Home Blog Page 82

‘பொம்மியின் பென்சில்’

0

தயாஜி

பொம்மி தன் கையில் அந்த பென்சிலுடன் இருக்கிறாள். அவளின் உள்ளங்கைப் பிடிக்கு அது தோதாக இருக்கிறது. அவளுக்கு பிடித்த மாதிரி அதன் வண்ணங்கள் இருந்தன. கைப்பிடியில் ஊதாவும், மேலே பச்சையும் கொண்ட நீலநிற பென்சில்.

ஆமாம் நீலநிற பென்சில்தான். அதைவிட ஆச்சர்யங்கள் நிறையவே  உண்டு. அதுவும் பொம்மிக்கு  நன்றாகவேத் தெரிந்திருந்தது. பொம்மிக்கு ரொம்பவும் பசி, வெளியில் சென்ற அப்பா இன்னும்  வரவில்லை.  அவர் வரவேண்டும். அவர் வந்தால்தான் சமைக்க ஏதாவது அம்மாவிற்கு கிடைக்கும். பிறகுதான் எங்களுக்கு சாப்பிட ஏதாவது அம்மா செய்வார். அதுவரை அம்மாவும் வாசலிலேயேதான் அமர்ந்திருப்பார்.  பொம்மிக்கு ஏனோ இன்று பசி கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறது. வாயில் எச்சில் சுரக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிடுவதாக நினைத்து வாயில் சுரக்கும் எச்சிலையே எவ்வளவு நேரம்தான் அவள் உறிஞ்சிக் கொண்டிருப்பாள். இம்முறை நிஜமாகவே சாப்பிட வேண்டும்.  வயிற்றைத் தடவியபடியே எதையோ யோசிக்கலானாள்.

நல்ல கண்டுபிடிப்பு. பசியில் இதனை மறந்து விட்டதை நினைத்துச் சிரித்துக் கொள்கிறாள்.  தான் பிடித்திருந்த பென்சிலை  ஆழ்ந்துப் பார்க்கலானாள். அந்நேரம் வித்தியாசமான வாசனையை அவள் உணர ஆரம்பித்தாள். என்ன வகை சமையல் வாசனை என அவளால் யூகிக்க முடியவில்லை.  ஆழ்ந்து  மூச்சை இழுத்துக் கொண்டாள். அந்த வாசனை அவளுக்கு  ஒரு  பூரிப்பைக் கொடுத்தது. இழுத்த  மூச்சை வெளியேற்ற மனசில்லை. வாசனைக் காற்று வாய்க்குள்ளேயே இருந்து விட்டால் எப்படி இருக்கும். பசிக்குமா பசிக்காதா.  கண்களை சிமிட்டிக் கொண்டாள்.  மெல்ல அம்மாவை எட்டிப் பார்க்கிறாள். அம்மா இன்னமும் வாசலில் அப்பாவிற்காக காத்திருக்கிறார். இன்னும் எத்தனை நேரம் வரை அப்பாவிற்காகக் காத்திருப்பது எனபது ஒரு புதிர்தான். ஏனோ அம்மா கண்களைத் துடைத்துக் கொள்கிறார். ஒருமுறை அம்மாவின் தலையில் யாரோ அடித்து விட்டார்கள். அம்மாவின் தலை மட்டுமல்ல, என்னுடன் விளையாடும் நண்பர்கள் அம்மாக்களையும் யாரோ சில பேர் அடித்து என்னென்னமோ பேசினார்கள். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அன்று கூட அம்மா அழுவில்லை. தலையில் அடிபட்டால் வலிக்காது என அம்மா சொன்னார். ஆனால் இப்போது அப்பாவுக்காக காத்திருக்கும் போது மட்டும் அம்மா அழுது கொண்டே இருக்கிறாள். அதற்காகவே நான் வாசலுக்கு இந்நேரம் வரக்கூடாது என்பார்.

பொம்மி, மெல்ல சமையலறைக்குச் செல்கிறாள். அடுப்படியில் உள்ள தட்டுகளை வரிசையாக  கீழே அடுக்கினாள். முதல் தட்டு அப்பாவிற்கு அடுத்த தட்டு அம்மாவிற்கு என வரிசைப்படுத்தினாள். அட தனக்கொரு  தட்டு எப்படி இல்லாமல் போனது என குழப்பமடைந்தாள். தேடலானாள்.

அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஒரே தட்டுதான் உள்ளதென தாமதமாகப் புரிந்து கொண்டாள். அவர்களுக்கு ஒரு தட்டையும் தனக்கு ஒரு தட்டையும் பிரித்துக் கொண்டாள்.

கையில் பிடித்திருக்கும் பென்சிலை பார்க்கலானாள். இப்போது சாப்பிட என்ன செய்யலாம். ஒருமுறை தொலைக்காட்சியில் ஆப்பிள் பழத்தை பார்த்திருந்தாள். அதனை சாப்பிட பல நாளாய் ஆசை இருந்தது. ஆப்பிள் பழத்தின் ருசியை தெரிந்துக் கொள்ள நினைத்தாள். தரையை சுத்தம் செய்தாள். பென்சிலை எடுத்தாள். தரையில் கோணல்மாணலான வட்டம் வரைந்து மேலே ஒரு கொம்பையும் இலையும் வரைந்தாள்.

சட்டென அது ஆப்பிளாக மாறியது. கைத்தட்டிக் கொண்டாள். ஆப்பிளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். இனிப்பாக இருந்தது. கண்களைச் சிமிட்டிக்கொண்டே சாப்பிட்டாள்.  ஆனாலும் அவளின் பசி அடங்கிய பாடில்லை. இன்னொரு ஆப்பிளை வரைந்து கொண்டாள். இரண்டாவது ஆப்பிள் தோன்றியது. சாப்பிட ஆரம்பித்தவளுக்கு,  பெரிய ஆப்பிளாக வரைந்திருக்கலாம் என்கிற யோசனை  வந்தது. ஆப்பிள் பெரிதாக இருந்தால் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். இல்லையில்லை. வேண்டாம். பெரிய ஆப்பிளை நண்பர்களுடன்  சேர்ந்துச் சாப்பிடலாம்.  அவர்களும் ஆப்பிளை சாப்பிட்டிருக்க மாட்டார்கள். பாதி தின்ற ஆப்பிளை தட்டில் வைத்தாள்.

பின்னர் பெரிய வட்டம் வரைந்தாள். அவளின் கை எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம் வரை அவள் வட்டத்தை வரைந்து முடித்தாள். தொடர்ந்து பெரிய கொம்பொன்றை வரைந்துக் கொண்டாள். இலையையும் பெரிதாகவே போட்டாள். எதிர்ப்பார்த்தது போலவே பெரிய ஆப்பிள் தோன்றியது. சிரமப்பட்டு அதனை கட்டிப்பிடித்த வாக்கிலேயேத் தூக்கினாள். எந்த பக்கத்தில் இருந்து கடித்துத் தின்பது என அவளுக்குத் தெரியவில்லை. அதனை அப்படித் தடவிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பிடியில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து போனது.

பொம்மிக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி மறைந்திருக்கும். ஒரு கடி கூட கடித்துப் பார்க்கவில்லையே. ஆனால், அவள் பாதி தின்ற ஆப்பிள் அப்படியே தட்டில் இருக்கிறது. அதனையே பார்த்துக் கொண்டிருந்தாள். எடுத்தாள். இம்முறை சாப்பிடாமல் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தாள். இப்போது அந்த ஆப்பிளும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. மறைந்தேப் போனது.

அவள் அந்த மாய வித்தையைப் புரிந்துக் கொண்டாள். பென்சிலில் வரைந்ததை தட்டில் வைத்தால் மறையவில்லை. எடுத்து சீக்கிரம் சாப்பிட்டு விடலாம். ஆனால் தட்டில் வைக்காமல் இருந்தால், மாயமாக மறைந்து விடுகிறது.

தன்னிடம் இரண்டு தட்டுகள்தானே இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல என்ன வரைவது. யோசிக்கலானாள். கடைசியாக என்ன சாப்பிட்டோம் என நினைக்கிறாள். ஆப்பிள். ஆமாம் ஆப்பிள்தானே சாப்பிட்டேன் என நினைத்துக் கொண்டு சிரிக்கவும் செய்கிறாள்.

‘அம்மா கடைசியாக என்ன சமைத்துக் கொடுத்தார்?, தட்டு? அது முழுவதும் தண்ணீராய் இருந்தது. நடுவில் ஆங்காங்கு வெள்ளையாய் ஏதோ  இருந்தன. அதிலொன்றை ரொம்ப நேர நீச்சலுக்குப் பின் பொம்மி வெளியில் விரல்களை எடுத்து அம்மாவிடம் காட்டினாள். அம்மா அதுதான் சோறு, நாளைக்கு அப்பா வந்ததும் தண்ணிய குறைச்சி சோறு நிறைய இருக்கற மாதிரி சமைக்கலாம் என்றார். ஆனால் அம்மா சொன்ன அந்த ‘நாளை’ இன்றுவரை பொம்மிக்கு வரவில்லை. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எதாவது சாப்பிடக் கொடுக்கலாம் என எண்ணினாள்.

பென்சிலில் சின்ன சின்னதாய் வட்டங்களை வரைய ஆரம்பிக்கின்றாள். எல்லாம் சோற்றுப் பருக்கைகளாக  மாறிக்  கொண்டிருந்தன. அப்படியே எடுத்து ஒரு தட்டு நிறைய போட்டுக்கொண்டாள். கீழே விழும் சோற்றுப் பருக்கைகள் எல்லாம் மறைய ஆரம்பித்தன. இம்முறை விழுந்தவுடன் உடனடியாக அவை மறையத் தொடங்கின. பொம்மி ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் ஒரு தட்டு முழுக்க சோற்றை போட்டு நிரப்பினாள். அடுத்த தட்டு…..

“பொம்மீ… பொம்மீ…”

வாசலில் இருந்து அம்மா அழைக்க ஆரம்பித்தாள். அப்பா வந்துக் கொண்டிருக்கிறார் என்பதை பொம்மி புரிந்து கொண்டாள்.

சோறுக்கு ஏற்றதாய் என்ன வரைந்து எடுக்கலாம் என பரபரப்பானாள். ஒரு குட்டி வட்டம் அதன் கீழ் பெரிய வட்டம்….

“பொம்மீ… பொம்மீ…”

பெரிய வட்டத்தின் கீழ், இரண்டு குச்சி கால்கள்….

“பொம்… பொ..ம்மீ…..”

குச்சி கால்களுக்கு மேலே சிறகுகளை வரைந்தாள். நினைவில் இருக்கும் கோழி அவளின் விரலில் வந்திறங்கவில்லை….

“பொம்மீ…….!!”

அம்மா வேறு இப்படி கத்துகிறாரே என போட்டதைப் போட்டபடியே எழுந்து ஓடுகிறாள்.  கீழே எதையோ மிதித்து கால் வழுக்கியது. அப்படியே தலைகீழாக விழுந்தாள். ஆனாலும் அவளின் கை அந்த பென்சிலை இருக்கமாகவே பிடித்திருந்தது. சட்டென அவள் மீது மழை.

“பொம்மீ.. பொம்மீ…..”

அம்மா கதறி அழுது கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் சிலர் நின்று கொண்டிருக்கிறார்கள். பலர் தலையில் எதையோ கட்டிச் சுமந்து, நடந்து கொண்டிருந்தார்கள். வியர்வையிலும் வெயிலிலும் அவர்களின்  உடல்கள், நனையவும் காயவும் செய்துக் கொண்டிருந்தன. நடை பிணங்கள் போல எந்த உணர்ச்சியும் இன்றி நடந்து கொண்டிருக்கிறார்கள். சாலையின் இடையிடையில்  மயங்கி  விழுந்தவர்களை தூக்கி விட தெம்பும் இல்லை. முகத்தில் தெளிக்க தண்ணீரும் இல்லை. பசி. ஏமாற்றம். துரோகம்.  அழுகை.  இழப்பு.  இருள்.

நாம் ஏன் இத்தனை இழிவான மனிதர்களாக  பிறந்தோம். யாருக்குப் பிறந்தோம். எங்கே பிறந்தோம். ஏன் விரட்டுகிறார்கள். எங்கே விரட்டுகிறார்கள். பதில் தெரியவில்லை.  கிளம்பியவர்களில் எத்தனைப்பேர் தத்தம் தாய் நிலத்தை அடைவார்கள் என்பதற்கு உத்தரவாதமில்லை. தாய் நிலமா அப்படியொன்று இருக்கிறதா என்ன? . பூமி பிளந்து எங்களைத் தின்றுவிட்டால் எத்தனைப்பெரிய பாக்கியம் கிடைக்கும்.

“ஐயோ… பொம்மி.. பொம்மி…… நீயும் என்னை விட்டு போய்ட்டியே…..”

 அம்மா கதறினார். அசைவற்ற பொம்மியின் உள்ளங்கை, அம்மாவின் கிழிந்துப் போயிருந்த முந்தானையை இறுக்கமாய் பிடித்திருந்தது. அவளின் உள்ளங்கை வியர்வையில் அந்த முந்தானையின் நிறம் ஒட்டிக்கொண்டிருந்தது. இன்னும் பலர் இவர்களை வெறுமனே கடந்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அழுவதற்கு கண்ணீர் யாரிடமும் மிஞ்சியிருக்கவில்லை. இருந்திருந்தால், அதைக் கொண்டாவது வாய் நனைத்திருக்கலாம்.

தூரத்தில் ஈசல்கள் போல நீண்ட சங்கிலியாய் ஏதோ ஊர்ந்து கொண்டிருக்கிறது. பாதி திறந்த ஜன்னலில் தெளிவாகத் தெரியவில்லை.  ஜன்னல் திரையை விலக்கியப்படி ஒரு சிறுவன் எட்டிக் பார்க்கிறான். என்ன நினைத்தானோ தெரியவில்லை. தன் கையில் இருந்த பாதி கடித்த ஆப்பிளை அந்த ஈசல் கூட்டத்தின் மீது வீச முற்படுகிறான். அவன் உள்ளங்கையிலும் சில வண்ணங்கள் ஒட்டியிருந்தன.

***

தயாஜி

மலேசியாவில் வசிக்கிறார். தொடர்ந்து கதைகள், நூல் விமர்சனம் என இயங்கி வருகிறார். இவரது வலைப்பூ – https://tayagvellairoja.blogspot.com , இவரது மின்னஞ்சல் – tayag17@gmail.com

நீலநிற ஆக்காட்டி

0

சிவகுமார் முத்தய்யா

1

பூக்காரத் தெருவுக்கு ஆறுமுகம் வந்தபோது யாரோ கெட்ட வார்த்தையில் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வார்த்தை தன்னை நோக்கி வருவதுபோல போல உணர்ந்த அவன் ஒரு நிமிடம் நின்று வசவு வந்த அந்த வீட்டை புதிதாக பார்ப்பது போல உற்றுக் கவனித்தான். முகப்பு சுவரில் நீலநிற பெயிண்ட் அடிக்கப்பட்ட அந்த வீட்டிலிருந்து அடர்த்தி கூடிய மல்லிகையின் மயக்கமுறச் செய்யும் அது இக்கணமும் அவனை குலைவு அடைய செய்திருந்தன.. அந்த மணம் அது பூக்காரன் வீடு என்பதை பல ரூபங்களில் உணர்த்தும் விதமாக காட்சியளித்தது. புதிதாக முளைத்த நஞ்சுச்செடி போல  கடுஞ்சொற்களில் அங்கு பேசும் அந்த நபர்  மஞ்சுளாவின் அப்பா என்று முதலில்  நினைத்தான்.

எந்த அப்பாவும் மகளை இப்படிப் பேசி இவன் கேட்டதில்லை. ஆமாம் சினிமாவில் கூட. அப்படியானால் இவர் யார்? வேறு யார் இப்படி உரிமையுடன் கண்டிக்க முடியும். பேசிய ஆளின் குரல் புதிது. சற்று குனிந்து தாழ்வரத்தை உற்றுப் பார்த்து பேசியவரின் முகத்தைப் பார்த்தான். அது  கன சதுரமாகவும் மூக்கு சற்று தட்டையாகவும் இருந்தது.  அவர் மூக்கு எப்போதோ பார்த்த மீன்கொத்தி பறவையை நினைவுக்கு கொண்டு வந்தது. ஆனால் மீன்கொத்திக்கு மூக்கு மட்டும் நீளம் என்பது பெரிய விஷயமில்லை.  இருபது அடி உயரத்தில் பறந்து கொண்டே நீரில் நீந்தும் மீனைக் குறிபார்த்து விடும். சில வருடங்களாக மீன்கொத்தியை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது. கரகரப்பு குரலில் பேசிக்கொண்டிருக்கும் நீள மூக்குக்காரர்.

வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். நெற்றியில் சந்தனத்தில் திலகமிட்டுருந்தார். ஆனால் தலையில் ஒரு முடியில்லை. பரந்த வழுக்கை. அந்த வீட்டுக்கு எதிரேயிருந்த இலைகள் அடர்ந்து நிழல் பரப்பிய புங்கமரத்தில் வந்து ஒதுங்கினான். முகத்தில் மெல்ல கசிவு கொண்டிருந்த வியர்வையை இடது கையால் துடைத்துக் கொண்டான். நல்ல மதியம் நேரம். அனல் கக்கும் வெயில். அந்த மனிதரின் வார்த்தைகள் சூடாகியிருந்தன. அவர் பெண்ணின் பாலின உறுப்புகளை கேவலமாக விமர்சிக்கும் வார்த்தைகளை தேடியெடுத்து மஞ்சுளா மீது வீசிக்கொண்டிருந்தார். அது பெருகியது. மஞ்சுளா மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களையும் அவமானம் கொள்ளச் செய்யும் வகையில் வார்த்தைகளைப் பெருக்கினார். அதனைத் தொடர்ந்து கேட்டுக்கொண்டு அவனால் நிற்க முடியவில்லை. திரும்பி நடக்கத் தொடங்கினான். அவர் யாராக இருக்கக் கூடும்? அந்தக் கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தன.

பச்சையான அருவெறுப்பு மிக்க சொற்களைக் கேட்டு கண்கள் கலங்கின. ஆறுமுகம் நடந்தான்… மதிய கால பூஜைக்கு முன்பாக தியாகராஜர் ஆலயத்தில் இருந்து சிவத்தொண்டர் பெரிய புராணத்திலிருந்து ஒரு பாடலை மென்மையான ராகத்தில் பாடினார். அந்த ராகம் துயர் நிரம்பிய நெஞ்சை மயில் இறகால் வருடுவது போலிருந்தது.

இந்த தேவர்கண்டநல்லூருக்கு வந்து சேர்ந்து இன்றோடு ஆறுமாத காலம் ஆகிவிட்டது. பூக்காரன் மூர்த்தி வீட்டில் தங்கி தேடி வந்த ஆட்காட்டியை தேடியாகி விட்டது. வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனக்காவலர்களிடமும் விசாரித்துப் பார்த்து விட்டான். வனக்குறவர்களையும், பறவைகள் குறித்த ஆய்வாளர்களையும் கேட்டாகி விட்டது. அவர்கள் சிலர் தெரியவில்லை என்றும், சிலர் குழப்பமான பதில்களையும் தெரிவித்தனர். ஆனால் கழிமுகத்துவார வேட்டைக்காரர்கள் விரைவில் உயிரோடு பிடித்து தருவதாக உறுதியளித்திருந்தனர்.

சிலநேரங்களில் ஆக்காட்டியை பிடித்து தருவதாகச் சொல்லி அழைத்து செல்லும் ஆட்களுடன் லகூன் தீவுகளில் அலைந்து சாரயமும், வறுத்த மீனும் தின்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தான்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அம்மாவுக்கு புற்று முற்றிவிட்டது என்று கோரிமேடு மருத்துவர்கள் கைவிட்டபோது அப்பா குலுங்கிக் குலுங்கி அழுவதை முதன்முறையாகப் பார்த்தான் ஆறுமுகம். அம்மாவின் நோயை விடவும் அப்பாவின் அழுகை அத்தனை துயர் நிரம்பியதாக இருந்தது.

அம்மாவுக்கு நோய் முற்றிய நிலையில் முகம் களையிழந்து உடம்பெங்கும் வெண்புள்ளிகள் படர்ந்து வேரறுந்த தாவரம் போல் நிலையற்று தத்தளித்துக் கொண்டிருந்தாள். அடிவயிற்றில் தொடங்கியிருந்த நோய் உடலெங்கும் பரவிக் கொண்டிருப்பதாகவும், இனி எந்த மருந்து மாத்திரையும் வேலை செய்யாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர் மருத்துவர்கள். அவர்கள் மேலும் அம்மாவுக்கு நாளும் குறித்து விட்டனர்.

அம்மாவும்-அப்பாவும் மனம் உடைந்த நிலையில் இருப்பதைப் பார்த்த அவனுக்கு நிலைகொள்ளாத துக்கம் பெருகியது. தெரிந்தவர்கள்-அறிந்தவர்கள் என அம்மாவின் நிலையைச் சொல்லி தீர்வு தேடி களைத்த போதுதான் நண்பரின் நண்பரான உலகநாதன் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் ஞானசாமி பண்டிதர் பற்றி தெரிவித்தார். அவர் தொண்டிக்கு அருகே ஆலபெருமழை என்றும் கிராமத்தில் இருப்பதாகச் சொன்னார். அவரைப் போய் பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் நம்பிக்கையளித்தார்.

காரில் அம்மாவை அழைத்துக்கொண்டு ஆலபெருமழைக்கு சென்றடைந்தபோது இந்தியப் பெருங்கடலுக்கு மிக அருகில் அமைந்த இடமாக இருந்தது அது.. அவரது இருப்பிடம் துவங்கும் இடத்தின் முகப்பிலே ஞானசாமி பண்டிதர் வைத்தியசாலை என எழுதப்பட்டு இருந்தது. வைத்தியசாலை தொடங்கும் இடத்தில் ஒரு பெரிய முகப்பு மண்டபமும் அதனைச் சுற்றி பனையோலையால் வேயப்பட்ட சிறுசிறு குடில்கள்.

அதில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கும் வகையில் செய்நேர்த்தியோடு அமைக்கப்பட்டிருந்தன. இவர்கள் அந்த முகப்பு மண்டபத்துக்குள் நுழைந்த நேரத்தில் ஞானசாமி பண்டிதர் மழைக்கான பூஜையில் இருந்தார். அங்கு அவரை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவரை சாமி என்றே அழைத்தார்கள்.  வருடத்துக்கு ஒருமுறை மழை யாகம் செய்வது அவரது வழக்கம் என்றார்கள். ஆலபெருமழையில் அவரது மழை பூஜைக்கு பிறகுதான் கருமேகங்கள் சூழும் என்றும் பேசிக்கொண்டர்கள். இவையெல்லாம் ஆறுமுகத்துக்கு வியப்பாகவும் புதிதாகவும் இருந்தது.

நீண்ட நேரம் வெட்டவெளியில் அமர்ந்து மழை குறித்த சுலோகங்களையும் இடையே பாடல்களையும் கணீர் குரலில் பாடி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தார். பாடல் பாடும் சில நேரங்களில்… மழையே… வாடா… வா.. என  கனத்த குரலில் ஒலி எழுப்பினார்.  வானை நோக்கி அவரது பாடல்கள், கோரிக்கைகள் பாய்ந்தன. அவரது குரல் அதிக ஒலியுடன் யாகத்தின் நிறைவை நோக்கிப் செல்லத் தொடங்கிய நேரத்தில் வானம் இருள் கொள்ளத் தொடங்கியது. தொடர்ந்து அதிவேகக் குரலை எழுப்பி மழையை இறங்கிவரச் சொன்னார்.

அந்த நேரத்தில் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தவர்… இப்போது எழுந்து நின்று கையில் இருந்த தடியைப் பற்றியபடி  வானை நோக்கி முகத்தை காட்டி ‘விழுக… துளியே.. உயிர் வளியே’ என்றார்…..கையில் இருந்த தடியை அந்தரத்தில் நிறுத்திவிட்டு இரண்டு கரங்களையும் கூப்பி சூரியநமஸ்கார நிலையில் நின்றார். இருள் கொண்டிருந்த வானம் சடசடவென்று இறங்கியது.  திரண்டிருந்த மக்கள் கரகோஷங்களை எழுப்பி சாமியாருக்கு நன்றியை தெரிவித்தனர். வானமே இடிந்து விழுவது போல ஒன்றரை மணிநேரம் பெருமழை கொட்டியது. மழையில் நனைந்தபடி சாமி ஒய்வு அறைக்கு சென்றுவிட்டார். இனிமேல் இரவு 9 மணிக்குத்தான் நோயாளிகளைப் பார்ப்பார் என்றார்கள். மழையோடு சிலர் போய்விட்டிருந்தனர். மீதியிருந்த ஜனங்களுக்கு மிளகும் பூண்டும் அடர்த்திக்கூட்டிய ‘கடல் நண்டு சூப்’ வழங்கப்பட்டது. பெரிய அண்டாக்களில் நிரப்பட்டிருந்த வாழைப்பூ சோறு இரவு உணவாக தங்கு தடையின்றி அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டது..

சாமியார் வெளி நோயாளிகளைப் பார்க்க வந்தபோது வானம் துயில் கொள்ளத் துவங்கியிருந்தது. நேரம் போனதே தெரியாமல் இருந்தது ஆறுமுகத்துக்கு..

சாமி முன்பாக அமர்ந்தார்கள். அவரை மிக அருகில் ஆறுமுகம் பார்த்தான். அவர் முகத்தில் தங்கத்தின் மினுமினுப்பு. கழுத்தில் பவள மகுடம் சூடிய ருத்ராட்ச மாலையை அணிந்திருந்தார். இரண்டு கண்களும் வெண்மை நிற தாமரை போல விரிவு கொண்டிருந்தன.  அதில் ஒரு காந்தம். அதில் ஒரு மின்னல். அதில் ஒரு ஈர்ப்பு. இப்படி எத்தனையோ. அவர்  உதடுகள் சிவந்து போய் பழுத்த கோவைப்பழம் நிறம் காட்டின. அவர் தேகம் ஒரு சிற்பியால் செதுக்கியது போல இருந்தாலும் அவர் சராசரிக்கு மிகக்குறைவான உயரத்தில் இருந்தார்.

அதே நேரத்தில் உடல் மாநிறத்தில் இருந்தது.  வலது கரத்தில் ‘நமச்சிவாய’ என்னும் அட்சரம் பொறித்த செப்புக்காப்பு போட்டிருந்தார்.

அம்மாவை அவர் முன்பு அமர வைத்தபோது உற்றுக் கவனித்தவர்… “விஷயத்தை சுருக்கமாக சொல்லுங்கள்” என்றார்.

ஆறுமுகமும் அவனது தந்தையும் சொல்லியதைக் கூர்மையாகக் கேட்டார். பிறகு சாமி, அம்மாவின் கையைப் பற்றி நாடியை பரிசோதித்தார். சில நிமிடங்கள் யோசித்தவர் பிறகு எழுந்து உள்ளறைக்குச் சென்றார்.  கஷாயம் நிரம்பிய மூன்று பாட்டில்கள் மற்றும் லேகியங்கள், சூரணப்பொடிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். ஆறுமுகத்தைப் பார்த்து “தம்பி அம்மாவ அங்கே இருக்க வெச்சிட்டு வா” என சைகை காட்டினார். அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு எதிரேயிருந்த மண்டபத்துக்கு போனார்.

உள்ளறையில் சாமியார் முன்பு நின்றான் ஆறுமுகம். “தம்பி இன்று முதல் மூன்று மண்டலம் நான் கொடுத்திருக்கின்ற மருந்துகளை அம்மாவுக்கு கொடுக்கணும். மருந்தை தேன், காய்ச்சின பாலில் கலந்து கொடுங்க. அப்புறம் இந்த மருந்து சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு போகும் கவலைபடதீங்க. இன்னொரு முக்கிய விஷயம் இந்த மருந்து சாப்பிடும்போது அம்மாவுடன் கட்டாயம் ஒருவர் உடன் இருக்க வேண்டும். இந்த நோய் இந்த மருந்துக்கு எதிரா செயல்படும். அதுவும் இந்த மருந்து சாப்பிடும் நோயாளிக்கு குறிப்பா தற்கொலை எண்ணம் அதிகமாக இருக்கும் கவனம்….” அவர் சொல்லுவதை ஆறுமுகம் மனதில் ஏற்றிக்கொண்டே வந்தான்.

“நான் சொல்றதை மட்டும் நீ செய்துட்டா உங்க அம்மாவை விட்டு இந்த நோயை விரட்டிபுடுவேன். செய்விய்யா தம்பி”

“செய்யுறேன் சாமி…. நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்”.

மூன்று மண்டலத்துக்குள்ள நான் சொல்ற பறவையை நீ உயிரோடு பிடித்து வந்து தரணும். அது பேரு ‘நீலநிற ஆக்காட்டி’. ஒரு பேப்பர்ல குறிச்சுக்க. அதனைக் கொண்டு வந்தா அதன் குருதியை எடுத்து புடம்போட்டு பெரிய மருந்து செய்யணும். நீலநிற ஆக்காட்டி கடலோர கழிமுகத்துவாரத்துல வாழ்ற ஜீவன். சைவ பட்சி. பழங்கள் தான் தின்னும். சிவபறவை. அவ்வளவு சீக்கிரம் எவர் கண்ணிலும் படாது. வேட்டையின் சூது கற்றது. சிவராத்திரி அன்று ஒத்தை கால்ல நின்னு கயிலாயம் நோக்கி தவம் புரியும். அதனைப் பிடித்து இடது காலினை அறுத்து கொஞ்சம் குருதியை எடுத்துகிட்டு உயிரோடு விட்றணும்.

அது போயி சிவன் கோயில் முன்னே தவம் செய்து, யாருக்கு குருதி கொடுத்துச்சோ அவுங்களுக்காக தவம் இருக்கும்.  இப்ப அந்த இனம் அழிஞ்சுட்டதா சொல்றங்க. அதை தேடிக் கண்டுப்பிடிக்கிறது  உன்  சமார்த்தியம். நீ அதை கண்டுபிடிச்சு கொண்டாந்திய்ன்னா உங்க அம்மாவை நான் பிழைக்க வெச்சுடுவேன் ஆமா.. புரியுதா..? நான் சொல்றதை நீ நல்லா புரிஞ்சுக்க அது சிவபறவை அது அவ்வளவு சீக்கிரமா உன் கையில சிக்காது. உங்க அம்மா உயிர் அந்த பறவையிடம் தான் இருக்கு.”

அவரை மிரட்சியுடன் பார்த்தான் ஆறுமுகம்.

அவர் தொடர்ந்தார். “புரியுதா… வேதாரண்யம், கோடியக்கரை, முத்துப்பேட்டை பகுதிகள் தான் அதிகமாக அது வலசைப்போடும் என்று எங்க ‘குரு’சாமி சொல்வாங்க. இதைப் பத்தி குருவிக்காரங்க கிட்ட கேளு அவுங்க சொல்வாங்க. முடிந்தால் பிடித்தும் கொடுப்பாங்க. அதுக்கு முன்னாடி வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யஸ்வரர் கோவிலுக்கு போய் நெய்தீபம் ஏற்று. நான் சொல்றது உனக்கு விளங்குதா? இன்னும் சுருக்கமாக சொல்லணும் அப்படின்னா உங்க அம்மா உயிர் உன் கையில் தான் இருக்கு. புரியுதா… நீலநிற ஆக்காட்டி… சரி கருத்தா கிளம்பு” என்று சொல்லிவிட்டு காத்திருக்கும் நோயாளிகளைப் பார்க்க சென்றார். ஆறுமுகம் கொடுத்த பணத்தை வேண்டாம் என மறுத்து விட்டார்.

காரில் வரும்போது சாமி என்ன சொன்னார் என்று அப்பா குடைந்து கொண்டே வந்தார். அவர் சொல்லியதை அவரிடம் கூறியபோது கேட்டவர் வியப்பாக இவனைப் பார்த்தார். அவர் கண்களில் நம்பிக்கை துளிர் விட்டிருந்தது.  வீடு வந்து சேர்ந்த போது ஒரு பகலும் இரவும் முடிந்து இரண்டாவது நாள் தொடங்கி கதிரவன் துயில் களைந்திருந்தான்.

மாமாவும் அக்காவும் குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்திருந்தனர். நீண்ட நாட்களாக அம்மாவைக் காணாத செவலைப்பசு பெரும் குரலில் அம்மாவின் வருகையை ஆமோதித்தது. தெருவில் இருந்தவர்கள் நலம் விசாரிக்கக் கூடிவிட்டார்கள்.  அக்கா அம்மாவைப் பார்த்து கண்ணீர் விட்டபடியிருந்தாள். சாமியார் சொன்ன விஷயங்களை சொன்னபோது கதறிய அக்கா இரண்டு ஐந்நூறு ரூபாய் கட்டுகளை மாமாவுக்கு தெரியும்படி கொடுத்தார்.

“தம்பி எப்புடியாச்சும் அந்த பறவையை பிடிச்சுகிட்டு வந்திடுடா” என்று சொல்லி அம்மாவின் உயர்ந்த பண்புகளை எடுத்துச் சொல்லி தெருக்கார பெண்களையும் தன்னுடன்  அழும்படி செய்தாள்… “டேய் பணம் பத்தாட்டி கவல படாதே… நாங்க இருக்கோம்.” என்றாள். அப்போது மாமா அக்காவிடம் ஏதோ சொல்ல முயன்றார்.

2

அப்பாவின் பங்காளி உறவு வகையில் உறவினர் கணேசன் அளித்த தகவல் அடிப்படையில் தான் தேவர்கண்டநல்லூர் பூக்காரன் மூர்த்தி வீட்டுக்கு ஆறுமுகம் வர நேர்ந்தது. எந்த அடிப்படையில் இந்த ஊருக்கு வந்தான் என்பதற்கு பின்னால் பூக்கோள ரீதியாக மட்டுமல்ல அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அடிப்படையிலும் சில தொடர்புகள் இருக்கத்தான் செய்தன. அப்பா திருமணத்துக்கு முன்பு இங்கு தங்கி வருவாய்துறையில் சிலகாலம் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் என்றும் அப்போது பூக்காரன் மூர்த்தியின் அம்மா பாரிஜாதம் தான் அப்பாவுக்கு மூன்று வேளை உணவு சமைத்துக் கொடுத்து பார்த்துக் கொண்டாராம்.

மூர்த்தியின் அப்பா எந்த வகையில் உறவு என்று கேட்டால் சற்று தலைசுற்றும் அளவுக்கு தூரத்து தூரத்து சொந்தம் என்று கணேசன் சொன்னார். அதனால் மேலும் விளக்கம் பெற ஆறுமுகம் விரும்பவில்லை. மேற்கொண்டு இது குறித்து எதுவும் விசாரிக்காமல் நீலநிற ஆக்காட்டியைப் பிடிக்கக் கிளம்பியிருந்தான்.

அந்த சனிக்கிழமையின் அந்திப்பொழுதில் ஆறுமுகம் வந்திறங்கியபோது தேவர்கண்டநல்லூரில் அந்தி வெயில் மிதமாக காய்ந்து கொண்டிருந்தது. வைகாசி மாதம் என்பதால் காற்று மென்மையாக வீசியது. விசாரித்துக் கொண்டு மஞ்சுளா பூக்கடைக்கு வந்து சேர்ந்தபோது அழுக்கு கைலியும், முண்டா பனியனும் அணிந்திருந்த ஒருவன் வதங்கிய மலர்களுக்கு தண்ணீர் தெளித்து உயிர்ப்பை மீட்டெடுத்துக் கொண்டிருந்தான். அவனிடம் வந்து “அண்ணே மூர்த்தி அண்ணன் பூக்கடை தானே” என்றான்.

”என்ன வேணும்”

“அப்ப இவரு தான் மூர்த்தி” என்று சுதாரித்துக் கொண்ட ஆறுமுகம்.

“அண்ணே, கீழையூரில் இருந்து வர்றேன். கணேசன் மாமா அனுப்பி வெச்சாங்க. தாசில்தார் சிவபுண்ணியத்தின் மகன்” என்றான்.

“ஒ… அப்புடிய்யா… தம்பி நல்லாருக்கிய்யா.. பத்து வயசுல உன்னை பார்த்தது. அப்பா, அம்மா, அக்கா, மாமா எப்படி இருக்காங்க.” என்று படபடவென கேட்டுக்கொண்டே… ‘உட்கார்’ என சொல்லி மர நாற்காலியை எடுத்துப் போட்டான்.

அமர்ந்து தான் வந்த விஷயத்தையும் அம்மா நிலையும் மிக நிதானமாக விவரித்தான் ஆறுமுகம். மூர்த்தி பதட்டத்துடன் கேட்டான்.

“சரிப்பா சொல்லு… நான் என்ன செய்யணும்”.

“நான் இங்கு தங்கிதான் அந்த பறவையை தேடணும். அதற்கு நீங்க உதவணும். நான் தங்கிக்கொள்ள ஒரு அறை வேணும். இந்த பக்கத்து வேட்டைக்கார ஆட்களை நீங்க எனக்கு அறிமுகப்படுத்தி விடணும்”

’சரிப்பா…’ என ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டு, போனை எடுத்து யாரையோ அழைத்தான். பத்து நிமிடத்துக்குள், இருபது வயது இருக்கலாம் ஒரு வாலிபன் வந்து நின்றான். அவனிடம் மூர்த்தி “நேசமணி கடையை பார்த்துக்க தம்பியை கூட்டிட்டு பெயிட்டு ஒரு வேலையிருக்கு முடிச்சிட்டு வர்றேன்” சொல்லியபடி மூர்த்தி நடந்தான். அவனைப் பின்பற்றி ஆறுமுகம் நடந்தான்.

கடைவீதியின் முக்கில்  நிறுத்தியிருந்த ஆட்டோவை அழைத்து இருவரும் ஏறி அமர்ந்தார்கள். ஆட்டோக்காரனைப் பார்த்து “விளமல் முத்துமாரி லாட்ஜ்க்கு போ…” என்றான் மூர்த்தி. ‘தம்பி… உனக்கு எதுவேண்னாலும் கூச்சபடமா என்கிட்ட கேளு… சரிய்யா…” என்று ஆறுமுகத்தைப் பார்த்து சொல்லிவிட்டு பெருமிதம் பொங்க ஒரு பார்வைப் பார்த்தான். வெள்ளையும்.. கறுப்புமாக இருந்த தனது தாடியை தடவிக் கொண்டான். சில மீட்டர் தூரம் கடந்த நிலையில், ஆட்டோக்காரனைப் பார்த்து… தம்பி கடைக்கு விடு வண்டியை…” என்றான் அதட்டலுடன்.

ஆறுமுகம் நடப்பவற்றை மிக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான். வண்டி டாஸ்மார்க் கடையில் நின்றது. “தம்பி…கொஞ்சம் இரு.. ஒரு கட்டிங் போட்டாத்தான்… மூளை வேலை செய்யும்” என்று இறங்கினான். அவனிடம் 500 ரூபாயை எடுத்து நீட்டினான் ஆறுமுகம். ‘வேண்டாம்பா’… என்கிட்டே இருக்கு என்று ஒரே ஓட்டமாக ஒடி கடைக்குள் புகுந்தான். சில நிமிடங்களில் திரும்பி வந்தான். முத்துமாரி லாட்ஜ் வாசலில் ஆட்டோ நின்றது. அறை எண் 13க்கு அன்வான்ஸ் கொடுத்துவிட்டு, கிளம்பும்போது, ‘முடிந்தால் இரவு கடையை கட்டிவிட்டு வருகிறேன். இல்லையென்றால் காலையில் கடைக்கு வந்துவிடு” என்று சொல்லிவிட்டு வந்த ஆட்டோவில் மூர்த்தி கிளம்பினான்.

ஆறுமுகம் அறையில் சிறிது நேரம் ஒய்வு எடுத்துக்கொண்டு விட்டு குளித்தான். அப்போது அவனையறியமால் ’நீலநிற ஆக்காட்டி’ என்று சொல்லிக்கொண்டான். அப்போது அந்தப் பறவை குறித்து விநோதமான உணர்வுகள் அவனை உற்சாகம் கொள்ளச் செய்தன. சில நிமிடங்களில்  நோய் முற்றிய அம்மாவின்  துயர்மிக்க முகம் வந்து போனது. அறையை பூட்டிவிட்டு வெளியே கிளம்பினான். பொழுது ஏறிவிட்டது. நல்ல இருள். வானில் கருமேகங்கள் கூடியிருந்தன. செல்போனை ஆன் செய்து அக்காவிடம் பேசலாம் என்று நினைத்தான். பிறகு இரவு பேசலாம் என தனக்குத்தானே மறுப்பு சொல்லிக் கொண்டான்.

விளமல் மிகச்சிறிய ஊர் என்றே தோன்றியது. ஆனால் கடைத்தெருக்கள் அதிகம். குடியிருப்புகளும் வளர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றியது. வடக்கும் தெற்குமாக கடைகள் இருந்தன. வளரும் ஊருக்கு உரிய அத்தனை அம்சங்களும் காணப்பட்டன.

கடைத்தெருவில் எதிரே நடந்து வந்த இரண்டு பேரிடம்… கடை எங்குள்ளது என்று விசாரித்தான் கிழக்குப் பக்கம் சுட்டிக் காட்டினார்கள். நடந்தான். பெரிய திடலில் பரந்து விரிந்த நிலையில் அமைத்திருந்தார்கள். திருவிழா கூட்டம் போல் ஆட்கள் நிறைந்து வழிந்து கொண்டிருந்தார்கள். மேஜையில் அமர்ந்து தனக்கு பிரியமான ரம்மை ஆர்டர் செய்தான். எதிர் இருக்கையில் 56 வயது மதிக்கத்தக்க ஒருவர் மிதமான போதையில் யாரிடமோ போனில் கொஞ்சிக் கொண்டிருந்தார். அவர் பார்வை அடிக்கடி இவனை நோக்கி வந்தது.

