Home Blog Page 56

புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி – குறும்பட்டியல் வெளியீடு

4

வணக்கம்

கடந்த மார்ச் மாதம் அறிவித்த புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டிக்கு வந்திருந்த நீ…ண்ட பட்டியலிலிருந்து இறுதிச் சுற்றுக்கு செல்ல இருக்கின்ற குறுநாவல்களின் ஆசிரியர் பெயர்கள் பின்வருமாறு :

  • கிருஷ்ணமூர்த்தி
  • வா.மு.கோமு
  • எம்.எம்.தீன்
  • சுரேஷ் பிரதீப்
  • ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்
  • நாராயணி கண்ணகி
  • பிகு
  • மயிலன்.ஜி.சின்னப்பன்
  • மீரா செல்வகுமார்
  • மௌனன் யாத்ரீகா
  • மணி.எம்.கே.மணி
  • ராகேஷ் கன்யாகுமரி
  • பாலாஜி பிரசன்னா
  • திலா
  • இரா.இரமணன்
  • ஜீவா பொன்னுச்சாமி
  • சிலம்பரசன்
  • அ.மோகனா
  • அன்பாதவன்
  • மலர்வதி

மேற்சொன்னவர்களின் குறுநாவல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறுகிறது.. அக்கறையோடும் ஆர்வத்தோடும் கலந்துகொண்டவர்களுக்கு எங்களது பாராட்டுகளையும், மிகப்பொறுமையோடு கலந்து கொண்டவர்களுக்கு எமது நன்றியினையும், இறுதிச் சுற்றுக்கு செல்லும் படைப்புகளின் ஆசிரியர்களுக்கு எமது வாழ்த்துகளையும் தெரிவிக்கிறோம்.

இப்படிக்கு

ஜீவ கரிகாலன்
நெறியாளர்,
புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி

யாவரும் டிசம்பர் இதழ் 2020

0

அறிவிப்பு:

புதுமைப்பித்தன் குறுநாவல் போட்டி 2020,

எண்ணிக்கையில் சற்றும் எதிர்பார்த்திராத அளவு வந்திருந்த குறுநாவல்களில் இருந்து குறும்பட்டியலைத் தயாரிப்பதற்கான நாள் சற்றே தாமதமாகிவிட்டது. நெடும்பட்டியலில் கடைசிச் சுற்றுப்பணிகள் நடந்து வருகின்றன, விரைவில் அல்லது டிசம்பர் இறுதியில் குறுநாவலுக்கான குறும்பட்டியலை எதிர்பார்க்கலாம்.
பொறுமையோடு காத்திருக்கும் எழுத்தாளர்களுக்கு எங்களது நன்றி..

யாவரும் டிசம்பர் இதழ் :

ஒவ்வொரு இதழும் கடந்த இதழோடு ஒப்பிடுகையில் வித்தியாசமாகவும், தரம் மேம்பட்டதாகவும் இருக்கவே உழைக்கிறோம். அத்தோடு வெவ்வேறு ஆசிரியர்களைக் கொண்டு இதழைக் கொண்டு வருகையில் இதழானது ஒரு குறிப்பிட்ட குழுவையும் தாண்டி விரிவடைகிறது.

லா வோட்ஸு பொறுப்பாசிரியராக பங்கெடுத்து கொண்டு வந்திருக்கும் இதழ் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் கட்டுரைகள் என சிறப்புடன் வந்துள்ளது. யாவரும் ஆசிரியர் குழு அவரை வாழ்த்துகிறது. வாசகர்கள், இதழின் குறைகளை yaavarumdocs@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும். படைப்புகளும் அனுப்பிடலாம்.

விண்ணப்பம் : புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள எமது be4books புத்தகக் கடைக்கு ஆதரவு தெரிவிக்க, www.be4books.com இணையம் வாயிலாக நூல்கள் வாங்கி எங்களை உற்சாகப்படுத்துங்கள்

நம்பிக்கை:
எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும் புதுப்பொலிவுடன் யாவரும் இணையதளம் செயல்பட ஆரம்பித்தது, புத்தகக் கடை ஆரம்பித்தது என இந்த ஆண்டு ஓரளவுக்கு நம்பிக்கையை விதைக்கவும் தவறவில்லை என்கிற உணர்வோடு புதிய ஆண்டுக்குள் புதிய இலக்குகளோடு நாம் பயணிப்போம்.

இப்படிக்கு
மாறா அன்புடன்
ஜீவ கரிகாலன்
பதிப்பாளர்.

செந்நிற மரணத்தின் களியாட்டு – எட்கர் ஆலன் போ

1

தமிழில் – நரேன்

(எட்கர் ஆலன் போ (1809-1849) – அமெரிக்கச் சிறுகதை தொடக்க அலையின் முன்னணி எழுத்தாளர்களில் முக்கியமானவர். கற்பனாவாத காலகட்டதைச் சேர்ந்த இவர் அதீத துயரமும் மர்மங்களும் கொண்ட கதைகளை ஆங்கில இலக்கிய மரபிற்குள் அறிமுகப்படுத்தியதன் மூலம் ‘இருண்மை கற்பனாவாதம்’ என்ற ஒரு புது பிரிவை உருவாக்கினார். மாயங்களும் மர்மங்களும் சாத்தான்களும் மரணமும் இவரது கதைகளில் பாத்திரங்களாகவே உலவும். இவர் ஒரு கவிஞர் என்பதாலும் இவரது கதைகளில் உருவகங்களும் அருவங்களும் நிறைந்திருக்கும். “கோதிக் இலக்கியம்” என்று வகைப்படுத்தப்படும் இவரது படைப்புகள் உலகப் பிரசித்தி பெற்றவை. அதீத மன அழுத்தத்தாலும் கோரக் கனவுகளாலும் பீடிக்கப்பட்டிருந்த தன் வாழ்விலிருந்தே அவரது கதைகளுக்கான பேயுருவங்களையும் மாயப் பாத்திரங்களையும் புனைந்தார்.

கொள்ளை நோய் குறித்தான புனைவிலக்கியத்தில் முதன்மையானதாக அறியப்படுகிறது இவரது The Masque of the Red Death என்ற சிறுகதை. பதினான்காம் நூற்றாண்டில் இத்தாலிய எழுத்தாளர் Boccacio எழுதிய ‘The Decameron’ என்ற குறுநாவலினால் தூண்டுதல் பெற்று இச்சிறுகதையை எழுதினார் போ. உருவகக்கதைகளுக்கு இன்றளவும் முன்மாதிரியாகத் திகழ்கிறது இச்சிறுகதை. கொள்ளை நோயால் தாக்கப்பட்ட ஒருவனையே நடமாடும் கொள்ளை நோயின் உருவகமாகப் புனைந்ததின் மூலம் மரணம் எனும் என்றுமழியா ஒரு புள்ளியின் மீது வாசகனின் கவனத்தைக் குவிக்கிறார். இக்கதையில் வரும் வண்ணங்களும் ஏழு எண்ணிக்கையிலான அறைகளும் வெவ்வேறு குறியீட்டு அர்த்தங்களைத் திறந்தபடியே இருக்கின்றன. வண்ணங்களை நிறைத்து இருண்மையான ஒரு கனவுலகத்தைக் கட்டி நிறுவுகிறார். கொள்ளை நோயினால் மக்கள் மரணிப்பதை விடவும் மரணத்தை ஒரு நோயென எதிர்நோக்குவதைத்தான் பெரும் துன்பமென முன்வைக்கிறார்.)

செந்நிற மரணத்தின் களியாட்டு

அந்தச் செந்நிற மரணம் நாட்டை நீண்ட காலமாகச் சூறையாடிக் கொண்டிருந்தது. இவ்வளவு பயங்கரமான, அழிவேற்படுத்தக்கூடிய ஒரு கொள்ளை நோய் இதுவரை வந்ததில்லை. இரத்தமே அது கொண்ட அவதாரம், அதன் முத்திரை – குருதியின் செந்நிறமும் திகிலச்சமும். கூர்வெட்டு வலிகளும் திடீர் தலைச்சுற்றல்களும் முதலில் வரும், அதன் பிறகு உடற் நுண்துளைகள் கரைந்தழியுமளவிற்கு அடக்கவியலாத இரத்தப் பீறிடல்கள். நோயாளியின் உடம்பிலும் முக்கியமாக முகம் மீதும் பரவும் கருஞ்சிவப்பு நிறம் தொற்று பரவியதை அடையாளமிட்டு எந்த விதமான உதவியையும் சக மனிதர்களின் பரிவையும் பெற முடியாமல் அவனைத் தனியே வெளியேற்றியது. மேலும், இந்த நோயின் ஒட்டுமொத்த தாக்குதல், பரவுதல், முடிவு என அத்தனையும் அரை மணி நேரத்தில் நிகழ்ந்தேறி விடுவன.

ஆனால் இளவரசர் ப்ராஸ்பெரோ குதூகலமிக்கவராகவும், அச்சத்திற்கு ஆட்படாதவராகவும், மதிநுட்பம் கொண்டவராகவும் விளங்கினார். அவர் ஆட்சிக்குட்பட்டவையெல்லாம் சரிபாதியாக குடியழிந்துக் கொண்டிருந்தபோது அவர் வலிமையான, களிமனம் உடைய ஒரு ஆயிரம் மாவீரர்கள் மற்றும் பேரழகுப் பெண்களை தன் முன்னிலையில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இவர்களோடு அவர் தன்னுடைய அரண்மாளிகை கட்டிடங்கள் ஒன்றில் ஒதுங்கி அணுகவியலாத அரணிடப்பட்ட தனியுலகிற்குள் சென்றார். மிகப் பரந்தகன்ற விசித்திரமான கட்டமைப்பு கொண்டது அது, இளவரசரின் விந்தையான ஆனால் தனித்துவமான சுவையின் உருவாக்கம். ஓங்கியுயர்ந்த உறுதியான சுற்றுச் சுவர் ஒன்று அதை இறுக ஒட்டிச் சூழ்ந்திருந்தது. இந்தச் சுவர் இரும்பினாலான வாயிற்கதவுகள் கொண்டிருந்தது. பரிவாரங்கள் உள் நுழைந்ததும், திண்மையான சுத்தியல்களும் உலையடுப்புகளும் கொண்டு வரப்பட்டு மரையாணிகளை உருக்கி அது முழுவதுமாக அடைக்கப்பட்டது. மனங்கசந்ததினால் எழும் திடீர் உந்துகையினாலோ அல்ல உள்ளுக்குள் எழும் வெறிக் கொந்தளிப்பினாலோ எவரும் உள்நுழைவு வயமோ வெளியேறும் வழியூடாகவோ இங்கிருந்து அகலுவதில்லை என்று தங்களுக்குள் உறுதிமொழி பூண்டனர். அந்த மாளிகை போதுமானளவு அத்தியாவசியப் பொருட்களால் நிரப்பப்பட்டிருந்தது. இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அரசவையினர் கொள்ளை நோயை எதிர்த்து நிற்கக்கூடும். வெளியுலகு தன்னை தானே பார்த்துக் கொள்ளட்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஆழச் சிந்திப்பதோ துயரப்படுவதோ மடமை. களியாடுவதற்கான அத்தனைச் சாதனங்களையும் இளவரசர் ஏற்பாடு செய்தளித்திருக்கிறார். அங்கே கோமாளிகள் இருந்தனர், விகடகவிகள் இருந்தனர், பாலே நடன மங்கைகள் இருந்தனர், இசைக் கலைஞர்கள் இருந்தனர், அனைத்திலும் அழகு இருந்தது, திராட்சை மதுரசமும் இருந்தது. இவை எல்லாவற்றினோடும் பாதுகாப்பும் இருந்தது. அங்கு இல்லாதது ‘செந்நிற மரணம்’ மட்டும்தான்.

அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதற்குப் பிறகான ஐந்தாவது அல்லது ஆறாவது மாதத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோதுதான் இளவரசர் ப்ராஸ்பெரோ தன்னுடைய ஆயிரம் நண்பர்களை மகிழ்விக்க முன்னெப்போதும் நிகழ்ந்திரா வண்ணம் ஒரு ஆரவாரமான முகமூடி நடன நிகழ்விற்கு ஏற்பாடு செய்தார். கொள்ளை நோய் வெளியுலகை அச்சமயம் சீற்றங்கொண்டு வீசியெறிந்து கொண்டிருந்தது.

காமதுரக் காட்சியாக இருந்தது அந்த பொய்த்தோற்ற களியாட்டம். ஆனால் முதலில் இது நிகழும் அறைகளைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். அவை மொத்தம் ஏழு – பேரரசனுக்குரிய அடுக்கு அறைகள். பல அரண்மனைகளில் இத்தகைய அறைகள் இரு புறங்களிலும் நேராக நீண்டு அணிவகுத்து காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது போன்று இருக்கும், மடிப்பு அறைக்கதவுகள் சுவரோடு ஒட்டியபடி அமைந்திருக்கும். இதனால் முழு பரப்பளவும் ஒரு நேர்ப் பார்வையிலேயே பட்டுவிடும். ஆனால் இங்கு எல்லாமே மிகவும் விநோதமாகயிருந்தது, புதுமைகளின் மீதான பிரபுவின் பித்து அறிந்த எவரும் இது எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒன்றுதான். பகுப்பறைகள் மிகவும் ஒழுங்கற்று வரிசைப்படுத்தப்பட்டிருந்ததால், ஒரு நேரத்தில் ஒரு அறையை மீறி பார்வை அப்பால் உரசிச் செல்லவில்லை. ஒவ்வொரு அறுபது அல்லது தொண்ணூறு அடிக்கும் ஒரு கூர்மையான வளைவு இருந்தது, அவ்வொவ்வொரு திருப்பத்திலும் எதிர்பாரா விநோதமொன்று உருவாக்கப்பட்டிருந்தது. இருபுறங்களிலுமிருக்கும் ஒவ்வொரு சுவற்றின் மத்தியிலும் ஒரு நெடிந்துயர்ந்த குறுகிய கோதிக் பாணியிலான ஜன்னல், தொகுப்பறைகளின் சுற்றுப்பாதைகளான அடைக்கப்பட்ட நடைவழியை நோக்கியிருந்தது. இந்த ஜன்னல்கள் சாயமேற்றப்பட்ட கண்ணாடிகளால் ஆனவை, அதன் வண்ணங்கள் அது உட்திறக்கும் அறையில் வியாபித்திருக்கும் வண்ண அலங்காரங்களுக்கு ஏற்றபடி அமைக்கப்பட்டிருந்தன. உதாரணமாகக் கிழக்கு மூலையில் இருக்கும் அறையின் வண்ணம் நீலம் – அதன் ஜன்னல்கள் கண்ணைப் பறிக்கும் நீல வண்ணத்திலானவை. இரண்டாவது அறையின் நிறம் ஊதா, அதன் அணிமணிகளும் திரைச்சீலைகளும் சாளரப் பலகமும் கூட ஊதா நிறம். மூன்றாவது முழுதும் பச்சை, அதனால் அதன் சாளரங்களும் அதே வண்ணம். நான்காவது அறையில் அமைந்திருந்த பொருட்களும் நிறைந்திருந்த ஒளியும் செம்மஞ்சள் நிறம் – ஐந்தாவது வெள்ளை – ஆறாவது கருஞ்சிவப்பு. ஏழாவது அறை, உட்கூரையிலிருந்து சுவர்களின் வழியாகக் கீழிறங்கும் கருப்பு மென்பட்டுத் திரைச் சீலைகளால் நெருக்கி மூடப்பட்டிருந்தது, அதே வண்ணத்திலும் வகையிலுமான தரை விரிப்பின் மீது அவை தடித்த மடிப்புகளாக உருண்டு விழுந்திருந்தது. ஆனால் இந்த அறையில் மட்டும்தான் அலங்காரங்களோடு ஒத்துப் போகாமல் இருந்தது சாளரங்களின் வண்ணம். இங்கே பலகங்கள் ஒண்சிவப்பு நிறத்தில் இருந்தது – குருதியின் கடுஞ்சிவப்பு வண்ணம். இந்த ஏழு பகுப்பறைகளில் ஒன்றில் கூட, தரையிலிருந்து கூரைமீதேறி படர்ந்து விரவியிருக்கும் அல்லது கூரையிலிருந்து தரைதழுவித் தாராளமாகப் பரவியிருக்கும் தங்க ஆபரணங்களுக்கு மத்தியில் ஒரு விளக்கோ அல்லது மெழுகுவர்த்தி தொகுப்புகளோ கிடையாது. அவ்வறைகளுக்குள்ளிருந்து விளக்கினாலோ அல்ல மெழுகுவர்த்திகளிலிருந்தோ எந்தவொரு ஒளியும் பெருகி வரவில்லை. ஆனால் அறை தொகுப்புகளை பிந்தொடரும் இடைவழியில், ஒவ்வொரு சாளரத்தின் எதிரிலும் நின்றிருந்த கனமான முக்காலிகள் கனன்றெரியும் தீயைத் தாங்கியிருந்தது. அவை வண்ணக் கண்ணாடிகள் வழியாகக் கதிர்களைப் பாய்ச்சி அறைகளை மிகப் பளபளப்பாக ஒளிர்வித்தது. இதனால் விதவிதமான, கற்பனைக்கும் எட்டாத ஆர்ப்பரிக்கும் தோற்றங்கள் ஏராளமாக உருப்பெற்றன. ஆனால், மேற்குப்புற அறையில் அல்லது கறுப்பு அறையில் இரத்தச் சாயங்கொண்ட சாளரப் பலகங்கள் ஊடே தொங்கிய கருந்திரைச்சீலைகளின் மீது ஓடிய தீயொளியின் தோற்றங்கள் அதீத கோரமாக இருந்தது. மேலும் உள்ளே நுழைபவர்களின் முகத்தோற்றத்தை மிருகத்தனமேறியதாக உருமாற்றிக் காட்சிப்படுத்தியது, இதனால் கூட்டாளிகளில் வெகு சிலரே அதன் எல்லைக்குள் கால் பதிக்கத் தைரியம் கொண்டிருந்தனர்.

இந்தப் பகுப்பறையில்தான் மேற்கு சுவற்றின் எதிரே கருங்காலி மரத்தாலான ஒரு பிரம்மாண்டமான கடிகாரம் நின்றிருந்தது. அந்த மணிப்பொறியின் ஊசலாடி ஒரு மந்தமான, சந்தம் மாறாத கனத்த ஒலியெழுப்பி முன்னும் பின்னும் ஊசலாடியது; ‘நிமிடக் கரம்’ கடிகார முகத்தை ஒரு சுற்று முடித்து ‘மணிநேரத்தை’ சென்றடையும் தறுவாயில், கடிகாரத்தின் உறுதியான நுரையீரலிலிருந்து மேலெழுந்தது ஒரு சத்தம் – அது தெளிவாகவும் உரத்தும் ஆழமாகவும் இன்னிசையென இசைத்தது, ஆனால் விசித்திரமாக ஒற்றிசைக் குறிப்பாகவும் பேரழுத்தம் ஒன்றும் கொடுக்கப்பட்டதுமாக இருந்தது. அதாவது ஒவ்வொரு மணிநேர முடிவிலும் அச்சத்தத்தை உற்றுக் கேட்பதற்காக இசைக் குழுவின் இசைக்கலைஞர்கள் அனைவரும் அவர்கள் இசைப்பதைக் கணநேரம் இடைநிறுத்தும்படி ஆட்படுத்தியது அச்சத்தம்; சுழன்று நடனமாடுபவர்கள் தங்கள் சுருளவிழ்தல்களை நிறுத்தும் கட்டாயத்திற்கு உள்ளானார்கள். அத்தனை கூட்டாளிகளின் மத்தியிலும் குதூகலிப்பு சற்றே குலைந்தது; கடிகாரத்தின் மணியொலி நிற்காமல் மேலும் ஒலித்தபோது தடுமாறும் மனதுடையவர்கள் வெளிர் நிறமாக மாறுவதைக் காணமுடிந்தது, சற்றே வயதேறியவர்கள் மற்றும் அமைதிப் பாங்கானவர்கள் குழப்பத்தில் தன்னிலை மறந்தவர்கள் போலவோ அல்லது தியானத்தில் மூழ்கிவிட்டதைப் போலவோ தங்கள் கைகளால் புருவங்களைத் தடவிக் கொடுத்தனர். ஆனால் எதிரொலிகள் முற்றிலுமாக நின்றுபோனதும் ஒரு மெல்லிய சிரிப்பொலி சபையிடையே ஊடுருவியது; இசைக்கலைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர், அவர்களுடைய பதற்றத்தையும் முட்டாள்தனத்தையும் நோக்கிப் பரிகசிப்பதைப் போல. கடிகாரத்தின் அடுத்த மணியோசை இதைப்போன்றதொரு உணர்வு அவர்களுக்குள் மீண்டும் ஏற்படுத்திவிடக் கூடாதென இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டனர்; அதன் பின்னர் அறுபது நிமிடங்கள் கடந்ததும், (மூவாயிரத்து அறுநூறு நொடிகளை அரவணைத்துப் பறந்து போய்விடுகிறது அக்காலம்) கடிகாரத்தின் மற்றுமொரு மணியோசை மேலெழுந்ததும் மீண்டும் அங்கே தோன்றியது முன்பிருந்த அதே மனக்குலைவு, நடுக்கம் மற்றும் தியானம்.

ஆனால் இதையெல்லாம் மீறியும் மிகச் சிறப்பான பெரும் கொண்டாட்டமான களிவிழாவாகவே அது இருந்தது. கோமானின் சுவை தனித்துவம் வாய்ந்தது. வண்ணங்களையும் விசேஷத் தோற்றங்களையும் நுட்பமாகத் தேறும் கண் இருந்தது அவருக்கு. வெறும் மரபார்ந்த அலங்காரங்களை அவர் புறந்தள்ளினார். அவருடைய திட்டங்களெல்லாம் தீரமிக்கதாகவும் துடிதுடிப்புடையதாகவும் இருந்தன, அவருடைய எண்ணங்களெல்லாம் ஒரு காட்டாளனின் மிளிர்வுடன் பிரகாசித்தன. அவரை பித்துப் பிடித்தவர் என்று நினைத்தவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர் அப்படி இல்லை என்று அவரை பின்பற்றுபவர்கள் உணர்ந்தனர். அவர் அப்படி இல்லை என்பதை உறுதி செய்ய அவரை நேரில் காண்பதும் கேட்பதும் தொட்டுணர்வதும் அவசியம்.

இந்தப் பெருநிகழ்வின் பொருட்டு ஏழு அறைகளின் அசையும் அலங்காரங்களை அவரே பெருமளவில் இயக்கினார்; அவரது சொந்த சுவைத்திறம்தான் முகமூடி நடனக்காரர்களுக்கான பாத்திரங்களைத் தெரிவு செய்ய வழிகாட்டியது. அவை கோரத்தோற்றம் கொண்டவை என்பது உறுதி செய்யப்பட வேண்டும். அங்கே கண்ணைப் பறிக்கும் பளபளப்பும் மினுமினுப்பும் சீண்டும் ஆர்வமும் பேயுறுவமும் அதீதமாக இருந்தன – பெரும்பாலும் ‘ஹெர்னானி’[ ஹெர்னானி (Hernani) – ப்ரெஞ்ச் ஆசிரிய விக்டர் ஹியூகோ எழுதிய அரசவைக் காதல் நாடகம். ] நாடகத்தில் காணப்பட்டவையே. பொருத்தமற்ற உறுப்புகளும் இணைப்புகளும் கொண்ட ‘அரேபிஸ்க்’[ அரேபிஸ்க் (Arabesque) – பாலே நடனத்தின் ஒரு அமைவு நிலை. ஒற்றைக் காலால் உடலை நிலை நிறுத்தி மற்றொரு காலை பின்பக்கத்தில் கிடைமட்டமாக உயர்த்தி நிற்கும் நிலை. ] பாலே உருவத்தோற்றங்கள் அங்கே இருந்தன. மனம் பிறழ்ந்தவன் உவக்கும் பாணியிலான மயக்க வெறி கொள்ளும் கற்பனைகள் அங்கே நிறைந்திருந்தன. அங்கே அதீத அழகு இருந்தது, வரம்பற்ற ஒழுக்க மீறல்கள், மிகையான விநோதங்கள். அச்சமுண்டாக்குபவைகள் சில, ஆனால் சிறிதளவும் வெறுப்பைத் தூண்டக்கூடிய ஒன்றுகூட அங்கில்லை. உண்மையில், அவ்வேழு அறைகளிலும் முன்னும் பின்னும் கனவுத்திரள் ஒன்று அமைதியாகச் சஞ்சரித்தது. மேலும், இவை – இந்தக் கனவுகள் – அறையின் சாயங்களை ஏற்றுக்கொண்டு கூட்டத்தினுள்ளே வளைந்து நெளிந்தசைந்தபடியிருந்தது. இசைக் குழுவினரின் கட்டிலடங்காத இசையே அவற்றின் காலடிச் சத்தத்தின் எதிரொலியெனத் தோன்றியது. அப்பொழுதுதான் வெண்பட்டு கூடத்தில் நின்றிருந்த கருங்காலி கடிகாரம் மணியடித்தது. அதன் பிறகு, ஒரு கணம், அனைத்தும் அசைவற்று நின்றது, அனைத்தும் அமைதியாகிப் போனது அக்கடிகாரத்தின் குரலைத் தவிர. அக்கனவுகளும் நின்றபடி விறைப்பாய் உறைந்து போனது. ஆனால் மணியோசையின் எதிரொலிகள் மறைந்து போனதும் – கணநேரம் மட்டுமே அவை நீடித்தது – அவை நகர்ந்து செல்கையில் ஒரு மெல்லிய, அடங்கிய சிரிப்பொலி அவற்றின் பின்னால் காற்றில் அலைந்தது. இப்போது மீண்டும் இசை பெருகத் தொடங்கியது, கனவுகளும் உயிர்கொண்டது. முக்காலிகளிலிருந்து வரும் கதிரொளிகளை தன்னூடே பாய்ச்சும் சாயமேற்றப்பட்ட பல சாளரங்களிலிருந்து தன் வண்ணத்தை அவை ஏற்றுக் கொண்டு முன்னெப்பொழுதையும்விட அதிக களிப்புடன் முன்னும் பின்னும் நெளிந்தாடின. ஆனால் ஏழு அறைகளில் மேற்குப்புறத்தில் அமைந்திருந்த ஒன்றில் மட்டும் முகமூடியர்களில் ஒருவரும் நுழையத் துணியவில்லை; இரவு விலகிச் சென்றுக்கொண்டிருந்தது; இரத்த நிறங்கொண்ட பலகங்களின் ஊடாக குருதியொளி பாய்ந்து கொண்டிருந்தது; மென்மயிர் தூரிகை மடிப்புகளின் கருமை திகைப்பூட்டியது; துயருறுக்கும் அக்கருமையான தரைவிரிப்பின் மீது கால் பதிக்கும் ஒருவனுக்கு, கருங்காலிக் கடிகாரத்தின் அருகிலிருந்து எழும் உள்ளடங்கிய ஒலியலை மற்ற அறைகளில் விதவிதமான வேடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களின் செவிகளை அடைவதைவிடவும் அச்சமூட்டும் அழுத்தத்துடன் வந்து சேரும்.

ஆனால் மற்ற இந்த அறைகளிலெல்லாம் நெருக்கியடிக்கும் கூட்டமிருந்தது, அவர்களுள் வாழ்வின் இதயத்துடிப்பு கொந்தளிப்புடன் தாளமிட்டுக் கொண்டிருந்தது. களியாட்டம் மேலும் மேலுமென சுழன்றேறிக் கொண்டிருந்தது, நீண்ட நேரம் கழித்து கடிகாரத்தின் நள்ளிரவு மணி மீண்டும் அடிக்கத் தொடங்கியது வரை. நான் சொன்னது போலவே இசை நிறுத்தப்பட்டது; சுழல் நடன மலர்தல்கள் நின்று அரவமடங்கியது; முன்பு போலவே அத்தனையும் சங்கடமான அமைதிக்குள் தள்ளப்பட்டு நின்றுபோனது. ஆனால் தற்போது கடிகார மணி பன்னிரண்டு தாக்கொலிகளை முழங்க இருந்தது; அது நீண்ட நேரம் என்பதால், சிந்தனைகள் ஒருவருள் அதிகம் ஊடுருவியதாலோ என்னவோ, களியாடியவர்களில் சிந்தனையார்ந்தவர்கள் நீண்ட தியானத்திற்குள் மூழ்கினர். இதனால் இன்னொன்றும் நிகழ்ந்தது, கடைசி மணியொலியின் கடைசி எதிரொலிகள் முற்றிலுமாக மூழ்கி அமைதியடைவதற்கு முன்னால், அக்கூட்டத்தில் சற்று நிதானமடைந்திருந்த பலர் இதற்குமுன் ஒருவரின் கவனத்தையும் தொடாத முகமூடி அணிந்த ஒரு உருவத்தின் இருப்பை அறிந்து கொண்டனர். இந்த புதியவொன்றின் இருப்பை பற்றிய வதந்திகள் காதோடு காதாக அதைச் சுற்றியே பரவத் தொடங்கியது, மொத்த குழுவிடமிருந்தும் ஒரு நீண்ட சலசலப்பு அங்கே எழுந்தது, அல்லது ஒரு முணுமுணுப்பு, ஆச்சரியத்திற்கும் மறுதலிப்பிற்குமான ஒரு வெளிப்பாடு – பின்பு, கடைசியாக பேரச்சமும் நடுக்கமும் அருவருப்பும்.

