய்ததுடன் இந்நிலத்தினை, நிலத்தின் உற்பத்தியை, அவ்வுற்பத்தி அவர்களின் உயிரை உறிஞ்சும் விதத்தை இன்னும் ஒழுக்கத்தை அல்லது மீறல்களை, பயத்தை, முட்டாள்தனத்தை… தமக்கென்றில்லாத நிலத்துண்டுகளில் காலங்காலமாய் விவசாயம் செய்து பிழைக்கும் அவலத்தை… இப்படி ஏதோ ஒருவகையில் நிலம்சார் நினைவுகளைப் படைப்பிற்குள்ளாக்கும் முறைமையை இயல்பாக்கிக் கொண்டமையையும் அதற்கான அங்கீகாரமும் என் அதிர்ஷ்டம் தானென்பேன்.

வேறென்ன?

தொடர்ச்சியாயும் காலத்தின் நகர்த்தல் நிலத்தைத் தாண்டிய வேறு போக்குக்குள் என்னை தள்ளிவிடுகிறதா என்ன?

பின் ஏன் அகவுணர்வுகளையும் உளவியல் போக்குகளையும் என் படைப்புகள் வெளிப்படுத்துவதாகப் பேசப்பட வேண்டும். இருக்கலாம். சூழலின் தன்மையும் அது நம்மை நெருக்கும் முறைமையின் பிரதிபலிப்பும் பதிவாகும் அதிசய தருணங்களை நாமறிந்தா நகர்த்துகிறோம்?

ஆனாலும் நிலத்தையும் நிலத்தின் நினைவுகளையும் புதுப்பித்து அசைபோடும் படைப்பின் சுவைக்கு நிகராக வேறேதும் இல்லையென்பதை மறுப்போர் இருக்க மாட்டார்கள்.
புனைவினூடு ஒன்றை மீட்டிக்கொள்ளல்… பதிவு செய்தல் வலியுறுத்தல் அல்லது வெளிப்படுத்தத் துணிதல் இவையெல்லாவற்றிலும் சமூகப் பெறுமானமொன்று இருக்க வேண்டுமென ஆழமாக நம்புகிறவள் நான். எனவேதான் என் நிலம் பற்றிய நினைவுகளுக்குள் செல்வதில் அனேகமாக நான் விருப்பமுள்ளவளாகவே இருக்கிறேன்

***
பிரமிளா பிரதீபன் – இலங்கையில் உள்ள வத்தளையைச் சேர்ந்தவர். தற்பொழுது ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சிறுகதைத் தொகுப்பாக விரும்பித் தொலையுமொரு காடு யாவரும் பதிப்பகம்வழி வந்திருக்கிறது. மின்னஞ்சல் – pramilaselvaraja@gmail.com

ஆனந்த் குமார் கவிதைகள்

0

பைத்திய எறும்பு

நிலவு முழுதாய்
விரிந்த ஒரு இரவில்
அந்த சின்னஞ்சிறு எறும்பிற்கு
பித்திளகி விட்டது

இதுவரை
ஒரு மலரைக்கூட
முழுதாய் கண்டிராத அது
தேடுகிறது
மேல்நோக்கிய பாதையை

வாழ்வை நொந்து
வழிதொலைந்து அலைகிறது
தான் வசிக்கும் வெண்மலரின்
இதழ்களுக்கிடையில்

***

படுத்தபடிக்கே
வானில் ஏறுகிறது
குழந்தை

முதுகில் பூமியை சுமந்தபடி
வானில் ஏறும் குழந்தை
அதை அத்தனை
விருப்பத்தோடு செய்கிறது

குறுக்கே தனக்குப் பிடித்தமானவர்களின்
தலைகள் தென்படும்போதெல்லாம்
குழந்தைக்கு சிரிப்பாய் வருகிறது

வானில் ஏறி ஏறி
கால் தளர்ந்து
உறங்கிவரும் குழந்தையை
பூமி
தாங்கு தாங்கெனத் தாங்குகிறது

***

மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி

ஒரு மலைவாழ் ஸ்தலத்தில்
நான் அந்தச் சிறுமியை சந்தித்தேன்

மழை அரித்த சரிவொன்றில்
நாங்கள் ஏறிக்கொண்டிருக்கையில்
அவள் எழுதிக்கொண்டிருக்கும்
ஒரு கதையை எனக்குச் சொன்னாள்

சிறியவர் உலகில் வந்துபோகும்
பெரியவர்களின் கரங்கள்
அதில் தென்பட்டன

நான் கேட்டேன்
“அவை உங்கள் கால்களை
எப்போதேனும் பற்றிக்கொள்கின்றனவா”

அவள் தனது
பெரிய பற்களை சிரிக்கவைத்து
அதன் மீது வந்துவந்து சொன்னாள்
“அவைகளுக்கு எங்கள் கால்கள்
சிக்கவே சிக்காது..”

அதன்பின் நாங்கள்
பேசாமல் நடந்தோம்

ஒரு மஞ்சள் நிறப் பட்டாம்பூச்சி
ஏற்றத்தில் ஏறுவதுபோல் பாவனை செய்தபடி
எங்களுடன் மேலே வந்துகொண்டிருந்தது

(மிருத்திகாவிற்கு)

***

விரிந்து உதிர்ந்த மலரென
நகர் நடுவில் ஒரு மைதானம்

பொங்கி நிற்கும் நீரை
சுற்றிவரும் எறும்புகள் போல
அதிகாலையில்
அந்த ஆழத்தைப் பார்த்தபடி
எல்லையைச் சுற்றி
நடக்கிறார்கள் பெரியவர்கள்

ஒன்றுமில்லையென
கிடந்த அந்த மலரை
இந்த விடுமுறை நாளில்
தொட்டது யார்
பூவெறும்புகளென உள்ளிருந்து
வெளிவந்துகொண்டே இருக்கிறார்கள்
பிள்ளைகள்

***

ஆனந்த் குமார் – தமிழின் நவீன கவிஞர்களில் ஒருவர். இவரது முதல் தொகுப்பான ‘டிப் டிப் டிப்’ பரவலான கவனத்தைப் பெற்றது. 2022க்கான குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருதைப் பெற்றார். குழந்தைகள் புகைப்படக் கலைஞரான இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். மின்னஞ்சல்: ananskumar@gmail.com

வேல்கண்ணன் கவிதைகள்

0

1. கடல் நினைவு

செக்கச் சிவந்த கருநீலம்
இளமஞ்சள் நெளி கானலுடன்
உடல் தழுவும்
உப்புக் கரிப்பில்
நின்றுவிடுகிறேன்

அணியாத சேலை மடிக்கும் அலைகள்
பறிக்கவியலா வெண்பூ விளிம்புகள்
எனை தீண்டியபடி.

கடல் வானம்
இணை கோட்டை
தேடும் கண்களுக்கு
ஒரு விள்ளல் போதும்
நிலையாய் நிற்க.

நிரந்தரமாய் வியாபித்திருக்கும்
கடலெனும் வானம் கடலெனும் இரவு
கடலெனும் நிலம் கடலெனும் அமைதி
கடலெனும் காற்று கடலெனும் தவிப்பு
கடலெனும் பெருமரம் கடலெனும் சிற்றிலை
கடலெனும் தனிமை
கடலெனும் நான்.

2. மலை தரிசனம்

கூழாங்கற்கள்
விளைந்தேங்கிய
பள்ள நீரில் கிடந்தது
பெருமலை.

மழைத் தூறல்
அடிவாரத்து அடர்வற்ற
செடியிடம் ஒதுங்கினேன்..
ஒடுங்கிச் சிறிதாக முயல்வதை
வேடிக்கை பார்த்து
துளியும் கருணையற்ற
கோவர்த்தன கிரி.

தன்னிடத்தில்
மறையத் தொடங்கிய
சூரியனை
நிலவாக்கியது
உள்வாங்கிய கரடு.

பெரிய கனிவாக
உயர்ந்த தாய்மையாக
இன்னும் வேறு வேறாக
தள்ளி நின்று
அண்மையில்
சற்று தொலைவில்
அற்புதக் காட்சி அளித்த
பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால்
என்னுள் இருக்கிறது மலை.

சுள்ளிகளைச் சேகரிக்க
வெறுங்காலுடன்
மலையேறிக் கொண்டிருக்கிறது
முது நிழல்.

3. மாயக் கனவு

இன்றும்
நீட்டி முழங்கி
எழுந்திருக்க வேண்டியதாகிறது
மனசில்லாவிடினும்.

மறந்துபோன கனவுகளுடன்
என்றேனும் நிகழும் விடியலுக்குள்
தீர்ந்து போன
மது போத்தல் நசுக்கப்படும்
சத்தம்.

நாள் முழுமையும்
துர்கனவு பாறைகளின் இடறலில்
உன் கை நீளும்
மாயக் கனவை
பற்றிக் கொள்கிறேன்
எப்போதும்

உறக்கமென்பது
நினைவுகளின் விழிப்பு

***
வேல் கண்ணன் – இசைக்காத இசை குறிப்பு, பாம்புகள் மேயும் கனவுநிலம் தொகுப்புகளின் ஆசிரியர். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார். மின்னஞ்சல் முகவரி: velkannanr@gmail.com

சாருக் செல்வராஜ் கவிதைகள்

0

கடல் பற்றி எனது அல்லது கடலின் கூற்று:

டல் காமம் கொதிக்கும் உலை
அலை தோற்றுப்போன புணர்ச்சியின் தழுவல்
கரை இத்தனை யுகத்தீண்டல்களின் விறைக்காத மயிர்
ஒரு அலை உலுக்கியதில் உதிர்ந்தது போக
ஒரு அலை அரித்ததில் தேய்ந்து போக
மீதமுள்ளவை இம்மலர்கள், இம்மணல், இம்மக்கள்.
கடல் வெளித்தள்ளப்படாத மதநீர்
கடல் நாகரிகம் சுமக்கும் பனிக்குடத் திரவம்
அலை கரை தொட்டு கடல் திரும்ப பல நூற்றாண்டுகளும் ஆகும்
பாதங்களை பாறைகள் புதைத்து விட்டன, பாதங்களை அலைகள் மீட்டெடுக்கப் போராடுகின்றன
பாறைகளை ஒருநாள் கடல் தின்னும் பாதங்களையும் சேர்த்து.
கடல் தனது கருப்பையை தனது கைகளால் அறுத்து எறிந்தபோது
ஏனையோர் எல்லாவற்றையும் இழந்தனர்.
கடல் எதோ ஒன்றை நோக்கி முன்னும் பின்னுமாக அலைந்து சோர்வுற்றதன் விளைவாக
யுகங்களை நினைவிலிருந்து நுரைக்கிறது
நாங்கள் எங்கள் ஊரை காலி செய்யும்போது
கடல் தனது உப்பை இழக்கும்.

*

அப்பா மகனின் சுற்றென வரும்போது
தளும்பிய மூத்திர வாளியை
அவ்வாரத்தில் இரண்டாம் நாளும் தூக்கி நடந்தார்.
பால்யத்தில் விரும்பித் தின்ற மீனை மகன் பிடித்த அன்று
தேசங்களின் அதிகார வலையில் அவன் துடிதுடித்தான்.
சிறைக்கு ஐந்து பேர் எனப் பிரிக்கப்பட்ட போது
அப்பா இந்த தொழில் வேண்டாமென்று சொன்னது
எதற்கென்று தெரிந்தது.
முள்ளில்லாத மீன் துண்டு எதுவென சொன்ன உடல்
சோற்றையும்
வெறும் புளித்தணீரையையும் மாறி மாறி பார்த்தது.
உள்நாட்டு கைதிகள் நாயாகப் பார்க்கப்பட்ட போது
பிணைக்கைதிகளை நாய் பேயாக கூட பார்க்கவில்லை.
ஒரு தட்டில் வெறும் தண்ணீர் சேர்த்துதான் சாப்பிடச் சொல்வார்
கடல் என்பது நீர் அல்ல அது அதிகாரத்தின் பரவல்

*

அக்கா பதின்மத்தை கடந்து நின்றபோது
கல்யாணத்துக்கான சமிக்கைகள் வந்தன.
அக்கா ஊரையும் வீட்டையும் கடலையும்
ஓரளவுக்கு அறிந்தவள்
அவள் கடலுக்கு போகாத ஆணையே
வேண்டுமென்றபோது கரையங்கும்
ஒரு நிசப்தத்தை அவள் மார்பில் உணர்ந்தாள்.

*

குடும்பத்தில் முதன்முதலாக காலேஜ் முடித்தான்
அப்பா ஆற்றிலும் ஒடப்பிலும் கடலில் தூரமின்றியும்
வலை தள்ளுவார்.

மூத்த மகன் அம்மாவுக்கு குலச்சாமி
அவன் சரி என்றால் சரி இல்லை என்றால் இல்லை
தம்பிக்கும் தங்கைக்கும் அவன் சொல்தான் எல்லாம்
படிப்பிற்காகவும் குடும்பச் செலவுக்காகவும்
கடலுக்கு எப்போதாவது போய்வருபவன்.

