Tuesday, June 23, 2026
Homeஇதழ்கள்2026 இதழ்கள்எனக்குள் நான் நெய்த உறவு

எனக்குள் நான் நெய்த உறவு

ஶ்ரீரஞ்சனி

தைவிடப் பெரிசோ? இது போனதுதானே! பிறகென்ன பிரச்சினை? உங்களை விட்டிட்டு இன்னொரு பொம்பிளையைத் தேடிக்கொண்டு அவர் போகப்போறார்.” ஏதோ ஒன்றைக் காட்டியவண்ணம், எரிச்சலுடன் குரலை உயர்த்திப் பேசினாள், அந்தத் தாதி. 

உடலுறவு கொள்ளமுடியாமலிருப்பதற்கான பிரச்சினையை எப்படித் தீர்க்கலாமென அறிவதற்காக அந்தக் கிளினிக்குச் சென்றிருந்தவளின் கண்கள் நிறைந்தன. ஏமாற்றம் பேரலையாக அவளைத் தாக்கியது. வெளியில் காத்திருந்த கணவனிடம் சென்றவள் எதுவும் சொல்லாமல் அழுதாள். “என்ன பிரச்சினை? சரி, விடு, உடலுறவில்லாம ராமகிருஷ்ணரும் சாராதாதேவியும் குடும்பம் நடத்தேல்லையே. நானும் அப்பிடி இருப்பன்.” 

“நான் உன்னைக் கலியாணம் செய்துகொள்ள விரும்புறன்,” தன் ஆசையை நேரடியாக அவன் அவளிடம் கூறியபோது, உங்களைவிட “நான் ரண்டு வயசு மூப்பு,” என்பதுதான் அவளின் பதிலாக இருந்தது. ஆண்களைவிட பெண்கள் வயது குறைந்தவர்களாக இருக்கவேண்டுமென்ற சமூக நியதிக்கு அவள் பயப்படவில்லை. ஆனால், பெண்களுக்கு வயதாக, வயதாகக் காமம் மெல்ல மெல்லக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலே போய்விடும், ஆனால், ஆண்களுக்கு அது இறக்கும்வரை அடங்காது என அவள் வாசித்திருந்ததுதான், அவளைக் கரிசனைகொள்ள வைத்திருந்தது. அவனோ 25 வயதிலேயே உடலுறவு தேவைப்படாதெனச் சொல்கிறானே, அது நடக்கக்கூடிய விடயமா என அவள் பலமாக யோசித்தாள். 

“மூண்டாம் வகுப்பிலை இங்கிலிஸ் படிக்கவெண்டு பக்கத்து வீட்டுக்கு ரியூசனுக்குப் போனனான். ஒரு நாள் அந்த மாஸ்ரர் என்னைத் தூக்கிக்கொண்டுபோய் தன்ரை கட்டிலிலை கிடத்திப்போட்டு என்ர யங்கியைக் கழட்டப் பாத்தார். நான் பெலத்துக் கத்த, அவற்ரை அம்மா குசினிக்கே நிண்டுகொண்டு என்ன சத்தமெண்டு உரத்துக் கேட்டார். அதாலை அவர் என்னை விட்டிட்டார். பிறகு அம்மா ரியூசனை நிப்பாட்டிப்போட்டா. உங்களோடை என்னாலை சேர முடியாமலிருக்கிறதுக்கு அது காரணமாயிருக்குமோ?”

“சரி, கனக்க யோசிக்காதை, பாப்பம்.” பிரபு அப்படிச் சொன்னாலும், அவனின் முகம் இருண்டுபோய்க் கிடப்பதுபோல அவளுக்கிருந்தது.

“பள்ளிக்கூடத்துக்கு ஒரு கவுன்சிலர் வாறவ, அவவோடையும் கதைச்சுப்பாக்கிறன்.”

தொட்டதுக்கெல்லாம் பிரபு அவளுடன் கோபிப்பதற்கும், வன்முறையாக நடப்பதற்கும் தங்களிடையே உடலுறவில்லாமல் இருப்பதுதான் காரணமென அவள் நம்பினாள். 

அன்றிரவும் ஏதோ ஒரு புதுக் கிறீமைப் பயன்படுத்தி அவன் முயற்சித்து பார்த்தான். ஆனால், அதுவும் தோல்வியாகவே போய்விட்டது. மற்றப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். அறைக்குள் சுழன்றுகொண்டிருந்த காற்றாடியையும் மேவி, அவனின் முதுகு முழுவதும் வியர்வைத் துளிகள் மின்னிக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அவளுக்கு மிகவும் அசெளகரியமாக இருந்தது. 