நான் தீட்டிக் காட்டியதைப் போன்ற புனைவுத்தோற்றங்களின் சங்கமத்தில் எந்தவொரு சாதாரண உருவமும் அத்தகைய உணர்வைக் கிளர்த்தியிருக்காது என்று கருதக்கூடும். உண்மையில் இந்த இரவின் களியாட்டத்திற்கான சலுகைகள் வரம்புகளற்றது; ஆனால் சந்தேகத்திற்குரிய அவ்வுருவம் ‘ஹெராடு’[ ஹெராடு அரசன் (Herod the Great) – கி.மு. 72லிருந்து கி.மு. 1 வரை வாழ்ந்ததாக அறியப்படும் ரோமானிய அரசன். வரலாற்றிலும் இலக்கியங்களிலும் அப்பாவிகளை கொன்று குவித்த கொடூரனாக குறிப்பிடப்படுபவன். ] அரசனை விடவும் இரக்கமற்ற தோற்றம் கொண்டிருந்தது. மேலும், இளவரசரின் வரையறையற்ற தகுதிகளையும் கூட மிஞ்சி எல்லை கடந்து விட்டிருந்தது. மிகவும் அசட்டையானவர்களின் இதயங்களை மிகச் சரியான உணர்வுகளின்றி தொட்டுவிடமுடியாது. வாழ்வும் மரணமும் வெறும் விளையாட்டே என்று எண்ணும் மதியிழந்தவர்களால் கூட புறந்தள்ளிவிட முடியாத சில விஷயங்கள் உண்டு. மொத்த குழாமும் தற்போது அந்நியனைப் போன்ற ஆடையிலும் தோற்றத்திலும் இருக்கும் அது, ஒரு விளையாட்டுச் செயலோ அல்ல இவ்விடத்திற்குப் பொருத்தமான ஒன்றோ இல்லை என்று ஆழமாக உணரத்தொடங்கினர். இந்த உருவம் நெடிந்தும் மெலிந்தும், தலை முதல் கால் வரை பிணமுக்காடிட்டு கல்லறைக்கான உடையணிந்து இருந்தது. முகத்தை முற்றிலுமாக மறைத்திருந்த முகமூடி, விறைத்துப்போன சடலத்தின் முகபாவத்தை ஒத்து இருந்தது. நுணுகி ஆராய்ந்திருந்தாலும் இவ்வஞ்சகச் செயலை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்திருக்கக் கூடும். இருப்பினும், பித்தேறிய இக்களியாட்டகாரர்களால் இவையனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் பொறுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஊமை நாடகமாடி செந்நிற மரணத்தின் வகையைச் சார்ந்தவனோ என்று ஊகம் கொள்ளுவதற்கு இடம் கொடுத்து விட்டான். அவனது அணியாடை குருதி படர்ந்து ஈரமாகயிருந்தது – மேலும் அவன் முகம் முழுதும், அவனின் அடர்ந்த புருவங்களிலும் கூட திகிலூட்டும் கருஞ்சிவப்பு தெறித்திருந்தது.

இளவரசர் ப்ராஸ்பெரோவின் கண்கள் இந்தப் பேயுருவத்தின் மீது விழுந்தபோது (அப்போது அவ்வுருவம் மெதுவாக ஆனால் கம்பீரமாக, தன்னுடைய பாத்திரத்தை முழுமையாக நிறுவி விட்டதைப் போலச் சுழல் நடனக்காரர்களை நோட்டமிட்டபடியே முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருந்தது). அவர் அதைப் பார்த்ததுமே, முதல் நொடியில் பயத்தினாலோ அல்லது வெறுப்பினாலோ ஒரு பலமான உதறல்கொண்டு அதிர்ந்துபோனதைப் போலத் தோன்றியது; ஆனால், அடுத்த நொடி, அவருடைய புருவம் ஆத்திரத்தில் சிவந்தது.

“யாருக்கு வந்தது இந்த தைரியம்,” – அவர் அருகில் நின்றிருந்த பரிவாரத்திடம் கரகரத்த குரலில் அதட்டலாகக் கேட்டார் – “இந்த இழிவான போலி வேஷம் பூண்டு எங்களை நிந்தனை செய்யும் தைரியம் உள்ளவன் யாரவன்? அவனைப் பிடித்து அவன் முகத்திரையைக் கிழியுங்கள் – கொத்தளத்தில் நாளை சூரியோதயத்தில் நாம் தூக்கிலிடப்போவது யார் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.”

இளவரசர் ப்ராஸ்பெரோ இவ்வார்த்தைகளை உச்சரித்தபோது கிழக்கு அறையிலோ அல்லது நீல அறையிலோ அவர் நின்று கொண்டிருந்தார். இளவரசர் தீரமும் கட்டுரமும் மிக்கவர் என்பதால் அக்குரல் ஏழு அறைகள் முழுவதும் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்டது, அவரின் கையசைவில் இசையும் சப்தமடங்கிப் போனது.

நீல நிற அறையில் நின்றிருந்தார் இளவரசர் ப்ராஸ்பெரோ, வெளிறிய படைக்குழு அவரருகே சூழ்ந்திருந்தன. முதலில், அவர் பேசியபோது, ஊடுருவியனின் திசையை நோக்கி அக்குழுவினரிடமிருந்து ஒரு பரபரப்பான வேகத்துடன் அசைவுகள் எழும்பியது, அவனும் அந்நேரத்தில் கைக்கெட்டும் தூரத்தில் தான் இருந்தான். ஆனால் இப்போது, வேண்டுமென்றே வீறார்ந்த நடை போட்டுப் பேசியவரின் அருகாமையை நோக்கி நகர்ந்தான். அந்த ஊமை நாடகமாடியைப் பற்றிய மடத்தனமான அனுமானங்களால் தூண்டப்பெற்று வர்ணிக்கமுடியாத பிரம்மிப்பில் இருந்த மொத்த கூட்டத்திலிருந்தும் அவனைக் கைப்பற்ற ஒருவர் கூட முன்வரவில்லை; இதனால் இளவரசனின் ஆட்களிடமிருந்து சில அடி தூரத்திலேயே அவ்வுருவக்காரன் எத்தடையுமின்றி கடந்து செல்ல முடிந்தது; மேலும், ஒட்டுமொத்த குழாமும் ஒற்றை விசையில் அறைகளின் மையங்களிலிருந்து விலகி சுவர்களோரம் சுருங்கிக் கொள்ள, அவன் எந்த இடையூறுமின்றி அவனை முதலில் தனித்துக் காட்டிய அதே ஸ்திரமான அளவெடுத்த அடிகளால் தனது வழியில் நகரத் தொடங்கினான் – ஊதாவின் வழியாகப் பச்சைக்கும் – பச்சையினூடாக செம்மஞ்சளுக்கும் – அதிலிருந்து மீண்டும் வெள்ளைக்கும் – அங்கிருந்து கருநீலத்திற்கும். அவனைக் கைது செய்வதற்குத் தீர்மானமான ஒரு செயல்பாடு அப்போது தொடங்கியிருக்கக்கூட இல்லை. எனினும் இதற்கு பிறகுதான் இளவரசர் ப்ராஸ்பெரோ தன் கணநேர கோழைத்தனத்தால் வெட்கமுற்றுச் சினங்கொண்ட வெறியுடன் ஆறு அறைகளைக் கடந்து அவசரமாக விரைந்தார். தங்களைப் பீடித்திருந்த பயங்கரமான அச்சத்தின் காரணமாக ஒருவரும் அவரை பின்தொடரவில்லை. உருவிய தன் உடைவாளை அவர் தலைக்கு மேலே உயரப் பிடித்திருந்தார். விலகிச் சென்று கொண்டிருக்கும் அவ்வுருவத்தின் அருகில் கட்டுக்கடங்காத வேகத்தில் சென்றதும், கருநீல அறையின் எல்லையை அப்போது எட்டிவிட்டிருந்த அவ்வுருவம் சடாரென திரும்பி தன்னை பிந்தொடரும் அவரை எதிர்கொண்டது. செவியைத் துளைக்கும் கூர்மையான கதறல் ஒலி அங்கு எழுந்தது – உடைவாள், பஞ்சுத் தரை விரிப்பின் மீது மின்னி விழுந்தது. அதன் மேல், அடுத்த கணமே, மரணித்து நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்தார் இளவரசர் ப்ராஸ்பெரோ. பிறகு, நம்பிக்கை அத்தனையையும் இழந்ததின் விளைவாகப் பிறந்த துணிவை ஒன்றாகத் திரட்டி, களியாட்டக்காரர்களின் ஒரு திரல் கருப்பு அறைக்குள் மொத்தமாகப் பாய்ந்தது. கருங்காலி கடிகாரத்தின் நிழலில் அசைவற்று நிமிர்ந்து உயரமாக நின்ற, எவ்வுருவிலும் காணச் சகியாத அந்த ஊமை நாடகமாடியை வன்மையுடன் முரட்டுத்தனமாகக் கைப்பற்றியதும், அவனின் பிணமொத்த முகமூடியையும் போர்த்தியிருக்கும் கல்லறை ஆடையையும் கண்டு விவரிக்க முடியாத அச்சத்தினால் மலைத்து மூர்ச்சையாகினர்.

செந்நிற மரணத்தின் இருப்பு இப்போது ஒப்புக் கொள்ளப்பட்டது. ஒரு கள்ளனைப் போல இரவில் வந்திருந்தான். களி கூத்தாடியவர்களை ஒருவர் பின் ஒருவராக இரத்தம் சிதறித் தோய்ந்திருந்த கூடத்தில் வீழ்த்தினான். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய தோல்வியை விரக்தியுடன் ஏற்றுக்கொள்ளும் தோரணையில் இறந்து கிடந்தனர். அந்தக் கடைசி களியாட்டத்தோடு கருங்காலி கடிகாரத்தின் வாழ்வும் முடிவிற்கு வந்தது. முக்காலிகளில் ஒளிர்ந்த தீப்பிழம்புகளும் அணைந்து போயின. இருண்மையும் சிதைவும், அச்செந்நிற மரணமும் அத்தனையின் மீதும் வரம்பற்ற ஒட்டுமொத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது.

இதான் மச்சான் லைப் !

0

மணி எம் கே மணி

பசிக்குது என்றார் ஆரிப்.

தாசன் தலையை அசைத்தார். ஒருமுறை குளத்தில் மூழ்கி எழுந்தார்.

தாசன் உள்ளிட்ட எட்டு பேருக்கும் அதுதான். கொசகொசவென வந்து குழுமும் மீன்களுக்கு நடுவே நீந்திக் கொண்டிருந்தார்கள். மதியம் போலவே இல்லை. மேகங்கள் கூடியிருந்தன. வரப்போகின்ற மழைக்குளிர் குளத்தில் இருந்தது. சுற்றியிருந்த ஒருவிதமான கருமையும், இவர்களைத் தவிர ஒருவரும் இல்லாத சுதந்திரமும் கட்டவிழ்த்து விட்டது போலிருந்தது. மீன்களைப் பிடித்து ஆராய்ந்து மறுபடியும் அவற்றைத் தண்ணீரில் விட்டு ஆட்டம் போட்டார்கள். வருகிறவர்கள் எல்லாம் அள்ளி இறைக்கிற பொரியைத் தின்று அவைகள் கொழுத்திருந்தன. கோவில் திறக்க நேரமிருக்கிறது இன்னும். அதனால் இப்படிதான் நேரத்தைப் போக்கியாக வேண்டும். என்னதான் பசித்தாலும்.
சாலமனும் ஆரிபும் தம்மடிக்க கடையைத் தேடிக்கொண்டு போனார்கள்.

மற்றவர்கள் பாலகனை தொழுது நின்றார்கள். முழுமையான ஒரு அமைதியின் வெளியில் குடிகொண்டு எளிமையாக சிரிக்கிற அழகன் அவன். தொழுகையின் துல்லியத்தில் மனம் கூர்மைப்பட்டு மனம் கனிந்து தன்னை இலேசாக உணருகிற தருணம் அனைவருக்குமே வாய்த்திருக்க வேண்டும். ஆனால் அனைவரும் ஐயப்பன் மாலைகளை சம்பிரதாயமாகக் கழற்றி முடித்து வெளியே வந்து சட்டையை போட்டுக் கொண்டதும் வேகவேகமாக காருக்கு நடந்தார்கள். சாலமன் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான். தாசன் இரண்டு இழுப்புக்கு அப்புறம் அதை ராஜாவிடம் கொடுத்து விட்டார். “ரொம்பப் பசிடா, ஏறுங்க போலாம்!” டிரைவர் நிலைமை உணர்ந்து வேகமாகவே போனார்.

ஓட்டலில் அது ஏறக்கட்டும் நேரமாக இருக்க வேண்டும். எட்டுபேர் என்கிற சபலம், கொஞ்சம் தாமதித்து உள்ளே அனுமதித்தார்கள். நடுத்தர ஓட்டல். ஒருவன் இப்போதுதான் உலை வைக்க ஓடுகிறான் என்பது புரிந்தது. எவ்வளவு தான் துடைத்து மொழுகி கிருமிநாசினி போட்டிருந்தாலும் அதன் வாசத்தை மீறி, உணவுப் பொருட்கள் புழங்குகிற அடையாளம் தான் முன்னின்றது. அது பசியை அதிகமாகக் கிளறியது. பரிமாறுகிறவர்கள் ஒருவரையும் காணோம். ஒருவிதமாக எதையோ தயார் செய்கிறார்கள், அதுதான். அவர்களில் ஓரிருவர் வந்து இலைபோடவே தாமதமாயிற்று. அதைக் கழுவிவிட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்கள்.

ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். யாரும் யாரிடமும் பேசவில்லை. சகஜமாக இருக்க முடியவில்லை. முதலில் கூட்டுப்பொரியல் வந்தது. பேதமே இல்லாமல் அனைவரும் அதை வாரித்தின்று இலையை காலி செய்தார்கள். மேலும் கேட்டார்கள். அவர்கள் முகச்சுளிப்புடனும், முணுமுணுப்புடனும் பரிமாறியதில் ஒருவன் தப்பாக பேசுவதை தாசன் கேட்டார். அவருக்கு நன்றாக மலையாளம் தெரியும். முதலில் சோறு, அது வந்தது. எல்லோரும் அதேபோல பேசாமல் கொள்ளாமல் தியானம் செய்வது போல சாப்பிட்டார்கள். ஓரளவு பசி தணியும் போது ஓடி ஓடி பரிமாற வேண்டியிருந்த அவர்களுக்குள் ஒரு பரிகாசம் ஓடிக்கொண்டிருந்ததை தாசன் கவனித்தவாறே இருந்தார். சாலமன் பில்லைக் கொடுக்கும்போது தாசன் பணம் ஏதாவது போட்டுக்கொடுக்க வேண்டுமா என்று கேட்கவும் செய்தார்.கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்தவன் எதற்கு என்பது போல கேட்டான் மிகவும் கூர்மையாக.

தாசன் கோணலாகச் சுழிந்தார். “நீங்கள் பரிமாறின மயிரு லட்ஷணத்துக்கு தான்!” என்றார் மலையாளத்தில். அநேகமாக அவன் அந்த மொழியை எதிர்பார்க்கவில்லை. அவன் தங்களுடைய ஆடகளைப் பார்த்துக் கொண்டான். அவர்களுக்குள் ஒரு பின்னடைவு இருந்தது. என்றாலும் கேஷ் ஆள் அடங்கவில்லை. “மரியாதை! அது முக்கியம்! இது உங்க தமிழ்நாடு இல்லை!” என்றான் அவன்.

“அதுதான்! தமிழ்நாட்டான் உங்க சபரிமலைக்கு லட்சம் லட்சமா வருவான். இந்த மாதிரி கோவில் ஊருக்கு கார்லயும் பஸ்லயும் கூட்டம் கூட்டமா வருவான். உங்களுக்கு அவங்க காசு மட்டும் வேணும். மத்தபடி அவங்கள மயிரு மாதிரி நடத்துவீங்க. அதானே?”

அதற்குள் இவர்கள் எல்லாரும் சுதாரித்துக்கொண்டு விட்டார்கள். ராஜா “ங்கோத்தா டேய். தமிழன்னா உனக்கு இளக்காரமா? நாங்க எல்லாம் யாருன்னு உங்களுக்கு தெரியுமா, அறுத்து போட்டு போயிகினே இருப்போம்!” என்றான். அதன் கூடவே இதே தொனியில் பலரும் பலதும் சொல்லி விட்டார்கள். அவர்கள் தரப்பில் கூட்டம் கூடிவிட்டது. வாக்குவாதங்கள் முற்ற முற்ற அது பெருகிக்கொண்டேப் போயிற்று. பக்கத்து கடைக்காரர்கள் அனைவரும் ஓட்டலுக்குள் ஏறி விட்டார்கள். சாலையில் இருந்த நான்கு போலீசாரையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள். சண்டை எங்கிருந்து தொடங்கியது என்பதே மறந்து போய், அது தமிழன் மலையாளி விரோதத்தில் வசைகளுடன் முறுகி ஓரிரு ஆட்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு விட்டார்கள். மேலே சண்டை போட முடியாது என்று வந்து விட்டது. எட்டு பேரும் முற்றிலுமாக மலையாளிகளால் சூழப்பட்டு நின்றார்கள். பலரும் அவர்களை அடிக்க முயன்றாலும், பலரும் அதைத் தடுத்துக் கொண்டிருக்கவும் செய்தார்கள். யாரோ ஒரு சகாவு வந்து இதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றார்கள். சிகரெட்டு பிடிக்க அனுமதிக்கவில்லை. குடிகாரன் ஒருவன் ஒரு தடியைக் கொண்டு வந்து வீசியவாறு முந்திவந்து விழ, அது பிரகாஷின் நெற்றியில் பட்டு ரத்தம் துளிர்க்க, மேலும் ஆவேசம் உண்டாகி தள்ளுமுள்ளு ஆகி விபரீதத்தை நெருங்கிய போது சகா வந்துவிட்டார் என்றார்கள்.
வந்தவர் கிரிவாசன்.

“தாஸ் அண்ணா” என்று ஊடுருவிப் பார்த்தவாறே வந்தவர் முதலில் அரிப்பை அணைத்துக் கொண்டு அவனுடனே முன்னுக்கு நகர்ந்து தாசனைப் பார்த்தார். தாசனோடு இருப்பவர்களில் பலரையும் அவருக்குத் தெரியும். எதிர்தரப்பு ஆட்களையெல்லாம் பார்த்தார். “என்னா.. தாசண்ணா, இதெல்லாம்? இங்க எப்டி? மலைக்கு வந்தீங்களா?” அப்படியே அவர்களிடம் “எல்லாரும் நம்ம ஆளுங்க!” என்றார். கூட்டம் பலவேறு அசட்டுச் சிரிப்புக்களுடன் விலகி, தள்ளி நின்றது. வேடிக்கை பார்த்தது. அவர் தாசனையும் மற்றவர்களையும் குசலம் விசாரிக்க ஆரம்பித்தார். அப்படியே அவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து “எல்லாரையும் சாதாரணமா நெனைக்காதீங்க! அத்தன பேரும் கில்லாடிங்க!” என்றார் பெருமிதத்துடன். இது எல்லாமும் நடக்கிற போதிலும் அவருடைய கரம் ஆரிபின் தோளில் இருந்து எடுக்கப்பட்டிருக்கவில்லை.

“தாஸ் அண்ணா. புரோக்ராம் என்ன?”

குற்றாலம் போற வழி. ரெண்டு மூனு நாள் இருந்து குடிக்கறதா பிளான். பசி தாங்காம இங்க சாப்பிட வந்ததுக்கு சண்ட!”

“குற்றாலம் தானே? நாளைக்கு போலாம்! இன்னைக்கு இப்ப நம்ம வீட்டுக்குப் போவோம். நைட்டு ஸ்டே. நல்லா குடிங்க. நல்ல சாப்பாடு போடறேன். நாளைக்கு காலைல எழுந்து, நீங்க உங்க வழிக்கு போலாம்! ரைட்டோ?”
“ரைட்டு!”

ஓட்டல்காரர்கள், அக்கம் பக்கத்தவர்கள், போலீசார் என்று அனைவருமாக கும்பல் கூடி அமர்ந்து பரஸ்பரம் ஒருவரையொருவர் விசாரித்துக்கொண்டு சாந்தி சமாதானம் உருவாவதன் பொருட்டு காப்பி, பிஸ்கெட்டுகள் சாப்பிட்டார்கள். சிகரெட்டு பீடி புகைத்தார்கள். கைகுலுக்கிக் கொண்டு, அணைத்துக் கொண்டு கிரிக்கு பின்னால் நின்றுகொண்டு விடைபெற்றார்கள். கிரி போன் செய்து சொல்லியிருக்கவே, விருந்தினர்களை வரவேற்க ஒரு குடும்பம், மற்றும் கூட்டம் அவர் வீட்டில் காத்திருந்தது. கிரியின் அப்பா, அம்மா, வளர்ந்த இரண்டு பெண் குழந்தைகள், மனைவி வல்சலா என்று அனைவருமே தென்னந்தோப்பின் அவுட்-டஹவுசில் இவர்கள் குடிக்க விதவிதமான டிஷ்களைக் கொண்டு வந்து கொடுத்தவாறே இருந்தார்கள். கிரியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.

அவனுக்கு எப்போதுமே குடிப்பழக்கம் இருந்ததில்லை. ஆரிப்பிற்கு மாட்டிறைச்சி கைமா ரொம்பப் பிடிக்கும் என்று கவனம் வைத்திருந்து அவன் கையாலே அதை செய்து எடுத்து வந்தான். அதைப்போலவே சரக்கு வாங்கவும் அவனே சென்று விலையுயர்ந்த இறக்குமதி பாட்டில்களை அள்ளிக்கொண்டு வந்தான். இருட்டுகிற நேரத்தில், அந்தக் குளிர் பிராந்திய மழை, குடிக்கிற மூடுக்கு மாண்பு சேர்த்தது. ஊரின் உட்புறமாக, வெள்ளம் நிறைந்த வயல்கள் தூரமாக இருந்து மின்னுகிற அழகு தெரிகிற அந்தத் தோப்பையும், எல்லோருக்கும் பெக்கு போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிற கிரியையும் தாசன் பார்த்தவாறே இருந்தார். அவருடைய கண்களை ஏறிட வேண்டி வரும்போது கிரி செய்த புன்னகையில் ஒரு துளியேனும் கள்ளமில்லை. மிகவும் வெளிப்படையாக இருந்தார். அவருடைய குடும்பம் அவரை உள்ளங்கையில் வைத்துப் போற்றியது சந்தோஷமான ஒரு காரியம். ஒரு கோணத்தில் தாசன் சற்றே படபடப்பில் தானிருந்தார். சென்னையில் கிரி ரவுடியாக தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கிய பிறகு குறைந்தது மூன்று பேரையாவது கொன்றிருக்கிறான் என்பதை எப்படி நினைவு கொள்ளாமலிருக்க முடியும்?

கிரியின் அம்மா மறுமணம் செய்து கொண்டபோது அவனுடைய சித்தப்பா அவனைக் கூட்டிக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டார். அப்போது அவனுக்கு வயது பதிமூன்றோ, பதினான்கோ? அரசுப்பள்ளி அவனுக்குச் சேரவில்லை. ஒட்டேரியின் உள்ளே இருந்த குறுக்குச்சந்தில் இருந்த டீக்கடையில் அவன் எச்சில் கிளாஸ்களைக் கழுவிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்துக்கு அப்புறம் சித்தப்பா தன்னுடைய வீட்டில் தன்னுடைய மனைவியுடன் அப்பளத் தொழிலைப் பார்க்க, இவன் தனியாளாகவே கடையைப் பார்த்துக் கொண்டான். என்ன, அது அந்தக் குடும்பத்தின் வாயிற்கும் வயிற்றிக்கும் மட்டும் வருகிற சோம்பலான வணிகம். வாழ்க்கைக்கு ஒரு பொருளும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்து விடுவதால் நுரைக்கிற அலுப்பில் இருக்கும்போது அங்கே அந்த சம்பவம் நடந்தது. மெயின் ரோடு பிளாட்பார வியாபாரிகளிடம் பண வசூல் தொடர்பான ஒரு விரோதத்தில் மறுகரை ஆட்கள் ஆயுதங்களுடன் ஏரியாவிற்குள் நுழைய, பைபிள் படிக்காசு தலைமையில் குறுக்கு சந்து பூராவும் வீட்டு ஓடுகளின் மடிப்பில், அடி பம்புகளின் இடுக்குகளில், குப்பைத்தொட்டிகளின் கல்லு மறைவில் இருந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ஓடி அவர்களை நேரிட்டு சண்டை செய்தார்கள். பின்னடைந்தும் முன்னேறியும் அந்தச் சண்டை நீடித்தது மிகக் குறைந்த நேரம் தான். போலீசு வந்து விடும் என்பதால் அத்தனை பேரும் ஓடித்தான் ஆக வேண்டும். படிக்காசு மண்டையை யாரோ பிளந்து விட்டிருந்தார்கள். அவன் திரும்பி தனது வீட்டுக்கு ஓடுகிற வழியில் டீக்கடைக்குள் ஏறி நின்று ரத்தத்தைக் கழுவினான்.

“ஒத்தா என்னா பாக்கற” என்று கிரியை நோக்கி கத்தியைத் தூக்கினது தான் தாமதம், கிரி காய்ந்து கொண்டிருந்த டீத்தூள் குடுவையை எடுத்து அவன் முகத்தில் ஊற்றினான். அப்புறம் நடந்தது எதுவும் அவன் கையில் இருக்கவில்லை. இன்ஸ்பெக்டர் அவனை சட்டமன்ற உறுப்பினரிடம் அறிமுகம் செய்ய கிரி பல காரியங்கள் செய்தான். வசூல்கள் அவனை முன் வைத்து நடந்தன. அவர் சொல்லி பாபர் மசூதி இடிப்பு நாளில் ஒரு ஜவுளிக்கடையின் பிரம்மாண்ட கண்ணாடிகளை உடைத்ததில் நிறைய பணம் கிடைத்தது. பலரையும் ஒடுக்கி வைத்துவிட்டு சிற்றப்பாவின் குடும்பத்தை பணம் கொடுத்து அவர்களின் பிள்ளை இருந்த மும்பைக்கு அனுப்பிவிட்ட பிறகு ஆட்டமாக ஆடினான். அதில் அவன் செய்த மூன்று கொலைகளும் அடங்கும். கண்களில் திண்மை அமர்ந்து, பெரிய மனிதர்களிடம் அவர்களுடைய முகம் பார்த்து பேசுகிற சாதுர்யங்கள் எல்லாம் படிந்து, அப்போது ஆளும் கட்சியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் ஈ ஓட்டிக் கொண்டிருந்த காங்கிரசில் அவர்கள் தருவதாகச் சொன்ன பதவிக்காக காத்துக் கொண்டிருந்த போது, கேரளாவில் இருந்த, இவனே மறந்து போயிருந்த அவனுடைய பால்யசகி வல்சலா ஒருமுறை ஆப்செட் வர்ணத்தில், மகாபலி ஓவியமெல்லாம் இருந்த வாழ்த்து அட்டையை அனுப்பி, பக்கவாட்டில் ஒரு ஓரமாக நீ நம் ஊருக்கெல்லாம் வர மாட்டாயா என்று கேட்டிருக்கிறாள். அப்படி அது கையில் கிடைத்தது பாருங்கள் அதுதான் ட்விஸ்ட். அதைப் பார்த்தவாறே மூன்று நாட்கள் அலைந்து திரிந்து, எதற்காகவோ ஒரு கனவில் இருந்து கண் விழித்து அழுதிருக்கிறான்.

இத்தனைக்கும் அவன் அவ்வளவு முக்கியமான சம்பவங்கள் எதையும் கனவில் பார்த்திருக்கவில்லை. புகைவண்டிகள் ஓடியவாறே இருந்திருக்கின்றன. மறுபடியும், மறுபடியும். திரும்பத் திரும்ப. மறுநாள் நிஜத்தில் வண்டி ஏறி விட்டான். அதோடு திரும்பவில்லை. இந்தக் கதைகளை எல்லாம் அடிமுதல் முடிவரை தெரிந்த ஒரு ஆள் தாசன் தான். மற்றபடி ஆரிப்புக்கும் வேறு கொஞ்சமெல்லாம் தெரியும். அன்று இரவு தூங்கி காலையில் எல்லோரும் குற்றாலத்துக்கு கிளம்பின போது, கிரி ஆரிப்பை முத்தமிட்டு வழியனுப்பினான். சற்று தூரம் சென்று விட்ட பிறகு அவன் திரும்பிப் பார்த்தபோது கிரியும் அவனது குடும்பமும் இன்னமும் நின்று கையசைத்துக் கொண்டிருந்தார்கள். ஆரிப்பும் தாசனும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்கள்.

சொன்ன மாதிரியே குற்றாலத்தில் இருந்து அருவிகளில் குளித்தவாறு தண்ணி போடுவது நடக்காமல் இருக்குமா?.

அங்கேயிருந்து கிளம்புகிற அன்று அதிகாலை நேரத்தில் கிரி அங்கே வந்து எல்லோரையும் வழியனுப்பி வைத்தார்.

“போயிட்டு வா மச்சான்” என்றார் ஆரிப்பிடம்.