அந்த முறையும் கடலுக்குப் போனான்

கடல் ஒரு சொல்லப்படாத பிரேத கிடங்கு
கடல் அலையின் ஓசை என்பது மனித மூச்சுகளின் ஓலம்
அந்த காலையில் கடலின் ஓசை
அவனின் தொண்டை எலும்புகள் உடைந்ததில் எழுந்த ஓசை
பிழைப்புக்கு எறிய படகு இவன் உடலை கடலோடும் கரையும் நசுக்கியதில்
செத்துப்போனான்,

நாக்கு தள்ளி நெஞ்சு சிவந்த உடலைக் கண்டு
ஓலமிட்டாள் அம்மா
நெஞ்சில் கை வைத்தப்படி கடலை
ஒரே மிடறில் சாராயம் போல் குடித்தார் அப்பா
மூத்தப்பிள்ளை குலச்சாமியை உடல்
அறுக்கப்பட்டு வெள்ளைத் துணியால் சுற்றிக்கொண்டு வந்தனர்.

பிரேதம் வீடு வரும்முன்னே பிரேதத்தை அப்புறப்படுத்த வேலைகள் நடந்த
அறுக்கப்பட்ட உடல் இரவு வீடு தங்கக்கூடாதாம்
ஊர் என்பதே அதிகாரத்தின் முதல் ஆசனம்
வந்த கையோடு சடங்கு முடிக்கப்பட்டு
மேளமும் கொட்டும் நகர்ந்தன
முதல் நாள் இரவு தானாகப் போனவனை
மறுநாள் ஏழு எட்டு பேர் தூக்கி சுமந்தனர்.

அந்த இரவின் இருளை
அப்பா கொள்ளிக்கட்டையால் மேலும் எரித்து இருளாக்கினார்.
கடல் என்பது நீங்க நினைக்கும் எதும் அல்ல
அது இருளடைந்த பாதைக்கான சாவித்துவாரம்
மகன் போனநாள் முதல் அம்மா அந்த வீட்டில்
விசேஷ நாள் என எதையும் அனுமதிப்பதில்லை.

அவன் புகைப்படச் சட்டகத்தில் இருக்கும்
சிறிய பல்புகளில் இருக்கும் வண்ணங்களைத் தவிர
பிரத்யேகமாக வாழ்வின் வேறெந்த வண்ணங்களையும்
இந்நாள் வரையிலும் நான் பார்த்ததில்லை

அம்மா அடிக்கடி இப்படி சொல்லுவாள்

எப்போவோ போய்ச்சேர வேண்டிய உயிர இழுத்து பிடிச்ச என் சாமி
இப்போ எங்கன ஒண்ட இடமில்லாம சுத்துதென்று தெரியலையே.,
அம்மா இன்னும் கனவிலும் கூட அந்த முகத்தைக் காணாது
நுரைக்கிறாள்.

*

எவ்வெளியும் இல்லாத அக்கடலில் அதிகாரத்தின் எல்லை தீர்க்கம்
வெறும் நுரைக்கட்டைகளால் ஆனது
அண்டை தேசத்தின் கொடியுயர்ந்த கப்பல் படகைச் சுற்றி வளைத்தபோது
உடல்கள் தங்களை மீறிய பயத்தில் மண்டியிட்டு நின்றன.

எல்லா மீன்களையும் கடலுக்கு கொடுத்தது போக
ஆளுக்கு ஒன்றென வாயில் திணிக்கப்பட்டது.

துப்பாக்கியின் முனைகள் பின்னந்தலையை குறிபார்த்து நின்றபோது
ஒவ்வொரு கட்டளையாகப் பிறப்பிக்கப்பட்டது

கடலில் குதி

முட்டி போடு

ஐஸ் கட்டியை தலையில் வை

இப்படியாக இருவரை அழைத்து புணர வைக்கப்பட்டனர்.
கடலென்பது சுவர்களற்ற சித்திரவதைக் கூடம்
அப்பா மகனின் துவாரத்தில் குறி நுழைத்தபோது
அப்பாவின் துவாரத்தில் ஐஸ்கட்டி நுழைக்கப்பட்டது

எல்லாவிதமான வதைகளும் முடிவுற்று படகு கரைதிரும்பும் முதல் நாள்
அப்பா செத்துப்போனார்

மகன் இறந்த உடலை பார்த்தபடியே கரை சேர்ந்தான்.

வீட்டில் அம்மா தெய்வத்தை கண் இல்லையா என்று சபித்துக்கொண்டிருந்தாள்.

கடலென்பது சபிக்கப்பட்ட வார்த்தைகளின் நீர்மக்காட்சி….

2

முன்று பகல் மூன்று இரவென மொத்தம் ஆறு கனாக்கள்

கனவுகளின் ஊடே வந்து போகிறது
ஆழ்மனதில் புதையுண்ட முகம்.
தொடர்ந்து ஓயாது
தியானத்தில் புரள்கிறது கண்கள்.
அவ்வளவு தீவிரத்துடன் நேசிக்கும் கண்களில்
ரத்தம் ஓட்டம் பெருக்கெடுக்கிறது.
அதில் மூழ்கி சாகத்துடிக்கிறது உயிர்.
உடைந்த கோப்பையில் கலந்த விசத்தை
பிரத்யேகமான காஃபிக்கொட்டை என்றாய்.
அதில் மணக்கத் தொடங்கியது உனது மனம்.
பூதாகரமான இரவை வயிற்றில் செரிக்கும் ஓசை கேட்டு
பறக்கிறது காக்கை.
எந்த அதிர்வுமின்றி சரிகிறது உடல்.

ஒரு பெண்ணிற்காக கொலை செய்ய நினைத்தவன்
அப்பெண்ணிற்காக அப்பெண்ணாலே கொலையாகிறான்.
தனது முதுகெலும்பால் செய்த கத்தியை அவளிடம் நீட்டுகிறான்.
பிறகு தனது தலையை அவனாக தெருத்தெருவாக
எடுத்துக்கொண்டு சுற்றிப் பார்க்கிறான்.
தாளாமல் பெய்கிறது மழை
கண்களில் ஒய்யாரமாக ஆடும் உருவத்தைக் கண்டு
சிரித்துக்கொண்டே இருக்கிறது கொலையானவனின் தலை.

திடீரென்று மலர்கிறது மலர்.
அதன் நடுவே சிகரெட்டை பற்றவைக்கத் தெரியாமல்
தடுமாறுகிறது அவ்வுடல்.
அதை பற்றவைக்கச் சொல்லிக் கொடுத்தேன்.
புகைக்க சொல்லிக் கொடுத்தேன்.
அவ்வுடலின் தொப்புளைச் சுற்றி
வளர்ந்தது புகையிலைகள்.
உடல் இரவு பகலென சதா புகைக்கத் தொடங்கியது.
உடல் என்னையும் சேர்த்து புகைக்கத் தொடங்கியது.
நான் புகையுண்டேன்.
புகையிலைகள் தீர்ந்த நாளன்று
நான் அவ்வுடலால் எரி சாராயம் ஊற்றி எரிக்கப்பட்டேன்.
பிறகு
தொடை எலும்பில் ஆன ஒரு சிகரெட்டில்
இன்னும் புகைகிறது அவ்வுடல்.

தனது நாய்க்காக அறுக்கப்பட உடலிகளில்
எனது உடலும் ஒன்று
ஆடைகளை நீயாகவே நெய்துகொள்வாய் என்கிறாய்.
பெருகும் கருணையில் உனது விருப்பமான ஆடையில்
எனக்கு ஊஞ்சல் கட்டித் தந்தாய்.
அந்த ஊஞ்சலில் எனது உடல் தலைகீழாகத் தொங்கியதில்
தலைகுப்புற விழுந்தது பட்டுப்புழுக்களின் இலை.
என் தோலை எடுத்து நீ செருப்பு தைத்துக்கொள்கிறாய்.

நிலவொளியில் தோய்ந்த புல்வெளியில்
பாதங்களின் சுவடு மிளிர்கிறது
காமத்தின் ஆழியில் நுழைந்தபோது
போகத்தின் வாயில் திறக்கபட்டதே அந்நாளிலே
நதியில் மூழ்கடிக்கப்பட்டேன்
உனது கரங்களில் மீனாகத் துடிதுடித்தேன்
நதியின் தனிமை ரகசியம் உடைந்து
இரு கரைகளும் வெள்ளக்காடானது.
உனது பாதங்களைப் பார்த்தவாறே செத்துப்போனேன்.
பிறகு உனது மடியில் இரவெல்லாம் புதைக்கப்படுகிறேன்.

உருண்டு கொண்டிருக்கும் பாறைகளுக்கு நடுவே
குகையினை கண்டுப்பிடித்தாய்.
ஆயிரம் கள்ளம் பொருந்திய இரவுகளை
பாறைகளில் தீட்டத் தொடங்கினோம்.
உனது உடலையும் ஆயுதத்தையும்
முழுமையாக முடிக்காத போது
என்னுடலில் குருதி தீர்ந்தது.
ஆத்திரத்தில் எனது இதயத்தை நீர்மமாக்கி
பாறையை முழுமைப்படுத்தினாய்
எனது உடலை சதா நீ அமரும் மரத்தில் புதைத்த
மறுகணமே நிகழ்ந்தது அற்புதம்.
அந்தப் பறவை காண்டாமிருகங்களிள் ஆரவாரத்துடன்
தனது கூட்டினை அடைந்தது…

***

சாருக் செல்வராஜ் – Sharukhraj1999@gamil.com

கெட்ட குமாரன்

0

கு.கு.விக்டர் பிரின்ஸ்

ரண்டாயிரம் பாஸ்டர்களுக்குச் சற்றே குறைவான எண்ணிக்கையில் அகில இந்திய கோல்கோதா பெந்தேகோஸ்தே சபைகளின் தலைவருக்கான தேர்தல் சென்னையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து ஆயத்த நிலையுடன் தயாராக இருந்தது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மகாநாடு என்பதால் ஏழு நாள் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று தேர்தலுக்கு நாள் குறித்திருந்தனர். ஜெபங்களும் பாடல்களும் சிறந்த அசைவம் முதல் இனிப்பு வகையென களை கட்டியிருந்தது. மூன்று நாட்களாக கேகே நகர் வெள்ளை பேண்ட் சட்டைகளுடுத்திய மீசை மழித்த நபர்களால் வேயப்பட்டிருந்தது. இருபது பாஸ்டர்களால் முன்மொழிபவரே தலைவர் தேர்வுக்குப் போட்டிபோட முடியும். இருமுறை போட்டியின்றியும் கடந்த தடவை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ரெவரெண்ட் டேனியேல் புஷ்ப ராஜனுக்கான சிம்மாசன தயாரெடுப்போடு தேர்தல் துவங்கியது. எதிர்முனையில் கேரளாவின் கோட்டயம் பகுதி கோல்கோதா பெந்தேகோஸ்தே சபையின் போதகர் தங்கச்சன் போட்டியிட்டார். தமிழ்நாட்டில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக சபைகளைக் கொண்ட அந்த பெந்தேகோஸ்தே பிரிவின் ஏகபோக சக்கரவர்த்தியாயிருந்த புஷ்பராஜன் ஆயிரத்தி ஐநூறு வாக்குகள் பெற்று இருக்கைகள் தெறிக்குமளவுக்கான ஜெபங்களோடு கிரீடமும் செங்கோலும் ஏந்தத் தயாரானர். கரவொலிகளோடு தேவனின் தேர்வாக அமைந்த அதனைப் போற்றும் வகையில் பாடல்கள் பாடுகையில் மார்தாண்டத்தைச் சார்ந்த ஒரு பாஸ்டர் ஒரு வெள்ளைத்தாளுடன் பீடத்தில் ஏறி மைக்கைப் பிடித்தார்.

“தேவனுடைய பிரகாரத்தில் பயபக்தியுடன் ஏறவேண்டும்…. நான் ஆத்ம சுத்தியுடனும் ஆத்ம உந்துதலோடு இங்கு வந்திருக்கிறேன். அண்ட சராசரத்தைப் படைத்த தேவனின் நாமம் மகிமைப்படுவதாக… சங்கீதம் ஒன்று… துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும் பாவிகளின் வழியில் நில்லாமலும் பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காராமலும்…” அவரைத் தொடர விடாமல் ஒருசாரர் இருக்கையில் எழுந்து நின்று கத்தினர்.

“லெகியோனே கர்த்தருடைய பீடத்திலிருந்து கீழிறிங்கு…”

“ஏன் இறங்கவேண்டும்..!! பேசட்டும்…” என இரண்டாக உடைந்து தொங்கியது அந்த மாநாடு. எண்பது வயதைக் கடந்த மூத்தப் போதகர் அனைவரையும் அமைதிப்படுத்தி அவரைப் பேச வைத்தார்.

“எனது பத்து தீர்மானங்களில் ஒன்றை மட்டும் வாசிக்கிறேன், அதனை உங்கள் முன்னால் வைக்கிறேன்…” என்றவருக்கு ஆதரவாக தங்கச்சன் அணியினர் குரலெழுப்பினர். அவர் ஒரு நாளிதழைத் தூக்கிக் காட்டினார். கட்டுக்கட்டாக வைத்திருந்த நாளிதழ்களைத் தங்கச்சன் ஆதரவு பாஸ்டர்கள் கூட்டத்தில் விளம்பினர். பிறமொழியினர் புரிந்துகொள்ளும் வகையில் ஆங்கில மொழியாக்கக் கைப்பிரதியும் இணைக்கப்பட்டிருந்தது.