அடுத்த கிழமை, அப்பொன்ற்மென்ற் வைத்துப் பாடசாலையில் கவுன்சிலருடன் கதைத்தாள். விபரங்களைக் கேட்டவர், உடலுறவுப் பிரச்சினைக்கு அவள் மட்டும்தான் காரணமில்லை, அவனும் காரணமாக இருக்கிறான் என அவர் விளங்கப்படுத்தினார். பிணைப்பு என்பது இரவில் நிகழும் உடல்களின் சேர்க்கை மட்டுமல்ல. மனங்களின் சேர்க்கை என்றவர், இரவில் உடல்கள் சேர்வதற்கான அத்திவாரம் பகலில் போடப்பட வேண்டும் என்றார். முடிந்தவரையில் காதலுடன் ஒருவருடன் ஒருவர் பேசவேண்டும், அன்பான தொடுகைகள் இருவரிடையும் இருக்கவேண்டும் என்றும், உடலுறவுக்குத் தயாராகும் வகையில் அதற்கு முன்பான நேரம் செலவழிக்கப்பட வேண்டுமென்றும் கூறிய அவர், அதற்கான சில உத்திகளையும் கூறினார். 

அன்றிரவு, கட்டிலில் நேரம் செலவழிக்க வேண்டுமென்றும், அவள் சந்தோஷமாக இருக்காவிடில், உடல் ஒத்துழைக்காது என்றும் கவுன்சிலர் சொன்னதை பிரபுக்குச் சொன்னபோது அவனுக்குக் கோபம் வந்தது. அவளின் இயலாமையை அவன் கடந்துபோக முயற்சிக்கிறான், ஆனால் அவளோ அவனில் குற்றம்சாட்டுகிறாள், அது நியாயமற்றதென அவன் கொதித்தான். முடிவில் அந்த உரையாடல், அவர்களிடையே மேலும் விரிசலையே தோற்றுவித்தது. 

அவளுக்கும் அவளின் அம்மாவுக்கும் ஒட்டுறவு இருந்ததில்லை. எப்போதும் நாயும் பூனையும் போலவே இருந்தார்கள். அப்பாவும் பெயரளவில்தான் அப்பாவாக இருந்தார். வெளியூரில் அவர் வேலைசெய்தமை, உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவருடனான அருகாமையை இல்லாமல் செய்திருந்தது. கணவர் என்ற உறவு தன் ஆதங்கத்தையெல்லாம் தீர்த்துவைக்குமெனக் கனவு கண்டவளுக்கு எல்லாம் சூனியமாக இருந்தது. கலியாணம் கட்டினால் போதுமென அவசரப்படாமல் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவேண்டும், எங்களின் வாழ்க்கைப் பெறுமானங்கள் என்ன, நாங்கள் எப்படி எங்களின் உணர்ச்சிகளைக் கையாளுகிறோம் என எதுவுமே தெரியாமல் கட்டியிருக்கக் கூடாதென்ற சுயபச்சாதாபம், கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்தென்ன பயன் என்ற புரிதலினால் மறுகணமே வழமைபோல முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.  

ஆசிரியப் பயிற்சிக்காகப் போயிருந்தபோதுதான் பிரபுவின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்திருந்தது. தனிமையையும், சோகத்தையும் மறப்பதற்கு ஒரு வழியாக ரேடியோவுடன் சேர்ந்து பாடிப் பாடி தன் குரலை அவள் மெருகேற்றி வைத்திருந்தாள். அவர்களின் ஆண்டுவிழாவில் அவள் பாடிய ‘செண்பகமே செண்பகமே’ பாட்டில், அவளின் இனிமையான அந்தக் குரலில் அவன் லயித்துப் போனான். தன் வருங்காலத் துணையை எண்ணி அவள் உருகி உருகிப் பாடியது, அவனை நோக்கிப் பாடப்பட்டது போல அவனை உணரவைத்தது. ‘சேர்ந்திருக்கச் சம்மதமா’ என அவள் பாடியபோது அவனின் கால்கள் தாளம்போட, அவனின் தலை மேலும் கீழும் ஆடியது. நிகழ்ச்சி முடிந்ததும் அவளைச் சந்தித்துப் பாராட்டினான். அவனின் கலகலத்த சிரிப்பும், கனிவான பாராட்டும் வாழ்வில் இதுவரை அவள் உணர்ந்திராத ஒட்டுதலை அவள் உணரச்செய்தன. நாளடைவில் அவன் அவளில் காட்டிய கரிசனையும் நேசமும், அவளை அவன் இரட்சிக்க வந்திருப்பதாக அவளைப் பேரானந்தம் அடையச்செய்தன.