ஒரு நேரத்தில் ஒரு கல்லூரி வாத்தியின் முகத்தை உடைப்பது சம்மந்தமாக ஒரு குழுவிடம் கிரிக்கு தொடர்பு ஏற்பட்டது. எல்லாமே பெத்த கைகள். ஒருவன் கர்னாடக முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆப்ரிக்காவில் சாராயத்தொழில். ஜவுளித் தொழிலில் கொட்டை போட்ட குடும்பங்களை சேர்ந்த இருவர். இன்னும் இருவர் இப்போது தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களாக இருக்கிறார்கள். இப்படி அவர்களுடைய வட்டத்தை வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம். இரவில் அவர்கள் குடிப்பதற்கோ, பெண்களை பொட்டி போடுவதற்கோ சுற்றும்போது கிரியை தங்களோடு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். குடிக்ககாத, பெண்களை ஏறிட்டுப் பார்க்காத கிரிக்கு அவர்களுடைய ஆட்டம் சரியாக செரிக்க மறுத்தது. அவர்கள் குடிமுற்றி இவனிடம் செய்யச் சொல்கிற காரியங்களை முறைப்புடன் மறுத்தவாறு வந்தான். அவர்கள் அதை நீடித்துக் கொண்டு அதில் இருந்து ஒரு கிண்டலை இழுத்துக் கொண்டு இவனை ஒரு ஜோக்கர் போல நகைச்சுவை கொண்டாடினர். முக்கியமாக அக்கூட்டத்தில் ஒருவனாக இருந்த ஆரிப் இவனைக் கிண்டல் செய்து அவர்களைச் சிரிக்க வைக்க அரும்பாடுபட்டான். உதாரணம், நான் முதுமலைக் காட்டில் ஒருமுறை புலியைப் பார்த்திருக்கிறேன் என்கிறான் கிரி. கொட்டை எடுத்த புளியா, கொட்டை எடுக்காத புளியா? ஹா ஹா ஹா ஹா . அவனுடன் சேர்ந்து அனைவரும் ஹா ஹா ஹா ஹா. ஆரிப்பிடம் கிரி பலமுறை சொல்லிப் பார்த்திருக்கிறான். அவன் இவனை சட்டை செய்யவில்லை. ஒருநாள் தூக்கியாயிற்று. பூந்தமல்லி தாண்டி ஒரு ஊரில், ஒரு அட்டை கம்பனி குடோனுக்குள் எல்லா துணியையும் அவுக்க வைத்து தன்னுடைய ஆட்களுடன் ஆரிப்பை கட்டிப் போட்டான் கிரி. மிக எளிமையாக இதை மட்டும்தான் கேட்டான். மச்சான், நீயே ஒரு எச்சக்குடி. உனக்கு இந்த நக்கல் தேவையா? அதற்கு அப்புறம் அவன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முதலில் கால் விரல்கள் அனைத்தையும் கல்லு வைத்து நசுக்கியிருக்கிறான். இரண்டு நாட்கள் வலி தாங்காமல் அவன் கதறி முடித்த பிறகு கை விரல்கள் நசுக்கப்பட்டன. மலம் சாப்பிட வைத்திருக்கிறார்கள். அவனது குறியில் சிகரெட்டால் சுட்டு அந்தப் புண்ணில் அனைவரும் மூத்திரம் பெய்தவாறு இருந்திருக்கிறார்கள். கண்களைக் கூட திறக்க முடியாமல் அவன் போதமிழந்து போனதற்கு அப்பால் காயங்கள் சீழ் வைத்து ஒழுகும்போது ஒரு பையன் வந்து சிகிச்சையளிக்கத் துவங்கி தொடர்ந்து ஊட்டச்சத்துள்ள திரவ ஆகாரங்களைக் கொடுத்தார்கள். அந்தக் காரியங்கள் யாவுமே ஒரு ஆன்மீக செயற்பாடு போல இருந்தது என்றான் ஆரிப். எனக்கு மேல பாத்தா வானம், கீழ பூமி. இத நீ யாரிடமாவது சொன்னால், அந்தப் பயல்களின் சபைக்கு நீ வந்தால் முதலில் நான் உன் அம்மா அப்பாவைக் கொல்லுவேன், பின்னர் உனது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் கொல்லுவேன் என்று சொல்லிய பின்னர் அவனை விடுவித்திருக்கிறான் கிரி. மேலும் ஒன்றை சொன்னான், அது விசித்திரம். “எனக்கு அல்லான்னா ரொம்பப் புடிக்கும். பசிக்கும் போதெல்லாம், தனியா இருந்து அழும்போதெல்லாம், அவமானப்படும் போதெல்லாம் அவரையும் தொழுதுகிட்டே இருந்திருக்கேன். அனாத நாய்களுக்கு இந்த சாமி, அந்த சாமி இருக்கா? அவுரும் என் கொற கேட்டார். நீ அவர கும்பிடறவன் ஆச்சே? அதுக்காகத்தான் உன்ன உயிரோட விடறேன் ! “

கிரி பலமுறையும் ஆரிப்பை தழுவிக் கொண்டதற்கு இந்தக் குற்றவுணர்வு தான் காரணம்.

எல்லோரும் சென்னை வந்து சேர்ந்து வழக்கமான சுழலில் இறங்கிக் கொண்டு அவரவர், அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒருநாள் ஆரிப் தாசனுக்கு போன் செய்தார்.

“என்னய்யா?”

“வேற என்ன? கிரி ஞாபகம்!”

“ம்.”

“அன்னைக்கு நைட்டு எல்லாரும் தூங்கிட்டு இருந்தமா? தட்டி எழுப்பி வயல் பக்கம் கூட்டிட்டுப் போனான். மறுபடியும் செதைக்கப் போறானோன்னு கூட பயம் தட்டிருச்சு. நான் மூனு பேர கொன்னுருக்கேன். அது என் தொழில். எனக்கும் செத்தவனுக்கும் ஒரு சம்மந்தமும் கெடையாது. ஆனா உன்னோட நெனைப்பு வர்றப்ப எல்லாம் ஏன் சின்னப் பொண்ணு உள்ளங்கைல ஏன் மொகத்த பொதைச்சுப்பேன்னு சொன்னான். அப்டியே கால்ல விழுந்து அழ்தான் தெரியுமா? நானும் அழ்தேன். ”

வெகுநேரம் இருவரும் பேச முடியாமல் தத்தம் நினைப்பில் இருந்தார்கள்.

அப்புறமும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டு ஆரிப் ஒன்றை தான் சொன்னார். அது இந்தக் கதையின் தலைப்பு.

***

மணி எம் கே மணி
mkmani1964@gmail.com

“நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

0


நாராயணி சுப்ரமணியன்

மெய்யியலில் ஒரு பிரபலமான எண்ணப் பரிசோதனை (Thought experiment) உண்டு. அதிவேகத்தில் ஒரு ரயில் தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சற்று தொலைவில், தண்டவாளத்தின் மேல் ஐந்து பேர் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள், ரயில் வந்து கொண்டிருக்கிற வேகத்தில் அவர்களால் உடனடியாக நகர்ந்து தப்பித்துவிட முடியாது. ரயில் இதே பாதையில் தொடர்ந்தால் நிச்சயம் ஐவரும் ரயிலில் அடிப்பட்டு இறந்து விடுவார்கள். ஆனால் தண்டவாளத்தின் அருகே ஒரு விசை இருக்கிறது. விசையை அழுத்தினால் ரயில் வேறு ஒரு தண்டவாளத்தில் பயணிக்கத் தொடங்கும். ஆனால் அங்கேயும் ஒருவர் வேலை செய்து கொண்டிருக்ககிறார். நீங்கள் விசையை அழுத்துவீர்களா இல்லையா? பெரும்பாலானோர் “விசையை அழுத்துவோம்” என்று உடனடியாக பதில் சொன்னார்கள். ஐந்து பேரைக் காப்பாற்றுவதற்காக ஒருவரை இழந்தாலும் பரவாயில்லை என்பது அவர்களின் வாதம்.

பிறகு கற்பனையான இந்தப் பரிசோதனையில் சின்ன ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதே ரயில், அதே தண்டவாளம், அதே ஐவர், ஆனால் வேற்று தண்டவாளத்தில் இருக்கிற அந்த ஒருவர் உங்கள் அன்புக்குரியவராகவோ நண்பராகவோ இருக்கிறார், ஏன் அவர் உங்கள் குடும்ப உறுப்பினராகக் கூட இருக்கலாம். இப்போது உங்கள் பதில் என்ன? முதன்முறை உடனே பதில் அளித்த பலரும் குழம்பிப் போனார்கள்.

பரிச்சயமானவர்கள்/தெரிந்தவர்கள்/அன்புக்குரியவர்கள் என்று வரும்போது மனித மனம் துல்லியமான, தெளிவான முடிவுகளிலிருந்து தடுமாறுகிறது. தன்னைச் சுற்றிய எல்லாவற்றையும் இதே கோணத்தில்தான் மனிதன் அணுகுகிறான் என்றே சொல்ல வேண்டும். அந்தப் பட்டியலில் இயற்கையும் உண்டு.

நாம் எதன்மீது அன்பு காட்டுகிறோமோ, அதை மட்டும்தான் பாதுகாப்போம்; எது நமக்குப் புரிகிறதோ அதன்மீது மட்டும்தான் அன்பு செலுத்துவோம்; எது நமக்குக் கற்றுத் தரப்பட்டிருக்கிறதோ அது மட்டும்தான் நமக்குப் புரியும்” என்றார் சூழலியலாளர் பாபா டியோம். சூழலியல் சார்ந்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை இது உணர்த்துகிறது. அதேநேரம், நமக்குப் பிடித்த விலங்குகளின் மீதுதான் நாம் அதிக அக்கறை காட்டுகிறோம் என்பதும் உண்மை. அதனால் பல சிக்கல்கள் வருகின்றன. விலங்குகளுக்கும் இயற்கைக்கும் சட்டரீதியான பாதுகாப்பு இருந்தால் இந்த சிக்கல் இருக்காது, இல்லையா? ஆராயலாம்.

ஈக்வடார், பொலிவியா, நியூசிலாந்து – முன்னோடிகள்

இயற்கைக்கும் மனிதனுக்குமான நுண் உறவின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு 2008-ல் நடந்தது. ஈக்வடார் நாட்டில் “இயற்கைக்கும் உரிமைகள் உண்டு” என்பதாக அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவு இயற்றப்பட்டது! உலகிலேயே இயற்கையின் உரிமைகளை அங்கீகரித்த முதல் நாடு என்கிற பெருமை ஈக்வடாருக்கு உண்டு. “இருப்பதற்கும், இயங்குவதற்கும், தனது சுழற்சி முறைகளைத் தொடர்ந்து நடத்திக் கொள்வதற்கும் தன்னை மீட்டெடுத்துக் கொள்வதற்கும் இயற்கைக்கு முழு உரிமை உண்டு” என்றும் “இயற்கையின் இந்த உரிமைகள் மீறப்பட்டால் அதற்காகக் குரல் எழுப்புவதற்கு எல்லா மனிதர்களுக்கும் இனக்குழுக்களுக்கும் உரிமை உண்டு” எனவும் தனது அரசியலமைப்புச் சட்டத்திலேயே ஒரு விதியை ஈக்வடார் சேர்த்தது. மனிதர்களுக்கு இயற்கை உதவுகிறதோ இல்லையோ, மனிதனுக்கு இதனால் ஆதாயம் இருக்கிறதோ இல்லையோ, இயற்கை தன்னியல்பிலேயே இருந்தால்கூட அதற்கு ஒரு உரிமை உண்டு என்பதாக அந்த சட்டம் அங்கீகரித்தது.

பொலிவியா நாட்டில் 2010-ல் அமலுக்கு வந்த ஒரு சட்டம் “இயற்கை அன்னைக்கு உரிமைகள் உண்டு. நீதித்துறையைப் பொறுத்தவரை பொதுநலன் சார்ந்த விஷயம்” என்று அறிவிக்கிறது. 2010-ல் ஐக்கிய நாடுகள் சபை “இயற்கையின் உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு” (Universal declaration of the rights of nature) ஒன்றை இயற்றியபோது அந்தக் குழுவில் பொலிவியாவும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.

ஈக்வடாரிலும் பொலிவியாவிலும் கொண்டுவரப்பட்ட முக்கியமான இந்தச் சட்டங்களுக்குத் தொல்குடியினரின் அரசியல் பிரவேசம் ஒரு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. போர்னியோவின் இபான் பழங்குடியினர் ஒராங்குட்டான் குரங்குகளைத் தங்களது மூதாதையர்களாகக் கருதுகின்றனர். பல தொல்குடி மரபுகளில் இயற்கையும் இனக்குழுவின் ஒரு அங்கமாகவே பார்க்கப்படுகிறது. அந்தப் பார்வையின் நீட்சியாகவே இந்தச் சட்டங்கள் அமைந்திருக்கின்றன என்கிறார்கள் வல்லுநர்கள்.

கொலராடோ நதி என் உடலின் ஒரு அங்கம்.
நான் ஒரு நதியை சுமந்து கொண்டிருக்கிறேன்.
இது உருவகம் அல்ல.
என் உடலின் மத்தியில் நதி ஓடுகிறது

என்ற நடாலி டியாஸின் கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன. இவர் ஒரு சிவப்பிந்தியர் எனும் பின்னணியோடு சேர்த்துப் படித்தால் இந்தக் கவிதை வரிகளின் ஆழம் புரியும்.

நியூசிலாந்தில் பல மவோரி பழங்குடியினருக்கு மலைகளும் நதியும் மூதாதையர்களாக இருக்கின்றன. குடும்ப மூதாதையர்களைப் போற்றி வழிபடுவது போலவே அவர்கள் மலைகளையும் ஆறுகளையும் வழிபடுகிறார்கள். “அந்த நதி நானே தான்; நான் தான் அந்த நதி” என்கிறது ஒரு மவோரி சொலவடை. இதையும் மனதில் வைத்துக்கொண்டே 2014-ல் நியூசிலாந்து அரசு டே உரவாரா காட்டுக்கு உரிமைகளை வழங்கியது. 2017-ல் வாங்காமி நதிக்கும் உரிமைகள் வழங்கப்பட்டன.

பொலிவியா, ஈக்வடாரின் சட்டங்களுக்கும் நியூசிலாந்தின் இந்த முடிவுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு : டே உவாரா காட்டையும் வாங்காமி நதியையும் “நபர்” (Person) என்பதாக அங்கீகரித்து நியூசிலாந்து இந்த உரிமைகளை வழங்கியிருந்தது! அதாவது, ஒரு மனிதனுக்கு உள்ள எல்லா உரிமைகளும் இந்த நதிக்கும் காட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதை Personhood என்று அழைக்கிறார்கள்.

இதுபோன்ற “நபர்” அங்கீகாரங்கள் வாலில்லாக் குரங்குகளுக்கும் பல கடல்வாழ் பாலூட்டிகளுக்கும் ஆங்காங்கே தரப்பட்டிருக்கின்றன. மனிதனை மையப்படுத்திய பார்வையிலிருந்து இயற்கையை மையப்படுத்திய பார்வைக்கு ஒருசில நாடுகள் மாறத் தொடங்கியிருப்பதற்கான அறிகுறி இது.

இந்திய சூழல்

இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2013-ல் ஓங்கில்(டால்ஃபின்), திமிங்கிலம் முதலிய கடல் பாலூட்டிகளை மனிதர்களல்லாத நபர்கள் (Non human persons) என்று வகைப்படுத்தியது. இந்த அடிப்படையில் ஓங்கில் காட்சி சாலைகள் மூடப்பட்டன.

2017-ல் உச்சநீதிமன்றம் கங்கை, யமுனை முதலிய நதிகளுக்கும் “மனிதர்களல்லாத நபர்கள்” என்ற அங்கீகாரத்தை வழங்கியது. பிறகு உத்தரகாண்ட்டில் இருக்கும் அருவிகள், சிற்றோடைகள், காடுகள் உட்பட எல்லா இயற்கைக் கூறுகளுக்கும் இதே அங்கீகாரம் வழங்கப்பட்டது.

வரலாற்றுப் பின்னணி

பல்வேறு தொல்குடிகளால் இயற்கையும் நதிகளும் விலங்குகளும் மனிதர்களாகவே பாவிக்கப்படுகின்றன என்றாலும் எழுத்துரீதியான முதல் ஆவணமாக இருப்பது க்றிஸ்டோஃபர் ஸ்டோன் 1972-ல் எழுதிய “Should trees have standing? Towards legal rights for natural objects” என்ற கட்டுரை தான். இயற்கையால் பேசமுடியாது என்கிற ஒரே காரணத்துக்காக இயற்கைக்கான உரிமைகளை நாம் மறுத்துவிட முடியாது என்று வாதிடும் அவர், சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாவலர்கள் (Legal Guardians) இயற்கையின் சார்பாக வழக்காட முடியும் என்கிறார். இப்போது மனிதர்களல்லாத நபர்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பல இயற்கைக் கூறுகளுக்கும் இதே விதிமுறையே சொல்லப்படுகிறது – சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சில பாதுகாவலர்களோ அல்லது எந்த மனிதனோ இனக்குழுவோ இயற்கையின் சார்பில் வழக்காடலாம். இது அந்தந்த நாட்டின் சட்டத்தைப் பொறுத்து மாறுகிறது.

நடைமுறை சிக்கல்கள்

சட்டங்களின் தெளிவின்மை

கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் “மனிதர்களல்லாத நபர்கள்” என்ற அங்கீகாரம் தரப்பட்ட செய்தி வெளிவந்த போது அதற்குக் கிடைத்த நெகிழ்வான வரவேற்பு பலருக்கு நினைவிருக்கலாம். நதிகளை வழிபடுகிற ஒரு தேசம் என்பதால் நமக்கு அந்த உளவியல் புரியும். அதேசமயம் இயற்கை சார்ந்த சட்டங்களின் வரலாற்றிலும் இது ஒரு முக்கியமான மைல்கல் என்பதில் ஐயமில்லை. அடுத்தடுத்து பல சட்டங்களுக்கும் விவாதங்களுக்கும் இது முன்னுதாரணமாக அமையும்.

“இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு என்றாலும் கங்கை, யமுனை ஆகிய நதிகளின் உரிமைகள் என்னென்ன என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை, இது சிக்கல்களுக்கே வழிவகுக்கும்” என்கின்றனர் இந்தத் தீர்ப்பை விரிவாக ஆராய்ந்த வல்லுநர்களான அக்‌ஷிதா ஜா மற்றும் அத்ரிஜா கோஷ் ஆகியோர். “நதிகளை பாதிக்கிற, ஆனால் மனிதர்களுக்கு அவசியமாகப் படுகிற திட்டங்களை என்ன செய்யலாம்?” என்று நாளை ஒரு விவாதம் வந்தால், இந்த அறிவிப்பின் தெளிவின்மையால் பல குழப்பங்கள் விளையும் என்று இவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உரிமைகளும் கடமைகளும்

உரிமைகளை வகுப்பதற்கு “மனிதர்களல்லாத நபர்கள்” என்ற அங்கீகாரம் தேவைதானா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த அங்கீகாரம் தேவையற்ற குழப்பங்களை, புதிய சிக்கல்களைக் கொண்டு வரலாம். ஒரு நபர் என்றால் அவருக்கு உரிமை இருப்பது போலவே கடமையும் இருக்கும். கடமையை நிறைவேற்றாமல் உரிமையைக் கோர முடியாது.
சகமனிதர்களின் உரிமையில் குறுக்கிடக் கூடாது என்பது மனிதனின் கடமை என்றால், இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிற இயற்கைக்கும் இந்த விதி பொருந்துமா? உதாரணமாக, ஒரு அணை என்பது மனிதனின் மேம்பாட்டுக்கான உரிமை என்று யாராவது வாதிட்டால், இந்த விதியின்படி, நதியைக் காரணமாகக் காட்டி அதைத் தடுக்க முடியாது இல்லையா?

யாருடைய உரிமை முக்கியமானது?

“இதுபோன்ற சட்டங்களில் இயற்கைக்கான உரிமைகளை மட்டுமே வகுத்துவிட்டு நாம் பின்வாங்கிக் கொள்ள முடியாது” என்கிறார்கள் சட்டவியல் நிபுணர்கள். “உரிமைகளை மட்டும் முன்வைக்கும் போது, பெருநிறுவனங்கள் இயற்கையை ஒரு போட்டியாகத்தான் பார்க்கும். யாருடைய உரிமை பெரியது, இயற்கையின் உரிமை எப்படிப்பட்டது, மனிதனுக்குத் தேவை என்றால் இயற்கையின் உரிமையை நசுக்கலாமா என்றெல்லாம் கேள்விகள் எழலாம்” என்று வாதிடுகிறார்கள் சட்டவியல் வல்லுநர்களாக சிந்தியா மற்றும் ஹவார்ட். முன்னோடி நாடாகக் கருதப்படும் ஈக்வடாரில் நடந்த ஒரு வழக்கையே உதாரணமாகவும் சுட்டுகிறார்கள். பொதுநலன் (மக்கள் நலன் என்று இதைப் புரிந்து கொள்ளலாம்) என்று வரும்போது அங்கே இயற்கையின் உரிமைகள் மீறப்பட்டன, அங்கே மனித உரிமைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள் என்பதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

மெய்யியல் சிக்கல்கள்

மனிதர்களல்லாத விலங்குகளுக்கும் இயற்கைக்கும்கூட இந்த அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பேசும் மெய்யியலாளர்கள் ஒருபுறம் என்றால், “அது எப்படி, மனிதன் மட்டும் தான் மனிதன், பூச்சி புழு எல்லாம் மனிதனாகிடுமா?” என்றும் பலர் கேள்வி கேட்கிறார்கள்.

சமூகப் பங்களிப்பு

“மனிதன் என்றால் அவன் சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிக்க வேண்டும். அப்படி இல்லாத விலங்குகளையும் இயற்கையையும் அங்கீகரிக்க முடியாது.” என்பது பலரின் வாதம்.

“எந்த வகையிலும் சமூகத்துக்குப் பங்களிக்காத மனிதர்களும் உலகெங்கிலும் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை நாம் மறுப்பதில்லை. அப்படியிருக்க, இயற்கைக்கு இந்த உரிமைகளைத் தருவதில் என்ன தவறு?” என்பது அதற்கான எதிர்வாதமாக வைக்கப்படுகிறது.

புலனறிவாற்றல்

அங்கீகாரத்தை மறுக்கிறவர்கள் பேசுகிற முக்கியமான ஒரு விஷயம் புலனறிவாற்றல் (Sentience) சார்ந்தது. சுற்றியுள்ள சூழலைப் புலன்களால் உணர்ந்து, அதை உணர்வுகளாக மாற்றும் தன்மை புலனறிவாற்றல் எனப்படுகிறது. புலன்களால் சூழலை உணரும் திறன் மட்டுமே போதாது, இதற்கு ஒரு தனி உணர்திறன் தேவை, அது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிறார்கள் இவர்கள்.

பல விலங்குகளில் இந்தப் புலனறிவாற்றல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கொடைத்தன்மை, பிறர் வலியைத் தன்வலியாக உணரும் தன்மை, எதிர்மறை எண்ணங்கள் என்று பல விஷயங்கள் விலங்குகளிலும் உண்டு. ஆனால் இந்த ஆராய்ச்சிகள் பலவும் பாலூட்டிகளிலேயே அதிகம் நடத்தப்படுகின்றன, தவிர, ஒரு விலங்குக்குப் புலனறிவாற்றல் இருக்கிறதா இல்லையா என்று சரியாக அளக்கும் பரிசோதனைகள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை, இதுவரை நிகழ்ந்தவை எல்லாமே தோராயமான மதிப்பீடுகள்தான். இந்த ஆராய்ச்சியின் நெகிழ்தன்மை, உரிமைகளுக்கு எதிராக வாதிடுபவர்களுக்கு சாதகமாகப் போய்விடுகிறது.

“பிடித்த” விலங்குகள்

ஒரு சூழலியலாளராக எனக்கு இன்னொரு கேள்வியும் இருக்கிறது – இதுபோன்ற கடுமையான விதிமுறைகளை வைத்துக்கொண்டே நாம் விலங்குகளின் உரிமைகளை அங்கீகரிப்போம் என்றால், மனிதர்களுக்குப் பிடிக்காத விலங்குகளின் நிலை என்னவாகும்? எந்த வகையிலும் மனிதர்களைப் போலத் தோற்றமளிக்காத, மனிதர்களை இம்சிக்கிற விலங்குகளுக்கு உரிமை உண்டா? சட்டரீதியாகவும் அறம் சார்ந்தும் இதற்கு என்ன பதில்?

“சிரித்த முகம் கொண்ட” ஓங்கில்களை, அழகான நாய்க்குட்டிகளை, மனிதர்களைப் போலவே இருகால்களில் நடக்கும் குரங்குகளை, பாண்டா கரடியை, கண்கவர் பறவைகளைப் பாதுகாக்கவேண்டும் என்றால் அனைவரும் ஒத்துழைக்கலாம். ஆனால் ஒரு ஆந்தையை, ஓணானை, அருவருப்பான, கொழகொழப்பான ஒரு ஆழ்கடல் மீனை, விஷமுள்ள ஒரு பூச்சியை, புழுவைப் பாதுக்காப்பதில் நமக்கு ஆர்வம் இருக்குமா? மனிதர்கள்தான் சட்டங்களை இயற்றுகிறார்கள் என்பதால் விருப்பத்தின் அடிப்படையில் அவர்கள் பாரபட்சமாகத்தான் முடிவெடுப்பார்கள், இல்லையா?

உரிமைசார் அரசியல்

துரதிருஷ்டவசமாக, இதுவரை விலங்குகளுக்கான் உரிமைகள் குறித்த பெரும்பாலான விவாதங்கள், மனிதர்களின் உணவுத்தட்டில் கைவைப்பவையாக மட்டுமே இருக்கின்றன. இது ஒருபுறம் என்றால், வாழிடப் பாதுகாப்பு என்ற பெயரில் தொல்குடிகளை வெளியேற்றவும் இந்த விலங்குசார் உரிமைக்குரல்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. மனிதர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவே போராட வேண்டியிருக்கும் சூழலில் விலங்குகளுக்கான உரிமைகள் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் சிக்கல்தான்.

இயற்கைக்கு சட்டரீதியான உரிமைகள் தரப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. “முன்னேற்றம்” என்ற பெயரில் சூழல் தேவையில்லாமல் சுரண்டப்படும் போது அந்த சட்டம் ஒரு பாதுகாப்பாக அமையும். ஆனால் மனித உரிமைகளை இயற்கைக்கு வழங்கி அங்கீகரிப்பதில் பெரிய அளவில் குழப்பங்கள் நிலவுகின்றன. மனிதனல்லாத வேறு ஒன்றை ஏற்றுக்கொள்வதில் மனித இனத்துக்கே இருக்கிற சிக்கலின் பிரதிபலிப்பு இது.

இந்த விவாதங்கள் இப்போதுதான் உலக அளவில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடங்கியிருக்கின்றன. தொல்குடிகளின் இயற்கை சார்ந்த நம்பிக்கை, ரோபாட் இயந்திர மனிதர்களின் உரிமைகள் என்று கடந்த காலத்திலிருந்தும் எதிர்காலக் கணிப்புகளிலிருந்தும் மாறிமாறிப் பாடம் கற்றுக்கொண்டு தான் இது ஒரு சமநிலைக்கு வரும். “மனிதன் என்றால் யார்? எப்படியெல்லாம் இருந்தால் மனிதன் என்று ஏற்றுக்கொள்வது?” என்கிற, நடுங்க வைக்கிற ஒரு கேள்வி இது. இகாரஸின் மெழுகுச் சிறகுகளோடு மனித இனம் பறக்கத் தொடங்கியிருக்கிறது, கேள்விக்கான பதில் சூரியனாக எரிக்குமா நிலவாக இருக்குமா என்பது போகப்போகத் தான் தெரியும்.

தரவுகள்

  • Environmental Personhood (2018 ) – Gwendolyn J.Gordon – Columbia Journal of Environmental Law.
  • Should Trees have standing? – Toward Legal Rights for Natural Objects (1972). Christopher Stone. Southern California Law Review.
  • Is being a “Person” Essential for the Environment to hold rights? Assessing the Legitimacy of Environmental Personhood and Alternative Approaches (2018). Akshita Jha and Adrija Ghosh, NUJS Law Review.
  • Law Reform or World Re-form: The problem of Environmental Rights (1990). Cynthia G and Howard G, McGill Law Journal.