‘கார் திருட்டில் பாஸ்டர் மகன் கைது..’ என்ற தலைப்பில் ‘நாகர்கோவில் கோல்கோதா சபையின் பாஸ்டரின் ஏழாவது மகன் இருபத்தி ஏழு வயதுடைய ஜோயலைப் போலிஸார் கைது செய்திருக்கின்றனர். இவர் மேல் ஐந்துக்கும் மேலான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் குண்டர் சட்டத்தில் அடைப்பு’ செய்தி விரிந்திருந்தது. புஷ்பராஜன் பாஸ்டரின் கடைசி மகன் தேவனுடைய வழியிலிருந்து விலகித் துன்மார்க்கனாகத் திரிகிறான் என்ற தகவல் பரவலாகப் பாஸ்டர்கள் மத்தியில் பேசப்பட்டாலும், குமரி மாவட்ட பாஸ்டர்கள் ஜோயல் குறித்து அனைத்தும் தெரிந்து வைத்திருந்தனர். ஞாயிறு ஆராதனை நடக்கையிலே போலீஸ் சபையினுள் நுழைந்து மகனைக் கைது செய்ததை அனைவருக்குமான புதுத் தகவலாக அவரைப் பிடிக்காத குமரி போதகர்கள் சுடசுடத் தகவலாக கூட்டத்தில் பரிமாறினர்.

விபச்சாரம் செய்த ஸ்திரியை பெருங்கூட்டம் கல்லெறிய நிற்க்கையில் உங்களில் பாவம் செய்தவர்கள் கல்லெறியக் கடவன் என்ற இயேசுவின் நன்னெறி வார்த்தைகளைச் சுமந்து புஷ்பராஜனைக் காப்பாற்ற எவருமில்லை. ஜோயல் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அந்த போதகர் வாசிக்கத் துவங்கினார். எதிர்ப்புக் குரலுயர்த்தியவர்கள் சிறுபான்மையாயினர்.

“சதா நேரம் மதுபோதையில் கிடந்து பர ஸ்திரிகளின் மடிகளை மெத்தையாக்கி வீடு வரும் மகனின் திருட்டுப் பணத்தில் ரெவரெண்ட் டேனியேல் புஷ்பராஜனுக்கும் பங்கு கிடைக்கிறது… ஆகவே இந்த பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்…” அந்த பாஸ்டர் படித்து முடிக்கையில் மொத்த அரங்கமும் உறைந்து போயிற்று. முன்வரிசையில் அமர்ந்திருந்த புஷ்பராஜனின் இரு பாஸ்டர் மகன்கள் போடியம் ஏறி அந்தப் பாஸ்டரைத் தாக்கினர்.

ஆறு பிள்ளைகளோடு போதும் என்று வயிறைப் பிடித்த கெசியாளுக்கு பைபிளின் பழைய ஏற்பாடு பாடம் நடத்தி துயருற்றிருந்த அந்த கர்ப்பப் பையில் தாங்கா பாரம் சுமக்க வைத்தார் புஷ்பராஜன். கருத்தடைக்கு எதிரான கடுமையான தத்துவ நிலைப்பாடு கொண்டிருந்த பெந்தேகோஸ்தே சமூகமே சமீபகாலமாக மூன்று குழந்தைகளோடு நின்று விடுகிறதே என்ற அவளின் கெஞ்சல்களுக்கு ‘கர்த்தர் தாரத வேண்டாம்னு சொல்லாத’ என்றாயிருந்தது அவரது பதில். எப்போதும் இல்லாத ரத்தப்போக்கு, தாயும் சேயும் மருத்துவமனையிலிருந்து நேராய் கல்லறைக்கு என்ற ஊரார் பேச்சைப் பொய்பித்து காலை முதலில் காட்டி கர்ப்பத்திலும் மரண சாகசம் காட்டிப் பிறந்தவன் ஜோயல். எப்படியாவது ஒரு முண்டம் வெளியே வந்து மனைவி பிழைத்தால் போதும் என்றிருந்தவருக்கு அவனின் பிறப்பிலிருந்தே கசப்பான பானம் நிரந்தரமானது. பைபிளைத் தூக்கியெறிந்தான் என மூன்று வயதில் பிரம்பால் அடி வாங்கியதிலிருந்து பதினேழு வயது வரைக்கும் தினம் அடி வாங்காத நாளில்லை. இரவு குடும்ப ஜெபத்தில் இரண்டு அக்காள்கள் நான்கு அண்ணன்களும் பெற்றோருடன் ஆர்ப்பரித்திருக்கையில் இவன் உறங்கி விழுவான். தங்கம் பூசிய பன்றியாக அந்த சர்ச்சில் உலா வந்தான்.

“பாஸ்டருக்க கடைசி பையன் அவருக்க பேர கெடுப்பான்…”

சபையிலும் சுற்று வட்டாரத்திலும் பேச்சானது. தந்தை சகோதரர்களின் கண்ணயரும் நேரத்தில் சர்ச்சுக்கு விடை கொடுத்து நண்பர்களுடன் ஐக்கியமாவான். நீண்ட நேர ஜெபங்களும் பள்ளி விடுமுறையில் நடக்கும் சிறப்புக் கூட்டங்களும் அவனுக்கான வதை முகாமாகக் கருதினான். நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறான், தியேட்டர் செல்கிறான் என்ற புகார்களோடு தோளுக்கு மேல் வளர்ந்த மகனை அடிக்க முடியாமல் கண்ணீரோடு நின்றார் புஷ்பராஜன்.

“மோனே நான் ஒரு பாஸ்டர்.. அதுவும் பெந்தேகோஸ்… சுற்றி இருக்கவங்க என்னையும் எனக்க குடும்பத்தையும் பைனாகுலர் வைச்சு பாப்பினும், ஒரு சின்ன கொறன்னாலும் அத பெருசா சொல்வாங்க… உன் நிமித்தம் ஒருத்தருகிட்ட எனக்கு சுவிசேசம் சொல்லமுடியல…’ மவன திருத்த முடியல.. வந்துட்டான்’ ன்னு எனக்க காதுகேக்க சொல்லினும்…” பதினான்கு வயதில் மூழ்கி ஞான ஸ்தானம் பெற்று பதினேழு வயதிற்குள் பைபிளை இரண்டு முறை முழுமையாகப் படித்த அவனுள் எந்த உபதேசமும் ஏறவில்லை. பல போதகர்களை வரவழைத்து அவனுக்காக சிறப்பு ஆராதனைகள் நடத்தியும், தீர்க்கதரிசிகளைக் கொண்டு ‘நீ திருந்தி கர்த்தருக்குள் வரவில்லை என்றால், வெகுவிரைவில் அகால மரணமடைவாய்…’ அச்சுறுத்தும் ஏற்பாட்டு வசனங்களைத் திவ்ய தரிசனமாய் சொல்ல வைத்தும் தங்க உடையைத் துறந்து ஓடவே அவன் யாசித்தான்.

அம்மாவும் இரு அக்காக்களில் ஒருத்தியான பிரீடாவும் அவனிடம் சிலவேளைகளில் அன்பொழிய காரியம் சாதிக்க முடிந்தது. அதை கெட்டியாகப் பிடித்து தனது மூத்த மகன்கள் பாதையில் அவனை பைபிள் காலேஜ் படிக்க சம்மதிக்க வைத்தார் புஷ்பராஜன். நண்பர்கள் வாசனையும் அவன் லயித்த லௌகீகத் தனங்களும் அந்த கல்லூரியைச் சுற்றிவந்து மாயக்கோலாக அவனை வெளியே இழுக்க வரிந்து கட்டியது. ராணுவக் கட்டுப்பாடுடன் அந்த மதில்களுக்குள் மந்திரித்து விட்டவனைப் போலக் கிடந்தான். மற்ற பிள்ளைகள் பைபிள் கல்லூரியில் படிக்கையில் வருடத்திற்கு ஒருமுறை சென்று பார்த்திருந்த பெற்றோர் இவனுக்காக வாரம் ஒருமுறை மதுரைக்கு காரில் பண்டம், பலகாரங்களுடன் சென்று வந்தனர். முத்தங்களினால் அவனது தலைமயிரைத்தான் கட்டிப்போட முடிந்தது. வால் போன்ற பின்னந்தலையின் கொத்து முடியில் வந்த மாற்றம் அவன் கால்களுக்கு வரவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் திருவனந்தபுரத்தில் திருடிய பைக்கின் துப்புத் துலங்கியிருந்தது. பாஸ்டரின் மகன் திருட்டு வழக்கில் பைபிள் கல்லூரியிலிருந்து கைது என்பதைப் புஷ்பராஜனால் ‘பொய்வழக்கு’ என சக போதகர்களுடன் வாதிட முடிந்தது. ஆனால் சிறைக்குச் சென்று வீட்டுக்கு வந்தவனை மறுபடியும் கல்லூரிக்கு அனுப்ப அவரால் முடியவில்லை. சபையையும் அது சார்ந்த அனைத்தையும் புறக்கணித்தவன் ஜன்னல் வழியாக புதுப்பாதையை உருவாக்கி சபைக் காம்பவுண்ட்டை தனக்கு அன்னியமாக்கினான்.

அருகாமை சபைகளும் பிற மதத்தவர்களும் ‘கள்ளனின் தந்தை பாஸ்டர்..’ எள்ளி நகையாடுகையில் தாயின் ஒற்றைப்பிடியில் அவன் அங்கு தங்கி வந்தான். ‘சாத்தானைத் துரத்திடுவோம்’ என புஷ்பராஜன் மைக்கில் போதனையிலும் மன்றாட்டு ஜெபத்திலும் வேண்டுகையில், மொத்த விசுவாசிகளும் மேல் அறையைப் பார்த்து நகைப்பார்கள். அவரும் சபை விசுவாசிகளின் அபிலாஷைக்காக ‘சபையில் ஆணியடித்து அமர்ந்திருக்கும் பிசாசைத் துரத்த ஜெபம் செய்வோம்’ எனச் சொல்லி வீட்டிற்கு வரும்போது மனைவியின் முனகல் சாதம் விளம்பலைச் சகிக்க வேண்டியிருந்தது. வட இந்தியாவில் மிஷினரியாக இருக்கும் அவனது இரு அண்ணன்கள் உட்பட மொத்த குடும்பமே அவனைத் துரத்தி சாத்தான் பிண்டம் வைக்கக் கொக்கரித்து நிற்கையில் பிரீடா மற்றும் கெசியாளின் அழுகையே அவனைக் காப்பாற்றியது. தாயின் பரிவும் சுவையும் நிறைந்த உணவு ஒன்றே அவனையும் கட்டிப் போட்டிருந்தது, பலமுறை வனவாசம் சென்றிருந்தும் அந்த அறையையும் அம்மாவையும் பலநாள் அவனால் பிரிந்திருக்க இயலவில்லை.

இன்னோவா காரின் முன்னிருக்கையில் பதவி இழந்த புஷ்பராஜன் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். இரு மகன்கள் வெள்ளைச் சட்டைகள் கசங்கிக் கிழிந்து அவமானமுடுத்தி காரின் பின் இருக்கையில் தாய்க்கும் சகோதரிகளுக்கும் போன் செய்து கோபத்தைச் சற்றேனும் இறக்கிவைக்கும் முயற்சியிலிருந்தனர். எழுபத்தியிரண்டு வயதான அவர் பதவியிலிருந்தே மரிக்க வேண்டும் என்பதே குடும்பத்தாரின் ஆவலாயிருந்தது. கார் சர்ச்சை வந்தடைவதற்கு முன்பாகவே ஜோயலின் அறைச் சுத்தமாக துடைத்தெடுத்து ஒரு திறந்த டிம்போ வாகனத்தில் வைக்கப்பட்டது. அவனது மூத்த சகோதரியும் அவளது பாஸ்டர் கணவரும் பணியாட்களை வைத்து பொருட்களை ஏற்றிக் காத்திருந்தனர். கெசியாளும் பிரீடாவும் அனைத்தும் கைவிட்ட கையறு நிலையில் அவனைக் கைவிட இயலாமல் தவித்தனர்.

“இனி இந்த வீட்ல அவன் இருந்தா என்ன கொலகாரனா ஜெயில்ல பாப்பீங்க…” காரிலிருந்து புஷ்பராஜன் இறங்க மறுக்க, தாயை நோக்கி ஆவேசமாக வந்தான் மூத்த மகன். இரண்டாவது மகனின் வார்த்தைகள் அந்த சர்ச் காம்பவுண்டில் அச்சிலேற்ற இயலாத வகையிலிருந்தது. சபை விசுவாசியான டிரைவர் கெஞ்சிக் கேட்டும் புஷ்பராஜன் இறங்கவில்லை.

“பதவி எனக்கு முக்கியமில்ல.. தேவனுடைய ராஜ்யத்தில பங்கு கெடைச்சா போதும்… ஆனா திருட்டில நான் பங்கு வாங்குறேன்னு நான் பாத்து வளத்தின ஒருத்தனே மொத்த கூட்டத்தில நின்னு சொல்லுறான்….” உடைந்த அவர் மனைவியைக் காட்டி, “இவ ஒருத்திக்காக நான் பொறுத்தேன் எல்லாத்தையும்… இனி அவன் இல்லன்னா நான் இந்த வீட்ல இருந்தா போதும்…” சொல்லி முடிக்கையில் அழுதார். அங்கு கூடியிருந்த சிறு எண்ணிக்கையிலான விசுவாசிகளும் அவரது குடும்பமும் அவரது அழுகையை முதல் முறையாகக் கண்டு சேர்ந்து அழுதது. நண்பனின் பைக்கில் வந்த ஜோயலுக்கு அந்த இரவின் காட்சிகள் புதுமையாயிருந்தது. டிம்போவின் மேல் எட்டிப்பார்த்து நின்ற அவனது பீரோ அவனுக்கு உணர்த்தியது.