பிரபுவுக்குத் தங்கை ஒருவர் இருந்ததால், அவவைக் கரைசேர்க்கிறதுக்குக் கொஞ்சம் பணம் இனாமாகக் கொடுத்தால் அவனின் அம்மா சம்மதிப்பா என்றும் அது சரிவருமோ என்றும் அவன் அவளைக் கேட்டிருந்தான். “எங்கை மாப்பிளை தேடுறது, சீதனத்துக்கு என்ன செய்யிறது?” என அப்பா அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்ததால், அவனின் கேள்வியில் விடிவெள்ளி ஒன்று அவளுக்குத் தெரிந்தது. அவன் கேட்டதைத் தயங்கித்தயங்கி அவள் அம்மாவுக்குச் சொன்னாள். “வீடு, வளவு, நகை எண்டு ஒண்டுமில்லாமல் கொஞ்சக் காசோடை கட்டுறதுக்கு இந்தக் காலத்திலை ஆர் வரப்போயினம். அதுவும் அப்படி ஒரு ரீச்சர் முன்வாறது நல்ல விசயம்தானே.” என்று அவ பச்சைக்கொடி காட்டியபோது அவளின் இதயம் விம்மியது.

அது அவளின் ‘அதிர்ஷ்டம்’ என்று உறவினர்கள் சற்றுப் பொறாமை பொங்க அவளுக்குச் சொன்னார்கள். அவளின் கையைத் தன் கைகளுக்குள் அவன் பொத்திப் பிடித்திருக்கும் விதமும், அவளுக்காக மாமிச உணவை உண்பதைத் தவிர்த்த பாங்கும் அவளைப் பரவசப்படுத்தின. எந்தப் புயலிலிருந்தும் அவன் தன்னைக் காப்பான், தனக்கொரு பாதுகாப்பான இடம் கிடைத்துவிட்டதென அவள் ஆசுவாசப்பட்டாள். ஆனால், அந்த மகிழ்ச்சிக்கும், ஆசுவாசத்துக்கும் ஆயுள் கெட்டியாக இருக்கவில்லை. 

திருமண மாலை வாடிக்கொண்டிருந்தது. நண்பர்களும் உறவினர்களும் அவர்களை விருந்துக்கு அழைப்பது குறைந்திருந்தது. அவர்களின் இடைவெளி அதிகரித்துக் கொண்டிருந்தது. எதைப் பற்றிக் கதைத்தாலும் வாக்குவாதங்களே விடையாயின. சின்னச் சின்னப் பிரச்சினைகள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டன. ஒரு நாள் சனிக்கிழமை விரதத்துக்குப் பல்வேறு கறிகளுடன் நெடுநேரம் செலவழித்துச் சோறு சமைத்துவிட்டு, பசியுடன் அவனுக்காகக் காத்திருந்தாள். 

வந்தவன், வழியில் ஒரு நண்பரை எதிர்பாராமல் சந்தித்ததாகவும் அவனுடனேயே சாப்பிட்டுவிட்டதாகவும் சொன்னான். “நான் இங்கை பசியோடை காத்திருக்கிறன், நீங்க சுத்திப்போட்டு வாறியள்,” என்றாள், எரிச்சலுடன். 

“உன்னைச் சாப்பிட வேண்டாமெண்டு நான் சொன்னனானோ?” அவன் கேட்ட கேள்விப் பதிலாகத் தன் சாப்பாட்டுக் கோப்பைச் சத்தமெழுப்ப அவள் வைத்தாள். பக்கத்திலிருந்து தும்புத்தடியால் அவளை அடிக்குமளவுக்கு அது அவனின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டுசென்றிருந்தது. அதன்பின் அவள் சில நாள்கள் அவனுடன் கதைக்கவில்லை. முடிவில் அவளின் உடுப்புக்களை அவன் தோய்த்துக் கொடுத்தான். அவளுக்குக் குளிக்கவார்த்தான். அப்படியாக அவளுடன் அவன் சமாதானமானான்.