***

நாராயணி சுப்ரமணியன்
nans.mythila@gmail.com

சாபம் பற்றி ஆராய்ந்தவனின் குறிப்புகள்

0

மதியழகன்

சாபம் என்பது வாழ்வின் தொடக்கம்

சாபம் என்ற சொல் தன்னைப் பலநாட்களாகத் தொந்தரவு செய்வதை அவர் மனது உணர்ந்தே இருந்தது. ஆனால் சாபம் என்ற வார்த்தையை உபயோகிக்கும் அந்த நொடியில் தனக்குள் ஏற்படும் இருளுக்கு நீண்ட தொடர்பு இருக்க வேண்டும் என்று நம்ப ஆரம்பித்தார். தன்னுடைய ஆராய்ச்சிக்கான தலைப்பாக சாபத்தை எடுத்துக் கொண்டவர், இதற்காக தன்னுடன் பணி செய்பவர்களிடம் பலவித பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவர்கள் எல்லோரும் இவருக்கு எதோ பித்துப் பிடித்துவிட்டது என்று நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால் தன்னுடைய தலைப்பில் எந்தவிதப் பிரச்சனை இல்லை எனவும், தன்னால் அதனை நிரூபிக்க முடியும் என்று உறுதியாகச் சொன்னார். தான் அடுத்த மூன்றுமாத காலம் தூங்கச் செல்வதாகவும், விழித்தவுடன் அதற்கான சிறிய விடை கிடைக்குமென்று உறுதியாகச் சொன்னவர், தூங்குவதற்காகத் தன் அறையை ஒளியின் சிறுகீற்று கூட நுழைந்துவிடாத அளவுக்கு முழுவதும் கருப்பு நிற வண்ணத்தால் அலங்கரித்தார். தலையணை போர்வை என ஒவ்வொன்றையும் கருப்பு வண்ணத்தில் தேர்ந்தெடுத்துக் கொண்டார். தன்னுடைய அருகில் நாட்குறிப்பேடு, பேனா போன்றவற்றையும் வைத்துக் கொண்டார். தூங்கத் தொடங்கிய முதல் இரண்டு நாள்கள் மிகவும் கடினமானதாகவும், குழப்பமானதாகவும் இருந்தது. தூங்குவது என்பது அவ்வளவு கடினமானதா? எவ்வளவு நாட்கள் எந்தவித வேலையும் செய்யாமல் இருந்திருக்கிறோம் ஆனால் தற்போது தூங்குவது என்பது ஏன் இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. ஆராய்ச்சியினால் ஏற்பட்ட குழப்பமா? அல்லதுதான் தொடக்கூடாத ஏதேனும் விஷயத்தை மூளைக்குள் ஏற்றிக் கொண்டோமா?. என்ன நிகழ்ந்தாலும் தன்னுடைய ஆராய்ச்சியின் விதையை எந்த நொடியிலும் நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். எல்லா நிகழ்வுகளுக்கும் நிச்சயம் ஒரு தொடக்கம் இருந்தாக வேண்டும். எனவே தன்னுடைய முதல் கேள்வியாக சாபத்தின் தொடக்கம் எங்கு நிகழ்கிறது என தன்னுடயை நாட்குறிப்பில் குறித்துக் கொண்டார். அதற்கான விடைகளை எவ்வளவு வழிகளில் யோசித்துப் பார்த்தாலும் அது தன்னைவிட்டு விலக்கிக் கொண்டே சென்றது. ஆனால் இந்த சாபம் என்கிற வார்த்தை தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை வகித்திருக்கிறது என்பதில் மட்டும் அவருக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வளவு குழப்பங்களும் வேண்டாம் என்று கண்ணை மூடிக்கொண்டவரின் கண்களுக்குள் சிவப்புநிறம் அலைந்து கொண்டிருந்தது. எப்படியாவது அதைக் கருப்பு நிறமாக மாற்றிவிட வேண்டும் என்று அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போக கண்ணை திறந்து பார்க்க, தூரத்தில் எங்கோ கடல் அலையடிக்கும் சத்தம் கேட்டது. அவருக்குள் எதோ உணர்வு ஏற்பட, சிறுவயதில் தன்னுடைய அப்பா கூறிய அந்தக் கதை அவர் நினைவுகளிலிருந்து வெளியே கசிய ஆரம்பித்தது.

*

மேலுலகத்தில் ஒருநாள் சாபத்தின் தலைவனுக்கும், வரத்தின் தலைவனுக்கும் சாபத்தையும், வரத்தையும் வழங்குவது யார்? அதை ஏற்றுக்கொள்வது யார்? என்பது தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றது. வானத்திலிருந்த அத்தனை தேவாதி தேவர்களும், அரக்கர்களும் அவர்களிடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கான தீர்வை எட்டமுடியவில்லை. இவ்வளவு குழப்பத்திற்கும் இடையில் அந்தக் கூட்டத்தின் நடுவே மெல்லிய உருவம் கொண்ட ஒருவன் உள்ளே நுழைந்தான். முதலில் யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று யோசித்தவனாக சாபத்தின் தலைவன் அருகில் சென்று,

“சாபத்தின் தலைவனே ஏன் உங்களுக்குஇவ்வளவு பெரிய குழப்பங்கள், சாபம் என்பது வாழ்வின் ஒரு பகுதி என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று நினைக்கிறேன்.”

“சாபம்வாழ்வின் ஒரு பகுதி என்பதில் எந்தவிதக் குழப்பங்களும் இல்லை மானிடனே. ஆனால் அதனளவு எவ்வளவு என்பதில்தான் இவ்வளவு குழப்பமும்.”

“நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால் வரத்தின் தலைவனுக்கு எங்கே அளவுக்கு அதிகமாக சாபத்தினை வழங்கியும், ஏற்றும் நான் அவரின் நிலையை விட உயர்ந்துவிடுவேனோ என்று ஒரு குழப்பம். அதனால் இங்கு அவன் ஒரு கலகத்தினை உருவாக்கிவிட்டு நகர்ந்துவிட்டான். இவர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தீர்ப்பது என்பது மிகப்பெரிய வேலையாக எனக்கு இருக்கிறது. நான் சாபத்தின் விதைகளை சிறுவயதிலிருந்தே ஒவ்வொரு நொடியாக வளர்த்து வந்திருக்கிறேன். அதன் ஒவ்வொரு நொடியிலும் நான் அடைந்த அதிர்வுகளை உனக்கு விளக்குவது என்பது என்னால் முடியாத காரியம். ஆனால் அதன் வேர்களின் பாய்ச்சலை விரும்பாத வரத்தின் தலைவன் அதனை வெட்டிவிடத் துடிக்கிறான். எங்கு சாபத்தின் வேர்கள் அதிகமாகி தன்னை மக்கள் மறந்துவிடுவார்களோ என்று நினைக்கிறான். அதனால்தான் இவ்வளவு குழப்பம்.”

”சரி,ஒரு நிமிடம் பொறுங்கள் நான் அவரிடம் சென்று பேசி வருகிறேன்”, என்று சொல்லி அருகிலிருந்த வரத்தின் தலைவனருகே சென்று, “வரத்தின் தலைவனே ஏன் உங்களுக்கு இவ்வளவு பதட்டம். சற்று பொறுமையாக இந்த விஷயங்களை நாம் ஏன் பேசி தீர்க்கக்கூடாது.”

“பேசி தீர்ப்பதற்கு இன்று நேற்று பிரச்சனை இல்லை மானிடனே. இது காலம் தோறும் எங்களுக்குள் இருந்து வரும் மிகப்பெரிய போர். பாரதத்தின் மகாபாரதப்போரை விட மிகவும் பழமையானது, இதற்கான தீர்வு என்பது எங்களில் ஒருவர் இறப்பில் மட்டுமே சாத்தியமாகும். சாத்தியத்தின் எல்லா பக்கங்களிலும் அது மட்டும்தான் தீர்வாக இருக்கிறது. நான் வேறேதும் விடைகள் இருக்கிறதா என்று இந்த உலகத்தின் அறிஞர்களிடமும், முதியோர்களிடம் கலந்துரையாடி விட்டேன், அவர்கள் சொல்வதெல்லாம் ஒன்றுதான், நான் நிம்மதியாக வாழ்வதற்கான ஒரே வழி சாபத்தின் தலைவனைக் கொல்வது என்பதுதான். ஆனால் எனக்கு இருக்கும் குழப்பம் என்பது வரத்தின் தலைவனான நான் ஒருவனை கொலை செய்யும்பட்சத்தில், சாபத்தின் பக்கத்தில் சென்று விடுவேன் என்பதுதான்., அதனை தவிர்ப்பது என்பதுதான் இன்று என் முன்னால் மிகப்பெரிய சவால். அப்பொழுதுதான் எனக்கு ஒன்று தோன்றியது இந்த உலகில் சாபத்தின் தலைவனாவதற்கு அனைவருக்கும் அடியாழத்தில் ஒரு ஆசை இருக்கிறது. ”

“இவ்வளவு புரிந்த நீங்கள் ஏன் இதனை சுமுகமாக தீர்த்துக்கொள்ளக் கூடாது.
தீர்வுகள் எல்லாமே எப்போதும் மீண்டும் வேறோரு துவக்கத்தை ஆரம்பித்துவிடும் என்பது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.”

“நீங்கள் சொல்ல வருவது?”

“ஆம். நான் அவனைக் கொன்றால் நிச்சயம் நானும் சாபத்தின் தலைவனாக முடிசூடிக் கொள்வேன். அந்த உலகம் சாபம் கொடுப்பவர்களால் சூழப்படும். ஏன் என்றால் வரத்தைத் தருவதை விட சாபத்தினைக் கொடுப்பதும், ஏற்றுக்கொள்வதும் எளிதான விஷயம். சாபத்தினை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அடுத்தவர்கள் பற்றி நாம் எந்தக் கவலைகளும் கொள்ள வேண்டியதில்லை. தங்களின் சாபக்கணக்கை அதிகரிப்பது மட்டும் அவர்கள் முன்னால் உள்ள சவால். வரத்தினை கொடுப்பது என்பது ஒவ்வொரு மனிதனையும் மிகவும் பராமரிப்புது ஆகும். அந்த பராமரிப்பது மிகவும் பாரமானதும் கூட. அதனால் நான் ஒரு முடிவு செய்துவிட்டேன்.”

“என்ன முடிவு?”

“என்னை நானே கொலை செய்துகொள்ளப்போகிறேன்..”

“ஏன்?”

“சாபத்தின் தலைவனாக வாழ்வதென்பது எவ்வளவு கஷ்டம் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என்னுடைய தலையில் ஓடும் எண்ணங்கள் கல்லில் இருந்து மாபெரும் மலையாக வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதன் பாரங்களை தாங்க என்னால் முடியவில்லை.”

“தயவுசெய்து அப்படி எதுவும் செய்துவிடாதீர்கள். நான் அவரிடம் பேசிவருகிறேன்” என்று அவன் சாபத்தின் தலைவனை நோக்கி ஓடினான்.

வரத்தின் தலைவன் சொன்னவற்றையெல்லாம் விவரித்துச் சொல்ல சாபத்தின் தலைவன் கடகடவென சிரிக்க ஆரம்பித்தார். அவன் மிகவும் குழம்பிப்போய்,

“ஏன் நீங்கள் இப்போது சிரிக்கிறீர்கள்?”

“வரத்தின் தலைவனுக்கே இவ்வளவு குழப்பமென்றால் அவர் வரம் கொடுத்த மனிதர்களை நினைத்தேன். அவனை விட நான் குழம்பிப்போய்கிடக்கிறேன். வரத்தை கொடுப்பது அவ்வளவு எளிதுதான். ஆனால் சாபத்தை ஏற்றுக்கொள்வது என்பது குத்திய முள் காலிலிருந்து வெளிவராமல் நடக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னுடைய இருப்பை உறுத்திக்கொண்டிருப்பதைப் போன்றது. பனையோலையின் குருத்துகள் கீறியது போன்று அதன் எரிச்சல் விடுவதில்லை. சாபத்தினை கொடுப்பது என்பது ஒருவழியில் நிம்மதிதான் என்றாலும் அதனால் மனிதன் அடையும் துன்பங்களையும், கொடூரங்களையும் என்னால் பார்க்க முடியவில்லை. ஒவ்வொருவரின் சாபத்திலிருந்தும் ஒரு நுண்ணிய கிருமி என்மேல் ஒட்டிக்கொண்டு என் உடலை ரணப்படுத்துகிறது. நீ அதை கொஞ்சம் பாரேன் ”என்று தன் அங்கவஸ்திரங்களை எல்லாம் திறந்து காண்பிக்க அவர் உடலெல்லாம் செதில்செதிலாக பாம்புச்சட்டையின் மேல்புறத்தோல் போல் இருந்தது. அதனைப் பார்த்தவன் சற்று அதிர்ச்சியடைந்து கீழே விழப்போக, சாபத்தின் தலைவன் அவனைக் கைத்தாங்கலாக பிடித்து நிறுத்தினார். ஏறக்குறைய மயங்கிய நிலையில் இருந்தவனை தன்னுடைய ஆசனத்தின் அருகில் உட்காரவைத்து, அவன் முகத்தில் தண்ணீரை தெளித்தார். சிறிது நேரம் கழித்து விழித்து பார்த்தவன் எதிரே சாபத்தின் தலைவன் முழு ஆடையுடுத்தி, சந்தன மணம் கமழ நின்று கொண்டிருந்தார். அவனைப் பார்த்து,

“அதன் புண்களைப் பார்த்த உனக்கே இப்படியென்றால், அதனை சுமந்து திரியும் என்நிலையை சற்றேனும் யோசித்துப்பார். ”

“இப்பொழுது புரிகிறது தங்களின் வேதனை. நீங்கள் இப்போது என்ன முடிவெடுத்துள்ளீர்கள்?”

“என்னை நானே கொலை செய்துகொள்ளலாம் என்று இருக்கிறேன்.”

“நீங்களுமா?”

“ஆமாம் அது மட்டும்தான் இந்த துன்பத்தில் இருந்து நான் வெளியேறுவதற்கான ஒரே வழி.
தன்னைத்தானே தற்கொலை செய்துகொள்ளாமல் இந்த உலகத்தின் துன்பங்களில் இருந்து நாம் வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லையா?”

“இருக்கிறது என்று நினைக்கிறேன். எனக்காக ஒரு நிமிடம் வரத்தின் தலைவனை இங்கு அழைத்து வருகிறாயா?”

ஆச்சரியம் அடைந்தவன் உடனே அங்கிருந்து கிளம்பி ஓட்டமும் நடையுமாக வரத்தின் தலைவனிடம் சென்று, சாபத்தின் தலைவன் சொன்னவற்றை எல்லாம் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு வந்தான். வரத்தின் தலைவனுக்கு சாபத்தின் தலைவனைப் பார்த்ததும் அவரறியாமல் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. சாபத்தின் தலைவனுக்கும் தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தோட இருவரும் அருகருகே நின்று ஒரு வார்த்தையும் பேசாமல் பார்த்துக் கொண்டே நின்றனர்.

இருவரின் தூதுவனுக்கோ எதுவுமே புரியாமல் மாறி மாறி இருவரையும் பார்த்துக் கொண்டிருக்க அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் கரைந்தோடியது. மூவரும் முக்கோணத்தில் மூன்று பாகங்களாய் நின்று ஒரு வார்த்தையும் பேசாமல் அழுதுகொண்டே இருக்க, அவர்களைச் சுற்றி மெல்ல ஒரு குளம் உருவாக ஆரம்பித்தது. ஒரு நாள், இரண்டு நாள் என அந்த அழுகை கூடிக்கொண்டே சென்று முடிவிலா பல யுகங்கள் நகர்ந்துகொண்டே இருந்தது. தேவாதி தேவர்களும், அரக்கர்களும் அதன் கண்ணீரை அடக்கமுடியாமல் தாங்களும் கண்ணீர் விட அங்கு மாபெரும் கடல் ஒன்று உருவாக ஆரம்பித்தது. அதனால்தால் கடற்கரைகள் எல்லாம் பாவத்தைப் போக்கும் இடமாகவும், வரத்தை அளிக்கும் இடமாகவும் இருக்கின்றது என்று சொல்லி அப்பா அந்த கதையை முடித்தார்.

*

உணர்ச்சிப் பெருக்கெடுத்தவராக தன்னுடய அறையின் விளக்குகள் எல்லாவற்றையும் ஏற்றியவர், அந்த கதையை ஒருவரி கூட சிதறாமல் தன்னுடைய நோட்டில் எழுதிக்கொண்டார். இந்த கதைக்குள்தான் தன்னுடைய ஆராய்ச்சிக்கான விடை இருக்கிறது என்று அவருக்கு தோன்றியது. தன் ஆராய்ச்சிக்கான முதல் விதை மிகவும் நன்றாகவே விழுந்திருப்பதாக தோன்ற கண்ணை மூடித்தூங்க ஆரம்பித்தார். மீண்டும் அவர் விழிப்பதற்கு இரண்டு நாட்கள் ஆனது. இரண்டு நாட்களுக்கு இடையிலும் ஒரு கவிதை அவர் கனவில் வந்துகொண்டே இருந்தது. அந்த கவிதையை தன்னுடைய முகப்புத்தகப் பதிவுகளில் என்றோ பார்த்த ஞாபகம் உறுத்திக்கொண்டே இருந்தது. அந்த கவிதையை கண்டுபிடிக்கும் பட்சத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக அது இருக்கும் என்று நினைத்தார். உடனே தன்னுடைய கணினியை இயக்கி முகப்புத்தகத்தில் இதுவரை வந்த எல்லா பதிவுகளையும் தேடி த் துழாவினார். ஒரு மணிநேரத் தேடலுக்குப் பிறகு அந்த கவிதை அவர் கண்ணில் பட்டது.

சாபத்தைத் தழுவிக்கொண்டவனின்
பாதங்கள்
நிலத்தை ஒவ்வொரு சுவடு வைக்கையிலும்
எரியச்செய்கின்றன.

            -பாலைநிலவன்

இதுதான்.. இதுவேதான் தான் தேடிக்கொண்டிருந்த அந்த நான்கு வரிகள். அவற்றினை தன்னுடைய நோட்டில் எழுதிக்கொண்டவர் ஒவ்வொரு வரிக்கும் எதேனும் மறைபொருள் இருக்கிறதா என யோசிக்க ஆரம்பித்தார். ஆனால் அப்படி ஏதேனும் தட்டுப்படவில்லை ஆனால் அந்த ஒற்றை வரி அவரை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. “சாபத்தை தழுவிக்கொண்டவன்”. உண்மையில் இந்த நூற்றாண்டில் சாபத்தை ஏந்திக்கொண்ட மனிதர்கள் இருக்கிறார்களா? அப்படி இருக்க எதேனும் வாய்ப்பிருக்குமா? என்று யோசித்தவர் உடனே தன்னுடைய முகப்புத்தகத்தில் “சாபத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த மின்னஞ்சலுக்கு உங்களின் சாபத்தினை பற்றிய விபரத்தினை விலாவரியாக எழுதி அனுப்பவும்” என்று இதற்காக உருவாக்கிய மின்னஞ்சலை சேர்த்து அனுப்பினார். அவர் அனுப்பிய அந்த தகவலுக்கு முகப்புத்தகத்தில் எழுந்த கிண்டல்களும் கேலிகளும் அவருடைய தூக்கத்தை மீண்டும் பறித்துக்கொண்டது. தன்னுடன் பணிபுரிவர்களின் கேலிக்கு ஆளானதோடு மட்டுமல்லாமல் இப்போது தான் இந்நகரத்தின் கேலிக்கும் ஆளானதை நினைத்து அவருக்கு சங்கடமாக இருந்தது. சோர்வின் உச்சத்தில் இருந்தவர்க்கு ஆச்சரியமாக மின்னஞ்சலில் சாபம் பெற்றவர்கள் அனுப்பிய குறிப்பு வந்துகொண்டே இருந்தது. அவர் நினைத்துப் பார்க்காத அளவிற்கு பதில்வினை இருக்க, தன்னுடைய கவலைகளை எல்லாம் மறந்து அவற்றை வாசிக்க ஆரம்பித்தார். அவைகள் பெரும்பாலும் கல்யாணம் ஆகாதவர்களின் புலம்பல்களும், ஜோசியர்களின் ஏமாற்றுத்தனத்தினைப் பற்றிய கதைகளாகவும் நகர்ந்துகொண்டே சென்றது. ஏன்தான் இப்படி ஒரு அஞ்சலை கொடுத்தோம் என நினைத்துக் கொள்ளுமளவுக்கு மொத்தக் கதைகளாகவும் அவை மட்டுமே இருந்தது. மொத்தவற்றையும் தேர்வு செய்தவர் அவற்றை எல்லாம் நீக்கிவிட்டார். பின் தன் அனுபவத்திலிருந்தும், கேட்ட கதைகளிலிருந்தும் அவற்றை எடுத்து ஒரு தொகுப்பாக தன் நாட்குறிப்பில் எழுதிக்கொண்டார்.

*

நான் கேட்ட புராணங்கள் முழுக்க சாபம் ஏறியவர்கள் பாறைகளாகவோ, மரமாகவோ அல்லது வேறு உருவிலோ அலைகின்றனர், அதற்கான ஆதிக்காரணம் என எவ்வளவோ நான் யோசித்துப்பார்த்தும் அதற்கான காரணமாக நான் கண்டடைந்தவைகள் சாபம் பெற்றவர்கள் அனைவரும் மீண்டும் தன் இயற்கை மனித நிலைக்கு (குகை மனிதன்) சென்றடைய விரும்புகின்றார்கள். அந்த நிலை என்பது உண்மையில் நன்மையா? தீமையா? அல்லது நம்மை நாம் சமாதானபடுத்திக்கொள்ளும் உணர்வு நிலையா?
சாபத்தின் முதற்புள்ளி எங்கு துவங்குகிறது? அது நம்முடைய குழந்தைப்பருவமாகத்தான் இருக்க வேண்டும். உடலின் மச்சங்கள் ஏன் சாபம் ஏறியதற்கான விளக்கமாக இருக்கக்கூடாது? மச்சங்களின் வடிவங்கள் நம் சாபத்தின் அளவுகோலா? ஏன் மச்சங்கள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை? மச்சங்கள்தான் உண்மையில் சாபத்தின் விளக்கம் எனில் அதன் தொடக்கம் இரவு உடலை சேரும் இரு உயிர்களில் ஒரு உயிர் ஏற்கனவே சாபத்தின் சுவடுகளை தன்னுள் உள்ளே ஏற்றிக்கொண்டவர்களா? ஒவ்வொரு குழந்தையின் முதல் இதயத்துடிப்பிற்கு முன்னால் சாபம்தான் துடிக்க ஆரம்பிக்கிறதா? ஒவ்வொரு விந்தின் தொடக்கமும் அறிவியலின் குரோமசோம்களை தாண்டி கண்ணுக்குத் தெரியாத சாபங்களை சுமந்து செல்கிறதா? எல்லா குழந்தைகளும் சாபத்துடன்தான் பிறக்கிறதா?

*

அறிவியல் உலகில் நிருபணவாதம் மட்டுமே வெற்றியாக ஏற்றுக்கொள்ளப்படும். சாபத்தினைப் பற்றிய தன் ஆராய்ச்சிகள் எல்லாம் வெறும் குறிப்புகளாக குவிவதை கண்டவர்க்கு தான் அடுத்த செய்யவேண்டிய வேலை என்ன என குழம்பிக் கொண்டிருக்கையில் அவரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் இருந்த சிறுகுறிப்பு “நானும் தங்களைப்போல் ஒரு ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகிறேன் ஆனால் குறிப்புகளால் அல்ல ஒரு மனித உடலுடன்” என்று இருக்க, தன்பெயர் தர்மன் என்றும் அதற்கு கீழே அவருடைய அலைபேசி எண்ணும் இருந்தது. உடனே தன்னுடைய போனிலிருந்து அவருக்கு அழைக்க,

“வணக்கம் வசுமித்… உங்கள் அழைப்பிற்காகத்தான் நான் காத்திருக்கிறேன்.”

“வணக்கம் தர்மன், உங்கள் கடிதம் போன்ற ஒன்றிற்காகத்தான் நானும் காத்திருந்தேன். எப்பொழுது இந்த ஆராய்ச்சியை நீங்கள் துவக்கினீர்கள்? எந்த அறிவியல் கோட்பாட்டில் உங்கள் ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.”

“வசுமித். நான் செய்வது எந்த அறிவியல் ஆராய்ச்சிக்குள்ளும் வராது. நான் செய்வது என் உள்ளுணர்வில் மேல் நின்று. அதை நிரூபிக்க அறிவியலும் தேவையில்லை. என்னுடைய உணர்வே போதுமானது. நான் இந்த ஆராய்ச்சியை தொடங்கிய கதை உங்களுக்கு தேவைப்படுகிறதா?”

“ஆம்”.

எல்லா மனிதர்களின் நாட்களினைப் போலவே என்னுடைய நாட்களும் ஒவ்வொன்றாக கழிந்து கொண்டிருந்தது. அப்போது ஒருநாள் மாலை நான் வேலை முடித்துக்கொண்டு வரும்போது ரோட்டில் ஒருவன் நின்று, “அய்யா நான் சாபம் பெற்றவன். என்னை எப்படியாவது அந்த சாபத்திலிருந்து விடுவியுங்கள்”, என்று தன்னைத்தானே விளம்பரம் செய்து கொண்டிருந்தான். மக்களுக்கெல்லாம் அவன் வேடிக்கையான பொருளாக நின்று கொண்டிருக்க., நானும் அவனை வேடிக்கையாகப் பார்த்துவிட்டு வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.

ஆனால் அன்று இரவு முழுவதும் என்னால் துளி அளவுகூட உறங்க முடியவில்லை. அவனின் அலறலும், சாபம் என்கிற வார்த்தையும் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. நான் எந்த பக்கமும் திரும்பினாலும் அவன் வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மறுநாள் காலை விடிந்ததுமாக அவன் நின்ற இடத்திற்கு சென்றேன். அவன் அதே இடத்தில் நின்று அதே வார்த்தைகளை திரும்பத்திரும்ப உச்சரித்துக் கொண்டே இருந்தான். நான் அவனிடம் சென்று உன்னுடைய சாபங்களை நான் விடுவிக்கிறேன் என்னுடன் வருகிறாயா? என்று கேட்டேன். அவன் பதிலேதும் சொல்லாமல் என் பின்னால் நடக்க ஆரம்பித்தான். என்னுடைய அறைக்கு அழைத்து வந்து அவனுக்கு உணவளித்துவிட்டு இன்று ஓருநாள் நன்றாக ஓய்வெடுத்துக்கொள் நாளை காலை முதல் நாம் தொடங்கிவிடலாம்” என்று சொல்லிவிட்டுப் பணிக்குச் சென்றுவிட்டேன். ஆனால் அலுவலகத்தில் ஒரு நிமிடம் கூட என்னால் இருக்க முடியவில்லை. உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அவன் வீட்டின் ஒரு மூலையில் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான். வீட்டுக்குள் நுழைந்ததும் என்னால் ஒரு அழுத்தத்தை உணர முடிந்தது. அது நிச்சயம் சாபத்தினை வாங்கியவனின் அழுத்தம் என்பதை நான் புரிந்து கொண்டேன். உடனே என்னுடைய அலுவலகத்திற்கு போன்செய்து மூன்றுமாத கால ஓய்வு வேண்டும் என்று சொல்லிவிட்டு, ஆராய்ச்சியைச் தொடங்கினேன். ஆராய்ச்சி என்றால் அவன் உடலைப் பரிசோதிப்பதோ, இல்லை அவனிடம் கேள்விகளைக் கேட்பதோ அல்லாமல் அவன் அருகே நான் உட்கார்ந்து கொண்டேன். ஒருவாரம் அவன் எந்த வார்த்தையும் பேசவில்லை. மூன்று வேளை நன்றாக சாப்பிட்டான், நன்றாக தூங்கினான். ஒரு வாரம் கழித்து தன்னுடைய உடலுக்குள் இருந்து வேர் ஒன்றினை எடுத்து என் கையில் வைத்தான். பார்ப்பதற்கு விரல் அளவுகூட இல்லாத அந்த வேரை நான் பார்த்துக் கொண்டிருக்க, மெல்ல மெல்ல அது என்னை அதனுள் இழுத்துக்கொண்டு விட்டது. உள்ளே செல்லச்செல்ல பல சாத்தியப்பாடுகளும், பலவித வழிகளும் திறந்து கொண்டே இருக்க, என்னுடைய ஆராய்ச்சிக்கான அடிப்படையை நான் புரிந்து கொண்டேன். அப்போதுதான் அவனது கண் இமைகள் மூடவே இல்லை என்பதும், அவன் தூங்கும்போது கூட இமைகள் திறந்தேதான் இருந்தது என்பதையும் கவனித்தேன். அவன் கண்ணை மூடும் பட்சத்தில் நம் இருவரின் ஆராய்ச்சிக்குமான விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். அவனிடம் இருந்து நான் எடுத்த வேர்களை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் வசுமித். அந்த வேரில் நீங்கள் ஒருமுறை பயணம் செய்து பார்க்க வேண்டும்.

“நாளை காலை உங்கள் இடத்திற்கு வருகிறேன் தர்மன். உங்கள் அட்ரஸ்ஸை ஒரு எஸ்.எம்.எஸ் செய்துவிடுங்கள்.”

“இப்பொழுதே அனுப்பிவிடுகிறேன். நன்றி வசுமித். நாளை சந்திப்போம்.”

மறுநாள் தர்மன் அனுப்பிய முகவரிக்குச் சென்று சேர்ந்தார் வசுமித். அவர் கற்பனையிலிருந்த எந்த வடிவத்திற்குள்ளும் அந்த வீடு இடம்பெறவில்லை. மிகவும் பிரமாண்டமான மாளிகையும், வாசற்கதவுகள் எல்லாம் தானியங்கி பொருத்தப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் கடந்து வீட்டின் உள்ளே செல்ல, தர்மன் எதிரே நின்றுக்கொண்டிருந்தார். இருவரும் கைகுலுக்கிக் கொள்ள மாடிப்படியேறி அவனைப் பார்த்தனர். அவன் எந்தவித உணர்ச்சிகளையும் காட்டாதவனாக, கண் இமைகளை மூடாதவனாக உட்கார்ந்து கொண்டிருந்தான். வசுமித் அவன் அருகே சென்று அவன் கையைப் பிடித்துப் பார்க்க அது லேசாக துடித்துக் கொண்டிருந்தது. பின் தர்மனைப் பார்த்து, “நான் இவரை என்னுடைய ஆராய்ச்சிக்கு அழைத்துக் கொண்டு செல்லட்டுமா?”, என்று கேட்க, தனக்கு அதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், விடைதான் நமக்கு முக்கியம் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

தன்னுடைய வீட்டின் ஒரு அறையை சகல வசதிகளுடன் அவனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டார். அவனை காலையிலிருந்து மாலை வரை பார்த்துக்கொண்டே இருப்பது மட்டுமே அவருக்கு வேலையாய் இருந்தது. அவ்வப்போது தர்மனும் வந்து பார்த்து செல்வார். சில வாரங்கள் கழித்தபின் அவருக்கு தருமன் கூறிய வேரின் ஞாபகம் வர, அவனை நெருங்கி வேர் இருக்கிறதா எனக் கேட்டார். தன் வயிற்றுக்கு அடியிலிருந்து மற்றொரு வேரை அவருக்கு எடுத்துக் கொடுத்தான். இது மட்டும் அவனுக்கு எப்படி புரிகிறது என குழப்பமடைந்தவராக தர்மனுக்கு போன் செய்து நடந்தவற்றைச் சொல்ல, “அது மட்டும் அவனுக்கு புரிகிறது. அந்த வேர்தான் அவனின் அடித்தளம். அந்த வேரை நாம் ஆராயும் பட்சத்தில் நிச்சயம் அவன் யார் என்று கண்டுபிடித்து விடலாம்”, என்று தர்மன் சொல்ல, நம்பிக்கை அடைந்தவராக தன்னுடைய அறைக்கு அந்த வேரை எடுத்து வந்தார். உடனே தன்னுடன் பணிபுரியும் நண்பரிடமிருந்து நுண்ணோக்கி கருவியை வாங்கி வந்து வேரை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார்.