“நான் பேசினா கொல தான் விழும்…” என்ற மூத்த மகனிடம் கெசியாள் குரலுயர்த்திப் சொன்னாள்.

“யாரும் பேசவேண்டாம்… நானே பேசுதேன்…. எனக்கு ஒரு சகாயம் பண்ண முடிஞ்சா, நீங்க எல்லாம் மாறி நிக்க முடியுமா?”

அந்தக் குரலும் புதுமையாயிருந்தது மக்களுக்கு. அனைவரும் சர்ச்சினுள் சென்றனர். அருகில் கதவு திறந்த நிலையில் நின்றிருந்த இனோவா காரில் அதே சிலை போல புஷ்பராஜன் அமர்ந்திருந்தார். “என்ன அம்மா?” என்ற ஜோயலிடம், “மக்ளே.. ஒரு நிமிசம் இங்கயே இரு.. நான் இப்பம் வாரேன்…” என்ற கெசியாள் அவளின் வயோதிகத்தால் பருத்த உடல் உருகித் தரையில் ஒட்டும் வல்லமையோடு வீட்டினுள் ஓடினாள். அவனது நண்பனும் நிறுத்திய அதே தொலைவில் பைக்கில் நின்றிருந்தான். திரும்பி வந்தவள் கையில் சிறு பொதியும் சில பணக்கட்டுகளும் இருந்தது.

“இனி நீ இங்க வரருது மக்ளே… உன்னால எனக்க செரசுக்க மேல பாரம்.. நீ வாங்கின பேர விட எனக்க மக்க கொலகாரன் பேர வாங்கினுவினுமோன்னு பேடியா இருக்கு… நான் கேக்காத கெட்ட வார்த்தய எனக்க பாஸ்டர் மோனுக்க வாயில கேட்டன் இன்னைக்கு…. ஒனக்கு வேண்டி நான் பிடிச்சு வைச்ச கதவெல்லாம் அடபட்டாச்சு, ஒனக்கு பிரிச்சு தர நமக்கு சொத்து ஒன்னும் இல்ல.. இதுல இருக்க ஒரு லட்சம் எனக்க சேமிப்பு…. போ எங்கேங்கிலும் போய் ஜீவி… ஒன்னு மட்டும் மறக்காத, நல்ல பிள்ளையா இரு.. தெய்வத்த இறுக பிடிச்சுக்கோ…” கண்ணீரோடு தொப்புள் கொடியை அறுத்துவிட்டுத் திரும்பியவள் அவன் மரத்து நிற்பதறியாமல் அவனைக் கட்டிப் பிடித்தாள்.

“மக்ளே, எனக்க நம்பருக்கு விளிக்காத, ஒனக்க கொரல் கேட்ட தொங்கியோண்டு நிக்க இந்த சீவன் அத்து விழும்… ஒனக்கு முடிஞ்சா ‘அம்மா’ன்னு எழுதி ஒரு மொட்ட லெட்டர் எழுது… நிக்காம போ மக்ளே, எனக்க கிறுதயம் பெடைக்குது…” அவள் வீட்டைப் பார்த்து ஓடினாள். அறுந்து ஓடும் தொப்புள் கொடி வலி இருதரப்புக்குமாக அவனது கையிலிருந்த பணக்கட்டுகள் சரிந்து கீழே விழ, பெரிய பொதி அவனுடன் கெட்டியாக ஒட்டியிருந்தது. இனோவா குலுங்க அவர் இறங்கினார்.
“இனி நீ கெட்டகுமாரனாவும் வரவேண்டாம்…” அழுத்தமாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார்.

பைபிளில் இயேசு சொன்ன உவமைக் கதைகளில் முக்கியமான ‘கெட்டகுமாரன்’ கதையைப் பலமுறை தனது மகனுக்குச் சொல்லியிருந்தார் புஷ்பராஜன். அவன் புடமிடப்பட்டு திருந்தி வருவான் என்ற அவரது அங்கலாய்ப்புகளை அவன் பொருட்படுத்தவில்லை. அந்த உவமைக் கதையில் சொத்தில் தனக்கான பங்கைத் தகப்பனுடன் சண்டையிட்டுப் பெற்றுச் சென்ற செல்ல மகன் பணத்தையனைத்தையும் ஊதாரித்தனமாக இழந்து நண்பர்களால் புறக்கணிக்கப்படுவான். இறுதியில் வறுமையைத் தவிர்க்க பன்றிகளை மேய்க்கச் செல்லும் அவன் பன்றிகளுக்கான உணவுகளை உண்ணுகையில் தனது தந்தை அவரது வேலையாட்களுக்குக் கொடுக்கும் பிரமாதமான உணவுகளைச் சிந்தித்துப் பார்த்து, தந்தையிடம் ஓடிவருகிறான். கந்தலாடையில் வயிறு ஒட்டி திருந்திவரும் தனது மகனை ஆரத்தழுவி, அவனை மன்னித்து கொழுத்த ஆடுகளை அடித்து அவனது வருகையைக் கொண்டாடுகிறார்.

கெட்டகுமாரனாக அவன் திருந்தி வருவதையே புஷ்பராஜன் வெறுத்திருந்தார். பதவி இழப்பும் சாட்டையடியான குற்றச்சாட்டுகளும் அந்த இரவில் அவனது சிலுவையேற்றத்தில் அவரை எரோது மன்னர் போலாக்கி தீர்ப்பு எழுத வைத்தது. சாத்தானை விரட்டியடித்த மகிழ்வில் கேட்டைப் பூட்டி மகிழ்வின் ஆராதனையை நடு இரவிலே மேற்கொண்டனர். அம்மா அவசரத்தில் கட்டிவைத்த பொதியில் இருந்த சோற்றுப் பருக்கைகளும் பொரித்த இருமீன் துண்டுகளும் சிலுவையில் தொங்கிய இயேசு தாகத்தில் அலறியபோது ராணுவ வீரர்கள் ஈட்டியில் வைத்து நீட்டிய காடி நீராக கசக்கவில்லை. அவனின் வாழ்வின் மிச்ச நாளுக்கான ஞாபகார்த்த பண்டமாக கொறித்துக் கொறித்து விடியும் வரை உண்டான். கோல்கோதா பெந்தேகோஸ்தே ஆலயத்தில் விடியும் வரை விடுதலையின் பெருவிழாவைக் கொண்டாடினர்.

கேரளாவின் நெடுமங்காடில் நண்பனின் அறையில் தஞ்சம் புகுந்த அவனுக்கு அம்மாவுக்கு மொட்டைக் கடிதம் எழுதி விசனப்படுத்தும் எண்ணம் இல்லை. வீட்டிலிருத்து அவனைத் துரத்த வீட்டு கமிட்டி கூடும்போதெல்லாம் அவள் போராடியதை அவனது மேல் அறை பெரும் காதாக்கி அவனைக் கேட்க வைத்திருக்கிறது. ஒரு டீ கொண்டு வந்து, “எல்லாருக்கும் ஒனக்கமேல பாசம் தான், கேசு கீசு இல்லாம இரு.. அது மட்டும் மதி..” செல்லமாகப் பேசிச்செல்லும் அவள் மறந்தும் வீட்டாரின் வெறுப்பை அவனுக்குக் கடத்த மாட்டாள். இரண்டு நாள் வீட்டிற்கு வரவில்லையென்றால் பிரீடாவிடமிருந்து அழைப்பு வரும், வீட்டிற்கு திரும்பி வருகையில் இரண்டு நாள் உடல் வாட்டம் அவளது உடலில் தெரியும். கடிதம் அனுப்பிச் சிறுகக் கொல்லாமல் ஒரேயடியாக மறந்து விடட்டும் என அவன் நினைத்தது பொய்யானது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்காவது கொரானா பலி கெசியாள் வயது 70. அனைவரையும் அதிரவைத்தது. உடலருகில் உறவினர்களைச் செல்ல அனுமதி மறுத்த சுகாதாரத்துறையும் காவல்துறையும் மற்ற மூன்று கொரானா மரணங்களுக்கு காட்டிய கெடுபிடியை விட அதிகமான சட்டங்களை விதித்தனர். கொரானா பரவல் தொற்று பாதித்து இறந்தவர்கள் வாயிலாக எளிதாக பரவக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடமும் அதிகம் இருந்தது. போலீஸ் உதவியுடன் சுகாதாரத் துறையே உடலடக்கங்களை மேற்கொண்டது.

கல்லறைத் தோட்டத்தில் ஒருவருக்கும் அனுமதி இல்லை என காவல்துறை அறிவித்தது அனைவருக்கும் நிம்மதியைக் கொடுத்தது. சர்ச்சிலிருந்து ஐம்பது மீட்டரில் அதே வளாகத்தின் பின் எல்லையிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் குழியைத் தோண்டுவதற்கு மட்டும் புஷ்பராஜன் குடும்பத்திற்கு அனுமதி கொடுத்தனர், மண்ணை நிரப்புவதற்கு ஜேசிபி இயந்திரத்தை சுகாதாரத்துறை ஏற்பாடு செய்திருந்தது. கெசியாளின் உடலை மருத்துவமனையின் பிணவறையில் பல அடுக்கு பிளாஸ்டிக் பைகளால் சுற்றி வைத்திருந்தனர். சபையின் உறுப்பினர்களில் சிலரும் புஷ்பராஜனின் நெருங்கிய உறவினர்களும் சர்ச்சுக்குள்ளிருந்தனர். மூன்று நான்கு முகக்கவசங்களைப் பயத்திற்கேற்ப அணிந்திருந்தார்கள். சர்ச்சிலிருந்து கல்லறைத் தோட்டத்தை நோக்கிய கிழக்கு பகுதியின் மூன்று ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது.

சர்ச்சுக்குள்ளிருந்தவர்கள் அந்த ஜன்னல்களூடாக தோண்டி வைக்கப்பட்டிருக்கும் குழியின் அகமண் குவியலைப் பார்த்திருந்தார்கள். பிணத்தை நடுவில் வைத்து வெகுநேரம் பாடலும் பிரசங்கமும் ஜெபமும் செய்பவர்கள் பெந்தேகோஸ்தேகாரர்கள். பல ஆயிரம் அடக்க ஆராதனைகளை நடத்திய புஷ்பராஜனுக்கு தனது மனைவியின் அடக்க நிகழ்வைச் சர்ச்சில் வைத்து நடத்த இயலாத கொடுந்துயரில் அவர் அறையிலே இருக்க, அவரது உதவி போதகர்கள் கெசியாளின் உடல் இல்லாமலே சர்ச்சில் உடலடக்க ஆராதனைக்கான பாடல்களை வந்திருந்தவர்களுடன் சேர்ந்து நடத்தினர். அழுகையும் மரணப் பாடலுமாகச் சேர்ந்து ஒப்பாரி ராகத்தில் அந்த சபை இறுகிக் கிடந்தது.

மரணப்பெட்டி வாங்க கையில் கிட்டிய இருபதாயிரத்துடன் சென்ற இரு சபை நிர்வாகிகளுக்கு பிணவறை ஊழியர்களின் ஆகாத நட்பு கிட்டியது. தங்களது பொறுப்பிலே பெட்டிகள் வாங்கப்படும், பணத்தைத் தந்துவிட்டுப் போங்கள், “உலக்கை மூட்டில் சென்ற புளியங்கொட்டைகளை எண்ணவா முடியும்?” என்ற பிணவறை பொறுப்பாளரின் பழமொழி சபை நிர்வாகிகளுக்கு யூதாஸின் ரூபம் கொடுத்தது. பத்தாயிரம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட அவர்கள் ஏற்கனவே அங்கிருந்த ஒரு பழுதடைந்த பெட்டியில் கெசியாளைக் கிடத்தி, பெட்டியை பல அடுக்கு கனமான பிளாஸ்டிக் பைகளால் மூடினர். புதைக்கும் இடத்திற்கே ஒருவரும் வரப்போவதில்லை!! சில நிமிட ஆராதனை நடத்த கல்லறை அருகில் யாராவது வந்தாலும் பெட்டியின் தன்மையை ஆராயப் போவதில்லை என்பதை அவர்கள் பரிட்சயித்து பார்த்த விடயமாயிருந்தது.

கோல்கொதா சபை வளாகம் ஆம்புலன்ஸ் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருந்தது. உடலை மூடிய பிளாஸ்டிக் ஆடை அணிந்த போலீஸார் சிலர் புதைக்கும் இடத்திற்கும் சர்ச் நுழைவாயிலுக்குமாக லாந்தியபடி நின்றனர். ஆம்புலன்ஸ் வரும் பாதையில் ஒருவரும் நிற்காதபடி அனைவரையும் சர்ச்சுக்குள் விரட்டியடித்தனர். இன்ஸ்பெக்டர் புஷ்பராஜனின் மகன்களை அழைத்து பரபரத்தபடி பேசி நின்றார்.