அவரிடம் பேசுவதற்கான சொற்களை எப்படி தொடங்குவது என தெரியாமல் குழப்பமாக அவரைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். சர்வீஸ் செய்பவர் “சயிடிஸ் என்ன சார் வேணும்” என்றார்.

’என்ன இருக்கு…’

”காடை, மடையான் இருக்கு சார்…”

“மடையான் இருக்கா… அது ஒரு பிளேட்டு சொல்லுப்பா…”

எதிரேயிருந்தவர் இவனைப் பார்த்து, சிறிய புன்முறுவல் பூத்தார்.

மடையான் குறித்து கேள்விப்பட்டு இருக்கிறான். ஆனால் சாப்பிட்டதில்லை. ஊரில் இருக்கும்போது மாதம் ஒருமுறை தான் அசைவம் இருக்கும். அம்மாவைப் போல் அப்பாவும் சைவப்பிரியர். ஆனால் அக்கா ஒருவேளை கவுச்சி இல்லையென்றாலும் முகம் சுழிப்பாள். சிலநேரங்களில் அவளுக்காவே தனிச்சமையல் நடக்கும். குறைந்த பட்சமாக ஒரு கருவாடாவது சுட்டு வைக்க வேண்டும். ஆறுமுகம் சென்னையில் தங்கிப் படித்தபோது ஆஸ்டல் சாப்பாடு. அதிலேயே பெரும் நாட்கள் ஓடிவிட்டன.

அப்பாவுக்கு மீன் உணவில் விருப்பம் அதிகம். அதுவும்  விரால்மீன் என்றால் விலையே கேட்க மாட்டார். நாட்டுக்கோழியைத் தவிர வேறு பறவைகளை வீட்டில் சமைத்தது கிடையாது. இவன் படிப்பு முடிந்து  சென்னையிலேயே ஒரு ஐடி நிறுவனத்தில் வேலையில் அமர்ந்து கொண்டான். அங்கு ஏற்பட்ட ஒரு காதல் தோல்விக்கு பிறகு திருமணம் குறித்த எண்ணமின்றி இருக்கிறான். பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அக்கா மடையான் கறி கேட்டபோது, பட்சிகளைக் கொல்வது பாவம் என்றாள் அம்மா. அதற்கு அக்கா, “கொன்னா பாவம் தின்னா போச்சு” என்றாள். அது ஏனோ இப்போது ஆறுமுகம் நினைவுக்கு வந்தது.

இரண்டு கிளாஸ் குடிக்கும் வரை மடையான் கறி வரவில்லை. வறுகடலையை கொறித்தான்.  ஆவிப்பறக்க வந்து மேஜையில் அமர்ந்தது நேற்று வரை வான்வெளியில் மிதந்த மடையான். எதிரே குடித்தவர் இவனைப் பார்த்து, தம்பி என்ன ஊரு என்றார். தேவர்கண்டநல்லூர் என்றான். இதனைக் கேட்டதும் “மழ வர்ற மாதிரியிருக்கு நான் கிளம்புறேன்” என அவர் கிளம்பினார். வெங்காயமும் மிளகும் அதிகம் தூவப்பட்ட மடையான் தனது முன்பாக இருப்பதை வியப்புடன் பார்த்தான்.

சடசடவென ஏறும் தன்மை கொண்டது ரம். அது தனது பணியை செவ்வானே செய்யத்தொடங்கி பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. அதன் சுழலலில் ஒரு துண்டை எடுத்து சுவைத்துப் பார்த்தான். இறைச்சியின் மணம் தொண்டைக்குள் ஏதோ செய்தன. கறியை வெளியே தூப்பினான். அப்போது அவன் முன்னாள் காதலி கயல்விழியுடன் ஒருநாள் ‘காஃபி டே’ வில் மோசமான காஃபியை இவன் குடித்துவிட்டு வாந்தியெடுத்தது நினைவுக்கு வந்தது. அப்போது கயல்விழி ஆத்திரம் பொங்க இவனை திட்டித்தீர்த்தாள். அது ஒரு மோசமான நாள்.

மூன்றாவது கிளாசை குடிக்கத் தொடங்கினான். மடையான் கூட்டம் கூட்டமாக அக்டோபர், நவம்பர் மாதங்களின் மழைக்காலப் பொழுதுகளில் அணிவகுத்து பறந்து வருவதும், அதே போன்று கொக்குகள், நாரைகள் அணி அணியாக வந்து சம்பா வயல்களில் நத்தைகள் பிடித்துத் தின்னும் காட்சிகளும் மாறிமாறி வந்து போயின. ஒரு பாட்டிலை முடித்து விட்டு இன்னொரு பாட்டிலை வாங்கி இடுப்பில் சொருகினான். வறுத்த முந்திரி பருப்பை சாப்பிட்டுக்கொண்டே பாரிலிருந்து வெளியே வந்தான்.

முன்பை விடவும் வானம் கருங்மேகங்கள் சூழ்ந்து பெரும் மழைக்கான அறிகுறிகளுடன் துலங்கின.  கயல்விழியின் நினைவுகள் ஆக்கிரமிக்கும் நேரங்களில் கட்டாயமாகக் குடிக்கும் மனநிலைக்கு சமீப காலங்களில்  வந்திருந்தான். ஆனால் இன்று அப்படியில்லை. புதிய இடமும், சூழலும், அம்மா குறித்த கவலைகளும் இன்று அதிகம் குடிக்கும்படி செய்து விட்டிருந்தன.

கயல்விழி உடன் உறவை முறித்துக் கொண்ட இரண்டு வருட காலங்களில் தான் ‘பீயர்’ குடிப்பதை நிறுத்திவிட்டு ’ரம்’ குடிக்கத் தொடங்கியிருந்தான். அவள் இவனது தோழியாக வரும்வரை நல்லபிள்ளை தான். அவளின் நம்பரை எடுத்துப் பார்த்தான். டயல் செய்யலாம் என்று தோன்றிய கணத்தில் வானில் இருந்து துளிகள் விழத்தொடங்கின. காற்று பலமாக அடித்தது. புழுதி கடைவீதியெங்கும் பறந்தன. சிறு தள்ளாட்டத்துடன் நடந்தான்.

 3  

செல்போன் நாலைந்து முறை குரல் கொடுத்தது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவன் திடுக்கிட்டு எழுந்தான். அப்போது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. சட்டென்று எழுந்து கதவைத் திறந்தான். அறை வாசலில் மூர்த்தி நெற்றியெங்கும் திருநீறு மணக்க சிரித்த முகத்துடன் நின்றான். ஆறுமுகம் பதட்டமாக குளியலறையில் புகுந்தான். தலை இடது பக்கமாய் வலித்தது. கிளம்பி அறக்க பறக்க மூர்த்தியுடன் நடக்கத் தொடங்கினான். வாசலில் ஆட்டோ நின்றது. இருவரும் ஏறினார்கள்.

தேவர்கண்டநல்லூர் பூக்காரத் தெருவுக்கு கால் மணிநேரத்துக்குள் ஆட்டோ வந்து நின்றது. தெருவே பலவகை பூக்களின் மணத்தால் நிரம்பி வழிந்தது. மூர்த்தி ஆட்டோவில் இருந்து இறங்கினான்.

“இறங்கு தம்பி இதுதான் நம்ம வீடு” தலைவலி சற்று கட்டுக்குள் வந்தது போலிருந்தது.  விதவிதமான மலர்களின் வாசனை. எந்த பூவுக்கு என்ன வாசம் என நுட்பமாக உணர முடியவில்லை. இருவரும் மாடி வீட்டின் முகப்பில் நின்றார்கள். “தம்பி உங்க அப்பா இங்க வேலை பாக்கும்போது எனக்கு வயசு ஐஞ்சு இருக்கும். அப்போ இது பெரிய ஒட்டு வீடு. உள்முற்றம் வேறு. பதினைஞ்சு ரூம்க. இப்ப மாதிரியில்ல. நாலைந்து குடும்பம் வாடகை இருந்தாங்க. அப்படி வந்தவங்க உங்க அப்பா. மூனா வருஷம் தான் அதனை இடிச்சுப்புட்டு இந்த வீட்டைக் கட்டினோம்.

எங்க அப்பாவும், அம்மாவும் இறந்தப்போ கூட உங்க  அட்ரஸ் தெரியாம செய்தி சொல்ல முடியல்ல… என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. புடவையை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள் மஞ்சுளா. அவளைப் பார்த்த அந்த கணம் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது.  உலராத கூந்தலுடன்… பச்சைநிறப் புடவையை அணிந்திருந்தாள்.

“மஞ்சு… தம்பி பறவை தேடி வந்திருக்கப்புள்ள… பெரிய படிப்பு படிச்சுட்டு மெட்ராஸ்ல வேலைப் பார்த்த புள்ள. அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு இப்படி வந்திருக்கு. எப்ப வந்தாலும் சோறு தண்ணி போடுறது உன் பொறுப்பு..”

மூர்த்தி சொல்லியது இவனுக்கு சங்கடமாய் இருந்தது. இங்கேயிருந்து கிளம்ப வேண்டும் போல் ஒரு அவஸ்தை. அவளுடன் இயல்பாக முகம் கொடுக்கவில்லை. ஒருவகை நடுக்கம். உடனே கிளம்ப வேண்டும் போல் ஒரு உந்துதல்… அவள் பார்வை உள்ளுக்குள் ஏதோ செய்தன. நாற்காலியில் உட்கார முடியவில்லை. சில நிமிடங்களில் சூடான காஃபியுடன் வந்து நின்றாள். குழந்தைகள் பாட்டி வீட்டுக்கு சென்று விட்டார்கள் நாளை வந்து விடுவார்கள் என்றாள். அவள் நீட்டும்போது அவள் விரல்கள் பட்டுவிடுமோ என்று பயந்தான். மூர்த்தி பக்கத்து அறையில் கொட்டிக் கிடக்கும் மலர்களை அள்ளி ஈர சாக்கில் திணித்துக் கொண்டிருந்தான்.

“காஃபி எப்பிடியிருக்கு”

“நல்லா இருக்குங்க..” வார்த்தைகள் உடைந்தன.

“வாங்க.. போங்க… வேண்டாம்… மஞ்சுன்னே கூப்பிடுங்க”

4

ஆறுமுகத்திடம், கடைவீதியில் வைத்து மூன்று வேட்டைக்காரர்களை அறிமுகம் செய்து வைத்தான் மூர்த்தி. அவர்கள் இன்று உடனே போனால் வேதாரண்யம் அருகேயுள்ள ஆறுகாட்டுதுறையில் அந்தப் பறவையை பார்க்கலாம் என்றார்கள். இந்த பருவநிலையில் அது அந்தப் பகுதியில் நிறைய காணப்படும் என்றார்கள். உடனே ஒரு வாடகைக்கு கார் பிடிக்கப்பட்டது. மூர்த்தி காரின் முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான்.  பின்னிருக்கையில் நான்கு பேரும் அமர்ந்து கொண்டனர்.

நாகை சாலையில் இருந்து கார் வேதாரண்யம் சாலையில் செல்லத் தொடங்கியபோது பகல் பணிரெண்டு. வேட்டைக்காரர்கள் தங்கள் வேட்டையின் சாகசங்களைச் சொல்லி பெருமையடித்துக் கொண்டே வந்தார்கள். கார் மிதமான வேகத்தில் ஒடிக்கொண்டிருந்தது.  சாலையின் இடதுபுறத்தில் இருந்த மதுக்கடையை பார்த்தவுடன் மூர்த்தி, “வண்டியை நிறுத்துப்பா…. ஒரு கட்டிங் சரக்கு போட்டாத்தான்.. நமக்கு மூளையே வேலை செய்யும்”… என்றான். வண்டியை நிறுத்தியதும் வேட்டைக்காரர்கள் மகிழ்ச்சியடைந்தனர். “தம்பி கவலைபடாதீங்க… நாளைக்குள்ள ஆக்காட்டியை எப்படியும் பிடிச்சுட்டுத்தான் திரும்ப்போறம்” ரூ 500 எடுத்து மூர்த்தியிடம் நீட்டினான். “தம்பி உனக்கு…” வேண்டாம் என மறுத்தான்.

செல்போனை எடுத்து அக்காவிடம் பேசி தனது முயற்சிகளை தெரிவித்தான் ஆறுமுகம். அக்காவின் அருகில் இருந்த அப்பாவிடம் பேசி ஆறுதல் கூறினான். அப்போது புதிய எண் ஒன்று உள் நுழைந்தது. “நான் மஞ்சுளா பேசுறேன்… அவரு உங்களோட இருக்காரா. அவரு போனையும் இங்க வெச்சுட்டு போய்ட்டார். அழைப்பு மேல அழைப்பு வருது. ஏதோ கோயில் விசேஷத்துக்கு மாலைக்கு ஆர்டர் வாங்கிட்டாராம். மாலை இன்னும் வந்து சேரலன்னு சத்தம் போடுறாங்க. அவர்கிட்ட கொஞ்சம் கொடுங்க.” இடைவிடாமல் பேசிக்கொண்டே போனாள். அவள் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

“ஒரு நிமிஷத்துல கூப்பிடுறேன்… வெயிட் பண்ணுங்க”

சில நிமிடங்களில் குடித்து விட்டு வெளியே வந்தார்கள். விஷயத்தைச் சொல்லி மூர்த்தியிடம் போனை கொடுத்தான். “எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்..நீ.. போனை வை”….என்று மூர்த்தி போனை கட் செய்தான். கார் கிளம்பியது ஆறுகாட்டுத்துறையில் போய் இறங்கியபோது… நல்ல வெண்மையும்… நீலமும் கலந்த வண்ணத்தில் ஆகாயம் காட்சியளித்தது.

மூன்றாம் துண்டில் முள் வளைவில், விரிந்து பரந்து கிடக்கும் வங்களாவிரிகுடா கடலில் மிக குறைவான அலைகள் கரைக்கு வந்து திரும்பிக் கொண்டிருந்தன. கடற்காகங்கள் முற்பகல் பொழுதில் துள்ளி வரும் அலையில் குளிப்பதும் பறப்பதுமாக இருந்தன. வேட்டைக்காரர்கள் கடற்கரையில் இருந்து பிரியும் மருதராஜன் ஆற்றின் கரையில் நடக்கத் தொடங்கினார்கள். மிதமான போதையோடு அவர்கள் இருந்தார்கள். மூர்த்தி அவர்கள் பின்னால் நடந்து கொண்டிருந்தான்.

கடைசியாக ஆறுமுகம் நடந்தான். அலையாத்தி மரங்கள் ஆற்றின் கரைகளில் அடத்தியாக வளர்ந்திருந்தன. ஒற்றையடிப் பாதையாக அவை நீண்டன. வேட்டைக்காரர்களில் விஷயம் தெரிந்தவர் போலிருந்த ராமசாமி சொன்னார். “தம்பி இது பாரஸ்ட் ஏரியா, அவுங்க யாராச்சும் வந்து  கேட்டா. ஆவரம்பூ பறிக்க வந்தோம்முன்னு சொல்லுங்க. ஏன்னா அது காமாலையை போக்குற பூ. இங்கு அது ஜாஸ்தி.   “சரி”யென்று தலையாட்டினான்.

அவர்கள் நடந்து கொண்டேயிருந்தார்கள். கொஞ்ச தூரத்தில் கிழக்கிலிருந்து மேற்காக நடந்தார்கள். அடர்ந்த வனத்துக்குள் நடப்பது போல் இருந்தது.  ஆற்றின் படுகையில் ஆறுமுகம் புதிய புதிய தாவரங்களைப் பார்த்தான்.  வேட்டைக்காரர்கள் அதன் இலைகளைப் பறித்து முகர்ந்து அதன் மருத்துவ குணங்களை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆறுமுகம் “ஒரு பறவைங்கயும் காணல” என்றான்.

“தம்பி இது உச்சிக்கு பிறகான நேரம். அசமடங்கியிருக்கும்…. இன்னும் ஒரு நாழிகைக்கு பிறகு பாருங்க…” மூர்த்தி, அந்த சாமி பறவை எப்படிங்க இருக்கும் என்றான். அதற்கு, ராமசாமி, நீலநிற ஆக்காட்டின்னு சொல்றது விநோதமான பறவைங்க. அது குரல் எடுத்து கூவியதுன்னு வையுங்க. மிருகங்களே வாலைச் சுருட்டிக்கிட்டு படுத்துடும்.  அவ்வளவு வன்மை மிக்கதுங்க. ஆனா கண்கள் சிவப்பு நிறத்துல இருக்கும். காட்டுலோயோ மேட்டுலோயோ ஆட்களை பார்த்துட்டா… மிக கடுமையா குரலிட்டு ஆர்பாட்டம் பண்ணும்.” என்றார்.

ராமசாமியைப் பார்த்து ஆறுமுகம் கேட்டான்…அது நீலநிறத்திலயா இருக்கும்.

“இல்ல தம்பி.. அது கலர் வந்து… அத்திப்பழம் நிறத்துல இருக்கும், அதன் குரல் நாலு பேடைக்குயிலுங்க ஒரே நேரத்துல ஒரே மாதிரி கூவுன்னா எப்படியிருக்குமோ அப்படியிருக்கும்”.

ஒரு கணத்தில் ஆறுமுகம் குழம்பி போனான்.” நீலநிற ஆக்காட்டின்னு தானே சாமி  சொன்னனார். பிறகெப்படி அது அத்திப்பழம் நிறம்முன்னு சொல்றாங்க. அத்திபழம் நிறம் எப்படியிருக்கும்…” என்றான் குழப்பத்துடன்.

சூரியன் மெல்ல சுருங்கத் தொடங்கியது.

கொஞ்ச தூரம் நடந்த பிறகு பெரும் வனப்பரப்பு முடிவுக்கு வந்தது. அலைகள் மினுங்க இருந்த பெரிய ஏரியில் மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன. அதனை ‘கலங்கல் ஏரி’ என்றார்கள். நான்கு புறமும் அலையாத்தி மரங்களும் கருவேல மரங்களும் கொன்னை, கொன்றை மரங்களும் நின்றன. அதில் ஒரிரு கொக்குகள் அமர்ந்து ஒய்வு எடுத்துக் கொண்டிருந்தன. மூர்த்தி கடுப்பானான் “ஏன்ய்யா.. ராமசாமி, கொக்க காட்டுறத்துக்கா இம்புட்டு தூரம் அழைச்சிட்டு வந்தே…”

”இல்லிங்க… பொழுது மசமசன்னு ஏறும்போது வரும் பாருங்க… கொஞ்சம்… காத்திருக்கலாங்க….” – வேட்டைக்காரர்களின் இரண்டு கைகளிலும் எம்ஜிஆரை பச்சைக் குத்தியிருந்தவன். ஏரியின் கரையோரத்தில் வளர்ந்து நின்ற பெரிய நாலைந்து சேமை இலைகளைக் கொய்து வந்து “இதப் போட்டு உட்காருங்க சார்” என்று ஆறுமுகத்திடம் கொடுத்தான். ஏரி கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிந்தது.

“சார் அதோ தெரியுது பார்ங்க தெற்கு பக்கம் அங்கே இந்த ஏரி தண்ணியின் கசிவுல இருந்து உப்பு வயலுங்க ஆரம்பிக்கிது” என்றார் ராமசாமி.

பரந்த நீர்ப்பரப்பில் சில பறவைகள் நீந்துவதும் பறப்பதுமாக இருந்தது. அதனைப் பார்த்த வேட்டைக்காரர்களில் மூன்றாவதாக இருந்த சேகர்  “அருமையான நீர்கோழி மாமா… குச்சிவிட்டுமா” என்றான். அது சரிடா கூர்கத்தியும்… நரம்பும் எங்கடா…” பத்தரமா இந்த இடுப்புல வெச்சிருக்கேன்.

“சரிடா கொஞ்சம் போய் ஆவரம்பூ பறிச்சுக்கிட்டு சீக்கிரம் வா. ஆக்காட்டி இன்னிக்கி இந்த பகுதியில சுத்துறதை பார்த்தா.. நாளை காலையில… ‘தட்டு’ போட்டுவோம், அப்புறம். ‘விரி’ கட்டிடுவோம். அதிலேயும் சிக்காட்டி… பாரஸ்ட் ஆளுங்களுக்கு காசு கொடுத்துட்டு “குதிரை வல” போட்டுக்கலாம்” என்றார்.

காத்திருக்கத் தொடங்கினார்கள். மரங்களை உற்றுக் கவனித்தபடி இருந்த ராமசாமி, “பேசினால் பறவைகள் நம் பார்வைக்கு படாது மறைந்து விடும். மவுனமாக இருங்கள்’ என்றார். மரங்களைப் பார்த்தபடி காத்திருக்கத் தொடங்கினார்கள். பொழுது மெல்ல இருள் கொள்ளத் துவங்கியது.  பருந்துகள்… கழுகுகள்.. காகங்கள்… மரங்களில் அடங்கின. ஆவரம்பூ பறித்து வந்தவன் இதுவரை தான் காணாத பறவையொன்றைப் பார்த்தாகவும் அது ஒருவேளை நீலநிற ஆக்காட்டியாக இருக்கலாம் என்றும் ராமசாமியிடம் கூறினான், பருந்துகளைத் தாண்டி புதிய பறவை எதுவும் வரவில்லை என்றதும் கடுப்பான மூர்த்தி “கிளம்பலாம்.. ராமசாமி” என்றான்.

இருள் சூழ்ந்த வனத்தில் அடிக்கடி மூர்த்தி செல்போனிலிருந்து வரும் மிஸ்டு கால்களைப் பார்த்தவாறு நடந்தான் ஆறுமுகம். இரவுப்பூச்சிகள் முணுமுணுக்கத் தொடங்கின. ஆற்றிலிருந்து வரும் விநோத மணம். கடலின் இரைச்சல். வானில் சுடர்விடும் நிலா… பரவலாக சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்கள்.. காட்டு மலர்களின் ஏகாந்த வாசனை… தாவரத் தழைகளின்… மினுமினுப்பு…. இவற்றின் ஊடே ராமசாமி முன்னே நடக்க பேச வார்த்தைகள் இல்லாதவன் போல் நடந்து கொண்டிருந்தான் மூர்த்தி.

காரில் ஏறும்போது மணி ஏழே முக்கால் ஆகியிருந்தது. ஆறுமுகம் “அண்ணி மிஸ்டு கால் கொடுக்குறாங்க” என்று மூர்த்தியிடம் போனைக் கொடுத்தான். இப்போது மூர்த்தி போனை வாங்கி “சொல்லு மஞ்சு இன்னும் ஓரு மணிநேரத்துல வீட்டுல இருப்போம். எனக்கும் தம்பிக்கும் சாப்பாடு ரெடி பண்ணு” என்றான். ‘…ம்’ என்று ஒரே பதிலுடன் தொடர்பு கட்டாகியது.

மூர்த்தி “டிரைவரே… வேகமாக வண்டிய எடுப்பா, கடையை வேற விட்டுட்டு வந்துட்டேன். என்னாச்சோ தெரியல. பரவாயில்ல அதை பாத்துக்கலாம். தலைய வலிக்குது மொதல்ல நல்ல கடையைப் பார்த்து விடு,”  “கடைன்னா எந்த கடைண்ணே’ என்றான் டிரைவர். அட ஒன்னும் தெரியாத மாதிரிதாண்டா பேசுவீங்க.. சாராயக்கடைக்கு தான்டா” மூர்த்தியின் குரல் தடித்தது. டிரைவர் தனது கோபத்தை காரில் காட்டினான். மூர்த்தி சொன்ன இடத்தில் கார் நின்றது.

தள்ளாடும் அளவுக்கு குடித்திருந்தான் ஆறுமுகம். செல்போனை எடுத்து தன்னுடன் பணியாற்றும் நவீனிடம் பேசினான்… ஆக்காட்டிப் பற்றி விவரித்தான். இருவரும் மச்சான், மாமா என்று பேசிக்கொண்டதை வேட்டைக்காரர்கள் போதையிலும் நிதானம் காட்டி ரசித்தார்கள். அதிக போதையில் மூர்த்தியின் தலை துவண்டது. அவ்வப்போது கடையில் வேலை பார்க்கும் பையனை திட்டினான். எதற்கு இப்படி திட்டித் தீர்க்கிறான் என்று தெரியாமல் பார்த்தார்கள்.

விளமல் வந்து காரை நிறுத்தினான் டிரைவர். போதையிலும் மூர்த்தி எழுந்து, ஆறுமுகத்திடமிருந்து வேட்டைக்காரர்களுக்கு சம்பளத்தைக் கொடுத்து விட்டு அவர்களைப் பார்த்து, “பறவையை மட்டும் பிடிக்காதீங்க. காசு மசுரு மட்டும் கூசாம வாங்குங்க”.   கெட்ட வார்த்தையில் திட்டினான். அவர்கள் பதிலேதும் சொல்லாமல் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு போனார்கள்.. தேவர்கண்டநல்லூருக்குள் கார் நுழைந்தபோது ஊரே அமைதியாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு இருவரும் தடுமாற்றத்துடன் நடந்து போனார்கள். அப்போது தெருநாய் ஒன்று இவர்களைப் பார்த்து குரைத்தது.

கதவைத் திறந்தாள் மஞ்சு. ஆறுமுகத்துக்கு குப்பென்று வியர்க்கத் தொடங்கியது. “மஞ்சு…என்ன செஞ்சு வெச்சிருக்க…”  தடுமாற்றத்தை குறைத்துக் கொண்டவனாக. “வவ்வால் மீன் குழம்பு, இட்லி வறுவலும் ரெடி” என்றாள் மஞ்சுளா. ஆறுமுகத்துக்கு இப்போது தான் ஒரு உண்மை விளங்கியது. அவள் முகத்தை உற்றுக் கவனித்தான். கிட்டதட்ட கயல்விழியின் முகத்தைப் போலவே தோன்றியது மஞ்சுவின் முகம். அதனால் தான் இத்தனை தடுமாற்றம். பாத்ரூம் சென்று செல்போனை ஆன் செய்து கேலரிக்குள் சென்று கயல்விழியின் பல்வேறு   நிழற்படங்களைப் பார்த்தான். மஞ்சுளாவின் முகத்தையும் பார்த்தான் ஒன்று போலவே இப்போது தோன்றியதும் மூர்த்தி இருந்த அறைக்குள் மவுனமாக நாற்காலியில் அமர்ந்தான்.  

வறுவலை கொண்டு வா… என்றான் மூர்த்தி. மஞ்சு முறைத்தாள். “சீக்கிரம் கொண்டு வா… தம்பி பாவம். காட்டிலேயும் மேட்டிலேயும் ஓரே அலைச்சல்… ஒரு தட்டு நிறைய வறுத்த துண்டங்களைக் கொண்டு வந்து வைத்தாள். மீனின் மேலிருந்த மசாலாவின் வாசனை தூக்கலாய் இருந்தது. சிறுவன் ஒளித்து வைத்திருந்த பந்தை எடுப்பதைப் போல இடுப்பிலிருந்து ஒரு பாட்டிலை எடுத்து பெஞ்சில் வைத்துவிட்டு சமையலறைக்குச் சென்று, இரண்டு கண்ணாடித் தம்ளர்களை எடுத்துக் கொண்டு அறைக்கு வந்தான் மூர்த்தி. ஆறுமுகத்துக்கு குடிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.

ஆனால் மூர்த்தியிடம் இதைச் சொன்னால் அதை ஏற்கும் நிலையில் அவன் இல்லையென்று தோன்றியது. லைட் வெளிச்சத்தில் தங்க நிறம் காட்டி மினுங்கியது திரவம்.  குடிக்கத் தொடங்கினார்கள். ஆறுமுகம் மறுத்தும் அவன் விடவில்லை. மூர்த்தியின் மீது கொண்ட எச்சரிக்கையுணர்வால் போதையிலும் கவனமாகப் பேசினான். மீன்களைத் தின்பதும் குடிப்பதுமாக இருந்தார்கள். ஆக்காட்டி குறித்தும் பேசினார்கள்… பேசினார்கள். பேசிக்கொண்டே இருந்தார்கள். அவர்கள் பேச்சு ரஷ்யாவின் ஸ்டெப்பி புல்வெளியில் வலசைக்குப் போகும் பறவைகள் வரை நீண்டது. இருவரையும் மஞ்சு நாலைந்து முறை சாப்பிட அழைத்துப் பார்த்துவிட்டு, சாப்பாட்டை எடுத்து வைத்துவிட்டு உறங்கப்போய் விட்டாள்.

இருவரும் உச்சக்கட்ட போதையில் இரவை சலனப்படுதுதும் குறட்டைகளை விட்டபடி உறங்கிக் கொண்டிருந்தார்கள்….. அப்போது அவன் கனவில் கயல்விழியின் வியர்வை வாசம் அறையெங்கும் பரவியிருப்பதைப் போல பிரம்மை. சட்டென்று திடுக்கிட்டு எழுந்தவன் அறையில் பேன் வேகத்துடன் சுழன்று கொண்டிருந்ததை மிரட்சியுடன் பார்த்தான். ஒருசில நிமிடங்கள் யோசித்தவன், செல்போனை எடுத்து ஆன் செய்ய முயன்றான் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. தன்னுடன் படுத்திருந்த மூர்த்தியைக் காணவில்லை. எழுந்து போயிருந்தான். அடிவயிறு முட்டியது. எழுந்து கழிவறையை நோக்கி நடந்தான். அப்போது ஒரு விசித்திரமான குரல் கேட்டது. அது எங்கேயோ கேட்ட பறவையின் குரல். அது ஏற்றம் இறக்கமாக… மெலிந்தும் வளைந்தும், உயர்ந்தும் தாழ்ந்தும் வேடனின் வலையில் சிக்கிக்கொண்ட கருங்குயில் போல… மிக கவனமாக தன் புலன்களைக் கூர்மைப்படுத்தினான். அது பறவையின் குரல் தான். இங்கே எப்படி அறைக்குள்… கால்களை மிக கவனமாக வைத்தான். மஞ்சுளாவின் அறையில் இருந்து தான்… கதவோரமாக காதுகளை… வைத்தான்… சட்டென்று பொறி தட்டியது. அது மஞ்சுவின் குரல்.. வீட்டிலிருந்து வெளியேறி நடக்கத் தொடங்கினான்.

5

உழவர்கள் ஏர் கலப்பையை தோளில் சுமந்து கொண்டு அந்த அதிகாலைப் பொழுதில் வயலுக்குச் செல்கிறார்கள். எருமை மாட்டுத் தோலைத் உரித்து காயப்போட்டது போல் கருப்பும், லேசான வெள்ளையாக வானம் துலங்குகிறது. வாய்க்கால்களில் பெருக்கெடுக்கும் நீரில் கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்து விளையாடுகின்றன. மெல்லிய குளிர் காற்றில் மரங்கள் அசைகின்றன. கரும்பு வயல்களில் இருந்து நரிகள் ஊளையிடுகின்றன. காவிரி ஆற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீர் பல பாசன ஆறுகளில் நுங்கும் நூரையுமாகப் பாய்கின்றன. சிறுவர்கள் தூண்டிலிட்டு மீன்கள் பிடிக்கின்றனர். நடவுப் பெண்களின் பாடல் வெளியெங்கும் மிதக்கின்றன. பாட்டிகள் பாட்டனுக்கு பிரியமான வயல் நண்டுகளைப் பிடித்து வருகின்றனர்.  

மேற்கே நீண்டு கிடக்கும்…சம்பா… குறுவை வயல்கள். வயலோரங்களில் வளர்ந்து நிற்கும் மரங்கள். காற்றும்… மழையுமாக… சாரலும்… ஈரமாக… கரிசிட்டான் ஏதோ பறவையை தூரத்தி செல்கின்றன. அது தனது இணையுடன் அப்படியும்.. இப்படியுமாக அலைகின்றன. காகங்கள் கரைகின்றன. தூரத்து ஆற்றோரங்களில் இருந்து யாரோ மணல் லாரிகளை வேக வேகமாகப் புழுதியடித்து ஓட்டிச் செல்கின்றனர். யார் வீட்டிலிருந்தோ பசு மாடுகள் அம்மா… என பெருங்குரலில் கூவி அழைக்கின்றன. அக்காவ்… அக்காவ்… ஆற்றில் போன தனது உறவைத் தேடி ஒற்றைக் குரலில் மன்றாடுகின்றன. ஒன்று தனது உறவை அழைத்துபனை மரங்களில் தொங்கும் கூடுகள் காற்றில் மிதந்து ஊஞ்சல் போல அசைந்து தூக்கணாங்குருவிகள் மெல்லுறக்கம் போடுகின்றன. தவிட்டுக் குருவிகள் குறுவை வயல்களில் தாழும் நெல் மணிகளை கொறித்து மகிழ்கின்றன. சிட்டு குருவிகள்… மேலும் கீழுமாக காற்றின் அலைவரிசையில் மிதக்கின்றன. நாவல் மரங்களில் அலைந்து திரியும் கிளிகள்…, மாமரங்களையும், அழிஞ்சைப் பழங்களையும் தேடியலையும் செண்பகங்கள் அதீத இசையை மீட்டிச் செல்கின்றன. களத்து மேட்டில் சுற்றித் திரியும் கவுதாரிகள்.., கோவில் மாடங்களில் முட்டையிடும் வெண்புறாக்கள், குளங்களில் நீச்சலடிக்கும் நீர்கோழிகள்.., காக்கா கூட்டில் முட்டையிடும் கருங்குயில்கள்…, நள்ளிரவில் இருளைப்பாடும் வானம்பாடிகள், வீட்டு வாசலில் கோலம் போடும் நார்த்தைக் குருவிகள்., வெகு தொலைவுக்கு அப்பால் இருந்து சம்பா அறுவடைக்கு வரும் செறவிகள்., வாய்கால்களில் சுற்றித்திரியும் மீன் கொத்திகள்…,  பெருமரங்களில் தவில் வாசிக்கும் மரங்கொத்திகள்..,  நள்ளிரவில் பாடும் ராக லீலாக்கள்.,  குறுவை வயல் எலிகளை தேடும் பருந்துகள்., நீர் குறைந்த ஒடைகளில் நத்தைகள் தேடும் செங்கல்நாரைகள்., வீட்டு முற்றங்களில் சுற்றி வரும் கல்லுக்குருவிகள்., வைக்கோல் போர்களில் முட்டையிடும் காடைகள்., மூங்கில் காடுகளில் பதுங்கி வாழும் கானங்கோழிகள்…, திடல் கரைகளில் நிற்கும் கின்னிக்கோழிகள்., தனது நீண்ட ஒற்றை வாலை ஆட்டி கூக்குரல் இடும் வால்குருவி., அதற்கு போட்டியாக பங்காளிச் சண்டையில் இறங்கும் இரட்டைவால் குருவி., கடலோர நன்னீர் குளங்களில் மீன் வேட்டையாடும் உள்ளான்கள்., மயிலுக்கு போட்டியாக இறக்கை விரிக்கும் நீளவால் குருவிகள்., வரப்போரங்களில் இரைத்தேடும் கடாப்புறாக்கள்., கருங்குயிலுக்கு காதல் சொல்லும் வரிக்குயில்கள்.,  இறைச்சியைத் தேடியலையும் கழுகுகள்., வட்டமாய் நோட்டமிட்டு கோழிகுஞ்சுகளை தூக்கிச்செல்லும் பருந்துகள்., இலுப்பை பழங்களையே அதிகம் விரும்பி உண்ணும் பழந்தின்னி வவ்வால்கள்., இரவில் வேட்டைக்கு கிளம்பும் கோட்டான்கள்.., இரவை சலனப்படுத்தும் ஆந்தைகள்., வேட்டைக்கு என்று பிறந்த வல்லூறுகள்….இப்படி எத்தனையோ பார்வைக்குள் சிக்காமல் பறந்து  போனவை இவை எல்லாம் இந்த டெல்டாவில் தான் ஒரு காலத்தில் றெக்கை விரித்தன.  

6

வேட்டைக்கார ராமசாமி வனக்குறவன் கொத்தலியை அழைத்துக்கொண்டு வந்து லாட்ஜ் வாசலில் காத்திருந்தார்.. ஆறுமுகம் இருவரையும் அறைக்கு அழைத்து வந்தான். கொத்தலியைப் பற்றி பெருமை பொங்கச் சொன்னார் ராமசாமி. வனத்துறை அதிகாரிகள், புத்தகம் எழுதும் ஆசாமிகள், ஆராய்ச்சியில் ஈடுபடும் பேர்வழிகள் போன்றவர்கள் இவரிடம் வந்து ஆலோசனையும் பறவைகள் குறித்த தகவல்களையும் பெற்று செல்வர்கள் எனவும் சில பறவைகளின் பாஷைகள் இவருக்குத் தெரியும் என்றும் சொன்னார். கொத்தலி உயரமாகவும்..ஒரு நைந்து போன வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். இரண்டு காதுகளிலும் பெரிய துவாரம் தெரிந்தது. முகம் வட்டமாக இருந்தது. அவரின் கண்கள்  கோட்டானின்  கண்களைப் போல பெரிது பெரிதாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தன. அதில் நீர் கோர்த்திருந்தன. ஆனால்  உடல் மெலிந்து போய்  இருந்தார்.

அவரைக் கையெடுத்து கும்பிட்டான். நீலநிற ஆக்காட்டி பற்றி சொன்னான். பிடித்துக் கொடுத்தால்.. இரண்டு லட்சம் பணம் தருவதாக ஆறுமுகம் தெரிவித்தான்.

இதனைக் கேட்டதும் கொத்தலி விழுந்து விழுந்து சிரித்தார். ஆறுமுகத்துக்கு கோபத்தில் முகம் சிவந்தது. அவரை அடித்துத் தூக்கி ஏறிய வேண்டும் போல் தோன்றியது. அடக்கிக் கொண்டான். அதனை முகத்தில் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

கட்டிலில் கிடந்த செல்போன் முணுமுணுத்தது.   அதனைக் கண்ட சடுதியில் ஆறுமுகத்தின் கோபம் மாசி மாத கடைமடை பாசன வயலைப் போல சடுதியில் வடிந்து போனது. “மதியத்துக்கு சாப்பிட வாங்க.. நாட்டுக்கோழி குழம்பு. சீக்கிரமே வந்துடுங்க. குரலில் அத்தனை குழைவு கூடியிருந்தது. “ம்’ என்று சொல்லிவிட்டு ஒருவித மகிழ்வில் பொய்யாக போனை விட்டெறிந்தான். அன்று அவள் பறவையை போன்று முனகியது நினைவுக்கு வந்தது. அதனை மல்லுக்கட்டி தவிர்த்துவிட்டு,

‘சொல்லுங்க.. கொத்தலி, ஆக்காட்டி பற்றி’ என்றான்.

அவர் முகம் இறுகியது… அவர் மவுனத்தை உடைத்துகொண்டு பேசத் தொடங்கினார்.

“இதப்பாருங்க தம்பி நீங்க ரொம்ப சின்ன பையன் அதுவும் என் கண்ணுக்கு விளையாட்டு பையனா தெரியிறீங்க.. உங்க ஊரு வடக்கு பக்கம் நீங்க டெல்டா பத்தி அறிஞ்சிருக்க மாட்டிங்க. இங்குள்ள எங்க வாழ்க்கை ரொம்ப போராட்டமானது. அந்த போராட்டத்த அப்படி நுணுக்கமாக சொல்ல முடியாது. இங்கேயிருந்து நீங்க அனுபவிக்கணும். உங்கள மாதிரி  ஆட்களை பார்த்த எனக்கு கோபம் தான் வருது. அந்த பறவை தெரியுமா.? இந்த பறவை வேணுமுன்னு வர்ற ஆட்களுக்கு இந்தப் பகுதி மக்கள் இப்ப எதிர் கொண்டிருக்கிற பிரச்சனை என்னான்னு தெரியுமா? ஒரு காலத்துல இந்த டெல்டா பகுதிங்க பாதுகாப்பா இருந்துச்சு. இப்ப அந்த பகுதியெல்லாம் பாதி அழிஞ்சுகிட்டு. இன்னும் கொஞ்சமும் அழிமானத்துல இருக்கு. இதைப் பத்திய   உணர்வு உங்கள்ல யாருக்காச்சும் உண்டா?  மூனு போகம் விளைஞ்ச பூமி இது. இன்னக்கி.. ஒரு போகம் கூட விளையல. அறுபத்தஞ்ச்சுக்கு பிறகு  பசுமைப்புரட்சின்னு ஏதோ சொன்னாங்க. புதிய உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை கொடுத்தாங்க. இதுல மண்ணு மட்டும் மலடா போகல… இந்த வயல்ல பறந்து புழுப்பூச்சிகளை உணவா சாப்பிட்ட எத்தனையோ பறவைங்க செத்துப் போய்டுச்சுங்க. தானியங்கள சாப்பிட்டவையும் கொஞ்சம் கொஞ்சமாய் அழியத் தொடங்கிட்டு,”

அவர் பேசுவது இவனுக்கு புதிதாக இருந்தது. கொத்தலி பேச்சில் குழப்பம் அடைந்த ஆறுமுகம், ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்து தனது பிராண்ட்டை ஒரு சீட்டில் எழுதிக்கொடுத்து ராமசாமியை கடைக்கு அனுப்பினான். .