இன்னொரு நாள் இரவு 10 மணியாகியும் அவன் வீட்டுக்கு வரவில்லை. என்ன நடந்திருக்குமோ என்ற பயத்தில் இருட்டுக்குள் அவள் முன்னொழுங்கையில் காத்திருந்தாள். அவனின் மோட்டார்சயிக்கிள் அவளருகே வந்துநின்றது. “ஒரு யோசனையும் உங்களுக்குக் கிடையாதோ?” எனத் தன் பயமெல்லாம் கோபமாகமாற அவன்மீது அவள் பாய்ந்தாள். “என்ன நடந்துதெண்டு கேட்டியோ? வழியிலை அடிபட்டுக் கிடந்த ஒருத்தனை ஆஸ்பத்திரியிலை சேத்துப் போட்டுவாறன்,” என்றவன் அவள் கன்னத்தைப் பொத்தி அடித்தான். அவளின் முரசால் இரத்தம் கொட்டியது. உதடு வீங்கிப்போனது. 

“எந்த உறவுடனும் என்னால் ஒத்துப்போக ஏலவில்லையே. இதுவும் பிழைச்சால் அது என்ர பிழைதானே, அது பெரும் தோல்விதானே.” அவள் தனக்குள் குமுறினாள். என்ன செய்வதென அவளுக்குத் தெரியவில்லை. உறவினருக்கு முன்னால் பெயருக்குச் சிரித்தாள், பக்கத்து வீட்டுக்காரரின் பகிடிக்கு ஏனோதானோ என்று புன்னகைத்தாள், தாலிக்கொடியை உறவின் இலச்சனைபோல தினமும் மறக்காமல் அணிந்துகொண்டாள். ஆனால், ஒவ்வொரு இரவிலும் அவனுடனான அந்தியத்தன்மை அதிகரித்துக்கொண்டே இருந்தது

ஒரு கட்டத்தில் காசு உழைப்பதை அவன் குறிக்கோளாகக் கொண்டான். பிஸியாக இருப்பது தன் மனதுக்கு ஆசுவாசமாக இருக்கின்றது என்றான். ஆனால், அவன் முதலிட்ட பங்குச்சந்தை அவன் காலைவாரிவிட்டது. முதலீட்டுக்காக அவளுக்குத் தெரியாமல் அவளின் தாலிக்கொடியை அடகுவைத்திருக்கின்றான் என்பது அவளுக்குத் தெரியவந்தபோது அவளுக்குக் கோபத்தை அடக்கமுடியவில்லை. இருந்தாலும், உறவில் மகிழ்ச்சியில்லை என்று ஏதோவொரு சந்தோஷத்தைத் தேடி அலைகிறான், துன்பங்களையும் வேதனைகளையும் சகித்துக்கொள்ளவது தன் கடமையென அவள் நினைத்தாள். அத்துடன், ஆண் துணையில்லாமல் வாழமுடியாது, அப்படியானதொரு நிலைவந்தால் தனக்கு எந்த மதிப்புமிருக்காது எனவும் நம்பினாள். 

திருமணத்துக்கு ஒப்புக்கொண்ட அம்மாவுக்கு, அவர்கள் இருவரும் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஒரே காலத்தில் இருந்ததால், காதலித்துப்போட்டு, காசு வாங்குறதுக்காக நாடகம் ஆடியிருக்கிறார்களெனத் திடீரெனச் சந்தேகம் வந்திருந்தது. அதனால், “எல்லாத்தையும் நீ கொண்டுபோறாய், மற்றப் பிள்ளையள் நடு ரோட்டிலை நிக்கப்போயினம்,” எனத் திட்டித்தான் கலியாணம் கட்டிப்போகும்போது அவளைப் பயணம் அனுப்பியிருந்தா. 

அது நினைவுக்கு வந்ததும். அவ போட்ட சாபம் தன்னைத்தான் நடுரோட்டில் நிறுத்தப் போகின்றதோ என அவளுக்குப் பயமாகவிருந்தது. அவனுடனான உறவை எப்படியும் சரிசெய்துவிட வேண்டுமென பிரயாசைப்பட்டாள். அன்று அவனின் பாடசாலைத் தோழி விமலாவை இருவரும் கடை ஒன்றில் சந்தித்திருந்தனர். “பிரபுவை நம்பி எங்கேயும் போகலாம். என்ன உதவியும் துணிஞ்சு கேட்கலாம். பொம்பிளைப் பிள்ளையளுக்கு அந்தக் காலத்திலை பிரபு எண்டால் காணும். கலகலப்பான ஆள் வேறை. ஆள் கதைக்கிறதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம், நீங்க சரியான லக்கி,” என விமலா அவளுக்கு அவன் புகழ் பாடித் தீர்த்தாள்.