“பாடி வந்த உடனே நேரா குழி உள்ள வச்சுடுவோம்.. ஜேசிபி ரெடியா இருக்கு… குழிக்கரைல ரெண்டு நிமிசம் பிரேயர் பண்ண மட்டும் பெர்மிசன் உண்டு, அதுவும் மூனு பேருக்கு மேல கூடாது… எந்த பாஸ்டர் பிரேயர் பண்றார் யாரு கூட போறாங்கன்னு லிஸ்ட் வேணும். அவங்களுக்கு ஹெல்த் டிப்பார்ட்மெண்ட் புல் செக்கியூர்ட் டிரஸ் தருவாங்க…”

கொரானா மரணங்களையும் அதன் புதைக்குழியோர அவலங்களையும் செய்தி தொலைக்காட்சி சானல்களும் பேஸ்புக்கும் வாட்ஸ்ஆப்பும் இன்னபிற சோஷியல் மீடியாக்களும் குறில் நெடிலில் இரட்டைக்கிளவி என தமிழின் அனைத்து சொற்களையும் வளைத்து வளைத்து தலைப்பிட்டு கொரானா பார்வையாளர்களாக மக்களை மாற்றியிருந்தது சர்ச்சிலும் ஒலித்தது. முப்பதுக்கும் அதிகமான பாஸ்டர்கள் அந்த சர்ச்சினுள் இருந்தனர், அதில் கெசியாளின் இரண்டு மருமகன்கள், நான்கு மகன்கள், போதகர்கள். குழிக்கரையில் நடைபெறும் இறுதி ஆராதனை பெந்தேகோஸ்தே சமூகத்துக்கு மிகவும் நெகழ்வானதும் இன்றியமையானதுமாகும். ஒருவரை அடக்கிய பிறகு அந்த கல்லறையில் சென்று வழிபடுவதோ அங்கு சென்று முறையிடுவதோ அவர்கள் நினைவாக இறந்த அல்லது பிறந்த தினத்தில் அங்கு செல்வதோ அவர்களுக்கு ஒப்புரவானதில்லை. மண்ணுக்கு மண்ணாக்கிவிட்டு வீடு வருவதோடு சரி, என்றைக்காவது சென்று புதர்களை அகற்றி கூட்டிப் பெருக்குவது, வீட்டில் திருமணமோ அல்லது வேறு நல்ல நிகழ்வுக்கு பெயிண்ட் அடிக்கையில் அதற்கும் சேர்த்து பெயிண்ட் அடித்துவிடுவார்கள். குழிக்கரையில் இறந்தவர்களை வழியனுப்பும் பெந்தேகோஸ்காரர்களின் இறுதி ஜெபத்தின் நீளமானது பலநேரங்களில் கிறிஸ்தவர்களின் ஏனைய பிரிவினரையே முகம் சுளிக்கவைக்கும்.

எந்த பாஸ்டரும் குழிக்கரையில் செல்லத் தயாராக இல்லை. கெசியாளின் மகன்களின் மனைவிகளே கணவன்மார்களை அழைத்து, “வீட்ல சின்ன பிள்ளைகள் இருக்கு… ஞாபகம் வைச்சுக்கோங்க..” என அச்சுறுத்தினர். நாற்ப்பத்தியெட்டு மணிநேரமாக சபையில் அடக்க ஆராதனை நடந்தாயிற்றே என்ற சலிப்புச் சாக்குப்போக்குடன் ஒவ்வொரு போதகரும் முகம் திருப்பி நின்றனர். கெசியாளின் வீட்டிலுள்ள ஆறு பாஸ்டர்களில் ஒருவர் கூட துணியாததைச் செய்ய அங்கிருந்த ஏனைய பாஸ்டர்கள் மத்தியில் நிசப்தமே நிலவியது. இறுதியாக, பிணத்தைக் கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் செல்கையில் சர்ச்சுக்குள்ளிருந்து சத்தமாக அடக்க ஆராதனைச் செய்வதாக அங்கு ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

“சார், மூனு பேருன்னு சொன்னா நெறய பேரு நான் நீன்னு வாராங்க… அரசாங்கத்தோட சட்டங்கள நாங்க மதிக்கிறோம், குழிக்கரைல ஜெபம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம்… சர்ச்லே நாங்க பிரேயர் பண்ணிக்கிறோம்…” மூத்த மகன் இன்ஸ்பெக்டரிடம் நெளிந்தபடி சொன்னான்.

ஆம்புலன்ஸ் வரும் நேரமறிந்து பூட்டிய வீடுகளுக்குள் மாஸ்க் அணிந்திருந்து தவளை போல் முகம் குப்புறப் படுத்தவர்களும், பிணம் வரும் சாலையோர வீடுகளில் வேப்பிலை அரைத்தும் மாட்டுச்சாணம் கரைத்தும் வீட்டைச் சுற்றி ஊற்றியவர்களும் உடலை பூமியில் இறக்கி மூடியாயிற்று என்ற ஒரு சொல்லிற்கே காத்திருந்தனர். விண்வெளி வீரர்கள் உடையணிந்த ஆறு சுகாதார ஊழியர்களுடன் வாகனம் சர்ச் வளாகத்தில் வந்தடைகையில் சர்ச்சுக்குள்ளிருக்கும் பெண்கள் முகக்கவசத்துக்கு மேலே சேலை நுனியால் கவ்விப்பிடித்தும், ஆண்கள் முகத்தை மறைத்த மாஸ்க்குகளின் மேல் கைகளை வைத்தும் ஹிட்லரின் கேஸ் சேம்பரில் நின்றவர்கள் போல் நின்றனர். பாடல்களை நிறுத்தியவர்களில் சிலர் கிழக்கு பகுதியில் பெவிலியனாக திறந்து வைக்கப்பட்டிருந்த மூன்று ஜன்னல்களில் தைரியத்தை வரவழைத்துச் சென்றனர். தயாராக நின்ற ஜேசிபியின் தும்பிக்கையில் பெட்டியைக் கவச உடையணிந்தவர்கள் வைத்துவிட்டு அருகில் நின்ற சுகாதாரத்துறைக்கான மற்றொரு வாகனத்தில் ஏறிப் பதுங்கினர். எந்த எதிர்ப்புக் குரலும் அங்கு எழவில்லை. பிணங்களைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றதும், நியூயார்க் நகர வீதிகளில் அனாதையாக கொரானா பிணங்கள் கிடந்த காட்சிகளைக் கண்டு கிடந்தவர்களுக்கு ஜேசிபி தேவதூதனாகத் தெரிந்தது.

ஜேசிபி வாகனத்தைக் குழியை நோக்கி இயக்குகையில், கல்லறைத் தோட்டத்தின் தென்முனையின் புதர் மண்டிய மதில் சுவரில் ஏறி ஐந்து இளைஞர்கள் உள்ளே குதித்தனர். தேக்கு மரத்திலான அழகிய மரணப்பெட்டி இரு கையுயர்த்தி ஜேசிபியைப் பார்த்து ‘நிறுத்துங்கள்’ என்பது போல் மதில்களுக்கு மறுபுறத்திலிருந்து உயர்ந்து வந்தது. பெட்டியின் கனமான கீழ்பகுதியை ஜோயல் பிடித்திருந்தான். போலீஸாரும் சுகாதார துறை ஊழியர்களும் தூரத்தில் நின்றபடி கத்தினர்.

“லே… போங்கல…” என்ற கவச உடையிலிருந்த ஜேசிபி டிரைவர் சடுதியில் காரியத்தை முடித்து கிளம்பும் துரிதத்தில் வெடவெடத்தபடி இருந்தான். ஜோயலின் நண்பன் வீசிய கல் அவனது வண்டியில் படவே, கிடைத்தது காரணம் என வண்டியிலிருந்து குதித்து ஓடினான். ஆராதனை நிறுத்தப்பட்டு அனைவரும் கிழக்கு நோக்கிய ஜன்னல்களில் இடம்பிடிக்க முண்டியடித்தனர்.

வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஆறுமாத காலத்தில் பிரீடாவின் வாயிலாக தாயின் நலமறிந்த அவனுக்கு அன்றிரவு உறக்கம் வராமல் பித்துபிடித்து அந்த வீட்டின் மேல்மாடியில் அமர்ந்திருந்தான். நகரும் நட்சத்திரங்களின் கணக்கு அவனுக்கு அத்துப்படியாயிருந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையை முட்டியது போல் ஒரு புது நட்சத்திரம் அவனை வருடும் நோக்கில் மலையிறங்கத் துடிப்பது போல் கண்டான். இரண்டு குவாட்டர் குடித்தால் பாய் எது தலையணை எது என படுத்துறங்கும் அவனுக்கு அன்றைக்கு அதற்கு மேலாகியும் நிலவு காவுகொள்ளவே முடிந்தது. அந்த நட்சத்திரத்தின் தவிப்பைப் பார்த்திருக்கையில் பிரீடாவிடமிருந்து அழைப்பு வந்தது.
“அம்மா எறந்தாச்சு…”

கேட்டதும் அந்த நட்சத்திரம் சிறு புள்ளியாகி பின்னர் மயமானது. கொரானா பாதிக்கப்பட்டு இருநாட்களே மருத்துவமனையிலிருந்த கெசியாள் இறந்துவிடுவாள் என ஒருவரும் நினைத்திருக்கவில்லை. “தம்பி… நீ கண்டிப்பா வரணும்… யாரு என்ன சொன்னாலும் பொட்டன போல நின்னுட்டாவது போ…” அவள் சொல்லுகையில் அதிகாலைக்கு ஒரு மணிநேரமிருந்தது. நண்பர்களை அழைத்துக்கொண்டு தனது டிரக் வாகனத்தில் கிளம்பினான். சாலைகளில் தடுப்பு அமைத்து அதனருகில் போலீஸார் உறங்கிக்கொண்டிருந்த உச்சகட்ட லாக்டவுண் நேரமது. சைக்கிள்களுக்கு கூட தடை விதிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டை விட கேரள போலீஸார் சட்ட விதிகளில் கடுமை காட்டினர்.

“அம்மா மரிச்சு சாரே… பியுனரலினு போணு…..”

“கலெட்டர்டடுத்து மேடிச்ச பெர்மிசன் காப்பி காணிச்சிட்டு பெய்க்கோ…”

“அதினொந்நும் சமயமில்ல… உச்சக்கு அடக்கம்…” என்ற ஜோயலை வண்டியிலிருந்து இறங்க போலீஸார் கேட்டனர். உறுமியபடி சாலையில் டயரின் மேல்பகுதியை வெற்றிலையில் சுண்ணாம்பு ஆக்கியபடி, குறுக்காக கட்டியிருந்த இரும்புக் குழாயைக் காற்றில் பறக்கவிட்டு வண்டியைக் கிளப்பினான். தமிழ்நாடு கேரளா எல்லையில் வண்டியை நிறுத்திப் பேசுவதற்கு நிற்கவில்லை. இரண்டாவது எப்ஐஆரின் நிறத்தைக் கண்ணாடியில் பார்த்தபடி தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்தது. ஒயர்லெஸ்களில் தகவல் பரிமாறப்படுவதற்குள் தமிழ்நாடு எல்லைப் போலிஸாருக்கு இரண்டாயிரம் லஞ்சம் கொடுத்து மார்த்தாண்டம் வந்தனர். பெட்டிகளில் வைத்து அடக்காமல் பெரும்பாலான உடல்களைப் பிளாஸ்டிக் பைகளில் கட்டிப்புதைக்கும் காணொளிகள் கைபேசிகளில் கொட்டிக் கிடந்த காலமது. டிரக் வண்டியிலும் அந்த பேச்சு வந்தது.
“ஜோயலளியா, எனிக்கறியாம்.. ஹெல்த் காரம்மாரானு எல்லாம் செய்ணது, அவம்மாரு பெட்டிலு வைக்காறில்ல…” என்ற நண்பனின் பேச்சு ஜோயலை உசுப்பியது. மதுவின் உச்சமும் துரத்திவரும் வழக்குகளின் எண்ணிக்கையும் அவனை நீண்ட யுத்தத்தின் முன்நிலை வீரனாக்கத் தயாராக்கியது. பள்ளியாடியிலிருந்து பெட்டி வாங்கி வண்டியில் வைத்ததும் நாகர்கோவிலுக்கான நெடுஞ்சாலைப் பாதை இலகுவானது.

“எங்க இருக்க? வந்தியா?…” பிரீடாவின் குறுஞ்செய்திகளுக்கு அவனுக்கு பதிலளிக்க நேரமில்லை. சர்ச்சுக்குள் முடங்கிய அவள், சிறையுடைத்து கழிவறை வந்து கைபேசியில் பேசினாள்.

“ஏழு பாஸ்டர்க உள்ள வீட்ல உள்ள அம்மாக்கு, குழிக்கரைல பிரேயர் பண்ண ஒருத்தரும் தயாரில்ல எனக்க ஹஸ்பண்ட் உட்பட… புல் கவர்ட் டிரஸ் கொடுக்கிலாம்னு சொன்ன பெறவும்… நான் ஜெபம் பண்ணுறேன்னு சொன்னப்ப ‘பெட்டச்சி தன்நில தெரிஞ்சு இருக்கணும்’ன்னு டயலாக்… கடவுளுக்கு மேல பயம் இல்ல இவியளுக்கு, கண்ணுக்கு காணாத கிருமி மேல பயம்… தம்பி சீக்கிரம் வால, அம்மய அடக்கும்போ நீயாவது கிட்ட நில்லு… அது மதி அம்மாக்கு, இவங்களுக்க ஜெபத்த அம்மா நெறய கண்டாச்சு…” அழுகையும் தேம்பலுமாக அவளின் குரலில் அவன் பெரிதாக உடைவதற்கு மிச்சமாக அவனிடம் எதுவுமில்லாதிருந்தது.