*
சாபத்தின் வேர்களை கண்டுபிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை துவக்கினார்.
வேரிலிருந்து கம்பளம் ஒன்று உருவாகி அதன் நூல்கள் ஒவ்வொன்றாக பிரிந்து மற்றொரு கம்பளமாக விரிந்து பறந்து செல்ல, அதில் தானும் ஒரு கம்பளத்தில் ஏறிக்கொண்டு பறந்து சென்றார். வேரின் நுனிகள் தெரிந்ததும் அவரை அறியாமல் மனம் சந்தோசம் அடைய, அதன் அருகில் சென்றார். அருகில் சென்று பார்த்ததும் தான் தெரிந்தது பல ஆயிரம் வேர்களின் சற்று பெரிய வேர் அது என்று. வேர்கள் கணக்கிடமுடியாத அளவிலானவையா? நிச்சயம் கணக்கிடமுடியும் என்று நினைத்தவறாக அந்த பெரிய வேரினை நோக்கி தன் பயணத்தை துவக்கினார். பயணத்தின் வேர்கள் உள்ளே செல்லச்செல்ல அதன் முடிச்சுகள் ஒவ்வொன்றாக இறுகிக்கொண்டு வருவதையும், இறுகிய முடிச்சுகள் வெடித்துச் சிதற அதிலிருந்து மேலும் பல வேர்கள் கிளம்புவதையும் அறிந்தார். இதற்கு மேல் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என நினைத்தவராக அங்கிருந்து கிளம்பினார்.

ஆனால் அவர் அங்கிருந்து கிளம்பிய நேரமும் அவர் கம்பளத்தின் நூல் ஒன்று வேரொன்றில் சிக்கிக் கொண்டதும் நடந்தது. அதன் வேர்கள் அந்தக் கம்பளத்தை இழுத்துக்கொண்டு செல்ல அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் மேலும் அதன் பாதையை பின்தொடர ஆரம்பித்தார். உள்ளே செல்லச் செல்ல காற்றில் ஆடிக்கொண்டிருந்த வேர்களை பார்க்க ஆரம்பித்தார். பாலே நடனத்தின் அசைவுகளை ஒத்த அதன் நடனம் அவருக்கு ஆச்சரியமாக இருந்தாலும் அதன் அசைவுகளில் மர்மம் ஒன்றிருப்பதை உணர்ந்தார். கீழே செல்ல அதன் வேர்களின் நடனம் முற்றிலும் குறைந்திருப்பதும். வேர்கள் இறுகிக்கொண்டு வருவதும் அவருக்கு புரிய ஆரம்பித்தது. உள்ளே செல்லச்செல்ல இறுகிய அதன் தடிமன் சுருங்கிக்கொண்டு வருவது அவர் நினைத்ததை விடவும் மிக மெல்லியதாக இருந்தது. அவர் ஏறக்குறைய அந்த வேரின் தொடக்கத்தை நெருங்கிவிட்டார் என்பதை உள்மனம் அறிவித்தது. வேர்கள் ஒரு நூல் அளவுக்கு மட்டுமே இருக்க, அவர் கம்பளம் வேர்களின் பிடியிலிருந்து நீங்கி அதனைச் சுற்றி பறக்க ஆரம்பித்தது. தான் மனிதர்களின் சாபத்திற்கான வேர்களை கண்டுபிடித்துவிட்டதான சந்தோசத்தில் அவர் மிதந்துகொண்டிருந்த நேரத்தில்
“வாருங்கள் வசுமித்” என்று குரல் கேட்க, அதிர்ச்சியடைந்தவராக சுற்றும் முற்றும் பார்த்தார். மீண்டும் அதே குரல் கேட்க, புரிந்து கொண்டவராக அந்த வேர்களைப் பார்த்து “சொல்லுங்கள் ரூட்ஸ்?” என்றார் நக்கலாக,

“வேர்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதில்லை என்பது தங்களுக்கு புரியும்தானே?”

“நிச்சயமாக தெரியும் ரூட்ஸ் ? ஆனால் நான் அதை கண்டுபிடித்துவிட்டேனே?
கண்டுபிடித்துவிட்டிர்களா?” என்று அந்த வேர் சிரிக்க, எதுவும் புரியாதவராக
“இப்போது ஏன் சிரிக்கிறாய். நான் தான் உன்னுடைய அடிவேரைப் பார்த்துவிட்டேனே. சாபத்தின் வேர்கள் மிக மெல்லியவை அல்லவா?”

சாபத்தின் வேர்கள் மெல்லியவைதான் ஆனால் அந்த மெல்லியவைகளுக்குப் பின்னால் இருக்கும் விரிவை நீங்கள் பார்க்கவில்லை வசுமித்? என்ற ரூட்ஸ் தன் வேரை மெல்ல அசைக்க, அதன் கீழே ஒரு வெளிச்சம் போல் ஒளிவர அதனை பார்த்தவர்க்கு அதன் கீழும் வேர்கள் பரவிச் சென்று கொண்டிருந்தது. அதிர்ச்சி அடைந்தவராக,

“நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய்! நிச்சயம் அது நான் மேலிருந்து பார்த்த வேர்களின் கண்ணாடி பிம்பத்தின் எதிரொளிப்புகள் ” என்றார்.

“நிச்சயம் இல்லை வசுமித், உலக முழுக்க சாபம் ஏன் கொட்டிக்கிடக்கிறது என்று என்றாவது யோசித்து பார்த்திருக்கிறீர்களா வசுமித்.”

“நானும் யோசித்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கான காரணம்தான் என்னுடைய ஆராய்ச்சிக்கு தூண்டுதலும் கூட.”

“நீங்கள் எவ்வளவு யோசித்தாலும் உங்களால் அதை கண்டுபிடிக்க முடியாது வசுமித். நீங்கள் இவ்வளவு நேரம் பயணம் செய்தது. என்னவென்று நினைக்கிறீர்கள்.
வேர்கள்தானே?”

“நன்றாக கொஞ்சம் உற்றுப்பாருங்கள்.”

வேர்கள் எல்லாம் கொஞ்சம் நெகிழ்ந்துகொடுக்கு ஆரம்பிக்க, பயந்தவராக தன் கைகளை நழுவ விட்டார். இப்போது வேர்களுக்கான எந்த உருவமும் இல்லாமல் எல்லாம் வழுவழுவென்றும் மினுங்க ஆரம்பிக்க, அவைகள் எல்லாம் அசைய ஆரம்பித்தது. அப்போதுதான் அவருக்கு புரிந்தது அவைகள் பாம்புகள் என்று. இந்த உலகில் உள்ள பாம்புகளின் மொத்த கூடாரமாய் அவை ஒன்றையொன்று தழுவி, புரண்டுகொண்டிருக்க, புரியாதவராக அலறி வெளியேறினார் வசுமித்.

“என்ன வசுமித் இப்போது புரிந்ததா என்னவென்று?”

“போதும் உன்னுடைய மாயவிளையாட்டை நிறுத்துங்கள் ரூட்ஸ்? இதற்குமேல் என்னால் தாங்கமுடியாது?”

“இவைகளைத்தான் நீங்கள் அழைத்துவந்த மனிதன் சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசவேண்டிய வார்த்தைகளின் ஒவ்வொரு எழுத்துகளையும் இவைகள் பாதுகாத்து வைத்திருக்கின்றன. அவன் இவற்றை எலலாம் என்று வெற்றி கொள்கிறானோ அன்றுதான் அவனால் உங்களுடன் சகஜமாக உரையாட முடியும்.”

“இவ்வளவையும் அவனால் எப்படி வெற்றிகொள்ள முடியும்?”

“நிச்சயம் முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம். அந்த பாம்பின் பாதையை பின் தொடர்ந்து செல்வது மட்டுமே? அவை உங்களை அவனுடைய அடிவேருக்கு அழைத்துச் செல்லும். அப்போது தெரியும் அவன் யாரென்று.”

*

அதிர்ச்சியடைந்தவராக நுண்ணோக்கியிலிருந்து தன் முகத்தை வெளியில் எடுத்தவர் அவனை திரும்பிப் பார்த்தார். அப்போது தான் கவனித்தார் அவனது நாக்குகள் வெளியே நீட்டிநீட்டி வந்துகொண்டே இருந்தது. இப்போது அவருக்கு ஒரளவுக்கு புரிந்தது போல இருந்தாலும், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் என்னவென்று அவர் குழம்பிக் கொண்டிருக்க, அவன் அருகே வந்து,

“எனக்கு ஆப்பிள் ஒன்று வேண்டும்” என்று கேட்டான்.

அதிர்ச்சியடைந்தவராக, “என்ன வேண்டும்?” என்று கேட்க,

“ஆப்பிள், ஆப்பிள், ஆப்பிள்” என்று மூன்று முறை கூறினான்.

உடனே அவர் தன் வீட்டருகே இருந்த பழக்கடைக்குச் சென்று 2 கிலோ ஆப்பிள்களை வாங்கிவந்து கொடுத்தார். அவன் அவற்றை சாப்பிடாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தான். மிகவும் குழம்பியவராக, “சாப்பிடுங்கள்” என்று சொல்ல,

“எதை சாப்பிட சொல்கிறீர்கள் வசுமித்?”

“ஆப்பிளைத்தான்”.

ஹா..ஹா… என்று கடகடவென சிரிக்க ஆரம்பித்தான். வசுமித் அவன் முகத்தில் தோன்றிய விகாரத்தைக் கண்டவராக இரண்டடி பின்னால் சென்று நின்றார்.

“பயப்படாதீர்கள் வசுமித்”

அப்போதுதான் தெரிந்தது அவன் பெயரைச் சொல்லிப் பேசுகிறான் என்று. “என் பெயர் உனக்கு எப்படி தெரியும்?”

“காது உள்ளவன் கேட்கக்கடவான் வசுமித். உங்கள் வீட்டின் வாசலில் கால் வைத்த அன்றே உங்களின் ஆராய்ச்சி, அதற்கான உங்களின் தேடல் என எல்லாவற்றையும் நான் புரிந்து கொண்டேன்”.

“ஏன் அப்போதிருந்தே இதைப் பற்றி பேசவில்லை?”

“என்னை அழைத்துச் சென்று சோதனை செய்த யாருமே, நான் கொடுத்த வேரிலிருந்து வேருக்குள் மட்டுமே பயணம் செய்தார்கள். ஆனால் நீங்கள் மட்டுமே அதனைத் தாண்டி என்னுடைய ஆதியைக் கண்டுபிடித்தவர்”

“அப்போது நீங்கள் யார்?”

“ஆப்பிள் , பாம்பு என்ற இருகுறியீடுக்களுக்கிடையிலேயே நான் யாரென்று உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் வசுமித். நிர்வாணத்தினை முதன்முறையாக வெட்கம் கொள்ளச் செய்தவன். ஆண் பால், பெண்பால் விதிகளை வகுத்தவன். நன்மை தீமையின் பிறப்பிடம். இருள்-வெளிச்சம், உண்மை-பொய், அழகு-அசிங்கம் என ஒவ்வொன்றிற்கும் எதிர்நிலைகளை உருவாக்கிய பேரரசன். உலகில் சாபம் என்ற வார்த்தையை முதன்முதலில் உருவாக்கியவன். உலகைப் படைத்தவனின் நெருங்கிய தோழன். அவன் அவர்களை சாப்பிடவேண்டாம் என்று சொன்னது பழத்தை அல்ல, அந்தப் பழம் என்னுடைய தோட்டத்தில் விளைந்தது என்பதனால்தான். என் தோட்டத்தில் அவர்கள் சாப்பிட்டது கடவுளின் சொல்லை மீறுவதற்காக அல்ல, என் தோட்டத்தின் பழருசி அந்தப் பிரதேசத்தில் எவர் தோட்டத்திலும் கிடைக்காதது. அவனது சொல்லில் இருந்த ஒவ்வொரு வார்த்தையும் சாப வார்த்தைகள் அல்ல, அவனின் இருண்ட மனதின் இன்னொரு பரிமாணம். அவன் நீங்கள் நினைப்பது போல் புனிதன் அல்ல. இந்த உலகில் மிகவும் கீழானவன் ஒருவன் இருப்பானென்றால் அது அவனாகத்தான் இருப்பான். பழத்தினை தின்றதால் அவர்கள் பால்வேறுபாட்டை அறியவில்லை. அவர்கள் ஏற்கனவே அறிந்துதான் இருந்தார்கள். அதை சொல்லிக் கொடுத்தவன் நான்தான். ஆனால் அவன் அவர்கள் பழத்தை சாப்பிட்ட விவகாரத்தை ஏதோ பாவத்திற்கு ஒப்பான ஒன்றாக ஒவ்வொருவரிடம் சொல்லி, எங்கு சென்றாலும் அவர்களை கேலிப்பொருளாக்கி விட்டான். அந்த உணர்வை தாங்க முடியாமல் யாரிடமும் அவர்கள் பேசவில்லை. தங்களைத் தாமே அழித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள். அவர்களின் கடைசி நேரத்தில் என்ன தோன்றியதோ என்னிடம் வந்து நின்றார்கள். நான் கூறியவற்றை கேட்டபிறகு அவர்கள் தெளிவடைந்தவர்களாக சென்றார்கள். அதன் பிறகு இந்த உலகம் மனித வாழ்க்கைக்கான சொர்க்கமாக மாறியது”.

“நீங்கள் அப்படி அவர்களிடம் என்ன சொன்னீர்கள்?”

“மரணம் எப்போதும் நம் அருகில் இருக்கும் ஒரு உடல் உயிரி. அவற்றை நீங்கள் விரும்பும் பட்சத்தில் அழைத்துக் கொள்ளலாம். ஆனால் நாம் ஏன் அழைக்கின்றோம். அழைப்பதற்கான காரணம் என்ன? அதன் விளைவுகள் என்ன? நாம் அவற்றிலிருந்து பெற்றுக்கொண்ட விஷயம் என்ன? என ஒவ்வொன்றாக அவர்களை விசாரணை செய்துகொள்ளச் சொன்னேன். இந்த உலகில் பிறக்கப்போகும் ஒவ்வொருவரும் அஞ்சும் ஒன்றாக இருக்கப்போவது மரணம். மரணத்தின் வாசல் மிகவும் அழகானது. அழகானவற்றின் உள்ளே எல்லாம் எப்போதும் ஒரு அசிங்கம் மறைந்து கொண்டே இருக்கும். அந்த அசிங்கமானவற்றை கண்டுபிடியுங்கள். அப்போதுதான் உங்களுக்கு அழகானவற்றினைப் பற்றி புரியும். மரணத்தை தினமும் எதிர்கொண்டுதான் வருகிறேன். போகிற பாதையில், நீந்துகின்ற நீரில், பதுங்கிக் கொள்கிற மரத்தில் எல்லாம் நான் மரணத்தை அருகிலேதான் அழைத்துச் செல்கிறேன். ஆனால் நான் மரணத்தை பற்றி கவலைப்படவில்லை. மரணத்தை எதிர்கொள்வதற்கொள்வதற்கு முன்னால் இந்த உலகம் எவ்வளவு வியப்பானது. அழகானது, இதனை அனுபவிக்காமல் செல்வது என்பது உண்மையில் துரதிர்ஷ்வசமானது. எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள். உங்கள் முன்னால் இருப்பது கருப்பு அல்ல, வெள்ளையும் கூடவே இருக்கிறது. இரண்டையும் சமப்படுத்துங்கள். முடியவில்லை என்றால் எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். அவற்றின் நிறம் அவரவரிடமே இருக்கட்டும். நிறங்கள் இல்லா உலகு எந்த காலத்திலும் அமையப் போவதில்லை. சென்று வாருங்கள்”.

“அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் ஏன் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறீர்கள்?”

“உண்மையில் என்னை உங்களிடம் அழைத்துவந்தது யாரென்று நினைக்கிறீர்கள்?”

“தர்மன்”.

‘அவன் பெயர் காலன்’ என்று சொல்லி சிரித்தான். வசுமித்-க்கு சற்றுப் புரிந்தது போல் இருந்தது. இப்போது அவருடைய எண்ணிற்கு போன் செய்யுங்கள் என்று சொல்ல, வசுமித் போனை செய்ய, எதிர்முனையில் எந்தவித தகவலும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

“ஏன் என்னை தேர்ந்தெடுத்தீர்கள் நீங்கள் இருவரும்?”

“சாபத்தினை ஆராய்ச்சி செய்கிறீர்கள் என்று கேள்விப்பட்டோம். அதான் உங்களை சற்று பார்த்துவிட்டு செல்லலாம் என்று தோன்றியது. இந்த உலகில் சாபத்தினை பற்றி ஆராயும் ஒவ்வொருவருக்கும் அந்த தோட்டமும், கனியும், நிர்வாண மனிதர்களும் தான் தோன்றுகிறார்கள். அதனை அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு இதுவரை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அதான் தங்களை சந்தித்து விளக்கத்தை அளிக்கலாம் என்று தோன்றியது. என்னுடய வேலை முடிந்தது. சென்று வருகிறேன் வசுமித். உங்களுடைய ஆராய்ச்சி வெற்றி பெற வாழ்த்துகள்” என்று சொல்லியவனாக ஆப்பிளை கடித்துக்கொண்டே அவரின் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். பலவித யோசனைகளுடன் அங்கே நின்று கொண்டிருந்தவர் தன்னுடைய நோட்டில் இவற்றை எல்லாம் எழுதி முடித்துவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று அமைதியாக அமர்ந்து விட்டார்.

உடனே தன்னுடைய கனிணியை இயக்கி தன்னுடைய துறை நண்பர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.

*

“அன்புள்ள நண்பர்களே, சாபத்தின் தொடக்கத்தைப் பார்த்து விட்டேன். அவை உண்மையில் சாபம் அல்ல, இந்த உலகம் இயங்குவதற்கான உந்துசக்தி, இந்த உலகை இயக்குவதற்கான எந்திரம். அவை இல்லையென்றால் இன்று நீங்களும் இல்லை நானும் இல்லை. சாபத்தின் கதைகள் எல்லாம் நம்மை நாமே சிறுமைப்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட கருப்பு விழிகளின் பார்வை. நம்மில் பெரும்பாலும் அவற்றின் பார்வைக்குள் உள்ளே விழுந்து மேலேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றின் மறுபக்கத்தை பார்ப்பதென்பது அவ்வளவு கடினமில்லை என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியின் முடிவு. ஆராய்ச்சிகள் எல்லாவற்றிற்கும் நிரூபணவாதம் தேவை. நிரூபணத்தைத் தாண்டிய பல ஆராய்ச்சிகளுக்கு இன்றுவரை விடை இல்லை. விடையை இதுவரை யாரும் அளிக்கவில்லை என்பதற்காக அது பொய் என்று அர்த்தமில்லை. அவற்றின் தொடர்ச்சிதான் நம் சமநிலையை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த தொடர்ச்சியினை கண்டவனாக உங்களுக்கு கூறுகிறேன். சாபத்தினை நான் ஆராய்ந்து விட்டேன். உங்களுக்கு என்னை நினைத்து சிரிப்பு கூட வரலாம். மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று கூட நினைக்கலாம். உங்கள் சிரிப்பின் பின்னால் இருக்கும் நிறத்தை கவனியுங்கள். அவை கருப்பா? வெள்ளையா என்று. என்ன நிறம் என்றாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். எந்த நிறத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும் அதற்கு எதிர்நிறம் ஒன்றிருப்பதை மறந்து விடாதீர்கள். என் வாழ்வில் சாபம் என்ற ஒன்றே இல்லை என்று உறுதியளிக்கிறேன். சாபத்தின் வேரினை கடந்த நிலையில் சொல்கிறேன், வாழ்க்கை வாழ்வதற்கானது. வாழுங்கள். உங்கள் அறிவியலின் எதிர்கோணத்தை கண்டடையுங்கள். நீந்துங்கள். இந்த உலகை கண்கொண்டு பாருங்கள். விடியட்டும் உங்களுக்கும் எனக்குமான இந்த இரவு. வெளிச்சம் வரட்டும். அதைக் கைகளில் ஏந்தி இந்த உலகத்தை குதுகலமாக்குவோம். நன்றி நண்பர்களே. விடைபெற்று கொள்கிறேன்.”

***

மதியழகன்

கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்

1

லும்பர்கள்-2

ஈர ஜெர்கின்..
*
பாழ் முகம் தரித்த கருநிற நீரில்
பாதங்களோடு இழுபடுகின்றன நகரின் ஜல்லி பெயர்ந்த முதுகுத் தண்டுவடங்கள்
கழன்று மிதந்தோடும் ரப்பர் செருப்புகளின்
பாதை
வேறெங்கோ சுழித்துக்கொண்டு
கசடுகளை கைப்பிடித்து குதூகலிக்கிறது
மழை சொட்டும் சிறுவட்ட அலைகளின் விளிம்பில்
விரலளவு தவளைக் குஞ்சுகளின் குதியாட்டம்
நீந்துவதும் சொற்பத் தரை மேட்டில் துள்ளுவதுமான
ரெட்டை வாழ்வின் சாத்தியங்களாகி
நெளியும் மனித பிம்பங்களுடைய போக்கின் மீதொலிக்கிறது
சின்னஞ் சிறிய கர்ர்ர்ர்ரரக்க்
திரும்பிப் பார்
அப்பனே
இன்னுமொரு கர்ர்ர்ரரரக்க்க்

*

அப்படியும் கூட..

பேயாட்ட காற்றெதுவும் இல்லை
பெரும்பேச்சின் தொடர் ஊதலில் காதுவிடைத்த நாய்கள்
போன மழைக்கு மீந்த இடிபாடுகளுக்குள் பதுங்கின
சிறுபாலத்தையும் மூழ்கச் செய்தபடி புரண்டோடும் கழிவுகளை கரைமீறி
திருப்பிவிட்ட இன்னுமொரு நகரம்
வேறொரு திசையை காபந்து பண்ணிக்கொள்கிறது
தற்காப்பென அளந்து
பெருவிரலில் தொடங்கி மெல்ல இடுப்புவரை உயரும் நீர்மட்டத்தை
முடிவு செய்திருக்கிறார்கள் யார்யாரோ எவ்வெப்போதோ
முன்னுதாரணங்களை நகைமுரண்களை புள்ளிவிபரங்களோடு
சூடம் ஏற்றி திறந்துவிட்ட கனஅடிகள்
அஞ்சாயிரம்
பத்தாயிரம்
பதினஞ்சாயிரம்
நடுவிலே ஒரே ஒரு பிம்பிலிக்கா பிலாப்பி

*

Survival of the Fittest..

நுண்ணுயிர்களின் பிழைப்புவாதம் குறித்து மணிக்கணக்கில்
பேசிக்கொண்டிருந்தோம் நள்ளிரவில் அலைபேசியில்
அவசரமாய் மூத்திரம் பெய்ய உள் படியிறங்கி பாத்ரூமுக்குள் நுழையும் பொருட்டு
கதவைத் திறந்தால் பாத்ரூமே பெய்துகொண்டிருந்தது
வெளிச்சாக்கடையை
கரப்பான்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டின் மூடிகளை
ஆராய்ந்தபடி நீண்ட மீசைகளைக் கொண்டு எதிர்காலத்தை அளந்தபடி
பூரான்களுக்கு நீச்சல் தெரிந்திருக்கிறது
முனைக்கு தலா ஒரு தலையுள்ள மண்புழுக்களின் முடிவுகள் எப்போதும் குழப்பம் மிக்கவை;
அதனாலென்ன டைல்ஸ் சுவற்றின் பூக்காம்புகளை பற்றிக்கொண்டு நெளிந்தபடி நக்கல் செய்கின்றன
ஃபிரஷ்ஷாக பொரிந்துவிட்ட முட்டைகளின் தயவில் நம்பமுடியாத அளவில்
இத்துனூண்டு தவளைக் குஞ்சுகள்; தவளைக் குஞ்சுகள்
வெளியே மழை ஓங்கி பெய்தால் பதிலுக்கு உள்ளே சாக்கடையை பெய்கிறது பாத்ரூம்
சிலந்திகள் மொத்தமும் உட்கூரைகளில் மேலும் மேலும் நூலாம்படையை
உற்பத்தி செய்கின்றன; பல்லிகளின் உருளும் சாம்பல் விழிகளில் நம்பிக்கை இழந்த சிலந்திகள்
அர்த்தம் நலிந்த கொசு பேட்டை மின்சாரம் சப்ளை தொலையவிருக்கும் ஹோல்டரில்
பத்திரமாக சொருகி வைக்க வேண்டும் முதலில்;
கொலையெல்லாம் பிறகு

*

சரி சரி போங்க ஸார்..

சாலை விளிம்புகளில் பொக்லைன்கள் வாரிக்கொட்டிய சாக்கடைக் கசடுகளை
ஏளனமாக பார்த்தபடி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது கூவம்
அதை அள்ளிக்கொண்டு போக ஆறு டயர்கள் உள்ள மஞ்சள் பூதங்கள் வரப்போவதில்லை
அடுத்த மழையில் கசடுகள் தாமே கரைந்து மீண்டும் தன்னிடமே வந்துவிடும் என
நதி அறிந்து வைத்திருக்கிறது ஐம்பதாண்டு காலமாக
கரோனாவின் சம்பிரதாய முகம் அணிந்த மாஸ்க்குகள் பார்வையிடுகின்றன
மூன்று லேயரில் சீராக வடிகட்டப்படும் மூச்சில் கலந்திருக்கிறது
சமூக அம்சத்தின் மேடு பள்ளங்கள்
மற்றபடி அறிக்கைகள் நலத்திட்டங்கள் கவனப்படுத்தல்கள் மீடியா பிளிறல்கள்
சர்வே அலறல்கள் கூடவே போர்க்கால நடவடிக்கைகள் நடவடிக்கைகள் நடவடிக்கைகள்;
பல்டி அடிக்கும் வேடிக்கைகள்

*

கிளிஷே அல்லாத கிளிஷே..

இழப்பின் துயரில் எஞ்சும் முன்பகலை மோதி திறக்கும் மனத்தின் சாம்பல்நிற கண்கள் யாசிக்கின்றன
நிம்மதியை
தூக்கத்தை
ஊறி நசிந்த நம்பிக்கையை
பாதாளத்துக்கு இட்டுச் செல்லும் உண்மைகளை
மினுக்கி மினுக்கி இருண்டுகொள்ளும் குழல் விளக்கின் பழுப்பு நிறத்தை
வந்துவிட்டார்கள் க்ளோரின் பொடிகளைத் தூவியும் டெங்கு எச்சரிக்கையை குதப்பியும்
ஓர் இரவின் பொருட்டு நழுவிட வாய்ப்பற்ற கனவுத் துருத்திகளை மூடிக்கொள்கின்றன
நாசிவழியில் மூளைக்கு ஏறும் க்ளோரின் பொடிகள்
‘ஜல்தியா மாஸ்கை போடு சார்’ ‘ஜல்தியா மாஸ்கை போடு சார்”

*

அதாவது..

நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம் பின்பற்றும்படி
நாங்கள் பின்பற்றப்பட்டோம் அறிவுறுத்தும்படி
பின் நாங்கள் பட்டோம்
உறுத்தும் அறிவு
பற்றும்படி

*

சமூக இடைவெளியின் ஏரி வாயா.. குளத்து வாயா..

இடைவெளிகளில் ஈரம் சொட்ட கழிவு நாற்றத்துடன் குறி விறைத்திருக்கும் சமூகத்தை
ஏன் அவ்வப்போது விசிட் அடித்து ஆட்டிப்பார்க்கிறீர்கள் ஐயன்மாரே
வெள்ளுடுப்பின் ஓரங்களில் பறக்கிறது பாரும் கோட்டையில் கொடி கட்டின கரை
சந்துகளில் நீங்கள் புதுரோடு போடுகிறீர்களோ இல்லையோ தயவுசெய்து
நிறைய ஸ்பீடு பிரேக்கரையாவது கட்டி வையுங்கள்
அடுத்த கனமழைக்கு பத்திரமாக அவற்றில் ஆங்காங்கே ஏறி நின்றுகொள்வோம் ஐயன்மாரே

*

தொல்நிலை..

திடுமென்ற இடி பளீரென்ற மின்னல்வெட்டு; இதற்கெல்லாம் அறுந்து விழுந்துவிட மாட்டேன்
தேவைப்பட்டால் மொத்தமாக சாய்ந்துவிடுவேன் என்கிற நம்பிக்கை அளிக்கிற
மின்கம்பத்தின் அருகே இடுப்பில் ஒரு கையூன்றி நிற்கிறான் சிறுகூந்தல் வளர்க்கும் கவிஞன்
இதமான சிகரட்டின் நுனி கங்கு ஒளிர்கிறது இருட்டில்
அணைந்துவிடுகிற ஒவ்வொரு இழுப்புக்கும் க்ளிக்குகிறான் ஊதா நிற லைட்டரை
‘ஒரு வார்த்தைய தான் வந்து தொலைஞ்சா என்ன சனியனே’
சுண்டி எறிந்த கோபத்தில் நத்தையின் வீட்டுக்கூரையை மினுக்கென வெளிச்சமாக்கி புதருக்குள்
மாயமாகிறது வார்த்தை

*

அம்மா சத்தியம்..