அந்த உரையாடல், எதிலும் முரண்படாமல் தான் இருந்தால் அவன் தன்னை மீளவும் நேசிப்பான் என அவளை மீளவும் எதிர்பார்க்கச் செய்தது. ஆனால், நாளடைவில், அந்த நம்பிக்கையும் காலத்துடன் கரைந்துபோனது. பிரச்சினைகள் பெரிதானால் உடலுறவு சிரமமாகிறதா அல்லது உடலுறவில்லாததால் பிரச்சினைகள் பெரிதாகின்றனவா என அவளுக்கு விளங்கவில்லை. உடலுறவு கொடுக்கும் அசெளகரியத்திலிருந்தும், வலியிலிருந்தும் தப்புவதற்காக அவனின் கோரிக்கைகளை அவள் நிராகரித்தாள். அல்லது ஏனோ தானோ என்று விருப்பமின்றி இயங்கினாள். அது அவனை மேலும் கோபப்படுத்தியது. வீட்டிலிருந்த பொருள்கள் அவ்வப்போது அவனின் கோபத்துக்குப் பலியாயின. 

முடிவில் உக்கிரமடைந்த போர் அவர்களின் மூன்று வருடக் கொழும்பு வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவந்தது. ஜேர்மனியில் சரணடைந்தார்கள். மொழி புரியாத நாட்டில் தொழிற்சாலையில்தான் அவனால் வேலையெடுக்க முடிந்தது. அவளுக்கு வேலை எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை. 

X X X

அடுத்த ஐந்து வருடங்கள் சென்றன. வேலைக் களைப்பெனக் குடிக்க ஆரம்பித்தவன் குடிகாரனாகவே மாறிவிட்டான். ஒரு குளிர்கால இரவில், அவன் குடிக்குமளவு பற்றி அவனுக்கும் அவளுக்கும் ஏற்பட்ட சண்டையால், ஆத்திரமுற்ற அவன் வீட்டுக்கு வெளியில் அவளைத் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினான். அவள் போட்ட கூச்சலில் பக்கத்து வீட்டார் வந்து கதைவைத்தட்டி அவள் உள்ளுக்குப் போக வழிசெய்தார்கள்.  

உடலில் கண்டல்களையும், வீக்கங்களையும் வைத்துக்கொண்டு இப்படி வாழத்தான் வேண்டுமா என இரவு பூராவும் யோசித்தவள் விடிவதற்கு முன்பாக வீட்டை விட்டு வெளியே போவதென முடிவெடுத்தாள். தொடர்ந்து அங்கு வாழ்ந்தால், அவன் மட்டுமன்றி, தானும் தன்னைத் துன்புறுத்துவதாகவும், ஏமாற்றுவதாகவும், புறக்கணிப்பதாகவும்தான் முடியுமென்பதை அவள் உணர்ந்துகொண்டாள். வெட்டக்கூடிய விதத்தில் கத்தி இருக்கும்போது காயங்கள் வராமலிருக்குமென நினைப்பது பைத்தியக்காரத்தனமென அவளுக்குப் புரிந்தது. அருகிலிருந்த மைத்துனி உதயாவின் வீட்டுக் கதவைத் தட்டினாள். “நீ எதுவும் கேட்கிறதுக்கு முதல் நான் சொல்றன். அரசாங்க உதவிப் பணத்தில் ஒரு சின்ன இடத்தை எடுத்துக்கொண்டு விரைவில போயிடுவன். ரண்டு நாளைக்கு இருக்க இடம்தா” என்றாள். 

அடுத்த நாள் என்ன நடந்ததென விடுத்துக்கேட்ட உதயா, துணையின் அவசியம்பற்றி அவளுக்கு வகுப்பெடுத்தாள். அன்புக்கும், பாசத்துக்கும் அவள் ஏங்கியதால் அவனுக்கு அவள் அதிக அழுத்தம் கொடுத்திருக்கக்கூடுமென விளக்கம் சொன்னாள். சிறுவயதில் அவனின் பெற்றோர் அவனுடன் வன்முறையாக நடந்திருக்கக்கூடும். அதனால் அவனும் அதைக் கையாளுகிறானோ என்னவோ என யோசிக்கச் சொன்னாள். யார்தான் பெண்ணைத் திருப்திப்படுத்துகிறார்கள், ஒழுங்கான உடலுறவு இல்லாமல்தான் நானும் வாழ்கிறேன் எனச் சமாதானம் சொன்னாள். 