கொத்தலி.. ஒரு நிமிடம் அமைதியாக இருந்தார், “நான் சொல்றது பெரிய விஷயம் இந்த வளம் பொருந்திய பகுதியை அழிக்கிற வேலையை தொடங்கிட்டாங்க. என்னக்கி எண்ணைய் எடுக்குறோம். வெண்ணெய் எடுக்குறோமுன்னு சொல்லி இந்த பூமியை தோண்டி வாயுவை அங்கங்க எரியவிடத் தொடங்கினாங்ளோ அப்பயிலிருந்து மழையே பொய்த்து போய்ட்டு. இன்னக்கி மழை வரணுமுன்னு வையுங்க புயல் உருவாகுனும். அப்பத்தான் வரும்.  நம்ம உட்கார்ந்திருக்கமே இந்த கட்டிடம் இதுக்கு கீழே இருக்கே நிலம் இதுக்கு ஒரு காலத்துல மாப்பளை சாம்பா வயல்ன்னு பேரு. ஆனா இந்த இடத்துல இன்னக்கி லாட்ஜ் கட்டிபுட்டான் பாத்திய்யா தம்பி…. எனக்கு தெரிஞ்சு இந்த ஊர்ல பத்தடியில உப்பில்லாத நல்லத்தண்ணி வரும்.  இப்போ நீர்மட்டமே கீழே கீழே போய்ட்டு என்னச் செய்ய… ”

“கொத்தலி  நீங்க சொல்றது சரிதான்..,. இங்க மட்டுமல்ல இன்னக்கி நாடு முழுக்க இதே பிரச்சனை தான்… என்ன செய்யிறது….”

“தம்பி நான் சொல்றது உனக்கு புரியல. கழுகை வீட்டுல வளர்த்தவன், மயிலை வளர்த்தவன் இந்த ஊருக்காரன் தம்பி. பறவைங்க மேல அம்புட்டு சினேகம் அவனுக்கு. இதை நீங்க வேற எங்கேயும் பார்க்க முடியாது. தன்னை சுத்தி இருக்கிற செடி, கொடிங்க, பறவைங்க, மிருகங்க அத்தனையும் நேசிச்சு வாழ்ந்தவன்…”

ராமசாமி…. பாட்டில்களோடு வந்தார். லாட்ஜ் பையனை அழைத்து சைடிஸ் வாங்கி வரச்சொன்னான். மீண்டும் செல்போன் குரல் கொடுத்தது. அப்பா அழைத்தார், அம்மாவின் நிலவரம் குறித்து கேட்டான். ஞானசாமி பண்டிதர் கொடுத்த மருந்துகளை  தொடர்ந்து அம்மா சாப்பிட்டு வருவதால் முகத்தில் பொலிவு ஏற்பட்டு இருப்பதாகவும், நல்ல உறக்கம் கொள்வதாகவும், அடிக்கடி இவனைக் கேட்பதாகவும் சொன்னார். கடைசி வார்த்தையாக எப்படியாவதும் “அந்த பறவையை புடிச்சிட்டு வந்துடுப்பா” என்று சொல்லி தொடர்பை துண்டித்தார். அப்போது அடிவயிற்றில் சொரசொரப்பு எழுந்து அடங்கியது.

போனை வைத்துட்டு டீப்பாயில் வைக்கப்பட்டு இருக்கும் பாட்டில்களைப் பார்த்தான். செல்போன் மீண்டும் சிணுங்கியது. மூர்த்தி அழைத்தான், கோழிக்கறி சீக்கிரம் வா… என்றான்.  இவன் கொத்தலியிடம் பேசும் விவரம் பற்றி சொல்லவும். இதோ வருகிறேன் என்று போனை கட் செய்தான். அடுத்த சில நொடிகளிலேயே புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. “மஞ்சு பேசுறேன்.. சமையல் முடியப்போகுது.. குழந்தைங்க வந்துட்டாங்க.. உங்களப் பார்க்கணும் அப்படின்னு சொல்றாங்க. அன்னக்கி நீங்க வர்ல. நான் சாப்பிடல தெரியுமா.. இன்னக்கி நீங்க வராட்டி நான் சாப்பிட மாட்டேன்” இணைப்பு துண்டிக்கப்பட்டது. பதிலேதும் சொல்லாமல் போனையே சில நிமிடங்கள் பார்த்தான்.

சைடிஸ் மற்றும் கண்ணாடி குவளைகளுடன் லாட்ஜ் பையன் வந்தான். குடித்து ஒரு வாரகாலம் ஆகியிருந்தது. மூன்று குவளைகளிலும் திரவத்தை ஊற்றினான். அவர்கள் இருவரிடமும் தேவையான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள் என்று கொடுத்தான். வறுத்த வேர்கடலையை கொறித்து கொண்டே மடமடவென்று இரண்டு குவளைகளைக் குடித்தான். திரவம் உள்ளிறங்கிய சில நிமிடங்களில் வியர்வை அரும்பத் தொடங்கியது. கொத்தலியும் இரண்டு தம்ளர்களை குடித்து விட்டு, “தம்பி நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதே… இந்த ஊரோட நெலமை இதுதான். உலகத்துல நீங்க எந்த ஊர்லயும் வாழ்ந்திடலாம். ஏன்… பாலைவனத்துல கூட ஆனா.. இங்கே வாழ்றது கஷ்டம்… நான் ஒரு காலத்துல இந்த ஊர்ல செல்வாக்கான ஆளா இருந்தேன்… இஞ்ச இருக்கிற, இருந்த பண்ணை மகாணங்களுக்கு நான்தான் ஆஸ்தான வேட்டைக்காரன் எல்லாமே தலைகீழாப்போச்சு…”

மூர்த்தி, சில நிமிடங்களில் அறைக்கு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் ராமசாமி எழுந்து நின்றார். கொத்தலியைப் பார்த்து, என்ன தெரியுதா? என்றான்.. அதட்டும் தொனியில்.  ஆறுமுகத்தின் தம்ளரை  எடுத்து திரவத்தை ஊற்றி ஒரே மூச்சில் குடித்தான். உரையாடல் அறுந்து போயிருந்தது. மேஜை மீதிருந்த முறுக்கு, கடலை மிட்டாய்களை சாப்பிட்டார்கள் பேசாமல்.

“கொத்தலி உன்னால நீலநிற ஆக்காட்டியை பிடிக்க முடியுமா.. அது எந்த பகுதிகள்ல இப்போ நடமாடுதுங்க சரியா சொல்ல முடியுமா?….” என்றான் மூர்த்தி..

“அவ்வளவு எளிமையில்லிங்க… லகூன் தீவு பக்கம் தான் போகணும்… வாரக் கணக்குல காத்திருக்கணும்.. குறைஞ்சது பத்து பேராவது போகணும்… கடல்ல இருக்கிற அந்த தீவுல தங்கியிருக்க… வனத்துறை அதிகாரிங்கக்கிட்ட பெர்மிசன் வாங்கணும்… செலவு நிறைய ஆவும்…” என்றார் கொத்தலி

“எவ்வளவு ஆனாலும் பரவயில்ல… நாளைக்கே கிளம்புங்க.” என்றான் ஆறுமுகம். நெற்றியில் அரும்பிய வியர்வையை துடைத்துக் கொண்டே.

”சும்மா இரு ஆறுமுகம்… நான் சொல்றதைப் கேளு… நான் சில விவரமான ஆளுங்கக்கிட்டே  விசாரிச்சேன். அப்படி ஒரு பறவை இல்லைன்னு சொல்றாங்க…” என்றான் மூர்த்தி

பதிலேதும் சொல்லாமல் ஆறுமுகம் மூர்த்தியை பார்த்தான்.

கொத்தலி குறுகிட்டு, “யாருங்க சொன்னாங்க.. நான் பார்த்து இருக்கேன். யாரோ உங்கள குழப்பிவிட்டு இருக்காங்க.” என்றார்.    

“அப்படின்னா எத்தனை நாள்ல பிடிச்சு கொடுப்பே… கொத்தலி.. சொல்லு… வேற ஏதாச்சும்… நீல கலர்ல ஒரு பறவை புடிச்சு கொடுத்துட்டு… ஆக்காட்டின்னு ஏமாத்திட மாட்டியே. அன்னக்கி.. இந்த ராமசாமி… ஆறுகட்டுதுறைக்கு அழைச்சிட்டு போயி பருந்துங்கள காட்டிப்புட்டு திருப்பி அழைச்சிட்டு வந்தான். இன்னக்கி  ரெண்டு மாசத்துக்கு மேல ஆயிட்டு, எத்தனையோ ஆளுங்க… பிடிக்க முடியலன்னு.. கைய விரிச்சுட்டானுங்க. உன்ன எப்படி நம்புறது கொத்தலி…” என்றான் காட்டமாக மூர்த்தி.

கொத்தாலி ராமசாமியைப் பார்த்து கடகடவென்று சிரித்தார். ஆறுமுகம் மூர்த்தியை பார்த்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான். இப்போது மூர்த்திக்கு போன் வந்தது. “இரு வர்றோம்” என்று போனை கட் செய்தான்.

“கொத்தலி உங்கள நான் நம்புறேன்.. உங்க பேச்சு எனக்கு பிடிச்சிருந்தது. உங்க மனசில உள்ளத சொன்னிங்க. அதைப் பத்தி நான் விவாதம் செய்ய நான் வர்ல. எங்கம்மாவ காப்பத்தணும். அதுக்கு இந்த பறவை வேணும். சொல்றது புரியுதா… ரும்பவும் சொல்றேன்.. உங்கள நான் நம்புறேன்… இங்க வந்து கிட்டதட்ட இரண்டரை மாசம் ஆயிட்டு இன்னும் பதினைஞ்சு நாள் தான் இருக்கு அதுக்குள்ள புடிச்சாகணும்….” மிகத் தெளிவாக பேசினான் ஆறுமுகம்.

“எனக்கு நம்பிக்கையில்ல. இருந்தாலும் தம்பி ஆசைபடுது. கடைசி முயற்சி எப்பிடியாச்சும் புடிச்சு ஆகணும் கொத்தலி. ஆளை ரெடி பண்ணு… என்றான் கோபத்துடன் மூர்த்தி.

“பெளர்ணமிக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. வசந்த பஞ்சமி ஆரம்பிக்க போகுது.. பறவைங்களுக்கு இதுதான் வசந்த காலம்..” என்றார் கொத்தலி.

7

மூர்த்தி சாப்பிட்டுவிட்டு கடைக்கு போய்விட்டான். குழந்தைகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆறுமுகம் ஒருமாத காலமாகவே மஞ்சுவை அன்று ஒருநாள் நள்ளிரவில் அவளிடம் கேட்ட பறவையின் குரலை தனக்கு ஒருமுறை ஒலித்துக் காட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டேயிருந்தான். அதற்கான தருணம் இது இல்லையென்று பல தடவை தெரிவித்திருந்தாள். ஆனால் இன்று மூர்த்தி அறையில் இவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது மஞ்சு எழுப்பினாள். எழுந்து அமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் குரல் உடைந்து போயிருந்தது. அவள் கண்களில் நீர் கோர்த்திருந்தன. மெல்லிய குரலில் ஒரு பச்சைக்கிளிப் போல் கிரீச்சிட்டாள்.  தன்னை ஒரு அக்கா குருவி என்றாள். எனக்கு டிஸ்கவரி சேனல் பிடிக்கும் உனக்கு என்றாள். இவனுக்கு தூக்கம் கலைந்து போனது. சில நாட்களுக்கு பிறகு மிக மிக அருகில் அமர்ந்திருந்தாள். “உன் கயல்விழி என்னை விட அழகா என்றாள். இவன் அவள் என் கயல்விழி இல்லை. வேறு ஒருவனுக்கு சொந்தமாகி விட்டாள் என்றான். போன வாரம் ஏன் என்னை கயல்விழி என்று அழைத்தாய் என்றாள்.  எப்போது என்பது போல பார்த்தான். நீ என்னைத் தேடித்தானே வந்தாய். இல்லை என்பது போல பார்த்து விட்டு, பதிலேதும் சொல்ல முடியாமல் தவித்தான். ஊருக்கு போனால் என்னை மறந்து விடுவாயா? என்றாள்.  மாட்டேன் என்றான். என்னை எவ்வளவு பிடிக்கும் என்றாள். நிறைய என்றான். ஊருக்கு போனால் குடிப்பாயா? என்றாள். மாட்டேன் என்றான். மெல்ல மெல்ல நெருங்கத் தொடங்கினாள். இப்போது உனக்கு பிடித்த பறவை போல் பாடுகிறேன் கேட்கிறாயா என்றாள். பதிலேதும் சொல்லாமல் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அழ வேண்டும் போல் இருந்தது. உடையும் கணத்துக்கு அவன் நெருங்கியபோது… மெல்ல மெல்ல படர்ந்து இவனை மேலே கிடத்தத் தொடங்கினாள்.. தனது றெக்கைகள் இதுதான் என்று தனது கால்களையும், கைகளையும் அசைத்துக் காண்பித்தாள். என் மீது படுத்து றெக்கை விரித்து பற நான் குயிலாகிறேன் இல்லை..இல்லை நீலநிற ஆக்காட்டி நான் என்றாள். சில நிமிடங்களில் மெல்லிய குரலை உயர்த்தி, இயங்கிக் கொண்டே பறக்கலாம் என்றாள். கால்கள் இரண்டையும் அந்தரத்தில் உயர்த்தி இரண்டு புறமும் அசைத்து மேலே மேலே பறந்து கொண்டிருந்தாள். இப்போது அவளிடமிருந்து இப்போது இதுவரை கேட்டிராத வினோத பறவையின் குரலை கேட்டான். அது வீட்டைக் கடந்து காற்று வெளியெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. இருவரும் யாருமற்ற காற்று வெளியில் மிதக்கத் தொடங்கினார்கள்….

                         8     

ஆறுமுகம் லகூன் தீவுக்கரையில் கொத்தலி உள்ளிட்ட ஆட்களுடன் அமர்ந்திருந்தான். மடையான்களும் கொக்குகளும் வான் வெளியில் பறப்பதும் மரங்களில் அமர்வதும், கூட்டமாக எழுவதுமாக இருந்தன. அலையில்லாத கடல். சில இடங்களில் அலையடிக்கும் கடல். பார்க்கப் பார்க்க அலுப்பு தட்டவில்லை. பசியில்லை. இங்கே தான் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் மஞ்சுவிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. ஆனால் செல்போனுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. தீவினிலேயே சமைத்து சாப்பிட்டு காத்திருந்தார்கள். மரங்களில் வலை விரித்தார்கள். நாலைந்து நாட்கள் ஆகிவிட்டன. ஒரிரு புதிய பறவைகளைக் காட்டினார் கொத்தலி. இந்த பறவை வந்தால் நிச்சயம் நீலநிற ஆக்காட்டி வரும் என்று நம்பிக்கையளித்தார். ஆறுமுகத்தால் தீவில் படுக்க முடியவில்லை. கூடாரத்தில் உறக்கமே வரவில்லை. மஞ்சுவின் நினைவும், அம்மாவின் ஞாபகமும் மாறி மாறி வந்தன. சமயங்களில் மூர்த்திக்கு துரோகம் செய்கிறோம் என்று ஒரு வலி ஏற்படும். ஆனால் அடுத்த கணமே அது உடைந்து போகும். கயல்விழி செய்த புறகணிப்பும், அவமானமும் எழுந்து அடங்கும். ஆனால் கடலலையின் பேரோசையைக் கடந்து மஞ்சுவின் நினைவலை உடம்பில் நாதமாகவும்… மனதில் சங்கீதமாவும் ஒலிக்கத் தொடங்கியது. ஐந்தாவது நாள் கொத்தலியிடம் சொல்லிவிட்டு மஞ்சுவைப் பார்க்க கிளம்பி விட்டான்….

8

லகூனிலிருந்து வந்து அந்த அதிகாலைப் பொழுதில் கடையில் மூர்த்தியை  வந்து பார்த்தபோது, அப்போது தான் கடையை திறந்து வேனில் வந்த பூக்களை இறக்கி ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தான். முகம் சுண்டியிருந்தது. சரியாக பேசவில்லை. இவன் தான் பேசினான். எல்லாவற்றிக்கும் மூர்த்தி ‘ம்’ போட்டான். “அண்ணே வாங்கிட்டு வாங்கண்ணே” பணத்தைக்  கொடுத்தான். வேண்டாம் என்பது போல மறுத்தான். மல்லுக்கட்டி கொடுத்துவிட்டு, அறைக்கு வந்தான். குளித்து படுத்தான். ஆனால் இருப்பு கொள்ள முடியவில்லை. ஒரு ஆட்டோவைப் பிடித்து மூர்த்தி வீட்டுக்கு வந்தான். கதவைத் திறந்ததும் இவன் நிற்பதை பார்த்ததும், ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு பதிலேதும் சொல்லாமல் கதவை அறைந்து சாத்தினாள். இவன் மஞ்சு, மஞ்சு என்று கதறினான். செல்போனை எடுத்து அவள் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சித்தான். அவள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தாள்.

அறைக்கு வந்து படுத்து கிடந்தான். மூர்த்தி வருவான் என்று எதிர்பார்த்தான். மதியத்துக்கு மேல் ஆகிவிட்டது.  நெஞ்சை அறுப்பது போலிருந்தது. உடனே கிளம்பி விடலாம் என்று ஒரு எண்ணம் வந்து மறுகணமே மஞ்சுவை விட்டு செல்வது எளிதாக இல்லை.  பெரும் வெறியுடன் குடித்தான். அன்ன ஆகாரமின்றி படுத்துக் கிடந்தான். அழுதான். கயல்விழியையும், மஞ்சுவையும் மாறி மாறி திட்டிக் கொண்டேயிருந்தான். பொழுது மெல்ல நகர்வது போல உணர்ந்தான். இரவில் எழுந்து குடித்துக்கொண்டே மூர்த்தி இருக்கும் கடைவீதிக்கு சென்று அவனைப் தேடிக்கொண்டே அலைந்தான். பகற்பொழுதுகளில் மஞ்சுவைத் தேடி தேவர்கண்டநல்லூர் தெருக்களில் அலைந்தான்.. நினைவு வரும்போது லகூன் தீவில் இருக்கும் கொத்தலியிடம் பேசி ஆக்காட்டி பற்றி விசாரித்தான்… மஞ்சு மஞ்சு என்று பிதற்றினான். அவளிடம் தொடர்பு கொள்ள எது வேண்டுமானலும் செய்யவும் ரெடியாக இருந்தான். போதை அதிகமாகும் நேரங்களில் மூர்த்தியின் எண்ணுக்கும் போன் செய்து பார்த்தான். மஞ்சு எண் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.

9

நீலநிற ஆக்காட்டி கிடைத்து விட்டது. எடுத்துக் கொண்டு ஒடுகிறான். வானத்தின் நீலநிறத்தை போல அந்த பறவை அப்படியொரு நிறத்தில் மிளிர்கிறது. அதைக்காண பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. ஞானசாமி பண்டிதர் அந்த பறவையை வைத்து பெரும் மருந்து தயாரிக்கிறார். பிறகு பறவையை வானில் பறக்க விடுகிறார். மருந்தை அம்மாவுக்கு ஒரு மண்டலம் கொடுக்கச் சொல்லித் தருகிறார். மருந்தைக் கொடுக்கவும் அம்மாவுக்கு முகம் மாறிப்போகிறது. நோய் போய்விட்டது முற்றிலும் என்கிறார் அப்பா. தனது சிறு வயதில் பார்த்த அம்மா… இரண்டு காதுகளிலும் தோடு.. ஒற்றை கல் வைத்த மூக்குத்தி சிரிக்கச் சிரிக்கப் பேசுகிறாள். அப்பாவிடம் பொய்ச்சண்டைப் போடுகிறாள். நடுவீட்டில் அமர்ந்து மல்லிகைசழ் சரங்களைத் தொடுக்கிறாள். அம்மாவைத் தேடி யார் யாரோ வருகிறார்கள். கார்களில், ஆட்டோக்களில் வருகிறார்கள்.. புதுப்பெண் போல காரில் வைத்து ஊர்வலமாய் அழைத்து செல்கிறார்கள் அம்மாவை. வீட்டில் பந்தல் போட்டு மைக் செட் கட்டி பாடல்களைப் பாட விடுகிறார்கள். அம்மா முதலில் எம்ஜிஆர் ரசிகை.  ஆனால் அவர் பிறகு கமலுக்கு பரம ரசிகை ஆகிப்போனாள். அதனால் கமல்  பாடல்களையே போடுகிறார்கள். அம்மா சிரித்த முகத்துடன் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.  மேளம் வாசிக்கும் ஆட்கள் வந்தார்கள். அவர்கள் நாதஸ்வர கச்சேரியை திண்ணையில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். ஆறுமுகத்துக்கு திருமணம் என்று இவன் காதுபடவே சிலர் பேசினார்கள். இவனுக்கு குழப்பமாகி விட்டது. பெண் யார் என்று இவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. கயல்விழியா? மஞ்சுவா? என்று பதட்டமாகியது. நிச்சயமாக மஞ்சுவாக இருக்காது தனக்கு தெரியாமல் வேறு பெண்ணைப் பார்த்து இருக்கிறார்கள். சிரித்துக் கொண்டான். தன்னிடம் பெண்ணைக் காண்பிக்காமல் எப்படி திருமணத்துக்கு முடிவெடுத்தார்கள். அப்பா பட்டு சட்டை வேஷ்டி அணிந்தபடி அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தார். யாரோ ஏன் திருமணத்துக்கு மண்டபம் பிடிக்கவில்லை என்று அப்பாவிடம் கேட்கிறார்கள். விருந்துக்கு மட்டும் தான் மண்டபம். திருமணம் இங்கே தான் என்று வாதிடுகிறார். அக்கா புதிய பத்திரங்களை வீட்டு அறையில் அடுக்கி வைக்கிறாள்… அழகான பெண்கள் அம்மாவைச் சுற்றி நிற்கிறார்கள்… மணப்பெண் எங்கே என்று இவன் அக்காவிடம் கேட்கிறான்… கூட்டம் கூடிக்கொண்டே போகிறது. யாரோ அழைக்கிறார்கள்.. கதவு தட்டும் ஒசை கேட்கிறது. திடுக்கிட்டு போய் எழுகிறான்… அறையின் கதவை தட்டுகிறார்கள்…. வியர்த்துப் போன உடலுடன் கதவை திறக்கிறான் கொத்தலி சோர்வாக வாசலில் நிற்கிறார்…

10

“தம்பி.. மூனு நாளா போன் போடுறேன்.. நீங்க… எடுக்கல.. அதான் கிளம்பி வந்துட்டேன்.  இனிமே மெனக்கெடுவது வீண். நாங்க எல்லா வித முயற்சியும் செஞ்சு பார்த்துட்டோம். ஆளுங்களும் சோர்ந்து போயிட்டாங்க. எனக்குத் தெரியும் அதான் அன்னக்கி உங்களுக்கு நான் மறைமுகமாக சொன்னேன். சூழல் மாறிப்போய்ட்டு, இந்த பகுதிகள்ல வாழ்றதுக்கான தகுதி மெல்ல குறைஞ்சு வருது.. நீங்க என்ன பண்ணுவீங்க பாவம். அம்மாவை காப்பற்ற நீங்க முயற்சிப் பண்ணுறீங்க.. இங்கே இயற்கைக்கு எதிரா நடக்குற ஒவ்வொரு விஷயமும் தாவரம், புல் பூண்டுங்க, பறவைங்க எல்லாத்தையும் அழிக்கிறது. தயவு செய்து மன்னிச்சுக்கங்க… இந்த பத்து நாளைக்கும் கடுமையா செலவு செஞ்சிருக்கிங்க. பலன் இல்லை.  உங்க காசு எங்களுக்கு வேண்டாம். இந்தாங்க.. நீங்க கொடுத்த பணத்துல செலவு செஞ்சது போக மீதி. கூலி வேணாம்” கொத்தலி பணத்தை இவன் படுத்திருந்த கட்டிலில் போட்டுவிட்டு இறங்கிப் போனார்.

மேலும் பதட்டம்  அதிகமாகியது. தொடர்ந்து குடித்திருந்ததால் உடல் நலிவடைந்து போயிருந்தான். சாப்பிடாமல் கிடந்ததால் ஒரு நடுக்கம் நிலவியது. நாட்களை எண்ணிப் பார்த்தான்.. மயக்கம் வருவது போல இருந்தது. குளிர்ந்த நீரில் குளிக்கத் தொடங்கினான். நடுக்கத்தை குறைக்க குடிக்க வேண்டும் போலிருந்தது.

11

குடித்து விட்டு பாரிலிருந்து கிளம்பும்போது மாமா பேசினார். நம்ப முடியவில்லை. இது நடக்கும் என்பது போல் மனம் உறுதி கொண்டு விட்டது. அழுகை வரவில்லை. மிகத்தெளிவாக இருந்தான். கார் வாடகைக்கு பிடித்தான். மூர்த்தி பூக்கடையில் போய் நிறுத்தி மாலை வாங்கினான். அவன் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அவன் தன்னுடன் ஆறுதலாக வருவான் என்று எதிர்பார்த்தான். தனிமை பயணம். ஆறுதலாக மஞ்சுவோ, கயல்விழியோ பேசினால் நல்லத்தான் இருக்கும் என்று நினைத்தான்.  அம்மாவை கூலர் பாக்ஸில் வைத்திருந்தார்கள். அக்கா இவனைக் கண்டதும் ஒடி வந்து அணைத்துக் கொண்டாள். ஒரு சொட்டு நீர் வரவில்லை. அப்பாவைத் தேடினான். பறவையைத் தேடி போயிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அம்மாவுடன் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஞானசாமி பண்டிதர்… தொடங்கி அத்தனை பேர் மீதும் கோபமும் எரிச்சலும் வந்தது. கண்களில் இருந்து நீர் சொட்டிக் கொண்டேயிருந்து அப்பாவுக்கு. சர்வமும் அடங்கிப் போயிருந்தார். உறவினர்களுடன்  அம்மாவை நல்லடக்கம் செய்துவிட்டு வந்து அமர்ந்திருந்தான். இரவு வந்திருந்தது. நாலைந்து முறை செல்போன் குரல் கொடுத்தது. புதிய எண்ணாக இருக்கவும் எடுக்க யோசித்தான். சென்னையில் இருந்து நண்பர்கள் யாராவது பேசுகிறார்களா? அருகில் இருந்த அப்பா போனை எடுத்து பேசச் சொன்னார்… எடுத்தான். எதிர்முனையில் இருந்து மூர்த்தி பூக்கடையில் வேலை செய்யும் நேசமணி பேசினான்,

“அண்ணே மஞ்சு அக்காவுக்கு றெக்கை முளைச்சுட்டு, அவுங்க பறவையா மாறிட்டாங்க… அவுங்க உடம்பு நீல கலர்ல மாறிட்டு… கூ..கூன்னு கூவிட்டு இருக்காங்க… ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போக போறோம். ஊரே கூடி வேடிக்கை பாக்குது. பேப்பர்காரங்க வந்து போட்டோ புடிச்சிட்டு போறாங்க. இதை மூர்த்தி அண்ணன் உங்ககிட்டே சொல்ல சொன்னாரு” என்றான்    

அப்பா என்னவென்று கேட்டார்.

மஞ்சு பறவையாக ஆகியிருப்பதை கற்பனை செய்து பார்த்தான். பயத்தில் உடல் நடுங்கியது. “என் நீலநிற ஆக்காட்டியே” என்று பெருங்குரலில் அழத் தொடங்கினான்.  

—————-        

நன்றி : கணையாழி

சிவகுமார் முத்தையா     – நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு குறுநாவல் தொகுப்பு, ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியன வந்துள்ளன. தொடர்புக்கு -muthaiyasivakumar@gmail.com

நிறுவனங்கள் தான் முக்கியமானவை – யுவால் நோவா ஹராரி

7

தமிழில் : பாரதிராஜா

யுவால் நோவா ஹராரி – சேப்பியன்ஸ், ஹோமோ டியஸ், 21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். உலகம் முழுக்க இவருக்கு வாசகர்களும், விசிறிகளும் உண்டு. கரோனோ தொற்று குறித்து பல்வேறு விதத்தில் கட்டுரைகள், பேட்டி, உரை என தொடர்ந்து இயங்கி வருகிறார்.

இது ஒரு காணொளி உரையாடலின் தமிழ் உரைநடை வடிவம்..

யுவால் நோவா ஹராரி :

இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள் தோலுக்கு மேலேயே நடந்தன. அது இப்போது தோலுக்குக் கீழே போகப் போகிறது. இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால், இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள், ஃபேஸ்புக் அல்லது அமேசான் போன்ற பெரு நிறுவனங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அரசாங்கங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அவை இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள், யாரைச் சந்திக்கிறீர்கள், எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள், இணையத்தில் எந்தச் செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பனவற்றைப் பற்றியவையே.

ஆனால் அவை தோலுக்குக் கீழேயோ, உங்கள் உடலுக்கு உள்ளேயும் உங்கள் மூளைக்கு உள்ளேயும் என்ன நடக்கிறது என்றோ பார்க்கவில்லை. ஆனால் இப்போது நாம் தெரிந்து கொள்ள விரும்பும் முக்கியமான விஷயம் உடலுக்குள் இருக்கிறது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்களா இல்லையா, உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறதா, உங்கள் உடல் வெப்பநிலை என்ன, உங்கள் இரத்த அழுத்தம், உங்கள் இதயத்துடிப்பின் வேகம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இது கண்காணிப்பின் தன்மையையே மாற்றுகிறது. இப்போதைக்கு நோயின் மீதுதான் நம் கவனமெல்லாம் இருக்கிறது. ஆனால் உணர்வுகள் என்பவை நோய்களைப் போலவே உயிரியல் நிகழ்வுகள். உங்களுக்குக் கோவிட்-19 இருக்கிறதா என்று சொல்லக்கூடிய அதே கண்காணிப்பு, நீங்கள் கோபமாக இருக்கும் போது – மகிழ்ச்சியாக இருக்கும் போது – சலிப்பாக இருக்கும் போது அதையும் சொல்ல முடியும். எனவே, நீங்கள் இப்போது இந்த நேர்காணலைப் பார்க்கிறீர்கள் என்றால், உங்களிடம் – உங்கள் மணிக்கட்டில், உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்கும் ஓர் உயிரியளவுக் காப்பு (biometric bracelet) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், நீங்கள் என்னோடு உடன்படுகிறீர்களா இல்லையா என்பதையும், ‘ஐயோ, இது பயமுறுத்துவதாக இருக்கிறது’ என்று எண்ணுகிறீர்களா, ‘போப்பா, இதெல்லாம் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, இந்த ஆள் என்ன பேசிக்கொண்டு இருக்கிறான்!’ என்று எண்ணுகிறீர்களா என்பதையும், நீங்கள் சலிப்படைந்தாலும் சரி, வேறு எதுவானாலும் சரி, நான் அதை அறிந்து கொள்ள முடியும்.

இப்போதிருந்து 10 ஆண்டுகள் கழித்து, வட கொரியா போன்ற ஓரிடத்தில், ஒவ்வொரு குடிமகனும் 24 மணி நேரமும் உயிரியளவுக் காப்பு அணிய வேண்டும் என்றால், எண்ணிப் பாருங்கள். உங்கள் பெருந்தலைவரின் உரையைக் கேட்கும் போது நீங்கள் புன்னகைக்கலாம், கை தட்டலாம்,

ஆனால் உங்கள் உடலுக்குள் நடப்பதன் மீது உங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இராது. உங்கள் பெருந்தலைவர் மேல் நீங்கள் கோபமாக இருந்தால், அவர்களுக்கு அது தெரிந்து விடும். இது, 1984-இல் ஜார்ஜ் ஓர்வெல் கூடக் கற்பனை செய்து பார்த்திடாத ஒருவித முழுச் சர்வாதிகார அமைப்பு.

கேள்வி: இதுதான் நாம் சந்திக்கப் போகும் முதல் கொள்ளை நோய் இல்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படி வைத்துக் கொண்டால், தொலைநோக்கில் நாம் மக்களாட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த அமைப்பு ஏறக்குறைய நாசமாகிவிட்டது என்றுதான் படுகிறது. அதைப் பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

யுவால்: மக்களாட்சி நாசமாகி விட்டது என்று நான் நினைக்கவில்லை. அப்படியொன்றும் வேறு வழியில்லாமல் போய்விடவில்லை. முதலில், உடல் நலமா, தனிமறைவா (privacy) என்று இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வகையில் மக்களுக்கு அதை இரண்டு வேறு தெரிவுகளாகக் கொடுக்க வேண்டும் என்றே நான் எண்ணவில்லை.

ஒரே நேரத்தில் இரண்டையுமே மக்கள் அனுபவிக்க முடிய வேண்டும். இதெல்லாம் முன்பும் பார்த்திருக்கிறோம். நான் என் மருத்துவரிடம் செல்லும் போது, எனக்கு என் உடல்நலமும் வேண்டும், தனிமறைவும் வேண்டும். இரண்டும் வேண்டும். என் மருத்துவர், “ஏய், தொடங்கும் முன்பே, உன் முடிவைச் சொல்லிவிட வேண்டும். உனக்கு உடல்நலம் வேண்டுமா? தனிமறைவு வேண்டுமா? இரண்டில் எது வேண்டும்?” என்று சொல்வதில்லை. இல்லை. எனக்கு இரண்டும் கிடைக்கிறது. என் உடலைப் பற்றியும் என் வாழ்க்கையைப் பற்றியும் மருத்துவரிடம் மிக நெருக்கமான விஷயங்களைச் சொல்லலாம். அவரும் என் பாலியல் வாழ்க்கை போன்ற விஷயங்கள் பற்றிக்கூட என்னிடம் கேள்விகள் கேட்கலாம்.

நானும் நான் சொல்கிற இந்தத் தகவல்களை அவர் வேறு எவரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார் என்று எண்ணி, எனக்கு வேண்டிய சிறந்த சிகிச்சையைப் பெறுவதற்காக அவரிடம் அனைத்தையும் நேர்மையாகச் சொல்வேன். அது நமக்குப் புரிவதுதான். இப்போது நாம் பேசும் புதிய கண்காணிப்புகளிலும் அது போலவே இருக்க வேண்டும். நமக்கு இந்தக் கண்காணிப்புகள் வேண்டுந்தான்.

ஆனால் அது கவனமாகச் செய்யப்பட வேண்டும். முதலில், கொள்ளை நோய்களைத் தடுப்பதை மட்டுமே கவனமாகக் கொண்டு அது மிகவும் குறுகிய நோக்கமுடையதாக இருக்க வேண்டும். எனவே இந்தக் கண்காணிப்பு இதற்கென்றே அமைக்கப்பட்ட சிறப்பு சுகாதார அதிகார அமைப்பால் கையாளப்பட வேண்டும். அது காவல் துறையாகவோ இரகசியப் போலீசாகவோ இராணுவமாகவோ இருக்கக் கூடாது.

அது கொள்ளை நோய்களையும் பிற நோய்களையும் பற்றி மட்டுமே கவலைப்படும், வேறு எவருடனும் தகவல்களைக் காட்டாத, இதற்காகவே அமைக்கப்பட்ட சிறப்பு சுகாதார அதிகார அமைப்பாக இருக்க வேண்டும்.

மக்களாட்சியைப் பேணிக்காக்க முடியும். அது முழுதும் நாசமாகி விடவில்லை. நம்மிடம் கூடுதலான கண்காணிப்புகள் இருக்கும் போதெல்லாம் அது எப்போதுமே இரண்டு திசைகளிலும் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். சர்வாதிகாரத்தில் அது ஒரு திசையில் மட்டுமே போகும். உங்களைப் பற்றி அரசாங்கத்துக்கு எக்கச்சக்கமாகத் தெரியும். ஆனால் உங்களுக்கு அரசாங்கம் பற்றி எதுவுமே தெரியாது. எனவே, மக்களாட்சியில் அது இரு வழிகளிலும் செல்ல வேண்டும். ஆம், நாம் குடிமக்களைக் கண்காணிக்க வேண்டுந்தான். அதே வேளையில், அதுவும் குறிப்பாக இந்த நேரத்தில், நமக்குத்தான் அரசாங்கத்தை நிறையக் கண்காணிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இது போன்ற நேரத்தில் அரசாங்கம் எல்லாவிதமான நெருக்கடிநிலை அதிகாரங்களையும் பெற்றுக் கொள்கிறது. அத்தோடு, மிக முக்கியமான முடிவுகளும் எடுக்கிறது. எனவே, நான் ஒரு குடிமகனாக, அரசாங்கம் யாரை மீட்டெடுக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். எடுத்துக்காட்டாக, அரசாங்கம், தன் அமைச்சருடன் நெருக்கமாக இருக்கும் உரிமையாளர்களின் பெரும் பெருநிறுவனங்களை மீட்டெடுக்கிறதா அல்லது சிறிய குடும்பத் தொழில்களையும், உணவகங்களையும், கடைகளையும் மீட்டெடுக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

எனவே இதுவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். “இல்லை, இல்லை, உங்களை எல்லாம் எங்கள் வரவுசெலவுத் திட்டத்தைப் பார்க்கவிட முடியாது. அது நிரம்பச் சிக்கல் மிக்கது” என்றெல்லாம் அரசாங்கம் சொல்வதை நான் விரும்பவில்லை. இல்லை, என்னைப் பின்தொடர்வது உங்களுக்கு அவ்வளவு சிக்கலானதாக இல்லை என்றால், அதே நேரத்தில் உங்களைப் பின்தொடர்வதும் எங்களுக்கு அவ்வளவு சிக்கலானதாக இராது. ஒரே நேரத்தில் மேல் நோக்கியும் செல்லும் கீழ் நோக்கியும் செல்லும் இது போன்ற இரட்டைக் கண்காணிப்பு இருந்தால் மக்களாட்சி பாதுகாப்பாகத்தான் இருக்கும்.

கேள்வி: சரி, ஒரு வினாடி, நான் வாதத்திற்காகக் கேட்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். உண்மையிலேயே நாம் மகிழ்ச்சியை அதிகரித்து வலியைக் குறைக்க முயற்சிக்கிறவர்கள் தானே! அறியாமையே ஆனந்தம் என்று நம்புகிறவர்கள் தானே! அரசாங்கம் மக்களை இப்படி ஒட்டு மொத்தமாகக் கண்காணிப்பதும் கையாளுவதும் நம் மகிழ்ச்சிக்காகத் தானே! நம் மகிழ்ச்சிக்கு இது முக்கியம் இல்லையா?

யுவால்: நிச்சயமாக இல்லை. இந்தக் கண்காணிப்பையும் கையாளுதலையும் செய்பவர்கள் யார் என்று பாருங்கள். இவர்கள் எல்லாம் நாம் நம்புகிற அளவுக்கு அதிபுத்திசாலிகளாகவோ இரக்கவான்களாகவோ இருந்திருந்தால் இப்போது நாம் அது பற்றியெல்லாம் வாதிடலாம். ஆனால் உலகெங்கும் இது போன்ற கண்காணிப்பு வேலைகள் செய்யும் பெரும்பாலான அரசாங்கங்களைப் பார்க்கும் போது, அவர்கள் எல்லாம் மிகவும் அறிவாளிகளாகவோ மிகவும் இரக்கவான்களாகவோ கூட இருக்க வேண்டும் என்றுகூடக் கேட்கவில்லை.

இந்த அரசியல்வாதிகள் நிறைய பேரிடம் மக்களைப் பற்றிய சிறந்த நோக்கங்கள் கூட இல்லை. இதற்கு முன்பும் பலமுறை நாம் வரலாற்றில் பார்த்திருக்கிறோம். அவர்களிடம் நல்ல நோக்கங்கள் இருந்தாலுமே கூட, பிரச்சனை என்னவென்றால், மனிதர்கள் தவறு செய்யக்கூடியவர்கள். அரசாங்கம் ஒரு போதும் தவறு செய்யாது என்ற ஊகத்தின் அடிப்படையில் ஓர் அரசியல் அமைப்பைக் கட்டினீர்கள் என்றால், அது ஒரு பேரழிவுக்கான வழிமுறையே ஆகும்.

சர்வாதிகாரங்களிடம் இருக்கும் பெரும் பிரச்சனை என்னவென்றால், ஆம், அவற்றில் சில நன்மைகள் இருக்கின்றன தான், நிறைய பேரிடம் கலந்தாலோசிக்க வேண்டியதில்லை என்பதால் முடிவெடுக்கும் செயல்முறையை வேகப்படுத்தலாம், ஒருவர்தான் எல்லா முக்கியமான முடிவுகளையும் எடுக்கிறார், எனவே சொல்லவே வேண்டியதில்லை, அது வேகமாகத்தான் இருக்கும், ஆனால் பிரச்சனை என்னவென்றால், அந்த ஒருவர் தவறு செய்தால், அவர் யாராக இருந்தாலும் இன்றோ நாளையோ தவறு செய்யத்தான் செய்வார், ஒருபோதும் அவர்கள் தம் தவற்றை ஒத்துக்கொண்டு வேறொன்றை முயற்சித்துப் பார்க்கவே போவதில்லை.

வழக்கமாகவே அவர்கள் பழியையெல்லாம் எதிரிகள் மேல் போடுவார்கள் அல்லது துரோகிகள் மீது போடுவார்கள். அப்படிப் போட்டுவிட்டு, இந்த எதிரிகளோடும் துரோகிகளோடும் சண்டையிடுவதற்குக் கூடுதல் அதிகாரம் வேண்டும் என்று கேட்பார்கள். இப்படியே அவர்களுடைய தவறுகளை இரட்டிப்பாக்குவார்கள்.