கெட்டுப் போய்விடாமல் ரீ-சைக்ளிங் பிளாஸ்டிக் பைகளில் சிரத்தையாக ஒளித்து வைத்திருக்கும்
எங்கள் காய்கறிகளை குளிரூட்டி காபந்து செய்கிற குளிர்சாதனப்பெட்டியின் மீது
சத்தியம் செய்துகொடுங்கள்
சந்தைகளின் பெருக்கத்துக்குரிய உத்திரவாதத்திற்கு இன்னும் இன்னும்
கன்னங்கரேலென அதே தரத்தில் சாக்கடைகளை உற்பத்தி செய்வோம் என
சத்தியம் செய்துகொடுங்கள்

*

Mammals..

மல்டிபிள் காம்புள்ள பன்றி ஒரு பாலூட்டி; சாக்கடை போக்கிடம்
மல்டிபிள் காம்புள்ள நாய் ஒரு பாலூட்டி; தெருவின் இருள்மூலை போக்கிடம்
மல்டிபிள் காம்புள்ள பூனை ஒரு பாலூட்டி; கைவிடப்பட்ட எதுவும் போக்கிடம்
மல்டிபிள் காம்புள்ள எருமை ஒரு பாலூட்டி; கழிவுச் சதுப்பு போக்கிடம்
ரெட்டை காம்புள்ள பாலூட்டி ஒரு பழைய காடு;
குருதி ருசி மறவா உறுமல் சத்தம் ஓய்ந்திடா பழங்காடு

***

கவிதைக்காரன் இளங்கோ
elangomib@gmail.com
சென்னை.

ந பெரியசாமி கவிதைகள்

0

தற்குறிப்பேற்ற அணி

1.
தொடுதல்
முடிச்சிடப்பட்ட உடைகளின்
இறுக்கத்தை அறிந்து
அவிழ்த்திட பிரயோகிக்கும்
பலத்தை கணக்கிட அல்ல.
முண்டி நிலம் பிளக்கும்
துளிர்ப்பின் அன்பது.
*
தொடுதல்
வேட்டைக்கான
காம வனத்தின்
கதவை தள்ளுவதற்கானதல்ல
அன்பெனும் நிலத்துள்
பற்று கொள்ளும் வேர்.
*
தொடுதல்
நீர் அடித்து நீர் விலகும்
பிரியத்தின் விளையாட்டு.
கயமையோடு கவ்விக்கொள்ளும்
காமத்தின் தாகமல்ல.
*
தொடுதல்
பறத்தலின் இறகொன்று
அலைந்தாடி நிலம் அடைதலின்
தாய்மை ஸ்பரிசம்.

2.
தழுவுதல்
அகத்துள்
மூடிக் கிடக்கும் விதைகளை
மொட்டுவிடச் செய்யும்
நீரோட்டம்.
*
தழுவுதல்
அம்மணம் கொள்வதற்கான
அச்சாரமல்ல.
மிதந்து கிடக்க
பிணைவன்பு பிறப்பிக்கும்
பறவையின் இறக்கை.
*
தழுவுதல்
இரு துளிகள்
இணைவு கொண்டு
ஒரு துளியாகும்
விந்தை.
*
தழுவுதல்
மரங்களில் பற்றிக்
கிடக்கும் கனிகளின்
சுவையமுதம்.
*
தழுவுதல்
நிலத்தின் மீது
நீர் உலாவும்
குளிர்மையின் பகிர்வு.
*
தழுவுதல்
தன்னில் மறைதல்
தன்னை மறைத்தலென
நிலவிற்கும் மேகத்திற்குமான
விளையாட்டு.
*
தழுவுதல்
நாவைத்
தொடும் மது
உமிழ்நீருக்கு ஊட்டும்
போதையின் மயக்கம்.

  • ந.பெரியசாமி – na.periyasamy@gmail.com

கேசினோ

0
சுஷில் குமார்           

ருநாளும் இல்லாமல் அன்றைக்குதான் என் அலுவலகக் காரை முதன்முதலாக எடுத்தேன். ஒருநொடி வேண்டாமெனத் தோன்றினாலும் அதற்கெதிராகத்தான் மனம் எப்போதும் முடிவெடுக்கிறது. வண்டியை எடுத்த கணத்திலிருந்தே ஏதோ நடந்துவிடப் போகிறது என உறுதியாகத் தெரிந்தது. உடன் வந்த அலுவலக நண்பனும் ஏறிய அடுத்த நொடியே தூக்கத்தில் ஆழ்ந்து விட்டான். இரண்டு பகல் இரவுகளாகத் தொடர்ந்து வேலையில் இருக்கிறோம். இந்தக் கடைசி விநியோகத்தை முடித்து விட்டால் ஒரு இருபத்திநான்கு மணிநேர ஓய்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கடல் கடந்து வந்து நாயாக அலையும்போதுதான் சொந்த நாட்டின் சுகங்களெல்லாம் கண்முன் வந்து நிற்கின்றன. கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடியிருக்கிறோம்?

ஒரு பத்து நிமிடம் பொறுமையாக ஓட்டியிருந்தால் எல்லாமே வேறுமாதிரியாக ஆகியிருக்கும். ஆனால், எல்லாம் இப்படி நடந்ததும் கூட ஒருவகையில் நல்லதுதான். ஒரு கதவு மூடினால் ஒரு கதவு திறக்கத்தான் செய்கிறது. நமக்கான உதயத்தை இறைவன் எந்த மேகத்திற்குள் ஒளித்து வைத்திருக்கிறான் என்பதைக் கண்டுகொள்ளும் திறமை வேண்டும். இல்லையென்றால் அலையோடு அலையாக தத்தளித்துக் கரை சேரவோ, ஒதுங்கவோ வேண்டியதுதான்.

*

தலைமை நிர்வாக அதிகாரியுடனான முந்தைய வார சந்திப்பில் ஏற்பட்ட மனக்கசப்பு இன்னும் நீங்கியபாடில்லை. இந்தியாவிலிருந்து வந்திருக்க வேண்டிய திருமணச் சான்றிதழ் இந்த பாழாய்ப்போன கொரோனா ஊரடங்கால் வந்து சேராமல் போக, இந்தத் தீவில் நான் இருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் என் நிறுவனம் எனக்காக அபராதம் செலுத்த வேண்டுமாம். மாதத்திற்கு ஆயிரத்து ஐநூறு டாலர்கள். இங்கே விசித்திரம் என்னவென்றால் நம் திருமணச் சான்றிதழ் ஆறு வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும். பின், இன்னும் அதே பெண்ணுடன்தான் திருமண பந்தத்தில் இருக்கிறோம் என்பதை உறுதிசெய்யும் விதமாக திருமணச் சான்றிதழைப் புதுப்பிக்க வேண்டும். அதை விண்ணப்பிப்பதற்காக ஒரு மூவாயிரம் டாலர் கடன் வாங்கி இந்தியாவிற்குச் சென்று வந்திருந்தேன்.

சந்திப்பின் முடிவில் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தார்கள், அடுத்த மூன்று மாதங்கள் நான் சம்பளம் இல்லாமல் வேலைசெய்ய வேண்டும், இல்லையென்றால் உடனடியாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு என் சொந்தச் செலவில் இந்தியாவிற்குத் திரும்பிவிட வேண்டும். இந்த வாரத்திற்குள் என் முடிவை நான் சொல்லியாக வேண்டும். இந்த நொடி என் கையிருப்பு பூஜ்யம். இந்த வாடிக்கையாளர் ஐந்தோ பத்தோ அன்பளிப்பாகக் கொடுத்தால் ஒரு பியர் குடிக்கலாம். இன்று நான் குடித்தே ஆக வேண்டும்.

*

அட..என்ன இப்படி முட்டாள்தனமாக வருகிறான்.. ஏய்… பார்த்து.. பார்த்து…. அடப்பாவி…. என்னால் முடிந்த அளவு இடப்புறமாக வளைத்து ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினேன். க்ரீச் என்று ஒரு சத்தம். படபடத்துப் போய் சீட் பெல்ட்டைக் கழற்றாமல் இறங்க முயற்சித்து தலையில் இடித்துக் கொண்டேன். இறங்கிப் போய் பார்ப்பதற்குள் இடித்தவன் நிற்காமல் பறந்துவிட்டான். வண்டியின் பின்புற பம்பரும் பின்புற விளக்கில் ஒன்றும் உடைந்து தொங்கிக் கொண்டிருந்தன. எரிச்சலில் கார் டயரில் ஓங்கி மிதித்து என் தலையெழுத்தை நொந்துகொண்டேன். அலுவலக நண்பன் ஒன்றும் நடக்காதது போல இறங்கி வந்து பம்பரைப் பார்த்ததும் எனைப் பார்த்து வாயைப் பொத்திக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தான்.

“டேய்..என்ன இது, பிளந்து வைத்திருக்கிறாய்? ஏற்கெனவே உன்மேல் கடுப்பில் இருக்கிறார்கள்… இந்த நிலைமையில் இது வேறா? நீ தொட்ட எல்லாமே பொன்னாகிவிடும் போலிருக்கிறதே?” என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான். முகத்தை திருப்பிக் கொண்டு சட்டைப்பையிலிருந்த சிகரெட் பெட்டியினை எடுத்துத் திறந்தேன். என்ன ஞாபகத்தில் காலிப்பெட்டியினை வைத்துக் கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேனோ! எரிச்சலில் அவனை முறைத்துப் பார்த்து, “சிகரெட் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அவன் தன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து நீட்டினான். அதை வாங்கிப் பற்ற வைத்தபோது ஒரு கை நீண்டு வந்து அதைப் பிடுங்கியது.

“எவன்டா அவன்…” என்று கோவத்தில் நிமிர்ந்து பார்க்க, என் ஜமைக்கா நண்பன் தன் கௌபாய் தொப்பியைத் தூக்கி சிரித்துக்கொண்டே வணக்கம் சொன்னான்.

“ஹேய் மை ப்ரோ…. நீ என்ன அந்த மாதிரி சிகரெட்டெல்லாம் புகைக்கிறாய்? இதோ, இதை புகைத்துப் பார்…” என்று ஒரு கருப்பு நிற சிகரெட்டை நீட்டினான். நல்ல புதினா மணம்.

அதை வாங்கிப் பற்ற வைத்து, “பார்த்தாயா பாபா, நமக்கென்று வந்து இப்பிடி நடக்கிறது…” என்று சலித்துக்கொண்டேன்.

“அட.. என்ன ப்ரோ, இதுவெல்லாம் ஒரு விசயமா? இதற்கே அசந்துவிட்டால் எப்பிடி? ஒரே நிமிடம்…” என்று சொல்லித் தன் காரை நோக்கிச் சென்றான்.

தன் காரிலிருந்து ஒரு மரப்பெட்டியை எடுத்து வந்தான். ஒரு சிறிய பட்டறையே வைத்திருப்பான் போல. அடுத்த அரைமணி நேரத்தில் வண்டி இடித்த தடமே தெரியாமல் எல்லாவற்றையும் பொருத்தி விட்டான்.

“சரி, சரி… பில்லை யார் பெயரில் போட வேண்டும்? உன் பெயரிலா, இல்லை உன் முதலாளி அந்த ஆஸ்ஹோல் பெயரிலா?”

“யார் மேல் போட்டாலும் நான்தான் செலுத்த வேண்டும்..”

“ரிலாக்ஸ் மை ப்ரோ… இரண்டு ட்ராகன் ஸ்டவுட் போட்டால் சரி ஆகிவிடும் ப்ரோ.. எப்படி?”

“மிக்க நன்றி பாபா.. யு மேட் மை டே… ஏற்கெனவே பயங்கர உளைச்சலோடு சுற்றிக் கொண்டிருக்கிறேன்… Good fren betta dan packet money.”

“ஊஹூ.. அருமை ப்ரோ… பாட்வா மொழியெல்லாம் படித்து விட்டாயா? அப்படியென்றால் இனி ஜமைக்கன் பெண்களெல்லாம் உன் மடியில் தான், போ!”

அலுவலக நண்பனிடம் காரைக் கொடுத்து அந்த வாடிக்கையாளர் இடத்திற்கு அனுப்பிவிட்டு பக்கத்திலிருந்த கடற்கரைச் சாலையில் நடக்க ஆரம்பித்தோம்.

“ஆமாம், மேரேஜ் சர்டிஃபிகேட் விசயம் என்னவாயிற்று? சிக்கலென்று சொன்னாயே?”

“ஒன்றும் புரியவில்லை பாபா… சட்டென்று ஒரு முடிவு எடுக்க முடியவில்லை… இந்தியாவிற்குப் போனால் எல்லாவற்றையும் மறுபடியும் ஜீரோவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்… அம்மாவிற்கு ட்ரீட்மென்ட்டிற்கே ஒரு தொகை ஆகிறது… வேறு யாரையும் நம்பி எதுவும் செய்ய முடியாது… இங்கேயே இருக்கலாமென்றால் மூன்று மாதங்கள் ஓசியில் வேலை செய்ய வேண்டும்… மண்டை காய்கிறது..”

“ம்ம்… நன்றாக யோசித்து முடிவு செய்… இப்போதைக்கு கொஞ்சம் பொறுத்துக்கொண்டு வேலையைப் பார்த்தால், ஒன்ஸ் சர்டிஃபிகேட் கொடுத்து விட்டால் சம்பளம் பிரச்சினையில்லை… கொஞ்சம் ஹைக் செய்யவும் வாய்ப்பிருக்கிறது.”

“ம்ம்.. பார்ப்போம்… விதி விட்ட வழி.. சரி.. நீ என்ன இந்தப் பக்கம்?”

“நமக்கும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான் ப்ரோ… இன்று இரவிற்குள் ஆயிரம் டாலர் ரெடி பண்ண வேண்டும்… மனைவிக்கு பெயின் வந்து கூட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்… முதலில் சிசேரியன் செய்ததால் மோஸ்ட்லி இந்த முறையும் ஆப்பரேட்தான் செய்வார்கள்… அவளும் அவளுடைய அம்மாவும் அங்கே தனியாக என்னதான் செய்வார்கள்? நாம் ஏதோ பெரிய இடத்தில் வேலை பார்க்கிறோமென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்…”

“ஓ… டெர்ரிபிள் மேன்… ஆமாம், பணத்திற்கு என்ன செய்வாய்?”

“அதுதான் ஒரு ஐடியாவோடு வந்துகொண்டிருந்தேன்… ரிஸ்க் தான்.. பட், வேறு வழியில்லை… இங்கே ஒரு கேசினோ க்ளப் இருக்கிறது.. ஒன்றிரண்டு முறை போயிருக்கிறேன்.. ஒரு முன்னூறு டாலர் வரை வென்றிருக்கிறேன்… இன்றைக்கு அதிர்ஷ்டம் இருந்தால் ஏதாவது தேறும்… பார்க்கலாம்…”

“என்ன பாபா இப்படிச் சொல்கிறாய்? கேசினோவெல்லாம் மிகுந்த ரிஸ்க், இல்லையா?”

“ம்ம்… யெஸ்.. பட், நோ அதர் கோ…”

அதற்குள் ஆளுக்கு இரண்டு சிகரெட்டுகள் முடிந்து விட்டிருந்தன. சூரியன் மெல்ல மறைந்து கொண்டிருந்தான். சின்ட் மார்ட்டின் தீவின் மாலைநேரக் கடற்கரை மிக அழகானது. கலகலவெனக் குடும்பங்கள் விளையாடி மகிழ்வதைப் பார்த்திருந்தாலே மனது இலகுவாகி விடும். எல்லாம் சரியாக அமைந்தால் இன்னும் ஒரு வருடத்தில் என் குடும்பமும் இதே கடற்கரையில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கும்.

“சரி.. நீயும் வா.. கேசினோ எப்படி இருக்கிறதென்று வந்து பார்..”

“பாபா.. சொன்னால் நம்ப மாட்டாய்.. என் கையில் மொத்தமே பத்து டாலர் தான் இருக்கிறது…”

“மை ப்ரோ.. பத்து டாலர் எவ்வளவு பெரிய இன்வெஸ்ட்மென்ட் தெரியுமா? நீ வா, நான் சொல்கிறேன் என்ன செய்யலாமென்று…”

*

கடற்கரைச் சாலையிலிருந்து விலகிச்செல்லும் சாலையில் பத்து நிமிட நடைக்குப் பிறகு ஒரு திருவிழா போலக் காட்சியளித்த அந்த பிரம்மாண்ட மைதானத்திற்குள் நுழைந்தோம். ஜோடி ஜோடியாக கையில் பியர் டின், கஞ்சா சகிதமாக ஏராளமான இளசுகள். சிலர் கிடைத்த இடத்தில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சில பதின்பருவ இளைஞர்கள் தங்களது சூப்பர் பைக்குகளில் சாகசங்கள் செய்து கொண்டிருக்க, அவர்களது தோழிகள் தங்கள் அலைபேசிகளில் படம்பிடித்தனர். இடதுபுறம் மிக உயரமான ஒரு ராட்டினம் அலறல்களுக்கிடையே வேகம் கூட்டிக் கொண்டிருந்தது. நம் ஊர்த் திருவிழா நாட்கள் எப்படியிருக்கும்? அந்த மைனர்த்தனமெல்லாம் இப்போது எங்கே போயிற்று?

கேசினோ வாசலில் ஒரு மிகப்பெரிய ‘ரௌலட்’ விளையாட்டுச் சக்கரம் வண்ண விளக்குகளுடன் சுற்றிக் கொண்டிருந்தது. வாசலின் இருபுறங்களிலும் பலவிதமான போதைப்பொருட்களுக்கான சிறிய கடைகள், துரித உணவுக்கடைகள், உட்கார்ந்து அரட்டையடிக்க ஏதுவாக மேசைகள், நாற்காலிகள்… கூடவே ஆடலும் பாடலும்.. கேசினோவிற்கு உள்ளே செல்ல முடியாதவர்களும் சென்று முடித்து வெறுத்தோ மகிழ்ந்தோ வந்தவர்களும் என ஒரு கலவையான கூட்டம்.
நுழைவுக்கட்டணம் செலுத்தி என்னை உள்ளே அழைத்துச் சென்றான். வாசலில் எங்கள் உடல் முழுதும் தடவிப் பார்த்து சோதித்தபின், எங்கள் மணிக்கட்டுகளில் ஒரு காகிதப் பட்டையைக் கட்டி அனுப்பினார்கள்.

ஓரமாக இருந்த ஒரு மேசையில் உட்கார்ந்து சுற்றிலும் வேடிக்கை பார்த்தேன். பணியாள் ஒருவன் வந்து எங்கள் மேசையில் இரண்டு கோப்பை பியர் வைத்துவிட்டு, சாப்பிடுவதற்கு என்ன வேண்டும் என்று கேட்டான். கேசினோவில் எவ்வளவு வேண்டுமானாலும் இலவசமாகக் குடிக்கலாம். அதற்கும் காரணம் இருக்கிறது, இல்லையா?

முதல் சுற்று குடித்து முடித்தவுடன், பக்கத்திலிருந்த ‘சிஸ்ஸிலிங்’ என்ற விளையாட்டிற்கு அழைத்துச் சென்றான். முதலில் அவனே பத்து டாலர்கள் பந்தயம் வைத்து விளையாடினான். திரையில் ஐந்து கட்டங்களிலாக பல்வேறு பழங்களின் படங்களும் நட்சத்திரங்களும் எண்களும் ஓடிக்கொண்டிருந்தன. சற்று ஓடி நிற்கும் கட்டங்களில் ஒரே மாதிரியாகப் பொருந்தி வரும் படங்களைப் பொருத்து நமக்கு வெற்றி கிடைக்கும். முதல் ஆட்டத்திலேயே நூறு டாலர்கள் வென்று விட்டான் நண்பன். அடுத்து என்னை விளையாடச் சொன்னான். நான் வேண்டாமென மறுத்தும் எனை வலியுறுத்தி விளையாட வைத்தான். கையிலிருந்த பத்து டாலரை வைத்து ஆரம்பித்தேன். ஊரில் ஒடங்காட்டில் விளையாடிய ஆடுபுலி ஆட்டமும், ரம்மியும் கழுதையும், அடிதடிகளும் கண்முன் வந்து சென்றன. திரையில் படங்கள் சுற்றிச்செல்ல என் இதயம் வேகமாக அடிக்க ஆரம்பித்தது. வென்று விடுவேன் என ஒரு குரல் உள்ளிருந்து உறுதியாகச் சொல்லியது. திரையில் வந்த முடிவைப் பார்த்து சத்தமாகக் கத்தி நண்பனைக் கட்டிப் பிடித்துவிட்டேன். முதல் ஆட்டத்திலேயே நூறு டாலர்கள்.

அடுத்த கோப்பை பியர் மனதைக் கொஞ்சம் இலகுவாக்கியது. ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். பக்கத்து மேசையில் ஒரு ரௌலட் விளையாட்டு வெகு மும்முரமாக ஓடிக்கொண்டிருந்தது. சற்றும் யோசனையின்றி ஆயிரம் யூரோக்களை எடுத்து ஒரே சுற்றில் பந்தயம் கட்டின ஒருவனைப் பார்த்து எல்லோரும் மலைத்து நிற்க அவன் சிரித்தவாறு தன் காதலியின் காதில் ஏதோ கிசுகிசுத்தான். அவள் அவனது தோளில் கைவைத்து தட்டிக்கொடுத்தாள். நான் என் சட்டைப் பையிலிருந்த நூறு டாலருக்கான கேசினோ நாணயங்களை ஒருமுறை தொட்டுப் பார்த்தேன்.

நண்பன் மறுபடியும் ‘சிஸ்ஸிலிங்’ விளையாடினான். முடிவைப் பார்த்ததும் பெருமையாக என்னைப் பார்த்துக் கண்ணடித்தான். வெறும் பத்து டாலர் வைத்து முன்னூறு டாலர் சம்பாதித்து விட்டான். எனக்குள்ளும் ஒரு மெல்லிய ஆசை வந்து தொற்றிக்கொண்டது. இருந்தாலும், கிடைத்த நூறு டாலர்களை இழக்கவும் மனதில்லை. ஆனால், முடிவெடுப்பதற்கு நீண்ட நேரம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. முடிவெடுப்பதில் தானே முதல் பெரும் சூது ஆரம்பிக்கிறது? அடுத்த இருபது நிமிடங்களில் பத்து பத்து டாலர்களாக வைத்து இருநூறு டாலர்கள் சம்பாதித்தேன். ஏதோ சாதித்து விட்ட மாதிரி ஒரு கர்வம் வந்து ஒட்டிக்கொள்ள, மூன்றாவது கோப்பை பியர் கொண்டு வந்த பையனுக்கு ஒரு பத்து டாலரைக் கொடுத்துச் சிரித்தேன்.

அடுத்திருந்த ‘ப்ளாக் ஜேக்’ என்கிற விளையாட்டு மேசைக்கு அழைத்துச் சென்றான் நண்பன். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருகின்ற சீட்டு விளையாட்டு தான். ஐந்து டாலர்களில் ஆரம்பிக்கும் விளையாட்டு. இரண்டு சீட்டுகளின் கூட்டுத் தொகை உங்களை எதிர்த்து விளையாடுபவரை விட அதிகமா குறைவா என்பதைப் பொருத்த அதிர்ஷ்ட விளையாட்டு. விளையாட்டை நடத்தியவன் அடிக்கடி பதினேழு என்றும் இருபத்தி ஒன்று என்றும் சொல்லிக் கொண்டிருந்தது கேட்டது. நண்பன் பெரிய விற்பன்னன் போல விளையாடிக் கொண்டிருந்தான். முதலில் அவன் பக்கம் அதிர்ஷ்டக்காற்று வீசினாலும் தொடர்ந்து விளையாடிய சுற்றுகளில் தோல்வியடைய ஆரம்பித்தான். இடையிடையே சிகரெட்டுகளாக ஊதித்தள்ளிக் கொண்டிருந்தான். சுற்றி இருந்த நண்பர்கள் இருபுறமும் நின்று உற்சாகப்படுத்த, விளையாட்டு தீவிரமானது. எனக்குச் சோர்வாகத் தோன்ற மெல்ல அடுத்தடுத்த மேசைகளுக்குச் சென்று வேடிக்கை பார்த்தேன். பல மேசைகளில் பெண்கள் ஆண்களை அசாத்தியமாகத் தோற்கடித்தனர். சில பெண்கள் தலையில் கைவைத்து சோர்ந்து உட்கார்ந்திருந்தனர். ஒரு மேசையில் திடீரென ஏதோ அடிதடி ஆகிவிட கனத்த உடலுடையை கருப்புச் சீருடையணிந்த பாதுகாவலர்கள் வந்து சச்சரவிட்டவர்களை இழுத்துச் சென்று வெளியேற்றினர்.

நான் விளையாடிய ‘சிஸ்ஸிலிங்’ மேசையில் இப்போது ஓர் இளம்பெண் விளையாடிக் கொண்டிருந்தாள். அருகே சென்று அவளுக்குத் தெரியாமல் உற்றுப் பார்த்தேன். மூன்றே சுற்றுகளில் ஐநூறு டாலர்கள் வென்று முகம் முழுவதும் புன்னகையோடு அடுத்த மேசைக்குச் சென்றாள். ஒருநொடி தோன்றிய வீறாப்பில் நான் உட்கார்ந்து மறுபடியும் விளையாட ஆரம்பித்தேன். அம்மாவின் முகமும், மனைவியின் காத்திருப்பும் வேறு மனதில் வந்துபோக இன்னும் தீவிரமாக விளையாடினேன். எத்தனைச் சுற்றுகள் விளையாடினேன், எத்தனை கோப்பை பியர் குடித்தேன் என்று தெரியவில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில் என் கையில் பத்து டாலருக்கான ஓர் ஒற்றை நாணயம் மட்டுமே இருந்தது. அந்த விளையாட்டுத் திரையை சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளுக்குள் இருந்து ‘அந்தக் கடைசிப் பத்து டாலரையும் வைத்துவிடு, இந்தச் சுற்றில் நூறு டாலர் அடித்து விடுவாய் பார்’ என்று ஒரு குரல்.

அப்போது ஒரு மெல்லிய வெண்மையான கை என் தோளின் மீது படர்ந்து, “உங்கள் தனிமையைப் போக்க நான் உதவலாமா?” என்று ஸ்பேனிஷ் மொழியில் கேட்டது. அவள் ஓர் அப்சரஸ். தங்கநிறச் சுருள் முடியும், மெல்லிய சிவப்பு உதட்டுச் சாயமும், பாதி திறந்த திரண்ட மார்பும் ஒரு நொடி என்னை உலுக்கி விட்டன. அருகே வந்து உட்கார்ந்து கையை நீட்டித் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

“ஒருவேளை இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லையோ? வருத்தத்தில் இருக்கிறீர்கள் போல?”

நான் ஆமெனத் தலையாட்டினேன்.

என் கையைத் தூக்கி மெதுவாக முத்தமிட்டவாறு, “அதனாலென்ன, இன்று உங்களுக்கு வேறு ஒரு ஜாக்பாட் கிடைக்கப் போகிறதே!” என்று சொல்லிக் கண்ணடித்தாள்.

இந்தத் தீவில் வந்து இறங்கிய நாளிலிருந்து இன்றுவரை ஒருமுறை கூட எந்தவொரு பெண்ணும் என்னை முத்தமிட நான் அனுமதித்ததில்லை, நானும் எந்தவொரு பெண்ணையும் முத்தமிட்டதில்லை. நண்பன் கூட அடிக்கடி ‘வோர் ஹவுஸிற்கு’ அழைப்பான். அவனுடன் சென்று வேடிக்கை பார்ப்பதுடன் சரி. ஸ்பேனிஷ் பெண்கள் என்றால் ஒரு மணிநேரத்திற்கு நாற்பது டாலர், அதுபோக ஒரு டக்கீலா வாங்கிக் கொடுக்க ஒரு ஏழு டாலர், உணவிற்கும் அறைக்குமாக ஒரு இருபது டாலர், மேலும் கூடுதல் அன்பளிப்பாக ஒரு மூன்று டாலர் என மொத்தம் எழுபது டாலர் இருந்தால் ஒரு மணிநேர உல்லாச வாழ்க்கை வாழ்ந்து விடலாம்.

“தவறாக எடுத்துக் கொள்ளாதே.. எனக்கு விருப்பமில்லை.. அது போக, என்னிடம் வெறும் பத்து டாலர் மட்டுமே உள்ளது..” என்றேன்.
சற்று யோசித்தவள் அவளது முகத்தில் முன் விழுந்த முடியைத் தன் விரலில் சுற்றியவாறே, “நோ ப்ராப்ளம்… யு நோ வாட், என்னுடன் வாருங்கள்.. நான் உங்களுடன் இந்த இரவைக் கழிக்க விரும்புகிறேன்.. பணம் எனக்கு முக்கியமில்லை..” என்றாள்.

என்னதான் நான் வேறு எந்தப் பெண்ணையும் முத்தமிடவில்லை என்றாலும், நான் ஒன்றும் யோக்கியனில்லை. என் அலுவலகத்தில் சேவைப் பிரிவில் இருக்கும் ஒரு பெண்ணிடம் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு தான். காதல், காமப்பேச்சுகள் எல்லாமும் உண்டுதான். ஆனால், அதுவும் பேச்சோடு சரி.

இந்த தேவதையின் அழைப்பை மறுக்க உள்மனம் ஒத்துக் கொள்ளவில்லை. நான் எழுந்திருக்க எத்தனித்த கணம் என் அருமை ஜமைக்க நண்பன் பின்னிருந்து எங்கள் இருவரையும் சேர்த்து அணைத்து, “சியர்ஸ் நண்பர்களே.. வாருங்கள்.. நம் தோல்வியைக் கொண்டாடுவோம்..” என்று கனைத்தான்.