உதயாவின் நியாயங்களும் விளக்கங்களும் அவளுக்குக் குழப்பத்தைக் கொடுத்தன. வீட்டுக் கதையை வெளியில் கதைப்பது அவனுக்குப் பிடிக்காதென காலத்தை வீணாக்கி விட்டேனோ, அன்புடனும் ஆதரவுடனும் நடந்திருந்தால் அவனின் குடியை, பண இழப்பையெல்லாம் தடுத்திருக்க முடிந்திருக்குமோ என்றெல்லாம் அவளுக்குக் கவலையாக இருந்தது. ஒரு கட்டத்தில் கவுன்சிலிங்குக்கு போவமோ என அவனைக் கேட்டபோது அவளுக்குத்தான் அது தேவை, தனக்கில்லை என அவன் மறுத்திருந்தது நினைவுக்கு வந்தபோது, அவனுடன் இனியும் தன்னால் சேர்ந்து வாழமுடியுமென அவளுக்குத் தோன்றவில்லை. உதயாவுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள், எனக்கு அந்தப் பாக்கியமும் இல்லையே என அவள் குமைந்தாள். 

“நாங்க சேந்திருக்கிறதாலை எந்தப் பயனுமில்லை. இனியாவது விரும்பினமாரி அவர் வாழட்டும். அதுக்குத் தடையா நான் இல்லையெண்ட திருப்தியாவது எனக்குக் கிடைக்கட்டும்,” கண்ணீரைப் பெருக்கெடுக்க அவள் சொன்னாள். 

“சரி, ஏதோ உன்ரை விருப்பப்படி செய். நாங்க என்னத்தைத்தான் செய்யேலும்,” என்றாள், உதயா. 

முடிவில், அவள் எடுத்திருந்த சிறிய அறையின் கூரையிலிருந்த மின்விசிறி போடும் சத்தம் மட்டுமே தினமும் அவளுக்குக் கேட்டுக்கொண்டிருந்தது. அமைதியாக நித்திரை கொள்ளலாம், எதற்கும் பயப்படத் தேவையில்லை என்பதே அவளுக்குப் போதுமானதாக, ஆசுவாசமானதாக இருந்தது. மீண்டும் காலைநேரங்கள் அவளுக்குப் பிடித்தவையாக மாறியிருந்தன. பிரபு என்ன மனநிலையில் எழும்புவான், எதற்காகக் கத்துவான், எதை உடைப்பான் என்ற பயமின்றி, அவனின் நடத்தைகளுக்கான நியாயப்படுத்தல்களைத் தேடிச் சமாதானம் அடையவேண்டிய தேவையின்றி, யன்னலுக்கூடாக எட்டிப்பார்க்கும் சூரிய ஒளியை, கேத்தல் போடும் சத்தத்தை, தேநீரின் வாசத்தை எல்லாம் அவள் ரசித்தாள். 

தையல் கடை ஒன்றில் கிடைத்திருந்த வேலை அவள் தனியாக வாழ்வதற்கு உதவியது. வேலைமுடிந்து வந்து விரும்பியதைச் சமைத்து, அதை ரசித்துச் சாப்பிட்டாள். அல்லது வரும்வழியில் விரும்பிய உணவை வாங்கிவந்தாள். தொலைக்காட்சி நாடகங்களைப் பார்த்துச் சிரித்தாள். எவராலும் அவளின் சிரிப்புக்கோ, அமைதிக்கோ குந்தகம் செய்ய முடியவில்லை. 

X X X

அடுத்த எட்டு ஆண்டுகள் சென்றன. வேலைமுடிந்து வரும் வழியில் திடீரென மழை கொட்டத்தொடங்கியது. குடையை எடுத்துச் சென்றிராததால் பஸ் நிறுத்துமிடத்தில் ஒதுங்கிக் கொண்டாள். ‘தர்சி’ எனக் கூப்பிடும் சத்தம்கேட்டுத் திரும்பிப்பார்த்தாள். அங்கே தலை சற்று நரைத்திருந்த பிரபு, சற்றுப் பருத்த தேகத்துடன் நிறம் மங்கி நின்றிருந்தான். 