மாறாக, மக்களாட்சியில் அரசாங்கம் தவறுகளை ஒப்புக்கொள்வதில் கூடுதலான விருப்ப உணர்வு கொண்டிருக்கும். அல்லது, நீங்கள் அந்த அரசாங்கத்தையே மாற்றிக் கொள்ளலாம். அல்லது, வாக்காளர்களே, “ஓ, இந்த ஆளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நாம் தவறு செய்துவிட்டோம், அடுத்த முறை வேறொருவரைத் தேர்ந்தெடுப்போம்” என்று ஒப்புக் கொள்ளலாம்.

ஏனென்றால், அமைப்புக்குள் செயல் திட்டங்களைவிடக் கூடுதலான அளவில் அவற்றைக் கேள்வி கேட்கும் குரல்கள் இருக்கின்றன. “சரி, இதை முயன்று பார்த்தோம், அது வேலை செய்யவில்லை. வேறொன்றை முயன்று பார்ப்போம்” என்று சொல்வது எளிது. எல்லாப் பிரச்சனைகளுக்கும் பழியைத் தூக்கிப் போடுவதற்காக நீங்கள் புதிது புதிதாக எதிரிகளையும் துரோகிகளையும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை.

“ஆம், தவறு செய்து விட்டோம். முந்தைய கொள்கை மிகச் சிறந்ததாக இருக்கவில்லை. வேறு ஏதாவது முயற்சிப்போம்” என்று சொல்லி விடலாம். தவறை ஒப்புக்கொண்டு வேறு ஏதாவது முயன்று பார்ப்பதற்கான இந்த விருப்ப உணர்வு – இதுதான் கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலுமே மனிதகுல வளர்ச்சிக்கான உண்மையான திறவுகோல்.

கேள்வி: உலகெங்கும் வெவ்வேறு அரசாங்கங்களிலும் நிறைய தேசியவாதப் போக்குகளைப் பார்க்கிறோம். இந்த நெருக்கடியையும் இந்தக் கிருமியையும் தேசிய அளவில் எதிர்த்துப் போரிடுவது ஒரு நல்ல முடிவு என்று நினைக்கிறீர்களா அல்லது இதை வேறுவிதமாகக் கையாள வேண்டுமா? இதை வேறுவிதமாகக் கையாள வேண்டுமென்றால், இது போன்ற ஒரு விஷயத்தில் உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவது ஏன் இவ்வளவு கடினமாக உள்ளது என்று எண்ணுகிறீர்கள்?

யுவால்: தேசியவாதம் நிச்சயம் தவறில்லை. மனிதர்கள் இதுவரை கண்டுபிடித்த மிகச் சிறப்பானவற்றில் அதுவும் ஒன்று. இந்த நாட்டின் வேறொரு பகுதியில் இருக்கும் எனக்குத் தெரியவே தெரியாத மனிதர்கள் உட்பட என்னைச் சுற்றியிருக்கும் பிற மனிதர்களோடு எனக்கு ஒரு பிணைப்பு இருக்கிறது, இதனால்தான் நான் வரி கட்டுகிறேன், அதன் மூலம் எனக்குத் தெரியாத – என் நண்பர்களோ உறவினர்களோ கூட அல்லாத நாட்டின் வேறொரு பகுதியில் இருக்கும் மனிதர்களுக்கும் கூட நல்ல சுகாதாரம் கிடைக்கும் எனும் இந்தச் சிந்தனை – இம்மாதிரியான தேசியவாதம் மிகவும் நல்லது.

தேசியவாதத்தைப் பற்றி நாம் உணர வேண்டியது என்னவென்றால், தேசியவாதம் என்பது வேற்று நாட்டவரை வெறுப்பதல்ல. தேசியவாதம் என்பது உங்கள் நாட்டவரை நேசிப்பதும் அவர்களைக் கவனித்துக் கொள்வதும் ஆகும். அதன் பொருள் நாம் மற்ற நாடுகளோடு சண்டை போட வேண்டும் என்பதல்ல. இந்தக் கொள்ளை நோயின் போது போலவே மற்ற நாடுகளோடும் நீங்கள் ஒத்துழைக்க வேண்டிய வேறு பல சூழ்நிலைகளும் இருக்கின்றன. ஏனென்றால், பல்வேறு காரணங்களுக்காக இது போன்ற கொள்ளை நோய்களை ஒரு தனிநாட்டின் அளவிலேயே கையாள முடியாது.

முதலில், தகவல்தான் இது போன்ற கொள்ளை நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கான மிக முக்கியமான உடைமை. இந்த நோயை உண்டாக்கியது எது, நோயின் மூலத்தைத் தடுப்பது எப்படி, அது பரவாமல் தடுப்பது எப்படி என்பனவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தகவல்களில் நிறைய மற்ற நாடுகளில் இருந்து வருகின்றன.

இந்தக் கொள்ளை நோய் சீனாவில் தொடங்கியது. சீனாதான் முதலில் அதை எதிர் கொண்டது. இப்போது உலகின் எல்லா நாடுகளுமே ஓரளவு சீனா வழங்கும் தகவல்களை நம்பியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, சீனர்கள்தாம் முதலில் இந்தக் கிருமியையும் அதன் வரிசையையும் மரபணுக் குறியீட்டையும் அடையாளம் கண்டார்கள். இது பிற நாடுகளுக்கு இந்தக் கொள்ளை நோய் வந்த போது அதைக் கையாள்வதற்கு உதவியது.

இப்போது, இந்தப் பூட்டடைப்பை எப்படி முடித்து வைப்பது என்று நிறைய நாடுகள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, சீனா மட்டுமல்ல, கொரியா, தைவான் போன்ற நாடுகளும் பெரும்பாலான நாடுகளுக்கு முன்பே இதைச் சந்தித்து விட்டன. இப்போது இந்த நோய் மீண்டும் பரவி விடாமல் இந்தப் பூட்டடைப்பை எப்படி முடிவுக்குக் கொண்டு வருவது என்பது பற்றி இத்தாலிய அரசாங்கம் விவாதித்துக் கொண்டிருக்கிறது.

இது எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்களே கண்மூடித்தனமாக ஊகங்கள் செய்து, முயற்சிகளும் பிழைகளும் (trial and error) செய்து கண்டுபிடிக்கலாம். ஒருவேளை அது தோல்வியடையலாம் என்று எதையாவது முயன்று பார்க்கலாம். அல்லது மிகவும் புத்திசாலித்தனமான முறையில், இதே சூழ்நிலையில் சீனர்கள் என்ன செய்தார்கள், கொரியர்கள் என்ன செய்தார்கள், தைவானியர்கள் என்ன செய்தார்கள், எது வேலை செய்தது, எது வேலை செய்யவில்லை என்பதை விசாரித்தறிந்து, பின்னர் அவர்களின் அனுபவத்தை நம்பி இறங்கலாம்.

நாடுகளுக்கு இடையிலான இது போன்ற ஒத்துழைப்பு இந்தக் கொள்ளை நோயைக் கையாள்வதை எல்லோருக்கும் மிகவும் எளிதாக்கும்.

அது போலவே, மருத்துவ உபகரணங்களைப் பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு நாடும் தாமாகவே அவற்றை உற்பத்தி செய்ய முயற்சித்துக் கொண்டு உபகாரணத்துக்காகவும் மூலப்பொருட்களுக்காகவும் மற்ற நாடுகளோடு சண்டை போட்டால் இது உற்பத்தியில் ஒரு பெரும் திறனின்மையையே உண்டாக்கும்.

மிகப்பணக்கார நாடுகள் மட்டும் உபகரணங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு, உண்மையில் அது தேவைப்படும் மற்ற நாடுகளுக்கு அவை போயே சேராது. அதற்குப் பதிலாக, அனைத்து உபகரணங்களையும் மிகவும் திறன்மிக்க வகையில் உற்பத்தி செய்வதிலும் பின்னர் நியாயமான முறையில் விநியோகிப்பதிலும் போடப்படும் முயற்சிகளை ஒன்றிணைப்பது பற்றி உலகளாவிய அல்லது ஒரு கண்ட அளவில், எடுத்துக்காட்டாக, ஐரோப்பாவில் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியதுக்கும் ஓர் ஒற்றைக் கொள்கை வைத்துக் கொள்ள முடியும் என்றால், அது மிகவும் திறன்மிக்கதாகவும் விலையைக் குறைப்பதாகவும் மிகவும் நியாயமானதாகவும் ஆக்கும்.

நமக்குத் தேவையான இன்னொரு விஷயம் பொருளியல் துறையில் உள்ளது. சொல்ல வேண்டியதே இல்லை, இது ஒரு சுகாதார நெருக்கடி மட்டுமல்ல, இது ஓர் உலகளாவிய பொருளியல் நெருக்கடி. ஒவ்வொரு நாடும் தன் சொந்த நலன்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டால், ஒரு பெரும் பொருளியல் குழப்பம் வரும். நிச்சயமாக, மிகவும் பலவீனமான நாடுகளும் மிகவும் ஏழ்மையான நாடுகளும் இதைச் சமாளிக்க முடியாது.

அமெரிக்கா 2 ட்ரில்லியன் டாலர் மீட்புப் பொதியம் (rescue package) ஒதுக்க முடியும். ஆனால் பிரேசிலோ, எகிப்தோ, பாகிஸ்தானோ அப்படிச் செய்ய முடியாது. எனவே, உலகளாவிய பொருளாதாரப் பாதுகாப்பு வலை என்று ஒன்றில்லை என்றால் எல்லா நாடுகளும் சரிந்து வீழலாம்.

இவைதான் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு தேவைப்படுவதற்கான சில முக்கியக் காரணங்கள். துரதிஷ்டவசமாக, பெரியவர்களே இல்லாத அறையில் உள்ள சின்னக் குழந்தைகள் போல, இந்த உலகத்தில் தலைமைப் பற்றாக்குறை இருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொருவரும் தன் சொந்த உடனடி நலன்களை மட்டும் கவனித்துக் கொள்கிறார். ஒட்டுமொத்த மனிதகுலமும் ஒன்றாக எப்படி இந்த நெருக்கடியைச் சமாளிப்பது என்ற திட்டத்தை எவருமே கொண்டு வரவில்லை. எபோலாக் கொள்ளை நோயின் போதும், 2008 உலகளாவியப் பொருளாதார நெருக்கடியின் போதும், இதற்கு முன்பு உலகத் தலைமையாக இருந்த நாடு அமெரிக்கா. அமெரிக்காவின் தற்போதைய நிர்வாகம் உலகத் தலைமை என்ற தன் பொறுப்பைத் துறந்து விட்டது.

அமெரிக்கா இப்போது தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறது, ‘அமெரிக்கா தான் முதலில், மற்றதெல்லாம் அப்புறமே’ என்பதை உலகுக்குத் தெளிவுபடுத்தி விட்டது. இந்த நிலைப்பாடு வேலை செய்யவில்லை என்பதையும் சொல்ல வேண்டியதில்லை. இப்போது அமெரிக்காதான் நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது. புள்ளி விவரங்களைப் பாருங்கள். அமெரிக்காதான் முதலில் உள்ளது. எனவே நமக்குத் தலைமை இல்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என்றும் தோன்றுகிறது.

அதாவது, அமெரிக்காவோ, சீனாவோ வேறு ஏதோ ஒரு நாடோ நமக்குத் தலைமையேற்க வேண்டும் என்று ஓர் ஒற்றை நாட்டை எதிர்பார்த்துக் கொண்டிராமல் ஒரு பயனுள்ள கூட்டுத்தலைமை – விருப்பமுள்ளவர்களின் கூட்டணி போல ஒன்று வைத்துக் கொள்வதே நல்லது.

தேசியவாதத்தின் அடிப்படையிலான தனிமைப்படுத்தல்கள், வெறுப்பு, நாடுகள் ஒன்றையொன்று குற்றஞ்சாட்டுதல், நாடுகள் தம் இனச் சிறுபான்மையினரைக் குற்றஞ்சாட்டுதல் ஆகியவை எல்லாம் கூடி வருகின்றன என்பதை அறிவேன். பயனுள்ள உலகளாவிய ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நெருக்கடியைத் தோற்கடிக்க முடியாது என்பதை மென்மேலும் மனிதர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன்.

தேசியவாதம் உண்மையில் உலகளாவிய ஒத்துழைப்பைக் கோரும். ஏனென்றால், உங்கள் நாட்டவரைக் கவனித்துக் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் வேற்று நாட்டினரோடு ஒத்துழைக்க வேண்டும். இந்தக் கொள்ளை நோயை எல்லா நாடுகளிலிருந்தும் ஒழிக்கும் வரை எந்த நாட்டுக்கும் பாதுகாப்பில்லை.

ஒரு குறிப்பிட்ட காலம் உங்கள் நாட்டில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் வெற்றி பெற்றால் கூட, அது மற்ற நாடுகளில் பரவிக் கொண்டிருக்கும் வரை, அது திரும்பி உங்கள் நாட்டுக்குள்ளும் வரலாம், திரும்பி வரும்.

இப்போது இந்தக் கொள்ளை நோயில் நமக்கிருக்கும் மிகப்பெரிய எதிரி கிருமி அல்ல. கிருமியை நாம் சமாளிக்க முடியும். நமக்குள் இருக்கும் மிகப்பெரிய அகப் பேய்களே, குறிப்பாக நம் வெறுப்புகளே நமக்கிருக்கும் மிகப்பெரிய எதிரி. அவை அனைத்தும் இப்போது வெளியேறி வருகின்றன. நம் வெறுப்புகளை வென்று ஒத்துழைக்க முடிந்தால், நம்மால் இந்தக் கிருமியை எளிதாக வீழ்த்த முடியும்.

கேள்வி: இது நம்மால் முடியுமா முடியாதா என்பதைப் பற்றியது. நெருக்கடிகள்தாம் வரலாற்றின் இயங்கு விசையைத் துரிப்படுத்துகின்றன என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நம் தேசியவாத இயங்கு விசையைத் துரிதப்படுத்தப் போகிறோமா அல்லது உலகளாவிய ஒத்துழைப்பைத் துரிதப்படுத்தப் போகிறோமா என்கிற ஒரு முக்கியமான சந்தியில் இப்போது நாம் நிற்கிறோம் என்பது போலப்படுகிறது. உண்மையில் என்ன நடக்கப் போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

யுவால்: எனக்குத் தெரியவில்லை. என்னால் எதிர்காலத்தைக் கணிக்க முடியாது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் இது போன்ற நேர்காணல்களில் கலந்து கொள்வது, எதிர்காலத்தைக் கணிப்பதற்காக அல்ல. நிகழ்காலத்தின் முடிவுகளில் தாக்கம் செலுத்துவதற்காகவே அதைச் செய்கிறேன்.

வெறுப்பை வளர்க்காமல், இரக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல முடிவுகளை எடுக்கும் வகையில், இந்த வேளையில் உலகளாவிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்வதற்கு உதவ விரும்புகிறேன்.

இதுவே இந்தக் கொள்ளை நோயை முறியடிப்பதை மேலும் எளிதாக்கும். எதிர்காலத்தில் வரப்போகும் நெருக்கடிகளைக் கையாள்வதையும் இது மேலும் எளிதாக்கும். இதுவே 21-ஆம் நூற்றாண்டின் கடைசி நெருக்கடி இல்லை. இன்னும் பல கொள்ளை நோய்கள் வரலாம். தட்பவெப்ப மாற்றம் போன்ற மற்ற பிரச்சனைகளும் இருக்கின்றன. இப்போது நாம் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொள்ளவும் சண்டை போடவும் தொடங்கினால் அவை அனைத்தும் மேலும் மோசமாகும். இப்போது நாம் உலகளாவிய ஒற்றுமையை வளர்த்தால் அவை அனைத்தும் கையாள மேலும் எளிதாகி விடும்.

கேள்வி: கணிப்புகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். நான் அடுத்துக் கேட்க இருந்த கேள்வி இதுதான். உங்களிடம் மந்திரக்கோல் இல்லை, உங்களால் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்று சொல்ல முடியாது, ஆனால் கணிப்புகள் செய்ய முடியும், எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ அதை மாற்ற முடியலாம் என்று நம்புவதாகச் சொன்னீர்கள். இது உங்கள் நூல்களில் ஒன்றில் நீங்கள் சொல்வது. நல்ல கணிப்புகளுக்கு அவை கணிக்க முயற்சிக்கும் எதிர்காலத்தை மாற்றும் ஆற்றல் உண்டு. அதுவே கடைசியில் அந்தக் கணிப்புகளையே பயனற்றவையாகவோ தவறானவையாகவோ ஆக்கி விடுகின்றன. டேவிட் குவாமன் மற்றும் பில் கேட்ஸ் போன்றவர்களால் இந்தக் கொள்ளை நோய் பற்றிய கணிப்புகள் இருக்கத்தான் செய்தன. இந்தக் கணிப்புகள் ஏன் மாறுபட்டவை? அவற்றால் மாற்றியிருக்க முடிந்த அளவுக்கு அவை ஏன் எதிர்காலத்தை மாற்றவில்லை?

யுவால்: ஏனென்றால், போதுமான அளவிலான மனிதர்கள் அவர்களின் பேச்சைக் கேட்கவில்லை. எதிர்காலத்தைப் பற்றிய எல்லாவிதமான ஆபத்தான சாத்தியங்கள் பற்றியும் கேள்விப்படுவதும் பிரச்சனையின் ஒரு பகுதி எனலாம். அவர்கள் சொல்வது நடக்காதவரை அவர்களை எவ்வளவு பொருட்படுத்துவது என்று யாருக்கும் தெரியாது. இது உண்மையிலேயே நடக்கும் என்பதற்கான வாய்ப்புகள் என்ன?

எடுத்துக்காட்டாக, மனித நாகரீகத்தையே அழிக்கக்கூடிய அளவில் விண்வெளியிலிருந்து வந்து தாக்கப்போகும் ஒரு சிறுகோளிலிருந்து பூமியைக் காப்பதற்காக பயங்கரமான அளவில் பணத்தைக் கொட்டலாம். மாறாக, அடுத்த மில்லியன் ஆண்டுகளில் கூட அப்படியொரு சிறுகோள் வந்து பூமியைத் தாக்காமலும் போய்விடலாம். அப்போது, சுகாதாரத்துக்கும் கல்விக்கும் கொடுக்காமல் இதற்குப்போய் ஏன் இவ்வளவு பணத்தைச் செல்வழித்தீர்கள் என்று மக்கள் கேட்பார்கள். அந்தப் பணத்தை எல்லாம் வராமலே போய்விட்ட ஒரு சிறுகோளிலிருந்து காப்பாற்றுவதற்காகச் செலவழித்துவிட்டீர்களே என்பார்கள்.

எனவே இது போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. அது மட்டுமில்லை, இது போன்ற எச்சரிக்கையை மக்கள் காதில் வாங்கிக்கொண்டு, நல்ல வகையில் ஏதேனும் செய்து, மிக மோசமான விளைவிலிருந்து உண்மையாகவே தடுத்துக் கொள்ளும் காலங்களும் இருக்கின்றன. அப்போது, “ம்ம்ம், அதான் ஒன்றும் நடக்கவில்லையே! ஏன் அந்தப் பணத்தையெல்லாம் வீணாக்கினோம்?” என்பார்கள். 2003-இல் வந்த சார்ஸ் கொள்ளை நோயைத் திரும்பிப் பார்த்தால், அதுவும் ஒரு கொரோனா கிருமிதான், அது இப்போதைய இந்தக் கொள்ளை நோயை விட மிக வேகமாக நிறுத்தப்பட்டது.

முந்தைய வெற்றிகளின் காரணமாக சில நாடுகள் எச்சரிக்கையை இம்முறை போதுமான அளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள் சிலர். ஏனென்றால், “ஏய், 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த சார்ஸ் அச்சுறுத்தலின் காரணமாக நாங்கள் எவ்வளவோ பணம் செலவழித்தோம். கடைசியில் ஒன்றுமே நடக்கவில்லை” என்றார்கள்.

நீங்கள் பணம் செலவழித்ததாலும் சரியான விஷயங்களைச் செய்ததாலுந்தான் ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அப்போது கொள்ளை நோய் வரவில்லை, மிகக் குறைவான மனிதர்களே இறந்தார்கள் என்பதால் அது தவறான எச்சரிக்கை என்று எண்ணிக் கொண்டோம். இது மிகமிகச் சிக்கலானது. எச்சரிக்கையைச் சரியாகக் காதில் வாங்கிக்கொண்டு, சரியாக ஏதேனும் செய்து, பேரழிவைத் தடுத்துவிட்டால், கண் முன்னால் எதுவும் நடக்கவில்லை என்பதால், “அது சரி, பணத்தையெல்லாம் இப்படி வீணடித்துவிட்டீர்களே!” என்பார்கள். எனவே எந்த எச்சரிக்கைகளைக் காதில் வாங்கிக்கொள்வது, எந்த எச்சரிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது என்பது மிகமிகச் சிக்கலானது.

கேள்வி: நீங்கள் சொன்னவற்றுள் ஒன்று இது. உங்களிடமிருந்து இதைப் படிக்கவும் செய்திருக்கிறேன். வாழ்க்கைக்கு இன்பம், வலி என்று இரண்டு எஜமானார்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவதாகச் சொல்லியிருக்கிறீர்கள். கடந்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களில் நாம் வளர்த்துக் கொண்டுள்ள இந்த பயம் நம் நடத்தையை அடிப்படையிலேயே மாற்றப் போகிறது என்று எண்ணுகிறீர்களா? இதெல்லாம் முடிந்த பின்பு அல்லது வேகம் குறைந்த பின்பு, மனிதர்கள் சமூக ரீதியாக ஒவ்வொருவரிடமும் வேறுவிதமாக நடந்துகொள்ளப் போகிறார்களா?

யுவால்: ஓரளவுக்கு, வீட்டிலிருந்தே வேலை செய்ய முடியும் என்று உணரும் போது வேலைவாய்ப்புச் சந்தை போன்ற இடங்களில் ஒருவேளை மாற்றங்கள் ஏற்படலாம், பல்கலைக்கழகங்களும், பள்ளிகளும் இணையத்திலேயே பாடங்கள் நடத்தலாம். எனவே இந்தப் பாடங்கள் அனேகமாக மனிதர்கள் வேலை செய்யும் விதத்திலும் தகவல் தொடர்பு செய்து கொள்ளும் விதம் போன்றவற்றிலும் பெருமளவில் மாற்றம் செய்யப் போகின்றன. ஆனால், இன்னும் அடிப்படையான மட்டத்தில், மனித இயல்பு பற்றிச் சிந்தித்தீர்கள் என்றால், அது மாறும் என்று எனக்குத் தோன்றவில்லை.

நாம் சமூக விலங்குகள். நெருக்கத்தை விரும்புபவர்கள். ஒருவர் உடல்நிலை சரியில்லாமலோ ஏதேனும் சிக்கலிலோ இருக்கும் போது நாம் உதவுவதற்குப் பாய்ந்து செல்பவர்கள். நம் நண்பர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் குடும்பத்தினருக்கும் உதவுவது நம் சிறந்த இயல்புணர்வுகளில் ஒன்று. இப்போது இந்தக் கிருமி இதை நமக்கு எதிராகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. மனித இயல்பின் சிறந்த பகுதியை நமக்கு எதிராகப் பயன்படுத்தித்தான் இந்தக் கிருமி இப்படிப் பரவுகிறது.

நல்ல வேளையாக, தனக்கென்று சிந்தனைத்திறன் இல்லாத இந்தக் கிருமியைப் போலல்லாமல், நமக்கென்று மூளை இருக்கிறது. என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது புரியும் போது அதை முறியடிப்பதற்கு நம்மால் நம் நடத்தையை மாற்றிக்கொள்ள முடியும். மிதமிஞ்சிய நெருக்கம் கொள்ளை நோயைப் பரப்பலாம் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். எனவே அதை நாம் நிறுத்தி விட்டோம்.

நாம் இதயத்திலிருந்து செயல்படாமல் மூளையிலிருந்து செயல்படுகிறோம். ஆனால் இது நம் அடிப்படை இயல்பை மாற்றாது. நெருக்கடி முடிந்த பின்பும், மனித இயல்பு அப்படியேதான் இருக்கும். கவலையே படாதீர்கள். இதைவிடப் பல மடங்கு மோசமான கருஞ்சாவு (Black Death) எனும் கொள்ளை நோயே அதை மாற்றவில்லை. 1918-இல் வந்த ‘இன்ஃப்ளூயன்சா’ கொள்ளை நோய் அதை மாற்றவில்லை. எடுத்துக்காட்டுக்கு, 1980-களில் வந்த எய்ட்ஸைப் பாருங்கள். எயிட்ஸ் பல வகைகளிலும் இப்போது நடப்பதைவிடப் பலமடங்கு மோசமானது.

முதலில், 1980-களில் உங்களுக்கு எயிட்ஸ் வந்தால் நீங்கள் செத்துப் போவீர்கள். அவ்வளவுதான். கொரோனாக்கிருமி போல் அல்ல அது. இந்த நோய் வரும் பெரும்பாலானவர்கள் சிறிது நோய்வாய்ப்படலாம். மிகச்சிறிய விழுக்காட்டினரே இறப்பார்கள். எயிட்ஸ், அப்படி அல்ல, அது மரண தண்டனை. முதல் நோயாளிகள் நிறைய பேர் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதால் பாதிக்கப்பட்ட குடிமக்களை முதலில் அரசுகள் கைவிட்டன. பல அரசுகள், “அவர்கள் சாகட்டும். எங்களுக்கு ஒன்றும் இல்லை. சொல்லப்போனால் அவர்கள் சாவது நல்லது தான்” என்றன.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று  பார்த்தீர்கள் என்றால், எல்ஜீபீட்டி (LGBT) சமூகத்தில் இருந்த மனிதர்கள் எல்லோரும் ஒன்றிணைந்தார்கள். அந்தச் சமூகத்தை யாரும் அழிக்கவில்லை. உண்மையில் அவர்கள் தன்னார்வமாக முன் வந்தார்கள். நோய்வாய்ப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அமைப்புகளை நிறுவினார்கள்.

அந்தப் பயங்கரமான கொடும் கொள்ளை நோய் பற்றிய நம்பத்தக்க தகவல்களைப் பரப்புவதற்காக அமைப்புகளை நிறுவினார்கள். அரசாங்கத்தின் மீதும் சுகாதார அதிகாரங்களின் மீதும் அழுத்தம் தந்தார்கள். எல்ஜீபீட்டி சமூகம், 1990-களில், அந்தக் கொள்ளை நோயின் மிக மோசமான ஆண்டுகளுக்குப் பின், நோய் முழுமையாக முடிந்துவிடாத போது, கொள்ளை நோய்க்கு முன்பு 1970-களில் இருந்ததை விட மிக வலுவாக ஆகியிருந்தது.

எனவே, “ஆம், நெருக்கடியின் உச்ச கட்டத்தில் இருக்கும் போது மாறி ஆக வேண்டும் என்பதற்காக மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக் கொள்வார்கள் தான். ஆனால் சமூக விலங்குகள் என்ற முறையில் அது மனிதர்களின் அடிப்படையான இயல்பை மாற்றாது” என்பதற்கு இது போல இன்னும் நிறையக் கதைகள் இருக்கின்றன. இதெல்லாம் முடிந்த பின்பு, மீண்டும் வந்து, இதற்கு முன்பு நாம் அருமை புரியாமல் இருந்தவற்றின் அருமையை எல்லாம் கூட இன்னும் கூடுதலாகப் புரிந்து கொள்வோம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.

கேள்வி: இந்த உலகளாவிய நெருக்கடியை தேசிய அளவில் மட்டுமே கையாண்டு, சில நாடுகளில் மட்டும் இந்தக் கிருமியை ஒழிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்?

யுவால்: ஒரு பேச்சுக்கு, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்பு வீழ்ச்சிகளால் ஆப்பிரிக்காவில் பல நாடுகள் வீழ்கின்றன என்று வைத்துக் கொள்வோம். பேரலை போல ஓர் இடப்பெயர்ச்சியும் குடியேற்றமும் நிகழும். ஆப்பிரிக்காவை மட்டுமல்லாது ஐரோப்பாவையும் நிலைகுலைக்கும் போர்கள் மூளும். எனவே அப்படியொன்று நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பொருளியலையும் அரசியலையும் கூட ஒதுக்கி வைத்துவிடுவோம்.

சுகாதாரம் பற்றி மட்டும் யோசித்தால் கூட, ஒரு கொள்ளை நோய் மற்ற நாடுகளில் பரவிக் கொண்டிருக்கும் வரை உங்கள் நாட்டுக்கும் அது திரும்பி வரலாம், அப்படி வரும்போது அது இன்னும் மோசமான வடிவில் வரலாம். ஏன்? விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கும், வௌவால்களிலிருந்து மனிதர்களுக்கும் தாவும் நோய்க்கிருமிகளும் சரி, பிற நுண்ணுயிர்களும் சரி, முதலில் அவை மனித உடலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்வதில்லை.

அவை ஒரு வௌவாலின் உடலுக்குத் தகவமைத்துக் கொண்டிருந்தவை. மனித உடலுக்குத் தகவமைத்துக் கொள்ளவும் தொற்றுத் தன்மையை அதிகரிக்கவும் மேலும் கொடியதாகவும் அவற்றை ஆற்றுவிப்பது எதுவென்றால், அது வகைமாற்றங்கள் (mutations). இப்போது, உலகில் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், ஒரு மனித உடலில் இந்தக் கிருமி கூடுதலான காலம் வாழ வாழ அது கூடுதல் தொற்றுத்தன்மை உடையதாகவும் கொடியதாகவும் வகைமாற்றம் அடைவதற்கான வாய்ப்புக்களும் கூடும்.

எடுத்துக்காட்டாக, அதை 2014-இல் வந்த எபோலாக் கொள்ளை நோயில் பார்த்தோம். அதுவும் முதலில் வௌவால்களிலிருந்துதான் வந்தது. அந்தக் கிருமி முதலில் மனிதர்களுக்குள் வந்தபோது, அது கொடியதாக இருந்தது. ஆனால், மனித உயிரணுக்களுக்குள் நுழைவதில் சிரமம் இருந்ததால் அது தொற்றுத்தன்மை அதிகம் கொண்டிருக்கவில்லை.

அதற்கடுத்து, மேற்கு ஆப்பிரிக்காவில் எங்கோ ஓரிடத்தில் அந்தக் கிருமி ஒரேயோரு மனிதரின் ஒரேயொரு மரபணுவில் ஒற்றை வகைமாற்றத்துக்கு மட்டும் உட்பட்டது. அது அந்தக் கிருமியை நான்கு மடங்குகள் கூடுதலான தொற்றுத்தன்மை உடையதாக ஆக்கியது. அதுதான் உண்மையான கொள்ளை நோயைத் தொடங்கி வைத்தது. இது நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் கூட நடக்கலாம். அப்படியான ஒன்று இத்தாலியிலோ ஈரானிலோ பிரேசிலிலோ இந்த உலகத்தில் வேறெங்கிலுமோ இப்போது கொரோனாக்கிருமிக்கு நடந்து கொண்டிருக்கலாம்.

அது கொரோனாக்கிருமியை மேலும் தொற்றுத்தன்மை கொண்டதாகவும் மேலும் கொடியதாகவும் ஆக்கிவிடும். இது எல்லா மனிதர்களுக்கும் ஆபத்து. எனவே, இந்தக் கிருமி ஏதோவொரு மனிதத் தொகையில் பரவிக் கொண்டிருக்கும் வரை எவருமே உண்மையில் பாதுகாப்பாக உணர முடியாது.

கேள்வி: தகவல்களை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு, நம் நிறுவனங்களை நம்ப முடிய வேண்டும் என்கிறீர்கள். அது சாத்தியமானது தானா? ஆம் எனில், எப்படி? எப்படிச் சாத்தியமாகும்?

யுவால்: நிறுவனங்கள்தாம் முக்கியமானவை. தனி மனிதர்களை நம்பலாம், ஆனால் நமக்கு நிறையத் தனி மனிதர்களைத் தெரியாது. உங்களுக்கு, நூறு பேரையோ இருநூறு பேரையோ தெரியலாம். அது போதாது. ஓர் அறிவியலாளன் என்ற முறையில் நானும் கூட மற்ற அறிவியலாளர்களின் முடிவுகளை நம்புவதற்கான காரணம், அவர்கள் எனக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அல்ல, நான் நிறுவனங்களை நம்புகிறேன் என்பதாலேயே.

அவர்களுக்குப் பட்டமளித்த பல்கலைக்கழகத்தை நம்புகிறேன். அவர்களின் கட்டுரையை வெளியிட்ட இதழை நம்புகிறேன். அவர்கள் சோதனை செய்த ஆய்வகங்களை நம்புகிறேன். நல்ல சுதந்திரமான நிறுவனங்களைக் கட்டுவதற்கு நேரம் ஆகும். சமீப ஆண்டுகளில் மக்களுக்குப் பிடித்த அரசியல்வாதிகள் வேண்டுமென்றே பல்கலைக்கழகங்கள், மதிப்பிற்குரிய ஊடக நிறுவனங்கள் போன்ற சில முக்கியமான நிறுவனங்களின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் குழிபறிப்பதைப் பார்த்தோம்.

இந்த மக்களை மயக்கும் அரசியல்வாதிகள், “இந்தச் சிறிய மேற்தட்டு அறிவியலாளர்கள் உண்மையான மக்களிடமிருந்து தொடர்பறுந்தவர்கள். அவர்களை நாம் நம்பக்கூடாது” என்று மக்களிடம் சொன்னார்கள். “தட்பவெப்ப மாற்றம் வெறும் புரளி, அது உண்மையானதல்ல, பூமி உண்மையில் தட்டையானது, தடுப்பூசிகள் கேடு விளைவிப்பவை” போன்ற இந்தச் சதிக்கதைகள் எல்லாம் வந்தன. அது பரவியது.

ஆனால் இப்போதும் மிகவும் தாமதமாகிவிட்டது என்று நான் எண்ணவில்லை. குறிப்பாக நெருக்கடி நிலையில் மக்கள் தம் கருத்துக்களை மிக வேகமாக மாற்றிக் கொள்ளலாம், மறைந்து கிடக்கும் நம்பிக்கையின் களஞ்சியங்களைக் கண்டுபிடிக்கலாம். இந்த நெருக்கடியிலேயே பாருங்கள். மக்கள் யாரை நம்புகிறார்கள்? அனைத்து நாடுகளிலும் எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அறிவியலாளர்களைத் தான் நம்புகிறார்கள்.

இஸ்ரேலில் யூதத்திருக்கோயில்களைப் பூட்டிப் போடுகிறார்கள். ஈரானில் மசூதிகளைப் பூட்டிப் போடுகிறார்கள். உலகெங்கும் உள்ள தேவாலயங்கள் “யாரும் தேவாலயங்களுக்கு வராதீர்கள்” என்கின்றன. போப்பாண்டவர் ஸூமிலோ, யூட்யூபிலோ வந்து அவரின் சடங்குகளைச் செய்யவில்லை. அவர்கள் ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்? ஏனென்றால், அறிவியலாளர்கள் பரிந்துரைத்தார்கள். இந்த நெருக்கடி வேளையில், மதத்தலைவர்கள் கூட அறிவியலாளர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

நெருக்கடி முடிந்த பின், உண்மையிலேயே நம்பத்தக்க தகவல் வேண்டுமென்றால் இங்குதான் போக வேண்டும், ஒரு நெருக்கடியின் போது இவர்களைத்தான் நம்ப வேண்டும் என்பதை மக்கள் நினைவு வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

எனவே இந்த நெருக்கடி முடிந்த பின்னும், ஓரிரு ஆண்டுகள் கழித்த பின்னும், எடுத்துக்காட்டாக தட்பவெப்ப மாற்றம் பற்றி அறிவியலாளர்கள் எச்சரிக்கும் போது, அப்போது வந்து, “இதெல்லாம் புரளி” என்று சொல்லக் கூடாது. இந்த அறிவியலாளர்கள்… இவர்களை ஏன் நாம் நம்ப வேண்டும் என்பதையும் இன்று யாரை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் நெருக்கடி முடிந்த பின்பும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.

***

பாரதிராஜா – தூத்துடி மாவட்டம் பூதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர். இப்போது பணி நிமித்தம் அமெரிக்காவில் வேலை செய்து வருகிறார். அரசியல் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்.

Aarogya Setu: செத்தாண்டா சேகரு

0

ஃபேக் ஐடி பாரதீ

ஆரோக்கிய சேது: ஒரு தோல்வியின் கதை

Description: Elliot Alderson

எலியட் ஆல்டர்சன்

கோவிட்19-ஐ எதிர்த்துப் போரிட, இந்திய அரசு ஆரோக்கிய சேது என்றொரு கைபேசியில் இயங்கும் தொடர்புத் தடமறி பயன்பாட்டை (contact tracing application) வெளியிட்டது. இந்தப் பயன்பாடு பிளே ஸ்டோரில் உள்ளது. 9 கோடி இந்தியர்கள் ஏற்கனவே இதை தம் கைபேசிகளில் நிறுவியிருக்கிறார்கள்.

இந்தப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. நொய்டாவில், ஒருவர் தன் கைபேசியில் இந்தப் பயன்பாட்டை நிறுவவில்லை என்றால், அவர் 6 மாதங்கள் வரை சிறையில் அடைக்கப்படலாம் அல்லது ரூ .1000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

***

No Aarogya Setu app? Pay Rs 1,000 fine or face 6 months jail in Noida

“If people download it instantly, we will let them go. We are doing this so that people take the order seriously and…

indianexpress.com

***

ப்ரல் 3 அன்று, பயன்பாட்டை அறிமுகப்படுத்திய 2 நாட்களுக்குப் பிறகு, பயன்பாட்டின் 1.0.1 பதிப்பைப் பார்க்க முடிவு செய்தேன். அப்போது இரவு 11:54. 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே அதைப் பார்ப்பதில் செலவிட்டேன்.

காலை 1:27-க்கு, வெப் வியூ ஆக்டிவிட்டி (WebViewActivity) எனப்படும் ஒரு செயல்பாடு வினோதமாக நடந்து கொள்வதைக் கண்டேன். இந்தச் செயல்பாடு ஒரு வலைநோக்கு(ச்) (webview) செயல்பாடு. எனவே விதிப்படி தனியுரிமைக் கொள்கை (privacy policy) போன்ற வலைப்பக்கத்தைக் காண்பிப்பதே அதன் வேலை.

AndroidManifest.xml in Aarogya Setu v1.0.1

சிக்கல் என்னவென்றால், வெப் வியூ ஆக்டிவிட்டி அதற்கு மேலேயும் சில வேலைகளைச் செய்யக் கூடியதாக இருந்தது.

WebViewActivity in Aarogya Setu v1.0.1

onPageStarted முறை str அளவுருவின் மதிப்பைச் சரிபார்ப்பதை நீங்கள் பார்க்க முடியும். If str:

– is tel://[தொலைபேசி எண்]: இது சுழற்றியைத் திறந்து எண்ணை முன்கூட்டியே அழைக்குமாறு  ஆண்டிராய்டிடம் சொல்லும்

– http அல்லது https இல்லை, எதுவும் செய்யாது

– இல்லாவிட்டால் குறிப்பிட்ட URI உடன் வலைநோக்கைத் திறக்கிறது.

இதில் எந்த வழங்கிச் சரிபார்ப்பும் (host validation) இல்லை என்பதை நீங்களே பார்க்க முடியும். எனவே, பின்வரும் கட்டளையை அனுப்பி FightCorona_prefs.xml எனப்படும் பயன்பாட்டின் உட்கோப்பைத் திறக்க முயற்சித்தேன்.

பின்வரும் காணொளியில் பார்ப்பது போல, அது சிறப்பாக வேலை செய்தது!

காணொளியைக் காண்க

இது ஏன் பிரச்சினை (தெரியுமா)? ஒரேயொரு சொடுக்கில் fight-covid-db எனப்படும் பயன்பாட்டால் பயன்படுத்தப்படும் உள்ளிடத் தரவுத்தளம் (local database) உட்பட பயன்பாட்டின் எந்தவொரு உட்கோப்பையும் தாக்குபவர் (attacker) திறக்க முடியும்.

இந்தியாவில் எங்கெங்கு எவர்  நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்பதை அறியும் திறன்

மே 4 அன்று, எனது ஆய்வை இன்னும் கொஞ்சம் உந்திப்பார்க்க முடிவு செய்து, தற்போதைய பதிப்பான v1.1.1 பதிப்பை ஆய்வு செய்தேன்.

நான் கவனித்த முதல் விஷயம், நான் முன்பு விவரித்திருந்த பிரச்சனையை உருவாக்குநர்கள் அமைதியாகச் சரி செய்திருந்தார்கள். உண்மையில், வெப் வியூ ஆக்ட்டிவிட்டி இனி வெளியில் இருந்து அணுக முடியாததாகி இருந்தது. AndroidManifest.xml-இலிருந்த நோக்க வடிப்பான்களை (intent filters) அகற்றியிருந்தார்கள்.

AndroidManifest.xml in Aarogya Setu v1.1.1

என் ஆய்வைத் தொடர, வேரூன்றிய கருவி (rooted device) ஒன்றிலிருந்து இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்த முடிவு செய்தேன். அப்படி முயன்ற போது, நேரடியாக ​​இந்தச் செய்தியைப் பெற்றேன்.

அந்தப் பயன்பாட்டைத் தொகுப்பிரித்து (decompile), இந்த வேர் கண்டறிதல் (root detection) செயல்படுத்தப்பட்ட இடத்தைக் கண்டுபிடித்தேன். அடுத்து அதைத் தவிர்ப்பதற்காக, எனது ஃப்ரிடா (Frida) துணுக்கில் ஒரு சிறிய செயலாற்றியை (function) எழுதினேன்.