அந்தப் பெண் திடுக்கிட்டு அவனது கையைத் தட்டிவிட்டு எங்களிடமிருந்து விலகிச்சென்றாள். போகும்போது என்னைத் திரும்பித் திரும்பி பார்த்தாள். அவளது முகம் சோர்ந்து கவலையுற்றிருந்தது.

“சாரி ப்ரோ.. நான் வந்து கெடுத்துவிட்டேனோ?”
நான் இல்லையெனத் தலையாட்ட, “போயிற்று.. இருந்த கொஞ்சமும் போயிற்று.. சரி உன்னிடம் எவ்வளவு மிஞ்சியது?” என்று கேட்டான். அவனது முகத்தில் தோல்வி குறித்த வருத்தம் துளியும் இல்லை.

நான் என் கையிலிருந்த ஒற்றை நாணயத்தைக் காட்டினேன். என் தோளில் தட்டிக்கொடுத்து, “சரி விடு.. இன்று நம் காட்டில் மழை இல்லை போலும்.. வா, கிளம்பலாம்.. .ஏதாவது சாப்பிடலாம்..” என்றான். அந்த ஆயிரம் யூரோ நபர் இன்னும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி நான்கு பெண்களும் சில ஆண்களும் குதூகலித்துக் கொண்டிருந்தனர்.

கேசினோவின் வெளியேயிருந்த நடைபாதையின் ஓரத்தில் ஒரு கல்மேசையின் மீது உட்கார்ந்தேன். போதையின் உச்சத்தில் ஒரு வெறுமையுணர்வு. கிடைத்த தோல்வியும் கையிலிருந்த பத்து டாலரும், நாளைய என் வாழ்க்கையும் என மாறி மாறி எண்ணங்கள். நண்பன் ஏதாவது சாப்பிட வாங்கிவரச் சென்றிருந்தான். பக்கத்து மேசையில் தலையைக் கவிழ்ந்தபடி உட்கார்ந்திருந்த ஒரு பெண் உருவம் என்னை ஏதோ செய்தது. அவள் விரக்தியில் ஏதேதோ புலம்பிக் கொண்டிருந்தாள். இடையிடையே சத்தமாக அழுதாள். கையிலிருந்த ஒரு கோப்பை பியரை ஒரே மூச்சில் குடித்துத் தூக்கி எறிந்தாள். மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு புலம்ப ஆரம்பித்தாள்.

அப்போது என்னருகே வந்து உட்கார்ந்தது இன்னொரு பெண் உருவம். லாரா! என் பாட்டு தேவதை. என்னருமைத் தோழி. இங்கே இன்னொரு இரவு விடுதியில் பாடகி. அவளைப் பார்த்ததும் சட்டென எழுந்து அவளைக் கட்டிக் கொண்டேன்.

“கேசினோவில் உனக்கென்ன டா வேலை, என்னருமைத் தம்பி?” என்று என் தலையில் அடித்தாள்.

“அது..லாரா… சும்மா ஒரு ஃபிரெண்டுடன் வந்தேன்… நீயும் இங்கே ஆடுவதுண்டா?”

“ஒரு காலத்தில்… என் அளவிற்கு இங்கே வென்றவனும் கிடையாது, தோற்றவனும் கிடையாது…”

“ஓ… நானும் இன்று முயற்சி செய்தேன்.. ஜீரோ லாஸ்.. ஜீரோ கெயின்… உனக்குத்தான் என்னுடைய அதிர்ஷ்டத்தைப் பற்றித் தெரியுமே!”

“அடப் பாவி… ஒழுங்காக உன் வேலையைப் பார்ப்பாயா? கேசினோவிற்கல்லவா வந்திருக்கிறார் முதலாளி!”

நண்பன் வந்து இரண்டு பெரிய பர்கர்களை மேசையில் வைத்துவிட்டு உட்கார்ந்தான். இருவரையும் அறிமுகம் செய்து வைத்தேன். மூவரும் பகிர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். திடீரென, பக்கத்து மேசைப்பெண் கதறிக்கதறி அழ ஆரம்பித்தாள். அப்படியே சாய்ந்து தரையில் சுருண்டு படுத்தாள்.

“அது சரி… நீ ஏன் இங்கே விளையாடுவதை நிறுத்திவிட்டாய் லாரா?”

“ஓ… நல்ல கேள்வி… ஏனென்றால், நான் புத்திசாலி ஆகிவிட்டேன்… புத்தியுள்ளவன் சூதாட மாட்டான்…” என்று சொல்லி கேசினோவின் இரகசியங்களை எங்களுக்கு எடுத்துச் சொன்னாள். கேசினோக்களின் இரகசியமே ‘Bet more, gain more’ என்கிற மனநிலைக்கு வாடிக்கையாளர்களை ஈர்ப்பது தான். லாஸ் ஏஞ்ஜெல்ஸ் நகரிலிருந்து இந்த இயந்திரங்களைக் கொண்டு வந்து பொருத்துகிறார்கள். மிகத்தந்திரமாக வடிவமைக்கப்பட்ட கருவிகள். வெற்றியின் சுவையைக் காட்டி உள்ளிழுத்து பன்மடங்கு வியாபாரம் செய்யும் புத்திசாலிக் கருவிகள். இவற்றின் செயல் அடிப்படை கேயாஸ் தியரி போன்ற சில தியரிகள் தானாம்.

“ஒருமுறை, அப்படி லாஸ் ஏஞ்ஜெல்ஸிலிருந்து வந்திருந்த ஒரு நிபுணனிடம் கேசினோவில் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டேன்.. அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா?”

நானும் நண்பனும் ஆர்வமாக அவளை உற்றுப் பார்த்தோம்.
புன்னகையோடு, “விளையாடாமல் இரு என்றான்” என்றாள்.

*

கைகளை தலைக்கு அடைகொடுத்து அந்தப் புல்வெளியில் நான் படுத்துக் கிடந்தேன். நண்பன் தலையைக் கவிழ்த்து மெளனமாக உட்கார்ந்திருந்தான். கண்களில் கருவானின் மின்னும் வெள்ளிகள் நிறைய, ஓயாத கடலலைகளின் இரைச்சல் எனக்கு மிக அருகெனக் கேட்க, எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு வெற்று நிலத்தில் அசைவின்றி நின்று கொண்டிருந்தேன் நான். அந்த மௌனத்திலிருந்து பிரவாகம் எடுத்தது போல ஓர் இசை ஊற்றாகக் கிளம்பியது. நான் இன்னும் அசைவின்றியே நின்று கொண்டிருந்தேன். தொலைதூரத்தில் லாராவின் குரலில் ‘besame besame mucho’ என்கிற ஸ்பேனிஷ் பாடல்.. அவளது குரலில் தோய்ந்திருக்கும் ஒரு சோகம் கலந்த இனிமை… என் நினைவுகள் எல்லாம் அழிந்து மறதியின் ஆழடுக்குகளில் மூழ்கிச் செல்லச்செல்ல அவளோடு சேர்ந்து நானும் அந்தப் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தேன் என்று தெரியவில்லை. கண்விழித்த போது லாரா என் மார்பில் தலை சாய்த்து உறங்கிக் கிடந்தாள். நண்பன் அப்படியே சிலையாக உட்கார்ந்திருந்தான். இன்று கடந்து போன கணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக மனதில் வந்துபோயின.

நள்ளிரவில் லாரா கட்டியணைத்து விடைபெற்றாள். நானும் நண்பனும் கிளம்புவதற்காக எழுந்தோம்.

“ஒரு நிமிடம்…” என்று சொல்லிவிட்டுப் பக்கத்து மேசையின் கீழே விழுந்து கிடந்த பெண்ணின் அருகே குனிந்து தன் சட்டைப்பையிலிருந்த கடைசிப் பத்து டாலரை அவளது கைகளில் சொருகிவிட்டு வந்தான் என்னருமை ஜமைக்க நண்பன்.

***

சுஷில் குமார்
sushilkumarbharathi2020@gmail.com

புதுமைப்பித்தன் – கு.அழகிரிசாமி – தி.ஜானகிராமன் சிறுகதைகள்

2

சரவணன் மாணிக்கவாசகம்

ழுத்தாளர்கள் என்பதில் மட்டுமல்ல, எதிலுமே ஒப்புமை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.  எல்லாமே அதனளவில் தனித்துவம் வாய்ந்தது. அதனாலேயே என்னால் எல்லோரையும் ரசிக்க முடிந்தது. இவர்கள் மூவரையும் முழுமையாகப் படிக்காத, வாசகர்களுக்கு ஒரு புரிதலும் இவர்களைப் படிக்க வேண்டும் என்ற உத்வேகமும் வரக்கூடுமென்றால் இந்தக் கட்டுரையின் நோக்கம் நிறைவேறி விடுகிறது.

தி.ஜா நாவலில் செய்த சாதனையுடன் ஒப்புமை செய்யத்துணியும் அளவு கூட கு.அழகிரிசாமி எந்த நாவலையும் எழுதவில்லை. புதுமைப்பித்தன் நாவலே எழுதவில்லை. சிற்றன்னை நெடுங்கதை. எனவே சிறுகதைகள் மட்டுமே மூவருக்கும் பொதுவானவை.

அடுத்தது எழுதிய காலம். புதுமைப்பித்தன் எழுதியது 1933-லிருந்து 1948 வரை. கு.அழகிரிசாமி 1941-லிருந்து 1970. தி.ஜானகிராமன் 1945-லிருந்து 1982 வரை. புதுமைப்பித்தனின் கடைசிகாலம் சினிமா ஆசையில், காச நோய் பாதிப்பில் கழிந்தது. எனவே அவர் பதினைந்து வருடம் எழுதினார் என்று கூற முடியாது. பத்திரிகைத் தொழிலில் இருந்த பதினொரு வருடங்களே அதிக கதைகள் எழுதிய காலம். மூவரில் தி.ஜா தான் அதிக காலம் கதை எழுதியவர்.

அடுத்த விசயம் மூவரும் எழுதிய களம்,  சூழல் வேறு. புதுமைப்பித்தனுக்கு முன்பு சிறுகதை வடிவமோ, நேர்த்தியோ இருந்ததில்லை. புதுமைப்பித்தன் எழுதும் காலத்தில் எழுதிய கு.அழகிரிசாமியை இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான் என்று பாராட்டியிருக்கிறார். (புதுமைப்பித்தன் வரலாறு -தொ.மு.சி) கு.அழகிரிசாமி புதுமைப்பித்தனின் மீது பெருமதிப்பு வைத்திருந்தவர். (க.நா.சு கட்டுரைகள், அழகிரிசாமி கடிதங்கள்)

மூவருக்குமே அயல்நாட்டு இலக்கியங்களுடன் பரிச்சயம் இருந்திருக்கிறது. மூவரில் தி.ஜா மிகக்குறைந்த காலமே பத்திரிகை ஆசிரியராக (கணையாழி) இருந்திருக்கிறார். மூவருமே நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்கள். எனவே பலகாலமாய் பெரும்பான்மையோரால் சொல்லப்பட்ட இவர்களது இருபது சிறந்த கதைகளைப் பேசுவதே நியாயமான மாதிரி அளவாக இருக்கும்.

புதுமைப்பித்தன் 20:

செல்லம்மாள் :

அன்பு மனைவியின் அற்ப தேவைகளைக் கூட பூர்த்திசெய்ய இயலாத கணவர்கள் பிரமநாயகம் பிள்ளையிடம் தங்கள் சாயலைக் காணமுடியும். அவராவது மனைவிக்குப் பிடித்த பச்சைப்புடவையைக் கொடுத்து கட்டியும் விட்டுவிட்டார்! செல்லம்மாளின் கோணத்திலும், பிரமநாயகம் கோணத்திலும் இரண்டு கதையாக மாறும் நம் மண்ணின் கதை. இந்தக்கதை மிகப்பெரிய சாதனை என்று உணரப்படாமலேயே கடக்கப்பட்டது. துயரமே வாழ்க்கையாய் நடத்தும் சாமான்யனின் கதை.

அன்றிரவு :

கலைமகளில் 1946-ல் வந்த கதை. நரிகளைப் பரிகளாக்கும் திருவிளையாடலும் பிட்டுக்கு மண் சுமந்த கதையும் இணைகிறது. புதுமைப்பித்தன் கவிஞரும் கூட என்பதை நினைவுறுத்தும் கதைகளில் ஒன்றிது. துள்ளித்துள்ளிப் பாய்ச்சலாகிப் போகும் கதை. திருவிளையாடல் முடிந்தது. சிவனுக்கு பிரம்படிக்குப்பின் அங்கயற்கண்ணியின் ஆதுரத்தில் வேதனை அவிகிறது. பாண்டியனுக்கு சிவலோகப்பதவி. வாதவூரானுக்கு? நம்பிமோசம் போனவனின் வேதனை.

“வாதவூரனாக ஈசன் வேதனை கொண்டான். அவன் மனம் என்ற சர்வ வியாபகமான காலம் கொள்ளாத சர்வ மனம் நைந்தது. குமுறியது. கொப்புளித்தது. வாதவூரானாகக் கிடந்து வெம்பியது.”

ஒப்பந்தம் :

முழுக்க திருநெல்வேலிப்பிள்ளை வட்டார வழக்கில் அவர்கள் பழக்கங்கள், சம்பிராதயங்களைச் சொல்லிக்கொண்டே சென்று முடிக்கையில் ஒரு பெரிய டிவிஸ்ட். கொஞ்சப்பணத்தை வாங்கிக்கொண்டு சிறிதுநேரம் உடனிருக்கும் விலைமாதுக்கும், அதிகப்பணத்தை வரதட்சணையாக வாங்கிக்கொண்டு உடனிருக்கும் கணவனுக்கும் என்ன வித்தியாசம் என்கிறார்! கதை எழுதப்பட்ட வருடம் 1934.

ஒருநாள் கழிந்தது :

கோரைப்பாயை விரிப்பதற்கு ஒரு பத்தி அமைத்ததில் இருந்தே முருகதாசரின் ஏழ்மை தெரிகிறது. அவர் படும்பாட்டைப் பற்றி சிறு பிரக்ஞையும் இன்றி அவர் மனைவியும், குழந்தையும். குழந்தை அலமு அவள் உலகத்தில் சந்தோஷமாக இருக்கிறாள். நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரத்தைச் சொல்வதுடன் முடிவதில்லை இந்தக் கதை. கமலம் சொல்ல வந்ததை முழுங்குவதைக் கவனியுங்கள். எழுத்தாளராக சாகாவரம் பெற்ற கதைகளை எழுதி வறுமையில் வாடுவதற்கு சீலைப்பேன் குத்தப் பணம் கொடுத்தால் அதைச் செய்யலாம் என்று முருகதாசர் வாயிலாக தமிழின் சிறுகதையை முதன்முதலாக உலகத்தரத்திற்குக் கொண்டு வந்த புதுமைப்பித்தன் சொல்வதற்கு நாம் எல்லோருமே வெட்கப்படவேண்டும்.

கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் :

1943-ல் எழுதிய கதை. காப்பியில் சிக்கரி போல் பார்வதியும் சிவனும் வந்து ஆடினால் கூட கலப்படத்தை மட்டுமே அசல் என ஒப்புக்கொள்வோம் நாம். கடவுளிடம் சந்தா கேட்பது, வைத்திய முறை விளக்கம், வரம் வாங்கியவர் யாரும் உருப்பட்டதில்லை  என்று ஆரம்பம் முதல் முடிவு வரை எள்ளல் கலந்த கதை. ஆட்டம் தெரியாமல் ஆட வரலாமா என்று குழந்தை கடவுளைக் கேட்பது வட்டாட்டத்திற்கு மட்டுமல்லாது மனிதர்களுடன் இருப்பதற்கும் சேர்த்துத்தான்.

கயிற்றரவு :

கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்

கோலமும் பொய்களோ? அங்குக் குணங்களும் பொய்களோ? – என்ற பாரதியின் தத்துவ விசாரமே இந்தக்கதை. தலைப்பே கவிதை. முழுக்க முழுக்க வித்யாசமான நடையில் எழுதியது. தயிர்காரி வைக்கும் புள்ளி, சற்று தள்ளிப்போய் தேவாரம் படியுங்கள் என்பவற்றில் புதுமைப்பித்தன் எட்டிப் பார்க்கிறார்.

“நான் ஓடினால் காலம் ஓடும். நான் அற்றால் காலம் அற்றுப்போகும். காலம் ஓடுகிறதா? ஞாயிறு-திங்கள்-செவ்வாய்-நான் இருக்கும் வரைதான் காலமும். அது அற்றுப்போனால் காலமும் அற்றுப்போகும். வெறும் கயிற்றரவு!”

கலியாணி :

1935-ல் ஒரு Extramarital affair  கதை எழுத எவ்வளவு துணிச்சல் இருந்திருக்கும். முதலில் அந்த சமூகத்தின் வரைபடம். இரண்டாவது பதினேழு வயதுப்பெண்ணின் விரகதாபம். அடுத்தது விதி அமைத்துக் கொடுக்கும் சந்தர்ப்பம். இத்துடன் முடிவதில்லை. கலியாணி திருமண  உறவை விட்டு விலக விருப்பமின்றி தொடர நினைப்பதும், காதலன் அவளைக் கூட்டிக்கொண்டு ஊரைவிட்டு ஓட நினைப்பதுமே Bone of contention.

காஞ்சனை :

அமானுஷ்யக் கதை. சேமக்கலம் போன்ற திருநெல்லி வார்த்தைகள் புரியாவிட்டால் முழுதும் புரியாது. கதையின் சுவாரசியமே மனைவிக்கு என்ன நடந்தது என்று கடைசி வரை தெரியாததும், அவன் வட்டமிட்டதால் தான் வேலைக்காரி ஓடிவிட்டதாகத் தீர்க்கமாக நம்புவதும்.

காலனும் கிழவியும் :

பேரனா எமனா என்று தெரியாத அளவிற்குக் கண்பார்வை குறைவு இருக்கையில் பாசக்கயிறு கெட்டியாக இருப்பது மட்டும் எப்படித் தெரியும்? Logical Error. ஆனால் புராணம் படிக்காத ஜாதி, எமனுடனான வாக்குவாதம், எமனுக்கு மார்கண்டேயன் விசயத்தில் கோட்டை விட்டது நினைவுக்கு வருவது என்று பலவிசயங்களைத் தொடுகிறது. கயிற்றரவுக்கு நேர் எதிரிடையான தத்துவத்தை இந்தக்கதை பேசுகிறது.

சாபவிமோசனம் :

அகலிகையும் சீதையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்திப்பது நல்ல கற்பனை மட்டுமல்ல, இவர் சொல்ல நினைப்பதைச் சொல்லவும் உதவுகிறது. ஜனகனும் கோதமனும், அகல்யையும் கைகேயியும் நடத்தும் உரையாடல்கள் புதுமைப்பித்தனின் மொழியின் செறிவு. அகல்யை மனம் வருடக்கணக்கில் அலைபாய்வதும், சாபவிமோசனம் பெற்றும் பாபவிமோசனம் தராத சமூகமும் மாஸ்டரின் கைவண்ணங்கள். சீதை மணம் முடித்த பின் தாய்வீடு குறித்த தகவல்கள் இராமாயணத்தில் இல்லை. கதையில் ஜனகனின் உரையாடல் அந்தக்குறையைப் போக்குகிறது.. கிளைமாக்ஸில் எதிர்பாரா டிவிஸ்ட்.

இத்தனை காரணங்களினால் இன்றும் இது சிறந்த கதை.

துன்பக்கேணி :

1935-ல் வந்த கதை என்றால் நம்புவதே கடினம். சிறுகதை வடிவத்தில் இல்லாத நீள்கதை இது. பணம் போனாலும் பழிவாங்கவேண்டும் என்ற நிலச்சுவான்தார் மனநிலை, தேயிலைத் தோட்டங்களில் கூலிகள் நிலை, வெள்ளைக்காரர்களைக் கவர கங்காணிகளின் வழிமுறைகள், கலப்பு மணம் என்று எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாத தொனியில் நகரும் கதை.

நாசக்காரக் கும்பல் :

1937-ல் வெளிவந்த கதை. சைவப் பிள்ளைமார் எவ்வளவு ஜாதித் துவேஷம் பார்த்து இருக்கிறார்கள் என்பதை இந்தக் கதையில் சொல்கிறார். மதம் மாறுதல் நடக்கிறது. அடுத்த தலைமுறை முன் தலைமுறையிலிருந்து வித்தியாசமாக நடக்கிறது. அந்தக் காலகட்ட திருநெல்வேலி வாழ்க்கை படம் பிடிக்கப்பட்டுக் காட்டப்படுகிறது.

புதிய கூண்டு :

மதமாற்றம் தான் கதைக்கரு. அதற்கு உபயோகிக்கும் யுத்திகளுடன் ஒரு காதலும் சேர்கிறது. கிருத்துவர்களுக்கிடையே இருக்கும் பிரிவுகளும் பரஸ்பர வெறுப்பும் சொல்லப்படுகின்றது. ஆனால் மதபேதங்கள் தாண்டி பெண்மை எப்படி நடந்து கொள்ளும் எனச் சொல்வதில் இந்தக்கதை உயரத்திற்கு செல்கிறது.

பொன்னகரம் :

கதை நடக்கும் பகுதி குறித்த Landscape விவரணைகள் பின்னர் நடக்கப்போகும் விசயத்தின் முழுப்பாதிப்பையும் வாசகர் உணரச் செய்யும் யுத்தி. பின்னர் ரெய்னீஸ் ஐயர் தெருவில் வண்ணநிலவனும், நிறையக் கதைகளில் சு.வேணுகோபாலும் கடைபிடித்தார்கள். இந்தக் கதையில் பதிசேவை என்ற பாரம்பரிய மரபின் மேல் நவீன கதைசொல்லலைப் புகுத்துகிறார்.

மகா மசானம் :

மகாமசானம் தலைப்பே உருவகம். என் பெயர் போட்டு இந்தக் கதையை இப்போது பிரசுரித்தால் இது 1941-ல் எழுதியது என்பதை இந்தக் கதையை எழுதினார் என்பதை, இந்தக் கதையைப் படிக்காதவரால் கண்டுபிடிக்க முடியாத நவீனமொழிநடை. குருத்தோலை, பழுத்தோலையைப் பார்ப்பது, இளம் பிச்சைக்காரன் எரியும் வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என நினைப்பது, அப்பா பேரத்தில் ஜெயித்து மாம்பழ மோகத்தைத் தீர்த்துக் கொள்வது என கதை முழுதும் மேஜிக்.

மனித யந்திரம் :

சபலங்கள், மனோரதங்கள் ஒருவனை எப்படி ஆட்டிவிக்கும் என்பதே மனிதயந்திரம். லாஜிக்கலாக எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இருந்திருந்தால் அவர் ஏன் நாற்பத்தைந்து வருடம் ஒரே இடத்தில் வேலைபார்க்கப் போகிறார்?

வேதாளம் சொன்ன கதை :

சைவத்தைத் தூக்குவது, பௌத்த சமணத்தைக் குட்டுவது என்று கதை முழுதுமே எள்ளல். வேதாளம் எழுத்தாளன் போல் ராயல்டி கேட்பது போகிற போக்கில் செய்யும் நையாண்டி.

கபாடபுரம் :

இந்தக்கதை முழுக்கவே மேஜிக்கல் ரியலிசம். அம்மன் பெண் போல் தோற்றமளித்து சபலமேற்படுத்துகிறாள் என எழுதிய வருடம் 1945. காலத்தில் பின்னோக்கி பயணம் செய்வதும் நடக்கிறது. அந்தக் காலத்தில் இந்தக்கதை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்!

சிற்பியின் நரகம் :

மனதில் சூல்கொண்டு சிலை வடிப்பதும் பின் கனவில் அதை உடைப்பதற்கும் இடையில் இந்த மகத்தான கவைஞன் தொட்டுச் செல்லும் விசயங்கள் எத்தனை! இன்னொரு கோணத்தில் இவர் கதைகள் எதற்காக வடிக்கப்பட்டதோ அது மக்களிடம் வேறுவிதமாய் போய்ச் சேர்ந்த ஆதங்கத்தின் உருவகமா இந்தக்கதை!

கவந்தனும் காமனும் :

டிராம் ஓடிய சென்னை காலத்திய கதை. சென்னை அதிகம் மாறவில்லை. வேலை எப்படி ஒருவனின் ரத்தத்தை உறிஞ்சிவிடுகிறது என்பதில் இருந்து அசுரப்பாய்ச்சலில் கதை விலகுகிறது.

புதுமைப்பித்தன் நவீன ஆங்கில இலக்கியத்தின் கூறுகளை உள் வாங்கிக் கொண்டு அதை அப்படியே தமிழ் சூழலுக்கு கடத்துகிறார். மேஜிக்கல் ரியலிசம் வெளிநாட்டு சரக்கு என்று எப்படி சொல்ல முடியும்? பாட்டியின் வாய்மொழிக் கதைகளில் மேஜிக்கல் ரியலிசம் இல்லையா. அடுத்து புராணக் கதைகளில் கற்பனை கலந்து அதை நவீன இலக்கியமாக்குவது. பொன்னகரம் அம்முலு, கல்யாணி கதையின் கல்யாணி இருவருமே மணவினைத் தாண்டிய உறவு கொள்கிறார்கள். கற்பு என்ற சமாச்சாரத்தில் நம்பிக்கை இல்லை என்பதைச் சொல்லும் பொன்னகரம் கதையின் கடைசி வரி. அடுத்ததாக உளவியல் ரீதியான கதைகள். கல்யாணிக்கு ஊர்பேச்சும் பயம் ஆனால் உறவும் வேண்டும். சிற்பியின் நரகம் உள்ளிட்ட பல உளவியல் கதைகள். அப்புறம் காஞ்சனை போல Gothic stories. கயிற்றரவு போல தத்துவ விசாரக் கதைகள். மெய்ஞானபுரம், தூத்துக்குடி பாதிப்பில் மதமாற்றத்தை விமர்சனம் செய்யும் கதைகள். நடுத்தரவர்க்கத்தின் போலி மதிப்பீடுகளை கிண்டல் செய்தவர் முதலில் புதுமைப்பித்தன். பின்னர் ஆதவன். செல்லம்மாள் ஒருவகையில் அற்புதமான காதல் கதை. ஆனால் புதுமைப்பித்தன் சொல்லும் விதத்தில் காதல் நிறையப் பேரால் கண்டுபிடிக்க முடியாது போகிறது. சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை பிரச்சார நெடி துளியும் அடிக்காமல் எழுதிய ஒப்பந்தம் போன்ற கதைகள். சமகால சரித்திரத்தைப் பதிவுசெய்யும் துன்பக்கேணி போன்ற கதைகள் என்று ஒரு முழு பேக்கேஜ் ஆக இருக்கின்றன புதுமைப்பித்தன் கதைகள்.

வாழ்க்கை பற்றிய சொற்சித்திரங்கள், சாளரத்தின் வழியே பார்க்கையில் தெரியும் காட்சித் தீற்றுகள் போல் புதுமைப்பித்தனின் நிறைய கதைகள் அமைந்திருக்கின்றன. சமூகப் பிரச்சனைகளுக்குக் கலைவடிவம் கொடுத்தது தமிழில் முதலில் புதுமைப்பித்தனே. எழுத்தாளன் பிரம்மா போன்ற கற்பிதங்கள் இவரிடம் இல்லை. எல்லா எழுத்தாள கதாபாத்திரங்களும் வறுமையுடன் போராடுகிறார்கள். எதையும் புனிதம் என்று கருதும் மனநிலை இவரிடம் இல்லை. அதனாலேயே இவர் பல கதைகளில் நம்பிக்கை வறட்சித் தத்துவம் இருப்பது போல் தோற்றமளிக்கிறது. எள்ளல், நையாண்டி இவரது எழுத்துக்களில் இயல்பாய் வெளிப்படுகிறது. அவதாரம் போன்ற கதைகளில் ஓரினச்சேர்க்கை பற்றிக் கூறுகிறார். காலத்திற்கு முன் பிறந்த இந்த அற்புதக்கலைஞன் முயற்சிக்காத விசயங்கள் வெகுகுறைவு. கலை இலக்கியத்தில் மட்டுமல்ல. விளையாட்டுத்துறை போன்ற தனிப்பட்ட திறமை வெளிப்படும் எந்தத் துறையாக இருப்பினும், தன்னுடைய ஜீனியஸ் தன்மைக்கு  போட்டியாளர்  கண்ணுக்கெட்டிய தூரம்வரை  இல்லை என்பது கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். அதுவே புதுமைப்பித்தனுக்கும் தெரிந்திருக்கும். பொருளாதார ஸ்திரத்தன்மையின்றி, குடும்பத்தைப் பிரிந்து, அவர் காலத்தில் தனக்குரிய இடத்தைப் பெறாது, இருந்த சூழ்நிலையில் கலை இவ்வளவு தூரம் ஆலம்விழுதாக வானைத்தொடும் ஆசையுடன் பரவியிருக்கும் என்றால், பொருளாதாரச் சுதந்திரமும், நீண்ட ஆயுளும் கிடைத்திருந்தால் சென்றிருக்கும் தூரம் எவ்வளவாக இருந்திருக்கும்!

கு. அழகிரிசாமி 20

ஓட்டப்பந்தயம் :

நட்பு குறித்த கதை. அரசாங்க வேலை உட்பட ஐந்தாறு வேலையை விட்டுவிலகி நண்பனுடன் செல்வதற்கு என்ன காரணம்? ஹோமோ உறவு இல்லை. அநித்ய வாழ்க்கையைப் பற்றி அழுத்தமாகப் பதிய இதை ஒருவேளை சொல்லி இருக்கலாம்.