“எப்படியிருக்கிறாய், தர்ஷி? உன்னைக் காணுவனெண்டு நினைக்கவேயில்லை. இங்கை ஒரு வேலையா வந்தனான். கார் பழுதாய்ப்போச்சுது, காலம்பிறைக்குத்தான் திருத்தலாமாம். அதுதான் எங்கை போகலாமெண்டு யோசிச்சுக்கொண்டு நிக்கிறன்,” நிறுத்தாமல் பேசினான். ஒருகாலத்தில் தான் நேசித்த மனிதன் தன்னுடன் மீளவும் இயல்பாகக் கதைப்பதைக் கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள், அவள்.  

அடுத்த நிமிடத்தில், “என்ர வீடு பக்கத்திலைதான் இருக்கு, வேணுமெண்டா நீங்க அங்கை வரலாம்,” என்றாள் இயல்பாக. மழை ஓய்ந்ததும், அவளின் வீட்டுக்கு இருவரும் சேர்ந்து நடந்து சென்றார்கள். 

அவனை இருக்கச் சொல்லிவிட்டு, தன் அறைக் கதவை இறுகச் சாத்திவிட்டு அவள் உடுப்பை மாற்றினாள். பின்னர் கறுவாவும் ஏலக்காயும் சேர்த்து அவனுக்கு விருப்பமான முறையில் பால்தேநீர் தயார்செய்து  கொடுத்துவிட்டு, “தோசை சுடப்போறன், சுடச்சுடச் சாப்பிடலாம் வாங்கோ,” எனக் கூப்பிட்டாள். தோசையும், உருளைக்கிழங்குக் கறியும், செத்தல்மிளகாய்ச் சம்பலும் அவனுக்குப் பிடித்ததொரு சாப்பாடு. ஒரு நல்லெண்ணைய்த் தோசை, ஒரு பட்டர் தோசை, ஒரு நெய்த் தோசை என விதம்விதமாய்ச் சுட்டுக்கொடுத்தாள். 

சாப்பிட்ட பின்னர் அவளின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அவன் ஆயாசமாக அமர்ந்துகொண்டான். அவளுக்குத் தன் வீடு திடீரெனச் சிறிதாகப் போனமாதிரி இருந்தது. எங்கிருப்பதெனத் தெரியவில்லை. படுக்கையறைக்குள் சென்றவள் போர்வை ஒன்றையும் தலையணை ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்து அவனுக்குக் கொடுத்தாள். சோபாவில் படுப்பீர்கள்தானே எனக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல், தன் அறையைப் பூட்டிக்கொண்டாள். 

தனக்கு யாதுமாக இருப்பானென நம்பியவன், இன்று உறவேதுமற்ற ஒருவனாக அவளுடன் ஒரே வீட்டில் இரவைக் கழிக்கின்றான் என்பது அவளுக்கே அதிசயமாக இருந்தது. நான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ என மனதுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும் குற்றவுணர்வு அன்று சற்று அதிகமாகவே எட்டிப்பார்த்தது. எவ்வளவு பேர், எத்தனையெல்லாம் இழந்து, எதையெல்லாமோ விட்டுக்கொடுத்து வாழ்கின்றனர். அவனின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாமல் தான் எப்போதும் சண்டைபோட்டதுதான் அவனின் கோபத்துக்குக் காரணாமாயிருந்திருக்கும் என நினைத்தபோது அவளின் கண்கள் நிறைந்தன. 

நேரத்துடன் காலையில் எழுந்தவள் இரவு உடுப்புடன் வெளியில் வர விரும்பாது, முதலில் உடுப்பை மாற்றினாள். கடையில் வாங்கி வைத்திருந்த இடியாப்பத்தைச் சூடாக்கி, பால் சொதியுடனும், முட்டைப் பொரியலுடனும் அவனுக்குக் கொடுத்தாள். சாப்பிட்டுவிட்டு அவன் வெளியேறியதும் கதவைப் பூட்டிவிட்டு அவள் தன் வேலைக்குச் சென்றாள். 

வேலையிடத்தில் கணவனுக்கு முத்தமிட்டுவிட்டு அவனின் காரிலிருந்து இறங்கும் மேலதிகாரியைப் பார்க்கப் பொறமையாக இருந்தது. மாலையில் அவர் வந்திடுவார், போய்ச் சமைக்கவேண்டுமென ஓடிய சக பணியாளர் மாலதி அவளின் மனதைக் குத்தினாள். “பாவம், பிரபு,” எனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.