பயன்பாட்டின் பிணையக் கோரிக்கைகளைக் (network requests) கண்காணிக்க ஏதுவாகச் செயல்படுத்தப்பட்ட சான்றிதழ் குத்திணைப்பைத் (certificate pinning) தவிர்த்து நுழைய முடிவது அடுத்த சவாலாக இருந்தது. அதைச் செய்தவுடன், பயன்பாட்டைப் பயன்படுத்தி, சுவாரசியமான ஓர் அம்சத்தைக் கண்டேன்.

இந்தப் பயன்பாட்டில், உங்கள் பகுதியில் எத்தனை பேர் சுய மதிப்பீடு செய்து கொண்டார்கள் என்பதை அறியும் திறன் உங்களுக்கு உள்ளது. நீங்கள் 500 மீ, 1 கி.மீ, 2 கி.மீ, 5 கி.மீ அல்லது 10 கி.மீ. என்று பகுதியின் ஆரத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம்.

பயனர் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைவுகளில் ஒன்றைத் தேர்வு செய்யும் போது:

– அவருடைய இருப்பிடம் அனுப்பி வைக்கப்படுகிறது: தலைப்பகுதியில் உள்ள lat (அச்சரேகை) and lon (தீர்க்கரேகை) அளவுருக்களைப் பாருங்கள்.

– ஆரம் தேர்வு செய்யப்படுகிறது: URL-இல் உள்ள dist அளவுரு மற்றும் தலைப்பகுதியில் உள்ள distance அளவுருவைப் பார்க்கவும்.

நான் கவனித்த முதல் விஷயம் என்னவென்றால், இந்த இறுதிப்புள்ளி (endpoint) நிறைய தகவல்களைத் தருகிறது:

– நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை

– உடல்நிலை சரியில்லாதவர்களின் எண்ணிக்கை

– ஊடலை நேர்மறை (bluetooth positive) என அறிவிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை

– உங்களைச் சுற்றி நடத்தப்பட்ட சுய மதிப்பீட்டின் எண்ணிக்கை

– உங்களைச் சுற்றி பயன்பாட்டைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை

நான் முட்டாள் என்பதால், நான் முயற்சித்த முதல் விஷயம், இந்தியாவில் எங்கிருந்தும் தகவல்களைப் பெற முடியுமா என்று இருப்பிடத்தை மாற்றியமைத்துப் பார்த்தேன். இரண்டாவதாக, பயன்பாட்டில் கிடைக்காத ஆரத்தைக் கொடுத்துத் தகவல் பெற முடியுமா என்று பார்க்க, ஆரத்தை 100 கி.மீ.க்கு மாற்றிப் பார்ப்பது. முந்தைய திரைப்பிடிப்பில் காண்பது போல, எனது இருப்பிடத்தை மும்பைக்கு அமைத்து ஆரத்தை 100 கி.மீ.க்கு அமைத்தேன். அது வேலை செய்தது!

பின்விளைவுகள் என்ன?

இந்த இறுதிப்புள்ளியின் புண்ணியத்தில், தனக்கு  வேண்டிய இடத்தில், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும், யார் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதைத் தாக்குபவர் அறிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, என் பக்கத்து வீட்டுக்காரர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறாரா என்பதை என்னால் அறிய முடியும். எனக்கு இது ஒரு தனியுரிமைப் பிரச்சினை போல் தெரிகிறது…

எனவே அதோடு சிறிது விளையாடிப் பார்க்க முடிவு செய்து, சில குறிப்பிட்ட இடங்களில், 500 மீட்டர் சுற்றளவில் யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று பார்த்தேன்:

– பிரதமர் அலுவலகம்: {“நோய் தொற்று உடையவர்கள்”:0,”உடல்நிலை சரியில்லாதவர்கள்”:5,”ஊடலை நேர்மறை”:4,”வெற்றி”:ஆம்,”சுயமதிப்பீடு”:215,”அருகிலுள்ள பயனர்கள்”:1936}

– பாதுகாப்பு அமைச்சகம்: {“நோய்தொற்று உடையவர்கள்”:0,”உடல்நிலை சரியில்லாதவர்கள்”:5,”ஊடலை நேர்மறை”:11,”வெற்றி”:ஆம்,”சுயமதிப்பீடு”:123,”அருகிலுள்ள பயனர்கள்”:1375}

– இந்திய நாடாளுமன்றம்: {“நோய்தொற்று உடையவர்கள்”:1,”உடல்நிலை சரியில்லாதவர்கள்”:2,”ஊடலை நேர்மறை”:17,”வெற்றி”:ஆம்,”சுயமதிப்பீடு”:225,”அருகிலுள்ள பயனர்கள்”:2338}

– இந்திய இராணுவத் தலைமையகம்: {“நோய்தொற்று உடையவர்கள்”:0,”உடல்நிலை சரியில்லாதவர்கள்”:2,”ஊடலை நேர்மறை”:4,”வெற்றி”:ஆம்,”சுயமதிப்பீடு”:91,”அருகிலுள்ள பயனர்கள்”:1302}

மறைதிறவு (Disclosure)

எனது தொடக்க ட்வீட்டுக்கு 49 நிமிடங்களுக்குப் பிறகு, இந்தியத் தகவலியல் மையம் (NIC) மற்றும் இந்தியக் கணிப்பொறி நெருக்கடி மறுமொழி அணி (Indian Cert) என்னைத் தொடர்பு கொண்டன. அவர்களுக்கு ஒரு சிறிய தொழில்நுட்ப அறிக்கையை அனுப்பி வைத்தேன்.

சில மணிநேரங்களுக்குப் பின்  அவர்கள் ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டனர்.

சுருக்கமாக அவர்கள் சொன்னது, “இங்கே பார்க்க எதுவும் இல்லை, தொடர்ந்து செல்லுங்கள்.”

அவர்களுக்கு என் பதில்:

– கட்டுரையில் நீங்கள் பார்த்தது போல், 5 கொடுக்கப்பட்டுள்ள (hardcoded) மதிப்புகளை விட வேறு ஆரம் பயன்படுத்துவது முற்றிலும் சாத்தியமானது, எனவே அவர்கள் தெளிவாக இந்த இடத்தில் பொய் சொல்கிறார்கள், அது அவர்களுக்குத் தெரியும். இயல்பு நிலை மதிப்பு (default value) இப்போது 1 கி.மீ. என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள், எனவே எனது அறிக்கைக்குப் பிறகு உருவாக்கத்தில் (production) மாற்றம் செய்திருக்கிறார்கள்.

– வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஒரு பயனர் பல இடங்களுக்கான தரவைப் பெற முடியும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். முக்கோணகமாக்கத்தின் (triangulation) புண்ணியத்தில், தாக்குபவர் ஒருவரின் உடல்நிலையை ஒரு மீட்டர் துல்லியத்துடன் பெற முடியும்.

– மொத்த அழைப்புகள் சாத்தியம் மனுசா.. இந்த இறுதிப் புள்ளியை அழைப்பதற்காகத்தான் என் நாளையெல்லாம் கழித்தேன், அது உங்களுக்கும் தெரியும்.

அவர்கள் என் அறிக்கைக்கு விரைவாகப் பதிலளித்து சில சிக்கல்களைச் சரிசெய்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் உண்மையிலேயே சொல்கிறேன்: பொய் சொல்வதை நிறுத்துங்கள், மறுப்பதை நிறுத்துங்கள்.

மறந்து விடாதீர் மக்களே: இந்தக் கிரகத்தை ஊடுருவுங்கள்! 🤘

And don’t forget folks: Hack the planet! 🤘

Description: Elliot Alderson

எழுதியவர்

எலியட் ஆல்டர்சன்

பிரெஞ்சு பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் (French security researcher). Oneplus, Wiko, UIDAI, Kimbho, Donald Daters மற்றும் பலரின் மிக மோசமான சிம்ம சொப்பனம். முற்றிலும் புத்தி பேதலித்தவர் அல்ல (Not completely schizophrenic). USANetwork-உடன் தொடர்புடையவர் அல்ல.

https://medium.com/@fs0c131y/aarogya-setu-the-story-of-a-failure-3a190a18e34

(இக்கட்டுரையை மொழிபெயர்த்த ஆசிரியர் பற்றி தகவல் தெரிந்தால் வெளியில் சொல்லிவிடவேண்டாம் என்று நான்காம் ஊரடங்கின் மீது ஆணையிட்டுக் கேட்டுக்கொள்கிறோம்)

ஹெய் ஹிந்த்!! வந்தே மாதரம்.

மூலம் : https://medium.com/@fs0c131y/aarogya-setu-the-story-of-a-failure-3a190a18e34

ஒரு பெண் ஒரு சிறுவன்

3

சுரேஷ்குமார இந்திரஜித்

-1-

ஒரு பெண், பத்து வயது சிறுவனுடன் நிற்கும் காட்சி மனதில் தோன்றியது. சத்யனுக்கு ஆத்திரமாக இருந்தது. சமூகம் எத்தனை பேர்களை வரலாற்றில் மதிப்பீடுகள் மூலமாக, சமூகக் கட்டமைப்பு மூலமாகப் பலி வாங்கியிருக்கிறது. குடித்துக்கொண்டிருந்த பீர் பாட்டிலை உடைக்க வேண்டும் போலிருந்தது. கட்டுப்படுத்திக் கொண்டார். மதிப்பு மிக்க வாழ்க்கை வாழ்கிறார். பொருளாதார ரீதியாக தாழ்வான நிலையில் இல்லை. அவர் செய்து கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம். கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. எழுந்து லேசாகத் திறந்து பார்த்தார். அவருடைய உதவியாளர் ஈஸ்வரன் நின்று கொண்டிருந்தான். இரண்டு புரோக்கர்கள் வந்து காத்திருப்பதாகக் கூறினான். வருவதாகச் சொல்லி உள்ளே வந்து மிச்சமிருந்த பீரைக் காலி செய்தார்.

அவருடைய அலுவலக அறைக்கு வந்தார். இரண்டு புரோக்கர்களும் எழுந்து நின்று அவர் அமர்ந்ததும் அவர்களும் அமர்ந்தார்கள்.

“அண்ணே எப்படி வியாபாரம் போய்க்கிட்டிருக்கு”

“நல்லா போய்கிட்டிருக்கு ஆனா பத்தாது. முன்னேயெல்லாம் இவ்வளவு காலத்துக்குள்ளே எல்லா பிளாட்டுகளும் வித்துப் போயிருக்கும்.”

“ஆமா என்னண்ணே செய்றது, பணப்புழக்கம் இல்லை. பணத்துக்கு கட்டுப்பாடு வந்துருச்சு. ரெண்டு பார்ட்டியை கூட்டிட்டு வந்து காண்பிச்சோம். புடிச்சிப்போச்சு, வாங்கற ஐடியாவுலே இருக்காங்க. நாளைக்கி கூட்டிட்டு வாறோம். அட்வான்ஸ் போட்டுட்டு ரிக்கார்டுகளை வாங்கிட்டு போகட்டும். அவுங்க திருப்திபட்டதுக்கப்புறம் பதிவு வைச்சுக்கலாம்.”

“சரி… பண்ணுங்க… பதிவு அன்னிக்கு பணம் கிடைச்ச உடனே உங்க கமிஷன் செட்டிலாயிடும்.”

“சரிங்கண்ணே நாளைக்கி கூட்டிட்டு வாரோம்”

புரோக்கர்கள் சென்று விட்டார்கள். சத்யனுக்கு இன்னொரு பீர் பாட்டிலில் பாதி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது அறைக்குள் நுழைந்தார். ரொம்பக் காலமாகவே அவருடைய அம்மா பத்மாவிற்கு மனப்பிரச்சனை இருந்து கொண்டிருக்கிறது. தூக்கம் என்பதே இல்லை. இரவில் வீட்டிற்குள்ளே அலைந்து கொண்டிருப்பாள். அடுக்களைக்குச் சென்று ஏதாவது சாப்பிடுவாள். தற்போது மனநல மருத்துவரிடம் காண்பித்துக் கொண்டிருக்கிறாள். மனநல மருத்துவரைப் பார்த்து என்ன பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளலாம் என்று நினைத்து அவரை ஒருநாள் சந்தித்தார்.

மருத்துவமனையில் உட்கார்ந்திருக்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. மனநல மருத்துவரைப் பார்ப்பதற்கு வந்திருந்தவர்களின் முகங்களே வித்தியாசமாக இருந்தன. அவர்களின் மனநிலை சரியில்லை என்பதைக் காட்டிக் கொண்டிருந்தன. சத்யன் விசிட்டிங் கார்டை கொடுத்திருந்தார். உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்ததும் உதவியாளர் அவரை உள்ளே போகச் சொன்னான்.

மனநல மருத்துவர் வயதானவராக இருப்பார் என்ற கற்பனை சத்யனுக்கு இருந்தது. ஆனால் இளவயதுடையவராக இருந்தார். பரஸ்பர விசாரிப்பிற்குப்பின் சத்யன் தன்னுடைய தாயாரின் மனப்பிரச்சினை தொடர்பாக  விசாரித்தார்.

“உங்க அம்மாவுக்கு எழுபது வயதுக்கு மேலே ஆகுது. ஆனா அவுங்களுக்கு விருப்பமில்லாம அவுங்க கல்யாணம் நடந்துருக்கு, கணவரைப் பாத்தா அவுங்களுக்கு பயந்தான் ஏற்பட்டிருக்கு, விருப்பமில்லாம பயத்தோட வாழ்ந்திருக்காங்க. அதுவும் ரெண்டாம் தாரமா வாழ்க்கைப்பட்டிருக்காங்க, இதுதான் பிரச்சனை. அவுங்களுக்கு ஏதோ காரணத்தாலே மன அழுத்தமோ அல்லது நோயோ ஏற்பட்டால் மனப்பிரச்சினை அதிகரிக்கும். மாத்திரை தேவைதான். ஆனா பேசி சரி பண்ணிக்கிட்டிருக்கேன்” என்றார் மனநல மருத்துவர்.

“மறக்கடிக்க முடியுமா”

“மறக்கடிக்க முடியாது. ஆனா, தீவிரத்தை குறைக்கலாம். வாழ்க்கையிலே ரொம்பப் பேர் இப்படித்தான் விருப்பமில்லாத வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருங்காங்கன்னு சொல்லி ஏத்துக்க வைக்கலாம்.”

மனநல மருத்துவரைப் பார்த்துவிட்டுக் காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, கடந்த காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார். ஒரு பெண், பத்து வயதுச் சிறுவனுடன் நின்று கொண்டிருக்கும் காட்சி தோன்றியது.

-2-

விஸ்வநாதன் தன் தாயார் கோமளத்திடம் கேட்டார்  “புள்ளைங்க எங்கே”

“அவுங்க பாட்டி வீட்டுக்குப் போயிருக்காங்க. வர்ர நேரந்தான்.”

விஸ்வநாதனின் மனைவி லட்சுமி இறந்து பத்து வருட காலமாகிவிட்டது. இரண்டு மகள்கள் கங்கா மற்றும் சந்திரா. இரண்டாவது மகளுக்கு இரண்டு வயதிருக்கும்போது மஞ்சள்காமாலை வந்து லட்சுமி இறந்துவிட்டார். லட்சுமியின் அம்மா பரமேஸ்வரியும் தங்கைகள் பத்மாவும், அம்பிகையும் தனியே இரண்டு வீடுகள் தள்ளி வசிக்கிறார்கள். லட்சுமியின் அப்பா ஏற்கனவே இறந்துவிட்டார். லட்சுமியின் தம்பி சங்கரன் (பத்மா, அம்பிகையின் அண்ணன்) தஞ்சாவூரில் அரசு வேலை பார்க்கிறான்.

விஸ்வநாதன், தன் தந்தை ராமலிங்கம், தாயார் கோமளம், இரண்டு மகள்களுடன் ஒரே வீட்டில் வசிக்கிறார். இரண்டு மகள்களும் பெரும்பாலான நேரத்தை அவர்களின் சின்னம்மாக்கள் பத்மாவுடனும் அம்பிகையுடனும்தான் கழிக்கிறார்கள். அவர்களுக்கு அங்கே இருப்பதுதான் பிடிக்கிறது. கோமளத்திற்கு இரண்டு பேத்திகளும் அங்கே இருப்பதில் இஷ்டமில்லை. ஆனால் அங்கே சின்னம்மாக்கள் இருப்பதால், பேத்திகளுக்கு அவர்களுடன் விளையாட முடிகிறது. இங்கே தன்னால் அவர்களுடன் விளையாடுவதற்கு முடியவில்லை. மேலும் அவர்கள் அங்கே சென்றுவிடுவதால் வீட்டில் சத்தமில்லாமல் இருக்கிறது.

விஸ்வநாதன் தெருவில் இறங்கி, மாமியார் பரமேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று, திண்ணையில் உட்கார்ந்தார். அவரைப் பார்த்து, மகள்கள்  கங்காவும், சந்திராவும் அருகே வந்து அவரை ஒட்டி அமர்ந்து கொண்டார்கள். விஸ்வநாதனிடமிருந்து வந்த சாராய நெடி அவர்கள் இருவருக்கும் பழக்கமானதுதான். அவரைப் பார்த்ததும் கொழுந்தியாள்கள் பத்மாவும், அம்பிகையும் அடுக்களைக்குள் சென்று விட்டார்கள். பரமேஸ்வரி வந்து “காபி சாப்பிடுறீங்களா” என்றாள்.

“புள்ளைகளை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.” என்றவர், மகள்களைப் பார்த்து “பால்பேடா வாங்கி வந்துருக்கேன்” என்றார். கங்காவுக்கும் சந்திராவிற்கும் சந்தோஷம். மகள்களுடன் அவர் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பினார்.

பத்மாவும், அம்பிகையும் அடுக்களையிலிருந்து வந்தார்கள். ஏனோ அவர்கள் இருவருக்கும் விஸ்வநாதனைக் கண்டால் பயம். “என்னேரமும் குடி. எப்படித்தான் ரெண்டு புள்ளைகளையும் கரை சேர்க்கப் போராரோ” என்றாள் பரமேஸ்வரி. பிறகு “அவுங்க அம்மா அவரை சரியா வளக்கலை. அவளே ஒடுகாலி. அவ வளர்த்த மகன் எப்படி இருப்பார்” என்றாள். அவளுக்கும் விஸ்வநாதனின் தாயார் கோமளத்திற்கும் எப்போதுமே உள்ளுக்குள் பகைமை இருந்து கொண்டிருக்கிறது. கோமளத்தைப் பற்றி பரமேஸ்வரிக்குத் தாழ்வான எண்ணம் இருக்கிறது. அண்ணன் ராமலிங்கத்தின் மனைவி என்பதால் சண்டை போடாமலிருக்கிறாள். ஆனால் பேச்சு வளர்ந்தால் எப்படியோ மனஸ்தாபம் வந்துவிடுகிறது.

-3-

உர்..உர்.. உர்…. லலலா… லலலா… என்று கூறிக்கொண்டே அவள், நாவல் மரத்து நிழலில் உட்கார்ந்தாள். விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்துச் சாப்பிட்டாள். பக்கத்திலேயே கொடுக்காப்புளி மரம் இருந்தது. இந்த சீசனில் இதுதான் அவளுக்கு உணவு. சிறுவர், சிறுமியர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றுவிட்ட நேரம் என்பதால் நாவல் பழத்துக்கும் கொடுக்காப்புளி பழத்துக்கும் போட்டியில்லை. அந்தத் தெருவில் உள்ளவர்கள், அப்பெண்ணை நல்ல நிலையில் பார்த்தவர்கள். இப்போது அழுக்கடைந்த ஆடைகளுடன், எண்ணெயில்லாமல், தலை வாராமல், சிக்கிப்போன கூந்தலுடன் வாயிலிருந்து வார்த்தைகள் வராமல் அவள் “உர்” என்றும் ‘லலலா’ என்றும் கத்திக்கொண்டு திரிவதைப் பார்க்கிறார்கள். ஏன் இப்படி ஆனாள் என்று தெரியவில்லை.

விஸ்வநாதன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். உர்..உர்.. உர்…. லலலா… லலலா… என்ற சத்தத்துடன்  வீட்டு வாசலுக்கு அவள் வந்தாள். வாசலில் கையேந்தி நின்றாள். விஸ்வநாதன் அவளை கைப்பிடித்து அழைத்து திண்ணையில் உட்கார வைத்தார். உள்ளே போய் அம்மா கோமளத்திடம் தட்டில் சோறு, குழும்பு ஊற்றித்தரச் சொன்னார். அவள் எட்டிப்பார்த்தாள். “இவளை எதுக்கு இங்க உட்கார வைச்சிருக்கே… இதே பழக்கமா போயிடும். இவளுக்கும் சேர்த்தா நான் சமைக்கிறேன்” என்றாள். “பாவம்;” என்றார் விஸ்வநாதன். அவள் வேண்டா வெறுப்பாக தட்டில் சோறு, குழம்புடன் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள். திண்ணையில் அந்தப்பெண் மலங்க மலங்க விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். திண்ணையில் அவள் உட்கார்ந்திருந்த கோணத்தில், முன்னறையில் சுவரில் அவளும், ராமலிங்கமும் இருக்கும் புகைப்படம் மாட்டியிருப்பது தெரியும். அதை அவள் பார்த்தாளா, பார்த்தாலும் ஏதும் புரிந்திருக்காது என்று தோன்றியது.

தட்டை அவள் கையில் கொடுத்தார் விஸ்வநாதன். அவள் சோற்றை அள்ளி அள்ளி வேகமாகச் சாப்பிடுவதைப் பார்த்தார். சாப்பிட்டு முடித்தபின், தட்டை வைத்துவிட்டு, உர்..உர்.. உர்…. லலலா… லலலா… என்று கூறிக்கொண்டே தெருவில் நடந்தாள். தட்டை எடுத்துக்கொண்டு, விஸ்வநாதன் வீட்டின் உள்ளே சென்றாள். “நமக்கு வைச்சிருந்த சோறை அவளுக்குக் கொடுத்தாச்சு, இனி நான் புதுசா வடிக்கணும்” என்றாள், கோமளம்.

“என்ன இருந்தாலும், அப்பாவுக்கு அவுங்க முதல் சம்சாரம்.. விதிப்பயன்.. இப்படி ஆயிட்டாங்க. நாம வசதியாத்தான் இருக்கிறோம். சோறு போட்டா என்ன குறைஞ்சா போயிறும்” என்றார், விஸ்வநாதன்.

“உங்க அப்பா, அவ போக்குலே விட்டுட்டார். அவ இல்லேங்கிறதினாலே நாம இந்த வீட்டுக்குள்ள நல்லா உட்கார்ந்துருக்கோம். அவளை வீட்லே உக்கார வைச்சு சோறு போடறது எனக்கு புடிக்கலை. அது நமக்கு நல்லதில்லை.”

“சும்மாயிரு… அதுக்காக பசிச்ச வாய்க்குச் சோறு போடாம எப்படியிருக்கிறது இந்த வூடு அவுங்க அப்பா, அவுங்களுக்கு எழுதி வைச்சது. அவுங்க நகையை வித்துத்தான் அப்பா ஜவுளிக்கடை வைச்சிருக்கார். ஏதோ அவுங்க நேரம் இப்படித் திரியராங்க.. நம்ம நேரம் இப்படி உக்காந்திருக்கோம்.”

“நீ எப்பவும் இப்படித்தான் ஏடாகூடமா பேசுவே”

விஸ்வநாதன் முன்னறையில் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தைப் பார்த்தார். “ஏன் அப்பா இதை எடுக்காமல் வைத்திருக்கிறார்” என்று யோசித்தார். அவள் அந்தப் புகைப்படத்தில் லட்சணமாக இருந்தாள். காலம் தயவு தாட்சண்யமில்லாமல் வாழ்க்கையைப் புரட்டுகிறது. அவள்தான் இந்த வீட்டிற்கு உரிமையாளர் என்பதால் அந்தப் புகைப்படத்தை அப்பா எடுக்காமல் இருக்கிறாரோ என்று அவருக்குத் தோன்றியது.

-4-

பரமேஸ்வரி வீட்டுத் திண்ணையில் கோமளம் உட்கார்ந்திருந்தாள். பேத்திகள் உள்ளே ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். பேத்திகளுக்கு பாட்டியிடம்தான் ஒட்டுதல். அப்பத்தாவிடம் ஓட்டுதல் இல்லை. கோமளமும் அதை உணர்ந்திருந்தாள். “பேத்திகளைப் பராமரிப்பது பெரிய மண்டையிடி. மேலும் இரண்டு சின்னம்மாக்கள் பார்த்துக் கொள்வதற்கு இருக்கிறார்கள். எல்லாம் சரிதான்” என்று நினைத்துக் கொண்டாள்.

ராமலிங்கம் வீட்டிற்கு அவரின் மனைவியாக கோமளம் வந்தபோது, அவள் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அழகாகவும் சிவப்பாகவும் இருந்தாள். பரமேஸ்வரிக்கு அவள் அழகு ஆச்சர்யத்தைத் தந்தது. இப்போதும் கோமளம் இந்த வயதுக்குரிய அழகுடனும் கம்பீரத்துடனும் இருக்கிறாள். அவளுடன் தன்னை ஒப்பிடுகையில் பரமேஸ்வரிக்கு தாழ்வுணர்ச்சி ஏற்படும்.

“அம்பிகையை காணோமே” என்றாள் கோமளம்.

“அவ டைப் கத்துக்கிட்டிருக்கா, கிளாசுக்கு போயிருக்கா” என்றாள் பரமேஸ்வரி.

“நான் சம்பந்திகிட்டே ஒரு விஷயம் பேசலாம்னு வந்தேன். உங்க மூத்த மகள் இறந்து பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சு. புள்ளைக இருக்கிறதினாலே நானும் அவனோட மறு கல்யாணத்தை பத்தி நெனைக்கல. இப்ப புள்ளைக ஒரளவுக்கு வளர்ந்து பெரிசாயிடுச்சுக. எனக்கும் அடிக்கடி கை கால் குடையுது. முன்ன மாதிரி வேலை பாக்க முடியலை. உங்க அண்ணனுக்கும் வயசாயிட்டுப் போகுது, அதனாலே விஸ்வநாதனுக்கு ஒரு பொண்ணைப் பாத்து கட்டி வைக்கலாம்னு நெனைக்கிறேன். அவனும் ‘சரின்னு’ சொல்லிட்டாள். உங்க அண்ணன்ட்டேயும் பேசிட்டேன். அவரும் ‘எவ்வளவு காலத்துக்கு விஸ்வநாதன் இப்படி இருப்பான். ஏத்த பொண்ணப்பாரு பரமேஸ்வரிட்டே பேசுன்னு’ சொன்னாரு…”

“என்ன சம்பந்தி திடீர்னு இப்படி பேசுறீங்க. ரெண்டு பொம்பளைப் புள்ளைக இருக்கு. நாளைக்கி அதுகளை கரையேத்தணும். வர்றவ எப்படி இருப்பாள்னு தெரியாது. புள்ளைக வாழ்க்கையைப் பாருங்க..”

“அப்ப என் மகன் வாழ்க்கையை நெனச்சுப்பாருங்க.. பொம்பளை துணை இல்லாமல் பத்து வருஷத்துக்கு மேலே கழிச்சிட்டான். நாங்க நல்லா இருக்கிறப்பவே ஓரு கல்யாணத்தை செஞ்சு வைச்சுரலாம்னு இருக்கேன். பொண்ணு பாக்கலாம்னு இருக்கேன்.”

“என்ன சம்பந்தி புள்ளைக அனாதையா போயிருமே”

“எதுக்கு அனாதையா போகுது. என்ன வார்த்தை பேசுறீங்க, புள்ளைகளை வளக்கறதிலே உங்களுக்கு கூடுதல் பங்கு இருக்கு. உங்க மக புள்ளைகளைத் தானே பாக்க போறீங்க. அனாதைங்கிறீங்க.. வார்த்தைகளை அளந்து பேசுங்க…”

“நான் உள்ளதைத்தான் சொல்றேன். புள்ளைகளை கவனிக்க ஆள் இல்லாமல் போகும்னு அக்கறையிலே பேசுறேன். என் மன வேதனை எனக்குத்தான் தெரியும்”

“உங்க அண்ணன் சொல்லச் சொன்னாரு. சொல்லி விட்டேன் நான் வாரேன்” கோமளம் திண்ணையிலிருந்து எழுந்து தெருவில் நடந்தாள்.

“என்ன பாட்டி, அப்பத்தா என்ன சொல்றாங்க..” என்று பேத்திகள் கங்காவும், சந்திராவும் ஒடி வந்தார்கள்.

“போங்கடி தரித்திரம் புடிச்ச முண்டைகளா.. அம்மாவை முழுங்கியாச்சு. இப்ப அப்பாவும் பிரிய போறார்…” என்று அழலானாள். கங்காவும் சந்திராவும் பாட்டியின் பேச்சில் அதிர்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டு உள்ளே சென்றார்கள்.

-5-

டைப் அடித்துக்கொண்டே ஒரக்கண்ணால், ராஜேந்திரனைப் பார்த்தாள், அம்பிகை. அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கண்கள் சந்தித்துக் கொள்வது கிளர்ச்சியை உருவாக்கிக் கொண்டிருந்தது. மேற்பார்வையாளர் சுற்றிப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இவர்கள் இருக்கும் வரிசைக்கு வரும் போது அவர்கள் இருவரும் பார்ப்பதைத் தவிர்த்து விடுவார்கள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும்படியாக உட்காருவது வழக்கம். மேற்பார்வையாளரிடம் டைப் அடித்ததைக் கொடுத்து வாங்கிக் கொண்டு இருவரும் ஒளித்து வைத்திருந்த காதல் கடிதத்தை பரிமாற்றிக் கொண்டார்கள். ஒரு நொடி சந்தர்ப்பத்தில் அவள் இடுப்பை அவன் தடவினான். அம்பிகையின் முகம் சிவந்தது.

அவள் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அவன் கொடுத்த கடிதத்தை வீட்டிற்குச் சென்று படிப்பதற்கு, அவளுக்குப் பொறுமையில்லை. பர்ஸிலிருந்த கடிதத்தை எடுத்து மர நிழலில் நின்று பிரித்தாள். ‘என் இனிய காதலி அம்பிகைக்கு, முத்தத்துடன் எழுதிக்கொண்ட கடிதம்.’ என்று ஆரம்பித்திருந்தது. கடிதம் நான்கு பக்கங்களுக்கு இருந்தது. ரோட்டில் அம்மா பரமேஸ்வரி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள். கடிதத்தை மடித்து, பர்சுக்குள் வைத்தாள். அம்மா எதற்காக இந்நேரத்தில் வருகிறாள், எங்கு போகிறாள் என்று யோசித்துக் கொண்டே அம்மாவை நோக்கி நடந்தாள். இருவரும் சந்தித்துக்கொண்ட போது அம்பிகை கேட்டாள். “என்னம்மா எங்க போறே? ”

“எங்க அண்ணனை கடையிலே பாக்கப் போறேன். அந்தக் கோமளம் என்னென்னமோ பேசறா. இந்நேரத்துலே தான் கங்கா அப்பா இருக்க மாட்டாரு. அதான் போறேன், நீ வீட்டுக்குப் போய் புள்ளைகளை பார்த்துக்க, பத்மா அவ பாட்டுக்கு உட்கார்ந்திருப்பா”.

அம்பிகை வீட்டையடைந்தாள். கோமளம் ஜவுளிக்கடையை அடைந்தபோது ராமலிங்கம் எதற்காகவோ வெளியே நின்றிருந்தார். பரமேஸ்வரியைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.

“என்ன பரமேஸ்வரி கடைக்கு வந்திருக்கே. என்ன விஷயம்” என்றார். வீட்டில் பேச முடியாத விஷயத்தைத் தனியே பேசுவதற்காக கடைக்கு வந்திருக்கிறாள் என அவர் நினைத்தார்.

“ஆமா ஒரு விஷயம் பேசணும்னு நெனச்சேன்”

“உள்ளே வா பேசுவோம்” என்று உள்ளே இருந்த சிறிய அறைக்கு சென்றார்.

“காபி வாங்கிட்டு வரச் சொல்லவா” என்றார். பரமேஸ்வரி “சரி” என்றாள். கூஜாவிலிருந்து டம்ளரில் தண்ணீர் ஊற்றி பரமேஸ்வரியிடம் கொடுத்தார். அவள் அதை வாங்கிக் குடித்தாள்.

“வியாபாரமெல்லாம் எப்படியிருக்கு”

“ஓடுது. சீசன்லதான் நல்லா வியாபாரம் நடக்கும். அடுத்த மாசம் ஆடி வருது. ஆடித்தள்ளுபடின்னு போடுவோம். தள்ளுபடின்னா உடனே ஜனங்க வாங்க வரும். வியாபாரமே ஒரு தந்திரந்தான்”

“கோமளம் வீட்டுக்கு வந்துச்சு. கங்கா அப்பாவுக்கு பொண்ணு பாக்கப் போறதா சொல்லுச்சு. அவருக்கு ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க இருக்கு. அதுகளை கரையேத்தணும். உனக்குத் தெரியும்…. கோமளம், மகனோட வந்தாள். நீ விருப்பப்பட்டு ஏத்துக்கிட்டே. குடும்பம் நடத்தரே. என் மூத்த பொண்ணு லட்சுமியை விஸ்வநாதனுக்கு கேட்டே, அண்ணன் அவரை மகனா ஏத்துக்கிட்டாருன்னு, பொண்ணை கொடுத்தேன். அவள் ரெண்டு பொம்பளைப் புள்ளைகளை பெத்து போட்டுவிட்டு போய்ச் சேர்ந்துட்டா. அது போயி பத்து வருஷத்துக்கு மேலே ஆகுது. இப்ப இப்படி ஒரு பேச்சு வந்துருக்கு. நீயும் சரின்னு சொல்லிட்டேன்னு கோமளம் சொல்லுது, புதுசா ஒருத்தி வந்தா புள்ளைக எதிர்காலம் என்ன ஆகும்னு தெரியலை.

எனக்கு கோமளம் வந்து பேசிட்டுப் போனதிலிருந்து மனசு சரியில்லை.”

“நீ புள்ளைக பக்கம் இருந்து யோசிக்கிற, நானும் அதை யோசிக்காம இருப்பேனா, இப்ப வரவர விஸ்வநாதன் போக்கு சரியில்லை சாராயம் அடிக்கிறது கூடிப்போச்சு. கோமளமும் கை கால் உளையுதுங்கிறாள். அவன் தறிகெட்டுப் போயிரக் கூடாது. இத்தனை வருஷம் வைராக்கியமாத்தான் இருந்தான். இப்ப கோமளம் பேச்சை எடுத்ததும் சரிங்கிறான். அவன் மனசு மாறியிருக்கு. இப்ப நாம ஒரு வழி பண்ணாட்டி அவன் கெட்டுப்போயிருவான்னு எனக்குத் தோன ஆரம்பிச்சிருச்சு. புள்ளைகளை நாம கை வுட்ருவோமா. ஒரு நல்ல பொண்ணா பாத்து கட்டி வைச்சிருவோம். நம்மளை மீறி எதுவும் நடக்காம பாத்துக்குவோம்.”

“அண்ணே வேறு வழியில்லையா”

“பரமேஸ்வரி நீ பயப்படாதே. ஒன்னும் கெட்டதா நடக்காது.”

காபி வந்தது. கடை வேலையாள், இருவருக்கும் டம்ளரில் காபி ஊற்றிக் கொடுத்தான். இருவரும் காபி குடித்தார்கள். குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. காபி குடித்துக் கொண்டிருக்கும் போது பரமேஸ்வரிக்கு ஓரு எண்ணம் தோன்றியது. அதை இப்போது கூறலாமா, பிறகு கூறலாமா என்று யோசித்தாள். மௌனம் நிலவியது.

“அண்ணே எனக்கு ஒரு யோசனை தோனுது. என் மகள் பத்மாவை ரெண்டாந்தாரமா கொடுத்தா என்னன்னு தோணுது. புள்ளைகளுக்கும் பாதுகாப்பா இருக்கும். கங்கா அப்பாவிற்கும் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கும். பத்மாவுக்கும் கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கும். ஆனா இதுக்கு முன்னாடி சங்கரன்கிட்டே பேசி சம்மதம் வாங்கணும். அவன்தான் எங்களுக்கு மாசா மாசம் பணம் அனுப்பறான்.”

“நல்ல யோசனைதான் நீ உன் மகன்ட்டே கேளு அவன் மாட்டேன்னா சொல்ல போறான்.”

“நான் கடிதாசி போட்டு மகனை வரச் சொல்றேன். எல்லாம் முருகன் அருளாலே நல்லபடியா நடக்கட்டும்.

“சேலை காண்பிக்கச் சொல்றேன் உனக்கு பிடிச்ச சேலையா எடுத்துக்க” என்று கூறி வேலையாளை ராமலிங்கம் அழைத்தார்.

ராமலிங்கத்திற்கு கோமளத்தைப் பற்றிய நினைவுகள் ஏற்பட்டன. அவளுக்கு வாக்குக் கொடுத்தபடி அவளை நன்றாக வாழ வைத்துக் கொண்டிருப்பதாக அவர் நினைத்தார். விஸ்வநாதனைப் பற்றி அவள் கவலைப்படுவது நியாயம்தான் என்று தோன்றியது. கோமளத்தின் அழகு இன்னும் வற்றாமல் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டார்.

-6-

விஷயத்தை அறிந்ததும் பத்மாவிற்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. கங்கா அப்பாவிற்கு, தான் மனைவியாவதை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அண்ணன் சங்கரன் வரப் போகிறான். அவளை மையமாக வைத்து வலை பின்னப்பட்டுவிட்டது. தப்பிக்க முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. புதியதாக ஒரு பெண் கங்கா அப்பாவிற்கு மனைவியாக வந்தால், கங்காவையும், சந்திராவையும் அவள் கொடுமைப்படுத்துவாள் என்பதற்காக தன் வாழ்வு அழியப்போகிறதே என்று நினைத்து அழுதாள்.

ராமலிங்கத்தை ஐவுளிக்கடையில் பார்த்துப் பேசி வந்ததற்கு அடுத்த நாள், பத்மா மாவாட்டிக் கொண்டிருக்கும்போது, பரமேஸ்வரி வந்து நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். பரமேஸ்வரிக்கு, மகள்களிடம் அதிகாரமாகப் பேசித்தான் பழக்கம்.

“இந்தா பாருடி, நான் யாருக்கு கழுத்தை நீட்ட சொல்றேனோ அவருக்கு நீ கழுத்தை நீட்டணும், உனக்குத் தெரியும், அன்னைக்கு கோமளா வந்து கங்கா அப்பாவுக்கு பொண்ணு பாக்கப் போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டா. நான் எங்க அண்ணன்டே பேசிட்டேன். உன்னைத்தான் கங்கா அப்பாவுக்கு ரெண்டாம் தாரமா கொடுக்கப் போறேன். அப்பத்தான் கங்காவையும் சந்திராவையும் காப்பாத்த முடியும். சங்கரனை வரச் சொல்லியிருக்கேன். அவன் வந்ததும் அண்ணன்ட்டே முறைப்படி பேசி முடிச்சுக்கப் போறேன்.”

பத்மாவுக்கு இதைக் கேட்கும்போதே படபடப்பு ஏற்பட்டு கண்களில் நீர் வந்துவிட்டது. ஓரு கை, உரலை ஆட்டிக் கொண்டிருந்தது. இன்னொரு கை மாவைத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தது. அவள் அழுவதைப் பார்த்ததும் பரமேஸ்வரிக்கு மனம் நெகிழ்ந்துவிட்டது. “பாவம்… அவள் பேச்சில்லா அப்புராணி. என்ன கற்பனையில் இருந்தாளோ நம்ம குடும்ப சூழ்நிலைக்கு அவளை பலி கொடுக்கிறோம்” என்று தோன்றியதும் அவள் அருகே சென்று தோளைத் தொட்டாள். உடனே பத்மா எழுந்து நின்று பரமேஸ்வரியைக் கட்டிபிடித்துக் கொண்டு அழுதாள்.

“அழாதே.. அழக்கூடாது. பொண்ணாப் பிறந்தவங்களுக்கு தனியா விருப்பம் இல்லை. என் அண்ணனுக்காக உங்க அக்கா லட்சுமியை பலி கொடுத்தேன். இப்ப உன்னை பலி கொடுக்கிறேன், லட்சுமியோட புள்ளைகளுக்காக. எனக்கு மூனு பொட்டப்பிள்ளைக. உங்க அப்பா இறந்து போயிட்டாரு. உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன்னா அப்புறம் அம்பிகைக்கு எப்படியாவது கல்யாணம் செஞ்சுரலாம். உங்க அண்ணனுக்கு வேற கல்யாணம் முடிக்கணும். அழாதே.. முருகன் காப்பாத்துவாரு..”

பரமேஸ்வரி உறுதியான மனசு உள்ளவள். அவளுக்கும் கண்களில் நீர் கசிந்தது. பத்மாவின் வலது கையில் இருந்த மாவு பரமேஸ்வரியின் இடுப்பிலும் சேலையிலும் ஒட்டியிருந்தது. பத்மா கையையும், முகத்தையும் கழுவிவிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்தாள். பரமேஸ்வரி மாவாட்ட ஆரம்பித்தாள். சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த பத்மா தலையில் சுருண்டு படுத்துக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

-7-

அப்பத்தாவிடம் காசு வாங்கிக் கொண்டு கடலை மிட்டாய், முறுக்கு வாங்க, கங்காவும், சந்திராவும் கடைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.

“அப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் நடக்கப்போகுது” என்றாள் கங்கா.

“அப்ப புதுச்சட்டை, பாவாடை கிடைக்கும்” என்றாள் சந்திரா.

“போடி புதுசா ஒரு சித்தி வந்தா நம்மை கொடுமைப்படுத்துவான்னு பத்மா சித்தியை அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்க.”