ராஜா வந்திருக்கிறார் :

கு.அழகிரிசாமி பெயர் சொன்னதும் எல்லோர் நினைவிலும் வரும் கதை. குழந்தைகள் உலகம் திருத்தமாகப் பதியப்பட்ட கதை. தாயம்மாள் சொல்வது போல் எனக்கு இரண்டு சீலை இருக்கே என்று எத்தனை அம்மாக்கள் சொல்லியிருப்பார்கள்! ஏழ்மையில் இருக்கும் தாய்மை பேதம் பார்ப்பதில்லை என்ற உண்மை அழகாகக் கதையில் வருகிறது. குழந்தைகள் உலகில் பணம் பெரியவர் உலகில் செய்வது போல் முழு பாதகங்களைச் செய்வதில்லை. என்னிடம் அது இருக்கிறது உன்னிடம் இல்லையே என்ற விளையாட்டுக்குப் பயன்படுவதோடு முடிந்து விடுகிறது.

தீபாவளி வசதி படைத்தோருக்கு ஒருவிதமாய், வசதி இல்லாதவருக்கு ஒருவிதமாய் வந்து விடிகிறது. பூரணத்துவம் பெற்று காலத்தை எதிர்த்து நிற்கும் கதை.

அன்பளிப்பு :

அன்பளிப்பு குழந்தைகள் உலகமும் பெரியவர் உலகமும் சந்திக்க முடியாது திணறும் கதை. சிறுவர்கள் உலகத்தில் பெரியவர்களால் பிரவேசிக்க இயல்வதில்லை. அதுபோலவே பெரியவர் உலகம் சிறுவர்களை மூச்சுமுட்டச் செய்யும் வகையில் உள்ளது. அந்தக் கடைசி வரி இந்தக் கதையை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டது ஆசிரியருக்குத் தெரிந்திருக்கும். அத்துடன் நிறுத்திக் கொண்டார்.

இரண்டு ஆண்கள் :

பெண்கள் முரட்டுத்தனமான ஆண்களை விரும்புவதன் பின்னணியை வைத்து எழுதிய கதை. ஒருவரைப் பார்த்து இன்னொருவர் அதையே பின்பற்றுவதும் எல்லா நேரங்களிலும் உதவுவதில்லை. அறியாத ஒன்றின் மீது ஊர்மக்களுக்கு இருக்கும் மயக்கம் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பாலம்மாள் கதை :

புஷ்பராகக் கம்மலை வைத்தே கதை நகர்கிறது. மாடசாமி இரண்டாம் தாரம் வேண்டாம் என்பதும், தங்கம்மாள் குணம் மாறுவதும் காலங்காலமாய் வாய்வழியில் சொல்லப்பட்ட கதை தான். தங்கம்மாளின் பேத்திக்குக் கல்யாணம் முடிந்த பிறகு அவளுடைய அக்கா பாலம்மாள் மருமகளை எதிர்பார்த்துக் காத்திருப்பாளா?

பெரியமனுஷி :

எனக்குப் பிடித்த இவர் கதைகளில் ஒன்று. பதியம் போட்ட செடி போல் புது இடத்தில் பெண்கள் தங்களை இருத்திக் கொள்ளுதல் எப்போதும் ஆச்சரியமே. ஐந்து ஆறு வயது மூத்த ஒருவனைக் குழந்தை போல் நடத்துவதும் பெண்களாலேயே முடியும்.

திரிவேணி :

திரிவேணியும் இராமாயணத்தை ஒட்டிய கற்பனைக்கதை. தியாகையரைப் பார்க்க தம்பதி சமேதராய் வருகிறான் இராமன். சாபவிமோசனத்திற்கு நேர் எதிரிடையான கதையிது. அது இராமனை பலமாக விமர்சிக்கிறது. இது இராமனைப் பூஜிக்கிறது. இராமனுடன் சீதை மற்றும் ஊர்மக்களும் கொண்டாட்ட மனநிலையில்.

அழகம்மாள் :

அழகிரிசாமி கோட்டைத் தாண்டாத கதைகளே எழுதியதால் இக்கதையின் உளவியல் பலருக்குப் புரிவதில்லை. அழகம்மாள் தியாகம் செய்வதாக ஒப்புக்கொண்ட வாழ்க்கை, மகனின் படிப்பு, ஊரில் மதிப்பு எல்லாவற்றையும் பார்க்கையில் தான் ஏமாந்து விட்டதாகத் தோன்றுகிறது. மகனைக் கணவனுடன் ஒப்பிட்டு கோபம் கொள்கிறாள். இன்னும் ஒருபடி மேலே போய் தன்னை அலங்காரம் செய்து கொள்கிறாள். இந்தக்கதையைப் படிக்கையில் எல்லாம் கு.அ தான் எழுதிய கதையின் சிலவரிகளை பிரசுரத்திற்கு முன் எடுத்துவிட்டார் என்று எனக்குத் தோன்றும்.

சிரிக்கவில்லை :

மீண்டும் ஒரு உளவியல் கதை. பாப்பம்மாளின் கள்ளங்கபடமில்லாத உலகுக்குள் போவது ஒன்றும் சிரமமில்லை. குழந்தையைப் பார்த்து ராஜாராமன் இனி தனக்கில்லை என்ற பாப்பம்மாவின் முடிவில் தான் கதை அழகு பெறுகிறது. சாதாரண கதைகள் இலக்கியமாவது இதுபோன்ற மின்னல் கீற்றுக்களினால் தான்.

தம்பி ராமையா :

தம்பி ராமையா கல்கி, அகிலன் பாணிக்கதை. மனதில் ஆயிரம் துக்கம் இருந்தாலும் வெளிக்காட்டாத அண்ணன், மனக்கோட்டை கட்டும் குடும்பம், சுயநலம் பிடித்தவன் என ஒதுங்கும் தம்பி. தியாகச்சுடர் கொழுந்து விட்டு எரியும் கதை.

சுயரூபம் :

இவரது சிறந்த கதைகளில் ஒன்று. மாடசாமித்தேவருக்கும், முருகேசப் பிள்ளைக்குமான உரையாடல் இந்தக் கதையில் வெகுசிறப்பாக வந்திருக்கும். மாடசாமித் தேவர் மீது வரும் பரிதாபத்தைத் தாண்டி, அவர் குலப்பெருமையைக் காப்பாற்றியதாக சமாதானம் கொள்ளும் இடத்தில் சிரிப்பு வருவதைத் தடுக்க முடியாது.

இரண்டு சகோதரர்கள் :

கு.அழகிரிசாமி தன் வட்டத்தைத் தாண்டி வெளியே வந்த அபூர்வமான தருணங்களில் ஒன்று இந்தக் கதை. உடலே கடைசியில் வெல்லும் என்ற உளவியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை. சாரதா ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். ராமகிருஷ்ணனும் தான். இவரது சிறந்த சிறுகதைகளைச் சொல்கையில் இதைக் குறிப்பிடுபவர் குறைவு.

தெய்வம் பிறந்தது :

குழந்தைகள் வரும் கதையில் எல்லாம் கு.அழகிரிசாமி புதிய பலம் கொண்டு விடுவார். ராமசாமி ஐயர் குழந்தைக்கு தான் நல்லது சொல்லி வளர்ப்பதாக நினைக்கையில், குழந்தை நல்லத்தனம் என்றால் என்ன என்று அவருக்குச் சொல்லிக் கொடுக்கிறான்.

பேதைமை :

1960-ல் எழுதப்பட்ட கதை. அதிர்ச்சி மதிப்பிற்காக எழுதப்படும் கதைகள் உண்டு. இயல்பாக எழுதப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தும் கதைகளும் உண்டு. இந்தக் கதை பிந்தைய வகை. சிறுவர்களின் குரூரமான விளையாட்டிற்கு இன்னொரு முகம் இருக்கிறது என்பது கடைசிவரை தெரியாது. உதவிசெய்ய நினைப்பவன் தன் ஸ்டேட்டஸை மற்றவர் குறைத்து மதிப்பிடக்கூடாது, உதவி செய்து சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பது போன்ற இடங்கள் இந்தக் கதையில் கூடுதல் போனஸ்.

குமாரபுரம் ஸ்டேஷன் :

கதையின் இறுதியில் டிவிஸ்ட் என்ற ஓ ஹென்றியின் பாணியை பல கதைகளில் கடைபிடித்தவர் கு. அழகிரிசாமி. ஆனால் இந்தக் கதையின் முடிவு இப்போது உள்ள வாசகர்கள் எல்லோருமே எளிதாக யூகிக்கும் முடிவு. யோசித்துப் பார்த்தால் ஆள்வராத ரயில் நிலையமும் அதனை ஒட்டிய ஊரும் கூடப் பள்ளிக்கூடம் தான்.

முருங்கை மர மோகினி :

எடுத்து வைத்தும் கொடுத்து வைக்காத கதை. நல்லவர் சபலப்படுவதுடன் நின்று விட்டால் பரவாயில்லை, இல்லை அவர்களுக்கு அவர்களே தண்டனை கொடுத்துக்கொள்ள வேண்டியது தான்.

ஞாபகார்த்தம் :

ஆழமில்லாத கதை. காதலைச் சொல்லத் தயங்குவதும், அதற்கு முன்னரே எதிர்தரப்பு சமிக்ஞைகளைப் பரிமாறியிருப்பதும் அச்சுப் புத்தகம் வருவதற்கு முந்தைய காலத்துக்கதை.

தரிசனம் :

ஜனரஞ்சகமான பதிவிரதைக்கு இன்னல் வரும் போன்ற கதைகளில் லாஜிக் பார்ப்பது தவறு. மழைக்காலத்தில் இரவு பதினோரு மணிக்கு மேல் குருவி வெளியில் வந்தால் அல்லவா அதற்கு சாப்பாடு ஊட்டிவிட!

காற்று :

மீண்டும் சென்டிமெண்டை நம்பி எழுதப்பட்ட கதை. கற்பகம் ஓரறை வீட்டில் இருந்து வெளியில் செல்லத் (திண்ணை) துடிப்பதும், பள்ளிச் செல்லத் தொடங்கியதும் சுதந்திரக்காற்றைச் சுவாசிப்பதுமான கதை. கதையின் முடிவில் வழக்கப்படி எதிர்பாரா திருப்பம்.

தியாகம் :

நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும் போல செட்டியாரின் நடத்தை.  தன்னுடைய கடையில் எல்லாமே தன்னைச்சுற்றி நடக்க வேண்டும் என்ற மனப்பான்மை இன்றும் இருக்கிறது.

*

கு.அழகிரிசாமியின் கதைகள் எளிய மனிதர்களின் எளிய கதைகள். எந்தச் சிக்கலுமின்றி நேர்க்கோட்டில் செல்பவை. பெரும்பாலும் ஒரு கதைக்கருவை உளவியல் நோக்கில் சொல்வதான கதைகள். ஓ.ஹென்றியின் பாணியான கதையின் முடிவில் கொடுக்கும் டிவிஸ்ட்டில் இவருக்கு நம்பிக்கை இருந்திருக்கிறது. மாக்ஸிம் கார்க்கியின் இரண்டு நூல்களை இவர் மொழிபெயர்த்ததால் அவரைப் பின்பற்றிக் கதைகள் எழுதினார் என்று சொல்பவர்களும் உண்டு. கார்க்கி அரசியல் விமர்சனமாய் பல கதைகள் எழுதினார். அவருடைய பாணி மற்ற சோவியத் எழுத்தாளர்களிடமிருந்தும் மாறுபட்டது. மாறாக கு.அழகிரிசாமியின் கதைகள் இவருடைய பார்த்த அனுபவங்களை மண்ணின் மணத்துடன் எழுதியவை. அழகம்மாள் கதையின் கோனார் மற்றும் அழகம்மாள் இவருடைய பெற்றோர் என்று கி.ரா ஒரு பேட்டியில் சொன்னது நினைவுக்கு வருகிறது. குழந்தைகள் உலகத்தை தத்ரூபமாகக் கொண்டு வந்தவர் இவர். ஆனால் குழந்தைகள் உலகத்தை ஆகச்சிறப்பாகக் கொண்டு வந்தவர் என்றால் கிருஷ்ணன் நம்பியையே நான் சொல்வேன். இவர் எழுதிய காலகட்டத்தில் பல நல்ல கதைகளை இலக்கிய நயத்துடன் எழுதியவர் இவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தி.ஜானகிராமன் 20

தீர்மானம் :

இந்தக்கதைக்கு எந்த விமர்சனமும் நியாயம் செய்ய முடியாது. சிறுகச்சிறுகச் விசாலி என்னும் சிறு பெண்ணைத் தொடர்கிறோம். விசாலி கழுத்தில் இருக்கும் திருமாங்கல்யத்தைக் கடித்துக்கொண்டு சோழி விளையாடுகிறாள். அத்தையிடம் புக்ககம் போகாமல் எவ்வளவு நாள் விளையாடுவாய் எனத் திட்டு வாங்குகிறாள். கூட்டிச்செல்லப் புக்கக மனுஷாள் வந்ததும் முன்னால் வர வெட்கப்படுகிறாள். கல்யாணத்தில் அவள் அப்பாவிற்கும் புக்கக மனுஷாளுக்கும் பிரச்சினை. எதற்காக வந்திருக்கிறார்கள் இப்போது? இரண்டு நிமிடங்களில் பத்துவயதுப் பெண் பெரிய மனுஷியாகி நிற்கிறாள். அத்துடன் கதை முடியவில்லை.

வெறுப்பு மாறாததும், உடைந்த கண்ணாடியாய் உறவு ஆனதும், தந்தையின் ஆசீர்வாதமுமாய் கதை முடிகிறது. “உலகத்தாயைக் கண்ட மோனத்தில் அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன”. இதில் வரும் அப்பா, அத்தை, ராதா, ராதாம்மா, பெரிய மாமனார் என்று தெளிவான கதாபாத்திரங்களுடன் பதினோரு பக்கத்தில் என்ன ஒரு அழகிய சித்திரம்! குழந்தை மணத்தை எதிர்க்க நூறு பிரச்சாரங்கள் தேவையில்லை இந்த ஒரு கதை போதும். ஆனால் இது குழந்தை மணத்தைப் பற்றியே பேசவில்லை. உறவுகளுக்குள் சிக்கல்களையும், அதே உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வையும் பேசுகிறது. தமிழில் இதுவரை வந்த தலைசிறந்த கதைகளில் ஒன்று.

கங்கா ஸ்நானம் :

ஒரு துரோகம் தான் கதைக்கரு. சின்னசாமி காசிக்குப் போனாலும் கருமம் தொலையாமல் துன்பமிக உழன்று தவிக்கையில், அவர் மனைவி (அவர் பெயர் கூட கதையில் இல்லை) எவ்வளவு எளிதாகக் கடந்ததை மறந்து கடவுள் நாமத்தைச் சொல்கிறார். கடைசியில் கணவருக்குச் சொல்லும் அறிவுரையைப் பாருங்கள். தி.ஜா புல்லைக்கிள்ளிப் பெண் என்று சொன்னால் கூட சௌந்தர்யம் குறையாது வெட்கச்சிவப்பு சிவக்குமோ!

சிலிர்ப்பு :

முதன்முதலில் இந்தக் கதையை படிக்கையில் நான் பள்ளி மாணவன். இந்தக் கதையை உள்வாங்கும் Bandwidth இல்லாது நிம்மதி இழந்தேன்.

இந்தக் கதையின் உரையாடல்களில் கலந்திருந்த தங்க ஜரிகைகளை என்னால் அப்போது அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. காமாட்சி என்னும் பத்துவயது சிறுமி படிப்பவர் மனதைவிட்டு நீங்காமல் ஒட்டிக் கொள்வாள். வசதி படைத்தவர் ஏன் துளி மனிதாபிமானம் இல்லாது நடந்து கொள்கிறார்கள்? இந்தக் கதையின் கருவும் அழகிரிசாமியின் தெய்வம் பிறந்தது கதைக்கருவும் ஒன்றே. இது 1953. தெய்வம் பிறந்தது 1960. அடுத்தடுத்து படிப்பது ஒரு ரசானுபவம்.

சண்பகப்பூ :

1948-ல் வந்த கதை இது. அப்போதே சொல்கிறார் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வது கர்நாடகம் என்று. பதினெட்டு வயது பேரழகுப்பெண் விதவையாவதில் தொடங்கும் கதை இப்படி முடியும் என 2020-ல் கூட யாரும் நினைக்க முடியாது. பூடகமான வரிகள், உரையாடல்கள் தி.ஜாவிடமிருந்தே ஆரம்பிக்கிறது. இந்தக் கதையே பூடகமான கதை தான். மீறல்கள் இவரிடம் நல்இலக்கியம் ஆவது மொழிநடையிலா, வாசகரைத் தயார் செய்வதிலா, பெண்ணின் சௌந்தர்யத்தில் தன்னை மறந்து நம்மையும் மறக்க செய்வதிலா, அல்லது நேசமே எல்லாவற்றையும் விட பெரிது எனும் கதை சொல்லலிலா!

தவம் :

“அப்புறம் உயிர் வாழணும்னு என்ன முடை? உசிரே இல்லாம இருந்திட்டா?”

பேரழகிக்காகவே பத்து வருடங்கள், கடின உழைப்பு, சிக்கன வாழ்க்கை. அவளை நினைக்காத நாளில்லை. ஒரே வரத்திற்காக விடாத தவம். அவள் நினைவில் இவன் எப்போதுமாக இருக்கப் போகிறான் என்பது இவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“காலமே கும்பகோணத்துக்கு வண்டி இருக்கு” என்பதன் முழு அர்த்தம்  1952-ல் புரிந்திருக்குமா!

பரதேசி வந்தான் :

அநித்யமானது வாழ்வு மட்டுமல்ல அந்தஸ்து, பதவி, பணம் எல்லாமும் தான். பஞ்சாமி என்பவர் கதைசொல்லி. ஆரம்பத்தில் இருந்தே அண்ணாவை வஞ்சப்புகழ்ச்சி செய்து வருவார். புராணக்கதைகளில் வரும் கதாபாத்திரம் போல் பரதேசி ஆனால் கதை முழுதுமே நவீன கதைசொல்லல்..

பாயசம் :

பொறாமை வன்மமாய் உருவாகும் கதை. முக்கால்வாசி நனவோடை யுத்தியில் நகரும் கதை நடப்புக்கு வருகையில் வன்மம் வெடிக்கிறது. வாலாம்பாளின் மறுவடிவாய் நார்மடி மழித்த தலையுடன் பெண். அவளுக்குத் தெரிந்து விட்டது என்பது தான் சாமகேதுவின் ஆத்திரமே! வாலாம்பாளை நினைவுகூறும் உரையாடல்கள் சாமகேதுவின் கதாபாத்திரத்தை நமக்கு விளக்கும் ஒரு முன்னோட்டம். தி.ஜா-வின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று இது.

இசைப்பயிற்சி :

மாஸ்டரின் கைவண்ணத்தில் மற்றுமொரு சிறுகதை. மல்லி வாழ்க்கையில் தோற்றதை ஒப்புக்கொள்ள முடியாது தனக்குத்தானே உயர்வாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவரது சங்கீதத்தைச் சிலாகித்துப் பேச கிராமத்தில் ஆளில்லை. குப்பாண்டி அவருக்குக் கிடைத்த ஒரு ஆயுதம். அடுத்தடுத்த விசாரிப்புகள் இவர் எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றது. மனைவியிடம் ஆறுதல் தேடினால் அதுவும் கிடைக்கவில்லை. வேண்டாம் என்றால் இன்னும் ஊரார் மத்தியில் அவமானம். கடைசியில் மச்சில் அரிசியும் குறையக்கூடாது மக்கள் முகமும் வாடக்கூடாது என்பது போல் ஒரு முடிவு எடுக்கிறார். ஊரில் கேட்கும் கேள்விகள், அதே அக்கிரஹாரத்துக் கிண்டல்கள், காலம் மாறியும் மாறாத நம்பிக்கைகள். எல்லாவற்றையும் விட மல்லியின் பாசாங்கு பிடித்த மனம். புதுமைப்பித்தனின் சைவப்பிள்ளைகள் மீதான கிண்டலுக்கு சற்றும் குறைந்ததல்ல தி.ஜா-வின் கிண்டல்.

விளையாட்டு பொம்மை :

விளையாட்டு பொம்மை ஒரு மகா புத்திசாலிக்கு Alzheimer வந்ததைச் சொல்லிக் கொண்டே போய் சடக்கென்று ஒரு காதல் கதையாய் மாறுகிறது.

மாப்பிள்ளைத் தோழன் :

ஒருநாள் நிகழ்வின் காட்சி விவரிப்பே இந்தக்கதை. முழுக்க மாப்பிள்ளைத் தோழனின் கோணத்தில் சொல்லப்பட்ட கதை. எப்போதும் சந்தோஷமாக இருப்பது சாத்தியமா? நூறு இருக்கும் இடத்தில் பத்து இல்லை ஒன்று இருந்தால்!? மினிமலிசம் தியரி என்று இன்று பேசுகிறோமே, அதுதானே இது.

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் :

சில கதைகள் எத்தனை வருடமானாலும் மறக்க முடியாது அமைந்து விடும். எதுவோ ஒன்று நினைவில் வர தி.ஜா-வின் கதைகளை எடுத்துப் படித்து ஆனந்தப்பட்ட தருணங்கள் எத்தனையோ. ஆனால் சில. இவரது சில கதைகள் நிம்மதியைக் குலைத்துவிடும் என்று பயந்து கொண்டு அந்தப் பக்கமே போகாமல் இருப்பதும் உண்டு. அதில் ஒன்று இது. அக்கணாக்குட்டி போன்ற பிள்ளைகள் பிறக்காமல்/பெறாமல் இருந்தால் நல்லது. கதைக்குள் கதையாய் அண்ணாவையன் கதை.

கோபுர விளக்கு :

1954-ல் கலைமகளில் வந்த கதை. புதுமைப்பித்தனின் பொன்னகரத்திற்கும் இந்தக் கதைக்கும் ஒரு தொடர்பு உண்டு. வறுமை, பசி, மருந்து வாங்க என்று உடலை விற்பதை இருவரும் நியாயப்படுத்தி இருப்பார்கள். அந்த ஊரின் பாசாங்குத்தனத்தையும் வெளிப்படுத்தும் கதை. கதைசொல்லியும் அவர் மனைவியும் நடத்தும் உரையாடலை கவனமாகப் படிக்க வேண்டும்.

பாஷாங்க ராகம் :

ஒரு கடிதம் தான் கதை. மகள் எழுதிய கடிதத்திற்கு தாயின் பின்குறிப்பும் சேர்ந்த கடிதம். ராகத்திற்கு ரக்தி கொடுக்க வரும் அந்நியஸ்வரம் பாஷாங்கராகம். பாஷாங்கராகம் தான் கதையும்.

அட்சராப்பியாசம் :

இது ஒரு வித்தியாசமான கதை. சம்பந்தமில்லாதது போல் பதுங்கியிருக்கும் ஒரு தகவல் கதையின் மர்மமுடிச்சை அவிழ்க்கும் பாணியை அப்போதே கையாண்டிருப்பார் தி.ஜா.

சிவப்பு ரிக்க்ஷா :

1954-லேயே வெளியில் செல்லும் பெண்களுக்கு நிம்மதி இல்லை, இடிராஜாக்கள் இருந்திருக்கிறார்கள், காரும் பணமும் இருந்தால் எல்லாப் பெண்களும் பின்னால் வந்து விடுவார்கள் என்று சுற்றியிருக்கிறார்கள்.  துடிப்பான ருக்குவும் கூட ஒதுங்கிப் போக நினைக்கிறாள். இன்று கூட நிலைமை அதேதான்.

செய்தி :

எல்லாக் கலைகளுமே உண்மையான ஒரே ஒரு ரசிகனைத் தேடிப் போய்க்கொண்டே இருக்கும். இலக்கியப்பிரதி தன்னை அப்படியே உள்வாங்குபவனிடம் முழுவதும் திறந்து காட்டும். பணம், பெயர், புகழ் இவற்றிற்காக கலையை ஜனரஞ்சகமாக்குவதை விட ஆத்ம திருப்திக்காக சமரசம் செய்யாமல் இருப்பதை உயர்ந்தது என்பதே செய்தி.

கள்ளி :

நடுத்தர வர்க்கத்திற்கு என்று ஒரு மனநிலை இருக்கிறது. நியாயம், அநியாயம், புண்ணியம், பச்சாதாபம் என்று பல மதிப்பீடுகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு வாழ்க்கை நடத்தும். வசதி படைத்தவருக்கு இருக்கும் இரக்கமற்ற தன்மையை எவ்வளவு முயன்றாலும் நடுத்தர வர்க்க மனநிலையால் அதைக் கடைபிடிக்க முடிவதில்லை.

தேடல் :

மூன்று தேடல் இந்தக் கதையில். முதலில் ராமரத்னம் மனைவியின் தேடல். அவள் அடைந்ததென்ன, தேடியது கிடைத்ததா என்பது நமக்குத் தெரியாது. இந்தக் கதையில் அவள் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. இரண்டாவது ராமரத்தினத்தின் தேடல். மகளைத் தேடிய அவனுக்கு மகளுடன் கிடைத்தது டாரதி. மூன்றாவது டாரதியின் தேடல்.

கண்டாமணி :

பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை என்பது சினிமாப்பாடல். இந்தக் கதையில் அப்படியே நேர் எதிர்பதமாக ஒரு மணிஓசை.

வேண்டாம் பூசணி :

முதல்முறை படித்தபோது கதறி இருக்கிறேன். நிதர்சமான கதை. அவரவர் குடும்பத்தைப் பார்ப்பதே சிரமம் என்றாகும் போது வயதானவர்களின் நிலைமை கேள்விக்குரியாகிறது. யார் கவனிக்க ஆளில்லாமல் நாதியற்று இருக்கிறார்களோ அவர்களின் ஆயுள் அநியாயத்திற்கு நீள்வது இயற்கை விதி. மூத்த பையன் அறுபதுக்கு ஆசீர்வாதம் வாங்குவது மரியாதைக்கு இல்லை, அவன் ஆயுசு நீடிக்க. பாட்டி கொடுத்து வைத்தவள் தான். யார் பிரிய மகனோ அவன் வீட்டுக்குப் போய்விட்டாள்.

***

தி.ஜாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறேனா என்பது தெரியவில்லை. கடலலை ஒன்றின் மேல் ஒன்று படிந்து வருவது போல், நினைவலையில் இவர் கதைகள் ஒன்றின் மேல் ஒன்றாய் படிகின்றன.

துரோகம், பாலியல் மீறல்கள் தான் தி.ஜா கதைகள் என்று யாரேனும் சொன்னால் வேண்டாம் பூசணி, சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் போன்ற கதைகள் நினைவுக்கு வருகின்றன. சிலிர்ப்பு போன்ற கதைகளில் வரும் குழந்தைகளைப் போல் குழந்தைகள் உலகம் சிருஷ்டித்தல் இவருக்கு பிரத்தியேகமானது. புதுமைப்பித்தனைப் போலவே பார்க்கும் காட்சிகளை விவரிப்பது, ஒரு  சம்பவத்தைச் சொல்வது போல் பல கதைகள் எழுதியிருக்கிறார்.

அழகுணர்ச்சி அதிகம் நிறைந்த கதைகள் தி.ஜா-வினுடையது. தவம் கதையில் சொர்ணாம்பா பணம் இல்லாமல் அவனுடன் ஓரிரவைக் கழிக்கிறேன் என்பாள். கதையில் காலமே கும்பகோணத்திற்கு வண்டி இருக்கு என்று மட்டும் வரும். சண்பகப்பூவில் அவளது நாணமே கணவனின் தமையனுடன் அவள் கொள்ளப்போகும் வாழ்க்கைக்கு விளக்கம். இதுபோல் பூடகமான உரையாடல்கள், வரிகளில் நிரம்பியவை தி.ஜாவின் கதைகள்.

கதை வெகு சீரியஸாகப் போய்க் கொண்டிருக்கையில் கவனத்தை முற்றிலும் திசைதிருப்பும் படி இவரது மொழிநடை :

“சேப்பு ஒரு அழகு சூடு ஒரு ருசி”

“மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும்? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்திற்காக நகைநட்டுக்களை கழற்றி வைத்தால் போல் இருக்கும்”.

“பெண்ணாப் பிறந்தவர்களின் ஆயுசில் பாதி குனிந்து நிமிர்வதிலேயே போய்விடுகிறது.”

தி.ஜாவின் நாவல்களைப் படிக்கையில் இவர் நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கலாம் என்றும், சிறுகதைகள் படிக்கையில் சிறுகதைகள் மட்டும் எழுதியிருக்கலாம் இன்னும் எண்ணிக்கை அதிகமாகக் கிடைத்திருக்கும் என்று எனக்குத் தோன்றியதைப் போல், வேறு எந்த எழுத்தாளரைப் படிக்கையிலும் தோன்றியதில்லை.

புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமனின் மொத்தக் கதைகளையும் இருமுறைக்கு மேல் படித்திருக்கிறேன். ஒவ்வொருவரையும் படிக்கையில் அவர்கள் தனியம்சத்தை ரசித்திருக்கிறேன். தரவரிசையில் இவர்களை நிறுத்த வேண்டும் என்று எப்போதுமே எனக்கு சிந்தனை வந்ததில்லை. ஒப்புமைப்படுத்தியே ஆக வேண்டும் என்று துடிப்பவர்கள் இவர்களது அதிகம் குறிப்பிடப்படாத, வெளியில் தெரியாத பத்து கதைகளை எடுத்துப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது.

*

சரவணன் மாணிக்கவாசகம்