இரண்டு மாதங்களின் பின் ஒரு நாள் இரவு அவனிடமிருந்து அவளுக்கு அழைப்பொன்று வந்தது. “நான் உன்னோட கொஞ்சம் சீரியசாக் கதைக்கலாமோ?”

“ஓ, சொல்லுங்கோ. என்ன விஷயம்?” 

“நடந்ததெல்லாம் நடந்து முடிஞ்சிட்டுது. அண்டைக்கு என்னை நீ அன்பாய்க் கவனிச்சதை யோசித்துப் பாத்தன்… நாங்க ஏன் திரும்பவும் சேந்து வாழக்கூடாது?”

ஒரு கணம் அவள் ஆழமாக மூச்செடுத்தாள். அவனே தொடர்ந்தான்.

“எங்களுக்கு வயசும் முதிர்ச்சியும் வந்திருக்கு. ஆளுக்கு ஆள் துணையாய் இருக்கலாமெண்டு நான் நினைக்கிறன். நீ என்ன சொல்றாய்? யோசிக்கலாமெண்டு நினைச்சியண்டா நாங்க சந்திச்சு அதைப் பத்திக் கதைக்கலாம்.” 

“எனக்கு உங்களிலை வெறுப்பில்லை,” அவள் மென்மையாகச் சொன்னாள். பின் ஒரு நிமிடம் அமைதி காத்தாள். அதன் பின்னர் மிகவும் அமைதியான குரலில் தொடர்ந்தாள். 

“ஆனா, என்னாலை திரும்பவும் உங்களை நேசிக்கேலாது… எங்களுக்கிடையிலை இருந்த பாசத்தை, காதலை நாங்க அழிச்சிட்டம்… வேணுமண்டா நண்பர்களா இருந்துகொள்ளுவமன். ஏதாவது உதவி உங்களுக்குத் தேவையெண்டாக் கேளுங்கோ, ஏலுமெண்டால் செய்கிறன். அப்பிடி எனக்கும் ஏதும் தேவையெண்டால் உங்களைக் கேட்கிறன். ஆனா, இனி ஒரு கூரைக்குக் கீழை நாங்க வாழுறது சாத்தியமில்லை.”

“சரி, எதுக்கும், திரும்பவும் ஒருக்கா யோசிச்சுப் பாத்திட்டுப் சொல்லு. உன்ர நன்மைக்காகவும்தான் சொல்றன்.” 

அவளின் கண்கள் ஈரமாயின. தொலைபேசியை மெதுவாகக் கீழே வைத்தாள். கோபமோ, வெற்றியோ வேறெந்த உணர்வோ அவள் மனதில் தோன்றவில்லை. படுக்கையில் போய்ச் சாய்ந்தாள். அவளின் இதயம் அவளுக்காக மட்டும் துடித்தது. 

‘நான் எவ்வளவுதான் மோசமான ஒரு பொம்பிழையாக இருந்திருந்தாலும், நீங்க என்னை நினைச்சபாட்டுக்கு அடிச்சுச் சிறுமைப்படுத்தியிருக்கக்கூடாது,’ வாய்விட்டுச் சொன்னாள். 

அவளின் முன் சிறுமியாக இருந்த தர்ஷி நிழலாடினாள்.  

“அன்பை எதிர்பாத்து, எதிர்பாத்துத் தோல்வியடைஞ்சிட்டனே எண்டு கவலைப்படாதை தர்ஷி. பாசத்தைத் தேடித்தேடி அலைஞ்சது போதும். உனக்கு நான் இருக்கிறன். உன்னை நான் நேசிக்கிறன், அது போதும். சேந்துவாழுறதாலை அல்லது உடலுறவாலை கிடைக்கிற மகிழ்ச்சி மட்டும்தான் மகிழ்ச்சி எண்டில்லை,” என்றவள் கண்களை மூடினாள். கண்ணீர் அவள் கன்னங்களை நனைத்தது. 

***

ஶ்ரீரஞ்சனி – இலங்கையில் தெல்லிப்பழையைச் சேர்ந்த ஶ்ரீரஞ்சனி தற்போது ரொறன்ரோ, கனடாவில் வசிக்கின்றார். ‘நான் நிழலானால்’, ‘உதிர்தலில்லை இனி’, ‘ஒன்றே வேறே’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவற்றில் இரண்டுக்கு இலங்கையில் விருதுகள் கிடைத்துள்ளன.  சிறுவர்களுக்கான கதைகளையும்  ஶ்ரீரஞ்சனி  தற்போது எழுதிவருகிறார். மின்னஞ்சல் : sri.vije@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here