“அப்ப பத்மா சித்தி அந்த வீட்லேயிலிருந்து இந்த வீட்டுக்கு வந்துருவாங்களா.”

“ஆமா அப்பத்தா நம்ம கூட ஒன்னுமே விளையாடாது. ஏதாவது சொல்லிக்கிட்டிருக்கும். பத்மா சித்தி வந்துச்சுன்னா நமக்கு ஜாலிதான்.”

“நமக்கு ஜாலி தான். ஆனா பத்மா சித்திக்கு அப்பாவை பாத்து பயம், பத்மா சித்தி அழுதுகிட்டிருந்ததைப் பார்த்தேன்.”

கடை வந்துவிட்டது. நாலு முறுக்கு ஐந்து கடலை மிட்டாய் வாங்கினார்கள். சந்திராவிடம் இரண்டு முறுக்கும் இரண்டு கடலை மிட்டாய்களும் கொடுத்தாள், கங்கா.

மீதி ஒரு கடலை மிட்டாயை பல்லால் பாதியாக உடைத்து சந்திராவிடம் பாதியைக் கொடுத்தாள் கங்கா.

-8-

கோமளம் திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். விஸ்வநாதன் தினமும் குடித்துவிட்டு வருவதை எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். “என்ன செய்வது. அவனுக்குப் பெண்டாட்டி தங்கலை. ரெண்டு பொட்டப்புள்ளைக. அவனுக்குத் தனியா ஒரு ரவிக்கை பிட் கடை வைச்சுக் கொடுத்தாரு. வீட்டுக்கு காசு கொடுக்கறதில்லை. குடிச்சே தீக்குறான். கல்யாணம் வேற ஆகப்போகுது. தனியா வருமானம் இருக்கட்டும்னு அவரு கடை வைச்சிக் கொடுத்தாரு. அதையும் ஒழுங்கா கவனிக்கிறதில்லை” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

காய்கறி விற்கும் பெண், கோமளத்தை நோக்கி வேகமாக நடந்து வந்தாள். 

“அம்மா, உங்க வீட்டைச்சுத்தி வந்துக்கிட்டிருக்கும்ல ஒரு பைத்தியம். அது நாவல் மரத்தடியிலே பேச்சு மூச்சு இல்லாம கிடக்கு. போய் பாருங்க” என்றாள்.

கோமளத்துக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. திண்ணையிலிருந்து இறங்கி பரமேஸ்வரி வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள். வாசலில் நின்று பரமேஸ்வரியை வரச்சொல்லிக் கத்தினாள். அவள் வந்ததும் இருவருமாக நாவல் மரத்தடிக்குச் சென்றார்கள். நாவல் மரத்தடியில் கிடந்த அந்தப் பெண்ணை பரமேஸ்வரி தொட்டுப் பார்த்தாள். கையைத் தூக்கிப் பார்த்தாள். கை கீழே விழுந்தது. மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். நெஞ்சில் கை வைத்து பார்த்தாள். கோமளத்தைப் பார்த்து “முடிஞ்சது” என்றாள். தெருவிலுள்ள சிலர் அவர்கள் இருவரும் நிற்பதைப் பார்த்து வந்தார்கள். “அவருக்கும் விஸ்வநாதனுக்கும் தகவல் சொல்லணுமே” என்றாள் கோமளம். நாவல் மரத்துக்கு எதிர்வீட்டில் இருந்தவர் சைக்கிளில் சென்று தகவல் சொல்வதாகக் கூறினார். அந்தத் தெரு முழுக்க ஏதோ ஒரு வகையில் ஒருவருக்கொருவர் உறவினர்களாக இருந்தார்கள்.

சற்று நேரத்தில் குதிரை வண்டியில் ராமலிங்கமும், விஸ்வநாதனும் வந்தார்கள். கோமளத்திடமும், பரமேஸ்வரியிடமும் ராமலிங்கம் பேசினார். வீட்டுக்கு கொண்டு செல்லவேண்டும் என்று முடிவு செய்தார்கள். அதன்படி மற்றவர்கள் உதவியுடன் வீட்டிற்குக் கொண்டு சென்றார்கள். சற்று நேரத்தில் ராமலிங்கமும் விஸ்வநாதனும் வந்தார்கள்.

இறந்தவளின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டு முன்னறையில் கட்டிலில் வைத்திருந்தார்கள். இறந்து கிடந்தவளையும் புகைப்படத்தில் ராமலிங்கத்துடன் இருக்கும் அவளையும் விஸ்வநாதன் ஒப்பிட்டுப் பார்த்தார். மனித வாழ்கை எப்போது புரளும், எப்போது மாறும், எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கோமளம் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். “சீக்கிரம் எடுத்துரணும் இன்னும் பாடை கட்றாங்க. வந்தவங்க சோம்பேறிப் பசங்க” என்று பரமேஸ்வரி புலம்பிக் கொண்டிருந்தாள்.

இறுதிச்சடங்கை ராமலிங்கம் செய்தார்.

-9-

விஸ்வநாதனும், அவரின் நண்பர்கள் இருவரும் அந்தச் சாராயம் விற்கும் இடத்தில் இருந்தார்கள். ஆங்காங்கே மரத்தடியிலும் பெஞ்சிலும் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தார்கள். குடல் வறுவலும், ரத்தப்பொரியலும் வைத்து ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

விஸ்வநாதன் இருக்கும் தெருவின் கடைசி வீட்டில் குடியிருக்கும் சிவனாண்டி வந்திருந்தான். அவர்கள் குடும்பத்தினருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் முந்தைய இரண்டு தலைமுறையாக ஆகாது என்றும் பேசிக்கொள்வதில்லை என்றும் விஸ்வநாதனிடம் கூறியிருந்தார் ராமலிங்கம். அவன் இருக்கும் நேரத்தில் நண்பர்களுடன் வந்தது விஸ்வநாதனுக்கு உறுத்தலாக இருந்தது.

விஸ்வநாதனும் அவருடன் வந்தவர்களும் கடையில் சாராயம் வாங்கிக்கொண்டு பெஞ்சில் உட்கார்ந்து அரசியல் பேசிக் கொண்டிருந்தார்கள். நண்பர்களில் ஒருவர் குடல் வறுவல் வாங்கி வந்தார். மூவரும் அதைத் தொட்டுக்கொண்டு சாராயத்தைக் குடித்தார்கள். ஒரு ரவுண்டு முடிந்து இரண்டாவது ரவுண்டு முடிந்து, மூன்றாவது ரவுண்டு ஆரம்பமானது. இப்போது தொட்டுக்கொள்ள மீண்டும் குடல் வறுவல் தேவைப்பட்டது. விஸ்வநாதன் எழுந்து குடல் வறுவல் வாங்கச் சென்றார். அப்போது யாரோ தன்மேல் மோதியதாக உணர்ந்து பார்த்தார். சிவனாண்டி நின்று கொண்டிருந்தான்.

விஸ்வநாதன் அவனை முறைத்துப் பார்த்தார். அவன் வேறு யாரிடமோ பேசுவது போல் கூறினான். “அப்பன் பேரு தெரியாதவனெல்லாம் ஊரில் பெரிய மனுஷனாட்டம் திரியறான்ங்க” அடுத்த கணத்தில் விஸ்வநாதன் அவன் கன்னத்தில் அறைந்தார். அவன் பதிலுக்கு இவரை அடித்தான். இருவரும் அடித்துக் கொண்டார்கள். விஸ்வநாதனின் நண்பர்கள் வந்து விலக்கி விட்டார்கள்.

 “நான் என்ன இல்லாததையா சொல்லிவிட்டேன்” என்று மற்றவர்களின் பிடியிலிருந்த சிவனாண்டி கத்திக் கொண்டிருந்தான்.

விஸ்வநாதனின் நண்பர்கள் சிவனாண்டியைக் கொண்டுபோய் வெளியே விட்டார்கள். விஸ்வநாதன் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தார். சற்று நேரத்தில் நண்பர்கள் வந்தார்கள். நண்பர்களில் ஒருவர் “சிவனாண்டியை அனுப்பி வைச்சாச்சு. விஸ்வநாதன் நீ ஒன்னும் நெனைச்சுக்காதே. எதையும் மனசுலே வைச்சுக்காதே..”

என்றார். 

            விஸ்வநாதன் அமைதியாக இருந்தார். அவருக்குள் அவமானம் புரண்டு கொண்டிருந்தது. இந்தச் சாராயக்கடையையே சூறையாட வேண்டும் என்ற ஆவேசம் ஏற்பட்டது. அன்று அதிகம் குடித்தார். அவரால் நிற்கவே முடியவில்லை. சிவனாண்டியைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். திட்டிக்கொண்டே கீழே விழுந்து விட்டார்.

நண்பர்கள் வெளியே வந்து குதிரை வண்டியை அமர்த்தி, விஸ்வநாதனை அதில் வைத்து அவர்களும் ஏறிக்கொண்டார்கள். விஸ்வநாதன் வீட்டை நோக்கி குதிரை வண்டி சென்றது.

வாசலில் குதிரை வண்டி நிற்பதை பார்த்ததும் வீட்டின் உள்ளேயிருந்த கோமளம் வெளியே வந்து பார்த்தாள். விஸ்வநாதனை நண்பர்கள் இருவரும் குதிரை வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தார்கள். “என்னாச்சு” என்றாள் கோமளம். “ஒன்றுமில்லை கூடுதலா குடிச்சிட்டாரு” என்ற பதில் வந்தது. முன்னறையில் இருந்த கட்டிலில் அவரைக் கிடத்தினார்கள். சீக்கிரமா “விஸ்வநாதனுக்கு கல்யாணம் பண்ணனும்” என்று கோமளம் நினைத்துக் கொண்டாள்.

-10-

சங்கரன் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். இன்னொரு நாற்காலியில் பரமேஸ்வரியும், தரையில் பத்மாவும் அம்பிகையும் உட்கார்ந்திருந்தார்கள். அழுது அழுது பத்மாவின் முகம் வீங்கியிருந்தது.

“பத்மா கவலைப்படாதே உறவு விட்டுப் போகாம இருக்கும். அவுங்க கங்கா அப்பாவுக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணிட்டாங்க. இப்ப நாம என்ன பண்றது அக்கா பெத்த ரெண்டு பெண் குழந்தைகளைக் காப்பாத்தணும். வேறு வழி இல்லை. போகப்போக சரியாயிடும். அவர் என்ன உனக்கு நல்லா தெரிஞ்சவர்தானே. உனக்கு மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு காசு பணம் நம்மகிட்டே இப்ப இல்லை. அப்படி வேறே மாப்பிள்ளை பாத்தா அவரு அறிமுகமில்லாதவரா இருப்பாரு. எப்படி குணம் இருக்கும்னு தெரியாது. மாமியார் எப்படி குணம் இருப்பாங்கன்னு தெரியாது. அதனாலே உனக்கு இங்கே நம்ம குடும்பத்துக்குள்ளே சம்பந்தம் பண்ணிக்கிறதுதான் நல்லது. எல்லாம் நல்லபடி நடக்கும்” என்றான் சங்கரன்.

“வேற வழியில்லைல்ல. நீங்க விரும்புனபடி செய்ங்க. புள்ளைக பாதுகாப்பாக இருக்கட்டும்” என்றாள் மெல்லிய குரலில், பத்மா.

அடுத்த நாள், விஸ்வநாதன் வீட்டிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். சங்கரன் இருந்து முறைப்படி திருமணத்தை முடிவு பண்ணினான். ஒரு நல்ல நாள் பார்த்து திருமணமும் முடிந்தது. விஸ்வநாதன் வீடு இரண்டு வீடுகள் தள்ளித்தான் இருந்தது. அந்த வீட்டிற்கு மருமகளாக பத்மா சென்றாள்.

முதலில் சில நாட்கள் விஸ்வநாதன் குடிக்காமலிருந்தார். பிறகு மீண்டும் ஆரம்பித்துவிட்டார். அந்த நெடி பத்மாவிற்கு ஒத்துக் கொள்ளவில்லை. வயிற்றைப் புரட்டுவதுபோல் இருக்கும். சமயங்களில் வாந்தி வருவது போலவும் இருக்கும். அந்த நெடியுடன் பத்மா மீது அவர் படரும் போது அவள் கண்களை மூடிக்கொள்வாள். மனதுக்குள் “முருகா முருகா” என்று முணுமுணுத்துக்கொள்வாள். “கண்ணை ஏன் மூடறே.. கண்ணைத்திற” என்பார் விஸ்வநாதன். அவள் கண்களைக் திறந்து மீண்டும் மூடுவாள். கண்களை மீண்டும் மூடும்போது அவர், அவள் கன்னத்தில் அறைவார்.

-11-

வாயாடி வசுந்தரா மூலம் அம்பிகைக்கும், ராஜேந்திரனுக்கும் காதல் என்று தெரு முழுக்கப் பரவி விட்டது. பரமேஸ்வரிக்கும் தெரிந்துவிட்டது. அம்பிகை மறுக்கவில்லை. பரமேஸ்வரி திட்டிக்கொண்டே அம்பிகையை அடித்தாள்.

“கவுரவத்தை கெடுத்துப்புட்டியே. கைம்பெண் மகளை வளத்தது சரியில்லைன்னு என்னயில்ல எல்லோரும் பேசுவாங்க. உங்க அண்ணனுக்கு தந்தி கொடுத்து வரச்சொல்றேன். நீ அவனை மறந்துரு. ஒரே சாதின்னாலும் அவுங்க நம்மைக் காட்டிலும்        வசதியான குடும்பம். எப்படி சம்பந்தம் நடக்கும். இப்ப தெருவுக்கு தெரிஞ்சு போச்சு… நாளைக்கி உன்னை வேற யாரு கல்யாணம் பண்ணுவாங்க… இப்படி பண்ணிட்டியே சிறுக்கி..”

“நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இல்லேன்னா இப்படியே இருந்துருவேன்” என்றாள், அம்பிகை.

“இப்படியே இருப்பியா. உனக்கு யாரு கஞ்சி ஊத்தறது.. என்னடி உனக்கு அவ்வளவு பிடிவாதம்” என்று மீண்டும் பரமேஸ்வரி அடிக்க வந்தாள். அந்த நேரம் வீட்டுக்கு வந்த பத்மா விலக்கி விட்டாள். அம்பிகை பிடிவாதமாக கல் மாதிரி நின்றாள்.

சங்கரன் தந்தி கிடைத்து வீட்டுக்கு வந்து விட்டான்.  வழக்கமாக அமரும் நாற்காலியில் அமர்ந்திருந்தான். விஷயத்தைத் தெரிந்து கொண்டதும் அவன் கொந்தளிக்கவில்லை. அமைதியாக சற்று நேரம் யோசித்தான். வாசலுக்குச் சென்று நின்றுவிட்டு திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்தான்.

“எப்படி பழக்கம்” என்று அம்பிகையிடம் கேட்டான்.

“டைப் இன்ஸ்டீட்யூட்டுக்கு டைப் அடிக்க வரும்போது”.

“டைப் அடிக்கப் போறதை நிறுத்தியாச்சா” என்று பரமேஸ்வரியைப் பார்த்துக் கேட்டான். அவள் “நிறுத்தியாச்சு” என்றாள். “ராஜேந்திரன் அப்பாகிட்டே பேசிப்பார்ப்போம். அதைப் பொறுத்து முடிவு பண்ணிக்கிருவோம்” என்றான் சங்கரன். தினசரி நாட்காட்டியை எடுத்துப் பார்த்தான். “நாளைக்கி காலைலே நல்ல நேரம் இருக்கு. போய் பேசிப் பார்ப்போம். எதையும் தள்ளிப் போட்டுக்கிட்டே போகக்கூடாது.” என்றான்.

அடுத்த நாள் காலையில் ராஜேந்திரன் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றான். நல்ல முடிவு கிடைக்கும் என்ற கற்பனையில் அம்பிகை இருந்தாள். ராஜேந்திரனின் அப்பாவிற்கு ஹோட்டல், லாட்ஜ் சொந்தமாக இருந்தன. அவர்கள் இருந்த தெருவில் சில வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தார்கள்.

ராஜேந்திரன் வீட்டையடைந்து வாசலில் நின்றிருந்தபோது, ராஜேந்திரனின் அப்பா உள்ளிருந்து எட்டிப்பார்த்து உள்ளே வரச்சொன்னார். சங்கரனின் அலுவலக வேலை தொடர்பாக விசாரித்தார். கும்பகோணம் ஊரைப்பற்றி பேசினார். சங்கரன் கேள்விப்பட்ட விஷயத்தைக் கூறினான்.

“ஆமா தெருவுக்கே தெரிஞ்சு போச்சு. எங்களுக்கு காதலிக்கிற பொண்ணு வேண்டியதில்லை. நான் என் மகனைக் கூப்பிட்டு சத்தம் போட்டேன். எங்க குடும்பத்துக்கு உங்க சம்பந்தம் ஒத்து வராது. வேற இடத்துலே மாப்பிள்ளை பாருங்க வெளியூர்லே பாருங்க. நீங்க எத்தனை தடவை பேசினாலும் இதுதான் என் பதில்” என்றார், ராஜேந்திரனின் அப்பா.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான், சங்கரன். “நல்ல முடிவு கிடைக்கும் என்று அம்பிகை கற்பனை செய்து கொண்டிருப்பாளே” என்ற கவலை அவனுக்கு ஏற்பட்டது.

அவனை எதிர்பார்த்து, பரமேஸ்வரியும், அம்பிகையும் வீட்டில் காத்திருந்தார்கள். பத்மாவும் வந்திருந்தாள். சங்கரன் வந்து வழக்கமாக அமரும் நாற்காலியில் உட்கார்ந்தான். அம்பிகை எழுந்து போய் சாமி படத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்தாள்.

“ஒன்னும் நடக்கலை. ராஜேந்திரன் அப்பாவிற்கு இந்த சம்பந்தத்திலே விருப்பமில்லை. அந்த பையனுக்கு இதனாலே பெரிய பாதிப்பு இருக்காது. ஆனா நமக்குல்ல பாதிப்பு. ஊருக்குத் தெரிஞ்சு போச்சே. அம்பிகை, நீ நடந்ததை மறந்துரு, அடுத்து நடக்க வேண்டியதைப் பாப்போம். என்கூட ஒருத்தன் வேலை பாக்கறான். நம்ம சாதிதான். அப்பா அம்மா கிடையாது. சித்தப்பா ஒருத்தர் இருக்காரு. முற்போக்கான சிந்தனை உள்ளவன். அவன்ட்டே உள்ளதைச் சொல்லியே கேப்போம். அவன் அதை ஒன்னும் பெரிசா எடுத்துக்கற டைப் இல்லை. ஒருநாள் வீட்டுக்கு கூட்டியாரேன். அவனுக்குப் புடிச்சுப் போச்சுன்னா பெரியவங்களை வைச்சுப்பேசி சீக்கிரத்துலேயே முடிச்சுடுவோம். தள்ளிப் போட்டுக்கிட்டே போறதுலே அர்த்தம் இல்லை.”

சங்கரன் சொன்னதைக் கேட்டதும் அம்பிகைக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. “சாமி என்னை கைவிட்டிருச்சே” என்று அழுது கொண்டே சொன்னாள். பத்மா அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

பத்மாவைப் பார்த்து சங்கரன் கேட்டான். “என்ன உன் கன்னம் வீங்குன மாதிரி இருக்கு”

“ஒன்னுமில்லை இடிச்சுக்கிட்டேன்” என்றாள், பத்மா.   

-12-

அம்பிகைக்கு மனக்குழப்பமாக இருந்தது. இன்று பெண் பார்க்க வருகிறார்கள். சங்கரன் கூட அந்த வரன் முருகவேலும், அவனுடைய சித்தப்பாவும், சித்தியும் வருகிறார்கள்.

மூத்த அக்கா, இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாயான பின் கொஞ்ச வயதிலேயே இறந்துவிட்டாள். இரண்டாவது அக்கா இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டிருக்கிறாள். அம்பிகைக்கும் விருப்பப்பட்டது நடக்கவில்லை. அம்பிகைக்கு தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூடத் தோன்றியது. “ராஜேந்திரன் என்ன செய்வார். அவரோட அப்பா விருப்பப்படலேன்னா என்ன செய்ய முடியும். தற்கொலை பண்ணிக்கிட்டா ராஜேந்திரனையும், அவர் குடும்பத்தையும் பழி வாங்கிவிட்டதா நினைக்கலாம். அவுங்களுக்கு குற்ற உணர்ச்சியே இருக்காது. பிறகு தற்கொலை பண்ணி என்ன பயன். என் வாழ்க்கை முடிஞ்சு போகும். வாழ்க்கைக்கு ஏத்தாப்லே நாம வாழ்ந்து பழகிக்கணும். நடக்கறது நடக்கட்டும்” என்ற வைராக்கியம் அம்பிகைக்கு ஏற்பட்டது.

குதிரை வண்டியிலிருந்து சங்கரனும், முருகவேலும், அவருடைய சித்தப்பா சித்தியும் இறங்கி வந்தார்கள். பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்பிகையும் முருகவேலைப் பார்த்தாள். சித்தப்பா முருகவேலைப் பார்த்தார். அவன் சரி என்பது போல தலையாட்டினான். பின் சித்தப்பா, கல்யாணம் எப்போது எங்கே எப்படி நடத்துவது என லௌகீகமாகப் பேச ஆரம்பித்து விட்டார். பேச்சு நிறைவடைந்தது. முருகவேலுக்கு அம்பிகை மனைவியாகப் போகிறாள்.

குதிரைவண்டி வெளியிலேயே நின்றிருந்தது. வந்திருந்தவர்களை குதிரை வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டு, சங்கரன் வீட்டுக்குள் வந்தான். அம்பிகையைக் கூப்பிட்டு “முருகவேல் நல்லவன். முற்போக்கு சிந்தனைக்காரன். உன்னை அவன் நல்லா வைச்சிருப்பான்” என்றான். அம்பிகை தலையாட்டினாள். இந்த ஊரில் இல்லாமல் வெளியூருக்குத் திருமணமாகிச் செல்வதில் அவளுக்கு நிம்மதி ஏற்பட்டது.

பெரிய ஆலமரம். விழுதுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. மரத்தில் ஆணி அடித்து மாலைகள் போடப்பட்டிருந்தன. சந்தனம், குங்குமம் தெளிக்கப்பட்டிருக்கின்றன. சடைமுடியுடன் மஞ்சள் சேலையில் ஒரு பெண் சாமியாடுகிறாள். அந்தக் காட்சி மறைந்து விடுகிறது. குளத்தில் அம்பிகை தத்தளித்துக் கொண்டிருக்கிறாள். மூழ்கி விடுவாள் போலிருக்கிறது. தலையை தண்ணீருக்குள் மேல் கொண்டு வருகிறாள். பிறகு தண்ணீருக்குள் தலை மூழ்குகிறது. மீண்டும் தலையைத் தண்ணீருக்கு மேல் கொண்டு வருகிறாள். அவள் தத்தளிப்பதைப் பார்த்து “எனக்கு நீச்சல் தெரியாது” என்று ராஜேந்திரன் கத்துகிறான்.

அவளுக்குத் தூக்கத்திலிருந்து விழிப்பு வந்துவிட்டது. எழுந்து சென்று சாமி படத்தின் முன் தட்டில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு வந்து படுத்தாள்.

-13-

இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. அம்பிகை திருமணமாகி கும்பகோணம் சென்றுவிட்டாள். புது சூழ்நிலை அவளுக்குப் பிடித்துவிட்டது. சங்கரனும் கும்பகோணத்திலேயே வேலை பார்ப்பது அவளுக்குப் பலமாக இருக்கிறது. கங்கா பெரியவளாகிவிட்டாள். விஸ்வநாதனுக்கும், பத்மாவிற்கும் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சத்யன் என்று பெயர் வைத்தார்கள். பரமேஸ்வரி தனியாக இருக்கிறாள். சங்கரனுக்கு கங்காவைத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பரமேஸ்வரி இருக்கிறாள். சந்திராவும், கங்காவும், இரு வீட்டிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி வாழ்க்கை சீராகப் போய்க்கொண்டிருக்கும் போது கோமளத்தின் வீட்டிற்கு பரமேஸ்வரி வந்தபோது எப்படியோ பேச்சுமாறி இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்போது பத்மா மட்டும் இருந்தாள்.

“எங்க அண்ணன் கூட வர்றதுக்கு முன்னாடி பல பேர்ட்ட போனவதானே நீ. உன் மகனுக்கு அப்பன் பேர் தெரியாதவதானே நீ” என்று கோமளத்தைப் பார்த்து ஏசினாள் பரமேஸ்வரி.

“அப்படிப்பட்ட மகனுக்குத்தானே நீ உன் ரெண்டு மகள்களையும் கொடுத்தே. உனக்கு எங்க போச்சு அறிவு. நான் ஒழுங்கு கெட்டவன்னா நீயும் ஒழுங்கு கெட்டவதான்” என்றாள் கோமளம்.

இருவரும் அடித்துக்கொள்ளும் நிலைக்குச் சென்று விட்டார்கள். பத்மா கஷ்டப்பட்டு விலக்கி விட்டாள். கோமளம் விளக்குமாறை எடுக்கச் சென்றாள். பரமேஸ்வரி வெளியேறிவிட்டாள். சத்யன் அழுது கொண்டிருந்தான். பத்மா அவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். பத்மாவிடம் பரமேஸ்வரியைத் திட்டி கோமளம் பேசினாள். பத்மா எதுவுமே பேசவில்லை. குடும்பம் பெரிய நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது என்பதை உணர்ந்தாள். கோமளம் அமைதியாகித் திண்ணையில் அமர்ந்தாள்.

விஸ்வநாதன் முதலில் வீட்டுக்கு வந்தார். அவர் வந்தவுடன் கோமளம் ஆக்ரோஷத்துடன் அவரிடம் நடந்ததைக் கூறினாள். பரமேஸ்வரி தன்னைக் கேவலமாகத் திட்டியதைக் கூறினாள். விஸ்வநாதன் அமைதியாகக் கேட்டார். நல்லவேளையாக அவர் குடித்திருக்கவில்லை. விஸ்வநாதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே ராமலிங்கமும் வந்துவிட்டார்.

அவரிடமும், பரமேஸ்வரி திட்டியதைக் கோமளம் கூறினாள். அவர் ஆவேசத்துடன் “இரு அவளை நாலு வார்த்தை கேக்கறேன். பரமேஸ்வரி கலகம் மூட்டுறாளா” என்று கூறியபடி ராமலிங்கம் வாசலை நோக்கிச் சென்றார். பத்மா அழுதுகொண்டே அவர் காலில் விழுந்தாள். “பெரிசாக்கிறாதீங்க மாமா எங்கம்மா செஞ்சது தப்புதான். நான் மன்னிப்பு கேக்குறேன்” என்றாள். அவர் தோளில் போட்டிருந்த துண்டை உதறினார். கோமளத்தைப் பார்த்து “சாப்பாடு போடு” என்றார். விஸ்வநாதன் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு பாயை விரித்துத் திண்ணையில் படுத்துக் கொண்டார்.

விஸ்வநாதன் அசாதாரணமான அமைதியிலிருந்தார். யாரிடமும் பேசவில்லை. வீடே வழக்கமான நிலையில் இல்லை. ஒருவருக்கொருவர் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிக்கொண்டார்கள். அடுத்த நாள் ராமலிங்கம் முதலில் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றார்.

விஸ்வநாதன் வெளுத்த வேட்டி சட்டை அணிந்திருந்தார். பத்மா இடுப்பில் சத்யனை வைத்திருந்தாள். பத்மாவிடம் விஸ்வநாதன் வந்தார். “நான் போறேன். திரும்ப வரமாட்டேன்” என்றார். “அப்புறம் எதுக்கு என்னை கல்யாணம் பண்ணினீங்க” என்றாள் பத்மா. அவர் எதுவும் பேசாமல் வெளியேறினார்.

மதிய நேரத்தில் வாசலில் குதிரை வண்டி நிற்கும் சத்தம் கேட்டு பத்மா வாசலுக்கு வந்தாள். ராமலிங்கம் முதலில் இறங்கினார். கூடவே சைக்கிள்களில் வந்தவர்கள் குதிரை வண்டியிலிருந்து விஸ்வநாதனின் உடலை இறக்கி முன்னறையில் கட்டிலில் கிடத்தினார்கள். பத்மா அலறினாள். சத்யன் அழுதான். எதிர் வீட்டுப்பெண் சத்யனை வாங்கிக்கொண்டாள். உள்ளிருந்து வந்த கோமளம் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள்.

சத்தம் கேட்டு, கூட்டம் கூடியதைக் கண்டு பரமேஸ்வரி, வந்தாள். விஸ்வநாதன் இறந்து கிடக்கும் காட்சியைக் கண்டாள். “நீ என்னை கேவலமா திட்னதை பொறுக்க மாட்டாமத்தான் என் மகன் விஷம் குடிச்சு செத்துப் போயிட்டான். வீட்டுக்குள்ளே வராதே” என்று கத்தினாள் கோமளம்.

“என்ன எல்லோரும் சும்மா இருக்கீங்களா போலீசு வந்து விசாரிக்கணுமா, பிரேதத்தை பரிசோதனை பண்ணணுமா. சும்மா இருங்க.” என்று ராமலிங்கம் கத்தினார்.

விஸ்வநாதன் முகம் அமைதிக்களையுடன் இருந்தது. உடலில் நீலம் படர்ந்திருந்தது.

-14-

அப்போது ராமலிங்கம் இளைஞன். ஜவுளிக்கடை வைப்பதற்கு முன்பாக ராமலிங்கம், ஹோட்டல் வைத்து நடத்திக் கொண்டிருந்த காலம். போட்டியில்லாததால், பணம் கொழித்துக் கொண்டிருந்தது. வாழ்க்கையில் மிக சந்தோஷமாக இருந்த காலகட்டம் அது. பாஸ்கரன் அவருடைய பால்யகால நண்பர். நாட்டியம் சொல்லிக் கொடுப்பவர். அவரிடம் பேசிக்கொண்டிருக்கலாம் என்று ராமலிங்கம் அவர் வீட்டுக்குச் சென்றார். கோயில் விழாக்களில் பாட்டும், நாட்டியமும் ஒரு பகுதியாக இருந்தது. பாஸ்கரன் பாட்டும் சொல்லித்தருவார்.

“திருவிடைமருதூர்லேயிருந்து ஒருத்தி வர்ர நேரம் இது. பெயர் கோமளம். இங்கேயே சில மாதங்கள் தங்கியிருந்து பாட்டும், நாட்டியமும் கத்துக்கிடணும்னு வாரா” என்றார் பாஸ்கரன்.

“அவ இங்கே தங்கியிருந்தா? ”

“ஆமா நீ ஒன்னும் தப்பா நெனைக்காதே. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி. தங்கியிருந்தாதானே கத்துக்க முடியும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது வாசலில் குதிரை வண்டி நிற்கும் சத்தம் கேட்டது. பாஸ்கரன் வாசலுக்குச் சென்றார். பாஸ்கரன் கூட ஒரு சிவப்பான அழகான பெண்ணும் ஒரு சிறுவனும் வந்தார்கள்.

பாஸ்கரன் வேலையாளைக் கூப்பிட்டு அவர்கள் கொண்டு வந்திருந்த பெட்டி படுக்கைகளை எடுத்து அறையில் வைக்கச் சொன்னார். அங்கிருந்த பெஞ்சில் அவளும் அந்தச் சிறுவனும் அமர்ந்தார்கள். பாஸ்கரனும், ராமலிங்கமும் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். பாஸ்கரன் அவளைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். ராமலிங்கம் அவளேயே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு மூச்சு விடுவது கூட சிரமமாக இருந்தது.

“வாழ்ந்தால் இவளுடன் வாழ வேண்டும். அது ஒரு பெரும் சந்தோஷம்” என்று அவருக்குத் தோன்றியது.

“இவுங்க கோமளம். திருவிடைமருதூர்லேயிருந்து வாராங்க. இது இவுங்க பையன் விஸ்வநாதன்” என்று ராமலிங்கத்திடம் அறிமுகப்படுத்தினார். ராமலிங்கத்தை “இங்கே ஹோட்டல் நடத்துகிறார். ஊரில் முக்கியமானவர்” என்று அறிமுகப்படுத்தினார்.

ராமலிங்கம் ஹோட்டலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

“முருகா… முருகா… ஏன் இப்படி அலைக்கழிக்கிறே. என் முன்னால் சைக்கிள் வருவது கூட கவனத்தில் இல்லை. எங்கிருந்தோ அவள் வந்தாள். மனதில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து விட்டாள். அமர்ந்தது மட்டுமல்ல கால்மேல் கால்போட்டு உட்கார்ந்திருக்கிறாள். நான் அவள் முன்பாக கையேந்தி நிற்பவன்.”

எந்திரம் போல் ஹோட்டலுக்குள் நுழைந்தார். அவர் உட்காரும் இடத்தில் போய் உட்கார்ந்தார். யார் யாரோ சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கண்ணுக்கு யாரும் தெரியவில்லை. கோமளம்தான் தெரிந்தாள். நாளைக்கே திரும்பவும் அவளைப் பார்க்கச்செல்ல வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

அடுத்த நாள் சென்றார். கோமளம் நாட்டியம் பழகிக் கொண்டிருந்தாள். ராமலிங்கம் நாற்காலியை ஓரமாகப் போட்டு உட்கார்ந்து கொண்டார். அவளின் தோள்களையும், கழுத்தையும், முன்னங்கைகளையும் பார்த்தார். பார்த்துக் கொண்டே இருந்தார்.

அடுத்த நாளும் சென்றார். கதவு அடைத்திருந்தது. சற்று யோசித்துக் கதவைத் தட்டினார். சலங்கை ஒலி கதவை நெருங்கும் ஓசை கேட்டது. கதவு திறந்தது. கோமளம் நின்றிருந்தாள். உள்ளே வரச்சொன்னாள். “எங்கே பாஸ்கரன்” என்று கேட்டார்.

அவரும் பையனும் வெளியே கடைக்குச் சென்றிருப்பதாகக் கூறினாள். நாட்டியப்பயிற்சியில் இருப்பதாகக் கூறினாள்.

தனியாக இருக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அத்து மீறக் கூடாது என்றும் மனதில் இருப்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிவிட வேண்டும் என்றும் ராமலிங்கத்திற்குத் தோன்றியது. அவள் நடக்கும் போது ஜல் ஜல் என்று சலங்கைச் சத்தம் கேட்டது. அவள் தரையில் அமர்ந்து சலங்கையை அவிழ்த்தாள்.

“என் மனசுலே தோன்றதை நான் சொல்லுறேன். உன்னை எனக்கு புடிச்சுப் போச்சு. நீ திரும்பவும் ஊருக்குப் போக வேண்டாம். இங்கேயே என் கூட இருந்துக்க. உனக்கு வேண்டியதைச் செய்து தர்றேன். வாழ்க்கை முழுக்க நான் உன்னை கைவிட மாட்டேன். இது சத்தியம்” என்றார்.

“நானும் வயித்துப் பிழைப்புக்குத்தான் நாட்டியம் கத்துக்கிட்டு ஊருக்குப் போய் சம்பாதிச்சு வாழணும்னு நினைச்சேன். நிச்சயமான வாழ்க்கை இல்லை. வாத்தியார்கிட்டே கலந்துகிட்டு சொல்றேன். நாளைக்கு வாங்க. வாத்தியாரும் கூட இருக்கட்டும்” என்றாள்.

“அவளைத் தொட வேண்டும்” என்ற ஆவல் அவரை உந்தியது. கட்டுப்படுத்திக் கொண்டு வெளியேறினார். அடுத்த நாள் வந்தார். பாஸ்கரனும், கோமளமும் இருந்தார்கள்.

“இந்தா பாரு ராமலிங்கம் நீ நல்லா யோசிச்சுக்க. கோமளத்துக்கும் நல்ல ஏற்பாடு இதுன்னுதான் எனக்குத் தோனுது. உனக்கு பெண்டாட்டி இருக்கு. சொந்தக்காரங்க இருக்காங்க. கோமளத்துக்கு ஒரு பையன் இருக்கான். அவள் பிழைப்புக்காக நாட்டியம் கத்துக்க வந்தவ. வந்த இடத்திலே இந்த மாதிரி ஒரு சங்கல்பம் ஏற்பட்டிருக்கு. ஏங்கிட்ட சொன்னத இவர்கிட்ட சொல்லு” என்று கோமளத்தைப் பேசச்சொன்னார்.

“வாத்தியாரை சாட்சியா வைச்சு சொல்றேன். எனக்கு சில வாக்குகள் கொடுக்கணும். என்னை தாலிகட்டி கல்யாணம் பண்ணிக்கணும். என் பையனை உங்க மகனா தத்து எடுத்துக்கணும். எனக்கு தனியா வீடு பாத்து குடி வைக்கக்கூடாது. உங்க வீட்டுக்குத்தான் என்னை கூட்டிட்டு போகணும். என்ன சொல்றீங்க” என்றாள்.

“நீ சொன்னதுக்கெல்லாம் சம்மதம். நீ சொன்னபடி செய்றேன். பாஸ்கரனை சாட்சியா வைச்சு சத்தியம்” என்றார் ராமலிங்கம்.

“நீ இன்னொரு கல்யாணம் பண்ணிகிட்டா வீட்லே ஏத்துக்குவாங்க. இப்ப பையனோட வந்தவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போனா குழப்பம் வராதா” என்றார் பாஸ்கரன்.

“வராமப் பாத்துக்கறேன். எனக்கு ஒரே தங்கச்சி. நான் சொல்றதை கேட்டுக்குவா. என் பெண்டாட்டியும், நான் சொல்றதை கேட்டுக்குவா. எனக்கு குழந்தையும் இல்லை. அதனாலே பிரச்சனை இருக்காது. நான் வாக்கை காப்பாத்திருவேன்.”

‘சரி நீ போயி உங்க குடும்பத்துலே பேசு. கோமளத்துக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா எனக்கு சந்தோஷந்தான்.

ராமலிங்கம் சந்தோஷமாக வீட்டுக்குச் சென்றார். முதலில் தங்கை பரமேஸ்வரியிடம் பேசினார். “குடும்பப் பெண்ணா இருந்தா சரி. உனக்கும், குழந்தை இல்லை. ஆனா நீ நாட்டியக்காரின்னு சொல்றே. அதான் இடிக்குது” என்றாள், அவள். பிறகு அவரின் பிடிவாதத்தைப் பார்த்து “உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டாள்.

மனைவி பாக்கியத்திடம் கறாராகச் சொன்னார். “நமக்கு குழந்தை இல்லை. நான் ஒரு நாட்டியக்காரியை கல்யாணம் பண்ணிக்க போறேன். அவளுக்கு மகன் இருக்கான். அவனை நான் தத்து எடுத்துக்க போறேன். அவுங்க ரெண்டு பேரும் இந்த வீட்டுலதான் இருப்பாங்க. எனக்கு குழந்தை பொறக்காமலே கூட போகலாம். அதனாலே இந்த ஏற்பாடு”

அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும், அவளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோமளத்தின் விருப்பப்படி ராமலிங்கம், கோமளத்தைத் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். புரோகிதர்களை அழைத்து வந்து சடங்குகள் செய்து விஸ்வநாதனை மகனாக தத்து எடுத்துக்கொண்டார். கோமளமும், பாக்கியமும் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். அந்தத் தெருவிலேயே அந்த வீடுதான் அளவில் பெரியது.

பாக்கியத்திடம், ராமலிங்கம் அதிகம் பேசுவதில்லை. விஸ்வநாதனை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். கோமளத்தின் மீது காதலும், காமமுமாக இருந்தார். பாக்கியத்தை ராமலிங்கம் தொட்டே பல ஆண்டுகளாகிவிட்டன. பாக்கியம் தனியே வாய்விட்டு பேசிக்கொண்டாள். வெறித்துப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பாள். ஏதேதோ சம்பந்தமில்லாமல் பேசினாள். புத்தி பேதலித்துவிட்டது என்று மந்திரவாதியிடம் கூட்டிச் சென்றார்கள். அவர் சவுக்கால் அடித்து தீய சக்தியை விரட்டிவிட்டதாகச் சொன்னார். ஒன்றும் பயனில்லை. அவளுடைய மனப்பிறழ்வு அதிகரித்துக்கொண்டே இருந்தது.

ஒருநாள் தலைவிரிகோலமாக அறையிலிருந்து வெளியே வந்தாள். ‘உர்…உர்… உர்… லலலா… லலலா” என்று கத்திக்கொண்டே வீட்டைவிட்டு வெளியேறினாள்.

**********

ஆசிரியர் தொடர்புக்கு – sureshkumaraindrajith@gmail.com

புத்தனின் ஆண் குறி

0

கரன் கார்க்கி          

          
அவருக்கு மேலாய் மற்றொருவரை வைத்து அவரைக் குறைத்து மதிப்பிடுவதற்கு மாறாய் அவரை உயர் பேரறிவின் உன்னத அன்பின் உருவகமாய் கருதுவோமாக. (புத்தரும் அவர் தம்மமும்)
– பாபா சாகேப் அம்பேத்கர்.

2010 ல் என் முதல் புதினம் வெளிவந்த மறுஆண்டு சென்னை பல்கலைக்கழக அம்பேத்கர் பொருளியல் துறைக்கு எழுத்தாளர்கள் பலரும் கட்டுரை சமர்பிக்கும்படி அதன் தலைவர் சின்ன நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு முன் மாணவனாய் பள்ளிக்கு எழுதியதைத் தவிர வேறு எதற்காகவும் கட்டுரை எழுதியவனல்ல… அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மக்கள் மத்தியில் செயல்பட்ட மூன்று தலித் தலைவர்களான இரட்டைமலை சீனிவாசன், தந்தை சிவராஜ், எம்.சி.ராசா இவர்கள் மூவர் பற்றி 40 பக்கங்களுக்கு எழுதி தந்தேன்.