இன்ஸ்பெக்டர் லத்தியைத் தூக்கிவீசியபடி துப்பாக்கியை எடுத்தார். சற்று முன்னால் நகரத் துவங்கிய அவருக்கு பின்னால் போலீஸாரும் முன்னேறத் துவங்கினர். புஷ்பராஜன் பார்ப்பதற்கு ஒரு ஜன்னலுக்கு பாதை வகுத்தனர். அவரது தலையோடு மகன்களும் மருமகன்களுமாக அந்த ஜன்னல் அவர்களுக்கான உயர்தர சிறப்புக்காட்சி பகுதியானது.

“டேய் பாடிய டிஸ்டெர்ப் பண்ணாம பொய்டுங்க…”

“இது என் அம்மா… நல்ல பெட்டில வைச்சு மொறைய அடக்கீட்டு தான் போவேன்…”

“சூட் பண்ணீருவேன்… நீ வாழ்க்கைல பாக்காத செக்சன்ல ஜெயில்ல போவ போற…” என்றபடி இன்ஸ்பெக்டர் கவனமாக கவச உடையைச் சரிசெய்தபடி முன்னேறினார்.

“பதினஞ்சு வயசிலேந்து கேசு பாக்கிறேன்… என்ன வேணும்ணாலும் பண்ணிக்கோங்க…” பதிலளித்தபடி அவர்களைப் பொருட்படுத்தாமல் நண்பர்களிடம், “அளியா, பெட்டிய எடுக்காம்…” என்றான்.

ஜேசிபி துதிக்கையில் இருந்த பெட்டியை எடுத்து கீழே வைத்தார்கள். ஜோயல் தனது முகத்திலிருந்த மாஸ்க்கைக் கழற்றி வீசினான். பெட்டியைச் சுற்றியிருந்த பாலீத்தீன்களை அவர்கள் அகற்றத் துவங்கினர்
.
“டேய்… என்ன பண்றீங்க? கொரானா பரவ போவுது…” நகர்வதை நிறுத்திவிட்டு நின்ற இன்ஸ்பெக்டரும் போலீஸாரும் அவர்களைப் பார்த்து கத்தினர். எதையும் காதில் வாங்காமல் பெட்டியைத் தனியாக்கித் திறந்தனர். உளுத்துப் போயிருந்த அந்தப் பெட்டியை, அனாதைப் பிணத்தை அடக்க அரசு சார்பாக வாங்கிவந்த அதிகாரிகள், அளவு சரியில்லை என விட்டுச்சென்றிருந்தனர்.

“கிளம்புவோம்….” பெட்டியைத் திறக்க கொளுத்துக்களைத் தொட்டதும் ஹெல்த் டிப்பார்ட்மெண்டின் வண்டி கிளம்பியது.

“போலாம் சார்…” என போலீஸார் பின்வாங்க, இன்ஸ்பெக்டரும் துப்பாக்கியைத் தொங்கவிட்டு வியர்வை நிரம்பிய காக்கிக்குள் அந்த கவச உடையில் செய்வதறியாது நின்றார்.

“சார்… என் வீட்ல வயசான பெரியவங்க முதல் சின்ன குழந்த வரைக்கும் இருக்கு… நான் பொய்டுறேன்…” என்ற ஒரு ஏட்டு திரும்பி ஓடினார். சர்ச்சின் இரு ஜன்னல்களில் கூடியிருந்த பாஸ்டர்களும் சபை விசுவாசிகளும் சர்ச் கதவுகளைத் திறந்து எதிர்திசை சாலையில் ஓடினர். இறுதியாகத் தனித்து நின்றார் இன்ஸ்பெக்டர்.

“அளிய கரையாத… லோகத்திலு ஒரு அம்மக்கும் கிட்டாத ஒந்நு… ஏது மகனும் செய்யாத்த ஒந்ந செய்யான் தெய்வம் நமக்கு யோகம் தந்நு…”

“கள்ளிப்பெட்டி போல…”

“கண்டா, தெய்வமாயிட்டு நம்மள பெட்டி வாணிக்கான் நியமிச்சு… ஈ பெட்டி கண்டா!!..” நிலை மறந்து அழும் ஜோயலை ஆறுதல்படுத்த அவனது நண்பர்கள் தோன்றியவைகளைச் சொன்னனர். பெட்டியின் மூடி உடைந்தே திறந்தது. கவச உடையைத் தூக்கி முழங்காலுக்கு மேல் கொண்டு வந்த இன்ஸ்பெக்டரும் தனது ஜீப்பைக் கடந்து ஓடினார். கெசியாளைத் தூக்கி பெட்டியில் கிடத்தினர்.

“சமயமாம் ரதத்தில் ஞான் சொற்க யாத்ற செல்லுந்நு… என் சோதேசம் கண்பதீனாய்…” பெந்தேகோஸ்தே அடக்க ஆராதனையின் பாடல்களில் தவிர்க்க இயலாத மலையாளப் பாடலைச் சத்தமாக பாடத் துவங்கினான். பீரீடா உட்பட வீட்டுப்பெண்களின் கண்கள் நிறைந்து வழிந்தது. புஷ்பராஜனின் கைகள் ஜன்னலிருந்து தளர்ந்து கீழிறங்கியது. அவனுக்கு தெரிந்த பைபிள் வசனங்களைச் சொல்லி சிறுவயதிலிருந்து தந்தை நடத்திய அடக்க ஆராதனைகளை நினைவில் கொண்டுவந்து திறந்திருந்த பெட்டியினருகில் நின்று உடைந்த குரலில் சொல்லி பெட்டியை மூடினான். நண்பர்களுடன் சேர்ந்து குழிக்குள் இறக்கினான்.

“எனது அம்மாவ மண்ணுக்கு மண்ணாகவும் புழுதிக்கு புழுதியாவும் ஒப்படைக்கிறேன்…” என்ற இறுதி வேண்டுதல் ஜெபத்தோடு, குழிக்குள் மூன்று முறை மண்ணைக் கையிலெடுத்துப் போட்டான். அருகிலிருந்த மண்வெட்டிகளால் மண்ணை வழித்திறக்கி குழியை நிரப்பினர்.
***
கு.கு.விக்டர் பிரின்ஸ் – கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞராக செயல்பட்டவர். சிறாருக்கான சில புத்தகங்களையும் ‘செற்றை’ என்ற தலைப்பில் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார். தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.
victorprince1978@gmail.com

அப்பா பூனை

0

அருணா சிற்றரசு

ன் பெயர் சொல்லிக் கதறிய என் அம்மாவின் குரல் ஏதோ ஒரு மலை உச்சிக்குப் போய்க்கொண்டிருந்தது. நான் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு நேர் எதிராகத் திரும்பி ஓட ஆரம்பித்தேன். ஓடுவதாக நினைத்துக்கொண்டேன் போலும், நீண்டதொரு தொலைவுக்கு பிறகே அம்மா என் கண்களில் பட்டாள்.

ஐந்தே ஐந்து நிமிடங்களுக்கு முன் அம்மாவின் கைக்குள் நான் விட்டுச்சென்ற அப்பா இப்போது அவள் பக்கத்தில் இல்லை.

என் பெயரை அவளால் முடிந்த வரை அடி வயிறு கிழிசல் காணும் அச்சமுறாது கத்தினாள்.

“அப்பா எங்க? உன்கிட்டதான விட்டுட்டு போனேன்!”

அப்பா இல்லாத அம்மாவை எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. அவரின் சோடியற்ற அவளின் வடிவு எனக்கு சிறந்ததே இல்லை. எரிச்சலூட்டியது அவளின் தனிமை. அந்த எரிச்சலில் என் காட்சிகள் கருகின. அம்மாவின் கைகள் அந்த அவசரப்பிரிவைக் காட்டியபோது முற்றிலும் உறைந்திருப்பேன் போலும். அக்கணம் நான் உறிய வேண்டிய அந்த ஆக்சிஜன் உள்ளே செல்ல முடியாமல் திணறியது.

அப்பா எங்கே?

அம்மாவை ஒரு கைக்குள் சுருட்டி வைத்துக்கொண்டேன். அவளின் ஓலம் என்னை சிந்திக்க விடாது. அவள் குரலை மெல்லத் தணித்து அமர வைத்தேன்.

இப்படி நான் தனியாய் நின்றதில்லை. என் அப்பன் எனக்கு அந்தக் கலையைக் கற்றுத்தரவே இல்லை. தனியாய் தவிப்பதற்கு என் கால்கள் இதுநாள் வரை பாடம் கண்டதில்லை. அந்த மருத்துவமனையின் சுவர்கள் வெண்ணைக் கொண்டு தடவப்பட்ட பூச்சுகளைக் கொண்டிருந்ததாக இருக்க வேண்டும். பிடிமானத்திற்கு கை வைத்தபோது வழுக்கியது. எனக்கு எட்டும் வரை அந்த சுவரின் வளமையைத் தடவிக்கொண்டிருந்தேன். செவிலிகளும் மருத்துவர்களும் எனைப் பார்த்தவாறே அப்பா இருந்த அறைக்குள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

அன்பிற்குரியவர்கள் என்பவர்கள் பெரும்பாலும் அருகிலேயே இருப்பவர்கள்தான். அவர்களின் இல்லாமை, அவர்களின் இழப்பு பல வருடம் பழக்கப்பட்ட சிறிய அறையைக்கூட புதியதாய் காட்டும். ஆறுதலாய் கனிந்த ஆகாயம் கூட அனலாய் சுடும். பசி, தாகம், தூக்கம் என்பதை நாம் நிகழ்த்தவே முடியாது. அதற்கு உடலே முன்வந்து முயற்சித்துக் கொண்டால் உண்டு. அவர்களின் இருப்பின்றி அடுத்தடுத்து நகரும் ஒவ்வொரு நொடியும் துக்கத்தின் ஆட்சியை விரிவாக்கும்.

சற்றுமுன் தானே என்னுடன் நடந்தாய் அப்பா!

அம்மாடி! அங்கயும், இங்கயும் ஓடாதே கால்வலி கடுக்கும் என்றாயே! உண்மைதான், ஆனாலும் மூன்று நாட்களாய் உனக்காய் ஓடுகிறேன் கால் வலி காணவே இல்லை. இப்போது கால் சுருள்கிறது. கால் குட்டையாகி என் அடிவயிற்றோடு ஒட்டிக் கொண்டுவிட்டது.

நின்ற இடத்திலேயே நான் பொருந்திக்கொண்ட அந்த சுவரினூடே உன்னைத் துழாவிக்கொண்டிருக்கிறேன். அப்பா என்னை ஏமாற்றி விடாதே! நீ இல்லாமல் எனக்கு வாழத் தெரியாது என்று கெவ்விக்கொண்டிருந்தேன்.

அரைமணி நேரத்துக்கு முன் நீ உண்ட அந்த இரண்டுக் கவள தயிர்சோறு உன் வயிற்றில் தானே இருக்கிறது! பத்து நிமிடத்திற்கு முன் நீ சிரித்தபடியே குடித்த ஒரு மடக்கு காபியும் உன் வயிற்றில்தான் இருக்கும். உன் வயிற்றைத் தடவி இன்னும் பசிக்குதாப்பா என கொஞ்ச வேண்டுமாய் உருள்கிறேன் இந்த நடைபாதையில். நான் இப்படிச் செய்வது உனக்குப் பிடிக்காதேப்பா. நான் அழுவது அகோரமாய் தெரியுமே அப்பா.

அம்மா அடித்து நான் அழும்போது அசிங்கமாய் இருக்கிறது அழாதே என்பாயே. நான் அழகில்லாமல் போனதே இல்லையப்பா உனக்கு. நான் அழக்கூடாது உனக்கு. அவ்வளவுதான்.

இதோ என் கண்களில் நீர் பொங்கிப் பொங்கி வருகிறது. பேரூற்று ஒன்று பெருவெடிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. துடைப்பதற்கான தொந்தரவாக அந்தக் கண்ணீர் என்னைப் பிசுக்கவே இல்லை. அந்தக் கண்ணீர் கண்களை மறைத்துத்தான் வழிந்தது. காட்சிகள் என்பதற்கு ஆங்கே ஒன்றுமே இல்லை. சாத்தப்பட்ட உன் அறைக்கதவைத் தவிர.

என் குரல் உனக்கு நிச்சயம் கேட்கும். என் கதறல் கட்டாயம் உன் இதயம் துளைக்கும். ஏற்கனவே உடைபட்ட இதயம் என்பதால் என் குரல் சுளுவாக ஊடுருவும். உன் நெற்றி வியர்த்திருக்குமோ! பதறாமல் படுத்திரு அப்பா, இப்பொழுது எழுந்து விடுவாய். “கழுதை பயந்துட்டியா!” என்று என் தலையைச் செல்லமாகத் தட்டுவாய்.