அவர்களுக்குள் இருந்த முரண்பாடு, சச்சரவுகள் நாமறிந்தது என்றாலும் அன்றைய தலைவர்களின் மக்கள் பணிகள் குறித்து எழுதிய கட்டுரையது… அதில் என் நினைவில் உள்ள வரியும் மேடையில் நான் பேசிய வரியும் இப்போது நினைவுக்கு வருகிறது, “அம்பேத்கர் அவர்கள் என்றைக்கும் என் வணக்கத்துக்குரிய தெய்வமல்ல ஆனால்  வாழ்நாள் முழுக்க நானும், என் போன்ற பலரும் அவரைப் பயின்று பின்பற்ற தகுந்த புரட்சியாளரை பயில்வதற்கு முயல்வோம்” என்று நான் சொன்ன தருணத்தில் புத்திஸ்ட் ஒருவரால் அங்கு சின்ன சலசலப்பு நிகழ்ந்தது அது வேறு விடயம்.

இன்றுவரை அவர் வெறும் சலசலப்பு உண்டாக்குகிறவராகவே இருக்கிறார். இசங்களை துணைக்கு வைத்துக்கொண்டு வார்த்தைகளை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு அளவுகோளுக்கு ஒரு குறி தேவைப்படுகிறது. அம்பேத்கரை அளக்க அம்பேத்கர் மட்டுமே அளவுகோள்.. எந்த இசங்களைக் கொண்டும் அவரை அளக்க முடியாது என்பதல்ல, உலகெங்கிலும் உள்ள வழக்கமான சுரண்டல் முறைக்கும் இந்தியாவின் மதம் சாதி நம்பிக்கைகள் வழியிலான  சமூகப்பண்பற்று அடிப்படை மனசாட்சியற்று சுரண்டிக் கொழுக்க உரிமை கொண்ட வெட்கமற்ற சமூகத்தில் ஒவ்வொருவரின் மனசாட்சியை தட்டியெழுப்ப முயன்ற அம்பேத்கர் பண்டைய மரபு வழியில் தன் அறிவை ஒருக்கிணைக்க  இம்மண்ணுக்கு மேற்கிலிருந்து நகர நாகரீகச் சமூகத்தில் பிழைப்புத்தேடி ஊடுருவிய அன்னியமான சுரண்டல் சமூகம், உள்ளூர் மக்களின் நிற அடிப்படையிலான மயக்கத்தை சாதகமாக்கிய அதன் பரவலை, ஆதிக்கத்தை, அதன் அன்னியத்தனத்தை மறுக்கும் பன்னெடுங் காலமாயிருக்கும் எதிர்ப்பு மரபை இம்மண்ணுக்கே உரிய பண்டைய பகுத்தறிவு மரபை, மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியின் ஒரு வடிவம் தான் அவரை பவுத்தராக மாற்றியது என்கிற பார்வையிலிருந்து விலகுகிறோம்.

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென்று எதுவுமில்லை, எவருமில்லை என்பதே நம் கருத்து. அதே நேரம் பூச்சிகளுக்கு புரட்சியாளர்களைத் தெரியாது என்பது போலவே புரட்சியாளர்களும் பூச்சிகளை கவனிப்பதில்லை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

சுதந்திர, சகோதரத்துவ, சுதந்திரத்திற்கு அம்பேத்கர் மட்டுமே முற்றும் முடிவாக நாம் கொள்ளவில்லையென்றாலும் அவரைத் தவிர்த்துவிட்டு இங்குள்ள சூழலை மார்க்ஸியத்தால் அணுக முடியும் என நான் நம்பவில்லை..

*


ம்பேத்கர் குறித்த முறையற்ற சாடலுக்கு எதிர் வினையாற்றுவதோ, அல்லது வெறுமனே இல்லை அவர் அறிஞர் ஞானியென சப்பைக்கட்டு கட்டுவதோ நம் நோக்கமல்ல ஆனால் நாம் திரும்பத் திரும்ப உண்மைகளை புரிந்து கொள்ளவும், நேர்மையுடன் விவாதிக்கவுமான தேவை எப்போதும் எதிர் முகாமிலிருந்து எழுந்தபடியே இருக்கிறது.

அதைவிடவும் முக்கியமாக அண்ணல் குறித்த புரிதல் இங்கு மிகக் குறைவாக இருக்கிறது என்பது மட்டுமல்ல அவரைக் கற்றதன் வழியே உரையாடல் என்பதைவிட அவருக்கு பத்து தலை, பன்னிரண்டு கைகள் என்பதாக இல்லாமல் அதேநேரம் அசுத்தக்காற்றுடன், நுரைகளும் இடத்தை அடைத்துக் கொள்ளாமல் இருக்க அங்கு உண்மைகளை நிறுத்த வேண்டியுள்ளது.

பூமி தோன்றிய காலம் முதல் மானுட குழுவில் எத்தனையோ மாற்றங்கள் சக்கரங்கள் சுடுமண் பொம்மைகள், வரைகலை, சிற்பம், நகர அமைப்பு மொழி, இலக்கணம், இன்னும் எத்தனையோ…. சிறக்க இருந்தாலும், உலகம் தோன்றிய காலம் முதல் பூமியில் இமயத்துக்கு தெற்கே மிக நாகரீக வளர்ச்சியுற்ற மக்களை சூறையாடிய அரை வெள்ளை நாடோடிகள் காட்டுமிராண்டிகளாய் தொல்குடி மக்களை பல விதங்களிலும் சூறையாடி சாதி படிநிலை கொடூர சட்டங்கள் வழியே சுரண்டல் இருளில் துன்புறும் மக்களை மீட்க புதியதொரு பேரொளி தேவைப்பட்டது.

அந்த தேவையின் பொருட்டு வரலாறு இதுவரை கண்டிராத ஒருவேளை இம்மண்ணின் உருவாகி வந்த அறத்தின் தொடர்ச்சியின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக ஒரு மனிதனை வரலாறு உலகிற்கு அடையாளம் காட்டியது. அவர் தான் புத்தர். மனித குல வரலாற்றில் மேம்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனையின் உச்சமென துளிர்த்து பூமியின் முதல் ஒளி புத்தன்… அவருக்கு முன்பும் படைப்புகள், கதைகள், புராணங்கள், வேதங்கள் என எத்தனையோ அத்தனையும் புளுகும், மர்ம நயவஞ்சகமும் நம்ப முடியாத மாயத்தன்மைகளும் நிறைந்தது என்பதுடன், அதுவும் கூட குறிப்பிட்ட குழுவுக்கு மட்டுமே சொந்தமானவை.

அந்த குழு ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இனக்குழுக்களில் ஊடுருவி தன வெளிர்நிற தோலின் நிற கவர்ச்சியால் அந்த மனிதர்களில் வலுவான வளமான அனைவருடனும் தாராளமாக உறவுகொண்டு அவர்களைப் பிரித்தாளுவதன் மூலம் சூறையாடி எந்த தடைகளுமற்று சுரண்டிக் கொழுத்த காலம்,  அந்த வெளிர் நிற குழுவுக்கு மட்டுமேயான மொழி அதன் சட்ட திட்டங்களென எதுவும் மற்றவர்கள் அதை புரிந்து கொள்வதும், தெரிந்து கொள்வதுமே பெருங்குற்றமென சட்டம் செய்யப்பட்டிருந்தது.

அந்த சட்டங்கள் ஒரு மனிதனைச் சுரண்டி இன்னொரு மனிதனை கொழுக்க வைத்தவை அவைகள் எல்லோருக்குமானதன்று.., ஆனால் அவை தத்துவம் போல் மயக்கிய ஆபாச சுரண்டல் வெறியுள்ள கூச்சல்கள்… அவை பெரும்பாலான மக்களுக்கு புரியவும், பயன்படுத்தவும் முடியாதவை.. அவர்களின் மொழிக்கும் உள்ளூர் மொழிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இவையத்தனையையும் ஓங்கியறைந்து புதிய ஒன்றை, மாய மயக்கமற்ற அறிவுகுகந்த அன்பின் வழியே ஒளிவு மறைவற்ற அதுவரையிலும் உலகில் இல்லாததொரு புதியமுறையில் உலகை பார்க்க வைத்ததுடன் உள்ளூர் மக்கள் மொழியிலேயே பேசியவன் புத்தன்.

செல்வமிக்க அரசனின் மகனாயிருந்தவன் இரு சமூகங்களுக்கு இடையிலான போருக்கு எதிரான சமாதானத்தை முன்னெடுத்த காரணத்துக்காக காட்டுக்கு விரட்டப்பட்டவன் அங்கே பரிசோதனை முயற்சியாக முதுகெலும்பு முன் வயிற்றில் தெரியுமளவு கடும் தவ வாழ்க்கையை முயன்று அதனாலெல்லாம் ஒரு பயனுமில்லையென உணர்ந்து மக்களோடு மக்களாய் சங்கமித்து அறம் போதித்தவன் அம்மண்ணின் பண்டைய தொல்குடிகளின் அறத்தை மீண்டும் இம்மண்ணில் மீட்டுருவாக்கம் செய்தவன்.

தன் புலனெழுச்சியை மனதில் முடக்கி புலனடக்கம், என்கிற சுய கட்டுப்பாடு பண்பில் ஆசைகளினால் நசுங்கிய மானுட சமூகத்தில் ஆசையே துன்பத்துக்கு காரணமென்கிற புதிய பண்பாட்டு செயல்முறை மரபை முன்னெடுத்தவன்,

அவனது காலத்தில் அனுபவிக்க கிடைப்பதை முற்றாக அனுபவிப்பதே முற்பிறப்பின் பலன் அதை புறக்கணிப்பது மடமையென்ற கருத்துள்ள காலம், கர்மா, விதி என்கிற மாய சுரண்டுலுக்கான மாய சூத்திரங்களே அறிவென நெளிந்த காலம். தேடி போகாமல் நாடி வருமளவு உறுதி செய்யப்பட்ட இன்பங்கள் ஏராளம்.. அத்தனையும் உதறி மானுடப்பிறப்பின் கமுக்கங்களை தேடி உண்மையின் ஒளியை கண்டறியும் பேருள்ளத்தோடு, உண்மையறியக் கிளம்பியவன், உண்மையின் ஒளியைக் கண்டடைந்ததை உலகுக்கு உரக்கச் சொன்னவன்… பேரசையில் விளைந்த மனிதன் புத்தனையும் மந்திரவாதியாக்கி மணியாட்டிக்கொண்டிருப்பது புத்தனின் பிழையல்ல.. புத்தனைப் புரிந்துக்கொள்ள தவறியவர்கள் பிழைதானே.

இடைசெருகல்களால் ஆன இன்றைய புத்தன் மீதான மாயத்தன்மை திணிப்புகளை நாம் ஏற்பதற்கில்லை. பார்ப்பனிய வேள்வி முறைகளுக்கு, அதன் படிநிலை சாதியக் கொடூரங்களுக்கு, அதன் சமூக சுரண்டல் போக்குகளை நியாயப்படுத்தும் கற்பனை கதைகளுக்கு எதிரான இம்மண்ணின் சொந்த அறிவு மரபு மற்றும் அன்பின் வழியே விடுதலை என்பதை முன்னெடுத்த வகையில் புத்தனிடம் முகம் சுளிக்க  ஒன்றுமில்லை பார்ப்பனியத்தின் கேடுகளை மிக காத்திரமாக விமர்சித்தவன். கடவுள், ஆன்மா கட்டுக்கதைகளை தோலுரித்தவன்,

புத்தனில் துவங்கி இன்றுவரை பல புத்தன்கள் தோன்றி விட்டார்கள். வள்ளலாரையும் நான் புத்தனெனச் சொல்லுவேன். காட்டுமிராண்டி பண்பிலிருந்து மீளாத சமூகத்தை பண்படுத்த இன்றைக்கும் புத்தன் அவசியமாக இருக்கிறார். சில அறிவாளிகளுக்கு புத்தரிடம் பெறுவதற்க்கு ஒன்றுமில்லையெனும் போது மாற்றங்களை நிகழ்த்தும் காரணிகளைக் கண்டடையும் அவசியங்களை நீர்த்துப்போக வைக்க புத்தரது ஆண் குறியில் அம்பேத்கர் அறிவை பெற்றது போலொரு கண்டுபிடிப்புகள் நிகழ்த்த வேண்டியிருக்கிறது.

ஆண்குறிகள் யோனிகளாலான வார்த்தைச் சரடுகளை எழுதி கவிதையென விளம்பரம் தேடுகிற ஆள் முன்பொருநாள் மார்க்ஸிய அரங்கிலிருந்து துரத்தப்பட்டிருந்தாலும், புதிய விளம்பர முயற்சியாக மீண்டும் ஒரு பூச்சாண்டிக்கு தயாராவது ஒரு கவன ஈர்ப்பு வியாபார தந்திரமன்றி வேறென்ன? என புறந்தள்ள முடியாது. வெளிப்படையான பதில் தருவது அவசியமாகிறது

*

அம்பேத்கருக்கு மார்க்ஸியம் தெரியாது அதனால் என்ன?:

மார்ஸுக்கும் அம்பேத்கரை தெரியாது

புத்தனுக்கு இவர்கள் இருவரையுமே தெரியாது அதனால் என்ன? ஒவ்வொன்றையும் மார்க்ஸியத்தால் அளந்தவர்களின் அளவுகோள்கள் தேய்ந்து அடையாளமற்றுப் போய் நூறாண்டு கடக்கிறது. உங்கள்  அளவு கோள்களில் மார்க்ஸ் இருக்கிறாரா? என்பதே நம் கேள்வி.

அம்பேத்கர் சனநாயகத்தில் நம்பிக்கையை இழக்காமல் இருந்தற்கு காரணம் அவரது மேல்நாட்டு கல்வி மட்டுமா? அது புத்தனிலிருந்து பெற்ற மரபுவழிப் பண்பு… இரண்டாயிரம் ஆண்டுகளாக நசுக்கி சாறெடுக்கப்பட்டவர்கள்… கைகளில் அரிவாள்கள் ஏறாமல், அறிவாயுதங்கள் ஏறியிருப்பது ஏன்? எப்படி? புத்தனின் பண்பாட்டு மரபுவழித் தொடர்ச்சி…. ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதியில் பவுத்தரே… அய்யோத்திதாச பண்டிதர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்களைப் பற்றி வன்மத்தை கக்குகிறவர்களுக்கு பதிலளிக்கும் முன்
ஜோதிராவ் புலேவை, பகத்சிங்கை, நேதாஜியை, ஏன் காந்தியை இந்த வார்த்தைகளால் சீண்டிப் பார்த்திருந்தாலும் உங்கள் அற்ப விளம்பரத் தேடலுக்கு கண்டனம் எழுப்புவது தவிர்க்க முடியாது.

அப்போது உங்களால் மலிவாக சாதியத் தலைவருக்கான ஆதரவான கண்டனமாக பார்த்திருக்க மாட்டீர்கள் தானே… ஆனால் இப்போது எளிதாக சொல்வீர்கள்.. அம்பேத்கரை சாதித்தலைவராக வைத்திருக்கவே விரும்புகிறார்கள்… ஒரு ஆய்வறிஞரை, சமூக புரட்சியாளரை இப்படி கொச்சைப்படுத்துவதை மார்க்கசியம் அனுமதிக்கிறதா?  அப்படி கொச்சைப்படுத்துபவரை மார்க்ஸிஸ்டு இல்லையென சொல்கிறோம். அவர் முற்றிலும் முடிவானவர் என்பதை விட அவரில் கற்கவும் அவரிடமிருந்து தொடங்கவும் முடியும் என்பதே ஆக்கமான வழி. அவரைப் புறக்கணிப்பது என்பது மாற்றத்தை நோக்கிய அரசியலில் லாபகரமான செயல் அல்ல என்பதுடன் அவரை கொச்சைப்படுத்துவது அறியாமையின் அடையாளம் மட்டுமே. 

*
பண்பாடு, கலாச்சாரம் என்று புளுகித்திரியும் சமூகத்துடன் கல்வியறிவால்  சனநாயக அன்பின் வழியே உரையாடல் மூலம் மாற்றம் நிகழும் என்கிற நம்பிக்கை முற்றிலுமாக இழந்த நிலையில் இந்து மதத்தின் படிநிலைச் சுரண்டல் தத்துவம்தான் மக்களின் இந்த பண்பற்ற சாதிய இறுக்கத்துக்கு காரணம்.
*

சுரண்டுவதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட பிறப்பினடிப்படையிலான மதச்சமூக அமைப்பில் ஒருவன் எவ்வளவு அறிவாற்றல் பெற்றாலும், பண்பற்ற மூடனாயிருந்தாலும் அந்தந்த படியிலேயே சுரண்டி அல்லது சுரண்டப்பட்டு உழன்று மடிய வேண்டியதுதான், இந்த சுயநலமான காட்டுமிராண்டி அமைப்பை ஒழித்துக் கட்டாமல் அல்லது சீரமைக்காமல் ஒரு மாற்றமும் நிகழ வாய்ப்பேயில்லை என்றுணர்ந்து இந்து மதத்தை சீர்திருத்துவது நம் வேலையில்லையென்று உறுதியாக உணர்ந்து 1936ல் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர், 1956ல் தன் மறைவதற்க்கு முன் இந்து மதத்தை விட்டொழித்து பவுத்தமேற்கிறார். இடையில் எத்தனையாண்டுகள்….

அவரளவு இந்த மண்ணின் வரலாற்றை ஆய்வு செய்தவர்கள் எவராவது இருக்கிறார்களா? உறுதியாக இல்லையென்பேன். இந்திய சாதியக் கட்டுமானம் குறித்து 25 வயதில் ஆய்வை முன் வைத்தவர் அம்பேத்கர் . இந்தியாவில் சாதி இந்தியாவில் சாதி, தோற்றம், வளர்ச்சி என்கிற ஆய்வேடு (1916ல் கொலம்பிய பல்கலை கழகத்தில் வாசித்தளித்தது) அதை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்… அகமண முறையின் வழியே சாதிய இறுக்கத்துக்கு காப்பளித்தவர்களின் தந்திரங்கள்  பற்றி 25 வயது இளைஞனின் ஆய்வு வீச்சை அவரது மேதைமையை பரிசோதிப்பவர்கள் அவரது முதல் நூலுக்கு பதில் சொல்லுங்கள்.

பிறகு அவரது கடைசி நூலான புத்தமும் அவர் தம்மத்தை பிரித்து மேயலாம். சாதி என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது என்கிற கேள்வியற்ற சமூகத்தில் முதன்முறையாக அத்தகைய கேள்வியையும் எழுப்பியவர் 1936ல் சாதி ஒழிப்பு நூலை முன் வைக்கிறார். இரண்டுக்கும் இடையிலான இடைவெளி 20 ஆண்டுகள்.… உடனே சாதி ஒழிந்து விட்டதா என்று விதண்டாவாதிகள் கேட்கக்கூடும்.

அவர்களுக்கு சொல்லுவேன்.. உங்களிடம் ஆண்குறி, பெண்குறி, சில வேளைகளில் இரண்டுமாக, சிலவேளைகளில் இரண்டுமற்ற ஒன்று இருப்பது போல கூடுதலான ஒன்றாக கண்ணுக்குத் தெரியாத கற்பனையான சாதிக்குறியும் எப்போதும் உங்களிடம் விறைத்துக் கொண்டிருக்கிறது… ஒரு நோய் போல மிகக்குறிப்பாக இந்தியர்களிடம். அந்த நோய்குறி சிலருக்கு அது ஒரு அறிவைப்போல சிலர் புரட்சிகர முகமூடிகளால் மறைக்க முயலுகிற ஒவ்வாமையில் வெளியே கக்கிவிடும் போது சிக்கிக்கொள்கிறார்கள். 

(பரவாயில்லை வெறும் புனித கோஷங்களோடு இருந்த இளைஞர்களுக்கு வேலை வந்திருக்கிறது… அவர்கள் அண்ணலை மேலும் கற்க துவங்குவார்கள் என்றே நம்புகிறேன். அம்பேத்கரை உலகம் புரிந்து கொண்டாலும், புரியாதது போல நடிப்பார்கள்… அதற்கென்ன அவர்களுக்கு பாடம் புகட்டவேண்டியதில்லை நம் புரிதலை முன் வைப்போம்)

அம்பேத்கரின் வார்த்தைகளில் சொல்வதானால்

1) புத்தர் மதத்தை கடவுள், ஆத்மா என்கிற அடிப்படையில் அமைக்கவில்லை.
2) தனியுடைமை ஒழிப்பு பாதையில் புத்தரின் கொள்கைகள் இடையூறு செய்வதில்லை… மறுமை குறித்த சறுக்கல் கூட இருக்கலாம் ஆனால்.. ஆனால் அவரை குற்றம் சாட்டுவதற்கு முன் அம்பேத்கர் மதம் மாறிய காலம் அதற்கு முன்பு நிழ்ந்த செயல்பாடு இவை குறித்து சிந்திக்க குறைந்தளவேனும் இந்திய சமூக வரலாற்று அறிவு வேண்டும். அந்த அறிவுப் புரிதல் வழியே அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அதைப் பற்றி யோசிக்கலாம்.

அம்பேத்கர் தெளிவாக சொல்கிறார்… வேதங்கள் பாலைவனம் போல் பயனற்றவை என்று புத்தரும் அவர் தம்மமும் நூலில் எழுதுகிறார்.வேத முனிவர்களை புத்தர் முற்றாக ஒதுக்கித் தள்ளவில்லை நூற்றுக்கணக்கான கற்பனாவாத புளுகு மூட்டைகளிலிருந்து அவர் ஒரு பத்து முனிவர்களின் படைப்புகளை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்கிறார். அவர்களை தொன்மையானவர்கள் உண்மையான படைப்பாளிகள்  என்று புத்தர் கருதியதாக எழுதும் அம்பேத்கர் அதிலும் கூட மனிதனை ஒழுக்கத்தில் உயர்த்தும் எதுவும் இல்லையென்று புத்தர் சொல்வதாக சொல்கிறார்.

அத்துடன் பார்ப்பனியக் கட்டுக்கதைகளான  பிரம்மம் உள் பொருள் என்கிற மாய்மாலங்களை யாராலும், யாதொன்றும் அறியப்படாத ஒன்று எப்படி உள் பொருளாயிருக்க முடியும் அதனால் யாருக்கு? என்ன பயன் என்கிற கேள்வியால் புத்தர் எவ்விதம் பார்ப்பனியத்தை பகிரங்கப்படுத்துகிறார் என்பது போன்ற பலதையும் ஆய்வுக்குட்படுத்தி அதே நேரம் ஒரு மனிதன் உள்ளீடாக பற்றிக்கொள்ள தகுதியான ஒன்றாக கடவுள், ஆன்மா என்பது ஒரு ஏமாற்று கருத்து, ஆசையை துற, பேதமற்று அன்பு செய் என்பதில் தொடங்கி  பேரறிவுடன் முன் காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட ஒவ்வொன்றையும் வெளிப்படையாக விசாரணை செய்து… இதற்கு முன் உலகம் கண்டிராத மனிதப் பண்பு மேன்மையுறும் ஒன்றை, தொடர்ந்து வளர்சியுறும் ஒன்றை அவர் கண்டடைந்து சொன்னார். அது மிக எளிமையானதாகவும் , வெளிப்படையானதாகவும், எல்லோருக்குமானதாகவும் இருந்தது.

புத்தரும் அவர் தம்மமும் மிக மிக நுண்ணிய அற்புதமான விசாரணை புத்தகம் அது புத்தரின் நிலைப்பாட்டை மட்டுமின்றி  அன்றைய உலகம் எவ்வாறு இருந்தது, அந்த நாளில் புத்தன் காலத்திலேயே இருந்த மகாவீர் இவரிடமிருந்து எங்கனம் மாறுபாடு கொண்டுள்ளார் என்கிற வரையிலான ஒரு தீவிர மறுபரிசீலனை ஆய்வேடு என்பதாகவே கொள்ள முடியும்….
(இப்போது தீவிரமாக இளைஞர்களால் வாசிக்கப்படுகிறது)

ஆண், பெண், கடவுள் குறிப்பாக காளியுடனான புணர்வு, பிறப்புறுப்பு வழியிலான கவிதைகள் படைத்து வாசக கவனம்பெற எத்தனிக்கும் ஆள் அம்பேத்கரை விமர்சிக்கட்டும்… அம்பேத்கர் என்ன? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? இல்லையென்றே சொல்வோம். அவரைக் கடவுளாக பூஜிக்க நாங்களொன்றும் புராண புளுகுகளில் சிக்கியவர்களில்லை, புத்தக விற்பனைக்கு அரசியல் செய்கிற சராசரி ஆட்கள் அண்ணலை எளிதாக குற்றம் சாட்டிவிட முடியும் அது சனநாயக உரிமை… ஆனால் ஆபாச வார்த்தைகளால் அவதூறாக திட்டமிட்டு இழிவுபடுத்துவதன் நோக்கம் சில்லறைதனமானது. ஆனால் இது எப்போதும் நடப்பதுதானே!..

  • சிலைகளை உடைப்பவனுக்கும் இதற்குமான வித்தியாசம் என்ன?
  • அம்பேத்கர் இந்த சமூகத்துக்கு எதாவது செய்தாரா?
  • அவர் புரட்சியாளரா? என்பது மாதிரியான கேள்விக்கு பதிலாக இன்றைக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரடி முன் நகர்ந்து இருக்கிறார்கள் என்றால் அதற்கு முதல் ஒற்றை காரணம் அம்பேத்கர் மட்டுமே என்பதுடன் அந்த விதத்தில் மட்டுமல்லாது அரசியலாய் இன்றைக்கு குறைந்தளவேனும் சேரி மக்கள் ஒன்று திரண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கும் முதல் காரணமாக அம்பேத்கரே இருக்கிறார்.

இட ஒதுக்கீடு, தனித்தொகுதியென ஒவ்வொன்றுக்கும் அவரே மூலம்.

2000 ஆண்டாக உழைப்பு விலங்காக மட்டுமே கிடந்த நசுக்கபட்டவன் இன்று சகல துறைகளிலும் பங்கெடுப்பதற்கு பல காரணங்கள் இருப்பினும் முதற்காரணம் அண்ணல் அம்பேத்கர் தவிர வேறு காரணத்தை என்னால் சொல்ல முடியாது. அதன் பொருட்டு அம்பேத்கரை புரட்சியாளர் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். அவருக்கு முன்பான தீண்டப்படாதோர், அம்பேத்கருக்கு பின்பான தீண்டப்படாதோர் என வரைபடத்தை தீட்ட முடியுமளவு தெளிவானது அவரது வேலைதிட்டம். அத்துடன் அவரை மார்க்கிஸின் அளவுகோளால் அளக்காமல்  (எதையும் மார்க்ஸிய அளவுகோளால் அளக்க முடியும்) இம்மண்ணின்  மரபு வழியிலான, புராண புளுகு கசடுகளையும் அதன் வழியே நாசமாக்கப்பட்ட மக்களின் வரலாற்றின் முழுத்தொகுப்பையும் ஒரு அளவுகோலாக வைத்துப்பாருங்கள் அண்ணலின் ஆய்வுபூர்வமான உழைப்புடன் வரலாற்றில் அவர் புரட்டிய பகுதியும் தெரியும்.

மரபு வழிபட்ட உலகின் அனைத்து மதங்கள், தத்துவங்கள் என பயின்று உலகின் ஆகச்சிறந்த பலகலைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்டவர் என்பதற்காக நாம் அவரை பேரறிஞர் என்று சொல்லவில்லை. மகாத்மாக்களின் முமூடிகளைக் கழற்றி மக்களின் மகாத்மா யார் என்பதை ஒடுக்கி நாசமாக்கப்பட்ட மக்களுக்கு அடையாளம் காட்டியதுடன் மக்களால் மகாத்மா பட்டமளிக்கப்பட்ட ஜோதிராவ் புலேவை மக்களுக்கு அடையாளம் காட்டியவர் என்பதற்காக நாம் அவரைக் கொண்டாடவில்லை. பிணி, மூப்பு, சாவு, என்கிற நிலை கண்டு சித்தார்த்தன் மனம் வெதும்பி புத்தனனான் என்கிற அம்புலிமாமா கதையிலிருந்து உண்மை வரலாறை சொன்னதற்காக நாம் புகழ்ந்து கொண்டிருக்கவில்லை.

ஒவ்வொருவரும் சனநாயகத்தை நோக்கி நகர.. அவசியமான வயது வந்தோருக்கு வாக்கு என்கிற உரிமையை முன்னெடுத்ததற்காக, பட்டியல் சாதியினருக்கு பிரதிநிதித்துவம் என்பதை அரசியல் சாசனம் வழியே முன்னெடுத்ததற்கு, 8 மணி நேரம் வேலை என்கிற அறிவிப்புக்காக, தொழிலாளர் காப்பீடு, மகப்பேறு விடுப்பு, வங்கித்துறை சீர்திருத்தம், ரிசர்வ் வங்கி உருவாக்கம், சமுதாயத்தையே புணர் நிர்மாணம் செய்ய வேண்டுமென்கிற அவரது முன்னெடுப்புகளை நீங்கள் எளிதாக கடந்து விடுவீர்கள். ஆனால் இத்தகைய சனநாயகப் பங்களிப்பின் வழியே வரலாற்றில் அண்ணல் அம்பேத்கர் உறுதியாக இருக்கிறார் என்பதை எவற்றால் உங்களால் மூடி மறைக்க முடியும்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இவற்றுக்கு எதிராக பிராமணியம் இருக்கிறது. அத்துடன்  பிராமணியம், முதலாளித்துவம் இரண்டையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது என்று உறுதியாகச் சொன்னவரைத்தான்  மகாயான புத்தத்தை அம்பேத்கர் தழுவினார் என்கிற புதுக்கதைகளை உருவாக்குகிறார்கள்.  அதனாலென்ன  புத்தரும் அவர் தம்மமும் நூல்கள் தூசிபடிய கிடந்தவை மேசைகளுக்கு வந்து விட்டது.

அண்ணல் புத்தனை அறிவாசானாக ஏற்கிறார் என்பது உண்மையே. ஏன்?

புத்தனுக்கு முன்பு சுரண்டல் போக்கற்ற அறிவினால் கட்டமைந்த ஆன்மீக மரபென்று ஒன்று இம்மண்ணில் இருந்ததில்லை. இருந்த தமிழ் மரபும் பார்பனிய மயமாக்கப்பட்ட சிதைந்த சித்தமரபு மட்டுமே.. இப்போது மடங்களில் பூஞ்சை பிடித்துக் கிடக்கிறது. தனக்கு இடி விழும்போது மட்டும் அது அலறி துடிக்கும் (சமீப தஞ்சை குட முழுக்கு தமிழ், சமஸ்கிருத எதிர் குரல்கள்)

இந்த நிலையில் அற வழியிலான விடுதலையை புத்தனில் இருந்து தான் முன்னெடுக்க முடியும், காட்டுமிராண்டிகளில் இருந்து புற அக பண்பாட்டு அறவியல் மற்றும் சுயமரியாதையுடன் மாயத்தன்மையற்ற நேரிடையான சமூக புரிதல்களை சொர்க்கம், நரகம் மயக்கங்களில் இருந்து விடுவித்து பொதுமை உலகை நோக்கி நகர… ஆசையே பெருங்கேடு அந்த ஆசையைக் காட்டி மக்களை ஏமாற்றும் இந்த அரை வெள்ளை பார்ப்பனியம் அதைவிடக் கேடு என சமூக விடுதலைக்கு மக்களை அணி திரட்டியவர் அம்பேத்கர் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதை கொச்சைப் படுத்துகிறவர்கள் அறியாமை பற்றியென்ன..? இப்போதும் சொல்ல முடியும் ஒட்டு மொத்த மாற்றத்துக்கு அவரே விடிவெள்ளி என்கிற மயக்கம் எமக்கில்லை. ஆனால் அண்ணல் மாற்றத்தை நிகழ்த்த பெரும் வரலாற்று தொகுப்பாலான கைகாட்டி மரம் என்பதை மறுக்கவே முடியாது.

1) உலகமென்பது இடையறாது இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் உள்ளது.
2)
உலகிற்கு பாதுகாவலரோ, பேணுபவரோ ஒருவருமில்லை.
3)
நமக்குரியது ஏதுமில்லை நமக்குப்பின் நாம் அனைத்தையும் விட்டுச் செல்கிறோம்.
4)
உலகம் குறைபாடுடையதாய், ஆசைமிக்கதாய், அடிமையாய் அவாவுற்றதாய் உள்ளது.

மேற்குறிப்பிட்டது புத்தனின்  வார்த்தைகள். இதில் மார்க்கஸிய தத்துவத்தை குலைத்துவிடும் சாராம்சம் எதுவுமிருப்பதாக நாம் அறியவில்லை. விதைத்தபடி அறு என புத்தர் கூறியதின் பொருள் புரிந்தவர் அண்ணல்.

மார்க்ஸியத்தின் அடிப்படை அம்பேத்கருக்கு தெரியாது என்பது வசுமித்ராவின் கண்டுபிடிப்பு. இந்திய சமூகவியல் கோட்பாடு அதன் பண்பாட்டு அறவியல் பற்றி அம்பேத்கரை விடவும் ஒருவர் இம்மண்ணில் கண்டுணர்ந்திருப்பார் என்று நான் நம்பவில்லை.

“எந்த ஒரு எதிர்கால அரசாங்கமும் அதன் பொருளாதாரம் சோசலிச பொருளாதாரமாக இருந்தாலன்றி அது நீதியை எப்படி செயல்படுத்தும்.” அம்பேத்கரின் இந்தக் கேள்வி மார்க்கஸியத்துக்கு எதிரானதா? பொருளாதாரம் என்கிற அடிக்கட்டுமானத்தை மாற்றினால் சாதி என்கிற மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்கிற இந்திய கம்யூனிஸ்டுகளின் புரிதலை அம்பேத்கர் மறுக்கிறார். மிகச்சமீபத்தில் நீலத்துக்கும் சிவப்புக்கும் கறுப்புக்கும் சில புரிதல்கள் ஏற்படும் நிலையில் அதைத் தகர்க்கவே  இந்த வன்மங்கள் திட்டமிட்டு எழுப்பப்படுவதாக சந்தேகம் எழுகிறது.

பொதுவுடைமை தத்துவத்தை அரிக்கும் பூச்சிகள் நிறைந்த இந்திய மண்ணை மிக தெளிவாக அறிந்து… முதலில் இங்கு நிலைகொண்டுள்ள தீண்டாமை, மற்றும் சாதிக் கட்டுமானங்களை பலவீனபடுத்தாமல்.. ரஷ்யா போன்றோ, சீனா போன்றோ இங்கு மார்க்ஸியத்தை அடிப்படையில் ஆட்சியமைக்க முடியாது என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே அம்பேத்கர் உணர்ந்திருந்தார். (ஜோதிபாசுவை ஒருமுறை பிரதமர் பதவியேற்க அழைத்தபோது மார்க்கஸிய கம்யூனிஸ்ட் கட்சி அதை மறுத்தது ஏன்? அடிப்படை மாற்றங்கள் நிகழாமல் ஒரு கம்யூனிஸ்ட் பிரதமராக வருவதால் பயன் ஏற்படப்போவதில்லை என்பதுதானே நிலைப்பாடு. நான் அப்படித்தான் புரிந்துகொள்கிறேன்.. வேறு சில கமுக்க காரணங்களும் இருக்க கூடுமென சந்தேகமும் எனக்குண்டு..) அதே நேரம் மார்க்சியத்தின் நியாயங்கள் குறித்து அம்பேத்கருக்கு இயல்பாகவே புரிதல் இருந்தது. அதற்கான தேவையும் உணர்ந்து அவர் செயல்பட்டிருக்கிறார். மேல் சொன்ன பல விடயங்கள் அதற்கு சாட்சி.

இன்று தனித்தொகுதிகள் ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை. ஆனால் அதன் மூலம் அம்பேத்கர்தான் என்பதை வசுமித்ராக்களுக்கு தெரிந்திருக்குமா தெரியவில்லை…

நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சரானது காலத்தின் குறியீடு மனுவின் சட்டங்கள் இருந்த இடத்தில் அதற்கு மாற்றாக ஒன்றை வடிக்க தகுதியான ஒருவர் அவர் மட்டுமே இல்லை. 7 பேர் கொண்ட குழுவாக இருந்திருக்கலாம், ஆனால் அதன் தலைவராய் மட்டுமில்லாமல் அதன் மொத்த சுமையையும் சுமந்தவர் அவரே என டிடிகே போன்றவர்கள் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்களே..

இந்திய மண்ணுக்கேற்ற மார்க்கசியம் என்கிற புரிதலுக்கு இன்னமும் கூட நாம் வந்திருக்கிறோமா தெரியவில்லை. ரஷ்யாவில் நடந்ததும், சீன, வியட்நாம்களில் நடந்ததும் மண்ணுக்கேற்ற மாற்றங்களுடன்தானே.? இந்த மண்ணில் எப்போதுமே மாற்றங்கள் நிகழ்ந்துவிடக் கூடாது என்று காலம் தோறும் அரசியல் கள்ள தீர்க்கதரிசிகள் வந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் மார்க்சிய போர்வை அவசியமாகிறது. கட்சிகள் எப்படி அனுமதிக்கிறது… என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. அதுதான்  விசித்திரமான இந்திய மனோபாவம். அம்பேத்கரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியுமா? அப்படி புறக்கணிக்கிறவர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது.

ஆண், பெண் குறிகளை அவர்களுடனான புணர்ச்சிகளை கவிதையாக்கி அறிவு தம்பட்டம் அடிக்கிறவர்கள் அம்பேத்கரை, புத்தனை வார்த்தையாக்கி விளையாட நமக்கு இப்போதைய புரிதல் அவசியம் அண்ணலை வாசிப்பது அதை தீவிரமாக இலக்கியமாக்குவது. அதோடு  மார்க்கஸ், அம்பேத்கர், பெரியார் இவர்களின் லட்சியங்கள் எந்தப் புள்ளியில் இணைகிறதோ அதை அரசியல் வடிவமாக முன்னெடுப்பது… முக்கியமாக மார்க்கசிய போர்வையில் புளியேப்பமிடும் ஆட்களை கண்டடைந்து அவர்களை பொதுவெளியில் அடையாளம் காட்டுவது. சர்வாதிகாரத்தில் மட்டுமல்ல சனநாயகத்திலும் களையெடுப்பு அவசியம்.

 ஆயிரம் மாயக்கைகளால் உருமறைப்பு செய்து கொண்டு ஒடுக்கப்பட்டவனின் வியர்வையை மட்டுமல்ல, உடலையும் சுதந்திரமாக அனுபவித்த கொடூரங்களை தர்மமென நியாயப்படுத்திய மண்ணிது… அந்த கொடூரங்களின் 2000 வருட வரலாற்றை முற்றாக அறிந்த அறிஞர் ஆயதங்களை நாடாமல் கருத்தியலை நாடியது ஏன்? என்பதை புரிந்து கொள்ள தவறுகிற ஒருவர் தன்னை மார்ஸிஸ்ட் என்று அழைத்துக்கொள்வார் என்று நான் நம்பவில்லை.. அதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமற்ற பாசாங்கு காரணமாக இருக்க வேண்டும். அண்ணல் வன்முறை பாதையை தேர்வு செய்வதினின்று விலகி புத்தனின் பாதைக்கு செல்கிறார். சாதி இந்துக்கள் இவ்வளவு காலம் நமக்கு செய்ததற்கு பதிலாக அவர்கள் மீது பழிக்கு பழி என்பதாக மாறினால் அதன் துயரம் எத்தகையதாய் இருக்கும் எனபது கற்றறிந்த அந்த மனிதருக்கு தெரிந்திருக்கிறது.

இந்து மதத்தை விட்டு விலக அவர் பலவிதமான ஆய்வுகளின் முடிவிலே பவுத்தத்தை தேர்ந்தெடுக்கிறார்..

1) உலகமென்பது இடையறாது இயங்கிக்கொண்டும் மாறிக்கொண்டும் உள்ளது. இது புத்தனின் வார்த்தை. 2500 ஆண்டுகளுக்கு முன் புத்தன் சொன்னான் ஆனால் இன்னும் இந்த நிலம் இந்து மதத்தாலும் அதன் கொடூர சாதியமைப்பாலும் மேலும் மேலும்.. நசுக்கி கூழாக்கப்பட்டபடியே இருக்கிறது.. ஒவ்வொரு மனிதனும் தனக்கு கீழே ஒரு அடிமை இருக்கிறான் என்று திருப்திகொள்ளும் மனநிலைக்கு பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறான். சுரண்ட லாபகரமான அதை அவன் எளிதாக கைவிடத் தயாராகுமளவு இங்கு பிழைப்புச் சூழல்கள் உத்திரவாதபடுத்தப்-படவில்லை… இந்தச் சூழலில் மார்க்கஸியம் தற்போதைக்கு சாத்தியமல்ல என்கிற முடிவுக்கு அம்பேத்கர் வந்தார் என கருத இடமுண்டு. ஓரளவு கறைபட்ட தாளில் புதிய ஒன்றை எழுதலாம் மிக மோசமாக குப்பையாக்கப்பட்டதில் எப்படி எழுதுவது.