இந்தச் சுவர் வழுக்குகிறது அப்பா. இப்படியே உட்கார்ந்து கொள்கிறேன். நீ எழுந்ததும் குரல் கொடு. தெம்பற்றவளாய் சரிகிறேனா? இல்லை, வெண்ணைச் சுண்ணாம்பில் சறுக்குகிறேனா? புரிபடவில்லை. தரைக்கு வந்துவிட்டேன். கால்கள் இருக்கின்றன எனக்கு. இப்போதுதான் நீண்டு தெரிந்தன.

அன்று அதிகாலை சிணுங்கிய என் கைபேசி இங்கே வரத்தான் என்பது அன்று எனக்கும் தெரியாது, உனக்கும் தெரியாது. வயிற்றை வலிப்பதாய் என் முப்பத்து மூன்று வயதுக்கும் நீ சொல்லி நான் கேட்டதே இல்லை. அப்பா! என்னப்பா? என நான் பதறிய போதும் நிதானமாய் சொன்னியேப்பா. உனக்கு ஒன்றுமில்லைன்னு.

அம்மாவின் நலிவுற்ற கேவல் இப்போதுதான் எனக்கு கேட்டது. அவளை அப்படியே விட்டுவிட்டேனே! அப்பாவின் இருப்பில் மட்டுமே வீராப்பு பேசியவள் அவள். அப்பாவுக்கான பணிவிடைகளை யாருக்கும் விட்டுக் கொடுக்காதவள் அவள். அப்பா வெற்றுடம்புடன் வாசலில் நின்றால் துண்டுடன் வந்து அவரை மறைப்பவள் அவள். அப்பாவின் அத்தனை அலட்சியங்களுக்கும் நியாயம் கேட்பவள் அவள். என்னுடன் இரு, என்னுடன் பேசு, என்னுடன் படு என்று சண்டையிட்டே வாழ்ந்து வந்தவள் அவள்.

ஒரு வருடம் முன்பு வரை போராடித்தான் பொண்டாட்டியாய் இருந்தாள். போன சண்டையில் முற்றிலும் மாறுதலான முடிவொன்றை எடுத்திருந்தாள். இனி அப்பாவிடம் பேசுவதில்லை, அவர் முகம் காணுவதில்லை என சொடக்கு போட்டுச் சொல்லிவிட்டாள்.

அந்த ஆரவாரமும் ஆக்ரோஷமும் இன்று இல்லை அம்மாவிடம். திகிலுக்குள் விடப்பட்ட இள வயது காதலியாய் உள்ளங்கை வியர்த்திருந்தாள். அவளைப் பற்றிய கவலை இன்றுதான் எனக்குள் ஏறிட்டது.

பளபளத்த பளிங்குத் தரையில் நீந்தியவளாய் நடந்தேன். அம்மா பக்கத்து அறையின் மூளையில் சுருண்டுக் கிடந்தாள்.

அப்பாவைக் கொண்டு வா என்றாள். நான் அவரை இப்பவே பார்க்க வேண்டும் என்றாள். பையில் கொண்டு வந்திருந்த பணக்கட்டுகளை அள்ளி வீசினாள். இதையெல்லாம் வச்சி அப்பாவைக் கொண்டு வா என்றாள். சாம்பலைப் பூசிக்கொண்ட பூசாரி போல் தெரிந்தாள். சாம்பலுடன் கங்குகளும் ஏறியிருக்கக் கூடும். கடுந்தணல் அவளைக் குலுக்கிக் கொண்டிருந்தது. ஆவேசமான பூசாரியாய் தன்னைப் பீடிக்க இருக்கும் பிசாசை ஓட்டுபவளாய் கைகளை எல்லாத் திசையிலும் சுழற்றினாள்.

குளத்துப் படிக்கட்டில் உட்கார வைக்கப்பட்ட சிறுமி நான். குளத்துக்குள் சென்ற அப்பா இன்னும் வெளிவரவில்லை. அப்பா வருவதற்கு நேரம் ஆக ஆக அம்மா இங்கு படித்துறைப் பாறைகளை தலையைக் கொண்டு மோதி மோதிப் பெயர்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகமெல்லாம் இரத்தச் சிவப்பு. அம்மாவின் கேசரி மூக்குத்தி மட்டும் சிவப்பு விரிப்பில் மூடப்படவில்லை. குளத்துக்குள் செல்ல நான் அஞ்சவில்லை. தானே தண்ணீரைத் திறந்துவர வேண்டும் அப்பா. நான் உள்ளே இறங்கும்போது ஒருவேளை அப்பா பந்து போல் மிதந்துவிட்டால்! அசைவற்ற அப்பா பற்றிய எதிர்நோக்கை சமீபத்தில்தான் மனதில் ஏற்றி வைத்து இருந்தேன். தோழி ஒருத்தி அவள் அப்பாவின் அசைவற்ற உடலை உசுப்பி உசுப்பி உயிர்ப்பிக்கப் பார்த்தாள். அப்போ, என் அப்பனும் ஒருநாள் இப்படி கிடத்தப்படுவான் அல்லவா! தொண்டைக்குழியில் பனிக்கட்டி ஒன்று உருண்டை வடிவிலும் குழியின் பாதையை கச்சிதமாக அடைத்தாற் போலவும் உறைந்தது. பெருகி வந்த கண்ணீர்தான் இப்பனிக்கட்டியாய் உருமாறியிருக்க வேண்டும்.

அம்மா இன்னும் வேகமுற மோதுகிறாள். அவளைத் தடுக்க வேண்டும். இன்றிலிருந்து போன மூன்றாவது நாள் வரை அப்பாவும் அம்மாவும் பேசிக்கொள்ளவே இல்லை. ஓராண்டாக அவர்களுக்குள் பேச்சு நின்று போயிருந்தது.

நேற்று இரவுதான் ஒரே அறையில் நாங்கள் மூவரும் ஒன்றாய் இருந்தோம். ஒரு வருடம் பேசிக்கொள்ளாத நபர்களாய் அவர்கள் அந்நியப்படவே இல்லை. அப்பாவின் கால்களை அம்மா பிடித்துவிட்டுக் கொண்டு இருந்தாள்.

“என்னப்பா! உங்காளு டூட்டில சேர்ந்தாச்சா” என்ற நானும் அப்பாவும் சிரித்தோம்

“நான் பெண்டாட்டியா இப்பவரைக்கும் நிக்குறேன். உன் அப்பன் மாதிரி உதறிவிட மாட்டேன்” என்றாள் அம்மா.

இரண்டு நாட்களுக்கு முன்வரை அம்மா அப்பாவிடம் பேசவே இல்லை.

“அப்பாவுக்கு வயிற்று வலி, என்னுடன் வருகிறாயா?”

“நான் வருவதாக இல்லை. அவனுக்கும் எனக்கும் இழுத்துப் பிடிக்க எந்த மீதமுமில்லை”.

“நான் சொல்கிறேன் நீ வந்தாக வேண்டும்”.

அப்பா அம்மா சண்டை என்பது யுத்தமாக முடிந்தால் கூட சீக்கிரம் முடிவுறும். அதுவே பனிப்போர் எனும் பரிமாணத்தில் பேரப்பிள்ளை காலம் வரையிலும் பணிக்கு இருக்கும்.

அப்பா உண்ணாமல்
அம்மா உண்ண மாட்டாள்
அப்பா வாராமல்
அம்மா உறங்க மாட்டாள்
அப்பாவுக்கு பொய் பிடிக்காது
அப்பாவுக்கு புரட்டு பிடிக்காது
அப்பாவுக்கு இனிப்பு பிடிக்காது
அப்பாவுக்கு அவளையும் பிடிக்காது
என்ற வாய்ப்பாட்டில்தான் எங்களை
வளர்த்தாள்.

நள்ளிரவில் அவள் வீசியெறியும் பாத்திரங்களின் சத்தத்திற்கு நான் பழகியிருந்தேன். என் தூக்கத்தை அம்மாவின் நியாயத்திற்காக நான் கலைத்துக்கொண்டதே இல்லை.

தம்பி ஓடுவான், இருவருக்குமிடையே பரிதவிப்பான். அம்மாவை அடிக்க கை ஓங்கும் அப்பாவின் கால்களைப் பிடித்து தொங்குவான். அந்தச் சிறுவனின் போராட்டம் அவர்களை அமைதி நிலைக்கு கொண்டு வந்ததே இல்லை. எப்போதாவது நான் எழுந்து வேடிக்கைப் பார்ப்பேன். உனக்கு இதயமே இல்லையா! ராட்சசி! சுயதேவைக்காரி! என்றெல்லாம் என் தம்பி எனக்கு மூத்தவன் போல கேட்பான். நான் சிரித்துக்கொண்டே திரும்பவும் தூங்கச் செல்வேன்.

அப்பாவும் அம்மாவும் சிரித்துப் பேசிக்கொள்ளும் அந்த ஒருசில வேளைகளை அவ்வளவாக நான் பொருட்படுத்தியதே இல்லை. அது செடியில் ஒட்ட வைத்த பூ போல, தட்டிவிட்டால் கொட்டிவிடும். அந்தச்செடி பூக்காமலேயே வயதைக் கூட்டிக்கொண்டே இருந்தது.

அம்மா கண்டிப்பானவள். அரச நர்த்தகிகளின் அலங்கரித்த கண்களைப் போன்றது கண்மைக்குப் பழக்கப்படாத அவளது கண்கள். அப்பாவுக்கென்றே சமைக்கப்பட்ட வடிவமவள். நேர்மையானவள். மனிதர்களைக் கணிப்புக்குள் முக்கி எடுத்துக்கொண்டே இருப்பாள். அவளின் குரல் வளம் மட்டுமே அப்பாவுக்கு பிடிக்காது.

அம்மாவுக்குப் பிடித்த குணமாய் எதுவுமே அப்பாவிடம் இல்லை. பெண்கள் என்றால் கூடுதலாய் இறங்கும் அவரின் இளகிய மனம் அவளின் மூளைக்குள் நிரந்தரக் கொப்பளங்களாக சீழ் வடித்தன.

பிள்ளைகள் பெறுவதற்கு அப்பாவும் அம்மாவும் சண்டையிடாமல் இருக்க வேண்டும் என்று எந்த விதியும் இல்லை.

இந்த பிள்ளைகளுக்காகத்தான் நான் உன்னுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று இந்த வாரம் அம்மா சொன்னால், அடுத்த வாரம் அப்பா சொல்வார்.

தம்பியும் நானும் அவர்களை இழுத்துக் கட்டியிருக்கும் தேங்காய்ப்பிரி.
நாங்கள் வளர வளர அப்பாவின் வீரம் குறைந்தது. அம்மாவின் சோகம் குறையவில்லை. அம்மாவுக்கு மாமியார், நாத்தனார் இல்லாத குறையை நான் தீர்த்துக்கொண்டிருந்தேன்.

எங்கள் மூத்தக்குடி கிழவி ஒருத்தி ஒரு சாவு வீட்டில் எனைப் பார்த்தாள். என் கண்ணில் படாத அந்தக் கிழவியின் கண்ணில் நான் பட்டிருக்கிறேன்.

“எவடி அவ.. மீனாட்சி சாடைல ஒயிலாட்டம் காட்றவ!”

என் தூரத்து அத்தை ஒருத்தி எனைப் பிடித்து கிழவியின் படுக்கையில் அமர வைத்தாள்.

நன்கு பிடித்துப் பார்த்த பருத்திப் புடவைகள் பத்தை அடுக்கி அதன்மேல் படுத்தே கிடந்திருக்கிறாள் கிழவி. உட்கார்ந்த எனக்கே ஒனக்கையாக இருந்தது. புகையிலை நெடி நாசிக்கேறியது.

“மீனாட்சி அம்சம் அவ மவளுக்குக் கூட வாய்க்கலையே நீ அப்படியே அவளை அச்செடுத்துருக்கியேடி சிறுக்கி!, அவ தலையை முழுகி காத்துல உதறுனா பின்னமுடி புட்டமேட்டைத் தாண்டும்” என்றவளை இளக்காரமாய்ப் பார்த்தவளாய் பின்னாலிருந்த என் பின்னலைத் தூக்கி முன்பக்கம் கொண்டு வந்தேன். சுற்றி வரும்போது கிழவியின் மூஞ்சில் பொளிச்சென்று சாத்தியது.

உங்கப்பன் வவுத்துல தரிச்சப்பயே அவங்கப்பன் போய் சேர்ந்துட்டான். வவுத்துல புள்ளையோட தாலி அறுத்தா உன் ஆத்தா மீனாட்சி. புள்ளயப் பெத்து ஒரு வயசு போல வளர்த்திருப்பா என்ன நெனச்சாலோ ஏது நெனச்சாலோ சுருக்கு வச்சிக்கிட்டா.

எந்த இறுதிச் சடங்கிலும் இறுதி வரை நின்றதில்லை அப்பா. தண்ணீர் எடுக்க துறைக்கு கிளம்பினாலே எங்கள் கார் கிளம்பிவிடும்.

அப்பா உன் அப்பாவைப் பார்த்திருக்கிறாயா?

இல்லை.

போட்டோ?

இல்லை.

உன் அம்மாவை?

ம்ம்.

எப்படி இருப்பாங்க?

தெரியாது.

பார்த்திருக்கேன்னு சொன்ன?

கோழிப் பஞ்சாரத்தைக் கவிழ்த்துப் போட்டு அதன் மீதேறி பின் அந்தக் கூடையை உதைத்து விட்டாள். அவள் கால்கள் வெட்டி வெட்டி உதைத்தது. நான் உட்கார்ந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். முகம் நினைவில்லை.

நான் அப்போது தாயாக இல்லை.ஆனால் அப்பா என் கண்களுக்கு என் வயிற்றிலிருந்து வந்தவர் போல தெரிந்தார். குறுக்கெலும்பில் ஏதோ ஓர் குறுகுறுப்பு அவர் அப்படிச் சொன்னதும். அன்றிலிருந்து நான்தான் மீனாட்சி. அம்மாவின் மாமியார்.

அம்மாவின் நியாயங்களுக்கு என்னிடம் ஆதரவு கிடைக்கவே கிடைக்காது. அம்மாவுக்கென்ற ஒரு உலகை நான் அங்கீகரித்ததே இல்லை. அப்பாவுக்கான அழகி நீ! அவரை மகிழ்விப்பதற்கான வனிதை நீ! வாக்குவாதம் செய்யவே கூடாது நீ !

என் மருமகள் லேசுபட்டவள் இல்லை. நான் நானாகத்தான் இயங்குவேன். அவனுக்காக நான் புதைய மாட்டேன். அவன் வழி வேறென்றால் என் வழி வேறு என்று சபதமெடுத்தாள்.

அப்பாவின் வயிற்று வலி அவளை பெரிதாக பயமுறுத்தவில்லை. சில ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொள்ளும் உடைந்த காதலர்கள் அவர்கள்.
யார் முதலில் பேச்சைத் துவங்குகிறார்கள் என்று கவனித்தேன். அப்பாதான்!

‘அந்த தண்ணியை எடு” என்றார் அம்மாவை.

பேச்சின்றி பேச்சு கொடுத்தாள் அம்மா.

மருத்துவமனையிலிருந்து இருவரையும் தம்பதி சகிதமாய் அழைத்துப் போவேன் என்றிருந்தேன்.

இதுநாள் வரை போட்டிருந்த சண்டையெல்லாம் சாபமாய் நின்றது அம்மாவுக்கு. தான் வெற்றியோடு வாழ்வதாய் நினைத்து வந்த அம்மாவுக்கு அப்பா இல்லாத அந்த நொடி படுதோல்வியாய் இருந்தது.

என் கண்ணை விட்டு அகலாமல் நான் வைத்திருந்த என் மகன் என் கண்முன் சரியவில்லை .என் கண்ணில் மண்ணடித்து அம்மாவிடம் மண்டியிட்டு இருக்கிறான். மண்டியிட்டவனை அம்மா மடியில் ஏந்தியிருக்கிறாள். மேல்நோக்கி நெஞ்சைத்தூக்கி அம்மாவின் முகம் வரைக்கும் அவன் முகம் உயர்த்தி இருக்கிறான்.

“என்ன பண்ணுது? சொல்லுங்க சொல்லுங்க “என்று அம்மா கரிசனையாகக் கேட்டிருக்கிறாள்.

என்ன சொல்ல வந்திருப்பானோ ஒன்றுமே சொல்லாமல் நிலைக்குத்திட்டான் போலும்.

அவள் என்னைத் தேடி ஓடி வந்திருந்த போது அப்பா அவசரப் பிரிவிற்கு தூக்கப்படிருக்க வேண்டும்.

மருத்துவர் வெளியே வந்தார். என் முகம் பார்க்க முடியாதவராய் அவரின் முகம் தொங்கியே இருந்தது. அவரும் எதிர்பார்க்கவில்லைதான் போலும். நடை உடையாய் சாதாரண வயிற்று வலிக்கு வந்த அப்பா இப்படி ஒட்டுமொத்த அடைப்பிற்குள் செயலிழந்தது அவருக்கும் விந்தையாகத்தான் இருந்தது. என்னிடம் அவர் ஏதும் பேசவில்லை. செவிலிப்பெண் ஒருத்தி அம்மாவிடம் நிலையைக் குழைவாக சொல்லியிருந்தாள்.

அம்மா தன் தாலியைப் பிடித்துக் கொண்டு மன்றாட ஆரம்பித்தாள். இத்தனை வருடமாக அவள் சபித்துக் கொண்டிருந்த வாழ்வே தனக்கு மீண்டும் வேண்டும் என்றாள். அப்பா என்றாலே வெறுப்பு என்ற வேடம் இன்று தானாய்க் கலைந்து விட்டது. கோடி முத்தங்கள் வைப்பதாக அப்பாவிடம் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.

அசைவற்ற அப்பா எனக்கு அருவருப்பாய் இருப்பார். நான் அந்த அறைக்குள் நுழைய யாதொரு பிரயத்தனமும் எடுக்கவில்லை. அப்பாவின் வாயிலிருந்து இரத்தம் வழிந்தோடிய தடம் இருந்ததாக அவரைப் பார்த்த தோழி ஒருத்தி சொன்னாள். மீனாட்சி கொடுத்திருந்த அந்த ஓராண்டு தாய்ப்பால் இப்படி வெளியாகியிருக்க வாய்ப்பில்லை. தாய் தந்தை இல்லாமல் மாடாய் உழைத்த காலத்திலேயே அந்த பாலெல்லாம் ஆவியாகியிருக்கும். இது அப்பனின் இரத்தம். சிறந்த அப்பனாக, சிறந்த தாத்தாவாக, சிறந்த தோழனாக, சிறந்த மனிதனாக தன்னைத்தானே வார்த்தெடுத்துக் கொண்டவனின் சொந்த இரத்தம். நல்ல கணவன் என்ற பெயரெடுக்க முடியாமல் போனவனின் இரத்தம்.

சுற்றமும் நட்பும் ஒருசேர அழுது முடித்திருந்த அந்தி அது. அப்பா இல்லாத அந்தி அது. மழைக்கான அறிகுறிகளே இல்லாமல் அப்பாவின் உடலை நனைத்து சுடுகாட்டிற்கு அனுப்பிய அந்தி அது.

அப்பாவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாலைகளிலிருந்து வந்த மணம் வீட்டை பரிபூரணமாய் ஆட்கொண்டிருந்தது. அந்த ரோசாப்பூ மாலைகள் மட்டும் தனிரகமாய் கமழ்ந்தன. காற்றில் அப்பா ஒட்டிக்கொண்டிருப்பது போன்ற உத்திரவாதம். தண்ணீரை அள்ளி குடிக்கும் பிஞ்சு கைகள் போல அம்மணத்தை அள்ளி அள்ளி உட்கொண்டேன்.

ஒவ்வொருவராய் விடைபெற்றனர். அப்பாவின் பெருமை பேசும் துக்க விசாரிப்புகள் அம்மாவை உயிருடன் சிதையிலிறக்கின. அப்பாவுடனேயே அவளையும் வைத்தெரிக்கச் சொல்லியிருந்தாள். பன்னெடுங்காலமாய் போராடி நீக்கிய சடங்கல்லவா அது. அம்மாவின் அவசரத்திற்கு அதை செயல்படுத்த முடியாதல்லவா!

யாரும் ஒத்துழைக்கவில்லை அவளின் வேண்டுதலுக்கு.

அன்றிரவு திண்ணையில் ஓர் ஓரமாக தன்னைத்தானே ஒடுக்கிக்கொண்டாள் அம்மா. எவ்வளவு வற்புறுத்தியும் அவளுக்கென்றே அப்பா கட்டிய அந்த பெரிய வீட்டிற்குள் அவள் வரவே இல்லை.

அம்மாவைப் பார்த்து கண்ணீர் விட்டேன். அவளின் இந்த நிலைக்கு நான் என்னை தயார்படுத்தி வைத்திருக்கவில்லை.

தன் வாழ்நாள் மொத்தமும் அப்பாவைப் பற்றியே வசைத்துத் தள்ளியவள், இனி யாரைப் பற்றி பேசுவாள்! இனி யாரைச் சுற்றி அவளின் கொப்பள மூளை பயணிக்கும்!

தான் அவனை எல்லா வகையிலும் இழந்திருப்பதாக வாய்விட்டுச் சொல்லி அழவே இல்லை அவள். அவளின் வரட்டு வைராக்கியம் அவளை அதற்கு வளைந்து கொடுக்க விடவே இல்லை.

ஆனாலும் அழுதாள். மார்பை அடித்து அடித்து அழுதாள். நிச்சயம் இந்நேரம் அந்த மார் கருப்பாகக் கன்றிப் போயிருக்கும்.

அம்மாவை இப்போது தொட்ட போது ஈரமாவு போல நெகிழ்ந்து இருந்தாள். அழுத்தி பிடித்தால் அவளது தோல் கிழிந்துவிடும் போலிருந்தது. தனது கல்யாணப் புடவையைச் சுற்றிக்கொண்டு நத்தை போல கிடந்தாள். முனகலின் வழி மூச்சிழுத்துக்கொண்டிருந்தாள்.

எப்படித்தான் தூங்கிப் போனேனோ நான்! தெரியவே இல்லை. நடுநிசி. வளர்ந்திருந்த ஆண் அல்லவா, தம்பியின் குரல் கரகரவென அசுரன் உசுப்பது போல என்னை எழுப்பியது.

“அப்பா வந்திருக்கிறார் வா “என்றான்.

அந்த கலக்கத்திலும் தெளிவாய் இருந்தேன். அப்பா வர வாய்ப்பே இல்லை. இவன் உளருகிறான்.

நடை வாசலுக்கு வந்து இருட்டிற்குள் கை நீட்டினான். “அதோ பார், அப்பா” என்றான்.

இருட்டு அடர்த்தியாய் இருந்தது. பனியும் சாரலாய் ஊதியது. உற்றுப் பார்த்தேன். இரண்டு பளிங்குகள் ஒரே நேரத்தில் ஒரே அளவாய் உருண்டன. நான் அருகே போக எத்தனித்ததும் மியாவ்.. மியாவ்.. என்றது.

எங்கடா அப்பா? என்றேன் அயர்ச்சியுற்றவளாய்.

இதுதான் அப்பா.

இந்தப் பூனையா?

ஆமாம். அப்பா வெளியே போன பொழுதிருந்து இது இங்கே வந்து சேர்ந்துவிட்டது. அப்பாவின் விருப்பமான இடங்களை மட்டுமே சுற்றி வருகிறது. அப்பா கிடத்தப்பட்ட இடத்தை விட்டு அகலவே இல்லை. அப்பாவின் செருப்புக்குள் புகுந்து புகுந்து வந்தது. அப்பாவேதான் நம்பு என்றான்.

அந்த குட்டிப்பூனை நடந்து வந்து விளக்கின் வெளிச்சத்தில் தன்னைக் காட்டியது. அங்கும் இங்கும் நிதானமாக நடந்தது.

அப்பாவுக்கு பசிக்கிது போலிருக்கு. நான் போய் பால் எடுத்து வருகிறேன் என்று உள்ளே சென்றான்.

பூனைக்கு பழக்கப்பட்டிராத வீடு எங்களுடையது. அப்பாவிற்கு பூனை என்றால் சுத்தமாகப் பிடிக்காது. இந்தப் பூனை நிச்சயமாக அப்பா இல்லை.

பாலை ஒரு சின்னக் கிண்ணியில் ஊற்றினான். அது குடிக்கவே இல்லை. அங்கும் இங்கும் நடந்தது.

நானும் நான்கு மணி நேரமாகப் பார்க்கிறேன். ஒரு இடத்தில் இருக்க மாட்டேங்குது. அம்மாக்கிட்ட அம்மாக்கிட்ட போகுது. அம்மாவைச் சமாதானப்படுத்த அப்பா செய்யும் வேலையான அம்மாவின் தலைமுடியை இழுத்து இழுத்து ஓடுகிறது. அம்மா தள்ளி விரட்டியும் அங்கேதான் போகுது என்றான்.

அவன் சொன்ன மாதிரியே அம்மாவின் தலைப்பக்கமாக அணைசலாய்ப் படுக்கிறது. “சைக்.. தள்ளிப்போ.. நிம்மதியா விடுதா பாரு இந்தப் பூனை” என்று விரட்டியடிக்கிறாள் அம்மா.

“அம்மா அப்பாவை இன்னுமா விரட்டி விட்ற” என்றேன் நமட்டலாக.

“என்னை தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டான். இப்ப என்னாத்துக்கு என் பக்கத்துல வாரான்” அம்மா செல்லம் கொஞ்சினாள். அழுத கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தது அந்த பூனை.

அம்மா விரட்ட விரட்ட அம்மாவை விட்டு ஓடியது போல் நகர்கிறதே தவிர பூனையின் குறி அம்மாதான்.

பூனை ஓயவே இல்லை. இம்முறை அம்மா மனமிறங்கினாள். பூனையை புடவைக்குள் அணைத்தவாறு படுக்க வைத்துக்கொண்டாள்.

அப்பாவை மீட்டுக்கொண்டதாய் ஒரு பெருமூச்சுடன் அம்மாவின் உடல் இயல்பிற்குள் சென்றது. கடக்கப்போகும் தனிமைத் துயருக்கு இனி ஒவ்வொன்றிலும் அப்பாவைப் பொருத்த வேண்டும் அவள்.
வேறொரு வடிவு கிடைக்கும் வரை அது அப்பா பூனை.

***
அருணா சிற்றரசு – திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தவர், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்டம் எடகீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி அசிரியராகப் பணியாற்றி வருகிறார். இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார்.மின்னஞ்சல்: arunachitrarasu@gmail.com