(லெனினுடன் இரண்டாம் அகிலத்தில் கலந்து கொண்ட இந்தியர்களும் உண்டு. இம் மண்ணுக்குள் மார்க்கஸியம் நுழைந்து 100 ஆண்டு கடந்துவிட்டது) அம்பேத்கர் எவ்வளவு தூரம் கம்யூனிசத்தை புரிந்து கொண்டார் என்பதை மேற்சொன்னவைகள் கொஞ்சம் விளக்க கூடும். ஆனால் அம்பேத்கரை கம்யூனிஸ்டுகள் எவ்வளவு புரிந்து கொண்டார்கள் என்பது நமக்குத் தெரியாது. அவர் நசுக்கப்பட்ட மக்களை பிரித்து பலவீனப்படுத்துகிறார் என்று குற்றம் சாட்டியிருக்கலாம். அவர் அன்றைய சமூகச்சூழலை பிரதிபலித்தார்.
        
ஆயிரமாயிரம் கொடூரக்கைகள் வழியே ஆண் பெண் உடல்கள், அவர்களது உழைப்பு என பெருமிதத்துடன் உறிஞ்சிக்)கொழுத்த மனசாட்சியற்ற பூமியிது. சுரண்டப்பட்டவன் தன் கண்ணை தன் கைகளாலே குத்திக்கொள்கிற அவலம் தனக்கு மேலானவன் என்று சொல்லிக்கொள்பவனை ஏதாவதொரு சமயத்தில் தீண்டிவிட்டால் வசைச்சொற்களுடன் தாக்குதலுடன் எசமானுக்கு பாவம் சேர்த்து விட்ட துயரத்தை சுமந்தவன் தன்னை கழுவிக்கொள்வது தன் மீது துப்பப்பட்ட எச்சிலை கழுவ அல்ல தனக்கு மேலானவனை தீண்டியதற்கான பாவம் தனக்கு வந்து சேரக்கூடாது என்பதற்காகவே…

அந்தளவு மனரீதியாக நாசமான சமூகத்தில் இன்றைக்குள்ள மாற்றங்கள் என்ன என்பது வசுமித்ர போன்ற ஆட்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தானே….

அந்த கேடுகெட்ட அடிமை மனநிலையிலிருந்து இந்திய தொல்குடிகளை மீண்டெழசெய்தவர் அண்ணல் என்பது காழ்ப்புணர்ச்சி பரிதாபங்களுக்கு தெரியாது என்பதால்தானே ஒவ்வொரு மாதமும் அண்ணலின் சிலைகள் உடைக்கப்படுகிறது, செருப்பு மாலைகள் அணிவிக்கப்படுகிறது.

“எனக்கு தாய்நாடு கிடையாது நாங்கள் நாய்கள், பூனைகளை விட இழிவாக நடத்தப்படுகிறோம் எங்களை இப்படி நடத்தக் காரணமான மதத்தை எங்கள் சொந்த மதம் என்று எப்படி சொல்வது. காலங்காலமாக நசுக்கப்பட்டுக் கிடக்கும் என் மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தரும் முயற்சியில் இந்நாட்டிற்கு ஏதேனும் கேடு செய்திருந்தால் அது பாவமாகாது”  என்று அம்பேத்கர் சொன்னது காந்தியிடத்தில்.

அண்ணலை ஆரம்பத்தில் புரிந்து கொள்ள முடியாதபடி ஒருவித ஒவ்வாமை இடதுசாரிகளுக்கு இருந்தது. காரணம் இந்திய மனம் விசித்திரமானது அது பல விதங்களில் நுண்மையாக நாசமாக்கப்பட்டுள்ளது, இப்போதும் அது தொடரவே செய்கிறது. அதை முடிவுக்கு கொண்டு வர சமரசம் தேவை என்பதைவிட உண்மையான புரிதல் பலன் தரும்…. நல்ல மனமும் படிப்பறிவும் உள்ளவரையும் தடுமாற வைக்குமளவு மதமும் அதன் சாதிய படிநிலைகளும் அவர்கள் மண்டையில் எல்லா அடுக்குகளிலும் பரவி படந்திருக்கும்.. மார்க்கஸிய, அம்பேத்கரிய, பெரியாரிய லட்சியங்களில் பல காலமாக சுயவிருப்புடன் இருப்பவர்கள் கூட பிறழ்ச்சியுறுவதைப் பார்க்கிறோம்.

புத்தனின் ஆண்குறி பூனை இப்போது வெளியே குதித்து வந்ததல்ல.. இது பழைய பூனைதான். அவர் அம்பேத்கரை விமர்சிக்கவில்லை.. விமர்சித்தால் அது அவரது உரிமை. அந்த விமர்சனம் சரியாக இருப்பின் ஏற்கவோ, புரிதலற்றிருந்தால் மறுத்து புரியவைக்கவோ முயலலாம். ரங்கநாயகியம்மாளைப் படிக்காமலே கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக இந்திய வர்க்கம் மற்றும் சாதியப் பிரச்சினைகளுக்கு  மார்க்சுடன் அம்பேத்கரும், பெரியாரும் தேவை என்கிற இடத்துக்கு வந்திருக்கிறோம்  

ரங்கநாயகி அவரது புரிதல் மூலம் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துப் போகிறார். ஏற்கனவே 100 ஆண்டுகள் கடந்தும் யாராவது ஒரு நடிகனின் தோளில் ஏறிக் கடக்கும் நிலைக்கு காரணம் என்ன? என்று நாம் தான் தோன்றித்தனமாகக் கேட்கவில்லை.

பல்லாயிரக்கணக்கான மாற்றத்தை விரும்பும் மக்களின் கேள்வியாகவும் இருக்கிறது… அதற்கு காரணம் இது மாதிரியான புரட்சிப் பூனைகள் அடிக்கடி ஒற்றுமையைக் குலைக்கும் விதமாக பைகளில் இருந்து வெளியே வருவதுதான் என குற்றம் சொல்ல முடியும். ஒரு கேள்வி அல்லது ஒரு குற்றச்சாட்டு உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துமென்றால் அது அவசியமானதே என்று நாம் சொல்லுவோம். தங்கள் சொந்த வரலாறுகளையே பாதுகாக்காதவர்கள், மக்களிடம் கொண்டு செல்லாதவர்கள் மார்க்ஸிஸ்டுகள் என்று நம்மால் குற்றம் சாட்ட முடியும். வியாசர்பாடியில் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு பெயர் காரணம் கேட்டால் விழிக்கும் இளையவர்கள் ஏராளம்.

ஜீவாவை ஏன் நீங்கள் முன்னெடுத்துச் செல்லவில்லை என்கிறது போல ஆயிரம் சறுக்கல்கள்.

அம்பேத்கர் பவுத்தம் மாறியது ஒரு சறுக்கல்

அந்த அவசியத்துக்கு போனார் என்கிற சமூக வரலாறை உங்களால் சிந்திக்க முடியாது. அதற்கான அவசியம் இவர்களுக்கு இல்லையென்பதைத் தவிர வேறு என்ன? சூத்திரனாய் கடைசி படியில் இருப்பவனும் சாதிக்கு வெளியே தான் சுரண்டிக்கொள்ள ஒருவன் இருக்கிறான் என்கிற மமதை ஏறிய சமூகம்தானே இது. சாதியின் முதல் படியில் இருந்தும், கடைசி படியில் இருந்தும் மார்க்ஸியத்தை அனுகுவதற்கும், படிகளுக்கு வெளியே நான்கு பிணத்தையும் சுமந்து குமுறும் ஐந்தாவது பிணமான ஒன்றுக்குமான இடையிலான மூச்சு திணறும் அநீதியில் அவருக்கு புத்தன் தேவைப்பட்டார்.. மார்க்ஸிய பார்வை விடுத்து இந்திய மூச்சுத்திணற வைக்கும் சூழலில் அவர் எடுத்த முடிவு சரியில்லை என்று சொல்வது உங்கள் விமர்சனமாக இருக்கலாம். அதைபற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் பாலியல் வக்கிர கவிதை முணுமுணுப்பு போல புத்தனின் ஆண்குறியில் அம்பேத்கார் அறிவைத் தேடினார் என்று மலினப்படுத்துவது என்பது கேடுகெட்ட சிந்தனை எனபதை தவிர வேறு என்ன?…

100 ஆண்டுகளுக்கு பிறகு அம்பேத்கரை புரிந்துக்கொள்கிற அல்லது இணக்கமாக பணியாற்ற விரும்புகிற இளைஞர்கள் உருவாகிற காலத்தில் உங்கள் விளம்பரங்களை மலிவான வார்த்தைகளில் தேடி புத்தனுக்கு பின் இம்மண்ணில் சனாதனத்தின் மேல் மிக உறுதியான கேள்விகளை வைத்தது மட்டுமின்றி தன் மக்களில் கணிசமானோரை அதற்கு தயார் செய்தது அம்பேத்கர் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?

மார்க்கஸியம் நுழைந்த நிலங்களில் அதிகளவாக 25 ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தை கைபற்றியிருக்கிறார்கள் .நாம் 100 ஆண்டுகளில் தேய்ந்து தேய்ந்து சின்னப்புள்ளியாக ஏன் ஆனோம் என்கிற விமர்சனத்தை  உங்களால் ஆய்வு செய்ய முடிந்ததா? அதற்கான காரணத்தையாவது கண்டுபிடித்திருக்கிறீர்களா?  இப்போது தானே சிவப்பு, நீலம், கறுப்பு கூட்டு அரசியல்கள் பற்றிய முன்னெடுப்புகள் நடக்கிறது. இப்போது அதிலும் கீழறுப்பு வேலைகளை துவக்குவது யார்? இங்கிருந்து போனவர்கள் கம்யூன்களின் முதல் இரண்டாம் அகிலங்களில் கலந்து கொண்டவர்கள் என பழைய சரித்திரம் கொண்ட கட்சியின் இன்றைய நிலை என்ன? அதை விவாதிக்காமல் ஆய்வு செய்யாமல் கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தின் ஒற்றை விடிவெள்ளியாகத் துலங்கி மனிதன் கல்வியின் துணையால்,  நாடு முழுதும் நசுங்கிக் கிடந்த ஒரு சமூகத்தின் முதுகில் தட்டி சுழன்றெழச் செய்து நாமும் மனிதர் தாம், நாமும் சகலமானோர் போல தான் என்று உணரச் செய்தவர்களில் அம்பேத்கருக்கு பங்கில்லையா?

இன்று நீங்களும் நானும் அனுபவிக்கும் சட்டம் இந்து சட்ட மரபிலானது தான். மறுக்க முடியாது. ஆனால் அதில் குறைந்தளவேனும் மேற்கத்திய சாயலுடன் இந்திய சாதிய வன்முறை அமைப்புக்கு கடிவாளம் போடும்படியான நுணுக்கமான சட்ட வரையறைகள் எழுதப்பட்டதற்கு முக்கிய காரணம் அம்பேத்கர் என்பதையும் அதற்கு அவரது கற்றறிந்த மேதமையும் தான் என்பதை மறுப்பவர் தானா நீங்கள். புத்தாடையை கூட வணிகன் சேற்றிலே புரட்டியே தீண்டபடாதவனுக்கு தருவான் என்கிற இழிவான கலாச்சாரச் சூழலில் பிறந்த மனிதனின் முயற்சியால் இன்று ஆயிரமாயிரம் மனிதர்கள் சட்டம் பயில போகிறார்களே, படித்து உயர்பதவி வகிக்கிறார்களே இதற்கெல்லாம் இதிலெல்லாம் அம்பேத்கரின் பங்கு அவரது அறிவாற்றல் எதுவுமே இல்லையா?

 2000 வருடமாக வேட்டையாடப்பட்ட மனிதனின் துயரம் அவன் வீறுகொண்டு சாதித்து ஒரு பெருஞ்சமூகத்தையே தன்னம்பிக்கை கொள்ள வைத்த வரலாறு உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையென்றால் ஆச்சரியப்பட ஒன்றுமேயில்லை எனும் என்பது இந்திய சாதிய சமூகத்தின் அவலமானதொரு கூக்குரலின் அங்கம் தானே என்று நாங்கள் புரிந்துக்கொள்ளலாமா?… அண்ணலைப் பின்பற்றுகிற எல்லா தலித்தும் பவுத்தத்துக்கு மாற வரிசையில் நிற்கவில்லை அதன் தலைவர்கள் யாரும் அதற்கு அறைகூவல் விடவுமில்லை.

வரலாற்று அடிப்படையில் தமிழர்கள் பவுத்தரே. பவுத்தம் பார்ப்பனிய கசடை எதிர்க்க வந்த ஒரு பண்பாட்டு முறை. அது மனிதனை நான்காக ஐந்தாக பிரிக்கவில்லை. அதில் உள்ள இடைச்செருகல்களையும், மாயக்கசடுகளையும் அம்பேத்கர் ஏற்கவில்லை… பவுத்தம் ஏற்பவன் விஷ்ணு, சிவன், பிரம்மா என்கிற எதையும் ஏற்க கூடாது என்பது விதி… இந்த மறுதலிப்பைச் செய்ய வேண்டிய வரலாற்று அவசியத்தை நீங்கள் விமர்சிக்கலாம். அதை வக்கிர வார்தைகளால் கொச்சைபடுத்த முடியாது.

அவ்வப்போது குதித்து வரும் பூனைகள் இந்த மண்ணில் மாற்றம் நிகழ்ந்துவிடவேக் கூடாது என கங்கணம் கட்டித் திரிகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அம்பேத்கர் கம்யூனிஸ்ட் இல்லை மார்க்கஸியப் பார்வையில் அவரிடம் பதில் தேடுவதில் சில முரண்களை உருவாக்கும். ஆனால் லெனினிய பார்வையில் அணுக ஒரு வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அது எப்படி?

வி.இ.லெனின் அவர்கள் டால்ஸ்டாயை எப்படி அணுகினார் என்பதை உண்மையான கம்யூனிஸ்டுகள் அறிவார்கள். டால்ஸ்டாய் இலக்கிய மதப்பிரச்சாரத்தின் மூலம் மக்கள் விடுதலை பெற முடியும் என்ற நம்பிக்கையுள்ளவர் என்று குற்றம் சாட்டிய அதே லெனின் தான் “எப்பேர்பட்ட மகத்தான கலைஞர் நம் டால்ஸ்டாய். இந்த பிரபு எழுதுவதற்கு முன் உண்மையான ரஷ்ய குடியானவன் நம் இலக்கியங்களில் இடம் பெறவேயில்லையே… ம் இவருக்கு இணையாக ஐரோப்பாவில் ஒருவரையும் சொல்ல முடியாது” என்று மக்சிம் கார்க்கியிடம் சொன்னாராம்.

“டால்ஸ்டாய் அநீதிக்கு எதிரான கண்டனக்காரர், அநீதிக்கு எதிராக மீது குற்றம் சுமத்துபவர், சுரண்டலைப் பற்றி பேசியவர் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை புரிந்துக்கொள்ள தவறி விட்டார்” என்கிற குற்றச்சாட்டையும் வைத்தவர். இதுதான் மிகச்சரியான மார்க்ஸிய அனுகுமுறை என்பது என் கருத்து. ஒர் உண்மையான கம்யூனிஸ்ட்டுக்கு தெரியும், தெரிந்திருக்கும் அம்பேத்கரை எப்படி அணுக வேண்டுமென்று.    

எலும்புகள் சதையாகவும், சதைகள் எலும்பாகவும் இருந்திருக்கலாம்.

படைப்பில் தவறு நிகழ்ந்துள்ளது என்கிற போக்கில் பகிரங்கக் காழ்புணர்ச்சிகள் சதைகள் எலும்பாக இருக்குமானால் குறிகள் துவளாதென ஞானத்தைப்பொழியும் அசட்டுத்தனமான வார்த்தைகளால் அம்பேத்கரை பகடி செய்கிறார்கள்… பகடியும், விமர்சனமும், குற்றச்சாட்டும், இகழ்ச்சியும் வேறுவேறானவை. அவையனைத்தையும் திட்டமிட்டு ஒரு வார்த்தையில் இணைக்கத்தெரிந்தவர்கள் பொதுவுடமை சமூகத்தை கட்டுகிறவர்களா? அடிப்படையில் மார்க்ஸியர்கள் ஆகச்சிறந்த ஒரு ஆளுமையை எதன் பொருட்டும் முகம் சுளிக்கவைக்க மாட்டார்கள்… சிலர் திட்டமிட்டு செய்கிறார்கள் என்றால் 50 ஆண்டுகள் மீண்டும் பின்னோக்கி செல்கிறார்கள் என்று பொருள்.

இரண்டாயிரம் வருடமாக  கேட்கத் துணிந்தாலும் அதை நிறுவ முடியாத இடத்தில் இருந்து பீறிட்டுக் கிளம்பிய 25 வயது இளம் அம்பேத்கரை,  குழு குழுவாக இருந்த சமூகம் அகமண முறைகளால் மெல்ல வளர்ச்சியடைந்ததென 25 வயது இளைஞரான அம்பேத்கரின் இந்தியாவில் சாதிகளின் தோற்றம், அவற்றின் வளர்ச்சி என்கிற நூலைப்படிக்கட்டும்.  அம்பேத்கரின் பாய்ச்சல் புரியும். இங்குள்ள எந்த மார்க்கஸியரையும் விட அம்பேத்கர் மார்க்ஸை படித்தவர் என்பதை ஒரு பகட்டான வார்த்தையாக நான் சொல்ல மாட்டேன். அது உண்மையான மார்க்கஸியர்களுக்கே புரியும். ஏன் அவர் அதை ஒவ்வாமையோடு பார்த்தார் என்று ஆய்வு செய்யாமல் அம்பேத்கர் ஒன்றுமற்றவர் என்று ஆக்க நினைப்பவர்கள் ஒன்றுமற்றவர்கள் என்று தன்னையே நிருபித்துக் கொள்கிறவர்கள் என்பது நம் புரிதல்.

சாதிய சமூகத்துக்கும், சாதியற்ற சமூகத்துக்குமான போராட்டம் இங்கு காலகாலமாக நிகழ்ந்து வந்திருக்கிறது என்று அம்பேத்கர் சொன்னதன் பொருள் புரிந்தால் புத்தனின் குறியில் அம்பேத்கர் அறிவை பெற்றார் என்று சொல்லும் வாய்ப்பு வசுமித்ரவுக்கு இருந்திருக்காது…. அது அவருக்கு புரியாது.

மதம் கருணையற்ற உலகின் கருணையென மார்க்ஸ் சொன்னது வசுமித்ரவின் காதில் விழுந்திருந்தாலும் கொஞ்சம் நிதானித்திருப்பாr. அம்பேத்கர் இம்மண்ணில் தன் மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு  அறத்தின் வழியே ஒரு மாற்றத்தை விரும்பினார். நீங்கள் மகாத்மாவென்று புகழும் காந்தியளவு கூட அம்பேத்கர் வன்முறை செய்தவரல்ல. உண்ணாவிரதம், அகிம்சை என்பது உலக கண்ணோட்டம். உண்மையில் அது அகிம்சையா? உங்களால் அதை மார்க்கஸிய கண்ணோட்டத்துடன் பார்க்க முடியுமா? உறுதியாக சொல்ல முடியும் காந்தியின் உண்ணாவிரதம் மிகப்பெரிய வன்முறை ஆயுதம்…

எரவாடா சிறையில் உண்ணா நோன்பிருந்த காந்தியின் உயிருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் அம்பேத்கருக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் என்ன நேர்ந்திருக்கும்.? அகிம்சா மூர்த்தியின் பக்தர்களால் என்ன நேர்ந்திருக்கும்?
  
அம்பேத்கர் நடத்தியது பசியைப் போக்கும் போராட்டமல்ல. மாறாக  சுயமரியாதைக்கான விடுதலைப் போராட்டம். புத்தனுக்குப் பிறகு சனாதனங்கள் அலறிய வெகு சிலரில் அம்பேத்கரும் ஒருவர். அம்பேத்கரோடு சமரசம் செய்து கொள்ள அது செய்த எல்லா ஏற்பாடுகளையும் தனியொருவனாக முறியடித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவர் சாதித்துக் காட்டினார். அவர் மட்டுமா 8 பேர் என்று உடனே கொதிப்புறுபவர்கள் அவரது குழுவிலிருந்தவர்களின் வாக்குமூலங்களைப் படித்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறோம் .

“இந்து மதத்தில் இருந்து கொண்டே சமத்துவத்துக்காக போராடுவதில் எந்த பலனும் இல்லை… கடவுளே என் கண்முன் வந்து இந்து மதத்தை விட்டுப் போகாதே என்று சொன்னாலும் பவுத்தத்துக்கு மாறும் என் முடிவிலிருந்து நான் பின்வாங்கப் போவதில்லை” என்று அம்பேத்கரை எது தள்ளியது?… உங்களுக்கு தெரியாது ஏனெனில் உங்களுக்கு அது புரியாது என்பதுதான்.

ரங்கநாயகியம்மாளை புரிந்த உங்களுக்கு அம்பேத்கரை புரியாது. அதனால் புத்தனையும் புரியாது. இனி மற்றவர்களாவது புரிந்துக்கொள்ள நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய புரிதல். அம்பேத்கருக்கு புறக்கணிப்போ, அவதூறுகளோ புதிதல்ல..

சனநாயக அறம், சுதந்திரம், சமத்துவம் இது அனைத்தும் பவுத்த அறத்தில் மையம் கொண்டிருப்பதை உணர்ந்த அம்பேத்கரை உங்கள் புரிதலற்ற கிறுக்கலான அளவுகோல்களால் அளக்க முடியாது. அம்பேத்கரின் அறிவே அவருக்கு அளவுகோல்.

மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் இம்மூன்று வண்ணங்களும் இம்மண்ணில் மாற்றங்களை நிகழ்த்துமென செயல்படுகிறவர்களுக்குத் தெரியும் அம்பேத்கர் புனிதரல்ல, புரட்சியாளர். புரிந்து கொள்ளப்பட வேண்டியவர் என்பதுடன் விடுதலைக்கு அவரே இறுதியல்ல, ஆனால் மாற்றத்தை நோக்கிய பயணத்தின் மைல்கல்.


ரன் கார்க்கி
சென்னை-12
தொடர்புக்கு – jdkarankarki@gmail.com


யவனிகா ஸ்ரீராம் கவிதை

0

கலைந்த தலை

டெர்மினல்களில் இரவு நிற்கிறது
மரக்கூட்டங்களிடையே வெளிர்ந்து
மினுக்கும் நட்சத்திரங்கள்
கட்டண கார் ஷெட் பகுதியில் அழுகுரல்
பலகணியில் என் கலைந்த தலை
உடல் நடுங்குகிறது
அங்கு நான் எதையும் காணவில்லை
சொல்ல மாட்டேன் அவசியமற்றது
உண்மையில் பார்த்தேன் அக்காட்சியை
இட்சிப் பழங்கள் சிதைந்த துர்நாற்றம்
மசகெண்ணையின் மூக்கரிபபு
சாலைகளின் கடும் இறுக்கம்
மரங்களில் ஏனோ பறவைகள் நிதானம் இழக்கின்றன
விதைகளின் உறைக்குள் போய்த்
திரும்ப உறங்குவேன் போலும்
இக்காலங்களுக்கு ஏற்ற ஒரு
நாசகாரன்
டெர்மினல்களில் கடும் குளிர் சீறுகிறது
ஓ மகிழ்ச்சியான காட்சி
பல்லாயிரம் முதியவர்கள் தேங்கி இருந்தமைக்காக
வெட்கித் தலை குனிந்தபடி
இந்நகரைக் அமைதியாய்க் கடந்து
போய்க்கொண்டிருக்கிறார்கள்.

Disheveled Hair

Night stands in terminals
The stars twinkle dimly amidst trees
Near the pay car shed there was a cry
In the balcony my disheveled hair
My body shivers
I didn’t see anything there
I won’t say … it’s not necessary
In fact I saw it
That scene
The fowl rotten smell of ‘ itchy ‘ fruits
The itching of the nose due to grease
In highways there was severe coarctation
In trees somehow birds lose their patience
I would go back into the husk of a seed and
sleep I think
A destroyer suitable for these times
In terminals cold hisses
O a very happy scene
For having lived for long thousands of
old people go out of this city bowing
their heads in shame

(translated by Shanmugam Kaniyamuthu)

எஸ்.சண்முகம் கவிதைகள்

0

1

கோணங்களில்லா மடல் அடுக்குகளுக்கு இடையில்
வண்ணங்களின் மெல்லிய வேறுபாடுகளே உள்ளன
அது நம் முன்னேயுள்ள
ரோஜாக்களின் பூரணத்தைக் காட்டிலும்
அதனருகிலும் சற்று அப்பாலும்
நமக்கு புலப்படாத வடிவத்தையே
பிரதிபலிக்கிறது

என்றைக்கும் போல் அல்லாது
நன்னீரில் கழுவி
தனிமலராய் அன்றி விரல்விட்டு எண்ணாமல் கொத்தாய்
அருகில் வைத்த போதும் சரி
தூரத்திலுள்ள பூஜாடியில் செருகிய பின்னரும்
மிச்சப்பட்டதை மேசையில் வைத்து
அதைப் பலமுறை பார்த்தும்

இன்றைய நிகழ்வொன்றின் வன்அவலத்தைத் தவிர
ஏனோ அபூர்வமாய் ஒன்றும் வாய்க்கவில்லை.

2

தயக்கத்துள் அகப்பட்டுக் கொண்டுள்ளது
நெருங்கிவரல்
சகமுகர்தலின் இனிமையும் அகன்றுவிட
தொடுவுணர்வின் சிலிர்த்தலும்
இனி எந்நாளில் வாய்க்குமோ
போகட்டும்

முன்னெப்போதும் போலல்லாது
அடிக்கடி
ஆடியில் தன்னுருவைக் காண்பதைத் துறக்க
எதிர்புறமாய்த் திருப்பி வைத்துவிட வேண்டும்
அப்போதுதான் சமீபத்திய சுயமாறுதல்களைக் காணாதிருக்கலாம்

திறக்கப்படாமல் புழுதியடர்ந்திருக்கும்
அக்கம்பக்கத்து இல்லங்களின் சாளரத் திரைகளில்
உள்ள பூவேலைப்பாடுகள் மாறா நேர்த்தியுடன்
இரவும் பகலும் விலக்கப்படாமல் தொடர
உணர்வினிலசைந்த வண்ணமாய் நானிருக்க
எல்லோரும் அங்கங்கு இருக்கவே செய்கிறார்கள்.

3

தேங்கிய நீரில் நிற்கும்
வெண்நாரையின் கால்
சிறிதே மூழ்கியுள்ளது

அதைச் சுற்றிலுமுள்ளவை எதிலும்
உளம்பதியவில்லை
செல்லும் வாகனத்தின் வேகமும்
பின்னோக்கிப் பாயும் தார்ச்சாலையோட்டமும்
முக்கியத்துவமற்றுவிட்டன

அதன் கண்களின் வட்ட அளவும்
கழுத்தின் வளைநேர்த்தியும்
அவ்வபோது தன்னுடலினை உதறி
எதையோ நீத்துவிட்டு
மோனமுறுவதுபோல இருத்தல்
இன்றளவும் நீங்கா காட்சியாகும்

புதிய நிலங்களையும் பல்லுயிரிகளையும் காணவிழையும் மனோவியம்
இனி வாய்க்க
வாசலருகே ஒற்றைக்காலூன்றி நின்றபடி
தெருமுனையில் ஏதுமில்லாமையை அடைகாக்கும் வாழ்தலானது.

4

கைபேசியின் தொடுதிரை வெளிச்சத்தைத் தவிர
பக்கத்தில் எதுவுமில்லை
ஒளிமுகமாகிவிட கருமையின் எல்லையில் நின்றிருக்கும்
ஒன்றினை காணுவதற்கான விழைவுதான்
இந்நிலை

குழப்பத்தின் பேய்மைச் சுழற்சியிலிருந்து விடுபட
துளியளவு துயில் நிலைத்தலுக்குள் அமிழ்ந்து
கனவு நிறைவுறும் தருவாயில்
விழிக்காமல் தொடரப் பழக வேண்டும்

நாளையின் இருப்பத்துநாலு மணிநேரம்
கால்களில் போர்த்திய போர்வையின்
அலங்கோல மடிப்புகளென கிடக்க

என்னை எல்லோருடனோ அன்றி
ஒற்றையனாகவோ கடந்துவிடுதல்
நிகழப் போகிறதே தவிர
தடுமாறக் கூடுதலாக ஒன்றுமில்லை.

5

காம்போடுள்ள மலரொன்றை
அதன் இதழ்களில் ஒன்றுகூட வீழாமல்
உளத்திலும் விரல்களிலும் சுழற்ற வேண்டும்

திசைகளும் கூடவே சுற்றினாலும்
வாழுமிடம்தான் யாவற்றுக்குமானது என
குரலொன்று ஏதொவொரு திசையிலிருந்து
மிதந்து நெருங்கிவர

எதன் மணமென்று பிரித்தறிய இயலவில்லை
ஆனாலும்
முதல்நுகர்வில் திளைக்கும்போது
வீழத்துவங்கும் இதழ்களால்
அம்மலரைக் ஏந்திய நிறைவு
சிறிதும் என்னுள் மறையவில்லை.

6

இன்னும் சுவைக்க நிறையவே மிச்சமுள்ளது
வழுவவும் தீர்க்கமடையவும் நாட்கள் தேவை
அதுவே ஆண்டுகளாகவும் மாறக்கூடும்

மலைமுகட்டில் தென்படும் மங்கலான அசைவை
அடிவாரத்தில் நின்றுணர்கையில்
கடக்கும் வாகனத்தின் வேகம்
என்னில் பதியாத வண்ணம்

சற்றே பின்வாங்குதலை
பிரயத்தனமின்றி பழக்கிக் கொள்ள
அவகாசம் தேவைதான்

காலருகிலுள்ள பூமியிலுள்ள ஊன்றி நிற்கும்
நாணலொன்றின் ஈரத்தீண்டலைச்
சுயத்துடன் இணைத்துவிட்டால்
மிச்சமென ஏதுமில்லை
இனியும்.

7

ஏதோ ஒன்றை மறந்தே தீரவேண்டும்
எனது இடதில் நினது வலதில்
யார் யார் பக்கத்திலிருந்தோம்

ஒரு தோள்மீது கேசச்சுருளின் தவழல்
மறுதோளின் வெறுமையில் பதியும்
என் அணுக்க கவனம்

நானறியாதுபடும் நின் சுவாச இளகல்
கம்மலான குரலில் வினவியதற்கு
பதிலுரைக்கையில் இருவரும்
உள்வாங்கிக் களித்த நாசிமூச்சினில்
நாம் உருவற்றுப் போனாலும்

அமர்ந்தெழுந்த இருக்கையில்
இருவரது தகிப்பு மட்டும்
ஏனோ விலகாதிருக்கிறது
இன்றளவும்

8

ஒரு செடி அசைந்ததைக் கண்ட
அலாதியான இடமும் காலமும்
மறந்து போய்விட்டாலும்

சற்று அப்பால் நெடிதுயர்ந்த
தருவின் பெருங்கிளையில் சமைந்திருந்த
நீள்அலகு வெண்பறவையின் அசையாமை
எதிர்பாராதபோது கலைந்து மீண்டெழுகையில்

சுருங்கி நீளும் கழுத்தும் குரலும்
இன்றும் உடனிருப்பினும்
அது எந்த ஊரென்று
உடனே சொல்ல இயலவில்லை

அன்று அங்கிருந்ததும்
இன்று இங்கிருப்பதும்
வேறில்லை.

***

ஆசிரியர் தொடர்புக்கு – s.shanmugam65@gmail.com

சமயவேல் கவிதைகள்

0

புளிப்பு இசை

தொலைவில் ஒலிக்கும்
அதிகாலை நாகஸ்வர மேளம்
திடீரென ஒரு புளிப்புக் காற்றைக் கொண்டு வருகிறது.
எவ்வளவு காலப் புளிப்பு

அயர்ச்சியூட்டும் சில
திருமண மண்டபங்கள்
சில தூக்கமிலாக் கண்கள்
சில பதைபதைப்புகள்
சில கூச்சல்கள்
நூற்றுக்கணக்கான முகமூடிகள்

அன்றாடத்தின் ஆண்முகங்கள்
அலுங்காத பெண்முகங்கள்

காலத்தால் சபிக்கப்பட்ட
துர்பாக்கியம்
இந்த அதிகாலை.

***

பார்வதி அடிக்கடி தனக்குள் மூழ்கிப் போகிறாள்

பிரார்த்தனை செய்வது போல
அரைக்கண் மூடி நிற்கையில்
அவள் அவளாக இருக்கும் தேக்குமர அழகைக் காண
அங்கே ஒருவரும் இல்லை.

தற்கணத்தை விழுங்கி விட்டதால்
எக்காலத்தில் அவள் உலவுகிறாள் என்பதை
அறியவியலா சோபையில்
உறைந்து போகிறது
மெழுகுமுகம்

நினைவுகள்
ஞாபகங்கள்
எல்லாம் புதையுண்ட மண்மேட்டில் மலர்களைத் தூவுகிறாள்
அடைபட்டுப் போன சகல திசைகளிலும்
மஞ்சள் அரிசி விதைக்கிறாள்

எதிர் காலத்தில்
ஒரு நொடி கூட இவளுக்குத் தேவை இல்லை
என்பதில்
அது ஒரு செய்தியாகக் கூடாது என்பதில்
செய்தியை வாசித்தவர்களின்
சொற்கள்
காற்றை நச்சுப்படுத்தக் கூடாது
என்பதில்
அவள் உறுதியாக இருக்கிறாள்.

இருந்த இடம் தெரியாமல்
மறைந்து போகும் வரத்தை
யாரிடம்
வாங்க வேண்டும்?

ஒவ்வொரு கணமும் மறைந்து கொண்டிருக்கும்
அவளே பார்வதி.

***

1+1+1+1+….= 0

ஒவ்வொன்றிற்குள்ளும்
ஒளிந்திருக்கிறது
அதன் துயர இசை
தங்கமீன்கள் ஒவ்வொன்றாக இறந்து கொண்டிருக்கின்றன

ஒவ்வொன்றின் பின்னாலும்
ஒளிந்திருக்கிறது
அதன் அழிவு
ஒரு காரணமும் இல்லாமல்
சட்டெனப் பட்டுப்போனது பக்கத்து வீட்டுப் புன்னை மரம்.

நாம் ஆசை ஆசையாய் வளர்த்த
மஞ்சள் கிளிகளை
வீடு புகுந்து தூக்கிப் போயின
வெருகுப் பூனைகள்.

விடைபெறுதல் என்பது அவ்வளவு சுலபம் அல்ல
ஆனால் அவர்கள் எல்லாருமே
நமக்கு விடை கொடுத்து அனுப்ப
ரோஜாப்பூ மாலைகளோடு காத்திருக்கிறார்கள்.

கூட்டம் கூட்டமாக
ஒழுங்கு வரிசைகளில்
பறந்து கொண்டிருக்கும் கொக்குகள்
கூச்சலிடும் குழந்தைகளின் நகங்களில்
வெள்ளை போடும்
பேரதிசயம்
இன்றும் நிகழாமல் இல்லை.

***

உரு அழி

அறைக்கு வெளியே
மொட்டை மாடியில் அம்மாவாசை வெயிலில்
பாத்தி பாத்தியாக உளுந்து காய்கிறது‌.
பக்கத்தில் போய் பார்த்தால்
அவை உளுந்து இல்லை.
எல்லாமே காரீய எழுத்துருக்கள்.

கழுவக் கழுவக் காயாத கருப்பு
எழுத்துக்களை
அள்ளிக் கூட்டி என் அறை வாசலில் குவித்திருக்கிறாள்
கபிலர் அச்சகத்தில்
அச்சுக் கோர்க்கும் மலர்.

ஒருமுறை ய எழுத்துருவைக் காணோம் என்று
ய வரும் இடங்களில் எல்லாம்
மு வைத்திருந்தாள்.
பிழைதிருத்திக்கும் வேலை வேண்டாமா என்று கேட்டுவிட்டு
கண்ணைச் சிமிட்டினாள்.

மாலையில் அவள் பேருந்தில் ஏறுகையில்
என்னைப் பார்த்து அசைத்த உள்ளங்கையில்
பால்பென்னால் வரைந்த
ஒரு பெரிய மு இருந்தது.

முதல் முறையாக அவளை முத்தமிட்ட ஒரு நாள்
அவள் கணினிக்காரியாக மாறிப் போனாள்
இப்போது தனது பெயர்
குலாபி என்கிறாள்.
ஓ ரங்கசாடி…குலாபி…
என்று பாடவும் செய்கிறாள்.

குலாபியின் திருமண நாளில்
மொட்டை மாடியில் இருந்த எனது அறையில்
காரீய எழுத்துக்களைக் கொட்டினார்கள்
அறை நிரம்பி வாசலுக்கும் வெளியே சரிந்தன.

நான் எங்கே போனேன்?
இப்போது குலாபியின் கணினிக்குள்
திறக்க இயலாக் கோப்பாக
உரு அழியக் காத்திருக்கிறேன்
ஓ ரங்கசாடி…குலாபி…

***

ஞாபகங்களின் வரைபடத்திலோ எத்தனையோ முடுக்குகள்

கூகுள் வழித்தடத்தில் ஓடிக் கொண்டிருந்த காரை
ஓட்டுநர்
திடீரென ஒரு சிறிய சாலையில் திருப்பினார்.
பக்கத்தில் இருந்தவர் ‘தம்பி என்ன ஆச்சு’ என்று பதறினார்.

“ஒன்றுமில்லை கொஞ்சம் பொறுமையாக இருக்கமுடியுமா…”
என்று கூறிவிட்டு காரை
மேலும் ஒரு சிறிய தெருவில் திருப்பினான்.
வலதுபுறம் ஒரு முடுக்கு பிரியும் சந்தியில்
காரை நிறுத்தி என்ஜினை ஆஃப் செய்தான்.

பின்னால் இருந்த நண்பனிடம், அந்த இரண்டாவது வீடு தான் என்றான்.
இருவரும் வேகவேகமாக கார்க்கண்ணாடிகளை இறக்கினார்கள்.

அங்கே அந்த இரண்டாவது வீட்டில் ஒரு பெரிய கேட் இருந்தது.
ஒருவருமில்லாத முற்றத்தில் வெள்ளை வெளிச்சம்
மிதந்தது.
அந்த வெறும் முற்றத்திலிருந்து
ஒரு பூனை கூட நிற்காத அந்தப் பெரிய கேட்டில் இருந்து
ஒரு ஏகாந்தம் காரை நோக்கி வந்தது.

ஓட்டுநருக்கு மட்டும் ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.
சட்டென என்ஜின் முடுக்கப்பட்டு
கனவேகம் எடுத்த கார்
மீண்டும் சர்வதேச வரைபடத்தில் ஓடத் தொடங்கியது.

ஞாபகங்களின் வரைபடத்திலோ
எத்தனையோ முடுக்குகள்
எத்தனையோ தெருமுனைகள்.


ஆசிரியர் தொடர்புக்கு – samayavelk@gmail.com

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

0

1. ஊழி

சாலையோரத்து வீட்டில் வசிக்குமெனக்கு
என் மூச்சுக்காற்றே
இப்படி சத்தமாய் கேட்டதில்லை
இரவுகளில்

உக்கிரமோ
குண்டு மழையோ
துவக்குகளின் சப்தமோ
குருதி அப்பிய செய்திகளோ
எதிரிகளோ
யாருமில்லா போர்ச் சூழல்
காற்றிலும் படியவிட்டிருக்கிறது
அமைதியை

நிர்கதியையே நிரந்தர நியதியாக்கிய
அதிகாரங்களும் அரசியல் வியாதிகளும்
உள்ளீடற்ற கவசம் போல்
ஆடிக்கொண்டிருக்கின்றன காற்றில்

இடைவெளிகள் புதிதில்லையெனினும்
இது வேறொன்று

நாளும் கிழமைகளும் மறந்து
நித்யகாரியங்களுக்கும் செலவுகளுக்கும்
ஊறு நேர்ந்த பின்
பிறழ்வுகளின் விளிம்பில் நின்று
சபிக்கத் தோன்றினாலும் யாரை

யாருமற்ற தெருவில்
உணவுக்காய்ச் சுற்றியலையும் நாயாய்த்
துயருறுகிறது வாழ்வு

ரசாயனச் சேர்மானங்களிலிருந்து விடுதலையாகிறதாம்
காலும் புனலும்

அமிழ்த்தும் நினைவுகளுக்கு
மத்தியில்
சூன்ய நடமிடும்
அம்பலத்தரசன் ஆட்டத்துக்குக்
மட்டும் குறைச்சலில்லை.

***

2. ஒரே அழுத்தலில்

கடல் கடந்த தொலைவின் வாதையைச் சற்றே தணிக்கும்
காணொளி அழைப்பில் பிரசன்னம்

முகலோபனத்தில் வழியும் அமுதை
மறுபடி வரும் வரைக்குமாய்
பரபரப்பாய் சேமிக்கிறேன்

லாகிரியில் கண்கள் நிறைந்து தளும்பி
உடலெங்கும் சட்டென
நீயே பாவி பரவியிருப்பது தெரியாமல்
திரையில் தெரியும் பிம்பத்தோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்

இங்கேயும் அப்படித்தானென்கிறாய்

நீயும் நானும்
இப்போதிருப்பது
எவ்வெளியில் கண்ணே.

***

ரவிசுப்பிரமணியன், கவிஞர், எழுத்தாளர், ஆவணப்படஇயக்குனர், இசைக்கலைஞர் என பன்முக ஆளுமைத்திறன் கொண்டவர் ரவிசுப்பிரமணியன். ஐந்து கவிதை தொகுப்புகள், ஒரு கட்டுரை நூல், இரு தொகுப்பு நூல் என ஒன்பது நூல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்புக்கு : +91 994 004 555 7
ravisubramaniyan@gmail.com